Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. 24 FEB, 2025 | 10:19 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) அரசாங்கம் தோட்ட மக்களுக்கு ஒதுக்கி இருப்பதாக தெரிவிக்கும் 7322மில்லியன் ரூபாவில் 4100 மில்லியன் ரூபா இந்திய அரசாங்கத்தினால் ஒதுக்கப்பட்டதாகும். வீட்டுத்திட்டத்துக்கான இந்திய அரசாங்கத்தின் 3500 மில்லியன் ரூபாவும் நாங்கள் இந்திய அரசாங்கத்துடன் கலந்துரையாடி பெற்றுக்கொடுத்ததாகும். அந்த பெருமை எங்களுக்கே சேரவேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோகணேசன் தெரிவி்த்தார். பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (24) இடம்பெற்ற 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான ஆறாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், நாட்டில் அனைத்து துறைகளிலும் பின்தங்கிய மக்களாக இருப்பது பெருந்தோட்ட மக்கள் என்பது ஜனாதிபதிக்கு தெரியும். ஆனால் வரவு செலவு திட்டத்தில் பெருந்தோட்ட மக்களுக்கு 7322 மில்லியன் ரூபாவை ஒதுக்கிவிட்டு அதனை பெருமையாக பேசி வருகின்றனர். அதில் 3500 மில்லியன் ரூபா வீட்டு திட்டத்துக்காக ஒதுக்கி இருப்பதாக தெரிவிக்கின்றபோதும் அது இந்திய அரசாங்கத்தினால் ஒதுக்கப்பட்டதாகும். அதேபோன்று ஸ்மாட் வகுப்பறைக்கு 600 மில்லியன் ஒதுக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தாலும் அதுவும் இந்திய அரசாங்கத்தினால் ஒதுக்கப்பட்டதாகும். அதுதவிர தோட்ட உட்கட்டமைப்புக்காக அரசாங்கம் 1800 மில்லியன் ஒதுக்கி இருக்கிறது. புதிய கிராம வேலைத்திட்டத்துக்கு என 50 இலட்சம் ரூபா ஒதுக்கி இருக்கிறது. ஒட்டுமொத்தத்தில் அரசாங்கம் தோட்ட மக்களுக்கு ஒதுக்கி இருப்பதாக தெரிவிக்கும் 7322மில்லியன் ரூபாவில் 4100 மில்லியன் ரூபா இந்திய அரசாங்கத்தினால் ஒதுக்கப்பட்டதாகும். அதாவது நூற்றுக்கு 56வீதம் இந்திய அரசாங்கத்தின் நிதியாகும். வீட்டுத்திட்டத்துக்கான இந்திய அரசாங்கத்தின் 3500 மில்லியன் ரூபாவும் நாங்கள் இந்திய அரசாங்கத்துடன் கலந்துரையாடி பெற்றுக்கொடுத்ததாகும். அந்த பெருமை எங்களுக்கே சேரவேண்டும். அத்துடன் அரசாங்கத்தில் இருக்கும் மலையகத்தைச் சேர்ந்தவர்களும் அலையகம் அல்லாத தமிழ் அமைச்சர்கள் பிரதி அமைச்சர்கள் மலையகத்தின் அரசியல்வாதிகளை குறைசொல்லி வருகின்றனர். அவர்கள் அதனை நிறுத்த வேண்டும். தமிழ் முற்போக்கு கூட்டணி அமைக்கப்பட்ட பின்னர் மலையகத்தில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை மேற்கொண்டிருக்கிறோம். நுவரெலியா மாவட்டத்தில் 6 புதிய பிரதேச சபைகளை உருவாக்கி இருக்கிறோம். புதிய பிரதேச செயலகத்தை நுவரெலியா மாவட்டத்தில் ஏற்படுத்தி இருக்கிறோம். அதேபோன்று தோட்ட மக்களுக்கு 7பேர்ச் காணி பெற்றுக்கொடுக்க அமைச்சரவையின் அனுமதி பெற்றுக்கொண்டு அதனை நாங்களே ஆரம்பமாக பெற்றுக்கொடுத்தோம். கடந்த அரசாங்க காலத்தில் அது 10பேர்ச்சாக அதிகரிக்கப்பட்டிருக்கிறது. அந்த காணிகளில் நாங்கள் தனி வீடு கட்டுவதற்கு நடவடிக்கை எடுத்திருந்தோம். அவ்வாறு தனி வீடுகளை கட்டி மலையக தமிழ் கிராமமாக பிரகடனப்படுத்த இருந்தோம். மலையக அபிவித்திக்காக தனியான அதிகாரசபையை உருவாக்கி இருக்கிறோம். ஆனால் அந்த அதிகாரசபைக்கு 500 இலட்சம் ரூபா மாத்திரமே ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. பெருந்தோட்ட தொழிலாளர்கள் என்ற பெயரை மாற்றி, மலையக மக்கள் தேசிய இனம் என்பதை சர்வதேச ரீதியில் நாங்கள் பிரகடனம் செய்திருக்கிறோம். குடிசன புள்ளிவிபர மதிப்பீட்டிலும் மலைய மக்களின் புள்ளிவிபரங்களை பதிவு செய்யும்போது இந்திய தமிழ் மக்கள் என்றே பதிவு செய்யப்பட்டிருந்தது. அதனை மாற்றியமைத்து மலையக தமிழர் என கொண்டுவந்திருக்கிறோம். நாங்களே அதனை செய்தோம். அரசாங்கம் அதனை முன்னெடுத்திருப்பதையிட்டு சந்தோஷப்படுகிறோம். மேலும் பெருந்தாேட்ட மக்களின் சம்பளத்தை 1700 ரூபாவாக்க நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி தெரிவித்திருந்தார். அது இடம்பெறப்போவதில்லை. அவ்வாறு செய்வதாக இருந்தால் தோட்டங்களில் முறை மாற்றம் ஒன்றை ஏற்படுத்த வேண்டும். அத்துடன் மலையக மக்களுக்கு உடனடியாக வீடுகளை கட்டிக்கொடுக்க வேண்டும் என நாங்கள் கேட்பதில்லை. மாறாக அவர்களுக்கு நாங்கள் 7பேர் காணி கொடுத்தோம். அதேபோன்று அரசாங்கம் காணி கொடுக்கப்போகிறதா அல்லது வீடு கட்டிக்கொடுக்கப்போகிறா? அது தனி வீடா, மாடி வீடா என்பதை தெரிவிக்க வேண்டும். அதனை தெரிவிக்காமல் 33 வருடங்களுக்கு முன்னர் மரணித்த ரணசிங்க பிரேமதாச மலையகத்துக்கு வீடு கட்டிக்கொடுக்க தவறியமைக்காக மன்னிப்பு கோரவேண்டும் என தெரிவிப்பது குறித்து வெட்கப்படுகிறேன். அரசாங்கம் வெறுமனே பேசிக்கொண்டிருக்காமல் மலையக மக்களின் வீட்டுக்கொள்கை அல்லது காணிக் கொள்கை என்ன என்பதை தெரிவிக்க வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/207573
  2. Published By: DIGITAL DESK 2 24 FEB, 2025 | 09:56 AM டி.பி.எஸ்.ஜெயராஜ் போதைப்பொருள் கடத்தல்காரரும் பாதாள உலக கும்பலின் தலைவருமான ' கணேமுல்ல சஞ்சீவ ' என்று அறியப்பட்ட சஞ்சீவ குமார சமரரத்ன கடந்தவாரம் புதுக்கடை நீதிமன்ற கட்டிடத்தொகுதியில் 5ஆம் இலக்க மாஜிஸ்திரேட் நீதிமாறத்திற்குள் சுட்டுக் கொல்லப்பட்டார். கொலைச் சந்தேகநபர் புத்தளம் பாலவி பகுதியில் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்டவர் 34 வயதுடைய முஹமட் அஸ்மான் ஷெரீப்தீன் என்று முதலில் அறிவிக்கப்பட்டது. பிறகு பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால கொலைச் சந்தேகநபர் மகரகமவைச் சேர்ந்த சமிந்து டில்ஷான் பியூமங்க கந்தனாராச்சி என்று அறிவித்தார். கணேமுல்ல சஞ்சீவவின் வாழ்க்கை மீது ஊடகங்கள் குவித்திருக்கும் தீவிர கவனம் அவரின் கொலையின் எதிர்பார்க்கப்பட்ட ஒரு விளைவேயாகும். அவர் செய்ததாக அல்லது சம்பந்தப்பட்டதாக கூறப்படும் பெருமளவு குற்றச்செயல்கள் ஊடகங்களின் பல்வேறு பிரிவுகளினாலும் சமூக ஊடகங்களினாலும் வெளியிடப்பட்டதேயாகும். அந்த குற்றச்செயல்களில் சில மிகைப்படுத்தப்பட்டவையாக அல்லது திரிபுபடுத்தப்பட்டவையாக தோன்றுகின்றன. அவ்வாறு இருந்தாலும், கணேமுல்ல சஞ்சீவவின் கடந்த காலத்தின் எதிர்மறையான அம்சங்கள் தற்போதைய பின்புலத்தில் ஊடகங்களினால் குறைத்து மதிப்பிடக்கூடியவையோ அல்லது கவனிக்காமல் விடப்படக்கூடியவையோ அல்ல. இலங்கை தமிழரசு கட்சியின் முக்கியமான ஒரு அரசியல்வாதியைக் கொலை செய்வதற்கு முன்னர் மேற்கொள்ப்பட்ட ஒரு சதித்திட்டத்தில் கணேமுல்ல சஞ்சீவ சம்பந்தப்பட்டதாக சந்தேகிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த அரசியல்வாதி வேறு யாருமல்ல, யாழ்ப்பாண மாவட்டத்தின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான மதியாபரணம் ஆபிரகாம் சுமந்திரனேயாவார். கொழும்பில் வைத்து சுமந்திரனை கொலை செய்வதற்கு சஞ்சீவ உட்பட கொழும்பு பாதாள உலக கும்பலைச் சேர்ந்த பல உறுப்பினர்களின் உதவியை புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தின் மத்தியில் உள்ள சில பிரிவினர் உதவியை நாடினார்கள் என்ற அடிப்படையில் பொலிசார் அன்று விசாரணைகளை முன்னெடுத்தனர். ஒரு குறிப்பிட்ட காலம் தடுப்புக்காவலில் இருந்த பிறகு கணேமுல்ல சஞ்சீவவும் மற்றையவர்களும் அவர்களுக்கு எதிராக போதிய சான்றுகள் இல்லை என்ற அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டனர். கணேமுல்ல சஞ்சீவவின் கொலை சுமந்திரன் தொடர்பான விவகாரத்தின் மீது மீண்டும் கவனத்தை திருப்பியிருக்கிறது. சுமந்திரனுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் ஊடகப் பிரசாரம் ஒன்றே கணேமுல்ல சஞ்சீவ -- சுமந்திரன் கதையின் மீது கவனம் மீண்டும் திரும்பியதற்கான ஒரு முக்கிய காரணமாகும். நடந்தது இதுதான். 2010 ஆம் ஆண்டு தொடக்கம் 15 வருடங்களாக பாராளுமன்ற உறுப்பினராக இருந்த ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் 2024 தேர்தலில் பாராளுமன்றத்துக்கு தெரிவாகவில்லை. குறைக்கப்பட்ட பாதுகாப்பு ஜனாதிபதி அநூரா குமார திசாநாயக்கவும் ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி.) தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் அமைச்சர்களுக்கும் ஏனைய அதிமுக்கிய பிரமுகர்களுக்கும் வழங்கப்பட்ட பாதுகாப்பை குறைப்பதற்கு தீர்மானம் எடுத்தது என்பது எல்லாருக்கும் தெரியும். ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினரின் தனிப்பட்ட பாதுகாப்புக்கும் அமைச்சர்களுக்கான பாதுகாப்பு பிரிவில் இருந்து இரு பாதுகாப்பு அதிகாரிகளை வழங்கும் நடைமுறையும் நிறுத்தப்பட்டது. பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட தனிப்பட்ட பாதுகாப்பு நிறுத்தப்பட்டது. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் எந்த பாதுகாப்பும் கிடையாது. ஆனால், பொதுப் பாதுகாப்பு அமைச்சு சில பாராளுமன்ற உறுப்பினர்களினதும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களினதும் பாதுகாப்பு அச்சுறுத்தல் தொடர்பில் மதிப்பீடு ஒன்றைச் செய்து அதன் பிரகாரம் அவர்கள் ஒவ்வொருக்கும் இரு பொலிஸ் மெய்க்காவலர்களை அனுமதித்தது. முன்னாள் அமைச்சர்கள் ரிறான் அலஸ், டக்ளஸ் தேவானந்தா மற்றும் பிள்ளையான் என்ற சிவனேசதுரை சந்திரகாந்தன் ஆகியோரும் அவர்களில் அடங்குவர். முன்னாள் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினரான சுமந்திரனின் பாதுகாப்புக்கும் இரு அதிகாரிகள் வழங்கப்பட்டனர். தற்போது பாராளுமன்றத்தில் அங்கம் வகிப்போரில் தமிழரசு கட்சியைச் சேர்ந்த மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம், தமிழரசு கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினான சிவஞானம் சிறீதரன் ஆகியோருக்கும் பாதுகாப்பு வழங்கப்பட்டது. சாணக்கியன் விடயத்தில் பாதுகாப்பு அச்சுறுத்தல் மதிப்பீடொன்றை தொடர்ந்து பொதுப் பாதுகாப்பு அமைச்சே தீர்மானத்தை எடுத்தது. தமிழரசு கட்சியின் பாராளுமன்ற குழுவின் தலைவரான சிறீதரன் தனக்கு பாதுகாப்பைக் கோரியதையடுத்தும் ஜனாதிபதி திசாநாயக்கவுடனான நேரடிச் சந்திப்புக்கு பின்னரும் அவருக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டது. தனக்கு வளங்கப்பட்ட பாதுகாப்பு பிரிவில் இருந்து தன்னுடன் நீணடகாலமாக பணியாற்றிய பொலிஸ் மெய்க்காவலர் நீக்கப்பட்டதை சிறிதரன் ஆட்சேபித்ததாக கூறப்படடது. இலங்கையின் தற்போதைய தமிழ் அரசியல் சுமந்திரனைச் சுற்றிச் சுழல்வதாகவே இருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும். தமிழ் அரசியல் சுமந்திரனை ஆதரிக்கும் அல்லது எதிர்க்கும் ஒரு விவகாரமாக இருப்பதாக இலங்கை விவகாரங்களை நீண்டகாலமாக அவதானித்துவரும் இந்திய அரசியல் அவதானி ஒருவர் தெரிவித்தார். அத்தகைய ஒரு பின்புலத்தில், சுமந்திரனுக்கு எதிரான சக்திகள் அவருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு குறித்து பிரச்சினை கிளப்பியிருக்கின்றன. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் பாதுகாப்பு வழங்கப்பட்டிருக்கிறது என்ற உண்மையை அலட்சியம் செய்யும் இந்த சக்திகள் ஜனாதிபதி அநுரா குமார திசாநாயக்கவுடன் சுமந்திரனுக்கு இருப்பதாகக் கூறப்படும் தொடர்புகள் காரணமாகவே அவருக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டிருக்கிறது என்று விசமத்தனமான பிரசாரம் ஒன்றை செய்து வருகின்றன. இந்த பிரசாரத்தை எதிர்க்கும் சுமந்திரனின் விசுவாசிகளும் ஆதரவாளர்களும் அரசாங்கம் பாதூகாப்பு அச்சுறுத்தல் தொடர்பில் சுயாதீனமான மதிப்பீடு ஒன்றைச் செய்த பின்னரே அவருக்கு பொலிஸ் பாதுகாப்பு வழக்கப்பட்டதை சுட்டிக்காட்டுகிறார்கள். சுமந்திரனை கொலை செய்வதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட ஒரு வரலாறு இருப்பதையும் அவர்கள் வலியுறுத்திக் கூறுகிறார்கள். கணேமுல்ல சஞ்சீவவின் கொலை அவரின் கடந்தகால செயற்பாடுகள் அல்லது தவறான நடவடிக்கைகள் தொடர்பில் மீண்டும் கவனத்தை ஈர்த்திருக்கிறது. அதனால், சுமந்திரனை கொலை செய்வதற்கு மேற்கொள்ளப்பட்ட சதி முயற்சியில் கணேமுல்ல சஞ்சீவவுக்கு இருந்ததாகக் கூறப்படும் ஈடுபாடு குறித்து பெருமளவு ஆர்வம் காட்டப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து பல வாசகர்கள் என்னிடம் விசாரித்தார்கள். இந்த விவகாரம் தொடர்பில் சில வருடங்களுக்கு முன்னர் சஞ்சீவவை நீதிமன்றம் விடுதலை செய்தபோது நான் அது பற்றி அந்த நேரத்தில் விரிவாக எழுதினேன். அதனால் அன்று என்ன நடந்தது என்பதை எனது முன்னைய எழுத்துக்களின் உதவியுடன் மீட்டுப்பார்க்க விரும்புகிறேன். இரகசியப் பொலிஸ் விசாரணை கொழும்பு பாதாள உலக உறுப்பினர்களும் விடுதலை புலிகள் இயக்கத்தின் முன்னாள் போராளிகளும் சம்பந்தப்பட்ட மோசடி ஒன்று தொடர்பாக பொலிஸ் குற்றவியல் புலனாய்வு திணைக்களம் விசாரணை நடத்திக் கொண்டிருந்தது. விடுதலை புலிகளின் முன்னாள் போராளிகள் ஆயுதக்கிடங்குகளை தோண்டி துப்பாக்கிகளையும் வெடிபொருட்களையும் களைமோர் கண்ணி வெடிகளையும் எடுத்து கொழும்பில் உள்ள வன்முறைக் குய்பல்களுக்கு அவற்றை விற்பனை செய்வதாகச் சந்தேகிக்கப்பட்டது. விடுதலை புலிகளுடனான தொடர்பு வெளிச்சத்துக்கு வந்த நிலையில் குற்றவியல் புலனாய்வு பிரிவு பயங்கரவாத விசாரணைப் பிரிவையும் விசாரணைகளுக்குள் சேர்த்துக் கொண்டது. வத்தளையில் இருந்த விடுதலை புலிகளின் முன்னாள் உறுப்பினர் ஒருவரிடம் இருந்த ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டமை இந்த விசாரணைகளில் ஒரு ஆரம்பக்கட்ட முன்னேற்றமாக அமைந்தது. அவரின் பெயர் கணபதி கதிரவேலு. அவர் மீதான தீவிர விசாரணையின் விளைவாக புதிய துப்புக்கள் கிடைத்தன. தமிழரசு கட்சியான யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக இருந்த சுமந்திரனை கொழும்பில் வைத்து கொலை செய்வதற்கு சதித்திட்டம் ஒன்றை புலம்பெயர் தமிழ்ச் சமூகத்திற்குள் இருந்த சில விடுதலை புலிகள் உறுப்பினர்கள் தீட்டிக் கொண்டிருந்தார்கள் என்பது தெரியவந்தது. இதற்காக அவர்களன் பாதாள உலகக் கும்பல்களைச் சேர்ந்த சிலரை அணுகினார்கள். உயர்ந்த மாடிக்கட்டிடம் ஒன்றின் பல்கணியில் இருந்து சினைப்பர் தாக்குதல் மூலம் சுமந்திரனைக் கொலை செய்வதே நோக்கம். அப்போதுதான் அந்த சதித்திட்டத்தில் சம்பந்தப்பட்டவர்களில் ஒருவராக கணேமுல்ல சஞ்சீவவின் பெயரும் வெளியில் வந்தது. முன்னாள் விடுதலை புலிகளுடனும் புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தில் உள்ள அந்த இயக்க உறுப்பினர்களுடனும் ஆயுத வியாபாரத்தில் சஞ்சீவ ஈடுபட்டிருந்தார் என்பது அம்பலத்துக்கு வந்தது. முன்னதாக சஞ்சீவ கொந்தராத்துக் கொலைகள், போதைப் பொருள் கடத்தல் மற்றும் மிரடடிப் பணம் பறிப்பு போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக கூறப்பட்ட போதிலும், அரசியல் கொலைகளில் அவர் சம்பந்தப்பட்டதாக அறிய வரவில்லை. இந்த தகவல் வெளியானபோது கொலைக் குற்றச்சாட்டு ஒன்றின் பேரில் சஞ்சீவ விளக்கமறியலில் இருந்தார். கணேமுல்ல சஞ்சீவவை கைதுசெய்த குற்றவியல் புலனாய்வு பொலிசார் சுமந்திரனை கொலை செய்வதற்கு சதிசெய்ததாக சந்தேகத்திலும் ஆயுதங்களை சட்டவிரோதமாக கடத்தி விற்பனையில் ஈடுபட்டமைக்காகவும் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் விசாரணை செய்யத் தொடங்கினர். சஞ்சீவ மீதான விசாரணையின் விளைவாக மேலும் பல பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்தவர்கள் கைதுசெய்யப்பட்டனர். 2018 ஆம் ஆண்டில் ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில் பன்னிரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். அதற்கு பிறகு 2019 ஆம் ஆண்டில் மேலும் மூவர் கைது செய்யப்பட்டனர். 15 பேரும் கொழும்பு பிரதம மாஜிஸ்திரேட் லங்கா ஜெயரத்ன ( B/ 6284/ 01/ 19) முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டனர். குற்றப்பத்திரிகையில் இருந்த பெயர்களின் பிரகாரம் 11 பேர் சிங்களம் பேசுபவர்கள், 4 பேர் தமிழ் பேசுபவர்கள். 15 பேர் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்ட 15 பேரினதும் பெயர்கள் வருமாறு ; 1) இராசலிங்கம் சிவராஜ், 2) கல்யாணகுமார சசிகுமார, 3) ஜி.பி.எம்.பி. கவிந்த பத்திரன, 4) கே.கே.எம்.டி. விஜய சிறிவர்தன, 5) கே.பி.ஐ.ஆர். கருணாநாயக்க பத்திரன, 6) எம்.டி. நிமால் ஹர்ஷன, 7) எம்.கே பிரதீப் தேசப்பிரிய, 8) ஏ. பிரபாகர் விக்கிரமசிக்க, 9) எவ்.எஸ். ஜொனாதன் டட்லிலி, 10) டபிள்யூ. ஜூட் நிரோஷன், 11) டபிள்யூ. சலான் குமார, 12) கணபதி கதிரவேலு, 13) கே. உதேசித்த விதுரங்க, 14) ஆர்.ஏ. அமில நுவான், 15) கணேமுல்ல சஞ்சீவ அல்லது மாலிங்கமுவ சஞ்சீவ என்ற சஞ்சீவ சமரரத்ன. ' பிலாவ ' சித்திரைப் புத்தாண்டுக்கு இரு நாட்கள் முன்னதாக கொழும்பு பிரதம மாஜஸ்திரேட் ஸ்ரீ ராகல (2019 ஆம் ஆண்டின் முற்பகுதிரில் இருந்து) இரு வருடங்களாக தடுப்புக்காவலில் இருந்த பதினொரு சந்தேக நபர்களையும் விடுதலை செய்தார். அவர்களில் பாதாள உலக கும்பலைச் சேர்ந்த கணேமுல்ல சஞ்சீவவும் அடங்குவார். சுமந்திரனை கொலை செய்வதற்கு தீட்டப்பட்டதாகக் கூறப்படும் சதித் திட்டத்துக்காகவும் வேறு குற்றச்சாட்டுக்களின் பேரிலும் காவலில் வைக்கப்பட்டிருந்த வேறு பத்துப் பேரும விடுதலை செய்யப்பட்டனர். சுமந்திரனை கொலை செய்வதற்கான சதித் திட்டத்துடன் சேர்த்து, வடக்கில் விடுதலை புலிகளினால் புதைத்து வைக்கப்பட்டதாகக் கூறப்படும் கிளைமோர் கண்ணிவெடிகள், ரி -- 56 ரைபிள்களை தோண்டியெடுத்து அவற்றை கொழும்புக்கும் அதன் புறநகர்ப் பகுதிகளுக்கும் கடத்திவந்து பாதாள உலகப் புள்ளிகளுக்கு விற்பனை செய்தது தொடர்பிலும் விசாரணைகள் நடத்தப்பட்டன. தடுப்புக்காலில் வைக்கப்பட்டிருந்த 15 சந்தேகநபர்களில் 11 பேருக்கு எதிராக விசாரணைகளைத் தொடருவதற்கு போதிய சான்றுகள் இல்லை என்று சட்டமா அதிபர் தெரியப்படுத்தியிருப்பதாக பொலிஸ் அதிகாரிகள் நீதிமன்றத்தில் அறிவித்ததை அடுத்து அவர்களை கொழும்பு பிரதம மாஜிஸ்திரேட் புத்திக்க ஸ்ரீ ராகல விடுதலை செய்தார். பதினொரு பேருக்கும் எதிராக வழக்குத் தொடுப்பதற்கு போதிய சான்றுகள் இல்லை என்று அன்றைய சட்டமா அதிமர் தப்புல டி லிவேரா பொலிசாருக்கு ஆலோசனை வழங்கினார். மிகுதி நான்கு சந்தேக நபர்களுக்கும் எதிராக அண்மைய எதிர்காலத்தில் வழக்கைத் தாக்கல் செய்வதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறும் சட்டமா அதிபர் பொலிசாருக்கு ஆலோசனை வழங்கினார். ஆனால், மிகுதி நான்கு சந்தேக நபர்களுக்கும் என்ன நடந்தது என்பது தெளிவாகத் தெரியவில்ல. அவர்கள் படிப்படியாக விடுதலை செய்யப்பட்டதாக கருதப்படுகிறது. ஆனால், நான் கூறுவது சரியான தகவல் இல்லை என்றால் திருத்திக் கொள்ளத் தயாராக இருக்கிறேன். கணேமுல்ல சஞ்சீவவை பொறுத்தவரை, சுமந்திரனுடன் தொடர்பில்லாத வேறு வழக்குகளைச் சந்திக்க வேண்டியிருந்தது. கணேமுல்ல சஞ்சீவவும் ஏனைய பாதாள உலக கும்பலைச் சேர்ந்தவர்களும் விடுவிக்கப்பட்ட போதிலும், சமந்திரனை கொலை செய்வதற்கு தீட்டப்பட்டதாக கூறப்படும் சதித்திட்டம் தொடர்பில் தனியான விசாரணையை பயங்கரவாத விசாரணைப் பிரிவு தொடர்ந்து நடத்தியது என்பது கவனிக்கத்தக்கது. தனியான குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டு நீதிமன்ற விசாரணைகள் தொடர்ந்தன. ஆனால், சஞ்சீவ அந்த விசாரணைகளின் அல்லது வழக்கின் ஒரு அங்கமாக இருக்கவில்லை. சதிமுயற்சி கண்டுபிடிப்பு சுமந்திரனை கொலை செய்வதற்கு தீட்டப்பட்ட மேற்குறிப்பிட்ட சதித்திட்டத்தின் விபரங்களை முதலில் கண்டுபிடித்தவர்கள் பயங்கரவாத விசாரணைப் பிரிவுப் பொலிசாரே. பயங்கரவாத விசாரணைப் பிரிவின் அன்றைய பணிப்பாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் நாலக டி சல்வா தானே அந்த விசாரணைக்கு பொறுப்பாக இருந்து தனது அதிகாரிகளை வழிநடத்தினார். தீவிர விசாரணைக்குப் பிறகு 2016 டிசம்பர் 23 ஆம் திகதி சுமந்திரனுக்கு எதிரான சதி தொடர்பிலான உறுதியான சான்றுகள் பயங்கரவாத விரசாரணைப் பிரிவுக்கு கிடைத்தன. விசாரணைகள் தொடர்ந்தன. கைதுகளும் இடம்பெற்றன. பயங்கரவாத விசாரணைப் பிரிவினால் கண்டறியப்பட்ட தகவலின் பிரகாரம் சுமந்திரனை இலக்கு வைத்து மூன்று தடவைகள் கொலை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. தாக்குதலில் சம்பந்தப்பட்டவர்களின் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட காரணங்களின் விளைவாக அவர்களின் கொலை முயற்சிகள் தோல்விகண்டன. மூன்று சந்தர்ப்பங்களிலுமே யாழ்ப்பாணக் குடாநாட்டில் பி -- 402 சொரணப்பற்று -- தாளையடி வீதியில் சுமந்திரன் வாகனத்தில் பயணம் செய்து கொண்டிருக்கும்போது வெடிகருவிகளைப் பயன்படுத்தி அவரைக் கொலை செய்வதற்கே முயற்சிக்கப்பட்டது. மருதங்கேணிக்கு அவர் போய்வந்து கொண்டிருந்தார். சந்தேகநபர்கள் கைது செய்யப்டும்வரை தனக்கு எதிரான மூன்று கொலை முயற்சிகள் பற்றியும் சுமந்திரனுக்கு எதுவும் தெரியாது. கொழும்பு மேல் நீதிமன்றம் யாழ்ப்பாணக் குடாநாட்டில் மருதங்கேணி பகுதியில் வைத்து சுமந்திரனை கொலை செய்வதற்கு விடுதலை புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்கள் சிலர் மேற்கொண்ட சதிமுயற்சி கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து அவருக்கு முதல் தடவையாக 2017 ஜனவரியில் விசேட அதிரடிப்படை யின் பாதுகாப்பு வழங்கப்பட்டது. அந்த சதித்திட்டம் புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தின் மத்தியில் உள்ள தீவிரமான புலிகள் இயக்க பிரகிருதிகளினால் தீட்டப்பட்டது. இது தொடர்பாக ஐந்து பேருக்கு (ஒருவர் இல்லாமலேயே) எதிராக பயங்கரவாத தடைச் சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ் கொழும்பு மேல்நீதிமன்றத்தில் ( HC/ 242/ 2018 ) வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. மருதங்கேணி சதிமுயற்சி என்று கூறப்பட்ட அந்த சம்பவத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட ஐவரின் பெயர்கள் வருமாறு ; 1) சோலை குமரன் அல்லது மாஸ்டர் என்ற காராளசிங்கம் குலேந்திரன், 2) கடலன் அல்லது ஜனா என்ற மரியநாயகம் அஜந்தன், 3) வேந்தன் என்ற முருகையா தேவேந்திரன், 4) மதன் அல்லது பரதன் என்ற முருகையா தேவேந்திரன். காந்தன் அல்லது வெற்றி என்ற மகாத்மாஜி அனோஜன் என்பவரே ஐந்தாவது பிரதிவாதி. அவுஸ்திரேலியாவில் இருப்பதாக கூறப்படும் அவர் இல்லாமலேயே வழக்கு விசாரணை இடம்பெற்றது. கொழும்பு மேல்நீதிமன்றத்தில் ஒரு கணிசமான காலமாக வழக்கு விசாரணையில் இருந்து வருகிறது. இந்த வழக்கில் சுமந்திரன் சாட்சியமளித்தார். ஒரு சில அவுஸ்திரேலிய வாசிகளும் சாட்சியம் அளித்தனர். விசாரணை மந்தகதியில் நடைபெற்று வருகின்ற போதிலும், வழக்கில் முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. தீர்ப்பு எந்த நேரத்திலும் வழங்கப்படலாம். மருதங்கேணி சதிமுயற்சி சுமந்திரனை கொலை செய்வதற்கான இந்த மருதங்கேணி சதி முயற்சிககு புறம்பாக, வேறுபட்ட நேரங்களில் அவரை இலக்கு வைத்து வேறுபல சதி முயற்சிகளையும் பொலிசார் கண்டு பிடித்திருக்கிறார்கள். 2009 ஆம் ஆண்டில் போர் முடிவுக்கு வந்த பின்னர் வன்முறை நடவடிக்கைகள் ஊடாக இலங்கையில் விடுதலை புலிகளுக்கு புத்துயிர் அளிப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட ஒவ்வொரு முயற்சியுமே ஒரு இலக்காக சுமந்தி ரனை " "சம்பந்தப்படுத்துவதாகவே " இருந்திருக்கின்றது. முன்னதாக கண்டுபிடிக்கப்பட்ட பல்வேறு கொலைச்சதி முயற்சிகளில், இலக்குகளாக டக்ளஸ் தேவானந்தா அல்லது 'கேணல்' கருணா என்ற விநாயகமூர்த்தி முரளீதரனே இலக்குகள் என்று தவறாக கருதப்பட்டது. ஆனால், உண்மையான இலக்கு சுமந்திரனே என்று தெரிந்துகொண்டபோது விசாரணையாளர்கள் அதிர்ச்சியடைந்தார்கள். வெளிநாடுகளால் வாழும் புலிகளும் அவர்களின் ஆதரவாளர்களும் (அவர்களில் பலர் புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தின் மத்தியில் பெருமளவுக்கு வசதிபடைத்தவர்களாக இருக்கிறார்கள்) இலங்கையில் பணக்கஷ்டத்துக்கு உள்ளாகியிருக்கும் முன்னாள் விடுதலை புலிகள் போராளிகளுக்கு நிதியுதவியைச் செய்வதன் மூலமாக சுமந்திரனை கொலை செய்வதை நோக்கமாகக் கொண்டு செயற்பட்டு வந்திருக்கிறார்கள். இது தொடர்பில் பல வருடங்களாக சந்தேகத்தில் பலர் கைதுசெய்யப்பட்டு புலனாய்வாளர்களினால் விசாரணை செய்யப்பட்டிருக்கிறார்கள். சகல பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் வழங்கப்பட்டிருந்த அமைச்சர்கள் பாதுகாப்பு பிரிவின் பாதுகாப்புக்கு புறம்பாக, சுமந்திரனின் பாதுகாப்புக்கு விசேட அதிரடிப்படையைச் சேர்ந்தவர்களும் வழங்கப்பட்டிருந்தார்கள். அவரைக் கொலை செய்வதற்கான சதிமுயற்சிகள் கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்தே அவ்வாறு செய்யப்படடது. பாதுகாப்பு வழங்குவதற்கு அரசு கடமைப்பட்டிருக்கிறது. ஏனென்றால் சுமந்திரனுக்கு நம்பகமான உயிர் அச்சுறுத்தல்கள் இருந்தன. ஆனால், கடந்த காலத்தில் அதிகாரத்தில் இருந்தவர்கள் சுமந்திரனுக்கு பாதுகாப்பு வழங்கும் விவகாரத்தை மெத்தனமான முறையில் நோக்கினார்கள் என்பது கவனிக்கத்தக்கது. விசேட அதிரடிப்படை பாதுகாப்பு சுமந்திரனுக்கு விசேட அதிரடிப்படையின் பாதுகாப்பு முதல் தடவையாக 2017 ஆம் ஆண்டின் முற்பகுதியில் தான் வழங்கப்பட்டது. 52 நாள் அரசியலயைப்புச் சதியின்போது 2018 நவம்பரில் அந்த பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்ட்டது. மீண்டும் அவருக்கு விசேட அதிரடிப்படையின் பாதுகாப்பு 2019 மார்ச்சில் வழங்கப்பட்டது. கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக தெரிவான பிறகு 2019 நவம்பரில் அது விலக்கிக் கொள்ளப்பட்டது. 2020 ஜனவரியில் மீண்டும் சுமந்திரனுக்கு விசேட அதிரடிப்படை பாதுகாப்பு வழங்கப்பட்டது. 2020 பாராளுமன்ற தேர்தல் பிரசாரங்களின்போது அந்த பாதுகாப்பு இரண்டு மடங்காக அதிகரிக்கப்பட்டது. மீண்டும் 2021 பெப்ரவரியில் சுமந்திரனின் விசேட அதிரடிப்படை பாதுகாப்பு அகற்றப்பட்டது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் முன்னாள் பொதுப் பாதுகாப்பு அமைச்சரான சரத் வீரசேகரவின் இந்த நடவடிக்கை பலரின் கண்டனத்துக்கு உள்ளானது. ஆனால், மீண்டும் சுமந்திரனுக்கு விசேட அதிரடிப்படையின் பாதுகாப்பு வழங்கப்படவில்லை. எந்தவொரு கட்டத்திலுமே தனக்கு விசேட பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்று சுமந்திரன் தானாக வேண்டுகோள் விடுத்ததில்லை. அவருக்கு பயங்கரமான பாதுகாப்பு அச்சுறுத்தல் ஒன்று இருந்ததன் காரணத்தால் சிறிசேன -- விக்கிரமசிங்க அரசாங்கமும் கோட்டாபய -- மகிந்த அரசாங்கமுமே விசேட அதிரடிப்படை பாதுகாப்பை வழங்கின. அவருக்கு விசேட அதிரடிப்படை ப்துகாப்பை வழங்குவதும் பிறகு விலக்கிக் கொளாவதும் எப்போதுமே முற்றிலும் அரசாங்கத்தின் தீர்மானமாகவே இருந்து வந்திருக்கிறது. சரத் வீரசேகர 2021 ஜனவரியில் கோட்டாபய அரசாங்கத்தின் புதிய பொதுப் பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்ட சரத் வீரசேகர பாராளுமன்றத்தில் சுமந்திரனைச் சந்திக்க விரும்புவதாக ஒரு செய்தியை அவருக்கு அனுப்பினார். இருவரும் சந்தித்தபோது அண்மைய அச்சுறுத்தல் மதிப்பீடு பற்றியும் சுமந்திரனின் பாதுகாப்புக்கு கூடுதல் அச்சுறுத்தல் பற்றியும் விரசேகர அறிவித்தார். சுமந்திரனின் விசேட அதிரடிப்படை பாதுகாப்பு நீக்கப்படவேண்டும் என்று சிலர் ஆர்வப்படுகின்ற ஆர்வப்பட்ட போதிலும் கூட அது அகற்றப்படமாட்டாது என்று அமைச்சர் அவருக்கு உறுதியளித்தார். ஆனால், ஒரு மாதம் கழித்து 2021 பெப்ரவரி முற்பகுதியில் சுமந்திரனின் விசேட அதிரடிப்படை பாதுகாப்பை முன்னறிவித்தல் எதுவுமின்றி அதே வீரசேகர நீக்கினார். மேலும், சுமந்திரனுக்கு ஒரு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருக்கின்ற போதிலும் அவருக்கான விசேட அதிரடிப்படை பாதுகாப்பு அகற்றப்பட்டிருப்பதாக பாராளுமன்றத்தில் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் அறிவித்தார். சுமந்திரன் முக்கிய பங்கு வகித்து வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்ட " பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரை " பாதயாத்திரை கோட்டாபய அரசாங்கத்துக்கு ஆத்திரமடைய வைத்திருக்கிறது போன்றே தோன்றியது. அந்த பாதயாத்திரை முடிவடைந்த பிறகு, சுமந்திரனின் தனிப்பட்ட பாதுகாப்புக்கு பொறுப்பாக இருந்த விசேட அதிரடிப்படை பிரிவின் தலைமை அதிகாரி அவரை அணுகி அந்த பாதுகாப்பை மேலும் வழக்குவதில்லை என்று தீர்மானிக்கப்பட்ட காரணத்தால் திரும்பி வருமாறு தனது உயரதிகாரிகள் தனக்கு உத்தரவிட்டிருப்பதாக கூறினார். இந்த விசேட அதிரடிப்படை பாதுகாப்பு நீக்கம் குறித்து சுமந்திரன் பாராளுமன்றத்தில் குறிப்பிட்டார். பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை பாதயாத்திரைப் பற்றி விளக்கமளித்து அது அமைதியாக நடத்தப்பட்டதையும் சுட்டிக்காட்டிய சுமந்திரன்," இந்த பாதயாத்திரை முடிவடைந்ததும் எனக்கு வழங்கப்பட்டிருந்த விசேட பாதுகாப்பு அகற்றப்பட்டிருக்கிறது" என்று கூறினார். பாதுகாப்பு அச்சுறுத்தல் ஒன்றை எதிர்நோக்குவது பற்றி தானாக எவரிடமும் முறையிட்டதில்லை என்றும் தனக்கு அச்சுறுத்தில் இருப்பதாகக் கூறி அரசாங்கமே விசேட பாதுகாப்பை வழங்கியது என்றும் பாராளுமன்றத்தில் சுமந்திரன் கூறினார். பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை எதற்காக நடத்தப்பட்டது என்பதைப் பற்றி விளக்கிக் கூடிய சுமந்திரன் அது மிகவும் அமைதியான முறையில் அமைந்திருந்ததாகவும் குறிப்பிட்டார்." எனக்கு வழங்கப்பட்டிருந்த விசேட பாதுகாப்பு பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை பாதயாத்திரை முடிவடைந்த உடனடியாக நீக்கப்பட்டது. பாதுகாப்பு அச்சுறுத்தலை எதிர்நோக்குவது பற்றி நானாக எவரிடமும் முறையிட்டதில்லை. எனக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக கூறி அரசாங்கமே விசேட பாதுகாப்பை வழங்கியது" என்று அவர் பாராளுமன்றத்தில் கூறினார். மூன்று அவதானங்கள் விபரங்கள் அடங்கிய கோவை ஒன்றை காட்டிப் பேசிய சுமந்திரன் தனக்கு எதிரான முயற்சிகள் குறித்து கொழும்பு மேல்நீதிமன்றத்திலும் பிரதம மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திலும் விசாரணையில் உள்ள வழக்குகள் தொடர்பான விபரங்கள் அதில் இருப்பதாகவும் சிங்கள பாதாள உலக கும்பலின் உறுப்பினர்கள் உட்பட முப்பதுக்கும் அதிகமான சந்தேகநபர்கள் விளக்கமறியலில் இருப்பதாகவும் கூறினார். இவை எல்லாவற்றுக்கும் காரணம் எனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக அரசாங்கம் அறிவித்ததே என்று குறிப்பிட்ட சுமந்திரன் தனக்கு அச்சுறுத்தல் ஒன்று இருக்கிறது என்றால் எதற்காக அரசாங்கம் தனக்கு வழங்கப்பட்ட விசேட பாதுகாப்பை விலக்கிக்கொணடது என்று கேள்வியெழுப்பினார். மூன்று அவதானிப்புகளையும் அவர் முன்வைத்தார். முதலாவதாக, தனக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதற்கு மத்தியிலும் விசேட பாதுகாப்பை அரசாங்கம் நீக்கியிருக்கிறது என்றால் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்த பொத்துவில் முதல் பொலிகண்டி வரை பாதயாத்திரையில் தான் பங்கேற்றுக் கொண்டதால் அது ஆத்திரம் அடைந்திருக்க வேண்டும் என்று அவர் கூறினார். இரண்டாவதாக, உண்மையிலேயே பாதுகாப்பு அச்சுறுத்தல் இல்லை என்றால், அரசாங்கம் முப்பதுக்கும் அதிகமான அப்பாவி நபர்களை கைதுசெய்து தடுத்து வைத்திருக்கிறது என்று அவர் குறிப்பிடடார். மூன்றாவதாக, விசேட பாதுகாப்பை நீக்கிய செயல் தனக்கு ஆபத்தை விவைிக்க விரும்புகிறவர்களுக்கு ஒரு சமிக்ஞயைக் காண்பிக்கும் கெடுதியான நோக்கத்தைக் கொண்டிருக்கக் கூடும் என்று அவர் கூறினார். இறுதியாக அவர், " என்க்கு இடர்பாடான எதுவும் ஏற்பட்டால் அதற்கு முழுப் பொறுப்பையும் அரசாங்கமே ஏற்றுக் கொள்ளவேண்டும்" என்று அவர் சபையில் கூறினார். இதைத் தொடர்ந்து பொதுப் பாதுகாப்பு அமைச்சர் றியர் அட்மிறல் சரத் வீரசேகர, சுமந்திரனுக்கு வழங்கப்பட்டிருந்த விசேட அதிரடிப்படை பாதுகாப்பு தனது உத்தரவின் பேரிலேயே நிக்கப்பட்டதாக 'ஹிரு' தொலைக்காட்சிக்கு கூறினார். தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறிக்கொண்ட போதிலும், சமந்திரன் போராட்டம் ஒன்றில் பங்கேற்ற நிலையில், அவருக்கான விசேட பாதுகாப்பு நீக்கப்பட்டது நீக்கப்பட்டது என்றும் வீரசேகர கூறினார். " சுமந்திரனின் உயிருக்கு அச்சுறுத்தல் இருக்குமானால் அவர் பொது நிகழ்வு ஒன்றில் பங்கேற்றிருக்கக் கூடாது. சகல பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் வழங்கப்பட்டுவரும் பொலிஸ் பாதகாப்புக்கு சுமந்திரனும் உரித்துடையவர் என்பதால் அது அவருக்கு தொடர்ந்து வழங்கப்படும் " என்று சரத் வீரசேகர குறிப்பிட்டார். சுலபமான இலக்கு 2024 பாராளுமன்ற தேர்தலில் சுமந்திரன் தோல்வி கண்டதையடுத்து அவருக்கான பொலிஸ் பாதுகாப்பும் முடிவுக்கு வந்தது. ஆனால், முன்னர் குறிப்பிட்டதைப் போன்று, புதிய அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட சுயாதீனமான அச்சுறுத்தல் மதிப்பீடு ஒன்றையடுத்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் டக்ளஸ் தேவானந்தா ரிறான் அலஸ், பிள்ளையான் போன்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு சுமந்திரனுக்கும் வழங்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பில் சுமந்திரனுக்கு எதிரான சக்திகள் அவருக்கு எதிராக தாக்குதல்களை தொடுத்துவருகின்றன. இந்த பிரசாரம் சுமந்திரனுக்கு பொலிஸ் பாதுகாப்பை இலாலாமல் செய்து அவரை கொலையாளிகளின் இலகுவான இலக்காக்குவதை நோக்கமாகக் கொண்ட ஒரு கொடிய திட்டமாகவும் கூட இருக்கலாம். இத்தகைய பின்புலத்திலேயே, கடந்த காலத்தில் சுமந்திரனை கொலை செய்வதற்கான ஒரு சதித்திட்டத்தில் கணேமுல்ல சஞ்சீவவுக்கு இருந்ததாகக் கூறப்படும் ஈடுபாடு தொடர்பில் தற்போது ஆர்வம் காண்பிக்கப்படுகிறது. https://www.virakesari.lk/article/207486
  3. Published By: DIGITAL DESK 2 24 FEB, 2025 | 10:44 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும் வரை அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் மாற்றமில்லாமல் அமுல்படுத்தப்படும். வாய்ப்பு கிடைக்கும் சந்தர்ப்பத்தில் பொதுஜன அபிப்ராயத்துக்கு போதுமான காலவகாசம் வழங்கப்பட்டு, பாராளுமன்றத்தில் விரிவான கலந்துரையாடலுடன் புதிய அரசியலமைப்பினை உருவாக்க தயாராகவே இருப்பிறோம். இதற்கு முன்னர் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று ஆளும் தரப்பின் பிரதம கொறடாவும், சுகாதார அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (24) நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் 6 ஆம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் உரையாற்றியதாவது, பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் தான் ஜனாதிபதி வரவு செலவுத் திட்டத்தை முன்வைத்துள்ளார். இந்த வரவு செலவுத் திட்டம் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடையது, சர்வதேச நாணய நிதியத்தினுடையது என்று எதிர்கட்சிகள் குற்றஞ்சாட்டுகிறார்கள். அத்துடன் வரவு செலவுத் திட்டத்துக்கு பல பெயர்களையும் சூட்டுகிறார்கள். மக்களுக்கு பயனுடையதாக அமைந்தால் வேண்டிய பெயரை எதிர்க்கட்சிகள் பாதீட்டுக்கு சூட்டிக் கொள்ளட்டும். நாட்டு மக்களின் நலனை கருத்திற்கொண்டு வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த வரவுசெலவுத் திட்டத்தில் அனைத்து மக்களும் உள்வாங்கப்பட்டுள்ளார்கள். பொருளாதாரத்துக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நிவாரண வழங்கலுக்கான முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. எந்த தரப்பினரும் புறக்கணிக்கப்படவில்லை. வரவு செலவுத்திட்டத்தில் புதிய அரசியலமைப்பு தொடர்பில் குறிப்பிடப்படவில்லை என்று குற்றஞ்சாட்டப்படுகிறது. புதிய யாப்புருவாக்கம் குறித்து ஜனாதிபதித் தேர்தலிலும், பாராளுமன்றத் தேர்தலிலும் புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பில் தெளிவாக குறிப்பிட்டுள்ளோம். புதிய அரசியலமைப்பு ஒன்று உருவாக்கப்படும் வரை அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் அதிகரிக்காமலும், குறைக்காமலும் எவ்வித மாற்றமில்லாத வகையில் செயற்படுத்தப்படும். சிறந்த வாய்ப்பு கிடைக்கப் பெறும் முதல் சந்தர்ப்பத்தில் பொதுமக்களின் அபிப்ராயங்களுக்கும், பாராளுமன்ற ஆலோசனைக்கும் போதுமான காலவகாசம் வழங்கப்பட்டு புதிய அரசியலமைப்பினை உருவாக்குவோம், அதற்கு தயாராகவே உள்ளோம். புதிய அரசியலமைப்பு உருவாக்கத்துக்கு முன்னர் பொருளாதாரத்தை ஸ்தீரப்படுத்திக் கொள்ள வேண்டும். அப்போது தான் புதிய அரசியலமைப்பை சிறந்த முறையில் இயற்ற முடியும். ஆகவே தேர்தல் காலத்தில் வழங்கிய வாக்குறுதிக்கமைய, புதிய யாப்பினை உருவாக்குவோம். அரச சேவையாளர்களுக்கு சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளது. சுகாதாரத்துறைக்கு அதிக நிதி இம்முறை ஒதுக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த அரச சேவையாளர்களின் சம்பளம் 80 சதவீதத்தால் வளர்ச்சிப் பெறும். வரவு செலவுத் திட்டத்தின் முன்மொழிவுகள் செயற்படுத்தப்படும் என்ற அச்சத்தில் தான் எதிர்க்கட்சிகள் போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறது என்றார். https://www.virakesari.lk/article/207547
  4. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 24 பிப்ரவரி 2025, 02:31 GMT "கோலியின் ஃபார்ம் மோசமாகிவிட்டது என்று யார் சொன்னது? ஒரே ஒரு போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாட வையுங்கள். கோலியின் ஒட்டுமொத்த ஃபார்மும் கண் முன் வந்து நிற்கும்" இந்த வார்த்தைகளைக் கூறியது வேறு யாருமல்ல, பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஷோயப் அக்தர் தனது யூடியூப்பில் பேசியிருந்தார். நியூசிலாந்து, ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர்களில் கோலி தொடர்ந்து மோசமாக ஆடிவரவே, அவ்வளவுதான் கோலியின் கிரிக்கெட் எதிர்காலம் முடிந்துவிட்டது, டெஸ்ட்டிலிருந்து ஓய்வு பெறப் போகிறார் என்றெல்லாம் கதைகள் பறக்கவிடப்பட்டன. அப்போதுதான் கோலி குறித்த தனது அசைக்க முடியாத நம்பிக்கையை ஷோயப் அக்தர் வெளியிட்டார். " நான் எப்போதும் சந்தேகத்துக்குரியவனாக இருந்ததில்லை" என்று விராட் கோலியே ஒரு பேட்டியில் கூறியிருந்தார். இதன் மூலம் தன்னுடைய பேட்டிங், ஃபார்ம் குறித்து எப்போதும், யாரும் சந்தேகப்படத் தேவையில்லை எப்போது வெளிப்படுமோ அந்த தேவையை நிறைவேற்றுவேன், என் மீது சந்தேகம் எனக்கு வரும்போது களத்தில் இருக்கமாட்டேன் என்று சொல்லாமல் சொல்லி இருந்தார். சாம்பியன்ஸ் டிராபி: கோலியின் சதத்தோடு இந்திய அணி வெற்றி இந்திய அணி வென்றபோதும் ரோஹித் மன்னிப்புக் கேட்டது ஏன்? மகளிர் கால்பந்து போட்டிகள் ரத்து, நடிகைகளுக்கு மிரட்டல் - வங்கதேசத்தில் மதவாதம் தலைதூக்குகிறதா? 'நான் எழுவேன்' - பிபிசி இந்திய விளையாட்டு வீராங்கனை 2024 விருது பெற்ற மனு பாக்கரின் உத்வேக பயணம் 'கோலியின் ஆட்டத்தில் வியப்பில்லை' ரோஹித் சர்மா நேற்று போட்டி முடிந்தபின் அளித்த பேட்டியில் " நாங்கள் விராட் கோலியின் சதத்தைப் பார்த்து வியப்படையவில்லை. ஏனென்றால் ஓய்வறையில் எங்களிடம் நான் பார்த்துக் கொள்கிறேன், நீங்கள் ரிலாக்ஸாக இருங்கள் என விராட் சொல்லிவிட்டார். அதனால் தான் சதம் அடித்துவிட்டார்" என்று தெரிவித்தார். சதத்தின் மூலம் பதில் கோலி சதம் அடிப்பாரா என்று கவலைப்பட்டவர்கள் அல்லது வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் லெக் ஸ்பின்னில் ஆட்டமிழந்த இவரா சேஸிங்கில் உதவப் போகிறார் என கவலைப்பட்டவர்கள், இந்த மெதுவான ஆடுகளத்தில் கோலி சதம் அடிப்பாரா என்று கேள்வி எழுப்பியவர்கள் அனைவருக்கும் கோலி கடைசியில் ஒரு பவுண்டரி அடித்து சதத்துடன் இந்திய அணியை வெல்ல வைத்த போது பதிலை அளித்துவிட்டார். கோலி என்பவர் "மாஸ்டர் கிளாஸ் பேட்டர்". கோலியிடம் ஃபார்ம் இல்லை, ஃபார்ம் குறைந்துவிட்டது என்று இதுபோன்ற ஆல்டைம் கிரேட் பேட்டர்களிடம் கேள்விகளை வைப்பது தவறானது. ஏனென்றால், கோலி போன்ற பேட்டிங் ஜாம்பவான்கள், ஏதாவது ஒரு போட்டியில் ஃபயர் ஆகிவிட்டாலே ஒட்டுமொத்த ஆட்டத்தையும் கண்முன் கொண்டு வந்து நிறுத்தி, திகைக்க வைத்துவிடுவார்கள். ஆதலால், கோலி, ரோஹித் சர்மா போன்ற ஜாம்பவான்களுக்கு ஃபார்ம் எப்போதுமே ஒரு பொருட்டல்ல. பட மூலாதாரம்,GETTY IMAGES கோலியின் கவர் ட்ரைவ் ஷாட் துபாய் ஆடுகளம் மெதுவானது, பந்து நின்றுதான் பேட்டருக்கு அருகே வரும். தொடக்கத்திலேயே ரோஹித் விக்கெட்டை இந்திய அணி இழந்த நிலையில் வெற்றிக்கு 200 ரன்கள் தேவை, 45 ஓவர்கள் மீதமிருக்கிறது என்ற நிலையில்தான் கோலி நேற்று களமிறங்கினார். கோலி சதம் அடிப்பாரா ஆட்டத்தை வெற்றி பெறவைத்துக் கொடுப்பாரா என்ற கேள்விகளுடன், இயல்பான கவர் ட்ரைவ் ஷாட் அடிக்கும் வரை கோலியை முழுமையாக அறியாதவர்கள் சந்தேகத்துடனே பார்த்தார்கள். விராட் கோலியின் "பிராண்ட் ஷாட்" என்று சொல்லப்படும் அந்த கவர் ட்ரைவ் ஷாட்டை அடித்தபோது, அவரின் பேட்டிங் ஆழத்தை அறிந்தவர்கள் கூறியது, இன்று கோலி ஏதோ களத்தில் மாயஜாலம் நிகழ்த்தப் போகிறார், அணியின் வெற்றி மட்டுமல்ல, சதம் அடித்தாலும் வியப்பில்லை என்று எக்ஸ் தளத்திலும், தொலைக்காட்சி வர்ணனையிலும் பேசத் தொடங்கினர். விராட் கோலி கடந்த 3 ஒருநாள் போட்டிகளில் மட்டும் ஒரு அரைசதம், ஒரு சதம் என அடித்த போதே இவரின் ஃபார்ம் எங்கும் செல்லவில்லை, தேவைப்படும் போது ஒட்டிக்கொள்ளும் பட்டாம்பூச்சி என்பதை நிரூபித்தார். கடந்த 2024 டி20 உலகக் கோப்பைத் தொடரில் லீக் ஆட்டங்கள், அரையிறுதி என அனைத்திலும் ஒரு போட்டியில்கூட கோலி சிறப்பாக ஆடவில்லை. கோலியின் ஃபார்ம் குறித்து தெரியாதவர்கள்தான் விமர்சித்து பேசினர். ஆனால், கோலியைப் பற்றி தெரிந்தவர்கள், புரிந்தவர்கள், ஒரு வார்த்தை கூட பேசவில்லை. ஆனால், தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான பைனலின் போது விராட் கோலி களத்தில் ஆடிய ஆட்டம் மாஸ்டர் கிளாஸ் பேட்டிங். அந்த ஒருபோட்டியில் வெளிப்படுத்திய ஆட்டம், அனைத்து விமர்சனங்களுக்கும் பதில் அளித்து சென்றது. 'யுக்ரேன் நேட்டோ உறுப்பினராகச் சேர்க்கப்பட்டால் பதவி விலக தயார்' - ஸெலன்ஸ்கி23 பிப்ரவரி 2025 ஒரே வாரத்தில் உலகிலும், உள்நாட்டிலும் அதிர்வலைகளை ஏற்படுத்திய டிரம்பின் 19 நடவடிக்கைகள்24 பிப்ரவரி 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES சேஸிங் மாஸ்டர் கோலி ஒருநாள் போட்டியில் சேஸிங்கின் போது அதிகமான ரன்கள் குவித்தவர்களில் சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்த இடத்தில் தற்போது விராட் கோலி இருக்கிறார். "சேஸ் மாஸ்டர்" என்று அழைக்கப்படும் கோலி 7979 ரன்கள் சேர்த்துள்ளார் என்று க்ரிக் இன்போ புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. 2008 முதல் 2025 வரை 165 போட்டிகளில் 158 இன்னிங்ஸ்களில் 28 சதங்கள், 40 அரைசதங்களுடன், 7979 ரன்களை கோலி சேஸிங்கில் குவித்துள்ளார். சேஸிங்கில் கோலியின் பேட்டிங் சராசரி 64.34 ஆகவும், ஸ்ட்ரைக் ரேட் 93.33 ஆகவும் இருக்கிறது. சேஸிங்கின் போது கோலி 4 முறை மட்டுமே டக்அவுட் ஆகியுள்ளார். ஆக ஒருநாள் போட்டிகளில் கோலி சேர்த்த 14 ஆயிரம் ரன்களில், ஏறக்குறைய 8ஆயிரம் ரன்கள் சேஸிங்கின் போது அடிக்கப்பட்டவை எனும் போது " சேஸ் மாஸ்டர்" என்றுதானே கூற முடியும். 36 வயதான விராட் கோலி, ஒருநாள் போட்டிகள் முதல் பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்தும் டெஸ்ட் போட்டி வரை சகாப்தத்தையே நடத்தியுள்ளார். 2023 உலகக் கோப்பைத் தொடருக்குப்பின் விராட் கோலி 6 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே ஆடியுள்ள நிலையில் நேற்றைய ஆட்டத்தில் இந்த சதத்தை நிறைவு செய்துள்ளார். பட மூலாதாரம்,GETTY IMAGES "தலைதாழ்த்தி உழைப்பேன்" விராட் கோலி நேற்றைய ஆட்டம் முடிந்தபின் பேசுகையில் " நான் சொல்லும் முக்கிய விஷயங்களில் ஒன்று, நான் களத்தில் இருக்கும்போது சிறிது மனச்சோர்வாக உணரும் போதெல்லாம் - நான் பீல்டிங் செய்யும் ஒவ்வொரு பந்திலும் எனது 100% பலத்தையும் வெளிப்படுத்துவேன். என்னுடைய கடின உழைப்புக்கும், மைதானத்தில் என்னுடைய பங்களிப்புக்கும் சில நேரங்களில் வெகுமதி கிடைத்திருக்கிறது. அதனால்தான் கடினமாக உழைக்கும்போது நான் பெருமைப்படுவேன், பீல்டிங் செய்யும்போதும் அசரமாட்டேன். நாம் தலையைத் தாழ்த்தி போதுமான அளவு கடினமாக உழைக்கும்போது, கடவுள் நமக்கு அதற்கேற்ப வெகுமதி அளிப்பார் என்று நான் நினைக்கிறேன், எனவே நான் கடவுளுக்கு மிகவும் நன்றியுள்ளவனாகவும் நன்றியுள்ளவனாகவும் இருக்கிறேன். இந்த ஆட்டத்தில் என்னுடைய வேலை தெளிவாகச் சொல்லப்பட்டிருந்தது. நடுப்பகுதி ஓவர்களை கட்டுப்படுத்த வேண்டும், அதன்பின் வேகப்பந்துவீச்சாளர்களைக் கையாள வேண்டும். அதனால்தான் சுழற்பந்துவீச்சாளர்கள் பந்துவீச்சில் பெரிதாக நான் ரிஸ்க் எடுக்கவில்லை, அதனால் ஸ்ட்ரைக்கை மட்டும் ரொட்டேட் செய்தேன். பட மூலாதாரம்,GETTY IMAGES "என் ஸ்டைலில் விளையாடுகிறேன்" சரியான பார்ட்னர்ஷிப் அமையும்வரை ஸ்ட்ரைக்கை மாற்றுவது கடினம்தான், ஆனால் ஸ்ரேயாஸ் போன்ற சிறந்த வீரர் வரும்போது, எளிதாக ஸ்ட்ரைக்கை மாற்றி, ரன் குவிக்கும் வேகத்தை அதிகப்படுத்த வேண்டும். இந்த ஸ்டைலில்தான் நான் ஒருநாள் போட்டியை விளையாடுகிறேன், என்னுடைய இந்த விளையாட்டால் நான் பெருமைப்படுகிறேன். நானும் மனிதன்தான் வெளியே இருந்து ஏராளமான கருத்துக்கள், சத்தங்கள் என் கவனத்தை திசை திருப்புகின்றன. இருப்பினும் எனக்குரிய இடத்தை தக்கவைக்க நான் முயற்சிக்கிறேன், என்னுடைய சக்தியின் அளவை பராமரிக்கிறேன். நான் என்ன யோசிக்கிறேன், என் எண்ணங்கள், என்னவென்றால், நான் விளையாட்டுகளைச் சுற்றியுள்ள இது போன்ற எதிர்பார்ப்புகள் மற்றும் வெறித்தனங்களுக்குள் நான் எளிதில் சிக்கிக் கொள்கிறேன்" எனத் தெரிவித்தார். விராட் கோலியின் சதம் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற வித்திட்டது எப்படி?24 பிப்ரவரி 2025 சேவாக் சாதனை சமன்: இங்கிலாந்துக்கு எதிராக 352 இலக்கை எட்டிப் பிடித்து வரலாறு படைத்த ஆஸ்திரேலியா23 பிப்ரவரி 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES கவனம், தீர்க்கம், தீர்மானம் விராட் கோலி நேற்று தீர்மானத்தோடுதான் களமிறங்கினார். தொடக்கத்தில் ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்துதான் சுப்மான் கில்லுடன் ஆடினார், அதன்பின் அவருக்குரிய பிராண்ட் கவர் ட்ரைவ் ஷாட்டில் பவுண்டரிகள் சில அடித்தபின்புதான் கோலியின் தீர்மானம் தெரிந்தது. சுழற்பந்துவீச்சில் தான் பலவீனம் எனத் தெரிந்தபின் அதை மிகவும் கவனமாக கோலி கையாண்டார். பாகிஸ்தான் சுழற்பந்துவீச்சாளர் அப்ரார் அகமது பந்துவீச்சில் 30 பந்துகளை எதிர்கொண்ட கோலி ஒரு பவுண்டரி உள்பட 16 ரன்கள் மட்டுமே சேர்த்தார். லெக் ஸ்பின்னில் ஆட்டமிழந்துவிடுவார் என விமர்சிக்கப்பட்ட நிலையில் அதை நேர்த்தியாக கோலி நேற்று கையாண்டார். பட மூலாதாரம்,GETTY IMAGES சச்சினை முந்தி விராட் கோலி புதிய சாதனை பாகிஸ்தானுக்கு எதிராக சதம் அடித்து வெற்றியை மட்டும் கோலி பெற்றுத் தரவில்லை அவரின் கிரிக்கெட் வாழ்க்கையில் மிகப்பெரிய மைல்கல்லையும் எட்டினார். ஒருநாள் போட்டிகளில் 14 ஆயிரம் ரன்களை மிக விரைவாக எட்டி, சச்சின் சாதனையை முறியடித்தார். விராட் கோலி தனது 1000-வது ரன்களில் இருந்து 14 ஆயிரம் ரன்கள் வரை மிக விரைவாக ஸ்கோர் செய்து சச்சினை முந்தியுள்ளார். 14 ஆயிரம் ரன்களை எட்ட சச்சின் 350 இன்னிங்ஸ்களும், சங்ககாரா378 இன்னிங்ஸ்களும் எடுத்துக்கொண்ட நிலையில் கோலி 287 இன்னிங்ஸ்களில் இந்த மைல்கல்லை எட்டியுள்ளார். அது மட்டுமல்லாமல் ஒருநாள் போட்டிகளில் 51-வது சதத்தையும் கோலி நேற்று அடித்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் விராட் கோலி தற்போது 58.20 சராசரி வைத்துள்ளார். சச்சின் 44.19, சங்கக்கரா 41.73 மட்டுமே சராசரி வைத்திருந்தனர். அது மட்டுமல்லாமல் விராட் கோலி 14,984 பந்துகளைச் சந்தித்து 14 ஆயிரம் ரன்களை எட்டியுள்ளார். சச்சினைவிட, சங்ககாராவைவிட குறைவான பந்துகளை கோலி சந்தித்துள்ளார். சச்சின் 16,292 பந்துகளையும், சங்ககாரா 17789 பந்துகளையும் சந்தித்து இந்த மைல்கல்லை எட்டியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. கோலி தனது 175வது இன்னிங்ஸில் 8 ஆயிரம் ரன்களை எட்டினார். அதன்பின் 112 இன்னிங்ஸ்களில் 6ஆயிரம் ரன்களை எட்டியுள்ளார். கோலி தன்னுடைய 14 ஆயிரம் ரன்களில் 8 ஆயிரம் ரன்களுக்கு மேல் சேஸிங்கில் மட்டுமே சேர்த்துள்ள போதே அவரின் தீர்க்கம் தெரியவரும். சாம்பியன்ஸ் டிராபி: கோலியின் ஆகச் சிறந்த சதத்தோடு இந்திய அணி வெற்றி - பாகிஸ்தான் வெளியேறுகிறதா?24 பிப்ரவரி 2025 இந்திய அணி வென்றபோதும் ரோஹித் மன்னிப்புக் கேட்டது ஏன்?21 பிப்ரவரி 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES "கோலி ஃபார்மில் இல்லை என யார் சொன்னது?" பாகிஸ்தான் கேப்டன் முகமது ரிஸ்வான் நேற்று கோலி குறித்து பேசுகையில் " கோலியின் கடின உழைப்பைப் பார்த்து வியப்படைகிறேன். என்ன மாதிரியாக உழைக்கிறார். கோலி ஃபார்மில் இல்லை என்று உலகமே சொல்கிறது, ஆனால், இங்கு வந்து மிகப்பெரிய போட்டியில் அவரின் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி, அசாத்தியமாக ரன்களையும், சதத்தையும் விளாசியுள்ளார். போட்டியையும் வென்று கொடுத்து, ஆட்டநாயகன் விருதையும் வென்றுள்ளார். கோலியின் கடின உழைப்புக்கு எனது பாராட்டுகள், அவரின் உடற்தகுதிஅற்புதமானது. கோலியை ஆட்டமிழக்கச் செய்ய நாங்கள் எங்களால் முடிந்த அனைத்து வழிகளையும் கையாண்டோம், சிறப்பானவற்றையும் செய்தோம் ஆனால், முடியவில்லை. இங்கு வருவதற்கு முன் அவர் எவ்வளவு கடினமான உழைத்துள்ளார் என்பது களத்தில் தெரிந்தது. 36 வயதில் இந்த ஆட்டம் வியப்பானது"என குறிப்பிட்டார். ஆதலால் கோலி போன்ற ஜாம்பவான்களின் ஃபார்ம் குறித்தோ, அவர்களின் பேட்டிங் தரம் குறித்தோ விமர்சிப்பவர்கள், அதை கேள்வியாகக் கேட்பவர்களுக்கு இந்த சதம் பதிலாக அமைந்துள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c5y0v2rvgj4o
  5. இன்றைய போட்டியின் பின் அணிகளின் புள்ளிப் பட்டியல்
  6. Published By: DIGITAL DESK 2 24 FEB, 2025 | 04:51 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) பாதாள குழுக்களுக்கிடையிலான மோதல் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகும் வரைக்கும் அதிகரிக்க நாங்கள் இடமளிக்கப்போவதில்லை. இதற்காக நாங்கள் முறையான பல நடவடிக்கைகள் எடுத்திருக்கிறோம் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (24) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச விசேட கூற்றொன்றை முன்வைத்து, பாதாள குழுக்களுக்கிடையிலான மோதல் தேசிய பாதுகாப்புக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் எடுத்துவரும் நடவடிக்கைகளை சபைக்கு தெளிவுபடுத்துமாறு கேட்ட கோரிக்கைக்கு பதிலளித்து குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இதுதொடர்பில் அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில், நாட்டில் அண்மைக்காலத்தில் இடம்பெற்ற அசம்பாவிதங்கள் தொடர்பில் விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் இந்த சபைக்கு பல தடவைகள் தெளிவுபடுத்தி இருக்கிறார். அதேபோன்று ஜனாதிபதியும் தெளிவுபடுத்தி இருக்கிறார். அதனால் இந்த சம்பவத்தை நாங்கள் மிகவும் பாரதூரமாகவே பார்க்கிறோம் பாதாள குழுக்களுக்கிடையிலான மோதல் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகும் வரைக்கும் அதிகரிக்க நாங்கள் இடமளிக்கப்போவதில்லை. இதற்காக நாங்கள் முறையான பல நடவடிக்கைகள் எடுத்திருக்கிறோம். இன்னும் எடுத்துவருகிறோம் என்றார். இதுதொடர்பில் அமைச்சரும் ஆளும் கட்சி பிரதமகொறடாவுமான நளிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிடுகையில், இடம்பெற்றுவரும் இந்த சம்பவங்கள் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லை, நாட்டு மக்களின் பாதுகாப்பு, தேசிய பாதுகாப்பு தொடர்பில் உச்சமட்டத்தில் கருத்திற்கொள்வதாக பாதுகாப்பு அமைச்சர் என்றவகையில் ஜனாதிபதி தெரிவித்திருந்தார். திட்டமிட்ட குழுக்களுக்கிடையில் இடம்பெற்றுவரும் மோதல் தொடர்பில் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெளிவுபடுத்தி இருக்கிறார். அதேபோன்று பாதுகாப்பு அமைச்சுசார் ஆலோசனை குழுவில் ஜனாதிபதியும் தெளிவுபடுத்தி இருந்தார். இது தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்றுவருவதால் விசாரணை தகவல்களை பாராளுமன்றத்துக்கு தெரிவித்து, விசாரணைகளை குழப்ப முடியாது. இந்த சம்பவத்துடன் தொடர்புபட்டிருப்பதாக தெரிவித்து பொலிஸார், மற்றும் பாதுகாப்பு துறையுடன் சம்பந்தப்பட்டவர்கள் கூட கைது செய்யப்பட்டிருக்கின்றனர். அதேபோன்று நீதிமன்றத்துடன் சம்பந்தப்பட்டவர்கள் சிலரிடம் விசாரணை மேற்கொள்ளவும் இருக்கிறோம். அதனால் தேவையான தகவல்களை மாத்திரம் அடிக்கடி பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுத்திருக்கிறோம். மேலதிக தகவல் தேவை என்றால் எதிர்வரும் 28ஆம் திகதி பாதுகாப்பு அமைச்சினதும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சினதும் செலவு தலைப்பு மீதான விவாதம் இடம்பெறுகிறது. அப்போது விசாரணைகளுக்கு பாதிப்பு இல்லாத தகவல்களை முன்வைப்போம். அதனால் இடம்பெறும் விசாரணைகள் தொடர்பில் நம்பிக்கை கொள்ளுங்கள். விசாரணைகளில் இந்த சம்பவத்துடன் சம்பந்தப்பட்ட அனைவரையும் கைதுசெய்ய நடவடிக்கை எடுப்போம் என்றார். https://www.virakesari.lk/article/207542
  7. கணேமுல்ல சஞ்சீவ கொலையுடன் பதில் பொலிஸ்மா அதிபருக்கும் தொடர்பு? ; ரவி செனவிரத்ன நடவடிக்கை எடுப்பாரா ? - உதய கம்மன்பில கேள்வி Published By: DIGITAL DESK 2 24 FEB, 2025 | 05:13 PM (எம்.மனோசித்ரா) கணேமுல்ல சஞ்சீவ கொலையுடன் பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரியவுக்கும் தொடர்பிருக்கின்றதா என்ற சந்தேகம் எழுகிறது. எனவே தகவல் கிடைத்திருந்தும் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறி பதில் பொலிஸ்மா அதிபர் தொடர்பில் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரவி செனவிரத்ன நடவடிக்கை எடுப்பாரா என பிவிதுரு ஹெல உருமயவின் தலைவர் உதய கம்மன்பில கேள்வியெழுப்பினார். பிவிதுரு ஹெல உருமய அலுவலகத்தில் திங்கட்கிழமை (24) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இவ்வாறு கேள்வியெழுப்பிய அவர் மேலும் குறிப்பிடுகையில், கணேமுல்ல சஞ்சீவ மீது துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதற்கு முதல் வாரம் கம்பஹா நீதிமன்றத்தில் அவர் முன்னிலைப்படுத்தப்படவிருந்த போது அவர் மீது துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்ளப்படவிருந்ததாக தனக்கு தகவலொன்று கிடைத்ததாக பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார். அதன் காரணமாக அன்றைய தினம் மெய்நிகர் ஊடாக அவரை வழக்கு விசாரணைகளில் முன்னிலைப்படுத்தியதாகவும் பதில் பொலிஸ்மா அதிபர் குறிப்பிட்டுள்ளார். கம்பஹா நீதிமன்றத்தில் சஞ்சீவ மீது துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்ளப்படவிருந்தமைக்கான காரணம் அந்த நீதிமன்றத்தின் மீதுள்ள கோபத்தால் அல்ல, சஞ்சீவ மீதிருந்த கோபத்தினாலாகும். கம்பஹா நீதிமன்றத்தில் மேற்கொள்ளப்படவிருந்த தாக்குதலுக்கான சந்தர்ப்பத்தை பொலிஸார் தடுத்துள்ளனர் என்பதால், அதனை கொழும்பு நீதிமன்றத்தில் மேற்கொள்வதற்கான வாய்ப்புக்கள் இருக்கலாம் என்பதை ஊகிப்பதற்கு பெரும் புலமை தேவையில்லை. ஆனால் தகவல் கிடைத்திருந்தும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காத பதில் பொலிஸ்மா அதிபர், கணேமுல்ல சஞ்சீவ கொல்லப்படுவதற்கு இடமளித்துவிட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்திருக்கின்றார். கொழும்பிலும் சஞ்சீவ மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்படலாம் என பதில் பொலிஸ்மா அதிபர் சிந்திக்காமல் இருப்பதற்கான வாய்ப்புக்கள் இல்லை. சஞ்சீவ மீது இலக்கு வைத்தவர்கள் கைது செய்யப்படும் வரை அவருக்கான அச்சுறுத்தல் நீங்கவில்லை என்பதையும் பதில் பொலிஸ்மா அறிந்திருப்பார். அந்த வகையில் இந்தக் கொலையில் பதில் பொலிஸ்மா அதிபருக்கும் தொடர்பிருக்கலாம் என்ற நியாயமான சந்தேகம் எமக்கு ஏற்படுகிறது. அவ்வாறெனில் பதில் பொலிஸ்மா அதிபர் மீது யார் நடவடிக்கை எடுப்பது? பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்னவுக்கே அந்த அதிகாரம் காணப்படுகிறது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் 12 நாட்களுக்கு முன்னரே தகவல் கிடைத்திருந்தும் நடவடிக்கை எடுக்கத் தவறிய ரவி செனவிரத்னவுக்கே இந்த பொறுப்பு காணப்படுகிறது. இவர் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பதவியிலிருக்கும் வரை புலனாய்வு தகவல்கள் கிடைத்தாலும் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்காமலிருக்கும் நோய் ஒருபோதும் குணமடையப் போவதில்லை என்றார். https://www.virakesari.lk/article/207550
  8. மனித உடலில் உணரப்படும் வெப்பநிலை 'எச்சரிக்கை நிலை' வரை அதிகரிக்கும் - வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறல் Published By: DIGITAL DESK 7 24 FEB, 2025 | 05:49 PM (எம்.மனோசித்ரா) நாட்டில் சில மாவட்டங்களில் வெப்பக் குறியீடு, அதாவது மனித உடலில் உணரப்படும் வெப்பநிலை 'எச்சரிக்கை நிலை' வரை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதற்கமைய வடமேற்கு, மேற்கு, சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் இவ்வாறு வெப்பக்குறியீடு அதிகரிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை புத்தளம், குருணாகல், கம்பஹா, கேகாலை, கொழும்பு, களுத்துறை, இரத்தினபுரி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் இன்றும் அதிக வெப்பநிலை நிலவும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிக வெப்பநிலையால் உடலில் ஏற்படக் கூடிய பாதிப்புக்களைத் தவிர்த்துக் கொள்வதற்காக போதிளவு நீரை அருந்துமாறும், அநாவசியமாக வெளியிடங்களுக்கு செல்வதைத் தவிர்த்துக் கொள்ளுமாறும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மக்களை அறிவுறுத்தியுள்ளது. https://www.virakesari.lk/article/207564
  9. Published By: DIGITAL DESK 7 24 FEB, 2025 | 05:47 PM பிரதமர் பதவியுடன் எனக்கு வழங்கப்பட்டிருக்கும் பல பொறுப்புகளுக்கு மத்தியில் இந்தப் பொறுப்பைப் பற்றியும் அறிந்தபோது மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன். தெற்கில் பிறந்து வளர்ந்து கொழும்பு நகரில் வாழ்ந்தாலும் வரலாற்றுச் சிறப்புமிக்க அனுராதபுரம் மற்றும் அடமஸ்தானத்தின் மீது எனக்கு தனியான அன்பும் மரியாதையும் உண்டு. ஜய ஸ்ரீ மஹா போதி மற்றும் ருவன்வெலிசேய அருகில் இருப்பதை விட எனது மனதிற்கு ஆறுதலை தரும் வேறெதுவும் இல்லை என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். அநுராதபுரம் ஸ்ரீ மஹா போதி வளாகத்தில் உள்ள சன்னிபாத மண்டபத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (23) ஸ்ரீ மஹா போதி அபிவிருத்தி நிதியத்தின் உறுப்பினர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இதனைத் தெரிவித்தார். இந்த நிகழ்வில் அடமஸ்தானாதிபதி சாகித்யசூரி கலாநிதி பல்லேகம ஹேமரத்ன மகாநாயக்க தேரர், சியம் மகா நிகாயவின் வடமத்திய மாகாண தலைமை சங்கநாயக்க தேரர் ஈத்தலவெட்டுனுவெவே ஞானதிலக நாயக்க தேரர், சியம் மகா நிகாயவின் வடமத்திய மாகாண தலைமை அதிகரண சங்கநாயக்க தேரர் லங்காராம சைத்தியாதிகாரி சங்கைக்குரிய ரலபனாவே தம்மஜோதி நாயக்க தேரர், இலங்கை பிக்கு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் அபயகிரி சைத்யராமாதிபதி கலாநிதி கல்லஞ்சிய ரத்னசிறி நாயக்கதேரர், தூபாராம சைத்தியாதிகாரி சங்கைக்குரிய கஹல்லே ஞானின்த நாயக்க தேரர் ஆகியோர் பங்குபற்றினர். ஜய ஸ்ரீ மஹா போதி அபிவிருத்தி நிதியத்தின் உறுப்பினர்களை நியமிக்கும் அதிகாரம் பிரதமரிடம் உள்ளதுடன், பிரதமராக பதவியேற்ற பின்னர் அவர் இதில் ஈடுபடும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும். இங்கு ஸ்ரீ மஹா போதி அபிவிருத்தி நிதியத்தின் தற்போதைய தலைவர் அநுராதபுரம் மாவட்ட செயலாளர் ரஞ்சித் விமலசூரிய பிரதமரை வரவேற்று அபிவிருத்தி நிதிய உறுப்பினர்களை அறிமுகப்படுத்தினார். அதன் செயலாளர் தேமிய ஹுருல்லே ஸ்ரீ மஹா போதி அபிவிருத்தி நிதிச் சட்டம் மற்றும் அதன் ஆரம்பம் குறித்து விளக்கினார். நிதியத்தினால் இதுவரை மேற்கொள்ளப்பட்ட பணிகள் மற்றும் ஜய ஸ்ரீ மஹா போதி உட்பட புனித பூமியின் பாதுகாப்பு மற்றும் ஏனைய அடமஸ்தானங்கள் தொடர்பில் நிதியத்தின் நிர்வாகச் செயலாளர் சரத் விஜேசிங்க பிரதமரிடம் தெரிவித்தார். மேலும் இந்த அபிவிருத்தி நிதியானது எதிர்கால பணிகளுக்கு முடியுமான அதிகபட்ச ஆதரவை வழங்கும் என்றும் பிரதமர் இங்கு தெரிவித்தார். மேலும் இங்கு அடமஸ்தானாதிபதி சாகித்யசூரி கலாநிதி பல்லேகம ஹேமரத்ன மகாநாயக்க தேரர் அவர்கள் தங்கவேலி நிதியத்தினால் வெளியிடப்பட்ட “ஜய ஸ்ரீ மஹா போ சிரிதா” என்ற நூலை பிரதமருக்கு அறிமுகம் செய்து வைத்து புத்தகத்தை வழங்கிவைத்தார். ஆயிரம் பாடசாலை நூலகங்களுக்கு இந்நூலின் ஆயிரம் பிரதிகள் வழங்குவது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. https://www.virakesari.lk/article/207562
  10. 24 FEB, 2025 | 04:52 PM தையிட்டி விகாரை பிரச்சினையை நாங்கள் ஆறு மாத காலத்துக்குள் தீர்த்து வைப்போம் என சிவசேனை அமைப்பினர் உறுதி அளித்துள்ளனர். யாழ். ஊடக அமையத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை (2) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தனர். இது தொடர்பாக அவர்கள் மேலும் கூறுகையில், மக்களின் காணி மக்களுக்கே என்பதில் நாமும் உறுதியாக இருக்கிறோம். இது தொடர்பில் தையிட்டி விகாரை அமையப்பெற்றுள்ள காணி உரிமையாளர்களுடன் நாம் பேசவுள்ளோம். அவர்களுடன் பேசிய பின்னர் விகாராதிபதியுடனும் பௌத்த மத தலைவர்களுடனும் பேசி, விகாரை தொடர்பான பிரச்சினையை முடிவுறுத்துவோம். அதற்கு எமக்கு குறைந்தது ஆறு மாத காலமாவது தேவை. அதற்குள் அரசியல் செய்ய முயன்று அதனை யாரும் குழப்ப வேண்டாம் என கோருகிறோம் என்றார். https://www.virakesari.lk/article/207543
  11. ஐரோப்பா அமெரிக்காவிடமிருந்து சுதந்திரம் பெறவேண்டும் - ஜேர்மனியின் புதிய சான்சிலர் மேர்ஸ் Published By: RAJEEBAN 24 FEB, 2025 | 01:53 PM ஜேர்மனியின் புதிய சான்சிலராக தெரிவு செய்யப்பட்டுள்ள பிரீடிரிச் மேர்ஸ் அமெரிக்காவிடமிருந்துசுதந்திரம் பெறவேண்டும் என தெரிவித்துள்ளார். அமெரிக்கா ஐரோப்பிய கண்டத்தின் தலைவிதி குறித்து பெருமளவிற்கு அலட்சியமாக உள்ளது என தெரிவித்துள்ள ஜேர்மனியின் கென்சவேர்ட்டிவ் கட்சியின் தலைவர் ஐரோப்பா சுதந்திரமாகவேண்டும் என தெரிவித்துள்ளார். ஜேர்மனியின் தேர்தலில் அமெரிக்காவின் தலையீட்டையும் அவர் கண்டித்துள்ளார். டிரம்ப் நிர்வாகமும் எலொன் மஸ்க்கும் ஜேர்மனியின் அதிதீவிர வலதுசாரிகளிற்கு ஆதரவளித்தமை குறிப்பிடத்தக்கது. ஐரோப்பாவை வலுப்படுத்துவதே எனது மிகவும் முன்னுரிமைக்குரிய விடயம் எனதெரிவித்துள்ளஅவர் இதனை கூடியவிரைவில் செய்யவேண்டும், அமெரிக்காவிடமிருந்து படிப்படியாக நாங்கள் சுதந்திரத்தை பெறலாம் என குறிப்பிட்டுள்ளார். நான் இப்படி ஒரு கருத்தை தொலைக்காட்சிகளிற்கு தெரிவிக்கவேண்டிய நிலைவரும்,என ஒருபோதும் நினைக்கவில்லை என தெரிவித்துள்ள மேர்ஸ் கடந்த வாரம் டொனால்ட் டிரம்ப் தெரிவித்த கருத்துக்கள் அமெரிக்கா அல்லது அதன் தற்போதைய நிர்வாகம்,ஐரோப்பாவின் தலைவிதி குறித்து அலட்சியமாக உள்ளதை வெளிப்படுத்தியுள்ளது என குறிப்பிட்டுள்ளார். ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற தேர்தலில் பிரீடிரிச் மேர்ஸின் கென்சவேர்ட்டிவ் கட்சி வெற்றிபெற்றுள்ளது. அதேவேளை தீவிரவலதுசாரி கட்சியான ஏஎவ்டி ( அல்டனேர்ட் ஜேர்மன் கட்சி) 20.8 வீதவாக்குகள் கிடைத்தள்ளன. பழையபாணி கென்சவேர்ட்டிவும் . இதுவரை அரசபதவிகளை வகிக்காதவருமான மேர்ஸ்; ஐரோப்பாவின் மிகப்பெரிய பொருளாதாரத்திற்கும் அதிக சனத்தொகை கொண்ட நாட்டிற்கும் தலைமைதாங்கவுள்ளார். https://www.virakesari.lk/article/207520
  12. ஜெர்மனி தேர்தல்: கன்சர்வேடிவ் கட்சி வெற்றி - ஈலோன் மஸ்க் ஆதரித்த கட்சி என்ன ஆனது? பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, ஜெர்மன் தேர்தல் வெற்றிக்குப் பிறகு வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த ஃபிரெட்ரிக் மெர்ஸ் கட்டுரை தகவல் எழுதியவர், பால் கிர்பி பதவி, ஐரோப்பிய டிஜிட்டல் பிரிவு ஆசிரியர், பெர்லின் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஜெர்மனியில் நடைபெற்ற தேர்தலில் ஃபிரெட்ரிக் மெர்ஸின் கன்சர்வேடிவ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. மற்ற கட்சிகளைக் காட்டிலும் முன்னிலையில் இருந்தாலும், அக்கட்சியால் எதிர்பார்த்தபடி 30 சதவீத வாக்குகளை பெற இயலவில்லை. "இன்றிரவு இந்த வெற்றியைக் கொண்டாடுவோம். நாளை காலை நாம் செய்வதற்கு வேலைகள் இருக்கின்றன," என்று உற்சாகமாக தன்னுடைய ஆதரவாளர்களிடம் தெரிவித்தார் மெர்ஸ். "என் முன்னால் இருக்கும் பொறுப்பை உணர்ந்திருக்கிறேன்" என்றும் அவர் தெரிவித்தார். இந்த தேர்தலில் பலன் பெற்ற மற்றொரு கட்சி தீவிர வலதுசாரி கட்சியான ஆல்டர்நேட்டிவ் ஃபார் ஜெர்மனி (AfD) கட்சியாகும். 20.8 சதவீத வாக்குகளுடன் அந்த கட்சி இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. ஜெர்மனியின் சான்சிலர் பதவிக்கான, இக்கட்சியின் வேட்பாளர் ஆலிஸ் வெய்டல், தனது ஆதரவாளர்களிடம் இந்த சாதனை குறித்து பேசினார். ஆனால் அவரது கட்சி இதைவிட அதீதமான வாக்குகளையும் பெரிய வெற்றியையும் எதிர்பார்த்தது. திங்கட்கிழமை அதிகாலையில் வெளியான முடிவுகளின் படி, கிழக்கு பிராந்தியத்தில் இந்தக் கட்சி முன்னிலை வகிக்கிறது என்பது உறுதியாகியுள்ளது. ZDF நடத்திய கருத்துக்கணிப்பு முடிவில் இக்கட்சி 34 சதவீத வாக்குகளை பெறும் என்று கூறப்பட்டிருந்தது. வங்கதேசம்: வங்காள தேசியவாதத்தில் இருந்து இஸ்லாமிய தேசியவாதத்தை நோக்கி நகர்கிறதா? எப்.பி.ஐ. இயக்குநராக பதவியேற்பு: இந்திய வம்சாவளி காஷ் படேலைப் பார்த்து டிரம்ப் எதிர்ப்பாளர்கள் அஞ்சுவது ஏன்? டிரம்ப் - புதின் இடையிலான ஒரே ஒரு தொலைபேசி உரையாடல் உலகையே உலுக்கியது எப்படி? "ஜெர்மானியர்கள் மாற்றத்திற்கு வாக்களித்துள்ளனர்," என்று கூறிய ஆலிஸ் வெய்டல், கூட்டணியை உருவாக்கும் மெர்ஸின் முயற்சி தோல்வியில் தான் முடிவடையும் என்றும் தெரிவித்தார். "தேர்தல் மீண்டும் நடக்கும். அதற்காக இன்னும் நான்கு ஆண்டுகள் காத்திருக்க வேண்டியதில்லை என்று நினைக்கிறேன்," என்றும் அவர் தெரிவித்தார். யாருக்கு எவ்வளவு வாக்குகள்? 1990க்கு முன்பு இரண்டாக பிரிந்து கிடந்த அந்த நாடு இணைவதற்கு முன்பு பார்த்த வாக்குப்பதிவை இந்த தேர்தலில்தான் காண முடிந்தது. இம்முறை 83 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. ஆனால் மெர்ஸின் கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சி இந்த தேர்தலில் 28.6 சதவீத வாக்குகளை பெற்றது. ஆனால் அக்கட்சி அதைவிட வாக்குகள் கிடைக்கும் என்று எதிர்பார்த்தது. அல்டர்நேட்டிவ் ஃபார் ஜெர்மனி கட்சியுடன் இணைந்து பணியாற்ற மெர்ஸ் மறுத்துவிட்டார். ஜெர்மனியில் உள்ள பிரதான கட்சிகள் தீவிர வலதுசாரிகளுடன் இணைந்து செயல்படுவதில் ஏதோ ஒரு தடை அங்கே நிலவுகிறது. ஆனால் மெர்ஸூடன் கூட்டணி சேரும் என்று எதிர்பார்க்கப்பட்ட கட்சியான சமூக ஜனநாயகக் கட்சி (Social Democrats), 16.4% வாக்குகளை இந்தத் தேர்தலில் பெற்றுள்ளது. ஆனால் இது முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அக்கட்சிக்கு கிடைத்த குறைந்த வாக்குவிகிதம் ஆகும். அக்கட்சியின் தலைவரும் பதவியில் இருந்து வெளியேறும் சான்சிலருமான ஓலாஃப் ஷோட்ஸ், கட்சிக்கு ஒரு மோசமான தோல்வி என்றும் கூட்டணிப் பேச்சுவார்த்தைகளில் பங்கேற்கப் போவதில்லை என்றும் கூறினார். கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சிக்கு எதிர்பார்க்கப்பட்டதைவிட குறைவான வாக்குகளே கிடைத்திருப்பதால், இந்த இரண்டு கட்சிகள் சேர்ந்தால் ஆட்சியமைக்க போதுமானதாக இருக்குமா என்பதில் ஆரம்பத்திலேயே சில சந்தேகங்கள் இருந்தன. ஜெர்மனியில் மூன்று கட்சிகள் சேர்த்து அமைத்த கூட்டணியின் ஆட்சி தற்போது நான்கு ஆண்டுகளைக் கடந்து விட்டது. இப்போது அங்கே கூட்டணிக்கான ஒரே ஒரு சாத்தியமான வாய்ப்பு மட்டுமே உள்ளது. அது பசுமைக் கட்சி. இருப்பினும், பசுமைக் கட்சியின் தலைவரான ராபர்ட் ஹேபெக்கை தேர்தலுக்கு முன்பு "வெப்ப குழாய்களுக்கான பிரதிநிதி" என்று கூறி மெர்ஸ் கேலி செய்திருந்தார். 69 வயதான மெர்ஸ் ஒருபோதும் அமைச்சராகப் பதவி வகித்ததில்லை. ஆனால் அவர் ஜெர்மனியின் அடுத்த சான்சிலரானால் ஐரோப்பாவில் ஜெர்மனியின் தலைமைத்துவத்தை வெளிப்படுத்தி யுக்ரேனுக்கு ஆதரவை வலுப்படுத்த உறுதியளித்துள்ளார். உலக பணக்காரர் ஈலோன் மஸ்க் மற்றும் அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸ் ஆகிய இருவரும் ஜெர்மனி தேர்தலில் ஆல்டர்நேடிவ் ஃபார் ஜெர்மனி (AfD) கட்சிக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்தது பெரும்பாலான ஜெர்மானியர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. மியூனிச் மாநாட்டுக்குச் சென்ற போது, ஜெர்மனி தேர்தலில் தலையிட முயன்றதாக வான்ஸ் குற்றஞ்சாட்டப்பட்டார். ஜெர்மனி தேர்தல் குறித்து ஈலோன் மஸ்க் தனது எக்ஸ் தளத்தில் கருத்து தெரிவித்திருந்தார். ஆல்டர்நேட்டிவ் ஃபார் ஜெர்மனி கட்சிக்கு கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட கூடுதலாக 10 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன. வெற்றிகரமான டிக்டாக் பிரசாரத்தின் மூலமாக, பெரும்பாலான இளம் வாக்காளர்களை கவர்ந்தார். அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், மெர்ஸின் வெற்றியை வரவேற்றுள்ளார். இதனை நல்லெண்ணத்தின் வெளிப்பாடாக மெர்ஸ் கருதவில்லை. ஒரே வாரத்தில் உலகிலும், உள்நாட்டிலும் அதிர்வலைகளை ஏற்படுத்திய டிரம்பின் 19 நடவடிக்கைகள்7 மணி நேரங்களுக்கு முன்னர் 'யுக்ரேன் நேட்டோ உறுப்பினராகச் சேர்க்கப்பட்டால் பதவி விலக தயார்' - ஸெலன்ஸ்கி23 பிப்ரவரி 2025 ஞாயிற்றுக்கிழமை இரவு நடந்த ஒரு வட்டமேசை தொலைக்காட்சி விவாதத்தில், டிரம்ப் நிர்வாகம் ஐரோப்பாவின் எதிர்காலம் குறித்து பெரிதும் அலட்சியமாக உள்ளது என்பது கடந்த வாரத்தில் தெளிவாகிவிட்டது என்று அவர் கூறினார். மெர்ஸ், தனது "முன்னுரிமை", "முடிந்தவரை விரைவாக ஐரோப்பாவை வலுப்படுத்துவது என்று தெரிவித்தார். இதன் மூலம் படிப்படியாக அமெரிக்காவிடம் இருந்து உண்மையான சுதந்திரத்தை அடைய முடியும்" என்றும் அவர் கூறினார். மெர்ஸின் வெற்றிக்கு ஐரோப்பாவின் பெரும்பாலான பகுதிகளில் இருந்து வரவேற்பு கிடைத்தது. இந்த அசாதாரண காலகட்டத்தில் ஒன்றிணைந்து, "உலகத்திற்கும் நமது கண்டத்திற்கும் முன்பாகவுள்ள முக்கிய சவால்களை சமாளிக்க" வேண்டும் என்று பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோன் கூறினார். இங்கிலாந்து பிரதமர் ஸ்டார்மர், "நமது கூட்டு பாதுகாப்பை மேம்படுத்தி, இரு நாடுகளுக்கும் பொருளாதார வளர்ச்சியை உருவாக்க" வேண்டும் எனத் தெரிவித்தார். 8 முதல் 24 வயது வரை உள்ள வாக்காளர்கள் ஆல்டர்நடிவ் ஃபார் ஜெர்மனி மற்றும் இடதுசாரிகள் மீது அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். பிரெட்ரிக் மெர்ஸின் கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சிக்கு முதிர்ந்த வாக்காளர்களிடையே அதிக ஆதரவு கிடைத்துள்ளது. சிறிது காலத்திற்கு முன்பு, இடதுசாரிகளுக்கு 5 சதவீதத்திற்கும் குறைவாகவே ஆதரவு இருந்தது. ஆனால் இடதுசாரிக் கட்சியின் இணைத் தலைவரான ஹெய்டி ரெய்ச்சினெக், நாடாளுமன்றத்தில் ஆவேசமாக உரையாற்றிய டிக் டாக் வீடியோக்கள் அடுத்தடுத்து இணையத்தில் மிகவும் பிரபலமானது. இதன் விளைவாக, அக்கட்சிக்கு ஆதரவு கணிசமாக அதிகரித்தது. அக்கட்சிக்கு கிட்டத்தட்ட 9 சதவீத வாக்குகள் கிடைத்தன. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cdxqzllqevro
  13. பரிசுத்த பாப்பரசரின் உடல்நிலை-சிறுநீரகம் செயலிழந்திருக்கலாம் என அச்சம் 24 FEB, 2025 | 10:18 AM பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் தொடர்ந்தும் ஆபத்தான நிலையிலேயே உள்ளார் என தெரிவித்துள்ள வத்திக்கான் குருதிபரிசோதனைகளின் போது அவரது சிறுநீரகம் செயல் இழந்திருக்கலாம் என்பதற்கான அறிகுறிகள்தென்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. ஒருவார காலத்திற்கு முன்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பாப்பரசர் மேலும்சுவாசபாதிப்புகளை எதிர்கொண்டுள்ளார் என்பதற்கான அறிகுறிகள் இல்லை என தெரிவித்துள்ள வத்திக்கான் ஆரம்பகட்ட குருதி பரிசோதனைகளில் சிறுநீரக செயல்இழப்பிற்கான அறிகுறிகள் தென்பட்டன எனினும் தற்போது அது கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது என குறிப்பிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/207491
  14. 24 FEB, 2025 | 06:37 AM ஜேர்மனியில் தேர்தல் முடிவுகள் வெளியாகிவரும் நிலையில் 28 வீத வாக்குகளை பெற்றுள்ள கென்சவேர்ட்டிவ் கட்சி ஆட்சியை கைப்பற்றும் நிலையில் உள்ளது. தீவிர வலதுசாரி கட்சியான ஏஎவ்டி 20 வீத வாக்குகளை பெறும் நிலையில் உள்ளது. https://www.virakesari.lk/article/207482
  15. 24 FEB, 2025 | 10:46 AM சென்னை- ராமேசுவரம்: இலங்கை கடற்படையினரால் ராமேசுவரம் மீனவர்கள் 32 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களை மீட்க தூதரக முயற்சிகளை மேற்கொள்ளுமாறு இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழகமுதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 450 விசைப்படகுகளில் சுமார் 3 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு சென்றனர். அதிகாலை மன்னார் கடல் பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நிலையில் எல்லை தாண்டியதாக கூறி 5 படகுகளை இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்தனர். 32 மீனவர்களை கைது செய்தனர். இந்நிலையில் மத்திய வெளியுறவு துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் நேற்று கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது: இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது சமீபகாலத்தில் அதிகரித்துள்ளது. இதை தடுக்க இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும் என்று நான் பலமுறை கேட்டுக்கொண்ட போதிலும். கைது நடவடிக்கைகள் அதிக அளவில் தொடர்கின்றன. கடந்த 2 மாதங்களில் மட்டும் 119 மீனவர்கள் சிறை பிடிக்கப்பட்டுஇ 16 படகுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. நீண்ட காலமாக நிலுவையில் உள்ள இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண கூட்டு பணிக் குழுவை உடனே கூட்ட வேண்டும். மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுக்க வும். இலங்கையில் இருந்து படகுகளுடன் மீனவர்களை விரைவில் விடுவிக்கவும் வலுவான தூதரக முயற்சி எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/207496
  16. Published By: DIGITAL DESK 2 24 FEB, 2025 | 10:28 AM வவுனியா பூந்தோட்டம் வீதியில் மோட்டார் சைக்கிளுடன் கார் மோதி விபத்துக்குள்ளானதில் காரும் மோட்டார் சைக்கிளும் முற்றாக தீப்பற்றி எறிந்ததுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சம்பவம் திங்கட்கிழமை வவுனியா - பூந்தோட்டம் வீதியில் இடம்பெற்றுள்ளது. வவுனியா நகர் பகுதியில் இருந்து பூந்தோட்டம் நோக்கிச் சென்ற காரும், பூந்தோட்டம் பகுதியில் இருந்து வவுனியா நகர் நோக்கி வந்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிய நிலையில் விபத்துக்குள்ளாகி இருக்கின்றது. இதனை அடுத்து இரு வாகனங்களும் தீப்பற்றி எரிந்த நிலையில் அங்கு குழுமிய மக்களினால் தீயை கட்டுப்படுத்த முயற்சிகள் மேற்கொண்ட போதிலும் அது சாத்தியப்படவில்லை. இந்நிலையில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் காயம் அடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதோடு காரில் வந்தவர்கள் காப்பாற்றப்பட்டனர். இந்நிலையில் வவுனியா நகர சபையின் தீயணைப்பு பிரிவினர் விரைந்து வந்து தீயை கட்டுப்படுத்த முயற்சித்த போதிலும் கார் மற்றும் மோட்டார் சைக்கிள் முழுமையாக எரிந்துள்ள நிலையில் காணப்பட்டுள்ளது. விபத்து தொடர்பான விசாரணைகளை வவுனியா போலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/207493
  17. 24 FEB, 2025 | 10:22 AM பாதுகாப்புப் படைகளில் இருந்து தப்பியோடிய அனைவரையும் உடனடியாகக் கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் ஓய்வுபெற்ற விமானப்படையின் எயார் வைஸ் மார்ஷல் எச்.எஸ். துய்யகொந்த தெரிவித்துள்ளார். நாட்டில் இடம்பெறும் குற்றச்செயல்களை தடுக்கும் நோக்கத்தில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் தெரிவித்துள்ளார். பாதுகாப்பு செயலாளர் மேலும் தெரிவிக்கையில், நாட்டில் செயற்படும் பாதாள உலக கும்பல்களை கட்டுப்படுத்துவதற்கு தேவையான உத்திகளை மேற்கொள்வதே பாதுகாப்பு அமைச்சின் முக்கிய நோக்கம் ஆகும். மேலும், பாதுகாப்பு செயலாளர் கொழும்பிலுள்ள தகவல் ஊடக அமைச்சில் கடந்த சனிக்கிழமை (22) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில், நாட்டில் இடம்பெறும் குற்றச்செயல்களில் முன்னாள் இராணுவ வீரர்கள் ஈடுபட்டுள்ளமை மிகவும் கவலைக்குரிய விடயமாகும். உத்தியோகபூர்வமற்ற முறையில் இராணுவத்திலிருந்து விலகிய அல்லது பணி இடைநீக்கம் செய்யப்பட்ட இராணுவ வீரர்களே இவ்வாறு குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளனர் என அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/207492
  18. பட மூலாதாரம்,GETTY IMAGES 23 பிப்ரவரி 2025, 18:30 GMT புதுப்பிக்கப்பட்டது 23 பிப்ரவரி 2025, 18:31 GMT யுக்ரேன் நேட்டோ உறுப்பினராகச் சேர்க்கப்பட்டாலோ அல்லது அமைதியை ஏற்படுத்தினாலோ தனது அதிபர் பதவியை விட்டுக்கொடுக்கத் தயாராக இருப்பதாக யுக்ரேன் அதிபர் வொலோதிமிர் ஸெலன்ஸ்கி செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். திங்கள் கிழமையன்று நடக்கவுள்ள ஐரோப்பிய தலைவர்கள் இடையிலான சந்திப்பு குறித்து முதலில் பேசிய ஸெலன்ஸ்கி, "யுக்ரேன் போர் தொடர்பாக இந்தச் சந்திப்பில் அடுத்த சில வாரங்களுக்கான உத்திகள் குறித்து ஆலோசிக்கப்படும். யுக்ரேனிய பாதுகாப்புக்கான உத்தரவாதங்கள் குறித்து விவாதிக்கப்படும்," என்று கூறினார். யுக்ரேனுக்கு ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா என இரண்டுமே தேவை என்றும் அவர் தெரிவித்தார். யுக்ரேனில் நாளை நடைபெறும் சந்திப்பில் ஐரோப்பிய தலைவர்களின் எதிர்பார்ப்புகள் குறித்து ஸெலன்ஸ்கியிடம் ஒரு செய்தியாளார் எழுப்பிய கேள்விக்கு, "சில வலுவான முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக" தெரிவித்தார். இந்தச் சந்திப்பு யுக்ரேன் போர் விவகாரத்தில் ஒரு திருப்புமுனையாக இருக்க வாய்ப்புள்ளது என தான் நம்புவதாகவும் ஸெலன்ஸ்கி தெரிவித்தார். டிரம்ப் - புதின் இடையிலான ஒரே ஒரு தொலைபேசி உரையாடல் உலகையே உலுக்கியது எப்படி? அமெரிக்காவின் எஃப்.பி.ஐ. இயக்குநராக இந்திய வம்சாவளி நபர் நியமனம் - டிரம்ப் தேர்வு செய்த இவர் யார்? டிரம்பின் திடீர் அணுகுமுறையால் அதிர்ந்து போன யுக்ரேன் - போர் முனையில் நடப்பது என்ன? ஸெலன்ஸ்கி செய்தியாளர் சந்திப்பின் 5 முக்கிய அம்சங்கள் யுக்ரேன் நேட்டோ உறுப்பினராகச் சேர்க்கப்பட்டால் அல்லது அமைதியைக் கொண்டுவர முடியும் என்றால், தனது பதவியை விட்டுக்கொடுக்கத் தயாராக இருப்பதாக ஸெலன்ஸ்கி அறிவித்துள்ளார். அமெரிக்காவுக்கும் யுக்ரேனுக்கும் இடையிலான சாத்தியமான கனிம ஒப்பந்தம் குறித்துப் பேசிய அவர், ஒப்பந்த முன்மொழிவுகள் இதுவரை தாங்கள் விரும்பும் வகையில் இல்லை எனவும், பேச்சுவார்த்தைகள் முன்னேறி வருவதாகவும் குறிப்பிட்டார். அதன் அடிப்படையில், தனது வளங்களைப் பகிர்ந்துகொள்ள யுக்ரேன் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். அவரை சர்வாதிகாரி என்று முத்திரை குத்தும் வகையிலான டிரம்பின் கருத்து குறித்துப் பேசியபோது, "நான் ஒரு சர்வாதிகாரி அல்ல. ஆனால், புதின் மீண்டும் படையெடுக்க மாட்டார் என்பதை உறுதிப்படுத்த அமெரிக்க அதிபர் உத்தரவாதம் அளிக்க வேண்டும்," என்று குறிப்பிட்டார். இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவரக்கூடிய பாதுகாப்பு உத்தரவாங்களைப் பற்றி ஆலோசிக்க ஐரோப்பிய தலைவர்கள் யுக்ரேனுக்கு வருகை தர உள்ளார்கள். இந்தச் சந்திப்பு, ஒரு திருப்புமுனையாக இருக்கும் என்று தான் நம்புவதாக அவர் கூறினார். யுக்ரேன், ரஷ்யா இடையிலான மோதலை முடிவுக்குக் கொண்டு வருவது தொடர்பான எந்தவொரு பேச்சுவார்த்தையாக இருந்தாலும், அதில் யுக்ரேன் இருக்க வேண்டும் என்ற தனது நிலைப்பாட்டை அவர் மீண்டும் வலியுறுத்தினார். பில் கேட்ஸின் பால்ய காலம் எப்படி இருந்தது? அவர் நன்கொடைகளை அள்ளி வழங்குவது ஏன்?23 பிப்ரவரி 2025 உலகெங்கிலும் இருந்து அமெரிக்காவுக்குச் செல்லும் பல ஆயிரம் கிலோ தங்கம் - இந்தியாவில் விலை குறைவது எப்போது?23 பிப்ரவரி 2025 டிரம்பின் 'சர்வாதிகாரி' விமர்சனம் குறித்து என்ன கூறினார்? பட மூலாதாரம்,GETTY IMAGES அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிடம் இருந்து யுக்ரேனுக்கு தேவைப்படும் உத்தரவாதங்கள் குறித்தும் அமைதிக்காக யுக்ரேனின் அதிபர் பதவியை விட்டுக்கொடுக்க அவர் தயாராக இருக்கிறாரா என்பது குறித்தும் செய்தியாளர் சந்திப்பில் கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த ஸெலன்ஸ்கி, "ஆம், யுக்ரேன் அமைதிக்காக அதிபர் நாற்காலியை விட்டு நான் விலக வேண்டுமென்று விரும்பினால், அதைச் செய்யத் தயாராக இருக்கிறேன். அதற்குப் பதிலாக யுக்ரேனை நேட்டோ உறுப்பினராக சேர்க்க வேண்டும்," என்று அவர் குறிப்பிட்டார். ஜோ பைடன், டிரம்ப் என இருவரின் நிர்வாகத்தின் கீழும் கிடைக்கும் ஆதரவுக்குத் தான் கடமைப்பட்டுள்ளதாகக் கூறிய ஸெலன்ஸ்கி, அதிபர் டிரம்பிடம் இருந்து பாதுகாப்பு உத்தரவாதம் வேண்டுமென்றும் தெரிவித்தார். ரஷ்யாவுடனான போரின்போது யுக்ரேனுக்கு அமெரிக்கா வழங்கிய உதவிக்குப் பிரதிபலனாக, யுக்ரேனின் வளங்களைப் பகிர்ந்துகொள்ள வேண்டுமென்ற அமெரிக்காவின் கோரிக்கை குறித்தும் அவர் தனது கருத்தைத் தெரிவித்தார். முன்பு இந்தக் கோரிக்கையை நிராகரித்த யுக்ரேன் அதிபர் தற்போது, "அமெரிக்காவுடன் அதுகுறித்துப் பேச நாங்கள் தயாராக இருக்கிறோம். எங்கள் வளங்களைப் பகிர்ந்துகொள்ளத் தயாராக இருக்கிறோம். ஆனால், அதற்கு முதலில் இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வர அமெரிக்கா புதினை கட்டாயப்படுத்த வேண்டும்," என்று கூறினார். அமெரிக்க அதிபர் டிரம்ப் தன்னை "தனது வேலையை மோசமாகச் செய்துகொண்டிருக்கும் ஒரு சர்வாதிகாரி" என்று குறிப்பிட்டது குறித்துக் கேட்கப்பட்டபோது, "டொனால்ட் டிரம்பின் வார்த்தைகள் என்னைக் காயப்படுத்தவில்லை. ஒரு சர்வாதிகாரிக்குத்தான் அதைக் கேட்டு கோபம் வரும்," என்று புன்னகையுடன் யுக்ரேன் அதிபர் பதிலளித்தார். சாம்பியன்ஸ் டிராபி: கோலியின் ஆகச் சிறந்த சதத்தோடு இந்திய அணி வெற்றி - பாகிஸ்தான் வெளியேறுகிறதா?ஒரு மணி நேரத்துக்கு முன்னர் காலநிலை மாற்றம்: ஆணுடன் ஒப்பிடுகையில் பெண்ணுக்கு இரட்டைச் சுமை என்று நிபுணர்கள் எச்சரிப்பது ஏன்?23 பிப்ரவரி 2025 யுக்ரேனுக்கு ஐரோப்பிய தலைவர்களின் ஆதரவு பட மூலாதாரம்,EPA பிப்ரவரி 24ஆம் தேதியன்று நடக்கவுள்ள சந்திப்பு ஒரு திருப்புமுனையாக இருக்கும் என்று யுக்ரேன் அதிபர் தெரிவித்துள்ளார். பாதுகாப்பு தொடர்பான தனது செலவினங்களை அதிகரிக்கவும், யுக்ரேனில் ஒரு சமாதான ஒப்பந்தத்தை எட்ட உதவவும் ஐரோப்பிய தலைவர்களுக்கு அழுத்தம் கொடுக்கப்படுகிறது. இந்நிலையில், ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டேர் லேயன், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் மற்றும் பிரிட்டன் பிரதமர் கீயர் ஸ்டார்மருடன் இது தொடர்பாகப் பேசியதாகத் தெரிவித்துள்ளார். இந்த வாரத் தொடக்கத்தில், ஐரோப்பா முழுவதும் இருந்து பல தலைவர்களுடன் யுக்ரேன் தொடர்பான உச்சிமாநாட்டை பிரான்ஸ் அதிபர் நடத்தினார். அவரும் ஸ்டார்மரும் இந்த வாரம் அமெரிக்க அதிபர் டிரம்புடன் பேச்சுவார்த்தை நடத்த வாஷிங்டன் செல்கின்றனர். யுக்ரேன் போரின் மூன்றாவது ஆண்டு நிறைவடைவதை முன்னிட்டு, "நீதியுடன் கூடிய நிலையான, விரிவான அமைதிக்கான அவசரத் தேவை இருப்பதாக" ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் கூறியுள்ளார். மேலும், எந்தவொரு சமாதான ஒப்பந்தமும் "யுக்ரேனின் இறையாண்மை, சுதந்திரம், பிராந்திய ஒருமைப்பாட்டை" மதிக்க வேண்டும் என்று அன்டோனியோ குட்டெரெஸ் ஓர் அறிக்கையில் கூறியுள்ளார். போதைப் பொருட்களாகப் பயன்படுத்தப்பட்ட மாத்திரைகளைத் தடை செய்த இந்தியா23 பிப்ரவரி 2025 தவளைக் குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் அரிய வகை ஆண் தவளை21 பிப்ரவரி 2025 யுக்ரேன் நேட்டோ உறுப்பினராக இல்லாதது ஏன்? பட மூலாதாரம்,UKRAINIAN ARMED FORCES படக்குறிப்பு,யுக்ரேன் தலைநகர் கீயவ் மீது வானில் ட்ரோன்களை தேட யுக்ரேனிய சேவைப் பணியாளர்கள் தேடல் விளக்குகளைப் பயன்படுத்துகின்றனர். யுக்ரேன் அதிபர் ஸெலன்ஸ்கி, அந்நாடு நேட்டோவில் உறுப்பினராக வேண்டும் என்று நீண்ட காலமாகக் கூறி வருகிறார். கடந்த 1949ஆம் ஆண்டு 12 மேற்கத்திய நாடுகளால் ஒரு ராணுவக் கூட்டணி உருவாக்கப்பட்டது. அதில் ஒரு நாடு தாக்கப்பட்டால், மற்றவர்கள் அதைப் பாதுகாக்க உதவும் என்ற ஒப்பந்தத்துடன் அந்தக் கூட்டணி உருவாக்கப்பட்டது. அதுவே நேட்டோ என்றழைக்கப்படுகிறது. இன்று, ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவை சேர்ந்த 32 நாடுகள் அதில் உறுப்பினர்களாக உள்ளன. நேட்டோ படைகளை ரஷ்ய எல்லைகளுக்கு மிக அருகில் கொண்டு வரும் என்ற கவலைகளைக் காரணம் காட்டி, யுக்ரேன் உறுப்பினராகும் யோசனையை ரஷ்யா தொடர்ந்து எதிர்த்து வருகிறது. சமீபத்தில், ஸெலன்ஸ்கி நேட்டோ உறுப்பினர் பதவியைத் தனது "வெற்றித் திட்டத்தின்" ஒரு பகுதியாகக் குறிப்பிட்டபோது, ரஷ்ய அதிபர் மாளிகை அவர் "அது நடைமுறைச் சாத்தியமில்லாததைப் பேசுவதாக" கூறியது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cvg1xx0zdp0o
  19. 24 FEB, 2025 | 11:26 AM மரணதண்டனையை நிறைவேற்றுவது குறித்து அரசாங்கம் ஆராயவில்லை என நீதியமைச்சர் ஹர்சன நாணயக்கார தெரிவித்துள்ளார். ஐலண்டிற்கு கருத்து தெரிவித்துள்ள நீதியமைச்சர் மரணதண்டனை நிறைவேற்றம் குறித்து எந்த சூழ்நிலையிலும் அரசாங்கம் ஆராயவில்லை என அமைச்சர் தெரிவித்துள்ளார். பாதுகாப்பு அமைச்சராகவும் உள்ள ஜனாதிபதி மரணதண்டனை விதிக்கப்பட்டவர்களிற்கு தண்டனையை நிறைவேற்றுவது ஒரு வழிமுறையில்லை என்பது குறித்து தெளிவாக உள்ளார் என அமைச்சர் தெரிவித்துள்ளார். நீதிமன்ற கொலைகளின் பின்னர் இது குறித்து ஆராயவில்லை என அமைச்சர் தெரிவித்துள்ளார். தற்போதைய பிரச்சினைக்கு தீர்வை காண்பதற்கு நாங்கள் உறுதியான நடவடிக்கைகளை எடுக்கின்றோம் என தெரிவித்துள்ள நீதியமைச்சர் மூலோபாயம் ஒன்றை வகுப்பதற்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெறுகின்றன என தெரிவித்துள்ளார். நீதிமன்றம் தொடர்ந்தும் மரணதண்டனை தீர்ப்பினை வழங்குகின்ற போதிலும் இலங்கை 1976ம் ஆண்டுமுதல் மரணதண்டனையை நிறைவேற்றுவதை இடைநிறுத்திவைத்துள்ளது. https://www.virakesari.lk/article/207501
  20. கோலி சாதனை சதம்: இந்தியா பெற்ற வெற்றியால் பாகிஸ்தான் சாம்பியன்ஸ் டிராபியில் இருந்தே வெளியேறுமா? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 23 பிப்ரவரி 2025 விராட் கோலியின் ஆகச் சிறந்த சதத்தால் துபையில் நடந்த ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது இந்திய அணி. முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 241 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 242 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 45 பந்துகள் மீதமிருக்கையில் 4 விக்கெட் இழப்புக்கு 244 ரன்கள் சேர்த்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் 3-2 என்ற கணக்கில் பாகிஸ்தான் முன்னிலையில் இருந்தநிலையில் தற்போது 3-3 என்ற கணக்கில் இந்தியா-பாகிஸ்தான் சமநிலையில் இருக்கிறது. ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடங்குவதற்கு முன்பு வரை விராட் கோலியின் பேட்டிங் ஃபார்ம் பெரிய கவலையாக இருந்தது. பெரும்பாலான கிரிக்கெட் விமர்சகர்கள் கோலியின் ஃபார்ம் பற்றி குறிப்பிடத் தவறவில்லை, விமர்சிக்கத் தவறவில்லை. ஆனால், அனைத்துக்கும் இந்த ஒற்றை சதத்தின் மூலம் கோலி பதில் அளித்துள்ளார். இந்திய அணி வென்றபோதும் ரோஹித் மன்னிப்புக் கேட்டது ஏன்? மகளிர் கால்பந்து போட்டிகள் ரத்து, நடிகைகளுக்கு மிரட்டல் - வங்கதேசத்தில் மதவாதம் தலைதூக்குகிறதா? 'நான் எழுவேன்' - பிபிசி இந்திய விளையாட்டு வீராங்கனை 2024 விருது பெற்ற மனு பாக்கரின் உத்வேக பயணம் சதம் மூலம் பதில் விராட் கோலி போன்ற ஆல்டைம் கிரேட் பேட்டர்கள், இதுபோன்ற ஏதாவது ஒரு இன்னிங்ஸ் சிக்கிவிட்டால் இழந்த ஒட்டுமொத்த ஃபார்மையும் கண்முன் கொண்டு வந்து நிறுத்திவிடுவார்கள். ரசிகர்கள் கிங் கோலி என்பதற்கு விளக்கமாக இன்றைய கோலியின் ஆட்டம் அமைந்திருந்தப்பதாக சமூக ஊடகங்களில் கொண்டாடி வருகின்றனர். பட மூலாதாரம்,GETTY IMAGES பாகிஸ்தானுக்கு எதிராக எப்போதும் சிறப்பாக ஆடக்கூடிய விராட் கோலி இந்த ஆட்டத்திலும் தனது மாஸ்டர் கிளாஸ் ஆட்டத்தை வெளிப்படுத்தத் தவறவில்லை. சதம் அடிப்பாரா, அதற்கான வாய்ப்பு இருக்குமா என்ற நிலையில் கடைசியில் பவுண்டரி அடித்து 100 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் கோலி இருந்தார். அவருக்கே ஆட்டநாயகன் விருது அறிவிக்கப்பட்டது. சர்வதேச அரங்கில் தனது 51வது ஒருநாள் சதத்தையும் கோலி நிறைவு செய்துள்ளார். பட மூலாதாரம்,GETTY IMAGES இந்தியா பெற்ற வெற்றியால் பாகிஸ்தான் வெளியேறுமா? இந்திய அணி அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்துவிட்டது. அதேநேரம் பாகிஸ்தான் அணி ஏறக்குறைய சாம்பியன்ஸ் டிராபியில் இருந்து வெளியேறிவிட்டது. பாகிஸ்தான் அணிக்கு ஒரே வாய்ப்புதான் இருக்கிறது, வங்கதேச அணியை பெரிய ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடிக்க வேண்டும், நியூசிலாந்து அணி அடுத்த 2 ஆட்டங்களிலும் தோற்க வேண்டும். இப்படி நடந்தால் அரையிறுதிக்குள் பாகிஸ்தான் செல்ல வாய்ப்பு இருக்கிறது. ஆனால், இது நடக்குமா என்பது நிச்சயமில்லை. இந்திய அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக இருந்தவர்களில் சுப்மன் கில்(46), ஸ்ரேயாஸ் அய்யர்(56) ஆகியோரின் பேட்டிங்கும் குறிப்பிடத்தக்கது. இருவரும் சேர்ந்து கோலியுடன் அருமையான பார்ட்னர்ஷிப் அமைத்தனர். சுப்மன் கில், கோலி கூட்டணி 70 ரன்களும், ஸ்ரேயாஸ், கோலி கூட்டணி 114 ரன்களும் சேர்த்தது. ஒரே வாரத்தில் உலகிலும், உள்நாட்டிலும் அதிர்வலைகளை ஏற்படுத்திய டிரம்பின் 19 நடவடிக்கைகள்2 மணி நேரங்களுக்கு முன்னர் போதைப் பொருட்களாகப் பயன்படுத்தப்பட்ட மாத்திரைகளைத் தடை செய்த இந்தியா23 பிப்ரவரி 2025 ஹர்திக் அற்புதமான பந்துவீச்சு பட மூலாதாரம்,GETTY IMAGES இந்திய அணியின் பந்துவீச்சும் வெற்றிக்கு முக்கியக் காரணமாக இருந்தது. பாபர் ஆசம் விக்கெட்டை வீழ்த்தி ஹர்திக் பாண்டியா தொடங்கி வைத்தார். பாண்டியாவின் பந்துவீச்சில் இன்று ஏகப்பட்ட வேரியேஷன்கள், ஸ்லோபால், ஸ்விங் என அற்புதமாக இருந்தது. 8 ஓவர்களையும் 3.4 ரன்ரேட்டில் பந்துவீசி 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார் பாண்டியா. ஜடேஜா, அக்ஸர், குல்தீப் ஆகியோர் சேர்ந்து 26 ஓவர்களை வீசி, 129 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இந்த 3 பேருமே, 4 ரன்ரேட்டுக்கு மேலாக ரன்களை வழங்கவில்லை. குறிப்பாக நடுப்பகுதியில் விக்கெட் வீழ்த்தாமல் இந்திய அணி திணறுகிறது என்ற விமர்சனத்துக்கு இந்த முறை பதில் அளித்து நடுப்பகுதியில் விக்கெட்டை வீழ்த்தி ஆட்டத்தைத் திருப்பினர். சேவாக் சாதனை சமன்: இங்கிலாந்துக்கு எதிராக 352 இலக்கை எட்டிப் பிடித்து வரலாறு படைத்த ஆஸ்திரேலியா23 பிப்ரவரி 2025 நாளந்தா பல்கலைக் கழகம் உலகையே மாற்றியது எப்படி? ஒரு வரலாற்றுப் பார்வை22 பிப்ரவரி 2025 'கோலியின் ஆட்டம் வியப்பைத் தரவில்லை' பட மூலாதாரம்,GETTY IMAGES வெற்றிக்குப் பிறகு இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கூறுகையில் "பந்துவீச்சில் சிறப்பாகச் செயல்பட்டு அருமையாகத் தொடங்கினோம். இந்த விக்கெட் பற்றி நன்கு தெரியும் என்பதால் எங்கள் பேட்டர்கள் நிதானமாக ஆடினர். குல்தீப், அக்ஸர், ஜடேஜா சிறப்பாகப் பந்துவீசினர். ரிஸ்வான், சவுத் நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தனர். ஷமி, ஹர்திக் மற்றும் ராணா சரியான நேரத்தில் சிறப்பாகப் பந்துவீசினர். ஒவ்வொரு வீரரும் என்ன விதமான பணியைச் செய்ய வேண்டும் என்பதை அறிந்து செயல்பட்டனர். பேட்டர்களுக்கு யார் அதிகமாக தொந்தரவு கொடுப்பார்கள் என்பதை அறிந்து பந்துவீசச் செய்தேன். கோலி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திவிட்டார். ஓய்வறையில் இருப்போர் கோலியின் ஆட்டத்தைப் பார்த்துப் பெரிதாக வியப்படையவில்லை" எனத் தெரிவித்தார். 5 முறை ஆட்டமிழப்பு இந்திய அணி, 242 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கியது. ரோஹித் சர்மா, சுப்மன் கில் ஆட்டத்தைத் தொடங்கினர். ரோஹித் சர்மா வழக்கம்போல் 3 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என அதிரடியாகத் தொடங்கினார். ஆனால், அப்ரிடி வீசிய 5வது ஓவரின் கடைசிப் பந்து கணிக்க முடியாத வகையில் வந்த இன்-ஸ்விங் யார்க்கரில் ரோஹித் சர்மா க்ளீன் போல்டாகி 20 ரன்களில் ஆட்டமிழந்தார். டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் 8 முறை அப்ரிடி பந்துவீச்சை சந்தித்துள்ள ரோஹித் சர்மா, அதில் 5 முறை ஆட்டமிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதன்பின் விராட் கோலி களமிறங்கி, சுப்மன் கில்லுடன் சேர்ந்தார். அப்ரிடி வீசிய 7வது, 9வது ஓவர்களில் 4 பவுண்டரிகள் விளாசினார். பவர்ப்ளே ஓவர்கள் முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 64 ரன்கள் சேர்த்த்தது. பிரான்சில் பிரிட்டிஷார் பிடியில் இருந்து தப்ப, கப்பலில் இருந்து கடலில் குதித்த சாவர்க்கர் - என்ன நடந்தது?22 பிப்ரவரி 2025 பாம்பும் கீரியும் இயற்கையாகவே பகையாளிகளாக இருக்க என்ன காரணம்? பாம்பு விஷம் கீரியை ஒன்றும் செய்யாதா?20 பிப்ரவரி 2025 சச்சினை முந்திய கோலி பட மூலாதாரம்,GETTY IMAGES ஹாரிஸ் ராஃப் வீசிய 13வது ஓவரில் கோலி பவுண்டரி அடித்தபோது, ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவிரைவாக 14 ஆயிரம் ரன்களை எட்டி, சச்சின் டெண்டுல்கரின் சாதனையை கோலி முறியடித்தார். சச்சின் 350 இன்னிங்ஸிலும், சங்கக்கரா 378 இன்னிங்ஸிலும் இந்தச் சாதனையைச் செய்த நிலையில், கோலி 287 இன்னிங்ஸில் 14 ஆயிரம் ரன்களை எட்டினார். அதே ஓவரில் கோலி கவர் டிரைவில் அற்புதமான பவுண்டரியும் விளாசினார். அப்ரார் அகமது வீசிய 18வது ஓவரில் கில் 46 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் க்ளீன் போல்டாகி வெளியேறினார். கோலி 2வது அரைசதம் அடுத்து வந்த ஸ்ரேயாஸ் அய்யர், கோலியுடன் இணைந்தார். 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 109 ரன்கள் சேர்த்திருந்தது. 25 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 126 ரன்கள் சேர்த்தது. நசீம் ஷா வீசிய 27வது ஓவரில் டீப் கவர் திசையில் பவுண்டரி அடித்து தனது 74வது அரைசதத்தை கோலி நிறைவு செய்தார். கடந்த 3 போட்டிகளில் விராட் கோலி அடித்த 2வது அரைசதம் இது. இந்திய அணி, 36வது ஓவரில் 200 ரன்களை எட்டியது. நிதானமாக ஆடிய ஸ்ரேயாஸ் அய்யர் 63 பந்துகளில் அரைசதத்தை நிறைவு செய்தார். ஸ்ரேயாஸ் அய்யர் 56 ரன்கள் சேர்த்திருந்தபோது, குஷ்தில் வீசிய 39வது ஓவரில் இமாம் உல்ஹக்கிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஹர்திக் பவுண்டரி அடித்தநிலையில் 8 ரன்களில் அப்ரிடி பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். அக்ஸர் படேல் 3 ரன்களிலும், கோலி பவுண்டரி அடித்து சதத்தை நிறைவு செய்தும் இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். 42.3 ஓவர்களில் இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 244 ரன்கள் சேர்த்து இலக்கை அடைந்தது. சர்வதேச தலைவர்களை சந்திக்கும் போதும் ஈலோன் மஸ்க் தனது குழந்தைகளை அழைத்துச் செல்வது ஏன்?17 பிப்ரவரி 2025 மும்மொழிக் கொள்கையை தமிழ்நாடு தொடர்ந்து எதிர்ப்பது ஏன்? இந்தி எதிர்ப்பின் நெடிய வரலாறு18 பிப்ரவரி 2025 பாகிஸ்தான் தோல்விக்கு காரணம் என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES பாகிஸ்தான் அணி கவனமாக ஆட வேண்டும், விக்கெட்டை இழந்துவிடக்கூடாது என்ற கவனத்தோடு ஆடியதே தவிர ரன்சேர்ப்பில் கவனம் செலுத்தவில்லை. தொடக்கத்தில் இருந்தே மந்தமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பவர்ப்ளேவில் 2 விக்கெட் இழப்புக்கு 52 ரன்களை எடுத்த பாகிஸ்தான் அடுத்த 10 ஓவர்களில் 27 ரன்களையே சேர்த்தது. பாகிஸ்தான் தரப்பில் சவுத் ஷகில்(62), கேப்டன் ரிஸ்வான்(42) தவிர வேறு எந்த பேட்டர்களும் பெரிதாக ரன்களை சேர்க்கவில்லை இந்திய பந்துவீச்சாளர்கள் ஹர்திக், குல்தீப், அக்ஸர், ஜடேஜா ஆகிய 4 பந்துவீச்சாளர்களும் நடுவரிசையில் பாகிஸ்தான் ரன்ரேட்டை இறுக்கிப் பிடித்ததால் பாகிஸ்தான் பேட்டர்களின் பேட்டிலிருந்து பெரிய ஷாட்களும் வரவில்லை, பெரிதாக ரன்களும் வரவில்லை. பட மூலாதாரம்,GETTY IMAGES கேப்டன் ரிஸ்வான் ஆட்டமிழந்தவுடன் பாகிஸ்தான் அணியின் வீழ்ச்சி தொடங்கியது. அவர் ஆட்டமிழந்தபின் அடுத்த 11 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை பாகிஸ்தான் இழந்து தடுமாறியது. நடுவரிசை மீது மிகுந்த நம்பிக்கை வைத்து பாகிஸ்தான் தொடக்க ஆட்டக்காரர்களும், கேப்டன் ரிஸ்வானும் ரன் சேர்ப்பதில் கவனம் செலுத்தாமல் விக்கெட்டை தக்க வைப்பதிலேயே கவனம் செலுத்தினர். ஆனால், அவர்கள் நினைப்புக்கு மாறாக நடுவரிசை பேட்டர்கள் சொதப்பலாக பேட் செய்தனர். பாகிஸ்தான் அணி, 200 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்திருந்தது. அடுத்த 41 ரன்களுக்கு மீதமிருந்த 5 விக்கெட்டுகளையும் இழந்தது. நடுவரிசை பேட்டர்களை நம்பி பாகிஸ்தான் கேப்டனும், தொடக்க வீரர்களும் ஏமாந்தனர். பாகிஸ்தான் அணி தேவையின்றி பந்துகளை வீணடித்தது அந்த அணியின் ஸ்கோர் குறைவுக்கு முக்கியக் காரணம். பாகிஸ்தான் அணி இந்தப் போட்டியில் மட்டும் 152 டாட் பந்துகளை விட்டுள்ளது, இது ஏறக்குறைய 25 ஓவர்களுக்கு சமம். ஒருநாள் போட்டியில் இந்த அளவு டாட் பந்துகளை விடுவது ஸ்கோரை பெரிய அளவு பாதிக்கும். டாட் பந்துகளை விட்டதற்கு விலையாக பாகிஸ்தான் அணி ஸ்கோரை பறிகொடுத்துள்ளது. பாகிஸ்தான் அணியின் ஃபீல்டிங் படுமோசமாக இருந்தது. சுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் என 3 பேருக்கும் கேட்சை கோட்டைவிட்டனர். இந்த கேட்சுகளை பிடித்திருந்தாலே ஆட்டத்தை நெருக்கடியில் கொண்டு சென்றிருக்கலாம். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cx2gppq980go
  21. Published By: VISHNU 23 FEB, 2025 | 09:47 PM (நெவில் அன்தனி) பாகிஸ்தானின் இஸ்லாமாபாத், பாத்திமா ஜின்னா பூங்காவில் ஞாயிற்றுக்கிழமை (23) நடைபெற்ற தெற்காசிய நகர்வல ஓட்டப் போட்டியின் சிரேஷ்ட பிரிவில் இலங்கையின் விக்னராஜா வக்சன் தங்கப் பதக்கத்தையும் கனிஷ்ட பிரிவில் சிவாகரன் துதிஹர்ஷிதன் வெள்ளிப் பதக்கத்தையும் வென்றெடுத்தனர். பாகிஸ்தானுக்கான இலங்கையின் பதில் தூதுவர் ரூபன் கிறிஸ்டி நேரடியாக போட்டி நடைபெற்ற இடத்திற்கு விஜயம் செய்து வெற்றிபெற்ற இலங்கை மெய்வல்லுநர்களைப் பாராட்டி கௌரவித்தார். 10 கிலோ மீற்றர் தூரம் கொண்ட சிரேஷ்ட ஆண்களுக்கான நகர்வல ஓட்டப் போட்டியை 31 நிமிடங்கள், 56.38 செக்கன்களில் நிறைவு செய்து தலவாக்கொல்லையைச் சேர்ந்த இராணுவ வீரர் விக்னராஜா வக்சன் முதலாம் இடத்தைப் பெற்று தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார். தலவாக்கொல்லை தமிழ் மகா வித்தியாலயத்தின் பழைய மாணவரான விக்னராஜா வக்சன், தான் பங்குபற்றிய முதலாவது சர்வதேச மெய்வல்லுநர் போட்டியிலேயே முதலாம் இடத்தைப் பெற்றது பாராட்டுக்குரியதாகும்.. அவர் கடந்த 6 வருடங்களுகாக இலங்கை இராணுவத்திற்காக தேசிய மெய்வல்லுநர் போட்டிகளில் பங்குபற்றி வருகிறார். இப் போட்டியில் பங்குபற்றிய இலங்கையின் தமித் ஹேமன்த குமார (33:24.90) 7ஆம் இடத்தையும் அபேரத்ன பண்டா (33:25.09) 8ஆம் இடத்தையும் பெற்றனர். சிரேஷ்ட ஆண்களுக்கான இப் போட்டியில் ஒட்டுமொத்த நிலையில் இலங்கை இரண்டாம் இடத்தைப் பெற்று வெள்ளிப் பதக்கத்தை தனதாக்கிக்கொண்டது. இதேவேளை 8 கிலோ மீற்றர் தூரம் கொண்ட கனிஷ்ட ஆண்களுக்கான நகர்வல ஓட்டப் போட்டியில் மாத்தளை இந்து தேசிய கல்லூரி மாணவன் சிவாகரன் துதிஹர்ஷிதன் இரண்டாம் இடத்தைப் பெற்றார். துதிஹர்ஷிதனும் தனது முதலாவது சர்வதேச முயற்சியிலேயே வெள்ளிப் பதக்கம் வென்றது குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய விடயமாகும். 8 கிலோ மீற்றர் நகர்வல ஓட்டப் போட்டியை துதிஹர்ஷிதன் 27 நிமிடங்கள், 03.90 செக்கன்களில் நிறைவுசெய்து இரண்டாம் இடத்தைப் பெற்றார். அவருடன் பங்குபற்றிய கண்டி திகன இந்து தேசிய கல்லூரி மாணவன் ராஜேந்திரன் விதுசன் (27:28.20) 6ஆம் இடத்தையும் களுத்துறையைச் சேர்ந்த கவிந்து மதுஷான் (28:07.79) 8ஆம் இடத்தையும் பெற்றனர். அப் போட்டியில் பாகிஸ்தான் வீரர் முஸ்வார் அபாஸ் (26:55.88) முதலாம் இடத்தைப் பெற்றார். கனிஷ்ட ஆண்கள் பிரிவிலும் இலங்கை இரண்டாம் இடத்தைப் பெற்று வெள்ளிப் பதக்கத்தை தனதாக்கிக்கொண்டது. தெற்காசிய நகர்வல ஓட்டப் போட்டியில் பங்களாதேஷ், மாலைதீவுகள், நேபாளம், பாகிஸ்தான், இலங்கை ஆகிய ஐந்து நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் பங்குபற்றினர். https://www.virakesari.lk/article/207477
  22. பட மூலாதாரம்,MAXINE COLLINS/BBC கட்டுரை தகவல் எழுதியவர், கேட்டி ரஸ்ஸல் பதவி, கல்ச்சர் & மீடியா ஆசிரியர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் நேர்காணலின் இறுதியில்தான் பில்கேட்ஸ் இத்தனை ஆண்டுகளில் எவ்வளவு பணத்தை நன்கொடையாக வழங்கியிருக்கிறார் என்று கூறினார். அவரின் தொண்டு நிறுவனம் மூலம், நோய்களைத் தடுக்க, வறுமையை ஒழிக்க அவர் நன்கொடை அளித்துள்ளார். ''நூறு பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான நிதியை நான் கொடுத்திருப்பேன். என்னிடம் கொடுக்க இன்னும் நிறைய உள்ளது'' என்று கூறுகிறார் பில் கேட்ஸ். பல்கேரியா நாட்டின் மொத்த பொருளாதாரத்தின் மதிப்பு இது. இதை வைத்துக் கொண்டு லண்டனையும் பர்மிங்காமையும் இணைக்கும் அதிவிரைவு ரயில் சேவையான எச்.எஸ்.2 என்ற ரயில்வே லைனையே முழுமையாகக் கட்டிவிடலாம். இந்த மதிப்பானது, டெஸ்லா கார்களின் ஓராண்டு விற்பனை மதிப்பு. டெஸ்லாவின் உரிமையாளர் ஈலோன் மஸ்க், உலகில் மிகவும் பணக்கார நபராக அறியப்படுகிறார். ஒரு காலத்தில் பில் கேட்ஸ் அந்த இடத்தில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனரான கேட்ஸும், மற்ற செல்வந்தரான வாரன் ப்ஃபெட்டும் அவர்களின் கோடிக்கணக்கான நிதியை கேட்ஸ் அறக்கட்டளை மூலமாகப் பல்வேறு நலத்திட்டங்களுக்கு வழங்கி வருகின்றனர். கேட்ஸ் அறக்கட்டளையை கேட்ஸும் அவரின் முன்னாள் மனைவியான மெலிண்டாவும் சேர்ந்து உருவாக்கினார்கள். பில்கேட்ஸ் - மெலிண்டா விவாகரத்து முடிவு: அறக்கட்டளை எதிர்காலம் என்னவாகும்? மெலிண்டா பில் கேட்ஸ் யார்? ஈலான் மஸ்க் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 2ஆம் இடம்: பில் கேட்ஸை முந்திய ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனர் கிரிப்டோ கரன்சிகள் உயிருக்கு உலை வைக்கின்றன: கேட்ஸ் மிகவும் சிறிய வயதில் இருந்தே மற்றவர்களுக்குக் கொடுத்து உதவும் போக்கு தன்னிடம் இருந்ததாகத் தெரிவிக்கிறார் கேட்ஸ். அவருடைய அம்மா, "பணம் வரும்போது அதை மற்றவர்களுக்கு வழங்கும் பொறுப்பும் உடன் வருகிறது," என்று கூறியிருக்கிறார். கேட்ஸின் அறக்கட்டளையானது வருகின்ற மே மாதம், 25வது ஆண்டை நிறைவு செய்கிறது. பணத்தை வழங்குவதில் மகிழ்ச்சி கிடைக்கிறது என்று கூறுகிறார் பில்கேட்ஸ். அன்றாட வாழ்க்கை என்று வரும்போது எந்த மாற்றத்தையும் அடைந்ததாகத் தெரியவில்லை என்று அவர் தெரிவிக்கிறார். "நான் தனிப்பட்ட ரீதியில் எதையும் தியாகம் செய்யவில்லை. நான் ஹாம்பர்கர் ஆர்டர் செய்வதைக் குறைக்கவோ, படத்திற்குச் செல்வதைக் குறைக்கவோ இல்லை," என்று கூறுகிறார். இதுவரை அவரது சொத்தில் 60 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை அறக்கட்டளைக்கு வழங்கப்பட்டுவிட்டது. இருப்பினும், அவரால் இன்றும் தனி விமானத்தில் பறக்க இயலும். பல வீடுகளை வாங்க இயலும். சொத்தில் பெரும் பகுதியை நன்கொடையாக அளிக்க அவர் திட்டமிட்டுள்ளார். அனால், "மூன்று பிள்ளைகளிடமும் அவர்களுக்கு எவ்வளவு சொத்து வேண்டும்," என்ற பெரிய ஆலோசனையை நடத்தியதாகத் தெரிவித்தார் "அவர்கள் ஏழைகள் ஆகிவிடுவார்களா?" என்று நான் கேட்டேன். அவர் ''இல்லை'' என்றார். "மொத்த சதவீதத்தில் பெரும் பகுதி இல்லை என்றாலும் நான் அவர்களுக்கு விட்டுச்செல்லும் பணம் அவர்களை நன்றாக வாழ வைக்கும்," என்றார் அவர். கணக்கில் மிகவும் திறமையானவர் அவர். சியாட்டலில் உள்ள லேக்சைட் பள்ளியில் அவர் எட்டாம் வகுப்பு படிக்கும்போது நான்கு மாகாணங்களுக்கான பிராந்திய கணக்குத் தேர்வில் சிறப்பாகச் செயல்பட்டார். அப்போது அவருக்கு வயது 13 மட்டுமே. அந்த வயதில், அந்தப் பிராந்தியத்தில் கணக்கில் சிறந்து விளங்கியவர்களில் ஒருவராக அவர் திகழ்ந்தார். கணக்கு அவருக்கு மிகவும் எளிமையாக வருகின்ற ஒரு விசயம். ப்ளூம்பெர்க்கின் செல்வந்தர் பட்டியலில் அவருக்கு 160 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான சொத்துகள் உள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் ஒரு சிறு விகிதத்தை அவரின் பிள்ளைகளுக்கு விட்டுச் சென்றாலும் அவர்கள் பணக்காரர்களாக வாழ முடியும். கேட்ஸின் பால்ய கால வீடு ப்ளூம்பர்க் தரவுகளின் அடிப்படையில், 100 பில்லியன் டாலர்களுக்கு மேல் சொத்துகளைக் கொண்டுள்ள செல்வந்தர்கள் உலக அளவில் வெறும் 15 நபர்கள்தான் உள்ளனர். அதில் பில் கேட்ஸும் ஒருவர். நாம் தற்போது, சியாட்டிலில், அவருடைய பால்ய கால வீட்டில் இருக்கின்றோம். நான்கு படுக்கை வசதிகளைக் கொண்ட அந்த வீடு மலைப்பாங்கான இடத்தில் அமைந்துள்ளது. அவர் சமீபத்தில் 'ஸோர்ஸ் கோட்: மை பிகினிங்ஸ்' என்ற சுயசரிதை நூலை எழுதியுள்ளார். அதில் தன்னுடைய ஆரம்பக்கால வாழ்வைப் பற்றி விவரிக்கிறார். சராசரி என்ற எல்லைக்குள் நிறுத்தி வைக்க இயலாத குழந்தையைப் பிற்காலத்தில் ஒரு தொழில்நுட்ப ஜாம்பவானாக மாற்றியது எது என்று புரிந்து கொள்வற்காக நான் இங்கே வந்திருக்கிறேன். கிறிஸ்டி மற்றும் லிபி என்று இரண்டு சகோதரிகளுடன் வளர்ந்தவர் கேட்ஸ். இவர்கள் மூவரும் ஆச்சரியமாக வீட்டைச் சுற்றிப் பார்த்தனர். கடந்த சில ஆண்டுகளாக அவர்கள் இங்கே வருவதில்லை. அந்த வீட்டின் தற்போதைய உரிமையாளர்கள் அந்த வீட்டை மறுசீரமைப்பு செய்துள்ளனர் (அதற்கு கேட்ஸின் சகோதரிகள் ஒப்புதலும் அளித்திருக்கின்றனர்). அந்த வீட்டின் சமையலறைக்குச் செல்லும்போது பழைய நினைவுகளை அவர்கள் அசைபோடுகின்றனர். அங்கே ஒரு இண்டர்காம் சிஸ்டம் இருந்தது. அது அவர்களின் அம்மாவுக்கு மிகவும் பிடித்தமானது. படுக்கையில் இருந்து எங்களை எழுப்பி காலை உணவை உட்கொள்ள வைக்க, "அவர் காலையில் எங்களுக்காகப் பாடல் பாடுவார்," என்று கேட்ஸ் என்னிடம் பகிர்ந்துகொண்டார். பில் கேட்ஸின் அம்மா, மேரி கேட்ஸ் அவர்களின் கடிகாரங்களை எட்டு நிமிடங்கள் வேகமாக வைத்துவிடுவார். அப்போதுதான் அவருடைய நேரத்திற்கு ஏற்றபடி மற்றவர்கள் நடந்து கொள்வார்கள். பில் கேட்ஸை மேம்படுத்த அவருடைய அம்மா அதிக முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருந்தது. ஆனால் அந்த சேட்டையெல்லாம் அவருடைய பாட்டி 'காமி' முன்பு ஒன்றுமில்லாமல் போனது. பில் கேட்ஸின் குடும்பத்தினருடன் சேர்ந்து வாழ்ந்த அவர்தான் கேட்ஸுக்கு பல்வேறு விளையாட்டுகளைக் கற்றுக் கொடுத்துள்ளார். இலங்கை சுதந்திர தினத்தை கருப்பு தினமாக அறிவித்த காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள்3 பிப்ரவரி 2025 பெண் நாகா துறவிகளின் வாழ்க்கை எப்படி இருக்கும்? அவர்கள் எப்படி தீட்சை பெறுகின்றனர்?3 பிப்ரவரி 2025 கணினி கற்றுக்கொள்ள ஏற்பட்ட ஆர்வம் பட மூலாதாரம்,MAXINE COLLINS/BBC படக்குறிப்பு, நூறு பில்லியன் டாலர்களுக்கு மேல் சொத்துகளைக் கொண்டுள்ள செல்வந்தர்கள் உலக அளவில் வெறும் 15 நபர்கள்தான் உள்ளனர். அதில் பில் கேட்ஸும் ஒருவர். படிகளில் இறங்கி தரைத்தளத்தில் முன்பு அவரின் படுக்கையறை இருந்த இடத்திற்கு நான் கேட்ஸுடன் சென்றேன். தற்போது விருந்தினர் தங்கும் பகுதியாக அது மாற்றப்பட்டுள்ளது. இளமைக் காலத்தில் கேட்ஸ் அங்கே அதிக நேரத்தைச் செலவிடுவாராம். ஏதேனும் யோசித்துக் கொண்டே இருப்பார் என்று அவரின் சகோதரிகள் கூறுகின்றனர். ஒரு நேரத்தில் வீட்டில் மூன்று குழந்தைகளும் செய்யும் சேட்டையால் வெறுப்படைந்த அவருடைய அம்மா தரையில் கிடைக்கும் உடை மற்றும் இதர பொருட்களை எடுத்து வைத்துக் கொள்வாராம். திருப்பித் தர வேண்டும் என்றால் அதற்கு பில் கேட்ஸும் அவரின் சகோதரிகளும் 25 செண்ட் பணத்தை அவர்களின் அம்மாவிடம் கொடுக்க வேண்டுமாம். "அதன் பிறகு மிகவும் குறைவான உடைகளை உடுத்த பழகிக் கொண்டேன்," என்று அவர் கூறுகிறார். இந்தக் காலத்தில்தான் 'கோடிங்கில்' அவருக்கு அதிக நாட்டம் ஏற்பட்டது. ஏதேனும் பிரச்னையைப் பற்றி தெரிவித்தால் அதற்கு பதிலாக உள்ளூர் கணினி மையத்தில் கணினியைப் பயன்படுத்த அவரது பள்ளி நண்பர்கள் சிலருக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. தொழில்நுட்பப் புரட்சியின் ஆரம்பக் காலத்தில், 'கோடிங்' கற்றுக்கொள்ள அதிக ஆர்வம் காட்டினார் பில் கேட்ஸ். இரவு நேரங்களில் பெற்றோர்களிடம்கூட கூறாமல் ஜன்னல் வழியாக வீட்டைவிட்டு வெளியேறி கணினியைப் பயன்படுத்த விரும்பியிருக்கிறார் அவர். இப்போதும் உங்களால் அப்படி செய்ய முடியுமா என்று நான் கேட்டேன். அது ஒன்றும் அவ்வளவு கடினமான விஷயமில்லை எனக் கூறிக்கொண்டே, ஜன்னலைத் திறந்து அதிலிருந்து வெளியேறினார் கேட்ஸ். ஒரு காலத்தில் பில் கேட்ஸை பேட்டி கண்ட தொலைக்காட்சி நிருபர் ஒருவர், நின்ற இடத்தில் இருந்தே ஒரு நாற்காலியை தாண்டிக் குதிப்பீர்களா என்று கேட்டிருக்கிறார். அதே இடத்தில் கேட்ஸ் அதைச் செய்து காட்டியுள்ளார். அது மிகவும் பிரபலமான வீடியோவாக மாறியது. நான் இன்று அவருடைய பால்ய கால படுக்கையறையில் நின்று கொண்டிருக்கிறேன். 70 வயதைத் தொடப்போகும் அந்த மனிதர் இன்னும் இப்படியாக சாகசம் செய்து கொண்டிருக்கிறார். ராஜீவ் காந்தி ஓட்டிய விமானத்தை தீவிரவாதிகள் கடத்த முயன்றது ஏன்? ரா உளவு அமைப்பு தடுத்தது எப்படி?3 பிப்ரவரி 2025 டிரம்ப் அச்சுறுத்தல்: அமெரிக்காவின் கடுமையான வரிகளைத் தவிர்க்க சீனா என்ன செய்கிறது? எப்படி தயாராகிறது?2 பிப்ரவரி 2025 ஆட்டிசம் குறைபாடு கொண்டவரா பில் கேட்ஸ்? பட மூலாதாரம், MAXINE COLLINS/BBC படக்குறிப்பு, சகோதரிகளுடன் கேட்ஸ் விளையாடிக் கொண்டிருக்கும் காட்சி. இடது புறத்தில் இருந்து இரண்டாவதாக அமர்ந்திருப்பவர் பிபிசி செய்தியாளர் அந்த இடம் அவருக்குப் பழக்கப்பட்டது என்பதற்காக மட்டும் அவர் இப்படி இலகுவாக ஜன்னல் வழியாக ஏறிச் செல்லவில்லை. அவருடைய புத்தகத்தில் வெளிப்படையாக இவ்வாறு எழுதியுள்ளார், ''இந்தக் காலத்தில் அவர் வளர்க்கப்பட்டிருந்தால், அவர் ஆட்டிசம் குறைபாடு கொண்டவராக வகைப்படுத்தப்பட்டிருப்பார்.'' கடந்த 2012ஆம் ஆண்டுக்கு முன் ஒரே ஒருமுறை அவரை நான் நேர்காணல் செய்தேன். உயிர்க் கொல்லி நோய்களில் இருந்து குழந்தைகளைக் காப்பாற்றுவதற்கான அவருடைய இலக்கு குறித்த நேர்காணல் அது. அப்போது நேர்காணலுக்கு முன்பான உரையாடல் ஏதும் நிகழவில்லை. என்னுடைய நேர்காணலுக்குப் பிறகு அவருக்கு ஆட்டிசம் குறைபாடு இருக்கிறதா என்று எனக்குத் தோன்றியது. அவருக்குப் பிடித்த விஷயங்களில் செலுத்தப்படும் அதிகபட்ச கவனம், எதையும் கற்றுக்கொள்ள காட்டும் அதீத ஆர்வம், சமூக விழிப்புணர்வு குறித்து அறியாமல் இருந்தது போன்றவை குறித்துத் தன்னுடைய புத்தகத்தில் அவர் எழுதியுள்ளார். டெலவேர் குறித்து 177 பக்க அறிக்கை ஒன்றை ஆரம்பப் பள்ளியில் படிக்கும்போது எழுதியுள்ளார். உள்ளூரில் உள்ள நிறுவனங்களுக்கு ஆண்டு அறிக்கை வேண்டுமென்றால் தொடர்பு கொள்ளவும் என்று கூறி பல நிறுவனங்களுக்குக் கடிதம் எழுதும்போது அவருக்கு வயது 11. அவருடைய சகோதரிகள், பில் கேட்ஸ் வித்தியாசமானவர் என்று உணர்ந்திருப்பதாகத் தெரிவித்துள்ளனர். கிறிஸ்டி, பில்லின் அக்கா. தன்னுடைய தம்பி குறித்து மிகவும் அக்கறை கொண்டதாகத் தெரிவிக்கிறார். "அவன் சாதாரண குழந்தை இல்லை. அவனுடைய அறையில் அமர்ந்து பென்சிலை மென்று கொண்டிருப்பான்," என்று தன்னுடைய தம்பி குறித்துக் கூறுகிறார். அவர்கள் மிகவும் ஒற்றுமையாக இருந்தனர். தனக்கு ஆட்டிசம் குறைபாடு இருப்பதாக பில் கேட்ஸ் நம்பவது குறித்து அறிந்தபோது, ''அது எனக்கு ஆச்சர்யம் அளிக்கவில்லை'' என்று கூறுகிறார் மனநல ஆலோசகரான லிபி. டொனால்ட் டிரம்ப் ஆவணங்கள் இல்லாத புலம்பெயர்ந்தோரை எங்கு அடைத்து வைக்க திட்டமிட்டுள்ளார்?2 பிப்ரவரி 2025 அமெரிக்கா: வெடித்துச் சிதறிய விமான ஆம்புலன்ஸ், குழந்தை நோயாளியுடன் சென்றபோது நடந்த விபத்து1 பிப்ரவரி 2025 டிரம்ப்பை சந்தித்தேன் பட மூலாதாரம்,MAXINE COLLINS/BBC படக்குறிப்பு, ஆட்டிசம் குறித்து முறையாக நோயறியும் பரிசோதனையில் ஈடுபடவில்லை என்றும் அதற்கான திட்டம் ஏதும் இல்லை என்றும் கூறுகிறார் பில் கேட்ஸ் ஆட்டிசம் குறித்து முறையாக நோயறியும் பரிசோதனையில் ஈடுபடவில்லை என்றும் அதற்கான திட்டம் ஏதும் இல்லை என்றும் கூறுகிறார் பில் கேட்ஸ். "என்னுடைய குறைபாடுகள் எனக்கு ஒரு பிரச்னையாக இருந்ததைவிட எனது வாழ்க்கைக்கான நேர்மறையான பண்புகள் எனக்கு அதிக பயன் அளித்தன," என்று கூறுகிறார் பில் கேட்ஸ். "நரம்பியல் பன்முகத்தன்மை (neurodiversity) என்பது சிலிகான் பள்ளத்தாக்கில் அதிகமாக பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டுவிட்டது. ஏனெனில், மிகவும் சிறு வயதில் ஆழமாகக் கற்றுக் கொள்வது கடினமான சில விஷயங்களைப் புரிந்துகொள்ள உதவும்," என்கிறார் அவர். ஈலோன் மஸ்கும் ஆட்டிசம் குறைபாடான அஸ்பெர்கெர் குறைப்பாட்டைக் (Asperger's syndrome) கொண்டிருப்பதாகத் தெரிவித்தார். டெஸ்லா, எக்ஸ் மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் உரிமையாளரான அவர் டிரம்பின் மிகப்பெரிய ஆதரவாளர். அவர் மட்டுமின்றி சிலிகான் பள்ளத்தாக்கில் இருந்து மெட்டாவின் மார்க் சக்கர்பெர்க், அமேசானின் ஜெஃப் பெசோஸ் போன்றோர் வரை, டிரம்பின் பதவியேற்பு விழாவில் பங்கேற்றனர். சுய லாபத்திற்காக அவர்கள் இப்படிச் செய்திருக்கலாம் என நீங்கள் கருதலாம், இருப்பினும் தானும் அதிபரை அணுகியதாகக் கூறுகிறார் பில்கேட்ஸ். டிசம்பர் 27ஆம் தேதியன்று மூன்று மணிநேரம் பேசியதாகத் தெரிவித்தார். "ஏனென்றால் உலக சுகாதாரம் தொடர்பாகவும், நாம் எப்படி ஏழை நாடுகளுக்கு உதவ முடியும் என்பது தொடர்பாகப் பல்வேறு முடிவுகளை அவர் எடுக்கிறார். அதில் தான் தற்போது என்னுடைய முழுமையான கவனமும் இருக்கிறது," என்று தெரிவித்தார் கேட்ஸ். வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் உடனான டிரம்பின் நட்பு இந்த ஆட்சியில் தொடருமா? சவால்கள் என்ன?31 ஜனவரி 2025 டீப்சீக் செயலி என்பது என்ன? இது சாட்ஜிபிடி-க்கு சவால் விடுவது எப்படி?31 ஜனவரி 2025 பட மூலாதாரம்,LAKESIDE SCHOOL படக்குறிப்பு, லேக்சைட் பள்ளியில் மாணவனாக பில் கேட்ஸ் பில்கேட்ஸ் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் இருந்து வரவில்லை. அவருடைய அப்பா ஒரு வழக்கறிஞர். பணம் ஒரு பிரச்னையாக இல்லை. ஆனால் தன்னுடைய மகனை தனியார் பள்ளிக்குப் படிக்க அனுப்புவது அன்று சவாலாக இருந்தது. அவர்கள் அப்படிச் செய்யவில்லை என்றால் இன்று நாம் யாரும் பில் கேட்ஸ் பற்றிக் கேட்டிருக்க இயலாது. பள்ளியில் டெலிடைப் இயந்திரம் மூலம் முதல்முறையாக ஆரம்பக்கால மெய்ன்ஃபிரேம் கணினிக்கான அணுகல் கேட்ஸுக்கு கிடைத்தது. ஆசிரியர்களால் அதைப் பற்றி அறிந்துகொள்ள இயலவில்லை. ஆனால் நான்கு மாணவர்கள் இரவும் பகலுமாக அதில் வேலை செய்து வந்தனர். "வேறு யாராலும் அணுகவே முடியாத காலத்தில் நாங்கள் கணினியை நன்றாகப் பயன்படுத்த ஆரம்பித்திருந்தோம்," என்கிறார் அவர். அந்த அனுபவத்திற்குப் பிறகு, சில ஆண்டுகளில் அந்த நண்பர்களில் ஒருவரான பால் ஆலெனுடன் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தை கேட்ஸ் நிறுவினார். கேட்ஸின் மற்றொரு நெருங்கிய நண்பரான கென்ட் இவான்ஸ் அவருடைய 17 வயதில் விபத்தில் சிக்கி உயிரிழந்தார். லேக்சைட் பள்ளியில் நாங்கள் நடந்து செல்லும்போது அங்கே ஒரு தேவாலயத்தை தாண்டிச் சென்றோம். அங்கேதான் கென்ட்டின் இறுதிச் சடங்கு நடைபெற்றது. அப்போது படியில் நின்று அழுததை நினைவு கூர்ந்தார் பில் கேட்ஸ். அந்த நான்கு பேருக்கும் மிகப்பெரிய கனவு இருந்தது. அவர்கள் கணினியைப் பயன்படுத்தாத காலத்தில், பலரின் சுயசரிதை புத்தகங்களைப் புரட்டிக் கொண்டிருந்தனர். அதில் மக்களை வெற்றியாளர்களாக மாற்றியது எது என்பதை அறிந்துகொள்ள முயற்சி செய்தனர். தற்போது கேட்ஸ் அவருடைய சுயசரிதையை எழுதிவிட்டார். அவரின் கருத்து, ''நீங்கள் தற்போது யாராக இருக்கின்றீர்களோ, ஆரம்பக் காலத்தில் இருந்தே அவர் உங்களுக்குள் இருந்திருக்கிறார்.'' - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/czj31n28gm1o
  23. 23 FEB, 2025 | 08:52 PM (செ.சுபதர்ஷனி) நரம்பியல் சத்திர சிகிச்சை முதுகலைப் பட்டப்படிப்பை தொடர எதிர்பார்த்துள்ள இளம் மருத்துவர்களை ஊக்குவிக்க வேண்டியதன் அவசியம் தொடர்பில் சுகாதார அமைச்சு கவனம் செலுத்தி உள்ளது. ஆகையால் வைத்தியர்கள் பட்டப்படிப்பைப் பூர்த்தி செய்வதற்கு தேவையான ஆதரவையும், அனைத்து வளங்களையும் சுகாதார அமைச்சு தொடர்ச்சியாக வழங்க எதிர்பார்த்துள்ளதாக சுகாதார மற்றும் வெகுசன ஊடக துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ உறுதியளித்துள்ளார். கொழும்பு நவலோகா வைத்தியசாலையில் அண்மையில் நடைபெற்ற நரம்பியல் சத்திர சிகிச்சை வைத்திய நிபுணர்கள் சங்கத்தின் வருடாந்த கல்வி அமர்வு மாநாட்டில் கலந்துக் கொண்டிருந்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், நரம்பியல் சத்திர சிகிச்சை முதுகலைப் பட்டப் டிப்பை தொடர எதிர்பார்த்துள்ள இளம் மருத்துவர்களை ஊக்குவிக்க வேண்டியதன் அவசியம் தொடர்பில் சுகாதார அமைச்சு தற்போது கவனம் செலுத்தியுள்ளது. ஆகையால் வைத்தியர்கள் பட்டப்படிப்பைப் பூர்த்தி செய்வதற்கு தேவையான ஆதரவையும், அனைத்து வளங்களையும் சுகாதார அமைச்சு தொடர்ச்சியாக வழங்க எதிர்பார்த்துள்ளது. இந்நாட்டு மக்களுக்கு தரமான மற்றும் உரிய சிகிச்சை சேவைகளை வழங்கி வரும் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்கள் அர்ப்பணிப்பு பாராட்டத்தக்க விடயமாகும். அரச மற்றும் தனியார் என்னும் இரு தரப்பையும் சேர்ந்த நரம்பியல் நோய்கள் சார்ந்த 27 வைத்திய நிபுணர்கள் தற்போது நாட்டில் உள்ளனர். வரும் காலங்களில் நரம்பியல் அறுவை சிகிச்சை துறையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை ஏற்படுத்துவோம். பொதுமக்களுக்கு உயர்தரமான நரம்பியல் அறுவை சிகிச்சை சேவைகளை வழங்க அவசியமான எதிர்கால திட்டம் ஒழுங்கமைக்கப்பட உள்ளது. தற்போது நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வுகளை வழங்க சுகாதார அமைச்சு உரிய நடவடிக்கைகளை எடுக்க தயாராக உள்ளது. நரம்பியல் அறுவை சிகிச்சை சேவைகளின் எதிர்கால முன்னேற்றத்திற்கு தானும் சுகாதார அமைச்சும் உறுதி பூண்டுள்ளோம். இந்த ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் சுகாதாரத் துறையின் அபிசவிருத்திக்காக பொருளமாவான தொகை ஒதுக்கீடு செய்யப்பட்யுடுள்ளது. நரம்பியல் சத்திர சிகிச்சை வைத்திய நிபுணர்கள் சங்கம், இலங்கையின் நரம்பியல் துறையின் தரத்தை வலுப்படுத்த முன்னின்று உழைக்கும் ஓர் நிறுவனமாகும். இதுபோன்ற வருடாந்த கல்வி அமர்வு மாநாடுகள் சர்வதேச நரம்பியல் நிபுணர்களிடையேயான ஒத்துழைப்பையும் தோழமையையும் ஊக்குவிப்பதுடண், அறிவுப் பரிமாற்றத்தையும் எளிதாக்குகின்றன என்றார். https://www.virakesari.lk/article/207464
  24. Pakistan 241 India (40/50 ov, T:242) 223/4 India need 19 runs in 60 balls.Stats view Current RR: 5.57 • Required RR: 1.90 • Last 5 ov (RR): 34/2 (6.80) Win Probability:IND 99.84% • PAK 0.16%

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.