Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிருபன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by கிருபன்

  1. இலங்கை – இந்திய மீனவர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு வேண்டும்; எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கை இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் நீண்டகாலமாக மீனவர் பிரச்சினைகள் நிலவி வருவதாகவும், அதற்கு சர்வதேச சட்டங்களுக்கு அமைய நடைமுறைப்படுத்தக்கூடிய நிரந்தரத் தீர்வைக் காண இரு நாடுகளும் இணைந்து செயற்பட வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். தற்போது இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ‘இந்து-இலங்கை இருதரப்பு உறவுகள்’ என்ற தலைப்பில் ANI சேவையுடன் நடத்திய கலந்துரையாடலின் போதே இந்தக் கருத்தை வெளியிட்டார். அவர் மேலும் கூறுகையில், ஐக்கிய நாடுகளின் கடற் சட்டம் பற்றிய சாசனம் நடைமுறையில் உள்ளது என்றும், அதற்கு உட்பட்டு சர்வதேச சட்டங்கள் மற்றும் விதிமுறைகளைக் மதித்து இரு தரப்பினரும் ஒன்றிணைந்து உரிய சட்டங்களை உருவாக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன், சட்டவிரோத மீன்பிடியைத் தடுப்பதற்காக, சம்பந்தப்பட்ட சட்ட விதிமுறைகளுக்கு இணங்க பிரச்சினைகளைத் தீர்க்க இரு நாடுகளும் உறுதியளிப்பது முக்கியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மீனவர்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகள் இருப்பதை ஏற்றுக்கொண்டாலும், வருமானம் ஈட்டும் செயல்முறை சட்டபூர்வமாக இருக்க வேண்டும் என்பதை இரு அரசாங்கங்களும் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் சஜித் பிரேமதாச தெளிவுபடுத்தினார். “நிரந்தரச் சட்டக் கட்டமைப்பு இல்லாமல் செயற்படுவதை விட, இரு தரப்பினரும் ஒரு நீடித்த தீர்விற்காக இணைந்து செயற்பட வேண்டும்” என்று அவர் இந்தச் சந்தர்ப்பத்தில் வலியுறுத்தினார். மேலும், கச்சத்தீவு அருகே உள்ள இலங்கை கடல் எல்லைக்குள் தமிழக மீனவர்கள் நுழைவது குறித்து இரு நாடுகளுக்கும் இடையே தொடர்ச்சியான பிரச்சினைகள் நீடிப்பதாகவும், இது பெரும்பாலும் கைதுகள் மற்றும் கடல் எல்லைகள் தொடர்பான மோதல்களுக்கு வழிவகுப்பதாகவும் அவர் கூறினார். இதற்கிடையில், பிரதமர் ஹரிணி அமரசூரியவின் அண்மைய இந்தியப் பயணத்தின் போது பேசப்பட்ட விடயங்களையும் ANI செய்தி சேவை இந்தக் கலந்துரையாடலில் மேற்கோள் காட்டியது. பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இடையேயான சந்திப்பின் போது, இந்தப் பிரச்சினை ‘உணர்ச்சிபூர்வமான பிரச்சினை’ என்று கூறப்பட்டதாக அவர்கள் குறிப்பிட்டனர். அதன்படி, இதற்கு ஒரு நடைமுறைத் தீர்வைக் காண இரு நாடுகளுக்கும் இடையே விரிவான பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்த மீனவர் பிரச்சினை இந்திய-இலங்கை உறவுகளில் மிகவும் சர்ச்சைக்குரிய அம்சமாகத் தொடர்கிறது. பாக்கு நீரிணையில் தமிழ்நாடு மற்றும் இலங்கையைப் பிரிக்கும் குறுகிய நீர்ப்பரப்பு இரு நாடுகளின் மீனவர்களுக்கும் வளமான மீன்பிடித் தளமாகக் கருதப்படுகிறது. https://www.samakalam.com/இலங்கை-இந்திய-மீனவர்-பிர-10/
  2. ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு நிபந்தனைகளுடன் சுமந்திரன் விடுக்கும் அழைப்பு! தமிழரசுக் கட்சியின் நிலைப்பாட்டை ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணிக்கு தெரியப்படுத்தியுள்ளோம். அவர்கள் அதற்கு இணங்கி வந்தால் மட்டும் தமிழ் தேசியக் கூட்டமைப்பாக செயற்பட முடியும் என தமிழரசுக் கட்சியின் ஊடகப் பேச்சாளரும், செயலாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் வவுனியாவில் இடம்பெற்ற பின்னர் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், இன்றைக்கு இலங்கை தமிழ் அரசு கட்சியினுடைய மத்திய செயற்குழு கூட்டம் வவுனியாவில் உள்ள இலங்கை தமிழ் அரசு கட்சி அலுவலகத்தில் காலை பத்து மணியிலிருந்து மாலை வரை நடைபெற்றது. இந்த கூட்டத்திலே விசேடமாக வரப்போகிற வரவு செலவு திட்டம் சம்பந்தமாக நாடாளுமன்ற உறுப்பினர்களோடு ஒரு கலந்துரையாடல் நடத்தி இருக்கிறோம். 7ஆம் திகதி ஜனாதிபதி, நிதியமைச்சர் என்ற வகையில் தன்னுடைய வரவு செலவு திட்ட யோசனைகளை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க இருக்கிறார். அதற்கு பிறகு இரண்டாம் வாசிப்பு விவாதம் நடைபெற்று 14 ஆம் திகதி அதற்கான வாக்கெடுப்பு நடைபெறும் அதற்குப் பிறகு குழுக்கள் மட்டத்தில் விவாதம் நடைபெறும் அதை தொடர்ந்து மூன்றாம் வாசிப்பு இடம் பெற்று அதற்கான வாக்கெடுப்பு நடைபெறும். இந்த விடயத்தை நாங்கள் மிகவும் தீவிரமாக ஆராய்ந்தோம். நாடாளுமன்ற குழு ஒவ்வொரு உறுப்பினரும் தங்களுடைய நிலைப்பாடுகளை அல்லது தங்களுடைய கருத்துக்களை சொன்னார்கள். மத்திய செயற்குழு உறுப்பினர்களும் இன்றைய சூழ்நிலையிலே நாங்கள் என்ன விதமாக இதனை அணுக வேண்டும் என்கின்ற தங்களுடைய கருத்துக்களை சொன்னார்கள். இறுதி முடிவு எதுவுமே எடுக்கப்படவில்லை. நாங்கள் ஜனாதிபதி தன்னுடைய யோசனைகளை 7ஆம் திகதி முன்வைத்த பிறகு இரண்டாம் வாசிப்பு முடிவடைவதற்கு முன்னதாக எங்களுடைய அரசியல் குழுவோடு நாடாளுமன்ற குழுவும் இணைந்து வாக்களிப்பில் எப்படியாக கலந்து கொள்வது என்பது சம்பந்தமான இறுதி முடிவெடுப்பது என தீர்மானித்திருக்கிறோம். அதைத் தொடர்ந்து நாங்கள் மற்றைய தமிழ் அரசியல் கட்சிகளோடு இணைந்து செயல்படுகின்ற விடயம் சம்பந்தமாக பேசப்பட்டது. ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியோடு தலைவரும் நானும் ஏற்கனவே சில சந்தர்ப்பங்களில் உரையாடி இருக்கிறோம். அது சம்பந்தமாக எங்களுடைய நிலைப்பாட்டை நாங்கள் அவர்களுக்கு தெரியப்படுத்தி இருக்கிறோம். அந்த நிலைப்பாட்டில் அவர்களும் இணங்கி வருவார்களாக இருந்தால் நாங்கள் முன்னர் இருந்ததை போல் தமிழ் தேசிய கூட்டமைப்பாக ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியினரோடு இணங்கி செயல்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு. ஆகவே அப்படியாக இணங்கி செயல்பட முன்வருமாறு நாங்கள் அவர்களுக்கு அழைப்பும் விடுக்கிறோம். மத்திய செயற்குழுவிலே அதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டிருக்கிறது. அதேபோல் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரோடும் நாங்கள் இது சம்பந்தமாக பேசலாமா என்ற விடயமும் எடுத்துக் கொள்ளப்பட்டது. சகல தமிழ் தரப்புக்களோடும் பிரதான தலைமை தமிழ் கட்சி என்ற ரீதியில் நாங்கள் அனைவரையும் இணைந்து செயல்படுமாறு அழைப்பு விடுப்பது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரோடு வைத்தியர் சத்தியலிங்கம் சுவிஸ் விஜயத்தின் போது சம்பாசனைகளில் ஈடுபட்டிருக்கிறார். அது பற்றி எங்களுக்கு தெரியப்படுத்தப்பட்டது. அரசியல் தீர்வு சம்பந்தமாக ஒரே நிலைப்பாட்டை தமிழ் கட்சிகள் முன்வைக்குமா என்கின்ற ஒரு கேள்வி இருக்கிறது. ஆகவே அது சம்பந்தமாக இலங்கை தமிழ் அரசு கட்சி தமிழ் தேசிய கூட்டமைப்பாக இறுதியாக கோட்டாபய ராஜபக்ச அரசாங்க காலத்தில் அப்போதைய குழுவுக்கு முன்வைத்த யோசனை ஒன்று இருக்கிறது. அதுதான் நாங்கள் இறுதியாக ஒரு அரசாங்கத்துக்கு முன்வைத்த யோசனை. நாங்கள் அதனை மற்றவர்களுக்கும் காண்பிப்பது என்று தீர்மானித்திருக்கிறோம். அவர்கள் அதில் இணங்கி வருவார்களாக இருந்தால் அதை ஒரு பொது நிலைப்பாடாக நாங்கள் அரசாங்கத்துக்கு தெரிவிக்க முடியும் என்று தீர்மானித்திருக்கிறோம். ஜனாதிபதியை சந்திப்பதற்கு தமிழ் அரசு கட்சி ஒரு கோரிக்கை விடுத்திருக்கிறது. எப்படியான விடயங்களை நாம் கதைப்பது என இதற்கு முன்னர் நடந்த மத்திய செயற்குழுவிலே எடுத்த தீர்மானத்தின் அமைவாக தலைவரும் நானும் கையெழுத்திட்டு அரசியல் தீர்வு சம்பந்தமாக அவரோடு பேசுவதற்கு எட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களையும் நாம் இருவரையும் சேர்த்து பத்து பேர் கொண்ட குழு ஒன்று நியமிக்கப்பட்டிருப்பதாவும் நேரம் ஒதுக்கி தருமாறும் நாங்கள் அவரிடத்திலே கோரிக்கை விடுத்திருந்தோம். ஜனாதிபதியுடன் பேச்சு அந்த கடிதம் அவருக்கு அனுப்பி வைக்க போகும்போது அவர் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையிலே கலந்து கொள்வதற்காக வெளிநாட்டுக்கு சென்றிருந்தார். ஆகவே அவர் திரும்பி வந்த பிறகு ஒரு நினைவூட்டல் கடிதமும் நான் அனுப்பி இருக்கிறேன். ஆனால் இதுவரைக்கும் எந்தவிதமான பதிலும் ஜனாதிபதியிடத்திலிருந்து எங்களுக்கு கிடைக்கவில்லை. எனினும் 21 ஆம் திகதி எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து ஒரு பேரணியை ஏற்பாடு செய்திருக்கிறார்கள். தமிழ் அரசு கட்சிக்கு அழைப்பு விடப்படவில்லை. நாங்கள் அதில் பங்கேற்கவும் மாட்டோம். இதற்கு முன்னர் பல தடவைகளிலே பல்வேறு எதிர்க்கட்சிகள் சேர்ந்து செயல்படுகிற போது எங்களுக்கு அழைப்புகள் விடுப்பார்கள். நாங்கள் சில சில வேலைத் திட்டங்கள் சம்பந்தமாக இணைந்து பணியாற்றுகிறோம். மாகாண சபை தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும், பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை நீக்க வேண்டும் என்று சில வேலைத் திட்டங்களிலே எங்களோடு இணைந்து வருகிறவர்களோடு சேர்ந்து பயணிக்க தயாராக இருக்கிறோம். ஆனால் பொதுவாக ஒரு எதிர்க்கட்சிக் கூட்டணியாக ஒன்று சேர்ந்து பயணிக்க தயாராக இல்லை எனத் தெரிவித்தார் https://www.samakalam.com/ஜனநாயக-தமிழ்-தேசியக்-கூட-2/
  3. கட்டுக்கோப்பாக வாழ்ந்த சமூகம் அவ்வாறில்லாமல் இருக்கின்றது! - ஆளுநர் நா.வேதநாயகன் adminNovember 6, 2025 கட்டுக்கோப்பாக வாழ்ந்த எமது சமூகம் இன்று அவ்வாறில்லாமல் இருக்கின்றது. சமூகத்தின் மீதான அக்கறை என்பதும் குறைந்து செல்கின்றது. ஒரு சிலர் மாத்திரமே எமது சமூகத்தை மீட்டெடுப்பதற்கு அர்ப்பணிப்புடன் – அக்கறையுடன் செயற்படுகின்றனர் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். சுவிற்சர்லாந்து உறவுகளும் நித்திலம் கலையகமும் இணைந்து நடத்திய கலைஞர் மதிப்பளிப்பு மற்றும் திரையிசை வெளியீடு என்பன முகமாலை சிவபுர வளாகத்தில் நேற்றைய தினம் புதன்கிழமை மூத்த சட்டத்தரணி சோமசுந்தரம் தேவராஜா தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஈழத் தமிழ் கலைஞர் ஒன்றியத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தை ஆரம்பித்து வைத்த ஆளுநர் அவர்கள், ‘மகரந்தம்’ திரையிசையையும் வெளியிட்டு வைத்தார். அத்துடன் தூவானம் திரைப்படத்தில் பணியாற்றிய கலைஞர்கள் மற்றும் ஈழத் தமிழ் ஒன்றிய கலைஞர்களையும் மதிப்பளித்தார். அதனை தொடர்ந்து ஆளுநர் உரையாற்றும் போது, மிக நீண்ட காலத்தின் பின்னர் வித்தியாசமான நிகழ்வொன்றில் நான் பங்கேற்றிருக்கின்றேன். எமது சமூகத்தின் போக்கு தொடர்பில் அதிகம் கவலையடைந்து, அதை மாற்றுவதற்கு ஏதாவது செய்யவேண்டும் என்ற துடிப்புள்ள ஒருவராக மருத்துவர் சிவன்சுதன் அவர்களை எனக்கு நீண்ட காலமாகவே தெரியும். எமது சமூகம் எவ்வாறு கட்டுக்கோப்புடன் வாழ்ந்தது என்பது எல்லோருக்கும் தெரியும். புறக்காரணிகளால் அது மாற்றியமைக்கப்பட்டுள்ளதா அல்லது எமது சமூகமே அவ்வாறு மாறிவிட்டதா என்பது எனக்குத் தெரியவில்லை. எப்படி இருந்த நாம் இப்போது எப்படி இருக்கின்றோம். சமூகத்தை கலையால் மீட்டெடுக்கும் முயற்சியில் மருத்துவர் சிவன்சுதன் அவர்கள் ஈடுபட்டுள்ளது பாராட்டத்தக்கது. வடக்கு, கிழக்கு, மலையகம் என தமிழர்கள் வாழும் அனைத்துப் பிரதேசங்களிலும் உள்ள கலைஞர்களை ஒன்றிணைத்தமை மிகப் பெரிய விடயம். எமது சமூகம் எம்மவர்களின் திறமைகளைப் பாராட்டுவது குறைவதுதான். ஆனாலும், மருத்துவர் சிவன்சுதன் போன்றவர்கள் எங்கள் கலைஞர்களைப் பாராட்டுவதற்கு எடுத்துக்கொண்ட முயற்சி சிறப்பானது. இப்போது நல்லது செய்வதற்கு கூடுதலாக எல்லோரும் யோசிக்கின்றார்கள். நல்லது செய்வதில்தான் குறைகண்டு பிடிப்பதற்கு பலர் இருக்கின்றார்கள். ஆனால் தவறான விடயம் தொடர்பில் எவரும் குற கண்டு பிடிப்பதுமில்லை அதைத் தவறு என்றும் சொல்லுபவர்களும் இல்லை. விமர்சகர்களும் இப்போது மாறிவிட்டார்கள் என்றே எண்ணத் தோன்றுகின்றது. எது எப்படியிருப்பினும், எமது சமூகத்தை வழிப்படுத்துவதற்கு கலைஞர்கள் எடுத்துக்கொள்ளும் வகிபாகம் மிகவும் பொறுப்புமிக்கது. அதை அவர்கள் சிறப்பாகச் செய்ய வாழ்த்துகின்றேன், என்றார் ஆளுநர். இந்த நிகழ்வில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீடாதிபதி சி.ரகுராம் மற்றும் யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரியின் முன்னாள் பீடாதிபதி சு.பரமானந்தம் ஆகியோர் சிறப்ப விருந்தினர்களாகவும் கலந்துகொண்டிருந்தனர். https://globaltamilnews.net/2025/222384/
  4. கனடாவின் மொன்றியல் நகராட்சி மன்ற உறுப்பினராக இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட பெண் தெரிவு 05 Nov, 2025 | 11:38 AM (இணையத்தள செய்திப் பிரிவு) கனடாவின் கியூபெக் மாகாணத்தின் மொன்றியல் நகரில் அரசியல் வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக, டார்லிங்டன் (Darlington) பகுதியில், கோட் -டெஸ்-நெய்ஜ் (Côte-des-Neiges) நகர சபைக்கு மிலானி தியாகராஜா தெரிவுசெய்யப்பட்டுள்ளார். இவ்வெற்றியுடன், கியூபெக், மொன்றியலில் தெரிவு செய்யப்பட்ட முதல் தமிழ் அரசியல்வாதி என்ற வரலாற்று மைல்கல்லை அவர் நாட்டினார். கோட் -டெஸ்-நெய்ஜ் (Côte-des-Neiges) பகுதியில் பிறந்து வளர்ந்த மிலானி தியாகராஜா, இலங்கையை பூர்வீகமாகக் கொண்டவர். இலங்கையின் வடபகுதியான யாழ்ப்பாணம் நல்லூரை பூர்வீகமாகக் கொண்ட லிங்கராஜா தியாகராஜா (சட்டத்தரணி - இலங்கை ), சண்டிலிப்பாயைச் சேர்ந்த பாமதி சிவபாதத்தின் மகளாவார். 'அன்சாம்பில் மொன்ட்ரியல்' (Ensemble Montréal) கட்சியின் உறுப்பினராக மிலானி தியாகராஜா, இணைந்து, பாதுகாப்பான, அனைவரையும் உள்ளடக்கிய, மற்றும் ஒன்றிணைக்கப்பட்ட ஒரு டார்லிங்டன் மாவட்டத்தை கட்டியெழுப்பும் வாக்குறுதியுடன் பிரச்சாரத்தில் இறங்கினார். கனடா சேவை மையத்தில் (Service Canada) பல ஆண்டுகளாகப் பணியாற்றிய இவர், மக்களுக்கு சேவை செய்வதில் நீண்ட அனுபவம் பெற்றவர். தனது வெற்றியையடுத்து வீரகேசரிக்கு கருத்துத் தெரிவித்த மிலானி தியாகராஜா, "இது ஒரு வெற்றி மட்டுமல்ல, ஒரு புதிய தொடக்கம். டார்லிங்டனில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தினரின் குரலும் மதிக்கப்படும், பிரதிநிதித்துவப்படுத்தப்படும் என்பதை உறுதிசெய்கிறேன். நமது சமூகத்தின் இணைப்பை வலுப்படுத்தியே இந்தப் பணியை மேற்கொள்வேன். நகரத்தின் தூய்மை மற்றும் பாதுகாப்பை உறுதிசெய்தல், மக்களுக்கு கிடைக்க வேண்டிய அடிப்படைத் தேவைகளை பூர்த்திசெய்தல். வீடற்றவர்களின் பிரச்சினைகளை தீர்க்கவும் எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் வீதிப் போக்குவரத்துகளில் ஏற்படும் பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். கியூபெக் தமிழ்ச் சமூகத்தின் ஒரு பிரதிநிதியின் இந்த வரலாற்று வெற்றி, மொன்ட்ரியால் மற்றும் கியூபெக்கின் பல்பண்பாட்டு ஜனநாயகத்தில் ஒரு புதிய அத்தியாயத்தைத் திறந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. Virakesari.lkகனடாவின் மொன்றியல் நகராட்சி மன்ற உறுப்பினராக இலங்கையை பூர...கனடாவின் மொன்றியல் நகராட்சி மன்ற உறுப்பினராக இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட பெண் தெரிவு
  5. தூய்மை இலங்கை செயற்றிட்டத்தின் ஊடாக யாழ். மத்திய பேருந்து நிலையத்தை சூழவுள்ள கடைகள் அகற்றப்படும்! adminNovember 5, 2025 அதற்கு தூய்மை இலங்கை செயற்றிட்டத்தின் ஊடாக யாழ். மத்திய பேருந்து நிலையம் அபிவிருத்தி செய்யப்படும் போது அங்குள்ள கடைகள் அகற்றப்படும் என ஆளுநர் தெரிவித்துள்ளார் வர்த்தக சங்கத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர்களுக்கும் ஆளுநருக்கும் இடையிலான சந்திப்பு ஆளுநர் செயலகத்தில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அதன் போதே குறித்த விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. மேலும், யாழ்ப்பாண நகரில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஒருவழிப் பாதையூடாக வர்த்தகர்கள் பாதிக்கப்படுவதாக வர்த்தக சங்கப் பிரதிநிதிகள் தெரிவித்தனர். அதற்கு வர்த்தகர்களைத் தவிர ஏனையோர் அவ்வாறு ஒருவழிப் பாதையாக்கியதன் ஊடாக போக்குவரத்து நெரிசல் குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளதை ஆளுநர் குறிப்பிட்டார். நகரின் மத்தியிலுள்ள பேருந்து நிலையத்தாலேயே அந்த நெரிசல் ஏற்பட்டது என்பதையும், தனியாரும், இலங்கை போக்குவரத்துச் சபையினரும் நெடுந்தூர பேருந்துகளை புதிய பேருந்து நிலையத்திலிருந்து இயக்குவதன் ஊடாக இதனைச் சீர் செய்ய முடியும் என்பதையும் வர்த்தக சங்கப் பிரதிநிதிகள் தெரிவித்தனர். அத்துடன் பேருந்து நிலையத்தை சுற்றி அமைக்கப்பட்டுள்ள கடைகளால் அங்கு இடம்பெறும் சட்டவிரோத செயல்கள் தொடர்பாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர். தூய்மை இலங்கை செயற்றிட்டத்தின் ஊடாக யாழ். மத்திய பேருந்து நிலையம் அபிவிருத்தி செய்யப்படும் போது அங்குள்ள கடைகள் அகற்றப்படும் என ஏற்கனவே இலங்கை போக்குவரத்துச்சபையின் பிரதான பிராந்திய முகாமையாளர் மாவட்டச் செயலக கூட்டத்தில் தெரிவித்ததை நினைவுகூர்ந்த ஆளுநர், நெடுந்தூர பேருந்துகள் புதிய பேருந்து நிலையத்துக்கு மாற்றப்பட்ட பின்னர் வீதியின் நெருக்கடி நிலைமையை அவதானித்து நிலைமையை ஆராயலாம் எனக் குறிப்பிட்டார். யாழ். நகரின் முக்கிய இடங்களில் சிலைகள் ? யாழ். நகரின் முக்கிய இடங்களில் சிலைகளை வைப்பதன் அவசியத்தையும் இலங்கையில் ஏனைய நகரங்களில் அவ்வாறு சிலைகள் வைக்கப்பட்டு அவை உயிர்ப்புடன் எவ்வாறு உள்ளன என்பது தொடர்பில் வர்த்தக சங்கப் பிரதிநிதிகள் வடமாகாண ஆளுநருக்கு தெரியப்படுத்தினர். அதேவேளை 2026ஆம் ஆண்டில் சுற்றுலா செல்வதற்குரிய சிறந்த இடமாக யாழ்ப்பாணம் தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில், யாழ்ப்பாண நகரை அழகுபடுத்துவதற்கான முயற்சிகளுக்கு யாழ்ப்பாண வர்த்தக சங்கம் முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கு வர்த்தக சங்கத்தினர் உறுதியளித்தனர். வர்த்தக சங்கத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர்களுக்கும் ஆளுநருக்கும் இடையிலான சந்திப்பு ஆளுநர் செயலகத்தில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்தச் சந்திப்பில் வர்த்தக சங்கத்தால் பல்வேறு விடயங்கள் முன்வைக்கப்பட்டு அவை தொடர்பில் கலந்துரையாடப்பட்டன. யாழ்ப்பாணம் நவீன சந்தை கட்டடத் தொகுதியிலுள்ள பல கடைகளின் உரிமம் மாற்றம் தொடர்பான நடவடிக்கை கடந்த காலத்தில் ஆரம்பிக்கப்பட்டிருந்தாலும் அது பெருமளவுக்கு நடைபெறவில்லை என சுட்டிக்காட்டப்பட்டது. இது தொடர்பில் கவனமெடுத்து விசேடமாக ஆளணியை நியமித்து விரைவாக நிறைவுசெய்வதற்குரிய ஒழுங்குகளை முன்னெடுக்குமாறு யாழ். மாநகர சபையின் முதல்வர் மற்றும் ஆணையாளரை ஆளுநர் கோரினார். உரிமம் மாற்றத்தை செய்வதன் ஊடாக மாநகர சபைக்கான வருமானம் பல கோடி ரூபாக்கள் வரையில் கிடைக்கப்பெறும் என்பதையும் வர்த்தக சங்கப் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டினர். அத்துடன் நவீன சந்தைக் கட்டடத் தொகுதியிலுள்ள மலசலகூடம் உள்ளிட்ட நகரப் பகுதியிலுள்ள மலசலகூடங்களின் சீர்கேடுகள் தொடர்பில் வர்த்தக சங்கப் பிரதிநிதிகள் விசனம் வெளியிட்டனர். அவற்றை உரியமுறையில் சீர்செய்வதுடன் தொடர் பராமரிப்புக்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் ஆளுநர் கோரினார். யாழ். நகரின் முக்கிய இடங்களில் சிலைகளை வைப்பதன் அவசியத்தையும் இலங்கையில் ஏனைய நகரங்களில் அவ்வாறு சிலைகள் வைக்கப்பட்டு அவை உயிர்ப்புடன் எவ்வாறு உள்ளன என்பது தொடர்பிலும் வர்த்தக சங்கப் பிரதிநிதிகள் குறிப்பிட்டனர். பொருத்தமான இடங்களை அடையாளம் கண்டு சிலைகளை வைப்பதற்குரிய ஒழுங்குகளைச் செய்வதுடன், ஏற்கனவே வைக்கப்பட்டுள்ள சிலைகளை உயிரோட்டமாக தென்படக்கூடியவாறான வர்ணப்பூச்சு வேலைகளையும் முன்னெடுக்குமாறு ஆளுநர் கோரினார். யாழ்ப்பாண நகரிலுள்ள கழிவு வாய்க்கால்கள், குப்பைகள் தொடர்பிலும் பிரஸ்தாபிக்கப்பட்டது. அவற்றை துப்புரவு செய்வதற்கான முயற்சிகள் மாநகர சபை எடுத்துள்ள நிலையில் அதனை துரிதப்படுத்துமாறும் அதற்கான ஒழுங்குமுறைகளையும், தண்டங்களையும் அறிமுகப்படுத்துமாறும் வர்த்தக சங்கப் பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்தனர். மாநகர சபையை அதனைச் செயற்படுத்துமாறு ஆளுநர் குறிப்பிட்டார். https://globaltamilnews.net/2025/222342/
  6. அந்தப் பக்கம், இந்தப் பக்கம், எந்தப் பக்கம் இந்த ஊர்மனைகள் இருந்தாலும் எனக்கு இவை அந்தமான் பக்கம் மாதிரித்தான்! கண்னால் கண்ட இடங்களில் இவை இன்னமும் வரவில்லை!
  7. சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகில் பெண் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் – தவில் வித்துவான் கைது adminNovember 4, 2025 பூநகரி – சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகில் பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரான யாழ்ப்பாணத்தை சேர்ந்த தவில் வித்துவான் கைது செய்யப்பட்டுள்ளார். குப்பிளான் பகுதியை சேர்ந்த தவில் வித்துவானை இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை அதிகாலை வேளை கிளிநொச்சி மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபரை கிளிநொச்சிக்கு அழைத்துச் சென்று காவல்துறையினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். முதல் கட்ட விசாரணைகளின் அடிப்படையில் , படுகொலை செய்யப்பட்ட பெண்ணுடன் தவில் வித்தவானுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பழக்கம் ஏற்பட்டு , தொலைபேசி ஊடாக உரையாடி வந்த நிலையில் கடந்த ஒக்டோபர் மாதம் 11ஆம் திகதியளவில் யாழ் . மாவட்ட செயலகத்திற்கு அருகில் கார் ஒன்றினை வாடகைக்கு பெற்று , அப்பெண்ணை அழைத்துக்கொண்டு பூநகரி ஊடாக கிளிநொச்சி நோக்கி பயணித்தாகவும் , அதன் போது, பூநகரி பகுதியில் அப்பெண்ணுக்கு குடிப்பதற்கு , குளிர்பானம் வழங்கியதை அடுத்து அப்பெண் மயக்கமடைந்த நிலையில் ,அவரை கொலை செய்து கடலில் வீசிவிட்டு தான் கிளிநொச்சி உருத்திரபுரம் பகுதிக்கு சென்று தடய பொருட்களை அழித்து விட்டு , யாழ்ப்பாணம் திரும்பியதாக சந்தேக நபர் விசாரணைகளில் தெரிவித்துள்ளதாக காவல்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன அதேவேளை சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் அடிப்படையில் , படுகொலை செய்யப்பட்ட பெண் அணிந்திருந்த சுமார் 10 பவுண் நகையை சுன்னாகம் பகுதியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் அடகு வைத்து 17 இலட்ச ரூபாய் பணத்தினை பெற்று , அப்பணத்தினை தனது சொந்த தேவைகளுக்காக செலவழித்ததாகவும் தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையில் குறித்த தனியார் நிதி நிறுவனத்தில் அடகு வைத்த நகைகளை காவல்துறையினர் மீட்டுள்ளனர் சந்தேக நபரை நீதிமன்றில் முற்படுத்தி , மேலதிக விசாரணைகளுக்காக 72 மணி நேரங்கள் காவல்துறைக்காவலில் தடுத்து வைத்து விசாரணை செய்ய நீதிமன்றில் காவல்துறையினர் அனுமதி கோரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பின்னணி. யாழ்ப்பாணம் காரைநகர் பகுதியை சேர்ந்த சுரேஷ்குமார் குலதீபா என்ற இரண்டு பிள்ளைகளின் தாய் கடந்த ஒக்டோபர் மாதம் 11ஆம் திகதியளவில் , வுனியாவில் உள்ள நண்பி ஒருவரின் பிறந்தநாள் கொண்டாட்டம் ஒன்றுக்கு செல்வதாக கூறி சென்ற நிலையில் மறுநாள் 12ஆம் திகதி சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகில் கடற்கரையில் சடலமாக மீட்கப்பட்டிருந்தார். அதனை அடுத்து பெண்ணின் சடலத்தினை உடற்கூற்று பரிசோதனைக்கு உட்படுத்திய வேளை, தலையில் பலமாக தாக்கப்பட்டமைக்கான சான்றுகள் காணப்பட்டதுடன் , முகம் உள்ளிட்ட பகுதிகளில் எரிய கூடிய திரவம் ஊற்றி எரியூட்டப்பட்டமைக்கான சான்றுகளும் காணப்பட்டன. பெண்ணின் நுரையீரலுக்குள் நீர் புகுந்தமையால் , ஏற்பட்ட மூச்சு திணறல் காரணமாகவே மரணம் சம்பவித்துள்ளது என உடற்கூற்று பரிசோதனையில் தெரியவந்தது. அதேவேளை பெண்ணின் முகத்தில் எரிய ஊட்டிய பின்னரே அவரை நீரினுள் வீசி இருக்க வேண்டும் என்பது ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. அத்துடன் பெண் வீட்டில் இருந்து புறப்படும் போது, 10 பவுண் நகைகளை அணிந்து சென்றதாகவும் , சடலம் மீட்கப்படும் போது அவை காணப்படவில்லை எனவும் உறவினர்களால் தெரிவிக்கப்பட்டிருந்தது. சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த கிளிநொச்சி மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் , சம்பவம் நடைபெற்று ஓரிரு நாட்களில் கொலை செய்யப்பட்ட பெண் வேலை செய்த கடை உரிமையாளர் மற்றும் அங்கு பணியாற்றிய மற்றுமொரு பெண் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணைகளின் பின் நீதிமன்றில் முற்படுத்திய வேளை அவர்கள் இருவரையும் விளக்கமறியலில் வைக்க மன்று உத்தரவிட்டிருந்தது. இந்நிலையிலையே இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். https://globaltamilnews.net/2025/222314/
  8. கோவை மாணவி பாலியல் பலாத்காரம்.. 3 பேரை சுட்டு பிடித்த காவல்துறை 4 Nov 2025, 1:54 AM கோவையில் கல்லூரி மாணவி பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்ட விவகாரத்தில் தலைமறைவாக இருந்த குற்றவாளிகள் மூன்று பேரை, போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோவை விமான நிலையத்தின் பின்புறம் உள்ள பிருந்தாவன் நகர் பகுதி அருகே கடந்த ஞாயிறன்று இரவு கல்லூரி மாணவி தன் நண்பருடன் பேசிக் கொண்டிருந்த நிலையில் அங்கு வந்த 3 பேர் ஆண் நண்பரை தாக்கி விட்டு பெண்ணை தூக்கிச் சென்றனர். சிறிது தொலைவில் வைத்து மாணவியை கொடூரமான வகையில் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து விட்டு நிர்வாண நிலையில் அங்கேயே விட்டு சென்றுள்ளனர். மயக்கம் தெளிந்த நிலையில் மாணவியின் நண்பர் அளித்த தகவலின் பேரில் அங்கு விரைந்து வந்த காவல்துறையினர் அவரை மீட்டு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். மாணவியை தேடிய போலீசார் நேற்று அதிகாலையில் நிர்வாணமாக இருந்த நிலையில் அவரை மீட்டனர். இதைத்தொடர்ந்து மாணவியும், அவரது நண்பரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தமிழகம் முழுவதும் கடும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. கோவை மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதற்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்களும், பெண்கள் அமைப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். பாஜக மகளிரணி தலைவரும், கோவை எம்எல்ஏ-வுமான வானதி சீனிவாசன் தலைமையில் நேற்று மாலை பாஜகவினர் தீப்பந்தம் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். சுட்டு பிடித்த காவல்துறை இந்த சம்பவத்தில் தலைமறைவாக இருந்த குற்றவாளிகள் மூன்று பேரை, நள்ளிரவில் கோவை வெள்ளகிணறு பட்டத்தரசியம்மன் கோயில் பகுதியில் போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். குணா தவசி, சதீஷ் கருப்பசாமி, கார்த்திக் காளீஸ்வரன் ஆகிய 3 பேரும் காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். https://minnambalam.com/police-arrest-3-men-for-gang-raping-student/
  9. எதிர்க்கட்சிகளின் ஒன்றிணையும் முயற்சி அரசாங்கத்துக்கு சவாலாக அமையுமா? Veeragathy Thanabalasingham on November 4, 2025 Photo, GETTY IMAGES மிகப் பெரிய வாக்கு வங்கியைக் கொண்ட தனியொரு அரசியல் கட்சி என்ற வகையில் ஐக்கிய தேசிய கட்சிக்கு எதிராக மற்றைய கட்சிகள் குறிப்பாக, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் இடதுசாரிக் கட்சிகளும் கூட்டணி அமைத்து தேர்தல்களில் போட்டியிட்ட காலம் ஒன்று இருந்தது. எஸ்.டபிள்யூ. ஆர்.டி. பண்டாரநாயக்க தொடக்கம் அவரது மனைவி சிறிமாவோ பண்டாரநாயக்க, மகள் சந்திரிகா குமாரதுங்க மற்றும் மகிந்த ராஜபக்‌ஷ ஆகியோர் தலைமையில் சுதந்திர கட்சி இருந்த வரை ஐக்கிய தேசிய கட்சிக்கு எதிரான இந்தக் கூட்டணி அரசியல் தொடர்ந்தது. கடந்த நூற்றாண்டில் சுதந்திர கட்சி தலைமையிலான கூட்டணிகள் வெற்றி பெற்று அதிகாரத்துக்கு வந்த சில பொதுத் தேர்தல்களில் கூட நாடுபூராகவும் பெற்ற மொத்த வாக்குகளைப் பொறுத்தவரை ஐக்கிய தேசிய கட்சியே முன்னணியில் இருந்ததுண்டு. ஆனால், இன்று அதே ஐக்கிய தேசிய கட்சி ரணில் விக்கிரமசிங்கவின் 30 வருட கால தலைமைத்துவத்தின் கீழ் படுமோசமாக பலவீனமடைந்த நிலையில், இலங்கையின் அரசியல் வரலாற்றில் முதன் முறையாக ஜனநாயக தேர்தல் மூலம் அதிகாரத்துக்கு வந்த இடதுசாரிக் கட்சி கூட்டணி என்ற சாதனையைப் படைத்த ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி.) தலைமையிலான தேசிய மக்கள் சக்திக்கு எதிராக கட்சிகளை அணிதிரட்டும் நடவடிக்கைகளில் இறங்கியிருக்கிறது. பெரிய வாக்கு வங்கியைக் கொண்ட தனியொரு கட்சியாக ஐக்கிய தேசிய கட்சி முன்னர் விளங்கியதால் தொடர்ந்தும் அதிகாரத்தில் இருப்பதை நோக்கமாகக் கொண்டுதான் முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தன விகிதாசாரப் பிரதிநிதித்துவ தேர்தல் முறையை அறிமுகப்படுத்தினார் என்று கூறப்பட்டதுண்டு. ஆனால், அதே தேர்தல் முறையின் கீழ் ஐக்கிய தேசிய கட்சியின் ஒரு உறுப்பினர் கூட நாடாளுமன்றத்துக்கு தெரிவுசெய்யப்படாத பொதுத் தேர்தலையும் நாம் கண்டோம். அதேவேளை, சில வருடங்களுக்கு முன்னர் வெறுமனே மூன்று சதவீத வாக்கு வங்கியைக் கொண்டிருந்த தேசிய மக்கள் சக்தி விகிதாசார பிரதிநிதித்துவ தேர்தல் முறையின் கீழ் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டுக்கும் அதிகமான ஆசனங்களைக் கைப்பற்றக்கூடியதாக அரசியல் நிலைவரங்கள் மூன்று வருடங்களுக்கு முன்னர் முற்றுமுழுதாக மாற்றம் கண்டன. கடந்த ஒரு வருடமாக பதவியில் இருந்துவரும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு எதிராக தற்போது மிகவும் பலவீனமான நிலையில் இருக்கும் பிரதான பாரம்பரிய அரசியல் கட்சிகளான ஐக்கிய தேசிய கட்சி, சுதந்திர கட்சி மற்றும் ஒப்பீட்டளவில் புதிய கட்சியான ராஜபக்‌ஷர்களின் பொதுஜன பெரமுனவும் ஒன்றிணைந்து செயற்படுவதற்கு முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றன. இந்த பழைய கட்சிகளில் எந்த ஒன்றுமே கட்டுறுதியான கட்டமைப்புக்களை கொண்டவையாக இன்று இல்லை. ஆனால், கடந்த வருடத்தைய தேசிய தேர்தல்களில் மக்களால் நிராகரிக்கப்பட்ட இந்தக் கட்சிகள் இன்றைய அரசியல் சூழ்நிலையில் அவற்றுக்கு ஒரு பொருத்தப்பாட்டை தேடிக்கொள்ள வேண்டிய அரசியல் நிர்ப்பந்தத்தில் இருக்கின்றன. தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நாட்டு மக்களுக்கு வழங்கிய பெருவாரியான தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் இருக்கிறது என்பதும் அதன் விளைவான மக்களின் வெறுப்பை கடந்த உள்ளூராட்சி தேர்தல்களில் தேசிய மக்கள் சக்தியின் வாக்குகளில் ஏற்பட்ட கணிசமான வீழ்ச்சி வெளிக்காட்டியது என்பதும் உண்மை. ஆனால், எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயற்படுவதற்கு முன்னெடுக்கும் முயற்சிகள் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை முன்னிலைப்படுத்துவனவாக இல்லாமல் முன்னைய அரசாங்கங்களில் முக்கிய பொறுப்புக்களை வகித்த அரசியல்வாதிகளின் ஊழல் மற்றும் முறைகேடுகளுக்கு எதிராக தற்போது முன்னெடுக்கப்படும் சட்ட நடவடிக்கைகளை மையப்படுத்தியவையாகவே இருக்கின்றன. முன்னாள் ஜனாதிபதிகள் அரச பணத்தில் அனுபவித்துவந்த வரப்பிரசாதங்களை இல்லாமல் செய்வதற்கு அரசாங்கம் சட்டத்தைக் கொண்டுவந்த வேளையிலும் கூட எதிர்க்கட்சிகளை ஐக்கியப்படுத்துவதற்கு முயற்சிக்கப்பட்டது. ஜனாதிபதியாகப் பதவி வகித்தபோது விக்கிரமசிங்க தனிப்பட்ட வெளிநாட்டு பயணத்துக்கு அரச நிதியைப் பயன்படுத்தியதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் அவர் கடந்த ஆகஸ்ட் பிற்பகுதியில் கைது செய்யப்பட்டபோது அவருக்கு ஆதரவையும் ஒருமைப்பாட்டையும் வெளிக்காட்டிய எதிர்க்கட்சிகள் பிறகு நாளடைவில் அரசாங்கத்துக்கு எதிராக அணிதிரளுவதற்கான முயற்சிகளில் இறங்கின. முன்னைய அரசாங்கங்களில் பதவிகளை வகித்த அரசியல்வாதிகளில் பலர் எந்த நேரத்திலும் தாங்கள் ஊழல் குற்றச்சாட்டுக்களின் பேரில் கைதுசெய்யப்படக்கூடும் என்ற பீதியில் இருக்கிறார்கள் என்பது ஒன்றும் இரகசியமானது அல்ல. முன்னாள் ஜனாதிபதி விக்கிரமசிங்கவுக்கு எதிரான வழக்கு மற்றும் சில அரசியல்வாதிகளுக்கு எதிராக இதுவரையில் எடுக்கப்பட்ட சட்ட நடவடிக்கைகளை ‘அரசியலமைப்பு சர்வாதிகாரம்’ என்று வர்ணிக்கும் எதிர்க்கட்சிகள் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஜனநாயக விரோதப் போக்கிற்கு எதிராக போராட்டத்துக்கு அறைகூவல் விடுத்திருக்கின்றன. செப்டெம்பர் முற்பகுதியில் இடம்பெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் 79ஆவது வருடாந்த மகாநாட்டை விக்கிரமசிங்க எதிர்க்கட்சிளை ஓரணியில் கொண்டு வருவதற்கான ஒரு சந்தர்ப்பமாக பயன்படுத்துவதில் அக்கறை காட்டினார். அந்த மகாநாட்டில் ஐக்கிய தேசிய கட்சியின் அரசியல்வாதிகளை விடவும் மற்றைய கட்சிகளின் அரசியல்வாதிகளே கூடுதல் எண்ணிக்கையில் காணப்பட்டார்கள். நவம்பர் 21ஆம் திகதி தலைநகர் கொழும்புக்கு வெளியே நுகேகொடையில் அரசாங்கத்துக்கு எதிரான பிரமாண்டமான பேரணியொன்றை நடத்துவதற்கான ஏற்பாடுகளை எதிர்க்கட்சிகள் செய்து வருகின்றன. இந்த பேரணியில் ஐக்கிய தேசிய கட்சி, பொதுஜன பெரமுன, சுதந்திர கட்சி, சந்திரிகா தலைமையில் மூன்று தசாப்தங்களுக்கு முன்னர் அமைக்கப்பட்ட மக்கள் முன்னணியின் பெயரில் தங்களை அடையாளப்படுத்தும் சில அரசியல்வாதிகள் மற்றும் பிவிதுறு ஹெல உறுமய ஆகியவை பங்கேற்கவிருப்பதாக இதுவரையில் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. பிரதான எதிர்க் கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி இதில் கலந்துகொள்ளப் போவதில்லை என்று திட்டவட்டமாக அறிவித்திருக்கிறது. 2015 ஜனவரி ஜனாதிபதித் தேர்தலில் தோல்வி கண்ட மகிந்த ராஜபக்‌ஷவின் அரசியல் மீள் எழுச்சிக்கு வழிவகுப்பதற்கு நேசக்கட்சிகளின் தலைவர்கள் ‘மகிந்த காற்று’ என்ற பெயரில் சில வாரங்களிலேயே நுகேகொடையில்தான் மிகவும் வெற்றிகரமான பேரணியொன்றை நடத்தினார்கள். அதைத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட அரசியல் பிரசாரங்கள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன என்ற புதிய அரசியல் கட்சி தொடங்கப்படுவதற்கும் ராஜபக்‌ஷர்கள் மீண்டும் அதிகாரத்துக்கு வழிவகுத்தன. அதனால் நுகேகொடையில் முதல் பேரணியை நடத்துவதன் மூலம் அரசாங்கத்துக்கு எதிரான பிரசாரங்களை முன்னெடுத்தால் வெற்றிகரமாக அமையும் என்று எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் நம்புகிறார்கள் போலும். 2015 ஜனாதிபதி தேர்தலில் சிறுபான்மைச் சமூகங்களின் அதிகப் பெரும்பான்மையான வாக்குகளை பெற்றதன் காரணத்தினாலேயே மைத்திரிபால சிறிசேன வெற்றிபெறக்கூடியதாக இருந்தது. சிங்கள மக்களின் வாக்குகள் பெருமளவில் மகிந்த ராஜபக்‌ஷவுக்கே கிடைத்தன. சிறிசேனவுக்கு கிடைத்தவை ‘ஈழம் வாக்குகள்’ என்று ராஜபக்‌ஷ கூறவும் தவறவில்லை. இலங்கை அரசியலில் இரு துருவங்களாக இருந்து வந்த ஐக்கிய தேசிய கட்சியும் சுதந்திர கட்சியும் முதல் தடவையாக கூட்டுச் சேர்ந்து அமைத்த ‘நல்லாட்சி’ அரசாங்க பரீட்சார்த்தம் படுதோல்வியில் முடிவடைந்ததைத் தொடர்ந்து இனவாத அணிதிரட்டலை முன்னெடுத்து ராஜபக்‌ஷர்களினால் மீண்டும் அதிகாரத்துக்கு வரக்கூடியதாக இருந்தது. அதற்குப் பிறகு இடம்பெற்றவை அண்மைக்கால வரலாறு. ஆனால், அதைப் போன்றதொரு சூழ்நிலை இன்று இல்லை. முன்னென்றும் இல்லாத நாடாளுமன்ற பெரும்பான்மைப் பலத்துடன் தேசிய மக்கள் சக்தி பதவிக்கு வந்து ஒரு வருடம் மாத்திரமே கடந்திருக்கிறது. மகிந்த ராஜபக்‌ஷவை மையப்படுத்தி அன்று ‘நல்லாட்சி’ அரசாங்கத்துக்கு எதிராக வெற்றிகரமான பிரசாரங்களை முன்னெடுக்கக் கூடியதாக இருந்ததைப் போன்று இன்றைய அரசாங்கத்துக்கு எதிரான பிரசாரங்களுக்கு மக்களை அணிதிரட்டக்கூடிய ஒரு பலம்பொருந்திய அரசியல் தலைவர் எதிர்க்கட்சிகள் மத்தியில் இல்லை. ஒரு வருட காலத்திற்குள் நடைபெற்ற மூன்று தேர்தல்களின் முடிவுகளின் அடிப்படையில் நோக்கும்போது எதிர்க்கட்சிகள் மத்தியில் பெரிய வாக்கு வங்கியைக் கொண்டதாக ஐக்கிய மக்கள் சக்தியே விளங்குகிறது. மக்கள் ஆதரவை இழந்த மற்றைய கட்சிகளுடன் இணைந்து செயற்படுவதன் மூலமாக பெரிய அரசியல் அனுகூலம் தங்களுக்கு கிடைக்கப்போவதில்லை என்ற அபிப்பிராயத்தை அந்தக் கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச கொண்டிருக்கிறார் போன்று தெரிகிறது. அத்துடன், எதிர்க்கட்சிகள் கூட்டாக ஏற்பாடு செய்கின்ற பேரணியில் தனது தலைமைத்துவ ஆளுமைக்கு ஏற்படக்கூடிய தாக்கம் குறித்தும் அவர் சந்தேகத்தைக் கொண்டிருக்கிறார் போன்று தெரிகிறது. ரணில் விக்கிரமசிங்கவுடனும் பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்‌ஷவுடனும் ஒரே மேடையில் தோன்றுவதில் பிரமேதாசவுக்கு அசௌகரியம் இருக்கும் என்பது நிச்சயம். அத்துடன், ஐக்கிய தேசிய கட்சியையும் தனது கட்சியையும் இணைப்பதற்கு முன்னெடுக்கப்படும் முயற்சிகளையும் அவர் விரும்பவில்லை. அத்தகைய ஒரு இணைவு தனது அரசியல் வாழ்வுக்கு முடிவுகட்டி விடக்கூடும் என்று அவர் அஞ்சுகிறார். தனது எதிர்கால அரசியல் வாய்ப்புக்களை மனதிற்கொண்டே நகர்வுகளைச் செய்வதில் அக்கறை கொண்டிருக்கிறார். அரசாங்கத்தின் ஜனநாயக விரோதச் செயற்பாடுகளுக்கு எதிரான அரசியல் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கத் தயார் என்று அறிவித்திருக்கும் பிரேமதாச, கூட்டணிகளில் இணைந்து கொள்வதை தவிர்கிறார். அதனால் கணிசமானளவுக்கு மக்கள் ஆதரவைக் கொண்ட பெரிய எதிர்க்கட்சி இல்லாமல் எதிர்க்கட்சிகளின் முயற்சிகள் எந்தளவுக்கு வெற்றிகரமானதாக அமையும் என்ற கேள்வி எழுகிறது. அரசாங்கத்துக்கு எதிராக ஒன்றிணையும் எதிர்க்கட்சிகள் மத்தியில் கொள்கை ரீதியில் பெருமளவுக்கு ஒற்றுமையும் கிடையாது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், தமிழ் முற்போக்குக் கூட்டணி மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் போன்ற சிறுபான்மைச் சமூகங்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் அரசியல் கட்சிகள் எதிர்க்கட்சிகளின் ஒன்றிணையும் முயற்சிகளில் பங்கேற்பதிலும் சிக்கல் இருக்கிறது. சிறுபான்மைச் சமூகங்களின் நியாயபூர்வமான அரசியல் அபிலாசைகளில் குறைந்தபட்சமானவற்றைக் கூட ஆதரிக்காத உதய கம்மன்பில போன்ற அரசியல்வாதிகளின் ஈடுபாடு இதற்கு ஒரு முக்கியமான காரணம். தற்போதைய நிலைவரம் காரணமாக ஒன்றிணைந்து செயற்படவேண்டிய நிர்ப்பந்தத்தில் எதிர்க்கட்சிகள் இருக்கின்றன. ஆனால், தேர்தல் ஒன்று வரும்போது இந்தக் கட்சிகள் ஒரு கூட்டணியாகச் செயற்படுவதற்கான சாத்தியங்கள் குறைவு. ஊழல் மற்றும் முறைகேடுகள் தொடர்பான குற்றச்சாட்டுக்களின் பேரில் அரசியல்வாதிகளுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் சட்ட நடவடிக்கைகளை அரசாங்கத்தின் சர்வாதிகாரப் போக்கு என்றும் ஜனநாயக விரோதமானது என்று எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டுவதை மக்கள் எவ்வாறு நோக்குகிறார்கள் என்பது முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய ஒரு அம்சமாகும். அதேவேளை, அரசியலமைப்பு சர்வாதிகாரம் தொடர்பில் அரசாங்கத்தைக் குற்றஞ்சாட்டும் இந்தக் கட்சிகள் அதற்கு அடிப்படைக் காரணமான நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையை (புதிய அரசியலமைப்பு கொண்டுவரப்படும் வரை காத்திராமல்) அரசாங்கம் அதற்கு இருக்கும் நாடாளுமன்ற பெரும்பான்மைப் பலத்தைப் பயன்படுத்தி அரசியலமைப்பு திருத்தம் ஒன்றின் மூலமாக நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை முதன்மைப்படுத்தும் இயக்கத்தை முன்னெடுப்பதில் அக்கறை காட்டலாமே. வீரகத்தி தனபாலசிங்கம் https://maatram.org/articles/12394
  10. இலங்கையில் 13,000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பொது வெளிகளில் மலம் கழிப்பதாக தகவல்! November 4, 2025 இலங்கையில், 13,000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இன்னும் காடுகள் மற்றும் கடற்கரைகள் போன்ற திறந்தவெளிகளில் மலம் கழிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிவரத் திணைக்களத்தின் தரவுகளின் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது. 2024 மக்கள் தொகை மற்றும் வீட்டுவசதி கணக்கெடுப்பின் படி நாட்டின் 6,111,315 குடும்ப அலகுகளில் 0.2 சதவீதம் அதாவது, மொத்தம் 13,326 குடும்பங்கள் கழிப்பறை வசதிகள் இல்லாமல் தொடர்ந்து வாழ்கின்றன என்பதைக் காட்டுகிறது. 92.2 சதவீத வீடுகளில் தனியாக கழிப்பறைகள் உள்ளன என்றும், 5.8 சதவீதம் மற்ற குடும்பங்களுடன் கழிப்பறை வசதிகளைப் பகிர்ந்து கொள்வதாகவும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சுமார் 0.2 சதவீதம் பேர் பொது கழிப்பறைகளை நம்பியுள்ளனர், மேலும் 0.2 சதவீதம் பேர் திறந்தவெளிகளைப் பயன்படுத்துகின்றனர். கொழும்பு மாவட்டத்தில் பொது கழிப்பறைகளைப் பயன்படுத்தும் அதிக எண்ணிக்கையிலான குடும்பங்கள் பதிவாகியுள்ளன. 4518 குடும்பங்கள் இவ்வாறு பொது கழிப்பறைகளை பயன்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் கொழும்பு மாவட்டத்தின் 207 குடும்பங்கள் எந்த கழிப்பறைகளையும் பயன்படுத்துவதில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, நுவரெலியா மாவட்டம் பகிரப்பட்ட கழிப்பறை பயன்பாட்டின் மிக உயர்ந்த விகிதத்தைக் கொண்டுள்ளது. இது பெருந்தோட்டப் பகுதிகளில் சுகாதார சவால்களை பிரதிபலிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தின் கிராமப்புறங்களில், சுகாதார வசதிகளை அணுகுவதில் உள்ள இந்த இடைவெளிகள், சுகாதாரம் மற்றும் சுத்தத்திற்கு நீண்டகால ஆபத்துகளை ஏற்படுத்துகின்றன என்று பொது சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இந்நிலையில், கிராமப்புற சுகாதார திட்டங்களை வலுப்படுத்தவும், ஒவ்வொரு வீட்டிற்கும் பாதுகாப்பான மற்றும் தனிப்பட்ட கழிப்பறைகளை உறுதி செய்வதற்காக உள்கட்டமைப்பை மேம்படுத்தவும் அவர்கள் வலியுறுத்துகின்றனர். https://www.ilakku.org/more-than-13000-families-in-sri-lanka-are-reported-to-defecate-in-public-spaces/
  11. "பாகிஸ்தான் அணு ஆயுத சோதனையில் ஈடுபடுகிறது" - டிரம்ப் குற்றச்சாட்டு : பாகிஸ்தான், சீனா மறுப்பு 04 Nov, 2025 | 10:43 AM ரஷ்யா மற்றும் சீனா மட்டுமின்றி, வடகொரியாவும் பாகிஸ்தானும் அணு ஆயுத சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றன என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார். அண்மையில் ஆசியப் பயணத்தை முடித்துவிட்டு அமெரிக்கா திரும்பிய டிரம்ப், அங்கு அணு ஆயுதச் சோதனை நடத்தப் பாதுகாப்புத் துறைக்கு உத்தரவிட்ட நிலையில், தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் இந்தக் கருத்தைத் தெரிவித்தார். அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலில், "ரஷ்யாவும், சீனாவும் அணு ஆயுத சோதனைகளில் ஈடுபடுகின்றன. ஆனால் இது குறித்து அவர்கள் வெளிப்படையாகப் பேச மாட்டார்கள்." "ஆனால் நாம் அப்படி இல்லை. நாம் வேறுபட்டவர்கள், வெளிப்படையான சமூகம். நாம் சோதனைகளை நடத்தப் போகிறோம் என வெளிப்படையாகக் கூறியுள்ளோம்." "மற்றவர்களும் அணு ஆயுத சோதனைகளை நடத்தித்தான் வருகிறார்கள். வடகொரியாவும், பாகிஸ்தானும் அணு ஆயுத சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றன." டிரம்ப் ஆசியப் பயணத்தில் இருந்தபோது, அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ரஷ்யா அணு ஆயுதம் தாங்கிய ஏவுகணைச் சோதனையில் ஈடுபட்டதாகச் செய்திகள் வெளியாகின (எனினும் ரஷ்யா ஏவுகணை அணு ஆயுத வல்லமை பெற்றதல்ல என மறுத்தது). இதனைத் தொடர்ந்து, ஆசியப் பயணத்தை நிறைவு செய்துவிட்டு அமெரிக்கா திரும்பிய டிரம்ப், அணு ஆயுதச் சோதனை நடத்த அந்நாட்டுப் பாதுகாப்புத்துறைக்கு உத்தரவிட்டார். இதன் மூலம் 33 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்காவில் அணு ஆயுத சோதனை நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அணு ஆயுதச் சோதனைகள் குறித்துப் பேசியதற்குப் பின்னர் சீனா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் உத்தியோகபூர்வ பதில்கள் மற்றும் மறுப்புகள் உடனடியாக வெளியாகியுள்ளன. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், பாகிஸ்தான் இரகசியமாக அணு ஆயுதச் சோதனைகளில் ஈடுபட்டு வருகிறது என்று குற்றம் சாட்டியதற்குப் பாகிஸ்தானின் வெளியுறவுத் துறை அமைப்பில் இருந்து உடனடியாகவும், அதிகாரப்பூர்வமாகவும் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. டிரம்பின் இந்தக் குற்றச்சாட்டுகள் முற்றிலும் ஆதாரமற்றவை என்று பாகிஸ்தான் அறிவித்துள்ளது. பாகிஸ்தான், அணு ஆயுதப் பரவல் தடுப்பு குறித்த சர்வதேச விதிகள் மற்றும் நெறிமுறைகளுக்குத் தொடர்ந்து கட்டுப்படுவதாகவும், அணு ஆயுத சோதனைகளை நிறுத்தி வைப்பதற்கான அதன் உறுதிப்பாட்டைத் தொடர்ந்து கடைப்பிடிப்பதாகவும் வலியுறுத்தியுள்ளது. டிரம்ப் அணு ஆயுதச் சோதனை குற்றச்சாட்டுகளை முன்வைத்த பின்னர், சீன வெளியுறவு அமைச்சகம் உடனடியாகப் பதிலளித்தது. அணு ஆயுத சோதனைகளில் சீனா ஈடுபட்டு வருவதாக டிரம்ப் கூறிய குற்றச்சாட்டைச் சீனா திட்டவட்டமாக மறுத்தது. அணு ஆயுதச் சோதனைகளைத் தடை செய்யும் விரிவான அணு சோதனைத் தடை ஒப்பந்தத்தை (Comprehensive Nuclear-Test-Ban Treaty - CTBT) சீனா உறுதியாக ஆதரிப்பதாகவும், அதன் உறுப்பினராக இருப்பதாகவும் கூறியுள்ளது. மேலும், அணு ஆயுதச் சோதனைகளை நிறுத்தி வைப்பதற்கான அதன் வாக்குறுதியை சீனா எப்போதும் மதிக்கும் என்று தெரிவித்தது. வடகொரியாவைப் பொறுத்தவரை, அந்த நாட்டின் அணு ஆயுதச் சோதனைகள் பற்றிய குற்றச்சாட்டுகள் ஒரு புதிய விஷயம் அல்ல. வடகொரியா பொதுவாக இத்தகைய குற்றச்சாட்டுகளுக்கு நேரடியான பதில் அளிப்பதை விட, அமெரிக்காவின் அணு ஆயுத அச்சுறுத்தல்கள் குறித்துப் பேசுவதையே வழக்கமாகக் கொண்டுள்ளது. வடகொரியா கடந்த சில ஆண்டுகளாகவே அணு ஆயுத மற்றும் ஏவுகணைச் சோதனைகளைத் தொடர்ந்து நடத்துகிறது. இதற்கு முன்னரும், டிரம்ப் மற்றும் கிம் ஜோங் உன் இடையே அணு ஆயுத 'பட்டன்' குறித்து வெளிப்படையான வார்த்தைப் போர் நீடித்து வந்தது குறிப்பிடத்தக்கது https://www.virakesari.lk/article/229440
  12. மீண்டும் உருவாகும் தமிழீழ அச்சம் லக்ஸ்மன் அரசாங்கம் நாட்டுக்குள் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது பற்றிப் பேசிக்கொண்டு அதற்கான எதனையும் செய்யாமல் பாராமுகமாக இருந்து வருகின்றது. இருந்தாலும், தங்களது திட்டமிட்ட செயற்பாடுகளை நகர்த்துகிறது. ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் ஏற்படுத்தப்பட்ட தீர்மானத்தின் பின்னர் தமிழீழத்தைப் பற்றியும் பிரிவினை பற்றியும் தமிழர்களைவிடவும் சிங்களத் தரப்பினரே பேசிவருகின்றன. கடந்த வாரத்தில், ஐ.நாவில் இலங்கை இராணுவத்தினருக்கு எதிரான பழிவாங்கல் தொடர்பாக ஒரு நிகழ்வு கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்வில் பேசிய முன்னாள் கடற்படை அதிகாரி ஓய்வு பெற்ற ரியர் அத்மிரல் டி.கே.பி.தசநாயக்க, இலங்கையில் அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தி வடக்கு, கிழக்கை வேறாக்குவதே ஐக்கிய நாடுகள் சபையின் நோக்கம் என்று தெரிவித்திருக்கிறார். அதே நேரத்தில் தமிழீழம் என்ற வார்த்தையையும் பயன்படுத்தியிருக்கிறார். இவர்களுடைய நிகழ்வின் நோக்கம் இராணுவத்தினர், பாதுகாப்புத் தரப்பினருடைய நெருக்கடிகளுக்கானதாக இருந்தாலும் தமிழர்கள் அதிகாரம் பெறுவதைத் தடுப்பது தொடர்பிலேயே இருந்துள்ளது. அதே நேரத்தில், தனியார் தொலைக்காட்சி ஒன்றின் கலந்துரையாடலில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் திலும் அமுனுகம புலம்பெயர் அமைப்புக்கள் இலங்கையில் தனி இராச்சியம் ஒன்றை உருவாக்குவதற்காகவே நிதி சேகரித்துவருவதாகவும், புலம்பெயர் தமிழ் அமைப்புக்களின் கட்டளைக்கமைய அரசாங்கம் மாகாண சபைத் தேர்தலை நிச்சயம் நடத்தும் என்றும் கூறியிருக்கிறார். இவர்கள் இருவருடைய கருத்துக்களின் அடிப்படையில், மாகாணசபைத் தேர்தல், 13ஆவது அரசியலமைப்புத் ஆகியவை உள்ளடங்கியிருந்தன. கடந்த வருடத்தில் நடைபெற்ற தேர்தல்களில் வடக்கு, கிழக்குத் தமிழ் மக்களின் பேராதரவு தேசிய மக்கள் சக்திக்குக் கிடைத்திருந்தது. தமது பிரச்சினைகளுக்கு இந்த அரசாங்கம் தீர்வுகாணும் என்ற நம்பிக்கையிலேயே தமிழ் மக்கள் இந்த ஆதரவை வழங்கியிருந்தார்கள். பொறுப்புக்கூறல் விடயத்திலும் ஏதோ ஒரு வகையில் இந்த அரசாங்கம் நீதியை பெற்றுத் தரும் என்றும் தமிழ் மக்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், தமிழ் மக்களின் இந்த எதிர்பார்ப்புக்களைப் பூர்த்திச் செய்யும் வகையில் அரசாங்கத்தின் செயற்பாடுகள் இதுவரை அமைந்திருக்கவில்லை. ஆனால், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் பிரித்தானியா உள்ளிட்ட நாடுகளால் கொண்டுவரப்பட்ட பிரேரணையிலும் பல திருத்தங்களை மேற்கொண்ட அரசாங்கம் இறுதியில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தினை ஏற்க மாட்டோம் என்றே தெரிவித்திருந்தது. தமிழர் தரப்பால் முழுமையான ஆதரவு பெற்ற தீர்மானமாக இல்லாத போதிலும் இந்தத் தீர்மானத்தினை தமிழீழம் அமைத்துக் கொடுக்கவிருக்கும் தீர்மானமாகவே பெரும்பான்மை சமூகம் பார்க்கிறது என்பதற்கான சில உதாரணங்களே அதிலும் அமுனுகம மற்றும் தசநாயக்க ஆகியோரது கருத்துக்களைக் கொள்ளலாம். ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றதையடுத்து, ஜனாதிபதியாக அனுரகுமார திசாநாயக்க பதவியேற்றார். கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் கூட்டத் தொடரின்போது, 2022ஆம் ஆண்டு இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையை மேலும் ஒரு வருட காலத்துக்கு நீடிப்பதற்கான முன்னெடுப்பு மேற்கொள்ளப்பட்டபோது, அதனைத் தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது உடனடியாகவே கடுமையாக எதிர்த்திருந்தது. அது மாத்திரமல்லாமல், மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சாட்சியங்களைத் திரட்டும் ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுவின் கட்டமைப்பையும் கடுமையாக எதிர்த்திருந்தது. பிரேரணை ஒரு வருட காலம் நீடிக்கப்படக் கூடாதென்ற நிலைப்பாட்டிலேயே அரசாங்கம் இருந்தது. ஏனெனில், தேர்தல் பிரசாரத்திலும் தேர்தல் விஞ்ஞாபனத்திலும் இராணுவத்திற்கெதிரான நடவடிக்கைகளுக்கு ஒருபோதும் இடமளியோம் என்பதே அவர்களது உறுதிமொழியாகும். இந்த உறுதிமொழியில் பிழை ஏற்படுவதற்குத் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஒருபோதும் இடங்கொடுக்காது. பொறுப்புக்கூறல் விடயத்தில் எதிர்மறையான செயற்பாட்டையும் நிலைப்பாட்டையும் அரசாங்கம் கொண்டிருக்கிறது. நல்லாட்சி அரசாங்க காலத்தில் நிறைவேற்றப்பட்ட காணாமல்போனோருக்கான அலுவலகம் மற்றும் இழப்பீட்டு அலுவலகம் என்பவற்றின் செயற்பாடுகள் இறுக்கமான கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருக்கிறது. இப்போது ஏற்படுத்தப்பட்டிருக்கும் மனித உரிமைப் பேரவையின் தீர்மானம் ஒருபக்கம் வைக்கப்பட்டபடி அரசாங்கம் தன்னுடைய வேலைகளை நகர்த்திக் கொண்டிருக்கிறது. ஆனாலும், சிங்கள அடிப்படைவாதிகள் தங்களுடைய வேலைகளை முன்னெடுக்கின்றனர். தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பதவியேற்றதன் பின்னர் மேற்கொள்ளப்படும் செயற்பாடுகள் நல்லிணக்கத்தினை கடந்த அரசாங்கங்கள் திணிக்க முயன்றது போன்றே காணப்படுகிறது. இவ்வாறான நிலையில், 13ஐ அமுல்படுத்துவதும் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதும் தமிழ் மக்களுக்கு நிம்மதியை கொடுத்துவிடப் போவதில்;லை. இதனை உணர்ந்து கொள்ளத் தொடங்கியிருக்கும் தமிழ் மக்கள் மத்தியில் பெரும் ஏமாற்றம் உருவாகிவருகிறது எனலாம். இந்த இடத்தில், நாட்டுக்குள் புலிகளின் மீளுருவாக்கம் என்ற சிங்களவர்களிடமுள்ள அச்சம் சந்தர்ப்ப சூழ்நிலைகளின் அடிப்படையில் காலத்துக்குக் காலம் தூண்டிவிடப்படுவது வழமையாகும். ஒரு காலத்தில் தமிழர்கள் அனைவரையும் புலிகளாகவே சிங்களவர்கள் பார்க்கின்ற சூழல் ஏற்படுத்தப்பட்டிருந்தது, அது அச்சத்தின் பயனாக உருவானதே. யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட பின்னர், அந்த அச்சம் ஓரளவுக்குத் தணிந்திருந்தாலும் முழுமையாக இல்லாமல் போய்விட்டதாக யாரும் கொள்ள வாய்ப்புக்கள் குறைவாகவே காணப்படுகிறன. ஜே.வி.பி. தலைமையிலான ஆட்சி இலங்கையில் உருவானவுடன் போராட்ட இயக்கம் ஒன்றின் ஆட்சி தமிழர்கள் போராட்ட குணம் கொண்டவர்கள் அவர்களுடைய மனோநிலையைப் புரிந்து கொள்வார்கள் என்றே தமிழர் தரப்பு நம்பியிருந்தது. குறிப்பிட்ட சில சந்தர்ப்பங்களில் புலிகளின் மீளுருவாக்கம் குறித்தும் போராட்டம் பற்றியும் தெற்கில் கருத்துக்கள் உருவாக்கப்படுவது வழமையானதாகக் காணப்பட்டது. தற்போது நாட்டுக்குள் உருவாக்கப்படுகின்றவற்றுக்கு அப்பால் புலம்பெயர் நாடுகள் மீது இந்தக் குற்றச்சாட்டுகள் நகர்த்திவிடப்படுகின்றன. திலும் அமுனுகமவின் கருத்து அவ்வாறானதொன்றே. பல தசாப்தங்களாக நடைபெற்ற யுத்தத்தினால் அனுபவித்த கொடுமைகள் சிங்கள மக்களின் மனோநிலையில் அச்சத்தை விதைத்தே வைத்திருக்கிறது என்பது அனைவருக்கும் தெரிந்தது. இந்த அச்சத்தைப் பயன்படுத்த அரசியல் தரப்பினர் வீருப்பங்கொள்வதில் தவறில்லை. என்றாலும், வெளிநாடுகளிலும் உள்நாட்டிலும் நடைபெற்று வருகின்ற தமிழர்களின் அரசியல் ரீதியான முயற்சிகளுக்குத் தடையை ஏற்படுத்தும் வகையில் தற்போது நேரடியாகவும் மறைமுகமாகவும் பின்னப்படுகின்ற தவறான கற்பிதங்களில் ஒன்றாக திலும் அமுனுகம மற்றும் தசநாயக்க ஆகியோருடைய கருத்துக்கள் இருக்கலாம். இலங்கையின் சுதந்திரத்தையடுத்தே உருவான பாகுபாடு, பாரபட்சம் இன்னமும் தொடர்ந்து கொண்டிருக்கையில் நல்லிணக்கம் சாத்தியத்துக்குட்படுத்தக் கூடியதா என்பதுதான் இந்த இடத்தில் கேள்வி. 2022ஆம் ஆண்டில். பௌத்த பிக்குகள் 13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை எரித்தார்கள். அவர்களது அந்த எரிப்பானது 13ஐஅல்ல, ஒட்டுமொத்த நாட்டையே எரித்ததாகப் பேசப்பட்டது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நிகழ்த்திய அக்கிராசன உரையில் பொலிஸ் அதிகாரமற்ற, ஒற்றையாட்சிக்குள்ளே அதிகாரப் பரவலாக்கல் என்ற அடிப்படையில், அதிகாரங்களைப் பரவலாக்கிப் புரையோடிப்போயுள்ள இந்த இனப்பிரச்சினைக்கு ஒரு தீர்வைக்காண வேண்டும். 2023 சுதந்திர தினத்துக்கு முன்னர் தமிழர்களது இனப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும் என்று அறிவித்தார் ஆனால், அதனை நடத்தி முடிக்காமலே அவர் பதவி முடிந்து வீட்டுக்குச் சென்றார். தற்போது நிதிக் குற்ற விசாரணையில் இருக்கிறார். அதிகாரப் பரவலாக்கம் நடைபெறவில்லை. அரசியலமைப்பு சரியாக நடைமுறைப்படுத்தப்படவில்லை. தேர்தல்கள் ஒழுங்கான நடைமுறையில் நடைபெறவில்லை. தமிழர்களின் புரையோடிப்போன பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான வழி கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால், மீண்டும் மீண்டும் நாட்டுக்குள்ளும் புலம் பெயர் நாடுகளிலும் தமிழீழத்தை உருவாக்க முயற்சிகள் நடைபெறுகிறது என்ற கருத்துக்கள் மாத்திரம் பரப்பப்படுகின்றன. இதற்கான காரணங்கள் சரியான முறையில் கையாளப்பட்டாலே தவிர இலங்கையில் நல்லிணக்கம் ஏற்படுத்தப்படாது என்பது மாத்திரமே நிதர்சனமானது. 1948முதல் 30 ஆண்டுகள் அகிம்சை ரீதியான போராட்டம். 30 ஆண்டுகளுக்கு மேலாக ஆயுத ரீதியாக போராட்டம். 2009 மே மாதத்துக்குப் பின்னர் இராஜதந்திர ரீதியான முயற்சிகள் என நகர்ந்து கொண்டிருப்பதைத் தவிர, வேறு ஒன்றும் நடைபெறவில்லை. 1956ஆம் ஆண்டு சிங்களம் மட்டும் சட்டம். அதன்மூலம் சிறி கொண்டுவரப்பட்டது. 1958, 1978, 1983களில், பாரிய இனக் கலவரங்கள் உருவாக்கப்பட்டன. 1983ஆம் ஆண்டு இடம்பெற்ற இனக் கலவரத்தின்போது, தமிழர்கள் கடல் வழியாகத் தப்பிச் செல்லவேண்டிய நிலையும் உருவாகியிருந்தது. 1983 இனக் கலவரத்தைத் தொடர்ந்தே ஆயுதப் போராட்டம் உருக்கொண்டது. வடகிழக்கில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் ஆயுதப் போராட்டத்தில் இணைந்தார்கள். உக்கிரமடைந்த போர் நிலைமையில், 1987ஆம் ஆண்டு இலங்கை இந்திய ஒப்பந்தம் ஏற்பட்டு 13வது திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்டு மாகாணசபை அதிகாரம் உருவாக்கப்பட்டது. ஆனால், அதனை முழுமையாக நடைமுறைப்படுத்த இலங்கை அரசாங்கம் இன்றுவரை தயாராக இல்லை.இந்த நிலையில் தமிழர் தரப்பின் அரசியலில் வெறுத்துப் போன தமிழர்கள் ஆட்சியை மாற்றியும் அடிப்படையில் மாற்றம் ஏற்படாத நாட்டில் தமிழீழ அச்சம் விதைக்கப்படுவதில் எந்தத் தவறுமில்லை என்ற முடிவுக்கே வரமுடியும். https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/மீண்டும்-உருவாகும்-தமிழீழ-அச்சம்/91-367277
  13. யாழில் தேசிய சுனாமி ஒத்திகை நிகழ்வு! சுமாத்திரா தீவை அண்மித்த கடல் பகுதிகளில் பல சிறிய நிலநடுக்கங்கள் தொடர்ச்சியாக பதிவாகிவருவதனால் இலங்கையும் சுனாமிக்கு தயாரான நாடு என்ற வகையில் யாழ்ப்பாணம், களுத்துறை, மாத்தறை, மற்றும் மட்டக்களப்பு ஆகிய நான்கு மாவட்டங்களை பிரதானமாகக் கொண்டு நாட்டின் பிற மாவட்டங்களையும் உள்ளடக்கி தேசிய சுனாமி ஒத்திகை நிகழ்வானது இந்திய பெருங்கடல் பிராந்திய சுனாமி எச்சரிக்கை மையத்தின் கீழ் உள்ள 28 நாடுகளை உள்ளடக்கிய பிராந்திய அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்வின் ஒருபகுதியாக யாழ்ப்பாண மாவட்டத்தில் வடமராட்சி வடக்கு பிரதேச செயலக பிரிவில் உள்ள பருத்தித்துறை கிராம உத்தியோகத்தர் பிரிவான J/401 இல் நாளைய தினம் 05.11.2025 ஆம் திகதி புதன்கிழமை மு.ப 9.00 மணிக்கு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தினால் தேசிய ரீதியாக சுனாமிக்கான ஒத்திகை நிகழ்வொன்று நடைபெறவுள்ளது. இது ஒரு ஒத்திகைச் செயற்பாடு என்பதனால் இது தொடர்பில் பொதுமக்கள் எவரும் குழப்பமடையத் தேவையில்லை என யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார். https://newuthayan.com/article/யாழில்_தேசிய_சுனாமி_ஒத்திகை_நிகழ்வு!#google_vignette
  14. நடிப்பு திறமையால் பலரையும் கவர்ந்த இளைஞன் விபத்தில் பலி! யாழ்ப்பாணம் - தெல்லிப்பழை சந்திக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து சம்பவம் நேற்றைய தினம் திங்கட்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது. விபத்தில் மயிலிட்டியை சேர்ந்த 35 வயதுடைய வசந்த் எனும் இளைஞனே உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞன், மற்றுமொரு மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளாகி, வீதியில் விழுந்தவேளை, அதே வீதியில் வந்த கொண்டிருந்த கனரக வாகனம் இளைஞனுடன் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். குறித்த விபத்தில் உயிரிழந்தவர் யூடியூப் தளமொன்றில் தன் நடிப்பு திறமையால் பலரையும் கவர்ந்த திறமையான ஒரு கலைஞன் என தெரிவிக்கப்படுகின்றது. உயிரிழந்த இளைஞனின் சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக தெல்லிப்பழை மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. குறித்த விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். https://newuthayan.com/article/நடிப்பு_திறமையால்_பலரையும்_கவர்ந்த_இளைஞன்_விபத்தில்_பலி!
  15. தனக்கு அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாக செல்வம் எம்.பி பொலிஸில் முறைப்பாடு! தமக்கு வெளிநாட்டில் இருந்து உயிரச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் காவல்துறையில் முறையிட்டுள்ளார். இந்த முறைப்பாடு, யாழ்ப்பாண காவல்துறையின் கணினிக் குற்றப்பிரிவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில், தாம் இந்த முறைப்பாட்டை பதிவு செய்துள்ளதை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் உறுதிப்படுத்தினார். இதேவேளை ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், ரெலோ அமைப்பின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதனின் வாகனத்தில் திடீர் தீப் பரம்பல் ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் வவுனியா, பட்டானிச்சி புளியங்குளம் பகுதியில் நேற்றுமுன்தினம் மாலை இடம்பெற்றுள்ளது. மன்னார் வீதியில் பயணித்த போது வவுனியா, பட்டானிச்சி புளியங்குளம் பகுதியில் வாகனத்தில் மின்சார சீரின்மை காரணமாக தீப் பரம்பல் ஏற்பட்டது. இதனையடுத்து வாகன சாரதியும், அப் பகுதியில் நின்றவர்களும் துரிதமாக செயற்பட்டு தீயை கட்டுக்குள் கொண்டு வந்திருந்தனர். இச் சம்பவத்தின் போது வாகனத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் பயணிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. https://www.samakalam.com/தனக்கு-அச்சுறுத்தல்-விடு/
  16. இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய குழு உறுப்பினர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் விசேட மத்திய செயற்குழுக் கூட்டம் நாளை(5) புதன்கிழமை வவுனியாவில் நடைபெறவுள்ளது. கட்சித் தலைவர் சி.வி.கே. சிவஞானம் தலைமையில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில் கட்டாயம் பங்கேற்குமாறு மத்திய குழுவின் அனைத்து உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 2026 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம், மாகாண சபைத் தேர்தல், அரசியல் தீர்வை வென்றெடுப்பதற்குரிய நகர்வுகள் உட்பட முக்கிய பல விடயங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளன. அதேவேளை, இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கும், தேசிய மக்கள் சக்தி அரசுக்கும் இடையில் விரைவில் சந்திப்பு இடம்பெறவுள்ளது எனத் தகவல் வெளியாகியுள்ளது. https://www.samakalam.com/இலங்கைத்-தமிழரசுக்-கட்ச-4/
  17. வடக்கு கிழக்கில் எங்களுடைய தேசம் அங்கீகரிக்கப்படும் வரையில் எமது போராட்டம் தொடரும் adminNovember 3, 2025 வடக்கு கிழக்கில் எங்களுடைய தேசம் அங்கீகரிக்கப்பட்டு ஒரு கௌரவமான வாழ்வை இந்த மண்ணில் நிலை நிறுத்தும் வரை, இந்த மண்ணில் நாங்கள் அடிமை தனத்தில் இருந்து விடுவிக்கப்படும் வரை எமது அரசியல் இயக்கத்தின் போராட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என தமிழ் மக்கள் கூட்டணியின் உபசெயலாளர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார். தமிழ் மக்கள் கூட்டணியின் தலைமைக் காரியாலம் இன்றையதினம் திங்கட்கிழமை யாழ்ப்பாணத்தில் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்ட பின்னர் உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், எமது அரசியல் கட்சியின் செயற்பாடுகள் தொடர்பாக அல்லது அதனுடைய வகிபாகம் தொடர்பாக பலரும் பலவிதமாக கருத்துக்கள் சொல்ல முடியும். ஒரு பலவீனமான அமைப்பாக எமது அமைப்பை எங்களுடைய கட்சியை பலரும் விமர்சிக்கக்கூடும். ஆனால் தமிழ் மக்கள் கூட்டணி தான் தமிழ் மக்களுடைய எதிர்காலம் என்கின்ற அசைக்க முடியாத செய்தியை நான் இந்த சந்தர்ப்பத்தில் கூறுகின்றேன் 2009 ஆம் ஆண்டு வரை தங்களுடைய இன்னுயிர்களை ஈகம் செய்து ஒப்பற்ற தியாகங்களை புரிந்து இந்த மண்ணின் எழுச்சிக்காக தமிழ் மக்களுடைய உரிமைக்காக களமாடி மடிந்த அத்தனை உயிர்களின் ஆத்மாக்கள் மீது சத்தியம் செய்தவர்களாக நாங்கள் எங்களுடைய பயணத்தை எங்களுடைய அரசியல் இயக்கத்தை எங்களுடைய அரசியல் கட்சியை நாங்கள் முன்னோக்கி நடத்திக் கொண்டிருக்கின்றோம். அந்த இலட்சியத்தை நாங்கள் ஒருபோதும் கைவிடப்போவதில்லை. எமது மக்கள் இந்த இலங்கை தீவில் குறிப்பாக வடக்கு கிழக்கில் எங்களுடைய தேசம் அங்கீகரிக்கப்பட்டு ஒரு கௌரவமான வாழ்வை இந்த மண்ணில் நிலை நிறுத்தும் வரை இந்த மண்ணில் நாங்கள் அடிமை தனத்தில் இருந்து விடுவிக்கப்படும் வரை எமது அரசியல் இயக்கத்தின் தொடர்ச்சியான போராட்டம் ஒருபோதும் கைவிடப்பட மாட்டாது. உண்மையிலேயே எங்கள் மீது பிரயோகிக்கப் படுகின்ற அழுத்தங்கள் எத்தனை துரோகங்கள் எத்தனை சதிகள் வந்தாலும் நாங்கள் எமது இலட்சியப் பாதையில் இருந்து விலகப் போவதில்லை, இன்று நாம் மிகப்பெரிய சூழ்ச்சிகளுக்குள்ளும் சதி வினைகளுக்குள்ளும் நாங்கள் அகப்பட்டிருக்கின்றோம் ஆணித்தரமாக நான் கூறிக்கொள்ள விரும்புகின்றேன். எங்களுடைய கட்சி சந்தர்ப்பவாத அரசியல் இயக்கமாக அரசியல் கட்சியாக எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் நாங்கள் இருந்து விடப் போவதில்லை. என்பதையும் நாங்கள் மிக ஆணித் தரமாக எமது மக்களுக்கு நாங்கள் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றோம். இந்த மண்ணில் ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்னர் இந்த மண்ணில் குறிப்பிட்ட அல்லது நிலைக்கொண்டிருக்கக்கூடிய தமிழ் அரசியல் கட்சிகள் தங்களுடைய பணியை தமிழ் மக்களை ஒரு தேசமாக காட்டி எழுப்புகின்ற வரலாற்று பயணத்தை சரியாக மேற்கொள்ளவில்லை என்பது எங்களுடைய ஆணித்தரமான நம்பிக்கையாக இருக்கிறது. அதிலிருந்து விலகி ஒரு முன்னுதாரணமான எமது கட்சி பயணிக்க வேண்டும். எவ்வாறு தன்னுடைய கிளைகளை பரப்பி தன்னுடைய கட்டுமானங்களை இந்த மண்ணிலே நிறுவ வேண்டும். அத்தனை விதங்களுக்கும் முன்னுதாரணமாக இந்த மண்ணிலே இந்த கட்சி செயற்பட்டு காட்டும் என்பதை நீங்கள் எதிர்வரும் காலங்களில் எங்களுடைய மக்கள் பார்க்கக்கூடியதாக இருக்கும். அந்த வகையிலே நாங்கள் இழப்புகளுக்கோ அல்லது தேர்தல் தோல்விகளுக்கோ பயந்தவர்களாக நாங்கள் ஒதுங்கி போகப்போகமாட்டோம் என்பதை கூறி, எதிர்கால இந்த தேசத்திற்கான பாய்ச்சலில் தமிழ் தேசியத்தின் எழுச்சியின் பயணத்திலே நீங்கள் அணி திரண்டு பயணிக்க வேண்டும் என்று நான் அன்போடு உரிமையோடு நான் இந்த சந்தர்ப்பத்திலே வேண்டிக்கொள்கின்றேன் என மேலும் தெரிவித்தார். https://globaltamilnews.net/2025/222271/
  18. இலங்கையின் 2024 குடித்தொகை கணிப்பீடு: இலங்கைத் தமிழர்களின் அதிகரிப்பு – உண்மையும் பின்னணியும்! வைத்திய கலாநிதி முரளி வல்லிபுரநாதன். adminNovember 4, 2025 இலங்கையின் 2024 குடித்தொகை கணிப்பீடு: இலங்கைத் தமிழர்களின் அதிகரிப்பு – உண்மையும் பின்னணியும் வைத்திய கலாநிதி முரளி வல்லிபுரநாதன் 📈 ஆச்சரியம் அளிக்கும் புதிய தகவல்: தமிழர்களின் வீதாசாரம் அதிகரிப்பா? (நன்றி: குடித்தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம், இலங்கை ) அண்மையில் வெளியான இலங்கையின் 2024 குடித்தொகை கணிப்பீட்டின் அடிப்படை தகவல்கள் பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. 2012இல் 11.1% ஆக இருந்த இலங்கைத் தமிழர்கள், 2024இல் 12.3% ஆக அதிகரித்துள்ளதாக வெளியான செய்தி, இனவாதிகளின் வன்மத்தையும் அதிகரித்துள்ளது. ஒரு இனத்தின் குடித்தொகை வீதாசாரம் அதிகரிக்க, பொதுவாக கருவளம் (பிறப்பு வீதம்) அதிகரிக்க வேண்டும், இறப்பு வீதம் குறைய வேண்டும் அல்லது குடியேற்றம் அதிகமாக இருக்க வேண்டும். ஆனால், இலங்கைத் தமிழர்களைப் பொறுத்தவரை, அனைத்துக் காரணிகளும் குடித்தொகை வீதாசாரத்தைக் குறைக்கும் திசையிலேயே இருக்கின்றன. 📉 வரலாற்றுப் போக்கு: வீழ்ச்சியும் முரண்பாடான மாற்றமும் உள்நாட்டுப் போர் ஆரம்பித்த காலத்தில் இருந்து, இலங்கைத் தமிழரின் வீதாசாரம் தொடர்ச்சியாகக் குறைந்து வந்தது: ஆண்டு இலங்கைத் தமிழர்களின் வீதாசாரம் முஸ்லிம்களின் வீதாசாரம் 1981 12.7% 7.0% 2012 11.2% 9.2% இந்த அடிப்படையில், 2031ஆம் ஆண்டு இடம் பெறப்போகும் குடித்தொகைக் கணிப்பீட்டில் முஸ்லிம்கள் இலங்கைத் தமிழர்களை முந்திச் செல்வர் என்று நான் எதிர்வு கூறியிருந்தேன். இப்போது இந்த எதிர்வு கூறல்களுக்கு முரணாக வீதாசாரம் அதிகரித்து இருப்பது ஏன் என்பதை நாம் ஆராய வேண்டும். 🔍 உண்மை வெளிச்சம்: அடையாள மாற்றமே அதிகரிப்பின் காரணம் இந்த அதிகரிப்புக்குப் பின்னால் உள்ள உண்மை என்னவென்றால், குடிசன மதிப்பீட்டின் போது சேகரிக்கப்படும் தகவல்களது உண்மைத்தன்மையானது பரிசீலிக்கப்பட்டு உறுதிப்படுத்தப்படுவதில்லை. மாறாக வாய்வழியாகக் கேட்கப்படும் வினாக்களுக்குக் குடியிருப்பாளர் வழங்கும் பதில்கள் நேரடியாக எவ்வித ஆதாரச் சரிபார்ப்புகளும் இன்றிக் குடிசன மதிப்பீட்டாளரால் பதிவு செய்யப்படுவதே நடைமுறையாகும். இந்திய வம்சாவளித் தமிழர்களின் அடையாள மாற்றம்: 1981ஆம் ஆண்டு 5.5% ஆக இருந்த இந்திய வம்சாவளித் தமிழர்கள், அவர்களின் பிறப்பு வீதம் அதிகமாக இருந்தபோதிலும், தம்மைத் தொடர்ச்சியாக இலங்கைத் தமிழர்களாக அடையாளப்படுத்துவதன் காரணமாக: 2012இல் 4.2% ஆகக் குறைந்தது. 2024இல் 2.8% ஆக மேலும் குறைவடைந்துள்ளது. சில ஆய்வாளர்கள் இதை இந்திய வம்சாவளித் தமிழர்களின் கருவளத்தை வேரறுக்கும் சூழ்ச்சித் திட்டங்களால் ஏற்பட்டது எனக் கருத்துக் கூறுகின்றனர். தற்போது வெளியாகிய குடிசனமதிப்பீட்டு அறிக்கையில் உள்ளடங்கியுள்ள பிற தகவல்கள் மற்றும் ஆய்வுகள் இந்திய வம்சாவளித்தமிழர்கள் தம்மை இலங்கைத் தமிழர்களாக அடையாளப்படுத்தியிருக்கலாம் என்ற கருதுகோளினை உறுதிப்படுத்தும் விதமாகவே காணப்படுகின்றன தரவுகள் தெளிவுபடுத்துகின்றன: மொத்த தமிழர்களின் வீதாசாரம்: (இலங்கைத் தமிழர்கள் + இந்திய வம்சாவளித் தமிழர்கள்) 2012இல் (11.1+4.1=15.2) ஆக இருந்தது, 2024இல் (12.3+2.8=15.1) ஆக, அதாவது வெறும் 0.1% மட்டுமே குறைந்துள்ளது. மத ரீதியான கணிப்பீடு: இந்துக்களின் வீதாசாரம் 2012 இல் இருந்து 2024 வரை 12.6% ஆக மாறாமல் இருப்பது இந்த அடையாள மாற்றத்துடன் ஒத்துப் போகிறது. பிராந்திய உதாரணம் (பதுளை மாவட்டம்): 2012 இல் இலங்கைத் தமிழர்கள் 2.7% இலிருந்து 2024இல் 9.4% ஆக அதிகரித்துள்ள அதே வேளையில், இந்திய வம்சாவளித் தமிழரின் வீதாசாரம் 18.5% இலிருந்து 11.0% ஆகக் குறைந்துள்ளது. (நன்றி: குடித்தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம், இலங்கை) இலங்கைத் தமிழர்கள் பதுளைக்கு இடம்பெயர்ந்தமைக்கான காரணங்களோ, ஆதாரங்களோ இல்லாத நிலையில், இந்திய வம்சாவளித் தமிழர்கள் தம்மை இலங்கைத் தமிழர்களாக அடையாளப்படுத்தியிருந்தாலே அன்றி வேறு எந்தக் காரணியும் மேற்குறிப்பிட்ட புள்ளிவிபரத்திற்கான விஞ்ஞானபூர்வ விளக்கமாக அமையாது ⚖️ அரசியல் சூழ்ச்சிகளும் வாக்கு வங்கி அரசியலும் சனத்தொகை மதிப்பீட்டில் தமிழர்கள் கூறுபடுத்தப்படுதை நாம் கவனமாக இங்கு அவதானிக்க வேண்டும். அதாவது 1981ஆம் ஆண்டு முதல் தாழ்நிலச் சிங்களவர்கள் மற்றும் கண்டியச் சிங்களவர்கள் சிங்களவர்களாக ஒன்றிணைக்கப்பட்டு கணக்கிடப்படுகிறார்கள். எனினும், ஆரம்பகாலங்களில் தமிழர்களாகக் கணக்கிடப்பட்டவர்கள் 2012 முதல் மேலும் பல உப பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு இலங்கை செட்டி மற்றும் பரதவர்கள் என்று திட்டமிட்டவகையில் பிரிக்கப்பட்டுக் கணக்கிடப்படுகிறார்கள். இந்தச் சூழ்ச்சிகளை முறியடிக்கவேண்டுமானால், 2012ஆம் ஆண்டிலேயே தமிழர்கள் “தமிழர்” என்று ஒன்றுபட்டு தம்மை அடையாளப்படுத்த வேண்டும் என்று நான் கூறியிருந்தேன். ஆனால், அதை தமது சுயநல நோக்கங்களுக்காக, வாக்கு வங்கி சரிந்து விடும் என்று கருதிச் சில மலையக தலைமைகள் எதிர்த்து இருந்தன. 🚨 தமிழ் அரசியல் கட்சிகள் மீதான நேரடி விமர்சனம் தமிழர்களது இருப்பைத் தக்கவைக்கும் அடிப்படைப் பொருண்மிய மேம்பாடு குறித்துத் தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியற் கட்சிகள் எவையும் அக்கறைப்படாதிருப்பது கடுமையாகக் கண்டிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். புலிகளின் காலத்தில் அவர்கள் போரின் மத்தியிலும் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான பல திட்டங்களை முன்னெடுத்து இருந்தார்கள். ஆனால் துரதிஷ்டவசமாக, பல தசாப்தங்களாகத் தமிழ் தேசியம் பேசிவரும் தமிழரசு கட்சி (ITAK) மற்றும் தமிழ் காங்கிரஸ் அல்லது இந்திய ஐந்தாம் படையுடன் இணைந்து செயல்படும் ஏனைய தமிழ்க் கட்சிகள் மற்றும் குழுக்களுக்கோ இன்றுவரை தமிழர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வேலைத்திட்டம் எதுவும் இல்லை என்பதே பாரிய பிரச்சினையாக இருக்கிறது. தமிழர்களுக்கு உரிமைகளைப் பெறுவதாக உணர்ச்சிகளைத் தூண்டிப் போராட்டம் நடத்துவதையும், உரிமைகளை இழந்தமைக்கு ஏனையவர்களைக் குற்றம் சாட்டுவதையும் செய்து அடுத்த தேர்தலில் வெற்றி பெறும் இலக்கை அடைவதற்கு முயற்சி செய்தார்களே தவிர, இதுநாள் வரையில் குறித்த அரசியல் தலைமைகள் இனத்தின் இருப்பினைக் காப்பதற்காக ஒரு துரும்பையேனும் கிள்ளிப் போடவில்லை என்பதே நிதர்சனம். 💡 தமிழர்களின் இருப்புக்குத் தீர்வு: பொருளாதாரத்தை கட்டியெழுப்புதல் அதிகரித்த திருமண வயது, சீதனம், சோதிட நம்பிக்கை, சாதீயம், பிராந்தியவாதம், மதவாதம் போன்ற பல காரணிகள் தமிழர்களின் பிறப்பு வீதத்தைக் குறைத்தாலும், நலிவடைந்த பொருளாதாரமே முதன்மைக் காரணியாகத் தொடர்ச்சியாகத் தமிழர்கள் வெளிநாடுகளுக்குச் செல்வதையும், குறைந்த பிள்ளைகள் பெறுவதையும் தூண்டுகிறது. தமிழர்களின் குடித்தொகையை இலங்கையில் அதிகரிக்க வேண்டுமானால், தமிழர்களின் பொருளாதாரம் கட்டியெழுப்பப்பட வேண்டும். தமிழர்களின் நலிவடைந்த பொருளாதாரம் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தில் வறுமைக் கோட்டுக்குக் கீழ் இருக்கும் தமிழர்களின் புள்ளிவிபரங்களினாலும், அதிகரித்த மந்த போசணை மற்றும் தாய்-சேய் இறப்பு வீதங்கள் மூலமாகவும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. முஸ்லிம் சமூகத்திடம் இருந்து கற்க வேண்டிய பாடம்: இந்த விடயத்தில் தமிழர்கள் முஸ்லிம்களிடம் இருந்து பாடம் கற்றுக் கொள்ளவேண்டும். அரசியல்வாதிகளின் ஒற்றுமையின்மைக்கு மத்தியிலும், தமக்கென வங்கி கட்டமைப்பு, பள்ளிவாசல்கள் மூலம் ஒன்றுபட்ட சமூக பொருளாதார வேலை திட்டங்கள் ஆகியவற்றை முஸ்லிம்கள் வெற்றிகரமாக உருவாக்கியுள்ளனர். இவ்வாறான வேலைத்திட்டங்கள் எவற்றைப் பற்றியும் சிந்திக்காது, தமிழினம் விசர் தனமான பதிவுகளை யூடீயுப் மற்றும் சமூக ஊடகங்களில் பதிவேற்றி மற்றவர்களைக் குற்றம் சாட்டியும், நக்கலடித்தும் மகிழ்ந்து கொண்டிருப்பது தமிழினத்தின் சாபக்கேடு என்றே சொல்லவேண்டும். வைத்திய கலாநிதி முரளி வல்லிபுரநாதன் சமுதாய மருத்துவ நிபுணர், குடித்தொகையியல் ஆய்வாளர் 4.11.2025 https://globaltamilnews.net/2025/222281/
  19. போட்டியைத் திறம்பட நடத்திய @கந்தப்பு வுக்கு நன்றிகள். பலருக்கும் புள்ளிகள் கிடைக்கத் தக்கதாக கேள்விகள் அமைந்தன. “குண்டக்க மண்டக்க” கேள்விகள் இல்லை என்பது ஆறுதல்😂 போட்டியில் வெற்றிபெற்ற கிரிக்கெட் ஜாம்பாவன்கள் @Ahasthiyan , @alvayan , @செம்பாட்டான் க்கும் சியர்ஸ் போய் @வீரப் பையன்26 க்கும், கலந்து சிறப்பித்து திரியில் கலகலத்தவர்களுக்கும், பார்வையாளர்களுக்கும் வாழ்த்துக்கள் 🎉
  20. பழுதுபார்க்கும் பணியில் வெளியான மர்மம் - காவல்துறை விரிவான விசாரணை 03 November 2025 யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் யுத்தக் காலத்தில் இருந்தே அங்கு இருந்திருக்கலாம் என காவல்துறை எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார். பல்கலைக்கழகத்தின் நூலகத்தின் கூரைக்கு அடியில் இந்த ஆயுதங்களும் வெடிமருந்துகளும் மீட்கப்பட்டமை குறித்து காவல்துறை ஊடகப் பேச்சாளர், எப்.யூ. வூட்லரிடம் எமது செய்தி சேவை வினவியது. இதற்கு பதிலளித்த அவர், குறித்த ஆயுதங்கள் நீண்டகாலமாக, குறிப்பாக, யுத்தக் காலத்தில் இருந்தே அங்கு இருந்திருக்கலாம் என தாம் நம்புவதாக அவர் தெரிவித்தார். முன்னதாக, யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் நூலகத்தின் கூரைக்கு அடியில் ஆயுதங்களும் வெடிமருந்துகளும் மறைத்து வைக்கப்பட்டிருந்தன இதையடுத்து, பல்கலைக்கழக நிர்வாகம் கோப்பாய் காவல்துறையினருக்குத் தகவல் வழங்கியுள்ளது. இதனையடுத்து, 31 ஆம் திகதி காலை காவல்துறையினரும் விசேட அதிரடிப் படையினரும் குறித்த பொருட்களை மீட்டனர். அத்துடன், மேலதிக பழுதுபார்க்கும் பணிகளின் போது, நூலகத்தின் கூரையின் அருகிலுள்ள ஒரு பகுதியில், மேலும் ஒரு டி56 ரக துப்பாக்கி, இரண்டு மெகசின்கள், வெடிமருந்துகள் மற்றும் பல மருத்துவ உபகரணங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த நிலையில், அங்கு மேலும் ஆயுதங்கள் மறைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிப்பதால், காவல்துறையும், விசேட அதிரடிப் படையினரும் இணைந்து விரிவான விசாரணையை ஆரம்பித்துள்ளதாக காவல்துறை பேச்சாளர் எப்.யூ.வூட்லர் தெரிவித்தார். https://hirunews.lk/tm/428703/mystery-revealed-during-repair-work-police-conduct-detailed-investigation
  21. கிளிநொச்சயில் விசேட அதிரடிப்படையினர் மீது தாக்குதல் – 10 பேர் கைது சட்டவிரோத மதுபான சுற்றிவளைப்பை மேற்கொள்ளச் சென்ற கிளிநொச்சி பொலிஸ் விசேட அதிரடிப்படையின் அதிகாரிகள் குழுவொன்று தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் ஐந்து (05) சந்தேக நபர்களும், ஐந்து (05) பெண் சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இராமநாதபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சுடலைக்குளம் பிரதேசத்தில் சட்டவிரோத மதுபான சுற்றிவளைப்பை நடத்தி சந்தேக நபரொருவரை அதிகாரிகள் கைது செய்தபோது, இரும்புக் கம்பிகள் மற்றும் பொல்லுகள் சகிதம் அங்கு வந்த குழுவொன்று அதிகாரிகளைத் தாக்கி, சந்தேகநபரை விடுவித்துக் கொண்டு அந்த இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இதையடுத்து, அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தியமை தொடர்பில் இராமநாதபுரம் பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவொன்று இந்தக் குழுவினரை கைது செய்துள்ளது. தாக்குதலில் காயமடைந்த விசேட அதிரடிப்படையின் அதிகாரிகள் இருவர் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இராமநாதபுரம் பிரதேசத்தைச் சேர்ந்த 16 முதல் 32 வயதுக்கு இடைப்பட்ட சந்தேகநபர்களும், 26 முதல் 45 வயதுக்கு இடைப்பட்ட பெண் சந்தேகநபர்களுமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் இன்று (03) கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர். https://www.samakalam.com/கிளிநொச்சயில்-விசேட-அதிர/
  22. போதைப்பொருள் வியாபாரிகள் , பாவனையாளர்களால் அல்லப்படும் திருநெல்வேலிச் சந்தை adminNovember 3, 2025 யாழ்ப்பாணம் திருநெல்வேலி சந்தையில் போதைப்பொருள் பாவனையாளர்களால் சந்தைக்கு செல்வோர் கடும் அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வரும் நிலையில் , சம்பவம் தொடர்பில் பிரதேச சபை மற்றும் கோப்பாய் காவல்துறையினருக்கு அறிவித்தும் நடவடிக்கை இல்லை என குற்றம் சாட்டப்படுகிறது திருநெல்வேலி சந்தையில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை காலை , சந்தைக்குள் சனநெருக்கடி மிகுந்த நேரம் இளைஞன் ஒருவர் கடும் போதையில் தனது ஆடைகளை களைந்து , சந்தை வியாபரிகள் மற்றும் மக்களுடன் தகாத வார்த்தைகளால் பேசி வம்பிழுத்துக்கொண்டும் , வியாபாரங்களும் இடையூறு விளைவித்த வண்ணம் இருந்துள்ளார். அது தொடர்பில் நல்லூர் பிரதேச சபை மற்றும் கோப்பாய் காவல்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்ட போதிலும், அவர்கள் சம்பவ இடத்திற்கு வருகை தராத நிலையில் , இளைஞனின் பாட்டி முறையான வயோதிப பெண்ணொருவர் இளைஞனை அவ்விடத்தில் இருந்து அழைத்து செல்ல முற்பட்ட வேளை , இளைஞன் போதையில் வயோதிப பெண்ணையும் தாக்க முற்பட்டுள்ளார். அதேநேரம் சம்பவம் தொடர்பில் அறிந்து இளைஞனின் தந்தை உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் சந்தைக்கு விரைந்து வந்து இளைஞனை அங்கிருந்து அழைத்து சென்றிருந்தனர். அதேவேளை திருநெல்வேலி சந்தை பகுதியில் போதை வியாபாரிகள் மற்றும் , போதை பாவனையாளர்கள் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் சந்தை வியாபாரிகள் , சந்தைக்கு வருவோர் பெரும் இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். அவர்கள் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல்களை கொடுக்க வியாபரிகள் அச்சமுற்று உள்ளனர் ஆனால் , தமது வியாபர இடங்ககளில் பொருத்தப்பட்டுள்ள மற்றும் பிரதேச சபையினால் , சந்தைக்குள் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கமராக்களின் அடிப்படையில் காவல்துறையினா் விசாரணைகளை முன்னெடுத்தால் , போதைப்பொருள் வியாபாரிகள் மற்றும் , போதை பாவனையாளர்கள் தொடர்பிலும், அவர்களால் சந்தைக்கு வருவோர் எதிர்நோக்கும் இன்னல்கள் தொடர்பிலும் கண்டறிய முடியும். எனவே , இது தொடர்பில் கோப்பாய் காவல்துறையினா் விசாரணைகளை முன்னெடுத்து குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்பதுடன் போதைப்பொருளுடன் தொடர்புடையவர்களை சந்தையில் இருந்து வெளியேற்ற நல்லூர் பிரதேச சபை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியுள்ளனர் .https://globaltamilnews.net/2025/222246/
  23. கட்டதுரைக்கு வாத்தியார் தன்னை மிஞ்சிவிடுவாரோ என்ற தவிப்புத்தான்! 😂🤣
  24. அமெரிக்கன் கட்டதுரைக்கு கொழுப்பு ஜாஸ்தி. வரட்டியில் போட்டி வாட்டி எடுக்கோணும்😂

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.