Everything posted by ஏராளன்
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
இஸ்ரேலினால் கைதுசெய்யப்பட்ட காசா மருத்துவர் சிறையில் மரணம் Published By: RAJEEBAN 04 MAY, 2024 | 11:44 AM இஸ்ரேலினால் தடுத்துவைக்கப்பட்டிருந்த காசாவின் மருத்துவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கடந்த நான்கு மாதங்களாக இஸ்ரேலிய படையினரால் தடுத்துவைக்கப்பட்டிருந்த காசாவின் அல்ஸிபா மருத்துவமனையின் எலும்பியல் மருத்துவர் அட்னன் அல்பேர்ஸ் உயிரிழந்துள்ளார் என பாலஸ்தீன சிறைக்கைதிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இதேவேளை தேசிய பாதுகாப்பு காரணங்களிற்காக ஒவெர் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார் அவர் மருத்துவர் அட்னன் அல்பேர்ஸ் என இஸ்ரேலிய சிறைச்சாலை சேவை உறுதி செய்துள்ளது. உயிரிழப்பிற்கான காரணங்களை வெளியிடாத இஸ்ரேல் விசாரணைகள் இடம்பெறுவதாக தெரிவித்துள்ளது. இஸ்ரேலிய படையினர் பல தடவைகள் தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்ட அல்சிபா மருத்துவமனையில் உயிரிழந்த மருத்துவர் பணியாற்றிவந்தார். காசாவின் வடபகுதியில் உள்ள அல்அவாட மருத்துவமனையில் தற்காலிகமாக பணியாற்றிக்கொண்டிருந்தவேளை இஸ்ரேலிய படையினர் அவரை கைதுசெய்தனர். இந்த மரணச்செய்தி மனித ஆன்மாவினால் தாங்க முடியாதது என அல்சிபா மருத்துவமனையின் இயக்குநர் வைத்தியர் மர்வன் அபு சாடா தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/182649
-
தலை துண்டிக்கப்பட்ட 4 மாடுகள், உயிருடன் 21 மாடுகள் மீட்பு
யாழில் கண்டுபிடிக்கப்பட்ட கொல்களம் : 21 மாடுகள், 4 ஆடுகள் உயிருடன் மீட்பு, ஒரு தொகை இறைச்சியும் கைப்பற்றல் 05 MAY, 2024 | 05:38 AM யாழ்ப்பாணத்தில சட்டவிரோத கொல்களம் ஒன்று பொலிஸாரினால் சுற்றிவளைக்கப்பட்டு, 21 மாடுகளையும் 04 ஆடுகளையும் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதுடன் , ஒரு தொகை இறைச்சியும் மீட்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் ஒஸ்மானிய கல்லூரிக்கு அருகில் உள்ள கட்டடம் ஒன்றில் சட்டவிரோதமான முறையில் மாடு , ஆடுகள் இறைச்சியாக்கப்படுவதாக யாழ்ப்பாண பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல்களை அடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் அவ்விடத்தை சுற்றி வளைத்தனர். அதன்போது குறித்த கட்டடத்தில் இறைச்சியாக்கிக் கொண்டிருந்த நபரை கைது செய்ததுடன், இறைச்சிக்காக கொண்டு வரப்பட்டிருந்த 21 மாடுகள் மற்றும் 04 ஆடுகளை உயிருடன் மீட்டுள்ளதுடன், ஒரு தொகை இறைச்சி மற்றும் இறைச்சியாக்க பயன்படுத்திய கோடாரி , கத்திகள் உள்ளிட்டவற்றையும் மீட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட நபரை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். யாழ்பபாணத்தில் பல இடங்களில் ஆடு , மாடுகள் கடத்தப்படுவதாக பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகள் உள்ள நிலையில், உயிருடன் மீட்கப்பட்ட ஆடுகள், மாடுகள் களவாடப்பட்டவையா என பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். https://www.virakesari.lk/article/182707
-
இலங்கை சுற்றுலா: குறைந்த செலவில் செல்ல விரும்புவோர் அவசியம் அறிய வேண்டிய தகவல்கள்
பட மூலாதாரம்,GETTY IMAGES 58 நிமிடங்களுக்கு முன்னர் பண்பாட்டு-கலாசார ரீதியாக தமிழ்நாட்டுக்கு மிக நெருக்கமான நாடாக இலங்கை விளங்குகிறது. இந்தக் காரணத்திற்காகவும் அதன் இயற்கை அழகை ரசிப்பதற்காகவும் இந்தத் தீவு நாட்டுக்குச் செல்ல தமிழ்நாட்டு மக்கள் எப்போதும் ஆர்வம் காட்டுகின்றனர். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள், மத வழிபாட்டுத் தலங்கள், மலைப் பிரதேசங்கள், கடற்கரைகள், காட்டுயிர் சரணாலயங்கள், தனித்துவமான-சுவையான உணவுகளுக்காக உங்களின் பயண ‘லிஸ்ட்டில்' இலங்கை நிச்சயமாக இருக்கும். கடந்த 2019ஆம் ஆண்டு முதல் பொருளாதார நெருக்கடியில் சிக்கிய இலங்கையில், 2022ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நெருக்கடி உச்சக்கட்டத்தை அடைந்தது. 2023ஆம் ஆண்டின் பிற்பகுதியில்தான் அதிலிருந்து மெல்ல மீண்டு வரத் தொடங்கியது. தங்கள் நாட்டு பொருளாதார வளர்ச்சிக்காக சுற்றுலாத் துறையைப் பெரிதும் சார்ந்திருக்கிறது இலங்கை. 2023ஆம் ஆண்டில் முதல் இரண்டு மாதங்களிலும், 2 லட்சத்து 10 ஆயிரத்திற்கும் மேலான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். பட மூலாதாரம்,GETTY IMAGES ரஷ்யாவில் இருந்தே 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். அதற்கு அடுத்தபடியாக, இந்தியாவிலிருந்தே அதிகளவிலானோர் வருகை தந்துள்ளனர். இந்தத் தகவலை, இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை உறுதிப்படுத்தியுள்ளது. இதன்மூலம் இந்தியாவிலிருந்து அதிகளவிலானோர் இலங்கைக்குப் பயணிப்பது தெளிவாகிறது. குறைந்த செலவில் பயணம், இ-விசா சலுகை போன்ற வசதிகளும் இந்தியர்கள் இலங்கையைத் தேர்ந்தெடுப்பதற்கான முக்கியக் காரணங்களாக உள்ளன. குறைந்த செலவில் எப்படி இலங்கைக்குச் செல்லலாம், இந்தியர்களுக்கு இலங்கையில் உள்ள வசதிகள் என்னென்ன, அங்கு நிச்சயம் சுற்றிப் பார்க்க வேண்டிய இடங்கள் என்னென்ன என்பதை இங்கே காணலாம். இ-விசா சலுகை பட மூலாதாரம்,GETTY IMAGES இந்தியாவிலிருந்து சுற்றுலா செல்லும் நோக்கத்திற்காக இலங்கை செல்பவர்கள், https://www.srilankaevisa.lk/ எனும் இணையதளத்தில் பயண ஆவணங்களைப் பதிவேற்றி, இ-விசா பெற்று இலங்கை செல்லலாம். சுற்றுலா துறையை மேம்படுத்தும் பொருட்டு, இந்தியா, சீனா, ரஷ்யா உட்பட ஏழு நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு இந்த இ-விசா வசதியை அந்நாட்டு அரசு கடந்த அக்டோபர், 2023இல் அறிவித்தது. அதன்படி, இலங்கை செல்வதற்கு முன்பு, குறிப்பிட்ட இணையதளத்தில் விவரங்களைப் பதிவிட்டு இ-விசா பெற்றுக்கொள்ளலாம். இந்த இ-விசா மூலம் இலங்கையில் அதிகபட்சம் 30 நாட்கள் வரை தங்கியிருக்கலாம். பட மூலாதாரம்,GETTY IMAGES குறைந்த பயண செலவு தமிழ்நாட்டிலிருந்து இலங்கை செல்வதற்கு ஏராளமான விமான வசதிகள் உள்ளன. அதிலும் குறைவான பயண செலவிலேயே இலங்கை சென்று வர முடியும். சென்னையைச் சேர்ந்த ‘வேண்டர்லஸ்ட்' எனும் பயண நிறுவனத்தின் நிறுவனர் பாலாஜி கண்ணன் பிபிசி தமிழிடம் பேசுகையில், “தமிழ்நாட்டுக்கு மிகவும் அருகில் இருப்பதாலும் விமான கட்டணம் குறைவாக இருப்பதாலும் இங்குள்ள மக்கள் சுற்றுலாவுக்காக இலங்கையை அதிகம் தேர்ந்தெடுக்கின்றனர். இலங்கை செல்வதற்கான நடைமுறை எளிதானது. விசா தேவையில்லை. இ-விசாவை ஆன்லைன் மூலமாகவே பெறலாம். ஒருவர் இலங்கை சென்றுவர 15,000-18,000 ரூபாய் இருந்தாலே போதுமானது," என்கிறார். விமானப் போக்குவரத்து மட்டுமின்றி, நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து அவ்வப்போது பயணப்படகு ஒன்றையும் அரசு இயக்கி வருவதாக அவர் தெரிவித்தார். மேலும், சென்னையிலிருந்து தனியார் கப்பல் மூலமாகவும் ஜூன் மாதத்தில் இலங்கைக்கு பயணிக்கலாம் என பாலாஜி கண்ணன் தெரிவித்தார். கடல்வழிப் போக்குவரத்து எப்போதும் இருக்காது என்பதால், விமானப் பயணமே இலங்கை செல்ல ஏற்றது என்றும் அவர் பரிந்துரைக்கிறார். இந்திய ரூபாயை பயன்படுத்த முடியுமா? பட மூலாதாரம்,GETTY IMAGES எந்தவொரு வெளிநாட்டுக்குச் செல்லும்போதும் இந்திய ரூபாயை அந்த நாட்டுப் பணமாகவோ அல்லது அமெரிக்க டாலர்களாகவோ மாற்றினால்தான் நாம் அதைச் செலவுகளுக்குப் பயன்படுத்த முடியும். ஆனால், இந்தியாவிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கென இதிலும் இலங்கை அரசு சலுகை வழங்கியிருக்கிறது. அதாவது, இந்திய ரூபாயை அப்படியே யூபிஐ மூலமாக இலங்கையில் நாம் பயன்படுத்த முடியும். அதற்கென பெரும்பாலான இடங்களில் க்யூ-ஆர் கோடு வசதியும் செய்யப்பட்டுள்ளது. அதை நாம் ஸ்கேன் செய்தால், இந்திய ரூபாய் மதிப்பு, இலங்கை ரூபாய் மதிப்புக்கு மாற்றி அப்படியே பணத்தைச் செலுத்திவிடலாம். இதுதொடர்பாக பிபிசி தமிழுக்காக இலங்கை செய்தியாளர் ரஞ்சன் அருண் பிரசாத் அந்நாட்டு சுற்றுலாத்துறை அமைச்சகத்திடம் பேசியபோது, “இது இந்தியாவில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கென இலங்கை அரசு செய்துள்ள சலுகை. இதற்கென பல்வேறு இடங்களில் க்யூ-ஆர் கோடு வசதி செய்யப்பட்டுள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES இதன்மூலம் எளிதாக பணத்தைச் செலுத்தலாம். இதனால், சுற்றுலாப் பயணிகள் இலங்கை பணமாகவோ அல்லது அமெரிக்க டாலர்களாகவோ மாற்ற வேண்டிய அவசியம் இல்லை,” எனத் தெரிவித்தனர். ஆனால், இந்திய ரூபாயை கரன்சியாக அங்கு பயன்படுத்த முடியாது. எனினும், சில இடங்களில் யூபிஐ வசதி இல்லாமல் இருந்தால், அசௌகரியங்களைச் சமாளிக்க கொஞ்சம் பணத்தை இலங்கை ரூபாயாகவோ அமெரிக்க டாலர்களாகவோ மாற்றி வைத்திருப்பது நல்லது என்கிறார் பாலாஜி கண்ணன். மற்ற செலவுகள் எப்படி இருக்கும்? இலங்கையில் தங்குவதற்கு ஒரு நாளைக்கு ரூ.3,000-3,500 செலவிலேயே நல்ல ஹோட்டல்கள் கிடைக்கும் என, பாலாஜி கண்ணன் தெரிவித்தார். “பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கை மெல்ல மீண்டு வருவதால், இன்னும் சில இடங்களில் சுற்றுலா வசதிகளுக்கான சேவைகள், பொருட்களின் விலை அதிகமாகத்தான் இருக்கிறது. இந்திய ரூபாயின் மதிப்பு இலங்கை பணத்தைவிட அதிகம் என்பதால், அதிக செலவு இருக்காது," என்றார் பாலாஜி. தவறவிடக்கூடாத இடங்கள் பட மூலாதாரம்,SAIKO3P/GETTY IMAGES கொழும்புவில் இருந்து பதுல்லாவுக்கு செல்லும் ரயில் பயணம் நிச்சயம் சுற்றுலாப் பயணிகள் செல்ல வேண்டிய பயணம். அந்த ரயில் செல்லும் வழி மிக அழகு நிறைந்தது. மிகவும் மெதுவாக, 10 மணிநேரம் செல்லக்கூடிய இந்தப் பயணம், சிலருக்கு அசௌகரியமாக இருந்தாலும் இந்தப் பயணத்தின்போது நாம் பார்க்கக்கூடிய இடங்கள் மனதுக்கு மிக இனிமையாக இருக்கும். இலங்கை அழகிய கடற்கரைகளுக்குப் பெயர் போன நாடு. கடல் சார்ந்த சாகசங்களில் ஆர்வம் உள்ளவர்கள், மிரிசா, பென்டோடா போன்ற கடற்கரைகளுக்குச் செல்லலாம். காட்டுயிர்கள் மீதான ஆர்வம் கொண்டவர்கள் யாலா, உடவலவே போன்ற தேசிய காட்டுயிர் பூங்காக்களுக்குச் செல்லலாம். இங்கு, யானை, சிறுத்தை மற்றும் பலவகையான பறவைகளைக் காண முடியும். இலங்கையில் நிச்சயம் காண வேண்டிய மலைப்பிரதேசங்களும் உண்டு. தேயிலைத் தோட்டங்களால் நிரம்பிய எல்லா, நுவரெலியா போன்ற மலைப் பகுதிகளின் அழகை அவசியம் காண வேண்டும். இலங்கையின் கலைப் பாரம்பரியத்தின் சின்னமாகக் கருதப்படும் சிகிரியா கோட்டை, தம்புள்ளை குகை கோவில், அனுராதபுரம் போன்றவற்றுக்கு இலங்கையின் கலை அழகை ரசிக்கச் செல்லலாம். https://www.bbc.com/tamil/articles/cd1vm1rgrrjo
-
தமிழ் மக்களின் பிரச்சினைகள் சரியான முறையில் கையாளப்படவில்லை – அமைச்சர் டக்ளஸ்
04 MAY, 2024 | 08:19 PM தமிழ் மக்களின் பிரச்சனைகள் சரியான முறையில் கையாளாத காரணத்தினால் தான் தமிழ் மக்கள் தற்போதைய நிலமைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள். ஆனாலும் வருகின்ற காலத்திலாவது தமிழ் மக்களின் பிரச்சனைகளைச் சரியாக கையாளும் பட்சத்தில் விரைவில் பிரச்சனைகளுக்குத் தீர்வுகாணலாம் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தின் மகிழூர் பகுதிக்கு சனிக்கிழமை(04) நேரில் விஜயம் செய்து அப்பகுதி மீகவர்களின் குறை நிறைகளைக் கேட்டறித்து கொண்டார். இதன்போது ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்… சுருக்குவலைப் பயன்படுத்துதல் கிழக்கில் மாத்திரமல்ல நாடு பூராகவும் பரந்துபட்ட அளவில் இடம்பெற்று வருகின்றது. நான் செல்லும் இடம் எனலாம் அதனைத் தடை செய்யுமாறு கோரிக்கைகள் வந்து கொண்டிருக்கின்றன. முடிந்தவரையில் சுருக்குவலைப் பயன்பாட்டைத் தடை செய்வதற்குரிய நடவடிக்கையை நான் எடுத்துக் கொண்டு வருகின்றேன். அதுபோல் மட்டக்களப்பு வாவியிலும் தொழில் செய்பவர்கள் பல்வேறுபட்ட பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகின்றார்கள். அதற்குத் தீர்வு காணும் முகமாக ஒரு மாத்திற்குள் ஒரு குழுவை அமைத்து அதுதொடர்பில் ஆராய்ந்து அறிக்கையை சமர்ப்பிக்கவுள்ளார்கள். அதனை வைத்துக் கொண்டு நாம் நடவடிக்கை எடுக்கவுள்ளோம். இந்திய மீனவர்களின் அத்துமீறல் என்பது இரு நாடுகளுக்குமிடையிலான பிரச்சனையாகும். இது தொடர்பில் நாம் போச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றோம். அதுபோல் சட்டநடவடிக்கைகளையும் எடுத்துவருகின்றோம். இன்னும் பேச்சுவார்த்தைகளில் முழு நட்பிக்கை வத்து முயற்சிகளை எடுத்துள்ளோம். தற்போது மீன்களின் இனப்பெருக்க காலம் என்பதால் இரண்டு மாதங்களாக இந்திய மீனவர்கள் தொழிலுக்கு வரவில்லை. தேர்தல் முடிந்தவுடன் கூடிக் கதைக்கலாம் என அண்மையில் தமிழ்நாட்டு முதலமைச்சரிடமிருந்தும், புதுச்சேரி முதலமைச்சரிடமிருந்தும் எனக்கு அமைப்பு வந்திருந்தன. அதற்காக நாம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றோம். தமிழ் மக்களின் பிரச்சனைகள் சரியான முறையில் கையாளாத காரணத்தினால்தான் தமிழ் மக்கள் தற்போதைய நிலமைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள். ஆனாலும் வருகின்ற காலத்திலாவது தமிழ் மக்களின் பிரச்சனைகளைச் சரியாக கையாளும் பட்சத்தில் விரைவில் பிரச்சனைகளுக்குத் தீர்வுகாணலாம். 30 வருடங்களாக் நான் சொல்லி வந்தவிடையம் அவைரும் அறிந்ததே. அதாவது இலங்கை இந்திய ஒப்பந்தத்தில் ஏற்படுத்தப்பட்ட 13வது திருத்தச்சட்டம், மாகாணசபை முறைமையை ஆரம்பித்ததனூடாகத்தான் தமிழர்களுடைய அரசியல் உரிமைப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண முடியும் என நான் மிக நீண்ட காலமாக சொல்லி வந்தேன். அதனை “செவிடன் காதில் ஊதிய சங்கு” போல் அதனை யாரும் கேட்கவில்லை. ஆனால் தற்போது அதுபற்றி பலரும் முணு முணுக்கின்றார்கள். அவ்வகையிலாவது அது நல்லவிடையமாகும். யாரும் இவற்றை எதிர்க்கும்போதும், அதனை ஆதரிக்கும்போதும் உண்மைத் தன்மையாக யாரும் இருப்பதாகத் தெரியவில்லை. உண்மைத்தன்மையாக முன்வருவார்களேயானால் இப்பிரச்சனைகளுக்குத் தீர்வு காணலாம். வரஇருக்கின்ற ஜனாதிபதித் தேர்தலில், தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமராச மற்றும் அனுர குமார திசாநாயக்க ஆகிய மூன்று வேட்பாளர்கள் பிரதானமானவர்களாக காணப்படுகின்றார்கள். இந்த மூவரில் ஒருவருடன் கலந்துரையாடி எமது வாக்குகளை உங்களுக்குத் தலராம் எமது பிரச்சனைகளுக்குத் தீர்வு காணவேண்டும் என்ற பேரம்பேசலைச் செய்து கலந்துரையாடினால்தான் ஒரு ஆரோக்கியமான சூழல் உருவாகுமே தவிர வெறுமனே பொ வேட்பாளர் என்பது வெறும் பம்மாத்து ஆகும். புண்ணுக்கு வலியா மருந்துக்கு வலியா என பார்த்தால் கடந்த கால தமிழ் அரசியல் மருந்துக்குத்தான் வலி என்ற அரசியலை முன்னெடுத்திருந்தனர். அது என்ன நிலமையில் மக்களைக் கொண்டு விட்டுள்ளது என்பதை புரிகின்றது. எனவே புண்ணுக்குத்தான் வலி இதனை தமிழ் மக்களும் சரிவர உணர்ந்து யார் தமது பிரச்சனைகளை ஆக்கபூர்வமாக முன்னெடுக்கின்றார்களோ அவர்களோடு அணிதிரழ்வததான் சரியானது என தெரிவித்தார். https://www.virakesari.lk/article/182689
-
இந்திய விமானப்படை வாகனங்கள் மீது தாக்குதல்: ஒரு ராணுவ வீரர் மரணம், 4 பேர் காயம்
பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு,சனிக்கிழமை மாலை பூஞ்ச் பகுதியில் இந்திய விமானப்படை வாகனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் பகுதியில் இந்திய விமானப்படை வாகனத்தின் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தார், மேலும் நான்கு பேர் காயமடைந்துள்ளனர். எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் இந்தச் சம்பவம் குறித்து தகவல் அளித்த இந்திய விமானப்படை, சனிக்கிழமையன்று, ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள ஷாசிதார் அருகே தீவிரவாதிகளால் ஒரு ராணுவ வாகனம் குறிவைக்கப்பட்டதாகக் கூறியுள்ளது. பிடிஐ செய்தி முகமையின்படி, "மாலை 6:15 மணியளவில், வீரர்கள் ஜரன்வாலியில் இருந்து விமானப்படை நிலையத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, பதுங்கியிருந்த தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர்." சனிக்கிழமை இரவு 9 மணியளவில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதை ராணுவம் உறுதி செய்தது. உயிரிழந்த வான் படை வீரர் ஒரு மணிநேரம் கழித்து, இந்திய விமானப்படை வெளியிட்ட பதிவில், "பயங்கரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச் சூட்டில், விமானப்படை வீரர்கள் துணிச்சலாகப் போராடினர்" என்று கூறியது. இந்தத் தாக்குதலில், ஐந்து இந்திய வான் படை வீரர்கள் சுடப்பட்டனர், அவர்கள் உடனடியாக அருகிலுள்ள ராணுவ மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் பலத்த காயமடைந்த வீரர் ஒருவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். மற்றொரு வீரரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் ஏஎன்ஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது. மீதமுள்ள மூவரின் உடல்நிலை சீராக உள்ளது. ஞாயிற்றுக்கிழமை காலை முதல், பூஞ்ச் மாவட்டத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் கடுமையாக்கப்பட்டு உள்ளதாகவும், பாதுகாப்புப் படையினர் அனைத்து வாகனங்களையும் சோதனை செய்து வருவதாகவும் ஏஎன்ஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது. தலைவர்கள் கண்டனம் பட மூலாதாரம்,GETTY IMAGES காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பூஞ்ச் தாக்குதலை கோழைத்தனம் என விமர்சித்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். “ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் நகரில் ராணுவ வாகனத்தின் மீது பயங்கரவாதிகள் நடத்திய கோழைத்தனமான தாக்குதல் மிகவும் வெட்கக்கேடானது மற்றும் வருத்தமளிக்கிறது. வீரமரணம் அடைந்த ராணுவ வீரருக்கு எனது பணிவான அஞ்சலியைச் செலுத்துவதுடன், அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன். தாக்குதலில் காயமடைந்த ராணுவ வீரர்கள் விரைவில் குணமடைவார்கள் என நம்புகிறேன்,” என்று கூறியுள்ளார். இந்தச் சம்பவம் குறித்து பாஜக தலைவரும் அசாம் முதல்வருமான ஹிமந்தா பிஸ்வா சர்மாவும் தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளார். இந்தக் கோழைத்தனமான தாக்குதலை தாம் வன்மையாகக் கண்டிப்பதாக அவர் கூறியுள்ளார். மேலும், “பூஞ்ச் பகுதியில் இந்திய விமானப் படையின் வாகனம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர், இதில் நான்கு துணிச்சலான விமானப்படை வீரர்கள் காயமடைந்தனர். அவர்கள் விரைவில் பூரண குணமடைய வேண்டுகிறேன். இந்த வெறுக்கத்தக்க செயலுக்குக் காரணமானவர்கள் நீதியின் முழு வலிமையையும் எதிர்கொள்ள வேண்டும்,” என்றும் அவர் கூறியுள்ளார். ஜம்மு-காஷ்மீர் மாநிலம், அனந்த்நாக்-ரஜோரி மக்களவைத் தொகுதியில் மூன்று வாரங்களில் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் இந்தத் தாக்குதல்கள் நடந்துள்ளன. பூஞ்ச், அனந்த்நாக்-ரஜோரி நாடாளுமன்றத் தொகுதியின் ஒரு பகுதி. அங்கு மே 25ஆம் தேதி ஆறாவது கட்டமாக வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. https://www.bbc.com/tamil/articles/c29683w00zko
-
ஐ.பி.எல் 2024 - செய்திகள்
RCB vs GT: குஜராத்தை வெளியேற்றிய ஆர்சிபி - ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்ல வாய்ப்பு உண்டா? பட மூலாதாரம்,SPORTZPICS கட்டுரை தகவல் எழுதியவர், போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பவர்ப்ளேவில் 92 ரன்கள், 38 பந்துகள் மீதமிருக்கையில் மிகப்பெரிய வெற்றி, புள்ளிப்பட்டியலில் திடீர் முன்னேற்றம், இதுபோன்ற ஆட்டத்தைத்தான் ரசிகர்கள் ஆர்சிபி அணியிடம் எதிர்பார்த்தனர். ஆனால் அனைத்தும் காலம் கடந்து நடக்கிறது. அடுத்து வரும் 3 போட்டிகளிலும் வென்றாலும் ஆர்சிபி ப்ளே ஆஃப் செல்லுமா என்பது விவாதப் பொருள்தான். தொடர்ச்சியாக 6 தோல்விகளைச் சந்தித்த ஆர்சிபி நேற்றைய போட்டியில் கிடைத்த வெற்றியின் மூலம் ‘ஹாட்ரிக் வெற்றி’யை பதிவு செய்துள்ளது. பெங்களூரு சின்னசாமி அரங்கில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 52வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. முதலில் பேட் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 147 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 148 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ஆர்சிபி அணி 38 பந்துகள் மீதமிருக்கையில் 6 விக்கெட்டுகளை இழந்து 152 ரன்கள் சேர்த்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இந்த சீசனில் லீக் சுற்றில் குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் மோதிய இரு ஆட்டங்களிலும் ஆர்சிபி அணி வென்றுள்ளது. கடந்த மாதம் 28ஆம் தேதி ஆமதாபாத்தில் நடந்த ஆட்டத்தில் 200 ரன்களுக்கும் அதிகமான ஸ்கோரை சேஸிங் செய்து 9 விக்கெட் வித்தியாசத்தில் பிரமாண்ட வெற்றியை ஆர்சிபி பெற்ற நிலையில் நேற்றைய ஆட்டத்திலும் வென்றது. ஆர்சிபிக்கு ப்ளே ஆஃப் வாய்ப்பு உள்ளதா? பட மூலாதாரம்,SPORTZPICS இந்த வெற்றியின் மூலம் ஆர்சிபி அணி 11 போட்டிகளில் 4 வெற்றி, 7 தோல்வி என 8 புள்ளிகளுடன் 7வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. நிகர ரன்ரேட்டிலும் மைனஸ் 0.049 எனக் குறைந்துள்ளது. ஆர்சிபி அணி தனக்கு இருக்கும் அடுத்த 3 ஆட்டங்களில் வென்றாலும்கூட 14 புள்ளிகள்தான் கிடைக்கும். இந்தப் புள்ளிகள் ப்ளே ஆஃப் சுற்றில் கடைசி இடத்தைப் பிடிக்கக்கூட போதாது. ஆனாலும், தற்போது வரை ப்ளே ஆஃப் சுற்றிலிருந்து ஆர்சிபி வெளியேறவில்லை என்பதுதான் நிதர்சனம். கணித அடிப்படையில் ஆர்சிபி அணி ப்ளே ஆஃப் சுற்றுக்குள் செல்ல முடியும். அதற்கு இவையெல்லாம் நடந்தால் சாத்தியம். முதலில் ஆர்சிபி அணி மீதமிருக்கும் 3 ஆட்டங்களையும் வெல்ல வேண்டும், அதேநேரம் லக்னெள அணி அல்லது சன்ரைசர்ஸ் அணி தனக்கு மீதமிருக்கும் ஆட்டங்களில் ஒரு வெற்றி மட்டுமே பெற்று மற்ற ஆட்டங்களில் தோற்க வேண்டும். அப்போது 14 புள்ளிகளோடு முடிக்கும்போது நிகர ரன்ரேட் பார்க்கப்படும். இரண்டாவதாக சிஎஸ்கே, டெல்லி கேபிடல்ஸ் அணி தற்போது 10 புள்ளிகளுடன் உள்ளன. இந்த அணிகள் தங்களுக்கு இருக்கும் 4 ஆட்டங்களில் இரு வெற்றிகள் மட்டுமே பெற வேண்டும், இரு போட்டிகளில் தோற்க வேண்டும். பஞ்சாப் கிங்ஸ் அணி 8 புள்ளிகளுடன் தனக்கிருக்கும் 4 ஆட்டங்களில் 3 போட்டிகளுக்கு மேல் வெல்லக்கூடாது, ஒரு ஆட்டத்தில் தோற்க வேண்டும். இவ்வாறு நடந்தால் 14 புள்ளிகளுடன் 6 அணிகளும் இடம்பெற்று நிகர ரன்ரேட்டில் ஆர்சிபி அணி ப்ளே ஆஃப் சுற்றுக்குள் செல்ல முடியும். மூன்றாவதாக ஆர்சிபி அணி ஒருவேளை 12 புள்ளிகளுடன் முடித்தாலும் ப்ளே ஆஃப் சுற்றுக்குள் செல்லாம். எப்படியென்றால் மேலே கூறப்பட்ட 5 அணிகளில் சிஎஸ்கே, டெல்லி, ஒரு வெற்றிக்கு மேல் பெறக்கூடாது, லக்னெள அல்லது சன்ரைசர்ஸ் அணி இனிமேல் வெல்லவே கூடாது, பஞ்சாப் அணி 2 வெற்றிகள் மட்டுமே பெற வேண்டும், இவ்வாறு நடந்தால் 6 அணிகளும் 12 புள்ளிகள் பெற்று நிகர ரன்ரேட்டில் ஆர்சிபி ப்ளே ஆஃப் செல்ல முடியும். இவை நடப்பது சாத்தியமென்றால், ஆர்சிபி ப்ளே ஆஃப் சுற்று செல்வதும் சாத்தியமே. குஜராத் அணி வெளியேறுகிறது பட மூலாதாரம்,SPORTZPICS முன்னாள் சாம்பியன், கடந்த சீசனில் 2வது இடம் பிடித்த குஜராத் டைட்டன்ஸ் அணி ப்ளே ஆஃப் சுற்றுக்குள் செல்லாமல் லீக் போட்டிகளோடு இந்த சீசனில் வெளியேற உள்ளது. குஜராத் அணி இதுவரை 11 போட்டிகளில் 4 வெற்றி, 7 தோல்வி என 8 புள்ளிகளுடன் 9வது இடத்துக்கு சரிந்துள்ளது. அடுத்து வரும் 3 ஆட்டங்களிலும் குஜராத் அணி வென்றாலும்கூட14 புள்ளிகள்தான் கிடைக்கும். இது ப்ளே ஆஃப் சுற்றுக்குள் செல்லப் போதுமான புள்ளிகளாக இருக்காது. ஒருவேளை கணித அடிப்படையில் குஜராத் அணிக்கு வாய்ப்பு இருப்பதாகக் கூறினாலும், நிகர ரன்ரேட்டில் மைனஸ் 1.320 என்று மோசமாக இருக்கிறது. அடுத்த 3 ஆட்டங்களிலும் பிரமாண்ட வெற்றி பெற்றால்தான் நல்ல ரன்ரேட்டை பெற முடியும். ஆதலால், ஐபிஎல் ப்ளே ஆஃப் சுற்றுக்குள் செல்லாமல் மும்பை, ஆர்சிபி, குஜராத் ஆகிய 3 அணிகள் வெளியேறுகின்றன. ப்ளே ஆஃப் சுற்றில் 4 இடங்களுக்கு 7 அணிகள் மட்டுமே தற்போது ரேஸில் உள்ளன. ஆர்சிபி அணி வெற்றிக்கு அணியின் வேகப்பந்துவீச்சாளர்களும், கேப்டன் டூப்ளெஸ்ஸி, விராட் கோலியின் அதிரடியான பேட்டிங்கும்தான் காரணம். ஆடுகளத்தின் தன்மையைச் சரியாகப் பயன்படுத்திய முகமது சிராஜ் 4 ஓவர்கள் வீசி 29 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை சாய்த்து ஆட்டநாயகன் விருது வென்றார். தொடக்க ஆட்டக்காரர்கள் சாஹா, கேப்டன் கில் ஆகிய இரு முக்கிய விக்கெட்டுகளை சிராஜ் வீழ்த்தியது குஜராத் அணியை பெரிய அதிர்ச்சியில் தள்ளியது. டுப்ளெஸ்ஸியின் பதற்றம் ஆர்சிபி கேப்டன் டூப்ளெஸ்ஸி கூறுகையில், “கடந்த சில போட்டிகளாக நாங்கள் சிறப்பாக ஆடி வருகிறோம். பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும் நன்றாகச் செயல்படுகிறோம். பேட்டிங்கில் ஆக்ரோஷம், ஃபீல்டிங்கில் நம்ப முடியாத முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஆடுகளத்தில் நல்ல பவுன்ஸர் இருந்ததை பந்துவீச்சாளர்கள் பயன்படுத்திக்கொண்டனர். கேட்சுகளை நாங்கள் கோட்டைவிட்டாலும், ஆட்டத்தை கட்டுக்குள் வைத்திருந்தோம். 180 முதல் 190 ரன்கள் இந்த ஆடுகளத்தில் நல்ல ஸ்கோர். நாங்கள் ஸ்கோர் போர்டை பார்ப்பதில்லை, ஆட்டத்துக்கு என்ன தேவையோ அதை விளையாடுகிறோம். திடீரென வரிசையாக விக்கெட்டுகள் சரிந்தவுடன் நான் பதற்றமடைந்தேன். இந்த வெற்றி போதாது, நிகர ரன்ரேட்டை உயர்த்த வேண்டும்," எனத் தெரிவித்தார். ஆர்சிபியின் சாதனைகள் பட மூலாதாரம்,SPORTZPICS பேட்டிங்கை பொறுத்தவரை பவர்ப்ளேவில் வெளுத்து வாங்கிய டுப்ளெஸ்ஸி, கோலி, ஆர்சிபி அணிக்கு 92 ரன்கள் சேர்த்தனர். அதேநேரம், குஜராத் அணி பவர்ப்ளேவில் 3 விக்கெட் இழப்புக்கு 23 ரன்கள்தான் சேர்த்திருந்தது. குஜராத் அணியின் பவர்ப்ளே ஸ்கோருக்கும், ஆர்சிபி பவர்ப்ளே ஸ்கோருக்கும் இடையே 69 ரன்கள் இடைவெளி இருக்கிறது. ஐபிஎல் வரலாற்றில் பவர்ப்ளே ஸ்கோரில் இதுபோன்று மிகப்பெரிய வேறுபாடு இருப்பது இதுதான் முதல்முறை. இதற்கு முன் கடந்த 2017இல் ஆர்சிபி 3 விக்கெட் இழப்புக்கு 40 ரன்கள் சேர்த்தநிலையில் கொல்கத்தா அணி விக்கெட் இழப்பின்றி 105 ரன்கள் சேர்த்ததுதான் பெரிய வேறுபாடாக இருந்தது. குஜாரத் அணி பவர்ப்ளேவில் சேர்த்த 23 ரன்கள்தான் ஐபிஎல் தொடரில் அந்த அணியின் குறைந்தபட்ச பவர்ப்ளே ஸ்கோர். இதற்கு முன் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக குஜராத் 30 ரன்கள் சேர்த்திருந்தது. ஆர்சிபி அணி பவர்ப்ளேவில் 92 ரன்கள் என்பது எந்த அணிக்கும் எதிராக பவர்ப்ளேவில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர். இதற்கு முன் சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக பவர்ப்ளேவில் 79 ரன்களும், 2011இல் கொச்சி டஸ்கர்ஸ் அணிக்கு எதிராக 79 ரன்கள் சேர்த்ததுதான் ஆர்சிபியின் அதிகபட்ச ஸ்கோராக இருந்தது. ஆர்சிபி அணி 38 பந்துகள் மீதமிருக்கும்போதே இலக்கை எட்டி மிகப்பெரிய வெற்றி பெற்றது. ஐபிஎல் வரலாற்றில் எந்த அணிக்கும் எதிராக அதிகமான பந்துகள் மீதம் வைத்து வெற்றி பெற்று ஆர்சிபி சாதனை படைத்தது. இதற்குமுன் கொல்கத்தா அணி 34 பந்துகள் மீதமிருக்கையில் சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக வெற்றி பெற்றிருந்து குறிப்பிடத்தக்கது. குஜராத் மீது ஆதிக்கம் செலுத்திய ஆர்சிபி பட மூலாதாரம்,SPORTZPICS குஜராத் அணிக்கு எதிரான இந்த ஆட்டத்தில் 26 ஓவர்களில் ஆர்சிபி ஆதிக்கம் செலுத்தியது. பந்துவீச்சில் 20 ஓவர்களும் ஆர்சிபியின் கட்டுப்பாட்டிலும், சேஸிங்கின்போது பவர்ப்ளேவில் 6 ஓவர்களும் ஆர்சிபி வீர்ரகள்தான் கோலோச்சினர். நடுப்பகுதியில் 25 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை ஆர்சிபி படபடவென இழந்தாலும், சுதாரித்து வெற்றியை அடைந்தது. தினேஷ் கார்த்திக்(21), ஸ்வப்னில் சிங்(15) ஆட்டமிழக்காமல் இருந்து அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தனர். சன்ரைசர்ஸ் அணி 287 ரன்கள் சேர்த்த அதே ஆடுகளத்தில்தான் நேற்றைய ஆட்டமும் நடந்தது. ஆனால், ஆட்டம் தொடங்குவதற்கு முன் சிறிது மழை பெய்ததால் விக்கெட்டின் தன்மை ஒட்டுமொத்தமாக மாறியது. ஆடுகளம் வேகப்பந்துவீச்சில் ஸ்விங் செய்ய நன்கு ஒத்துழைத்ததால், அதை சிராஜ், யாஷ் தயால் நன்கு பயன்படுத்திக் கொண்டு குஜராத் பேட்டிங் வரிசையை ஆட்டம் காண வைத்தனர். முகமது சிராஜ் தனது முதல் ஓவரில் சஹாவை(1) வெளியேற்றினார். இதுவரை 6 இன்னிங்ஸில் சஹாவை 4 முறை சிராஜ் ஆட்டமிழக்க வைத்துள்ளார். சிராஜ் தனது 2வது ஓவரில் கில்(2) விக்கெட்டை வீழ்த்தி குஜராத் அணிக்கு அதிர்ச்சியளித்தார். ஒவ்வொரு ஆட்டத்திலும் குஜராத் அணிக்கு முதுகெலும்பாக இருக்கும் சாய் சுத்ரசன்(6) விக்கெட்டை கேமரூன் கிரீன் வீழ்த்த குஜராத் அணி ஆழ்ந்த சிக்கலுக்குச் சென்றது. அதன்பின் களமிறங்கிய ஷாருக்கான்(37), மில்லர்(30), திவேட்டியா(35) ஆகியோர் குஜராத் அணியை சரிவிலிருந்து மீட்க முயன்றும் முடியவில்லை. அதன்பின் களமிறங்கிய கடைசி வரிசை பேட்டர்களுக்கு பவுன்ஸர்களையும், ஷார்ட் பந்துகளையும் வீசி ஆர்சிபி பந்துவீச்சாளர்கள் திணறடிக்கவே, குஜராத் அணி 147 ரன்களுக்கு வீழ்ந்தது. குஜராத் அணி 131 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்திருந்த நிலையில், அடுத்த 16 ரன்களுக்குள் மீதமிருந்த 5 விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. அதிலும் வியாசக் வீசிய கடைசி ஓவரில் மட்டும் 3 விக்கெட்டுகளை குஜராத் இழந்தது. மிரட்டலான சேஸிங் பட மூலாதாரம்,SPORTZPICS இந்த ஆடுகளத்தில் 148 ரன்கள் இலக்கை விரைவாக அடைய வேண்டுமெனில் நீண்டநேரம் தாக்குப்பிடிக்கக் கூடாது என்பதை உணர்ந்து டூப்ளெஸ்ஸி, கோலி அதிரடி ஆட்டத்தைக் கையாண்டனர். மோகித் சர்மா வீசிய முதல் ஓவரிலேயே கோலி ஓவர் கவர் திசை, மிட்விக்கெட்டில் 2 சிக்ஸர்களை பறக்கவிட்டார். ஜோஸ் லிட்டில் வீசிய 2வது ஓவரில் டூப்ளெஸ்ஸி சிக்ஸர், பவுண்டரி என 20 ரன்களை விளாசினார். மனவ் சத்தார், மோகித் ஓவரை டூப்ளெஸ்ஸி வெளுக்கவே, ஆர்சிபி அணி 3.1 ஓவர்களில் 50 ரன்களை எட்டியது. மனவ் சத்தார் ஓவரில் தொடர்ந்து 2 சிக்ஸர்களை கோலி பறக்கவிட்டார். அதிரடியாக ஆடிய டூப்ளெஸ்ஸி 18 பந்துகளில் அரைசதத்தை நிறைவு செய்தார். ஆர்சிபி அணிக்காக 2வது அதிக அரைசதம் அடித்த வீரர் என்ற பெருமையை டூப்ளெஸ்ஸி பெற்றார். இதற்கு முன் கிறிஸ் கெயில் 17 பந்துகளில் அரைசதம் அடித்திருந்தார். பவர்ப்ளேவில் ஆர்சிபி அணி 92 ரன்கள் சேர்த்தது. பவர்ப்ளேவில் 92 ரன்கள் சேர்த்திருந்தபோதே ஏறக்குறைய ஆட்டம் முடிந்துவிட்டது, ஆர்சிபி வெற்றி உறுதியானது. லிட்டில் வீசிய ஓவரில் டூப்ளெஸ்ஸி 64 ரன்கள்(23 பந்துகள், 10 பவுண்டரி, 3 சிக்ஸர்) சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார். பவர்ப்ளே ஓவருக்குள் ஆர்சிபி அணிக்காக அதிக ரன்களை சேர்த்த முதல் பேட்டர் என்ற பெருமையையும் டூப்ளெஸ்ஸி பெற்றார். அதன்பின் ஆர்சிபி அணி அடுத்தடுத்து 5 விக்கெட்டுகளை மளமளவென இழந்தது. நூர் முகமது பந்துவீச வந்ததும், அவரின் பந்துவீச்சில் வில் ஜேக்ஸ் ஒரு ரன்னில் ஷாருக்கானிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அரைசதம் நோக்கி நகர்ந்த விராட் கோலி 42 ரன்னில் விக்கெட் கீப்பர் சஹாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். பட மூலாதாரம்,SPORTZPICS லிட்டில் வீசிய 8வது ஓவரில் பட்டிதார்(2), மேக்ஸ்வெல்(4) ரன்னில் விக்கெட்டைஇழந்தனர். இந்த சீசன் முழுவதும் இதுவரை மேக்ஸ்வெல் ஒரு அரைசதம்கூட அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. விக்கெட் இழப்பின்றி 92 ரன்கள் வரை இருந்த ஆர்சிபி அணி 117 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்தது. அதாவது 25 ரன்களில் 6 விக்கெட்டுகளை இழந்த தடுமாறியது. சின்னச்சாமி அரங்கமே மௌனமானது. 7வது விக்கெட்டுக்கு வந்த தினேஷ் கார்த்திக், ஸ்வப்னிங் சிங் அதிரடியாக சில பவுண்டரிகளையும், சிக்ஸர்களையும் அடித்து, வெற்றி பெற வைத்தனர். டிகே(21), ஸ்வப்னில்(15) ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். காபி குடிப்பதற்குள் ஆட்டம் மாறியது ஆர்சிபி விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் கூறுகையில், “டூப்ளெஸ்ஸி, கோலி ஆட்டத்தைப் பார்த்தபோது, நான் களமிறங்க வேண்டிய தேவை இருக்காது என நினைத்து ரிலாக்ஸாக ஒரு காபி குடிக்கத் தொடங்கினேன். ஆனால், அடுத்தடுத்து விக்கெட்டுகள் வீழ்ந்தவுடன் நான் பேட்டிங் செய்ய வேண்டி வந்தது. எனக்குரிய வேலையைச் செய்துவிட்டேன். விக்கெட் பந்துவீச்சாளர்களுக்கு நன்கு ஒத்துழைத்தது, லேசான ஈரப்பதம் இருந்தது. டாஸை வென்றோம், போட்டியையும் வென்றோம்,” எனத் தெரிவித்தார். https://www.bbc.com/tamil/articles/c3g9r054xkpo
-
ஆசியாவில் கடும் வெப்பம்; வியட்நாமில் இலட்சக்கணக்கான மீன்கள் இறப்பு
ஆசியாவில் கடும் வெப்பம் அலை Published By: DIGITAL DESK 3 04 MAY, 2024 | 11:54 AM ’வெப்ப அலை’ என்பது சாதாரண வெப்ப நிலையை (TEMPERATURE) விட கூடுதலாக 3 டிகிரி செல்சியஸ் வெப்பம் உயர்ந்து தொடர்ச்சியாக 3 நாட்கள் அல்லது அதற்கு மேல் தொடர்வதைக் குறிக்கும். உலக வானிலை ஆய்வு அமைப்பின்படி தொடர்ச்சியாக 5 தினங்கள் அல்லது அதற்கு மேல் சாதாரண வெப்பநிலையை விட '5 டிகிரி செல்சியஸ்' வரை அதிகமாகும் போது வெப்ப அலை ஏற்படுவதாகக் கூறுகின்றனர். அதாவது, சமவெளிப் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை குறைந்தபட்சம் 40 டிகிரி செல்சியஸ் ஆகவும், கடலோரப் பகுதிகளில் குறைந்தபட்சம் 37 டிகிரி செல்சியஸ் ஆகவும், மலைப் பகுதிகளில் குறைந்தபட்சம் 30 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருந்தால், அது வெப்ப அலையாக அறிவிக்கப்படும். இந்நிலையில், முன்னெப்போதும் இல்லாத வகையில் ஆசியா முழுவதும் வெப்பம் அதிகரித்து வருகிறது. பல ஆசிய நாடுகளில் கடந்த வாரம் 40 டிகிரி செல்சியஸுக்கும் அதிகமான வெப்பநிலை பதிவாகி வெப்ப அலை எழும்பத் தொடங்கியுள்ளது. அதன்படி, மியன்மாரில் வெப்பம் ஆகக் கூடுதலாக 45 டிகிரி செல்சியஸாக பதிவாகியுள்ளது. அதனையடுத்து, தாய்லாந்து மற்றும் இந்தியாவில் 44 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. பங்களாதேஷ், லாவோஸ், வியட்நாம், நேபாளில் 42 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. சீனாவில் 41 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. இந்நிலையில், குறைவான வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ் இந்தோனேஷியாவிலும், 37 டிகிரி செல்சியஸ் பிலிப்பைன்ஸிலும், 36 டிகிரி செல்சியஸ் சிங்கப்பூரிலும் பதிவாகியுள்ளது. https://www.virakesari.lk/article/182645
-
அமெரிக்காவில் லாட்டரியில் ரூ.10,000 கோடி பரிசு - என்ன செய்யப் போகிறார்?
அமெரிக்காவில் புற்றுநோயாளிக்கு லாட்டரியில் ரூ.10,000 கோடி பரிசு - என்ன செய்யப் போகிறார்? பட மூலாதாரம்,OREGON LOTTERY 37 நிமிடங்களுக்கு முன்னர் அமெரிக்காவில் குடியேறிய புற்றுநோயாளி ஒருவர் லாட்டரியில் பெரிய பரிசுத் தொகையை வென்றிருக்கிறார். இது அமெரிக்க வரலாற்றில் நான்காவது பெரிய லாட்டரி தொகை ஆகும். லாவோஸ் நாட்டை பூர்வீகமாக கொண்ட செங் சைஃபன், பவர்பால் லாட்டரியில் 1.3 பில்லியன் டாலர் பரிசுத் தொகையை வென்றார். இந்திய மதிப்பில் இந்த தொகை பத்தாயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகம் ஆகும். பல இரவுகள், தலையணைக்கு அடியில் லாட்டரி காகிதங்களை வைத்துக்கொண்டு தூங்கியதாக செங் சைஃபன் கூறுகிறார். பவர்பால் லாட்டரியை வெல்வதற்கான கணக்கீடுகள் கொண்ட காகித தாள்கள் அவரின் தலையணையின் கீழ் வாரக்கணக்கில் இருந்தன. அமெரிக்காவின் ஒரேகான் மாகாணத்தில் உள்ள போர்ட்லேண்டில் வசிக்கும் சைஃபன் தனது வாழ்க்கையில் கடினமான நாட்களை நினைவு கூர்ந்தார், "நான் கடவுளிடம் உதவிக்காக கெஞ்சினேன். என் பிள்ளைகள் மிகவும் சிறியவர்கள். அவர்களை பார்த்து கொள்ள வேண்டும். ஆனால் நான் மிகவும் பலவீனமாக இருக்கிறேன். என் உடல்நிலை சரியில்லை" என்று வேண்டியதாக அவர் கூறினார். சைஃபனின் லாட்டரி சீட்டில் இருந்த எண் வரிசைக்கு ஏப்ரல் 7ம் தேதி 1.3 பில்லியன் டாலர் பரிசுத் தொகை உறுதியானது. கடந்த திங்கள்கிழமை சைஃபனுக்கு லாட்டரி அமைப்பாளர்கள் பரிசுத் தொகையை வழங்கினர். இந்த லாட்டரி மூலம், சைஃபனின் மனைவி மட்டுமின்றி நண்பர்களுக்கும் அதிர்ஷ்டம் அடித்துள்ளது. சைஃபன் வழக்கமாக தனது மனைவி மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து 20க்கும் மேற்பட்ட லாட்டரி சீட்டுகளை வாங்குவார். அவ்வாறு வாங்கிய ஒரு சீட்டு இம்முறை அவருக்கு பெரும் பரிசுத்தொகையை பெற்றுத் தந்துள்ளது. இதனால் தான் லாட்டரி பணத்தில் 25 சதவீதத்தை தனது மனைவி டுவான்பெனுக்கும், 50 சதவீதத்தை தனது தோழி லைசா சோவுக்கும் தருவதாக கூறியுள்ளார். புற்றுநோயால் அவதிப்படும் சைஃபன் கடந்த எட்டு ஆண்டுகளாக கீமோதெரபி சிகிச்சை எடுத்து வருகிறார். 'எனக்கு இன்னும் எவ்வளவு காலம் இருக்கிறது என்று தெரியவில்லை' "என் வாழ்க்கை மாறிவிட்டது. நான் கடவுளிடம் மட்டும் தான் உதவி கேட்டேன். அதன் பின்னர் எல்லாம் நடந்தது. இப்போது நான் என் குடும்பத்தை சிறப்பாக கவனித்துக் கொள்ள முடியும். எனக்கு ஒரு நல்ல மருத்துவரை அணுகி சிகிச்சை பெற முடியும். லாட்டரி பரிசுத் தொகையில் இருந்து கொஞ்சம் பணத்தை செலவழித்து வீடு வாங்க விரும்புகிறேன். " என்று சிபிஎஸ் ஊடகத்திடம் சைஃபன் கூறினார். பட மூலாதாரம்,GETTY IMAGES லாட்டரி பரிசுத் தொகைக்கான காசோலையை பெற்றுக்கொண்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சைஃபன், "இந்தப் பணத்தை செலவழிக்க இன்னும் எத்தனை காலத்துக்கு என் உடல் நலம் ஒத்துழைக்கும் என்று எனக்குத் தெரியவில்லை. நான் இன்னும் எவ்வளவு காலம் உயிருடன் வாழ்வேன் என்பது கூட எனக்குத் தெரியாது" என்றார். தனக்கு லாட்டரியில் பரிசு கிடைத்தது தெரிந்ததும், சைஃபன் அதை தன் மனைவி மற்றும் தோழியிடம் சொல்ல மிகவும் உற்சாகமாக இருந்தார். "என் மனைவியிடம் எங்கே இருக்கிறாய் என்று கேட்டேன். நான் வேலைக்குப் போகிறேன் என்று பதிலளித்தாள். இனி வேலைக்குப் போகத் தேவையில்லை என்றேன்'' என்றார் சைஃபன். அமெரிக்காவின் மிகப் பெரிய லாட்டரி பரிசுத் தொகை 2.04 பில்லியன் டாலர்கள் அமெரிக்காவில் லாட்டரி சீட்டுகளில் தரப்படும் பரிசுத் தொகை வெகுவாக அதிகரித்துவிட்டது. ஒரு பில்லியன் டாலர்களுக்கு மேல் பரிசுத் தொகை பெறுவது சர்வ சாதாரணமாகிவிட்டது. 2022 ல் ஒருவர் 2.04 பில்லியன் டாலர்களை (சுமார் 20 ஆயிரம் கோடி ரூபாய்) வென்றார். இன்றுவரை இந்த தொகை தான் அதிகபட்ச பரிசுத்தொகை. லாட்டரி வெல்லும் வாய்ப்பை மேலும் கடுமையாக்கும் வகையில் விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதனால் $292.2 மில்லியன் டாலர் பரிசை வெல்வதற்கான வாய்ப்புகள் குறைந்தன. தொடர்ந்து லாட்டரி சீட்டை வாங்குவேன் என்று கூறும் சைஃபன், "நான் மீண்டும் லாட்டரியை வெல்லக்கூடும், நான் மீண்டும் அதிர்ஷ்டசாலியாக இருக்க வாய்ப்புகள் உள்ளன" என்கிறார் நம்பிக்கையுடன். https://www.bbc.com/tamil/articles/c97zq0r9pr7o
-
ஜனாதிபதி ரணில் – பசில் இன்று சந்திப்பு!
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ஷவுக்கும் இடையிலான மற்றுமொரு சந்திப்பு இன்று பிற்பகல் நடைபெறவுள்ளது. இருவருக்கும் இடையில் ஐந்தாவது தடவையாக இடம்பெறும் இந்த சந்திப்பு கொழும்பு மஹகமசேகர மாவத்தையில் உள்ள ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெறவுள்ளது. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் மற்றும் நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதிக்கும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கும் இடையில் இறுதியாக கடந்த ஏப்ரல் 23ஆம் திகதி கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. இந்த சந்திப்பின்போது, பிரதமர் தினேஷ் குணவர்தன, அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, ஹரின் பெர்னாண்டோ, டிரான் அலஸ், பிரசன்ன ரணதுங்க மற்றும் கஞ்சன விஜேசேகர ஆகியோர் கலந்து கொண்டனர். இதன்போது, எதிர்வரும் காலங்களில் எந்த தேர்தலை முதலில் நடத்துவது என்பது தொடர்பில் தீர்மானிக்கப்பட வேண்டுமென முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டால், அனைத்துக் கட்சிகளிடமும் எழுத்துப்பூர்வமாக ஆதரவை கேட்பது சிறந்தது எனவும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ இதன்போது கருத்து தெரிவித்துள்ளார். அத்துடன், அரசாங்கத்தின் பல செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டியிருப்பதால், ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பான தீர்மானத்தை எதிர்வரும் ஜூன் மாத இறுதியில் அறிவிக்கவுள்ளதாக ஜனாதிபதி இந்த சந்திப்பின்போது தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/300881
-
உடலிற்கு வலிமையை தரும் கஞ்சாவை சட்டமாக்குங்கள் : அரசிடம் தேரர் வலியுறுத்து
கஞ்சாவை(ganja) சட்டபூர்வமாக்குவதற்கு முன்னுரிமை வழங்குமாறு கோரிக்கை விடுப்பதாக ஜனசேத பெரமுனவின் தலைவர் பத்தரமுல்லை செளரதன தேரர் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் எதிர்காலத்தில் அரசாங்கத்திடம் முறையான கோரிக்கையை முன்வைக்க எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டார். கஞ்சா சோதனைகள் தேவையற்றது கஞ்சா சோதனைகள் தேவையற்றது என்று கூறிய அவர், இலங்கையில்(sri lanka) மதுபானங்கள் இல்லாத காலகட்டத்தில் சாமானியர்கள் கூட கஞ்சாவை பயன்படுத்தியதாக கூறினார். இனத்தின் வளர்ச்சியை ஏற்படுத்துகிறது கஞ்சா பயன்பாடு சிறப்பான உத்வேகத்தையும் வலிமையையும் தருவதுடன் இனத்தின் வளர்ச்சியையும் ஏற்படுத்துகிறது என அவர் தெரிவித்தார். இதேவேளை யுக்திய என்ற பெயரில் காவல்துறையினர், போதைப்பொருள் பாவனையாளர்கள் மற்றும் அதனை விநியோகம் செய்பவர்களை தேடி கைது நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://ibctamil.com/article/ganja-gives-motivation-and-strength-1714808794?itm_source=parsely-api
-
சேலம்: பட்டியலின மக்கள் கோவில் நுழைவுக்கான பேச்சுவார்த்தையில் கலவரம் வெடித்தது ஏன்? பிபிசி கள ஆய்வு
கட்டுரை தகவல் எழுதியவர், ச.பிரசாந்த் பதவி, பிபிசி தமிழுக்காக 4 மே 2024, 05:00 GMT புதுப்பிக்கப்பட்டது 9 மணி நேரங்களுக்கு முன்னர் சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி கிராமத்தில், அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவிலில், வழிபாடு நடத்துவது தொடர்பாக பட்டியலின மக்களுக்கும் பிற்படுத்தப்பட்ட சாதியினருக்கும் இடையே நடந்த கலவரத்தில் கடைகளுக்குத் தீ வைக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அமைதியின்மையை ஏற்படுத்தியது. கலவரத்திற்கான உண்மை காரணம் என்ன? பிபிசி தமிழ் அங்கு கள ஆய்வு மேற்கொண்டபோது தெரிய வந்தது என்ன? கலவரத்தில் நடந்தது என்ன? சேலம் மாவட்டம் காடையம்பட்டி தாலுகா அருகே தீவட்டிப்பட்டி கிராமம் அமைந்துள்ளது. இங்கு பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்தவர்களின் 500 குடும்பங்கள் உள்ளன. இந்த கிராமத்திற்கு மிக அருகிலுள்ள நாச்சினம்பட்டியில் 200 பட்டியலின குடும்பங்கள் உள்ளன. இரு கிராமத்தின் மத்தியில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. கோவிலில் இந்தாண்டுக்கான திருவிழா சில நாட்களுக்கு முன்பு துவங்கியுள்ளது. இந்நிலையில், மே 1ஆம் தேதி இரவு, "ஆதிக்க சாதியினர் தங்களை கோவிலுக்குள்விட மறுக்கிறார்கள்" எனக் குற்றம்சாட்டிய பட்டியலின மக்கள் அவர்களிடம் வாக்குவாதம் செய்துள்ளனர். இதனால் பிரச்னைக்குத் தீர்வு காண, மே 2ஆம் தேதி இருதரப்பையும் அழைத்த வருவாய்த்துறையினர் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இருதரப்பும் சமரசம் அடையாத நிலையில், அன்று மதியமே இருதரப்பிற்கும் கைகலப்பு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் கற்களால் தாக்கிக்கொண்டனர். அப்போது, அப்பகுதியில் இருந்த நகைக்கடை, காய்கறிக்கடை என 5 கடைகளுக்கு மர்ம நபர்கள் தீ வைத்ததால், இது கலவரமாக மாறி தமிழக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உண்மையில் அங்கு என்ன நடந்தது? கலவரத்திற்கான காரணம் என்ன? என்பதை அறிய பிபிசி தமிழ் தீவட்டிப்பட்டி கிராமத்தில் கள ஆய்வு மேற்கொண்டது. இதேபோன்ற பிரச்னை ஏற்பட்ட திருவண்ணாமலை அருகே உள்ள அம்மன் கோவில் ஒன்றில், கோவிலுக்குள் வந்து பட்டியலின மக்கள் வழிபாடு செய்யத் தொடங்கியதால் மற்ற சமூக மக்கள் ஒன்று சேர்ந்து தங்களுக்கென புதிய கோவில் கட்ட தொடங்கியுள்ளனர். இதுகுறித்து விரிவாகப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும். ‘இருதரப்பிலும் பாதிப்பு’ நாங்கள் தீவட்டிப்பட்டி மற்றும் நாச்சினம்பட்டிக்குச் சென்றபோது, இரு கிராமங்களிலும் திரும்பிய திசையெல்லாம் போலீசாரும், திருவிழாவிற்காக வைக்கப்பட்டிருந்த பேனர்களும் காட்சியளித்தன. நாச்சினம்பட்டி நுழைவுப்பகுதியில் பரபரப்பான அந்த சாலையில், கலவரத்திற்கு சாட்சியாகத் தீக்கிரையான கடைகளும் அந்தக் கடைகளில் இருந்த பொருட்களும் இருந்தன. தீக்கிரையான நகைக்கடைக்கு அருகே பூக்கடை நடத்தி வரும் சரஸ்வதியிடம் பேசியபோது, "இந்தக் கட்டடத்தில் ஆதிக்க சாதி, பட்டியல் சாதி எனப் பல்வேறு தரப்பைச் சேர்ந்தவர்கள் கடை வைத்துள்ளனர். தீ பிடித்ததில் இருதரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் நடந்தபோது, அன்று மதியம் 1:00 மணிக்கு மேல் திடீரென இப்பகுதியில் பல இளைஞர்கள் கற்களை வீசித் தாக்கிக் கொண்டு இருந்தனர்," என அன்று நடந்தது குறித்து விவரித்தார். அப்போது ஒரு காய்கறிக்கடையில் தீப்பிடித்ததாகவும் அந்தத் தீ மளமளவென அருகிலுள்ள கடைகளுக்குப் பரவியதாகவும் பிபிசி தமிழிடம் பேசிய சரஸ்வதி கூறினார். இருப்பினும் காய்கறிக்கடை அருகே ஒரு டிப்பர் லாரி நின்றிருந்ததால் யார் தீ வைத்தது எனத் தெரியவில்லை என்கிறார் அவர். சரஸ்வதியிடம் பேசிவிட்டு பட்டியலின மக்கள் வசிக்கும் நாச்சினம்பட்டி கிராமத்தினுள் சென்றபோது அங்குள்ள வேப்பமரத்தின் அடியில், சில பெண்கள், இளைஞர்கள் தலையில் காயத்திற்கான கட்டுகளுடன், மற்றவர்களோடு அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அவர்களிடம் கோவில் தொடர்பாக ஏற்பட்ட கலவரம் குறித்தும் அன்று என்ன நடந்தது எனவும் வினவினோம். ‘கோவிலுக்குள் வரவிடாமல் தடுத்ததால் தான் பிரச்னை’ படக்குறிப்பு,'எங்களை கோவிலுக்குள் வழிபட அனுமதிக்க வேண்டும்' என்று கோரிக்கை வைக்கிறார் தங்காய். இத்தனை ஆண்டுகளாகத் தங்களுக்கு எந்தப் பிரச்னையும் வந்ததில்லை என்றும் "ஆதிக்க சாதி இளைஞர்கள் தற்போது எங்களை கோவிலுக்குள் வரவிடாமல் தடுத்ததால்தான் பிரச்னை" எழுந்ததாகத் தெரிவிக்கிறார் தங்காய். ‘‘எனக்கு 63 வயதாகிறது. பல ஆண்டுகளாக நாங்கள் மாரியம்மன் கோவிலுக்கு உள்ளே சென்று வழிபாடு நடத்தி வருகிறோம். எங்கள் பகுதியில் உற்சவரான மாரியம்மனை வைத்து பூஜை செய்து கோவிலுக்கு அழைத்துச் சென்றுதான் திருவிழா நடத்துவார்கள். அங்குள்ள சாதியினரும் நாங்களும் ஒன்றாகத்தான் இருந்து வந்தோம். ஆனால், இந்த ஆண்டு பட்டியல் சாதியினர் கோவிலுக்குள் வரக்கூடாது என்று பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்த சிறுவர்களும் இளைஞர்களும் கூறியதோடு சாதிப் பெயரை வைத்து மிக மோசமாகத் திட்டியதாகவும்" கண்ணீருடன் தழுதழுத்த குரலில் நம்மிடம் பேசினார் அவர். தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு பேசத் துவங்கிய தங்காய், ‘‘பட்டியலின சாதியில் பிறந்தால் என்ன? நாங்களும் மனிதர்கள்தானே, எங்களுக்கும் கோவிலுக்குள் சென்று வழிபட உரிமை உள்ளது. நாங்கள் எங்கள் உரிமையைத்தான் கேட்கிறோம், எங்களை கோவிலுக்குள் வழிபட அனுமதிக்க வேண்டும், மீண்டும் நாங்கள் பிரச்னையின்றி வாழ வேண்டும்,’’ என்றார். ‘போலீசார் எங்களை மட்டுமே தாக்கினார்கள்’ படக்குறிப்பு,'போலீசார் தாக்கியதில், பத்துக்கும் மேற்பட்ட பெண்கள், இளைஞர்கள் படுகாயமடைந்து உள்ளனர்', என்கிறார் வீரம்மா. கலவரம் முடிந்ததும் போலீசார் தங்கள் கிராமத்தினுள் நுழைந்து கடுமையாக தங்களைத் தாக்கியதாகவும், வீடு புகுந்து பெண்களையும் தாக்கியதாகவும் குற்றம் சாட்டுகிறார் வீரம்மா. ‘‘நான் அன்று வீட்டில்தான் இருந்தேன். திடீரென பிரச்னை எனத் தெரிந்ததும் சென்று பார்த்தபோது, அங்கு எங்கள் பகுதி இளைஞர்கள் மீது ஆதிக்க சாதியினர் கற்களைக் கொண்டு கடுமையாகத் தாக்கினார்கள். பலரும் மண்டை உடைந்து படுகாயமடைந்தனர். கலவரம் முடிவதற்குள் நான் வீட்டுக்கு வந்தபோது, எங்கள் பகுதிக்கு வந்த போலீசார் எங்களை கடுமையாகத் தாக்கி, தகாத வார்த்தைகளால் திட்டினார்கள். அவர்களின் தாக்குதலில், பத்துக்கும் மேற்பட்ட பெண்கள், இளைஞர்கள் படுகாயமடைந்து உள்ளனர்,’’ என்கிறார் வீரம்மா. ‘நான் வேலைக்கு போயிட்டு வந்தேன், என்னையும் அடித்தார்கள்’ படக்குறிப்பு,கலவரம் நடந்த அன்று கூலி வேலைக்குச் சென்று வீடு திரும்பிய தன்னை போலீசார் தாக்கியதாகக் கூறுகிறார் பசுபதி. வீரம்மாவின் கூற்றையே பசுபதியும் கூறுகிறார். காலில் காயமடைந்து படுக்கையில் இருந்தபடி நம்மிடம் பேசிய பசுபதி, ‘‘அன்று கலவரம் நடந்தது குறித்து எனக்கு எதுவுமே தெரியாது. கூலி வேலைக்குச் சென்றுவிட்டு மாலை நான் வீட்டுக்கு வந்தபோது திடீரென வீட்டிற்குள் வந்த போலீசார் என்னை லத்தியால் கடுமையாக அடித்தார்கள். எதற்காக அடிக்கிறீர்கள் என நான் கேட்டபோது என்னைத் திட்டியதுடன், கலவரம் செய்கிறாயா? எனக் கூறி அடித்தார்கள்,’’ என்கிறார். மேலும் தனது காயத்தைக் காண்பித்து, இரு நாட்களாகப் படுக்கையில் இருப்பதாகவும், தனக்கு ஏற்கெனவே பல அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டு உள்ளதாகவும் இந்த நிலையில் போலீஸார் தாக்கியுள்ளதாகவும் தெரிவித்தார் பசுபதி. ஆனால், போலீசார் தாக்கியதாக பட்டியலின மக்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளை மறுக்கிறார், சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் கபிலன். பிபிசி தமிழிடம் பேசிய காவல் கண்காணிப்பாளர் அருண் கபிலன், ‘‘நாங்கள் கலவரத்தில் ஈடுபட்டோரைத்தான் கைது செய்தோம். அப்போது, ஆதாரத்திற்காக நாங்கள் வீடியோ எடுத்துதான் கைது நடவடிக்கையில் ஈடுபட்டோம். பட்டியலின மக்கள் புகார் தெரிவித்தால், வீடியோவை ஆய்வு செய்து தவறு இருந்தால் அத்துமீறிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,’’ எனக் கூறி குற்றச்சாட்டுகளை மறுக்கிறார். பட்டியலின மக்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள், கோரிக்கைகள் குறித்து பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்த மக்களின் கருத்துகளைக் கேட்டறிய தீவட்டிப்பட்டி கிராமத்திற்குச் சென்றோம். கிராமத்தின் நுழைவுப் பகுதியில் இருந்த மாரியம்மன் கோவில் திருவிழாக் கோலத்தில் அலங்காரம், விளக்குகளுடன் காட்சி அளித்தாலும், கலவரத்தால் திருவிழா தடைபட்டுள்ளதால் கோவிலே வெறிச்சோடி வெறும் போலீசாருடன் காணப்பட்டது. ‘பட்டியலின மக்கள் உள்ளே வரக்கூடாது’ படக்குறிப்பு,மாரியம்மன் கோவில் தர்மகர்த்தா கோபிநாத். அந்தக் கோவிலைக் கடந்து சென்று பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதியினரைச் சந்தித்துப் பேசினோம். அப்போது அவர்கள் பட்டியல் சாதி மக்கள் கோவிலுக்குள் வரக்கூடாது எனவும் இது தங்கள் பாரம்பரியம் எனவும் பிபிசி தமிழிடம் தெரிவித்தனர். நம்மிடம் பேசிய கோவிலின் தர்மகர்த்தாவான கோபிநாத், ‘‘பல தலைமுறையாக நாங்கள் இந்தக் கோவிலை நடத்தி வருகிறோம். இதை எங்கள் சாதி உள்பட ஐந்து சாதியைச் சேர்ந்தவர்கள் நடத்துகிறோம். அவர்கள் (பட்டியலின மக்கள்) கோவிலுக்கு வெளியில் நின்றுதான் வழிபாடு செய்வார்கள், பல தலைமுறையாக அப்படித்தான் கடைபிடிக்கிறோம். நாங்கள் எங்கள் பாரம்பரியத்தைக் கடைபிடிப்போம், அவர்கள் எங்களுக்குத் தேவையில்லை எங்கள் கோவிலுக்கு அவர்கள் வர வேண்டாம்,’’ என்று கூறினார் அவர். "இது அனைவருக்கும் பொதுவான கோவில்தானே? பிறகு ஏன் பட்டியலின மக்கள் வர வேண்டாம் என்கிறீர்கள்?" என்று அவரிடம் கேட்டபோது, ‘‘இது தான் எங்கள் பாரம்பரியம், பல ஆண்டுகளாகக் கடைபிடிக்கிறோம், விட்டுத் தரமாட்டோம்,’’ என்றார். ‘வெளியில் நின்றுதான் வழிபடுவார்கள்’ படக்குறிப்பு,'எங்களிடம் தேர் கொடுங்கள் இல்லையெனில் திருவிழா நடத்த வேண்டாம் எனக் கூறியதால் கலவரம் நடந்துள்ளது,' என்கிறார் பாவையம்மாள். கோவிலுக்கு வெளியில் நின்றுதான் இத்தனை ஆண்டுகளாக பட்டியலின மக்கள் வழிபட்டார்கள் என்கிறார் பாவையம்மாள். ‘‘பல தலைமுறைகளாக கோவிலுக்கு வெளியில் நின்று தான் அவர்கள் (பட்டியலின மக்கள்) வழிபடுவார்கள், தீர்த்தம் வாங்குவார்கள். அவர்கள் உள்ளே வந்து வழிபட்டது இல்லை, அந்தக் கூட்டத்தில் இருக்கும் ஒரு இளைஞர்தான் கோவிலுக்குள் வர வேண்டும், எங்களிடம் தேர் கொடுங்கள் இல்லையெனில் திருவிழா நடத்த வேண்டாம் எனக் கூறினார். அதனால்தான் கலவரம் நடந்துள்ளது,’’ என்கிறார் அவர். பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதிகள் சார்பாக நம்மிடம் பேசிய கோவில் நிர்வாகத்தைச் சேர்ந்த மணி மற்றும் சேனாதிபதியும், பாவையம்மாள் கருத்தைத்தான் எதிரொலித்தனர். கலவரம் தொடர்பாகவும், பட்டியலின மக்களின் கோரிக்கை மற்றும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதியினரின் நிலைப்பாடு குறித்தும், பிபிசி தமிழ் சேலம் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் விளக்கம் கேட்டது. ‘சமூக நீதியை உறுதிசெய்வோம்’ – மாவட்ட ஆட்சியர் படக்குறிப்பு,போலீசார் தாக்கியதில் காயமடைந்த பெண். பிபிசி தமிழ் விளக்கம் கேட்டு சேலம் மாவட்ட ஆட்சியரைத் தொடர்பு கொண்டபோது, செல்போன் வாயிலாகப் பதிலளித்த ஆட்சியர் பிருந்தா தேவி, ‘‘கலவரம் ஏற்படுவதற்கு முன்பு இருதரப்பு மக்களையும் அழைத்து அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தினோம். அப்போது பட்டியலின மக்களை கோவிலுக்குள் அனுமதிப்பது தொடர்பாக தங்களுக்குள் ஆலோசனை நடத்த ஒருநாள் அவகாசம் கேட்டனர். ஆனால், அமைதிப் பேச்சுவார்த்தை முடித்த அன்றே ஏன் கலவரம் செய்தார்கள் எனத் தெரியவில்லை," என்றார். மேலும், இந்தச் சம்பவம் குறித்து முழுமையாக விசாரித்து வருவதாகவும் போலீசார் கண்காணிப்பில் நிலைமை மீண்டும் கட்டுக்குள் வந்துள்ளதாகவும் தெரிவித்தார். "பட்டியலின மக்கள் கோவிலுக்குள் செல்ல ஏற்பாடு செய்து, சமூக நீதியை உறுதிப்படுத்துவோம்,’’ என விளக்கம் அளித்துள்ளார். ‘மீண்டும் சுமூகமாக திருவிழா நடத்த திட்டம்’ – காவல் கண்காணிப்பாளர் படக்குறிப்பு,பட்டியலின மக்கள் பகுதியில் போலீசார் போலீசார் வேண்டுமென்றே வீடு புகுந்து தாக்கியதாக பட்டியல் சாதியினர் முன்வைத்த குற்றச்சாட்டுகள் குறித்து காவல்துறையிடம் விளக்கம் கேட்டபோது, செல்போன் வாயிலாக பதிலளித்த சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் கபிலன், ‘‘1972 முதல் அந்தக் கோவில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. அங்கு பட்டியலின சாதியினரை உள்ளே நுழையக்கூடாது என ஆதிக்க சாதியினர் கூறியதால், இருதரப்பையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினோம். பேச்சுவார்த்தை முடிந்த நிலையில் கலவரத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை 30 பேர் கைது செய்யப்பட்டு, சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் கடைகளுக்குத் தீ வைத்தவர்களைத் தேடி வருகிறோம். இருதரப்பையும் கைது செய்யும்போது நாங்கள் ஆதாரத்திற்காக வீடியோவும் எடுத்துள்ளோம். போலீசார் வேண்டுமென்றே யாரையும் தாக்கவில்லை. அப்படி புகார் வரும் பட்சத்தில் எங்கள் வீடியோக்களை ஆய்வு செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மீண்டும் திருவிழாவை சுமூகமாக நடத்த இருதரப்பிடமும் பேச்சவார்த்தை நடத்துவோம்,’’ என விளக்கம் அளித்தார். அறநிலையத்துறை அதிகாரிகள் சொல்வது என்ன? "அரசுக் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு கோவிலில் பட்டியல் சாதியினர் நுழைவதில் சிக்கல் என்ன?" என்று இந்து சமய அறநிலையத்துறை காடையம்பட்டி ஆய்வாளர் கதிரேசனிடம் கேட்டபோது, ‘‘இதுவரை அந்தக் கோவிலில் இதுபோன்ற பிரச்னை, கலவரம் வந்தது இல்லை. பட்டியல் சாதியினர் சார்பில் எந்தப் புகாரும் வரவில்லை. அரசு கோவிலுக்குள் நுழைந்து வழிபாடு செய்வது தனிமனித உரிமை. இதை உறுதிப்படுத்த இருதரப்பிடமும் பேச்சுவார்த்தை நடத்தினோம், அதற்குள் கலவரத்தில் ஈடுபட்டுள்ளனர். பிரச்னையை விரைவில் சரி செய்வோம்,’’ என்றார். https://www.bbc.com/tamil/articles/c1vw66yn2evo
-
வெளியக தலையீடற்ற பொறிமுறையை நிறுவுவதிலும் அதிகாரங்களைப் பகிர்வதிலும் அர்ப்பணிப்புடன் செயற்படுகிறோம் - ஜப்பானிய வெளிவிவகார அமைச்சரிடம் அலி சப்ரி
04 MAY, 2024 | 06:42 PM (நா.தனுஜா) ஒருமைப்பாடு மற்றும் தேசிய நல்லிணக்கத்தை அடைந்துகொள்வதை முன்னிறுத்தி எவ்வித வெளியகத் தலையீடுகளுமின்றி உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு போன்ற உள்ளக செயன்முறைகளை நிறுவுவதற்கும், அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பதற்கும் அரசாங்கம் கொண்டிருக்கும் கடப்பாடு குறித்தும் ஜப்பானிய வெளிவிவகார அமைச்சரிடம் எடுத்துரைத்ததாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். இருநாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வருகைதந்துள்ள ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் யொகோ கமிகவா மற்றும் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஆகியோரின் கூட்டு ஊடக சந்திப்பு இன்று சனிக்கிழமை (04) கொழும்பிலுள்ள வெளிவிவகார அமைச்சில் நடைபெற்றது. அங்கு கருத்து வெளியிட்ட அமைச்சர் அலி சப்ரி மேலும் கூறியதாவது: ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையில் சுமார் 72 வருடகாலமாக நெருங்கிய நட்புறவு பேணப்பட்டு வருகின்றது. இந்நட்புறவானது அண்மைய காலங்களில் இரு நாடுகளுக்கும் இடையில் பரஸ்பரம் இடம்பெற்ற உயர்மட்ட விஜயங்களால் மேலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் நானும் ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் யொகோ கமிகவாவும் பரந்துபட்ட விடயங்கள் தொடர்பில் இருதரப்புக் கலந்துரையாடலை முன்னெடுத்திருந்தோம். இதன்போது கடந்த காலங்களில் இலங்கை மிகமோசமான பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருந்த வேளையில், ஜப்பான் வெளிப்படுத்திய உடனிற்பு மற்றும் வழங்கிய உதவிகளுக்காக நான் அவருக்கு நன்றி தெரிவித்தேன். அதேபோன்று வெளியகக் கடன் மறுசீரமைப்பு செயன்முறையில் ஜப்பான் வழங்கிவரும் பங்களிப்பு மற்றும் ஜப்பான் அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட நிதியுதவி என்பவற்றுக்கும் நன்றி கூறுகிறேன். அதேபோன்று பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தவும், கடன் உறுதிப்பாட்டை விரிவுபடுத்தவும், வளர்ச்சியை மையமாகக் கொண்ட மறுசீரமைப்பு செயன்முறைகளை நடைமுறைப்படுத்தவும் இலங்கை அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் குறித்து ஜப்பான் வெளிவிவகார அமைச்சருக்குத் தெளிவுபடுத்தினேன். இன்றளவிலே இலங்கை பொருளாதார நெருக்கடியிலிருந்து மாத்திரம் மீட்சியடையவில்லை. மாறாக, இம்மீட்சியானது இலங்கை மக்களின் மீண்டெழும் தன்மையையும் அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. அதன்படி, சர்வதேச நாணய நிதியத்தின் அடுத்த மீளாய்வுக்குள் கடன் மறுசீரமைப்பு செயன்முறை பூர்த்திசெய்யப்படுமென எதிர்பார்க்கின்றோம். அதேவேளை இலங்கையின் பொருளாதார உறுதிப்பாடு, மீட்சி மற்றும் எதிர்கால வளர்ச்சி என்பன குறித்த அமைச்சர் யொகோ கமிகவா தனது நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளார். அதன்படி தற்போது இலங்கையில் முன்னெடுப்பதற்கென உத்தேசிக்கப்பட்டுள்ள திட்டங்களையும், மின்சாரம், உட்கட்டமைப்பு, துறைமுகம் மற்றும் நெடுஞ்சாலை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் புதிய முதலீட்டுத் திட்டங்களையும் ஆரம்பிக்குமாறு நான் அவருக்கு அழைப்பு விடுத்துள்ளேன். இலகு ரயில் சேவைத்திட்டத்தையும் மீள ஆரம்பிப்பது குறித்து கலந்துரையாடியிருக்கிறோம். மேலும், ஒருமைப்பாடு மற்றும் தேசிய நல்லிணக்கத்தில் அடையப்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து அமைச்சர் யொகோ கமிகவாவுக்கு விளக்கமளித்ததுடன், அவற்றை முன்னிறுத்தி எவ்வித வெளியகத் தலையீடுகளுமின்றி உண்மை மற்றம் நல்லிணக்க ஆணைக்குழு போன்ற உள்ளக செயன்முறைகளை நிறுவுவதற்கும், அதிகாரங்களை பகிர்ந்தளிப்பதற்கும் அரசாங்கம் கொண்டிருக்கும் கடப்பாடு குறித்தும் எடுத்துரைத்தேன் என்று தெரிவித்தார். https://www.virakesari.lk/article/182696
-
கடன் மறுசீரமைப்பை பூர்த்திசெய்வதற்கு அவசியமான ஒத்துழைப்பையும் ஆதரவையும் வழங்கத் தயார் - இலங்கையிடம் சீனா உத்தரவாதம்
04 MAY, 2024 | 06:11 PM (நா.தனுஜா) கடன்மறுசீரமைப்பு செயன்முறையைப் பூர்த்திசெய்வதற்கு இலங்கைக்கு அவசியமான முழுமையான ஒத்துழைப்பையும் ஆதரவையும் வழங்குவதற்குத் தயாராக இருப்பதாக சீனா உறுதியளித்துள்ளது. ஜோர்ஜியாவின் ட்பிலிஸி நகரில் 2 - 5ஆம் திகதி வரை நடைபெறும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் வருடாந்த மாநாட்டில் இலங்கையின் சார்பில் கலந்துகொள்வதற்காக ஜோர்ஜியா சென்றிருக்கும் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க மற்றும் திறைசேரியின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன ஆகியோர் அங்கு பல்வேறு உயர்மட்டப் பிரதிநிதிகளுடன் இருதரப்பு சந்திப்புக்களை நடத்திவருகின்றனர். அதன் ஓரங்கமாக இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவுக்கும், சீனாவின் பிரதி நிதியமைச்சர் லியோ மின்னுக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பின்போது இலங்கையின் பொருளாதார மீட்சி, சர்வதேச நாணய நிதியத்தின் உதவி செயற்றிட்டம், கடன் மறுசீரமைப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. இதன்போது கடன் மறுசீரமைப்பு செயன்முறையை பூர்த்தி செய்வதற்கு அவசியமான முழுமையான ஒத்துழைப்பையும், ஆதரவையும் வழங்குவதற்குத் தயாராக இருப்பதாக சீன பிரதி நிதியமைச்சர் லியோ மின் உறுதியளித்துள்ளார். அதுமாத்திரமன்றி இலங்கைக்கு அனைத்து வழிகளிலும் உதவுவதில் சீனா கொண்டிருக்கும் வலுவான நிலைப்பாட்டையும் அவர் மீளுறுதிப்படுத்தினார். அதேபோன்று ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதித் தலைவர் யிங்மிங் யாங்குடனான சந்திப்பின்போது 2024 - 2028ஆம் ஆண்டு வரையான புதிய ஒத்துழைப்பு செயற்றிட்டம் குறித்தும், நுண்பாகப் பொருளாதார ஸ்திரத்தன்மையை மீளுறுதிப்படுத்துவதற்கான முயற்சிகளில் ஆசிய அபிவிருத்தியின் ஒத்துழைப்பு என்பன தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. அத்தோடு பொருளாதாரத்திலும் கடன் மறுசீரமைப்பு செயன்முறையிலும் அடையப்பட்டிருக்கும் முன்னேற்றம் குறித்தும் இதன்போது ஆராயப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/182692
-
சனிக்கிழமையன்று இலங்கை வருகிறார் ஜப்பான் வெளிவிவகார அமைச்சர்
உத்தியோகபூர்வ கடன் வழங்குநர் குழுவினருடனான இணக்கப்பாடு வெளிப்படைத்தன்மையான முறையில் அடையப்படுவது அவசியம் - ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் 04 MAY, 2024 | 05:18 PM (நா.தனுஜா) 'நண்பன் என்ற ரீதியில் இலங்கைக்கு அவசியமான ஒத்துழைப்புக்களை ஜப்பான் தொடர்ந்து வழங்கும்' என்ற செய்தியைக் கூறுவதற்காகவே தான் இலங்கைக்கு வருகைதந்திருப்பதாக தெரிவித்துள்ள ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் யொகோ கமிகவா, இலங்கைக்கும் உத்தியோகபூர்வ கடன் வழங்குநர் குழுவினருக்கும் இடையில் வெகுவிரைவில் இருதரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் என எதிர்பார்ப்பதாகவும், இருப்பினும் அந்த இணக்கப்பாடு வெளிப்படைத்தன்மை வாய்ந்த முறையில் அடைந்துகொள்ளப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். இருநாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வருகைதந்துள்ள ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் யொகோ கமிகவா மற்றும் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஆகியோரின் கூட்டு ஊடக சந்திப்பு இன்று சனிக்கிழமை (04) கொழும்பிலுள்ள வெளிவிவகார அமைச்சில் நடைபெற்றது. அங்கு கருத்து வெளியிட்ட அமைச்சர் யொகோ கமிகவா மேலும் கூறியதாவது: எனது பிறப்பிடமான ஷிஸுவோகா 'க்ரீன் டீ'க்கு பெயர்போன இடமாகும். எனவே, 'க்ரீன் டீ' விளையும் மண்ணில் இருந்து முதன்முறையாக 'சிலோன் டீ' விளையும் மண்ணுக்கு வருகைதருவதையிட்டு மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். இரண்டாம் உலகப் போரின் பின்னர் ஜப்பானுக்கு இலங்கை வழங்கிய ஊக்கமும், சமாதானத்தைக் கட்டியெழுப்பல், புனர்வாழ்வளித்தல் மற்றும் மீள்கட்டியெழுப்பல் ஆகியவற்றை இலக்காகக் கொண்ட இலங்கையின் முயற்சிகளுக்கு யஸுஷி அகாஷி தலைமையில் ஜப்பானால் வழங்கப்பட்ட ஆதரவும் இரு நாட்டு மக்களினதும் நினைவலைகளில் இருக்குமென நம்புகிறேன். கடந்த ஜனவரி மாதம் ஜப்பானின் நோட்டோ பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்ட வேளையில், இலங்கை எமக்கு பல்வேறு வழிகளிலும் உதவிகளை வழங்கியது. அதேவேளை இரு வருடங்களுக்கு முன்னர் இலங்கை மிக மோசமான பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருந்த வேளையில், இலங்கை மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய வகையில் ஜப்பான் பல்வேறு உதவித்திட்டங்களை வழங்கியது. அதுமாத்திரமன்றி உத்தியோகபூர்வ கடன் வழங்குநர் குழுவுக்கு இணைத்தலைமை வகிக்கும் ஜப்பான், இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் முன்னெடுக்கப்படும் சர்வதேச மட்டத்திலான பேச்சுவார்த்தைகளுக்குத் தலைமைதாங்குகிறது. இந்து சமுத்திர பிராந்தியத்தின் கேந்திர நிலைய முக்கியத்துவம் வாய்ந்த பகுதியில் அமைந்திருக்கும் இலங்கையில் ஸ்திரத்தன்மை மற்றும் பொருளாதார அபிவிருத்தி என்பன மீளுறுதிப்படுத்தப்படுவது ஒட்டுமொத்த இந்து - பசுபிக் பிராந்தியத்தினதும் உறுதிப்பாடு மற்றும் சுபீட்சம் என்பவற்றுக்கு இன்றியமையாததாகும். 'நண்பன் என்ற ரீதியில் ஜப்பான் இலங்கைக்குத் தொடர்ந்து ஆதரவு வழங்கும்' என்ற செய்தியை கூறுவதற்காகவே நான் இங்கு வந்திருக்கிறேன். அதற்கமைய வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியுடனான சந்திப்பின்போது இரு நாடுகளுக்கும் இடையிலான நல்லுறவை செயற்திறன் மிக்க வகையில் மேலும் வலுப்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து ஆராய்ந்தோம். அதேபோன்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமைத்துவத்தின் கீழ் கடன் நெருக்கடி மற்றும் மறுசீரமைப்பு செயன்முறையை நடைமுறைப்படுத்தல் ஆகியவற்றை இலங்கை உரியவாறு கையாள்கிறது. அந்த வகையில், இலங்கைக்கும் உத்தியோகபூர்வ கடன் வழங்குநர் குழுவினருக்கும் இடையில் வெகுவிரைவில் இருதரப்புப் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுமென நாம் எதிர்பார்க்கின்றோம். இருப்பினும் அனைத்துக் கடன்வழங்குநர்களுடனான கடன் மறுசீரமைப்பு இணக்கப்பாடானது வெளிப்படைத்தன்மை வாய்ந்த முறையில் அடையப்படவேண்டும். மேலும், தேசிய நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதை முன்னிறுத்தி இலங்கை அரசாங்கத்தினால் தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் முயற்சிகளுக்கு ஜப்பான் ஆதரவளிக்கும். இலங்கையினால் தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் பலதரப்பட்ட மறுசீரமைப்புக்கள் நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் வழமை நிலைக்குக் கொண்டுவருவதற்கு இன்றியமையாதவையாகும் என்று வலியுறுத்தினார். https://www.virakesari.lk/article/182677
-
அளவுக்கு அதிகமான இன்சுலின்… நோயாளிகளை கொன்ற செவிலியருக்கு 380 – 760 ஆண்டுகள் சிறை
அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் வசிப்பவர் 41 வயதான செவிலியர் ஹீதர் பிரஸ்டீ. இவர் 2020 முதல் 2023 ஆம் ஆண்டு வரை அங்குள்ள நான்கு மாவட்டங்களில் ஐந்துக்கும் மேற்பட்ட முதியோர் மறுவாழ்வு மையங்களில் செவிலியராக பணியாற்றி வந்திருக்கிறார். இந்த நிலையில் இவர் பணியாற்றி வரும் மறுவாழ்வு மையங்களில் வழக்கத்திற்கு மாறாக தொடர்ந்து 17க்கும் அதிகமான நோயாளிகள் மர்மமான முறையில் உயிரிழப்பது, அடிக்கடி முதியோர்கள் உடல் நலக்குறைவால் பாதிக்கப்படுவது போன்ற சம்பவங்கள் நடந்திருக்கிறது. இறந்தவர்கள் அனைவரும் 43 முதல் 104 வயதுடைய முதியோர்கள் என்பதால் மறுவாழ்வு மையத்தில் பணியாற்றும் சக செவிலியர்கள் இதனை பெரிதாக கண்டுகொள்ளாமல் வந்திருக்கின்றனர். ஆனால் ஒரு கட்டத்தில் செவிலியர் ஹீதர் பிரஸ்டீயின் நடத்தை, அவர் நோயாளிகளை அலட்சியப்படுத்தும் மற்றும் அவர்களை இழிவான முறையில் கடுமையாக திட்டுவது போன்றவை சக செவிலியர்களை சந்தேகப்பட வைத்தது. எனவே செவிலியர் ஹீதர் பிரஸ்டீவை பிடித்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது, இவர் நோயாளிகளின் நீரிழிவு அளவை பொருட்படுத்தாமல் அதிகப்படியான இன்சுலின் வழங்கியதாக கூறியிருக்கிறார். இதனால் இவர் இன்சுலின் வழங்கிய 19 நோயாளிகளில் 17பேர் நீரிழிவு நோய் இல்லாமலே அளவுக்கு அதிகமாக இன்சுலின் வழங்கியதால் இறந்திருக்கின்றனர். மேலும் செவிலியர் ஹீதர் பிரஸ்டீ மன அழுத்தத்தால் நோயாளிகளிடமும், மற்றவர்களிடமும் எப்போதும் கோபமாக நடந்துகொண்டதாக கூறியுள்ளார். இவர் பல நோயாளிகளை கடுமையாக காயப்படுத்தியதாகவும், இரவு நேர ஷிப்டுகளின் போது நோயாளிகளுக்கு இன்சுலின் செலுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டார். ஆரம்பத்தில் இந்த குற்றங்களை மறுத்து வந்த செவிலியர் ஹீதர் பிரஸ்டீ கடந்த பிப்ரவரி மாத விசாரணையின் போது, தனது வழக்கறிஞர்களிடம் தான் குற்றத்தை ஒப்புக்கொள்ள விரும்புவதாகக் கூறியுள்ளார். எனவே பிட்ஸ்பர்க்கிலிருந்து வடக்கே உள்ள பட்லர் நகர நீதிமன்றத்தில் நடந்த விசாரணையின் முடிவில், 41 வயதான ஹீதர் பிரஸ்டீக்கு, மூன்று ஆயுள் தண்டனையும், 380 – 760 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் நீதிமன்றத்தின் அறிக்கையின்படி, 2018 ஆம் ஆண்டு மேற்கு பென்சில்வேனியாவில் உள்ள முதியோர் இல்லத்தில் தனது செவிலியர் பணியை தொடங்கிய ஹீதர் பிரஸ்டீ, 2022 முதல் மே 2023 க்கு இடையில் தனது அம்மாவிற்கு பல கடிதங்களை அனுப்பினார், அதில் அவர் பல்வேறு நோயாளிகள் மற்றும் சக ஊழியர்களுடன் தனது மகிழ்ச்சியற்ற தன்மையைப் பற்றி விவாதித்துள்ளார், மேலும் தான் மிக மன அழுத்தத்தில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது தெரிய வந்துள்ளது. நன்றி – விகடன் https://thinakkural.lk/article/300874
-
OnmaxDT பிரமிட் திட்டத்தின் ஊடாக பண மோசடி செய்த ஆறு பேருக்கு பயணத்தடை!
04 MAY, 2024 | 04:20 PM ஒன்மேக்ஸ் டிடி (OnmaxDT) பிரமிட் திட்டத்தின் ஊடாக பணமோசடி செய்த ஆறு பேருக்கு வெளிநாடு செல்வதற்கு தடை விதித்து கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் நேற்று (03) உத்தரவிட்டுள்ளது. குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் விடுக்கப்பட்ட கோரிக்கையை அடுத்து இந்த வெளிநாட்டுப் பயணத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தினருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சீதுவ, திஸ்ஸமஹாராம, லுனுகம்வெஹர ரன்ன, அகுனுகொலபலஸ்ஸ, மற்றும் ரத்கம ஆகிய பிரதேசங்களில் வசிக்கும் ஆறு பேருக்கே இவ்வாறு பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/182666
-
திப்பு சுல்தான்: ஆங்கிலேயர்களால் கொல்லப்பட்ட இறுதி நாளின் முழு பின்னணி
திப்பு சுல்தான்: கொல்லப்பட்ட இறுதி நாளில் ஆங்கிலேயர்களால் வீழ்த்தப்பட்டதன் முழு பின்னணி பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன் பதவி, பிபிசி தமிழ் 4 மணி நேரங்களுக்கு முன்னர் பதினெட்டாம் நூற்றாண்டில் மைசூர் ராஜ்ஜியத்தை ஆண்டு, ஆங்கிலேயர்களுடனான போரில் வீழ்ச்சியடைந்த திப்பு சுல்தான், போர்க்களத்தில் மரணமடைந்த நாள் இன்று. திப்பு சுல்தானின் கடைசித் தருணத்தில் என்ன நடந்தது? பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் மைசூர் நாட்டை ஆட்சிசெய்த திப்பு சுல்தான், தான் ஆட்சியில் இருந்த 17 ஆண்டுகளிலும் தொடர்ந்து ஆங்கிலப் படைகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. 1799இல் நடந்த நான்காவது மைசூர் போரில் கொல்லப்பட்ட திப்பு சுல்தான் இரண்டு நூற்றாண்டுகளுக்குப் பிறகும் பல உணர்வுகளை எழுப்பக்கூடியவராக இருக்கிறார். திப்பு சுல்தானின் வாழ்க்கை வரலாறு பல வரலாற்று ஆசிரியர்களால் விரிவாக எழுதப்பட்டிருக்கிறது. இவற்றில், கொல்கத்தா பல்கலைக் கழகத்தின் வரலாற்றுத் துறை பேராசிரியரான மொஹிபுல் ஹசன் எழுதிய 'History of Tipu Sultan', அவரைப் பற்றி எழுதப்பட்ட வரலாறுகளில் மிக முக்கியமானது. இந்த நூலில், திப்பு சுல்தானின் கடைசி நாட்கள் மிக விரிவாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. திப்பு சுல்தானுக்கு எதிரான கூட்டணி பட மூலாதாரம்,GETTY IMAGES திப்பு சுல்தானுக்கு எதிராக 1787வாக்கிலேயே மெல்ல மெல்ல ஒரு பெரிய கூட்டணி உருவாக ஆரம்பித்திருந்தது. ஆங்கிலேயர்கள் - மராத்தியர்கள் - நிஜாம் ஆகியோர் ஒன்றாக இணைந்திருந்தனர். இதனால், பிரான்ஸ் அரசிடம் உதவிகோரி ஒரு தூதுக்குழுவை அனுப்பினார் திப்பு. ஆனால், சாதகமான பதில் வரவில்லை. ஆங்கிலேயர்களுடனான வெர்செய்ல்ஸ் உடன்படிக்கையை மீற, பிரான்ஸ் விரும்பவில்லை. இதற்குப் பிறகு இந்தியாவின் கவர்னர் ஜெனரலான கார்ன்வாலிஸுடன் கடிதங்களின் மூலம் சமாதானத்திற்கு அழைப்பு விடுத்துக்கொண்டே இருந்தார் திப்பு. ஆனால், கார்ன்வாலிஸ் இதில் பெரிய ஆர்வம் காட்டவில்லை. இதுபோலவே தொடர்ந்து ஆண்டுகள் கழிந்தன. 1799ஆம் ஆண்டில் நிலவரம் உச்சகட்டத்தை எட்டியிருந்தது. அந்த ஆண்டு மீண்டும் அமைதிக்கு அழைப்பு விடுத்தார் திப்பு. இந்த முறை அவர் பேச்சு வார்த்தையை ஆங்கிலேயத் தளபதியான ஹாரிசுடன் நடத்த வேண்டியிருந்தது. திப்புவின் அழைப்பிற்கு ஹாரிஸ் அனுப்பிய பதில் கடிதத்தில் திப்பு தனது ராஜ்ஜியத்தில் பாதியை கம்பனிக்கு வழங்க வேண்டும் என்றும் இரண்டு கோடி ரூபாயை பிணைத் தொகையாகத் தர வேண்டும் என்றும் அதில் ஒரு கோடியை உடனடியாகவும் மீதி ஒரு கோடியை ஆறு மாதங்களிலும் தர வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது. அதுவரை திப்பு தனது நான்கு மகன்களையும் நான்கு தளபதிகளையும் ஹாரிஸிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது. இந்த ஒப்பந்தத்தை ஏற்பதானால், அதை 24 மணிநேரத்திற்குள் செய்ய வேண்டும் என்றும் 48 மணிநேரத்திற்குள் எட்டுப் பேரையும் ஒரு கோடி ரூபாயையும் தர வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது. இந்த நிபந்தனைகள் மிக மோசமானதாக திப்புவுக்கு தோன்றின. ஏப்ரல் 28ஆம் தேதி ஒரு கடிதத்தை ஹாரிசுக்கு அனுப்பினார் திப்பு. அதில், ஆங்கிலப் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாகச் சொன்னார் அவர். ஆனால், 29ஆம் தேதி மதியம் 3 மணிக்குள் ஏற்கெனவே சொன்ன நிபந்தனைகளை ஒப்புக்கொள்ள வேண்டுமெனக் கூறினார் ஹாரிஸ். இதற்கிடையில் ஸ்ரீரங்கப்பட்டனத்தின் கோட்டையைத் தகர்க்கும் பணிகளும் துவங்கியிருந்தன. ஏப்ரல் 28ஆம் தேதியிலிருந்தே கோட்டையை நோக்கி குண்டுகள் வெடிக்கப்பட்டன. மே 3ஆம் தேதி கோட்டையில் முதல் உடைப்பு ஏற்பட்டது. அந்தப் பிளவைப் பார்வையிட்ட ஆங்கில கம்பனி அதிகாரிகள், அடுத்த நாள் நண்பகலில் தாக்குதல் நடத்த முடிவு செய்தனர். அடுத்த நாள் நண்பகல், அந்த உடைப்புப் பகுதியை திப்பு சுல்தான் வந்து பார்வையிட்டார். அதைச் சரிசெய்ய உத்தரவிட்டுவிட்டு, அரண்மனைக்குச் சென்றார். அங்கு அவரைச் சந்தித்த ஜோதிடர்கள் அன்றைய தினம் நல்ல நாளில்லை என்று கூறினர். அவர்களது ஆலோசனைப்படி பலருக்கு தானங்களைச் செய்தார் திப்பு. திப்பு சுல்தானின் இறுதித் தருணங்கள் பட மூலாதாரம்,ULLSTEIN BILD DTL. படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் இதற்குப் பிறகு தனது முகாமிற்கு வந்த திப்பு சுல்தான், சாப்பிடுவதற்காக அமர்ந்தார். அப்போதுதான், கோட்டையின் மேற்குப் பகுதிக்குப் பொறுப்பாக இருந்த சயீத் கபார் பீரங்கிக் குண்டு தாக்கி உயிரிழந்த தகவல் வந்து சேர்ந்தது. மிகுந்த விசுவாசியான சயீத்தின் மரணம் திப்புவை வெகுவாகப் பாதித்தது. அவர் உடனடியாக குதிரை மீதேறி உடைப்பு ஏற்பட்டிருந்த இடத்தைச் சென்றடைந்தார். ஆனால், அவர் அங்கு வந்து சேரும் முன்பே ஆங்கிலேயர்கள் அதைக் கைப்பற்றிக் கொடியேற்றியிருந்தனர். திப்புவின் வருகை அங்கிருந்த மைசூர் வீரர்களுக்கு உத்வேகமளித்தது. ஆனால், சிறிது நேரத்திலேயே ஆங்காங்கு வைக்கப்பட்டிருந்த தீயைப் பார்த்து, வீரர்கள் சிதறி ஓடத் துவங்கினர். அவர்களை ஒருங்கிணைக்கும் முயற்சிகள் வெற்றி பெறவில்லை. இருந்தபோதும் முழுக்க முழுக்க ஒரு சாதாரண வீரனைப் போல களத்தில் நின்றார் திப்பு. தொடர்ந்து வீரர்கள் சிதறி ஓடவே, நகரத்தை நோக்கிச் செல்லும் பாதையை நோக்கி நகர்ந்தார் திப்பு. அந்தப் பாதை மூடப்பட்டிருந்தது. அந்தப் பகுதியில் படைத் தலைவனாக இருந்த மீர் நதீம் ஏற்கெனவே ஆங்கிலேயர்களுக்கு ஆதரவாக மாறியிருந்தார். அவர், அந்தப் பாதையைத் திறக்க மறுத்துவிட்டார். அப்போதே திப்புவுக்கு காயம் ஏற்பட்டிருந்தது. அதற்குப் பிறகு, கோட்டை வாசலை நோக்கி முன்னேறினார் திப்பு. அப்போது இரண்டாவது காயம் ஏற்பட்டது. தொடர்ந்து மைசூர் வீரர்களைத் தாக்கி அழித்தபடி வந்த ஆங்கிலேயப் படை மூன்றாவது காயத்தை ஏற்படுத்தியது. அவரது இடது நெஞ்சின் பக்கம் துப்பாக்கிக் குண்டு பாய்ந்தது. அவரது குதிரை கொல்லப்பட்டது. அந்த நேரத்தில் அவரை நெருங்கிய அவரது உதவியாளர் ரஜா கான், ஆங்கிலேயர்களிடம் அவர் யார் என்பதைச் சொல்லலாம் என்றார். ஆனால், திப்பு மறுத்துவிட்டார். அவர்களிடம் கைதியாக இருப்பதைவிட இறப்பதே மேல் எனக் கருதினார் திப்பு. அப்போது ஒரு ஆங்கில வீரன் அவரது இடையிலிருந்த வாளின் உறையைப் பிடுங்க முயன்றார். வீறுகொண்டு அதைப் பறித்தார் திப்பு. அந்த வீரன், தனது துப்பாக்கியை எடுத்து திப்புவைச் சுட்டார். நெற்றியில் குண்டுகள் பாய்ந்து கீழே விழுந்தார் திப்பு. அவர் உயிர் பிரிந்திருந்தது. திப்பு சுல்தானின் இறுதி ஊர்வலம் பட மூலாதாரம்,BONHAMS இதற்குப் பிறகு மைசூர் படையின் வீரர்கள் அனைவரும் கொன்று குவிக்கப்பட்டனர். திப்பு இறந்துவிட்ட தகவல் ஆங்கிலேயப் படைக்குத் தெரியவில்லை. அரண்மனையைக் கைப்பற்றிய ஆங்கிலேயர்கள் அவரை அங்கே தேடினார்கள். அரண்மனையில் இருந்த இளவரசர்கள் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து தேடுதல் நடந்தபோது, அங்கு வந்த படைத் தலைவர் ஒருவர், திப்பு வடக்கு வாசலில் இறந்து கிடப்பதைச் சொன்னார். அதிகாரிகள் அங்கு சென்று பார்த்தபோது, சடலங்கள் குவியலாகக் கிடந்தன. ஒருவழியாக திப்புவின் பல்லக்கு இருந்த இடம் கண்டுபிடிக்கப்பட்டது. அதன் அருகில் ரஜா கான் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார். அவர், திப்புவின் உடல் இருந்த இடத்தைக் காட்டினார். மறுநாள் திப்புவின் இறுதி ஊர்வலம் துவங்கியது. திப்புவின் உடல் இருந்த சவப்பெட்டியை அவரது தனி உதவியாளர்கள் சுமந்து வந்தனர். இளவரசர் அப்துல் காலிக் சவப்பெட்டியைப் பின்தொடர்ந்து வந்தார். ஊர்வலம் சென்ற தெருக்களில், மக்கள் விழுந்து வணங்கினர். லால் பாக் கல்லறையில் இறக்கி வைக்கப்பட்ட திப்புவின் உடலுக்கு ராணுவ மரியாதை செய்யப்பட்டது. மரியாதைகள் முடிந்த பிறகு ஹைதர் அலியின் உடலுக்கு அருகில் திப்புவின் உடலும் புதைக்கப்பட்டது. இதற்குப் பிறகு ஸ்ரீரங்கப்பட்டனமும் அரண்மனையும் சூறையாடப்பட்டன. மே 6ஆம் தேதி கர்னல் வெல்லெல்ஸி அங்கு வந்து கோட்டையின் அதிகாரத்தைக் கையில் எடுக்கும்வரை இது தொடர்ந்தது. அவ்வளவு சூறையாடல்களுக்குப் பிறகும் அரண்மனையில் அதிகளவிலான செல்வம் மீதம் இருந்தது. நேர்த்தியான அரியாசனம், வெள்ளியிலும் தங்கத்திலும் செய்யப்பட்ட தட்டுகள், விலை உயர்ந்த தரை விரிப்புகள், விலை மதிப்பற்ற நகைகள் உள்ளிட்டவை இருந்தன. இவற்றில் ஒரு வைர நட்சத்திரம், நகைகள், திப்புவின் வாட்களில் ஒன்று ஆகியவை வெல்லெல்ஸிக்கு பரிசாக அளிக்கப்பட்டன. சுல்தானின் சிம்மாசனத்தில் இருந்த தங்க முலாம் பூசப்பட்ட புலித் தலை வின்ஸர் கோட்டையின் அருங்காட்சியகத்திற்கு அனுப்பப்பட்டது, திப்புவின் தலைப்பாகை, மற்றொரு வாள் ஆகியவை கவர்னர் ஜெனரல் கார்ன்வாலிஸுக்கு அனுப்பப்பட்டன. திப்பு சுல்தானின் தோல்விக்கான காரணம் பட மூலாதாரம்,DD NEWS மிகப்பெரிய வீரராக அறியப்பட்டிருந்த திப்பு சுல்தான், ஆங்கிலப் படையிடம் தோல்வியைச் சந்திக்கக் காரணம் என்ன? "வங்காளத்திலும் பிரெஞ்சுக்காரர்களுக்கு எதிரான போர்களிலும் வெற்றி பெற்றிருந்த ஆங்கிலேயர் தென்னகத்தில் முதலில் ஹைதர் அலியிடமும் பின்னர் திப்பு சுல்தானிடமும் கடுமையான சவாலைச் சந்திக்க வேண்டியிருந்தது. கிழக்கிந்திய கம்பனி மிகப்பெரிய வல்லமையைக் கொண்டிருந்ததால் மராத்தியர், ஐதராபாத் நிஜாம் இரண்டாம் ஆசப் ஷா, ஆவாத்தின் நவாப் சூஜா-உத்-தவுலா ஆகியோர் இணைந்து ஆங்கிலேயருடன் போரிட விரும்பினார்கள். ஆனால், அந்தத் தருணத்தில் ஹைதர் அலியின் செல்வாக்கு தொடர்ந்து பெருகி வருவதை விரும்பாத ஆசப் ஷாவும், சூஜா உத்-தவுலாவும் ஹைதர் அலிக்கு ஒத்துழைக்க மறுத்தனர். மராத்தியர்களும் ராஜபுத்திரர்களும் ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள ஆங்கிலேயருக்கு ஒத்துழைத்தனர். இவையெல்லாம் மைசூர் அரசுக்கு எதிராக மாறியது. முடிவில், ஆங்கிலேயருடன் இணைந்து இந்திய அரசர்களுக்கு எதிராகப் போரிடுவதில்லை என உறுதி ஏற்றிருந்த திப்பு சுல்தான் இறுதிவரை ஆங்கிலேயருடன் போரிட்டு மடிய வேண்டியதாயிற்று," என்கிறார் மணிக்குமார். திப்பு சுல்தானுக்கு 12 குழந்தைகள் வரை இருந்தனர். அவர்களில் இரு இளவரசர்களுக்கு ஆண்டுக்கு 2,24,000 பகோடாக்கள் வழங்க முடிவு செய்யப்பட்டது. ஆனால், அவர்கள் அங்கிருக்கக்கூடாது என்றும் வேலூர் கோட்டைக்குள் சென்று வசிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது. வேலூர் கோட்டையில் வெடித்த 1807ஆம் ஆண்டின் கலகத்தில் அவர்களுக்கு பங்கிருப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டு, கொல்கத்தாவுக்கு நாடு கடத்தப்பட்டனர். https://www.bbc.com/tamil/articles/c0klj2xxppgo
-
கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமானை சந்தித்தார் தமிழக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்!
04 MAY, 2024 | 05:32 PM தமிழக தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான செந்தில் தொண்டமானை மரியாதை நிமித்தமாக கொழும்பில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தார். இச்சந்திப்பின்போது, இலங்கையில் பொருளாதார நெருக்கடிகள் ஏற்பட்டிருந்த தருணத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசில் நிதி அமைச்சராக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இருந்த காலகட்டத்தில், இலங்கை மக்களுக்கு தமிழக அரசு வழங்கிய உதவிகளையும் ஒத்துழைப்புகளையும் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் நினைவுகூர்ந்தார். அத்துடன், தமிழகத்துக்கும் இலங்கைக்கும் இடையிலான தொடர்புகளை வலுவாக பேணுவது தொடர்பாகவும் இருவரும் கலந்துரையாடினர். https://www.virakesari.lk/article/182682
-
மருந்துகள், மருத்துவ உபகரணங்களுக்கு தட்டுப்பாடு!
நீரிழிவு, புற்றுநோய், இருதய நோய்கள் உள்ளிட்ட பல நோய்களுக்கு தேவையான மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களுக்கு தட்டுப்பாடு காணப்படுவதாக அரச மருந்தாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதனால் நோயாளர்கள் பல பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளதாக அரச மருந்தாளர்கள் சங்கத்தின் தலைவர் துஷார ரணதேவ தெரிவித்துள்ளார். வைத்தியசாலைகளில் இதுவரையில் 20 வீதமான மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுதாக சுகாதார அமைச்சின் மருந்து விநியோகப் பிரிவின் பிரதி பணிப்பாளர் நாயகம் விஜேசூரிய தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், அதற்கு மாற்று மருத்துகள் நாட்டில் உள்ளதாகவும் வைத்தியசாலைகளில் அரிதாக தேவைப்படும் 115 வகையான மருந்துகளுக்கு தட்டுபாடுகள் நிலவுவதாகவும் அவற்றை கொள்வனவு செய்வதற்கான நிதி மற்றும் அனுமதிகளை வைத்தியசாலைகளுக்கு பெற்றுக்கொடுத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/300895
-
கனடா: ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கில் மூன்று இந்தியர்கள் கைது - யார் அவர்கள்?
பட மூலாதாரம்,SIKH PA படக்குறிப்பு,ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கட்டுரை தகவல் எழுதியவர், ஜெசிகா மர்பி பதவி, பிபிசி நியூஸ் 47 நிமிடங்களுக்கு முன்னர் இந்தியா - கனடா இடையிலான உறவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய சீக்கிய பிரிவினைவாத தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கில், மூன்று இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கனடா காவல்துறை தெரிவித்துள்ளது. காலிஸ்தானுக்கு ஆதரவாகப் பல வழக்குகளில் இந்திய அரசால் தேடப்பட்டு வந்த 45 வயதான ஹர்தீப் சிங் நிஜ்ஜார், 2023 ஜூன் மாதம் கனடாவின் சர்ரேயில் படுகொலை செய்யப்பட்டார். வான்கூவர் புறநகர்ப் பகுதியில் ஒரு பரபரப்பான கார் நிறுத்துமிடத்தில் முகமூடி அணிந்து, துப்பாக்கி ஏந்திய மர்ம நபர்களால் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார். கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்தக் கொலையில் இந்தியாவுக்குத் தொடர்பு இருப்பதாகக் குற்றம் சாட்டினார். இந்தக் குற்றச்சாட்டுகளை டெல்லி திட்டவட்டமாக மறுத்தது. நிஜ்ஜார் கொலை வழக்கில் குற்றம் செய்ததாக சந்தேகிக்கப்படும் மூன்று நபர்களைக் கைது செய்ததாக கனடாவை சேர்ந்த காவல்துறை கண்காணிப்பாளர் மன்தீப் முகர் நேற்று (வெள்ளிக்கிழமை) அறிவித்தார். மேலும் கைதான மூன்று நபர்களின் பெயர்களையும் அறிவித்தார் - கரன் ப்ரார் (22), கமல் ப்ரீத் சிங் (22), மற்றும் கரண் ப்ரீத் சிங் (28) என்று கூறினார். பட மூலாதாரம்,GETTY IMAGES கைது செய்யப்பட்ட மூவரும் ஆல்பர்ட்டா என்னும் பகுதியில் எட்மன்டனில் வசித்து வந்ததாக அவர் கூறினார். அவர்கள் மீது கொலை மற்றும் கொலைக்கான சதித்திட்டம் தீட்டியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இவர்கள் மூவரும் மூன்று முதல் ஐந்து ஆண்டுகளாக கனடாவில் வசித்தவர்கள் என காவல்துறை தரப்பில் தெரிவித்தனர். இந்தக் கொலை வழக்கில் "இந்திய அரசாங்கத்துக்கு தொடர்புகள்" உள்ளனவா என்பது உட்படப் பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறை கூறியது. இந்தக் கைது நடவடிக்கை குறித்து உதவி ஆணையர் டேவிட் டெபுல் கூறுகையில், "இந்த வழக்கில் கைதானவர்களிடம் தனித்தனியாக மற்றும் பிரத்யேக விசாரணைகள் நடந்து வருகின்றன. அதேநேரம், நிச்சயமாக இன்று கைது செய்யப்பட்டவர்களின் ஈடுபாடு மட்டுமின்றி அவர்களைத் தாண்டியும் விசாரணை நடத்தப்படும்,” என்று கூறினார். இந்த வழக்கில் விசாரணை மேற்கொண்டுள்ள கனடா புலனாய்வு அதிகாரிகள் இந்திய புலனாய்வு அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றி வருகின்றனர். ஆனால், இரு நாட்டு அதிகாரிகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு கொஞ்சம் கடினமானதாகவும் சவாலாகவும் உள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். இந்தக் கொலையில் மேலும் சிலருக்குத் தொடர்பு இருக்கலாம் என்றும், மேலும் சிலர் கைது செய்யப்படலாம் என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர். சீக்கிய பிரிவினைவாதத் தலைவரான நிஜ்ஜார், காலிஸ்தானுக்காக பகிரங்கமாக, இந்தியாவின் பஞ்சாப் பகுதியில் ஒரு சுதந்திர சீக்கிய தாயகம் உருவாக்கப்பட வேண்டும் என்று பிரசாரம் செய்தார். அழுத்தத்தை எதிர்கொள்ளும் ஜஸ்டின் ட்ரூடோ பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ சீக்கியர்கள் 1970களில் இந்தியாவில் ஒரு பிரிவினைவாத கிளர்ச்சியைத் தொடங்கினர். பிரிவினை கோரிக்கை உச்சத்தில் இருந்தது. இதனால் பல வன்முறை தாக்குதல்கள் மற்றும் உயிரிழப்புகள் ஏற்பட்டன. இந்தப் பிரச்னை தணிக்கப்படுவதற்கு முன்னரே, அடுத்த பத்து ஆண்டுகளில், ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். அப்போதிருந்து, இந்த இயக்கம் பெரும்பாலும் சீக்கிய மக்கள் தொகை அதிகம் கொண்ட நாடுகளில் மட்டுமே இயங்கி வருகிறது. இந்தியா கடந்த காலங்களில் நிஜ்ஜாரை ஒரு போர்க்குணமிக்க பிரிவினைவாத குழுவிற்குத் தலைமை தாங்கிய பயங்கரவாதி என்று குறிப்பிட்டது. "அவரது ஆதரவாளர்கள் கூறுவது ஆதாரமற்ற குற்றச்சாட்டு. அவரது செயல்பாட்டின் காரணமாக கடந்த காலங்களில் அவருக்கு அச்சுறுத்தல்கள் வந்ததாக அவர்கள் கூறுவது ஆதாரமற்றது" என இந்தியா தரப்பில் கூறப்பட்டது. கடந்த ஆண்டு ஜூன் 18ஆம் தேதி வான்கூவருக்கு கிழக்கே 30 கிமீ (18 மைல்) தொலைவில் உள்ள சர்ரே நகரில் உள்ள குருநானக் சீக்கிய குருத்வாராவில் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார். அவர் "ஹிட் லிஸ்ட்டில்" இருப்பதாகவும், அவரது உயிருக்கு அச்சுறுத்தல்கள் இருப்பதாகவும் அவர் இறப்பதற்கு முன்பு கனடாவின் உளவுத்துறையால் எச்சரிக்கப்பட்டதாக அவருக்கு நெருக்கமானவர்கள் கூறினர். பிரிட்டிஷ் கொலம்பியா குருத்வாராஸ் கவுன்சிலின் உறுப்பினரான மொனிந்தர் சிங், நிஜ்ஜாருடன் 15 ஆண்டுகளாக நட்பு கொண்டிருந்தவர், ``விசாரணையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இதற்கு சீக்கிய சமூகம் நன்றியுடன் இருக்கும். இருப்பினும்,கொஞ்சம் பொதுப் பாதுகாப்பு பற்றிய கவலையும் நிறைய பதற்றமும் உள்ளது. இதனால் விரக்தி ஏற்பட்டுள்ளது. அனைத்தையும் தாண்டி வழக்கு நியாயமாக விசாரிக்கப்படும் என்ற ஒரு நம்பிக்கையும் உள்ளது,” என அவர் பிபிசி செய்தியிடம் கூறினார். நிஜ்ஜார் கொல்லப்பட்டு மூன்று மாதங்களுக்குப் பிறகு, கனடாவின் நாடாளுமன்றத்தில் (House of Commons) உரையாற்றிய ஜஸ்டின் ட்ரூடோ, ”இந்திய அரசை நிஜ்ஜார் கொலையுடன் தொடர்புபடுத்தும் நம்பத்தகுந்த குற்றச்சாட்டுகள் இருக்கிறதா என கனடா கவனித்து வருகிறது,” என்று கூறினார். இந்தக் குற்றச்சாட்டை இந்திய அதிகாரிகள் கடுமையாக மறுத்தனர். கனடா "காலிஸ்தான் பயங்கரவாதிகள் மற்றும் தீவிரவாதிகளுக்கு" அடைக்கலம் அளித்ததாக இந்தியா தரப்பில் குற்றம் சாட்டினர். இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்ட பதற்றம் காரணமாக இந்தியாவில் உள்ள கனடா தூதர்களின் எண்ணிக்கையைக் குறைக்குமாறு டெல்லி ஒட்டாவாவிடம் கோரியது. நிஜ்ஜார் கொலை வழக்கில் இந்தியாவின் தலையீடு இருப்பதாகக் குற்றம் சாட்டும் ட்ரூடோ, தனது குற்றச்சாட்டுக்கு ஆதாரங்களை வழங்குவதற்கான அழுத்தத்தை எதிர்கொண்டுள்ளார். https://www.bbc.com/tamil/articles/c51nvzjezywo
-
டி20 உலகக் கோப்பைச் செய்திகள்
ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ணம் : அறிமுக அணியை கனடா குழாம் அறிவிப்பு : இலங்கையின் புபுது தசநாயக்க பயிற்றுநர் 04 MAY, 2024 | 10:13 AM (நெவில் அன்தனி) ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் வரலாற்றில் முதல் தடவையாக பங்குபற்றும் கனடா, 15 வீரர்களைக் கொண்ட பலம் வாய்ந்த கிரிக்கெட் குழாத்தை அறிவித்துள்ளது. சாத் பின் ஸபார் அணித் தலைவராக பெயரிடப்பட்டுள்ளதுடன் அனுபவம் வாய்ந்த வீரர்கள் கனடா கிரிக்கெட் குழாத்தில் பெயரிடப்பட்டுள்ளது. ஐக்கிய அமெரிக்காவிலும் மேற்கிந்தியத் தீவுகளிலும் கூட்டாக நடைபெறவுள்ள ஐசிசி ஆடவர் உலகக் கிண்ண கிரிக்கெட் ஐக்கிய அமெரிக்காவுக்கும் கனடாவுக்கும் இடையில் டலாசில் எதிர்வரும் ஜூன் 1ஆம் திகதி நடைபெறவுள்ள போட்டியுடன் ஆரம்பமாகவுள்ளது. இந்த இரண்டு அணிகளும் ஏ குழுவில் இந்தியா, பாகிஸ்தான், அயர்லாந்து ஆகிய அணிகளுடன் இடம்பெறுகின்றன. பம்பலப்பிட்டி புனித பேதுருவானர் கல்லூரியின் பழைய மாணவரும் கனடாவுக்காக ரி20 அணியில் 2019முதல் விளையாடி வருபவருமான 6 அடி உயரமான ஸ்ரீமன்த ஏட்றியன் விஜேரத்ன உலகக் கிண்ண அணியில் இடம்பெறும் வாய்ப்பை துரதிர்ஷ்டவசமாக இழந்துள்ளார். ஐக்கிய அமெரிக்க அணியின் தலைமைப் பயிற்றுநராக இலங்கையின் முன்னாள் விக்கெட் காப்பாளரும் கனடாவின் முன்னாள் கிரிக்கெட் வீரருமான புபுது தசநாயக்க செயற்படுகிறார். கனடா குழாம் சாத் பின் ஸபார் (தலைவர்), ஆரோன் ஜோன்சன், டிலொன் ஹேய்லிகர், டில்ப்ரீத் பஜ்வா, ஹார்ஷ் தக்கர், ஜெரெமி கோர்டன், ஜுனைத் சித்திக்கி, கலீம் சானா, கன்வர்பால் தத்குர், நவ்னீத் தாலிவல், நிக்கலஸ் கேட்டன், பர்காத் சிங், ரவிந்தர்பால் சிங், ரய்யன்கன் பத்தான், ஷ்ரேயாஸ் மோவா. மாற்றுவீரர்கள்: தஜிந்தர் சிங், ஆதித்யா வரதராஜன், அம்மார் காலித், ஜட்டிந்தர் மதாரு, பர்வீன் குமார். https://www.virakesari.lk/article/182637
-
ஆசியாவில் கடும் வெப்பம்; வியட்நாமில் இலட்சக்கணக்கான மீன்கள் இறப்பு
Published By: DIGITAL DESK 3 03 MAY, 2024 | 09:42 PM வியட்நாமில் வெப்ப அலை வீசுவதால் நீர்த்தேக்கத்தில் நீர் மட்டம் குறைந்து இலட்சக்கணக்கான மீன்கள் இறந்துள்ளன. வியட்நாமில் டோங்னாய் மாகாணத்தில் உள்ள 300 ஹெக்டேர் பரப்பளவுள்ள சாங் மே நீர்த்தேக்கத்தில் இறந்த மீன்கள் சூழ்ந்து காணப்படுகிறுது. அதாவது, கடந்த சில நாட்களில் குறைந்தது 200 தொன் மீன்கள் இறந்திருக்கலாம் என உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தென்கிழக்கு மற்றும் தெற்காசியாவின் ஏனைய பகுதிகளைப் போலவே வியட்நாமும் கடும் வெப்பத்தால் பாதிக்கப்பட்டுள்ளதோடு, மழை பொழிவும் குறைந்து காணப்படுகின்றது. மீன்களின் இறப்பிற்கு அதிகரித்த வெப்பநிலை மற்றும் முறையற்ற பாராமரிப்பே காரணம் என உள்ளூர் ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. கடந்த சில வாரங்களாக நீர்த்தேக்கத்தில் நீர்மட்டம் குறைந்து வருகிறது. நீர்த்தேக்கத்தை முகாமைத்துவம் செய்யும் நிர்வாகம் விவசாய நிலங்களை பாதுகாப்பதற்கு நீரை வெளியேற்றியது. இன்று அவர்களின் அந்த முயற்சி பாழாகிவிட்டது. 2024 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் மீன்களுக்காக நீர்த்தேக்கத்தில் மேலதிக நீரை வெளியேற்றி சேறு மற்றும் குப்பைகளை அகற்றி நீர்த்தேக்கத்தை ஆழப்படுத்த நிர்வாகம் தீர்மானித்தது. இந்நிலையில், வெப்பம் தொடர்ந்து அதிகரித்தமையினால் வெளியேற்றப்பட்ட நீரை மீண்டும் நீர்த்தேக்கத்திற்கு விடுவிக்காமல் கீழுள்ள பகுதிக்கு வெளியிட நிறுவனம் முடிவு செய்தது. இதுவே நீர்த்தேக்கத்தில் நீர்மட்டம் குறைவடைய வழிவகுத்தது. மீன்கள் மொத்தமாக செத்து மடிந்தன என அந்நாட்டுப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தற்போது நீர்த்தேக்கத்தில் இருந்து அதிகமாக துர்நாற்றம் வீசுவதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர். "கடந்த 10 நாட்களாக துர்நாற்றம் வீசுவதால் எங்கள் வாழ்க்கை தலைகீழாக மாறிவிட்டது" என உள்ளூர்வாசி ஒருவர் தெரிவித்துள்ளார். டோங்னாய் மாகாணத்தில் 40 செல்சியசுக்கு வெப்பநிலை அதிகரித்துள்ளது. இரண்டு தசாப்தங்களுக்கு பிறகு அதிக வெப்பம் பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தென்கிழக்கு மற்றும் தெற்காசிய நாடுகளில் வரலாறு காணாத அளவில் வெப்ப அலை வீசுகிறது. ஆசியா முழுவதும் வெப்பத்தின் தாக்கம் மிகவும் கொடூரமான காணப்படுகிறது. இது உலக காலநிலை வரலாற்றில் மிகவும் தீவிரமான நிகழ்வு" என வானிலை வரலாற்றாசிரியர் மாக்சிமிலியானோ ஹெர்ரேரா தெரிவித்துள்ளார். வியட்நாமின் அயல் நாடான கம்போடியாவிலும் வெப்பம் அதிகரித்துள்ளது. அங்கு வெந்நிலை 43C ஐ அடையவுள்ளதாக எதிர்வு கூறப்பட்டுள்ளது. இதனால் பாடசாலைகளுக்கு விடுமுறை மற்றும் தண்ணீர் பற்றாக்குறையை தடுப்பதற்கான திட்டங்களை முன்னெடுக்க தூண்டியது. தாய்லாந்தில், உடோன் தானி மாகாணத்தில் வெப்பநிலை 44C க்கும் அதிகமாக அதிகரித்தமையினால், முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு மின்சாரப் பயன்பாடு அதிகரித்துள்ளது. பிலிப்பைன்ஸில் அணையில் நீர் மட்டம் குறைந்ததால் நீரில் மூழ்கிய 300 ஆண்டுகள் பழமையான நகரத்தின் எச்சங்கள் தென்படுகின்றன. பங்களாதேஷில் பாடசாலைகள் மூடப்பட்டுள்ளது. பிலிப்பைன்ஸில் கல்வி நடவடிக்கை இணையவழி முறையில் மேற்கொள்ளப்படுகிறது. இதேவேளை, இந்தியாவில் வெப்பம் பக்கவாதம் காரணமாக ஒன்பது பேர் உயிரிழந்துள்ளன. 2024 ஆம் ஆண்டு வெப்பத்தின் தாக்கம் கொடூரமாக இருக்கும் எனவும், கடந்த ஆண்டை விட வெப்பநிலை அதிகரித்து காணப்படும் எனவும் சர்வதேச அமைப்புகள் தெரிவித்துள்ளன. https://www.virakesari.lk/article/182594
-
சனிக்கிழமையன்று இலங்கை வருகிறார் ஜப்பான் வெளிவிவகார அமைச்சர்
நாட்டை வந்தடைந்தார் ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் Published By: DIGITAL DESK 3 04 MAY, 2024 | 10:50 AM ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் யொகோ கமிகவா இருநாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று சனிக்கிழமை (4) இலங்கைக்கு வருகைதந்துள்ளார். இன்றும் (04) , நாளையும் (05) நாட்டில் தங்கியிருக்கும் அவர், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோரை மரியாதை நிமித்தம் சந்திக்கவுள்ளார். அத்தோடு ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் யொகோ கமிகவா தலைமையிலான குழுவினருக்கும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரிக்கும் இடையிலான இருதரப்பு கலந்துரையாடல்களும் இடம்பெறவுள்ளன. https://www.virakesari.lk/article/182641
-
சுத்திகரிப்பு பணியாளர்களின் உரிமைகளுக்கு பொறுப்பானவர்கள் அக்கறையின்மையால் தொழிலாளர்கள் அதிருப்தி - ஆசிர்வாதம் ஜோன்சன்
Published By: DIGITAL DESK 3 04 MAY, 2024 | 08:46 AM குப்பையில்லா தூய்மையான நாட்டை உருவாக்க கடுமையாக உழைத்து வரும் சுத்திகரிப்பு பணியாளர்களின் உரிமைகளுக்கு பொறுப்பானவர்கள் அக்கறையின்மையால் தொழிலாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். உலக தொழிலாளர் தினத்தை முன்னிட்டு, அதற்கு முன்தினம் யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடாத்திய வடமாகாண சுத்திகரிப்பு தொழிலாளர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் ஆசிர்வாதம் ஜோன்சன், தொழிற்சங்க இயக்கங்களின் ஆதரவுடன் நாட்டின் உயரிய கதிரைக்கு வந்தவர்களும் கூட பின்னர் தொழிலாளர் உரிமைகளை மறுப்பதாக சுட்டிக்காட்டினார். "நாங்கள் தோல்விடைந்துள்ளோம். எங்களது உரிமைகள் மறுக்கப்படுகின்றன. எங்களது உரிமைகள் குறித்து மகஜராக கையளித்தாலும் அது நிராகரிக்கப்படுகிறது. இந்த நாட்டின் ஒவ்வொரு ஜனாதிபதிகளும் தொழிற்சங்கத்தில் இருந்துதான் வந்திருக்கின்றார்கள். எனினும் அவர்கள் நாட்டின் தலைவர்களாக வந்த பின்னர் தொழிலாளர்களின் உரிமைகளை மறுக்கின்ற சூழல் உருவாகிறது.” என்றார். பணியில் இருக்கும் சுத்திகரிப்பு தொழிலாளர்களுக்கு போதிய பாதுகாப்பு அங்கிகள் மற்றும் உபகரணங்களை அதிகாரிகள் வழங்காததால், எதிர்காலத்தில் தொழிலாளர்கள் நோய்வாய்ப்படும் அபாயம் இருப்பதாகவும் அவர் எச்சரித்துள்ளார். "தொழிலாளிகள் தமது வேலைகளை செய்கின்ற போது அவர்கள் பாதுகாப்பு அங்கிகளை பயன்படுத்த வேண்டும். எனினும் அது குறைவாக காணப்படுகிறது. எதிர்காலத்தில் தொழிலாளிகள் நோய்வாய்ப்படும் நிலைமை உருவாகிறது. வேலைகளை செய்கின்றபோது சீருடை, பாதணி, கையுறை அணிந்திருக்க வேண்டும். இதற்கான ஏற்பாடுகள் குறித்து அந்தந்த பிரதேசத்தில் பொறுப்பாளர்களாக செயற்படுபவர்கள் மற்றும் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும்.” என்றார். தொழிலாளர்களுக்கு கிடைக்க வேண்டியவற்றை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வடமாகாண சுத்திகரிப்பு தொழிலாளர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் ஆசிர்வாதம் ஜோன்சன் இந்த ஊடக சந்திப்பில் மேலும் தெரிவித்தார். “வீதிகளில் பணியாற்றும் மற்றும் பல இடங்களில் தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்கள் காணப்படுகின்றோம். ஒன்று அரச ஊழியர்கள், ஒன்று தனியார் ஊழியர்கள். அரசாங்கம் எமக்குத் தர வேண்டியதை தர வேண்டும். எங்கள் சம்பளம் உயர வேண்டும். பொருளாதார நெருக்கடியிலும் நாங்கள் தொழிலை முன்னெடுக்கின்றோம் எனினும் எங்கள் சம்பளம் உயரவில்லை.” https://www.virakesari.lk/article/182629
-
முல்லைத்தீவில் 130 நபர்களுக்கு எதிராக வனஜீவராசிகள் திணைக்களத்தினரால் தொடுக்கப்பட்ட வழக்கு தவணை
நூற்றுக்கும் மேற்பட்ட வடக்கின் பரம்பரை நில உரிமையாளர்களுக்கு எதிராக வனஜீவராசிகள் துறை வழக்குத் தாக்கல் Published By: DIGITAL DESK 3 04 MAY, 2024 | 08:53 AM காணி அனுமதிப்பத்திரம் உள்ளிட்ட ஆவணங்கள் காணப்படும் காணி உரிமையாளர்களுக்கு அரச காணிகளின் பூரண உரிமையை வழங்குவதற்காக பெரும் விளம்பரத்துடன், ஜனாதிபதி "உறுமய” வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ள நிலையில், யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வன்னியின் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்களின் பத்திரப்பதிவு செய்யப்பட்ட பரம்பரை காணிகளை அரசாங்க நிறுவனம் ஒன்று கையகப்படுத்த முயற்சிப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. தேசிய பூங்காவிற்குள் அத்துமீறி நுழைந்து தாவரங்களை சேதப்படுத்தியதாக வனஜீவராசிகள் திணைக்களத்தினால் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் பங்கேற்ற புதுக்குடியிருப்பு கரியல்வயல் பகுதியை சேர்ந்த விவசாயி ஒருவர், தாம் பரம்பரையாக பயிரிட்டு வந்த காணியை வனஜீவராசிகள் திணைக்களம் வர்த்தமானி அறிவித்தல் மூலம் கையகப்படுத்த முயற்சிப்பதோடு, தற்போது தமக்கு எதிராக நீதிமன்றத்தை நாடியுள்ளதாகவும் தெரிவித்தார். “83 வரை நாங்கள் வயல் செய்தோம். அதன் பின்னர் அங்கு போக முடியாமல் போய்விட்டது. பின்னர் 2010 - 2012ற்கு இடையில் நாங்கள் மீள் குடியேறிய பின்னர் காணியை துப்பரவு செய்து விவசாயம் செய்து கொண்டு வருகின்றோம். 2015இல் வனஜீவராசிகள் திணைக்களம் வர்த்தமானி அறிவித்தல் ஊடாக இந்த காணிகள் வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு சொந்தமானது என அறிவித்தது. அதன் பின்னர் வழக்குத் தாக்கல் செய்தது.” என்றார். சுண்டிக்குளம் தேசிய பூங்காவிற்குள் அனுமதியின்றி பிரவேசித்தமை, பூங்காவிலுள்ள மரம், செடி, கொடிகளை வெட்டி அழித்தமை, பாதை உருவாக்கியமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில், புதுக்குடியிருப்பு, கரியல்வயல் பிரதேச மக்கள் 130 பேருக்கு எதிராக வனஜீவராசிகள் திணைக்களம் தாக்கல் செய்த வழக்கு, இரண்டாவது தடவையாக கடந்த மே 2ஆம் திகதி முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதாக பிரதேச ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர். வடக்கில் ஆரம்பிக்கப்பட்ட யுத்தம் காரணமாக 80களின் முற்பகுதியில் தமது கிராம நிலங்களை விட்டு வெளியேறிய கரியல்வயல் கிராமத்தின் 130 குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் யுத்தம் முடிவடைந்த பின்னர் தமது சொந்த கிராம நிலங்களுக்குத் திரும்பி, பரம்பரையாக பயிர்ச்செய்கைக்காகப் பயன்படுத்திய சுமார் 980 ஏக்கர் காணியில் சுமார் 610 ஏக்கர் நிலப்பரப்பை சுத்தப்படுத்தி விவசாய உற்பத்திகளை ஆரம்பித்ததாக தெரிவிக்கின்றனர். 2015ஆம் ஆண்டு வர்த்தமானி அறிவித்தல் ஊடாக வனஜீவராசிகள் திணைக்களத்தினால் குறித்த காணி வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு சொந்தமானது என அறிவித்து, அதனைத் தொடர்ந்து குறித்த கிராம மக்கள் மீது நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பிரதேச ஊடகவியலாளர்கள் மேலும் தெரிவித்தனர். இவ்வாறு தாக்கல் செய்யப்பட்ட வழக்கு 2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 07ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதோடு, வழக்கு 2024ஆம் ஆண்டு மே மாதம் 2ஆம் திகதிக்கு நீதவான் நீதிமன்றம் ஒத்திவைத்தது. வனஜீவராசிகள் திணைக்களத்தால் தாக்கல் செய்யப்பட்ட 130 பேரில் 100க்கும் மேற்பட்டோர் தங்கள் நிலத்திற்கான உறுதிப்பத்திரங்கள் உள்ளிட்ட ஆவணங்களை வைத்துள்ளதாக, பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் மே 2ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையான சட்டத்தரணி வி. எஸ். தனஞ்சயன் ஊடகங்களுக்குத் தெரிவித்தார். “இந்த வழக்குடன் தொடர்படைய மக்கள் ஏற்கனவே தனியார் காணிகளுக்கான, அதாவது பிரிடிஷ் உறுதி என அழைக்கப்படுகின்ற நூற்றாண்டுக்கு முற்பட்ட உறுதி வழங்கப்பட்ட மக்களும், தனியார் காணிகளுக்கு சொந்தமான மக்களும், அரச அனுமதிபத்திரம், எல்டிஓ அனுமதிப்பத்திரம் (LDO - Land Development Ordinance) பெற்ற மக்கள் என நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு எதிராகவே இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கில் இருக்கும் குறைபாடுகளை ஏற்கனவே நாம் சுட்டிகாட்டி இருந்தோம். அதேபோல் இன்றைய தினமும் இந்த வழக்கில் குறைகளை சுட்டிகாட்டியிருந்தோம். நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டப்பட்ட விடயங்களை பரிசீலித்த நீதவான், குற்றச்சாட்டு பத்திரம் தாக்கல் செய்ய வேண்டி இருப்பின் தாக்கல் செய்யுமாறு, வழக்கு தொடுனர் தரப்புக்கு அறிவித்ததாக சடடத்தரணி வி. எஸ். தனஞ்சயன் தெரிவிக்கின்றார். "குறித்த விடயங்கள் தொடர்பாக மீள் பரிசீலனை செய்து, இந்த வழக்குகள் தொடர்பாக, குற்றச்சாட்டு பத்திரம் தாக்கல் செய்ய வேண்டி இருப்பின் தாக்கல் செய்யுமாறு, நீதிமன்றத்தினால் வழக்கு தொடுனர் தரப்புக்கு அறிவுறுத்தப்பட்டு குறித்த வழக்குகளில் ஒரு பகுதி வழக்குகள் எதிர்வரும் ஜுலை 25ஆம் திகதிக்கும், இதர திகதிகளுக்கும் தவணையிடப்பட்டுள்ளது." மகாவலி அபிவிருத்தி அதிகார சபை, சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை, தொல்பொருள் திணைக்களம், வனப் பாதுகாப்பு மற்றும் வனஜீவராசிகள் திணைக்களங்கள் வடக்கு கிழக்கில் உள்ள தமிழர்களின் காணிகளை பலவந்தமாக சுவீகரிப்பதாக தொடர்ந்தும் குற்றம் சுமத்தப்பட்டு வருகின்றது. வடக்கு, கிழக்கில் தமிழ் மக்களின் காணிகளை வலுக்கட்டாயமாக சுவீகரிப்பது தொடர்பில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு இடையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது, 1985ல் வனத்துறை உருவாக்கிய வரைபடத்திற்கு அமைய செயற்பட வேண்டுமென ஜனாதிபதி தெரிவித்ததாக, தமிழ் மக்கள் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன், 2023ஆம் ஆண்டு மே மாதம் தெரிவித்திருந்தார். https://www.virakesari.lk/article/182630