இராணுவ முஸ்த்தீபு
இந்தியாவிற்கெதிராக தனது சகாவான பிரேமதாசவைக் களமிறக்கிய ஜெயார்
அக்கால கட்டத்தில் ஜெயாருக்கு இருந்த ஒரே நோக்கம் இந்தியாவின் அழுத்தத்தை நிர்மூலமாக்கி இந்தியாவையும், இந்திராவையும் தற்காப்பு நிலையெடுக்கப் பண்ணுவதுதான். இந்தியாவைச் சீண்டுவதில் பெயர்பெற்றவராக விளங்கிய பிரேமதாச, ஜெயாரின் இந்த நோக்கத்திற்காகப் பயன்படுத்தப்பட்டார். இருமுனை நடவடிக்கையினை பிரேமதாச மேற்கொண்டார்.
முதலாவது, இந்தியாவின் அனுசரணையின் ஊடாக முன்வைக்கப்பட்ட பிராந்திய சபைகளினூடான தீர்வினை உள்ளடக்கிய இணைப்பு "சி" யின் அடித்தளத்தைச் சிதைப்பது. இதனைச் செய்வதற்கு பாராளுமன்றத்தையும், ஊடகத்துறையினையும் அவர் களமாகப் பாவித்தார். பாராளுமன்றத்தில் அவர் மேற்கொண்ட பேச்சுக்களில் தமிழர்களுக்கு மாவட்ட அபிவிருத்திச் சபைகளுக்கு மேலான எந்தத் தீர்வையும் வழங்க அரசாங்கம் தயாராக இல்லையென்று கூறத் தொடங்கினார். மேலும், மாவட்ட அபிவிருத்திச் சபைகளைத் தவிர வேறு எதனையும் தமிழர்கள் கோரக் கூடாது என்றும் பேசி வந்தார்.
பிரேமதாசவின் இரண்டாவது முனை தமிழர்களுக்கு இந்தியா வழங்கிவரும் ஆதரவினைப் பலவீனப்படுத்தி ஈற்றில் முற்றாக அகற்றிவிடுவது என்பதாக இருந்தது. அதற்காக இந்தியாவிற்கு தொடர்ச்சியான தலைவலியைக் கொடுக்க அவர் முயன்றார். பொதுக்கூட்டம் ஒன்றில் பேசும்போது, "இலங்கை இறையாண்மையுள்ள சுதந்திரமான நாடு. ஆகவே, தனக்குத் தேவையானவற்றை தான் விரும்பும் நாடுகளில் இருந்து, தனக்கு உகந்த நேரத்தில் பெற்றுக்கொள்ளும் உரிமை அதற்கு இருக்கிறது" என்று இந்தியாவின் அழுத்தத்திற்கு தாம் அடிபணியப்போவதில்லை எனும் தொனியில் பேசினார். பின்னர், பங்குனி மாதத்தில் பாராளுமன்றத்தில் பேசும்போது, " நாம் எத்தகைய சவாலையும் எதிர்கொள்ளத் தயாராகவே இருக்கிறோம். இந்தியா எம்மை அச்சுருத்துவதை அனுமதிக்கப்போவதில்லை. இதனை இலங்கை அரசாங்கத்தின் சார்பில் நான் பிரகடனம் செய்கிறேன்" என்று பேசினார்.
மேலும், இந்தியா இரட்டை நிலைப்பாட்டைக் கொண்டு இயங்குவதாகக் குற்றஞ்சாட்டினார். இந்தியாவில் அது கைக்கொள்ளும் நடைமுறைக்கும், இலங்கையில் அது கைக்கொள்ளும் நடைமுறைக்கும் இடையே வேறுபாடு இருப்பதாக அவர் விமர்சித்தார். காஷ்மீரிலும், பஞ்சாப்பிலும் பயங்கரவாதத்தினை இரும்புக் கரம் கொண்டு அடக்கிவரும் இந்தியா, இலங்கையை அவ்வாறு செய்யவேண்டாம் என்று போதித்து வருகிறது என்று அவர் தெரிவித்தார். "எமது குற்றச்சாட்டு என்னவென்றால், எமது நாட்டில் உள்ள மக்கள் கூட்டத்தினரை தமது நாட்டிற்குள் வரவழைத்து, பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு அவர்களைப் பயிற்றுவித்து, எமக்கெதிராகச் செயற்பட மீண்டும் எமது நாட்டிற்குள் இந்தியா அனுப்பிவைக்கிறது. இதுதான் எமது பிரச்சினை. இந்திய அரசாங்கத்திற்கெதிராகப் போராடிவரும் சீக்கியப் பிரிவினைவாதிகளை நாம் இலங்கைக்கு அழைத்து, பயிற்சியளித்து மீளவும் இந்தியாவிற்குள் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட அனுப்பினால் இந்தியா என்ன செய்யும்? எங்களை இந்தியா அப்போது குற்றஞ்சாட்டியிருக்கும். ஆனால், நாம் ஒருபோதும் அதனைச் செய்யப்போவதில்லை. எமது நாட்டையோ அல்லது அல்லது எமக்குச் சொந்தமான எதனையோ பாவித்து எவரும் இந்த உலகில் உள்ள எந்த நாட்டிற்கும் எதிராகப் போரிடவோ அல்லது ஆக்கிரமிக்கவோ நாம் அனுமதிக்கப்போவதில்லை. அதுதான் எமது கொள்கை. அதேபோல், எந்தவொரு நாடும் எமக்கெதிராகச் செயற்படுவதை நாம் வெறுக்கிறோம். எமது கொள்கையினை மற்றையவர்களும் முன்மாதிரியாகப் பின்பற்ற வேண்டும் என்று நாம் எதிர்பார்க்கிறோம்" என்று அவர் கூறினார்.
சித்திரை மாத ஆரம்பத்தில் பாராளுமன்றத்தில் பேசிய பிரேமதாச, " தமிழ்ப் பயங்கரவாதிகளை எதற்காக இந்தியாவிற்கு வரவழைத்து ஆதரிக்கிறீர்கள்? எமது நாட்டை ஆக்கிரமித்து, கபளீகரம் செய்ய நீங்கள் விரும்பினால் அதை நேரடியாகச் செய்யுங்கள், பயங்கரவாதிகளின் பின்னால் ஒளிந்திருந்து செய்யாதீர்கள்" என்று அவர் இந்தியாவை நோக்கி விமர்சனத்தை முன்வைத்தார்.
பிரேமதாசவின் இந்தியாவுக்கெதிரான தாக்குதலும், இணைப்பு "சி" இற்கெதிரான விமர்சனமும் வைகாசி, ஆனி மாதங்களிலும் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வந்தது. இதே காலப்பகுதியில் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினருக்கெதிரான தாக்குதலையும் அரசாங்கம் முன்னெடுத்திருந்தது.
சர்வகட்சி மாநாட்டினை ஜெயார் நடத்தி வந்த விதமும், தம்மீதான தொடர்ச்சியாக அரச ஊடகங்கள் ஊடாக முன்வைக்கப்பட்டு வந்த விமர்சனங்களும் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினருக்கு கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. ஆகவே, அரசாங்கத்துடன் ஒத்துழையாமை எனும் நிலைப்பாட்டினை தாம் எடுக்கப்போவதாக அமிர்தலிங்கம் ஊடகங்களுக்கு அறிவித்தார்.
இதனால் ஜெயார் கடுங்கோபமுற்றார். ஜெயாருக்கும் முன்னணியினருக்கு வளரத் தொடங்கிய கசப்புணர்வை உள்ளூர ஆதரித்த புலிகள் ஆனி 28 ஆம் திகதி வெளியிட்ட அறிக்கையில், தமிழர் தொடர்பான விடயங்களுக்குத் தாமே பொறுப்பானவர்கள் என்று தொனிப்பட அறிவித்தார்கள்.
"எம்மைப் புறக்கணித்திவிட்டு, தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினருடன் சமரசத்தில் ஈடுபடுவதில் எந்த அர்த்தமும் இல்லை. எமது இலட்சியத்தை அடையும் வகையில் தீர்வு அமையப்பெறாத விடத்து எமது ஆயுதப் போராட்டம் தொடர்ந்தும் நடைபெற்றுக்கொண்டே இருக்கும்" என்று புலிகளின் அறிக்கை கூறியது.
புலிகளின் உத்தியோகபூர்வ சஞ்சிகையான விடுதலைப் புலிகள் ஆடி மாதத்தில் வெளியிட்ட அறிக்கையில் "சர்வகட்சி மாநாடு தமிழர் பிரச்சினைக்கான தீர்வெதனையும் தரப்போவதில்லை. கடந்த 17 வருட கால சரித்திரம் அதனையே உறுதிப்படுத்துகிறது. சிங்களத் தலைவர்களுடன் பேசிவந்த பழைய தலைமுறை தமிழ் அரசியல்வாதிகள் தமது தலைமுடியினை இழந்ததுதான் கண்ட மிச்சம். ஆனால், அப்படியிருந்தும் பேச்சுவார்த்தைகள் மூலம் தமிழருக்கான தீர்வினை அடைந்துவிடலாம் என்கிற நம்பிக்கையினை மட்டும் அவர்கள் கைவிடத் தயாரில்லை".
"புரட்சிகரமான புதிய தலைமுறை ஒன்று அரசியல் களத்திற்குள் வந்துவிட்டது என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். அரசாங்கத்தாலோ, அரசியல் நடிகர்களாலோ தமிழ் மக்களின் அபிலாஷைகளை பூர்த்திசெய்துவிட முடியாது. தமிழர்களுக்கும் இவர்களுக்கு எந்தத் தொடர்பும் இனி இருக்கப்போவதில்லை. ஆகவே, தமீழிழ விடுதலைப் போராளிகளின் சரித்திரம் படைக்கப்போகும் சாகசக் களங்களை நாம் இனிமேல் தரிசிக்கப் போகிறோம். தமிழர்களின் புதிய பிரதிநிதிகள் அவர்களே. தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் அல்லாமல், போராளி இளைஞர்களே இனிமேல் தமிழர்களின் கதாநாயர்களாகத் திகழ்வார்கள்" என்று கூறப்பட்டிருந்தது.
தமது இறுதி முயற்சியாக சத்தியாகக் கிரகப் போராட்டத்தை கையிலெடுத்த முன்னணியினர்
தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரைப் பொறுத்தவரை அரசியல்க் களத்தில் தாமே இன்னமும் முக்கிய கதாப்பாத்திரங்கள் என்பதை அரசாங்கத்திற்கும் புலிகளுக்கும் நிரூபிக்க வேண்டிய கட்டாயம் இருந்தது. ஆகவே, 1983 ஆம் ஆண்டு ஆடி இனக்கொலை நிகழ்வின் முதலாம் வருட நினைவு தினத்தினை ஆடி 25 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள வீரமாகாளியம்மண் கோயிலின் முன்பாக சத்தியாக்கிரக நிகழ்வு மூலம் அனுஸ்ட்டிப்பது என்று முடிவெடுத்தார்கள். இதுதொடர்பாக அமிர்தலிங்கம் வெளியிட்ட அறிக்கையில், "1983 ஆடி தமிழினக் கொலையினை துயருருதல், உண்ணாவிரதம் இருத்தல், பிரார்த்தனைகளில் ஈடுபடுதல் ஆகிய நடவடிக்கைகளில் ஈடுபடுவதனூடாக அனுட்டிக்கப்போகிறோம். தமிழர்களுக்கான உரிமைகளை வன்முறையற்ற வழிகள் ஊடாகப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் நாட்டில் நடத்தப்படவிருக்கும் போராட்டங்களின் ஆரம்பமாக இந்தச் சத்தியாக்கிரக நிகழ்வு அமையும்" என்று கூறியிருந்தார்.
இதுதொடர்பான விபரமான செய்திக்குறிப்பினை சிவசிதம்பரம் ஊடகங்களுக்கு வெளியிட்டார். "தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசியல்த் தீர்வுத் திட்டம் ஒன்றினை சர்வகட்சி மாநாடு தரப்போவதில்லை என்பது உறுதியாகத் தெரிந்துவிட்டது என்று அவர் கூறினார். தமிழ் மக்கள் தாம் இழந்த உரிமைகளை மீளப் பெற்றுக்கொள்வதற்கான பொறுப்பினை தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரிடமே இன்னமும் கையளித்திருக்கிறார்கள். எம்மைப்பொறுத்தவரை இந்தப் பொறுப்பென்பது மிகவும் உன்னதமானது. இதனை அடைவதற்கு நாம் பல்வேறு வழிகளில் முயன்று வருகிறோம். பேச்சுவார்த்தைகள் மூலமாகவும், இருதரப்புச் சமரசங்கள் மூலமாகவும் பாராளுமன்றத்தில் பேசுவதன் ஊடாகவும் சர்வதேச அளவில் எமது மக்களின் பிரச்சினைகளை அறியச் செய்திருக்கிறோம். ஆனால், இவை எதுவுமே எமக்கான தீர்வினைத் தரவில்லை. உலகில் பலவீனமானவர்கள் முன்னெடுக்கவேண்டிய போராட்ட வழிமுறை குறித்து மகாத்மா காந்தி கற்பித்துச் சென்றிருக்கிறார். ஆடி 25 ஆம் திகதி நாமும் அவ்வழியில் பயணிப்போம். உண்மையான சத்தியாக்கிரகிகளாக நாம் மாறுவோம். இச்சத்தியாக்கிரக நிகழ்வு தமிழ் மக்களுக்கு அவலத்தை ஏற்படுத்துமாக இருந்தால், நாமே அந்த அவலங்களுக்கு முதலில் முகம் கொடுப்போம்" என்று அவரின் அறிக்கை கூறியது.
முன்னணியினரின் சத்தியாக்கிரகத்தைக் கலைத்துப்போட்ட போராளிகள்
1984 ஆம் ஆண்டு ஆடி மாதம் 25 ஆம் திகதி யாழ்ப்பாணம் வீரகாளியம்மண் ஆலய முன்றலில் கூடிய அமிர்தலிங்கம், சிவசிதம்பரம் தலைமையிலான சுமார் 200 பேர் அடங்கிய தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரும், ஆதவாளர்களும் நிலத்தில் அமர்ந்து பிரார்த்தனையில் ஈடுபடத் தொடங்கினார்கள். மங்கையட்கரசி சுலோகங்களை பாடினார். புலிகள் மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்புக்களைச் சேர்ந்த சுமார் 200 இளைஞர்கள் அவர்களைச் சூழ்ந்துகொண்டனர். சத்தியாக் கிரகத்தில் ஈடுபட்டவர்களை நோக்கி அவர்கள் பல கேள்விகளை முன்வைத்தனர். "இவ்வளவு காலமும் நீங்கள் எங்கே போயிருந்தீர்கள்? மக்களுடன் நிற்கவேண்டிய தருணத்தில், அவர்களைக் கைவிட்டு ஓடி ஒளிந்துவிட்டு இப்போது வந்து அவர்களின் முன்னால் வந்து உங்களைத் தலைவர்கள் என்று கூறிக்கொள்வது உங்களுக்கு அவமானமாகத் தெரியவில்லையா?" என்கிற கேள்விகளும், கேலிகளும் முன்னணியினரை நோக்கி அங்கு எழுப்பப்பட்டன.
உண்ணாவிரதம் இருந்து உரிமைகளை வெல்லும் காலம் முடிவடைந்துவிட்டது என்று இளைஞர்கள் கூறினார்கள். பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வினைக் காணமுடியும் என்று இன்னமும் நம்புகிறீர்களா? என்று அவர்கள் முன்னணியினரைப் பார்த்துக் கேள்வி எழுப்பினார்கள். இப்போது துப்பாக்கிகள் சுடத் தொடங்கிவிட்டன என்பதை மறக்கவேண்டாம் என்று நினைவுபடுத்தினார்கள். தமிழர்களின் போராட்டம் இளைஞர்களின் கைகளுக்கு தற்போது வந்துவிட்டது என்று அவர்கள் எச்சரித்தார்கள். "தயவுசெய்து உங்களின் சத்தியாக்கிரகத்தை முடித்துவிட்டு இங்கிருந்து அகன்று செல்லுங்கள்" என்று அவர்கள் அறிவுருத்தினார்கள்.
சத்தியாக்கிரகத்தில் ஈடுப்பட்ட பலர் அங்கிருந்து விலகிச் சென்றார்கள். வெறும் 20 பேரே அங்கு தொடர்ந்தும் நின்றிருந்தார்கள். அவர்களை சூழ்ந்துகொண்ட இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது. புலிகளின் போராளிகளில் ஒருவரான திலீபன் மதியவேளை, 12 உணவுப் பொதிகளுடன் அங்கு வந்தார். உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த தலைவர்களின் முன்னால் உணவுப் பொட்டலங்கள் வைக்கப்பட்டன. அவர்களின் அருகில் அமர்ந்துகொண்ட இளைஞர்கள் உணவுப் பொட்டலங்களை திறந்து அருந்த ஆரம்பித்தார்கள். இதனையடுத்து தமது உண்ணாவிரதப் போராட்டம் முடிவிற்கு வருவதாக அறிவித்துவிட்டு, தோல்வியுற்றவராய் அங்கிருந்து அகன்று சென்றார் அமிர்தலிங்கம்.
சமாதான வழிகளிலான போராட்டம் முடிவிற்கு வர, ஆயுதங்கள் மூலமான போராட்டம் களத்திற்கு வந்துவிட்டிருந்தது.