Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காலில் விழ மறுத்த சேதுராகவன் - குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக தமிழ்மாறன்

Featured Replies

காலில் விழ மறுத்த சேதுராகவன் - குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக தமிழ்மாறன்

24 செப்டம்பர் 2011

mullai%20sutdent_CI.jpg

ஈழத்தில் நடத்தப்பட்ட யுத்தம் குழந்தைகளின் மனங்களில் ஆறாத காயங்களாக படிந்திருக்கின்றன. குழந்தைகள் எந்த அரசியல் நோக்கங்களுமற்றவர்கள். குழந்தைகள் அமைதியான உலகத்தை எப்பொழுதும் எதிர்பார்க்கிறார்கள். ஆனால் ஈழத்துக் குழந்தைகளுக்கு அந்த உலகம் மறுக்கப்பட்டிருக்கிறது. அழிவும் அச்சமும் கொண்ட வாழ்க்கைதான் தொடர்ந்தும் பரிசளிக்கப்படுகிறது. குழந்தைகளின் மனங்களிலிருந்து எழும் கோபத்தையும் விரக்தியையும் யாரும் கண்டுகொள்ளுவதில்லை. அவைக்கான காரணங்களைத் தேடுவதில்லை. குழந்தைகளை அர்ப்பங்களாக பார்த்துவிட்டு கடந்து கொண்டிருக்கிறார்கள். குழந்தைகளிடம் இருக்கிற வார்த்தைகளும் கோபமும் விரக்தியும் எந்த அரசியல் சுயநலக் குறிக்கோள்களையும் கொண்டிருப்பதில்லை. அவர்களின் கோபங்கள் எங்கிருந்து ஏன் வருகின்றன என்பதுதான் முக்கியமானது. அழகான குழந்தைகளின் மனவுலகம் பல்வேறு அரசியல்களுக்காக தொடர்ந்தும் சிதைக்கப்படுகின்றன.

அண்மையில் யாழ் நூலகத்தில் புலமைப் பரிசில் பரீட்சையில் அதிசிறந்த புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முன்னணிப் பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களில் பரமேஸ்வரன் சேதுராகவன் என்ற மாணவன் அகில இலங்கை ரீதியாக 194 புள்ளிகளைப் பெற்று இரண்டாம் இடத்தைப் பெற்றதற்காக கௌரவிக்கப்பட்டான். தனது தாய் தந்தையருடன் வருகை வந்த சேதுராகவன் அன்றைய நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வருகை தந்த கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தனவின் கால்களில் விழுந்து வணங்க மறுத்திருக்கிறாரன். அதிசிறந்த புள்ளியைப் பெற்று அகில இலங்கை ரீதியாக இரண்டாம் இடத்தைப் பெற்றுக் கொண்ட சேதுராகவரனை கல்வி அமைச்சர் கௌரவித்து பரிசில் வழங்கிய பொழுது கல்வி அமைச்சரை விழுந்து கும்பிட்டு கௌரவிக்கும்படி சொல்லிய பொழுது அதை செய்ய அந்தச் சிறுவன் மறுத்திருக்கிறான்.

யுத்தத்தின் பின்னர் அரசாங்கத்தின் கால்களில் விழுதல் என்பது பெரும் அரசியலாகிவிட்டது. இதில் மிகவும் பெரிய துயரம் என்னவெனில் ஈழத்திற்காக போராடிய முன்னாள் போராளிகள் சிறைவைக்கப்பட்டு விடுவிக்கப்படுகையில் ஜனாதிபதியின் கால்களில் வீழ்ந்து வணங்கிய பின்னர் விடுவிக்கப்பட்டார்கள். போராடி வீழந்த போராளிகளை எங்கள் மக்கள் கைகூப்பி வணங்கி அவர்கள் விதைக்கப்பட்ட விதைநிலங்களை கோயிலாக வணங்குகிறார்கள். ஆனால் எங்கள் போராளிகளையே கால்களில் விழுச் சொல்லி அரசியல் நடத்தி விடுவிக்கும் இந்தத் துயரம் பல முன்னாள் போராளிகளின் நெஞ்சில் காயமாக ஆறாதிருக்கிறது. அவர்கள் விடுவிப்பு நிகழ்ச்சியில் கால்களில் விழ வேண்டும் என்று அறிவுருத்தப்பட்டார்கள். கால்களில் விழுதலில் பல அரசியல்களும் தந்திரங்களும் அடங்கிக் கிடக்கின்றன.

கால்களில் விழுந்து சிறைகளைவிட்டு வெளியில் வருவதைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலையில் போராளிகள் பலர் ஜனாபதியின் கால்களில் வீழ்த்தப்பட்டிருக்கிறார்கள். ஈழப்போராட்டத்திற்கு நிகழ்ந்த வீழ்ச்சியின் ஒரு வடிவமாக இதை அரசாங்கம் காட்டப் பார்க்கிறது. ஈழம் என்ற தனிநாடு கேட்டுப் போராடிய போராளிகள் இன்று ஜனாபதியின் கால்களில் விழுகிறார்கள் என்று வீழச்சியாக அர்த்தம் கற்பித்து இறுமாப்படைவதுடன் தான் 'நல்ல ஜனாதிபதி' என்பதையும் காட்ட முயல்கிறார். போராளிகளையும் மக்களையும் கால்களில் விழ வைத்து அரசியல் செய்பவர்களுக்கு இதில் எந்தக் குற்ற உணர்ச்சியும் கிடையாது.

சேதுராகவன் என்ற சிறுவனின் விடயத்தில் கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன அந்தச் சிறுவனின் கால்களில்தான் விழுந்திருக்கிறார். அந்தச் சிறுவன் கால்களில் விழ மறுத்த பொழுது அவனை கல்வி அமைச்சரை விழுந்து வணங்குமாறு அவனின் தாயாரும் தந்தையும் வற்புறுத்தியுள்ளனர். ஏனெனில் அவர்கள் எல்லா அரசியல்களையும் அறிந்தவர்கள். கால்களில் விழுந்து வாழ நேர்ந்த காலத்தில் வாழ்பவர்கள். சேதுராகவன் அம்மா அப்பா கால்களை விழுந்து வணங்குவதைத் தவிர வேறு யாருடைய கால்களிலும் விழுந்து வணங்க மாட்டேன் என்று தெரிவித்தான். சேதுராகவன் ஏன் கால்களில் விழ மறுத்தான்? அவன் தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினரோ, அல்லது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சியில் இருப்பவனோ அல்ல. வாக்கு அளிக்கின்ற வயதைக் கொண்டவனுமல்ல. போருக்குள் பிறந்து வாழ்ந்ததைத் விட வேறு எதையும் அறியாதவன். எதற்காக கால்களில் விழ மறுத்திருக்கிறான்?

செதுராகவனுக்கு பத்து வயதே ஆகிறது. கடந்த 2001 ஆம் ஆண்டில் பிறந்திருக்கிறான். யுத்த்தில் பிறந்து யுத்த்தில் வளர்ந்து யுத்தத்தில் படித்து தனது வாழ் நாட்கள் முழுவதையும் யுத்த காலத்தில் கழித்திருக்கிறான். அவன் பார்த்திருந்த காட்சிகள் எல்லாமே யுத்தம்தான். தமிழன் என்பதனால்தான் சேதுராகவன் கால்களில் விழ மறுத்தான் என்று மட்டும் சொல்லிவிட இயலாது. இது ஒரு குழந்தையின் எதிர்ப்புணர்வு. காயங்களினால் ஏற்க மறுக்கிற எதிர்ப்பு. துயரமும் அழிவும் கொண்ட வாழ்க்கையினால் ஏற்பட்ட உணர்வு. யாரும் அவனுக்கு இதைச் சொல்லிக் கொடுத்திருக்க மாட்டார்கள். அவனாகவே இதைச் செய்திருக்கிறான். சேதுராகவனின் மனம் என்பது ஈழத்தின் ஒவ்வொரு குழந்தைகளுக்குள்ளும் உள்ள மனம்.

வன்னி யுத்தத்திற்குள் வாழ்ந்து அதிலிருந்து மீண்டு தடுப்புமுகாம் சென்று அங்கிருந்து மீள்குடியேறி சமகால வன்னிச் சனங்கள் வாழும் வாழ்க்கைக்குள் இருந்து வந்த இந்தச் சிறுவன் இன்றைய ஈழத்து மக்களிடத்தில் உள்ள உணர்வை வெளிப்படுத்தியிருக்கிறான். அவனிடம் எந்த அரசியலும் இல்லை. தனது எதிர்ப்பு உணர்வை மறைக்கவும் தெரியவில்லை. கல்வி அமைச்சரின் கால்களில் விழுவதற்கு அவன் விரும்பவில்லை என்ற நிலைப்பாடு அரசு மீதான வெறுப்புணர்வைத்தான் காட்டுகிறது. சிறுவர்களின் வெறுப்பு சாதாரணமானதல்ல. அவை சிறுவர்களின் வெள்ளை மனவுலகத்தில் இருந்து எந்த ஒளிவு மறைவுமின்றி ஏற்படுகின்றது.

வன்னிப் போரைக் கடந்த பல குழந்தைகளின் நெஞ்சில் அந்தப் போர்க்கர்சிகள் ஆழமாகப் படிந்திருக்கின்றன. போருக்குப் பிந்தைய இன்றைய வாழ்விலும் அதன் தாக்கங்களை உணரக் கூடியதாக இருக்கிறது. அவர்கள் அந்தப் போரின் இறுதி நாட்களைப் பற்றியும் மரணக் காட்சிகளையும் பற்றியும் மறக்காமல் பேசிக் கொண்டிருக்கிறார்கள். போரின் குழந்தைகளாய் நெஞ்சில் படிந்த இந்தக் காயங்களை துடைத்தெறியக் கூடிய வாழ்வை அவர்கள் எட்டவில்லை என்பதுதான் துயரம். உலகில் குழந்தைகளின் நலம் பற்றித்தான் அதிகம் பேசுகிறார்கள். போரின் குழந்தைகளாய் பிறந்து வாழும் ஈழக் குழந்தைகளின் எதிர்காலம் பற்றி யார் சிந்திக்கிறார்கள்?

அரசாங்கம் ஈழத் தமிழர்களின்மீது தொடர்ந்தும் அடக்குமுறைகைளையும் அழிவுகளையும்தான் கட்டவிழ்த்து விடுகிறது. எமது குழந்தைகள் அந்தச் சூழலில் வளர்வதுடன் அதையே தங்கள் முதல் பாடமாக படிக்கிறார்கள். குழந்தைகளின் மனங்களை வெல்ல இந்த அரசால் முடியவில்லை என்பதுதான் இங்கு உணர்த்தப்படும் பெரும் செய்தி. சமதானம் கொண்டு வரப்பட்ட பூமி என்றும் பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்ட தேசம் என்றும் வெற்று அரசியல் வார்த்தைகளைச் சொல்லி ஈழத் தமிழர்களின் வாழ்வுலகத்தை மறுக்கும் அரசியலை செய்யும் பொழுது ஈழக்குழந்தைகள் எத்தகைய பாதிப்பை எதிர்கொண்டு வாழ்கின்றார்கள் என்பதும் இந்த வடுக்கள் நெஞ்சில் எப்படிப் படிந்திருக்கின்றன என்பதும் எப்பொழுது புரியப்படும்? ஈழக் குழந்தைகள் நிம்மதியாக வாழும் ஒரு உலகத்தைத் தேடுகிறார்கள்.

'ஒரு தடியையோ சில கட்டைத் துண்டுகளையோ இந்தக் குழந்தைகள்

எடுத்துச் செல்கின்றனர்

சிறிய குழிகளையோ சிறிய பற்றைகளையோ

அவர்கள் தேடிச்செல்கிறார்கள்

மிக நீளமான தூரத்திற்கு

அவர்கள் எறியும் கற்கள் சென்று விழுகின்றன

இரத்தம் வடிந்து கொண்டிருப்பதற்கு குங்குமத்தை அல்லது

கடதாசிப் பூக்களை கரைத்து அப்பிக் கொண்டு

பழைய சீலைத்துணிகளை கட்டிக் கிடக்கிறார்கள்.

வயற்கரை தென்னைமரங்களில்

மீண்டும் இளநீர்கள் காய்த்திருக்கின்றன

பெயர்த்து துரத்தப்பட்ட சனங்கள் குடியிருந்த

தொகுதிக்கு யாரும் திரும்பவில்லை.

லூர்த்தம்மாவும் அபிராஜிம்

சைக்கிளை எடுத்துக் கொண்டு எல்லாத் தெருக்களுக்கும் செல்கின்றனர்

கோணாவில் குளத்தில் தாமரைகள் பூத்திருக்கின்றன.

லூர்த்தம்மாவின் கண்கள் சிவக்கின்றன

அபிராஜின் கைகள் காய்த்துப் போயிருக்கின்றன.

ஒளிந்து விளையாட அவர்கள் நினைக்கும்பொழுது

பதுங்குகுழிகள் மிக அருகில் இருக்கின்றன

கூடாரங்களோ குழந்தைகளின் வார்த்தைகளை

தாங்கமுடியாதசைகின்றன

கூடாரங்களை சிலவேளை குழந்தைகள் கழற்றி விடுகின்றனர்.

மீண்டும் வயல்களுக்குள் இறங்குபவர்களையும்

லூர்த்தம்மா பார்த்துச் செல்கிறாள்.

சின்னக்கோயிலில் தீபம் வைக்கும் அபிராஜின்

கண்களில் பனித்த இரவுகளின்

சித்திரவதைகள் எரிந்து கொண்டிருந்தன

லூர்த்தமாவின் கைகளில் கொடுக்கப்பட்ட

துப்பாக்கிகளை பறித்து விட்டனர்

அபிராஜிடமிருந்த குண்டுகளை பறித்து விட்டனர்.

தோட்டக்களை எண்ணி கணக்கு பார்க்கவும்

குண்டுகளை அடையாளம் காட்டவும்

வெற்று செல்பெட்டிகளில் புத்தகங்களை அடுக்கவும்

மிதிவெடிகளை தூக்கிச்சென்று பின்வளவுகளில் போடவும்

இந்தக் குழந்தைகள் பழகியிருக்கின்றனர்

சிங்களப் பெயர்பலகைகளால் எச்சரித்திருக்கும்

சில வீதிகளுக்கு செல்லாதிருக்கவும்

உயரமான வேலிகளால் மூடப்பட்ட வீடுகளுக்கு தூரமாகச் செல்லவும்

அறிவுருத்தப்பட்டிருக்கின்றனர்

அரிக்கன் லாம்புகளை குழந்தைகள் தூண்டி விட்டு

குப்பி விளக்குகளை கைகளில் தூக்கிச் செல்லுகிறார்கள்'

(போரின் குழந்தைகள் - தீபச்செல்வன்)

• குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக தமிழ்மாறன்

முக்கிய குறிப்பு : குளோபல் தமிழ் செய்திகளிற்காக பிரத்யேகமாக எழுதப்படும் கட்டுரைகள் மிகுந்த உழைப்பின் பின் முழுமை பெறுகின்றன. இக்கட்டுரைகளை மறுபிரசுரம் செய்பவர்கள் ஆதாரமாகக் கட்டாயம் குளோபல் தமிழ் செய்திகள் இணையத்தின் பெயரைக் குறிப்பிட வேண்டும். ( www.globaltamilnews.net)

http://www.globaltamilnews.net/Home/tabid/38/language/ta-IN/Default.aspx

அருமையான கருத்துக்கள் பல நிறைந்த ஆக்கம்.

சர்வதேசம் ஊடாக, சிங்களவனிடம் இருந்து பிரிந்து எமது மக்களுக்கு ஒரு அரசியல் தீர்வை பெற்றுக்கொடுப்பதே நிரந்தரமாக கௌரவமாக அவர்களை வாழ வழி சமைக்கும். அதற்கு நாம் எல்லோரும் எம்மால் முடிந்த வகையில் உழைக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றி நிழலி!

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு கட்டுரை...இணைப்பிற்கு நன்றி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.