Jump to content

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    18715
  • Joined

  • Last visited

  • Days Won

    12

Everything posted by ஏராளன்

  1. வங்காள விரிகுடாவின் தென்மேற்கு கடலில் நிலைகொண்டுள்ள “மிக்ஜம்” ! வானிலையில் ஏற்படப்போகும் மாற்றம்.... 04 DEC, 2023 | 07:20 AM மிக்ஜம் சூறாவளியானது வங்காள விரிகுடாவின் தென்மேற்கு கடல் பிராந்தியத்திற்கு மேலாக யாழ்ப்பாணத்திலிருந்து வடகிழக்காக சுமார் 365 கிலோமீற்றர் தொலைவில் நிலைகொண்டுள்ளது என சிரேஷ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறினார். வானிலை குறித்து மேலும் கூறுகையில், மிக்ஜம் சூறாவளியானது மேலும் தீவிரமைவதுடன் வடமேற்குத் திசையை நோக்கி இலங்கையிலிருந்து அப்பால் நகர்ந்து சென்று இந்தியாவின் தமிழ் நாட்டின் வடகரையை சென்றடையும். இதன்பிற்பாடு வடதிசையை நோக்கி திரும்பி நாளையளவில் தென் ஆந்திராப் பிரதேசத்தை ஊடறுத்து செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் அத்துடன் திரிகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். சில இடங்களில் 75 மில்லிமீற்றர் வரையிலான ஓரளவு பலத்த மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டின் ஏனைய பிரதேசங்களின் பல இடங்களில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்திற்கு மேலாக சூறாவளி நிலைகொண்டுள்ளதனால் மீனவர்களும் கடல் சார் ஊழியர்களும் மறு அறிவித்தல் குறிப்பிட்ட கடல் பிராந்தியங்களுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகின்றனர். ஏனைய கடல் பிராந்தியங்களுக்கு செல்பவர்கள் மிகவும் அவதானத்துடன் செயற்பாடு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். காங்கேசன்துறை தொடக்கம் மன்னார், கொழும்பு, காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடல் பிராந்தியங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 30 - 40 கிலோமீற்றர் வேகத்தில் தென்மேற்குத் திசையில் இருந்து காற்று வீசும். மன்னார் தொடக்கம் காங்கேசன்துறை ஊடாக திருகோணமலை வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 60 - 70 கிலோமீற்றரிலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக்கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்றார். https://www.virakesari.lk/article/170898
  2. மிக்ஜாம் புயல்: சென்னையில் கனமழை; சாலைகளில் வெள்ளம் - படகுகள் மூலம் மக்கள் மீட்பு - சமீபத்திய தகவல்கள் பட மூலாதாரம்,NDRF படக்குறிப்பு, பெருங்களத்தூரை ஒட்டிய பகுதியில் படகு மூலம் மீட்கப்படும் மக்கள் 30 நவம்பர் 2023 புதுப்பிக்கப்பட்டது 12 நிமிடங்களுக்கு முன்னர் மிக்ஜாம் புயல் நாளை (டிச. 5) முற்பகல் தெற்கு ஆந்திரா கடற்கரையை நெல்லூருக்கும் மசூலிப்பட்டினத்திற்கும் இடையே தீவிர புயலாகக் கடக்கக்கூடும் என, இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மிக்ஜாம் புயலின் அறிகுறிகள் தமிழ்நாட்டில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை மாலை முதலே தென்படத் தொடங்கிவிட்டன. சென்னையில் ஞாயிற்றுக்கிழமை முதல் கன கன மழை பெய்து வருகிறது. பெரும்பாலான சாலைகளில் நீர் தேங்கியிருப்பதால், சென்னையின் முக்கிய சுரங்கப் பாதைகள் அனைத்தும் மூடப்பட்டிருக்கிறன. புயல் உருவாகியுள்ள நிலையில், துறைமுகங்களில் 3 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. சென்னை, எண்ணூர், காட்டுப்பாக்கம் துறைமுகங்களில் 5 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் அநேக இடங்களில் இடியுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல, விழுப்புரம், ராணிப்பேட்டை, கடலூர், தஞ்சாவூர், நாகப்பட்டிணம், மயிலாடுதுறை, திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருப்பூர், திண்டுக்கல், விருதுநகர், தூத்துக்குடி, நீலகிரி மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய சேலானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. நவம்பர் 30-ஆம் தேதி தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி டிசம்பர் ஒன்றாம் தேதி காலை ஐந்தரை மணி அளவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. சென்னை வானிலை மையம் கொடுத்த அப்டேட் பட மூலாதாரம்,RMC, CHENNAI படக்குறிப்பு, சென்னை வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள மிக்ஜாம் புயல் குறித்து, சென்னை மண்டல வானிலை மையத்தின் இயக்குநர் பாலச்சந்திரன் சமீபத்திய நிலவரங்களை பகிர்ந்துள்ளார். இன்று காலை 9 மணி நிலவரப்படி, மிக்ஜாம் புயல் சென்னைக்கு கிழக்கு வடகிழக்கே 110 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளது. கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 10 கி.மீ வேகத்தில் இந்த புயல் நகர்ந்து வருகிறது. இதுதொடர்ந்து வடக்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று முற்பகலில் தீவிர புயலாக வலுப்பெறும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. தீவிர புயலாக வலுப்பெற்ற பிறகு வட தமிழகம், தெற்கு ஆந்திரா கடலோரத்திற்கு இணையாக நகர்ந்து நாளை முற்பகலில் கரையை கடக்கும் என்று பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். ஆந்திரா மாநிலம் நெல்லூர் மற்றும் மசூலிப்பட்டினத்திற்கும் இடையே நாளை முற்பகலில் புயல் கரையை கடக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. புயலின் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்கள் நேற்று இரவு முதல் மழை பெய்து வருகிறது. இன்று இரவு வரை இந்த மாவட்டங்களில் மழையும், பலத்த காற்றும் வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மிக்ஜாம் புயலால் என்னென்ன பாதிப்பு? பட மூலாதாரம்,IMD மிக்ஜாம் புயல் காரணமாக கனமழை பெய்து வருவதால், சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் சாலைகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டிருக்கிறது. சென்னையில் பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து சாலைகளில் விழுந்துள்ளன. நீர் நிரம்பி அடைத்திருப்பதால், முக்கிய சுரங்கப் பாதைகள் அனைத்தும் மூடப்பட்டிருக்கின்றன. வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில், சில இடங்களில் படகுகள் மூலம் மக்கள் மீட்கப்பட்டுள்ளனர். பட மூலாதாரம்,SOCIAL MEDIA படக்குறிப்பு, சென்னையில் புறநகர்ப் பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில், பெருங்களத்தூர் அருகே முதலை ஒன்று சாலையில் செல்லும் காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. பிபிசி இந்தக் காணொளியை சரிபார்க்க இயவில்லை. பெருங்களத்தூரில் முதலை வந்ததா? சென்னையில் புறநகர்ப் பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில், பெருங்களத்தூர் அருகே முதலை ஒன்று சாலையில் செல்லும் காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. பிபிசி இந்தக் காணொளியை சரிபார்க்க இயவில்லை. இது தொடர்பாக பதிவிட்டுள்ள தமிழ்நாடு வனத்துறை செயலாளர் சுப்ரியா சாகு, "இந்த வீடியோ குறித்து பலர் ட்வீட் செய்து வருகின்றனர்.சென்னையில் உள்ள பல நீர்நிலைகளில் சில குவளை முதலைகள் உள்ளன. இவை கூச்ச சுபாவமுள்ள விலங்குகள். மனித தொடர்பைத் தவிர்க்கின்றன. புயலின் தாக்கத்தில் பாரிய மழை காரணமாக நீர் பெருக்கெடுத்துள்ளதால், தயவு செய்து நீர்நிலைகளுக்கு அருகில் செல்ல வேண்டாம். இந்த விலங்குகளை தனியாக விட்டுவிட்டு, தூண்டப்படாமல் இருந்தால், மனிதர்களுக்கு எந்தத் தீங்கும் ஏற்பட வாய்ப்பில்லை. பீதியடைய தேவையில்லை. வனவிலங்கு பிரிவு உஷார்படுத்தப்பட்டு அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் தடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்" என்று தெரிவித்துள்ளார். ரத்தான விமானம் மற்றும் ரயில்கள் பட மூலாதாரம்,UGC படக்குறிப்பு, மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் 20 விமானங்களின் வருகை, புறப்பாடு ரத்து செய்யப்பட்டுள்ளது மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் பெய்து வரும் கனமழையினால், சென்னை உள்நாட்டு மற்றும் பன்னாட்டு விமான நிலைய ஓடுதளத்தில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. விமான ஓடுதளங்களில் தண்ணீர் அதிகளவு தேங்கியிருப்பதால், சென்னையில் தரையிறங்க வேண்டிய மற்றும் சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய 20 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சென்னைக்கு வந்து கொண்டிருந்த விமானங்கள், தரையிறங்க ஏதுவான சூழல் இல்லாத நிலையில் பெங்களூரூவுக்கு திருப்பி அனுப்பப்பட்டன. மிகவும் அவசியமான சூழலில் மட்டும் விமான பயணங்களை மேற்கொள்ளுமாறும், பிற பயணிகள் தங்களது பயணங்களை ரத்து செய்யுமாறும் சென்னை விமான நிலையம் அறிவுறுத்தியுள்ளது. கனமழை காரணமாக ஒரு சில ரயில் சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது. சென்னை எம்.ஜி.ஆர். சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட வேண்டிய 6 ரயில்கள், வியாசர்பாடி - பேசின் பிரிட்ஜ் ரயில் பாலத்தில் தண்ணீர் அதிகளவில் செல்வதால் ரத்தாகியுள்ளன. அதே போல சென்னைக்கு வர வேண்டிய 6 ரயில்களும் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன. அதே போல சென்னை புறநகர் ரயில் சேவையும் இன்று காலை 8 மணி வரை ரத்து செய்யப்பட்டதாக தெற்கு ரயில்வே அறிவித்திருந்தது. கனமழையின் காரணமாக சென்னையின் ஒரு சில மெட்ரோ ரயில் நிலையங்களிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் வழக்கம் போல இயக்கப்பட்டாலும், பரங்கிமலை, கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. 'பொது மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்' - வானிலை ஆய்வு மையம் டிசம்பர் 4 மற்றும் 5 ஆம் தேதி, பொது மக்கள் தேவையின்றி வெளியே வர வேண்டாம் என வானிலை ஆய்வு மையமும், தமிழ் நாடு அரசின் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனாவும் அறிவுறுத்தியுள்ளனர். "புயல் கரையை கடந்துவிட்டது என அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கும்வரை பொது மக்கள் வெளியில் வராமல் இருக்க வேண்டும்," என வானிலை ஆய்வு மைய இயக்குநர் தெரிவித்திருந்தார். மிக்ஜாம் புயலால் கனமழையுடன் 60-70 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என மாநில பேரிடர் மேலாண்மை நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கடலோரத்தில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்தில் அல்லது நிவாரண முகாமில் எச்சரிக்கையுடன் இருக்கவும் மாநில பேரிடர் மேலாண்மை நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் கடலோரப் பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருவதால் பொதுமக்கள் தேவையின்றி வெளியே செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கன மழை பெய்ய வாய்ப்புள்ளதால், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் டிசம்பர் 4 ஆம் தேதி, பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பட மூலாதாரம்,NDRF மிக்ஜாம் புயலின் தற்போதைய நிலை என்ன? வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வுநிலை தற்போது இந்தத் தாழ்வுநிலை சென்னையிலிருந்து தென்கிழக்கே 340கி.மீ தொலைவில் இருக்கிறது. அது விரைவில் புயலாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்பின் அது வடமேற்கே நகர்ந்து, டிசம்பர் 4-ஆம் தேதி தமிழகம் மற்றும் ஆந்திராவை ஒட்டிய வங்கக் கடலை அடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்குப் பிறகு இந்தப் புயல், டிசம்பர் 4-ஆம் தேதியன்று மதியம் தெற்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய வட தமிழக கடலோரப் பகுதிகளை வந்தடையும். பிறகு இந்தப் புயல் தெற்கு ஆந்திரக் கடலோரப் பகுதிகளை ஒட்டியே நகரும். அதையடுத்து டிசம்பர் 5-ஆம் தேதி ஆந்திராவின் நெல்லூர் மற்றும் மசூலிப்பட்ணத்திற்கு இடையே கரையைக் கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் வேகம் 80-90கி.மீ அளவுக்கு இருக்கும். இந்த புயல் சின்னத்தின் காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் நாகப்பட்டனம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. டிசம்பர் 3, 4 தேதிகளில் தீவிர கன மழை எச்சரிக்கை இந்தப் புயலின் காரணமாக, டிசம்பர் 3-ஆம் தேதியன்று தமிழ்நாட்டின் அநேக இடங்களிலும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், இராணிப்பேட்டை, புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும் என்றும் வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் கரையைக் கடக்கும் டிசம்பர் 4-ஆம் தேதியன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. டிசம்பர் 4-ஆம் தேதியன்று விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர், புதுச்சேரி பகுதிகளில் பலத்த தரைக்காற்று மணிக்கு 60கி.மீ முதல் 70கி.மீ வேகத்திலும் இடையிடையே 80கி.மீ வேகத்திலும் வீசும் எனக் கூறப்பட்டுள்ளது. புயலின் பெயர் எப்படி வைக்கப்பட்டது? இது புயலாக உருமாறிய பிறகு இதற்கு, 'மிக்ஜாம்' எனப் பெயரிடப்பட உள்ளது. இந்தப் பெயர் மியான்மரால் வழங்கப்பட்டது. இந்தப் புயலின் காரணமாக, வடதமிழக கடலோரப் பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மூன்றாம் தேதி காலை வரை 80கி.மீ. வேகத்திலும் அன்று மாலை வரை மணிக்கு 70 முதல் 80கி.மீ. வேகத்திலும் இடையிடையே 90கி.மீ வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசும் என எச்சரிக்கப்பட்டிருக்கிறது. மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளிலும் தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளிலும் மூன்றாம் தேதி மாலை முதல் மணிக்கு 60 முதல் 70 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 80கி.மீ வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும். அதன் பிறகு காற்றின் வேகம் படிப்படியாக உயர்ந்து, டிசம்பர் 4ஆம் தேதி மாலை முதல் மணிக்கு 80 முதல் 90கி.மீ வேகத்திலும் இடையிடையே 100 கி.மீ வேகத்தில் அடுத்த 12 மணி நேரத்திற்கு வீசக்கூடும். இதன் காரணமாக மீனவர்கள் இந்தப் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. ஆழ்கடலில் உள்ள மீனவர்களும் கரைக்கு திரும்புமாறு அறிவுறுத்தப் பட்டுள்ளனர். புயல் கரையைக் கடக்கும்போது என்ன செய்யக்கூடாது? புயல் கரையைக் கடக்கும் நேரத்தில் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்று 10 முக்கிய தகவல்கள் கீழே தரப்பட்டுள்ளன. 1. புயல் வரும் சமயத்தில் வெளியே, குறிப்பாக கடற்கரைப் பகுதிகளுக்கு, சென்று வீடியோ எடுப்பது, செல்ஃபி எடுப்பது போன்றவற்றில் ஈடுபடக் கூடாது. இது உயிருக்கே ஆபத்தாக அமையலாம் 2. வீட்டின் கதவு மற்றும் ஜன்னல்களை மூடி வைக்க வேண்டும். வீட்டின் கதவோ, சன்னல் கதவோ நல்ல நிலையில் இல்லாவிட்டால், அதை உடனடியாக சரி செய்துகொள்வது நல்லது. 3. காற்றின் அழுத்தத்தால் சன்னல் கண்ணாடிகள் விரிசல் விட்டு உடையவோ, உடைந்து சிதறவோ வாய்ப்புண்டு. மரப்பலகை, துணி ஏதேனும் இருந்தால், சன்னலை அதை வைத்து மூடிக்கொள்ளுங்கள். கண்ணாடித் துண்டுகள் காற்றின் வேகத்தில் வீட்டுக்குள் சிதறுவதை அது தடுக்கும். 4. சிதிலமடைந்த கட்டடங்கள் மற்றும் பழைய கட்டடங்களுக்கு உள்ளேயோ அருகிலோ இருப்பதைத் தவிர்க்க வேண்டும். 5. பலத்த காற்றின் காரணமாக மின் இணைப்பு துண்டிப்பு ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே டார்ச் லைட், பவர் பேங்க், மெழுகுவர்த்தி, இன்வர்ட்டர் போன்றவற்றை தயார் செய்து வைத்துக்கொள்வது பாதுகாப்பானது. 6. பலத்த மழையால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட வாய்ப்புண்டு என்பதால் முன்னெச்சரிக்கையாக காய்கறிகள், உணவுப்பொருட்கள் மற்றும் மருந்துகளை ஓரிரு நாட்களுக்கு தயார் செய்து வைத்துக்கொள்ள வேண்டும். 7. உங்கள் பகுதியில் உள்ள அரசு மற்றும் தொண்டூழிய அமைப்புகளின் உதவி எண்களைத் தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள். 8. மின்சாரம் இல்லாமல் போனால், தொலைக்காட்சி செய்திகளை எல்லோரும் பார்க்க முடியாது. செல்பேசியே தகவல்களை பெற வழியாக இருக்கும். பேட்டரியில் இயங்கும் பழைய டிரான்சிஸ்டர் இருந்தாலும் அது உதவியாக இருக்கும். அதனால் சமூக ஊடகங்களில் வரும் அனைத்து தகவல்களையும் நம்பி விடாமல், போலிச் செய்திகள் குறித்து கவனமாக இருங்கள். 9. புயல் கரையைக் கடக்கும்போது பொதுமக்கள் வெளியே நடமாடுவதைத் தவிர்க்க வேண்டும். வேறு வழியில்லாமல் வெளியே செல்ல நேர்ந்தால் கவனமாக இருக்கவும். இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு கூடுதல் கவனம் தேவை. 10. கனமழையும் புயலுடன் சேர்ந்து வரும். தாழ்வான பகுதிகளில் உங்கள் வீடு இருந்தால், விலைமதிப்புள்ள பொருட்களையும் சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களை பத்திரப்படுத்திவிட்டு, நண்பர்கள், உறவினர்கள் வீடுகளுக்கு செல்வது நல்லது. பட மூலாதாரம்,IMD.GOV.IN தயார் நிலையில் மாநில பேரிடர் மீட்புக் குழுவினர் படகுகள், தண்ணீரில் இருக்கும் போது பயன்படுத்தப்படும் டியூப்கள், என மாநில பேரிடர் மீட்புக் குழு மற்றும் கமாண்டோ குழுக்கள் சென்னையில் தயார் நிலையில் உள்ளன. இரவு நேரங்களில் வெள்ள நீர் சூழந்து மக்கள் வெளியேற்றப்பட வேண்டிய சூழல் ஏற்பட்டால் அவர்களை மீட்புப் பணிகளை தொடங்குவார்கள். தி.நகர் ,மேற்கு மாம்பலம் உள்ளிட்ட எந்தெந்த தண்ணீர் தேங்கியிருக்கிறதோ, அங்கு மாநில பேரிடர் மீட்புக் குழுவினர் முன்கூட்டியே சென்று தயாராக இருக்க, சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார். தி.நகர் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் செல்லக் கூடிய ரங்கராஜன் சுரங்கப்பாதையில் மழை நீர் வெளியேற்றப்படுவது சவாலாக இருப்பதால், அங்கு கூடுதல் மோட்டார்கள் கொண்டு தண்ணீரை வெளியேற்றும் பணியில் சென்னை மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். https://www.bbc.com/tamil/articles/c80w795ej5xo
  3. 04 DEC, 2023 | 10:58 AM அரசியல்வாதிகள் பொதுப்போக்குவரத்தில் பயணம் செய்யும் கலாச்சாரத்தை உருவாக்குவேன் என ஜேவிபியின் தலைவர் அனுரகுமார திசநாயக்க தெரிவித்துள்ளார். கேகாலையில் இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் மாநாட்டில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். ஏனைய நாடுகளில் அரசியல்வாதிகள் பொதுப்போக்குவரத்தில் பயணம் செய்வதை நீங்கள் பார்த்திருப்பீர்கள் மக்களுடன் சேர்ந்து பணியாற்றுவதை பார்த்திருப்பீர்கள் எங்களுக்கு அவ்வாறான அரசியல் கலாச்சாரம் இங்கு தேவையா என கேள்வி எழுப்பியுள்ள அவர் நாங்கள் அந்த மாற்றத்தை அரசியல்கலாச்சாரத்தை உருவாக்குவோம் என அவர் தெரிவித்துள்ளார். வங்குரோத்து நிலையில் உள்ள நாட்டை பொறுப்பேற்பதற்கான பொருளாதாரத்திற்கு புத்துயுர்கொடுப்பதற்கான துணிச்சல் எங்களுக்குள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/170908
  4. 4 மாநில தேர்தல் முடிவுகள்: பாஜகவின் இமாலய வெற்றி 2024 மக்களவை தேர்தலில் ஆட்சியை பிடிக்க எப்படி உதவும்? பட மூலாதாரம்,GETTY IMAGES 3 டிசம்பர் 2023 மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் பாஜக இமாலய வெற்றியைப் பெற்றுள்ளது. தெலங்கானாவில் காங்கிரஸ் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. மிசோரம் தேர்தல் முடிவுகள் நாளை வரவுள்ளன. இவற்றில் இந்தி பேசும் பிரதான மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி, ஏற்கெனவே கைவசம் இருந்த மாநிலங்களை இழந்துள்ளது. இதனால் இந்தியாவில் தற்போது பாஜக 12 மாநிலங்களிலும், காங்கிரஸ் மூன்று மாநிலங்களிலும் ஆட்சி செய்கின்றன. எனவே இந்த முடிவுகள் வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கான அரையிறுதியாக பார்க்கப்படுகின்றன. பாஜக அடைந்துள்ள வெற்றி அந்தக் கட்சியினரை உற்சாகப்படுத்தியுள்ளது. இந்தத் தேர்தல் ஏன் நாடாளுமன்றத் தேர்தலுக்கான அரையிறுதி? அடுத்த ஆண்டு (2024) மக்களவைத் தேர்தல் நடைபெற இருப்பதாலும், இந்த மாநிலங்களில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான மக்களவைத் தொகுதிகள் இருப்பதாலும் இந்த ஐந்து மாநிலங்களின் முடிவுகள் மக்களவை தேர்தல்களுக்கான அரையிறுதி என அழைக்கப்படுகின்றன. நாட்டின் பிரதான கட்சிகளாக உள்ள பாஜக, காங்கிரஸ் இரண்டும் நேருக்கு நேர் மோதுகின்றன. நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் மத்திய பிரதேசத்தில் 230 இடங்களிலும், ராஜஸ்தானில் 199 இடங்களிலும், சத்தீஸ்கரில் 90 இடங்களிலும் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே நேரடிப் போட்டி நிலவியது. தெலங்கானாவில் 119 இடங்களில் காங்கிரஸ், பிஆர்எஸ் இடையே நேரடி போட்டி இருந்தது. நாடாளுமன்ற தொகுதிகளைப் பொருத்தமட்டில், மத்திய பிரதேசத்தில் 29 மக்களவைத் தொகுதிகளும், ராஜஸ்தானில் 25 இடங்களும், சத்தீஸ்கரில் 11 இடங்களும், தெலங்கானாவில் 17 இடங்களும், மிசோரமில் ஒரே ஒரு தொகுதியும் என இந்த ஐந்து மாநிலங்களில் மொத்தம் 83 தொகுதிகள் உள்ளன. எனவே, இந்த மாநிலங்களில் வெற்றி பெறுவது நாடாளுமன்ற தேர்தல் வெற்றிக்கு வாய்ப்புகளை பிரகாசிக்கச் செய்யும் என இரு கட்சிகளுமே நம்பின. பட மூலாதாரம்,REUTERS/ANUVAR HASARIKA எனவே பாஜக, காங்கிரஸ் இரண்டு கட்சிகளுமே அதை மனதில் கொண்டே ஐந்து மாநில தேர்தல் பிரசாரத்தை வடிவமைத்தன. கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தல்களில் குஜராத் மற்றும் திரிபுராவில் வெற்றி பெற்ற பாஜக, கர்நாடகா மற்றும் இமாச்சல பிரதேசத்தில் தோல்வியைத் தழுவியது. எனவே நாடாளுமன்றத் தேர்தலில் தனக்கு ஆதரவான அலையை உருவாக்குவதற்கு பாஜக இந்த ஐந்து மாநில தேர்தல் வெற்றிகளில் கூடுதல் கவனம் குவித்தது. அதே போன்று, காங்கிரஸ் இந்தத் தேர்தல்களில் வெற்றி பெறுவதன் மூலம், இந்தியா கூட்டணியில் பிற கட்சிகளிடம் தொகுதிப் பங்கீட்டின் போது தனக்கு கூடுதலான இடங்களை உறுதி செய்ய முடியும் என எதிர்பார்த்தது. முடிவுகள் உணர்த்தும் செய்தி என்ன? இந்தி பேசும் பிரதான மாநிலங்களில் வெற்றி பெற்றிருப்பது பாஜகவினருக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் கடந்த கால தேர்தல்களைப் பார்க்கும்போது, சட்டமன்றத் தேர்தல் முடிவுகளே மக்களவை தேர்தல்களிலும் பிரதிபலிக்கும் என உறுதி செய்ய்ஹம் வகையில் இல்லை. கடந்த 2003ஆம் ஆண்டில் இருந்து பார்க்கும்போது மக்களவைத் தேர்தல்களுக்கு முன்பாக அதிகபட்சம் 5 மாநிலங்களுக்கு சட்டமன்றத் தேர்தல்கள் நடந்துள்ளன. அப்போதும் மக்களவைத் தேர்தலுக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கும் இடையில், ஆறு மாதங்களுக்கும் குறைவாகவே கால அவகாசம் இருந்துள்ளன. தற்போதும் அதே நிலைதான் இருக்கிறது. மத்திய பிரதேசத்தின் நிலை என்ன? பட மூலாதாரம்,ANI காங்கிரஸ் கட்சி 1998இல் மத்திய பிரதேசத்தில் வெற்றி பெற்ற நிலையில், அடுத்த ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பாஜகவே அதிக எண்ணிக்கையில் நாடாளுமன்ற இடங்களைப் பிடித்தது. பிறகு, 2003-04இல் மத்திய பிரதேசத்தில் நடந்த சட்டமன்றம் மற்றும் மக்களவை தேர்தல்களில் பாஜக வெற்றி பெற்றது. 2008ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதோடு, 2009ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் 16 இடங்களைக் கைப்பற்றியது. கடந்த 2013ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றது. அதன் பின்னர் 2014ஆம் ஆண்டு மக்களவைத் தொகுதிகளிலும் பாஜக அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மத்திய பிரதேசத்தில் மொத்தமுள்ள 29 இடங்களில் பாஜக 27 இடங்களிலும், காங்கிரஸ் 2 இடங்களிலும் வெற்றி பெற்றன. கடந்த 2018ஆம் ஆண்டில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே கடும் போட்டி நிலவியது. ஆட்சி அமைப்பதில் கமல்நாத் வெற்றி பெற்றாலும், மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் ஒரு நாடாளுமன்ற இடத்தை மட்டுமே பெற முடிந்தது. காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே 2019இல் வாக்கு வித்தியாசம் தோராயமாக 25 சதவீதமாக இருந்தது. கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் 114 இடங்களிலும், பாஜக 109 இடங்களிலும் வெற்றி பெற்றன. காங்கிரஸ் கட்சியின் மாநில அரசு 20 மாதங்கள் மட்டுமே நீடித்த நிலையில், ஜோதிராதித்ய சிந்தியாவிற்கு ஆதரவாக இருந்த எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைந்தனர். இப்போது மத்திய பிரதேசத்தில் பாஜக தனது ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது. ராஜஸ்தானில் நடந்தது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES ராஜஸ்தானில் 1998ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில், காங்கிரஸ் மகத்தான வெற்றியைப் பதிவு செய்தது. அசோக் கெலாட் முதல்வரானார். ஆனால், ஓராண்டுக்குள் நடைபெற்ற மக்களவை தேர்தலில் தேர்தலில், பா.ஜ.கவே அதிக நாடாளுமன்ற இடங்களில் வெற்றி பெற்றது. ஆனால், 2003இல் இருந்து 2014ஆம் ஆண்டு வரை நிலைமைகள் வேறாக இருந்தன. சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெறும் கட்சியே, மக்களவை தேர்தலில் இன்னும் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இருப்பினும், 2018ஆம் ஆண்டில் இந்த நிலைமை மாறியது. சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றாலும், 2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக 25 இடங்களை வென்றது, ஆர்.எல்.பி ஒரு தொகுதியில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் கட்சியால் எந்த இடத்திலும் வெற்றிபெற முடியவில்லை. ராஜஸ்தானில் 2018ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது, ஆனால் பாஜகவுடனான வாக்கு வித்தியாசம் 0.5 சதவீதமாக இருந்தது. காங்கிரஸ் 100 இடங்களிலும், பாஜக 73 இடங்களிலும் வெற்றி பெற்றது. இப்போது நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பாஜக குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சியால் களத்தில் தனது வாக்கு வங்கியைத் தக்க வைத்துக் கொள்ளவோ, வாக்கு சதவீதத்தை அதிகரிக்கவோ முடியவில்லை என்பது இந்தத் தேர்தல் முடிவுகளில் புலனாகிறது. சத்தீஸ்கர் நிலை என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES சத்தீஸ்கர் மாநிலம் 2000ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. 2003 முதல், சட்டமன்ற, மக்களவைத் தேர்தல்களில் பாஜக ஆதிக்கம் செலுத்தி வந்தது. இருப்பினும் கடந்த 2013ஆம் ஆண்டு 41 சதவீதமாக இருந்த பாஜகவின் வாக்கு சதவீதம் 2018இல் 32 சதவீதமாகக் குறைந்தது. அந்த ஆண்டு சத்தீஸ்கரில் மொத்தமுள்ள 90 இடங்களில் 68 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. இப்போது தனது வாக்கு சதவீதத்தை மீட்டெடுத்துள்ள பாஜக, சத்தீஸ்கர் மாநில தேர்தலில் காங்கிரஸ் கட்சியை வீழ்த்தியுள்ளது. தெலங்கானாவில் காங்கிரஸ் வெற்றி பட மூலாதாரம்,ANI தெலங்கானா மாநிலம் 2013ஆம் ஆண்டு உருவானது முதல் நடைபெற்ற இரண்டு சட்டமன்றத் தேர்தல்களில் பிஆர்எஸ் (முன்னதாக டிஆர்எஸ்) மகத்தான வெற்றியைப் பதிவு செய்தது. அதே நேரம் நாடாளுமன்றத் தேர்தலில் கலவையான முடிவுகள் கிடைத்தன. இந்தியா கூட்டணியில் அங்கமாக இல்லாத பி.ஆர்.எஸ். பாஜகவையும் கடுமையாக எதிர்த்து வருகிறது. இப்போது காங்கிரஸ் அடைந்துள்ள வெற்றியின் மூலம், தென்னகத்தில் பாஜக கால் ஊன்றவிடாமல் செய்து விட்டது என்ற ஆறுதலை மட்டுமே பெற்றுக் கொள்ளலாம். இருப்பினும் இந்த வெற்றி பி.ஆர்.எஸ் கட்சிக்கு எதிராகவே பெறப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தலிலும் பாஜக வெற்றிபெமா? பாஜக அடைந்துள்ள இந்த வெற்றி நாடாளுமன்றத் தேர்தலில் தொடரும் என்கிறார் பத்திரிக்கையாளர் மாலன். பிபிசி தமிழிடம் அவர் பேசியபோது, “மோதி என்ற காரணி இப்போதும் பலன் கொடுக்கிறது. அதையே இந்தத் தேர்தல் முடிவுகள் எடுத்துக் காட்டுகின்றன. காங்கிரஸ் கட்சி அடைந்துள்ள தோல்வி, இந்தியா கூட்டணிக்குள் அவர்களைப் பலவீனப்படுத்தும். ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளாராக மற்ற கட்சிகள் ஏற்க மாட்டார்கள். அந்த சூழலும் நரேந்திர மோதிக்கு சாதகமாக முடியும்,” என்றார். பிரதமர் மோதியை தனிப்பட்ட முறையில், தாக்குவது காங்கிரஸுக்கு பலனளிக்காது என்று அவர் சுட்டிக்காட்டினார். “பிரதமர் மோதிக்கு மக்களிடையே ஒரு செல்வாக்கு இருக்கிறது. ஆனால் அவரை தனிப்பட்ட முறையில் தாக்குவதை ராகுல் காந்தியே மேற்கொள்கிறார். மோதியை 'மரண வியாபாரி' என்று பேசிய ராகுல் காந்தி சமீபத்தில் 'ராசியில்லாதவர்' என்ற பொருளில் தாக்கிப் பேசினார். இதுபோன்ற தாக்குதல்கள் மக்களின் ஏற்பைப் பெறாது,” என்றார். “மென்மையான இந்துத்துவா என்ற கொள்கையை காங்கிரஸ் கட்சி மேற்கொள்கிறது. இந்த போலியான வேடத்தை மக்கள் விரும்பவில்லை. சத்தீஸ்கர் மாநிலத்தில் பசுவின் சானத்தை அரசே வாங்கும் என உறுதி கொடுத்தார்கள். ஆனால் மதச்சார்பின்மையைப் பின்பற்றுவதாகக் கூறுகிறார்கள். கள நிலைமை என்ன என்பதையே அவர்கள் புரிந்துகொள்ளவில்லை,” என்கிறார் பத்திரிகையாளர் மாலன். மிசோரம் முடிவுகள் நாளை வெளியாகும் மிசோரமில் பாஜகவின் கூட்டணிக் கட்சியான மிசோ தேசிய முன்னணிக்கும் (எம்என்எஃப்) காங்கிரஸ் கட்சிக்கும் இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது. அதேநேரம் ஜோரம் மக்கள் இயக்கம் முக்கிய எதிர்க் கட்சியாக உள்ளது. மிசோரமில் 1998 முதல் 2008 வரை மிசோ தேசிய முன்னணி அரசாங்கம் இருந்தது, 1999 முதல் 2004 வரை மிசோ தேசிய முன்னணியின் ஆதரவு வேட்பாளர் மட்டுமே மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று வருகிறார். மிசோரமில் காங்கிரஸ் ஆட்சி 2008 முதல் 2018 வரை இருந்தபோது, ஒவ்வொரு முறையும் காங்கிரஸ் வேட்பாளர் மிசோரம் மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று வந்தார். 2018இல் மிசோ தேசிய முன்னணி மீண்டும் ஆட்சிக்கு வந்ததும், 2019 மக்களவைத் தேர்தலில் அதன் வேட்பாளர் வெற்றி பெற்றார். https://www.bbc.com/tamil/articles/czr28gdn3lvo
  5. கடைசி ஓவரை வீச அர்ஷ்தீப் தயங்கியபோது, சூர்யகுமார் கூறியது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES 2 மணி நேரங்களுக்கு முன்னர் கடைசி ஓவரில் ஆஸ்திரேலிய அணி வெற்றிக்கு 10 ரன்கள் தேவை. முரட்டுத்தனமான ஃபார்மில் இருந்த கேப்டன் மேத்யூ வேட் ஸ்ட்ரைக்கில் இருந்தார். ஏற்கெனவே 3ஓவர்கள் வீசி 37 ரன்கள் கொடுத்த அர்ஷ்தீப் சிங்கை கடைசி ஓவரை வீச சூர்யகுமார் அழைக்க ரசிகர்கள் “உஷ்ஷ்ஷ்” என்று சத்தமிட்டனர். ஆனால், யாரும் எதிர்பாராத அதிசயம் அங்கு நிகழ்ந்தது. எந்தவிதமான பதற்றமும், அச்சமும் இன்றி பந்துவீசிய அர்ஷ்தீப் சிங் முதல் இரு பந்துகளை யார்கர்க்ளாக வீசி வீசி மேத்யூ வேடுக்கு நெருக்கடியளித்தார். 3ஆவது பந்தை அர்ஷ்தீப் யார்க்கராக வீசும் முயற்சி தோல்வி அடையவே அதை லாங்-ஆன் திசையில் மேத்யூ வேட் தூக்கி அடிக்க ஸ்ரேயாஸிடம் கேட்சானதும் ரசிகர்கள் உற்சாகத்தில் கோஷமிட்டனர். அடுத்து வந்த பெரன்டார்ப் ஒரு ரன்னும், எல்லீஸ் ஒரு ரன்னும், கடைசிப் பந்தில் பெரன்டார்ப் ஒரு ரன்னும் எடுக்க இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. பட மூலாதாரம்,GETTY IMAGES பெங்களூர் ஆடுகளத்தின் சிறப்பு என்ன? பெங்களூரு சின்னசாமி ஆடுகளத்தில் 2023ம் ஆண்டில் இதுவரை நடந்த 7 சர்வதேச டி20 போட்டிகளில் முதலில் பேட் செய்த அணி ஒருமுறை மட்டுமே வென்றுள்ளது. அதிலும் இந்த மைதானத்தில் 190 ரன்கள் அடித்தால்கூட அது பாதுகாப்பில்லாத ஸ்கோர் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், அனைத்து கணிப்புகளையும் மாற்றி இந்திய அணி 160 ரன்கள் மட்டுமே சேர்த்து அதையும் டிபெண்ட் செய்து ஆஸ்திரேலிய அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 4-1 என்ற கணக்கில் இந்திய அணி வென்று கோப்பையைக் கைப்பற்றியது.சூர்யகுமார் தலைமையில் இந்திய அணிக்கு கிடைத்த முதல் தொடர் வெற்றியாகும். இதற்கு முன் கடைசியாக 2017ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணி 139 ரன்கள் சேர்த்து, ஆர்சிபி அணியை 119 ரன்களில் சுருட்டி வெற்றி பெற்றதே கடைசியாக குறைந்த ஸ்கோரில் டிபெண்ட் செய்யப்பட்டதாகும். அதன்பின் இப்போது இந்திய அணி டிபெண்ட் செய்திருக்கிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES மிரட்டும் பந்துவீச்சாளர்கள் முதலில் பேட் செய்த இந்திய அணி 8 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் சேர்த்தது. 161 ரன்களை சேஸிங் செய்ய புறப்பட்ட ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட் இழப்புக்கு 154 ரன்கள் மட்டுமே சேர்த்து 6 ரன்னில் தோல்வி அடைந்தது. இந்த போட்டியின் வெற்றிக்கு உரித்தானவர்கள் பந்துவீச்சாளர்கள்தான். அதிலும் தொடக்கத்தில் டிராவிஸ் ஹெட் வெறி பிடித்தவர் போல் ஷாட்களை அடித்து ரன்களைக் குவித்தபோது அதற்கு கடிவாளம் போட்டு, பெவிலியனுக்கு அனுப்பியது சுழற்பந்துவீச்சாளர்கள்தான். பிஷ்னோய் தொடர் நாயகன் சுழற்பந்துவீச்சாளர்கள் ரவி பிஷ்னோய், அக்ஸர் படேல் பந்துவீச வந்தபின், ஆஸ்திரேலிய ரன்ரேட் படிப்படியாகச் சரிந்து, வெற்றிக்கான தேவைப்படும் ரன்ரேட் அதிகரித்து நெருக்கடியில் சிக்கியது. சுழற்பந்துவீச்சுக்கு பலவீனமாக இருக்கும் டிராவிஸ் ஹெட்டை ஏன் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் நீண்டநேரம் நங்கூரமிட வைத்தது இந்திய அணி என்பது புரியவில்லை. இந்த தொடரில் டிராவிஸ் ஹெட் ஆட்டமிழந்தது அனைத்தும் ரவி பிஸ்னாயின் சுழற்பந்துவீச்சில்தான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தத் தொடரிலும் அக்ஸர் படேல், பிஸ்னோய் இருவரும் சிறப்பாகப் பந்துவீசினர். அடுத்த ஆண்டு டி20 உலகக் கோப்பையை எதிர்கொள்ள இருக்கும் நிலையில் பிஷ்னோய் சிறந்த லெக் ஸ்பின்னராகவும், ஆல்ரவுண்டராக அக்ஸர் படேலையும் உருவாக்க இந்திய அணிக்கு போதுமான அவகாசம் இருக்கிறது. இந்தப் போட்டியிலும் 31 ரன்கள் சேர்த்து, 4 ஓவர்கள் வீசி 14 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்திய அக்ஸர் படேல் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தத் தொடர் முழுவதும் பந்துவீச வந்தவுடன் ஆஸ்திரேலிய ரன்ரேட்டை இழுத்துப் பிடித்து, விக்கெட்டுகளை இக்கட்டான நேரத்தில் வீழ்த்திக் கொடுத்து மொத்தம் 9 விக்கெட்டுகளைச் சாய்த்த ரவி பிஷ்னோய் தொடர் நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பட மூலாதாரம்,GETTY IMAGES மோசமாகப் பந்துவீசிய அர்ஷ்தீப் சிங் வேகப்பந்துவீச்சில் இந்திய அணி முகேஷ் குமார், அர்ஷ்தீப் சிங் இருவரையும் அடுத்த ஆண்டு உலகக் கோப்பைக்கு தயார் செய்ய முயல்கிறது. ஆனால், அர்ஷ்தீப் சிங்கின் பந்துவீச்சு ஐபிஎல் தொடரில் இருந்த துல்லியம், லெங்த், ஸ்விங் போன்றவை இந்திய அணிக்குள் வந்தபின் காணப்படவில்லை. ஐபிஎல் தொடரில் ஆடும் ஒவ்வொரு இந்திய வீரரும், இந்திய அணிக்குள் வருவதுதான் இலக்காக வைத்து ஆடிவிட்டு வந்தபின் ஃபார்மை இழந்துவிடுகிறார்கள் என்ற விமர்சனம் உண்டு. இந்த தொடர் முழுவதுமே அர்ஷ்தீப் சி்ங் பந்துவீச்சு சிறப்பாக அமையவில்லை. சிறந்த பயிற்சியாளரிடம் அர்ஷ்தீப் சிங் தீவிரமாகப் பயிற்சி எடுத்தால்தான் பந்துவீச்சில் உள்ள தவறுகளைத் திருத்த முடியும். இல்லாவிட்டால் வரும் ஐபிஎல் தொடர் கூட அர்ஷ்தீப் சிங் சார்ந்திருக்கும் அணிக்கு சிக்கலாகிவிடும். பட மூலாதாரம்,GETTY IMAGES 'குற்றவாளி போல எண்ணினேன்' இந்தப் போட்டியின் வெற்றிக்குப்பின் அர்ஷ்தீப் சிங் அளித்த பேட்டியிலும் தனது பந்துவீச்சு மோசமாக இருந்தது என்பதை ஒப்புக்கொண்டார். அவர் கூறுகையில் “நான்தான் போட்டியின் பெரிய பங்காக இருக்கப் போகிறேன் என்று நினைத்தேன். ஆனால் ஏற்கெனவே 3 ஓவர்கள் வீசி 37 ரன்கள்வரை கொடுத்து குற்றவாளிபோல் ஆகிவிட்டேன். ஆனால் இறைவன் எனக்கு கடைசி வாய்ப்பாக கடைசி ஓவரை வழங்கினார், என் மீது நம்பிக்கைவைத்து பந்துவீசினேன், வெற்றிக்கு துணையாகினேன். கடவுளுக்கும், என் மீது நம்பிக்கை வைத்த கேப்டன், சக வீரர்கள் நிர்வாகத்துக்கும் நன்றி. கடைசி ஓவரை வீச சூர்யகுமார் என்னை அழைத்ததும் நான் தயங்கினேன். கவலைப்படாதீர்கள் நடப்பது நடந்தே தீரும் என்று நம்பிக்கையளித்தார். இந்திய அணி பேட்டர்களும் 160 ரன்கள் சேர்த்து பந்துவீச்சாளர்கள் டிபெண்ட் செய்ய உதவினர்” எனத் தெரிவித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES முகேஷ் குமார் ‘வேகம்’ முகேஷ் குமார் இந்தத் தொடரில் ஓரளவுக்கு பந்துவீசினார் என்றுதான் கூற முடியும். முகேஷ் குமார் பந்துவீச்சிலும் துல்லியத்தன்மை, லைன் லென்த் ஆகியவை இன்னும் நிலைத்தன்மைக்குள் வரவில்லை. அர்ஷ்தீப் சிங்கோடு ஒப்பிடும்போது முகேஷ் குமார் பந்துவீச்சு ஓரளவுக்கு சிறப்பாக இருந்தது. முகேஷ் குமார் தொடர் பயிற்சி, பந்தை ஸ்விங் செய்யும் திறனை வளர்த்தால், லைன்-லெங்த்தை மாற்றாமல் பந்துவீசி பயிற்சி எடுத்தால் நிச்சயமாக டி20 உலகக் கோப்பை இந்திய அணிக்குள் அழைத்துச் செல்லும் என விமர்சகர்கள் கருதுகிறார்கள். அர்ஷ்தீப் சிங் பந்துவீச்சில் இல்லாத வேகம் முகேஷ் குமார் பந்துவீச்சில் இருப்பது குறிப்பிடத்தக்கது. மற்ற வகையில் தீபக் சஹர், ஆவேஷ் கான் ஆகியோர் ஒருசில போட்டிகளில் பந்துவீசினாலும் அவர்களின் திறமை என்பது ஐபிஎல்வரை மட்டும்தான். சர்வதேச போட்டி என்று வரும்போது, அவர்களால் நெருக்கடிகளைச் சமாளித்து ஏற்றார்போல் பந்துவீசவில்லை. ஒரு போட்டியில் மட்டுமே பங்கேற்ற தீபக் சஹர் ரன்களை வாரி வழங்கியது அவர் சர்வதேச போட்டிகளுக்கு இன்னும் தகுதியாகவில்லை என்பதையே காட்டியது. பட மூலாதாரம்,GETTY IMAGES அருமையான கண்டுபிடிப்பு ‘ஜெய்ஸ்வால்’ பேட்டிங்கைப் பொறுத்தவரை கெய்க்வாட்டைவிட, ஜெய்ஸ்வால் தொடக்க ஆட்டக்காரர்களுக்கு அருமையான கண்டுபிடிப்பாகும். ஜெய்ஸ்வாலுக்கு தொடர்ந்து டி20 போட்டிகளில் வாய்ப்பளிப்பதன் மூலம் நிச்சயமாக டி20 உலகக் கோப்பைத் தொடரில் அனைத்து அணிகளுக்கும் சிம்மசொப்னமாக மாறுவார். இந்தத் தொடரில் ஜெய்ஸ்வால் செய்த தவறு என்னவென்றால், அவரால் பவர்ப்ளே ஓவருக்குப்பின் தனது ஆட்டத்தை நீட்டிக்க தவறிவிட்டார் என்பதுதான். அதிரடியாக ஆடி ரன்களைக் குவிக்கும் ஜெய்ஸ்வால், தனது இன்னிங்ஸையும் நீட்டிக்க முயன்றால் அணிக்கு பெரிய ஸ்கோராக வந்து சேரும். கெய்க்வாட் எப்படி? கெய்க்வாட்டைப் பொறுத்தவரை பேட்டிங்கிற்கு ஏற்ற ஆடுகங்களில் மட்டுமே கெய்க்வாட் பேட்டிங் பிரகாசித்துள்ளது. பேட்டிங்கிற்கு ஒத்துழைக்காத கடினமான ஆடுகளங்களில் சமாளித்து ஆடுவதற்கு கெய்க்வாட் திணறுகிறார். சர்வதேச போட்டியில் விளையாடும் அளவுக்கு, எந்த ஆடுகளத்திலும் தனது பேட்டிங்கில் நிலைத்தன்மை வெளிக்காட்ட கெய்க்வாட்டுக்கு இன்னும் பயிற்சி அவசியமாகும். இந்தத் தொடரில் கெய்க்வாட் சிறப்பான சதம் அடித்தாலும், அதே போட்டியில் பேட்டிங்கிற்கு சாதமான ஆடுகளத்தில் மேக்ஸ்வெல் அடித்த சதம்தான் பேசப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தத் தொடரில் சதம் அடித்ததைவிட பேட்டிங் நிலைத்தன்மையை, நல்ல அதிரடியான தொடக்கத்தை அளித்தது ஜெய்ஸ்வால் மட்டும்தான். பட மூலாதாரம்,GETTY IMAGES நடுவரிசை நாயகன் ரிங்கு சிங் டி20 போட்டிக்கானவர் சூர்யகுமார் என்று முத்திரை குத்தப்பட்டதுபோல், அதே பாணியில் உருவாகியுள்ளவர் ரிங்கு சிங். வரும் டி20 உலகக் கோப்பைக்கு இந்திய அணியின் நடுவரிசைக்கு அருமையான கண்டுபிடிப்பாக ரிங்கு சிங்கை எடுக்கலாம். தேவைப்படும் நேரத்தில் தனது பேட்டிங்கின் கியரை மாற்றி அதிரடிக்கு மாறுவது, விக்கெட் சரிந்த நேரத்தில் நிதானமாக, பொறுப்புடன் பேட் செய்தது என ரிங்கு சிங் அனுபவமான பேட்டர் போல் செயல்பட்டார். கடைசி டி20 போட்டி தவிர மற்ற 4 போட்டிகளிலும் ரிங்கு சிங் ஆட்டம் பிரமாதமாக இருந்தது. அதிலும் முதல் டி20 போட்டியில் கடைசிப்பந்தில் சிக்ஸர் அடித்து வெல்ல வைத்தது என்பது கடந்த 20 ஆண்டுகளுக்கு முந்தைய ராபின் சிங்கை நினைவுபடுத்தியது. டி20 உலகக் கோப்பைக்கு இந்திய அணியின் நடுவரிசைக்கு கச்சிதமாக பொருந்தக்கூடிய அருமையான கண்டுபிடிப்பு ரிங்கு சிங். முதலில் பேட் செய்த இந்திய அணி 46 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஸ்ரேயாஸ் அய்யர், அக்ஸர் படேல் கூட்டணி சேர்ந்து இந்திய அணியை சரிவிலிருந்து மீட்டனர். அதிரடியாக ஆடிய ஸ்ரேயாஸ் 37 பந்துகளி்ல் 53 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அணியில் அதிகபட்ச ஸ்கோரும் ஸ்ரேயாஸ் சேர்த்ததுதான். அதன்பின் அக்ஸர் படேல் 31 ரன்களும்,ஜிதேஷ் ஷர்மா 24 ரன்களும் சேர்த்தனர். மற்றவகையில் ஜெய்ஸ்வால்(21), கெய்க்வாட்(10) சூர்யகுமார்(5), ரிங்கு சிங்(6), என சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 8 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் சேர்த்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES சவாலாக மாறும் சங்கா ஆஸ்திரேலிய அணியில் சுழற்பந்துவீச்சில் அருமையான கண்டுபிடிப்பு தன்வீர் சங்கா. இந்தத் தொடர் முழுவதும் இந்திய அணி பேட்டர்களுக்கு சவாலாகவே தன்வீர் சங்கா பந்துவீச்சு இருந்தது. தொடர்ந்து போட்டிகளில் தன்வீர் சங்காவுக்கு வாய்ப்பளித்தால், டி20 உலகக் கோப்பைத் தொடரில் நிச்சயமாக அனைத்து அணிகளுக்கும் சவாலாக மாறுவார். 161 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு டிராவிஸ் ஹெட் அதிரடியான தொடக்கத்தை அளித்து, வலுவான அடித்தளம் அமைத்துக்கொடுத்தார். அர்ஷ்தீப் சிங்கின் முதல் ஓவரிலேயே ஹாட்ரிக் பவுண்டரிகளை விளாசி ஹெட் நெருக்கடி அளித்தார். இதனால் 4 ஓவர்களில் ஆஸ்திரேலிய 40 ரன்கள் என 10 ரன்ரேட்டில் பயணித்தது. சூர்யகுமாருக்கு தெரிந்தது ரோஹித்துக்கு தெரியவில்லையா? ஆனால், டிராவிஸ் ஹெட் சுழற்பந்துவீச்சுக்கு இவ்வளவு பயப்படுவார், விளையாடத் தெரியாதவர் என்பதை சூர்யகுமார் கண்டுபிடித்த அளவுக்கு ரோஹித் சர்மா கண்டுபிடிக்காதது ஏன் எனத தெரியவில்லை. டிராவிஸ் ஹெட் ஆட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க ரவி பிஸ்னாய் பந்துவீச சூர்யகுமார் அழைத்தார். ரவி பிஸ்னாய் பந்துவீச வந்தவுடன் சுழற்பந்துவீச்சை சமாளித்த ஆடமுடியாமல் கிளீன் போல்டாகி டிராவிஸ் ஹெட் 28 ரன்களில் ஆட்டமிழந்தார். மற்ற வகையில் நடுவரிசை பேட்டர்கள் யாரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. எளிதான இலக்குதான் என்றாலும், சுழற்பந்துவீச்சை எதிர்கொண்டு விளையாட பேட்டர்கள் சிரமப்பட்டனர். கடைசி நேரத்தில் ஆஸ்திரேலிய அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்ல கேப்டன் மேத்யூ வேட் கடினமாக முயன்றார். ஆனால், கடைசி ஓவரில் 10 ரன்கள் வெற்றிக்குத் தேவைப்பட்டநிலையில், பெரிய ஷாட்டுக்குமுயன்று 22 ரன்களி்ல் ஆட்டமிழந்தார். மேத்யூ வேட் வெளியேறியதும் ஆஸ்திரேலிய தோல்வி உறுதியானது. பட மூலாதாரம்,GETTY IMAGES நம்பிக்கையற்ற புதுமுகங்கள் அடுத்த ஆண்டு டி20 உலகக் கோப்பைக்குத் தயார் செய்ய மெக்டார்மார்ட், ஆரோன் ஹார்டி, ஜோஷ் பிலிப், டிம் டேவிட், மேத்யூ ஷார்ட் ஆகியோருக்கு சுழற்சி முறையில் இந்த போட்டியில் வாய்ப்பளித்தது. ஆனால், யாரும் பெரிதாக எந்த ஆட்டத்திலும் ஆடவில்லை. வேகப்பந்துவீச்சை விளையாடும் அளவுக்கு இந்திய சுழற்பந்துவீச்சை எதிர்கொண்டு விளையாட முடியாமல் திணறினர். இதில் மெக்டார்மார்ட் மட்டும்தான் இந்தத் தொடரில் அரைசதம் அடித்துள்ளார். மற்றவர்கள் யாரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. அடுத்த ஆண்டு டி20 உலகக் கோப்பைக்காக அணியைத் தயார் செய்யும் ஆஸ்திரேலிய அணியின் இந்த முயற்சி ஏறக்குறைய தோல்விதான். டிராவிஸ் ஹெட், மேத்யூ வேட் இருவரின் பங்களிப்பையும் ஒதுக்கி வைத்து மற்றவர்களின் பங்களிப்பைப் பார்த்தால் ஒன்றுமே இல்லை என்றுதான் கூற முடியும். அனுபவமற்றவர்கள், புதியவர்களுடன் களமிறங்கி, இந்திய அணியுடன் விளையாடியதுதான் புதிய அனுபவமாக அமைந்தது. பந்துவீச்சில் தன்வீர் சங்கா மட்டும்தான் ஆஸ்திரேலியாவுக்கு பெரிய பலமாகும். https://www.bbc.com/tamil/articles/cm5p0401xm0o
  6. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், யூ.எல். மப்றூக் பதவி, பிபிசி தமிழுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் இலங்கை எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடிக்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, முன்னாள் நிதியமைச்சர்களான மஹிந்த மற்றும் பசில் ராஜபக்ஷ உள்ளிட்ட 7 பேர் மேற்கொண்ட தவறான பொருளாதார மேலாண்மைத் தீர்மானங்களே காரணம் என இலங்கை உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது. அதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் அவர்கள் மேல் ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை? பட மூலாதாரம்,GETTY IMAGES ராஜபக்ஷ குழுவுக்கு எதிரான வழக்கு 2020-ஆம் ஆண்டு கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர், பொருளாதார ரீதியாகக் கடுமையாக வீழ்ச்சியடைந்த இலங்கை, ஒரு கட்டத்தில் திவால் ஆன நாடாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ, ஜனாதிபதியின் முன்னாள் செயலாளர் பி.பி. ஜயசுந்தர, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால், நிதியமைச்சின் முன்னாள் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல மற்றும் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் பேராசியர் டப்ளியு.டி. லக்ஷ்மன் ஆகியோரின் தவறான பொருளதார தீர்மானங்களால் மக்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக ஆணையிடுமாறு கோரி, உச்ச நீதிமன்றில் 2022-ஆம் ஆண்டு இரண்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இவற்றில் ஒரு மனுவை இலங்கை வணிக சபையின் முன்னாள் தலைவர் சந்ரா ஜயரத்ன, நீச்சல் வீரர் ஜுலியன் போலிங், ஜெகான் கனகரட்ன மற்றும் ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் ஆகிய தரப்பினர் தாக்கல் செய்திருந்தனர். மற்றைய மனுவை இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கலாநிதி அதுலசிறி குமார சமரகோன், சூசையப்பு நேவிஸ் மொராயஸ் மற்றும் கலாநிதி மாஹிம் மென்டிஸ் ஆகியோர் தாக்கல் செய்திருந்தார்கள். நாட்டின் பொருளாதாரம் தொடர்பில் பிரதிவாதிகள் எடுத்த தவறான முடிவுகளால், நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக ஆணையிடுமாறு மேற்படி மனுக்களிலும் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரி, புவனேக அலுவிகார, விஜித் மலல்கொட, மூர்து பெனாண்டோ மற்றும் பிரியந்த ஜயவர்த்தன ஆகிய நீதியரசர்கள் முன்னிலையில் இது குறித்த மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில், நவம்பர் 14-ஆம் தேதி தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. நீதியரசர்களில் பிரியந்த ஜயவர்த்தன தவிர்ந்த ஏனைய மூன்று நீதியரசர்களும் பிரதிவாதிகளின் தீர்மானங்களால் மக்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக அறிவித்து தீர்ப்பு வழங்கினர். குறித்த வழக்கில் மனுதாரர்கள் நஷ்ட ஈடு கோரவில்லை என்பதனால், அது குறித்து தீர்ப்பில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. மேலும் தவறான தீர்மானத்தை எடுத்தவர்களுக்கான அபராதம் குறித்தும் தீர்ப்பில் குறிப்பிடப்படவில்லை. இந்த நிலையில், மனுதாரர்களுக்கு தலா 150,000 இலங்கை ரூபாயினை வழக்குச் செலவாக பிரதிவாதிகள் செலுத்த வேண்டுமெனவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்த பின்னர் வர்த்தகர்களுக்கு வழங்கிய வரிச் சலுகைகள், அமெரிக்க டாலருக்கு நிகரான இலங்கை நாணயத்தின் பெறுமதியை உயர்ந்த நிலையில் பேணியமை, சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை பெற்றுக் கொள்ளத் தாமதித்தமை, நாட்டின் நிதிக் கையிருப்பு பற்றாக்குறையாக இருந்தபோது 500 மில்லியன் டாலர் பெறுமதியான பிணை முறிகளை மீளச் செலுத்தியமை பிரதிவாதிகள் மேற்கொண்ட முக்கிய தவறுகள் என தீர்ப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பட மூலாதாரம்,MUJIBUR RAHMAN / FACEBOOK படக்குறிப்பு, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு அரிய மற்றும் சிறந்த தீர்ப்பு குடியுரிமைகளை ரத்து செய்யக் கோரிக்கை இதனையடுத்து நாட்டின் பொருளாதாரம் தொடர்பில் தவறான தீர்மானங்களை எடுத்தார்கள் என, உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் பெயர் குறிப்பிடப்பட்ட நபர்களுக்கு சட்ட ரீதியாகத் தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும், அவர்களிடமிருந்து மக்களுக்கு நஷ்டஈடு பெற்றுக் கொடுக்கப்பட வேண்டுமெனவும் பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. முன்னாள் ராணுவத் தளபதியும் தற்போதைய எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினருமான சரத் பொன்சேகா உள்ளிட்ட சிலர், "தீர்ப்பில் பெயர் குறிப்பிடப்பட்டவர்களின் சிவில் உரிமைகளை ரத்துச் செய்ய வேண்டும்," எனக் கூறுகின்றார். இந்த நிலையில், உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள பிரதிவாதிகளுக்கு அரசு வழங்கும் ஓய்வூதியம் உள்ளிட்ட சலுகைகள் அனைத்தையும் நிறுத்துமாறு ஜனாதிபதியைக் கோரும் கடிதமொன்றில், பொதுமக்களின் கையொப்பங்களைப் பெறும் நடவடிக்கையொன்றினை சில நாட்களுக்கு முன்னர் பிரதான எதிர்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி ஆரம்பித்தது. அது குறித்து அந்தக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் பிரதிச் செயலாளருமான முஜீபுர் ரஹ்மான் பிபிசி தமிழுக்குத் தெரிவிக்கையில், "அவர்களுக்கு அரசினால் ஓய்வூதியம் உட்பட பல சலுகைகள் வழங்கப்படுகின்றன. உடனடியாக அவற்றினை நிறுத்த வேண்டும். அத்தோடு, அவர்களால் நாட்டுக்கு ஏற்பட்ட நஷ்டம் எவ்வளவு என்பதை கணக்கிட்டு, அவற்றினை அவர்களிடமிருந்து எவ்வாறு பெறுவது என்பதை ஆராய்வதற்காக ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றும் அமைக்கப்பட வேண்டும். இதனை நிறைவேற்றுமாறு ஜனாதிபதியை வலியுறுத்தும் ஆவணமொன்றிலேயே மக்களின் கையொப்பம் திரட்டபட்டது" என்றார். இதேவேளை, நாட்டை வங்குரோத்து அடையச் செய்தவர்களுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்புக் குறித்து கருத்து வெளியிட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக் குமாரதுங்க, "உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு அரிய மற்றும் சிறந்த தீர்ப்பு" எனத் தெரிவித்துள்ளார். ”நீதிமன்றத்துக்கு மக்கள் சென்று, உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளவர்களுக்கு தண்டனை வழங்குமாறும், அவர்களிடமிருந்து இழப்பீடு பெற்றுத்தருமாறும் கோர முடியும்" என, அவர் மேலும் கூறியுள்ளார். நாட்டின் பொருளாதாரம் தொடர்பில் தவறான தீர்மானங்களை எடுத்தவர்களின் வெளிநாட்டுக் கணக்குகள் மற்றும் நிறுவனங்களில் குவிக்கப்பட்டதாகக் கூறப்படும் பணம் அல்லது இலங்கையில் உள்ள காணிகள், ஹோட்டல்கள் மற்றும் குடியிருப்புகளில் முதலீடு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படும் அவர்களின் பணம் ஆகியவற்றை போலீஸ் விசாரணைகள் மூலம் கண்டுபிடித்து பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு அவற்றை இழப்பீடாக வழங்க பயன்படுத்த முடியும் எனவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குறிப்பிட்டுள்ளார். திருடப்பட்ட சொத்துக்களை மீட்பதற்கான உதவிகளை வழங்கும் தனிப் பிரிவை உலக வங்கி கொண்டுள்ளது என்றும், பிலிப்பைன்ஸின் அவ்வாறான சொத்துக்கள் மீட்கப்பட்டு அந்த நாட்டுக்குக் கொண்டு வரப்பட்டன எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவும், ”பொருளாதாரம் தொடர்பில் தவறான தீர்மானங்களை மேற்கொண்ட மேற்படி நபர்களுக்கு எதிராக, மக்கள் - மாவட்ட நீதிமன்றங்களுக்குச் சென்று, இழப்பீடு கோர முன்வர வேண்டும்,” என அழைப்பு விடுத்துள்ளார். இது இவ்வாறிருக்க உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வெளியானதை அடுத்து ஊடகங்களிடம் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, நாட்டு மக்களின் நலன் கருதியே தாம் தீர்மானங்களை மேற்கொண்டதாகவும், ஒவ்வொரு நபரையும் இலக்காகக் கொண்டு தீர்மானங்களை மேற்கொள்ளவில்லை எனவும் கூறினார். ”மக்களின் நலன் கருதி எடுத்த சில தீர்மானங்கள் பொருந்தவில்லை, சில தீர்மானங்களுக்கு அனுமதி கிடைக்கவில்லை. ஆனாலும், நல்லெண்ணத்துடனேயே அனைத்துத் தீர்மானங்களையும் மேற்கொண்டோம்" என, அவர் மேலும் தெரிவித்திருந்தார். பட மூலாதாரம்,RAUFF படக்குறிப்பு, அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை எதிர்பார்க்க முடியாது 'நோய் கண்டுபிடிக்கப்பட்டது, மருந்து வழங்கப்படவில்லை' தவறான பொருளாதாரத் தீர்மானங்களுக்கு காரணமானவர்கள் என, உச்ச நீதிமன்றம் பெயர் குறிப்பிட்டு தீர்ப்பளித்துள்ள நிலையில், அவர்களுக்கான 'அபராதம்' என்ன என்பது அறிவிக்கப்படாமையினால், சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக உடனடி நடவடிக்கை எடுப்பது கடினமாகியுள்ளதாக, தென்கிழக்குப் பல்கலைக்கழத்தின் பொருளியல்துறை தலைமைப் பேராசிரியர் ஏ.எல். ரஊப் பிபிசி தமிழிடம் கூறினார். ஒரு நாட்டின் பொருளாதரத்தை வீழ்ச்சியடையச் செய்து, அந்த நாடு வங்குரோத்து அடைவதற்கு காரணமாக இருந்தமை - மிகப் பெரிய குற்றம் எனத் தெரிவித்த அவர், "இதனைப் புரிந்தவர்களுக்கு எதிராக நாடாளுமன்றமும் இதுவரை எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என்பதையும் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது,” என்கிறார். "உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் பொருளாதாரம் தொடர்பாக தவறான தீர்மானம் எடுத்தவர்கள் என, பிரதானமாக யாரெல்லாம் குறிப்பிடப்பட்டுள்ளார்களோ, அவர்களின் அரசாங்கமே தற்போது உள்ளது. எனவே, நாடாளுமன்றத்திலும் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை எதிர்பார்க்க முடியாது” எனவும் அவர் கூறினார். அந்த வகையில், இவ்விவகாரத்தில் "நோய் கண்டறியப்பட்டுள்ள போதும், மருந்து வழங்கப்படவிலை," என தலைமைப் பேராசிரியர் ரஊப் குறிப்பிட்டார். பட மூலாதாரம்,SUMANTHIRA படக்குறிப்பு, ஒவ்வொரு குடிமகனுக்கும் ராஜபக்ஷவினரிடம் இழப்பீடு கோருவதற்கு உரிமை உள்ளது ஈஸ்டர் தாக்குதல் தீர்ப்பின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் இது இவ்வாறிருக்க, பொருளாதார ரீதியாக நாட்டைச் சீரழித்தமைக்காக பொறுப்புக் கூற வேண்டியவர்களாக ராஜபக்ஷக்களை உச்ச நீதிமன்றம் அடையாளப் படுத்தியுள்ளமையினால், அவர்களிடமிருந்து இழப்பீட்டை மக்கள் பெற்றுக் கொள்ள முடியுமென மூத்த சட்டத்தரணியும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் கூறியுள்ளார். பொறுப்புகூறலில் இருந்து விலகியமையால், அதற்கான இழப்பீட்டை பாதிக்கப்பட்ட மக்களுக்கு செலுத்த வேண்டும் என, ஏற்கனவே உச்ச நீதிமன்றம் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிரான ஈஸ்டர் தாக்குதல் வழக்கில் தீர்ப்பளித்துள்ளமையினை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே அந்த வழக்கின் தீர்ப்பை அடிப்படையாகக் கொண்டு, தனது தலைமையில் - ஏனைய எதிர்க்கட்சிகளின் சட்டத்தரணிகள் மற்றும் சிவில் தரப்பினருடன் இணைந்து, ராஜபக்ஷகளிடமிருந்து நஷ்டஈட்டைப் பெறுவதற்கான சட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பது பற்றி ஆராய்ந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். இதேவேளை, உச்ச நீதிமன்றம் நஷ்டஈடு வழங்குமாறு உத்தரவிட்டிருந்தால், இந்த நாட்டிலுள்ள 2.2 கோடி மக்களுக்கும் வழங்குவதற்குப் போதுமான ராஜபக்ஷவினரின் பணம், நாட்டுக்கு வெளியில் உள்ளது என்றும் சுமந்திரன் நாடாளுமன்றத்தில் கூறினார். ராஜபக்ஷ சகோதரர்கள் நாட்டிற்கு வெளியே வைத்திருக்கும் பணத்தின் மூலம், நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க முடியும் என்று அவர் தெரிவித்தார். மேலும் இந்த நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் ராஜபக்ஷவினரிடம் இழப்பீடு கோருவதற்கு உரிமை உள்ளது என்றும் சுமந்திரன் தெரிவித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இலங்கை நாடாளுமன்றம் மைத்திரிக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு என்ன? இலங்கையில் நடைபெற்ற ஈஸ்டர் தின குண்டு வெடிப்புத் தாக்குதல்களைத் தவிர்ப்பதற்குத் தவறியதன் ஊடாக, தமது அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாகத் தெரிவித்து, பாதிக்கப்பட்ட தரப்பினரால் 12 அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. அந்த மனுக்களில் தாக்குதல் நடைபெற்ற காலத்தில் ஜனாதிபதியாகப் பதவி வகித்த மைத்திரிபால சிறிசேன, அப்போதைய பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெணான்டோ, அப்போது போலீஸ் மாஅதிபராகப் பதவி வகித்த பூஜித் ஜயசுந்தர, அரச புலனாய்வு சேவையின் அப்போதைய பிரதானி நிலந்த ஜயவர்தன, மற்றும் தேசிய புலனாய்வு பிரிவின் அப்போதைய பிரதானி சிசிர மென்டீஸ் ஆகியோர் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டிருந்தனர். ஈஸ்டர் தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக புலனாய்வுத் தகவல்கள் கிடைத்திருந்த போதிலும், அதைத் தடுப்பதற்கு பிரதிவாதிகள் நடவடிக்கை எடுக்காமையின் மூலம், தமது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக மனுதாரர்கள் தெரிவித்திருந்தனர். இதனை ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்றம், பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு மனுதாரர்கள் தமது சொந்தப் பணத்திலிருந்து நஷ்டஈடுகளைச் செலுத்துமாறு உத்தரவிட்டிருந்தது. அதன்படி முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 100 மில்லியன் ரூபாயை நஷ்டஈடாகச் செலுத்த வேண்டும் என, உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. https://www.bbc.com/tamil/articles/cv2z09ee64vo
  7. December 01, 2023 டாக்டர் மு. நீலகண்டன் எழுதியுள்ள சோழ மண்டலத்தில் பௌத்தம் என்னும் நூல் சோழ மண்டலம் வரலாற்றுப்பின்னணி (பக்.13-33), சோழ மண்டலத்தில் பௌத்த தாக்கம் (பக்.34-44), சோழ மண்டலத்தில் பௌத்தப் பெரியோர்கள் (பக்.45-50), சோழ மண்டலத்தில் பௌத்த வழிபாடு (பக்.51-63), சோழ மண்டலத்தில் பௌத்த தடயங்கள் (பக்.64-122), சோழ மண்டலத்தில் பௌத்தம் வீழ்ச்சி (பக்.123-125) என்னும் ஆறு தலைப்புகளைக் கொண்டு அமைந்துள்ளது. முதல் இயலில் சோழ மண்டலம் என்ற வரையறையான பிரிக்கப்படாத தஞ்சை, திருச்சிராப்பள்ளி மாவட்டங்கள், தென்னாற்காடு, புதுக்கோட்டை மாவட்டங்களின் சில பகுதிளைக் கொண்ட நிலப்பரப்பு, வரலாற்றுப்பின்னணியில் தமிழ்நாட்டின் எல்லைகள், கால வாரியாக சோழ மண்டல வரலாறு, சோழர் தலைநகர்கள், சங்க இலக்கியச் சான்றுகள், கல்வெட்டு சான்றுகள் ஆகியவற்றைப் பற்றி ஆராயப்பட்டுள்ளன. பௌத்தத்தாக்கம் என்ற தலைப்பின்கீழ் புத்தரின் நான்கு தத்துவங்கள், தமிழ்நாட்டில் கி.மு.மூன்றாம் நூற்றாண்டு முதல் பௌத்தத்தின் பரவல், வெளிநாட்டவர் குறிப்புகள், பௌத்த மதத்தின் செல்வாக்கு, பௌத்தர் சமயக்கல்வி ஆகியவை பற்றி விளக்கப்பட்டுள்ளன. சோழ மண்டலத்தில் பெயர் பெற்ற பௌத்தப் பெரியோர்களான சங்கமித்திரர், அறவண அடிகள், புத்ததத்தர், புத்தமித்திரர், பெருந்தேவனார், தீபங்கரதேரர், காசப தேர், சாரிபுத்தர் ஆகியோரைப் பற்றி அடுத்த இயலில் விவாதிக்கப்பட்டுள்ளன. சோழ மண்டலத்தில் பௌத்த வழிபாடு என்ற தலைப்பில் புத்தரின் மறைவிற்குப் பின் பௌத்தம் இரண்டாகப் பிரிந்தது, அதன் நிலையில் மாற்றம், சோழ மண்டலத்தில் உள்ள புத்தத் தலங்கள், புகார் மற்றும் மணிபல்லவத்தில் புத்த வழிபாடு, அவலோகிதர், கந்திற்பாவை, பௌத்த பெண் தெய்வங்கள் வழிபாடு, சாத்தன் வழிபாடு, புத்த வந்தனம் ஆகியவற்றைப் பற்றி பதியப்பட்டுள்ளன. சோழ மண்டலத்தில் பௌத்த தடயங்கள் என்ற தலைப்பின்கீழ் தஞ்சை, கும்பகோணம் (இது இன்னும் மாவட்டம் ஆகவில்லை. நூலில் கும்பகோணம் மாவட்டம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது, வரைபடமும் தரப்பட்டுள்ளது), மயிலாடுதுறை, திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, தென்னாற்காடு, புதுக்கோட்டை, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் உள்ள புத்தர் சிலைகள், இப்பகுதியில் உள்ள விகாரைகள், கோயில்கள், நாகப்பட்டின புத்தர் படிமங்கள், அவலோகிதேஸ்வரர், மைத்ரேயர், தாரா உள்ளிட்ட சிற்பங்கள் ஆகியவற்றைப் பற்றி உரிய சான்றுகளுடன் முன்வைக்கப்படுகின்றன. சோழ மண்டலத்தில் பௌத்தத்தின் வீழ்ச்சிக்கான காரணங்களும், சூழலும் இறுதி இயலில் நோக்கப்படுகின்றன. நிறைவாக, சோழ மண்டலம் மட்டுமல்ல தமிழகம் முழுவதும் பௌத்தம் மறைந்தே போயிற்று, தமிழகத்தில் மறைந்தாலும், அதன் வேர்கள் ஆங்காங்கே காணப்படுகின்றன என்றும், தற்போது பௌத்தம் பற்றிய செய்திகள் பல நுண்தளங்களில் ஆய்வு செய்யப்படுகின்றன என்றும் கூறுகிறார் நூலாசிரியர். பின்னிணைப்பாக வரைபடங்களும், புத்தர் சிலைகளின் ஒளிப்படங்களும் காணப்படுகின்றன. உரிய இடங்களில் நூலாசிரியர் மேற்கோள்களைத் தந்துள்ளார். பல இடங்களில் அவர் களப்பணி சென்றதையும் மேற்கோளாகச் சுட்டிக்காட்டியுள்ளார். இந்தியாவின் பிற மாநிலங்களிலும், வெளிநாட்டு அருங்காட்சியகங்களிலும் உள்ள புத்தர் சிலைகளின் ஒளிப்படங்களை இணைத்துள்ளார். இந்நூலில் பல சான்றுகளைத் தந்துள்ள விதம் போற்றத்தக்க வகையில் உள்ளது. அவர் மேற்கொண்ட களப்பணிகளை நூலின் மூலம் நன்கு அறியமுடிகிறது. சோழ மண்டலத்தில் (சோழ நாட்டில்) இன்று வரை கிடைக்கப்பெற்ற பௌத்தம் தொடர்பான தகவல்களைக் கொண்டு இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளதாக முன்னுரையில் நூலாசிரியர் குறிப்பிடுகிறார். அவருடைய முயற்சி போற்றத்தக்கது. அவருக்கு என்னுடைய மனம் நிறைந்த வாழ்த்துகள். நூல் : சோழ மண்டலத்தில் பௌத்தம் வரலாற்று ஆய்வு ஆசிரியர் : டாக்டர் மு.நீலகண்டன் பதிப்பகம்: Coral. 8. 6th Cross. 8th Main Road, Vaishnavi Naar, Thirumullaivoyal, Chennai 600 109. அலைபேசி 90430 50699, மின்னஞ்சல் coralbooks2016@gmail.com பதிப்பாண்டு: 2021 விலை ரூ.250 https://ponnibuddha.blogspot.com/2023/12/blog-post.html
  8. வரலாற்றில் முதன் முறையாக ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் இணைந்து தொழில் முயற்சியாளர்களுக்காக 30 பில்லியன் ரூபா நிதியை ஒதுக்கீடு செய்திருப்பதாகவும், தொழில் முயற்சியாளர்களுக்கு அவசியமான மூலதனத்தை 2% சலுகை வட்டியின் கீழ் பெற்றுக்கொடுக்க எதிர்பார்ப்பதாகவும் சிறு மற்றும் மத்திய தர தொழில் முயற்சிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (02) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். நாட்டின் 2.8% தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் பொறுப்பு எம்மைச் சார்ந்துள்ளது. 2024 – 2028 வரையான காலப்பகுதியில் தொழில் முயற்சியாளர்களின் அளவை 10% ஆக உயர்த்துவதே எமது இலக்காகும். ஒவ்வொரு துறைகளின் கீழும் காணப்படும் சிறு மற்றும் மத்திய தரத்திலான துறைகளைப் பலப்படுத்தும் பணிகளை ஆரம்பித்துள்ளோம். அதற்காக அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்ளை ஒன்றிணைத்து பல வேலைத்திட்டங்களையும் ஆரம்பித்துள்ளோம். அதேபோல் சாதாரண தர பரீட்சையின் பின்னர் இரண்டு இலட்சத்திற்கும் அதிகமானோர் தொழில் சந்தைக்குள் நுழைகிறார்கள். இருப்பின் அவர்களுக்கான வாய்ப்பு தொழில் சந்தையில் கிடைப்பதில்லை. அதனால் அவர்களையும் தொழில் முயற்சியாளர்களாக மாற்றுவதே எமது நோக்கமாகும். முச்சக்கர வண்டியுடன் வீதியிலிறங்கும் சமுதாயத்தை அதிலிருந்து மீட்டெடுத்து உரிய தெரிவையும் பயிற்சிகளையும் வழங்குவதே எமது நோக்கமாகும். வரலாற்றில் முதன் முறையாக ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் இணைந்து சிறிய கடன் முன்மொழிவுகளின் கீழ் 30 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன் கீழ் தொழில் முயற்சியாளர்களுக்கு அவசியமான மூலதனத்தை 2% சலுகை வட்டியின் கீழ் பெற்றுக்கொடுக்க எதிர்பார்ப்பதோடு, அவர்களை புதிய உலகிற்கு பொருத்தமான தலைமுறையாக மாற்றுவதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினதும் எம்முடையதும் நோக்கமாகும். அதேபோல், உலகச் சந்தையில் 2024-2025 ஆண்டுக்காக விடுவிக்கப்படவுள்ள 789 பில்லியனிலிருந்து 1% பெற்றுக்கொள்ள முடியும் என்றாலும் அது நாட்டுக்கு கிடைக்கும் மிகப்பெரிய வெற்றியாகும் என்று தெரிவித்தார். https://thinakkural.lk/article/283328
  9. சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்தியர் பாலித மஹிபால மற்றும் இலங்கைக்கான உலக சுகாதார ஸ்தாபனத்தின் (WHO) பிரதிநிதி வைத்தியர் லகா சிங்கிற்கு இடையில் கலந்துரையாடல் ஒன்று நேற்று இடம்பெற்றது. சுகாதார அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலில் பின்வரும் விடயங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது. 1. டெங்குவை கட்டுப்படுத்த தேவையான தொழில்நுட்ப மற்றும் திட்டங்களுக்கு ஆதரவு. 2. நுண்ணுயிர் எதிர்ப்பிகளால் ஏற்படும் எதிர்ப்பைத் தடுப்பதற்கான ஆதரவு. 3. அடுத்த 10 ஆண்டுகளுக்கு சுகாதாரக் கொள்கைகளைத் தயாரிப்பதற்குத் தேவையான தரவுகளை வழங்குதல். 4. தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையத்தின் (NMRA) ஊழியர்களுக்கான பகுப்பாய்வு, தொழில்நுட்ப உதவி மற்றும் திறன் மேம்பாட்டு ஆதரவு. https://thinakkural.lk/article/283239
  10. 02 DEC, 2023 | 06:04 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) பலஸ்தீனம் - காஸாவின் இன்றைய நிலை தொடர்பில் அரசாங்கம் பலவீனமான நிலைப்பாட்டில் உள்ளது. சர்வதேச நாணய நிதியத்தினால் இந்த நிலையில் உள்ளதா என்பதை அறியவில்லை. காஸாவில் போர் குற்றங்கள் இடம்பெறுகின்றன. நாளாந்தம் 100க்கு அதிகமானோர் மரணிக்கிறார்கள். சர்வதேச நாணய நிதியமும் வேண்டும், மேற்குலகமும் வேண்டும். ஆனால், தர்மத்தின் நிலையில் இருந்து நாம் ஒரு தீர்மானத்தை எடுக்க வேண்டும். இஸ்ரேல் என்ற நாடு ஆரம்பத்தில் இருக்கவில்லை என்பதை முழு உலகும் அறியும் என எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடாவான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார். பாராளுமன்றத்தில் சனிக்கிழமை (02) இடம்பெற்ற 2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சுகளுக்கான செலவீனத் தலைப்பு மீதான விவாதத்தில் உரையாற்றும்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் உரையாற்றியதாவது, நீதிமன்றத்தின் சுயாதீனத்தை பாதுகாக்க அரசாங்கத்தில் இருந்தபோதும் குரல் கொடுத்துள்ளோம். எதிர்க்கட்சியில் உள்ளபோதும் குரல் கொடுக்கிறோம். நீதிமன்றங்களையும், உயர் கல்வியையும் சுயாதீனப்படுத்த முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அரசியலமைப்பின் 17ஆவது திருத்தத்தை கொண்டு வந்தார். மக்கள் விடுதலை முன்னணி உட்பட சகல அரசியல் கட்சிகளும் ஆதரவு வழங்கியது. அரசியலமைப்பின் 17ஆவது திருத்தத்தை 18ஆவது திருத்தம் மாற்றியமைத்தது. நாங்கள் 19ஆவது திருத்தம் கொண்டு வந்தோம். 20ஆவது திருத்த சட்டமூலத்தை அப்போதைய நீதியமைச்சர் அலி சப்ரி கொண்டுவந்தபோது நான் 25 திருத்தங்களை முன்வைத்தேன். ஆனால், அவர் அவற்றை செயற்படுத்தவில்லை. தன்னிச்சையாக செயற்பட்டார். 20ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டது. இறுதியில் நேர்ந்தது என்ன? முழு நாடும் பாரிய நெருக்கடிகளை எதிர்கொண்டது. 20ஆவது திருத்தம் நீதிமன்றத்தின் சுயாதீனத்தன்மையை பலவீனப்படுத்தியது. மூன்று வருடங்களுக்குப் பின்னர் அரசியலமைப்பின் 19ஆவது திருத்தம் மீண்டும் 21ஆவது திருத்தமாக அமுல்படுத்தப்பட்டது. நீதிமன்ற கட்டமைப்பு சுயாதீனமாக இயங்காவிட்டால் ஒருபோதும் முன்னேற்றமடைய முடியாது. பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் நீதிபதிகள் நாட்டை விட்டு வெளியேறுகிறார்கள். வரி நீங்கலாக அவர்களுக்கு 10 அல்லது 20 சதவீத சம்பளமே மிகுதியாகுகிறது. நீதிபதிகள் நாட்டை விட்டு வெளியேறுவது பற்றி நீதியமைச்சருக்கோ, ஜனாதிபதிக்கோ அல்லது பாராளுமன்றத்துக்கோ தீர்மானிக்க முடியாது. பிரதம நீதியரசரே ஒரு தீர்மானத்தை எடுக்க வேண்டும். நீதிபதிகள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்கு ஒரு தீர்வு காண வேண்டும். சுயாதீன ஆணைக்குழுக்கள் அழுத்தமில்லாமல் செயற்பட வேண்டும் என்பதற்காகவே அரசியலமைப்பு பேரவை உருவாக்கப்பட்டது. ஆகவே சகல பிரச்சினைகளுக்கும் பேச்சுவார்த்தைகள் ஊடாக தீர்வு காண வேண்டும். பலஸ்தீனம் - காஸாவின் இன்றைய நிலை தொடர்பில் அரசாங்கம் பலவீனமான நிலைப்பாட்டில் உள்ளது. சர்வதேச நாணய நிதியத்தினால் இந்த நிலையில் உள்ளதா என்பதை அறியவில்லை. நாளாந்தம் 100க்கும் அதிகமானோர் மரணிக்கிறார்கள். சர்வதேச நாணய நிதியமும் வேண்டும், மேற்குலகமும் வேண்டும். ஆனால் தர்மத்தின் நிலையில் இருந்து நாம் ஒரு தீர்மானத்தை எடுக்க வேண்டும். 10, 20 யூதர்களுக்காகவே இஸ்ரேல் உருவாக்கப்பட்டது. 1948ஆம் ஆண்டு காலப்பகுதியில் பலஸ்தீனத்தில் இஸ்ரேல் என்பதொன்று இருக்கவில்லை. இரண்டாம் உலக மகா யுத்தத்தில் 60 இலட்சம் யூதர்களை பலஸ்தீனர்களோ பிற தரப்பினரோ கொல்லவில்லை. இன்று மனித உரிமை பற்றி பேசும் ஐரோப்பியர்களே யூதர்களை கொன்றார்கள். இதுவே உண்மை. காஸாவில் போர் குற்றங்கள் இடம்பெறுகின்றன. ஆகவே இவ்விடயம் தொடர்பில் இலங்கை ஒரு நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு அரசாங்கம் செல்கிறதா என்பதை நாங்கள் அறியவில்லை. கடந்த காலங்களில் இலங்கை மீது மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் மாத்திரமே முன்வைக்கப்பட்டன. ஆனால், தற்போது பொருளாதார படுகொலை குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டுள்ளது. பொருளாதார படுகொலையாளிகள் யார் என்பதை உயர்நீதிமன்றம் தற்போது அறிவித்துள்ளது. எமது நாட்டின் நீதிமன்றம் நிறைவேற்று அதிகாரம் கொண்ட முன்னாள் ஜனாதிபதிகளுக்கு கடுமையான தீர்ப்பு வழங்கியுள்ளது என்பதை சர்வதேசத்துக்கு குறிப்பிட முடியும் என்றார். https://www.virakesari.lk/article/170823
  11. மீன்பிடிக்க செல்ல வேண்டாம் – வளிமண்டலவியல் திணைக்களம்! மன்னார் தொடக்கம் காங்கேசன்துறை, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஊடாக பொத்துவில் வரையான கரையோரங்களுக்கு அப்பாற்பட்ட கடற்பரப்பரப்புகளில் எதிர்வரும் 48 மணித்தியாலங்களுக்கு மீன்பிடிக்க செல்வதை தவிர்க்குமாறு வளிமண்டலவியல் திணைக்களத்தால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது குறித்த கடற்பிராந்தியங்களுக்கு சென்றுள்ள மீனவர்கள் மற்றும் கடற்பயணம் மேற்கொள்வோர் உடனடியாக கரைக்குத் திரும்ப வேண்டும் அல்லது பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. வங்காள விரிகுடாவில் நிலவும் குறைந்த தாழமுக்கம் வலுவடைவதால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த தாழமுக்கமானது இன்று (02) காலை 05.30 அளவில் திருகோணமலையில் இருந்து வடகிழக்காக 380 கிலோமீற்றர் தொலைவில் நிலைகொண்டிருந்தது. நாளை அது சூறாவளியாக வலுவடையும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, வடக்கு, வடமத்திய, கிழக்கு, வட மேல் மாகாணங்களில் 100 மில்லிமீற்றர் வரையான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகுமென எதிர்பார்க்கப்படுகின்றது. வடக்கு, வடமத்திய, வட மேல் மாகாணங்களிலும், திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் மணித்தியாலத்திற்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வரையான வேகத்தில் கடும் காற்று வீசக்கூடுமெனவும் எதிர்வுகூறப்பட்டுள்ளது. இதனிடையே, பதுளை, கண்டி, கேகாலை, இரத்தினபுரி மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/283321
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.