Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிருபன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by கிருபன்

  1. தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர் நாளின் உத்தியோகபூர்வ அறிக்கை - 2025 தலைமைச்செயலகம், தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம். 27.11.2025 எமது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழீழ மக்களே! இன்று மாவீரர் நாள். தமிழீழ மண்ணின் விடுதலைக்காகத் தம்மை கந்தகத்தீயில் உருக்கி ஆகுதியாக்கிய வீரமறவர்களை, தியாகத்தின் உன்னதங்களை, தமிழீழ விடுதலையின் அத்திவாரக்கற்களை நெஞ்சுருகி வணங்கிடும் நவம்பர் 27 ஆம் நாள், தமிழீழத் தேசிய எழுச்சிமிகு புனித நாளாகும். இன்றைய நாள், தமிழீழத்தின் ஆன்மா எழுச்சி பெற்று, தமிழீழ விடுதலைக்காகச் சாவைத் தழுவிய மாவீரர்களுக்கு, தாயகம் தலைவணங்கி, தமிழீழ வீரசுதந்திர வரலாற்றை மீண்டுமொருமுறை உரத்துச்சொல்லும் எழுச்சி நாளாகும். தமிழீழ விடுதலையின் முதல் விதையான மாவீரர் லெப்.சங்கர் அவர்களின் ஈகத்துடன் தொடங்கி, இன்றுவரை வீரச்சாவடைந்த அனைத்து மாவீரர்களும் எமது நெஞ்சில் அணையாத தீச்சுடராக, அசைக்க முடியாத நம்பிக்கையாக இன்றும் வாழ்கின்றார்கள். விடுதலையின் விதைகளாகவே தமிழீழத்தாயின் மடியில் இவர்களை விதைத்தோம். அவர்களை வரலாற்றுத்தாய் அரவணைத்துக்கொண்டாள். இந்த மானமறவர்கள் துயில்கொள்ளும் இப்புனித நிலங்களைத் துயிலுமில்லங்களாக உருவாக்கிப் போற்றி, வணங்கிவருகின்றோம். இத்துயிலுமில்லங்கள், உலக இராணுவ விதிகளைமீறிச் சிங்கள இனவாத ஆட்சியாளர்களால் இடித்தழிக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாகத் தமிழீழ மக்களின் மனங்களில் ஆறாத வடுக்களையும் கொதிநிலையினையும் ஏற்படுத்தியிருக்கின்றார்கள். இருந்தும், இத்துயிலுமில்லங்களிலும் அதனை அண்மித்தும், சிங்கள இனவெறி அரசின் எண்ணத்திற்கு மாறாக, மாவீரர் நாளில் தாயகத்திலுள்ள தமிழீழ மக்கள் பேரெழுச்சியோடு மாவீரர்களுக்கு விளக்கேற்றி நினைவுகூர்ந்து வருகின்றார்கள். இந்த மண்ணை ஆழமாக நேசித்த மாவீரர்களைப் பெற்றெடுத்த பெற்றோர் மற்றும் உரித்துடையோர்களை இவ்வேளை அன்புரிமையுடன் இறுகப்பற்றிக்கொள்கின்றோம். இவர்களிற்கான மதிப்பளிப்புகளைத் தாயகத்திலும் புலம்பெயர்தேசங்களிலும் உணர்வோடு முன்னெடுத்துவருகின்றோம் என்பதில் அகநிறைவடைகின்றோம். அன்பார்ந்த தமிழீழ மக்களே! தமிழீழ விடுதலைப்போராட்டப் பயணத்தில், இன்று நாம் ஒரு மிக நெருக்கடியான காலகட்டத்தில் நின்றுகொண்டிருக்கின்றோம். கடந்த 2009 இற்கு பின்னரான சமகால நிலமை, எமது விடுதலை நோக்கிய பயணத்தைப் பலவழிகளில் தடைகளை ஏற்படுத்தி, அவற்றை இல்லாதொழிக்க முயலும் சவால்கள் நிறைந்த காலமாக மாற்றமடைந்துவருகின்றது. எமது மாவீரர்கள் எந்த மண்ணிற்காகப் போராடினார்களோ, அந்த மண் தற்போதும் திட்டமிட்ட ஆக்கிரமிப்பிற்கு உள்ளாக்கப்பட்டுவருவதோடு, தமிழர் பகுதிகளில் சிறிலங்காப் படைகளின் எண்ணிக்கை மாறாது பேணப்படுவதும், சிறிலங்காப் படைமுகாம்களை மக்களின் குடியிருப்புகளுக்கு மத்தியிலும் விவசாய நிலங்களிலும் அமைத்திருப்பதும் மகாவலி அபிவிருத்தி, வனவளத் திணைக்களம், தொல்லியல் திணைக்களம் போன்ற சிறிலங்கா அரச கட்டமைப்புகளாவன, தொன்றுதொட்டுத் தமிழர்கள் வாழ்ந்த பூர்வீக நிலங்கள், மத வழிபாட்டுத்தலங்கள், தமிழ் மக்களின் உடமைகள் என்பன சிங்களக் குடியேற்றத் திட்டங்கள், புதிது புதிதாக புத்தர் சிலைகளை நிறுவி பௌத்தமயமாக்கல் மூலம் திட்டமிட்ட முறையில் சூறையாடப்படுவதால் தமிழீழத்தின் குடிப்பரம்பல் அமைப்பு மாற்றப்பட்டு, தமிழர்களின் இருப்பையே இல்லாமல் ஒழிக்கும் நடவடிக்கைகள் தீவிரமாகத் தொடர்ந்துகொண்டிருக்கின்றன. அத்தோடு, தமிழரின் தேசிய இனப்பிரச்சினைக்கான நீதியான தீர்வு என்பது இன்றும் சாத்தியமற்றதொன்றாகவே உள்ளது. ஏனெனில், புனையப்பட்ட கதையான மகாவம்ச மனநிலையில் ஆழ வேரூன்றியிருக்கும் சிங்கள இனவாதத்தின் கட்டமைப்புகளான சனாதிபதி ஆட்சிமுறை, நாடாளுமன்றம், பாதுகாப்புத்துறை, நீதித்துறை, பௌத்ததேரர்கள் மற்றும் முதலாளித்துவவாதிகளும் இணைந்து எமது தேசியப்பிரச்சனைக்குத் தீர்வுகாண்பதற்குத் தடையாகவுள்ளனர். சிங்கள மக்கள் மத்தியில் வலதுசாரிகள், இடதுசாரிகள், புரட்சியாளர்கள், முற்போக்குச் சிந்தனையாளர்கள் என அடையாளப்படுத்தப்படும் அனைவரும் இனவெறியாளர்களே. தமிழீழத்தில் வாழும் மக்களின் இன அடையாளத்தையோ ஈழத்தீவின் வடக்கும் கிழக்கும் தமிழர் தாயகம் என்பதையோ சுயநிர்ணய உரிமையையோ அங்கீகரிக்கக்கூடாது என்பதில் தெளிவான திடமான பார்வையுள்ளவர்களாகவே இவர்கள் திகழ்கின்றார்கள். இதன் காரணமாகவே சர்வதேசக் குமுகாயகத்தினை நோக்கி, தமிழீழ மக்கள் தமது விடுதலைக்கான கோரிக்கைகளை முன்வைத்துப் போராட்டங்களை நடாத்திவருகின்றார்கள். சர்வதேசச் குமுகாயத்தின் ஈடுபாட்டுடனான வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் அடிப்படையில் ஏற்படுத்தப்படும் ஒரு நிரந்தர நீதியான தீர்வே சிங்கள தேசத்தின் வளர்ச்சிக்கும் தமிழர் தேசத்தில் வாழும் மக்களின் நிம்மதியான வாழ்விற்கும் வழிவகுக்கும். கடந்த 2024ஆம் ஆண்டின் இறுதியில், சிறிலங்காவின் வழக்கமான வலதுசாரித்துவ மேட்டுக்குடிச் சிங்கள ஆட்சித்தலைமைகளுக்குப் பதிலாக, புரட்சிகர இடதுசாரித்துவச் சிந்தனைகள் நிறைந்துள்ளதாகக் காண்பித்த ஜே.வி.பி. தலைமையிலான அரசானது, ஆட்சிப்பீடம் ஏறியுள்ளது. இவ்வரசு ஆட்சிக்கு வருவதற்கு முன்பதாக, தமிழ் மக்களிற்கான உரிமைகளை வழங்கப்போவதாக அறிவித்திருந்தது. ஆனால், ஆட்சிக்குவந்து ஆண்டொன்று கடந்துவிட்ட நிலையிலும்கூட சம உரிமை வழங்குவதன் பெயரால், ஒற்றையாட்சிச் சிந்தனைக்குட்பட்டு, இலங்கையர் என்ற சிங்களத்தேசியத்திற்குள் தமிழ்த்தேசியத்தை நீர்த்துப்போகச்செய்யும் வகையில், இரண்டறக் கலக்கும் சூட்சுமமான சிந்தனையினை முன்னிறுத்தி, தமிழரின் இனப்பிரச்சினையின் தீர்வுக்கான உரையாடலைக்கூட மறுதலிக்கும் போக்கையே கடைப்பிடித்து வருகின்றது. ஜே.வி.பி அரசின் இந்த நடவடிக்கைபற்றி ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. ஏனென்றால், இன்றைய ஆட்சிக்குத் தலைமை தாங்கும் இதே ஜே.வி.பியினர் தான், தமிழர் தாயகத்தினைச் சிறிலங்காவின் உச்ச நீதிமன்றத்தின் ஊடாக கூறுபோட்டவர்கள். அத்தோடு, தமிழின அழிப்புப் போரிற்குச் சிங்கள இளைஞர்களை இணைத்து, போரைத்தொடர சிங்கள பேரினவாத ஆட்சியாளர்களிற்கு முட்டுக்கொடுத்தவர்கள். தற்போதும், சிங்களத் தேசிய பௌத்தமயவாத சிந்தனையை வலுவேற்றி, ஆட்சி அதிகாரத்தை நீடித்துத் தம்வசம் வைத்திருக்கவே திட்டமிட்டுவருகின்றார்கள். இத்தகைய சிந்தனை உள்ளவர்கள், தமிழ் மக்களிற்கு நியாயமான அதிகாரப்பகிர்வுடனான சுயநிர்ணய உரிமையை வழங்குவதற்கு, இதயசுத்தியுடன் செயற்படுவார்களென்று எதிர்பார்க்க முடியாது. அத்தோடு, தாயகத்தில் நிலவும் சூழல் முற்றிலும் வித்தியாசமானது. சிங்களத் தேசியவாத பௌத்தமயவாதத்திற்குத் தற்போது தலைமை தாங்கும் ஜே.வி.பியானது, கிராம மட்டங்களிலிருந்து எதிர்கால சந்ததியினரையும் இளையோரையும் மூளைச்சலவை செய்யும் செயற்பாடுகளில் தீவிரமாகக் களமிறங்கியுள்ளது. சுருங்கக்கூறின், சிறிலங்கா அரசானது தமிழீழத்தேசத்தை சிங்களத்தேசமாக மாற்றி, எமது விடுதலை வேட்கையை மடைமாற்றம் செய்து, விடுதலைச் சிந்தனைகளை இல்லாதொழிக்கும் நடவடிக்கையையே இலக்காகக் கொண்டு நகர்த்திவருகின்றது. அன்பார்ந்த தமிழீழ மக்களே! நாம், கல்வி மற்றும் பண்பாட்டுப் பாதுகாப்பை வலுப்படுத்தவேண்டும். எமது மொழி, வரலாறு, பண்பாடு என்பவற்றை அடுத்த தலைமுறையினருக்குக் கடத்தி, எமது தமிழ்த்தேசிய உணர்வை ஆழமாக விதைக்கவேண்டியது எமது வரலாற்றுக் கடமையாகின்றது. அத்துடன், தமிழீழ விடுதலைக்கான அரசியல் போராட்டத்தினைப் பல வடிவங்களில் முன்னெடுக்கும் அதேவேளை, தாயகத்திலுள்ள மாணவர், இளையோர், பொதுமக்கள் என்று அனைவரும் நில ஆக்கிரமிப்பிற்கு எதிராக, அரசியல் கைதிகள் விடுதலை, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரிற்கான நீதி, மனிதப் புதைகுழிகளிற்கான நீதி போன்ற விடயங்களை முன்னிறுத்தி, நீதிக்கான மக்கள் போராட்டங்களைச் சிறிலங்கா அரசிற்குத் தாக்கம் செலுத்தக்கூடிய வகையில் பல்வேறு வழிமுறைகளில் தீவிரமாக முன்னெடுக்கவேண்டும். அறவழியிலான இப்போராட்டங்கள், உலகத்தின் கவனத்தை ஈர்க்கும் ஆற்றல் கொண்டவை. புலம்பெயர் உறவுகள், எமது மாவீரர்களின் இலட்சியங்களைச் சுமந்து, நீதிக்கான குரலைத் தொடர்ந்தும் ஓங்கி ஒலிக்கச்செய்ய வேண்டும். நாம் வாழும் தேசங்களிலுள்ள அதிகார மையங்களை நோக்கி, நீதிக்கான கோரிக்கைகளை மேலும் வலுவாக எடுத்துச்செல்ல வேண்டும் என்பதனைப் புரிந்து அனைவரும் செயற்படவேண்டும். எமது அன்பிற்குரிய இளையோர்களே! தமிழீழத்திற்கான விடுதலைப்பயணத்தின் நாளைய சிற்பிகளே, தமிழீழத்தேசத்திற்கான அங்கீகாரத்திற்காக ஒவ்வொரு இளையோரும் தாம் வாழும் நாடுகளில் உணர்வுடன் முன்னெடுத்துவருகின்ற உரிமைக்கான, உறுதியான பணிகள் மிகவும் பாராட்டத்தக்கவை. புதிய பரிணாமத்தை அடைந்துள்ள இன்றைய தொழில்நுட்பங்களின் ஊடாக, எமது போராட்ட வரலாற்றைப் பாதுகாப்பது காலத்தின் கட்டாய தேவையாகும். சிறிலங்கா அரசானது தனது திட்டமிட்ட சூழ்ச்சிகளால், நாம் கடந்துவந்த வரலாற்றுப் பாதைகளைத் திசைமாற்றி, நாம் பேணிப்பாதுகாத்து வந்த எமது வரலாற்று ஆவணங்களை அழித்து, உண்மைக்குப் புறம்பான கருத்துருவாக்கங்களைத் திரைப்படங்கள் ஊடாகவும் சமூக வலைத்தளங்கள் ஊடாகவும் தவறாக வெளியிட்டு, எமது போராட்டப்பாதையை மடைமாற்றத் தொடர்ந்தும் முயற்சிசெய்துவருகின்றது. இந்த ஆபத்தினைத் தடுத்து நிறுத்தி, எமது இன அடையாளங்களையும் உண்மையான போராட்ட வரலாற்றையும் அதன் ஆவணங்களையும் பாதுகாத்து, எதிர்காலத் தலைமுறையினரிற்குக் கடத்தும் பாரிய பொறுப்பானது உங்களின் கைகளில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அத்தோடு மொழி, கலை, பண்பாடு உள்ளிட்ட எமது இன அடையாளங்களைப் பாதுகாத்து, புரட்சிகரப்பயணத்தைத் தொடர்வீர்கள் என்ற எதிர்பார்ப்பும் நம்பிக்கையும் எமக்குள்ளது. எமது அன்பிற்குரிய தேசியச் செயற்பாட்டாளர்களே! தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் சிந்தனைக்குச் செயல்வடிவம் கொடுத்து, நீண்ட நெடிய எமது விடுதலைப்போராட்டப் பயணத்தில் நீங்கள் செலுத்திவரும் பங்கு மிகவும் முக்கியமானது. ஆயுதப்போராட்டம் வீச்சோடு இருந்த காலத்தில், நம்பிக்கையும் அதி உச்ச உறுதியோடும் நீங்கள் செய்த தேசம் நோக்கிய செயற்பாடுகள் அளப்பரியவை. ஆயுதப்போராட்டத்தின் மௌனிப்பிற்குப் பின்னர், புலனாய்வாளர்களால் ஏற்படுத்தப்பட்ட பல்வேறு நெருக்கடிகள், அச்சுறுத்தல்கள், அவமானப்படுத்தல்கள் அனைத்திற்கும் முகம்கொடுத்து, தொடர்ந்து மனத்துணிவோடு உறுதிதளராத உங்களது செயற்பாடுகள் மெய்சிலிர்க்க வைக்கின்றன. உங்களுடைய இந்த உறுதிதளராத செயற்பாடுகள்தான், இன்றுவரை எமது மாவீரர்களின் இலட்சியமாகிய தமிழீழத்திற்கான பாதையில் பயணிக்கக்கூடியதாக உள்ளது. எவ் இடர்வரினும், எமது இலட்சியத்தை நாம் அடையும்வரை உங்களது உறுதிதளராத பயணத்தை மேலும் வீச்சோடும் வேகத்தோடும் தொடர்வது அவசியமானது. இதுவே, மாவீரர்களின் ஈகங்களிற்கு நாம் செய்யும் வரலாற்றுக் கடமையாகும். எமது அன்பிற்குரிய தமிழ்நாட்டு மக்களே! தமிழ்த்தேசியம், தமிழ்மொழிக்காப்பு, குமுகாயநீதிக்கான போராட்டம், அடக்குமுறை எதிர்ப்பு என்பவற்றில் ஆழமான பற்றைக்கொண்டிருப்பவர்கள் நீங்கள். எமது தாயகத்தில், கட்டமைப்புசார் தமிழின அழிப்பு இன்றும் மிகவேகமாக நடைபெற்றுக்கொண்டிருப்பதால், அதனைத் தடுத்து நிறுத்துவதற்கும் அதற்கு எதிராகவும் சுயாதீன சர்வதேச விசாரணைக்கு, இந்திய நடுவண் அரசின் ஆதரவைப் பெறும் வகையில் அழுத்தம் கொடுக்கவேண்டுமெனக் கேட்டுக்கொள்வதுடன், தார்மீக அடிப்படையில் ஆக்கிரமிக்கப்பட்ட எமது தேசத்தை மீட்டெடுக்கும் விடுதலைப் போராட்டத்தை அங்கீகரிக்குமாறும், எமது இயக்கத்தின் மீதான தடையை நீக்குவதற்காகத் தொடர்ந்தும் குரல் எழுப்புமாறும் வேண்டிநிற்கின்றோம். அத்துடன், மாவீரர்களின் ஈகங்களாலும் மக்களின் அர்ப்பணிப்புகளாலும் உருவான எமது விடுதலைப்போராட்ட வரலாற்றைச் சிதைத்துத் திரிபுபடுத்தி வெளிவரும் படைப்புகளிற்கு வெளிப்படையாக நீங்கள் தெரிவிற்கும் எதிர்ப்புகளிற்கு எமது நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கின்றோம். தொடர்ந்தும் இவ் எதிர்ப்புக்களைத் தெரிவிப்பதோடு, இதனை நிறுத்தும் வகையில் நீங்கள் தமிழ்நாட்டு அரசிற்கு அழுத்தம் கொடுக்கவேண்டும் எனவும் அன்புரிமையுடன் கேட்டுக்கொள்வதோடு, எமது தேசத்தின் விடுதலைக்காகத் தொடர்ந்தும் குரல்கொடுத்துவரும் தமிழ்நாட்டு மக்களிற்கு எமது அன்பையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கின்றோம். அன்பார்ந்த மக்களே! தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களினால் வகுக்கப்பட்ட, தமிழீழ விடுதலை என்னும் மாபெரும் சித்தாந்த இலட்சியத்தைத் தாங்கி, அவருடைய சிந்தனையின் வழிகாட்டலில் தொடர்ந்தும் கொள்கை வழுவாது உறுதியுடன் தமிழீழ விடுதலைப்போராட்டச் சக்கரம் நகர்ந்துவருகிறது. இன்றைய காலப்பரப்பில், விடுதலைப்போராட்டத்தின் அடித்தளத்தையும், தேசியத்தலைவரின் சிந்தனையான இயங்குவிசையையும் சிதைத்து, அழித்துப் போராட்டத்தை நீர்த்துப்போகச்செய்ய தமிழின விரோதக்குழுக்கள் சிறிலங்கா அரசினாலும் பிராந்திய உருவாக்கப்பட்டு களமிறக்கப்பட்டுள்ளன. தமிழீழ விடுதலைப் புலிகளின் இயங்குநிலை மரபைத் தடம்மாற்றி, அழிக்கமுனையும் சக்திகளும் தலைதூக்குகின்றன. விடுதலை அவாவுடன் போராடும் மக்களிடையே நம்பிக்கையீனத்தை விதைத்து, குழப்பத்தை ஏற்படுத்தி, தமிழீழத் தேசியத்தலைவரால் உருவாக்கப்பட்ட விடுதலைச் சிந்தனைத் தளத்திலிருந்து தமிழினத்தை விலகச்செய்து தமிழீழம் என்னும் கோட்பாட்டை அடியோடு அழித்து விடுவதே இவர்களின் சதித் திட்டமாகும். இந்த நாசகாரப் புலனாய்வு நடவடிக்கையை உணர்ந்து, இன்னும் வீரியமாக விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டிய காலமிதுவாகும். தமிழின விரோதிகளை தெளிவாக இனம்கண்டு, நிராகரித்துக் களையெடுக்கவேண்டும் என்னும் விடுதலை விழிப்புணர்வை ஒவ்வொரு தமிழரும் கொண்டிருக்க வேண்டியது தாயக விடுதலைக் கடமையாகும். சிங்களப் பௌத்த பேரினவாதத்தின் அரசியலும் புலனாய்வு வலையமைப்பும் அதன் துணைச்சக்திகளும் பல தீர்வுகள், மாற்றங்கள், பொருண்மிய அபிவிருத்தி, நல்லிணக்கம் போன்ற சொற்களின் போர்வையில் ஒற்றையாட்சிக்குள் எமது தேசிய விடுதலையைப் புதைத்துவிட முயற்சிக்கின்றன. பொருளாதார வீழ்ச்சியின் கோரப்பிடிக்குள் சிக்குண்டுபோயுள்ள சிறிலங்கா அரசானது, புலம்பெயர் தமிழர்களிடம் முதலீடு என்ற பெயரில் அணுகி, அவர்களைப் பயன்படுத்தித் தமிழினத்தின் விடுதலைச் சித்தாந்தத்தை நிரந்தரமாக அழிப்பதற்கு தேவையான புதிய படிமங்களைக் கட்டமைக்க முழனகிறது. இந்த அரசியல்-பொருளாதார, புலனாய்வுச் சதித்திட்டங்களைத் தெளிவாகப் புரிந்துகொண்டு மிகுந்த விழிப்புணர்வுடன் செயற்படுவது தமிழினத்தின் இருப்பிற்கு அத்தியாவசியமானாதாகும். அதேவேளை, தமிழின அழிப்பிற்கு நீதி வேண்டிய மக்கள் போராட்டங்களை இன்னும் வீச்சோடு தொடர்வதும் சர்வதேச அரசியல் தளங்களில் இராசதந்திர உறவுகளை வலுப்படுத்துவதும் எமது விடுதலைப் பயணத்தின் முக்கிய சாராம்சங்கள் ஆகும். மாவீரர்கள் தங்கள் உயிர்விதையால் கட்டியெழுப்பிய ஒளிரும் பாதையில், தமிழீழ விடுதலையை நோக்கிய எமது பயணம் தளராது தொடரும் எத்தடைகள் வந்தாலும் அதனைத் தகர்த்தெறியக்கூடிய மனோபலத்தைத் தேசியத்தலைவரின் சிந்தனையும் வழிகாட்டலும் எமக்குத் தரும். மாவீரர்களின் ஆன்மபலம் எம்மோடு என்றும் துணை நிற்கும். “நாம் விதைத்த இலட்சிய விதை, எமது வீரர்களின் இரத்தத்தால் வளர்கிறது. அது விருட்சமாகி எமது கனவை நனவாக்கும்” என்ற தேசியத் தலைவரின் சிந்தனை, எப்போதும் தமிழினத்தை வழிநடத்தும் விடுதலை ஒளியாக நிலைத்திருக்கும். எமது சத்திய இலட்சியமான தமிழீழ விடுதலையினை எந்தச் சக்தியாலும் அசைக்கமுடியாது. தமிழீழ விடுதலைப் பயணத்தில் உறுதிதளராது போராடும் தமிழினம், தனது இலட்சிய விடுதலையை அடைந்தே தீரும். தேசியத்தலைவரின் சிந்தனை சுட்டி நிற்கும் விடுதலைப்பாதையில், தமிழீழம் என்னும் இலட்சியத்தை அடையும்வரை தொடர்ந்தும் போராடுவோம் என உறுதியெடுத்துக்கொள்வோமாக! "புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்.” தலைமைச் செயலகம், தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம். https://www.thaarakam.com/news/5e3c1ac3-5de9-4fd2-807e-c8bb0dc9a3cb
  2. யாழ் பல்கலை உள்ளிட்ட வடக்கின் பல பகுதிகளில் மாவீரர் தினம் அனுஸ்டிப்பு! ஒரே பார்வையில்! adminNovember 27, 2025 யாழ். பல்கலையில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வில் மாணவர்கள் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். கொடிகாமம் துயிலுமில்லம் யாழ்ப்பாணம் , கொடிகாமம் துயிலுமில்லத்தின் முன்பாக இடம்பெற்ற மாவீரர் நாள் நினைவேந்தலில் மாவீரர் மேரியனின் தாயான கந்தையா நாகராணி பொது சுடரினை ஏற்றி வைத்தார். கோப்பாய் துயிலுமில்லம்! யாழ்ப்பாணம் , கோப்பாய் துயிலுமில்லத்தில் இடம்பெற்ற மாவீரர் நாள் நினைவேந்தலில் மூன்று மாவீரர்களின் தாயான நடேசு தவமணி பொது சுடரினை ஏற்றி வைத்தார். நல்லூர் நினைவாலயத்தில் யாழ்ப்பாணம் ,நல்லூர் மாவீரர் நினைவலையத்தில் இடம்பெற்ற மாவீரர் நாள் நினைவேந்தலில் மாவீரர் கப்டன் பண்டிதரின் தாயார் பொது சுடரினை ஏற்றி வைத்தார். எள்ளங்குளம் துயிலுமில்லம் யாழ்ப்பாணம் , வடமராட்சி எள்ளங்குளம் துயிலுமில்லத்தில் இடம்பெற்ற மாவீரர் நாள் நினைவேந்தலில் மூன்று மாவீரர்களின் தந்தையான இரத்தினம் செல்லத்தம்பி பொது சுடரினை ஏற்றி வைத்தார். சாட்டி துயிலுமில்லம் யாழ்ப்பாணம் , தீவகம் சாட்டி துயிலுமில்லத்தில் இடம்பெற்ற மாவீரர் நாள் நினைவேந்தலில் மூன்று மாவீரர்களின் தந்தையான செல்லர் அருளம்பலம் பொது சுடரினை ஏற்றி வைத்தார். மன்னார் ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலும் இல்லத்தில் உணர்வு பூர்வமாக இடம்பெற்ற மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வு தமிழ் மக்களின் விடுதலைக்காக தம் உயிரை தியாகம் செய்த வீரர்களை நினைவு கூறும் ‘மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வு’ இன்று (27) வியாழன் மன்னார் ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலும் இல்லத்தில் கொட்டும் மழையிலும் மிகவும் உணர்வு பூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது. -தமிழர் தாயகத்திற்காக உயிர் நீத்த உறவுகளை நினைவு கூறும் வகையில் கார்த்திகை மாதம் 27 ஆம் திகதி மாவீரர் தினம் வருடா வருடம் நினைவு கூறப்பட்டு வருகிறது. அதற்கு அமைவாக மன்னார் மாவட்ட மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஆட்காட்டி வெளி மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வு இன்று (27) மாலை மாவீரர் நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழுவினால் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது . மாலை 6.5 மணியளவில் மாவீரர் ஒருவரின் தாயினால் பொதுச் சுடர் ஏற்றப்பட்டது. அதனை தொடர்ந்து ஆட்காட்டி வெளி மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர்களின் உறவினர்கள் பெருந்திரளான மக்கள், அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், என ஆயிரக்கணக்கானவர்கள் ஒன்று திரண்டு கண்ணீர் மல்க உணர்வுபூர்வமாக மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். https://globaltamilnews.net/2025/223152/
  3. தமிழ் மக்களின் தாயகக் கனவுக்காக தமது இன்னுயிர்களை ஆகுதியாக்கிய மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்🪔🪔🪔
  4. போரை முடிவுக்குக் கொண்டுவரும் அமெரிக்காவின் அமைதி ஒப்பந்தம் – பொதுவான இணக்கம் எட்டப்பட்டுள்ளதாக உக்ரைன் அறிவிப்பு Mano ShangarNovember 26, 2025 12:31 pm 0 ரஷ்யாவுடனான போரை முடிவுக்குக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்ட அமைதி ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்காவுடன் பொதுவான இணக்கம் எட்டப்பட்டுள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. இந்நிலையில், ரஷ்ய ஜனாதிபதியை மொஸ்கோவில் சந்திக்க தனது சிறப்பு தூதுவருக்கு உத்தரவிட்டுள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். முன்னதாக புதிய வரைவு ஒப்பந்தம் குறித்து ரஷ்யாவிடம் இன்னும் ஆலோசனை நடத்தப்படவில்லை ரஷ்ய தரப்பு தெரிவித்திருந்தது. மேலும், திட்டத்தில் முன்வைக்கப்படும் திருத்தங்களை ஏற்காமல் போகலாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. அமெரிக்காவின் ஆரம்ப கட்டமைப்பிற்கு ஆதரவாக இருந்தபோதிலும், அமைதி ஒப்பந்தம் தொடர்பான ஒப்பந்தம் கணிசமான மாற்றங்களுக்கு உட்பட்டிருந்தால் நிலைமை அடிப்படையில் வேறுபட்டிருக்கும் என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் கூறியுள்ளார். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி புதிய திட்டத்தின் நகல் கிடைக்கவில்லை என்று லாவ்ரோவ் தெரிவித்துள்ளார். மேலும், ஐரோப்பா, அமெரிக்கவின் அமைதி முயற்சிகளை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார். எவ்வாறாயினும், ரஷ்யாவின் நிலைப்பாடு குறித்து அமெரிக்க அதிகாரிகள் பகிரங்க கருத்துகளை வெளியிடவில்லை. எனினும், அமெரிக்க இராணுவச் செயலாளர் டான் டிரிஸ்கோலும் ரஷ்ய பிரதிநிதிகளும் கடந்த திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் அபுதாபியில் சந்தித்து பேசியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆழமாக முரண்படும் சில பிரச்சினைகள் இதுவரை தீர்க்கப்படாமல் இருப்பதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. https://oruvan.com/us-peace-deal-to-end-war-ukraine-announces-general-agreement-reached/
  5. சொந்த மண்ணில் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது இந்தியா – தென்னாப்பிரிக்கா வரலாற்று சாதனை Mano ShangarNovember 26, 2025 1:11 pm 0 இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி 408 ஓட்டங்களால் வெற்றிபெற்று வரலாற்று சாதனையை படைத்துள்ளது. இந்த வெற்றியுடன் இரண்டு போட்டிகளை கொண்ட தொடரை முழுமையாக கைப்பற்றியுள்ள தென்னாப்பிரிக்கா அணி இந்தியாவை வெள்ளையடிப்பு செய்துள்ளது. 25 ஆண்டுகளுக்கு பின் தென்னாப்பிரிக்கா அணி இரண்டு போட்டிகளிலும் வெற்றிபெற்று, இந்திய அணியை அதன் சொந்த மண்ணில், தோல்வியடையச் செய்துள்ளனர். இதன்மூலம், தென்னாப்பிரிக்கா இந்தியாவை இரண்டு முறை சொந்த மண்ணில் முழுமையாக வென்ற முதல் அணியாக மாறியது. முன்னதாக, 1999-2000 ஆம் ஆண்டில், தென்னாப்பிரிக்கா இந்தியாவை டெஸ்ட் தொடரில் 2-0 என்ற கணக்கில் தோற்கடித்தது. இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது டெஸ்ட் குவஹாத்தியில் உள்ள பர்சபரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாப்பிரிக்கா அணி, முதல் இன்னிங்ஸில், 489 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. தென்னாப்பிரிக்கா அணிக்காக செனுரான் முத்துசாமி 206 பந்துகளில் 10 நான்கு ஓட்டங்கள, மற்றும் இரண்டு ஆறு ஓட்டங்கள் அடங்களாக 109 ஓட்டங்களை குவித்தார். இந்தியா அணிக்காக, குல்தீப் யாதவ் நான்கு விக்கெட்டுகளையும், ஜடேஜா, பும்ரா மற்றும் சிராஜ் தலா இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். பதிலுக்கு, துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 201 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. யஷஸ்வி ஜெய்ஸ்வால் மட்டுமே 50 ஓட்டங்களுக்கு மேல் குவித்திருந்தார். தென்னாப்பிரிக்கா சார்பில் மார்கோ ஜான்சன் ஆறு விக்கெட்டுகளையும், சைமன் ஹார்மர் மூன்று வெற்றிகளையும் கைப்பற்றினர். முதல் இன்னிங்ஸின்படி, தென்னாப்பிரிக்கா 288 ஓட்டங்கள் முன்னிலை பெற்றனர். இதனையடுத்து இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய தென்னாப்பிரிக்கா 260 ஓட்டங்களை பெற்ற நிலையில், ஆட்டத்தை இடைநிறுத்திக்கொண்டது. இதனால் இந்திய அணிக்கு 549 என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. எவ்வாறாயினும், இந்திய அணி 140 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து 408 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்துள்ளது. இது ஒட்டுமொத்தமாக, சொந்த மண்ணிலும் இந்தியாவின் மிகப்பெரிய டெஸ்ட் தோல்வியாகும். இதற்கு முன்பு 2004 ஆம் ஆண்டு நாக்பூரில் அவுஸ்திரேலியா அணி 342 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியாவை தோற்கடித்தது. மேலும், 13 மாதங்களில் ஒரு அணி சொந்த மண்ணில் இந்தியாவை டெஸ்ட் தொடரில் முழுமையாக வென்றது இது இரண்டாவது முறையாகும். முன்னதாக, 2024 ஒக்டோபர்-நவம்பர் மாதங்களில் நடந்த மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் நியூசிலாந்து இந்தியாவை 3-0 என்ற கணக்கில் தோற்கடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. https://oruvan.com/india-suffered-its-biggest-defeat-on-home-soil-south-africa-makes-history/
  6. சிங்கள, முஸ்லிம் போராளிகளின் பெற்றோர் கௌரவிக்கப்பட வேண்டும்; மூத்த போராளி மனோகர் வலியுறுத்து! ஈழ விடுதலைப் போராட்டத்தில் தன்னுயிர்களை ஈர்த்த சிங்கள, முஸ்லீம் போராளிகளின் பெற்றோர்கள் கெளரவிக்கப்படவேண்டுமென மாவீரர் அறிவிழியின் தந்தையும், மூத்த போராளியுமான முத்துக்குமார் மனோகர் வலியுறுத்தியுள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இந்த வலியுறுத்தலை விடுத்தார். அங்கு மேலும் கருத்துரைக்கையில், இலங்கையிலுள்ள நான்கு இனங்களைச் சேர்ந்த பேராளிகளும் மாவீரர்கள் ஆகியுள்ளனர். எமது போராட்டத்தின் நியாயத்தன்மையை உணர்ந்தே இறுதி யுத்தம் வரை உறுதியுடன் போராடியுள்ளனர். இந்த மாவீரர்களின் பெற்றோர்களும் கௌரவிக்கப்பட வேண்டியவர்களே! வருடாவருடம் இந்த விடயம் தொடர்பாக நான் வலியுறுத்தி வருகிறேன். குறிப்பாக 2022ஆம் ஆண்டு மாவீரர் நாளில் கனகபுரம் துயிலுமில்லத்தில் எழுத்து மூலமாக நான் விடுத்த வேண்டுகோள் புறந்தள்ளப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மூன்று மாவீரர்களின் அன்னையான சிங்களப் பெண்மணி துயிலும் இல்ல வாசலில் அவமானப்படுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டமையை ஒரு மாவீரரின் தந்தை என்ற வகையில் தாங்கொணாத் துயரத்தை ஏற்படுத்தியது. ‘நான்கு இனத்தவர்களின் ஈகத்தாலும் கட்டியெழுப்பப்பட்ட போராட்டம்’ என்ற தலைப்பில் கடந்த 23ஆம் திகதி உதயன் சஞ்சீவியில் வெளிவந்த நான் எழுதிய கட்டுரையின் பிரதிகளை கிளிநொச்சி ஜெயந்தி நகரில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்ட மாவீரர்களின் பெற்றோர், உறவினர்களிடம் வழங்கினேன். எனது எதிர்பார்ப்பின் நியாயத்தை அவர்கள் ஏற்றுக்கொண்டனர். எனவே கடந்த ஆறு வருடங்களாக நான் விடுத்த அதே வேண்டுகோளை நேற்று (24) கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் வேழமாலிகிதனிடம் அவரது பணிமனைக்குச் சென்று நினைவுபடுத்தினேன். அத்துடன் சிங்கள-முஸ்லிம் மாவீரர்கள் நினைவாக உங்களது நிலைப்பாடு என்ன என்று கேட்டேன். ஏனெனில் இவர் 2022ஆம் ஆண்டு மாவீரர் நாள் காலப்பகுதியில் அடுத்த ஆண்டு கட்டாயம் இராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த வீரவேங்கை ரமீஸின் பெற்றோர் கௌரவிக்கப்படுவார்கள் என உறுதிமொழி வழங்கியவர். தற்போது அவரது பதில் எனக்கு ஆச்சரியமளித்தது. ‘புலம்பெயர் உறவுகள் சிங்கள-முஸ்லிம் மாவீரர்களின் பெற்றோரைக் கௌரவிப்பது குறித்து கடும் சினத்துடன் ஆட்சேபிக்கிறார்கள்’ என்பதே அந்தப் பதிலாக அமைந்தது. தவறான புரிதல் இது. மக்கள் பிரதிநிதி அதுவும் உள்ளூராட்சிச் சபையின் தவிசாளர் எமது மாவீரர்களின் பெற்றோரின் உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டியவர், இப்படிப் பதில் சொல்வதை நீங்களும் ஏற்கமாட்டீர்கள் என்பதை நான் முழுமையாக நம்புகிறேன். இவரது பதிலைத் தொடர்ந்து உடனடியாக யாழ்ப்பாணம் விரைந்த நான் கட்சித் தலைவர் சி.வி.கே. சிவஞானத்தைச் சந்தித்து விடயத்தைச் சொன்னேன். ‘எமது போராட்டத்தின் நியாயத்தன்மையை உணர்ந்துகொண்டு விடுதலைப்போரில் ஆகுதியானோரின் பெற்றோர் நிச்சயம் மதிப்பளிக்கப்பட வேண்டியவர்களே’ என அவர் பதிலளித்தமை ஆறுதலாக இருந்தது. நடந்த விடயங்களைக் கேட்டு மனம் வருந்திய அவர் இந்தக் கௌரவிப்புகள் ஏற்கனவே நடத்திருக்கவேண்டும் எனக் குறிப்பிட்டார். இந்தப் போராட்டத்தில் ஏதோ முடிந்தளவு என்னால் பங்காற்றியுள்ளேன். இன்று நான் உயிரோடு இருப்பதற்கு முஸ்லிம் மக்கள் ஆற்றிய பங்களிப்பை நான் எப்போதும் நன்றியுடன் நினைவு கூருவேன். மாவீரர் பெற்றோரை புறந்தள்ளுவதைத் தேசியத் தலைவரின் ஆன்மாவும் மன்னிக்காது. எனவே புலம்பெயர்ந்து வாழும் தாங்கள் அனைவரும் தேசியத் தலைவரின் தலைமையை ஏற்றுப் போராடிய சிங்கள-முஸ்லிம்-பறங்கி என மாவீரர்களின் பெற்றோர் புறந்தள்ளப்படுவது குறித்த ஆட்சேபனைகளையும், எதிர்காலத்தில் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்ற அறிவுரையையும் கரைச்சி பிரதேசசபைத் தலைவருக்கும் அவரை வழிநடத்தும் மாவட்டத் தலைமைக்கும் உடனடியாக சாத்தியமான சகல வழிகளிலும் தெரிவியுங்கள். நன்றி மறந்த இனத்தவராக நாம் மாறக்கூடாது. கைதிகள் பரிமாற்றம் மூலம் இரு போராளிகளை விடுவிக்கக்கூடிய சந்தர்ப்பம் கிடைத்தபோது அவர்களில் ஒருவராக காமினி என்ற சிங்களப் போராளியைக் கிட்டு குறிப்பிட்டார். விடுதலையாகி வந்த அந்தப் போராளி மட்டக்களப்பில் போராடி 04.05.1987 வந்தாறுமூலையில் வீரச்சாவடைந்தார். இறுதி யுத்தம் வரை முஸ்லிம் போராளிகள் போராடினர். இவையெல்லாம் சாமானியமான விடயங்களா? உங்களுக்கு மாவீரர் நாளுக்கு நிதி வேண்டுமாயின் நான் உண்டியல் குலுக்கி வழங்கத் தயார் என வேழமாலிகிதனுக்குத் தெரிவித்ததையும் சுட்டிக்காட்டுகிறேன். இன்னொரு விடயம் மாவீரர் நினைவேந்தல் மற்றும் மாவீரர் பெற்றோர் கௌரவிப்புகளை தமது அரசியல் எதிரிகளைச் சாடும் களங்களாக மாற்றவேண்டாமென தயவுசெய்து சம்பந்தப்பட்டவர்களுக்குச் சுட்டிக்காட்டுங்கள். இன உறவுகளை மேம்படுத்துவதில் ஆர்வமுள்ள ஒரு முஸ்லிம் குழுவினர் ஏதாவதொரு மாவீரர் துயிலுமில்லத்தில் ஒரு முஸ்லிம் மாவீரரின் பெற்றோரை கௌரவிக்கவேண்டும். இதற்கான முழுச் செலவையும் தாங்கள் பொறுப்பேற்கிறோம் என எனக்குத் தெரிந்த ஒரு தரப்பு மூலம் வேண்டுகோள் விடுத்தனர். இந்தவேண்டுகோள் அகில இலங்கைத் தமிழ்க்காங்கிரஸ் தலைமைக்கு அதன் மத்திய குழு உறுப்பினர் மூலம் தெரியப்படுத்தியும் அந்தப் பேச்சைத் தொடர அவர்கள் விரும்பவில்லை என்தைக் குறிப்பால் உணர்த்தினர். எனவே, தேசியத்தலைமையை நேசிக்கும் புலம்பெயர் நாடுகளிலுள்ள எமது உறவுகள், முன்னாள் போராளிகள் இந்த விடயத்தில் தங்களது முடிவை உடனடியாகக் கிளிநொச்சிக்கும் காங்கிரஸ் பிரமுகர்களுக்கும் தெரிவிக்குமாறு பணிவன்புடன் வேண்டுகின்றேன்.” என்றார். https://akkinikkunchu.com/?p=350178
  7. இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதிவசதிச் செயற்திட்டம் குறித்த IMF பரிசீலனை! November 26, 2025 இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதிவசதிச் செயற்திட்டம் குறித்த 5 ஆம் கட்ட மீளாய்வு தொடர்பில் எட்டப்பட்ட உத்தியோகத்தர் மட்ட இணக்கப்பாடு அடுத்தகட்ட ஒப்புதலுக்காக எதிர்வரும் டிசம்பர் மாதம் 15 ஆம் திகதி சர்வதேச நாணய நிதியத்தின் இயக்குநர் சபையினால் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதிவசதிச் செயற்திட்டம் தொடர்பான 5 ஆம் கட்ட மீளாய்வை மேற்கொள்ளும் நோக்கில் கடந்த செப்டெம்பர் 24 ஆம் திகதி நாட்டை வந்தடைந்த இலங்கைக்கான செயற்திட்டப்பிரதானி எவான் பபஜோர்ஜியோ தலைமையிலான நாணய நிதிய அதிகாரிகள் குழுவினர், இக்காலப்பகுதியில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் சந்திப்புக்களை நடாத்தியதுடன் பெரும்பாகப் பொருளாதார அபிவிருத்திகள், பொருளாதார மற்றும் நிதியியல் கொள்கைகளை அமுல்படுத்துவதில் அடையப்பட்டுள்ள முன்னேற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஆராய்ந்தனர். அதனையடுத்து மேற்படி விரிவாக்கப்பட்ட நிதிவசதிச் செயற்திட்டம் குறித்த 5 ஆம் கட்ட மீளாய்வு தொடர்பில் சர்வதேச நாணய நிதிய அதிகாரிகளுக்கும் இலங்கை அரசாங்கத்துக்கும் இடையில் உத்தியோகத்தர் மட்ட இணக்கப்பாடு எட்டப்பட்டதுடன், நாணய நிதிய செயற்திட்டத்துக்கு அமைவாக 2026 ஆம் ஆண்டுக்கான வரவு, செலவுத்திட்ட ஒதுக்கீட்டுச்சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படுவதைக் கருத்திற்கொண்டே அதற்கு இயக்குநர் சபையின் அனுமதி வழங்கப்படும் என எவான் பபஜோர்ஜியோ அறிவித்திருந்தார். இவ்வாறானதொரு பின்னணியில் விரிவாக்கப்பட்ட நிதிவசதிச் செயற்திட்டம் குறித்த 5 ஆம் கட்ட மீளாய்வு தொடர்பில் எட்டப்பட்ட உத்தியோகத்தர் மட்ட இணக்கப்பாடு எதிர்வரும் டிசம்பர் மாதம் 15 ஆம் திகதி நாணய நிதியத்தின் இயக்குநர் சபையினால் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. இப்பரிசீலனையைத் தொடர்ந்து உத்தியோகத்தர் மட்ட இணக்கப்பாட்டுக்கு இயக்குநர் சபை ஒப்புதல் அளிக்கும் பட்சத்தில் அடுத்த கட்டமாக 347 மில்லியன் டொலர் நிதியைப் பெறுவதற்கான தகுதியை இலங்கை பெறுவதுடன், அதன்மூலம் இதுவரையில் இலங்கைக்கு வழங்கப்பட்ட மொத்த நிதியின் பெறுமதி 2.04 பில்லியன் டொலராக உயர்வடையும். அதன்படி அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் கண்காணிப்புக்கு உட்பட்ட முக்கிய விடயங்களில் பெரும்பாலானவற்றை 2026 ஆம் ஆண்டுக்கான வரவு, செலவுத்திட்டத்தில் உள்வாங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.ilakku.org/imf-review-of-extended-financial-facility-for-sri-lanka/
  8. மாவீரர்களின் தியாகத்தை உணர்த்தும் நாள் கார்த்திகை 27 : பா. அரியநேத்திரன் November 25, 2025 மாவீரம் என்பது பெரிய வீரம், அல்லது பெருமை தரும் வீரம் என்பதாகும். வீரம் துணிவான ஒரு உணர்வு தாம் சந்திக்கும் ஒவ்வொரு சவாலையும் எதிர்கொண்டு வலி, ஆபத்து, எதிர்பாராத நிகழ்வுகள், எதிர்ப்பு, என பலவற்றைக் கடந்து வெற்றி காண முயல்வதே மாவீரம். சரி என்று பட்டதை யார் தடுத்தாலும் சிரம் தாழ்த்தாது செய்து முடிப்பதே வீரம். புறப்பொருள் இலக்கியங்களில் வீரம் என்ற உணர்வு முதன்மை பெறுகின்றது. வெட்சி, கரந்தை, வஞ்சி, காஞ்சி, நொச்சி, உழிஞை, தும்பை, வாகை என்று எல்லா புறப்படலங்களிலும் வீர மறவரின் துணிவும், அவர்கள் எதிரிகளை எதிர்த்து போராட தயங்காமையும் கூறப்பட்டுள்ளது. அகத்தில் பெரும்பாலும் வீரம் முன் மொழியாவிடினும், பல செயல்களில் தலைவ னும், தலைவியும், பாங்கியும், நற்றாயும், செவிலித் தாயும், பல்வேறு சமூக உறுப்பினர்களும் தான் விரும்பியதை அடைய வீரத்தை உபயோகிக்க வேண்டியுள்ளது. வீரத்தின் தன்மை. 1.தன் நாட்டைக்காத்தல் 2.நேர்மையாக இருத்தல் 3. தன் கடமையினை எவ்வித தடை வரினும் சிரமேற்று வெற்றி பெறுதல் 4.நினைத்ததை சாதித்தல் 5..விடாமுயற்சி 6 தன்னைச் சார்ந்தோரைக் காத்தல் இந்த ஆறு உன்னத வீரம்தான் “மாவீரம்” அதை களத்தில் இனத்துக்காய் போராடி செய்கையில் காட்டிய ஈழத்தில் ஒரேயொரு விடுதலை இயக்கம் விடுதலைப்புலிகள் மட்டுமே அவர்களின் உன்னத தியாகத்தால் தன்னை ஆகுதியாக்கிய புனிதர்கள் தான் விடுதலைப்புலிகளின் “மாவீரர்கள்” அந்த ஒப்பற்ற உயிர் தியாகம் செய்தவர்களை ஒரே நாளில் தேசமாக திரண்டு அஞ்சலி நினைவு கூரும் நாளாக 1989, கார்த்திகை27ம் நாளை தேசிய தலைவர் மேதகு பிரபாகரன் பிரகடனப்படுத்தியிருந்தார். அந்த தினம் விடுதலைப்புலிகளின் போராளி சங்கர் வீரச்சாவை தழுவிய நாள் 1982 கார்த்திகை, 27 அந்த நினைவு நாளே மாவீரர் நாளாக பிரகடனப்படுத்தப்பட்டது. எதிர்வரும் வியாழக்கிழமை 2025 நவம் பர் 27ல் வழமை போன்று ஈழவிடுதலைப் போராட்டத்தில் ஆகுதியான மாவீர்களை நினைவு கூர்ந்து துயிலும் இல்லங்களிலும், புலம் பெயர் நாடுகளில் வாழும் ஈழத்தமிழர்களும், மத்தியகிழக்கு நாடுகளில் தொழிலுக்காக சென்ற தமிழ் இளைஞர்களும், தமிழ் நாட்டிலும் மக்கள் திரண்டு சுடர் ஏற்றி வணக்கம் செலுத்தும் நிகழ்வு எழுச்சியாக இடம்பெறுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுவருகிறது. 2025 ல் இடம்பெறும் மாவீர் தினம் 36 வது மாவீரர் தினமாகும். 2008 கார்திகை,27 வரை ஈழத்தில் விடுதலைப்புலிகளால் 20 மாவீரர் தினங்கள் இடம்பெற்றன இந்த 20 தினங்களில் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் 20 மாவீரர் உரைகளை நிகழ்த்தியுள்ளார். அவருடைய உரை ஒரு தீர்க்க தரிசன உரையாகவே பார்க்கப் பட்டது. அவர் இறுதியாக 2008,கார்த்திகை,27 ல் மாவீர் நாள் உரையில் கூறியது “இந்த வரலாற்றுச் சூழமைவில், தமிழர் உலகின் எந்த மூலையில் வாழ்ந்தாலும் எந்தக் கோடியில் வளர்ந்தாலும் எமது தேச விடுதலைக்கு உறுதியாகக் குரலெழுப்பி, எமது சுதந்திர இயக்கத்தின் கரங்களைப் பலப்படுத்துமாறு அன்போடு வேண்டுகிறேன். அத்துடன், தங்களது தாராள உதவிகளை வழங்கித் தொடர்ந்தும் பங்களிக்குமாறும் உரிமை யோடு கேட்டுக் கொள்கிறேன். இந்த சந்தர்ப் பத்திலே தேச விடுதலைப் பணியைத் தீவிரமாக முன்னெடுத்து வருகின்ற புலம்பெயர்ந்து வாழும் எமது இளைய சமுதாயத்தினருக்கும் எனது அன்பையும், பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். சத்திய இலட்சியத் தீயில் தம்மையே அழித்துச் சரித்திரமாகிவிட்ட எமது மாவீரர்கள் வழியில் சென்று நாம் எமது இலட்சியத்தை அடைவோமென உறுதியெடுத்துக் கொள்வோ மாக” . என கூறியிருந்தார் இதனை அவதானித்தால் சர்வதேசத்தை நோக்கி விடுதலைப்பயணம் செல்லவேண்டிய தேவையையும் புலம்பெயர்ந்து வாழும் இளையோருக்கும் அந்தபணி உண்டு என்பதையே மேலோட்டமாக தமது உரையின் மூலம் சுட்டிக்காட்டப்பட்டுள்தை நோக்க முடிகி றது. ஒரு விடுதலைக்கான போராட்டம் அந்த நாட்டில் ஆரம்பித்தாலும் விடுதலைக்கான வெற்றி யையும், அந்த நோக்கத்தையும் தீர்மானிக்கும் சக்தி சர்வதேசமாகும் தலைவர் பிரபாபரனின் இறுதி உரையில் தேசவிடுதலையை தீவிரமாக முன்எடுத்து வருபவர்கள் புலம்பெயர்ந்துவாழும் இளையோர் என்பதை தெளிவாக கூறி அவர்களிடம் போராட்டத்தை ஒப்படைத்ததாகவே அந்த உரையின் தார்ப்பரியம் தெரிந்தது. சர்வதேசம் மூலமாக எமது இலக்கை அடைவதற்கான வேண்டுகோளாகவே இந்த உரை அமைந்துள்ளது. விடுதலைப்புலிகள் மௌனிப்பதற்கு முன்னம் 2008 கார்த்திகை 27 வரை துயிலும் இல்லங்களில் நடைமுறையானது மாவீரர்களின் பெற்றோர் சுடர் ஏற்றவேண்டிய கல்லறைகள், நினைவு கற்களுக்கு முன்னால் கார்த்திகை 27 ம் நாளில் பி.ப 5.15 மணிக்கு நிற்கக்கூடிய வகையில் ஒழுங்குகள் மேற்கொள்ள பட்டிருக்கும் தேசியத் தலைவரின் மாவீரர் நினைவுரை இடம்பெறும் பின்னர் நினைவொலி மணி ஒலி எழுப்பபட்டு ஒருமணித்துளி நேரம் எழுப்பப் படும், அகவணக்கம் செலுத்தப்பட்ட பின்னர் பொதுச் சுடர் தளபதிகளில் ஒருவர் ஏற்றுவார் அதனை தொடர்ந்து ஈகை சுடர்களை பி.ப 6.07 மணிக்கு சகலரும் ஏற்றுவார்கள். விடுதலைப்புலிகள் மௌனத்திற்கு பின் னர் 2009 கார்த்திகை 27 தொடக்கம் எதிர்வரும் 2025, கார்த்திகை 27 வரை 16 வருடங்களாக மாவீரர் தினங்கள் முன்னாள் போராளிகள், பொது அமைப்புகள், சில தமிழ்த்தேசிய கட்சிகள் இராணுவ முகாம் இல்லாத துயிலும் இல்லங்களில் தலைவரின் உரை, தேசிய கொடி மட்டும் இன்றி ஏனைய நடைமுறைகளை அப்படியே சகல துயிலும் இல்லங்களிலும் எழுச்சியுடன் செய்யப் பட்டு வருவதை காணலாம். புலம்பெயர் நாடுகளில் தலைவரின் உரை மட்டுமே இடம்பெறாது ஏனைய புலிக்கொடி ஏற்றப்பட்டு அனைத்து நிகழ்வுகளும் அப்படியே நடைபெற்று வருவதை காணலாம். வீரச்சாவை தழுவிய மாவீரர்கள் 2009 மே 18 வரை ஐம்பதாயிரம் வரையில் உயிர் நீத்துள்ளனர். விடுதலைப்புலிகளால் 2008 ல் உத்தியோகபூர்வமாக வெளியிட்ட தரவில் 1982 தொடக்கம் 2008 வரையும் 22390 மாவீர்கள் ஆகுதியானதாக மாவட்ட ரீதியான விபரத்தை அப்போது வெளியிட்டிருந்தனர். இந்த தொகையில் வடமாகாணத்தை சேர்ந்த மாவீரர்கள்:14957 (ஆண்கள்:10834 பெண்கள்:4123 கிழக்கு மாகாண மாவீரர்கள்: 7083, (ஆண்கள்: 6580 பெண்கள்:503) வடகிழக்கு சாராதவர்கள்:350 (ஆண்கள்:282 பெண்கள்:68) 2009 ஜனவரி தொடக்கம் மே 18 வரை ஐந்து மாதங்களில் உக்கிரமான போர் கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு மாவட்டங்கள் முழுவதும் இடம்பெற்று இறுதியில் முள்ளி வாய்க்கால், நந்திக்கடல், வரை 2009 மே 18 ல் போர் மெளனிக்கும் வரை 05 மாதங்கள் மட்டும் ஏறக்குறைய 27000, மாவீர்ர்கள் வீரச்சாவை தழு வினார்கள் என நம்பப்படுகிறது அவர்களை டைய கணிப்பு இதுவரை உத்தியோக பூர்வமாக வெளியிடப்படவில்லை 2008 ல் விடுதலைப்புலிகள் உத்தியோகபூர்வ மாக அறிவித்த 22360 மாவீர்ர்களுடன் சேர்த்து மொத்தமாக 50000, மாவீரர்கள் ஆகுதியானார்கள் என்பதை முள்ளிவாய்க்கால் மௌனத்திற்கு பின்னர் பலராலும் உச்சரிக்கப்படுகிறது. அந்த ஐம்பதாயிரம் மாவீர்களை நினைவு கூர்ந்து தொடர்ச்சியாக 2009 கார்த்திகை,27 தொடக்கம் தற்போது 16 வருடங்களாக நினைவுச் சுடர் ஏற்றி வணக்கம் செலுத்தப்படுகிறது. விடுதலைப்புலிகளின் மௌனத்திற்கு பின்னர் 16 வருடங்களாக மாவீர்களுக்காக வணக்கம் செலுத்தும் நாம் அவர்களுடைய கனவு நினைவேற வேண்டுமானால் குறைந்த பட்சம் சிதறிக்கிடக்கும் தமிழ்த்தேசிய கட்சிகள் ஈழத்தில் ஒற்றுமையாக ஒரு அணியாக ஒரே குரலில் சர்வதேசம் நோக்கி அரசியல் தீர்வுக்காக கோரிக்கையை முன்வைக்க கூடியதாக செயல்படக்கூடிய தமிழ்தேசிய கட்சிகள் ஒற்றுமை படவில்லை . 2025 கார்த்திகை 27 மாவீரர் நாளிலாவது தமிழ்தேசிய கட்சிகள் அனைத்தும் ஒற்றுமையாக செயல்பட்டு மாவீரர்களுடைய கனவு நனவாக உழைக்க உறுதி பூணுவோம். https://www.ilakku.org/மாவீரர்களின்-தியாகத்தை-உ/
  9. ஏன் அவர் ஒப்பற்ற தலைவர் : ஜெரா November 26, 2025 இலங்கை தீவில் இழந்துவிட்ட தம் இறைமையை மீட்கவே முடியாது என்ற பெருங்கவலையோடு ஈழத்தமிழர்கள் பல சந்ததிகளைக் கடந்தனர். இடையிடையே எல்லாளன், சேனன், குத்திகன், பண்டாரவன்னியன், கயிலைவன்னியன், செகராசசேகரன், பரராசசேகரன், சங்கிலியன் எனப் பலர் அந்தக் கனவை ஏந்தி வரலாற்றில் வந்துபோயினர். ஆனால் எவராலும், விஜயனிடம் இழந்த ஈழத்தமிழர் இறைமையை முழுமையாக அடைய முடியவில்லை. ஒரே ஒருவரால் அது முடிந்தது. வெறுங்கனவாக மாத்திரமிருந்த ஈழத்தமிழர் இறைமையை ஆட்சி சிம்மாசனத்தில் ஏற்றி 30 வருடங்களாக அழகுபார்க்க முடிந்தது. அவரே நம் தலைவர். அவரே இன்றைய நாளுக்குரியவர். அதுவரைக்குமான உலகில் கண்டுபிடிக்கப்படாதிருந்த அனைத்துவித அறவழிப்போராட்டங்களிலும் ஈடுபட்டு, தோற்றுப்போயிருந்த தருணத்தில்தான் தலைவர் வந்தார். பெற்றோரின், ஆசிரியர்களின் வழிகாட்டுதலின்றி முடிவெடுக்க முடியாத வயதில், இனத்தையே வழிநடத்தத் துணிந்தார். தம்மிடமிருக்கும் ஆயுதங்களை வைத்து ”எவ்விதமான” காரியங்களையும் செய்யத்துணியும் வயதில், அனைத்துவித பாசங்கள் மீதான பற்றுக்களையும் அறுத்தெரிந்தார். இனவிடுதலை ஒன்றே தாம் ஏந்தியிருக்கும் ஆயுதத்தின் ஒரே இலக்கு என்பதைத் தன்னைச் சூழ்ந்திருந்த இளையோருக்குப் போதித்தார். இன்றைய உலக அனுபவங்களை வைத்துக் கற்பனை செய்துபாருங்கள், ஆயிரக்கணக்கான இளைஞர்களிடம் கனரக ஆயுதங்களும், வெளியுலகத் தொடர்புகளற்ற ஒரு பிராந்தியத்தை நிர்வகிக்கவல்ல அதிகாரமும் கிடைத்தால் என்ன செய்திருப்பர். உலக அனுபவங்களைப்போன்று எதுவும் நடக்கவில்லை. இனவிடுதலை என்கிற இலக்கு ஒன்றிற்காக ஐம்பதாயிரத்திற்கு மேற்பட்ட மாவீரர்கள் அவர் தலைமையில் விதையாகி வீழ்ந்தபோதிலும் யாரை நோக்கியும் ஒரு தீயசொல் பாயவில்லை. ”அவரின் எத்தனையோ படங்களை மீட்டோம். ஒரு படத்தில்கூட மது போத்தல்களைக் காணவில்லை” என எதிரிகளே புகழுமளவிற்கு உலகின் மிகஉன்னதமான சுய ஒழுக்கமிக்க இயக்கமொன்றைக் கட்டமைத்தார் அவர். அதனை இம்மியளவும் வழிபிசகாமல் இறுதிவரையில் வழிநடத்தினார். அதனால்தால் அவர் தலைவர். விடுதலை கோரி போராடத்தை ஆரம்பிக்கும் ஆயுத இயக்கங்கள், வெகுவிரைவிலேயே திசைமாறிப் போவது உலக வழக்கம். உலகநாடுகளின் சதிகளில் சிக்கி தான் வந்த வழியையே மறந்து, விடுதலை இயக்கங்களின் மறைந்துபோவதும் பொதுப்போக்கு. தலைவரை நோக்கியும் உலக வல்லரசு நாடுகள் அந்த வலையை தொடர்ச்சியாக முப்பதாண்டுகள் வீசிவந்தன. ”நான் இனவிடுதலை என்கிற இலட்சியத்திலிருந்து விலகினால் என் மெய்பாதுகாவலரே என்னை எவ்வேளையிலும் சுட்டுக்கொல்லலாம்” என்கிற கொள்கையில் தலைவர் துளியளவும் விடாப்பிடியாக இருந்தார். அவருக்கென்று தனிப்பட்ட வாழ்வொன்றிருந்தது. ஒரே மகள், இரண்டு ஆண் மகன்கள் என்கிற அரியதொரு குடும்பமிருந்தது. அன்பிற்கே அடையாளமான தாய், தந்தையர் இருந்தனர். ஒரு மனிதனின் வாழ்க்கை வரம்பின் உச்சமெதுவெனில் இப்படியொரு அன்பான குடும்பம்தானே. ஆனால் இந்த இனவிடுதலைக்காக தன் மொத்தக் குடும்பத்தையும் தியாகித்தார் தலைவர். தானும் தன் பிள்ளைகளும், தன் உறவினர்களும் ஏழேழு தலைமுறையாக செழித்து வாழவேண்டியளவுக்கு நாட்டைச் சூறையாடி சொத்துச் சேர்க்கும் தலைவர்கள் மத்தியில், ஒரு ரூபாயைக்கூடத் தனக்காகவோ, தன் குடும்பத்திற்காகவோ எடுத்துச்செல்லாத – தன் மொத்தக்குடும்பத்தையும் இனத்திற்காக வித்தாக்கிய ஒப்பற்ற தலைவர் உலகில், இந்தப் பூகோள வரலாற்றில் வேறெந்த இனத்திற்கு வாய்த்திருக்கும். சதாகாலமும் போர் நடத்திக்கொண்டு, கடல், தரை, வான் என எல்லைகளைக் காத்துக்கொண்டு, புவிசார் அரசியல் அழுத்தங்களுக்கு எதிராகப் போராடிக்கொண்டு ஒரு நிழல் அரசைக் கட்டமைப்பதும், அதனை நேர்த்தியாக வழிநடத்துவதும் கற்பனைகூட செய்துபார்க்கமுடியாத ஒன்று. உலகம் பாதுகாப்புசார் துறைகளில் இவ்வளவு தூரம் வளர்ந்துவிட்ட பிறகும்கூட நவீன அரசுகள் கட்டுப்படுத்த முடியாமல் இருக்கின்ற பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், போதைப்பொருள் குற்றங்கள், திட்டமிட்டக் குற்றச்செயல்களுக்காக உருவாகும் குழுக்கள் என எல்லாவற்றையும் 30 ஆண்டுகளாக ஒருவர் கட்டுப்படுத்தினார் எனில் அது தலைவரைத் தவிர வேறு யாராக இருக்க முடியும்..! எல்லாவற்றுக்கும் மேலாக, படையக் கட்டுமானம்..! சோழர்களுக்குப் பிறகு 30 ஆண்டுகள் இந்து சமுத்திரத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்திய ஒரே படையக் கட்டமைப்பைத் தலைவர் உருவாக்கினார். அவரின் காலத்தில் இலங்கைத் தீவின் மீதான புவிசார் அரசியல் இன்றிருக்கிற அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்தவில்லை. இந்தியா, சீனா என எந்நாட்டுக்கும் ஒரு துண்டு நிலம்கூட இத்தீவிலிருந்து விற்கப்படவில்லை. இன்று இந்நாட்டின் தலைநகரில் பெரும்பகுதியைப் பிடித்து சீனா தனக்கான தனிநாடொன்றை உருவாக்கிக்கொள்ளுமளவிற்கு இந்நாடு புவிசார் அரசியல்விடயத்தில் தோல்வியடைந்திருக்கின்றது. இந்தியாவின் தலையீடுகள் சொல்லத்தேவையில்லை. அவர் உருவாக்கிய வலிதான – ஓர்மம் மிக்க படையக் கட்டமைப்புக்களின் வழியே தமிழர்களின் கடல் மற்றும் நிலம் சார் இறைமை மாத்திரமின்றி, முழு இலங்கைத்தீவின் இறைமையும் காப்பாற்றப்பட்டது. ஆனால் அவரற்ற பதினாறு வருடங்கள் கடந்துள்ள இன்றைய நிலை…! இப்படி தன்னினத்திற்கு மாத்திரமல்லாது, இத்தீவில் வாழுகிற எதிர் இனத்திற்குமாகப் போராடியவர் எம் தலைவர். அதனால்தான் குற்றவுணர்வால் உந்தப்படும் எதிரிகள்கூட அவ்வப்போது தலைவர் பற்றிய உண்மையைச் சொல்லிவிடுகின்றனர். உலகில் தோன்றிய ஆச்சரியமிகு – மேன்மைமிகு தலைவர்களின் வரிசையில் நின்றுநிலைத்துவிட்ட தலைவருக்கு இன்று அகவைத் திருநாள். வானும் தன் ஆசி வழங்கி, வாழ்த்தி நிற்கும் இன்நன்நாள் குறித்து நம் தலைமுறைக்கு ஒரு பெருமிதம் உண்டு. அது எதுவெனில், தலைவ…நாம் நின் காலத்தில் வாழ்ந்தோம்..! https://www.ilakku.org/ஏன்-அவர்-ஒப்பற்ற-தலைவர்-ஜ/
  10. தொல்பொருள் இடங்களுக்கான பெயர்ப்பலகை அகற்றிய விவகாரம்: வாழைச்சேனை பிரதேசசபை தவிசாளர் உள்ளிட்ட ஐவருக்குப் பிணை Published By: Vishnu 26 Nov, 2025 | 05:28 AM (வாழைச்சேனை நிருபர், பட்டிருப்பு நிருபர்) தொல்பொருள் இடங்களுக்குரிய பெயர்ப்பலகையினை அகற்றியது தொடர்பான வழக்கில் வாழைச்சேனை பிரதேசசபை தவிசாளர், பிரதி தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள் உட்பட 5 பேருக்கும் வாழைச்சேனை நீதிவான் நீதிமன்றத்தினால் பிணை வழங்கப்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை (22) வாழைச்சேனை பிரதேச செயலகப்பிரிவுகளில் தொல்பொருள் திணைக்களத்தினால் தொல்பொருள் இடங்கள் என அடையாளப்படுத்தப்பட்ட இடங்களுக்குப் பெயர்ப்பலகைகள் பொருத்தப்பட்டிருந்தன. வாழைச்சேனை பிரதேசசபைக்கு உட்பட்ட வீதிகளில் தங்களது அனுமதி பெறப்படாமல் குறித்த பெயர்ப்பலகைகள் இடப்பட்டதாகத் தெரிவித்து வாழைச்சேனை பிரதேசசபை தவிசாளரினால் அப்பெயர்ப்பலகைகள் அகற்றப்பட்டன. இதுகுறித்து தொல்பொருள் திணைக்களத்தினால் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டிருந்த நிலையிலும், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் வழங்கிய உத்தரவுக்கு அமைவாகவும் விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் முன்னெடுத்து வந்தனர். அதற்கமைய வாழைச்சேனை பிரதேச சபைக்குள் இருந்த தொல்பொருள் இடங்களைக் குறிக்கும் பெயர்ப்பலகைகளை நேற்று முன்தினம் கைப்பற்றிய வாழைச்சேனை பொலிஸார், இச்சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவரைக் கைதுசெய்தனர். அதேவேளை இதனுடன் தொடர்புபட்ட வாழைச்சேனை பிரதேசசபையின் தவிசாளர் சுதாகரன், பிரதி தவிசாளர், இரண்டு உறுப்பினர்கள் உட்பட நால்வர் நேற்றைய தினம் வாழைச்சேனை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகினர். இந்நிலையில் அவர்கள் சார்பில் நேற்றைய தினம் வாழைச்சேனை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், தனது தரப்பினர்மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுக்கள் பொருத்தமற்றவை என நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டுவந்தார். அத்தோடு 1987 ஆம் ஆண்டு 15 ஆம் இலக்க பிரதேசசபை சட்டத்தின்கீழ் வீதிகள் தொடர்பான அதிகாரங்கள் பிரதேசசபைகளுக்கு வழங்கப்பட்டிருப்பதாகவும், அந்த சட்டத்தின் பிரகாரம் பிரதேசசபை தவிசாளர் அதிகாரமுடையவர் எனவும் சுட்டிக்காட்டினார். எனவே அந்த அதிகாரத்துக்கு அமைவாகச் செய்யப்பட்ட விடயத்தை 'பெயர்ப்பலகைகளை அகற்றினார்' என்று குற்றச்சாட்டாக முன்வைக்கமுடியாது எனவும் சுமந்திரன் வாதத்தை முன்வைத்தார். அத்துடன் உள்ளுராட்சிமன்றங்களின் அனுமதியைப்பெற்றே பெயர்ப்பலகை இடப்படவேண்டும் என்பதை சுமந்திரன் நீதிமன்றின் கவனத்துக்குக் கொண்டுவந்தபோது, அதனை தொல்லியல் திணைக்கள அதிகாரிகள் ஏற்றுக்கொண்டதுடன் எதிர்காலத்தில் முறையான அனுமதியைப்பெற்றுக்கொள்வதாகவும் தெரிவித்தனர். அவ்வாறு முறையாக அனுமதி கோரும்போது அதனை சபையில் சமர்ப்பித்து சபையினால் முறையான அனுமதியை வழங்கமுடியும் என்று சுமந்திரன் கூறியதன் அடிப்படையில் வழக்கு சுமுகமாக தீர்க்கடலாம் என்ற காரணத்தினாலும், பொலிஸார் முன்வைத்த குற்றச்சாட்டுகள் பிணைவழங்ககூடிய காரணங்களைக் கொண்டிருப்பதனாலும் நீதிவானால் ஐந்து பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டனர். அதற்கமைய வாழைச்சேனை பிரதேசசபையின் தவிசாளர், பிரதி தவிசாளர், பிரதேசசபை உறுப்பினர்கள் இருவர் உள்ளடங்கலாக ஐந்து பேரும் தலா ஐந்து இலட்சம் ரூபா சரீரப்பிணையில் செல்ல நீதிவான் நீதிமன்றம் அனுமதி அளித்தது. இந்த வழக்கு மீண்டும் டிசம்பர் 15 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/231467
  11. யாழில் மாவீரர் வாரத்தில் பொலிஸாரின் கெடுபிடிகள்! மாவீரர் வாரம் நடைபெற்றுவரும் நிலையில் பொலிஸாரின் சில கெடுபிடி சம்பவங்கள் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 71வது பிறந்தநாள் இன்றும், மாவீரர் நாள் நாளை வியாழக்கிழமையும் அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில் இவ்வாறு பொலிஸாரின் கெடுபிடி சம்பவங்கள் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. வல்வெட்டித்துறை பகுதியில் மாவீரர் தினத்தை அனுஷ்டிக்கும் வகையில் நேற்று சோடினையில் ஈடுபட்டவர்கள் தொடர்பாக வல்வெட்டித்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் சிலரின் சிவில் உடை படங்களுடன் வல்வெட்டித்துறையில் கட்டப்பட்ட பதாகையை அகற்றுமாறும் வல்வெட்டித்துறை பொலிஸார், குறித்த பதாகையில் உள்ள பாதணி விடுதலைப் புலிகளினை உருவகப்படுத்துவதாக சுட்டிக்காட்டி சிலரிடம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். தடை செய்யப்பட்ட அமைப்புக்களின் சின்னங்கள், இலட்சிணைகள் பயன்படுத்தாமல் உயிரிழந்தவர்களை நினைவு கூர முடியும் என அரசாங்கம் அறிவித்திருந்த போதும், ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை என பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இதேவேளை நேற்று மாலை மல்லாகம் சந்தி பகுதியில் மாவீரர் நினைவேந்தல் தொடர்பில் இலத்திரனியல் உபகரணத்தில் பாடல் ஒலிக்க விடப்பட்டுள்ளது. அவ்விடத்திற்கு வந்த தெல்லிப்பழை பொலிஸார் குறித்த உபகரணத்தை கைப்பற்றி வழக்கு சான்றுப் பொருளாக இலக்கமிட்டுள்ளனர். மாவீரர் நாள், நாளை அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில் பொலிஸாரின் கெடுபிடிகள் காணப்படுமா என பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். https://newuthayan.com/article/யாழில்__மாவீரர்__வாரத்தில்__பொலிஸாரின்_கெடுபிடிகள்!#google_vignette
  12. அசாதாரண காலநிலை காரணமாக யாழில் 560 பேருக்கு பாதிப்பு! வடமாகாணத்தில் தற்போது நிலவும் அசாதாரண கால நிலை காரணமாக, 171 குடும்பங்களைச் சேர்ந்த 560 பேர்பாதிக்கப்பட்டுள்ளனர் என்று யாழ்ப்பாணம் மாவட்ட இடர்முகாமைத்துவ பிரிவின்பிரதிப்பணிப்பாளர் ரி.என். சூரியராஜா தெரிவித்துள்னர். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் யாழ்ப்பாணத்தில் நிலவும் அசாதாரண காலநிலைகாரணமாக சண்டிலிப்பாய் பிரதேசசெயலர் பிரிவில் 4 குடும்பங்களைச் சேர்ந்த 21 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 4 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. சங்கானை பிரதேசசெயலர் பிரிவில் மின்னல் தாக்கம் மற்றும் வெள்ள இடர் காரணமாக 4 குடும்பங்களைச் சேர்ந்த 16 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் வீடு ஒன்றும் பகுதியளவில் சேதமடைந்துள்ளது. ஊர்காவற்றுறை பிரதேசசெயலர் பிரிவில் கடும் காற்று காரணமாக மூன்று குடும்பங்களை சேர்ந்த 7பேர் பாதிக்கப் பட்டுள்ளதுடன் 2 வீடுகளும் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.யாழ்ப்பாணம் பிரதேச செயலர் பிரிவில் வெள்ள அனர்த்தம் காரணமாக 29 குடும்பங்களைச் சேர்ந்த 98பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வேலணை பிரதேச செயலர் பிரிவில் 3 குடும்பங்களைச் சேர்ந்த 10 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சாவகச்சேரி பிரதேசசெயலர் பிரிவில் 123 குடும்பங்களைச் சேர்ந்த 385பேர் வெள்ளம் மற்றும் மின்னல் அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 5 வீடுகளும் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. கோப்பாய் பிரதேசசெயலர் பிரிவில் 2 குடும்பங்களைச் சேர்ந்த 8 பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதுடன். ஒரு வீடு முழுமையாக சேதமடைந்துள்ளது. காரைநகர் பிரதேசசெயலர் பிரிவில் இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த 10 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றார். https://newuthayan.com/article/அசாதாரண_காலநிலை_காரணமாக_யாழில்_560_பேருக்கு_பாதிப்பு!
  13. தலைவர் பிரபாகரன் பிறந்த தினம் இன்று! தமிழீழ விடுதலைப் புலிகளின் தேசியத் தலைவர் மேதகு வேலுப் பிள்ளை பிரபாகரனின் 71ஆவது பிறந்தநாள் தாயகத்திலும் புலத்திலும் இன்று கொண்டாடப்படவுள்ளது. தலைவரின் பிறந்த நாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு வல்வெட்டித்துறை ஆலடி வீதியில் அவரது இல்லம் அமைந்துள்ள வளாகம் அந்தப் பகுதி இளைஞர்களால் துப்புரவு செய்யப்பட்டு சிவப்பு மஞ்சள் கொடிகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. அங்கு, இன்று காலை கேக் வெட்டிக் கொண்டாட்டங்கள் இடம்பெறவுள்ளன. தமிழர்தாயகத்தின் இதர பகுதிகளிலும், புலம்பெயர்நாடுகளிலும்கூடதலைவர் பிரபாகரனின் பிறந்த நாளைக் கொண்டாடுவதற்கு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. தேசியத் தலைவர் பிரபாகரனின் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் கடந்த பல வருடங்களாக இராணுவத்தினர் மற்றும் புலனாய்வாளர்களது இறுக்கமான கண்காணிப்புக்குள்ளும், கெடுபிடிக்குள்ளும் கொண்டாடப்பட்ட நிலையில், இம்முறை அச்சமின்றி மக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபடத் தயாராகின்றமையை அவதானிக்க முடிகிறது. https://newuthayan.com/article/தலைவர்_பிரபாகரன்_பிறந்த_தினம்_இன்று!
  14. ஒன்லைன் கேம் மோகம் காதலனின் தாயாரின் நகைகளை திருடிய பெண் கைது! adminNovember 26, 2025 நிகழ்நிலை விளையாட்டில் ஈடுபட (Online game) காதலனின் தாயாரின் தாலிக்கொடி உள்ளிட்ட தங்க நகைகளை திருடிய பெண்ணை காவற்துறையினர் கைது செய்துள்ளனர். கிளிநொச்சி பகுதியை சேர்ந்த யுவதி ஒருவரும் சாவகச்சேரி பகுதியை சேர்ந்த இளைஞனும் காதலித்து வந்த நிலையில் , இளைஞனின் வீட்டில் காதலுக்கு சம்மதம் தெரிவித்தமையால் யுவதி சில நாட்கள் இளைஞனின் வீட்டில் தங்கியிருந்துள்ளார். இந்நிலையில் , வீட்டில் பாதுகாப்பாக வைத்திருந்த இளைஞனின் தாயாரின் தாலிக்கொடி உள்ளிட்ட தங்க நகைகள் காணாமல் போயுள்ளது. அது தொடர்பில் கடந்த 17ஆம் திகதி தாயார் சாவகச்சேரி காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்த நிலையில், காவற்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வந்தனர். விசாரணைகளின் அடிப்படையில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை (25.11.25) குறித்த வீட்டில் தங்கியிருந்த இளைஞனின் காதலியை காவற்துறையினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட பெண்ணிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் , இளைஞனின் தாயாரின் நகைகளை திருடியதை ஒப்புக்கொண்டதுடன் , திருடிய நகைகளில் தாலிக்கொடி உள்ளிட்ட ஒரு தொகுதியை , சாவகச்சேரி பகுதியில் உள்ள நிதி நிறுவனம் ஒன்றில் அடகு வைத்ததாகவும், மற்றுமொரு தொகுதி நகைகளை யாழ் . நகர் பகுதியில் உள்ள நகைக்கடையில் விற்பனை செய்ததாகவும் , தெரிவித்துள்ளார் ரிக்ரொக்கில் அறிமுகமான நண்பன் ஒருவருடன் தான், ஒன்லைன் கேம் விளையாடுவதாகவும் , அதற்கு இதுவரையில் சுமார் 27 இலட்ச ரூபாய் வரையில் செலவழித்து உள்ளதாகவும் , மேலும் பணம் தேவைப்பட்டதால் தான் நகைகளை திருடியதாகவும் அப்பெண் விசாரணைகளில் தெரிவித்துள்ளார். குறித்த பெண்ணின் வாக்குமூலத்தின் அடிப்படையில் ஒரு தொகுதி நகைகளை பொலிஸார் மீட்டுள்ளனர் அத்துடன் அப்பெண்ணை காவல் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். அதேவேளை , இவ்வாறான ஒன்லைன் விளையாட்டில் ஈடுபட , தனது நகைகளை விற்று பணம் செலுத்திய பெண்ணொருவர் , வீட்டில் பெற்றோர் நகைகள் தொடர்பில் கேட்ட போது அவை களவு போனதாக பெற்றோரிடம் கூறியுள்ளார். அதனை அடுத்து பெற்றோர் குறித்த பெண்ணை காவல் நிலையம் அழைத்து சென்று முறைப்பாடு பதிவு செய்த நிலையில் , காவற்துறையினர் முன்னெடுத்த விசாரணைகளில், அப்பெண்ணே, தனது நகைகளை விற்றுள்ளமை தெரிய வந்துள்ளது. அதனை அடுத்து பெண்ணை கடுமையாக எச்சரித்து காவற்துறையினர் விடுவித்தனர் யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக இணைய விளையாட்டுக்களில் பெரும்பாலான இளையோர் பெருந்தொகை பணத்தினை இழந்து வருவதுடன் , கடந்த மாதம் இரு இளைஞர்கள் இணைய விளையாட்டுக்காகக பணம் செலுத்த பெருந்தொகைகளை கடன் பெற்று , கடன் சுமையினால் தமது உயிரை மாய்த்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது. https://globaltamilnews.net/2025/223074/
  15. திருகோணமலை புத்தர்சிலை சர்ச்சையும் எதிரணியின் பெரும்பான்மை இனவாத அணிதிரட்டல் நாட்டமும் November 24, 2025 — வீரகத்தி தனபாலசிங்கம் — திருகோணமலையில் கடந்த வாரம் புத்தர் சிலை தொடர்பாக மூண்ட சர்ச்சையை கையாளுவதற்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கடைப்பிடித்த அணுகுமுறையும் அதற்கு எதிரணி அரசியல் கட்சிகள் வெளிக்காட்டிய எதிர்வினையும் இதுகாலவரையில் இனவாத மற்றும் மதவாத அரசியலின் விளைவாக நாடும் மக்களும் அனுபவித்த அவலங்களில் இருந்து தென்னிலங்கை அரசியல் சமுதாயம் எந்தவிதமான படிப்பினையையும் பெறவில்லை என்பதை பிரகாசமாக வெளிக்காட்டியிருக்கிறது.. இலங்கையில் இனவாதமும் மதத்தீவிரவாதமும் மீண்டும் தலையெடுக்க ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை என்ற அரசாங்கத்தின் நிலைப்பாடு எதிர்நோக்கக்கூடிய சவால்களையும் அரசியலில் மீண்டெழுவதற்கு எதிரணி கட்சிகள் பெரும்பான்மை இனவாத அணிதிரட்லை செய்வதற்கு கிடைக்கக்கூடிய எந்தவொரு சந்தர்ப்பத்தையும் பயன்படுத்தத் தவறப்போவதில்லை என்பதையும் திருகோணமலை சம்பவம் எமக்கு உணர்த்தியது. திருகோணமலை கடற்கரையோரமாக அமைந்திருக்கும் ஸ்ரீ சம்புத்த போதி ரஜமகா விகாரை வளாகத்தில் நவம்பர் 16 ஞாயிற்றுக்கிழமை இரவோடிரவாக வைக்கப்பட்ட புத்தர்சிலையை பிக்குமாரின் எதிர்ப்புக்கு மத்தியில் பொலிசார் அகற்றினர் என்ற போதிலும், மறுநாள் திங்கட்கிழமை நண்பகல் அந்த சிலை அதே இடத்தில் பொலிசாரின் பாதுகாப்புடன் வைக்கப்பட்டு பௌத்த மத நிகழ்வுகள் இடம்பெற்றன. இரவில் புத்தர் சிலைக்கு எவராவது சேதம் விளைவித்துவிடக்கூடும் என்ற காரணத்தினாலேயே பாதுகாப்பு கருதி அதை அகற்றியதாகவும் மீண்டும் அதே இடத்தில் அந்த சிலை வைக்கப்படும் என்றும் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால பாராளுமன்றத்தில் அன்றைய தினம் முன்கூட்டியே அறிவித்திருந்தார். புத்தர் சிலை அகற்றப்பட்ட வேளையில் விகாரை வளாகத்தில் இடம்பெற்ற குழப்பநிலையை பயன்படுத்தி இலங்கையில் பௌத்த மதத்துக்கு பேராபத்து ஏற்பட்டிருக்கிறது என்பதைப் போன்று எதிரணி கட்சிகள் பாராளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் ஆவேசமாகக் குரலெழுப்பின. இந்து அல்லது கிறிஸ்துவ சிலை ஒன்று அது வைக்கப்பட்டிருந்த இடத்தில் இருந்து பொலிசாரினால் அகற்றப்பட்டிருந்தால் இத்தகைய அமர்க்களம் ஏற்பட்டிருக்குமா என்ற கேள்விக்கான பதிலை நாம் சொல்லித்தான் எவரும் தெரிந்துகொள்ள வேண்டியதில்லை. பாராளுமன்றத்தில் நவம்பர் 18 ஆம் திகதி திருகோணமலை சம்பவங்கள் குறித்து பேசிய ஜனாதிபதி அநுர குமார திசநாயக்க மத வழிபாட்டுத் தலத்தை அமைப்பது தொடர்பிலானதாக இந்த சர்ச்சை தோன்றுகின்ற போதிலும், வேறு கதையும் அதற்குள் இருப்பதாக கூறினார். சம்பவங்கள் குறித்து பாதுகாப்பு செயலாளரிடம் அறிக்கை ஒன்றைக் கோரியிருப்பதாக தெரிவித்த ஜனாதிபதி, அரசாங்கத்துக்கு எதிரான போராட்டத்தை நியாயப்படுத்துவதற்கு வேறு எந்த விவகாரமும் கிடைக்கவில்லை என்பதால் எதிரணியினர் இனவாதத்தை தூண்டிவிடுவதற்கு புத்தர் சிலை சர்ச்சையை பயன்படுத்துவதில் நாட்டம் காட்டுகிறார்கள் என்றும் அதற்கு ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை என்றும் குறிப்பிட்டார். அவரைப் பொறுத்தவரை, நீதிமன்றம் உத்தரவைப் பிறப்பித்திருக்கும் நிலையில், அந்த சர்ச்சை முடிவுக்கு வந்துவிட்டது. வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் என்று தாங்கள் கருதுகின்ற இடங்களில் மாத்திரமல்ல, பெளத்தர்கள் வசிக்காத இடங்களிலும் கூட பிக்குமாரில் ஒரு பிரிவினர் புத்தர் சிலைகளை இரவோடிரவாக கொண்டுவந்து வைப்பதும் பிறகு படிப்படியாக அரசாங்கங்களின் அனுசரணையுடன் விகாரைகளை கட்டியெழுப்புவதும் புதிய ஒரு விடயம் அல்ல. சம்பந்தப்பட்ட பகுதிகளின் மக்களிடமிருந்து எதிர்ப்புகள் கிளம்புகின்ற வேளைகளில் அரச இயந்திரம் சட்டவிரோதமானது என்று அந்த மக்கள் குற்றஞ்சாட்டுகின்ற நடவடிக்கைகளுக்கு துணைபோவதே நடைமுறையாக இருந்துவருகிறது. திருகோணமலையில் புத்தர் சிலை அகற்றப்பட்ட இடத்திலேயே மீண்டும் பொலிசாரின் உதவியுடன் அது கொண்டு வந்து வைக்கப்பட்ட சம்பவத்தையும் அதற்கு அரசாங்கத் தரப்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தையும் மேற்கூறிய வழமையான நடைமுறையே தொடருகின்றது என்பதற்கான சான்றாக ஏன் கருதமுடியாது என்பதற்கு ஜனாதிபதியும் அரசாங்க தலைவர்களும் மாத்திரமே பதில் கூற வேண்டும். எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச உட்பட எதிரணி அரசியல்வாதிகள் புத்தர் சிலை சர்ச்சை தொடர்பாக கருத்து வெளியிட்டபோது இலங்கையின் அரசியலமைப்பில் பௌத்த மதத்துக்கு முதன்மையான முன்னுரிமை கொடுக்கப்பட்டிருப்பதை அடிக்கடி சுட்டிக்காட்டியதை காணக்கூடியதாக இருந்தது. ஆனால், அந்த முன்னுரிமையை பிக்குமாரில் ஒரு பிரிவினர் அல்லது மதவாத அடிப்படையில் சமூகங்களுக்கு இடையில் குரோதங்களை ஏற்படுத்த முயற்சிக்கும் சக்திகள் தங்களின் சட்டவிரோதமான அல்லது பௌத்த தர்மத்துக்கு மாறான நடவடிக்கைகளை நியாயப்படுத்த தவறான முறையில் கேடயமாகப் பயன்படுத்துவதை எவ்வாறு அனுமதிக்க முடியும்? தாங்கள் எதைச் செய்தாலும் அரசாங்கம் தட்டிக்கேட்க முடியாது என்ற எண்ணத்தை மகாசங்கத்தின் ஒரு கணிசமான பிரிவினர் வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள். பெளத்த மதத்துடன் தொடர்புடைய சகல பணிகளையும் முன்னெடுப்பதில் பிக்குமாருக்கு இருக்கும் சுதந்திரத்தில் தலையீடு செய்வதற்கு எவருக்கும் உரிமை கிடையாது என்று கூறும் பிரேமதாச பௌத்த மதத்தின் அடிப்படைக் கோட்பாடுகளுக்கு முரணான அடாத்தான நடவடிக்கைகளில் பிக்குமாரில் சில பிரிவினர் ஈடுபட்ட எத்தனை சம்பவங்களை பகிரங்கமாக கண்டனம் செய்தார் என்ற கேள்வியை கேட்காமல் இருக்க முடியவில்லை. பௌத்த மதத்துக்கு அரசியலமைப்பு வழங்கியிருக்கும் முன்னுரிமையை சட்டத்தின் ஆட்சிக்கு சவால் விடுக்கக்கூடிய வகையிலான நடவடிக்கைகளுக்கு பிக்குமாரில் ஒரு பிரிவினர் பயன்படுத்துகிறார்கள் என்பது வெளிப்படையானது. கடந்த காலத்தில் முஸ்லிம் சமூகத்துக்கு எதிரான வன்முறைகளுக்கு தலைமை தாங்கியவர் என்று அறியப்பட்ட பிரச்சினைக்குரிய பிக்கு ஒருவர் புத்தர் சிலை சர்ச்சைக்கு பிறகு கடந்த வாரம் திருகோணமலைக்கு சென்று சமூகங்களுக்கு இடையில் குரோதங்களை தூண்டும் வகையில் பேசியிருப்பதுடன் அரசாங்கத்துக்கு சாவாலும் விடுத்திருக்கிறார். இஸ்லாமிய மதத்தை நிந்தனை செய்யும் விதத்தில் பேசியதாக நீதிமன்றத்தினால் குற்றவாளியாகக் காணப்பட்ட அவர் திருகோணமலை சர்ச்சையில் தன்னை ஈடுபடுத்துவதில் வலிந்து நாட்டம் காட்டுகிறார். பெரும்பான்மையான சிங்கள பௌத்த மக்கள் இத்தகைய பிக்குமாரின் முறைகேடான செயற்பாடுகளை ஆதரிப்பதில்லை என்று கூறப்படுகிறது. ஆனால், அவற்றை அவர்கள் எதிர்ப்பதுமில்லை என்பது துரதிர்ஷ்டவசமானது. கெடுதி செய்பவர்களினால் அல்ல, அந்த கெடுதியை தடுக்க எதையும் செய்யாமல் இருப்பவர்களினாலேயே உலகம் ஆபத்தானதாக இருக்கிறது என்ற அறிவியல் மேதை அல்பேர்ட் அயன்ஸ்டீனின் கூற்று நினைவுக்கு வருகிறது. கெட்டவர்களின் வெறுப்பு பேச்சுக்களுக்கும் செயல்களுக்காகவும் மாத்திரமல்ல, நல்லவர்களின் மௌனத்துக்காகவும் இந்த தலைமுறையில் நாம் பச்சாதபப்பட வேண்டியவர்களாக இருக்கிறோம் என்று அமெரிக்க கறுப்பின தலைவர் மார்டின் லூதர் கிங் கூறினார். சிறுபான்மைச் சமூகங்களுக்கு எதிரான வெறுப்பு அரசியல் இலங்கைக்கு ஒன்றும் புதியதல்ல. அது இலங்கையின் பெரும்பான்மை இனவாத அரசியலுடன் சமாந்தரமாக வளர்ச்சி கண்ட அருவருக்கத்தக்க ஒரு போக்காகும். ஆனால், சகல சமூகங்களுக்கும் அழிவை ஏற்படுத்திய மூன்று தசாப்தகால உள்நாட்டுப் போருக்கு பின்னரும் கூட, தென்னிலங்கை அரசியல் சமுதாயம் சிறுபான்மைச் சமூகங்களின் நியாயபூர்வமான அரசியல் அபிலாசைகளை ஏற்றுக் கொள்ளத் தவறுவதே பெரும் கவலைக்குரியதாக இருக்கிறது. அரசியலில் பெரும் செல்வாக்கைச் செலுத்துவதற்கு பௌத்த மதகுருமார் நாட்டம் காட்டுவதே இலங்கையில் பல பிரச்சினைகளுக்கு தீர்வுகளைக் காணமுடியாமல் இருப்பதற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாகும். பிக்குமார் நேரடியாக அரசியலில் ஈடுபட்டு தேர்தல்களில் போட்டியிடுகிறார்கள். அவர்களின் செயல்கள் புத்தபெருமானின் அடிப்படைப் போதனைகளுக்கு முரணானதாக இருந்தாலும் கூட, நேரடி அரசியலில் ஈடுபடுவதில் இருந்து அவர்களை தடுக்க மகாநாயக்கர்களினால் கூட முடியாமல் இருக்கிறது. இலங்கையில் பௌத்தம் நடைமுறையில் ஒரு அரசியல் மதமாக மாற்றப்பட்டுவிட்டது. தென்னிலங்கை அரசியல் வரலாற்றில் பெளத்த மதகுருமாரின் செல்வாக்கு பெருமளவுக்கு எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தியிருக்கிறது. இன்று தமிழர்களின் அரசியலிலும் முன்னென்றும் இல்லாத வகையில் மதவாதம் ஊடுருவுகின்ற போக்கை காணக்கூடியதாக இருக்கிறது. இந்தியாவின் ‘ இந்துத்வா’ அரசியலின் செல்வாக்கே இதற்கு காரணம் எனலாம். சிங்களவர்களாக இருந்தாலென்ன, தமிழர்களாக இருந்தாலென்ன இலங்கைச் சமூகம் அரசியலில் இருந்து மதத்தைப் பிரிக்காவிட்டால் இலங்கைக்கு எதிர்காலம் இல்லை. ஜனாதிபதி திசநாயக்கவும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் வெறுமனே சகல குடிமக்களையும் சமத்துவமாக நடத்துவதே தங்களின் கொள்கை என்று கூறிக்கொண்டிருந்தால் மாத்திரம் போதாது. கடந்த காலத்தில் அரசாங்கங்கள் கடைப்பிடித்த பாகுபாடான கொள்கைகள் மற்றும் அடக்குமுறைகளின் விளைவாக சிறுபான்மைச் சமூகங்கள் அனுபவிக்கின்ற பிரத்தியேகமான பிரச்சினைகளை போக்குவதற்கு நடவடிக்கைகளை எடுப்பதில் அக்கறை காட்டினால் மாத்திரமே சமத்துவமான குடிமக்கள் என்ற உணர்வை அந்த மக்கள் மத்தியில் படிப்படியாக ஏற்படுத்த முடியும். சாந்தமே உருவான புத்தர் சிலையை ஆக்கிரமிப்பின் ஒரு கருவியாக சிறுபான்மைச் சமூகங்கள் நோக்குகின்ற துரதிர்ஷ்டவசமான நிலைவரத்தை மாற்றியமைக்க வேண்டியதும் அரசாங்கம் தீர்வுகாண வேண்டிய அந்த பிரத்தியேகமான பிரச்சினைகளில் ஒன்று. அரசாங்கத்துக்கு எதிரான பிரசாரங்களுக்கு இனவாதத்தையும் மதவாதத்தையும் பயன்படுத்துவதில் எதிரணி கட்சிகள் கொண்டிருக்கும் நாட்டத்தை திருகோணமலை புத்தர் சிலை சர்ச்சை வெளிக்காட்டியிருக்கிறது. தங்களது தவறான ஆட்சிமுறையையும் ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகங்களையும் மறைப்பதற்காக பெரும்பான்மை இனவாத அணிதிரட்டலை தீவிரமாக முன்னெடுத்த முன்னைய ஆட்சியாளர்கள் பொருளாதார ரீதியில் நாட்டை வங்குரோத்து அடையச் செய்ததை நாட்டு மக்கள் மறந்துவிடக்கூடாது. மீண்டும் அத்தகைய அணிதிரட்டலை அனுமதித்தால் தொடர்ந்தும் அதே பிரச்சினைகளுடனேயே இலங்கையர்கள் வாழவேண்டியிருக்கும். https://arangamnews.com/?p=12455
  16. வவுனியாவில் பாரிய தீ விபத்து - கோடிக்கணக்கான ரூபாய் பெறுமதியான பொருட்கள் தீக்கிரை செவ்வாய், 25 நவம்பர் 2025 06:18 AM வவுனியாவில் தனியார் நிறுவனம் ஒன்றின் காட்சியறையில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் கோடிக்கணக்கான ரூபாய் பெறுமதியான பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளது. வவுனியா - ஹொரவபொத்தானை வீதியில் அமைத்துள்ள சிங்கர் காட்சியறையிலையே தீ விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தினை அடுத்து, தீயணைப்பு படையினர் மற்றும் வர்த்தகர்கள் உள்ளிட்ட பெருமளவானோரின் பெரும் போராட்டத்தின் மத்தியில் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. தீ விபத்தில் காட்சியறையில் காணப்பட்ட பெறுமதியான இலத்திரனியல் பொருட்கள், தளபாடங்கள் என கோடிக்கணக்கான பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளது. சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். https://jaffnazone.com/news/52609
  17. லண்டனின் வீதியில் நின்ற தமிழ் இளைஞருக்கு கொள்ளையர்களால் நேர்ந்த கதி லண்டனில் தமிழ் இளைஞர் ஒருவர் மீது கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியதில் தாக்குதலுக்கு உள்லான இளைஞன் கோமா நிலைக்கு சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஈழத் தமிழர்கள் மற்றும் இந்தியர்கள் அதிகம் வாழும் சவுத்ஹாலில் இப்படி ஒரு சம்பவம் நடந்தது பெரும் அதிர்வலைகளைத் தோற்றுவித்துள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், லண்டன் சவுத்ஹால் பகுதியில் வீதியில் நின்ற இளைஞரை குறிவைத்து சிலர் தாக்கியுள்ளார்கள். அடித்துக் காயப்படுத்திய நபர்கள் அவர் அணைந்திருந்த தங்க நகைகளைக் கொள்ளையடித்துக் கொண்டு சென்றது மட்டுமல்லாமல், அவரைச் சரமாரியாகத் தலையில் தாக்கி, கீழே தள்ளிவிட்ட நிலையில், அவர் கடுமையான காயங்களுக்கு உள்ளாகியுள்ளார். சம்பவத்தை அடுத்து விரைந்து வந்த பாரா மெடிக்ஸ் குழுவினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்ற நிலையில், அவர் கோமா நிலைக்குச் சென்றுவிட்டதாகத் தற்போது தகவல் வெளியாகியுள்ளது. தற்போது சவுத்ஹால் பிரதேசத்தில் ஆப்பிரிக்கர்கள் மற்றும் ருமேனிய நாட்டவர்களும் அதிகம் வசித்து வருகிறார்கள். குறிப்பாக ருமேனிய சமூக இளைஞர்கள் இது போன்ற பல திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகின்றது. அவர்கள் தமிழர்களையும் இந்தியர்களையும் குறிவைத்து செயல்பட்டு வருவதானால் அங்குள்ள இலங்கையர்களும் , இந்தியர்களும் அச்சத்தில் உள்ளலதாக கூறப்படுகின்றது. https://akkinikkunchu.com/?p=350056
  18. பாபா வங்கா கணிப்பில் மீண்டும் சலசலப்பு ; 2026 இல் புடினின் எழுச்சியா? ஜப்பானிய பாபா வங்கா என்று அழைக்கப்படும் ரையோ தத்சுகி 2026இல் இடம்பெறுமென கணித்துள்ள விடயங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தவகயில், 2026ஆம் ஆண்டில் ரஷ்யாவிலிருந்து உலகளாவிய சக்தியாக உயரும் ஒரு புதிய தலைவர் உருவாகுவார் என பாபா வங்கா கணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும், குறித்த கணிப்பின் படி, அந்த நபர், உலகையே ஆளும் சக்தி கொண்டவராகவும் “உலகின் இறைவன்” அல்லது உலக விவகாரங்களின் மாஸ்டர் என்று கூறக்கூடிய அளவு சக்தி வாய்ந்தவராக இருப்பார் என தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில், பல நிபுணர்கள், அது ரஷ்யா விளாடிமிர் புடினாக இருக்க கூடும் என தெரிவித்து வருகின்றனர். அவரது கணிப்புகளின் சில விளக்கங்கள், 2026ஆம் ஆண்டில் ரஷ்யாவிலிருந்து அல்லது ரஷ்யா செல்வாக்கு செலுத்தும் இடத்திலிருந்து ஒரு சக்திவாய்ந்த தலைவர் வெளிப்படுவார் என்று கூறுகின்றன. சர்வதேச பரப்பில் உக்ரைன் – ரஷ்ய போர் நீண்டகாலமாக இடம்பெற்று வரும் நிலையில் தற்போது அமெரிக்காவின் தலையீட்டால் விரைவில் அதனை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் தீவிர பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறான ஒரு சூழ்நிலையில் பாபா வங்காவின் இந்த கணிப்பு, முன்னதாக அவரின் கணிப்புக்களில் சில விடயங்கள் நிகழ்ந்துள்ளன என்பதால் நிபுணர்களின் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. https://akkinikkunchu.com/?p=350062
  19. 12 ஆயிரம் ஆண்டுகளுக்குப்பின் முதல்முறையாக வெடித்தது எரிமலை ; இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு பரவும் சாம்பல் 25 Nov, 2025 | 11:22 AM கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள எத்தியோப்பா நாட்டின் அபார் மாகாணத்தில் ஞாயிற்றுக்கிழமை (23) ஹேலி குப்பி என்ற எரிமலை 12 ஆயிரம் ஆண்டுகளுக்குப்பின் முதல் முறையாக வெடித்து சிதறியுள்ளது. இந்த எரிமலை எரித்திரியா நாட்டின் எல்லை அருகே அமைந்துள்ளது. ஹேலி குப்பி எரிமலை கடந்த 12 ஆயிரம் ஆண்டுகளாக எந்தவித வெடிப்பும் இன்றி அமைதியான இருந்துள்ளது. இந்நிலையில், திடீரென வெடித்து சிதறி எரிமலையில் இருந்து பல கிலோ மீட்டர் தூரத்திற்கு கரும்புகை வெளியேறி வருகிறது. எரிமலை வெடிப்பால் லாவா எரிமலை குழம்பும் வெளியேறி வருகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்த எரிமலை வெடிப்பில் இருந்து சிதறிய சாம்பல் சிவப்பு கடல் வழியாக ஏமன் மற்றும் ஓமன் நாடுகளில் பரவி, தற்போது வடக்கு அரேபிய கடல் பகுதிக்கு வந்துள்ளது. அதையும் தாண்டி, இந்த சாம்பல்கள் கொஞ்சம் கொஞ்சமாக இந்தியாவின் டெல்லி, ஹரியானா, உத்தரபிரதேசத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. இந்த சாம்பல் மேகங்கள் வளிமண்டலத்தில் ஆயிரக்கணக்கான அடி உயரத்தில் இருக்கம் என்பதால் பாதிப்பிற்கான வாய்ப்பு சற்று குறைவே. இந்த சாம்பல்கள் இந்தியாவை பாதிக்கலாம் என்பதால் ஆகாசா ஏர் இண்டிகோ, கே.எல். எம் ஆகிய விமானங்கள் தங்களது சில விமானங்களை இரத்து செய்துள்ளன. சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகமும் விமான நிறுவனங்களை சாம்பல் பாதிக்கப்பட்ட பகுதிகளை தவிர்க்கவும், அந்த இடங்களுக்கான விமான பயணத்தை மாற்றவும், எரிப்பொருள் நிரப்புவதற்கான இடங்களை தேவைப்பட்டால் மாற்றவும் அறிவுறுத்தி உள்ளது. ஒருவேளை விமானங்களில் ஏதேனும் சாம்பல் பாதிப்பு இருந்தாலோ, இருப்பதாகவோ நினைத்தாலோ உடனே தெரிவிக்குமாறும் உத்தரவிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/231366
  20. யாழ் பல்கலையின் பேரவைக்கு புதிய உறுப்பினர் நியமனம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பேரவைக்குப் புதிய உறுப்பினர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் பணிப்பாளரான குமாரசாமி சத்தியகுமார் என்பவரே உடன் அமுலாகும் வகையில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த வருடம் நியமிக்கப்பட்ட பேரவை உறுப்பினர்களில் ஒருவர் தொடர்ச்சியாக மூன்று கூட்டங்களில் பங்கேற்காமை காரணமாக அவரது உறுப்பினர் பதவிக்கு வெற்றிடம் ஏற்பட்டது. அந்த உறுப்பினரின் எஞ்சிய காலப்பகுதிக்காக 2028 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. யாழ் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தர் நியமனத்துக்காக மூன்று பேரைத் தெரிவு செய்து, ஜனாதிபதிக்குப் பரிந்துரைப்பதற்கான தெரிவுக் கூட்டம் எதிர்வரும் டிசம்பர் 09 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், பேரவையில் வெற்றிடமாக இருந்த இடத்தை நிரப்புவதற்குப் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://adaderanatamil.lk/news/cmie3y3tn01yto29nvwzsozcy
  21. 10 தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க கோரிக்கை! ஆனந்தசுதாகர் உட்பட சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 10 தமிழ் அரசியல் கைதிகளையும் அடுத்த மாதம் நடைபெறவுள்ள இலங்கையர் தினத்தை முன்னிட்டு விடுதலை செய்ய வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. வன்னி மாவட்ட நாடாளுமன்றின் உறுப்பினர் துரைராசா ரவிகரன், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் இதனை வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினரின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட ஜனாதிபதி, தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வது தொடர்பில் தாம் பரிசீலனை செய்வதாகக் குறிப்பிட்டுள்ளார். இலங்கையர் தினம் தொடர்பில், தமிழ் அரசியல்வாதிகளுடன் நடைபெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி இந்த விடயத்தைக் கூறியதாக நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் அரசியல் கைதிகளில் ஒருவரான கிளிநொச்சி மருதநகரைச் சேர்ந்த ஆனந்தசுதாகருடைய மனைவி ஏற்கனவே உயிரிழந்துள்ள நிலையில், அவருடைய இரண்டு பிள்ளைகளையும் பராமரித்து வந்த பாட்டியும் உயிரிழந்துள்ளார். இந்தநிலையில், அந்த பிள்ளைகள் நிர்க்கதியாகியுள்ளமை தொடர்பில் ஜனாதிபதியிடம் தாம் எடுத்துரைத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டுள்ளார். எனவே, இந்த விடயத்தில் மனிதாபிமானத்துடன் அணுகி, எதிர்வரும் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள இலங்கையர் தினத்திலாவது தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை உறுதி செய்து நல்லிணக்கத்தினை வெளிப்படுத்துமாறு தாம் வலியுறுத்தியதாகவும் ரவிகரன் கூறியுள்ளார். https://newuthayan.com/article/10_தமிழ்_அரசியல்_கைதிகளை_விடுவிக்க_கோரிக்கை!
  22. கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது! யாழ்ப்பாணம் - புன்னாலைக்கட்டுவன் பகுதியில் இடம்பெற்ற கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் நேற்று காங்கேசன்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் புன்னாலைக்கட்டுவன் பகுதியில் உள்ள கள்ளுத் தவறணை ஒன்றுக்கு சென்ற நபர் ஒருவர் கள்ளுத் தவறணையில் வைத்து இருவரால் தாக்கப்பட்டார். தாக்குதலுக்கு உள்ளான அவர் தெல்லிப்பளை ஆதார மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார். அவர்மீது தாக்குதலை மேற்கொண்ட இருவரும் தலைமறைவாகி இருந்த நிலையில், ஒருவர் நேற்றய தினம் காங்கேசன்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் அவரை மல்லாகம் நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். https://newuthayan.com/article/கொலையுடன்__தொடர்புடைய_சந்தேகநபர்__கைது!
  23. புலிகளின் சின்னத்தை அங்கீகரித்தல் உள்ளிட்ட பிரிவினைவாத நடவடிக்கைகளை தடுத்து நிறுத்துங்கள் – கனேடிய உயர்ஸ்தானிகரிடம் வெளிவிவகார அமைச்சர் புலிகளின் சின்னத்தை அங்கீகரித்தல், பிரிவினைவாத சிந்தனைகளை ஊக்குவித்தல் என்பன உள்ளடங்கலாக இலங்கையில் பிரிவினையைத் தூண்டக்கூடிய நடவடிக்கைகளைக் கனேடிய அரசாங்கம் தடுக்கவேண்டும் என அந்நாட்டு உயர்ஸ்தானிகரிடம் வலியுறுத்தியுள்ள வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத், இவ்வாறான நடவடிக்கைகள் தேசிய ஒருமைப்பாட்டைக் கட்டியெழுப்புவதை இலக்காகக்கொண்டு அரசாங்கம் முன்னெடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு விரோதமானவையாக இருப்பதாக அதிருப்தி வெளியிட்டுள்ளார். இலங்கைக்கான புதிய கனேடிய உயர்ஸ்தானிகராகப் பதவியேற்றிருக்கும் இஸபெல் கத்ரின் மார்டின் திங்கட்கிழமை (24) கொழும்பிலுள்ள வெளிவிவகார அமைச்சில் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித்த ஹேரத்தை சந்தித்துக் கலந்துரையாடினார். இச்சந்திப்பின்போது கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பில் தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவொன்றைச் செய்திருக்கும் அமைச்சர் விஜித்த ஹேரத், புலிகளின் சின்னத்தை அங்கீகரித்தல், பிரிவினைவாத சிந்தனைகளை ஊக்குவித்தல், இலங்கையில் இனங்களுக்கு இடையில் பிளவுகளை ஏற்படுத்தும் நோக்குடன் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு இடமளித்தல் என்பன உள்ளடங்கலாக இலங்கையில் பிரிவினையைத் தூண்டக்கூடிய நடவடிக்கைகளைக் கனேடிய அரசாங்கம் தடுக்கவேண்டும் என அந்நாட்டு உயர்ஸ்தானிகரிடம் வலியுறுத்தியதாக அப்பதிவில் குறிப்பிட்டுள்ளார். அதுமாத்திரமன்றி கனடாவில் வாழும் தரப்பினரின் இவ்வாறான நடவடிக்கைகள் இலங்கையில் தேசிய ஒருமைப்பாட்டைக் கட்டியெழுப்புவதை இலக்காகக்கொண்டு அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகளுக்கு விரோதமானவையாக இருப்பதாகவும் கனேடிய உயர்ஸ்தானிகரிடம் அமைச்சர் விஜித்த ஹேரத் சுட்டிக்காட்டியுள்ளார். அதற்குப் பதிலளித்த உயர்ஸ்தானிகர் இஸபெல் கத்ரின் மார்டின், ‘தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் கனடாவில் தடை செய்யப்பட்டதொரு அமைப்பாகவே இருக்கின்றது. அதேபோன்று விடுதலைப்புலிகள் இயக்கத்துடன் தொடர்புடைய சின்னங்களையோ அல்லது பிரிவினைவாத சிந்தனைகளையோ கனேடிய மத்திய அரசாங்கம் ஒருபோதும் அங்கீகரிக்காது. அத்தோடு இலங்கையின் இறையாண்மை மற்றும் கௌவரம் என்பவற்றுக்கு மதிப்பளிப்பதற்கு கனடா உறுதிபூண்டிருக்கின்றது’ எனத் தெரிவித்ததாகவும் அமைச்சர் விஜித்த ஹேரத் அவரது எக்ஸ் தளப்பதிவில் குறிப்பிட்டுள்ளார். https://www.samakalam.com/புலிகளின்-சின்னத்தை-அங்க/
  24. அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் ஆளுகையில் உள்ள ஊர்காவற்துறை பாதீடு தோற்கடிப்பு! adminNovember 25, 2025 அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் ஆளுகையில் உள்ள ஊர்காவற்துறை பிரதேச சபை வரவு செலவு திட்டம் நேற்றையதினம் திங்கட்கிழமை தோற்கடிக்கப்பட்டது. 13 ஆசனங்களை கொண்ட ஊர்காவற்துறை பிரதேச சபையில் , ஈழமக்கள் ஜனநாயக கட்சி 4 ஆசனங்களையும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் மற்றும் தேசிய மக்கள் சக்தி ஆகியன தலா 03 ஆசனங்களையும் , இலங்கை தமிழ் அரசுக் கட்சி 2 ஆசனங்களையும் , ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி ஒரு ஆசனத்தையும் பெற்றுள்ளது. அந்நிலையில், தவிசாளர் அன்னலிங்கம் அன்னராசா நேற்றைய தினம் நடைபெற்ற சபை அமர்வில் வரவு செலவு திட்டத்தை சமர்ப்பித்தபோது அது தோற்கடிக்கப்பட்டது. வரவு செலவு திட்டத்துக்கு ஆதரவாக அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் இருவரும் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் ஒருவருமாக மூவர் வாக்களித்தனர். வரவு செலவு திட்டத்துக்கு எதிராக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் நால்வரும் தேசிய மக்கள் சக்தியின் மூவரும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி மற்றும் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலா ஒருவர் என 10 பேர் வாக்களித்தனர். கடந்த ஜுன் மாதம் நடைபெற்ற தவிசாளர் தெரிவின் போது திருவுளச்சீட்டு மூலம் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் உறுப்பினர் அன்னலிங்கம் அன்னராசா தவிசாளராகவும் உப தவிசாளராக இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் செபஸ்தியான் பிள்ளை லெனின் ரஞ்சித்தும் தெரிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://globaltamilnews.net/2025/223021/
  25. அமைதியை தவிர வேறு வழியில்லை லக்ஸ்மன் இனவாதமும் பௌத்த மேலாதிக்கமுமே ஆரம்பத்திலிருந்து இலங்கையின் இன முரண்பாடுகளுக்கும் பெரும்பாலான பிரச்சினைகளுக்கும் மூல காரணம் என்பது எல்லோருக்கும் வெளிப்படையாகத் தெரிந்ததே. இருந்தாலும் அதனை வெளிப்படையாக ஏற்றுக் கொள்வதற்கு அவர்களுக்கும் துணிச்சல் இல்லை. அதனாலேயே சுதந்திரமடைந்து 80 வருடங்களாகின்ற போதிலும், நிம்மதியற்ற இலங்கையே இருந்து வருகிறது.கடந்த வாரத்தில் உருவான திருமலை புத்தர் சிலை விவகாரத்தில் கருத்துவெளியிட்ட எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, “பிக்குகளைக் கொண்டே முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனா தமிழ் மக்களுக்கெதிராக அரசியல் செய்தார். திருகோணமலைப் பகுதியில் பிரதிஸ்ட்டை செய்யப்பட்ட புத்தர் சிலை அகற்றப்பட்டமை தேசியப் பிரச்சினை ஆகவே சிலையை அதே இதத்தில் வைக்கவேண்டும்” என்று தெரிவித்திருந்தார். இந்தக் கருத்தைத் தவறான கருத்தாகச் சுட்டிய பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் அவர், தமிழ் மக்களிடம் மன்னிப்புக் கோரவேண்டும் என்று கூறியிருந்தார். மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் “இந்த நாட்டில் இனிமேலும் இன, மத வாதங்களுக்கு இடமில்லை. இனவாதிகளை சட்டம் சும்மா விடமாட்டாது. இருக்கின்ற சட்டங்கள் போதாது என்றால் மேலும் சட்டங்களைக் கொண்டு வந்து இனவாதிகளை அடக்குவோம்” என்ற கருத்துக்கு சஜித்தின் கருத்து நேர் எதிரானது. திருகோணமலை புத்தர் சிலை விவகாரமானது தங்களால் சரியாகக் கையாளப்பட்டதாகவும் இனவாதிகளின் முயற்சிகள் முறியடிக்கப்பட்டதாகவும் தற்போது கதைகள் உலாவ விடப்படுகின்றன. ஆனால், யார் முயற்சி செய்தாலும் அதன் பலாபலன் தமக்கே கிடைக்க வேண்டும் என்கிற முறைமையைத் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கையாண்டிருப்பதையே காணமுடிகிறது. வடக்கு கிழக்கானது தமது பாரம்பரிய தாயகம் என்று சொல்கின்ற தமிழர்களின் பிரதேசத்துக்குள்ளேயே இருக்கின்ற திருகோணமலையில் இந்த அரசாங்கத்தின் காலத்துக்குள் மாத்திரமல்ல கடந்த அரசாங்கங்களின் ஆட்சிக் காலங்களிலும் புத்தர் சிலைகள் பல முளைத்ததும் விகாரைகள் கட்டப்பட்டதும் நடைபெற்றே இருக்கிறது. ஆனால், அவற்றினை மக்கள் விடுதலை முன்னணி எதிர்த்ததில்லை. அதே நேரத்தில், இந்தச் சிலை விவகாரத்தினைப் பார்த்தால், உள்ளுராட்சிச் சபைகள் அதிகாரத்தில் இருக்கின்ற வேளையில் திருகோணமலை நகர சபையின் எல்லைக்குள் இந்தச் சிலை அனுமதியின்றி நிறுவப்பட்டிருக்கிறது. சட்டத்திற்கு முரணான நடவடிக்கை உள்ளூர் அரசியல்வாதிகள், பொலிஸாரின் கவனத்திற்கும் கொண்டு வரப்பட்டபோது புத்தர் சிலை இரவோடிரவாக அகற்றப்பட்டிருக்கிறது. அதனை அறிந்த தமிழ் மக்கள் சிறிது மகிழ்ச்சியடைந்தனர். அந்த மகிழ்ச்சி திருப்தியாக மாற்றமடைவதற்கு முன்னரே பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால பாதுகாப்பு காரணங்களுக்காகவே புத்தர் சிலை அகற்றப்பட்டது. அகற்றியவர்களால் மீண்டும் அதே இடத்தில் நிறுவப்படும் என்று நாடாளுமன்றத்தில் அறிவித்ததும் ஏமாற்றமாகிப் போனது. அவ்வாறானால் இப்போது அச்சிலை சட்டரீதியாகநிறுவப்பட்டிருப்பதாகவே கொள்ளலாம். அதே நேரத்தில், புத்தர் சிலை விடயத்தில் தமிழ், முஸ்லிம் மக்களுக்குத் தொடர்பில்லை என்று திருகோணமலை ஸ்ரீ சம்புத்த ஜெயந்தி போதிவர்த்தன விகாரையின் விகாராதிபதி கல்யாண வங்ச திஸ்ஸ தேரர் தெரிவித்திருந்தார். இந்தச் சிலை விவகாரத்தில் தமிழ் மக்கள் அக்கறையில்லாமல் இருக்கின்ற வேளையிலும் கூட அவர்களை இதற்குள் இழுத்துவிடும் செயற்பாடு நடைபெற்றிருக்கிறது என்பதனை இது காட்டுகிறது. அதே நேரத்தில், தமிழ் மக்களிடம் இருக்கின்ற ஆட்சிப் பொறுப்பைக் கொடுத்துவிட்டோம் அவர்கள் பார்த்துக் கொள்ளட்டும் என்கிற அசட்டை மனோநிலை இந்த விடயத்தில் தமிழ் மக்களின் கவனக் குறைவுக்குக் காரணமாக இருக்கலாம். அதற்கு ஜே.வி.பி. தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அல்லது ஜனாதிபதியின் கடந்த கால வார்த்தைகள் மீது கொண்ட நம்பிக்கை காரணமாக இருக்கலாம். ஆனால் அகற்றப்பட்ட சிலை மீண்டும் சட்ட ரீதியாகவே நிறுவப்பட்டமையானது சிறுபான்மை மக்கள் மத்தியில் கவலையையே ஏற்படுத்தியிருக்கிறது. பொலிசாரால் அகற்றப்பட்ட அந்த சிலை அரசாங்க ஆசீர்வாதத்துடன் மீண்டும் அங்கு நிறுவப்பட்டமையானது எதனையும் சட்டரீதியாகச் செய்யுங்கள் என்று ஒரு தகவலை இனவாதிகளுக்குக்கொடுத்திருக்கிறது எனலாம். எதிர்க்கட்சித் தலைவர் சஜீத் பிரேமதாசா அரசியலமைப்பின் இரண்டாவது சரத்தைச் சுட்டிக்காட்டிப் பேசுகிறார். இனவாதம், மதவாதம் இனி இல்லை என்று சொன்ன தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அமைச்சர் பாதுகாப்பு காரணங்களுக்காகவே சிலை அகற்றப்பட்டதாகக் கூறி அதனை மீண்டும் நிறுவச் செய்கிறார். இது சஜித்தின் கருத்தை ஆதரித்து ஏற்றுக் கொண்டதாகவே பார்க்கப்படுகிறது. மற்றொருவகையில் பார்த்தால், சிங்கள பௌத்த பேரினவாதத்திற்கு அரசாங்கம் அடிபணிந்தே சிலையை மீண்டும் நிறுவியிருக்கிறது என்று கொள்ளமுடியும். அதே நேரத்தில் அரசாங்கத்தின் கொள்கை தோற்றுவிட்டது. இனவாதிகள் வெற்றிபெற்றிருக்கிறார் என்றும் கொள்ள முடிகிறது. மாறாக, சட்டரீதியற்ற முறையில் நிறுவப்பட்ட சிலையை பொலிஸார் அகற்றினர். அதற்கெதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டம், ஒழுங்கை நிலைநாட்டவேண்டிய பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் வாதாடியிருந்தால் அரசாங்கம் சொன்னதையே செய்கிறது என்று கொள்ள முடியும். ஆனால், நடைபெற்றிருப்பதோ வேறொன்று. அத்துடன், மகிந்த கூட்டணியுடன் தொடர்புடையதே இந்த புத்தர் சிலை. அவர்களுடைய தரப்பினரே இந்தக் காரியத்தை நடத்தினர். பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசியக் கட்சி உள்ளிட்ட கட்சிகளின் ஏற்பாட்டில் நுகேகொடவில் நடைபெறவிருந்த பேரணிக்கு ஆதரவு திரட்டும் வகையில் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. அந்தவகையில், எதிர்க்கட்சிகளின் இன, மதவாத சதி அரசியல் இது என்று கூறும் அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கைகள் சரியானதா என்ற கேள்வி சிறுபான்மை மக்கள் மத்தியில் உருவாகியிருக்கிறது. கடந்த காலத்தில் இனவாத அரசியலையே செய்து கொண்டிருந்த ஜே.வி.பி. தேசிய மக்கள் சக்தியாகத் தன்னை மாற்றிக்கொண்டபோது, முற்று முழுதாக மாறி விட்டது. என்று மனோநிலையை முழுமையாக மாற்றிக்கொள்ள முனைகின்ற தமிழ், முஸ்லிம் சிறுபான்மை மக்களும், தமிழ் மக்களின் உரிமை பற்றிச் சிந்திக்கின்ற சிறுதொகைச் சிங்கள மக்களும் இதிலிருந்தேனும் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். அதே நேரத்தில், ஒரு தலைமையின் கீழ் ஒரு கட்டளையாளரின் கீழ் மாத்திரமே தேசிய மக்கள் சக்தி இயங்க, செயற்பட வேண்டும் என்கிற நெறிமுறைக் கட்டுப்பாடுகள் அரசாங்கத்துக்குள் இருக்கிறதா? என்கிற கேள்வியை அவர்கள் கேட்டுக் கொள்ளவும் வேண்டும். அவ்வாறானால், பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைக் கொண்டுள்ள இடதுசாரிச் சிந்தனையாளர்களாக தம்மைக் காட்டிக்கொள்ள முனைகின்ற அரசாங்கம் பௌத்த மேலாத்திக்க வாதத்துக்குள் இருந்து வெளியில் வந்ததாக அறிவித்துக் கொள்வதற்குக் கிடைத்த வாய்ப்பினை தவறவிட்டிருக்கிறது, வீணடித்து விட்டது. அவ்வாறானால், அது அரசாங்கத்தின் இயலாமையால் நடைபெற்றதா?, பலவீனமானதாக அரசாங்கம் இருக்கிறதா? என்பதே இப்போது ஆராயப்பட வேண்டும். இலங்கையைப் பொறுத்தவரையில் பௌத்த தேசியவாதம், தமிழ்த் தேசியவாதம், இஸ்லாமியத் தேசியவாதம் என தங்கள் தங்கள் நிலைப்பாடுகளைக் கொண்டிருக்கின்ற சமூகங்கள் ஒவ்வொரு இனத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடவே செய்கின்றனர். ஆனால், சிங்களவர்களை அனுசரிக்கின்ற நிலைப்பாட்டைக் கொண்டிருந்தால் நாட்டில் வாழ முடியும் தங்களது இனத்தை நிலைநிறுத்திக் கொள்ள முடியும் என்ற கொள்கையை எடுத்துக் கொள்வதில் தமிழர்களுக்கு மனோநிலை இடம் கொடுப்பதில்லை. இவ்வாறான நிலையில்தான் தங்களது தமிழ்த் தேசிய அரசியல்வாதிகள் எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியிலேயே முடிந்த கொண்டிருக்கின்ற சூழலை உணர்ந்து வெளிப்படுத்தப்பட்ட தோரணைகளைக் கண்ணுற்று தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்திருந்தனர். எது எவ்வாறானாலும், தமிழ் மக்கள் தங்களது இந்த முடிவினைத் தவறென்று எடுத்துக் கொள்வார்களா?, அப்படியே விட்டுவிடுவோம் என்று கொள்வார்களா? என்பது காலத்தின் கையில் விடப்பட்டதே. இருந்தாலும், வடக்குக் கிழக்கில் நடைபெற்ற இனப் பரம்பல் குறைப்பு நடவடிக்கைகள், சிங்கள மயமாக்கல் குடியேற்றங்கள், பௌத்த மேலாதிக்க செயற்பாடுகள், தொல்பொருள் ஆதிக்கங்கள் நிறுத்தப்படப் போவதில்லை என்பதனை மீண்டும் ஒருமுறை திடமாக உறுதிப்படுத்திய சம்பவமாகத் திருமலை சிலை நிறுவலைக் கொள்ளமுடியும் என்பதே நிச்சயம். ஆனாலும், ஆயுதத்தை ஆயுதத்தால் அணுகுகின்ற, இனவாதத்தை, இனவாதத்தால் அணுகுகின்ற நிலைப்பாடுகள் வலுத்துவருகின்ற இன்றைய சூழலில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு வேறுவழியுமில்லை என்று அமைதியடைந்து கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. புத்தர் திருகோணமலையின் கடற்கரையோரப் பாதுகாப்பு வலயத்தில் தற்காலிகமாகக் குடியேற்றப்படவில்லை அவர் நிரந்தரமாகவே அமர்த்தப்பட்டார். அங்கு விரைவில் விகாரையும் அமையும் என்பது உண்மையானாலும், தமிழர்களைப் பொறுத்தமட்டில். இப்போது போன்று அப்போதும் அமைதியாகவே இருப்பர். https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/அமைதியை-தவிர-வேறு-வழியில்லை/91-368414

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.