Everything posted by ஏராளன்
-
திருகோணமலையில் புத்தர் சிலை வைக்கப்பட்ட சம்பவம் - 4 தேரர்கள் உட்பட 9 பேருக்கு விளக்கமறியல்
திருகோணமலை கடற்கரையில் அனுமதியின்றி புத்தர் சிலையை வைத்த தேரர்கள் உட்பட 9 பேருக்கு விளக்கமறியல்! 14 Jan, 2026 | 04:02 PM திருகோணமலை பிரதான கடற்கரைப் பகுதியில் வைக்கப்பட்ட சர்ச்சைக்குரிய புத்தர் சிலையுடன் தொடர்புடைய நான்கு தேரர்கள் உள்ளிட்ட ஒன்பது பேரை எதிர்வரும் 19ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் இன்று (14) உத்தரவு பிறப்பித்துள்ளது. குறித்த வழக்கானது இன்றையதினம் (14) புதன்கிழமை நீதிபதி எம்.எஸ்.எம்.சம்சுதீன் முன்னிலையில் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டபோதே நீதிபதி குறித்த கட்டளையை பிறப்பித்திருந்தார். குறித்த வழக்கானது இன்றைய தினம் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்ட போது இரு தரப்பினராலும் சமர்ப்ணங்கள் முன்வைக்கப்பட்டன. இந்நிலையில் சமாதானமான முறையில் குறித்த வழக்கினை முடிவுக்குக் கொண்டு வர முடியும் எனவும் அவ்வாறாயின் சட்டவிரோத கட்டுமானங்கள் அகற்றப்பட வேண்டும் எனவும் கரையோர பாதுகாப்பு திணைக்களத்தின் சார்பாக முன்னிலையாகியிருந்த சட்டத்தரணிகளால் தெரிவிக்கப்பட்டபோது எதிர் தரப்பினர் அதற்கு இணங்கிக் கொள்ளாத நிலையில் குறித்த சட்டத்தின் கீழ் இடம்பெற்றிருக்கின்ற கைதுக்கு பிணை வழங்கும் அதிகாரம் தனக்கு இல்லை என தெரிவித்து குறித்த எதிரிகளுக்கு பிணை வழங்க நீதிபதி மறுப்பு தெரிவித்து எதிர்வரும் 19ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பித்திருந்தார். குறித்த வழக்கில் எதிரிகளாக குறிப்பிடப்பட்டிருந்த 11 பேரில் 9 பேர் இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலையாகி இருந்த நிலையில் அவர்கள் கைது செய்யப்பட்டு திருகோணமலை சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். குறிப்பாக திருகோணமலை கல்யாண வன்ச திஸ்ஸ தேரர், பலாங்கொட கஞ்சப தேரர், திருகோணமலை சுவித வன்ச திஸ்ஸ தேரர், நந்த தேரர் ஆகிய 4 தேரர்கள் உட்பட சிவில் சமூகத்தினர் ஐவருமாக ஒன்பது பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். திருகோணமலை பிரதான கடற்கரைக்கு அருகில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் 2025 நவம்பர் மாதம் 16ஆம் 17ஆம் திகதிகளில் கடலோர பாதுகாப்பு கட்டளை சட்டத்தை மீறி சட்ட விரோதமான முறையில் புத்தர் சிலையை வைத்து மக்களிடையே குழப்பங்களை ஏற்படுத்தியதாக கடலோரப் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் 28 (01) மற்றும் 14 (01) போன்ற சட்ட விதிகளுக்கு அமைவாக திருகோணமலை துறைமுக பொலிஸார் குற்ற பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு 17.11.2025 அன்று திருகோணமலை துறைமுக பொலிஸாரினால் திருகோணமலை நீதிவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. குறித்த வழக்கானது 26.11.2025 அன்று விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டபோது எதிராளிகள் சார்பில் எவரும் முன்னிலையாகி இருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும். https://www.virakesari.lk/article/236031
-
கருத்து படங்கள்
அத தெரண கருத்துப்படங்கள்.
-
யாழிணைய நிர்வாகி திரு மோகன் அவர்களின் அருமைத் துணைவியார் இன்று (14-01-2026) காலமானார்.
மனைவியின் பிரிவால் துயருற்று இருக்கும் மோகன் அண்ணாவிற்கும் அம்மாவை இழந்து வாடும் பிள்ளைகளுக்கும் ஏனைய உறவுகளுக்கும் ஆழ்ந்த இரங்கல்கள், ஓம் சாந்தி.
-
கொட்டகலையில் ரூ.25,000 நிவாரணத் தொகை வழங்கப்படவில்லை என கோரி தோட்டத் தொழிலாளர்கள் போராட்டம்
கொட்டகலையில் ரூ.25,000 நிவாரணத் தொகை வழங்கப்படவில்லை என கோரி தோட்டத் தொழிலாளர்கள் போராட்டம் 14 Jan, 2026 | 02:33 PM டிட்வா சூறாவளியைத் தொடர்ந்து குடும்பங்களை மீள்குடியேற்றுவதற்கும் அவர்களின் வீடுகளை புனரமைப்பதற்கு அரசாங்கம் வழங்கும் ரூ.25,000 உதவித்தொகை இதுவரை கிடைக்கவில்லை என்று கூறி தோட்டத் தொழிலாளர்கள் குழு ஒன்று செவ்வாய்க்கிழமை (13) மதியம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லோகில் தோட்டத்தைச் சேர்ந்த தோட்டத் தொழிலாளர்கள் குழுவே குறித்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர். ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியில் கொட்டகலையில் உள்ள லோகில் தோட்ட நுழைவாயிலுக்கு அருகில் குறித்த போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில் நாட்டில் நிலவிய மோசமான காலநிலை காரணமாக தங்கள் தோட்ட வீடுகளில் 46 வீடுகள் முழுமையாக வெள்ளத்தில் மூழ்கியது வெள்ளத்தில் மூழ்கிய வீடுகளை உடனடி நிவாரணத்திற்காக அரசாங்கம் பழுதுபார்ப்பதற்காக அரசாங்கத்தால் வழங்கப்பட்ட ரூ.25,000 தோட்டத்தில் உள்ள ஒரு சிலருக்கு மாத்திரம் இன்னும் ஒரு சிலருக்கு இன்றுவரை கிடைக்கவில்லை எனவும் போராட்டத்தில் ஈடுபட்ட தோட்டத் தொழிலாளர்கள் தெரிவித்தனர். அரசாங்கத்தால் வழங்கும் உதவித்தொகை பாரபட்சமின்றி பாதிக்கப்பட்ட அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதே எங்கள் அது கோரிக்கையாக உள்ளது எனத் தெரிவித்தனர். உடனடியாக போராட்டத்தின் மையப்பகுதிக்கு விஜயம் செய்த கொட்டகலை பிரதேச சபை (SP) உறுப்பினர் புஷ்பா விஸ்வநாதன், நுவரெலியா மாவட்ட செயலாளர் துஷாரி தென்னகோனையும் நுவரெலியா பிரதேச செயலாளரையும் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு டெவோன் நீர்வீழ்ச்சியில் பாயும் நீர் டெவோன் கால்வாய் பகுதிகளில் நிரம்பி வழிந்ததால், லோகில் தோட்டத்தில் உள்ள 46 வீடுகள் தரையில் இருந்து 8-9 அடி உயரத்தில் நீரில் மூழ்கி பாதிக்கப்பட்டது. இவர் அனைவருக்கும் மீள்குடியேற்றுவதற்கும் அவர்களின் வீடுகளை மறுவாழ்வு செய்வதற்கும் அரசாங்கம் வழங்கும் பணம் உரிய கிடைக்க வேண்டும். இவர்களின் சிலருக்கு மாத்திரம் குறித்த பயணம் கிடைத்துள்ளன. ஏனையவர்கள் பாதிக்கப்பட்ட நிலையில் தொடர்ந்து உள்ளனர். இதற்கு உடனடியாக தீர்வு கிடைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இதற்கு தொடர்ந்து பதில் அளித்த அரசாங்க அதிபர் பிரதேச கிராம உத்தியோகத்தர் மூலம் கிடைக்கும் பரிந்துரையின் பேரில் பணம் தற்போது வழங்கி வருவதாகவும் வரும் நாட்களில் பணம் தவணை முறையில் செலுத்தப்படுவதால், பணம் இது கிடைக்காதவர்களுக்கு எதிர் வரும் நாட்களில் உடனடியாக அது வழங்கப்படும் என்றும் மாவட்ட செயலாளர் கூறினார். இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். https://www.virakesari.lk/article/236014
-
முன்னோடி - அடிப்படை சுகாதார வசதி திட்டம்
அண்ணை, என்னுடைய மனத்திருப்திக்கும் நான் போய் பார்க்கவேண்டும், முகந்தெரியாத உறவுகள் நம்பிக்கையில் தரும் நன்கொடை சரியானவர்களின் கைகளில் கிடைப்பதை உறுதிப்படுத்தவும் விரும்புகிறேன்.
-
இந்தியாவின் புத்த கயாவிற்கு நாமல் ராஜபக்ஷ விஜயம்!
இந்தியாவின் புத்த கயாவிற்கு நாமல் ராஜபக்ஷ விஜயம்! 14 Jan, 2026 | 03:26 PM நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, கௌதம புத்தர் ஞானம் பெற்ற இடமான இந்தியாவின் புத்த கயாவிற்கு விஜயம் செய்து, அங்குள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க மகாபோதி மகா விகாரையில் வழிபாடுகளில் ஈடுபட்டு ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டார். இந்த விஜயத்தின் போது, புத்த கயா விகாரையின் செயலாளர் கலாநிதி மகாஸ்வேதா மகாரதி மற்றும் அதன் மேலாண்மைக் குழுவைச் சேர்ந்த புத்த ரத்ன தேரர், தம்மிஸ்ஸர தேரர், கௌடின்ய தேரர் உள்ளிட்ட மகா சங்கத்தினரைச் சந்தித்து அவர் ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொண்டார். தொடர்ந்து, 1891 ஆம் ஆண்டு அநகாரிக தர்மபாலவினால் ஆரம்பிக்கப்பட்ட இந்திய மகாபோதி சங்கத்திற்கும் நாமல் ராஜபக்ஷ விஜயம் செய்தார். அங்கு புத்த கயா மத்திய நிலையத்தின் வணக்கத்திற்குரிய கடகந்துரே ஜினானந்த தேரர், முல்தெனியவல சுசீல தேரர், ஞானரத்ன தேரர் மற்றும் வாகீச தேரர் ஆகியோரைச் சந்தித்து கலந்துரையாடியதுடன், மகா சங்கத்தினரின் ஆசீர்வாதங்களையும் பெற்றுக்கொண்டார். இந்த ஆன்மீகச் சுற்றுப்பயணத்தில் நாமல் ராஜபக்ஷவுடன் அவரது மனைவி லிமினி ராஜபக்ஷவும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/236010
-
முன்னோடி - அடிப்படை சுகாதார வசதி திட்டம்
அண்ணை, 1) படங்கள் கிடைத்து வட்சப் குழுவில் பகிர்ந்து விட்டேன். 2) விபரங்களை கேட்டுப் பெறுவேன். 3) படம், காணொளி எடுத்து போடச் சொல்லி உள்ளேன். 4) இதற்கு முடிந்தால் நானே சென்று எடுப்பேன் 5) பற்றுச்சீட்டுகள் பெற்றுத்தர சொல்லி உள்ளேன். (கடைகளில் பெறும் பொருட்களுக்கு சீமந்து, மணல், கல்லு போன்றவற்றிற்கு பெறலாம். பெக்கோ மூலம் குழி தோண்டுபவர் கையால் எழுதிய துண்டு தான் தருவார். தொழிலாளர் சம்பளமும் அவ்வாறு தான் தருவார்கள்.) அரச தொழிநுட்ப உத்தியோகத்தர்கள் மதிப்பீடு செய்ய பணம் கேட்கிறார்கள், பிரதேச செயலரிடம் இலவசமாக செய்துதர கோரியுள்ளேன். மலசலக்குழிகள் வெட்டி கட்டுவதற்கான பிரதேச சபை அனுமதியையும் அவர்களே பெற்றுத்தர வேண்டும்)
-
புதிய உச்சத்தை எட்டிய கொழும்பு பங்குச் சந்தை
கொழும்பு பங்குச் சந்தையின் புதிய சாதனை Jan 14, 2026 - 03:15 PM கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் (ASPI) இன்று (14) வரலாற்றில் மீண்டும் உச்சத்தைப் பதிவு செய்தது. அதன்படி அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் இன்று (14) 23,708.70 புள்ளிகளாக பதிவாகியுள்ளது. இதற்கு முன்னர் கடந்த 12 ஆம் திகதி அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் 23,659.70 அதிகூடிய புள்ளிகளாக பதிவாகியிருந்தது. அதன்படி, அனைத்துப் பங்கு விலைக் சுட்டெண் 100.90 புள்ளிகள் உயர்ந்து 23,708.70 புள்ளிகளாக பதிவானதாக கொழும்பு பங்குச் சந்தை தெரிவித்துள்ளது. இன்றைய வர்த்தக நாளின் மொத்தப் புரள்வு 9.26 பில்லியன் ரூபாவாக பதிவாகியுள்ளது. https://adaderanatamil.lk/news/cmkdu4v5903x7o29nv8l6ttsc
-
சிரியாவில் அசாத் போல் இரானில் காமனெயி அரசு வீழுமா? ஒரு விரிவான அலசல்
சிரியாவில் அசாத் போல் இரானில் காமனெயி அரசு வீழுமா? ஒரு விரிவான அலசல் பட மூலாதாரம்,Getty Images கட்டுரை தகவல் ஜெர்மி போவன் சர்வதேச ஆசிரியர் 7 மணி நேரங்களுக்கு முன்னர் ஒரு சர்வாதிகார ஆட்சி எப்படி முடிவுக்கு வரும்? எர்னஸ்ட் ஹெமிங்வே கூறிய பிரபல கருத்தைப் போல, படிப்படியாகச் சென்று பின்னர் திடீரென உடைந்து விழும். இரானில் நடைபெறும் போராட்டங்களில் ஈடுபட்டவர்களும் வெளிநாடுகளில் உள்ள அவர்களுடைய ஆதரவாளர்களும், டெஹ்ரானில் உள்ள இஸ்லாமிய ஆட்சி திடீரென வீழ்ச்சியடையும் கட்டத்தை எட்டியுள்ளதாக நம்பிக்கை கொண்டிருந்தனர். ஆனால் அந்த ஆட்சி வீழ்ச்சியடைவதாக இருந்தாலும், அது இன்னும் மெதுவான, படிப்படியான நிலையிலேயே நடைபெறுகிறது என்பதற்கான அறிகுறிகளே தென்படுகின்றன. இரானில் கடந்த இரண்டு வாரங்களாக நிலவும் அமைதியற்ற சூழல், அந்நாட்டு ஆட்சிக்கு ஒரு பெரிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இரானியர்களின் கோபமும் விரக்தியும் இதற்கு முன்பும் வீதிகளில் போராட்டங்களாக வெடித்திருக்கின்றன. ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலால் இரான் மீது தொடுக்கப்பட்ட ராணுவத் தாக்குதல்களுக்கு பிறகு தற்போதைய இந்த எழுச்சி ஏற்பட்டுள்ளது. இருப்பினும், தங்கள் குடும்பங்களுக்கு உணவளிக்கப் போராடும் இரானியர்களுக்கு, பொருளாதாரத் தடைகளின் தாக்கம் மிக முக்கியமானதாக இருக்கிறது. இரானியப் பொருளாதாரத்திற்கு ஏற்பட்ட சமீபத்திய பின்னடைவாக, 2015-ஆம் ஆண்டு அணுசக்தி ஒப்பந்தத்தின் கீழ் நீக்கப்பட்ட ஐக்கிய நாடுகளின் அனைத்து தடைகளையும் பிரிட்டன், ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் செப்டம்பர் மாதம் மீண்டும் விதித்தன. 2025-ஆம் ஆண்டில் உணவுப் பொருட்களின் பணவீக்கம் 70 சதவீதத்திற்கும் அதிகமாக இருந்தது. அந்நாட்டு நாணயமான 'ரியால்' மதிப்பு கடந்த டிசம்பரில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வீழ்ச்சியடைந்தது. இரானிய ஆட்சி பெரும் அழுத்தத்தில் இருந்தாலும், அது இப்போதைக்கு வீழ்ந்துவிடாது என்பதையே சான்றுகள் காட்டுகின்றன. Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading அதிகம் படிக்கப்பட்டது சீனாவுடன் போர்: 120 இந்திய வீரர்கள் பின்வாங்க மறுத்தபோது நடந்தது என்ன? அடர் வனத்தில் தனியே வசிக்கும் குடும்பம் - வெளியாட்களை கண்டால் ஓடி ஒளியும் குடும்பத்தலைவர் இரானில் கொந்தளிப்பான சூழல்: டிரம்ப் அறிவிப்பால் இந்தியாவின் திட்டத்திற்கு மேலும் சிக்கல் குடல் ஆரோக்கியம் உங்கள் வாழ்நாளை அதிகரிக்குமா? மல ஆய்வில் தெரியவந்தது என்ன? End of அதிகம் படிக்கப்பட்டது முக்கியமாக, பாதுகாப்புப் படைகள் இன்னும் அரசுக்கு விசுவாசமாகவே உள்ளன. 1979-ஆம் ஆண்டு இஸ்லாமியப் புரட்சிக்குப் பிறகு, இரானிய ஆட்சியாளர்கள் அடக்குமுறை மற்றும் ஒடுக்குமுறைக்கான ஒரு விரிவான மற்றும் இரக்கமற்ற அமைப்பை உருவாக்குவதற்காகப் பெரும் நேரத்தையும் பணத்தையும் செலவிட்டுள்ளனர். பட மூலாதாரம்,West Asia News Agency via Reuters படக்குறிப்பு,கலகக்காரர்களுக்கு 'விரைவான மற்றும் கடுமையான' தண்டனை வழங்கப்படும் என இரானின் நீதித்துறை தலைவர் கூறியுள்ளார். கடந்த இரண்டு வாரங்களில், வீதிகளில் இறங்கிய சக குடிமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தும்படி வந்த உத்தரவுகளை பாதுகாப்புப் படைகள் நிறைவேற்றின. இதன் விளைவாக, கடந்த சில வாரங்களாக நடந்த போராட்டங்கள் முடிவுக்கு வந்துள்ளன. தகவல் தொடர்பு தடையை விதித்துள்ள ஒரு நாட்டில் நம்மால் இவ்வளவுதான் அறிந்துகொள்ள முடிகிறது. இந்தப் போராட்டங்களை ஒடுக்குவதில் முன்னணியில் இருப்பது இரானிய புரட்சிகர காவல்படை (IRGC) ஆகும். இது நாட்டின் மிக முக்கியமான அமைப்பாகக் கருதப்படுகின்றது. 1979-ஆம் ஆண்டு இஸ்லாமியப் புரட்சியின் சித்தாந்தம் மற்றும் ஆட்சி முறையைப் பாதுகாக்கும் குறிப்பிட்ட பணியைக் கொண்டுள்ள இந்த அமைப்பு, நேரடியாக உச்ச தலைவர் ஆயதுல்லா அலி காமனெயிக்கு பதில் சொல்ல கடமைப்பட்டது. இரானிய புரட்சிகர காவல்படை அமைப்பில் சுமார் 1,50,000 ஆயுதம் ஏந்திய வீரர்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இரானின் வழக்கமான ராணுவத்திற்கு இணையாகச் செயல்படும் இந்தப் படை, இரானியப் பொருளாதாரத்திலும் முக்கியப் பங்காற்றுகிறது. அதிகாரம், பணம், ஊழல் மற்றும் சித்தாந்தம் ஆகியவற்றின் சக்திவாய்ந்த கலவையானது, அமைப்பைப் பாதுகாக்க அதற்கு எல்லா காரணங்களையும் கொண்டுள்ளது. பட மூலாதாரம்,Getty Images ஐஆர்ஜிசி அமைப்பிற்கு துணை படையாக பாசிஜ் மிலீஷியா எனப்படும் தன்னார்வ துணை ராணுவ அமைப்பு உள்ளது. இதில் கோடிக்கணக்கான உறுப்பினர்கள் இருப்பதாக அந்த அமைப்பு கூறுகிறது. மேற்கத்திய நாடுகளின் சில மதிப்பீடுகளின்படி, இதில் செயற்பாட்டுப் பணியில் இருக்கும் வீரர்கள் பல லட்சங்களாக உள்ளனர். அது மிகப் பெரிய எண்ணிக்கையாகவே கருதப்படுகிறது. அரசாங்கத்திற்கு எதிரான போராட்டக்காரர்களை ஒடுக்குவதில் இந்த பசிஜ் படையினர் முன்னணியில் உள்ளனர். 2009-ஆம் ஆண்டு டெஹ்ரானில் சர்ச்சைக்குரிய அதிபர் தேர்தலைத் தொடர்ந்து நடந்த பிரமாண்டமான போராட்டங்களை ஒடுக்க ஐஆர்ஜிசி மற்றும் பசிஜ் படையினர் நடவடிக்கை எடுத்ததை நான் நேரில் பார்த்தேன். பசிஜ் தன்னார்வலர்கள் ரப்பர் லத்திகள் மற்றும் மரத்தடிகளுடன் வீதிகளில் வரிசையாக நின்றிருந்தனர். அவர்களுக்குப் பின்னால் தானியங்கி ஆயுதங்களை ஏந்திய சீருடை அணிந்த ஆண்கள் இருந்தனர். மோட்டார் சைக்கிள் குழுக்கள் டெஹ்ரானின் அகலமான சாலைகளில் சீறிப்பாய்ந்து, போராட்டம் நடத்த முயன்ற குழுக்கள் மீது பாய்ந்தன. இரண்டு வாரங்களுக்குள், வீதிகளை ஆக்கிரமித்திருந்த போராட்டங்கள், கோஷங்களை எழுப்பும் மற்றும் குப்பைத் தொட்டிகளுக்குத் தீ வைக்கும் சிறிய மாணவர் குழுக்களாகக் குறைக்கப்பட்டன. மாலை வேளையில் மக்கள் தங்கள் பால்கனிகளுக்கும் மாடிகளுக்கும் சென்று, ஷாவுக்கு எதிராக அவர்களுடைய பெற்றோர் முழங்கியதுபோல 'கடவுள் மிகப் பெரியவர்' என முழக்கமிட்டனர். ஆனால் அந்த முழக்கங்களும் காலப்போக்கில் மெல்ல மங்கிப் போயின. பட மூலாதாரம்,Getty Images உள்நாட்டு பாதுகாப்புப் படைகளின் வெளிப்படையான உறுதித்தன்மை, உச்ச தலைவர் அல்லது அவருடைய நெருங்கிய கூட்டாளிகள் நிம்மதியாக இருக்க முடியும் அல்லது இருப்பார்கள் என்பதைக் குறிக்கவில்லை. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இன்னும் நடவடிக்கை எடுப்பதாக அச்சுறுத்தி வருகிறார். ஆட்சி வீழ்ச்சியடைய வேண்டும் என்று விரும்பும் லட்சக்கணக்கான இரானியர்கள் மிகுந்த ஆத்திரத்திலும் கோபத்திலும் இருக்கக்கூடும். டெஹ்ரானில், தாங்கள் எதிர்கொண்டு வரும் அழுத்தங்களில் ஒரு பகுதியையாவது குறைக்கும் வழிகளை அரசு மற்றும் உச்ச தலைவர் தேடிக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது. கடுமையான, அதிகாரப்பூர்வ பேச்சுகள் ஒருபுறம் தொடர்ந்தாலும், மறுபுறம் அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தையைத் தொடங்கத் தயாராக இருப்பதாக முன்மொழிவும் முன்வைக்கப்படுகிறது. இரானின் அணுசக்தித் திட்டங்கள் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைத் திட்டங்கள் தொடர்பாக இரு தரப்பினரும் எவ்வாறு ஒரு உடன்பாட்டை எட்ட முடியும் என்பதைப் புரிந்துகொள்வது கடினம், ஏனெனில் இவை முந்தைய பேச்சுவார்த்தைகளைத் தோல்வியடையச் செய்துள்ளன. ஆனால் பேச்சுவார்த்தைகள் இரானுக்கு நேரத்தை கொடுக்கக்கூடும், குறிப்பாக ஒரு ஒப்பந்தம் சாத்தியம் என்று டிரம்பை நம்ப வைக்க முடிந்தால் அது நடக்கலாம். அழுத்தத்தை அதிகரிக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, இரானுடன் வணிகம் செய்யும் எந்தவொரு நாட்டின் பொருட்கள் மீதும் 25% வரி விதிக்கப்படும் என்று டிரம்ப் கூறுகிறார். இது எவ்வாறு செயல்படும் என்பதைப் பார்ப்பது கடினம். சீனா இரானின் பெரும்பாலான எண்ணெயை வாங்குகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு இலையுதிர் காலத்தில் டிரம்பும் சீன அதிபர் ஷி ஜின்பிங்கும் தங்களது வர்த்தகப் போரில் ஒரு தற்காலிக உடன்பாட்டிற்கு ஒப்புக்கொண்டனர். இதன் தொடர்ச்சியாக ஏப்ரல் மாதம் பெய்ஜிங்கில் ஒரு உச்சிமாநாடு நடைபெற உள்ளது. உலகின் இரண்டு வல்லரசுகளும் எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்னைகள் குறித்து இந்த உச்சிமாநாடு விவாதிக்கும். இரான் மீதான அழுத்தத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்காக மட்டும், டிரம்ப் இந்த உச்சிமாநாட்டை ஆபத்தில் தள்ளவோ அல்லது சீர்குலைக்கவோ விரும்புவாரா? டெஹ்ரானில், உச்ச தலைவர் ஆயதுல்லா காமனெயியின் மிகப்பெரிய முன்னுரிமை இஸ்லாமியக் குடியரசின் ஆட்சி முறையைப் பாதுகாப்பதாகும். மீண்டும் போராட்டங்கள் வெடித்தால், அவை கடுமையான பதிலடியைச் சந்திக்கும் என எதிர்பார்க்கலாம். ஆட்சிக்கு இருக்கும் ஒரு சாதகமான அம்சம் என்னவென்றால், போராட்டக்காரர்கள் இடையே ஒரு ஒருங்கிணைந்த தலைமை இல்லாததுதான். ஏறக்குறைய அரை நூற்றாண்டுக்கு முன்பு புரட்சியால் பதவி நீக்கம் செய்யப்பட்ட ஷா மன்னரின் மூத்த மகன், போராட்டக்காரர்களுக்குத் தேவையான தலைவராக மாற முயற்சித்து வருகிறார். ஆனால் அவரது குடும்ப வரலாறு மற்றும் இஸ்ரேலுடனான அவரது நெருங்கிய தொடர்புகள் காரணமாக, அவருக்குக் கிடைக்கும் ஆதரவு ஒரு குறிப்பிட்ட வரம்பிற்குட்பட்டதாகவே தெரிகிறது. டெஹ்ரானில் உள்ள மதகுருமார்களையும் ராணுவ வீரர்களையும் கவலையடையச் செய்யக்கூடிய ஒரு பாடம், அவர்களின் முன்னாள் கூட்டாளியான சிரியாவின் முன்னாள் அதிபர் பஷர் அல்-அசாத்திடமிருந்து கிடைக்கிறது. அவர் தனது போரில் வெற்றி பெற்றது போலத் தோன்றியதுடன், சௌதி அரேபியா மற்றும் அரபு லீக் அமைப்புகளால் மெதுவாக மீண்டும் ஏற்றுக்கொள்ளப்பட்டும் வந்தார். ஆனால் 2024-ஆம் ஆண்டின் இறுதியில், நன்கு திட்டமிடப்பட்ட கிளர்ச்சியாளர்களின் தாக்குதலை அவர் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. அவரது மிக முக்கியமான இரண்டு கூட்டாளிகளான ரஷ்யாவும் இரானும் அவரைப் பாதுகாக்க விரும்பவில்லை அல்லது ஒருவேளை அவர்களால் முடியாமல் போயிருக்கலாம். சில நாட்களுக்குள்ளேயே, அசாத்தும் அவரது குடும்பத்தினரும் மாஸ்கோவிற்கு தப்பிச் சென்றனர். ஒரு சர்வாதிகார ஆட்சி படிப்படியாகச் சிதைந்து, திடீரென வீழும். அசாத்தின் ஆட்சி சிரியாவில் வீழ்ந்த போது, அந்த செயல்முறை மிக வேகமாக நடந்தது. டெஹ்ரானில் ஆய்வு செய்யப்பட வேண்டிய மற்றொரு உதாரணம், 2011-இல் துனீசிய அதிபர் பென் அலியின் வீழ்ச்சியாகும். பென் அலியின் வீழ்ச்சி, எகிப்தின் ஹோஸ்னி முபாரக் ராஜினாமாவிற்கு வழிவகுத்தது. அவர் மிகப்பெரிய போராட்டங்களைத் தாண்டி பதவியில் நீடித்திருக்கக் கூடும். ஆனால் தங்களது நிலையைப் பாதுகாக்க வேண்டும் என்று ஆயுதப்படைகள் முடிவு செய்ததால், அவர் பதவியை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது. இதே போல் இரானில் நடக்க வாய்ப்புள்ளதா? ஒருவேளை நடக்கலாம். ஆனால் இப்போதைக்கு இல்லை. இஸ்லாமிய ஆட்சி முறையை எதிர்ப்பவர்கள், உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் கூடுதல் அழுத்தம் ஏற்படுவதையும், ஒரு நம்பகமான தலைமை உருவாவதையும் எதிர்பார்ப்பார்கள். இதன் மூலம் அந்த ஆட்சி சிதைவுறும் செயல்முறை வேகமெடுத்து, 'படிப்படியானது' என்பதிலிருந்து 'திடீரென' நடப்பதாக மாறலாம். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cwy8e5xzqqjo
-
திருகோணமலையில் புத்தர் சிலை வைக்கப்பட்ட சம்பவம் - 4 தேரர்கள் உட்பட 9 பேருக்கு விளக்கமறியல்
திருகோணமலை சம்பவம் - 4 தேரர்கள் உட்பட 9 பேருக்கு விளக்கமறியல் Jan 14, 2026 - 04:06 PM திருகோணமலை பகுதியில் புத்தர் சிலை வைக்கப்பட்டமை தொடர்பான சம்பவத்தின் அடிப்படையில், வணக்கத்திற்குரிய பலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட நான்கு பிக்குகள் மற்றும் மேலும் 5 சந்தேகநபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். திருகோணமலையிலுள்ள விகாரையொன்றில் வைக்கப்பட்டிருந்த புத்தர் சிலையொன்றை அகற்றுவதற்கு முற்பட்டதையடுத்து, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 16ஆம் திகதி அங்கு அமைதியற்ற சூழல் ஏற்பட்டிருந்தது. எனினும், குறித்த கட்டுமானங்கள் அனுமதி இன்றி முன்னெடுக்கப்பட்டதாகக் கூறி, கடற்கரை பாதுகாப்புத் திணைக்களம் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்திருந்தது. இந்த நிலையில், புத்தர் சிலையை அகற்ற முயற்சித்த போது, பிக்குகள் மற்றும் பிரதேச மக்களிடமிருந்து பொலிஸாருக்குக் கடும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பான வழக்கு திருகோணமலை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, சம்பந்தப்பட்ட தரப்பினர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். இதன்போது, குறித்த குழுவினரை ஜனவரி மாதம் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. https://adaderanatamil.lk/news/cmkdvy4ch03xdo29nqe9mtqro
-
ஜல்லிக்கட்டு செய்திகள் 2026
ஜல்லிக்கட்டு களத்தில் வீரர்களை பதறச் செய்யும் இந்த 6 காளைகள் பற்றி தெரியுமா? பட மூலாதாரம்,shyam படக்குறிப்பு,கோப்புப் படம் கட்டுரை தகவல் இரா.சிவா பிபிசி தமிழ் 6 மணி நேரங்களுக்கு முன்னர் தமிழ்நாட்டில் பொங்கலை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் ஏற்கனவே தொடங்கிவிட்டன. புகழ் பெற்ற அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் போட்டிகளும் நெருங்கிவிட்டன. ஜல்லிக்கட்டு என்பதென்ன? வீரர்களுக்கும் மாடுகளுக்கும் இடையே களத்தில் நடக்கும் 'நீயா… நானா என்ற போட்டி தானே. அந்த மாடுபிடி வீரர்கள் காளையை பற்றி மனம் திறந்து பேசினால் எப்படி இருக்கும்? ஜல்லிக்கட்டு களத்தில் தாங்கள் வியந்து பார்த்த காளைகளை பற்றி சில வீரர்கள் பிபிசியிடம் பகிர்ந்து கொண்டனர். தோட்டா பட மூலாதாரம்,Selvakumar படக்குறிப்பு,'தோட்டா' வந்தால் களமே சற்று நேரம் பதறும் என்கிறார் முன்னாள் ஜல்லிக்கட்டு வீரர் முடக்கத்தான் மணி. இது திருப்பரங்குன்றம் முன்னாள் எம்.எல்.ஏ. மறைந்த சீனிவேல் என்பவரது காளை. இந்தக் காளை வந்தால் களமே சற்று நேரம் பதறும் என்கிறார் முன்னாள் ஜல்லிக்கட்டு வீரரும் தமிழ்நாடு ஜல்லிக்கட்டு நலச்சங்கம் என்ற அமைப்பின் மாநில நிறுவனத் தலைவருமான முடக்கத்தான் மணி. ''தோட்டா களத்தில் நின்று விளையாடும். இந்த மாட்டை அணைவதே சிரமம். களத்தில் நிற்பவர்களை நேருக்கு நேர் வாடா… என அழைப்பது போல நிற்கும். தோட்டா இறங்கினால் களமே சற்று நேரம் பதறும், காலியாகும்,'' என்கிறார் முடக்கத்தான் மணி. இதுவரை 40-க்கும் மேற்பட்ட வாடிவாசலில் இந்த மாடு களமிறங்கி உள்ளதாக சீனிவேலுவின் மகன் செல்வகுமார் கூறுகிறார். ஒரு லட்ச ரூபாய் பரிசு, பிடித்தால் மாட்டையே தருகிறோம் என அறிவித்தும் கூட இந்த மாடு பிடிபட்டதில்லை' என்கிறார் செல்வகுமார். சௌமி பட மூலாதாரம்,sathish படக்குறிப்பு,ஜல்லிக்கட்டு களத்தில் இது ஒரு ஸ்டார் மாடு என்கிறார் ஜல்லிக்கட்டு வீரர் பாரதி. இது புதுக்கோட்டை மாவட்டம் கைக்குறிச்சி தமிழ்ச்செல்வன் என்பவரது காளை. ஜல்லிக்கட்டு களத்தில் இது ஒரு ஸ்டார் மாடு என்கிறார் ஜல்லிக்கட்டு வீரர் பாரதி. ''மாடு வெளியே வந்ததும் வீரர்கள் பாதுகாப்புக்காக உள்ள கம்பிகளில் ஏறி தொங்குவார்கள். மாடு அப்படியே ஒரு தோரணையாக நிமிர்ந்து பார்க்கும். கீழே இறங்கவே யோசிப்பார்கள். பல பேர் பிடிக்க நினைத்தும் இதுவரை இந்த மாட்டை பிடிக்க முடியவில்லை,'' என்கிறார் பாரதி. ''சௌமி 30-க்கும் மேற்பட்ட வாடிகளில் களமிறங்கி இருக்கிறது. இதுவரை எங்கும் பிடிபட்டதில்லை. பாய்ச்சல் தான் சௌமியின் சிறப்பே. வாடியை விட்டு வெளியே வந்ததும் எந்தப் பக்கம் ஆள் இருந்தாலும் பாய்ந்துவிடும்,'' என்கிறார் காளை உரிமையாளரின் உறவினர் சதீஸ். பில்லா பட மூலாதாரம்,shyam படக்குறிப்பு,'பில்லா' வாடிக்குள் இருந்து வருவதே பறந்து வருவது போல இருக்கும் என்கிறார் ஜல்லிக்கட்டு வீரர் பொதும்பு பிரபா. இது மதுரை மாவட்டம் கே.புதூரைச் சேர்ந்த கே.ஆர். ஆனந்தின் காளை. இந்த மாடு வரும் தோரணையே நன்றாக இருக்கும் என்கிறார் ஜல்லிக்கட்டு வீரர் பொதும்பு பிரபா. ''இந்த மாட்டைப் பிடிக்க வேண்டும் என்பது என் ஆசை. ஆனால், கடந்த முறை பாலமேட்டில் முயற்சித்த போது என்னை தூக்கி எறிந்துவிட்டது. வாடிக்குள் இருந்து வருவதே பறந்து வருவது போல இருக்கும். குதிரை மாதிரி கால்களை தூக்கிக் கொண்டு வரும். வெளியே வந்து ஒரு சுற்று சுற்றி விட்டுதான் போகும்.'' என்கிறார் பொதும்பு பிரபா. ''இதுவரை 150-க்கும் மேற்பட்ட வாடிவாசலில் களமிறங்கி உள்ளது. ஒரே ஒருமுறை மட்டும்தான் இந்த மாடு பிடிபட்டிருக்கிறது. வாடியை விட்டு வரும் போதே ஸ்டைலாக வெளியே வரும். களத்தில் ஆக்ரோஷமாக இருந்தாலும் வீட்டில் அமைதியாக இருக்கும்'' என்கிறார் மாட்டின் உரிமையாளரின் சகோதரர் ஷ்யாம். ஆண்டிச்சாமி கோவில் காளை பட மூலாதாரம்,Karuppasamy படக்குறிப்பு,இந்த காளை எத்தனை பேர் பிடித்தாலும் தூக்கி எறிந்துவிடும் என்கிறார் ஜல்லிக்கட்டு வீரர் திருப்பரங்குன்றம் கார்த்தி. இது மதுரை மாவட்டம் வெள்ளியங்குன்றத்தை சேர்ந்த கருப்பசாமி என்பவரது காளை. இது ஒரு தரமான காளை என்கிறார் முடக்கத்தான் மணி. ''பிடித்த உடனே ஆளையை பறக்க விட்டுவிடும். போடும் பந்துகள் அனைத்தையும் அடிப்பவர்தான் டாப் பேட்ஸ்மேன், அது போல அணைய வரும் அத்தனை பேரையும் பறக்கவிடும் டாப் காளைதான் இந்தக் காளை. பிடிக்க வருபவர்களை கீழே தள்ளுவது வேறு, உதைத்து தள்ளுவது வேறு, ஆனால், ஆண்டிச்சாமி கோவில் காளை ஆளையே காற்றில் பறக்கவிட்டுவிடும்'' என்கிறார் முடக்கத்தான் மணி. மற்றொரு ஜல்லிக்கட்டு வீரரான திருப்பரங்குன்றம் கார்த்தியும் இதே காளையை தானும் வியந்து பார்த்ததாக கூறுகிறார். ''திமிலில் ஒரு நொடிக்கு மேல் ஆளை வைத்திருக்காது. எத்தனை பேர் பிடித்தாலும் தூக்கி எறிந்துவிடும். இன்றைக்கு அனைத்து ஜல்லிக்கட்டிலும் இந்த மாடு களமிறங்குகிறது. ஓய்வு இல்லாமல் விளையாடினாலும் அசராமல் விளையாடுகிறது.'' என்கிறார் திருப்பரங்குன்றம் கார்த்தி. 9 ஆண்டுகளுக்கு மேலாக இந்த மாடு ஜல்லிக்கட்டில் களமிறங்குவதாக உரிமையாளர் கருப்பசாமி கூறுகிறார். ஆரம்ப காலத்தில் ஒரு முறை மட்டும் பிடிபட்டதாகவும், அதன் பிறகு இதுவரை பிடிபடவில்லை என்கிறார் கருப்பசாமி. கைதி 2 பட மூலாதாரம்,PCN Kannan படக்குறிப்பு,'கைதி 2' களத்தில் வீரர்கள் நெருங்க முடியாத காளை என்கிறார் பாரதி. இது புதுக்கோட்டை மாவட்டம் தாயினிப்பட்டியை சேர்ந்த பிசிஎன் கண்ணன் என்பவரது காளை. கைதி 2 களத்தில் வீரர்கள் நெருங்க முடியாத காளை என்கிறார் பாரதி. ''களத்துக்குள் ஆட்களையே இறங்கவிடாது. நீண்ட தூரம் கூட வராது. கட்டை அருகிலேயேயே இருக்கும். ஒருத்தர் உள்ளே வந்தால் கூட அவர்களை விரட்டிச் சென்று அமுக்கிவிடும். களத்துக்கு அந்த மாடு வருகிறது என்றாலே அதன் பெயரில் ஒரு பரிசை எழுதி வைத்துவிடலாம்'' என்கிறார் பாரதி. ''களத்தில் வீரர்கள் யாராவது தொட்டுவிட்டால் ஆவேசமாகிவிடும். ஆனால், களத்தை விட்டு வெளியே வந்துவிட்டால் அமைதியாகிவிடும். சிறுநீர் கழிக்க வேண்டும் என்றால்கூட கழுத்தில் கட்டி இருக்கும் கயிறு எவ்வளவு தூரம் நீளுமோ அவ்வளவு தூரம் சென்றுதான் சிறுநீர் கழிக்கும். அந்தளவுக்கு புத்திக் கூர்மையான மாடு.'' என்கிறார் உரிமையாளர் கண்ணன். பவி பட மூலாதாரம்,Parthasarathy படக்குறிப்பு,ரசிகர்களுக்கு ஏற்ற மாதிரி இந்தக் காளை விளையாடும் என்கிறார் பாரதி. இது தேனி மாவட்டம் எருமநாயக்கன்பட்டியைச் சேர்ந்த வழக்கறிஞர் பார்த்தசாரதி என்பவரது காளை. ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்றபடி இந்தக் காளை விளையாடும் என்கிறார் பாரதி. ''விறுவிறுப்பே இல்லாமல் இருக்கும் போது இந்த மாடு வந்தால் களமே மாறிவிடும். அதனுடைய கொம்பும் உடம்பும் அழகாக இருக்கும். களத்துக்கு உள்ளே இருக்கும் வீரர்களை கலங்க வைக்க கூடிய, வெளியே இருக்கும் ரசிகர்களை கவரக்கூடிய காளையாக இது உள்ளது'' என்கிறார் பாரதி. ரசிகர்களை மட்டுமின்றி வீரர்களையும் கவர்ந்த இந்த 6 காளைகளும் இந்தாண்டும் ஜல்லிக்கட்டில் களமாட காத்திருக்கின்றன. அந்த காளைகளை அணைந்து ரசிகர்களின் புகழ் மாலைகளை சூட வேண்டும் என்று வீரர்கள் விரும்புகின்றனர். இந்தக் காளைகளைத் தாண்டியும் எண்ணற்ற சிறந்த ஜல்லிக்கட்டு காளைகள் தமிழ்நாட்டில் உள்ளதாக கூறிய வீரர்கள், ஒவ்வொரு மாடும் ஒவ்வொரு வகையில் தனித்துவமானது என்பதையும் குறிப்பிடத் தவறவில்லை. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c62vn3p1k8ko
-
முன்னோடி - அடிப்படை சுகாதார வசதி திட்டம்
முன்னோடி - அ.சு.வ.திட்டம் 1 :- திரு நாகன் பரராசசிங்கம் ஐயாவின் மலசலகூடக்குழி வெட்டி கட்டி பூரணப்படுத்தாமல் உள்ள மலசலகூடம் கட்டி முடிப்பதற்காக தேவைப்படும் 150000 ரூபா நிதியில் முதலாவது கட்டமாக 50000 ரூபா திரு நாகன் பரராசசிங்கம் ஐயாவின் வங்கிக் கணக்கில் வைப்புச் செய்துவிட்டேன். இருப்பு 430,445.67-50025=ரூ 380,420.67 சதம் இன்று 14/01/2026 50000 ரூபா வைப்புச் செய்த பின் வங்கி மீதி. 25 ரூபா மக்கள் வங்கிக்கு மாற்றுவதற்கான கட்டணம் எடுத்துள்ளார்கள்.
-
முன்னோடி - அடிப்படை சுகாதார வசதி திட்டம்
பொன்னாலை மூன்று சகோதரர்களின் புனரமைப்பு வேலையை வியாழன் செய்யத் தொடங்குவோம்.
-
முன்னோடி - அடிப்படை சுகாதார வசதி திட்டம்
திரு நாகன் பரராசசிங்கம் ஐயாவின் வங்கிக் கணக்கிற்கு முதலாவது கட்டமாக 50000 ரூபாவை வைப்புச் செய்யட்டுமா?
-
அமைச்சர் லால்காந்தவின் கருத்தை உடனடியாக மீளப் பெறப்பட வேண்டும்
லால்காந்த ICCPR சட்டத்தை மீறியுள்ளார்; நாமல் குற்றச்சாட்டு Jan 13, 2026 - 10:12 PM விவசாய, கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால்காந்த, 2007 ஆம் ஆண்டின் 56 ஆம் இலக்க சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச உடன்படிக்கை (ICCPR) சட்டத்தை மீறி பௌத்த மதத்தையும் மகா சங்கத்தினரையும் அவமதித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மிஹிந்தலை ரஜமஹா விகாராதிபதி, வணக்கத்திற்குரிய வலவாஹெங்குனவெவே தம்மரதன தேரரை அண்மையில் 'காட்டுமிராண்டி' என விளித்து அவமதித்துள்ளதாகவும், இவ்வாறு பௌத்த மதத் தலைவரொருவரை அவமதிப்பதை தான் வன்மையாகக் கண்டிப்பதாகவும் நாமல் ராஜபக்ஷ கூறினார். ICCPR சட்டத்தில், "யாரும் போரைப் பரப்புவதோ அல்லது பாகுபாடு, பகைமை அல்லது வன்முறையைத் தூண்டும் வகையில் தேசிய, இன அல்லது மத வெறுப்பைத் தூண்டுவதோ கூடாது" எனக் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், லால்காந்த இதில் மதத் துவேஷத்தைப் பரப்பியிருப்பது புலப்படுவதாக நாமல் ராஜபக்ஷ சுட்டிக்காட்டுகிறார். சட்டம் அனைவருக்கும் சமம் என்றால், பௌத்த தலைவர்களை இலக்காகக் கொண்டு மேற்கொள்ளப்படும் அவதூறுகள் மற்றும் மதத் துவேஷத்தைப் பரப்புவது தொடர்பில் இச்சட்டத்தின் கீழ் லால்காந்தவுக்கு எதிராக எடுக்கப்படும் சட்ட நடவடிக்கை என்ன என்று தான் அரசாங்கத்திடம் கேள்வி எழுப்புவதாகவும் அவர் கூறினார். சாதாரண பிரஜை ஒருவரோ அல்லது எதிர்க்கட்சியைச் சேர்ந்த ஒருவரோ இவ்வாறு சட்டத்தை மீறியிருந்தால் இந்நேரம் கைது செய்யப்பட்டு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கும் என்றும், லால்காந்த மதத் துவேஷத்தைப் பரப்பியது மற்றும் மகா சங்கத்தினரை அவமதித்தது குறித்து அரசாங்கம் மௌனம் காப்பதாகவும் அவர் தெரிவித்தார். அரசியல்வாதிகளுக்கும் மகா சங்கத்தினருக்கும் இடையில் பல்வேறு கருத்து வேறுபாடுகள் இருந்தபோதிலும், இந்நாட்டு வரலாற்றில் எந்தவொரு அரசியல்வாதியும் இம்முறையில் மகா சங்கத்தினரை அவமதித்தது இல்லை என நாமல் ராஜபக்ஷ மேலும் தெரிவித்தார். https://adaderanatamil.lk/news/cmkctlctj03w5o29nitxivp24
-
முன்னோடி - அடிப்படை சுகாதார வசதி திட்டம்
3) முன்னோடிக்கான மூன்றாவது நன்கொடை ரூபா 319,122.00 சதம் 14/01/2026 கிடைக்கப்பெற்றது. இன்றைய 14/01/2026 வங்கி மீதி ரூபா 430,445.67 சதம் ஆகும். 250 ரூபா Swift கட்டணம் எடுத்துள்ளார்கள். மூன்றாவது நன்கொடையை அனுப்பி வைத்த உறவிற்கு மிக்க நன்றி. உங்கள் ஒவ்வொருவரின் கூட்டு முயற்சியால் வறுமை/ஏழ்மையில் இருக்கும் ஒரு குடும்பத்திற்கு அடிப்படை சுகாதார வசதி கிடைக்கட்டும். முன்னோடி - அடிப்படை சுகாதார வசதி திட்டம் 2026. ஒற்றுமையே பலம்.
-
ஈரானில் தீவிரமடையும் போராட்டம்: இணைய சேவைகள் முடக்கம்
'கொன்றுகொண்டே இருந்தனர்' - இரான் ஒடுக்குமுறை குறித்து நேரடி சாட்சியங்கள் கூறுவது என்ன? பட மூலாதாரம்,Public domain படக்குறிப்பு,டெஹ்ரானின் வடமேற்கில் உள்ள கஜ் சதுக்கத்தில் ரெஸா பஹ்லவியின் புகைப்படத்தை ஏந்தியுள்ள போராட்டக்காரர் ஒருவர் கட்டுரை தகவல் ரோஜா அசாதி மற்றும் சாரா நம்ஜூ பிபிசி பாரசீக சேவை 7 மணி நேரங்களுக்கு முன்னர் "அவர்கள் போராட்டக்காரர்களை நோக்கி நேரடியாக சுட்டனர், போராட்டக்காரர்கள் எங்கு நின்று கொண்டிருந்தார்களோ அங்கேயே விழுந்தனர், இதை நான் என் கண்களால் பார்த்தேன்." தான் பேசும்போது தன்னை கண்காணிக்கலாம் என்ற அச்சம் காரணமாக ஓமிட்டின் குரல் நடுங்குகிறது. அதிகாரிகளின் பழிவாங்கல் நடவடிக்கை குறித்த அச்சத்திற்கு நடுவே, இரான் மற்றும் உலகின் பிற பகுதிகளுக்கு இடையேயான மௌனத்தை உடைப்பதற்கு மிகப்பெரும் தைரியம் தேவைப்படுகிறது. ஓமிட்டின் பெயர் அவரின் பாதுகாப்பு காரணமாக மாற்றப்பட்டுள்ளது. இரானில் மோசமாகிவரும் பொருளாதார நெருக்கடிக்கு எதிராக அவர் கடந்த சில தினங்களாக தெற்கு இரானில் உள்ள சிறுநகரத்தில் தெருக்களில் இறங்கி போராடிவருகிறார். தன்னுடைய நகரத்தில் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிகளை கொண்டு ஆயுதமற்ற போராட்டக்காரர்களை சுட்டதாக அவர் தெரிவித்தார். "மிருகத்தனமான அரசுக்கு எதிராக நாங்கள் வெறுங்கைகளுடன் சண்டையிடுகிறோம்," என அவர் தெரிவித்தார். ரெஸா பஹ்லவியின் அழைப்பு கடந்த வாரம் இரான் முழுதும் நடைபெற்ற பரவலான போராட்டங்களில் பாதுகாப்புப் படையினரால் இதேபோன்ற ஒடுக்குமுறைகள் நிகழ்ந்தது குறித்த தகவல்கள் பிபிசிக்கு கிடைத்துள்ளன. போராட்டம் ஆரம்பித்ததிலிருந்து இணைய வசதி அதிகாரிகளால் துண்டிக்கப்பட்டதால் இரானிலிருந்து செய்தி சேகரிப்பது முன்னெப்போதையும் விட மிகவும் கடினமாகியுள்ளது. இரானுக்குள் இருந்து செய்தி சேகரிக்க பிபிசி பாரசீக சேவைக்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. இரானில் மிகப்பெரிய தேசியளவிலான போராட்டங்களில் ஒன்று கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது. போராட்டங்கள் ஆரம்பித்த 12-ஆம் நாள் இரவு அது. 1979-ஆம் ஆண்டு நிகழ்ந்த இஸ்லாமிய புரட்சியில் ஆட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஷா-வின் (மன்னருக்குரிய பட்டம்) நாடு கடத்தப்பட்ட மகனான ரெஸா பஹ்லவியின் அழைப்புக்குப் பிறகு வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பலரும் போராட்டங்களில் இணைந்ததாக தோன்றுகிறது. அதற்கடுத்த நாள் இரானின் அதிஉயர் தலைவர் காமனெயி, "இஸ்லாமிய குடியரசு பின்வாங்காது" எனத் தெரிவித்தார். அதன்பின், அவரிடமிருந்து பாதுகாப்புப் படையினர் மற்றும் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை உத்தரவுகளை பெற்றதைத் தொடர்ந்து மோசமான படுகொலைகள் நிகழ்ந்ததாக தோன்றுகிறது. பட மூலாதாரம்,Reuters அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இப்பிரச்னையை தூண்டிவிடுவதாக தெரிவித்துள்ள இரானிய அதிகாரிகள், "பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு" கண்டனம் தெரிவித்துள்ளதாக, அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. "தீர்ப்பு நாள் போன்று இருந்தது" கடந்த வியாழக்கிழமை "தீர்ப்பு நாள்" போன்று இருந்ததாக டெஹ்ரானை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தெரிவித்தார். "நீங்கள் நம்பமுடியாத வகையிலான, டெஹ்ரானின் தொலைதூர பகுதிகளில் கூட போராட்டக்காரர்கள் திரண்டனர்," என அவர் தெரிவித்தார். "ஆனால் வெள்ளிக்கிழமை பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து கொன்று கொண்டே இருந்தனர். அதை என் கண்களால் பார்த்தபோது என்னுடைய மன உறுதி முற்றிலும் குலைந்துவிட்டது. அந்த வெள்ளிக்கிழமை ஒரு குருதி தோய்ந்த நாள்." வெள்ளிக்கிழமை நிகழ்ந்த கொலைகளுக்குப் பிறகு மக்கள் வெளியே செல்ல அஞ்சுவதாக தெரிவித்த அவர், தற்போது அவர்கள் தங்கள் பகுதிகளில் உள்ள தெருக்கள் மற்றும் தங்கள் வீடுகளிலிருந்து முழக்கமிடுவதாக கூறினார். போராட்டக்காரர்கள் மற்றும் பாதுகாப்புப் படையினர் தெருக்களை சூழ்ந்துகொண்டதால் டெஹ்ரான் அப்போது போராட்டக்களமாக இருந்ததாக அவர் தெரிவித்தார். ஆனால், "போரில் இரு தரப்பிலும் ஆயுதங்கள் இருக்கும். ஆனால் இங்கு முழக்கங்களை மட்டுமே இடும் மக்கள் கொல்லப்பட்டனர். இது ஒரு தரப்பில் மட்டும் நடக்கும் போர்." எனவும் அவர் கூறினார். பட மூலாதாரம்,AFP via Getty Images டெஹ்ரானுக்கு சற்று மேற்கே உள்ள ஃபர்டிஸ் எனும் நகரத்தைச் சேர்ந்த நேரடி சாட்சியங்கள் கூறுகையில், தெருக்களில் காவல்துறையினர் பல மணிநேரங்களாக இல்லாத நிலையிலும், இஸ்லாமிய புரட்சிகர காவல் படையின் கீழ் செயல்படும் துணை ராணுவமான பசிஜ் படையினர் திடீரென போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக தெரிவித்தனர். நேரடி சாட்சியங்களின் கூற்றுப்படி, சீருடை அணிந்து மோட்டார் சைக்கிள்களில் வலம்வந்த படையினர், போராட்டக்காரர்களை நோக்கி சுட்டனர். குறுகிய தெருக்களுக்கு உள்ளே நுழைந்த அடையாளம் தெரியாத கார்களில் வந்தவர்கள், போராட்டங்களில் ஈடுபடாத குடியிருப்புவாசிகளை நோக்கி சுட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர். "ஒவ்வொரு குறுகிய தெருவிலும் இரண்டு அல்லது மூன்று நபர்கள் கொல்லப்பட்டனர்," என நேரடி சாட்சியமான ஒருவர் குற்றம் சாட்டினார். பிபிசி பாரசீக சேவையிடம் பேசியவர்கள் இரானுக்குள் நடப்பவை வெளியுலகம் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவுக்கு இருப்பதாகவும், இறந்தவர்களின் எண்ணிக்கை குறித்து சர்வதேச ஊடகம் கூறும் எண்ணிக்கை தங்களின் சொந்த மதிப்பீடுகளின் ஒரு பகுதியையே பிரதிபலிப்பதாகவும் தெரிவித்தனர். பட மூலாதாரம்,Eyewitness image படக்குறிப்பு,வியாழக்கிழமை வெளியான காணொளியில் வடக்கு இரானில் உள்ள பபோலில் பெருவாரியான போராட்டக்காரர்கள் திரண்டிருப்பதை காட்டுகிறது. இறந்தவர்கள் குறித்து அதிகாரப்பூர்வ தகவல் இல்லை சர்வதேச செய்தி ஊடகங்கள் அந்நாட்டுக்கு உள்ளேயிருந்து சுதந்திரமாக இயங்க அனுமதிக்கப்படவில்லை, எனவே அவை நாட்டுக்கு வெளியே இருந்து இயங்கும் இரானிய மனித உரிமை குழுக்கள் தரும் தகவல்களையே பெரிதும் சார்ந்துள்ளன. கடந்த திங்கட்கிழமை நார்வேயை தளமாக கொண்டு செயல்பட்டு வரும் இரான் மனித உரிமைகள் அமைப்பு (IHRNGO) இரானில் குறைந்தது 648 போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் அவர்களுள் 9 பேர் 18 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் தெரிவித்துள்ளது. சில உள்ளூர் வட்டாரங்கள் மற்றும் நேரடி சாட்சியங்கள் கூறும் தகவல்களின்படி, பல்வேறு நகரங்களில் அதிகளவிலான போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டதாக கூறுகின்றனர். அதன்படி, இந்த எண்ணிக்கை பல நூறு பேரிலிருந்து ஆயிரக்கணக்கானவர்கள் வரை இருக்கலாம். இந்த எண்ணிக்கையை பிபிசியால் தற்போதைக்கு சுயாதீனமாக சரிபார்க்க முடியவில்லை. இதுவரை எத்தனை போராட்டக்காரர்கள் இறந்தார்கள் என்பது குறித்த அதிகாரபூர்வ அல்லது வெளிப்படையான புள்ளிவிவரங்களை இரானிய அதிகாரிகள் வெளியிடவில்லை. எனினும், இந்தப் போராட்டங்களில் பாதுகாப்பு படையைச் சேர்ந்த 100 பேர் கொல்லப்பட்டதாக இரான் ஊடகம் தெரிவித்துள்ளது. பாதுகாப்புப் படை "கலவரக்காரர்கள்" என அழைக்கும் அந்த போராட்டக்காரர்கள் பல்வேறு நகரங்களில் உள்ள பல மசூதிகள் மற்றும் வங்கிகளுக்கு தீ வைத்ததாக தெரிவித்துள்ளது. பட மூலாதாரம்,Eyewitness image படக்குறிப்பு,வியாழக்கிழமை வெளியான புகைப்படத்தில் மேற்கு இரானில் உள்ள கோராமாபாத்தில் போராட்டக்காரர் ஒருவர் 1979 இரானிய புரட்சிக்கு முன்பாக இருந்த கொடியை ஏந்தியுள்ளார் பிபிசி பாரசீக சேவையின் உண்மை சரிபார்ப்பு குழுவால் சரிபார்க்கப்பட்ட காணொளிகள், போராட்டங்களின்போது வெவ்வேறு பகுதிகளில் காவல்துறை வாகனங்கள் மற்றும் சில அரசு கட்டடங்களுக்கு தீ வைக்கப்படுவதைக் காட்டுகின்றன. பிபிசி பாரசீக சேவையிடம் பேசிய சாட்சியங்கள் மற்றும் காணொளிகள் ஆகியவை இரானின் பெரிய நகரங்களான டெஹ்ரான் மற்றும் அதற்கு அருகிலுள்ள கராஜ், வடக்கில் ரஷ்த், வடகிழக்கில் மஷத், தெற்கில் ஷிராஸ் ஆகிய நகரங்களைச் சேர்ந்தவை. இந்த நகரங்களுக்கு ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணையத் தொடர்பு மூலம் அதற்கான வசதி கிடைத்துள்ளது. போராட்டங்களின் ஆரம்பத்தில் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்ட சிறுநகரங்கள் குறித்த தகவல்கள், அப்பகுதிகளில் ஸ்டார்லிங்க் இணையவசதி மிகவும் கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் உள்ளதால் அரிதாகவே கிடைக்கப் பெற்றுள்ளன. ஆனால், கிடைத்துள்ள சாட்சியங்களின் அளவு, நிலைத்தன்மை மற்றும் ஒத்துப்போதல் ஆகியவற்றின்படி பல்வேறு நகரங்களில் ஒடுக்குமுறை மற்றும் பரவலாக கொடிய வன்முறை கட்டவிழ்க்கப்பட்டதன் தீவிரத்தைக் காட்டுகின்றன. மருத்துவமனை பணியாளர்கள் கூறுவது என்ன? பிபிசியிடம் பேசிய செவிலியர்கள் மற்றும் மருத்துவர்கள், தாங்கள் அதிகளவிலான சடலங்கள் மற்றும் காயமடைந்தவர்களை கண்டதாக தெரிவித்தனர். பல நகரங்களில் உள்ள மருத்துவமனைகள் காயம்பட்டவர்களால் நிரம்பி வழிவதாகவும், பலருக்கும் குறிப்பாக தலை மற்றும் கண்களில் படுகாயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க முடியவில்லை என்றும் தெரிவித்தனர். சடலங்கள் "ஒன்றின் மேல் ஒன்றாக குவிக்கப்பட்டதாக" கூறிய நேரடி சாட்சியங்கள், அவை குடும்பங்களிடம் ஒப்படைக்கப்படவில்லை எனத் தெரிவித்தனர். பட மூலாதாரம்,Eyewitness image / Reuters படக்குறிப்பு,வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட காணொளி ஒன்று, டெஹ்ரானில் கார்களுக்கு தீ வைக்கப்பட்டதை காட்டுகிறது. செயற்பாட்டாளர் ஒருவரால் நடத்தப்படும் டெலிகிராம் சேனலான வாஹித் ஆன்லனில் ஞாயிற்றுக்கிழமை வெளியான வன்முறை தொடர்பான காணொளிகளில் டெஹ்ரானின் காஹ்ரிஸாக் தடயவியல் மருத்துவ மையத்தில் அதிகளவிலான சடலங்கள் இருப்பதையும் பல குடும்பங்கள் துக்கத்துடனும் சடலங்களை அடையாளம் காண்பதிலும் ஈடுபட்டிருப்பதை பார்க்க முடிந்தது. காஹ்ரிஸாக்கிலிருந்து எடுக்கப்பட்டதாக தோன்றும் வீடியோக்களில் ஒன்றில், உறவினர்கள் அங்கு வைக்கப்பட்டுள்ள திரையில் காட்டப்படும் அடையாளம் தெரியாத உடல்களின் புகைப்படங்களை பார்ப்பதைக் காட்டுகின்றன. கருப்புப் பைகளில் பல சடலங்கள் அங்கு வைக்கப்பட்டிருப்பதையும் அதற்கு வெளியே உள்ள தெருவில் சடலம் இருப்பதையும் பார்க்க முடிந்தது, அவற்றில் சில சடலங்கள் மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளன. ஒரு காணொளி சேமிப்பு அறை ஒன்றில் பல உடல்கள் இருப்பதையும் மற்றொரு காணொளி டிரக் ஒன்றிலிருந்து இறந்தவர்களின் உடல்களை சிலர் வெளியே எடுப்பதையும் காட்டுகின்றன. மஷத்தில் உள்ள கல்லறை ஒன்றில் பணிபுரியும் ஒருவர் கூறுகையில், வெள்ளிக்கிழமை காலை சூரிய உதயத்திற்கு முன்பாக 180 முதல் 200 வரையிலான உடல்கள் தலையில் தீவிரமான காயங்களுடன் கொண்டு வரப்பட்டு உடனடியாக அடக்கம் செய்யப்பட்டதாக தெரிவித்தார். ரஷ்த் பகுதியைச் சேர்ந்த ஒருவர் பிபிசி பாரசீக சேவையிடம் கூறுகையில், போராட்டத்தில் ஈடுபட்ட 70 பேரின் உடல்கள் வியாழக்கிழமை அந்நகரில் உள்ள மருத்துவமனையின் பிணவறைக்கு மாற்றப்பட்டதாக தெரிவித்தார். குடும்பங்களிடம் உடல்களை ஒப்படைப்பதற்கு முன்பாக "தோட்டாக்களுக்கான கட்டணத்தை" தருமாறு அவர்களிடம் பாதுகாப்புப் படையினர் கேட்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேசமயம், கிழக்கு டெஹ்ரானில் உள்ள மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவ பணியாளர் ஒருவர் பிபிசி பாரசீக சேவையிடம் கூறுகையில், கடந்த வியாழக்கிழமை ஒரே நாளில் சுமார் 40 உடல்கள் கொண்டு வரப்பட்டதாக தெரிவித்தார். அந்த பணியாளரின் அடையாளத்தைப் பாதுகாக்கும் பொருட்டு மருத்துவமனையின் பெயர் வெளியிடப்படவில்லை. ஐநா பொதுச் செயலாளர் அந்தோனியோ குத்தேரஸ் ஞாயிற்றுக்கிழமை கூறுகையில், "போராட்டக்காரர்களுக்கு எதிராக சமீப நாட்களாக உயிரிழப்புகள் மற்றும் காயங்களை ஏற்படுத்தும் வகையிலான வன்முறை மற்றும் அதிகப்படியான பலத்தைப் பயன்படுத்துதல் குறித்து வரும் தகவல்கள் அதிர்ச்சியளிக்கின்றன." என்றார். "உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையைத் தாண்டி, பாதுகாப்புப் படையினர் கடுமையான பலத்தை பயன்படுத்தியது கவலைக்குரியது என நான் வலியுறுத்த விரும்புகிறேன்," என இரானில் மனித உரிமைகள் சார்ந்து தற்போது நிலவும் சூழல் குறித்து பிபிசி பாரசீக சேவையிடம் ஐநா சிறப்பு அறிக்கையாளர் தெரிவித்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c86v18q2l16o
-
ஐசிசி 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் 2026 தொடர்
ஐசிசி 19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான உலகக் கிண்ணம்: குழு பி இல் பங்களாதேஷ், இந்தியா, நியூஸிலாந்து, ஐக்கிய அமெரிக்கா Published By: Vishnu 13 Jan, 2026 | 09:28 PM (நெவில் அன்தனி) 16ஆவது 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண அத்தியாயத்தில் மிகவும் வெற்றிகரமான அணியாகத் திகழும் இந்தியாவுடன் 2020 சம்பியன் பங்களாதேஷ், நியூஸிலாந்து, ஐக்கிய அமெரிக்கா ஆகிய நாடுகள் பி குழுவில் மோதவுள்ளன. 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ணத்தில் ஐந்து தடவைகள் உலக சம்பியனான இந்தியா, இந்த வயதுப் பிரிவில் மிகவும் பலசாலியாக வருணிக்கப்படுகிறது. கடந்த ஐந்து அத்தியாயங்களில் தொடர்ச்சியாக இறுதிப் போட்டியில் விளையாடிய இந்தியா, 2024இல் அவுஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்தது. 2020 இறுதிப் போட்டியில் மோதிக்கொண்ட இந்தியாவும் பங்களாதேஷும் இந்த வருடம் ஜனவரி 17ஆம் திகதி பி குழுவுக்கான போட்டியில் சந்திக்கவுள்ளன. பி குழு போட்டிகள் யாவும் ஸிம்பாப்வேயில் நடைபெறும். பங்களாதேஷ் தனது பத்தாவது முயற்சியில் முதல் தடவையாக அரை இறுதிக்கு முன்னேறி இருந்த பங்களாதேஷ், 2016ஆம் ஆண்டு 3ஆம் இடத்தைப் பெற்றது. நான்கு வருடங்கள் கழித்து இலங்கையின் முன்னாள் வீரர் நவீட் நவாஸின் பயிற்றுவிப்பில் முதல் தடவையாக உலகக் கிண்ணத்தை பங்களாதேஷ் ஸ்பரிசித்தது. 19 வயதுக்குட்பட்ட பங்களாதேஷ் அணிக்கு நவீட் நவாஸ் தொடர்ந்து பயிற்சி அளித்து வருகின்றார். சம்பியனான அந்த அணியில் இடம்பெற்ற மஹ்முதுல் ஹசன் ஜோய், ஷொரிபுல் இஸ்லாம், தௌஹித் ஹிர்தோய் உட்பட பல வீரர்கள் தற்போதைய பங்களாதேஷின் சிரேஷ்ட அணியில் இடம்பெறுகின்றனர். இந்த வருடம் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட்டில் அரை இறுதிப் போடடிவரை முன்னேறிய பங்களாதேஷ் அணிக்கு அஸிஸ்உல் ஹக்கிம் தமிம் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். ஆசிய கிண்ண கிரிக்கெட்டில் துடுப்பாட்டத்தில் ஸவாத் அப்ராரும் பந்துவீச்சில் ஷாரியார் அஹ்மத்தும் திறமையாக செயல்பட்டிருந்தனர். இந்தியா 19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான உலகக் கிண்ண கிரிக்கெட்டில் 6ஆவது தடவையாக உலக சம்பியன் பட்டத்தை சுவீகரிக்கும் கங்கணத்துடன் இந்திய இளையோர் அணி களம் இறங்கவுள்ளது. எதிர்கால உலக கிரிக்கெட் அரங்கில் உயரிய இடத்தை அடையக்கூடியவர் என இந்திய கிரிக்கெட் விமர்சகர்களால் வருணிக்கப்படும் இளம் துடுப்பாட்ட நட்சத்திரம் வைபவ் சூரியவன்ஷி முழு கிரிக்கெட் உலகினாலும் கவரப்படுவார் என்பதில் சந்தேகம் இல்லை. இங்கிலாந்துக்கு எதிரான இளையோர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஒன்றில் சூரியவன்ஷி 78 பந்துகளில் 143 ஓட்டங்களை விளாசி இருந்தார். ஐபிஎல் ரி20 கிரிக்கெட் போட்டிகளிலும் இளம் வயதில் அபரிமிதமாக பிரகாசித்து அனைவரையும் பிரமிக்க வைத்த சூரியவன்ஷி, இந்த உலகக் கிண்ணத்தில் அசத்துவார் என்பதில் சந்தேகம் இல்லை. அவர் 2028 உலகக் கிண்ணத்தில் விளையாடினாலும் ஆச்சிரியப்படுவதற்கில்லை. ஏனெனில் அவர் இப்போதுதான் 15 வயதை நெருங்கிக்கொண்டிருக்கிறார். அவரைவிட விக்கெட் காப்பாளர் அபிக்யான் குண்டு, ஆரோன் ஜோர்ஜ், விஹான் மனோஜ் மல்ஹோத்ரா ஆகியோர் துடுப்பாட்டத்திலும் தமிழகத்தைச் செர்ந்த தீப்பேஷ் தேவேந்திரன், கௌஷிக் சௌஹான் ஆகியோர் பந்துவீச்சிலும் அசத்துவர் என எதிர்பார்க்கப்படுகிறது. நியூஸிலாந்து 28 வதுடங்களுக்கு முன்னர் உப சம்பியனான நியூஸிலாந்து, ஒரு கட்டத்தில் 3 தொடர்ச்சியான தடவைகள் அரை இறுதிகளில் விளையாடி இருந்தது. கடைசியாக ஐந்து வருடங்களுக்கு முன்னரும் நியூஸிலாந்து அரை இறுதிவரை முன்னேறி இருந்தது. தென் ஆபிரிக்காவில் 2020 இல் நடைபெற்ற உலகக் கிண்ண அரை இறுதியில் பங்களாதேஷிடம் நியூஸிலாந்து தோல்வி அடைந்தது. அதற்கு முன்னர் இரண்டு தடவைகள் இந்தியாவிடம் தோல்வி அடைந்தது. நியூஸிலாந்தின் முன்னாள் துடுப்பாட்ட வீரர் அன்டன் டேவ்சிக் பயிற்றுவிக்கும் இளம் நியூஸிலாந்து அணியில் முதல் தர கிரிக்கெட் விளையாடிவரும் பல வீரர்கள் இடம்பெறுகின்றனர். ஒட்டாகோ அணிக்காக விளையாடிவரும் இளையோர் அணித் தலைவர் டொம் ஜோன்ஸ், தனது அறிமுக முதல்தர போட்டியில் சதம் குவித்திருந்தார். அவரை விட நொதர்ன் டிஸ்ட்ரிக்ட்ஸ் அணியில் பிரகாசித்தவரும் ஸ்னேஹித் ரெட்டி, ஆரியன் மான் ஆகிய இருவரும் நியூஸிலாந்து அணிக்கு முக்கிய பங்காற்றுவர் என நம்பப்படுகிறது. ஐக்கிய அமெரிக்கா 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட்டில் நான்காவது தடவையாக ஐக்கிய அமெரிக்கா பங்குபற்றுகின்றது. அமெரிக்காஸ் குவாலிபயர்ஸ் என்றழைக்கப்படும் அமெரிக்காக்களுக்கான தகுதிகாண் சுற்றில் வெற்றிபெற்றதன் மூலம் இந்த வருட உலகக் கிண்ணத்தில் அமெரிக்கா பங்குபற்ற தகுதிபெற்றது. தகுதிகாண் சுற்றில் 6 போட்டிகளிலும் இலகுவாக வெற்றியீட்டிய அமெரிக்கா சார்பாக பல வீரர்கள் திறமையை வெளிப்படுத்தினர். அம்ரிந்தர் கில் குவித்த சதத்தின் உதவியுடன் பேர்மூடாவை வெற்றிகொண்ட அமெரிக்கா, சஹிர் பாட்டியா பதிவுசெய்த 5 விக்கெட் குவியலின் உதவியுடன் ஆர்ஜன்டீனாவை 34 ஓட்டங்களுக்கு கட்டுப்படுத்தியது. ஐக்கிய அமெரிக்காவுக்கு இந்த வருட உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகள் இலகுவாக அமையாது. ஆனால், அமெரிக்காவின் இளம் வீரர்கள் தேவையான அனுபவங்களை இப் போட்டிகள் மூலம் பெறுவார்கள் என்பது நிச்சயம். ஐக்கிய அமெரிக்க அணிக்கு உத்கார்ஷ் ஸ்ரீவஸ்தாவா தலைவராக விளையாடவுள்ளார். போட்டி விபரங்கள் ஜனவரி 15: ஐக்கிய அமெரிக்கா எதிர் இந்தியா ஜனவரி: 17: இந்தியா எதிர் பங்களாதேஷ் ஜனவரி 18: நியூஸிலாந்து எதிர் ஐக்கிய அமெரிக்கா ஜனவரி 20: பங்களாதேஷ் எதிர் நியூஸிலாந்து ஜனவரி 23: பங்களாதேஷ் எதிர் ஐக்கிய அமெரிக்கா ஜனவரி 24: இந்தியா எதிர் நியூஸிலாந்து (குறிப்பு பங்களாதேஷ் - ஐக்கிய அமெரிக்கா போட்டி மாத்திரம் ஹராரே டக்காஷிங்கா விளையாட்டுக் கழக மைதானத்தில் நடைபெறும். மற்றைய போட்டிகள் யாவும் புலாவாயோ குவீன்ஸ் விளையாட்டுக் கழக மைதானத்தில் நடைபெறும்) https://www.virakesari.lk/article/235963
-
யாழ். வரும் ஜனாதிபதி ஊர்காவற்துறை கடற்கோட்டை விவகாரத்துக்கு தீர்வு தர வேண்டும் - அன்னாராசா வேண்டுகோள்!
யாழ். வரும் ஜனாதிபதி ஊர்காவற்துறை கடற்கோட்டை விவகாரத்துக்கு தீர்வு தர வேண்டும் - அன்னாராசா வேண்டுகோள்! Published By: Vishnu 13 Jan, 2026 | 07:15 PM பொங்கல் பண்டிகைக்காக யாழ்ப்பாணம் வருகின்ற ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, ஊர்காவல்துறையில் உள்ள சுற்றுலா மையமான கடற்கோட்டை விவகாரத்திற்கு தீர்வு தர வேண்டும் என ஊர்காவற்துறை பிரதேச சபையின் தவிசாளர் அ.அன்னராசா வேண்டுகோள் விடுத்துள்ளார். நேற்றையதினம் ஊர்காவற்துறை பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், ஊர்காவற்துறை கடற்கோட்டை என்பது ஒரு பாரம்பரிய, பிரபல சுற்றுலாத்தலமாக காணப்படுகின்றது. இது ஊர்காவல்துறை பிரதேச சபையின் ஆளுகைக்குள் காணப்படுகின்றது. இது கடற்படையினரின் கட்டுப்பட்டில் உள்ளது. இதனை தொல்லியல் திணைக்களத்தினர் மற்றும் கடற்படையினர் பயன்படுத்தி வருகின்றனர். கடற்படையினரின் கட்டுப்பாட்டில் இந்த கடற்கோட்டை இருப்பது எமக்கு ஆட்சேபனை அல்ல. அல்லது தொல்லியல் திணைக்களத்தின் பராமரிப்பில் கடற்கோட்டை இருப்பது எமக்கு பிரச்சனை இல்லை. இந்த கடற்கோட்டைக்கு ஊர்காவற்துறை துறைமுகத்தில் இருந்து 4 நிமிடங்களில் செல்லக்கூடிய நிலை காணப்படுகிறது. எனவே எமது ஆளுகைக்குள் உள்ள துறைமுகத்திலிருந்து, எமது ஆளுகைக்குள் உள்ள கடற்கோட்டையை சென்று பார்வையிடுவதற்கு ஜனாதிபதி ஆவன செய்ய வேண்டும். சுற்றுலா பயணிகள் எமது பாரம்பரிய துறைமுகங்களில் ஒன்றான ஊர்காவற்துறை துறைமுகத்தில் இருந்து கடற்கோட்டைக்கு சென்று வருவதன் ஊடாக பிரதேச சபையின் வருமானம் அதிகரிக்கும். அத்துடன் எமது பகுதிக்கு சுற்றுலாவிகளின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடிய சந்தர்ப்பமும் காணப்படுகின்றது. சுற்றுலா பயணிகள் எமது பிரதேசத்திற்கு வருவதன் ஊடாக எமது பிரதேசம் வலுப்பெறும், பிரதேசம் வலுப்பெறும்போது மக்களின் வாழ்வாதாரம் அதிகரிக்கும், மக்களின் வாழ்வாதாரம் அதிகரிக்கும் போது பிரதேச சபையின் வருமானம் அதிகரிக்கும். எமது பிரதேச சபையானது வருமானம் குறைந்த ஒரு சபையாக காணப்படுகின்றது. எனவே சுற்றுலா துறையின் ஊடாக வருமானம் அதிகரிக்க கூடிய வாய்ப்பு உள்ளது. எனவே ஊர்காவல்துறை துறைமுகத்திலிருந்து ஊர்காவற்துறை கடற்கோட்டைக்கு மக்கள் சென்று பார்வையிடுவதற்கு வழி வகுக்க வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/235957
-
சீனாவுடன் போர்: 120 இந்திய வீரர்கள் பின்வாங்க மறுத்தபோது நடந்தது என்ன?
சீனாவுடன் போர்: 120 இந்திய வீரர்கள் பின்வாங்க மறுத்தபோது நடந்தது என்ன? பட மூலாதாரம்,120 Bahadur team படக்குறிப்பு,மேஜர் ஷைத்தான் சிங்காக நடிகர் ஃபர்ஹான் அக்தர் கட்டுரை தகவல் கீதா பாண்டே பிபிசி செய்தியாளர் 13 ஜனவரி 2026, 05:42 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் சமீபத்திய பாலிவுட் திரைப்படம் ஒன்று, 1962-ஆம் ஆண்டு இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே நடந்த போரில் மறக்கப்பட்ட ஒரு போர்க்களத்தின் மீது வெளிச்சம் பாய்ச்சியுள்ளது. '120 பகதூர்' என்று இப்படத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது. இந்தி மொழியில் 'பகதூர்' என்றால் 'வீரர்கள்' என்று பொருள். லடாக்கின் கடும் குளிரான இமயமலைப் பகுதியில் உள்ள 'ரெசாங் லா' கணவாயைப் பாதுகாக்க தீரத்துடன் போராடிய இந்திய வீரர்களின் கதையை இத்திரைப்படம் சொல்கிறது. மேஜர் ஷைத்தான் சிங்காக ஃபர்ஹான் அக்தர் நடித்த இந்தத் திரைப்படம், வசூல் ரீதியாக வெற்றி பெறவில்லை என்றாலும், இந்தியா தோற்ற ஒரு போரில் 'ஒரே ஒரு நம்பிக்கையாக' விவரிக்கப்படும் ஒரு போர்க்களத்தைப் பற்றிப் பேசியதில் வெற்றி பெற்றுள்ளது. "இக்கதையைச் சொல்வது மிகவும் முக்கியம் என்று நாங்கள் கருதினோம், நிஜ வாழ்வில் இந்தப் போராட்டத்தை எதிர்கொண்ட வீரர்களை நாங்கள் கௌரவிக்க விரும்பினோம்," என்று பிபிசியிடம் தெரிவித்த வசனகர்த்தா சுமித் அரோரா, "நாங்கள் சினிமா சார்ந்து சில சுதந்திரங்களை எடுத்துக்கொண்டாலும், எங்கள் திரைப்படம் வரலாற்று உண்மைக்கு மிகவும் நெருக்கமாகவே உள்ளது"என்று கூறினார். எல்லை பதற்றங்களால் இந்தியா மற்றும் சீனா இடையிலான உறவு மோசமாக மாறியாததாலும், தகராறுகளைத் தீர்ப்பதற்கான கூட்டங்கள் தோல்வியடைந்ததாலும் இந்தப் போர் மூண்டது. 1959-ல் திபெத்தில் இருந்து தப்பி வந்த தலாய் லாமாவுக்கு இந்தியா தஞ்சம் அளித்தது குறித்து சீனா அதிருப்தியில் இருந்தது. சீனா இந்தியா மீது தாக்குதல் நடத்தியதில் ஒரு மாத கால போர் தொடங்கியது. இது ஒரு "தற்காப்பு எதிர்-தாக்குதல்" என்று கூறிய சீனா, இந்தியா "சீன நிலப்பரப்பை ஆக்கிரமித்து, சீன வான்வெளிக்குள் அத்துமீறி நுழைவதாக" குற்றம் சாட்டியது. ஒரு மாதத்திற்குப் பிறகு சீனா ஒருதலைப்பட்சமாகப் போர்நிறுத்தத்தை அறிவித்து, படைகளைத் திரும்பப் பெற்று, போர்க் கைதிகளையும் விடுவித்தது. அப்போது, இந்தியா சுமார் 7,000 வீரர்களையும் 38,000 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பையும் இழந்திருந்தது. இரு நாடுகளும் பின்னர் ஆறுகள், ஏரிகள் மற்றும் பனிச்சிகரங்களால் குறிக்கப்பட்ட 3,440 கிமீ (2,100 மைல்) நீளமுள்ள தெளிவற்ற 'லைன் ஆப்ஃ கன்ட்ரோல் ' (LAC) மூலம் பிரிக்கப்பட்டன. மோதல் நடந்த பகுதிகளில் இருந்த அனைத்து இந்திய நிலைகளையும் தங்கள் படைகள் அழித்ததாகக் கூறுவதைத் தாண்டி, இந்தப் போர் குறித்து சீனா அதிகாரப்பூர்வமாக அதிகம் எதுவும் கூறவில்லை. அதேபோல், ரெசாங் லா போர் குறித்து ஒருபோதும் கருத்து தெரிவிக்கவில்லை. கடல் மட்டத்திலிருந்து 16,000 அடிக்கும் (4,900 மீ) அதிகமான உயரத்தில் நடந்த இந்தப் போர், சீனா வென்ற ஒரு பெரிய போரின் ஒரு பகுதியாகும். இருப்பினும், இந்தியாவில் இது ஒரு "காவியப் போர்" என்றும் "இறுதிவரைப் போராடிய மிகச்சிறந்த போர்களில் ஒன்று" என்றும் நினைவுகூரப்படுகிறது. இந்தப் போர் பல புத்தகங்கள் மற்றும் திரைப்படங்களுக்கும் உத்வேகமாக அமைந்துள்ளது. பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,1962 ஆம் ஆண்டு ஆயிரக்கணக்கான இந்திய வீரர்கள் சீனாவுடனான போருக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இந்தப் போர் நவம்பர் 18-ஆம் தேதி அதிகாலை 3:30 மணி முதல் காலை 8:15 மணி வரை நடைபெற்றது. இந்தக் கணவாய் சுஷுல் விமானத் தளத்திற்கு மிக அருகில் இருந்தது. "அந்தப் பகுதியை இந்தியாவின் பிற பகுதிகளுடன் இணைக்கும் சாலை வசதிகள் இல்லாத அக்காலத்தில், சுஷுல் விமானத் தளமே முதன்மையான மையப்புள்ளியாக விளங்கியது," என்கிறார் யாதவ். 120 வீரர்களில் ஐந்து பேர் மட்டுமே உயிர் பிழைத்தனர். போரில் வீரமரணம் அடைந்த மேஜர் சிங், அவரது துணிச்சலுக்காகவும் தலைமைப் பண்புக்காகவும் இந்தியாவின் மிக உயரிய ராணுவ விருதான 'பரம வீர் சக்ரா' வழங்கி கௌரவிக்கப்பட்டார். 12 வீரர்களுக்கு வீரதீர விருதுகள் வழங்கப்பட்டன. ஆனால், உயிர் பிழைத்தவர்கள் தங்கள் மேலதிகாரிகளிடம் அந்தத் துணிச்சலான இறுதிப் போர் குறித்துக் கூறியபோது, "துரதிர்ஷ்டவசமாக, யாரும் அவர்களை நம்பவில்லை," என்கிறார் முன்னாள் கடற்படை அதிகாரியும், 2021-ல் வெளியான 'பேட்டில் ஆஃப் ரெசாங் லா' புத்தகத்தின் ஆசிரியருமான குல்பிரீத் யாதவ். "அப்போது மன உறுதி குலைந்திருந்தது, நாங்கள் போரில் மிக மோசமாகத் தோற்றிருந்தோம், ஒரு பிரிகேடியர் உட்பட ஆயிரக்கணக்கான வீரர்கள் சீனாவால் போர்க் கைதிகளாகப் பிடிக்கப்பட்டிருந்தனர். எனவே, இவ்வளவு வீரமிக்க ஒரு இறுதிப் போராட்டம் சாத்தியம் தான் என்று யாரும் நம்பவில்லை," எனவும் அவர் கூறுகிறார். ரெசாங் லாவில் பணியமர்த்தப்பட்டிருந்த வீரர்கள் போர்க்களத்திலிருந்து ஓடிவிட்டார்கள் அல்லது போர்க் கைதிகளாகப் பிடிக்கப்பட்டிருக்கலாம் என்றே பரவலாக நம்பப்பட்டது. "போர் முடிந்து மூன்று மாதங்களுக்குப் பிறகு, ஒரு ஆடு மேய்ப்பவர் தற்செயலாக அங்குள்ள சிதைந்த பதுங்கு குழிகள், வெற்றுத் தோட்டாக்கள் மற்றும் பனியில் உறைந்திருந்த உடல்களைப் பார்த்தார். அதன் பிறகே, அந்தப் போர் குறித்த துல்லியமான தகவல்களை முதன்முதலாகத் திரட்ட முடிந்தது." 13 குமாவோன் பட்டாலியனின் சி கம்பெனியைச் சேர்ந்த அந்த வீரர்கள், மேஜர் சிங்கின் தலைமையில் அங்கு நிறுத்தப்பட்டிருந்தனர். வெடிமருந்துகள் தீர்ந்துவிட்டால் பின்வாங்குவது குறித்து ஆலோசிக்குமாறு அவரது மேலதிகாரிகள் அறிவுறுத்தியிருந்தனர். ஆனால், அவர் தனது வீரர்களுடன் இதுகுறித்துப் பேசியபோது, "நாங்கள் கடைசி மனிதன் இருக்கும் வரை, கடைசித் தோட்டா வரை போராடுவோம்" என்று அவர்கள் பதிலளித்ததாக யாதவ் கூறுகிறார். "சீன வீரர்கள் கணவாயைத் தாக்கியபோது, சி கம்பெனி வீரர்கள் போருக்குத் தயாராக இருந்தனர். ஆனால், விரைவில் இந்தியப் படை வீரர்கள் முறியடிக்கப்பட்டனர்." பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,2007ஆம் ஆண்டு டெல்லியில் நடந்த விழாவில் ரெசாங் லாவில் இறந்த இந்திய வீரர்களின் மனைவிகள் . இது ஒரு சமமற்ற போராக இருந்தது. ஆயிரக்கணக்கான வீரர்களை 120 வீரர்கள் எதிர்கொண்டனர். சீனா 1962-ஆம் ஆண்டு போர் ஆவணங்களை வகைப்படுத்தவில்லை என்றாலும், சுமார் 3,000 சீன வீரர்கள் அந்தப் பகுதியில் தாக்குதல் நடத்தியதாக இந்திய மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. "அவர்களிடம் நவீன ஆயுதங்கள் இருந்தன, அவர்கள் போருக்குத் தேவையான அனைத்து உபகரணங்களையும் கொண்டிருந்தனர். ஆனால், இந்திய வீரர்களிடம் 'செமி-ஆட்டோமேட்டிக்' துப்பாக்கிகள் மட்டுமே இருந்தன. ஒவ்வொரு வீரரிடமும் வெறும் 600 தோட்டாக்கள் மட்டுமே இருந்தன," என்று அவர் கூறுகிறார். பத்திரிகையாளர் ரச்சனா பிஷ்ட், மேஜர் ஷைத்தான் சிங் குறித்து 2014-ல் எழுதிய தனது புத்தகத்தில், சமவெளிப் பகுதிகளிலிருந்து வந்த 'சி கம்பெனி' வீரர்கள் அதற்கு முன்பு பனியைப் பார்த்ததே இல்லை என்றும், அந்த மலைப்பகுதியின் தட்பவெப்ப நிலைக்குப் பழகுவதற்கு அவர்களுக்குப் போதிய அவகாசம் கிடைக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். உயிர் பிழைத்தவர்களில் ஒருவரான சுபேதார் ராம் சந்தர் அந்தப் போர் குறித்து நினைவு கூறுகையில், "வானிலை மிகவும் மோசமாக இருந்தது. எங்களிடம் முறையான குளிர்கால உடைகளோ அல்லது காலணிகளோ இல்லை"என்கிறார். "எங்களுக்கு வழங்கப்பட்டிருந்த ஜெர்சிகள், பருத்தி கால்சட்டைகள் மற்றும் மெல்லிய கோட்டுகள் அந்த உறைய வைக்கும் காற்றில் எங்களை கதகதப்பாக வைத்திருக்கப் போதுமானதாக இல்லை. வீரர்களுக்குக் கடுமையான தலைவலி ஏற்படும், மருத்துவ உதவியாளர் ஒவ்வோர் இடமாக ஓடிச் சென்று மருந்துகளை வழங்குவார்," என்று அவர் அச்சூழலை விவரித்தார் . போர் நடந்த நாளிரவில், பனி பொழிந்துகொண்டிருந்ததுடன் வெப்பநிலையும் −24°C ஆக இருந்தது. இது குறித்து சுபேதார் ராம் சந்தர் முன்னர் பிபிசி ஹிந்தியிடம் கூறுகையில், "நாங்கள் இவ்வளவு காலம் காத்திருந்த நாள் வந்துவிட்டது என்று எனது மேலதிகாரிகளிடம் சொன்னேன்," என்றார். 'சி கம்பெனி முதல் அலைத் தாக்குதலை முறியடித்த போதிலும், சீனாவின் மோர்டார் தாக்குதல், பதுங்கு குழிகளையும் கூடாரங்களையும் அழித்து, பெரும் உயிர்ச்சேதத்தை ஏற்படுத்தியது. அதன் பிறகு நடந்த மிகக் கொடூரமான மூன்றாவது அலைத் தாக்குதலில் பெரும்பாலான வீரர்கள் கொல்லப்பட்டனர்' என பிஷ்ட் எழுதியுள்ளார். பட மூலாதாரம்,Kulpreet Yadav படக்குறிப்பு,போர் நடந்த இடத்திலிருந்து மீட்கப்பட்ட குண்டு துளைத்த குடுவை பட மூலாதாரம்,Kulpreet Yadav படக்குறிப்பு,போர் நடந்த இடத்திலிருந்து மீட்கப்பட்ட ஒரு தலைக்கவசம் மேஜர் சிங்கின் வீரம் குறித்து சுபேதார் ராம் சந்தர் பகிர்ந்த தகவல்கள் இதயத்தை நெகிழச் செய்பவை. "அவரது வயிற்றில் பல தோட்டாக்கள் பாய்ந்திருந்தன. ரத்தம் வழிந்தோட, கடும் வேதனையில் மயக்கத்திற்கும் தெளிவான மனநிலைக்கும் இடையே இருந்த நிலையிலும், போரை எவ்வாறு தொடர வேண்டும் என்று எனக்கு அவர் அறிவுறுத்தினார். பின்னர் என்னை பட்டாலியனுடன் இணையச் சொன்னார். உங்களை விட்டு என்னால் போக முடியாது என்று நான் சொன்னேன். அதற்கு அவர், 'நீ போய் தான் ஆக வேண்டும். இது எனது உத்தரவு' என்றார்" என சுபேதார் ராம் சந்தர் பகிர்ந்துகொண்டார். உடல்களும் பதுங்கு குழிகளும் கண்டறியப்பட்ட பிறகு, பிப்ரவரி 1963-ல் ஒரு மூத்த ராணுவ அதிகாரி, செஞ்சிலுவைச் சங்கத்தினர் மற்றும் ஊடகவியலாளர்களை ரெசாங் லா-வுக்கு அழைத்துச் சென்றார். அந்தப் போர்க்களம் "அன்று என்ன நடந்ததோ, அப்படியே பனியில் உறைந்த நிலையில்" இருந்தது. இந்தக் கண்டுபிடிப்பு குறித்து தனது புத்தகத்தில் எழுதியுள்ள பிஷ்ட், "அவர்கள் கண்டெடுத்த ஒவ்வொரு வீரரும் துப்பாக்கிச் சூடு, குண்டுவெடிப்பு அல்லது சிதறல்களால் ஏற்பட்ட பலத்த காயங்களுடன் உயிரிழந்திருந்தனர். சிலர் பதுங்கு குழிகளில் பாறைகளுக்கு அடியில் புதைந்து கிடந்தனர், மற்றவர்கள் சிதைந்த துப்பாக்கிகளின் பிடியை இன்னும் இறுக்கமாகப் பிடித்திருந்தனர் எனக் குறிப்பிடுகிறார். மேலும், "மருத்துவ உதவியாளர் கையில் ஊசியையும் கட்டுப்போடும் துணியையும் வைத்திருந்தார். மோர்டார் கருவியை இயக்கிய வீரர் ஒரு வெடிகுண்டை ஏந்தியிருந்தார். மேஜர் சிங் ஒரு பாறைக்கு அருகில் கிடந்தார், அவரது இடது கையில் ரத்தக்கறை படிந்த கட்டு இருந்தது, அவரது வயிறு இயந்திரத் துப்பாக்கிச் சூட்டினால் கிழிந்திருந்தது," என்று விவரித்துள்ளார். "பெரும்பாலும் அவமானத்துடன் நினைவுகூரப்படும்" ஒரு போரில், மேஜர் ஷைத்தான் சிங்கும் அவரது வீரர்களும் பெரும் புகழைப் பெற்றனர் என்று பிஷ்ட் பதிவு செய்துள்ளார். 'சி கம்பெனி' பின்னர் 'ரெசாங் லா கம்பெனி' என மறுபெயரிடப்பட்டது. அந்த வீரர்கள் வந்த ஊரான ரேவாரியில் ஒரு நினைவகம் கட்டப்பட்டது. போர் நிறுத்தத்திற்குப் பிறகு, அந்தக் கணவாய் மனித நடமாட்டமில்லாத பகுதியாகிவிட்டது. தற்போது இது சர்ச்சைக்குரிய நிலப்பகுதியின் ஒரு பகுதியாக உள்ளது. சி கம்பெனி இவ்வளவு தீரத்துடன் போராடாமல் இருந்திருந்தால், இந்தியாவின் வரைபடம் இன்று முற்றிலும் வேறாக இருந்திருக்கும் என்கிறார் யாதவ். தொடர்ந்து பேசிய அவர், "இந்த வீரர்கள் மட்டும் இல்லையென்றால், லடாக்கின் பாதியை இந்தியா இழந்திருக்கும் என நான் நினைக்கிறேன். சீனா அந்த விமானத் தளத்தையும் சுஷுல் பகுதியையும் கைப்பற்றியிருக்கும். "1962-ஆம் ஆண்டு போரில் இந்தியாவுக்கு கிடைத்த ஒரே நம்பிக்கை ஒளி இந்தப் போர் மட்டும் தான்" என்றும் அவர் குறிப்பிட்டார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cwygnp8l2p7o
-
கல்வி சீர்திருத்தத்திற்கு எதிர்ப்பு: விமல் வீரவன்ச சத்தியாக்கிரக போராட்டம்!
"நாட்டை திவாலாக்கியவர்கள் இன்று உண்ணாவிரதம் இருப்பது வேடிக்கையானது" – நிருக்ஷ குமார கடும் தாக்கு 13 Jan, 2026 | 05:14 PM முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்சவின் தற்போதைய அரசியல் செயல்பாடுகளைக் கடுமையாக விமர்சித்துள்ள ஜனநாயக தேசியக் கூட்டமைப்பின் தேசிய அமைப்பாளர் நிருக்ஷ குமார, நாட்டைப் பொருளாதார ரீதியாகப் படுகுழியில் தள்ளியவர்களுக்கு மக்கள் குறித்துப் பேச எந்த உரிமையும் இல்லை எனத் தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் இந்த நாட்டு மக்கள் எரிபொருள், மின்சாரம் மற்றும் அத்தியாவசியப் பொருட்களுக்காக நீண்ட வரிசைகளில் நின்று சொல்லொண்ணாத் துயரங்களை அனுபவித்தபோது, இந்த விமல் வீரவங்ச எங்கே மறைந்திருந்தார் என கேள்வி எழுப்பிய அவர், ராஜபக்சக்களுடன் இணைந்து நாட்டை திவாலாக்கியதில் இவர்களுக்கும் பெரும் பங்கு உண்டு எனக் குற்றம் சாட்டினார். மேலும், விமல் வீரவங்ச உள்ளிட்ட குழுவினர் கடந்த காலங்களில் அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்ள இனவாதத்தைப் பயன்படுத்தியதாகச் சாடிய நிருக்ஷ குமார, ஒரு அப்பாவி வைத்தியர் மீது தேவையற்ற குற்றச்சாட்டுகளைச் சுமத்தியும், பெண்களுக்கு எதிரான பொய்ப் பிரசாரங்களை முன்னெடுத்தும் சமூகத்தில் அச்சத்தையும் வெறுப்பையும் விதைத்தனர் எனக் குறிப்பிட்டார். தற்போது கல்வி மறுசீரமைப்பில் உள்ள பாலினக் கல்வி தொடர்பான விடயங்களைத் தவறாகச் சித்தரித்து, விமல் வீரவங்ச அரசியல் லாபம் தேட முயல்வதாகவும், எட்டு வகுப்பு கூடத் தேறாத அவருக்கு கல்வி மறுசீரமைப்பு பற்றிப் பேச தகுதி இல்லை என்றும் அவர் காரசாரமாகக் கேள்வி எழுப்பினார். அமைச்சராக இருந்தபோது அனுபவித்த சொகுசு வாழ்க்கை மற்றும் சலுகைகள் பறிபோன விரக்தியில் விமல் வீரவங்ச தற்போது வீதிக்கு வந்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், உண்மையில் நாட்டு மக்கள் மீது அக்கறை இருந்தால், நாட்டைச் சூறையாடியவர்களுக்கு எதிராகத் தான் போராடியிருக்க வேண்டும் என்றார். இறுதியாக, இனங்களுக்கு இடையில் மோதலை உருவாக்கி குளிர் காய்ந்தவர்களின் இந்த நாடகம் இனி செல்லுபடியாகாது என்றும், முடிந்தால் உண்மையாகவே சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து காட்டுங்கள் என்றும் விமல் வீரவங்சவுக்கு நிருக்ஷ குமார சவால் விடுத்தார். https://www.virakesari.lk/article/235948
-
ஐசிசி 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் 2026 தொடர்
ஐசிசி 19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான உலகக் கிண்ணம்; குழு ஏ இல் அவுஸ்திரேலியா, அயர்லாந்து, ஜப்பான், இலங்கை Published By: Vishnu 13 Jan, 2026 | 07:13 PM (நெவில் அன்தனி) பதினாறு நாடுகளைச் சேர்ந்த 240 எதிர்கால கிரிக்கெட் நட்சத்திரங்களின் ஆற்றல்களைப் பரீட்சிக்கும் 16ஆவது ஐசிசி 19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான உலகக் கிண்ணத் தொடர், நமிபியாவிலும் ஸிம்பாப்வேயிலும் இன்னும் 2 தினங்களில் ஆரம்பமாகவுள்ளது. நான்கு குழுக்களாக வகுக்கப்பட்டு முதல் சுற்று கிரிக்கெட் போட்டிகள் இம் மாதம் 15ஆம் திகதியிலிருந்து 24ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது. இந்த வருடம் 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண அத்தியாயத்தில் ஏ குழுவில் நடப்பு சம்பியனும் நான்கு தடவைகள் சம்பியனுமான அவுஸ்திரேலியா, 2000ஆம் ஆண்டு தனது சொந்த மண்ணில் உப சம்பியனான இலங்கை ஆகிய நாடுகளுடன் அயர்லாந்து, ஜப்பான் ஆகிய நாடுகள் மோதவுள்ளன. ஏ குழு போட்டிகள் யாவும் விண்ட்ஹோக் நமிபியா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. அவுஸ்திரேலியா 1988இல் நடைபெற்ற அங்குரார்ப்பண அத்தியாயத்திலும் தென் ஆபிரிக்காவில் இரண்டு வருடங்களுக்கு முன்னர் நடைபெற்ற 15ஆவது அத்தியாயத்திலும் உலக சம்பியனான அவுஸ்திரேலியா, சம்பியன் பட்டத்தை தக்க வைக்கும் குறிக்கோளுடன் இம்முறை களம் இறங்கவுள்ளது. ஒரே ஒரு அத்தியாயத்தைத் தவிர மற்றைய 14 அத்தியாயங்களிலும் விளையாடியுள்ள அவுஸ்திரேலியா, 2024இல் இந்தியாவை இறுதிப் போட்டியில் வெற்றிகொண்டு சம்பியனானது. இரண்டு வருடங்களுக்கு முன்னர் உலக சம்பியனான அவுஸ்திரேலிய அணியில் இடமபெற்ற வீரர்களில் ஒரே ஒருவர் இந்த வருடமும் விளையாடுகின்றார். இந்தியாவுக்கு எதிரான இறுதிப் போட்டிக்கு மாற்றுவீரராக அழைக்கப்பட்டு ஆட்டம் இழக்காமல் 46 ஓட்டங்களைப் பெற்ற ஒலிவர் பீக் மாத்திரமே இந்த வருடம் விளையாடுவதுடன் அவர்தான் அவுஸ்திரேலிய அணியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ணத்துக்கான அவுஸ்திரேலிய குழாத்தில் இடம்பெறும் பெரும்பாலானவர்கள், 19 வயதுக்குட்பட்ட இந்தியாவுக்கு எதிரான தொடரில் விளையாடி இருந்தனர். அத் தொடரில் அவுஸ்திரேலியா வெற்றிபெறாததை அடுத்து, 19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான தேசிய சம்பியன்ஷிப்பில் பிரகாசித்த நிட்டேஷ் செமுவல், நேடன் குறே, வில்லியம் டெய்லர் ஆகியோர் உலகக் கிண்ண குழாத்தில் இணைத்துக்கொள்ளப்பட்டனர். அவர்களில் நிட்டேஷ் செமுவேல், நேடன் குறே ஆகிய இருவரும் இலங்கை வம்சாவளிகளாவர். அயர்லாந்து இரண்டு வருடங்களுக்கு முன்னர் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் போன்றே இந்த வருடமும் நடப்பு சம்பியன் அவுஸ்திரேலியாவுடன் ஒரே குழுவில் அயர்லாந்து இடம்பெறுகின்றது. தென் ஆபிரிக்காவில் நடைபெற்ற 15ஆவது அத்தியாயத்தில் இந்தியாவுடனும் அயர்லாந்து விளையாடி இருந்தது. கடந்த அத்தியாயத்தில் சுப்பர் 6 சுற்றுக்கு முன்னேறிய அயர்லர்நது அங்கு நியூஸிலாந்தை வெற்றிகொண்டு வரலாறு படைத்திருந்தது. அப் போட்டியில் கெவின் ரூல்ஸ்டன் 82 ஓட்டங்களைப் பெற்றதுடன் ஒலிவர் ரைலி 20 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றினார். ஒலிவர் ரைலி இம்முறை அணித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதுடன் ரூபன் வில்சன் உப தலைவராக பெயரிடப்பட்டுள்ளார். ரூபன் தனது 15ஆவது வயதில் 2022 உலகக் கிண்ண அத்தியாயத்தில் விளையாடி இருந்தார். அவர்கள் இருவர் மாத்திரமே 2024 உலகக் கிண்ணப் போட்டியில் விளையாடிய வீரர்களாவர். எனினும் அயர்லாந்து அணியில் அனுபவத்துக்கு பஞ்சம் இல்லை. அடம் லெக்கி, செப் டிக்ஸ்ட்ரா, தோமஸ் ஃபோர்ட் ஆகிய மூவரும் அவுஸ்திரேலியாவில் விளையாடியுள்ளனர். கடந்த செப்டெம்பர் மாதத்திலிருந்து ஒன்றாக பயிற்சியில் ஈடுபட்டுவரும் அயர்லாந்து அணியினர் இந்த வருடம் திருப்பத்தை ஏற்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அயர்லாந்து இளையோர் அணியின் பயிற்சிகளுக்கு சர்வதேச வீரர்களான ஜோர்ஜ் டொக்ரெல், கரெத் டிலேனி, லோக்கன் டக்கர் ஆகியோர் ஆதரவு வழங்கி வருகின்றனர். 19 வயதுக்குட்பட்ட அயர்லாந்து அணிக்காக 2010, 2012 உலகக் கிண்ணப் போட்டிகளில் விளையாடிய டொக்ரெல் 15 விக்கெட்களைக் கைப்பற்றி இருந்தார். 2010இல் அயர்லாந்து 10ஆம் இடத்தைப் பெற்றது. அதுவே அதன் சிறந்த பெறுபேறாகும். ஜப்பான் 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண வரலாற்றில் ஜப்பான் பங்குபற்றுவது இது இரண்டாவது தடவையாகும். நான்கு வருடங்களுக்கு முன்னர் 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ணத்தில் ஜப்பான் அறிமுகமாகி இருந்தது. 2020 இறுதிப் போட்டியில் விளையாடிய இந்தியா, நியூஸிலாந்து, இலங்கை அகிய அணிகளுடன் முதல் சுற்றில் குழுநிலைப்படுத்தப்பட்டிருந்த ஜப்பான், இரண்டு மோசமான தோல்விகளைத் தழுவியது. ஒரு போட்டி மழை காரணமாக விளையாடப்படவில்லை. தொடர்ந்து கோப்பை பிரிவில் இங்கிலாந்துக்கு எதிரான கால் இறுதிப் போட்டியில் ஜப்பான் அதிகூடிய 93 ஓட்டங்களைப் பெற்றது. பின்னர் கனடாவுடனான போட்டியில் அந்த மொத்த எண்ணிக்கையைக் கடந்த ஜப்பான் 118 ஓட்டங்களைப் பெற்றது. அந்த வருடம் நைஜீரியாவுடனான போட்டியில் தோல்வி அடைந்த ஜப்பான், இப்போது நான்கு வருடங்களுக்குப் பின்னர் மீண்டும் 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ணப் போட்டியில் விளையாடவுள்ளது. ஆசிய கிரிக்கெட் பெரவை பிறீமியர் கிண்ணப் போட்டியில் தலைவராக இருந்த கஸுமோ காட்டோ-ஸ்டஃபர்ட், உலகக் கிண்ணப் போட்டியில் தலைரவாக விளையாடவுள்ளார். ACC பிறீமியர் கிண்ண கிரிக்கெட் போட்டியில் கத்தாருக்கு எதிராக காய்செய் கொபாயாஷி-டொகெட் சதம் குவித்து அசத்தி இருந்தார். ஜப்பான் அணியிலும் இலங்கை வம்சாவளி விரர் ஒருவர் இடம்பெறுகின்றார். ஜப்பானில் நடைபெற்றுவரும் இளையோர் கிரிக்கெட் போட்டிகளிலும் சகலதுறைகளிலும் பிரகாசித்து வரும் சந்தேவ் ஆரியன் வடுகே என்பவரே இலங்கை வம்சாவளி வீரராவார். இது இவ்வாறிருக்க,ஜப்பான் அணியில் மூன்று ஹரா-ஹின்ஸே சகோதரர்கள் இடம்பெறுகின்றமை விசேட அம்சமாகும். சார்ள்ஸ், கேப்றியல், மொன்ட்கோமெரி ஆகியோரே மூன்று சகோதரர்களாவர். ஜப்பானின் சிரேஷ்ட அணி தலைவர் கெண்டெல் கடோவாக்கி-ஃப்ளெமிங் 2020இல் போன்றே உதவி பயிற்றுநராக செயற்படவுள்ளார். இலங்கை 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண வரலாற்றில் சகல அத்தியாயங்களிலும் விளையாடியுள்ள இலங்கை இம்முறை அதிசிறந்த பெறுபேறுகளை ஈட்டும் குறிக்கொளுடன் 16ஆவது தடவையாக களம் இறங்குகிறது. தனது சொந்த நாட்டில் 2000ஆம் ஆண்டு நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ணப் போட்டியிலேயே இலங்கை அதிசிறந்த பெறுபேறுகளைப் பதிவு செய்திருந்தது. அந்த வருடம் இறுதிப் போட்டியில் இந்தியாவிடம் தோல்வி அடைந்து உப சம்பியன் பட்டத்தை இலங்கை சூடியது. இறுதிப் போட்டியில் இலங்கை இளையோர் அணி 178 ஓட்டங்களைப் பெற்றதுடன் ஜெஹான் முபாரக் 58 ஓட்டங்ளைக் குவித்தார். மொஹம்மத் கய்வ் தலைமையிலான இந்திய அணி 40.4 ஓவர்களில் வெற்றி இலக்கை கடந்து 6 விக்கெட்களால் வெற்றியீட்டி சம்பியனானது. அதன் பின்னர் இரண்டு தடவைகள் அரை இறுதிவரை முன்னேறிய இலங்கை, இரண்டு வருடங்களுக்கு முன்னர் சுப்பர் 6 சுற்றுவரை முன்னேறி இருந்தது. இலங்கை இளையோர் அணிக்கு 2024இல் சினேத் ஜயவர்தன தலைவராக விளையாடியதுடன் அவர் கல்வி பயின்ற றோயல் கல்லூரியைச் சேர்ந்த விமத் டின்சார இந்த வருடம் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை அணியில் இம்முறை தமிழ் பேசக்கூடிய நால்வர் இடம்பெறுகின்றமை விசேட அம்சமாகும். குகதாஸ் மாதுளன் (யாழ். சென். ஜோன்ஸ்), விக்னேஸ்வரன் ஆகாஷ் (முன்ளாள் பருத்தித்துறை ஹாட்லி தற்போது மருதானை புனித சூசையப்பர்), ஸ்ரீராம் ஜீவகன் (வெஸ்லி), ஆதம் ஹில்மி (திரித்துவம்) ஆகிய நால்வரே தமிழ் பேசும் வீரர்களாவர். இலங்கை குழாம் விமத் தின்சார (அணித் தலைவர் - றோயல் கல்லூரி), கவிஜ கமகே (உதவித் தலைவர் - கிங்ஸ்வூட் கல்லூரி), திமன்த மஹாவித்தான, ஆதம் ஹில்மி, செத்மிக்க செனவிரட்ன (மூவரும் திரித்துவ கல்லூரி), விரான் சமுதித்த, சமரிந்து நெத்சார (இருவரும் மாத்தறை சென். செர்வேஷியஸ் கல்லூரி), துல்னித் சிகேரா, சாமிக்க ஹீனட்டிகல (இருவரும் மஹாநாம கல்லூரி), குகதாஸ் மாதுளன் (யாழ். சென். ஜோன்ஸ் கல்லூரி), ரசித் நிம்சார (வத்தளை லைசியம் சர்வதேச பாடசாலை), விக்னேஸ்வரன் ஆகாஷ், சேனுஜ வேக்குனாகொட (இருவரும் மருதானை புனித சூசையப்பர் கல்லூரி), ஸ்ரீராம் ஜீவகன் (வெஸ்லி கல்லூரி), மலின்த சில்வா (மொறட்டுவை புனித செபஸ்தியார் கல்லூரி) போட்டி விபரங்கள் ஜனவரி 16: அவுஸ்திரேலியா எதிர் அயர்லாந்து ஜனவரி 17: ஜப்பான் எதிர் இலங்கை ஜனவரி 19: அயர்லாந்து எதிர் இலங்கை ஜனவரி 20 அவுஸ்திரேலியா எதிர் ஜப்பான் ஜனவரி 22: அயர்லாந்து எதிர் ஜப்பான் ஜனவரி 23: அவுஸ்திரேலியா எதிர் இலங்கை https://www.virakesari.lk/article/235958
-
கூகுளுடன் கைகோர்த்தது ஆப்பிள்: தொழில்நுட்ப உலகில் புதிய திருப்பம்
கூகுளுடன் கைகோர்த்தது ஆப்பிள்: தொழில்நுட்ப உலகில் புதிய திருப்பம் Published By: Digital Desk 3 13 Jan, 2026 | 03:36 PM செயற்கை நுண்ணறிவு (AI) துறையில் நிலவும் கடும் போட்டியைச் சமாளிக்க, ஆப்பிள் (Apple) நிறுவனம் தனது நீண்டகாலப் போட்டியாளரான கூகுளுடன் (Google) ஒரு முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது. அதன்படி, ஆப்பிளின் 'சிறி' (Siri) குரல் உதவிச் செயலி மற்றும் எதிர்கால 'ஆப்பிள் இன்டலிஜென்ஸ்' (Apple Intelligence) அம்சங்கள் கூகுளின் ஜெமினி (Gemini) தொழில்நுட்பம் மற்றும் கிளவுட் வசதியைப் பயன்படுத்தி இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மெகா கூட்டணிக்காக ஆப்பிள் நிறுவனம் கூகுளுக்கு ஆண்டுக்கு சுமார் 1 பில்லியன் டொலர் வரை செலுத்தக்கூடும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேம்படுத்தப்பட்ட சிறி செயலி, 2026 ஆம் ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரல் வெளியாகவுள்ள iOS 26.4 மென்பொருள் பதிப்பில் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கூகுளின் தொழில்நுட்ப உதவியுடன் சிறி இனி பயனர் சூழலை (Context) மிகச் சிறப்பாகப் புரிந்துகொள்வதுடன், செயலிகளுக்கு இடையிலான பணிகளை (In-app actions) எளிதாகச் செய்யும் திறன் பெறும். ஆப்பிள் தனது சொந்த AI மாதிரிகளை விட வலிமையான கூகுளின் 1.2 ட்ரில்லியன் அளவுருக்கள் (1.2 trillion parameters) கொண்ட மொடலைப் பயன்படுத்த முடிவெடுத்துள்ளது. இருப்பினும், பயனர்களின் தரவுப் பாதுகாப்பு (Privacy) மற்றும் தனியுரிமையை உறுதி செய்ய, இந்த AI அம்சங்கள் ஆப்பிளின் சொந்த 'பிரைவேட் கிளவுட் கம்ப்யூட்' (Private Cloud Compute) கட்டமைப்பில் மட்டுமே இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து கூகுளின் தாய் நிறுவனமான அல்பபெட்டின் (Alphabet) சந்தை மதிப்பு முதல் முறையாக 4 ட்ரில்லியன் டொலரைக் கடந்தது. எக்ஸ் (X) மற்றும் xAI நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க், இக்கூட்டணியைக் கடுமையாக விமர்சித்துள்ளார். கூகுள் ஏற்கனவே அண்ட்ரோய்ட் மற்றும் குரோம் மூலம் ஆதிக்கம் செலுத்தும் நிலையில், இது "அதிகாரக் குவிப்பு" (Unreasonable concentration of power) என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தக் கூட்டணியானது ஓபன்ஏஐ (OpenAI) மற்றும் மைக்ரோசொப்ட் போன்ற நிறுவனங்களுக்குப் பெரிய சவாலாக அமையும் எனத் தொழில்நுட்ப நிபுணர்கள் கருதுகின்றனர். https://www.virakesari.lk/article/235935
-
ரோஹிங்கியா இனப்படுகொலை வழக்கு: ஐநா சர்வதேச நீதிமன்றத்தில் மியன்மாருக்கு எதிராக காம்பியா கடும் வாதம்
ரோஹிங்கியா இனப்படுகொலை வழக்கு: ஐநா சர்வதேச நீதிமன்றத்தில் மியன்மாருக்கு எதிராக காம்பியா கடும் வாதம் Published By: Digital Desk 3 13 Jan, 2026 | 11:18 AM மியன்மாரில் ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட "இனப்படுகொலை கொள்கைகள்" மூலம் அந்த இனத்தையே அழிக்க மியன்மார் முயன்றதாக காம்பியா நாடு ஐநா சர்வதேச நீதிமன்றத்தில் (ICJ) குற்றம் சாட்டியுள்ளது. மேற்கு ஆபிரிக்க நாடான காம்பியா, கடந்த 2019ஆம் ஆண்டு மியன்மாருக்கு எதிராகத் தொடர்ந்த இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வழக்கின் விசாரணைகள் திங்கட்கிழமை(12) நெதர்லாந்தின் தி ஹேக் நகரில் ஆரம்பமானது. மியன்மார் இராணுவம் திட்டமிட்டு ஒரு குறிப்பிட்ட சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தை அழிக்க முயன்றதாக காம்பியாவின் வெளிவிகார அமைச்சர் டவ்டா ஜாலோ (Dawda Jallow) நீதிமன்றத்தில் தெரிவித்தார். 2017ஆம் ஆண்டு மியன்மார் இராணுவம் மேற்கொண்ட ஒடுக்குமுறையின் போது ஆயிரக்கணக்கான ரோஹிங்கியாக்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 700,000-க்கும் அதிகமானோர் அண்டை நாடான பங்களாதேஷிற்கு அகதிகளாகத் தப்பிச் சென்றனர். பல தசாப்தங்களாக ரோஹிங்கியாக்கள் கொடூரமான துன்புறுத்தல்களுக்கும், மனிதநேயமற்ற அவதூறு பிரச்சாரங்களுக்கும் உள்ளாக்கப்பட்டதாக காம்பியா சுட்டிக்காட்டியுள்ளது. காம்பியாவின் இந்த முயற்சிக்கு இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் (OIC) 57 உறுப்பு நாடுகளும், பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி மற்றும் கனடா உள்ளிட்ட 11 நாடுகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. "மியன்மார் இழைத்த கொடூரமான குற்றங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என நாம் கோருகிறோம். இனப்படுகொலை செய்த மியன்மார் இராணுவத் தலைவர்களுக்கு எதிராக நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும்," என நீதிமன்றத்திற்கு வெளியே இருந்த அகதிப் பெண் மொனைரா தெரிவித்துள்ளார். மியன்மார் இராணுவம் இந்த இனப்படுகொலை குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து மறுத்து வருகிறது. பயங்கரவாத அச்சுறுத்தல்களுக்கு எதிராகவே தமது நடவடிக்கைகள் அமைந்ததாக மியன்மார் தரப்பு வாதிடுகிறது. இம்மாத இறுதி வரை நடைபெறவுள்ள இந்த விசாரணைகளில் மியன்மார் தனது பதில்களை வழங்க வாய்ப்பளிக்கப்படும். 1948ஆம் ஆண்டு ஐநா இனப்படுகொலை உடன்படிக்கையின் கீழ் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது இஸ்ரேலுக்கு எதிராக தென்னாப்பிரிக்கா தொடர்ந்துள்ள வழக்கு போன்ற ஏனைய சர்வதேச வழக்குகளுக்கும் ஒரு முன்மாதிரியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது வங்காளதேசத்தின் காக்ஸ் பஜார் முகாம்களில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான ரோஹிங்கியாக்கள் மிக நெருக்கடியான நிலையில் வாழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/235903
-
அரச சேவையில் புதிதாக 26,095 பேரை இணைத்துக்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம்
அரச சேவையில் புதிதாக 26,095 பேரை இணைத்துக்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம் Jan 13, 2026 - 03:22 PM அரசாங்க சேவைக்கு புதிதாக 26,095 பேரை இணைத்துக்கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதற்கமைய, 23,344 ஆசிரியர்கள் உட்பட இந்த ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் கலாநிதி நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். https://adaderanatamil.lk/news/cmkceyggz03vho29nj1a1c9km