Everything posted by ஏராளன்
-
தமிழ்நாடு ராவணனை கொண்டாட தொடங்கியது எப்போது தெரியுமா?
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கம்பரால் ராமாயணம் இயற்றப்படுவதற்கு முன்பே தமிழில் ராமாயணக் கதை நிலவிவந்தது என்கிறார்கள் தமிழறிஞர்கள். கட்டுரை தகவல் எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன் பதவி, பிபிசி தமிழ் 24 ஜனவரி 2024 புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் தமிழ்நாட்டில் ராமர் பக்தியோடு வணங்கப்படுவதைப் போலவே, ராவணனை அங்கீகரிக்கும் போக்கும் இருக்கிறது. இது எவ்வளவு காலமாக இருக்கிறது? இதற்குக் காரணம் என்ன? ஜனவரி 22ஆம் தேதியன்று அயோத்தியில் ராமர் கோவில் திறக்கப்பட்ட தினத்தன்று நாடு முழுவதும் ராமர் குறித்தும், ராமர் கோவில் குறித்தும் உற்சாகமாக சமூக வலைதளங்களில் பதிவுகள் வெளியாகின. ஆனால், நாட்டின் தென் பகுதியான தமிழகத்தில், #ராவணன் என்ற ஹாஷ்டாகின் கீழ் பதிவுகள் வெளியாகின. அதில் ராவணனை முன்னிறுத்தி பலர் பதிவுகளை வெளியிட்டனர். ராமாயணத்தின் பிரதான எதிர் கதாபாத்திரமான ராவணன் போற்றப்படுவது இந்தியாவுக்கு புதிதல்ல. இந்தியாவின் பல கோவில்களில் ராவணனின் உருவம் வணங்கப்படுகிறது. அதற்குக் காரணம், மிகப் புனிதமான ஒரு இதிகாசத்தின் அங்கமாக ராவணன் இருப்பதுதான். ஆனால், தமிழ்நாட்டில் ராவணன் போற்றப்படுவதற்கான காரணங்கள் முற்றிலும் மாறானவையாக இருக்கின்றன. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இந்தியாவின் பல கோவில்களில் ராவணனின் உருவம் வணங்கப்படுகிறது ராமாயணம் தமிழ்நாட்டில் தாக்கம் செலுத்தத் தொடங்கியது எப்போது? தமிழில் வால்மீகியின் ராமாயணத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட காப்பியங்களில் கம்பரின் ராமாயணம் மிக முக்கியமானது. ஒன்பதாம் நூற்றாண்டில் இருந்து 12ஆம் நூற்றாண்டிற்குள் இயற்றப்பட்டதாகக் கருதப்படும் கம்ப ராமாயணம், இயற்றப்பட்ட காலத்திலிருந்து தமிழில் பெரும் செல்வாக்கைச் செலுத்திவரும் இதிகாசமாக இருக்கிறது. ஆனால், கம்பரால் ராமாயணம் இயற்றப்படுவதற்கு முன்பே தமிழில் ராமாயணக் கதை நிலவிவந்தது என்கிறார்கள் தமிழறிஞர்கள். சிலப்பதிகாரத்தில் வரும் "அருந்திறல் பிரிந்த அயோத்தி போலப்/ பெரும்பெயர் மூதூர்பெரும்பே துற்றதும்" என்ற வரிகளைச் சுட்டிக்காட்டி, சிலப்பதிகார காலத்திலேயே ராமாயணக் கதை தாக்கம் செலுத்தியது என தனது தமிழர் பண்பாடு நூலில் குறிப்பிடுகிறார் எஸ். வையாபுரிப்பிள்ளை. இது தவிர, புறநானூறு, அகநானூறு, மதுரைக் காஞ்சி, பரிபாடல் ஆகியவற்றிலும்கூட ராமாயண பாத்திரங்களை, சம்பவங்களை உவமானமாகக் காட்டும் போக்கையும் அவர் சுட்டிக்காட்டுகிறார். திருஞானசம்பந்தரின் திருநீற்றுப் பதிகத்திலும் "இராவணன் மேலது நீறு" என குறிப்பிடப்பட்டு, அவர் சைவ சமயத்தைச் சேர்ந்தவராகச் சுட்டிக்காட்டப்படுகிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, அயோத்தி தாசரின் எழுத்துகளிலும் ராவணன் பற்றிய நேர்மறையான குறிப்புகள் தென்படுகின்றன தமிழ்நாடு ராவணனை கொண்டாட தொடங்கியது எப்போது? 19ஆம் நூற்றாண்டில்தான் ராவணனை மிக முக்கியமான அடையாளமாக தூக்கிப்பிடிக்கும் போக்கு துவங்கியது என்கிறார் ஆய்வாளர் ஸ்டாலின் ராஜாங்கம். "19ஆம் நூற்றாண்டில் வெளிவந்த தத்துவவிவேசினி இதழில் மாசிலாமணி முதலியார் சில இடங்களில் ராவணனை உயர்த்திச் சொல்கிறார். அதேபோல அயோத்தி தாசரின் எழுத்துகளிலும் ராவணன் பற்றிய நேர்மறையான குறிப்புகள் தென்படுகின்றன. இதற்குப் பிறகு 20ஆம் நூற்றாண்டில் திராவிட இயக்கத்தினர் ராவணனை மிகுந்த நேர்மறைத் தன்மை கொண்டவராக சித்தரிக்க ஆரம்பித்தனர்" என்கிறார் அவர். திராவிட இயக்கக் கவிஞரான பாரதிதாசன் எழுதிய "தென்றிசையைப் பார்க்கின்றேன்" என்று துவங்கும் பாடல் முழுக்க முழுக்க ராவணனைப் புகழ்ந்து எழுதப்பட்டிருந்தது. "குள்ளநரிச் செயல்செய்யும் கூட்டத்தின் கூற்றம்! என்தமிழர் மூதாதை! என்தமிழர் பெருமான் இராவணன்காண்!" என அந்தப் பாடலில் குறிப்பிடுகிறார் பாரதிதாசன்., இதற்குப் பிறகு, திராவிட இயக்கத்தின் மிக முக்கியத் தலைவரான அண்ணாவின் காலத்தில் ராவணனின் அடையாளம் மிக நேர்மறையான ஒன்றாக, ராமனுக்கு மாற்றாக முன்வைக்கப்பட ஆரம்பித்தது என்கிறார் ஸ்டாலின் ராஜாங்கம். "ஆரம்ப காலத்தில் மையநீரோட்ட மரபுகளோடு தொடர்புபடுத்தப்படாமல், மாறுபட்ட சித்தாந்தங்களோடுதான் ராவணன் தொடர்புபடுத்தப்பட்டார். ஆனால், இருபதாம் நூற்றாண்டில் நடந்த தமிழ் மறுமலர்சிக்குப் பிறகு, ராவணன் திராவிட - தமிழ் மரபைச் சேர்ந்தவராக முன்னிறுத்தப்பட ஆரம்பித்தார்" என்கிறார் அவர். ஆனால், தமிழ் இலக்கிய மரபைப் பொறுத்தவரை ராவணனைத் தூக்கிப் பிடிக்கும் மரபு கிடையாது என்கிறார் ஆய்வாளர் பொ. வேல்சாமி. இருபதாம் நூற்றாண்டில்தான் இந்தப் போக்கு துவங்கியது என்பதை அவரும் வலியுறுத்துகிறார். "தமிழ்நாட்டில் பிராமணரல்லாதார் இயக்கம் வலுப்பெற்றபோது, தமிழ்நாட்டில் கம்ப ராமாயணம் மிகுந்த செல்வாக்குடன் இருந்தது. ராமன் ஒரு முக்கிய அடையாளமாக முன்வைக்கப்பட்டார். ஆகவே, அதனை எதிர்கொள்ள திராவிட இயக்கம் ராவணனை முக்கிய அடையாளமாக முன்வைத்தது. ராமனை எதிர்மறைக் கதாபாத்திரமாக்கி, அதனைத் தாக்க ஆரம்பித்தார்கள்" என்கிறார் பொ. வேல்சாமி. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, அவ்வப்போது ராவண லீலாவை பெரியார் இயக்கங்கள் ஆங்காங்கே நடத்தி வருகின்றன. 1950களின் துவக்கத்தில் திராவிட நாடு இதழில், ராம லீலாவுக்குப் பதில் ராவண லீலா நடத்தி, ராமன் உருவத்தைக் கொளுத்தினால் என்ன செய்ய முடியும் என ஒரு கட்டுரையில் கேள்வி எழுப்பினார் சி.என். அண்ணாதுரை. இதற்குப் பிறகு தென்னாட்டில் ராவண லீலா நடத்தும் காலம் வந்தே தீரும் எனக் குறிப்பிட்டார் மு. கருணாநிதி. அதற்கு முன்பே அண்ணா எழுதிய 'கம்ப ரசம்' நூல், ராமாயணத்திற்கு எதிரான திராவிட இயக்க உணர்வை வெளிப்படுத்துவதாக இருந்தது. ஆனால், ராமன் என்ற அடையாளத்தைக் கடுமையாக எதிர்த்த பெரியார் அதற்கு மாறாக ராவணன் என்ற அடையாளத்தை தொடர்ந்து உயர்த்திப் பிடிக்கவில்லை என்பதையும் ஸ்டாலின் ராஜாங்கம் சுட்டிக்காட்டுகிறார். பெரியாரின் மறைவுக்குப் பிறகு, அவரது முதலாம் ஆண்டு நினைவு தினத்தில் மணியம்மையார் தலைமையிலான திராவிடர் கழகம் ராவண லீலாவை நடத்தப்போவதாக அறிவித்தது. இதற்கு கடுமையான எதிர்ப்பு எழுந்த நிலையிலும் சென்னையில் உள்ள பெரியார் திடலில் ராவண லீலா நடத்தப்பட்டது. அதற்குப் பிறகும் அவ்வப்போது ராவண லீலாவை பெரியார் இயக்கங்கள் ஆங்காங்கே நடத்தி வருகின்றன. இதற்கு நடுவில் திராவிட இயக்கப் பேராசிரியரான புலவர் குழந்தை எழுதிய 'ராவண காவியம்' 1946ல் வெளியானது. இது ராவணனை நேர்மறைப் பாத்திரமாகவும் ராமன், லக்ஷ்மணன் ஆகியோரை எதிர்மறைப் பாத்திரங்களாகவும் சித்தரித்தது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இந்த நூல் 1948ஆம் ஆண்டு ஜூன் இரண்டாம் தேதி தமிழ்நாடு அரசால் தடைசெய்யப்பட்டது. 1972ஆம் ஆண்டில்தான் இந்தத் தடை நீக்கப்பட்டது. ராவணன் மிக நல்ல குணங்களை உடையவாரகவும், போற்றத்தக்கவராகவும் ஒரு கருத்தை உருவாக்கியதில் இந்த புத்தகத்திற்கு முக்கியப் பங்கு இருக்கிறது. பட மூலாதாரம்,RAMAYAN படக்குறிப்பு, ராவணன் திரைப்படம், ராவணனை நல்ல பண்புகளை உடையவனாகக் காட்டியது. 2010ஆம் ஆண்டில் ராமாயணக் கதையைத் தழுவி மணிரத்னத்தின் இயக்கத்தில் விக்ரம், ஐஸ்வர்யா ராய் நடித்து வெளியான ராவணன் திரைப்படம், ராவணனை நல்ல பண்புகளை உடையவனாகக் காட்டியது. "ஆனால், சாதாரண மக்கள் இதையெல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. அவர்கள் வழக்கம் போலவே ராமாயணத்தை அணுகினார்கள்" என்கிறார் பொ. வேல்சாமி. 1980களின் பிற்பகுதியில் உருவான பா.ஜ.கவின் எழுச்சி, புதிய பொருளாதாரக் கொள்கை, நாட்டின் பல்வேறு பகுதிகளில் விளிம்பு நிலை மக்களின் போராட்டங்கள், மண்டல் கமிஷன் பரிந்துரைகளின் அமலாக்கம் ஆகியவற்றிற்கு மத்தியில் ராவணனை மாற்று அடையாளமாக முன்னிறுத்துவதற்கு பெரிய முக்கியத்துவம் கிடைக்கவில்லை. இப்போது ராமர் கோவில் திறக்கப்பட்டதை ஒட்டி, மீண்டும் ராவணனின் அடையாளம் கவனத்திற்கு வந்திருக்கிறது. https://www.bbc.com/tamil/articles/crg94q6m7vgo
-
விபத்தில் சிக்கிய ராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த உயிரிந்தார் ..
விபத்தில் சனத் நிஷாந்த மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் உயிரிழப்பு இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த மற்றும் அவரது பாதுகாப்பு அதிகாரியாக இருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஆகியோர் இன்று அதிகாலை கந்தானைக்கு அருகில் கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்துள்ளனர். கட்டுநாயக்காவிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற ஜீப் ஒன்று அதே திசையில் பயணித்த கொள்கலன் வாகனத்துடன் மோதி பின்னர் வீதியின் பாதுகாப்பு வேலியில் மோதி விபத்துக்குள்ளானது. ஜீப்பில் பயணித்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த, அவரது பாதுகாப்பு உத்தியோகத்தராக இருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் 72542 ஜெயக்கொடி மற்றும் ஜீப் சாரதி ஆகியோர் படுகாயமடைந்து ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இராஜாங்க அமைச்சர் மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதுடன், சாரதி ராகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர். கந்தானை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். https://thinakkural.lk/article/289327
-
ஐ.சி.சி. கிரிக்கெட் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள வீர, வீராங்கனைகள்
வருடத்தின் வளர்ந்துவரும் வீரருக்கான ஐ.சி.சி. விருது ரச்சின் ரவிந்த்ரவுக்கு சொந்தமானது 25 JAN, 2024 | 10:49 AM (நெவில் அன்தனி) வருடத்தின் வளர்ந்துவரும் வீரருக்கான ஐசிசி விருதை நியூஸிலாந்தின் இளம் அதிரடி துடுப்பாட்டக்காரர் ரச்சின் ரவிந்த்ர தட்டிச்சென்றார். இவர் கடந்த வருடம் நடைபெற்ற இரண்டு வகை சர்வதேச மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் அற்புதமான ஆற்றல்களை வெளிப்படுத்தியமைக்காக வளர்ந்துவரும் வீரராக ஐசிசியினால் இனங்காணப்பட்டுள்ளார். இந்தியாவில் கடந்த வருடம் நடைபெற்ற ஐசிசி ஆடவர் உலகக் கிண்ண கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் ரச்சின் ரவிந்த்ர துடுப்பாட்டத்தில் அசத்தியிருந்தார். உலகக் கிண்ணப் போட்டியில் அதிரடியாக 3 சதங்களையும் 2 அரைச் சதங்களையும் விளாசிய ரச்சின் ரவிந்த்ர 64.22 என்ற சராசரியுடன் 578 ஓட்டங்களை மொத்தமாக குவித்திருந்தார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 106.44 ஆக இருந்தது. இடது கை சுழல்பந்துவீச்சாளரான அவர் 6 விக்கெட்களையும் வீழ்த்தி இருந்தார். உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் ரச்சின் ரவிந்த்ர அபார ஆற்றல்களை வெளிப்படுத்தியதன் மூலம் நியூஸிலாந்து அணி அரை இறுதிவரை முன்னேறியிருந்தது. கடந்த வருடம் மொத்தமாக 25 சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிய அவர், 41 என்ற சராசரியுடனும் 108.03 என்ற ஸ்ட்ரைக் ரேட்டுடனும் மொத்தமாக 820 ஓட்டங்களைப் பெற்றதுடன் 18 விக்கெட்களையும் கைப்பற்றியிருந்தார். சர்வதேச ரி20 அரங்கில் 12 போட்டிகளில் விளையாடிய அவர் 91 ஓட்டங்களைப் பெற்றதுடன் 5 விக்கெட்களைக் கைப்பற்றியிருந்தார். இத்தகைய சிறந்த ஆற்றல்களை வெளிப்படுத்திய ரச்சின் ரவிந்த்ர, வளர்ந்துவரும் வீரருக்கான ஐசிசி விருதை தனதாக்கிக்கொண்டார். இந்த விருதுக்கு இலங்கையின் டில்ஷான் மதுஷன்க, தென் ஆபிரிக்காவின் ஜெரால்ட் கொயெட்ஸீ ஆகியோரும் பரிந்துரைக்கப்பட்டிருந்தனர். https://www.virakesari.lk/article/174757 வருடத்தின் வளர்ந்துவரும் வீராங்கனைக்கான ஐசிசி விருதை ஃபோப் லிச்ஃபீல்ட் வென்றெடுத்தார் 25 JAN, 2024 | 11:52 AM (நெவில் அன்தனி) வருடத்தின் வளர்ந்துவரும் வீராங்கனைக்கான ஐசிசி விருதை அவுஸ்திரேலியாவின் 20 வயதுடைய சகலதுறை ஆட்டக்காரர் ஃபோப் லிச்ஃபீல்ட் வென்றெடுத்தார். ஐந்து வருடங்களுக்கு முன்னர் தனது 15ஆவது வயதில் மகளிர் பிக் பாஷ் லீக்கில் அறிமுகமான லிச்ஃபீல்ட், என்றாவது ஒருநாள் சாதிப்பார் என்ற எதிர்பார்ப்பை இந்த விருதின் மூலம் உறுதி செய்துள்ளார். பிக் பாஷ் லீக்கில் அவர் வெளிப்படுத்திய ஆற்றல்களைவிட சிறந்த ஆற்றல்களை சர்வதேச அரங்கில் கடந்த வருடம் வெளிப்படுத்தினார். மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் தனது அறிமுக ஆண்டில் 12 இன்னிங்ஸ்களில் துடுப்பெடுத்தாடிய லிச்ஃபீல்ட், ஆட்டம் இழக்காத ஒரு சதம், 4 அரைச் சதங்கள் உட்பட 485 ஓட்டங்களை மொத்தமாக குவித்தார். (சராசரி 53.88 ஸ்ட்ரைக் ரேட் 81.92) அவரது இந்த ஆற்றல்கள் அவரை வருடத்தின் ஐசிசி மகளிர் ஒருநாள் அணியிலும் இடம்பெறச் செய்தது. இணை அங்கத்துவ நாடுகளில் அதிசிறந்த வீரர்கள் இணை அங்கத்துவ நாடுகளுக்கான வருடத்தின் அதிசிறந்த ஐசிசி கிரிக்கெட் வீரர் விருதை நெதர்லாந்தின் பாஸ் டி லீட் வென்றெடுத்ததுடன் வருடத்தின் அதிசிறந்த ஐசிசி கிரிக்கெட் வீராங்கனை விருதை கென்யாவின் குவின்டோர் ஆபெல் தனதாக்கிக்கொண்டார். 24 வயதான பாஸ் டி லீட், கடந்த வருடம் 16 சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 424 ஓட்டங்ளைப் பெற்றதுடன் 31 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார். ஐசிசி உலகக் கிண்ண தகுதிகாண் சுற்றில் ஸ்கொட்லாந்துக்கு எதிரான போட்டியில் 123 ஓட்டங்களைக் குவித்ததுடன் 5 விக்கெட் குவியலையும் பதிவுசெய்திருந்தார். இந்தியாவில் நடைபெற்ற உலகக் கிண்ண கிரிக்கெட்டில் 8 போட்டிகளில் 16 விக்கெட்களைக் கைப்பற்றியதன் மூலம் தனது அதிசிறந்த ஆற்றலை வெளிப்படுத்தியிருந்தார். முதலாவது ஆபிரிக்க பெண் இணை அங்கத்துவ நாடுகளுக்கான வருடத்தின் அதிசிறந்த ஐசிசி கிரிக்கெட் வீராங்கனையாக கென்யாவின் குவின்டோர் ஆபெல் தெரிவானார். இதன் மூலம் இந்த விருதை வென்ற முதலாவது ஆபிரிக்க பெண் என்ற கௌரவத்தையும் பெருமையையும் குவின்டோர் ஆபெல் பெற்றுக்கொண்டார். கடந்த வருடம் 17 மகளிர் சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிய குவின்டோர் ஆபெல், ஒரு சதம், 3 அரைச் சதங்களுடன் 476 ஓட்டங்களைப் பெற்றார். அத்துடன் தனது சுழல்பந்துவீச்சின் மூலம் 30 வீராங்கனைகளை ஆட்டம் இழக்கச் செய்திருந்தார். https://www.virakesari.lk/article/174761
-
ஐசிசி 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் - செய்திகள்
நமிபியாவிடம் சவாலை எதிர்கொண்ட இலங்கை 77 ஓட்டங்களால் வெற்றிபெற்றது 24 JAN, 2024 | 09:46 PM (நெவில் அன்தனி) தென் ஆபிரிக்காவின் கிம்பர்லி, டயமண்ட் ஓவல் விளையாட்டரங்கில் புதன்கிழமை (24) நடைபெற்ற சி குழுவுக்கான ஐசிசி 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் துடுப்பாட்டத்தின் போது நமிபியாவிடம் பலத்த சவாலை எதிர்கொண்ட இலங்கை, பந்துவீச்சில் அசத்தி 77 ஓட்டங்களால் வெற்றிபெற்றது. மிகவும் பொறுமையுடன் துடுப்பெடுத்தாடி ஆட்டம் இழக்காமல் அரைச் சதம் பெற்ற சுப்புன் வடுகே, துல்லியமாக பந்துவீசிய ருவிஷான் பெரேரா, விஷ்வா லஹிரு, தினுர கலுபஹன ஆகியோர் இலங்கைக்கு வெற்றியை ஈட்டிக்கொடுத்து அதன் கௌரவத்தைக் காப்பாற்றினர். சர்வதேச கிரிக்கெட் பேரவையில் இணை அங்கத்துவ நாடாக இருக்கும் நமிபியா இந்தப் போட்டியில் அசாத்திய வெற்றி ஒன்றை ஈட்டும் என கருதும் அளவுக்கு இலங்கையின் துடுப்பாட்டம் மிக மோசமாக இருந்தது. அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இலங்கை 37.5 ஓவர்களில் 133 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. ஒரு கட்டத்தில் 20 ஓவர்கள் நிறைவில் முன்வரிசை வீரர் ஐவரை இழந்து 71 ஓட்டங்களை மாத்திரம் இலங்கை பெற்றிருந்தது. புலிந்து பெரேரா (3), அணித் தலைவர் சினேத் ஜயவர்தன (10), ரவிஷான் டி சில்வா (2) ருசந்த கமகே (17) தினுர கலுபஹன (0) ஆகியோர் எதிரணியின் பந்துவீச்சுக்கு தாக்குப் பிடிக்கவில்லை. மத்திய மற்றும் பின்வரிசையிலும் அதே கதிதான் தொடர்ந்தது. ஷாருஜன் சண்முகநாதன் (13), மல்ஷா தருபதி (6), விஷ்வா லஹிரு (0), ருவிஷான் பெரேரா (0), கருக்க சன்கேத் (1) ஆகியோரும் துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கவில்லை. எனினும் மறு பக்கத்தில் மிகவும் பொறுமையுடன் துடுப்பெடுத்தாடிய சுப்புன் வடுகே 79 பந்துகளை எதிர்கொண்டு 6 பவுண்டறிகளுடன் 56 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழக்காதிருந்தார். அவரது துடுப்பாட்டமே இலங்கைக்கு 100 ஓட்டங்களைக் கடக்க உதவியது. பந்துவீச்சில் சச்சியோ வென் வூரென் 23 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் ஜொஹானஸ் டி வில்லியர்ஸ் 19 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நமிபியா 27 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 56 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வி அடைந்தது. ஒன்பதாம் இலக்க வீரர் ஹன்ரோ பேடன்ஹோஸ்ட் (11), பீட்டர் டெனியல் ப்ளைனோட் (17 ஆ.இ.) ஆகிய இருவரே இரட்டை இலக்கை எண்ணிக்கைகளைப் பெற்றனர். பந்துவீச்சில் ருவிஷான் பெரேரா, தினுர கலுபஹன ஆகிய இருவரும் மிகவும் அற்புதமாக செயற்பட்டனர். ருவிஷான் பெரேரா 3 ஓட்டமற்ற ஓவர்கள் உட்பட 5 ஓவர்கள் 3 ஓட்டங்களை மாத்திரம் கொடுத்து 3 விக்கெட்களையும் தினுர கலுபஹன 4 ஓட்டமற்ற ஓவர்கள் உட்பட 8 ஓவர்கள் வீசி 8 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். அவர்களை விட விஷ்வா லஹிரு 19 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களை வீழ்த்தினார். ஆட்டநாயகன்: சுப்புன் வடுகே https://www.virakesari.lk/article/174747
-
ஐ.சி.சி. கிரிக்கெட் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள வீர, வீராங்கனைகள்
வருடத்தின் அதிசிறந்த ரி - 20 கிரிக்கெட் வீரர் சூரியகுமார் யாதவ் 24 JAN, 2024 | 05:09 PM (நெவில் அன்தனி) வருடத்தின் அதிசிறந்த ஐசிசி ஆடவர் ரீ20 கிரிக்கெட் வீரர் விருதை இந்தியாவின் அதிரடி வீரர் சூரியகுமார் யாதவ் வென்றெடுத்துள்ளார். இந்த விருதை அவர் இரண்டாவது தொடர்ச்சியான வருடமாக வென்றெடுத்துள்ளார். சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் 2023ஆம் ஆண்டுக்கான அதிசிறந்த வீரர்களுக்கான ஐசிசி விருதுகள் பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் சூரியகுமார் யாதவ்வுக்கான விருது இரண்டாவதாக அறிவிக்கப்பட்டது. முதலாவதாக ஐசிசி இணை அங்கத்துவ நாடுகளில் அதிசிறந்த கிரிக்கெட் வீராங்னை விருது அறிவிக்கப்பட்டது. வருடத்தின் அதிசிறந்த ஐசிசி இணை அங்கத்துவ நாடுகளுக்கான வீராங்கனை விருதை கென்யாவின் குவின்டோர் ஆபெல் வென்றெடுத்தார். அதிரடி மன்னன் சூரியகுமார் யாதவ் அதிரடியாக ஓட்டங்கள் குவிப்பதில் வல்லவரும் மன்னருமான சூரியகுமார் யாதவ், கடந்த வருடம் 17 இன்னிங்ஸ்களில் 2 சதங்கள், 5 அரைச் சதங்களுடன் மொத்தமாக 733 ஓட்டங்களைப் பெற்றார். அவரது சராசரி 48.86 ஆக அமைந்திருந்ததுடன் ஸ்ட்ரைக் ரேட் நினைத்துப் பார்க்க முடியாத 155.95ஆக இருந்தது. மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணியின் மத்திய வரிசை துடுப்பாட்டத் தூண் என வருணிக்கப்படும் சூரியகுமார் யாதவ், பெரும்பாலும் எல்லா போட்டிகளிலும் சிறப்பாகத் துடுப்பெடுத்தாடி இலகுவாக ஓட்டங்களைக் குவித்தார். அவரது அதிரடி துடுப்பாட்டம் இந்தியாவின் பல வெற்றிகளில் பிரதான பங்களிப்பு செய்திருந்தது. வருடத்தின் ஆரம்பத்தில் இலங்கைக்கு எதிராக 36 பந்துகளில் 51 ஓட்டங்களையும் 51 பந்துகளில் ஆட்டம் இழக்காமல் 112 ஓட்டங்களையும் குவித்த யாதவ், வருட இறுதியில் இந்திய அணியின் பதில் அணித் தலைவராக செயற்பட்டார். ரோஹித் ஷர்மா ஓய்வு எடுத்ததால் அவரிடம் தலைமைப் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. வருட இறுதியில் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக 42 பந்துகளில் 80 ஓட்டங்களையும் தென் ஆபிரிக்காவுக்கு எதிராக 36 பந்துகளில் 56 ஓட்டங்களையும் 56 பந்துகளில் 100 ஓட்டங்களையும் குவித்திருந்தார். இந்த விருதுக்கு சிக்கந்தர் ராஸா (ஸிம்பாப்வே), அல்பேஸ் ராம்ஜனி (உகண்டா), மார்க் செப்மன் (நியூஸிலாந்து) ஆகியோரும் பரிந்துரைக்கப்பட்டிருந்தனர். https://www.virakesari.lk/article/174702 வருடத்தின் அதிசிறந்த ரி - 20 கிரிக்கெட் வீராங்கனை விருதை ஹெய்லி மெத்யூஸ் வென்றார் Published By: VISHNU 24 JAN, 2024 | 04:51 PM (நெவில் அன்தனி) வருடத்தின் அதிசிறந்த ஐசிசி மகளிர் ரீ20 கிரிக்கெட் வீராங்கனை விருதை மேற்கிந்தியத் தீவுகள் அணித் தலைவி ஹெய்லி மெத்யூஸ் வென்றெடுத்துள்ளார். மேற்கிந்தியத் தீவுகளிலிருந்து இந்த விருதை வென்றெடுத்த இரண்டாவது வீராங்கனை ஹெய்லி மெத்யூஸ் ஆவார். முன்னாள் அணித் தலைவி ஸ்டெஃபானி டெய்லர் இந்த விருதை 2015இல் வென்றிருந்தார். சகலதுறைகளிலும் பிரகாசிப்பு மேற்கிந்தியத் தீவுகளின் சமகால தலைவியான ஹெய்லி மெத்யூஸ் சகலதுறைகளிலும் வெளிப்படுத்திய ஆற்றல்களின் அடிப்படையிலேயே வருடத்தின் அதிசிறந்த ஐசிசி ரி20 வீராங்கனை விருதுக்கு சொந்தக்காரராகி உள்ளார். கடந்த வருடம் 14 போட்டிகளில் விளையாடிய ஹெய்லி மெத்யூஸ் ஒரு சதம், 4 பவுண்டறிகள் உட்பட 700 ஓட்டங்களை மொத்தமாக குவித்திருந்தார். இதில் 99 பவுண்டறிகள், 14 சிக்ஸ்கள் அடங்கியிருந்தன. அவரது துடுப்பாட்ட சராசரி 63.63 ஆகவும் ஸ்ட்ரைக் ரேட் 132.32 ஆகவும் பதிவாகியுள்ளது. அவுஸ்திரேலியாவினால் நிர்ணயிக்கப்பட்ட 212 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை மேற்கிந்தியத் தீவுகள் விரட்டிக் கடப்பதில் பெரும் பங்காற்றியவர் மெத்யூஸ். அவர் அப் போட்டியில் 132 ஓட்டங்களைக் குவித்தார். அதே தொடரின் முதலாவது போட்டியில் ஆட்டம் இழக்காமல் 99 ஓட்ட்ஙகளையும் கடைசிப் போட்டியில் 79 ஓட்டங்களையும் பெற்றார். பந்துவீச்சிலும் கடந்த வருடம் அவர் அபாரமாக செயற்பட்டு மொத்தமாக14 விக்கெட்களைக் கைப்பற்றியிருந்தார். அவரது இந்த சகலதுறை ஆட்டத் திறனே அவருக்கு வருடத்தின் அதிசிறந்த ஐசிசி மகளிர் ரி20 வீராங்கனை விருதை வென்றுகொடுத்தது. இந்த விருதுக்கு இலங்கையின் சமரி அத்தபத்து, அவுஸ்திரேலியாவின் எலிஸ் பெரி, இங்கிலாந்தின் சொஃபி எக்லஸ்டோன் ஆகியோரும் பரிந்துரைக்கப்பட்டிருந்தனர். https://www.virakesari.lk/article/174715
-
மதுரையில் பிரம்மாண்ட ஏறு தழுவுதல் அரங்கம் திறப்பு!
உலகின் முதல் ஏறுதழுவுதல் அரங்கம் – மதுரையில் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.! 24 JAN, 2024 | 12:53 PM உலகின் முதல் ஏறுதழுவுதல் அரங்கத்தை மதுரையில்தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். உலகின் முதல் பிரம்மாண்டமான ஏறுதழுவுதல் அரங்கம் திறப்புவிழா இன்று மதுரையில் நடைபெறுகிறது. 62 கோடியே 78 இலட்ச ரூபாய் மதிப்பில் மதுரை அலங்காநல்லூர் கீழக்கரை கிராமத்தில் கம்பீரத் தோற்றத்துடன் கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம் கட்டப்பட்டுள்ளது இதற்கு கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம் என பெயரிடப்பட்டுள்ளது. தமிழ் சமுதாயத்தின் முக்கிய பண்பாட்டுத் திருவிழாவான பொங்கல் விழா கொண்டாடப்படும் வேளையில் தமிழ்நாடு முழுவதிலும் காளையை இளைஞர்கள் அடக்கும் வீரத்தைப் போற்றும் வகையில் ஏறுதழுவுதல் விழா நடைபெறும் தமிழர்களின் பெருமைக்குரிய தொழிலாக பழங்காலத்திலிருந்து திகழ்ந்து வருவது உழவுத் தொழில். “சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம்” என்றார் வள்ளுவர். அத்தகைய உழவுத் தொழிலுக்கு முதன்முதலில் தேவைப்பட்டது “காளை”. அந்நாளில் காடுகளில் திரிந்த காளைகளைப் பிடித்து அடக்கிப் பழக்கி உழவுத் தொழிலில் ஈடுபடுத்தி வந்தனர் தமிழ் மக்கள். அதன் தொடர்ச்சியாகத்தான், மாடு பிடிக்கும் விழா, “ஏறு தழுவுதல்”, “எருது விடுதல்” “மஞ்சு விரட்டு”, ஜல்லிக்கட்டு” எனப் பல பெயர்களில் தமிழ்ச் சமுதாயத்தில் வழிவழியாக நடைமுறையில் இருந்து வந்துள்ளது. மதுரை அலங்காநல்லூர் கீழக்கரையில் பிரம்மாண்டமான ஏறுதழுவுதல் அரங்கம் கட்டப்படுவதற்காக 3.2.2023 அன்று அரசாணை பிறப்பிக்கப்பட்டது அதனைத் தொடர்ந்து ரூ.62 கோடியே 77 இலட்சத்து 62 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கு 18.3.2023 அன்று அடிக்கல் நாட்டப்பட்டது தமிழ்நாடு அரசின் பொதுப்பணித்துறை மூலம் வாடிவாசல், ஒரே நேரத்தில் 5,000 பார்வையாளர்கள் அமர்ந்து காணும் வசதிகளுடன் மூன்றடுக்குப் பார்வையாளர் மாடம், ஏறுதழுவுதல் நடைபெறும் இடம், மிக முக்கிய விருந்தினர்கள் அமரும் இடம், ஏறுதழுவுதலில் பங்குபெறும் காளைகளின் எழுச்சி வடிவங்களைப் பிரதிபலிக்கும் அருங்காட்சியகம், ஒலி-ஒளி காட்சிக்கூடம், கால்நடை மருந்தகம், நூலகம், மாடுபிடி வீரர்களுக்கான தங்கும் அறைகள், புல்வெளிகளுடன்கூடிய தோட்டம் என அனைத்தையும் கொண்டுள்ள 83,462 சதுரடி பரப்புடைய மிகப் பிரம்மாண்டமான கட்டடமாக ஏறுதழுவுதல் அரங்கம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது ஏறுதழுவுதல் அரங்கம் திறப்பையோட்டி அரங்கில் முதல் ஜல்லிக்கட்டு இன்று நடைபெறுகிறது. முதல் ஜல்லிக்கட்டில் 500 காளைகளும், 300 மாடுபிடி வீரர்களும் பங்கேற்கின்றனர். முதலிடத்தை பிடிக்கும் சிறந்த காளை மற்றும் சிறந்த மாடுபிடி வீரருக்கு தலா ஒரு தார் ஜீப் வழங்கப்படுகிறது. இரண்டாம் இடத்தை பிடிக்கும் சிறந்த காளை மற்றும் சிறந்த மாடுபிடி வீரருக்கு தலா ஒரு இரு சக்கர வாகனம் வழங்கப்படுகிறது. மேலும் வெற்றி பெரும் ஓவ்வொரு ஜல்லிக்கட்டு காளை மற்றும் வீரருக்கு தங்ககாசு, வெள்ளிகாசு உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கப்படுகிறது. இந்த நிலையில் ஏறு தழுவுதல் அரங்கத்தை திறந்து வைக்க வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு போலீசார் சார்பில் மரியாதை வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த அரங்கத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து தமிழ் தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. இதன் பின்னர் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. https://www.virakesari.lk/article/174684
-
நிகழ்நிலை காப்புச் சட்டமூலம் : 224 உறுப்பினர்கள் எதிராக வாக்களிக்க வேண்டும் - சிவில் அமைப்பினர் கூட்டாக வலியுறுத்தல்
20 ஆவது திருத்தத்துக்கு நேர்ந்த கதியே நிகழ்நிலை காப்புச் சட்ட மூலத்துக்கு நேரிடும் - கிரியெல்ல சாடல் Published By: VISHNU 24 JAN, 2024 | 05:35 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகம் என்பனவற்றில் சிங்கப்பூர் முன்னேற்ற நிலையில் இல்லை. ஆகவே சிங்கப்பூர் நாட்டின் மாதிரியிலான வகையில் நிகழ்நிலை காப்புச் சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. 20 ஆவது திருத்தச்சட்டத்துக்கு நேர்ந்த கதியே நிகழ்நிலை காப்புச் சட்டமூலத்துக்கும் நேரிடும். அரசாங்கத்துக்கு எதிரான கருத்தை குறிப்பிடும் சகலரையும் பயங்கரவாதிகள் என்றும் சித்தரிக்கும் நிலைப்பாட்டில் இருந்துக் கொண்டு அரசாங்கம் செயற்படுகிறது என எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடாவான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (24) இடம்பெற்ற உத்தேச நிகழ்நிலை காப்புச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். https://www.virakesari.lk/article/174712
-
இலங்கையில் புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்ட வரைவுக்கு கடும் எதிர்ப்பு வர காரணம் என்ன?
பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பில் 18 மனுக்கள் தாக்கல் - சபாநாயகர் சபைக்கு அறிவிப்பு 24 JAN, 2024 | 05:35 PM (எம்.ஆர்.எம்.வசீம்) பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பில் மேலும் 18 மனுக்கள் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன சபைக்கு அறிவித்தார். பாராளுமன்றம் புதன்கிழமை (24) காலை 9.30 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது. இதன்போது இடம்பெற்ற சபாநாயகர் அறிவிப்பின்போதே அவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் கூறுகையில், 23 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நான் இந்த சபையில் விடுத்த அறிவித்தலில் குறிப்பிடப்பட்ட ஆறு மனுக்களுக்கு மேலதிகமாக, அரசியலமைப்பின் 121(1) ஆம் உறுப்புரையின் பிரகாரம் பயங்கரவாத எதிர்ப்பு எனும் சட்டமூலம் தொடர்பாக உயர் நீதிமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட்ட மேலும் பதினெட்டு மனுக்களின் பிரதிகள் எனக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. அதேவேளை அரசியலமைப்பின் 121(1) ஆம் உறுப்புரையின் பிரகாரம் நுண்நிதி மற்றும் கடன் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபை எனும் சட்டமூலம் தொடர்பாக உயர் நீதிமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட்ட மேலும் ஐந்து மனுக்களின் பிரதிகளும் எனக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன என்றார். https://www.virakesari.lk/article/174713
-
ராமர் கோவில்: 72 ஏக்கர் நிலம் இருக்கும்போது 2.7 ஏக்கரில் மட்டும் கோவில் கட்டப்பட்டது ஏன்?
சில நிமிடங்கள் அனுமதி; Inside The Ayodhya Ram Temple - கோவில் உள்ளே எப்படி இருக்கிறது?
-
நாம் குடிக்கும் தண்ணீரில் பிளாஸ்டிக் இருப்பது எவ்வளவு ஆபத்தானது?
பட மூலாதாரம்,GETTY IMAGES 24 ஜனவரி 2024, 05:59 GMT மனிதர்களின் அடிப்படைத் தேவைகளில் ஒன்று சுத்தமான குடிநீர். நாம் பயணம் செய்யும்போது அல்லது சுத்தமான தண்ணீர் கிடைக்காத இடத்தில் இருக்கும்போதெல்லாம், பாட்டில் தண்ணீரை அங்கேயே வாங்க முயற்சிக்கிறோம். அந்த தண்ணீரில் அழுக்கு இருக்காது என்று நம்புகிறோம். ஆனால் அந்த தண்ணீருக்குள் நுண்ணிய பிளாஸ்டிக் அதாவது பிளாஸ்டிக்கின் எண்ணற்ற நுண்ணிய துகள்கள் இருக்கலாம். பிபிசி ஃபியூச்சரில் வெளியிடப்பட்ட கட்டுரையின்படி , அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழகம் மற்றும் ரட்ஜர்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், பாட்டில் தண்ணீரில் முன்னர் மதிப்பிடப்பட்டதை விட 100 மடங்கு அதிகமான மைக்ரோ பிளாஸ்டிக்ஸ்கள் இருக்கலாம் என்று கண்டறிந்துள்ளனர். ஒரு லிட்டர் தண்ணீரில் சுமார் 2.5 லட்சம் நானோ பிளாஸ்டிக் துகள்கள் இருக்கலாம் என்று கண்டறிந்தனர். இந்த ஆராய்ச்சியாளர்கள் மூன்று பிராண்ட் தண்ணீர் பாட்டில்களை ஆய்வு செய்தபோது, ஒரு லிட்டரில் ஒரு லட்சத்து பத்தாயிரம் முதல் நான்கு லட்சம் நானோ பிளாஸ்டிக் துகள்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, தண்ணீரில் கரைந்த பெரும்பாலான பிளாஸ்டிக் துகள்கள் ஒரு பாட்டிலில் இருந்து வந்தவை. பட மூலாதாரம்,GETTY IMAGES இந்தியாவிலும் மைக்ரோபிளாஸ்டிக் மாசுபட்டுள்ள தண்ணீர் நாம் இருக்கும் இடத்தைச் சுற்றிப் பார்த்தால் பல பிளாஸ்டிக் பொருட்கள் தெரியும். அத்தகைய பொருட்களை நுண்ணிய துண்டுகளை மிகச் சிறிய அளவில் வெட்டினால், அதுவே மைக்ரோபிளாஸ்டிக்ஸ் என அழைக்கப்படுகின்றது. பொதுவாக ஐந்து மில்லிமீட்டருக்கும் குறைவான அளவில் உள்ள பிளாஸ்டிக் துண்டுகள் மைக்ரோ பிளாஸ்டிக் என்று அழைக்கப்படுகின்றன. அதை விட சிறியதாக இருக்கும் பிளாஸ்டிக்கை நானோ அளவில் மட்டுமே அளவிட முடியும். அவை நானோ பிளாஸ்டிக் என்று அழைக்கப்படுகின்றன. இந்த இரண்டு வகைகளும் கண்ணுக்கு எளிதில் புலப்படுவதில்லை. ஆனால், அவை உலகின் ஒவ்வொரு பகுதியிலும் உள்ளன. அது ஆறுகளின் நீராகவோ, கடலின் அடிப்பகுதியாகவோ அல்லது அண்டார்டிக்கில் உறைந்த பனியாகவோ இருக்கலாம். ஐஐடி பாட்னா நடத்திய ஆய்வில் , மழைநீரிலும் மைக்ரோபிளாஸ்டிக் துகள்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இதேபோல், இந்தியாவில் உள்ள ஆறுகள் மற்றும் ஏரிகளில் கூட மைக்ரோபிளாஸ்டிக்ஸ் காணப்படுவதாக மற்றொரு ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் அழுக்கு நீர், நகர்ப்புறங்களில் இருந்து வெளியேறும் பிளாஸ்டிக் கழிவுகள் என பல காரணங்களால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES மைக்ரோபிளாஸ்டிக்ஸின் ஆபத்துகள் என்ன? ஒரு பிரச்னை என்னவென்றால், குடிநீரில் கூட மைக்ரோபிளாஸ்டிக் இருக்கலாம். ஆனால், அதில் முக்கியமான சிக்கல் என்னவென்றால், மைக்ரோ பிளாஸ்டிக்ஸ் மனித உடலில் என்ன விளைவை ஏற்படுத்துகிறது என்பது இன்னும் உறுதியாகத் தெரியவில்லை. 2019 ஆம் ஆண்டில், உலக சுகாதார நிறுவனம் ஒரு மதிப்பாய்வை நடத்தியது. அதில், மைக்ரோபிளாஸ்டிக்ஸ் மனித உடலில் நுழைந்தால் என்ன ஆபத்துகள் ஏற்படக்கூடும் என்பதைப் புரிந்துகொள்ள முயற்சித்தது. ஆனால், வரையறுக்கப்பட்ட ஆராய்ச்சி காரணமாக, உலக சுகாதார மையம், எந்த முடிவுக்கும் வரவில்லை. இன்னும் பிளாஸ்டிக் மாசுபாட்டை குறைக்க வேண்டும் என்று மட்டும் வேண்டுகோள் விடுத்து. டெல்லியில் உள்ள புஷ்பாஞ்சலி மருத்துவ மையத்தின் மூத்த மருத்துவர் மணீஷ் சிங், பிபிசி செய்தியாளர் ஆதர்ஷ் ரத்தோரிடம், மைக்ரோபிளாஸ்டிக்கின் ஆபத்துகள் பற்றி அதிகம் அறியப்படவில்லை, எனவே அந்த விஷயத்தில் இன்னும் கவனமாக இருக்க வேண்டிய அவசியம் உள்ளது எனக் கூறினார். “மைக்ரோபிளாஸ்டிக்கின் ஆபத்துகள் குறித்து வரையறுக்கப்பட்ட ஆராய்ச்சி வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அது நமது நாளமில்லா சுரப்பிகளின் (ஹார்மோன் உற்பத்தி செய்யும் சுரப்பிகள்) செயல்பாட்டில் சிக்கல்களை ஏற்படுத்துவதாகவும் சில ஆராய்ச்சிகள் உள்ளன. மைக்ரோபிளாஸ்டிக் மிகவும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என்பது எதிர்காலத்தில் அறியப்படலாம், எனவே இப்போதிலிருந்தே எச்சரிக்கையாக இருக்க வேண்டிய அவசியம் உள்ளது," என்றார் மணீஷ் சிங். பட மூலாதாரம்,GETTY IMAGES எல்லா இடங்களிலும் மைக்ரோ பிளாஸ்டிக் தண்ணீரைத் தவிர, மைக்ரோ பிளாஸ்டிக்குகள் விவசாயம் செய்யும் நிலத்திலும் ஏராளமாகக் காணப்படுகின்றன. 2022 ஆம் ஆண்டு அமெரிக்காவில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது . இதன்படி, பயிர்களுக்கு உரமாகப் பயன்படுத்தப்படும் சாக்கடைக் கழிவுகளில் மைக்ரோபிளாஸ்டிக் கலந்ததால், 80 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் விவசாய நிலம் மாசுபட்டிருந்தது. அந்த மண்ணில் மைக்ரோபிளாஸ்டிக் தவிர, சில இரசாயனங்களும் இருந்தன, அவை ஒருபோதும் மக்காது, அதாவது அதே நிலையில் இருக்கும். அதே நேரத்தில், பிரிட்டனில் உள்ள கார்டிஃப் பல்கலைக்கழகம்(Cardiff University), ஒவ்வொரு ஆண்டும் ஐரோப்பாவில் பயிரிடப்பட்ட நிலங்களில் டிரில்லியன் கணக்கான மைக்ரோபிளாஸ்டிக் துகள்கள் காணப்படுவதாகவும், அவை ஒவ்வொரு பிடி உணவின் மூலமாக மக்களின் உடலில் கலப்பதாகவும் தங்களின் ஆய்வில் கண்டறிந்தனர். பிபிசி ஃபியூச்சரில் எழுதியுள்ள இசபெல் ஜெரெட்சன், மற்ற பொருட்களைவிட, தாவரங்களின் அதிக மைக்ரோபிளாஸ்டிக் இருப்பதாக எழுதியுள்ளார். உண்மையில், வேர் காய்கறிகளில் மைக்ரோபிளாஸ்டிக்ஸ் அதிகம் இருப்பதாக சில ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. இதன் பொருள் முள்ளங்கி மற்றும் கேரட் போன்ற காய்கறிகள் அதிகமாக இருக்கும். பட மூலாதாரம்,GETTY IMAGES மைக்ரோ பிளாஸ்டிக்கை எவ்வாறு தவிர்ப்பது? இந்தியாவில் பெரும்பாலான இடங்களில் கழிவுகளை அகற்றுவதற்காக முறையான அமைப்பு இல்லாததுதான் பிரச்னை என்கிறார் டாக்டர் மணீஷ் சிங். இதன் காரணமாக, மைக்ரோபிளாஸ்டிக்கள், ஆறுகள் மற்றும் விவசாய நிலங்களை சென்றடைகின்றன. “எண்ணற்ற உணவுப் பொருட்கள் பிளாஸ்டிக்கில் அடைக்கப்பட்டுள்ளன. அப்போது பிரச்னை என்னவென்றால், மக்கள் வீட்டில் தட்டுகள் மற்றும் பலகைகளில் கூட பிளாஸ்டிக் பயன்படுத்துகிறார்கள். இது தவிர்க்கப்பட வேண்டும். ஆனால் இந்த விவகாரத்தில் அரசு கவனம் செலுத்த வேண்டும்” என்றார். பிளாஸ்டிக் மற்றும் அதன் தொடர்புடைய பொருட்களின் பயன்பாட்டைக் குறைக்க, இந்திய அரசு ஜூலை 1, 2022 முதல் ஒருமுறை பிளாஸ்டிக் பயன்படுத்த தடை விதித்தது. ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் உற்பத்தி, இறக்குமதி, சேமிப்பு மற்றும் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது. உலகின் பல நாடுகள் ஏற்கனவே இதுபோன்ற நடவடிக்கைகளை எடுத்துள்ளன. பிரிட்டனின் பிளைமவுத் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் மக்கும் தன்மை கொண்டவை என பெயரிடப்பட்ட பைகள் மக்குவதற்கு பல ஆண்டுகள் ஆகலாம் என்று கண்டறிந்துள்ளனர். அதுமட்டுமின்றி சிறு சிறு துண்டுகளாக உடைந்து அவை மாசுபடுத்துவதாகவும் கண்டறிந்துள்ளனர். உணவுப் பொருட்களில் மைக்ரோபிளாஸ்டிக் சேருவதைத் தடுக்க, கண்ணாடி பாட்டில்களைப் பயன்படுத்தவும் அறிவுறுத்தப்படுகிறது. ஆனால் இசபெல் ஜெரெட்சன் எழுதுகையில், "கண்ணாடி பாட்டில்களை பல முறை மறுசுழற்சி செய்யலாம் என்றாலும், சிலிக்கா (மணல்) கண்ணாடி தயாரிக்கப் பயன்படுகிறது. அத்தகைய சூழ்நிலையில், அதன் செயல்பாட்டில் சுற்றுச்சூழலும் பாதிக்கப்படுகிறது," என எழுதியுள்ளார். பட மூலாதாரம்,GETTY IMAGES மாசுபாட்டை எப்படி குறைக்க முடியும்? பிபிசி ஃபியூச்சரில் வெளியிடப்பட்ட கட்டுரையின்படி, மைக்ரோபிளாஸ்டிக்கால் ஏற்படும் அபாயங்களைக் குறைக்க வாய்ப்புள்ளது. பிளாஸ்டிக்கை மக்கச் செய்வதற்கு உதவும் பூஞ்சை மற்றும் பாக்டீரியாவை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். ஆனால், பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைப்பதற்கான கொள்கைகளை அரசாங்கம் ஒருபுறம் உருவாக்குவதும், மறுபுறம் மக்கள் தங்கள் சொந்த மட்டத்தில் பிளாஸ்டிக்கை சார்ந்திருப்பதைக் குறைப்பதும் இந்த நடவடிக்கைகளை விட சிறந்தது என்கிறார் டாக்டர் மணீஷ் சிங். "உதாரணமாக, சணல் அல்லது துணிப் பைகளைப் பயன்படுத்துங்கள். துணிகளை வாங்கும் போது கூட செயற்கை இழை ஆடைகளுக்கு பதிலாக பருத்தி ஆடைகளுக்கு முன்னுரிமை கொடுங்கள். பிளாஸ்டிக் கழிவுகளை முறையாக அப்புறப்படுத்த வேண்டும். பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டைக் குறைப்பதே நம் முயற்சியாக இருக்க வேண்டும்," என்றார் மணிஷ் சிங். https://www.bbc.com/tamil/articles/cgx58n3wvqno
-
இராணுவ தளபதி இராணுவ பரசூட் வீரராக தகுதி
24 JAN, 2024 | 07:39 PM இராணுவத்தின் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்.டபிள்யூ.பீ.ஆர்.எஸ்.பீ. என்.டி.யூ. இராணுவ பரசூட்டில் தனது நிபுணத்துவம் மற்றும் அறிவின் மூலம் கடந்த திங்கட்கிழமை 22ஆம் திகதி இராணுவ பரசூட் வீரராக தகுதி பெற்றார். இராணுவ பரசூட் வீரராக மாறுவதற்கான தளபதியின் பயணம் குடாஓய கொமாண்டோ படையணி பயிற்சிப் பாடசாலையில் இடம்பெற்றது. திங்கட்கிழமை இராணுவத் தளபதி, மாலைதீவு தேசிய பாதுகாப்புப் படையணியின் 18 படையினர் மற்றும் இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த 14 படையினர் உட்பட ஏனைய பங்கேற்பாளர்களுடன் உஹான விமானப்படைத் தள ஓடுபாதையில் எம்.ஐ-17 ஹெலிகொப்டரில் விமானத்தில் சென்றார். தளபதி உஹான விமானப்படை தளத்தின் துளி மண்டலத்தின் மீது பரசூட் குதித்து, வான்வழி வீரர்களின் குடும்பத்துடன் அதிகாரபூர்வமாக இணைந்தார். இந்த சாதனையானது இராணுவ வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க தடயமாக லெப்டினன் ஜெனரல் இராணுவ பரசூட் வீரராக காணப்படுவது குறிப்பிடத்தக்கது. அதேவேளை, இராணுவ தளபதியாக பதவி வகிக்கின்றமை சிறப்பம்சமாகும். மேலும், இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ இராணுவ பரசூட் வீரராக வெற்றிகரமாக தகுதி பெற்ற சிரேஷ்ட மிக உயர்ந்த இராணுவ வீரர் என்ற குறிப்பிடத்தக்க சிறப்பை அடைந்துள்ளார். ஒழுக்க பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகமும் இலங்கை பொலிஸ் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் எசீஎ டி சொய்சா யூஎஸ்பீ எச்டிஎம்சீஎல்எஸ்சீ தளபதியுடன் இணைந்துகொண்டார். https://www.virakesari.lk/article/174737
-
அமெரிக்காவில் பனிப்புயல்: 61 பேர் பலி.
அமெரிக்காவில் 90 பேர் பலி; அவசியமின்றி வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் - எச்சரிக்கை வெளியீடு | பனிப்புயல்
-
எம்எல்ஏவின் மகன் வீட்டில் பணியாற்றிய 18 வயது பட்டியல் சாதிப் பெண் - பிபிசியிடம் கூறிய அதிர்ச்சி சம்பவங்கள்
திமுக எம்எல்ஏவின் மகன், மருமகள் வீட்டில் பணியாற்றிய பெண் பிபிசியிடம் கூறிய அதிர்ச்சி சம்பவங்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES 24 ஜனவரி 2024, 02:21 GMT புதுப்பிக்கப்பட்டது 24 ஜனவரி 2024, 02:50 GMT எச்சரிக்கை: இந்த கட்டுரையின் உள்ளடக்கம் உங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தக்கூடும். “ஒரு நாள் நான் விரைவாக எனது பணியை முடிக்கவில்லை என்பதற்காக காலை 10 முதல் இரவு 11 மணி வரை கரண்டியால் என்னை அடித்தார். நான் எவ்வளவு கெஞ்சியும் நிறுத்தாமல், என் முகத்தை கழுவிவிட்டு வரச் சொல்லி என்னை அடித்தார்கள்” இப்படித்தான் தான் அனுபவித்த சித்திரவதையை விவரிக்கிறார் கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 18 வயது பட்டியல் சாதிப் பெண். இந்தப் பெண், பல்லாவரம் திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் ஆண்ட்ரோ மதிவாணன் வீட்டில் வேலை பார்த்த போது, ஆண்ட்ரோவும், அவரது மனைவி மெர்லினும் தன் உடலில் சூடு வைத்தும், அடித்தும் சித்திரவதை செய்ததாக ஜனவரி 16 ஆம் தேதி புகார் அளித்தார். புகாரின் பேரில் ஜனவரி 18 ஆம் தேதி வழக்குப்பதிவு செய்த திருவான்மியூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த குற்றச்சாட்டு குறித்து கேட்க மதிவாணன் மற்றும் மெர்லினை தொடர்புகொள்ள முடியவில்லை. பல்லாவரம் திமுக எம்எல்ஏ கருணாநிதியிடம் கேட்டபோது, தனது மகன் வீட்டில் என்ன நடந்தது எனத் தனக்குத் தெரியாது எனக் கூறினார். பட மூலாதாரம்,GETTY IMAGES என்ன நடந்தது? இச்சம்பவம் தொடர்பாக பிபிசி தமிழ் சார்பில் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் பேசினோம். அப்போது அவர், பன்னிரண்டாம் வகுப்பு முடித்துவிட்டு, மேற்படிப்பிற்காக பணம் சேர்ப்பதற்காக வேலையில் சேர்ந்ததாகக் கூறினார். “நான் கடந்த ஆண்டு பன்னிரெண்டாம் வகுப்பு முடித்த பிறகு, எங்காவது வேலைக்கு சேரலாம் என இருந்தேன். என் அம்மா அப்போது கேளம்பாக்கத்தில் ஒரு வீட்டில் வேலை பார்த்து வந்தார். அப்போது ஒரு ஏஜென்சி மூலமாக திருவான்மியூரில் உள்ள எம்எல்ஏ கருணாநிதியின் மகன் ஆண்ட்ரோ மதிவாணன் வீட்டில் துடைப்பதற்கும், அவர்களுக்கு உதவியாக இருப்பதற்கும் வேலைக்கு சேர்ந்தேன்,” என தான் எப்படி வேலைக்குச் சேர்ந்தார் என பிபிசியிடம் பகிர்ந்தார். ஆனால், வேலைக்கு சேர்ந்த இரண்டே நாட்களில், வேலை பிடிக்காததால், வேலையை விட்டு செல்ல முயன்றதாகவும், அப்போது கருணாநிதியின் மகன் ஆண்ட்ரோ தன் அம்மாவை போலீசில் சிக்க வைத்துவிடுவேன் என மிரட்டியதால், அந்த வேலையைத் தொடர்ந்ததாகவும் அவர் கூறினார். “இரண்டு நாட்களிலேயே எனக்கு கடுமையான வேலைகள் கொடுத்தனர். என்னால் செய்ய முடியாது என என் அம்மாவிடம் தொலைபேசியில் சொன்னேன். ஆனால், அப்போதே என் அம்மாவை எதாவது செய்துவிடுவோம் என மிரட்டியதால், நான் அதற்குப் பிறகு எதுவும் சொல்லவில்லை. வேலைக்கு சேர்ந்து எட்டு நாட்களுக்கு பின் என் அம்மா வந்தார்." "அப்போதுதான் ஒப்பந்தம் போட்டனர். அதில், மாதம் ரூ 16,000 சம்பளம் என்று கூறியிருந்தனர். அப்போதே நான் என் அம்மாவிடம் கூறியிருக்க வேண்டும். ஆனால், பயத்தால் என்னால் சொல்ல முடியவில்லை. அன்றே எனது தொலைபேசியை என் அம்மாவிடம் கொடுத்து அனுப்பிவிட்டனர்,” என்றார் அந்த 18 வயது பெண். பட மூலாதாரம்,GETTY IMAGES ‘காலால் முகத்தில் உதைத்தனர்’ கடந்த எட்டு மாதங்களாக திருவான்மியூரில் உள்ள ஆண்ட்ரோவின் வீட்டில் பணியாற்றி வந்த இவர், தினமும் தான் எதாவது ஒரு காரணத்திற்காக துன்புறுத்தப்பட்டதாகக் கூறினார். “ஒரு நாள் அவர்கள் மும்பைக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தனர். அன்று இரவு 2 மணி வரை அனைத்தையும் எடுத்து வைத்துவிட்டு, பிறகு தான் தூங்கினேன். காலையில் உணவும் தயார் செய்ய வேண்டும் எனக் கூறியிருந்தனர். ஆனால், என்னால், 7 மணிக்குத் தான் எழுந்திருக்க முடிந்தது. அதற்கு மெர்லின் என்னை கடுமையாகத் தாக்கி, அசிங்கமாகத் திட்டினார்” என்றார். இதேபோல, கடந்த ஜனவரி 1 ஆம் தேதி துணி துவைக்கத் தெரியாது என்று கூறியதற்காக, மிளகாயைச் சாப்பிடச் சொல்லி கொடுமைப்படுத்தியதாக அந்தப் பெண் கூறினார். “எதாவது வேலை எனக்குத் தெரியாது எனச் சொன்னால், மெர்லின் மிளகாயைச் சாப்பிடச் சொல்லி கட்டாயப்படுத்தி கொடுமைப் படுத்துவார்கள். கடந்த ஜனவரி 1 ஆம் தேதி, அப்படி துணி துவைக்கத் தெரியாது என்று கூறியதற்கு 10 மிளகாயை சாப்பிட வைத்தனர். குடிக்கத் தண்ணீரும் கொடுக்கவில்லை,” என்றார். மேலும், தன்னுடைய முகமே மாறிவிட்டதாக அந்தப் பெண் மிகவும் வேதனை தெரிவித்தார். "அவர்கள் என்னை கீழே தள்ளி முகத்தின் மீது மிதிப்பார்கள், காலால் உதைப்பார்கள். அவர்கள் துன்புறுத்தியதில், என் முகமே மாறிவிட்டது. எவ்வளவு காயமானாலும், சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கூட அழைத்துச் செல்ல மாட்டார்கள்," என்றார் அவர். இதுகுறித்து கருத்துகேட்க ஆண்ட்ரோவையும், அவரது மனைவி மெர்லினையும் தொடர்பு கொள்ள முயன்றோம். ஆனால், அவர்களை தொடர்புகொள்ள முடியவில்லை. பட மூலாதாரம்,GETTY IMAGES காவல்துறைக்கு எப்படித் தெரிந்தது? பாதிக்கப்பட்ட பெண் பொங்கல் விடுமுறைக்காக வீட்டிற்கு செல்ல வேண்டும் எனக் கூறியுள்ளார். அப்போதுதான் வீட்டிற்குச் செல்ல அனுமதித்தாக அவர் கூறினார். “என் அம்மா என்னிடம் எப்போதாவது தான் பேசுவார். அவர் எப்போது பேசினாலும், அவர்கள் சொல்வதைத் தாண்டி நான் எதுவும் பேசக்கூடாது. மீறி பேச முயன்றால், என்னை அடிப்பார்கள். பொங்கலுக்காக வீட்டிற்கு செல்ல வேண்டும் எனக் கூறியபோதும், அவர்கள் வீட்டில் நடந்ததை யாருக்கும் சொல்லக் கூடாது என மிரட்டித்தான் என்னை அனுப்பினர். நானும் அவர்களுக்கு பயந்து யாரிடமும் சொல்லவில்லை. ஆனால், மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றதால்தான் இது வெளியே வந்தது,” என்றார் அந்தப் பெண். ஜனவரி 16 ஆம் தேதி, பாதிக்கப்பட்ட பெண், கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர் பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றார். அப்போது, அவரது முகம், கை, கால், தலை மற்றும் பிற இடங்களில் ஏற்பட்டுள்ள காயத்தை பார்த்த மருத்துவர்கள், அது தொடர்பாக உளுந்தூர்பேட்டை காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தகவலின்பேரில் மருத்துவமனைக்கு விரைந்த போலீசார், பாதிக்கப்பட்ட பெண்ணின் குற்றச்சாட்டுகளை கேட்டுவிட்டு, சென்னை அடையார் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த பெண் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில், அடையார் போலீஸ் மாவட்ட சரகத்திற்கு உட்பட நீலாங்கரை மகளிர் போலீசார், வன்கொடுமை தடுப்புச் சட்டம் உட்பட ஆறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து பல்லாவரம் எம்எல்ஏ கருணாநிதியிடம் கேட்டபோது, “என் மகன் வீட்டில் என்ன நடந்தது என எனக்குத் தெரியாது. ஆனால், எங்கள் வீட்டில் பணியாற்றும் நபர்களை எங்கள் குடும்பத்தில் ஒருவராகத் தான் பார்க்கிறோம்,”என்றார் அவர். காவல்துறையினர் என்ன சொல்கிறார்கள்? இந்த வழக்கு குறித்து அடையார் சரகத்தில் உள்ள ஒரு மூத்த அதிகாரி பிபிசியிடம் பேசினார். அப்போது அவர், “இந்த வழக்கில், எந்த தாமதமும் இல்லை. புகார் பெற்ற உடனேயே வழக்குப்பதிவு செய்துள்ளோம். குற்றம் சாட்டப்பட்ட ஆண்ட்ரோ மற்றும் மெர்லினை கைது செய்ய மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இருவரும் விரைவில் கைது செய்யப்படுவார்கள்,” என்றார். மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணிடம் புகார் பெற்ற பிறகு அவரிடம் தொடர் விசாரணை செய்யவில்லை என்றும் கூறினார். “பாதிக்கப்பட்ட பெண்ணிடமும் நாங்கள் மீண்டும் ஒரு முறை விசாரணை நடத்தி, அவரின் வாக்குமூலத்தை முழுமையாக பதிவு செய்ய வேண்டியுள்ளது. அதுவும் விரைவில் செய்யப்படும்,” என்றார். இதற்கிடையில், இந்த வழக்கை கையில் எடுத்திருக்கும் தமிழ்நாடு மகளிர் ஆணையம், ஜனவரி 29 தேதி, பாதிக்கப்பட்ட பெண்ணிடம் விசாரிக்க உள்ளனர். https://www.bbc.com/tamil/articles/cz7kgyz42jdo
-
முல்லைத்தீவு துணுக்காய் பாணலிங்கேஸ்வரம் சிவன் ஆலய காணிப் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு - வட மாகாண ஆளுநர்
24 JAN, 2024 | 05:39 PM முல்லைத்தீவு துணுக்காய் பாணலிங்கேஸ்வரம் அருள்மிகு நர்மதா நதீஸ்வரர் சிவன் கோவிலின் காணிப் பிரச்சினை தொடர்பில் துரித நடவடிக்கை எடுக்கப்படும் என வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் தெரிவித்தார். ஆலயத்தின் நான்கு திக்கு இராஜ கோபுரங்களுக்குமான அடிக்கல் நடும் நிகழ்வும் திருக்குடமுழுக்கு நன்னீராட்டு விழாவும் இன்று (24) இடம்பெற்றது. இந்த நிகழ்வுக்கு பிரதம அதிதியாக வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் கலந்துகொண்டார். இதன்போது, ஆலய காணிப் பிரச்சினை உள்ளிட்ட சிக்கல்கள் தொடர்பில் ஆலய நிர்வாகத்தினர் ஆளுநரிடம் தமது கருத்துக்களை தெரிவித்தனர். அதற்கு பதிலளிக்கையிலேயே ஆளுநர், நர்மதா நதீஸ்வரர் சிவன் கோவிலின் காணிப் பிரச்சினை தொடர்பில் தனக்கு ஏற்கனவே தகவல் கிடைத்துள்ளதாகவும், அது தொடர்பில் தாம் உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் கூறினார். அத்துடன், ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய, நல்லிணக்க செயற்பாடுகளும் மக்களின் காணிப் பிரச்சினை, வீட்டுப் பிரச்சினை உள்ளிட்ட பிரச்சினைகளை தீர்ப்பதற்கான செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் ஆளுநர் மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/174724
-
நிகழ்நிலை காப்புச் சட்டமூலம் : 224 உறுப்பினர்கள் எதிராக வாக்களிக்க வேண்டும் - சிவில் அமைப்பினர் கூட்டாக வலியுறுத்தல்
நிகழ்நிலை காப்புச் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது! 24 JAN, 2024 | 07:38 PM பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலசினால் சபைக்கு சமர்ப்பித்திருந்த நிகழ்நிலை காப்புச் சட்டமூலம் மீதான விவாதம் இன்று புதன்கிழமை (24) இரண்டாவது நாளாக இடம்பெற்ற நிலையில் மாலை 5மணியளவில் விவாதம் நிறைவுக்கு வந்தது. அதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடாவான லக்ஷ்மன் கிரியெல்ல எம்.பி. சட்ட மூலத்தை நிறைவேற்ற வாக்கெடுப்பைக் கோரினார். இதனையடுத்து இடம்பெற்ற வாக்கெடுப்பில் நிகழ்நிலை காப்புச் சட்டமூலத்துக்கு ஆதரவாக 108 வாக்குகளும் எதிராக 62 வாக்குகளும் அளிக்கப்பட்ட நிலையில் 46 மேலதிக வாக்குகளினால் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது. இதில் சட்ட மூலத்துக்கு ஆதரவாக அரசுடன் இணைந்து எதிர்கட்சி தரப்பில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி எம்.பி.யான துமிந்த திசாநாயக்க, சுயாதீன எதிரணி எம்.பி. யான நிமல் லான்ஸா , அலிசப்ரி ரஹீம், ஜோன் செனவிரத்ன. எ.எல்.எம். அதாவுல்லா, அரச தரப்பு எம்.பி.யான ரொஷான் ரணசிங்க , ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி.யான வடிவேல் சுரேஷ் ஆகியோர் ஆதரவாக வாக்களித்தனர். எதிர்க்கட்சிகள் அனைத்தும் எதிராகவே வாக்களித்தன. 54பேர் வாக்களிப்பில் கலந்துகொண்டிருக்கவில்லை. அதன் பிரகாரம் நிகழ்நிலை காப்புச்சட்டமூலம் 46 மேலதிக வாக்குகளால் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டதாக சபைக்கு அறிவித்தார். https://www.virakesari.lk/article/174730
-
அரசாங்கம் திருடர்களை சரியாக பிடித்திருந்தால் வற் வரியை விதித்து மக்களை நசுக்க வேண்டிய தேவை ஏற்பட்டிருக்காது - எதிர்க்கட்சித் தலைவர்
Published By: DIGITAL DESK 3 24 JAN, 2024 | 05:38 PM நாட்டை பொருளாதார ரீதியாக வங்குரோத்தாக்கி, நாட்டு மக்களை மிகவும் நிர்க்கதியான எதிர்காலத்திற்கு ஆளாக்கிய தரப்பினர் யார் என்பதனை உயர் நீதிமன்றத்தின் சமீபத்திய தீர்ப்பின் ஊடக வெளிக்கொணரப்பட்டது. இவ்வாறு வெளிக்கொணரப்பட்ட கோட்டாபய ராஜபக்ச, மஹிந்த ராஜபக்ச, பசில் ராஜபக்ச, அஜித் நிவாட் கப்ரால், எஸ்.ஆர்.ஆடிகல, பி.பி. ஜயசுந்தர, டபிள்யூ.டி.லக்ஷ்மன் மற்றும் சமந்தா குமாரசிங்க போன்றவர்களைத் தவிர பொறுப்புக் கூற வேண்டிய மேலும் பலர் இந்த அரசாங்கத்தில் உள்ளனர். இந்த ஊழல் மற்றும் மோசடி நடவடிக்கைகளுக்கு காரணமானவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என வரிச்சுமைக்கு ஆளான மக்கள் கேள்வி எழுப்புகின்றனர் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். வற் வரியை அறவிடமால், திருடிய திருடர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் இந்த திருடர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு, அனைத்து வித தண்டனைகளும் வழங்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். எரிவாயு, சீனி, நானோ நைட்ரஜன், நிலக்கரி மற்றும் மல உர ஊழல்கள் தொடர்பில் இதுவரை எடுக்கப்பட்டுள்ள சட்ட நடவடிக்கைகள் தொடர்பில் நிலையியற் கட்டளை 27(2)ன் கீழ் அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (24) பாராளுமன்றத்தில் இவ்வாறு தெரிவித்தார். எரிவாயு, சீனி, நானோ நைட்ரஜன், நிலக்கரி, மல உரம் போன்றவற்றுக்கு எதிரான விசாரணைகள் தாமதமாக இடம்பெற்றாலும், நுண், சிறு மற்றும் நடுத்தர வர்த்தகர்களுக்கு பரேட் சட்டத்தை அமுல்படுத்தி அவர்களின் சொத்துக்கள் ஏலம் விடப்பட்டு வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் இங்கு தெரிவித்தார். 2019-2022 ஆம் ஆண்டில் நிகழ்ந்த பல முறைகேடுகள் தொடர்பான விசேட கணக்காய்வு விசாரணைகள் தொடர்பான பல சிக்கல்கள் உள்ளன. இது தொடர்பில் தனித்தனியாக வினவுவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். சீனி வரி மோசடிக்கு எதிராக என்ன சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? இதன் பிரகாரம், 2020 ஆம் ஆண்டு 1 கிலோ சீனிக்கு விதிக்கப்பட்ட விசேட பண்ட வரியை 50 ரூபாவில் இருந்து 25 சதமாக அரசாங்கம் குறைத்ததன் காரணமாக, நுகர்வோருக்கு நிவாரணம் கிடைக்காத நிலையில், அரசாங்கத்திற்கு ரூ.16707 மில்லியன் இழப்பு ஏற்பட்டதாக 23.03.2022 அன்று வெளியிடப்பட்ட விசேட கணக்காய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கோபா குழுவிற்கு அறிக்கையை அனுப்பிய பிறகு, வருமானம் பெறாததற்கு பொறுப்பான தரப்பினரை அடையாளம் காண 21 ஜூன் 2022 அன்று சி.ஐ.டி.க்கு அனுப்பி வைக்கப்பட்டு 19 மாதங்கள் கடந்து விட்டன. இதற்கு பொறுப்புக்கூற வேண்டிய தரப்பினர் யார் என கேள்வி எழுப்புகிறேன் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். இலகு ரயில் திட்டம் நிறுத்தப்பட்டதால் 10000 மில்லியன் ரூபா நஷ்டம் இலகு ரயில் திட்டம் எந்த தர்க்க ரீதியான அடிப்படையும் இல்லாமல் இடைநடுவிலையே நிறுத்தப்பட்டதால் 10000 மில்லியன் ரூபா நஷ்டம் ஏற்பட்டதாக 23.11.2022 அன்று வெளியிடப்பட்ட விசேட கணக்காய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த விசேட கணக்காய்வு அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு 13 மாதங்கள் கடந்துள்ள போதிலும், கோப் அல்லது கோபா குழுக்களில் கருத்தில் கொள்ளாததற்கான காரணங்களை அவர் கேள்வி எழுப்பினார். இந்த முட்டாள்தனமான முடிவால், ஜப்பான் நாடு இன்னும் நமது நாட்டுடன் சிறந்த மனதுடன் இல்லை. இதனால் இந்த நஷ்டத்தை ஈடுகட்ட அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி எழுப்பினார். சேதன உரங்களால் ஏற்பட்ட இழப்பு இன்னும் கணக்கிடப்படவில்லை 2021-2022 ஆம் ஆண்டில் 96000 மெட்ரிக் டொன் சேதன உரங்கள் கொள்முதல் செய்யப்பட்டதால், அரசாங்கத்திற்கு 69000 அமெ.டொலர் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும், கணக்கிடப்படாத பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் 26.8.2022 திகதியிடப்பட்ட விசேட கணக்காய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இது வெளியிடப்பட்டு 16 மாதங்கள் கடந்துள்ள போதிலும், கோப் அல்லது கோபா குழுக்களால் இது தொடர்பில் இதுவரை ஏன் பரிசீலிக்கப்படவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி எழுப்பினார். நானோ நைட்ரஜன் மோசடி கோப் மற்றும் கோபா குழுக்களுக்கு சமர்ப்பிக்கப்படவில்லை ஒரு போத்தல் நானோ நைட்ரஜன் திரவ உரம் 5.25 அமொ.டொலர்களுக்கு கொள்வனவு செய்ய முடியுமாக இருந்தாலும், 12.45 மற்றும் 10 அமெ.டொலர்களுக்கு கொள்வனவு செய்வதற்கு 711 மில்லியன் ரூபா செலவாகியுள்ளதாக 12.13.2023 திகதியிட்ட விசேட கணக்காய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் அரசாங்கத்திற்கு ஏற்பட்டு இழப்பு யாது? இந்த அறிக்கை எப்போது கோப் அல்லது கோபா குழு முன் பரிசீலிக்கப்படும் என்று எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி எழுப்பினார். நிலக்கரி ஊழலினால் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்டுவது எப்போது? நிலக்கரி நிறுவனத்தால், 500 பில்லியன் பெறுமதியான கொள்முதலை தகுதியில்லாத வழங்குநருக்கு வழங்குவதற்கான உடன்பாட்டை எட்டுவதற்கு முன் சட்டமா அதிபரின் ஆலோசனை பெறப்படவில்லை என்றும், கொள்முதல் குழுவும், தொழில்நுட்ப மதிப்பீட்டுக் குழுவும் இந்தப் பணிகளைச் சரியாகச் செய்யவில்லை என்றும் 30.9.2022 திகதியிட்ட விசேட கணக்காய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அறிக்கையின் பரிந்துரைகளுக்கு பொது அலுவல்கள் குழுவும் ஒப்புதல் அளித்துள்ள நேரத்தில், அரசாங்கத்திற்கு ஏற்பட்ட இழப்பு மற்றும் அந்த இழப்பை ஈடுகட்ட அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து அவர் கேள்வி எழுப்பினார். எரிவாயு மோசடிக்கு யார் பொறுப்பு? எல்.பி.ஜி கொள்முதலின் போது, சியாம் கேஸ் ட்ரேடிங் நிறுவனத்திடம் இருந்து குறைந்த விலைக்கு கொள்வனவு செய்யாமல், ஓகிம் டிரேடிங்கில் நிறுவனத்திடம் இருந்து அதிக விலைக்கு கொள்வனவு செய்தமையினால், அரசாங்கத்திற்கு 1138 அமொ.டொலர் மேலதிக செலவு ஏற்பட்டது. முறையான நிதி மதிப்பீடு அல்லது நிதி உறுதிப்படுத்தல் இல்லாமல் எரிவாயுவை கொள்வனவு செய்ததால், கப்பல்களுக்கு கூட 210 மில்லியன் ரூபா 5 மாத காலத்திற்கு மேலதிகமாக செலுத்தப்பட்டுள்ளதாக 11.12.2022 ஆம் திகதியிட்ட விசேட கணக்காய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கை கோப் மற்றும் கோபா குழுக்களில் பரிசீலிக்கப்படவில்லை. இதற்கு பொறுப்புக் கூற வேண்டியவர்கள் யார் என்று கேள்வி எழுப்பினார். அதிக கடன் பெற்று அதனை மீளச் செலுத்தாதுள்ள பிரதான நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுங்கள் கிட்டிய காலத்தில் பாராளுமன்ற கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்படும் என செய்திகள் வெளியாகியுள்ளன. தான் சபையில் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு சரியான பதில்கள் இன்னும் வழங்கப்படவில்லை. இலங்கை வங்கியிலும், மக்கள் வங்கியிலும் அதிக தொகை கடன் பெற்று அதனை மீளச் செலுத்தாதுள்ள 10 வர்த்தகர்களின் பெயர்களை வெளியிடுமாறு வினவிய போதும் இன்றும் இதற்கான பதில் கிடைக்கவில்லை. பரேட் சட்டத்தை அமுல்படுத்தி சாதரண நபர்களின் சொத்துக்களை ஏலம் விடுவதை விடுத்து, பாரிய தொகை கடன் செலுத்தாதுள்ள அரசாங்க தரப்பு, நட்பு வட்டார பிரதான நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது எப்போது என்றும் அவர் மேலும் கேள்வி எழுப்பினார். https://www.virakesari.lk/article/174716
-
நிகழ்நிலை காப்புச் சட்டமூலம் : 224 உறுப்பினர்கள் எதிராக வாக்களிக்க வேண்டும் - சிவில் அமைப்பினர் கூட்டாக வலியுறுத்தல்
இணையவழி பாதுகாப்பு சட்டமூலம் 46 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம் பாராளுமன்றில் முன்வைக்கப்பட்டுள்ள இணையவழி பாதுகாப்பு சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு 46 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு ஆதரவாக 108 வாக்குகளும் எதிராக 62 வாக்குகளும் அளிக்கப்பட்டன. இதன்படி, சட்டமூலம் மேலதிக வாக்குகளால் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. https://thinakkural.lk/article/289321
-
உயிருக்கு ஆபத்தான நிலையில் சாந்தன்- சிறுநீரகம் கல்லீரல் பாதிப்பு - சிறைக்கைதிகள் உரிமை அமைப்பு ஸ்டாலினிற்கு கடிதம்
Published By: RAJEEBAN 24 JAN, 2024 | 05:11 PM இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று பல வருடங்களின் பின்னர் பொதுமன்னிப்பின் கீழ் விடுதலையாகி தற்போது திருச்சி சிறைமுகாமில் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் சாந்தனின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக சிறைக்கைதிகள் உரிமை மையம் என்ற அமைப்பு தெரிவித்துள்ளது. சாந்தனிற்கு கல்லீரல், சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சிறைக்கைதிகள் உரிமை மையம் தெரிவித்துள்ளது. திருச்சி சிறப்பு முகாமில் சாந்தனிற்கு உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை, இதனால் அவரின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் சென்னை பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை வழங்கவேண்டும் என சிறைக்கைதிகள் உரிமை மையம் தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளது. ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று தற்போது விடுதலையான சாந்தன் இலங்கைக்கு செல்வதற்காக விசா போன்றவற்றை பெற்றுக்கொள்வதற்காக காத்திருக்கின்றார், திருச்சி முகாமில் அடைக்கப்பட்டுள்ள சாந்தனிற்கு சிறுநீரக பாதிப்பு எற்பட்டுள்ளதால் அவருக்கு உரிய சிகிச்சை வழங்குவதற்கான நடவடிக்கைகள் திருச்சி சிறப்பு முகாமில் எடுக்கப்படாததால் அவரின் உயிரை காப்பாற்றுவதற்காக தமிழக முதல்வர் உரிய நடவடிக்களை எடுக்கவேண்டும் என சிறைக்கைதிகள் உரிமைகள் மையம் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளது. சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் கால்கல் வீங்கியுள்ளன கல்லீரலும் பாதிக்கப்பட்டுள்ள து. எனினும் இரண்டுமாதங்களாக உரிய சிகிச்சைகள் வழங்கப்படவில்லை. இதனால் அவர் உயிருக்கு போராடுகின்றார் என்பதால் அவரை காப்பாற்றவேண்டும் என சிறைக்கைதிகள் மையம் வேண்டுகோள் விடுத்துள்ளது. https://www.virakesari.lk/article/174731
-
பெண்கள் தலைமையிலான தொழில் நிறுவனங்களுக்கு ஐ.நா.வின் பெண்கள் அமைப்பும் ஜப்பானும் இணைந்து ஆதரவு
24 JAN, 2024 | 04:12 PM ஜப்பான் அரசாங்கத்தின் நிதியுதவியுடன் ஐ.நா.வின் பெண்கள் அமைப்பும் மற்றும் கிறிசாலிஸ் நிறுவனனும் இணைந்து நாட்டில் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டபெண்கள் தலைமையிலான 600 சிறு மற்றும் நடுத்தர தொழிவல் நிறுவனங்களுக்கு வணிக நடவடிக்கைகளை விரிவுபடுத்துவதற்கு 110 மில்லியன் ரூபா மதிப்புள்ள உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. 'நெருக்கடியில் உள்ள பெண்களுக்கு அதிகாரமளித்தல்' என்ற நோக்கத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு பெப்ரவரியில் ஆரம்பிக்கப்பட்ட ஒருவருட திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த செயல் திட்டம் முன்னெடுக்கப்பட்டது. பெண்கள், சிறுவர்கள் விவகாரங்கள் மற்றும் சமூக வலுப்படுத்துகை அமைச்சின் ஒத்துழைப்புடன் ஐ.நா. பெண்கள் அமைப்பு மற்றும் கிறிசாலிஸ் நிறுவனமும் இணைந்து இலங்கையில் சமூகப் பொருளாதார நெருக்கடியால் அதிகம் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்கியுள்ளனர். இது தொடர்பான நிகழ்வொன்று அண்மையில் பத்தரமுல்லையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய இங்கைக்கான ஜப்பான் தூதுவர் MIZUKOSHI Hideaki கூறுகையில், “இலங்கையில் 5 மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த மகத்தான முயற்சிக்கு ஜப்பான் தூதரகம் ஆதரவளிப்பதில் மகிழ்ச்சி அடைவதோடு, பெண்களின் பொருளாதாரத்திற்கு ஆதரவாக ஐ.நா. பெண்கள் அமைப்புடன் இணைந்து இந்த கூட்டுறவை தொடர நாங்கள் எதிர்பார்க்கின்றோம் என்றார். இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியத்திற்கான ஐ.நா.வின் மகளிர் பிராந்திய அலுவலகத்தின் பிரதிப் பணிப்பாளர் சாரா நிப்ஸ், “ஜப்பான் அரசாங்கத்தால் நிதியளிக்கப்பட்ட இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக, 600 பெண்கள் தலைமையிலான நுண் நிறுவனங்களுக்கு வர்த்தகம் தொடர்பான மேம்பட்ட பயிற்சிகளை வழங்கியுள்ளோம். டிஜிட்டல் கருவிகள் மற்றும் வளங்களை அறிமுகப்படுத்துவதன் மூலம் அவர்களின் தயாரிப்புகளை சிறந்த முறையில் சந்தைப்படுத்த முடியும். "ஐ.நா. பெண்களுக்கான பயிற்சியில் பங்கேற்றமை எனக்கு சிறந்த சாத்தியக்கூறுகளை உருவாக்கியது. சமூக ஊடக தளங்கள் மற்றும் இணைய வணிகச் செயல்பாடுகளுக்கான அவற்றின் திறனைப் பற்றி நான் கற்றுக்கொண்டேன். எனது குழந்தைகளின் உதவியுடன், நான் இப்போது எனது சொந்த சமூக ஊடகப் பக்கத்தை நிர்வகிக்கிறேன், எனது தயாரிப்புகளை காட்சிப்படுத்த Facebook மற்றும் YouTube போன்ற தளங்களை மேம்படுத்துகிறேன். குறுகிய காலத்தில் அதிக வாடிக்கையாளர்களை நான் அடைந்ததால் எனது உற்பத்திற்கான பிரச்சினையை தீர்க்க இது எனக்கு உதவியது” என்று வட மாகாணத்தின் கனகராயன்குளத்தைச் சேர்ந்த தொழிலதிபரும் நிகழ்ச்சியின் பங்கேற்பாளருமான தர்சன் வக்சலா (32) கூறினார். அம்பாறை, கொழும்பு, மொனராகலை, முல்லைத்தீவு மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களில் உள்ள பெண்கள் தலைமையிலான சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு இத்திட்டம் பெரிதும் துணைபுரிகின்றமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/174709
-
தோடம்பழச்சாறு ஒன்றின் விலை 6,000 ரூபா!
இலங்கையின் முன்னணி விருந்தகம் ஒன்றில் தோடம்பழச்சாறு ஒன்றின் விலை 6,000 ரூபா என்று விடயம் சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. எனினும் பிரசுரிக்கப்பட்டுள்ள பணம் செலுத்தும் சீட்டு உண்மையானதா என்பதை விருந்தகம் இன்னும் முறையாக உறுதிப்படுத்தவில்லை. குறித்த கட்டண சீட்டில் விருந்தகம் ஒரு வாடிக்கையாளரிடம் தோடம்பழச்சாறுக்காக 6, 075 ரூபாயை கட்டணமாக குறிப்பிட்டுள்ளது. அத்துடன் குறித்த கட்டணச்சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ள விலையில் வரி 1,055.80 ரூபா என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் புதிய வரிக் கொள்கையின் விளைவாக இலங்கையில் உள்ள விருந்தகங்கள், பல பொருட்களின் விலையை கடுமையாக உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/289281
-
நடிகைகளால் சிக்கலில் சிக்கிய அமைச்சர் ஜீவன்!
தைப்பொங்கல் விழா குறித்த சர்ச்சைகளுக்கு ஜீவன் தொண்டமான் விளக்கம்! தென்னிந்திய நடிகைகள் பலரின் பங்குபற்றுதலுடன் அண்மையில் ஹட்டனில் இடம்பெற்ற ‘தேசிய தைப் பொங்கல்’ விழா தொடர்பில் நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெளிவுபடுத்தியுள்ளார். புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு, நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சு, இந்து சமய மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களம், நுவரெலியா மாவட்ட செயலகம் மற்றும் திணைக்களம் ஆகியன இணைந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 21) நடைபெற்ற இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தன. நாடு பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டிருக்கும் வேளையில் இவ்வாறான கொண்டாட்டம் நடத்தப்பட்டது குறித்து விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் ஜீவன் தொண்டமான் இது குறித்து விளக்கமளித்துள்ளார். தனது அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் இது தொடர்பில் அறிக்கை வெளியிட்டுள்ள அவர், தேசிய தைப்பொங்கல் நிகழ்விற்கு குறைந்தளவு அரசாங்க நிதியே செலவிடப்பட்டது எனவும் அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களின் நிதி ஒதுக்கீடுகள் வரையறுக்கப்பட்டவை எனவும் வர்த்தகர்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் இந்த நிகழ்விற்கு அனுசரணை வழங்கியிருந்தனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார். ஏனைய தேசிய நிகழ்வுகளுக்கு செலவிடப்படும் தொகைகளுடன் ஒப்பீடு செய்யும் போது மிகவும் குறைந்தளவு பணமே செலவிடப்பட்டது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பொங்கல் விழாவிற்கு அதிகளவு செலவிடவில்லை செலவு மிகுந்த ஆடம்பர களியாட்டமாக இந்த நிகழ்வு நடத்தப்படவில்லை செழுமையான கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் நடத்தப்பட்டது என அவர் தெரிவித்துள்ளார். விருது வென்ற தென்னிந்திய நடிகைகள் அழைத்து வரப்பட்ட விடயத்தை சிலர் அற்பமான விடயமாக விமர்சனம் செய்து வருவதாக தெரிவித்துள்ள அவர் அது அற்பமான விடயமல்ல எனவும் சமூகத்தை வலுவூட்டும் நோக்கில் அழைத்து வரப்பட்டதாகவும் தமிழ்நாட்டுடன் காணப்படும் நீண்ட கால உறவுகளின் அடிப்படையில் தாம் நடிகைகளை அழைத்து வந்ததாகவும் தெரிவித்துள்ளார். இலங்கை வாழ் இந்திய வம்சாவளி மக்கள் மீதான நல்லெண்ணத்தை வெளிப்படுத்தும் வகையில் நடிகைகள் இலங்கை விஜயம் செய்திருந்தனர் . நடிகைகள் தங்களது உரைகளில் அர்த்தபூர்வமான பல விடயங்களை எடுத்துரைத்தனர். பெண்களை வலுவூட்டல், பிள்ளைகளின் பாடசாலை கல்வி போன்றவற்றை அவர்கள் தங்களது உரைகளில் வலியுறுத்தியதாக அமைச்சர் ஜீவன் தெரிவித்துள்ளார். சிலர் பெண் ஆளுமைகளை மலினப்படுத்தும் வகையில் கருத்து வெளியிடுவது வேதனை அளிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார் தேசிய தைப்பொங்கல் விழா அனைத்து சமூகங்களின் மீதான அரசாங்கத்தின் கரிசனையை வெளிப்படுத்தும் வகையிலானது என அவர்குறிப்பிட்டுள்ளார். https://thinakkural.lk/article/289279
-
நிகழ்நிலை காப்புச் சட்டமூலம் : 224 உறுப்பினர்கள் எதிராக வாக்களிக்க வேண்டும் - சிவில் அமைப்பினர் கூட்டாக வலியுறுத்தல்
நிகழ்நிலை பாதுகாப்பு சட்ட மூலம் குறித்த குறுஞ்செய்தி சர்வஜனவாக்கெடுப்பு - 97 வீதமானவர்கள் எதிர்ப்பு Published By: RAJEEBAN 24 JAN, 2024 | 02:58 PM நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலம் குறித்து மேற்கொள்ளப்பட்ட குறுஞ்செய்தி சர்வஜனவாக்கெடுப்பில் தங்கள் கருத்துக்களை தெரிவித்தவர்களில் 97 வீதமானவர்கள் உத்தேச சட்ட மூலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நேற்று மாலைவரை குறுஞ்செய்தி சர்வஜனவாக்கெடுப்பில் கலந்துகொண்ட 1531 பேரில் 1492 பேர் நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலத்திற்கு எதிராக வாக்களித்துள்ளனர். இலங்கையின் மக்களிற்கான தகவல்தொழில்நுட்ப துறையினர் என்ற குழுவினர் இந்த குறுஞ்செய்தி சர்வஜனவாக்கெடுப்பை நடத்துகின்றனர். நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலம் குறித்து மேற்கொள்ளப்பட்ட குறுஞ்செய்தி சர்வஜனவாக்கெடுப்பில் தங்கள் கருத்துக்களை தெரிவித்தவர்களில் 97 வீதமானவர்கள் உத்தேச சட்ட மூலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நேற்று மாலைவரை குறுஞ்செய்தி சர்வஜனவாக்கெடுப்பில் கலந்துகொண்ட 1531 பேரில் 1492 பேர் நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலத்திற்கு எதிராக வாக்களித்துள்ளனர். இலங்கையின் மக்களிற்கான தகவல்தொழில்நுட்ப துறையினர் என்ற குழுவினர் இந்த குறுஞ்செய்தி சர்வஜனவாக்கெடுப்பை நடத்துகின்றனர். தகவல்தொழில்நுட்ப துறையை சேர்ந்தவர்கள் ஒன்றிணைந்து நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலம் குறித்த குறுஞ்செய்தி ஊடான சர்வஜனவாக்கெடுப்பை ஆரம்பித்துள்ளனர் நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால் தடைசெய்யப்பட்ட அறிக்கைகளிற்காக சிறைத்தண்டனையையும் அபராதத்தையும விதிக்க முடியும்இ இந்த சட்டமூலத்தினால் எதிர்கட்சிகளின் தேர்தல் பிரச்சாரங்கள் முடக்கப்படலாம் ஊழல் குறித்த பத்திரிகையாளர்களின் செய்தியிடல் மௌனமாக்கப்படலாம் தகவல்தொழில்நுட்ப துறை மிக மோசமான பாதிப்புகளை எதிர்கொள்ளலாம் என எழுந்துள்ள விமர்சனங்கள் குறித்து தங்கள் கரிசனைகளை முன்வைத்துள்ள தகவல்தொழில்நுட்ப துறைசார்ந்தவர்கள் நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலம் குறித்த மக்களின் கருத்தை அறிவதற்காக குறுஞ்செய்தி சர்வஜனவாக்கெடுப்பை ஆரம்பித்துள்ளனர். நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலம் குறித்த தங்களின் குரல்கள் செவிமடுக்கப்படுவதற்கான வாய்ப்பை பொதுமக்களிற்கு ஏற்படுத்திக்கொடுப்பதே இதன் நோக்கம் என அவர்கள் தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/174696
-
உலக அழிவை குறிக்கும் டூம்ஸ்டே கடிகாரம்: நள்ளிரவை நெருங்க 90 விநாடிகளே பாக்கி
படக்குறிப்பு, அணு ஆயுதங்கள் மற்றும் பல்வேறு காரணிகளால் உலகம் அழிவின் விளிம்புக்குச் செல்லும் என்பதை அடையாளமாகக் காட்டும் எச்சரிக்கைக் கடிகாரமாக டூம்ஸ்டே கடிகாரம் அமைந்துள்ளது. கட்டுரை தகவல் எழுதியவர், ஜேன் கார்பின் பதவி, பிபிசி நியூஸ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் டூம்ஸ்டே கடிகாரம்: அணுசக்தி அழிவுக்கு உலகம் இன்னும் எவ்வளவு நெருக்கமாக உள்ளது என்பதைக் காட்டும் ஓர் அடையாளமாக இது உள்ளது. இந்தக் கடிகாரம் நள்ளிரவை நெருங்க இன்னும் தற்போது 90 விநாடிகள் மட்டுமே தேவை. விஞ்ஞானிகள் அந்தக் கடிகாரத்தின் முட்களை "டூம்ஸ்டே"க்கு (அழிவு ஏற்படும் நாள்) மிக அருகில் நகர்த்தியிருப்பதற்கான காரணங்களைப் பட்டியலிட்டுள்ளனர். ஆனால் அந்த முட்களை மேலும் முன்னோக்கி நகர்த்துவதை நிறுத்திவிட்டனர். புதிய அணு ஆயுதப் போட்டியின் அச்சுறுத்தல், யுக்ரேன் போர் மற்றும் காலநிலை மாற்றக் கவலைகள் அனைத்தும் அழிவுக்கான காரணிகள் என்று அவர்கள் கூறினர். இந்தக் கடிகாரத்தின் நேரம் ஆண்டுதோறும் அணு விஞ்ஞானிகள் வெளியிடும் வருடாந்திர செய்தியை அடிப்படையாக வைத்து அமைக்கப்படுகிறது. கடந்த 2007ஆம் ஆண்டு முதல், செயற்கை நுண்ணறிவு மற்றும் காலநிலை மாற்றம் போன்ற புதிய, மனிதர்களால் உருவாக்கப்பட்ட அபாயங்களின் தாக்கத்தையும், அத்துடன் மிகப்பெரிய அச்சுறுத்தலான அணு ஆயுதப் போரையும் கருத்தில் கொண்டு இந்தக் கடிகாரத்தின் நேரம் மாற்றியமைக்கப்படுகிறது. செவ்வாய்க்கிழமையன்று, 2024ஆம் ஆண்டுக்கான அணு விஞ்ஞானிகளிள் அறிக்கையில், சீனா, ரஷ்யா, அமெரிக்கா ஆகிய நாடுகள் அனைத்தும் “தங்கள் அணு ஆயுதங்களை அதிகரிக்க அல்லது நவீனப்படுத்த" பெரும் தொகையைச் செலவழித்து வருவதாகக் கூறப்பட்டுள்ளது. இது "அணு ஆயுதப் போர் குறித்துத் தொடர்ந்து நீடிக்கும் ஆபத்தை" சேர்த்தது. யுக்ரேனில் நடந்த போர் "எப்போதும் இல்லாத அணுசக்தி அதிகரிப்பின் அபாயத்தை" உருவாக்கியுள்ளது என்று இந்த அறிக்கை கூறுகிறது. காலநிலை மாற்றம் குறித்த நடவடிக்கையின் பற்றாக்குறை மற்றும் வளர்ந்து வரும் உயிரியல் தொழில்நுட்பங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவுக் (AI) கருவிகளை "தவறாகப் பயன்படுத்துவதில்" தொடர்புடைய ஆபத்துகள் ஆகியவை மேற்கோள் காட்டப்பட்டுள்ளன. படக்குறிப்பு, இந்தக் கடிகாரம் நிறுவப்பட்டதில் இருந்து அணுஆயுத ஆபத்துகள் அதிகரித்த போதெல்லாம் அதன் முட்கள் அணு விஞ்ஞானிகளால் நகர்த்தப்பட்டு வருகின்றன. “டூம்ஸ்டே” கடிகாரம் 1947இல் ஜே ராபர்ட் ஓப்பன்ஹெய்மர் மற்றும் அணுகுண்டை உருவாக்கிய சக அமெரிக்க விஞ்ஞானிகளால் நிறுவப்பட்டது. அதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, இரண்டாம் உலகப் போரின் முடிவில், ஜப்பானிய நகரங்களான ஹிரோஷிமா மற்றும் நாகசாகியில் அதன் பேரழிவு விளைவுகளை அவர்கள் நேரடியாகக் கண்டனர். அதன் அடிப்படையில் அவர்கள் பொது மக்களை எச்சரிக்க விரும்பினர் என்பதுடன் அணு ஆயுதங்கள் மீண்டும் பயன்படுத்தப்படாது என்பதை உறுதிப்படுத்த உலகத் தலைவர்களுக்கு அழுத்தம் கொடுக்க விரும்பினர். இந்தக் கடிகாரத்தின் முட்கள் 25 முறை நகர்த்தப்பட்டுள்ளன. 1947ஆம் ஆண்டில், அவை நள்ளிரவு முதல் ஏழு நிமிடங்களில் தொடங்கின. பனிப்போரின் முடிவில் 1991இல், கடிகாரத்தின் முட்களை அவர்கள் நள்ளிரவு முதல் 17 நிமிடங்கள் வரை முன்னோக்கித் திருப்பினர். அணு விஞ்ஞானிகள் வெளியிட்ட அறிக்கையின் தலைவர் ரேச்சல் ப்ரோன்சன் பிபிசியிடம் பேசுகையில், "பிரிட்டன் உட்பட ஒவ்வொரு பெரிய நாடும் அணு ஆயுதங்கள் மிக நீண்ட காலத்திற்குப் பயன்படுத்தக் கூடியது போல் தங்கள் அணு ஆயுதங்களில் முதலீடு செய்கின்றன. இது மிகவும் ஆபத்தான நேரம். தலைவர்கள் பொறுப்புடன் செயல்படவில்லை," எனக் கவலை தெரிவித்தார். பல ஆண்டுகளாக டூம்ஸ்டே கடிகாரத்தின் நேரத்தை மாற்றியமைப்பதில் ஈடுபட்டுள்ள ரஷ்ய அணு ஆயுத நிபுணரான பாவெல் போட்விக், யுக்ரேன் படையெடுப்பிற்குப் பிறகு அதிபர் புதின் ரஷ்யாவின் அணுசக்தி படைகளை உஷார்படுத்தியபோது அதிர்ச்சியடைந்ததாகக் கூறுகிறார். ரஷ்ய அதிபரின் அச்சுறுத்தலுக்கு உலகம் திகிலுடன் பதிலளித்தது. ஆனால் அவர் ஓர் எச்சரிக்கையை வெளிப்படுத்த வேண்டுமென்றே அதுபோன்று செய்ததாகத் தெரிகிறது. "எங்களுக்கு ஒரு குறிப்பிட்ட சுதந்திரம் உள்ளது என்பதை உறுதிப்படுத்தத்தான் எங்களிடம் அணு ஆயுதங்கள் உள்ளன," என அவர் கூறியதாக போட்விக் கூறுகிறார். "ரஷ்ய அதிபர் இந்த அறிக்கைகளை வெளியிடுவதன் மூலம் மேற்குலக நாடுகளை யுக்ரேன் போரில் தலையிடுவதைத் தடுக்க முடியும் என்று நம்பினார். இது சரியான கணக்கீடுதான். இவ்வாறுதான் அணு ஆயுதப் போர் தடுப்பு செயல்படுகிறது." படக்குறிப்பு, ஒவ்வொரு நாட்டிலும் இருக்கும் அணு ஆயுதங்களின் எண்ணிக்கை துல்லியமானது எனக் கருதமுடியாது. பல தசாப்தங்களாக ஆயுதக் கட்டுப்பாட்டு ஒப்பந்தங்கள் இருந்தபோதிலும், உலகில் இன்னும் 13,000 அணு ஆயுதங்கள் உள்ளன, அவற்றில் 90% ரஷ்ய மற்றும் அமெரிக்க நாடுகள் வசம் இருக்கின்றன. பிரிட்டன், பிரான்ஸ், சீனா, இந்தியா, பாகிஸ்தான், வட கொரியா ஆகிய மற்ற ஆறு நாடுகள் அணுசக்தி நாடுகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. இஸ்ரேலிடம் இந்த ஆயுதங்கள் இருப்பதாகப் பரவலாக நம்பப்படுகிறது, ஆனால் அது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. பெரும்பாலான நவீன அணு ஆயுதங்கள் ஹிரோஷிமா மற்றும் நாகசாகியை அழித்ததைவிட பல மடங்கு சக்தி வாய்ந்தவை. கடந்த 2021ஆம் ஆண்டில், பிரிட்டன் தனது போர்க் கப்பல்களின் எண்ணிக்கையை 225இல் இருந்து 260 ஆக உயர்த்தியது. மேலும் 35 போர்க் கப்பல்கள் உருவாக்கப்படும் சாத்தியமும், நாட்டின் அணுசக்தியும் அதிக எச்சரிக்கையுடன் உள்ளன. யுக்ரேனில் போர் தொடங்கியதில் இருந்து, மாஸ்கோவின் அணு ஆயுதங்கள் பிரிட்டனுக்கு எதிராகப் பயன்படுத்தப்படலாம் என்று அரசுடன் நெருங்கிய மூத்த ரஷ்ய பிரமுகர்களிடம் இருந்து எச்சரிக்கைகள் வெளிப்பட்டன. பிரிட்டனின் அணு ஆயுதத் தடுப்புப் பிரிவுப் படை ஸ்காட்லாந்தின் மேற்கில் ஃபாஸ்லேன் ராணுவ தளத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் நான்கு ‘வான்கார்ட்’ நீர்மூழ்கிக் கப்பல்கள் உள்ளன. அவற்றில் அணு ஆயுதங்களை ஏந்திய டிரைடென்ட் ஏவுகணைகள் தயாராக வைக்கப்பட்டுள்ளன. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பிரிட்டனின் வான்கார்ட் நீர்மூழ்கிக் கப்பல்களில் ஒன்றான எச்எம்எஸ் விஜிலன்ட், ஃபாஸ்லேனில் நிறுத்தப்பட்டுள்ளது. ஹெச்எம்எஸ் விக்டோரியஸ் நீர்மூழ்கிக் கப்பலில் பணியாற்றிய முன்னாள் லெப்டினன்ட் சிடிஆர் ஃபியர்கல் டால்டன், டிரைடென்ட் ஏவுகணையை உண்மையில் ஏவிய ஒரு சில நபர்களில் ஒருவர். அது போலியாக உருவாக்கப்பட்ட போரின்போது சோதனை அடிப்படையில் ஏவப்பட்டது. "எப்போதும் ஒரு நீர்மூழ்கிக் கப்பல் 15 நிமிடங்களில் செயல்படுவதற்குத் தயாராக இருந்துகொண்டே இருக்கும்," என்று டால்டன் கூறுகிறார். "நாம் பேசுகையில், அங்கு ஒரு அணுசக்தி தடுப்புப் படை உள்ளது. உலகில் உள்ள விளாதிமிர் புதின் போன்றவர்களுக்கு அது எப்போதும் தயாராக இருப்பது நன்றாகவே தெரியும். அது நம்பகமான அமைப்பு என்பதுடன், தேவைப்பட்டால் அதை எப்போதும் பயன்படுத்தலாம்," என்றார். அணுகுண்டு உருவாக்கப்பட்ட காலத்தில் இருந்தே இந்த ஆயுதங்களுக்கு எதிர்ப்பு இருந்து வருகிறது. 1980களில், கிரீன்ஹாம் பொது அமைதி முகாமைச் சேர்ந்த பெண்கள் அனைத்து அமெரிக்க அணுசக்தி ஏவுகணைகளையும் பிரிட்டன் மண்ணில் இருந்து அகற்றப் போராடினர் - எஞ்சிய கடைசி போர்க் கப்பல்களும் 2008ஆம் ஆண்டு வெளியேறின. படக்குறிப்பு, சஃபோல்க்கில் உள்ள ஆர்ஏஎஃப் லேகன்ஹீத்தில் அணு ஆயுத எதிர்ப்புப் போராளிகள் தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இருப்பினும், சஃபோல்க்கில் உள்ள ஆர்ஏஎஃப் லேக்கன்ஹீத்தில் (RAF Lakenheath) - இருக்கும் ராயல் விமானப் படைத் தளத்தில்- அணு ஆயுதக் குறைப்புக்கான பிரசாரம் காரணமாக இப்போது அமெரிக்க ஆயுதங்கள் மீண்டும் திரும்புவதற்கான சாத்தியக் கூறுகளும் குறைந்து வருகின்றன. பென்டகன் ஆவணங்கள் - அமெரிக்க விஞ்ஞானிகளின் கூட்டமைப்பால் முதலில் அறிவிக்கப்பட்டது - அமெரிக்க "சிறப்பு" ஆயுதங்களுக்கு என இருக்கும் தளத்தில் பாதுகாப்பாக வைக்கப்படும் எனக் கூறுகிறது. அத்தகைய ஆயுதங்களை வீழ்த்தும் திறன் கொண்ட அமெரிக்க போர் விமானங்கள் 2021இல் லேக்கன்ஹீத்தை வந்தடைந்தன. மேலும் இந்தத் தளத்தில் அணுசக்தி பணியில் ஈடுபடுவதற்கு,போர் வீரர்களுக்கான தங்குமிடங்களை உருவாக்க அமெரிக்க விமானப்படை தற்போது திட்டமிட்டுள்ளது. "நாங்கள் எங்கள் பக்கத்தில் பொதுக் கருத்தைப் பெற்றுள்ளோம் என்பதை நாங்கள் அறிவோம்," என்று அணு ஆயுதக் குறைப்புக்கான பிரசார அமைப்பைச் சேர்ந்த சோஃபி போல்ட் விளக்குகிறார் - அவரது சிறிய குழு, படைத்தளத்தின் சுற்றளவு வேலிக்கு அருகே முழக்கங்களை எழுப்பியது. "கிட்டத்தட்ட 60% மக்கள் பிரிட்டனில் அணுகுண்டுகளை வைத்திருக்க விரும்பவில்லை," என்கிறார் அவர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஆர்ஏஎஃப் லேகன்ஹீத், அமெரிக்க விமானப் படையின் 48வது போர் விமானப் பிரிவின் தளமாக இயங்குகிறது. "இந்தத் தளத்துடன் எங்களுக்கு எந்தத் தொடர்பும் இல்லை. இது முற்றிலும் அமெரிக்க கட்டுப்பாட்டில் உள்ளது," என்று மற்றொரு எதிர்ப்பாளர் ஆலன் ரைட் கூறுகிறார். "அடுத்த முறை மீண்டும் டிரம்ப் வெள்ளை மாளிகையில் நுழைந்தால், அவர் அணுகுண்டைப் பயன்படுத்தலாம். ஏனெனில் அவர் புதினைவிட பெரிய அளவிலான அணுசக்தியைப் பெற்றுள்ளார்." எவ்வாறாயினும், டொனால்ட் டிரம்ப் ஏற்கெனவே யுக்ரேனில் நடந்த போரை 24 மணிநேரத்திற்குள் முடிவுக்குக் கொண்டு வருவதாகக் கூறினார். இருப்பினும் அது எப்படி சாத்தியம் என்று அவர் விளக்கமளிக்கவில்லை. யுக்ரேனுக்கான அமெரிக்க ஆதரவு குறையக்கூடும் என்று சில ஆய்வாளர்கள் நம்புகின்றனர். கடந்த தசாப்தத்தில், அணு ஆயுத கிளப்பில் இணைந்த சமீபத்திய நாடான வட கொரியாவின் அதிபரான கிம் ஜாங்-உன், அணு ஆயுதப் போர் பற்றிய அச்சத்தையும் அதிகரித்துள்ளார். அமெரிக்காவை சென்றடையக்கூடிய அணு ஆயுதங்களைத் தாங்கிச் செல்லக்கூடிய ஏவுகணைகளை சோதனை செய்ததாக அவர் பெருமையாகக் கூறியுள்ளார். அணு விஞ்ஞானிகள் ஒவ்வோர் ஆண்டும் அளிக்கும் அறிக்கையைத் தயாரிக்கும் குழுவின் முன்னாள் உறுப்பினரும், ‘டூம்ஸ்டே’ கடிகார ஆலோசகருமான சிக் ஹெக்கர், ஒரு அறிவியல் ஆராய்ச்சித் திட்டத்தின் ஒரு பகுதியாக வட கொரியாவின் அணுசக்தி நிலையங்களை ஏழு முறை பார்வையிட்டுள்ளார். மேலும் வட கொரியாவிடம் இப்போது 50 முதல் 60 அணு ஆயுதங்கள் இருக்கலாம் என்று அவர் மதிப்பிடுகிறார். "அணு ஆயுதங்கள், அணு ஆயுத பயங்கரவாதம், அணு ஆயுத பரவல் - இவை அனைத்தும் தவறான திசையில் செல்கின்றன என்பது மட்டும் உண்மை," என்று அவர் கூறுகிறார். https://www.bbc.com/tamil/articles/czd7pl23d0jo
-
சீனாவின் ஷியாங் யாங் ஹோங் 3 கப்பல் எவ்வித ஆய்வுகளையும் மேற்கொள்ளாது!
சீனாவின் ஷியாங் யாங் ஹோங் 3 என்ற சர்ச்சைக்குரிய ஆய்வு கப்பலுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள போதிலும் அது எந்த ஆராய்ச்சியையும் மேற்கொள்ளாது என மாலைத்தீவு வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த கப்பலுக்கான அனுமதியை முன்னதாக இலங்கை நிராகரித்திருந்தது. இதனையடுத்து மாலைத்தீவு அதற்கு அனுமதி வழங்கியதுடன் எதிர்வரும் பெப்ரவரி மாதத்தின் ஆரம்பத்தில் குறித்த கப்பல் அங்கு சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பணியாளர்களின் சுழற்சி மற்றும் எரிபொருள் நிரப்புதல் உள்ளிட்ட செயற்பாடுகளுக்காக மாத்திரமே ஷியாங் யாங் ஹோங் 3 என்ற சீன கப்பல் தங்களது கடற்பகுதியில் நங்கூரமிடவுள்ளதாகவும், இது எந்த ஆய்வுகளையும் மேற்கொள்ளாது எனவும் மாலைத்தீவு வெளிவிவகார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. https://thinakkural.lk/article/289243
-
அபே ஜனபல கட்சியின் தலைவர் சமன் பெரேரா துப்பாக்கிச் சூட்டில் பலி!
பெலியத்தவில் ஐவர் கொலை : மாத்தறையில் ஒருவர் கைது! Published By: DIGITAL DESK 3 24 JAN, 2024 | 01:49 PM பெலியத்தவில் ஐவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு உடந்தையாக இருந்தார் என்ற சந்தேகத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மாத்தறையில் வைத்து அவர் இன்று புதன்கிழமை (24) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டவர், தாக்குதல் நடத்தியவர்கள் பயன்படுத்திய வாகனத்தின் சாரதி எனவும் இவரே இந்தத் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தை திட்டமிட்டுள்ளதாகவும் சந்தேகிக்கப்படுகிறது. https://www.virakesari.lk/article/174692