Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. விமலின் சத்தியாக்கிரக போராட்டம்: நீதிமன்றின் உத்தரவு Jan 12, 2026 - 03:54 PM தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச உள்ளிட்ட சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் குழுவொன்று, இசுருபாய கல்வி அமைச்சுக்கு முன்பாக இன்று (12) காலை ஆரம்பித்த தொடர் சத்தியாக்கிரக போராட்டம் தொடர்பில் நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடுவலை நீதவான் நீதிமன்றத்தினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வீதியை மறிக்காத வகையிலும், உயர்தரப் பரீட்சைகள் இடம்பெற்று வரும் நிலையில் ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்தக் கூடாதெனவும் குறித்த நீதிமன்ற உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://adaderanatamil.lk/news/cmkb0n6j503tco29nt0my6oly
  2. கரூர் சம்பவம் குறித்த டெல்லியில் விஜயிடம் சிபிஐ விசாரணை - என்ன நிலவரம்? பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு,சென்னையில் இருந்து விஜய் கிளம்பியபோது 36 நிமிடங்களுக்கு முன்னர் கரூர் கூட்ட நெரிசல் மரணம் தொடர்பான வழக்கின் விசாரணைக்காக டெல்லி சிபிஐ அலுவலகத்தில் தவெக தலைவர் விஜய் ஆஜராகியுள்ளார். விசாரணைக்காக விஜய் தனி விமானத்தில் டெல்லி வந்தடைந்தார். அவரிடம் காலை சுமார் 11.30 மணி முதல் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மதியம் 3 மணியைத் தாண்டி தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. கூட்டத்துக்குத் தாமதமாக வருகை தந்த குற்றச்சாட்டு, கூட்ட மேலாண்மை, மேலும் கரூர் நிகழ்வுடன் தொடர்புடைய அமைப்புசார்ந்த பொறுப்புகள் ஆகியவை தொடர்பாக இந்த விசாரணையின்போது சிபிஐ கவனம் செலுத்துவதாக ஏ.என்.ஐ செய்தி முகமை கூறியுள்ளது. பட மூலாதாரம்,Getty Images தவெக நிர்வாகிகளிடம் ஏற்கெனவே விசாரணை இந்த வழக்கில் ஏற்கனவே அந்தக் கட்சியின் முக்கியப் பிரமுகர்களான ஆனந்த், நிர்மல் குமார், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட நிர்வாகிகளிடம் டெல்லியில் கடந்த மாதம் விசாரணை நடத்தப்பட்டது. கரூரில் பிரசாரத்திற்குப் பயன்படுத்தப்பட்ட வாகனத்தை, கரூருக்கு வரவழைத்து ஆய்வும் நடத்தப்பட்டது. அந்த வாகனத்தின் ஓட்டுநரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. இந்த வழக்கில் சி.பி.ஐ. பதிவுசெய்துள்ள முதல் தகவல் அறிக்கையில் விஜய்யின் பெயர் இல்லை. இருந்தபோதும் அவரிடமும் விசாரணை நடத்த சி.பி.ஐ. முடிவுசெய்தது. அதன்படி ஜனவரி 12ஆம் தேதி டெல்லியில் ஆஜராகும்படி அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. பட மூலாதாரம்,ANI மேல்முறையீடு கரூர் கூட்ட நெரிசலை விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்த சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து தவெக சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. தமிழ்நாடு காவல்துறை அதிகாரிகளை கொண்டு சிறப்பு விசாரணைக் குழுவை அமைக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதை இந்த மனு எதிர்த்தது. உச்சநீதிமன்றத்தின் உத்தரவு என்ன? பட மூலாதாரம்,Getty Images மேல்முறையீட்டை விசாரித்த உச்சநீதிமன்றம் கரூரில் விஜய் பரப்புரை கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது குறித்து சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட்டது. சிபிஐ விசாரணையை கண்காணிக்க முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் மேற்பார்வைக் குழுவையும் உச்ச நீதிமன்றம் அமைத்துள்ளது. சிபிஐ விசாரணையை இந்தக் குழு கண்காணிக்கும். சிபிஐக்கு முறையான வழிகாட்டுதல்களை வழங்கவும், சிபிஐ சேகரித்த ஆதாரங்களை மறுபரிசீலனை செய்யவும் அதற்கு சுதந்திரம் உள்ளது. விசாரணையின் முன்னேற்றம் குறித்து சிபிஐ அதிகாரிகள் மாதாந்திர அறிக்கைகளை இந்த மேற்பார்வைக் குழுவிடம் சமர்ப்பிப்பார்கள். கரூரில் நடந்தது என்ன? தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் ஒவ்வொரு வாரம் சனிக்கிழமையும் மாவட்ட வாரியாக பரப்புரை மேற்கொண்டு வந்தார். அந்த வகையில், கடந்த செப்டம்பர் 27-ஆம் தேதி சனிக்கிழமை கரூர் வேலுசாமிபுரத்தில் விஜய் பரப்புரை மேற்கொண்ட போது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அதில் 11 குழந்தைகள் உள்பட 41 பேர் உயிரிழந்தனர். இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு நியமித்த ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையம் விசாரித்தது. மேலும், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் அஸ்ரா கார்க் தலைமையிலான சிறப்பு புலனாய்வுக் குழுவும் விசாரித்தது. இந்தநிலையில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் தற்போது சிபிஐ விசாரித்து வருகிறது. https://www.bbc.com/tamil/articles/cwy13pl0d91o
  3. சர்வதேச ரி20 கிரிக்கெட்டில் குறைந்த இன்னிங்ஸ்களில் 150 விக்கெட்களைப் பூர்த்தி செய்து ஹசரங்க சாதனை Published By: Vishnu 12 Jan, 2026 | 02:33 AM (ரங்கிரி தம்புள்ளை அரங்கிலிருந்து நெவில் அன்தனி) சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டிகளில் மிகக் குறைந்த போட்டிகளில் 150 விக்கெட்களைப் பூர்த்தி செய்த வீரர் என்ற சாதனையை இலங்கை சுழல்பந்துவீச்சாளர் வனிந்து ஹசரங்க நிலைநாட்டியுள்ளார். பாகிஸ்தானுக்கு எதிராக ரங்கிரி தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (11) நடைபெற்ற மூன்றாவதும் கடைசியுமான சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் 3ஆவது விக்கெட்டை வீழ்த்தியபோது வனிந்து ஹசரங்க இந்த அரிய மைல்கல் சாதனையை நிலைநாட்டினார். தனது 92ஆவது போட்டியில் 90ஆவது இன்னிங்ஸிலேயே 150 விக்கெட்களை அவர் பூர்த்தி செய்தார். இதன் மூலம் மிக வேகமாக அதாவது குறைந்த இன்னிங்ஸ்களில் இந்த சாதனையை நிலைநாட்டியவர் என்ற பெருமையை பெற்றுள்ளார். பாகிஸ்தானின் அறிமுக வீரர் கவாஜா நவேயின் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலமே சர்வதேச ரி20 போட்டிகளில் வனிந்து ஹசரங்க 150ஆவது விக்கெட்டைக் கைப்பற்றினார். பாகிஸ்தானுடனான கடைசி ரி20 போட்டியில் 35 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களை வீழ்த்திய வனிந்து ஹசரங்க, இதுவரை 90 இன்னிங்ஸ்களில் 151 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். https://www.virakesari.lk/article/235789
  4. ‘Rebuilding Sri Lanka’ தேசிய வேலைத்திட்டம் நாளை ஆரம்பம் 12 Jan, 2026 | 03:29 PM நாட்டை மீண்டும் கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்தை திறம்பட வழிநடத்துவதற்காக செயல்படுத்தப்பட்டு வரும் ‘Rebuilding Sri Lanka’ தேசிய வேலைத்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு, ஜனவரி 13 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் கொழும்பு, பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப வளாக லோட்டஸ் அரங்கில் நடைபெற உள்ளது. உயிரிழப்புகள் , தனியார் மற்றும் அரச சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதம் உட்பட இலங்கையின் அனைத்துப் பிரதேசங்களையும் பாதித்த டித்வா சூறாவளிஅனர்த்தத்திற்குப் பின்னரான புனர்வாழ்வு மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்காக உயர் மட்ட, நன்கு ஒருங்கிணைந்த தேசிய மீட்பு பொறிமுறையின் விரைவான மற்றும் அவசரத் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் ‘Rebuilding Sri Lanka’ வேலைத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. நாட்டின் மீள்கட்டமைப்புத் திட்டத்திற்கு தற்போது மூன்று மூலோபாய அணுகுமுறைகளின் கீழ் நிதியளிக்கப்படுகிறது. அதன்போது, முக்கியத்துவத்தின் அடிப்படையில் மீள் ஒழுங்கமைப்பு (Re-purposing) செய்முறையின் கீழ் தற்போது செயல்படுத்தப்படும் அபிவிருத்தித் திட்டங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட திட்டங்களின் நோக்கங்களை மாற்றி செயற்படுத்தல், மறு ஒதுக்கீட்டின் (Re-allocating) கீழ் நிதி முகாமைத்துவச் சட்டத்தின் விதிகளின் அடிப்படையில் வரவுசெலவுத்திட்ட ஒதுக்கீடுகளுக்கு மேலதிகமான தொகையை ஒதுக்குதல் என்பன மேற்கொள்ளப்படுகின்றன. அதன்படி, 2026 ஆம் ஆண்டிற்காக 500 பில்லியன் ரூபா குறைநிரப்புப் பிரேரணை முன்வைப்பு மற்றும் ‘Rebuilding Sri Lanka’ நிதியத்தின் மூலம் உள்நாட்டு, வெளிநாட்டு, அரச மற்றும் தனியார் நன்கொடையாளர்களின் ஆதரவு பெறப்படும். இந்த செயற்பாடுகளை முன்னெடுத்துச் சென்று ‘Rebuilding Sri Lanka’ திட்டத்தின் மூலோபாய தலைமைத்துவம், ஒருங்கிணைப்பு, நிறுவன அணுகுமுறை மற்றும் மேற்பார்வை ஆகியவற்றிற்கு பிரதமர் ஹரிணி அமரசூரிய தலைமையில், அமைச்சர்கள் மற்றும் அரச அதிகாரிகள் உட்பட 25 உறுப்பினர்களைக் கொண்ட ஜனாதிபதி செயலணியை ஜனாதிபதி அண்மையில் நிறுவினார். இதன் மூலம் அடிப்படைத் தேவைகள், சுகாதாரம் மற்றும் சுகாதாரப் பாதுகாப்பை மீண்டும் நிறுவுதல், அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளை மீண்டும் கட்டியெழுப்புதல், வாழ்வாதாரங்கள் மற்றும் சொத்துக்களை போதுமான அளவு அதிகரித்தல், உள்நாட்டு பொருளாதாரத்தை மீட்டெடுத்தல், டிஜிட்டல் தரவு கட்டமைப்புகள் மற்றும் தீர்மானங்களை எடுப்பதற்கு ஆதரவளிக்கும் பொறிமுறைகளை நிறுவுதல், தொடர்பாடல் மற்றும் பங்குதாரர் உறவுகளை மேம்படுத்துதல் ஆகிய மீள்கட்டமைப்பு நடவடிக்கைகளின் ஒட்டுமொத்த வழிகாட்டல், மூலோபாய முடிவெடுத்தல், அமைச்சுகளுக்கு இடையேயான பிரச்சினைகளைத் தீர்த்தல், முக்கிய நிதியளித்தல் மற்றும் மீட்பு மற்றும் மீள்கட்டமைப்பில் முடிவெடுத்தல்களுக்கு வழிகாட்டல் என்பன மேற்கொள்ளப்படும். மேலும், பிரதான குழுவின் முடிவுகளை செயல்படுத்தல், மேற்பார்வை செய்தல் மற்றும் முன்னேற்றத்தைக் கண்காணிக்க, தொடர்புடைய துறைசார் அமைச்சரின் தலைமையில் பின்வரும் உப குழுக்களும் நிறுவப்பட உள்ளன. அதன்படி, 1. இயற்கை அனர்த்தத்தினால் ஏற்பட்ட பௌதீக, பொருளாதார மற்றும் சமூக தாக்கங்கள் குறித்த தரவுகளைச் சேகரித்தல், பகுப்பாய்வு செய்தல் மற்றும் மதிப்பீடு செய்வதற்கான, அனர்த்தத்தின் பின்னரான மதிப்பீட்டுக் குழு. 2. போக்குவரத்து, மின்சாரம், நீர், நீர்ப்பாசனம், சுகாதாரம், கல்வி மற்றும் தொலைத்தொடர்பு உள்ளிட்ட பாதிக்கப்பட்ட உட்கட்டமைப்பு வசதிகளைப் புனரமைத்தல் மற்றும் மறுசீரமைத்தல் ஆகியவற்றின் போது வளங்களை ஒருங்கிணைத்தல் மற்றும் தரநிலைகளை உறுதிப்படுத்துவதற்கான பொது உட்கட்டமைப்பு வசதிகளை மீட்டெடுப்பதற்கான குழு. 3. மீளமைப்புத் திட்டத்தின் அடிப்படையில் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்காக சேதமடைந்த வீடுகளைப் புனரமைத்தல் அல்லது புதிய வீடுகளை நிர்மாணிப்பதற்கான பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கான வீட்டு நிர்மாண மீளமைப்பு குழு. 4. வாழ்வாதாரங்கள் மற்றும் வர்த்தகங்களை விரைவாக ஸ்திரப்படுத்துவதற்கு ஆதரவு வழங்குதல், பிரதான விநியோகச் சங்கிலிகளை மீண்டும் கட்டியெழுப்புதல், நிதிச் சேவைகளுக்கான அணுகலை மேம்படுத்துதல் மற்றும் பொருளாதார வாய்ப்புகளை விருத்தி செய்வதற்கான உள்ளூர் பொருளாதாரம் மற்றும் வாழ்வாதாரங்களை மீட்டெடுப்பதற்கான குழு. 5. கல்வி, சுகாதாரம், நீர், சுகாதார பாதுகாப்பு மற்றும் நலன்புரி உதவிகள் உள்ளிட்ட அத்தியாவசிய சமூக சேவைகளை மீட்டெடுப்பதை ஒருங்கிணைப்பதற்கான சமூக உட்கட்டமைப்பு வசதிகளை மீட்டெடுப்பது தொடர்பான குழு. 6. நிதி திரட்டுதல், வரவு செலவுத் திட்டமிடல், நன்கொடையாளர்களை ஒருங்கிணைத்தல் மற்றும் ‘Rebuilding Sri Lanka’ நிதியத்தை அரசாங்கத்தின் நிதிப் பாதுகாப்புக் கொள்கைக் கட்டமைப்புக்குள் வெளிப்படைத்தன்மையுடன் பயன்படுத்துவதற்காக நிதி மற்றும் நிதியுதவிக் குழு. 7. அனர்த்த காலத்திற்குப் பின்னரான புனர்வாழ்வு மற்றும் மீளமைப்புத் தேவைகளை முன்னுரிமை அடிப்படையில் தீர்மானித்தல், மீளமைப்புத் திட்ட உத்திகளை வழிநடத்துதல் மற்றும் நவீன தொழில்நுட்பத்துடனான தகவல் கட்டமைப்புகளை நிறுவுவதற்கான தரவு மற்றும் தகவல் கட்டமைப்புகள் தொடர்பான குழு. 8. மறுசீரமைப்பு மற்றும் மீளமைப்புத் திட்டங்கள் குறித்த மக்கள் தொடர்பாடல், விழிப்புணர்வு மற்றும் பங்குதாரர் தொடர்புகளை ஒருங்கிணைப்பதற்கான மக்கள் தொடர்பாடல் குழு. https://www.virakesari.lk/article/235838
  5. இலங்கை - சீன வௌிவிவகார அமைச்சர்கள் சந்திப்பு Jan 12, 2026 - 01:06 PM சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யீ (Wang Yi) இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தை இன்று (12) முற்பகல் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். டித்வா புயலுக்கு பின்னர் இலங்கையை மீண்டும் கட்டியெழுப்புவது குறித்து ஆராய்வதும், சீன அரசாங்கத்தினால் வழங்கப்படும் உதவிகள் குறித்து அறிவிப்பதும் இந்த சந்திப்பின் பிரதான நோக்கமாக அமைந்திருந்தது. தென்னாப்பிரிக்காவுக்கான விஜயத்தை முடித்துக்கொண்டு மீண்டும் சீனா செல்லும் வழியில், சீன வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட அந்த நாட்டு வெளிவிவகார அமைச்சின் 17 உயர் மட்ட அதிகாரிகள் குழுவினர் இன்று அதிகாலை இலங்கை வந்தனர். எவ்வாறாயினும், குறித்த குழுவினர் தமது விஜயத்தை நிறைவு செய்து இன்று முற்பகல் 10.30 மணியளவில் மீண்டும் சீனா நோக்கிப் புறப்பட்டுச் சென்றமை குறிப்பிடத்தக்கது. https://adaderanatamil.lk/news/cmkaumlq103szo29nut5gik7y
  6. கிரீன்லாந்தைக் 'கைப்பற்ற' டிரம்ப் முன்பு உள்ள வாய்ப்புகள் என்ன? பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,கிரீன்லாந்து மிகப்பெரிய நிலப்பரப்பாக இருந்தாலும், அங்கு மக்கள்தொகை மிகக் குறைவு. இதன் காரணமாக, இது சாத்தியமில்லை என நிபுணர்கள் நம்பினாலும் ஒரு ராணுவ நடவடிக்கையை மிக விரைவாக மேற்கொள்ள முடியும். கட்டுரை தகவல் பெர்ன்ட் டெபுஸ்மேன் ஜூனியர், நிக் பீக் & கெய்லா எப்ஸ்டீன் 11 ஜனவரி 2026 டொனால்ட் டிரம்ப் கிரீன்லாந்தைக் கைப்பற்ற விரும்புகிறார். மேலும் ராணுவ பலத்தைப் பயன்படுத்துவது உட்பட அனைத்து வழிகளும் பரிசீலனையில் உள்ளதாக வெள்ளை மாளிகை உறுதிப்படுத்தியுள்ளது. பொருளாதார மற்றும் அரசியல் ரீதியான பல்வேறு வழிகளில் ராணுவ நடவடிக்கையும் ஒன்று என்றாலும், ஒரு நேட்டோ உறுப்பு நாடு மற்றொரு நாட்டின் மீது நடத்தும் தாக்குதலாக இது அமையும் என்பதால், இது நேட்டோ கூட்டமைப்புக்கு ஒரு மிக மோசமான கனவாகவும், ஒருவேளை அந்த அமைப்பின் இருப்புக்கே ஆபத்தாகவும் முடியலாம். கிரீன்லாந்து அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக்கு மிக முக்கியமானது என்று டிரம்ப் பலமுறை கூறியுள்ளார். எவ்வித ஆதாரமும் இன்றி, "அங்கு எல்லா இடங்களிலும் ரஷ்ய மற்றும் சீனக் கப்பல்கள் நிறைந்துள்ளன" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்க, பிரித்தானிய மற்றும் டென்மார்க் நிபுணர்களின் கருத்துக்களுடன், அதிபர் பரிசீலிக்கும் பல்வேறு வழிகளையும், அவற்றுக்கான சாத்தியமான காரணங்களையும் இங்கே தொகுத்துள்ளோம். ராணுவ நடவடிக்கை கிரீன்லாந்தைக் கைப்பற்ற வெகு விரைவான ஒரு தாக்குதலை ஒப்பீட்டளவில் எளிதாகச் செய்ய முடியும், ஆனால் அதன் விளைவுகள் மிகப்பெரியதாக இருக்கும் என்று பாதுகாப்பு ஆய்வாளர்கள் கூறுகின்றனர். நிலவியல் ரீதியாகப் மிகப்பெரியதாக இருந்தாலும், கிரீன்லாந்தின் மக்கள்தொகை சுமார் 58,000 மட்டுமே. இதில் மூன்றில் ஒரு பங்கினர் தலைநகரான நூக்கில் வசிக்கின்றனர். மற்றவர்கள் பெரும்பாலும் மேற்கு கடற்கரைப் பகுதிகளில் வாழ்கின்றனர். இந்தத் தன்னாட்சிப் பகுதிக்கு எனத் தனி ராணுவம் கிடையாது, அதன் பாதுகாப்புக்கு டென்மார்க் தான் பொறுப்பு. ஆனால், இவ்வளவு பெரிய பரப்பளவைப் பாதுகாக்க டென்மார்க்கிடம் அங்கு குறைவான விமான மற்றும் கடற்படை வசதிகளே உள்ளன. கிரீன்லாந்தின் பெரும்பகுதி, நாய் ஸ்லெட்ஜ்களை (பனிச்சறுக்கில் நாய்களால் இழுத்துச் செல்லப்படும் ஊர்தி) முதன்மையாகப் பயன்படுத்தும் 'சிரியஸ் பேட்ரோல்' (Sirius) என்ற டென்மார்க் சிறப்புப் படைப் பிரிவினரால் மட்டுமே கண்காணிக்கப்படுகிறது. இருப்பினும், கடந்த ஆண்டில் கிரீன்லாந்து உட்பட ஆர்க்டிக் மற்றும் வட அட்லாண்டிக் பிராந்தியங்களில் டென்மார்க் தனது பாதுகாப்புச் செலவுகளைக் கணிசமாக அதிகரித்துள்ளது. பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,டொனால்ட் டிரம்ப் அதன் பரந்த அளவு, சிறிய மக்கள்தொகை மற்றும் ராணுவப் பற்றாக்குறை ஆகியவை அமெரிக்காவுக்கு அதை ஒரு சுலபமான இலக்காக மாற்றக்கூடும். ஏற்கெனவே கிரீன்லாந்தின் வடமேற்கு முனையில் உள்ள பிடுஃபிக் தளத்தில் 100-க்கும் மேற்பட்ட அமெரிக்க ராணுவத்தினர் நிரந்தரமாகப் பணியில் உள்ளனர். தத்துவார்த்த ரீதியாக, இந்தத் தளம் எதிர்கால நடவடிக்கைகளுக்கான தளவாட மையமாகச் செயல்படக்கூடும். இரண்டாம் உலகப் போரின் போது, நாஜிக்கள் டென்மார்க்கைக் கைப்பற்றிய பிறகு, ராணுவ மற்றும் வானொலி நிலையங்களை அமைக்க அமெரிக்கப் படைகள் இந்தத் தீவில் நிலைநிறுத்தப்பட்டதில் இருந்து இந்தத் தளம் பயன்பாட்டில் உள்ளது. ரிஸ்க் இன்டெலிஜென்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாகியும், டென்மார்க் பாதுகாப்பு நிபுணருமான ஹான்ஸ் டிட்டோ ஹான்சன், கிரீன்லாந்தை கைப்பற்றுவதற்கான நடவடிக்கையை அமெரிக்கா எப்படி மேற்கொள்ளக்கூடும் என்பதை விளக்கினார். அலாஸ்காவைத் தளமாகக் கொண்ட 11-வது வான்வழிப் பிரிவு இதில் முக்கியப் பங்கு வகிக்கும். பாராசூட் அல்லது ஹெலிகாப்டர் மூலம் தாக்குதல் நடத்தும் திறன் கொண்ட இரண்டு ஆர்க்டிக் படைப்பிரிவுகள் இதில் ஈடுபடும். எந்தத் தாக்குதலிலும் அது "முக்கியத் திறனாக" இருக்கும். மேலும், இதற்கு அமெரிக்க விமானப்படை மற்றும் கடற்படை ஆதரவு அளிக்கும் என்று ஹான்சன் குறிப்பிட்டார். இந்தக் கருத்தை சிபிலைன் நிறுவனத்தின் தலைவரும், பிரிட்டிஷ் ராணுவ ரிசர்வ் அதிகாரியுமான ஜஸ்டின் கிரம்ப் உறுதிப்படுத்தினார். "அமெரிக்காவிடம் அளவிட முடியாத அளவிலான கடற்படை பலம் உள்ளது. மேலும், பெருமளவு படையினரை ஒரே நேரத்தில் இடமாற்றம் செய்யும் திறனும் அதற்கு உள்ளது. ஒரே முறையில், மக்கள்தொகையில் சிலருக்கு ஒருவர் என்ற அளவுக்கு போதுமான படையினரை எளிதாகக் கொண்டு செல்ல முடியும்," என்றும் அவர் கூறினார். மேலும், இந்த நடவடிக்கை மிகவும் கொடூரமானதாகத் தோன்றினாலும், பெரிய எதிர்ப்பு ஏதும் இருக்காது என்பதால் பெரியளவு பாதிப்பு இல்லாத ஒரு நடவடிக்கையாகவே இது முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார். இருப்பினும், அமெரிக்காவில் உள்ள பல முன்னாள் அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு ஆய்வாளர்கள், அமெரிக்க-ஐரோப்பிய கூட்டணிகளில் இது ஏற்படுத்தும் தாக்கம் காரணமாக ராணுவ நடவடிக்கை என்பது சாத்தியமற்றது என்று கூறுகின்றனர். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,டிரம்பின் முந்தைய அச்சுறுத்தல்களுக்கு எதிராக கடந்தாண்டு மார்ச் மாதம் கிரீன்லாந்தில் நடைபெற்ற போராட்டம் முன்னாள் கடற்படை வீரரும், சிஐஏ அதிகாரியும், துணை பாதுகாப்பு செயலாளருமான மிக் முல்ராய் கூறுகையில், "இது சர்வதேச சட்டங்களுக்கு முற்றிலும் எதிரானது. அவர்கள் அமெரிக்காவுக்கு அச்சுறுத்தல் கிடையாது, மாறாக அவர்கள் ஒப்பந்த ரீதியான நமது கூட்டாளிகள்," என்றார். ஒருவேளை அமெரிக்க அரசு ராணுவ வழியைப் பின்பற்றுவதை நோக்கி நகரத் தொடங்கினால், நாடாளுமன்ற உறுப்பினர்களிடமிருந்து (காங்கிரஸ்) கடும் எதிர்ப்பு கிளம்பும் என்று முல்ராய் கருதுகிறார். காரணம், நாடாளுமனற்ற உறுப்பினர்களின் ஒப்புதல் இன்றி அதிபர் போர் தொடுப்பதைக் கட்டுப்படுத்தும் 'போர் அதிகாரச் சட்டத்தின்' (War powers act) மூலம் இதைத் தடுக்க முடியும் என்று அவர் குறிப்பிட்டார். மேலும், "நேட்டோ கூட்டணியை அழிப்பதற்கு காங்கிரஸில் எந்த ஆதரவும் கிடைக்கும் என்று நான் நினைக்கவில்லை," என்றும் அவர் தெரிவித்தார். கிரீன்லாந்தை வாங்குதல் அமெரிக்காவிடம் பெரும் செல்வம் இருக்கலாம், ஆனால் கிரீன்லாந்து விற்பனைக்கு அல்ல என்பதில் கிரின்லாந்து மற்றும் டென்மார்க் ஆகிய இரு தரப்பும் உறுதியாக உள்ளன. பிபிசியின் அமெரிக்கச் செய்தி கூட்டாளியான சிபிஎஸ், ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் இந்த விவகாரத்தை அறிந்த ஒரு ஆதாரத்தை மேற்கோள் காட்டி ஒரு செய்தியை வெளியிட்டுள்ளது. அதன்படி, வெள்ளை மாளிகையின் நிலைப்பாட்டிலிருந்து சற்று மாறுபட்டு, கிரீன்லாந்தை விலைக்கு வாங்குவதே இந்த நிர்வாகத்தின் விருப்பமான தேர்வு என்று வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் தெரிவித்துள்ளார். ஆனால், ஒருவேளை கிரீன்லாந்து தன்னை விற்க விரும்பினாலும், அத்தகைய பரிவர்த்தனை மிகவும் சிக்கலானது. இதற்கான எந்தவொரு நிதியும் அமெரிக்க நாடாளுமன்றத்தால் ஒதுக்கப்பட வேண்டும். ஒரு ஒப்பந்தத்தின் மூலம் கிரீன்லாந்தை கையகப்படுத்துவதற்கு செனட் சபையில் மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு தேவைப்படும். இதைத் திரட்டுவது மிகவும் கடினம் என நிபுணர்கள் கூறுகின்றனர். மேலும், இந்த ஒப்பந்தத்திற்கு ஐரோப்பிய ஒன்றியமும் ஒப்புதல் அளிக்க வேண்டியிருக்கும். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,கிரீன்லாந்தை சேர்ந்த பலரும் டென்மார்க்கிலிருந்து சுதந்திரம் பெறுவதை விரும்புகிறார்கள் என்று கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன, ஆனால் அவர்களில் சிலர் மட்டுமே அமெரிக்காவின் ஒரு பகுதியாக மாற விரும்புகிறார்கள் கிரீன்லாந்து அல்லது காங்கிரஸை ஈடுபடுத்தாமல் டிரம்ப் ஒருதலைப்பட்சமாக ஒரு ஒப்பந்தத்தை மேற்கொள்ள முயலலாம் என்றாலும், அது நடக்க வாய்ப்பில்லை என்று நிபுணர்கள் கருதுகின்றனர். கொலம்பியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சர்வதேச சட்ட நிபுணர் பேராசிரியர் மோனிகா ஹகிமி கூறுகையில், டென்மார்க், அமெரிக்கா மற்றும் கிரீன்லாந்து ஆகியவை இணைந்து, அந்தப் பிரதேசத்தை மாற்றுவதற்கான விதிமுறைகளில் ஒப்பந்தம் செய்வதற்கான "ஒரு சூழ்நிலை உருவாகலாம் என்று கற்பனை செய்ய முடியும்" என்று தெரிவித்தார். "ஆனால் சர்வதேச சட்டத்திற்கு முழுமையாக இணங்க வேண்டுமானால், அத்தகைய ஒப்பந்தத்தில் கிரீன்லாந்து மக்களின் சுயநிர்ணய உரிமைக்காக அவர்களின் பங்களிப்பும் இருக்க வேண்டும்," என்று அவர் குறிப்பிட்டார். இந்தத் தீவை வாங்குவதற்கு எவ்வளவு செலவாகும் என்பது குறித்து இன்னும் தெளிவாக தெரியவில்லை. இது அமெரிக்காவுக்கு முன்னுரிமை அளிக்கும் விதமான "அமெரிக்கா ஃபர்ஸ்ட்" என்ற கொள்கையை முன்னிறுத்தி பிரசாரம் செய்த டிரம்புக்குச் சிக்கலை ஏற்படுத்தலாம். பனி மூடிய ஒரு தீவுக்காக பில்லியன் கணக்கான அல்லது டிரில்லியன் கணக்கான அமெரிக்க வரி செலுத்துவோரின் பணம் செலவழிக்கப்படுவதை டிரம்பின் ஆதரவாளர்கள் விரும்பாமல் போகலாம். இருப்பினும், தீவை விலைக்கு வாங்குவதில் தோல்வி அடைந்தால், அது டிரம்புக்கு ராணுவ வழியை ஈர்க்கக்கூடியதாக மாற்றக்கூடும் என்று ஜஸ்டின் கிரம்ப் கருதுகிறார். குறிப்பாக வெனிசுவேலாவில் நிக்கோலஸ் மதுரோவைக் கைது செய்ய சமீபத்தில் நடத்தப்பட்ட வெற்றிகரமான ராணுவ நடவடிக்கையால் டிரம்ப் நிர்வாகம் உற்சாகமடைந்துள்ளது. "'அப்படியென்றால், நாங்கள் இதை நேரடியாகக் கைப்பற்றிவிடுவோம்' என்று அவர் சொல்வார்," என்று டிரம்பைப் பற்றி கிரம்ப் கூறினார். வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ கூறுகையில், "கிரீன்லாந்தை எப்படிக் கையகப்படுத்தலாம் என்று ஆராய்ந்த முதல் அமெரிக்க அதிபர் டிரம்ப் அல்ல" என்று குறிப்பிட்டுள்ளார். 1946-ஆம் ஆண்டு டென்மார்க்குக்கு 100 மில்லியன் டாலர் தங்கத்தை வழங்க முன்வந்து கிரீன்லாந்தை வாங்க முயன்ற அதிபர் ஹாரி ட்ரூமனை அவர் உதாரணமாகக் காட்டினார். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ கிரீன்லாந்து மக்களை வெல்வதற்கான பிரசாரம் கிரீன்லாந்தில் பெரும்பான்மையான மக்கள் டென்மார்க்கிலிருந்து சுதந்திரம் பெற விரும்புகிறார்கள் என்று கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. ஆனால், அவர்கள் அமெரிக்காவின் ஒரு பகுதியாக மாற விரும்பவில்லை என்பதையும் கருத்துக் கணிப்புகள் சுட்டிக்காட்டுகின்றன. ஆயினும், குறுகிய கால நிதிச் சலுகைகள் அல்லது வருங்கால பொருளாதார நன்மைகளை முன்வைத்து, கிரீன்லாந்து மக்களின் ஆதரவைப் பெற அமெரிக்கா தனது முயற்சிகளைத் தீவிரப்படுத்தக்கூடும். ஏற்கெனவே, அமெரிக்க உளவு அமைப்புகள் கிரீன்லாந்தின் சுதந்திர இயக்கத்தைக் தீவிரமாகக் கண்காணித்து வருவதாகவும், அமெரிக்க நிர்வாகத்தின் இலக்குகளுக்கு ஆதரவாகச் செயல்படக்கூடிய நபர்களைக் கண்டறிய முயற்சிப்பதாகவும் அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வாஷிங்டன் டிசியில் உள்ள அட்லாண்டிக் கவுன்சிலின் நிலவியல் உத்தி சார் நிபுணரும், பாதுகாப்புத் துறையின் முன்னாள் கொள்கை ஆலோசகருமான இம்ரான் பயோனி, பிபிசியிடம் பேசுகையில், ராணுவ நடவடிக்கையை விட ஒரு "செல்வாக்கு செலுத்தும் பிரசாரம்" நடைபெறவே அதிக வாய்ப்புள்ளது என்றார். இந்தப் பிரசாரம் கிரீன்லாந்தை சுதந்திரத்தை நோக்கி நகர்த்த உதவும். இதுகுறித்து தொடர்ந்து பேசிய அவர், "அதன் பிறகு, கிரீன்லாந்து சுதந்திரத்தை அறிவித்தவுடன், அமெரிக்க அரசு ஒரு கூட்டாளியாக மாற முடியும்" என்றும் "ராணுவ நடவடிக்கைக்கான செலவு மிக அதிகம்" என்றும் விளக்கினார். இத்தகைய கூட்ணி ஒப்பந்தங்களுக்கு முன்னுதாரணங்கள் இல்லாமலும் இல்லை. உதாரணமாக, பசிபிக் நாடுகளான பலாவ் , மைக்ரோனேஷியா மற்றும் மார்ஷல் தீவுகள் ஆகியவற்றுடன் அமெரிக்கா இதேபோன்ற ஒப்பந்தங்களைச் செய்துள்ளது. இவை சுதந்திர நாடுகள் என்றாலும், அமெரிக்காவுக்கு அங்கு பாதுகாப்பு உரிமைகளை வழங்குகின்றன. இதற்குப் பதிலாக, இந்த மூன்று நாடுகளின் குடிமக்களும் அமெரிக்காவில் வசிக்கவும் பணிபுரியவும் வாய்ப்பு வழங்கப்படுகிறது. ஆனால், இது டிரம்புக்குத் திருப்தி அளிக்காமல் போகலாம். ஏனெனில், தற்போதைய ஒப்பந்தங்களின் கீழ் எத்தனை வீரர்களை வேண்டுமானாலும் கிரீன்லாந்துக்கு அனுப்பும் அதிகாரம் அவருக்கு ஏற்கெனவே உள்ளது. மேலும், இத்தகைய ஒப்பந்தங்கள் ஆர்க்டிக் பனிப்பாறைகளுக்கு அடியில் புதைந்துள்ள கிரீன்லாந்தின் பரந்த கனிம வளங்கள் மீதான உரிமையை அமெரிக்காவுக்கு வழங்காது. டென்மார்க் ஆய்வாளர் ஹான்சன் கூறுகையில், ராணுவ நடவடிக்கையைத் தவிர்த்து கிரீன்லாந்தை "கைப்பற்றும்" எந்த முயற்சியும், அந்த யோசனைக்கு கிரீன்லாந்து மக்களே எதிராக இருக்கும் வரையில், வெற்றியடையாது என்று கூறுகிறார். தற்போது, அந்தத் தீவில் உள்ள எந்தவொரு அரசியல் கட்சியும் அமெரிக்காவின் ஒரு பகுதியாக மாறுவதற்குப் பிரசாரம் செய்யவில்லை. இதுகுறித்துப் பேசிய ஹான்சன், "கிரீன்லாந்து மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பினராக மாறுவதற்கான வாய்ப்புகள் அதிகம்" என்றார். "மேலும், தற்போதைய அமெரிக்க நிர்வாகத்திற்கு இன்னும் மூன்று ஆண்டுகள் மட்டுமே உள்ளன, ஆனால் கிரீன்லாந்து மக்களின் எதிர்காலத் திட்டம் 1,000 ஆண்டுகளைக் கொண்டிருக்கலாம்," என்று சுட்டிக்காட்டினார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c17ze7npwqko
  7. இலங்கை சுங்க திணைக்களத்திற்கு உயர் தொழில்நுட்ப ஸ்கேனர்கள்! Jan 12, 2026 - 01:24 PM அவுஸ்திரேலிய எல்லைப் படையினரால் இலங்கை சுங்க திணைக்களத்திற்கு, 02 உயர் தொழில்நுட்ப ஸ்கேனர்களை வழங்கப்பட்டுள்ளது. காங்கேசன்துறை துறைமுகத்தில் இன்று (12) காலை குறித்த நிகழ்வு இடம்பெற்றது. அதன்போது, அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் மேத்யூ டக்வொர்த், இலங்கை சுங்க இயக்குநர் ஜெனரல் சீவலி அருகோடவிடம் ஸ்கேனர்கள் அதிகாரப்பூர்வமாக ஒப்படைத்தார். நிகழ்வில், சுங்க இயக்குநர் ஜெனரல் பால் எட்வர்ட்ஸ், ஆஸ்திரேலிய தூதரக அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் மற்றும் காங்கேசன்துறை துறைமுகத்தில் பயன்படுத்துவதற்காக அவுஸ்திரேலிய எல்லைப் படையினரால் இலங்கை சுங்கத்திடம் குறித்த 02 ஸ்கேனர்களும் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. -யாழ். நிருபர் பிரதீபன்- https://adaderanatamil.lk/news/cmkavaedk03t0o29nog46u10t
  8. இந்தியாவின் PSLV விண்வெளி திட்டம் தோல்வி Jan 12, 2026 - 01:29 PM ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று (திங்கட்கிழமை) விண்ணில் பாய தயாராக இருந்த பி.எஸ்.எல்.வி. சி-62 ரொக்கெட்டுக்கான 24 மணி நேர கவுண்ட்டவுன் நேற்று காலை 10.17 மணிக்கு தொடங்கியது. இந்த நிலையில், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று காலை 10.17 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் முதல் ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. -சி 62 ரொக்கெட் விண்ணில் ஏவ தயாரானது இது புத்தாண்டில் இஸ்ரோ ஏவும் முதல் ரொக்கெட்டாகும். இதற்கான 24 மணி நேர கவுண்ட்டவுன் நேற்று தொடங்கியது. இந்த ரொக்கெட் மூலம், மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டி.ஆர்.டி.ஓ.) உருவாக்கிய இ.ஓ.எஸ். என்-1 என்ற செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்டது. முதன்மை செயற்கைக்கோளான இதனுடன் ஸ்பெயின் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட 'கெஸ்ட்ரல் இனிஷியல் டெமான்ஸ்ட்ரேட்டர்' என்ற ஒரு சிறிய சோதனை கருவியும் பொருத்தப்பட்டுள்ளது. இதனுடன் இந்தியா, மொரீஷியஸ், லக்சம்பர்க், ஐக்கிய அரபு இராச்சியம் சிங்கப்பூர், ஐரோப்பா மற்றும் அமெரிக்காவை சேர்ந்த ஆராய்ச்சி நிறுவனங்களின் 17 வணிக செயற்கைக்கோள்களும் விண்ணில் ஏவப்பட்டது. இந்த நிலையில், பி.எஸ்.எல்.வி சி 62 ரொக்கெட் தனது இலக்கை அடையவில்லை என இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார். மேலும், இது தொடர்பாக இஸ்ரோ வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “பிஎஸ்எல்வி-சி62 திட்டத்தின் 3வது நிலையின் முடிவில் ஒரு தொழிநுட்ப கோளாறு ஏற்பட்டது. இது குறித்து விரிவான ஆய்வு தொடங்கப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது. https://adaderanatamil.lk/news/cmkavgkdj03t2o29n87poqw7m
  9. டிட்வா புயல் நிவாரணப் பணிகளுக்காக 100 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்தது HNB 12 Jan, 2026 | 02:41 PM டிட்வா புயலினால் ஏற்பட்ட அழிவுகளிலிருந்து நாட்டை மீட்டியெடுக்கும் முயற்சிக்கு வலுசேர்க்கும் வகையில், Rebuild Sri Lanka நிதியத்திற்காக HNB PLC நிறுவனம் 100 மில்லியன் ரூபாயை பங்களிப்பாக வழங்கியுள்ளது. HNB வங்கியின் சார்பாக, எமது சக நாட்டு மக்கள் அனைவருக்கும், குறிப்பாக டிட்வா புயலினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டவர்களுக்கு எமது ஒற்றுமையையும் ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். உள்நாட்டில் உருவான ஒரு நிறுவனம் என்ற வகையில், நாம் சேவை செய்யும் சமூகங்களுடன் எமக்கு ஆழமான பிணைப்பு உள்ளது. எமது வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்களில் பலர் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இந்தப் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இந்த இக்கட்டான காலப்பகுதியில் அவர்களுக்குப் பக்கபலமாக இருப்பதற்கும், அவர்கள் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவதற்கான முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதற்கும் நாம் உறுதியுடன் இருக்கின்றோம். “Rebuild Sri Lanka நிதியத்திற்கு HNB வழங்கியுள்ள பங்களிப்பானது, இந்த கூட்டுப் பணிக்கு எமது அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் ஒரு அடையாளமாகும். இது நீண்ட மற்றும் சவாலான ஒரு செயன்முறை என்பதை நாம் உணர்ந்துள்ளோம். இருப்பினும், உடனடியான மற்றும் நீண்டகால மீட்பு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க நாம் தயாராகவும் உறுதியுடனும் இருக்கின்றோம்,” என HNB முகாமைத்துவ பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான தமித் பல்லேவத்த தெரிவித்துள்ளார். நிதியத்திற்கான நேரடி நிதி உதவியைத் தவிர, வங்கியின் பரந்த மற்றும் ஒருங்கிணைந்த மீட்பு நடவடிக்கைகளின் முதற்கட்டமாக, நாடு தழுவிய ரீதியிலான பேரிடர் நிவாரணத் திட்டமொன்றையும் HNB ஆரம்பித்துள்ளது. இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக, இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு ஆதரவளிப்பதற்காக 2,500 இற்கும் மேற்பட்ட அத்தியாவசிய நிவாரண மற்றும் ஊட்டச்சத்து பொதிகளை வங்கி வழங்கியது. கண்டி, கம்பஹா, கடுவலை மற்றும் ஹங்வெல்ல ஆகிய பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்தப் பொருட்கள் முறையாகவும், வெளிப்படைத்தன்மையுடனும், சமமாகவும் விநியோகிக்கப்படுவதை உறுதி செய்வதற்காக, அவை இலங்கை இராணுவத்திடம் உத்தியோகபூர்வமாக ஒப்படைக்கப்பட்டன. அதேவேளை, பாதிக்கப்பட்ட ஊழியர்களின் தனிப்பட்ட மீட்சிக்கு வலுசேர்க்கும் வகையில் அவர்களுக்கு எனத் தனிப்பயனாக்கப்பட்ட நிவாரணப் பொதிகளும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. பாதிக்கப்பட்ட குடும்பங்களின் அன்றாட வாழ்க்கை நிலையை வழமைக்குக் கொண்டுவர உதவும் வகையில், கவனமாகத் தெரிவுசெய்யப்பட்ட ஊட்டச்சத்து பொருட்கள், தனிநபர் பராமரிப்புப் பொருட்கள் மற்றும் அத்தியாவசிய வீட்டுத் தேவைகள் இந்த நிவாரணப் பொதிகளில் உள்ளடக்கப்பட்டுள்ளன. இதற்கு இணையாக, பேரிடரினால் பாதிக்கப்பட்ட அனைத்து HNB ஊழியர்களுக்கும் விசேட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. https://www.virakesari.lk/article/235829
  10. பிரதமருக்கு எதிரான நடவடிக்கையில் இலங்கை தமிழ் அரசுச் கட்சி பங்கெடுக்கவில்லை - சிவஞானம் ஸ்ரீதரன் 12 Jan, 2026 | 01:52 PM ஹரிணி அமரசூரிய ஒரு பெண் பிரதமர் என்பதாலும், அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு இதுவரை எவ்வித முறையான ஆதாரங்களும் சமர்ப்பிக்கப்படவில்லை என்பதாலும் இலங்கை தமிழ் அரசுச் கட்சி, பிரதமருக்கு எதிரான நடவடிக்கையில் பங்கெடுக்கவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் தெரிவித்தார். இலங்கையின் தற்போதைய கல்விச் சீர்திருத்தங்கள் தொடர்பாகவும் கல்வி அமைச்சரும் பிரதமருமான ஹரிணி அமரசூரியவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பாகவும் சிவஞானம் ஸ்ரீதரன் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், அண்மையில் பாராளுமன்ற எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர் பிரதமருக்கு எதிராகக் கையெழுத்துக்களைத் திரட்டி, அவர் பிரதமர் மற்றும் கல்வி அமைச்சர் பதவிகளிலிருந்து விலக வேண்டும் என நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஒன்றைக் கொண்டுவர முயற்சிக்கின்றனர். இருப்பினும், ஹரிணி அமரசூரிய ஒரு பெண் பிரதமர் என்பதாலும், அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு இதுவரை எவ்வித முறையான ஆதாரங்களும் சமர்ப்பிக்கப்படவில்லை என்பதாலும், இலங்கை தமிழ் அரசுச் கட்சி இந்த நடவடிக்கையில் பங்கெடுக்கவில்லை என சிறிதரன் தெரிவித்துள்ளார். இந்த நம்பிக்கையில்லா தீர்மானமானது அரசியல் உள்நோக்கம் கொண்ட ஒரு பழிவாங்கும் நடவடிக்கை எனத் தாம் கருதுவதாகவும், இவ்வாறான அவதூறான செயற்பாடுகளை ஏற்க முடியாது என்றும் அவர் கூறினார். கடந்த பாராளுமன்ற அமர்வுகளின்போதும், கட்சித் தலைமையுடனும் இது குறித்து விரிவாக ஆராயப்பட்டதாகவும், முறையான ஆதாரங்கள் இன்றி பிரதமருக்கு எதிராக வாக்களிப்பதில்லை எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் ஸ்ரீதரன் மேலும் சுட்டிக்காட்டினார். குறிப்பாக, இந்த புதிய கல்வி முறையானது நாட்டுக்கு மிக முக்கியமானது என்றும், இலங்கையில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள ஆரம்பக் கல்வியின் தரத்தை மேம்படுத்துவது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார். இராணுவமயப்படுத்தப்பட்ட அல்லது போதிய அறிவற்றவர்களால் கல்வித்துறை கையாளப்படுவதைக் காட்டிலும், முறையான கல்விச் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதில் அவர் உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளார். மேலும், கடந்த வியாழக்கிழமை பிரதமரைச் சந்தித்தபோது தமிழர்களின் பூர்வீக வரலாறு மற்றும் கல்வித் தேவைகள் குறித்து விரிவாகக் கலந்துரையாடியதாக ஸ்ரீதரன் தெரிவித்தார். குளக்கோட்டன், சங்கிலியன், பண்டாரவன்னியன் மற்றும் அரசகேசரி போன்ற தமிழ் மன்னர்கள் இந்த நிலத்தை ஆண்ட வரலாறுகள் திட்டமிட்ட முறையில் பாடப்புத்தகங்களிலிருந்து மறைக்கப்பட்டுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார். 70களுக்குப் பின்னர் வந்த அரசாங்கங்கள் எவ்வித திட்டமுமின்றி தமிழ் மக்களின் வரலாற்றைச் சிதைத்துள்ள நிலையில், அவற்றை மீண்டும் பாடப்புத்தகங்களில் உள்வாங்குவது குறித்து பிரதமரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான முழுமையான அறிக்கை ஒன்றை இன்னும் இரண்டு வாரங்களில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் அவர் கூறினார். தமிழ் மக்களின் கல்வித் தேவைகள், ஆசிரியர் பற்றாக்குறை மற்றும் பாடசாலைக் கட்டமைப்பு வசதிகள் எனப் பல பிரச்சினைகள் இருக்கும் நிலையில், பிரதமருக்கு எதிரான தனிப்பட்ட அல்லது அரசியல் ரீதியான தாக்குதல்களில் இலங்கை தமிழ் அரசுச் கட்சி பங்காளியாகாது என அவர் தெளிவுபடுத்தினார். அரசாங்கத்தின் மீது தமக்கு விமர்சனங்கள் இருந்தாலும், ஒரு பொறுப்புள்ள இனத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சி என்ற ரீதியிலும், தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்கும் பாரம்பரியத்தைக் கொண்ட கட்சி என்ற ரீதியிலும், இந்த விவகாரத்தில் மிகவும் நிதானமாகச் செயற்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/235826
  11. மதுரோ கைது மற்றும் 'ரஷ்ய' கப்பல் சிறைபிடிப்புக்கு பதிலடி தராமல் புதின் மௌனம் காப்பது ஏன்? பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,வெனிசுவேலா தலைவர் நிக்கோலஸ் மதுரோவை அமெரிக்கா சிறைபிடித்துள்ளது, ஆனால் ரஷ்யா மௌனம் காக்கிறது கட்டுரை தகவல் பிரையன் வின்ட்சர் மற்றும் டாரியா மொசோலோவா பிபிசி மானிட்டரிங் 7 மணி நேரங்களுக்கு முன்னர் வெளிநாட்டு மண்ணில் அமெரிக்கா இவ்வளவு ஆக்ரோஷமாக தனது அதிகாரத்தை காட்டும் நிகழ்வுகள் இதற்கு முன்பெல்லாம் நடந்திருந்தால் அதற்கு ரஷ்யாவிடமிருந்து உடனடியான மற்றும் கடுமையான பதிலடி கிடைத்திருக்கும். ஆனால் 2026-ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து நிலைமை வேறாக இருக்கிறது. வெனிசுவேலா தலைவர் நிக்கோலஸ் மதுரோவைச் சிறைபிடித்ததை அமெரிக்கா கொண்டாடியது ரஷ்யக் கொடி ஏந்திய எண்ணெய் கப்பலை அமெரிக்கா கைப்பற்றியது கிரீன்லாந்தைத் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கான மிரட்டல்களையும் அமெரிக்கா மீண்டும் விடுத்தது இவற்றிற்கெல்லாம், ரஷ்யா மற்றும் ரஷ்ய அரசுடன் தொடர்புடைய விமர்சகர்கள் ஆச்சரியமளிக்கும் வகையில் மௌனத்தைக் கடைபிடிக்கின்றனர். மேற்கத்திய நாடுகளின் ஆதரவுடன் நடக்கும் ஆட்சி மாற்றங்கள் மற்றும் வளங்களைக் கைப்பற்றுதல் ஆகியவற்றை நீண்டகாலமாக எதிர்த்து வந்த ஒரு அரசாங்கத்திடம் தென்படும் இந்தக் கட்டுப்பாடு ஒரு பெரிய மாற்றத்தைக் குறிக்கிறது. அமெரிக்காவின் செல்வாக்கைச் சமநிலைப்படுத்துவதற்காக வெனிசுவேலா மற்றும் ஆர்க்டிக் போன்ற பகுதிகளில் ரஷ்யா பெருமளவில் முதலீடு செய்துள்ளது. அதிபர் விளாதிமிர் புதின் இந்த நிகழ்வுகள் குறித்து இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை. இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து, அவர் ஜனவரி 6-ஆம் தேதி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியில் மட்டுமே பொதுவெளியில் தோன்றினார். அவரது செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் மற்றும் ரஷ்ய அரசு தொலைக்காட்சி சேனல்களும் விடுமுறை நாட்களில் இந்த விவகாரத்தில் மௌனம் காத்தன. டொனால்ட் டிரம்பின் சமீபத்திய சர்வதேச நகர்வுகள், யுக்ரேன் விவகாரத்தில் அமெரிக்காவுடன் ரஷ்யா மேற்கொண்டு வரும் நடைமுறை ரீதியான ஆனால் நுட்பமான பேச்சுவார்த்தைகளைச் சேதப்படுத்துவதை ரஷ்யா விரும்பவில்லை என்பதை இந்த மௌனம் காட்டக்கூடும். சிறப்பு ராணுவ நடவடிக்கைகள் பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,வெனிசுவேலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி அமெரிக்கப் பாதுகாப்புப் படையினரால் அழைத்துச் செல்லப்படுகிறார்கள். டொனால்ட் டிரம்ப் 2026-ஆம் ஆண்டைத் தனது பலத்தை வெளிப்படுத்தும் நிகழ்வுகளுடன் தொடங்கினார். வெனிசுவேலா தலைவர் நிக்கோலஸ் மதுரோவைக் கைது செய்யவும், போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டின் பேரில் அவரை நாடு கடத்தி நியூயார்க் அழைத்து வரவும் அவர் உத்தரவிட்டார். இந்த லத்தீன் அமெரிக்க நாடு தற்காலிகமாக அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் அவர் அறிவித்தார். விடுமுறை நாட்களில் ரஷ்ய அரசுத் தொலைக்காட்சியில் நடப்பு நிகழ்வுகள் தொடர்பான நிகழ்ச்சிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டிருந்தாலும், மதுரோ அதிகாரத்தில் இருந்து நீக்கப்பட்டிருப்பது ரஷ்யாவின் நலனுக்கு உகந்தது என்ற கருத்தையே முக்கிய அரசு ஊடகங்களுடன் தொடர்புடைய ஆய்வாளர்கள் முன்வைத்தனர். தமது செல்வாக்குள்ள பகுதிகளில் மேலாதிக்கத்தை நிலைநாட்டுவதன் மூலம், ரஷ்யாவுக்கும் அதையே செய்ய அமெரிக்கா மறைமுகமாக சுதந்திரம் அளித்துள்ளதாகச் சில ஆய்வுகள் வாதிடுகின்றன. கடந்த ஆண்டு டிசம்பரில் வெளியிடப்பட்ட டிரம்ப் நிர்வாகத்தின் புதிய தேசிய பாதுகாப்பு உத்தியின் நடைமுறை உதாரணம் இது என ரஷ்ய ஆதரவு விமர்சகர்கள் விவரித்தனர். 'செல்வாக்கு உள்ள பகுதிகள்' மற்றும் வல்லரசுகளின் சிறப்பு உரிமைகள் ஆகியவற்றை வலியுறுத்தியதற்காக இந்த உத்தி ரஷ்ய அதிகாரிகளால் வெளிப்படையாகப் பாராட்டப்பட்டது. மதுரோவின் கைது குறித்து கருத்து தெரிவித்த கிரெம்ளினுக்கு நெருக்கமான வெளியுறவுக் கொள்கை நிபுணர் ஃபியோடர் லுகியானோவ், அமெரிக்காவின் புதிய பாதுகாப்பு உத்தியைக் குறிப்பிட்டார். "டிரம்ப் கோட்பாடு செல்வாக்கு உள்ள பகுதிகள் மீண்டும் சர்வதேச உறவுகளின் முக்கிய அங்கமாக மாறுவதை உறுதிப்படுத்துகிறது," என்று கொம்மர்சன்ட் வணிகச் செய்தித்தாளிடம் அவர் தெரிவித்தார். ரஷ்ய எம்பி-யும் அரசு தொலைக்காட்சி தொகுப்பாளருமான யெவ்ஜெனி போப்போவ், அமெரிக்காவின் சமீபத்திய நடவடிக்கைகள் உத்தி ரீதியாக ரஷ்யாவிற்கு "அசௌகரியமாக" இருப்பதை ஒப்புக்கொண்டார், ஆனால் அவை நீண்ட கால அடிப்படையில் ரஷ்யாவிற்கு "நன்மை பயக்கும்" என்றும் நம்பிக்கை தெரிவித்தார். "நடப்பவை நமது கைகளை விடுவித்து, வெளிப்புற அழுத்தத்தைக் குறைக்கின்றன. உலக அரங்கில் ஏற்படும் பின்னடைவு என்பது நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டிய ஒரு வாய்ப்பு," என்று போப்போவ் டெலிகிராமில் குறிப்பிட்டிருந்தார். சில ரஷ்ய ஆதரவு விமர்சகர்கள், விருப்பமில்லாவிட்டாலும், அமெரிக்காவின் விரைவான மற்றும் தீர்க்கமான நடவடிக்கைக்குத் தங்களின் மரியாதையை வெளிப்படுத்தினர். ரஷ்யாவும் ஒரு காலத்தில் யுக்ரேனில் இத்தகைய நடவடிக்கையைத்தான் கற்பனை செய்தது, ஆனால் அங்குள்ள நிலைமை முழு அளவிலான போராக மாறியது, அது இப்போது ஐந்தாவது ஆண்டில் உள்ளது. ரஷ்ய அரசு ஊடகமான ரஷ்யா டுடேவின் தலைமை ஆசிரியர் மார்கரிட்டா சிமோனியன், அமெரிக்காவின் நடவடிக்கையைக் கண்டு தனக்கு "பொறாமையாக" இருப்பதாக டெலிகிராமில் தெரிவித்துள்ளார். இந்தச் செய்திகளுக்குப் பின்னால் ஒரு எளிய உண்மையும் உள்ளது: மதுரோவின் கைது ரஷ்யாவுக்கு ஒரு பெரிய அடி. வெனிசுவேலாவில் ரஷ்யா பெருமளவில் முதலீடு ரஷ்யா பல தசாப்தங்களாக வெனிசுவேலாவில் பெருமளவில் முதலீடு செய்துள்ளது. ஆனால் அதன் வளங்களும் கவனமும் யுக்ரேன் போரின் பக்கம் இருப்பதால், இப்பகுதியில் அதன் செல்வாக்கு பலவீனமடைந்துள்ளது. பிபிசி மானிட்டரிங்கிடம் ஜேம்ஸ் மார்ட்டின் ஆயுத பரவல் எதிர்ப்பு ஆய்வு மையத்தின் யுரேசியா திட்ட இயக்குநர் ஹனா நோட்டே கூறுகையில், வெனிசுவேலா விவகாரத்தில் ரஷ்யா கடுமையான விமர்சனத்தைத் தவிர்ப்பது, ரஷ்ய அதிபர் தற்போது டிரம்பைக் கோபப்படுத்த விரும்பவில்லை என்பதைக் காட்டுகிறது. ஏனெனில் அவர் "கையாள வேண்டிய இன்னும் பெரிய பிரச்னைகள் உள்ளன." என்றார். யுக்ரேன் விவகாரத்தில் டிரம்பைத் தனது பக்கம் கொண்டு வருவது அல்லது குறைந்தபட்சம் அவர் முற்றிலும் ரஷ்யாவிற்கு எதிராக மாறுவதைத் தடுப்பதே ரஷ்யாவின் முன்னுரிமை என்று அவர் கூறினார். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,ரஷ்யா பல தசாப்தங்களாக வெனிசுவேலாவில் பெருமளவில் முதலீடு செய்துள்ளது. "கடந்த ஓராண்டில் ரஷ்யா இதில் ஓரளவுக்கு வெற்றி பெற்றுள்ளது, அந்த வெற்றியைத் தக்கவைக்க விரும்புகிறது, ஏனெனில் யுக்ரேன் அதன் முதன்மையான முன்னுரிமை." லுகியானோவ் இந்த உணர்வையே வெளிப்படுத்துகிறார். "வெனிசுவேலா போன்ற இரண்டாம் நிலை விவகாரங்களுக்காக அமெரிக்கா போன்ற "மிக முக்கியமான தரப்புடன்" ரஷ்யா தனது விரிவான உத்தியில் சமரசம் செய்து கொள்ளாது." என்றார். "புதின் டிரம்புடன் விவாதிக்க வேண்டிய மிக முக்கியமான விஷயம் யுக்ரேன்," என்று அவர் கொமர்சன்ட் இதழிடம் கூறினார். வெனிசுவேலாவின் புதிய இடைக்காலத் தலைவர் டெல்சி ரோட்ரிக்ஸின் நியமனத்தை ரஷ்ய வெளியுறவு அமைச்சகம், ஜனவரி 6-ஆம் தேதி வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையின் மூலம் வரவேற்றது. வெளிப்புற அழுத்தங்களுக்கு மத்தியில் நிலைத்தன்மையை நோக்கிய ஒரு படியாக இது விவரிக்கப்பட்டது. அமெரிக்காவை நேரடியாகக் குறிப்பிடாமல், "எந்தவொரு அழிவுகரமான வெளிப்புற தலையீடும் இன்றி தனது சொந்த எதிர்காலத்தைத் தீர்மானிக்கும்" உரிமை வெனிசுவேலாவிற்கு உறுதி செய்யப்பட வேண்டும் என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் கூறியது. ஆழ்கடலில் பெரிய பந்தயங்கள் பட மூலாதாரம்,Reuters படக்குறிப்பு,அமெரிக்கக் கடலோரக் காவல்படை 'மாலினேரா' என்று பெயரிடப்பட்ட கப்பலை பல வாரங்களாகக் கண்காணித்து வந்தது ரஷ்யக் கொடி ஏற்றப்பட்ட எண்ணெய் கப்பலான மலினேராவை அமெரிக்கா கைப்பற்றியதற்கும் ரஷ்யாவின் பதில் ஒப்பீட்டளவில் மட்டுப்படுத்தப்பட்டதாகவே இருந்தது. ரஷ்ய கப்பல் ஊழியர்களைப் பாதுகாப்பாகத் திரும்ப ஒப்படைக்குமாறு ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் கோரியது. இதற்கு டிரம்ப் ஒப்புக் கொண்டுள்ளதாகவும் அமைச்சகம் கூறுகிறது. சர்வதேச கடல்சார் சட்ட மீறல்கள் என்ற பின்னணியிலேயே ரஷ்யா தனது முதன்மையான விமர்சனமாக முன்வைத்தது. சூழலைக் கருத்தில் கொண்டால், அதாவது நடுக்கடலில் ரஷ்யப் பதிவும் உரிமையும் கொண்ட கப்பலில் அமெரிக்கப் படைகள் ஏறியது என்பது மிகப்பெரிய விஷயம். ஆனால் ரஷ்யாவின் எதிர்வினை இன்னும் கடுமையாக இருந்திருக்கலாம். இப்பகுதியில் ரஷ்ய கடற்படைக் கப்பல்கள் இருப்பதாகத் தகவல்கள் வந்தபோதிலும், ரஷ்யா அந்தக் கப்பலைத் திரும்பக் கோரவோ அல்லது அதை மீட்க பலத்தைப் பயன்படுத்துவோம் என்றோ குறிப்பிடவில்லை. அமெரிக்கா அல்லது பிற நாடுகளின் கப்பல்களுக்கு எதிராகப் பழிவாங்கும் நடவடிக்கையையும் ரஷ்யா அறிவிக்கவில்லை. அமெரிக்க ஆக்கிரமிப்பிற்கு எதிராக ரஷ்யா மென்மையான போக்கைக் கடைபிடிப்பதாக கடும்போக்காளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினர் அலெக்ஸி ஜுராவ்லியோவ் இதற்கு ராணுவ ரீதியான பதிலடி கொடுக்க வேண்டும் என்று கோரியதோடு, பதிலடியாக "அமெரிக்கக் கடலோரக் காவல்படையின் இரண்டு படகுகளைத் நீர்மூழ்கி குண்டுகளால் ரஷ்யா மூழ்கடிக்க வேண்டும்." என்றார். ரஷ்ய ஆதரவு டெலிகிராம் வலைப்பதிவான விஷனரி, யாருக்கும் சொந்தமில்லாத சர்வதேச கடல் பகுதியில் கப்பலைக் கைப்பற்றுவது "ரஷ்யா மீதான முழுமையான தாக்குதலாகக்" கருதப்படலாம் என்று தனது வாசகர்களுக்கு நினைவுபடுத்தியது. "கடல் வழித்தடங்களை ராணுவ ரீதியாகத் தடுப்பது என்பது போர் பிரகடனம் செய்வதற்கு தெளிவான ஒரு காரணம்," என்றும் அந்தப் பதிவில் கூறப்பட்டிருந்தது. ஆர்க்டிக் லட்சியங்கள் பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,ஆர்க்டிக் பிராந்தியத்தில் ராணுவ மற்றும் பொருளாதார உள்கட்டமைப்புகளில் ரஷ்யா பெருமளவில் முதலீடு செய்துள்ளது. ஜனவரி 2025-இல், கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், கிரீன்லாந்தில் நடக்கும் முன்னேற்றங்களை ரஷ்யா "தீவிரமாக கவனித்து வருவதாகக்" கூறினார். ஆனால் டென்மார்க்கிற்குச் சொந்தமான இந்த ஆர்க்டிக் பிராந்தியத்தின் மீதான அமெரிக்காவின் உரிமை கோருதலை அமெரிக்காவுக்கும் டென்மார்க்குக்கும் இடையிலான இருதரப்பு விஷயம் என்று அவர் விவரித்தார். ஜனவரி 7-ஆம் தேதி இப்பகுதியைத் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர அமெரிக்கா உத்தேசித்துள்ளதாக டிரம்ப் அறிவித்தார். ஆனால் இது குறித்து ரஷ்யாவிடமிருந்து இதுவரை அதிகாரப்பூர்வமான பதில் ஏதுமில்லை. இதற்கிடையில், கிரீன்லாந்தைக் கட்டுப்படுத்துவதில் டிரம்பின் புதிய பிடிவாதம் குறித்து ரஷ்ய ஆதரவுக் குரல்கள் மகிழ்ச்சியடைந்தன. ஐரோப்பாவின் பலவீனத்திற்கு இது ஒரு அடையாளம் என்றும், யுக்ரேனில் ரஷ்யாவின் நடவடிக்கைகளை நியாயப்படுத்தும் மற்றொரு வாதமாகவும் அவர்கள் இதை முன்வைத்தனர். புதினின் சிறப்புத் தூதர் கிரில் டிமிட்ரிவ் எக்ஸ் தளத்தில், "கிரீன்லாந்து கிடைப்பது கிட்டத்தட்ட உறுதியாகத் தெரிகிறது. ஐரோப்பிய ஒன்றியம் தனது அடிமைத்தனத்தையே தொடர்ந்து செய்யும்: அதாவது 'சூழ்நிலையைக் கண்காணிப்பது' மற்றும் இரட்டை நிலைப்பாடுகளுக்கு உதாரணமாக இருப்பது." "அடுத்தது கனடாவா?" என்றும் அவர் கிண்டலாகக் குறிப்பிட்டிருந்தார். ஜனவரி 6-ஆம் தேதி சிஎன்என் நேர்காணலில் டிரம்பின் மூத்த உதவியாளர் ஸ்டீபன் மில்லர் குறிப்பிட்டது போல, "வலிமை உடையவனுக்கே அதிகாரம்" என்ற அரசியலை நோக்கி உலகம் மாறுவதை ரஷ்யா அங்கீகரிப்பது போலத் தோன்றினாலும், இதில் கிரீன்லாந்து விவகாரத்தில் ரஷ்யா தோல்வியடையும் அபாயமும் உள்ளது. ஆர்க்டிக் பிராந்தியத்தில் ராணுவ மற்றும் பொருளாதார உள்கட்டமைப்புகளில் ரஷ்யா பெருமளவில் முதலீடு செய்துள்ளது. அதிபர் புதின் இங்கே "ரஷ்யாவின் உலகளாவிய தலைமைப் பொறுப்பை வலுப்படுத்துவதாக" உறுதியளித்துள்ளார். 2023-இல் வெளியிடப்பட்ட ரஷ்யாவின் புதிய வெளியுறவுக் கொள்கைக் கருத்தாக்கத்தில், ஆர்க்டிக் பகுதி மாஸ்கோவின் வெளியுறவுக் கொள்கை முன்னுரிமைகளில் இரண்டாவது இடத்தில் இருந்தது. இதற்கு மேலே, யுக்ரேன் உள்ளிட்ட முன்னாள் சோவியத் நாடுகளுடனான உறவுகள் மட்டுமே முன்னுரிமையாக வைக்கப்பட்டிருந்தன. ஜனவரி 12-ஆம் தேதி ரஷ்யாவில் வழக்கமான பணிகள் மீண்டும் தொடங்கும்போது, விடுமுறை நாட்களில் ஏற்பட்டுள்ள புவிசார் அரசியல் கொந்தளிப்புகள் குறித்து அதிபர் புதின் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் தற்போதைக்கு, டிரம்ப் நிர்வாகத்தின் வெளியுறவுக் கொள்கை நகர்வுகள் மாஸ்கோவுடனான பேச்சுவார்த்தைக்கான கதவுகளை மூடுவது போல் தெரியவில்லை. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cx2kv216dy2o
  12. அவுஸ்திரேலிய எல்லைப் படையினரால் இலங்கை சுங்கத்துறைக்கு உயர் தொழில்நுட்ப ஸ்கேனர்கள் வழங்கல் 12 Jan, 2026 | 01:19 PM அவுஸ்திரேலிய எல்லைப் படையினரால் இலங்கை சுங்க திணைக்களத்திற்கு, 02 உயர் தொழில்நுட்ப ஸ்கேனர்களை வழங்கப்பட்டுள்ளது. காங்கேசன்துறை துறைமுகத்தில் திங்கட்கிழமை (12) காலை குறித்த நிகழ்வு இடம்பெற்றது. அதன்போது, அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் மேத்யூ டக்வொர்த், இலங்கை சுங்க இயக்குநர் ஜெனரல் சீவலி அருகோடவிடம் ஸ்கேனர்கள் அதிகாரப்பூர்வமாக ஒப்படைத்தார். நிகழ்வில், சுங்க இயக்குநர் ஜெனரல் பால் எட்வர்ட்ஸ், அவுஸ்திரேலிய தூதரக அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் மற்றும் காங்கேசன்துறை துறைமுகத்தில் பயன்படுத்துவதற்காக அவுஸ்திரேலிய எல்லைப் படையினரால் இலங்கை சுங்கத்திடம் குறித்த 02 ஸ்கேனர்களும் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/235822
  13. இலங்கை வந்தார் சீன வெளியுறவு அமைச்சர் வோங் யீ : நிதி உதவி, முதலீடுகள் குறித்து எதிர்பார்ப்பு 12 Jan, 2026 | 09:49 AM சீன வெளியுறவு அமைச்சர் வோங் யீ தனது ஆபிரிக்கப் பயணத்தை முடித்துக்கொண்டு, திங்கட்கிழமை (12) இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ளார். கடந்த 36 ஆண்டுகளாக சீன வெளியுறவு அமைச்சர்கள் ஆண்டின் முதல் வெளிநாட்டுப் பயணத்தை ஆபிரிக்க நாடுகளுக்கே மேற்கொண்டு வரும் மரபைத் தொடர்ந்து, எத்தியோப்பியா, சோமாலியா, தான்சானியா மற்றும் லெசோதோ ஆகிய நாடுகளுக்கான விஜயங்களை நிறைவு செய்த பின்னரே அவர் கொழும்புக்கு தனது விஜயத்தை மேற்கொண்டுள்ளார். 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்குப் பிறகு வோங் யீ இலங்கைக்கு மேற்கொள்ளும் மிக முக்கியமான விஜயமாக இது கருதப்படுகிறது. குறிப்பாக, ‘டித்வா’ சூறாவளியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையின் மறுசீரமைப்புப் பணிகளுக்காக சீனாவால் விசேட நிதி உதவித் திட்டம் அறிவிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில், சீன ஆய்வுக் கப்பல்கள் இலங்கைக்கு வருவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடைகள் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் நீண்டகால நெருக்கடியாக தொடர்கின்றன. புதிய முதலீட்டுத் திட்டங்களை அறிவிப்பதில் சீனா காட்டி வரும் பின்னடிப்புகளுக்குக் காரணமாக இந்த ஆய்வுக் கப்பல் விவகாரம் பார்க்கப்படுகிறது. வோங் யீயின் விஜயத்தின் போது, இந்த விவகாரம் தொடர்பில் எத்தகைய இணக்கப்பாடுகள் எட்டப்படும் என்பது அரசியல் மற்றும் இராஜதந்திர ரீதியாக பெரும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. அண்மையில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்டக் குழுவினர் மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) தலைமையகத்திற்கு விஜயம் செய்து பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்திருந்தனர். இந்தப் பின்னணியில், சீனாவின் 15 ஆவது ஐந்தாண்டுத் திட்டத்தின் ஒரு பகுதியாக இலங்கைக்கான உதவிகளை உறுதிப்படுத்துவதே வோங் யீயின் விஜயத்தின் பிரதான நோக்கமாகக் கருதப்படுகிறது. அந்தவகையில், சீன வெளியுறவு அமைச்சர் வோங் யீ, இலங்கைக்கு ஒரு நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு 12 ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார். அவருடன் சீன வெளியுறவு அமைச்சின் 17 சிரேஷ்ட அதிகாரிகள் ஒரே விமானத்தில் குழுவாக வந்தனர். அவர்கள் இன்று அதிகாலை 01.05 மணிக்கு சீன நிறுவனமான பெய்ஜிங் ஏர்லைன்ஸின் சிறப்பு விமானத்தில் தென்னாபிரிக்காவின் டேர்பனில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர். இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென் ஹொங், தூதரகத்தின் உயர் அதிகாரிகள் குழுவுடன் மற்றும் இலங்கை வெளியுறவு அமைச்சின் கிழக்கு ஆசியா மற்றும் ஓசியானியா பிரிவின் பணிப்பாளர் ஜெனரல் சாவித்ரி பனபோக்கே ஆகியோர் விமான நிலையத்தில் அவர்களை வரவேற்றனர். சீன வெளியுறவு அமைச்சர் மற்றும் அவரது குழுவினர் இன்று திங்கட்கிழமை (12) மதியம் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து சீனாவின் பெய்ஜிங் நோக்கிப் புறப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/235805
  14. 'வெனிசுவேலா அதிபராக' தன்னைத்தானே அறிவித்த டிரம்ப் பட மூலாதாரம்,ANDREW CABALLERO-REYNOLDS/AFP via Getty Images அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தன்னைத்தானே 'வெனிசுவேலாவின் தற்காலிக அதிபர்' என்று அழைத்துக்கொண்டுள்ளார். டிரம்ப் தனது ட்ரூத் சமூக வலைதளப் பக்கத்தில் தனது புகைப்படத்தைப் பதிவிட்டு, அதன் அருகில் "வெனிசுலாவின் தற்காலிக அதிபர்" என்று பதிவிட்டிருந்தார். பட மூலாதாரம்,@realDonaldTrump ஜனவரி 3-ஆம் தேதி, அமெரிக்கா வெனிசுவேலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவையும் அவரது மனைவி சிலியா ஃபுளோரஸையும் சிறைபிடித்தது. மதுரோ ஆயுத மற்றும் போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டுகளின் பேரில் அமெரிக்காவில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இதற்கிடையில், வெனிசுவேலாவில் முன்னாள் துணை அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் தற்காலிக அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.bbc.com/tamil/live/clyzgnr178jt?post=asset%3Aabdfa51e-8570-4461-baee-a926c4fe51d1#asset:abdfa51e-8570-4461-baee-a926c4fe51d1
  15. இரானில் போராட்டம் தீவிரம்: அரசு நடவடிக்கையில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டதாக தகவல் பட மூலாதாரம்,MAHSA / Middle East Images / AFP via Getty Images கட்டுரை தகவல் ஷயன் சர்தாரிசாதே, ரிச்சர்ட் இர்வின்-பிரௌன் பிபிசி வெரிஃபை 12 ஜனவரி 2026, 03:15 GMT புதுப்பிக்கப்பட்டது 54 நிமிடங்களுக்கு முன்னர் அமெரிக்கா தாக்கினால் பதிலடி கொடுப்போம் என்று இரான் எச்சரித்துள்ளது. இதற்கிடையில், தீவிரமடைந்து வரும் அரசாங்கத்தின் நடவடிக்கைகளில் நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டிருப்பதாக பிபிசி வட்டாரங்களும் ஆர்வலர்களும் தெரிவிக்கின்றனர். "இங்கு நிலைமை மிகவும் மோசமாக உள்ளது," என்று டெஹ்ரானில் இருந்து ஒருவர் ஞாயிற்றுக்கிழமை கூறினார். "எங்கள் நண்பர்கள் பலர் கொல்லப்பட்டுள்ளனர். அவர்கள் துப்பாக்கி குண்டுகளால் சுட்டனர். இது ஒரு போர்க்களம் போல இருக்கிறது, தெருக்கள் முழுவதும் இரத்தம் நிரம்பியுள்ளது. அவர்கள் சடலங்களை லாரிகளில் ஏற்றிச் செல்கிறார்கள்." என்றார் அவர். டெஹ்ரானுக்கு அருகிலுள்ள ஒரு சவக்கிடங்கு வீடியோவில் சுமார் 180 சடலப் பைகளை பிபிசி எண்ணியுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர் செய்தி நிறுவனம், இரான் முழுவதும் 495 போராட்டக்காரர்கள் மற்றும் 48 பாதுகாப்புப் படையினரின் மரணங்களை உறுதிப்படுத்தியுள்ளதாகக் கூறுகிறது. கடந்த இரண்டு வாரங்களாக நீடிக்கும் போராட்டங்கள் எதிரொலியாக மேலும் 10,600 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டதற்காக இரான் மீது தாக்குதல் நடத்தப் போவதாக அமெரிக்கா அச்சுறுத்தியுள்ளது. இரான் "சுதந்திரத்தை நோக்கிப் பார்க்கிறது" என்பதால், அமெரிக்கா "உதவத் தயாராக உள்ளது" என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் சனிக்கிழமை கூறினார். அமெரிக்கா என்ன நடவடிக்கைகளைக் கருத்தில் கொள்கிறது என்பது குறித்து டிரம்ப் விரிவாகக் கூறவில்லை. இரான் மீது இராணுவத் தாக்குதலுக்கான சாத்தியக்கூறுகள் குறித்து அவருக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது என்று பிபிசியின் அமெரிக்க செய்திக் கூட்டாளியான சிபிஎஸ்-ஸிடம் ஒரு அதிகாரி தெரிவித்தார். அரசாங்கத்திற்கு எதிரான இணையவழி ஆதாரங்களை அதிகரிப்பது, இரானிய இராணுவத்திற்கு எதிராக இணைய ஆயுதங்களைப் பயன்படுத்துவது அல்லது மேலும் பொருளாதாரத் தடைகளை விதிப்பது போன்ற பிற அணுகுமுறைகளும் இதில் அடங்கும் என்று அதிகாரிகள் வால் ஸ்ட்ரீட் ஜர்னலிடம் தெரிவித்தனர். அமெரிக்கா தாக்கினால், இஸ்ரேல் மற்றும் பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க இராணுவ மற்றும் கப்பல் போக்குவரத்து மையங்கள் இரண்டும் சட்டபூர்வமான இலக்குகளாக மாறும் என்று இரானிய நாடாளுமன்ற சபாநாயகர் எச்சரித்தார். பட மூலாதாரம்,IRIB/Handout/Anadolu via Getty Images அதிகரித்து வரும் பணவீக்கம் எதிரொலியாக தொடங்கிய இந்தப் போராட்டங்கள், இப்போது இரானின் உச்ச தலைவர் ஆயதுல்லா அலி காமனெயி-யின் மதகுருமார்களின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று கோரும் அளவுக்கு வளர்ந்து நிற்கின்றன. "போராட்டத்தில் ஈடுபடும் எவரும் கடவுளின் எதிரி என்று கருதப்படுவார்கள். இது மரண தண்டனைக்குரிய குற்றம்" என்று இரானின் அட்டர்னி ஜெனரல் கூறினார். அதே நேரத்தில், டிரம்பை "மகிழ்விக்க" முயலும் "ஒரு கும்பல் குண்டர்கள்" என்று ஆர்ப்பாட்டக்காரர்களை காமனெயி வர்ணித்துள்ளார். அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிரான இரானிய தேசியப் போரில் கொல்லப்பட்ட "தியாகிகளுக்காக" மூன்று நாள் துக்கம் அனுசரிப்பதாக இரான் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது. சமீபத்திய நாட்களில் இறந்த அல்லது காயமடைந்த போராட்டக்காரர்களால் பல மருத்துவமனைகளின் ஊழியர்கள் திக்குமுக்காடிப் போயுள்ளதாக பிபிசியிடம் தெரிவித்துள்ளனர். வெள்ளிக்கிழமை இரவு ராஷ்ட் நகரில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு 70 உடல்கள் கொண்டுவரப்பட்டதை பிபிசி பெர்சியன் சேவை உறுதிப்படுத்தியுள்ளது. அதே சமயம், டெஹ்ரானில் உள்ள ஒரு மருத்துவமனையின் சுகாதாரப் பணியாளர் ஒருவர் பிபிசியிடம், "சுமார் 38 பேர் இறந்தனர். அவர்களில் பலர் அவசர சிகிச்சைப் பிரிவு படுக்கைகளுக்கு வந்த உடனேயே உயிரிழந்தனர். இளைஞர்களின் தலைகளிலும், இதயங்களிலும் நேரடியாகச் சுடப்பட்டிருந்தது. பலர் மருத்துவமனைக்கே வந்து சேரவில்லை," என்று கூறினார். பிபிசி மற்றும் பெரும்பாலான பிற சர்வதேச செய்தி நிறுவனங்களால் இரானுக்குள் இருந்து செய்திகளை வெளியிட முடியவில்லை. இரானிய அரசாங்கம் வியாழக்கிழமை முதல் இணைய முடக்கத்தை அமல்படுத்தியுள்ளதால், தகவல்களைப் பெறுவதும் சரிபார்ப்பதும் கடினமாக உள்ளது. பட மூலாதாரம்,Khoshiran / Middle East Images / AFP via Getty Images சில காட்சிகள் வெளியாகியுள்ளன, அதில் டெஹ்ரான் மாகாணத்தின் தடயவியல் கண்டறிதல் மற்றும் ஆய்வக மையத்தில் - அதாவது கஹ்ரிசாக்கில் உள்ள ஒரு சவக்கிடங்கில் வரிசையாக வைக்கப்பட்டிருந்த சடலப் பைகளைக் காட்டும் காணொளியும் அடங்கும். அந்த இடத்திலிருந்து எடுக்கப்பட்ட ஒரு காணொளியில், சுமார் 180 போர்வையால் மூடப்பட்ட அல்லது சுற்றப்பட்ட உடல்கள் காணப்படுகின்றன, அவற்றில் பெரும்பாலானவை திறந்தவெளியில் கிடக்கின்றன. தங்கள் அன்புக்குரியவர்களைத் தேடுவது போல் தோன்றும் மக்களின் கூக்குரல்களும் அழுகுரல்களும் கேட்கின்றன. பிபிசி வெரிஃபை மூலம் சமீபத்தியவை என உறுதிப்படுத்தப்பட்ட பல காணொளிகள், இரானின் இரண்டாவது பெரிய நகரமான மஷ்ஹத்தில் போராட்டக்காரர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்த மோதல்களைக் காட்டுகின்றன. முகமூடி அணிந்த போராட்டக்காரர்கள் குப்பைத் தொட்டிகள் மற்றும் தீக்குவியல்களுக்குப் பின்னால் தஞ்சம் அடைவதைக் காணலாம், தொலைவில் பாதுகாப்புப் படையினர் வரிசையாக நிற்கின்றனர். ஒரு பேருந்து போல் தோன்றும் வாகனம் ஒன்று தீப்பிடித்து எரிந்து கொண்டிருக்கிறது. பல துப்பாக்கிச் சூடு சத்தங்களும், பாத்திரங்களைத் தட்டும் சத்தம் போன்ற ஒலிகளும் கேட்கின்றன. அருகிலுள்ள ஒரு நடை மேம்பாலத்தில் நிற்கும் ஒருவர், பல திசைகளில் பலமுறை துப்பாக்கியால் சுடுவதைப் போல் தெரிகிறது, அப்போது ஓரிருவர் ஒரு வேலிக்குப் பின்னால் தஞ்சம் அடைகின்றனர். டெஹ்ரானில், சனிக்கிழமை இரவு எடுக்கப்பட்ட ஒரு உறுதிப்படுத்தப்பட்ட காணொளியில், கிஷா மாவட்டத்தில் போராட்டக்காரர்கள் தெருக்களைக் கைப்பற்றுவதும், புனாக் சதுக்கத்தில் பாத்திரங்களைத் தட்டும் சத்தமும், ஹெராவி மாவட்டத்தில் ஒரு கூட்டம் பேரணியாகச் சென்று மதகுருமார்களின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று முழக்கமிடுவதும் காணப்படுகிறது. அமெரிக்கா, இஸ்ரேலை சாடும் இரான் பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,இரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் (கோப்புப் படம்) இரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் இந்த அமைதியின்மைக்கு அமெரிக்காவும், இஸ்ரேலுமே காரணம் என்று குற்றம் சாட்டியுள்ளார். "அவர்கள் நாட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் சில நபர்களுக்குப் பயிற்சி அளித்துள்ளனர், வெளிநாட்டிலிருந்து பயங்கரவாதிகளை கொண்டு வந்துள்ளனர், மசூதிகளுக்குத் தீ வைத்துள்ளனர், ராஷ்டில் உள்ள சந்தைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களைத் தாக்கி, சந்தையை எரித்துள்ளனர்," என்று எந்த ஆதாரத்தையும் வெளியிடாமல் அவர் கூறினார். இருப்பினும், பிபிசி பெர்சியன் மற்றும் பிபிசி வெரிஃபை மூலம் உறுதி செய்யப்பட்ட காட்சிகள், இரானின் பாதுகாப்பு அதிகாரிகள் பல பகுதிகளில் போராட்டக்காரர்களின் கூட்டங்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதை உறுதிப்படுத்துகின்றன. அவற்றில் டெஹ்ரான், மேற்கு கெர்மன்ஷா மாகாணம் மற்றும் தெற்கு புஷேர் பகுதி ஆகியவை அடங்கும். கடந்த வார இறுதியில் மேற்கு நகரமான இலாமின் மையத்தில் படமாக்கப்பட்ட பல உறுதிப்படுத்தப்பட்ட காணொளிகள், போராட்டக்காரர்கள் பேரணி நடத்திக் கொண்டிருந்த இமாம் காமனெயி மருத்துவமனையை நோக்கி பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்துவதையும் காட்டுகின்றன. இரானில் இணைய சேவை பெரும்பாலும் உள்நாட்டு இன்ட்ராநெட்டுடன் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது, வெளி உலகத்துடனான இணைப்புகளும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் தற்போதைய போராட்டங்களின் போது, அதிகாரிகள் முதல் முறையாக அதையும் கடுமையாகக் கட்டுப்படுத்தியுள்ளனர். 2022ஆம் ஆண்டில் நடந்த "பெண், வாழ்க்கை, சுதந்திரம்" எழுச்சியின் போது இருந்ததை விட இந்த இணைய முடக்கம் மிகவும் கடுமையானது என்று ஒரு நிபுணர் பிபிசி பெர்சியன் சேவையிடம் தெரிவித்தார். இணைய ஆராய்ச்சியாளரான அலிரேசா மனாஃபி, வெளி உலகத்துடன் இணைவதற்கான ஒரே சாத்தியமான வழி ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் வழியாகத்தான் என்று கூறினார், ஆனால் இதுபோன்ற இணைப்புகளை அரசாங்கத்தால் கண்டறிய முடியும் என்பதால், பயனர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அவர் எச்சரித்தார். 'விரைவில் உங்களுடன் இருப்பேன்' - ஷா மன்னரின் மகன் பட மூலாதாரம்,Norvik Alaverdian/NurPhoto via Getty Images படக்குறிப்பு,இரானிய அரசுக்கு எதிராக ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடைபெற்ற போராட்டத்தில் ரெசா பஹ்லவியின் புகைப்படம். இரானில் போராட்டக்காரர்களால் நாடு திரும்ப வேண்டும் என்று விரும்பப்படுபவரும், அமெரிக்காவில் வசிப்பவருமான இரானின் கடைசி ஷா மன்னரின் நாடு கடத்தப்பட்ட மகனான ரெசா பஹ்லவி, ஞாயிற்றுக்கிழமை சமூக ஊடகப் பதிவு ஒன்றில், டிரம்ப் "உங்கள் விவரிக்க முடியாத வீரத்தை கவனமாகக் கவனித்துள்ளார்" என்று ஆர்ப்பாட்டக்காரர்களிடம் தெரிவித்தார். "உலகம் முழுவதும் உள்ள இரான் மக்கள் உங்கள் குரலை பெருமையுடன் முழங்குகிறார்கள்," என்று குறிப்பிட்டுள்ள அவர், "நான் விரைவில் உங்கள் பக்கம் இருப்பேன் என்பதை நான் அறிவேன்" என்று தெரிவித்துள்ளார். இஸ்லாமியக் குடியரசு "கூலிப்படையினரின் கடுமையான பற்றாக்குறையை" எதிர்கொள்வதாகவும், "பல ஆயுத மற்றும் பாதுகாப்புப் படைகள் தங்கள் பணியிடங்களை விட்டு வெளியேறியுள்ளன அல்லது மக்களை அடக்குவதற்கான உத்தரவுகளுக்குக் கீழ்ப்படிய மறுத்துவிட்டன" என்றும் பஹ்லவி கூறியுள்ளார். அவரது இந்த கூற்றுகளை பிபிசியால் சரிபார்க்க முடியவில்லை. ஞாயிற்றுக்கிழமை மாலை போராட்டங்களைத் தொடருமாறு அவர் மக்களை ஊக்குவித்தார், ஆனால் குழுக்களாக அல்லது கூட்டத்துடன் இருக்குமாறும், "உங்கள் உயிரைப் பணயம் வைக்க வேண்டாம்" என்றும் கேட்டுக்கொண்டார். பிரிட்டனில், சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் லண்டனில் உள்ள இரானிய தூதரகத்தின் பால்கனியில் இருந்து போராட்டக்காரர்கள் இரானியக் கொடியை அகற்றுவது போன்ற காட்சிகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட காணொளிகளில் காணப்படுகின்றன. இந்தச் சம்பவங்களைத் தொடர்ந்து, டெஹ்ரானில் உள்ள பிரிட்டன் தூதரை இரான் வரவழைத்துள்ளதாக இரானிய அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. கூடுதல் தகவல்கள்: சௌரூஷ் பக்ஜாத் மற்றும் ரோஜா அசாடி - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c17zrrl1jzwo
  16. சத்தியாக்கிரகத்தை ஆரம்பித்தார் விமல் Jan 12, 2026 - 10:28 AM முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச இன்று (12) முதல் தொடர்ச்சியான சத்தியாக்கிரக போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். இசுருபாயவில் உள்ள கல்வி அமைச்சுக்கு முன்பாக அவர் இன்று காலை முதல் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார். புதிய கல்வி சீர்த்திருத்தத்தை கைவிட வேண்டும் என்றும், கல்வி அமைச்சர் பிரதமர் ஹரிணி அமரசூரிய பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்தி முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச தொடர்ச்சியான சத்தியாக்கிரக போராட்டத்தை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://adaderanatamil.lk/news/cmkaoztso03soo29npx4xd6w4
  17. நுரைச்சோலையின் மின் பிறப்பாக்கி ஒன்று வழமைக்கு Jan 12, 2026 - 07:55 AM பராமரிப்பு பணிகள் காரணமாக தற்காலிகமாக செயலிழக்கச் செய்யப்பட்டிருந்த நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் மின் பிறப்பாக்கி ஒன்று மீண்டும் வழமைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், அந்த மின் பிறப்பாக்கி மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் இதுவரையில் தேசிய மின் கட்டமைப்பில் இணைக்கப்படவில்லை என்பதுடன், எதிர்வரும் சில தினங்களுக்குள் அதனை தேசிய மின் கட்டமைப்பில் இணைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது. நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்திலுள்ள 3 மின் பிறப்பாக்கிகள் மூலம் தேசிய மின் கட்டமைப்புக்கு 900 மெகாவோட் மின்சாரம் விநியோகிக்கப்படும் நிலையில், தற்போது ஒரு மின் பிறப்பாக்கியின் ஊடாக மாத்திரமே தேசிய மின் கட்டமைப்புக்கு மின்சாரம் வழங்கப்பட்டு வருகின்றது. இதேவேளை, மற்றுமொரு மின் பிறப்பாக்கி இன்னும் செயலிழந்த நிலையிலேயே உள்ளதோடு, அதனை மீண்டும் வழமைக்குக் கொண்டுவருவதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்படுகின்றது. https://adaderanatamil.lk/news/cmkajj25o03sio29nahjma7hd
  18. ஈரான் போராட்டம் தீவிரம்: 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் எனத் தகவல் Published By: Digital Desk 3 12 Jan, 2026 | 10:55 AM ஈரானில் போராட்டம் தீவிரம் அடைந்துள்ள நிலையில் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என மனி உரிமைக்குழு ஒன்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது. ஈரான் நாட்டில் அதிகரித்துள்ள பணவீக்கம், அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி அதிகரிப்பு, பொருளாதார தேக்கநிலை உள்ளிட்டவற்றால் விரக்தி அடைந்துள்ள மக்கள் அரசுக்கு எதிராக தெருக்களில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 28 ஆம் திகதி ஆரம்கபித்த மக்களின் போராட்டம், ஈரானின் 31 மாகாணங்களில் 100 நகரங்களில் 15 நாட்களாக நீடித்து வருகிறது. போராட்டக்காரர்களை அடக்க பாதுகாப்பு படையினரை அரசு இறக்கி விட்டு உள்ளது. இதன்படி போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். வன்முறையை தடுக்கும் நோக்கில், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இணையதள சேவையை அரசு முடக்கி வைத்து உள்ளது. சில அரசு ஊடகங்கள் மட்டுமே செயல்பட அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், ஈரானில் அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அமெரிக்காவை அடிப்படையாக கொண்ட மனித உரிமைகள் அமைப்பு ஒன்று அதிர்ச்சி தகவலை தெரிவித்து உள்ளது. அவர்களில் 8 குழந்தைகளும் அடங்குவார்கள். போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 2,600 பேர் அரசால் கைது செய்யப்பட்டு உள்ளனர். இந்த சூழலில், ஈரானின் அட்டார்னி ஜெனரல் முகமது மோவாஹிதி ஆசாத் அரசு தொலைக்காட்சியில் வெளியிட்டு உள்ள அறிக்கையில், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுபவர்கள், கலகக்காரர்களுக்கு உதவுபவர்கள் அல்லது வன்முறையில் பொருட்களை சூறையாடுபவர்கள் மற்றும் பாதுகாப்பின்மையை ஏற்படுத்துபவர்களுக்கு எதிராக கடுமையான, விரைவான, சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். அந்த குற்றவாளிகள் அனைவருக்கும் ஒரேவித தண்டனைதான் கிடைக்கும். அவர்களுக்கு எந்தவித கருணையும் காட்ட கூடாது என வழக்கறிஞர்களுக்கும் அறிவுறுத்தி உள்ளார். ஈரானின் பதற்ற நிலைக்கு உலக நாடுகளின் தலைவர்கள் வருத்தம் தெரிவித்து உள்ளனர். இந்நிலையில்,வத்திக்கான நகரில் போப் லியோ இறை வணக்க நிகழ்ச்சிக்கு பின்னர் கூடியிருந்த கூட்டத்தினரின் முன் பேசும்போது, ஈரான் மற்றும் சிரியா போன்ற மத்திய கிழக்கு பகுதிகளில் தொடர்ச்சியான பதற்ற நிலையால், மக்கள் பலர் பலியாகி வருகின்றனர். அவர்களுடன் என்னுடைய எண்ணங்கள் உள்ளன. ஒட்டுமொத்த சமூகத்தின் நலனுக்காக பேச்சுவார்த்தை நடைபெறும் என நம்புகிறேன். அதற்காக வேண்டி கொள்கிறேன் என்றார். இதேபோன்று, பின்லாந்து ஜனாதிபதி அலெக்சாண்டர் ஸ்டப் கூறும்போது, வன்முறையை தவிர்க்க வேண்டும் என ஈரானிய அதிகாரிகளை வலியுறுத்தினார். அயர்லாந்து, இஸ்ரேல் நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களும் ஈரான் சூழல் பற்றி கவலை தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/235808
  19. வாகன உரிமை மாற்றத்திற்கும் TIN இலக்கம் கட்டாயம் Jan 12, 2026 - 07:29 AM வாகனங்களின் உரிமையை மாற்றும் போது, வரி செலுத்துவோர் அடையாள இலக்கம் எனப்படும் "TIN இலக்கம்" தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் அறிவித்துள்ளது. இதற்கான சட்ட நடைமுறைகள் கடந்த ஜனவரி மாதம் 5 ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக அதன் ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்க குறிப்பிட்டுள்ளார். இதுவரை காலமும் புதிய வாகனங்களை மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் பதிவு செய்வதற்கு மாத்திரமே TIN இலக்கம் கட்டாயமாக்கப்பட்டிருந்தது. எனினும், இந்த ஆண்டு முதல் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட வாகனங்களின் உரிமையை மாற்றும் போதும் அது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிள்கள், கை உழவு இயந்திரங்கள், டிரக்டர்கள் மற்றும் முச்சக்கர வண்டிகள் தவிர்ந்த ஏனைய அனைத்து மோட்டார் வாகனங்களுக்கும் இது பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வாகனப் பதிவு அல்லது உரிமை மாற்றத்தின் போது, புதிய உரிமையாளரின் தேசிய அடையாள அட்டை இலக்கம் மற்றும் TIN இலக்கம் ஆகியவற்றை மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் தரவு அமைப்பில் உள்ளீடு செய்தல் வேண்டும். இந்தச் சட்டத்தை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே அமுல்படுத்த திட்டமிடப்பட்டிருந்த போதிலும், பல சந்தர்ப்பங்களில் அது ஒத்திவைக்கப்பட்டதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார். https://adaderanatamil.lk/news/cmkailmsc03sho29nug9qsbu1
  20. இலங்கைத் தமிழர்களுக்காக மோடிக்கு கடிதம் அனுப்பிய ஸ்டாலின் Jan 11, 2026 - 07:16 PM இலங்கையில் தற்போது நடைபெற்றுவரும் அரசியலமைப்புச் சீர்திருத்தங்களால் இலங்கைத் தமிழ்ச் சமூகத்திற்கு ஏற்படும் கடுமையான பாதிப்புகளை களைந்திட வேண்டுமென்றும், தமிழ் மக்களின் குறைகளை நிவர்த்தி செய்யும் வகையிலான ஒரு அரசியலமைப்புச் செயல்முறையினைக் கொண்டுவருவதற்கு, இந்திய அரசு இலங்கை அதிகாரிகளுடன் உயர்மட்ட அளவில் தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்றும் கோரி, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில், இலங்கையில் உள்ள தமிழ்ச் சமூகத்தின் நலன் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான ஆழ்ந்த கவலைக்குரிய ஒரு விஷயம் குறித்து இந்தியப் பிரதமரின் கவனத்திற்குக் கொண்டுவருவதாக அவர் தெரிவித்துள்ளார். ஆழமான வரலாற்று, கலாச்சார மற்றும் உணர்வுப் பூர்வமான பிணைப்புகளின் காரணமாக, இலங்கையில் உள்ள தமிழர்களின் உரிமைகளையும், எண்ணங்களையும் நிலைநிறுத்துவதில் தமிழ்நாடு முன்னணியில் இருந்து வருகிறது என்றும், தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்ற முறையில், இந்தியா மற்றும் இலங்கையில் உள்ள மரியாதைக்குரிய தமிழ்த் தலைவர்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகளின் அடிப்படையில், இலங்கையில் முன்மொழியப்பட்ட புதிய அரசியலமைப்பு தொடர்பான பிரச்சினை குறித்து இந்தியப் பிரதமரின் மேலான கவனத்திற்குக் கொண்டுவருவது தமது கடமை என்றும் அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் தற்போது நடைபெற்றுவரும் அரசியலமைப்புச் சீர்திருத்தங்களால் இலங்கைத் தமிழ்ச்சமூகத்திற்கு ஏற்படும் கடுமையான பாதிப்புகளை எடுத்துரைக்கும் விரிவான கோரிக்கைகளை தாம் பெற்றுள்ளதாக முதலமைச்சர் தனது கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளார். இலங்கைத் தமிழர்கள் 77 ஆண்டுகளுக்கும் மேலாக, திட்டமிட்ட பாகுபாடு, வன்முறை மற்றும் அவர்களின் உண்மையான உரிமைகளைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளைச் சகித்து வந்துள்ளனர் என்றும், பலர், இதனை தங்கள் சமூகத்திற்கு எதிரான இனப்படுகொலை என்று விவரிக்கும் ஒரு நிலைக்கு வழிவகுத்துள்ளது என்றும் முதலமைச்சர் வருத்தத்தோடு சுட்டிக்காட்டியுள்ளார். சுதந்திரத்திற்குப் பிந்தைய இலங்கையின் அரசியலமைப்புகள் (1947, 1972, மற்றும் 1978 ஆம் ஆண்டுகளின் அரசியலமைப்புகள்) அனைத்தும் ஒரு ஒற்றையாட்சி அரசுக் கட்டமைப்பில் வேரூன்றியிருந்தன என்றும், இது திட்டமிட்ட இன வன்முறை, கட்டமைப்பு ரீதியான ஒடுக்குமுறை மற்றும் தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளை மறுப்பதற்கு வழிவகுத்தது என்றும் தெரிவித்துள்ள அவர், உள்நாட்டுப் போர் முடிவடைந்த கடந்த 16 ஆண்டுகளாக, இந்த ஒற்றையாட்சிக் கட்டமைப்பு, பாரம்பரியமாக தமிழர்கள் வாழ்ந்து வந்த பகுதிகளில் மக்கள் தொகை மாற்றங்கள், நில அபகரிப்புகள் மற்றும் தமிழ் அடையாளத்தின் சிதைவு ஆகியவற்றிற்கு தொடர்ந்து வழிவகுத்து வருவதாக வருத்தத்துடன் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான, பாராளுமன்றத்தில் முழுப்பெரும்பான்மையைக் கொண்ட தற்போதைய இலங்கை அரசாங்கம், இனப்பிரச்சினைகளைத் தீர்க்கும் போர்வையில் ஒரு புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுத்தும் முயற்சிகளைத் துரிதப்படுத்தி வருகிறது என்று தெரிவித்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்த முன்மொழியப்பட்ட கட்டமைப்பு மீண்டும் ஒரு ஒற்றையாட்சி மாதிரியை வலுப்படுத்துவதாகத் தெரிகிறது என்றும், இது அரசியல் சுயாட்சிக்கான தமிழர்களின் நியாயமான எண்ணங்களைப் புறக்கணித்து, அதன்மூலம் அவர்களை மேலும் ஓரங்கட்டி, அச்சுறுத்தும் வகையில் அமைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். இந்தச் சூழலில், இந்திய அரசால் பூட்டானில் ஏற்பாடு செய்யப்பட்ட 1985 அமைதிப் பேச்சுவார்த்தைகளின் போது, தமிழ் பிரதிநிதிகளால் முன்வைக்கப்பட்ட திம்பு கோட்பாடுகளில் குறிப்பிடப்பட்ட கோட்பாடுகளையே, தற்போது பெறப்பட்டுள்ள கோரிக்கைகளில் வலியுறுத்தப்பட்டுள்ளது * இலங்கைத் தமிழர்களுக்கான ஒரு தனித்துவமான தேசத்தை அங்கீகரித்தல் (தமிழர் தேசியம்); * வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைத் தமிழ் மக்களின் பாரம்பரிய தாயகமாக ஏற்றுக்கொள்வது (தமிழர் தாயகம்); * தமிழ் தேசத்திற்கான தன்னாட்சி உரிமையை உறுதிப்படுத்துதல் (தமிழர் தன்னாட்சி உரிமை); மற்றும் * மலையகத் தமிழர்களுக்கான முழு குடியுரிமை உரிமைகள் உட்பட, அனைத்து குடிமக்களுக்கும் சமத்துவத்தையும், பாகுபாடின்மையையும் உறுதிசெய்யும் ஒரு கூட்டாட்சி ஆட்சி முறையை நிறுவுதல்; போன்றவற்றையே இந்தக் கோட்பாடுகள் வலியுறுத்துகின்றன என்றும் தமிழ்நாடு முதலமைச்சர் தனது கடிதத்தில் கோடிட்டுக் காட்டியுள்ளார். இந்தக் கூறுகளை உள்ளடக்காமல் கொண்டுவரப்படும் எந்தவொரு புதிய அரசியலமைப்பும், அநீதி மற்றும் நிலையற்ற தன்மை தொடர வழிவகுக்கும் என்றும், இது மீண்டும் மோதல்களுக்கும், மனிதாபிமான நெருக்கடிகளுக்கும் வழிவகுக்கும் அபாயத்தை ஏற்படுத்தும் என்று சுட்டிக்காட்டியுள்ள முதலமைச்சர், 1987 ஆம் ஆண்டு இந்திய - இலங்கை ஒப்பந்தம் உட்பட, வரலாற்று ரீதியாக இலங்கையுடன் கொண்டுள்ள நட்புறவின் காரணமாக இலங்கையில் அமைதி மற்றும் நீதிக்காக நீண்டகாலமாக அர்ப்பணிப்புடன் செயல்படவேண்டிய தார்மீகக் கடமையை இந்தியா கொண்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். இலங்கைத் தமிழர்களின் அவல நிலை, தமிழ்நாட்டில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்றும், இலட்சக்கணக்கான மக்கள், அங்குள்ளவர்களைத் தங்கள் உறவினர்களாகக் கருதுகின்றனர் என்றும் தெரிவித்துள்ள முதலமைச்சர் அவர்கள், இலங்கையில் வாழும் தமிழர்களின் நிலைமையில் ஏற்படும் எந்தவொரு சரிவும் இருதரப்பு உறவுகளுக்கும், இரு நாடுகளுக்கிடையேயான உறுதிப்பாட்டிற்கும் பெரிய அளவில் தாக்கங்களை ஏற்படுத்தும் என்றும் கவலையோடு குறிப்பிட்டுள்ளார். இந்தச் சூழ்நிலையில், தமிழ் மக்களின் குறைகளை உண்மையாக நிவர்த்தி செய்யும் ஒரு அரசியலமைப்புச் செயல்முறையினைக் கொண்டுவருவதற்கு, இந்திய அரசாங்கம் இலங்கை அதிகாரிகளுடன் உயர்மட்ட அளவில் தூதரக நடவடிக்கைகள மேற்கொள்ள வேண்டுமென்று கேட்டுக்கொண்டுள்ள முதலமைச்சர், குறிப்பாக, மாகாணங்களுக்கு அதிகாரப் பரவலாக்கம் செய்யும்; இனச் சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாக்கும்; மற்றும் பன்முகத்தன்மை, சமத்துவக் கோட்பாடுகளை நிலைநிறுத்தும் கூட்டாட்சி முறையை உருவாக்குவதற்கு இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார். இத்தகைய அணுகுமுறை, பிராந்திய அமைதிக்கு உத்தரவாதம் அளிக்கும் இந்தியாவின் பங்கை மதிப்பது மட்டுமல்லாமல், கூட்டாட்சி மற்றும் மொழி மற்றும் இனச் சிறுபான்மையினரைப் பாதுகாப்பது குறித்த நமது அரசியலமைப்பு விழுமியங்களுடனும் ஒத்துப்போகும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். அந்த வகையில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், இலங்கைத் தமிழர்களின் உரிமைகளைப் பாதுகாக்க இந்தியா முனைப்பான நடவடிக்கைகளை எடுக்கும் என்றும், ஒரு நியாயமான மற்றும் நீடித்த தீர்வுக்கு அது பங்களிக்கும் என உறுதியாக தான் நம்புவதாகவும், தமிழ்நாடு முதலமைச்சர் தான் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார். https://adaderanatamil.lk/news/cmk9sf6fs03s8o29nyiayk34q
  21. வடக்கு ரயில் மார்க்கத்தின் புனரமைப்பு பணி ஆரம்பம் Jan 11, 2026 - 06:20 PM டித்வா புயலினால் சேதமடைந்த வடக்கு ரயில் பாதையைப் புனரமைக்கும் பணிகள் இன்று (11) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டன. இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க ஆகியோரின் தலைமையில் இப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. இந்தியாவினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட 450 மில்லியன் அமெரிக்க டொலர் அவசர நிதியுதவியில் இருந்து, இந்த முதற்கட்டப் புனரமைப்புப் பணிகளுக்காக 5 மில்லியன் அமெரிக்க டொலர் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்திய அரசாங்கத்திற்குச் சொந்தமான ரயில்வே கட்டுமான நிறுவனத்தினால் இப்பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன. வடக்கு ரயில் மார்க்கம் மஹவ முதல் ஓமந்தை வரை, ஓமந்தை முதல் யாழ்ப்பாணம் வரை, மதவாச்சி முதல் மன்னார் வரை என மூன்று கட்டங்களின் கீழ் புனரமைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://adaderanatamil.lk/news/cmk9qetq303s6o29n4jq9gfrd
  22. கல்வி சீர்திருத்தத்திற்கு எதிர்ப்பு: விமல் வீரவன்ச சத்தியாக்கிரக போராட்டம்! Published By: Digital Desk 1 12 Jan, 2026 | 11:06 AM தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச இன்று திங்கட்கிழமை (12) காலை சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். புதிய கல்வி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை பதவி விலகுமாறு வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இசுருபாயவில் உள்ள கல்வி அமைச்சின் முன் இந்தப் போராட்டம் நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/235812
  23. சச்சினை விஞ்சி புதிய மைல்கல்லை எட்டிய விராட் கோலி - நியூசிலாந்துக்கு எதிராக இந்தியா அபாரம் பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,முதல் ஒருநாள் போட்டியில் விராட் கோலி 93 ரன்கள் எடுத்தார். 13 நிமிடங்களுக்கு முன்னர் "விராட் தற்போது பேட்டிங் செய்வதைப் பார்ப்பது ஒரு மகிழ்ச்சியான அனுபவம். அவர் விளையாட்டில் தென்படும் அந்த சுதந்திரம், நிதானம் மற்றும் உற்சாகம் போன்றவை அவர் இந்த விளையாட்டை எவ்வளவு ரசித்து விளையாடுகிறார் என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது." ஞாயிற்றுக்கிழமை நியூசிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில், விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்தார். இதையொட்டி முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆர். அஸ்வின் தனது எக்ஸ் பக்கத்தில் கோலி குறித்து இவ்வாறு பதிவிட்டிருந்தார். கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சிட்னி ஒருநாள் போட்டியில் தொடங்கிய விராட் கோலியின் சிறப்பான பேட்டிங் பயணம், வதோதராவிலும் தொடர்ந்தது. இதன் மூலம் சங்கக்காராவை முந்தி, சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்தபடியாக சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த இரண்டாவது வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றுள்ளார். விராட் கோலியின் அதிரடி ஆட்டத்தால், நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. வதோதரா ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 300 ரன்கள் எடுத்தது. சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி 49 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து இந்த இலக்கை எட்டியது. சர்வதேச கிரிக்கெட்டில் 28,000 ரன்கள் பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,ஒருநாள் கிரிக்கெட்டில் விராட் கோலி நல்ல ஃபார்மில் உள்ளார். வதோதரா ஒருநாள் போட்டியின் போது விராட் கோலி 25 ரன்களைக் கடந்த போது, சர்வதேச கிரிக்கெட்டில் 28 ஆயிரம் ரன்களைக் கடந்த மூன்றாவது வீரர் என்ற பெருமையைப் பெற்றார். அத்துடன், சச்சினை விஞ்சி சர்வதேச கிரிக்கெட்டில் அதிவேகமாக 28,000 ரன்களைக் கடந்த வீரர் என்ற சாதனையையும் விராட் கோலி படைத்தார். சச்சின் டெண்டுல்கர் இந்த மைல்கல்லை எட்ட 644 இன்னிங்ஸ்களையும், சங்ககாரா 666 இன்னிங்ஸ்களையும் எடுத்துக் கொண்டனர். ஆனால், விராட் கோலி வெறும் 624 இன்னிங்ஸ்களில் 28 ஆயிரம் ரன்களை நிறைவு செய்துள்ளார். இருப்பினும், சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் சச்சின் டெண்டுல்கர் 34,357 ரன்களுடன் முதலிடத்தில் நீடிக்கிறார். தற்போது ஒருநாள் போட்டிகளில் மட்டுமே கவனம் செலுத்தி வரும் விராட் கோலி, சமீபகாலமாக மிகச் சிறந்த ஃபார்மில் உள்ளார். கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்த அவர், அதன் பிறகு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சிட்னி ஒருநாள் போட்டியில் ஆட்டமிழக்காமல் 74 ரன்கள் எடுத்த கோலி, அதைத் தொடர்ந்து தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் சதம் விளாசினார். மூன்றாவது போட்டியில் 65 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். தென்னாப்பிரிக்கத் தொடரில் அவரது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதற்காக 'தொடர் நாயகன்' விருதும் அவருக்கு வழங்கப்பட்டது. இருப்பினும், நேற்றைய ஆட்டத்தில் விராட் கோலி ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 54வது சதத்தை அடிக்கத் தவறவிட்டார், அவர் 91 பந்துகளில் 93 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். சிறப்பான சாதனையைப் படைத்த விராட் கோலி, இது குறித்து கூறுகையில், "எனது ஒட்டுமொத்தப் பயணத்தையும் திரும்பிப் பார்த்தால், இது ஒரு கனவு நனவானது போல உள்ளது. எனது திறமையின் மீது நான் எப்போதும் நம்பிக்கை கொண்டிருந்தேன். இருப்பினும், இந்த நிலையை அடைய நான் மிகவும் கடினமாக உழைக்க வேண்டியிருந்தது," என்றார். தொடர்ந்து பேசிய அவர், "உண்மையைச் சொல்லப்போனால், நான் தற்போது எந்த சாதனைகளைப் பற்றியும் யோசிக்கவில்லை. நாங்கள் முதலில் பேட்டிங் செய்திருந்தால், ஒருவேளை நான் இன்னும் அதிரடியாக விளையாடியிருப்பேன். அனுபவம் பயனுள்ளதாக இருக்கும், ஆனால் அணியை வெற்றி பெறச் செய்வதுதான் எல்லாவற்றையும் விட முக்கியமானது," என்று தெரிவித்தார். கில் மற்றும் ஸ்ரேயாஸ் பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,காயம் காரணமாக தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் சுப்மன் கில் இடம்பெறவில்லை. தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான தொடரைத் தவறவிட்ட பிறகு, கேப்டன் சுப்மன் கில் இந்த ஒருநாள் தொடரில் வெற்றிகரமாகத் திரும்பினார். 301 ரன் என்ற இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணியில், சுப்மன் கில் மற்றும் ரோஹித் சர்மா தொடக்க ஜோடி முதல் விக்கெட்டிற்கு 39 ரன்கள் சேர்த்தது. ரோஹித் சர்மா இந்த ஆட்டத்தில் கிடைத்த நல்ல தொடக்கத்தைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளத் தவறினார். அவர் 29 பந்துகளில் 26 ரன்கள் மட்டுமே எடுத்தார். அவரது இன்னிங்ஸில் இரண்டு சிக்ஸர்கள் மற்றும் மூன்று பவுண்டரிகள் அடங்கும். அதன் பிறகு, கில்லுடன் விராட் கோலி இணைந்தார். இந்த இணை இரண்டாவது விக்கெட்டிற்கு 107 பந்துகளில் 118 ரன்கள் சேர்த்தது. அரைசதம் கடந்த பிறகு சுப்மன் கில்லால் தனது இன்னிங்ஸை நீண்ட நேரம் தொடர முடியவில்லை, அவர் 56 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். ஷுப்மன் கில்லைத் தவிர, ஸ்ரேயாஸ் ஐயரும் சுமார் மூன்று மாதங்களுக்குப் பிறகு மீண்டும் கிரிக்கெட் களத்திற்குத் திரும்பினார். அணியின் துணை கேப்டனான ஐயர் 49 ரன்கள் எடுத்தார். விராட் கோலி ஆட்டமிழந்த பிறகு இந்திய அணியின் இன்னிங்ஸ் சற்று தடுமாறியது. கோலி ஆட்டமிழந்த நேரத்தில் இந்தியா 234 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்திருந்தது. அதன்பின் வெறும் எட்டு ரன்கள் இடைவெளியில் இந்தியா அடுத்தடுத்து மூன்று விக்கெட்டுகளை இழந்தது. இறுதியில் ஹர்ஷித் ராணா 23 பந்துகளில் 29 ரன்களும், கே.எல். ராகுல் ஆட்டமிழக்காமல் 21 பந்துகளில் 29 ரன்களும் எடுத்து இந்தியாவின் வெற்றிக்கு வழிவகுத்தனர். விராட் கோலியின் தற்போதைய ஃபார்ம் குறித்துப் பேசிய சுப்மன் கில், "விராட் கோலி இப்போது பேட்டிங் செய்யும் விதம், அவர் பேட்டிங்கை மிகவும் எளிதாக்கிவிட்டது போலத் தோன்றுகிறது. ஆரம்பத்தில் பேட்டிங் செய்வது அவ்வளவு எளிதாக இருக்கவில்லை, ஆனால் விராட் கோலி அதை மிக எளிதாக மாற்றிக்காட்டினார்," என்று கூறினார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cy05kk0gwdwo

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.