Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. வெளிநாட்டுக் கடனை மறுசீரமைப்பதில் இலங்கை வெற்றி பெற்றுள்ளது - ஜனாதிபதி Published By: VISHNU 26 JUN, 2024 | 08:32 PM இலங்கையின் பிரதான உத்தியோகபூர்வ இருதரப்பு கடன் வழங்குநர்களுடன் 26ஆம் திகதி புதன்கிழமை காலை கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகளை நிறைவு செய்து உத்தியோகபூர்வ கடன் வழங்குநர் குழுவுடன் இறுதி உடன்பாடு எட்டப்பட்டுள்ளதால் இலங்கை கடனை மறுசீரமைப்பதில் வெற்றி பெற்றுள்ளது என்றும் கடன் மறுசீரமைப்புப் பணியின் முக்கியமான கட்டத்தை வெற்றிகரமாக முடித்துள்ளதால், வெளிநாட்டு நிதியைப் பயன்படுத்தி முன்னெடுத்த அனைத்து திட்டங்களையும் மீண்டும் தொடங்க சட்டபூர்வ வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிதார். சீனாவின் எக்ஸிம் வங்கியுடன் பீஜிங்கில் இறுதி உடன்பாடு எட்டப்பட்டதோடு அது அதற்கான முறையான நடைமுறைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவிதார். ஜனாதிபதி ஆற்றிய முழுமையான உரை வருமாறு : அன்று மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியின் பிரகாரம் இலங்கைத் தாயை ஆபத்தான தொங்கு பாலத்தின் ஊடாக கொண்டு வர முடிந்ததாக தெரிவித்த ஜனாதிபதி, ஹுனுவட்டயே நாடகத்தில் வருவதைப் போன்று கடினமான நிலைமையில் குழந்தையைப் பாதுகாப்பதற்கு அஞ்சி எந்த ஆதரவையும் வழங்காத தரப்பினர், குழந்தை தொங்கு பாலத்தை கடக்கும் முன்பே குழந்தையின் உரிமையைக் கேட்டு போராடுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். கடனை செலுத்த முடியாமல் வங்குரோத்தான நாடென்று முத்திரை குத்தப்பட்ட ஒரு நாடு இரண்டு வருடங்களில் இந்தளவு முன்னேற்றத்தைப் பெற முடிந்திருப்பது வெற்றி எனவும், அண்மைய வரலாற்றில் பொருளாதார படுகுழியில் விழுந்த உலகின் எந்த நாடும் இவ்வளவு குறுகிய காலத்தில் இவ்வாறான நிலையை அடைந்ததில்லை எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். நாடு எதிர்நோக்கும் சவால்களை உண்மையாகப் புரிந்துகொண்டு அவற்றிற்கு நடைமுறை தீர்வுகளை வழங்கி, முடிவுகளைக் காட்டிய தன்னுடன் சேர்ந்து நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வீர்களா? இல்லையேல் இன்னும் பிரச்சினையை புரிந்து கொள்ளாத மற்றும் அதிகாரத்திற்காக இருட்டில் தடவிக் கொண்டிருக்கும் குழுக்களுடன் இணைவதா என்பதை நாட்டு மக்கள் தீர்மானிக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார். தவறான பாதையில் செல்வதால் ஏற்படும் ஆபத்துக்களை அனைவரும் அறிந்துவைத்துள்ளதால், அது தொடர்பில் தீர்மானத்தை எடுப்பதற்கு மக்களுக்கு முழு உரிமையும் சுதந்திரமும் இருப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். மக்கள் எடுக்கும் தீர்மானம் ரணில் விக்ரமசிங்கவின் எதிர்காலத்தை தீர்மானிக்காது என்றும் அது நாடு மற்றும் எதிர்கால குழந்தைகளின் எதிர்காலத்தையே தீர்மானிக்கும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். வங்குரோத்து அடைந்து நாட்டின் பொருளாதாரம் படுகுழியில் வீழ்ந்திருந்த நாட்டை மீட்பதற்கு தனது கட்சிக்கு பாராளுமன்ற அதிகாரம் இருக்கவில்லை எனவும் தன்னால் நியமிக்கப்பட்ட அரச அதிகாரிகளோ தான் நியமித்த அமைச்சரவையோ இருக்கவில்லை என்றும் குறிப்பிட்ட ஜனாதிபதி, அவை எதுவும் இன்றி உலகையே ஆச்சரியப்படுத்தும் விதத்தில் இரண்டு வருடங்களில் நிலையான நாட்டை கட்டியெழுப்ப தன்னால் முடிந்ததாகவும் குறிப்பிட்டார். நமது நாட்டின் அண்மைய வரலாற்றில் இன்று மிக முக்கியமான நாள். இந்நாள் ஒரு தனித்துவமான மைல்கல். கடந்த காலத்தில் நாம் பாடுபட்ட பணிகளுக்கான நல்ல பலன்கள் தற்போது நமது நாட்டுக்குக் கிடைத்துள்ளன. இன்று முற்பகல் பெரிஸ் நகரில் இலங்கையின் உத்தியோகபூர்வ இருதரப்பு கடன் வழங்குநர்களுடன் கடன் மறுசீரமைப்பு குறித்த பேச்சுவார்த்தைகள் நிறைவு செய்யப்பட்டு, கடன் வழங்குநர்களுடன் இறுதி இணக்கப்பாட்டை எட்ட முடிந்தது. அதேபோல் சீனாவின் எக்ஸிம் வங்கியுடன் இன்று நாம் பீஜிங் நகரில் இறுதி இணக்கப்பாட்டினை எட்டினோம். அதற்கு அமைவான உரிய செயற்பாடுகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. நாட்டை உண்மையிலேயே நேசிப்பவர்களுக்கு இது ஒரு நற்செய்தியாகும். இருதரப்பு கடன் வழங்குநர்களுடன் இவ்வகையான இணக்கப்பாட்டை எட்டுவதற்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக நாங்கள் கடுமையாக உழைத்து வந்தோம். விரிவாக பேச்சுவார்த்தை நடத்தினோம். கடந்த காலத்தில் நாம் பெற்ற பொருளாதார வெற்றிகள் இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் எமக்குப் பெரும் பலமாக இருந்தது. இந்த பேச்சுவார்த்தைகள் வெற்றியடைய, எமது கடன் வழங்குநர்களான சீனா மற்றும் சீன எக்ஸிம் வங்கி, உத்தியோகபூர்வ கடன் வழங்குநர் குழுவில் இணைத்தலைமை வகிக்கும் இந்தியா, ஜப்பான், பிரான்ஸ் ஆகிய நாடுகளும் அந்தக் குழுவின் மற்ற உறுப்பினர்களும், பெரிஸ் கழகத்தின் செயலகமும் எமக்கு வழங்கிய ஆதரவுக்கு நான் நன்றி கூறுகிறேன். இந்தப் பேச்சுவார்த்தைகளில் கலந்துகொண்ட இலங்கை மற்றும் ஏனைய நாடுகளின் பிரதிநிதிகளுக்கும், எமக்கு ஆலோசனை வழங்கிய லஸார்ட்(Lazard) மற்றும் கிளிபோர்ட் சான்ஸ் (Clifford Chance)அதிகாரிகளுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம் . இந்த ஒப்பந்தங்களின் மூலம், வெளிநாடுகளில் உள்ள அனைத்து இருதரப்பு கடன் தவணைகளையும் 2028 ஆம் ஆண்டுவரை ஒத்திவைக்க முடியும். அதன்பிறகு, சலுகை நிபந்தனைகள் அடிப்படையில் அனைத்து கடன்களையும் செலுத்த 2043 வரை நீண்டகால அவகாசம் கிடைக்கும். 2023 ஆம் ஆண்டில் நாம் உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பை நிறைவு செய்துள்ளோம்.இப்போது வெளிநாடுகளின் இருதரப்புக் கடன் மறுசீரமைப்பை வெற்றிகரமாக நிறைவுசெய்ய முடிந்தது. அடுத்ததாக வெளிநாட்டு பிணைமுறி உரிமையாளர்களை உள்ளடக்கிய வணிகக் கடன் வழங்குநர்களுடன் ஒரு உடன்பாட்டை எட்ட வேண்டும். இந்தப் பாதையில் தொடர்ந்து செல்வதன் மூலம், அதற்கான இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொள்ள முடியும். அது தொடர்பான பேச்சுவார்த்தைகளை நாம் தொடர்ந்தும் முன்னெடுத்து வருகிறோம். இன்று நாம் எட்டியுள்ள இணக்கப்பாடுகளால், நமது பொருளாதாரத்திற்கு சுவாசிக்க அவகாசம் கிடைக்கிறது. 2022ஆம்ஆண்டில்,மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 9.2வீதத்தினை, வெளிநாட்டுக் கடனை செலுத்துவதற்கு செலவிட வேண்டியிருந்தது.2027 முதல் 2032 வரையான இடைப்பட்ட காலத்தில் கடன் செலுத்துவதற்காக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.5மூ இற்கும் குறைவான தொகையையே ஒதுக்குவதற்கான வாய்ப்பு கிட்டியுள்ளது. 2022 இல் அரசாங்கத்தின் வருடாந்த நிதித் தேவை, மொத்த தேசிய உற்பத்தியில் 34.6 சத வீதமாகும் . இந்த இணக்கப்பாடுகள் காரணமாக 2027-2032 வரையான காலப்பகுதியில் அந்த நிதித் தேவை 13 சதவீதத்தை விடக் குறையும். 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், இலங்கை கடன் செலுத்த முடியாத நாடு என்று உத்தியோக பூர்வமாக அறிவித்தது.அந்த அறிவிப்பைத் தொடர்ந்து உலக நாடுகள் எங்களுடனான கொடுக்கல் வாங்கல்களை நிறுத்திவிட்டன. வங்குரோத்து அடைந்த நாட்டுடன் நிதி உறவுகளைப் பேணுவதற்கு எந்தவொரு நாடும் முன்வராது, கடன்களை வழங்காது. குறைந்தபட்சம் கடன் பத்திரங்களைக்கூட ஏற்றுக்கொள்ளாது. இந்தப் பின்னணியில் வெளிநாட்டுக் கடன் உதவியோடு நம் நாட்டில் செயற்படுத்தப்பட்ட திட்டங்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டன. அந்த நாடுகள், தங்கள் திட்ட அலுவலகங்களை மூடிவிட்டு தத்தமது நாடுகளுக்குச் சென்றன. அபிவிருத்திப் பணிகள் முற்றிலும் முடங்கின. ஆனால் இப்போது கடன் மறுசீரமைப்புப் பணியின் முக்கியமான கட்டத்தை வெற்றிகரமாக முடித்துள்ளதால், வெளிநாட்டு நிதியைப் பயன்படுத்தி முன்னெடுத்த அனைத்து திட்டங்களையும் மீண்டும் தொடங்க அந்தந்த நாடுகளுக்கு சட்டபூர்வ வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன. கட்டுநாயக்க விமான நிலைய அபிவிருத்தி, இலகு ரயில் பாதை, அதிவேக நெடுஞ்சாலை உள்ளிட்ட பல திட்டங்கள் மீண்டும் ஆரம்பிக்கப்படும். அது மாத்திரமன்றி பல புதிய அபிவிருத்தித் திட்டங்களை எமக்குப் பெற்றுக்கொள்ள முடியும். இருதரப்பு கடன் வழங்குநர்கள் எங்களுடன் ஒரு இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளதால், நமது நாட்டின் மீதான சர்வதேச நம்பிக்கை மேலும் அதிகரித்து வருகிறது. இது ஒரு வகையான சர்வதேச அங்கீகாரமாகும். எமது கடன் பத்திரத்தைக்கூட ஏற்றுக்கொள்ளாத சர்வதேச சமூகம் தற்போது எமக்கு நம்பிக்கைச் சான்றிதழை வழங்கும் நிலைக்கு வந்துள்ளது. எனவே இன்று நாம் இணக்கப்பாட்டிற்கு வந்த இந்த இரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்களையும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளோம். இந்த உடன்படிக்கைகளை பிரதமர் அவர்கள், ஜூலை 2ஆம் திகதி நடைபெறும் விசேட பாராளுமன்ற அமர்வில் பாராளுமன்ற அங்கீகாரத்துக்காகச் சமர்ப்பிப்பார். பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாட்டை நேசிக்கும் அனைத்துத் தரப்பினரையும் அந்த ஒப்பந்தங்களை அங்கீகரிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நாம் இதுவரை எளிதான பயணத்தை கடந்துவரவில்லை. கடந்த காலங்களில் நாம் மிகக் கடினமான, கஷ்டமான பாதையைக் கடந்துவந்தோம். இந்தப் பணிக்காக நமது அமைச்சர்களும், அதிகாரிகளும் கடுமையாக உழைத்தனர். நமது நாட்டின் பெரும்பான்மையான மக்கள் பொறுமையுடன் எங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கினர். நாங்கள் அனைவரும் வெவ்வேறு சிரமங்களையும், கஷ்டங்களையும் எதிர்கொண்டோம். இன்னமும் எதிர்கொள்கின்றோம். இந்த முன்னேற்றத்தை சீர்குலைக்க சிலர் முயன்றனர், இன்னும் முயல்கின்றனர். ஆனால் அவர்களால் இந்தப் பயணத்தை நிறுத்த முடியவில்லை. இவர்கள் எதிர்காலத்தில் ஒருநாள், நாட்டைக் காட்டிக் கொடுத்தமைக்காக, தங்களின் பிள்ளைகளின் முன்னால் வெட்கப்பட நேரிடும். பொருளாதாரம் வலுப்பெறும் போதெல்லாம், நாம் சலுகைகளை வழங்கினோம். பொருளாதாரத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அந்தச் சலுகைகள் வழங்கப்பட்டன. எதிர்காலத்திலும் அந்நிலைமை தொடரும். சரியான பாதையில் பயணித்தால், பொருளாதாரம் வலுப்பெறும்போது, தற்போதைய கஸ்டங்களை படிப்படியாகக் குறைத்துக் கொள்ளலாம். வேலை நிறுத்தங்களாலும், அச்சுறுத்தல்களாலும் இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியாது. நாம் அனைவரும் ஒன்றிணைந்து பொருளாதாரத்தை வலுப்படுத்துவதன் மூலம், எங்களுக்கு தீர்வுகளும், நிவாரணங்களும் கிடைக்கும். இரண்டு வருடங்களுக்கு முன்னர் நாட்டைப் பொறுப்பேற்றபோது, நாங்கள் மிகவும் கடினமான பாதையில் செல்ல வேண்டியிருக்கும் என்பதை நான் சுட்டிக்காட்டினேன். இந்தப் பிரச்சினைகளை ஒரு வாரத்தில், இரண்டு, மூன்று, நான்கு மாதங்களில் அல்லது ஒரு வருடத்தில் தீர்க்க முடியாது என்றும் குறிப்பிட்டிருந்தேன். 'ஹுனுவட்டயே' நாடகத்தை மேற்கோள்காட்டி, அடிவாரம் தெரியாத, பயங்கரமான பாதாளத்தின் மேலாக அமைக்கப்பட்ட தொங்கு பாலத்தை நாம் கடக்க நேரிடும் என்பதை வலியுறுத்தினேன். அப்போது நம் நாட்டின் பொருளாதாரம் பாதாளத்தில் இருந்தது. அதிலிருந்து நாட்டைக் காப்பாற்ற பலர் முன்வரத் தயங்கினர், பயந்தனர். 'செய்யாத சிகிச்சைக்கு சிறு-தேன் ஔடதம் தேடுவதைப் போல’ ஒவ்வொரு காரணங்களைக் கூறி தப்பிக் கொள்ள முயன்றனர்.முழு ஆட்சி அதிகாரத்தையும் கொடுத்தால் நாட்டைப் பொறுப்பேற்பதாக ஒரு தரப்பு கூறியது. அமைச்சரவைக்கு தங்களுடைய ஆட்களை நியமிக்க அனுமதித்தால் பொறுப்பை ஏற்றுக் கொள்வதாக மற்றொரு குழுவினர் தெரிவித்தனர். இன்னும் சிலர் ஜனாதிபதி பதவியை வழங்கினால் ஏற்றுக் கொள்வதாகக் கூறினர். ஆனால் எந்த நிபந்தனையும் இல்லாமல் இந்த சவாலை நான் ஏற்றுக்கொண்டேன். பொருளாதாரப் படுகுழியில் இருந்து நம் நாட்டையும், நம் நாட்டு மக்களையும் காப்பாற்றும் வலிமை எனக்கு இருந்தது. என்னிடம் வேலைத்திட்டம் இருந்தது. இதுபோன்ற சூழ்நிலைகளில் இருந்து நாடுகள் வெளிவருவதற்கான வழிகளைப் பற்றிய புரிதலும் அனுபவமும் எனக்கு இருந்தது. திட்டமிட்ட கொள்கைகள் மற்றும் அர்ப்பணிப்புடன் பொருளாதாரத்தை மீட்டெடுக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. அதற்காக சர்வதேச ஆதரவைப் பெற முடியும் என்பதையும் அறிந்திருந்தேன். அவைதான் என்னிடம் இருந்தன. எனக்கென்று எம்.பி.க்கள் இருக்கவில்லை. எனக்கென்று ஒரு அமைச்சரவை இருக்கவில்லை. எனக்கென்று ஒரு அரசாங்கம் இருக்கவில்லை. ஆனால் நான் சவாலை ஏற்றுக்கொண்டேன். “பெருமை பேசுவதை விட்டுவிட்டு செயலில் இறங்குவதே ஒரு பணியை ஆரம்பிப்பதற்கான சரியான வழி!" என்று உலகப் புகழ்பெற்ற படைப்பாளி வால்ட் டிஸ்னி சொன்ன கூற்று நினைவுக்கு வந்தது. பயமின்றி செயலில் இறங்கினேன். 2022 ஆகஸ்ட் 3 ஆம் திகதி பாராளுமன்றக் கூட்டத்தொடரின் ஆரம்ப உரையின்போது, வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்ப பின்பற்ற வேண்டிய நான்கு அம்சக் கொள்கைகளை நான் நாட்டுக்கு முன்வைத்தேன். 1. சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்தாலோசித்து, விரிவான கடன் வசதிகளைப் பெற்று நாட்டில் நிதி ஒழுக்கத்தை ஏற்படுத்துவது, 2. சர்வதேச நிதி மற்றும் சட்ட வல்லுனர்களான டுயணயசன மற்றும் ஊடகைகழசன ஊhயnஉந ஆகியோருடன் இணைந்து கடன் உறுதிப்படுத்தல் திட்டத்தைத் தயாரித்து கடன் வழங்குநர்களுடன் உடன்பாட்டை எட்டுவது, 3. வெளிநாட்டு முதலீட்டை உறுதிப்படுத்திக் கொள்வதோடு, ஏற்றுமதிப் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் கொள்கைகள், சட்ட திட்டங்களை உருவாக்குவதுடன், டிஜிட்டல் பசுமைப் பொருளாதாரத்தை உருவாக்குவது, 4. இத்திட்டத்தின் மூலம் 2048 ஆம் ஆண்டுக்குள் கடனற்ற பொருளாதாரத்தை உருவாக்கி அபிவிருத்தியடைந்த நாடாக மாற்றுவது, ஆகிய நான்கு அம்சக் கொள்கைகளை அன்று முன்வைத்தேன். அன்று நான் குறிப்பிட்ட வேலைத்திட்டம் குறித்தும், அதை எப்படிச் செயல்படுத்துவது என்பது பற்றிய அனைத்துத் தகவல்களையும் அவ்வப்போது பாராளுமன்றத்தில் முன்வைத்தேன். இதை நாங்கள் இரகசியமாகச் செய்யவில்லை. அனைத்தும் வெளிப்படைத் தன்மையுடன் செய்யப்பட்டன. நான்கு அம்சக் கொள்கைகளில் முதல் மூன்று விடயங்களும் இப்போது வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. நமது வேலைத்திட்டமும் நாம் கடந்து வந்த பாதையும் சரியானவை என்பதை இது நிரூபிக்கிறது. கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் வங்குரோத்து முத்திரை குத்தப்பட்ட நாடு என்ற வகையில், இரண்டே ஆண்டுகளில் இந்த மாதிரியான முன்னேற்றத்தை எட்ட முடிந்ததே பாரிய வெற்றியாகும். இவ்வாறு பொருளாதார படுகுழியில் விழுந்த ஏனைய நாடுகளுக்கு, சாதகமான நிலையை எட்ட நீண்ட காலம் பிடித்தது. அண்மைய வரலாற்றில், உலகில் எந்த நாடும் இவ்வளவு சிறப்பான வெற்றியை இவ்வளவு குறுகிய காலத்தில் பெற்றதில்லை. நமது பொருளாதாரம் வீழ்ந்துள்ள படுகுழி தொடர்பில் நாம் தெளிவாகப் புரிந்து வைத்திருந்தோம். அதற்குக் கொடுக்கப்பட வேண்டிய சரியான தீர்வுகளை நாங்கள் அறிந்திருந்தோம். எங்களுடைய தொலைநோக்குப் பார்வை, உறுதிப்பாடு, அர்ப்பணிப்பு காரணமாக இந்த நிலையை எங்களால் அடைய முடிந்தது. எனவே, இந்த வழியைப் பின்பற்றினால், நான்காவது கட்டமான 2048 இற்குள் அபிவிருத்தியடைந்த நாடாக மாற முடியும் என்பது இப்போது தெளிவாகிறது. 2022 ஆம் ஆண்டில் பொருளாதாரத்தில் அதல பாதாளத்தில் இருந்த ஒரு நாட்டின் தற்போதைய நிலை என்ன? தொடர்ந்து 6 காலாண்டுகளாக சுருங்கிச் சென்ற நமது பொருளாதாரம் 2023 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் இருந்து வளரத் தொடங்கியது. 2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதமளவில் மீண்டு வர வழியின்றி, வற்றிப் போயிருந்த எமது வெளிநாட்டு கையிருப்பு தற்போது 5,500 மில்லியன் டொலராக உயர்ந்துள்ளது. ரூபாய் வலுப்பெற்றுள்ளது. வங்கி வட்டி விகிதம் குறைந்துள்ளது. 2022 செப்டம்பரில் 70 சதவீதமாக இருந்த பணவீக்கம் தற்போது 9 சதவீதமாகக் குறைந்துள்ளது. முதன்மை கணக்கு இருப்பை உபரியாக மாற்றக்கூடிய நிலைமை உருவாகியிருக்கிறது. அதேபோல், கடந்த ஆண்டு நாட்டின் வெளிநாட்டுக் கணக்குக் கையிருப்பில் உபரியை ஏற்படுத்த முடிந்தது. 1977 இற்குப் பின்னர் உபரியை ஏற்படுத்தியது இதுவே முதல் முறையாகும். சிறந்த பொருளாதார முகாமைத்துவத்தின் மூலம் வங்குரோத்து நிலையில் இருந்து மீள்வதற்காக நாம் இந்த இலக்குகளை எட்டியிருக்கிறோம். எமது உத்தியோகபூர்வ கடன் வழங்குநர்கள் கடன் மறுசீரமைப்புக்கு இணக்கம் தெரிவித்துள்ளனர். அதனால், நாம் இப்போது மீண்டும் சர்வதேசத்தின் நம்பிக்கையைப் பெற்றுள்ளோம். அதேநேரம் நாம் இதுவரை கடந்து வந்த பாதை சரியானது என்பது மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது. சர்வதேச அளவிலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்த வேலைத் திட்டத்தை பாராளுமன்றத்தில் அன்று சமர்ப்பித்தபோது, நாட்டைப் பற்றி சிந்தித்து இந்த வேலைத் திட்டங்களுடன் இணைந்துகொள்ளுமாறு இந்நாட்டின் அனைத்து அரசியல் கட்சிகளிடமும் அழைப்பு விடுத்தேன். சில அரசியல் கட்சிகள் அந்த அழைப்பை ஏற்று இன்று என்னுடன் இணைந்து இந்தப் பயணத்திற்கு ஆதரவளித்து வருகின்றன. ஆனால் சில அரசியல் கட்சிகள் இன்றும் விமர்சித்து வருகின்றன. இந்த விமர்சனங்கள் பற்றியும் கூற விரும்புகிறேன். கோட்டாபய ஜனாதிபதி பதவியில் இருந்தபோது சர்வதேச நாணய நிதியம் இல்லாமல் தீர்வு கிட்டாது என்று சொன்னவர்கள் இப்போது சர்வதேச நாணய நிதியம் தேவையில்லை என்கின்றனர். மக்கள் கஷ்டப்படும்போது பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் பயனில்லை என்று கூறிய தரப்பினர், அவர்கள் ஆட்சிக்கு வந்தால் பால் தேநீருக்கு பதிலாக வெறும் தேநீரை மட்டும் குடிக்க வேண்டியிருக்கும் என்று கூறுகின்றனர். சிலர் பிரசித்தமடைய அரசியல் செய்கின்றனர். இல்லையெனில், பாடசாலை அரசியலை செய்கிறார்கள். அவர்களின் அரசியல், பொருளாதார, ஆட்சி நிர்வாக அறிவு முன்பள்ளிக் கல்விக்கு மேலாக வளரவில்லை. எவ்வாறாயினும், இந்த பிரச்சினை உக்கிரமடைந்த தருணத்திலேயே அதன் ஆழத்தை நான் உணர்ந்துகொண்டேன். தனியொரு பாராளுமன்ற உறுப்பினராக இருந்தாலும் நான் இந்த நெருக்கடி குறித்து எடுத்துக்கூறினேன். தீர்வுகளையும் வலியுறுத்தினேன். சிலருக்கு இன்னும் அதன் பாரதூரம் புரியாமல் இருக்கிறது. நான் இந்த நாட்டைப் பொறுப்பேற்ற பின்னர், நாட்டைக் கட்டியெழுப்ப பல நடவடிக்கைகளை மேற்கொண்டேன். அவை அனைத்தும் சரியானவை என்பதை அறிந்துகொள்ள அவர்களுக்கு இரு வருடங்கள் தேவைப்பட்டன. நான் இப்போது முன்னெடுக்கும் நடவடிக்கைகள் சரியானவை என்பதை புரிந்து கொள்ளவும் அவர்களுக்கு இன்னும் சில வருடங்கள் தேவைப்படும். சரியானது எது என்பது புரியும் வரையில் அவர்கள் கூச்சலிட்டுக் கொண்டிருப்பதை மட்டுமே செய்வார்கள். வெட்டிப் பேச்சு பேசுவோர் தொடர்ந்து பேசிக்கொண்டிருப்பர். வீண் பேச்சு பேசுவோரும் தொடர்ந்து பேசிக்கொண்டிருப்பர். அது பற்றியும் சற்றுப் பேச விருப்புகிறேன். நமது நாடு ஐஎம்எப்(IMF)ஆதரவைப் பெற்றுக்கொண்ட முதலாவது முறை இதுவல்ல. இதற்கு முன்னதாக 16 தடவை ஐஎம்எப்(IMF) ஆதரவு பெறப்பட்டுள்ளது. அந்த ஒவ்வொரு முறையும் இலங்கை தோல்வியடைந்தது. ஏன் அவ்வாறு நடந்தது? நாம் நிபந்தனைகளை மீறினோம். நாங்கள் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. நிதி ஒழுக்கத்தைப் பேணவில்லை. ஐஎம்எப்(IMF) வேலைத் திட்டத்தில் நாம் வெற்றி பெறுவது வரலாற்றில் இதுவே முதல் முறையாகும். முன்பு ஐஎம்எப்(IMF) இடம் உதவி கோரிய 16 தடவையும் நாம் வங்குரோத்து அடைந்த நாடாக இருக்கவில்லை. ஆனால் வங்குரோத்து நாடாக உதவி கோரி, அந்தத் திட்டத்தை வெற்றிபெறச் செய்வதற்கு தலைமைத்துவம் வழங்கியதையிட்டு நான் மகிழ்ச்சி அடைகிறேன். அது இத்தோடு முடிந்துவிடாது. இது எமது பயணத்தில் ஒரு மைல்கல் மட்டுமே. இங்கிருந்து நாம் புதிய ஆரம்பத்தைப் பெற வேண்டும். தற்போது எங்களுக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளது. மீண்டும் சர்வதேசத்தின் நம்பிக்கையைப் பெற்றுள்ளோம். இவற்றை நாம் பயன்படுத்தி பொருளாரத்தை முன்னேற்ற வேண்டும். முழுமையான வெற்றியைப் பெற வேண்டும். நாம் முழுமையான வெற்றியைப் பெற்றால் நம் நாடு மீண்டும் சர்வதேச நாணய நிதியத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இருக்காது. அதற்காகவே நான் பாடுபடுகிறேன். ஐஎம்எப்(IMF) செல்ல அவசியமில்லாத, வலுவான வினைத்திறனான வளர்ச்சியடைந்த பொருளாதாரத்தை நாட்டில் கட்டியெழுப்பவே நான் பாடுபடுகிறேன். அதற்காக நாம் உழைக்கிறோம். நானும், எமது அமைச்சரவையும், நமது அரசாங்கமும் அதற்காக அர்ப்பணிப்புடன் உழைக்கிறோம். உழைப்பது மட்டுமன்றி அதற்கான பலன்களையும் காட்டுகிறோம். எங்களை விமர்சிக்கும் சில குழுக்கள் அரசியல் அதிகாரத்தைப் பெறுவதை மட்டுமே நோக்கமாகக் கொண்டுள்ளனர். எதிர்காலத்தில் ஆட்சிக்கு வர ஆசைப்படுவோர் இப்போதே ஜனாதிபதியையும் தெரிவு செய்துவிட்டனர். அவர்களில் சிலர், ஆட்சிக்கு வந்தப் பின்னர் அமைச்சர்களை நியமிப்பது தொடர்பில் ஆழமாக ஆலோசனை நடத்துகிறார்கள். சிலர் இப்போதே அமைச்சுக்களைப் பகிர்ந்து கொண்டுள்ளனர். அவ்வாறு கனவு காணும் தரப்பினர், அவர்களின் மனைவியருக்கு அந்த அமைச்சுப் பதவிகளை வழங்குவது குறித்தும் சிந்திக்கிறார்கள். இந்தக் கனவு அமைச்சர்கள் இன்றைய எனது உரையை பற்றி நாட்டு மக்களிடம் எத்தனை பொய்களை சொல்லியுள்ளார்கள். ஊடக சந்திப்புக்களை நடத்தி பொய் சொன்னார்கள். அவை அனைத்துமே பொய் என்பது நாட்டு மக்களுக்கு இப்போது தெரியவந்திருக்கும். நாட்டுக்கு எவ்வாறான வெற்றி கிட்டினாலும், ஏன் அவர்கள் இன்னும் இதனை வன்மமாகப் பார்க்கிறார்கள்? நாட்டிற்கு கிடைக்கும் நற்செய்தியை எதிர்மறையாக பார்ப்பது ஏன்? எல்லாவற்றிலும் அரசியல் ஆதாயம் பெற ஏன் முயற்சிக்கிறார்கள்? அதிகாரத்தைப் பெறுவதற்காக ஏன் நாட்டுக்கு துரோகம் செய்கின்றனர்? இவ்வாறான சந்தர்ப்பங்களில் அரசியல் செய்வது ஏன்? அதற்கு இதுதான் காரணம். ஜனாதிபதி பதவிக்காக கடுமையாகப் போராடுகிறார்கள். நாம் நாட்டுக்காக போராடுகிறோம். அவர்களோ தங்களுக்குக் கிடைக்கும் பதவிகள், பட்டங்கள் பற்றிக் கனவு காண்கிறார்கள். ஆனால் நாம் நாட்டின் வளர்ச்சி பற்றி கனவு காண்கிறோம். அவர்கள் அமைச்சுக்களைப் பகிர்ந்துகொள்ள திட்டமிடுகிறார்கள். நாம் நாட்டை கட்டியெழுப்ப திட்டங்களை வகுக்கிறோம். அதிகாரத்தைக் கோரி இலங்கையைச் சுற்றி வருகிறார்கள். பாடசாலைகளுக்குச் சென்றும் அதிகாரத்தை கேட்கிறார்கள். உலகம் முழுவதும் பறந்து நாட்டின் அதிகாரத்தைக் கேட்கிறார்கள். அதிகாரத்துக்காக அல்லும் பகலும் ஓடித் திரிகின்றனர். ஆனால் நாம் நாட்டுக்காக இரவு பகல் பாராமல் உழைக்கிறோம். நாடு முழுதுமாகச் சென்று மக்கள் தேவைகளைப் பூர்த்தி செய்கிறோம். பொருளாதாரத்தை வலுப்படுத்தும் திட்டங்களை ஆரம்பிக்கிறோம். நான் உலகம் முழுவதும் சென்று நமது நாட்டின் வளர்ச்சிக்காக சர்வதேச ஆதரவைப் பெற்று வருகிறேன். இத்தகைய பின்னணியில் நான் உங்களிடம் இந்தக் கேள்வியைக் கேட்க விரும்புகிறேன். ஆரம்பத்திலிருந்தே பிரச்சினையைப் புரிந்துகொண்டு நடைமுறைச் சாத்தியமான தீர்வுகளை வழங்கிய என்னுடன் நாட்டை முன்னேற்றுவீர்களா? அல்லது இன்னும் பிரச்சினையை புரிந்து கொள்ளாமல், இருட்டில் தடவிக் கொண்டு, அதிகாரத்தைப் பெற முயற்சிக்கும் குழுக்களுடன் பயணிக்க விரும்புகிறீர்களா? நீங்கள் சரியான பாதையில் சென்று உங்களதும் நாட்டினதும் எதிர்காலத்தை மேம்படுத்துவீர்களா? அல்லது பயணத்தை மாற்ற வேண்டுமா? தவறான பாதைக்குத் திரும்பினால் அல்லது தவறான பாதையில் பயணித்தால் ஏற்படும் விளைவுகளை நாம் அனைவரும் நன்கு அறிவோம். எனவே சரியான முடிவை எடுங்கள். அந்த முடிவை எடுக்க உங்களுக்கு முழு உரிமையும் சுதந்திரமும் உள்ளது. உங்கள் முடிவு ரணில் விக்ரமசிங்கவின் எதிர்காலத்தை தீர்மானிக்காது. நாட்டின் எதிர்காலத்தையும் உங்கள் எதிர்காலத்தையும் மட்டுமன்றி அது உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தையும் தீர்மானிக்கப் போகிறது. பொருளாதாரம் படுகுழியில் வீழ்ந்து வங்குரோத்து நிலையிலிருந்த நாட்டை மீட்க எனது கட்சிக்கு பாராளுமன்றத்தில் அதிகாரம் இருக்கவில்லை. நான் நியமித்த அரசாங்க அதிகாரிகளும் இருக்கவில்லை. அமைச்சர்களும் இருக்கவில்லை. ஆனால் அவை எதுவுமேயில்லாமல், உலகையே வியப்பில் ஆழ்த்தும் வகையில் இரண்டு வருட காலத்தில் நாட்டை சுமூகமான நிலைமைக்கு கட்டியெழுப்ப என்னால் முடிந்தது. அதை யோசித்துப் பாருங்கள். இரண்டு வருடங்களுக்கு முன்பு வீதிகளில் எவற்றை கண்டோம்? இன்று எதனைக் காண்கிறோம். ஆபத்தான தொங்கு பாலத்திலிருந்து இலங்கை அன்னையை மீட்டுத் தருவதாக அன்று நான் வாக்குறுதி அளித்தேன். குழந்தையைப் பத்திரமாக மீட்டு வந்திருக்கிறேன். இப்போது என்ன நடந்தது? "ஹுனுவடயே" நாடகத்தில் வருவது போல், குழந்தையைக் காக்க எந்த ஆதரவும் தராத குழுக்கள் தற்போது குழந்தையின் உரிமையைப் பெறப் போராடுகின்றனர்.தொங்கு பாலத்தைக் கடக்கும் முன் குழந்தையை சொந்தமாக்க முயற்சிக்கிறார்கள். குழந்தையை இரு பக்கமாக அன்றி அனைத்துப் பக்கங்களிலும் பிடித்து இழுக்கின்றனர். நாம் அறிந்த ‘ஹுனுவடயே’ நாடகத்தின் நிறைவில், குழந்தையின் உரிமை உண்மையான தாய்ப்பாசமுள்ள அன்னைக்கு கிடைக்கிறது. “தகுதியானவருக்கு தகுதியானது கிடைக்க வேண்டும்.குதிரை சரியான வண்டியோட்டியிடம் கொடுக்கப்பட வேண்டும்” என்று நாடகத்தின் கதாசிரியர் கூறுகிறார். அந்தக் கதையில் வரும் நீதிபதி அஸடக்கைப் போன்று நீங்களும் சரியான முடிவை எடுக்க வேண்டும். அப்போது தகுயானவருக்கு தகுதியானது கிடைக்கும். நமது நாட்டுக்கு ஒளிமயமான எதிர்காலம் கிட்டட்டும். https://www.virakesari.lk/article/187056
  2. 26 JUN, 2024 | 01:31 PM மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலை சிபிஐ கைது செய்தது. கேஜ்ரிவாலை கைது செய்ய டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ அனுமதி கோரியது. அப்போது, அவரை கைது செய்வதற்கான ஆவணங்களை தாக்கல் செய்யுமாறு நீதிமன்றம் தெரிவித்தது. இதையடுத்து, அரவிந்த் கேஜ்ரிவாலிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி அவரது வாக்குமூலங்களைப் பதிவு செய்தனர். இதையடுத்து, கேஜ்ரிவாலை கைது செய்த சிபிஐ அதிகாரிகள், அவரை டெல்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி அமிதாப் ராவத் முன் அஜர்படுத்தினர். மேலும், கேஜ்ரிவாலிடம் விசாரணை நடத்த நீதிமன்றத்திடம் சிபிஐ அதிகாரிகள் அனுமதி கோரினர். இதனிடையே, அமலாக்கத் துறை தொடர்ந்த வழக்கில் ஜாமீன் கோரி கேஜ்ரிவால் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வர உள்ளது. https://www.virakesari.lk/article/187018
  3. உருகும் ஆபிரகாம் லிங்கன் சிலை! அமெரிக்காவின் வொஷிங்டனில் ஆரம்ப பள்ளிக்கூடத்துக்கு வெளியில் வைக்கப்பட்டுள்ள ஆபிரகாம் லிங்கனின் மெழுகு சிலை உருகி வருகிறது. அங்கு நிலவி வரும் அதீத வெப்பம் இதற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது உருகி வரும் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஆபிரகாம் லிங்கனின் ஆறு அடி மெழுகு சிலை அவரது நினைவிடத்தில் வைக்கப்பட்டுள்ள சிலையை போலவே வடிவமைக்கப்பட்டதாகும். அந்த சிலையின் தலை பகுதி, கால்கள் தற்போது உருகி உள்ளன. கடந்த சனிக்கிழமை அன்று சுமார் 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் அங்கு நிலவியதாக வானிலை மைய அறிக்கைகள் தெரிவிக்கின்றன. கடந்த பெப்ரவரி மாதம் தான் இந்த வெள்ளை நிற மெழுகு சிலை வடமேற்கு வொஷிங்டன் பகுதியில் அமைந்துள்ள பள்ளிக்கு வெளியே நிறுவப்பட்டுள்ளது. இதனை அமெரிக்க கைவினை கலைஞர் சான்டி வில்லியம்ஸ் வடிவமைத்துள்ளார். சிலையின் தலை பகுதி உருகிய நிலையில் அது கீழே விழுந்து சேதமடையாத வகையில் அதனை பத்திரப்படுத்தி உள்ளனர் தன்னார்வலர்கள். மேலும், சிலை வடிவமைப்பு பணிக்கு பயன்படுத்தப்பட்டுள்ள மெழுகு சிலை 140 டிகிரி வெப்பம் வரை தாங்கும் தன்மை கொண்டது என்றும் தெரிவித்துள்ளனர். அமெரிக்க நாட்டின் பல்வேறு பகுதிகளின் வெப்பத்தின் தாக்கம் அதி தீவிரமாக காணப்படுகிறது. மத்திய மற்றும் கிழக்கு பிராந்தியங்களில் வசிக்கும் இந்த மாதம் அதீத வெப்பத்தை எதிர்கொள்ள வேண்டி இருக்கும் என வானிலை அறிக்கைகள் தெரிவித்தன. அதனால் மக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு நாட்களாக அந்த வெப்பத்தின் தாக்கம் தீவிரமாக இருந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்படுவது குறிப்பிடத்தக்கது. https://thinakkural.lk/article/304634
  4. அவுஸ்திரேலிய திரும்புகின்றார் ஜூலியன் அசஞ்சே Published By: RAJEEBAN 26 JUN, 2024 | 02:07 PM விக்கிலீக்ஸ் ஸதாபகர்களில் ஒருவரான ஜூலியன் அசஞ்சே நாடு திரும்பவுள்ளமை குறித்து அவுஸ்திரேலிய பிரதமர் அன்டனி அல்பெனிஸ் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையில் இதனை தெரிவித்துள்ள அவர் தனது குடும்பத்தினருடன் இணைவதற்காக அவர் அவுஸ்திரேலியா நோக்கி வந்துகொண்டிருக்கின்றார் என்பது குறித்து மகிழ்ச்சியடைகின்றேன் என குறிப்பிட்டுள்ளார். அவரது நடவடிக்கைகள் பற்றிபல கருத்துக்கள் இருக்கலாம் ஆனால் அவரது விவகாரம் நீண்டநாட்கள் நீடித்துள்ளது என அவுஸ்திரேலிய பிரதமர் தெரிவித்துள்ளார். அவரை தொடர்ந்து தடுத்துவைப்பதால் எந்த பலனும் கிடைக்கப்போவதில்லை என நான் தொடர்ச்சியாக தெரிவித்துவந்துள்ளேன்இநாங்கள் பதவியேற்ற பின்னர் கடந்த இரண்டு வருடங்களாக எங்கள் அரசாங்கம் இந்த விடயத்திற்கு தீர்வை காண்பதற்காக பல மட்டங்களில் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டது என அவுஸ்திரேலிய பிரதமர் தெரிவித்துள்ளார்.உரிய வழிமுறைகள் அனைத்தையும் பயன்படுத்தினோம் என அவர் குறிப்பிட்டுள்ளார். விக்கிலீக்ஸ் நிறுவுனர்Julian Assange அமெரிக்க நீதிமன்ற விசாரணைகளின் பின்னர் முழுமையாக விடுதலை செய்யப்பட்டுள்ளார். இன்று மாலை அவர் ஆஸ்திரேலியா திரும்புகின்றார். இதனையடுத்து இன்றிரவு கன்பராவில் விசேட ஊடக சந்திப்பொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தன்னை விடுதலை செய்வதாக அமெரிக்கா உத்தரவாதம் அளித்தால் அமெரிக்காவை உளவு பார்த்தது இராணுவ ரகசியங்களை வெளியிட்டது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை துரடயைn யுளளயபெந ஒப்புக்கொண்டார். இந்த ஒப்பந்தம் ஏற்கப்பட்டதை அடுத்து நேற்று முன்தினம் இரவு லண்டன் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட ஜூலியன் அசஞ்சே Julian Assange இன்று அமெரிக்கா புறப்பட்டார். அமெரிக்காவின் பசுபிக் தீவுகள் பிராந்தியமான சைபன் நீதிமன்றத்தில் ஆஜரான நிலையில் ஜூலியன் அசஞ்சே Julian Assange மீதான குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை 3 மணிநேரம் நடைபெற்றது. இதன்போது அமரிக்காவை உளவு பார்த்தது இராணுவ ரகசியங்களை கசியவிட்டது உள்ளிட்டவற்றை நீதிபதியின்முன் ஒப்புக்கொண்ட அசாஞ்சே அமெரிக்க அரசியல் அமைப்புச் சட்டத்திலேயே பேசுவதற்கான சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ள நிலையில் தான் செய்தது எப்படி குற்றமாகும் என்று வாதிட்டார். விசாரணையின் இறுதியில் ஜூலியன் அசஞ்சே Julian Assange குற்றவாளிதான் என்று தீர்ப்பளித்த நீதிபதி ஏற்கனவே லண்டன் சிறையில் தண்டனைக் காலத்தை அனுபவித்ததால் அவரை விடுதலை செய்வதாக தீர்ப்பளித்தார். https://www.virakesari.lk/article/187020
  5. Published By: RAJEEBAN 26 JUN, 2024 | 01:09 PM உக்ரைனில் இடம்பெற்ற யுத்த குற்றங்களிற்காக ரஸ்யாவின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் தற்போதைய இராணுவ பிரதானிக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடியாணையை பிறப்பித்துள்ளது. உக்ரைன் மீதான ரஸ்யாவின் படையெடுப்பின் போது உக்ரைனின் சிவில் உட்கட்டமைப்பு மற்றும் மின்நிலையங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலிற்காகவே ரஸ்ய அதிகாரிகளிற்கு எதிராக சர்வதேச நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் சேர்ஜி சொய்குவும் மற்றும் பாதுகாப்பு பிரதானி வலெரி ஜெராசிமோவும் பொதுமக்கள் இலக்குகளை தாக்கியமை, பொதுமக்களிற்கு கடும் பாதிப்புகளை ஏற்படுத்தியமை, சேதப்படுத்தியமை மூலம் யுத்த குற்றங்களில் ஈடுபட்டனர் என ஐசிசி தெரிவித்துள்ளது. அவர்கள் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டனர் எனவும் சர்வதேச நீதிமன்றம் குற்றம்சாட்டியுள்ளது. ஹேக் நீதிமன்றம் அவர்களிற்கு எதிராக பிடியாணை பிறப்பித்துள்ள போதிலும் அவர்கள் ரஸ்யாவில் இருப்பதால் கைதுசெய்யப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் குறைவாக உள்ளன. ரஸ்யா ரோம் பிரகடனத்தில் கைச்சாத்திடவில்லை என கார்டியன் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/186999
  6. Published By: DIGITAL DESK 3 26 JUN, 2024 | 12:18 PM எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கடந்த ஒரு வாரத்தில் 30-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் அடுத்தடுத்து இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு வருவதன் எதிரொலியாக, ராமேஸ்வரத்திலிருந்து மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் சர்வதேச கடல் எல்லையை தாண்டி செல்ல வேண்டாம் எனவும், உயிர்காக்கும் உபகரணங்களை கையில் வைத்துக் கொள்ளுமாறு ராமேஸ்வரம் மீன்வளத்துறை அதிகாரிகள் ஒலிபெருக்கி மூலமாக எச்சரிக்கை விடுத்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் இருந்து கடந்த சனிக்கிழமை மீன் பிடிக்க சென்ற மூன்று விசைப்படகுகளையும் அதிலிருந்து 22 மீனவர்களையும் எல்லை தாண்டி பிடித்ததாக இலங்கை கடற்படை கைது செய்து யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர். அதனை தொடர்ந்து நேற்று 10 நாகை மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து யாழ்ப்பாணம் சிறையில் அடைத்துள்ளனர். தமிழக மீனவர்களை தொடர்ந்து இலங்கை கடற்படை கைது செய்து வருவதால் மீனவர்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், சனிக்கிழமை மீன் பிடிக்க சென்ற 22 ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படை சிறை பிடித்ததை கண்டித்து ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து, இன்று வேலை நிறுத்தப் போராட்டம் முடிந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்ற ராமேஸ்வரம் மீனவர்களுக்கு ராமேஸ்வரம் மீன்வளத்துறை உதவி இயக்குனர் அப்துல் காதர் ஜெய்லானி உத்தரவின் பேரில் மீன்வளத் துறை அதிகாரிகள் ஒலிபெருக்கி வாயிலாக “இந்திய இலங்கை சர்வதேச கடல் எல்லையை தாண்டி இலங்கை கடற்பரப்பிற்குள் மீன்பிடிக்க செல்லக்கூடாது, உயிர் காக்கும் உபகரணங்களை வைத்திருக்க வேண்டும், மீனவர் அடையாள அட்டை மற்றும் மீன்பிடி படகின் உரிய ஆவணங்களை வைத்துக் கொள்ளுமாறு” எச்சரிக்கை விடுத்துள்ளனர். https://www.virakesari.lk/article/187006
  7. சாதிவாரி கணக்கெடுப்பு: மோதி தயங்குவது ஏன்? ஸ்டாலின் முன் உள்ள தடைகள் என்ன? - 6 கேள்வி பதில்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES 37 நிமிடங்களுக்கு முன்னர் சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்த வலியுறுத்தி சட்டசபையில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தனித் தீர்மானம் குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டது. ’’இந்திய மக்கள் அனைவருக்கும் கல்வி, பொருளாதாரம், வேலைவாய்ப்பு ஆகியவற்றில் சம உரிமை மற்றும் வாய்ப்பு கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் திட்டங்களைத் தீட்டி, சட்டங்கள் இயற்ற வழிவகை செய்ய சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு அவசியம்." "எனவே, 2021ஆம் ஆண்டு மேற்கொள்ள வேண்டிய மக்கள் தொகை கணக்கெடுப்பை உடனே தொடங்க வேண்டும் என்றும், அத்துடன் சாதிவாரி கணக்கெடுப்பையும் இணைத்தே நடத்த வேண்டும் எனவும் மத்திய அரசை வலியுறுத்துகிறோம்’’ என்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்தார். முதல்வர் ஸ்டாலின் கொண்டு வந்த தனித் தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் சாதிவாரிக் கணக்கெடுப்பை ஏன் அரசியல் கட்சிகள் வலியுறுத்துகின்றன? மாநில அரசால் இந்தக் கணக்கெடுப்பை நடத்த முடியாதா? மத்திய அரசின் நிலைப்பாடு என்ன? சாதிவாரி கணக்கெடுப்பு ஏன் தேவை? பட மூலாதாரம்,DIPR மக்களுக்குக் கல்வி, பொருளாதாரம், வேலைவாய்ப்பு ஆகியவற்றில் சம வாய்ப்பு, சம உரிமை வழங்க சாதிவாரி கணக்கெடுப்பு முக்கியம் எனக் கருதப்படுகிறது. சாதி ரீதியில் மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்துவதால் பல கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியும் என்கிறார் அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் ஊழியர் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் கோ. கருணாநிதி. "இட ஒதுக்கீடு அளிக்கச் சரியான தரவுகள் தேவை. அடுத்தபடியாக, பல நலத் திட்டங்களை அரசு மேற்கொள்கிறது. அப்போது ஒவ்வொரு சமூகத்தின் சமூக - பொருளாதார பின்னணி தெரிய வேண்டும். அடுத்ததாக, பல்வேறு சாதிகள் தங்கள் எண்ணிக்கை சார்ந்து பல கோரிக்கைகளை முன்வைக்கிறார்கள். அந்தக் கோரிக்கைகள் சரியா என்பதை அறிய இந்தக் கணக்கெடுப்பு உதவும்" என்கிறார் அவர். இந்தியாவில் தமிழ்நாடு, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் மாநில அரசுகள் நீண்ட காலமாக இட ஒதுக்கீட்டைப் பின்பற்றி வருகின்றன. ஆனால், இந்த நடைமுறையில் நீதிமன்றங்கள் பல முறை குறுக்கிட்டுள்ளன. "இட ஒதுக்கீடு தொடர்பாக மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்தால் போதிய புள்ளிவிவரங்கள் இல்லை என்று கூறி, உச்ச நீதிமன்றம் அதை ரத்து செய்கிறது. பரந்துபட்ட மக்கள் எல்லா அதிகாரங்களையும் பெற சாதிவாரி கணக்கெடுப்பு தேவை" என்கிறார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளரான து.ரவிக்குமார். பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். சாதிவாரி கணக்கெடுப்பு கடைசியாக எப்போது எடுக்கப்பட்டது? கடந்த 1865ஆம் ஆண்டில் அப்போதைய பிரிட்டிஷ் இந்தியாவின் ஒரு மாகாணமான வட-மேற்கு எல்லைப்புற மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பே இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட முறையான மக்கள் தொகை கணக்கெடுப்பாகக் கருதப்படுகிறது. கடந்த 1931ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பு பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட கடைசி முழுமையான மக்கள் தொகை கணக்கெடுப்பாகக் கொள்ளப்படுகிறது. இந்தியா சுதந்திரமடைந்த பிறகு நடந்த மக்கள் தொகை கணக்கெடுப்பில், சாதிகள் விவரம் சேகரிக்கப்படவில்லை. ஆனால், பட்டியல் பிரிவில் இருக்கும் பழங்குடியினருக்கும் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பதால், அவர்களது எண்ணிக்கை மட்டும் சேகரிக்கப்பட்டது. மற்ற சாதியினர் குறித்த தகவல்கள் சேகரிக்கப்படவில்லை. ஆகவே, மற்ற சாதியினரின் எண்ணிக்கையைப் பொறுத்தவரை, 1931ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் இருந்த விகிதமே இப்போதும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. 2011ஆம் ஆண்டில் நடந்த மக்கள் தொகை கணக்கெடுப்பில், சாதி தொடர்பான தகவல்கள் சேகரிக்கப்பட்டாலும், அவை வெளியிடப்படவில்லை. இந்தியாவில் கடைசி மக்கள் தொகை கணக்கெடுப்பு 2011இல் மேற்கொள்ளப்பட்டது. அதற்கடுத்த கணக்கெடுப்பு, 2021இல் மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அந்தத் தருணத்தில் கோவிட் பரவல் இருந்த காரணத்தால், மேற்கொள்ளப்படவில்லை. அடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பு எப்போது மேற்கொள்ளப்படும் என்பது இதுவரை தெளிவுபடுத்தப்படவில்லை. சாதிவாரி கணக்கெடுப்பை மாநில அரசால் மேற்கொள்ள முடியுமா? பட மூலாதாரம்,GETTY IMAGES சட்டமன்றத்தில் தனித் தீர்மானம் கொண்டு வந்து பேசிய தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின், "புள்ளிவிவர சட்டம் 2008இன் படி சாதிவாரி கணக்கெடுப்பை மேற்கொள்ளும் மாநில அரசுகள் மக்களின் சமூக, பொருளாதார புள்ளி விவரங்களைச் சேகரிக்க மட்டுமே வழிவகை செய்யப்பட்டுள்ளது." "இந்தச் சட்டத்தின் பிரிவு 3இல் உள்ள உட்பிறவு ஆ-வின் படி, இந்திய அரசமைப்பு சட்டத்தின் 7வது அட்டவணையில் உள்ள இனங்கள் தொடர்பான புள்ளி விவரங்களை மாநில அரசால் சேகரிக்க இயலாது. அதாவது 7வது அட்டவணையில் தான் மக்கள் தொகை கணக்கெடுப்பு, 69வது இனமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது." என்றார். மேலும், "இச்சட்டத்தின் பிரிவு 32இன்படி, மக்கள் தொகை கணக்கெடுப்பு சட்டம் 1948இன் கீழ் மக்கள் தொகை தொடர்பான புள்ளிவிவரங்களை (census data) மாநில அரசால் சேகரிக்க இயலாது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பான விவகாரம் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது,’’ என முதல்வர் மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். மாநில அரசே சாதிவாரி கணக்கெடுப்பை எடுத்தால் என்ன பிரச்னை? பாமக கெளரவ தலைவரும், பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினருமான ஜி.கே மணி, "மத்திய அரசு சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவதற்காக தமிழ்நாடு அரசு காத்திருக்க வேண்டாம். பிகார், ஆந்திரா போன்ற மாநிலங்கள் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தியுள்ள நிலையில், தமிழக அரசு ஏன் நடத்தவில்லை?’’ எனக் கேள்வி எழுப்பியுள்ளார். அரசமைப்பு சட்டம் 246இன் படி மக்கள் தொகை கணக்கெடுப்பு மத்திய அரசின் பட்டியலில் உள்ளது. சட்டப்படியாக நிலைக்கக்கூடிய சாதிவாரி கணக்கெடுப்பு என்றால், அது மத்திய அரசு பட்டியலில் உள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பு சட்டத்தின் மூலமே மேற்கொள்ள முடியும். மக்கள் தொகை மற்றும் சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு மேற்கொண்டு, கிடைக்கப்பெறும் புள்ளிவிவரங்களின் அடிப்படையில் மாநில அரசுகள் மேற்கொள்ளும் பணிகளுக்குத்தான் சட்டப்படியான பாதுகாப்புகள் இருக்கும். இதைத் தவிர்த்து, அந்தந்த மாநில அரசுகள் மேற்கொள்ளும் சர்வே மூலம் புள்ளிவிவரங்களைச் சேகரித்து அதன் அடிப்படையில் சட்டங்களை இயற்றினால் நீதிமன்றங்களால் ரத்து செய்யப்படும் வாய்ப்புகள் உள்ளன. பிகாரில் கடந்த ஆண்டு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டன. அதன் தொடர்ச்சியாக இட ஒதுக்கீடு சட்டங்களில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. இதற்கு எதிராக பாட்னா உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள், அரசின் 2 திருத்தச் சட்டங்களையும் ரத்து செய்து உத்தரவிட்டனர். 2011 கணக்கெடுப்பு முடிவுகள் ஏன் வெளியிடப்படவில்லை? பட மூலாதாரம்,GETTY IMAGES கடந்த 2011ஆம் ஆண்டு மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பும் நடத்தப்பட்டது. ஆனால், முடிவுகள் வெளியிடப்படவில்லை. அதன்பிறகு ஆட்சிக்கு வந்த மோதி தலைமையிலான அரசும் கணக்கெடுப்பு முடிவுகளை வெளியிடவில்லை. இந்தக் கணக்கெடுப்பு பல குறைபாடுகள் கொண்டது என்றும், நம்பகத்தன்மையற்றது என்றும், இட ஒதுக்கீடு மற்றும் கொள்கையின் நோக்கங்களுக்காகப் பயன்படுத்த முடியாதது என்றும் அரசு கூறியது. தரவுகளில் உள்ள குறைபாடுகள் காரணமாக, நிதி ஆயோக்கின் அப்போதைய துணைத் தலைவர் அரவிந்த் பனகாரியா தலைமையில் ஒரு நிபுணர் குழுவை அமைக்க அரசு முடிவு செய்தது. ஆனால் கமிட்டியின் மற்ற உறுப்பினர்கள் பெயர் அறிவிக்கப்படாததால், அந்தக் குழு ஒருபோதும் மக்களைச் சந்திக்கவில்லை. இதன் விளைவாக, மூலத் தரவுகளைத் தொகுத்து, வெளியிடக்கூடிய கணக்கெடுப்பாக மாற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மத்திய அரசின் நிலைப்பாடு என்ன? கடந்த 2021ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்போது இந்தியாவில் உள்ள பிற்படுத்தப்பட்ட மக்கள் பற்றிய தரவுகளைச் சேகரிக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி மகாராஷ்டிர அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இதற்கு மத்திய அரசு 2021ஆம் ஆண்டு செப்டம்பர் 23 அன்று எழுத்துப்பூர்வமாகப் பதிலளித்தது. அதில், சமூக-பொருளாதார சாதிக் கணக்கெடுப்பை நடத்துவது நிர்வாக ரீதியாகக் கடினமானது மற்றும் சிக்கலானது(வழக்கமாக எடுக்கப்படும் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி பிரிவினரின் கணக்கெடுப்பைத் தவிர) எனக் கூறியது. மேலும் தனது பதிலில், "வெவ்வேறு பட்டியல்களின்படி சாதி வகைகளில் உள்ள வேறுபாட்டை மத்திய அரசு சுட்டிக்காட்டாது. மத்திய பட்டியலில் 2,479 பிற்படுத்தப்பட்ட சாதிகள் உள்ளன, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் பட்டியல்களின்படி 3,150 சாதிகள் உள்ளன" என்று மத்திய அரசு கூறியது. மேலும், "மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது சாதி தொடர்பான கேள்வியைக் கேட்டால், அதற்குப் பல ஆயிரம் சாதிப் பெயர்கள் பதிலாக வரும். ஏனெனில், சாதி குறித்துக் கேட்கும்போது மக்கள் தங்கள் குலம், கோத்ரம், துணை சாதி என ஒன்றுக்கொன்று மாறுபட்ட வகையில் பயன்படுத்துவதால் கணக்கெடுப்பு தரவுகளில் குழப்பம் ஏற்படும்" என்று தனது பதிலில் மத்திய அரசு கூறியுள்ளது. https://www.bbc.com/tamil/articles/cjeerg0rr1lo
  8. Published By: VISHNU 26 JUN, 2024 | 07:41 PM இலங்கை இன்று 26ஆம் திகதி புதன்கிழமை முற்பகல் பெரிஸ் நகரில் தனது முக்கிய உத்தியோகபூர்வ இருதரப்பு கடன் வழங்குநர்களுடன் கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகளை நிறைவு செய்துள்ளதுடன் உத்தியோகபூர்வ கடன் வழங்குநர் குழுவுடன் இறுதி இணக்கப்பாட்டை எட்டியுள்ளது. மேலும், கடன் மறுசீரமைப்பு தொடர்பில் சீனாவின் எக்ஸிம் வங்கியுடன் பீஜிங்கில் இலங்கை இன்று இறுதி இணக்கப்பாட்டை எட்டியதுடன் அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திலும் கையெழுத்திடப்பட்டது. இந்த இணக்கப்பாடுகளுடன், இலங்கை தனது முக்கிய உத்தியோகபூர்வ இருதரப்பு கடன் வழங்குநர்களுக்கான கடன் மறுசீரமைப்பு இணக்கப்பாடுகளை வெற்றிகரமாக நிறைவுசெய்துள்ளது. இந்த உத்தியோகபூர்வ கடன் வழங்குநர் குழுவுடன் ஜப்பான், இந்தியா மற்றும் பிரான்ஸ் இணைந்து தலைமை தாங்கின. அவுஸ்திரேலியா, ஒஸ்டிரியா, பெல்ஜியம், கனடா, டென்மார்க், ஜெர்மனி, ஹங்கேரியா, கொரியா, நெதர்லாந்து, ரஷ்யா, ஸ்பெயின், ஸ்வீடன், ஐக்கிய இராச்சியம் மற்றும் அமெரிக்கா ஆகியவை இந்த உத்தியோகபூர்வ கடன் வழங்குநர்கள் குழுவின் ஏனைய உறுப்பினர்கள் இருந்தன. உத்தியோகபூர்வ கடன் வழங்குநர்கள் மற்றும் சீனா எக்ஸிம் வங்கி மூலம் மறுசீரமைக்கப்பட வேண்டிய கடனின் ஒருங்கிணைந்த மதிப்பு 10 பில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆகும். 2022ஆம் ஆண்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை அடுத்து இலங்கை அந்நிய செலாவணிக் கையிருப்பை இழந்தது. இதனால் கடன் செலுத்த முடியாத நாடாக அறிவித்தது. இலங்கையை மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டுவர சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடப்பட்டது. கடன் நிலைபேற்றுத் தன்மையற்ற நாடுகளுக்கு கடன் வழங்க சர்வதேச நாணய நிதியத்திற்கு முடியாது என்பதால் இலங்கை தனது அரச கடன் மறுசீரமைக்கும் செயற்பாட்டை ஆரம்பித்தது. சர்வதேச நாணய நிதியத்தின் கடன் நிலைபேற்றுத்தன்மை பகுப்பாய்வு (Debt Sustainability Analysis - DSA) ஆரம்பத்தில் கடன் மறுசீரமைப்பு செயல்முறையின் மூலம் கடன் நிவாரண அளவு தீர்மானிக்கப்படுகிறது. அதன் பின்னர், குறித்த கடன் வழங்குநர்கள் மற்றும் கடனில் உள்ள நாடும் சர்வதேச நாணய நிதியத்தின் கடன் நிலைபேற்றுத்தன்மை பகுப்பாய்வு மூலம் காட்டப்படும் இலக்கை அடையத் தேவையான பணிகளை பூர்த்தி செய்ய வேண்டும். இதற்காக கடன் மறுசீரமைப்புப் பேச்சுவார்த்தைகளை இலங்கை தொடர்ந்து முன்னெடுத்தது. சர்வதேச நாணய நிதிய கடன் நிலைத்தன்மை பகுப்பாய்வில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள இலக்குகளின் அடிப்படையில் வழங்கப்படும் கடன் நிவாரணம் ஒவ்வொரு நாட்டிற்கும் மாறுபடும். கடன் வழங்கும் நாடுகள் வெவ்வேறு வழிகளில் கடன் நிவாரணம் வழங்குகின்றன. உத்தியோகபூர்வ கடன் வழங்கும் குழு மற்றும் சீனாவின் எக்ஸிம் வங்கி போன்ற உத்தியோகபூர்வ கடன் வழங்குநர்கள் இவற்றை வெவ்வேறாக தீர்மானிக்கின்றன. காலத்தை நீடித்தல், விதிமுறைகளை தளர்த்துதல் மற்றும் வட்டி விகிதங்களைக் குறைத்தல் ஆகியவற்றின் மூலம் கடன் நிவாரணம் வழங்கப்படுகிறது. உத்தியோகபூர்வ கடன் வழங்குநர் குழு மற்றும் சீனாவின் எக்ஸிம் வங்கியுடனான மறுசீரமைப்பு ஒப்பந்தங்கள் இரண்டும் குறிப்பிடத்தக்க கணிசமான கடன் நிவாரணத்தை இலங்கைக்கு வழங்கியுள்ளது. பொருளாதாரம் மீளவும் வழமைக்கு திரும்பும் வரையில் எதிர்காலத்தில் கடன் சேவைத் திறன் மேம்படும் வரை குறுகிய காலத்தில் இலங்கைக்கான தற்போதைய கட்டணச் சுமையை இது குறைக்கும். இதை மதிப்பிடுவதற்காக உத்தியோகப்பூர்வ கடன் வழங்குநர் குழு மற்றும் சீனா எக்ஸிம் வங்கியுடனான மறுசீரமைப்பு ஒப்பந்தங்கள் ஊடாக ஐஎம்எப் உடனான நிகழ்ச்சி நிரல் அமுல்படுத்தப்படும் காலப்பகுதியில், செலுத்த வேண்டிய குறித்த கடனில் நிவாரணம் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு கடன் வழங்குநருடனும் கடன் மறுசீரமைப்பு மேற்கொள்ளும் போது ஐஎம்எப் கடன் நிலைத்தன்மை பகுப்பாய்வில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அடைய வேண்டும். அத்துடன், ஏனைய கடன் வழங்குநர்களுடன் எட்டப்பட்ட கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தங்களுடன் ஒப்பிடப்படும் வகையில் இது இருக்க வேண்டும். அடுத்த கட்டமாக, வர்த்தக பிணைமுறி உரிமையாளர்களுடனான இறுதிக் கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தங்களை எட்டுவதை இலங்கை துரிதப்படுத்தும். முறையான கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தங்களை வெற்றிகரமாக முடிப்பது இந்த செயல்முறையை எளிதாக்கும். இன்று எட்டப்பட்ட கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தங்கள் பின்வரும் நன்மைகளை உள்ளடக்கியது: 1. நிதி நிவாரணம்: இலங்கையின் வரி வருவாயை கடனை செலுத்துவதற்கு பதிலாக அத்தியாவசிய பொது சேவைகளுக்கு பயன்படுத்த முடியும். இது பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கு கால அவகாசத்தை வழங்குகிறது. 2. வெளிநாட்டு நிதி: முக்கிய உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு இருதரப்பு நிதியுதவி வசதிகளைப் பெறுவதை மீண்டும் தொடங்கலாம். வரவு செலவுத்திட்டத்தின் மூலதன செலவினங்களை ஆதரிக்க குறுகிய கால வெளிநாட்டு நிதி கிடைப்பதில் இது குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இது நிர்மாணத்துறை போன்ற துறைகளில் சாதகமான விளைவுகளையும், முக்கியமான உள்கட்டமைப்பு மேம்பாட்டில் நடுத்தர முதல் நீண்ட கால சாதகமான விளைவுகளையும் ஏற்படுத்தும். 3. கடன் தரப்படுத்தல்: இலங்கையின் கடன் தரப்படுத்தலை பழைய நிலைக்கு கொண்டுவருவதற்கு ஒரு முக்கியமான முன்னெடுப்பாக உத்தியோகபூர்வ கடன் மறுசீரமைப்பின் முடிவு அமையும். வர்த்தக பிணைமுறி உரிமையாளர்களின் கடன்களும் விரைவாக மறுசீரமைக்கப்பட்ட பின்னர், அது கடன் தரப்படுத்தலின் உயர்வுக்கு வழிவகுக்கிறது. உத்தியோகபூர்வ கடன் மறுசீரமைப்பின் முடிவானது வெளிநாட்டு நிதியுதவிக்கான எளிதான பிரவேசம் என்பதுடன் குறைந்த செலவு போன்ற வழிகளின் ஊடாக குறிப்பிடத்தக்க நன்மைகளை வழங்கும். இது வர்த்தக நிதியிலிருந்து வங்கிகளுக்கு இடையேயான நிதியுதவி வரை அனைத்து துறைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். https://www.virakesari.lk/article/187055
  9. அதிபர், ஆசிரியர்கள் மீது கண்ணீர் புகை, நீர்த்தாரை பிரயோகம்! ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் போராட்டத்தின் மீது பொலிஸாரால் நீர் மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது. இதனால் கொழும்பு கோட்டை பகுதி மற்றும் ஜனாதிபதி செயலக பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்தப் போராட்டத்தை அமைதியான முறையில் நடத்த நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. எவ்வாறாயினும், கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு அருகில் ஆரம்பிக்கப்பட்ட இந்த போராட்டம் பொலிஸாரின் தடைகளையும் மீறி ஜனாதிபதி செயலகம் நோக்கி நகர்ந்தது. போராட்டக்காரர்களை கலைக்க பொலிஸார் நீர் மற்றும் கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். கோட்டைக்கு முன்பாகவுள்ள வீதி முற்றிலும் தடை ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக உள்ள வீதி போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/304605
  10. Published By: DIGITAL DESK 3 26 JUN, 2024 | 05:13 PM பல வெளிநாட்டு பிரஜைகளையும் உள்ளூர் மக்களையும் குறிவைத்து இணையம் ஊடாக நிதி மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படும் வெளிநாட்டு பிரஜை உட்பட 33 பேரை நீர்கொழும்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கைது செய்துள்ளது. டிக்டொக் வீடியோக்களை லைக் செய்வதற்கும், கருத்து தெரிவிப்பதற்கும் பணம் தருவதாக கூறி வட்ஸ்அப் குழு ஒன்றில் பெண்ணொருவர் இணைந்துள்ளார். ஆரம்பத்தில் லைக் மற்றும் கமெண்ட் செய்ததற்காக இந்த பெண் பணம் பெற்றுள்ளார். பின்னர் தொடர்ந்து பணத்தை பெற்றுக்கொள்ள வங்கிக் கணக்கில் 5.4 மில்லியன் ரூபாய் முதலீடு செய்துள்ளார். பணத்தை முதலீடு செய்த போதிலும் அவர் திரும்ப பணத்தை பெறவில்லை. இந்நிலையில், குறித்த பெண் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். பெண்ணின் முறைப்பாட்டிற்கு அமைய வங்கிக் கணக்குகள் தொடர்பான மேலதிக விசாரணைகளின் போது தந்தை மற்றும் மகன் ஆகிய இருவரை பொலிஸார் கைது செய்தனர். இதேவேளை, பீட்சா ஆர்டர் செய்யப்பட்ட வங்கி கணக்கொன்றின் மூலம் நீர்கொழும்பிலுள்ள வீடொன்றில் சோதனை நடத்திய போது இரண்டு பெண்கள் உட்பட 13 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். மோசடி நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்ட 57 கையடக்க தொலைபேசிகள், 13 கணினிகள் மற்றும் 3 மடிக்கணினிகளை அதிகாரிகளால் கைப்பற்ப்பட்டன. நீர்கொழும்பில் மற்றொரு சொகுசு விட்டில் பாகிஸ்தான், இந்தியா, பங்களாதேஷ் மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த 19 கூடுதல் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த இடத்தில் இருந்து 52 மொபைல் போன்கள் மற்றும் 33 கணினிகளை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் பொலிஸார் கைப்பற்றினர். அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், இந்த மோசடியில் வெளிநாட்டவர்களும் சிக்கியது தெரியவந்தது. இவர்களின் கிளைகள் துபாய் மற்றும் ஆப்கான் இராச்சியங்களிலும் இருப்பதும் தெரியவந்துள்ளது. சமூக ஊடகங்கள் வாயிலாக பிரபல நிறுவனங்களின் பெயர்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் மோசடிகள் குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையாக செயற்படுமாறு இலங்கை கணினி அவசர தயார் நிலைக் குழு கோரிக்கை விடுத்துள்ளது. https://www.virakesari.lk/article/187028
  11. 26 JUN, 2024 | 04:53 PM ஆசனவாயிலிலும் பயணப் பொதிகளிலும் சுமார் 18 கோடி ரூபா பெறுமதியான தங்க ஜெல் உருண்டைகளை மறைத்து வைத்துக்கொண்டு துபாயிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த 06 இலங்கையர்களை விமான நிலைய சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கல்முனை, மூதூர், கொழும்பு-10, கலகெடிஹேன மற்றும் மினுவாங்கொடை ஆகிய இடங்களில் வசிக்கும் 30 வயதுக்கும் 50 வயதுக்கும் இடைப்பட்ட ஆறு நபர்களே கைது செய்யப்பட்டுள்ளனர் . கைது செய்யப்பட்டவர்கள், துபாயில் இருந்து சென்னைக்கு வந்து அங்கிருந்து நேற்று செவ்வாய்க்கிழமை (25) பிற்பகல் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர். இதன் போது விமான நிலைய சுங்க அதிகாரிகள் மேற்கொண்ட ஸ்கேன் பரிசோதனையின் போது இவர்களிடம் தங்க ஜெல் உருண்டைகள் இருப்பது தெரியவந்துள்ளது. அவர்களில் 4 பேர் ஆசனவாயிலில் தங்க ஜெல் உருண்டைகளை மறைத்து வைத்திருந்ததாகவும் மேலும் இருவர் 08 கிலோ 632 கிராம் எடையுள்ள 22 தங்க ஜெல் உருண்டைகளை பயணப்பொதிகளில் மறைத்து வைத்திருந்ததாகவும் விமான நிலைய சுங்க அதிகாரி ஒருவர் தெரிவித்தார். கைதானவர்கள் இன்று புதன்கிழமை (26) நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/187030
  12. Published By: VISHNU 26 JUN, 2024 | 07:22 PM கடன் மறுசீரமைப்பு தொடர்பான சீனாவின் எக்ஸிம் வங்கியுடன் இலங்கை 26ஆம் திகதி புதன்கிழமை பீஜிங்கில் இறுதி உடன்பாட்டை எட்டியது. சீன எக்ஸிம் வங்கி மற்றும் இலங்கைக்கிடையில் 4.2 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் மறுசீரமைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கைசாத்திடும் நிகழ்வுகள் சற்று முன்னர் பீஜிங் மற்றும் கொழும்பில் நடைபெற்றன. இந்த மறுசீரமைப்பினால் இலங்கைக்கு குறிப்பிடத்தக்க நிவாரணங்கள் கிடைக்கும் என்பதோடு, அத்தியாவசிய பொதுச் சேவைகளுக்காக அதிகளவில் நிதி ஒதுக்கீடு செய்யவும், நாட்டின் உட்கட்மைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான சலுகை அடிப்படையிலான நிதி வசதிகளை பெற்றுக்கொள்ளவும் முடியும். மேலும் சீனாவிற்கான இலங்கைத் தூதுவர் மஜிந்த ஜயசிங்க அவர்கள் சீனாவிலுள்ள இலங்கைத் தூதரகத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டப்பட்டது அதன் பின்னர் இலங்கைக்கான சீனத் தூதரகத்தில் இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹாங்(Qi Zhenhong) மற்றும் திறைசேரி உதவிச் செயலாளர் ஏ.கே. செனவிரத்ன ஆகியொர் புரிந்துணர்வு ஒப்பந்த கோப்புகளை பரிமாறிக்கொண்டமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/187052
  13. கோழி இறைச்சி மற்றும் முட்டைகள் நன்கு சமைக்கப்படுவதை உறுதி செய்வதோடு , பச்சையாகவோ அல்லது வேகவைக்கப்படாத கோழி இறைச்சியை உட்கொள்வதையும் தவிர்க்குமாறும் சுகாதார அமைச்சு பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. இந்தியாவில் சமீபத்தில் பரவும் பறவைக் காய்ச்சல் (H9) குறித்து சுகாதார அமைச்சகத்தின் கவனத்துடன் சுகாதார மேம்பாட்டுப் பணியகம் இந்த விழிப்புணர்வை வழங்கியுள்ளது . தற்போது, மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் வைராலஜி துறை, H5 மற்றும் H7 விகாரங்களைக் கண்டறியவும், H9 இன்ஃப்ளூயன்ஸா விகாரத்தையும் கண்டறியவும் PCR பரிசோதனை வசதிகளை நிறுவியுள்ளது. பறவைகளையோ அவற்றின் எச்சங்களையோ தொட வேண்டாம் என்றும், கோழிப்பண்ணைகளுக்குச் செல்வதைத் தவிர்க்கவும் மக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும், நோய்வாய்ப்பட்ட அல்லது இறந்த பறவைகள் தங்கள் பகுதிகளில் காணப்பட்டால், உடனடியாக உள்ளூர் சுகாதார அதிகாரிகளுக்கு தெரிவிக்குமாறு சுகாதார அமைச்சகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. https://thinakkural.lk/article/304569
  14. 1500 மீற்றரில் வக்சனுக்கு தங்கம்; குண்டு எறிதலில் மிதுன்ராஜுக்கு வெள்ளி 26 JUN, 2024 | 04:13 PM (நெவில் அன்தனி) தியகம விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் 102ஆவது தேசிய மெய்வல்லுநர் போட்டியில் இராணுவத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் விக்னராஜ் வக்சன் தங்கப் பதக்கத்தையும் எஸ். மீதுன்ராஜ் வெள்ளிப் பதக்கத்தையும் வென்றெடுத்தனர். ஆண்களுக்கான 1500 மீற்றர் ஓட்டப் போட்டியை 3 நிமிடங்கள் 51.61 செக்கன்களில் நிறைவுசெய்து விக்னராஜ் வக்சன் (2625) தங்கப் பதக்கத்தை வென்றெடுத்தார். இவர் தலவாக்கொல்லை மிட்ல்டன் தோட்டத்தைச் சேர்ந்தவராவார். இதேவேளை ஆண்களுக்கான தட்டெறிதல் போட்டியில் 14.94 மீற்றர் தூரத்தைப் பதிவுசெய்த பருத்தித்துறை ஹாட்லி கல்லூரியின் பழைய மாணவரான எஸ். மிதுன்ராஜ் வெள்ளிப் பதக்கத்தை வென்றெடுத்தார். நேற்று மாலை நடைபெற்ற ஆண்களுக்கான 10,000 மீற்றர் ஓட்டப் போட்டியில் புசல்லவையைச் சேர்ந்த ஜெயகந்தான் பிரசான் (இராணுவம் 31:52.58) வெள்ளிப் பதக்கத்தையும் நுவரெலயா ஒலிஃபன்ட் தோட்டத்தைச் சேர்ந்த முத்துசாமி சிவராஜன் (விமானப்படை - 32:01.54) வெண்கலப் பதக்கத்தையும் வென்றெடுத்தனர். தியகமவில் நடைபெற்றுவரும் 102ஆவது தேசிய மெய்வல்லுநர் போட்டியானது சிறப்பு வீரர்களுக்கான ஒலிம்பிக் தகுதிகாண் போட்டியாகவும் அமைகிறது. எவ்வாறாயினும் முதல் இரண்டு தினங்களில் சிறப்பு மெய்வல்லுநர்களில் யாரும் ஒலிம்பிக் அடைவு மட்டத்தை எட்டவில்லை. ஆண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியை 45.51 செக்கன்களில் நிறைவு செய்த அருண தர்ஷன 0.49 செக்கன்களால் ஒலிம்பிக் அடைவு மட்டத்தை தவறவிட்டார். எனினும் அவருக்கு கிடைத்துள்ள தரவரிசை புள்ளிகளின் பிராகாம் அவர் ஒலிம்பிக் வாயிலை அண்மித்துள்ளதாகத் தெரிகிறது. அருண தர்ஷன தங்கப் பதக்கத்தை வென்றதுடன் அவருடன் போட்டியிட்ட காலிங்க குமாரகே (46.38 செக்.) வெள்ளிப் பதக்கத்தை வென்றார். ஒலிம்பிக் தகுதியைப் பெறுவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஈட்டி எறிதல் வீராங்கனை டில்ஹானி லேக்கம்கே முதலாம் இடத்தைப் பெற்று தங்கப் பதக்கத்தை வென்றபோதிலும் ஒலிம்பிக் அடைவுமட்டத்தைவிட வெகுதூரம் பின்னிலையில் இருந்தார். டில்ஹானி லேக்கம்கே ஈட்டியை 55.77 மீற்றர் தூரத்துக்கு எறிந்தே தங்கப் பதக்கத்தை வென்றெடுத்தார். ஆனால் ஒலிம்பிப் தகுதியைப் பெறுவதற்கு அவர் குறைந்தது 64.00 மீற்றர் தூரத்தைப் பதிவுசெய்திருக்கவேண்டும். இது இவ்வாறிருக்க, இன்று பிற்பகல் யுப்புன் அபேகோன் ஆண்களுக்கான 100 மீற்றர் தகுதிகாண் சுற்றில் பங்குபற்றவுள்ளார். https://www.virakesari.lk/article/187032
  15. பாராளுமன்ற சிறப்புரிமைகள் என்ற போர்வையில், நீதித்துறை மற்றும் நீதிச்சேவைகள் ஆணைக்குழுவின் விவகாரங்களில் தலையிடுவதை பாராளுமன்ற உறுப்பினர்கள் தவிர்க்க வேண்டும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. அவ்வாறான செயற்பாடுகளால் நீதித்துறை மீதான பொதுமக்களின் நம்பிக்கை மீறப்படுவது போன்ற மோசமான விளைவுகள் ஏற்படும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீதித்துறையின் சுதந்திரத்தையும் சட்டவாட்சியையும் பாதுகாப்பதற்கு தாம் அர்ப்பணிப்புடன் இருப்பதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. சுதந்திரமான மற்றும் தைரியமான நீதித்துறையை ஆதரிப்பதாகவும், சட்டவாட்சியை பாதுகாப்பது அவசியம் எனவும் அவர்கள் வௌியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. நீதித்துறை அதிகாரி ஒருவருக்கு எதிராக ஏதேனும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுமாயின், முதலில் அதனை பாரபட்சமின்றி விசாரணை செய்ய வேண்டும் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது. அவ்வாறான விசாரணையின் பின்னர், நீதித்துறை அதிகாரி குற்றமிழைத்துள்ளார் என்பது உறுதி செய்யப்படும் பட்சத்தில், உரிய நடவடிக்கை எடுக்க முடியும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது. https://thinakkural.lk/article/304567
  16. 26 ஜூன் 2024, 07:41 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் ஆண் பாம்பு என தவறுதலாக கருதப்பட்ட பெண் பாம்பு ஒன்று 14 குட்டிகளை ஈன்றுள்ளது. இந்த பெண் பாம்பு கருத்தரிப்பதற்காக ஆண் பாம்புடன் இணை சேரவில்லை. 13 வயதான, ரொனால்டோ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த போவா கன்ஸ்ட்ரிக்டர் வகை பாம்பு, பிரிட்டனின் சிட்டி ஆஃப் போர்ட்ஸ்மவுத் கல்லூரியில் அண்மையில் சில குட்டிகளை ஈன்றது. போவா கன்ஸ்ட்ரிக்டர், மலைப்பாம்பு வகையைச் சேர்ந்தது. இது மத்திய மற்றும் தென் அமெரிக்க நாடுகளில் பரவலாக காணப்படுகிறது. பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். இது குறித்து பேசிய அந்த கல்லூரியின் விலங்குகள் பராமரிப்பு நிபுணரான பீட் குவின்லான், குட்டிகளை ஈன்றதற்கு முன்பு வரை ரொனால்டோ ஒரு ஆண் பாம்பு என்றே தான் நம்பியதாக கூறினார். தன்னுடைய பராமரிப்பில் இருந்த ஒன்பது ஆண்டுகளில் ரொனால்டோ எந்த ஒரு ஆணுடனும் இணை சேரவில்லை என்கிறார் பீட். இணை சேராமல் குட்டியை ஈன்றெடுக்கும் இதுபோன்ற நிகழ்வு பார்தெனோஜெனிசீஸ் என்று அழைக்கப்படுகிறது. இதுபோன்ற நிகழ்வு பிரேசிலிய போவா கன்ஸ்ட்ரிக்டர் வகை பாம்புகளில் இதுவரை மூன்று முறை மட்டுமே நடந்துள்ளது. விலங்குகள் வன்கொடுமை தடுப்புக்கான ராயல் சொசைட்டியிடம் இருந்து ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு ரொனால்டோவை பெற்றதாக பீட் கூறுகிறார். சிட்டி ஆஃப் போர்ட்ஸ்மவுத் கல்லூரியில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு விலங்குகள் பராமரிப்பாளராக பணியில் சேர்ந்ததாகவும், அப்போது தன்னுடன் இந்த பாம்புகளையும் எடுத்து வந்ததாகவும் அவர் விவரித்தார். ரொனால்டோ குட்டியை ஈன்ற நாளன்று பீட் குவின்லான் வேறு இடத்திற்கு சென்றிருந்துள்ளார். அங்கு பயிலும் மாணவர் ஒருவர், ரொனால்டோ இருந்த பெட்டிக்குள் சில பாம்பு குட்டிகள் நெளிவதை அடையாளம் கண்டு, பணியில் இருந்த காவலர்களிடம் கூறியுள்ளார். “உடனடியாக நான் கல்லூரிக்கு விரைந்து வந்தேன். அங்கு நான் பார்த்த போது அந்த பெட்டிக்குள் எங்கு பார்த்தாலும் பாம்புக் குட்டிகள் நிறைந்திருந்தன.” சில விலங்குகளில் இணையில்லாமல் கருத்தரிக்கும் நிகழ்வுகள் நடக்கின்றன. குறிப்பாக முதுகெலும்பில்லாத சில பூச்சிகள், துணையுடன் இனச்சேர்க்கையில் ஈடுபடாமலேயே இனப்பெருக்கம் செய்கின்றன. இதுபோன்ற நடைமுறையின் போது தன்னைப் போலவே மரபணு ரீதியாக ஒத்திருக்கும் சந்ததிகளை அவை உயிரி நகலாக்கம்(க்ளோனிங்) செய்கின்றன. கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்காவில் இணையின் உதவியில்லாமல் ஒரு திருக்கை மீன் தாமாகவே கருத்தரித்தது. அதேபோல ஆணின் துணையில்லாமல் பெண் முதலை தானாகவே கருத்தரித்த சம்பவம் கோஸ்டாரிகாவில் கடந்த ஆண்டு நடந்தது. ஆனால் பாம்பு போன்ற முதுகெலும்பு உள்ள விலங்குகளில் இத்தகைய நிகழ்வு அரிதான ஒன்றாக பார்க்கப்படுகிறது. https://www.bbc.com/tamil/articles/cp6684e2e8po
  17. அதிபர், ஆசிரியர் ஆர்ப்பாட்டப் பேரணி (படங்கள்) அதிபர், ஆசிரியர்களால் இன்று கொழும்பில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டப் பேரணியையும், பொலிஸாரால் பேரணியில் சென்றவர்கள் மீது நீர்த்தாரை மற்றும் கண்ணீர்புகைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதையும் காணலாம். படப்பிடிப்பு – எஸ்.ரி.ரமேஷ் https://thinakkural.lk/article/304621
  18. இந்திய மீனவர்கள் 10 பேருக்கு விளக்கமறியல் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டமை தொடர்பில் கைதான 10 இந்திய மீனவர்களும் மல்லாகம் நீதவானின் உத்தரவுக்கமைய எதிர்வரும் ஜூலை 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் – நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்களை கைது செய்ய சென்ற போது படகிலிருந்து தவறி விழுந்து கடற்படை சிப்பாய் ஒருவர் உயிரிழந்தார். குறித்த கடற்படை சிப்பாய் இந்திய மீனவர்களின் தாக்குதலில் உயிரிழந்தார் எனச் செய்திகள் வெளியான போதும், கடற்படை பேச்சாளர் அதனை மறுத்திருந்தார். எவ்வாறாயினும் கைது நடவடிக்கையின்போது, உயிரிழப்பொன்று ஏற்பட்டதால் காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்து வரப்பட்ட மீனவர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக காங்கேசன்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். இதன்படி 10 இந்திய மீனவர்களும் நேற்று (25) மல்லாகம் நீதவான் முன்னிலையில் முற்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதவான் எதிர்வரும் ஜூலை 8ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார். https://thinakkural.lk/article/304609
  19. கனடா, ஆஸ்திரேலியாவில் மாணவர் விசா விதிகள் கடுமை - தமிழ்நாட்டு மாணவர்கள் என்ன செய்கிறார்கள்? பட மூலாதாரம்,GETTY IMAGES 3 மணி நேரங்களுக்கு முன்னர் வெளிநாடு சென்று கல்வி கற்க வேண்டும் என விரும்பும் இந்திய மாணவர்கள் பெரும்பாலும் தேர்ந்தெடுப்பது கனடா, ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளை தான். குறிப்பாக கனடாவில் கல்வி கற்க இந்திய மாணவர்கள் அதிகளவில் விண்ணப்பிப்பது வழக்கம். ஆனால் கனடா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் சமீப காலமாக, மாணவர் விசாக்களைப் பெறுவதற்கான சட்டங்களையும் விதிமுறைகளையும் கடுமையாக்கி வருகின்றன. தமிழ்நாட்டிலிருந்து இந்த நாடுகளுக்கு சென்று படிக்க விரும்பும் மாணவர்கள் மத்தியில் இந்த புதிய விசா விதிமுறைகள் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன என்பதைப் பார்க்கலாம். பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். விசா விதிகள் கடுமை கனடா அரசாங்கம், இந்த ஆண்டின் தொடக்கத்தில், சர்வதேச மாணவர்கள் எதிர்நோக்கும் பிரச்னைகள் மற்றும் நாட்டின் உட்கட்டமைப்பு சுமைகளை கருத்தில் கொண்டு 2024 ஜனவரி மாதம் முதல் இரண்டு வருடங்களுக்கு வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கையை 35 சதவிகிதம் வரை குறைப்பதாக அறிவித்தது. இதனால் 2024ஆம் ஆண்டுக்குள் தோராயமாக 3,60,000 மாணவர் விசாக்களை மட்டுமே வழங்க கனடா அரசாங்கம் இலக்கு வைத்துள்ளது. இதைத் தவிர மற்றொரு பெரிய மாற்றத்தையும் கனடா அரசு செய்தது. கனடாவில் அரசு-தனியார் கூட்டுறவின் கீழ் இயங்கும் கல்லூரிகளில் பட்டம் பெறும் மாணவர்களுக்கு செப்டம்பர் முதல் அங்கு பணி செய்வதற்கான அனுமதி வழங்கப்படாது. கனடாவில் படித்து குடியுரிமை பெற விரும்பும் மாணவர்களுக்கு இது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுமட்டுமல்லாது வரலாற்றில் முதன்முறையாக, தற்காலிகமாக வசிப்பவர்களின் எண்ணிக்கையைப் புதிதாக வருபவர்கள் சார்ந்து மட்டும் கட்டுப்படுத்த கனடா கருதியது. அடுத்த மூன்று ஆண்டுகளில் தற்காலிகமாக வசிப்பவர்களின் எண்ணிக்கை குறைக்கப்படும் என்று கனடா குடிவரவு அமைச்சர் மார்க் மில்லர் இந்த ஆண்டு மார்ச் மாதம் தெரிவித்தார். செப்டம்பர் மாதம் முதல் இந்த நடவடிக்கை அமலுக்கு வரும். இந்த வரம்பு, சர்வதேச மாணவர்கள், வெளிநாட்டுத் தொழிலாளர்கள் மற்றும் அகதிகளுக்கும் பொருந்தும். அதேபோல ஆஸ்திரேலிய அரசாங்கமும், அடுத்த இரண்டு ஆண்டுகளில் அந்நாட்டில் குடியேறுபவர்களின் எண்ணிக்கை பாதியாகக் குறைக்கப்படும் என 2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அறிவித்தது. மாணவர் விசாவுக்கான தகுதித் தேர்வுகளையும் அது கடுமையாக்கியது. நிதிசார் விதிமுறைகளிலும் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. அதன்படி ஆஸ்திரேலிய மாணவர் விசாவுக்காக விண்ணப்பிப்பவர்கள் தங்கள் சேமிப்பில் 16,29,964 ரூபாய் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். கடந்தாண்டு இந்தத் தொகை 13,44,405 ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த மே மாதம் இது அமலுக்கு வந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES புதிய விதிகளின் தாக்கம் கனடா, ஆஸ்திரேலியா சென்று படிக்க விரும்பும் மாணவர்கள் மத்தியில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என 'ட்ரூமேட்டிக்ஸ் ஓவர்சீஸ் எஜுகேஷன் கன்சல்டன்சி'யின் இயக்குநர் சுரேஷிடம் கேட்டோம். "நிச்சயமாக 40-50 சதவீத மாணவர்களை இது பாதித்துள்ளது. உதாரணமாக தமிழ்நாட்டில் இருந்து ஆண்டுக்கு சராசரியாக 40 ஆயிரம் பேர் வரை கல்வி கற்பதற்காக கனடாவுக்கு செல்வார்கள், இந்த ஆண்டு அந்த எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. கனடாவுக்கு அடுத்து ஆஸ்திரேலியாவை தமிழ்நாட்டு மாணவர்கள் விரும்புவார்கள், இப்போது அங்கும் விதிகள் கடுமையாக்கப்பட்டுள்ளதால் ஐரோப்பிய நாடுகளுக்கு செல்ல ஆர்வம் காட்டுகிறார்கள்" என்று கூறுகிறார் சுரேஷ். சமீப காலங்களில் இந்தியா- கனடா உறவில் ஏற்பட்ட பதற்றம் காரணமாக, பெற்றோர் பலரும் தங்கள் பிள்ளைகளை அனுப்ப தயக்கம் காட்டியதாகவும், இப்போது இந்த புதிய கட்டுப்பாடுகளால் அவர்கள் மேலும் தயங்குவதாகவும் கூறுகிறார் அவர். "ஆஸ்திரேலியா புதிய கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளது. இந்த வருடம் மே மாதம் முதல் நல்ல நிதி நிலைமை கொண்ட மாணவர்களால் மட்டுமே ஆஸ்திரேலியா மாணவர் விசா பெற முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது. இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமானால் வருடத்திற்கு குறைந்தது 15 முதல் 20 லட்சம் வரை சம்பாதிக்கும் பெற்றோர்களால் மட்டுமே தங்கள் பிள்ளைகளை அங்கு மேல்படிப்பிற்கு அனுப்ப முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது" என்று கூறுகிறார் சுரேஷ். பிரான்ஸ், நெதர்லாந்து, சுவீடன், அயர்லாந்து, பிரிட்டன் போன்ற நாடுகளை மாணவர்கள் மாற்றாகப் பார்க்கிறார்கள் என்றும், இந்த நாடுகளில் மாணவர் விசா கிடைப்பது எளிது என்றும் கூறுகிறார் சுரேஷ். தொடர்ந்து பேசுகையில், "இந்த நாடுகள் பெரும்பாலும் கல்விக் கடன் பெற்று வரும் மாணவர்களை ஏற்றுக் கொள்கிறார்கள். பெற்றோர் வருமானத்தை பார்ப்பதில்லை, அதேபோல விசா விதிகளும் எளிமையானவை. உண்மை என்னவென்றால், சர்வதேச மாணவர்கள் அல்லது புதிதாக குடியேறுபவர்கள் இனியும் தங்களுக்கு தேவையில்லை என்று ஆஸ்திரேலியா, கனடா நாடுகள் நினைக்கின்றன. வரும்காலத்தில் மீண்டும் தேவை என்று நினைத்தால் அவை விதிகளைத் தளர்த்தும்." என்கிறார். இந்தியா- கனடா இடையேயான கசப்புணர்வு பட மூலாதாரம்,GETTY IMAGES சென்னையைச் சேர்ந்த வினோத் குமார் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) கனடா செல்வதற்காக முயற்சித்து வந்தார், ஆனால் புதிய விதிகள் மற்றும் சமீபத்தில் இந்திய- கனடா உறவில் ஏற்பட்ட பதற்றங்கள் காரணமாகவும் தன்னை கனடா செல்ல வேண்டாமென பெற்றோர் கூறி விட்டதாகச் சொல்கிறார். "அவர்கள் பயப்படுவதிலும் ஒரு நியாயம் உள்ளது. செய்திகளில் வருவதையெல்லாம் அவர்களும் பார்க்கிறார்கள். கடன் வாங்கி என்னை படிக்க அனுப்பி வைத்துவிட்டு, கவலையுடன் தொலைக்காட்சி செய்திகளைப் பார்த்தவாறு அவர்களால் உட்கார முடியாது அல்லவா." என்கிறார். காலிஸ்தான் ஆதரவாளரான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த வருடம் ஜுன் மாதம் கனடாவில் படுகொலை செய்யப்பட்டார். இதன் பின்னணியில் இந்திய புலனாய்வு முகமைகளின் பங்கு இருப்பதற்கான 'நம்பத் தகுந்த' ஆதாரங்கள் இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்த பின் இந்தியா - கனடா இடையே ஏற்பட்டது. வினோத் குமாருக்கு அயர்லாந்து நாட்டின் பல்கலைக்கழகம் ஒன்றில், முதுகலைப் பட்டப்படிப்பு படிப்பதற்கான மாணவர் விசா கிடைத்துள்ளது. செப்டம்பர் மாதம் அவரது வகுப்புகள் தொடங்குகின்றன. 'கனடாவில் நிலைமை முன்பு போல இல்லை' பட மூலாதாரம்,GETTY IMAGES முதுகலைப் படிப்பிற்காக மாணவர் விசா மூலம் கனடா சென்றவர் கோயம்புத்தூரைச் சேர்ந்த விக்னேஷ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இப்போது அங்குள்ள தனியார் கட்டுமான நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இந்த புதிய விதிகள் தொடர்பாக பிபிசியிடம் பேசினார். "பெரும்பாலும் கனடா வரும் மாணவர்களின் நோக்கம் என்பது நிரந்தரக் குடியுரிமை தான். இங்குள்ள வாழ்க்கைத் தரம் காரணமாக தான் அத்தகைய ஆசை பலருக்கும் இருந்தது. ஆனால் இன்று கனடாவில் அனைத்தும் மாறிவிட்டது. கடந்த சில வருடங்களில் விலைவாசி மிகவும் அதிகரித்துள்ளது. வரியும் மிக அதிகம். கொரோனா காலத்திற்கு பிறகு கனடா தனது விசா விதிகளைத் தளர்த்தியதால் தான் பலர் இங்கு வந்தனர். நானும் அப்படிதான் வந்தேன். அப்போது அவர்களுக்கு சர்வதேச மாணவர்களின் வருகை தேவைப்பட்டது, இப்போது அது தேவையில்லை என்று நினைக்கிறார்கள். எனவே புதிய கட்டுப்பாடுகளை விதிக்கிறார்கள். சமீபகால அரசியல் பிரச்னைகள் காரணமாக இந்தியர்கள் மீதான பார்வையும் மாறியுள்ளது" என்கிறார் விக்னேஷ். https://www.bbc.com/tamil/articles/cd11edgyy0yo
  20. Published By: VISHNU 26 JUN, 2024 | 04:35 AM நடாஷா குணரத்ன அபிவிருத்தி அடைந்துவரும் நாடொன்று, மிகவும் சிக்கலான பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்கிறது. வேலையின்மை நிலை அதிகரித்து வருகின்றது, ஆனால் பணவீக்கம் அதனைவிட மிகவும் வேகமாக அதிகரித்து வருகின்றது. தேசிய வங்கிகளில் வெளிநாட்டு நாணய இருப்பு வெறுமையாக உள்ளது. எரிபொருள் மற்றும் எரிவாயு இருப்புக்களும் அவ்வாறே உள்ளன. சர்வதேச நிதி நிறுவனங்கள் இதுபற்றி தட்டிக் கேட்டன. அ) நிதி உறுதியற்ற தன்மை அல்லது ஆ) பணம் செலுத்துவதில் உள்ள இயல்புநிலை இ) மேற்குறித்த இரண்டு விடயங்களாலும் ஏற்பட்ட அரசியல் அமைதியின்மை குறித்து அவர்கள் மகிழ்ச்சியடையவில்லை. தனிப்பட்ட கலந்துரையாடல்களில், அரசாங்கங்களின் அடுத்தடுத்த தோல்வி மற்றும் நுகர்வோர் விலை உயர்வு ஆகியவற்றிலேயே கவனம் செலுத்துகின்றனர். அரசியல் வெளிகளில் இடம்பெறும் கலந்துரையாடல்களை பொறுத்தவரை, அவை தேசிய ரீதியான ஊழல், அலட்சியம் மற்றும் தீவிரமான மாற்றத்தின் தேவை ஆகியவற்றில் கவனம் செலுத்துகின்றன. நீங்கள் உலகளாவிய தெற்கைச் சேர்ந்தவர் என்றால், இந்த விளக்கம் உங்கள் நாடு போல் தோன்றலாம். ஆனால் இது உலகளவில் ஒன்றரை பில்லியனுக்கும் அதிகமான மக்கள் வசிக்கும் 105இற்கும் மேற்பட்ட அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளைக் குறிக்கின்றது. உள்ளூர் பிரச்சினைகளை சர்வதேசமயமாக்குவது பற்றி கலந்துரையாடுவது 'அபிவிருத்தி அடைந்துவரும் உலகிற்கு' அரிது. தேசிய நிதி துயரங்களுக்காக நாம் வெறுக்கும் உள்ளூர் அரசியல்வாதியைக் குறை கூறவே நம்மில் பெரும்பாலோர் விரும்புகிறோம். மாறாக, அவர் பேச்சுவார்த்தை நடத்தும் தேசிய நிதி துயரங்களுக்கு மூலகாரணமான சர்வதேச நிறுவனத்தை நாம் குறைகூறுவதில்லை. ஆனால் 105 நாடுகள் இதே போன்ற பொருளாதாரப் பிரச்சினைகளைப் பகிர்ந்து கொள்ளும்போது, அதை நன்றாகப் புரிந்துகொள்வது அவசியமாகிறது. ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி செயற்திட்டமானது, 2022ஆம் ஆண்டு வெளியிட்ட அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளின் வாழ்க்கைச் செலவு குறித்த ஒரு அறிக்கையில், கொவிட் தொற்றுநோய் குறித்து இவ்வாறு குறிப்பிட்டிருந்தது. 'கடந்த 50 வருட காலத்தில் ஏற்பட்ட அதிகரித்த பாதிப்பாகும். இது அரசாங்க வருவாயில் 250 சதவீதத்திற்கும் அதிகமான நிலைக்கு சமமானதாகும்' அதே வருடத்தில் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் நிர்வாகி அச்சிம் ஸ்டெய்னர், அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளை பாதிக்கும் சுழற்சி அறிகுறிகளை விளக்கினார். உலகப் பொருளாதார நெருக்கடியால் இந்த நாடுகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன. கொவிட் தொற்றுநோயால் ஏற்பட்ட முடக்கல் நிலைகள் மற்றும் உலகளாவிய விநியோகச் சங்கிலி சரிவுகள், ரஷ்யா-உக்ரைன் மோதலால் மோசமடைந்த எரிபொருள் மற்றும் எரிசக்தி பற்றாக்குறை, உணவு மற்றும் அத்தியாவசிய பற்றாக்குறை ஆகியவற்றால் அவர்களிடம் குறைந்த வெளிநாட்டு இருப்பு காணப்பட்டது. இது சமூக அமைதியின்மை மற்றும் கிளர்ச்சிக்கு வழிவகுக்கின்றது, இது சர்வதேச நிதி, பிணை எடுப்பு மற்றும் கடன்களை எதிர்மறையாக பாதிக்கிறது. சுருக்கமாக கூறினால், தொடர்ச்சியான சார்ந்திருக்கும் நிலையானது சுழற்சியில் சிக்கியது, இது சர்வதேச கட்டமைப்பு பல வருடங்களாக மோசமடையத் தயாராக இருப்பதாகத் தோன்றியது. இலங்கையில் அந்தத் தருணத்தில் வெளிநாட்டுக் கடனுடன் என்ன நடந்து கொண்டிருந்ததோ, அது ஏனைய உலகளாவிய தெற்கு நாடுகளுக்கும் நிகழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றும், வீழ்ச்சியடைந்த முதல் முன்னோடியாக இலங்கை இருக்கும் என்றும் ஸ்டெய்னர் குறிப்பிட்டார். 'அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகள் தற்போது நிதி, நிதி நிலைத்தன்மை மற்றும் அரசியல் ரீதியாக மிகவும் ஆபத்தான காலகட்டத்தை கடந்து செல்கின்றன. நாடுகள் இயல்புநிலைக்கு வரும்போது, அத்தியாவசிய அன்றாட விநியோகங்களுக்கான அணுகல் மறைந்து, பசிக்கு வழிவகுக்கும் என்பதை இலங்கை போன்ற எடுத்துக்காட்டுகளுடன் நாம் கண்டோம். மற்றும் விரைவில் சாத்தியமான அரசியல் நெருக்கடிகளுக்கு வழிவகுக்கலாம்' இந்த நாடுகள் தாங்களாகவே இந்த சுழற்சியின் வழியில் செல்ல முடியாது என்பதை அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற கலந்துரையாடல்கள் உறுதிப்படுத்தும். அதற்கு, சர்வதேச பலதரப்பு முதலீட்டு வங்கிகள் மற்றும் சர்வதேச நாணய நிதியம் உள்ளிட்ட முகவர்கள், தமது வழக்கமான பணி முறைகளை மாற்றி கடன் சேவை இடைநீக்க முன்முயற்சிகளை செயற்படுத்த வேண்டும். ஏனைய இடங்களில் உள்ள ஆய்வாளர்கள், உலகளாவிய சமபங்கு என்பது நாம் உண்மையிலேயே அடைய விரும்பும் இலக்காக இருந்தால், கடன் தள்ளுபடி பற்றி கலந்துரையாடுவது ஒரு தீவிரமான கருத்தாடலாக இருக்க வேண்டுமென ஏனைய இடங்களில் உள்ள ஆய்வாளர்கள் வலியுறுத்துகின்றனர். ஆனால், காலனித்துவ நீக்கம் இயக்கத்தில் இருந்தே, கடன் தள்ளுபடி பற்றிய கலந்துரையாடல்கள் பெரும்பாலும் புறக்கணிக்கப்பட்டன. ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் கணிப்பு இப்போதும் உண்மையாக உள்ளது. ஒன்றுக்கொன்று சார்ந்த நிகழ்வுகளின் வீழ்ச்சிக்கு மிக சமீபத்திய உதாரணமாக பொலிவியா உள்ளது. இந்த உலகளாவிய பொருளாதார நெருக்கடி மற்றும் சர்வதேச கடன்களை திருப்பிச் செலுத்துவதில் உள்ள சவால்கள்-அல்லது அதன் பற்றாக்குறை ஆகியவற்றிற்கு மத்தியில், மற்றொரு ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட பிரச்சினை எழுந்தது: உலகப் பொருளாதாரம் முதன்மையான வர்த்தக நாணயமாக அமெரிக்க டொலரை நம்பியிருப்பதில் இருந்து மாறுவதற்கான அவசரத் தேவையே அது. உலகளாவிய தெற்கின் பெரும்பகுதி முழுவதும் பரவலான பணமதிப்பு நீக்கம் காரணமாக இது மிகவும் பொருத்தமானது. இதற்கு மேலதிகமாக, அமெரிக்கா விதித்த பொருளாதாரத் தடைகள் புவிசார் அரசியல் பதட்டங்களில் சிக்கியுள்ள நாடுகளை எவ்வளவு விரைவாகப் பாதிக்கும் என்பதை நினைவூட்டுகிறது. கடந்த ஆண்டு ஜோகன்னஸ்பர்க்கில் நடந்த பிரிக்ஸ் உச்சிமாநாட்டின் போது பிரேசில் ஜனாதிபதி லூலா டா சில்வா, அமெரிக்க டொலரை சார்ந்திருப்பதை குறைக்கும் நோக்கில், வர்த்தகம் மற்றும் முதலீட்டிற்கான பொதுவான நாணயத்தை தங்களுக்குள் உருவாக்குமாறு பிரிக்ஸ் உறுப்பு நாடுகளை வலியுறுத்தியமைக்கு இந்த காரணிகள் காரணமாக இருக்கலாம். ஆனால் சில சந்தர்ப்பங்களில் உறுப்பு நாடுகளுக்கிடையிலான வர்த்தகம் குறைவாகவோ அல்லது இல்லாததாகவோ நிபுணர்கள் சுட்டிக்காட்டினர். பொதுவான வர்த்தக உடன்படிக்கைகள் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட நாணய அமைப்பு இலக்குகளாக இருந்தால், அவற்றை அடைவதில் சீனா மையமாக இருக்கும் என்று தோன்றியது. 2023 ஆம் ஆண்டில் சுமார் 3.4 டிரில்லியன் அமெரிக்க டொலர் ஏற்றுமதி மதிப்புடன், உலகின் மிகப்பெரிய பொருட்களை ஏற்றுமதி செய்யும் நாடாக அது தொடர்ந்து நிலைத்திருக்கிறது. அதுமட்டுமன்றி, சீனா ஒரு சர்வதேச வர்த்தகர், கடன் வழங்குபவர், முதலீட்டாளர் மற்றும் பிரிக்ஸ்-இன் உறுப்பு நாடாக குறிப்பிடத்தக்க பாத்திரங்களைக் கொண்டுள்ளது. இந்த யோசனை தத்துவார்த்தமானது மட்டுமல்ல, பொலிவியா தனது பொருளாதார சரிவைத் தணிப்பதற்கான எடுத்த நடவடிக்கைப் போன்று, பிரேசில் மற்றும் அர்ஜென்டினா போன்ற நாடுகள் ஏற்கனவே டொலரில் இருந்து யுவானுக்கு மாறத் தொடங்கியுள்ளன. யுவான் அதன் வர்த்தகத்தில் சுமார் 10 வீதத்தை பயன்படுத்தி, டொலர் மதிப்பை நீக்கும் செயற்பாட்டில் உள்ளது என்று அறிக்கைகள் குறிப்பிடுகின்றன. சவூதி அரேபியா, எகிப்து, எத்தியோப்பியா, ஈரான் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய புதிய உறுப்பினர்களை உள்ளடக்கி இந்த ஆண்டு பிரிக்ஸ் விரிவாக்கம் செய்யப்பட்டதன் அர்த்தம், பெரிய குழு இப்போது உலக மக்கள் தொகையில் 45 வீதத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறது மற்றும் உலகின் கச்சா எண்ணெயில் 44 வீதத்தை உற்பத்தி செய்கிறது. அதன் தற்போதைய மற்றும் புதிய உறுப்பினர்கள் ஒருதலைப்பட்சமான தடைகளால் ஏற்படும் தீங்கை உணர்ந்து, பொருளாதார இறையாண்மையின் அவசியத்தை, குறிப்பாக பணமதிப்பு நீக்கம் மூலம் வலியுறுத்துகின்றனர். மேலும், சர்வதேச நிதி நிறுவனங்களான சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியை சீர்திருத்துவது, பிரிக்ஸ் நாடுகளுக்கு 2009இல் அரசுகளுக்கிடையேயான குழு நிறுவப்பட்டபோது முக்கிய இலக்காக இருந்தது. உலகளாவிய தெற்கில் சீன ரென்மின்பி ஒரு விரும்பத்தக்க டொலர் அல்லாத நாணயமாக அதிகரிப்பது, பாரம்பரியமாக டொலரால் ஆதிக்கம் செலுத்தும் வெளிநாட்டுக் கடன் கொடுப்பனவுகளுக்கான மாற்று முறைகளை மறுபரிசீலனை செய்ய பிரெட்டன் வூட்ஸ் நிறுவனங்களை கட்டாயப்படுத்தலாம். அல்லது சீர்திருத்தங்களைக் கருத்தில் கொள்ள குறைந்தபட்சம் கடனாளி மாநிலங்களைத் தூண்டும். இருப்பினும், இந்த கலந்துரையாடல்களுக்கு குறிப்பிடத்தக்க தடைகள் இல்லாமல் இல்லை. குறுக்கு வர்த்தக பரிவர்த்தனைகளுக்கான நாணயமாக டொலர் மிகவும் உறுதியாக வேரூன்றியுள்ள நிலையில், சீனா மற்றும் இந்தியா போன்ற பொருளாதாரங்களில் கூட அதன் முக்கிய நிலையை மாற்றுவதற்கு கணிசமான நேரம் எடுக்கும். உதாரணமாக, 2023இல் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வில் இவ்வாறு குறிப்பிடப்பட்டது, '...இந்திய ஏற்றுமதியில் 15 சதவீதம் மட்டுமே அமெரிக்காவுக்கு சென்றாலும், 86 சதவீத இந்திய ஏற்றுமதிகள் டொலர் மதிப்பிலானவை. 2023இல், சீனாவின் 47 வீதம் எல்லை தாண்டிய கொடுப்பனவுகள் (மற்றும் எல்லை தாண்டிய பொருட்கள் மற்றும் சேவைகளின் வர்த்தகக் கொடுப்பனவுகளில் அதிக சதவீதம் இருக்கலாம்) டொலர்களில் இருந்தன, அதன் ஏற்றுமதியில் 17 வீதம் மட்டுமே 2021இல் அமெரிக்காவிற்கு கட்டுப்பட்டதாக அமைந்தது.....' எவ்வாறாயினும் மெதுவாக இருந்தாலும், இந்த மாற்றம் அமெரிக்காவிற்கு உலகளாவிய தெற்கில் வளர்ந்து வரும் விரக்திகளையும் சமிக்ஞை செய்யலாம். நாடுகளிடையே கூட அது வலுவான உறவுகளைப் பகிர்ந்து கொள்கிறது. இதனை வொஷிங்டன் 'பகிரப்பட்ட மதிப்புகள்' என்று கருதுகின்றது. மேலாதிக்கம் மற்றும் கட்டுப்பாட்டைப் பின்தொடர்வதில் கூட்டாண்மைக்கு முன்னுரிமை அளிப்பதற்கும் உறவுகளை வலுப்படுத்துவதற்கும் ஒரு வாய்ப்பாக அமைகின்றது. பிரிக்ஸ் நாடுகள் இன்னும் தமது சொந்த நாணயத்தை உருவாக்குவதற்கான வழிகளைக் கொண்டிருக்கலாம் என்றாலும், குழு முதலில் உருவாக்கப்பட்டதை விட இன்று வொஷிங்டனில் பங்குதாரர்களை ஈடுபடுத்துவதற்கு அதிக பேரம் பேசும் சக்தியைக் கொண்டுள்ளது. மேற்கு நாடுகளுடன் எவ்வாறு ஈடுபடுவது என்பது பற்றிய மாறுபட்ட கருத்துக்கள் உட்பட உறுப்பு நாடுகளுக்கு இடையே இருக்கும் வேறுபாடுகளை பிரிக்ஸ் சமாளிப்பது மற்றும் ஒரு கூட்டு அரசுகளுக்கிடையேயான பணிக்குழுவை நிறுவுவது இப்போது அவசியமாக இருக்கலாம். இந்த குழு, டொலர் மதிப்பை நிலையானதாகவும், சாத்தியமானதாகவும் மாற்றுவதற்கு செயற்படுத்தப்படக்கூடிய சாத்தியமான அளவுகோல்களை ஆவணப்படுத்தும். ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டம் மற்றும் UNCTAD போன்ற அமைப்புகளின் உதவி அல்லது நிபுணத்துவம் அத்தகைய செயன்முறையை மேம்படுத்தி வலுப்படுத்தும். கூடுதலாக, பொது மன்ற மட்டத்தில், உலகளாவிய தெற்கு மற்றும் வடக்கு ஆகிய இரு பகுதிகளினதும் நாடுகளைச் சேர்ந்த நிபுணர்களிடையே, தற்போதைய சீர்திருத்த செயன்முறைகளுடன், அத்தகைய நடவடிக்கையின் சாத்தியமான அம்சங்களைப் பற்றிய கலந்துரையாடல்கள் மற்றும் ஊக்குவிப்பு இருக்க வேண்டும். மற்றொரு உலகளாவிய பொருளாதார நெருக்கடியைத் தடுக்கவும், எதிர்காலத்தில் 105க்கும் மேற்பட்ட உலகளாவிய தெற்கு நாடுகள் (மற்றும் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு இன்னும் நீடித்திருக்கும்) அனுபவிக்கும் பொருளாதார வீழ்ச்சியின் அறிகுறிகளைத் தவிர்க்கவும், இந்த செயன்முறையும் உலகளாவிய சமத்துவத்தை நோக்கிய அதன் பயணமும் வடக்கு மற்றும் தெற்கில் புரிந்து கொள்ளப்பட வேண்டும். இந்தக் கட்டுரையை எழுதிய நடாஷா குணரத்ன, கோஸ்டரிகாவில் உள்ள United Nations-mandated University இல் சர்வதேச சட்டம் மற்றும் மனித உரிமைகள் ஆகியவற்றில் இரட்டை முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார். மேலும் பிலிப்பைன்ஸில் உள்ள Ateneo de Manila Universityஇல் உலகளாவிய ஆளுகையில் முக்கியப் பட்டத்துடன் அரசியல் அறிவியலில் பட்டம் பெற்றுள்ளார். அவர் இலங்கை மற்றும் அமெரிக்க அரசாங்கங்களின் பொது இராஜதந்திரத்தில் நிபுணராக பணியாற்றியுள்ளார். உலகளாவிய தெற்கில் உள்ள நிறுவனங்களுக்கிடையில் தெற்கு-தெற்கு ஒத்துழைப்பை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்ட முன்முயற்சிகளை உருவாக்குவதில் நடாஷா குணரத்ன முக்கிய பங்காற்றியுள்ளார். அவர் Perspective Southஇன் நிறுவனர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் ஆவார். இது புவிசார் அரசியல், சர்வதேச சட்டவியல் சொற்கள் மற்றும் உலகளாவிய தெற்கின் முன்னோக்குகளை பொதுமக்களுக்கு அணுகுவதை நோக்கமாகக் கொண்ட ஒரு சர்வதேச தளமாகும். Factum என்பது சர்வதேச உறவுகள், தொழில்நுட்ப ஒத்துழைப்பு மற்றும் மூலோபாய தொடர்புகள் பற்றி செயற்படும் ஆசியாவை மையமாகக் கொண்ட ஒரு சிந்தனைக் குழுவாகும். www.factum.lk என்ற இணையத்தளத்தில் இது தொடர்பான விபரங்களைப் பெற்றுக்கொள்ளலாம். இங்கு குறிப்பிடப்பட்டுள்ள கருத்துக்கள் யாவும் இந்தக் கட்டுரையை எழுதியவரின் சொந்தக் கருத்தேயன்றி, அவை எந்தவகையிலும் எமது நிறுவனத்தை பிரதிபலிப்பதாக அமையாது. https://www.virakesari.lk/article/186981
  21. ஆப்கானிஸ்தான் அணிக்கு இந்தியா, பாகிஸ்தானில் இருந்து குவியும் வாழ்த்து - தாலிபன் கூறியது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES 25 ஜூன் 2024 ஐசிசி டி20 உலகப்கோப்பையின் சூப்பர் 8 போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி வங்கதேச அணியை 8 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அரை இறுதிக்குள் நுழைந்துள்ளது. இந்த சாதனை ஆப்கானிஸ்தான் அணிக்கு மிக முக்கியமானது. ஐசிசி உலகக்கோப்பையில் ஆப்கானிஸ்தான் அரை இறுதிக்கு நுழைவது இதுவே முதல் முறையாகும். இந்நிலையில் ஆப்கானிஸ்தானின் இந்த வெற்றியை, கிரிக்கெட் ஆர்வலர்கள் எப்படி பார்க்கின்றனர்? ஆப்கன் கிரிக்கெட் வரலாறு என்ன? 1839-ம் ஆண்டு ஆங்கிலோ- ஆப்கன் போரின் போது கிடைத்த இடைவெளியில் பிரிட்டன் துருப்புகள் கிரிக்கெட் விளையாடியுள்ளனர். இதுதான் ஆப்கானிஸ்தானில் பதிவான முதல் கிரிக்கெட் போட்டியாகும். இருப்பினும், 1990 களின் நடுப்பகுதியில் தான், ஆப்கானிஸ்தானில் கிரிக்கெட் உண்மையில் வேரூன்றத் தொடங்கியது. பாகிஸ்தானில் உள்ள அகதிகள் முகாம்களில் வளர்ந்த ஆப்கானியர்கள் கிரிக்கெட் மீது ஆர்வத்துடன் தங்கள் பிறந்த இடத்திற்குத் திரும்பினர். ஆப்கானிஸ்தானில் தாலிபன்கள் முதல் முறையாக ஆட்சிக்கு வந்த ஓராண்டுக்கு முன்பு 1995-ம் ஆண்டு ஆப்கன் கிரிக்கெட் வாரியம் உருவாக்கப்பட்டது. அமெரிக்கா தலைமையிலான படையினர் 2001-ம் ஆண்டு ஆப்கானிஸ்தான் மீது படையெடுத்து, தாலிபன்களை ஆட்சியில் இருந்து அகற்றிய பிறகு தேசிய கிரிக்கெட் அணி உருவாக்கப்பட்டது. 2017-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலில் உறுப்பினராக ஆப்கானிஸ்தான் சேர்ந்தது. பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். 2021-ம் ஆண்டு மீண்டும் ஆட்சிக்கு வந்த தாலிபன்களின் கொடிக்கு பதிலாக, கருப்பு, சிவப்பு, பச்சை நிறம் கொண்ட கொடியை அணிந்தே ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி விளையாடுகிறது. தாலிபன்கள் ஆட்சிக்கு வந்த பிறகு நஸீப் கான் என்பவரை ஆப்கன் கிரிக்கெட் வாரிய தலைவராக நியமித்தது. ‘’இந்த வெற்றி, நாட்டில் உள்ள மக்களுக்கு நிறைய நம்பிக்கையை அளிக்கும். எங்கள் நாட்டு மக்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும் ஒரே விஷயம் கிரிக்கெட்தான்’’ என ஆப்கானிஸ்தான் கேப்டன் ரஷித் கான் கூறியுள்ளார். ஆப்கானிஸ்தனில் வெளியுறத்துறை அமைச்சர் மாவ்லவி அமிர் கான் மிட்டாகி, கேப்டன் ரஷித் கானுக்கு வீடியோ கால் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த வீடியோவை ஆப்கன் கிரிக்கெட் வாரியம் தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ளது. மூத்த கிரிக்கெட் வீரர்களின் வாழ்த்து இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரரும் மாஸ்டர் பிளாஸ்டருமான சச்சின் டெண்டுல்கர் ஆப்கானிஸ்தான் அணியை வாழ்த்தி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். ’’ஆப்கானிஸ்தான், நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி உங்களது அரையிறுதிக்கான பயணம் அபாரமானது. இன்றைய வெற்றி, உங்களது கடும் உழைப்பு மற்றும் உறுதிப்பாட்டிற்கு ஓர் உதாரணம். உங்களது முன்னேற்றம் பெருமையாக உள்ளது’’ என பதிவிட்டுள்ளார். பட மூலாதாரம்,X/SACHIN TENDULKAR ஆஸ்திரேலியாவின் ஆல் ரவுண்டர் டிம் மூடி,’’ வாவ், என்னவொரு போட்டி. விறுவிறுப்பு நிறைந்ததாக இருந்தது. இந்த மிகப்பெரிய சாதனையை நிகழ்த்திய ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு வாழ்த்துக்கள்’’ என சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். ‘’வாவ் ஆப்கானிஸ்தான். நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவைத் தோற்கடித்து அரையிறுதியை எட்டியுள்ளது. என்னவொரு முயற்சி. இதைதான் முன்னேற்றம் என்பார்கள். வாழ்த்துகள்’’ என முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷேவாக் வாழ்த்தியுள்ளார். யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங், சுரேஷ் ரெய்னா, பத்ரிநாத் என பலரும் ஆப்கானிஸ்தானை வாழ்த்தியுள்ளனர். ’’தாலிபன்கள் அரையிறுதிக்கு நுழைந்து, உணர்ச்சிப்பூர்வமாக உள்ளது. நவீன் உல்ஹக்கின் சிறந்த திறனை வெளிப்படுத்தினார். கிரிக்கெட் அதன் சிறந்த நிலையில் உள்ளது’’ என யுவராஜ் சிங் பதிவிட்டுள்ளார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,வெற்றி கொண்டாட்டத்தில் ரஷித் கான் பாகிஸ்தானில் இருந்தும் வாழ்த்து முன்னாள் பேட்ஸ்மேனும், விக்கெட் கீப்பருமான கம்ரான் அக்மல், ரஷித் கான் மற்றும் நவீன் உல்ஹக்கை வாழ்த்தி பதிவிட்டுள்ளார். ’’அரையிறுதிக்கு நுழைந்த ஆப்கனுக்கு வாழ்த்துகள். அருமையான கிரிக்கெட். என்னவொரு சாதனை. பந்துவீச்சாளர்களின் அருமையான திறன்’’ என பதிவிட்டுள்ளார். பாகிஸ்தான் அரசியல் தலைவர்களும் ஆப்கானிஸ்தான் அணிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். டெஹ்ரீக்-இ-இன்சாஃப் கட்சியின் முன்னாள் தலைவர் ஃபவாட் சவுத்ரி,’’ காபுல் மற்றும் கந்தகார் பாய்ஸ், உலகில் மிகப்பெரிய விளையாட்டுப்போட்டியின் அரையிறுதிக்கு நுழைந்துள்ளனர்.’’ என வாழ்த்தியுள்ளார். https://www.bbc.com/tamil/articles/czkk03x4ppno
  22. Published By: DIGITAL DESK 3 26 JUN, 2024 | 10:34 AM யாழ்ப்பாணத்தில் 15 வயது சிறுமியை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டில் 17 வயதான சிறுவன் நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். நெல்லியடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் 15 வயதான சிறுமியை 17 வயதான சிறுவன் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியுள்ளதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் சிறுமியை மீட்டு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்தனர். சிறுமியிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் சிறுவன் தொடர்பான தகவல்களை பெற்ற பொலிஸார் சிறுவனை கைது செய்து பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தினர். நீதிமன்ற விசாரணைகளை அடுத்து, சிறுவனை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/186995
  23. அதிபர்கள், ஆசிரியர்கள் சுகயீன விடுமுறை போராட்டம் Published By: DIGITAL DESK 3 26 JUN, 2024 | 09:09 AM நாடளாவிய ரீதியில் அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரிய ஆலோசகர்கள் இன்று 26ஆம் திகதி சுகயீன விடுமுறை போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். அரசாங்கத்துடன் சம்பள முரண்பாடுகள் தொடர்பில் நடாத்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததன் காரணமாக அதிபர்கள்,ஆ சிரியர்கள், ஆசிரிய ஆலோசகர்கள் சுகவீன விடுமுறை போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். இந்நிலையில், அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரிய ஆலோசகர்களின் பங்குபற்றுதலுடன் புதன்கிழமை (26) முற்பகல் 11 மணிக்கு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டமொன்று நடத்தப்படவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/186987
  24. Published By: VISHNU 26 JUN, 2024 | 03:22 AM நாட்டில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக மன்னார் மாவட்டமும் பாதிக்கப்பட்டிருந்தது. மீள் குடியேற்றத்தின் பின்னர் நாங்கள் எதிர் நோக்குகின்ற முக்கியமான பிரச்சனையாகப் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதில் உள்ளது என மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தெரிவித்துள்ளார். உண்மை ஒற்றுமை மற்றும் நல்லிணக்க பொறி முறைகளுக்கான இடைக்கால செயலகத்தின் ஏற்பாட்டில் உத்தேச சட்ட வரைவு நிறுவுவதற்கு ஜனாதிபதியின் ஏற்பாட்டில் குறித்த குழு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை(25) மன்னருக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர். மன்னார் மாவட்டச் செயலகத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை(25) காலை 9 மணியளவில் மன்னார் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையில் பிரதேசச் செயலாளர் உள்ளிட்ட திணைக்கள தலைவர்களை உண்மை ஒற்றுமை மற்றும் நல்லிணக்க பொறி முறைகளுக்கான இடைக்கால செயலகத்தின் உத்தேச சட்ட வரைவு நிறுவுவதற்கான குழுவினர் சந்தித்துக் கலந்துரையாடி உள்ளனர். இதன் போது மாவட்டத்தில் உள்ள பல்வேறு பிரச்சினைகள் குறித்துக் குறித்த குழுவினர் கலந்துரையாடி உள்ளனர். இதன் போதே மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் குறித்த குழுவினரிடம் குறித்த பிரச்சினையை முன் வைத்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக மன்னார் மாவட்டமும் பாதிக்கப்பட்டிருந்தது. மீள்குடியேற்றத்தின் பின்னர் நாங்கள் எதிர் நோக்குகின்ற முக்கியமான பிரச்சனையாகப் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதில் உள்ளது. மன்னார் மாவட்டத்தில் முக்கியமான வாழ்வாதார செயல்பாடாக விவசாயம் காணப்படுகின்றது. விவசாயத்தை விருத்தி செய்ய பல்வேறு சவால்களுக்கு முகம் கொடுக்கின்றோம். யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் வன வள திணைக்களம், வன ஜீவராசிகள் திணைக்களம் கிட்டத்தட்ட 36 வீதம் காணிகளைப் பிடித்துள்ளனர். மேலதிகமாக புதிதாக 30 வீத காடுகளை உருவாக்கி உள்ளனர். இவர்கள் ஜீ.பி.எஸ். மற்றும் கூகுள் படம் ஊடாக கூடுதலான நூறுக்கு மேற்பட்ட விவசாய குளங்களை தமது எல்லைக்குள் அடையாளப்படுத்தி உள்ளமையினால் விவசாய அபிவிருத்தியைப் புனரமைப்பு செய்ய முடியாத நிலை காணப்படுகிறது. இடம் பெயர்ந்த மக்கள் மீளக்குடியேறிய பின்னர் தமது விவசாய நிலங்களை மீளப் பெற்றுத்தருமாறு கோருகின்றனர். அதன் அடிப்படையில் குறிப்பிட்ட விவசாய நிலங்கள் தற்போது வன வள திணைக்களத்திடம் இருந்து மீளப் பெற்றுக்கொள்ள முடியாத நிலை காணப்படுகிறது. இதனால் மீள்குடியேறி பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. நல்லிணக்க அடிப்படையில் அவர்களின் நிலங்களை மீள வழங்குவதில் நாங்கள் சவால்களை எதிர் நோக்குகிறோம். 1980 ஆம் ஆண்டு இடம் பெயர்ந்ததன் காரணமாக பொது மக்களினால் பயன்படுத்தப்பட்ட இடங்கள் கூட சிறு காடுகளாகக் காணப்படுகிறது. இதன் காரணமாக 12 ஆயிரம் ஹெக்டேர் நிலத்தைக் குறித்த திணைக்களத்திடம் உரிய ஆதாரத்துடன் சமர்ப்பித்து பொது மக்களின் 1500 ஹெக் டயர் காணிகளே விடுவிக்கப்பட்டுள்ளது. பொது மக்களினால் அடையாளம் காணப்பட்ட ஏனைய நிலங்களை விடுவிக்க முடியாத நிலை காணப்படுகிறது என அவர் மேலும் தெரிவித்தார். இதேவேளைக் குறித்த குழுவினர் அரச அரச சார்பற்ற அமைப்புகளின் பிரதிநிதிகள், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் உட்பட பல்வேறு தரப்புக்களையும் சந்தித்து உண்மை ஒற்றுமை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் உத்தேச சட்ட வரைவு குறித்துக் கலந்துரையாடி உள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/186979
  25. மாங்குளத்தில் இடம்பெற்ற கோர விபத்தில் 3 பேர் உயிரிழப்பு, இருவர் படுகாயம்! 26 JUN, 2024 | 09:58 AM மாங்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து நேற்று செவ்வாய்க்க்கிழமை (25) இரவு இடம்பெற்றுள்ளது. பஸ் பழுதடைந்த நிலையில் வீதியோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேளை, பின்னால் வாந்த லொறி மோதியே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் பஸ் சாரதியும் பஸ்ஸில் பயணித்த இருவரும் உயிரிழந்துள்ளதுடன் லொறியின் சாரதியும் லொறியில் பயணித்த மற்றுமொருவரும் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டள்ளனர். https://www.virakesari.lk/article/186986

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.