Everything posted by ஏராளன்
-
காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான இறுதி கட்டப் பதிவுகள் இன்று!
09 AUG, 2024 | 04:03 PM காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான அலுவலகத்தினால் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான இறுதி கட்டப் பதிவுகள் இன்று வெள்ளிக்கிழமை (09) வவுனியா பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது. பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான அலுவலகத்தின் பிரதானிகள் கலந்து கொண்டு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களிடம் இறுதி கட்டப் பதிவுகளை மேற்கொண்டதோடு விடயங்களையும் கேட்டறிந்திருந்தனர். இதன்போது 62 பேருக்கு கடிதங்கள் தபால் மூலமாகவும் கிராம சேவையாளர் ஊடாகவும் அனுப்பப்பட்டு இந்த பதிவு நடவடிக்கைகளில் கலந்து கொள்ளுமாறு காணாமல் ஆக்கப்பட்ட அலுவலகத்தினால் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இது தொடர்பில் கருத்து தெரிவித்த காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர் ஒருவர், எதிர்வரும் மாதம் அளவில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக அவர்களுக்காக நஷ்ட ஈடும், சான்றிதழும் வழங்குவதற்கு காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான அலுவலகம் நடவடிக்கை எடுத்திருப்பதாக தங்களிடம் அவர்கள் தெரிவித்ததாகவும் கூறியிருந்தார். https://www.virakesari.lk/article/190658
-
சிறுவர்கள் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
சிறுவர்கள் மத்தியில் தற்போது மூச்சுத்திணறல் அறிகுறிகள் அதிகரித்து வருவதாக வைத்திய நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். சிறுவர்களுக்கு ஏற்படும் இன்புளுவென்சா வைரஸ் காய்ச்சலினை தொடர்ந்து மூச்சுத்திணறல் அறிகுறிகள் அதிகரித்து வருகின்றன. காய்ச்சல் இரண்டு நாட்களுக்கு மேல் நீடிக்குமாயின் உடனே அருகில் உள்ள வைத்தியரை நாடி ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ளுமாறும் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், சிறுவர்களுக்குப் பாதுகாப்பான சூழலை ஏற்படுத்திக் கொடுப்பது பெற்றோரின் கடமை எனவும் வைத்திய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இந்த வைரஸ் நோய்களின் அறிகுறிகளாக தலைவலி, இருமல், சளி, தும்மல், உடல்வலி ஆகியவற்றுடன் கூடிய காய்ச்சல் இருக்கும் என்றும் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். https://thinakkural.lk/article/307581
-
கட்சி தாவலை தடுக்க தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் புதிய சட்டம் - அனுர குமார
அரசியல் கட்சிகளில் ஒரு பக்கத்திலிருந்து மற்றைய பக்கத்திற்கு தாவும் தவளைகள் அதிகம் - கட்சி தாவலை தடுக்க தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் புதிய சட்டம் - அனுரகுமார 09 AUG, 2024 | 04:47 PM தேசிய மக்கள் அரசாங்கத்தில் கட்சிதாவலை கட்டுப்படுத்துவதற்கான புதிய சட்டம் கொண்டுவரப்படும் என கட்சியின் தலைவர் அனுரகுமாரதிசநாயக்க தெரிவித்துள்ளார். பிரதான வேட்பாளர்களின் குடும்ப உறவுகள் காரணமாக இந்த தேர்தல் வித்தியாசமானது என தெரிவித்துள்ள அவர் இந்த ஒரு காரணத்திற்காகவே நீங்கள் தேசிய மக்கள் சக்திக்கு வாக்களிக்கலாம் என தெரிவித்துள்ளார். இந்த கட்சிகளில் ஒருபக்கத்திலிருந்து மற்றைய பக்கத்திற்கு தாவும் தவளைகள் நிறைய உள்ளன என தெரிவித்துள்ள அவர் கட்சி தாவலில் அவர்கள் ஈடுபடும் கடைசி தடவை இதுதான் எனவும் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் அரசியல் இதன் காரணமாகவே ஊழலில் சிக்குண்டது என மேலும் தெரிவித்துள்ள அவர் இதனை கட்டுப்படுத்துவதற்காக தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் சட்டங்களை கொண்டுவரும்,19வது திருத்தத்தில் இது தொடர்பில் சில விடயங்கள் காணப்பட்டன, விஜயதாச அதனை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார் தினேஸ் குணவர்த்தன அதனை நீக்கவேண்டும் என்றார் எனவும் அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/190682
-
மூன்று சிறுமிகள் கொல்லப்பட்ட விவகாரம்: பிரிட்டனில் கலவரமாக மாறிய போராட்டம் - என்ன நடக்கிறது?
"இங்குள்ள மக்கள் மிகவும் அன்பானவர்கள்.. ஆனால்.. ” - வன்முறையால் அச்சத்தில் இருக்கும் பிரிட்டன் முஸ்லிம் சமூகம் படக்குறிப்பு,கிரேட்டர் மான்செஸ்டர் நகரின் ஸ்டாக்போர்ட் பகுதியில் வசிக்கிறார் ஹுமா கான் கட்டுரை தகவல் எழுதியவர், ரேடா எல் மாவி, மான்செஸ்டரில் இருந்து பதவி, பிபிசி அரபி 3 மணி நேரங்களுக்கு முன்னர் "மக்கள் எதை போராட்டங்கள் என்கிறார்கள், நான் உண்மையில் இந்த போராட்டங்களை பயங்கரவாத தாக்குதல்கள் என்று அழைப்பேன்” என்கிறார் ஹுமா கான். ஹுமா கான் கிரேட்டர் மான்செஸ்டர் நகரின் ஸ்டாக்போர்ட் பகுதியில் வசிக்கிறார். உள்ளூர் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிகிறார். பிரிட்டன் நகரங்களில் சமீபத்தில் நடந்த வன்முறைச் சம்பவங்களை அவர் சாதாரணமாக எடுத்து கொண்டு அன்றாட பணிகளை தொடர தீர்மானித்தார். ஆனால் அவரால் முடியவில்லை. அவ்வப்போது மன பதற்றம் அடைந்தார். "போராட்டங்களை பார்த்த போது முதலில் அதிர்ச்சியாக இருந்தது. வன்முறையை மக்கள் போராட்டங்கள் என்று சொல்கின்றனர். நான் உண்மையில் அதை பயங்கரவாதத் தாக்குதல்கள் என்று சொல்வேன். சமூக ஊடக வதந்திகளிலிருந்து அது எப்படி பொய்யாக உருவானது என்பது அதிர்ச்சியாக உள்ளது” என்று அவர் பிபிசியிடம் கூறினார். அவர் தனது வழக்கமான பணிகளை இப்போதைக்கு மாற்றப்போவதில்லை என்று கூறினாலும், எச்சரிக்கையாக இருக்கப் போவதாகத் தெரிவித்தார். "என் மத நம்பிக்கைகளுக்காகவும், என் தோற்றத்துக்காகவும், என் உடைகளுக்காகவும் நான் குறி வைக்கப்படுகிறேன். துன்புறுத்தலுக்கு ஆளாகிறேன்.” “நான் பயங்கரவாதத்தை பார்த்து பயப்பட மாட்டேன்… ஆனால் ஒவ்வொரு முறையும் நான் என் வீட்டை விட்டு வெளியே செல்லும் போது என் மனதில் அந்த அச்ச உணர்வு இருக்கிறது. எனக்கு ஏதாவது நடந்துவிடுமோ, ஆபத்தில் இருக்கிறேனா என பதற்றமடைகிறேன்" என்று அவர் விவரித்தார். இந்திய காகங்களை கொடிய பறவையாக கருதும் கென்யா - 10 லட்சம் காகங்களை கொல்லும் முடிவு ஏன்?7 ஆகஸ்ட் 2024 பிரிட்டனின் என்ன நடக்கிறது? ஜூலை 29 அன்று இங்கிலாந்தின் வடமேற்கில் உள்ள சவுத்போர்ட்டில் மூன்று சிறுமிகள் கத்தியால் தாக்கப்பட்டதில் இருந்து பரவலான கலவரம் இங்கிலாந்து மற்றும் வடக்கு அயர்லாந்தில் உள்ள நகரங்களில் பரவியுள்ளது. ஆன்லைனில் தவறான தகவல், தீவிர வலதுசாரிகள் மற்றும் குடியேற்ற எதிர்ப்பு உணர்வு ஆகியவற்றால் வன்முறை தூண்டப்பட்டு அரங்கேறியது. சவுத்போர்ட் கத்தி குத்து நிகழ்வுக்கு பிறகு, இந்த சம்பவத்தில் குற்றம் செய்தவர் என்று சந்தேகிக்கப்படும் நபர் ஒரு படகில் சட்டவிரோதமாக பிரிட்டனுக்குள் வந்த புகலிடக் கோரிக்கையாளர் என்று சமூக ஊடகங்களில் பொய்யான தகவல் பரவியது. அவர் முஸ்லிம் என்றும் ஆதாரமற்ற வதந்திகள் பரவின. விரைவில், வன்முறை வெடித்தது. 2011 ல் நடந்த கலவரங்களுக்குப் பிறகு காணப்படாத அளவுக்கு அழிவுக் காட்சிகளை காண முடிந்தது. படக்குறிப்பு,மான்செஸ்டரில் தற்போது அரபு புத்தகக் கடையை நடத்தி வரும் ஆலா பிரிட்டன் முஸ்லிம்கள் என்ன கூறுகிறார்கள்? வன்முறையால் ஏற்படும் அமைதியின்மை அசாதாரண சூழ்நிலைக்கு வழிவகுக்கும், ஆனால் எல்லா நேரங்களிலும் அது பேரழிவை ஏற்படுத்தக் கூடியது அல்ல. செவ்வாயன்று , மான்செஸ்டரின் புறநகரில் நகரின் வடமேற்கில், உள்ள சால்ஃபோர்ட் ஷாப்பிங் சென்டருக்கு மதிய வேளையில் சென்றபோது, அது மிகவும் அமைதியாக இருந்தது. அந்த நாளின் பிற்பகுதியில் போராட்டங்கள் நடைபெறும் என்று ஆன்லைனில் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வந்தததை அடுத்து வணிக வளாகங்களை முன்கூட்டியே மூடுமாறு அறிவுறுத்தப்பட்டது. அந்த பெரிய, காலியான வளாகத்தில் ஒரு சிலரை மட்டுமே காண முடிந்தது. ஒரு சில முகமூடி அணிந்த இளைஞர்களை மட்டுமே போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர், அவர்கள் அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தனர், ஆனால் போராட்டம் நடத்தும் அறிகுறி இல்லை. மான்செஸ்டரின் தெற்குப் பகுதியில் நிலைமை முற்றிலும் மாறுபட்டு இருந்தது. மோஸ் சைட் (Moss Side) என்னும் பகுதியில் ஆசியா, மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்காவிலிருந்து அதிகளவிலான முஸ்லிம் சமூகத்தினர் வசிக்கின்றனர். செவ்வாய்க்கிழமை, உணவகங்கள் மற்றும் கஃபேக்கள் வாடிக்கையாளர்களால் நிரம்பி வழிந்தன. அப்பகுதியில் வேலை செய்யும் மற்றும் வசிக்கும் பலர் "எந்த பிரச்னையும் இல்லை, பாதுகாப்பாக உணர்கிறோம் " என்று கூறுகிறார்கள். ஆனால் அவர்கள் அங்கு நடக்கும் அடுத்தடுத்த நிகழ்வுகளை கவலையுடன் கண்காணித்து வருகின்றனர். "நான் 2018 இல் சிரியாவிலிருந்து இங்கு வந்தேன், நானும் எனது குடும்பமும் இங்கு பாதுகாப்பான இருப்பிடத்தை கண்டடைந்தோம்" என்று மான்செஸ்டரில் தற்போது அரபு புத்தகக் கடையை நடத்தி வரும் ஆலா கூறுகிறார். "சமீபத்திய நிகழ்வுகள் நாட்டு மக்களின் எதிர்காலத்திற்கு நல்லதல்ல. தற்போதைக்கு, நான் பெரிதாக யார் கவனத்திலும் விழாமல் அமைதியாக வசித்து வருகிறேன். நான் மீண்டும் ஒரு துன்புறுத்தலை உணர விரும்பவில்லை" என்று அவர் பிபிசியிடம் கூறினார். படக்குறிப்பு,அப்துல் ஹக்கீம் 20 ஆண்டுகளுக்கு முன்பு சோமாலியாவில் நடந்த போரில் தப்பி வந்தவர். அப்துல் ஹக்கீம் 20 ஆண்டுகளுக்கு முன்பு சோமாலியாவில் நடந்த போரில் தப்பி வந்தவர். தீவிர வலதுசாரி ஆர்வலர்கள் முஸ்லிம் குழுக்களுடன் மோதுவதைக் குறித்து அவர் கவலைப்படுகிறார். "இந்த இரண்டு குழுக்கள் சந்தித்தால், அவர்கள் ஒரு கலவரத்தை உருவாக்கலாம், உள்நாட்டுப் போரை உருவாக்கலாம். சோமாலியாவிலிருந்து இந்த மான்செஸ்டருக்கு என்னைத் துரத்தியது போலவே மீண்டும் ஒரு நிகழ்வு நடக்கலாம்" மசூதிகள், வணிகங்கள் மற்றும் வீடுகளைப் பாதுகாக்க முஸ்லிம் சமூகத்தின் அழைப்பு குறித்தும் அலா வருத்தப்படுகிறார் - "தேவைப்பட்டால் வன்முறையைப் பயன்படுத்துங்கள்” என்னும் அழைப்பு அவரை கவலையில் ஆழ்த்தியுள்ளது. “இதில் எனக்கு உடன்பாடு இல்லை. முஸ்லிம்களின் பாதுகாப்புக்காக அரசாங்கம் ஏற்கெனவே உறுதியளித்துள்ளது. உள்ளூர் அதிகாரிகள் மற்றும் அரசாங்கத்தின் ஒருங்கிணைப்பில் அனைத்தும் நடக்க வேண்டும்.” "எங்கள் மசூதிகளைப் பாதுகாக்க எங்களுக்கு உரிமை உள்ளது என்று நான் நினைக்கிறேன், மேலும் நமது நம்பிக்கை சுதந்திரத்திற்கான உரிமையை நாங்கள் பாதுகாக்க வேண்டும், ஆனால் இதை நாமாக செய்தால், நம்மை பயங்கரவாதிகளாக முத்திரை குத்துவார்கள். அதற்கு நாம் வழிவகுக்கக் கூடாது." என்றார். இந்த கலவரத்தால் இளைய தலைமுறையினருக்கும் பாதிப்பு உள்ளது என்கிறார் ஹுமா கான். “எனது நெருங்கிய உறவுக்கார சிறுவர்களிடம் நடக்கும் நிகழ்வுகளை எப்படி விவரிப்பது என்று தெரியவில்லை. எனக்கு மிகவும் கடினமாக இருப்பது அவர்களுக்கு விவரித்துக் கூறுவதுதான். அவர்கள் 12, 10 மற்றும் 7 ஆகிய வயதில் இருக்கும் சிறுவர்கள். அவர்களிடம் மான்செஸ்டரின் எங்கள் தெருக்களில் நடப்பதற்கு அனைவரும் காரணமல்ல, அனைவரும் தீங்கு விளைவிப்பவர்கள் அல்ல என்று எப்படி உறுதியளிக்க போகிறேன்? இந்த பன்முக கலாச்சார சமூகத்தின் அனைத்து அங்கத்தினரையும் இந்தப் போராட்டம் பிரதிபலிக்கவில்லை” என்றார். ‘இங்கு இனவெறியை நான் அனுபவித்ததே இல்லை’ படக்குறிப்பு,"கடந்த இருபது ஆண்டுகளாக சில வன்முறை சம்பவங்களை நாங்கள் பார்த்திருக்கிறோம்" என்கிறார் டாக்டர் ஜவாத் அமீன் சிரியாவைச் சேர்ந்த சயீத், மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பிரிட்டனுக்கு வந்து, ஐரோப்பாவைச் சுற்றிப் பயணங்களை மேற்கொண்டார். "நான் ஐரோப்பா முழுவதும் பயணம் செய்தேன், என்னிடம் ஸ்வீடிஷ் பாஸ்போர்ட் உள்ளது. நான் வேண்டுமென்றே இந்த நாட்டிற்கு [பிரிட்டன்] வந்தேன், ஏனென்றால் அனைத்து தரப்பின் நம்பிக்கைகளும் மதிக்கப்படுகின்றன. கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள், யூதர்கள் - அனைவரும் ஒற்றுமையாக வாழ்கின்றனர்.” “சமீபத்திய இனவெறி நிகழ்வுகளைப் பற்றி கேள்விப்பட்டபோது நான் மிகவும் அதிர்ச்சியடைந்தேன். நான் இங்கு இனவெறியைக் கண்டதில்லை. இந்த செய்தியைப் பற்றி முதலில் கேள்விப்பட்டபோது நாங்கள் கொஞ்சம் பயந்தோம், இது எங்களுக்கு அசாதாரணமான ஒன்று, ஏனென்றால் நாங்கள் இப்படி நிகழ்வை பார்ப்பது அல்லது கேட்பது இதுவே முதல் முறை." "நான் மூன்று ஆண்டுகளாக இங்கு வசிக்கிறேன், இங்குள்ள மக்கள் மிகவும் அன்பானவர்கள். அவர்கள் உதவும் பண்பு கொண்டவர்கள். அவர்கள் என் மொழி தடையை உடைக்க உதவுகிறார்கள், ஆனால் நான் செய்திகளில் பார்த்தது உண்மையில் நான் பார்த்ததை விட மிகவும் மோசமாக உள்ளது." கிரேட்டர் மான்செஸ்டர் முஸ்லிம் பாதுகாப்பு மன்றத்தின் தலைவர் டாக்டர் ஜவாத் அமீன் கூறுகையில், "கடந்த இருபது ஆண்டுகளாக சில வன்முறை சம்பவங்களை நாங்கள் பார்த்திருக்கிறோம். "சவுத்போர்ட்டில் இந்த குறிப்பிட்ட சம்பவம் பற்றிய கவலை என்னவென்றால், ஆன்லைனில் வெறுப்பை பரப்ப விரும்புபவர்களால் சமூக ஊடகங்களில் பரப்பப்படும் தவறான தகவல்களால் இந்த கலவரம் தூண்டப்பட்டது என்பது தான்" என்று அவர் பிபிசியிடம் கூறினார். "தாக்குதல் நடத்தியவர் முஸ்லிமாக இருந்தாலும் இல்லாவிட்டாலும், நாம் பார்த்த அந்த வன்முறைக்கு அது அடிப்படையாக இருக்கக்கூடாது." என்றார். https://www.bbc.com/tamil/articles/cy4ld3dzyrpo
-
மன்னாரில் குழந்தையை பிரசவித்த இளம் தாய் உயிரிழப்பு!
மன்னார் இளம் தாய் சிந்துஜாவின் மரணம் : முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்படும் - சுகாதாரத்துறை அமைச்சர் Published By: DIGITAL DESK 7 08 AUG, 2024 | 08:23 PM (எம் ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த இளம் தாய் சிந்துஜாவின் மரணம் தொடர்பில் விசேட கவனம் செலுத்தியுள்ளோம். இந்த விடயத்தில் ஏதாவது தவறுகள் இடம்பெற்றிருந்தால் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (08) இடம்பெற்ற மருத்துவ திருத்தச் சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன், மன்னார் வைத்தியசாலையில் இடம்பெற்ற மரியராஜ் சிந்துஜாவின் மரணம் பாரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.இந்த மரணம் குறித்து துரிதகரமான விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இதன்போது எழுந்து பதிலளித்த சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன, இந்த விடயம் தொடர்பில் விசேட அவதானம் செலுத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பான விசாரணை அறிக்கையை இதுவரை ஆராயவில்லை. குறித்த விடயத்தில் ஏதாவது தவறுகள் நடந்திருந்தால் அது தொடர்பில் நிச்சயமாக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்போம். இதேவேளை நாட்டில் நோயாளர்களை பாதுகாப்பது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும். அதற்காகவே புதிய சட்டமூலமொன்றையும் முன்வைத்துள்ளோம் என்றார். https://www.virakesari.lk/article/190580
-
ஒலிம்பிக் விளையாட்டு விழா 2024 செய்திகள்
நீரஜ் சோப்ராவுக்கு வெள்ளி; நதீமும் என் மகனே - நீரஜின் தாய் பெருமிதம் பட மூலாதாரம்,GETTY IMAGES 9 ஆகஸ்ட் 2024, 01:13 GMT புதுப்பிக்கப்பட்டது 38 நிமிடங்களுக்கு முன்னர் பாரிஸ் ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். இந்தப் போட்டியில் பாகிஸ்தானின் அர்ஷத் நதீம் தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார். நீரஜ் சோப்ரா அதிகபட்சமாக 89.45 மீட்டர் தூரம் எறிந்தார். அர்ஷத் நதீம் 92.97 மீட்டர் தூரம் எறிந்து புதிய ஒலிம்பிக் சாதனையை படைத்தார். நீரஜ் சோப்ரா தனது ஆறு முயற்சிகளில் ஐந்தில் தவறிழைத்தார். இரண்டாவது முயற்சியில் அவர் எறிந்த 89.45 மீட்டர் தொலைவே அவருக்குப் பதக்கத்தைப் பெற்றுத் தந்தது. கிரெனடா நாட்டின் ஆண்டன்சன் பீட்டர்ஸ் 88.54 மீட்டர் தூரம் எறிந்து வெண்கலப் பதக்கத்தை வென்றார். நீரஜ் சோப்ரா வெற்றி பெற்றதையடுத்து, ஹரியானா மாநிலம் பானிபட்டில் உள்ள கந்த்ரா கிராமத்தில் உள்ள நீரஜ் சோப்ராவின் வீட்டில் இருந்தவர்கள் கொண்டாடத் தொடங்கினர். நீரஜ் சோப்ரா மூன்று ஆண்டுகளுக்கு முன்பு டோக்கியோ ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதலில் இந்தியாவுக்காக தங்கப் பதக்கம் வென்றார். டோக்கியோவில் தங்கப் பதக்கம் வென்றதன் மூலம், அபினவ் பிந்த்ராவுக்குப் பிறகு தனிநபர் போட்டியில் தங்கம் வென்ற இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றார். நதீம் தங்கப்பதக்கம் பற்றி நீரஜ் கூறியது என்ன? வெள்ளிப்பதக்கம் வென்ற பிறகு பேசிய நீரஜ் சோப்ரா, நாட்டிற்காக எப்போதெல்லாம் பதக்கம் வெல்கிறோமோ அப்போதெல்லாம் மகிழ்ச்சியாக உணர்வோம் என கூறினார். ''நான் எனது சிறந்த திறனை வெளிப்படுத்தினேன். ஆனால், இது அர்ஷத் நதீமின் நாள்'' எனவும் நீரஜ் சோப்ரா குறிப்பிட்டார். ''இன்று போட்டி நன்றாக இருந்தது. ஆனால், ஒவ்வொரு தடகள வீரர்களுக்கும் அவர்களுக்கான நாள் இருக்கும். இன்று அர்ஷத் நதீமின் நாள். எனது சிறந்த திறனை வெளிப்படுத்தினேன். ஆனால் சில விஷயங்களை கவனத்தில் கொண்டு அதை மேம்படுத்த வேண்டும். நமது தேசிய கீதம் ஒன்று ஒலிபரப்பப்படாமல் இருந்திருக்கலாம், ஆனால், எதிர்காலத்தில் நிச்சயம் வேறு எங்காவது ஒலிபரப்பப்படும்'' என ஏஎன்ஐ செய்தி முகமையிடம் நீரஜ் சோப்ரா கூறினார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பாகிஸ்தானின் அர்ஷத் நதீமும் முதல் முயற்சியில் தவறிழைத்தார் நதீமும் என் மகனே - நீரஜ் சோப்ராவின் தாய் பெருமிதம் நீரஜ் சோப்ரா, ஈட்டி எறிதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற நிலையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய நீரஜ் சோப்ராவின் அம்மா சரோஜ் தேவி, மகிழ்ச்சி அடைந்ததாக தெரிவித்தார். "வெள்ளி பதக்கமும் எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என்று கூறிய அவர், தங்கப் பதக்கம் வென்றவரும் (அர்ஷத் நதீம்) என் மகன்தான். அந்த வெற்றிக்குப் பின்னால் கடுமையான உழைப்பு இருக்கிறது" என்று நெகிழ்ச்சியோடு தெரிவித்துள்ளார். இவரின் இந்த கருத்து சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இவர் மட்டுமின்றி அவரின் தாத்தா தர்ம் சிங் சோப்ரா, அப்பா சதீஸ்குமார் ஆகியோரும் நீரஜ் சோப்ராவின் வெள்ளிப் பதக்க வெற்றியை அவர்களின் கிராமத்தில் கொண்டாடி வருகின்றனர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இறுதி முயற்சியில் நதீம் 91.79 மீ எறிந்தார் வரலாறு படைத்த அர்ஷத் நதீம் நீரஜ் சோப்ரா தனது முதல் முயற்சியில் சரியாக வீசவில்லை. பாகிஸ்தானின் அர்ஷத் நதீமும் முதல் முயற்சியில் தவறிழைத்தார். இரண்டாவது சுற்றில் அர்ஷத் நதீம் 92.97 மீட்டர் தூரம் எறிந்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். இதுநாள் வரையிலான ஒலிம்பிக் போட்டிகளில் இது வரலாற்று சாதனையாகும். அவர் தங்கம் வென்றதன் மூலம் பாகிஸ்தானின் 40 ஆண்டுகளாக ஒலிம்பிக் தங்கக் கனவு நிறைவேறியுள்ளது. இரண்டாவது முயற்சியில் நீரஜ் சோப்ரா எறிந்த ஈட்டியின் தொலைவு 89.45 மீட்டர். அவரது நெருங்கிய போட்டியாளரான பீட்டர்ஸின் தொலைவு 88.54 மீட்டர். ஜெர்மனியின் வெபரிடம் இருந்து அவருக்கு கடுமையான போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டாலும், வெபர் 87.40 மீ., புள்ளிகளுடன் ஆறாவது இடத்தைப் பிடித்தார். இறுதி முயற்சியில் நதீம் 91.79 மீ எறிந்தார், இது போட்டியின் இரண்டாவது அதிகபட்ச தொலைவாகும். 26 வயதான நீரஜ் சோப்ரா, பாரிஸ் ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதல் போட்டியின் தகுதிச் சுற்றில் அதிகபட்சமாக 89.34 மீட்டர் தூரம் எறிந்து தொடர்ந்து இரண்டாவது ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வெல்வார் என்ற நம்பிக்கையை உயர்த்தினார். சோப்ராவின் கிராமத்தில் ஒரு பெரிய திரை அமைக்கப்பட்டது, அதில் அனைவரும் நிகழ்வைப் பார்த்து வெற்றிகரமான தருணத்திற்காக காத்திருந்தனர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,கிரெனடா நாட்டின் ஆண்டன்சன் பீட்டர்ஸ் 88.54 மீட்டர் தூரம் எறிந்து வெண்கலப் பதக்கத்தை வென்றார் ஒலிம்பிக் போட்டிகளுக்கான தகுதிச் சுற்றில், ஆகஸ்ட் 6ம் தேதி பங்கேற்ற நீரஜ் சோப்ரா, இறுதிப் போட்டிக்கு நேரடியாக தேர்வு செய்யப்பட்டார். 84 மீட்டர் தூரத்தை அடையும் பட்சத்தில் நேரடியாக போட்டியாளர்கள் இறுதி போட்டிக்கு செல்ல முடியும் என்ற விதியின் அடிப்படையில் அவர் தேர்வு செய்யப்பட்டார். இந்த சுற்றில் அவர் 89.34 மீட்டர் தூரத்திற்கு ஈட்டி எறிந்தது குறிப்பிடத்தக்கது. வாழ்த்துகள் தெரிவித்த மோதி இந்திய பிரதமர் நரேந்திர மோதி, நீரஜ் பதக்கம் வென்றதைத் தொடர்ந்து வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். எக்ஸ் தளத்தில் பதிவிட்ட அவர், "நீரஜ் சோப்ரா சிறந்த ஆளுமை படைத்தவர். மீண்டும் மீண்டும் தனது திறமையை வெளிப்படுத்திவருகிறார். ஒலிம்பிக்கில் மீண்டும் ஒரு பதக்கத்தைப் பெற்று வெற்றியுடன் வீடு திரும்புவதால் இந்தியா மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளது. வெள்ளிப் பதக்கம் வென்ற அவருக்கு வாழ்த்துகள். வரவிருக்கும் எண்ணற்ற விளையாட்டு வீரர்களை ஊக்குவித்து, அவர்களின் கனவுகளை நனவாக்கி நமது தேசத்தை பெருமைப்படுத்துவார்," என்று குறிப்பிட்டார். நீரஜ் சோப்ராவின் தங்கக் கனவு நீரஜ் சோப்ரா டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்றார். இந்த முறையும் தங்கம் வெல்வார் என்ற எதிர்பார்ப்புடன் அவர் களம் இறங்கினார். டோக்கியோ ஒலிம்பிக்கில் அவர் 87.58மீ தொலைவிற்கு ஈட்டி எறிந்து தங்கத்தை உறுதி செய்தார். ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியா தங்கம் பெற்றது அதுவே முதல்முறை. அந்த போட்டியில் ஜேக்கப் வாத்லேஜ் வெள்ளிப்பதக்கம் வென்றார். விதேஸ்லாவ் வெசெலி வெண்கல பதக்கத்தை தட்டிச் சென்றார். துப்பாக்கி சுடும் வீரரான அபினவ் பிந்திராவை தொடர்ந்து தனிநபர் பிரிவில் தங்கம் வென்ற வீரர் நீரஜ் சோப்ரா ஆவார். 120 ஆண்டு கால வரலாற்றில், ட்ராக்-அண்ட்-ஃபீல்ட் (track-and-field) பிரிவில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையையும் டோக்கியோ ஒலிம்பிக்கில் படைத்தார் நீரஜ் சோப்ரா. பட மூலாதாரம்,GETTY IMAGES இளம் வயதிலிருந்தே பயிற்சி பெறும் நீரஜ் நீரஜ் சோப்ரா, ஹரியானாவின் பானிபட்டில் உள்ள கந்த்ரா கிராமத்தில் பிறந்தவர். விவசாயத்தை அடிப்படையாக கொண்ட குடும்பப் பின்னணியில் இருந்து வந்தவர். 13 வயதில் இருந்தே ஈட்டி எறிதல் போட்டிகளுக்காக பயிற்சி பெற்று வருகிறார் நீரஜ் சோப்ரா. உடல் எடை தொடர்பான பிரச்னைகளை எதிர்கொள்வதற்காகவும், தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ளவும் இந்த விளையாட்டை தேர்வு செய்தார் அவர் என்று ஒலிம்பிக்கின் அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. முதன்முறையாக பானிபட்டில் உள்ளா சிவாஜி மைதானத்தில் ஈட்டி எறிதல் போட்டியை பார்த்து உத்வேகம் அடைந்தார் அவர். இந்திய ஈட்டி எறியும் வீரரான ஜெய்வீர் சவுத்ரி, நீரஜிடம் இருந்த திறமையை பார்த்து வியந்து போனார். பிறகு தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்க தேவையான பயிற்சிகளையும் வழி காட்டுதல்களையும் வழங்கினார் ஜெய்வீர் சவுத்ரி. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,13 வயதில் இருந்தே ஈட்டி எறிதல் போட்டிகளுக்காக பயிற்சி பெற்று வருகிறார் நீரஜ் சோப்ரா நீரஜ் சோப்ராவின் நீளும் பதக்கப் பட்டியல் அதன் பின்னர் தொடர்ச்சியாக சர்வதேச போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற துவங்கினார் நீரஜ். 2016ம் ஆண்டு போலாந்து நாட்டில் நடைபெற்ற 20 வயதினருக்கான ஐ.ஏ.ஏ.எஃப். உலக சாம்பியன்ஷிப் போட்டியில் 86.48 மீட்டர் தூரத்திற்கு ஈட்டி எறிந்து சாதனை படைத்தார் நீரஜ். இந்த சாதனை இதுவரை முறியடிக்கப்படாத ஒன்றாக உள்ளது. அதன் பின்னர் 2017ம் ஆண்டு ஆசிய போட்டிகளில் தங்கம் வென்றார். பிறகு 2018ம் ஆண்டு கோல்ட் கோஸ்ட்டில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டிகளிலும், 2018ம் ஆண்டு ஜகார்தாவில் நடைபெற்ற ஆசிய போட்டிகளிலும் தங்கம் வென்று புதிய சாதனை படைத்தார். டோக்கியோ ஒலிம்பிக் 2020 போட்டியில் தங்கம் வென்று வரலாற்று சாதனை படைத்த அவர், 2022ம் ஆண்டு ஓரிகானில் நடைபெற்ற உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்றார். 2023ம் ஆண்டு புதாபெஸ்ட்டில் நடைபெற்ற உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்க பதக்கம் வென்று அசத்தினார். அதே ஆண்டு ஹாங்க்ஜூவில் நடைபெற்ற ஆசிய போட்டியில் தங்கம் வென்றார். பட மூலாதாரம்,GETTY IMAGES பாரிஸ் ஒலிம்பிக் 2024 பதக்கப் பட்டியல் - முழு விவரம் பற்றி அறிய இங்கே கிளிக் செய்யவும் பாகிஸ்தான் வீரர் நீரஜ் பற்றி கூறுவது என்ன? நீரஜ் மற்றும் அர்ஷத் பங்கேற்ற போட்டிகளில் இதுவரை 9-0 என்ற கணக்கில் மலைக்க வைக்கும் வெற்றியை பதிவு செய்திருந்தார் நீரஜ். முதல் முறையாக நீரஜுக்கு தோல்வி கிடைத்திருக்கிறது. இவர்கள் இருவருக்கும் இடையேயான இந்த போட்டி 2016-ஆம் ஆண்டில் ஆரம்பித்தது. தெற்காசிய போட்டிகளில் இருவரும் இறுதிப் போட்டியில் பங்கேற்றனர். அதில் நீரஜ் முதல் இடம் பிடித்தார். அர்ஷத் வெள்ளிப் பதக்கத்தைக் கைப்பற்றினார். இருவருக்கும் இடையே கடுமையான போட்டி இருந்தாலும் கூட, நேரடியாக இறுதிப் போட்டிக்கு தேர்வு ஆன நிலையில் நீரஜ் சோப்ராவுக்கு வாழ்த்துகளை தெரிவித்திருந்தார் அர்ஷத். "தெற்காசியாவில் இருந்து இந்த போட்டியில் பங்கேற்கும் இரண்டு வீரர்கள் நானும், நீரஜும் என்பதே எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி அளிக்கிறது," என்று கூறிய அர்ஷத், நாங்கள் தத்தம் நாடுகளுக்காக உலக அரங்கில் போட்டியிட்டு, நாட்டுக்கு உலக அரங்கில் பெயர் வாங்கித் தருவோம் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். நீரஜ் சோப்ராவுடன் விளையாடுவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, பதில் கூறிய அர்ஷத், "ஒவ்வொரு தடகள வீரரும் அவர்களின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவே விரும்புவார்கள். நான் நீரஜுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். நாங்கள் இருவரும் எங்களின் நாட்டுக்காக போட்டிகளில் பங்கேற்போம்," என்று கூறினார். https://www.bbc.com/tamil/articles/cwyjl44l4g1o
-
Factum Perspective: உக்ரைன் - மூலோபாய மற்றும் தொழில்நுட்ப ஹாட்ஹவுஸ்
Published By: VISHNU 09 AUG, 2024 | 01:36 AM வினோத் மூனசிங்க பெப்ரவரி 24, 2022 அன்று உக்ரைனின் "இராணுவமயப்படுத்தலின் நீக்கத்தை" இலக்காகக் கொண்டு ரஷ்யா தனது "விசேட இராணுவ நடவடிக்கையை" (Spetsialnaya Voennaya Operatsiya - SVO) ஆரம்பித்தது. ரஷ்யப் படைகள் 2014 இல் கிறிமியாவில் மேற்கொண்டதைப் போலவே தங்களது பிரச்சாரத்தை ஆரம்பித்தன. உக்ரேனியப் படைகள் எதிர்க்கவில்லை. ரஷ்யர்கள் தாங்கள் எதிர்கொண்ட எதிர்ப்பின் அளவை எதிர்பார்க்கவில்லை என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன. வடக்கில், ரஷ்யர்கள் உக்ரேனிய தலைநகரான கியிவ் அருகே அடையும் வரை நல்ல முன்னேற்றத்தை அடைந்தனர், அங்கு வான்படைத் துருப்புக்கள் அன்டோனோவ் விமான நிலையத்தை கைப்பற்ற முயன்றனர். இங்கே, வலுவான உக்ரேனிய எதிர்ப்பு அவர்களை அவர்களின் வழிகளில் நிறுத்தி, இறுதியில் அவர்களை பின்னோக்கி தள்ளியது. தெற்கில், ரஷ்யர்கள் ஆழமாக ஊடுருவி, மைக்கோலேவுக்கு வெளியே உள்ள உயர் படைகளால் தடுத்து நிறுத்தப்பட முன்னராக டினீப்பர் ஆற்றைக் கடந்து, கெர்சனைக் கைப்பற்றியதால் மரியுபோல் துறைமுகத்தை ஈரூடகப் படைகள் தாக்கின. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு போர் தொடர்பான மரபு அறிவை மிகவும் சீர்குலைப்பதாக நிரூபித்த கசப்பான சண்டையை அடுத்த இரண்டு ஆண்டுகள் கண்டன. ஆளில்லா வான்வழி வாகனங்கள் (UAVs) அல்லது "ட்ரோன்கள்", கவச வாகனங்களுக்கு எதிரான தற்காப்பு நடவடிக்கைகளின் அதிகரித்த ஆற்றல் மற்றும் விமான எதிர்ப்பு பாதுகாப்புகளின் அதிகரித்த வினைத்திறன் ஆகிய மூன்று காரணிகள் பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாக வெளிப்பட்டுள்ளன. இவை இராணுவக் கோட்பாட்டின் வளர்ச்சியையும், தற்போதுள்ள இராணுவ தளவாடங்களைப் பயன்படுத்துவதையும் பாதித்துள்ளன. ஆழமான நடவடிக்கைகள் 1940-42 இல், ஜெர்மானிய போர் படையணி வெண்ணையை கத்தியால் வெட்டியதை போல தனது எதிரிகளை தாக்கியது. நாஜிக்கள் மற்ற ஆயுதங்களுடன் இணைந்ததாக பெரிய கவச வாகனங்களைப் பயன்படுத்தி, எதிரிகளின் எல்லைகளில் ஊடறுப்புகளை மேற்கொண்டு தளவாடங்களையும் உள உறுதியைத் தாக்கினர். தாக்குதல் விமானம் நீண்ட தூர பீரங்கியாக செயற்பட்டதுடன், முன்னேறும் கவச வாகனங்களுக்கு ஆதரவை வழங்கியது. சோவியத் யூனியன் இதேபோன்ற "ஆழமான நடவடிக்கைகளுடன்" பதிலளித்ததுடன், முதலில் 1920 மற்றும் 30களில் மார்ஷல் துகாசெவ்ஸ்கி உருவாக்கப்பட்டது. கவச வாகனம் போர்க்களத்தின் ராணியாக மாறியதுடன், அனைத்து படைகளும் சோவியத் T-34 நடுத்தர கவச வாகனத்தை பின்பற்ற முயற்சித்ததுடன், இது நகர்வு, பாதுகாப்பு மற்றும் சுடுதிறன் ஆகியவற்றுக்கிடையே சமநிலையை மேம்படுத்தியது. இந்த வகையான விரைவான, ஒருங்கிணைந்த நடவடிக்கைப் போர் 1973 அரபு-இஸ்ரேல் போர் வரை தொடர்ந்தது. இஸ்ரேலியர்கள் தங்களது கவச வாகன தாக்குதல்கள் கவச வாகன எதிர்ப்பு வழிப்படுத்தப்பட்ட ஆயுதங்களால் எதிர்க்கப்படுவதைக் கண்டதுடன், அவர்களின் வான்வழித் தாக்குதல்கள் விரைவான விமான எதிர்ப்பு பீரங்கிகள் மற்றும் மேற்பரப்பில் இருந்தான வான் ஏவுகணைகளால் வரையறுக்கப்பட்டன. இதற்கு பதிலளிக்கும் வகையில், அமெரிக்க இராணுவம் "வான்வழிப் போர்" என்ற எண்ணக்கருவை உருவாக்கியதுடன், நேரடி மோதல், சுடுதிறன் மற்றும் ஆயுத தளவாடத்தின் மேம்பட்ட திறன் ஆகியவற்றைப் பயன்படுத்தி, எதிரியை வெல்ல வேகம், நுணுக்கம் மற்றும் நெகிழ்வுத்தன்மை ஆகியவற்றைறை ஒருங்கிணைத்து எதிரியின் போரிடும் திறனை சீர்குலைத்தது. இந்த எண்ணக்கருவை சோதிக்க அமெரிக்காவுக்கு அதிக வாய்ப்பு கிடைக்கவில்லை. அதன் அனைத்துப் போர்களும் தொழில்நுட்ப ரீதியாகவும் தளவாட ரீதியாகவும் தாழ்ந்த எதிரிகளான சிறிய கிரெனடா, பனாமா, ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகியவற்றிற்கு எதிராக இருந்தன. உதாரணமாக, ஈராக்கியர்கள், பொருளாதாரத் தடைகள் காரணமாக, பயிற்சி பெறவில்லை மற்றும் கவச வாகன எதிர்ப்பு ஏவுகணைகள், மதிவெடிகள் அல்லது வினைத்திறனான விமான எதிர்ப்பு பாதுகாப்பு முறைமைகள் எதுவுமில்லை. எனவே, அமெரிக்க கவச வாகன பிரிவுகள் பாக்தாத் வழியாக "இடி போன்ற நகர்வுகளை" (கவச மற்றும் இயந்திரமயமாக்கப்பட்ட படைகளைப் பயன்படுத்திய தாக்குதல்கள்) ஆரம்பித்தபோது, அவர்கள் சிறியளவான எதிர்ப்பையே சந்தித்தனர். புதிய தொழில்நுட்பங்கள் இருப்பினும், இந்த விடயம் 1973 முதல் எழுத்திலேயே இருந்தது. 1995 ஆம் ஆண்டு செச்சினியாவில் உள்ள க்ரோஸ்னியில் (கவச எதிர்ப்பு ஏவுகணைகளை வைத்திருந்த எதிரிக்கு எதிராக) ரஷ்ய "இடி ஓட்டம்" அதன் 80 சதவீத கவச வாகனங்களை இழக்க வழிவகுத்தது. ஹெஸ்பொல்லா போராளிகள் 2006 இல் லெபனான் மீதான இஸ்ரேலிய படையெடுப்பை முறியடித்ததுடன், கவச வாகன எதிர்ப்பு ஆயுதங்களை, குறிப்பாக கவச எதிர்ப்பு ஏவுகணைகளை நன்கு பயன்படுத்தினர். அமெரிக்கா தனது "பயங்கரவாதத்திற்கு எதிரான போரின்" போக்கில், கணிசமான வினைத்திறனுடன் தொலைதூரத்தில் இயக்கப்படும் ட்ரோன்களைப் பயன்படுத்தியது. 14,000 க்கும் மேற்பட்ட தாக்குதல்களில், இவற்றில் 21,000 பேர் வரை உயிரிழந்ததுடன், இதில் ஐந்தில் ஒரு பங்கு பொதுமக்களாவர். குறிப்பிடத்தக்க வகையில், 2010களில், இஸ்லாமிய அரசு (ISIS) என அறியப்படும் டேஷ், சிரிய மற்றும் ஈராக் இலக்குகளுக்கு எதிராக பேரழிவு விளைவைக் கொண்ட மலிவான குவாட்காப்டர் ட்ரோன்களைப் பயன்படுத்த ஆரம்பித்தனர். மற்றைய சிரிய குழுக்கள் 2018 இல் ரஷ்ய தளங்களுக்கு எதிராக ட்ரோன்களின் குவியல்களை ஏவியது. யேமனில் உள்ள அன்சரல்லா படைகளும் அமெரிக்க ஆதரவு கூட்டணிக்கு எதிரான போராட்டத்தில் அவற்றைப் பயன்படுத்த ஆரம்பித்தன. 2020 ஆம் ஆண்டில், சிரிய இராணுவத்தைத் தாக்க துருக்கி ட்ரோன்களின் குவியல்களை பயன்படுத்தியது. துருக்கி முன்பு விலையுயர்ந்த இஸ்ரேலிய மற்றும் அமெரிக்க ட்ரோன்களை நம்பியிருந்தது, ஆனால் பொருளாதாரத் தடைகள் அதன் சொந்த, மிகவும் மலிவான பதிப்புகளை உருவாக்குவதற்கு கட்டாயப்படுத்தியது. பின்னர் 2020 இல் அஜர்பைஜான் ஆர்மீனியாவிற்கு எதிராக ட்ரோன்களை உளவு பார்த்தல், தரை பீரங்கிகளைக் கண்காணித்தல், எதிரி நிலைகள் மீதான துப்பாக்கிச் சூடு மற்றும் தரைப்படைகளுக்கு பாதுகாப்பு வழங்குதலுக்கு வெற்றிகரமாகப் பயன்படுத்தியது. விமானத்தை எதிர்கொள்வதற்காக வடிவமைக்கப்பட்ட ஆர்மேனிய வான் பாதுகாப்பு, ட்ரோன்களுக்கு எதிராக வினைத்திறனற்றதாக நிரூபிக்கப்பட்டது. தந்திரோபாய மாற்றங்கள் ரஷ்யர்கள் உக்ரைனை ஆக்கிரமிக்க ஆரம்பித்த போதும் சோவியத்தினுடைய ஆழ்ந்த ஊடுருவல் கோட்பாட்டைக் கடைப்பிடித்தனர். ஒருங்கிணைந்த கவச மற்றும் காலாட்படை வரிசைகள் தரை வழியான படையெடுப்பை முன்னெடுத்தன. உக்ரைனின் ஆயுதப் படைகள் (AFU), கவச வாகனங்கள், பீரங்கி, விமானம் மற்றும் கப்பல்களில் பலவீனமாக இருந்தபோதும், படையெடுப்பு தரைப்படையை விட மூன்றுக்கு ஒன்றாக காணப்பட்டது. அவர்கள் ஈட்டி "உயர் தாக்குதல்" கவச எதிர்ப்பு ஏவுகணைகள், கொடிய புதிய பைரக்டர் TB-2 ட்ரோன்கள் மற்றும் ஓர் "ரகசிய ஆயுதமான" Mass of First-person view (FPV) குவாட்காப்டர் ட்ரோன்கள் ஆகியவற்றையும் வைத்திருந்தனர். இந்த ஆயுதங்கள் ரஷ்ய தரை தாக்குதலை நிறுத்திய அதே நேரத்தில் வலுவான வான் பாதுகாப்பு ரஷ்ய விமானங்களை நடுநிலைப்படுத்தியது. இதற்கிடையில், உக்ரேனிய கடல் ட்ரோன்கள் ரஷ்ய கடற்படையின் ஆதிக்கத்தை ஈடுகட்டுகின்றன. ட்ரோன்கள் எங்கும் பரவியிருப்பதால், செயற்கைக்கோள் கண்காணிப்பு, பெரிய அளவிலான துருப்புக்கள் அல்லது கவசங்கள் உடனடி இலக்குகளாக மாறுகின்றன. தாக்குதல் மற்றும் தற்காப்பு இரண்டிலும், சண்டையின் தாக்கம் அணிகள் அல்லது படைப்பிரிவு அளவிலான அலகுகள் தாங்கப்பட்டுள்ளன. ஐந்து அல்லது ஆறு கவச வாகனங்களை விட பெரிய எண்ணிக்கையிலான கவசத் தாக்குதல்கள் பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தியுள்ளன. இந்த சூழ்நிலையில், அதிக பயிற்சி பெற்ற பிரிவுகளின் சிறிய குழுக்கள் மிகவும் வினைத்திறனானதாக இருந்தன. ஆயுதமேந்திய காலாட்படை யுத்த வாகனங்களான மேம்படுத்தப்பட்ட லொறிகள் செலவழிக்கக்கூடிய துருப்பு போக்குவரத்துகளாக மாறியுள்ள அதே நேரத்தில் கவச வாகனங்கள் காலாட்படை ஆதரவுக்கான நடமாடும் பீரங்கிகளாக செயற்படுகின்றன. போரானது மட்டுப்படுத்தப்பட்ட நோக்கங்களுக்காக, இரு தரப்பிலும் உள்ள சிறிய பிரிவுகளின் கடுமையான போட்டித் தாக்குதல்களின் தொடராக மாற்றமடைந்தது. AFU குறைந்த எண்ணிக்கையில் இருந்த ரஷ்யப் படைகளை கிய்வ், கார்கிவ் மற்றும் கெர்சனில் இருந்து பின்னோக்கி தள்ள முடிந்ததுடன், ரஷ்யர்கள் டான்பாஸில் சில வெற்றிகளைப் பெற்றதுடன் குறிப்பாக செவெரோடோனெட்ஸ்க், லைசிசான்ஸ்க் மற்றும் பாக்முட் ஆகியவற்றைக் கைப்பற்றினர். 2023 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில், நேட்டோ ஆயுதங்களால் பெரிதும் வலுப்படுத்தப்பட்ட, நேட்டோ பயிற்றுவிப்பாளர்களால் பயிற்சியளிக்கப்பட்ட அல்லது மீள் பயிற்சியளிக்கப்பட்ட இராணுவப் பிரிவுகளுடன், AFU அதன் கோடைகால எதிர் தாக்குதலை ஆரம்பித்தது. அஸோவ் கடலை அடையும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையானது, முழுவதுமாக நிறுத்தப்படுவதற்கு முன்னர், ஒவ்வொரு மீட்டர் பிரதேசத்திற்கும் மெதுவாக, இரத்தக்களரியாக ஆக்கப்பட்டது. விலையுயர்ந்த, மிகவும் புகழ் பெற்ற மேற்கத்திய ஆயுத அமைப்புகள் அவற்றின் மிகவும் மலிவான ரஷ்ய எதிரமைப்புக்களைப் போலவே பாதிக்கப்படக்கூடியவை என்பதை நிரூபித்தன. ரஷ்யர்கள் தங்களது தாக்குதல்களை மீண்டும் தொடங்கியதுடன், உக்ரேனிய கட்டுப்பாட்டில் இருந்து பாரியளவான பகுதிகளை ஆக்கிரமித்துக் கொண்டனர். எவ்வாறாயினும், ரஷ்ய மற்றும் மேற்கத்திய கோட்பாடுகளில் போருக்கு முன் திட்டமிடப்பட்ட விரைவான, ஆழமான ஊடுருவல் சூழ்ச்சி நடவடிக்கைகள் சாத்தியமற்றதாக நிரூபிக்கப்பட்டுள்ளன. கிராமங்கள் மற்றும் நகர்ப்புற மாவட்டங்கள், காடுகள் மற்றும் மர எல்லைகளினூடாக போர்கள் நடந்துள்ளன. தற்காலிக கோட்டைகளை உருவாக்குவதற்காக வலுவாக கட்டப்பட்ட உயரமான கட்டிடங்களை ஒன்றிணைத்து குழுவாக்கும் சோவியத் நடைமுறை இந்த செயன்முறைக்கு உதவியது. ட்ரோன்கள், ஆமை கவச வாகனம், கண்ணிவெடிகள் மற்றும் குண்டுகள் பிரமிக்கதக்க காணொளி அமைப்புக்களுடனான உக்ரேனிய ஆளில்லா விமானங்கள், அதிகமான ஊடகங்களைத் தூண்டின. இருப்பினும், ரஷ்யர்கள் ஈரானிய வடிவமைப்பிலான "காமிகேஸ்" ட்ரோன்கள் மற்றும் FPV ட்ரோன்கள் மற்றும் பெரிய வழக்கமான ட்ரோன்கள் மூலம் பதிலடி கொடுத்தனர், இருப்பினும் அவர்களின் அதிர்ச்சியூட்டும் காணொளிப் பதிவுகள் குறைந்த ஊடக கவனத்தையே பெற்றன. ஆயினும்கூட, ட்ரோன் தாக்குதல்கள் குறிப்பிடத்தக்க வகையில் வினைத்திறனானதாக நிரூபிக்கப்பட்டாலும், வெற்றிகரமான தாக்குதல்களின் ஒளிபரப்பு காட்சிகள் அவற்றின் தாக்கத்தை மிகைப்படுத்தின. கவச வாகனத்தை முடக்க அல்லது அழிக்க சராசரியாக பத்து FPV ட்ரோன் தாக்குதல்கள் தேவைப்படலாம். திறந்தவெளியில் உள்ள காலாட்படைக்கு எதிராக ட்ரோன்கள் மிகவும் வெற்றிகரமாக நிரூபிக்கப்பட்டுள்ளன. கவச வாகனங்கள் வான் தாக்குதல் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களுக்கு எதிரான பாதுகாப்பிற்காக கவச வாகனங்களின் மேலே பொருத்தப்பட்ட "தணிக்கும் கூண்டுகள்", மேம்படுத்தப்பட்ட உலோகக் கூண்டு போன்ற கட்டமைப்புகள் போன்ற எதிர் நடவடிக்கைகளுடன் தங்களைத் தயார்படுத்திக் கொள்ள ஆரம்பித்தன. ரஷ்யர்கள் உலோக உறைகள் கொண்ட தொட்டிகளை மாற்றியமைப்பதன் மூலம் இதை ஒரு படி மேலே கொண்டு சென்றதுடன், அவர்களின் ஆமைக் குடும்ப தோற்ற அமைப்பால் அவை "ஆமை கவச வாகனங்கள்" என்ற புனைப்பெயரைப் பெற்றன. ட்ரோன்களுக்கு எதிரான இலத்திரனியல் எதிர் நடவடிக்கைகள் இலத்திரனியல் போர் தந்திரோபாய அளவில் அதிக தீவிரத்தை எட்டியுள்ளதால் மாறுபட்ட வெற்றியைப் பெற்றுள்ளன. கண்ணிவெடிகள் ஓர் பெரிய போரில் குறிப்பாக கவச வாகனங்களுக்கு எதிராக வெற்றி பெற்ற ஆயுதமாக நிரூபிக்கப்பட்டுள்ளன. கண்ணிவெடிகளை நிலைநிறுத்துவதற்கான புதிய மற்றும் விரைவான முறைமைகள் கண்ணிவெடிகள் மூலமாக அழிக்கப்பட்ட பாதைகள் நீண்ட காலத்திற்கு அகற்றப்படவில்லை என்பதை வெளிப்படுத்துகின்றன. இதற்கிடையில், கண்ணிவெடிகளை அகற்றும் கருவிகள், விலை உயர்வானதாக இருப்பதால், ட்ரோன்கள், கவச எதிர்ப்பு ஏவுகணைகள் மற்றும் விமானங்கள் ஆகியவற்றின் தாக்குதலுக்கான பிரதான இலக்குகளாக மாறியது. வான் பாதுகாப்பின் வலிமையானது தாக்குதல் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களை போர்க்களத்தில் இருந்து தொலைவில் இருக்க கட்டாயப்படுத்தியதுடன், fire-and-forget ஏவுகணைகள் மற்றும் ஸ்மார்ட் குண்டுகளின் முக்கியத்துவத்தை அதிகரித்தது. முன்னரங்கில் வான்வழியின் மேன்மையை நிலைநிறுத்திய ரஷ்யர்கள் முன்னரங்கிற்கு பின்னால் மிகத் தொலைவிலிருந்து தங்கள் இலக்குகளை நோக்கிச் சென்று தாக்கத்தில் பேரழிவை ஏற்படுத்தும் திறன் கொண்ட FAB 500, 1500 மற்றும் 3000 ஸ்மார்ட் குண்டுகளை மேலும் மேலும் சார்ந்து இருந்தனர். தொழிற்துறைப் பலம் இருப்பினும், போரின் போக்கு பெரும்பாலும் பீரங்கிகளால் தீர்மானிக்கப்பட்டது. துப்பாக்கிகள் மற்றும் பல்குழல் ஏவுகணை செலுத்தி (MBRL) அமைப்புகள் இரண்டும் அதிகரித்த துல்லியம் மற்றும் எல்லையுடன் அதிநவீனமாக வளர்ச்சியடைந்துள்ளன. ஏறக்குறைய நிலையான, முற்றுகை போன்ற போர்கள், தற்காப்புப் படையின் எழுச்சியின் விளைவாக, வீரர்கள் அல்லது கவச வாகனங்களின் எண்ணிக்கையை விட டன் கணக்கில் குண்டுகள் முக்கியமானவை என்று வெளிப்படுத்துகினறன. உதாரணமாக, அதிக எண்ணிக்கையிலான ரஷ்யப் படை வடக்கு கார்கிவ் பகுதியில் கசப்பான AFU தாக்குதல்களை முதன்மையாக பீரங்கிகளைப் பயன்படுத்தி தடுத்து நிறுத்தியுள்ளது. ரஷ்யப் படைகளின் அண்ணளவான 10,000 குண்டுகளுடன் ஒப்பிடும்போது AFU தினமும் சுமார் 2,000 குண்டுகளை வீசுகிறது. இந்த எண்கள் பெரும்பாலான நாடுகள் திட்டமிட்டதை விட அதிகமாக உள்ளதுடன், அதனால் இருப்புகள் கணிசமாகக் குறைந்துவிட்டன. நேட்டோ இந்த ஆண்டு 1.2 மில்லியன் குண்டுகளை உற்பத்தி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளதுடன், ஏற்கனவே தென் கொரியாவிலிருந்து 300,000 கையகப்படுத்தப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் 800,000 குண்டுகளை வாங்க திட்டமிட்டுள்ளது. இதற்கிடையில், பாகிஸ்தான் உக்ரைனுக்கான சோவியத் பாணியிலமைந்த வெடிமருந்துகளை குறிப்பிடப்படாத அளவு தயாரித்து வருகிறது. மறுபுறம், ரஷ்யா கடந்த ஆண்டு மூன்று மில்லியன் குண்டுகளை உற்பத்தி செய்ததுடன், இந்த ஆண்டு உற்பத்தியை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது, இருப்பினும் அதன் இலக்கு தெரியவில்லை. மேலதிகமாக, ரஷ்யா ஈரான் மற்றும் வட கொரியாவில் இருந்து வெளிப்படுத்தப்படாத ஏழு இலக்க குண்டுகளை ஒதுக்கியுள்ளதுடன், மேலும் இந்தியா, பெலாரஸ் மற்றும் சீனாவிலிருந்து இன்னும் அதிகமாக வாங்கலாம். இறுதிப் பகுப்பாய்வில், இந்தப் போர் தொழிற்துறை வலிமையின் மீது தங்கியிருக்கிறது. ரஷ்ய (முக்கியமாக அரசுக்கு சொந்தமான) இராணுவ-தொழிற்துறை வளாகமானது ஷெல்கள், குண்டுகள் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் முழு மேற்கையும் விஞ்சியிருக்கிறது. இது தரப்படுத்தல், மையப்படுத்தப்பட்ட திசைப்படுத்தல் மற்றும் தேவைக்கு ஏற்ற உற்பத்தி ஆகியவற்றின் நன்மைகளைக் கொண்டுள்ளது. மாறாக, மேற்கத்திய இராணுவ-தொழிற்துறை வளாகம், இலாப உந்துதல் காரணமாக, தேவையான கூடுதல் உற்பத்தி வசதிகளில் முதலீடு செய்ய மறுத்தது. இது போரிலிருந்து வெளிப்படும் மிகப்பெரிய மூலோபாய பாடமாக இருக்கலாம். இறுதி முடிவு எதுவாக இருந்தாலும், இந்த மோதல் எதிர்காலத்தில் போர்கள் நடத்தப்படும் விதத்தில் மகத்தான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ட்ரோன்களின் பயன்பாடு சமச்சீரற்ற தன்மையை சமன் செய்துள்ள அதே நேரத்தில் பீரங்கிகளைப் பயன்படுத்துவது வேறுபாட்டை விரிவுபடுத்தியுள்ளது. எவ்வாறாயினும், இந்த இரத்தக்களரி மோதலில் இருந்தான மிகவும் நம்பிக்கையூட்டும் விடயம் என்னவென்றால், இப்போது வேறுபாடுகளைத் தீர்ப்பதற்கான ஏற்றுக்கொள்ளக்கூடிய வழிமுறையாகக் கருதப்படுகின்ற போர்கள் மனித உயிர்கள் மற்றும் பொருளாதார தாக்கத்தின் அடிப்படையில் மிகவும் விலை உயர்ந்தவையாகும். வினோத் மூனசிங்க வெஸ்ட்மின்ஸ்டர் பல்கலைக்கழகத்தில் இயந்திர பொறியியலை கற்றதுடன், இலங்கையில் தேயிலை இயந்திரங்கள் மற்றும் மோட்டார் உதிரிபாகங்கள் மற்றும் ரயில்வே துறைகளில் பணியாற்றினார். பின்னர் அவர் பத்திரிகை துறை மற்றும் வரலாறுகளை எழுதுவதில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். இலங்கை ஜேர்மன் தொழில்நுட்பப் பயிற்சி நிறுவனத்தின் ஆளுனர் குழுவின் தலைவராகப் பணியாற்றினார். Factum என்பது ஆசிய – பசுபிக்கை மையமாக கொண்ட சர்வதேச உறவுகள், தொழில்நுட்ப ஒத்துழைப்பு மற்றும் மூலோபாய தொடர்புகள் பற்றிய சிந்தனைக் குழுவாகும், அதனை www.factum.lk மூலமாக அணுகலாம். இங்கே வெளிப்படுத்தப்பட்ட கருத்துக்கள் ஆசிரியரின் சொந்தக் கருத்துக்கள் என்பதுடன் நிறுவனத்தின் பிரதிபலிப்புக்களாக இருக்க வேண்டிய அவசியமில்லை. https://www.virakesari.lk/article/190617
-
ஒலிம்பிக் விளையாட்டு விழா 2024 செய்திகள்
பாரிஸ் ஒலிம்பிக்ஸ்: ஸ்பெயின் அணியை வீழ்த்தி வெண்கலம் வென்றது இந்திய ஆண்கள் ஹாக்கி அணி பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பாரிஸ் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற இந்திய ஆண்கள் ஹாக்கி அணியினர் 8 ஆகஸ்ட் 2024 ஆகஸ்ட் 8ஆம் தேதியன்று வெண்கல பதக்கத்திற்காக நடைபெற்ற ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் வெண்கலப் பதக்கத்தை வென்றது இந்திய ஆண்கள் ஹாக்கி அணி. ஸ்பெயின் 2-1 என்ற கோல் கணக்கில் அணியை வீழ்த்தி பதக்கத்தை உறுதி செய்தது இந்திய அணி. ஆரம்பம் முதலே இரண்டு அணிகளும் பதக்கம் வெல்வதில் உறுதியாக இருந்தன. ஆட்டத்தின் முதல் பகுதி வரை இரு அணிகளும் எந்த கோல்களையும் எடுக்கவில்லை. இரண்டாம் பகுதியில் முதல் கோலை பதிவு செய்தது ஸ்பெயின் அணி. 1-0 என்ற கோல் கணக்கில் இந்தியா தோல்வியின் விளிம்பில் இருந்த சில நிமிடங்களிலேயே சமன் செய்யும் வகையில் இந்தியா ஒரு கோல் அடித்தது. இலக்கை நோக்கி மூன்றாவது ஆட்டம் துவங்கியது. ஆட்டத்தின் துவக்கத்திலேயே இந்தியா இரண்டாவது கோலை பதிவு செய்தது. அதன் பின்னர் ஸ்பெயின் அணியினருக்கு வாய்ப்புகள் அதிகமாக இருந்தும், இந்திய அணியின் சாதுர்யமான ஆட்டத்தால், ஸ்பெயின் அணி கோல் அடிப்பது தடுக்கப்பட்டு பதக்கம் உறுதி செய்யப்பட்டது. இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் சிங் இந்தியாவுக்கான முதல் கோலை பதிவு செய்தார். இரண்டாவது கோலையும் அவர்தான் அடித்தார். இந்த பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளில் இதுவரை அவர் 11 கோல்களை அடித்து அசத்தியுள்ளார். இதற்கு முன்பு அரையிறுதிப் போட்டியில் ஜெர்மனியுடன் மோதிய இந்திய அணி 3-2 என்ற கோல் கணக்கில் போராடி தோல்வியைத் தழுவியது. அரையிறுதி ஆட்டத்தில் நெதர்லாந்து அணியை எதிர்கொண்டு தோல்வியைத் தழுவியது ஸ்பெயின் அணி. இந்திய அணியின் ஶ்ரீஜீஸுக்கு இது கடைசி சர்வதேச இறுதி போட்டி. பிரியாவிடை தரும் வகையில், அணியின் தலைவர் ஹர்மன்ப்ரீத் சிங் அவரை தோளில் தூக்கி வைத்து நடக்க, அவருக்கு அனைவரும் மரியாதை செலுத்தி போட்டி முடிவை மிகவும் நெகிழ்ச்சியாக மாற்றிவிட்டனர். இந்திய பிரதமர் வாழ்த்து இந்திய அணி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இந்திய தலைவர்கள் தங்களில் வாழ்த்துகளை சமூக ஊடகங்களில் பதிவு செய்து வருகின்றனர். பிரதமர் நரேந்திர மோதி எக்ஸ் பக்கத்தில், "எதிர்கால சந்ததியினர் அனைவரும் கொண்டாட இருக்கும் வெற்றி," என்று குறிப்பிட்டார். "ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஹாக்கி அணி பிரகாசமாக ஜொலிக்கிறது. தாய்நாட்டுக்கு வெண்கலப் பதக்கத்துடன் திரும்பி வருகிறது. ஒலிம்பிக்கில் தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக இந்திய அணி பதக்கம் வென்றிருப்பது கூடுதல் சிறப்பு" என்றும் மேற்கோள் காட்டினார். வீரர்களுக்கு வாழ்த்துகளைப் பதிவு செய்த அவர், இந்திய ஹாக்கி அணியினருடன் ஒவ்வோர் இந்தியரும் உணர்வுப்பூர்வமாக இணைந்திருப்பதாகவும், இந்த வெற்றி இந்திய இளைஞர்கள் மத்தியில் இந்த விளையாட்டை மேலும் பிரபலமடைய வைக்கும் என்றும் குறிப்பிட்டிருக்கிறார். பட மூலாதாரம்,TWITTER/NARENDRAMODI படக்குறிப்பு,இந்திய அணியை வாழ்த்திய பிரதமர் நரேந்திர மோதி பதக்கங்களை வென்று குவித்த ஹாக்கி அணி இந்திய ஆண்கள் ஹாக்கி அணி ஒலிம்பிக் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி பதக்கங்களை வென்று சாதனை புரிந்துள்ளது. இதுவரை இந்திய ஆண்கள் ஹாக்கி அணி 12 பதக்கங்களை நாட்டுக்குக் கொண்டு வந்துள்ளது. 1936ஆம் ஆண்டு பெர்லினில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணி தங்கம் வென்றது. இன்றும் வரலாற்றில் மிக முக்கிய நிகழ்வாக இது பார்க்கப்படுகிறது. நாஜி ஜெர்மனியில் நடைபெற்ற இந்தப் போட்டியைக் காண ஹிட்லர் நேரடியாக மைதானத்துக்கு வந்தது குறிப்பிடத்தக்கது. இதுவரை ஒலிம்பிக்கில் இந்தியா 8 தங்கப் பதக்கங்களைப் பெற்றுள்ளது. 1960இல் வெள்ளிப் பதக்கத்தையும், நான்கு முறை வெண்கலப் பதக்கங்களையும் இந்திய அணி வென்றுள்ளது. இந்தியா இறுதியாக 1980இல் மாஸ்கோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்றது. 41 ஆண்டுகளுக்குப் பிறகு, டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணி வெண்கலம் வென்றது. https://www.bbc.com/tamil/articles/cn02elg94qeo
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
உக்ரைனின் அதிரடியால் கடும் அச்சத்தில் புடின் : அவசரகாலநிலை பிரகடனம் ரஷ்யாவிற்குள்(russia) சுமார் 15 கிலோ மீற்றர் வரை ஊடுவியுள்ள உக்ரைன்(ukraine) படையினர் அப்பகுதியிலுள்ள அணு உலையை கைப்பற்றலாம் என்ற தகவல் வெளியாகிய நிலையில் ரஷ்ய ஜனாதிபதி புடின் (vladimir putin) கடும் அச்சத்தில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உக்ரைன் 300 படைவீரர்களையும், 11 கவச வாகனங்களையும், 20 கவச தாக்குதல் வாகனங்களையும் வடகிழக்கு எல்லையைத் தாண்டி ரஷ்யாவுக்குள் அனுப்பியுள்ளதாக ரஷ்ய இராணுவமும் தெரிவித்துள்ளது. அவசர காலநிலை பிரகடனம் ரஷ்யாவின் குர்ஸ்க் பகுதியில் உக்ரைன் படையினரின் எல்லை தாண்டிய தாக்குதல் புதன்கிழமையும் தொடர்ந்ததால் அங்கு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. தற்போதைய பிராந்திய ஆளுநர் அலெக்ஸி ஸ்மிர்னோவ், "எதிரி படைகள் பிராந்தியத்திற்குள் வருவதால் ஏற்படும் விளைவுகளை அகற்ற" இந்த நடவடிக்கை அவசியம் என்றார். ஊடுருவல் தொடங்கியதில் இருந்து குறைந்தது ஐந்து பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும், 31 பேர் காயமடைந்துள்ளதாகவும், அவர்களில் ஆறு குழந்தைகள் என ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்தனர். ஊடுருவிய உக்ரைன் படையினர் செவ்வாயன்று காலை 1,000 உக்ரைனிய படையினர், அத்துடன் 11 டாங்கிகள் மற்றும் 20 க்கும் மேற்பட்ட கவச போர் வாகனங்கள், சுட்ஜா நகருக்கு அருகில் ரஷ்யாவுக்குள் நுழைந்ததாக மொஸ்கோ தெரிவித்துள்ளது. செவ்வாய்க்கிழமை முழுவதும் பல கிராமங்களில் சண்டை நடந்ததாகக் கூறப்படுகிறது, உள்ளூர் அதிகாரிகள் குடியிருப்பாளர்களை தங்கள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துமாறு வலியுறுத்தினர் மற்றும் அனைத்து பொது நிகழ்வுகளும் இரத்து செய்யப்பட்டன. புடினுக்கு அச்சம் நேற்று (07)புதன்கிழமை அரசாங்க அதிகாரிகளுடனான ஒரு தொலைக்காட்சி சந்திப்பில், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் உக்ரைன் "பெரிய ஆத்திரமூட்டல்" மற்றும் "கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு" நடத்துவதாக குற்றம் சாட்டினார். இதேவேளை, உக்ரைன் படைவீரர்கள், Kursk அணு உலையை கைப்பற்றக்கூடும் என அஞ்சப்படுகிறது. அப்படி அந்த அணு உலையை உக்ரைன் படைவீரர்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொண்டு, உக்ரைனுக்குச் சொந்தமான Zaporizhzhia அணு உலையை தங்களிடம் ஒப்படைக்குமாறு மிரட்டலாம் (nuclear blackmail) என புடினுக்கு அச்சம் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. https://ibctamil.com/article/ukraine-launches-raid-into-russia-1723110104
-
யாழ் போதனை வைத்தியசாலையில் தவறிழைக்கும் சில வைத்தியர்கள்: உண்மையை உடைக்கும் முன்னாள் அதிகாரி
யாழ் போதனை வைத்தியசாலையில் 50 பேர் வைத்தியர்களாக இருக்கின்றார்கள் என்றால் அதில் 10 பேர் தவறு செய்பவர்களாக இருக்கின்றார்கள் என அந்த வைத்தியசாலையில் கடமையாற்றியிருக்ககூடிய முன்னாள் திடீர் மரணவிசாரணை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ஐபிசி தமிழுக்கு வழங்கிய நேர்க்காணலிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். சமகாலத்தில், சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாக இருக்க கூடிய விடயங்களில் மிக முக்கியமானவை மருத்துவதுறை சார்ந்த விடயங்களாகவே காணப்படுகின்றது. இந்த பின்னணியில் மருத்துவதுறை சார்ந்த மற்றுமொரு விடயம் பேசுபொருளாகியுள்ளது. யாழ் போதனா வைத்தியசாலையில் கடமையாற்றியிருக்க கூடிய முன்னாள் திடீர் மரணவிசாரணை அதிகாரி தனக்கு அநீதி இழைக்கப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். இவற்றின் உண்மை தன்மை என்ன, இவற்றின் பின் இருக்ககூடிய விடயங்கள் என்ன, உண்மையில் என்ன நடந்திருக்கின்றது என இந்த காணொளியில் காணலாம். https://ibctamil.com/article/jaffna-doctor-allegations-exposed-1723125121
-
ஒலிம்பிக் விளையாட்டு விழா 2024 செய்திகள்
சீனாவைச் சேர்ந்த 11 வயது இளையவர் ஒலிம்பிக்கில் பங்கேற்று சாதனை சீனாவைச் சேர்ந்த 11 வயது ஸ்கேட்போர்டிங் வீரர், இந்த ஆண்டு ஒலிம்பிக்கில் பங்கேற்ற இளையவர் என்ற வரலாறு படைத்தார். அவருக்கு 11 வயது என்பதுடன், 2012 லண்டன் ஒலிம்பிக் போட்டி நிறைவடைவதற்கு முன்தினம் பிறந்துள்ளார். Zheng Haohao தனது ஸ்கேட்போர்டிங் போட்டியில் 63.19 புள்ளிகளுடன் 18வது இடத்தைப் பிடித்தார். https://thinakkural.lk/article/307516
-
கொக்குதொடுவாயில் மனித எச்சங்கள் மீட்பு
கொக்குத்தொடுவாய் புதைகுழி அகழ்வு பணிகள் நிறைவு; மீட்கப்பட்ட தகட்டு இலக்கங்களை பகிரங்கப்படுத்துமாறு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கோரிக்கை! Published By: DIGITAL DESK 3 08 AUG, 2024 | 05:59 PM கே .குமணன் இன்று வியாழக்கிழமை (08) முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் கொக்குத்தொடுவாய் புதைகுழி வழக்கு விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்படுள்ளது. காணாமல் போனோர் அலுவலகம் (ஓ.எம்.பி ) சார்பில் அந்த அலுவலகத்தின் சட்டத்தரணிகளும், சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவா மற்றும் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சார்பில் சட்டத்தரணிகளான ரட்ணவேல் மற்றும் நிரஞ்சன் ஆகியோரும் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் உறவினர்களும் மன்றில் ஆஜராகி இருந்தார்கள். ஏற்கனவே நீதிமன்றால் இந்த புதைகுழி அகழ்வு தொடர்பில் அறிக்கைகள் சமர்ப்பிக்க கோரியிருந்தமை தொடர்பில் கொக்குத்தொடுவாய் கிராம அலுவலரால் இன்று நீதிமன்றில் அறிக்கை சமர்ப்ப்பிக்கப்பட்டுள்ளது. அதேவேளை இந்த அகழ்வில் ஈடுபட்டிருந்த தொல்லியல் திணைக்களத்தின் பேராசிரியர் ராஜ் சோமதேவாவின் இறுதி அறிக்கை ஒரு மாத காலப்பகுதிக்குள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த மனித புதைகுழி அகழ்வு பணிகளின் போது எடுக்கப்பட்ட இருபத்தைந்து வகையான எலும்புக்கூட்டு தொகுதிகள் யாழ். போதனா வைத்தியசாலையின் மருத்துவ பீட கட்டடத்தில் உள்ள சட்ட மருத்துவ பிரிவுக்கு இடமாற்றப்பட்டு கடந்த இரண்டாம் திகதி தொடக்கம் அது சம்பந்தமான பகுப்பாய்வு பணிகள் இரு நாட்களாக இடம்பெற்றன. இப்பாகுப்பாய்வு பணிகளானது எதிர்வரும் வாரங்களில் தொடர்ந்தும் நடைபெறவுள்ளது என இந்த புதைகுழி அகழ்வில் தலைமை தாங்கிய சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவா நீதிமன்றுக்கு தெரியப்படுத்தினார். அத்தோடு காணாமல் போனோர் அலுவலகம் புதைகுழி அகழ்வு இடம்பெற்ற இடத்தை பூரணமாக பொதுமக்களிடம் கையளிப்பது சம்பந்தமாக அடுத்த வழக்கு தவணையில் முடிவுக்கு வருவதாக நீதிமன்றுக்கு தெரியப்படுத்தியிருந்தார்கள். அத்தோடு காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்கள் சார்பில் சில விண்ணப்பங்களை அவர்களது சார்பில் ஆஜரான சட்டதரணிகள் மன்றில் முன்வைத்திருந்தார்கள். அதாவது தடயவியல் பொலிஸாரினால் எடுக்கப்பட்ட குறிப்புகள் நீதிமன்றத்துக்கு தாக்கல் செய்யப்பட வேண்டும் என்றும் மீட்கப்பட்ட எலும்புக்கூட்டு தொகுதிகள் மற்றும் சான்றுகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் அத்தோடு இந்த அகழ்வில் பொழுது பல இலக்கத்தகடுகள், இலக்கங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அதை துலாம்பரமாக பத்திரிகைகளில் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற பதிவாளரினால் பிரசுரிக்கப்படவேண்டும் என்றும் அந்த இலக்கங்கள் அதனோடு இணைந்த போராளிகளுக்கும் உறவினர்களுக்கும் குடும்பத்தாருக்கும் தெரியும் என்ற அடிப்படையில் அவர்கள் அந்த தகவல்களை நீதிமன்றுக்கு தெரிவிப்பதன் மூலம் ஆய்வுப்பணிகளையும் அந்த புதைகுழி தொடர்பான காலப்பகுதியையும் கண்டுபிடிப்பதற்கு இலக்கு என்ற அடிப்படையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சார்பில் ஆஜரான சட்டதரணிகளால் தெரிவித்ததன் அடிப்படையில் அது சம்பந்தமாகவும் கட்டளை ஆக்கப்படுள்ளது. இந்த வழக்கு மீண்டும் செப்டம்பர் மாதம் 26 ஆம் திகதி தவணையிடப்படுள்ளது. இந்த வழக்கு விசாரணை சம்பந்தமான விடயங்களை கண்காணிக்க இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதரகத்தின் அரசியல் விவகாரங்களுக்கான அதிகாரி சுசாந்தி கோபாலகிறிஸ்ணன் நீதிமன்றத்துக்கு வருகை தந்திருந்தோடு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரனும் நீதிமன்றுக்கு வருகை தந்திருந்தார். https://www.virakesari.lk/article/190603
-
கைது செய்யப்பட்டார் அமைச்சர் கெஹலிய
கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட நால்வருக்கு தொடர்ந்து விளக்கமறியல் - இருவருக்கு பிணை Published By: DIGITAL DESK 7 08 AUG, 2024 | 05:47 PM முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட நால்வரும் எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக சந்திரகுப்த, சுகாதார அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளர் சமன் ரத்நாயக்க ஆகியோர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். தரமற்ற இம்யூனோகுளோபுலின் ஊசி மருந்துகளை கொள்வனவு செய்தமை தொடர்பில் மேற்படி சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்களை இன்று வியாழக்கிழமை (08) மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/190598
-
நல்லூர் கந்தசுவாமி ஆலய மகோற்சவம் – காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு!
நல்லூர் கந்தனின் பக்தர்களுக்கு ஏற்பட்டுள்ள அசௌகரியம் யாழ்.நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் நாளைய ஆரம்பமாகவுள்ள நிலையில், ஆலயத்திற்கு முன்பாக உள்ள பருத்தித்துறை வீதியில் அமைக்கப்பட்ட வீதித் தடை தொடர்பில் மக்கள் அதிருப்தியை வெளியிட்டுள்ள நிலையில், இது தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய அலுவலகம் தனது கவனத்தை செலுத்தியுள்ளது. இது தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.மாவட்ட இணைப்பாளர் த. கனகராஜ் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில்; யாழ்.மாநகர சபையின் ஆளுகைக்குட்பட்ட பருத்தித்துறை வீதியில் யாழ்ப்பாண மாநகர சபையினால் பொதுமக்களுக்கு உயிராபத்தை ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ள பாதை தடை தொடர்பில் பல தரப்பினராலும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய காரியாலயத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்ட முறைப்பாடு தொடர்பில் இவ் ஆணைக்குழுவினால் கவனம் செலுத்துப்பட்டுள்ளது. எனவே, இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு நாளை வெள்ளிக்கிழமை மு.ப. 11.30 மணிக்கு இல 42, கோவில் வீதியில் அமைந்துள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகத்திற்கு சமுகமளிக்குமாறு யாழ்.மாநகர சபையின் ஆணையாளர் மற்றும் வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஆகியோருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/307544
-
தமிழ் பொது வேட்பாளராக பா.அரியநேந்திரன், அறிவிக்கப்பட்டுள்ளார்!
தமிழ் தேசியத்தின் குறியீடாக நான் இருப்பேன்; தமிழ் தேசியத்திற்காக மக்கள் வாக்களிக்க வேண்டும் - தமிழ் பொதுவேட்பாளர் அரியநேத்திரன் Published By: DIGITAL DESK 3 08 AUG, 2024 | 04:26 PM (எம்.நியூட்டன்) தமிழ்தேசியத்தின் குறியீடாக நான் இருப்பேன் தமிழ்தேசியத்திற்காக மக்கள் வாக்களிக்க வேண்டும் என தமிழ் பொதுவேட்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பா.அரியநேத்திரன் தெரிவித்தார். தமிழ்தேசியபொதுக்கட்டமைப்பின் பெதுவேட்பாளரை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் இன்று வியாழக்கிழமை (08) இடம்பெற்ற போது அவர் இதனை தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ்த்தேசியத்தின் குறியீடாக மாத்திரமே நான் இருப்பேன் இலங்கை சோசலிச குடியரசின் ஜனாதிபதியாக வருவதற்காக அல்ல. தமிழ்த்தேசிய மண்ணில் இனப்படுகொலை செய்யப்பட்ட இனமாக நாங்கள் இருக்கின்றோம் எங்களுக்கான உரிமை கிடைக்கவேண்டும் என்பதற்காக சர்வதேசத்திற்கும் தென்னிலங்கைக்கும் வலியுறுத்துகின்ற அடையாளமாக இந்தத் தேர்தலில் பொது வேட்பாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளேன். எனது பணி செப்டம்பர் 22 ஆம் திகதி மட்டுமே இருக்கும் அதற்கு பிற்பாடான பணிகளை தமிழ் பொதுக்கட்டமைபே எடுக்கும். தந்தை செல்வா காலம் தலைவர் பிரபாகரன் காலம் அதற்குப் பின்னர் சம்பந்தன் தலைமையின் கீழ் வழிநடத்தப்பட்டோம். இதில் பலர் இருந்திருந்தாலும் தந்தை செல்வாவின் போராட்டம் அகிம்சை ரீதியாக பல ஒப்பந்தங்கள் செய்யப்பட்டிருந்தாலும் பல ஏமாற்றங்களை கண்டிருந்தது பின்னர் ஆயுதப்போராட்டம் அது மௌனிக்கப்பட்ட பின்னர் மீண்டும் ஜனநாயக ரீதியான போராட்டங்கள் நடைபெற்று வந்தபோதும் ஏமாற்றங்களே எமக்கு மிஞ்சியது. சர்வதேச ரீதியாக நாங்கள் பேச்சுவார்த்தைக்குச் செல்லுகின்றபோது சர்வதேசம் ஒரு குரலில் வரவேண்டும் என்பதைத்தான் நமக்கு கூறியது இவ்வாறாக அனைத்து விடையங்களை நாங்கள் சீர்தூக்கிப் பார்க்கும் போது ஒரு குரலில் ஒருமித்த கருத்துக்களை முன்கொண்டு செல்வதற்காக நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளராக அடையாளப்படுத்தப்பட்டு அதற்கான ஆதரவை வாக்குகளாக செலுத்துகின்றபோது தமிழ் மக்களின் இனப்பிரச்சினை இன்னும் தீர்க்கப்படாது உள்ளது அவை தீர்க்கப்படவேண்டும் என்பதை வெளிக்காட்டுகின்ற முயற்சியே இந்த பொதுவேட்பாளர் முயற்சியாகும். பொதுக் கட்டமைப்பு சார்பில் பலரையும் ஆராய்ந்த பின்னர் இறுதியாக சட்டத்தரணி தவராசாவும் எனது பெயரையும் இறுதித் தெரிவில் இருந்தது. நாங்கள் இருவரும் நண்பார்களாகவே இருக்கின்றோம். எவ்வாறாயினும் நானே அவரோ எவ்விதமான சர்ச்சைகளும் இல்லாமல் என்னை தெரிவு செய்தார்கள். இதனால் தமிழ்தேசியத்தின் அடையாளமாக நான் இருப்பேன். இவ்வாறான சூழலில் இந்த ஜனாதிபதித் தேர்தலில் எத்தகையவர்கள் போட்டடியிடுகின்றார்கள் என்பது அனைவரும் அறிந்த விடையம் மிக முக்கியமாக போட்டியிடுகின்ற ஜனாதிபதி வேட்பாளராக இருக்கின்றவர்கள் விடுதலைப்புலிகளை நான் தான் பிரித்தேன், கட்சிகளை பிரித்தேன்,என்னை மாற்றமாட்டேன் என்று போட்டிபோட்டு செல்லும் நிலையே காணப்படுகின்றது. இவ்வாறான நிலையில் மக்களை பிரித்தாளுகின்றவர்களுக்கு வாக்குகளை வழங்கப்போகின்றோமா? வடக்கில் ஒன்று தெற்கில் ஒன்று கதைப்பவர்களுக்கு வாக்குகளை வழங்கப்போகின்றோமா? வடக்கு கிழக்கை பிரித்தவர்களுக்க வாக்குகளை வழங்கப்போகின்றோமா? என்பதை தமிழ் மக்கள் சிந்திக்கவேண்டும். தமிழ்த்தேசிய இனத்தின் விடிவுக்காக பல இலட்சம் மக்களையும் போராளிகளையும் இழந்துள்ள நாம் உரிமையற்றவர்களாக இருக்கும் நிலையில் பல ஜனாதிபதிகளைக் கண்டு ஏமாற்றம் அடைந்துள்ள நிலையில் இன்னும் பேரம் பேசத்தான் போகின்றோமா? இவை தொடர்பில் சிந்திக்கவேண்டும். இவற்றுக்காகத்தான் பொது வேட்பாளராக அடையாளப்படுத்தப்பட்டுள்ளேன். எனவே ஒட்டுமொத்த தமிழ் மக்களும் எங்கள் விடிவுக்காக வாக்களிக்கவேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/190586
-
15 இலட்சம் ரூபாய் பெறுமதியான 24 தேக்க மரக்குற்றிகளை கடத்தி சென்ற இருவர் கைது!
Published By: DIGITAL DESK 7 08 AUG, 2024 | 02:12 PM யாழ். தென்மராட்சி கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆசைப்பிள்ளை ஏற்றம் பகுதியில் சட்டவிரோதமான முறையில் சூட்சுமமாக மறைத்து கடத்திச் செல்லப்பட்ட மரக்குற்றிகளுடன் டிப்பர் வாகனம் ஒன்றை இன்று வியாழக்கிழமை (08) காலை 9 மணியளவில் கொடிகாமம் பொலிஸார் கைப்பற்றியுள்ளதுடன், இருவரை கைது செய்துள்ளனர். கொடிகாமம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய கொடிகாமம் பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரியான பிரதான பொலிஸ் பரிசோதகர் சிவலிங்கம் பிரபாகரன் அவர்களின் தலைமையின் கீழ் கொடிகாமம் பொலிஸ் நிலைய நிர்வாகப் பிரிவு பொறுப்பதிகாரியான தினேஸ் குணதிலக மற்றும் போக்குவரத்து பிரிவில் கடமையாற்றும் 44209 பொலிஸ் இலக்கமுடைய பொலிஸ் சார்ஜன்ட் தம்பிராஜா தர்மரட்னம் என்போருடன் ஏனைய பொலிஸ் உத்தியோகத்தர்களும் இணைந்து குறித்த கைது நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளனர். குறித்த, டிப்பர் வாகனத்தினுள் மரக்குற்றிகள் அடுக்கப்பட்டு அதற்கு மேல் சிறிய கற்கல் ஏற்றப்பட்டு சூட்சுமமான முறையில் கடத்தப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டது. சுமார் 15 இலட்சம் ரூபாய் பெறுமதியான 24 தேக்க மரக்குற்றிகளே கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக பபொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் சாரதி உட்பட இருவர் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்களை நாளை வெள்ளிக்கிழமை (09) சாவகச்சேரி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/190571
-
சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
உண்மை தானே?
-
தமிழ்நாடு அமைச்சர்கள் மீதான சொத்துக்குவிப்பு வழக்கை மீண்டும் விசாரிக்க உத்தரவு - முழு பின்னணி என்ன?
பட மூலாதாரம்,@TTHENARASU படக்குறிப்பு,தமிழ்நாடு அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் கட்டுரை தகவல் எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன் பதவி, பிபிசி தமிழ் 7 ஆகஸ்ட் 2024 தமிழ்நாடு அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் ஆகியோர் சொத்துக் குவிப்பு வழக்கில் விடுவிக்கப்பட்டதை ரத்து செய்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், அந்த வழக்கை மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் ஆகியோர் சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டதை சென்னை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரித்து வந்தது. இந்த வழக்கில் புதன்கிழமையன்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தீர்ப்பு வழங்கினார். அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் ஆகியோர் சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டது செல்லாது என்றும் இந்த வழக்குகளை விசாரணை நீதிமன்றம் மீண்டும் விசாரிக்க வேண்டுமென்றும் உத்தரவிடப்பட்டிருக்கிறது. வழக்குகளின் பின்னணி பட மூலாதாரம்,@TTHENARASU படக்குறிப்பு,தமிழ்நாட்டின் நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தற்போது தமிழ்நாட்டின் நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சராக இருந்துவருகிறார் தங்கம் தென்னரசு. 2006 - 2011 ஆண்டு கால தி.மு.க. ஆட்சியின்போது பள்ளிக் கல்வித் துறை அமைச்சராகப் பதவி வகித்துவந்தார். அப்போது வருமானத்திற்கு அதிகமாக ரூ.74.58 லட்சம் அளவுக்கு சொத்துக் குவிப்பில் ஈடுபட்டதாக தங்கம் தென்னரசு, அவரது மனைவி மணிமேகலை ஆகியோர் மீது விருதுநகர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் 2012ஆம் ஆண்டு பிப்ரவரி 14ஆம் தேதி வழக்குப் பதிவுசெய்தனர். இந்த வழக்கில் அதே ஆண்டு நவம்பர் 15ஆம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல்செய்யப்பட்டது. இந்த வழக்கை முதலில் மதுரையில் இருந்த ஊழல் வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றம் வசாரித்துவந்தது. பிறகு, 2014ல் இந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்த குற்றவியல் நடுவர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்த முதன்மை அமர்வு நீதிமன்றம் எம்.பி., எம்.எல்.ஏக்களுக்கான சிறப்பு நீதிமன்றமாக மாற்றப்பட்ட பிறகு, 2019ல் அந்த நீதிமன்றத்திற்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது. இதற்குப் பிறகு இந்த வழக்கிலிருந்து தங்களை விடுவிக்க வேண்டுமென குற்றம்சாட்டப்பட்டவர்கள் மனு தாக்கல் செய்தனர். இதற்குப் பிறகு வழக்கின் விசாரணை அதிகாரி மீண்டும் வழக்கின் விசாரணையைத் துவங்கி, 2022 அக்டோபரில் துணை அறிக்கை ஒன்றைத் தாக்கல் செய்தார். இந்த துணை அறிக்கையில், அமைச்சர் மற்றும் அவரது மனைவியின் சொத்துகளின் மதிப்பு ஒரு கோடியே 71 லட்ச ரூபாய் என்றும், குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டிருப்பதைப் போல ஒரு கோடியே 81 லட்ச ரூபாய் அல்ல எனக் கூறப்பட்டது. அவர் அமைச்சராக இருந்த காலகட்டத்தில் அவரது வருவாய், 1.62 கோடி என குற்றப்பத்திரிகை கூறுகிறது. ஆனால், இந்தக் காலகட்டத்தில் அவரது உண்மையான வருவாய் 2.39 கோடி ரூபாய் என்றும் துணை அறிக்கை கூறியது. ஆகவே, இவர்களிடம் வருமானத்தைவிட 1.54 லட்ச ரூபாய்தான் கூடுதலாக இருக்கிறது என்றும் குற்றப்பத்திரிகையில் இருப்பதைப் போல ரூ. 74.85 லட்சம் அல்ல என்றும் துணை அறிக்கை கூறியது. லஞ்ச ஒழிப்புத் துறையின் இந்த அறிக்கையை ஏற்றுக்கொண்ட முதன்மை அமர்வு நீதிபதி எம். கிறிஸ்டோஃபர், அமைச்சரையும் அவரது மனைவியையும் 2022 டிசம்பர் 12ஆம் தேதி வழக்கிலிருந்து விடுவித்துத் தீர்ப்பளித்தார். சாத்தூர் ராமச்சந்திரன் மீதான வழக்கு பட மூலாதாரம்,@KKSSRR_DMK அதேபோல, தற்போது வருவாய்த் துறை அமைச்சராக இருக்கும் சாத்தூர் ராமச்சந்திரன் 2006 முதல் 2011ஆம் ஆண்டு வரையிலான தி.மு.க. ஆட்சிக் காலகட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்துவந்தார். அந்த காலகட்டத்தில் ரூ. 44.59 லட்சம் அளவுக்கு வருமானத்திற்கு அதிகமாக சொத்துக் குவிப்பில் ஈடுபட்டதாக சாத்தூர் ராமச்சந்திரன் மீதும் அவருடைய மனைவி ஆர். ஆதிலட்சுமி, அவருடைய நண்பர் கே.எஸ்.பி. சண்முகமூர்த்தி ஆகியோர் மீது 2011ஆம் ஆண்டு டிசம்பர் 20ஆம் தேதி தமிழக லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்புத் துறை வழக்குப் பதிவுசெய்தது. இந்த வழக்கில் விசாரணை எட்டு மாதங்களில் முடிந்து, மதுரையில் உள்ள ஊழல் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் 2012 செப்டம்பரில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதற்குப் பிறகு இந்த வழக்கு 2014ல் ஸ்ரீவில்லிபுத்தூரில் இருக்கும் தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. 2019 ஏப்ரலில் அங்கிருந்த முதன்மை அமர்வு நீதிமன்றம் எம்.பி., எம்.எல்.ஏக்களுக்கான சிறப்பு நீதிமன்றமாக மாற்றப்பட்ட பிறகு, அந்த நீதிமன்றத்திற்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது. 2019ல் குற்றம்சாட்டப்பட்ட மூன்று பேரும் தங்களை இந்த வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டுமென மனு தாக்கல் செய்தனர். இதையடுத்து 2021 செப்டம்பரில் இந்த வழக்கின் விசாரணை அதிகாரி இது தொடர்பாக மீண்டும் விசாரணை நடத்தினார். அந்த விசாரணையின் முடிவில் இவர்கள் மீதான குற்றச்சாட்டு சரியானதல்ல என்று அறிக்கை தாக்கல் செய்தார். அமைச்சரிடமும் அவரது மனைவியிடமும் வருமானத்திற்கு அதிகமாக 1.49 லட்சம் ரூபாய் மட்டுமே இருப்பதாகவும் 44.59 லட்ச ரூபாய் இருப்பதாக குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டிருப்பது சரியானதல்ல என்றும் அந்த அறிக்கை கூறியது. இந்த வழக்கை விசாரித்துவந்த நீதிபதி வி. திலகம், தமிழக லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்புத் துறையின் அறிக்கையை ஏற்றுக்கொண்டு 2023 ஜூலை 28ஆம் தேதி குற்றம்சாட்டப்பட்ட மூவரையும் விடுவித்தார். தாமாக முன்வந்து வழக்குகளைப் பதிவுசெய்த நீதிபதி பட மூலாதாரம்,GETTY IMAGES இந்த நிலையில், 2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தங்கம் தென்னரசு, அவரது மனைவி மணிமேகலை ஆகியோர் சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டதை தாமாக முன்வந்து விசாரிக்கப் போவதாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் அறிவித்தார். இந்த வழக்கில் விசாரணை ஆகஸ்ட் 23ஆம் தேதி துவங்கியது. அதேபோல, அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் மீதான வழக்கில் ஸ்ரீ வில்லிபுத்தூர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பும், ஒத்திவைக்கப்பட்டு அந்த வழக்கையும் சென்னை உயர் நீதிமன்றம் விசாரிக்க ஆரம்பித்தது. 2023 ஆகஸ்டிலிருந்து செப்டம்பருக்குள் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், ஐ. பெரியசாமி, கே. பொன்முடி, முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் பி. வளர்மதி ஆகிய ஆறு பேர் மீது தாமாக முன்வந்து வழக்குகளைப் பதிவுசெய்திருந்தார் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ். இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் பதிவுசெய்யப்பட்டன. இந்த வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்றம் பிப்ரவரி 5ஆம் தேதி தீர்ப்பளித்தது. அந்தத் தீர்ப்பில் இந்த வழக்குகளை யார் விசாரிக்கலாம் என்பதை சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியே முடிவுசெய்யலாம் எனத் தீர்ப்பளித்தது. இந்த ஆறு வழக்குகளையும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷே விசாரிக்கலாம் என சென்னை உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி முடிவெடுத்தார். அதன்படி அந்த வழக்குகள் விசாரிக்கப்பட்டு, இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இன்று சென்னை உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், அமைச்சர்களை விடுவித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு ரத்துசெய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் மீண்டும் விசாரிக்க உத்தரவிடப்பட்டிருக்கிறது. செப்டம்பர் 11ஆம் தேதி அமைச்சர்கள் இருவரும் விசாரணை நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும் விசாரணை தினமும் நடக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. https://www.bbc.com/tamil/articles/c8erl70pdr4o
-
தமிழக மீனவர்கள் கொல்லப்படுவதற்கு எதிர்ப்பு; தமிழ்நாட்டில் 10 ம் திகதி சிங்கள வர்த்தக நிறுவனங்களை இழுத்து மூடும் போராட்டம் - மே 17 இயக்கம்
08 AUG, 2024 | 12:02 PM தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது கொல்லப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மே 10 ம் திகதி தமிநாட்டில் உள்ள சிங்கள வணிகங்களை இழுத்து மூடும் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக மே 17 இயக்கம் அறிவித்துள்ளது.இது தொடர்பில் மே 17 இயக்கம் மேலும் தெரிவித்துள்ளதாவது இராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் கடந்த வாரம் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அவர்கள் படகு மீது இலங்கை கடற்படை கப்பல் மோதியது. இதில் மீனவர் திரு மலைச்சாமி கொல்லப்பட்டார். மற்றொரு மீனவர் திரு இராமச்சந்திரன் என்பவரை காணவில்லை. அவரது உடலும் கிடைக்கவில்லை. மற்ற இருவர் உயிருடன் தப்பி வந்துள்ளனர். தமிழ்நாட்டு மீனவர்கள் மீதுஇலங்கை கடற்படையினர் தொடர்ந்து நடத்தி வரும் தாக்குதல்களின் தொடர்ச்சியாக இச்சம்பவம் நடந்துள்ளது. கொல்லப்பட்ட மீனவர் திருமலைச்சாமியின் உடல் கரைக்கு கொண்டுவரப்பட்டு அதிகாரிகளால் உடனடியாக புதைக்கப்பட்டுள்ளது. எவ்வித வழக்கும் பதியவில்லைஇ உடற்கூராய்வும் நடத்தப்படவில்லை என்பது அதிர்ச்சியளிக்கக் கூடிய செய்தியாக அமைந்தது. காணாமல் போன மீனவர் குறித்த தகவல்கள் ஏதும் இதுவரை கிடைக்கப்பெறவில்லை. கொல்லப்பட்ட மீனவரின் குடும்பத்திற்கு அரசு சார்பாக ரூ.10 லட்சம் கொடுக்கப்பட்டு இப்படுகொலை விவகாரம் முடித்து வைக்கப்பட்டுள்ளது. அரசும் அதிகாரிகளும் இதற்கு காரணமாக இருந்த இலங்கை கடற்படையினர் மீது வழக்கு பதியவுமில்லைஇ எவ்வித விசாரணையும் கோரவில்லை. அப்பாவி மீனவர்கள் கொல்லப்படுவதை தடுக்க வேண்டிய ஒன்றிய அரசும் தமிழ்நாடு அரசும் மீனவர்களின் படுகொலையை கைகழுவும் வேலையை தொடர்ந்து செய்வதையே தற்போதைய சம்பவம் உணர்த்துகிறது. இதனால்இ இந்தியாவின் நட்பு நாடான இலங்கையினால் 600க்கும் மேற்பட்ட தமிழ் மீனவத் தொழிலாளர்கள் கொல்லப்பட்டும் இதுவரை நீதி கிடைக்கவில்லை. இப்படியாக எவ்வித எதிர்ப்பும் இல்லாமல் இந்த சம்பவமும் கடந்துபோனால் தொடர்ந்து இது போன்ற சம்பவம் அரங்கேறிக்கொண்டே இருக்கும். ஆகையால் இலங்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக தமிழ்நாட்டின் இலங்கையின் பொருளாதாரத்தை முடக்கும் வேலையை தொடங்குவோம். தமிழீழ இனப்படுகொலைக்கு நீதி கிடைக்கும் வரை இலங்கையின் மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டுமென 2013 ம் ஆண்டு தமிழ்நாட்டு சட்டமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. அதனடிப்படையில் தமிழ்நாட்டிலுள்ள சிங்கள வணிகங்களை இழுத்து மூடும் போராட்டத்தை முன்னெடுப்போம். முதற்கட்டமாக சிங்கள நிறுவனத்தின் தமிழ்நாடு கிளைகளை ஆகஸ்ட் 10 அன்று மே பதினேழு இயக்கம் தோழமை அமைப்புகளோடு இணைந்து முற்றுகையிடும் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது. இந்த போராட்டத்தில் தமிழர்கள் அனைவரும் தங்களை இணைத்துக்கொள்ளுமாறு மே 17 இயக்கம் அறைகூவல் விடுக்கிறது. தமிழர்களை கொலை செய்யும் சிங்களப் பேரினவாதத்தின் வணிகத்தை தமிழ்நாட்டிலிருந்து அகற்றுவோம். இலங்கையுடனான பொருளாதார உறவுகளை புறக்கணிப்போம். தமிழினம் காக்க ஒன்றுதிரள்வோம். https://www.virakesari.lk/article/190557
-
போயிங் நிறுவனத்தின் புதிய விண்கலத்தில் விண்ணுக்கு பயணமானார் சுனிதா வில்லியம்ஸ்!
விண்வெளிக்குச் சென்றுள்ள சுனிதா வில்லியம்ஸ் தொடர்பில் வெளியாகியுள்ள அதிர்ச்சி தகவல் சர்வதேச விண்வெளி நிலையத்துக்குச் சென்றுள்ள இந்திய வம்சாவளி விண்வெளி வீராங்கனையும் அவரது சக வீரரும் இந்த ஆண்டு முடியும் வரை பூமிக்குத் திரும்பமுடியாது என தகவல் வெளியாகியுள்ளது. சுனிதா வில்லியம்ஸும்(Sunita Williams) அவரது சக விண்வெளி வீரருமான வில்மோரும்(Butch Wilmore) மே 05 அன்று ஒரு சோதனைப் பயணத்திற்காக விண்வெளி சென்றனர். எனினும் அவர்களது விண்கலத்தில் ஏற்பட்ட கோளாறு காலமாக அவர்களால் பூமிக்கு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டது. பூமிக்கு திரும்புவது சாத்தியமில்லை இந்த ஆண்டு ஜூன் மாதம் 3ஆம் திகதியே பூமிக்குத் திரும்பியிருக்கவேண்டிய நிலையில் தற்போது 2 மாதங்களாகியும் அவர்களால் பூமிக்கு திரும்ப முடியவில்லை. இந்நிலையில், அவர்கள் இப்போதைக்கு பூமிக்கு திரும்புவது சாத்தியமில்லை என தகவல் வெளியாகியுள்ளது. அவர்களுடைய போயிங் ஸ்டார்லைனர் (Boeing's Starliner) விண்கலத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சினையை நிவர்த்தி செய்யும் முயற்சியில், பூமியிலிருந்தவண்ணம் தொழில்நுட்பக் கலைஞர்கள் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். அடுத்த ஆண்டு அடுத்த ஆண்டு, அதாவது, 2025ஆம் ஆண்டு, பெப்ரவரி மாதம் வரை, பூமிக்குத் திரும்ப வாய்ப்பில்லை என நாசா அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். இதேவேளை, எதிர்வரும் 18ஆம் திகதி “Crew 9” என்ற திட்டத்தின் கீழ், எலான் மஸ்க்கின் (Elon Musk) ஸ்பேஸ்-எக்ஸ் (SpaceX) நிறுவனத்துடன் இணைந்து சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு 4 பேர் கொண்ட குழுவை அனுப்புவதற்கு நாசா தீர்மானித்துள்ளதாக ஏற்கனவே தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://ibctamil.com/article/sunita-williams-space-return-postponed-1723108187
-
ஜனாதிபதித் தேர்தல் 2024 - செய்திகள்
ஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் கூட்டணி ஒப்பந்தம் கைச்சாத்தானது Published By: DIGITAL DESK 3 08 AUG, 2024 | 12:04 PM (எம்.மனோசித்ரா) ஜனாதிபதித் தேர்தலை இலக்காகக் கொண்டு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான ஐக்கிய மக்கள் கூட்டணியில் ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வு இன்று வியாழக்கிழமை (08) இடம்பெற்றது. கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பங்காளி கட்சிகளுடன் ஒப்பந்தநம் கைச்சாத்திடப்பட்டது. அதற்கமைய எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி, மனோ கணேஷன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணி, டலஸ் அழகப்பெரும தலைமையிலான சுதந்திர மக்கள் காங்ரஸ், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தயாசிறி ஜயசேகர தரப்பு உள்ளிட்ட முக்கிய கட்சிகள் இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டன. ரிஷாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்ரஸ் இதற்கு முந்தைய தேர்தல்களில் ஐக்கிய மக்கள் கூட்டணியுடன் இணைந்தே செயற்பட்டது. எனினும் இம்முறை அக்கட்சி அவ்வாறானதொரு தீர்மானத்தை அறிவிக்கவில்லை. அடுத்த வாரமே தாம் யாருக்கு ஆதரவு என்பதை அறிவிக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/190556
-
வாட்ஸ்அப்பில் AI தொழில்நுட்பம் : அறிமுகமாகும் புதிய அம்சம்
வாட்ஸ்அப் (WhatsApp) புதிய அம்சமொன்றை அறிமுகம் செய்யவுள்ள நிலையில் மெட்டா நிறுவனம் விரைவில் AI மூலம் வாட்ஸ்அப்பில் ஒரு பாரிய புதுப்பிப்பைக் கொண்டுவர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனடிபபடையில், வாட்ஸ்அப்பானது Meta AI Voice Chat உடன் அறிமுகமாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பயனர்கள் குரல் மூலம் மெட்டா AI இடம் கேள்விகளைக் கேட்டால் அது உரை (Text) வடிவில் பதில்களை வழங்குவதாகவும் வாட்ஸ்அப், முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் பயனர்கள் இந்த செயலியை எளிதாக அணுகலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காணொளி அழைப்பு அத்தோடு, வாட்ஸ்அப் விரைவில் AR video calling, background edit, AI studio, user names, double tap to react ஆகிய அம்சங்களும் கொண்டுவரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனுடன், AR (Augmented Reality) காணொளி அழைப்பு (video call) அம்சம் விரைவில் அறிமுகமாவுள்ளதோடு இந்த அம்சம் பயனர்கள் காணொளி அழைப்புகளைச் செய்யும் போது வித்தியாசமான அனுபவத்தை கொடுக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், குறித்த அம்சத்தின் உதவியுடன் காணொளியின் பின்னணியை மாற்றம் செய்ய முடியுமெனவும் இனி தொலைபேசி எண்ணுடன் வேலை செய்யாமல் பயனர் பெயர்களுடன் வாட்ஸ்அப் கணக்கை உருவாக்கும் அம்சங்கள் அறிமுகப்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://ibctamil.com/article/meta-al-technology-whatsapp-update-1723085496
-
மூன்று சிறுமிகள் கொல்லப்பட்ட விவகாரம்: பிரிட்டனில் கலவரமாக மாறிய போராட்டம் - என்ன நடக்கிறது?
வலதுசாரி போராட்டக்காரர்களுக்கு எதிராக வீதியில் இறங்கிய மக்கள்- பிரிட்டனில் என்ன நடக்கிறது? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பிரிட்டனில் ஆயிரக்கணக்கான ‘இனவெறி எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள்’ அமைதிப் பேரணிகளை நடத்தினர். கட்டுரை தகவல் எழுதியவர், லூசி மானிங், மல்லோரி மோன்ச் பதவி, பிபிசி நியூஸ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பிரிட்டனை உலுக்கிய புலம்பெயர்ந்தோருக்கு எதிரான போராட்டங்கள் மற்றும் கலவரங்கள் நடந்து பிறகு, நேற்று (07-08-2024) இங்கிலாந்து முழுவதும் உள்ள நகரங்களின் வீதிகளில், அந்தக் கலவரங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆயிரக்கணக்கான ‘இனவெறி எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள்’ அமைதிப் பேரணிகளை நடத்தினர். வடக்கு லண்டன், பிரிஸ்டல் மற்றும் நியூகேஸில் உட்பட, புலம்பெயர்ந்தோருக்கு எதிரான போராட்டங்கள் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்பட்ட இடங்களில் இவர்கள் ஒன்றுகூடி பெரும்பாலும் அமைதியான முறையில் ஊர்வலம் சென்றனர். "அகதிகள் இங்கு வரவேற்கப்படுகிறார்கள்" என்று கோஷமிட்டவாறு இவர்கள் சென்றனர். கடந்த வார நிகழ்வுகளுக்கு பிறகு, மேலும் 100க்கும் மேற்பட்ட ‘புலம்பெயர்ந்தோர் எதிர்ப்பு போராட்டங்கள்’ நடக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், ஆயிரக்கணக்கான காவல்துறை அதிகாரிகள் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிகழ்வுகளுக்கெல்லாம் தொடக்கப்புள்ளி, ஜூலை 29 அன்று சவுத்போர்ட்டில் மூன்று சிறுமிகளை கத்தியால் தாக்கி, கொலை செய்த நபர் ‘ஒரு முஸ்லிம் என்றும், அவர் படகு மூலம் பிரிட்டனுக்குள் நுழைந்த அகதி’ என்றும் சமூக ஊடகங்களில் வதந்திகள் பரவியதே ஆகும். இதன் தொடர்ச்சியாக பிரிட்டனில் கலவரங்கள் வெடித்தன. வெள்ளையனே வெளியேறு போராட்டத்தின் போது தமிழ்நாட்டில் என்ன நடந்தது- காமராஜர் என்ன செய்தார்?5 மணி நேரங்களுக்கு முன்னர் மசூதிகள் மற்றும் புலம்பெயர்ந்தோர் வசிக்கும் விடுதிகள், இந்த கலவரங்களின் போது குறிவைத்து தாக்கப்பட்டன. சில கடைகள் எரிக்கப்பட்டு, சூறையாடப்பட்டன . புதன்கிழமை (07-08-2024), இங்கிலாந்து முழுவதும் உள்ள வணிக வீதிகளில், மேலும் வன்முறை நிகழ்வுகள் நடக்குமோ என்ற அச்சத்தில் கடை உரிமையாளர்கள் தங்கள் கடைகளை முன்கூட்டியே மூடிவிட்டனர். வழக்கறிஞர்களின் நிறுவனங்கள் மற்றும் ஆலோசனை நிறுவனங்களின் மீது தாக்குதல் நடக்கும் என வாட்சாப் குழுக்களில் எச்சரிக்கைகள் பகிரப்பட்டதால், குடியேற்றம் தொடர்பான வழக்குகளை கையாளும் வழக்கறிஞர்கள் வீட்டிலிருந்து வேலை செய்யுமாறு காவல்துறையினரால் அறிவுறுத்தப்பட்டனர். ஆனால் நேற்று மாலையில் ஒரு சில கைதுகள் மட்டுமே பதிவாகின. இனவெறி எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் இங்கிலாந்தில் அமைதியான முறையில் நடத்தப்பட்டன. ‘இனவெறி எதிர்ப்பாளர்கள்’ லிவர்பூல் நகரில் உள்ள புகலிட சேவை அலுவலகத்திற்கு வெளியே, அகதிகள் மற்றும் புலம்பெயர்ந்தோருக்கு ஆதரவாக நூற்றுக்கணக்கான மக்கள் கூடினர். லண்டனில், வால்தம்ஸ்டோ மற்றும் நார்த் ஃபின்ச்லியில் நடந்த இனவெறி எதிர்ப்பு போராட்டங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டதாகவும், ‘பெரிய அசம்பாவிதம் இல்லாமல் பேரணிகள் கடந்து சென்றதாகவும்’ காவல்துறை கூறியது. சுமார் 1,500 ‘இனவெறி எதிர்ப்பாளர்கள்’ பிரிஸ்டலில் கூடினர். அங்குள்ள வீதிகள் தொழிற்சங்கவாதிகள், பாசிச எதிர்ப்பாளர்கள், கறுப்பின மக்கள் மற்றும் ஆசிய சமூகத்தின் உறுப்பினர்களால் நிரம்பியிருந்தன. பிரைட்டனில், குடியுரிமை மற்றும் அகதிகள் சட்டத்தில் நிபுணத்துவம் பெற்ற ஒரு வழக்கறிஞர் அலுவலகம் இருப்பதாக நம்பப்பட்ட கட்டிடத்திற்கு வெளியே எட்டு புலம்பெயர்ந்தோர் எதிர்ப்பாளர்கள் கூடினர். ஆனால் அவர்களைச் சூழந்த 2,000 ‘இனவெறி எதிர்ப்பாளர்கள்’, அவர்களை அங்கிருந்து விரட்டினர். பின்னர் காவல்துறை அந்த எட்டு பேர் இருந்த இடத்தைச் சூழ்ந்தது. நியூகேஸில் , சுமார் 1,000 ‘இனவெறி எதிர்ப்பாளர்கள்’, பெரும்பாலும் முஸ்லிம்கள், பீக்கன் மையத்தின் முன் இருந்த நடைபாதையில் கூடினர். அங்குள்ள குடியேற்றச் சேவை வணிக மையம் ஒன்று தாக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டதால் அவர்கள் அங்கு கூடினர். சமூக ஊடகங்களில் பரவிய, உறுதிப்படுத்தப்பட்ட காணொளி ஒன்றில், அக்ரிங்டன் நகரின் வீதிகளில் மக்கள் முஸ்லிம்களைக் கட்டித் தழுவி ஆறுதல் கூறியதைக் காண முடிந்தது. சவுத்தாம்ப்டனில், க்ரோஸ்வெனர் சதுக்கத்தில் கூடிய 300 முதல் 400 பேர், "இனவெறியர்களே திரும்பிச் செல்லுங்கள்" மற்றும் "இங்கு இனவெறிக்கு இடமில்லை" என்று கோஷமிட்டனர் . சுமார் 10 புலம்பெயர்ந்தோர் எதிர்ப்பாளர்களும் அந்தப் பகுதிக்கு வந்தனர், இரு குழுக்களும் காவல்துறையினரால் தனித்தனியாக தடுத்து நிறுத்தப்பட்டனர். ஒருவர் மட்டுமே கைது செய்யப்பட்டார். ஷேக் ஹசீனாவை காத்து நின்ற இந்தியாவின் ரஃபேல் போர் விமானங்கள் - நடுவானில் என்ன நடந்தது?7 ஆகஸ்ட் 2024 Anti-racism protesters rally after week of riots9 மணி நேரங்களுக்கு முன்னர் இனவெறி எதிர்ப்பு போராட்டங்களில் கலந்துகொண்ட 20 வயது செவிலியர் நாசர், தனது சக செவிலியர்கள் யாரும் ஆங்கிலேயர் அல்ல என்றும், தனது ஆதரவைக் காட்ட இங்கு வந்துள்ளதாகவும் கூறினார். "எனது அப்பா அம்மா பிரிட்டனில் பிறக்கவில்லை, நான் இங்கே பிறந்தேன். எனது பெற்றோர் வாழ இங்கு வந்தார்கள் என்ற காரணத்திற்காக என் மீது தாக்குதல் நடத்த நான் அனுமதிக்கமாட்டேன்" என்று அவர் கூறுகிறார். "எங்கள் எதிர்ப்பு அவர்களை பயமுறுத்துகிறது. அதனால்தான் அவர்கள் (கலவரக்காரர்கள்) வரவில்லை" என்று கிளாரா செர்ரா லோபஸ் கூறுகிறார். "அமைதியை, அன்பை விரும்புபவர்கள் அதிகமாக இருக்கிறார்கள் என்பதை அவர்கள் (கலவரக்காரர்கள்) தெரிந்து கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன். குடியேற்றம் இல்லாமல் பிரிட்டன் கிடையாது." என்று கூறினார் கிளாரா. பக்கிங்ஹாம் அரண்மனை கூறியது என்ன? பட மூலாதாரம்,NIKI SORABJEE படக்குறிப்பு,இங்கிலாந்தின் பல பகுதிகளில் ‘இனவெறி எதிர்ப்பு போராட்டங்கள்’ பெரும்பாலும் அமைதியாக நடைபெற்றன கடந்த வாரம் நடைபெற்ற கலவரங்கள் தொடர்பாக மொத்தம் 400க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். 140க்கும் மேற்பட்டோர் மீது குற்றம் சாட்டப்பட்டு, சிலர் ஏற்கனவே குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது. சவுத்போர்ட் மற்றும் லிவர்பூல் நகரங்களில் வன்முறைச் சீர்கேட்டில் ஈடுபட்டதற்காக மூவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது . புதன் மாலை பெரும்பாலும் அமைதியாக நடத்தப்பட்ட பேரணிகள், கடந்த வார கலவரங்களின் கைதுகள் மற்றும் தண்டனைகள், இனவெறி வன்முறைக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்கும் மக்கள் என பிரிட்டனில் பல விஷயங்கள் நடந்துள்ளன. ஆனால், இவையெல்லாம் புதிய கலவரங்களைத் தொடங்க வேண்டும் என திட்டமிடும் கும்பல்களிடம் ஏதேனும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதா என்பதே கேள்வி. குரோய்டன் நகரில் ஒரு நிகழ்வு பதிவாகியுள்ளது என்றும், ஆனால் அது போராட்டங்களுடன் தொடர்புபடுத்தப்படவில்லை என்று லண்டன் மெட்ரோபொலிட்டன் பல்கலைக்கழகம் கூறியது. சுமார் 50 பேர் கூடி, அதிகாரிகள் மீது பொருட்களையும், பாட்டில்களையும் வீசி எறிந்தனர். எட்டு பேர் கைது செய்யப்பட்டனர். பெல்ஃபாஸ்ட் நகரிலும் காவல்துறையினர் தாக்குதலுக்கு உள்ளாகினர் , அங்கு சில இடங்களுக்கு தீ வைக்கப்பட்டது மற்றும் அதிகாரிகள் மீது பொருட்கள் வீசப்பட்டன. புதனன்று, துணைப் பிரதம மந்திரி ஏஞ்சலா ரெய்னர், புலம்பெயர்ந்தோர் தங்கியுள்ள விடுதியான ‘ஹாலிடே இன் எக்ஸ்பிரஸ்ஸை’ பார்வையிட்டார். கடந்த ஞாயிற்றுக்கிழமை ரோதர்ஹாமில் உள்ள இந்த விடுதி தாக்கப்பட்டது. கலவரத்தில் ஈடுபடுபவர்கள் "சட்டத்தின் மூலம் தண்டிக்கப்படுவார்கள்" என்று உறுதியளித்த அவர், "அதிலிருந்து விலகி இருக்குமாறு” சாமானிய மக்களை வலியுறுத்தினார். போராட்டக்காரர்களுக்கு உண்மையில் ‘குடியேற்றம்’ குறித்து நியாயமான கவலைகள் உள்ளதா என்று கேட்டதற்கு, "வீதிகளில் இறங்கி, காவல்துறை மீது ஏவுகணைகளை வீசுவது, விடுதிகளைத் தாக்குவது ஆகியவை நியாயமான செயல்கள் அல்ல. இந்த நாட்டில் அத்தகைய அரசியலை நாங்கள் ஊக்குவிக்கவில்லை. அப்படி செய்பவர்களுக்கு இங்கு இடமில்லை. இது மூர்க்கத்தனம்.” என்று கூறினார் ஏஞ்சலா ரெய்னர். பக்கிங்ஹாம் அரண்மனையின் கூற்றுப்படி, நாடு முழுவதும் அரங்கேறும் நிகழ்வுகள் குறித்து அரசர் சார்லஸுக்கு தினமும் தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன. ஆனால் உடனடியாக அவர் இதில் தலையிடுவோ அல்லது பாதிக்கப்பட்ட இடங்களுக்குச் செல்லவோ மாட்டார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. https://www.bbc.com/tamil/articles/c303l26dz3ro
-
மன்னார் மனித புதைகுழி தொடர்பான வழக்கு விசாரணை
மன்னார் மனித புதைகுழி தொடர்பான வழக்கு விசாரணை நேற்றைய தினம்(7) மன்னார் நீதிமன்றத்தில் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. இதன் போது காணாமல் ஆக்கப்பட்பவர்களின் உறவுகள் சார்பாக சட்டத்தரணி வி.எஸ்.நிறைஞ்சன் மன்றில் முன்னிலையாகியுள்ளனார். பிறப்பிக்கப்பட்ட கட்டளைகள் விசாரணைகளின் பின்னர் காணாமல் ஆக்கப்பட்பவர்களின் உறவுகள் சார்பாக மன்றில் முன்னிலையான சட்டத்தரணி வி.எஸ்.நிறைஞ்சன் கருத்து தெரிவிக்கையில், “இந்த வழக்கு விசாரணையின் போது நீதி மன்றத்தால் பல்வேறு கட்டளைகள் பிறப்பிக்கப்படிருந்தது. குறிப்பாக பேராசிரியர் ராஜ்சோம தேவ் தலைமையில் சதோச மனிதபுதைகுழி பகுதியில் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் ஸ்கான் பரிசோதனை செய்ய வேண்டும் எனவும், சதோச மனித புதை குழியில் மீட்கப்பட்ட என்புகள் மற்றும் பிற பொருள் மாதிரிகளை வெவ்வேறாக பிரிப்பாதற்கான தீர்மானமும் எட்டப்பட்டுள்ளது. அத்துடன், என்புகளை பால், வயது, மரணத்திற்கான காரணம் தொடர்பில் ஆரய்வதற்கான செய்ற்பாடுகளை முன்னெடுக்குமாறும் ஏனைய சான்று பொருட்களை பேரசிரியர் ராஜ் சோம தேவியிடம் கையளிக்குமாறும் கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், குறித்த வழக்கு மேலதிக விசாரணைகளுக்காக அக்டோபர் மாதம் திகதியிடப்பட்டுள்ளது.” என அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, இந்த வழக்கு விசாரணையில் அகழ்வுக்கு பொறுப்பான சட்ட வைத்திய அதிகாரி ராஜபக்ச, பேராசிரியர் ராஜ்சோம தேவ், காணாமல் போனோர் சங்க பிரதிநிதிகள்,OMP அலுவளக பிரதிநிதிகள் உள்ளடங்கியோர் கலந்து கொண்டுள்ளனர். https://tamilwin.com/article/case-investigation-related-to-mannar-human-burial-1723100289
-
வவுனியாவில் ஆசிரியை ஒருவருக்கு நீதிபதி இளஞ்செழியன் வழங்கிய கடுமையான உத்தரவுகள்!
வவுனியாவில் காசோலை மோசடி வழக்கில் ஆசிரியை ஒருவர் குற்றவாளி என தீர்ப்பளித்த நீதிமன்றம் 37 இலட்சம் ரூபாய் பணத்தை பாதிக்கப்பட்டவருக்கு செலுத்த வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது. அத்துடன் குறித்த ஆசிரியையின் அரச தொழிலுக்கு பங்கம் ஏற்படாத வகையில் 5 வருட கால ஒத்திவைக்கப்பட்ட சிறை தண்டனையும் வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. 2010 ஆம் ஆண்டு 6 காசோலைகளை வழங்கிய மோசடி குற்றச்சாட்டின் அடிப்படையில் வவுனியா மேல் நீதிமன்றில் வழக்கு நடைபெற்று வந்த நிலையில் ஆசிரியை ஒருவர் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டார். மோசடி இந்நிலையில், நீதிபதி இளஞ்செழியன் அரச செலவாக 50 ஆயிரம் ரூபாவும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 37 இலட்சம் ரூபாவும் செலுத்த தவறும் பட்சத்தில் 18 மாத கால கடூழிய சிறைத்தண்டனையும் வழங்கி நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளார். இதன்போது பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் 2006 ஆம் ஆண்டு அடையாளம் தெரியாத நபர்களால் படுகொலை செய்யப்பட்டமை மன்றின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது. அரச சட்டவாதி ஆறுமுகம் தனுசன் வழக்கு தொடுத்தவர் தரப்பில் வழக்கை நெறிப்படுத்தியுள்ளார். ஆசிரியை, பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு 10 இலட்சம் ரூபாய் பணத்தை நீதிமன்றில் வைத்து வழங்கியுள்ளார். சிறைத்தண்டனை இதற்கிடையில் 3 மாத காலத்தில் மீதி தொகையை செலுத்த வேண்டும் என நீதிமன்றம் கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளதுடன் பணம் செலுத்த தவறினால் உடனடியாக சிறைத்தண்டனை நடைமுறைப்படுத்தப்படும் எனவும் நீதிபதி தெரிவித்துள்ளார். மேலும் 14 ஆண்டுகள் ஏமாற்றியது போதும் இனியும் பணம் செலுத்தாது ஏமாற்ற முடியாது என தெரிவித்து 3 மாத காலம் அவகாசம் வழங்கி நீதிபதி உத்தரவிட்டுள்ளார். https://tamilwin.com/article/fraudulent-act-of-a-woman-in-vavunia-1723084614