Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெனிவாப் போர்க்களம் புஸ்வாணமாகுமா?

Featured Replies

ஜெனிவாப் போர்க்களம் புஸ்வாணமாகுமா?

நல்லிணக்க ஆணைக்குழு விவகாரம் அரசிற்கு பொல்லைக் கொடுத்து அடிவாங்கிய கதையாகிவிட்டது. அதன் சிபார்சுகளை உடனடியாக அமுல்படுத்த வேண்டும் என்ற அழுத்தம் அரசிற்கு வரத்தொடங்கி விட்டது. ஏற்கனவே போர்க்குற்ற விசாரணை விடயம் நிலுவையாக உள்ள நிலையில் இது புதிய தலையிடிதான்.

நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை போர்க்குற்ற விவகாரத்தை சிறிதளவுகூட சாதகமான வகையில் அணுகவில்லை என மனிதஉரிமை நிறுவனங்கள் தொடக்கம் மேற்குலக சக்திகள் வரை உறுதியாகக் கூறிவிட்டன.இதுவிடயத்தில் உள்நாட்டு முயற்சிகள் தோல்வியடைந்துவிட்டதால் சர்வதேச பொறிமுறை தேவை என்ற குரலும் சற்று தீவிரமாக மேலெழும்ப ஆரம்பித்துள்ளன.

அமெரிக்கா இந்த விடயத்தில் உறுதியாக நிற்பதுதான் அரசிற்கு புதியதலையிடி. போர்க்குற்றப் பிரேரணைக்கு ஐ.நா. மனிதஉரிமை கவுன்சிலில் ஆதரவு கொடுக்கப்போவதாக அமெரிக்கா எழுத்து மூலம் இலங்கைக்கு தெரிவித்துவிட்டது. அதேவேளை இவ்விவகாரத்துடன் நல்லிணக்கம், வடமாகாணசபைத் தேர்தல் என்பவை பற்றி விவாதிக்க இலங்கை வெளிநாட்டமைச்சரை வாஸிங்டனுக்கு வருமாறும் அழைப்பு விடுத்திருக்கின்றது.

அதைவிட அரசிற்கு பெரியதலையிடி அமெரிக்காவின் தெற்காசிய விவகாரங்களுக்கான இராஜங்க அமைச்சர் பிளேக் இலங்கை வர இருப்பதுதான். வரும் 10ம் திகதி வர இருக்கும் அவர் என்ன புதிய புயல்களைக் கிளப்பிவிடப் போகின்றாரோ என்ற அச்சம் அரசிற்கு ஏற்படத் தொடங்கியுள்ளது. அவரது வருகையை தவிர்ப்பதற்கு அரசு முயன்றும் முடியவில்லை என்றே செய்திகள் வருகின்றன.

பிளேக்கின் அணுகுமுறைதான் அரசிற்கு பெரிய நெருக்கடிகளைக் கொடுப்பது வழக்கம். அவர் முதலில் அரசின் நல்ல செயற்பாடுகளைப் பாராட்டுவார். அரசின் அபிவிருத்தி செயற்பாடுகள், புனர்வாழ்வு முகாம்களிலிருந்த விடுதலைப் புலிகள் இயக்கப் போராளிகளின் விடுதலை, நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபார்சுகள் என்பன அதில் அடங்குவதற்கு வாய்ப்புக்கள் உண்டு. பின்னர் இணக்கம் காணப்பட்ட விடயங்களில் போதியளவு முன்னேற்றங்கள் காணப்படவில்லை எனக் குற்றம் சுமத்துவார். இதன்போது இவ்விடயத்தில் அமெரிக்காவின் நிலைப்பாட்டை அழுத்தமாக கூறிவிடுவார். இந்தத் தடவை போர்க்குற்ற விசாரணை, சிறைகளிலுள்ளோர் விவகாரம், தமிழ்ப்பிரதேச சட்டம் ஒழுங்கு விவகாரத்தை தமிழ் பொலிஸாரிடம் விட்டுவிடுதல் என்பன இடம்பிடிக்கலாம்.

தொடர்ந்து புதிய விவகாரங்களைக் கிளப்பிவிடுவார். அடுத்த தடவை வரும்போது அது பழைய விவகாரங்களில் சேர்ந்துவிடும். இந்தத்தடவை நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையை ஐ.நா. மனித உரிமைக்கவுன்சிலில் சமர்ப்பிக்கவேண்டும், வடமாகாணசபைத் தேர்தலை உடனடியாக நடாத்தவேண்டும், சரத் பொன்சேகாவை விடுதலை செய்யவேண்டும் என அவர் கோரிக்கைகளை விடுக்கலாம்.

குறிப்பாக நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை ஐ.நா மனித உரிமை சபையில் சமர்ப்பிக்க வேண்டும் என்பதில் அமெரிக்கா மிகவும் தீவிரமாக உள்ளது. அதன் சிபார்சுகளை நடைமுறைப்படுத்துவதற்கு அழுத்தம் கொடுப்பதற்காகவே அதனை விரும்புகின்றது. போர்க்குற்ற விவகாரத்தில் சற்றுப் பின்னடிக்கின்ற நாடுகள் கூட அதற்கு ஆதரவு கொடுக்க முன்வரலாம். ஏதோ ஒரு வகையிலாவது சர்வதேசத்திற்கு இலங்கை பொறுப்புக்கூறக்கூடிய பொறிமுறை தேவை என்று அமெரிக்கா கருதுகின்றது. இதனால்தான் நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபார்சுகளையாவது பொறுப்புக்கூறும் விடயமாக்கவேண்டும் என்பதில் அமெரிக்கா கவனமாக இருப்பதுபோல தெரிகின்றது.

இந்தியா உட்பட அமெரிக்கா, மேற்குலகம் என்பவற்றிற்கு போர்க்குற்ற விவகாரங்களுக்காக இலங்கையைத் தண்டிக்கும் எண்ணம் பெரிதாக இல்லை. அவ்வாறு இருந்திருந்தால் சிரியா தொடர்பாக எடுத்து வரும் நடவடிக்கைகளின் அளவிற்காவது அமெரிக்கா முன்னேறியிருக்கும். சிரியாவினை என்ன விலை கொடுத்தாவது ரஸ்யாவும் சீனாவும் பாதுகாக்கும் என்பது அமெரிக்காவிற்கு தெரிந்த ஒன்றுதான். ஆனாலும் ஐ.நா பாதுகாப்புச் சபையில் அதுதொடர்பான தீர்மானத்தைக் கொண்டு வந்தது. இவ்வளவிற்கும் வன்னியில் இறந்த மக்களோடு ஒப்பிடும்போது சிரியாவில் இறந்த மக்களின் தொகை பத்தில் ஒன்றுகூட இல்லை. சிரிய விவகாரத்தில் இந்த தடவை இந்தியா மேற்குலகத்துடன் தன்னை இணைத்துக் கொண்டிருக்கின்றது. இது மேற்குலக அணியில் இந்தியா நிரந்தரமாக இணைந்துவிட்டதா என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது.

இந்தியா உட்பட மேற்குலகத்திற்கு அதன் முழு இலக்குமே சீனாவிடமிருந்து இலங்கையைக் கழற்றுவதுதான். தற்போதைய சூழலில் இலங்கையின் ஆட்சி மாற்றம் ஒன்றைக் கொண்டு வருவதன் மூலமே இதனை மேற்கொள்ள முடியும். ஆட்சி மாற்றத்தினைக் கொண்டு வருவதற்கு இலங்கையில் அதிகாரச் சமநிலை மாற்றமடைய வேண்டும். தற்போது அதிகாரச் சமநிலை மகிந்தருக்கு சார்பாக அதி உச்சவகையில் உயர்ந்திருக்கின்றது. தமிழ் அரசியலுக்கு சிறிய வகை வெற்றிகளையாவது கொண்டுவராமல் இவ் அதிகாரச் சமநிலையில் மாற்றங்களை மேற்கொள்ள முடியாது. இது பற்றி எனது முன்னைய கட்டுரைகளிலும் கூறியிருக்கின்றேன். இதனால்தான் குறைந்தபட்சம் வடக்கு மாகாணசபைத் தேர்தலையாவது நடாத்த வேண்டும் என்பதில் அமெரிக்கா உறுதியாக இருக்கின்றது.

தென்னிலங்கையில் சிங்கள மக்களுக்கு மகிந்தர் அரசு மீது அதிக அதிருப்திகள் இருக்கின்றன. ஆனால் போர் வெற்றி தமிழர்களுக்கு எதுவும் கொடுக்காத நிலை, எதிர்காலத்தில் எதனையும் கொடுக்க தேவையற்ற வகையில் வட-கிழக்கில் சிங்களமயமாக்கலை மேற்கொள்ளல் என்பவை காரணமாகத்தான் மகிந்தர் அரசினை உயர்நிலையில் வைத்திருக்க விரும்புகின்றனர்.

இந்த உயர்நிலையில் சிறிய சரிவாவது ஏற்பட வேண்டுமானால் தமிழ் மக்களுக்கு சில வெற்றிகளாவது கிடைக்க வேண்டும். இது இந்தியாவிற்கும் தெரியும். அமெரிக்காவிற்கும் தெரியும். இலங்கையரசிற்கும் தெரியும். இந்தநிலை ஜனாதிபதிக்கும் தெளிவாகத் தெரிந்ததினால்தான் வெட்டி ஓடி இதனைச் சமாளிக்கப் பார்க்கின்றார்.

காலதாமதம் இலங்கையின் மீதான சீனாவின் பிடியை மேலும் உறுதிப்படுத்தும் என்பதால் அமெரிக்கா அவசரம் காட்டுகின்றது. இலங்கைக்கான அமெரிக்க தூதுவரினால் இலங்கை அரசிற்கு வழங்கப்பட்ட கடிதம், கில்லறி கிளின்டனின் அமெரிக்க அழைப்பு, பிளேக்கின் இலங்கை வருகை, சொல்கேய்மின் இந்திய விஜயம், ஜெனிவாவிற்கு கூட்டமைப்பை அழைத்தல் என்பனவெல்லாம் இந்த அவசரத்தின் விளைவுகளே.

இன்னோர் பக்கத்தில் ஆளுங்கட்சிக்கும் எதிர்கட்சிக்குமிடையே அதிகார சமனிலையைக் கொண்டு வருவதற்காக சரத் பொன்சேகாவை விடுதலை செய்வதற்கான முயற்சிகளிலும் அமெரிக்கா இறங்கியுள்ளது. இது தொடர்பாக அவரது கட்சியை சேர்ந்தவர்கள் அரசாங்கத்துடன் தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். இரு தரப்பிலும் நிபந்தனைகள் முன்வைக்கப்படுவதனால் இன்னமும் பேச்சுவார்த்தை வெற்றிபெறவில்லை.

இன்று ஜனாதிபதியுடன் போட்டி போடக்கூடிய தென்னிலங்கைத் தலைவர் சரத் பொன்சேகாதான். போர் வெற்றியில் அவர் மாத்திரமே பங்கெடுக்கக் கூடியவராக இருக்கின்றார். ஆனால் அவர்கூட ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து அதன் தலைமைப் பொறுப்பினை எடுக்கும்போதே அதற்கான சாத்தியங்கள் அதிகமாக இருக்கும். இன்று ஐக்கிய தேசியக்கட்சி என்னதான் பலவீனநிலையில் இருந்தாலும் அரசாங்க கட்சிக்கு மாற்று அதுவேயாகும். அமெரிக்கா ஐக்கிய தேசியக்கட்சிக்குள் அவரைக் கொண்டு வருவதிலும் முன்னின்று செயற்படுவது போலத்தெரிகின்றது.

தற்போதைய சூழலில் ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிக்குமிடையே சமநிலையைக் கொண்டு வருவதற்கு சரத் பொன்சேகாவின் விடுதலை அவசியம். அதேவேளை சிங்கள அரசியலுக்கும் தமிழ் அரசியலுக்குமிடையே அதிகாரச் சமநிலையைக் கொண்டு வருவதற்கு தமிழ் மக்களுக்கு சில வெற்றிகள் அவசியம். இந்த இரண்டிலும் ஏற்படும் அதிகாரச் சமநிலைகள்தான் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையேயும், இந்தியாவிற்கும் சீனாவிற்குமிடையேயும், சீனாவிற்கும் அமெரிக்காவிற்குமிடையேயும் அதிகாரச் சமநிலையைக் கொண்டுவரும்.

இந்திய-சீன அதிகாரச் சமநிலை, சீன-அமெரிக்க அதிகாரச் சமநிலை என்பவற்றில் மியன்மாரில் ஏற்பட்டுவரும் மாற்றங்கள் தாக்கங்களைச் செலுத்தியிருந்தாலும் இலங்கையில் ஏற்படும் மாற்றங்களும் அதற்கு அவசியம்.

மறுபக்கத்தில் இலங்கை அரசும் இந்த நெருக்கடிகளை எதிர்கொள்ள வியூகங்களை அமைத்து செயற்படத் தொடங்கியுள்ளது. இந்தச் செயற்பாட்டில் அதன் முதலாவது வியூகம் இந்தியாவைக் கைக்குள் போடுவதுதான். இலங்கையில் சீனாவுடன் பொருளாதாரப் போட்டி இருப்பதால் இந்திய முதலீடுகளுக்கு இடம்கொடுப்பதன் மூலமும், பாதுகாப்பு ஒத்துழைப்புகளை மேற்கொள்வதன் மூலமும் அதனைச் செயற்படுத்த அரசு முயற்சிக்கின்றது.

இந்தியாவைக் கொண்டே இலங்கையில் சுமூக நிலை நிலவகின்றது. இணக்க அரசியலை நோக்கி இலங்கை முன்னேறிச் செல்கின்றது எனச் சொல்லவும் வைத்தது. கிருஸ்ணாவும், அப்துல் கலாமும் இலங்கையின் விருப்பங்களை சிறப்பாகவே செய்து முடித்துச் சென்றுள்ளனர்.

இந்த முதலாவது வியூகத்தின் இன்னோர் அம்சம் இந்தியாவைக் கொண்டே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் கைக்குள் போடுவது. கூட்டமைப்பு இந்தியாவின் செல்வாக்கில் இருப்பதனால் சற்று தாமதமானாலும் அரசிற்கு அதில் வெற்றிகிடைத்து வருகின்றது போலவே தெரிகின்றது. சம்பந்தன்-ஜனாதிபதி இரகசியச் சந்திப்பு இந்த அடிப்படையிலேயே இடம்பெற்றுள்ளது. இந்தியாவின் அழுத்தத்தினால் தெரிவுக்குழுவிற்கு பெயர்கள் கொடுக்க கூட்டமைப்பு முடிவெடுத்துள்ளதாகவே செய்திகள் வருகின்றன.

அதேவேளை இந்தியாவைக் கொண்டு ஐக்கிய தேசியக் கட்சியை கைக்குள் போடுவதிலும் அரசு வெற்றியீட்டுள்ளது. ரணில் விக்கிரமசிங்காவை டில்லிக்கு அழைத்த இந்தியா தெரிவுக்குழுவிற்கு செல்லும்படி ஆலோசனை கூறியுள்ளது. ரணிலும் கூட்டமைப்பு கலந்து கொண்டால் தாம் கலந்து கொள்வதில் ஆட்சேபனை இல்லை எனத் தெரிவித்திருக்கின்றார்.

தெரிவுக்குழு செயற்படத் தொடங்கினால் இலங்கைக்கு மேலும் ஒருவருடம் இழுத்தடிப்பதற்கு கால அவகாசம் கிடைக்கும். இந்தியா அதனைக் காட்டியே ஐ.நா மனித உரிமைக் கவுன்சிலில் இலங்கை தொடர்பான அழுத்தங்களை குறைக்கச் செய்யும். இந்தியாவைக் கைக்குள் போடுவது என்பது அரசாங்கத்திற்கு ஒரு கல்லில் பல மாங்காய்களை விழுத்துவதற்கு சமன். இந்தியா விழுந்தால் கூட்டமைப்பு விழும், ஐக்கியதேசியக்கட்சி விழும், அமெரிக்கா விழும், மேற்குலகம் விழும்.

இரண்டாவது வியூகம் தமிழ் மக்களோடு இணக்கச் செயற்பாட்டை மேற்கொள்கின்றேன் என்ற தோற்றத்தைக் கொடுப்பதாகும். யாழ்ப்பாணத்திற்கு கட்டிடத்திறப்பு விழாக்களுக்காக ஜனாதிபதி சென்றமைக்கு இதுதான் காரணம். முன்னர் தேர்தல்கால திறப்பு விழாக்களுக்கு செல்வதற்கான வழக்கங்களைக் கொண்டிருந்தாரே தவிர இடைக்காலத்தில் செல்வது அரிது. தற்போது ஏற்கனவே செயற்படத் தொடங்கிய வைத்தியசாலைக் கட்டிடத்தையும் திறந்து வைத்ததாக ஒரு தகவல். அவசர அவசரமாக யாழ்மாவட்ட அபிவிருத்திக் கூட்டத்தையும் அவர் நடாத்தியிருக்கின்றார்.

இது ஜெனிவாக் காய்ச்சலின் விளைவு எனக் கருதியமையினால் அழைப்பு விடுத்தும் கூட்டமைப்பு புத்திசாலித்தனமாக நழுவிக்கொண்டது. இந்தியா சம்பந்தனை கக்கத்தில் கொண்டு திரிவதுபோல, மகிந்தரும் டக்ளஸ் தேவானந்தாவை கக்கத்தில் கொண்டு திரிகின்றார். இனவிவகார விடயத்தில் அரசிற்கு நெருக்கடி வருகின்ற போதுதான் டக்ளஸ் தேவானந்தாவிற்கு மவுசு கூடிச்செல்கின்றது. மற்றைய காலங்களில் ரிசாத் பதியுதீனுக்கு இருக்கின்ற மவுசில் 1/10 கூட டக்ளசிற்கு இருப்பதில்லை. டக்ளசிற்கு கிடைக்கின்ற வாக்குகள் அரசிற்கு கிடைக்கின்ற வாக்குகளாக இல்லாமல் இருப்பதுதான் இதற்கு காரணம். ஆனால் நெருக்கடி காலங்களில் டக்ளசினைக் கைவிட்டால் ஜனாதிபதிக்கு மக்கள் பிரதிநிதி என தமிழ்ப் பிரதிநிதி எவரும் இல்லை.

அப்துல் கலாமை அழைத்து மும்மொழித்திட்ட விழாவை நடாத்தியதும், கிருஸ்ணாவை அழைத்து பொங்கல் விழாவினை நடாத்தியதும் இந்த நல்லிணக்கத் தோற்றத்தைக் கொடுப்பதற்காகத்தான். இது விடயத்தில் அரசிற்குள்ள கவலை, தான் சிரமப்பட்டு பலவேறு தோற்றங்களை உருவாக்கினாலும் அமெரிக்கா அதனைக் கணக்கில் எடுக்காததுதான்.

மூன்றாவது வியூகம் மனிதஉரிமைக் கவுன்சிலில் தமக்கு ஆதரவான நாடுகளைத் திரட்டிக்கொள்வதாகும். அதற்காக அமைச்சர்கள் பல்வேறு ஆசிய, ஆபிரிக்க நாடுகளுக்கு படையெடுக்க தொடங்கியுள்ளனர். சென்றதடவை இந்தியா உற்சாகத்துடன் ஆதரவினைத் திரட்டிக் கொடுத்தது. ஆனால் இந்தத் தடவை இந்தியா உற்சாகமாக செயற்படுவதாகத் தெரியவில்லை. அமெரிக்காவின் முயற்சிக்கு இந்தியாவும் ஆதரவாக இருப்பது போலவே தெரிகின்றது. இந்தியா தன்னால் முடியாததை அமெரிக்கவைக் கொண்டு செய்விக்கின்றது என்ற தகவலிலும் உண்மைகள் இல்லாமல் இல்லை. அமெரிக்கா நெருக்க நெருக்க இந்தியாவிடம் ஓடுவதைவிட இலங்கைக்கு வேறு தெரிவு இல்லை. அதுவும் இந்தியாவிற்கு சாதகமானதுதான். ஆனாலும் ஒரு எல்லைக்கு மேல் இலங்கை விவகாரத்தில் அமெரிக்கா தலையிடுவதற்கு இந்தியா அனுமதிக்கும் எனக் கூறமுடியாது.

ஆனால் இங்குள்ள பிரச்சினை இந்தியா பொறுமை காப்பது போல அமெரிக்காவினால் பொறுமை காக்கமுடியாது என்பதுதான். சீன விவகாரத்திற்கு அப்பால் ஈரானில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவரும் அமெரிக்காவிற்கு அவ்விவகாரத்தில்கூட இலங்கையை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கவேண்டிய தேவை உள்ளது. பிளேக்கின் இலங்கை விஜயத்தின்போது ஈரான் விவகாரமும் பேசப்படக்கூடும். இலங்கை தனது 94வீதமான எரிபொருள் தேவைக்கு ஈரானையையே நம்பியிருக்கின்றது.

மியன்மார் விவகாரத்திலும் இந்தியா பொறுமை காத்தது. ஒரு கட்டத்திற்கு மேல் பிடுங்கியது லாபம் என்பதற்கிணங்க இராணுவ ஆட்சியாளர்களுடன் கூட சமரசத்திற்கு சென்றது. ஒரு பக்கத்தில் சீனா பிடுங்கினாலும் எஞ்சியதை நாம் பிடுங்குவோம் என்ற அணுகுமுறையைத்தான் மியன்மார் விவகாரத்தில் இந்தியா கையாண்டது. இலங்கை விவகாரத்திலும் அதனையே பின்;பற்றுகின்றது. இந்த அணுகுமுறை அமெரிக்காவிற்கு ஏற்றதல்ல. கடைசிவரை மியன்மாருடன் இறுக்கமாக இருந்த அமெரிக்கா இராணுவ ஆட்சி இறங்கி வந்த பின்னரே நேச உறவுகளைக் கையாளத் தொடங்கியிருக்கின்றது.

அமெரிக்கா அழுத்தத்திற்கு ஏதாவது முதலீட்டு சலுகைகளை வழங்கி சமாளிக்கப் பார்க்கின்றது. ஆனால் அமெரிக்காவிற்கு அதுவல்ல முக்கியம். சீனா விலகவேண்டும் என்பதுதான் முக்கியம். இன்றைய நிலையில் அதனைச் செய்ய மகிந்தரால் முடியாது. பொருளாதார விவகாரங்களில் சீனா நன்றாகவே இலங்கையில் காலூன்றிவிட்டது.

இந்தியாவின் வியூகம் எல்லோருக்கும் தெரிந்ததுதான். இலங்கையைப் பாதுகாத்தல், தமிழ்த் தேசிய அரசியலை வளரவிடாது தடுத்தல், அமெரிக்காவைக் கொண்டு மென்மையான அழுத்தங்களை கொடுத்தல் என்பவைதான் அவை. இலங்கைக்குமேல் கத்தி தொங்கிக் கொண்டிருக்கின்ற நிலையில் கூட அதற்கு ஆறுதலான சூழல் இதுதான். இந்தியாவின் இந்த அணுகுமுறை இருக்கும்வரை கத்தி தலையில் தொங்கிக்கொண்டிருக்குமே தவிர ஒருபோதும் தலையில் விழுந்து விடாது.

இங்கு மிகவும் கவலைக்குரிய விடயம் எந்தவித வியூகங்களும் இல்லாமல் ஒரு தரப்பு இருக்கின்;றது என்பதுதான். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புதான் அந்த தரப்பு. தனக்கென தனியான ஒரு இலக்கோ, கொள்கையோ, வேலைத்திட்டமோ, அமைப்பு வடிவமோ இல்லாத ஒரு குழுவிடம் வியூகங்களை எப்படித்தான் எதிர்பார்க்க முடியும்.

இந்தியாவின் நிகழ்ச்சிநிரலுக்கு பின்னால் இழுபட்டுச் செல்வதைத் தவிர கூட்டமைப்பிடம் வேறு எதுவும் இல்லை. இந்தியாவின் கக்கத்தில் இருந்து சம்பந்தன் ஒருபோதும் இறங்கப் போவதில்லை. இந்தியாவும் இறங்கவிடப் போவதில்லை.

ஜெனிவாப் போர்க்களம் இந்தத்தடவையும் புஸ்வானம் ஆகிவிட்டால் ஆச்சரியம் பெரிதாக இருக்கப்போவதில்லை.

http://www.ponguthamil.com/shownewscontent.aspx?sectionid=2&contentid=27886217-49ca-4ac6-89af-8c44d820a1ce

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தியா புலிகள் மீதான ஆத்திரப்போக்கில் இலங்கையை இழந்தது. அதுபோல் ராஜபக்ஷவின் நெருங்கிய நண்பானாயிருக்கும் மாலைதீவும் பறிபோகாமல் இருக்க இந்தியா உள்நாட்டுவிவகாரம்போல் சதியை ஏற்படுத்தி பின்னர் தனது படைகளையுமம் தயார் நிலையில் வைத்திருக்கின்றனவாம். இது மாலைதீவின்; உள்நாட்டுவிவகாரம் அல்லவா. இலங்கையில் உள்நாட்டுவிவகாரம,; அவர்கள் பேசித்தீர்த்து கொள்ளட்டும்என்று சொல்லும் இந்திய அரசு ஏன் மாலைதீவில இந்த ஆர்ப்பாட்டம். சுற்றியுள்ள எல்லாத்தீவுகளும் நாடுகளும் பறிபோய்விட்டது மதலைதீவையாவது உங்கள் தைக்குள் அடக்கவேண்டாமா? என்பது தான். தன் தலைக்கே தன்னையறியாமல் கொள்ளி வைத்த ஒரே ஒரு வல்லரசு இந்தியாதான். இன்று அவர்கள் செய்வது சரியெனத்தோன்றும். ஆனால் இதன் பலாபலன்களை எதிர்காலத்தில் அனுபவிக்கும். தன்னுடைய நாட்டின் மாநிலங்கள் அளவையில் மாநிலங்களைத்திருப்திப்படுத்தகூடிய எதையும் செய்யாத நாடுகள் தன்னைச்சுற்றியுள்ள நாடுகளைத்திருப்திபடுத்த நினைக்கலாம். இதுவே உள்நாட்டு பிரச்சனை பலமாகி தன்னாட்டம் காணும் நிலையை இந்தியா எதிர்நோக்கும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.