Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறிலங்காவினைக் காப்பாற்றுவதற்கு ரஷ்யா, சீனாவால் முடியும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

[ திங்கட்கிழமை, 27 யூன் 2011, 12:16 GMT ] [ தி.வண்ணமதி ]

ஐ.நாவின் பாதுகாப்புச் சபையில் சிறிலங்காவிற்கு எதிராகக் கொண்டுவரப்படக்கூடிய எத்தகைய நடவடிக்கையிலுமிருந்து சிறிலங்காவினைக் காப்பாற்றுவதற்கு ஜின்ரோ மற்றும் டிமிற்ரி மெட்வெடேவ் [Jintao and Medvedev] ஆகியோரால் முடியும். அனைத்துலக அரங்கில் சத்தமில்லாத ஆதரவினை வழங்குவதற்கு இந்தியா தயாராகவே இருக்கிறது.

இவ்வாறு இந்திய ஊடகமான Hindustan Times செய்தியாளர் Sutirtho Patranobis எழுதியுள்ள தனது செய்தி ஆய்வில் தெரிவித்துள்ளார். அதனை 'புதினப்பலகை'க்காக [www.puthinappalakai.com] மொழியாக்கம் செய்தவர் தி.வண்ணமதி.

ரசியாவின் சென் ஸ்பீட்டர்பேஸ்க் பகுதியில் கடந்த வாரம் இடம்பெற்ற பொருளாதாரம்சார் கலந்துரையாடலொன்றில் தனது நண்பர்களான யூ ஜின்ரோ மற்றும் டிமிற்ரி மெட்வெடேவ் ஆகியோரை சிறிலங்காவினது அதிபர் மகிந்த ராஜபக்ச சந்தித்தபின்னர் அவர் தற்போது தைரியத்துடன் இருக்கக்கூடும்.

வழமையான வெள்ளைநிற சட்டையினையும் சிவப்பு நிற துண்டையும் அணிந்திருக்கும் ராஜபக்ச அண்மைய காலங்களில் சற்றே கோபமுற்றிருந்தமைக்கு அவரை எவரும் குறைகூறமுடியாது.

குறிப்பாகக் கடந்த மூன்றுமாத காலத்தினை நோக்குமிடத்து, அதிபர் ராஜபக்ச திடமான மனதினைக்கொண்ட ஒருவர் என்ற தனது பெயரைத் தக்கவைத்துக்கொள்வதற்கு அவர் பாடாயப் படுகிறார்.

இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்களின் விளைவாக இராசதந்திர ரீதியில் ஒரு மூலையில் ஒதுக்கப்பட்டிருக்கும் ராஜபக்ச பலம்பொருந்திய இதுபோன்ற தனது நண்பர்களைச் சந்திப்பதன் ஊடாக இந்த இருள்சூழ்ந்த இந்த நிலைமையிலிருந்து விடுபட முனைகிறார்.

முதலில் ஏப்பிரலில் ஐ.நா வல்லுநர்கள் குழுவின் அறிக்கை வெளிவந்து தலையிடியினைக் கொடுத்தது, தொடர்ந்து மேயில் ஐ.நாவின் சிறிலங்காவிற்கான முன்னாள் பேச்சாளர் கோர்டன் வைசினது 'சிறைக்கூண்டு' என்ற புத்தகம் வெளிவந்தது.

இதன்பின்னர் இப்போது யூனில் சனல் -4 தொலைக்காட்சியின் சிறிலங்காவினது கொலைக்களம் என்ற ஆவணப்படம் சிறிலங்காவிற்கு என்றுமில்லாத தலையிடியினை ஏற்படுத்தியிருக்கிறது.

போரின் இறுதிநாட்களில் பொதுமக்களை இலக்குவைத்து சிறிலங்கா இராணுவத்தினர் வேண்டுமென்றே தாக்குதல் நடாத்தி ஆயிரக்கணக்கானவர்களைக் கொலைசெய்ததாக இந்த மூன்றுமே சிறிலங்கா அரசாங்கத்தின் மீது குற்றம் சுமத்துகிறது.

போர்க் குற்றங்கள் தொடர்பான 'நம்பத்தகுந்த குற்றச்சாட்டுக்கள்' பற்றி ஐ.நா அறிக்கை ஆராயும் அதேநேரம் சனல்-4 தொலைக்காட்சியின் ஆவணப்படத்தில் படைத்துறைப் பாணியில் அமைந்த, கையடக்கத்தொலைபேசிகளில் பதியப்பட்ட, கைதிகள் சுட்டுக்கொல்லப்படும் காட்சிகளும் முறைகேட்டிற்கு உட்படுத்தப்பட்டபின்னர் சுட்டுக்கொல்லப்பட்ட ஆடைகள் களையப்பட்ட பெண்களின் உடலங்கள் உளவூர்தியில் ஏற்றப்படும் காட்சிகளும் உள்ளடக்கப்பட்டிருக்கின்றன.

பாதுகாப்பு வலயங்கள் மற்றும் மருத்துவமனைகளை இலக்குவைத்து சிறிலங்கா அரச படையினர் மேற்கொண்ட சரமாரியான ஆட்லறி எறிகணைத் தாக்குதல்கள், திட்டமிட்ட பாலியல் வல்லுறவுகள் மற்றும் முறைகேடுகள், உணவு மற்றும் மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் மறுக்கப்பட்டமை தொடர்பாக இந்த 50 நிமிட ஆவணப்படத்தில் ஆராயப்படுகிறது. இந்தக் குற்றச்சாட்டுக்களுக்கு வலுச்சேர்க்கும் வகையிலான பல அநாமதேய நேர்காணல்களும் இதில் உள்ளடக்கப்பட்டிருக்கின்றன.

குறித்த இந்த ஆவணப்படத்தில் இறுதிப்பகுதிதான் அதிக குழப்பம் தருவதாக அமைகிறது. கைகள் கட்டப்பட்ட நிலையில் ஆடைகள் களையப்பட்ட ஆண்களும் பெண்களும் சுட்டுக்கொல்லப்படும் காட்சிகள், இறந்தவர்கள் தொடர்பாக படையினர் கேவலமாகப் பகிடிவிடும் காட்சிகள் இதில் உள்ளடக்கப்பட்டிருக்கின்றன.

இறந்துகிடக்கும் ஒரு பெண்ணின் உடலைக் காட்டி "இவள் யாரோ ஒருவரது செயலாளராக இருக்கவேண்டும். அதுதான் ஏராளம் பேனைகளையும் பென்சில்களையும் வைத்திருக்கிறாள்" என ஏளனப் புன்னகையுடன் சிங்களத்தில் கூறுகிறான் ஒரு படையினன்.

ஒரு மணி நேரம் கொண்ட இந்த ஆவணப்படத்தினை யூன் 03ஆம் நாளன்று சனல்-4 தொலைக்காட்சி ஐ.நாவில் திரையிட்டிருந்தது.

இந்த ஆவணப்படம் தொடர்பாக ஐ.நாவின் நீதிக்குப்புறம்பான கொலைகளுக்கான சிறப்பு விசாரணையாளர் கிறிஸ்ரொப் கெய்ன்ஸ் ஏ.வ்.பி செய்திச்சேவையிடம் கருத்துத் தெரிவிக்கையில், "இதுபோல மக்கள் கொல்லப்படும்போது எடுக்கப்படும் காட்சிகள் கிடைப்பது மிகவும் அரிது. குற்றம்புரிந்தவர்களே நினைவுச்சின்னமாகப் பேணுவதற்காக எடுத்த படங்கள் இவை" என்கிறார் கெய்ன்ஸ்.

2009ம் ஆண்டு போரின் இறுதி நாட்களில் "போர்க் குற்றங்கள் இடம்பெற்றதை இந்தப் படங்கள் உறுதிப்படுத்துகின்றன" என அவர் மேலும் தெரிவித்தார்.

பாதுகாப்பு வலயப் பகுதியாகப் பிரகடனப்படுத்தப்பட்ட பகுதிகளில் பல நூற்றுக்கணக்கான எறிகணைகள் வீழ்ந்து வெடித்ததாகவும் பொதுமக்கள் தயவு தாட்சண்ணமின்றி தாக்குதலுக்கு உள்ளானதாகவும் தனது நண்பர்கள் கூறியதாக 2009ம் ஆண்டினது முதல்பகுதியில் கொழும்புக்கான ஐ.நாவின் முன்னாள் பேச்சாளராக இருந்த 'சிறைக்கூண்டு' என்ற புத்தகத்தின் எழுத்தாளரான கோர்டன் வைஸ் கூறுகிறார்.

பொதுமக்களை வேண்டுமென்றே இலக்குவைத்துத் தாக்குதல்களை நடாத்தியமை, கட்டாய ஆட்திரட்டலை மேற்கொண்டமை உள்ளிட்ட மோசமான போர்க் குற்றங்களில் விடுதலைப் புலிகளும் ஈடுபட்டார்கள் எனக் குற்றம் சுமத்தப்படுகிறது.

ஆனால் எதிர்பார்க்கப்பட்டதுபோலவே சனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட கொழும்பு அரசாங்கத்தின் மீது அதிக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.

இங்கு மிக மோசமான விடயம் யாதெனில், பாதுகாப்பு வலயம் என்ற ஒன்றைப் பிரகடனப்படுத்திய சிறிலங்கா இராணுவத்தினர் பொதுமக்களை அந்தப் பகுதிகளுக்குள் செல்லுமாறும் அவர்களது பாதுகாப்பு உறுதிப்படுமென்றும் அறிவித்திருந்தனர்.

ஆனால் தங்களது வாக்குறுதிகளுக்கு எதிராகச் செயற்பட்ட அரச படையினர் பொதுமக்கள் செறிந்திருந்த பாதுகாப்பு வலயப் பகுதிகளை இலக்குவைத்து சரமாரியான எறிகணைத் தாக்குதல்களை மேற்கொண்டிருக்கிறார்கள்.

"வன்னி மக்களே: வன்னியில் விடுதலைப் புலிகளின் இரக்கமற்ற பயங்கரவாதச் செயற்பாடுகளினால் கடும் துன்பத்திற்கு முகம்கொடுத்திற்கும் மக்களை விடுவிக்கும் வகையில் நாங்கள் இறுதிக்கட்டப் போரை முன்னெடுத்திருக்கிறோம்... இந்தப் போரில் மனித இழப்புக்களைத் தவிர்ப்பதற்காக சிறிலங்கா அரசாங்கத்தினராகிய நாங்கள் எங்களால் முடிந்த நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றோம். ... ஆதலினால் எங்களது அன்புக்குரிய தமிழர்களே இடம்பெறப்போகும் இந்தப் பேரனர்த்தத்திலிருந்து உங்களைப் பாதுகாப்பதற்காக உடனடியாக அரசாங்கத்தினால் விடுவிக்கப்பட்ட பகுதிகளுக்கு வந்துசேருமாறு கோருகிறோம்" என ஓகஸ்ட் 2008ல் கிளிநொச்சியில் சிறிலங்கா விமானப்படையினரினால் வீசப்பட்ட துண்டுப்பிரசுரங்களில் குறிப்பிடப்பட்டிருப்பதாக ஐ.நா அறிக்கையொன்று கூறுகிறது.

சிறிலங்கா அரச படையினருக்கு எதிரான போர்க்குற்றச்சாட்டுக்கள் அனைத்துலக ரீதியில் பரவலாக முன்வைக்கப்பட்ட வேளையிலும்கூட "பொதுமக்களை எவருக்கும் எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாதவகையில் பயங்கரவாத அமைப்பொன்றை இல்லைதொழிப்பதற்கான அடிப்படைகள்" என்ன என்ற தனது அனுபவத்தினை இதர நாடுகளுக்கு எடுத்துவிளக்கும் வகையில் கருத்தரங்கு ஒன்றைச் சிறிலங்கா இராணுவத்தினர் பெருமையுடன் ஒழுங்குசெய்திருந்தார்கள்.

குறித்த ஒரு சம்பவத்தினை சிறிலங்கா அரச படையினர் ஒரு விதமாகவும் ஐ.நா அறிக்கையும் 'சிறைக்கூண்டு' என்ற புத்தகமும் வேறுவிதமாகவும் விபரிப்பது விநோதமானது.

கொழும்பில் இடம்பெற்ற சிறிலங்கா இராணுவத்தினரின் கருத்தமர்வில் சிறிலங்கா இராணுவத் தளபதியும் போரின் இறுதி நாட்களில் இராணுவத்தின் முதன்மையான படைப்பிரிவு ஒன்றை வழிநடத்தியவருமான மேஜனர் ஜெனரல் சவேந்திர சில்வா கருத்துரைத்திருந்தார்.

தங்களது தோல்வி தவிர்க்கமுடியாத ஒன்று என்றாகிவிட்ட நிலையில் விடுதலைப் புலிகள் பொதுமக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தினார்கள் என விபரித்த சவேந்திர சில்வா இராணுவத்தினரது செயற்பாடுகளைப் புகழ்ந்து தள்ளினார்.

"பொதுமக்களின் பாதுகாப்பினைக் கருத்திற்கொண்டு பாதுகாப்பு வலயம் எனப் பிரகடனப்படுத்தப்பட்ட பகுதியில் கனரக ஆயுதங்களை நிலைப்படுத்தி படையினர் மீது தாக்குதல் நடாத்தியதன் ஊடாகப் பொதுமக்களை புலிகள் மனிதக் கேடயமாகப் பயன்படுத்தினர். பொதுமக்களது கூடாரங்கள் அமைந்திருந்த பகுதிகளுக்கு நடுவாகவே புலிகள் தங்களது தற்காப்பு நிலைகளை அமைத்திருந்ததை அவதானிக்கமுடிந்தது. உடையார்கட்டு மற்றும் வள்ளிபுனம் பகுதிகளில் அமைந்திருந்த தற்காலிக மருத்துவமனைகள், உடையார்கட்டில் அமைந்திருந்த அனைத்துலக செஞ்சிலுவைக் குழுவின் அலுவலகம், புதுக்குடியிருப்பு பகுதியில் அமைந்திருந்த ஐ.நா வளாகம் ஆகியவற்றுக்கு அருகாகவும் விடுதலைப் புலிகள் தங்களது கனரக ஆயுதங்களை நிலைப்படுத்தியிருந்தனர்" என சவேந்திர சில்வா தொடர்ந்தார்.

தற்போது இதே சம்பவங்கள் தொடர்பான ஐ.நாவின் தகவலைப் பார்ப்போம். "சனவரி 19 மற்றும் 21 ஆகிய நாட்களில் வள்ளிபுனம் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக மருத்துவமனையில் சிறிலங்கா இராணுவத்தினர் ஏவிய எறிகணைகள் வீழ்ந்து வெடித்தமையினால் நோயாளர்கள் பலர் காயமடைந்தனர். வன்னிப் பகுதியில் இடம்பெற்ற போரின்போது தற்காலிக மருத்துவமனைகளாக இருக்கலாம் அன்றி நிரந்தர மருத்துவமனைகளாக இருக்கலாம் அனைத்துமே படையினரின் ஆட்லறித் தாக்குதலுக்கு உள்ளாகியிருந்தன. குறிப்பாக காயமடைந்த விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களையும் கொண்டிருந்த மருத்துவமனைகள் மீண்டும் மீண்டும் தாக்குதலுக்கு உள்ளாகின" என ஐ.நா வல்லுநர்கள் குழுவின் அறிக்கை விபரிக்கிறது.

ஐ.நா வல்லுநர்கள் குழுவின் அறிக்கைக்கு அரசாங்கத்தின் பதில் எதிர்பார்க்கப்பட்டதுபோலவே இருந்தது: ஐ.நா அறிக்கையானது 'அடிப்படையில் அர்த்தமற்றது' அத்துடன் இந்த அறிக்கை 'போலியானது'. புலம்பெயர் தமிழர்களின் சார்பில் தயாரிக்கப்பட்ட அறிக்கையிது. குறித்த இந்த ஆவணத்தின் மோசமான உள்ளடக்கங்கள், அரசாங்கம் முன்னெடுத்துவரும் போருக்குப் பின்னான நல்லிணகத்தில் எந்தவிதமான பாதிப்பினையும் ஏற்படுத்திவிடப்போவதில்லை. சிறிலங்காவிலுள்ள பலதரப்பட்ட சமூகங்கள் மத்தியில் வெறுப்புணர்வினை விதைப்பதற்கே இந்த அறிக்கை துணைநிற்கும் எனச் சிறிலங்கா அரசாங்கம் ஐ.நா வல்லுநர்கள் குழுவின் அறிக்கை தொடர்பாகக் கருத்துரைத்திருந்தது.

பிரித்தானியாவிலிருந்து ஒளிபரப்பாகும் சனல்-4 தொலைக்காட்சியின் ஆவணப்படம் தொடர்பாக அரசாங்கம் சட்ட நடவடிக்கை எதனையும் முன்னெடுக்குமா அல்லது இல்லையா எனத் தனக்குத் தெரியாது என்றும் 'ஆனால் பொருத்தமான நடவடிக்கையினை அரசாங்கம் கட்டாயம் எடுக்கும்' என்றும் சட்டமா அதிபர் மோகன் பீரிஸ் கூறுகிறார்.

இந்த மாதம் ஜெனீவாவில் இடம்பெற்ற ஐ.நா மனித உரிமைச் சபையின் கூட்டத்தொடரில் சிறிலங்காவின் வாதத்தினை வலுப்படுத்தும் நோக்கில் மோகன் பீரிஸ் கருத்துரைத்திருந்தார். சிறிலங்காவில் அமைக்கப்பட்டிருக்கும் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவினை அங்கீகரிப்பதோடு அதன் முன்தோன்றி அனைத்துலக நிறுவனங்களும் ஊடக அமைப்புக்களும் சாட்சியமளிக்கவேண்டும் என்றும் சட்டமா அதிபர் கோரினர்.

"சிறிலங்காவிற்கு வெளியே வாழும் பிரிவினையினை விரும்பும் தரப்புகளின் நலன்களைக் கருத்திற்கொண்டு செயற்படும் ஒரு சில அனைத்துலக ஊடகங்கள் முன்னெடுக்கும் சிறிலங்காவிற்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் நோக்கிலமைந்த செயற்பாடுகள்தான் இவை. சிறிலங்கா ஆற்றுவதற்கு முனையும் போர் தந்த காயங்களை கிண்டிக் கிழறுவதன் ஊடாக நாட்டினை மீண்டும் மோதல் நிலைக்குத் தள்ளுவதுதான் இவர்களது இறுதி இலக்கு. நாட்டினது எதிர்காலச் சந்ததியினர் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினர் மத்தியில் பகைமை உணர்வினை வளர்ப்பதை நோக்காகக் கொண்டதுதான் சனல்-4 தொலைக்காட்சியின் ஆவணப்படம். தற்போது சிறிலங்காவில் முன்னெடுக்கப்பட்டுவரும் இன நல்லிணக்க முனைப்புக்களை இது பாதிக்கிறது" என சிறிலங்கா அரசாங்கம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

ஆனால் இந்த வாதம் வெறும் குப்பையே என்கிறார்கள் அவதானிகள்.

"சிறிலங்காவிலுள்ள சமூகங்களின் மத்தியில் இந்த ஆவணப்படம் மேலும் பிரிவினையினை ஏற்படுத்தும் என்று நான் கருதவில்லை. இனங்களின் மத்தியில் ஏலவே ஏற்பட்டிருக்கும் இந்தப் பிளவு ஆற்றுப்படுத்தக்கூடியதே. உண்மையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிபுரிவதற்குப் பதிலாக அரசாங்கம் இடம்பெற்றவை அனைத்தையும் எடுத்த எடுப்பில் மறுக்கும் உபாயத்தினைக் கைக்கொள்கிறது. அத்துடன் தனக்கிருக்கும் அதிகாரங்களைப் பயன்படுத்தி சிங்கள சித்தாந்தங்களின் அடிப்படையிலமைந்த வாதங்களைத் திணிப்பதற்கும் அரசாங்கம் முனைகிறது. இவைதான் இன்று காணப்படும் பெரும் தடைகள். மேற்குறித்த இந்த எண்ணத்துடன் செயற்படும் அனைவருமே ஆவணப்படத்தின் நன்மதிப்பினைக் கெடுக்கும் வகையிலமையும் காரணங்களைத் தேடுகிறார்கள்" என்கிறார் மனித உரிமைகளுக்கான பல்கலைக்கழக ஆசிரியர்கள் (யாழ்ப்பாணம்) என்ற மனித உரிமை அமைப்பினைச் சேர்ந்த ராஜன் கூல் கூறுகிறார்.

"சிங்களவர்கள் உள்ளிட்ட பலருக்கு உண்மையில் நடந்தது என்ன என்பது நன்கு தெரியும். விடுதலைப் புலிகள் எவரையும் மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தவில்லை என்றும் விடுதலைப் புலிகளுக்குக் தங்களது ஆதரவினை வழங்கிநின்ற பொதுமக்களே போரின் இறுதிநாள் வரையும் புலிகளுடன் இணைந்திருந்தார்கள் என்றும் வாதிடும் புலிகளின் பரப்புரைக்குத் துணைநின்ற அவர்களது ஆதரவாளர்களது செயற்பாடுகள் தொடர்பில் பேசவிரும்பியவர்களின் வாய்களை அடைப்பதாகவே போரின் இறுதி நாட்களில் எதுவுமே இடம்பெறவில்லை என்ற அரசாங்கத்தின் மறுப்பு அமைகிறது" என ராஜன் கூல் தொடர்ந்து தெரிவித்தார்.

இதே கருத்தினையே பத்தியாளர் திசாரனே குணசேகரவும் கொண்டிருக்கிறார். "குற்றங்கள் எதுவுமே இடம்பெறவில்லை என்ற அரசாங்கத்தின் வாதத்தில் எந்தவிதமான அர்த்தமும் இல்லை. இது வெறுமனே ஒரு சாட்டுத்தான். இனக்குழுமங்கள் மத்தியிலான பிணக்கு தொடர்ந்தும் இருக்கத்தான் செய்கிறது. போரின் இறுதி நாட்களில் உண்மையில் என்ன நடந்தது என்பது தொடர்பில் பலதரப்பட்ட மட்டங்களிலும் வெளிப்படையான கருத்துப்பரிமாற்றங்கள் இடம்பெறுவதற்கு வழிசெய்வதுதான் ஏற்பட்ட காயங்கள் ஆறுவதற்கும் சமூகங்களுக்கு இடையிலான உறவுகள் வலுப்பெறுவதற்கும் வழிசெய்யும்" என்கிறார் அவர்.

"இதுபோன்றதொரு செயல்முறைதான் காயங்கள் ஆறுவதற்கு வழிசெய்யும். இறந்துபோன தங்களது உறவுகளை எண்ணித் துன்பத்தினைப் பகிர்ந்துகொள்வதற்கான வழிவகைகள் தமிழர்களுக்குத் தேவை. இறந்துவிட்ட உறவுகளுக்காக துக்கம் செலுத்துவதுகூட முடியாதுபோகும்போது இந்த வேதனை கோபமாக மாறும். இங்கு குற்றமிழைத்தவர்கள் தண்டிக்கப்படவேண்டுமென்றல்ல. இந்தப் பிரச்சினையினை இயல்புடன் அணுகுவதுதான் காயங்கள் ஆறுவதற்கு வழிசெய்யும். தங்களது கரங்கள் தூய்மையானது என்றும் போரின்போது தாங்கள் தவறிழைக்கவில்லை என்றும் சிங்களவர்கள் வாதிடும்வரைக்கும் தமிழர்களும் தமக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளைக் கூறிக்கொண்டேயிருப்பார்கள். இதுபோன்ற நிலை தொடரின் இதற்கு முடிவு என்பது இருக்காது" என பத்தியாளர் குணசேகர கூறுகிறார்.

அரசாங்கத்தின் பத்திரிகைத்தணிக்கை தொடர்பாக தமக்கிருக்கும் தனிப்பட்ட அச்சுறுத்தலையும் பொருட்படுத்தாது ராஜன்கூலும் குணசேகரவும் தங்களது கருத்துக்களைப் பரிமாறியிருந்தனர். ஆனால் இதுவிடயம் தொடர்பாக மன்னார் மறைமாவட்ட ஆயர் ராஜப்பு ஜோசப்புடன் தொடர்புகொண்டு கோரியபோது அவர் பதிலெதனையும் வழங்க மறுத்துவிட்டார்.

"இதுபோலக் கருத்துரைப்பது எனக்கு ஆபத்தானது" என ஆயர் ராஜப்பு ஜோசப் பதிலளித்திருந்தார்.

கடந்த ஆண்டு கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் முன்னால் தோன்றிய ஆயர் ராஜப்பு ஜோசப், நாட்டினது வடக்குப் பகுதியில் வாழ்ந்துவந்த 146,000 பொதுமக்கள் காணாமற்போயிருப்பதாகவும் அவர்களுக்கு என்ன நடந்தது என்றும் அவர் கேள்வியெழுப்பியிருந்தார்.

முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டச் செயலகங்களால் வெளியிடப்பட்ட தகவல்களின் அடிப்படையில் ஒக்ரோபர் 2008ம் ஆண்டு வன்னியின் மொத்த சனத்தொகை 429,059 ஆக இருந்திருக்கிறது. ஐக்கிய நாடுகள் சபையினது கணக்கின்படி போர் முடிவுக்குவந்த கையோடு 282,380 பொதுமக்கள் வன்னிப்பகுதியிலிருந்து வெளியேறியிருக்கிறார்கள். எஞ்சிய 146,679 என்ன நடந்தது என வணக்கத்துக்குரிய ஆயர் ராஜப்பு ஜோசப் அவர்கள் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக் ஆணைக்குழுவிடம் கேள்வி எழுப்பியிருந்தார்.

முடிவு

சனல்-4 தொலைக்காட்சியில் சிறிலங்காவினது கொலைக்களம் என்ற ஆவணப்படம் திரையிடப்பட்ட பின்னர் இலங்கைத்தீவில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான அனைத்துலக விசாரணைகள் மேற்கொள்ளப்படவேண்டும் என்ற தனது அழைப்பினை பிரித்தானியா மீண்டும் விடுத்திருந்தது.

"கவலை தருகின்ற சம்பவங்கள் இடம்பெற்றதாகக் கூறப்படுகிறது. குறிப்பிட்ட இந்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக சிறிலங்கா அரசாங்கமும் ஐக்கிய நாடுகள் சபையும் விசாரணைகளை நடாத்தவேண்டிய தேவை உள்ளது. உண்மையில் நடந்தது என்ன என்பதையும் இதிலிருந்து நாங்கள் கற்றுக்கொள்ளும் பாடம்தான் என்ன என்பதையும் நாங்கள் அறியவேண்டும்" என பிரித்தானியப் பிரமர் டேவிற் கமறோன் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

"அனைத்துலக மனித உரிமைச் சட்டங்கள் மற்றும் மனித உரிமைகள் சிறிலங்காவில் மீறப்பட்டிருப்பதை வெளிப்படுத்தும் நம்பத்தகுந்த குற்றச்சாட்டுக்கள் வெளியிடப்பட்டிருப்பது தொடர்பில் நாங்கள் அதிக கரிசனையுடன் இருக்கிறோம். அனைத்துலக மனிதாபிமான மற்றும் மனித உரிமைச் சட்டங்களை மீறும்வகையில் செயற்பட்டவர்கள் யாரோ அவர்கள் பொறுப்புச்சொல்லும் செயல்முறைக்கு உட்படுவதை நாங்கள் முழுமையாக ஆதரிக்கிறோம்" என கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரக அதிகாரி ஒருவர் கடந்த வாரம் சண்டே லீடர் பத்திரிகைக்குத் தெரிவித்திருக்கிறார்.

சிறிலங்கா மீது முன்வைக்கப்படும் இத்தகைய குற்றச்சாட்டுகளுக்கு இந்தியா இதுவரை வாய்திறந்து எந்தக் கருத்தினையும் வெளியிடவில்லை. அண்மையில் இரு நாடுகளும் வெளியிட்ட கூட்டு அறிக்கையில், மனித உரிமை மீறல்களை விசாரிக்கமாறும் அவசரகாலச் சட்டத்தினை மீளப்பபெறுமாறும் புதுடில்லி கொழும்பினைக் கோரியிருக்கிறது. ஆனால் இந்தியா குறிப்பாக எந்த விடயத்தினையும் கூறவில்லை.

அனைத்துலக நிறுவனங்களால் நாடுகள் தேர்ந்தெடுக்கப்பட்டு தாக்கப்படுவதைத் தாங்கள் விரும்பவில்லை என யூன் 11ம் நாளன்று இந்தியாவின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவ் சங்கர் மேனன் குறிப்பிட்டிருந்தார்.

இதுவிடயம் தொடர்பான புதுடில்லியின் நிலைப்பாட்டினை விளக்குவது சுலபமானது. இந்தியாவினதும் சிறிலங்காவினதும் பூகோள அமைவிடத்தின் விளைவாக இரு நாடுகளுக்கும் இடையிலான கலாச்சார மற்றும் வரலாற்று ரீதியிலான தொடர்புகள் வலுவானது. ஆனால் பொருளாதார ரீதியில் சீனா சிறிலங்காவில் காலூன்றியிருப்பினும் உள்நாட்டு அரசியல் விவகாரங்களில் அதன் ஈடுபாடின்மையும் முரண்பாடுகளும் இங்கு கவனிக்கவேண்டிய விடயம்.

எது எவ்வாறிப்பினும் இடம்பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணையினை மேற்கொள்ளும் நோக்கம் எதுவும் மகிந்த அரசாங்கத்திடம் இருப்பதாகத் தெரியவில்லை. தான் ஏற்கனவே அமைத்திருக்கும் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் துணையுடன் அனைத்துலக விசாரணைகள் மேற்கொள்ளப்படவேண்டும் என்ற வாதங்களைச் சிறிலங்கா முறியடிக்க முனைகிறது.

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவானது கொள்கை ரீதியிலும் நடைமுறையிலும் முறையாகச் செயற்படவில்லை. பொறுப்புச்சொல்லும் செயன்முறையினை முன்னெடுக்கும் எந்த ஆணையும் இதற்கு இல்லை.

சுதந்திரமாகவும், பக்கச்சார்பின்னிறியும், வெளிப்படைத்தன்மையுடனும் இது செயலாற்றவில்லை. பாதிக்கப்பட்டவர்களை நடாத்துதல் மற்றும் சாட்சியங்களைப் பாதுகாக்கும் முறை ஆகிய அம்சங்களில் இந்த ஆணைக்குழுவானது அனைத்துலக தரத்திற்கு அமையச் செயற்படவில்லை'என ஐ.நா வல்லுநர்கள் குழுவின் அறிக்கை கூறுகிறது.

ஆனால் ராஜபக்சவினால் இலகுவாகத் தன்னை ஆசுவாசப்படுத்திக்கொள்ள முடியும். ஐ.நாவின் பாதுகாப்புச் சபையில் சிறிலங்காவிற்கு எதிராகக் கொண்டுவரப்படக்கூடிய எத்தகைய நடவடிக்கையிலுமிருந்து சிறிலங்காவினைக் காப்பாற்றுவதற்கு யூ ஜின்ரோ மற்றும் டிமிற்ரி மெட்வெடேவ் ஆகியோரால் முடியும். அனைத்துலக அரங்கில் சத்தமில்லாத ஆதரவினை வழங்குவதற்கு இந்தியா தயாராகவே இருக்கிறது.

போரின் இறுதி நாட்களில் கொல்லப்பட்ட சரியான எண்ணிக்கை எதுவெனத் தெரியாத பெருந்தொகையானோரின் பிரச்சினை ஒருபோதும் தீர்க்கப்படாது.

போர் தந்த இந்த வடுக்கள் ஆற்றப்படுவதற்குப் பதிலாக நீறுபூத்த நெருப்பாக அது என்றும் நெஞ்சங்களில் நிலைத்திருக்கும்.

http://www.puthinappalakai.com/view.php?20110627104158

அதாவது அமெரிக்காவாலோ, ஐரோப்பிய நாடுகளாலோ போற்குற்றவாளிகளை தண்டிக்க முடியாது என்கிறார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.