Jump to content

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    18776
  • Joined

  • Last visited

  • Days Won

    12

Everything posted by ஏராளன்

  1. 12 DEC, 2023 | 03:28 PM (நெவில் அன்தனி) 2023ஆம் ஆண்டுக்கான சிறந்த மெய்வல்லுநர்களாக நோவா லைல்ஸ், மொண்டோ டுப்லான்டிஸ், கெல்வின் கிப்டம், டிகிஸ்ட் அசேஃபா, ஃபெய்த் கிப்பிகோன், யூலிமா ரோஜாஸ் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர். மொனாக்கோவில் திங்கட்கிழமை (11) நடைபெற்ற உலக மெய்வல்லுநர் விருது விழாவின்போது உலக சாம்பியன்கள் மற்றும் உலக சாதனை படைத்தவர்கள் இறுதி வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்டனர். இந்த வருடத்தின் வளர்ந்துவரும் நட்சத்திர வீரர்களாக இம்மானுவேல் வன்யோன்யி, ஃபெய்த் செரோட்டிச் ஆகியோர் தெரிவாகினர். வாக்களிக்கும் முறையின்போது பெறப்பட்ட கருத்துக்களைப் பின்பற்றி இந்த வருடத்துக்கான உலக மெய்வல்லுநர் விருதுகள் வழங்கப்பட்டன. மிகவும் அற்புதமான 23 உலக சாதனைகள் உட்பட பல பரபரப்பான நிகழ்ச்சிகள் 2023 மெய்வல்லுநர் அரங்கில் நிகழ்த்தப்பட்டன. பல்வேறு பட்ட நிகழ்ச்சிகளில் மெய்வல்லுநர்கள் வெளிப்படுத்தி வரும் அளப்பரிய ஆற்றல்களைக் கொண்டு ஒரு தடகள வீரருக்கு மட்டும் வாக்களிப்பதைக் கட்டுப்படுத்துவது நம்பமுடியாத அளவிற்கு கடினமானது என்று வாக்குகளை தொகுக்கும்போது, விளையாட்டு வீரர்கள், ரசிகர்கள் மற்றும் உலக மெய்வல்லுநர் குடும்ப உறுப்பினர்கள் கருத்து தெரிவித்தனர். இதன் காரணமாக 2023ஆம் ஆண்டுக்கான உலக மெய்வல்லுநர் விருதுகள் சுவடு, மைதானம் மற்றும் வெளிக்களம் ஆகிய மூன்று பிரிவுகளில் இரு பாலாருக்கும் வழங்கப்பட்டது. 'திறமையின் பரிமாணம், விளையாட்டில் சிறந்த செயல்திறன் ஆகியவற்றை அங்கீகரிக்கும் வகையில் இம்முறை விருதுகளை விஸ்தரிப்பதன் மூலம் இந்த ஆறு விளையாட்டு வீரர்களின் பலதரப்பட்ட சாதனைகள் அங்கீகரிக்கப்படுகிறது' என வேர்ல்ட் அத்லெட்டிக்ஸ் (உலக மெய்வல்லுநர் நிறவனம்) தலைவர் செபாஸ்டியன் கோ கூறினார். 2023க்கான மெய்வல்லுநர் விருதுகள் ஆண்கள் சுவடு நிகழ்ச்சி: நோவா லைல்ஸ் (ஐக்கிய அமெரிக்கா) - 100 மீட்டர், 200 மீட்டர். ஆண்கள் மைதான நிகழ்ச்சி: மொண்டோ டுப்லாண்டிஸ் (சுவீடன்) - கோலூன்றிப் பாய்தல். ஆண்கள் வெளிக்கள நிகழ்ச்சி: கெல்வின் கிப்டம் (கென்யா) - மரதன். பெண்கள் சுவடு நிகழ்ச்சி : ஃபெய்த் கிப்பிகோன் (கென்யா) - 1500 மீட்டர், 5000 மீட்டர் பெண்கள் மைதான நிகழ்ச்சி: யூலிமர் ரோஜாஸ் (வெனிசுவேலா) டிரிபிள் ஜம்ப் பெண்கள் வெளிக்கள நிகழ்ச்சி: டிஜிஸ்ட் அசேஃபா (எதியோப்பியா) - மரதன் டுப்லாண்டிஸ், கிப்டம், கிபிகோன், அசேஃபா, ஆகியோர் 2023இல் தத்தமது நிகழ்ச்சிகளில் உலக சாதனைகளை படைத்தனர். அத்துடன் இந்த வருடம் சிறந்த நட்சத்திர வீரர்களாக தெரிவான அறுவரும் உலக சம்பியன் பட்டங்களை வென்றனர். குறுந்தூர ஓட்டத்தில் லைல்ஸ் அசத்தல் ஆண்களுக்கான குறுந்தூர ஓட்டப் போட்டிகளில் லைல்ஸ் தங்கப் பதக்கங்களை வென்றிருந்தார். புடாபெஸ்ட் உலக மெய்வல்லுநர் போட்டியில் 100 மீற்றர் ஓட்டத்தை 9.83 செக்கன்களிலும் 200 மீற்றர் ஓட்டத்தை 19.52 செக்கன்களிலும் லைல்ஸ் நிறைவுசெய்து இரட்டை வெற்றியை ஈட்டினார். அத்துடன் 4 தர 100 மீற்றர் தொடர் ஓட்டப் போட்டியில் வெற்றிபெற்ற ஐக்கிய அமெரிக்கா அணியிலும் அவர் இடம்பெற்றார். அவர் அத்துடன் நின்றுவிடவில்லை. லண்டனில் நடைபெற்ற டயமண்ட் லீக் மெய்வல்லுநர் போட்டியில் 200 மீற்றர் தூரத்தை 19.47 செக்கன்களில் நிறைவு செய்து தொடர்ச்சியான 6ஆவது தடவையாக சிறந்த நேரப் பெறுதியைப் பதிவுசெய்தார். டுப்லான்டிஸின் சாதனைகள் தொடர்கின்றன டுப்லாண்டிஸ் 2023இல் தனது உலக கோலூன்றிப் பாய்தல் சாதனையை உள்ளக அரங்கிலும் வெளியக அரங்கிலும் முன்னேற்றிக்கொண்டார். உலக சம்பியன் பட்டத்தை தொடர்ந்து தக்கவைத்து வரும் அவர் 6.00 மீட்டருக்கும் மேற்பட்ட உயரத்தை 20 தடவைகள் தாவியுள்ளார். க்ளமொன்ட் - ஃபெராண்ட் உள்ளக அரங்கில் 24 வயதான டுப்லான்டிஸ் 6.22 மீட்டர் உயரத்தை தாவியதன் மூலம் தனது முந்தைய உலக சாதனையை ஒரு சென்றி மீட்டரால் புதுப்பித்தார். வெளியரங்க கோலூன்றிப் பாய்தலில் தனது இரண்டாவது தொடர்சச்சியான உலக சம்பியன் பட்டத்தை வென்றெடுத்தார். வொண்டா டயமண்ட் லீக் போட்டியில் தனது முதல் முயற்சியிலேயே 6.23 மீட்டர் உயரத்தைத் தாவி தனது சொந்த உலக சாதனையை ஒரு மீ ட்டரால் முறியடித்தார். வொண்டா டயமண்ட் லீக்கில் அவர் வென்ற 3ஆவது சம்பியன் பட்டம் இதுவாகும். மரதனில் ஆதிக்கம் செலுத்தும் கிப்டம் உலக மெய்வல்லுநர் பிளட்டினம் லேப்ள் வீதி ஓட்டப் போட்டியில் கென்ய வீரர் கிப்டம் உலக சாதனை படைத்தார். அக்டோபர் மாதம் நடைபெற்ற பான்க் ஒவ் அமெரிக்கா சிக்காகோ மரதன் ஓட்டப் போட்டியை 2 மணித்தியாலங்கள் 00:35 செக்கன்களில் நிறைவுசெய்து கிப்டம் உலக சாதனை படைத்தார். 24 வயதான அவர் கிட்டத்தட்ட மூன்றரை நிமிடங்கள் வித்தியாசத்தில் மரதன் போட்டியில் வெற்றிபெற்றார். அத்துடன் எலியுட் கிப்சோஜின் முந்தைய உலக சாதனையை 34 செக்கன்கள் வித்தியாசத்தில் முறியடித்தார். 40 வருடங்களில் பெரிய வித்தியாசத்தில் அசேஃபா உலக சாதனை செப்டம்பர் மாதம் நடைபெற்ற பெண்களுக்கான BMW பேர்லின் மரதன் ஓட்டப் போட்டியை 2 மணித்தியாலங்கள் 11 நிமிடங்கள் 53 செக்கன்களில் ஓடி முடித்த எத்தியோப்பியாவின் 27 வயதுடைய டிஜிஸ்ட் அசேஃபா, உலக சாதனையை இரண்டு நிமிடங்கள் 14 செக்கன்களில் முறியடித்து புதிய உலக சாதனையை படைத்தார். கடந்த 40 வருடங்களில் மிகப் பெரிய வித்தியாசத்தில் உலக சாதனை முறியடிக்கப்பட்டமை இதுவே முதல் தடவையாகும். 3 வெவ்வேறு ஓட்டப் போட்டி நிகழ்ச்சிகளில் கிப்பிகோன் உலக சாதனை புடாபெஸ்டில் நடைபெற்ற 2023 உலக மெய்வல்லுநர் போட்டியில் இரட்டை தங்கப் பதக்கங்களை சுவீகரித்த கிப்பிகோன், 3 வெவ்வேறு தூரங்களுக்கான போட்டி நிகழ்ச்சிகளில் உலக சாதனைகளைப் படைத்த தனது அற்புத ஆற்றலை வெளிப்படுத்தினார். ஃப்ளொரென்ஸில் நடைபெற்ற மெய்வல்லுநர் போட்டியில் பெண்களுக்கான 1500 மீட்டர் ஓட்ட நிகழ்ச்சியை 3 நிமிடங்கள் 49.11 செக்கன்களில் நிறைவு செய்து உலக சாதனை படைத்த கிப்பிகோன், ஒரு வாரம் கடந்து மற்றொரு உலக சாதனையை நிலைநாட்டினார். அதற்கு முன்னர், இரண்டு தடவைகள் மாத்திரமே 5000 மீட்டர் ஓட்டப் போட்டியில் பங்குபற்றியிருந்த கிப்பிகோன், பாரிஸில் நடைபெற்ற 5000 மீட்டர் ஓட்டப் போட்டியை 14 நிமிடங்கள் 05.20 செக்கன்களில் நிறைவு செய்து தனது இரண்டாவது உலக சாதனையை நிலைநாட்டினார். அதனைத் தொடர்ந்து மொனாக்கோவில் நடைபெற்ற மெய்வல்லுநர் போட்டியில் ஒரு மைல் தூரத்தை 4 நிமிடங்கள் 07.64 செக்கன்களில் கடந்து தனது 3ஆவது உலக சாதனையை படைத்தார். இதனை விட புடாபெஸ்ட் உலக மெய்வல்லுநர் போட்டிகளில் அவர் 1500 மீட்டர், 5000 மீட்டர் ஆகிய இரண்டு நிகழ்ச்சிகளியலும் வெற்றிபெற்றார். முப்பாய்ச்சலில் ரோஜாஸின் ஆற்றல் தொடர்கிறது ரொஜாஸ் தனது 4ஆவது உலக வெளியரங்க சம்பியன் பட்டத்தை புடாபெஸ்ட் முப்பாய்ச்சலில் வென்றெடுத்தார். அத்துடன் டயமண்ட் லீக் போட்டியிலும் தனது 3ஆவது தொடர்ச்சியான வெற்றியை ஈட்டி வரலாறு படைத்தார். உலக மெய்வல்லுநர் போட்டிக்கான முன்னோடி சுற்று நிறைவில் 8ஆம் இடத்திலிருந்த வெனிசுவேலா வீராங்கனை ரோஜாஸ், நிதானத்துடனும் மன உறுதியுடனும் இறுதிச் சுற்றில் பங்குபற்றி முப்பாய்ச்சலில் 15.08 மீட்டர் தூரம் பாய்ந்து ஏனைய வீராங்கனைகளைப் பிரமிக்க வைத்து வெற்றியீட்டினார். இயூஜினில் நடைபெற்ற டயமண்ட் லீக் போட்டியில் 15.35 மீட்டர் தூரம் பாய்ந்து வெற்றியீட்டினார். ஆனால் அவரது உலக சாதனையைவிட 39 சென்றிமீட்டர் குறைவான தூரத்தையே அவர் பதிவுசெய்தார். https://www.virakesari.lk/article/171548
  2. Published By: DIGITAL DESK 3 12 DEC, 2023 | 08:55 AM குருந்தூர்மலை தொடர்பான வழக்கு ஒன்று நேற்று செவ்வாய்க்கிழமை (11) முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் இடம்பெற்றிருந்தது. B1053 /2022 என்ற இலக்கமுடைய வழக்கு தொடர்ச்சியாக தவணைகள் வழங்கப்பட்டு இடம்பெற்று வந்த நிலையில் நேற்று குறித்த வழக்கு இடம்பெற்ற போது நீதிமன்றிற்கு வருகை தந்த சட்டத்தரணிகள் அனைவரும் எழுந்து நின்று ஆதரவு தெரிவித்திருந்தனர். வழக்கு விசாரணை நடைபெற்று விவாதங்கள் நடைபெற்று 29 ஆம் திகதி பெப்ரவரி மாதம் 2024 அன்று வழக்கு தவணையிடப்பட்டுள்ளது. நீதிமன்ற தீர்ப்புகள் மதிக்கப்பட வேண்டும், சைவ வழிபாடுகளை மேற்கொள்ள எந்தவித இடையூறுகளும் விளைவிக்க கூடாது, குருந்தூர் மலையை அண்டிய பகுதிகளில் நில அபகரிப்பு தடுக்கப்பட வேண்டும் என தண்ணிமுறிப்பு மற்றும் குமுழமுனை பகுதி மக்களால் கடந்த வருடம் 2022.09.21 குருந்தூர் மலையில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. அவ் ஆர்ப்பாட்டத்தில் மக்களோடு கலந்து கொண்ட முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும் முன்னாள் கரைதுறைப்பற்று பலநோக்கு கூட்டுறவுச்சங்கத் தலைவரும், சமூக செயற்பாட்டாளருமான இரத்தினராசா மயூரன் ஆகியோரை விசாரணைகளை மேற்கொள்வதற்காக முல்லைத்தீவு பொலிஸார், பொலிஸ் நிலையம் வருமாறு அழைப்பு விடுத்திருந்தனர். இந்நிலையில், பொலிஸ் நிலையம் சென்ற இருவரையும் பொலிஸார் கைது செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/171504
  3. ஜம்மு காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்த பிறகு தனித்த இறையாண்மையைக் கொண்டிருக்கவில்லை- சிறப்பு அந்தஸ்த்து நீக்கம் சரியானது - இந்திய நீதிமன்றம் தீர்ப்பு 11 DEC, 2023 | 12:44 PM புதுடெல்லி: ஜம்முகாஷ்மீர் சிறப்பு அந்தஸ்த்து நீக்கம் சரியானது - என இந்திய நீதிமன்றம் தீர்ப்புவழங்கியுள்ளது. ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த சட்டப்பிரிவு 370 தற்காலிகமானதே என்று உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த 5 நீதிபதிகள் அடங்கிய உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு இன்று தனது தீர்ப்பை வழங்கி வருகிறது. தீர்ப்பை வாசிப்பதற்கு முன்பாக, இந்த வழக்கில் 3 விதமான தீர்ப்பு உள்ளதாக உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து அவர் தீர்ப்பை வாசித்தார். அதில் அவர் கூறியதாவது: ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டப்பிரிவு 370 தற்காலிகமானதே. சட்டப்பிரிவு 1 மற்றும் 370ன் படி ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி. சட்டப்பிரிவு 370 ஏற்படுத்தப்பட்டது ஒரு இடைக்கால ஏற்பாடு. சட்டப்பிரிவு 370ஐ ரத்து செய்வதற்கு இந்திய குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் உள்ளது. ஜம்மு காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்த பிறகு அது தனித்த இறையாண்மையைக் கொண்டிருக்கவில்லை. ஜம்மு காஷ்மீரை இந்தியாவுடன் ஒருங்கிணைக்கவே சட்டப்பிரிவு 370 இருந்தது. இந்தியாவில் இருந்து அதனை பிரிப்பதற்காக அல்ல. சட்டப்பிரிவு 370ஐ ரத்து செய்வதற்கான அறிவிப்பை வெளியிடும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு உண்டு. இதற்காக அவர் சட்டப்பிரிவு 370(3)ஐ பயன்படுத்தியதில் தவறு இல்லை. குடியரசுத் தலைவர் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தியது செல்லுபடியாகும். சட்டப்பிரிவு 370(1)(d)-ன்படி அரசியலமைப்பின் அனைத்து விதிகளையும் ஜம்மு காஷ்மீருக்குப் பயன்படுத்தலாம். ஜம்மு காஷ்மீர்மீருக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ய மாநில அரசின் ஒப்புதலைப் பெறத் தேவையில்லை. ஜம்மு காஷ்மீரை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்க மத்திய அரசுக்கு உரிமை உள்ளது. மாநிலம் தொடர்பாக மத்திய அரசு எடுக்கும் முடிவுகளை ரத்து செய்யக் கோர முடியாது. இதில் தலையிடுவது, குழப்பத்தையும் நிச்சயமற்ற நிலையையுமே ஏற்படுத்தும். மேலும், நிர்வாகத்தை ஸ்தம்பிக்க வைக்கும். அந்த வகையில், லடாக்கை யூனியன் பிரதேசமாக அறிவித்தது செல்லும். அடுத்த ஆண்டு செப்டம்பர் 30ம் தேதிக்குள் இந்திய தேர்தல் ஆணையம் ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைக்குத் தேர்தல் நடத்த வேண்டும். ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு தொடர்பான மத்திய அரசின் அறிக்கையின்படி, விரைவில் ஜம்மு காஷ்மீருக்கு மத்திய அரசு மாநில அந்தஸ்து அளிக்க வேண்டும். முன்னதாக தீர்ப்பு வெளியாவதை ஒட்டி ஜம்மு காஷ்மீரில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இதன் ஒரு பகுதியாக முன்னாள் முதல்வரும் பிடிபி கட்சியின் தலைவருமான மெஹபூபா முஃப்தி, தேசிய மாநாட்டுக் கட்சியின் முக்கியத் தலைவரும், முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா ஆகியோர் தாங்கள் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டதாகக் கூறினார். ஆனால் இதனை அரசுத் தரப்பு மறுத்தது குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/171444
  4. பட மூலாதாரம்,GETTY IMAGES 10 டிசம்பர் 2023 இந்தியப் பெருங்கடலில் பரஸ்பர ஒத்துழைப்பை அதிகரிக்க, அந்தப் பகுதியின் அனைத்து நாடுகளையும் இணைத்து, கோஷ்டி பூசல்களுக்கு முடிவு கட்ட வேண்டும் என்று மாலத்தீவில் அதிபர் முகமது முய்சு தலைமையில் பொறுப்பேற்றுள்ள புதிய அரசு கூறியுள்ளது. மாலத்தீவு அதிபர் முகமது முய்சுவின் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சீனாவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்தியப் பெருங்கடல் பிராந்திய கூட்டமைப்பில் (Indian Ocean Region Forum) மாலத்தீவின் துணை அதிபர் ஹுசைன் முகமது லத்தீப் இதனைத் தெரிவித்தார். இந்தியப் பெருங்கடலில் இந்தியாவின் செல்வாக்கைக் குறைக்கும் நோக்கத்தில் சீனா இந்த கூட்டமைப்பை உருவாக்கியதாக நம்பப்படுகிறது. கடந்த ஆண்டு, மாலத்தீவு இந்த கூட்டத்தில் பங்கேற்க மறுத்துவிட்டது. அப்போது, மாலத்தீவு அதிபராக இந்தியாவுக்கு நெருக்கமானவராகக் கருதப்படும் இப்ராகிம் முகமது சோலி இருந்தார். இந்தியப் பெருங்கடலில் வலுவான உறவுகளைக் கட்டியெழுப்புவதற்கும், நிபுணத்துவத்தைப் பகிர்ந்து கொள்வதற்கும், தாராளமயமான மற்றும் வளமான பிராந்தியமாக அதனை மாற்றுவதற்கும் தோளோடு தோள் நின்று பணியாற்ற மாலத்தீவு தயாராக இருப்பதாக ஹுசைன் முகமது லத்தீப் கூறினார். அவர் கூறுகையில், “2011ம் ஆண்டில் இருந்து இந்தியப் பெருங்கடல் மற்றும் பிற பிராந்தியங்களில் மற்ற நாடுகள் உடனான உறவை வலுப்படுத்தி, அமைதியான ஒத்துழைப்பிற்காகவும் வளர்ச்சிக்காகவும் மாலத்தீவு முயற்சிகள் எடுக்கிறது.” என அவர் தெரிவித்தார். அவர் தனது உரையில் கூறுகையில், “இந்தியப் பெருங்கடலில் ஒத்துழைப்பு என்பது அனைவரையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். யாரும் பாரபட்சம் காட்டக்கூடாது, பிராந்தியத்தில் உள்ள அனைத்து நாடுகளும் இதில் ஈடுபட வேண்டும்” என அவர் கூறினார். இது இந்தப் பகுதியில் உள்ள நாடுகளுக்கு இடையேயான பிரிவுவாதத்தை முடிவுக்குக் கொண்டு வந்து வளர்ச்சி மற்றும் ஒத்துழைப்பை விரைவுபடுத்த உதவும் என்றும் முகமது லத்தீஃப் கூறினார். மாலத்தீவு துணை அதிபர் பேசியதன் முக்கியத்துவம் என்ன? மாலத்தீவு துணை ஜனாதிபதி ஹுசைன் முகமது லத்தீப்பின் அறிக்கை முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. ஏனெனில், முகமது முய்சுவின் அரசாங்கம் சார்பாக சீனாவிற்கு சென்றுள்ள முதல் மூத்த அரசியல் தலைவராக முகமது லத்தீப் பார்க்கப்படுகிறார். மாலத்தீவில் சீனா அதிக அளவில் முதலீடு செய்துள்ளது. மாலத்தீவு முன்னாள் அதிபர் அப்துல்லா யாமீன் ஆட்சிக் காலத்தில் இந்த அதிக அளவில் முதலீடு செய்யும் நடைமுறை தொடங்கியது. புதிய அதிபர் முகமது முய்சு, முன்னாள் அதிபர் அப்துல்லா யாமீனுக்கு நெருக்கமானவர். சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் இந்தியாவுக்கு நெருக்கமானவராக கருதப்படும் முன்னாள் அதிபர் இப்ராஹிம் முகமது சோலியை முய்சு தோற்கடித்திருந்தார். முகமது முய்சு தேர்தல் பிரசாரத்தில் இருந்தே அங்குள்ள இந்திய ராணுவ வீரர்களை திருப்பி அனுப்புவது குறித்து பேசி வருகிறார். ‘இந்தியாவே வெளியேறு’ என்ற முழக்கம் அவரது தேர்தல் பரப்புரையில் முக்கியப் பங்கு வகித்தது. இந்தியா தனது படைகளை வாபஸ் பெற ஒப்புக்கொண்டதாக சில நாட்களுக்கு முன்பு முகமது முய்சு கூறியிருந்தார். முய்சுவின் அரசாங்கம் பொறுப்பேற்ற பிறகு, மாலத்தீவில் சீனாவின் செல்வாக்கு மீண்டும் அதிகரிக்கக் கூடும் என்றும், அப்துல்லா யாமீனின் அரசாங்கம் அகற்றப்பட்ட பின்னர் மாலத்தீவில் குறைந்திருந்த முதலீடுகள் மீண்டும் அதிகரிக்கலாம் என்றும் இந்தியா கவலைப்படுகிறது. மாலத்தீவு நீண்ட காலமாக இந்தியாவின் செல்வாக்கின் கீழ் இருந்து வந்தது. இந்தியப் பெருங்கடலின் பெரும் பகுதியைக் கண்காணிக்கும் வாய்ப்பை இந்தியாவிற்கு மாலத்தீவு வழங்குகிறது. ஆனால், அதே நேரம் இந்தியாவின் போட்டியாளரான சீனாவும் இந்தியாவுக்கு நெருக்கமான இந்தப் பகுதியில் தனது செல்வாக்கை அதிகரிக்க தொடர்ந்து முயற்சித்து வருகிறது. பட மூலாதாரம்,PRESIDENCY.GOV.MV இந்திய பெருங்கடலில் என்ன நடக்கிறது? கடனைத் திருப்பிச் செலுத்தத் தவறியதால், இலங்கையின் அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனா கைப்பற்றியுள்ளது. மேலும், தனது இராணுவத் தளத்தை கிழக்கு ஆப்பிரிக்க நாடான ஜிபூட்டியில் (Djibouti) சீனா அமைத்துள்ளது. கடந்த வெள்ளியன்று, சீனாவின் தென்மேற்கு யுனான் மாகாணத்தின் தலைநகரான குன்மிங்கில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தியப் பெருங்கடல் பிராந்திய கூட்டமைப்பில், மாலத்தீவு துணை அதிபர் ஹுசைன் முகமது லத்தீஃப், கடந்த பத்தாண்டுகளில் மாலத்தீவின் வளர்ச்சிக்கு சீனா முக்கிய பங்களிப்பைச் செய்து வருகிறது என்று கூறினார். அவர் கூறுகையில், "அதிபர் முய்சு சீனாவுடன் உறவுகளை உருவாக்குவதற்கும் பொதுவான நலன்களை அடைவதற்கும் ஆதரவாக இருக்கிறார். சீனாவுடன் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான புதிய வாய்ப்புகளை நாங்கள் ஆராய்ந்து வருகிறோம்." என அவர் தெரிவித்தார். செய்தி நிறுவனமான பி.டி.ஐ. வெளியிட்ட செய்தியின்படி, முகமது லத்தீப்பின் உரையின் சிறப்பு அம்சம் என்னவென்றால், அவர் சீனாவிற்கும் மாலத்தீவிற்கும் இடையிலான இருதரப்பு உறவுகளைப் பற்றி பேசினார் என்பதுதான். ஆனால் சீனாவின் பெல்ட் மற்றும் ரோடு திட்டம் பற்றி குறிப்பிடவில்லை. இந்த திட்டத்தின் கீழ் பல வளர்ச்சி திட்டங்கள் மாலத்தீவில் நடந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. பட மூலாதாரம்,PRESIDENCY.GOV.MV இந்தியப் பெருங்கடல் பிராந்திய கூட்டமைப்பு என்பது என்ன? மாலத்தீவு துணை அதிபர் இந்தக் கூட்டத்தில் கூறுகையில், இவை அனைத்தும் 'சீனா சர்வதேச வளர்ச்சி ஒத்துழைப்பு நிறுவனம்' (China International Development Cooperation Agency) எனப்படும் CIDCA மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார். இது சீன கம்யூனிஸ்ட் கட்சியின் ஒரு அங்கமாகும். சீனாவின் முன்னாள் துணை வெளியுறவு அமைச்சரும், இந்தியாவுக்கான தூதருமான லுவோ சாவ்ஹுய், இந்த அமைப்பின் தலைவராக உள்ளார். இந்த ஆண்டு கூடியுள்ளது இந்த மன்றத்தின் இரண்டாவது கூட்டமாகும். பிடிஐ செய்தியின்படி, கடந்த ஆண்டு 19 நாடுகள் இந்த மன்றத்தில் பங்கேற்றதாக லுவோ கூறியிருந்தார். பாகிஸ்தான், நேபாளம், இலங்கை, பங்களாதேஷ், மாலத்தீவுகள், இந்தோனேசியா, மியான்மர், ஆப்கானிஸ்தான், ஈரான், ஓமன், தென்னாப்பிரிக்கா, கென்யா, மொசாம்பிக், தான்சானியா, சீஷெல்ஸ், மடகாஸ்கர், மொரிஷியஸ், ஜிபூட்டி மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் கடந்த வருடம் நடந்த கூட்டத்தில் பங்கேற்றதாக லுவோ கூறினார். இருப்பினும், பின்னர் ஆஸ்திரேலியா மற்றும் மாலத்தீவுகள் இதில் பங்கேற்க மறுத்துவிட்டன. அந்த கூட்டத்திற்கு இந்தியா அழைக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த கூட்டத்தில் தனது பிரதிநிதிகள் யாரும் பங்கேற்கவில்லை என்று ஆஸ்திரேலியா கூறியிருந்தது. அதேநேரம், இதில் பங்கேற்க முடியாதது குறித்து ஏற்கனவே தெரிவித்துவிட்டதாக மாலத்தீவு கூறியிருந்தது. பட மூலாதாரம்,REUTERS/MARTIN PETTY இந்த ஆண்டு சீனா, 20 நாடுகள் மற்றும் பல நிறுவனங்களில் இருந்து சுமார் 300 விருந்தினர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டதாக அந்த அமைப்பு கூறுகிறது. இந்தியப் பெருங்கடலில் இந்தியாவின் செல்வாக்கைக் குறைக்கவே சீனா இந்த கூட்டமைப்பை தொடங்கியுள்ளதாக நம்பப்படுகிறது. இந்தத் கூட்டமைப்பில் இந்தியாவிற்கு ஆதரவான பல அமைப்புகள் உள்ளன. அவை நீண்ட காலமாக செயல்பட்டு வருகின்றன. உதாரணமாக 23 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட 'இந்தியப் பெருங்கடல் ரிம் குழு' (IORA) போன்றவை. 1997 இல் உருவாக்கப்பட்ட இந்த குழுவில் சீனாவும் ஒரு உறுப்பினராகும். IORAவைத் தவிர, 2015ல் மோடி அரசாங்கம் 'பிராந்தியத்தில் உள்ள அனைவருக்கும் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி எனும் சாகர் (SAGAR) திட்டத்தை அறிமுகப்படுத்தியது. கூடுதலாக, இந்தியக் கடற்படை ‘இந்தியப் பெருங்கடல் கடற்படை கருத்தரங்கையும்’ (IONS) உருவாக்கியுள்ளது. இது அந்தப் பிராந்தியத்தின் கடற்படைகளுக்கு இடையே கடல்சார் ஒத்துழைப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. பட மூலாதாரம்,PIB மாலத்தீவு - இந்தியா உறவு எப்படி உள்ளது? இந்திய இராணுவ வீரர்களை தங்கள் நாட்டிலிருந்து திரும்பப் பெறுவதற்கான கோரிக்கையை இந்திய அரசு ஏற்றுக்கொண்டதாக மாலத்தீவு அரசு சமீபத்தில் தெரிவித்திருந்தது. ஐ.நாவின் காலநிலை மாற்றத்திற்கான கருத்தரங்கான சிஓபி-28 மாநாட்டின் போது பிரதமர் மோடியும், அதிபர் முய்சுவும் சந்தித்தனர். இந்தியா 2010 மற்றும் 2013-இல் இரண்டு ஹெலிகாப்டர்களையும், 2020-இல் ஒரு சிறிய விமானத்தையும் மாலத்தீவுக்கு பரிசாக வழங்கியது. இந்த விமானங்கள் நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகள் மற்றும் மருத்துவ அவசர நிலைகளில் பயன்படுத்தப்படும் என்று இந்தியா கூறியிருந்தது. 2021-ஆம் ஆண்டில், இந்த ஹெலிகாப்டர்கள் மற்றும் விமானங்களை இயக்க சுமார் 75 இந்திய வீரர்கள் மாலத்தீவில் இருப்பதாக மாலத்தீவு பாதுகாப்புப் படையினர் தெரிவித்தனர். மாலத்தீவுக்கு இந்தியா ராணுவ தளவாடங்களையும் வழங்குகிறது. மேலும், மாலத்தீவு கடற்படைக்கு கப்பல் கட்டும் தளம் அமைக்க இந்தியாவும் உதவி வருகிறது. இந்தியாவும் சீனாவும் மாலத்தீவில் தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்ட முயற்சிக்கின்றன. இந்த தேர்தலில் வெற்றி பெற்றுள்ள அதிபர் முய்சு தலைமையிலான கூட்டணி சீனாவின் பக்கம் சாய்ந்துள்ளதாக நம்பப்படுகிறது. இந்தியா மற்றும் மாலத்தீவுகள் 60 ஆண்டுகளுக்கும் மேலாக வெளியுறவு, இராணுவ, பொருளாதார மற்றும் கலாச்சார உறவுகளைக் கொண்டுள்ளன. மாலத்தீவுகள் இந்தியப் பெருங்கடலில் சுமார் 1,200 தீவுகளைக் கொண்ட ஒரு நாடாகும். அதன் மக்கள் தொகையில் 98 சதவீதம் பேர் சுன்னி முஸ்லிம்கள். மாலத்தீவு குடியுரிமையை யாராவது விரும்பினால், அவர் முஸ்லிமாக இருப்பது அவசியம். மாலத்தீவு ஐந்து லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட ஒரு குடியரசாகும். இந்தியா மற்றும் சீனாவின் பார்வையில் இந்தியப் பெருங்கடலில் புவியியல் ரீதியாக முக்கியமான இடத்தில் மாலத்தீவு இருப்பதாக பார்க்கப்படுகிறது. மாலத்தீவுகள் நீண்ட காலமாக இந்தியாவிடமிருந்து பொருளாதார மற்றும் இராணுவ உதவிகளைப் பெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. https://www.bbc.com/tamil/articles/cv2z25zkx3qo
  5. கிராம சேவகரின் வேலையை பொலிஸார் பார்க்கக் கூடாது : தமிழர்களை இலக்காக கொண்ட தகவல் திரட்டலை உடன் நிறுத்துங்கள் - மனோ Published By: VISHNU 11 DEC, 2023 | 01:40 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) பொலிஸார் பொலிஸூற்குரிய வேலையை பார்க்க வேண்டும். அதனை விடுத்து கிராம சேகவர் வேலையை பார்க்க கூடாது. தமிழ் மக்களை மாத்திரம் இலக்காகக் கொண்டு தனிப்பட்ட தகவல்கள் திரட்டப்படுகின்றன. வாழ்த்து தெரிவிப்பதற்காகவா மதம், பிறந்த திகதி உள்ளிட்ட விடயங்கள் கோரப்படுகின்றன. ஆகவே தமிழர்களை இலக்காகக் கொண்ட தகவல் திரட்டலை உடன் நிறுத்துங்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸிடம் வலியுறுத்தினார். பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (11) விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் உரையாற்றுகையில், கிருலபனை, வெள்ளவத்தை, கொட்டாஞ்சேனை, நாரஹேன்பிட்டிய, தெஹிவளை, பம்பலப்பிட்டி, மட்டக்குளி, முகத்துவாரம் ஆகிய பகுதிகளில் வாழும் தமிழர்களை இலக்காக கொண்டு தகவல் திரட்டும் நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். பொலிஸ் கட்டளைச்சட்டத்தின் பிரகாரம் தகவல் கோருவதற்கான விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படுவதாக குறிப்பிடப்படுகிறது. ஆனால் விண்ணப்பங்கள் சிங்கள மொழியில் மாத்திரம் விநியோகிக்கப்படுகின்றன. பொலிஸ் கட்டளைச்சட்டம் பற்றி பேசும் இலங்கை பொலிஸூக்கு நாட்டின் அரசியலமைப்பு சட்டம் தெரியவில்லை. தமிழ் மற்றும் சிங்கள மொழிகள் நாட்டின் அரசகரும மொழிகளாக அரசியலமைப்பில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் சிங்கள மொழியில் மாத்திரமே சகல விண்ணப்பங்களும் வழங்கப்படுகின்றன. இது டரான் அலஸின் பொலிஸ் இராச்சியமா, விக்கிரமசிங்கவின் பொலிஸ் இராச்சியமா ? அல்லது தேசபந்துவின் பொலிஸ் இராச்சியமா? இந்த நாட்டில் யுத்தம் இல்லை, பயங்கரவாதம் இல்லை அவ்வாறான நிலையில் ஏன் ஏன் வீடு வீடாக செல்கின்றீர்கள்? தகவல் திரட்டுகின்றீர்கள்? தேர்தல் காலத்தில் அரசியல்வாதிகள் வீடு வீடாக சென்று துண்டுபிரசுரங்களை வழங்குவதை போன்று பொலிஸார் வீடு வீடாக சென்று விண்ணப்ப படிவங்களை வழங்குகிறார்கள். பொலிஸார் பொலிஸூக்குரிய வேலையை பார்க்க வேண்டும். அதை விடுத்து கிராம சேகவரின் வேலையை பொலிஸ் செய்ய கூடாது. விநியோகிக்கப்படும் விண்ணப்ப படிவத்தில் முழு பெயர், தேசிய அடையாள அட்டை இலக்கம் மற்றும் மதம் உள்ளிட்ட தகவல்கள் கேட்கப்பட்டுள்ளன. மதம் தொடர்பான விபரங்களை ஏன் கேட்கின்றீர்கள். தீபாவளி, நத்தார் மற்றும் தைப்பொங்கள் ஆகிய பண்டிகைகளுக்கு வாழ்த்து அனுப்புவதற்காகவா? அதேபோல் பிறந்த திகதி கேட்கப்படுகிறது. பிறந்த தினத்துக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காகவா?அத்துடன் தனிப்பட்ட விடயங்கள் கோரப்படுகின்றன. பாதாள குழுக்கள் மற்றும் சமூக விரோத செயற்பாட்டாளர்களுடன் பொலிஸூக்கு தொடர்புண்டு. நான் ஒட்டுமொத்த பொலிஸாரையும் குறிப்பிடவில்லை. ஒருசிலர் சிறந்த முறையில் சேவையாற்றுகிறார்கள். 99 சதவீதமான சிறந்தவர்கள் உள்ளார்கள். தனிப்பட்ட தகவல்களை கோரும் போது பொதுமக்கள் அச்சமடைகிறார்கள். தொலைபேசி இலக்கத்தை வைத்துக் கொண்டு எதனையும் செய்ய முடியும். தமிழ் மக்களை மாத்திரம் இலக்காகக் கொண்டு தகவல் கோரப்படுகின்றன. ஆகவே இதனை உடன் நிறுத்துங்கள் என்றார். https://www.virakesari.lk/article/171445
  6. 11 DEC, 2023 | 05:44 PM யாழ். பல்கலைக்கழக முன்னாள் கலைப்பீட மாணவர் ஒன்றியத் தலைவரான தர்ஷனிடம் பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றிய முன்னாள் தலைவரும் ஊடகவியலாளருமான இராசரத்தினம் தர்ஷனிடம் பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள அலுவலகத்தில் வைத்து சுமார் 4 மணித்தியாலங்களுக்கும் மேலாக விசாரணை மேற்கொண்டுள்ளனர். இவ்விசாரணை காலை 10 மணிக்கு ஆரம்பமாகி 2.30 வரை தொடர்ச்சியாக இடம்பெற்றுள்ளது. கடந்த 2022ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வினை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் முன்னெடுத்தபோது தமிழீழ விடுதலைப்புலிகளின் பாடல் இசைக்கப்பட்டமை மற்றும் மாணவர் ஒன்றிய செயற்பாடுகள், மாணவர் ஒன்றியம் நடத்திய ஊடக சந்திப்புகள் தொடர்பிலேயே விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. https://www.virakesari.lk/article/171488
  7. இறந்த குழந்தையின் உடலை அட்டைப் பெட்டியில் வைத்து கொடுத்த அரசு மருத்துவமனை ஊழியர்கள் – என்ன நடந்தது? கட்டுரை தகவல் எழுதியவர், தங்கதுரை குமாரபாண்டியன் பதவி, பிபிசி தமிழ் 45 நிமிடங்களுக்கு முன்னர் சென்னையில் மிக்ஜாம் புயலால் பெய்த மழையின் வெள்ளத்தால், ஆம்புலன்ஸ் உதவி கிடைக்காமல் வீட்டிலேயே பிரசவிக்கப்பட்டு இறந்த பச்சிளம் குழந்தையின் உடலை அட்டைப் பெட்டியில் வைத்து வழங்கியிருக்கிறது ஒரு அரசு மருத்துவமனை நிர்வாகம். இதனையடுத்து, கடையில் வெள்ளைத் துணியை வாங்கி, குழந்தையின் உடலின் மீது சுற்றி அடக்கம் செய்ய உதவியிருக்கிறார்கள் தன்னார்வலர்கள். இந்தச் சம்பவம், மருத்துவக் கட்டமைப்பில் பின் தங்கி இருப்பதகக் கருதப்படும் வட மாநிலங்களில் நிகழவில்லை. தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த ஓர் குடும்பத்திற்கு நிகழ்ந்து இருக்கிறது இறந்த குழந்தையை அட்டைப் பெட்டியில் வைத்துக் கொடுத்த நிகழ்வு தொடர்பானப் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் பரவியது. அரசியல் தலைவர்கள் உட்பட அனைத்து தப்பினரும் அரசுக்கு எதிராக கடும் விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர் படக்குறிப்பு, வீட்டினுள் மழைநீர் சூழ்ந்ததால் செளவுமியா வீட்டின் மாடியில் தங்க வைக்கப்பட்டிருந்தார் வீட்டில் நடந்த பிரசவம், இறந்து பிறந்த குழந்தை சென்னையில் கடந்த டிசம்பர் 4-ஆம் தேதி மிக்ஜாம் புயல் கரையைக் கடந்தது. அப்போது பெய்த கனமழையால் சென்னை நகரம் முழுவதும் வெள்ளக் காடாக மாறியது. வெள்ளம் வீடுகளைச் சூழ்ந்ததால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே சிக்கிக்கொண்டு பால், குடிநீர், உணவு தொலைத் தொடர்பு சேவை இல்லாமல் கடும் அவதிக்கு உள்ளாகினர். இதில் சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரம் 2-வது தெருவைச் சேர்ந்த மசூத் பாட்ஷா, தினக் கூலியாக வேலை பார்த்து வருகிறார். கர்ப்பமாக இருந்த இவரது மனைவி செளவுமியாவுக்கு கடந்த டிசம்பர் 6-ஆம் தேதி பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இவர்கள் வசித்து வந்த வீட்டினுள் மழைநீர் சூழ்ந்ததால் செளவுமியா வீட்டின் மாடியில் தங்க வைக்கப்பட்டிருந்தார். வீட்டைச் சுற்றி மழை நீர் கழுத்தளவு இருந்ததால் வீட்டின் அருகே இருந்த பெண்களை உதவிக்கு அழைத்தனர். பெண்கள் வந்து பார்த்த போது செளவுமியாவிற்கு பிரசவ வலி அதிகரித்து, குழந்தை இறந்து பிறந்தது. கன்னிகாபுரம் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் பலகை, மீன்பாடி வண்டி ஆகியவற்றை ஏற்பாடுச் செய்து மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு மருத்துவர்கள் உதவியுடன் தொப்புள் கொடி அகற்றப்பட்டது. பின் கீழ்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இறந்த குழந்தையின் உடலை 5 நாட்கள் போராட்டத்திற்குப் பிறகு பெட்டியில் வைத்து பெற்ற அவரது தந்தை மசூத் தன்னார்வலர்கள் உதவியுடன் வியாசர்பாடி மயானத்தில் அடக்கம் செய்து இருக்கிறார். படக்குறிப்பு, மசூத் ‘ஆம்புலன்ஸ் கிடைக்காததால் குழந்தையை இழந்துவிட்டேன்’ பிபிசியிடம் பேசிய மசூத், தனது மனைவி செளவுமியாவிற்கு கடந்த டிசம்பர் 6-ஆம் தேதி காலை 11 மணியளவில் பிரசவ வலி வந்தது என்றார். “ஆம்புலன்ஸ் வரவழைத்து மனைவியை மருத்துவமனை அழைத்துச் செல்லலாம் என 108க்கு தொடர்ச்சியாக தொடர்பு கொள்ள முயற்சி செய்தேன். மழை வெள்ளத்தால் தொலைத்தொடர்பு சேவை பாதிக்கப்பட்டு இருந்ததால் சிக்னல் கிடைக்காமல் போனது. வெளியே சென்று வாகனம் தேடிச் சென்றேன் கிடைக்கவில்லை. தண்ணீர் கழுத்தளவிற்கு இருந்ததால் இதனால் வீட்டின் அருகே வசிக்கும் பெண்களை உதவிக்கு அழைத்தேன்,” என்றார். அவர்கள் உதவிக்கு வந்தனர் என்றும், குழந்தை இறந்தே பிறந்தது என்றும் அவர் கூறினார். “தொப்புள் கொடி அகற்றப்படாமல் இருந்தால் தாய்க்கும் ஆபத்து என பெண்கள் கூறினர்,” என்றார். “இதனால், எனது பகுதியைச் சேர்ந்த இளைஞர்களின் உதவியுடன் ஒரு பலகையை மீன்பாடி வண்டி மீது வைத்து அருகில் இருந்த ஜி-3 அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றேன். அங்கு வெள்ளநீர் புகுந்ததால் அரசு மருத்துவமனையே பூட்டப்பட்டு இருந்தது," என கூறினார். போலீசார் உதவியால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை தொடர்ந்து பேசிய அவர் அதைத்தொடர்ந்து தனது மனைவியை அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றதாகவும், ஆனால் அவர்கள் பிரச்னை வந்துவிடும் என எண்ணி சிகிச்சை அளிக்க முன்வரவில்லை என்றும் கூறினார். “புளியந்தோப்பு காவல்துறை பெண் அதிகாரி உதவியதால் பிற்பகல் ஒரு மணிக்கு மேல் உள்நோயாளியாக அனுமதித்து தொப்புள் கொடியை அகற்றி அங்கிருந்து சிகிச்சைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்,” என்றார் மசூத். பிபிசியிடம் பேசிய குழந்தையின் தந்தை மசூத், அரசு மருத்துவமனையிடம் கொடுத்தபோது குழந்தையின் உடலை அட்டப்பெட்டியில் வைத்துக் கொடுத்ததாகக் கூறினார். ஆனால், பிபிசியிடம் பேசிய காவல்துறை ஆய்வாளர் பிரவீன் குமார், தனியார் மருத்துவமனையிலிருந்து குழந்தையின் உடலைப் பெறும்போது, அது துணியில் சுற்றப்பட்டிருந்தது, அது அப்படியே தான் அரசு மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டது என்றார். காவல் துறையிடம் கடிதம் மேலும் பேசிய மசூத், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை பிணவறையில் இறந்த குழந்தையின் உடல் வைக்கப்பட்டு இருந்தது என்றார். “குழந்தையின் உடலை பெறுவதற்கு ஆதார் அட்டை எடுத்து வரும்படி பிணவறையின் முதல் நாள் இரவு ஊழியர் கூறினார்,” என்றார். மறுநாள் காலை வந்து கேட்ட போது இது போலீஸ் வழக்கு என்பதால் காவல் நிலையத்திலிருந்து கடிதம் கொண்டு வந்தால் மட்டுமே தான் உடலை அளிக்க முடியும் என அவர்கள் கூறியதாகக் கூறினார். “அந்நேரம் அருகில் இருந்த ஒருவர் 2,500 ரூபாய் கொடுத்தால் எல்லா வேலையும் வேகமாக நடைபெறும் எனக் கூறினார். அப்பொழுது நான் அவரிடம் பணம் இல்லை என்று கூறினேன்,” என்றார். மேலும், தனது மனைவி மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பதால் அவரை விட்டுவிட்டு காவல்நிலையம் வர இயலாது எனக் கூறியதாகவும், போலீசார் உறவினரை அனுப்பி வைக்குமாறு கூறியதாகவும் அவர் கூறினார். “தொடர்ந்து கடிதத்தை பெற்று குழந்தையின் உடலை வாங்குவதற்காக சென்றோம்,” என்றார். அட்டைப் பெட்டியில் குழந்தை உடல் மருத்துவமனைக்குச் சென்ற போது செவிலியர் அட்டை பெட்டியுடன் தயாராக காத்திருந்ததாகக் கூறினார் மசூத். “அதனை அடக்கம் செய்யக்கூட பணம் இல்லாமல் இருந்தேன். அப்போது தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவர்கள் குழந்தையின் உடலை அடக்கம் செய்ய உதவினர். வியாசர்பாடி சுடுகாட்டிற்கு உடலை எடுத்துச் சென்றுபெட்டியை திறந்து போது குழந்தையின் உடல் மீது ஒரு துணி கூட சுற்றாவில்லை,” என்றார். மேலும் பேசிய மசூத், பிணவறை ஊழியர் அவசரமாக உடலைக் கேட்டதால் துணி சுற்றாமல் கொடுத்ததாகக் கூறியதாகத் தெரிவித்தார். “மேலும், பணம் கொடுத்தது தொடர்பாக பிணவறை உதவியாளர் பன்னீர் செல்வம் பிணவறை ஊழியர்களையும் வரிசையில் நிற்க வைத்து என்னிடம் காட்டினார். என்னிடம் பணம் கேட்ட நபர் அந்த ஊழியர்களில் யாரும் இல்லை என தெரிய வந்தது", என்றார். படக்குறிப்பு, ஆசாத் ‘கையில் இருந்து நழுவிய குழந்தையின் உடல்’ குழந்தையின் உடலை அடக்கம் செய்த ஆசாத் பிபிசி தமிழிடம் பேசினார். “குழந்தையின் உடலைப் பெற்று சுடுகாட்டிற்கு எடுத்துச் சென்று திறந்து பார்த்த போது ஒரு சிறு துணிகூட இல்லாமல் குழந்தை இருந்தது அதனை வெறும் கையால் தூக்க முயன்ற போது குழந்தை கையில் இருந்து நழுவிச் சென்றது,” என்றார். “இது எனக்கு அச்சத்தை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து நாங்களே எங்களது பணத்தில் வெள்ளைத் துணியை வாங்கி குழந்தையின் உடலைச் சுற்றி பின் சுடுகாட்டில் நல்லடக்கம் செய்தோம்,” என்றார். மேலும் பேசிய அவர், கொரோனா காலத்தில் கூட தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகத்தின் சார்பில் பல உடல்களை அடக்கம் செய்து இருக்கின்றோம். ஆனால், உரிய முறையில் துணியைச் சுற்றியே அடக்கம் செய்து இருக்கின்றோம். இறந்தவர்கள் உடலை அடக்கம் செய்ய இயலாதவர்களுக்கு துணி, போர்வை வாங்கிக் கொடுத்து உடலை சுற்றிய பின்னரே அடக்கம் செய்வோம் என்றார். மருத்துவமனை பணியாளர் பணியிடை நீக்கம் இது தொடர்பாக கீழ்பாக்கம் மருத்துவமனை மருத்துவக் கல்லூரியின் டீன் முத்துச்செல்வம் பிபிசியிடம் பேசினார். “மருத்துவமனையில் இறந்தவர்களின் உடலை காடா துணி என்று சொல்லப்படும் துணியால் சுற்றி வழங்குவது தான் நடைமுறை இந்தக் குழந்தையை அட்டைப்பெட்டிக்குள் வைத்து வழங்கப்பட்ட சம்பவம் தொடர்பாக பிணவரை உதவியாளர் பன்னீர் செல்வம் பணியிட நீக்கம் செய்யப்பட்டு இருக்கிறார்,” என்றார். “மருத்துவமனையில் இறந்த குழந்தையின் உடலை துணியால் சுற்றி உறவினர்களிடம் வழங்க வேண்டும். குழந்தையின் உடலை எப்படி எடுத்துச் செல்வது என்பதனை உறவினர்களின் முடிவுக்கு விட்டுவிடுவோம்,” என்றார். குழந்தை அட்டைப்பெட்டிக்குள் துணி சுற்றப்படாமல் வைக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக 3 பேராசிரியர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டு உள்ளது அந்த குழுவினர் விசாரணையை துவங்கி நடத்தி வருகின்றனர். “இந்த விசாரணையின் அடிப்படையில் மேல் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் மருத்துவமனையில் கண்காணிப்பு பணிகளை அதிகரிக்க அனைத்து துறை தலைவர்களுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு உள்ளது என", கூறினார். தொடர்ந்து பேசிய அவர் " சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாத்திரை, மருந்து, மருத்துவ உபகரணங்கள் தேவைக்கு ஏற்ப கையிருப்பு உள்ளன பற்றாக்குறை இல்லை,” எனத் தெரிவித்தார். காவல் துறை சொன்னது என்ன? குழந்தை இறப்பில் பெற்றோருக்கு எந்தச் சந்தேகமும் இல்லாததால் வழக்குப் பதிவு செய்யப்படவில்லை என காவல் ஆய்வாளர் பிரவீன் குமார். https://www.bbc.com/tamil/articles/cw02y69rzp8o
  8. தமிழர்களை இலக்காகக் கொண்டு தகவல் திரட்டவில்லை - பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் Published By: VISHNU 11 DEC, 2023 | 01:48 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) தமிழர்களை மாத்திரம் இலக்காகக் கொண்டு தகவல் திரட்டவில்லை. கொழும்பு மாவட்டத்தில் வாழ்பவர்களிடமிருந்து தகவல் பெறும் நடவடிக்கை 90 சதவீதமளவில் நிறைவடைந்துள்ளது. இதில் ஒட்டுமொத்த மக்களும் உள்ளடங்குகிறார்கள். நாட்டில் யுத்தம் இல்லாவிட்டாலும் சமூக விரோத செயற்பாடுகள் தற்போது தீவிரமடைந்துள்ளன. தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக தகவல் தரவு கட்டமைப்பு பேணப்படும். ஆகவே தனிப்பட்ட தகவல் கோரலை நிறுத்த முடியாது என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் குறிப்பிட்டார். பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (11) இடம்பெற்ற அமர்வின் போது விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றிய ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் கொழும்பு மாவட்டத்தில் தமிழர் வாழும் பகுதிகளில் பொலிஸாரால் முன்னெடுக்கப்படும் தகவல் கோரல் தொடர்பில் முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் உரையாற்றுகையில், தமிழர்களை மாத்திரம் இலக்காக கொண்டு தகவல் திரட்டப்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் பொய்யுரைக்கிறார். கடந்த முறையும் இவர் இதே பிரச்சினையை முன்வைத்த போது நான் அவரை தனிப்பட்ட முறையில் சந்தித்து தரவுகளை காண்பித்தேன் பதிலளித்தேன். கொழும்பு மாவட்டத்தில் வாழ்பவர்களின் விபரங்கள் பதிவு செய்யும் நடவடிக்கை 90 சதவீதமளவில் நிறைவு பெற்றுள்ளன. சிங்களம்,தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகத்தினர் இந்த தகவல் பதிவுக்குள் உள்ளடங்குகிறார்கள்.இது தற்போது புதிதாக ஆரம்பிக்கப்படவில்லை.யுத்த காலத்தில் இருந்து இவ்வாறு பொதுமக்களின் தனிப்பட்ட தகவல்கள் கோரப்படுகின்றன.பொலிஸ் ஊடாக தகவல்கள் பெற்றுக்கொள்ளப்படுகின்றன. ஒரு தனிநபர் எங்கு தங்கியுள்ளார் என்பது தொடர்பான தகவல் தரப்படுத்தலை பேணுவதற்காகவே இவ்வாறு தகவல் கோரப்படுகிறது. இதில் தவறொன்றும் இல்லை. பெயர் உள்ளிட்ட தகவல் மாத்திரமே கோரப்படுகிறது. மதம் பற்றி கேட்கவில்லை.இனம் தொடர்பான விபரம் மாத்திரமே கேட்கப்படுகிறது. கடந்த முறையும் இவர் இவ்வாறு பொய்யுரைத்தார். நாட்டில் யுத்தம் இல்லாவிட்டாலும் சமூக விரோத செயற்பாடுகள் தற்போது அதிகரித்துள்ளன.தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும். ஆகவே தகவல் கோரலை எதற்காகவும் இடைநிறுத்த முடியாது. தகவல் கட்டமைப்பை பேண வேண்டும். சிங்கள மொழியில் மாத்திரம் விண்ணப்பம் விநியோகிக்கப்படுகிறது என்று குறிப்பிட்டார். அதை ஆராய்ந்து திருத்திக் கொள்கிறேன் என்றார். https://www.virakesari.lk/article/171455
  9. ஜம்மு காஷ்மீர்: 370-வது சட்டப் பிரிவு ரத்து செல்லுமா? உச்ச நீதிமன்ற தீர்ப்பு விவரம் பட மூலாதாரம்,SCREENGRAB/SUPREME COURT OF INDIA 11 டிசம்பர் 2023, 02:57 GMT புதுப்பிக்கப்பட்டது 8 மணி நேரங்களுக்கு முன்னர் ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது சட்டப்பிரிவை ரத்து செய்யும் குடியரசுத் தலைவரின் நடவடிக்கை செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. 370வது சட்டப்பிரிவு நீக்கப்பட்டு 4 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த தீர்ப்பை உச்சநீதிமன்றம் அளித்துள்ளது. இந்தியாவின் மற்ற மாநிலங்களைப் போலவே ஜம்மு காஷ்மீருக்கும் தனி இறையாண்மை கிடையாது என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் கூறியுள்ளார். 4 ஆண்டுகளுக்குப் பிறகு தீர்ப்பு சட்டப்பிரிவு 370ஐ நீக்கியதை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்கள் மீதான தீப்பை உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் உள்ளிட்ட ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு வழங்கியது. 'ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி. அரசியலமைப்பின் 1 மற்றும் 370 வது பிரிவுகளில் இருந்து இது தெளிவாகிறது' என்று தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் கூறினார். “சட்டப்பிரிவு 370 தற்காலிகமானது என்று நாங்கள் நம்புகிறோம். இது ஒரு இடைக்கால செயல்முறையை முடிக்க உருவாக்கப்பட்டது. மாநிலத்தில் நிலவும் போர் சூழல் காரணமாக இது ஒரு தற்காலிக ஏற்பாடாகும். இது ஒரு தற்காலிக ஏற்பாடு, எனவே இது அரசியலமைப்பின் 21 வது பகுதியில் வைக்கப்பட்டுள்ளது. இந்தியாவுடன் இணைவதில் கையெழுத்திட்ட பிறகு ஜம்மு-காஷ்மீருக்கு உள் இறையாண்மை இல்லை என்று நாங்கள் நம்புகிறோம்" என்றும் அவர் கூறினார். பட மூலாதாரம்,GETTY IMAGES "அரசியலமைப்பு பிரிவுக்கானது அல்ல" தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தனது தீர்ப்பில் முன்வைத்த விவரங்கள் பின்வருமாறு ஒருங்கிணைப்பிற்காகவே 370 (3) கொண்டு வரப்பட்டது. அரசியல் நிர்ணய சபை கலைக்கப்பட்ட பிறகு 370 (3) ஐப் பயன்படுத்த முடியாது என்ற இந்த வாதத்தை ஏற்றுக்கொள்ள முடியாது, ஏனெனில் இது அரசியலமைப்பு ஒருங்கிணைப்புக்கு தீங்கு விளைவிக்கும். குடியரசுத் தலைவர் முடிவுகளின் மீதான மேல்முறையீடுகளை நீதிமன்றம் கேட்க முடியாது. இருப்பினும், எந்த முடிவும் நீதித்துறை மறுஆய்வுக்கு அப்பாற்பட்டது அல்ல. ஆனால் 370(1)(d) இன் கீழ் எடுக்கப்பட்ட பல அரசியலமைப்பு உத்தரவுகள், மத்திய அரசும், மாநிலமும் இணைந்து செயல்படுவதைக் காட்டுகிறது. இந்த செயல்முறை மூலம் ஜம்மு காஷ்மீரில் இந்தியா செயல்படுத்தப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை ஒருங்கிணைக்கும் செயல்முறை கடந்த காலங்களில் நடந்து கொண்டிருந்ததை இது காட்டுகிறது, எனவே இந்த முடிவை குடியரசுத் தலைவரின் அதிகாரங்களை தவறாக பயன்படுத்துவதாக பார்க்க முடியாது. எனவே, குடியரசுத் தலைவரின் முடிவை நாங்கள் சட்டப்பூர்வமாக்குகிறோம். சட்டப்பிரிவு 370 என்றால் என்ன? இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 370வது சட்டப்பிரிவு ஜம்மு மற்றும் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குகிறது. இந்த சட்டப்பிரிவால் இந்திய அரசியலமைப்பு சட்டம் முழுமையாக ஜம்மு காஷ்மீருக்கு பொருந்தாது. இந்தியா மாநிலங்களின் ஒன்றியம் என்று கூறும் பிரிவு 1 தவிர, ஜம்மு காஷ்மீருக்கு வேறு எந்தச் சட்டமும் பொருந்தாது. ஜம்மு காஷ்மீருக்கு என தனி அரசியலமைப்பு உள்ளது. அரசியலமைப்பின் எந்தப் பகுதியையும் மாநிலத்திற்குப் பொருந்தக் கூடிய வகையில் மாற்றியமைக்கும் அதிகாரம் இந்தியக் குடியரசுத் தலைவருக்கு இருக்கிறது. ஆனால், இதற்கு மாநில அரசின் ஒப்புதல் கட்டாயம். வெளிவிவகாரங்கள், பாதுகாப்பு மற்றும் தகவல் தொடர்பு என மூன்று துறைகள் தொடர்பாக மட்டுமே இந்திய நாடாளுமன்றம் ஜம்மு காஷ்மீரின் சட்டங்களில் திருத்தம் செய்யலாம் என்றும் சட்டப்பிரிவு 370ல் கூறப்பட்டுள்ளது. மேலும், அந்த திருத்தங்களையும் எவ்வாறு செய்ய வேண்டும் என்பதற்கான வரம்புகளையும் சட்டப்பிரிவு 370 கொண்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் அரசியலமைப்பு சபையின் ஒப்புதலுடன் குடியரசுத் தலைவரால் மட்டுமே இந்த விதியை திருத்த முடியும் என்றும் சட்டப்பிரிவில் கூறப்பட்டுள்ளது. ஜம்மு மற்றும் காஷ்மீரின் அரசியலமைப்புச் சபை 1951-இல் உருவாக்கப்பட்ட 75 உறுப்பினர்களைக் கொண்ட அமைப்பாகும். இந்திய அரசியலமைப்புச் சபையால் எப்படி இந்திய அரசியலமைச் சட்டம் உருவாக்கப்பட்டதோ, அதேபோல ஜம்மு மற்றும் காஷ்மீருக்கான அரசியலமைப்பை ஜம்மு மற்றும் காஷ்மீரின் அரசியலமைப்புச் சபை உருவாக்கியது. 1956 நவம்பரில், மாநிலத்தின் அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்ட பிறகு, ஜம்மு காஷ்மீர் அரசியலமைப்புச் சபை நிறுத்தப்பட்டது. காஷ்மீர் குறித்த பாஜகவின் திட்டத்திற்கு நீண்ட காலமாகவே தடையாக இருந்தது சட்டப்பிரிவு 370தான். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் இருந்து 370 மற்றும் 35ஏ ஆகிய பிரிவுகளை நீக்குவோம் என்று பாஜக தனது தேர்தல் அறிக்கைகளில் தொடர்ச்சியாக கூறி வந்தது. சட்டப்பிரிவு 370 உடன் கூடுதலாக 1954 ஆம் ஆண்டு அரசியலமைப்பில் 35-A சட்டப்பிரிவு சேர்க்கப்பட்டது. ஜம்மு மற்றும் காஷ்மீரில் நிரந்தரமாக வசிப்பவர்களுக்கு அரசு வேலை, மாநிலத்தில் சொத்து வாங்குதல் மற்றும் மாநிலத்தில் வசித்தல் உள்ளிட்ட விவகாரங்களில் சிறப்பு உரிமைகளை இந்த சட்டப்பிரிவு வழங்கியது. பட மூலாதாரம்,GETTY IMAGES சட்டப்பிரிவு 370 எப்படி ரத்து செய்யப்பட்டது? இந்த சட்டப்பிரிவை ரத்து செய்வதற்காக மேற்கொள்ளப்பட்ட சட்ட செயல்முறை மிகவும் சிக்கலானதாக இருந்தது. 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் 5-ஆம் தேதி, குடியரசுத் தலைவர் அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்து ஒரு உத்தரவு பிறப்பித்தார். மாநிலத்தின் அரசியல் நிர்ணய சபை என்பது மாநிலத்தின் சட்டமன்றத்தைக் குறிக்கும் என்று அந்த திருத்தம் கூறியது. மேலும், மாநில அரசிற்கு இணையாக மாநில ஆளுநர் இருப்பார் என்றும் அந்த திருத்தம் கூறியது. இது முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் இந்த திருத்தம் நிறைவேற்றப்பட்டபோது, ஜம்மு காஷ்மீர் டிசம்பர் 2018 முதல் குடியரசுத் தலைவர் ஆட்சியின் கீழ் இருந்தது. ஜூன் 2018-இல், மக்கள் ஜனநாயகக் கட்சிக்கான ஆதரவை பாஜக திரும்பப் பெற்றது. இதையடுத்து 6 மாதங்கள் ஆளுநர் ஆட்சியிலும், பின்னர் குடியரசுத் தலைவர் ஆட்சியிலும் அம்மாநிலம் இருந்தது. சாதாரண சூழ்நிலையில், குடியரசுத் தலைவருக்கு இந்தத் திருத்தத்தைச் செய்ய மாநில சட்டமன்றத்தின் ஒப்புதல் தேவைப்படும் என்றாலும், குடியரசுத் தலைவர் ஆட்சி இருப்பதன் காரணமாக சட்டமன்றத்தின் ஒப்புதலை பெறுவது சாத்தியமில்லை என்ற சூழல் உருவானது. இந்த உத்தரவு குடியரசுத் தலைவருக்கும், மத்திய அரசுக்கும் 370வது பிரிவைத் தங்களுக்குத் தகுந்ததாகக் கருதும் விதத்தில் திருத்தும் அதிகாரத்தை வழங்கியது. அடுத்த நாளான டிசம்பர் 6-ஆம் தேதி, குடியரசுத்தலைவர் மற்றொரு உத்தரவைப் பிறப்பித்தார். அதில் இந்திய அரசியலமைப்பின் அனைத்து விதிகளும் மற்ற மாநிலங்களுக்கு பொருந்துவது போல ஜம்மு காஷ்மீருக்கும் பொருந்தும் என்று கூறினார். இதனால் ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது. பின்னர், ஆகஸ்ட் 9 அன்று, அம்மாநிலத்தை ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கும் சட்டத்தை நாடாளுமன்றம் நிறைவேற்றியது. ஜம்மு காஷ்மீரில் சட்டப் பேரவை இருக்கும் எனவும், லடாக்கில் இருக்காது எனவும் முடிவு செய்யப்பட்டது. பட மூலாதாரம்,GETTY IMAGES சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதன் பின்விளைவு என்ன? 2019-ம் ஆண்டு ஜம்மு-காஷ்மீரில் ஆகஸ்ட் 5 முதல் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. தொலைபேசி தொடர்புகள் மற்றும் இணைய சேவை முடக்கப்பட்டன. அரசியல் தலைவர்கள் உட்பட ஆயிரக்கணக்கான மக்கள் தடுத்து வைக்கப்பட்டனர். சிலர் கைது செய்யப்பட்டனர் அல்லது வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர். ஆயிரக்கணக்கான பாதுகாப்புப் படையினர் ஜம்மு காஷ்மீரில் குவிக்கப்பட்டனர். சில மாதங்களுக்குப் பிறகு ஜனவரி 2020 இல் 2G இணைய சேவை மீண்டும் வழங்கப்பட்டாலும், 4G இணைய சேவை பிப்ரவரி 2021-இல் மட்டுமே மீண்டும் வழங்கப்பட்டது. ரத்து செய்யப்பட்ட உடனேயே, இந்த நடவடிக்கையை எதிர்த்து பல மனுக்கள் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டன. ஆகஸ்ட் 2019-இல், உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை 5 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு இந்த வழக்கை மாற்றியது. இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், இந்த வழக்கின் இறுதி வாதங்களை உச்சநீதிமன்றம் விசாரிக்கத் தொடங்கியது. பட மூலாதாரம்,GETTY IMAGES இந்த வழக்கில் மனுதாரர்கள் யார்? அவர்கள் தரப்பு வாதம் என்ன? இந்த வழக்கில் 23 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. மனுதாரர்களில் சிவில் சமூக அமைப்புகள், வழக்கறிஞர்கள், அரசியல்வாதிகள், ஊடகவியலாளர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்களும் அடங்குவர். மனுதாரர்களில் சிலர் ஜம்மு காஷ்மீர் மக்கள் மாநாடு, சிவில் உரிமைகளுக்கான மக்கள் சங்கம், தேசிய மாநாட்டுத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான முகமது அக்பர் லோன் மற்றும் ஜம்மு-காஷ்மீர் முன்னாள் உரையாசிரியர் ராதா குமார் உள்ளிட்டோர் ஆவர். சட்டப்பிரிவு 370ஐ ரத்து செய்து, மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்ததை ரத்து செய்ய வேண்டும் என்று மனுதாரர்கள் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தனர். மனுதாரர்களின் கூற்றுப்படி, பிரிவு 370 ஒரு நிரந்தர ஏற்பாடு. அதில் எந்த மாற்றமும் செய்வதற்கு 1956-இல் கலைக்கப்பட்ட ஜம்மு காஷ்மீரின் அரசியல் நிர்ணய சபையின் ஒப்புதல் தேவை. இந்த பிரிவை ரத்து செய்தது சுதந்திரத்தின் போது ஜம்மு காஷ்மீருக்கும் இந்தியாவிற்கும் இடையே போடப்பட்ட இணைப்பு ஒப்பந்தத்திற்கு (Instrument of Accession) எதிரானது என வாதத்தில் கூறப்பட்டது. அந்த ஒப்பந்தத்தின் மூலம்தான் ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியாக மாறியது. அதேசமயம் ஜம்மு காஷ்மீருக்கு என தனி இறையாண்மை மற்றும் தன்னாட்சி இருக்கும் என அந்த ஒப்பந்தத்தில் கூறப்பட்டிருந்தது. இது மக்களின் விருப்பத்திற்கு மாறாக செய்யப்படும் அரசியல் செயல் என்று மனுதாரர்கள் வாதிட்டனர். அரசியல் நிர்ணய சபையை சட்டப் பேரவையாக மாற்ற முடியாது ஏனென்றால் நிர்ணய சபைக்கும் சட்டப்பேரவைக்கும் அவை செய்யக்கூடிய பணிகளில் வேறுபாடு உள்ளது என அவர்கள் கூறினர். குடியரசுத் தலைவர் ஆட்சியில் மாநிலம் இருந்தபோது இந்தத் திருத்தத்தை செய்திருக்க முடியாது என்று மனுதாரர்கள் வாதிட்டனர். ஏனென்றால், சட்டத்திருத்தத்தை நிறைவேற்றி, சட்டப் பேரவையை மாற்றியமைத்து, சட்டப்பிரிவு 370ஐ நீக்கிய ஆளுநர் மத்திய அரசால் நியமிக்கப்பட்ட ஒருவர் என மனுதாரர்கள் வாதிட்டனர். மேலும், ஒரு மாநிலம் யூனியன் பிரதேசமாக மாறும்போது அது மத்திய அரசின் கட்டுப்பாட்டிற்கு சென்றுவிடுகிறது. எனவே, ஒரு மாநிலத்தின் சுயாட்சியைக் குறைத்து, கூட்டாட்சித் தன்மையை பாதிக்கும் என்பதால், ஒரு மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு இல்லை என்றும் அவர்கள் வாதிட்டனர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மனுதாரர்களில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மூத்த தலைவர் கபில் சிபலும் ஒருவராவார். தனது முடிவை மத்திய அரசு எவ்வாறு நியாயப்படுத்தியது? 370வது சட்டப்பிரிவு ஒரு தற்காலிக ஏற்பாடு என்று மத்திய அரசு வாதிட்டது. அரசியல் நிர்ணய சபை கலைக்கப்பட்டதால், சட்டமன்றம் அந்த பொறுப்பை ஏற்க வேண்டும். இல்லையெனில் சட்டப்பிரிவை ஒருபோதும் திருத்த முடியாது என மத்திய அரசு கூறியது. சட்டப்பிரிவு 370 ரத்து நடவடிக்கை ஜம்மு காஷ்மீரை முழுமையாக இந்தியாவுடன் ஒருங்கிணைத்தது என்று மத்திய அரசு கூறியது. இந்த சட்டப்பிரிவால் இந்திய அரசியலமைப்புச் சட்டம் முழுமையாகப் ஜம்மு காஷ்மீருக்கு பொருந்துவதில்லை. இதனால் மாநிலத்தில் வசிப்பவர்களுக்கு எதிராக பாகுபாடு காட்டப்படுவதாக அரசு வாதிட்டது. மேலும், குடியரசுத் தலைவர் ஆட்சியின் போது, மத்திய அரசோ அல்லது ஆளுநரோ பிறப்பிக்கும் உத்தரவுகள், மாநில சட்டமன்றம் இயற்றும் உத்தரவுகளுக்குச் சமம் என்று அரசு கூறியது. எனவே, குடியரசுத் தலைவர் ஆட்சியின் போது சிறப்பு அந்தஸ்தை மாற்றியது சட்டத்துக்குப் புறம்பானது அல்ல என அரசு தெரிவித்தது. மத்திய அரசிற்கு மாநிலங்களை மறுசீரமைக்க பரந்துபட்ட அதிகாரம் உள்ளது என்றும், மத்திய அரசு ஒரு மாநிலத்தின் பெயர், பகுதி, எல்லைகளை மாற்றியமைக்கலாம் மற்றும் ஒரு மாநிலத்தை யூனியன் பிரதேசங்களாக பிரிக்கலாம் என்றும் மத்திய அரசு வாதிட்டது. சட்டம்-ஒழுங்கு இயல்பு நிலைக்கு திரும்பியவுடன் ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து திரும்ப வழங்கப்படும் என்றும் மத்திய அரசு கூறியது. சிறப்பு அந்தஸ்தை நீக்கியதன் மூலம் மாநிலத்தின் வளர்ச்சி, சுற்றுலா மற்றும் சட்டம்-ஒழுங்கு மேம்படுத்தப்பட்டது என்றும் எனவே, இது ஒரு நன்மை பயக்கும் நடவடிக்கை என்றும் மத்திய அரசு தனது வாதத்தில் குறிப்பிட்டது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மனோஜ் சின்ஹா, ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர் அரசியல் தலைவர்கள் வீட்டுக் காவலில் வைப்பா? உச்சநீதிமன்ற தீர்ப்பை முன்னிட்டு, ஜம்மு-காஷ்மீரில் அரசியல் தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாயின. ஆனால், அதனை மறுத்துள்ள ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா, "அது முற்றிலும் அடிப்படையற்றது. வீட்டுக்காவலில் யாரும் வைக்கப்படவில்லை. அரசியல் காரணங்களுக்காக யாரும் கைது செய்யப்படவில்லை. இது வதந்தியை பரப்பும் முயற்சி" என்று கூறியுள்ளார். https://www.bbc.com/tamil/articles/c0x2x2jwgpdo
  10. 'காஸாவின் கடும் குளிரில் அரைநிர்வாணமாக்கி சித்ரவதை செய்தனர்' - ஒரு பாலத்தீன குடிமகனின் வாக்குமூலம் படக்குறிப்பு, இந்த சம்பவம் தொடர்பான புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன கட்டுரை தகவல் எழுதியவர், ஈதர் ஷைல்பி, ஷிரீன் யூசுப் பதவி, பிபிசி நிருபர், அரபு சேவை 3 மணி நேரங்களுக்கு முன்னர் 22 வயதான பாலத்தீனர் ஒருவர் கடந்த வியாழனன்று பிபிசியிடம், இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினரால் (IDF) வடக்கு காஸாவில் தான் சிறைப்பிடிக்கப்பட்டதையும், அதன் பிறகு அவருக்கு என்ன நடந்தது என்பதைப் பற்றியும் நம்மிடம் பகிர்ந்து கொண்டார். அவருடன் சேர்த்து காஸா பகுதியைச் சேர்ந்த பலரை இஸ்ரேலிய இராணுவம் கைது செய்தது. இந்த சம்பவம் தொடர்பான புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன. அந்த வீடியோவின் உண்மைத்தன்மையை பிபிசி உறுதி செய்தது. அதில் உள்ளாடை மட்டுமே அணிந்த பல ஆண்கள் தரையில் முட்டிபோட்டவாறு இருப்பதைக் காண முடிகிறது. அருகே நிற்கும் இஸ்ரேலிய இராணுவ வீரர்கள் அவர்களது துணிகளை அப்புறப்படுத்துவதைக் காண முடிகிறது. காஸா பகுதிக்கு வடக்கே உள்ள பெய்ட் லஹியாவில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக நம்பப்படுகிறது. "அவர்கள் எங்களை சாலையில் அமர வைத்தனர்," என்று ஒரு இளைஞர் தொலைபேசியில் பிபிசியிடம் கூறினார். பாதுகாப்பு காரணங்களுக்காக பெயர் மற்றும் அடையாளத்தை வெளியிட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். தொடர்ந்து அவர், "சுமார் மூன்று மணி நேரம் அங்கேயே அமர்ந்திருந்தோம். லாரிகள் வந்த பின்னர் எங்கள் கைகளையும் கண்களையும் கட்டினர். பின்னர் வேறொரு இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டோம்," என்று விவரித்தார். அந்த வீடியோவில், ஏராளமான ஆண்கள் சாலையோரம் வரிசையாக அமர்ந்திருப்பதைக் காணலாம். காலணிகளைக் கழற்றச் சொன்னதாகத் தெரிகிறது. அவர்களது காலணிகள் எங்கும் சிதறிக் கிடக்கின்றன. அந்த வீடியோவில் இஸ்ரேலிய வீரர்கள் மற்றும் கவச வாகனங்கள் அவர்களைச் சுற்றி இருப்பதையும், இராணுவ வீரர்கள் அந்த ஆண்களைக் கண்காணித்துக் கொண்டிருப்பதையும் காண முடிகிறது. இஸ்ரேலிய இராணுவத்தால் கேட்கப்பட்ட கேள்விகள் இச்சம்பவம் தொடர்பான மற்றுமொரு வீடியோவில் இவர்கள் இராணுவ ட்ரக் வண்டிகளில் எங்கோ அழைத்துச் செல்லப்படுவதைக் காணமுடிகிறது. இவர்களை இஸ்ரேல் ராணுவத்திடம் சரணடைந்த ஹமாஸ் தீவிரவாதிகளாக இஸ்ரேல் ஊடகங்கள் சித்தரித்து வருகின்றன. ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட பின்னர், தான் மிகவும் மோசமான முறையில் விசாரிக்கப்பட்டதாக அந்த இளைஞர் கூறினார். பாலத்தீன கிளர்ச்சிக் குழுவான ஹமாஸ் உடனான அவரது தொடர்பு குறித்து கேட்கப்பட்டது. மற்றொரு புகைப்படம் (பிபிசி அதை இன்னும் உறுதிப்படுத்தவில்லை) அவர்கள் கண்கள் கட்டப்பட்ட நிலையில் மண்டியிட்டு இருப்பதைக் காட்டுகிறது. இவர்கள் ஒரு மணல்மேடு அருகே அமர்ந்திருப்பதாகத் தெரிகிறது. ‘வெறும் காலில் உடைந்த கண்ணாடிமேல் நடக்க வைத்தனர்’ பட மூலாதாரம்,MOHAMMED LUBBAD இந்த 22 வயது இளைஞரின் புகைப்படமே போதுமான ஆதாரமாக இருக்கிறது. சம்பவம் நடந்த இடம் குறித்து பிபிசியிடம் அவர் கூறியதும் சரியாக ஒத்துப் போகிறது. தானும், தன் தந்தையும், ஐந்து உறவினர்களும் அழைத்துச் செல்லப்பட்ட இடம் மணல் மேடுகளால் நிறைந்திருந்தது என்று அவர் கூறியிருந்தார். தான் அங்கு கிட்டத்தட்ட முழு நிர்வாணமாக விடப்பட்டதாகவும், இருப்பினும் இரவில் போர்த்துவதற்கு ஒரு போர்வை வழங்கப்பட்டது எனவும் அவர் கூறுகிறார். கேள்விகளுக்கு பதில் அளித்த பின் ஒரு புதிய இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், பின்னர் அங்கிருந்து விடுவிக்கப்பட்டு வீட்டிற்கு செல்ல அனுமதிக்கப்பட்டதாகவும் கூறுகிறார். அவர் கூறுகையில், “எனது தந்தை மற்றும் எனது உறவினர் தவிர அனைவரும் விடுவிக்கப்பட்டோம். எனது தந்தை ஐக்கிய நாடுகளின் நிவாரண நிறுவனமான UNRWA உடன் பணிபுரிகிறார். எதற்காக அவரை அழைத்துச் சென்றார்கள் என்று எனக்கு புரியவில்லை," என்றார். அவர் தொடர்ந்து, "கற்கள் மற்றும் உடைந்த கண்ணாடிகள் சிதறிக் கிடந்த இருள் நிறைந்த சாலையில் வெறுங்காலுடன் நடந்தோம்," என்கிறார். சிறைபிடிக்கப்பட்ட 400 பேர் பட மூலாதாரம்,GETTY IMAGES பாலத்தீன குடிமகனான முகமது லுபாத் பெல்ஜியத்தில் வசித்து வருகிறார். அவர், 10 குடும்ப உறுப்பினர்களுடன் கைது செய்யப்பட்ட தனது சகோதரர் இப்ராஹிமைப் பற்றி சமூக ஊடக தளமான இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். ஒரு புகைப்படத்தில், கைது செய்யப்பட்டவர்கள் மத்தியில் அமர்ந்திருந்த அண்ணன் இப்ராஹிமின் முகத்தை வட்டமிட்டு, 'இவர் என் சகோதரர்' என்று எழுதியுள்ளார். அந்த படத்தில், அவரது சகோதரர் தனது பெயர் பொறிக்கப்பட்ட ஆடையை அணிந்துள்ளார். பின்னர் இது குறித்து பிபிசியிடம் பேச முகமது ஒப்புக்கொண்டார். "என் அண்ணன் இப்ராஹிமை கைது செய்து அழைத்துச் செல்வதற்கு முன், வாட்ஸ்அப் வீடியோ அழைப்பில் இரண்டு மணி நேரம் பேசினேன். என் சகோதரர் ஒரு கணினிப் பொறியாளர்," என்று அவர் கூறினார். இப்ராஹிமுக்கு இரண்டு மகள்கள் இருப்பதாக அவர் பிபிசியிடம் கூறினார். தங்கள் வீடு மற்றும் பெய்ட் லஹியா கிராமம் முழுவதும் இஸ்ரேலிய இராணுவத்தால் சுற்றி வளைக்கப்பட்டுள்ளதாக சகோதரர் தன்னிடம் கூறியதை முகமது நினைவு கூறுகிறார். அவர் தொடர்ந்து கூறியது "இரண்டு மணிநேரத்திற்குப் பிறகு நான் சமூக ஊடகங்களில் ஒரு வீடியோவைப் பார்த்தேன். அதில் என் சகோதரனை உடனடியாக அடையாளம் கண்டுகொண்டேன், மேலும் சில அண்டை வீட்டுக்கார்களையும் அந்த வீடியோவில் பார்த்தேன்." இரண்டு உறவினர்களைத் தவிர அவரது மற்ற உறவினர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். அவர்களில் ஒருவர் 35 வயதான அஹ்மத் லுபாத், ஆசிரியர் வேலை பார்க்கும் அவர் நான்கு பிள்ளைகளின் தந்தையும் ஆவார். மனித உரிமை ஆர்வலரும் மூன்று பிள்ளைகளின் தந்தையுமான அய்மன் லுபாத் என்ற உறவினரும் இதில் உள்ளார். தனது குடும்பம் மிகவும் சாதாரணமானது என்றும் இராணுவத்துடன் தங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை என்றும் கூறுகிறார் முகமது. கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரின் உறவினர் பிபிசியிடம் கூறுகையில், இஸ்ரேல் மொத்தம் 400 பேரை சிறை பிடித்தது, அதில் 250 பேர் மட்டுமே விடுவிக்கப்பட்டனர். இஸ்ரேல் ராணுவத்தின் பதில் என்ன? பட மூலாதாரம்,அல்-அரேபி அல்-ஜதீத் படக்குறிப்பு, பாலத்தீன பத்திரிகையாளர் தியா அல்-கஹ்லூத் வீடியோவைப் பற்றி கேட்டபோது, இஸ்ரேலிய அரசாங்க செய்தித் தொடர்பாளர் பிபிசியிடம், பிடித்து வைக்கப்பட்ட அனைவரும் இராணுவத்தில் சேரும் வயதுடையவர்கள் என்றும், மக்கள் அனைவரும் வெளியேற்றப்பட்ட பகுதிகளில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டவர்கள் இவர்கள் என்றும் கூறினார். வடக்கு காஸாவில் தரைவழித் தாக்குதல்களை நடத்துவதற்கு முன், காஸாவின் சமவெளியில் இருந்து தெற்கே செல்லுமாறு இங்குள்ள மக்களை இஸ்ரேல் கேட்டுக் கொண்டது. இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினர் புகைப்படம் மற்றும் வீடியோ பற்றி நேரடியாகக் கருத்து தெரிவிக்காமல், "இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகளின் வீரர்கள் மற்றும் ஷின் பெட் அதிகாரிகள் சந்தேகத்திற்குரிய பயங்கரவாதிகளை பிடித்து வைத்து விசாரித்தனர்," என வியாழனன்று கூறினார் இராணுவ செய்தித் தொடர்பாளர் டேனியல் ஹகாரி. அவர் தொடர்ந்து கூறியது, "இவர்களில் பலர் 24 மணித்தியாலங்களுக்குள் எமது படைகளிடம் சரணடைந்துள்ளனர். விசாரணைக்கு பின்னர் அவர்களிடம் இருந்து பெறப்படும் புலனாய்வுத் தகவல்கள் யுத்தத்தைத் தொடரப் பயன்படுத்தப்படும்." இஸ்ரேலிய அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர் எலோன் லெவி வெள்ளிக்கிழமை பிபிசியிடம், வடக்கு காசாவில் உள்ள ஜபாலியா மற்றும் ஷெஜாயாவில் மக்கள் சிறை பிடிக்கப்பட்டதாகக் கூறினார். இந்த இரண்டு இடங்களும் "ஹமாஸின் கோட்டைகளாகவும் அவர்களின் முக்கிய சந்திப்பு பகுதிகளாகவும் கருதப்படுகின்றன," என்றார். இவர்களில் யார் ஹமாஸ் பயங்கரவாதிகள், யார் பொது மக்கள் என்பதைத் தெரிந்துகொள்ள இவர்களிடம் விசாரணை நடத்தப்படும் என்றார். 'இஸ்ரேலிய இராணுவத்தின் அட்டூழியத்திற்கு இந்த படங்களே சாட்சி" இங்கிலாந்திற்கான பாலத்தீன தூதர் தனது சமூக ஊடகப் பதிவில், "ஐ.நா. முகாம்களில் இருந்து அழைத்துச் செல்லப்பட்ட சாதாரண குடிமக்களை இஸ்ரேலிய இராணுவம் நிர்வாணப்படுத்தி கொடுமைப்படுத்தியதை அறிவிக்கும் படங்கள் இவை," என்று கூறினார். "இந்த படங்கள் மனிதகுல வரலாற்றில் மிக மோசமான நினைவுகளுக்கு சாட்சியாக இருக்கும்," என்று தூதர் ஹுஸாம் ஸோம்லாட் கூறினார். கைது செய்யப்பட்டவர்களில் பாலத்தீன ஊடகவியலாளரான தியா அல் கஹ்லூத்தும் அடங்குவார். அவர் அல்-அரபி அல்-ஜாதித் என்ற அரபு செய்தித்தாளின் காஸா பணியகத் தலைவர் ஆவார். இதை அந்த செய்தித்தாள் வியாழக்கிழமை அன்று உறுதிப்படுத்தியது. தியா அல் கஹ்லூத்தின் உறவினர், முகமது அல்-கஹ்லூத், காஸாவில் பிபிசியில் ஃப்ரீலான்ஸ் பத்திரிகையாளராகப் பணிபுரிகிறார். அவரது குடும்பத்தைச் சேர்ந்த 24 பேர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்றார். "அவர்களில் 12 பேரை நான் வைரலான வீடியோக்கள் மற்றும் படங்களிலிருந்து அடையாளம் கண்டுக் கொண்டேன்," என்கிறார் 27 வயதான முகமது. அதில் ஏழு நபர்கள் மட்டுமே வெள்ளிக்கிழமை அன்று விடுதலை செய்யப்பட்டதாக அவர் கூறுகிறார். "விடுதலை செய்யப்பட்டவர்கள் காஸாவிற்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான எல்லைக்கு அருகில் விடுவிக்கப்பட்டனர். எனக்குத் தெரிந்தவரை, ஜிகிம் அருகே உள்ள எல்லையில் இஸ்ரேலிய இராணுவத்தால் விடுவிக்கப்பட்டனர்," என்கிறார் முகமது. அவரது உறவினர்கள் வீட்டிற்கு செல்ல ஆறு கிலோமீட்டர்கள் நடக்க வேண்டியிருந்தது என முகமது கூறுகிறார். ஒரு அரபு மொழி செய்தி இணையதளம் (நியூ அரப் என்ற ஆங்கில மொழி இணையதளம் அதற்கு உள்ளது) அல்-கஹ்லூத்தின் கைது மிகவும் அவமானகரமானது என்று கடுமையாக விமர்சித்துள்ளது. "பாலத்தீன பிராந்தியத்தில் நடக்கும் பத்திரிகையாளர்கள் மீதான இஸ்ரேலின் தாக்குதல்களை சர்வதேச சமூகம், ஊடகவியலாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் மனித உரிமைகளுக்காகப் பணியாற்றும் கண்காணிப்புக் குழுக்கள் மற்றும் ஏஜென்சிகள் கண்டிக்க வேண்டுமென நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்," என்று அந்த செய்தித்தாள் வேண்டுகோள் விடுத்துள்ளது. தியா அல்-கஹ்லூத்தை கைது செய்ததாக கூறப்படும் ஐடிஎஃப்-யிடம் இது குறித்து பிபிசி கேள்வி எழுப்பியுள்ளது. https://www.bbc.com/tamil/articles/cjkp31447vlo
  11. 11 DEC, 2023 | 05:06 PM யாழ்ப்பாணம் நகர் பகுதியை அண்டிய பகுதிகளில் இரவு வேளைகளில் வழிப்பறிக் கொள்ளை சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. யாழ்.நகர் பகுதியை அண்டிய முட்டாஸ்கடை சந்தி பகுதிகளில் இரவு வேளைகளில், வீதியில் பயணிப்போரை வழிமறித்து வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர். காங்கேசன்துறை வீதி - ஸ்ரான்லி வீதி ஆகிய இரு பிரதான வீதிகளும் சந்திக்கும் சந்தி பகுதியான குறித்த சந்தியில் மின் விளக்குகள் பொருத்தப்படாமையால், இருளில் மறைந்து இருக்கும் கொள்ளையர்கள், வீதியில் தனியாக மோட்டார் சைக்கிளில் பயணிக்கும் நபர்களை இலக்கு வைத்து வழிப்பறியில் ஈடுபட்டு வருகின்றனர். பேர்ஸில் இருக்கும் சிறு தொகை பணத்தினை மட்டுமே கொள்ளையடித்து வருவதனால், பாதிக்கப்பட்டவர்கள் பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு செய்ய பின்னடிக்கின்றனர். இதனால் போதை ஆசாமிகளின் வழிப்பறிக் கொள்ளை நாளுக்கு நாள் அதிகரித்து செல்கின்றது. அதனால் சந்தி பகுதியில் மின் விளக்குகளை பொருத்துவதற்கு யாழ்.மாநகர சபையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், யாழ்ப்பாண பொலிஸார் கொள்ளை சம்பவங்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் கோரியுள்ளனர். https://www.virakesari.lk/article/171476
  12. சீனாவில் மிரர் என்ற பெண்ணின் கண்களில் இருந்து சுமார் 60 உயிருள்ள புழுக்களை அறுவை சிகிச்சையின் மூலம் அகற்றி மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். ஆனால், இது வினோதமான அறுவை சிகிச்சை என்றும் அவர்கள் தெரிவித்தனர். சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு கண்களில் அடிக்கடி அரிப்பு ஏற்பட்டுள்ளது. பிறகு, கூச்ச உணர்வைப் போக்க அவர் கண்களைத் தேய்த்தபோது கண்ணில் இருந்து ஒரு ஒட்டுண்ணிப் புழு வெளியே வந்து விழுந்துள்ளது. இதைக் கண்டு அதிர்ச்சிடையந்த அந்த பெண் பயந்துபோய் உடனடியாக சீனாவின் குன்மிங்கில் உள்ள மருத்துவமனையை அணுகியுள்ளார். ஆனால், அந்த பெண்ணை சோதனை செய்த மருத்துவருக்கும் அதிர்ச்சி காத்திருந்தது. பெண்ணின் கண்களை சோதனை செய்தபோது, இரு கண்களிலும் கருவிழியில் உயிருள்ள புழுக்கள் இருப்பது தெரிய வந்துள்ளது. இதில், அவரது வலது கண்ணில் இருந்து 40க்கும் மேற்பட்ட புழுக்களையும் இடது கண்ணில் இருந்து 10க்கும் மேற்பட்ட புழுக்களையும் அறுவை சிகிச்சையின் மூலம் அகற்றினர். மொத்தத்தில், மருத்துவர்கள் அந்த பெண்ணின் கண்களில் இருந்து 60க்கும் மேற்பட்ட ஒட்டுண்ணிகளை அகற்றியதாக பெண் தெரிவித்துள்ளார். பொதுவாக ஈ கடித்தால் பரவும் ஃபிலாரியோடியா வகையைச் சேர்ந்த வட்டப்புழுக்களால் அந்தப் பெண் பாதிக்கப்பட்டிருப்பதாக மருத்துவர்கள் நம்புகிறார்கள். இருப்பினும், நாய்கள் மற்றும் பூனைகளிடமிருந்து புழுக்களை தொற்றியிருக்க வாய்ப்புள்ளதாக அந்த பெண் கருதுகிறார். அவற்றின் உடலில் தொற்று லார்வாக்கள் இருக்க வாய்ப்புள்ளது. விலங்குகளைத் தொடுவதும், கண்களைத் தேய்ப்பதும் தொற்றுக்கு வழிவகுத்திருக்கலாம் என மிரர் கூறினார். எஞ்சியிருக்கும் லார்வாக்களின் சாத்தியக்கூறுகளை கண்காணிக்க அடிக்கடி பரிசோதனைக்கு உட்படுத்தும்படி மருத்துவர்கள் அந்தப் பெண்ணை வலியுறுத்தியுள்ளனர். https://thinakkural.lk/article/284407
  13. கட்டுரை தகவல் எழுதியவர், ச.பிரசாந்த் பதவி, பிபிசி தமிழுக்காக 28 நவம்பர் 2023 புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் கோவை ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் விஜய் என்ற நபரை இரு வாரங்களுக்கு பின்னர் தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் இருந்து 400 கிராம் தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளன. ஏற்கனவே நவம்பர் 30 ம் தேதி, விஜயின் மனைவி நர்மதாவை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 3.2 கிலோ தங்க நகைகளை பறிமுதல் செய்தனர். இதனைத் தொடர்ந்து தனிப்படை போலீசார் தர்மபுரி மாவட்டம் தும்பலஹள்ளியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் இருந்த விஜயின் மாமியார் யோகராணியை கைது செய்தனர். அவரிடம் இருந்து 1.35 கிலோ தங்க நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். நகைகளை குப்பைத் தொட்டியிலும், சாலை ஓரத்திலும் புதைத்து வைத்திருந்த நிலையில் அவற்றை மீட்டனர். கோவை நகைக்கடை கொள்ளையன் கைது செய்யப்பட்டது எப்படி? கடந்த 5 ம் தேதி தர்மபுரி மாவட்டம் தேவரெட்டியூரில் உள்ள தனது இல்லத்திற்கு வந்த விஜய் வீட்டில் 38 கிராம் நகையை வைத்துவிட்டு சென்றதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து காவல்துறையினர் விஜயின் தந்தை முனிரத்தினத்திடம் விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் ஆறாம் தேதி இரவு விஜயின் தந்தை முனிரத்தினம் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். கொள்ளையடிக்கப்பட்ட நகைகளில் பெரும்பாலானவை மீட்கப்பட்ட நிலையில் விஜய் தொடர்ச்சியாக தலைமுறைவாக இருந்து வந்தார். ஐந்து தனிப்படை போலீசாரும் தொடர்ச்சியாக பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். இந்நிலையில் ஆந்திர மாநிலம் காளகஸ்தி பகுதியில், ஐயப்பன் கோவிலுக்கு மாலை அணிந்த வேடத்தில் விஜய் சுற்றி திரிவதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து போலீசார் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தி இருந்த நிலையில், காளகஸ்தியில் இருந்து சென்னை வரும் வழியில் விஜயை தனிப்படை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட விஜய் தற்பொழுது தனிப்படை போலீசாரால் கோவை அழைத்து வரப்படுகிறார். விஜயிடம் இருந்து 400 கிராம் தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளன. இந்த கொள்ளை சம்பவம் நடைபெற்று 12 நாட்களுக்குப் பிறகு கொள்ளையன் விஜய் கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த கொள்ளை சம்பவத்தில் முக்கிய நபரான விஜய் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், நகைக்கடையில் இருக்கும் குறுகிய இடைவெளி குறித்து அவருக்கு தகவல் சொன்ன நபர் யார் ? இதன் பின்னணியில் உள்ள நபர்கள் யார்? என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு விடை காணும் பணியில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். ‘லாவகமான திருடன்’ பல நகைக் கடை திருட்டுகள் நடந்திருந்தாலும் இந்த திருட்டு சற்று சவாலானது போலீஸார் கருதுகின்றனர். ஏனென்றால் திருடிய நபர் மிக லாவகமாக யாரும் எதிர்பார்க்காத படி ஏசி வெண்டிலேட்டர் குழாய் வழியாக வந்து சென்றுள்ளார். சம்பவ இடத்துக்கு வந்து அவர் எவ்வாறு வந்திருப்பார் என செய்து பார்க்க முயன்ற போலீஸாருக்கு காயங்கள் ஏற்பட்டதே மிச்சம். சிசிடிவி காட்சிகளில் முதல் முறை ஒரு ஆடையும் அடுத்தடுத்த பதிவுகளில் வேறு ஆடைகளிலும் இருந்துள்ளார். கடையினுள் நுழைந்த 24 வயது திருடர், நகைகளை அப்படியே அள்ளி போடாமல், விரைவாக வேண்டிய இடத்துக்கு சென்று சில நகைகளை எடுக்கிறார் என்பதை போலீஸார் சிசிடிவி காட்சிகளில் கவனித்துள்ளனர். எனவே அவருக்கு கடையைப் பற்றிய விவரங்கள் ஏற்கெனவே தெரிந்திருக்கலாம் என கருதப்படுகிறது. பஸ் டிக்கெட் கொடுத்த துப்பு பிபிசி தமிழிடம் பேசிய தனிப்படை போலீஸார், ‘‘நகைக்கடையில் திருடிவிட்டு குற்றவாளி தனது சட்டையை விட்டுச்சென்றார். அதில் இருந்த பஸ் டிக்கெட் கொண்டு பொள்ளாச்சியில் இருந்து காந்திபுரம் வந்தது கண்டறியப்பட்டது,” என்றனர். மேலும், "திருடும் முன் சிசிடிவி கேமராவை மாற்றியமைக்க முயன்ற போது பதிவான அவரது கைரேகைகளை எடுத்த போலீஸார், பழைய திருட்டு வழக்கு குற்றவாளிகளின் கைரேகைகளுடன் ஒப்பிட்டு பார்த்தனர். ஏற்கனவே விஜய் தருமபுரி பகுதியில் திருட்டு வழக்கில் சிக்கியபோது எடுக்கப்பட்ட கைரேகையும், ஜோஸ் ஆலுக்காஸ் கைரேகையும் ஒத்துப்போனது. ஜோஸ் ஆலுக்காஸில் திருடிவிட்டு நகைகளை சிறிய பையில் வைத்து, ஆட்டோவில் சென்று, அதன்பின் பஸ் மூலம் அவர் வீடு சென்றுள்ளார். இவை அனைத்தும் கண்காணிப்பு கேமரா காட்சிகளில் பதிவாகியுள்ளன. இதை வைத்து அவர் ஆனைமலையில் இருப்பதை கண்டறிந்தோம்," என்றனர். மேலும் தொடர்ந்த போலீஸார், "விஜயை கைது செய்ய ஆனைமலை சென்று வீட்டின் கதவை தட்டினோம், அப்போது அவரது மனைவி ஆடை மாற்றுவதாகக்கூறி உள்ளிருந்து சப்தமிட்டு கதவை அடைத்துக்கொண்டார். நாங்கள் கதவை உடைக்க முயன்றபோது அவரே கதவை மீண்டும் திறந்தார், உள்ளே சென்று பார்த்தபோது தான் 18 அடி உயரமுள்ள வீட்டின் மேற்கூரையை பிரித்து மீதமுள்ள 1.6 கிலோ தங்கத்துடன் விஜய் தப்பிச்சென்றது தெரியவந்தது. விரைவில் அவரையும் கைது செய்து மீதமுள்ள நகைகள் மீட்கப்படும்," என்கிறார்கள் அவர்கள். படக்குறிப்பு, நர்மதா கைதான நபர் யார்? இப்படியான நிலையில் குற்றவாளி தருபுரி அரூரை சேர்ந்த விஜய் என்பதையும் அவர் கோவை மாவட்டம் ஆனைமலை பகுதியில் தங்கியிருப்பதையும் கண்டறிந்தனர். நவம்பர் 30-ஆம் தேதி விஜய் தங்கியிருந்த வீட்டுக்குச் சென்ற போலீஸார் விஜயை கைது செய்யும் முயற்சித்த போது குற்றவாளி அங்கிருந்து தப்பியோடிய நிலையில், வீட்டில் இருந்து 3 கிலோ தங்க நகைகளை பறிமுதல் செய்து, அவரது மனைவி நர்மதாவைக் கைது செய்துள்ளனர். கொள்ளைச் சம்பவம் குறித்து நிருபர்களுக்கு பேட்டியளித்த கோவை மாநகர கமிஷனர் பாலகிருஷ்ணன், "ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடை வழக்கில் முதற்கட்டமாக 2 கிலோ தங்கம், வைர நகைகள் திருடப்பட்டதாக வழக்கு பதிவு செய்திருந்தோம். புலன்விசாரணையில் திருடப்பட்டது 4.6 கிலோ தங்க நகைகள், 700 கிராம் வெள்ளி என்பது தெரியவந்தது. 350க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமரா காட்சிகள் ஆய்வு செய்து விசாரணை நடத்தியதில் குற்றவாளி தருமபுரியை சேர்ந்த விஜய் என்பது தெரியவந்தது. அவரது மனைவி இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த நர்மதா,” என்றார். "ஆனைமலையில் தங்கியிருந்த விஜய் தப்பியோடிய நிலையில், 3 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்து திருடுவதற்கும், திருடிய பொருட்களை மறைக்கவும் உதவிய அவரது மனைவி நர்மதா மற்றும் நண்பர் சுரேஷ் ஆகியோரை கைது செய்துள்ளோம். தப்பியோடி விஜய் விரைவில் கைது செய்யப்படுவார். நகைக்கடையில் கட்டுமானப் பணிகள் நடக்கும் நிலையில் விஜய் எப்படிச்சரியாக மூன்றாம் தளம் சென்று கொள்ளையடித்து தப்பினார், கடை ஊழியர்கள் யாரேனும் உதவினார்களா? என விசாரிக்கிறோம். குற்றவாளி விஜய் இதுவரையில் பணம் மட்டுமே திருடும் குற்றங்களில் ஈடுபட்டு வந்துள்ளார், முதன் முதலாக நகைகள் திருடியுள்ளார்," என்றார். சம்பவத்தன்று என்ன நடந்தது? கோவை காந்திபுரம் 100 அடி ரோட்டில் உள்ள ஜோஸ் ஆலுக்காஸ் தங்க நகைக்கடையில், ‘ஏசி வென்டிலேட்டர்’ குழாய் வழியாக புகுந்த மர்ம நபர் 200 பவுன் அளவுக்கான தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளார். கோவை மாநகரின் முக்கிய வணிகப்பகுதியான காந்திபுரம் 100 அடி ரோடு பகுதியில் அதிக அளவிலான நகைக்கடைகள், ஆடை உள்பட பல கடைகள் உள்ளன. எப்போதும் பரபரப்பாக காணப்படும் இந்தப் பகுதியில் ஜோஸ் ஆலுக்காஸ் தங்க நகைக்கடை அமைந்துள்ளது. நவம்பர் 28ம் தேதி காலை 9:30 மணிக்கு பணியாளர்கள் கடையை திறந்து பார்த்த போது, முதல் மற்றும் இரண்டாவது தளத்தில், ரேக்குகளில் அடுக்கி வைக்கப்படிருந்த தங்க நகைகள் கொள்ளை போயிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த பணியாளர்கள், காட்டூர் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் கைரேகை நிபுணர்களை வைத்தும், மோப்பநாய் வில்மாவை வரவழைத்தும் சோதனை செய்து தடயங்களை சேகரித்தனர். படக்குறிப்பு, கோவை மாவட்ட கமிஷனர் பாலகிருஷ்ணன் கொள்ளையர் கடைக்குள் நுழைந்தது எப்படி? போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில், கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் குற்றவாளி ஒருவர் எனவும், நகைக்கடையில் சில கட்டுமான பணிகள் நடந்து வரும் நிலையில் நகைக்கடையின் பக்கவாட்டு சுவர் அருகேயுள்ள சிறிய சந்தில் நடந்து சென்று, சுவற்றில் பொருத்தியிருந்த ‘ஏசி’ இயந்திரத்துக்கான வென்டிலேட்டர் குழாய் வழியாக சென்று கடைக்குள் நுழைந்தது தெரியவந்துள்ளது. சம்பவம் குறித்து நிருபர்களுக்கு பேட்டியளித்த கோவை மாவட்ட கமிஷனர் பாலகிருஷ்ணன், ‘‘முதற்கட்ட விசாரணையில் ஒரு நபர் தான் ‘ஏசி’ வென்டிலேட்டர் வழியாக நகைக்கடைக்குள் புகுந்து நகைகளை கொள்ளையடித்திருப்பது தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பாக சில தடயங்களை சேகரித்துள்ளோம், 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம். குற்றவாளி தனது சட்டையை கழற்றி முகத்தை மூடி நகைகளை கொள்ளையடித்துள்ளார். அதிகாலை, 12:00 மணிக்கு மேல் கொள்ளை நடந்துள்ளது. சுமார் 150 – 200 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருக்கும் என்று தெரியவந்துள்ளது. நகைக்கடை ஊழியர்கள் எத்தனை நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன என்று கண்டறியும் பணியில் ஈடுபட்டுள்ளனர்,’’ என்றார். குற்றவாளி வட மாநிலத்தை சேர்ந்தவரா? கட்டுமான பணி நடப்பதால் அந்த பணியாளர்களில் யாரேனும் குற்றவாளிகளா? என்ற கேள்விகளை நிருபர்கள் கமிஷனர் பாலகிருஷ்ணனிடம் முன்வைத்தனர். அதற்கு பதிலளித்த அவர், ‘‘குற்றவாளி உள்ளூர் நபராகத் தான் தெரிகிறார், வடமாநிலத் தொழிலாளர் போன்று இல்லை. கட்டுமான பணியில் இதுவரை ஈடுபட்டவர்கள் விபரங்களை சேகரித்து விசாரிக்கிறோம். இந்த கொள்ளையை பொறுத்தவரையில் மற்ற குற்றவாளிகளைப் போல் அல்லாமல், அங்கொன்றும் இங்கொன்றுமாக நகைகளை எடுத்துச் சென்றுள்ளார்,’’ என்றார். நகை திருட்டை எச்சரிக்க கடையில் சைரன் இல்லையா? என்ற கேள்விகளை கமிஷனர் பாலகிருஷ்ணனிடம் நிருபர்கள் முன்வைத்தனர். அதற்கு பதிலளித்த அவர், "கடையில் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஆனால், சைரன் இல்லை. மர்ம நபர் நகைகளை கொள்ளையடித்த போது, இரு காவலாளிகள் பணியில் இருந்ததுடன், 12 பணியாளர்கள் நகைக்கடையில் தான் தங்கியுள்ளனர். அவர்களிடமும் விசாரணை நடத்துகிறோம்," என்றார் கமிஷனர் பாலகிருஷ்ணன். ஃபால்ஸ் சீலிங் வழியாக இறங்கிய கொள்ளையர் பிபிசி தமிழிடம் பேசிய போலீஸார், "கடைக்கு முன் பகுதியில் சில கட்டுமான பணிகள் மற்றும் வெளிப்புற வேலைகள் நடப்பதால் பக்கவாட்டு சுவர் அருகே கட்டுமான பொருட்கள் போடப்பட்டுள்ளன. மற்றொரு பக்கம் மருந்துக்கடை அருகேயும் சந்து போன்று இடமுள்ளது. கட்டுமான பொருட்கள் போடப்பட்டுள்ள பகுதி வழியாக சென்று, ‘ஏசி’ வென்டிலேட்டர் குழாய் வழியாக மர்ம நபர் உள்ளே சென்றிருக்க வாய்ப்பு அதிகம்," என்கின்றனர் போலீஸார். மேலும் தொடர்ந்த அவர்கள், "கடைக்குள் நுழைய வென்டிலேட்டர் குழாயை பயன்படுத்திய குற்றவாளி, அதன் வழியாக சென்று பின் ஃபால்ஸ் சீலிங் (False Ceiling) பிரித்து அதன் வழியாக நகை வைத்திருக்கும் தளத்தினுள் இறங்கி, சட்டையால் முகத்தை மூடிக்கொண்டு நகைகளை கொள்ளையடித்துள்ளார். வந்த வழியாகவே வெளியில் சென்று தப்பியுள்ளார். சிசிடிவி காட்சிகளைப் பார்த்தால் அதிகாலை, 12:00 – 3:00 மணிக்கு கொள்ளை நடந்திருப்பது தெரியவந்துள்ளது. "குற்றவாளி வெறும் சாதாரண முகக்கவசம் அணிந்து, துணியை தலையில் சுற்றி வந்து கொள்ளையில் ஈடுபட்டுள்ளார். நகைக்கடை மற்றும் அருகிலுள்ள கடைகளின் கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரிக்கிறோம். "இரண்டு பக்கவாட்டு சுவர், தரைத்தளத்தின் கீழேயுள்ள பார்க்கிங் என பல வழிகளில் ‘ஏசி வென்டிலேட்டரை’ அடைய முடியும் என்பதால், எந்த வழியாக சென்றார் என்பதையும் விசாரிக்கிறோம்," என்றனர். 72 வயதிலும் வெறுங்காலுடன் ஓடி தங்கப் பதக்கங்களைக் குவிக்கும் இலங்கைப் பெண்28 நவம்பர் 2023 பறக்கும் விமானத்தில் இருந்து பாராசூட் மூலம் தப்பிய கடத்தல்காரர் எங்கே போனார்? 52 ஆண்டு அமெரிக்க மர்மம்28 நவம்பர் 2023 https://www.bbc.com/tamil/articles/cj7p9jddrrno
  14. Published By: DIGITAL DESK 3 11 DEC, 2023 | 04:03 PM கிருலப்பனை, வெள்ளவத்தை, தெஹிவளை, பம்பலப்பிட்டி, நாரஹேன்பிட்ட, கொட்டாஞ்சேனை, மட்டக்குளி மற்றும் மோதர ஆகிய பொலிஸ் பிரிவுகளில் உள்ள தமிழ் மக்களை குறிவைத்து மீண்டுமொரு பதிவு நடவடிக்கை நடந்து வருவதாகவும், இந்த அனைத்து பதிவு விபர பத்திர ஆவணங்களும் சிங்கள மொழியிலேயே வழங்கப்படுவதாகவும், நாட்டின் அரசியலமைப்பை மீறி சிங்கள மொழியில் மட்டுமே இந்த விபர பதிவுப் பத்திர ஆவணங்களை வழங்குகின்றனர் என்றும், அது தவறான விடயம் என்றும்,”ரணில் பொலிஸ் இராஜ்யமா நடக்கிறது என சந்தேகம் எழுவதாக” பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் அவர்கள் எழுப்பிய கேள்வி ஒன்றிற்கு பதிலளிக்கும் முகமாக கருத்துத் தெரிவிக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார். இந்நடவடிக்கை தவறானது என்றும், ஆட்களை பதிவு செய்யும் நடைமுறையொன்று உள்ளதாகவும், இந்த பதிவு முறைக்கு குறித்த நடைமுறையையே நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றும், இதற்காக பொலிஸ் முறையை பயன்படுத்தி அநீதி இழைக்கக் கூடாது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். நாட்டின் தேசியப் பாதுகாப்பைப் போலவே குற்றங்களைக் குறைப்பதும் முக்கியம் என்றாலும், ஏதேனும் நியாயமற்ற முறை நடைமுறைப்படுத்துவதற்கு இடமளிக்க முடியாது என்றும், எந்தவொரு வேலைத்திட்டத்திலும் வெளிப்படைத்தன்மையும் ஜனநாயகமும் நிலைநாட்டப்பட வேண்டும் என்பதையும் அவர் இங்கு சுட்டிக்காட்டினார். https://www.virakesari.lk/article/171471
  15. Published By: RAJEEBAN 11 DEC, 2023 | 10:56 AM 2024 அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தான் வெற்றிபெற்றால் அது ஜனநாயகத்திற்கு ஆபத்தாக மாறும் என தெரிவிக்கப்படுவதை முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நிராகரித்துள்ளார். டிரம்ப் தான் ஜனாதிபதியானால் ஜனநாயகத்திற்கு ஆபத்து என தெரிவிக்கப்படுவதை வதந்தி ஜனநாயக கட்சியினரின் தவறான பிரச்சாரம் என வர்ணித்துள்ளார். நியுயோர்க்கின் இளம் குடியரசுகட்சியினர் கழகத்தில் ஆற்றிய உரையில் இதனை தெரிவித்துள்ள டிரம்ப் தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடனே ஜனநாயகத்திற்கு உண்மையான ஆபத்து என குறிப்பிட்டுள்ளார். ஆனால் நான் அச்சுறுத்தல் இல்லை நான் ஜனநாயகத்தை பாதுகாப்பேன் உண்மையான ஆபத்து நேர்மையற்ற ஜோ பைடனே எனவும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். மீண்டும் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால் பதவிக்காலத்தின் முதல்நாளிற்கு பின்னர் நான் சர்வாதிகாரியாக விளங்கமாட்டேன் என டிரம்ப் கடந்த வாரம் தெரிவித்துள்ளமை கரிசனைகளை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/171432
  16. Published By: RAJEEBAN 11 DEC, 2023 | 11:24 AM guardian இஸ்ரேலிய படையினர் கான்யூனிசின் மையப்குதிக்குள் நுழைந்துள்ள அதேவேளை ஹமாஸ் பாலஸ்தீன கைதிகளை விடுதலை செய்யவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளதுடன் தன்னிடம் உள்ள பணயக்கைதிகளின் உயிர்களிற்கு ஆபத்து ஏற்படலாம் எனவும் எச்சரித்துள்ளது. இஸ்ரேலிய டாங்கிகள் கான் யூனிசின் முக்கியமான வடக்கு தெற்கு வீதிக்குள் நுழைந்துள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். நகரின் கிழக்கு பகுதி ஊடாக இஸ்ரேலிய படையினரின் முன்னேற்றம் கடும் மோதல் காரணமாக கடும் சவால்களை எதிர்கொண்டுள்ளது இஸ்ரேல் கடும்குண்டுவீச்சு தாக்குதல்களையும் மேற்கொண்டுவருகின்றது. இதேவேளை ஞாயிற்றுக்கிழமை விடுத்துள்ள அறிக்கையில் பாலஸ்தீன கைதிகள் விடுதலை தொடர்பான தனது வேண்டுகோள்களை இஸ்;ரேல் ஏற்றுக்கொள்ளாவிட்டால் தன்னிடம் உள்ள கைதிகள் எவரும் உயிருடன் இஸ்ரேல் திரும்பமாட்டார்கள் என ஹமாஸ் தெரிவித்துள்ளது. எங்களின் அனைத்து கைதிகளும் விடுதலை செய்யப்பட்டால் பணயக்கைதிகளாக உள்ள இஸ்ரேலிய படையினரை விடுதலை செய்வோம் என ஹமாஸ் அறிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/171435
  17. பட மூலாதாரம்,GETTY IMAGES 3 மணி நேரங்களுக்கு முன்னர் இரண்டாம் உலகப்போரின் போது இமயமலையில் விழுந்த அமெரிக்க விமானங்களின் பாகங்கள் இந்தியாவில் புதிதாக திறக்கப்பட்ட அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்தியாவுக்குள் உலகப்போர் அடியெடுத்து வைத்தபோது நடந்த ஒரு துணிச்சலான, அபாயகரமான வான்வழி நடவடிக்கை குறித்து பிபிசியின் சௌதிக் பிஸ்வாஸ் இங்கு விவரிக்கிறார். 80 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசத்தில் உள்ள மலைகளில் விபத்துக்குள்ளான நூற்றுக்கணக்கான விமானங்களின் சிதைவுகள் மற்றும் உடைந்த பாகங்களை 2009-ஆம் ஆண்டு முதல் இந்திய மற்றும் அமெரிக்கக் குழுக்கள் தேடி வந்தனர். இரண்டாம் உலகப்போரின் போது 42 மாத காலமாக இந்தியாவில் நடைபெற்ற ராணுவ நடவடிக்கையில் சுமார் 600 அமெரிக்க விமானங்கள் அருணாச்சல பிரதேசத்தில் உள்ள இந்த தொலைதூரப் பகுதியில் விபத்துக்குள்ளானதாக மதிப்பிடப்பட்டுள்ளது. பலராலும் மறக்கப்பட்ட இந்த விபத்துகளில் குறைந்தது 1,500 விமானப் பணியாளர்கள் மற்றும் பயணிகள் கொல்லப்பட்டனர். உயிரிழந்தவர்களுள் அமெரிக்க மற்றும் சீன விமானிகள், ரேடியோ ஆபரேட்டர்கள் மற்றும் வீரர்கள் அடங்குவர். குன்மிங் மற்றும் சங்கிங்கில் (இப்போது சோங்கிங் என்று அழைக்கப்படுகிறது) சீனப் படைகளுக்கு ஆதரவாக, இந்திய மாநிலங்களான அசாம் மற்றும் வங்காளத்தில் இருந்து இந்த நடவடிக்கை ஒரு முக்கிய விமானப் போக்குவரத்து வழித்தடத்தில் மேற்கொள்ளப்பட்டது. பட மூலாதாரம்,GETTY IMAGES உயிர் நாடியான விமான வழித்தடம் அச்சு நாடுகளுக்கும் (ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான்) மற்றும் நேச நாடுகளுக்கும் (பிரான்ஸ், கிரேட் பிரிட்டன், அமெரிக்கா, சோவியத் யூனியன், சீனா) இடையேயான போர் பிரிட்டிஷ் ஆளும் இந்தியாவின் வடகிழக்குப் பகுதியை எட்டியிருந்தது. அப்போது, வடக்கு மியான்மர் (அப்போது பர்மா என்று அழைக்கப்பட்டது) வழியாக சீனாவுக்கான தரைவழியை திறம்பட மூடி, இந்தியாவின் எல்லைகளுக்கு ஜப்பானியர்கள் முன்னேறியதைத் தொடர்ந்து இந்த விமான வழித்தடம் ஒரு உயிர் நாடியாக மாறியது. ஏப்ரல் 1942-இல் தொடங்கப்பட்ட அமெரிக்க ராணுவ நடவடிக்கையில், 6,50,000 டன் போர் ஆயுதங்கள் வெற்றிகரமாக இந்த வழித்தடத்தில் கொண்டு செல்லப்பட்டது. இது நேச நாடுகளின் வெற்றியை கணிசமாக உயர்த்தியது. விமானிகள் இந்த ஆபத்தான விமானப் பாதையை "தி ஹம்ப்" (The Hump) என்று அழைத்தனர். இந்த நடவடிக்கைக்காக இன்றைய அருணாச்சல பிரதேசமான கிழக்கு இமயமலையின் நம்ப முடியாத உயரத்திற்கு அவர்கள் செல்ல வேண்டியிருந்தது. அடர்ந்த வெப்ப மண்டல காடுகளுக்குள் கடந்த 14 ஆண்டுகளாக, மலையேற்றம் செல்பவர்கள், மாணவர்கள், மருத்துவர்கள், தடயவியல் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மீட்பு நிபுணர்கள் அடங்கிய இந்திய-அமெரிக்கக் குழுக்கள் பயணித்து, மியான்மர் மற்றும் சீனாவின் எல்லையில் உள்ள அருணாச்சல பிரதேசத்தில் 15,000 அடி (4,572 மீ) உயரத்தை எட்டியுள்ளனர். இவர்களுள் அமெரிக்க பாதுகாப்பு துறையின் கீழ் செயல்படும் டிபிஏஏ (DPAA) எனும் முகமையின் உறுப்பினர்களும் அடங்குவர். இந்த முகமை ராணுவ நடவடிக்கைகளில் காணாமல் போன வீரர்கள் குறித்து ஆராயும் முகமையாகும். உள்ளூர் பழங்குடியினரின் உதவியுடன், ஒரு மாத கால பயணங்களுக்குப் பிறகு அவர்கள் விபத்துக்குள்ளான இடங்களை அடைந்தனர். அங்கு குறைந்தது 20 விமானங்கள் மற்றும் காணாமல் போன விமானப்படை வீரர்கள் பலரின் சேதமடைந்த உடைமைகள் கண்டுபிடிக்கப்பட்டன. பட மூலாதாரம்,HUMP MUSEUM சவாலான பயணம் ஆறு நாள் மலையேற்றம், இரண்டு நாள் சாலைப் பயணம் என சவாலான பயணத்திற்குப் பின்னரே விபத்து நடந்த ஒரு இடத்தைக் கண்டுபிடிக்க முடிந்தது. இந்த தேடுதல் பயணத்தின்போது பனிப்புயல் தாக்கத்தின் காரணமாக, மூன்று வாரங்கள் மலையிலேயே அவர்கள் சிக்கித் தவிக்க நேர்ந்தது. "தட்டையான வண்டல் சமவெளிகள் முதல் மலைகள் வரை நிரம்பியுள்ள இப்பகுதி ஒரு சவாலான நிலப்பரப்பாகும். வானிலை ஒரு பிரச்னையாக இருக்கலாம். பொதுவாக இலையுதிர் காலத்தின் பிற்பகுதியிலும், குளிர்காலத்தின் ஆரம்பத்திலும் மட்டுமே இங்கு சென்று பணிகளை மேற்கொள்ள முடியும்," என்கிறார், இப்பயணங்களில் ஈடுபட்டுள்ள தடயவியல் மானுடவியலாளர் வில்லியம் பெல்ச்சர். ஆக்சிஜன் சிலிண்டர்கள், இயந்திர துப்பாக்கிகள், விமானத்தின் முதன்மைப் பகுதி உட்பட ஏராளமானவை இந்த தேடுதலில் கண்டுபிடிக்கப்பட்டன. இறந்தவர்களை அடையாளம் காண்பதற்காக மண்டை ஓடுகள், எலும்புகள், காலணிகள், கடிகாரங்கள் மற்றும் டிஎன்ஏ மாதிரிகள் உள்ளிட்டவை கண்டெடுக்கப்பட்டுள்ளன. காணாமல் போன விமானப்படை வீரர் ஒருவரின் ’இனிஷியல்’ பொறிக்கப்பட்ட காப்பு, நினைவுச்சின்னம் ஆகியவற்றை இடிபாடுகளில் இருந்து கண்டெடுத்த கிராமவாசி ஒருவரிடமிருந்து அவை மீட்கப்பட்டன. விபத்து நிகழ்ந்த சில இடங்கள் பல ஆண்டுகளாக உள்ளூர் கிராம மக்களால் துடைத்தெடுக்கப்பட்டு, அங்கிருந்த அலுமினிய எச்சங்கள் விற்கப்பட்டுள்ளன. இமயமலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள அருணாச்சல பிரதேசத்தில் உள்ள இயற்கை எழில் கொஞ்சும் நகரமான பாசிகாட்டில் புதிதாக திறக்கப்பட்டுள்ள ‘தி ஹம்ப்’ மியூசியத்தில் இந்த அழிந்த விமானங்கள் தொடர்பான பிற கலைப்பொருட்கள் மற்றும் விவரிப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. பட மூலாதாரம்,WILLIAM BELCHER சமாளிக்க முடியாத வானிலை நவம்பர் 29 அன்று இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டி, "இது அருணாச்சல பிரதேசத்திற்கோ அல்லது பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கோ கிடைத்த பரிசு மட்டுமல்ல, இந்தியாவுக்கும் உலகுக்கும் கிடைத்த பரிசு" என்று கூறினார். அருங்காட்சியகத்தின் இயக்குனர் ஓகென் தாயெங் மேலும் கூறுகையில், "மற்றவர்களின் நினைவை மதிக்கும் இந்த பணியின் ஒருங்கிணைந்த பகுதியாக இருக்கும் அருணாச்சல பிரதேசத்தின் உள்ளூர் மக்கள் அனைவருக்கும் இது ஒரு அங்கீகாரம்" என தெரிவித்தார். இந்த வழியில் விமானத்தில் பறப்பதால் ஏற்படும் ஆபத்துகளை அருங்காட்சியகம் துல்லியமாக வெளிப்படுத்துகிறது. அமெரிக்க விமானப்படை விமானியான மேஜர் ஜெனரல் வில்லியம் டர்னர், செங்குத்தான சரிவுகள், அகன்ற பள்ளத்தாக்குகள், ஆழமான பள்ளத்தாக்குகள், குறுகிய நீரோடைகள் மற்றும் கரும் பழுப்பு நிற ஆறுகளில் உள்ள கிராமங்கள் மீது தனது சி-46 சரக்கு விமானத்தை வழிநடத்தியதை நினைவுகூர்ந்துள்ளார். இளம் மற்றும் புதிதாகப் பயிற்சி பெற்ற விமானிகளால் இயக்கப்படும் விமானங்கள் கொந்தளிப்பாக இருந்தன. டர்னரின் கூற்றுப்படி, ‘தி ஹம்ப்’பின் வானிலை, "நிமிடத்திற்கு நிமிடம், ஒரு மைலில் இருந்து மற்றொரு மைலுக்கு" மாறும் தன்மை கொண்டது. அப்பகுதியின் ஒரு முனை இந்தியாவின் தாழ்வான, நீராவி காடுகளிலும் மற்றொரு முனை மேற்கு சீனாவின் உயரமான பீடபூமியிலும் உள்ளது. கனரக போக்குவரத்து விமானங்கள், கீழ்நோக்கி அடிக்கும் காற்றில் சிக்கி, விரைவாக 5,000 அடி கீழே இறங்கி, அதே வேகத்தில் மேலே உயரும். ஒரு விமானம் 25,000 அடி உயரத்தில் கீழ்நோக்கி சென்ற பிறகு முற்றிலும் திரும்பியது குறித்து டர்னர் எழுதியுள்ளார். வசந்த கால காற்று, பனிமழை மற்றும் ஆலங்கட்டி மழை, இடியுடன் கூடிய மழை என இயற்கை இடர்களுக்கு மத்தியில் அடிப்படை வழிசெலுத்தல் கருவிகளைக் கொண்டு விமானங்களைக் கட்டுப்படுத்துவது மிகப்பெரிய சவாலாக இருந்துள்ளது. ’லைஃப்’ இதழின் பத்திரிகையாளர் தியோடர் ஒயிட், கட்டுரை ஒன்றுக்காக ஐந்து முறை இந்த பாதையில் விமானத்தில் பயணித்திருக்கிறார். பாராசூட்கள் இல்லாத சீன வீரர்களை ஏற்றிச் சென்ற ஒரு விமானத்தின் விமானி தனது விமானம் பனிக்கட்டியால் சூழ்ந்தபிறகு தரையிறங்க முடிவு செய்ததாக எழுதியுள்ளார். துணை விமானியும் வானொலி இயக்குனரும் எப்படியோ சமாளித்து வெளியேறி, "பெரிய வெப்பமண்டல மரங்களில் தரையிறங்கினர். அங்கிருந்த பூர்வீக குடிமக்கள் 15 நாட்கள் அலைந்து திரிந்து அவர்களைக் கண்டுபிடித்தனர்" என அவர் எழுதுகிறார். தொலைதூர கிராமங்களில் உள்ள உள்ளூர் மக்கள் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு சிகிச்சை அளித்து நலம் பெற உதவியுள்ளனர். (விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது என்றும் உயிர் சேதம் ஏற்படவில்லை என்றும் பின்னர் தெரியவந்தது.) வானொலி தர நிலையம் அழைப்புகளால் நிரம்பியதில் ஆச்சரியமில்லை. மலைகளுக்குள் விமானங்கள் மோதியதால், 50 மைல்களுக்குள் எங்கு இருக்கிறோம் என்பது விமானிகளுக்குத் தெரியாது என டர்னர் நினைவுகூர்கிறார். ஒரு புயல் மட்டும் ஒன்பது விமானங்களை நொறுக்கியது. இதில், 27 பணியாளர்கள் மற்றும் பயணிகள் கொல்லப்பட்டனர். "உலகில் இதற்கு முன்பும் பின்பும் இப்படியொரு தீவிரமான கொந்தளிப்பை எங்கும் பார்த்ததில்லை,” என அவர் எழுதுகிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES ”எனது மகன் எங்கே?” காணாமல் போன விமானப்படை வீரர்களின் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் இன்னும் உயிருடன் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தினர். "எனது மகன் எங்கே? இந்த உலகம் அதையறிய நான் விரும்புகிறேன்/அவரது பணி முடிந்து பூமியை விட்டு சென்றுவிட்டானா?/அவன் தேவலோகத்தில் இருக்கிறானா? அல்லது அவன் இன்னும் இந்தியாவின் காடுகள் மற்றும் மலைகளில் அலைந்து கொண்டிருக்கிறானா?" என, 1945-இல் ஒரு கவிதையில் காணாமல் போன விமானப்படை வீரர் ஜோசப் டுனவேயின் தாயார் பேர்ல் டுனவே எழுதியுள்ளார். காணாமல் போன விமானப்படையினர் இப்போது நினைவுகளில் மட்டுமே உள்ளனர். "இந்த ஹம்ப் மனிதர்கள் ஜப்பானியர்களோடும், காடுகளோடும், மலைகளோடும், மழைக்காலங்களோடும் ஆண்டு முழுவதும் இரவும் பகலும் போராடுகிறார்கள். அவர்களுக்குத் தெரிந்த ஒரே உலகம் விமானங்கள். அவர்கள் அவற்றின் சத்தங்களை கேட்பதையோ, அவற்றில் பறப்பதையோ, சபிப்பதையோ நிறுத்த மாட்டார்கள். ஆனாலும் அவர்கள் சீனாவுக்கு வெளியே செல்லும் விமானங்களைப் பார்த்து சோர்வடைய மாட்டார்கள்," என்று ஒயிட் விவரித்தார். இந்தியாவின் வாசலை எட்டிய இரண்டாம் உலகப்போரைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை உண்மையில் வான்வழி தளவாடங்களின் துணிச்சலான சாதனையாகும். "’தி ஹம்ப்’ நடவடிக்கை மூலம் அருணாச்சல பிரதேசத்தின் மலைகள் மற்றும் மக்கள் இரண்டாம் உலகப்போர் குறித்த கதைகள், வீரம் மற்றும் சோகங்களுக்குள் ஈர்க்கப்பட்டனர்" என்று தாயெங் கூறுகிறார். இவை சிலருக்கு மட்டுமே தெரிந்த கதைகள். https://www.bbc.com/tamil/articles/c8v8v2jgm5zo
  18. 11 DEC, 2023 | 11:11 AM கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு முன்னிட்டு கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியேறும் பயணிகளுக்கு தங்களது பயணப்பொதிகளை இலகுவாக அடையாளம் காண பயன்படுத்தப்படும் "டாக்" குறிச்சொற்கள் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் அதிகாரிகள் சோதனையிட ஆரம்பித்துள்ளனர். சில விமானப்பயணிகள் தங்களது பயணப்பொதிகளுக்கு மாறாக வேறொரு பயணப்பொதிகளை எடுத்துச் செல்வதும் சில பயணிகள் தெரிந்தே மற்றவர்களது பயணப்பொதிகளை திருடிச்செல்வதும் தொடர்ந்து இடம்பெற்றுவருகின்றது. இவ்வாறு மாற்றப்பட்டு எடுத்து செல்லப்பட்ட பயணப்பொதிகள் மீண்டும் அடிக்கடி விமான நிலையத்திற்குத் திரும்புகின்ற நிலையில் அவைகளின் உரிமையாளர்களுக்கு வழங்குவது மிகவும் கடினமாக உள்ளது. இதனை தடுக்கும் முகமாக இப் புதிய "டாக்" குறிச்சொற்கள் முறை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதனால் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியேரும் பயணிகளின் பயணப் பொதிகளின் "டாக்" குறிச்சொல் சீட்டுகளை சோதனையிடும் நடவடிக்கையில் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/171430
  19. 10 DEC, 2023 | 10:56 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) தனது உயிருக்கு இராணுவத்தினராலும் பாதுகாப்பு தரப்பினராலும் அச்சுறுத்தல் என்று மிஹிந்தலை விகாராதிபதி கருதுவாராயின் இராணுவத்தினர் உட்பட 251 பாதுகாப்பு அதிகாரிகளை மீளப் பெற்றுக்கொள்ளுவோம். இராணுவத்தின் மீது படுகொலை குற்றச்சாட்டை முன்வைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. மிஹிந்தலை புனித பூமிக்கு பணிக்கு செல்ல இராணுவத்தினர் விரும்பவில்லை. ஆகவே பாதுகாப்பு தரப்பினரை மீளப்பெறும் தீர்மானத்தில் மாற்றமில்லை என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் ஞாயிற்றுக்கிழமை (10) இடம்பெற்ற அமர்வின் போது விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் உரையாற்றுகையில், மஹிந்தலை விகாரைக்கும்,அதன் விகாராதிபதிக்கும் வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் முன்வைத்துள்ள கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டியது எனது பொறுப்பாகும்.மிஹிந்தலை புனித பூமியில் 103 கடற்படையின் அதிகாரிகளும்,48 இராணுவத்தினரும், 100 சிவில் பாதுகாப்பு அதிகாரிகள் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதுடன்,ஏனைய செயற்பாடுகளிலும் அவர்கள் ஈடுபடுகிறார்கள். விகாராதிபதியின் கோரிக்கைக்கு அமைய பல்வேறு செயற்பாடுகளுக்காக பாதுகாப்பு சேவையார்களை மிஹிந்தலை விகாரைக்கு வழங்கியுள்ளோம். கடந்த பொசன் உற்சவத்தின் போது 150 மண் மூட்டைகளை இராணுவத்தினர் தமது தோளில் சுமந்தவாறு விகாரைக்கு கொண்டு சென்று புனரமைப்பு பணிகளை முன்னெடுத்துள்ளார்கள்.இவ்வாறான நிலையில் இரண்டு பேர் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சபையில் உரையாற்றினார். கடந்த ஒக்டோபர் மாதம் 07 ஆம் திகதிக்கு பின்னர் மத தலங்கள்,சுற்றுலா மையங்கள் உட்பட பொது இடங்களின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.சிவில் உடையுடன் இராணுவத்தினர் விகாரைக்கு செல்ல முடியாது என்பதை நேற்று முன்தினமே அறிந்துக் கொண்டேன்.பாதுகாப்புக்காகவே இராணுவத்தினர் சிவில் ஆடையில் புனித பூமியில் இருந்துள்ளார்கள். இராணுவத்தினரால் தனது உயிருக்கு அச்சுறுத்தல் என்று மஹிந்தலை விகாரையின் விகாராதிபதி கருதுவாராயின் அங்கு பாதுகாப்பு உட்பட ஏனைய நடவடிக்கைகளில் ஈடுபடும் 252 பாதுகாப்பு சேவையாளர்களை மீளப்பெற்றுக்கொள்ள தீர்மானித்துள்ளோம்.இந்த தீர்மானத்தில் மாற்றமில்லை இதன்போது ஒழுங்குப் பிரச்சினையை முன்வைத்து உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இராஜாங்க அமைச்சரின் தவறான தீர்மானம் தொடர்பில் கடும் அதிருப்தியை வெளிப்படுத்திக் கொள்கிறோம்.மிஹிந்தலை புனித பூமியை பாதுகாக்க இராணுவத்தினர் உட்பட முப்படையினர் அர்ப்பணிப்புடன் செயற்படுகிறார்கள். பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தெரியாமல் இனந்தெரியாத இருவர்கள் புனித பூமியில் இருந்து பொலிஸார் பிடித்துள்ளார்கள்.இவ்வாறான நிலையில் அங்கு பாதுகாப்பில் உள்ள 251 பேரை மீளப் பெறுவதாக குறிப்பிடுவது அநீதியாகும்.பௌத்த மதத்தை பாதுகாக்க வேண்டியதன் அவசியம் அரசியலமைப்பின் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.ஆகவே தவறான தீர்மானங்களை எடுக்க வேண்டாம் என்பதை கேட்டுக் கொள்கிறேன் என்றார். தொடர்ந்து உரையாற்றிய பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்,இந்த இரண்டு அதிகாரிகள் 48 இராணுவத்தினருடன் இரண்டு வாரங்களாக மிஹிந்தலை புனித பூமியில் இருந்துள்ளார்கள்.ஆகவே பாதுகாப்பு தரப்பினர்களுக்கு தெரியாத நபர்கள் என்று குறிப்பிடுவது தவறு.குட்ட குட்ட தலைகுனிபவர் முட்டாள்கள் என்று குறிப்பிடுவார்கள்.இராணுவத்தினருக்கும் சுய கௌரவம் உள்ளது.அவர்களின் சுய கௌரவம் தொடர்பில் நாங்கள் விசேட கவனம் செலுத்த வேண்டும். மிஹிந்தலை புனித பூமியில் சேவையில் உள்ள இராணுவத்தினர் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடுவதுடன்,அந்த பகுதியை தூய்மைப்படுத்தும் பணிகளிலும் ஈடுபடுகிறார்கள்.இராணுவத்தினர் படுகொலை செய்ய வந்தார்கள் என்று குற்றஞ்சாட்டுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.அரசாங்கத்துடன் உள்ள பிரச்சினைகளை அரசாங்கத்துடன் தீர்த்துக் கொள்ள வேண்டும்.இராணுவத்தினரை அரசியலுக்கு பயன்படுத்த கூடாது.இவ்வாறான குற்றச்சாட்டுக்களினால் மிஹிந்தலை புனித பூமிக்கு பணிக்கு செல்ல பாதுகாப்பு தரப்பினர் விரும்பவில்லை.ஆகவே 251 பாதுகாப்பு தரப்பினரை மீளப்பெற்றுக் கொள்ளும் தீர்மானத்தில் மாற்றமில்லை என்றார். https://www.virakesari.lk/article/171416
  20. அஸ்வெசும நலன்புரித் திட்டம் ; இரண்டாம் கட்டத்துக்கான விண்ணப்பம் அடுத்த மாதம் கோரப்படும் - நிதி இராஜாங்க அமைச்சர் 10 DEC, 2023 | 11:06 PM (இராஜதுரை ஹஷான்) அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் முதலாம் கட்டத்தை முழுமையாக மீளாய்வு செய்யவும், இரண்டாம் கட்டத்திற்கான விண்ணப்பங்களை அடுத்த மாதம் கோருவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, அஸ்வெசும நலன்புரித் திட்டத்தில் இரண்டாம் கட்டத்தை ஆரம்பிப்பதற்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டுள்ள முதல் கட்டம் தொடர்பில் முழுமையான மீளாய்வு மேற்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது. முதலாவது கட்டத்தில் காணப்படும் சிக்கல்களுக்கு தீர்வு கண்டு இரண்டாம் கட்டத்தை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய இரண்டாம் கட்டத்துக்காக அடுத்த மாதம் விண்ணப்பம் கோர எதிர்பார்க்கப்பட்டுள்ளது. 14 இலட்சத்து 6932 பயனாளர்களுக்கான ஒக்டோபர் மாத தவணை கொடுப்பனவு வங்கி கணக்குகளுக்கு வைப்பிடும் பணிகள் நிறைவுப்பெற்றுள்ளன. கடந்த செப்டெம்பர் தவணை கொடுப்பனவை பெற்றுக்கொண்ட 13 இலட்சத்து 77,000 பயனாளர்களை காட்டிலும் ஒக்டோபர் மாதம் 29,932 பயனாளர்கள் புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள். நலன்புரி கொடுப்பனவை பெற்றுக்கொள்ளும் பயனாளர்களின் எண்ணிக்கையை 20 இலட்சமாக வரையறை செய்ய அரசாங்கம் உத்தேசித்துள்ளது. 2024 ஆம் ஆண்டு நலன்புரி கொடுப்பனவுகளுக்காக மாத்திரம் 205 பில்லியன் ரூபா வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக ஒதுக்கப்பட்டுள்ளது என்றார். https://www.virakesari.lk/article/171389
  21. Published By: RAJEEBAN 11 DEC, 2023 | 10:25 AM இந்தியா பாதுகாப்பாகயிருந்தால் இலங்கையும் பாதுகாப்பாகயிருக்கும் என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார். இலங்கை எதிர்கொண்ட முன்னொருபோதும் இல்லாத நெருக்கடியின் போது வேகமாக வலுவான விதத்தில் செயற்பட்ட இந்தியா வேறு எந்த நாட்டிற்கும் நெருக்கடி விடயத்தில் உதவவில்லை என இந்திய உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார். இந்தியா இலங்கைக்கு உதவுவதற்காக சர்வதேச அளவிலும உள்நாட்டிலும் தனது பங்களிப்பை வழங்கியது என குறிப்பிட்டுள்ள அவர் இந்தியாவின் தலைமைத்துவம் வலுவான இந்திய இலங்கை உறவுகள் குறித்து தெளிவாகவும் அர்ப்பணிப்புடனும் உள்ளது எனவும் தெரிவித்துள்ளார். சீனா கப்பல்கள் கொழும்பிற்கு வருவது குறித்த இந்தியாவின் கரிசனைகள் குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ள அவர் இந்தியாவும் இலங்கையும் இந்து சமுத்திரத்தில் உள்ளன கடற்பயண சுதந்திரத்தை உறுதி செய்வது இரு நாடுகளினதும்கூட்டு பொறுப்பு கடப்பாடு எனவும் தெரிவித்துள்ளார். உருவாகின்ற கடல்சார் சவால்களி;ற்கு இணைந்து தீர்வை காணவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். பாதுகாப்பும் ஸ்திரதன்மையும் காணப்பட்டால் அமைதியும் வளமும் காணப்படும் எனவும் தெரிவித்துள்ள உயர்ஸ்தானிகர் எங்கள் நாடுகள் அமைந்துள்ள பகுதியில் பாதுகாப்பை உறுதி செய்வது எங்களின் கூட்டு பொறுப்பாகும் இந்த அர்த்தத்தில் இலங்கையினதும் இந்தியாவினதும் பாதுகாப்பு பிரிக்க முடியாதது பரஸ்பரம் ஒன்றிணைந்தது எனவும் குறிப்பி;ட்டுள்ளார். https://www.virakesari.lk/article/171428
  22. பட மூலாதாரம்,X/ V CREATIONS AND KAVITHALAYA PRODUCTIONS கட்டுரை தகவல் எழுதியவர், காவிய பிருந்தா உமாமகேஷ்வரன் பதவி, பிபிசி தமிழுக்காக 9 டிசம்பர் 2023 புதுப்பிக்கப்பட்டது 7 மணி நேரங்களுக்கு முன்னர் ஆளவந்தான் (2001), முத்து (1995) திரைப்படங்கள் நேற்று மீண்டும் ரீ ரிலீஸ் செய்யப்பட்டன. கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த், மீனா, சரத் பாபு, வடிவேலு, மனோரமா உள்ளிட்டோர் நடிப்பில், ஏ ஆர் ரஹ்மான் இசையில், கவிதாலயா தயாரிப்பில் வெளிவந்த திரைப்படம் முத்து. ஜனரஞ்சகமான இத்திரைப்படம் வசூல் ரீதியாக பல சாதனைகள் படைத்தது. அதேபோல, 2001-ஆம் ஆண்டு கமல்ஹாசனின் இருவேறுபட்ட நடிப்பில் வெளிவந்த திரைப்படம் ஆளவந்தான். சுரேஷ் கிருஷ்ணா இத்திரைப்படத்தை இயக்கியிருநதார். கலைப்புலி தாணு தயாரித்த இத்திரைப்படத்தில் ரவீனா டாண்டன், மனீஷா கொய்ராலா, சரத்பாபு, அனுஹாசன், பாத்திமா பாபு, ரியாஸ் கான் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சங்கர் எஹசான் லாய் இசையமைத்துள்ளார். ஓடிடி வரவுக்குப் பிறகு நேரடியாக திரையரங்குகளில் படங்கள் வெளியாவது சற்று குறைந்தது. எனவே, ரசிகர்கள் அவரவர்கள் ரசிக்கும் நடிகர்களின் படங்களை திரையரங்குகளில் ரசிப்பதற்காக, புதிய தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி, சமீப காலமாக பல பிரபல திரைப்படங்கள் ரீ ரிலீஸ் செய்யப்படுகின்றன. அந்த வகையில், ரசிகர்களை மகிழ்விக்க ஆளவந்தான் திரைப்படம் தமிழ் நாடு முழுவதும் 1,000 திரையரங்குகளில் மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை 2005-ஆம் ஆண்டு வரை திரைப்படங்கள் ஃபிலிம் ரோலில் படமாக்கப்பட்டன. அதற்கு பிறகு, சினிமா கேமராக்கள் முழுவதும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டன. தற்போது ரீ ரிலீஸ் செய்யப்படும் திரைப்படங்கள் ஃபிலிம் ரோலில் படமாக்கப்பட்டவை. ஃபிலிம் ரோலில் படமாக்கப்பட்ட திரைப்படங்களை அதிநவீன தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி டிஜிட்டல் வடிவத்திற்கு எவ்வாறு மாற்றுகிறார்கள்? ஃபிலிம் ரோலில் படமாக்கப்படும் திரைப்படங்களுக்கும், டிஜிட்டல் கேமராவில் படமாக்கப்படும் திரைப்படங்களுக்கும் உள்ள வித்தியாசம் என்ன? ஃபிலிம் ரோலில் சினிமா இருந்தபோது பணியாற்றிய தொழில் நுட்ப கலைஞர்கள் என்னவானார்கள்? அவர்கள் டிஜிட்டல் கேமராவின் நவீன தொழில் நுட்பங்களுக்கேற்றவாறு தங்களை மாற்றிக் கொண்டார்களா? ஃபிலிம் ரோல் - டிஜிட்டல் இடையே என்ன வேறுபாடு? பட மூலாதாரம்,MUTHU “கனவு மெய்ப்பட வேண்டும்”, “பெரியார்”, “சட்டம் ஒரு இருட்டறை” உள்ளிட்ட திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவரும், ஒளிப்பதிவு பற்றியும், சினிமா லைட்டிங் பற்றியும் புத்தகங்களை எழுதியுள்ள ஒளிப்பதிவாளர் சி. ஜே. ராஜ்குமாரிடம் ஃபிலிம் ரோல் பற்றியும், டிஜிட்டல் தொழில் நுட்பம் பற்றியும் கலந்துரையாடினோம். அவர் கூறும்போது, “ சினிமா என்பதே அறிவியல் தான். சினிமா ஃபிலிம் ரோலில் படமாக்கப்பட்டபோது, அவை ஒரு வேதியியல் மாற்றத்தின் கலவை என்றே கூறலாம். இன்றைய தலைமுறைக்கு ஃபிலிம் ரோல் பற்றி அடிப்படைத் தகவல்களைக் கூற வேண்டுமென்றால், சினிமா ஃபிலிம் ரோல்கள் கேன்களில் படப்பிடிப்புத் தளத்திற்கு கொண்டு வரப்படும். ஒரு கேனில் 400 அடி ஃபிலிம் ரோல்கள் இருக்கும். ஒரு நாளைக்கு சுமார் 3 கேன் ஃபிலிம் ரோல்கள் வரை உபயோகப்படுத்துவார்கள். அடிக்கணக்காக கூற வேண்டுமானால், ஒரு நாளைக்கு 50,000 அடி முதல் 60,000 அடிவரை உபயோகப்படுத்துவார்கள். ஒரு கேன் ஃபிலிம் ரோலில் 4 நிமிட காட்சிகளைப் பதிவு செய்யலாம். ஃபிலிம் ரோல்களைப் பாதுகாப்பாக படப்பிடிப்பிடிப்புத் தளத்திற்கு கொண்டு வந்து அதனை கேமராவிற்குள் செலுத்துவதற்கென்றே ஒரு தனி நபர் இருப்பார். அவர் பெயர் “ஃபிலிம் லோடர்”. ஃபிலிம் லோடர் ஃபிலிம் ரோலை கேமராவிற்குள் பொருத்துவதே ஒரு நுணுக்கமான பணி. தமிழ் சினிமா எப்போது முழுவதுமாக டிஜிட்டல் தொழில் நுட்பத்திற்கு மாறியது என துல்லியமாக கூற முடியாது. தோராயமாக குறிப்பிட வேண்டுமானால், 2005-ஆம் ஆண்டிற்கு பிறகு டிஜிட்டல் தொழில் நுட்பத்திற்கு மாறியது எனலாம். ஃபிலிம் ரோலில் பதிவு செய்யப்படும் காட்சிகள் புள்ளியியலை அடிப்படையாகக் கொண்டவை. அதே போல, டிஜிட்டல் தொழில் நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு பதிவு செய்யப்படும் காட்சிகள் எண்களை அடிப்படையாகக் கொண்டவை. ஃபிலிம் ரோலுக்கும், டிஜிட்டல் தொழில் நுட்பத்திற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளது. சூரிய ஒளியில் தெரியும் இலையை ஃபிலிம் ரோலில் படமாக்கும்போது அதன் நுண்ணிய இழைகளைக் கூட துல்லியமாக படமாக்கலாம். ஆனால், டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் அவ்வளவு துல்லியமாக படமாக்க முடிவதில்லை. அதே போல, குறைந்த ஒளியில் டிஜிட்டல் தொழில் நுட்பம் ஃபிலிம் ரோலை விட நன்றாக செயல்படுகிறது. இதுபோல, இரண்டிலுமே சாதக, பாதகங்கள் உள்ளன. ஃபிலிம் ரோலில் சினிமா படமாக்கப்பட்ட காலகட்டத்தில், அதனை பாதுகாப்பதே தொழில் நுட்ப கலைஞர்களுக்கு மிகவும் சவாலான பணியாக இருந்தது. உதாரணமாக, படப்பிடிப்பு முடிந்தவுடன், ஒருவர் அதனை பொறுப்பாக பேருந்திலோ, ரயிலிலோ எங்கு லெபாரட்டரி உள்ளதோ அங்கு சேர்க்க வேண்டிய சிரமம் இருந்தது. அதிலும், வெளி நாட்டில் படப்பிடிப்பு என்றால் கஸ்டம்ஸில் அதற்கென தனியாக அனுமதி வாங்க வேண்டியிருக்கும். டிஜிட்டல் தொழில் நுட்பம் அதனையெல்லாம் மொத்தமாக மாற்றி விட்டது. ஒரே ஒரு பென் ட்ரைவில் மொத்த திரைப்படத்தையும் பதிவு செய்து விட்டு உலகின் எந்த மூலைக்கும் செல்லலாம். ஆனால், பணிகளை இவ்வளவு சுலபமாக்கிய டிஜிட்டல் தொழில் நுட்பத்தை உபயோகப்படுத்தி படமாக்கப்படும் திரைப்படங்கள் ஃபிலிம் ரோலில் பதிவு செய்யப்படும் திரைப்படங்களைப் போல காலம் கடந்தும் நிற்பதில்லை. தோரயமாக கூற வேண்டுமானால், ஒரு 20 வருடத்திற்கு மட்டுமே டிஜிட்டல் தொழில் நுட்பத்தை உபயோகப்படுத்தி பதிவு செய்யப்படும் திரைப்படங்கள் இருக்கும். ஆனால், முறையாகப் பாதுகாத்தால், ஃபிலிம் ரோலில் படமாக்கப்படும் திரைப்படங்கள் 100 வருடங்கள் தாண்டியும் இருக்கும்,” எனக் கூறினார். ஃபிலிம் ரோலில் படமாக்கப்பட்ட திரைப்படங்கள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு ரீ ரிலீஸ் செய்யப்படுவது ஏன்? பட மூலாதாரம்,MUTHU ஃபிலிம் ரோலில் எடுக்கப்படும் திரைப்படங்களை ஏன் மீண்டும் டிஜிட்டல் தொழில் நுட்பத்திற்கு மாற்றி பின்பு ரீ ரிலீஸ் செய்கிறார்கள் என சினிமா ஆர்வலர்களின் புரிதலுக்காக ஆளவந்தான் திரைப்படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி தாணுவிடம் கேள்வியெழுப்பினோம். அவர், “ஃபிலிம் ரோலில் சினிமா படமாக்கப்பட்டபோது, அதனை ப்ராசஸிங் லெபாரட்டரிக்கு அனுப்பி பிரிண்ட் எடுத்து, பின்னர் திரையரங்குகளில் உள்ள ப்ரொஜெக்டர்கள் மூலம் திரையில் காட்சிகளை தோன்ற வைப்பார்களல்லவா? தற்போது திரையரங்குகளும் டிஜிட்டல்மயமாக்கப்பட்டுவிட்டன. ப்ரொஜெக்டர் என்ற ஒன்றே உலகம் முழுவதும் இல்லை. அது அழிந்து விட்ட்து. அனைவரும் Qube, EFO, TFT, TSR உள்ளிட்ட நவீன டிஜிட்டல் தொழில் நுட்பத்திற்கு மாறிவிட்டார்கள். எனவே, ஃபிலிமில் படமாக்கப்பட்ட திரைப்படத்தை அப்படியே டிஜிட்டல் தொழில் நுட்பத்திற்கு மாற்றுகிறோம்” என்றார். அப்படியென்றால், சினிமாவை மட்டுமே நம்பி எத்தனையோ தொழில் நுட்பக் கலைஞர்கள் தங்கள் வாழ்வாதாரத்தைக் கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு புதிய தொழில் நுட்பங்கள் சினிமாவில் அசுர வேகத்தில் வரும்போது, ஃபிலிம் லோடர்கள், ஃபிலிம் ரோலை பிராசஸிங் செய்யும் லெபாரட்டரி தொழில் நுட்ப கலைஞர்கள் தற்போது என்ன ஆனார்கள்? இதனை ஒரு தயாரிப்பாளராக எப்படிப் பார்க்கிறீர்கள் எனக் கேட்டோம். அதற்கு அவர், “சினிமா அப்படித்தான். நாளுக்கு நாள் தொழில் நுட்பம் மாறிக் கொண்டே இருக்கும். ஆனால், அதற்கேற்ப ஒரு தொழில் வாய்ப்பையும் சினிமா மாற்றிக் கொடுக்கும். எனக்குத் தெரிந்த ஒரு ப்ரேஸ்சிங் லெபாரட்டரி சீஃப் பிரசாத் லேபில் சினிமா சார்ந்த ஒரு பணியில் சேர்ந்து கொண்டார்; இன்னும் சிலர் அவுட்டோர் யூனிட் வேலைகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர். மாற்றங்கள் தவிர்க்க முடியாதது தானே” என்றார். ஃபிலிம் ரோலில் படமாக்கப்பட்ட திரைப்படம் எப்படி டிஜிட்டல் சினிமாவாக உருமாறுகிறது? பட மூலாதாரம்,MUTHU ஃபிலிம் ரோலில் எடுக்கப்பட்ட திரைப்படம் எப்படி டிஜிட்டல் சினிமாவாக மாறுகிறது என்பது குறித்து இந்தியாவின் முக்கியமான ஒளிப்பதிவாளரும், ஆளவந்தான் திரைப்படத்தின் ஒளிப்பதிவாளருமான திருநாவுக்கரசு அவர்களிடம் பேசினோம். அவர், “ஃபிலிம் ரோலில் படமாக்கப்பட்ட திரைப்படங்களை இரண்டு வழி முறைகளை பயன்படுத்தி டிஜிட்டலுக்கு மாற்றுகிறார்கள். அவை Film Preservation, Film Restoration. ஃபிலிம் ரோல்களை Humidity குறைவான இடத்தில் வைத்து பாதுகாக்கிறார்கள். ஆனால், இந்தியாவில் இது போன்ற preservative முறையை யாரும் மதிப்பதில்லை. அனைவருக்கும் ஒரு திரைப்படத்தை முடிக்க வேண்டும். முடித்து விட்டு அடுத்த திரைப்படத்திற்கு செல்ல வேண்டும் என்ற அவசரம் தான் இருக்கிறது. இன்னொன்று, ஃபிலிம் ரோல்களை அதிலுள்ள தூசி, துரும்புகளை, கீறல்களை சுத்தம் செய்யும் Film Restoration முறை. பிற நாடுகளில் அவர்களது திரைப்படங்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை நாம் கொடுப்பதில்லை என்பதை நினைக்கும்போது வருத்தமாக இருக்கிறது. Citizen Kane (1941) திரைப்படத்திற்கோ, God Father (1972) திரைப்படத்திற்கோ கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் இங்கு எந்த திரைப்படத்திற்கும் கொடுக்கவில்லை. மேலே குறிப்பிட்ட திரைப்படங்கள் இன்னும் பத்திரமாக பாதுகாக்கப்பட்டுள்ளன. ஆனால், நாம் வெகு சில திரைப்படங்களையே அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்கிறோம். ஃபிலிம் ரோல்களை அந்த காலகட்டத்தில் Oxyberry Machine ஸ்கேன் செய்யும். அதே தொழில் நுட்பம் தற்போது, அதிர்ஷ்டவசமாக எல்வி ப்ராசாத்தில் Oxscan என்ற பெயரில் உள்ளது. அதில் ஸ்கேன் செய்யப்படும் ஃபிலிம் ரோல்கள் டிஜிட்டல்மயமாக்கபடும் போது 12k வரை ரெசல்யூஷன் கிடைக்கிறது. பட மூலாதாரம்,MUTHU நான் ஹே ராம் திரைப்படத்தினை, அதன் கருத்தியல் இன்றைய காலகட்டத்திலும் ஃப்ரெஷாக இருப்பதால் டிஜிட்டலுக்கு மாற்றும் முயற்சியில் ஈடுபட்டேன். எப்பொழுதும் ஃபிலிமில் படமாக்கும்போது அதன் நெகடிவ்களை இண்டெர்போசிட்டிவ் ஒன்று எடுத்து வைப்போம். அதனை ஹேராம் திரைப்பட பணிகளின் போது தொலைத்து விட்டேன். பின்னர், எல்வி பிரசாத்தின் எடிட்டர் கிருஷ்ணா அதனைக் கண்டுபிடித்துக் கொடுத்தார். பின்னர், நான் ஃபிலிம் ரோலில் படமாக்கிய ஹேராம் திரைப்படத்தினை எல்வி ப்ரசாத்தில் டிஜிட்டல் மயமாக்கும் நவீன தொழில் நுட்பங்கள் இருப்பதால், அங்கு கொடுத்தேன். கொடுக்கும்போதே, ஹேராம் திரைப்படத்தினை ஃபிலிமில் படமாக்கினோம், 12k க்ளாரிட்டியில் ஸ்கேன் செய்து, அதனை டிஜிட்டலுக்கு 8k டவுன் கன்வெர்ட் செய்து, 4k க்ளாரிட்டியில் வேண்டும் என தெளிவாக கூறிவிட்டேன். அதே போல அவர்கள் எனக்கு அதனை DPX File மற்றும் Raw Tiff File-ஆக கொடுத்தார்கள். இதில், வியக்கத்தக்க விடயம் என்னவென்றால், Oxscan தொழில் நுட்பம் இந்தியாவைத் தவிர வேறெங்கும் கிடையாது. ஃபிலிம் ரோல் முதல் டிஜிட்டல் சினிமா- பி.சி. ஸ்ரீராம் கூறுவது என்ன? பட மூலாதாரம்,MUTHU இந்தியாவின் மிக முக்கியமான, சிறந்த ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராம் அவர்களிடம் ஃபிலிம் ரோல் காலகட்டத்திலிருந்து டிஜிட்டல் தொழில் நுட்பத்திற்கு மாறியது வரையிலான மாற்றத்தை எப்படி பார்க்கிறார் என கேட்டோம். அதற்கு அவர், ”ஃபிலிம் ரோலில் திரைப்படங்களை பதிவு செய்வதற்கு ஒரு அணுகுமுறை தேவைப்படுகிறது. டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் திரைப்படங்களை பதிவு செய்வதற்கு ஒரு அணுகுமுறை தேவைப்படுகிறது. சிலர் ஃபிலிம் ரோலில் நல்ல ஒளிப்பதிவு இல்லை என்கிறார்கள். அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை. சினிமா தினம் தினம் பல மாற்றங்களை அசுர வேகத்தில் காணும். நாம் நம்மை அதற்கேற்றார் போல தகவமைத்துக் கொள்ள வேண்டும். நான் இப்பொழுது எல்லா திரைப்படங்களையும் டிஜிட்டலில் தான் பதிவு செய்கிறேன்,” என்றார். https://www.bbc.com/tamil/articles/c51xnj91yj7o
  23. 10 DEC, 2023 | 05:05 PM இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவுக்கும், பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (10) அலரி மாளிகையில் இடம்பெற்றது. இதன்போது இலங்கை - இந்திய நட்புறவை மேம்படுத்த இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே வழங்கிய ஒத்துழைப்புகளுக்கு பிரதமர் நன்றி தெரிவித்தார். அதற்கு இந்திய உயர்ஸ்தானிகர், இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவு ஒருபோதும் மாற்றமடையாது என கூறியமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/171400
  24. Published By: VISHNU 10 DEC, 2023 | 03:15 PM யாழ்ப்பாணம் - உடுப்பிட்டி பகுதியில் மக்களின் எதிர்ப்பை மீறி மீளவும் மதுபானசாலைக்கு அனுமதி வழங்கப்பட்டதை தொடர்ந்து அதற்கு எதிராக சமூக மட்ட அமைப்புகள் தொடர் நடவடிக்கையில் ஈடுபட தீர்மானித்துள்ளன. உடுப்பிட்டி விநாயகர் சனசமூக நிலையத்தில், நேற்று சனிக்கிழமை (9) உடுப்பிட்டி சமூகமட்ட அமைப்புக்கள் இவ்விடயம் தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொண்டன. கரவெட்டி பிரதேச செயலாளர் நேரடியாகவும், வாய்மொழி மூலமாகவும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர், தனக்கு அறிவுறுத்தியதனால் தான் இடத்துக்கான சிபாரிசினை வழங்கியதாக குறிப்பிட்டதற்கு இணங்க சமூகமட்ட அமைப்புக்கள் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுத் தலைவரை சந்தித்து கலந்துரையாடிய பின்னர் அடுத்தகட்ட நடவடிக்கையை மேற்கொள்வதென முடிவு செய்யப்பட்டுள்ளது. உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரி மற்றும் உடுப்பிட்டி மகளிர் கல்லூரி ஆகியவற்றிலிருந்து 500 மீற்றருக்கும் குறைவான தொலைவில் உடுப்பிட்டிச் சந்தியிலிருந்து நவிண்டில் நோக்கிய வீதியில் இமையாணன் மேற்கில், பிரதான வீதியிலேயே இந்த மதுபானசாலை அமைக்கப்பட்டுள்ளது. அதேவேளை, இமையாணன் இ.த.க பாடசாலையிலிருந்தும் நவிண்டில் தாமோதரா பாடசாலையிலிருந்தும் இந்த மதுபானசாலை மிகக் குறைந்த தூரத்தில் இருப்பதால், இது மாணவர்கள் மத்தியில் மதுபான பாவனையை ஊக்கப்படுத்திவிடும் என அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/171382
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.