Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. பட மூலாதாரம், Hulton Archive/Getty Images படக்குறிப்பு, பிரிட்டன் உளவு வரலாற்றில் சிட்னி ரைலியின் தந்திரங்கள் சிறந்தவையாக கருதப்பட்டன. கட்டுரை தகவல் ரெஹான் ஃபசல் பிபிசி ஹிந்தி 23 நவம்பர் 2025 புதுப்பிக்கப்பட்டது 24 நவம்பர் 2025 ஆண்டு: 1925, நாள்: நவம்பர் 5, இடம்: ரஷ்யா ரஷ்யாவின் லுப்யான்கா சிறையில் அடைக்கப்பட்டிருந்த 73-ஆம் எண் கொண்ட கைதி அங்கிருந்து அருகில் உள்ள சோகோல்நிக்கி காட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டார். சோவியத் ராணுவ உளவு அமைப்பைச் சேர்ந்த (ஓஜிபியூ) மூன்று பேர் அவருடன் சென்றனர். பகோர்ஸ்க் சாலையில் அமைந்துள்ள ஒரு குளம் அருகே கார் நின்றது. காரிலிருந்து இறங்கி சிறிது தூரம் காட்டிற்குள் நடந்து செல்லுமாறு அந்த கைதியிடம் தெரிவிக்கப்பட்டது. இதில் அசாத்தியமாக எதுவும் இல்லை. இதற்கு முன்னரும் கூட கைதிகள் இது போல நடப்பதற்காக சில நாட்கள் இடைவெளியில் அழைத்து செல்லப்பட்டுள்ளனர். 2004-ஆம் ஆண்டு வார்ஃபேர் ஹிஸ்டரி நெட்வொர்க்கில் வெளியான 'தி மிஸ்டீரியஸ் சிட்னி ரைலி' என்கிற கட்டுரையில் வின்ஸ் ஹாவ்கின்ஸ் பின்வருமாறு எழுதுகிறார் - "கைதி காரிலிருந்து 30-40 அடிகள் நடந்திருக்க மாட்டார். அப்போது ஓஜிபியூ உளவாளியான ஆப்ரஹாம் அபிசாலோவ் தன்னுடைய துப்பாக்கியை எடுத்து அக்கைதியை பின்னிருந்து சுட்டார். தான் இவ்வாறு கொல்லப்படுவோம் என அவர் அறிந்திருக்கமாட்டார். ஒருவேளை அறிந்திருந்தாலும் அவர் தப்பிக்க வாய்ப்பில்லை, ஏனெனில் அவரைக் கொல்வதற்கான உத்தரவை ஸ்டாலினே பிறப்பித்திருந்தார். பிரிட்டன் உளவு வட்டாரங்களில் மிகச்சிறந்த உளவாளியாக கருதப்பட்ட சிட்னி ரைலி, இறுதியில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்." இவரை அடிப்படையாக வைத்துதான் பிரபல ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரம் உருவாக்கப்பட்டுள்ளது. பட மூலாதாரம், Biteback Publishing யுக்ரேனிய யூத குடும்பத்தில் பிறந்தவர் பிரிட்டன் உளவு வரலாற்றில் ரைலியின் தந்திரங்கள் சிறந்தவையாக கருதப்பட்டன. இவை 1931-ஆம் ஆண்டு அவர் இறந்த பிறகு வெளியான அவருடைய சுயசரிதை புத்தகமான, "அட்வெஞ்சர்ஸ் ஆப் ஏ பிரிட்டிஷ் மாஸ்டர் ஸ்பை" என்கிற புத்தகத்தின் மூலமாகத்தான் வெளி உலகிற்கு முதலில் அறிமுகமானது. இந்த சுயசரிதையின் சில பகுதிகள் லண்டன் ஈவினிங் ஸ்டாண்டர்டிலும் பிரசுரிக்கப்பட்டுள்ளன. ஸ்டீபன் க்ரே தனது, "தி நியூ ஸ்பைமாஸ்டர்ஸ்" புத்தகத்தில், "ரைலியிடம் ஒரு சிறந்த உளவாளிக்கான அனைத்து தகுதிகளும் இருந்தன. அவர் பல மொழிகள் பேசுவார், எளிதாக மக்களை ஏமாற்றக்கூடியவர், எந்த இடத்திலும் நுழையக்கூடிய திறமை அவரிடம் இருந்தது. நண்பர்களாகி அவர்களிடம் ரகசியங்களைப் பெறுவது அவருக்கு எளிதாக இருந்தது. சோவியத் ஒன்றியத்திற்கு அனுப்பப்பட்ட பிரிட்டனின் சிறந்த உளவாளிகளில் அவரும் ஒருவர்." என எழுதுகிறார். யுக்ரேனில் உள்ள ஒடேசாவில் ஒரு யூத குடும்பத்தில் 1873-ஆம் ஆண்டு பிறந்தார் ரைலி. 1890-ஆம் ஆண்டு லண்டனுக்கு குடிபெயர்ந்தவர், அங்கு ஒரு அயர்லாந்து பெண்ணை திருமணம் செய்து கொண்டதோடு அவரின் குடும்ப பெயரையும் தனது பெயருடன் சேர்த்துக் கொண்டார். தன்னையும் அயர்லாந்தைச் சேர்ந்தவர் என விவரிக்கத் தொடங்கினார். அப்போதிலிருந்து வணிகராகவும் பகுதிநேர துப்பறிவாளராகவும் பணியாற்றத் தொடங்கினார். பட மூலாதாரம், Tempus பிரிட்டன், ஜப்பானுக்கு உளவு பார்த்தவர் தகவல்களைச் சேகரித்து அவற்றை விற்பதுதான் அவரின் பணி. காக்கேசியா பகுதியில் உள்ள எண்ணெய்க்கான சாத்தியம் பற்றிய துல்லியமான தகவல்களையும் பிரிட்டன் உளவுப் பிரிவுக்கு வழங்கினார். ரஷ்யா-ஜப்பான் போரின்போது ரஷ்யாவின் பாதுகாப்பு திட்டங்களை திருடி அவற்றை ஜப்பானியர்களிடம் விற்றார். ஆண்ட்ரூ குக் தனது 'ஏஸ் ஆஃப் ஸ்பைஸ், தி ட்ரூ ஸ்டோரி ஆஃப் சிட்னி ரைலி' புத்தகத்தில், "போர் தகவல்களை வாங்கி விற்பதில் ரைலி முக்கியப் பங்கு வகித்தார். 1917-இல் ரஷ்ய புரட்சிக்கு முன்பாக அங்கு 1915-ஆம் ஆண்டின் கோடை காலத்தில் கடைசியாக காணப்பட்டார். 1914-இல் செயின்ட்.பீட்டர்ஸ்பெர்கில் உள்ள ஜெர்மன் கப்பல் கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளரிடமிருந்து ஜெர்மனியின் கடற்படை விரிவாக்கத்தின் முழுமையான ப்ளூபிரிண்டை திருடி அதை பிரிட்டன் உளவுப் பிரிவிடம் விற்றார்" என எழுதியுள்ளார். ரஷ்யாவில் அக்டோபர் புரட்சியைத் தொடர்ந்து பிரிட்டன் ராணுவத்தில் இணைய முடிவெடுத்தார் ரைலி. அப்போது நியூயார்க்கில் போர் ஒப்பந்தங்கள் தொடர்பாக வேலை செய்து வந்தார். அவருடைய சுயசரிதையை எழுதிய ஆண்ட்ரூ குக், "ரைலி வேறு சில நோக்கங்களுக்காக மீண்டும் ரஷ்யாவிற்குள் நுழைய திட்டமிட்டு வந்தார். செயின்ட்.பீட்டர்ஸ்பெர்கில் அதிக அளவிலான விலையுயர்ந்த பொருட்களையும் ஓவியங்களையும் விட்டுவிட்டு வந்திருந்தார். அவற்றை பிரிட்டனுக்கு எடுத்து வரும் முயற்சியில் இருந்தார்." எனத் தெரிவித்திருக்கிறார். ரஷ்யாவில் உளவுப்பணி பிரிட்டன் ரகசிய உளவு சேவையின் (எஸ்ஐஎஸ்) தலைவரான சார் மேன்ஸ்ஃபீல்ட் கம்மிங்ஸ், 1918-ஆம் ஆண்டு மார்ச் 18-ஆம் தேதி இவரை ரஷ்யாவிற்கு அனுப்புவதற்கு முன்பாக இவரின் பின்னணியை முழுமையாக விசாரித்திருந்தார். நியூயார்கில் உள்ள எஸ்ஐஎஸ் நிலையம் இவர் நம்பகமான நபர் இல்லையென்றும் ரஷ்யாவில் இவருக்கு வழங்கப்பட உள்ள பொறுப்புகளுக்கு உகந்தவர் இல்லையென்றும் தந்தி அனுப்பியிருந்தது. "நார்மன் துவெய்ட்ர்ஸ் என்கிற எஸ்ஐஎஸ் அதிகாரி, ரைலி ஒரு சிறந்த வணிகர், ஆனால் தேசப்பற்று அல்லது கொள்கை கொண்டவரோ இல்லை. எனவே விசுவாசம் தேவைப்படும் ஒரு வேலைக்கு இவரைத் தேர்வு செய்யக்கூடாது எனத் தெரிவித்திருந்தார். ஆனால் கம்மிங்ஸ் இவரின் பரிந்துரைகளைப் புறக்கணித்து ரைலியை ரஷ்யாவில் ஒரு உளவு திட்டத்தில் அனுப்ப முடிவெடுத்தார்." என குக் எழுதியுள்ளார். பட மூலாதாரம், Public Affairs பெண்கள் உடனான நட்பு ரஷ்யாவில் உள்ள தனது உளவாளிகளுக்கு ரைலியைப் பற்றிய குறிப்பு ஒன்றை கம்மிங்ஸ் அனுப்பியிருந்தார். அதில், "அவர் 5 அடி 10 அங்குலம் உயரம் இருப்பார். கண்கள் பழுப்பு நிறத்திலும் புடைத்துக் கொண்டிருப்பதைப் போலவும் இருக்கும். முகம் கருப்பாகவும் பல வெளிப்படையான கோடுகளைக் கொண்டும் இருக்கும்." எனக் குறிப்பிட்டுள்ளார். ஆனால் ரைலியிடம் உள்ள ஏதோ ஒன்று பெண்களை ஈர்த்துள்ளது. உளவு தகவல்களைச் சேகரிப்பதற்காக அவர்களைப் பயன்படுத்தி வந்தார். 'ஸ்பைஸ் அண்ட் கமிஷர்ஸ்' என்கிற தனது புத்தகத்தில் ராபர்ட் சர்வீஸ், "ரைலியுடன் தொடர்பில் இருந்தவர்களில் ரஷ்ய நடிகையான யெலிசவெடா ஓட்டனும் ஒருவர். ரஷ்ய அதிபர் மாளிகையான கிரெம்ளினிலிருந்து சில 100 யார்டுகள் தொலைவில் அடுக்குமாடி குடியிருப்பில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்திருந்தார். அதே குடியிருப்பில் வசித்த டக்மாரா கரோசஸ் என்கிற பெண்ணுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தார். ஜெர்மன் நாட்டு குடிமகளான டக்மாரா 1915-இல், உளவாளி என்கிற சந்தேகத்தில் ரஷ்ய உள்நாட்டு பாதுகாப்பு அமைச்சகத்தால் விசாரிக்கப்பட்டிருந்தார்." என எழுதியுள்ளார் ராபர்ட் தனது புத்தகத்தில் நீண்ட பட்டியல் ஒன்றை வழங்கியுள்ளார். "கூடுதலாக ஒல்கா ஸ்டார்ஜெவ்ஸ்கயா என்கிற பெண்ணும் அவரைத் தீவிரமாக காதலித்து வந்தார். அவர்களுக்கு விரைவில் திருமணமாகும் என்றும் அவர் நம்பி வந்தார். காங்கிரஸ் ஆஃப் சோவியத்ஸ் அலுவலகத்தில் அவர் தட்டச்சு வேலை செய்பவராக பணியாற்றி வந்தார். அவர் மீது ரைலி ஆர்வம் காட்டியதற்கு ஒரே காரணம் முக்கியமான ஆவணங்களை அணுக முடியும் என்பதுதான். மரியா ஃப்ரீடே என்கிற பெண்ணுடன் அவர் தொடர்பில் இருந்தார். அவரின் சகோதரர் அலெக்ஸாண்டர் ராணுவத்தில் லெப்டினன்ட் கர்னலாக இருந்தார். ராணுவ விவகாரங்களுக்கான அலுவலகத்தில் பணியாற்றி வந்தார்." என்று அதில் குறிப்பிடுகிறார். ஸ்டீபன் கேரி பின்வருமாறு எழுதுகிறார், "ரகசியமாக வாழ்வதிலும் வெவ்வேறு மாறு வேடங்களை அணிவதிலும் அவர் தேர்ந்து விளங்கினார். பெட்ரோகார்டில் அவரை துருக்கிய வணிகரான கொன்ஸ்டன்டின் மசினோ என மக்கள் அறிவார்கள். மாஸ்கோவில் அவர் கிரேக்க வணிகரான கான்ஸ்டன்டின் என அறியப்பட்டார். மற்ற இடங்களில் அவர் ரஷ்ய உளவு அமைப்பின் கிரிமினல் விசாரணை பிரிவின் உறுப்பினரான சிக்மண்ட் ரெலின்ஸ்கி என தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார்." லெனினை நெருங்கிய ரைலி 1918-ஆம் ஆண்டு ஏப்ரலில் மாஸ்கோவிற்கு வந்த பிறகு அங்கிருந்த பிரிட்டன் உளவாளிகளுடன் தொடர்பை தவிர்த்து வந்தார். சோவியத் சாதனைகள் பற்றிய புத்தகத்திற்கான ஆய்வில் இருப்பதாகக் கூறி அவர் கிரெம்ளினுக்கு (ரஷ்ய அதிபர் மாளிகை) சென்றார். அதன் தொடர்ச்சியாக லெனினின் தலைமை பணியாளரான விளாடிமிர் ப்ரூயேவிசை சந்தித்தார். இந்த சந்திப்பை பற்றி ராபர்ட் சர்விஸ் தனது 'ஸ்பைஸ் அண்ட் கமிஷர்ஸ்' புத்தகத்தில் எழுதியுள்ளார். "சிட்னி மற்றும் ப்ரூயேவிச் இடையேயான சந்திப்பு எந்த அளவிற்கு வெற்றிகரமானது என்றால் அவருக்கு அரசு வாகனத்துடன் பாலிடெக்னிக் அருங்காட்சியகத்தில் நடைபெற இருந்த மே தின கொண்டாட்டத்திலும் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. மாஸ்கோவில் இருந்த பிரிட்டன் உளவாளிகளான ராபர்ட் லாக்ஹார்ட் மற்றும் ஜார்ஜ் ஹில், தங்களின் சுயசரிதையில் ரைலி சோவியத் அரசுக்கு எதிராக கலகம் செய்ய திட்டமிட்டார் எனக் குறிப்பிடுகின்றனர். லெனின் உட்பட மூத்த சோவியத் தலைவர்களை துப்பாக்கி முனையில் வைத்து கைது செய்ய வேண்டும் என்பதுதான் ரைலியின் திட்டம் என அவர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் லெனினைக் கொல்ல வேண்டும் என அவர் திட்டமிடவில்லை. ஏனென்றால் லெனின் வெளிநாட்டு சக்திகளால் கொல்லப்பட்டால் அதற்கு சோவியத் மக்களின் எதிர்வினை மிகவும் கொடூரமானதாக இருக்கும் என அவர் நம்பினார். ஜார்ஜ் அலெக்ஸாண்டர் ஹில் தனது 'கோ ஸ்பை தி லேண்ட்' புத்தகத்தில் இவ்வாறு எழுதுகிறார், "ரைலியின் நிஜ திட்டம் என்பது லெனின் உள்ளிட்ட அனைத்து சோவியத் தலைவர்களையும் மாஸ்கோவின் தெருக்களில் பேரணியாக அழைத்து வந்து ரஷ்யர்கள் எவ்வளவு வலுவிழந்தவர்கள் என்பதைக் காட்ட வேண்டும் என்பதுதான். இது கடினமான பணி. சிட்னியின் கூட்டாளி இது சாத்தியமானது இல்லை எனக் கூறி நிராகரித்துவிட்டார்." பட மூலாதாரம், Biteback Publishing தோல்வியில் முடிந்த திட்டம் ஆகஸ்ட் 17-ஆம் தேதி ரைலியும் இன்னொரு பிரிட்டிஷ் ஏஜென்டான ஜார்ஜ் ஹில்லும் லாட்விய பிரிவு தலைவரைச் சந்தித்தனர். செப்டம்பர் முதல் வாரத்தில் நடைபெறும் சோவியத் தலைவர்கள் மற்றும் கவுன்சில் ஆஃப் பீப்பில்ஸ் கமிஷர்ஸின் கூட்டத்தின்போது கிளர்ச்சியை நடத்த வேண்டும் என்பது தான் திட்டம். ஆனால் இறுதி நேரத்தில் நடைபெற்ற சில எதிர்பாராத சம்பவங்கள் இந்த திட்டத்தை குலைத்தது. ஆகஸ்ட் 30-ஆம் தேதி, ஒரு ராணுவ வீரர், சோவியத் உளவுப் பிரிவின் தலைவரான மொசல் உரிட்ஸ்கியைக் கொன்றார். அதே நாளில் ஃபன்யா கப்லான் என்பவர் மாஸ்கோ தொழிற்சாலைக்கு வெளியாக லெனினை சுட்டார். இந்த துப்பாக்கிச் சூட்டில் லெனின் காயமடைந்தார். இந்த நிகழ்வுகளைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான அரசியல் எதிரிகளை கைது செய்வதற்கான நடவடிக்கையைத் தொடங்கினார். இந்த கிளர்ச்சியைத் திட்டமிட்ட ரைலியின் கூட்டாளிகளும் இந்த ஆபரேஷனில் கைது செய்யப்பட்டனர். பிரிட்டன் தூதரகத்திற்குள் புகுந்து சிட்னி ரைலியின் கூட்டாளியான க்ரோமியைக் கொன்றனர். ரைலியின் மற்றுமொரு கூட்டாளியான ராபர்ட் லாக்ஹார்டும் கைது செய்யப்பட்டார். பின்னர் லண்டனில் சிறை வைக்கப்பட்டிருந்த மாக்ஸிம் லிட்வினோவின் விடுதலைக்கு கைமாறாக ராபர்ட் விடுவிக்கப்பட்டார். ரைலியின் தூதுவர் யெலிசவெடா ஆடென், மரியா ஃப்ரீடே மற்றும் இன்னொரு காதலியான ஒல்கா ஸ்டார்ஜெவ்ஸ்கயா ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். ரைலியின் கைது ரைலியின் மறைவிடமும் ரஷ்ய உளவுப் பிரிவினரால் சோதனை செய்யப்பட்டது. ஆனால் பிரிட்டன் உளவாளிகளின் உதவியுடன் அவர் ரஷ்யாவில் இருந்து தப்பித்துச் சென்றார். பின்லாந்து மற்றும் ஸ்டாக்ஹோம் வழியாக நவம்பர் 9-ஆம் தேதி லண்டனை அடைந்தார். அதன் பிறகு ரைலி அடுத்த சில வருடங்களை வெவ்வேறு ஐரோப்பிய நாடுகளில் கழித்தார். இதற்கிடையே ரஷ்ய நீதிமன்றம் போல்ஷெவிக் அரசை கவிழ்க்கும் முயற்சியில் ஈடுபட்டதற்காக அவருக்கு மரண தண்டனை விதித்திருந்தது. 1925-இல் அவர் ஒரு கடைசி மிஷனுக்காக ரஷ்யாவிற்கு திரும்பினார். சோவியத் ஒன்றியத்தின் ராணுவ மற்றும் தொழில்துறை திறன்களைப் பற்றிய உளவுத் தகவல்கள் சேகரிப்பதே இதன் நோக்கமாக இருந்தது. யூஜீன் நீல்சன் எழுதிய "சிட்னி ரைலி, ஏஸ் ஆஃப் ஸ்பைஸ்" என்கிற கட்டுரை ஜெருசலேம் டைம்ஸில் ஆகஸ்ட் 21, 2023 அன்று வெளியானது. "சோவியத் அரசை கவிழ்க்க வேண்டும் என ரைலி வெறியுடன் இருந்தார். இந்தப் பணிக்கு சோவியத் ஒன்றியத்தில் செயல்பட்டு வந்த ரகசிய போல்ஷெவிக் எதிர்ப்பு அமைப்பான ட்ரஸ்ட் தனக்கு உதவும் என அவர் நம்பினார். ஆனால் இது போல்ஷெவிக் அரசின் எதிரிகள் மற்றும் வெளிநாட்டு ஏஜென்டுகளை ரஷ்யாவிற்குள் வரவைப்பதற்கு ரஷ்ய உளவு அமைப்பு வைத்த பொறி. ரைலி அதற்குப் பலியானார்." என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவுக்கு வந்த ரைலி கைது செய்யப்பட்டு மாஸ்கோவின் லுப்யான்கா சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு பல நாட்கள் தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். 1925, நவம்பர் 5-ஆம் தேதி மாஸ்கோ அருகே உள்ள காட்டில் சுடப்பட்டார். அவர் சிறையிலிருந்து தப்பிச் செல்ல முயன்றபோது சுடப்பட்டார் என்றே ரஷ்யா நீண்ட காலமாக தெரிவித்துவந்தது. ஆனால் 2002-இல் சோவியத் ஏஜென்ட் போரிஸ் குட்ஸ், ரைலியின் சரிதையை எழுதியவரான ஆண்ட்ரூ குக்கிற்கு பேட்டி அளித்திருந்தார். அதில் சிட்னி ரைலியை விசாரித்து சுட்டுக் கொன்ற குழுவில் தான் ஒரு உறுப்பினராக இருந்ததாகத் தெரிவித்துள்ளார். சிட்னி ரைலி மற்றும் ஜேம்ஸ் பாண்ட் பட மூலாதாரம், Bradley Smith/CORBIS/Corbis via Getty Images படக்குறிப்பு, ஃப்ளெமிங், ரைலியின் தந்திரங்கள் பற்றி அவரின் நண்பரான ராபர்ட் லாக்ஹார்டிடம் இருந்து தெரிந்து கொண்டார். சிட்னி ரைலியின் வாழ்க்கையை வைத்து தான் இயன் ஃப்ளெமிங் ஜேம்ஸ் 'பாண்ட்' என்கிற உளவாளி கதாபாத்திரத்தை உருவாக்கினார் என நம்பப்படுகிறது. ஃப்ளெமிங், ரைலியின் தந்திரங்கள் பற்றி அவரின் நண்பரான ராபர்ட் லாக்ஹார்டிடம் இருந்து தெரிந்து கொண்டார். ரைலியுடன் ரஷ்யாவில் பணியாற்றிய ராபர்ட் லாக்ஹார்ட் புகழ்பெற்ற 'ரைலி: ஏஸ் ஆஃப் ஸ்பைஸ்' என்கிற புத்தகத்தை எழுதியிருந்தார். அவரின் நல்ல தோற்றம், சிறந்த உடைகள் மீதான அவரின் விருப்பம், பெண்கள், கார்கள் மற்றும் மதுபானம் மீதான அவரின் காதல், பல மொழிகள் மற்றும் ஆயுதங்களின் மீதான அவரின் நிபுணத்துவம் மற்றும் எதிரிகள் மீதான ஆக்ரோஷமான அணுகுமுறை போன்ற குணாதிசயங்களை அடிப்படையாக வைத்து ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தை ஃப்ளெமிங் உருவாக்கினார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cpwk8pvklq9o
  2. 26 Nov, 2025 | 04:57 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) இந்திய மீனவர்களின் அத்துமீறல் மற்றும் சட்டவிரோத மீன்பிடியாளர்களின் அடாவடித்தனமான செயற்பாடுகளாலும் வடக்கு மீனவர்களின் வாழ்வாதாரக் கருவூலமான வடக்குக் கடல் சூறையாடப்படுகிறது. இக்கடல் வளத்தை முறையாக பேணவேணுவது வடக்கு மீனவர்களின் நிலைபேறான கடற்றொழில் வாழ்வை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தினார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (26) நடைபெற்ற 2026 வரவு செலவுத் திட்டத்தின் கடற்றொழில், நீரியல் வளங்கள் மற்றும் கடல் வளங்கள் அமைச்சு மற்றும் விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சு, டிஜிட்டல் பொருளாதார அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, போசணையிலும் வேலைவாய்ப்பிலும் உணவு பாதுகாப்பிலும் அந்நியச் செலாவணியிலும் அரச வருவாயிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை ஆற்றுகின்ற கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் தொடர்பான இன்றைய விவாதத்திலே வன்னி மாவட்டத்தில் இன்னமும் சீர் செய்யப்படவேண்டியுள்ள பகுதிகளை விவாதிக்க விரும்புகிறேன். கிட்டத்தட்ட ஒவ்வோர் ஆண்டும் மொத்த தேசிய உற்பத்தியில் 1 சதவீத பங்களிப்பை கடற்றொழில் வழங்குகிறது. கடந்த ஆண்டின் தேசிய ஏற்றுமதி வருவாயில் 2.4மூ பங்களிப்பை வழங்கியுள்ளது. இலங்கை வாழ் மக்களின் விலங்கு புரத உட்கொள்ளலில் 50மூ இற்கும் அதிகமான பங்களிப்பை கடல்சார் உணவுகள் வழங்குகின்றன. இது உலகளாவிய சராசரியிலும் மூன்று மடங்கு உயர்வாகும். ஒரு மில்லியனுக்கும் அதிகமான இலங்கையர்கள் நேரயாகவோ மறைமுகமாகவோ இந்த மீன்வளத்தை வாழ்வாதார மூலமாக நம்பியுள்ளனர். கடலோர மீன்பிடி, கடலோர மற்றும் ஆழ்கடல் மீன்பிடி, நன்னீர் மீன்பிடி மற்றும் மீன்வளர்ப்பு அனைத்தும் கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறைக்கு முக்கிய பங்காற்றுகின்றன. இருப்பினும் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறையின் வலிமை சீரற்றது. குறிப்பாக வடகடல் பகுதியில் மிகவும் சீரற்ற அணுகல் கடற்றொழில் பரப்பில் காணப்படுகிறது. இலங்கையின் கடந்த ஆண்டின் மொத்த மீன் விளைச்சலின் 16 சதவீத பங்களிப்பை வடகடல் வழங்கியுள்ளதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்திணைக்களத்தின் 2024ஆம் ஆண்டு அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. ஆனால் வடகடலின் பங்களிப்பு அதன் வளநிலையுடன் ஒப்பிடும் போது மிகக்குறைவாகவே உள்ளது. உள்ளுரில் தொடரும் சட்டவிரோத மீன்பிடி முறைகள், எல்லைதாண்டிய இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறிய மீள்வளச்சுரண்டல் வடகடலின் மீன்விளைச்சலுக்கு சவாலாகும் முக்கிய காரணிகள் ஆகின்றன. சட்டத்துக்குப் புறம்பான, ஒழுங்குபடுத்தப்படாத, அறிக்கைப்படுத்தப்படாத மீன்பிடியால் (ஐயுயு) வருடாந்தம் உலகளாவிய வகையில் 26-50 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பொருளாதார இழப்பு ஏற்படுவதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்திணைக்களத்தின் 2020ஆம் ஆண்டின் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. 2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் துறைமுக அபிவிருத்திப்பணிகள், படகுத்தள மறுசீரமைப்பு, மீன்பிடி தொழிலுக்கான துணை உபகரணங்களை வழங்கல், நன்னீர் மீன்பிடி ஊக்குவிப்பு, விழிப்புணர்வுத்திட்டங்கள், ஆராய்ச்சி முன்னெடுப்புகள் உள்ளிட்டவற்றுக்கான முன்மொழிவுகளை வரவேற்பதோடு மீனவர்களுக்கும் நிலைபேறான மீன்வளச்சூழமைவுக்கும் பெரும் அச்சுறுத்தலாகும் காரணிகளை இழிவளவாக்குவதற்கான முயற்சிகளிலும் கூடுதல் கரிசனை கொள்ளுமாறு கடற்றொழில் அமைச்சரைக் கேட்டுக்கொள்கின்றேன். வடமாகாணத்தில் உள்ள மீனவர்கள் எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பில் பல முறை இந்த அவையிலே விவாதிக்கப்பட்டன. ஏனைய துறைகளில் கொள்ளும் கரிசனையைக்கூட இத்துறையில் இதுவரை அரசு காட்டாதிருப்பது சற்று ஏமாற்றமாகத்தான் இருக்கிறது. இதுவரை காத்திரமான முடிவுகள் எட்டப்படாது நீடித்திருக்கும் இப்பிரச்சினைகளால் கடலை நம்பி வாழும் ஓரு இலட்சத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இழுவைமடி படகுகள்,வெளிச்சம் பாய்ச்சி மீன்பிடித்தல்,வெடிவைத்து மீன்பிடித்தல், சுருக்கு வலைகளில் மீன்பிடித்தல் உள்ளிட்டவை இலங்கையின் சட்டத்துக்கு அமைவாக தடைசெய்யப்பட்ட தொழில் முறைகள். இத்தொழில் முறைகளால் இலங்கையின் கடல் வளம் அதிலும் குறிப்பாக வடகிழக்கின் கடல் வளம் தற்போது வெகுவாக சீர்குலைக்கப்பட்டு வருகிறது. சட்டங்கள் இயற்றப்பட்டாலும் அவை இதுவரை நடைமுறைப்படுத்தப்படாதிருப்பது அரசாங்கத்தின் தவறாகும். சட்டத்திற்கு புறம்பாக இயங்குபவர்கள் கட்டுப்படுத்தப்படவேண்டிய சூழ்நிலையில் தற்போது சட்டத்தை மதித்து இயங்குபவர்களே தண்டிக்கப்படுகிறார்கள். அவர்களின் நாளாந்த வாழ்வாதாரம் தண்டிக்கப்படுகிறது. தடைசெய்யப்பட்ட தொழில்முறைகளைக் கட்டுப்படுத்தாதிருக்கும் போது நாளுக்கு நாள் அவ்வாறான தொழில் முறைகளைப் பயன்படுத்தும் மீனவர்களின் எண்ணிக்கை வடகடல்பரப்பில் அதிகரித்துச் செல்கிறது. தடைசெய்யப்பட்ட தொழில் முறைகளில் நூற்றுக்கணக்கான கிலோ மீன்களை பிடித்து இலாபம் உழைக்கும் அதே கடற்பரப்பில் ஐந்து கிலோ பத்துகிலோ என எரிபொருளுக்கும் வருவாய் ஈட்டாத அளவுக்கு பாரம்பரிய மீனவர்கள் பாதிக்கப்படுகின்றனர். முல்லைத்தீவில் கடந்த 2024 ஆம் ஆண்டு 12,335 மெற்றிக் தொன் அளவிலான மீன்வளங்கள் கடற்றொழில் ஊடாக பெறப்பட்டதாக தங்கள் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. இவ்வளவு தொகை மீன்களில் வெளிச்சம் பாய்ச்சியும் வெடிவைத்தும் இரவுவேளைகளில் சுருக்குவலைகளைப் பயன்படுத்தியும் பிடித்த மீன்கள் எவ்வளவு மெற்றிக் தொன் என்ற புள்ளிவிபரம் ஏதேனும் தங்களிடம் உள்ளதா? ஏனெனில் பெரும்பாலான நேரத்தில் எரிபொருளுக்கும் வருவாய் ஈட்டாத அளவு மீன்களுடனேயே பாரம்பரிய மீனவர்கள் கரை திரும்புகின்றனர். இந்த அரசாங்கம் யாரைக்காக்கிறது? யாரை வஞ்சிக்கிறது? என்று தெரியவில்லை. கடல் தொழிலில் இந்த அரசு ஊழலுக்கு துணைபோகின்றது என்பதையே நடக்கும் நிகழ்வுகள் சான்றாக்குகின்றன.இத்தகைய மீன்பிடி முறைகள் இந்த ஆண்டோடு அதாவது 2025ஆம் ஆண்டோடு முற்றாக இலங்கைக்குள் தடைசெய்யப்படும் என மீன்பிடி அமைச்சர் இவ்வாண்டு உறுதியளித்திருந்தார். அறத்தை மதித்து கடலை மதித்து மீன்பிடிக்கும் மீனவர்கள் உங்கள் காலத்தில் பட்டினியால் மாண்டார்கள் என்பதை நிகழ்வாக்கவேண்டாம் என தயவுடன் அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கிறேன். இலங்கை கடற்பரப்பினுள் தொடர்ச்சியாக அத்துமீறும் இந்திய இழுவைப் படகுகளை கட்டுப்படுத்தவேண்டியதும் இந்த அரசின் கடப்பாடு. இத்தகைய தொடர்ச்சியான அத்துமீறல் நாட்டின் இறையாண்மையை கேள்விக்கு உள்ளாக்குகிறது. எல்லோரும் பயன்படுத்திச் செல்வதற்கு வடக்கு கடல் ஓர் ஒழுங்குபடுத்தப்படாத, திறந்தவெளி அணுகல் வலயம் அல்ல. மாறாக இது வடமாகாணத்தைச் சார்பாக்கும் மீனவர்களின் வாழ்வாதாரத்திடல்! அவர்களின் உரித்து. இந்தக்கடல் இந்தத்தலைமுறைக்கு மட்டும் அல்ல. இனி வரும் சந்ததிகளுக்குமானது. இனிவரும் காலத்திற்குமாக இக்கடல் வளத்தை முறையாக பேணவேண்டியது எம் எல்லோரின் பொறுப்பு! 1996ஆம் ஆண்டின் 2ஆம் இலக்க கடற்றொழில் நீர் வாழ் உயிரினவளங்கள் சட்டத்தின் 27ஆம் பகுதியின் முதல் கூற்று இலங்கை நீர்நிலைகளில் மீன் அல்லது பிற நீர் வாழ் வளங்களை நஞ்சாக்குதல், கொல்லுதல், அதிர்ச்சி ஊட்டுதல் அல்லது முடக்குதல் போன்ற நோக்கங்களுக்காக ஏதேனும் நஞ்சுஇ வெடிப்பு அல்லது மயக்கத்தை ஏற்படுத்தும் பொருள் (டைனமிக் உட்பட) அல்லது பிற தீங்கு விளைவிக்கும் பொருளைப் பயன்படுத்தல் அல்லது பயன்படுத்த முயற்சித்தலைத் தடைசெய்கிறது. முல்லைத்தீவு கடற்பரப்பில் இத்தகைய தடைசெய்யப்பட்ட தொழில்முறைகள் இன்றளவும் நடைபெறுகின்றன. குறித்த சட்டத்தின் இரண்டாம் கூற்று அவ்வாறான பொருள்களை தரைக்கு கொண்டுவருதல், விற்றல், வாங்குதல், வைத்திருத்தல், கொண்டுசெல்லல் போன்றவற்றையும் தடைசெய்கிறது.அத்தகைய பொருள்கள் தரைக்கு கொண்டுவரப்படுகின்றன. விற்கப்படுகின்றன. வாங்கப்படுகின்றன. கொண்டு செல்லப்படுகின்றன. சட்டத்தின் 28ஆம் பகுதி தடைசெய்யப்பட்ட மீன்பிடி உபகரணங்கள் அல்லது தடைசெய்யப்பட்ட மீன்பிடி முறைகளை சாதாரண உள்ளுர் மீன்பிடி படகுகளில் வைத்திருப்பதையோ பயன்படுத்துவதையோ தடைசெய்கிறது. அத்தகைய தடை செய்யப்பட்ட மீன்பிடி உபகரணங்கள் மீன்பிடி படகுகளில் வைத்து பயன்படுத்தப்படுகின்றன. இலங்கை கடற்படை, கடலோர பாதுகாப்பு திணைக்களம், கடற்றொழில் திணைக்களம், தேசிய நீரியல் வள ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிறுவனம், பாதுகாப்பு அமைச்சு, இராணுவம் என அனைத்து துறையினரும் இணைந்து கூட இலங்கை மீனவர்களின் தடைசெய்யப்பட்ட தொழில்முறைகளையும் எல்லை தாண்டிவரும் இந்திய மீனவர்களையும் கட்டுப்படுத்த இயலவில்லை. முல்லைத்தீவின் கடற்பரப்பில் மேற்கொள்ளப்படும் சட்டவிரோத தொழில்முறைகள் தொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் மற்றும் நீரியல் வள திணைக்களத்தின் உதவிப்பணிப்பாளரிடம் முறையிடச்செல்லும் போது தன்னிடம் போதியளவு ஆளணி இல்லை என பதிலளிப்பதாகவே மீனவர்கள் எம்மிடம் முறையிடுகின்றனர். இலங்கையின் அத்தனை பாதுகாப்புக் கட்டமைப்புகள் இணைந்து கூட கட்டுப்படுத்த இயலாதிருப்பின், தன்னிடம் போதியளவு ஆளணி இல்லை என முல்லைத்தீவு மாவட்ட உதவிப்பணிப்பாளர் கூறுவது உண்மை எனில் போதியளவு ஆளணியை குறித்த திணைக்களங்களுக்கு வழங்கி இவற்றை கட்டுப்படுத்த ஆவன செய்யுங்கள்.அவ்வாறு போதிய அளவு ஆளணி உங்களிடம் இல்லையேல் இன்றுவரை சட்டத்துக்கு இசைவாக மீன்பிடிக்கும் எங்களின் நூற்றுக்கணக்கான மீனவர்கள் உங்கள் திணைக்களத்துடன் வருகிறோம். கட்டுப்படுத்துங்கள். ஒவ்வொரு முறைகேடும் இங்கு நடைபெறும் போது எங்களுக்கு விடுதலைப்புலிகளின் நிழல் நிர்வாகத்தையே உங்களுக்கு எடுத்துக் காட்ட வேண்டியுள்ளது. விடுதலைப்புலிகளின் காலத்தில் இங்கு இந்திய மீனவர்களும் எல்லை தாண்டி வரவில்லை. இலங்கை மீனவர்களும் தடைசெய்யப்பட்ட தொழில் முறைகளை இங்கு பயன்படுத்த முனையவில்லை. அவர்களால் இயல்பாக கொண்டுவர முடிந்ததை ஓர் அரசாகக்கூட ஏன் உங்களால் இதுவரை இயலவில்ல கரையோரங்களில் கனிய மணல் அகழ்வுக்கான முயற்சிகள் பல இடங்களிலும் நடைபெற்றுவருகின்றன. கொக்கிளாய் முகத்துவாரத்தில் இருந்து சுமார் 44 ஏக்கர் கரையோரமாக 32 குடும்பங்களின் கரைவலைப்பாடுகள், காலபோக நெற்செய்கைக்கான விளைநிலங்கள், மானாவாரிக் காணிகள் அடங்கிய பகுதிகள் கனியமணல் அகழ்வுக்கென கையகப்படுத்தப்பட்டு வேலியிடப்பட்டன. முல்லைத்தீவின் கொக்கிளாய் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட கனிய மணல் அகழ்வின் பின்னர் அப்பகுதி முறையாக மீள்நிரப்பப்படாததால் கடல் நீர் ஊருக்குள் புகுந்து மக்களின் வாழ்வியலை சீர்குலைத்திருந்தது. அதற்கான மண் நிரப்பல் உள்ளிட்ட பரிகாரச் செயற்பாடுகள் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை. கனிய மணலுக்காக அபகரிக்கப்பட்ட 44 ஏக்கருக்கு மேலதிகமாக அதற்கு முன்னர்,பூர்வீகத்தமிழ் மக்கள் வாழ்ந்து தொழில் புரிந்த 20 ஏக்கர் வரையான உறுதிக்காணிகளில் போருக்குப் பின்னர் சிங்கள மக்கள் குடியமர்த்தப்பட்டுள்ளனர். கொக்கிளாய் கனிய மணல் அகழ்வுக்கு ஒப்பான முயற்சிகள் மீண்டும் முல்லைத்தீவின் கரையோரப்பகுதிகளில் குறிப்பாக செம்மலை கிழக்கு, செம்மலை, அளம்பில், உடுப்புக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் கனிய மணல் அகழ்வுக்கான மணல் ஆய்வுக்கென உரிய தரப்பினர் வருகை தந்தபோது அதனை மக்கள் எதிர்த்திருந்தனர். கடந்த 2024.07.31ஆம் திகதி இவ்வாறானதொரு கனிய மணல் அகழ்வுக்காக கனியமணல் கூட்டுத்தாபனம், கடலோர பாதுகாப்புத் திணைக்களம், வனசீவராசிகள் திணைக்களம், சுற்றுச்சூழல் திணைக்களம், நீர் வழங்கல் முகாமைத்துவப்பிரிவுஇ புவிச்சரிதவியல் திணைக்களம் என்பவற்றின் அதிகாரிகளோடு கரைதுறைப்பற்று பிரதேச செயலக காணி உத்தியோகத்தர், கிராம உத்தியோகத்தர் அடங்கலான ஓர் அணி அளம்பில் குருசடி எனும் பகுதிக்கு வருகைதரும் போது மக்களின் கடுமையான எதிர்ப்பினால் திருப்பி அனுப்பப்பட்டனர். அளம்பில் குருசடி தொடக்கம் தீர்த்தக்கரை வரையான சுமார் 10 கிலோமீற்றர் நீளத்துக்கும் கரையோரத்தில் இருந்து 300 மீற்றர் தூரமான மேல் பகுதி வரை அளவீடு செய்து கையகப்படுத்தி கனிய மணல் அகழ்வதற்கான தொடக்க முயற்சியே அன்று மக்களின் எதிர்ப்பால் தடுக்கப்பட்டது. முல்லைத்தீவு மாவட்டத்தின் கரையோரமானது கொக்கிளாய் தொடக்கம் சுண்டிக்குளம் வரையான சுமார் 75 கிலோமீற்றர் நீளமானது. முல்லைத்தீவு முழுதும் இவ்வாறு பல்வேறு தேவைக்கும் கரையோரம் கையகப்படுத்தப்பட்டால் அப்பகுதிகளின் மீனவர்கள் எங்கு தொழில் செய்வது! அம்மீனவர்களின் வாழ்வாதாரத்துக்கு அரசின் பதில் என்ன? மன்னாரில் பேசாலையிலும் இத்தகைய கனிய மணல் அகழ்வுக்கான தொடக்க ஆய்வு முயற்சிகள் மக்கள் எதிர்ப்பால் தடுக்கப்பட்டன. மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் அனுமதி இல்லாது இவ்வாறான முயற்சிகளை மேற்கொள்ளமுடியாது. மக்களின் கருத்துகளை புறந்தள்ளி வடகிழக்கின் கரையோரங்களை முறையற்று இவ்வாறு கையகப்படுத்தும் திட்டங்களை கைவிடுங்கள். மன்னார் தீவில் கடந்த காலங்களில் காற்றாலை நிறுவப்படும்போது ஏனைய சூழல் காரணிகள் தொடர்பாக முறையான கவனம் செலுத்தப்படாமையால் வெள்ளப்பெருக்கு உள்ளிட்ட அவலநிலைகளால் மக்கள் பெரும் இன்னல்களை எதிர்கொண்டனர். இவ்வாறு வடகிழக்கில் பல்வேறு செயற்றிட்டங்களுக்கும் வடகிழக்கு வளங்கள் நிறுவனங்களுக்கு தாரைவார்க்கப்பட்டு அவை முறையாக செயற்படுத்தப்படாததாலும் முழுமைப்படுத்தப்படாததாலும் அவற்றினால் ஏற்படும் இலாபத்தை நிறுவனங்களும் பாதிப்பை மக்களுமே தான் எதிர்கொள்கின்றனர். கடந்த கால கசப்பான அனுபவங்களைக் கொண்டே கடல் வளத்தை பாதிக்கும் இத்தகையை தடைசெய்யப்பட்ட தொழில் முறைகளின் நீடித்த செய்கையையும் கரையோரங்களில் மேற்கொள்ளப்படும் கனியமணல் உள்ளிட்ட முயற்சிகளையும் எதிர்க்கிறோம். எச்செயற்றிட்டத்தை மேற்கொள்வதாயினும் முறைப்படி மக்களைத் தெளிவூட்டி அவர்களின் அனுமதியோடு அரசுகள் அவற்றை செயற்படுத்தவேண்டும் என்பதை இங்கு தெரிவிக்கிறேன். தேசிய அளவிலான மீன் வளக் கொள்கைகளின் பலவீனமான நடைமுறைப்படுத்தலால் வடகடல் வெகுவாகப் பாதிக்கப்பட்டு வருகிறது என்பதை நாம் ஏற்றுக்கொள்ளவேண்டும். இந்தத்தீவிலே மிகக்கடுமையாக உழைக்கும்இ மிகவும் குறைவாக பாதுகாக்கப்படும் ஊழியக்குடிமக்கள் மீனவர்கள் தாம். நான்கு புறமும் கடலால் சூழப்பட்ட ஒரு தீவு என்ற வகையில் மீனவர்களின் நிலைபேறான வாழ்வு இத்தீவின் பொருளாதாரத்தை மிகவும் வலுப்படுத்தும். இந்நிலையில் சட்டவிரோத மீன்பிடி நடைமுறைகளைத் தடைசெய்யும் அனைத்து சட்டங்களையும் உடனடியாக நடைமுறைத்துங்கள் எனக் கேட்டுக்கொள்கிறேன். எமது கடல் வளத்தைப் பாதிக்கும் அயலக நடைமுறைகள் தொடர்பில் அதீத கரிசனை கொண்டு தீவின் வடகடலின் இறையாண்மையை காக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். வடகடல் சார் பாதுகாப்பையும் நிலைபேறான மீனவர் வாழ்வாதாரத்தையும் உறுதிப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். இயற்கையான, செயற்கையான அழிவுகளில் இருந்து மீண்டெழும் வகையில் மீனவர்களுக்கான இழப்பீட்டையும் காப்புறுதித் திட்டங்களையும் சீரமைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.நிறைவாக, வடகடல் என்பது என்பதை புவியியல் சார்ந்த ஒரு தளமாக கருதுவதைத் தாண்டி,வடக்கு வாழ் மக்களின் வாழ்வாதார கருவூலம். மீனவர்களின் நிலைபேறான கடற்றொழில் வாழ்வை அரசு உறுதிப்படுத்த வேண்டும். அவ்வாறு உறுதிப்படுத்தினால் மீனவர்களின் வறுமை இயல்பாகவே விலகும். தீவுக்கே மீன் வழங்கும் இனத்தை வலுவூட்டுங்கள் என்றார். https://www.virakesari.lk/article/231522
  3. நைஜீரியாவில் கடத்தப்பட்ட 24 மாணவிகள் விடுவிப்பு 26 Nov, 2025 | 02:26 PM வடமேற்கு நைஜீரியாவில் பாடசாலை விடுதிக்குள் நுழைந்த பயங்கரவாதிகளால் கடந்த வாரம் கடத்தப்பட்ட 24 மாணவிகள் விடுவிக்கப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த திங்கட்கிழமை (17) கெப்பி மாநிலத்திலுள்ள இவ்விடுதிக்குள் நுழைந்த ஆயுதக் குழுவினர் பாடசாலையில் துப்பாக்கிகளால் தாக்கிவிட்டு, துப்பாக்கிமுனையில் மாணவிகளை கடத்திச் சென்றனர். அதேவேளை, அந்நாடு முழுவதும் கடத்தல் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. குவாரா மாநிலத்தில் 10 பெண்கள் மற்றும் சிறுவர்கள் மீண்டும் கடத்தப்பட்டனர். இந்நிலையில், நைஜர் மாநில கத்தோலிக்க பாடசாலையொன்றில் 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கடத்தப்பட்ட சம்பவத்தால் பெற்றோர் பதற்றத்தில் உள்ளனர். இந்நிலையில், விடுவிக்கப்பட்ட 24 மாணவிகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதோடு, மேலும் கடத்திச் செல்லப்பட்ட மாணவர்களை மீட்க பாதுகாப்புப் படைகள் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. https://www.virakesari.lk/article/231475
  4. 26 Nov, 2025 | 03:51 PM யாழ்ப்பாணத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக கடற்போக்குவாரத்து பாதிக்கப்பட்டுள்ளமையால் நெடுந்தீவு மக்களை மிக அவதானமாக இருக்குமாறு நெடுந்தீவு வைத்தியசாலை நிர்வாகம் கோரியுள்ளது. சீரற்ற காலநிலையால் நெடுந்தீவு பிரதேச வைத்தியசாலையில் இருந்து கடல் வழியாக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக நோயளர்களை இடமாற்றீடு செய்ய முடியாத நிலை காணப்படுகிறது. எனவே நெடுந்தீவு மக்கள் அனைவரையும் விபத்துக்கள், பாம்பு கடி உள்ளிட்ட தவிர்க்க கூடிய நோய் நிலைகளை குறைத்து வீடுகளில் அவதானமாக இருக்குமாறு நெடுந்தீவு வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதேவேளை கடற் போக்குவரத்து தடைப்பட்டுள்ள நிலையில் நெடுந்தீவு வைத்திய அதிகாரியினால் நோயாளிகளை யாழ்ப்பாணத்திற்கு மேலதிக சிகிச்சைக்காக வான் வழியாக அனுப்பி வைக்க விமான படையினர் ஊடாக நடவடிக்கை எடுப்பதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/231500
  5. "இலங்கைக்கு தென் மேற்கிலும் தென்கிழக்கிலும் காணப்படும் காற்றுச் சுழற்சிகள் முறையே கிழக்கு மற்றும் மேற்கு நோக்கி நகர்ந்து ஒன்றாக இணைந்து தாழமுக்கமாக மாறவுள்ளன. இவ்வாறு இரு காற்றுச் சுழற்சிகள் இணைந்து இலங்கை ஊடாக நகர்கின்றமை 130 ஆண்டுகளில் இதுவே முதல் தடவை. இதனால், எதிர்வரும் 30ஆம் திகதிவரை வடக்கு மாகாணத்தில் கனமழை தொடரும் என யாழ்ப்பாணம் பல்கலைக்கழக புவியியற்றுறையின் மூத்த விரிவுரையாளர் நா.பிரதீபராசா தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், "இலங்கையின் தென் மேற்கிலும் தென்கிழக்கிலும் காணப்படும் காற்றுச்சுழற்சிகள் முறையே கிழக்கு மற்றும் மேற்கு நோக்கி நகர்ந்து இன்று புதன்கிழமை ஒன்றாக இணைந்து காற்றழுத்த தாழ்வு நிலையாக வலுப்பெறவுள்ளன. காற்றழுத்த தாழ்வுநிலை இந்தக் காற்றழுத்தத் தாழ்வுநிலை ஆரம்பத்தில் இலங்கையின் நிலப்பகுதி ஊடாகவும், பின்னர் இலங்கையின் கிழக்குக் கரைப்பகுதி ஊடாகவும் நகரவுள்ளது. எதிர்வரும் 30ஆம் திகதியளவிலேயே அந்தக் காற்றழுத்தத் தாழ்வுநிலை வடக்கு மாகாணத்தில் இருந்து நீங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதனால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட்ட நாட்டின் பல பகுதிகளில் கனமான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. அதேவேளை இன்று முதல் எதிர்வரும் 29ஆம் திகதி வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் அத்துடன் மேற்கு, தெற்கு, மத்திய, சபரகமுவா, ஊவா, வட மத்திய மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் மிகக் கனமழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. அத்துடன் கிழக்கு தெற்கு, மேற்கு, மத்திய, சப்ரகமுவா மற்றும் ஊவா மாகாணங்களில் காற்று மணிக்கு 50 கிலோமீற்றர் தொடக்கம் 70 கிலோமீற்றர் வேகத்தில் வீசும் என எதிர்பார்க்கப்படுகின்றது." என்றார். https://tamilwin.com/article/close-proximity-to-sri-lanka-in-the-last-130-years-1764154057
  6. மட்டக்களப்பில் மூன்று ஆற்றுப்படுகைகளுக்கு எச்சரிக்கை Nov 26, 2025 - 02:37 PM கல் ஓயா ஆற்றுப் படுக்கையின் தாழ்வான பகுதிகளில் தற்போது சிறு வெள்ளப்பெருக்கு நிலை ஏற்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அம்பாறை இங்கினியாகல சேனாநாயக்க சமுத்திரத்தின் நீர் கொள்ளளவானது தற்போது அதன் அதிகபட்ச கொள்ளளவை அண்மித்து வருவதுடன், தற்போது சேனாநாயக்க சமுத்திரத்தின் தாழ்வான பகுதிகளில் வெள்ள நிலைமை ஏற்பட்டுள்ளது. இந்நிலைமை காரணமாக விசேடமாக தமன, அம்பாறை, இறக்காமம், அட்டாளைச்சேனை, சம்மாந்துறை, நிந்தவூர், காரைதீவு, சாய்ந்தமருது, கல்முனை, நாவிதன்வெளி ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளிலும், ஒலுவில் தென்கிழக்கு பல்கலைக்கழக வளாகத்தின் தாழ்வான பகுதிகளிலும் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இன்று (26) நண்பகல் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த நீர்ப்பாசனப் பணிப்பாளர் (நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவம்) பொறியியலாளர் எல்.எஸ். சூரியபண்டார, நேற்று (25) அதிகபட்ச மழைவீழ்ச்சியாக 225 மி.மீ. அம்பாறையில் பதிவாகியுள்ளதாகத் தெரிவித்தார். தற்போது சேனாநாயக்க சமுத்திரத்தின் வான் கதவுகள் திறக்கப்படாவிட்டாலும், ஏனைய குளங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதால் தாழ்வான நிலப்பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளதாகவும் சூரியபண்டார தெரிவித்தார். அதிக மழைவீழ்ச்சி காரணமாக தற்போது நாட்டின் 25 பிரதான குளங்களும் 26 நடுத்தர குளங்களும் வான் பாய்ந்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தின் மூன்று ஆற்றுப் படுக்கைகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது. சோமாவதிய மற்றும் மனம்பிட்டி ஆகிய பிரதேசங்கள் இன்று மாலைக்குள் நீரில் மூழ்கும் வாய்ப்பு உள்ளதாகவும் பொறியியலாளர் எல்.எஸ். சூரியபண்டார தெரிவித்தார். யான் ஓயா ஆற்றின் தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களும் அப்பகுதி ஊடாகப் பயணிக்கும் சாரதிகளும் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறும், விசேடமாக குச்சவெளி, பதவிய ஸ்ரீபுர, கெப்பித்திகொல்லாவ, கோமரன்கடவல, ஹொரவபொத்தானை, மொரவெவ, கஹட்டகஸ்திகிலிய மற்றும் கலென்பிந்துனுவெவ ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளைச் சேர்ந்த மக்கள் அவதானத்துடன் இருக்குமாறும் நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது. இதேவேளை, முந்தானை ஆற்றுப் படுக்கையில் நேற்று இரவு முதல் பெய்து வரும் அதிக மழைவீழ்ச்சி காரணமாக, முந்தானை ஆறு படுக்கையைச் சேர்ந்த அம்பாறை மாவட்டத்தின் மஹாஓயா பிரதேச செயலாளர் பிரிவு மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்ப்பற்று மற்றும் கோறளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுகளுக்குட்பட்ட முந்தானை ஆறு சார்ந்த தாழ்வான பகுதிகளில், தற்போதிருந்து அடுத்த 48 மணித்தியாலங்களுக்கு வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது. மாதுறு ஓயா படுக்கையைச் சேர்ந்த கோறளைப்பற்று, கோறளைப்பற்று மேற்கு, கோறளைப்பற்று வடக்கு, ஏறாவூர்ப்பற்று, மஹாஓயா, பதியத்தலாவ, தெஹியத்தகண்டி, திம்புலாகல, வெலிகந்த மற்றும் மஹியங்கனை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்குட்பட்ட மாதுறு ஓயா சார்ந்த தாழ்வான பகுதிகளில் தற்போதிருந்து அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் காணப்படுகின்றது. https://adaderanatamil.lk/news/cmifs777r020io29nbtfh9odi
  7. ஜீவன் தொண்டமானும் மனைவி சீதை ஸ்ரீ நாச்சியாரும் இலங்கை வந்தடைந்தனர் 26 Nov, 2025 | 05:38 PM இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமானும் அவரது மனைவியான சீதை ஸ்ரீ நாச்சியார் இன்று புதன்கிழமை (26) இந்தியாவில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர். கடந்த 23 ஆம் திகதி திருப்பத்தூரில் திருமணம் செய்து கொண்ட நிலையில் இன்று காலை 11.05 மணிக்கு இந்தியாவின் திருச்சியிலிருந்து இலங்கை ஏர்லைன்ஸ் விமானம் UL-132 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று இலங்கையை வந்தடைந்துள்ளனர். https://www.virakesari.lk/article/231498
  8. வெகு சிறப்பாக இடம்பெற்ற மாவீரர் வாரத்தின் ஆறாம் நாள் பச்சிலைப்பள்ளி கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பளை பகுதியில் இன்றையதினம் (26.11.2025) காலை 9:30 மணியளவில் பளை பிரதான பேருந்து தரிப்பிடத்தின் அருகாமையில் மாவீரர் பெற்றோர் உரித்துடையோர் கௌரவிப்பு மிக சிறப்பாக இடம்பெற்றுள்ளது. இந்த கௌரவிப்பு நிகழ்வின் ஆரம்பத்தில் மாவீரர் பெற்றோர் உரித்துடையோர் மங்கள வார்த்தை இசையுடன் அழைத்து வரவேற்கப்பட்டு மாவீரர் பெற்றோரால் நினைவு சுடர் ஏற்றப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. இந்த கௌரவிப்பு நிகழ்வில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன், பச்சிளைப்பள்ளி பிரதேச சபை தவிசாளர் சுரேன், பச்சிளைப்பள்ளி பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் மாவீரர் பெற்றோர் மற்றும் மாவீரர் உரித்துடையோர் என பலரும் கலந்து கொண்டனர். செய்தி - எரிமலை யாழில் கட்டப்பட்டுள்ள கொடிகள் மாவீரர் நாளை முன்னிட்டு யாழ். நகர் பகுதி எங்கும் மஞ்சள் மற்றும் சிவப்பு கொடிகள் கட்டப்பட்டுள்ளன. வடக்கு, கிழக்கு பகுதிகளில் மாவீரர் வாரத்தின் ஆறாம் நாள் இன்று வெகு சிறப்பாக அனுஷ்டிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. செய்தி - தீபன் https://tamilwin.com/article/the-sixth-day-of-maaveerar-work-1764159995
  9. அததெரண கருத்துப்படம்.
  10. தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 408 ரன்களில் இந்தியா தோல்வி - 5 காரணங்கள் என்ன? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, முதல் இன்னிங்ஸில் 109 ரன்கள் எடுத்தார் செனுரன் முத்துசாமி கட்டுரை தகவல் பிரதீப் கிருஷ்ணா பிபிசி தமிழ் 26 நவம்பர் 2025, 08:03 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் தோல்வியை சந்தித்திருக்கிறது இந்திய அணி. இதன் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2 - 0 என கைப்பற்றியிருக்கிறது தென்னாப்பிரிக்கா. இதன் மூலம் 2000 ஆண்டுக்குப் பிறகு இந்திய மண்ணில் முதல் முறையாக ஒரு டெஸ்ட் தொடரை வென்றிருக்கிறது தென்னாப்பிரிக்க அணி. முதல் போட்டியில் தோற்றிருந்த இந்திய அணி, இரண்டாவது போட்டியிலும் 408 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. இந்தப் போட்டியில் இந்தியா தோல்வியடைந்ததற்கான 5 காரணங்கள் என்ன? 1. சவால் கொடுத்த லோயர் மிடில் ஆர்டர் இந்தப் போட்டியின் முதல் நாள் இந்தியா ஓரளவு நல்ல நிலைக்கு வந்தது. தென்னாப்பிரிக்க அணி 201/5 என்ற நிலையில் இருந்தது. அங்கிருந்த அந்த அணியை 300 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆக்குவதற்கான வாய்ப்பு இருப்பதாகக் கருதப்பட்டது. ஆனால், வழக்கம் போல் லோயர் மிடில் ஆர்டர் மற்றும் லோயர் ஆர்டர் இந்திய அணி பௌலர்களுக்கு சவால் கொடுத்தது. வழக்கமாகவே பல போட்டிகளில் டாப் ஆர்டரை விரைந்து ஆட்டமிழக்கச் செய்தபின் அதன் பிறகு வரும் வீரர்களை அவுட் ஆக்க முடியாமல் இந்தியா தடுமாறும். சமீபத்திய போட்டிகளிலேயே அதற்குப் பல உதாரணங்கள் இருக்கின்றன. பட மூலாதாரம், Getty Images நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் (பெங்களூரு, 2024) வேகப்பந்துவீச்சாளர் டிம் சௌத்தி 65 ரன்கள் எடுத்து இந்தியாவை சோதித்தார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மெல்போர்ன் டெஸ்ட் போட்டியின் (2025) இரண்டாவது இன்னிங்ஸில் 91/6 என்றிருந்த ஆஸ்திரேலிய அணி, அதன்பிறகு மட்டும் 47.4 ஓவர்கள் ஆடியது. கடைசி விக்கெட்டுக்கு நாதன் லயான், ஸ்காட் போலாண்ட் இருவரும் மட்டும் 19.3 ஓவர்கள் ஆடினார்கள். சமீபத்தில் கூட இங்கிலாந்துக்கு எதிரான லார்ட்ஸ் டெஸ்ட்டின் (2025) முதல் இன்னிங்ஸில் பிரைடன் கார்ஸ் 55 ரன்கள் எடுத்து இங்கிலாந்தின் ஸ்கோரை அதிகப்படுத்தினார். இது இந்த கவுஹாத்தி போட்டியிலும் தொடர்ந்தது. செனுரன் முத்துசாமி, மார்கோ யான்சன் மற்றும் கைல் வெரெய்னே ஆகியோர் இந்திய பௌலர்களுக்கு சவால் கொடுத்தனர். ஏழாவது விக்கெட்டுக்கு 88 ரன்கள் எடுத்திருந்த அந்த அணி, எட்டாவது விக்கெட்டுக்கு 97 ரன்கள் சேர்த்தனர். அதன் விளைவாக அந்த அணி 489 ரன்கள் குவித்தது. முத்துசாமி 109 ரன்கள் அடிக்க, யான்சன் 93 ரன்கள் எடுத்தார். இது இந்திய அணிக்கு மிகப் பெரிய நெருக்கடியை ஏற்படுத்தியது. பட மூலாதாரம், Getty Images 2. பதம் பார்த்த 12 ஓவர்கள் இந்தப் போட்டியில் பேட்டிங் செய்வது அவ்வளவு கடினமாக இருந்திருக்கவில்லை. தென்னாப்பிரிக்காவின் பெரிய இன்னிங்ஸுக்குப் பிறகு, இந்தியாவும் நல்ல தொடக்கத்தையே கண்டிருந்தது. 32.1 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 95 ரன்கள் எடுத்திருந்தது இந்தியா. தென்னாப்பிரிக்காவின் தொடக்கத்தை விட இது ஓரளவு சிறப்பானதாகவே இருந்தது. ஆனால், அங்கிருந்து பெரும் சரிவைச் சந்தித்தது இந்தியா. 32.1 ஓவர்களில் 95/1 என்ற இந்தியா 43.3 ஓவர்கள் முடிவில் 122/7 என்ற நிலைக்குத் தள்ளப்பட்டது. அந்த இடைப்பட்ட 11.2 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்தார்கள். அதில் பெரும்பாலானவை மோசமான ஷாட்களினால் வீழ்ந்த விக்கெட்டுகள். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, மோசமான ஷாட் தேர்வால் முதல் இன்னிங்ஸில் இந்திய பேட்டர்கள் விரைந்து ஆட்டமிழந்தனர் தென்னாப்பிரிக்க வேகப்பந்துவீச்சாளர்கள் தொடர்ந்து 'ஷார்ட் லென்த் பால்'களாக வீச, இந்திய பேட்ஸ்மேன்கள் அதை அடித்து ஆட முற்பட்டு விக்கெட்டுகளை இழந்தார்கள். துருவ் ஜுரெல், ரிஷப் பண்ட், ஜடேஜா, நித்திஷ் குமார் ரெட்டி என அடுத்தடுத்து விக்கெட்டுகள் அப்படியே வீழ்ந்தன. ஹார்மர் பந்துவீச்சில் அவுட்டான சாய் சுதர்ஷன் கூட தவறான ஷாட் ஆடித்தான் ஆட்டமிழந்தார். அது இந்திய அணி ஃபாலோ ஆனைத் தவிர்க்க முடியாத ஒரு நிலைக்குத் தள்ளப்படக் காரணமாக அமைந்தது. அதிலிருந்து கடைசி வரை இந்திய அணி மீண்டு வரவேயில்லை. 3. அனைத்து திசையிலும் அணைபோட்ட யான்சன் இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் பேட்டிங், பௌலிங் இரண்டு ஏரியாவிலுமே இந்தியாவுக்கு மிகப் பெரிய சவாலாக விளங்கினார் யான்சன். முன்னர் தன்னுடைய அதிரடி இன்னிங்ஸால் தென்னாப்பிரிக்காவின் ஸ்கோரை உயரச் செய்தார். 91 பந்துகளில் 93 ரன்கள் விளாசினார் அவர். இது இந்திய பௌலர்களுக்கு ஒருபக்கம் நெருக்கடி ஏற்படுத்தியதோடு, மறுபக்கம் பேட்டிங் செய்துகொண்டிருந்த முத்துசாமி மீதான நெருக்கடியையும் குறைத்தது. பேட்டிங்கில் சோபித்ததோடு மட்டுமல்லாமல், அடுத்ததாக பந்துவீச்சிலும் பெரும் தாக்கம் ஏற்படுத்தினார் யான்சன். இந்திய அணி தங்கள் முதல் இன்னிங்ஸில் அந்த பெரும் சரிவை சந்திக்க அவர்தான் முக்கியக் காரணமாக இருந்தார். 'ஷார்ட் லென்த்' பந்துகளாக தொடர்ந்து வீசிய அவர், இந்திய பேட்டர்களை பெருமளவு சோதித்தார். அதில் வேகமும் இருந்ததால், இந்திய பேட்டர்களால் அதிரடியும் காட்ட முடியவில்லை. அதன் விளைவாக பண்ட், ஜுரெல், ஜடேஜா, நித்திஷ் ஆனைவரும் அவரது ஷார்ட் லென்த் பந்துகளில் பெவலியின் திரும்பினார்கள். கடைசி கட்டத்தில் வந்து குல்தீப் மற்றும் பும்ரா ஆகியோரின் விக்கெட்டையும் வீழ்த்தினார் அவர். 19.5 ஓவர்களில் 48 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்டுகள் வீழ்த்தினார் அவர். முதல் இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்க அணி 288 என்ற மிகப் பெரிய முன்னிலை பெறுவதற்கு அவர் மிக முக்கியக் காரணமாக விளங்கினார். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, முதல் இன்னிங்ஸில் பேட்டிங், பந்துவீச்சு இரண்டு பிரிவிலும் சோபித்தார் மார்கோ யான்சன் 4. சவாலான தருணத்தில் தரப்பட்ட டிக்ளரேஷன் இரண்டாவது இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்க அணியின் திட்டம் பலருக்கும் புதிராக இருந்தது. விரைந்து ரன்கள் சேர்த்து, நல்ல முன்னிலை பெற்றதும் டிக்ளேர் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர்களோ வேறொரு திட்டம் வைத்திருந்தார்கள். 83.5 ஓவர்கள் பேட்டிங் செய்த அந்த அணி 260 ரன்கள் எடுத்து, 548 ரன்கள் முன்னிலை பெற்றதும் டிக்ளேர் செய்தது. தென்னாப்பிரிக்கா இரண்டாவது இன்னிங்ஸை ஆடத் தொடங்கியபோது 450 - 480 என்ற இலக்கை நிர்ணயித்து விட்டு டிக்ளேர் செய்வார்கள் என்று வல்லுநர்கள் எதிர்பார்த்தார்கள். அதற்கு அவர்கள் இரண்டாவது இன்னிங்ஸில் 170 - 200 ரன்கள் அடித்திருந்தாலே போதும், அதை அவர்கள் அதிரடியாக அடிப்பார்கள் என்றுதான் வர்ணனையாளர்கள் விவாதித்தார்கள். ஆனால், தென்னாப்பிரிக்க பேட்டர்கள் மிகவும் நிதானமாக விளையாடியது தங்களுக்கு ஆச்சர்யமளிப்பதாகக் கூறியவர்கள், அதற்கான காரணத்தை பெருமளவு விவாதித்தார்கள். பேட்டிங் செய்வதற்கு ஆடுகளம் நன்றாக இருக்கிறது என்பதால் அவர்கள் இந்தியாவுக்கு அதிக ஓவர்கள் கொடுக்கவேண்டாம் என்று திட்டமிட்டிருக்கலாம் என்று தமிழ் வர்ணனையாளர்கள் விவாதித்துக்கொண்டிருந்தார்கள். இந்தியாவை ஆல் அவுட் செய்ய 100 -110 ஓவர்கள் கொடுப்பது முக்கியம் என்றும் விவாதிக்கப்பட்டிருந்தது. இரண்டாவது செஷன் முடிந்ததும் கூட டிக்ளேர் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்தது. ஆனால், தென்னாப்பிரிக்கா அதைச் செய்யவில்லை. மூன்றாவது செஷனிலும் 8 ஓவர்கள் ஆடிவிட்டு அந்த அணி டிக்ளே செய்ய, வெளிச்சம் சற்று குறைவான, மிகவும் சவாலாக கடைசி கட்டத்தில் புதிய பந்தை எதிர்கொள்ளவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது இந்தியா. இறுதியில் நான்காம் நாளின் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்தது. இது கடைசி நாள் சரிவுக்கு அடித்தளம் போட்டதாக அமைந்துவிட்டது. ஒருவேளை முன்னதாகவே இந்திய அணியின் இன்னிங்ஸ் தொடங்கியிருந்தால் அவர்கள் நல்ல தொடக்கம் கண்டிருக்கலாம். அது போட்டியை டிரா நோக்கி நகர்த்தியிருக்கலாம். ஒருவேளை அந்த இரு விக்கெட்டுகள் கிடைக்காவிட்டாலும் கூட இந்தப் போட்டி டிரா ஆகியிருக்கலாம். ஆனால் தென்னாப்பிரிக்க அணி அந்த ரிஸ்க் எடுக்கத் தயாராக இருந்தது. அவர்கள் அதிக ஓவர்கள் பிடித்து இந்தியாவை கடைசி கட்டத்தில் ஆடவைக்கவேண்டும் என்பதில் தீர்க்கமாக இருந்திருக்கிறார்கள். அதை சிறப்பாகவும் நடைமுறைப்படுத்தினார்கள். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, 25 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரை வென்றிருக்கிறது தென்னாப்பிரிக்க அணி 5. 'உத்வேகம் இல்லையா?' இந்தப் போட்டியின்போது வல்லுநர்கள் பலரும் விவாதித்த இன்னொரு விஷயம், இந்திய வீரர்களிடம் உத்வேகம் இல்லை என்பது. தென்னாப்பிரிக்க அணி இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங் செய்தபோது இந்திய வீரர்கள் யாரும் பெரிதாக உரையாடல்கள் எதுவும் மேற்கொள்ளவில்லை. வழக்கம்போல் ரிஷப் பண்ட் மட்டுமே பேசிக்கொண்டிருந்தார். இதை அப்போது வர்ணனையில் இருந்த இந்திய அணியின் முன்னாள் ஃபீல்டிங் பயிற்சியாளர் ஆர்.ஶ்ரீதர் கூடக் குறிப்பிட்டுப் பேசியிருந்தார். இந்திய அணியின் முன்னாள் வீரர் அபினவ் முகுந்த் கூட இதைப் பற்றி வர்ணனையில் விவாதித்தார். "இந்தப் போட்டியில் இந்திய வீரர்களிடம் பெரிதாக உத்வேகம் காணப்படவில்லை" என்று அவர் கூறினார். கொல்கத்தாவில் நடந்த முதல் போட்டியில் இந்திய அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்திருந்தது. 2000ம் ஆண்டுக்குப் பிறகு இந்திய அணி சொந்த மண்ணில் ஒரு தொடரை இழப்பது இதுவே ஐந்தாவது முறை. அதில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இரண்டு முறை தோற்றிருக்கிறது இந்தியா. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/czdg5d76r5po
  11. 26 Nov, 2025 | 04:39 PM மக்கள் விடுதலை முன்னணியின் (JVP) பொதுச் செயலாளர் டில்வின் சில்வா இங்கிலாந்தில் எதிர்கொண்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் ஆர்ப்பாட்டம் ஒரு "சுமுகமான ஆர்ப்பாட்டம்" என்று பிவிதுரு ஹெல உருமய (PHU) கட்சியின் தலைவர் உதய கம்மன்பில கடுமையாக விமர்சித்தார். புதன்கிழமை (26) எதுல் கோட்டையில் நடைபெற்ற பிவிதுரு ஹெல உருமய (PHU) கட்சியின் ஊடகவியலாளர் சந்திப்பில், அதன் தலைவர் வழக்கறிஞர் உதய கம்மன்பில மேற்கண்டவாறு தெரிவித்தார். உதய கம்மன்பில மேலும் தெரிவிக்கையில், தில்வின் சில்வாவுக்கு எதிராக புலிக்கொடிகள் ஏந்தி வந்தபோதும், எந்தவொரு கோரிக்கையையோ அல்லது கோஷத்தையோ அவர்கள் முன்வைக்கவில்லை. அவர் வாகனத்திலிருந்து இறங்கி விழா நடைபெறும் இடத்திற்குச் செல்வதைத் தடுக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இதை, 2012இல் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக லண்டனில் நடந்த புலிகளின் ஆர்ப்பாட்டத்துடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். அன்றைய ஆர்ப்பாட்டக்காரர்கள் கோபத்துடன் வெறித்தனமாக இருந்தனர். மஹிந்த ராஜபக்ஷவுக்கு மரணம் வேண்டும் என்று கோஷமிட்டனர். அன்றைய தினம் அவர் மேலும் பத்து நிமிடங்கள் அங்கு நின்றிருந்தால், அவரது உயிருக்கே ஆபத்து ஏற்பட்டிருக்கலாம் எனப் பாதுகாப்பு நிபுணர்கள் பின்னர் குறிப்பிட்டனர். ஆனால், தில்வின் சில்வாவுக்கு எதிராக நாம் கண்டது ஒரு பெயரளவு ஆர்ப்பாட்டம், ஒரு சுஹத (சுமுகமான/நட்பான) ஆர்ப்பாட்டம், ஏதோ கடமைக்காகச் செய்த ஆர்ப்பாட்டம். எப்படியும், வடக்கின் பயங்கரவாதிகளுக்கும் தெற்கின் பயங்கரவாதிகளுக்கும் இடையில் ஒரு சகோதரத்துவ பிணைப்பு உள்ளது. நாங்கள் செய்ய முடியாததை இவர்கள் செய்துவிட்டார்களே என்று வடக்கின் பயங்கரவாதிகளுக்கு தெற்கின் பயங்கரவாதிகள் மீது ஒரு பெரிய மரியாதை இருக்கிறது. திசைகாட்டி அரசாங்கத்தின் வாக்குறுதிகள் நிராகரிப்பு: நம்பகத்தன்மையை மீட்டெடுக்க புலிகளின் உதவி? திசைகாட்டி (NPP) அரசாங்கம் பிரிவினைவாதிகளை திருப்திப்படுத்த முயற்சித்து, தனது தென் பகுதி வாக்குகளை இழந்துவிட்டதாக கம்மன்பில குற்றம் சாட்டினார். ரணவிருவோக்களுக்கு (போர் வீரர்களுக்கு) 'சிப்பாய்கள்' என்று கூறினர். புலிகள் அமைதிக்குத்தான் போராடினர் என்று கூறினர். வடக்கில் இராணுவ முகாம்களை அகற்றினர். வடக்கில் சிங்களவர்களுக்கு தொந்தரவு கொடுக்க உள்ளூராட்சி சபைத் தலைவர்களை ஏவி விட்டனர். வடக்கில் பௌத்த விகாரைகளை அகற்றும் ஆர்ப்பாட்டங்களில் தமது உறுப்பினர்களைப் பங்கேற்க அனுமதித்தனர். கிழக்கில் விகாரைகளை டோசர் செய்ய முயன்றனர். கிழக்கில் உள்ள விகாரைகளின் புத்த சிலைகளை பொலிஸாரைப் பயன்படுத்தி அகற்றினர். இதனால் பெரும்பான்மை மக்களின் நம்பிக்கை அரசாங்கத்தின் மீது உடைந்துள்ளது. பிரிவினைவாதிகளுக்கு உறுதியளிக்கப்பட்ட சமஷ்டி (Federal) யாப்பை கொண்டுவர வேண்டுமானால், இந்த நம்பிக்கையை மீண்டும் ஏற்படுத்த வேண்டும். அதனால்தான், லண்டன் புலிகள் ஆர்ப்பாட்டம், தெற்கின் பயங்கரவாதிகள் மீண்டும் மக்கள் நம்பிக்கையைப் பெற வடக்கின் பயங்கரவாதிகளிடமிருந்து கிடைத்த ஒத்துழைப்பு என்ற நியாயமான சந்தேகம் நமக்கு எழுகிறது, என அவர் தெரிவித்தார். 6 நிறைவேற்றப்படாத பிரிவினைவாதக் கோரிக்கைகள் அம்பலம் கனடிய தமிழ்க் காங்கிரஸ், ஜனாதிபதி அனுர திசாநாயக்க வெற்றிக்குப் பின் அனுப்பிய வாழ்த்துச் செய்தியில், "நாங்கள் எங்கள் கடமையைச் செய்துவிட்டோம், நீங்கள் உங்கள் கடமையைச் செய்யுங்கள்" என்று குறிப்பிட்டதை கம்மன்பில நினைவுபடுத்தினார். "ஜனாதிபதி எனது கேள்விக்கு பதிலளிக்கவில்லை. ஆனால், கனடிய தமிழ்க் காங்கிரஸ் பாராளுமன்றத் தேர்தல் வெற்றிக்குப் பின் அனுப்பிய வாழ்த்துச் செய்தியில், தலைவர் குமார் ரத்னம் கையொப்பமிட்டு வழங்கப்பட்ட கோரிக்கைகள் பட்டியலையும் முன்வைத்துள்ளனர். திசைகாட்டி அரசாங்கம் புலிகள் ஆதரவாளர்களுக்கு அளித்த வாக்குறுதிகள் இவைதான், என்று கூறி, கம்மன்பில அந்தக் கோரிக்கைகளைப் பட்டியலிட்டார்: * அனைத்து அரசியல் கைதிகளையும் விடுவித்தல் (கைதிகளாக உள்ளவர்கள் பயங்கரவாதிகளே தவிர, அரசியல் கைதிகள் அல்ல என்பதை நாங்கள் வலியுறுத்துகிறோம்). * பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) நீக்குதல். * இராணுவ முகாம்கள் அமைப்பதற்காகப் பெறப்பட்ட அனைத்துப் தனியார் நிலங்களையும் அதன் அசல் உரிமையாளர்களிடம் ஒப்படைத்து, இராணுவ முகாம்களை அகற்றுதல். * வடக்கில் விகாரைகள் கட்டுவதைத் தடுத்து நிறுத்துதல். * புதிய அரசியலமைப்புச் சட்டம் நிறைவேற்றப்படும் வரை, பொலிஸ் அதிகாரங்கள் உட்பட 13வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துதல். * இராணுவம் உணவகங்கள் நடத்துவது போன்ற வர்த்தக நடவடிக்கைகளிலிருந்து முழுமையாக விலகி, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள இராணுவ நிலைநிறுத்தலை மற்ற மாகாணங்களுக்கு இணையாகக் குறைத்தல். "இவைதான் திசைகாட்டி அரசாங்கம் புலிகள் ஆதரவாளர்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள். பொலிஸ் அதிகாரங்கள் உட்பட 13வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தவும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு சுயாட்சி வழங்கும் புதிய அரசியலமைப்பைக் கொண்டு வரவும் ஒப்புக்கொண்டுள்ளனர். அவற்றை நிறைவேற்றாததின் ஆவேசமே லண்டனில் இருந்து வெளிவந்துள்ளது," என்று அவர் கூறினார். "அனுரவே இலங்கையின் வரலாற்றில் ஊழல் மிகுந்த ஜனாதிபதி" நுகேகொட கூட்டத்தில் முன்வரிசையில் இருந்த அனைவருக்கும் இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழுவில் (CIABOC) நான்கு அல்லது ஐந்து கோப்புகள் இருப்பதாக திசைகாட்டி உறுப்பினர்கள் கூறிய குற்றச்சாட்டுக்கு கம்மன்பில சவால் விடுத்தார். "நானும் முதல் வரிசையில்தான் அமர்ந்திருந்தேன். எனக்கு எதிராக நான்கு ஐந்து கோப்புகள் அல்ல, ஒரே ஒரு கோப்பு இருப்பது பற்றி உங்களால் கூற முடியுமா என்று திசைகாட்டி உறுப்பினர்களுக்கு சவால் விடுக்கிறேன். நாங்கள் இலஞ்சமோ, கொள்ளையோ, ஒழுக்கக்கேடோ செய்யாததால்தான், அனுர திசாநாயக்கவே இலங்கையின் வரலாற்றில் ஊழல் மிகுந்த ஜனாதிபதி என்றும், திசைகாட்டி அரசாங்கம் ஊழல் நிறைந்தது என்றும் பயமின்றி கூறுகிறோம்," என்றார். அனுர திசாநாயக்கவின் நிர்வாகத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பல முக்கிய முறைகேடுகளை பட்டியலிட்ட கம்மன்பில, பின்வருவனவற்றைச் சுட்டிக்காட்டினார்: * ஊழலை விசாரிக்கும் கணக்காய்வாளர் நாயகம் பதவிக்கு தகுதியானவரை நியமிக்காமல், அரசுத் தணிக்கையில் அனுபவமில்லாத கேளனி பல்கலைக்கழக சகா ஒருவரை நியமிக்க முயன்ற முதல் ஜனாதிபதி. * ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் உயர் பதவிக்கு அதிக மதிப்பெண் பெற்ற மாதவ தென்னக்கோன் என்பவரை நீக்கி, சதி மூலம் தனக்குச் சாதகமான ஒருவரை நியமித்தது. * 323 கொள்கலன்கள் மோசடியாக விடுவிக்கப்பட்டதில் ஜனாதிபதியின் கீழ் உள்ள நிதி அமைச்சுக் குழுவால் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட 'சீவலி அருக்கொடவுக்கு' தண்டனை வழங்குவதற்குப் பதிலாக, மரபுகளை மீறி சேவைக் கால நீட்டிப்புடன் பணிப்பாளர் நாயகமாகப் பதவி உயர்வு வழங்கியது. "இதைவிட ஊழல் மிகுந்த ஜனாதிபதி யாராவது இருந்தால், அவரை பெயரிடுமாறு நான் உங்களுக்கு சவால் விடுகிறேன்," என்று கம்மன்பில தெரிவித்தார். "பொய் வழக்குகள் போட்டால், அதுவே அரசாங்கத்திற்குப் பெரிய சிக்கலாகும்" நுகேகொட கூட்டம் "திருடர்களின் கூட்டம்" என்று கூறப்பட்டதை நிராகரித்த கம்மன்பில, "திசைகாட்டி தலைவர்கள் வாயைத் திறந்தாலே அப்பட்டமான பொய்களைத்தான் சொல்கிறார்கள். நுகேகொட கூட்டத்தில் இருந்தவர்கள் மீதுள்ள குற்றச்சாட்டுகள் உண்மையானதா, பொய்யானதா என்று எங்களுக்குத் தெரியாது. அதனால், அரசியலில் ஈடுபடும் அனைவருடனும் நாம் இணைந்து பணியாற்ற நேரிடும். எங்களில் யாராவது திருடர்கள் இருந்தால், பேசிக்கொண்டிருக்காமல் அவர்களைக் கைது செய்யுங்கள். நாங்கள் அதற்கு எந்த எதிர்ப்பும் தெரிவிக்க மாட்டோம். திருடர்களைப் பிடிப்பதாக வாக்குறுதி அளித்ததால் தானே, மக்கள் ஆணை கிடைத்தது," என்று வலியுறுத்தினார். "ஆனாலும், எங்களைப் பயமுறுத்தி நிறுத்த முடியாமல், சிறையில் அடைப்பதற்காகப் பொய் வழக்குகளைப் புனைய முயற்சித்தால், அது அரசாங்கத்திற்கு ஒரு பேரழிவு சக்தியாக மாறும் என்று இப்போதே எச்சரிக்கிறேன்," என்றும் அவர் மேலும் கூறினார். https://www.virakesari.lk/article/231514
  12. பிரான்ஸிலிருந்து வந்த இளைஞனின் படுகொலை தொடர்பில் நீதிமன்ற உத்தரவு! பிரான்ஸிலிருந்து யாழ்ப்பாணம் வந்த ராஜகுலேந்திரன் பிரிந்தனின் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இருவரையும் எதிர்வரும் 01ஆம் திகதி வரை பொலிஸ் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்ய பருத்தித்துறை நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. ராஜகுலேந்திரன் பிரிந்தன், கடந்த 18ஆம் திகதி (18.11.2025) நள்ளிரவு, வெளிநாட்டிலிருந்து பொதி ஒன்று வந்திருப்பாதாக தொலைபேசியில் கூறப்பட்டு யாழ். வடமராட்சியில் உள்ள அவரது வீட்டிலிருந்து வெளியே வரவைக்கப்பட்டு கொல்லப்பட்டார். இந்த குற்றச்சாட்டு தொடர்பில் மட்டக்களப்பு அக்கரைப்பற்று பிரதேசத்தைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், குறித்த சந்தேகநபர்கள் இருவரும் நேற்று (25.11.2025) பிற்பகல் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டிருந்தனர். நீதிமன்ற அனுமதி இதன்போது, குறித்த சந்தேக நபர்கள் இருவரிடமும் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ள வேண்டும் என நெல்லியடி பொலிஸாரால் நீதிமன்றில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், குறித்த இரண்டு சந்தேகநபர்களையும் நெல்லியடி பொலிஸாரின் தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்ய எதிர்வரும் 01ஆம் திகதி வரை நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. https://tamilwin.com/article/court-order-on-france-youth-murder-in-jaffna-1764148005#google_vignette
  13. 26 Nov, 2025 | 01:15 PM தற்போது பெய்துவரும் காற்றுடன் கூடிய கனமழை காரணமாக திருகோணமலை மாவட்ட தம்பலகாமம் பிரதேச செயலகப் பிரிவில் உள்ள தாழ் நிலப் பகுதிகளும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதனால் இன்று புதன்னிழமை (26) குறித்த பகுதிக்கு தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி, சபை தவிசாளர் எச்.தாலிப் அலி உள்ளிட்டோர் விஜயம் செய்து, நீரில் மூழ்கியுள்ள மற்றும் போக்குவரத்து பாதிக்கப்பட்ட வீதிகள் தொடர்பிலும் நிலைமையை கேட்டறிந்ததோடு, உடனடியாக அவ்வீதிகளை மூழ்கடித்துள்ள வெள்ள நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த விஜயத்தின்போது சபை நிர்வாகிகள் முள்ளிப்பொத்தானை பாதிமா பாலிகா பாடசாலை வீதி, 4ஆம் வாய்க்கால் வீதி, பாலம் போட்டாறு, புதுக்குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளை பார்வையிட்டனர். அங்கு கனமழை தொடர்ந்தும் பெய்து வருவதால் பாடசாலை செல்லும் மாணவர்கள் வீதியில் பயணிக்க முடியாமல் பெரும் அசௌகரியங்களை எதிர்கொள்கின்றனர். https://www.virakesari.lk/article/231487
  14. Published By: Vishnu 26 Nov, 2025 | 01:55 AM இலங்கை கடற்படையின் 75வது ஆண்டு நிறைவை முன்னிட்டு கடற்படைக்கு ஆசிர்வதிக்கும் வகையில் நடத்தப்படும் மத நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக, கூட்டு கிறிஸ்தவ உற்சவம் மற்றும் நன்றி செலுத்தும் ஆராதனை , கோட்டாஞ்சேனையில் உள்ள செயிண்ட் லூசியா கதீட்ரலில், கடற்படை கிறிஸ்தவ சங்கத்தின் தலைமையில், பிரதி தலைமை அதிகாரி,விநியோகம் மற்றும் சேவை இயக்குநர் ரியர் அட்மிரல் ருவன் கலுபோவிலன் தலைமையில், 2025 நவம்பர் 21 அன்று நடைபெற்றது. 1991 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இலங்கை கடற்படை கிறிஸ்தவ சங்கம், மிக உயர்ந்த கடற்படை பழக்கவழக்கங்கள் மற்றும் மரபுகளின்படி தொடர்ச்சியாக 34 ஆண்டுகளாக கூட்டு உற்சவம் மற்றும் நன்றி செலுத்தும் ஆராதனையை நடத்தி வருகிறது. இந்த உற்சவம் மற்றும் நன்றி செலுத்தும் ஆராதனை திருகோணமலை மறைமாவட்ட ஆயர் கிறிஸ்டியன் நோயல் எமெனுவேல் அவர்களின் தலமையின் கீழ், மேலும் இது எட்டு கத்தோலிக்க பாதிரியார்களின் கருணைமிக்க இருப்பு மற்றும் பிரார்த்தனைகளுடன் மிகவும் கண்ணியமான முறையில் நடைபெற்றது. "கடலின் பாதுகாவலரே, எங்கள் இறைவனின் அமைதியும் பலமும் உங்களுடன் இருக்கட்டும்," என்று திருகோணமலை ஆயர் டாக்டர் நோயல் இம்மானுவேல், இலங்கை கடற்படை அடைந்த அனைத்து வெற்றிகளுக்கும் கடவுளைப் புகழ்ந்து நன்றி தெரிவித்தார். தாய்நாட்டிற்கு அமைதியைக் கொண்டுவருவதற்காக உன்னத தியாகங்களைச் செய்த அனைவரையும் மரியாதையுடன் நினைவுகூரும் வகையில், கிறிஸ்தவ மத நடைமுறைகளுக்கு ஏற்ப கடற்படைக் கொடி மற்றும் கடற்படை கட்டளைக் கொடிகளுக்கு ஆசீர்வாதங்கள் வழங்கப்பட்டன. அதேபோல், கடற்படையின் 75 ஆண்டுகால வரலாற்றில் தாய்நாட்டின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாக்க தங்கள் உயிரைத் தியாகம் செய்த மற்றும் போரில் வீழ்ந்த அனைத்து கடற்படை வீரர்களுக்கும், தற்போது பணியாற்றும் மற்றும் ஓய்வு பெற்ற அனைத்து கடற்படை வீரர்களுக்கும், அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கும், முழு கடற்படைக்கும் ஆசீர்வாதங்கள் தெரிவிக்கப்பட்டன. மேலும், இந்த சேவையில் (ஓய்வு பெற்ற) முன்னாள் கடற்படைத் தளபதிகள் மற்றும் ஓய்வு பெற்ற சிரேஷ்ட அதிகாரிகள், கடற்படை கிறிஸ்தவ சங்கத்தின் சிரேஷ்ட அதிகாரிகள், மேற்கு கடற்படை கட்டளைத் தளபதி உள்ளிட்ட கடற்படை இயக்குநர் ஜெனரல்கள், இலங்கை கடலோர காவல்படையின் இயக்குநர் ஜெனரல், கடற்படை சேவா வனிதா நிர்வாகக் குழு உறுப்பினர்கள், கடற்படை கிறிஸ்தவ சங்கத்தின் சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட அதிகாரிகள், கடற்படை தலைமையகம் மற்றும் மேற்கு கடற்படை கட்டளையுடன் இணைக்கப்பட்ட சிரேஷ்ட மற்றும் இளைய அதிகாரிகள் மற்றும் மாலுமிகள் குழு கலந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/231456
  15. Published By: Vishnu 26 Nov, 2025 | 01:38 AM (எம்.மனோசித்ரா) திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் மற்றும் வாழைச்சேனையில் தொல்பொருள் பெயர் பலகைககள் அகற்றப்பட்மை போன்ற சம்பவங்கள் ஊடாக பௌத்த சிங்கள சமூகத்தை தூண்டி கோபத்துக்குள்ளாக முயற்சிக்கப்படுகிறது. எனவே இளம் பிக்குகள் மற்றும் தேசிய அமைப்புகள் அமைதியாகவும் விழிப்புணர்வுடனும் இருக்கும் அதேவேளை, மீண்டும் தனி ஈழத்துக்புகு பாதை அமைப்பதற்கு இடமளித்து விடக் கூடாது என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்தார். இராஜகிரியவிலுள்ள பொதுபல சேனா அமைப்பின் அலுவலகத்தில் செவ்வாய்கிழமை (25) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், திருகோணமலையில் புத்தர் சிலை அகற்றப்பட்ட சம்பவம் பௌத்தர்களின் உணர்வுகளைத் தூண்டும் ஒரு மிக முக்கியமான பிரச்சினையாகும். இதுபோன்ற விஷயங்களைக் கையாளும் போது அரசாங்கம் விவேகத்துடனும் தூரநோக்குடனும் செயல்பட வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால் பல்வேறு குழுக்களும் சக்திகளும் தமது தேவைக்கேற்ப நிலைமையைக் கையாள இது வழிவகுக்கும். கனடாவில் வசிக்கும் அயூப் அஸ்மின் என்ற நபர் திருகோணமலை சம்பவத்தின் போது தனது முகநூலில் 'நீங்கள் இப்படியே தொடருங்கள், சிலைகளை உடைக்கும் ஒரு இயக்கம் உருவாகும்வரை' எனப்பதிவிட்டிருக்கின்றார். இந்த நபர் ஜமாஅத் அமைப்பில் மாணவர் இயக்கத்தின் முன்னாள் தலைவராக செயற்பட்டிருக்கின்றார். அவ்வாறு செயற்பட்ட போது தமிழ் தேசிய கூட்டமைப்புடன் வடக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டார். தேர்தலில் தோல்வியடைந்த போதிலும், பட்டியலூடாக 5 ஆண்டுகள் மாகாணசபை உறுப்பினராகக் காணப்பட்டார். இவர் பிரிவினைவாதத்தை ஆதரிக்கும் மற்றும் நாட்டின் ஒற்றையாட்சித் தன்மையை கேள்விக்குள்ளாக்கும் ஒரு ஆபத்தான நபராவார். அவர் தலைமை தாங்கிய மாணவர் குழுவே மாவனெல்லையில் உள்ள புத்தர் சிலைகளை அழித்தன. அஸ்மி உலகளாவிய பயங்கரவாதம் மற்றும் பிரிவினைவாதக் குழுக்களுடன் தொடர்புகளைக் கொண்டிருக்கலாம். இலங்கையை ஒரு முஸ்லிம் நாடாக மாற்ற முயற்சிப்பதுடன், வெளிநாட்டில் இருந்து அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை அதிதீவிரவாதக் கருத்துக்களை நோக்கித் தள்ளுவதாகவும் சந்தேகிக்கின்றோம். எனவே நல்லாட்சியின் போது இடம்பெற்றதைப் போன்று உலகளாவிய பயங்கரவாத வலைப்பின்னல்களுடன் தொடர்புடைய நபர்களின் நடவடிக்கைகள் எவ்வாறு விரிவடைந்தன என்பதை விசாரிக்க ஒரு விசேட ஆணைக்குழுவை நியமிக்குமாறு அரசாங்கத்திடம் கோருகின்றோம். பெரும்பான்மை சமூகத்தினருக்கு மனவேதனையை ஏற்படுத்திய நடவடிக்கைகளாலேயே முந்தைய அரசாங்கம் கவிழ்க்கப்பட்டு, நாடு உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை எதிர்கொண்டது. திருகோணமலை போன்ற சம்பவங்களைத் தொடர்ந்து பௌத்த சிங்கள சமூகத்திலிருந்து வரும் ஆரவாரமும் கோபமும், அதிதீவிரவாதத்தின் ஆரம்ப நிலையில் உள்ளவர்களால் தமக்கான தீவிரவாத கருத்துகளுக்குத் தமிழ் மற்றும் முஸ்லிம் இளைஞர்களை விரைவாகச் சேர்ப்பதற்குப் பயன்படுத்தப்படுகிறது. இளம் பிக்குகள் மற்றும் தேசிய அமைப்புகள் அமைதியாகவும் விழிப்புணர்வுடனும் இருக்குமாறும், பொலிஸால் கையாளப்பட வேண்டிய விடயங்களில் தேவையற்ற விதத்தில் தலையிட வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்கின்றோம். அவர்களது கோபமான எதிர்வினைகள், அவர்களை இனவாதிகள் அல்லது மத அடிப்படைவாதிகள் என்று முத்திரை குத்த விரும்புபவர்களின் கைகளுக்குள் விளையாட வழிவகுக்கும். பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரால் கனடாவில் தனிநாட்டுக் கோரிக்கைக்கு ஆதரவாகக் கருத்துக்களைத் தெரிவிக்கப்பட்டன. 30 ஆண்டுகாலப் போருக்குப் பிறகும், விடுதலைப் புலிகள் செய்த பல படுகொலைகளுக்குப் பிறகும் அவர்களை நினைவுகூர வேண்டிய தார்மீக அதிகாரம் இருக்கின்றதா? இந்த புதிய சித்தாந்தங்களை இப்போதே தோற்கடிக்கத் தவறினால், நாடு தவிர்க்க முடியாமல் ஒரு ஆபத்தான நிலைமைக்கு தள்ளப்படும். அத்தகைய சூழ்ச்சிகளுக்குத் தூண்டப்பட அனுமதித்தால், முந்தைய அரசாங்கம் சந்தித்த அதே வீழ்ச்சியை இந்த அரசாங்கமும் சந்திக்க நேரிடும் என எச்சரிக்கின்றேன். விடுதலைப்புலிகளுடன் இணைந்து அஸ்மின் மீண்டும் வடக்கு, கிழக்கை மற்றொரு பலஸ்தீனாக மாற்றுவதற்கு முயற்சிக்கின்றாரா என்ற சந்தேகம் எழுகிறது. தனி ஈழத்துக்கு பாதை அமைக்க இடமளிக்க கூடாது. 13ஆவது திருத்தத்தை நீக்குவதற்கு பதிலாக அதனை மேலும் வலுப்படுத்தும் வகையிலேயே அரசாங்கம் செயற்படுகிறது. பிரதேசசபையின் அனுமதியின்றி தொல்பொருள் பெயர் பலகையை நிறுவ முடியாது என முரண்படும் நிலைமைக்கு அரசாங்கம் இடமளிக்கின்றதா? இந்த நிலைமைகள் இப்போதே அடியோடு அழிக்கப்பட வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/231454
  16. பிணை வழங்கப்படமுடியாத மிகக்கொடூரமான தொல்லியல் சட்டம் மாற்றியமைக்கப்படவேண்டும் - எம்.ஏ.சுமந்திரன் Published By: Vishnu 26 Nov, 2025 | 01:31 AM (நா.தனுஜா) இலங்கையில் பிணை வழங்கப்படமுடியாத ஒரேயொரு சட்டமாக இருக்கக்கூடிய தொல்லியல் சட்டத்தை மிகக்கொடூரமான சட்டம் என்று கூறமுடியும். தொல்லியல் சட்டத்தின் ஊடாக அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டிருக்கும் அதிகாரங்களைத் தவறாகப் பிரயோகித்து, இன மற்றும் மதரீதியான ஆக்கிரமிப்புக்களை நிகழ்த்துவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமுடியாது. எனவே அச்சட்டம் கட்டாயமாக மாற்றியமைக்கப்படவேண்டும் என இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் வலியுறுத்தியுள்ளார். தொல்பொருள் இடங்களுக்குரிய பெயர்ப்பலகையை அகற்றியது தொடர்பான வழக்கில் வாழைச்சேனை பிரதேசசபை தவிசாளர், பிரதி தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள் உட்பட 5 பேருக்கு வாழைச்சேனை நீதிவான் நீதிமன்றம் செவ்வாய்கிழமை (25) பிணை வழங்கியது. அந்த ஐவர் சார்பில் நீதிமன்றில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் வழக்கின் முடிவில் நீதிமன்றுக்கு வெளியே ஊடகங்களுக்குக் கருத்துரைக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கூறியதாவது: ஒரு வீட்டிலிருந்து அல்லது ஒரு கட்டடத்திலிருந்து அல்லது ஒரு கப்பலில் இருந்து ஏதாவதொரு பொருள் திருடப்பட்டால், அது தண்டனைக்குரிய குற்றம் என்று இலங்கைத் தண்டனைச் சட்டக்கோவையின் 369 ஆவது பிரிவு கூறுகிறது. அந்தப் பிரிவின் கீழேயே இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அத்தோடு 410, 417 என்ற பிரிவுகளும் பொலிஸாரின் அறிக்கையிலேயே காண்பிக்கப்பட்டிருக்கின்றன. அவற்றுக்கு இந்த வழக்குடன் எந்தவொரு சம்பந்தமும் இல்லை என்பதுடன் அந்தப் பிரிவுகளில் கூறப்பட்டிருக்கும் விடயம் ஒரு அரச உத்தியோகத்தர் தன்னுடைய அதிகாரத்தின் கீழ் ஒரு விடயத்தை செய்தாலோ அல்லது அறிவிப்புப் பலகையைப் பொருத்தினாலோ, அதனை அப்புறப்படுத்துவது குற்றம் என்பதேயாகும். எனவே இச்சம்பவத்தில் வீதியிலிருந்து பெயர்ப்பலகைகள் திருடப்பட்டிருப்பதாக பொலிஸார் கூறுவது பொருத்தமற்ற குற்றச்சாட்டு என நான் மன்றிலே சுட்டிக்காட்டினேன். இலங்கையில் தொல்லியல் சட்டத்தை மிகக்கொடூரமானதொரு சட்டம் என்றுகூடச் சொல்லலாம். ஏனென்றால் எமது நாட்டில் பிணை வழங்கமுடியாத ஒரேயொரு சட்டமாக இருப்பது தொல்லியல் சட்டம் மாத்திரமேயாகும். மற்றைய எல்லாச் சட்டங்களின் கீழும், குறிப்பாக பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் கீழ் கூட பிணை வழங்கமுடியும். ஆகவே இந்தச் சட்டம் மாற்றப்படவேண்டும். ஏனெனில் தொல்லியல் இடங்கள் பாதுகாக்கப்படவேண்டும் என்பது எமது எல்லோருடைய விருப்பம். ஆனால் அந்தப் போர்வையின்கீழ் ஏராளமாக ஆக்கிரமிப்புக்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. தொல்லியல் பொருட்கள் அழிந்துவிடக்கூடாது என்பதற்காக வழங்கப்பட்டிருக்கும் அதிகாரங்களை அதிகாரிகள் தவறாகப் பிரயோகித்து மத மற்றும் இன ரீதியான ஆக்கிரமிப்புக்களை மேற்கொள்வதை எம்மால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமுடியாது. இருப்பினும் அவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றுவரும் பின்னணியில், தொல்லியல் சட்டம் கட்டாயமாக மாற்றியமைக்கப்படவேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/231453
  17. சில தினங்களுக்கு நாடு முழுவதும் காற்றுடன் மழையுடனான வானிலை! 26 Nov, 2025 | 07:25 AM அடுத்துவரும் சில தினங்களுக்கு நாடு முழுவதிலும் காற்றும் மழையுடனான வானிலையும் அதிகரித்துக் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வங்காள விரிகுடாவின் தென்கிழக்கு கடல் பிராந்தியத்திற்கு மேலாக இலங்கையின் தென் திசையில் தாழ் அமுக்கப் பிரதேசம் நிலைகொண்டிருந்தது. இது அடுத்துவரும் 30 மணித்தியாலங்களில் மேலும் தீவிரமடைந்து தாழ் அமுக்கமாக விருத்தியடையும். இதன் தாக்கத்தின் காரணமாக அடுத்துவரும் சில தினங்களுக்கு நாடு முழுவதிலும் காற்றும் மழையுடனான வானிலையும் அதிகரித்துக் காணப்படும். ஆகையினால் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வழங்கப்படுகின்ற எதிர்கால எதிர்வு கூறல்களை கவனத்திற் கொண்டு செயற்படுமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வானம் முகில் செறிந்து காணப்படும். நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் பொலனறுவை மாவட்டத்தின் சில இடங்களிலும் 150 மில்லமீற்றரிலும் கூடிய மிகப் பலத்த மழை பெய்வதுடன் நாட்டின் ஏனைய பிரராந்தியங்களின் சில இடங்களில் 100 mm இலும் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும். வடக்கு , கிழக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் மேல் மாகாணங்களிலும் அத்துடன் ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் மணித்தியாலத்திற்கு சுமார் 50 கிலோமீற்றர் வேகத்தில் அடிக்கடி பலத்த காற்று வீசக் கூடும். நாட்டின் ஏனைய பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு சுமார் 40 கிலோமீற்றர் வேகத்தில் அடிக்கடி ஓரளவு பலத்த காற்று வீசக் கூடும். பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொது மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். வங்காள விரிகுடாவின் தென்மேற்குப் பகுதியில் நிலைகொண்டுள்ள தாழ் அமுக்கப் பிரதேசம் அடுத்துவரும் 30 மணித்தியாலங்களில் தாழ் அமுக்கமாக விருத்தியடைய இருப்பதால் இன்று முதல் மறு அறிவித்தல் கிடைக்கும் வரையில் நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்களுக்கு மீனவர்களும் கடல்சார் ஊழியர்களும் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகின்றனர். நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். சில இடங்களில் மிகப் பலத்த மழை பெய்யக்கூடும். நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 40 - 50 கிலோமீற்றர் வேகத்தில் வடகிழக்குத் திசையில் இருந்து வட திசையை நோக்கி காற்று வீசும். காற்றின் வேகம் சில சமயங்களில் மணித்தியாலத்திற்கு 60 - 70 கிலோமீற்றராக அதிகரித்தும் காணப்படும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் கடல் பிராந்தியங்கள் கொந்தளிப்பான நிலையில் இருந்து மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும். புத்தளம் தொடக்கம் காலி, ஹம்பாந்தோட்டை, மட்டக்களப்பு, திருகோணமலை ஊடாக காங்கேசன்துறை வரையான கடல் பிராந்தியங்களில் கடல் அலையானது 2.5 - 3.0 மீற்றர் உயரத்திற்கு மேலெளக்கூடும். இது தரைப் பிரதேசத்திற்கு தாக்கத்தை ஏற்படுத்தாது. இடியுடன் கூடிய மழை பெய்கின்ற சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் பிராந்தியங்கள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும். https://www.virakesari.lk/article/231468
  18. ஸிம்பாப்வேயை வெளுத்துக்கட்டிய இலங்கைக்கு இறுதிக்கு செல்ல இன்னும் ஒரு வெற்றி தேவை Published By: Vishnu 25 Nov, 2025 | 10:09 PM (நெவில் அன்தனி) ராவல்பிண்டி கிரிக்கெட் விளையாட்டரங்கில் இன்று செவ்வாய்க்கிழமை (25) நடைபெற்ற மிகவும் தீர்மானம் மிக்க மும்முனை சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் ஸிம்பாப்வேயை வெளுத்துக்கட்டிய இலங்கை 9 விக்கெட்களால் அமோக வெற்றியீட்டியது. ஆனால், பாகிஸ்தானை இறுதிப் போட்டியில் எதிர்த்தாட இலங்கை தகுதிபெறுவதாக இருந்தால் எஞ்சியுள்ள பாகிஸ்தானுடனான இரண்டாம் கட்டப் போட்டியிலும் வெற்றிபெற்றாக வேண்டும். பாகிஸ்தானுக்கான கிரிக்கெட் விஜயத்தில் இரண்டு தொடர்களில் 6 போட்டிகளில் இலங்கை ஈட்டிய முதலாவது வெற்றி இதுவாகும். மும்முனை சர்வதேச ரி20 கிரிக்கெட் தொடரில் அணிகள் நிலையில் ஸிம்பாப்வேயும் இலங்கையும் தலா ஒரு வெற்றியுடன் 2 புள்ளிகளைப் பெற்றுள்ளன. ஆனால், நிகர ஓட்ட வேக அடிப்படையில் ஸிம்பாப்வே தொடர்ந்தும் 2ஆம் இடத்தில் இருக்கிறது. பாகிஸ்தான் 3 போட்டிகளிலும் வெற்றியீட்டி 6 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பெற்று இறுதிப் போட்டியில் விளையாட ஏற்கனவே தகுதிபெற்றுவிட்டது. இன்றைய போட்டியில் ஸிம்பாப்வேயினால் நிர்ணயிக்கப்பட்ட 147 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி 16.2 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து 148 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது. மிகவும் ஆக்ரோஷமாகத் துடுப்பெடுத்தாடிய பெத்தும் நிஸ்ஸன்க 58 பந்துகளில் 11 பவுண்டறிகள், 4 சிக்ஸ்கள் உட்பட 98 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். 12 ஓட்டங்களைப் பெற்ற காமில் மிஷாரவுடன் 34 பந்துகளில் 59 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தை பெத்தும் நிஸ்ஸன்க இட்டுக்கொடுத்தார். தொடர்ந்து பெத்தும் நிஸ்ஸன்க, குசல் மெண்டிஸ் ஆகிய இருவரும் பிரிக்கப்படாத 2ஆவது விக்கெட்டில் 64 பந்துகளில் 89 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியின் வெற்றியை இலகுவாக்கினர். குசல் மெண்டிஸ் 25 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். முன்னதாக இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த ஸிம்பாப்வே 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 146 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் ரெயான் பேர்ல் ஆட்டம் இழக்காமல் 37 ஓட்டங்களையும் அணித் தலைவர் சிக்கந்தர் ராஸா 37 ஓட்டங்களையும் ப்றயன் பெனட் 34 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் மஹீஷ் தீக்ஷன, வனிந்து ஹசரங்க ஆகிய இருவரும் 23 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்கள் என்ற ஒரே பந்துவீச்சுப் பெறுதியைப் பதிவுசெய்தனர். இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான கடைசி லீக் போட்டி நாளைமறுதினம் நடைபெறுவுள்ளது. ஆட்டநாயகன்: பெத்தும் நிஸ்ஸன்க. https://www.virakesari.lk/article/231444
  19. 'சென்யார்' புயல் உருவானது - தமிழ்நாட்டில் எங்கெல்லாம் மழை எச்சரிக்கை? பட மூலாதாரம், IMD 26 நவம்பர் 2025, 02:20 GMT புதுப்பிக்கப்பட்டது 26 நிமிடங்களுக்கு முன்னர் இந்திய பெருங்கடல் பகுதியில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருவானது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயலுக்கு 'சென்யார்' என பெயரிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் இன்று காலை 9.13 மணிக்கு வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், மலாக்கா நீரிணையில் ஏற்பட்ட ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 10 கிமீ வேகத்தில் மேற்கு நோக்கி நகர்ந்து, 'சென்யார்' புயலாக தீவிரமடைந்துள்ளது என தெரிவித்துள்ளது. "நவம்பர் 26, 2025 காலை 05:30 மணி நிலவரப்படி, 'சென்யார்' புயல் நான்கோவ்ரிக்கு (நிக்கோபார் தீவுகள்) கிழக்கு - தென்கிழக்கே 600 கிமீ மற்றும் கார் நிக்கோபருக்கு (நிக்கோபார் தீவுகள்) தென்கிழக்கே 740 கிமீ தொலைவில் மையம் கொண்டுள்ளது." மேலும், "அடுத்த 24 மணி நேரத்திற்கு சென்யார் புயலின் தீவிரம் குறையாது, பின்னர் படிப்படியாக பலவீனமடைய வாய்ப்புள்ளது. அது இன்று (நவம்பர் 26) காலையில் மேற்கு நோக்கி நகர்ந்து இந்தோனீசியா கடற்கரையைக் கடக்கும். அதன் பிறகு, அது மேற்கு - தென்மேற்கு நோக்கி நகர்ந்து, அடுத்த 48 மணி நேரத்தில் கிழக்கு நோக்கி திரும்பும்" எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, கோப்புப் படம் மற்றொரு சுழற்சி இது தவிர, ''நேற்று தென்மேற்கு வங்ககடல் பகுதியை ஒட்டிய தெற்கு இலங்கை பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி, இன்று அதிகாலை 5.30 மணி நிலவரப்படி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக மாறியுள்ளது''. என இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது இது வடக்கு - வடமேற்கு நோக்கி நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தீவிரமடைய வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளது. பட மூலாதாரம், IMD சென்னை வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் அமுதா நவம்பர் 24 அன்று செய்தியாளர்களை சந்தித்தபோது, "குமரிக்கடல் பகுதியில் நிலவும் சுழற்சியும் மலாக்கா, மலேசியாவில் நிலவும் சுழற்சியும் இணைந்து ஒன்றாக நகர்வதற்கும் வாய்ப்புண்டு. வரும் நாட்களில் தான் அதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்" என்று குறிப்பிட்டார். இந்த இரு சுழற்சிகளாலும், அடுத்த சில நாட்களுக்கு தமிழகத்தில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எங்கெல்லாம் மழை பெய்யக்கூடும்? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, கோப்புப் படம் நவம்பர் 26: கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தென்தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், பலத்த காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். நவம்பர் 27: தூத்துக்குடி, இராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. நவம்பர் 28: தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கன முதல் மிக கனமழையும், இராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, மயிலாடுதுறை, கடலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது. நவம்பர் 29: புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் கன முதல் மிக கனமழையும், இராமநாதபுரம், சிவகங்கை, திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, இராணிப்பேட்டை மற்றும் வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது. நவம்பர் 30: திருவள்ளூர் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், இராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மற்றும் புதுவையில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது. மீனவர்களுக்கான எச்சரிக்கை 'ஆழ்கடலுக்கு சென்றுள்ள மீனவர்கள் உடனே கரைக்குத் திரும்ப வேண்டும்' என்று அறிவுறுத்தியுள்ள வானிலை ஆய்வு மையம், 'தமிழக கடலோர பகுதிகள், குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகள், கேரள கடலோர பகுதிகள், லட்சத்தீவு மற்றும் மாலத்தீவு பகுதிகள், தென் வங்கக்கடல், அந்தமான் கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் நவம்பர் 29-ஆம் தேதி வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டிருக்கின்றனர்' என்றும் தெரிவித்துள்ளது. இலங்கையில் என்ன நிலை? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, இலங்கை (கோப்புப் படம்) ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக இலங்கையின் பல்வேறு பகுதிகளுக்கு கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி இலங்கையின் கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும், பொலன்னறுவை மாவட்டத்திலும் சில பகுதிகளில் 150 மில்லிமீட்டருக்கும் அதிகமான கடும் மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அத்துடன், ஏனைய பகுதிகளின் சில இடங்களில் 100 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் உள்ளதாகவும் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வடக்கு, வடமத்திய, வடமேல், மேல் மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் இடைக்கிடை 50 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதுடன், ஏனைய பகுதிகளில் இடைக்கிடை 40 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களாக பெய்து வரும் கடும் மழையுடனான சீரற்ற வானிலை காரணமாக 10 பேர் உயிரிழந்துள்ளதுடன், 7 பேர் காயமடைந்துள்ளனர். கேகாலை மாவட்டத்தின் மாவனெல்ல பகுதியில் கடந்த 21ம் தேதி பாரிய கல்லொன்று சரிந்து ஏற்பட்ட மண்சரிவில் 6 பேர் உயிரிழந்திருந்ததுடன், மாவனெல்ல பகுதியில் 23ம் தேதி முச்சக்கரவண்டியொன்றின் மீது மரமொன்று சரிந்து வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்திருந்தார். நாட்டில் ஏற்பட்டுள்ள மழையுடனான வானிலையை அடுத்து, தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம், மண்சரிவு அபாய எச்சரிக்கையை விடுத்துள்ளது. இதன்படி, பதுனை, கொழும்பு, காலி, ஹம்பாந்தோட்டை, களுத்துறை, கண்டி, கேகாலை, குருநாகல், மாத்தளை, மாத்தறை, நுவரெலியா, இரத்தினபுரி ஆகிய பகுதிகளுக்கு இவ்வாறு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கண்டி மாவட்டத்தின் உடுதும்பர மற்றும் நுவரெலிய மாவட்டத்தின் வலப்பனை, நில்தண்டாஹின்ன, மத்துரட்ட, ஹங்குரங்கெத்த ஆகிய பகுதிகளுக்கு மண்சரிவு சிவப்பு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஏனைய பகுதிகளுக்கு இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை எச்சரிக்கைகளே விடுக்கப்பட்டுள்ளன. நாட்டின் சில தாழ்நிலப் பகுதிகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளன. கடந்த சில தினங்களாக மழையுடனான வானிலை நிலவிவந்த போதிலும், இன்றைய தினம் நாட்டின் பல பகுதிகளில் அதிகளவான மழையுடனான வானிலை நிலவி வருவதை அவதானிக்க முடிகின்றது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cwyl4zdd5wvo
  20. அண்ணை, அண்மையில் அவர்களிடம் தோற்றதால் கடினமான அணியாகத் தோன்றுகிறதோ?!
  21. 2026 ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட்: இலங்கைக்கு சொந்த மண்ணில் முதல் சுற்று Published By: Vishnu 25 Nov, 2025 | 09:51 PM (நெவில் அன்தனி) 10ஆவது ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் 2026 பெப்ரவரி 7ஆம் திகதி இலங்கையிலும் இந்தியாவிலும் நடைபெறவுள்ள முதல் 3 போட்டிகளுடன் ஆரம்பமாகிறது. 20 நாடுகள் பங்குபற்றும் பத்தாவது ரி20 உலகக் கிண்ண அத்தியாயத்தில் மிகவும் கடினமான பி குழுவில் இடம்பெறும் முன்னாள் சம்பியன் இலங்கை தனது நான்கு முதல் சுற்று போட்டிகளை சொந்த மண்ணில் விளையாடவுள்ளது. இலங்கை சுப்பர் 8 சுற்றில் விளையாட தகுதிபெறும் அதன் பட்சத்தில் அதன் போட்டிகள் அல்லது சில போட்டிகள் கொழும்பில் அல்லது கண்டியில் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐசிசி ரி20 உலகக் கிண்ணத் தொடருக்கான உத்தியோகபூர்வ குழுப்படுத்தலையும் போட்டி அட்டவணையையும் சர்வதேச கிரிக்கெட் பேரவை இன்று செவ்வாய்க்கிழமை வெளியிட்டது, எவ்வாறாயினும் அணிகளின் குழு நிலைகளை வீரகேசரி ஒன்லைன் நேற்றைய தினமே வெளயிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இலங்கை தனது முதலாவது போட்டியில் அயர்லாந்தை கொழும்பு ஆர். பிரேமதாச விளையாட்டரங்கில் பெப்ரவரி 8ஆம் திகதி எதிர்த்தாடும். தொடர்ந்து ஓமானை பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் பெப்ரவரி மாதம் 12ஆம் திகதி இலங்கை சந்திக்கும். இலங்கைக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையிலான போட்டியும் பல்லேகலையில் பெப்ரவரி 16ஆம் திகதி நடைபெறும். இலங்கை தனது கடைசி முதல் சுற்றுப் போட்டியில் ஸிம்பாப்வேயை கொழும்பு ஆர். பிரேமதாச விளையாட்டரங்கில் பெப்ரவரி 19ஆம் திகதி எதிர்த்தாடும். ரி20 உலகக் கிண்ணத்தில் குழு நிலையில் (முதல் சுற்று) 40 போட்டிகளும் சுப்பர் 8 சுற்றில் 12 போட்டிகளும் நடைபெறும். அவற்றைவிட இறுதிச் சுற்றில் 2 அரை இறுதிகளும் ஓர் இறுதிப் போட்டியுமாக 3 போட்டிகள் நடைபெறும். இதற்கு அமைய மொத்தம் 55 போட்டிகள் நடைபெறும். இலங்கைக்கான போட்டிகள் உட்பட 14 முதல் சுற்று போட்டிகள் கொழும்பிலும் கண்டியிலும் நடைபெறவுள்ளன. தொடர்ந்து சுப்பர் 8 சுற்றில் 6 போட்டிகள் இலங்கையில் அரங்கேற்றப்படும். முதல் சுற்றிலும் சுப்பர் 8 சுற்றிலும் 32 போட்டிகள் இந்தியாவில் நடைபெறும். இந்தியாவில் அஹமதாபாத் நரேந்த்ர மோடி விளையாட்டரங்கு, சென்னை எம்.ஏ. சிதம்பரம் விளையாட்டரங்கு, புதுடில்லி அருண் ஜய்ட்லி விளையாட்டரங்கு, மும்பை வான்கேட் விளையாட்டரங்கு, கொல்கத்தா ஈடன் கார்ட்ன்ஸ் விளையாட்டரங்கு ஆகிய ஐந்து இடங்களில் போட்டிகள் நடைபெறும். போட்டியின் ஆரம்ப நாளான பெப்ரவரி 7ஆம் திகதியன்று ஏ குழுவில் இடம்பெறும் பாகிஸ்தானுக்கும் நெதர்லாந்துக்கும் இடையிலான போட்டி எஸ்.எஸ்.சி. விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது. சி குழுவில் இடம்பெறும் மேற்கிந்தியத் தீவுகளுக்கும் பங்களாதேஷுக்கும் இடையிலான போட்டி கொல்கத்தாவில் நடைபெறவுள்ளது. ஏ குழுவில் இடம்பெறும் வரவேற்பு நாடுகளில் ஒன்றான இந்தியாவை மும்பையில் ஐக்கிய அமெரிக்கா எதிர்த்தாடும். முதல் சுற்றுப் போட்டிகள் பெப்ரவரி 7ஆம் திகதி முதல் 20ஆம் திகதிவரை நடைபெறும். முதல் சுற்று முடிவில் ஒவ்வொரு குழுவிலும் முதல் இரண்டு இடங்களைப் பெறும் அணிகள் சுப்பர் 8 சுற்றில் பெப்ரவரி 21இலிருந்து மார்ச் முதலாம் திகதிவரை விளையாடும். பாகிஸ்தான் இறுதிப் போட்டிக்கு முன்னேறினால் ஒரு அரை இறுதிப் போட்டியும் (மார்ச் 4), இறுதிப் போட்டியும் (மார்ச் 8) கொழும்பில் நடைபெறும். பாகிஸ்தான் இறுதிச் சுற்றுக்கு தெரிவாகாவிட்டால் ஒரு அரை இறுதிப் போட்டி கொழும்பு அல்லது கொல்கத்தாவிலும் மற்றைய அரை இறுதிப் போட்டி மும்பையிலும் (மார்ச் 5) நடைபெறும். இறுதிப் போட்டி மார்ச் 8ஆம் திகதி அஹமதாபாத் அல்லது கொழும்பில் நடைபெறும். https://www.virakesari.lk/article/231443
  22. 25 Nov, 2025 | 06:40 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) ஆண்டுக்கு பல பில்லியன் ரூபா வருமானம் பெறும் டியூசன் மாபியா என்ற கைத்தொழில் துறை ஏழ்மை நிலையில் உள்ள பெற்றோர் மற்றும் மாணவர்களை சுரண்டிப் பிழைக்கிறது. தேசிய மக்கள் சக்தி தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் இந்த டியூசன் மாபியாவை இல்லாதொழிப்பதாக குறிப்பிட்டது. ஆனால் இதுவரையில் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (25) நடைபெற்ற 2026 வரவு - செலவுத் திட்டத்தின் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது பாடசாலை கல்வி முறைமையில் தற்போதைய நிலையில் மாணவர்கள் ஆசிரியர்களை மதிக்காத சூழல் காணப்படுகிறது. பல்கலைக்கழக கட்டமைப்பிலும் இவ்வாறான நிலைமையே காணப்படுகிறது. ஆகவே இதற்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இல்லாவிடின் மாணவர் சமுதாயம் தவறான வழிக்கே செல்லும். இந்த நாட்டில் அரிசி மாபியா, மின்சார மாபியா என்று பல மாபியாக்களும் காணப்படுகின்றன. ஆண்டுக்கு பல பில்லியன் ரூபா வருமானம் பெறும் டியூசன் மாபியா என்ற கைத்தொழில் துறையும் காணப்படுகிறது. ஏழ்மை நிலையில் உள்ள பெற்றோர் மற்றும் மாணவர்களை சுரண்டிப் பிழைக்கும் மாபியாவாகவே இந்த டியூசன் மாபியா காணப்படுகிறது. தேசிய மக்கள் சக்தி தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் இந்த டியூசன் மாபியாவை இல்லாதொழிப்பதாக குறிப்பிட்டது. ஆனால் இதுவரையில் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. தேர்தல் காலத்தில் இந்த டியூசன் மாபியாக்கள் தேசிய மக்கள் சக்திக்கு செலவழித்ததாக குறிப்பிடப்படுகிறது. ஆகவே அந்த நன்றி கடனுக்காக அரசாங்கம் அவர்களுக்கு எதிராக எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என்று சந்தேகம் எழுந்துள்ளது. கல்வி மற்றும் உயர்கல்வி துறையில் பல பிரச்சினைகள் காணப்படுகின்றன. புதிய கல்வி மறுசீரமைப்பு நாட்டுக்கு அத்தியாவசியமானது. முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவின் ஆட்சியின் போது தேசிய கல்வி ஆணைக்குழு கல்வி மறுசீரமைப்பு தொடர்பான கொள்கையை வெளியிட்டது.இந்த அறிக்கையின் பரிந்துரைகளை புதிய கல்வி மறுசீரமைப்பில் உள்ளடக்கியிருக்க வேண்டும் என்றார். இதனைத் தொடர்ந்து எழுந்து உரையாற்றிய கல்வி அமைச்சர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, 2022 ஆம் ஆண்டு தேசிய கல்வி ஆணைக்குழு வெளியிட்ட கல்வி மறுசீரமைப்பு தொடர்பான கொள்கையை அடிப்படையாகக் கொண்டு புதிய கல்வி மறுசீரமைப்பு கொள்கை தயாரிக்கப்பட்டுள்ளது. டியூசன் கல்வி பற்றி குறிப்பிடப்பட்டது. புதிய கல்வி மறுசீரமைப்பின் ஊடாக இந்த பிரச்சினைக்கு தீர்வு முன்வைக்கப்படும் என்றார். https://www.virakesari.lk/article/231431
  23. Published By: Digital Desk 3 25 Nov, 2025 | 05:30 PM பொதுமக்களுக்கு பகிரங்கப்படுத்தப்படாமையினால் விமர்சனத்திற்கு உள்ளாகியிருந்த இலங்கை–அமெரிக்க பாதுகாப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) தற்போது உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. புதிய ஆவணத்தில், இரு நாடுகளுக்கும் இடையில் கையெழுத்தான இந்த ஒப்பந்தத்தின் நோக்கங்கள், செயல்துறை வரம்புகள் மற்றும் பாதுகாப்புத் தொடர்பான ஒத்துழைப்பின் முக்கிய அம்சங்கள் விரிவாக குறிப்பிடப்பட்டுள்ளன. கடந்த 14 ஆம் திகதி கைச்சாத்திடப்பட்ட இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம், இந்த ஒப்பந்தம் அமெரிக்க பாதுகாப்புத் துறையின் மாநில கூட்டுத் திட்டத்தின் (SPP) கீழ் மொன்டானா தேசிய காவல்படை, அமெரிக்க கடலோர காவல்படை மாவட்டம் 13 மற்றும் இலங்கை ஆயுதப்படைகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை ஒருங்கிணைக்கிறது. இந்த ஒப்பந்தத்தில் பாதுகாப்பு அமைச்சில் அமெரிக்க அரசாங்கத்தின் சார்பாக அமெரிக்க தூதுவர் அதிமேதகு Julie Chung மற்றும் மொன்டானா தேசிய காவல்படையின் பிரதி ஜெனரல் பிரிகேடியர் ஜெனரல் Trenton Gibson ஆகியோர் கையெழுத்திட்டனர். அத்துடன் இலங்கை அரசாங்கத்தின் சார்பாக பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) கையெழுத்திட்டார். பொது விமர்சனங்களையும் வெளிப்படைத்தன்மை குறித்த கேள்விகளையும் தொடர்ந்து வெளியிடப்பட்ட முழு ஆவணத்தில், கூட்டுப் பயிற்சி, அனர்த்த மீட்பு, கடல்சார் பாதுகாப்பு, சைபர் பாதுகாப்பு, மனிதாபிமான உதவி மற்றும் தொழில்முறை இராணுவக் கல்வி ஆகியவற்றில் ஒத்துழைப்பை கோடிட்டுக் காட்டும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் முழு உள்ளடக்கமும் விளக்கப்பட்டுள்ளன. உத்தியோகபூர்வ அறிக்கையின்படி, இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் இயங்குதன்மை, பிராந்திய ஸ்திரத்தன்மை மற்றும் தயார்நிலையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒரு பாதுகாப்பு கூட்டாண்மையை புரிந்துணர்வு ஒப்பந்தம் முறைப்படுத்துகிறது. கடத்தல், இடம்பெயர்வு மற்றும் போதைப்பொருள் தடுப்பு ஆகியவற்றை நிவர்த்தி செய்வதற்கான கடல்சார் கள விழிப்புணர்வில் ஒத்துழைப்பு, அத்துடன் அனர்த்த தயார்நிலை மற்றும் பதிலளிப்பில் இராணுவ-சிவில் ஒருங்கிணைப்பு ஆகியவை இதில் அடங்கும். இருதரப்பு உறவுகளில் இந்த ஒப்பந்தம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. அமைதி மற்றும் பிராந்திய பாதுகாப்பை இலக்காகக் கொண்ட பரஸ்பர நம்பிக்கை மற்றும் நீண்டகால ஒத்துழைப்பை வலுப்படுத்துகிறது என அமெரிக்க தூதர் ஜூலி சுங் தெரிவித்தார். இலங்கையின் பாதுகாப்புத் திறன்களை மேம்படுத்துவதில் இந்த ஒப்பந்தம் ஒரு முற்போக்கான படியை பிரதிநிதித்துவப்படுத்துகிறது எனவும், இது திறன் மேம்பாட்டிற்கான புதிய வழிகளைத் திறக்கிறது எனவும் அமெரிக்காவுடனான நீண்டகால கூட்டாண்மையை வலுப்படுத்துகிறது எனவும் பாதுகாப்புச் செயலாளர் சம்பத் துயகோந்தா தெரிவித்தார். இந்த ஒப்பந்தம் இலங்கையை அமெரிக்க அரசாங்க கூட்டாண்மை திட்டத்தின் கீழ் 115 க்கும் மேற்பட்ட நாடுகளின் உலகளாவிய வலையமைப்பிற்குள் சேர்க்கிறது. முதல் கூட்டு நடவடிக்கைகள் 2026 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் ஆரம்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது, இது அனர்த்த மீட்பு மற்றும் கடல்சார் பாதுகாப்பில் கவனம் செலுத்துகிறது. https://www.virakesari.lk/article/231423
  24. தென் ஆபிரிக்காவுடனான இரண்டாவது டெஸ்டில் இந்தியா தள்ளாடுகிறது Published By: Vishnu 25 Nov, 2025 | 08:11 PM (நெவில் அன்தனி) குவாஹாட்டி, பர்சபரா கிரிக்கெட் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் தென் ஆபிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 549 ஓட்டங்கள் என்ற மிகவும் கடினமான வெற்றி இலக்கை நோக்கி இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடும் இந்தியா 2 விக்கெட்களை இழந்து 27 ஓட்டங்களைப் பெற்று தள்ளாடிக் கொண்டிருக்கிறது. போட்டி ஆரம்பமான சனிக்கிழமை முதல் இன்று நான்காம் நாள்வரை முழுமையான ஆதிக்கம் செலுத்தி வரும் தென் ஆபிரிக்காவுக்கு இரண்டு போட்டிகள் கொண்ட தொடரில் முழுமையான வெற்றியை ஈட்ட இன்னும் 8 விக்கெட்களே தேவைப்படுகிறது. கொல்கத்தா ஈடன் கார்ட்ன்ஸ் விளையாட்டரங்கில் மூன்று நாட்களுக்குள் நிறைவடைந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்தியாவை 30 ஓட்டங்களால் தென் ஆபிரிக்கா மிகவும் பரபரப்பான முறையில் வெற்றிகொண்டிருந்தது. இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலாவது இன்னிங்ஸ் நிறைவில் 288 ஓட்டங்களால் முன்னிலையில் இருந்த தென் ஆபிரிக்கா, போட்டியின் நான்காம் நாளான இன்று காலை தனது இரண்டாவது இன்னிங்ஸை விக்கெட் இழப்பின்றி 26 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்தது. மிகவும் திறமையாகத் துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்த ட்ரைஸ்டன் ஸ்டப்ஸுக்கு சதம் அடிப்பதற்கு வாய்ப்பு கொடுக்க டெம்பா பவுமா தீர்மானித்தார். ஆனால், மொத்த எண்ணிக்கை 260 ஓட்டங்களாக இருந்தபோது ட்ரைஸ்டன் ஸ்டபஸ் 94 ஓட்டங்களுடன் 5ஆவதாக ஆட்டம் இழந்ததும் டெம்பா பவுமா இரண்டாவது இன்னிங்ஸை நிறுத்திக்கொண்டு இந்தியாவுக்கு 543 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தார். தென் ஆபிரிக்காவின் 2ஆவது இன்னிங்ஸில் ட்ரைஸ்டன் ஸ்டப்ஸ், 4ஆவது விக்கெட்டில் டோனி டி ஸோர்ஸியுடன் 101 ஓட்டங்களையும் 5ஆவது விக்கெட்டில் வியான் முல்டருடன் 82 ஓட்டங்களையும் பகிர்ந்து அணியை மிகவும் பலமான நிலையில் இட்டார். தென் ஆபிரிக்காவின் இரண்டாவது இன்னிங்ஸில் வீழ்ந்த 5 விக்கெட்களில் நான்கை ரவிந்த்ர ஜடேஜா கைப்பற்றினார். இந்தப் போட்டியில் அதிசயம் நிகழ்ந்தாலன்றி இந்தியா தோல்வி அடைவதை தவிர்க்க முடியாததாகிவிடும். எண்ணிக்கை சுருக்கம் தென் ஆபிரிக்கா 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 489 (சேனுரன் முத்துசாமி 109, மார்க்கோ ஜென்சன் 93, ட்ரைஸ்டன் 49, கய்ல் வெரின் 45, டெம்பா பவுமா 41, ஏய்டன் மார்க்ராம் 38, ரெயான் ரிக்கல்டன் 35, குல்தீப் யாதவ் 115 - 4 விக்., ஜஸ்ப்ரிட் பும்ரா 75 - 2 விக்., ரவிந்த்ர ஜடேஜா 94 - 2 விக்., மொஹம்மத் ஷமி 106 - 2 விக்.), இந்தியா 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 201 (யஷஸ்வி ஜய்ஸ்வால் 58, வொஷிங்டன் சுந்தர் 48, கே. எல். ராகுல் 22, மார்க்கோ ஜென்சன் 48 - 6 விக்., சைமன் ஹாமர் 64 - 3 விக்.) தென் ஆபிரிக்கா 2ஆவது இன்: 260 - 5 விக். டிக்ளயார்ட் (ட்ரைஸ்டன் ஸ்டப்ஸ் 94, டோனி டி ஸோர்ஸி 49, வியான் முல்டர் 35 ஆ.இ., ரெயால் ரிக்கல்டன் 35, ரவிந்த்ர ஜடேஜா 62 - 4 விக்.) இந்தியா - வெற்றி இலக்கு 549 ஓட்டங்கள் - 2ஆவது இன்: 27 - 2 விக். (யஷஸ்வி ஜய்ஸ்வால் 13, சைமன் ஹாமர் 1 - 1 விக்., மார்க்கோ ஜென்சன் 14 - 1 விக்.) https://www.virakesari.lk/article/231440
  25. பட மூலாதாரம், BBC, Getty Images கட்டுரை தகவல் நவின் சிங் கட்கா, அன்டோனியோ குபேரோ & விஷுவல் ஜர்னலிசம் குழு பிபிசி உலக சேவை ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பெரும்பாலும், உலகின் மிகப்பெரிய மழைக்காடான அமேசானின் நுழைவாயில் என்று விவரிக்கப்படும் வடக்கு பிரேசிலின் பெலெம் (Belém) நகரில்தான் இந்த ஆண்டின் ஐ.நா. காலநிலை மாநாடு (COP30) நடைபெற்றது. இது, பூமியை வெப்பமாக்கும் வாயுக்களின் வெளியேற்றத்தைப் பாதுகாப்பான வரம்புக்குள் கட்டுப்படுத்தும் நோக்கில் ஒரு முக்கிய ஒப்பந்தத்தை எட்டிய பாரிஸ் காலநிலை உச்சி மாநாடு நடந்து 10 ஆண்டுகளுக்குப் பிறகு நடப்பதால் இந்த இடம் ஒரு முக்கியமான குறியீடாகப் பார்க்கப்படுகிறது. ஆனால், அந்த முயற்சிகள் இன்னும் பலனளிக்கவில்லை. ஏனெனில் வாயுக்கள் வெளியேற்றம் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. வளிமண்டலத்தில் இருந்து அதிக அளவிலான கரிம வாயுவை உறிஞ்சும் அமேசான் காடு, கரிம வெளியீட்டின் போக்கை மாற்றியமைக்கும் நடவடிக்கைகளில் மிக முக்கியப் பங்காற்றும். ஆனால், பல தசாப்தங்களாக நடந்த காடழிப்பு மற்றும் இப்போது ஏற்படும் காலநிலை மாற்றத்தின் தாக்கங்களால், அமேசானின் எதிர்காலமே தற்போது தெளிவாக இல்லை என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். பெலெம் தலைநகராக உள்ள பாரா (Pará) மாகாணத்தில், அமேசானின் வேறு எந்தப் பகுதியையும்விட அதிக அளவில் மழைக்காடுகள் அழிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாகவே பிபிசி, அமேசானின் தற்போதைய நிலை மற்றும் அது எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்கள் குறித்து விரிவாக ஆராய்ந்தது. படக்குறிப்பு,தென் அமெரிக்காவில் 6.7 மில்லியன் சதுர கிலோமீட்டருக்கும் அதிகமான பரப்பளவில் பரவியுள்ள இது, இந்தியாவின் பரப்பளவைவிட இரண்டு மடங்கு பெரியது. அமேசானில் 60% பகுதியைத் தன்னகத்தே கொண்டுள்ள பிரேசில், வெப்பமண்டல மழைக்காடுகளுக்கு வலிமையான பாதுகாப்பை வழங்கும் ஓர் ஒப்பந்தம் கையெழுத்தாவதை உறுதி செய்ய முயல்வதாகக் கூறியுள்ளது. இந்த வெப்பமண்டலக் காடுகள் பெரும்பாலும் பூமத்திய ரேகைக்கு அருகில் அமைந்துள்ளன, மேலும் அதிக மழைப்பொழிவு மற்றும் ஈரப்பதத்தால் செழிப்பாக வளரும் தாவரங்கள், உயரமான, பெரும்பாலும் பசுமையான மரங்களைக் கொண்டுள்ளன. ஆனால் அமேசான், நதிப்படுகைகள், சதுப்பு நிலங்கள் மற்றும் புதர்க் காடுகளை கொண்டுள்ளது. தென் அமெரிக்காவில் 6.7 மில்லியன் சதுர கிலோமீட்டருக்கும் அதிகமான பரப்பளவில் பரவியுள்ள இது, இந்தியாவின் பரப்பளவைவிட இரண்டு மடங்கு பெரியது. மேலும் இது பூமியிலுள்ள மிகவும் வளமான பல்லுயிர் செறிவுகொண்ட பகுதிகளில் ஒன்று. Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading அதிகம் படிக்கப்பட்டது சாதனை படைக்க விண்வெளி சென்ற சீனர்கள் - கிரிக்கெட் பந்து அளவு குப்பையால் அடுத்தடுத்த சிக்கல் ராஜ்நாத் சிங் கருத்தால் பாகிஸ்தானின் சிந்து பற்றி விவாதம் - இந்த பகுதியின் வரலாறு என்ன? இந்தியாவை நோக்கி வரும் எத்தியோப்பிய எரிமலையின் சாம்பல் மேகங்கள் - என்ன ஆபத்து? 'தமிழ்நாட்டு மருமகன்' தர்மேந்திரா: கிராமத்து இளைஞர் பாலிவுட்டில் கோலோச்சிய கதை End of அதிகம் படிக்கப்பட்டது இது தன்னகத்தே கொண்டுள்ளவை: குறைந்தது 40,000 வகையான தாவரங்கள் எறும்புத்திண்ணிகள் மற்றும் ராட்சத நீர்நாய்கள் உள்பட 427 பாலூட்டி இனங்கள் ஹார்ப்பி கழுகு மற்றும் டூகன் (toucan) உள்பட 1,300 பறவை இனங்கள் இகுவானா என்றழைக்கப்படும் பெரும்பச்சைப் பல்லி முதல் கருப்பு முதலை வரை 378 ஊர்வன இனங்கள் டார்ட் விஷத் தவளை (dart poison frog) மற்றும் வழவழப்பான மேற்புறத்தைக் கொண்ட தேரை உள்பட 400க்கும் மேற்பட்ட நீர்நில வாழ்விகள் அதோடு, பிரானா மற்றும் 200 கிலோ வரை எடையுள்ள பிரமாண்டமான அரபைமா உள்பட சுமார் 3,000 நன்னீர் மீன் இனங்கள். இந்த இனங்களில் பல வேறு எங்கும் காணப்படுவதில்லை. படக்குறிப்பு, அமேசானில் வாழும் விலங்குகள் மற்றும் தாவர இனங்களைக் காட்டும் காட்சிப் படம் மேலும், நூற்றுக்கணக்கான பூர்வகுடி குழுக்கள் இந்தப் பகுதியில் வாழ்கின்றன. படக்குறிப்பு, அமேசானில் வாழும் பூர்வகுடி மக்கள் வாழும் பகுதிகளின் வரைபடம் மற்றும் அவர்கள் பற்றிய தகவல்களைக் காட்டும் காட்சிப் படம் அமேசான் நதி உலகின் மிகப்பெரிய நதியாகும், அதன் 1,100க்கும் மேற்பட்ட கிளை நதிகளுடன் சேர்ந்து, இது உலகின் மிகப்பெரிய நன்னீர் வளத்தை உருவாக்குகிறது. இந்த நீர் அட்லான்டிக் பெருங்கடலில் கலக்கிறது மற்றும் பிராந்திய, உலகளாவிய காலநிலை அமைப்புகளைப் பாதிக்கக்கூடிய கடல் நீரோட்டங்களைத் தக்கவைப்பதில் ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறது. மேலும், சில சீரழிந்த பகுதிகள் அவை கிரகித்து வைப்பதைவிட அதிக கரிம வாயுவை வெளியேற்றுவது கண்டறியப்பட்ட போதிலும், அதன் காடுகள் ஒரு முக்கிய கரிமத் தொட்டியாக (carbon sink) இருக்கின்றன. அமேசான் உணவு மற்றும் மருந்துகளின் முக்கிய ஆதாரமாகவும் உள்ளது. இது தங்கம் உள்ளிட்ட உலோகங்களுக்காக தோண்டப்படுகிறது. இந்தக் காடுகள் எண்ணெய் மற்றும் எரிவாயுவின் ஒரு குறிப்பிடத்தக்க உற்பத்தியாளராகவும் மாறக்கூடும். பெரிய அளவிலான காடுகள் அழிக்கப்படுவது, இதை ஒரு பெரிய மர விநியோக அமைப்பாக ஆக்கியுள்ளது. இப்போது என்ன நடக்கிறது? விவசாயம், கால்நடை வளர்ப்பு, மரங்களை வெட்டுதல், சுரங்கம் உள்ளிட்ட மனித நடவடிக்கைகளுடன் இப்போது காலநிலை மாற்றத்தால் தூண்டப்பட்ட வறட்சி, வெப்பநிலை உயர்வு ஆகியவற்றின் காரணமாகக் காட்டின் 20% நிலப்பரப்பை இழந்துவிட்டோம். மேலும் அதே அளவிலான ஒரு பகுதி சீரழிந்துள்ளதாக பாதுகாப்பு அமைப்புகள் கூறுகின்றன. அமேசான் பாதுகாப்பு அமைப்பின் ஆண்டிஸ் அமேசான் திட்டத்தின் கண்காணிப்பு (MAAP) அறிக்கைப்படி, சமீபகால அதீத காடழிப்பு 2022இல் நிகழ்ந்தது. அப்போது கிட்டத்தட்ட 20,000 சதுர கிமீ காடு அழிக்கப்பட்டது. இது 2021இல் நிகழ்ந்ததில் இருந்து 21% அதிகம் மற்றும் 2004க்கு பிறகு ஏற்பட்ட மிக மோசமான காடழிப்பு. கடந்த 2023இல் பிரேசிலில் அரசு மாற்றம் ஏற்பட்ட பிறகு, பிரேசிலிய அமேசானில் காடழிப்பு விகிதம் உடனடியாக பாதியாகக் குறைந்தது. பிற நாடுகளின் கட்டுப்பாட்டில் உள்ள பிராந்தியங்களில் இது குறையவில்லை என்றாலும் பிரேசிலில் குறைந்தது பற்றி உலகம் மகிழ்ச்சி கொண்டது. ஆனால், அமேசானின் சில பகுதிகள் மீள முடியாத அளவுக்கு மோசமான சேதத்தைச் சந்தித்துள்ளதும் உடனடியாக கண்டுபிடிக்கப்பட்டது. இது பல ஆண்டுகளாக நடந்த காடழிப்பின் விளைவு மட்டுமல்ல, அமேசான் சுற்றுச்சூழலுக்கு ஒரு புதிய அச்சுறுத்தலாக வெளிவரும் காலநிலை நெருக்கடியின் விளைவும் ஆகும். பட மூலாதாரம், Reuters/Amanda Perobelli படக்குறிப்பு, தபாஜோஸ் (Tapajos) போன்ற அமேசான் வழியாகப் பாயும் ஆறுகளை வறட்சி பாதித்து வருகிறது. வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க உயர்வு மற்றும் நீண்ட வறட்சி நிகழ்வுகள் அதன் அடிப்படைச் செயல்பாட்டில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன. வழக்கமாக ஈரப்பதமான காட்டை வறண்டதாக மாற்றி, காட்டுத் தீயால் எளிதில் பாதிக்கப்படக் கூடிய நிலைக்குத் தள்ளியுள்ளன. உதாரணமாக, பிரேசிலிய விண்வெளி நிறுவனமான ஐஎன்பிஇ-இன் கூற்றுப்படி, செப்டம்பர் 2024இல், பிரேசிலிய அமேசானில் 41,463 தீ பற்றும் பகுதிகள் இருந்தன. இது 2010க்கு பிறகு அந்த மாதத்திற்கான மிக அதிகமான எண்ணிக்கை ஆகும். "வறட்சி மற்றும் தீ விபத்துகள் அதிகரிப்பதை நாங்கள் காண்கிறோம், இது அமேசானின் பல பகுதிகளில் பாதிப்புகள் அதிகரிக்க வழிவகுத்துள்ளது," என்று அமெரிக்காவின் யேல் பல்கலைக்கழகத்தில் கரிம கிரகிப்பு சூழலியல் துறையின் இணைப் பேராசிரியரான பாவ்லோ பிராண்டோ கூறுகிறார். "பல்வேறு பகுதிகளில் இந்தச் சீரழிவு அமேசானுக்கு ஒரு பெரிய அச்சுறுத்தலாக உருவெடுத்து வருவதாகவும்" அவர் தெரிவித்தார். 'பறக்கும் நதிகள்' தடைபடுதல் பிரச்னை எவ்வாறு எழுகிறது என்பது இங்கே விளக்கப்பட்டுள்ளது. பிரமாண்டமான அமேசான் பிராந்தியம் உள்வானிலை அமைப்புகளைக் கொண்டுள்ளது: அதன் காடுகள் அட்லாண்டிக் பெருங்கடலில் இருந்து ஈரப்பதத்தைச் சுழற்றி, வானத்தில் "பறக்கும் நதிகள்" என்று அறியப்படுவனவற்றை உருவாக்குகின்றன. இந்த வளிமண்டல நதிகள் முதலில் அமேசானின் கிழக்குப் பகுதியில், அட்லாண்டிக்கிற்கு அருகில் மழையைப் பொழிகின்றன. பின்னர் நீர் தரையில் இருந்தும் தாவரங்களில் இருந்தும் மீண்டும் காற்றுக்கு உயர்ந்து (ஆவியாதல் மற்றும் நீராவிப் போக்கு செயல்முறை மூலம்) மேலும் மேற்கு நோக்கிச் சென்று காடுகளின் மற்றொரு பகுதியில் விழுகின்றன. மழைக்காட்டின் ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கான நீரின் இந்தச் சுழற்சி அமேசான் முழுவதும் நிகழ்கிறது மற்றும் பரந்த மழைக்காடு எப்படிச் செழித்துள்ளது என்பதை இந்தச் செயல்முறை ஓரளவு விளக்குகிறது. பட மூலாதாரம், AFP via Getty Images/NELSON ALMEIDA படக்குறிப்பு, வளிமண்டல நதிகள் (Atmospheric rivers) நீராவியைக் கடத்திச் செல்கின்றன ஆனால், இந்த ஈரப்பத சுழற்சி இப்போது தடைபட்டுள்ளதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். காடழிப்பு மற்றும் சீரழிவு ஏற்பட்ட அமேசானின் பகுதிகள் கடலில் இருந்து வரும் ஈரப்பதத்தைச் சரியாகச் சுழற்ற முடியாது, இதன் விளைவாக நீராவிப் போக்கு மூலம் மிகக் குறைவான ஈரப்பதம் மட்டுமே மீண்டும் வளிமண்டலத்திற்குள் நுழைகிறது. "அமேசான் முழுவதும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டிருந்த ஈரப்பதத்தைச் சுழற்றும் சிறிய வானிலை அமைப்புகள் இப்போது உடைந்துவிட்டன," என்று அமேசான் பாதுகாப்பு விஞ்ஞானி மற்றும் பறக்கும் நதிகளின் பங்கு மற்றும் அமேசானின் விதி குறித்த சமீபத்திய அறிக்கையின் இணை ஆசிரியரான மாட் ஃபைனர் கூறுகிறார். மிகவும் பாதிக்கப்பட்ட பகுதி, அட்லான்டிக்கில் இருந்து வெகு தொலைவில் உள்ள மேற்கு அமேசான் ஆகும். குறிப்பாக பெருவின் தெற்கு மற்றும் பொலிவியாவின் வடக்குப் பகுதிகள் என்று அவர் கூறுகிறார். "பெரு மற்றும் பொலிவியாவில் உள்ள மழைக்காடுகளின் உயிர்வாழ்வுச் சூழல், கிழக்கில் உள்ள பிரேசிலில் உள்ள பாதுகாப்பான காடுகளைச் சார்ந்துள்ளது. ஏனெனில் அந்தக் காடுகள் அழிக்கப்பட்டால், பறக்கும் நதிகளை உருவாக்கும் நீர் சுழற்சி உடைந்துவிடும், அது மேற்கு அமேசானை அடைய முடியாது. அனைத்தும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளன." இந்தச் சிக்கல், குறிப்பாக ஜூன் முதல் நவம்பர் வரையிலான வறண்ட காலத்தில் மோசமாக உள்ளது. பட மூலாதாரம், AFP via Getty Images/Pedro Pardo படக்குறிப்பு, அமேசான் நதிகள் சமீபத்திய ஆண்டுகளில் இதுவரை இல்லாத அளவுக்குக் குறைந்த நீர் மட்டங்களைப் பதிவு செய்துள்ளன. பலவீனமடையும் தாங்கு திறன் ஈரமான மற்றும் ஈரப்பதம் நிறைந்த மழைக்காடு கடந்த காலத்தில் காட்டுத் தீ ஏற்படாமல் எதிர்ப்புத் திறனோடு இருந்தது. ஆனால் மழைப்பொழிவு இல்லாத பகுதிகளில் இந்த எதிர்ப்புத் திறன் பலவீனமடைந்து வருகிறது. வறண்டு வரும் மழைக்காடு சுற்றுச்சூழல் அமைப்பு தனது தாங்கு திறனின் வரம்பை அடைந்து வருவதாகவும், அதிலிருந்து அது மீள முடியாமல் நிரந்தரமாக இழக்கப்படலாம் என்றும் சில விஞ்ஞானிகள் அஞ்சுகின்றனர். "அமேசானின் சில பகுதிகளில் இந்தத் தாங்கு திறன் பாதிப்பதற்கான அறிகுறிகளாக நாம் காண்பது இவைதான்," என்று ஃபைனர் கூறுகிறார். ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் உள்ள சுற்றுச்சூழல் அமைப்புகளின் ஆய்வகத்தில் மூத்த ஆராய்ச்சி அசோசியேட்டான எரிகா பெரெங்குயர், இந்த ஆபத்து அதிகரித்து வருவதை ஒப்புக்கொள்கிறார். ஆனால் ஃபைனரை போலவே அவரும் சில பகுதிகள் மற்ற பகுதிகளைவிட மோசமாகப் பாதிக்கப்படுவதாகக் கூறுகிறார். "இது சில பகுதிகளில் நடக்கும் மிகவும் மெதுவான செயல்முறை," என்று அவர் கூறுகிறார். பட மூலாதாரம், The Washington Post via Getty Images/Rafael Vilela படக்குறிப்பு, விவசாயம், கால்நடை வளர்ப்பு, மரங்களை வெட்டுதல், சுரங்கங்கள் ஆகியவை காடுகளைப் பாதித்து வருகின்றன. சிக்கலில் உள்ள நீர்நிலைகள் அமேசானின் வானத்தில் குறைந்த நீர் சுழற்சி என்பது ஆரோக்கியமான காடு குறைவது மட்டுமின்றி, அமேசான் நதி மற்றும் அதன் பல கிளை நதிகளிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவதாக நிபுணர்கள் கூறுகின்றனர். அமேசான் படுகையில் உள்ள பல நதிகள் சமீபத்திய ஆண்டுகளில் மிகக் குறைந்த அளவிலான நீர் மட்டங்களைப் பதிவு செய்துள்ளன. மேலும் 2023இல் கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மோசமான வறட்சி ஏற்பட்டது. கடந்த 2023 மற்றும் 2024இன் முதல் பாதியில் நிலவிய வறண்ட நிலைமைகள், எல் நினோவால் (El Niño) ஓரளவு தூண்டப்பட்டது. இது கிழக்கு பசிபிக் பெருங்கடலில் கடல் மேற்பரப்பு வெப்பநிலை அதிகரிக்கும் ஓர் இயற்கை வானிலை அமைப்பாகும், இது உலகளாவிய மழைப்பொழிவு வடிவங்களை குறிப்பாக தென் அமெரிக்காவில் பாதிக்கிறது. பட மூலாதாரம், NurPhoto via Getty Images/Rafael Guadeluppe படக்குறிப்பு, அமேசான் பிராந்தியம் லட்சக்கணக்கான மக்களின் தாயகமாக உள்ளது. சுரங்கத் தொழில் குழப்பம் காடழிப்பு, காலநிலை நெருக்கடி ஆகியவை போதுமான சேதத்தை ஏற்படுத்தவில்லை என்றாலும், சட்டவிரோத சுரங்கங்கள் - குறிப்பாக தங்கச் சுரங்கங்கள் - மழைக்காடுகளின் சுற்றுச்சூழலுக்கு அளவிட முடியாத தீங்குகளை விளைவித்துள்ளன. "மேலும் இப்போது அரிய தாதுக்களுக்கான சுரங்கத் தொழிலும் இந்தப் பகுதியில் தொடங்கியுள்ளது," என்று பெரெங்குயர் கூறுகிறார். இந்தத் தாதுக்கள் மின்சார வாகனங்கள், காற்றாலை விசையாழிகள், மொபைல் போன்கள் மற்றும் செயற்கைக் கோள்களில் பயன்படுத்தப்படுகின்றன, அவை நவீன பொருளாதாரத்திற்கு முக்கியமானவை. சுரங்கம் அதிக காடழிப்பை ஏற்படுத்தாவிட்டாலும், அது பாதரசம் போன்ற ரசாயனங்களால் நதிகள், மண் மற்றும் தாவரங்களை மாசுபடுத்தி, பின்னர் விலங்குகள் மற்றும் மனிதர்களிடையே நச்சுத்தன்மையை பரப்பக்கூடும். சட்டவிரோத சுரங்க முதலாளிகளுக்கும், துப்பாக்கிகள் மற்றும் ஆயுதங்களைக் கடத்தும் கும்பல்கள் உள்படத் திட்டமிட்ட குற்றங்களுக்கும் இடையே அதிகரிக்கும் தொடர்பு உள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர். "குற்றவியல் வலைப்பின்னல் அமேசான் முழுவதும் விரிவடைந்து வருகிறது. இது அதிகாரிகளுக்குத் தரைமட்டத்தில் அதை கையாள்வதை கடினமாக்குகிறது," என்று மாட் ஃபைனர் கூறுகிறார். பட மூலாதாரம், Reuters/Ueslei Marcelino படக்குறிப்பு, சட்டவிரோத சுரங்கம் காடுகளுக்கு மட்டுமின்றி, அந்தக் காடுகளைச் சார்ந்து வாழும் பழங்குடி மக்களின் வாழ்வுக்கும் அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. அமேசான் எட்டு நாடுகளில் பரவியுள்ளது, ஒவ்வொன்றும் அதன் சொந்த சட்ட அமைப்பு மற்றும் சட்ட அமலாக்க ஆட்சிகளைக் கொண்டுள்ளது. இது எல்லை தாண்டிய குற்றங்களைக் கையாள்வதில் உள்ள சவாலை அதிகரிக்கிறது. அதோடு, அமேசானுக்கு கீழே அதிக அளவு ஹைட்ரோகார்பன்கள் (எண்ணெய் மற்றும் எரிவாயு) புதைபட்டுள்ளன என்ற கண்டுபிடிப்பு, மேலும் கவலையளிப்பதற்கான மற்றொரு காரணமாக உள்ளது. இன்ஃப்போஅமேசோனியாவின் கூற்றுப்படி, சுமார் 5.3 பில்லியன் பீப்பாய்கள் எண்ணெய்க்கு சமமான இருப்புகள் 2022 மற்றும் 2024க்கு இடைபட்ட காலகட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டன. இந்தப் பகுதி உலகில் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட இருப்புகளில் கிட்டத்தட்ட ஐந்தில் ஒரு பங்கைக் கொண்டுள்ளதாக அது கூறுகிறது. இது புதைபடிவ எரிபொருள் தொழிலுக்கு ஒரு புதிய பகுதியாக அமைகிறது. இந்த ஹைட்ரோகார்பன் இருப்புகளில் பல கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பே, பறக்கும் நதிகள் குறித்த சமீபத்திய ஆராய்ச்சிக்கு முன்பே, அமேசானுக்கான அறிவியல் குழு மழைக்காடுகள் அழிவைச் சந்தித்து வருவதால் 10,000க்கும் மேற்பட்ட தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் அழிவின் அபாயத்தில் இருப்பதாகக் காட்டியது. அமேசான் காடுகள் உலகுக்கு ஏன் முக்கியம்? அமேசான், கரிம வாயுவைக் கிரகித்துச் சேமித்து வைக்கும் ஒரு சக்தி வாய்ந்த கார்பன் தொட்டியாக உள்ளது. இது பூமியை வெப்பமாக்கும் முக்கிய வாயுவான கரிம வாயுவை அதிக அளவில் உறிஞ்சும் திறன் கொண்டது. கடந்த 2024இல் வெளியிடப்பட்ட MAAP அறிக்கையில், "2022 நிலவரப்படி, அமேசான் தனது நிலத்தின் மேற்புறத்திலும் கீழேயும் 71.5 பில்லியன் மெட்ரிக் டன் கரிமத்தைக் கொண்டுள்ளது" என்று மதிப்பிடப்பட்டது. இது 2022ஆம் ஆண்டு அளவில் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளின் உலகளாவிய கரிம வாயு வெளியேற்றத்திற்குச் சமமானது. ஆனால், தாவரங்கள் வெட்டப்பட்டு எரிக்கப்படும் காடழிப்பு மற்றும் காலநிலை மாற்றத்தின் தாக்கம் மழைக்காடுகளின் மேலும் பல பகுதிகளை நிகர கரிம வெளியீட்டாளர்களாக (net emitters) மாற்றும் அபாயம் இருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அமேசானை இழப்பது என்பது காலநிலை நெருக்கடிக்கு எதிரான போரில் தோல்வியடைவதற்குச் சமம் என்றும் அவர்கள் கூறுகிறார்கள். பட மூலாதாரம், REUTERS/Amanda Perobelli படக்குறிப்பு, சோயாபீன்ஸ் விவசாயம் விரிவடைந்ததால், அமேசானுக்குள் இருக்கும் நிலங்கள் அழிக்கப்பட்டுள்ளன வெப்பமண்டல காடுகள் சூரிய ஒளியை விண்வெளிக்குப் பிரதிபலிக்கும் மேக மூட்டத்தையும் உருவாக்குகின்றன. மேலும் பூமியில் குளிரூட்டும் விளைவைக் கொண்டுள்ளது. இது தொடரும் வரை, பூமியின் வெப்பமயமாதலை அவை குறைக்கும். "அமேசான் போன்ற வெப்பமண்டலக் காடு கரிமத்தைச் சேமித்து வெப்பமயமாதலைக் கட்டுப்படுத்தும் திறனைக் கொண்டிருப்பது போலவே, அது கிரகத்தைக் குளிர்விக்கும் திறனையும் கொண்டுள்ளது," என்று பிரேசிலிய வனவியல் விஞ்ஞானி டாஸோ அசெவெடோ கூறுகிறார். "அதனால்தான், அமேசான் காடுகளை வெப்பமடைந்து வரும் இந்த பூமிக்குத் தேவைப்படும் ஓர் ராட்சத ஏசி (ஏர் கண்டிஷனர்) என்று நாங்கள் அழைக்கிறோம்." மேலும், மேலே குறிப்பிட்டது போல, உலகின் மிகப்பெரிய நன்னீர்ப் படுகை உலகளாவிய காலநிலையில் ஒரு குறிப்பிடத்தக்க தாக்கத்தைக் கொண்டுள்ளது. அட்லான்டிக்கில் இந்த நன்னீர் அதிக அளவில் வெளியேறுவது கடல் நீரோட்டங்களைத் தீர்மானிக்க உதவுகிறது என்றும், இந்த வெளியேற்றத்தில் ஏற்படும் மாற்றங்கள் நீரோட்டங்கள் மற்றும் அவை வடிவமைக்க உதவும் பிராந்திய மற்றும் உலகளாவிய வானிலை வடிவங்களைப் பாதிக்கும் என்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cr43p54z4k5o

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.