Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாடல் பிறந்த கதைகள் I

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

விஸ்வநாதன் வேலை வேணும் – பாடல் பிறந்த கதைகள் I

காதலிக்க நேரமில்லை பாடல் கம்போஸிங்குக்காக சித்ராலயா அலுவலகத்தில் எம்.எஸ்.வி.தன்னுடைய ஆர்மோனியத்துடன் அமர்ந்திருந்தார். (அப்போதெல்லாம் புரொடக்ஷன் அலுவலகத்தில் வைத்து ட்யூன் போட்டு, பின்னர் ரிக்கார்டிங் தியேட்டரில் பதிவு செய்வது வழக்கம்.) கவிஞர்கண்ணதாசனும் வந்துவிட்டார்.

எம்.எஸ்.வி.அவர்களுக்கு இசையை விட்டால் வேறு எதுவும் தெரியாது. யார் எந்த நாட்டில் ஜனாதிபதி என்பதெல்லாம் கூட தெரியாது. அப்போது செய்தித்தாளில் ஐசனோவர் பற்றி யாரோ படிக்க இவர் உடனே “ஐசனோவர் யாருண்ணே?” என்று கேட்டார். அப்போது கண்ணதாசன் “அடே மண்டு அவர் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்தவர்யா” என்றார்.

அப்போது அங்கு வந்த ஸ்ரீதர், “அடே, ரெண்டு பேரும் வந்துட்டீங்களா? சரி, சிச்சுவேஷன் என்னன்னா தன்னை வேலையிலிருந்து நீக்கிய எஸ்டேட் ஓனரை எதிர்த்து ரவிச்சந்திரன் போராட்டம் நடத்துறார். இந்த சிச்சுவேஷனுக்கு பாட்டுப்போடுங்க” என்று சொல்லி விட்டு உள்ளறயில்சி.வி.ராஜேந்திரனோடும், கோபுவோடும் கதை டிஸ்கஷன்னுக்குப் போய் விட்டார்.

சற்று முன்னர் யாரோ சொன்ன ஐசனோவர் என்ற பெயரை மட்டும் நினைவில் வைத்திருந்த எம்.எஸ்.வி. “ஐசனோவர்…ஆவலோவா…” என்று வாய்க்கு வந்தபடி சத்தம் போட்டுக்கொண்டிருந்தார். உள்ளறையிலிருந்து எட்டிப் பார்த்த ஸ்ரீதர் “அண்ணே இப்போ நீங்க கத்தினீங்களே அதுதான் ட்யூன்” என்றார். இவருக்கோ ஆச்சரியம். இதில் என்ன ட்யூனைக் கண்டுவிட்டார் ஸ்ரீதர் என்று.

கவிஞர் கண்ணதாசன் பாடலை சொல்லாமல், வெட்டிப் பேச்சில் நேரம் கழித்துக்கொண்டிருந்தார். அப்போது எம்.எஸ்.வி. அவர்கள் “அண்ணே சீக்கிரம் பாட்டைச் சொல்லுங்கண்ணே. இதை முடிச்சிட்டு ஆலங்குடி சோமு கூட வேறு இடத்தில் பாடல் பதிவு இருக்கு எனக்கு” என்றார்.

அதற்கு கண்ணதாசன் “இதோ பாருடா விசு. ஒரு வாரமா பெங்களூர்ல தங்கி கையில இருந்த காசையியெல்லாம் செலவழிச்சிட்டேன். இப்போ செலவுக்கே காசில்லை. இன்னைக்கு ஸ்ரீதருக்கு ரெண்டு மூணு பாட்டு எழுதினேன்னா அவர் ஒரு தொகை கொடுப்பாரு. இந்த நேரத்தில என்னை விட்டுட்டு அங்கே இங்கேன்னு போகாதேடா. எனக்கு வேலை கொடுடா விஸ்வநாதா…!” என்றார்.

எலிக்காது படைத்த ஸ்ரீதருக்கு இதுவும் கேட்டுவிட்டது. மீண்டும் தலையை நீட்டி “கவிஞரே, இப்போ கடைசியா சொன்னீங்களே அதுதான் பல்லவி” என்றார். இப்போது இருவருக்கும் அதிர்ச்சி. விஸ்வநாதன் கேட்டார் “ஏண்ணே, இன்னைக்கு ஸ்ரீதருக்கு என்ன ஆச்சு..?. நான் வாய்க்கு வந்தபடி கத்தியதை ‘அதுதான் ட்யூன்’னு சொல்றார். வேலை கொடுடா விஸ்வநாதான்னு நீங்க சொன்னதை ‘அதுதான் பல்லவி’ என்கிறார். என்னண்ணே இதெல்லாம்?” என்று கேட்டதும் கண்ணதாசன் சொன்னார்.

“இதோ பார் விசு, நம்ம ரெண்டு பேருக்கும் ஸ்ரீதர் இன்னைக்கு ஒரு டெஸ்ட் வச்சிருக்கார். அதை சாதிச்சுக் காட்டி பேர் வாங்கணும். நீ கத்தியதுதான் ட்யூன், நான் சொன்னதுதான் பல்லவி. ஆரம்பி” என்றார்.

சரியென்று இறங்கினார்கள். “ஐசனோவர்…ஆவலோவா…” என்று கத்தியதற்கு ஏற்ப “வேலை கொடு விஸ்வநாதா” என்று ஆரம்பித்தார்கள். அப்போது எம்.எஸ்.வி. அவர்கள் “அண்ணே எஸ்டேட் ஓனர்பாலையா வயசானவர், தவிர முதலாளி, ரவிச்சந்திரனோ சின்ன வயசுக்காரர், அவரிடம் வேலை பார்க்கும் குமாஸ்தா, தவிர இப்படத்தில் புதுமுகம். வேலை கொடுன்னு கேட்பது மரியாதைக்குறைவா தெரியுதே” என்று அபிப்பிராயம் சொல்ல, உடனே கண்ணதாசன் “சரி, அப்படீன்னா இப்படி செய்வோம் ‘வேலை கொடு விஸ்வநாதா’ என்பதற்கு பதிலாக “விஸ்வநாதன் வேலை வேணும்” என்று துவங்குவோம் என்று சொல்லி மளமளவென மற்ற வரிகளைச் சொல்ல ஆரம்பித்தார்.

நாற்பத்தி மூன்று ஆண்டுகளை (2007 – 1964) கடந்து இன்றைக்கும் புதுமை மாறாமல், பொலிவு குறையாமல் வலம் வந்து கொண்டிருக்கும் “விஸ்வநாதன் வேலை வேணும்” என்ற ‘காதலிக்க நேரமில்லை’ படப்பாடல் பிறந்தது இப்படித்தான்.

http://www.msvtimes.com/forum/viewtopic.php?t=159

காதலிக்க நேரமில்லை படத்தில் ரவிச்சந்திரன் நடித்த வேடத்திற்கு ஸ்கிரின் டெஸ்டிற்கு போனவர்களில் வை,கோ வும் ஒருவர் .சிலவேளை அதில் நடித்திருந்தால் இந்நேரம் முதலமைச்சராக வந்திருக்க கூடும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"சொன்னது நீதானா...."

(நெஞ்சில் ஓர் ஆலயம்)

மீண்டும் ஸ்ரீதரின் படம்தான். ஏற்கெனவே இப்படத்தின் 'முத்தான முத்தல்லவோ' பாடலை எப்படி இருபது நிமிடங்களில், ஓடும் காரில் மெட்டமைத்தார்கள் என்று அண்ணன் ராம்கி அருமையாக விளக்கியிருந்தார். இப்போது நான் சொல்லவிருப்பது இன்னொரு பாடல்.

கவிஞர் கண்ணதாசனின் வருகைக்காக மொத்த ஆட்களும் காத்திருந்தார்கள். எம்.எஸ்.வி. அவர்கள் அடிக்கடி வாட்சைப் பார்த்துக்கொண்டிருந்தார். இதைக்கவனித்த சித்ராலயா கோபு "என்னண்ணே ரொம்ப ரெஸ்ட்லெஸ் ஆக இருக்கீங்க?" என்று கேட்டார். அதற்கு விஸ்வநாதன் அவர்கள் "இந்தப்பாட்டை கம்போஸ் பண்ணிட்டு, வேலுமணி சாரோட பணத்தோட்டம் பட ரீ-ரிக்கார்டிங்குக்குப் போகனும். இந்த ஆளை (கண்ணதாசனை) இன்னும் காணோமே" என்று புலம்பிக்கொண்டிருக்க, ஸ்ரீதரோ இந்தப்பாடலை நீங்க கம்போஸ் பண்ணிக் கொடுத்துட்டுத்தான் வேறு இடத்துக்குப்போகணும் என்று கண்டிப்பாக சொல்லி விட்டார். இடையிடையே சரவணா ஃபிலிம்ஸில்ருந்து ஃபோன் வந்த வண்ணம் இருந்தது.

ஒரு கட்டத்தில் பொறுமையிழந்து விட்ட விஸ்வநாதன் அவர்கள் "என்னய்யா இந்த குடிகாரரோடு இதே வேலையா போச்சு. சொன்ன நேரத்துக்கு வந்து தொலைய மாட்டேங்கிறார்" என்று கத்தி விட்டார். (சாதாரணமாக இப்படி மரியாதையில்லாமல் கண்ணதாசனைப் பற்றிப் பேச மாட்டார். ஆனால் வேறு கம்பெனியில் இருந்து அடிக்கடி வந்த போன் அவரை பொறுமையிழக்கச்செய்து விட்டது).

கண்ணதாசனும் வந்தார். ஸ்ரீதரும் சிச்சுவேஷனைச் சொன்னார். ஆஸ்பத்திரியில் புற்று நோய் காரண்மாக அனுமதிக்கப்பட்டிருக்கும் கணவன், தான் எப்படியும் இறந்துவிடுவோம் என்பதையும், அந்த ஆஸ்பத்திரி டாக்டர் தன் மனைவியின் முன்னாள் காதலன் என்பதையும் அறிந்து, தான் இறந்து விட்டால் அந்த டாக்டரை தன் மனைவி மணந்து கொள்ள சம்மதிக்க வேண்டும் என்று கூற, மனம் நொருங்கிப்போகும் மனைவி தன் சோகத்தைப்பிழிந்து பாடுவதாக காட்சியை விளக்கினார்.

பி.சுசீலாவும் தயாரக இருக்கிறார். விஸ்வநாதன் அவர்களும் மெட்டுக்களைப்போட்டு காட்டுகிறார். அந்த மெட்டுகளுக்கு கண்னதாசனுக்கு வார்த்தைகள் வர மறுக்கின்றன. அவர் சொல்லிய சில வரிகளும் ஸ்ரீதருக்குப்பிடிக்கவில்லை.

இடையில் பாத்ரூம் போவதற்காக கண்னதாசன் எழுந்து போகிறார். அவர் திரும்பி வருபோது ஒருவர் கண்ணதாசனிடம் "நீங்க வர லேட்டாச்சுன்னு விஸ்வநாதன் சார் உங்களை குடிகாரர்னு திட்டிட்டாருங்க" என்று சொல்லி விட்டார். (அதாவது போட்டுக்கொடுத்து விட்டார்).

கண்ணதாசன் கோபப்படவில்லை. மீண்டும் வந்து அமர்ந்தவர், எம்.எஸ்.வி.அவர்களிடம்

"ஏண்டா விசு, என்னை நீ குடிகாரன்னு திட்டினியாமே. அப்படியா, ஆச்சரியமா இருக்கே. நீ இப்படியெல்லாம் சொல்லமாட்டியே. நீயா இப்படிச்சொன்னே. என்னால் நம்பவே முடியலை" என்றவர் சட்டென்று ராகத்தோடு "சொன்னது நீதானா.. சொல்.. சொல்... சொல்... என்னுயிரே" என்று பாடிக்காட்ட......

ஸ்ரீதர் எப்படிப்பட்டவர்? 'கப்'பென்று பிடித்துக்கொண்டார் "ஐயோ கவிஞ்ரே, இதுதான்யா நான் கேட்டது. எப்படி திடிற்னு உங்களுக்கு வந்தது?. விசு அண்ணே அவர் பாடிக்காட்டிய மெட்டையே வச்சுக்கொவோம். அதையே தொடர்ந்து மெட்டுப்போடுங்க. கவிஞரே நீர் வரிகளைச்சொல்லுமய்யா" என்று கூற, சற்று முன்னர் இருந்த இறுக்கமான சூழ்நிலை மறைந்து கண்ணதாசனும் விஸ்வநாதனும் மற்றும் குழுவினரும் உற்சாகமானார்கள்.

யூனிட்டே வாய் பிளந்தது. மை காட்... இன்னொருவனை திருமணம் செய்யும்படிக்கூறும் கணவனுக்கு பதிலாக "சொன்னது நீதானா சொல் சொல் சொல் என்னுயிரே" என்ற வரிகள் எவ்வளவு கன கச்சிதமாகப் பொருந்துகின்றன என்று திகைப்பில் ஆழந்தனர். அதே உற்சாகத்தோடு கண்னதாசன் வரிகளை அள்ளி வீச, மெல்லிசை மன்ன்ர் அவற்றுக்கு சந்தம் அமைத்துக்கொண்டே வந்தார்.

சம்மதம்தானா... ஏன்...ஏன்...ஏன்...என்ன்யிரே

இன்னொரு கைகளிலே... யார்...யார்... நானா

எனை மறந்தாயா...ஏன்...ஏன்...ஏன்...என்ன்யிரே

மங்கல மாலை குங்குமம் யாவும் தந்ததெல்லாம் நீதானே

மணமகளை திருமகளாய் நினைத்ததெல்லாம் நீதானே

என் மனதில் உன் மனதை இணைத்ததும் நீதானே

இறுதி வரை துணையிப்பேன் என்றதும் நீதானே

இன்று சொன்னது நீதானா

சொல் சொல் சொல் என்னுயிரே

தெய்வத்தின் மார்பில் சூடிய மாலை தெருவினிலே விழலாமா

தெருவினிலே விழுந்தாலும் வேறோர் கை தொடலாமா

ஒருகொடியில் ஒருமுறைதான் மலரும் மலரல்லவா

ஒரு மனதில் ஒரு முறைதான் வளரும் உறவல்லவா

பாடல் எழுதி முடிந்ததும், எம்.எஸ்.வி. அவர்கள் கண்ணதாசனைக் கட்டித் தழுவி கண்ணீர் விட்டார். "செட்டியாரே, லேட்டாக வந்தாலும் வட்டியும் முதலுமாக அள்ளித்தந்துட்டீங்கய்யா" என்று மனம் மகிழ்ந்தார். இவர்களுடைய போட்டியில் ஸ்ரீதருக்கு அருமையான பாடல் கிடைத்து விட்டது.

பின்னர் இந்தப்பாடலை சிதார் இசையுடன் பி.சுசீலா நம் நெஞ்சைப்பிழியும் வண்னம் பாடியதும், அதற்கு சோகமே உருவாக தேவிகா நடித்ததும் சரித்திரங்கள்.

http://www.msvtimes.com/forum/viewtopic.php?t=159

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்னை யாரென்று எண்ணி எண்ணி – பாலும் பழமும்

‘காதலித்து மணந்த முதல் மனைவியைப் விபத்தில் பறிகொடுத்து விட்டு (சந்தர்ப்ப சூழ்நிலையால் அவள் இறந்துவிட்டதாக நினைத்து) பற்றற்ற வாழ்க்கை வாழும் ஒரு புற்று நோய் டாக்டர். தன்னை வளர்த்து ஆளாக்கியவர்களுக்கு செலுத்தும் நன்றிக்கடனாக (விருப்பமில்லாமல்) செய்து கொண்ட இரண்டாவது திருமணத்தில் மனம் ஈடுபடாத வாழ்க்கை. அவளோடு ஏற்ப்பட்ட வாக்குவாதத்தால் விபத்து நேர்ந்து கண்களையும் இழந்து தவிக்க, அசந்தர்ப்பமாக முதல் மனைவியே அவருக்கு நர்ஸாக வர, இரண்டாவது மனைவியோடு தன் கணவர் விரும்பாத வாழ்க்கை வாழ்வது அறிந்து அவரை அவள் பால் திருப்ப எடுக்கும் முயற்சியின் ஒரு கட்டமாக, உடல் நலமில்லாத அவரை வாக்கிங் அழைத்துப்போகும்போது அவர் மனம் மாற்றம் ஏற்பட பாட, அதற்கு மறுப்பு தெரிவித்து கணவர் பாடும் பாடல்… இதுதான் சிச்சுவேஷன் இதற்கு பாடல் எழுதுங்கள்’ – இயக்குநர் பீம்சிங் ஒரே மூச்சில் சொல்லி முடித்தார். பல்லவிக்காக மெல்லிசை மன்னரும் மூன்று ட்யூன்கள் போட்டு காண்பித்தார். அதில் ஒன்று பிடித்துப் போக, பல்லவிக்காக வரிகளை யோசித்துக்கொண்டிருந்த கண்ணதாசன், தன் உதவியாளர் பஞ்சு அருணாசலத்திடம் “டேய் பஞ்சு, காரில் என் ஃபைல் இருக்குல்ல? அதை எடுத்துகிட்டு வா” என்றார்.

பஞ்சுவும் ஃபைலுடன் வந்தார். அதைப் புரட்டி, ஒரு தாளை எடுத்த கவிஞர் “இந்த வரிகளைப் பாருங்கள், கண்ணனைப் பற்றி நான் எழுதிய பாடல். இதில் ‘அவன்’ என்பதை அவள் என்று மாற்றிப் பாருங்கள். விசு போட்ட சந்தத்துக்கும் நீங்க சொன்ன சிச்சுவேஷனுக்கும் பொருந்தும் என நினைக்கிறேன்” என்றார். பீம்சிங் பாடலை வாங்கிப் பார்த்தார். பாடல் இப்படி இருந்தது.

என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்

இது யார் பாடும் பாடல் என்று நீ கேட்கிறாய்

நான் ‘அவன்’ பேரை தினம் பாடும் குயிலல்லவா

என் பாடல் ‘அவன்’ தந்த மொழியல்லவா

இதில் அவன் என்று வந்த இடங்களை அவள் என்று மாற்றி விஸ்வநாதன், தன் மெட்டோடு பாட, வாவ்! கனகச்சிதமாக பொருந்தியது. எல்லோரும் ஆச்சரியத்தில் உறைந்து போனார்கள். மெல்லிசை மன்னர் துள்ளி குதித்தார் “எப்படி கவிஞரய்யா இது…?” என்று.

சொற்களை மாற்றிய பின் பாடலின் தன்மை அப்படியே மாறிப் போனது. கடவுளைப் பற்றி கவிஞர் எழுதிய பாடல், இரண்டாவது மனைவியோடு சேர்ந்து வாழும்படி நர்சாக வந்த முதல் மனைவி அட்வைஸ் செய்ய, அவர் அதை மறுப்பதாக அமைந்தது.

என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்

இது யார் பாடும் பாடல் என்று நீ கேட்கிறாய்

நான் ‘அவள்’ பேரை தினம் பாடும் குயிலல்லவா

என்பாடல் ‘அவள்’ தந்த மொழியல்லவா

தொடர்ந்து கவிஞர்

என்றும் சிலையான உன் தெய்வம் பேசாதய்யா

சருகான மலர் மீண்டும் மலராதய்யா

என்று வரிகளை அடுக்கினார்.

பாடல் தயார். மறூநாள் ரிக்கார்டிங். விஸ்வநாதன்-ராமமூர்த்தி குழுவினர் தயார் நிலையில் இருந்தார்கள், சுசீலாவும் வந்து தன் போர்ஷன்களை பாடிப் பார்க்க துவங்கிவிட்டார். ஆனால்டிஎம்எஸ் வரவில்லை. சிறிது நேரம் கழித்து அவரிடமிருந்து ஃபோன் வர, பீம்சிங் தான் பேசினார்.

“என்ன் சௌந்தர்ராஜன்… குரல் ஒரு மாதிரியாக இருக்கு?”

“அதைச் சொல்லத்தான் ஃபோன் செய்தேன். நேற்று இரவு முதல் ஜலதோஷம். அதனால் இன்னைக்கு ரிக்கார்டிங்கை கேன்ஸல் செஞ்சுடுங்க. இரண்டு நாள் கழித்து வச்சுக்கலாம்”.

(இப்போ மாதிரி ட்ராக் சிஸ்டம் எல்லாம் அப்போது கிடையாது. பாடகர்கள், இசைக் குழுவினர் எல்லோரும் ஒரே நேரத்தில் அமர்ந்து பாடலை ரிக்கார்டிங் செய்து முடிக்க வேண்டும். ஒருவர் தவறு செய்தாலும் அத்தனை பேரும் மீண்டும் வாசிக்க வேண்டும். இப்போது டூயட் பாடல் என்றால் அனுராதா ஸ்ரீராம் தன்னுடைய போர்ஷனை பாடி விட்டு போய்விடுவார். தன்னோடு உடன் பாடுவது எஸ்.பி.பி.யா, மனோவா, அல்லது திப்புவா என்பது கேஸட் வெளியான பின்புதான் அவருக்கே தெரியும்)

பீம்சிங் கேட்டார்…. “உங்களுக்கு ஜலதோஷம் மட்டும் தானா? அல்லது ஜுரம் ஏதாவது அடிக்கிறதா?”

“இல்லீங்க வெறும் ஜலதோஷம் மட்டும்தான்”

“அப்படீன்னா உடனே புறப்பட்டு ரிக்கார்டிங் தியேட்டருக்கு வாங்க. நீங்க இப்போ பேசுகிற குரல்தான் இந்தப் பாடலுக்கு வேண்டும்” என்றார் பீம்சிங்.

டிஎம்எஸ்ஸும் வந்து விட்டார். “அப்படி என்னென்னே இன்று என்னுடைய குரலில் விசேஷம்?” என்று கேட்க, இயக்குநர் சொன்னார் “இந்தக் காட்சியில் சிவாஜி உடல்நிலை சரியில்லாதவராக இருக்கிறார். அதோடு வாக்கிங் போகும்போது மழையிலும் நனைந்து விடுகிறார். அதனால் இந்தக் காட்சிக்கு இப்போதுள்ள் உங்கள் ஜலதோஷக்குரல் கச்சிதமாக பொருந்தும்” என்றார்.

டிஎம்எஸ் ஒத்திகை பார்த்து விட்டு ரிக்கார்டிங்குக்கு தயாரானார். அப்போது விஸ்வநாதன் அவர்கள் ” அண்ணே…, மூக்கை உறிஞ்சுவது, தும்மல் போடுவது எல்லாத்தையும் ரிக்கார்டிங் துவங்கும் முன்னர் பண்ணிக்குங்க. இடையில் பண்ணிடாதீங்க.” என்றார்.

அதற்கு பீம்சிங் “பரவாயில்லை, அப்படியே தும்மல் வந்தாலும் போடுங்க. படத்தில் சிவாஜி சாரையும் தும்ம வைத்து எடுக்கிறேன்” என்று சொல்ல அனைவரும் சிரித்தனர்.

நல்லவேளையாக பாடல் முடியும் வரை டிஎம்எஸ் அவர்கள் தும்மல் எதுவும் போடவில்லை. இப்போதும் கூட அப்பாடலைக் கேட்கும்போது, டி.எம்.எஸ்ஸின் ஜலதோஷக்குரல் நமக்கு நன்றாக தெரியும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.