Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சேரனின் தவமாய் தவமிருந்து

Featured Replies

சேரனின் தவமாய் தவமிருந்து திரைப்படம் மிகவும் நீளமாக வந்துள்ளதாம். கிடடத்தட்ட திரையில் 4மணி நேரம் ஓடுமாம். அதனால் படத்திற்கு 2 இடைவேளைகள் விடலாம் என சிந்திக்கின்றார்களாம். படத்தில் அறிமுக நடிகை பத்மப்பிரியாவின் நடிப்பும் ராஜ்கிரனின் நடிப்பும் நிச்சயம் பேசப்படுமாம். சேரனும் தன் திறமையைக் காட்டத் தவறவில்லையாம். இப்படம் பற்றிய மேலதிக தகவல்கள் தெரிந்தோர் அதனை இங்கு தெரிவிக்கலாம்.

  • 3 weeks later...

விமர்சனம்

'கண்ட நாள் முதல்' கிடைக்குமா என்று நண்பனின் பேச்சினைக் கேட்டு ஆல்பர்டில் இறங்கினால், 'தவமாய் தவமிருந்து'. ஆட்டோஃகிராபின் வெற்றிக்குப் பிறகு இரண்டு வருடங்களுக்குப் பிறகு மிகுந்த எதிர்ப்பார்ப்புகளுடன் வந்திருக்கும் படம்.

முதலில் சேரனுக்கு ஒரு ஷொட்டு. தமிழில் முதல் உருப்படியான ஹை டெபனிஷனினில் எடுக்கப்பட்ட படம். இதற்கு முன் 'வானம் வசப்படும்' (P.C.ஸ்ரீராம்) எடுத்து திருப்தியில்லாமல் போன படம். ஹை டெபனிஷனில் எடுத்த படம் மிக திருப்தியாக இருக்கிறது. வெகு சில தொழில்நுட்ப குறைகள் தெரிகின்றன. ஆனாலும், சாதாரண ரசிகனுக்கு தெரியாத விஷயங்கள் அவை. நீலம் கொஞ்சம் bleed ஆகிறது, கொஞ்சம் blur ஆன விஷயங்கள் லேசாக pixelate ஆகின்றன. மற்றபடி, அருமையாக பிலிமில் தெரிகிறது. அகன்ற திரையில் வித்தியாசங்கள் கண்டு பிடிக்க முடியவில்லை.

மிகவும் எதிர்ப்பார்ப்புடன் வந்திருக்கும் படம். தந்தை பாசத்தினையும், ஒரு நடுத்தர குடும்பத்தில் குடும்ப தலைவன் படும் பாடுகளையும், கஷ்டங்களையும், சின்ன சின்ன சந்தோஷங்களையும், உணர்வு புறமாக சொல்லியிருக்கும் படம். கதை ராமலிங்கம் (சேரன்) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் தந்தையினைப் பார்க்க புறப்படுவதிலிருந்து ஆரம்பிக்கிறது. கார் முன்னே செல்ல, ராமலிங்கத்திற்கு நினைவுகள் பின்நோக்கி செல்கின்றன.

உணர்வுபூர்வமாக, சென்டிமெண்டினையும், பாசத்தினையும், உறவு சிக்கலையும், பொருளாதார ஏற்றத்தாழ்வுகளையும் ஒரு சேர சொல்லியிருக்கும் படம். ஒரு சராசரி தமிழனால் தன்னை சர்வ சாதாரணமாக பொருத்திக் கொள்ளும்படியான கதைக்களம். ராமைய்யா (ராஜ்கிரண்), சாரதா (சரண்யா) தம்பதிகளுக்கு இரண்டு ஆண் பிள்ளைகள். அவர்களை எப்படி வளர்ந்து, பெரியவர்களாகி, சேர்ந்து வாழ்ந்து, பிரிந்து, சிக்கல்களை சந்தித்து, பின் தந்தையின் இறப்புக்கு ஒன்றாக இணைகிறார்கள் என்பது தான் கதை. சேரனின் மிகப்பெரிய பலம் காட்சியமைப்புகள். இயக்குநர் சேரன் ஜெயிக்கிறார். ஆனால், நடிகர் சேரன் ஒவர் சென்டியாக இருக்கிறார். காதலை சொன்னால் அழுகிறார். நண்பர் உதவினால் அழுகிறார். காதலியோடு அழுகிறார். தந்தையினைப் பார்த்து அழுகிறார். அழுத மாதிரியே படம் முழுக்க பேசுகிறார் சேரன். உணர்வுப் பூர்வமாக நடிக்க வேண்டியதிற்கு படமுழுக்க அழவேண்டியதில்லை.

படத்தில் அத்தனை பேரையும் அசரடிப்பவர் ராஜ்கிரண். ஒரு நடுத்தர அச்சக முதலாளியாய் அச்சு அசலாய் கண்முன்னே நடமாடுகிறார். hats off ராஜ்கிரண். ஒவ்வொரு காலக்கட்டத்திலும் அவரின் மேக்கப் கனகச்சிதமாக பொருந்தியிருக்கிறது. பிள்ளைகளை கொஞ்சுவதிலாகட்டும், தண்டல்காரரிடம் கெஞ்சுவதிலாகட்டும், மூத்த மகன் வீட்டில் பங்கு கேட்கும் போது பதறுவதாகட்டும், சேரன் குழந்தையினை தன் மனைவி தூக்குவாளா என்கிற எதிர்ப்பார்ப்பும், பதைபதைப்பும் கொண்ட பார்வையாகட்டும், மனிதர் வாழ்ந்திருக்கிறார். தமிழில் குணச்சித்திர நடிகர்கள் வெகு குறைவு. எஸ்.வி.ரங்கராவ், நாகையா அளவிற்கு இன்று யாருமில்லை. எஸ்.வி.ஆர் அளவிற்கு இல்லாமல் போனாலும், ராஜ்கிரணின் அடையாளம் மண்ணின் அடையாளம். நாக்கும், வாக்கும் செத்துப் போகாத, வெள்ளை மனசு கிராமத்து மண்ணின் முகம். இந்த படத்தின் மூலம் நிறைய படங்கள் தேடிவரும் வாய்ப்புகளதிகம்.

சாரதாவாக சரண்யா. பத்து ரூபாய் வாங்கிக் கொண்டு பதினைந்து ரூபாய்க்கு நடித்திருக்கிறார். தமிழில் அம்மா கதாபாத்திரங்களைப் பொருத்தமாக பண்ணுவதற்கு சில பேர்கள் தான் இருக்கிறார்கள். பணக்கார அம்மா அம்பிகா, வாஞ்சையுடன் கொஞ்ச கலைராணி, கொஞ்சம் இளைமையான நடிகர்களுக்கு ரேவதி,ராதிகா என்ற வரிசையில் அச்சு அசலான கிராமத்து அம்மாவினை கண் முன் நிறுத்துகிறார் சரண்யா. பற்களில் கொஞ்சம் காவியடித்திருக்கலாம். மண்ணிற மேக்கப்பில் வெண்ணிற பற்கள் கொஞ்சம் அன்னியமாய் இருக்கின்றன, அதுவும் வயதான காலத்தில். எண்ணெய் தேய்த்து விடும் பாசமான அம்மா. தன் மகன்கள் ராஜ்கிரணை எதிர்த்து பேசும் போது அவர்களை அடிக்கும் ஆவேசம், தனக்குத் தெரியாமல் திருமணம் செய்து கொண்டு குழந்தையுடன் வரும் சேரனை பார்க்காத வைராக்கியம், தன் பேத்திகளோடு கொஞ்சம் போது இருக்கும் பாசம் என பஞ்சம் வைக்காமல், சும்மா வந்து போகாமல் நிலைத்திருக்கிறார். அதுவும், வயதாக, வயதாக தளர்வான ரவிக்கைகள், ரவிக்கைக்கும் புடவைக்கும் சம்பந்தமில்லாத நிறங்கள் என இயக்குநர் பார்த்து பார்த்து செய்திருக்கிறார். ஒரு காட்சியில் மருத்துவமனையிலிருந்து நடந்து வருவார், அதில் காலை அகட்டி மெதுவாக ஒவ்வொரு அடியையும் பார்த்து பார்த்து நடப்பார். ஒரு அசாதாரணமான நடிகையின் அடையாளமது. obeservation to the core.

ஆச்சர்யமுட்டும் இன்னொருவர் ஒரு புதுமுகம். சேரனின் அண்ணியாக வந்து கலக்கியிருக்கிறார். அசலான மதுரை பெண்ணின் முகம். மாமியாரின் பேச்சுக்கு எதிரே பேசாமல்,அதை சமயம் குமைந்துக் கொண்டே கணவரிடம் புகார் சொல்லி தனிக் குடித்தனத்திற்கு அடித்தளம் போடும் போதும், வருடங்கள் கழித்து ராஜ்கிரண் குடும்பத்தோடு அவர்களின் வீட்டுக்கு வரும்போது தண்ணீரைக் கொண்டு வந்து சட்டென்று வைத்து விட்டு சமையலறையில் புகுந்துக் கொள்ளும் போதும், எனக்கு தெரிந்த நிறைய பெண்கள் நினைவில் வந்து விட்டுப் போனார்கள்.

சேரனின் காதலி / மனைவியாக புதுமுகம் பத்மப்பிரியா. அடுத்த படத்தில் பேசலாம். கொஞ்சம் புஷ்டியாய் அந்த கால ப்ரியா ராமன் alias ப்ரியா ரஞ்சித் போல தெரிகிறார். கொஞ்சம் பெரிதான கண்களில் பேச முயன்றிருக்கிறார். better luck next time. கொஞ்சமாய் வந்தாலும், அச்சகத்தில் வேலை செய்யும் இளவரசு நெஞ்சில் நிற்கிறார்.

"நீ பொறக்கும்போது காசுக்கு நான் அலைஞ்சது ஞாபகமிருக்கிறது. நீயும் அப்படிதானே அலைஞ்சிருப்பே. அதனால தான் பார்த்துட்டுப் போகலாம்ன்னு வந்தேன்" என சொல்லாமல் ஒடி வந்த மகனுக்கு குழந்தை பிறந்ததையொட்டி பார்க்கும் போது சொல்லும் வசனத்திலும், "என்னடா இது, அடுப்பு மேல உட்கார்ந்துட்டு போற மாதிரி இருக்கு" என்று சரண்யா, நகர வெஸ்டர்ன் டாய்லெட்டினை சொல்லும்போதும் வசனகர்த்தா சேரன் பாராட்டுக்குரியவராகிறார். கொடுக்கப்பட்ட வேலையினை கனக் கச்சிதமாக செய்திருக்கிறார்கள் பிற கதாபாத்திரங்கள். தண்டல்காராராக வருபவர், சேரனின் அச்சகத்தின் முதலாளி, சேரனின் சென்னை நண்பர், சேரனின் அண்ணனாக வருவபர், பத்மபரியாவின் பாட்டி, தந்தை என எல்லாரும் அருமையான தேர்வுகள். சாதாரணமாக இவ்விதமான micro details எல்லாம், கமல், மணிரத்னம், சங்கர் படங்களில் பார்க்க முடியும். சமீபத்தில் இதனை அமீரின் படத்திலும் (ராம்), இந்த படத்திலும் பார்க்கும்போது தமிழ் சினிமா இயக்குநர்கள் மாறி வருகிறார்கள் என்பதன் அடையாளம். இயக்குநர் சேரன் நிறையவே மாறியிருக்கிறார். பிரச்சாரங்களும், கருத்து சொல்லுதலும் மாறி, உணர்வுப்பூர்வமான ஒரு இயக்குநனனாக தன்னை மாற்றிக் கொண்டு இருக்கிறார். கதை 1970களில் ஆரம்பிக்கிறது. அதற்கேற்றாற்ப்போல் ஒவ்வொரு காலக்கட்டங்களில் அதற்கு ஏற்றாற்ப் போல சினிமா போஸ்டர்கள், ரேடியோக்களில் ஒலிக்கும் பாடல்கள், உடை தேர்வுகள் என்று ஒவ்வொரு சின்ன details எல்லாம் மிக கவனத்துடன் சிரத்தையுடன் செய்திருக்கிறார்.

உணர்வுகள் பலம். கதை ஒரு தகப்பனின் வாழ்க்கைப் பயணம். ஆனாலும், நிறைய படங்களில்,கதைகளில் கேட்ட கிளிஷேகள் படத்திலுண்டு. தனிப்பட்ட முறையில் எனக்கு ஒரு சில குறைபாடுகளுடன், நிறைவாக பார்க்கலாம் என்று சொல்லத் தோன்றுகிறது.

இந்த படத்திற்கு ஆரம்பிக்கும் போது "டூரிங் டாக்கீஸ்" என்று பெயரிருந்தது. அப்போது நான் கேட்ட செய்தி Cinema Paradiso வின் தமிழாக்கம் போல இருக்குமென்று இருந்தது. நல்லவேளை சேரன் தப்பிவிட்டார் ;)

படம்: தவமாய் தவமிருந்து

நடிகர்கள்: ராஜ்கிரண், சரண்யா, சேரன், பத்ம பரியா, இளவரசு

இசை: சபேஷ்-முரளி

கதை, திரைக்கதை, இயக்கம்,வசனங்கள்: சேரன்

நன்றி: நாராயணன்.

http://urpudathathu.blogspot.com/2005/12/b...ost_04.html

p5b1yv.jpg

வாழ்க்கை ஒரு விசித்திரமான வாத்தியார்!

அது பாடம் நடத்திவிட்டு பரீட்சை வைப்பதில்லை. பரீட்சை முடிந்த பிறகே, பாடம் கற்றுக்கொடுக்கிறது! என்பார்கள். அப்படி இழந்த பிறகே உணர்கிற உறவுகளின் அருமையை, இருக்கிறபோதே மதிக்க, பாதுகாக்க, கொண்டாட வேண்டியதன் அவசியம் பற்றிப் பேசுகிற திரைப்படம் இது!

மன்னர்களின் கதைகளையும் மாவீரர்களின் கதைகளையும் சொல்லி வந்த தமிழ் சினிமாவில், முதன்முறையாக ஒரு பலவீனமான ஏழைத் தகப்பனின் கதை. தாயின் பெருமையை மட்டுமே பெரிதாகப் பேசும் உலகத்தில், ஒரு தகப்பனின் பேரன்பைப் பதிவு செய்யும் முயற்சி, தவமாய் தவமிருந்து!

p82vk.jpg

ஒரு சாதாரண மனிதனின் முப்பத்தைந்து வருட வாழ்க்கை... அதுவும் மூன்றரை மணி நேர சினிமா. காமெடி டிராக், அதிரடி ஆக்ஷன், திடீர் திருப்பங்கள், குத்துப் பாட்டு, குழு நடனங்கள் ஏதும் இல்லாத படம்.

கிராமத்து நடுத்தர வர்க்கத் தகப்பனாக ராஜ்கிரண். ஏகப்பட்ட கஷ்ட நஷ்டங்களுக்கு நடுவே நகர்கிற குடும்பம். வாழ்க்கை முழுக்க மகன்களின் நல்வாழ்வுக்காக வட்டிக்குக் கடன் வாங்கிச் செலவழித்து, கடனுக்கு வட்டி கட்டவே வாழ்க்கையோடு போராடும் தகப்பன். தீபாவளிச் செலவு, பாலிடெக்னிக் ஃபீஸ் என ஒவ்வொரு கட்டத்திலும் அல்லாடுகிற, அவமானம் சுமக்கிற, கெஞ்சிக் கூத்தாடி கொண்டுவந்து கொட்டுகிற ஒரு மனிதன்.

p5a9mn.jpg

மூத்த மகனுக்குத் திருமணமாகிறது. வருகிற மருமகளால் குடும்பத்தில் சிக்கல். மூத்த மகன் தனிக்குடித்தனம் போகிறார். இன்னொரு பக்கம் இன்ஜினீயரிங் படிக்கும் சேரன், தன் சக மாணவி பத்மப்ரியாவுடன் காதலாகி, எசகுபிசகான ஒரு சந்தர்ப்பத்தால் கர்ப்பமாகிற காதலியுடன் ஊரை விட்டே ஓடிவிடுகிறார். அவர்களுக்குக் குழந்தை பிறந்த பிறகே ராஜ்கிரணுக்கு விஷயம் தெரியவர, அப்போதும் மகனை மன்னிக்கிறார். தங்களுக்காகவே வாழும் தாய் தகப்பனுக்கு வாழ்வின் எல்லா சந்தோஷங்களையும் தர ஆசைப்படுகிறார் சேரன் என வாழ்வின் ஒவ்வொரு பரிமாணத் தையும் பரிணாமத்தையும் விலாவாரியாக விவரிக்கிற கதை, ஒரு சுடுசொல் தாளாமல் உயிரை விடுகிற தனி மனிதனின் வரலாறாக முடிகிறது.

ஒரே ஒரு ஊருக்குள்ள பாடலில் ஒரு கிராமத்து அப்பாவும் அம்மாவும் தங்களின் இரண்டு மகன்களுடன் பாசமாக சைக்கிளில் பயணிக்கும்போதே, நாமும் அவர்களின் வாழ்க்கைச் சைக்கிளில் தொற்றிக்கொண்டுவிடுகிறோம்.

உங்க பையன் நேத்து விபசார கேஸ்ல மாட்டிக்கிட்டான் என்பதைக் கேட்கும் போது கனவுகள் நொறுங்கிக் கண்ணீர் விடும்போதும், அர்த்தராத்திரியில் காதலியுடன் ஓடிப்போகக் கிளம்புகிறான் இளைய மகன் என்பது புரியாமல், கோயம்புத்தூர்ல ஒரு இன்டர்வியூப்பா என அவன் சொல்லும் பொய்யை நம்பி, திருநீறு பூசி ஆசிர்வதித்து அனுப்பும் போதும், பிள்ளைகளுக்காகவே வாழும் அப்பாவிப் பெற்றோரின் உலகம் நம் நெஞ்சில் அறைகிறது!

வட்டிக்கடைக்காரரிடம் கூனிக் குறுகி நின்றுவிட்டு, பணத்துக்கு ரெடி பண்ணியதும் கண்ணீர் பொங்கக் கண்கள் சிரிக்க நடந்து வரும்போது, ஆயிரமாயிரம் ஏழைத் தகப்பன்களைக் கண் முன் கொண்டுவருகிற ராஜ்கிரணின் லைஃப் டைம் அச்சீவ்மெண்ட் இந்தப் படம்! ஓடிப்போன மகனுக்குக் குழந்தை பிறந்த செய்தி தெரிந்து தேடி வந்து அந்த வீட்டில் அமைதியாக உட்கார்ந் திருப்பாரே... அந்த ஒரு காட்சி போதும். பரிதவிக்கும் பார்வையுடன் ஒரு சித்தரைப் போல நிமிர்ந்து, ஏம்ப்பா இப்படிப் பண்ணினே? எனக் கேட்கிற காட்சி, க்ளாஸ்!

எம் புள்ளைகளுக்கு நா ஏதோ குறை வெச்சுட்டேன் போலிருக்கு, அதான் ரெண்டு பிள்ளைகளுமே என்கிட்ட தங்கலை. நீயாவது உம் பிள்ளைக்கு அந்தக் குறை வராமப் பார்த்துக்கோப்பா என்பது போன்ற இயல்பான வசனங்கள்தான் படத்தைத் தூக்கி நிறுத்து கின்றன தூணாக!

அப்பாவைப் பற்றிய படம்தான் என்றாலும், அவரின் முதுகெலும்பாக வரும் அப்பாவி மனைவியாக அசத்தி இருக்கிறார் சரண்யா. ஏம், உம் பொண்டாட்டி மட்டுந்தேன் அல்வா திம்பாளாக்கும் என மருமகளை லேசாக எரிச்சலாகப் பார்ப்பது போலிருந்தாலும், வகுத்துப் பிள்ளைக்காரிக்குக் கடைப் பலகாரம் குடுத்தா ஒத்துக்காதுப்பா என முடிக்கும்போது, தாய்மையின் கரிசனமே மேலெழுகிறது.

சென்னை வாழ்க்கையில் சிரமமான பொருளாதாரத்தில் கர்ப்பம் சுமந்து கஷ்டப்படும் பெண்ணாக வரும்போது, கலங்கடிக்கிறார் பத்மப்ரியா. படத்தில் காமெடி இல்லாத குறையைத் தீர்ப்பது மூத்த மருமகளாக வரும் புதுமுகம் மீனா. முகச் சுழிப்பும், எதற்கெடுத்தாலும் சண்டைக் கோழியாக மல்லுக்கு நிற்கும் வேகமும், முணுக்கென்றால் ஹஸ்கி வாய்ஸில் முனங்குகிற குரலும்... செம முறுக்கு! ராஜ்கிரணின் அச்சகத் தொழிலாளி அப்பாவி அழகராக பாசமும் விசுவாசமுமாக வளையவரும் இளவரசுவின் காரெக்டர், சமூக அமைப்பில் பாடப்படாத நாயகர்களின் அடையாளம்!

படம் முழுக்க உணர்வுகளின் புயல் மழையாகக் காட்சிக்குக் காட்சி நம்மை நனைத்தெடுக்கிற விதத்தில் கம்பீரமாக ஜெயித்திருக்கிறார் இயக்குநர் சேரன். ஆனால் நடிகர் சேரன், ஃபர்ஸ்ட் கிளாஸில் பாஸாக போராட வேண்டும். அழுகிறபோதெல்லாம் கைகளால் முகத்தை மூடிக்கொள்வது, எம்.ஜி.ஆர். காலத்து ஃபார்முலாங்கோவ்! இன்ஜினீயரிங் படித்த மாணவர் சென்னையில் பிழைக்க ஆயிரம் வழிகள் உண்டு. முக்கால் காலுக்கு மடித்துவிட்ட பேன்ட்டும், கர்ச்சீஃப் கட்டிய தலையுமாகக் கை வண்டி இழுப்பதும்கூட அதே எம்.ஜி.ஆர். காலத்து சினிமா!

கால மாற்றங்களைப் பதிவு செய்ய இயக்குநருடன் மேக்கப் மேன், கேமரா மேன், ஆர்ட் டைரக்டர் என ஒரு கும்பலே கூடி மிகக் கடுமையாக உழைத் திருக்கிறது. நகரத்தில் சேரன் & பத்ம ப்ரியாவின் வாழ்க்கையைக் காட்டும் போது அரை இருளிலேயே பயணிக்கிற எம்.எஸ்.பிரபுவின் கேமராவே பாதி கதை சொல்கிறது. ஒரு அச்சகம் ஒவ்வொரு காலத்திலும் எப்படியெல்லாம் மாறுகிறது என்பதைக் காட்டுவதில் சபாஷ் பெறுவது ஆர்ட் டைரக்டர் ஜே.கே!

ஒரே ஒரு ஊருக்குள்ள பாடலில் ஸ்கோர் பண்ணுகிற சபேஷ் முரளி, இடைவேளைக்குப் பிறகு வருகிற எட்டு நிமிட திரன திரன தீம்திரன எபிசோடின் பின்னணி இசையும், அந்தக் குதூகலக் காட்சிகளும் சிலிர்ப்பூட்டும் சுக ராகம்.

வழக்கமான தமிழ் சினிமாவின் கதை சொல்லும் பாணி இதில் இல்லை. துள்ளவைக்கிற முடிச்சுகளோ, தூக்கிவாரிப்போடும் திருப்பங்களோ கொண்ட காட்சி அமைப்புகள் எதுவும் இல்லவே இல்லை. ஒரு மென்மையான நீரோடை மாதிரி அதன் போக்கில் மிக மெள்ளப் பயணிக்கிறது படம். அடுத்தடுத்து அடுக்கப்பட்டிருக்கும் காட்சிகள் அத்தனையும் யதார்த்த வகை. கூடவே, படம் நீளமோ என்கிற அலுப்பும் அவ்வப்போது ஏற்படுகிறது.

இருந்தாலும்... சிதையும் கூடாக, சிதறடிக்கப்படும் கனவாக, நிறைவேறாத பிரார்த்தனையாக... இப்படித்தானே இருக்கிறது இங்கே ஒவ்வொருவரின் வாழ்க்கையும் எனத் திரையரங்கில் இருந்து வெளியேறுகிற கசிந்த விழிகள் சொல்கின்றன, இந்தப் படைப்பின் முக்கியத்துவத்தையும் மகத்துவத்தையும்.

இதுதான் சேரனின் தவத்துக்குக் கிடைத்திருக்கும் நல்வரம்!

http://www.vikatan.com/

மிகவும் நல்ல ஒரு பாடம் :lol:

தகவல்களுக்கு நன்றி வசிசுதா - KULAKADDAN

  • தொடங்கியவர்

இன்னும் எனக்குப் படம் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. ஆனாலும் குளக்காட்டனின் இணைப்பும் வசி இணைத்த விகடனின் விமர்சனமும் ஓரளவு படத்தைப் பார்த்த திருப்தியைக் கொடுத்தது. நன்றி. மதுரன் சொல்லியது போல் இது படமல்ல பாடம் என்றும் சொல்லலாம்.

சாக்கடைக்குள் இருந்து ஒரு தாமரை 'தவமாய் தவமிருந்து"

வாழ்க சேரனின் படைப்புக்கள்

  • 4 weeks later...

சேரனும் விருதுக்கான தவமும் [தவமாய் தவமிருந்து] - சுரேஷ் கண்ணன்

வாழ்க்கையை அதன் யதார்த்தங்களோடு பிரதிபலிப்பதுதான் ஒரு நல்ல சினிமாவின் அடிப்படையாக இருக்க வேண்டும்; மறுக்கவில்லை. ஆனால் சேரன் இதை வேறு விதமாய் புரிந்து கொண்டாரா என்று தெரியவில்லை. கலைப் படங்கள் என்று பொதுவாக அழைக்கப்படும் திரைப்படங்கள் பற்றி சினிமாவின் தீவிர ரசிகர்கள் அல்லாதவர்களிடம் ஒரு பிம்பம் உள்ளது. "ஒருத்தன் பல்லு வெளக்கறான்னா... அதை அரைமணி நேரம் காட்டுவானுங்கடா". சேரன் அந்த அளவிற்குப் போகவில்லையென்றாலும் கூட கதையை ஒவ்வொரு கட்டத்திலும் சுவாரசியமாக நகர்த்திக் கொண்டே போவது திரைக்கதையின் அடிப்படை என்பதை மறந்து போய் உணர்ச்சிகரமான சம்பவங்களினாலேயே நிதானமாக இந்தப் படத்தை நகர்த்திச் செல்ல முடிவு செய்து விட்டார்.

மென்மையான படங்களுக்கு நிதானமான காட்சியமைப்புகள் நிச்சயம் தேவைதான். ஆனால் அதை மிகவும் அவசியமான இடத்தில் மட்டும் பயன்படுத்தி மற்ற காட்சிகளை ஒரு தவளைப் பாய்ச்சலில் சொல்ல வேண்டும். தனது மூத்த மகனிடம் ஏற்கெனவே ஏற்பட்ட கசப்பான அனுபவத்தினால் இளைய மகனிடம் 'நீ தனிக்குடித்தனம் போயிடுப்பா' என்று சொல்லும் போது "அவ்வாறில்லை. உங்களுக்கு ஏற்கெனவே தந்த துன்பத்திற்கு ஆறுதலாக உங்களிடமேதான் இருக்கப் போகிறேன்' என்று சேரன் மென்மையாகவும் அழுத்தமாகவும் அதை மறுக்கும் இடத்திற்கு நிச்சயம் அந்த நிதானம் தேவைதான்.

சேரன் தன்னுடைய 'ஆட்டோகிராப்' பட வெற்றியின் பாதிப்பிலிருந்து இன்னும் மீண்டு வரவில்லை என்பதையே 'தவமாய் தவமிருந்து' உணர்த்துகிறது. ஒரு மனிதன் தான் கடந்து வந்த பாதையின் நினைவுகளை, வலி, வேதனைகளை, சந்தோஷங்களை அசை போட்டுப் பார்ப்பது சுகமான அனுபவம்தான். ஆனால் முந்தைய வெற்றி தந்த அனுபவத்தைக் கொண்டு மீண்டும் அதே பாணியைப் பயன்படுத்துவது சரியானது அல்ல. (இந்த இடத்தில் மற்றொரு இயக்குநர் லிங்குசாமியின் நினைவு வருகிறது. 'ஆனந்தம்' என்கிற குடும்பப் பாங்கான வெற்றிப் படத்தைக் கொடுத்து விட்டு அடுத்ததாக அதிலிருந்து விலகி 'ரன்' என்கிற ஆக்ஷன் படத்தைத் தந்த தைரியத்தை வியந்தேன்)

()

இந்தப் படக்கதையின் அவுட்லைன் என்னவென்று உங்களில் பலருக்கு அநேகமாய்த் தெரிந்திருக்கும். ஒரு பாசமுள்ள தகப்பனின் 35 ஆண்டுகால வரலாற்றை அவனுடனே பயணம் செய்து நமக்குக் காட்சிகளாய் விரித்திருக்கும் படம். பொதுவாகவே படைப்புகளிலும் திரைப்படங்களிலும் தாய்ப்பாசமே எப்போதும் பிரதானப்படுத்துவதுண்டு. தாய் 'பத்து மாசம் சொமந்து பெத்ததே' பெரிதாகப் பேசப்பட்டாலும் அந்த மகனோ அல்லது மகளோ ஆளாகி தன் சுயக்காலில் நிற்கும் வரையும் - அதற்கும் பின்னாலும் கூட - அவனைத் தன்னுடைய நெஞ்சில் சுமக்கும் தகப்பன்மார்களின் சிரமங்கள் அவ்வளவாகப் பேசப்படுவதில்லை. அந்தக் குறையை இந்தப் படம் நீக்கியிருக்கிறது.

என்றாலும் இந்தப் படம் தகப்பனின் பெருமையை மாத்திரமே பேசுவதாய் நான் நினைக்கவில்லை. மாறாக, இன்றைய இயந்திர வாழ்க்கையில் ஒவ்வொரு மனிதனும் தனித் தீவாகி சக மனிதனை ஒரு போட்டியாளனாகவே பார்த்து, உறவுகளை அறுத்துக் கொண்டு குடும்பம் குடும்பமாய் விலகுவதில் உள்ள அபத்தத்தையும், உறவுகளின் மேன்மையையும், அவசியத்தையுமே சொல்வதாய் நான் நினைக்கிறேன்.

()

ஒரு சராசரி கிராமத்துத் தகப்பனை அப்படியே கண்முன்னே நிறுத்தியிருக்கிறார் ராஜ்கிரண். இம்மாதிரியான நடிகர்கள் சரியாக உபயோகப்படுத்தப் படாமலிருப்பது தமிழ் சினிமாவின் துரதிர்ஷ்டமே. வயதாவதற்கேற்ப அவருடைய ஒப்பனையும், body language-ம் மாறிக் கொண்டே வருவது சிறப்பு. தீபாவளிக்கு மகன்களுக்கு சட்டைத் துணி வாங்கிக் கொடுக்கப் பணமில்லாமல் தவிக்கும்போதும், மகனை இன்ஜினியரிங் காலேஜில் சேர்க்க வட்டிக் கடைக்காரரிடம் கெஞ்சி பணம் வாங்கிக் கொண்டு கண்ணீரும், தன்னை அழுத்திக் கொண்டிருந்த துயரத்திலிருந்து விடுபட்ட உணர்வுப் புன்னகையுடனும் வெளியே வரும் போதும், எந்தப் பெண்ணுடனோ ஓடிப்போன இளையமகன் பட்டணத்தில் சிரமப்படுகிறான் என்பதை அறிந்து அவன் வீட்டுக்கு வந்து மெளனமாய் வெறித்த பார்வையுடன் காத்திருக்கும் போதும்... என்று சில பல காட்சிகளில் ராஜ்கிரண் தன் பாத்திரத்தை சரியாக உணர்ந்து அதற்கேற்ப எதிர்வினையாற்றியிருக்கிறார

நல்ல படம் என்று சொல்வதால் ஒரிஜினல் கொப்பி கிடைத்ததும் பார்க்கலாம் என்றிருக்கின்றேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.