Everything posted by ஏராளன்
-
உலகில் அதிக நேரம் உறங்கும் மக்களை கொண்ட நாடுகள் பட்டியலில் இலங்கை!
உலகில் அதிக நேரம் மக்கள் உறங்கும் நாடுகளின் பட்டியல் வெளியாகியுள்ள நிலையில், இலங்கை 3ஆவது இடம் பிடித்துள்ளது. உலகில் உள்ள 60 நாடுகளின் சராசரியாக உறங்கும் அளவினை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்பட்ட ஆராய்ச்சிக்கமைய இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய இலங்கை வாழ் மக்கள் 8.1 மணிநேரம் உறங்குவதாகக் கணிக்கப்பட்டுள்ளது. குறித்த ஆய்வின்படி 12 மணி நேரத்துடன் பல்கேரியா 1ஆவது இடத்திலும் 10.2 மணிநேரத்துடன் அகோலா 2ஆவது இடத்திலும் காணப்படுகின்றன. இதேவேளை எமது அண்டை நாடான இந்தியா 42ஆவது இடத்தில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. https://thinakkural.lk/article/301159
-
ரஷ்யா: 5வது முறை அதிபரான புதின் - அடுத்த ஜோசப் ஸ்டாலின் ஆகிறாரா? மக்கள் சொல்வது என்ன?
பட மூலாதாரம்,SPUTNIK/SERGEI BOBYLEV/KREMLIN VIA REUTERS கட்டுரை தகவல் எழுதியவர், ஸ்டீவ் ரோசன்பர்க் பதவி, ஆசிரியர், பிபிசி ரஷ்ய சேவை 5 மணி நேரங்களுக்கு முன்னர் ஐந்தாவது முறையாக ரஷ்ய அதிபர் பதவியேற்பதற்கு விளாதிமிர் புதின் கிரெம்ளின் அரண்மனை வழியாக செயின்ட் ஆண்ட்ரூ சிம்மாசன மண்டபத்திற்கு நடந்து சென்றார். அவர் அந்தப் பாதையில் கண்களைக் கட்டிக்கொண்டே நடந்திருக்கலாம். அங்கு அவர் பதவிப் பிரமாணம் செய்துகொண்டு, அடுத்த 6 ஆண்டு காலத்திற்கு ரஷ்யாவின் அதிபராகப் பதவியேற்றார். "நாம் ஒன்றுபட்ட, சிறந்த மக்கள். ஒன்றாக நாம் அனைத்து தடைகளையும் சமாளிப்போம். நமது திட்டங்களை நிறைவேற்றுவோம். ஒன்றாக வெற்றி பெறுவோம்," என்று அமைச்சர்கள் மற்றும் பிரமுகர்கள் கூட்டத்தில் அதிபர் புதின் கூறினார். சிவப்புக் கம்பளப் பாதை அவருக்கு நன்கு தெரிந்திருக்கலாம். ஆனால் 2000ஆம் ஆண்டு மே மாதம் புதினின் முதல் பதவியேற்பு விழாவிற்குப் பிறகு நிறைய மாறிவிட்டது. அப்போது, அதிபர் புதின், "ஜனநாயகத்தைப் பாதுகாத்து வளர்ப்பதாகவும் ரஷ்யாவைக் கவனித்துக் கொள்வதாகவும்" உறுதியளித்தார். அதற்கு 24 ஆண்டுகளுக்குப் பிறகு, புதின் இன்று யுக்ரேனுக்கு எதிராக ஒரு போரை நடத்தி வருகிறார். இதில் ரஷ்யா பெரும் இழப்பைச் சந்தித்திருக்கிறது. உள்நாட்டில், ஜனநாயகத்தை வளர்ப்பதற்குப் பதிலாக, அதிபர் புதின் அதைக் குறைத்து வருகிறார். விமர்சகர்களை சிறையில் அடைக்கிறார், அவரது அதிகாரத்தின் மீதான அனைத்து கட்டுப்பாடுகளையும் நீக்குகிறார். ‘தன்னை நவயுக மன்னர் என நினைக்கிறார் புதின்’ பட மூலாதாரம்,GAVRIIL GRIGOROV/POOL/AFP படக்குறிப்பு,ஏறக்குறைய கால் நூற்றாண்டு ரஷ்யாவை இயக்கிய பிறகு, புதின் நிச்சயமாகத் தனது முத்திரையைப் பதித்துள்ளார். "புதின் இப்போது தன்னை ‘விளாதிமிர் தி கிரேட்’ என்ற ரஷ்ய மன்னர் என நினைத்துக்கொள்கிறார்," என்கிறார் வெள்ளை மாளிகையின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகரான ஃபியோனா ஹில். "புதினின் முதல் இரண்டு அதிபர் பதவிக் காலங்களை மதிப்பிட்டால், அவர் ரஷ்யாவை அரசியல் ரீதியாக உறுதிப்படுத்தியுள்ளார். ரஷ்ய பொருளாதாரம் அதன் வரலாற்றில் எந்த முந்தைய காலகட்டத்தை விடவும் சிறப்பாகச் செயல்பட்டது,” என்கிட்றார் அவர். "பத்து ஆண்டுகளுக்கு முன்பு கிரைமியாவை ரஷ்யா தன்னோடு இணைத்ததில் இருந்து தற்போதைய யுக்ரேன் வரையான சம்பவங்கள், அந்தச் சாதனைகளை வியத்தகு முறையில் மாற்றியுள்ளன. அவர் ஒரு நடைமுறைவாதியாக இல்லாமல் தன்னை ஒரு ஏகாதிபத்தியவாதியாக மாற்றிக்கொண்டார்," என்கிறார். விளாதிமிர் புதின் முதன்முதலில் ஆட்சிக்கு வந்ததில் இருந்து, அமெரிக்கா ஐந்து வெவ்வேறு அதிபர்களையும், பிரிட்டன் ஏழு பிரதமர்களையும் பெற்றுள்ளது. ஏறக்குறைய கால் நூற்றாண்டு ரஷ்யாவை இயக்கிய பிறகு, புதின் நிச்சயமாகத் தனது முத்திரையைப் பதித்திருக்கிறார். ரஷ்ய மக்கள் தங்கள் கடந்த அதிபர்களைப் பற்றி ‘ப்ரெஷ்நேவிசம்’, ‘கோர்பச்செவிசம்’ அல்லது ‘யெல்ட்சினிசம்’ பற்றி அரிதாகவே பேசினர். ஆனால் ‘புதினிசம்’ ரஷ்யாவின் எல்லா இடங்களிலும் உள்ளது. "எங்கள் வரலாற்றில் இன்னும் ஒரு-இசம் உள்ளது, அது ஸ்டாலினிசம்," என்கிறார் கார்னகி யூரேசியா ரஷ்யா மையத்தின் மூத்த ஆய்வாளர் ஆண்ட்ரி கோல்ஸ்னிகோவ். அவர் ரஷ்யாவின் முன்னாள் சர்வாதிகாரியான ஜோசஃப் ஸ்டாலினை பற்றிக் கூறுகிறார். ஜோசப் ஸ்டாலினது ஆட்சியில் நாட்டுக்கும் அவருக்கும் எதிரானவர்கள் என்று கருதப்பட்ட பல லட்சம் மக்கள் கொல்லப்பட்டனர். "புதினிசம் என்பது ஸ்டாலினிசத்தின் மற்றோர் அவதாரம் என்று நான் கூறுவேன். அவர் ஸ்டாலினை போலவே நடந்துகொள்கிறார். அவருடைய அதிகாரம் ஸ்டாலினின் காலத்தைப் போலவே தனிநபர் மயமாக்கப்பட்டது. அவர் நிறைய அரசியல் அடக்குமுறைகளைப் பயன்படுத்த விரும்புகிறார். மேலும் ஸ்டாலினை போலவே அவர் தன்னை அதிகாரத்தில் வைத்திருக்கத் தயாராக இருக்கிறார். அவர் தனது இறுதிநாள் வரை அதிகாரத்தில் இருப்பார்," என்கிறார் கார்னகி யூரேசியா. மேற்கு நாடுகளுக்கு புதின் விடுக்கும் சவால் படக்குறிப்பு,காஷிரா நகரில் ஒரு பிரமாண்டமான புதின் உருவப்படச் சுவரோவியம், ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் ஒரு முழு பக்கத்தையும் நிரப்பியிருக்கிறது அதீதமாகச் சர்வாதிகார முறையில் செயல்படும் ரஷ்ய தலைவரை, ரஷ்யாவின் மகத்துவமாகத் தாம் கருதுவதை மீட்டெடுப்பதில் உறுதியாக உள்ள அந்தத் தலைவரை, அணு ஆயுதங்கள் வைத்திருக்கும் ஒரு நவீன மன்னரை எவ்வாறு கையாள்வது என்பதுதான் மேற்கு நாடுகளுக்கு முன்னிருக்கும் மிகப்பெரும் சவால். "அணு ஆயுதம் குறித்த பிரச்னையில், நாம் நிறைய செய்யக்கூடும்," என்கிறார் ஃபியோனா ஹில். “யுக்ரேனில் அணு ஆயுங்கள் பயன்படுத்துவதாக மிரட்டி, புதின் பின்வாங்கியபோது, சீனா, இந்தியா, ஜப்பான் போன்ற சில நாடுகள் பதற்றமடைந்தன. இந்த வரைமுறையற்ற அணு ஆயுத ஊகப்பேச்சைக் கட்டுப்படுத்துவதற்கு ஒரு சர்வதேச கட்டமைப்பை உருவாக்குவதன் மூலம், ரஷ்யா மீது கட்டுப்பாட்டை அமல்படுத்த முடியும்,” என்கிறார் அவர். "ஒருவேளை, விளாதிமிர் புதினை நாம் எவ்வாறு கையாள்வது என்பதற்கு இதுவொரு முன்மாதிரியாக இருக்கலாம். அவர் பல விஷயங்களில் ஒரு முரட்டுத்தனமான தலைவராக இருக்கிறார். அவர் மேற்கொள்ள விரும்பும் செயல்களை அனுமதிக்காத, கட்டுப்பாடான சூழலை நாம் உருவாக்க வேண்டும்," என்றார் அவர். சென்ற மார்ச் மாதம் நடந்த அதிபர் தேர்தலில் அதிகாரப்பூர்வமாக விளாதிமிர் புதின் 87%-க்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றார். இருப்பினும், இத்தேர்தல் சுதந்திரமாக, நியாயமாக நடக்கவில்லை என்று பரவலாகக் கூறப்படுகிறது. புதினுக்கு இந்தத் தேர்தலில் வலுவான எதிரியும் இல்லை. ‘புதின் இல்லையெனில் வேறு யார்?’ படக்குறிப்பு,"எனக்கு புதினை பிடிக்கும்," என்கிறார் சாலையோரம் பூக்கள் விற்கும் ஓய்வூதியதாரர் வாலண்டினா. ஜோசஃப் ஸ்டாலினுக்கு அடுத்து ரஷ்யாவை நீண்டகாலம் ஆண்டு வரும் புதினை ரஷ்ய மக்கள் எவ்வாறு பார்க்கின்றனர். அதை அறிந்துகொள்ள மாஸ்கோவில் இருந்து 70 மைல் தொலைவில் உள்ள காஷிரா நகருக்குச் சென்றோம். அங்கே ஒரு பிரமாண்டமான புதின் உருவப்படச் சுவரோவியம், ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் ஒரு முழு பக்கத்தையும் நிரப்பியிருக்கிறது. காஷிராவில் புதின் உங்களைப் கவனித்துக்கொண்டிருக்கிறார். "எனக்கு அவரைப் பிடிக்கும்," என்கிறார் சாலையோரம் பூக்கள் விற்கும் ஓய்வூதியதாரர் வாலன்டினா. "புதின் நல்ல சிந்தனைகள் உள்ளவர். மக்களுக்காக நிறைய செய்கிறார். எங்கள் ஓய்வூதியம் பெரிதாக இல்லை என்பது உண்மைதான். ஆனால் அவரால் எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் சரிசெய்ய முடியாது," என்கிறார் அவர். "அவர் கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் ஆட்சியில் இருந்திருக்கிறார்," என்று நான் சுட்டிக்காட்டினேன். "ஆனால் புதின் இல்லையென்றால் அடுத்து யார் வருவார்கள் என்று தெரியாது," என்று வாலன்டினா பதிலளித்தார். புதின் சுவரோவியத்தைக் கடந்து செல்லும் விக்டோரியா என்ற பெண்மணி, "ரஷ்யாவில் நாங்கள் அனைவரும் ஒரே மாதிரியாக சிந்திக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது,” என்கிறார். "புதினுக்கு எதிராக நான் ஏதாவது சொன்னால் என் கணவர் 'நீ புதினை மீண்டும் விமர்சித்தால், நான் உன்னை விவாகரத்து செய்துவிடுவேன்!' என்று கூறுவார். அவர் புதின்மீது வெறித்தனமாகப் பற்று கொண்டுள்ளார். புதின் இல்லாவிட்டால், 1990களில் இருந்ததைப் போல இங்கே வாழ்க்கை கடினமாக இருக்கும் என்று அவர் கூறுகிறார்,” என்கிறார் விக்டோரியா. மற்றொரு வழிப்போக்கரான அலெக்சாண்டரிடம், அதிபரைப் பற்றி என்ன நினைக்கிறார் என்று நான் கேட்டபோது, அவர், "இப்போது எனது கருத்தை வெளிப்படுத்துவது ஆபத்தானது. எதுவும் சொல்ல விரும்பவில்லை,” என்றார். நான் பேசிய மக்களில் பெரும்பாலானவர்கள் புதினின் உருவப்படத்தை இப்போது கவனிக்காமல் கடந்து செல்வதாகக் கூறுகிறார்கள். அதற்கு அவர்கள் பழகிவிட்டார்கள். ரஷ்யாவை இயக்கும் ஒரு தனிமனிதனுக்கும், ரஷ்ய அரசாங்கத்தில் இனி எந்த உடனடி மாற்றத்திற்கும் வாய்ப்பு இல்லை என்ற நிதர்சனத்துக்கு அவர்கள் பழகிவிட்டதைப் போலவே அவர்கள் புதினின் அந்தப் பெரிய உருவப்படத்துக்கும் பழகிவிட்டார்கள். https://www.bbc.com/tamil/articles/c51nevkgl53o
-
மின் கட்டண குறைப்பு முன்மொழிவுகளை சமர்ப்பிக்குமாறு மின்சார சபைக்கு PUCSL அறிவிப்பு
மின் கட்டண குறைப்பு தொடர்பான முன்மொழிவுகளை எதிர்வரும் 10ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு இலங்கை மின்சார சபைக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இம்மாதம் முதலாம் திகதி இந்த முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதுடன் இலங்கை மின்சார சபை அதற்கு கால அவகாசத்தை கோரியிருந்ததாக ஆணைக்குழுவின் பேச்சாளரொருவர் தெரிவித்துள்ளார். அதற்கமைய, எதிர்வரும் 10ஆம் திகதி வரை குறித்த முன்மொழிவுகளை சமர்ப்பிப்பதற்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. குறித்த முன்மொழிவுகள் கிடைத்ததன் பின்னர் மின் கட்டணங்களை குறைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது. அதன்படி மின் கட்டணங்களை குறைப்பது தொடர்பான விபரங்களை எதிர்வரும் ஜூலை மாதத்தில் அறிவிக்க முடியும் என இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்தது. https://thinakkural.lk/article/301094
-
மீள் மின் இணைப்பை 90 நாட்களுக்குள் பெற்றுக்கொள்ளாவிடின் மின் விநியோகம் முழுமையாக துண்டிக்கப்படும் - மின்சாரத்துறை அமைச்சர்
அரசுக்கு சிக்கலை ஏற்படுத்தும் வகையில் ஒருங்கிணைக்கப்பட்ட குழு மின் இணைப்பை துண்டிக்கிறது: காஞ்சன அரசாங்கத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில், கட்டணத்தை செலுத்த தவறிய மின்சார பாவனையாளர்களின் மின் இணைப்பை துண்டிக்கும் வகையில் ஒழுங்கமைக்கப்பட்ட குழுவொன்று செயற்பட்டு வருவதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இது தொடர்பில் இலங்கை மின்சார சபை விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக அவர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். மின்சாரத் துண்டிப்பு தொடர்பில் SJB பாராளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மின்சாரம் துண்டிக்கப்படுவதற்கு முறையான நடைமுறை இருப்பதாகத் தெரிவித்த அமைச்சர் விஜேசேகர, உரிய நடைமுறைகளைப் பின்பற்றத் தவறும் அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார். “சிவப்பு அறிவிப்புகளை வெளியிட சரியான நடைமுறையும், சிவப்பு அறிவிப்புகளை வெளியிட்ட பிறகு துண்டிக்க ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியும் உள்ளது. மேலும், மின் விநியோகத்தை துண்டிக்கும் போது பின்பற்ற வேண்டிய நடைமுறை உள்ளது. துண்டிக்கப்படும் போது முறையான நடைமுறை பின்பற்றப்பட வேண்டும். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் குமாரவின் மின்சார விநியோகம் முன்னறிவிப்பின்றி துண்டிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குழு செயற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார, ஒரு மாத கட்டணத்தை செலுத்த தவறியதற்காக முன்னறிவிப்பின்றி தனது மின்சாரம் துண்டிக்கப்பட்டதாகவும், அது நியாயமற்றது என்றும் தெரிவித்தார். https://thinakkural.lk/article/301082
-
ஐ.பி.எல் 2024 - செய்திகள்
சாம்சனின் சர்ச்சைக்குரிய அவுட், ராஜஸ்தானை வீழ்த்திய டெல்லி - ப்ளே ஆஃப் வாய்ப்புகள் எப்படி? பட மூலாதாரம்,SPORTZPICS கட்டுரை தகவல் எழுதியவர், போத்திராஜ் பதவி, பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் கிரிக்கெட்டில் எப்போதுமே சந்தேகத்தின் பலன் பேட்டருக்குத்தான் தரப்பட வேண்டும் என்று தார்மீகம். ஏனென்றால், பேட்டருக்கு இருப்பது ஒரு வாய்ப்புதான், ஒரு உயிர்தான் அதில் தவறு நேரும்பட்சத்தில் பேட்டரும் தன்னுடைய விக்கெட்டை இழக்க நேரிடும், அணியின் வெற்றி வாய்ப்பும் தலைகீழாக மாறிவிடும். ஆனால், பந்துவீச்சாளருக்கு ஒரு பந்து இல்லாவிட்டால் அடுத்த பந்தில் வாய்ப்பு கிடைக்கும். இதைக் கணக்கிட்டுத்தான் சந்தேகத்தின் பலன் பேட்டருக்கு தரப்பட வேண்டும் என்று தார்மீகமாகக் கூறப்படுகிறது. அதன்படி, நேற்று நடந்த ஐபிஎல் டி20 லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு சந்தேகத்தின் பலனை அளித்திருந்தால், ஆட்டம் வேறுவிதமாகத் திரும்பியிருக்கும். ஆனால், சந்தேகத்தின் பலன் சாம்சனுக்குத் தராமல் அவுட் வழங்கியது ஆட்டத்தில் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. டெல்லியில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 56வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 20 ரன்களில் தோற்கடித்தது டெல்லி கேபிடல்ஸ். முதலில் பேட் செய்த டெல்லி கேபிடல்ஸ் 8 விக்கெட் இழப்புக்கு 221 ரன்கள் சேர்த்தது. 222 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 8 விக்கெட் இழப்புக்கு 201 ரன்கள் சேர்த்து 20 ரன்களில் தோல்வி அடைந்தது. ப்ளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெறப்போவது யார்? பட மூலாதாரம்,SPORTZPICS இப்போதுவரை ப்ளே ஆஃப் சுற்றை எந்த அணியும் இறுதி செய்யவில்லை என்பதுதான் ஐபிஎல் தொடரில் இருக்கும் சுவாரஸ்யம். டெல்லி கேபிடல்ஸ் அணி 12 ஆட்டங்களில் 6 வெற்றி, 6 தோல்வி என 12 புள்ளிகளுடன் 5வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. இருப்பினும் அந்த அணியின் நிகர ரன்ரேட் மைனஸ் 0.316 என்ற கணக்கில்தான் இருக்கிறது. டெல்லி அணிக்கு இன்னும் 2 போட்டிகள் மட்டுமே மீதமிருக்கும் நிலையில், அதில் கட்டாய வெற்றி பெற்றால்தான் 16 புள்ளிகளுடன் கடைசி இடத்துக்குப் போராட முடியும். இதில் நிகர ரன் ரேட்டையும் டெல்லி அணி உயர்த்துவது அவசியம். டெல்லி அணிக்கு நெருக்கடி கொடுக்க லக்னெள, சன்ரைசர்ஸ் அணிகள் காத்திருக்கின்றன. இப்போதைய சூழலில் இந்த 3 அணிகளுக்குள்தான் ப்ளே ஆஃப் சுற்றில் 4வது இடத்தைப் பிடிக்கக் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. ஒருவேளை சிஎஸ்கே அணி ஒரு போட்டியில் தோற்றாலும் 4வது இடத்துக்கான ரேஸில் சேர்ந்துகொள்ளும். இதில் டெல்லி அணி இன்னும் ஒரு போட்டியில் தோற்றாலும் ப்ளே ஆஃப் ரேஸில் இருந்து வெளியேறும். இன்று ஹைதராபாத்தில் நடக்கும் சன்ரைசர்ஸ், லக்னெள அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் கிடைக்கும் முடிவுதான் ப்ளே ஆஃப் சுற்றுக்கு யார் செல்ல முடியும் என்பதில் தெளிவான பார்வையை உருவாக்கும். ஒருவேளை சன்ரைசர்ஸ் அணி வென்றால் 14 புள்ளிகளுடன் சிஎஸ்கே அணியைக் கீழே இறக்கிவிட்டு 3வது இடத்தைப் பிடித்துவிடும். லக்னெள அணி ஏற்கெனவே நிகர ரன்ரேட்டில் மைனஸ் 0.371 என இருக்கும் நிலையில் தோல்வி அடைந்தால் அதன் நிலை இன்னும் மோசமாகும். அடுத்த இரு ஆட்டங்களையும் லக்னெள வென்றாலும் 16 புள்ளிகள்தான் கிடைக்கும், நிக ரன்ரேட்டில் சிக்கிக்கொள்ளும். ஒருவேளை சன்ரைசர்ஸ் அடுத்த 3 ஆட்டங்களையும் வென்று லீக் சுற்றை 18 புள்ளிகளுடன் முடித்து, சிஎஸ்கேவும் 18 புள்ளிகளுடன் முடித்தால், நிகர ரன்ரேட்டில் இரு அணிகளுக்குள் போட்டி ஏற்படும். அப்போது 3வது, 4வது இடத்தை இரு அணிகளுமே பகிர்ந்துகொள்ளும். டெல்லி, லக்னெள அணிகள் வெளியேற்றப்படும் சூழல் ஏற்படலாம். இதே கணக்கீடு, லக்னெள அணி வெற்றி பெற்றால் சன்ரைசர்ஸ் அணிக்கும் பொருந்தும். சிஎஸ்கே அணி அடுத்து ஒரு போட்டியில் தோற்றாலும், 16 புள்ளிகளுடன் நிகர ரன்ரேட்டில் சிக்கி 4வது இடத்தையே பிடிக்கலாம். ராஜஸ்தான் அணியின் நிலை என்ன? பட மூலாதாரம்,SPORTZPICS ராஜஸ்தான் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இருப்பினும் 16 புள்ளிகளோடு வலுவாக இருப்பதால் 2வது இடத்தில் இருந்து இறங்கவில்லை, நிகர ரன்ரேட்டும் மைனசுக்கு வராமல் 0.476 ஆக இருக்கிறது. இப்போதுள்ள சூழலில் முதலிடத்தைப் பிடிக்க கொல்கத்தா, ராஜஸ்தானுக்கு இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இரு அணிகளும் அடுத்து வரும் 3 ஆட்டங்களிலும் வென்றால் தலா 22 புள்ளிகள் பெறும், அப்போது நிகர ரன்ரேட் ஒப்பீடு பார்க்கப்படும். எந்த அணி நிகர ரன்ரேட்டில் உயர்வாக இருக்கிறதோ அந்த அணி முதலிடத்தைப் பிடிக்கும். ஏற்கெனவே நிகர ரன்ரேட்டில் கொல்கத்தா உயர்வாக இருப்பது அந்த அணிக்குக் கூடுதல் சாதகம். ராஜஸ்தான் முதலிடத்தைப் பிடிக்க வேண்டுமென்றால், அடுத்து வரும் 3 ஆட்டங்களையும் மிகப்பெரிய ரன் வித்தியாசத்தில், விக்கெட் வித்தியாசத்தில் வென்று நிகர ரன்ரேட்டை உயர்த்தினால், முதலிடம் கிடைக்கும் அல்லது கொல்கத்தா அணி ஒரு ஆட்டத்தில் தோற்க வேண்டும். இல்லாவிட்டால் ராஜஸ்தானுக்கு 2வது இடம்தான். ராஜஸ்தான் அணி தனக்கிருக்கும் 3 லீக் ஆட்டங்களில் இன்னும் ஒரு ஆட்டத்தில் வேண்டுமென்றால் தோற்கலாம், மற்ற இரு ஆட்டங்களிலும் வென்றால் 2வது இடத்தைப் பிடித்துவிடும். ஒருவேளை ஒரு ஆட்டத்தில் வென்று 2 ஆட்டங்களில் தோல்வி அடைந்தால், ப்ளே ஆஃப் சுற்றில் 2,3,4வது இடங்களுக்கு கடும் போட்டி ஏற்படும். டெல்லி அணியின் வெற்றிக்கு பந்துவீச்சாளர்கள்தான் காரணம் என்பதைவிட, ராஜஸ்தான் அணியில் வலுவான பேட்டர்கள் நடுவரிசையில் இல்லாததே காரணம் என்று கிரிக்கெட் விமர்சகர்கள் கூறுகின்றனர். ஹெட்மயர், துருவ் ஜூரெல் இருவரும் இல்லாத பலவீனமான நடுவரிசை இருந்ததால்தான் ராஜஸ்தான் 20 ரன்களில் தோல்வி அடைந்தது, ஒருவேளை இவர்கள் இருந்திருந்தால் ஆட்டம் வேறுவிதமாகத் திரும்பியிருக்கும். இருப்பினும் குல்தீப் யாதவ் ஒரே ஓவரில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டத்தின் திருப்புமுனையாக இருந்தார். 4 ஓவர்கள் வீசிய குல்தீப் 25 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருது வென்றார். குல்தீப் வீசிய 18வது ஓவர்தான் ஆட்டத்தை டெல்லி பக்கம் முழுமையாகக் கொண்டு சென்றது. சாம்சனின் சர்ச்சைக்குரிய அவுட்? பட மூலாதாரம்,SPORTZPICS ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஜெய்ஸ்வால்(4), பட்லர்(19), ரியான் பராக்(27) ஆகியோர் ஏமாற்றிய நிலையில் அணியை தோல்வியிலிருந்து கேப்டன் சாம்சன் இழுத்து வந்தார். அரைசதம் அடித்து 85 ரன்களுடன் ஆக்ரோஷமாக சாம்சன் பேட் செய்தார். சாம்சன் இருந்த தீவிரத்துக்கும், ஆவேசத்துக்கும், ஸ்பிரிட்டுக்கும் களத்தில் இருந்திருந்தால் அணியை வெற்றி பெற வைத்திருப்பார். ராஜஸ்தான் வெற்றிக்கு 30 பந்துகளில் 63 ரன்கள்தான் தேவைப்பட்டது. அப்போதுதான் அந்தச் சம்பவம் நடந்தது. 16வது ஓவரை முகேஷ் குமார் வீசினார். அந்த ஓவரில் 4வது பந்தை சாம்சன் தூக்கி அடிக்க பவுன்டரி கோடு அருகே பக்கவாட்டில் சாய்ந்தவாறு ஷாய் ஹோப் கேட்ச் பிடித்தார். ஆனால், ஹோப் கேட்ச் பிடித்தபோது அவரின் கால் பவுண்டரி எல்லைக் கோட்டின் மீது லேசாக மிதித்தது போன்று இருந்ததா அல்லது இல்லையா என்பதை உறுதி செய்ய முடியவில்லை. எல்லைக் கோட்டின் மீது ஹோப் லேசாக மிதித்தது போன்றும் இருந்தது, மிதிக்காமல் சென்றது போன்றும் இருந்தது. ஆனால், உறுதி செய்ய முடியாத சூழலில் இருந்தது, 3வது நடுவரும் பலமுறை ரீப்ளே செய்து பார்த்தபோதும் இறுதி முடிவை எடுக்க முடியவில்லை. களத்தில் இருந்த சாம்சனும் வெளியேறவில்லை. ஆனால் ஷாய் ஹோப் கேட்ச் பிடித்துவிட்ட மகிழ்ச்சியில் சகவீரர்களோடு கொண்டாட்டத்தில் இருந்தார். சந்தேகத்தின் பலனை பேட்டருக்கு வழங்காமல் 3வது நடுவர் சாம்சனுக்கு அவுட் வழங்கினார். இதைப் பார்த்த சாம்சன் கள நடுவரிடம் வாக்குவாதம் செய்துவிட்டு மைதானத்தில் இருந்து வெளியேறினார். சாம்சனின் அவுட் குறித்து முடிவு அறிவிக்கப்படாத நிலையில், அரங்கில் இருந்த டெல்லி கேபிடல்ஸ் அணியின் உரிமையாளர் பர்த் ஜிண்டால் கொண்டாட்டத்தில் இருந்தார். இதைப் பார்த்த ரசிகர்கள், நெட்டிசன்கள் தங்கள் ஆதங்கத்தையும், கோபத்தையும் சமூக ஊடகத்தில் பதிவிட்டனர். சாம்சனுக்கு ஒரு தலைபட்சமாக முடிவு அளிக்கப்பட்டதைக் கண்டித்தும், டெல்லி உரிமையாளரின் செயலையும் கடுமையாகக் கண்டித்து, விமர்சித்து வருகிறார்கள். ஒருவேளை சாம்சனுக்கு சந்தேகத்தின் பலனை அளித்து அவுட் இல்லை எனத் தெரிவித்திருந்தால், ஆட்டத்தில் ராஜஸ்தான் வெற்றி உறுதியாகி இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. சாம்சனும் 46 பந்துளில் 86 ரன்களில் (6 சிக்ஸர், 8 பவுண்டரி) இருந்தவர் சதம் அடித்திருப்பார். இவை அனைத்தும் சர்ச்சைக்குரிய அவுட்டால் நடக்கவில்லை. ராஜஸ்தான் அணி எங்கு தோற்றது? பட மூலாதாரம்,SPORTZPICS ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஜெய்ஸ்வால், பட்லர் விரைவாக ஆட்டமிழந்ததுதான் தோல்விக்கான முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது. இருவரும் பவர் ப்ளேவில் வலுவான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்திருந்தால், அடுத்து வரும் பேட்டர்களின் சுமை குறைந்திருக்கும். ஜெய்ஸ்வால் இந்த சீசனில் மீண்டும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். கலீல் அகமது வீசிய முதல் ஓவரின் 2வது பந்திலேயே ஜெய்ஸ்வால் ஆட்டமிழந்தது, பவர்ப்ளே ஓவருக்குள் பட்லர் ஆட்டமிழந்தது பெரிய பின்னடைவாக இருந்தது. இருப்பினும் சாம்சன் களமிறங்கி, பவர்ப்ளே ஓவர்களை சரியாகப் பயன்படுத்தி சிக்ஸர், பவுண்டரி என விளாசி 67 ரன்களை சேர்த்தார். அடுத்ததாக நடுவரிசையில் களமிறங்கிய ரியான் பராக்(27), ரூ.2.80 கோடிக்கு வாங்கப்பட்ட ஷூபம் துபே(25) இருவரும் சாம்சனுக்கு சரியான பார்ட்னர்ஷிப் அமைக்கத் தவறிவிட்டனர். இருவரும் சாம்சனுக்கு நன்கு ஒத்துழைத்திருந்தால், ரன் சேர்ப்பு இன்னும் வேகமெடுத்திருக்கும். இதில் ஷுபம் துபே மட்டும் சாம்சனுக்கு ஓரளவு ஒத்துழைத்து 59 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார். ரியான் பராக், சாம்சன் கூட்டணி 36 ரன்கள் மட்டுமே சேர்த்தனர். கீழ்வரிசையில் ரோவ்மென் பாவெல்(13), பெரேரா(1), அஸ்வின்(2) என அனைத்து பேட்டர்களும் ராஜஸ்தான் அணியைக் கைவிட்டது தோல்விக்குக் காரணமாக அமைந்தது. அதிலும் பவர் ஹிட்டரான பாவெல் கடைசி நேரத்தில் பந்துகளை வீணாக்கியது நெருக்கடியை ஏற்படுத்தியது. தென் ஆப்பிரிக்க வீரரான பெரேராவுக்கு பேட்டர் என நினைத்து வாய்ப்பளித்தும் அவர் ஏமாற்றினார். சாம்சன் ஆட்டமிழக்காத வரை ராஜஸ்தான் அணி 162 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து வலுவாக இருந்தது. 15வது ஓவர் வரை ஆட்டத்தை சாம்சன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். சாம்சனுக்கு எவ்வாறு பந்துவீசுவது எனத் தெரியாமல் டெல்லி பந்துவீச்சாளர்கள் திணறி வந்தனர். குறிப்பாக கலீல் அகமது பவுண்டரி அடிப்பதைத் தவிர்க்க வேண்டுமே என்பதற்காக 5 வைடு பந்துகளை ஒரே ஓவரில் வீசி சாம்சனை வெறுப்பேற்றினார். இசாந்த் சர்மா, சலாம், முகேஷ், குல்தீப் ஓவர்களையும் சாம்சன் வெளுத்து வாங்கி, 28 பந்துகளில் அரைசதம் அடித்து சிம்மசொப்னமாகத் திகழ்ந்தார். முகேஷ் குமார் ஓவரில் சர்ச்சைக்குரிய வகையில் சாம்சன் ஆட்டமிழந்தவுடன், ராஜஸ்தான் சரிவு தொடங்கி, அடுத்த 39 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்தது. பவர் ஹிட்டர்களை வைத்திருக்கும் ராஜஸ்தான் அணி 20 ரன்களில் தோற்றது. பாவெல், பெரேரா இருவரும் சிறிய கேமியோ ஆடி இருந்தாலே ஆட்டத்தின் முடிவு வேறுவிதமாகத் திரும்பியிருக்கும். எங்களிடம்தான் ஆட்டம் இருந்தது பட மூலாதாரம்,SPORTZPICS ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் கூறுகையில், “ஆட்டம் எங்கள் கைகளில்தான் இருந்தது, ஓவருக்கு 10 முதல்11 ரன்கள் என்பது எட்டக்கூடிய இலக்குதான், ஐபிஎல் தொடரில் இதுபோன்ற சேஸிங் நடந்துள்ளது. பந்துவீச்சு, பேட்டிங்கில் சிறப்பாகவே செயல்பட்டோம், சூழலுக்கு என்ன தேவையோ அதைச் செய்தோம். 220 ரன்களை நாங்கள் அனுமதித்திருக்கக் கூடாது, 2 பவுண்டரிகள் கொடுத்ததைக் குறைத்திருந்திருந்தால், ஆட்டம் எங்கள் பக்கம்தான். டெல்லி அணி சிறப்பாக பேட் செய்தனர், மெக்ருக் இந்த சீசன் முழுவதும் சிறப்பான தொடக்கத்தை அளித்து வருகிறார். மெக்ருக் சந்தித்த இரு ஓவர்களில் அதிக ரன்களை கொடுத்தோம். நாங்கள் 3 ஆட்டங்களையும் வெற்றியின் அருகே வந்து தோற்றுள்ளோம், இருப்பினும் சிறந்த கிரிக்கெட்டை ஆடினோம் என்ற மனநிறைவு இருக்கிறது. முடிவுகள் எப்படி வேண்டுமானாலும் வரட்டும், ஆனால் தொடர்ந்து எங்களை நாங்கள் உற்சாகப்படுத்திக்கொண்டே அடுத்தடுத்து வெற்றிகளைப் பெற்றோம், சிறிதுகூட ரிலாக்ஸ் ஆக எங்களை நாங்கள் அனுமதிக்கவில்லை. டெத் ஓவரில் சந்தீப் சர்மா சிறப்பாகப் பந்துவீசக்கூடியவர். அவர் கடைசி நேரத்தில் 3 சிக்ஸர்களை விட்டது பின்னடைவு. எங்கு தவறு நடந்தது என்பதை ஆலோசிப்போம், அடுத்தடுத்த ஆட்டங்களில் முன்னோக்கிச் செல்வோம்,” எனத் தெரிவித்தார். மெக்ருக், போரெல், ஸ்டெப்ஸ் அதிரடி பேட்டிங் டெல்லி அணி 200 ரன்களுக்கு மேல் சேர்த்ததற்கு தொடக்க ஆட்டக்காரர் மெக்ருக், அபிஷேக் போரெல், கடைசியில் டிரிஸ்டன் ஸ்டெப்ஸ் ஆகியோரின் அதிரடிதான் காரணம். அதிலும் பிரேசன் மெக்ருக் தொடக்கத்தில் இருந்தே ராஜஸ்தான் பந்துவீச்சை வெளுத்தார். போல்ட் வீசிய முதல் ஓவரிலேயே பவுண்டரி, சிக்ஸர் என 15 ரன்களை பிரேசர் விளாசினார். பட மூலாதாரம்,SPORTZPICS ஆவேஷ் கான் ஓவரில் ஹாட்ரிக் பவுண்டரி, 6 சிக்ஸர்கள் ஒரு பவுண்டரி என 28 ரன்களை பிரேசர் விளாசி, 19 பந்துகளில் அரைசதம் அடித்தார். பிரேசர் அதிரடியில் 3.5 ஓவர்களில் டெல்லி அணி 50 ரன்களை எட்டியது. அஸ்வின் வீசிய 5வது ஓவரில் பிரேசர் 50 ரன்கள் சேர்த்த நிலையில்(3 சிக்ஸர்,7 பவுண்டரி) விக்கெட்டை இழந்தார், அடுத்துவந்த ஷாய் ஹோப் ரன் அவுட் ஆனார். இதனால் பவர்ப்ளே ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 78 ரன்களை டெல்லி அணி சேர்த்தது. மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான அபிஷேக் போரெல் 28 பந்துகளில் அரைசதம் அடித்து 65(36 பந்து, 3 சிக்ஸர், 7 பவுண்டரி) ரன்களில் அஸ்வின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். நடுவரிசையில் ரிஷப் பந்த்(15), அக்ஸர் படேல்(15) எனப் பெரிதாக ரன் சேர்க்கவில்லை. கீழ்வரிசையில் களமிறங்கிய டிரிஸ்டன் ஸ்டெப்ஸ் கடைசி நேரத்தில் அதிரடியாக ஆடினார். ஸ்டெப்ஸ் தொடக்கத்தில் நிதானமாக பேட் செய்து 11 பந்துகளில் 8 ரன்கள் மட்டுமே சேர்த்தார். டெல்லி அணியும் 14 முதல் 17வது ஓவர்கள் வரை ரன்ரேட் குறைந்து 22 ரன்கள் மட்டுமே சேர்த்தது. ஆனால் யஷ்வேந்திர சஹலின் கடைசி ஓவரை வெளுத்த ஸ்டெப்ஸ் 16 ரன்கள் சேர்த்து 41 ரன்களில் ஆட்டமிழந்தார். குல்புதின் நயீப்(19), ரசிக் சலாம்(9) இருவரும் கடைசி ஓவர்களில் கேமியோ ஆடியதால், டெல்லி அணி 200 ரன்களை கடந்தது. கடைசி 6 ஓவர்களில் மட்டும் டெல்லி அணி 70 ரன்களை சேர்த்ததுதான் 200 ரன்களுக்கு மேல் உயரக் காரணம். டெல்லி பந்துவீச்சு சுமார்தான்… டெல்லி அணியின் பந்துவீச்சு நேற்றைய ஆட்டத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. சாம்சன் ஒருவரை ஆட்டமிழக்கச் செய்யவே டெல்லி பந்துவீச்சாளர்கள் மிகவும் போராட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர். குல்தீப் யாதவ், அக்ஸர் மட்டும்தான் கட்டுக்கோப்பாகப் பந்துவீசினர். வேகப்பந்துவீச்சாளர்கள் பந்துவீச்சை சாம்சன், ரியான் பராக், ஷூபம் துபே ஆகிய 3 பேட்டர்களும் துவைத்து எடுத்துவிட்டனர். டெல்லி அணியின் வேகப்பந்துவீச்சாளர்கள் 4 பேருமே ஓவருக்கு சராசரியாக 11 ரன்களை விட்டுக்கொடுத்தனர். மற்றவகையில் டெல்லியின் பந்துவீச்சு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றும் விமர்சிக்கப்படுகிறது. https://www.bbc.com/tamil/articles/cevepv8zx94o
-
பிக்குவினால் ஆக்கிரமிக்கப்பட்ட திரியாய் வளத்தாமலையடி நாகதம்பிரான் ஆலயம் சப்த நாக விகாரையாக மாற்றம்
08 MAY, 2024 | 09:47 AM குலதெய்வமாக வழிபடப்பட்டுவந்த நாகதம்பிரான் ஆலயத்தை நாக விகாரையாக மாற்றி தமது வழிபாட்டை தடை செய்துள்ளதாக திரியாய் மக்கள் தெரிவிக்கின்றனர். குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட திரியாய் வளத்தாமலையடி பகுதியில் உள்ள நாகதம்பிரான் ஆலயமானது 2021ஆம் ஆண்டுக்குப் பின்னர் பௌத்த பிக்கு ஒருவரினால் ஆக்கிரமிக்கப்பட்ட நிலையில், சப்த நாக விகாரையாக மாற்றப்பட்டு திரியாய் மக்களின் வழிபாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நாகதம்பிரான் ஆலயத்தில் திரியாய் மக்கள் பரம்பரை பரம்பரையாக குலதெய்வ வழிபாட்டில் ஈடுபட்டு வந்ததாகவும் 1984ஆம் ஆண்டு இடம்பெயர்ந்து சென்று, மீண்டும் 2002ஆம் ஆண்டு அப்பகுதியில் மீளக் குடியேறி, ஆலய வழிபாட்டில் ஈடுபட்டு வந்த நிலையில், 2021ஆம் ஆண்டளவில் பௌத்த பிக்கு ஒருவரினால் தமிழ் மக்களின் வழிபாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதோடு, அப்பகுதியில் புதையல் தோண்டியுள்ளதாகவும் திரியாய் மக்கள் தெரிவிக்கின்றனர். விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பை தமது வாழ்வாதார தொழிலாக கொண்டுள்ள திரியாய் மக்கள் நெல் விதைப்பின்போதும், அறுவடையின்போதும் வளத்தாமலையடி நாகதம்பிரானுக்கு நேர்த்தி வைத்து பொங்கிப் படைத்த பின்னரே தமது தொழிலைத் தொடங்குவதாகவும், புல்மோட்டையைச் சேர்ந்த இஸ்லாமிய சகோதரர்கள் கூட நம்பிக்கை வைத்து நேர்த்தியை நிறைவேற்றி வந்ததாகவும் பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர். தற்போது இந்த ஆலயத்துக்கு சென்று வழிபட முடியாத காரணத்தாலும், நேர்த்திக்கடன்களை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளமையினாலும் ஆலயத்தில் இருந்து 500 மீற்றர் தொலைவில் உள்ள புல்மோட்டை பிரதான வீதியில் நின்று, ஆலயத்தை பார்த்து கற்பூரம் ஏற்றி வழிபட்டு வருவதாகவும் அந்த மக்கள் தெரிவிக்கின்றார்கள். எனவே, தங்களுக்கு துன்பங்கள் வரும்போதெல்லாம் உச்சரிக்கப்படுகின்ற வளத்தாமலையானை வழிபடுவதற்கு அனுமதி வழங்குமாறு திரியாய் மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். https://www.virakesari.lk/article/182938
-
இன்றைய வானிலை
இன்று முதல் அடுத்துவரும் சில நாட்களுக்கு மழையுடனான வானிலை! இன்று (08) முதல் அடுத்துவரும் சில நாட்களுக்கு நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழையுடனான வானிலை அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அதன்படி மேல், சப்ரகமுவ, மத்திய மாகாணங்களிலும் மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன் மத்திய, சப்ரகமுவ, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும். குறித்த பகுதிகளில் 75 மில்லி மீற்றருக்கும் அதிகளவிலான மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன் மத்திய, சப்ரகமுவ மாகாணங்களின் சில இடங்களில் இன்று காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும். இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய அபாயங்களைக் குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது. https://thinakkural.lk/article/301096
-
யுக்ரேனுக்கு எதிராக ரஷ்ய ராணுவம் பயன்படுத்தும் வட கொரிய ஆயுதங்கள் - உலகிற்கு என்ன அச்சுறுத்தல்?
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ஜீன் மெக்கன்சி பதவி, சியோல் செய்தியாளர் 45 நிமிடங்களுக்கு முன்னர் இளம் யுக்ரேனிய ஆயுத ஆய்வாளரான கிறிஸ்டினா கிமாச்சுக்கு ஜனவரி 2 ஆம் தேதி, கார்கிவ் நகரில் உள்ள ஒரு கட்டடத்தின் மீது வழக்கத்திற்கு மாறான தோற்றமுள்ள ஏவுகணை ஒன்று மோதியுள்ளதாக தகவல் கிடைத்தது. உடனடியாக யுக்ரேனிய ராணுவத்தில் இருக்கும் தனது நண்பர்களைத் தொடர்பு கொண்ட அவருக்கு, அடுத்த ஒரு வாரத்திற்குள் தலைநகர் கீவில் ஒரு பாதுகாப்பான இடத்தில் அந்த ஏவுகணையின் எஞ்சிய பகுதிகளை ஆய்வு செய்யும் வாய்ப்பு கிடைத்தது. தன்னுடைய விரல் நகத்தை விட சிறிய கணினி சில்லுகள் உட்பட அனைத்தையும் புகைப்படம் எடுத்துக் கொண்ட அவருக்கு, அது ரஷ்ய ஏவுகணை இல்லை என்பது மட்டும் தெளிவாக புரிந்தது. ஆனால், அதை நிரூபிப்பது தான் அவருக்கு சவாலாக இருந்தது. அங்கு குவிந்துக் கிடந்த ஏவுகணை குப்பைகளுக்கு மத்தியில் கொரிய எழுத்துகள் சிலவற்றை கண்டறிந்திருக்கிறார் க்றிஸ்டினா. அதோடு கூடுதல் விவரங்களும் அவருக்கு கிடைத்துள்ளது. அதன் பாகங்களில் 112 என்ற எண் பொறிக்கப்பட்டிருந்தது. பட மூலாதாரம்,CONFLICT ARMAMENT RESEARCH வட கொரிய நாட்காட்டியின்படி அந்த எண் 2023 என்பதை குறிக்கும். அப்போதுதான் அவருக்கு தனது நாட்டை தாக்க வடகொரிய ஆயுதங்கள் பயன்படுத்தப்படுகிறது என்பதற்கான முதல் ஆதாரம் கிடைத்துள்ளது என்பது புரிந்துள்ளது. கீவில் இருந்து என்னுடன் தொலைபேசி மூலம் அவர் பேசுகையில், “ரஷ்யாவிற்கு அவர்கள் ஆயுதங்களை வழங்குகிறார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், முதல்முறையாக இதுவரை யாரும் கண்டுபிடித்திராத ஆதாரத்தை என்னால் பார்க்க முடிகிறது, தொட முடிகிறது, ஆய்வு செய்ய முடிகிறது” என்று உற்சாகம் பொங்க கூறினார். அதிலிருந்து டஜன்கணக்கான வடகொரிய ஏவுகணைகள் ரஷ்யாவால் தங்களது எல்லைக்குள் வீசப்பட்டுள்ளதாகவும், அதில் 24 பேர் இறந்துள்ளதாகவும், 70க்கும் மேற்பட்டோர் காயம் பட்டுள்ளதாகவும் கூறுகிறது யுக்ரேன். படக்குறிப்பு,கடந்த சில ஆண்டுகளில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பா ஆகிய நாடுகளில் தயாரிக்கப்பட்ட தொழில்நுட்பங்கள் இந்த ஏவுகணையில் பயன்படுத்தப்பட்டுள்ளது. கிம் ஜாங் உன் ஒரு அணு ஆயுதப் போரைத் தொடங்குவதற்குத் தயாராகிக் கொண்டிருக்கிறார் என்று சமீபத்தில் பரவி வரும் விவாதங்களுக்கு மத்தியில், தற்போது நடந்து வரும் போர்களை மேலும் தூண்டும் வகையில் நடந்துக் கொள்ளுதல் மற்றும் உலகளாவிய நிலையற்ற தன்மையை ஊக்குவிக்கும் வட கொரியாவின் திறன் இப்போது உலகின் உடனடி அச்சுறுத்தலாகும். க்றிஸ்டினா போரில் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களை மீட்டெடுக்கும் ஒரு அமைப்பான கான்ஃபிளிக்ட் ஆர்மமென்ட் ரிசர்ச் (CAR) இல் பணியாற்றுகிறார். அந்த ஏவுகணையின் சிதைந்த பாகங்களை அவர் புகைப்படம் எடுத்த பின், அதன் நூற்றுக்கணக்கான கூறுகளை அவரது குழுவினர் ஆய்வு செய்த பிறகே அதுகுறித்த அதிர்ச்சியூட்டும் உண்மைகள் வெளியே வந்துள்ளது. இந்த ஏவுகணையில் பல்வேறு நாடுகளின் புதிய தொழில்நுட்பமும் இடம்பெற்றுள்ளது. இதில் பெரும்பாலான பாகங்கள் கடந்த சில ஆண்டுகளில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பா ஆகிய நாடுகளில் தயாரிக்கப்பட்டவை ஆகும். அதுவும் மார்ச் 2023இல் தயாரிக்கப்பட்ட அமெரிக்க தொழில்நுட்பமும் கூட அதில் இடம்பெற்றிருந்தது. இதன் பொருள் என்னவென்றால், வடகொரியா இந்த தொழில்நுட்ப பாகங்களை சட்டவிரோதமாக வாங்கி, அவற்றை தங்களது நாட்டில் ஒன்றாக இணைத்து ஏவுகணையாக தயாரித்து, அந்த ஏவுகணைகளை எப்படியோ ரஷ்யாவுக்கு வழங்கியிருக்கிறது. இவை எல்லாம் ஒரு சில மாதங்களில் நடந்துள்ளது. "இதில் பெரிய ஆச்சரியம் என்னவென்றால், கடந்த 20 ஆண்டுகளாக வட கொரியா மீது பல்வேறு தடைகள் இருந்தாலும் கூட, எப்படியாவது ஆயுதம் தயாரிக்க தேவையான பொருட்களை வேகமாக பெற ஏற்பாடுகளை கொண்டுள்ளது அந்நாடு " என்கிறார் கான்ஃபிளிக்ட் ஆர்மமென்ட் ரிசர்ச் அமைப்பின் துணை இயக்குனர் டேமியன் ஸ்ப்ளீட்டர்ஸ். லண்டனில் உள்ள ராயல் யுனைடெட் சர்வீசஸ் இன்ஸ்டிடியூட் (RUSI) என்ற பாதுகாப்பு குழுவின் வட கொரிய நிபுணரான ஜோசப் பைர்னேவும் இதுகுறித்து வியப்புக்குள்ளானார். "ஐரோப்பிய மக்களைக் கொல்ல வட கொரிய ஏவுகணைகள் பயன்படுத்தப்படும் என்று நான் ஒருபோதும் நினைக்கவில்லை," என்று கூறினார் அவர். அவரும் அவரது அமைப்பும், கடந்த ஆண்டு செப்டம்பரில் ரஷ்யாவில் கிம் மற்றும் விளாடிமிர் புதினுக்கு இடையில் நடந்த சந்தேகத்திற்குரிய ஆயுத ஒப்பந்தத்திற்கு பிறகு, வட கொரிய ஆயுதங்கள் ரஷ்யாவிற்கு அனுப்பப்படுவதைக் கண்காணித்து வருகின்றனர். செயற்கைக்கோள் படங்களைப் பயன்படுத்தி, வட கொரியாவிற்கும் ரஷ்ய இராணுவத் துறைமுகத்திற்கும் இடையில் ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான கண்டெய்னர்களைக் கொண்டு செல்லும் நான்கு ரஷ்ய சரக்குக் கப்பல்கள் முன்னும் பின்னுமாகச் செல்வதை அவர்களால் கண்டுபிடிக்க முடிந்தது. அந்த அமைப்பின் மதிப்பீட்டின்படி, ஒரு மில்லியனுக்கும் அதிகமான வெடிகுண்டுகள் மற்றும் ராக்கெட்டுகள் நிரம்பிய7,000 கண்டெய்னர்கள் அனுப்பப்பட்டுள்ளன. படக்குறிப்பு,வட கொரியாவிற்கும் ரஷ்ய இராணுவத் துறைமுகத்திற்கும் இடையில் கண்டெய்னர்களைக் கொண்டு செல்லும் நான்கு ரஷ்ய சரக்குக் கப்பல்கள் செல்வதை RUSI அமைப்பால் கண்டுபிடிக்க முடிந்தது. இதனை ரஷ்யாவும் வட கொரியாவும் மறுத்தாலும் கூட , இந்த அமைப்பின் தரவுகள் அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் தென் கொரியாவின் உளவுத்துறைகள் வழியாக திரட்டப்பட்டவையாகும். "இன்றைய தேதியில் உலகமே இந்த குண்டுகள் மற்றும் ராக்கெட்டுகளை வாங்குவதற்காக தேடிக் கொண்டிருக்கும் நிலையில், அமெரிக்காவும் ஐரோப்பாவும் எந்த மாதிரியான ஆயுதங்களை பயன்படுத்துவது என்று தடுமாறிக் கொண்டிருக்கும் நேரத்தில், ரஷ்யாவோ இதே ஆயுதத்தைக் கொண்டு யுக்ரேன் மீது தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கிறது” என்று ஜோசப் கூறினார். ஆயுதம் வாங்குதல் மற்றும் தாக்குதல் ஆனால், போரில் பாலிஸ்டிக் ஏவுகணைகளின் பயன்பாடு ஜோசப் மற்றும் அவரது சகாக்களை மிகவும் கவலையடையச் செய்துள்ளது, 1980 களில் இருந்து வட கொரியா தனது ஆயுதங்களை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்து வந்துள்ளது. அவற்றில் பெரும்பாலும் வட ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளான லிபியா, சிரியா மற்றும் ஈரான் உள்ளிட்ட நாடுகள் அடங்கும். இந்த ஆயுதங்கள் அனைத்தும் பழைய, சோவியத் பாணியிலான ஏவுகணைகள் என்ற பெயரைக் கொண்டுள்ளன. கடந்த 2023 அக்டோபர் 7ஆம் தேதி ஹமாஸ் நடத்திய தாக்குதலில் கூட பியோங்யாங்கின் பழைய தொழில்நுட்பத்தில் தயாரான கையெறி குண்டுகள் சிலவற்றை பயன்படுத்தியதற்கான சான்றுகள் உள்ளன. ஆனால் ஜனவரி 2 ஆம் தேதி ஏவப்பட்ட மற்றும் க்றிஸ்டினா பார்த்த ஏவுகணையானது, பியோங்யாங்கின் அதிநவீன குறுகிய தூர ஏவுகணை ஹ்வாசோங் 11 ஆகும். இது 700 கிமீ வரை தாக்கும் திறன் கொண்டது. "யுக்ரேனியர்கள் அதன் துல்லியத்தை குறைத்து மதிப்பிட்டிருந்தாலும், ரஷ்ய ஏவுகணைகளை விட மோசமானதாக இல்லை" என்று வட கொரிய ஆயுதங்கள் மற்றும் பரவல் தடுப்பு நிபுணரான டாக்டர் ஜெஃப்ரி லூயிஸ், கூறுகிறார். இவர் மிடில்பரி இன்ஸ்டிடியூட் ஆப் இன்டர்நேஷனல் ஸ்டடீஸில் பணிபுரிகிறார். “இந்த ஏவுகணைகளின் நன்மை என்னவென்றால், அவை மிகவும் மலிவானவை. எனவே, நீங்கள் அதிகமாக வாங்கலாம் மற்றும் அதிக அளவில் தாக்கலாம். ரஷ்யா இதையே செய்கிறது” என்று அவர் கூறுகிறார். படக்குறிப்பு,பியோங்யாங் ஆயுதத் தொழிற்சாலைகள் முழு வீச்சில் இயங்கி வருவதாகவும், அவற்றால் பெரும் அளவிலான ஆயுதங்களை தயாரிக்க முடியும் என்றும் டாக்டர் லூயிஸ் தெரிவிக்கிறார். இது வட கொரியர்கள் இது போன்ற எவ்வளவு ஏவுகணைகளை தயாரிக்க முடியும் என்ற கேள்வியை எழுப்புகிறது. வடகொரியா 6,700 கண்டெய்னர் வெடிமருந்துகளை ரஷ்யாவிற்கு அனுப்பியிருப்பதாக சமீபத்தில் தென் கொரிய அரசாங்கம் சமீபத்தில் கூறியது. பியோங்யாங் ஆயுதத் தொழிற்சாலைகள் முழு வீச்சில் இயங்கி வருவதாகவும், ஆண்டுக்கு சில நூறு என்ற அளவில் அவற்றால் பெரும் அளவிலான ஆயுதங்களை தயாரிக்க முடியும் என்றும் செயற்கைக்கோள்கள் மூலம் இந்தத் தொழிற்சாலைகளை ஆய்வு செய்து வரும் டாக்டர் லூயிஸ் தெரிவிக்கிறார். வட கொரியாவிற்கு உதிரிபாகங்களை விற்பதில் இருந்து நிறுவனங்கள் தடை செய்யப்பட்டுள்ள நிலையிலும் கூட, இது எப்படி சாத்தியம் என்பதை அறிய , டேமியன் மற்றும் அவரது குழுவினரும் முயற்சிக்கின்றனர். நவீன ஆயுதங்களை இயக்கி, அவற்றின் இலக்குகளை அடையச் செய்யும் அதே கணினி சில்லுகள் தான் , நமது அன்றாட பயன்பாடுகளான போன், கார், வாஷிங் மெஷின் போன்ற இயந்திரங்களையும் இயக்குகின்றன என்கிறார் டேமியன். இவை உலகம் முழுவதும் பெருமளவிலான எண்ணிக்கையில் விற்கப்படுகிறது. இவற்றை பில்லியன்கணக்கில் விற்பனை செய்யும் உற்பத்தியாளர்களுக்கே, இது எங்கு போய் சேர்கிறது என்று பல நேரங்களில் தெரியாது. அப்படியிருந்தும், இந்த ஏவுகணையில் இடம்பெற்றிருக்கும் எத்தனை பாகங்கள் மேற்கில் இருந்து வந்தவை என்பதை அறிந்து டேமியன் விரக்தி அடைவதில் இருந்து தவிர்க்க முடியவில்லை. வட கொரியாவின் கொள்முதல் வலையமைப்பானது, அவற்றை விசாரித்து வரும் டேமியன் அறிந்ததை விட மிகவும் திறன் மிக்கது மற்றும் பரந்து விரிந்தது. அவரது அனுபவத்தின் படி, வெளிநாடுகளில் உள்ள வட கொரியர்கள், பெரும்பாலும் கள்ளப் பணத்தைப் பயன்படுத்தி பொருட்களை வாங்குவதற்காக ஹாங்காங் அல்லது பிற மத்திய ஆசிய நாடுகளில் போலி நிறுவனங்களை நிறுவுவார்கள். பின்னர் அங்கிருந்து பொருட்களை வடகொரியாவிற்கு அனுப்புவார்கள். அதிலும் வழக்கமாக சீன எல்லையில் இது நடைபெறும். அப்படி ஒரு போலி நிறுவனம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால், உடனே அதன் இடத்தில் வேறு ஒரு நிறுவனம் உருவாக்கப்படும். நாடுகள் விதித்துள்ள தடைகள் நீண்ட காலமாக இந்த வலையமைப்புகளை ஒழிப்பதற்கான சிறந்த கருவியாகக் கருதப்படுகிறது. ஆனால் அவை உண்மையாகவே திறனோடு செயல்பட தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு செயல்படுத்தப்பட வேண்டும். 2017 முதல் வடகொரியா மீது புதிய தடைகளை விதிக்க ரஷ்யாவும் சீனாவும் மறுத்து வருகின்றன. பியோங்யாங்கின் ஆயுதங்களை வாங்குவதன் மூலம், மாஸ்கோ ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அது வாக்களித்த கட்டுப்பாடுகளையே தற்போது அப்பட்டமாக மீறுகிறது. இந்த ஆண்டின் தொடக்கத்தில், விதிமீறல்களைக் கண்காணிக்கும் ஐ.நா குழு ஒன்றை ஆய்வைத் தவிர்க்கும் பொருட்டு ரஷ்யா லாவகமாக கலைத்தது. "வட கொரியாவிற்கு எதிரான ஐ.நாவின் பல பொருளாதாரத் தடைகள் சிதைந்து வருவதை நேரடியாகவே நாங்கள் பார்க்க முடிகிறது. இது பியோங்யாங்கிற்கு எளிமையான வழிகளை ஏற்படுத்தி தரும்", என்று ஜோசப் கூறினார். இவை அனைத்தும் யுக்ரேன் போருக்கு அப்பாற்பட்ட தாக்கங்களையும் கொண்டுள்ளன. "இங்கே உண்மையில் வட கொரியர்கள் தான் வெற்றியாளர்கள்", என்று கூறுகிறார் ஜோசப். "அவர்கள் ரஷ்யர்களுக்கு குறிப்பிடத்தகுந்த வழியில் உதவியுள்ளனர், மேலும் இது அவர்களுக்கு ஏராளமான அந்நியச் செலாவணியை வழங்கியுள்ளது". மார்ச் மாதத்தில், ரயில் பெட்டிகளில் அரிசி மற்றும் கோதுமை ஏற்றுமதி செய்யப்பட்டபோது, ரஷ்யாவிலிருந்து வட கொரியாவிற்கு அதிக அளவு எண்ணெய் அனுப்பப்பட்டதை RUSI அமைப்பு ஆவணப்படுத்தியுள்ளது, படக்குறிப்பு,வடகொரியா தனது ஏவுகணைகளை உண்மையான போர்க்களத்தில் சோதனை செய்து பார்த்துக் கொள்வதற்கான சிறந்த வாய்ப்பு இது. நூற்றுக்கணக்கான மில்லியன் பவுண்டுகள் மதிப்புடையதாக கருதப்படும் இந்த ஒப்பந்தம், பியோங்யாங்கின் பொருளாதாரத்தை மட்டுமல்ல, அதன் இராணுவத்தையும் உயர்த்தும். ரஷ்யாவால் தொடர்ந்து இந்த ஏவுகணைகளைத் தயாரிப்பதற்கான மூலப்பொருட்களையும், அல்லது போர் விமானங்கள் போன்ற இராணுவ உபகரணங்களையும், மேலும் அணு ஆயுதங்களை மேம்படுத்துவதற்கான கூறுகளையும் கூட வடகொரியாவுக்கு அனுப்ப முடியும். வடகொரியா தனது ஏவுகணைகளை உண்மையான போர்க்களத்தில் சோதனை செய்து பார்த்துக் கொள்வதற்கான சிறந்த வாய்ப்பு இது. இந்த தரவுகளைக் கொண்டு, அந்த ஆயுதங்களை அந்நாடு மேலும் மேம்படுத்தும். ஏவுகணை வர்த்தகம் இதில் மேலும் கவலைக்குரிய விஷயம் என்னவென்றால், இந்தப் போர் வட கொரியாவுக்கு உலகின் பிற பகுதிகளுக்கும் ஆயுதம் விற்கும் வாய்ப்பை வழங்குகிறது. இப்போது பியாங்யாங் இந்த ஆயுதங்களை பெருமளவில் உற்பத்தி செய்து வருவதால், அவற்றை பல நாடுகளுக்கு விற்க விரும்புகிறது, இந்த ஏவுகணைகள் ரஷ்யாவிற்கு சரியானதாக இருந்தால், மற்றவர்களுக்கும் அவை பொருத்தமானதாக இருக்கும் என்று டாக்டர் லூயிஸ் கூறுகிறார். அதிலும் குறிப்பாக தடைகளை மீறுவது ஒன்றும் குற்றமில்லை என்ற உதாரணத்தை வேறு ரஷ்யா ஏற்படுத்தி வைத்துள்ளது. சீனா-ரஷ்யா-ஈரான் கூட்டணியில் உள்ள நாடுகளுக்கு ஏவுகணைகளை வழங்கும் பெரிய நாடாக வடகொரியா மாறும் என்று டாக்டர் லூயிஸ் கணித்துள்ளார். இந்த மாதம் இஸ்ரேல் மீது இரான் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து, வட கொரியா இரானுடன் அதன் அணு ஆயுத மற்றும் பாலிஸ்டிக் ஆயுதத் திட்டங்களில் இணைந்து செயல்படலாம் என்பது "நம்ப முடியாத அளவிற்கு கவலையளிக்கும்" விஷயம் என அமெரிக்கா கூறியது. "இந்தப் பிரச்னையைப் குறித்து பேசும்போது நிறைய இருண்ட முகங்களை நான் காண்கிறேன்" என்று கூறுகிறார் டேமியன். "ஆனால் இதில் நல்ல செய்தி என்னவென்றால், அவர்கள் வெளிநாட்டு தொழில்நுட்பத்தை எவ்வளவு சார்ந்திருக்கிறார்கள் என்பது இப்போது நமக்குத் தெரியும், அதில் நம்மால் ஏதாவது செய்ய முடியும்." என்கிறார் அவர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,வடகொரியாவை கட்டுப்படுத்துவதில் மேற்குலகம் தோற்று விட்டதாக டாக்டர் லூயிஸ் கருதுகிறார். உற்பத்தியாளர்களுடன் இணைந்து பணியாற்றுவதன் மூலம் வட கொரியாவின் விநியோகச் சங்கிலிகளைத் துண்டிக்க முடியும் என்று டேமியன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஒரு முக்கியமான வர்த்தகம் முடிவதற்கு முன்பே அந்த வலையமைப்பை கண்டறிந்து இவரது குழு அதை முழுமையாக மூடியுள்ளது. ஆனாலும், இவை குறித்து டாக்டர் லூயிசுக்கு பெரிய திருப்தி இல்லை. "நாம் இந்த வர்த்தகத்தை கடினமாக்கலாம், செலவை அதிகரிக்கலாம், ஆனால் இவை எதுவும் வட கொரியா இந்த ஆயுதங்களை தயாரிப்பதில் இருந்து தடுக்கப் போவதில்லை," என்று அவர் கூறுகிறார். வட கொரியாவை கட்டுப்படுத்துவதில் மேற்குலகம் தோற்று விட்டதாக அவர் கருதுகிறார். தற்போது அந்நாட்டின் ஏவுகணைகள் அரசியல் மற்றும் கௌரவத்தின் ஆதாரமாக மட்டுமின்றி, பணம் உருவாக்கும் விஷயமாகவும் மாறிவிட்ட நிலையில், அதை ஏன் கிம் ஜாங் உன் விட்டுக்கொடுக்க போகிறார் என்ற கேள்வியை முன்வைக்கிறார் டாக்டர் லூயிஸ். https://www.bbc.com/tamil/articles/cjk478p7mxro
-
குமரி மாவட்டத்தில் 8 பேரை பலி கொண்ட 'கள்ளக்கடல்' சீற்றத்திற்கும் சுனாமிக்கும் என்ன ஒற்றுமை?
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், சிராஜ் பதவி, பிபிசி தமிழ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் தமிழ்நாட்டின் கன்னியாகுமரி, இராமநாதபுரம், தூத்துக்குடி போன்ற தென் கடலோரப் பகுதிகள் மற்றும் கேரளாவின் கடற்பகுதிகளில் மே 4, 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் கடல் சீற்றம் அதிகமாக இருக்கும் என தேசிய பெருங்கடல் தகவல் சேவை மையம் (INCOIS), தேசிய பேரிடா் மேலாண்மை ஆணையம் மற்றும் இந்திய வானிலை மையம் ஆகியவை எச்சரித்திருந்தன. இது வழக்கமான கடல் சீற்றமாக இல்லாமல், எந்தவித அறிகுறிகளும் இன்றி திடீரென கடல் கொந்தளித்து, கரையோரம் பலத்த பாதிப்பை ஏற்படுத்தும் ‘கள்ளக்கடல்' சீற்றம் (Swell Surge) என்பதால் கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், நெல்லை ஆகிய கடலோர பகுதிகளுக்கு ‘ரெட் அலர்ட்’ கொடுக்கப்பட்டிருந்தது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்டும், விழுப்புரம், கடலூர், நாகை மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருந்தது. 0.5 மீட்டர் முதல் 1.8 மீட்டர் வரை கடல் அலைகள் எழும் என்பதால், கடலோர பகுதிகளில் உள்ள சுற்றுலா தலங்களில் யாரும் கடலில் இறங்கக்கூடாது என்று எச்சரிக்கப்பட்டிருந்தது. ஆனால் இதையெல்லாம் தாண்டி கடல் சீற்றம் காரணமாக கன்னியாகுமரியில் மட்டும் கடந்த இரண்டு நாட்களில், 5 பயிற்சி மருத்துவர்கள் உட்பட 8 பேர் உயிரிழந்துள்ளனர். கள்ளக்கடல் சீற்றம் என்றால் என்ன? இதனால் ஏற்படும் பாதிப்புகள் என்ன? எச்சரிக்கை விடுக்கப்பட்டும் உயிரிழப்புகள் ஏற்பட்டது எப்படி? பட மூலாதாரம்,GETTY IMAGES கள்ளக்கடல் சீற்றம் (Swell Surge) 2012ஆம் ஆண்டில், ‘கள்ளக்கடல்’ என்ற சொல் ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு அமைப்பின் (யுனெஸ்கோ) முறையான ஒப்புதலைப் பெற்றது. “கள்ளக்கடல் என்ற சொல் மலையாளத்திலிருந்து பெறப்பட்டது. 'கள்ளன் + கடல்', கள்ளன் என்றால் திருடன். திருடன் போல எந்தவித சத்தமும், முன்னறிவிப்பும் இல்லாமல் மக்கள் வசிக்கும் கரையோரப் பகுதிகளில் கொந்தளிப்புடன் நுழையும் கடல் நீர் என்ற அர்த்தத்தில் இந்த பெயர் வைக்கப்பட்டது” என்கிறார் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன். தொடர்ந்து பேசிய அவர், “கள்ளக்கடல் சீற்றம் குறித்து தேசிய பெருங்கடல் தகவல் சேவை மையத்துடன் இணைந்து வானிலை ஆய்வு மையம் மூலமாக பல எச்சரிக்கைகளை விடுத்து வந்தோம். பொதுவாக கடல் சீற்றம் மூன்று வகையில் ஏற்படும், ஒன்று கடலில் ஏற்படும் நிலநடுக்கம் போன்ற நிகழ்வுகளால் ஏற்படுவது, இரண்டாவது காற்றழுத்த தாழ்வு நிலை, புயல் காரணமாக ஏற்படுவது, மூன்றாவது எங்கோ தொலைதூரத்தில் வீசும் சூறாவளிகள் அல்லது பலத்த காற்றின் ஆற்றலால் உண்டாகும் அலைகள் அதே வேகத்தோடு கரையை நோக்கிச் செல்லும், மூன்றாவது வகையே கள்ளக்கடல்” என்று கூறினார். கள்ளக்கடல் சீற்றம் எதனால் ஏற்படுகிறது? படக்குறிப்பு,மத்திய உவர்நீர் மீன் வளர்ப்புக் கழகத்தில் முதன்மை விஞ்ஞானியாகப் பணிபுரிந்து ஓய்வு பெற்ற டாக்டர் வி.எஸ்.சந்திரசேகரன். “கடற்கரையோரம் வாழும் மக்கள் சாதாரண கடல் சீற்றத்தையும் கள்ளக்கடல் சீற்றத்தையும் ஒன்று என நினைக்கிறார்கள். இந்த கள்ளக்கடல் சீற்றம் என்பது பல ஆயிரம் மைல்களுக்கு அப்பால் உருவாகும் ஒரு ஆற்றல் கடல் அலைகள் மூலமாகப் பயணித்து பெரும் வேகத்துடன் கரையை அடைவது” என்கிறார் டாக்டர் வி.எஸ்.சந்திரசேகரன். இவர் மத்திய உவர்நீர் மீன் வளர்ப்புக் கழகத்தில் முதன்மை விஞ்ஞானியாகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். தொடர்ந்து பேசிய அவர், “அவ்வாறு பெரும் ஆற்றலோடும் வேகத்தோடும் கரையை அடையும் அலைகள் மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்தும். இந்த அலைகளில் மண், வண்டல் அதிகமாக இருக்கும். எனவே இத்தகைய கள்ளக்கடல் அலைகளில் நீச்சல் தெரிந்தவர்கள் சிக்கிக்கொண்டால் கூட தப்பிப்பது கடினம். காரணம் அந்த அலைகளில் சிக்கியவர்களின் நுரையீரலில் இந்த மண் மற்றும் வண்டல் நிறைந்து மூச்சுத்திணறி இறந்துவிடுவார்கள். அது மட்டுமல்லாது பெரும் வேகத்தோடும், ஆற்றலோடும் இந்த அலைகள் இருப்பதால் இதில் சிக்கியவர்கள் கரைகளில் இருக்கும் பாறைகளில் மோதி உயிரிழக்கவும் வாய்ப்புகள் உண்டு” என்கிறார். சுனாமி - கள்ளக்கடல் சீற்றம் என்ன ஒற்றுமை? படக்குறிப்பு,2004ஆம் ஆண்டு தமிழ்நாட்டைத் தாக்கிய சுனாமி. “சுனாமி என்பது கடலுக்குள் ஏற்படும் பூகம்பத்தால் நிகழ்வது. அவ்வாறு கடலுக்குள் பூகம்பம் ஏற்படும் போது ராட்சத அலைகள் தோன்றி அவை கரையை நோக்கி நகரும். ஆனால் இந்த கள்ளக்கடல் சீற்றத்தில் காற்றிலிருந்து அலைகளுக்கு கடத்தப்படும் ஆற்றல் மட்டுமே பல ஆயிரம் கிலோமீட்டர்களுக்கு பயணம் செய்யும். இதனால் கரையை நெருங்கும்போது போது தான் பெரும் அலைகள் தோன்றும், அதுவரை இந்த ஆற்றல் அலைகள் மூலம் பயணிப்பது வெளியே தெரியாது. அதனால் தான் கள்ளக்கடலில் திடீரென எந்த ஆரவாரமும் இல்லாமல் கடல் கொந்தளிப்பு ஏற்படுகிறது” என்று கூறுகிறார் டாக்டர் வி.எஸ்.சந்திரசேகரன். “சுனாமிக்கும் இந்த கள்ளக்கடல் அலைகளுக்கும் இருக்கும் ஒரு ஒற்றுமை என்னவென்றால், இரண்டுமே அதிகளவு கடல் மணலையும் வண்டலையும் சுமந்து வரும். கரையைத் தாண்டி அதிக தூரத்திற்கு அலைகள் செல்லும். இதனால் கூட சில சமயங்களில் சுனாமியும் கள்ளக்கடல் சீற்றமும் ஒன்று என புரிந்துகொள்ளப்படும்” என்று கூறினார் அவர். மீனவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் படக்குறிப்பு,சமூக ஆய்வாளர் ஜோன்ஸ் தாமஸ். கள்ளக்கடல் சீற்றத்தால் அதிகம் பாதிக்கப்படுவது மீனவர்கள் தான் என்றும் ஆனால் அரசு கள்ளக்கடல் சீற்றம் குறித்து போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யாமல் மெத்தனம் காட்டியதால் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன என்கிறார் சமூக ஆய்வாளர் ஜோன்ஸ் தாமஸ். “கள்ளக்கடல் சீற்றம் ஒவ்வொரு வருடமும் கோடைகாலத்தில் நடக்கும் நிகழ்வு தான், ஆனால் இந்தமுறை தான் ‘ரெட் அலர்ட்’ கொடுக்கும் அளவுக்கு தீவிரமாக உள்ளது. மேற்கு கடற்கரைப் பகுதியில் கன்னியாகுமரி அமைந்திருப்பதால், இந்த பகுதி சற்று தாழ்வாக இருக்கும். இதனால் அலைகள் வழக்கமாகவே சற்று ஆக்ரோஷத்துடன் தான் வரும். இதனால் அதிகம் பாதிக்கப்படுவது மீனவர்கள் தான். கடந்த முறை குமரி மீனவர்களின் வீடுகளுக்குள் புகுந்த கடல் அலைகள், பல அடிகளுக்கு கடல் மண்ணை அப்படியே விட்டுச் சென்றன. இதனால் அவர்களுக்கு பொருளாதார ரீதியில் மிகப்பெரிய நஷ்டம் ஏற்பட்டது.” என்கிறார் ஜோன்ஸ். தொடர்ந்து பேசிய அவர், “கடந்த சில நாட்களாகவே கள்ளக்கடல் சீற்றம் குறித்த எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டும், கடற்கரைகளில் முறையான பாதுகாப்பு வசதிகள் செய்யப்படாததால் தான் இத்தனை உயிரிழப்புகள். மீனவர்களின் வீடுகளுக்குள் தொடர்ந்து கடல் நீர் வருவதை அரசு நிர்வாகம் வேடிக்கை பார்த்தவாறே தான் இருந்தது. இந்த முறையும் அது போல கடல் நீர் வீடுகளுக்குள் புகும் அவ்வளவு தானே என நினைத்து இருந்துவிட்டார்கள்” என்று குற்றம் சாட்டுகிறார் சமூக ஆய்வாளர் ஜோன்ஸ் தாமஸ். கன்னியாகுமரியில் 8 பேர் உயிரிழப்பு பட மூலாதாரம்,GETTY IMAGES கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் அடுத்த கணபதிபுரம் பகுதியில் ஆயிரங்கால் பொழிமுகம் என்ற லெமூர் கடற்கரை பகுதி உள்ளது. திருச்சி தனியார் மருத்துவக் கல்லூரியில் இறுதியாண்டு படித்துவரும் பயிற்சி மருத்துவர்கள் 12 பேர் தங்கள் நண்பர் வீட்டுத் திருமண நிகழ்ச்சிக்காக நாகர்கோவில் வந்துள்ளனர். இவர்களில் 8 பேர் நேற்று (06.05.2024) லெமூர் கடற்கரைக்கு சென்றுள்ளனர். கடற்கரையில் நின்றிருந்தபோது, கடல் சீற்றத்தால் வேகமாக எழுந்த பெரிய அலையில் அவர்கள் சிக்கிக்கொண்டனர். இதில் தஞ்சாவூரைச் சேர்ந்த சார்கவி (24), நெய்வேலியைச் சேர்ந்த காயத்ரி (25), ஆந்திராவைச் சேர்ந்த வெங்கடேஷ் (25), திண்டுக்கல்லைச் சேர்ந்த பிரவின் ஷாம் (23), கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த சார்வதர்ஷித் (24) ஆகிய 5 பேரும் உயிரிழந்தனர். ஞாயிற்றுக்கிழமை அன்று (06-05-2024) கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பட்டினத்தில் கடற்கரையில் நின்றிருந்த பிரேமதாஸ், அவரது 7 வயதான மகள் ஆதிஷா ஆகியோரும் கடல் சீற்றத்தில் சிக்கினர். அதில் பிரேமதாஸ் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில் கடலில் மாயமான ஆதிஷா உயிரிழந்துவிட்டார். அவரது உடல் மட்டுமே கிடைத்தது. சென்னையில் இருந்து சுற்றுலா வந்திருந்த 20 பேர் குழுவினர் குளச்சல் அருகே உள்ள கோடிமுனை கடற்கரையில் இருந்த போதும் இதேபோன்ற அசம்பாவிதம் நிகழ்ந்தது. வில்லிவாக்கம் மனோஜ் குமார், சூளைமேடு விசூஸ் ஆகியோர் கடலலையில் சிக்கி இழுத்துச் செல்லப்பட்டனர். பின்னர், அவர்களது உடல் மட்டுமே மீட்கப்பட்டது. கள்ளக்கடல் சீற்றம் குறித்த தேசிய பெருங்கடல் தகவல் சேவை மையத்தின் எச்சரிக்கை விடுக்கப்பட்டும், கள்ளக்கடல் சீற்றத்தால் கன்னியாகுமரி மாவட்டத்தில் இரண்டே நாட்களில் 8 பேர் உயிரிழந்தது குறித்து மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதரிடம் கேட்டபோது, “முறையான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. கள்ளக்கடல் குறித்த எச்சரிக்கை கிடைத்தவுடன் லெமூர் கடற்கரை உட்பட அனைத்து கடற்கரைகளுக்கும் பொது மக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. ஆனால் ஊர் பாதை வழியாக பயிற்சி மருத்துவர்கள் அங்கு சென்றதால் இந்த சம்பவம் நடந்துள்ளது. மாவட்ட நிர்வாகத்தோடு ஊர் மக்களும் ஒத்துழைத்தால் மட்டுமே இத்தகைய அசம்பாவிதங்களை தடுக்க முடியும். இன்னும் கடல் சீற்றம் இருப்பதால், ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடற்கரைகளுக்கு செல்ல பொதுமக்களுக்கு தடை நீடிக்கிறது. மீனவர்களையும் தங்கள் படகுகளை இடைவெளி விட்டு, பாதுகாப்பான் இடங்களில் நிறுத்துமாறு அறிவுறுத்தியுள்ளோம்” என்று கூறினார். தேசிய பெருங்கடல் தகவல் சேவை மையத்தின் எச்சரிக்கை பட மூலாதாரம்,INCOIS,MOES/X படக்குறிப்பு,தேசிய பெருங்கடல் தகவல் சேவை மையத்தின் சார்பாக வெளியிடப்பட்ட அறிக்கை. இந்த கள்ளக்கடல் சீற்றம் தொடர்பாக கடந்த மே 3ஆம் தேதி தேசிய பெருங்கடல் தகவல் சேவை மையத்தின் சார்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், “இந்திய பெருங்கடலின் தென் பகுதியிலிருந்து அதிக தூரம் பயணிக்கக் கூடிய ஆற்றல் உடைய அலைகள் கரையை நோக்கி வருவதால், அதன் தாக்கத்தில் கடல் சீற்றங்கள் மற்றும் மோசமான கடல் கொந்தளிப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஏப்ரல் 26ஆம் தேதி இந்தியக் கடற்கரையிலிருந்து சுமார் 10,000 கிமீ தொலைவில், தெற்கு அட்லாண்டிக் பெருங்கடலில் தொடங்கிய இந்த நிகழ்வு, 28 ஏப்ரல் 2024இல் தெற்கு இந்தியப் பெருங்கடலை நோக்கி மெதுவாக நகர்ந்தது. இது 4 மே 2024 அதிகாலையில் (02:30 மணி) இந்தியாவின் தென் முனையைத் தாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அன்றைய தினத்தில் லட்சத்தீவு, கேரளா, தென் தமிழ்நாடு, கர்நாடகா, கோவா, மகாராஷ்டிரா, அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள், ஒடிசா மற்றும் மேற்கு வங்கக் கடற்கரைகளில் தாழ்வான பகுதிகளில் கடலோர வெள்ளம் ஏற்படலாம். தாழ்வான கடலோரப் பகுதிகள் அதிகம் பாதிக்கப்படக்கூடும். கடல் சீற்றம் குறித்து எச்சரிக்கையுடன் இருக்குமாறு மீனவர்கள் மற்றும் கரையோர மக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள். சிறிய படகுகளை கரைக்கு அருகில் நிறுத்த வேண்டாம். மோதல் மற்றும் சேதத்தைத் தவிர்க்க, படகுகள் குறிப்பிட்ட இடைவெளி விட்டு நங்கூரமிடப்பட வேண்டும். இந்த நாட்களில் கடற்கரைகள் மற்றும் அருகில் உள்ள பகுதிகளில் அனைத்து செயல்பாடுகள் மற்றும் பொழுதுபோக்கு நடவடிக்கைகள் மொத்தமாக நிறுத்தப்பட வேண்டும்” எனக் கூறப்பட்டுள்ளது. https://www.bbc.com/tamil/articles/cl40pm0kxzmo
-
ஐ.பி.எல் 2024 - செய்திகள்
இம்பாக்ட் பிளேயர் விதி பற்றி ரோஹித் சர்மா கவலை ஏன்? இந்திய கிரிக்கெட்டில் அதன் தாக்கம் என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 7 மே 2024, 15:29 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் “இம்பாக்ட் ப்ளேயர் விதிமுறைக்கு நான் பெரிய ரசிகன் அல்ல. அந்த விதி ஆல்ரவுண்டர்கள் வளர்வதில் சிக்கல்களை ஏற்படுத்தும். கிரிக்கெட் என்பது 11 வீரர்கள் விளையாடுவதாக இருக்க வேண்டும், 12 வீரர்கள் விளையாடும் விளையாட்டு அல்ல." இந்திய கிரிக்கெட் அணி தலைவர் ரோஹித் சர்மா அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இந்த கருத்து, ஐ.பி.எல்லில் கடைபிடிக்கப்படும் இம்பாக்ட் விதிமுறை குறித்த விவாதங்களை கிளப்பியுள்ளது. இம்பாக்ட் விதி ஐபிஎல் போட்டிகளை சுவாரஸ்யமாக்குகிறது என்று ஒரு தரப்பினரும், சர்வதேச போட்டிகளில் இல்லாத விதியால் இந்தியாவில் ஆல்ரவுண்டர்கள் உருவாவதை தடுப்பதாக மற்றொரு தரப்பினரும் கூறுகின்றனர். திறமையை நிரூபிக்கும் களமான ஐபிஎல் பாகிஸ்தான், இந்திய, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகளின் முக்கிய வீரர்கள் ஒரே அணியில் விளையாடினால் எப்படி இருக்கும் என்று ரசிகர்கள் செய்த கற்பனையை நிஜமாக்கியது ஐபிஎல் டி20 தொடர்தான். இந்த ஐபிஎல் தொடரால் இந்திய அணிக்கு மட்டும் பலன் கிடைக்கவில்லை. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர்களும் சிறப்பாக ஆடி தங்களின் தேசிய அணியில் இடம் பெற்றனர். புதிய இளம் பேட்டர்கள், இளம் வேகப்பந்து வீச்சாளர்கள், திறமையான சுழற்பந்து வீச்சாளர்கள் அடையாளம் காணப்பட்டு இந்திய அணிக்குக் கிடைத்தனர். கிரிக்கெட் கனவுகளுடன் பயிற்சி எடுத்து, விளையாடி வரும் ஏராளமான இளைஞர்களை அடையாளம் காணும் தளமாகவும், தங்களின் திறமையை நிரூபிக்கும் அரங்காகவும் ஐபிஎல் உருவெடுத்துள்ளது என்றால் மிகையில்லை. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஆல்ரவுண்டர்கள் ஓர் அணியில் இருக்கும் எண்ணிக்கையைப் பொருத்து அணியில் பலம் நிர்ணயிக்கப்படும். சர்வதேச அளவில் கிரிக்கெட் அணியின் பலம் என்ன? சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு அணி வலிமையானது என்பதை முடிவு செய்யும் அளவுகோல்களில் ஒன்றாக இருப்பது ‘ஸ்பெஷலிஸ்ட்’ பந்துவீச்சாளர்கள், பேட்டர்கள் மட்டுமல்ல ‘ஆல்ரவுண்டர்கள்’ எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பதும் கூர்ந்து கவனிக்கப்படும். ஆல்ரவுண்டர்கள் ஓர் அணியில் இருக்கும் எண்ணிக்கையைப் பொருத்து அணியில் பலம் நிர்ணயிக்கப்படும். அதிகமான ஆல்ரவுண்டர்களை வைத்திருக்கும் அணி உண்மையாகவே வலிமையான அணியாகவே பார்க்கப்படுகிறது. இதில் பேட்டிங் ஆல்ரவுண்டர், பந்துவீச்சு ஆல்ரவுண்டர் என்று இரு வகைகளிலும் வீரர்கள் அணியில் சேர்க்கப்பட்டனர். இம்பாக்ட் ப்ளேயர் விதி அறிமுகம் இவையெல்லாம், ஐபிஎல் டி20 தொடரில் “இம்பாக்ட் ப்ளேயர்” விதி வருவதற்கு முன்புதான் இருந்தது. இந்த விதி ஐபிஎல் டி20 தொடரில் 2023ம் ஆண்டு சீசனில் நடைமுறைக்கு வந்தபின், ‘ஆல்ரவுண்டர்கள்’ அணிகளில் குறைந்து, “ இம்பாக்ட் ப்ளேயர்” என்ற கலாசாரத்துக்கு மாறிவிட்டனர். பட மூலாதாரம்,IPL / X படக்குறிப்பு,2023 ஐபிஎல் அணிகள் இம்பாக்ட் ப்ளேயர் விதி என்றால் என்ன? இம்பாக்ட் பிளேயர் விதி என்பது வழக்கமான ஆடும் லெவனில் உள்ள 11 வீரர்கள் தவிர, மேலும் 5 வீரர்களை டாஸ் போடும்போது அறிவிக்க வேண்டும். இந்த 5 வீரர்களில் யாரை வேண்டுமானாலும் தேவைக்கு ஏற்றாற்போல் பந்துவீச்சாளருக்குப் பதிலாக பேட்டரையோ, அல்லது பேட்டருக்கு பதிலாக பந்துவீச்சாளராகவோ இம்பாக்ட் பிளேயராக களமிறக்கிக் கொள்ளலாம். இதற்கு முன் மாற்றுவீரர்(சப்ஸ்டிடியூட்) என்பவர் ஏதேனும் வீரருக்கு காயம் ஏற்பட்டால், உடல்நலக்குறைவு ஏற்பட்டால் பீல்டிங் செய்ய மட்டுமே அனுமதிக்கப்படுவார். ஆனால், இம்பாக்ட் ப்ளேயர் விதியில் வரும் வீரர் பந்துவீச முடியும், பேட்டிங் செய்யவும் முடியும். கடந்த 2023ம் ஆண்டு ஐபிஎல் சீசனில் அறிமுகப்படுத்தப்பட்ட இம்பாக்ட் ப்ளேயர் விதிக்குப்பின், ஐபிஎல் தொடரில் உள்ள அணிகள், ஆல்ரவுண்டர்கள் மீதான தங்கள் கவனத்தைக் குறைத்துவிட்டன. ஐபிஎல்லில் நடைபெறும் வீரர்களுக்கான ஏலத்தில் இதனை கண்கூடாக காண முடிந்தது. இம்பாக்ட் விதி அமலுக்கு வருவதற்கு முன்பு நடந்த ஏலங்களின் போதெல்லாம் மிகப்பெரிய நட்சத்திர வீரர்களுக்கு நிகராக ஆல் ரவுண்டர்களுக்கு கிராக்கி இருந்ததைக் காண முடிந்தது. பென் ஸ்டோக்ஸ், கிளென் மேக்ஸ்வெல், ரவீந்திர ஜடேஜா, ஆந்த்ரே ரஸ்ஸல், ஸ்டாய்னிஸ் போன்ற வீரர்கள் பேட்டிங், பந்துவீச்சு ஆகிய இரண்டிலும் பங்களிக்கக் கூடியவர்கள் என்பதாலேயே அதிக விலை போயினர். சர்வதேச போட்டிகளில் பெரிதாக ஜொலிக்காத கேதார் ஜாதவை ஆல்ரவுண்டர் என்பதாலேயே 2018-ம் ஆண்டு ஏலத்தின் போது 7.8 கோடி ரூபாய் கொடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வாங்கியது ரசிகர்களுக்கு நினைவிருக்கும். ஆனால், கடந்த தொடரில் இம்பாக்ட் பிளேயர் விதி அமலுக்கு வந்த பிறகு, நடப்புத் தொடருக்கு முன்னதாக நடைபெற்ற வீரர்கள் ஏலத்தில் அந்த விதியின் தாக்கத்தை உணர முடிந்தது. ஒரு பேட்ஸ்மேனையோ, பவுலரையோ தேவைக்கு ஏற்ப 12-வது வீரராக களமிறக்க முடியும் என்பதால் அனைத்து அணிகளுமே ஏதாவது ஒரு துறையில் ஸ்பெஷலிஸ்டான வீரர்களையே குறிவைத்தன. இதனால், ஆல்ரவுண்டர்களுக்கான மவுசு குறைந்து போனது. கடந்த ஏலத்தில் பேட்டிங் அல்லது பவுலிங்கில் ஸ்பெஷலிஸ்ட் வீரர்களே அதிக விலைக்கு ஏலம் போயினர். ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் 24.75 கோடி ரூபாய்க்கும். மற்றொரு ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் 20.50 கோடி ரூபாய்க்கும் ஏலம் போயினர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஐபிஎல் போலவே ஆஸ்திரேலியாவில் நடந்துவரும் பிக் பாஷ் லீக் டி20 கிரிக்கெட்டில் “பவர் சர்ஜ்” என்ற விதி உள்ளது. ஆஸ்திரேலியாவில் ‘பவர் சர்ஜ்’ ஆஸ்திரேலியாவில் நடந்துவரும் பிக் பாஷ் லீக் டி20 கிரிக்கெட்டில் “பவர் சர்ஜ்”(Power Surge) என்ற முறை உள்ளது. ஐபிஎல் தொடரில் இம்பாக்ட் ப்ளேயர் விதியைப் போல பேட்டிங் செய்யும் அணியின் கரங்களையே இதுவும் வலுப்படுத்துகிறது. பவர் சர்ஜ் என்பது பவர்ப்ளேயில் 6 ஓவர்களில் 4 ஓவர்கள் மட்டும்தான் வீச முடியும். மீதமுள்ள 2 ஓவர்களை 11-வது ஓவருக்குப்பின் பேட்டிங் செய்யும் அணிதான் எப்போது வீசுவது என்பதை முடிவு செய்யும். இந்த விதியால் ஆட்டத்தின் முடிவைத் தீர்மானிப்பதே பேட்டிங் செய்யும் அணியாகத்தான் இருக்கும். இந்த பவர் சர்ஜ் விதி பிக்பாஷ் லீக்கில் எவ்வாறு சர்ச்சையாக, விவாதப்பொருளாக மாறியுள்ளதோ அதேபோன்று இம்பாக்ட் ப்ளேயர் விதியும் மாறியுள்ளது. பட மூலாதாரம்,IPL / INSTAGRAM படக்குறிப்பு, இம்பாக்ட் ப்ளேயர் ஆல்ரவுண்டர்களை பாதிப்பதாக தெரிவிக்கிறார் வோக்ஸ். "ஆல்ரவுண்டர்களின் தேவையை குறைத்த இம்பாக்ட் பிளேயர் விதி" "இம்பாக்ட் ப்ளேயர் விதி ரசிகர்களுக்கு நல்ல பொழுதுபோக்கைக் கொடுத்தாலும், அது போட்டியிலிருந்து ஆல்ரவுண்டர்களை வெளியேற்றிவிடுகிறது" என்று லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியின் ஆலோசகர் ஆடம் வோக்ஸ் தெரிவித்துள்ளார். அவர் ஆங்கில நாளேடுக்கு அளித்த பேட்டியில், “இம்பாக்ட் ப்ளேயர் விதி டி20 ஆட்டத்தின் சுவாரஸ்யத்தை அதிகப்படுத்தி பொழுதுபோக்காக இருக்கிறது. ஆனால், இது ஆல்ரவுண்டர்களின் முக்கியத்துவத்தை குறைத்து விடுகிறது. அணிகளின் ஸ்கோர் எப்போதும் இல்லாத அளவு உயர்கிறது, அணிகளுக்கு முழுமையான ஸ்பெஷலிஸ்ட் பேட்டர்கள் 7வது அல்லது 8-வது வரிசை வரை கிடைக்கிறது. நான் பவர் சர்ஜின் ரசிகன். இம்பாக்ட் ப்ளேயர் விதியைவிட பவர் சர்ஜை ரசிக்கிறேன். சேஸிங்கின் போது ஆட்டம் கையைவிட்டு சென்றுவிட்டதாக ஒருபோதும் நினைக்க முடியாது” என்றார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, டி20 உலகக் கோப்பையில் சிவம் துபேவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ரிங்கு சிங் – துபே சர்ச்சை ரிங்கு சிங்கிற்கு டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் வாய்ப்பு மறுக்கப்பட்டு, ஷிவம் துபேவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதும் சமூக வலைத்தளங்களில் சர்ச்சையாகி வருகிறது. ஏனென்றால், ஷிவம் துபே சர்வதேச போட்டிகளி்ல் விளையாடிய பெரிதாக அனுபவம் இல்லாதவர். ஐபிஎல் தொடரில் இதுவரை பெரிதாக பந்துவீசவும் இல்லை. குறிப்பாக 2022 ஐபிஎல் சீசனில் 20.4 ஓவர்கள் வீசிய துபே 8 விக்கெட்டுகளையும், 2023 ஐபிஎல் சீசனில் 4 ஓவர்கள் வீசி ஒரு விக்கெட்டையும் கைப்பற்றியுள்ளார். 2024 சீசனில் இதுவரை துபே பந்துவீசவில்லை என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அப்படி இருக்கும் போது எந்த அடிப்படையில் ஷிவம் துபே ஆல்ரவுண்டர் வரிசையில் இந்திய அணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்று சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் கேள்வி எழுப்புகிறார்கள். அதேசமயம், ரிங்கு சிங் இந்திய டி20 அணியில் இடம் பெற்று ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு எதிராக விளையாடி தன்னை ஃபினிஷர் என நிரூபித்துள்ளார். ஆனால், அவர் ரிசர்வ் வீரராக மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளார். ரிங்கு சிங் தேர்வு செய்யப்படாமல் போனதற்கு அவரை இம்பாக்ட் ப்ளேயராகவே கொல்கத்தா அணி களமிறக்கியது முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது. ஏனென்றால், இந்த சீசனில் ரிங்கு சிங் மொத்தம் 82 பந்துகளே ஆடியுள்ளார். ஆனால், சிஎஸ்கே அணியில் இடம் பெற்ற ஷிவம் துபே 203 பந்துகளை ஆடி, சராசரியாக 23 பந்துகளை சந்தித்துள்ளார். இதில் 26 சிக்ஸர்கள், 24 பவுண்டரிகளை அடித்துள்ளார். ஆனால், கொல்கத்தா அணியில் ரிங்கு சிங் 6வது அல்லது 7-வது வீரராக இம்பாக்ட் ப்ளேயராக களமிறக்கப்படுகிறார். சமநிலையற்ற சூழல் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பயிற்சியாளரும், முன்னாள் ஆஸ்திரேலிய வீரரான டாம் மூடி எக்ஸ் தளத்தில் இம்பாக்ட் விதி பற்றி பதிவிட்ட கருத்தில் “பந்துவீச்சுக்கும், பேட்டிங்கிற்கும் சமநிலையற்ற சூழலை இம்பாக்ட் ப்ளேயர் விதி உருவாக்கும். ஏலத்தில் மோசமாக வீரர்களைத் தேர்வு செய்ததை மூடி மறைக்கவே இந்த முறை இருக்கிறது” என விமர்சித்துள்ளார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இம்பாக்ட் ப்ளேயர் விதி அறிமுகப்படுத்தப்பட்டபின், சர்வதேச டி20 போட்டிகளில் பவர்ப்ளேயில் இந்திய வீரர்கள் 25 இன்னிங்ஸ்களில் 1263 ரன்களும், நடுப்பகுதி ஓவர்களில் 2,133 ரன்களும் சேர்த்துள்ளனர். இம்பாக்ட் ப்ளேயர் விதியால் என்ன நன்மை? ஆனால் இம்பாக்ட் ப்ளேயர் விதி கொண்டுவரப்பட்டதிலிருந்து இந்திய பேட்டர்களின் பேட்டிங் ஸ்ட்ரைக் ரேட் மேம்பட்டுள்ளதாக புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. இம்பாக்ட் ப்ளேயர் விதி அறிமுகப்படுத்தப்பட்ட பின், சர்வதேச டி20 போட்டிகளில் பவர்ப்ளேயில் இந்திய வீரர்கள் 25 இன்னிங்ஸ்களில் 1,263 ரன்களும், நடுப்பகுதி ஓவர்களில் 2,133 ரன்களும் சேர்த்துள்ளனர். டெத் ஓவர்களில் 22 இன்னிங்ஸ்களில் 935 ரன்கள் சேர்த்துள்ளனர் இம்பாக்ட் விதி அமலுக்கு வரும் முன்பு, 2022 டி20 உலகக் கோப்பைத் தொடரில் இந்திய அணி வீரர்கள் பவர் ப்ளேயில் 6 இன்னிங்ஸ்களில் 217 ரன்களும், நடுப்பகுதி ஓவர்களில் 6 இன்னிங்ஸ்களில் 477 ரன்களும், டெத் ஓவர்களில் 6 இன்னிங்ஸ்களில் 296 ரன்களும் சேர்த்திருந்தனர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இம்பாக்ட் ப்ளேயர் விதி மீது தனக்கு பெரிய உடன்பாடு இல்லை என்று கூறுகிறார் ரோகித் சர்மா. விதியை எதிர்த்தவரே இம்பாக்ட் பிளேயர் ஆனது எப்படி? “இம்பாக்ட் ப்ளேயர் விதிமுறைக்கு நான் பெரிய ரசிகன் அல்ல. அந்த விதி ஆல்ரவுண்டர்கள் வளர்வதில் சிக்கல்களை ஏற்படுத்தும். கிரிக்கெட் என்பது 11 வீரர்கள் விளையாடுவதாக இருக்க வேண்டும், 12 வீரர்கள் விளையாடும் விளையாட்டு அல்ல. இந்த விதிமுறை சமநிலையான அணியைத் தேர்ந்தெடுத்த முக்கியத்துவத்தை அழித்துவிடும்” என்று கூறி இம்பாக்ட் பிளேயர் விதிக்கு எதிரான விவாதத்தை தொடங்கிவைத்த ரோஹித் சர்மாவே இம்பாக்ட் பிளேயராக களமிறங்கும் சூழலும் உருவானது. கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் அவரை இம்பாக்ட் பிளேயராக மும்பை இந்தியன்ஸ் அணி பயன்படுத்தியது. முதுகில் ஏற்பட்ட பிரச்னையால் ரோஹித் சர்மா இம்பாக்ட் பிளேயராக களமிறங்கும் நிலை ஏற்பட்டதாக ஆட்டத்திற்கு பிறகான செய்தியாளர் சந்திப்பில் சக அணி வீரர் பியூஷ் சாவ்லா தெரிவித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இம்பாக்ட் ப்ளேயர் விதிமுறை தொடர்ந்தால், தோனியை இன்னும் அதிகமான காலம் கிரிக்கெட் விளையாட வைக்கலாம் என்று கூறுகிறார் சிஎஸ்கே அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளர் டுவைன் பிராவோ. "தோனி இன்னும் பல ஆண்டுகள் விளையாடலாம்" இம்பாக்ட் ப்ளேயர் விதிமுறை செயல்பாட்டில் இருக்கும் வரை வயதான வீரர்களான தோனி, விராட் கோலி, ரோஹித் சர்மா, ஜடேஜா, ரஹானே உள்ளிட்ட மூத்த வீரர்கள் அவரவர் அணிகளில் இருந்து விடைபெற விடாமல் தொடர்ந்து இருக்க வைக்கும். இது குறித்து சிஎஸ்கே அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளர் டுவைன் பிராவோ“ இம்பாக்ட் ப்ளேயர் விதிமுறை தொடர்ந்து இருந்தால், தோனியை இன்னும் அதிகமான காலம் கிரிக்கெட் விளையாட வைக்கும்”என்று சமீபத்தில் நாளேட்டுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். ஏனென்றால், கோலி, ரோஹித் சர்மா போன்ற மூத்த வீரர்கள் விளையாடுவதைக் காணவே ரசிகர்கள் அரங்கிற்கு வருகிறார்கள். நட்சத்திர வீரர்கள் இல்லாத ஆட்டத்தைக் காண ரசிகர்களும் அதிக ஆர்வம் காட்டுவதில்லை. வணிக ரீதியான நோக்கத்திற்காக, மூத்த வீரர்களை தொடர்ந்து தக்க வைக்கும் நோக்கில் இம்பாக்ட் ப்ளேயர் விதியை அணிகள் பயன்படுத்தக் கூடும் என்றும் கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். https://www.bbc.com/tamil/articles/c3ge94jq41qo
-
வடலூரில் வள்ளலார் சர்வதேச மைய பணிகள் நிறுத்தி வைப்பு - தமிழ்நாடு அரசின் ரூ.100 கோடி திட்டத்திற்கு எதிர்ப்பு ஏன்?
வள்ளலார் சர்வதேச மைய கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டது ஏன்? - பிபிசி கள ஆய்வு கட்டுரை தகவல் எழுதியவர், சாரதா வி பதவி, பிபிசி தமிழ் 9 மணி நேரங்களுக்கு முன்னர் கடலூர் மாவட்டம் வடலூரில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கும் பணிகளை தமிழக அரசு நிறுத்தியுள்ளது. ஒருபுறம் எதிர்ப்புக் கிளம்பிய நிலையில், மற்றொருபுறம் தொல்லியல் தடயங்கள் கிடைத்திருப்பதாக தமிழ்நாடு அரசு கூறுகிறது. வள்ளலார் சர்வதேச மையத்தை அரசு தேர்ந்தெடுத்திருக்கும் இடத்தில் கட்டக் கூடாது என்று அப்பகுதியினர் தெரிவிக்கின்றனர். இந்நிலையில்தான், சர்வதேச மையக் கட்டுமானப் பணிகளுக்காகத் தோண்டப்பட்ட குழிகளில் "தொல்லியல் சுவர்கள்" கண்டெடுக்கப்பட்டுள்ளன. வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க, அரசு தேர்ந்தெடுத்திருக்கும் இடம், வடலூரில் சத்ய ஞான சபையை ஒட்டியுள்ள சுமார் 70 ஏக்கர் பரந்த நிலபரப்பு. இந்த இடத்தை வள்ளலாரை பின்பற்றுபவர்கள் சிலர் ‘பெருவெளி’ என்றழைக்கின்றனர். வள்ளலார் விரும்பியபடி இந்த பெருவெளி காலியாக இருக்க வேண்டும், எந்த கட்டுமானமும் இருக்கக் கூடாது என்று கூறுகின்றனர். வள்ளலார் யார்? வள்ளலார் எனப்படும் ராமலிங்க அடிகளார், தமிழ்நாட்டில் 19-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆன்மீகவாதி ஆவார். சமய பேதங்கள் இல்லாத பொது நெறியை வகுத்த வள்ளலார், 1865-ஆம் ஆண்டு சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தை நிறுவினார். இந்த அமைப்பு உருவ வழிபாட்டை மறுத்து, ஒளி வழிபாட்டை முன்வைக்கிறது. கோயில் என்ற அமைப்புக்கு பதில் சபையை உருவாக்கினார் வள்ளலார். அவர் எழுதிய திருவருட்பாவில், முதல் ஐந்து திருமுறைகளில் ஆன்மீகம் குறித்து பேசிய வள்ளலார், தனது வாழ்நாளின் கடைசி ஒன்பது ஆண்டுகளில் எழுதியதான ஆறாம் திருமுறையில் சாதியை எதிர்த்துக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். மதச்சீர்திருத்தம் வேண்டிய வள்ளலாரின் கருத்துகளை ஆறாம் திருமுறையில் பார்க்கலாம். 'வேத ஆகமங்கள் என்று வீண் வாதமாடுகின்றீர், வேத ஆகமத்தின் விளைவு அறியீர்' என்று வேத நம்பிக்கைகளை விமர்சித்துள்ளார் அவர். 1927-ஆம் ஆண்டு வெளிவந்த 'குடியரசு' இதழின் முதல் பதிப்பில் வள்ளலாரின் வரிகளை வெளியிட்டார் தந்தை பெரியார். வள்ளலார் சர்வதேச மையம் எதற்காக? கடலூர் மாவட்டத்தில் உள்ள வடலூர் வள்ளலார் சத்திய ஞான சபையில், ரூ.100 கோடி மதிப்பில் 3.18 ஏக்கர் பரப்பளவில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்தச் சர்வதேச மையத்தில் தியான மண்டபம், மின் நூலகம், வள்ளலாரின் கொள்கைகளை எடுத்துரைக்கும் தகவல் மையம், நிகழ்வரங்கம், முதியோர் இல்லம், வெளிநாட்டு ஆய்வு மாணவர்களுக்கான விடுதி ஆகியவை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. “இவை வள்ளலார் கூறிய சமரச வேத தருமசாலையின் கிளைச்சாலைகளாகவே அமைக்கப்பட்டுள்ளன. விவகார சாலை (தகவல் மையம்), உபகார சாலை (முதியோர் இல்லம்), சாத்திர சாலை (படிப்பகம்), விருத்தி சாலை (வளர்ச்சி மையம்) ஆகியவை சர்வதேச மையத்தில் கட்டப்படுகின்றன,” என்றார் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரி. வடலூரில் வள்ளலார் சர்வதேச மையம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டுவிழா இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடத்தப்பட்டு, கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. பார்வதிபுரம் மக்கள் போராடுவது ஏன்? இந்தச் சர்வதேச மையத்தின் கட்டுமானப் பணிகள் தொடங்கிய போது, அதை எதிர்த்து குழிக்குள் இறங்கி போராடியவர்கள் பார்வதிபுரத்தை சேர்ந்த மக்கள். சத்திய ஞான சபைக்குப் பின்புறம் உள்ள பகுதியே பார்வதிபுரம். வள்ளலார் தரும சாலை அமைப்பதற்காக, 1867-ஆம் ஆண்டு பிப்ரவரி 2-ஆம் தேதி இந்த ஊரை சேர்ந்த 30-க்கும் மேற்பட்டோர் தங்கள் நிலத்தை தானமாக கொடுத்தனர். தங்கள் முன்னோர்கள் கொடுத்த நிலம் வள்ளலார் விரும்பியது போல் பெருவெளியாக இருக்க வேண்டும், கட்டுமானங்கள் நடைபெறக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தனர். சர்வதேச மையம் அமைப்பது குறித்து தங்களிடம் கருத்து எதுவும் கேட்கவில்லை என்று குற்றம் சாட்டுகின்றனர் அவர்கள். வள்ளலார் சர்வதேச மையம் அமைப்பதை தாங்கள் எதிர்க்கவில்லை என்றும், இந்த இடத்தில் கட்ட வேண்டாம் என்று கூறுவதாகத் தெரிவித்தனர். ‘பெருவெளி’ என்பது என்ன? சர்வதேச மையத்தின் கட்டுமானத்தை ஆதரிப்பவர்களும் எதிர்ப்பவர்களும் பெருவெளி என்பதை இருவேறு விதமாக பார்க்கிறார்கள். சத்திய ஞான சபையை சுற்றி இருக்கும் 70 ஏக்கர் நிலத்தை பெருவெளி என்று அழைக்கின்றனர் வள்ளலாரை பின்பற்றுபவர்கள் சிலர். ஆனால், பெருவெளி என்பது எந்த குறிப்பிட்ட நிலமும் கிடையாது, அண்ட பெருவெளி தான் வள்ளலார் கூறியது என்கின்றனர் வேறு சிலர். வெளி என்பது இடம் அல்ல, தங்களுக்கான தத்துவம் என்கிறார் வள்ளலார் படிப்பக ஒருங்கிணைப்பாளர் முனைவர் சுப்ரமணிய சிவா. “வள்ளலார் ‘ஓங்கார நிலை நின்றேன்’ என்ற பாடலில் 'நானும் இறைவனும் உறைந்த அனுபவம் தான் தோழி நிறைந்த பெருவெளியே' என்கிறார். அதாவது வள்ளலாரும் இறைவனும் கலந்த அனுபவத்தின் குறியீடு தான் பெருவெளி என்று வள்ளலாரே கூறியுள்ளார். பெருவெளிக்குள் தான் சத்ய ஞான சபை இருக்கிறது," என்றார். "சபையைச் சுற்றிதான் வள்ளலார் கூறும் வெளிகள் உள்ளன. திருக்கோயில்களில் எப்படி பிரகாரம் இருக்கிறதோ அதே போன்று சத்திய ஞான சபையை சுற்றி 30-க்கும் மேற்பட்ட வெளிகள் உள்ளன. அவை அருவுருவமாக உள்ளன. கண்ணுக்கு தெரியாததாலேயே அவை இல்லை என்றாகிவிடாது. அகவல், அருள்விளக்கமாலை, ஆறாம் திருமுறை என பல இடங்களில் வள்ளலார் இந்த பெருவெளியை குறிப்பிட்டுள்ளார்," என்றார். "இங்கு கட்டுமானம் மேற்கொள்வது, திருக்கோயிலில் உள்ள திருச்சுற்றை இடிப்பதற்கு சமமாகும்,” என்கிறார் அவர். படக்குறிப்பு,முனைவர் சுப்ரமணிய சிவா வடலூரில் உள்ள மூத்த சன்மார்கி முருகன், 153 ஆண்டுகளாக பெருவெளியாக இருக்கும் நிலத்தை அப்படியே காக்க வேண்டும் என்கிறார். “மக்கள் அந்தப் பெருவெளியில் நின்று ஒளிவழிபாடு செய்ய வேண்டும் என்பதற்காக தான், பார்வதிபுரம் மக்களிடமிருந்து இந்த இடத்தை வாங்கினார் வள்ளலார். 153 ஆண்டுகளாக இது பெருவெளியாக தான் உள்ளது. இனியும் அப்படி தான் இருக்க வேண்டும்,” என்கிறார். வள்ளலார் குறித்த நூல்களை எழுதியிருக்கும் உமாபதி, “இந்த இடத்தில் கட்டுமானங்கள் நடைபெறக் கூடாது என்று கூறுவதற்கு எந்த அர்த்தமும் இல்லை. வெளி என்பதை எந்த இடத்துக்குள்ளும் சுருக்க முடியாது. வள்ளலார் கூறும் வெளி என்பது அண்டப் பெருவெளி. வள்ளலாரின் கூற்று படி அது கணக்கு வழக்கற்றது,” என்கிறார். இந்தத் தத்துவார்த்த மோதல் ஒரு புறம் இருக்க, வேறு சில காரணங்களுக்காகவும் இந்தச் சர்வதேச மையம் எதிர்க்கப்படுகிறது. தற்போது அமைந்திருக்கும் சத்திய ஞான சபை அனைவருக்கும் தங்கு தடையின்றி வந்து செல்லக் கூடிய இடமாக, ஆதரவற்றோர் இளைப்பாறக் கூடிய இடமாக உள்ளது. வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கப்பட்டால், அந்த இடம் கட்டுப்படுத்தப்பட்ட இடமாக மாறிவிடும் என்ற அச்சம் அப்பகுதியினருக்கு இருக்கிறது. பார்வதிபுரத்தைச் சேர்ந்த சங்கீதா, “எனக்கு சிறு வயதிலிருந்தே வள்ளலாரைப் பிடிக்கும். எனக்கு ஊர், அருகில் உள்ள குறிஞ்சிபாடி. எனக்கு திருமணமாகி இங்கு வந்த போது, இனி தினம் தினம் வள்ளலாரை காணலாம் என்று மகிழ்ந்தேன். அனைவரும் சமம் என்று வள்ளலார் கூறியதால் அவரைப் பிடிக்கும். இந்த ஞான சபைக்கும் எங்கள் ஊருக்கும் மிக நெருங்கிய தொடர்பு உண்டு. எங்கள் ஊருக்கு ஒரு பெண் புதிதாக திருமணம் ஆகி வந்தால் முதலில் சபைக்கு கூட்டி சென்று வணங்கிய பிறகே ஊருக்குள் அழைத்து வரப்படுவார். அதே போன்று திருமணமாகி வெளியூர் சென்றாலும், சபையின் முன் சென்ற பிறகே செல்வார். இங்கு 2,000 வீடுகள் உள்ளன. நாங்கள் ஊருக்குள் வருவது, பள்ளிக்கு செல்வது, வேலைக்கு செல்வது எல்லாம் இந்த வழியாக தான். சர்வதேச மையம் அமைக்கும் போது எழுப்பப்படும் சுவர் எங்கள் பாதையைத் தடுக்கும்,” என்றார். படக்குறிப்பு,சங்கீதா, பார்வதிபுரம் அதே பகுதியில் இருக்கும் சாந்தி, “அந்த நிலம் நாங்கள் கொடுத்த நிலம், எங்கள் நிலம், அது அரசின் புறம்போக்கு நிலமல்ல. எங்கள் இடத்தை நாங்கள் வள்ளலாருக்கு தான் தர விரும்புகிறோம். சாலையில் போகிறவர்கள் ஞான சபையின் கோபுரத்தை பார்த்துவிட்டு வணங்கி செல்கின்றனர். புதிய கட்டுமானத்தால் அந்த கோபுரம் மறைந்து விடும்” என்கிறார். படக்குறிப்பு,சாந்தி, பார்வதிபுரம் குழிக்குள் இறங்கி போராடியதற்காக வழக்கு போடப்பட்டவர்களில் ஒருவரான மணிகண்டன், தங்கள் போராட்டம் திடீரென நடைபெறவில்லை என்கிறார். “ஆட்சியருக்கும், முதல்வருக்கும் மனு வழங்கினோம். எந்த பதிலும் இல்லை. அரசின் இந்த முனைப்பை பார்த்தால், வியாபார நோக்கத்துக்காக சர்வதேச மையத்தை அமைக்கிறார்களா என்ற சந்தேகம் எழுகிறது. வசதி மிகுந்த பல சர்வதேச மையங்களை அரசு உருவாக்க முடியும். இது போன்ற பெருவெளியை அரசு நினைத்தால் உருவாக்க முடியுமா?" என்கிறார். "வள்ளலாருக்கு சொந்தமான 12.8 ஏக்கர் நிலம், நெய்வேலி சாலையில் காலியாக உள்ளது. இந்த பெருவெளியின் சுமார் 40 ஏக்கர் ஆக்கிரமிப்பில் உள்ளன. அதை மீட்டெடுத்து சர்வதேச மையம் கட்டலாமே,” என்கிறார் மணிகண்டன். படக்குறிப்பு,மணிகண்டன், பார்வதிபுரம் குழிக்குள் இருக்கும் தொல்லியல் படிமங்கள் என்ன? சர்வதேச மையம் கட்டுவதற்காக அரசு தோண்டிய குழிகளில் தொல்லியல் படிமங்கள் சில கிடைத்திருப்பதாக தமிழக அரசு கூறுகிறது. தொல்லியல் நிபுணர்கள் ஆய்வு நடத்தும் வரை கட்டுமானப் பணிகளை நிறுத்தி வைத்துள்ளது. இந்து சமய அறநிலையத்துறை அதிகாரி கூறுகையில் , “அங்கு கிடைத்துள்ள சுவர்களை ஆய்வு செய்ய வேண்டும். எனினும் அந்த இடத்தில் வீடுகள் இருந்ததற்கு சான்றுகள் உள்ளன, எனவே தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த பொருட்கள் கிடைப்பதற்கு வாய்ப்பில்லை. எனினும் தொல்லியல் நிபுணர்கள் ஆய்வு முடிந்த பிறகே கட்டுமானப் பணிகள் தொடரும்,” என்றார். அரசு கூறுவது என்ன? இந்த சர்ச்சை குறித்து, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரி ஒருவர் கூறும் போது, “வள்ளலாரின் கருத்தியலுக்கு எதிராக நாங்கள் எதையும் செய்யவில்லை. வள்ளலார் தனது எழுத்துகளில் 30 இடங்களில் பெருவெளியை குறிப்பிடுகிறார். எந்த இடத்திலும் இங்கு உள்ள 70 ஏக்கர் தான் பெருவெளி என்று வள்ளலார் குறிப்பிடவில்லை. அவர் கூறியது அண்ட பெருவெளி. ‘கணக்கு வழக்கு அற்றது’ பெருவெளி என்கிறார். பார்வதிபுரம் மக்கள் கொடுத்தது 80 காணி நிலம் என்பதற்கு சான்றுகள் எதுவும் கிடையாது. இந்து சமய அறநிலையத்துறை இந்த இடத்தை கையில் எடுக்கும் போது எவ்வளவு நிலம் இருந்ததோ, அது இப்போதும் இருக்கிறது, எதுவும் ஆக்கிரமிப்பு செய்யவில்லை,” என்றார். இது குறித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு பிபிசி தமிழிடம் பேசுகையில், “வள்ளலார் சர்வதேச மையம் அமைப்பது தொடர்பாக பார்வதிபுரம் மக்களிடம் அமைதி பேச்சுவார்த்தை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. அந்த பெருவெளியை தற்போது அவர்கள் முழுமையாக நினைத்தபடி எல்லாம் பயன்படுத்தி வருகின்றனர். சர்வதேச மையம் அமைக்கப்பட்டால் தங்களால் அந்த இடத்தை பயன்படுத்த முடியாது என்று நினைக்கின்றனர். சர்வதேச மையம் அமைப்பதால் யாரும் அவர்கள் உள்ளே வர தடை செய்ய போவதில்லை. இந்த மையம் அமைவதால், பொருளாதார, கலாசார ரீதியில் அந்த மக்களுக்கு தான் பலனளிக்கும். அந்த இடத்தில் உள்ள தொல்லியல் படிமங்களை ஆய்வு செய்ய, நீதிமன்ற உத்தரவு படி, தொல்லியல் நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது.” என்றார். https://www.bbc.com/tamil/articles/cj7m9z142p0o
-
42 நாள் யுத்த நிறுத்தம் பணயக்கைதிகள் கைதிகள் பரிமாற்றம் - யுத்த நிறுத்தம் தொடர்பான யோசனையை ஏற்றுக்கொண்டது ஹமாஸ் - இஸ்ரேல் மறுப்பு
காஸாவில் அமைதி திரும்புமா? சண்டையை நிறுத்த ஹமாஸ் தயார் - இஸ்ரேல் என்ன சொல்கிறது? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், டேவிட் கிரிட்டன் பதவி, பிபிசி நியூஸ் 27 நிமிடங்களுக்கு முன்னர் "காஸா போர் நிறுத்தம் குறித்த புதிய ஒப்பந்தத்தின் முன்மொழிவு, இஸ்ரேலின் முக்கிய கோரிக்கைகளை பூர்த்தி செய்யவில்லை. இருப்பினும் பேச்சுவார்த்தை தொடரும்" என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். கத்தார் மற்றும் எகிப்து நாடுகளின் மத்தியஸ்தர்களால் போர் நிறுத்தத்திற்கு சில நிபந்தனைகள் முன்வைக்கப்பட்டன. அதை ஏற்றுக் கொண்டதாக ஹமாஸ் கூறியுள்ள நிலையில் நெதன்யாகுவின் அறிக்கை வெளிவந்துள்ளது. ஹமாஸ் அதிகாரி, "முடிவு இப்போது இஸ்ரேலின் கைகளில் உள்ளது" என்று கூறியுள்ளார். ஹமாஸ் ஏற்றுக்கொண்ட ஒப்பந்தம் இஸ்ரேலின் அடிப்படை கோரிக்கைகளை பூர்த்தி செய்யவில்லை என்றும் ஆனால் பேச்சுவார்த்தைகள் தொடரும் என்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். பட மூலாதாரம்,EPA படக்குறிப்பு,இஸ்ரேலில் பணயக்கைதிகளை விடுவிக்க கோரும் ஆர்ப்பாட்டம் இதற்கிடையில், இஸ்ரேலிய ஊடக செய்திகளின்படி, தெற்கு காஸாவில் உள்ள ரஃபா கடவுப் பாதைக்கு அருகில் இஸ்ரேலிய படைகள் மற்றும் டாங்கிகள் தென்படுகின்றன. அண்மையில், இஸ்ரேல் ரஃபாவில் தாக்குதல்களை ஆரம்பித்தது. அகதிகளை முகாமை விட்டு வெளியேறுமாறு இஸ்ரேல் ஏற்கனவே கூறியிருந்தது. ரஃபாவில் ஹமாஸை குறிவைத்து தாக்குதல்களை நடத்தி வருவதாக இஸ்ரேலிய ராணுவம் கூறியுள்ளது. இஸ்ரேலின் நடவடிக்கையால் ரஃபாவில் வசிக்கும் பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பலர், அப்பகுதியை காலி செய்ய, கழுதைகள் மீது சவாரி செய்து வருகின்றனர். கான் யூனிஸ் அருகே உள்ள முகாமில் இருந்து ஒரு லட்சம் பேரை வெளியேறுமாறு இஸ்ரேல் உத்தரவிட்டுள்ளது. ரஃபாவின் கிழக்குப் பகுதிகளில் இருந்து மக்கள் காலி செய்ய வேண்டும் என்ற உத்தரவை, போரின் "ஆபத்தான திருப்புமுனை" என்று ஹமாஸ் அதிகாரி ஒருவர் விவரித்தார். தற்போது முன்வைக்கப்பட்டுள்ள போர் நிறுத்த ஒப்பந்தத்தில் இரண்டு விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு வார கால போர் நிறுத்தம் மற்றும் ஹமாஸால் பணயக் கைதிகளாக இருக்கும் இஸ்ரேலியர்களை விடுவிப்பது. ஹமாஸ் சொல்வது என்ன? பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு,இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கை குறித்த எச்சரிக்கையை அடுத்து மக்கள் கிழக்கு ரஃபாவை விட்டு வெளியேறுகின்றனர். திங்கட்கிழமை மாலை, ஹமாஸ் சார்பில் ஒரு அறிக்கை வெளியானது. அதன்படி, `ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியா, கத்தார் பிரதமரிடமும் எகிப்திய உளவுத்துறை தலைவரிடமும் போர் நிறுத்த உடன்படிக்கை முன்மொழிவுக்கு சம்மதம் தெரிவித்ததாக அறிவித்தார்’ என்று கூறப்பட்டிருந்தது. இந்த முன்மொழிவை பற்றி நன்கு அறிந்த ஒரு மூத்த பாலத்தீன அதிகாரி பிபிசியிடம், ”தனது நிபந்தனைகள் நிறைவேற்றப்பட்டால் ’இஸ்ரேல் விரோத நடவடிக்கைகளை’ முடிவுக்கு கொண்டுவர ஹமாஸ் ஒப்புக்கொண்டது’’ எனக் கூறினார். இந்த அறிக்கை, ஹமாஸ் தனது ஆயுத தாக்குதல்களை முடிவுக்கு கொண்டு வர பரிசீலித்து வருவதை சுட்டிக்காட்டுகிறது, இருப்பினும் இது தொடர்பாக மேற்கொண்டு தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. இவை அனைத்தும் இரண்டு கட்ட போர்நிறுத்த ஒப்பந்தங்களின் மூலம் மட்டுமே சாத்தியப்படும், அதன் கீழ் ஒவ்வொரு கட்டமும் 42 நாட்களுக்கு இருக்கும். முதற்கட்டமாக, பிணைக் கைதிகளாக பிடிபட்டுள்ள பெண் இஸ்ரேலிய படையினர் விடுவிக்கப்படுவார்கள். அதன் கீழ், இஸ்ரேல் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 50 பாலத்தீன கைதிகள் விடுவிக்கப்படுவார்கள், அவர்களில் சிலருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தின் போது, இஸ்ரேலிய ராணுவம் காஸாவில் இருக்கும். ஆனால் போர் நிறுத்தத்தின் 11 நாட்களுக்குள், இஸ்ரேல் தனது இராணுவ உபகரணங்களை அப்பகுதியின் ராணுவ மையத்திலிருந்து திரும்பப் பெறத் தொடங்கும் மற்றும் சலா அல்-தின் சாலையில் இருந்து வெளியேறும். இது வடக்கு-தெற்கு பாதை மற்றும் கடற்கரை சாலைகளில் நடைபெறும் செயல்முறை. 11 நாட்களுக்குப் பிறகு, இடம்பெயர்ந்து வாழும் பாலத்தீனர்கள், வடக்கே தங்கள் பகுதிகளுக்கு திரும்ப அனுமதிக்கப்படுவார்கள். ஒரு அதிகாரியின் கூற்றுப்படி, போர் நிறுத்தத்தின் இரண்டாம் கட்ட நடவடிக்கையில் காஸாவில் கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கப்படும். பின்னர் `நீண்ட கால அமைதி’ ஒப்பந்தத்துடன் முடிவடையும். "போர் நிறுத்த ஒப்பந்தத்தில் உடன்பட்டாலும் தடையாக இருந்தாலும் முடிவு இப்போது இஸ்ரேலின் கைகளில் உள்ளது" என்று ஹமாஸின் மூத்த அதிகாரி ஒருவர் AFP செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார். இஸ்ரேலின் அறிக்கை பட மூலாதாரம்,GETTY ஹமாஸின் அறிக்கை வெளியானதும், இந்த தகவல் மக்கள் மத்தியில் பரவியது, இதனால் காஸா மக்களிடையே கொண்டாட்ட சூழல் காணப்பட்டது. ஆனால் பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு இஸ்ரேலிய அதிகாரி, ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் கூறுகையில், ”ஹமாஸ் ஏற்றுக்கொண்ட ஒப்பந்தம், எகிப்திய முன்மொழிவின் 'மென்மையான பதிப்பு', இது சாத்தியம் ஆகாது. இஸ்ரேல் தரப்பில் ஏற்க முடியாத இலக்குகளைக் கொண்டுள்ளது. எப்படியும் இஸ்ரேல் ஒப்பந்தத்தை நிராகரிக்கும். அவ்வாறு நிராகரித்தால், அதையே இஸ்ரேலின் பிம்பமாக கட்டமைக்க இந்த முயற்சி என்று தோன்றுகிறது" என்று கூறினார். இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம் இதுகுறித்து அறிக்கை வெளியிட்டது, "ஹமாஸின் முன்மொழிவு இஸ்ரேலின் அடிப்படை நிபந்தனைகளை பூர்த்தி செய்யவில்லை என்றாலும், இஸ்ரேல் ஏற்றுக் கொள்ளக்கூடிய நிபந்தனைகள் அடங்கிய ஒப்பந்தத்தை எட்டுவதற்கு மத்தியஸ்தர்கள் குழுவை இஸ்ரேல் அனுப்பும்." என்று அதில் கூறப்பட்டுள்ளது. "அதனுடன், பணயக் கைதிகளை விடுவிக்கவும், ஹமாஸின் ராணுவப் பிரிவை ஒழிக்கவும் ஹமாஸ் மீது அழுத்தம் கொடுக்கும் வகையில், ரஃபாவில் தனது தாக்குதலை தொடர இஸ்ரேலின் போர் அமைச்சரவை முடிவு செய்துள்ளது. எதிர்காலத்தில், காஸா இஸ்ரேலுக்கு அச்சுறுத்தலாக மாறக்கூடாது என்று இஸ்ரேல் விரும்புகிறது" என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கிழக்கு ரஃபாவில் ஹமாஸ் நிலைகளை குறிவைத்து தாக்குதல் நடத்துவதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ள நிலையில் இந்த அறிக்கை வெளிவந்துள்ளது. கத்தார் மற்றும் எகிப்துடன் ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா முயற்சித்து வருவதாக அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் ஊடகங்களிடம் தெரிவித்தார். அவர் ஹமாஸின் பதிலை மறுபரிசீலனை செய்து, நேச நாடுகளுடன் கலந்துரையாடும் முயற்சியில் இருக்கிறார். ”பணயக்கைதிகளை விடுவிப்பது தொடர்பான ஒப்பந்தம் இஸ்ரேலிய மக்களின் நலன் சார்ந்தது என்று நாங்கள் நம்புகிறோம். பாலத்தீனர்களுக்கு இந்த ஒப்பந்தம் பலன் தரும். இது உடனடி போர் நிறுத்தத்திற்கு வழிவகுக்கும். மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கும் உதவும், எனவே இந்த விஷயத்தில் அனைத்து தரப்பினருடனும் பேச முயற்சிப்போம்.” என்றும் அவர் கூறினார். கடந்த ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி தெற்கு இஸ்ரேலில் ஹமாஸ் படை தாக்குதல் நடத்தியதில் இருந்து இந்தப் போர் தொடங்கியது. இந்தத் தாக்குதலில் குறைந்தது 1,200 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 250 பேர் பிணைக்கைதிகளாக பிடிக்கப்பட்டனர். ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள காஸா சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, இஸ்ரேலிய இராணுவ தாக்குதலில் இதுவரை 34,700 பாலத்தீனர்கள் இறந்துள்ளனர். கடந்த ஆண்டு நவம்பரில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் கீழ் ஹமாஸ் 105 பணயக் கைதிகளை விடுவித்தது. அப்போது ஒரு வாரத்திற்கு போர் நிறுத்தம் செய்யப்பட்டு இஸ்ரேல் சிறைகளில் இருந்த சுமார் 240 பாலத்தீன கைதிகளும் விடுவிக்கப்பட்டனர். "காஸாவில் 128 பணயக்கைதிகள் எங்கிருக்கிறார்கள் என்பது இன்னும் தெரியவில்லை" என்று இஸ்ரேல் கூறுகிறது. இந்த பணயக்கைதிகளில் 34 பேர் இறந்துவிட்டதாக நம்பப்படுகிறது. https://www.bbc.com/tamil/articles/cv2rzm3yylgo
-
ரஃபாவின் கிழக்கு பகுதியில் வசிக்கும் மக்களை உடனடியாக அங்கிருந்து வெளியேறுமாறு இஸ்ரேல் உத்தரவு
ரஃபா எல்லை இஸ்ரேலிய இராணுவத்தின் கட்டுப்பாட்டில் -மனிதாபிமா உதவிகளை காசாவிற்குள் கொண்டு செல்வது இடைநிறுத்தம் 07 MAY, 2024 | 03:44 PM காசா பகுதியில் உள்ள ரஃபாஎல்லையை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. ரஃபா மூலோபாய ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிஎன்பதுடன் எகிப்திலிருந்து காசாவிற்கான மனிதாபிமான உதவிகள் வருவதற்கான ஒரேயொரு பாதையாகவும் காணப்படுகின்றது. ரஃபாவின் காசா பக்கத்தினை நாங்கள் தற்போது கட்டுப்பாட்டின் கீழ் வைத்துள்ளோம் எங்களது சிறப்பு படைகள் இந்த பகுதியில் சோதனை நடவடிக்கைகள் போன்றவற்றில் ஈடுபட்டுள்ளன என இஸ்ரேலின் இராணுவ அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். இதேவேளை காசா எல்லை அதிகாரசபைக்கான பேச்சாளர் இஸ்ரேலிய டாங்கிகள் காணப்படுவதை உறுதிசெய்துள்ளார். அந்த பகுதி ஊடாக மனிதாபிமான உதவிகள் பயணிப்பது நிறுத்தப்பட்டுள்ளதாக மனிதாபிமான அமைப்புகள் தெரிவித்துள்ளன. https://www.virakesari.lk/article/182896
-
யாழ். வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்து கும்பல் ஒன்று அடாவடி
Published By: DIGITAL DESK 3 07 MAY, 2024 | 12:57 PM யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்து குழப்பத்தில் ஈடுபட்ட கும்பலை கைது செய்வதற்கு யாழ்ப்பாண பொலிஸார் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர். விபத்தில் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளைஞன் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இளைஞனின் உயிரிழப்பை அடுத்து , அவரின் நண்பர்கள் என தம்மை அடையாளப்படுத்திக்கொண்ட சுமார் 20 பேர் கொண்ட கும்பல் ஒன்று வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்து அடாவடியில் ஈடுபட்டதுடன், மருத்துவர்கள், தாதியர்கள், நோயாளிகளுடன் முரண்பட்டனர். அது தொடர்பில் மருத்துவ சேவைக்கு இடையூறு ஏற்படுத்தினார் என வைத்தியசாலை நிர்வாகத்தினரால், யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிஸார் அடாவடியில் ஈடுபட்டவர்களை இனம் கண்டுள்ளதாகவும், அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்து உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/182883
-
யாழில் வெப்பத்தால் 5 பேர் வரை உயிரிழப்பு - வைத்திய நிபுணர்கள்
Published By: DIGITAL DESK 3 07 MAY, 2024 | 12:49 PM அதிக வெப்பத்தினால் ஏற்பட்ட வெப்ப பக்கவாதம் (Heat stoke) நோய் காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒரு விடுதியில் கடந்த வாரத்தில் மாத்திரம் நான்கு முதல் ஐந்து வரையான இறப்புக்கள் பதிவாகியுள்ளதென வைத்திய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் திங்கட்கிழமை இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், தற்பொழுது அதிகரித்துள்ள வெப்பநிலை காரணமாக உடலின் வெப்பநிலை அதிகரித்து வெப்ப பக்கவாதம் ஏற்படக்கூடிய வாய்ப்புஉள்ளது. வெப்ப பக்கவாதம் மூலம் எமது விடுதிகளில் அனுமதிக்கப்பட்டிருந்த பல நோயாளிகளை இழந்து இருக்கின்றோம். இனிவரும் காலங்களிலும் வெப்பநிலை அதிகரித்துச் செல்லக்கூடிய வாய்ப்பு காணப்படுகின்றது. எனவே, வெப்பநிலை அதிகரிப்பை தடுக்கும் நோக்கில் அதிகளவிலான மரங்களை நடவேண்டும். பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களின் பாவனையை தவிர்க்க வேண்டும். பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் பாவனைகளின் அதிகரிப்பு மற்றும் அதிகளவிலான மரங்கள் அழிப்பு என்பனவற்றின் மூலம் தான் தற்பொழுது வெப்பநிலை அதிகரித்து காணப்படுகிறது. எனவே மக்கள் அனைவரும் வீட்டுக்குவீடு மரங்களை நட்டு சுற்றாடலை குளிர்மையாக வைத்திருக்கவேண்டும். அதிக நீர் மற்றும் குளிர்மையான பானங்களை அருந்த வேண்டும். கடந்த இரு வாரங்களில் வெப்ப பக்கவாதம் காரணமாக எமது நோயாளர் விடுதிகளில் அனுமதிப்பட்டிருந்த நான்கு தொடக்கம் ஐந்து நோயாளிகளை இழந்து இருக்கின்றோம். இந்த நோய் வராமல் இருப்பதற்கு அதிக நீரை அருந்த வேண்டும். வீட்டில் உள்ள வயோதிபர்கள் மற்றும் குழந்தைகளுக்கு போதிய நீர் ஆகாரங்களை வழங்கவேண்டும். தர்பூசணி, வெள்ளரிப்பழம், தோடம்பம் போன்ற பழங்களை கூடுதலாக உண்ணக் கொடுக்க வேண்டும். வயது போனவர்களுக்கு தண்ணீர் தாகம் எடுப்பது தெரியாது. எனவே நீர் ஆகாரங்களை தொடர்ச்சியாக வழங்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் உடலின் வெப்பத்தை குறைத்து வெப்ப பக்கவாதம் வாராமல் தடுக்கமுடியும் என்றார். https://www.virakesari.lk/article/182880
-
மீள் மின் இணைப்பை 90 நாட்களுக்குள் பெற்றுக்கொள்ளாவிடின் மின் விநியோகம் முழுமையாக துண்டிக்கப்படும் - மின்சாரத்துறை அமைச்சர்
Published By: DIGITAL DESK 3 07 MAY, 2024 | 01:33 PM (எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) மின் விநியோகம் துண்டிக்கப்பட்டு 90 நாட்களுக்குள் மீள் இணைப்பை பெற்றுக் கொள்ளாத மின்பாவனையாளர்களின் மின்கணக்கு இரத்து செய்யப்பட்டு மின் விநியோகம் முழுமையாக துண்டிக்கப்படும். மீள் மின் இணைப்புக்காக அறவிடப்படும் கட்டணம் தற்போது குறைக்கப்பட்டுள்ளது என மின்சாரத்துறை மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (7) இடம்பெற்ற அமர்வின் போது எதிர்க்கட்சியின் உறுப்பினரான கெவிந்து குமாரதுங்க முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் உரையாற்றியதாவது, 2022 மே மாதம் 14 ஆம் திகதிக்கு முன்னரான காலப்பகுதியில் 70 இலட்சம் மின்பாவனையாளர்கள் மின்விநியோக கட்டமைப்பில் பாதிக்கப்பட்டிருந்தார்கள்.பல மணித்தியாலங்கள் மின்விநியோக துண்டிப்பு அமுல்படுத்தப்பட்டன.ஆட்சிமாற்றத்தை தொடர்ந்து மின்கட்டமைப்பில் கொள்கை ரீதியில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டது. மின்விநியோக கட்டமைப்பின் கொள்கை திருத்தம் செய்யப்பட்டதால் தற்போது பாரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. மின்கட்டணம் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. கட்டணத்தை தொடர்ந்து குறைக்க முடியுமா என்று முன்வைக்கப்பட்டுள்ள யோசனை தொடர்பில் இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோம். சிவப்பு எச்சரிக்கை கட்டண படிவம் விநியோகிக்கப்பட்டு நிலுவை கட்டணம் செலுத்தாத சுமார் 10 இலட்சம் மின்பாவனையாளர்களுக்கான மின்விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது. மின்விநியோகம் துண்டிக்கப்பட்டு 90 நாட்களுக்குள் நிலுவை கட்டணத்தை செலுத்தாவிடின் மின்விநியோகம் முழுமையாக துண்டிக்கப்பட்டு, மின்பாவனைக்கான கணக்கும் இரத்து செய்யப்படும். மின்கட்டணத்தை செலுத்தாத தரப்பினரை இலக்கு வைத்து அவர்களுக்காக விநியோகத்தை துண்டிக்குமாறு எவருக்கும் பொறுப்பு வழங்கவில்லை. கட்டணம் செலுத்தாவிடின் மின்விநியோகம் துண்டிக்கப்படும் இது நான் அமைச்சரான பின்னர் எடுத்த தீர்மானமல்ல,காலம் காலமாகவே அமுல்படுத்தப்படுகிறது. சிவப்பு எச்சரிக்கை கட்டண படிவம் வழங்கப்பட்டு,கட்டணம் செலுத்துவதற்கு காலவகாசம் வழங்கப்படும். அந்த காலப்பகுதிக்குள் கட்டணத்தை செலுத்தாவிடின் தான் மின் விநியோகம் துண்டிக்கப்படும். மின்விநியோகம் துண்டிக்கப்பட்டு, மீள இணைப்பு பெற்றுக்கொள்ளப்படும் போது அறவிடப்படும் கட்டணம் தற்போது குறைக்கப்பட்டுள்ளது என்றார். https://www.virakesari.lk/article/182884
-
கனடா: ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கில் மூன்று இந்தியர்கள் கைது - யார் அவர்கள்?
மூன்று இந்தியர்கள் கைதால் கனடா - இந்தியா உறவில் மீண்டும் பதற்றம் - என்ன நடக்கிறது? பட மூலாதாரம்,GETTY IMAGES 6 மே 2024 புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் கனடாவில் காலிஸ்தான் ஆதரவு தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்ட வழக்கில் மூன்று இந்தியர்கள் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில், கனடாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே மீண்டும் ஒரு பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. இந்த கைது குறித்து கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, "கனடா வலுவான மற்றும் சுதந்திரமான நீதி அமைப்பைக் கொண்ட நாடு," என்று கூறியுள்ளார். மேலும் அவர், கனடா தனது குடிமக்களின் பாதுகாப்பிற்கு உறுதியளிக்கும் `சட்டப்பூர்வமான நாடு` என்று அவர் கூறினார். 2023-ஆம் ஆண்டு, ஜூன் 18-ஆம் தேதி அன்று, கனடிய குடிமகன் ஹர்தீப் சிங் நிஜ்ஜார், கனடாவில் இருக்கும் பிரிட்டிஷ் கொலம்பியா பகுதியில் உள்ள ஒரு குருத்வாரா முன் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த வழக்கில், கனடாவின் எட்மண்டன் நகரில் வசிக்கும் இந்தியக் குடிமக்களான 22 வயது கரண் ப்ரார், 22 வயது கமல்ப்ரீத் சிங் மற்றும் 28 வயது கரன்ப்ரீத் சிங் ஆகியோர் முதல் நிலை கொலை மற்றும் கொலை செய்ய சதி செய்தல் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் வெள்ளிக்கிழமை (மே 3) கைது செய்யப்பட்டனர். சனிக்கிழமையன்று (மே 4) கனடாவின் டொரோண்டோ நகரில் இந்தக் கைது நடவடிக்கை பற்றிப் பேசிய கனடா பிரதமர் ட்ரூடோ, “கனடா சட்டத்தை மதிக்கும் ஒரு நாடு என்பதால் இது முக்கியமானது. எங்களிடம் வலுவான மற்றும் சுதந்திரமான நீதி அமைப்பு உள்ளது. எங்கள் குடிமக்கள் அனைவரின் பாதுகாப்பிற்கும் நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்," என்றார். “ஆர்.சி.எம்.பி (கனடா நாட்டின் காவல்துறை) கூறியது போல், விசாரணை நடந்து வருகிறது. இந்த விசாரணை இந்த மூன்று பேரை கைது செய்வதோடு மட்டும் நின்றுவிடப் போவதில்லை," என்றார். நிஜ்ஜார் கொலைக்குப் பிறகு, கனடாவில் உள்ள சீக்கிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாகவும் ட்ரூடோ கூறினார். "கனடாவில் உள்ள அனைவருக்கும் பாரபட்சம் மற்றும் அச்சமின்றி சுதந்திரமாக வாழ உரிமை உள்ளது," என்று அவர் கூறினார். பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு,இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இந்திய வெளியுறவு அமைச்சர் கூறியது என்ன? இந்தக் கைது நடவடிக்கைகள் குறித்து சனிக்கிழமை (மே 4) பேசிய இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர், இந்தியாவில் தேடப்படுபவர்களுக்கு கனடா விசா வழங்க்குவதாகக் குற்றம் சாட்டினார். இதுகுறித்துப் பேசிய ஜெய்சங்கர், "இந்தியாவின் பஞ்சாபில் திட்டமிடப்பட்டக் குற்றங்களுடன் தொடர்புடையவர்கள் கனடாவில் வரவேற்கப்படுகிறார்கள்," என்று கூறினார். ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற போது அவர் இதைத் தெரிவித்தார். மேலும் பேசிய ஜெய்சங்கர், தான் இந்தச் செய்தியைப் பார்த்ததாகச் சொன்னார். "போலீஸ் விசாரணையில் யாரையாவது கைது செய்திருக்க வேண்டும். ஆனால் உண்மை என்னவெனில், திட்டமிட்ட குற்றங்களில் தொடர்புடைய பஞ்சாபைச் சேர்ந்தவர்கள் கனடாவில் வரவேற்கப்படுகிறார்கள். அவர்களுக்கு கனடா விசா வழங்குகிறது," என்றார். “இந்தியாவில் தேடப்படுபவர்களுக்கு விசா கொடுக்கிறீர்கள். பலர் பொய்யான ஆவணங்களுடன் வருகிறார்கள். ஆனாலும் நீங்கள் அவர்களை தங்க அனுமதிக்கிறீர்கள். அரசியல் ஆதாயத்துக்காக அவர்களை இருக்க விடுகிறீர்கள். இதனால் உங்களுக்கும் பிரச்னைகள் இருக்கும். சில சமயங்களில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. அவர்கள் சிந்திக்க வேண்டும்," என்றார். கனடாவுடன் இந்தியாவுக்கு பிரச்னை இருப்பதை வெளியுறவு அமைச்சர் வெளிப்படையாக ஒப்புக்கொண்டார். ஜெய்சங்கர் கூறுகையில், “அமெரிக்காவுடன் இந்தியாவுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால் கனடாவுடன் பிரச்னை உள்ளது," என்றார். "கனடாவில் ஆட்சியில் இருக்கும் கட்சியும் எதிர்க்கட்சியும் பேச்சு சுதந்திரம் என்ற பெயரில் தீவிரவாதம் மற்றும் வன்முறையை ஆதரிப்பவர்களுக்கு அங்கீகாரம் அளித்துள்ளன," என்றார் ஜெய்சங்கர். கடந்த ஆண்டு செப்டம்பரில், நிஜ்ஜார் கொலையில் இந்திய அரசின் ஏஜெண்டுகளுக்கு தொடர்பு இருப்பதற்குத் தன்னிடம் வலுவான ஆதாரம் இருப்பதாக ஜஸ்டின் ட்ரூடோ கூறியிருந்தார். அப்போதிருந்து, இந்தியாவிற்கும் கனடாவிற்கும் இடையிலான உறவுகள் மிகவும் பதற்றமான நிலையில் இருக்கின்றன. அப்போது கனடாவின் குற்றச்சாட்டுகளை 'அடிப்படையற்றது மற்றும் அபத்தமானது' என்று இந்தியா விவரித்திருந்தது. படக்குறிப்பு,கனடாவில் கைது செய்யப்பட்டிருக்கும் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்ட மூன்று பேர் யார்? காலிஸ்தான் ஆதரவாளர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கில் மூன்று இந்தியர்களை கனடா போலீசார் வெள்ளிக்கிழமை (மே 3) கைது செய்தனர். கனடாவின் ஒருங்கிணைந்த படுகொலை விசாரணைக் குழு இவர்களைக் கைது செய்தது. அவர்கள் இந்தியக் குடிமக்களான கரண் ப்ரார், கரன்ப்ரீத் சிங் மற்றும் கமல்பிரீத் சிங் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். கரண் ப்ரார், 22, பஞ்சாபின் ஃபரித்கோட்டில் வசிப்பவர், கரன்ப்ரீத் பஞ்சாபின் குர்தாஸ்பூரைச் சேர்ந்தவர், மூன்றாவது நபரான கமல்ப்ரீத் பஞ்சாபின் ஜலந்தர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். கரண் கல்விக்கான அனுமதியில் (ஸ்டடி பெர்மிட்) கனடா சென்றவர். பஞ்சாப் போலீஸ் வட்டாரங்களின்படி, கரண் ப்ரார் ஃபரித்கோட் மாவட்டத்தின் கோட்காபுரா நகரை சேர்ந்தவர். பஞ்சாப் போலீஸ் வட்டாரங்கள் கூறுகையில், "கரண் ப்ரார் தனது பள்ளிப் படிப்பை கோட்காபுராவில் முடித்தார், பின்னர் அவர் 2020-இல் கல்வி அனுமதியில் கனடா சென்றார்," என்றனர். கரண் ப்ராரின் குடும்பத்துக்கு நிலபுலன்கள் இருப்பதாக காவல்துறை கூறுகிறது. அக்கம்பக்கத்தினர் மற்றும் அருகிலுள்ளவர்களிடமிருந்து பெறப்பட்ட தகவலின்படி, கரணின் தாத்தா பல்பீர் சிங் ப்ரார் ஒரு உள்ளூர் தொழிலதிபர். கரண் தனது பெற்றோருக்கு ஒரே மகன். அவரது தாயார் ரமன் ப்ரார் வேலை நிமித்தமாக சிங்கப்பூரில் வசிப்பதாக அவர்கள் தெரிவித்தனர். கரண் ப்ராரின் தந்தை மன்தீப் பிரார் கடந்த மாதம் 18-ஆம் தேதி காலமானார். இதன் காரணமாக கரணின் தாயும் இந்தியா வந்தார். குர்தாஸ்பூரைச் சேர்ந்த கரண் ப்ரீத் ஒரு சாதாரண விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரது தந்தை துபாயில் லாரி ஓட்டுநராக வேலை செய்கிறார். கரன்ப்ரீத் சிங்கின் மாமாவும் கிராம சர்பஞ்சின் மகனுமான ரஞ்சித் சிங் ராணா, "கரண் ப்ரீத் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர்," என்றார். ஆரம்பக் கல்வியை முடித்த கரண்ப்ரீத் 2016-இல் துபாய்க்குச் சென்றதாகவும், அங்கு தனது தந்தையுடன் சுமார் நான்கு ஆண்டுகள் லாரி ஓட்டுநராகப் பணிபுரிந்ததாகவும் அவர் கூறினார். கரண்ப்ரீத் கனடா சென்றது குறித்து ரஞ்சித் சிங் கூறுகையில், "கரண்ப்ரீத் பணி அனுமதிச் சீட்டில் கனடா சென்றுள்ளார்," என்றார். கரண்ப்ரீத் கடந்த மூன்று ஆண்டுகளாக கனடாவில் இருப்பதாகவும், அங்கு லாரி ஓட்டுவதாகவும் கூறினார். மூன்றாவது நபரான கமல்ப்ரீத் சிங் பஞ்சாபின் ஜலந்தர் மாவட்டத்தின் நாகோதரில் இருக்கும் கலான் கிராமத்தில் வசிப்பவர். கமல்பிரீத் சிங் நகோதரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்தார். 2019-ஆம் ஆண்டில் 12-ஆம் வகுப்பை முடித்தார். அதன் பிறகு கல்வி விசாவில் கனடா சென்றார். கமல்ப்ரீத்தின் தந்தை சத்னம் சிங் வருமானம் ஈட்டுவதாலும், கிராமத்தில் அவர்களுக்கு நிலம் உள்ளதாலும் அவரது குடும்பம் பொருளாதார ரீதியாக வலுவாக உள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது. கமல்ப்ரீத்தின் சகோதரி கனடாவில் வசிக்கிறார் என்று பஞ்சாப் காவல்துறை அதிகாரி ஒருவர் கூறினார். 2022-இல் அவரைச் சந்திக்க அவரது தாயும் கனடா சென்றார். படக்குறிப்பு,சமீப காலமாக இந்தியா-கனடா உறவுகளில் சிக்கல் ஏற்பட்டுள்ளது கனடா-இந்தியா வார்த்தைப் போர் கடந்த ஏப்ரல் 28-ஆம் தேதி கனடாவின் டொராண்டோ நகரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த `கல்சா தின` நிகழ்ச்சியில், பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கனடாவில் வசிக்கும் சீக்கிய சமூக மக்களிடையே உரையாற்றினார். ஊடக அறிக்கைகளின்படி, இந்த நிகழ்வில் ட்ரூடோ, கனடா சீக்கிய சமூகத்தின் மத உரிமையை `பாகுபாடு` இன்றி ஆதரிக்கும் என்று கூறியிருந்தார். இந்த நிகழ்வில் காலிஸ்தானுக்கு ஆதரவாகவும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இந்த நிகழ்வில் ஊடகங்களிடம் பேசிய ட்ரூடோ, காலிஸ்தான் ஆதரவு போராட்டங்களை சுட்டிக்காட்டி, “எங்கள் வேலை அரசியல் போராட்டங்களை நிறுத்துவது அல்ல," என்றார். இதற்கு அடுத்த நாள், இந்திய வெளியுறவு அமைச்சகம், இந்தியாவுக்கான கனடா துணை உயர் ஸ்தானிகரை வரவழைத்து தனது கடும் எதிர்ப்பைத் தெரிவித்தது. இந்த விவகாரம் குறித்து இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கடந்த வியாழன் அன்று (மே 2), "கனடாவில் பிரிவினைவாதம், தீவிரவாதம் மற்றும் வன்முறைக்கு எப்படி அரசியல் இடம் கொடுக்கப்படுகிறது என்பது மீண்டும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இது கனடா-இந்தியா உறவுகளை மட்டும் பாதிக்காது. கனடா தனது சொந்த குடிமக்களுக்கு வன்முறை மற்றும் குற்றச் சூழ்நிலையை உருவாக்குகிறது," என்றார். பட மூலாதாரம்,SIKH PA படக்குறிப்பு,கடந்த ஆண்டு, காலிஸ்தான் தலைவர் குர்பத்வந்த் சிங் பன்னுவின் சொத்துக்களை என்.ஐ.ஏ பறிமுதல் செய்தது என்.ஐ.ஏ வெளியிட்ட காலிஸ்தான் ஆதரவாளர்களின் பட்டியல் கடந்த ஆண்டு, தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) காலிஸ்தான் ஆதரவு தலைவர்களின் பெயர்ப் பட்டியலை வெளியிட்டது. அதில் உள்ளவர்களின் சொத்துகளை அந்த நிறுவனம் பறிமுதல் செய்ய முடிவு செய்தது. கடந்த ஆண்டு, காலிஸ்தான் தலைவர் குர்பத்வந்த் சிங் பன்னுவின் சொத்துகளை என்.ஐ.ஏ பறிமுதல் செய்தது. இந்தப் பட்டியலில், அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் வசிக்கும் காலிஸ்தான் ஆதரவு தலைவர்கள் பலரின் பெயர்கள் இருந்தன. அவர்களை என்.ஐ.ஏ 'பயங்கரவாதிகள்' என்று குறிப்பிட்டிருந்தது. பரம்ஜித் சிங் பம்மா - இங்கிலாந்து வாத்வா சிங் (பாபர் சாச்சா) - பாகிஸ்தான் குல்வந்த் சிங் முத்ரா - இங்கிலாந்து ஜே.எஸ்.தலிவால் - அமெரிக்கா சுக்பால் சிங் - இங்கிலாந்து ஹர்பிரீத் சிங் (ராணா சிங்) - அமெரிக்கா சரப்ஜித் சிங் பெனூர் - இங்கிலாந்து குல்வந்த் சிங் (காந்தா) - இங்கிலாந்து ஹர்ஜப் சிங் (ஜப்பி சிங்) - அமெரிக்கா ரஞ்சித் சிங் நீத்தா - பாகிஸ்தான் குர்மீத் சிங் (பக்கா பாபா) குர்பிரீத் சிங் (ரிபெல்) - இங்கிலாந்து ஜஸ்மீத் சிங் ஹக்கிம்கஜாதா - துபாயில் உள்ள போதைப்பொருள் கடத்தல்காரர் குர்ஜந்த் சிங் தில்லோங் - ஆஸ்திரேலியா லக்பீர் சிங் ரோட் - கனடா அமர்தீப் சிங் பூரேவால் - அமெரிக்கா ஜதீந்தர் சிங் க்ரேவால் - கனடா துபிந்தர் சிங் - இங்கிலாந்து ஹிம்மத் சிங் - அமெரிக்கா https://www.bbc.com/tamil/articles/c04307g9kd0o
-
இலங்கையின் பொதுவான கல்வி முறையை டிஜிட்டல் நிலையுருமாற்றம் செய்ய அமைச்சரவை அங்கீகாரம் !
07 MAY, 2024 | 10:16 AM சாத்தியவளக் கற்கையின் அறிக்கையின் பிரகாரம் உத்தேசக் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இன்று செவ்வாய்க்கிழமை (7) இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இது தொடர்பான அறிவிப்பு வெளியாகியது. இலங்கையின் பொதுவான கல்வி முறையை டிஜிட்டல் நிலையுருமாற்றம் செய்வதற்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ள கருத்திட்ட முன்மொழிவுக்கமைய உதவிகளை வழங்குவதற்கு சீனா அரசு உடன்பாடு தெரிவித்துள்ளது. குறித்த கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்குரிய சாத்தியவளக் கற்கை தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளது. உத்தேசக் கருத்திட்டத்தின் மூலம் மிடுக்கான பார்த்தறியும் திரையுடன் கூடிய வகுப்பறை (Delivering Class Room) மிடுக்கான ஏற்புப்பரப்பு திரையுடன் கூடிய வகுப்பறை (Receiving Class Room) குறித்த பணிகளை நெறிப்படுத்துவதற்காக கல்வி அமைச்சின் கீழ் தரவு மையம் (Data Centre) ஒளிப்பதிவு அறை (Studio Room) மாநாட்டு அறை (Conference Room) போன்றவற்றை வழங்குவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. கலப்புக் கற்றல் முறைமையை முறைசார்ந்த வகையில் மேற்கொள்ளல், வளங்களைப் பகிர்ந்து கொள்ளல், விசேட திறன்களைக் கொண்டுள்ள ஆசிரியர்களின் அறிவை தேவையான சந்தர்ப்பங்களில் மாணவர்களுக்கு வழங்கல், ஆசிரியர் பற்றாக்குறை காணப்படும் வேளைகளில் ஏற்படுகின்ற பிரச்சினைகளைத் தவிர்த்தல் மற்றும் மற்றும் உத்தேசக் கல்வி மறுசீரமைப்புக்களுக்காக வசதிகளை வழங்கல் போன்ற பணிகளை வினைத்திறனாகவும் பயனுறு வகையிலும் மேற்கொள்வதற்காக குறித்த உபகரணங்கள் மூலம் ஒத்துழைப்புக்களைப் பெற்றுக் கொள்ள முடியும். அதற்கமைய, குறித்த சாத்தியவளக் கற்கையின் அறிக்கையின் பிரகாரம் உத்தேசக் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக கல்வி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. https://www.virakesari.lk/article/182858 இலங்கை கல்வி முறை மாற்றத்திற்கு சீனா அரசு உடன்பாடு! இலங்கையின் பொதுவான கல்வி முறையை டிஜிட்டல் நிலையுருமாற்றம் செய்வதற்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ள கருத்திட்ட முன்மொழிவுக்கமைய உதவிகளை வழங்குவதற்கு சீனா அரசு உடன்பாடு தெரிவித்துள்ளது. குறித்த கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்குரிய சாத்தியவளக் கற்கை தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளது. உத்தேசக் கருத்திட்டத்தின் மூலம் மிடுக்கான பார்த்தறியும் திரையுடன் கூடிய வகுப்பறை (Delivering Class Room), மிடுக்கான ஏற்புப்பரப்பு திரையுடன் கூடிய வகுப்பறை (Receiving Class Room), குறித்த பணிகளை நெறிப்படுத்துவதற்காக கல்வி அமைச்சின் கீழ் தரவு மையம் (Studio Room), ஒளிப்பதிவு அறை (Studio Room), மாநாட்டு அறை (Conference Room) போன்றவற்றை வழங்குவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. கலப்புக் கற்றல் முறைமையை முறைசார்ந்த வகையில் மேற்கொள்ளல், வளங்களைப் பகிர்ந்து கொள்ளல், விசேட திறன்களைக் கொண்டுள்ள ஆசிரியர்களின் அறிவை தேவையான சந்தர்ப்பங்களில் மாணவர்களுக்கு வழங்கல், ஆசிரியர் பற்றாக்குறை காணப்படும் வேளைகளில் ஏற்படுகின்ற பிரச்சினைகளைத் தவிர்த்தல் மற்றும் மற்றும் உத்தேசக் கல்வி மறுசீரமைப்புக்களுக்காக வசதிகளை வழங்கல் போன்ற பணிகளை வினைத்திறனாகவும் பயனுறு வகையிலும் மேற்கொள்வதற்காக குறித்த உபகரணங்கள் மூலம் ஒத்துழைப்புக்களைப் பெற்றுக் கொள்ள முடியும். அதற்கமைய, குறித்த சாத்தியவளக் கற்கையின் அறிக்கையின் பிரகாரம் உத்தேசக் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக கல்வி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. https://thinakkural.lk/article/301054
-
மின்சாரத்தைக் கொள்வனவு செய்வதற்கான விலை மனுக்கோரலை அதானி நிறுவனத்திற்கு வழங்க அமைச்சரவை அங்கீகாரம்
07 MAY, 2024 | 10:36 AM 20 வருடங்களுக்கு மின்சாரத்தைக் கொள்வனவு செய்வதற்கான விலை மனுக்கோரலை இந்தியாவின் அதானி நிறுவனத்திற்கு ( M/s Adani Green Energy SL Limited ) வழங்குவதற்கும் மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இன்று செவ்வாய்க்கிழமை (7) இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இது தொடர்பான அறிவிப்பு வெளியாகியது. இந்தியாவின் அதானி நிறுவனத்தினால் ( M/s Adani Green Energy Limited ) மன்னார் மற்றும் பூநகரி பிரதேசத்தில் காற்றாலை மின்னுற்பத்தி நிலையங்களை அபிவிருத்தி செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்கு 2022.03.07 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய, குறித்த கம்பனியால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள கருத்திட்ட முன்மொழிவை மதிப்பீடு செய்வதற்காக அமைச்சரவையால் பேச்சுவார்த்தை உடன்பாட்டுக் குழு நியமிக்கப்பட்டது. குறித்த குழுவின் விதந்துரைகளின் பிரகாரம் உத்தேசக் கருத்திட்டத்தின் கீழ் உற்பத்தி செய்யப்படும் மின்னலகொன்று கிலோவாற்று மணிக்கு 8.26 சதம் அமெரிக்க டொலர் பெறுமதி (உண்மையான வெளிநாட்டு செலாவணி சரிவிகிதத்திற்கமைய இலங்கை ரூபாவில் செலுத்துவதற்கு) இறுதிக் கட்டணமாக அங்கீகரிப்பதற்கும் 20 வருடங்களுக்கு மின்சாரத்தைக் கொள்வனவு செய்வதற்கான விலை மனுக்கோரலை M/s Adani Green Energy SL Limited இற்கு வழங்குவதற்கும் மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. https://www.virakesari.lk/article/182862
-
இன்றைய வானிலை
நாளை முதல் மழையுடனான வானிலை அதிகரிக்கும்! நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் நாளை (08) முதல் சில தினங்களுக்கு மழையுடனான வானிலை அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அதன்படி, மேல், சபரகமுவ, மத்திய மாகாணங்களிலும் மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் நாளை பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன் வடமேல், வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் நாளை பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். குறித்த பகுதிகளில் 50 மில்லி மீற்றருக்கும் அதிகளவிலான மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன் மத்திய, சபரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும். இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய அபாயங்களைக் குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது. https://thinakkural.lk/article/301025
-
மன்னார் பொது வைத்தியசாலைக்கு 600 மில்லியன் ரூபா நிதியை நன்கொடையாக வழங்க இந்திய அரசாங்கம் அனுமதி
Published By: DIGITAL DESK 3 07 MAY, 2024 | 09:22 AM மன்னார் பொது வைத்தியசாலைக்கு 600 மில்லியன் ரூபா நிதியை நன்கொடையாக வழங்க இந்திய அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது. இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் ஊடாக மேற்கொள்ளப்பட்ட கோரிக்கைக்கு அமைய இந்த அனுமதி கிடைத்துள்ளது. மன்னார் பொது வைத்தியசாலையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவுக்கான கட்டிட நிர்மாண பணிகளுக்கும், மருத்துவ உபகரணங்களை பெற்றுக் கொள்வதற்குமாக இந்த 600 மில்லியன் ரூபா நன்கொடை பயன்படுத்தப்படவுள்ளது. வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸின் நெறிப்படுத்தலின் கீழ், மாகாண சபையால் திட்ட முன்மொழிவு தயாரிக்கப்பட்டு சுகாதார அமைச்சின் ஊடாக கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்திடம் விண்ணப்பம் சமர்பிக்கப்பட்டது. இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட இந்திய அரசாங்கம் 600 மில்லியன் ரூபா நன்கொடையை வழங்குவதற்கான அனுமதியை அளித்துள்ளது. மன்னார் பொது வைத்தியசாலையில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு இன்மையால் மக்கள் பல துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். இவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கும் முகமாக வடக்கு மாகாண ஆளுநரினால் இந்திய அரசாங்கத்திடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/182852
-
42 நாள் யுத்த நிறுத்தம் பணயக்கைதிகள் கைதிகள் பரிமாற்றம் - யுத்த நிறுத்தம் தொடர்பான யோசனையை ஏற்றுக்கொண்டது ஹமாஸ் - இஸ்ரேல் மறுப்பு
Published By: RAJEEBAN 07 MAY, 2024 | 11:04 AM ஹமாஸ் அமைப்பு மூன்று கட்ட யுத்த நிறுத்தம் தொடர்பான யோசனைகளையும் கைதிகள் பணயக்கைதிகள் பரிமாற்றம் தொடர்பான யோசனைகளையும் ஏற்றுக்கொள்வதாக அறிவித்துள்ள அதேவேளை இஸ்ரேல் இதனை ஏற்றுக்கொள்ள முடியாது என குறிப்பிட்டுள்ளது. கத்தார் எகிப்துடன் இணைந்து மத்தியஸ்த முயற்சிகளில் ஈடுபட்ட அமெரிக்கா ஹமாஸ் அமைப்பின் யோசனைகளை ஆராய்ந்து வருவதாக தெரிவித்துள்ளது. மத்திய கிழக்கில் உள்ள நேசநாடுகளுடன் இது குறித்து ஆராயவுள்ளதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது. முதல்கட்டமாக 42 நாட்கள் யுத்த நிறுத்தம் கடைப்பிடிக்கப்படும் என்ற யோசனையை ஏற்றுக்கொண்டுள்ள ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் தனது சிறைகளில் உள்ள பாலஸ்தீனியர்களை விடுதலை செய்தால் 33 இஸ்ரேலிய பணயக்கைதிகளை விடுதலை செய்ய தயார் எனவும் தெரிவித்துள்ளது. முதற்கட்டமாக இஸ்ரேல் காசாவிலிருந்து அரைவாசிக்கும் மேற்பட்ட படையினரை விலக்கிக்கொள்ளவேண்டும் தென்காசாவிலிருந்து பாலஸ்தீனியர்கள் வடக்கிற்கு செல்ல அனுமதிக்கவேண்டும் என்ற யோசனையையும் ஹமாஸ் அமைப்பு ஏற்றுக்கொண்டுள்ளது. இரண்டாம் கட்டமாக 42 நாட்கள் யுத்த நிறுத்தத்தின் பின்னர் காசவில் நீடிக்ககூடிய அமைதியை உருவாக்குவதற்கான உடன்படிக்கை கைச்சாத்தாகும். மேலும் காசாவிலிருந்து இஸ்ரேலிய படையினர் முற்றாக விலக்கிக்கொள்ளப்படுவார்கள் - இஸ்ரேல் பாலஸ்தீன கைதிகளை விடுதலை செய்தால் ஹமாஸ் தன்னிடம் பணயக்கைதிகயாக உள்ள இஸ்ரேலிய படையினரை விடுதலை செய்யும். https://www.virakesari.lk/article/182867
-
ஐ.பி.எல் 2024 - செய்திகள்
மும்பையின் ஆறுதல் வெற்றியால் சென்னைக்குக் கிடைத்த நன்மை பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 3 மணி நேரங்களுக்கு முன்னர் ஐபிஎல் டி20 தொடரில் ப்ளே ஆஃப் சுற்று நெருங்க, நெருங்க ஒவ்வொரு போட்டி முடிந்தபின்பும் புள்ளிப்பட்டியலில் அடுத்தடுத்து மாற்றங்கள் நடந்து வருகின்றன. அப்படியொரு போட்டிதான் திங்கள்கிழமை நடந்திருக்கிறது. மும்பையின் ஆறுதல் வெற்றி, சன்ரைசர்ஸ் அணிக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது. மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 55-வது ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது மும்பை இந்தியன்ஸ் அணி. முதலில் பேட் செய்த சன்ரைசர்ஸ் அணி 8 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்தது. 174 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 16 பந்துகள் மீதமிருக்கையில் 3 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. பட மூலாதாரம்,GETTY IMAGES மும்பை அணிக்கு ப்ளே ஆஃப் வாய்ப்பு இருக்கிறதா? இந்த வெற்றி மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஆறுதலாக மட்டுமே இருக்கும். ஆனால், இந்த வெற்றி சன் ரைசர்ஸ் ப்ளே ஆஃப் சுற்று செல்வதில் பெரிய பிரேக் போடும் விதத்தில் அமைந்துவிட்டது. அதே நேரத்தில் இந்த வெற்றி சிஎஸ்கே உள்ளிட்ட சில அணிகளுக்கு பிளேஆப் கனவை தக்கவைத்துக் கொள்வதற்கு ஒரு வாய்ப்பாக அமைந்திருக்கிறது. மும்பை தோற்றிருந்தால், சிஎஸ்கே புள்ளிப் பட்டியலில் கீழே இறங்கியிருப்பதுடன், பிளேஆப் வாய்ப்பும் கூடுதல் சவாலாக மாறியிருக்கும். மும்பை அணி இந்த வெற்றியால் புள்ளிப்பட்டியலில் 9-ஆவது இடத்துக்கு நகர்ந்துள்ளது, 12 போட்டிகளில் 4-ஆவது வெற்றியைப் பதிவுசெய்தாலும் நிகர ரன்ரேட் இன்னும் மைனஸைக் கடக்காமல் 0.212 என்ற அளவில்தான் இருக்கிறது. அடுத்த இரு போட்டிகளிலும் மும்பை அணி பெரிய அளவில் வென்றால்கூட ப்ளே ஆஃப் சுற்றுக்குள் செல்வது பெரிய சந்தேகம்தான். இருப்பினும் மும்பையின் வெற்றிகள் பல அணிகளின் முன்னேற்றத்தில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும். பட மூலாதாரம்,GETTY IMAGES சன்ரைசர்ஸ் அணிக்கு என்ன சிக்கல்? இந்த தோல்வி சன்ரைசர்ஸ் அணி ப்ளே ஆஃப் சுற்று செல்வதற்கான பாதையை கடினமாக்கியுள்ளது. முதல் இரு இடங்களை கொல்கத்தா அணி பிடிக்க தேவையான வசதிகளை உருவாக்கிவிட்டது. சன்ரைசர்ஸ் அணி அடுத்துவரும் 3 ஆட்டங்களிலும் கட்டாய வெற்றி பெற வேண்டிய நிலையும், நிகர ரன்ரட்டை உயர்த் வேண்டிய சூழலிலும் இருக்கிறது. ஏனென்றால் இந்த தோல்வியால் சன்ரைசர்ஸ் அணியின் நிகர ரன்ரேட் மைனசில் சென்று 0.065 ஆகக் குறைந்துவிட்டது. சன்ரைசர்ஸ் அணி 11 போட்டிகளில் 6 வெற்றி, 5 தோல்வி என 12 புள்ளிகளுடன் 4வது இடத்தில் இருக்கிறது.இந்த 4வது இடத்தைத் தக்கவைக்க, சன்ரைசர்ஸ் அணிக்கு அடுத்தடுத்து வெற்றிகள் அவசியம். அதேசமயம் லக்னெள அணி இன்னும் ஒரு போட்டியில் தோற்றால்கூட சன்ரைசர்ஸ் ப்ளே ஆஃப் செல்லும் வாய்ப்பு பிரகாசமடையும். புள்ளிப்பட்டியலில் திடீர் மாற்றங்கள் இன்று டெல்லியில் நடக்கும் ராஜஸ்தான், டெல்லி அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தின் முடிவு புள்ளிப்பட்டியலில் இன்னும் திடீர் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும். ராஜஸ்தான் அணி பிரமாண்ட வெற்றி பெற்றால் 18 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடிக்கும். கொல்கத்தா 2-ஆவது இடம் பிடிக்கும். ஒருவேளை சாதாரண வெற்றியாக அமைந்தாலும், 18 புள்ளிகளுடன் முதலிடம் செல்லும். அதேசமயம், டெல்லி அணி வெற்றி பெற்றால், 12 புள்ளிகளுடன், சிஎஸ்கே, லக்னெள, சன்ரைசர்ஸ் அணிகளுடன் ரேஸில் இணைந்துவிடும். மும்பை இந்தியன்ஸ் அணியின் நேற்றைய சேஸிங்கில் வெற்றிக்கு சூர்யகுமார் மட்டுமே முக்கியக் காரணமாக அமைந்தார். 51 பந்துகளில் சதம் அடித்த சூர்யகுமார் யாதவ் 102 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்று ஆட்டநாயகன் விருது வென்றார். ஸ்கைக்கு துணையாக ஆடிய பேட்டர் திலக் வர்மா 37 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இருவரும் 4வது விக்கெட்டுக்கு 79 பந்துகளில் 143 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். பட மூலாதாரம்,GETTY IMAGES டெஸ்ட் போட்டியா அல்லது டி20 போட்டியா? கடந்த முறை இதே வான்கடே மைதானத்தில் நடந்த ஆட்டத்தில் ரன் திருவிழாவாவை சன்ரைசர்ஸ் அணி நடத்தி, பல புதிய சாதனைகளைப் படைத்தது. ஆனால் இந்த முறை சன்ரைசர்ஸ் அணியை தொடக்கத்தில் இருந்தே கட்டுப்படுத்தி, 173 ரன்களில் மும்பை அணி சுருட்டியது. ஆனால் 173 ரன்களையும் டிபெண்ட் செய்ய வலுவான பந்துவீச்சு வைத்திருக்கும் சன்ரைசர்ஸ் அணியும் முயன்றது. பேட்டர்களுக்கு சொர்க்கபுரியான வான்ஹடே மைதானத்தில் 173 ரன்களைக் கட்டுப்படுத்துவது எளிதான இலக்கு அல்ல. அதற்கு ஏற்றாற்போல் புதியபந்தில் பந்துவீசி மும்பை பேட்டர்களை புவனேஷ்வர், கம்மின்ஸ், யான்சென் திணறவிட்டனர். பனிப்பொழிவால் ஆடுகளம் லேசான நெகிழ்வுத்தன்மை அடைந்ததால், பந்துவீச்சாளர்களால் ஸ்விங்கைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் பந்து பலமுறை பேட்டர்களை கடந்து விக்கெட் கீப்பரிடம் சென்றது. அதிகமான ஸ்விங் ஆகியதால், முதல் 3 ஓவர்களில் சன்ரைசர்ஸ் பந்துவீச்சாளர்கள் 18 உதிரிகளை விட்டனர். இதனால் மும்பை அணி முதல் 9 பந்துகளில் அதிரடியாகத் தொடங்கி 29 ரன்களைச் சேர்த்தது. ஆனால், அடுத்தடுத்து சன்ரைசர்ஸ் பந்துவீச்சாளர்கள் நெருக்கடி கொடுத்தனர். முதலில் யான்சென் தனது ஸ்விங் பந்துவீச்சில் இஷான் கிஷன் விக்கெட்டை எடுத்தார். அடுத்ததாக கம்மின்ஸின் துல்லியமான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் ரோஹித் சர்மா ஆட்டமிழந்தார். 3வதாக நமன்திர் புவனேஷ்வர் பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார். இதனால், முதல் 9 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்த மும்பை அணி அடுத்த 19 பந்துகளில் 6 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது. 1.3 ஓவரிலிருந்து 4.4 ஓவர்கள்வரை மும்பை அணி ஒரு ரன்கூட எடுக்கவில்லை. டெஸ்ட் போட்டியில் வீசப்படும் பந்துவீச்சா அல்லது டி20 போட்டியா எனத் தெரியாத அளவுக்கு பந்து ஸ்விங் ஆகின. இதுபோன்ற ஆடுகளத்தில் கம்மின்ஸ், புவனேஷ் பந்துவீச்சைப் பற்றி சொல்லத்தேவையில்லை. இருவரும் தலா ஒரு மெய்டன் ஓவர்களை வீசி திணறவிட்டனர். இதனால் ஆட்டம் மும்பையின் கையைவிட்டு சன்ரைசர்ஸ் பக்கம் நழுவுகிறதா என்று வான்கடே ரசிகர்கள் கவலையடைந்தனர். 4வது விக்கெட்டுக்கு சூர்யகுமார், திலக் வர்மா ஜோடி சேர்ந்து ஆட்டத்தை கையில் எடுத்து, அணியைச் சரிவிலிருந்து மீட்டனர். பட மூலாதாரம்,GETTY IMAGES சூர்யகுமாரின் அதிரடி சூர்யகுமார் களத்துக்கு வந்தபின் ஆட்டத்தின் போக்கே மாறியது. கம்மின்ஸ், யான்சென் ஓவர்களை சூர்யகுமார் முதலில் குறிவைத்து பவுண்டரிகளை அடித்தார். யான்சென் வீசிய 7-வது ஓவரில் 2 பவுண்டரி, ஒரு சிக்ஸரை விளாசினார். நிதானமாகத் தொடங்கிய ஸ்கை 7 பந்துகளில் 4 ரன்கள் என்ற நிலையில் இருந்து, அதன்பின் 14 பந்துகளில் 32 ரன்கள் என்ற நிலைக்கு உயர்ந்தார். பந்துவீச்சில் கிடைத்த துல்லியத்தை அதன்பின் சன்ரைசர்ஸ் அணி இழந்தது. பவப்ப்ளேயில் மும்பை அணி 3 விக்கெட் இழப்புக்கு 52 ரன்கள் சேர்த்தது. சன்ரைசரஸ் பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சை எளிதாக அடித்த சூர்யகுமார் 30 பந்துகளில் அரைசதம் அடித்தார். அதிலும் யான்சென் பந்துவீச்சில் 9பந்துகளைச் சந்தித்த சூர்யகுமார் 32 ரன்களை விளாசினார், அதில் 4 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் அடங்கும். 11.1 ஓவர்ளில் மும்பை அணி 100 ரன்களை எட்டியது. ஒருகட்டத்தில் சூர்யகுமார் 82 ரன்கள் சேர்த்திருந்தபோது கம்மின்ஸ் வீசிய 17-வது ஓவரில் அடுத்தடுத்து 2பவுண்டரி, சிக்ஸர் விளாசி 96 ரன்களு உயர்ந்தார். நடராஜன் வீசிய 18-வது ஓவரில் லாங்க் ஆஃப் திசையில் சிக்ஸர்விளாசி சதத்தை நிறைவு செய்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். ஐபிஎல் தொடரில் சூர்யகுமார் 2வது சதத்தையும், டி20 போட்டிகளில் 6வது சதத்தையும் நிறைவு செய்து 102 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். ஆட்டத்தின் முக்கியமான வித்தியாசம் என்னவென்றால், சன்ரைசர்ஸ் அணி பேட்டர்கள் அனைவரும் சேர்ந்து 12 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் அடித்தனர். ஆனால் நேற்று சூர்யகுமார் ஒருவரே 12 பவுண்டரிகள், 6சிக்ஸர்கள் விளாசினார். பட மூலாதாரம்,GETTY IMAGES ‘ப்ளே ஆஃப் கணக்குத் தெரியாது’ மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா கூறுகையில் “ ப்ளேஆஃப் செல்வதற்கான கணித சூழல்கள் எனக்குத் தெரியாது. இந்த வெற்றியால் மகிழ்ச்சி. கூடுதலாக 20 ரன்கள் கொடுத்துவிட்டோம், இருப்பினும் பேட்டிங் சிறப்பாக அமைந்தது. என்னுடைய பந்துவீச்சு எனக்கு திருப்தி அளிக்கிறது. நல்ல லென்த்தில் பந்துவீசினேன், இதைத்தான் விரும்புகிறேன். பியூஷ் சாவ்லா எடுத்த விக்கெட்டுகள் திருப்புமுனையாக அமைந்தது. ஸ்கையின் ஆட்டம் நம்பமுடியாத அளவுக்கு இருந்தது. சன்ரைசர்ஸ் பந்துவீச்சாளர்களுக்கு அவர் கொடுத்த அழுத்தம் ரன்சேர்ப்பில் தெரிந்தது. எந்தவிதமான மோசமான பந்தையும் ஸ்கை பெரிய ஷாட்கள் அடிக்க தவறவிடவில்லை. என்னுடைய அணியில் ஸ்கை இருப்பது அதிர்ஷ்டம். இதுபோல் அடுத்தடுத்து வெற்றிகள் வரும் என நம்புகிறேன்” எனத் தெரிவித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES சன்ரைசர்ஸ் அணி எங்கு தோற்றது? சன்ரைசர்ஸ் அணியில் தொடக்க ஆட்டக்காரர் டிராவிஸ் ஹெட் 48 ரன்கள் சேர்த்ததுதான் அந்த அணியில் நேற்றைய அதிகபட்ச ஸ்கோராகும். வலுவான பேட்டிங் வரிசையை வைத்திருக்கும் சன்ரைசர்ஸ் அணி நேற்று விக்கெட்டுகளை சீரான இடைவெளியில் இழந்தது. பவர்ப்ளேயில் விக்கெட்டை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்த மும்பை அணி பந்துவீச்சாளர்களில் பும்ரா தவிர மற்றவர்கள் வழக்கத்துக்கு மாறாக துல்லியமாக பந்துவீசினர். ஆனால் பும்ரா தனது இயல்பான பந்துவீச்சில் அபிஷேக் சர்மா 11 ரன்னில் வெளியேற்றினார். மயங்க அகர்வால் 5 ரன்னில் கம்போஜ் பந்துவீச்சில் க்ளீன் போல்டாகி ஆட்டமிழந்தார். இருப்பினும் பவர்ப்ளேயில் சன்சைர்ஸ் அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 56 ரன்களுடன் வலுவாக இருந்தது. டிராவிஸ் ஹெட் விக்கெட்டை எடுக்க பியூஷ் சாவ்லா கொண்டுவரப்பட்டார். தொடக்கத்தில் இருந்தே சாவ்லா பந்துவீச்சுக்கு திணறிய ஹெட் திலக் 48 ரன்கள் சேர்த்தநிலையில் திலக் வர்மாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். ஒரு கட்டத்தில் சன்ரைசர்ஸ் அணி 90 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து வலுவான நிலையில் இருந்தது, ஸ்கோரை 200 ரன்களுக்கு மேல் கொண்டு செல்லகக்கூடிய வலுவான பேட்டர்கள் இருந்தனர். அதன்பின் வந்த நடுவரிசை, கீழ்வரிசை பேட்டர்கள் யாரும் நிலைத்து ஆடவில்லை. நிதிஷ்குமார் ரெட்டி(20), கிளாசன்(2), யான்சென்(17), ஷாபாஸ் அகமது(10) அப்துல் சமது(3) என சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தது ரன் சேர்ப்பில் பெரிய பாறையை கட்டிவிட்டதுபோன்ற நிலை ஏற்பட்டது. ஹர்திக் பாண்டியா, பியஷ் சாவ்லாவின் பந்துவீச்சு நேற்றைய ஆட்டத்தில் பெரிய திருப்புமுனையாக இருந்தது.டி20 உலகக் கோப்பை நெருங்கும் நேரத்தில் ஹர்திக்கின் பந்துவீச்சில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பது ஆறுதல் அளிக்கிறது. இருவரும் சேர்ந்து சன்ரைசர்ஸ் பேட்டிங் வரிசையை உலுக்கி எடுத்தனர். 90 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து வலுவாக இருந்த சன்ரைசர்ஸ் அணி, அடுத்த 11 பந்துகளில் 96 ரன்களுக்கு 5 விக்கெட்டுகள் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டது. சன்ரைசர்ஸ் அணி 6 ரன்களுக்க 3 விக்கெட்டுகளை இழந்தது. ஷாபாஸ் அகமது, யான்சென் தங்களால் முடிந்த அளவு போராடினர். 7 விக்கெட் இழப்புக்கு 125 ரன்கள் சேர்த்திருந்த சன்ரைசர்ஸ் அணி, 136 ரன்களுக்கு 8 விக்கெட்டுகள் என்ற நிலைக்கு தள்ளப்பட்டது. பியூஷ் சாவ்லா, ஹர்திக் இருவரும் கடைசி வரிசை பேட்டர்களின் விக்கெட்டை வீழ்த்தி சன்ரைசர்ஸ் ரன்ரேட்டை இறுக்கிப் பிடித்தனர். சன்ரைசர்ஸ் கேப்டன் கம்மின்ஸ் அதிரடியாக கேமியோ ஆடி 17 பந்துகளில் 35 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். https://www.bbc.com/tamil/articles/c3g82zdll3do
-
நாடளாவிய ரீதியில் கிராம சேவையாளர்கள் பணிப்பகிஷ்கரிப்பு - மக்கள் அவதி
இன்றும் தொடரும் கிராம உத்தியோகத்தர்களின் பணிப்புறக்கணிப்பு! நாடளாவிய ரீதியில் சுகவீன விடுமுறையை அறிவித்து, கிராம உத்தியோகத்தர்கள் முன்னெடுத்துள்ள பணிப்புறக்கணிப்பு இன்றும் (07) தொடர்கின்றது. கொடுப்பனவுகளை அதிகரிக்காமை உள்ளிட்ட பல பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு கோரி, நேற்றும் இன்றும் இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டு வருவதாக இலங்கை கிராம உத்தியோகத்தர்கள் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் நெவில் விஜேரத்ன தெரிவித்துள்ளார். தமது தொழில் பிரச்சினைகளுக்கான உரிய தீர்வை வழங்காவிடின் அடுத்த வாரம் முதல் தொடர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக கிராம உத்தியோகத்தர்கள் சங்கங்கள் எச்சரித்துள்ளன. இதேவேளை கிராம உத்தியோகத்தர்களின் சேவையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வுகள் அவசியம் என அகில இலங்கை சுதந்திர கிராம அதிகாரிகள் சங்கத்தின் பிரதித் தலைவர் பீ.எம்.தீக்ஷன தெரிவித்துள்ளார். அதேநேரம் கிராம உத்தியோகத்தர்களிடம் சேவைகளை பெற்றுக்கொள்ளச் சென்ற பல பகுதிகளைச் சேர்ந்த மக்கள் நேற்றைய தினம் பல்வேறு அசௌகரியங்களுக்கு உள்ளானமை குறிப்பிடத்தக்கது. https://thinakkural.lk/article/301044
-
யாழ்ப்பாணத்தில் நேற்றைய இன்றைய கடும் வெப்பநிலை!
அண்ணை மேலே படத்தில் இணைத்த கூகுள்ஏர்த்தின் வெப்பச் சுட்டி.