Everything posted by ஏராளன்
-
ஏடன் வளைகுடாவில் தீப்பிடித்து எரிகின்றது கப்பல் - ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை தாக்குதல்
ஹூத்தி தாக்குதலில் பற்றி எரிந்த கப்பல் - 22 இந்தியர்கள் என்ன ஆயினர்? கடற்படை விரைவு பட மூலாதாரம்,INDIAN NAVY படக்குறிப்பு, பிரிட்டிஷ் வணிக கப்பல் மீது ஹூத்தி குழு தாக்குதல் 39 நிமிடங்களுக்கு முன்னர் ஏமனை தளமாகக் கொண்ட ஈரான் ஆதரவு இயக்கமான ஹூத்தி கிளர்ச்சிக்குழு, "அமெரிக்க-பிரிட்டன் தாக்குதலுக்கு" பதிலடி கொடுக்கும் விதமாக வெள்ளிக்கிழமையன்று மார்லின் லுவாண்டா கப்பலை குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த கப்பலை மீட்கும் முயற்சியில் இந்திய கடற்படையின் கப்பல் உள்ளிட்ட பிற நாடுகளின் கப்பல்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. அமெரிக்க, பிரிட்டன் தாக்குதலுக்கு பதிலடி செங்கடல் பகுதியில் செல்லும் கப்பல்கள் மீது தொடர் தாக்குதல் நடத்தி வரும் ஹூத்தி குழுவின் நடவடிக்கைகளுக்கு எதிராக சமீபத்தில் அமெரிக்கா மற்றும் பிரிட்டன் இணைந்து வான்வழி தாக்குதலை நடத்தினர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஏடன் வளைகுடா பகுதியில் பயணித்து கொண்டிருந்த மார்லின் லுவாண்டா கப்பல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது ஹூத்தி கிளர்ச்சிக்குழு. தற்போது பிரான்ஸ் , இந்தியா மற்றும் அமெரிக்க கடற்படை கப்பல்கள் அந்த கப்பலுக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளன. பட மூலாதாரம்,INDIAN NAVY படக்குறிப்பு, இந்த டேங்கர் கப்பலானது மார்ஷல் தீவுகளின் கொடியின் கீழ் , டிராஃபிகுரா (Trafigura) என்ற பன்னாட்டு வர்த்தக நிறுவனத்தின் சார்பில் இயக்கப்படுகிறது. கப்பல் மீது தாக்குதல் தற்போது ஹூத்திக்கள் தாக்குதல் நடத்தியுள்ள மார்லின் லுவாண்டா கப்பலை இயக்குவது ஓஷியோனிக்ஸ் சர்வீசஸ் லிமிடெட் (Oceonix Services Ltd) என்ற இங்கிலாந்தில் பதிவு செய்யப்பட்ட நிறுவனமாகும். இந்த டேங்கர் கப்பலானது மார்ஷல் தீவுகளின் கொடியின் கீழ் , டிராஃபிகுரா (Trafigura) என்ற பன்னாட்டு வர்த்தக நிறுவனத்தின் சார்பில் இயக்கப்படுகிறது. சனிக்கிழமையன்று(27.1.2024) கிடைத்த புதிய தகவலின்படி, கப்பலின் அனைத்து பணியாளர்களும் பாதுகாப்பாக இருப்பதாகவும், டேங்கரில் ஏற்பட்ட தீ அணைக்கப்பட்டுவிட்டதாகவும் கூறியுள்ளது டிராஃபிகுரா நிறுவனம் . கப்பல் தற்போது பாதுகாப்பான துறைமுகத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, அமெரிக்க-பிரிட்டிஷ் தாக்குதலுக்கு" பதிலளிக்கும் வகையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக ஹூத்தி அமைப்பு தெரிவித்துள்ளது. ஹூத்தி பொறுப்பேற்பு இது செங்கடல் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஹூத்திக்களால் வணிகக் கப்பல் மீது நடத்தப்பட்ட சமீபத்திய தாக்குதலாகும். இஸ்ரேல் ஹமாஸுக்கு எதிராக தாக்குதல் நடத்தி வரும் நிலையில், காசாவில் உள்ள பாலத்தீனர்களுக்கு ஆதரவாக இந்த பகுதியில் வரும் கப்பல்கள் மீது தாக்குதல்கள் நடத்தி வருவதாக ஹூத்தி அமைப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து ஹூத்தி செய்தித் தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மார்லின் லுவாண்டா ஒரு பிரிட்டிஷ் கப்பல் என்றும், "எங்கள் நாட்டிற்கு எதிரான அமெரிக்க-பிரிட்டிஷ் தாக்குதலுக்கு" பதிலளிக்கும் வகையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள இங்கிலாந்து அரசு, வணிக கப்பல் போக்குவரத்து மீதான தாக்குதல்கள் "முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதவை" என்றும், பிரிட்டனும் அதன் நட்பு நாடுகளும் "இதற்கு தகுந்த முறையில் பதிலளிக்கும்" என்றும் தெரிவித்துள்ளது. நவம்பர் மாதத்திலிருந்து, உலகின் முக்கியமான கடல் வழித்தடங்களில் ஒன்றான செங்கடல் வழியாகப் பயணிக்கும் வணிகக் கப்பல்கள் மீது ஹூத்திக்கள் டஜன்கணக்கான தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இதனால் செங்கடல் பகுதியில் வணிக கப்பல்களின் போக்குவரத்துக்கு பாதிக்கப்பட்டுள்ளது. தாக்குதல் எங்கே நடந்தது? ஏடனுக்கு தென்கிழக்கே திசையில் 60 கடல் மைல் தொலைவில் இந்த தாக்குதல் நடந்ததாக இங்கிலாந்து கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் (UKMTO) அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும் மற்ற கப்பல்கள் எச்சரிக்கையுடன் செல்லுமாறும், சந்தேகத்திற்கிடமான செயல்கள் ஏதேனும் பார்த்தால் உடனே தகவல் தருமாறும் எச்சரித்துள்ளது. இதற்கு பின்னர், சனிக்கிழமையன்று உள்ளூர் நேரப்படி 03:45 மணிக்கு (00:45 GMT) அமெரிக்க படை, “ செங்கடலை குறிவைத்து ஏவத் தயாராக இருந்த கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகளுக்கு எதிராக” ஏவுகணை தாக்குதல்களை நடத்தியுள்ளதாக அமெரிக்க மத்திய கமாண்ட் தெரிவித்துள்ளது. அவர்கள் “ தற்காப்புக்காக அந்த ஏவுகணைகளை அழித்து விட்டதாக” சென்ட்காம் தெரிவித்துள்ளது. பட மூலாதாரம்,INDIAN NAVY படக்குறிப்பு, ஐஎன்எஸ் விசாகப்பட்டினம் உடனடி நடவடிக்கையில் இறங்கியது. இந்திய கடற்படை விரைவு இந்தத் தாக்குதலுக்குப் பிறகு, ஏடன் வளைகுடாவில் நிலைநிறுத்தப்பட்டுள்ள இந்தியக் கடற்படையின் போர்க்கப்பலான ஐஎன்எஸ் விசாகப்பட்டினம் உடனடி நடவடிக்கையில் இறங்கியது. தாக்குதல் நடத்தப்பட்ட கப்பலில் இருந்து உதவிக்கான அழைப்பு வந்ததையடுத்து, இந்திய கடற்படையின் ஏவுகணை அழிப்பு கப்பலான ஐஎன்எஸ் விசாகப்பட்டினம் உதவிக்கு அனுப்பப்பட்டதாக இந்திய கடற்படை சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளது. இந்தக் கப்பலில் 22 இந்தியர்களைத் தவிர, வங்கதேசத்தைச் சேர்ந்த பணியாளர் ஒருவரும் இருக்கிறார். வெள்ளிக்கிழமை இரவு இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது. அதனை தொடர்ந்து உடனடியாக விரைந்த ஐஎன்எஸ் விசாகப்பட்டினம் கப்பல் குழுவின் முயற்சியால் கப்பலில் பற்றியிருந்த தீ அணைக்கப்பட்டு விட்டதாக இந்திய கடற்படை தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளது. மேலும் வணிக கப்பல்களுக்கு பாதுகாப்பு வழங்குவதில் உறுதியாகவும், ஈடுபாட்டோடும் இந்திய கடற்படை தொடர்ந்து செயல்படும் என்றும், கடல் பரப்பில் உயிர்களை காப்பதற்கான உறுதியை கொண்டுள்ளதாகவும் இந்திய கடற்படை தனது பதிவில் தெரிவித்துள்ளது. https://www.bbc.com/tamil/articles/c4nwx556zvno
-
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் புதிய நிர்வாகத் தெரிவுகள் திருகோணமலையில் இன்று
பொதுச்சபைக் கூட்டத்தில் அமளிதுமளி : தமிழரசுக் கட்சியின் 17ஆவது தேசிய மாநாடு ஒத்திவைப்பு 27 JAN, 2024 | 07:12 PM இலங்கைத் தமிழரசுக்கட்சியின் 17ஆவது தேசிய மாநாடு காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக அக்கட்சியின் முன்னாள் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜா அறிவித்துள்ளார். கட்சியின் உறுப்பினர்கள் இடையே இணக்கப்பாட்டுடன் தீர்மானங்களை எட்ட முடியாமையின் காரணமாக அவ்விதமான முடிவுக்கு தான் வந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். இதேவேளை, தமிழரசுக்கட்சியின் மத்திய செயற்குழுவினால் அங்கீகாரமளிக்கப்பட்ட புதிய நிருவாகத்தினை அங்கீகரிப்பது தொடர்பில் பொதுச்சபைக்குள் ஏற்பட்ட குழப்பித்தினை அடுத்து நிருவாகத்தினை ஆதரிப்பதா இல்லையா என்பது தொடர்பில் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு ஆதரவாக 112வாக்குகளும்ரூபவ் எதிராக 104வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன. இந்த முடிவுகளின் அடிப்படையில் புதிய நிருவாகத்திற்கு பொதுச்சபை அங்கீகாரம் அளித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைத் தமிழரசுக்கட்சியின் 17ஆவது தேசிய மாநாட்டின் முதல்நாள் இன்றைய தினம் திருகோணமலை உப்புவெளியில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது. இதன்போது முற்பகல் மத்தியகுழு கூட்டமும், பிற்பகலில் பொதுச்சபைக் கூட்டமும் நடைபெற்றது. மத்திய செயற்குழுக் கூட்டம் அதனடிப்படையில் மத்திய செயற்குழு கூட்டம் முற்பகல் 10மணிக்கு ஆரம்பமானது. இதன்போது முதலில் பொதுச்செயலாளர் பதவிக்கான தெரிவு தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது. அதன்போது, ஞானமுத்து சிறிநேசன், குலநாயகம் மற்றும் சண்முகம் குகதாசன் ஆகியோர் அப்பதவியை வகிப்பதற்கு தமது விருப்பத்தினை வெளிப்படுத்தினார்கள். எனினும் அதன் பின்னர் பலதரப்பட்ட கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டு பொதுச்செயலாளராக சண்முகம் குகதாசன் நியமிக்கப்பட்டதோடு, சிரேஷ்ட உபதலைவராக சி.வி.கே.சிவஞானமும் இணை பொருளாளர்களாக ஞா.சிறிநேசன், கனகசபாபதி ஆகியோரும் துணைத் தலைவர்களாக கே.வி.தவராசா, சாள்ஸ் நிர்மலநாதன், தவராசா கலையரசன், பாக்கியசெல்வம் அரியநேந்திரன், வைத்தியர் சத்தியலிங்கம் ஆகியோரும் இணை செயலாளர்களாக திருமதி சாந்தி, சிறிஸ் கந்தராஜா, திருமதி ரஞ்சனி கனகராஜா, சரவணபவன், சாணக்கியன், சிவமோகன் ஆகியோரும் சுமந்திரன் உட்பட 13 உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டனர். இதன்பின்னர் மதிய போசனத்துக்கான இடைவேளை விடப்பட்டதோடு தொடர்ந்து பொதுச்சபைக் கூட்டத்தின் முதலாவது நாள் அமர்வு ஆரம்பமானது. பொதுச்சபைக் கூட்டம் பொதுச்சபைக் கூட்டம் ஆரம்பமாகியதும் மீண்டும் பொதுச்செயலாளர் நியமனம் சம்பந்தமாக சர்ச்சைகள் ஏற்பட்டன. உறுப்பினர்களிடையே வாதப்பிரதிவாதங்கள் அதிகரித்து கைகலப்பில் ஈடுபடுமளவிற்கு நிலைமைகள் மோசமாகின. இதனையடுத்து பல்வேறு இணக்கப்பாடுகளை எட்டுவதற்கான முன்மொழிகள் செய்யப்பட்டபோதும் உறுப்பினர்களில் சிலர் நிருவாகத்தெரிவினை ஏற்றுக்கொள்வதற்கு எதிர்ப்பினை வெளியிட்டார்கள். அதுமட்டுமன்றி, பொதுச்செயலாளராக குகதாசனை நியமிப்பதற்கும் எதிர்ப்பினை வெளியிட்டனர். இதனால், பொதுச்சபைக் கூட்டத்தில் பல்வேறு வாதப்பிரதிவாதங்கள் நிகழ்ந்ததை அடுத்து, பொதுச்செயலாளர் தெரிவிக்கான பகிரங்கமான வாக்கெடுப்பினை நடத்துமாறு கோரினார்கள். எனினும், குறித்த நிருவாகத்தெரிவுக்கு மத்திய செயற்குழு அங்கீகாரம் அளித்துள்ளதன் அடிப்படையில் மீண்டும் தனியொரு பதவிநிலைக்காக வாக்கெடுப்பு நடத்த முடியாது என்ற விடயத்தினை சுமந்திரன் சுட்டிக்காட்டினார். இந்நிலையில் தமிழரசுக்கட்சியின் தலைவர் தவிர்ந்த புதிய நிருவகத்தினருக்கான அனுமதியை கோரும் பிரேரணையை கட்சியின் புதிய தலைவர் சிவஞானம் சிறீதரன் முன்மொழிந்தார். அதனையடுத்து, பீற்றர் இளஞ்செழியர் அதனை வழிமொழிந்தார். தொடர்ந்து, குறித்த பிரேரணை மீதான வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. உறுப்பினர்கள் தங்களது கைகளை உயர்த்தி ஆதரவினையும் எதிர்ப்பினையும் வெளியிட்ட நிலையில் அதனடிப்படையில் எண்ணிக்கை கணிக்கப்பட்டது. அந்த வகையில் பிரேரணை எட்டு மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. மேலும் குறித்த பிரேரணை மீதான வாக்கெடுப்பில் மத்திய செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்கமுடியாது என்ற விடயத்தினை சுமந்திரன் சுட்டிக்காட்டினார். ஏனெனில் மத்திய செயற்குழு உறுப்பினர்கள் ஏற்கனவே நிருவாகத்தெரிவுக்கு ஆதரவளித்திருந்த நிலையில் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்று அவர் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் மத்திய செயற்குழு உறுப்பினர்களின் பங்கேற்பின்றியே பொதுச்சபை உறுப்பினர்களின் பங்கேற்புடன் வாக்கெடுப்பு முடிவுக்கு கொண்டு வரப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. எனினும் உறுப்பினர்களிடையே சார்ச்சைகள் தொடர்ந்தும் நீடித்தன. இந்த நிலைமையை தொடர்ச்சியாக அவதானித்துக்கொண்டிருந்த மாவை.சோ.சேனாதிராஜா உறுப்பினர்களை அமைதியாக இருக்குமாறு கோரிக்கை விடுத்தார். அனைவரும் ஒற்றுமையாக நாளை நடைபெறவுள்ள பகிரங்க தேசிய மாநாட்டை நிறைவு செய்வதற்கு ஒத்துழைப்புக்களை வழங்குமாறு கோரியபோதும் நிலைமைகள் சுமூகமடைந்திருக்கவில்லை. இதனையடுத்து மாவை.சோ.சேனாதிராஜா ஒலிவாங்கியைப் பெற்று 17ஆவது தேசிய மாநாட்டை தான் ஒத்திவைப்பதாக அறிவித்து விட்டு கூட்டத்தினை முடிவுக்கு கொண்டுவந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/174918
-
‘வீடு வாங்கினால் மனைவி இலவசம்’ என அறிவித்த ரியல் எஸ்டேட் நிறுவனம்
போட்டி நிறைந்த உலகில் தங்கள் பொருட்களை வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்ப்பதற்கு வியாபார நிறுவனங்கள் பல்வேறு யுக்திகளை கையாண்டு வருகிறது. மேலும், வியாபாரத்தை பெருக்குவதற்காகவும், வாடிக்கையாளர்களை கவர்வதற்காகவும் சில நிறுவனங்கள் பம்பர் பரிசு, கேஷ் பேக் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை அறிவிக்கின்றன. அதுபோன்ற விளம்பரங்கள் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு சில நேரங்களில் எதிர்மறையாகவும் அமைந்து விடுகிறது. அப்படி ஒரு நிகழ்வு சீனாவில் நடைபெற்றுள்ளது. சீனாவின் டிரையஜின் நகரை சேர்ந்த பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்று சமீபத்தில் வாடிக்கையாளர்களை கவர்வதற்காக ஒரு விளம்பரம் செய்தது. அதில் எங்கள் நிறுவனத்தில் வீடு வாங்கினால் உங்கள் மனைவியை இலவசமாக பெறுங்கள் என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது. இந்த விளம்பரம் சமூகவலைத்தளங்கள் மற்றும் சுவர் போஸ்டர்கள் மூலம் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. வீடு வாங்கினால் மனைவி இலவசமா? என அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சம்பந்தப்பட்ட நிறுவனம் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்தனர். அதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு ரூ.3 இலட்சம் அபராதம் விதித்து அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. அதில், இந்த விளம்பரத்தை மக்கள் சரியாக புரிந்து கொள்ளவில்லை. அதாவது தங்கள் முயற்சியில் வீடு வாங்கி உங்கள் மனைவிக்கு கொடுங்கள் என்ற அர்த்தத்தில் விளம்பரம் செய்யப்பட்டதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. https://thinakkural.lk/article/289577
-
இனப்படுகொலை நினைவு தினம்: யூதர்களை கொன்று குவித்த ஹிட்லரின் 'கொடூர வதை முகாம்கள்'
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஹோலோகாஸ்ட்டின் அழியா சுவடுகள் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஹோலோகாஸ்ட்(இனப்படுகொலை) என்பது இரண்டாம் உலகப் போரின்போது (1939-1945), கோடிக்கணக்கான யூதர்கள் அவர்கள் யூதர்கள் என்பதற்காகவே கொல்லப்பட்ட வரலாற்றின் கொடூரமான சம்பவம். இந்தப் படுகொலைகள் ஜெர்மனியின் நாஜி கட்சியால் அடால்ஃப் ஹிட்லர் தலைமையில் நிகழ்த்தப்பட்டது. இதில் யூத மக்களே நாஜிக்களின் இலக்காக இருந்தனர். அவர்களே அதிக எண்ணிக்கையில் கொல்லவும் பட்டனர். கிட்டத்தட்ட ஐரோப்பாவை சேர்ந்த ஒவ்வொரு 10 யூதர்களில் 7 பேர் அவர்களின் இன அடையாளத்திற்காகவே என்பதற்காகவே கொல்லப்பட்டனர். அவர்களை மட்டுமின்றி ரோமா(ஜிப்ஸிக்கள்) மற்றும் மாற்றுத் திறனாளிகளையும் கொன்று குவித்தனர் நாஜிக்கள். மேலும் அவர்களது எதிர் குழுக்கள் மற்றும் பால் புதுமையினர் உள்ளிட்ட மக்களின் உரிமைகளையும்கூட அவர்கள் பறித்தனர். இவர்களில் பலர் சித்ரவதை செய்யப்பட்டு இறந்து போயினர். இந்த ஹோலோகாஸ்ட்தான் இனப்படுகொலைக்கு எடுத்துக்காட்டு. இனப்படுகொலை என்பது உள்நோக்கத்தோடு குறிப்பிட்ட நாடு, இனம் மற்றும் மதத்தைச் சார்ந்த மக்களைக் கொத்துக் கொத்தாகக் கொன்று குவிப்பதாகும். யார் இந்த நாஜிக்கள்? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, 1920இல் பெர்லினில் வாழ்ந்த ஒரு குடும்பத்தின் நிலை நாஜி(Nazi) என்பது ஜெர்மன் தேசிய சோசலிச தொழிலாளர் கட்சி(NSDAP) என்பதன் சுருக்கம். இது 1919ஆம் ஆண்டில் முதல் உலகப் போருக்குப் பிறகு ஜெர்மனியில் உருவாக்கப்பட்ட அரசியல் கட்சி. முதல் உலகப்போரில் ஏற்பட்ட பின்னடைவால் ஜெர்மனி போராடிக் கொண்டிருந்த நேரத்தில் 1920 காலகட்டங்களில் இந்தக் கட்சி பிரபலமடைந்தது. அந்தப் போரில் ஜெர்மனி தோற்றதால், போரில் வெற்றி பெற்ற நாடுகளுக்குப் பெரும் தொகை கொடுக்க வேண்டியிருந்தது. இந்நிலையில் மக்கள் பலரும் ஏழைகளாகவும், அந்த நேரத்தில் தேவையான அளவு வேலைவாய்ப்புகள் இல்லாமலும் இருந்தது. மேலும், ஜெர்மானியர்கள் நாஜிக்களை நோக்கி வந்ததற்கான காரணம் மாற்றம் குறித்து நாஜி கட்சி கொடுத்த நம்பிக்கை. நாஜிக்கள் இனவெறியர்களாகவும், தங்களது இனம் என்று அழைக்கப்படும் ஆரிய இனத்தைத் தவிர வேறு எதுவும் மேலானது இல்லை என்று நம்புபவர்களாகவும் இருந்தனர். ஜெர்மானியர்களாக இருப்பவர்களே ஆரியர்கள் என்று கூறினர் நாஜிக்கள். மேலும் யூதர்கள், ரோமா (ஜிப்ஸிக்கள்), கறுப்பினத்தவர்கள் மற்றும் இதர இனங்களைச் சேர்ந்த மக்கள் அனைவரும் ஆரியர்களுக்குக் கீழானவர்கள் என்றும் நம்பினார்கள். ஜெர்மனி மற்ற நாடுகளைவிடச் சிறந்த நாடு என்றும், தங்கள் மக்களின் உயர்ந்த தன்மை மூலம் மற்றவர்களை ஆதிக்கம் செலுத்த முடியும், எனவே அவர்கள் ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்றும் அவர்கள் நம்பினர். இதுவே இரண்டாம் உலகப் போருக்கு முன்பும் பின்பும் பிற நாடுகளை ஜெர்மனி கைப்பற்ற வழிவகுத்தது. யார் இந்த அடால்ஃப் ஹிட்லர்? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, அடால்ஃப் ஹிட்லர் அடால்ஃப் ஹிட்லர் என்ற பெயர் கொண்ட நபர் 1921ஆம் ஆண்டு நாஜி கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்றார். பிறகு 1933ஆம் ஆண்டு ஜனவரியில், நடந்த தேர்தலில் அதிக வாக்குகள் பெற்றதால் நாஜிக்கள் ஆட்சியமைக்க அழைக்கப்பட்டனர். தனது கட்சி அதிகாரத்திற்கு வந்த தருணத்தில் இருந்து, ஜெர்மானியர்களின் வாழ்க்கையில் அனைத்து அம்சங்களிலும் நாஜி கொள்கைகளை புகுத்தத் தொடங்கினார் அடால்ஃப் ஹிட்லர். மேலும் பயம் மற்றும் அச்சுறுத்தலைப் பயன்படுத்தி அவர்களைத் தனது கட்டுக்குள் கொண்டு வந்தார். ஜெர்மனியின் அதிபர் ஹிண்டன்பர்க் 1934இல் இறந்தபோது, ஹிட்லர் தன்னைத் தானே தலைவர்(Fuhrer) அல்லது 'ஜெர்மனியின் உச்சபட்ச தலைவர்' (supreme leader of Germany) என்று அறிவித்துக்கொண்டார். (தற்போது, Fuhrer என்ற சொல்லுக்கு மக்கள் மீது மிருகத்தனமான ஆட்சியைத் திணிக்கும் இரக்கமற்ற தலைவர் என்ற எதிர்மறையான அர்த்தம் உள்ளது.) ஹிட்லருக்கும் நாஜிகளுக்கும் முக்கியமான மூன்று விஷயங்கள்: ஆரிய இனத்தின் புனிதம் ஜெர்மனியின் மகத்துவம் அடால்ஃப் ஹிட்லரை உச்சமாகக் கருதுவது இவற்றை மக்களைப் பின்பற்றச் செய்ய நாஜி கட்சி பல்வேறு பிரசாரங்களைச் செய்தது. அதற்காகப் பெரும் பேரணிகள், பெரிய ஸ்பீக்கர்கள் அமைத்து பொதுக்கூட்டங்களில் நாஜிக்கள் குறித்த தகவல்களைப் பரப்புவது போன்ற பணிகளைச் செய்தனர். ஹோலோகாஸ்ட் என்றால் என்ன? ஹோலோகாஸ்ட் என்பது யூத மக்களை ஒடுக்குவதில் தொடங்கி, இறுதியாக அவர்களின் இன அடையாளத்திற்காகவே மில்லியன் கணக்கான யூத மக்களை கொன்று குவித்ததில் முடிந்த துயர சம்பவம். இது காலப்போக்கில் கொடூரமானதாக மாறிய ஒரு செயல்பாடு. நாஜிக்களின் கொடுமைகள் நாஜிக்கள் 1933இல் அதிகாரத்திற்கு வந்தது முதல், "சமூகத்தில் வாழத் தகுதியான அங்கத்தினர்" என்று தாங்கள் நினைக்காத மக்களை, குறிப்பாக யூத மக்களைத் துன்புறுத்தினார்கள். அவர்களுக்கு எதிராக பாரபட்சம் காட்டும், அவர்களின் உரிமைகளைப் பறிக்கும் சட்டங்களை அறிமுகப்படுத்தினர். இதனால் யூதர்கள் சில இடங்களில் அனுமதிக்கப்படவில்லை மற்றும் சில வேலைகளைச் செய்யத் தடை விதிக்கப்பட்டது. "அரசின் எதிரிகள்" என்று அவர்கள் நினைக்கும் மக்களை சிறையில் அடைத்து வேலை செய்ய நிர்ப்பந்திக்கக்கூடிய வதை முகாம்களையும் அமைக்கத் தொடங்கினர். இதில் யூத மக்களும் நாஜிக்களை ஆதரிக்காத பிற மக்களும் அடங்குவர். அதுபோன்ற டச்சாவ் என்று அழைக்கப்படும் முதல் முகாம் மார்ச் 1933இல் முனிச்சிற்கு வெளியே திறக்கப்பட்டது. 1933 மற்றும் 1945 ஆண்டுகளுக்கு இடையில், நாஜிக்கள் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளில் 40,000க்கும் மேற்பட்ட முகாம்களை உருவாக்கினர். அதில் சில வேலை செய்வதற்கான முகாம்கள், சில கைதிகளை தற்காலிகமாக தங்க வைப்பதற்கான முகாம்கள், மற்றவை வதை முகாம்கள். அப்படி 1941இல் முதலில் வதை முகாம்கள் தொடங்கப்பட்டன. இங்குதான் நாஜிக்கள் அதிக எண்ணிக்கையில் மக்களைக் கொல்வார்கள். இங்கு எந்தக் காரணமும் இல்லாமல் பலர் முகாம் காவலர்களால் கொல்லப்பட்டனர். மேலும் பலர் அவர்களின் மோசமான நிலைமைகளின் காரணமாக இறந்தனர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, 1934ஆம் ஆண்டில், தீங்கிழைக்கும் வதந்திகள் சட்டம் என்று அழைக்கப்படும் ஒரு சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. நாஜிக்கள் அனைவரின் வாழ்க்கையையும் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கத் தொடங்கினார்கள். 1934ஆம் ஆண்டில், தீங்கிழைக்கும் வதந்திகள் சட்டம் என்று அழைக்கப்படும் ஒரு சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இது நாஜிக்களுக்கு எதிரான நகைச்சுவை சொல்வதை குற்றமாகக் கருதும் சட்டம். ஜாஸ் இசை தடை செய்யப்பட்டது, பாடப் புத்தகங்கள் நாஜிக் கருத்துகளை உள்ளடக்கியதாக மாற்றி எழுதப்பட்டன, ஹிட்லரின் படங்கள் எல்லா இடங்களிலும் வைக்கப்பட்டன, நாஜிக்களுக்கு பிடித்தது போல் எழுதப்படாத புத்தகங்கள் அழிக்கப்பட்டன. கடந்த 1935இல், 1,600 செய்தித்தாள்கள் மூடப்பட்டன, மீதமுள்ள செய்தித்தாள்கள் நாஜிக்களால் அங்கீகரிக்கப்பட்ட கட்டுரைகளை மட்டுமே அச்சிட அனுமதிக்கப்பட்டன. ஹிட்லர் யூத் (ஆண்கள்) மற்றும் பிடிஎம் (பெண்கள்) என்ற இளைஞர்களுக்கான கட்டாயக் குழுக்களை அமைத்தனர் நாஜிக்கள். இதன் மூலம் அவர்கள் வளரும்போது ஹிட்லரை வணங்கும் இளம் நாஜிக்களாக மாறுவார்கள் என்று நம்பினார்கள். சிறுவர்களுக்கு நாஜிக்களின் விழுமியங்கள்(Values) கற்பிக்கப்பட்டன மற்றும் அவர்கள் போருக்குத் தயார்படுத்தப்பட்டனர். பெண்களுக்கு சமையல் மற்றும் தையல் போன்ற திறன்கள் கற்பிக்கப்பட்டன. பட மூலாதாரம்,GETTY IMAGES கிரிஸ்டல்நாக்ட்(Kristallnacht) மற்றும் கோடிக்கணக்கானோரின் கொலை கடந்த 1938ஆம் ஆண்டு, நவம்பர் 8ஆம் தேதி மிகவும் முக்கியமானது. அன்றுதான் யூத மக்களுக்கு எதிராக பயங்கரமான வன்முறை நடந்தது. இது கிரிஸ்டல்நாக்ட் - 'உடைந்த கண்ணாடியின் இரவு' என்று அறியப்படுகிறது. அன்று இரவு நடத்தப்பட்ட சோதனையில் ரெய்டு செய்யப்பட்ட கடைகளில் இருந்து உடைந்து தெருக்களில் கிடந்த கண்ணாடிகளின் காரணமாக இந்தப் பெயர் வந்தது. இதில் 91 யூதர்கள் கொல்லப்பட்டனர். 30,000 பேர் கைது செய்யப்பட்டு வதை முகாம்களுக்கு அனுப்பப்பட்டனர். 267 ஜெப ஆலயங்கள் அழிக்கப்பட்டன. செப்டம்பர் 1, 1939இல், ஜெர்மனி போலந்தில் படையெடுத்தது. இதுவே இரண்டாம் உலகப் போரின் தொடக்கமாக வரலாற்றில் பதிவாகியுள்ளது. போலந்தில் உள்ள யூத மக்கள் கெட்டோக்கள் என்று அழைக்கப்படும் தேர்வு செய்யப்பட்ட பகுதிகளில் வாழ கட்டாயப் படுத்தப்பட்டனர். அங்கு அவர்கள் மிகவும் மோசமாக நடத்தப்பட்டனர் மற்றும் பலர் கொல்லப்பட்டனர். அங்கு நிலை மிகவும் மோசமாக இருந்த காரணத்தால் பலரும் நோய் மற்றும் பட்டினியால் இறந்து போயினர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, 1941ஆம் ஆண்டின் இறுதியில், போலந்தில் செல்ம்னோ என்று அழைக்கப்படும் முதல் வதை முகாம் அமைக்கப்பட்டது. நாஜிக்கள் 1940களின் முற்பகுதியில், மிக குறுகிய காலத்தில் ஐரோப்பாவின் யூத மக்கள்தொகையில் அதிக எண்ணிக்கையிலான மக்களைக் கொல்வதற்கான வழியைத் தேடினர். அப்போதுதான் ஏராளமான மக்களைக் கொல்லக்கூடிய வதை முகாம்களின் யோசனையைக் கொண்டு வந்தனர். இதைத்தான் அவர்கள் 'இறுதி தீர்வு' என்று அழைத்தனர். 1941ஆம் ஆண்டின் இறுதியில், போலந்தில் செல்ம்னோ என்று அழைக்கப்படும் முதல் வதை முகாம் அமைக்கப்பட்டது. நாஜிக்களால் கட்டுப்படுத்தப்பட்ட போலந்தின் பகுதிகளில் மொத்தம் ஆறு வதை முகாம்கள் இருந்தன: ஆஷ்விட்ஸ்-பிர்கெனாவ் (மிகப் பெரியது), பெல்செக், செல்ம்னோ, மஜ்டானெக், சோபிபோர் மற்றும் ட்ரெப்ளிங்கா. போலந்துக்கு வெளியே (பெலாரஸ், செர்பியா, யுக்ரேன் மற்றும் குரோஷியாவில்) நாஜிக்கள் மற்றும் அவர்களது கூட்டாளிகளால் முகாம்கள் தொடங்கப்பட்டன. அங்கு பல நூறாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். உலகம் இதுவரை கண்டிராத அளவில் 1941 மற்றும் 1945ஆம் ஆண்டுக்கு இடையில், மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். கோடிக்கணக்கான மக்கள் முகாம்களுக்கு ரயில் மூலம் அனுப்பட்டனர். அங்கு அவர்கள் வேலை செய்ய கட்டாயப்படுத்தப்பட்டார்கள் அல்லது கொல்லப்பட்டார்கள். ஹோலோகாஸ்டில் கொல்லப்பட்டவர்கள் அல்லது துன்புறுத்தப்பட்டவர்கள் யார்? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இந்த முகாம்களை அழிப்பதன் மூலம் தங்கள் குற்றங்களுக்கான ஆதாரங்களை மறைக்க முயன்றனர் நாஜிக்கள். பாதிக்கப்பட்டவர்கள் யூதர்கள் ரோமா மற்றும் சிந்திக்கள் ('ஜிப்சிகள்') ஸ்லாவிக் மக்கள், குறிப்பாக சோவியத் யூனியன், போலந்து மற்றும் யூகோஸ்லாவியாவை சேர்ந்தவர்கள். மாற்றுத் திறனாளிகள் பால் புதுமையினர் கருப்பின மக்கள் யெகோவாவின் சாட்சிகள் அரசியல் எதிரிகள் ஹோலோகாஸ்ட் எப்படி முடிவுக்கு வந்தது? இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனிக்கு எதிராகப் போரிட்ட பிரிட்டன், அமெரிக்கா, சோவியத் யூனியன் மற்றும் அவர்களது நட்பு நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் நாஜிக்களின் கட்டுப்பாட்டில் இருந்த ஐரோப்பாவின் பகுதிகள் வழியாகச் செல்லும்போது, இந்த வதை முகாம்களைக் கண்டுபிடிக்கத் தொடங்கினர். நாஜிக்கள் தோற்கடிக்கப்படுவார்கள் என்பது முன்பே தெளிவாகத் தெரிந்ததால், அவர்கள் இந்த முகாம்களை அழிப்பதன் மூலம் தங்கள் குற்றங்களுக்கான ஆதாரங்களை மறைக்க முயன்றனர். அவர்கள் போலந்தில் மீதமிருந்த கைதிகளை ஜெர்மனியில் உள்ள முகாம்களுக்குத் திரும்பிச் செல்லும்படி கட்டாயப்படுத்தினர். இந்தக் கடினமான பயணத்தில் பல கைதிகள் உயிரிழந்தனர். நாஜிக்களால் தாங்கள் செய்ததை மறைக்க முடியவில்லை. அதேநேரம் இந்த இனப்படுகொலையின் கொடூரம் எவ்வளவு ஆழமானது என்பதை உலகம் அறிந்துகொள்வதற்கு நீண்ட காலம் தேவைப்படவில்லை. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பலர் முகாமில் நடந்த சித்திரவதையின் காரணமாக நோய்வாய்ப்பட்டு விடுதலைக்குப் பின் இறந்து போயினர். மஜ்தானெக் தான் 1944 கோடைக்காலத்தில் விடுவிக்கப்பட்ட முதல் முகாம். முகாம்களில் இருந்தவர்களை விடுவிக்கச் சென்ற மக்கள், அங்கு தாங்கள் எதிர்கொண்ட கொடூரமான காட்சிகளைப் பற்றிப் பேசியுள்ளனர். முகாம்களில் இருந்து விடுவிக்கப்பட்டவர்களில் பலர் முகாமில் நடந்த சித்திரவதையின் காரணமாக நோய்வாய்ப்பட்டு விடுதலைக்குப் பின் இறந்து போயினர். அவர்களுக்கு யுத்தம் முடிவடைந்த பின்னரும்கூட வாழ்க்கை மிகவும் கடினமாக இருந்தது. தப்பிப் பிழைத்தவர்கள் பலரும் தங்கள் வீடுகளில் வேறு யாரோ வசிப்பதைக் கண்டனர். மேலும் வாழ்வதற்கான வேறு இடத்தை அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. இவ்வளவு பெரிய எண்ணிக்கையிலான அகதிகளை ஏற்றுக்கொள்ள பிற நாடுகளும் விரும்பவில்லை. ஹோலோகாஸ்ட் குற்றத்திற்காக நாஜிக்கள் தண்டிக்கப்பட்டனரா? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, போர் முடிவதற்குள் அடால்ஃப் ஹிட்லர் தற்கொலை செய்துகொண்டதால் அவரை நீதியின் முன் நிறுத்த முடியவில்லை. ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை 1946ஆம் ஆண்டு டிசம்பர் 11ஆம் தேதி, சர்வதேச சட்டத்தின் கீழ் இனப்படுகொலையை குற்றம் என்று தீர்ப்பளித்தது. போர் முடிவதற்குள் அடால்ஃப் ஹிட்லர் தற்கொலை செய்துகொண்டதால் அவரை நீதியின் முன் நிறுத்த முடியவில்லை. இரண்டாம் உலகப் போருக்குப் பின் வந்த ஆண்டுகளில், நாஜிக்களின் மீது அவர்கள் செய்த குற்றங்களுக்காக வழக்குத் தொடரப்பட்டது. சமீபத்தில் ஜூலை 2015இல் கூட, ஆஷ்விட்ஸில் காவலராகப் பணிபுரிந்த 94 வயதான ஆஸ்கர் க்ரோனிங்கிற்கு அவரது குற்றங்களுக்காக தண்டனை வழங்கியது ஜெர்மன் நீதிமன்றம். ஆனால் அனைவரையும் நீதியின் முன் நிறுத்துவது சாத்தியமாகவில்லை. பல நாஜிக்கள் போருக்குப் பிறகு தலைமறைவாகினர். அதற்குப் பின் அவர்கள் கண்டுபிடிக்கப்படவில்லை அல்லது அவர்களின் குற்றங்கள் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பே இறந்துவிட்டனர். பட மூலாதாரம்,VIEW PICTURES படக்குறிப்பு, ஜனவரி 27 அன்று இங்கிலாந்தில் உள்ள மக்கள் ஹோலோகாஸ்ட் நினைவு தினத்தைக் கடைபிடிக்கின்றனர். இனப்படுகொலையை நினைவில் கொள்வது எப்படி? தற்போது, இந்த இனப்படுகொலையின் தீவிரம் உலகம் முழுவதும் அறியப்பட்ட ஒன்றாக உள்ளது. மேலும் இனப்படுகொலையின் கொடூரங்களுக்கும், சில நடத்தைகள் எப்படி வழிநடத்தக்கூடும் என்பதற்கும் இதுவோர் எடுத்துக்காட்டு. ஆனால், துரதிர்ஷ்டவசமாக இது ஒன்றும் இனப்படுகொலை வரலாற்றில் நடந்த ஒரே இனப்படுகொலை அல்ல. கம்போடியா, ருவாண்டா, போஸ்னியா மற்றும் டார்பூர் ஆகிய நாடுகளில் லட்சக்கணக்கான மக்கள் அவர்களின் இன அடையாளத்திற்காகவே கொல்லப்பட்டுள்ளனர். ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி 27 அன்று, பிரிட்டனில் உள்ள மக்கள் ஹோலோகாஸ்ட் நினைவு தினத்தைக் கடைபிடிக்கின்றனர். 1945இல் சோவியத் ராணுவத்தின் வீரர்களால் மிகப்பெரிய நாஜி வதை முகாமான ஆஷ்விட்ஸ்-பிர்கெனாவ் விடுதலை செய்யப்பட்ட நாளில் இந்தத் தினம் கடைபிடிக்கப்படுகிறது. ஹோலோகாஸ்ட் நினைவு நாள் என்பது இனப்படுகொலையில் பாதிக்கப்பட்ட கோடிக்கணக்கானவர்களை நினைவுகூர்வது மட்டுமின்றி, உலகெங்கிலும் நடத்தப்பட்டுள்ள இதர இனப்படுகொலைகளில் கொல்லப்பட்டவர்களையும் நினைவுகூரும் தினமாகப் பார்க்கப்படுகிறது. மேலும் மற்றவர்களின் நம்பிக்கைகள் மற்றும் வேறுபாடுகளை சகித்துக்கொள்வது எவ்வளவு முக்கியம் என்பதையும், மக்களை ஒதுக்கி வைப்பதோ அல்லது வெறுப்பு செய்தியைப் பரப்புவதோ தவறு என்பதையும் இது சுட்டிக்காட்டுகிறது. இது ஹோலோகாஸ்டில் நடந்தவற்றை ஒருபோதும் மக்கள் மறக்காமல் இருக்கவும், மீண்டும் இதுபோன்ற ஒரு மோசமான சம்பவம் நடக்காமல் தடுக்கவும் உதவுகிறது. இந்த நாள் எப்படி ஒரு "பாதுகாப்பான, சிறந்த எதிர்காலத்தை உருவாக்க ஒன்றிணைந்து செயல்படுவதற்கான நாள்" என்பதை விளக்குகிறது ஹோலோகாஸ்ட் நினைவு நாள் அறக்கட்டளை. https://www.bbc.com/tamil/articles/c87nj5843mvo
-
பாடசாலை மாணவர்களின் உணவுக்கான தொகை அதிகரிப்பு
பாடசாலை மாணவர் ஒருவரின் உணவுக்காக தற்போது வழங்கப்படும் 85 ரூபாயை 115 ரூபாவாக அதிகரிப்பது தொடர்பில் கல்வி அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது. அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையேற்றித்தினால் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் இது தொடர்பில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளதுடன், நிதியமைச்சின் பிரதிநிதிகளுடனும் கலந்துரையாடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், இது தொடர்பிலான இறுதித் தீர்மானம் அடுத்த வாரமளவில் எடுக்கப்படும் என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதேவேளை, 100,000 பாடசாலை மாணவர்களுக்கு இலவச மதிய உணவு தற்போது வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://thinakkural.lk/article/289571
-
120 மெகாவோட் மின்சாரத்தை தேசிய மின் கட்டமைப்பில் இணைப்பதற்கு திட்டம்
உமாஓயா திட்டத்தின் கீழ் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 15ஆம் திகதியிலிருந்து 120 மெகாவோட் மின்சாரத்தை தேசிய மின் கட்டமைப்பில் இணைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அதேநேரம் 31 நீர்த் தேக்கங்கள் மூலம் நீரில் மிதக்கும் சோலார் பேனல்களைப் பயன்படுத்தி 3,077 மெகாவோட் மின்சாரத்தை உற்பத்தி செய்து தேசிய மின்கட்டமைப்பில் இணைக்க முடியும் எனவும் இதற்குப் பொருத்தமான நீர்த்தேக்கங்கள் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். உணவு உற்பத்தியை அதிகரிப்பதன் ஊடாக தேசிய உணவுப் பாதுகாப்பிற்கு பங்களிப்பதையே, 2024 ஆம் ஆண்டில் நீர்ப்பாசன அமைச்சு முக்கிய நோக்கமாக கொண்டுள்ளது. நீர்ப்பாசன அமைச்சின் ஊடாக பல பாரிய பல்நோக்கு அபிவிருத்தித் திட்டங்கள் ஏற்கனவே முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதில் பெரும்பாலான திட்டங்கள் வெளிநாட்டுக் கடன்களின் கீழ் செயல்படுத்தப்படுகின்றன. அந்தவகையில் ஆரம்பிக்கப்பட்ட உமாஓயா திட்டத்தின் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. எனவே, பெப்ரவரி மாதம் 15ஆம் திகதிக்குள் 120 மெகாவோட் மின்சாரத்தை தேசிய மின் கட்டமைப்பில் இணைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/289543
-
இலங்கையின் வர்த்தக மற்றும் கலாசார கண்காட்சி சீனாவில் நடைபெறவுள்ளது
இலங்கையின் வர்த்தகம், முதலீட்டு வாய்ப்புகள் மற்றும் கலாசார கண்காட்சி 2024 மார்ச் மாதம் சீனாவின் சியான் மாகாணத்தில் உள்ள பாவோஜி நகரில் நடைபெறவுள்ளது. 100க்கும் மேற்பட்ட தொழில்முனைவோர் மற்றும் வர்த்தகர்களின் பங்கேற்புடன் இலங்கை தயாரிப்புகளை காட்சிப்படுத்த 40க்கும் மேற்பட்ட இலங்கையின் காட்சிக்கூடங்கள் அமைக்கப்படும் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இக்கண்காட்சியின் சீன மற்றும் இலங்கை ஏற்பாட்டாளர்கள் குழுவொன்று, இந்த வாரம் பிரதமர் தினேஷ் குணவர்தனவை அலரிமாளிகையில் சந்தித்து, சின்ஜியாங்கில் இலங்கையின் உத்தேச கண்காட்சி குறித்து விளக்கமளித்தது. இக்கண்காட்சியானது இலங்கையின் வர்த்தகம், முதலீடு மற்றும் சுற்றுலாத் துறைகளையும் ஊக்குவிக்கும் என அவர்கள் தெரிவித்தனர். https://thinakkural.lk/article/289483
-
ஜனாதிபதி தேர்தல் : தேர்தல்கள் ஆணையாளரின் அறிவிப்பு!
ஜனாதிபதி தேர்தல் உரிய தினத்தில் நடத்தப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அதேநேரம், ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைப்பதற்கான எந்தவொரு சாத்திய கூறுகளும் இல்லை. ஜனாதிபதி தேர்தலுக்கு 10 பில்லியன் ரூபா நிதி கோரப்பட்டுள்ளது. இந்தநிலையில், ஜனாதிபதி தேர்தல் எந்தவொரு சந்தரப்பத்திலும் பிற்போடப்படமாட்டாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/289460
-
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் புதிய நிர்வாகத் தெரிவுகள் திருகோணமலையில் இன்று
27 JAN, 2024 | 11:29 AM இலங்கை தமிழ் அரசு கட்சியின் 17ஆவது தேசிய மாநாட்டுக்காக புதிய நிர்வாகத் தெரிவுகள் இடம்பெற்று வருகின்றன. அந்த வகையில் கடந்த 21ஆம் திகதி இடம்பெற்ற தலைவர் தெரிவில் இலங்கை தமிழ் அரசு கட்சியின் புதிய தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் ஜனநாயகத் தேர்தல் மூலம் தெரிவுசெய்யப்பட்டிருந்தார். இந்நிலையில், ஏனைய பதவிகளுக்கான தெரிவுகள் இன்று சனிக்கிழமை (27) திருகோணமலையில் இடம்பெறுகின்றன. அவ்வாறு ஏனைய பதவிகளுக்கான தெரிவுகள் இடம்பெறுவதற்கு முன்னதாக தற்போது திருகோணமலை முருகாபுரி ஜேக்கப் கடற்கரை தனியார் விடுதியில் இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்திய செயற்குழுவினர் ஒன்றுகூடி கலந்துரையாடி வருகின்றனர். அதன் பின்னர், பொதுச்சபை உறுப்பினர்களையும் உள்வாங்கி கட்சியின் முக்கிய பதவிகளுக்கான தெரிவுகள் இடம்பெறவுள்ளன. அதேவேளை இன்று பதவிகளுக்கான தெரிவுகள் நிறைவடைவதை தொடர்ந்து, நாளை (28) இலங்கை தமிழ் அரசு கட்சியின் 17ஆவது தேசிய மாநாடு இடம்பெறவுள்ளது. https://www.virakesari.lk/article/174902
-
ஏடன் வளைகுடாவில் தீப்பிடித்து எரிகின்றது கப்பல் - ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை தாக்குதல்
Published By: RAJEEBAN 27 JAN, 2024 | 08:31 AM ஹெளத்தி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல் காரணமாக ஏடன் வளைகுடாவில் எண்ணெய் கப்பலொன்று தீப்பிடித்து எரிவதாக அதன் உரிமையாளர் தெரிவித்துள்ளார். ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஏவுகணை தாக்குதலால் மார்லின் லுவான்டா என்ற கப்பல் தீப்பிடித்துள்ளது என கப்பலை இயக்கும் நிறுவனம் தெரிவித்துள்ளது. கப்பலின் எண்ணெய் தாங்கியொன்று தாக்கப்பட்டுள்ளதால் கப்பல் தீப்பிடித்து எரிவதாக தகவல் வெளியாகியுள்ளது. கப்பல் எதிர்ப்பு ஏவுகணை எண்ணெய் கப்பலை தாக்கியுள்ளது என தெரிவித்துள்ள அமெரிக்க அதிகாரிகள் கடற்படை கப்பலொன்று உதவிக்கு விரைந்துள்ளது என குறிப்பிட்டுள்ளனர். காயங்கள் குறித்த தகவல்கள் எதுவுமில்லை என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். போர்க்கப்பல்கள் அந்த கப்பலை நோக்கி சென்றன மாலுமிகள் பாதுகாப்பாக உள்ளனர் என பிரிட்டனின் கடல்சார்வர்த்தக நடவடிக்கை அமைப்பு தெரிவித்துள்ளது. ஏனைய கப்பல்கள் எச்சரிக்கையுடன் பயணிக்கவேண்டும் சந்தேகத்திற்கு இடமான விடயங்களை அவதானித்தால் அறிவிக்கவேண்டும் என பிரிட்டன் அமைப்பு தெரிவித்துள்ளது. இதேவேளை மார்லின் லுவான்டா கப்பலை இலக்குவைத்ததை ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள் உறுதி செய்துள்ளனர். பல பொருத்தமான ஏவுகணைகளை பயன்படுத்தி தாக்குதலை மேற்கொண்டதாக ஹெளத்திகிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/174888
-
70 ஆண்டுகளுக்கு பிறகு சவூதியில் மதுபானக்கடை.
சவுதி அரேபியாவில் முதல் மதுபானக்கடை விரைவில் திறக்கப்படும் மது விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டு இருந்த சவுதி அரேபியாவில், முதல் முதலாக மதுபானக்கடையை திறக்க அந்நாட்டு அரசு திட்டமிட்டு உள்ளதாக இளவரசர் முகமதுபின் சல்மான் அறிவித்து உள்ளார். சவுதி அரேபியா நாட்டின் ரியாத் நகரத்தில் முஸ்லிம் அல்லாத வெளிநாட்டினருக்காக மதுபானங்கள் விற்பனை செய்ய மதுபானக்கடை ஒன்று விரைவில் திறக்கப்பட உள்ளது. இவர்கள் மது பெற வேண்டும் என்றால் வெளியுறவு அமைச்சிடம் அனுமதி குறியீடு பெற்று, ’மொபைல் செயலி’ மூலம் பதிவு செய்ய வேண்டும் எனவும் நிபந்தனை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த மதுபானக் கடையின் வாடிக்கையாளர்களாக பெரும்பாலும் தூதரகங்களில் பணியாற்றுபவர்களே இருப்பார்கள். கடந்த 70 ஆண்டுக்கால வரலாற்றில் சவுதி அரேபியாவில் மதுபானம் கடை மூலம் விற்கப்படுவது இதுவே முதல்முறை. சவுதிஅரேபியா நாட்டில் முதல் மதுபான கடை திறக்கப்படுவதன் மூலம் இஸ்லாமிய சட்ட கோட்பாட்டில் இருந்து விலகி செல்கிறாரா இளவரசர் முகமதுபின் சல்மான் என கேள்வி எழுந்து உள்ளது. https://thinakkural.lk/article/289529
-
பாகிஸ்தான் மண்ணில் இந்திய ஏஜென்டுகள் கொலை செய்ததாக குற்றச்சாட்டு: இந்தியா மறுப்பு
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பாகிஸ்தான் வெளியுறவு செயலாளர் முகமது சைரஸ் காஜி கட்டுரை தகவல் எழுதியவர், மெரில் செபாஸ்டின் பதவி, பிபிசி நியூஸ் கொச்சி ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இரண்டு பாகிஸ்தான் குடிமக்களை இந்திய ஏஜென்டுகள் 2023ஆம் ஆண்டில் பாகிஸ்தான் மண்ணில் கொன்றதாக பாகிஸ்தான் கூறிய குற்றச்சாட்டுகளை இந்தியா நிராகரித்துள்ளது. அந்தக் குற்றச்சாட்டுகள் "பொய்யானவை" என்று கூறியுள்ளது. கனடாவில் சீக்கிய பிரிவினைவாதி கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக கனடா குற்றம் சாட்டிய சில மாதங்களுக்குப் பிறகு பாகிஸ்தானின் இந்தக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆனால், இந்தியா அதை மறுத்துள்ளது. இந்த இரண்டு கொலைகளுக்கும் இந்திய ஏஜென்டுகளுக்கும் இடையிலான தொடர்புகள் குறித்து "நம்பகமான ஆதாரங்கள்" இருப்பதாக பாகிஸ்தான் கடந்த வியாழக்கிழமை கூறியது. இந்திய வெளியுறவு அமைச்சகம் இதை "தீங்கிழைக்கும் இந்திய எதிர்ப்பு பிரசாரம்" என்று கூறியுள்ளது. இதுகுறித்த செய்தியாளர் சந்திப்பின்போது, பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம், 2023ஆம் ஆண்டு செப்டம்பரில் ராவல்கோட் நகரில் முகமது ரியாஸ் மற்றும் அக்டோபரில் சியால்கோட் நகரில் ஷாஹித் லத்தீப் ஆகியோர் கொல்லப்பட்டனர் என்று தெரிவித்தது. அதில் ஒருவர் ஒரு மசூதியில் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தபோது சுட்டுக் கொல்லப்பட்டார், மற்றொருவர் ஒரு மசூதிக்கு வெளியே கொல்லப்பட்டார் என்று கூறியது. பாகிஸ்தானின் குற்றச்சாட்டுக்கு இந்தியா பதில் பட மூலாதாரம்,GETTY IMAGES பாகிஸ்தானின் வெளியுறவு அமைச்சகம் கொல்லப்பட்டவர்கள் யார் அல்லது இந்திய அரசு அதன் பரம எதிரியின் எல்லைக்குள் கொலைகளை நடத்த ஏஜென்டுகளை அனுப்பியதாகக் கூறப்படுவதற்கான காரணங்கள் என்ன என்பது குறித்து எந்தத் தகவலையும் வெளியிடவில்லை. வெளியுறவு செயலாளர் முகமது சைரஸ் காஜி இந்தக் கொலைகளை "ஏற்றுக்கொள்ள முடியாதது" மற்றும் "இறையாண்மையை மீறும் செயல்" என்று கூறினார். "இந்தப் படுகொலைகளுக்கு மூளையாகச் செயல்பட்ட இரண்டு இந்திய ஏஜென்டுகளின் தொடர்பு குறித்த ஆவண, நிதி மற்றும் தடயவியல் ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன," என்றும் அவர் தெரிவித்தார். அதோடு, சர்வதேச சட்டத்தை அப்பட்டமாக மீறியதற்கு இந்தியா பொறுப்பேற்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார். பாகிஸ்தான் எழுப்பிய குறிப்பிட்ட குற்றச்சாட்டுகளுக்கு இந்தியா நேரடியாக பதிலளிக்கவில்லை. ஆனால் பாகிஸ்தானை "பயங்கரவாதம், திட்டமிடப்பட்ட குற்றங்கள் மற்றும் சட்டவிரோத பன்னாட்டு நடவடிக்கைகளின் மையம்," என்று விமர்சித்தது. சீக்கியர்களின் கொலைகளுடன் ஒப்பிட்ட பாகிஸ்தான் பட மூலாதாரம்,X/@MEAINDIA இதுகுறித்து இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்தியாவும் பல நாடுகளும் பாகிஸ்தான் அதன் பயங்கரவாதம் மற்றும் வன்முறை கலாசாரத்தால் விழுங்கப்படும்," எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் வெளியுறவு செயலாளர் காஜி, "கனடாவிலும் அமெரிக்காவிலும் எழுந்த குற்றச்சாட்டுகள், சீக்கியர்களின் கொலைகள் மற்றும் கொலை முயற்சிகள் சம்பந்தப்பட்டது என்றாலும், அதேபோன்ற முயற்சிகள்தான் பாகிஸ்தானில் நடைபெற்றுள்ளன,” என்று கூறினார். கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில், காலிஸ்தான் அல்லது தனி சீக்கிய நாட்டிற்காக வாதிடும் நியூயார்க்கை சேர்ந்த ஓர் அமெரிக்க குடிமகனைப் படுகொலை செய்ய இந்தியர் ஒருவர் திட்டமிட்டதாகவும் அந்த சதித்திட்டத்தை முறியடித்ததாகவும் அமெரிக்கா கூறியது. இதில் குற்றம்சாட்டப்பட்ட நிகில் குப்தா ஓர் இந்திய அரசாங்க அதிகாரியால் இயக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், அந்த அதிகாரி குறித்த விவரங்கள் குற்றப்பத்திரிகையில் இடம்பெறவில்லை, அதிகாரி மீது குற்றம்சாட்டப்படவும் இல்லை. படுகொலை சதித்திட்ட விவகாரத்தை இந்தியாவிடம் உயர்மட்ட அதிகாரிகளுடன் எழுப்பியதாக வெள்ளை மாளிகை கூறியது. "அமெரிக்க அரசாங்கத்தால் எழுப்பப்பட்ட பாதுகாப்பு குறித்த கவலைகளை நிவர்த்தி செய்வதற்காக" ஓர் உயர்மட்ட விசாரணைக் குழுவை அமைத்துள்ளதாக இந்தியா கூறியது. ஜூன் மாதம் பிரிட்டிஷ் கொலம்பியாவில் ஒரு சீக்கிய தலைவர் கொலை செய்யப்பட்டதில் இந்திய அரசாங்கத்தை இணைக்கும் "நம்பகமான" ஆதாரங்கள் இருப்பதாக கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறிய சில மாதங்களுக்குப் பிறகு இந்தச் செய்தி வந்துள்ளது. அந்தக் கொலையில் தங்களுக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்று இந்தியா மறுத்தது. இந்தக் குற்றச்சாட்டு இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியது. காலிஸ்தான் இயக்கம் 1980களில் சீக்கியர்கள் பெரும்பான்மையாக உள்ள பஞ்சாப் மாநிலத்தை மையமாகக் கொண்ட வன்முறை கிளர்ச்சியுடன் இந்தியாவில் உச்சத்தில் இருந்தது. இது பலவந்தமாக அடக்கப்பட்டது, இப்போது இந்தியாவில் இந்தக் கோரிக்கை பெரிய அளவில் முன்னெடுக்கப்படவில்லை. ஆனால் கனடா, ஆஸ்திரேலியா, பிரிட்டன் போன்ற நாடுகளில் உள்ள சீக்கிய புலம்பெயர்ந்தோரிடையே இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறது. https://www.bbc.com/tamil/articles/cjmd0j41411o
-
ஒரு வேளை உணவுக்கு ரூ.90 இலட்சம்- டிப்ஸ் எவ்வளவு தெரியுமா?
துருக்கியை சேர்ந்தவர் பிரபல சமையல் கலை நிபுணர் நுஸ்ரெட் கோட்சே என்ற சால்ட் பே. இவர் டுபாயில் ஒரு உணவகம் நடத்தி வருகிறார். அங்கு சமீபத்தில் வாடிக்கையாளர்கள் குழுவாக சென்று உணவு சாப்பிட்டுள்ளனர். அவர்களுக்கு வந்த பில் தொகையை சால்ட் பே தனது வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மிகப்பெரிய உணவு பில்லான அதில், மொத்தம் ரூ.90 இலட்சம் பில் தொகை இருந்தது. ‘பணம் வரும்… போகும்…’ என்ற தலைப்புடன் அந்த பில்லின் புகைப்படத்தை அவர் பதிவிட்டிருந்தார். அந்த பில்லில், பிரெஞ்ச் பொறியல், கோல்டன் பக்லாவா, பழத்தட்டு, துருக்கிய காபி மற்றும் சமையல்காரரின் கையொப்பம் கொண்ட இறைச்சி உணவுகள் உள்ளிட்ட பல உணவு பொருட்கள் ஆர்டர் செய்யப்பட்டிருந்தது தெரிய வந்தது. உணவை தவிர பல விலை உயர்ந்த பானங்களையும் அருந்தியதற்கான தொகையும் பில்லில் இருந்தது. அதோடு வாடிக்கையாளர்கள் தாராளமாக சுமார் ரூ.20 இலட்சத்தை டிப்ஸ்சாக வழங்கி இருந்ததும் பில்லில் இடம் பெற்றிருந்தது. இந்த பில் வைரலான நிலையில், பயனர்கள் பலரும் தங்களது விமர்சன கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். நாள்தோறும் பல இலட்சக்கணக்கான மக்கள் பசியால் அவதிப்படும் போது ஒரு நேர உணவுக்காக இவ்வளவு செலவழிப்பது வெட்கக்கேடானது என ஒரு பயனரும், பணம் வீணடிக்கப்பட்டுள்ளது என மற்றொரு பயனரும் பதிவிட்டுள்ளனர். https://thinakkural.lk/article/289522
-
போலி சிகரெட்டுக்கள் தொடர்பில் சூத்திரதாரியாக செயல்படுபவர் யார் ?
24 JAN, 2024 | 07:40 PM உலக சுகாதார அமைப்பு (WHO) வரையறுத்துள்ளபடி, 'சட்டவிரோத சிகரெட் வர்த்தகம்' என்பது சிகரெட்டுகளின் உற்பத்தி, ஏற்றுமதி, இறக்குமதி, உடைமை, விநியோகம், விற்பனை, கொள்முதல் மற்றும் எளிதாக்குதல் போன்ற சட்டவிரோத முயற்சிகளை குறிக்கிறது. சட்டவிரோத வர்த்தகம் மூன்று தயாரிப்பு வகைகளைக் கொண்டுள்ளது. கடத்தல் (smuggled), போலித் தயாரிப்புகள் (counterfeits) மற்றும் மலிவான / சட்டவிரோத சிகரட்டுக்கள் (வெள்ளை சிகரட்டுகள் cheap / elicits white) போன்றவையாகும். புதிய ஆதாரங்களுடன், புகையிலை நிறுவனங்கள் சிகரெட் கடத்தலில் சிக்கலாக ஈடுபட்டுள்ளன என்பதும் இது உலக அளவில் புகையிலை நிறுவனங்களால் பின்பற்றப்படும் ஒரு விரிவான உத்தி (தந்திரோபாயம்) என்பதும் இனியும் ஒரு ரகசியம் அல்ல. உலக சுகாதார அமைப்பு மற்றும் பாத் பல்கலைக்கழகத்தின் அறிக்கைகளின்படி, புகையிலை நிறுவனங்களின் உள் ஆவணங்கள் 1990களின் முற்பகுதியில், சிகரெட் கடத்தல் தொழில்துறையின் வணிக உத்தியின் மிக முக்கியமான பகுதியாக இருந்தது. 1990களின் பிற்பகுதியிலும் 2000 ஆண்டுகளின் முற்பகுதியிலும் இந்த தந்திரோபாயங்கள் அம்பலமானது. குறிப்பாக விசாரணைகள், புகைபொருள் உற்பத்திக்கு எதிரான வழக்குகள் போன்றன புகையிலை நிறுவனங்களுக்கு மிகவும் எதிர்மறையான விளம்பரத்துக்கு வழிவகுத்தது. பாரிய மக்கள் தொடர்பு பிரச்சாரத்தைப் பயன்படுத்தி, புகையிலை நிறுவனங்கள் தாங்கள் சிகரெட் கடத்தலினால் பாதிக்கப்பட்டவர்கள், குற்றவாளிகள் அல்ல என்பதை தெளிவுபடுத்தியது. ஆனால் தற்போதைய சான்றுகள், சட்டவிரோத சிகரெட் வர்த்தகத்தில் புகையிலை நிறுவனங்களின் குறிப்பிடத்தக்க, தொடர்ச்சியான குறுக்கீடுகள் ஏற்கனவே நடந்து வருகின்றன என்பதை காட்டுகிறது. பல தசாப்தங்களாக பன்னாட்டு புகையிலை நிறுவனங்கள் தங்கள் சொந்த தயாரிப்புகளை கடத்துகின்றன. அதன் மூலம் அவர்களின் நிதி தேவைகளை பூர்த்தி செய்கின்றன. புகையிலை நிறுவனங்கள் பின்வரும் நன்மைகளைப் பெற தங்கள் தயாரிப்புகளை கடத்துகின்றனர். சிகரெட் பொருட்கள் மீதான வரி அல்லது விலை உயர்வை கட்டுப்படுத்துதல். அவர்களின் தயாரிப்புகள் சட்டபூர்வமானதா அல்லது சட்டவிரோதமானதா என்பதை பொருட்படுத்தாமல் அதன் மூலம் லாபம் ஈட்டுதல். புகையிலை கட்டுப்பாட்டுக் கொள்கைகளுக்கு எதிராக வாதிடுவதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக்கொள்தல். குறிப்பாக சிகரட் மீது ஏற்படுத்தும் ஒவ்வொரு கொள்கையும் சிகரெட் கடத்தலை அதிகரிக்க வழிவகுக்கிறது. கடத்தலின் விளைவாக குறையும் சாதாரண பொதுச் சந்தை விலைகள் புகையிலை தொழிலை நிறுத்துவதை தடுக்கின்றது மற்றும் மொத்த விற்பனையை அதிகரிக்கிறது. புகையிலை நிறுவனங்கள் ஏன் தங்கள் சொந்த தயாரிப்புகளை கடத்துகின்றன? சட்டவிரோத விற்பனையானது தற்போதுள்ள புகையிலை கட்டுப்பாட்டுக் கொள்கைகளை (பேக்கேஜிங் சட்டங்கள், விற்பனையின் வயது வரம்புகள்) பலவீனப்படுத்துகிறது. புகையிலை நிறுவனங்கள் சந்தையில் நுழைவதற்கும் ஒரு உத்தியாகவும் கடத்தலைப் பயன்படுத்துகின்றன. சிகரட் மீதான வரி அதிகரிப்பதற்கான முன்மொழிவு முன்வைக்கப்படும்போது அல்லது இலங்கையில் தற்போது நடைமுறையில் இருப்பது போல் சிறந்த வரிக் கொள்கைகள் இருக்கும்போது நாட்டில் சட்ட விரோதமான சிகரெட் வர்த்தகத்தின் அளவையும் தீவிரத்தையும் பெரிதுபடுத்துவது புகையிலை நிறுவனங்களினால் பயன்படுத்தப்படும் பொதுவான உத்தியாகும். இச்சந்தர்ப்பத்தில் தற்போது முன்வைக்கப்பட்டுள்ள சில முக்கிய பொதுவான வாதங்கள் பின்வருமாறு: சிகரெட் வரி அதிகரிப்பு காரணமாக சட்டவிரோத புகையிலை பொருட்களின் வர்த்தகத்தை அதிகரிக்கும். ஒரு சட்டவிரோத சிகரெட் சந்தையின் இருப்பு வரி அதிகரிப்புக்குப் பிறகு அரசாங்க வருவாய் குறைவதற்கு வழிவகுக்கிறது. ஜூலை 2023இல் சிகரெட் பொருட்களுக்கான வரி 20% மற்றும் 01 ஜனவரி 2024இல் 14%ஆக அதிகரிக்கப்பட்டதன் மூலம் மேற்கண்ட வாதங்கள் ஊடகங்களில் அதிகளவில் விளம்பரப்படுத்தப்பட்டன. இது சட்டவிரோத புகையிலை வர்த்தகம் பற்றிய உச்சகட்ட பேச்சுக்கு வழிவகுத்தது. இது சம்பந்தமாக, இலங்கையில் சில ஆய்வு அறிக்கைகளின் உள்ளடக்கங்களை கவனம் செலுத்தும்போது, ஆய்வுகளின் கண்டுபிடிப்புகள் சிகரெட் வரி அதிகரிப்பு தொடர்பான உண்மைகளை முன்வைக்கின்றன. மேலும் ஆய்வுகள் வாசகரின் கவனத்துக்குக் கொண்டு வருகின்றன. அவை தெளிவாக ஒன்றுக்கொன்று தொடர்புடைய மற்றும் தவறாக வழிநடத்தும் புகையிலை நிறுவனத்தினால் முன்வைக்கப்பட்ட வாதங்கள். சிகரெட் மீதான வரி அதிகரிப்பால் நுகர்வோர் மீண்டும் மலிவு விலையில் மாற்று வழிகளுக்கு திரும்புவார்கள். இது சட்டவிரோத சிகரெட் வர்த்தகம் அதிகரிப்பதற்கு வழிவகுக்கும். இதனால் அரசுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்படும் என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இருப்பினும், வரி உயர்த்தப்பட்டாலும், அரசின் வருவாய் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. மேலும், இலங்கையில் சிகரெட் உற்பத்திப் பொருட்களின் கடத்தல் 20%க்கும் அதிகமாக இருப்பதாக அறிக்கைகள் காட்டுகின்றன. ஆனால் இந்த தரவுகள் புகையிலை நிறுவனம் மற்றும் சந்தை ஆதாரங்களால் உருவாக்கப்பட்ட தரவு என்பதுடன் தெளிவற்ற ஆதாரங்கள் இருப்பதனால் இந்த புள்ளிவிபரங்களின் நம்பகத்தன்மையை சரிபார்க்க வேண்டியது அவசியம். துரதிர்ஷ்டவசமாக, புகைபொருள் உற்பத்திக்கு சாதகமான தரவை முன்வைக்கும் போக்குடன், அத்தகைய ஆதாரங்களை நம்புவதில் சிக்கல் உள்ளது. குறிப்பிட்ட இந்த ஆய்வுகளுக்கு யார் நிதியுதவி அளித்துள்ளனர் என்பதும் சந்தேகமாக உள்ளது. மாறாக, உத்தியோகபூர்வ சுங்கப் புள்ளிவிபரங்கள் கடத்தப்பட்ட சிகரெட்டுகளில் 1%க்கும் குறைவானவை கைப்பற்றப்பட்டதாக வெளிப்படுத்துகின்றன. கடத்தல் சம்பவங்கள் மேலே குறிப்பிடப்பட்ட 20%ஆக இருந்தால், சட்டவிரோத சிகரெட் உற்பத்திப் பொருட்களின் வர்த்தகத்தை ஊக்கப்படுத்துவதையும் குறைப்பதையும் நோக்கமாகக் கொண்ட ஒழுங்குமுறை நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கான வலுவான தேவையை இது முன்வைக்கிறது. கிடைக்கக்கூடிய பிற தரவு மற்றும் தகவல்களுக்கு இணங்க, வரி மற்றும் விலை ஏற்ற இறக்கங்கள் சிகரெட் பொருட்களின் கடத்தலுக்குப் பின்னால் ஒரே ஒரு காரணியை மட்டுமே பிரதிநிதித்துவப்படுத்துகின்றன என்பது சிகரெட் பொருட்கள் மீதான கலால் வரியை அதிகரித்தபோது அதனுடன் இணைத்து ஊடகங்கள் மற்றும் ஆராய்ச்சிகள் மூலம் சட்டவிரோத சிகரட் உற்பத்தியை பெரிதுபடுத்துதல், விளம்பரம் செய்தல் தெளிவாகிறது. இந்த காரணிகளில் பல்வேறு நாடுகளுக்கு இடையே சட்டபூர்வ சிகரெட் பொருட்களின் விலையில் ஏற்படும் மாறுபாடுகள் மற்றும் சிகரெட் கடத்தலுக்கான போதுமான அபராதம் ஆகியவை அடங்கும். எனவே, சிகரெட் பொருட்களின் கடத்தலுடன் தொடர்புடைய அனைத்து காரணிகளையும் கணக்கில் எடுத்துக்கொண்டு அவற்றை குறைக்க தேவையான நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துவது காலத்தின் தேவையாகும். மேற்கூறியவற்றுக்கு மேலதிகமாக, சிகரெட் / புகையிலை பொருட்கள் மீதான சட்ட விரோத வர்த்தகத்தை ஒழிப்பதற்கான சர்வதேச உடன்படிக்கையில் 8 பெப்ரவரி 2016 அன்று இலங்கை அரசாங்கம் கையெழுத்திட்டுள்ளது. இதன் விளைவாக, அனைத்து ஆட்கடத்தல் மற்றும் தொடர்புடைய அனைத்து நடவடிக்கைகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய அபாயங்களைக் குறைக்க செயலூக்கமான நடவடிக்கைகள் செயற்படுத்தப்பட வேண்டும். அதன்படி, சட்டவிரோத சிகரெட் / புகையிலை பொருட்களை அகற்றவேண்டிய கடப்பாடு இலங்கை அரசாங்கத்துக்கு உண்டு என்பதை வலியுறுத்துகிறோம். தகவல் : மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் (ADIC) https://www.virakesari.lk/article/174739
-
வடகொரியா: கிம் ஜாங் உன் போருக்கு தயாராவதாக நம்பும் நிபுணர்கள்
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், பிரான்சிஸ் மாவோ பதவி, பிபிசி நியூஸ் 7 மணி நேரங்களுக்கு முன்னர் வடகொரியா குறித்து ஆய்வு செய்யும் பகுப்பாய்வர்களும், அதனை கூர்ந்து கவனித்து வரும் நிபுணர்களும் இயல்பாகவே, பதற்றத்தை உருவாக்கும் கருத்துகளை எளிதில் கூறாதவர்கள். ஆனால் அண்மையில், அவர்களில் இரண்டு பேர் வழக்கத்துக்கு மாறாக அதிர்ச்சிகரமான தகவல் ஒன்றை பகிர்ந்து கொண்டுள்ளனர். வட கொரிய நாட்டின் தலைவர் போருக்குத் தயாராகி வருகிறார் என்று தாங்கள் நம்புவதாக ஒரு குண்டு வீசியுள்ளனர். கிம் ஜாங்-உன் தென் கொரியாவுடன் இணங்குவது, மீண்டும் இணைவது என்ற வட கொரியாவின் அடிப்படை இலக்கை கைவிட்டுவிட்டதாக அவர்கள் கூறினர். அதற்கு பதிலாக, போரில் உள்ள இரண்டு சுதந்திர நாடுகளாக வட கொரியாவையும் தென்கொரியாவையும் பார்க்க வேண்டும் என அவர் விரும்புகிறார் என்று கூறப்படுகிறது. "1950ஆம் ஆண்டில் தனது தாத்தா செய்ததை போலவே, கிம் ஜாங்-உன் போருக்குச் செல்ல ஒரு மூலோபாய முடிவை எடுத்துள்ளார் என்று நாங்கள் நம்புகிறோம்," என்று முன்னாள் சிஐஏ பகுப்பாளர் ராபர்ட் எல். கார்லின் மற்றும் பலமுறை வடக்கு கொரியாவுக்குச் சென்றிருக்கும் அணு விஞ்ஞானி சீக்ஃபிரீட் எஸ். ஹெக்கர் ஆகியோர் 38 நார்த் என்ற நிபுணர் தளத்தில் எழுதிய கட்டுரையில் கூறியுள்ளனர். இத்தகைய அறிவிப்பு வாஷிங்டன் மற்றும் சியோலில் எச்சரிக்கை மணிகளை ஒலிக்கச் செய்தது, வடக்கு கொரியாவைக் கவனிக்கும் வட்டங்களில் பெரும் விவாதத்தைத் தூண்டியது. எனினும், பெரும்பாலான பகுப்பாளர்கள் போருக்கான வாய்ப்பை ஏற்றுக்கொள்ளவில்லை. பிபிசி ஆசியா, ஐரோப்பா மற்றும் வடக்கு அமெரிக்காவிலிருந்து ஏழு நிபுணர்களுடன் பேசியது - அவர்களில் யாரும் இந்தக் கருத்துக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. "கொடிய மோதலின் சாத்தியக்கூறுகள் நிறைந்த ஒரு போரில் தனது ஆட்சியையே பணயம் வைப்பது வட கொரியர்களின் இயல்பல்ல," என்று நெதர்லாந்தில் இருந்து க்ரைசிஸ் குழுவின் கொரியா கண்காணிப்பாளர் கிறிஸ்டோபர் கிரீன் கூறுகிறார். அவரும் மற்றவர்களும், வட கொரியா மேற்கத்திய சக்திகளை உரையாடலுக்கு அழைக்க விரும்புகிறது என்றும், உள்நாட்டில் அரசியல் அழுத்தங்களும் உள்ளன என்றும் குறிப்பிடுகின்றனர். ஆனால் கிம்மிடமிருந்து வரும் அச்சுறுத்தல்களைக் கண்ணைமூடி கடந்து போக முடியாது என்பதிலும், அவரது ஆட்சி மேலும் ஆபத்தானதாக மாறிவிட்டதிலும் அவர்கள் உடன்படுகிறார்கள். போர் இன்னும் நடக்க வாய்ப்பில்லை என்று பெரும்பாலானோர் வாதிட்டாலும், சிலர் ஒரு சிறிய அளவிலான தாக்குதல் நடக்கலாம் என்று அஞ்சுகிறார்கள். பட மூலாதாரம்,KCNA இதற்கு என்ன காரணம்? வடக்கு கொரியாவின் கிம் ஜாங்-உனை நெருக்கமாகக் கவனிக்கும் மக்கள் அவரது அணு அச்சுறுத்தல்களுக்குப் பழக்கப்பட்டவர்கள், ஆனால் பியாங்யாங்கிலிருந்து வரும் சமீபத்திய செய்திகள் வேறு விதமானவை என்று சிலர் கூறுகிறார்கள். புத்தாண்டு தினத்தன்று "கொரிய தீபகற்பத்தில் எந்த நேரமும் போர் வெடிப்பதை தவிர்க்க முடியாது" என்று அறிவித்த ஆறு நாட்களுக்குப் பிறகு, அவரது ராணுவம் எல்லையில் பீரங்கி தாக்குதல்களை நடத்தியது. வடக்கு கொரியா ஜனவரி தொடக்கத்திலிருந்து புதிய திட-எரிபொருள் ஏவுகணைகளின் சோதனையையும், அணு ஆயுதத்தை சுமந்து செல்லக்கூடியதாகக் கூறப்படும் நீர்மூழ்கி தாக்குதல் ட்ரோன்களையும் சோதனை செய்ததாகக் கூறுகிறது. ஐக்கிய நாடுகளின் தடைகளை வெளிப்படையாக மீறி இரண்டு ஆண்டுகளாக கிட்டத்தட்ட மாதந்தோறும் ஏவுகணைகளை ஏவுவதையும், ஆயுதங்களை உருவாக்குவதையும் தொடர்ந்து செய்து வருகிறது. இருப்பினும், கடந்த வாரம், தென் கொரியா உடனான இணைப்பு என்ற இலக்கை அதிகாரபூர்வமாக கைவிடுவதாக அவர் அறிவித்ததால் பலரின் புருவங்கள் சுருங்கின. தெற்கு கொரியாவுடன் மீண்டும் இணைவது என்பது வடக்கு கொரியா உருவானது முதலே அதன் சித்தாந்தத்தின் ஒரு முக்கிய அங்கமாக இருந்தது. தற்போது அது யதார்த்தமாக கருதப்படுவதில்லை. பட மூலாதாரம்,GETTY IMAGES "இது மிகப்பெரிய விஷயம். ஆட்சியின் அடிப்படை சித்தாந்தக் கோட்பாடுகளில் ஒன்று மாறுகிறது. " என்று சியோலில் உள்ள குக்மின் பல்கலைக்கழகத்தின் மூத்த ஆய்வாளர் பீட்டர் வார்ட் கூறுகிறார். கிம் ஜாங்-உன் இப்போது அந்த பாரம்பரியத்தை சோதித்துப் பார்க்கவுள்ளார். ராஜதந்திர பரிமாற்றங்கள் மற்றும் எல்லை கடந்த வானொலி ஒலிபரப்புகளை மூடுவதாகவும், பியாங்யாங்கின் புறநகரில் உள்ள ஒன்பது மாடி மறு இணைப்பு (இரண்டு கொரிய நாடுகளும் இணைவது) நினைவுச்சின்னத்தை இடிப்பதாகவும் அறிவித்துள்ளார். 2001-ம் ஆண்டில், மறு இணைப்பு என்ற இலக்கை நோக்கிய தனது தந்தை மற்றும் தாத்தாவின் முயற்சிகளைக் குறிக்கும் வகையில், பாரம்பரிய கொரிய உடையில் இருக்கும் இரு பெண்கள் ஒருவரையொருவர் நோக்கி கைகளை விரிக்கும் வகையில் அந்த நினைவுச்சின்னம் கட்டப்பட்டது. 1950ல் போருக்குச் சென்றவர் கிம் இல்-சுங் தான், ஆனால் வட கொரியர்கள் எப்போதாவது தங்கள் தெற்கு உறவினர்களுடன் மீண்டும் இணைவார்கள் என்ற எண்ணத்தை உருவாக்கியவரும் அவரே. ஆனால் அவரது பேரன் இப்போது தென் கொரியர்களை முற்றிலும் வேறுபட்ட மக்கள் என்று வரையறுத்துள்ளார் - ஒருவேளை அவர்களை ராணுவ இலக்காக நியாயப்படுத்துவதற்காகவும் இது இருக்கலாம். முன்னாள் சிஐஏ ஆய்வாளர் ராபர்ட் எல். கார்லின் மற்றும் அணு விஞ்ஞானி சீக்ஃபிரீட் எஸ். ஹெக்கர் ஆகியோர் கிம் ஜாங்-உன் போரைத் தொடங்குவதற்கான திட்டமிட்ட நகர்வுகளை பார்க்கிறார்கள். ஆனால் பெரும்பாலான நிபுணர்கள் இதில் உடன்படவில்லை. அமெரிக்க-சீன உறவுகளுக்கான ஜார்ஜ் எச்.டபிள்யூ. புஷ் அறக்கட்டளையின் சியோங்-ஹியோன் லீ, அடுத்த மாதம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை வட கொரியா மீண்டும் அனுமதிக்கவுள்ளதாகவும் போருக்காக ரஷ்யாவிற்கு ஆயுதங்கள் விற்பதையும் சுட்டிக்காட்டுகிறார். போர்களத்துக்குத் தயாராகினால் இவற்றை செய்ய முடியாது என்று அவர் கூறுகிறார். எவ்வாறிருந்தாலும், வட கொரியா தாக்குதல் நடத்தினால், அமெரிக்கா மற்றும் தென் கொரிய ராணுவங்கள் மிகவும் பலமானதாக இருக்கிறது என்பது தான் வட கொரியாவை தடுக்கும் முக்கிய அம்சமாகும். "ஒரு பொதுவான போர் தென் கொரியாவில் ஏராளமானோரை கொல்லக்கூடும், ஆனால் அது கிம் ஜாங்-உன்னுக்கும் அவரது ஆட்சிக்கும் முடிவு கட்டுவதாகவும் அமைந்துவிடும்," என்று கூக்மின் பல்கலைக்கழகத்தின் வார்ட் கூறுகிறார். அதற்கு பதிலாக, சிறிய அளவிலான தாக்குதலுக்கான சூழல் உருவாகி வருகிறது என்று அவரும் மற்றவர்களும் எச்சரிக்கின்றனர். "தென் கொரியா மீதான ஒரு கட்டுப்படுத்தப்பட்ட தாக்குதல் நடைபெறும் என்பதே என் கவலை. அத்தகைய தாக்குதல் தென் கொரிய பிரதேசம் அல்லது ராணுவப் படைகளை இலக்காகக் கொண்டு, ஒரு எல்லைக்குள் இருக்கும்," என்று கார்னெகி எண்டோவ்மென்ட் ஃபார் இன்டர்நேஷனல் பீஸின் நிபுணர் அன்கித் பாண்டா கூறுகிறார். இது எல்லைக் கோட்டில் இருந்து மேற்கே உள்ள சர்ச்சைக்குரிய தீவுகளை குண்டு வீசித் தாக்குவது அல்லது ஆக்கிரமிப்பு முயற்சியாகவும் இருக்கலாம். 2010-ம் ஆண்டில், வட கொரியா யியோன்பியோங் தீவைத் தாக்கி நான்கு தென் கொரிய ராணுவ வீரர்களைக் கொன்றது. இது தென் கொரியாவுக்கு ஆத்திரமூட்டியது. தென் கொரியாவை சோதித்து பார்க்க, அதே போன்ற தாக்குதல்கள் நடத்தப்படலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். பிற நிபுணர்கள், போர் குறித்த அச்சங்களை கிம்மின் செயல்பாட்டு முறைகளின் பின்னணியில் பார்க்க வேண்டும் என்று கூறுகின்றனர். "வட கொரியாவின் வரலாற்றைப் பார்த்தால், வேறு நாடுகளின் கவனத்தை ஈர்க்க விரும்பும்போது, அது பல நேரங்களில் மற்றவரை சீண்டிப் பார்க்கும். " என்று லீ சியோங்-ஹியோன் கூறுகிறார். இந்த ஆட்சி பொருளாதாரத் தடைகளால் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறது, மேலும் 2024 ஆம் ஆண்டு அதன் எதிரிகளுக்கு தேர்தல் ஆண்டு - அமெரிக்க அதிபர் வாக்குப்பதிவு மற்றும் தென் கொரிய சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதனால் வட கொரியா தனது சீண்டலை நடத்த எல்லா காரணங்களையும் தருகிறது என்று டாக்டர் லீ கூறுகிறார். அதிபர் ஜோ பைடன் தலைமையிலான தற்போதைய அமெரிக்க நிர்வாகம் - உக்ரேனுடனும் காஸாவுடனும் இணைந்துள்ளது. வட கொரியாவைக் கவனிக்கவில்லை, மேலும் பியோங்யாங் பொதுவாக குடியரசுக் கட்சி நிர்வாகங்களுடன் அதிக ஈடுபாட்டைக் கொண்டிருந்தது. 2019 ஆம் ஆண்டில் அணு ஆயுத நீக்க பேச்சுவார்த்தைகள் கசப்பதற்கு முன் கிம் ஜாங் உன்னும் டொனால்ட் டிரம்பும் பிரபலமாக நண்பர்களாக இருந்தனர். வட கொரிய தலைவர் முன்னாள் அமெரிக்க அதிபர் வெள்ளை மாளிகைக்கு மீண்டும் திரும்புவதற்காகக் காத்திருக்கலாம். அப்போது அமெரிக்காவுடனான தென் கொரியாவின் நட்பு பலவீனமாகக் கூடும். மீண்டும் கிம்முடன் உரையாடலுக்கு வாய்ப்பு ஏற்படலாம். ரஷ்யாவுடனான வட கொரியாவின் நெருங்கிய நட்பு மற்றும் கடந்த ஆண்டு சீனாவிலிருந்து தொடர்ந்து வரும் பொருளாதார ஆதரவு அதன் துணிச்சலை அதிகரித்திருக்கலாம் என்று பகுப்பாய்வாளர்கள் கருதுகின்றனர். ரஷ்யாவிலிருந்து தனது உளவு செயற்கைக்கோள்களை ஏவுவது என்ற நீண்டகால இலக்கை அடைய தொழில்நுட்ப உதவியைப் பெற்றுள்ளது, மேலும் கடந்த ஆண்டு தலைவர்கள் உச்சிமாநாடு உட்பட பல உயர் மட்ட கூட்டங்களை இரு நாடுகளும் நடத்தியுள்ளன. வட கொரியா அதன் ராணுவ திறன்கள் மற்றும் ரஷ்யா, சீனா ஆதரவு காரணமாக அதிக நம்பிக்கையுடன் செயல்படலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். பட மூலாதாரம்,GETTY IMAGES சில நிபுணர்கள் கிம் ஜாங் உன்னின் நடவடிக்கைகள் அனைத்தும் தனது ஆட்சியை நிலைநிறுத்துவதையே குறிக்கிறது என்று கூறுகின்றனர். "இது ஆட்சி தப்புவதற்கான ஒரு சித்தாந்த சரிசெய்தல் என்று தோன்றுகிறது," என்று சியோலில் உள்ள எஹ்வா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் லைஃப்-எரிக் எஸ்லி வாதிடுகிறார். "வட கொரியர்கள் தங்கள் கம்யூனிஸ்ட் நாட்டின் தோல்விகளை அதிகளவில் அறிந்திருக்கிறார்கள்." கடினமான காலக்கட்டத்தில், கிம்மின் ஏவுகணை செலவுகளை நியாயப்படுத்தவே, எதிரியை வரையறுப்பதில் கவனம் செலுத்தும் கொள்கையை அவர் பரிந்துரைக்கிறார். நாடு முழுவதும் பஞ்சம் இருப்பதாக தகவல்கள் உள்ளன. "இப்போது, நாடு மற்றும் அதன் கலாச்சாரம் வெறுமனே தீயவை என்று முத்திரை குத்தப்பட்டு, தென் கொரிய கலாச்சாரத்தை தொடர்ந்து ஒடுக்குவதற்கு இது காரணமாகிறது." என்று அவர் கூறுகிறார். "போர் எனும் மிகப்பெரிய சூதாட்டத்தை அவர் உண்மையில் விரும்பவில்லை . அதில் அவர் எதையும் பெற முடியாது, எல்லாவற்றையும் இழக்க நேரிடும்," என்று வட கொரிய அகதிகளுக்கு உதவும் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனமான லிபர்ட்டி இன் நார்த் கொரியாவைச் சேர்ந்த ஷோகீல் பார்க் கூறுகிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES உள்நாட்டு இலக்குகள் அவரது அச்சுறுத்தல்கள் தனது நாட்டில் தனது அதிகாரத்தை உறுதிப்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளன, என்று அவர் கூறுகிறார். கடுமையான சூழ்நிலைக்கு தென் கொரியா, அமெரிக்கா மற்றும் கூட்டணி நாடுகள் தயாராக இருப்பது முக்கியமாகும். எனினும் வட கொரியாவின் உள்நாட்டு சூழ்நிலையையும் பரந்த புவிசார் அரசியலையும் முழுமையாக ஆராய்வது அவசியம் என்று பகுப்பாய்வாளர்கள் கூறுகின்றனர். இறுதியில், வட கொரிய தலைவர் என்ன நினைக்கிறார் என்பதை அறிந்து கொள்ள, அவருடன் உரையாடுவதே சிறந்த வழி என்று டாக்டர் லீ வாதிடுகிறார். "சர்வதேச சமூகம் கிம் ஜாங் உன்னுடன் பேசுவதை கிம் ஜாங் உன்னின் அச்சுறுத்தல்களுக்கு சரணடைவதாக கருதுவதில்லை. அது ஒரு இலக்கை அடைவதற்கான அவசியமான வழிமுறையாக பார்க்கப்படுகிறது," என்று அவர் கூறுகிறார். "தேவைப்பட்டால், தவறான கணிப்புகளை குறைப்பதற்கும் போரைத் தடுப்பதற்கும் எதிரி நாட்டின் தலைவரை சந்திப்பதை கருத்தில் கொள்ள வேண்டும்." என்கிறார். https://www.bbc.com/tamil/articles/c51089lz66jo
-
நைட்ரஜன் வாயு செலுத்தி மரண தண்டனை நிறைவேற்றப்படும் முதல் அமெரிக்க கைதியின் கடைசி நேர அச்சம்
உலகின் முதல் ‘நைதரசன் வாயு’ மரண தண்டனை நிறைவேற்றம் அமெரிக்காவைச் சேர்ந்த தம்பதி சார்லஸ் சென்னட் – எலிசபெத் சென்னட். சார்லஸ் சென்னட் தன் மனைவியுடனான கருத்துவேறுபாடு காரணமாக அவரைக் கொலை செய்யத் திட்டமிட்டார். அதற்காக கென்னத் யூஜின் ஸ்மித், ஜான் பார்க்கர் ஆகிய இருவரிடமும் தலா 1000 டொலர் வழங்கி, தன் மனைவியைக் கொலை செய்ய கேட்டிருக்கிறார். இருவரும், 1988ஆம் ஆண்டு எலிசபெத் சென்னட்டை கொலை செய்தனர். எலிசபெத் சென்னட் கொலை செய்யப்பட்ட ஒரு வாரத்தில் சார்லஸ் சென்னட் தற்கொலை செய்துக்கொண்டார். கொலை குற்றம்சாட்டப்பட கென்னத் யூஜின் ஸ்மித், ஜான் பார்க் ஆகிய இருவரையும் பொலிஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிமன்றம் இருவருக்கும் மரணதண்டனை விதித்தது. இதில், ஜான் பார்க்கர்க்கு 2010இல் ஊசி மூலம் மரண தண்டனை வழங்கப்பட்டது. 2022ஆம் ஆண்டு கென்னத் யூஜின் ஸ்மித் மரண தண்டனைக்கு உட்படுத்தப்பட்டார். அப்போது மரண ஊசி போடுவதற்கான நரம்பை கண்டுபிடிப்பதில் ஏற்பட்ட சிக்கலால், மரண தண்டனை நிறைவேற்றப்படவில்லை. இந்த நிலையில், நேற்று nitrogen hypoxiaவால் அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. nitrogen hypoxia மரண தண்டனை என்பது, மரண தண்டனை விதிக்கப்பட்ட நபருக்கு ஒரு முகமூடி அணிவிக்கப்படும். அதில் நைதரசனை மட்டுமே சுவாசிக்கும்படியான அமைப்பு ஏற்படுத்தப்பட்டிருக்கும். மனித வாழ்வுக்கு தேவைப்படும் ஒட்சிசனை தவித்து நைதரசனை தொடர்ந்து சுவாசிப்பதால் நுரையீரல் பாதிக்கப்பட்டு, மூச்சுத்திணறல் ஏற்படும். அதைத் தொடர்ந்து மரணம் நிகழும். இந்த மரண தண்டனையால் கைதிக்கு பெரும் சிரமங்கள் இருக்காது எனக் கூறப்படுகிறது. கென்னத் யூஜின் ஸ்மி மரணிக்க சுமார் 22 நிமிடங்கள் ஆனதாக ஊடகங்கள் தெரிவித்திருக்கின்றன. இதற்கு முன்னர், 1999ஆம் ஆண்டு நைதரசன் சயனைடு வாயுவைப் பயன்படுத்தி ஒரு குற்றவாளிக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து, தற்போது, நைதரசனை வைத்து முதன்முறையாக மரண தண்டனை நிறைவேற்றப்படிருக்கிறது. இதுபோன்ற மரண தண்டனைக்கு அமெரிக்க மனித உரிமை வழக்கறிஞர்கள் கண்டனம் தெரிவித்திருப்பது குறிப்பிடதக்கது. நன்றி – விகடன் https://thinakkural.lk/article/289466
-
சர்வதேச சமூகத்தின் நல்லெண்ணத்தை நாடி நிற்கும் அரசாங்கம்
Published By: VISHNU 23 JAN, 2024 | 12:41 PM கலாநிதி ஜெகான் பெரேரா ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமைத்துவத்தின் கீழ் இலங்கை அதன் ஆற்றலுக்கு அப்பாற்பட்ட முறையில் மீண்டும் முக்கியத்துவத்தைப் பெறத்தொடங்கியிருக்கிறது போன்று தெரிகிறது. ஆபிரிக்க நாடான உகண்டாவின் தலைநகர் கம்பாலாவில் தற்போது நடைபெறும் அணிசேரா நாடுகளின் 19 வது உச்சிமாநாட்டிலும் 77 நாடுகள் குழு மற்றும் சீனாவின் மூன்றாவது தெற்கு உச்சிமகாநாட்டிலும் ஜனாதிபதிக்கு முக்கியத்துவம் வாய்ந்த இடம் கிடைத்தது. உகண்டா ஜனாதிபதி ஜோவெரி முசவெனியின் அழைப்பின் பேரில் விக்கிரமசிங்க முக்கியமான சந்திப்புகளில் பங்கேற்றது மாத்திரமல்ல, அணிசேரா உச்சிமாநாட்டிலும் தெற்கு உச்சிமகாநாட்டிலும் உரையாற்றினார் என்று ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்தது. கம்பாலாவுக்கான தனது விஜயத்தின்போது அவர் ஆபிரிக்க பிராந்தியத்தைச் சேர்ந்த தலைலர்களுடன் இரு தரப்பு உறவுகளைப் பலப்படுத்துவதில் முக்கிய கவனத்தைச் செலுத்தியதுடன் தெற்கு உலக நாடுகளின் தலைவர்களுடனும் பேச்சுவார்த்தைகளை நடத்தினார். அணிசேரா இயக்கத்தின் 120 தலைவர்களும் ஒன்றாக எடுத்த படத்தில் உச்சிமகாநாட்டை நடத்தும் உகண்டா ஜனாதிபதிக்கு பக்கத்தில் முன்வரிசையில் நின்றதைக் காணக்கூடியதாக இருந்தது. 1976 ஆண்டு கொழும்பில் பிரதமர் திருமதி சிறிமா பண்டாரநாயக்க அணிசேரா நாடுகளின் உச்சிமகாநாட்டை நடத்தியபோதே இறுதியாக இலங்கைக்கு முக்கியத்துவம் வாய்ந்த இடம் கிடைத்தது. சர்வதேச பொருளாதார நீதிக்கு கோராக்கை விடுத்து அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள் நடத்திய ஒரு முக்கியமான மகாநாடாக அது அமைந்தது. அந்த நேரத்தில் இலங்கை சர்வதேச அரங்கில் பொருளாதார கொள்கையில் உதாரணம் வகுக்கும் ஒரு நாடாக விளங்கியது. சமத்துவத்துடனான அபிவிருத்திக்கான சாத்தியப்பாட்டை வெளிக்காட்டியது. ஏனைய பல நாடுகளையும் விட உயர்ந்த ஆள்வீத வருமானத்துடன் தரம்வாய்ந்த பௌதீக வாழ்க்கைக் குறிகாட்டியில் முன்னிலையில் இலங்கை அன்று விளங்கியது. உச்சிமகாநாட்டில் ஜனாதிபதி விக்கிரமசிங்க நிகழ்த்திய உரை முன்னுதாரணமானதாக அமைந்ததுடன் அங்கு கூடியிருந்த உலகத் தலைவர்களின் பெரும் மதிப்பையும் பெற்றது. அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளின் அக்கறைக்குரிய இரு முக்கிய பிரச்சினைகளை அவர் தனதுரையில் மிகவும் துணிச்சலான முறையில் கையாண்டார். மத்திய கிழக்கில் காசா போர் நெருக்கடிக்கும் தெற்கு உலகம் மீதான வடக்கு உலகின் தொடர்ச்சியான ஆதிக்க்கத்துக்கும் முக்கியத்துவம் கொடுத்து அவர் உரையாற்றினார். காசா பள்ளத்தாக்கின் மனிதாபிமான நெருக்கடியையும் இலங்கையில் இனமோதலைக் கையாண்டதில் தனக்கு இருக்கும் அனுபவங்களைச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி ஐக்கிய நாடுகள் சபையில் நிறைவேற்றப்பட்ட பெருவாரியான தீர்மானங்களுக்கும் இந்த அணிசேரா உச்சிமாநாட்டின் பிரகடனத்துக்கும் இசைவான முறையில் மேற்கு ஆற்றங்கரை, காசா பள்ளத்தாக்கு மற்றும் கிழக்கு ஜெரூசலேம் ஆகியவை பாலஸ்தீன அரசின் எல்லைகளுக்குள் வருவதை அங்கீகரிக்கவேண்டும் என்றும் காசாவின் இனரீதியான குடிப்பரம்பலில் மாற்றம் இருக்கக்கூடாது என்றும் வலியுறுத்தினார். மதிப்பாய்வுடனான அணுகுமுறை அமெரிக்காவின் தலைமையிலான சர்வதேச கடற்படையில் இணைந்து கொள்வதற்கு இலங்கையின் போர்க்கப்பல்களை செங்கடலுக்கு அனுப்புவதற்கு ஜனாதிபதி எடுத்த சர்ச்சைக்குரிய தீர்மானத்துக்கு பிறகு இலங்கையிலும் சர்வதேச ரீதியாகவும் முஸ்லிம்களின் உணர்வுகளை சாந்தப்படுத்துவதற்கு பெருமளவு உதவக்கூடியதாக ஜனாதிபதியின் உச்சிமகாநாட்டு உரை அமைந்தது. சுதந்திரமான கப்பல் போக்குவரத்துக்காக ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் இலங்கைக் கடற்படைக் கப்பல்களை அனுப்புவதற்கு ஜனாதிபதி எடுத்த தீர்மானம் இலங்கையில் உள்ள மத்திய கிழக்கு நாடுகளின் தூதுவர்கள் அவரைச் சந்தித்துப் பேசவேண்டிய அவசியத்தை உருவாக்கியது. சனத்தொகையில் கால்வாசிக்கும் அதிகமானவர்கள் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் ஒரு நாட்டைப் பொறுத்தவரை பெரும் செலவுபிடிக்கிற ஒரு கடற்படை நடவடிக்கையில் இறங்குவது கட்டுப்படியாகாத ஒன்று என்று கடுமையான விசனமும் வெளிப்படுத்தப்பட்டுவருகிறது. அத்துடன் பாலஸ்தீனப் போராட்டத்துக்கு உணர்ச்சிபூர்வமாக ஒருமைப்பாட்டை வெளிக்காட்டும் இலங்கை முஸ்லிம் மக்களின் உணர்வுகளை அவமதிப்பதாகவும் ஜனாதிபதியின் தீர்மானம் அமைந்தது. நாட்டின் நலன்களை சர்வதேச சமூகத்தின் முன்னால் முன்னுரிமைப்படுத்தும் அக்கறை காரணமாகவே ஜனாதிபதி பெருவாரியன வெளிநாட்டுப் விஜயங்களை மேற்கொள்கிறார் என்று அடிக்கடி வெளிநாடுகளுக்கு சென்றுவருவதற்கு ஒரு நியாயப்பாட்டை அவரின் சீடர்களில் ஒருவரான ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளரான வஜிர அபேவர்தன முன்வைக்கிறார். மேலதிக செலவினங்கள் நாட்டுக்கு கட்டுப்படியாகாத ஒரு நேரத்தில் பெருமளவு பணத்தை ஜனாதிபதி செலவுசெய்கிறார் என்ற ஒரு விமர்சனம் இருக்கிறது. ஒன்றரை வருட காலத்தில் நெருக்கடி நிலையில் இருந்து நாட்டை மீட்டெடுத்து அபிவிருத்தப் பாதையில் நகர்த்துவதற்கான தனது முயற்சிகளின் விளைவாக இலங்கைமீது உலகின் கவனத்தை ஜனாதிபதி விக்கிரமசிங்க திருப்பியிருப்பதாகவும் அதற்காக தனது வெளிநாட்டு விஜயங்களை அவர் பயனுறுதியுடைய முறையில் பயன்படுத்தியிருப்பதாக அபேவர்தன கூறுகிறார். உலகவங்கி, சர்வதேச நாணய நிதியம், ஆசிய அபிவிருத்தி வங்கி, ஜப்பானிய சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் போன்ற சர்வதேச நிறுவனங்களினதும் பல்வேறு நாடுகளினதும் ஆதரவுடன் இலங்கையை முன்னேற்றுவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார். நாட்டுக்கு உச்சபட்ச பயன்களைப் பெறுவதற்காக செங்கடலுக்கு மதிப்பாய்ந்த ஒரு வெளியுறவுக் கொள்கையை ஜனாதிபதி கடைப்பிடிக்கிறார் என்று தெரிகிறது. கடற்படையை அனுப்பும் தீர்மானத்தில் இருந்து ஜனாதிபதியோ அல்லது அரசாங்கமோ பின்வாங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. உகண்டாவில் அணிசேரா நாடுகளின் உச்சிமகாநாட்டில் ஜனாதிபதியின் உரையின் முற்பகுதியைப் போன்றே பிற்பகுதியும் நிச்சயம் பாராட்டவேண்டியதாக இருக்கிறது.அணிசேரா நாடுகள் குழுவுக்கு அறிவுத்திறனுடைய தலைமைத்துவம் ஒன்றின் அவசியத்தை அவர் வலியுறுத்தினார். வடக்கு - தெற்கு பிளவு குறித்தும் தெற்கு உலகம் தன்முனைப்புடன் செயற்படவேண்டிய அவசியம் குறித்தும் அவர் உணர்ச்சியைக் கிளறும் வகையில் பேசினார். "எமது உறுப்பு நாடுகள் இனிமேலும் பலவீனமான அரசுகளின் ஒரு குழுவாக இல்லை.ஆசிய, ஆபிரிக்க, லத்தீன் அமெரிக்க பிராந்தியங்களின் சில நாடுகளின் துரித முன்னேற்றம் மற்றும் பொருளாதார மேம்பாட்டின் விளைவாகவே இந்த நிலை ஏற்பட்டது எனபதை நாம் அங்கீகரிக்கவேண்டும்.2050 ஆம் ஆண்டளவில் உலகின் பத்து முன்னணி பொருளாதாரங்களில் பெரும்பாலானவை அணிசேரா இயக்கத்துக்கு சொந்தமானவையாக விளங்கும்.அவை தலைமைத்துவத்தை வழங்குவதற்கு தயாராக வேண்டும் " என்று விக்கிரமசிங்க தனதுரையில் கூறினார். நம்பிக்கையை வென்றெடுத்தல் அணிசேரா உச்சிமகாநாட்டில் பங்கேற்ற 120 நாடுகளில் அனேகமாக அரைவாசி நாடுகள் ஆபிரிக்க கண்டத்தைச் சேர்ந்தவை என்கிற அதேவேளை அவற்றின் ஆதரவு இலங்கைக்கு தேவை என்பதை கருத்திற் கொண்டதாகவே கம்பாலாவில் ஜனாதிபதியின் செயற்பாடுகள் அமைந்தன. " இலங்கையில் நல்லிணக்கம், பொறப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல்" என்ற தொனிப்பொருளில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் ஏற்கெனவே நிறைவேற்றப்பட்ட 46/1, 51/1 தீர்மானங்களின் நடைமுறைப்படுத்தல் தொடர்பில் எதிர்வரும் மார்ச்சிலும் பிறகு செப்டெம்பரிலும் பேரவையின் கூட்டத்தொடர்களில் ஆராயப்படவிருக்கிறது. உள்நாட்டுப்போர் 2009 ஆண்டில் முடிவுக்கு வந்த பிறகு இலங்கை மனித உரிமைகள் பேரவையின் அறிவுறுத்தல்களுக்கு உள்ளாகிவருகிறது. பேரவையில் ஒரு தடவை மாத்திரம் வெற்றி பெறக்கூடியதாக இருந்தது. போருக்கு பின்னரான பிரச்சினைகளை கையாளுவதில் இலங்கை அக்கறையுடன் செய்படுவதாக கலாநிதி தயான் ஜெயதிலக தலைமையிலான இராஜதந்திரிகள் குழுவினரால் தெற்கு உலகின் நாடுகளை நம்பவைக்கக்கூடியதாக இருந்தது. ஆனால் அதற்கு பிறகு தீர்மானங்கள் மீதான சகல வாக்கெடுப்புக்களிலும் இலங்கை தோல்வி கண்டது. மனித உரிமைகள் பேரவைக்கு அளித்தை உறுதிமொழிகளை இலங்கை நிறைவேற்றத் தவறியதே அந்த தோல்விகளுக்கான காரணமாகும். தற்போது போருக்கு பின்னரான நீதியைப் பொறுத்தவரை இலங்கை நிறைவேற்றுவதற்கு பல உறுதிமொழிகள் இருக்கின்றன. இலங்கையில் பதவியில் இருந்த அரசாங்கங்கள் உறுதிமொழிகளைக் காப்பாற்றத் தவறியதனால் சர்வதேச மனித உரிமைகள் சமூகம் " இலங்கையில் இடம்பெற்ற மனித பாரதூரமான மனித உரிமை மீறல்கள் மற்றும் சர்வதேச மனிதாபிமான உரிமை மீறல்கள் தொடர்பில்ஆராய்ந்து தகவல்களையும் சான்றுகளையும் திரட்டுவதற்கும் எதிர்காலப் பொறுப்புக் கூறலுக்கான செயன்முறைகளுக்கு சாத்தியமான தி்ட்டங்களை வகுப்பதற்கும் பலியானவர்களுக்கும் உயிர்தப்பியவர்களுக்கும் நீதி கிடைப்பதற்காக குரல்கொடுப்பதற்கும் தகுதிவாய்ந்த நியாயாதிக்கமுடைய உறுப்புநாடுகளில் பொருத்தமான நீதிச் செயன்முறைகளை முன்னெடுப்பதற்கும் உதவியாக ஜெனீவாவில் சர்வதேச தரவு திரட்டல் பிரிவு ஒன்றை அமைத்திருக்கிறது. ஆனால், உகண்டாவில் ஜனாதிபதி முன்னெடுத்த ஆதரவு திரட்டும் முயற்சிகளுக்கு பிறகு இலங்கை மீண்டும் ஒரு தடவை (2009 ஆம் ஆண்டில் இடம்பெற்றதைப் போன்று) மனித உரிமைகள் பேரவையின் பெரும்பான்மையான உறுப்பு நாடுகளின் ஆதரவைப் பெறக்கூடியதாக இருக்கும். காசா பள்ளத்தாக்கில் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கு இயலாமற்போன சூழ்நிலைகளில் ஐக்கிய நாடுகளின் நம்பகத்தன்மை பாதிக்கப்பட்டிருக்கின்றமையால் இலங்கை தற்போது சர்வதேச ரீதியில் ஆதரவைத் திரட்டும் பணிகள் சுலபமாகிவிட்டன எனலாம். இந்த மாதம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டம் ஒன்றின் மூலமாக நல்லிணக்கப் பொறிமுறைகளை குறிப்பாக தேசிய ஐக்கியம் மற்றும் நல்லிணக்க அலுவலகத்தை அமைக்கும் செயன்முறைகளைை முன்னெடுப்பதில் வெற்றிகாணமுடியும் என்று அரசாங்கம் இரண்டு மடங்கு நம்பிக்கையுடன் இருக்கிறது. உண்மை, ஐக்கியம் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை அமைப்பதற்கான சட்டமூலம் இப்போது வர்த்தமானியில் வெளியிடப்பட்டிருக்கிறது. அரசாங்கத்தின் இந்த முன்முயற்சிகள் சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்க்கத் தவறுவதற்கு வாய்ப்பில்லை. அரசாங்கம் சர்வதேச அரங்கில் அதன் போராட்டங்களை ஒவ்வொன்றாக வென்றுகொண்டு வருகிறது. ஆனால் நாட்டுக்குள் மக்களின் நம்பிக்கையையும் நல்லெண்ணத்தையும் அரசாங்கத்தினால் வென்றெடுக்க இயலுமா என்பது முக்கியமான கேள்வி. பிரதான தமிழ்க் கட்சியின் புதிய தலைவர் தேர்தலில் மிதவாத வேட்பாளரின் தோல்வி மேலும் பல விடயங்களைச் செய்யவேண்டிய தேவையை உணர்த்திநிற்கிறது. https://www.virakesari.lk/article/174594
-
விபத்தில் சிக்கிய ராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த உயிரிந்தார் ..
மறைந்த சனத் நிஷாந்தவுக்கு எதிராக சமூக ஊடகங்களில் அவதூறான கருத்துக்கள்: விசாரணை முன்னெடுப்பு முன்னாள் நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மரணம் தொடர்பில் சமூக ஊடகங்களில் அவதூறான கருத்துக்களை வெளியிடுபவர்களை அடையாளம் காண விசாரணை நடத்தப்பட்டுள்ளது. ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியுடன் தொடர்புடையவர்களே இந்த சம்பவத்தின் பின்னணியில் இருப்பதாக விசாரணையில் தெரிய வந்துள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறுகையில், தனிநபர்கள் இதுபோன்ற அவதூறான கருத்துக்களை தொடர்ந்து மற்றும் போலி கணக்குகளின் கீழ் பதிவிடுவது கண்டறியப்பட்டது. சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான அத்துமீறல்கள் போன்ற ஏனைய நிகழ்வுகளுடன் இந்தச் சம்பவமும் சமூக ஊடகங்கள் ஓரளவு கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்பதைக் காட்டுவதாக அமைச்சர் அமரவீர தெரிவித்தார். https://thinakkural.lk/article/289491
-
இஸ்ரேல் இனப்படுகொலையில் ஈடுபடுகின்றது – சர்வதேச நீதிமன்றத்தில் தென்னாபிரிக்கா வழக்கு
காசா யுத்தம் : இஸ்ரேல் இராணுவ நடவடிக்கையை நிறுத்த வேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிடலாம் Published By: RAJEEBAN 26 JAN, 2024 | 10:59 AM காசாவில் இஸ்ரேல் யுத்த குற்றங்களில் ஈடுபடுவதாக தெரிவித்து தென்ஆபிரிக்கா தாக்கல் செய்துள்ள மனு மீதான தனது தீர்ப்பை சர்வதேச நீதிமன்றம் இன்று வழங்கவுள்ளது. காசாவில் இஸ்ரேல் இராணுவநடவடிக்கைகளை நிறுத்தவேண்டும் என ஐக்கியநாடுகளின் நீதிமன்றம் உத்தரவிடலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இஸ்ரேலிற்கு எதிராக தென்னாபிரிக்கா தாக்கல் செய்த மனுதொடர்பில் விசாரணைகள் இடம்பெற்ற வேளை இரண்டு தரப்பினரும் தமது தரப்பு வாதங்களை முன்வைத்திருந்தனர். சர்வதேசநீதிமன்றத்தின் தீர்ப்பினை நடைமுறைப்படுத்தவேண்டியது அவசியம் இல்லை என்ற போதிலும் இந்த தீர்ப்பு அரசியல்முக்கியத்துவம் வாய்ந்ததாக காணப்படலாம். பாலஸ்தீனியர்களிற்கு ஆதரவாக குரல்கொடுத்துவரும் தென்னாபிரிக்கா இஸ்ரேல் தனது இராணுவநடவடிக்கைகளை இடைநிறுத்தவேண்டும் என்பது உட்பட 9 இடைக்கால உத்தரவுகளை நீதிமன்றம்பிறப்பிக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது. தென்னாபிரிக்காவின் இனப்படுகொலை குற்றச்சாட்டிற்கு இஸ்ரேல் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது. https://www.virakesari.lk/article/174821
-
மூன்று பில்லியன் ரூபாய் இலாப வருமானத்தை திறைச்சேரிக்கு செலுத்தியுள்ளோம் - லிட்ரோ நிறுவனம்
26 JAN, 2024 | 06:38 PM (இராஜதுரை ஹஷான்) மூன்று பில்லியன் ரூபாய் இலாப வருமானத்தை திறைச்சேரிக்கு செலுத்தியுள்ளோம். பாரிய நிதி நெருக்கடியை எதிர்கொண்டிருந்த லிட்ரோ நிறுவனம் தற்போது இலாபமடைந்துள்ளது என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்தார். கொழும்பில் உள்ள லிட்ரோ நிறுவனத்தின் காரியாலயத்தில் இன்று வெள்ளிக்கிழமை (26) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, 2023ஆம் ஆண்டு காலப்பகுதியில் லிட்ரோ நிறுவனம் ஸ்ரீ லங்கா காப்புறுதி கூட்டுத்தாபனத்துக்கு 1.5 பில்லியன் ரூபாய் இலாப வருமானத்தை செலுத்தியுள்ளோம். தற்போது 1.5 பில்லியன் ரூபாய் இலாப வருமானத்தை ஸ்ரீ லங்கா காப்புறுதி கூட்டுத்தாபனம் ஊடாக திறைச்சேரிக்கு செலுத்தியுள்ளோம். லிட்ரோ நிறுவனத்தின் தலைவராக பதவியேற்கும்போது நிறுவனம் பாரிய நிதி நெருக்கடியை எதிர்கொண்டிருந்தது. முறையான முகாமைத்துவம் மற்றும் ஊழியர்களின் ஒத்துழைப்பு ஆகியவற்றின் ஊடாக நிறுவனம் தற்போது இலாபமடைந்துள்ளது. லிட்ரோ நிறுவனத்தின் எரிவாயு சிலிண்டரின் பாதுகாப்புத் தன்மை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பொது காரணிகளை அடிப்படையாகக் கொண்டு ஏற்பட்ட நிதி நெருக்கடியை முகாமைத்துவம் செய்து எரிவாயு சிலிண்டரின் விலையை ஸ்திரமான நிலையில் பேணுகிறோம். எரிவாயு விலை அதிகரிப்பால் நிறுவனத்துக்கு சொற்பளவிலான இலாபமே கிடைக்கப் பெறுகிறது என்றார். https://www.virakesari.lk/article/174878
-
அதிபர் கொடுப்பனவு – விசேட குழுவின் பரிந்துரை கையளிப்பு
அதிபர் சேவையில் நிலவும் சிக்கல்களுக்கு தீர்வு காணும் வகையில் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவால் நியமிக்கப்பட்டுள்ள குழு, அதன் அறிக்கையை நேற்று அமைச்சரிடம் கையளித்தது. சம்பள திருத்தம் மற்றும் சம்பள முரண்பாடுகளை களைதல், அதிபர்களின் கொடுப்பனவை 6,000 ரூபாவிலிருந்து 15,000 ரூபாவாக அதிகரித்தல், அரசசேவை அதிகாரிகளுக்கு கிடைக்கும் தொடர்பாடல் பயணச் செலவு, வாகனம், வீடு உள்ளிட்ட கொடுப்பனவுகள் மற்றும் தூரப் பிரதேசங்களில் கடமையாற்றும் அதிபர்களுக்கான விசேட கொடுப்பனவு தொடர்பாக 6 முக்கிய விடயங்கள் அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. தற்போது 16 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் காணப்படும் அதிபர் சேவை தரம் III, II, I க்கு உட்பட்ட அதிபர்கள், பிரதி அதிபர்கள் மற்றும் உப அதிபர்கள், சேவைகளை பாடசாலை கட்டமைப்பின் புதிய தேவைகளை கவனத்திற்கொண்டு அதிபர்களுக்கான அதி உயர் தரத்தை உருவாக்குவதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவின் பரிந்துரையை அமைச்சரவைக்கு சமர்ப்பித்து, அதனூடாக சேவை யாப்பு திருத்தம் மூலம் நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமெனவும், கல்வித்துறை அதிகாரிகளிடம் அமைச்சர் தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/289442
-
விபத்தில் சிக்கிய ராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த உயிரிந்தார் ..
சனத் நிஷாந்தவின் சாரதிக்கு விளக்கமறியல்! 26 JAN, 2024 | 09:58 PM இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் சாரதி கைது செய்யப்பட்ட நிலையில் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். வெலிசர நீதிவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். கட்டுநாயக்க - கொழும்பு அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற விபத்தில் நீர்வழங்கல் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த மற்றும் அவரது பாதுகாப்பு அதிகாரி ஆகியோர் பலியான சம்பவம் தொடர்பிலேயே இவர் கைது செய்யப்பட்டார். https://www.virakesari.lk/article/174886
-
நிகழ்நிலை காப்புச் சட்டமூலம் : 224 உறுப்பினர்கள் எதிராக வாக்களிக்க வேண்டும் - சிவில் அமைப்பினர் கூட்டாக வலியுறுத்தல்
யாழில் நிகழ்நிலை காப்பு சட்டம், பயங்கரவாத தடுப்பு சட்டமூலம் பற்றிய தெளிவூட்டல் தொடர்பான கலந்துரையாடல் 26 JAN, 2024 | 05:29 PM நிகழ்நிலை காப்பு சட்டம், பயங்கரவாத தடுப்புச் சட்டமூலம் பற்றி தெளிவுபடுத்தும் கலந்துரையாடல் யாழ்ப்பாணத்தில் இன்று வெள்ளிக்கிழமை (26) இடம்பெற்றது. இன்று காலை 10 மணியளவில் யாழ்ப்பாணம் பொதுசன நூலக கேட்போர் கூடத்தில் யாழ் ஊடக மையம் மற்றும் உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் இந்த கலந்துரையாடல் ஒழுங்குபடுத்தப்பட்டது. இதன்போது இலங்கை ஆசிரியர் சங்கத் தலைவர் ஜோசப் ஸ்டாலின், யாழ்.ஊடக அமையத்தின் தலைவர் கு.செல்வகுமார், உழைக்கும் பத்திரிகையாளர் சங்க தலைவர் துமிந்த சம்பத், சட்டத்தரணி கு.ஐங்கரன், காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகள் சங்கத்தினர், ஊடகவியலாளர்கள், சிவில் சமூகத்தினர், அரசியல் பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/174863
-
விபத்தில் சிக்கிய ராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த உயிரிந்தார் ..
சனத் நிஷாந்தவின் மறைவு முழு நாட்டுக்கும் பேரிழப்பு! - மஹிந்த ராஜபக்க்ஷ அனுதாபம் Published By: VISHNU 26 JAN, 2024 | 06:42 PM (இராஜதுரை ஹஷான்) இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மறைவு எமது கட்சிக்கு மாத்திரமல்ல முழு நாட்டுக்கும் பேரிழப்பு. புத்தளம் மாவட்டம் சிறந்த தலைமைத்துவத்தை இழந்து விட்டது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் வியாழக்கிழமை (25) அதிகாலை இடம்பெற்ற வீதி விபத்தில் உயிரிழந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் பூதவுடல் கொழும்பில் உள்ள மலர்சாலையில் வைக்கப்பட்டிருந்தது. ஆளும் மற்றும் எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட பொதுமக்கள் பூதலுடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள். பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்திய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ தனது அனுதாபத்தை தெரிவித்துக் கொண்டு இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மறைவு எமது கட்சிக்கு மாத்திரமல்ல நாட்டுக்கும் பேரழிப்பு. அச்சம் என்பது அறியாதவர். பல சவாலான சந்தர்ப்பத்திலும் முன்னின்று செயற்பட்டுள்ளார். புத்தளம் மாவட்டம் சிறந்த தலைமைத்துவத்தை இழந்து விட்டது என்றார். https://www.virakesari.lk/article/174855
-
உயிருக்கு ஆபத்தான நிலையில் சாந்தன்- சிறுநீரகம் கல்லீரல் பாதிப்பு - சிறைக்கைதிகள் உரிமை அமைப்பு ஸ்டாலினிற்கு கடிதம்
உடல் நலக்குறைவால் சாந்தன் வைத்தியசாலையில் அனுமதி! இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட இலங்கையை சேர்ந்த சாந்தன், திடீரென ஏற்பட்ட உடல் நலக்குறைவினால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திருச்சி அரச மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன. 54 வயதான சாந்தன் திருச்சி சிறப்பு முகாமில் தங்கியிருந்த நிலையில் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. சுதந்திர ராஜா என்ற இயற்பெயர் கொண்ட சாந்தன், கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார். எனினும், இவர் திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளார். இவர் இலங்கையை பூர்வீகமாகக் கொண்டவர் என்பதால், அவருடைய சொந்த நாட்டில் இருந்து ஒப்புதல் கிடைத்த பின் அனுப்புவதற்கான நடைமுறைகள் செயற்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், சாந்தனுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் தற்போது திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். சாந்தனுக்கு இரண்டு கால்களிலும் வீக்கம் ஏற்பட்டு அவதியுற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக திருச்சி முகாமில் இருக்கும் சாந்தன், சொந்த நாடான இலங்கைக்கு செல்ல அனுமதிக்குமாறு பிரதமர் மோடி, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இலங்கை துணை தூதர், வெளியுறவுத்துறை அமைச்சர் உட்பட பலருக்கும் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் கடந்த 32 வருடங்களாக தனது தாயாரைப் பார்க்கவில்லை எனவும் அவருடைய இந்த முதுமையான காலத்தில் அவரோடு கூட வாழ விரும்புவதாகவும் ஒரு மகனாக அவருக்கு உதவிகரமாக இருக்க ஆசைப்படுவதாகவும் தெரிவித்திருந்தார். மேலும் தன்னை இலங்கைக்கு அனுப்பக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்துள்ள மனு, நிலுவையில் உள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன. https://thinakkural.lk/article/289474