Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. வரலாற்றில் மிகப் பெரிய பீபா உலகக் கிண்ணத்துக்கான அணிகளுக்குரிய பகிரங்க குலுக்கல் இன்று 05 Dec, 2025 | 08:17 PM (நெவில் அன்தனி) கால்பந்தாட்ட வரலாற்றில் முதல் தடவையாக 48 நாடுகள் பங்குபற்றும் மிகப் பெரிய FIFA உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டி அமெரிக்க கண்டத்தில் அடுத்த வருடம் நடைபெறவுள்ளது. உலகக் கிண்ணப் போட்டிக்கான அணிகளைக் குழுநிலைப் படுத்தும் பகிரங்க குலுக்கல் வொஷிங்டன் டிசியில் அமைந்துள்ள கென்னடி நிலையத்தில் இன்று வெள்ளிக்கிழமை (05) இரவு நடைபெறவுள்ளது. ஐக்கிய அமெரிக்கா, கனடா, மெக்சிகோ ஆகிய மூன்று நாடுகள் கூட்டாக உலகக் கிண்ண கால்பந்தாட்ட சுற்றுப் போட்டியை நடத்தவுள்ளன. உலகக் கிண்ண கால்பந்தாட்ட வரலாற்றில் மூன்று நாடுகள் கூட்டு சேர்ந்து நடத்துவது இதுவே முதல் தடவையாகும். 2002 உலகக் கிண்ணப் போட்டியை ஜப்பான், தென் கொரியா ஆகிய இரண்டு நாடுகள் கூட்டாக நடத்தியிருந்தன. அதுவே கூட்டாக நடத்தப்பட்ட முதலாவது உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டியாகும். நான்கு ஜாடிகளில் தலா 12 நாடுகள் உலகக் கிண்ணப் போட்டியில் விளையாட இதுவரை 42 நாடுகள் தகுதிபெற்றுள்ளதுடன் இன்னும் 6 நாடுகள் தகுதிபெறவுள்ளன. இந்த 48 நாடுகளும் நான்கு ஜாடிகளில் நிரல்படுத்தல் பிரகாரம் இடம்பெறுகின்றன. ஜாடி 1: கனடா, மெக்சிகோ, ஐக்கிய அமெரிக்கா (இந்த மூன்றும் கூட்டு வரவேற்பு நாடுகள்), ஸ்பெய்ன், நடப்பு உலக சம்பியன் ஆர்ஜன்டீனா, பிரான்ஸ், இங்கிலாந்து, பிறேஸில், போர்த்துக்கல், நெதர்லாந்து, பெல்ஜியம், ஜேர்மனி. ஜாடி 2: குரோஷியா, மொரோக்கோ, கொலம்பியா, உருகுவே, சுவிட்சர்லாந்து, ஜப்பான், செனகல், ஈரான், தென் கொரியா, ஈக்வடோர், ஆஸ்திரியா, அவுஸ்திரேலியா. ஜாடி 3: நோர்வே, பனாமா, எகிப்து, அல்ஜீரியா, ஸ்கொட்லாந்து, பரகுவே, டியூனிசியா, கோட் டி'ஐவொயர் (ஐவரி கோஸ்ட்), உஸ்பெகிஸ்தான், கத்தார், சவூதி அரேபியா, தென் ஆபிரிக்கா. ஜாடி 4: ஜோர்தான், கபோ வேர்டே, கானா, கியூராகாவோ, ஹெய்ட்டி, நியூஸிலாந்து, ஐரோப்பிய ப்ளே ஓவ் ஏ, பி, சி, டி, FIFA ப்ளே ஓவ் சுற்றுப் போட்டி 1, 2. ஜாடி 1இல் இடம்பெறும் 12 அணிகளும் A இலிருந்து L வரை 12 குழுக்களில் முதல் அணிகளாக குலுக்கல் மூலம் நிரல்படுத்தப்படும். 2026 உலகக் கிண்ணப் போட்டிகளை முன்னின்று நடத்தும் வரவேற்பு நாடுகள் என்ற வகையில் ஜாடி 1இல் (Pot 1) இடம்பெறும் மெக்சிகோ, கனடா, ஐக்கிய அமெரிக்கா ஆகியன வெவ்வேறு நிறங்களிலான பந்துகளைக் கொண்டு முதல் அணிகளாக நிரல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மூன்று அணிகளும் ஏ 1 - மெக்சிகோ (பச்சை பந்து), பி 1 - கனடா (சிவப்பு பந்து), டி 1 - ஐக்கிய அமெரிக்கா (நீல பந்து) என நிரல்படுத்தப்படும். ஜாடி 2இல் இடம்பெறும் அணிகள் 12 குழுக்களில் 2ஆவது அணிகளாகவும் ஜாடி 3இல் இடம்பெறும் அணிகள் 3ஆவது அணிகளாகவும் ஜாடி 4இல் இடம்பெறும் அணிகள் 4ஆவது அணிகளாகவும் குலுக்கல் மூலம் தெரிவு செய்யப்படும். சம அளவிலான போட்டித் தன்மை சம அளவிலான போட்டித் தன்மையை உறுதிப்படுத்தும் வகையில் அரை இறுதிகளுக்கு நான்கு வெவ்வேறு குழுக்களிலிருந்து அணிகள் தெரிவாகும். அதாவது பீபா தரவரசையில் முதல் இரண்டு இடங்களில் இருக்கும் ஸ்பெய்ன், ஆர்ஜன்டீனா ஆகியன ஒரு பகுதியில் மேல் பாதி மற்றும் கீழ் பாதியாக (Top half and Bottom half) விளையாடும். அதேபோன்று தரவரிசையில் 3ஆம், 4ஆம் இடங்களில் உள்ள பிரான்ஸ், இங்கிலாந்து ஆகியன மற்றொரு பகுதியில் மேல் பாதி மற்றும் கீழ் பாதியாக விளையாடும். இந்த அணிகள் தத்தம் குழுக்களில் முதலிடத்தைப் பெற்றால் அரை இறதிவரை ஒன்றை ஒன்று எதிர்கொள்ள மாட்டாது. 12 குழுக்களில் நடத்தப்படும் உலகக் கிண்ணப் போட்டியில் ஐக்கிய ஐரோப்பிய கால்பந்தாட்ட சங்கத்தைத் தவிர்ந்த ஏனைய கூட்டு சம்மேளனங்களை சேர்ந்த இரண்டு அணிகள் ஒரு குழுவில் இடம்பெறாது என கொள்கை அளவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடுகளுக்கு இது பொருந்தாது. ஏனெனில் ஐக்கிய ஐரோப்பிய கால்பந்தாட்ட சங்கத்தைப் பிரதிநிதித்தவப்படுத்தும் 16 அணிகள் உலகக் கிண்ணத்தில் விளையாடவுள்ளன. அதேவேளை, ஒரே குழுவில் இரண்டு ஐரோப்பிய அணிகளுக்கு மேல் இடம்பெறாது. பீபா உலகக் கிண்ண குலுக்கலில் பங்குபற்றும் உலகத் தலைவர்கள் வொஷிங்டன் டி சி கென்னடி நிலையத்தில் இலங்கை நேரப்படி இன்று இரவு 10.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ள 42 அணிகளுக்கான பகிரங்க குலுக்கலின் போது வரவேற்பு நாடுகளின் தலைவர்கள் உட்பட இன்னும் பல நாடுகளின் தலைவர்கள் பங்குபற்றுவர் எனத் தெரிவிக்கப்படுகிறது. கனடா பிரதமர் மார்க் கார்னி, மெக்சிகோ ஜனாதிபதி குளோடியா ஷெய்ன்போம், அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்ப் ஆகிய மூவரும் இறுதி குலுக்கலின்போது அரங்கில் பிரசன்னமாகி இருப்பர். உலகக் கிண்ணப் போட்டிகள் நடைபெறவுள்ள 16 நகரங்களில் உள்ள இலட்சக்கணக்கான இரசிகர்களிடம் போட்டிகளைக் கண்டு களிக்க வருகை தருமாறு மூன்று தலைவர்களும் அழைப்பு விடுக்கவுள்ளனர். அத்துடன் கால்பந்தாட்ட கூட்டு சம்மேளனங்களின் தலைவர்கள் உட்பட பிரதிநிதிகளும் கலந்து இன்றைய வைபவத்தில் பங்குபற்றவுள்ளனர். ஈரான் கால்பந்தாட்ட சங்கத் தலைவருக்கு விசா மறுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும் இந்த சங்கத்தைச் சேர்ந்த நான்கு பிரதிநிதிகள் ஏற்கனவே அமெரிக்கா சென்றுள்ளதாக அறியக்கிடைக்கிறது. பீபா உலகக் கிண்ணம் 2026 பீகா உலகக் கிண்ணப் போட்டிகள் 2026 ஜூன் 11ஆம் திகதி முதல் ஜூலை 19ஆம் திகதிவரை நடைபெறும். 72 குழுநிலைப் போட்டிகள், இறுதிப் போட்டி மற்றும் 3ஆம் இடத்துக்கான போட்டிகள் உட்பட 32 நொக் அவுட் போட்டிகளுளுடன் மொத்தம் 104 போட்டிகள் நடைபெறும். உலகக் கிண்ண கால்பந்தாட்டத்தை மூன்றாவது தடவையாக அரங்கேற்றவுள்ள மெக்சிக்கோ முதலாவது போட்டியை ஜூன் 11ஆம் திகதி தனது அணியின் பங்கேற்புடன் மெக்சிகோ சிட்டி விளையாட்டரங்கில் அரங்கேற்றும். மெக்சிகோவில் மொத்தம் 13 போட்டிகள் நடத்தப்படும். கனடா முதல் தடவையாக உலகக் கிண்ணப் போட்டிகளை நடத்துகின்றது. அந்த நாட்டிலும் 13 போட்டிகள் நடத்தப்படும். கனடா தனது ஆரம்பப் போட்டியை டொரொன்டோ விளையாட்டரங்கில் ஜூன் 12ஆம் திகதி நடத்தும். ஐக்கிய அமெரிக்காவில் மொத்தம் 78 போட்டிகள் நடைபெறும். ஐக்கிய அமெரிக்காவின் ஆரம்பப் போட்டி லொஸ் ஏஞ்சலிஸில் ஜூன் 12ஆம் திகதி நடைபெறும். உலக சம்பியனைத் தீர்மானிக்கும் மாபெரும் இறுதிப் போட்டி நியூ யோர்க் நியூ ஜேர்சி விளையாட்டரங்கில் ஜூலை 19ஆம் திகதி அரங்கேற்றப்படும். இப் போட்டிகளை முன்னிட்டு 60 இலட்சம் டிக்கெட்கள் விற்பனை செய்யப்படவுள்ளதுடன் அவற்றில் 2 இலட்சம் டிக்கெட்கள் ஏற்கனவே விற்றுத் தீர்ந்துவிட்டன. https://www.virakesari.lk/article/232570
  2. “சாகர் பந்து” நடவடிக்கையின் கீழ் இலங்கைக்கு உதவி : 9வது இந்திய நிவாரண விமானம் கட்டுநாயக்கவை வந்தடைந்தது! Published By: Digital Desk 1 07 Dec, 2025 | 12:10 PM இந்தியாவால் பெயரிடப்பட்ட "சாகர் பந்து" நடவடிக்கையின் கீழ் இலங்கைக்கு அனர்த்த நிவாரண உதவிகளை ஏற்றிச் செல்லும் 9வது இந்திய விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது. இந்த விமானத்தில் 110 அடி நீளம், 65 மெட்ரிக் தொன் எடையும் கொண்ட பெய்லி பாலம், ஒரு ஜேசிபி பேக்ஹோ வாகனத்துடன் இந்திய இராணுவ பொறியியலாளர் படையின் 13 பொறியாளர்கள் நாட்டை வந்தடைந்தனர். இந்திய விமானப்படையின் மிகப்பெரிய சரக்கு விமானமான சி-17, நேற்று (6) பிற்பகல் 3.15 மணிக்கு இந்தியாவின் ஆக்ராவிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்தடைந்தது. இலங்கை இராணுவ பொறியியலாளர் படையின் அதிகாரிகள் குழுவும், இலங்கையில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் அதிகாரிகள் குழுவும் இதனை வரவேற்றனர். https://www.virakesari.lk/article/232659
  3. இந்தோனேசியாவில் வெள்ளப் பேரழிவு: பலியானோரின் எண்ணிக்கை 900ஐ கடந்தது ; நூற்றுக்கணக்கானோர் மாயம்! Published By: Digital Desk 1 07 Dec, 2025 | 12:02 PM இந்தோனேசியாவில் வெள்ளத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 900ஐ கடந்துள்ளதுடன், நூற்றுக்கணக்கானவர்களை காணவில்லை என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த வாரம் மலாக்கா ஜலசந்தியில் உருவான சூறாவளியால் 100,000க்கும் மேற்பட்ட வீடுகள் அழிவடைந்துள்ளன. இது தென்கிழக்காசிய நாட்டின் சில பகுதிகளில் மழை மற்றும் மண்சரிவுகளை ஏற்படுத்தியது. இந்தோனேசியாவில் ஏற்பட்ட வெள்ளம் அண்மைய வாரங்களில் ஆசியாவைத் தாக்கிய பல தீவிர வானிலை நிகழ்வுகளில் ஒன்றாகும். மேலும், இலங்கை, தாய்லாந்து, மலேசியா மற்றும் வியட்நாமில் ஒட்டுமொத்த உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை எட்டியுள்ளது. இந்தோனேசியாவின் மிகவும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றான ஆச்சே தமியாங்கில், வெள்ளத்தால் பல கிராமங்கள் முற்றிலுமாக நீரில் மூழ்கி, வாழ்விடங்கள் அடித்துச் செல்லப்பட்டதாக உயிர் பிழைத்தவர்கள் தெரிவித்துள்ளனர். லிண்டாங் பவா கிராமத்தில் உயிர் பிழைத்த ஒருவர் மக்கள் தங்கள் வீடுகளின் கூரைகளின் மீது அமர்ந்து தங்களது உயிரை காப்பாற்றிக்கொண்டதாக சர்வதேச ஊடகமொன்றிற்கு தெரிவித்துள்ளார். "மூன்று நாட்கள் சாப்பிடாமலும் குடிக்காமலும் தங்கள் நான்கு வயது குழந்தைகளுடன் தங்கள் வீடுகளின் கூரைகளின் மீது அமர்ந்து உயிரை காப்பாற்றிக்கொண்டவர்களும் இருந்தனர்" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அவரது கிராமத்தில் சுமார் 90 சதவீத வீடுகள் அழிக்கப்பட்டதாகவும், 300 குடும்பங்கள் செல்ல இடமில்லாமல் போனதாகவும் அவர் கூறியுள்ளார். அங்கு ஏற்பட்ட வெள்ளம் ஒரு சிறைச்சாலையையே மூழ்கடிக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியபோது, கைதிகள் விடுவிக்கப்பட்டதாகவும், அவர்களை அனுப்புவதற்கு வேறிடம் இல்லை என்றும் அதிகாரிகள் கூறியதாகவும் இந்தோனேசிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சிபோல்கா நகரம் மற்றும் மத்திய தபனுலி ஆகிய இரண்டு பகுதிகளுக்கான நில அணுகல் ஞாயிற்றுக்கிழமை வரை துண்டிக்கப்பட்டிருந்தது. உதவிகள் விமானம் மற்றும் கடல் வழியாக மட்டுமே அவர்களை அடைய முடிந்தது. சில பகுதிகளில் உள்ள பல்பொருள் அங்காடிகளில் கொள்ளை நடந்ததாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. https://www.virakesari.lk/article/232654
  4. பாகிஸ்தானின் முப்படைகளின் பிரதானியாக அசிம் முனீர் நியமனம் 06 Dec, 2025 | 11:20 AM பாகிஸ்தானில் இதுவரை இல்லாத புதிய உயர்பதவியாக “ முப்படைகளின் பிரதானி” (Chief of Defence Forces – CDF) உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் பதவியை உருவாக்க, பாகிஸ்தான் அரசியலமைப்பின் 243 ஆவது பிரிவில் 27வது திருத்தச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தியாவின் “ஆபரேசன் சிந்தூர்” நடவடிக்கையில் பாகிஸ்தான் எதிர்கொண்ட கடும் பின்னடைவை அடுத்து, பாதுகாப்பு அமைப்பை மறுசீரமைக்கும் நோக்கில் பாகிஸ்தான் அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், தற்போதைய இராணுவத் தளபதியான பீல்ட் மார்ஷல் அசிம் முனீருக்கு பதவி நீட்டிப்பு வழங்கும் வகையிலும் இந்த புதிய பதவி உருவாக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, பாகிஸ்தானின் முதல் முப்படைகளின் பிரதானியாக அசிம் முனீரை நியமிக்கும் பிரதமரின் பரிந்துரையை அந்நாட்டு ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி அங்கீகரித்து உள்ளார். இந்த நியமனம் 5 ஆண்டுகள் செல்லுபடியாகும் என்று ஜனாதிபதி அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. புதிய பதவியை ஏற்றுக்கொள்ளும் அசிம் முனீர், இதுவரை வகித்து வந்த இராணுவத் தளபதி (Army Chief) பொறுப்பையும் தொடர்வார். முப்படைகளின் பிரதானி பதவிக்கு உட்பட்ட அதிகாரம், இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை என மூன்று முப்படைகளையும் ஒரே கட்டமைப்பின் கீழ் ஒருங்கிணைக்க வழிவகுக்கும். இதுவரை முப்படைகளின் அதிகாரமும் கட்டுப்பாடும் ஜனாதிபதி மற்றும் அமைச்சரவையின் கீழ் இருந்தது. இனி அந்த அதிகாரம் ஒரே உயரதிகாரியிடம் ஒருங்கிணைக்கப்படுகிறது. நாட்டின் பாதுகாப்பு அமைப்பில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் இந்த புதிய பதவி, பாகிஸ்தானின் பாதுகாப்பு கொள்கையில் முக்கிய திருப்பமாகப் பார்க்கப்படுகிறது. https://www.virakesari.lk/article/232591
  5. 'டாடா காப்பாத்துங்க' : மண் சரிவால் சேறும் சகதியும் புகுந்த வீட்டிற்குள் கேட்ட குழந்தையின் குரல் கட்டுரை தகவல் முரளிதரன் காசிவிஸ்வநாதன் பிபிசி தமிழ் 7 டிசம்பர் 2025, 06:41 GMT புதுப்பிக்கப்பட்டது 28 நிமிடங்களுக்கு முன்னர் இலங்கையில் நிலச்சரிவுகளால் பலர் உயிரிழந்திருக்கும் நிலையில், பதுளை மாவட்டத்தில் மார்பளவு மண்ணில் புதைந்த பலர் துணிச்சலான சிலரது முயற்சியால் உயிரோடு மீட்கப்பட்டிருக்கிறார்கள். என்ன நடந்தது? இலங்கையின் உவா மாகாணத்தில் பதுளை மாவட்டத்தில் பண்டாரவிளை நகரிலிருந்து சற்றுத் தொலைவில் அமைந்திருக்கிறது கவரக்கெல பகுதி. தேயிலைத் தோட்டங்கள் சூழ அமைந்திருக்கும் இந்த மலைப் பிரதேசத்தில்தான் நிலச்சரிவில் சிக்கிய பலர் உயிரோடு மீட்கப்பட்டார்கள். கவரக்கெலவில் வசிப்பவர்கள் பெரும்பாலும் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள். தித்வா புயலின் தாக்கம் இலங்கையை நெருங்கியதும் இங்கும் தொடர்ச்சியாக மழை பெய்ய ஆரம்பித்தது. நவம்பர் 27ஆம் தேதிவரை எல்லாம் வழக்கம் போலவே இருந்தது. நவம்பர் 27ஆம் தேதியன்றும் காலையிலிருந்து வழக்கமான மழைதான் பெய்துகொண்டிருந்தது. பிற்பகலுக்கு மேல் மழையின் தீவிரம் அதிகமானது. இந்த நிலையில், கவரக்கெலயின் பிரதான பாதையை ஓட்டியுள்ள மலைப் பகுதிகள் சிறிய அளவில் சரிய ஆரம்பித்தன. இதனால் அந்தப் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் அங்கிருந்த ஆட்களை ஒரு வாகனத்தை வைத்து வேறு இடங்களுக்கு அழைத்துச் செல்ல முயன்றார்கள். ஆனால், வாகனத்தில் ஆட்கள் ஏறி, வாகனம் நகர்வதற்குள் மழை நீர் அதிகரிக்கவே அவர்களுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. "அந்த நேரத்தில் இரு பக்கங்களில் இருந்தும் மண் சரிந்து, தண்ணீரோடு கலந்து வர ஆரம்பித்தது. பக்கத்தில் இருந்த கோவிலில் புதுப்பிக்கும் பணிகள் நடந்துகொண்டிருந்ததால் அங்கிருந்த பலகைகளையும் கயிறையும் வைத்து ஆட்களை மீட்டு, மற்றொரு பக்கம் அனுப்பிக் கொண்டிருந்தோம். அந்த நேரத்தில்தான் மலைப் பகுதியிலிருந்து பெரிய அளவில் மண் சரிய ஆரம்பித்தது" என்றார் மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த இளைஞர்களில் ஒருவரான ஆர். கஜேந்திரன். கவரக்கெலயின் பிரதான பாதையை ஓட்டி, கீழே இருந்த பகுதியில் சில வீடுகள் அடுத்தடுத்து அமைந்திருந்தன. மழை பெய்துகொண்டிருந்த அந்த நேரத்தில் பல வீடுகளில் இருந்த ஆட்கள் வெளியேறிவிட, மூன்று வீடுகளில் வசித்தவர்கள் உள்ளேயே இருந்தனர். ஒவ்வொரு வீட்டிலும் குழந்தைகளும் இருந்தன. அதில் ஒரு வீட்டில்தான் செல்வராஜ் - ரேணுகா தேவி தம்பதி வசித்துவந்தனர். அந்த மழை நாளில், அவர்களது வீட்டில் மூன்று பேரக் குழந்தைகளும் வந்திருந்தார்கள். இவர்களை சாப்பிட வைத்துக் கொண்டிருந்த நேரத்தில்தான் பெரிய நிலச்சரிவு ஏற்பட்டு, வீட்டிற்குள் சகதியும் தண்ணீரும் புகுந்ததாக செல்வராஜ் கூறினார். "எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. ஐயோ, நாம் போனாலும் பரவாயில்லை, நம் பேரப் பிள்ளைகளும் இதில் சிக்கிக் கொண்டுவிட்டார்களே என்று இருந்தது. குழந்தைகளையும் தூக்கிக்கொண்டு தப்பிக்க முயன்றேன். வெளியில் வரும்போது என் மனைவியின் சேலை எதிலோ சிக்கிக்கொண்டுவிட்டது. நானும் சகதியில் சிக்கினேன்" என்கிறார் செல்வராஜ். அந்த நேரத்தில் பக்கத்து வீட்டு இளைஞர் ஒருவரும் வேறு சிலருமாகச் சேர்ந்து குழந்தைகளையும் செல்வராஜ் தம்பதியையும் மீட்டுள்ளனர். தற்போது கவரக்கெலையில் ஒரு முகாமில் தங்கியிருக்கிறார்கள் செல்வராஜ் குடும்பத்தினர். "அந்தத் தருணத்தை இப்போது நினைத்தாலும் புத்தி ஏதோ ஆகிவிடுகிறது" என்று சொல்லும்போதே அவரது கைகள் நடுங்குகின்றன. செல்வராஜின் வீட்டிலிருந்த பேரக் குழந்தைகளில் அவருடைய மகள் தங்கேஸ்வரியின் குழந்தையும் ஒன்று. மழையும் வெள்ளமும் வரவும் தந்தையின் வீட்டை நோக்கி ஓடிவந்தார் தங்கேஸ்வரி. ஆனால், தந்தையின் வீடு நிலச்சரிவில் சிக்கியிருந்ததைப் பார்த்த அவர், அதில் சிக்கி தன் குழந்தையும் போய்விட்டது என்றுதான் முதலில் நினைத்துள்ளார். "நான் பாதி வழி வரும்போதே என் அப்பாவின் வீட்டில் மண் சரிந்துவிட்டதைப் பார்த்தேன். அவ்வளவுதான், என் குழந்தையை மீட்க முடியாது என நினைத்தேன். 'அப்பா வீட்டிற்கு குழந்தை அனுப்பினேன். அவர்கள் மண்ணுக்குள் போய்விட்டார்கள்' என கத்தினேன். சிறிது நேரத்திலேயே அப்பாவின் பக்கத்து வீட்டில் இருந்த பையன், பாப்பாவை மண்ணில் இருந்து எடுத்திருக்கிறார்கள் என்று சொன்னான்" என்கிறார் தங்கேஸ்வரி. குழந்தை மீட்கப்பட்டுவிட்டாலும், இந்த நிகழ்வை இப்போது விவரிக்கும்போதும் அவரால் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை. படக்குறிப்பு,மண் சரிவில் சிக்கியவர்களை மீட்ட இளைஞர்கள் செல்வராஜ் வீட்டிற்கு பக்கத்து வீட்டில் இருந்த யோகத்தின் வீட்டில் அவரும் அவருடைய இரு குழந்தைகளும் மாமியாரும் இருந்தனர். கணவர், மழை நீரைத் திருப்பிவிடுவதாகச் சொல்லி வெளியில் போயிருந்தார். அந்த நேரத்தில் நிலச்சரிவு வந்துவிட, தன் குழந்தைகளை அருகில் இருந்த பாதை மீது தூக்கிப்போட்டுவிட்டு, அவரும் வெளியேறினார். ஆனால், மாமியார் உள்ளேயே சிக்கிக்கொண்டார். "என்ன செய்றதுன்னே எனக்குத் தெரியவில்லை. கத்திக்கொண்டே ஓடினேன். அப்போது மேலே இருந்து சில இளைஞர்கள் ஓடி வந்தார்கள். என் மாமியாரை யாராலும் காப்பாற்ற முடியாது என்றுதான் நினைத்தேன். ஆனால், எல்லோரும் சேர்ந்து அவரைக் காப்பாற்றிவிட்டார்கள்" என்கிறார் அவர். இவர்களது பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர் கமல்ராஜ். இவர் வீட்டிற்குள்ளும் நிலச்சரிவால் சேறும் சகதியும் புகுந்தபோது வீட்டிற்குள் குழந்தை இருந்தது. அவர் தனது வீட்டிலிருப்பவர்களைக் காப்பாற்ற வந்தபோது மார்பளவுக்கு சேறும் சகதியும் நிறைந்திருந்தது. "சகதியால் சூழப்பட்டிருந்த வீட்டிற்குள் செல்லும்போது 'டாடா காப்பாத்துங்கன்னு' குழந்தையின் சத்தம் கேட்டது. பதற்றத்துடன் வீட்டிற்குள் சென்று பார்த்தால், யாரும் இருக்கும் இடமே தெரியவில்லை. குழந்தை எங்கே இருக்கிறாள் என்றே தெரியவில்லை. நான் தடவித் தடவி உள்ளே சென்றபோது 'டாடா வந்துட்டீங்களா' என்று குழந்தையின் குரல் கேட்டது. அவ்வளவுதான். வீட்டிற்குள்ளிருந்த ஒவ்வொருவரையும் பிடித்து இழுத்து வெளியில் வந்து சேர்த்தேன்" என்கிறார் கமல்ராஜ். "ஆனால், வீட்டை நெருங்கும்போது 'டாடா, என்னை எப்படியாவது காப்பாத்திடுங்க டாடா' என்ற குழந்தையின் குரல்தான் எனக்குத் தெம்பைக் கொடுத்தது. இல்லாவிட்டால் இது நடந்திருக்காது" என்கிறார் கமல்ராஜ். இங்கிருந்தவர்களின் துணிச்சலான முயற்சிகளால், இந்த நிலச்சரிவில் கவரக்கெலயில் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை. இந்த இடத்திலிருந்து மீட்கப்பட்ட அனைவரும் இப்போது பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். வீட்டையும் பொருட்களையும் இழந்தவர்களுக்கு அரசு நிவாரண உதவிகளை அறிவித்திருக்கிறது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/czj0mejxkk9o
  6. 950 மெட்ரிக் தொன் அவசர உதவி பொருட்களுடன் இன்று இலங்கை வரும் தமிழக நிவாரணக் கப்பல் Published By: Digital Desk 1 07 Dec, 2025 | 08:31 AM (லியோ நிரோஷ தர்ஷன்) 'டித்வா' புயல் மற்றும் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில், தமிழ்நாடு அரசின் சார்பில் அனுப்பி வைக்கப்பட்ட நிவாரணப் பொருட்கள் அடங்கிய கப்பல் இன்று ஞாயிற்றுக்கிழமை நாட்டை வந்தடையவுள்ளது. சென்னை துறைமுகத்தில் நடைபெற்ற விசேட நிகழ்வில், தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இந்த மனிதாபிமான உதவிப் பொருட்கள் ஏற்றிய கப்பலை கொடியசைத்து அனுப்பி வைத்தார். இந்த நிகழ்வில் தமிழகத்திற்கான இலங்கை துணைத் தூதுவர் வைத்தியர். கணேசநாதன் கேதீஸ்வரன் உட்பட தமிழக அரசின் முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர். இது குறித்து தமிழகத்திற்கான இலங்கை துணைத் தூதுவர் வைத்தியர். கணேசநாதன் கேதீஸ்வரன் வீரகேசரிக்கு கருத்துத் தெரிவிக்கையில், இலங்கை மக்களுக்கு நிவாரணம் அளிப்பதற்காக, உணவுப் பொருட்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய மொத்தமாக 950 மெட்ரிக் தொன் பொருட்கள் சென்னை மற்றும் தூத்துக்குடி துறைமுகங்களில் இருந்து கப்பல்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்த 950 மெட்ரிக் டொன் நிவாரணப் பொதிகளில் பருப்பு, சீனி மற்றும் பால் மா போன்ற அத்தியாவசிய உணவுப் பொருட்கள் பெருமளவில் உள்ளடங்குகின்றன. அத்துடன், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் உடனடித் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், 10,000 துவாய்கள் (TOWELS) 5,000 சேலைகள், 5,000 வேட்டிகள், 10,000 படுக்கை விரிப்புகள் மற்றும் 1,000 தற்காலிக கூடாரங்கள் அமைக்கும் பொருட்கள் (TARPAULIN) போன்ற அத்தியாவசியப் பொருட்களும் கப்பலில் ஏற்றப்பட்டுள்ளன. 'இந்த நெருக்கடியான நேரத்தில் இலங்கைக்கு உடனடியாக உதவிக்கரம் நீட்டிய தமிழக அரசுக்கும், தமிழக மக்களுக்கும் நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளோம். வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தின் ஆலோசனைகளின் பிரகாரம், பேரிடர் இடம்பெற்ற மறுநாளே தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் தமிழக அரசின் அதிகாரிகளைச் சந்தித்து கலந்துரையாடியதுடன், அந்தப் பேச்சுவார்த்தைகள் ஊடாகவே மிக விரைவில் நிவாரணப் பொருட்களை அனுப்ப முடிந்தது. விரைவில் மேலும் சில நிவாரணப் பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை அனுப்புவதற்குத் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். சமீபத்தில் 'தித்வா' புயலால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் இலங்கையில் பெரும் உயிரிழப்புகளும், உடைமைகள் சேதங்களும் ஏற்பட்டன. பாதிக்கப்பட்ட மக்களுக்குத் துணையாக நிற்பதில் தமிழ்நாடு அரசு உறுதியுடன் உள்ளது என முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னதாக அறிவித்திருந்தார். இதேவேளை, மத்திய அரசின் 'சாகர் பந்து நடவடிக்கை' மூலம் இந்தியா ஏற்கனவே கடற்படை கப்பல்கள் மற்றும் விமானப் படைகள் வழியாக தேசிய பேரிடர் மீட்புப் படையினரை அனுப்பி, தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருவதுடன், பல டொன் நிவாரணப் பொருட்களையும் வழங்கி வருகிறது. இந்த நெருக்கடியான காலகட்டத்தில், அவுஸ்திரேலியா, ஜப்பான், பாகிஸ்தான், சீனா, மாலைதீவுகள், அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளும் நிதி மற்றும் மனிதாபிமான உதவிகளை வழங்கி இலங்கையின் மீட்சிக்குத் தோள் கொடுக்கின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும். https://www.virakesari.lk/article/232641
  7. தொடரை வென்ற இந்தியா - குல்தீப், ஜெய்ஸ்வால் ஆட்டத்தின் போக்கை மாற்றியது எப்படி? பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு,யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆட்டமிழக்காமல் 116 ரன்கள் எடுத்திருந்தார். இது அவரது முதல் ஒருநாள் சதமாகும். 6 டிசம்பர் 2025 இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில், இந்தியா 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தொடரை வென்றது. முதலில் பேட் செய்த தென்னாப்பிரிக்க அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 270 ரன்கள் எடுத்தது. 271 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 39.5 ஓவர்களில், ஒரு விக்கெட் மட்டுமே இழந்து வெற்றி பெற்றது. குறிப்பாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆட்டமிழக்காமல் 116 ரன்கள் எடுத்திருந்தார். இது அவரது முதல் ஒருநாள் சதமாகும். இதன் மூலம், மூன்று வகையான கிரிக்கெட்டிலும் சதம் அடித்த ஆறாவது இந்திய பேட்ஸ்மேன் என்ற பெருமையை ஜெய்ஸ்வால் பெற்றுள்ளார். இந்தப் போட்டியில் தொடக்க வீரர் ரோஹித் சர்மா 75 ரன்களும், விராட் கோலி ஆட்டமிழக்காமல் 65 ரன்களும் எடுத்தனர். யஷஸ்வி ஜெய்ஸ்வால், இந்தப் போட்டியின் ஆட்டநாயகன் விருதை வென்றார். விராட் கோலி தொடரின் நாயகன் விருதை வென்றார். மூன்று போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில், இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று சமநிலையில் இருந்ததால், விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் தொடரை வென்றுள்ளது இந்திய அணி. ராய்ப்பூரில் நடந்த இரண்டாவது போட்டியில் தென்னாப்பிரிக்கா 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது, அதே நேரத்தில் முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு,டி காக் 106 ரன்கள் எடுத்திருந்தபோது பிரசித் கிருஷ்ணா பந்தில் ஆட்டமிழந்தார். இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி, முதலில் பந்து வீச முடிவு செய்தது. தென்னாப்பிரிக்க அணியின் தொடக்க வீரர்களாக ரயன் ரிக்கில்டன் மற்றும் குயின்டன் டி காக் களமிறங்கினர். ஆனால், தென் ஆப்பிரிக்காவிற்கு ஆரம்பத்திலே அதிர்ச்சி காத்திருந்தது. அர்ஷ்தீப் சிங் வீசிய முதல் ஓவரின் 5வது பந்தில், ராகுலிடம் கேட்ச் கொடுத்து, ரன்கள் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார் ரிக்கில்டன். அடுத்ததாக கேப்டன் டெம்பா பவுமா களமிறங்கினார். இந்த ஜோடி பத்து ஓவர்கள் வரை பொறுமையாகவே ஆடி வந்தது. அப்போது தென் ஆப்பிரிக்க அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 42 ரன்கள் எடுத்திருந்தது. டி காக் 21 ரன்களும், டெம்பா பவுமா 19 ரன்களும் எடுத்திருந்தனர். அதன் பிறகு, டி காக் அதிரடியாக ஆடத் தொடங்கினார். மறுபுறம் பொறுமையாக ஆடிக்கொண்டிருந்த டெம்பா பவுமா 48 ரன்களில், ஜடேஜா வீசிய பந்தில் ஆட்டமிழந்தார். இதற்கு முந்தைய ஒருநாள் போட்டியில் பவுமா 46 ரன்கள் எடுத்திருந்தார். அதேபோல, இந்தத் தொடரில் ஜடேஜா வீழ்த்திய முதல் விக்கெட்டும் இதுதான். இரண்டாவது விக்கெட்டுக்கு 113 ரன்கள் சேர்த்த டி காக்- டெம்பா பவுமா பார்ட்னர்ஷிப் உடைந்தது இந்தியாவுக்கு உற்சாகத்தை அளித்தது. அதன் பின்னர் மேத்யூ ப்ரீட்ஸ்கே களமிறங்கினார். டி காக் சதத்தை நெருங்கிக்கொண்டிருந்தபோது (93 ரன்கள்), 28வது ஓவரில் பிரசித் கிருஷ்ணா வீசிய பந்தில் எல்பிடபிள்யு முறையில் ஆட்டமிழந்து வெளியேறினார் மேத்யூ ப்ரீட்ஸ்கே. அவர் 24 ரன்கள் எடுத்திருந்தார். அடுத்து களமிறங்கிய எய்டன் மார்க்கரமும் அதே ஓவரில், கோலியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். டி காக் சதம் ஹர்ஷித் ராணா வீசிய 29வது ஓவரில், ஒரு சிக்ஸர் மூலமாக சதத்தை எட்டினார் டி காக். பின்னர் அவர் 32வது ஓவரில் பிரசித் பந்தில் ஆட்டமிழந்தார். 6 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகளுடன், 89 பந்துகளில் 106 ரன்களை எடுத்திருந்தார் டி காக். அப்போது தென்னாப்பிரிக்க அணி 5 விக்கெட் இழப்புக்கு 199 ரன்களை எடுத்திருந்தது. அதன்பிறகு, டெவால்ட் பிரெவிஸ் மற்றும் மார்கோ ஜான்சன் சிறப்பாக விளையாடி தென்னாப்பிரிக்க அணியின் ரன்களை உயர்த்திக் கொண்டிருந்தார்கள். ஆனால் 38வது ஓவரில், குல்தீப் இருவரையும் ஒரே ஓவரில் அவுட்டாக்கி, ஆட்டத்தின் போக்கையே மாற்றினார். 234/5 என்ற நிலையில் இருந்த தென்னாப்பிரிக்கா, 270 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. குல்தீப் 10 ஓவர்களில் 41 ரன்கள் கொடுத்து, 4 விக்கெட்டுகளை எடுத்திருந்தார். பிரசித் கிருஷ்ணாவும் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். அர்ஷ்தீப் சிங் மற்றும் ரவீந்திர ஜடேஜா தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர். இந்தியா வெற்றிபெறுவதற்கு 271 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. யஷஸ்வி ஜெய்ஸ்வால் - ரோஹித் சர்மா கூட்டணியின் அதிரடி பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு,ரோஹித் சர்மா 54 பந்துகளில் 50 ரன்களை எட்டினார். யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ரோஹித் சர்மா தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இந்த ஜோடி இந்திய அணிக்கு ஒரு உறுதியான தொடக்கத்தை அளித்தது. இருவரும் இணைந்து 155 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்து 271 ரன்கள் என்ற இலக்கை எளிதான ஒன்றாக மாற்றினர். ரோஹித் சர்மா 54 பந்துகளில் ஆறு பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் அரை சதமடித்தார். இருப்பினும், 26வது ஓவரின் கடைசி பந்தில், 75 ரன்கள் எடுத்திருந்தபோது, கேசவ் மகாராஜ் பந்தில் ஆட்டமிழந்தார் ரோஹித் சர்மா. அவர் 7 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களுடன், 73 பந்துகளில் 75 ரன்கள் எடுத்திருந்தார். அதன் பிறகு, ஜெய்ஸ்வாலுடன் இணைந்த விராட் கோலி, அதிரடியாக அணியின் ரன்களை உயர்த்தினார். ஜெய்ஸ்வால் 111 பந்துகளில் 10 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 100 ரன்களை எட்டினார். மறுமுனையில், கோலியும் அரை சதத்தைக் கடந்தார். இறுதியில், 39.5 ஓவர்களில் 271 ரன்களை எடுத்த இந்திய அணி, 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தத் தொடரில், இந்திய அணி முதல் ஒருநாள் போட்டியில் 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது, இரண்டாவது ஒருநாள் போட்டியில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. அதேசமயம், இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், தென்னாப்பிரிக்கா இந்தியாவை 2-0 என்ற கணக்கில் தோற்கடித்தது. அடுத்ததாக, ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர் டிசம்பர் 9 ஆம் தேதி தொடங்கும். முதல் போட்டி கட்டாக்கில் நடைபெறும். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cre3vd3pyzdo
  8. முன்னாள் அமைச்சர் ‘சொல்லின் செல்வர்’ செல்லையா இராஜதுரை காலமானார் 07 Dec, 2025 | 12:07 PM இலங்கையின் தலைசிறந்த பேச்சாளரான முன்னாள் அமைச்சர் ‘சொல்லின் செல்வர்’ செல்லையா இராஜதுரை தனது 98ஆவது வயதில் சென்னையில் காலமானார். அவர் 1956ஆம் ஆண்டு முதல் 1989ஆம் ஆண்டு வரை பாராளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றினார். மட்டக்களப்பு மாநகர சபையின் முதலாவது முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பெருமையும் அவருக்குச் சேரும். மட்டக்களப்பு ஆனைப்பந்தி ஆண்கள் பாடசாலையில் ஆரம்பக் கல்வியை முடித்த அவர், பின்னர் மெதடிஸ்த மத்திய கல்லூரியில் மேல் நிலைக் கல்வியை நிறைவு செய்தார். ஊடகவியலாளராகவும் செயல்பட்ட இராஜதுரை, ‘சுதந்திரன்’ பத்திரிகையின் ஆசிரியர் குழுவிலும் பணியாற்றியுள்ளார். 1956ஆம் ஆண்டு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி சார்பில் மட்டக்களப்பு தொகுதியில் போட்டியிட்டு முதன்முறையாக பாராளுமன்றம் சென்றார். தொடர்ந்து 1960 மார்ச், 1960 ஜூலை, 1965 மற்றும் 1970 ஆகிய தேர்தல்களிலும் வெற்றி பெற்றார். இலங்கை தமிழ் அரசுக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணியில் இணைந்ததைத் தொடர்ந்து, 1977ஆம் ஆண்டு தேர்தலில் கூட்டணியின் சார்பில் போட்டியிட்டு மீண்டும் வெற்றி பெற்றார். 1979 பெப்ரவரி 10ஆம் திகதி, அவர் தமிழ் அரசுக் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். பின்னர், அவரை ஆளும் கட்சியில் இணைப்பதற்காக 1979 பெப்ரவரி 22ஆம் திகதி அரசியலமைப்பில் திருத்தம் கொண்டுவரப்பட்டது. 1979 மார்ச் 7ஆம் திகதி, ஜே.ஆர். ஜெயவர்தன தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியில் அவர் இணைந்தார். இதனையடுத்து, அவருக்கு இந்து சமய, பண்பாட்டு, தமிழ் அமுலாக்கல் மற்றும் பிரதேச அபிவிருத்தி அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. பின்னர், மலேசியாவுக்கான இலங்கைத் தூதுவராக நியமிக்கப்பட்டு பணியாற்றினார். அரசுப் பணியில் இருந்து இளைப்பாறிய பின்னர், சென்னையில் புலம்பெயர் வாழ்வை மேற்கொண்டு வந்த நிலையிலேயே அவர் காலமானார். அவரது மறைவுக்கு கொழும்பு சாயி மத்திய நிலையம் உள்ளிட்ட பல அமைப்புகள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளன. அவரது இறுதிக்கிரியைகள் சென்னையில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/232661
  9. மனிதாபிமான நிவாரணப்பொருட்கள் அடங்கிய குழுவினருடன் இலங்கை வந்தது சுவிஸ் நாட்டு விமானம் ! 06 Dec, 2025 | 08:15 PM டித்வா புயல் ஏற்படுத்திய பேரழிவைத் தொடர்ந்து, இலங்கைக்கான அவசர மனிதாபிமான உதவிகளை சுவிற்சர்லாந்து தீவிரப்படுத்தியுள்ள நிலையில், அந்நாட்டு விமானம் ஒன்று நிவாரணப் பொருட்களுடன் இன்று (6) கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது. சுவிஸ் மனிதாபிமான உதவி (Swiss Humanitarian Aid – SHA) வழியாக ஒருங்கிணைக்கப்பட்ட இந்த உதவியின் ஒரு பகுதியாக, இன்று ஏழு நிபுணர்களைக் கொண்ட Swiss Rapid Response Team இலங்கைக்கு வந்துள்ளது. இந்த நிபுணர் குழு, இலங்கையில் உள்ள அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்துடன் (DMC) இணைந்து குடிநீர், சுகாதாரம், சுகாதார பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் நிலைமையறிக்கை, அவசர தேவைகள் மதிப்பீடு மற்றும் அவசர உதவி நடவடிக்கைகளில் ஈடுபட உள்ளது. டித்வா புயலால் பாதிக்கப்பட்ட மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யவும், நிலைமை கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வரவும் சுவிற்சர்லாந்து நாட்டின் இந்த அதிவேக பதிலளிப்பு குழு முக்கிய பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. சுவிஸ் அபிவிருத்தி மற்றும் ஒத்துழைப்பு அமைப்பு (SDC) மற்றும் இலங்கையின் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இணைந்து இந்த மனிதாபிமான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றன. https://www.virakesari.lk/article/232626
  10. இந்தியாவுடனான 2ஆவது சர்வதேச ஒருநாள் போட்டியில் தென் ஆபிரிக்காவுக்கு பரபரப்பான வெற்றி; கோஹ்லி, ருத்துராஜ் ஆகியோரின் சதங்களை மார்க்ராமின் சதம் வீணடித்தது Published By: Vishnu 04 Dec, 2025 | 04:52 AM (நெவில் அன்தனி) ராய்ப்பூர் ஷஹீத் வீர் நாராயண் சிங் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் புதன்கிழமை (03) கடைசிவரை பரபரப்பை ஏற்படுத்திய இந்தியாவுக்கும் தென் ஆபிரிக்காவுக்கும் இடையிலான 2ஆவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 4 பந்துகள் மீதம் இருக்க தென் ஆபிரிக்கா 4 விக்கெட்களால் அபார வெற்றியீட்டியது. ஏய்டன் மார்க்ராம் குவித்த சதம், மெத்யூ ப்றீட்ஸ், டிவோல்ட் ப்ரவிஸ் ஆகியோர் குவித்த அரைச் சதங்கள் என்பன தென் ஆபிரிக்காவுக்கு அவசியமான வெற்றியை ஈட்டிக்கொடுத்தன. இதன் காரணமாக விராத் கோஹ்லி, ருத்துராஜ் கய்க்வோட் ஆகியோர் குவித்த சதங்கள் வீண் போயின. இந்தப் போட்டி முடிவுடன் 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடர் 1 - 1 என சமப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவினால் நிர்ணயிக்கப்பட்ட 359 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென் ஆபிரிக்கா 49.2 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 462 ஓட்டங்களைப் பெற்று மிகவும் பரபரப்பான வெற்றியை ஈட்டியது. மொத்த எண்ணிக்கை 26 ஓட்டங்களாக இருந்தபோது குவின்டன் டி கொக் 8 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். எனினும், ஏய்டன் மார்க்ராம் அற்புதமான சதம் ஒன்றைக் குவித்ததுடன் அடுத்த இரண்டு விக்கெட்களில் பெறுமதிவாய்ந்த இணைப்பாட்டங்களை ஏற்படுத்தி தென் ஆபிரிக்க அணியை சிறந்த நிலையில் இட்டார். இரண்டாவது விக்கெட்டில் அணித் தலைவர் டெம்பா பவுமாவுடன் 101 ஓட்டங்களைப் பகிர்ந்த ஏய்டன் மார்க்ராம், 3ஆவது விக்கெட்டில் மெத்யூ ப்றீட்ஸுடன் 70 ஓட்டங்களைப் பகிர்ந்தார். ஏய்டன் மார்க்ராம் 10 பவுண்டறிகள், 4 சிக்ஸ்களுடன் 110 ஓட்டங்களைக் குவித்தார். டெம்பா பவுமா 46 ஓட்டங்களைப் பெற்றார். தொடர்ந்து மெத்யூஸ் ப்றீட்ஸ், டிவோல்ட் ப்ரவிஸ் ஆகிய இருவரும் 4ஆவது விக்கெட்டில் 92 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியின் மொத்த எண்ணிக்கைக்கு உரமூட்டினர். மெத்யூஸ் ப்றீட்ஸ் 68 ஓட்டங்களையும் டிவோல்ட் ப்ரவிஸ் 54 ஓட்டங்களையும் பெற்றனர். மொத்த எண்ணிக்கை 332 ஓட்டங்களாக இருந்தபோது டோரி டி ஸோர்ஸி 17 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் உபாதைக்குள்ளாகி ஓய்வுபெற நேரிட்டது. எனினும் வெற்றிக்கு மேலும் தேவைப்பட்ட ஓட்டங்களை கோர்பின் பொஷ் (29 ஆ.இ.), கேஷவ் மஹாராஜ் (10 ஆ.இ.) ஆகிய இருவரும் பெற்றுக்கொடுத்தனர். பந்துவீச்சில் அர்ஷ்தீப் சிங் 54 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ப்ராசித் கிரிஷ்ணா 85 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இந்தியா 50 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்களை இழந்து 358 ஓட்டங்களைக் குவித்தது. ரஞ்சியில் மூன்று தினங்களுக்கு முன்னர் சதம் குவித்த விராத் கோஹ்லி, தொடர்ச்சியான இரண்டாவது தடவையாக இன்றைய போட்டியிலும் சதம் குவித்து அசத்தினார். ரோஹித் ஷர்மா (14), யஷஸ்வி ஜய்ஸ்வால் (22) ஆகிய இருவரும் குறைந்த எண்ணிக்கைகளுடன் ஆட்டம் இழந்தனர்.(62 - 2 விக்.) அந்த சந்தர்ப்பத்தில் ஜோடி சேர்ந்த விராத் கோஹ்லி, ருத்துராஜ் கய்க்வோட் ஆகிய இருவரும் மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி சதங்கள் குவித்ததுடன் 3ஆவது விக்கெட்டில் 195 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை பலமான நிலையில் இட்டனர். ரஞ்சியில் 135 ஓட்டங்களைக் குவித்த விராத் கோஹ்லி, ராய்பூரில் 102 ஓட்டங்களைப் பெற்றார். கோஹ்லி குவித்த 53ஆவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் சதம் இதுவாகும். ருத்துராஜ் கய்க்வோட் 105 ஓட்டங்களைப் பெற்றார். சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் ருத்துராஜ் பெற்ற முதலாவது சதம் இதுவாகும். வொஷிங்டன் சுந்தர் வந்த வேகத்தில் ஒரு ஓட்டத்துடன் திரும்பிச் சென்றார். (289 - 5 விக்.) இதனைத் தொடர்ந்து அணித் தலைவர் கே.எல். ராகுல், ரவிந்த்ர ஜடேஜா ஆகிய இருவரும் பிரிக்கப்படாத 6ஆவது விக்கெட்டில் 69 ஓட்டங்களைப் பகிர்ந்து இந்தியாவின் மொத்த எண்ணிக்கையை 258 ஓட்டங்களாக உயர்த்தினர். கே.எல். ராகுல் 66 ஓட்டங்களுடனும் ரவிந்ர ஜடேஜா 24 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர். பந்துவீச்சில் மார்க்கோ ஜென்சன் 63 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார். ஆட்டநாயகன்: எய்டன் மார்க்ராம் https://www.virakesari.lk/article/232375
  11. புலர் அறக்கட்டளையால் 5ஆவது ஆண்டாக நடத்தப்பட்ட மாற்றுத்திறனாளிகள் நாள் நிகழ்வு 03/12/2025 பகுதி 2
  12. மலையகத்தை சீரமைக்க நீண்டகாலத் திட்டம் தேவை - ஜனாதிபதி Dec 6, 2025 - 08:03 PM அனர்த்தத்திற்குப் பின்னரான மக்களின் வாழ்க்கையை மீட்டெடுக்க, சாதாரண அரச பொறிமுறைகளுக்கு அப்பாற்பட்ட ஒருங்கிணைந்த செயல்பாட்டு பொறிமுறை அவசியம் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார். கண்டி மாவட்ட செயலகத்தில் இன்று (06) முற்பகல் நடைபெற்ற கண்டி மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார். மாவட்டத்தின் நெடுஞ்சாலை கட்டமைப்பு, மின்சாரம், நீர் மற்றும் எரிபொருள் விநியோகம், நீர்ப்பாசனம் மற்றும் தொடர்பாடல் கட்டமைப்புகளை சீர்செய்வது உள்ளிட்ட அத்தியாவசிய உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக செயல்படுத்தப்படும் அவசர திட்டங்களின் முன்னேற்றத்தை இதன்போது ஜனாதிபதி தனித்தனியாக மீளாய்வு செய்தார். வீதிக் கட்டமைப்பு நிரந்தரமாக அமைக்கப்படும் வரை, அடுத்த 25 நாட்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியைப் பயன்படுத்தி, வீதிப் புனரமைப்புப் பணிகளை விரைவாக முடிக்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். மாவட்டத்தில் நீர் விநியோகத்தை 03 நாட்களுக்குள் முழுமையாக வழமைக்கு கொண்டுவருமாறு பணிப்புரை விடுத்த ஜனாதிபதி, அதுவரை மக்களின் நீர் தேவைகளை பவுசர்கள் மூலம் பூர்த்தி செய்யுமாறும், இந்த நடவடிக்கைகளில், வழக்கமான செயல்முறைக்கு அப்பால் சென்று, அவசரநிலையாகக் கருதி, முப்படையினரிடமிருந்து தொழில்நுட்ப உதவிகளைப் பெறுமாறும் அறிவுறுத்தினார். மேலும், வீடுகளில் உள்ள கிணறுகளை சுத்தம் செய்யும் பணிகளை பிரதேச செயலகங்களின் பங்களிப்புடன் மேற்கொள்ள அறிவுறுத்திய ஜனாதிபதி, பாரிய சீரமைப்பு பணிகளை இரண்டாம் கட்டத்தில் மேற்கொள்ளும் அதேவேளை, டிசம்பர் 31 ஆம் திகதிக்குள் தற்காலிக பழுதுபார்ப்பு மூலம் மாவட்டத்தில் மின்சார விநியோகத்தை மீட்டெடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். பயிர்ச்செய்கைக்கு ஏற்ற நிலங்களை அடையாளம் கண்டு அவற்றை பயிரிடுவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, பயிர்ச்செய்கைக்கு ஏற்ற நிலங்களை விரைவாகக் கண்டறிந்து அவற்றுக்குத் தேவையான நீர்ப்பாசன வசதிகளை வழங்குவதன் முக்கியத்துவத்தையும், நீர்ப்பாசனத் திணைக்களம், மாகாண நீர்ப்பாசனத் திணைக்களம் மற்றும் கமநல சேவைகள் திணைக்களம் ஆகியவை இணைந்து செயல்பட வேண்டியதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார். மேலும், பயிர்ச்செய்கையில் ஈடுபட முடியுமான விவசாயிகளின் எண்ணிக்கை மற்றும் பயிரிடக்கூடிய விவசாய நிலங்களின் அளவை உடனடியாகக் கண்டறிந்து, அவர்களுக்கு வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ள ரூ.150,000 இழப்பீட்டை உடனடியாக வழங்குமாறும் அறிவுறுத்திய ஜனாதிபதி, அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மாவட்டத்தில் மரக்கறி பயிர்ச் செய்கை குறித்து இரண்டு வாரங்களுக்குள் அறிக்கை பெற்று, அவர்களுக்கு வழங்கப்படும் ஒரு ஹெக்டெயாருக்கு 200,000 ரூபா இழப்பீட்டை வழங்கவும், மரக்கறி பயிர்ச் செய்கைக்கு வழங்கப்படும் அதே இழப்பீட்டுத் தொகையை வாழை பயிர்ச் செய்கைக்கு ஏற்பட்ட சேதத்திற்கு வழங்கக்கூடிய வகையில் தேவையான திருத்தங்களைச் செய்யுமாறும் அறிவுறுத்தினார். கால்நடைத் துறைக்கு அனர்த்தத்தினால் ஏற்பட்ட பாதிப்பு குறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன், பண்ணைகளின் அளவு மற்றும் விலங்குகளின் எண்ணிக்கை குறித்த புதுப்பித்த தரவுகளைப் பேண வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி இதன்போது அதிகாரிகளுக்கு சுட்டிக்காட்டினார். அழிக்கப்பட்ட கால்நடை பண்ணைகளை விரைவாக மீண்டும் தொடங்குவதற்கும், அவர்களின் வருமானத்தை மீட்டெடுப்பதற்கும், பால், கோழி, முட்டை உள்ளிட்ட நாட்டின் உணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் செயற்பட வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி விளக்கினார். மாவட்டத்தில் எரிபொருள் விநியோகத்தை சீர்செய்வது குறித்தும் கலந்துரையாடப்பட்டதுடன், வீதிகள் சேதமடைந்துள்ளதால் எரிபொருள் விநியோகம் தடைபட்டுள்ள புஸ்ஸெல்லாவை மற்றும் மீதலாவ பகுதிகளுக்கு வீதி அபிவிருத்தி அதிகார சபை, முப்படையினர் மற்றும் பொலிஸாரின் ஒருங்கிணைப்புடன் இன்று மாலைக்குள் எரிபொருள் விநியோகத்தை சீர்படுத்துமாறும் பணிப்புரை விடுக்கப்பட்டது. மேலும், கண்டி மாவட்டத்தில் பாடசாலைகளை மீண்டும் திறப்பது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டதுடன், திட்டமிட்டபடி பரீட்சைகளை நடத்துவதற்கு பாடசாலைகளை மீண்டும் திறப்பதில் உள்ள கால இடைவெளியைக் குறைக்க வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி அதிகாரிகளுக்கு சுட்டிக்காட்டினார். மாவட்டத்தில் சுகாதாரம், புகையிரதப் பாதைகள் மற்றும் தொடர்பாடல் வசதிகளை மீளமைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டது. வீடுகளுக்கு ஏற்பட்ட சேதம் மற்றும் அந்த மக்கள் மீளக் குடியேறுதல் தொடர்பான நடவடிக்கைகளில் புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகத்தின் வகிபாகம் மற்றும் பணியாளர் தேவைகளைப் பூர்த்தி செய்வது குறித்தும் கலந்துரையாடப்பட்டது. மக்களை மீளக் குடியேற்றுவதற்காக அருகிலுள்ள அரச காணிகளை அடையாளம் கண்டு சமர்ப்பிக்குமாறும், சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் கலந்துரையாடி அந்தக் காணிகளை விடுவிப்பதற்குத் தேவையான தலையீடு செய்யப்படும் என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். மக்களை மிகவும் பாதுகாப்பாக மீளக் குடியேற்றுவதே அரசாங்கத்தின் நோக்கம் என்றும், முற்றாக அழிக்கப்பட்ட மற்றும் பகுதியளவு சேதமடைந்த வீடுகளுக்கு வழங்கப்படும் இழப்பீடு அந்த நோக்கங்களுக்காக முறையாகப் பயன்படுத்தப்படுகிறதா என்பதை தொடர்ந்து கண்காணிக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் ஜனாதிபதி இங்கு சுட்டிக்காட்டினார். 2025 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் கீழ் இந்த இழப்பீடுகளின் பகுதியளவு வழங்கப்படும் என்பதால், வழங்க முடியமான இழப்பீட்டுத் தொகைகள் அனைத்தையும் டிசம்பர் 31 ஆம் திகதிக்கு முன்னர் வழங்கி முடிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய ஜனாதிபதி, 2026 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டம் சுமையாக இருக்கக் கூடாது என்றும் மக்களின் வாழ்க்கையை மீட்டெடுக்க ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த திட்டங்களை வெற்றிகரமாக்குவதற்கு அனைத்து அரச அதிகாரிகளின் அர்ப்பணிப்பும் அவசியம் என்று தெரிவித்தார். கம்பளை பிரதேசத்தில் குப்பை அகற்றும் பிரச்சினை குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டதுடன், நீண்டகாலத் தீர்வாக மகாவலிக்குச் சொந்தமான காணிகள் விடுவிக்கப்படும் வரை, மின்சார சபைக்குச் சொந்தமான காணிகளை தற்காலிகமாக வழங்குமாறும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார். அனர்த்தம் காரணமாக அரச நிறுவனங்களுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது. வெள்ளம், சூறாவளி, மண்சரிவு போன்ற இயற்கை அனர்த்தங்ளைத் தடுக்க முடியாவிட்டாலும், உயிர்களுக்கும் சொத்துக்களுக்கும் ஏற்படும் சேதங்களைத் தடுக்க முடியும் என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, மத்திய மலைநாட்டைப் பற்றிய முறையான ஆய்வு நடத்தப்பட்டு, பாதிக்கப்பட்டு வரும் மத்திய மலைநாட்டை மீட்டெடுக்க நீண்டகால வேலைத்திட்டம் தயாரிக்கப்பட வேண்டும் என்றும் சுட்டிக்காட்டினார். இதுபோன்ற பேரழிவுகள் மீண்டும் நிகழாமல் தடுக்க பிரதேச சபைகளின் அதிகாரங்களைப் பயன்படுத்த வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, எதிர்காலத்தில் அனுமதிக்கப்படாத நிர்மாணங்களுக்கு இடமளிக்கக் கூடாது என்றும், அத்தகைய இடங்களுக்கு மின்சாரம் வழங்கப்படாமல் இருப்பதை மின்சார சபை உறுதி செய்ய வேண்டும் என்றும் சுட்டிக்காட்டினார். அனர்த்தத்திற்குப் பிறகு நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப நீண்ட காலம் எடுக்கும் என்று சிலர் எதிர்பார்த்த போதிலும், மிகக் குறுகிய காலத்தில் மக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்கு கொண்டுவர அரசாங்கத்தால் முடிந்துள்ளதாகவும், இன்னும் சிறிது காலம் ஒன்றிணைந்து செயல்படுவதன் மூலம் எதிர்பார்த்த இலக்குகளை அடைய முடியும் என்றும் ஜனாதிபதி மேலும் சுட்டிக்காட்டினார். இந்த நடவடிக்கைகளில் அரச அதிகாரிகள் மற்றும் முப்படையினரின் அர்ப்பணிப்பை ஜனாதிபதி விசேடமாக பாராட்டினார். https://adaderanatamil.lk/news/cmiue951x02gao29nsdh4o4hm
  13. அனுபவ பேட்டர்களை கூட குழப்பும் 'கவண்' உத்தி பும்ராவுக்கு வந்தது எப்படி? பட மூலாதாரம்,Getty Images கட்டுரை தகவல் எழுதியவர்,பிரதீப் கிருஷ்ணா பதவி,பிபிசி தமிழ் 6 டிசம்பர் 2025, 10:23 GMT புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் "அவர் ஓடும் விதம் மற்ற எல்லோரும் ஓடுவதை விடவும் வித்தியாசமானது. அவருடைய கடைசி கட்ட 'ஆக்‌ஷனும்' வித்தியாசமாக இருக்கும். நான் அவரது பந்துவீச்சை போதுமான அளவு எதிர்கொண்டிருக்கிறேன். ஆனால், ஒவ்வொரு முறையும் அதற்கு ஒத்துப்போக எனக்கு சில பந்துகள் அவகாசம் எடுக்கவே செய்கிறது" ஆஸ்திரேலிய பேட்டரான ஸ்டீவ் ஸ்மித் கடந்த ஆண்டு சிட்னி மார்னிங் ஹெரால்ட் பத்திரிகைக்குக் கொடுத்த பேட்டியில், ஜஸ்ப்ரித் பும்ராவையும் அவரது பந்துவீச்சு முறை பற்றியும் இப்படிச் சொல்லியிருந்தார். பும்ராவின் வேரியேஷன்கள், அதை சரியான நேரத்தில் பயன்படுத்தும் உத்தி, துல்லியம் மற்றும் சீரான செயல்பாடு அவரை நம்பர் 1 டெஸ்ட் பௌலராக்கியிருக்கிறது. இவற்றையெல்லாம் விட பும்ராவின் 'வித்தியாசமான பௌலிங் ஆக்‌ஷனே' பேட்டர்களுக்கு பெரிய சவாலாக இருப்பதாக ஸ்டீவ் ஸ்மித் போன்ற முன்னணி பேட்டர்கள் பலரும் கூறியுள்ளனர். மெதுவாக ஓடிவந்து, முதுகை முன்னே அதிகமாகவும், பக்கவாட்டில் கொஞ்சமாகவும் வளைத்து, கைகளை முழுமையாக நீட்டி அவர் பந்துவீசும் முறை சற்றே தனித்துவமான ஒன்று. இது அதிகம் காயம் ஏற்படுத்தக்கூடிய முறை என்று ஆரம்பத்தில் பேசப்பட்டிருந்தாலும், வெகுவிரைவிலேயே பும்ராவின் ஆயுதமாக மாறிவிட்டது. அந்த பந்துவீச்சு முறையை 'டீகோட்' செய்த பல முன்னணி வீரர்களும் வல்லுநர்களுமே, அதுவே அவருக்கு மிகப் பெரிய பலம் என்று கூறியிருக்கிறார்கள். விளம்பரம் பும்ராவின் பிறந்த நாளான இன்று (டிசம்பர் 6), அந்த வித்தியாசமான பந்துவீச்சு முறை எப்படி அவரது பலமாக விளங்குகிறது என்று பார்ப்போம். குழப்பம் ஏற்படுத்தும் 'வேகம் இல்லாத சிறிய ரன் அப்' வழக்கமாக பெரும்பாலான வேகப்பந்துவீச்சாளர்களின் ரன் அப் அதிக தூரம் கொண்டதாக இருக்கும். அவர்கள் ஓடிவரும் வேகத்திலிருந்து அவர்களுக்குத் தேவையான ஆற்றலை உருவாக்கிக் கொள்வார்கள். ஆனால், பும்ராவின் ரன் அப் குறுகிய தூரம் கொண்டது. அதேசமயம் மெதுவானதும் கூட. இது பேட்டர்களின் தயார் நிலையை சோதிப்பதோடு, அவர்களுக்கு எதிர்பாராத சவாலைக் கொடுப்பதாகச் சொல்கிறார்கள் இங்கிலாந்தின் இரு முன்னாள் கேப்டன்கள். இந்த ஆண்டு நடந்த இங்கிலாந்து vs இந்தியா டெஸ்ட் தொடரின்போது, ஸ்கை ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் பும்ராவின் பந்துவீச்சு பற்றி அலசியிருந்தார் இங்கிலாந்தின் முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன். Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading அதிகம் படிக்கப்பட்டது '10 அடிக்கு ஒரு பாம்பு': உலகில் அதிக பாம்பினங்கள் வாழும் முதல் 5 நாடுகள் எவை தெரியுமா? தீபத்தூணா, சர்வே கல்லா? திருப்பரங்குன்றம் சர்ச்சையின் பின்னணி 'குளியலறையில் லைஃப் பாய் சோப்': பிரெஷ்னேவ் இந்தியா வந்த போது சோவியத் முன்வைத்த விசித்திரமான கோரிக்கைகள் 'சிங்கத்தை தழுவ கனவு' - தடுப்புகளை தாண்டி குதித்த இளைஞருக்கு என்ன நேர்ந்தது? End of அதிகம் படிக்கப்பட்டது பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,பந்துவீசுவதற்கு முன்பான ரன் அப்பில், மற்ற வேகப்பந்துவீச்சாளர்களைப் போல் பும்ரா அதிக தூரமோ, அதிக வேகமாகவோ ஓடுவதில்லை அப்போது பேசிய நாசர் ஹுசைன், "நீங்கள் (ஒரு பேட்டராக) எப்போது நகரப் போகிறீர்கள் என்று யோசிக்கும் போது பும்ராவின் 'ஸ்டட்டரிங் ரன் அப்' (நின்று நின்று ஓடுவது போன்ற ரன் அப்) சிக்கலை ஏற்படுத்தும். அவர் ஓடி வருவதைப் பார்த்தால், அந்தப் பந்து ஏதோ காலிங்வுட் வீசும் வேகத்தில் (சற்றே மிதமான வேகத்தில்) வரும் என்று எதிர்பார்த்திருப்பீர்கள். ஏன் சில சமயம் அவர் ஓடிவருவதைப் பாதியில் நிறுத்தப் போகிறாரா என்றுகூட நினைப்பீர்கள். ஆனால், அது அப்படியிருக்கப் போவதில்லை" என்று கூறினார். பெரும்பாலான பேட்டர்களுக்குமே 'டிரிகர் மூவ்மெண்ட்' என்பது இருக்கும். அதாவது, அவர்கள் பந்தை எதிர்கொள்வதற்கு முன்னதாக தங்கள் ஸ்டான்ஸில் இருந்து சிறிய அளவு நகர்வார்கள். பந்துவீச்சாளர் ஒரு குறிப்பிட்ட நிலைக்கு வரும்போது, அவர்கள் இந்த நகர்வைத் தொடங்குவார்கள். பெரும்பாலான பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சு முறை வழக்கமான பாணியில் இருக்கும் என்பதால் அவர்களுக்குப் பிரச்னை இருக்காது. இந்த இடத்தில்தான், பும்ராவின் வித்தியாசமான ரன் அப், அவர்களைக் குழப்பிவிடும். அதனால்தான் ஸ்மித் போன்ற அனுபவ வீரருக்கே, ஒவ்வொரு முறையும் பும்ராவை எதிர்கொள்ளும்போது சில பந்துகள் அவகாசம் தேவைப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், அவர் மெதுவாக ஓடிவருவதைப் பார்த்துவிட்டு, பந்தை வேகமாக எதிர்கொள்வதும் பேட்டர்களுக்கு சவால் கொடுக்கிறது என்கிறார்கள் வல்லுநர்கள். கடந்த ஆண்டு, டெய்லி மெயில் பத்திரிகையில் பும்ரா பற்றி எழுதியிருந்த இங்கிலாந்து முன்னாள் கேப்டனும் வேகப்பந்து வீச்சாளருமான ஸ்டுவர்ட் பிராட், "பும்ரா மிகவும் அமைதியாக, மெதுவாக, 'shuffle' செய்து ஓடும்போது அங்கே ஆற்றல் அதிகம் உண்டாகப்படுவதில்லை. அதனால் அங்கு பில்ட் அப்பே இல்லை. அப்படியிருக்கும் போது திடீரென்று பந்து பெரும் வேகத்தில் உங்களை நோக்கி வரும்போது பெரும் குழப்பம் ஏற்படுத்தும். இதுவே மற்ற சிறந்த வேகப்பந்துவீச்சாளர்களைப் பாருங்கள், நல்ல வேகத்தில் ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி கிரீஸை நோக்கி ஓடிவருவார்கள். அப்போது ஒரு பேட்டருக்கு என்ன எதிர்பார்க்க வேண்டும் என்று தெரியும். பும்ரா விஷயத்தில் அது நேரெதிராக இருக்கிறது" என்றார். இதன்மூலம் உளவியல் ரீதியாக ஒரு பேட்டரை பும்ராவின் ரன் அப் குழப்புகிறது என்கிறார் பிராட். பும்ராவின் டெலிவரி ஸ்டிரைட் (Delivery Stride - பந்தை வீசுவதற்கு முன்பான கடைசி அடி) சிறிதாக இருப்பதால் அவரால் சமநிலையைத் தக்கவைக்க முடிகிறது, கட்டுப்பாட்டோடு இருக்க முடிகிறது என்றும் அவர் குறிப்பிட்டார். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,இன்று நம்பர் 1 டெஸ்ட் பௌலராகத் திகழ்கிறார் ஜஸ்ப்ரித் பும்ரா ஆற்றலை உருவாக்கும் பௌலிங் ஆக்‌ஷன் அதேசமயம், மெதுவாக ஓடிவரும் ஒருவரால் எப்படி பந்தை வேகமாக வீசமுடியும் என்ற கேள்வி எழுகிறது. "பெரும்பாலான பௌலர்கள் 60% ஆற்றலை அவர்களின் வேகமான ரன் அப் மூலம் உருவாக்குகிறார்கள். ஆனால், பும்ரா தான் ஓடிவருவதன் மூலம் 30% ஆற்றலையும், தன் பௌலிங் ஆக்‌ஷன் மூலம் 70% ஆற்றலையும் உருவாக்குகிறார்" என்கிறார் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் டேமியன் ஃபிளெமிங். சிட்னி மார்னிங் ஹெரால்ட் பத்திரிகைக்கு கொடுத்த பேட்டியொன்றில் இப்படிக் கூறியிருந்த ஃபிளெமிங், பும்ரா தன் ரன் அப்-ன் கடைசி சில அடிகளில் வேகத்தை உருவாக்குகிறார் என்றும் குறிப்பிட்டார். சில ஆண்டுகளுக்கு முன்பு, பும்ராவின் பந்துவீச்சு முறை பற்றி 7 ஸ்போர்ட் நிகழ்ச்சியொன்றில் அலசியிருந்த ஃபிளெமிங், அந்த பந்துவீச்சு முறையால் அவர் உடல் கவண் போல் செயல்படுவதாகக் குறிப்பிட்டார். பும்ரா பந்தை வீசும்போது, அவருடைய முன்காலுடைய (இடது கால்) முழங்கால் வளையாமல் நேராக இருப்பதால், அது உடலின் கீழ்ப் பகுதியுடைய வேகத்தைக் குறைத்து, மேற்பகுதியின் வேகம் அதிகரிக்க உதவுகிறது என்று ஃபிளெமிங் கூறினார். "பும்ராவின் முன்கால் வேகத்தைக் குறைக்கும்போது, உடல் மற்றும் தோள்பட்டை இலக்கை (பேட்டர்) நோக்கி கவண் போல் செலுத்தப்படுகிறது" என்கிறார் அவர். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,பும்ரா பந்தை வீசும்போது, அவருடைய முன்காலுடைய (இடது கால்) முழங்கால் வளையாமல் நேராக இருப்பதால், அது உடலின் கீழ்ப் பகுதியுடைய வேகத்தைக் குறைத்து, மேற்பகுதியின் வேகம் அதிகரிக்க உதவுகிறது என்கிறார் டேமியன் ஃபிளெமிங். பும்ரா பந்துவீசும்போது அவரது முழங்கை மடக்கப்படாமல் நீண்டிருக்கும். இந்த நிலையை ஹைப்பர்-எக்ஸ்டென்ஷன் (hyperextension) என்கிறார்கள். இந்த நிலையில் பும்ராவுடைய முழங்கையின் வேகம் குறையும்போது, முன்கையின் வேகம் அதிகரித்து, அது கவண் போல் செயல்பட்டு பந்தை முன்னே செலுத்தத் தொடங்குகிறது என்றார் ஃபிளெமிங். மூன்றாவது கட்டமாக அவருடைய மணிக்கட்டும் இதேபோன்ற வேலையைச் செய்வதாக அவர் குறிப்பிடுகிறார். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,மிகையாக நீண்டிருக்கும் பும்ராவின் கையும், வளைந்துகொடுக்கும் அவரது மணிக்கட்டும் கவண் போல் செயல்பட்டு பந்தை இலக்கை நோக்கி செலுத்துகின்றன என்கிறார் டேமியன் ஃபிளெமிங் "பும்ராவின் மணிக்கட்டு நம்பமுடியாத அளவுக்கு வளைந்துகொடுக்கிறது (flexible). இதை நீங்கள் சர்வதேச பௌலர்களிடம் அதிகம் பார்க்க முடியாது. இங்கே உள்ளங்கையின் வேகம் குறையத் தொடங்கும்போது, மணிக்கட்டின் வேகம் கூடி அது கவண் போல் பந்தைத் தள்ளுகிறது" என்று ஃபிளெமிங் கூறினார். இப்படி பும்ராவின் பந்துவீச்சு முறை அவரது உடலின் மூன்று பகுதிகளை கவண் போல் பயன்படுத்துவதால் அவருடைய பந்தில் வேகம் உருவாகிறது. பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,ஜேம்ஸ் ஆண்டர்சன் போன்ற பெரும்பாலான வேகப்பந்துவீச்சாளர்களின் கைகள் பந்துவீசும்போது மடங்கியே இருக்கும். பும்ரா இந்த இடத்தில் மாறுபடுகிறார் விரைவாக கீழே இறங்கும் பந்து பெரும்பாலான பௌலர்களைக் காட்டிலும் பும்ராவின் பந்து சீக்கிரமாக ஆடுகளத்தில் பிட்ச்சாகிவிடும். அதனால் பேட்டர்கள் அதைக் கணிப்பது மிகவும் கடினமாகிறது. இதற்குப் பின்னால் இருக்கும் அறிவியலை, 2019ம் ஆண்டு இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைக்கு எழுதிய கட்டுரையில் விவரித்திருந்தார் ஐஐடி கான்பூரின் விண்வெளி பொறியியல் பேராசிரியர் சஞ்சய் மிட்டல். வேகப்பந்துவீச்சாளர்கள் பந்தை ரிலீஸ் செய்யும்போது, அது பின்னோக்கி சுழன்றுகொண்டே (back spin) செல்கிறது. அப்போது மேக்னஸ் விளைவு (Magnus effect) காரணமாக பந்தில் மேல்நோக்கி விசை ஏற்படுத்தப்படுகிறது. "பேக் ஸ்பின்னுடன் நகரும் கிரிக்கெட் பந்தில் இருக்கும் மேக்னஸ் விசை, பந்தை காற்றில் அதிக நேரம் மிதக்க வைக்கிறது. இது பேட்டர்கள் பந்தை அடிப்பதை எளிதாக்குகிறது" என்கிறார் சஞ்சய் மிட்டல். அதேசமயம், பும்ரா பந்தை அதீதமாக பின்னோக்கி சுழலச் செய்வதால், அவர் தலைகீழ் மேக்னஸ் விளைவை உருவாக்குகிறார் என்றும், அதனால் பந்து விரைவாக பிட்ச் ஆகி பேட்டர்களுக்கு சவால் கொடுக்கிறது என்றும் அவர் கூறுகிறார். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,சாட்டை சுழற்றப்படுவதுபோல் பும்ராவின் மணிக்கட்டு பந்தை ரிலீஸ் செய்வது, அந்தப் பந்து விரைந்து ஆடுகளத்தில் பிட்ச்சாகக் காரணமாகிறது என்கிறார்கள் வல்லுநர்கள் "பும்ராவால், 1000 ஆர்பிஎம் சுழற்சி வேகம் மற்றும் மிகவும் நிலையான சீம் பொசிஷனுடன் சுமார் 145 கிமீ வேகத்தில் பந்து வீச முடியும். இது கிரிக்கெட் பந்திற்கு கிட்டத்தட்ட 0.1 சுழல் விகிதத்தை அளிக்கிறது. ஐஐடி கான்பூரின் தேசிய காற்று சுரங்கப்பாதை வசதியில் உள்ள சுழலும் கோளத்தில் (Rotating sphere at the National Wind Tunnel Facility) செய்யப்பட்ட சோதனைகள், இந்த சுழல் விகிதம் பந்தில் தலைகீழ் மேக்னஸ் விளைவை ஏற்படுத்துகிறது என்பதை வெளிப்படுத்தியுள்ளது. பும்ராவின் அதீத வேகத்தில் நகரும் ஒரு கிரிக்கெட் பந்தில், கீழ்நோக்கிச் செல்லும் விசை செயல்படும்போது, பந்து கூர்மையாகக் கீழ்நோக்கிச் செல்கிறது. எனவே பேட்ஸ்மேன்கள் அவரது பந்துகளைக் கணிப்பதில் சிரமப்படுகிறார்கள்" என்று சஞ்சய் மிட்டல் எழுதியிருந்தார். சாட்டை சுழற்றப்படுவதுபோல் பும்ராவின் மணிக்கட்டு (கவண் போல் என்று ஃபிளெமிங் குறிப்பிட்டது) பந்தை ரிலீஸ் செய்வதுதான் அவரது பந்துகளில் பின்னோக்கிய சுழற்சியை அதிகப்படுத்துகிறது. இது வேகத்தை அதிகப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், பின்னோக்கிய சுழற்சியையும் அதிகப்படுத்துகிறது. அதனால், பந்து விரைவாக பிட்ச் ஆகிறது. ஆக, பும்ராவின் உடல் கவண் போல் செயல்படுவது, வேகத்தை அதிகப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் பந்தை வேகமாக கீழே இறக்கி அவரது பந்துவீச்சை மேலும் தனித்துவமாக்குகிறது. பட மூலாதாரம்,Getty Images குறையும் இடைவெளி, குறையும் நேரம் பும்ராவின் இந்த பௌலிங் ஆக்‌ஷன் இன்னொரு விதத்திலும் பேட்டர்களுக்கு சவாலாக விளங்குகிறது. பெரும்பாலான பௌலர்கள் பந்தை விடுவிக்கும்போது அவர்கள் கை பௌலிங் கிரீஸுக்கு நேர் கோட்டிலோ அல்லது சற்று முன்னரோ இருக்கும். ஆனால், பும்ராவின் வித்தியாசமான பந்துவீச்சு முறை மூலம், அவரது பந்துவீச்சு கையான வலதுகை வெகுதூரம் முன்தள்ளி இருக்கிறது. மிகையாக நீட்டப்பட்ட பும்ராவின் கை (hyperextended arm) காரணமாக, அவர் பௌலிங் கிரீஸிலிருந்து வெகுதூரம் முன்தள்ளி பந்தை விடுவிக்கிறார். இதனால் பந்துக்கும் பேட்டருக்குமான இடைவெளி குறைவதோடு, பேட்டர் எதிர்பார்ப்பதை விட பந்து சீக்கிரமே வந்துவிடுகிறது. அதனால், அவர்கள் அதற்கு வினையாற்றுவதற்கான நேரம் குறைகிறது. அதனால் அவர் வீசும் வேகத்தை விட அதிக வேகத்தில் பந்துவீசுவதாக பேட்டர்கள் உணர்கிறார்கள். இதுபற்றிய ஆர்தர்டன் மற்றும் மார்க் வுட் இடையிலான உரையாடலில், ஒரு தருணத்தில் வுட்டை விட 47 செ.மீ முன்தள்ளி பந்தை பும்ரா ரிலீஸ் செய்ததாகக் குறிப்பிட்டார் ஆர்தர்டன். "அந்தப் பந்து நான் பேட்டை கீழே கொண்டுவருவதற்கு 47 நொடிகள் முன்பாகவே என்னை தாக்கும்" என்று நகைச்சுவையாகப் பதிவு செய்திருந்தார் வுட். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,பௌலிங் கிரீஸிலிருந்து வெகுதூரம் முன்தள்ளியே பந்தை ரிலீஸ் செய்கிறார் ஜஸ்ப்ரித் பும்ரா எந்த பேட்டரும் தங்கள் வாழ்நாள் முழுவதுமே கிரீஸிலிருந்து ரிலீஸ் ஆகும் பந்துக்கே ஆடிப்பழகியிருப்பார்கள். வெகு சில வேகப்பந்துவீச்சாளர்கள் மட்டுமே சற்று முன்னர் வருவார்கள். பும்ராவை எதிர்கொள்ளும்போது அவர்கள் முற்றிலும் பழக்கப்படாத ஒரு சூழ்நிலையைச் சந்திக்கவேண்டியிருக்கிறது. அவர்களால் வேறொரு வேகத்தில் பந்தை சந்திக்கவேண்டிய நிலை ஏற்படுகிறது. இப்படி பல தனித்துவங்கள் நிறைந்ததால் தான் பும்ராவின் பந்துவீச்சைக் கணிப்பது பலருக்கும் சவாலாக இருக்கிறது. இதுபற்றிப் பேசிய நாசர் ஹுசைன், "பும்ராவுடைய ரன் அப், அவருடைய ஆக்‌ஷன், மிகையாக நீண்டிருக்கும் கைகள், பந்தை வீசும்போது அவர் இருக்கும் நிலை... இதையெல்லாம் பார்த்தால் நிச்சயம் பேட்டர்கள் குழப்பம் அடைவார்கள். அதனால் பும்ராவைப் பார்க்காமல், பந்தை மட்டும் பார்த்து ஆடுவதுதான் பாதுகாப்பானது" என்றும் அறிவுரை வழங்குகிறார். இந்த தனித்துவங்கள் போக இன்ஸ்விங், அவுட் ஸ்விங், ரிவர்ஸ் ஸ்விங், ஸ்லோயர் பால்கள் என பல வேரியேஷன்களை வைத்திருக்கும் பும்ரா, அதைத் துல்லியமாகவும் செயல்படுத்துகிறார். 'இந்த பௌலிங் ஆக்‌ஷன் எப்படி வந்தது என்றே தெரியவில்லை' இன்று பெரிய அளவு பேசப்படும் இந்த வித்தியாசமான பௌலிங் ஆக்‌ஷன் தனக்கு எப்படி வந்தது என்றே தெரியவில்லை என்கிறார் பும்ரா. இந்திய முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் உடனான ஒரு உரையாடலில் இதுபற்றிப் பேசியிருந்த அவர், "எனக்கு இந்த பௌலிங் ஆக்‌ஷன் எப்படி வந்தது என்று சரியாகத் தெரியவில்லை. சிறு வயதில் எல்லாமே தொலைக்காட்சியைப் பார்த்து கற்றுக்கொண்டதுதான். பயிற்சியாளர்கள் என்று யாரும் இல்லை. அதனால் அப்போது நான் யாரையெல்லாம் பார்க்கிறேனோ, அவர்களைப் போல பந்துவீசிப் பார்ப்பேன். அவை அனைத்தும் சேர்ந்து இப்படியொரு ஆக்‌ஷன் வந்திருக்கலாம் என்று நினைக்கிறேன்" எனக் கூறினார். இந்த முறையால் தன் உடல் அதிகம் பாதிக்கப்படவில்லை என்றும், அதனால் தான் அதைத் தொடர்ந்ததாகவும் பும்ரா கூறினார். "அப்போது(சிறு வயதில்) பவுண்டரி எல்லைகள் சிறிதாக இருக்கும். அதனால் என்னால் அதிகம் ஓடமுடியாது. அப்போதெல்லாம் நான் இன்றுபோல் நடக்கவில்லை. ஓடிக்கொண்டுதான் இருந்தேன். அதன்பிறகுதான் ஆற்றலை சேமிக்கலாமே என்று கொஞ்சம் நடை, கொஞ்சம் ஓட்டம் என்று மாற்றிக்கொண்டேன். அதனால் வேகம் குறையவில்லை எனும்போது அதையே பின்பற்றத் தொடங்கினேன்" என்றார் பும்ரா. அப்படி ஆற்றலை சேமித்ததன் மூலம் பெரிய ஸ்பெல்கள் வீசும் ரஞ்சி போன்ற போட்டிகளில் மற்ற பௌலர்களை விட தான் சற்று புத்துணர்வாக இருந்ததாகவும் கூறினார். இந்த முறை அங்கு நன்றாகத் தனக்கு உதவியதால், அதையே சர்வதேச அரங்குக்கும் எடுத்துவர முடிவு செய்ததாகவும் கூறினார் பும்ரா. அவர் கூறிய இன்னொரு முக்கியமான விஷயம், அந்த பந்துவீச்சு முறையை எந்த பயிற்சியாளரும் பெருமளவு மாற்றவில்லை என்பது. இந்திய அணியின் முன்னாள் பந்துவீச்சுப் பயிற்சியாளர் பரத் அருண் உடன் கடந்த ஆண்டு நான் கொண்டிருந்த உரையாடலில், அவரும் அதைத்தான் சொல்லியிருந்தார். "எந்தவொரு வீரரின் இயற்கையான இயல்பையும் நாம் விருப்பத்துக்கு மாற்றிவிடக்கூடாது. பயிற்சி கொடுப்பதன் முக்கிய சாராம்சம், அவர்களை மேம்படுத்துவதுதான். நாங்கள் பும்ராவிடம் இயற்கையாகவே திறமை இருப்பதை உணர்ந்தோம். அதை எப்படி சரியாகக் கையாள்வது, எப்படி காயங்கள் ஏற்படாத வகையில் பார்த்துக்கொள்வது, அதற்கு என்ன மாதிரியான முன்னெடுப்புகள் எடுக்கவேண்டும் என்றுதான் திட்டமிட்டோம். பும்ராவின் பௌலிங் ஆக்‌ஷனை மாற்ற நினைத்ததே இல்லை" என்று பரத் அருண் குறிப்பிட்டார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c075dy3grxyo
  14. ஜெனரேட்டரில் கசிந்த விசவாயு : மரணமடைந்த குடும்ப பெண்ணின் சடலம் கையளிப்பு 06 Dec, 2025 | 03:34 PM வீடு ஒன்றினுள் இயங்கிய நிலையில் ஜெனரேட்டரில் இருந்து வெளியாகிய நச்சுவாயுவை சுவாசித்த நிலையில் உயிரிழந்ததாக சந்தேகிக்கப்படும் குடும்பப் பெண்ணின் சடலம் பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் சனிக்கிழமை (06) ஒப்படைக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்முனைக்குடி 5 ஆம் பிரிவு புதிய வீதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் இச்சம்பவம் வியாழக்கிழமை (04) இரவு இடம்பெற்றுள்ளது. குறித்த வீட்டில் அச்சமயம் இருந்த தாய், தந்தை, மகள் ஆகியோர் இவ்வனர்த்தத்தில் பாதிக்கப்பட்டவர்களாவர். வழமை போன்று தனது பெற்றோர்கள் மறுநாள் வெள்ளிக்கிழமை (05) காலை எழும்பவில்லை என சந்தேகமடைந்த மகள் உடனடியாக தனது உறவினர்களுக்கு அறிவித்துள்ளார். இதன் போது குறித்த வீட்டில் இருந்த ஜெனரேட்டரில் இருந்து கசிந்த வாயுவினால் ஏதோ இடம்பெற்றுள்ளதை உணர்ந்த நிலையில் உரிய தரப்பினருக்கு அறிவித்துள்ளனர். இவ்வனர்த்தத்தில் புதிய வீதியில் வசித்து வந்த 54 வயதுடைய குடும்ப பெண் மரணமடைந்துள்ளார். காபன் மொனொக்சைட் காற்றுடன் கலந்து நஞ்சாகியதால் அதை சுவாசித்த நிலையில் குறித்த பெண்ணின் மரணம் சம்பவித்துள்ளதாக தெரிவித்து மரண விசாரணை மற்றும் உடற்கூற்று பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/232608
  15. Published By: Digital Desk 1 06 Dec, 2025 | 12:25 PM நாட்டில் ஏற்பட்ட டித்வா புயலையடுத்தான பேரிடரில் இதுவரையான காலப்பகுதியில் 586,464 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் பாதிக்கப்பட்ட தனிநபர்களின் எண்ணிக்கை 2,082,195ஆக பதிவாகியுள்ளது. பேரிடரில் சிக்கி இதுவரை 607 பேர் உயிரிழந்துள்ளதுடன், 214 பேர் காணாமல் போயுள்ளனர். அதேநேரம், 4,164 வீடுகள் முழுமையாகவும் 67, 505 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன. அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் 1,211 இடங்களில் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டுள்ளனர். 43,715 குடும்பங்களை சேர்ந்த 152,537 பேர் இவ்வாறு தங்கவைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/232599
  16. இயல்பு வாழ்வை மீட்டெடுக்க, சாதாரண அரச பொறிமுறைகளுக்கு அப்பாற்பட்ட செயல்பாட்டு பொறிமுறை அவசியம் ; ஜனாதிபதி 06 Dec, 2025 | 05:26 PM அனர்த்தத்திற்குப் பிறகு மக்களின் வாழ்க்கையை மீட்டெடுக்க, சாதாரண அரச பொறிமுறைகளுக்கு அப்பாற்பட்ட ஒருங்கிணைந்த செயல்பாட்டு பொறிமுறை அவசியம் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார். கண்டி மாவட்ட செயலகத்தில் சனிக்கிழமை (06) முற்பகல் நடைபெற்ற கண்டி மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார். மாவட்டத்தின் நெடுஞ்சாலை கட்டமைப்பு, மின்சாரம், நீர் மற்றும் எரிபொருள் விநியோகம், நீர்ப்பாசனம் மற்றும் தொடர்பாடல் கட்டமைப்புகளை சீர்செய்வது உள்ளிட்ட அத்தியாவசிய உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக செயல்படுத்தப்படும் அவசர திட்டங்களின் முன்னேற்றத்தை இதன்போது ஜனாதிபதி தனித்தனியாக மீளாய்வு செய்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், வீதிக் கட்டமைப்பு நிரந்தரமாக அமைக்கப்படும் வரை, அடுத்த 25 நாட்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியைப் பயன்படுத்தி, வீதிப் புனரமைப்புப் பணிகளை விரைவாக முடிக்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். மாவட்டத்தில் நீர் விநியோகத்தை 03 நாட்களுக்குள் முழுமையாக வழமைக்கு கொண்டுவருமாறு பணிப்புரை விடுத்த ஜனாதிபதி, அதுவரை மக்களின் நீர் தேவைகளை பவுசர்கள் மூலம் பூர்த்தி செய்யுமாறும், இந்த நடவடிக்கைகளில், வழக்கமான செயல்முறைக்கு அப்பால் சென்று, அவசரநிலையாகக் கருதி, முப்படையினரிடமிருந்து தொழில்நுட்ப உதவிகளைப் பெறுமாறும் அறிவுறுத்தினார். மேலும், வீடுகளில் உள்ள கிணறுகளை சுத்தம் செய்யும் பணிகளை பிரதேச செயலகங்களின் பங்களிப்புடன் மேற்கொள்ள அறிவுறுத்திய ஜனாதிபதி, பாரிய சீரமைப்பு பணிகளை இரண்டாம் கட்டத்தில் மேற்கொள்ளும் அதே வேளை, டிசம்பர் 31 ஆம் திகதிக்குள் தற்காலிக பழுதுபார்ப்பு மூலம் மாவட்டத்தில் மின்சார விநியோகத்தை மீட்டெடுக்க வேண்டும். பயிர்ச்செய்கைக்கு ஏற்ற நிலங்களை அடையாளம் கண்டு அவற்றை பயிரிடுவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, பயிர்ச்செய்கைக்கு ஏற்ற நிலங்களை விரைவாகக் கண்டறிந்து அவற்றுக்குத் தேவையான நீர்ப்பாசன வசதிகளை வழங்குவதன் முக்கியத்துவத்தையும், நீர்ப்பாசனத் திணைக்களம், மாகாண நீர்ப்பாசனத் திணைக்களம் மற்றும் கமநல சேவைகள் திணைக்களம் ஆகியவை இணைந்து செயல்பட வேண்டியதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார். மேலும், பயிர்ச்செய்கையில் ஈடுபட முடியுமான விவசாயிகளின் எண்ணிக்கை மற்றும் பயிரிடக்கூடிய விவசாய நிலங்களின் அளவை உடனடியாகக் கண்டறிந்து, அவர்களுக்கு வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ள ரூ.150,000 இழப்பீட்டை உடனடியாக வழங்குமாறும் அறிவுறுத்திய ஜனாதிபதி, அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மாவட்டத்தில் மரக்கறி பயிர்ச் செய்கை குறித்து இரண்டு வாரங்களுக்குள் அறிக்கை பெற்று, அவர்களுக்கு வழங்கப்படும் ஒரு ஹெக்டெயாருக்கு 200,000 ரூபா இழப்பீட்டை வழங்கவும், மரக்கறி பயிர்ச் செய்கைக்கு வழங்கப்படும் அதே இழப்பீட்டுத் தொகையை வாழை பயிர்ச் செய்கைக்கு ஏற்பட்ட சேதத்திற்கு வழங்கக்கூடிய வகையில் தேவையான திருத்தங்களைச் செய்யுமாறும் அறிவுறுத்தினார். கால்நடைத் துறைக்கு அனர்த்தத்தினால் ஏற்பட்ட பாதிப்பு குறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன், பண்ணைகளின் அளவு மற்றும் விலங்குகளின் எண்ணிக்கை குறித்த புதுப்பித்த தரவுகளைப் பேண வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி இதன்போது அதிகாரிகளுக்கு சுட்டிக்காட்டினார். அழிக்கப்பட்ட கால்நடை பண்ணைகளை விரைவாக மீண்டும் தொடங்குவதற்கும், அவர்களின் வருமானத்தை மீட்டெடுப்பதற்கும், பால், கோழி, முட்டை உள்ளிட்ட நாட்டின் உணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் செயற்பட வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி விளக்கினார். மாவட்டத்தில் எரிபொருள் விநியோகத்தை சீர்செய்வது குறித்தும் கலந்துரையாடப்பட்டதுடன், வீதிகள் சேதமடைந்துள்ளதால் எரிபொருள் விநியோகம் தடைபட்டுள்ள புஸ்ஸெல்ல மற்றும் மீதலாவ பகுதிகளுக்கு வீதி அபிவிருத்தி அதிகார சபை, முப்படையினர் மற்றும் பொலிஸாரின் ஒருங்கிணைப்புடன் இன்று மாலைக்குள் எரிபொருள் விநியோகத்தை சீர்படுத்துமாறும் பணிப்புரை விடுக்கப்பட்டது. மேலும், கண்டி மாவட்டத்தில் பாடசாலைகளை மீண்டும் திறப்பது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டதுடன், திட்டமிட்டபடி பரீட்சைகளை நடத்துவதற்கு பாடசாலைகளை மீண்டும் திறப்பதில் உள்ள கால இடைவெளியைக் குறைக்க வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி அதிகாரிகளுக்கு சுட்டிக்காட்டினார். மாவட்டத்தில் சுகாதாரம், புகையிரதப் பாதைகள் மற்றும் தொடர்பாடல் வசதிகளை மீளமைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டது. வீடுகளுக்கு ஏற்பட்ட சேதம் மற்றும் அந்த மக்கள் மீளக் குடியேறுதல் தொடர்பான நடவடிக்கைகளில் புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகத்தின் வகிபாகம் மற்றும் பணியாளர் தேவைகளைப் பூர்த்தி செய்வது குறித்தும் கலந்துரையாடப்பட்டது. மக்களை மீளக் குடியேற்றுவதற்காக அருகிலுள்ள அரச காணிகளை அடையாளம் கண்டு சமர்ப்பிக்குமாறும், சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் கலந்துரையாடி அந்தக் காணிகளை விடுவிப்பதற்குத் தேவையான தலையீடு செய்யப்படும் என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். மக்களை மிகவும் பாதுகாப்பாக மீளக் குடியேற்றுவதே அரசாங்கத்தின் நோக்கம் என்றும், முற்றாக அழிக்கப்பட்ட மற்றும் பகுதியளவு சேதமடைந்த வீடுகளுக்கு வழங்கப்படும் இழப்பீடு அந்த நோக்கங்களுக்காக முறையாகப் பயன்படுத்தப்படுகிறதா என்பதை தொடர்ந்து கண்காணிக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் ஜனாதிபதி இங்கு சுட்டிக்காட்டினார். 2025 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் கீழ் இந்த இழப்பீடுகளின் பகுதியளவு வழங்கப்படும் என்பதால், வழங்க முடியமான இழப்பீட்டுத் தொகைகள் அனைத்தையும் டிசம்பர் 31 ஆம் திகதிக்கு முன்னர் வழங்கி முடிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய ஜனாதிபதி, 2026 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டம் சுமையாக இருக்கக் கூடாது என்றும் மக்களின் வாழ்க்கையை மீட்டெடுக்க ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த திட்டங்களை வெற்றிகரமாக்குவதற்கு அனைத்து அரச அதிகாரிகளின் அர்ப்பணிப்பும் அவசியம் என்று தெரிவித்தார். கம்பளை பிரதேசத்தில் குப்பை அகற்றும் பிரச்சினை குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டதுடன், நீண்டகாலத் தீர்வாக மகாவலிக்குச் சொந்தமான காணிகள் விடுவிக்கப்படும் வரை, மின்சார சபைக்குச் சொந்தமான காணிகளை தற்காலிகமாக வழங்குமாறும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார். அனர்த்தம் காரணமாக அரச நிறுவனங்களுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது. வெள்ளம், சூறாவளி, மண்சரிவு போன்ற இயற்கை அனர்த்தங்ளைத் தடுக்க முடியாவிட்டாலும், உயிர்களுக்கும் சொத்துக்களுக்கும் ஏற்படும் சேதங்களைத் தடுக்க முடியும் என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, மத்திய மலைநாட்டைப் பற்றிய முறையான ஆய்வு நடத்தப்பட்டு, பாதிக்கப்பட்டு வரும் மத்திய மலைநாட்டை மீட்டெடுக்க நீண்டகால வேலைத்திட்டம் தயாரிக்கப்பட வேண்டும் என்றும் சுட்டிக்காட்டினார். இதுபோன்ற பேரழிவுகள் மீண்டும் நிகழாமல் தடுக்க பிரதேச சபைகளின் அதிகாரங்களைப் பயன்படுத்த வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, எதிர்காலத்தில் அனுமதிக்கப்படாத நிர்மாணங்களுக்கு இடமளிக்கக் கூடாது என்றும், அத்தகைய இடங்களுக்கு மின்சாரம் வழங்கப்படாமல் இருப்பதை மின்சார சபை உறுதி செய்ய வேண்டும். அனர்த்தத்திற்குப் பிறகு நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப நீண்ட காலம் எடுக்கும் என்று சிலர் எதிர்பார்த்த போதிலும், மிகக் குறுகிய காலத்தில் மக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்கு கொண்டுவர அரசாங்கத்தால் முடிந்துள்ளதாகவும், இன்னும் சிறிது காலம் ஒன்றிணைந்து செயல்படுவதன் மூலம் எதிர்பார்த்த இலக்குகளை அடைய முடியும் என்றும் ஜனாதிபதி மேலும் சுட்டிக்காட்டினார். இந்த நடவடிக்கைகளில் அரச அதிகாரிகள் மற்றும் முப்படையினரின் அர்ப்பணிப்பை ஜனாதிபதி விசேடமாக பாராட்டினார். கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால்காந்த, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன, சுகாதார பிரதி அமைச்சர் முதித ஹன்சக விஜேமுனி, பாராளுமன்ற உறுப்பினர்களான ஜகத் மனுவர்ண, தனுர திசாநாயக்க ரியாஸ் மொஹமட், மொஹமட் பஸ்மின், துஷாரி ஜயசிங்க உட்பட ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள், மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் சரத் அபேகோன், பிரதம செயலாளர் ஜி.எச்.எம்.ஏ. பிரேமசிங்க, நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்சன சூரியப்பெரும உட்பட அமைச்சுகளின் செயலாளர்கள், கண்டி மாவட்ட செயலாளர் இந்திக உடவத்த மற்றும் வீதி அபிவிருத்தி அதிகாரசபை, மின்சார சபை, நீர்ப்பாசனத் திணைக்களம் உள்ளிட்ட அனைத்து துறை சார் நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தி அதிகாரிகள் பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/232623
  17. இந்தியாவை பலமான நிலையில் இட்ட கோஹ்லி, ருத்துராஜ் சதங்கள் Published By: Vishnu 03 Dec, 2025 | 07:11 PM (நெவில் அன்தனி) தென் ஆபிரிக்காவுக்கு எதிராக ராய்பூர் சர்வதேச விளையாட்டரங்கில் இன்று புதன்கிழமை (03) நடைபெற்றுவரும் இரண்டாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விராத் கோஹ்லி, ருத்துராஜ் கய்க்வோட் ஆகியோர் குவித்த அபார சதங்களின் உதவியுடன் இந்தியா கணிசமான மொத்த ஓட்டங்களைக் குவித்து பலமான நிலையை அடைந்துள்ளது. இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இந்தியா 50 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்களை இழந்து 358 ஓட்டங்களைக் குவித்தது. ரஞ்சியில் மூன்று தினங்களுக்கு முன்னர் சதம் குவித்த விராத் கோஹ்லி, தொடர்ச்சியான இரண்டாவது தடவையாக இன்றைய போட்டியிலும் சதம் குவித்து அசத்தியுள்ளார். ரஞ்சியில் 135 ஓட்டங்களைக் குவித்த விராத் கோஹ்லி, ராய்பூரில் 102 ஓட்டங்களைப் பெற்றார். கோஹ்லி குவித்த 53ஆவது சர்வதெச ஒருநாள் கிரிக்கெட் சதம் இதுவாகும். ரோஹித் ஷர்மா (14), யஷஸ்வி ஜய்ஸ்வால் (22) ஆகிய இருவரும் ஆட்டம் இழக்க இந்தியா 62 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. அந்த சந்தர்ப்பத்தில் ஜோடி சேர்ந்த விராத் கோஹ்லி, ருத்துராஜ் கய்க்வோட் ஆகிய இருவரும் மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி சதங்கள் குவித்ததுடன் 3ஆவது விக்கெட்டில் 195 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை பலமான நிலையில் இட்டனர். ருத்துராஜ் கய்க்வோட் 105 ஓட்டங்களைப் பெற்றார். சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அவர் குவித்த முதலாவது சதம் இதுவாகும். வொஷிங்டன் சுந்தர் வந்த வேகத்தில் ஒரு ஓட்டத்துடன் திரும்பிச் சென்றார். (289 - 5 விக்.) இதனைத் தொடர்ந்து அணித் தலைவர் கே.எல். ராகுல், ரவிந்த்ர ஜடேஜா ஆகிய இருவரும் பிரிக்கப்படாத 6ஆவது விக்கெட்டில் 69 ஓட்டங்களைப் பகிர்ந்து இந்தியாவின் மொத்த எண்ணிக்கையை 258 ஓட்டங்களாக உயர்த்தினர். கே.எல். ராகுல் 66 ஓட்டங்களுடனும் ரவிந்ர ஜடேஜா 24 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர். பந்துவீச்சில் மார்க்கோ ஜென்சன் 63 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார். 359 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு தென் ஆபிரிக்கா பதிலுக்கு துடுப்பெடுத்தாடி வருகிறது. https://www.virakesari.lk/article/232366 RESULT 2nd ODI (D/N), Raipur, December 03, 2025, South Africa tour of India India 358/5 South Africa (49.2/50 ov, T:359) 362/6 South Africa won by 4 wickets (with 4 balls remaining) Player Of The Match Aiden Markram, SA 110 (98)
  18. 05 Dec, 2025 | 05:37 PM யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2026ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் மேலதிக 2 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மாநகர சபையின் வரவு - செலவுத் திட்டம் மீதான விவாதம் நிறைவடைந்த நிலையில் இன்றைய தினம் (5) வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. அந்த வகையில் இலங்கை தமிழ் அரசு கட்சி, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி, ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசிய கட்சி ஆகிய கட்சிகளை சேர்ந்த 23 உறுப்பினர்கள் வரவு - செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்தனர். தமிழ் தேசிய மக்கள் முன்னணி, தேசிய மக்கள் சக்தி ஆகிய கட்சிகளை சேர்ந்த 21 உறுப்பினர்கள் திட்டத்துக்கு எதிராக வாக்களித்தனர். தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் ஒருவர் இன்றைய சபை கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. இந்நிலையில், வாக்கெடுப்பினைத் தொடர்ந்து, மேலதிக இரண்டு வாக்குகளால் வரவு - செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்டது. https://www.virakesari.lk/article/232546
  19. டிசம்பர் 9 முதல் 11 வரை மழை அதிகரிக்கும் - வளிமண்டலவியல் திணைக்களம் Dec 5, 2025 - 03:49 PM நாட்டில் நிலவும் வடகீழக்கு பருவப்பெயர்ச்சி வானிலை காரணமாக டிசம்பர் மாதம் 9, 10 மற்றும் 11 ஆகிய திகதிகளில் மழைவீழ்ச்சி அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இக்காலப்பகுதியில் காற்றின் வேகமும் அதிகரிக்கும் என அதன் பணிப்பாளர் நாயகம் அதுல கருணாநாயக்க தெரிவித்தார். எனினும், இடைப் பருவப்பெயர்ச்சி வானிலையுடன் ஒப்பிடுகையில் வடகீழக்கு பருவப்பெயர்ச்சியின் போது இடியுடன் கூடிய மழை குறைவானதாகவே இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார். வடக்கு, வடமத்திய, வடமேல், கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் இந்த வடகீழக்கு பருவப்பெயர்ச்சி தீவிரமடைவதன் காரணமாக டிசம்பர் 9ஆம் திகதிக்குப் பின்னர் மழைவீழ்ச்சி அதிகரிக்கக்கூடும் என்பதோடு, எந்நேரத்திலும் இப்பகுதிகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் எனவும் அதுல கருணாநாயக்க தெரிவித்தார். அத்துடன், இப்பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன், 75 மி.மீ. அல்லது 100 மி.மீ. அளவிலான மழை பெய்யக்கூடும் எனவும் அவர் கூறினார். நாட்டின் ஏனைய மாகாணங்களில், குறிப்பாகத் தென்மேற்குப் பகுதியில் இக்காலப்பகுதியில் இடியுடன் கூடிய மழை இல்லாவிட்டாலும் மழை பெய்யக்கூடும் எனவும் அதுல கருணாநாயக்க குறிப்பிட்டார். இதனிடையே, இலங்கைக்குத் தென்கிழக்குத் திசையில் வளிமண்டலத் தளம்பல் நிலை காணப்படுவதாகவும், ஒக்டோபர் முதல் டிசம்பர் வரை இந்நிலை நீடிக்கக்கூடும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார். நாட்டைச் சூழவுள்ள கீழ் வளிமண்டலத்தில் தளம்பல் நிலை உருவானமை வடகீழக்கு பருவப்பெயர்ச்சி தீவிரமடைவதற்குக் காரணமாக அமைந்துள்ளதெனக் குறிப்பிட்ட அதுல கருணாநாயக்க, வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள இந்தத் தளம்பல் நிலை இலங்கைக்குத் தொலைவில் தென்கிழக்குத் திசையில் அந்தமான் தீவுகளுக்கு அருகில் காணப்படுவதாகக் குறிப்பிட்டார். இதன் காரணமாக டிசம்பர் 9ஆம் திகதிக்குப் பின்னர் கடல் கொந்தளிப்பாகக் காணப்படக்கூடும் என்பதால், மீனவர்களும் கடற்பயணிகளும் எதிர்கால அறிவித்தல்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அதுல கருணாநாயக்க கேட்டுக்கொண்டுள்ளார். https://adaderanatamil.lk/news/cmispqmzc02f1o29nffix7kpm
  20. 2026 வரவு செலவுத் திட்டம் மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம் Dec 5, 2025 - 07:33 PM 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு, திருத்தங்களுடன் 157 வாக்குகள் பெரும்பான்மையால் நிறைவேற்றப்பட்டது. அதன்படி, வரவு செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக 158 வாக்குகளும், எதிராக ஒரு வாக்கும் பதிவானது. இருவர் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை. https://adaderanatamil.lk/news/cmisxqy2602fbo29n08z2vdsd
  21. அனர்த்த நிவாரணங்களுக்காக நாடு பூராகவும் 504 மருத்துவக் குழுக்கள் Dec 5, 2025 - 04:48 PM நிலவும் அனர்த்த நிலைமை காரணமாக நிவாரணம் வழங்குவதற்காக நாடு முழுவதும் 504 அனர்த்த நிவாரண மருத்துவக் குழுக்கள் செயற்படுத்தப்பட்டுள்ளதாகச் சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சு தெரிவித்துள்ளது. சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் "சுரக்" அனர்த்த முகாமைத்துவம் மற்றும் பதிலளிப்புப் பிரிவின் ஒருங்கிணைப்பில் இந்த நிவாரணக் குழுக்கள் தற்போது நாடு முழுவதும் இயங்கி வருகின்றன. நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 1,041 பாதுகாப்பு நிலையங்களை மையமாக வைத்து இந்த மருத்துவக் குழுக்கள் தமது சேவைகளை வழங்கி வருவதாகச் சுகாதார அமைச்சின் வைத்திய சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகமும், அனர்த்த முகாமைத்துவ தேசிய இணைப்பாளருமான விசேட வைத்திய நிபுணர் சமித்தி சமரகோன் தெரிவித்தார். அத்துடன், ஏனைய அனைத்து உதவி நிறுவனங்களுடனும் இணைந்து செயற்படும் மருத்துவக் குழுக்கள், பாதுகாப்பு நிலையங்களில் தங்கியுள்ள மக்களில் 98.3% ஆனோரைப் பரிசோதித்து முடித்துள்ளதாகவும், தேவைக்கேற்ப மருந்துகளை வழங்கி மேலதிக சிகிச்சை தேவைப்படுவோரை உரிய வைத்தியசாலைகள் மற்றும் சுகாதார நிறுவனங்களுக்குப் பரிந்துரைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இது தவிர, குறிப்பிட்ட இடங்கள் அல்லது கிராமங்களுக்கு மேலும் மருத்துவக் குழுக்கள் தேவைப்படின், சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் அனர்த்த முகாமைத்துவம் மற்றும் பதிலளிப்புப் பிரிவின் அவசர தொலைபேசி இலக்கமான 1926 இற்கு நாளின் 24 மணித்தியாலமும் அழைக்க முடியும் எனவும் விசேட வைத்திய நிபுணர் மேலும் சுட்டிக்காட்டினார். https://adaderanatamil.lk/news/cmisru1bi02f3o29nxhl3s41d
  22. மூச்சுக்குழாயில் உணவு சிக்கிவிட்டால் உயிரைக் காக்க உதவும் எளிய முதலுதவி சிகிச்சை பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,மூச்சுக் குழாயில் உணவு நுழைந்துவிட்டால் உடனே முதலுதவி செய்ய வேண்டியது அவசியம் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். கட்டுரை தகவல் சேவியர் செல்வகுமார் பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஈரோட்டைச் சேர்ந்த 5 வயது சிறுவன், வாழைப் பழம் சாப்பிடும்போது, அது தொண்டையில் சிக்கி உயிரிழந்தான். சமீபத்தில் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் 4 வயது சிறுவன், மாத்திரை சாப்பிடும்போது தொண்டையில் சிக்கி உயிரிழந்தான். இத்தகைய சம்பவங்கள் பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளன. குழந்தைகள் மட்டுமின்றி, பெரியவர்களுக்கும் இத்தகைய பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கூறும் மருத்துவர்கள், இதற்குரிய முதலுதவியை உடனே செய்யாவிட்டால் ஆபத்து என்று எச்சரிக்கின்றனர். மேலும், குழந்தைகளுக்கு சிறிது சிறிதாக உணவை ஊட்ட வேண்டுமென அறிவுறுத்தும் மருத்துவர்கள், யாராயினும் உணவை நன்கு மென்று கவனமாக உண்பதோடு, சாப்பிடும் நேரத்தில் பேசுவதைத் தவிர்க்க வேண்டுமென வலியுறுத்துகின்றனர். மருத்துவமனை செல்லும் வழியிலேயே உயிரிழந்த சிறுவன் ஈரோடு அன்னை சத்யா நகரைச் சேர்ந்த மாணிக்–மகாலட்சுமி தம்பதிக்கு 5 வயதில் சாய் சரண் என்ற மகனும், 2 வயதில் ஒரு மகளும் இருந்தனர். கடந்த டிசம்பர் 2ஆம் தேதியன்று இரவு, தமது இரு குழந்தைகளுக்கும் மகாலட்சுமி வாழைப் பழத்தை ஊட்டியுள்ளார். அதைச் சாப்பிடும்போது சாய் சரணுக்கு வாழைப்பழம் தொண்டையில் சிக்கி, மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக பெற்றோர் சிறுவனை ஈரோடு அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றுள்ளனர். ஆனால் சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள், வரும் வழியிலேயே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். கருங்கல்பாளையம் காவல் நிலையத்தில் இதுதொடர்பாக வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. பிபிசி தமிழிடம் இது குறித்து விளக்கிய ஈரோடு அரசு மருத்துவமனை இருப்பிட மருத்துவ அலுவலர் சசிரேகா, ''அந்தச் சிறுவனை வீட்டிலிருந்து 20 நிமிடங்களில் இங்கு கொண்டு வந்துவிட்டனர். ஆனால் இங்கு வரும்போதே உயிர் இல்லை. உணவுக் குழாய்க்குப் பதிலாக மூச்சுக் குழாயில் வாழைப்பழம் சென்றதால் ஆக்சிஜன் நுரையீரலுக்குப் போகாமல் சிறுவன் மூச்சுவிடச் சிரமப்பட்டுள்ளான்" என்று தெரிவித்தார். இந்தக் காரணத்தால் அடுத்த ஐந்து நிமிடங்களில் உயிரிழப்பு ஏற்பட வாய்ப்பிருப்பதாகக் கூறிய அவர், "உடற்கூராய்வு முடிந்துவிட்டது. சிறுவனுக்கு வேறு எந்த உடல் பாதிப்பும் இல்லை. சிறுவனின் வாய்க்குள் வாழைப் பழம் அடைத்து இருந்ததைக் கண்டறிந்தோம்'' என்றும் தெரிவித்தார். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,அவசரப்படாமல் நிதானமாகவும், பேசாமலும் சாப்பிட வேண்டியது அவசியம் என்கிறார்கள் மருத்துவர்கள் (சித்தரிப்புப் படம்) ''இதுபோன்ற நேரங்களில் உடனடியாக முதலுதவி செய்வதுதான் உயிரைக் காக்க ஒரே வழி. இந்தச் சிறுவனுக்கே முதலில் முதலுதவியைச் செய்திருந்தால் உயிரைக் காப்பாற்றியிருக்க முடியும். அப்படியில்லாமல், மருத்துவமனைக்கு கொண்டு வரும் வரை மூச்சுக்குழாய் அடைபட்டே இருந்தால், எந்த வயதினராக இருந்தாலும், காப்பாற்றுவதற்கான சாத்தியங்கள் மிகக் குறைவு," என்று விளக்கினார் மருத்துவர் சசிரேகா. அதேவேளையில், உணவுக் குழாயில் பல்வேறு பொருட்கள் சிக்கியதாக வந்தவர்களை, சிறு சிறு சிகிச்சை முறைகள் மூலமாகவும், அறுவை சிகிச்சைகள் மூலமாகவும் காப்பாற்றியுள்ளதாக, ஈரோடு அரசு மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்தனர். உணவு மூச்சுக் குழாய்க்குள் செல்லாமல் தடுப்பது எப்படி? கடந்த ஆகஸ்ட் மாதத்தில், திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில், அரசு மருத்துவமனையில் காய்ச்சலுக்குக் கொடுக்கப்பட்ட மாத்திரையை விழுங்கும்போது, அதுவும் இதேபோல தொண்டையில் சிக்கி 4 வயது சிறுவன் உயிரிழந்தான். மாத்திரை, வாழைப்பழம் போன்றவற்றை விழுங்கும்போது, சிறுவர்கள் உயிரிழப்பது பெற்றோரிடையே அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஆனால், இதை எப்படிக் கையாள்வது என்ற விழிப்புணர்வு இருந்தால் பெற்றோர் அச்சப்படத் தேவையில்லை என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். பட மூலாதாரம்,Getty Images கோவையைச் சேர்ந்த காது, மூக்கு, தொண்டை நிபுணர் பாலகிருஷ்ணன் இதுகுறித்துப் பேசியபோது, "எந்த வயதினராக இருந்தாலும், உணவுக் குழாயில் செல்ல வேண்டிய உணவு மூச்சுக் குழாய்க்குச் செல்லும்போது, இந்த விபரீதம் ஏற்பட வாய்ப்புள்ளதாக" கூறுகிறார். மேலும், இதற்குக் கால தாமதமின்றி உரிய முதலுதவியை உடனே செய்துவிட்டால் உயிருக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்றும் அவர் வலியுறுத்தினார். மருத்துவ ஆராய்ச்சியாளர் எரின் காலமன் எழுதியுள்ள கட்டுரையின்படி, மனித உடலில் உணவுக் குழாய், மூச்சுக் குழாய் என கழுத்து மற்றும் மார்பு வழியாக இரு குழாய்கள் செல்கின்றன. அதில் உணவுக் குழாயில் போக வேண்டிய உணவு, காற்றுப் பாதையில் செல்வதே சுவாசம் தடைபட்டு, உயிருக்கு ஆபத்தான நிலை ஏற்படக் காரணம் என்று அவர் விளக்கியுள்ளார். மனித உடலின் இயக்கவியல் குறித்து விளக்கிய மருத்துவர் பாலகிருஷ்ணன், "மூச்சுக்குழாய் எப்போதும் திறந்திருக்கும், உணவுக் குழாய் மூடித்தான் இருக்கும். உணவு உள்ளே செல்லும்போதுதான் அது திறக்கப்படும், அப்போது மூச்சுக் குழாய் மூடிக்கொள்ளும்" என்றார். "ஆனால், உணவு வருவதை மூளை அறிவுறுத்தி, உணவுக் குழாய் திறக்கப்படுவதற்குள் அவசர அவசரமாக விழுங்கினால், மூடாமல் திறந்திருக்கும் மூச்சுக் குழாய்க்குள் உணவு சென்றுவிடும். அதனால்தான் சுவாசம் பாதிக்கப்படுகிறது," என்று அவர் விளக்கினார். பட மூலாதாரம்,Getty Images அதோடு, குழந்தை முதலில் ஊட்டப்பட்ட வாழைப்பழத் துண்டினை விழுங்குவதற்குள் மேன்மேலும் பழத்தைக் கொடுக்கையில், அவற்றை மொத்தமாக விழுங்க எத்தனிக்கையில், இத்தகைய விபரீதம் நேரிட வாய்ப்புள்ளதாகவும் அவர் எச்சரித்தார். குழந்தைகளுக்கு எந்த உணவைக் கொடுத்தாலும் கவனத்துடன், சிறு சிறு அளவில் கொடுக்க வேண்டுமென்று வலியுறுத்துகிறார் மருத்துவர் சசிரேகா. அதோடு, பல குழந்தைகள், நாணயம், மோமோஸ், பட்டாணி, பாதாம் போன்றவற்றை விழுங்கிவிட்டதாக அரசு மருத்துவமனைக்கு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். சிறியவர்கள், பெரியவர்கள் என யாராக இருந்தாலும், ''வேகமாகச் சாப்பிடுவது, பேசிக்கொண்டே சாப்பிடுவது ஆகிய இரண்டு காரணங்களால்தான் இத்தகைய ஆபத்தைச் சந்திக்கிறார்கள். எனவே, அவசரப்படாமல் நிதானமாகவும், பேசாமலும் சாப்பிட வேண்டியது அவசியம்" என்று கூறுகிறார் மருத்துவர் பாலகிருஷ்ணன். இவை மட்டுமின்றி, சிக்கன் பீஸ் உள்படப் பசை போன்ற தன்மையைக் கொண்ட உணவுகள் தொண்டைக்குள் ஒட்டிக் கொள்வதால், தசைகளின் செயல்பாட்டு நேரம் மாறி, உணவு மூச்சுக் குழாய்க்குள் செல்லும் வாய்ப்பு ஏற்படுவதாகவும் அவர் விவரித்தார். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,குழந்தைகளை டிவி அல்லது போன் போன்ற டிஜிட்டல் சாதனங்களைப் பார்த்துக் கொண்டே சாப்பிட வைப்பது, இத்தகைய ஆபத்துகளை ஏற்படுத்தும் என்கிறார் மருத்துவர் டிவி, போன் பார்த்துக்கொண்டே சாப்பிடுவது ஆபத்து யாராக இருந்தாலும் சாப்பிடும்போது உணவின் மீது கவனம் வேண்டும் என்று அறிவுறுத்துகிறார் குழந்தைகள் அறுவை சிகிச்சை நிபுணர் தர்மேந்திரா. "சிறியவர்கள், பெரியவர்கள் என யாராக இருந்தாலும் கவனமின்றிச் சாப்பிடும்போது, உணவுக் குழாயில் போக வேண்டிய உணவு மூச்சுக்குழாய்க்குச் சென்று புரையேறுதல் நடக்க வாய்ப்புள்ளது" என்கிறார் அவர். மேலும், எந்த உணவையும் நன்கு மென்று விழுங்கச் சொல்லி, குழந்தைகளைப் பழக்குவதும் மிக மிக அவசியமென்று அவர் வலியுறுத்துகிறார். பிபிசி தமிழிடம் பேசிய அவர், ''வாழைப்பழம் அவ்வளவு எளிதில் அடைக்க வாய்ப்பில்லை. ஆனால் வேடிக்கை பார்த்துக்கொண்டு சாப்பிடும்போது, கவனம் சிதறி மூச்சுக்குழாய் திறந்து அதில் அடைத்திருக்கலாம். குழந்தைகளை டிவி அல்லது போன் போன்ற டிஜிட்டல் சாதனங்களைப் பார்த்துக் கொண்டே சாப்பிட வைப்பது, இத்தகைய ஆபத்துகளை ஏற்படுத்தும்'' என்கிறார். உணவுக் குழாயில் சிக்குவதை சிறு கால அவகாசத்திற்கு உள்ளாகவே எடுத்துவிடலாம் என்று கூறும் லேப்ராஸ்கோபிக் அறுவை சிகிச்சை நிபுணர் பி.எஸ்.ராஜன், மூச்சுக்குழாயில் ஏதாவது சிக்கிவிட்டால் சில விநாடிகளுக்குள் முதலுதவி தராவிட்டால் உயிருக்கே ஆபத்தாக முடியும் என்று எச்சரிக்கிறார். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,மூச்சுக் குழாயில் உணவு நுழைந்துவிட்டால் குழந்தைகளுக்குச் செய்ய வேண்டிய முதலுதவி சிகிச்சையை விளக்கும் புகைப்படம் குழந்தைகளுக்கு முதலுதவி சிகிச்சை வழங்குவது எப்படி? மாதக்கணக்கில் இருமிக்கொண்டிருந்த ஒரு குழந்தையை ஸ்கேன் செய்து பரிசோதித்தபோது, அதன் மூச்சுக் குழாய்க்குள் பட்டாணி இருந்ததைக் கண்டறிந்து, அறுவை சிகிச்சையில் அகற்றியதாகச் சொல்கிறார் மருத்துவர் பாலகிருஷ்ணன். பல்வேறு மேலை நாடுகளில் குழந்தைகளுக்கு பட்டாணி, பாதாம் போன்றவற்றை உணவாகக் கொடுக்க அனுமதிக்கப்படுவதில்லை என்று கூறும் அவர், குழந்தைகள் பொம்மைகளில் (Toys) பயன்படுத்தப்படும் பட்டன் பேட்டரிகளையும் வெளிநாடுகளில் தடை செய்துள்ளதாகக் கூறுகிறார். ''இருப்பதிலேயே பொம்மைகளில் பயன்படுத்தும் பட்டன் வடிவிலான பேட்டரிதான் மிக ஆபத்தானது. அதை விழுங்கிய பல குழந்தைகளுக்கு நான் சிகிச்சை அளித்துள்ளேன். விழுங்கிய ஒரு மணிநேரத்தில் இருந்து அதிலுள்ள ரசாயனம் கசியத் தொடங்கிவிடும். அது குடல் உள்ளிட்ட பாகங்களில் பாதிப்புகளை ஏற்படுத்தும் ஆபத்து இருப்பதால் நம் நாட்டிலும் அது தடை செய்யப்பட வேண்டும்'' என்கிறார் மருத்துவர் பாலகிருஷ்ணன். இதுபோல, சாப்பிடும்போது உணவுப் பொருள் தொண்டையில் சிக்கினாலோ அல்லது வேறு ஏதேனும் பொருளை குழந்தைகள் வாயில் போட்டு அது சிக்கிக் கொண்டாலோ, உடனடியாக ஹெய்ம்லிச் மனேவர் முதலுதவியை செய்ய வேண்டும். இந்த முதலுதவி குறித்து பிபிசி தமிழிடம் முன்பு விளக்கிய ஈரோட்டைச் சேர்ந்த குழந்தைகள் நல மருத்துவர் அருண்குமார், "பாதிக்கப்பட்ட நபருக்குப் பின்னால் நின்றுகொண்டு, உங்கள் இரு கைகளை அவர்களின் இடுப்பைச் சுற்றி இறுக்கமாக கட்டிக் கொள்ளுங்கள். வயிற்றில் விரைவாகவும், வலுவாகவும் மேல்நோக்கி 5 அல்லது 6 முறை அழுத்தம் கொடுக்க வேண்டும். இதை முயற்சி செய்தும் தொண்டையில் சிக்கியிருக்கும் பொருள் வெளியேறவில்லை என்றால், உடனடியாக மருத்துவரின் உதவியை நாட வேண்டும்" என்று விவரித்தார். ஆனால், சிறு குழந்தைகளுக்கு இந்தப் பிரச்னை ஏற்பட்டால், அவர்களைத் தங்கள் தொடை மீது வயிறு அழுத்தியிருப்பது போலப் படுக்க வைத்து, முதுகில் தட்ட வேண்டுமென்று மருத்துவர் அருண்குமார் விளக்கினார். இந்த மிகவும் எளிமையான முதலுதவி முறை பல பள்ளிகளில் கற்றுத் தரப்படுவதாகத் தெரிவித்த அவர், "பொது மக்களுக்கும் அதைக் கற்றுக் கொடுப்பது, குழந்தைகளின் பாதுகாப்பில் முக்கியப் பங்கு வகிக்கும்" என்றும் குறிப்பிட்டார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/czxpe0eqwr9o
  23. அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விசேட நிவாரணங்கள் அறிவிப்பு Dec 5, 2025 - 06:32 PM நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை மற்றும் இயற்கை அனர்த்தங்கள் காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணம் மற்றும் இழப்பீடுகளை வழங்குவது தொடர்பில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று பாராளுமன்றத்தில் விசேட உரையொன்றை நிகழ்த்தினார். இதன்போது, பாதிக்கப்பட்ட குடும்பங்களின் வாழ்வாதாரத்தை கருத்திற்கொண்டு, எதிர்வரும் டிசம்பர், ஜனவரி மற்றும் பெப்ரவரி ஆகிய மூன்று மாதங்களுக்கு விசேட மாதாந்த கொடுப்பனவு வழங்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்தார். அதன்படி, இரண்டுக்கு மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட ஒரு குடும்பத்திற்கு 50,000 ரூபாவும் மற்றும் இரண்டு உறுப்பினர்கள் மாத்திரம் உள்ள குடும்பத்திற்கு 25,000 ரூபாவும் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அதேபோல், வெள்ளம் மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்கள், சேதமடைந்த தமது வீட்டு உபகரணங்களை மீண்டும் கொள்வனவு செய்வதற்காக ரூபா 50,000 வழங்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்தார். தற்போது நலன்புரி முகாம்களில் தங்கியுள்ள மக்கள் தொடர்ந்தும் அங்கேயே தங்கியிருக்க விரும்பினால், அவர்களுக்கான அனைத்து அடிப்படை வசதிகளும் அரசாங்கத்தினால் செய்து கொடுக்கப்படும் எனவும், மாறாக, முகாம்களிலிருந்து வெளியேறி வாடகை வீடுகளில் வசிக்க விரும்புவோருக்கு, 6 மாத காலத்திற்கு மாதாந்தம் 25,000 ரூபாய் வாடகைக் கொடுப்பனவாக வழங்கப்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார். மேலும், அனர்த்தத்தினால் நெல், சோளம் உள்ளிட்ட பயிர்கள் சேதமடைந்த விவசாயிகளுக்கு, ஒரு ஹெக்டேர் நிலப்பரப்பிற்கு 150,000 ரூபாய் இழப்பீடாக வழங்கப்படும் என ஜனாதிபதி அறிவித்துள்ளார். https://adaderanatamil.lk/news/cmisvkj4v02f9o29nwa4khtn2
  24. இருமலின் போது வரும் சளியை விழுங்கினால் ஆபத்தா? பட மூலாதாரம்,Getty Images கட்டுரை தகவல் அலெக்ஸ் டெய்லர் பிபிசி செய்தியாளர் 5 டிசம்பர் 2025, 01:18 GMT புதுப்பிக்கப்பட்டது 8 மணி நேரங்களுக்கு முன்னர் குளிர்கால வைரஸ்கள் ஆதிக்கம் செலுத்தும் இந்த நேரத்தில், இருமலின் சத்தம் வீடுகள், அலுவலகங்கள் மற்றும் பொதுப் போக்குவரத்து என எங்கும் நிறைந்திருக்கும். பெரும்பாலும் மக்கள் நிவாரணம் பெற இருமல் மருந்துகளை நாடுகிறார்கள். ஆனால் இவை உண்மையில் வேலை செய்யுமா, அல்லது தேன் மற்றும் எலுமிச்சை போன்ற வீட்டில் தயாரிக்கப்பட்ட கைவைத்தியங்கள் அதே அளவு பயனுள்ளவையா? மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தின் சுவாச மருத்துவப் பேராசிரியர் ஜாக்கி ஸ்மித், ரேடியோ 4-இன் 'ஸ்லைஸ்டு பிரெட்' நிகழ்ச்சியில் இதைப்பற்றி விரிவாகப் பேசினார். பட மூலாதாரம்,Getty Images எந்த மருந்து? பெரும்பாலான இருமல் சளியிலிருந்து (ஜலதோஷத்திலிருந்து) வருகிறது. மேலும் சளி வைரஸ்கள் பொதுவாகத் தானாகவே உங்கள் உடலை விட்டு வெளியேற வேண்டும். இருமல் மருந்துகள் அடிப்படை வைரஸுக்குச் சிகிச்சை அளிக்க முடியாது, ஆனால் அவை உங்கள் தொண்டைக்கு இதமளித்து, இருமலை வரவழைக்கும் அரிப்பு உணர்வுகளைக் குறைக்கலாம். இது வறட்டு இருமலாக இருந்தால், பால்சம்கள் அல்லது கிளிசரால் போன்ற மிகவும் இனிப்பான பாகு (சிரப்) அடிப்படையிலான மருந்துகளைத் தேர்ந்தெடுப்பது, உங்கள் தொண்டையை இதமளித்து வறண்டு போகாமல் பாதுகாக்க உதவும் என்று பேராசிரியர் ஸ்மித் கூறுகிறார். ஆனால், மலிவான தயாரிப்புகளும் பெரிய பிராண்டுகளைப் போலவே பயனுள்ளதாக இருக்கும் என்பதால், இவற்றிற்காக அதிக பணம் செலவழிப்பது பயனற்றது என்றும் அவர் கூறுகிறார். இருப்பினும், லேபிளில் நீங்கள் கவனிக்க வேண்டிய ஒரே விஷயம் சர்க்கரையின் அளவு தான்; இனிப்பான சிரப்புகளில் இது அதிகமாக இருப்பது வழக்கம். இது கவலையளித்தால், சர்க்கரை இல்லாத இருமல் மருந்துகள் ஒரு சிறந்த தேர்வாக இருக்கலாம். இருமலின் அனிச்சை தன்மையை கட்டுப்படுத்துவதாகக் கூறப்படும் டெக்ஸ்ட்ரோமெதோர்பான் (dextromethorphan) போன்ற சில "உள்ளீடுகள்" (active ingredients) இருமல் மருந்துகளில் அடிக்கடி விளம்பரப்படுத்தப்படுகின்றன. இருப்பினும், இதன் தாக்கம் மிகக் குறைவு என்று பேராசிரியர் ஸ்மித் கூறுகிறார். மருந்தின் அளவைப் பின்பற்றுவது எப்போதும் முக்கியம் என்று அவர் மேலும் கூறுகிறார், குறிப்பாக டெக்ஸ்ட்ரோமெதோர்பான் அடிமையாக்கும் வாய்ப்புள்ளதால் இது மிகவும் முக்கியம். "லேபிளில் பரிந்துரைக்கப்பட்ட அளவை நீங்கள் நிச்சயமாக மீறக்கூடாது," என்று அவர் அறிவுறுத்துகிறார். மறுபுறம், மார்புச் சளிக்கான சில இருமல் மருந்துகளில் காணப்படும் ஒரு மூலப்பொருளான லெவோமெந்தோல் (Levomenthol), தொண்டையின் பின்னால் ஒரு "குளிரூட்டும் உணர்வை" வழங்குகிறது, இது எரிச்சல் உணர்வை மறைத்து அரிப்பைக் கட்டுப்படுத்துகிறது. தண்ணீரின் முக்கியத்துவம் பட மூலாதாரம்,Getty Images மார்புச் சளியாக இருந்தால், பலர் அதிகப்படியான சளியுடனும், இறுக்கமான நெஞ்சுடனும் போராடுவதாக உணரலாம். இது சுவாசப் பாதைகளில் வீக்கத்தை ஏற்படுத்தும் மூச்சுக்குழாய் அழற்சி போன்ற இரண்டாம் நிலை தொற்றுகள் அல்லது மூக்கு மற்றும் சைனஸ்களில் அதிகப்படியான சளி சேர்வதால் வரலாம். இதற்கு கடைகளில் கிடைக்கும் சிரப் மருந்துகளை நாடுவது இயல்பானது, ஆனால் அவற்றின் தாக்கம் குறித்து ஐயத்துடன் இருக்குமாறு பேராசிரியர் ஸ்மித் அறிவுறுத்துகிறார். உதாரணமாக, குவைஃபெனெசின் என்ற மூலப்பொருள் சளியை தளர்த்தும் என்று கூறப்பட்டாலும், இதற்குத் திட்டவட்டமான ஆதாரம் இல்லை. மேலும், டிஃபென்ஹைட்ரமைன் போன்ற மயக்கமூட்டும் ஆன்டிஹிஸ்டமின்கள் (ஒவ்வாமைகளை போக்கும் மருந்துகள்) இரவில் நீங்கள் தூங்க உதவலாம் என்றாலும், அவை இருமலுக்குச் சிகிச்சை அளிக்காது. அதேபோல், தைம் மற்றும் ஸ்குவில் போன்ற தாவரச் சாறுகள் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதற்கு ஆதாரம் சொற்பமாகவே உள்ளது. அதற்குப் பதிலாக, மக்கள் "அது சரியாகும் வரை காத்திருக்க" வேண்டும், உடலில் நீர் இருக்கும் வகையில் தண்ணீர் குடிக்க வேண்டும் மற்றும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு "இருமலைத் தடுக்கும்" மாத்திரைகளை (lozenges) எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதே சிறந்த அணுகுமுறை என்று பேராசிரியர் ஸ்மித் கூறுகிறார். தேன் மற்றும் எலுமிச்சை பயன்படுத்தலாமா? பட மூலாதாரம்,Getty Images தேவையான அளவு தேன் மற்றும் எலுமிச்சையுடன் கூடிய ஒரு சூடான, வீட்டில் தயாரிக்கப்பட்ட கலவையானது, வறட்டு இருமலுக்கு கடைகளில் கிடைக்கும் பல மருந்துகளுக்குச் சமமான இதமளிக்கும் விளைவைத் தரும். சுதந்திரமான ஆய்வான கோக்ரேன் ரிவியூ, ஒரு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்குச் சளி மற்றும் இருமல் இருக்கும்போது, தேன் மற்றும் எலுமிச்சையைப் பயன்படுத்துவது "ஓரளவு பயன் அளிக்கலாம்" என்று பரிந்துரைத்ததாக பேராசிரியர் ஸ்மித் மேலும் கூறுகிறார். இருமல் வெளியேறட்டும் பட மூலாதாரம்,Getty Images இருமுவது அவசியம் என்பதையும் நினைவில் கொள்வது முக்கியம். நமது உடலில் இருந்து சளியை வெளியேற்றுவது அப்படித்தான் நடக்கிறது. இது சளி கலந்த இருமல் என்றால், அதிகப்படியான சளியை வெளியே துப்புவது சுவாசப் பாதைகளை எளிதாக்கும். "வெளியேற்றவேண்டியவற்றை நான் இருமி வெளியேற்றுவேன்," என்று பேராசிரியர் ஸ்மித் கூறுகிறார். "நான் அதை அடக்க முயற்சிக்க மாட்டேன், வெளியே வரட்டும்." நீங்கள் இருமும்போது, கண்டிப்பாக ஒரு டிஸ்யுவை பயன்படுத்துவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். ஆனால் நீங்கள் அதை விழுங்கினாலும், எந்தத் தீங்கும் இல்லை. உங்கள் வயிறு அதை எளிதாகச் செரித்துவிடும். நீங்கள் இருமி வெளியேற்றும் சளி அடர் பழுப்பு நிறமாக இருந்தால் நீங்கள் கவலைப்பட வேண்டும், ஏனெனில் அதில் "சிறிதளவு ரத்தம் இருக்கலாம்". பெரும்பாலான மார்புச் சளிகள் பொதுவாகச் சில வாரங்களுக்குப் பிறகு ஆன்டிபயாடிக் மருந்துகள் இல்லாமலே சரியாகிவிடும், ஆனால் அது மூன்று வாரங்களுக்கு மேல் நீடித்தால், மருத்துவரை அணுகுமாறு பேராசிரியர் ஸ்மித் வலியுறுத்துகிறார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/clyx3zv71zlo
  25. Published By: Digital Desk 3 05 Dec, 2025 | 04:10 PM (எம்.மனோசித்ரா) நாடளாவிய ரீதியில் கடந்த ஒரு வார காலமாக பெய்த கடும் மழை காரணமாக மலைப்பாங்கான பிரதேசங்கள் ஈரப்பதனுடையதாகவுள்ளன. இன்று முதல் வடகீழ் பருவ பெயர்ச்சி மழை எதிர்பார்க்கப்படுவதால் அப்பிரதேசங்களில் மண் சரிவு அபாய எச்சரிக்கை நீங்கவில்லை. எனவே அவ்வாறான பகுதிகளிலிருந்து இடம்பெயர்ந்து பாதுகாப்பு முகாம்களில் இருப்பவர்கள் தற்போது தமது இருப்பிடங்களுக்கு திரும்ப வேண்டாம் என தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் வசந்த சேனாதீர தெரிவித்தார். கொழும்பில் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், கண்டி, கேகாலை, குருணாகல் மற்றும் மாத்தளை ஆகிய மாவட்டங்களில் 44 பிரதேச செயலகப்பிரிவுகளுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய கண்டியில் கங்காவத்த கோரளை, தெல்தோட்டை, தொலுவ, தொம்பே, தும்பனை, மெததும்பர, மினிப்பே, பஹதஹேவாஹெட்ட, ஹட்டிநுவர, கங்கா இஹல கோரள, அக்குரணை, உடுநுவர, பன்வில, பஹதும்பர, குண்டசாலை, பஸ்பாகே கோரள, ஹதரலியத்த, உடுதும்பர, பூஜாபிட்டிய, ஹரிஸ்பத்துவ மற்றும் உடபலாத்த ஆகிய பிரதேச செயலகப்பிரிவுகளுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது. கேகாலை மாவட்டத்தில் கலிகமுவ, அரநாயக்க, கேகாலை, மாவனல்ல, ரம்புக்கனை, வரக்காபொல, யட்டியாந்தோட்டை மற்றும் புளத்கொஹூபிட்டிய ஆகிய பிரதேச செயலகப்பிரிவுகளுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது. குருணாகல் மாவட்டத்தில் நாரம்மல, பொல்கஹாவெல, மாவத்தகம, ரிதீகம, மல்லவபிட்டிய மற்றும் அலவ்வ பிரதேச செயலகப்பிரிவுகளுக்கும், மாத்தளையில் அம்பன்கங்க கோரளை, நாவுல, மாத்தளை, பல்லேபொல, உக்குவெல, லக்கல பல்லேகம, யட்டவத்த, ரத்தோட்டை மற்றும் வலிகமுவ பிரதேச செயலகப்பிரிவுகளுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது. இவை தவிர பதுளை, கேகாலை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களிலுள்ள 29 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு விடுக்கப்பட்டுள்ள இரண்டாம் கட்ட மண்சரிவு எச்சரிக்கையும் நீடிக்கப்பட்டுள்ளது. மேலும் கொழும்பு, காலி, கம்பஹா, களுத்துறை, மாத்தறை, மொனராகலை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் 26 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு விடுக்கப்பட்டுள்ள மூன்றாம் கட்ட மண்சரிவு எச்சரிக்கையும் நீடிக்கப்பட்டுள்ளது. அபாயகரமான நிலைமை இன்னும் நீங்கவில்லை. எனவே, வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களைப் பின்பற்றி, தற்போது தங்கியிருக்கும் பாதுகாப்பான இடங்களிலேயே தொடர்ந்து இருக்குமாறு பொதுமக்களைக் கேட்டுக் கொள்கின்றோம். பாறை விழுதல், நிலச்சரிவு மற்றும் அச்சுறுத்தும் நிலைமைகள் குறித்து தொடர்ந்து தகவல்கள் கிடைக்கின்றன. வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்கவுள்ளதால், 50 மி.மீ அல்லது 100 மி.மீ மழையைத் தாண்டினால், ஏற்கனவே நிலச்சரிவுக்கான அறிகுறிகள் உள்ள இடங்களில் ஆபத்து மீண்டும் தீவிரமடைய அதிக வாய்ப்புள்ளது. எனவே, அதிக ஆபத்துள்ள பகுதிகளில் வசிப்பவர்கள், அந்தப் பகுதிகளில் ஆய்வு நிறைவடையும் வரை தங்கள் வீடுகளுக்குத் திரும்பிச் செல்ல வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இந்த ஆய்வுகள் மாவட்ட செயலாளர்களின் முன்னுரிமைப்படி நடைபெறுவதால், இதற்குச் சில நாட்கள் ஆகலாம். சுவர்களில் விரிசல் போன்ற சேதங்கள் குறித்து தெரிவிக்கப்பட்டால், தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவன அதிகாரிகள் ஆய்வு செய்து, உரிய நிறுவனங்களுக்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க அறிவுறுத்துவார்கள் என்றார். https://www.virakesari.lk/article/232530

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.