Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்

Everything posted by ஏராளன்

  1. பொலித்தீன் பைகளுக்குப் பதிலாக காகிதப் பைகள்? Nov 15, 2025 - 06:36 PM பொலித்தீன் பைகளுக்கு பதிலாக மாற்றீடாகப் பயன்படுத்தக்கூடிய சுற்றுச்சூழலுக்கு உகந்த காகிதப் பைகளை உற்பத்தி செய்யுமாறு சுற்றாடல், கமத்தொழில் மற்றும் வளங்களின் நிலைத்தன்மை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவினால் அமைச்சகத்திற்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. பொருட்களை வாங்கும் போது பொலித்தீன் பைகளுக்கு ஒரு தொகையை அறவிடும் முடிவு குறித்து கவனம் செலுத்தி, குறித்த மேற்பார்வைக் குழு இந்தப் பரிந்துரையைச் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதன்போது, குழுவின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி, இந்த நடவடிக்கையின் மூலம் பொலித்தீன் பயன்பாடு குறைகிறதா என்பது குறித்து ஆராயப்பட வேண்டும் என்று குறிப்பிட்டார். மேலும், பொலித்தீன் பைகளுக்காகச் செலுத்த வேண்டிய தொகையை எந்தத் தரப்பினர் தீர்மானித்தனர் என்றும் குழுவின் தலைவர் அதிகாரிகளிடம் வினவினார். அதற்கு பதிலளித்த அதிகாரிகள், பொலித்தீன் பைகளுக்குப் பணம் செலுத்த வேண்டும் என்று வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்படவில்லை என்று சுட்டிக்காட்டினர். https://adaderanatamil.lk/news/cmi0aw09701n3o29nk1tts4aa
  2. மன்னார் காற்றாலை மின் திட்டத்திற்கு எதிரான போராட்டம் நிறைவு Nov 15, 2025 - 06:22 PM மன்னாரில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வந்த காற்றாலை மின் திட்டம் மற்றும் கனிம மணல் அகழ்வுக்கு எதிரான போராட்டம் 105ஆவது நாளான இன்றைய தினம் (15) மாலை நிறைவுக்கு வந்துள்ளது. குறித்த விடயம் தொடர்பாக மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை மாக்கஸ் அடிகளார் இன்றைய தினம் (15) மாலை போராட்டக் களத்தில் விசேட ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்தார். இதன் போது மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு எஸ்.ஞானப்பிரகாசம் ஆண்டகை கலந்து கொண்டதோடு, போராட்டக் களத்தில் அங்கம் வகித்தவர்களும் கலந்து கொண்டிருந்தனர். அருட்தந்தை எஸ்.மாக்கஸ் அடிகளார் கருத்து தெரிவிக்கையில், "மக்களின் வாழ்விடங்களையும், வாழ்வாதாரத்தையும், இருப்பையும் பாதிப்புக்கு உள்ளாக்கி வரும் காற்றாலை மற்றும் கனிம மணல் அகழ்வுக்கு எதிரான போராட்டம் இன்றைய தினம் 105ஆவது நாளைக் கடக்கின்றது." "ஜனாதிபதி அவர்களின் அமைச்சரவை அறிவிப்பை நாங்கள் சற்று பரிசோதனைக்கு உட்படுத்தினோம். அதற்கமைவாக 105ஆவது நாளான இன்றைய தினம் சனிக்கிழமை (15) மாலை எமது போராட்டத்தை நிறுத்திக் கொள்ளுகின்றோம். எமது போராட்டம் என்ன கோரிக்கைகளை முன்வைத்து முன்னெடுக்கப்பட்டதோ, அந்தக் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு." "எங்களுடைய முக்கியமான கோரிக்கை என்னவென்றால், மன்னார் மண்ணிலே கனிம மணல் அகழ்வுக்கான அனைத்து வித அனுமதிகளும் நிறுத்தப்பட வேண்டும். மேலும், மன்னார் தீவில் அகழ்வு செய்யப்படுகின்ற மணல், மண் தீவை விட்டு வெளியில் கொண்டு செல்லப்படுவது தவிர்க்கப்பட வேண்டும்." "கொண்டு செல்லப்படும் மண் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். எனவே, அரசாங்கம் கனிம மணல் அகழ்வுக்கு அனுமதி வழங்காது என்ற நம்பிக்கையுடனே இந்தப் போராட்டத்தை நிறுத்துகிறோம். வெகு விரைவில் அரசாங்கம் கனிம மணல் தொடர்பாக அமைச்சரவை அனுமதியைப் பெற்று தேசிய கொள்கையாக அதனை அறிவிப்பார்கள் என்பதை நம்புகின்றோம்." "எதிர்வரும் காலத்தில் எல்லா நடவடிக்கைகளையும் கண்காணித்துக் கொள்ளுவதற்காக எல்லா மக்களையும் உள்ளடக்கிய ஒரு கண்காணிப்புக் குழுவை அரச அதிபர் தலைமையில் உடனடியாக அமைத்து, குறித்த குழுவினுடைய கண்காணிப்பின் கீழ் எல்லா விதமான செயல்பாடுகளையும் முன்னெடுப்பது சிறந்ததாக அமையும் என்பதை இப்போராட்ட குழு சார்பாகத் தெரிவித்துக் கொள்கிறோம்." இதைத் தொடர்ந்து அருட்தந்தை எஸ்.மாக்கஸ் அடிகளார் தலைமையிலான குழுவினர் மன்னார் மாவட்ட செயலகத்திற்குச் சென்று மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க. கனகேஸ்வரனிடம் தமது கோரிக்கை அடங்கிய மகஜரை கையளித்தனர். -மன்னார் நிருபர் லெம்பட்- https://adaderanatamil.lk/news/cmi0adulf01n2o29nq7bk4k1r
  3. எதிர்க்கட்சிகளின் பேரணி குறித்து சுமந்திரனுடன் நாமல் சந்திப்பு Nov 15, 2025 - 04:33 PM தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகளால் ஏற்பாடு செய்யப்படும் மக்கள் பேரணி குறித்து அறிவிப்பதற்காக, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ. சுமந்திரனை சந்தித்துள்ளார். இன்று (15) காலை இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளதுடன், இதன்போது கருத்துத் தெரிவித்த எம்.ஏ. சுமந்திரன், மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்துவது அத்தியாவசியமான விடயம் என்று கூறியுள்ளார். உள்ளூராட்சி மன்றங்களை வலுப்படுத்துவதற்காக, அரசியலமைப்புக்கு அமைய இந்தத் தேர்தல்களை நடத்துவது அத்தியாவசியம் என்றும் அவர் அங்கு வலியுறுத்தியுள்ளார். இந்தச் சந்தர்ப்பத்தில் கருத்துத் தெரிவித்த நாமல் ராஜபக்ஷ, எதிர்க்கட்சியின் பிரதான கட்சிகளில் ஒன்றான இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு இந்தப் பேரணி குறித்து அறிவிப்பது அத்தியாவசியமான விடயம் என்றும் குறிப்பிட்டுள்ளார். https://adaderanatamil.lk/news/cmi06hda901mzo29ne087a0bk
  4. மனைவியை மிரட்ட சுருக்கு மாட்டிக்கொண்டவர் மூச்சுத்திணறி உயிரிழப்பு Nov 15, 2025 - 03:17 PM தற்கொலை செய்துகொள்வதாக மனைவியை மிரட்டுவதற்காக கழுத்தில் மாட்டப்பட்டிருந்த சுருக்கு இறுக்கியதில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நபர் இன்று (15) அதிகாலை உயிரிழந்தார். உரும்பிராய் தெற்கு, உரும்பிராய் பகுதியைச் சேர்ந்த 33 வயதான ஜெ. சுரேந்தன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், கடந்த எட்டாம் திகதி இரவு மதுபோதையில் வீட்டுக்கு வந்த சுரேந்தன், மனைவி மற்றும் பிள்ளைகளுடன் முரண்பட்டதையடுத்து அவர்கள் வீட்டை விட்டு வெளியேறினர். பின்னர் அவர் ஒரு கதிரையில் அமர்ந்துகொண்டு, கழுத்தில் சுருக்கிட்டவாறு தான் தற்கொலை செய்யப்போவதாக மனைவியுடன் தொலைபேசியில் பேசியுள்ளார். கைபேசியில் பேசிக்கொண்டிருக்கும்போதே மதுபோதையில் அவர் உறங்கிவிட்டார். பின்னர் அவரது சகோதரன் அங்கு சென்று பார்த்தபோது, அவர் கழுத்தில் சுருக்குடன் குறட்டைவிட்டு உறங்கிக்கொண்டிருந்தார். உடனடியாக சகோதரன் அவரது கழுத்தில் இருந்த கயிற்றை அகற்றிவிட்டு, அவரைத் தரையில் படுக்க வைத்துள்ளார். இந்நிலையில் சிறிது நேரத்தில் அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டார். -யாழ். நிருபர் கஜிந்தன்- https://adaderanatamil.lk/news/cmi03sbk301mwo29np80sl4we
  5. Nov 15, 2025 - 01:25 PM இன்று (15) முதல் அமுலுக்கு வரும் வகையில் டின் மீன் வகைகளுக்கான அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயித்து விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வௌியிடப்பட்டுள்ளது. இதன்படி 425 கிராம் நிறையுடைய டூனா (Tuna) டின் மீனின் அதிகபட்ச சில்லறை விலை 380 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 425 கிராம் நிறையுடைய மெக்கரல் டின் மீன் 480 ரூபாவாகவும், 425 கிராம் நிறையுடைய ஜெக் மெக்கரல் டின் மீனின் 560 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. https://adaderanatamil.lk/news/cmhzzsexu01mto29nhqcrpdc3
  6. 15 Nov, 2025 | 03:14 PM யாழில் உணவக கழிவு நீரினை வீதிக்கு வெளியேற்றிய உணவக உரிமையாளருக்கும், காலாவதியான பொருட்களை விற்பனைக்கு காட்சிப்படுத்திய உரிமையாளர்களிற்கும் ஒரு இலட்ச ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. பருத்தித்துறை நகரசபையின் எல்லைக்குட்பட்ட வியாபார நிலையங்களில் சுகாதார பரிசோதகரினால், மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது இரு வர்த்தக நிலையங்களில் காலாவதியான பொருட்களை விற்பனைக்கு காட்சிப்படுத்தியிருந்தமை, உணவகம் ஒன்றின் கழிவு நீரினை வீதிக்கு அப்புறப்படுத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் கீழ் மூவருக்கும் எதிராக பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டது. குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போது மூவரும் தம் மீதான குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொண்டதை அடுத்து, அவர்களை கடுமையாக எச்சரித்த நீதிமன்று, அவர்களுக்கு ஒரு இலட்ச ரூபாய் தண்டம் விதித்தது. https://www.virakesari.lk/article/230426
  7. 2026 IPL : மதீஷ பத்திரனவை விடுவித்தது CSK! Nov 15, 2025 - 05:42 PM 2026 ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலம் நடைபெறும் திகதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஒவ்வொரு அணியும் தங்கள் அணியில் தக்கவைத்துள்ள மற்றும் விடுவித்த வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளன. அதன்படி, அண்மைக்காலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய வீரராக மாறியிருந்த இலங்கை வேகப்பந்து வீச்சாளர் மதீஷ பத்திரனவை, வரவிருக்கும் தொடருக்காக அணியின் நிர்வாகம் விடுவிக்க முடிவு செய்துள்ளது. கடந்த ஆண்டு இவரை இந்திய ரூபா 13 கோடிக்கு சென்னை அணி தக்கவைத்திருந்தது. 2023 ஆம் ஆண்டு சென்னை அணிக்காக தனது முதல் ஐபிஎல் தொடரில் பங்கேற்ற மதீஷ பத்திரன, தான் விளையாடிய முதல் தொடரிலேயே வெற்றி பெற்ற அணியில் ஒரு அங்கமானார். அந்தத் தொடரில் அவர் தனது அணிக்காக 12 போட்டிகளில் விளையாடி 19 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதுவரை அவர் 32 போட்டிகளில் 47 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மதீஷ பத்திரன மீது மிகுந்த ஆர்வம் கொண்டிருந்த அப்போதைய தலைவர் மகேந்திர சிங் தோனி கூட, இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தால் மதீஷ பத்திரன கவனத்துடன் பயன்படுத்தப்பட வேண்டும் என்று கூறியிருந்தார். அவ்வாறு செய்தால், அவரால் நீண்டகால தொழில்முறை பயணத்தை மேற்கொள்ள முடியும் என்றும் அவர் தெரிவித்திருந்தார். எவ்வாறாயினும், சென்னை அணிக்கு மதீஷ பத்திரன தேவைப்பட்டால், எதிர்வரும் டிசம்பர் 16 ஆம் திகதி அபுதாபியில் நடைபெறவுள்ள வீரர்களின் ஏலத்தில் அவரை மீண்டும் ஏலம் எடுக்க வாய்ப்புள்ளது. ஏலத் திகதி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஒவ்வொரு அணியும் தங்கள் அணியில் இருந்து விடுவிக்கப்படும் மற்றும் தக்கவைக்கப்படவுள்ள வீரர்களின் பட்டியலை இந்திய நேரப்படி இன்று மாலை 3.00 மணிக்கு முன் வெளியிட வேண்டியிருந்தது. அதன்படி, மதீஷ பத்திரனவைத் தவிர, நியூசிலாந்து வீரர்கள் டெவோன் கான்வே மற்றும் ரச்சின் ரவீந்திரா உட்பட பல வீரர்களை விடுவிக்கவும் சென்னை நிர்வாகம் முடிவு செய்துள்ளது. https://adaderanatamil.lk/news/cmi08z6ia01n1o29ng29mia8a
  8. துடுப்பாட்டத்தில் இந்தியாவும் தடுமாறிய முதல் டெஸ்டில் பரிதாபகரமான நிலையில் தென் ஆபிரிக்கா 15 Nov, 2025 | 05:51 PM (நெவில் அன்தனி) இந்தியாவுக்கு எதிராக கொல்கத்தா ஈடன் கார்ட்ன்ஸ் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நடப்பு உலக டெஸ்ட் சம்பியன் தென் ஆபிரிக்கா பரிதாபகரமான நிலையில் இருக்கிறது. துடுப்பாட்ட வீரர்களுக்கு சிம்மசொப்பனமாக அமைந்த ஈடன் கார்ட்ன்ஸ் ஆடுகளத்தில் போட்டியின் இரண்டாம் நாளான இன்றைய ஆட்ட நேர முடிவில் தென் ஆபிரிக்கா அதன் இரண்டாவது இன்னிங்ஸில் 7 விக்கெட்களை இழந்து 93 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. இரண்டாவது இன்னிங்ஸில் மேலும் 3 விக்கெட்கள் மீதம் இருக்க இந்தியாவை விட 63 ஓட்டங்களால் மாத்திரம் தென் ஆபிரிக்கா முன்னிலையில் இருக்கிறது. இந்தியாவும் அதன் முதல் இன்னிங்ஸில் தடுமாற்றத்தை எதிர்கொண்டிருந்தது. பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்திய இந்தப் போட்டியின் முதல் இரண்டு நாட்களில் 26 விக்கெட்கள் வீழ்த்தப்பட்டன. முதல் நாளான நேற்றைய தினம் 11 விக்கெட்களும் இன்றைய தினம் 15 விக்கெட்களும் வீழ்த்தப்பட்டன. இந்திய அணித் தலைவர் ஷுப்மான் கில் கழுத்தில் ஏற்பட்ட தசைப் பிடிப்பு காரணமாக 4 ஓட்டங்களுடன் ஓய்வு பெற்றார். இந்தப் போட்டியில் கே.எல். ராகுல் பெற்ற 39 ஓட்டங்களே இதுவரை துடுப்பாட்ட வீரர் ஒருவரால் பெறப்பட்ட அதிகபட்ச ஓட்டங்களாக பதிவாகியுள்ளது. போட்டியின் இரண்டாம் நாளான இன்று சனிக்கிழமை (15) காலை தனது முதல் இன்னிங்ஸை ஒரு விக்கெட் இழப்புக்கு 37 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த இந்தியா சகல விக்கெட்களையும் இழந்து 189 ஓட்டங்களைப் பெற்றது. இது தென் ஆபிரிக்கா முதலாவது இன்னிங்ஸில் பெற்ற 159 ஓட்டங்களைவிட 30 ஓட்டங்கள் அதிகமாகும். இந்தியாவின் முதலாவது இன்னிங்ஸில் ராகுலை விட வொஷிங்டன் சுந்தர் (29), ரிஷாப் பான்ட் (27), ரவிந்த்ர ஜடேஜா (27) ஆகியோரே 20 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர். பந்துவீச்சில் சைமன் ஹாமர் 30 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் மாக்கோ ஜென்சன் 35 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர். 30 ஓட்டங்கள் பின்னிலையில் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்த தென் ஆபிரிக்கா பெரும் பரிதாபகரமான நிலையில் இருக்கிறது. அணித் தலைவர் டெம்பா பவுமா மாத்திரமே மிகவும் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடி 29 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதுள்ளார். அவரை விட மாக்கோ ஜென்சன் (13), ரெயான் ரிக்கில்டன் (11), வியான் மெல்டர் (11) ஆகிய இருவரே இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றனர். முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்களை வீழ்த்திய பும்ரா, இரண்டாவது இன்னிங்ஸில் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றவில்லை. அவர் 6 ஓவர்களை மாத்திரமே வீசினார். உபாதைக்குள்ளான ஷுப்மான் கில் களத்தடுப்பில் ஈடுபடாததால் அணிக்கு தலைமை தாங்கிய ரிஷாப் பான்ட் தனது சுழல்பந்துவீச்சாளர்களில் நம்பிக்கை வைத்து அதில் வெற்றியும் கண்டார். ரவிந்த்ர ஜடேஜா 29 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் குல்தீப் யாதவ் 12 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் அக்சார் பட்டேல் 30 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். மூன்றாம் நாள் ஆட்டம் நாளை தொடரும். https://www.virakesari.lk/article/230440
  9. கடும் மின்னல் தாக்கம் குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை! 15 Nov, 2025 | 03:01 PM தெற்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் களுத்துறை, இரத்தினபுரி, கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த எச்சரிக்கையானது இன்று சனிக்கிழமை (15) இரவு 11.00 மணி முதல் அமுலில் இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் பலத்த காற்றும் வீசக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மின்னல் தாக்கத்தினால் ஏற்படும் விபத்துக்களை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது. https://www.virakesari.lk/article/230422
  10. படக்குறிப்பு, எலத்தூர் குளம் கட்டுரை தகவல் சேவியர் செல்வகுமார் பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பல்லுயிர் பாதுகாப்புச் சட்டம் 2002இன் படி, ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் அருகிலுள்ள எலத்துார் குளத்தை மூன்றாவது பாரம்பரிய பல்லுயிர் தலமாக தமிழக அரசு கடந்த செப்டம்பரில் அறிவித்தது. அதற்கு அடுத்த மாதத்திலேயே அதற்கு மிக அருகிலேயே உள்ள நாகமலை குன்றை நான்காவது பாரம்பரிய பல்லுயிர் தலமாக அறிவித்தது. எலத்துார் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 3 கி.மீ. துார இடைவெளியில் அமைந்துள்ள இவ்விரு இடங்களையும் பாரம்பரிய பல்லுயிர் தலங்களாக அறிவித்திருப்பது, அவற்றின் மீது பலருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளது. அப்படி அந்த இடங்களில் என்ன இருக்கிறது? இவற்றின் சூழலியல் சிறப்புகள் என்ன? விரிவாகத் தெரிந்துகொள்ள பிபிசி தமிழ் கள ஆய்வுக்குச் சென்றது. ஊர்ப் பறவைகளை கவர்வதில் முக்கிய இடம் பிடித்த எலத்துார் குளம் எலத்துார் குளம் மொத்தம் 96 ஏக்கர் பரப்பளவில் இருக்கிறது. சுற்று வட்டாரத்திலுள்ள 21 கிராமங்கள்தான் இதற்கு நீர்ப்பிடிப்புப் பகுதிகளாக உள்ளன. குளத்தில் இருந்து வெளியேறும் நீர், ஓடை வழியாகச் சென்று அரசூர் என்ற இடத்தில் பவானி ஆற்றில் கலக்கிறது. இந்தக் குளத்திற்குள் முட்புதர் காடுகள், கரைக்காடு, வறண்ட புல்வெளி, சதுப்பு நிலம், ஆழமான நீர்ப்பகுதி, ஆழம் குறைவான பகுதி, மண் திட்டுகள், ஏரிக்கரை எனப் பலவிதமான நில அமைப்புகள் உள்ளன. இதற்குள் குடைவேலம், நாட்டுக் கருவேலம், வேம்பு, அரப்பு, மூலிகைச் செடிகள் எனப் பலவிதமான மரங்களும், தாவரங்களும் இருக்கின்றன. குளத்திலுள்ள தண்ணீர் தெளிந்த நீராகத் தெரிகிறது. 134 விதமான மண்ணின் மரங்கள் கரைப்பகுதிகளில் உள்ளன. மொத்தம் 2 ஆயிரத்துக்கும் அதிகமான மரங்கள் உள்ள இந்தக் குளத்தில்தான் பல்லாயிரக்கணக்கான பறவைகள் இருந்தன. வேறு மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பறவைகள் வலசை வருகின்றன. பட மூலாதாரம், ebird.org அமெரிக்காவின் கார்நெல் பல்கலைக் கழகத்தின் உலகளாவிய பறவைகள் கணக்கெடுப்புக்கான இ-பேர்ட் இணையதள தரவின் அடிப்படையில், 2024–2025ஆம் ஆண்டுக்கான ஊர்ப்புற பறவைகள் கணக்கெடுப்பில் (Great Backyard Bird Count) எலத்துார் குளம் தமிழகத்தில் முதலிடம் பிடித்துள்ளது. இந்தியாவில் 23வது இடத்தையும் பிடித்துள்ளது. அதேபோன்று 2024 ஜனவரி 28 அன்று, தமிழ்நாடு ஒருங்கிணைந்த நீர்வாழ் பறவைகள் கணக்கெடுப்பில் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் அதிக பறவைகளைக் கொண்ட நீர்நிலையாகவும் எலத்துார் பதிவு பெற்றுள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டில் சென்னை பெருவெள்ளத்தின்போது தொடங்கப்பட்ட 'சூழல் அறிவோம்' அமைப்பு, நீர்நிலைகள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகிறது. இதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் தீபக் வெங்கடாசலம் 5 ஆண்டுகளாக எலத்துார் குளம் மற்றும் நாகமலை குன்று பற்றி ஆவணப்படுத்தியுள்ளார். ''கோவிட் காலத்தில் இந்தக் குளத்திற்கு வந்தபோது, பல்லாயிரக்கணக்கான பறவைகள் வருவதைப் பார்த்தோம். பறவை ஆராய்ச்சியாளர் ஜெகநாதன், இங்குள்ள பறவைகளை அடையாளம் கண்டு ஆவணப்படுத்த பெரிதும் உதவினார். அதன் பின்பே இந்தக் குளத்தைப் பாதுகாக்க வேண்டுமென்று தொடர்ந்து அங்கு வரும் பறவைகளை 5 ஆண்டுகளாகப் பதிவு செய்தோம்'' என்றார் தீபக் வெங்கடாசலம். படக்குறிப்பு, சூழல் அறிவோம், தலைமை ஒருங்கிணைப்பாளர் தீபக் வெங்கடாசலம் இந்தக் குழுவினர் இங்கு வரும் பறவைகளை ஆவணப்படுத்தி இ–பேர்ட் இணையதளத்தில் பதிவு செய்து வருகின்றனர். அதன் அடிப்படையில்தான் 2 ஆண்டுகளாக ஊர்ப்பறவைகள் கணக்கெடுப்பில் எலத்துார் குளம் முதலிடம் பெற்றுள்ளது. குளத்தை நவம்பர் முதல் வாரத்தில் பிபிசி நேரில் பார்வையிட்டது. அப்போது பெருமளவில் குளம் நிரம்பியிருந்தது. குளத்திற்கு நம்பியூர் பகுதியிலிருந்து சிறிய ஓடையில் தண்ணீர் வருகிறது. சமீப காலமாக அத்திக்கடவு–அவிநாசி நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டம் மூலமாகவும் இந்தக் குளத்துக்கு தண்ணீர் வருகிறது. குளத்தின் நடுவிலுள்ள மரங்களிலும், நீர்ப் பகுதிகளிலும், தரையிலுள்ள புதர்க் காடுகளிலும் பல ஆயிரம் பறவைகள் தங்கியிருந்ததைப் பார்க்க முடிந்தது. நீர்க்காகம், கொக்கு, வாத்துகள் என பலவகை பறவைகள் பகல் நேரத்திலேயே அங்கிருந்தன. மாலையில் இருள் சூழும் நேரத்தில் கூட்டம் கூட்டமாக நுாற்றுக்கணக்கான பறவைகள் அணி அணியாக வந்து குளத்தில் தங்குவதற்கு (Roosting) இறங்கியது கண் கொள்ளாக் காட்சியாக இருந்தது. படக்குறிப்பு, எலத்தூர் குளம் 204 பறவையினங்கள் 'சூழல் அறிவோம்' ஆவணப்படுத்தியுள்ள தரவுகளின்படி, எலத்துார் குளத்தில் 204 பறவையினங்கள், 174 பூச்சி இனங்கள், 228 தாவர வகைகள், 17 ஊர்வன, 18 எட்டுக்காலிகள், 20 மிதவை நுண்ணுயிரிகள், 8 பாலுாட்டிகள், 24 இதர பல்லுயிர்கள் உள்பட 693 வகையான உயிரினங்கள் வாழ்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றில் 77 வலசைப் பறவைகள் என்றும், அவற்றில் 47 தொலைதுார வலசைப் பறவைகள் என்றும் கண்டறியப்பட்டுள்ளன. மொத்தம் 125 விதமான உள்ளூர்ப் பறவைகள் உள்ளன. 64 பறவைகள் இனப்பெருக்கம் செய்கின்றன. பன்னாட்டுப் பாதுகாப்பு ஒன்றியத்தின் (IUCN) சிவப்புப் பட்டியலில் (அழியும் அபாயத்தில்) உள்ள 9 பறவைகள் இங்கு இருப்பது பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று இந்தியாவில் பாதுகாப்பு முன்னுரிமை பட்டியலில் (State of Indian Birds) உள்ள 52 விதமான பறவைகள் இங்கு வருவதும் தெரிய வந்துள்ளது. குளத்திற்கு அருகிலுள்ள செங்காளிபாளையத்தைச் சேர்ந்த பெண் விவசாயி தேவிகா, ''ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, பங்குனி மாதங்களில்தான் (நவம்பர் முதல் பிப்ரவரி வரை) இந்த குளத்திற்கு ஏகமாகப் பறவைகள் வரும். அதிலும் அந்தி நேரத்தில் பார்த்தால் கூட்டம் கூட்டமாகப் பறவைகள் வரும். அத்திக்கடவு–அவிநாசி திட்டத்திலும் தண்ணீர் வருகிறது. குளத்தில் அதிக தண்ணீர் தொடர்ந்து இருப்பதால் மீன்களும் அதிகமாக இருக்கின்றன'' என்றார். படக்குறிப்பு,தேவிகா, செங்காளிபாளையம் குளம், குன்று ஆகியவற்றின் அமைப்பு மற்றும் முக்கியத்துவத்தை சூழல் அறிவோம் குழுவினர், நம்முடன் நடை பயணம் மற்றும் மலையேற்றம் செய்து நேரில் விளக்கினர். குளத்திற்குள் கீச்சான், கரிச்சான்குருவி, குயில், புறா, சில்லை, அன்றில், தேன்சிட்டு, கொண்டலாத்தி, கதிர்குருவி உள்பட ஏராளமான உள்ளூர்ப் பறவைகள் இருப்பதை சூழலியல் ஆர்வலர் கேசவமூர்த்தி அடையாளம் காண்பித்தார். அவை இனப்பெருக்கம் செய்வதற்காக அங்குள்ள மரம், புதர், தரை எனப் பல இடங்களில் கட்டியுள்ள விதவிதமான கூடுகளையும் காண்பித்து, அந்தப் பறவைகளின் இனப்பெருக்க காலத்தையும் விவரித்தார். ரசாயனப் பொறியாளரான கேசவமூர்த்தி, 'இயற்கை நடை' என்ற சூழல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளராகவும் உள்ளார். பிபிசி தமிழிடம் பேசிய அவர், ''எலத்துார் குளத்தைப் பாதுகாப்பதில் இப்போது உள்ளூர் மக்களின் பங்களிப்பு பிரதானமாகிவிட்டது. அரசின் அறிவிப்புக்குப் பின், சூழலியல் ஆர்வலர்கள், பறவை ஆய்வாளர்கள், மாணவர்கள் அதிகளவில் வருகின்றனர். இங்கேயும் நாகமலை குன்றிலும் நாங்கள் இயற்கை நடைக்கு அழைத்துச் சென்று இங்குள்ள உயிர்ச் சூழல், பறவைகளின் முக்கியத்துவத்தை விளக்கிச் சொல்கிறோம்'' என்றார். படக்குறிப்பு, இயற்கை நடை ஒருங்கிணைப்பாளர் கேசவமுர்த்தி தொல்லியல் மற்றும் சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த நாகமலை குன்று இந்த குளத்திலிருந்து 3 கி.மீ. தொலைவில் நாகமலை குன்று உள்ளது. நாகமலை குன்றின் அடிவாரப் பகுதிகளையும், குன்றின் உச்சியிலுள்ள பாறைப் பகுதிகளையும் பிபிசி தமிழ் நேரில் பார்வையிட்டது. நாகமலை குன்றின் உச்சியிலும், மலையடிவாரத்திலும் முருகன் கோவில் அமைந்துள்ளது. மேலே செல்ல 700க்கும் மேற்பட்ட படிக்கட்டுகள் உள்ளன. மலையின் அடிவாரத்தில் தனிப்பாறையில் ஆஞ்சநேயரின் புடைப்புச் சிற்பம் கொண்ட தனிக்கோவில் உள்ளது. நாகமலை குன்று பகுதியில் புலிக்குத்தி நடுகல், பாறைத்தட்டுகள் போன்ற வரலாற்றுக் காலத்துக்கு முந்தைய தொல்லியல் சான்றுகள் அதிகம் இருப்பதாக வரலாற்று ஆய்வாளர் க.ராஜன் தனது 'கொங்கு களஞ்சியம்' என்ற நுாலில் குறிப்பிட்டுள்ளார். குன்றில் 5 இடங்களில் உள்ள பாறை ஓய்விடங்கள் (Caves) பண்டைக்கால வேட்டைச் சமூகத்திற்கான வாழ்விடங்களாக இருந்திருக்கலாம் என்கிறது அவரது நுால். நாகமலை குன்றின் மலையடிவாரப் பகுதியில் இருந்த மரங்களில் பகல் நேரத்திலேயே ஏராளமான பறவைகள் இருந்தன. அந்தக் குன்றின் உச்சியில் ராசாளிக் கழுகுகள் இணையாக வசிப்பதாக சூழலியல் ஆர்வலர்கள் கூறினர். அவற்றில் ஒரு ராசாளிக் கழுகு வெளியில் வலம் வந்ததையும் நேரில் பார்க்க முடிந்தது. படக்குறிப்பு, நாகமலை குன்று, முருகன் கோவில் நாகமலை குன்று உச்சியைச் சுற்றிலும் உள்ள பாறைப் பகுதிகளில் 3 இடங்களில் நீர்ச்சுனைகள் உள்ளன. அவற்றில் கந்தன் தேரை இருப்பதை நேரில் காண்பித்த சூழலியல் ஆர்வலர் கேசவமூர்த்தி, எலத்துார் குளத்திற்கும், நாகமலை குன்றுக்கும் ஓர் உணவுச் சங்கிலி இருப்பதையும் அவர் விவரித்தார். அரிய வகைப் பறவைகள் மட்டுமின்றி, அரிதான பல தாவரங்கள் இங்கு இருப்பதையும் தாவரவியல் வல்லுநர்களின் உதவியுடன் சூழல் அறிவோம் அமைப்பு ஆவணப்படுத்தியுள்ளது. எலத்துார் பேரூராட்சியின் பல்லுயிர்ப் பெருக்க பாதுகாப்புக் குழு (Biodiversity Management Committee), குளம் மற்றும் குன்று பகுதிகளைப் பாதுகாப்பதில் முக்கியப் பங்காற்றி வருகிறது. பறவைகளை நாட்டுத் துப்பாக்கி வைத்து வேட்டையாடுதல், மரம் வெட்டுதல், வலை விரித்து மீன்களைப் பெருமளவில் பிடித்தல், கால்நடை மேய்ச்சல், பேரூராட்சி குப்பைகளைக் குளத்தில் கொட்டுதல் போன்றவை சூழல் அறிவோம் மற்றும் பல்லுயிர் பாதுகாப்புக் குழுவின் முயற்சிகளால் பெருமளவில் தடுக்கப்பட்டு இருப்பதாக பல்லுயிர்ப் பெருக்க பாதுகாப்புக் குழுவின் தலைவர் நாகராஜன் தெரிவித்தார். படக்குறிப்பு, நாகமலை குன்று உள்ளூர் மக்களின் கோரிக்கைகளும், வனத்துறையின் முன்மொழிவும் குளம் மற்றும் குன்றின் சூழலியல் முக்கியத்துவத்தை உணர்த்துவதற்காக சூழல் அறிவோம் குழுவினர், சுற்றுவட்டாரத்திலுள்ள 130க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்களை இங்கே அழைத்து வந்து 'இயற்கை நடை' என்ற பெயரில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளனர். ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் வாயிலாகவும் இதைச் செய்து வருகின்றனர். ''பல்லுயிர்ப் பெருக்கப் பாதுகாப்புச் சட்டம் (Biological Diversity Act, 2002) மக்கள் பங்களிப்பை உறுதி செய்வதால்தான், பல்லுயிர்ப் பெருக்க பாதுகாப்புத் தலம் என்ற கோரிக்கையை முன் வைத்தோம். இதில் இந்த இடங்களில் வளர்ச்சிப் பணிகளை மக்கள்தான் முடிவு செய்ய முடியும். இவை தவிர்த்து, அரசிடம் அடுத்த 5 ஆண்டுகள், 10 ஆண்டுகளுக்கு என சில கோரிக்கைகளை முன் வைத்துள்ளோம்'' என்றார் தீபக். சூழல் அறிவோம், பல்லுயிர்ப் பெருக்க பாதுகாப்புக்குழு மற்றும் உள்ளூர் சூழல் ஆர்வலர்கள் முன் வைக்கும் சில கோரிக்கைகள்: குளம் மற்றும் குன்றின் பகுதிகளில் பறவை வேட்டையை முற்றிலும் தடுக்க, 2 இடங்களிலும் வேட்டைத் தடுப்புக் காவலர்களை நியமிக்க வேண்டும். அதில் உள்ளூர் மக்களுக்கு முன்னுரிமை தர வேண்டும். பல்லுயிர்ப் பெருக்க பாதுகாப்புத் தல எல்லையை வரையறுத்து, நிறைய அறிவிப்புப் பலகைகள் வைக்கப்பட வேண்டும். தாவரங்கள், உயிர்களின் வாழ்விடம் பாதிக்கும் வகையில் நில அமைப்பில் எந்த மாற்றங்களையும் செய்யக்கூடாது. குளத்தில் நம்பியூர் கழிவுநீர் கலக்காமல் சுத்திகரிப்பு செய்ய சுத்திகரிப்பு நிலையம் அமைத்து, சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரையும் வேறு வழியில் வெளியே கொண்டு செல்ல வேண்டும். இந்தக் கோரிக்கைகள் குறித்து சத்தியமங்கலம் புலிகள் காப்பகக் கள இயக்குநர் ராஜ்குமாரிடம் பிபிசி தமிழ் கேட்டபோது, ''இத்தகைய தலங்களை பல்லுயிர்ப் பெருக்கப் பாதுகாப்புக் குழுதான் பராமரிக்க வேண்டும். ஆனால் பறவைகள் வாழ்விடம் என்ற வகையில் வனத்துறையும் அதைக் காக்க வேண்டிய அவசியம் உள்ளது. மாவட்ட ஆட்சியர் கந்தசாமியின் ஆலோசனைப்படி சில முன்மொழிவுகளைத் தயார் செய்து வருகிறோம்'' என்றார். "வனத்துறைக்கு வெளியே உள்ள உயிர்ச்சூழல் முக்கியத்துவம் உள்ள இடங்களைப் பாதுகாக்க மத்திய அரசின் ஒருங்கிணைந்த உயிரியல் வாழ்விடப் பாதுகாப்பு மேம்பாட்டுத் திட்டத்தில் நிதி கோரி முன்மொழிவு அனுப்பியிருந்தோம். அந்த நிதி கிடைக்கவில்லை" என்றும் அவர் தெரிவித்தார். வேட்டைத் தடுப்புக் காவலர்களை நியமிக்க அனுமதி கிடைக்கும் வரை, தற்போது வனத்துறையினர் இவ்விரு இடங்களையும் அவ்வப்போது கண்காணித்து வருவதாகவும் அவர் கூறினார். ''நாகமலை குன்றை அப்படியே பாதுகாத்தால் போதுமானது. எலத்துார் கரையில் சூழல் நடை பயிலும் வகையில் ஒரு சிறிய நடைபாதை அமைத்து, சுற்றிலும் அங்குள்ள பறவைகள், அவற்றைப் பற்றிய தகவல்களைத் தரும் பலகைகளை வைக்கத் திட்டமிட்டுள்ளோம். கரைப் பகுதிகளில் ஆலமரங்களை நட்டுப் பராமரிக்கும் திட்டமும் உள்ளது. சூழல் சுற்றுலாவை உருவாக்கினாலும் அதுவும் அங்குள்ள மக்களின் பங்களிப்போடுதான் செயல்படுத்தப்படும்.' என்றார் கள இயக்குநர் ராஜ்குமார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/ckg16k3xxlro
  11. 6 இடங்களில் மட்டுமே வெற்றி: பிகாரில் காங்கிரஸ் படுதோல்வி ஏன்? 5 முக்கிய காரணங்கள் பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, கோப்புப் படம் கட்டுரை தகவல் தில்நவாஸ் பாஷா பிபிசி செய்தியாளர் 15 நவம்பர் 2025, 08:04 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் பிகார் சட்டப்பேரவையில் உள்ள 243 இடங்களில் 202 இடங்களை வென்று தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. ராஷ்டிரிய ஜனதா தளம், இந்திய தேசிய காங்கிரஸ் மற்றும் பிற கட்சிகளின் மகா கூட்டணி மிகப்பெரிய மற்றும் எதிர்பாராத தோல்வியைச் சந்தித்துள்ளது. காங்கிரஸ் கட்சியில் நிலைமை இன்னும் மோசம். அக்கட்சி போட்டியிட்ட சுமார் 60 இடங்களில் 6 இடங்களை மட்டுமே வென்றது. இந்த முறை, பிகார் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் 8.71 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளது. 2020 சட்டமன்றத் தேர்தலில் அது 9.6 சதவீதமாக இருந்தது. அந்த நேரத்தில் காங்கிரஸ் 70 இடங்களில் வேட்பாளர்களை நிறுத்தியிருந்தது. கடந்த தேர்தலில் காங்கிரஸ் 19 இடங்களை வென்றிருந்தது. கடந்த சில தசாப்தங்களாக பிகார் அரசியல் ரீதியாக காங்கிரசுக்கு மிகவும் கடினமாக உள்ளது. 2015 இல் காங்கிரஸ் 27 இடங்களை வென்றது. 2010 இல், அது நான்கு இடங்களை மட்டுமே வென்றிருந்தது. இந்த முறை காங்கிரஸ் ஆறு இடங்களை மட்டுமே வென்றுள்ளது. அதாவது ஒவ்வொரு பத்து வேட்பாளர்களில் ஒருவர் மட்டுமே வெற்றி பெற்றனர். காங்கிரஸின் இந்த மோசமான செயல்பாடு எதிர்பாராததாகவும் ஆச்சரியமாகவும் இருக்கலாம். ஆனால் தேர்தல் பிரசாரத்தின் போதே அதன் அறிகுறிகள் தென்பட்டதாக ஆய்வாளர்கள் நம்புகின்றனர். 1990 முதல் பிகாரில் காங்கிரசுக்கு முதல்வர் இல்லை, பெரும்பாலான நேரம் மாநிலத்தில் கட்சி அதிகாரத்திற்கு அப்பால்தான் காங்கிரஸ் இருந்துள்ளது. Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading அதிகம் படிக்கப்பட்டது ஒரு வீரரை கூட இழக்காமல் முகலாயர்களை வீழ்த்தி இந்தியாவை வென்ற 'ஷேர்ஷா சூரி' இந்தியா அணுசக்தி நாடாக, சுதந்திரம் அடைந்த இரண்டே வாரங்களில் நேரு எடுத்த முக்கிய முடிவு உலகில் 60 லட்சம் பேரில் ஒருவருக்கு உள்ள 'தங்க' ரத்தத்தை உருவாக்க விஞ்ஞானிகள் முயற்சி தினசரி எத்தனை தேக்கரண்டி சர்க்கரை சேர்க்கலாம் தெரியுமா? End of அதிகம் படிக்கப்பட்டது தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, காங்கிரசுடன் தொடர்புடைய பெரும்பாலான தலைவர்கள், 'இந்த முடிவுக்கு தேர்தல் ஆணையமே பொறுப்பு' என்று எதிர்வினையாற்றியுள்ளனர். தேர்தல் முடிவுகளின் போது, காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பவன் கேரா, "இந்தத் தேர்தல் பிகார் மக்களுக்கும் தேர்தல் ஆணையத்திற்கும் இடையிலான போட்டி. தேர்தல் ஆணையம் வெற்றி பெறுகிறது" என்று கூறினார். மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான திக்விஜய் சிங், "இந்த முழு விளையாட்டும் போலி வாக்காளர் பட்டியல்கள் மற்றும் போலி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பற்றியது, எனது சந்தேகம் சரி என்று நிரூபிக்கப்பட்டுள்ளது" என்று கூறியுள்ளார். ஹரியாணா முன்னாள் முதல்வர் பூபிந்தர் ஹூடா, "மகா கூட்டணி ஒரு அரசாங்கத்தை அமைக்கும் என்று தோன்றியது. இந்த தோல்வி எதிர்பாராதது; காரணங்களை நாங்கள் மதிப்பாய்வு செய்வோம்." என்று கூறியுள்ளார். இருப்பினும், காங்கிரஸின் இந்த மோசமான செயல்பாட்டிற்கு, சமூக அடித்தளமின்மை, பலவீனமான கட்சிக் கட்டமைப்பு, கூட்டணியுடன் ஒருங்கிணைப்பு இல்லாமை மற்றும் வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதில் கவனக்குறைவு ஆகியவையே காரணம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். பலவீனமான சமூக அடித்தளம் பட மூலாதாரம், Getty Images பிகாரில் காங்கிரசுக்கு வலுவான சமூக அடித்தளம் இல்லை என்றும், கட்சியின் மோசமான முடிவுகளுக்கு இதுவே மிகப்பெரிய காரணம் என்றும் ஆய்வாளர்கள் நம்புகின்றனர். மூத்த பத்திரிகையாளரும் அரசியல் ஆய்வாளருமான சுரூர் அகமது கூறுகையில், "காங்கிரசுக்கு வலுவான சமூக அடித்தளம் இல்லை. உயர் சாதியினர் ஏற்கனவே கட்சியை விட்டு வெளியேறிவிட்டனர். அதேநேரம், பிற்படுத்தப்பட்ட சாதியினரும் கட்சியில் சேரவில்லை." "காங்கிரஸ் ஒரு சித்தாந்த அடிப்படையிலான கட்சி, ஆனால் சாதி மற்றும் சமூக இயக்கவியல் பிகார் அரசியலில் ஆதிக்கம் செலுத்துகிறது. தேர்தல் முடிவுகளை பாதிக்கும் அளவுக்கு வலுவான சமூக அடித்தளம் கட்சிக்கு இல்லை." அதே நேரத்தில், பிகாரின் முன்னணி இந்தி நாளிதழான பிரபாத் கபரின் மாநிலத் தலைவரான அஜய் குமார், பிகாரில் பலவீனமடைந்து வரும் தனது அடித்தளத்தை மீண்டும் ஒன்றிணைக்க காங்கிரஸ் எந்த தீவிர முயற்சியும் எடுக்கவில்லை என்று நம்புகிறார். "பிகாரில் காங்கிரசின் சமூக அடித்தளம் படிப்படியாக பலவீனமடைந்து வருகிறது. 2005 முதல், கட்சி அதன் பழைய அடித்தளத்துடன் மீண்டும் இணைவதற்கு உறுதியான முயற்சியை மேற்கொள்ளவில்லை. மக்களவைத் தேர்தலின் போது ராகுல் காந்தி தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட சாதியினருடன் இணைய முயன்றார், ஆனால் இந்த தேர்தலில் அந்த முயற்சி தோல்வியடைந்தது" என்று அஜய் குமார் கூறுகிறார். காங்கிரஸ் கட்சி தனது சமூக அடித்தளத்தை வலுப்படுத்த எந்த தீவிர முயற்சிகளையும் எடுக்கவில்லை என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். பத்திரிகையாளர் நச்சிகேதா நாராயண் கூறுகையில், "தேர்தலுக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு ராகுல் காந்தி பிற்படுத்தப்பட்ட வகுப்புகள் தொடர்பான தீர்மானத்தை வெளியிட்டார், ஆனால் கட்சி அதை விளம்பரப்படுத்தவில்லை. இதன் விளைவாக, பிற்படுத்தப்பட்ட சாதியினரிடையே கட்சியின் செல்வாக்கு பலவீனமாகவே இருந்தது. பாஜக மற்றும் ஜே.டி.யு.வின் வலுவான சமூக மற்றும் நிறுவன ரீதியான உத்திகள் தேர்தல்களில் சிறப்பாக பலன் தந்துள்ளன" கருத்தியல் சவால்கள் பட மூலாதாரம், Getty Images பாரதிய ஜனதா வலுவான இந்துத்துவா நிகழ்ச்சி நிரலைக் கொண்டுள்ளது. கடந்த பத்தாண்டுகளில் அக்கட்சி பல தேர்தல்களில் வெற்றி பெற்றுள்ளது. ஹரியாணா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களுக்குப் பிறகு, இப்போது பாஜகவின் தே.ஜ. கூட்டணி பிகாரிலும் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. தேர்தல் பிரசாரத்தின் போது, பாஜக தலைவர்கள் தங்கள் சித்தாந்த அடிப்படையை வெளிப்படுத்துவதில் எந்த தயக்கமும் காட்டவில்லை. மூத்த பத்திரிகையாளர் சுரூர் அகமது கூறுகையில், "காங்கிரஸ் எதிர்கொள்ளும் ஒரு பெரிய சவால் என்னவென்றால், மக்களை அதன் சித்தாந்தத்துடன் இணைக்க முடியவில்லை. பிகார் மக்கள் காங்கிரஸின் சித்தாந்தம் மற்றும் உத்தி இரண்டையும் நிராகரித்துவிட்டனர். ஆனால் இந்த சவால் பிகாரில் மட்டும் அல்ல. இடது-மையவாத கட்சிகள் பிகாரில் மட்டுமல்ல, நாடு முழுவதும் சவால்களை எதிர்கொள்வதால், காங்கிரஸ் தனக்குள்ளேயே ஆழமாக சிந்திக்க வேண்டும். மறுபுறம், வலதுசாரிக் கட்சிகள் இன்னும் வலுவடைந்து வருகின்றன." என்றார். சமூக ஊடகங்கள் மற்றும் தகவல் யுகத்தில் மக்கள் உணர்ச்சி ரீதியாக அதிகம் பாதிக்கப்படுகிறார்கள் என்றும் ஆய்வாளர்கள் நம்புகின்றனர். காங்கிரஸ் தேர்தலில் போட்டியிடும் பிரச்னைகள் சித்தாந்தம் சார்ந்தவை, ஆனால் உணர்ச்சி ரீதியான தொடர்பு இல்லை. "சமூக ஊடகங்கள் மக்களின் வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறிவிட்டதாலும், தகவல்களின் பெருக்கம் அதிகரித்துள்ளதாலும், மக்கள் சிந்தனையை விட உணர்ச்சிவசப்பட்டே உள்ளனர். காங்கிரஸ் மற்றும் உலகெங்கிலும் உள்ள பிற இடது-மையவாதக் கட்சிகள் இந்த சவாலை எதிர்கொள்கின்றன. வலதுசாரிக் கட்சிகளைப் போல மக்களுடன் உணர்ச்சி ரீதியாக இணையவோ அல்லது அவர்களின் உணர்ச்சிகளைப் பாதிக்கவோ அவர்களால் முடியவில்லை" என்று சுரூர் அகமது கூறுகிறார். 'வாக்கு திருட்டு பரப்புரை எடுபடவில்லை' பட மூலாதாரம், Getty Images பிகார் சட்டமன்றத் தேர்தல்களில், காங்கிரஸ் தனது அறிக்கையில் வேலையின்மை, சமூக நீதி, இடஒதுக்கீடு, இலவச மின்சாரம், மோசமான நலத்திட்டங்கள், சுகாதாரம் மற்றும் கல்வி போன்ற பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தது. ஆனால் கட்சியின் தேர்தல் பிரசாரத்தில் பிகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் மற்றும் 'வாக்கு திருட்டு' போன்ற பிரச்னைகளே ஆதிக்கம் செலுத்தின. காங்கிரஸ் தொடர்பான ஊடக செய்திகளிலும் இது பிரதிபலித்தது. வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம் மற்றும் 'வாக்கு திருட்டு' பிரச்னைகளுடன் பிகார் மக்களை காங்கிரசால் இணைக்க முடியவில்லை என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர். இது தேர்தலில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர். மூத்த பத்திரிகையாளர் நச்சிகேதா நாராயண் கூறுகையில், "வாக்கு திருட்டை ஒரு தேர்தல் பிரச்னையாக மாற்றுவதை பிகார் மக்கள் புரிந்து கொள்ளவில்லை, இது காங்கிரசுக்கு சிக்கல்களை உருவாக்கியது." பிகாரில் முதல் கட்ட வாக்குப்பதிவுக்கு ஒரு நாள் முன்பு, ஹரியாணா சட்டமன்றத் தேர்தலின் போது வாக்குகள் திருடப்பட்டதாகக் ராகுல் காந்தி கூறினார். பாரதிய ஜனதா மற்றும் தேர்தல் ஆணையம் மீது அவர் பல குற்றச்சாட்டுகளை சுமத்தினார். "பிகார் மக்களால் இந்தப் பிரச்னையைப் புரிந்து கொள்ள முடியவில்லை. மக்கள் வாக்களிக்கப் போகிறார்கள், அவர்களின் வாக்குகள் திருடப்படுவதாக ராகுல் காந்தி கூறிக் கொண்டிருந்தார்" என்று நச்சிகேதா நாராயண் கூறுகிறார். "ஒரு கட்சி தெளிவான நிகழ்ச்சி நிரலைக் கொண்டிருக்கும் போது, சுறுசுறுப்பாக இயங்கும் போது, மக்களுடன் இணைந்திருக்கும் போது சிறப்பாகச் செயல்படுகிறது. பிகார் தேர்தலிலும் காங்கிரஸ் தனது நிகழ்ச்சி நிரலை செயலாக்க தவறிவிட்டது." மறுபுறம், லாலுபிரசாத் ஆட்சி பற்றி முன்வைக்கப்படும் 'காட்டாட்சி' என்ற விமர்சனத்தை தேஜ கூட்டணி தொடக்கத்திலிருந்தே தனது பிரசாரத்தின் அடிப்படையாக வைத்திருந்தது. "தேஜ கூட்டணியின் மிகவும் வெற்றிகரமான உத்தி என்னவென்றால் தங்கள் ஆட்சியின் குறைபாடுகள் குறித்து கவனம் செலுத்தவோ அல்லது அது விவாதத்திற்கு வரவோ அனுமதிக்கவில்லை, மாறாக லாலுவின் சகாப்தத்தை தலைப்புச் செய்திகளில் வைத்திருந்தனர். விவாதமும் அதைச் சுற்றியே இருந்தது" என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர். "காங்கிரஸ் மற்றும் மகா கூட்டணி கட்சிகள் இந்த பிரசார போரில் தோற்றன" என்று சுரூர் அகமது கூறுகிறார். காட்டாட்சி என்று குறிப்பிட்டு தேஜகூ செய்த பிரசாரம் வெற்றிகரமாக அமைய, "அதனை எதிர்கொள்ள காங்கிரஸிடம் எந்தவொரு உத்தியோ அல்லது எதிர் வாதமோ இல்லை" என்று நச்சிகேதா நாராயண் கூறுகிறார். கூட்டணியில் ஒருங்கிணைப்பு இல்லாமை பட மூலாதாரம், Getty Images பிகார் தேர்தலில், ஒருபுறம் புதிய கட்சிகளைச் சேர்ப்பதன் மூலம் தேஜகூ வலுவடைந்து வந்தது, மறுபுறம், மகா கூட்டணியின் முக்கிய கட்சிகளான காங்கிரஸ் மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் இடையே ஒருங்கிணைப்பு இல்லாமையும், நம்பிக்கையின்மையும் காணப்பட்டன. மகா கூட்டணியில் எல்லாம் நன்றாக இருக்கிறது என்பதை உறுதிப்படுத்த இரு கட்சிகளின் தலைவர்களும் பாட்னாவில் ஒரு கூட்டு பத்திரிகையாளர் சந்திப்பை நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. கூட்டாளிகளுடன் ஒருங்கிணைப்பு இல்லாதது மகா கூட்டணியில் தெளிவாகத் தெரிந்தது என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர். "பிகாரில், காங்கிரஸ் கட்சி தனது கட்டமைப்பை வலுப்படுத்துவதிலோ அல்லது கூட்டணியுடன் ஒருங்கிணைவதிலோ கவனம் செலுத்தவில்லை. மண்டல் கமிஷனுக்குப் பிறகு, லாலுபிரசாத் யாதவுடன் நீடிப்பதா அல்லது தனியே நிற்பதா என்பதில் காங்கிரஸ் கட்சிக்குள் மோதல் ஏற்பட்டது. பிகாரில் மாநில காங்கிரசாரின் கருத்து எதுவாக இருந்தாலும், கட்சித் தலைமை ஆர்ஜேடியுடன் கூட்டணி வைப்பதை தேர்வு செய்தது. இந்தக் கூட்டணி பயன் தரவில்லை என்று தோன்றுகிறது" என்று அஜய்குமார் கூறுகிறார். காங்கிரஸ் - ஆர்ஜேடி கூட்டணி தொடர்பாக எழுந்த குழப்பமும் தேர்தல் முடிவுகளில் தாக்கத்தை செலுத்தியிருக்கலாம் என்று சுரூர் அகமது நம்புகிறார். இருப்பினும், காங்கிரஸ் மகா கூட்டணியிலிருந்து பிரிந்திருந்தால், நிலைமை இன்னும் மோசமாக இருந்திருக்கும் என்று அவர் நம்புகிறார். "ஆர்ஜேடி கூட்டணியில் இருந்து காங்கிரஸ் பிரிந்திருந்தால், அது ஒரு பெரிய தவறாக இருந்திருக்கும். ஏனெனில் அவ்வாறு செய்திருந்தால், அதன் வாக்கு சதவீதம் மிகவும் குறைந்து பிகாரில் தன் இருப்பைக் காப்பாற்றவே காங்கிரஸ் போராடியிருக்கும்" என்று சுரூர் அகமது கூறுகிறார். "காங்கிரசுக்கும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் இடையே ஒருங்கிணைப்பு இல்லாதது ஒரு முக்கிய காரணியாக இருந்தது. சில தொகுதிகளில் நட்புரீதியான போட்டிகள் நடந்தன, இது தேர்தல் உத்திக்கு தீங்கு விளைவிக்கும்." என்று பத்திரிகையாளர் நச்சிகேதா நாராயண் கூறினார். கட்டமைப்பு பலவீனம், வேட்பாளர் தேர்வு பற்றி எழும் கேள்விகள் பிகாரில் காங்கிரஸ் கட்சியில் வலுவான களப் பணியாளர்கள் அல்லது அர்ப்பணிப்புள்ள தொண்டர்கள் இல்லை. சமீபத்திய ஆண்டுகளில் கட்சி கட்டமைப்பு ரீதியாக இன்னும் பலவீனமாகிவிட்டதாக ஆய்வாளர்கள் நம்புகின்றனர். காங்கிரசின் வேட்பாளர் தேர்வு குறித்தும் ஆய்வாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர். "காங்கிரசுக்குள் கட்சி கட்டமைப்பு வலுவாக இல்லை. நடுத்தர வர்க்கத்தினரும் சில ஊக்கமுள்ள மக்களும் காங்கிரசுடன் தொடர்புடையவர்கள், ஆனால் அது பெரிய அளவில் ஒரு வலுவான அடித்தளத்தை உருவாக்க உதவவில்லை. உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாதி அல்லது பிகாரில் ஆர்ஜேடி போல பிகாரில் காங்கிரசுக்கு அர்ப்பணிப்புள்ள தொண்டர்கள் இல்லை. இது பிகாரில் காங்கிரஸ் மிகவும் வலுவான நிலையில் இல்லை என்பதை தெளிவுபடுத்துகிறது" என்று சுரூர் அகமது கூறுகிறார். "ஒரு கட்சி தெளிவான நிகழ்ச்சி நிரலைக் கொண்டிருந்தால், சுறுசுறுப்பாக இருக்கும்போது, மக்களுடன் இணைந்திருக்கும் போது சிறப்பாகச் செயல்பட முடியும். இது காங்கிரஸ் கட்சியின் நீண்டகால பற்றாக்குறையாக இருந்து வருகிறது. பிராந்தியக் கட்சிகள் வலுவாக இல்லாத மாநிலங்களில் காங்கிரஸ் ஒரு வலுவான அமைப்பை உருவாக்கியுள்ளது. வலுவான பிராந்தியக் கட்சிகள் உள்ள உத்தரபிரதேசம், பிகார் மற்றும் மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் அதுபோன்ற ஒன்றை உருவாக்குவதில் காங்கிரஸ் பெரும்பாலும் தோல்வியடைந்துள்ளது." என்று அஜித்குமார் தெரிவித்தார். அதே நேரத்தில், காங்கிரஸ் வேட்பாளர்களைத் தேர்வு செய்வதும் கூட கேள்விக்குரியதாக இருப்பதாக பத்திரிகையாளர் நச்சிகேதா நாராயண் நம்புகிறார். -இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cqjwk248jygo
  12. ஜம்மு - காஷ்மீரில் குண்டுவெடிப்பு; 7 பேர் பலி, 27 பேர் காயம் 15 Nov, 2025 | 10:26 AM இந்திய நிர்வாகத்தின் கீழ் உள்ள ஜம்மு- காஷ்மீரின் முக்கிய நகரமான ஸ்ரீநகரில் உள்ள ஒரு பொலிஸ் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட வெடிபொருட்கள் வெடித்ததில் ஏழு பேர் உயிரிழந்துள்ளதுடன் 27 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஸ்ரீநகரின் தெற்கே உள்ள நவ்காம் பகுதியில் உள்ள ஒரு பொலிஸ் நிலையத்தில் வெள்ளிக்கிழமை (14) இரவு இந்த இந்த வெடிப்பு சம்பவம் பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உயிரிழந்தவர்களில் பெரும்பாலோர் வெடிப்பு நடந்த நேரத்தில் வெடிபொருட்களை ஆய்வு செய்து கொண்டிருந்த பொலிஸார் மற்றும் தடயவியல் குழு அதிகாரிகள் ஆவார். இந்த வெடிப்பு சம்பவத்தில் ஸ்ரீநகர் நிர்வாகத்தைச் சேர்ந்த இரண்டு அதிகாரிகளும் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. காயமடைந்தவர்களில் மேலும் ஐந்து பேர் இன்னும் ஆபத்தான நிலையில் இருப்பதால், உயிரிழப்பின் எண்ணிக்கை தொடர்ந்து உயரக்கூடும் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/230399
  13. ஜடேஜாவுக்கு பதில் சஞ்சு சாம்சன் : சிஎஸ்கே முடிவால் யாருக்கு லாபம்? பட மூலாதாரம், Getty Images கட்டுரை தகவல் பிரதீப் கிருஷ்ணா பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டிருந்த சஞ்சு சாம்சன் - ரவீந்திர ஜடேஜா 'ஐபிஎல் டிரேட்' உறுதியாகியிருக்கிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய அங்கமாக விளங்கிய ஜடேஜாவையும், ஆல்ரவுண்டர் சாம் கரண் இருவரும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு டிரேட் செய்யப்பட்டிருக்கிறார்கள். அதற்குப் பதிலாக ராஜஸ்தான் அணியின் கேப்டனாக இருந்த சஞ்சு சாம்சன் சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்திருக்கிறார். ஐபிஎல் தொடரைப் பொறுத்தவரை ஏலத்தைத் தவிர்த்து 'டிரேட்' மூலமாகவும் வீரர்களை வாங்க முடியும். 2009ம் ஆண்டு முதலே ஐபிஎல் டிரேட்கள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. பல அணிகள் இதில் தொடர்ச்சியாக ஈடுபட்டிருந்தாலும், சென்னை சூப்பர் கிங்ஸ் இதில் ஆர்வம் காட்டியதில்லை. 16 சீசன்களில் அந்த அணி ஒரேயொரு முறை ராபின் உத்தப்பாவை டிரேட் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து வாங்கியது. இப்போது அதே அணியிலிருந்து சாம்சனையும் ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள். தங்கள் அணிகளின் முக்கிய அங்கமாகக் கருதப்பட்ட வீரர்கள் மாறியது ஏன்? இந்த டிரேட் யாருக்கு பெரிய அளவில் லாபகரமாக அமைந்திருக்கிறது? இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சாதகமாக அமைந்திருக்கும் விஷயங்கள் என்ன? பட மூலாதாரம், Getty Images இரு அணிகளின் முக்கிய அங்கமாக இருந்த வீரர்கள் ஜடேஜா, சாம்சன் இருவருமே தங்கள் அணிகளில் நெடுங்காலம் முக்கிய வீரர்களாக இருந்தவர்கள். 2012ம் ஆண்டு முதல் முறையாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்த ஜடேஜா, 12 சீசன்கள் அந்த அணிக்காக ஆடியிருக்கிறார். ஐபிஎல், சாம்பியன்ஸ் லீக் என 200 போட்டிகளில் சூப்பர் கிங்ஸுக்காக ஆடியிருக்கிறார் அவர். இஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோ தரவுகள்படி அந்த அணிக்காக அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் அவர் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். மேலும், அந்த அணியோடு மூன்று முறை (2018, 2021, 2023) ஐபிஎல் பட்டமும் வென்றிருக்கிறார் அவர். அதேசமயம் சஞ்சு சாம்சன் 11 ஆண்டுகள் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடியிருக்கிறார். 155 போட்டிகளில் அந்த அணிக்காக விளையாடிய அவர், இஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோ தரவுகள்படி சுமார் 32 என்ற சராசரியில் 4219 ரன்கள் (அனைத்து போட்டிகளிலும்) எடுத்திருக்கிறார். அந்த அணிக்காக அதிக ரன்கள் எடுத்திருப்பவர் அவர்தான். மேலும், 2021ம் ஆண்டு முதல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டுவந்த சாம்சன், 2022 சீசனில் அந்த அணியை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றார். 2024ல் அவர் தலைமையில் அந்த அணி மூன்றாவது இடம் பிடித்தது. இப்படி அந்த அணிகளின் பெரிய அங்கமாக இருந்த வீரர்களை இரு அணிகளும் டிரேட் செய்ய முன்வந்தது பலருக்கும் ஆச்சர்யமளிப்பதாக உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் சொன்ன காரணம் என்ன? இந்த டிரேட் உறுதியான பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சமூக வலைதளப் பக்கத்தில், அந்த அணியின் நிர்வாக இயக்குநர் காசி விஸ்வநாதன் பேசிய வீடியோ வெளியிட்டிருந்தனர். அதில் இது மிகவும் கடினமான முடிவாக இருந்ததாகக் கூறிய அவர், தரமான இந்திய டாப் ஆர்டர் பேட்டர்களை மினி ஏலத்தில் எடுப்பது கடினம் என்பதால் இந்த முடிவை எடுத்ததாகவும் தெரிவித்தார். "ஒரு டாப் ஆர்டர் இந்திய பேட்டரின் தேவையை அணி உணர்ந்தது. ஏலத்தில் அதிக இந்திய பேட்டர்கள் இருக்கமாட்டார்கள் என்பதால் இந்த 'டிரேட் விண்டோவில்' ஒருவரை கொண்டுவருவது என்று முடிவு செய்தோம். சிஎஸ்கேவின் வெற்றிப் பயணத்தில் முக்கிய அங்கமாக இருந்த ஜடேஜாவை விடுவது எளிதான முடிவாக இருக்கவில்லை. சிஎஸ்கே நிர்வாகம் எடுத்த முடிவுகளிலேயே இதுதான் கடினமானது என்றுகூட சொல்லலாம். இந்த சமயத்தில் அணியின் எதிர்கால மாற்றத்தை (transition) கருத்தில் கொண்டு இந்த கடினமான முடிவை எடுத்திருக்கிறோம். ஜடேஜாவோடு கலந்துபேசி சுமுகமாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டது" என்று அந்த வீடியோவில் பேசியிருந்தார் காசி விஸ்வநாதன். அதுமட்டுமல்லாமல், அணியின் பல வீரர்கள் தங்கள் கரியரின் கடைசி கட்டத்தில் இருப்பதால், எதிர்காலத்துக்கான ஓர் அணியைக் கட்டமைக்கும் நோக்கோடு இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். அதுபற்றிப் பேசிய அவர், "தன் 'வைட் பால்' கரியரின் கடைசி கட்டத்தில் இருப்பதால் ஜடேஜாவும் மாற்றம் தரும் வேறு வாய்ப்புகளுக்குத் தயாராகத்தான் இருந்தார். சாம் கரணும் எங்களுக்கு சீரான செயல்பாட்டைக் கொடுத்திருக்கிறார். நான் முன்பே சொன்னதுபோல் இவர்கள் இருவரையும் விடுவது மிகவும் கடினமான முடிவுகளுள் ஒன்று. அணியின் பல வீரர்கள் தங்கள் கரியரின் கடைசி கட்டத்தில் இருப்பதால், எதிர்காலத்துக்கான ஒரு அணியை அடுத்த ஒருசில ஆண்டுகளில் கட்டமைப்பது மிகவும் முக்கியம்." என்றார். இந்நிலையில், சாம்சனை எதிர்காலத்துக்கான ஒரு வீரர் என அவர் குறிப்பிட்டார். "சஞ்சு சாம்சன் சுமார் 4500 ரன்களுக்கு மேல் எடுத்திருக்கும் ஒரு அனுபவ ஐபிஎல் பேட்டர். அவர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு கேப்டனாகவும் செயல்பட்டிருக்கிறார். அவருக்கு கிட்டத்தட்ட 30 வயது தான் (31 வயது) ஆகிறது. அதனால் எதிர்காலத்துக்கு இது நல்ல முடிவாக இருக்கும் என்று நாங்கள் கருதினோம்" என்று சாம்சனை டிரேட் செய்ததற்கான காரணத்தை அவர் தெரிவித்தார். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, தோனி, ரெய்னா தவிர்த்து சூப்பர் கிங்ஸுக்காக 200 போட்டிகள் ஆடிய ஒரே வீரர் ஜடேஜா தான் ராஜஸ்தான் ராயல்ஸ் & ஜடேஜா சொன்னது என்ன? இந்த டிரேட் பற்றிப் பேசிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கிரிக்கெட் இயக்குநர் குமார் சங்கக்காரா, "ஜடேஜா மீண்டும் அணிக்குத் திரும்புவது சிறப்பான தருணம். அவருக்கு இந்த அணியை, ரசிகர்களை நன்கு தெரியும். கடந்த சில ஆண்டுகளில் அனைத்து ஏரியாவிலும் பங்களிக்கக்கூடிய ஒரு சிறந்த வீரராக அவர் உருவெடுத்திருக்கிறார். அவருடைய அனுபவம், அமைதியான தன்மை, போட்டித்தன்மை ஆகியவை ஒரு நல்ல எதிர்காலத்தை நாங்கள் கட்டமைக்க உதவும்" என்று கூறினார். சாம் கரண், ஜடேஜா இருவரும் தங்களுக்கு பல பரிமாணங்களில் உதவுவதாக அவர் தெரிவித்தார். "சாம் கரண் கொஞ்சம் வேறு மாதிரியான வீரர் என்றாலும், அவரும் முக்கியமான சில பரிமாணங்கள் கொண்டுவருகிறார். அவர் பயமறியாத வீரர். எளிதில் தன்னை தகவமைத்துக்கொள்பவர். நெருக்கடியான சூழ்நிலைகளை சமாளிக்கக்கூடியவர். பேட்டிங், பௌலிங் இரண்டிலும் பங்களிக்கக்கூடியவர்" என்றும் அவர் கூறினார். 2008 மற்றும் 2009 சீசன்களில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய ஜடேஜா, முதல் ஐபிஎல் சீசனில் அந்த அணியோடு சாம்பியன் பட்டமும் வென்றார். அந்த அணியோடு மீண்டும் இணைவது பற்றிப் பேசிய ஜடேஜா, "எனக்கு முதல் மேடையும், முதல் வெற்றிச் சுவையையும் கொடுத்த அணி ராஜஸ்தான் ராயல்ஸ். இங்கு மீண்டும் வருவது மகிழ்ச்சியளிக்கிறது. இது எனக்கு ஒரு அணி மட்டுமல்ல. இது என் வீடு. இங்குதான் என் முதல் ஐபிஎல் கோப்பையை வென்றேன். இப்போது இருக்கும் வீரர்களோடு இணைந்து இன்னும் நிறைய கோப்பைகள் வெல்ல ஆசைப்படுகிறேன்" என்றார். இந்த டிரேட் மூலம் யாருக்கு வெற்றி? இரண்டு அணிகளுமே பெரிய வீரர்களை டிரேட் செய்திருந்தாலும், இதனால் யாருக்கு அதிக லாபம் என்ற விவாதங்களும் எழவே செய்திருக்கின்றன. இதுபற்றிப் பேசிய தமிழ்நாடு ஆண்கள் அண்டர் 19 அணியின் தலைமைப் பயிற்சியாளரும் முன்னாள் சிஎஸ்கே வீரருமான யோ மஹேஷ், சூப்பர் கிங்ஸுக்கு சற்று கூடுதல் லாபம் என்று தெரிவித்தார். "இந்த டிரேடைப் பொறுத்தவரை இரண்டு அணிகளுக்குமே வெற்றி தான். இரு அணிகளுமே அவர்களுக்கு இருந்த வெற்றிடத்தை நிரப்பியிருக்கிறார்கள். ஏனெனில், சாம்சன் பல கட்டங்களை நிரப்புகிறார். அவர் ஒரு நீண்ட காலத்துக்கான வீரர், ஒரு நல்ல டாப் ஆர்டர் பேட்டர், சிறந்த கீப்பர், அதுமட்டுமல்லாமல் கேப்டன்ஸி அனுபவம் கொண்ட வீரரும் கூட. சூப்பர் கிங்ஸுக்கு தேவையாக இருந்த பல வெற்றிடங்களை அவர் நிரப்புகிறார்" என்று கூறினார் யோ மஹேஷ். நீண்ட நாள்களாக ஒரு தரமான கீப்பரை சூப்பர் கிங்ஸால் வாங்க முடியாமல் இருந்த நிலையில், இந்த டிரேட் அவர்களுக்கு சாதமாக அமைந்திருப்பதாகக் கூறினார் அவர். மேலும், இவ்விரு வீரர்களின் வயதைக் கணக்கில் கொள்ளும்போது, சூப்பர் கிங்ஸுக்கு இந்த ஒப்பந்தம் சற்று கூடுதல் சாதகமாக அமைந்திருப்பதாக அவர் கூறினார். சாம்சனுக்கு 31 வயதாகும் நிலையில், ரவீந்திர ஜடேஜா அடுத்த மாதம் 37 வயதில் அடியெடுத்து வைப்பார். "சாம்சன் - சூப்பர் கிங்ஸ் எதிர்காலத்துக்கான அடித்தளம்" சாம்சனை மையமாக வைத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அடுத்த 5 ஆண்டுகளுக்கான ஒரு அணியைக் கட்டமைக்க நல்ல வாய்ப்பு கிடைத்திருப்பதாகக் கூறுகிறார் யோ மகேஷ். "சாம்சன் ஒரு சிறந்த வீரர் என்பதைத் தாண்டி, அவர் ஒரு பெரிய 'பிராண்ட்'. அவருக்கு நல்ல பெயரும் மதிப்பும் இருக்கிறது. மார்க்கெட்டிங் ரீதியாகவும், வணிக ரீதியாகவும் அது சூப்பர் கிங்ஸுக்கு பெரிய சாதகம். அதுமட்டுமல்லாமல் சாம்சன் தமிழ் பேசக்கூடியவர். ரஜினிகாந்த் ரசிகர் வேறு. இதெல்லாம் நம் ரசிகர்களுக்குப் பிடித்துப்போகும். சாம்சனை நம்முள் ஒருவனாக அவர்கள் பார்க்கத் தொடங்குவார்கள். அது ருதுராஜ் கெய்க்வாடுக்கு நடக்கவில்லை" என்றார் அவர். அதுமட்டுமல்லாமல் சாம்சனை உடனடியாக கேப்டனாக்குவது நல்லது என்றும் அவர் கருதுகிறார். "18 கோடி ரூபாய் கொடுத்து ஒரு பெரிய வீரரை வாங்கிவிட்டு, சிஎஸ்கே தாமதம் செய்யக்கூடாது. அவரை உடனடியாக கேப்டனாக்கவேண்டும். ருதுராஜ் போன்று அவருக்கு அந்த ரோலில் செட் ஆக அவகாசம் எடுத்துக்கொள்ளாது. அவர் ஏற்கெனவே ஒரு அணியை பல ஆண்டுகளாக வழிநடத்தியிருக்கிறார். சொல்லப்போனால் அவர் தலைமையில் தான் ராஜஸ்தான் ராயல்ஸ் ஒரு சீரான முன்னேற்றத்தைக் கண்டிருந்தது. அதனால், அவர் எளிதாக அந்த இடத்தை நிரப்பிவிடுவார்" என்கிறார் யோ மகேஷ். சாம்சனை கேப்டனாக்கும் முடிவு ருதுராஜ் கெய்க்வாட் மீதான நெருக்கடியையும் குறைக்கும் என்கிறார் அவர். 2022, 2023 சீசன்களில் ஒரு பேட்டராக அவர் எப்படி சோபித்தாரோ, அதே மாதிரியான செயல்பாட்டை கேப்டன் பதவி இல்லாதபோது அவரால் நெருக்கடியின்றி கொடுக்கமுடியும் என்பது அவரது வாதமாக இருக்கிறது. பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, சூப்பர் கிங்ஸ் அணியின் கீப்பராக யார் செயல்படுவார் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது கீப்பர் யார்? தோனியா, சாம்சனா? இந்திய அணியின் விக்கெட் கீப்பராக செயல்பட்டுவரும் சாம்சன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்திருப்பதன்மூலம், கீப்பராக யார் செயல்படுவார் என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது. ஒருசில வல்லுநர்கள், இது தோனி 'இம்பேக்ட்' வீரராக விளையாடுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுக்கும் என்றார்கள். அவர் முழங்கால் பிரச்னையால் தொடர்ந்து அவதிப்படுவதால் இப்படியொரு வாதத்தை சிலர் முன்வைத்தனர். அதேசமயம் தோனியின் சிறப்பே அணி ஃபீல்டிங் செய்யும்போது அவர் கொடுக்கும் பங்களிப்புதான் என்பதால், அவர் ஃபீல்டிங்கில் இருக்கவேண்டும் என்றும் சிலர் கூறுகின்றனர். இந்த விஷயம் பற்றிப் பேசிய யோ மகேஷ், "சொல்லப்போனால் தோனி அறிவிக்கப்படாத ஒரு 'இம்பேக்ட்' வீரராகத்தான் ஆடிக்கொண்டிருக்கிறார். கடைசி 10 பந்துகள் இருக்கும்போதுதான் ஆடவருகிறார். அவருடைய பெரிய பங்களிப்பு என்பது ஃபீல்டிங்கில் இருக்கும்போதுதான். அதேசமயம் வேறு கேப்டன்கள் இருக்கும்போது அவரும் மெல்ல தலையீட்டைக் குறைத்துக்கொண்டிருக்கிறார். இப்போதும் அதுதான் நடக்கும் என்று நம்புகிறேன். ஒருசில போட்டிகள் சாம்சன் செட் ஆகும் வரை அவர் கீப்பிங் செய்துவிட்டு, மெல்ல அவர் அந்த பொறுப்பில் இருந்து தன்னை விடுவித்துக்கொள்வார் என்று எதிர்பார்க்கலாம்" என்றார். சாம்சன் தற்போது இந்திய அணியின் விக்கெட் கீப்பராக செயல்பட்டுவருவதால் அவர் நிச்சயம் கீப்பிங் செய்யவே விரும்புவார் என்று குறிப்பிட்டார் யோ மகேஷ். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, 2023 ஐபிஎல் இறுதிப் போட்டியில் கடைசி 2 பந்துகளில் 10 ரன்கள் அடித்து சிஎஸ்கேவை வெற்றி பெற வைத்தார் ஜடேஜா ஜடேஜா: சென்னையின் இழப்பும், ராயல்ஸின் லாபமும் ரவீந்திர ஜடேஜா சென்னையில் இருந்து சென்றிருப்பது உணர்வுபூர்வமாக ரசிகர்களுக்கு மிகவும் கடினமாக இருக்கும் என்று தெரிவித்தார் யோ மகேஷ். "இத்தனை ஆண்டுகள் ரசிகர்கள் அவரை தங்களுள் ஒருவராகப் பார்த்திருக்கிறார்கள். அவரும் அதை திரும்ப வெளிப்படுத்தியிருக்கிறார். இதை ஒரு வீடு என்றே கருதியிருக்கிறார். அவரும், அஷ்வினும் ஒன்றாகப் பந்துவீசி எதிரணிகளை தடுமாற வைத்த தருணங்கள், ஜடேஜா பாய்ந்து பிடித்த கேட்ச்கள், 2023 ஐபிஎல் இறுதிப் போட்டியின் கடைசி 2 பந்துகளில் பௌண்டரிகள் அடித்து அவர் வெற்றி பெறவைத்த அந்தத் தருணம்... இப்படி பல்வேறு தருணங்கள் சென்னை ரசிகர்களுக்கு அவரை மிகவும் நெருக்கமாகக் கொண்டுவந்து வைத்துள்ளன" என்றார் அவர். கடந்த 2 சீசன்களாக ஜடேஜாவின் பந்துவீச்சில் ஏற்பட்ட சிறு சரிவு அணி நிர்வாகம் இந்த முடிவை எடுப்பதற்கு ஒரு காரணமாக இருந்திருக்கலாம் என்றும் கூட அவர் கருதுகிறார். கடந்த சீசன் 32.40 என்ற சராசரியில் 10 விக்கெட்டுகள் வீழ்த்தியிருந்த ஜடேஜா, 2024 சீசனில் 46.13 என்ற சராசரியில் 8 விக்கெட்டுகள் மட்டுமே வீழ்த்தியிருந்தார். அதேசமயம், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக அவரால் சிறப்பாக செயல்படமுடியும் என்று சொல்லும் யோ மகேஷ், அதற்கான காரணத்தையும் கூறுகிறார். "கடந்த 2 ஆண்டுகளாக சேப்பாக்க ஆடுகளம் முன்பு போல் சுழலுக்கு ஒத்துழைக்கவில்லை. அது ஜடேஜாவின் செயல்பாட்டில் பிரதிபலித்தது. ஆனால், ராஜஸ்தான் ராயல்ஸின் ஹோம் கிரவுண்டான சவாய் மான்சிங் ஸ்டேடியம் அவருக்கு உகந்ததாக இருக்கும். அது பெரிய மைதானம். பந்து கொஞ்சம் மெதுவாகவும், கீழ் தங்கியும் செல்லும். அங்கு சராசரி ஸ்கோரே 160 - 170 போலத்தான் இருக்கும். அங்கு ஜடேஜாவால் பெரிய தாக்கம் ஏற்படுத்த முடியும்" என்று யோ மகேஷ் கூறினார். கடந்த சீசன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு சுழற்பந்துவீச்சே பிரதான பிரச்னையாக இருந்ததாகவும், அதை ஜடேஜா மூலம் அவர்கள் ஓரளவு தீர்த்திருப்பதாகவும் யோ மகேஷ் நம்புகிறார். அதுமட்டுமல்லாமல், சமீப ஆண்டுகளாக ஆல்ரவுண்டர்கள் இல்லாமல் அந்த அணி பல போட்டிகளில் 5 பிரதான பௌலர்களை மட்டுமே வைத்து களமிறங்கும் சூழ்நிலை பல போட்டிகளில் ஏற்பட்டிருக்கிறது. ஜடேஜா, சாம் கரண் ஆகியோரின் வருகை மூலம் அந்த பிரச்னைக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருக்கிறது என்கிறார் அவர். இதனால் தான் இந்த டிரேட் இரண்டு அணிகளுக்குமே வெற்றிகரமானது என்று குறிப்பிடுகிறார் யோ மகேஷ். எதிர்காலத்தை கணக்கில் கொள்ளும்போது சூப்பர் கிங்ஸுக்கு கூடுதல் லாபம் என்று சொல்லும் அவர், சாம்சனை ராயல்ஸ் இழந்ததை விட, ஜடேஜாவை சூப்பர் கிங்ஸ் இழந்தது உணர்வுபூர்வமாக பெரிய இழப்பு என்றும் கூறினார். -இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c8ey35nwwlpo
  14. மட்டக்களப்பில் கனமழை காரணமாக தாழ்நிலப் பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை 15 Nov, 2025 | 02:46 PM மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்துவரும் கடும் மழை காரணமாக தாழ்நிலப்பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை (15) தொடக்கம் தொடர்ந்து கடுமையான மழைபெய்துவருகின்றது. இதன்காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் வெள்ள நிலைமை ஏற்படுவதற்கான நிலை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. பேய்துவரும் கடும் மழை காரணமாக மட்டக்களப்பு நகரின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள தாழ் நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. தொடர்ச்சியாக மழைபெய்யுமானால் சில பகுதிகளுக்கான போக்குவரத்துகளும் பாதிக்கப்படும் நிலைமைகள் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதேநேரம், கடந்த 11.11 2025 உருவான காற்றுச் சுழற்சி நகர்வதன் காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கன மழைக்கான வாய்ப்புகள் உள்ளதாக வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. அதேவேளை, இம்மழை எதிர்வரும் 20.11.2025 வரை தொடரும் வாய்ப்புள்ளது. கனமழைக்கு வாய்ப்புள்ளதனால் தாழ்நிலப் பகுதிகளில் உள்ள மக்கள் அவதானமாக இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். https://www.virakesari.lk/article/230421
  15. பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, சித்தரிப்புப் படம் கட்டுரை தகவல் பல்லப் கோஷ் அறிவியல் செய்தியாளர் 7 மணி நேரங்களுக்கு முன்னர் "பொய் சொல்லும் நபரை யாராலும் கண்டுபிடிக்க முடியாது. அப்படியே கண்டுபிடித்தாலும், அது பகுத்தறிவதன் மூலமாகவே இருக்கும். நாம் அதிகமாக மதிக்கும் 'உள்ளுணர்வின்' அடிப்படையில் அல்ல" என்கிறார் 170க்கு மேல் ஐ.க்யூ (IQ) கொண்டவரான சர் ஸ்டீபன் ஃப்ரை. பிபிசியின் 'தி செலிபிரிட்டி டிரெய்ட்டர்ஸ்' (The Celebrity Traitors) என்ற கேம் ஷோவில் இருந்து வெளியேற்றப்படுவதற்கு சற்று முன் அவர் இப்படிக் கூறினார். அந்த நிகழ்ச்சியைப் பார்த்தபோது, அவரது கோட்பாடு நிச்சயம் உண்மையாக இருக்கலாம் என்று கருதப்பட்டது. ஏனெனில், அந்த நிகழ்ச்சியில் இருக்கும் 16 "விசுவாசமான" போட்டியாளர்கள், தங்கள் மத்தியில் இருக்கும் "துரோகிகளை" கண்டுபிடிக்க வேண்டும். ஆனால், கேம் ஷோ தொடங்கி ஏழு எபிசோடுகள் கடந்த பிறகுதான் "விசுவாசமான" போட்டியாளர்கள் தங்கள் மத்தியில் இருந்த மூன்று பொய்யுரைக்கும் "துரோகிகளில்" ஒருவரையே கண்டுபிடித்துள்ளனர். பெரும்பான்மையாக சொல்லப்படும் வழக்கமான 'ஞானத்திற்கு' முரணாக சர் ஸ்டீபனின் கோட்பாடு உள்ளது. அதாவது, பல நூற்றாண்டுகளாக மக்கள் முகங்களைப் பார்த்தே ஒருவர் சொல்வது உண்மையா, பொய்யா என்பதைக் கண்டுபிடித்துவிடலாம் என்று நம்பினார்கள். இது ஒருவரது உடலில் நிகழும் மாற்றங்களைப் பகுப்பாயும் ஃபிசியோக்னோமி (physiognomy) என்றழைக்கப்படும் ஒரு பண்டைய முறை. கடந்த 19ஆம் நூற்றாண்டில் குற்றவாளிகளை அடையாளம் காண இது பயன்படுத்தப்பட்டது. அதாவது, பெரிய தாடைகள், கன்னக் கதுப்பின் எலும்புகள், சமச்சீரற்ற முக அம்சங்கள், தட்டையான அல்லது பெரிதாக இருக்கும் மூக்கு, வலிமையான கண்புருவ முகடுகள் போன்றவை "நாகரிகம் குறைவான" மனிதர்களுடன் தொடர்புடைய அம்சங்களாகக் கருதப்பட்டன. இத்தகைய தோற்றம் உடையவர்கள் சந்தேகத்திற்குரிய நபர்களாகக் கருதப்படும் அபாயம் இருந்தது. நிச்சயமாக, இது முற்றிலும் மடமைத்தனமான பார்வைதான். இது சமூக ரீதியாகவும் இன ரீதியாகவும் உருவாக்கப்படும் தப்பெண்ணங்களுடன் தொடர்புடையது. இதற்கும் அறிவியலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இன்றைய காலகட்டத்தில் இந்தக் கருத்து முற்றிலுமாக மதிப்பிழந்துள்ளது. இருப்பினும், சில நவீன ஆய்வுகள், ஒருவர் தம்மை எவ்வளவு தூரம் கவர்கிறார், அவர்களின் முக சமச்சீர்மை, முகபாவனைகள் ஆகியவற்றின் அடிப்படையில், மனிதர்களை நம்புவது, சந்தேகிப்பதில் மக்கள் ஈடுபடுவதாகக் கூறுகின்றன. இதன் மூலம், நேர்மையற்ற ஒருவரது முகத்தைக்கூட மற்றவர்களின் பார்வைக்கு மிகவும் நம்பகமான ஒன்றாகக் காட்டலாம் என்று விஞ்ஞானிகள் வாதிடுகின்றனர். அழகாக இருந்தால் நல்லவரா? மக்கள் வெளிப்புறத்தில் தெரியும் மேலோட்டமான அம்சங்களில் அதிக கவனம் செலுத்துவதாக ஆய்வுகள் கூறுகின்றன. கடந்த 2000ஆம் ஆண்டில் வெளியான ஓர் ஆய்வு, கவர்ச்சிகர தோற்றம் கொண்ட மக்கள் மிகவும் நேர்மறையாக உணரப்படுவதாகக் கூறுகிறது. அதாவது, அவர்கள் அதிக புத்திசாலிகளாக, திறமையானவர்களாக, நம்பகமானவர்களாக கருதப்படுகிறார்கள் என்று அந்த ஆய்வின் முடிவுகள் கூறுகின்றன. "எது அழகாக இருக்கிறதோ அது நல்லதாக இருக்கும் என்ற அனுமானம் இருக்கிறது" என்று கவன்ட்ரி பல்கலைக் கழகத்தின் உளவியலாளரும் விரிவுரையாளருமான ரேச்சல் மோலிட்டர் கூறுகிறார். "உங்களை ஒருவர் கவர்ந்திழுப்பதாகக் கருதினால், நேர்மறையான குணங்களாக நீங்கள் கருதும் குணங்களை அவர் கொண்டிருப்பதாக நினைத்துக் கொள்கிறீர்கள்" என்கிறார் ரேச்சல். படக்குறிப்பு, ஒருவர் பொய் சொல்கிறாரா என்பதை யாராலும் கண்டுபிடிக்க முடியாது என்கிறார் சர் ஸ்டீபன் ஃப்ரை கவர்ச்சி, அழகு ஆகியவை குறித்த பார்வை உலகம் முழுவதும் நீண்ட காலமாக பெருமளவில் வேறுபடுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், கடந்த 2015இல் வெளியான மற்றோர் ஆய்வு, கவர்ச்சி மற்றும் நம்பகத்தன்மை பற்றிய கருத்துகளை ஆராய்ந்தது. ஒரு முகம் மிகவும் பொதுவானதாகவோ அல்லது சராசரியான ஒன்றாகவோ மாறும்போது, மிகவும் கவர்ச்சிகரமான, நம்பகமான முகமாகவும் அது மாறுகிறது என்பது அந்த ஆய்வில் கண்டறியப்பட்டது. அதன்படி, ஒருவர் குறிப்பிட்ட அளவிலான கவர்ச்சியைக் கொண்டிருந்தால் அவர் மீதான நம்பகத்தன்மை அதிகமாக இருக்கிறது. அதுவே ஒருவர் அந்த வரம்பை மீறும் அளவுக்கு கவர்ச்சியாக இருக்கும்போது, அவர் குறித்த பிறரின் நம்பகத்தன்மை குறையத் தொடங்குகிறது. தன்னியக்கமாக, சுயநினைவின்றி வெளிப்படும் நமது "அனிச்சையான நம்பிக்கை", மகிழ்ச்சியாகவும் நட்புறவு கொண்ட வகையிலும் தோன்றக்கூடிய முக அம்சத்தாலும் தூண்டப்படலாம். கடந்த 2008ஆம் ஆண்டு பிரின்ஸ்டன் பல்கலைக்கழக கல்வியாளர்கள் மேற்கொண்ட தொடர் சோதனைகளில் இது நிரூபிக்கப்பட்டது. பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, முகபாவனைகளை, உடலியல் மாற்றங்களை வைத்து ஒருவர் பொய் சொல்வதைக் கண்டுபிடிக்க முடியாது என்கின்றனர் நிபுணர்கள். இந்தச் சோதனையில் பங்கேற்றவர்கள், கோபம், சோகம் அல்லது நடுநிலையான உணர்ச்சிகளை வெளிப்படுத்திய முகங்களைவிட, மகிழ்ச்சியான அல்லது புன்னகைக்கும் பாவனைகளைக் கொண்ட முகங்களை அதிக நம்பிக்கையானவை என மதிப்பிட்டனர். பிரெஞ்சு தன்னார்வலர்கள் மத்தியில் 2015ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஓர் ஆய்வில், மிகவும் உண்மையானதாக மதிப்பிடப்பட்ட புன்னகைகளைக் கொண்ட முகம் நம்பத் தகுந்தது என்றும் கருதப்பட்டதைக் கண்டறிந்தது. அதுமட்டுமின்றி, அத்தகைய முகங்களைக் கொண்டவர்கள் அதிக வருமானம் ஈட்டுபவராக இருக்கலாம் என மக்களை நினைக்க வைப்பதாகவும் இந்த ஆய்வு கண்டறிந்தது. சன்கிளாஸ், முகக்கவசம், முகத்தை மறைக்கும் வகையில் இருக்கும் நீளமான முடி ஆகியவை, நம்பகத்தன்மை அளவைக் குறைப்பதாகக் கூறுகிறார் உளவியலாளர் ரேச்சல். என் முகம் எவ்வளவு நம்பகமானது? என் முகம் எவ்வளவு நம்பகத்தன்மை கொண்டதாக இருக்கிறது எனக் கூறுமாறு சில ஆய்வாளர்களிடம் கேட்டேன். இது சற்று ஆபத்தானதாகத் தெரிந்தாலும், எனக்கு ஆர்வமாக இருந்தது. அவர்கள் முதலில், என் முகம் எவ்வளவு சமச்சீராக இருக்கிறது என்பதைப் பார்த்தார்கள். சமச்சீர் என்பது முகத்தின் இருபுறமும் எவ்வளவு சீராக இருக்கிறது என்பதாகும். படக்குறிப்பு, பல்லப் கோஷ் தனது சொந்த முகத்தின் நம்பகத்தன்மையை ஆராயுமாறு ஆய்வாளர்களிடம் கேட்டுக்கொண்டார் "மக்கள் பெரும்பாலும் சமச்சீரான முகங்களை மிகவும் அழகானவையாகக் கருதுகிறார்கள். அழகான முகங்கள் பெரும்பாலும் நம்பகமானவையாக கருதப்படுகிறது" என்று கூறினார் லண்டன் கிங்ஸ் கல்லூரியில் உளவியல் மற்றும் குற்றவியல் துறையில் விரிவுரையாளராக இருக்கும் மிர்சியா ஸ்லோடானு. அதோடு ஹேலோ விளைவு என்ற ஒன்றும் உள்ளது. அதாவது, ஒருவர் ஒரு வழியில் நல்ல விதமாகத் தென்பட்டால், அவர் பிற விஷயங்களிலும் நல்லவராக இருப்பார் என்று கருதுவது. உளவியலாளர் மிர்சா ஸ்லோடானு, "அனைவரிடமும் சிறிய அளவிலான சமச்சீரற்ற தன்மை இயல்பாக இருக்கும்" என்று விளக்கினார். ஆகையால், "சில சமச்சீர்மை அம்சங்கள் ஒருவரை நல்லவராகக் காட்டலாம். ஆனால், ஒரு முகம் மிகச் சரியானதாக இருந்தால் அது விசித்திரமாகவோ அல்லது இயற்கைக்கு மாறானதாகவோ தோன்றத் தொடங்குகிறது" என்கிறார் முனைவர் ஸ்லோடானு. இந்தக் காரணத்தாலேயே, டிஜிட்டலாக உருவாக்கப்பட்ட முகங்கள் அல்லது ரோபோக்களின் முகங்களின் சமச்சீர் மிகுந்த துல்லியத்தன்மை, பார்ப்போருக்கு விசித்திரமாகத் தோன்றுகிறது. படக்குறிப்பு, பல்லப் கோஷின் முகத்தில் உள்ள சமச்சீர்மையை முனைவர் மிலேவா ஆராய்ந்தார் (இந்தப் புகைப்படங்கள் தன்னார்வலர்களுக்கு காட்டப்பட்டவை அல்ல) என் முகத்தை எப்படி அதிகம் நம்பகமான ஒன்றாகத் தோன்ற வைப்பது என்பதைக் காட்ட, மற்றொரு ஆய்வாளரான முனைவர் மிலா மிலேவா என் புகைப்படத்தில் சில திருத்தங்களைச் செய்தார். அவர் முக சமச்சீர்மையை சிறிது மாற்றி, என் உதடுகளில் புன்னகையைக் கொண்டு வந்தார். கூடுதலாக ஒரு படி மேலே சென்று, என் முகத்தை இளமையானதாகவும் பெண்மை கொண்டதாகவும் மாற்றிக் காட்டினார். அதாவது, பெண் முகங்கள், குரல்கள், பெயர்கள் பெரும்பாலும் ஆண் முகங்களைவிட நம்பகமானவையாகக் கருதப்படுவதாக சில ஆய்வுகள் கூறுகின்றன. அதாவது, ஒரு முகம் எவ்வளவு பெண்மையுடன் தெரிகிறதோ, அவ்வளவு நம்பகமானது என மக்கள் நினைக்கிறார்கள். இந்த மாற்றங்களைச் செய்த பிறகு, அவர் 26 தன்னார்வலர்களுக்கு வெவ்வேறு மாற்றங்களுக்கு உட்படுத்தப்பட்ட என் முகத்தின் வெவ்வேறு வடிவங்களைக் காட்டினார். ஒவ்வொரு நபரும் 35 முகங்களின் புகைப்படங்களில் ஒன்றாக என் முகத்தையும் பார்த்தார்கள். அந்தத் தன்னார்வலர்கள் ஒவ்வொரு முகத்திற்கும், 1 (நம்பகமானதல்ல) முதல் 9 (மிகவும் நம்பகமானது) என்ற அளவுகோலில் மதிப்பிட்டனர். இது ஓர் அதிகாரபூர்வ அறிவியல் ஆய்வு இல்லை. ஆனால் முடிவுகள் நாங்கள் எதிர்பார்த்ததைப் போலவே இருந்தன. அதாவது மக்கள் என் முகத்தின் இளைய, புன்னகைக்கும், பெண்மை கூட்டப்பட்ட வடிவத்தின் மீது அசல் முகத்தைவிட அதிகமாக நம்பிக்கை வைத்தனர். இந்தச் சோதனையின் இறுதியில் நான் எளிமையான விஷயத்தை கற்றுக் கொண்டேன். அதாவது நான் கொஞ்சம் கூடுதலாகச் சிரித்தால், மக்கள் என் அறிவியல் கட்டுரைகளை அதிகமாக நம்பக்கூடும். படக்குறிப்பு, குழு மனப்பான்மை மக்களின் முடிவுகளை அதிகம் பாதிப்பதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர் மக்களின் மந்தை மனோபாவம் ஆரம்பத்தில் பார்த்த கேம் ஷோவில் இருப்பதைப் போல, துரோகிகளைக் கண்டறிவதை பொறுத்தவரை, குழு மனப்பான்மை காரணமாக யாரை நம்புவது என்பது பற்றிய கேள்வி மிகவும் சிக்கலான ஒன்றாக மாறுகிறது. முனைவர் மோலிட்டர் ஏமாற்றுவதில் நிபுணத்துவம் பெற்றவர். அவர் துரோகிகளாக கேம் ஷோ நிகழ்ச்சியில் வந்தவர்களுடைய மிகப்பெரிய ரசிகராகவும் உள்ளார். அந்த நிகழ்ச்சியில் பங்கெடுத்த இந்த ஆண்டின் போட்டியாளர்கள் ஒரேயொரு பொய்யரை அடையாளம் காண்பதற்குக் கூட இவ்வளவு நேரம் எடுத்துக் கொண்டதற்கான காரணம் குறித்து அவருக்குச் சொந்தக் கருத்து உள்ளது. அதாவது "குழு மனப்பான்மை மோசமான முடிவுகளை எடுக்கவே வித்திடுவதாக" அவர் வாதிடுகிறார். "துரோகத்திற்கான சான்றுகள் மெல்லியதாகவோ, தெளிவற்றதாகவோ இருந்தாலும்கூட, மந்தை மனநிலை கொண்ட மக்களை அது கூட்டாகப் பிழை செய்வதற்கு இழுக்கிறது," என்று கூறுகிறார் அவர். மக்களின் மனம், குழு சிந்தனையில் எழக்கூடிய, பெரும்பாலும் தவறாக இருக்கக்கூடிய அனுமானத்தை ஆதரிக்காத ஆதாரங்களை புறக்கணிப்பதாகவும் கூறுகிறார். ஒருவர் எவ்வளவு நம்பகமானவர் என்பது குறித்து மக்களுக்கு எண்ணங்கள் எழுவதன் வேகமும் இந்தப் பிரச்னையின் ஒரு பகுதியாக இருக்கலாம். இது ஒரு நபரின் நம்பகத்தன்மையை தவறாகப் புரிந்துகொள்ள வழிவகுக்கும். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, துல்லியமான சமச்சீர்மை இருப்பது, ரோபோ முகங்கள், டிஜிட்டலாக உருவாக்கப்பட்ட முகங்கள் மீது மக்களுக்கு ஒருவித அசௌகரியத்தை ஏற்படுத்துகிறது நம்பிக்கையை அளவிடக்கூடிய திறன் என்பது, மனித பரிணாம வளர்ச்சியின் ஆரம்பக் கட்டத்திலேயே உருவாகிவிட்டதாக முனைவர் மிலேவா விளக்குகிறார். "நமது முன்னோர்கள் ஒருவர் நண்பரா, பகைவரா என்பதை ஒரு நொடியில் சொல்ல வேண்டியிருந்தது. இது மிகவும் விரைவான சிந்தனைச் செயல்முறை. நம்பகத்தன்மை குறித்த நிலையான எண்ணங்கள் நமக்குள் உருவாவதற்கு ஒரு விநாடியில் பத்தில் ஒரு பங்கு நேரமே ஆகிறது" என்று அவர் விளக்குகிறார். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், அனிச்சையாக ஏற்படும் நமது நம்பிக்கைகள் விரைவாக உருவாகும் அதேவேளையில், அவை மிக மோசமானவை என்று மிலேவாவின் ஆராய்ச்சி காட்டுகிறது. பொய்யர்களை கண்டுபிடிக்க நாம் தவறுவது ஏன்? பொய் கண்டறிதலுக்கான அறிவியல் அணுகுமுறைகள், ஏமாற்றுதலின் சமூகப் பங்கு ஆகியவற்றில் நிபுணரான மிர்சியா ஸ்லோட்டானு, விரைவாக உருவாகும் நமது அனிச்சையான நம்பிக்கை மோசமாக இருப்பதை ஒப்புக்கொள்கிறார். நம்பத்தகுந்த நபர்களையும் பொய் சொல்பவர்களையும் கண்டறிவதில் நாம் மிகவும் திறமையானவர்கள் என்று நமக்கு நாமே கருதிக் கொள்கிறோம் என்பதையும் ஆனால் உண்மையில் அப்படி இல்லை என்பதையும் அவர் கண்டுபிடித்துள்ளார். "வியர்வை, நேராகக் கண்களைப் பார்க்காதது, முகம் சிவத்தல், நடுக்கம் அல்லது பிற உடலியல் குறிப்புகளைத் தேடுவதன் மூலம் நம்மால் ஒரு பொய்யைக் கண்டுபிடித்துவிட முடியும் எனக் கருதுகிறோம். ஆனால், உண்மையில், இந்தக் குறிப்புகள் நம்ப முடியாத அளவுக்கு சுற்றியிருக்கும் சூழல் சார்ந்தவையாக உள்ளன. இவை ஏமாற்றுதலின் நம்பகமான குறியீடுகள் இல்லை" என்று கூறுகிறார் ஸ்லோடியனு. பட மூலாதாரம், Getty Images "ஒருவர் பதற்றமாக, கூச்ச சுபாவமுள்ளவராக இருப்பதால் வியர்த்துக் கொண்டிருக்கலாம் அல்லது கண்களை நேராகப் பார்க்காமல் இருக்கலாம். அதற்காக அவர்கள் பொய் சொல்வதாகப் பொருள் இல்லை. பெரும்பாலும், இந்த சமிக்ஞைகளை நாம் தவறாகப் புரிந்து கொள்கிறோம். ஏனெனில், அவை நேர்மையற்ற தன்மையைக் குறிப்பதாக நாம் கருதுகிறோம். ஆனால் உண்மையில் அவை ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் ஏற்படும் அசௌகரியம் அல்லது உணர்ச்சித் தூண்டுதலின் அறிகுறிகளே" என்றும் அவர் விளக்கினார். பல்வேறு சோதனைகளில், தன்னார்வலர்கள், ஒருவரின் வீடியோவை பார்த்து, அவர் சொல்வது பொய்யா, உண்மையா என்பதைக் கண்டறிய, வியர்த்தல், விலகி வேறுபுறமாகப் பார்ப்பது, முகம் சிவத்தல் போன்ற வழக்கமான குறிப்புகளைப் பயன்படுத்தினார்கள். முனைவர் ஸ்லோடானுவும் அவரது குழுவினரும் சோதனைகளில் பங்கெடுத்த தன்னார்வலர்களால் உண்மை மற்றும் பொய்க்கு இடையிலான வித்தியாசத்தை அறிய முடியவில்லை என்பதையும், போலி உணர்ச்சிகள் அல்லது கற்பனையான கதைகள் போன்ற பல்வேறு வகையான பொய்களைக் கண்டறிவதில் அவர்கள் சிறந்து விளங்கவில்லை என்பதையும் கண்டறிந்தனர். மீண்டும் குழு மனப்பான்மையுடன், தவறான பதிலையே உறுதி செய்வதில் அதிகமான மக்கள் ஈடுபட்டது துல்லியத்தன்மையை மேலும் குறைத்தது. "அறிவியல் ஆய்வுகளைப் பார்க்கும்போது, அதைப் பிரதிபலிக்கும் எங்கள் சொந்தப் பரிசோதனை முடிவுகளைப் பார்க்கும்போது, மக்கள் பொய்களைக் கண்டுபிடிப்பதில் சிறந்தவர்கள் அல்ல என்பது புரியும். அதாவது இது அடிப்படையில் ஒரு நாணயத்தைச் சுண்டிவிட்டு, கையில் இருப்பது பூவா, தலையா என்பதைக் கண்டுபிடிப்பதற்கு நிகரானதுதான்" என்று முனைவர் ஸ்லோட்டானு கூறினார். பொய்யர்களால் பிறரை முட்டாளாக்க முடிந்தது எப்படி? ஆரம்பத்தில் கூறிய நிகழ்ச்சியில் பங்கெடுத்த துரோகிகளால் இவ்வளவு காலம் அனைவரையும் முட்டாளாக்க முடிந்தது எப்படி என்ற கேள்வி எழுகிறது. இதில் போட்டியாளர்களின் தனிப்பட்ட குணாதிசயங்கள் முக்கியப் பங்கைக் கொண்டிருந்ததாக நிபுணர்கள் கூறுகின்றனர். அப்படியெனில், தி செலிபிரிட்டி டிரெய்ட்டர்ஸ் நிகழ்ச்சியில் இருந்து கிடைத்த பாடம் என்ன? நாம் நம்பும் நபர்களால் எளிதில் ஏமாற்றப்படலாம் என்பதுதானா? இது உண்மையெனில், அது எப்போதும் மோசமான விஷயமாக இருப்பதல்ல என்று முனைவர் ஸ்லோட்டியனு கூறுகிறார். பொய் சொல்வது நீண்டகாலமாக மிகவும் மோசமான விஷயமாக கருதப்படுகிறது என்று விளக்கும் அவர், "ஆனால் உண்மையில், கொஞ்சம் பொய் சொல்லும் திறனும், சில நேரங்களில் ஏமாற்றத்திற்கு உள்ளாகும் திறனும் இருப்பது சமூகத்தில் உதவிகரமாக இருக்கும்" என்கிறார். எடுத்துக்காட்டாக, நீங்கள் உங்கள் நண்பர்களிடம் சிறிய விஷயங்களில் பொய் கூறலாம். அதாவது, அவர்கள் நன்றாக இருக்கிறார்கள், எல்லாம் சரியாகிவிடும் என்று கூறுகிறீர்கள். அல்லது கூடுதலாக ஒரு துண்டு கேக் சாப்பிடுவது நல்லது எனக் கூறுகிறீர்கள். இவை மோசமான பொய்கள் அல்ல. அவை நட்பை உருவாக்கிக் கொள்ளவும், நல்ல உறவுகளைப் பராமரிக்கவும், மக்கள் நல்லவிதமாக உணர்வதற்கும் உதவுகின்றன. இந்த வகையான பொய்கள், "பசை" போலச் செயல்பட்டு, மக்களை இணைக்கிறது. ஒருவர் உண்மையைத்தான் பேசுகிறாரா என்பதைத் தெரிந்து கொள்ளவும் விஞ்ஞானிகள் சில பரிந்துரைகளைக் கூறுகிறார்கள். அதாவது, நமது சொந்தச் சார்பு நிலைகளைப் புரிந்து கொள்வது, நமக்கு உடனடியாக ஏற்படும் முதல்கட்ட எண்ணங்களையே முற்றிலுமாக நம்பாமல் இருப்பது, உள்ளுணர்வுகளை மட்டுமே அதிகமாக நம்புவதைத் தவிர்ப்பதும், அதற்கு உதவும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த அடிப்படையில் பார்த்தால், சர் ஸ்டீபன் ஃப்ரை கூறியது சரிதான். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cm2w7yvvmy2o
  16. மருந்து வகைகளின் பெயர்களை தெளிவாக எழுதுமாறு வைத்தியர்களுக்கு எச்சரிக்கை! 15 Nov, 2025 | 11:32 AM இலங்கையில் உள்ள வைத்தியர்களுக்கு இலங்கை மருத்துவ சபை முக்கிய அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளனர். வைத்தியர்கள் மருந்துச் சீட்டுகளில் தெளிவற்ற முறையில் மருந்து வகைகளின் பெயர்களை எழுதுவதால் மருந்துகளை அடையாளம் காண சிரமமாக உள்ளமாக மருந்தாளர்கள் மற்றும் பொதுமக்கள் முறையிடுவதாக இலங்கை மருத்துவ சபை தெரிவித்துள்ளது. வைத்தியர்கள் மருந்துச் சீட்டுகளில் மருந்து வகைகளின் பெயர்களை எழுதும் போது தெளிவாகவும் மருந்து பரிந்துரைப்பது தொடர்பான வழிகாட்டுதல்களுக்கு அமையவும் எழுத வேண்டும் என இலங்கை மருத்துவ சபை தெரிவித்துள்ளது. மருந்துச் சீட்டுகளில் உள்ள மருந்து வகைகளின் பெயர்கள் தெளிவற்றதாக இருக்கும் போது நோயாளிகள் தவறாக மருந்துகளை பெற்றுக்கொள்ள கூடும் எனவும் இது உயிருக்கு மிகவும் ஆபத்தானது எனவும் இலங்கை மருத்துவ சபை தெரிவித்துள்ளது. மருந்து பரிந்துரைப்பது தொடர்பான வழிகாட்டுதல்களை மீறும் வைத்தியர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை மருத்துவ சபை எச்சரிக்கை விடுத்துள்ளது. https://www.virakesari.lk/article/230411
  17. Published By: Digital Desk 1 15 Nov, 2025 | 01:36 PM பிரதி பொலிஸ் மாஅதிபர் லலித் பத்திநாயக்க, ஒழுக்காற்று நடவடிக்கை காரணமாக பிரதி பொலிஸ் மாஅதிபர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். தேசிய பொலிஸ் ஆணைக்குழுவினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும், மத்திய மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஸ்ட பிரதி பொலிஸ் மாஅதிபராக லலித் பத்திநாயக்க தொடர்ந்தும் பணியாற்றுவார் என குறிப்பிடப்படுகிறது. மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஸ்ட பிரதி பொலிஸ் மாஅதிபராக பணியாற்றிய சஞ்சீவ தர்மரத்ன, குறித்த பதவியிலிருந்து நீக்கப்பட்டதால், குறித்த வெற்றிடத்திற்கு லலித் பத்திநாயக்கவை நியமிக்க தேசிய பொலிஸ் ஆணைக்குழு அனுமதியளித்துள்ளது. பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் இருப்பதால், பிரதி பொலிஸ்மா அதிபராக சஞ்சீவ தர்மரத்ன தற்போது பணியாற்றி வருகிறார். https://www.virakesari.lk/article/230414
  18. 15 Nov, 2025 | 01:15 PM (இணையத்தள செய்திப் பிரிவு) பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மற்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பின் போது தேசிய மக்கள் சக்கி அரசாங்கம் பொதுமக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியமை தொடர்பான 21ஆவது பொதுக்கூட்டம் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது. 21ஆவது பொதுக்கூட்டத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சி பங்கேற்காவிட்டாலும், ஒரு முக்கிய எதிர்க்கட்சி என்ற வகையில், பொதுக்கூட்டம் தொடர்பிலும் பிரச்சினைகள் குறித்தும் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு தெரிவிப்பது அவசியம் என நாமல் ராஜபக்ஷ தனது Xதளத்தில் குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/230415
  19. இந்தியாவில் கணனி மூலமாக தட்டச்சு செய்து பிரதி வழங்கவேண்டும் என சட்டம் இயற்றப்பட்டுள்ளதாக வாசித்த நினைவுள்ளது.
  20. 2026 வரவு செலவுத் திட்ட குழுநிலை விவாதம் இன்று முதல் Nov 15, 2025 - 06:55 AM 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் குழு நிலை விவாதம் இன்று (15) முதல் 17 நாட்களுக்கு நடைபெறவுள்ளது. வரவு செலவு சட்டமூலத்துடன் தொடர்புடைய குழுநிலை விவாதம் டிசம்பர் மாதம் 5ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. வரவு செலவுத் திட்டக் காலப்பகுதியில் அரசாங்க விடுமுறை நாட்கள் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளைத் தவிர்த்து ஏனைய நாட்களில் விவாதம் நடைபெறும் என்று பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதேநேரம் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு டிசம்பர் 5ஆம் திகதி மாலை 6 மணிக்கு நடத்தப்படவுள்ளது. தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள இரண்டாவது வரவு செலவு திட்டம் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் கடந்த 7 ஆம் திகதி பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து நேற்றைய தினம் வரையில் வரவு செலவு திட்டம் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம் நடைபெற்று வந்தது. இந்தநிலையில் நேற்று மாலை இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நடத்தப்பட்டிருந்தது. குறித்த வாக்கெடுப்பில் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 160 வாக்குகளும் எதிராக 42 வாக்குகளும் அளிக்கப்பட்டன. 8 பேர் வாக்களிப்பில் இருந்து விலகினர். அதன்படி 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் மதிப்பீடு 118 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://adaderanatamil.lk/news/cmhzlv7ja01mgo29nvku1ow5o
  21. Nov 15, 2025 - 08:58 AM ஐக்கிய நாடுகள் சபையின் இடைக்காலப் படை லெபனானில் கடந்த மாதம் நடத்திய ஆய்வில், இஸ்ரேலிய இராணுவத்தால் கட்டப்பட்ட ஒரு சுவர், டி ஃபேக்டோ எல்லையாக கருதப்படும் நீலக் கோட்டை கடந்து செல்வது கண்டறியப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை குற்றஞ்சாட்டியுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் செய்தித் தொடர்பாளர் இந்த தகவலை வௌியிட்டுள்ளார். நீலக் கோடு என்பது லெபனானை இஸ்ரேல் மற்றும் இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்ட கோலன் குன்றுகளில் இருந்து பிரிக்கும் ஐ.நா.வால் வரையறுக்கப்பட்ட கோடாகும். ஐ.நா. பொதுச்செயலாளரின் செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் (Stephane Dujarric) கூறுகையில், இஸ்ரேலிய பாதுகாப்புப் படையால் எழுப்பப்பட்ட கொன்கிரீட் 'T-சுவர்' சுமார் 4,000 சதுர மீட்டரால் லெபனான் நிலப்பரப்பை உள்ளூர் மக்கள் அணுக முடியாத நிலையை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார். யருன் பகுதிக்கு தென்கிழக்கே, நீலக் கோட்டைக் கடந்து செல்லும் மேலதிக சுவர் ஒன்றின் ஒரு பகுதியும் எழுப்பப்பட்டு வருவதாக ஐ.நா அமைதிகாக்கும் படையினரை மேற்கோள் காட்டி அவர் கூறினார். இந்த ஆய்வுக் கண்டுபிடிப்புகள் குறித்து இஸ்ரேலிய இராணுவத்திற்கு UNIFIL தகவல் அளித்து, அந்தச் சுவரை அகற்றக் கோரியதாகவும் டுஜாரிக் தெரிவித்தார். "லெபனான் பிரதேசத்தில் இஸ்ரேலின் இருப்பு மற்றும் கட்டுமானம் ஆகியவை ஐ.நா. பாதுகாப்புக் குழுவின் தீர்மானம் 1701 மற்றும் லெபனானின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு ஆகியவற்றின் மீறல்கள் ஆகும்" என்று UNIFIL அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும் இஸ்ரேலிய இராணுவ செய்தித் தொடர்பாளர் ஒருவர், அந்தச் சுவர் நீலக் கோட்டைக் கடக்கவில்லை என்று தெரிவித்துள்ளார். "இந்தச் சுவர் 2022-இல் தொடங்கப்பட்ட பரந்த இஸ்ரேலிய பாதுகாப்பு படையின் திட்டத்தின் ஒரு பகுதியாகும். போர் தொடங்கியதிலிருந்தும், அதிலிருந்து கற்றுக்கொண்ட பாடங்களின் ஒரு பகுதியாகவும், வடக்கு எல்லையில் உள்ள பௌதீகத் தடையை வலுப்படுத்துவது உட்பட பல நடவடிக்கைகளை IDF மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். https://adaderanatamil.lk/news/cmhzq8ngy01mio29ndjtrlytc
  22. 15 Nov, 2025 | 09:41 AM (இணையத்தள செய்திப் பிரிவு) 2026 ஆம் ஆண்டுக்கான பாடசாலை பரீட்சை அட்டவணையை வெளியிட்டுள்ளதாக இலங்கைப் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த நேர அட்டவணைப்படி, 2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை 2026 பெப்ரவரி 17ம் திகதி முதல் 26ம் திகதி வரை நடைபெறும். 2026 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை ஆகஸ்ட் 9 ஆம் திகதியும், 2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை ஆகஸ்ட் 10ம் திகதி முதல் செப்டம்பர் 5 வரை நடைபெறும். 2027 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை முதன்முறையாக எழுதும் மாணவர்களுக்கான பொதுத் தகவல் தொழில்நுட்ப (GIT) பரீட்சை 2026 அக்டோபர் 24ம் திகதி நடைபெறும். 2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை 2026 டிசம்பர் 8ம் திகதி முதல் 17ம் திகதி வரை நடைபெறும் என இலங்கைப் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/230397
  23. பும்ராவின் 5 விக்கெட் குவியலின் பலனாக தென் ஆபிரிக்காவை 159 ஓட்டங்களுக்கு சுருட்டியது இந்தியா Published By: Vishnu 14 Nov, 2025 | 06:36 PM (நெவில் அன்தின) கொல்கத்தா ஈடன் கார்ட்ன்ஸ் விளையாட்டரங்கில் இன்று வெள்ளிக்கிழமை (14) ஆரம்பமான முதலாவது டெஸ்ட் போட்டியில் வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்ப்ரிட் பும்ரா பதிவுசெய்த 5 விக்கெட் குவியலின் உதவியுடன் நடப்பு உலக டெஸ்ட் சம்பியன் தென் ஆபிரிக்காவை முதல் இன்னிங்ஸில் 159 ஓட்டங்களுக்கு இந்தியா சுருட்டியது. இந்தியாவில் எட்டு முயற்சிகளில் முதல் தடவையாக நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற தென் ஆபிரிக்கா, துணிந்து துடுப்பாட்டத்தைத் தெரிவுசெய்தபோதிலும் அவ்வணி ஒருநாள் போட்டியை ஒத்தது போன்று துடுப்பெடுத்தாடி 55 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்தது. ஏய்டன் மார்க்ராம், ரெயான் ரிக்ல்டன் ஆகிய இருவரும் 57 ஓட்டங்களைப் பகிர்ந்து நல்ல ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர். ஆனால், அதன் பின்னர் தென் ஆபிரிக்காவின் 10 விக்கெட்களும் 102 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தப்பட்டன. 51ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் ஜஸ்ப்ரிட் பும்ரா ஓர் இன்னிங்ஸில் தனது 16ஆவது 5 விக்கெட் குவியலைப் பதிவு செய்ததுடன் மொஹமத் சிராஜ், குல்தீப் யாதவ், அக்சார் பட்டேல் ஆகியோர் மற்றைய 5 விக்கெட்களை வீழ்த்தி தென் ஆபிரிக்காவை திக்குமுக்காட வைத்தனர். சிறப்பாகத் துடுப்பெடுத்தாடிக்கொண்டிருந்த தென் ஆபிரிக்க ஆரம்ப வீரர்களான ரெயான் ரிக்ல்டன், ஏய்டன் மார்க்ராம் ஆகிய இருவரையும் 4 பந்துகள் இடைவெளியில் பும்ரா ஆட்டம் இழக்கச் செய்து போட்டியில் இந்தியாவுக்கு சாதகமான திருப்புமுனையை ஏற்படுத்தினார். அதன் பின்னர் பொறுமையுடன் துடுப்பெடுத்தாட முயற்சித்த அணித் தலைவர் டெம்பா பவுமா, வியான் மல்டர் ஆகிய இருவரை குல்தீப் யாதவ் ஆட்டம் இழக்கச் செய்ததும் தென் ஆபிரிக்கா ஆட்டம் காணத் தொடங்கியது. தென் ஆபிரிக்க துடுப்பாட்டத்தில் ஏய்டன் மார்க்ராம் (31), வியான் மல்டர் (24), டோனி டி ஸோர்ஸி (24), ரெயால் ரிக்ல்டன் (23) ஆகிய நால்வரே 20 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர். பந்துவீச்சில் ஜஸ்ப்ரிட் பும்ரா 5 ஓட்டமற்ற ஓவர்கள் உட்பட 27 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களையும் குல்தீப் யாதவ் 36 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் மொஹம்மத் சிராஜ் 47 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் அக்சார் பட்டேல் 21 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடும் இந்தியா முதலாம் நாள் ஆட்டநேர முடிவில் ஒரு விக்கெட்டை இழந்து 37 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. இதற்கு அமைய முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட்கள் மீதமிருக்க தென் ஆபிரிக்காவைவிட 122 ஓட்டங்களால் இந்தியா பின்னிலையில் இருக்கிறது. யஷஸ்வி ஜய்ஸ்வால் 12 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். கே.எல். ராகுல் 13 ஓட்டங்களுடனும் புதிய 3ஆம் இலக்க வீரர் வொஷிங்டன் சுந்தர் 6 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதுள்ளனர். https://www.virakesari.lk/article/230383
  24. பாபர் அஸாம் சதம், ஸமான், ரிஸ்வான் அரைச் சதங்கள் குவிப்பு, இலங்கையுடனான தொடரைக் கைப்பற்றியது பாகிஸ்தான் Published By: Vishnu 15 Nov, 2025 | 02:31 AM (நெவில் அன்தனி) இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் ராவல்பிண்டி கிரிக்கெட் விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை (14) நடைபெற்ற இரண்டாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பாபர் ஸமான் குவித்த ஆட்டம் இழக்காத அபார சதத்தின் உதவியுடன் பாகிஸ்தான் 8 விக்கெட்களால் இலகுவாக வெற்றிபெற்றது. பக்கார் ஸமான், மொஹம்மத் ரிஸ்வான் ஆகியோரும் அரைச் சதங்கள் குவித்து இந்த வெற்றியில் சிறந்த பங்களிப்பை வழங்கி இருந்தனர். இந்த வெற்றியுடன் 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் ஒரு போட்டி மீதம் இருக்க இப்போதைக்கு 2 - 0 என தொடரை பாகிஸ்தான் கைப்பற்றியுள்ளது. இலங்கையினால் நிர்ணயிக்கப்பட்ட 289 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் 48.2 ஓவர்களில் 2 விக்கெட்களை மாத்திரம் இழந்து 289 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது. பாகிஸ்தான் முன்வரிசை வீரர்கள் அனைவரும் திறமையாகத் துடுப்பெடுத்தாடியதுடன் சிறந்த இணைப்பாட்டங்களை ஏற்படுத்தி இலங்கை பந்துவீச்சாளர்களை சிதறடித்தனர். பக்கார் ஸமான், சய்ம் அயூப் ஆகிய இருவரும் 58 பந்துகளில் 77 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது அயூப் 33 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். இதனைத் தொடர்ந்து களம் புகுந்த முன்னாள் அணித் தலைவர் பாபர் அஸாம் 2ஆவது விக்கெட்டில் பக்கார் ஸமானுடன் 100 ஓட்டங்களையும் பிரிக்கப்படாத 3ஆவது விக்கெட்டில் மற்றொரு முன்னாள் தலைவர் மொஹம்மத் ரிஸ்வானுடன் 122 ஓட்டங்களையும் பகிர்ந்து பாகிஸ்தானை வெற்றி அடையச் செய்தார். பக்கார் ஸமான் 78 ஓட்டங்;களையும் பாபர் அஸாம் ஆட்டம் இழக்காமல் 102 ஓட்டங்களையும் மொஹமத் ரிஸ்வான் ஆட்டம் இழக்காமல் 51 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் துஷ்மன்த சமீர 58 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களை வீழ்த்தினார். முன்னதாக இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இலங்கை 50 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 288 ஓட்டங்களைப் பெற்றது. முதலாவது போட்டியில் போன்றே முன்வரிசை வீரர்கள் எதிர்பார்த்தளவு பிரகாசிக்காத நிலையில் மத்திய வரிசை வீரர்கள் நால்வர் 35 ஓட்டங்களுக்கு மேல் பெற்றதன் பலனாக இலங்கை கௌரவமான மொத்த எண்ணிக்கையைப் பெற்றது. ஜனித் லியனகே திறமையாகத் துடுப்பெடுத்தாடி அரைச் சதம் குவித்ததுடன் இரண்டு முக்கிய இணைப்பாட்டங்களில் பங்காற்றி இருந்தார். பவர் ப்ளேயில் பெத்தும் நிஸ்ஸன்கவும் காமில் மிஷாரவும் வேகமாகத் துடுப்பெடுத்தாடி ஆரம்ப விக்கெட்டில் 51 ஓட்டங்களைப் பகிர்ந்துகொடுத்தனர். ஆனால், பெத்தும் நிஸ்ஸன்க (24), காமில் மிஷார (27), குசல் மெண்டிஸ் (20), அணித் தலைவர் சரித் அசலன்க ஆகியோர் (7) சீரான இடைவெளியில் ஆட்டம் இழந்தனர். (98 - 4 விக்.) இந் நிலையில் சதீர சமரவிக்ரமவும் ஜனித் லியனகேவும் 5ஆவது விக்கெட்டில் 61 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு உயிர்கொடுத்தனர். சதீர சமரவிக்ரம 42 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்த பின்னர் ஜனித் லியனகே, கமிந்து மெண்டிஸ் ஆகிய இருவரும் 6ஆவது விக்கெட்டில் 73 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை ஓரளவு பலமான நிலையில் இட்டனர். ஆனால், கமிந்து மெண்டிஸ் 44 ஓட்டங்களையும் ஜனித் லியனகே 54 ஓட்டங்களையும் பெற்று 9 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தனர். வனிந்து ஹசரங்க 37 ஓட்டங்களுடனும் ப்ரமோத் மதுஷான் 11 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர். அவர்கள் இருவரும் பிரிக்கப்படாத 9 ஆவது விக்கெட்டில் 44 ஒட்டங்களைப் பகிர்ந்;தனர். பந்துவீச்சில் அப்ரார் அஹ்மத் 41 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஹரிஸ் ரவூப் 66 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர். ஆட்டநாயகன்: பாபர் அஸாம் https://www.virakesari.lk/article/230390
  25. இந்தியாவில் கடினமான டெஸ்ட் தொடரை சந்திக்கவுள்ள உலக டெஸ்ட் சம்பியன் தென் ஆபிரிக்கா Published By: Vishnu 13 Nov, 2025 | 07:51 PM (நெவில் அன்தனி) இந்தியாவுக்கும் தென் ஆபிரிக்காவுக்கும் இடையிலான 2 போட்டிகள் கொண்ட சுதந்திரக் கிண்ணத்துக்கான இருதரப்பு டெஸ்ட் தொடரும், உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரும் கொல்கத்தா ஈடன் கார்ட்ன்ஸ் விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை (14) ஆரம்பமாகவுள்ளது. இந்தியாவில் மிகவும் கடினமான தொடர் தென் ஆபிரிக்காவுக்கு காத்திருக்கிறது என்று கூறினால் அது தவறாகாது. கடந்த 10 வருடங்களில் இந்தியாவுக்கு இரண்டு தடவை டெஸ்ட் கிரிக்கெட் விஜயம் செய்த தென் ஆபிரிக்கா, அந்த இரண்டு சந்தர்ப்பங்களிலும் படுதோல்விகளை சந்தித்தது. 2015இல் நடைபெற்ற 4 போட்டிகள் கொண்ட தொடரில் 0 - 3 என இளம் வீரர்களைக் கொண்ட இந்தியாவிடம் தென் ஆபிரிக்கா தோல்வி அடைந்தது. அந்த தொடரில் 2ஆவது டெஸ்ட் போட்டி மழையினால் கழுவப்பட்டது. அந்த சந்தர்ப்பத்தில் எதிர்கால டெஸ்ட் அணியைக் கட்டி எழுப்பும் குறிக்கோளுடன் இளம் வீரர்களை இந்தியா களம் இறக்கி அதில் வெற்றியும் கண்டது. தொடர்ந்து 2019இல் உப கண்டத்துக்கு பயணித்த தென் ஆபிரிக்கா, அனுபவம் வாய்ந்த வீரர்களைக் கொண்ட இந்தியாவிடம் 0 - 3 என தோல்வி அடைந்தது. எவ்வாறாயினும் நடப்பு உலக டெஸ்ட் சம்பியன் தென் ஆபிரிக்கா, இம்முறை அனுப வசாலிகளுடன இந்தியாவை எதிர்கொள்ளவுள்ளது. இந்தியா இந்த வருடம் விளையாடிய 8 டெஸ்ட் போட்டிகளில் 4 வெற்றிகள், 3 தோல்விகள், ஒரு வெற்றி தோல்வியற்ற முடிவு என்ற பெறுபேறுகளைக் கொண்டுள்ளது. மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக கடந்த மாதம் நடைபெற்ற இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2 - 0 என்ற ஆட்டங்கள் கணக்கில் முழுமையாக வெற்றியீட்டிய இந்தியா, நாளை ஆரம்பமாகவுள்ள தென் ஆபிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் வெற்றி பெற முயற்சிக்கும். இந்தத் தொடர் இரண்டு அணிகளினதும் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு இடையிலான போட்டியாக அமையலாம் என எதிர்வுகூறப்படுகிறது. ஆனால், இந்தியா தனது சொந்த மண்ணில் சுழல்பந்துவீச்சாளர்களைக் கொண்டு பல சந்தர்ப்பங்களில் வெற்றியீட்டியதை மறந்துவிடலாகாது. தென் ஆபிரிக்கா இந்த வருடம் விளையாடிய 6 போட்டிகளில் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டி உட்பட 5இல் வெற்றிபெற்றிருந்தது. பாகிஸ்தானுக்கு எதிராக கடந்த மாதம் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் தென் ஆபிரிக்கா தோல்வி அடைந்திருந்தது, தென் ஆபிரிக்கா 1989ஆம் ஆண்டிலிருந்து டெஸ்ட் கிரிக்கெட் விளையாடி வருகின்றபோதிலும் இந்தியாவுக்கு எதிராக 1992இலிருந்தே டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. அதற்கு முன்னர் இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, நியூஸிலாந்து ஆகிய நாடுகளுடன் மாத்திரம் தென் ஆபிரிக்கா விளையாடி இருந்தது. இன ஒடுக்கல் காரணமாக 1970இலிருந்து 1991வரை தென் ஆபிரிக்காவுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. 1991இல் தடை நீக்கப்பட்ட பின்னரே மற்றைய நாடுகளுடன் டெஸ்ட் விளையாட்டில் தென் ஆபிரிக்கா ஈடுபட ஆரம்பித்தது. இந்தியாவுக்கும் தென் ஆபிரிக்காவுக்கும் இடையில் இதுவரை நடைபெற்றுள்ள 44 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் தென் ஆபிரிக்கா 18 - 16 என்ற ஆட்டங்கள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருக்கிறது. 10 போட்டிகள் வெற்றிதோல்வியின்றி முடிவடைந்தன. அணிகள் இந்தியா: ஷுப்மான் கில் (தலைவர்), ரிஷாப் பான்ட் (உப தலைவர்), ஆகாஷ் தீப், ஜஸ்ப்ரிட் பும்ரா, ரவிந்த்ர ஜடேஜா, யஷஸ்வி ஜய்ஸ்வால், த்ருவ் ஜுரெல், குல்தீப் யாதவ், மொஹம்மத் சிராஜ், தேவ்டத் படிக்கல், அக்சார் படிக்கல், கே. எல். ராகுல், சாய் சுதர்ஷன், வொஷிங்டன் சுந்தர். தென் ஆபிரிக்கா: டெம்பா பவுமா (தலைவர்), கோபின் பொஷ், டிவோல்ட் ப்ரவிஸ், டோனி டி ஸோர்ஸி, சைமன் ஹாமர், மாக்கோ ஜென்சன், கேஷவ் மஹாராஜ், ஏய்டன் மார்க்ராம், வியான் முல்டர், சேனுரன் முத்துசாமி, கெகிசோ ரபடா, ரெயான் ரிக்ள்டன், ட்ரைஸ்டன் ஸ்டப்ஸ், கய்ல் வெரின், ஸுபய்ர் ஹம்ஸா. https://www.virakesari.lk/article/230282

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.