Everything posted by கிருபன்
-
பொன்ஜூர் ரூஸோ! - ஷோபாசக்தி
பொன்ஜூர் ரூஸோ! ஷோபாசக்தி இருநூற்று முப்பது வருடங்கள் பழைமையான சாம்பல்நிறச் சமாதிமீது நீட்டி நிமிர்ந்து படுத்துக்கிடந்த மனிதரைப் பார்த்தபோது, அபினா அச்சமடைந்தார் என்பதைக் காட்டிலும் அவர் வியப்பில் உறைந்துபோனார் என்பதே உண்மை. அவரது வயோதிப மூளை தடுமாறியது. சமாதியின்மீது படுத்துக்கிடப்பது தத்துவவாதி ஜோன் ஜக் ரூஸோ என்றுதான் அபினா நினைத்தார். ‘கருணையைக் காட்டிலும் உயரிய ஞானம் எதுவுமில்லை’ எனச் சொன்ன ரூஸோ இறந்தபோது, அவரது உடல் பெப்லியர் தீவில் புதைக்கப்பட்டது. பதினாறு வருடங்கள் கழித்து, பிரெஞ்சு அரசாங்கத்தால் ரூஸோவின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு, பாரிஸ் நகரத்திலுள்ள ‘பந்தியோன்’ மணிமண்டபத்திற்கு அரசு மரியாதைகளுடன் கொண்டுவரப்பட்டு, வோல்த்தேயரின் உடலுக்கு அருகே சமாதி வைக்கப்பட்டது. இவர்களுக்கு அருகேதான் விக்டர் ஹூகோவும், அலெக்ஸாந்தர் டுமாவும், ஜோசப்பின் பாக்கரும், எமில் ஸோலாவும் நீள்துயிலில் இருக்கிறார்கள். பொன்நிறமான பந்தியோன் மணிமண்டபம் கட்டடங்களின் அரசி போன்று நகரத்தின் மையத்தில் உயர்ந்து நிற்கிறது. பிரெஞ்சுப் புரட்சிக்கு முன்பு இது தேவாலயமாக இருந்தது. புரட்சியின் போது, இந்தத் தேவாலயம் பிரான்ஸின் மாண்புமிகு எழுத்தாளர்களதும் கலைஞர்களதும் அறிஞர்களதும் உடல்களைச் சமாதி செய்து வைக்கும் மணிமண்டபமாக மாற்றப்பட்டது. மண்டபத்திலிருந்து குறுகிய படிகளின் வழியே கீழே இறங்கிச் சென்றால், அங்கே சிலுவை வடிவத்தில் அமைக்கப்பட்டிருக்கும் விசாலமான பாதாள மண்டபத்துள், அரை இருளில் இவ்வாறாக எண்பத்துமூன்று சமாதிகள் இருக்கின்றன. இவற்றைப் பார்வையிட நாள்தோறும் ஆயிரக்கணக்கானவர்கள் வெயில், பனி பாராமல் நீண்ட வரிசையில் காத்திருப்பார்கள். காலை பத்து மணிக்குத்தான் மணிமண்டபத்தைப் பார்வையாளர்களுக்குத் திறந்துவிடுவார்கள். மணிமண்டபத்தின் தூய்மைப் பணியாளர்கள் காலை ஆறுமணிக்கே வேலைக்கு வந்துவிடுவார்கள். இன்று, சிலுவை வடிவப் பாதாள மண்டபத்தைச் சுத்தம் செய்யவேண்டியது அபினாவின் முறை. அபினா இங்கே வேலைக்கு வந்து சரியாக முப்பது வருடங்களாகின்றன. அவர் வேலைக்குச் சேர்ந்த அதே வாரத்தில்தான் ‘ஸ்ஸோ’ நகரத்தில் புதைக்கப்பட்டிருந்த மேரி கியூரியின் உடல் அறுபது வருடங்களுக்குப் பின்பு தோண்டி எடுக்கப்பட்டு, இந்த மணிமண்டபத்திற்குக் கொண்டுவரப்பட்டுச் சமாதி வைக்கப்பட்டது. அப்போது அபினாவுக்கு இருபத்தைந்து வயது. அவர் வட ஆபிரிக்காவிலிருந்து அகதியாக பிரான்ஸுக்கு வந்து சில மாதங்கள்தான் ஆகியிருந்தன. வோலோவ் குடியில் பிறந்து, சிறிய பாலைவனக் கிராமத்தில் வசித்திருந்த அபினாவுக்கு பாரிஸ் நகரம் மிரட்சியைத்தான் கொடுத்தது. இயல்பிலேயே கூச்ச சுபாவத்தைக் கொண்டிருக்கும் அபினா அந்நியர்களுடன் பேசுவதற்குத் தடுமாறினார். வாயை மூடிக்கொண்டு வேலைக்கு வந்து திருத்தமாக வேலையைச் செய்துவிட்டு அமைதியாகப் போய்க்கொண்டிருந்தார். அப்போது மணிமண்டபத்தின் வாயில் பாதுகாப்பு அதிகாரியாக இருந்த நடுத்தர வயதுப் பிரெஞ்சுக்காரருக்கு அபினாவின் இந்தப் போக்கு அதிருப்தியைக் கொடுத்தது. ஒருவரையொருவர் பணியிடத்தில் காலையில் சந்திக்கும்போது ‘உங்களுக்கு நல்ல நாளாகட்டும்’ என்ற பொருள்தரும் ‘பொன்ஜூர்’ எனும் வணக்கத்தைச் சொல்வது பிரெஞ்சு நடைமுறை. ஆனால், அபினா ‘பொன்ஜூர்’ எனப் பாதுகாப்பு அதிகாரிக்குச் சொல்வதில்லை. அப்படி ஒரு கண்டிப்பான வழக்கம் இருக்கிறது என்றே அவருக்குத் தெரியாது. பாதுகாப்பு அதிகாரி, தூய்மைப் பணியாளர்களின் மேற்பார்வையாளரிடம் இது குறித்து முறையிட்டார். மேற்பார்வையாளரும் அபினாவின் நாட்டவர்தான். அவர் இந்த ‘பொன்ஜூர்’ நடைமுறையை அபினாவிடம் பக்குவமாக எடுத்துச் சொல்லி, வாயில் பாதுகாப்பு அதிகாரிக்கு அவசியம் வணக்கம் வைக்கவேண்டும் என்றார். அபினா கற்றுக்கொண்ட முதல் பிரெஞ்சு வார்த்தை ‘பொன்ஜூர்’. அன்று முழுவதும் அபினா பரீட்சைக்குப் படிப்பது போன்று இந்த ‘பொன்ஜூர்’ மந்திரத்தை மனதிற்குள் உச்சாடனம் செய்தவாறேயிருந்தார். அவரது நீண்டு தடித்த நாக்கில் அந்த வார்த்தை தங்காமல் வழுக்கி விழுந்துகொண்டிருந்தது. அடுத்தநாள் காலையில் அபினா வேலைக்கு வந்தபோது, வாயில் பாதுகாப்பு அதிகாரி வழக்கமாக அமர்ந்திருக்கும் இருக்கையில் அவரைக் காணவில்லை. ‘பொன்ஜூர்’ சொல்லும் அபாயத்திருந்து தப்பித்தேன் பிழைத்தேன் என்று எண்ணிக்கொண்டே அபினா அங்கிருந்து வேகமாக நகர்ந்தார். துடைப்பத்தை எடுத்துக்கொண்டு கழிப்பறைகளைச் சுத்தம் செய்யச் சென்றார். வரிசையிலிருந்த முதலாவது கழிப்பறையின் கதவை அபினா தள்ளித் திறந்தபோது, உள்ளே வாயில் பாதுகாப்பு அதிகாரி சிறுநீர் கழித்துக்கொண்டு நின்றிருந்தார். அவர் திடுக்கிட்டுத் திரும்பி அபினாவை உணர்ச்சியற்ற சாம்பல்நிறக் கண்களால் பார்த்தார். அபினாவுக்கு என்ன செய்வது, என்ன சொல்வது எனத் தெரியவில்லை. நேற்றிலிருந்து உச்சாடனம் செய்துகொண்டிருக்கும் ‘பொன்ஜூர்’ மந்திரம் எதிர்பாராமல் அவரது நாவிலிருந்து நடுக்கத்தோடு உருண்டு விழுந்தது. அதைச் சொல்லிவிட்டு அபினா அங்கிருந்து வேகமாக அகன்றுவிட்டார். பாதுகாப்பு அதிகாரி அபினாவின் மேற்பார்வையாளரைத் தேடிச் சென்று அவரிடம் சொன்னார்: “அந்தப் பெண் எனக்கு ‘பொன்ஜூர்’ சொல்லத் தொடங்கியிருப்பது நல்ல விஷயம்தான். ஆனால், மெனக்கெட்டு என்னைத் தேடி வந்து கழிவறைக்குள் கண்டுபிடித்து அவள் வணக்கம் சொல்ல வேண்டியதில்லை.” இவ்வாறாகத்தான் முப்பது வருடங்களுக்கு முன்பு அபினா பிரெஞ்சு மொழி பழக ஆரம்பித்தார். இப்போதுவரை அவரது வாயில் தங்காமல் பிரெஞ்சு மொழி வழுக்கிக்கொண்டேயிருக்கிறது. என்றாலும், எதிர்ப்படும் எல்லோருக்கும் ‘பொன்ஜூர்’ வணக்கத்தை அபினா சொல்லிக்கொண்டேயிருந்தார். தானாகவே போய் உளமும் முகமும் மலரச் சொல்வார். மெத்ரோவில், தெருவில், சந்தையில், மணிமண்டபத்தில் என எல்லா இடங்களிலும் தன்னுடைய புன்னகையால் தோய்ந்த வணக்கங்களை அளித்தார். தற்போது வாயில் பாதுகாப்பு அதிகாரியாக இருப்பவன் போலந்து நாட்டு இளைஞன். அவனுக்கு “என் மகனே…பொன்ஜூர்…” என அபினா வணக்கம் சொல்லிவிட்டு, வேலையைத் தொடங்கினார். பாதாள மண்டபத்தில் இருக்கும் எந்தச் சமாதியில் எவரின் உடல் இருக்கிறது என்பதை இந்த முப்பது வருட அனுபவத்தில் அபினா அறிந்து வைத்திருந்தார். வோல்த்தேயரின் சமாதியைத் பூப்போல துடைத்துச் சுத்தம் செய்துவிட்டு, ரூஸோவின் சமாதியைச் சுத்தம் செய்ய அபினா வந்தபோதுதான், அந்தச் சமாதியின் மீது ஒரு மனிதர் படுத்து உறங்கிக்கொண்டிருப்பதைக் கண்டார். அபினாவின் இருதயம் வழுவி அவரது பருத்த வயிற்றுக்குள் விழுந்த சத்தமோ என்னவோ அவருக்கே கேட்டது. அதே நேரத்தில் அவரது பச்சை குத்தப்பட்டிருந்த தடித்த உதடுகள் அகலப் பிளந்து அப்படியே நின்றன. என்ன செய்வது எனத் தெரியாமல் தடுமாறியவர் ‘பொன்ஜூர் ரூஸோ’ எனத் திறந்த வாய் மூடாமலேயே முணுமுணுத்துவிட்டு, வாயைக் கைகளால் பொத்தியவாறே ஓடிச் சென்று, படிகளில் ஏறி மூச்சிரைப்புடன் மணிமண்டபத்தின் அலுவலகத்திற்குள் நுழைந்தார். மணிமண்டபத்தின் நிர்வாகிகள் இருவர் அலுவலகத்திற்குள் இருந்தார்கள். அபினா தட்டுத்தடுமாறி அவர்களிடம் சொன்னார்: “பொன்ஜூர்…. தனது சமாதியிலிருந்து… திரு. ரூஸோ வெளியே வந்துவிட்டார்.” 2 பந்தியோன் மணிமண்டபத்துள் ரூஸோவின் சமாதிமீது படுத்திருந்தவரது பெயர் கதிரன் சிவபாலன். அவருக்கு நாற்பத்தைந்து வயது. சற்றே வழுக்கையான தலையும் ஒல்லியான உடலும் கொண்ட கரிய மனிதர். “இந்தக் கறுப்பனையா அந்தப் பெண்மணி ரூஸோ எனச் சொன்னார்?” என ஆச்சரியத்துடன் மணிமண்டபத்தின் நிர்வாகி தனது உதவியாளரிடம் கேட்டார். பீட்ரூட் போன்ற நிறமும் உருவமும் கொண்ட உதவியாளர் சதை மடிப்புகள் விழுந்த தனது தாடையைத் தடவியவாறே சற்று யோசித்துவிட்டு “ரூஸோ அடிமை ஒழிப்பு குறித்து நிறைய எழுதியிருப்பதால், ரூஸோ ஒரு கறுப்பரே என அந்தப் பெண்மணி நினைத்திருக்கக்கூடும்” என்றார். “அந்தப் பெண்மணிக்கு எழுதப் படிக்கவே தெரியாதே… வேலை ஒப்பந்தப் பத்திரத்தில் கையொப்பம் வைக்கவே அவருக்குத் தெரியாது. ஒட்டகம் போன்ற ஏதோவொன்றைத்தான் வரைந்து வைக்கிறார்” என்றவாறே நிர்வாகி தனது கைக்கடிகாரத்தைப் பார்த்தார். இரண்டே நிமிடங்களில் பாரிஸ் நகரக் காவல்துறையினர் அங்கே வந்துவிட்டார்கள். சென்ற வாரம்தான் கொள்ளையர்கள் ‘லூவர்’ அருங்காட்சியகத்திற்குள் நோகாமல் நுழைந்து நெப்போலியனின் மனைவியின் நகைகளை எடுத்துச் சென்றிருக்கிறார்கள்… அதற்குள் பந்தியோன் மணிமண்டபத்தில் ஒரு சம்பவமா எனக் காவல்துறையினர் அலறியடித்துக்கொண்டு அங்கே வந்திருந்தார்கள். சமாதிமீது ஆழ்ந்த உறக்கத்திலிருந்த கதிரன் சிவபாலனை உலுக்கி எழுப்பிய காவல்துறை அதிகாரிகள் அவரது கைகளில் விலங்கை மாட்டிவிட்டு, மணிமண்டபத்தின் அலுவலக அறைக்கு அழைத்துவந்து உட்கார வைத்தார்கள். சிவபாலனுக்கோ எந்தப் பதற்றமுமில்லை. அவர் உற்சாகமாகத் தனது கால்களை ஆட்டியவாறே “ஒரு தேநீர் கிடைக்குமா?” என ஆங்கில மொழியில் கேட்டார். காவல்துறையினர் அவருக்குத் தேநீர் வழங்கிவிட்டு, அவரிடம் பேசத் தொடங்கினார்கள். 3 பாரிஸில் ‘லிபி வட்டம்’ என்றொரு தமிழ் இலக்கியக் குழுவினர் ஏழெட்டு வருடங்களாகவே இயங்கிவருகிறார்கள். நாவல் – சிறுகதை வாசிப்பு, விமர்சனம் என அவ்வப்போது கூட்டங்களை நடத்துவார்கள். இந்தக் கூட்டங்களுக்குப் பதினைந்து – இருபது பேர் வருவார்கள். லிபி வட்ட உறுப்பினர்களே ஏழெட்டுப் பேர் இருக்கிறார்கள். எல்லாக் கூட்டங்களிலும் அதே முகங்கள்தான் திரும்பத் திரும்பக் காணப்படுகின்றன. லிபி வட்டத்தினர் உலகிலுள்ள எல்லாவற்றைப் பற்றியும் தீவிரமான கருத்துகளைக் கொண்டவர்கள். பேச்சைத் தொடங்கும்போதே “எனக்கு தஸ்தயேவ்ஸ்கி மீது ஒரு விமர்சனம் இருக்கிறது, அந்தோனியோ கிராம்ஷி மீது அதிருப்தி இருக்கிறது” என்றெல்லாம் அதீத தன்நம்பிக்கை மிளிரப் பேசக் கூடியவர்கள். தேசியம், தலித்தியம், பெண்ணியம், மார்க்ஸியம், பின்நவீனத்துவம் என எல்லாவற்றைப் பற்றியுமே அவர்களிடம் ஆளுக்கொரு திட்டவட்டமான கருத்து இருந்தது. அவர்கள் எல்லோருமே வாரத்திற்கு ஆறு நாட்கள் கடுமையாக வேலை செய்பவர்கள். இலக்கியச் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு அவர்களுக்கு நேரம் கிடைப்பது அரிது என்றாலும், இலக்கியத்திற்காகக் காசு செலவழிப்பதில் பின்நிற்காதவர்கள். தமிழில் வெளிவரும் அநேகமான நூல்களை பாரிஸ் தமிழ் புத்தகக் கடைகளில் அறாவிலைக்கு வாங்கியாவது வாசித்துவிடுவார்கள். வாசித்தவற்றைத் தங்களுக்குள் தீவிரமாக விவாதிப்பார்கள். அவர்களுடைய பொதுவான கருத்துப்படி தற்போது இலங்கைத் தமிழ் இலக்கியத்துறையில் பெரும் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தச் சுணக்கத்தை உடைப்பதற்குத் தங்களால் என்ன செய்ய முடியும் என்று அவர்கள் தீவிரமாகச் சிந்தித்தபோதுதான், இலங்கையில் சிறுகதைப் பரிசுப் போட்டியொன்றை நடத்தி எழுத்தாளர்களை ஊக்குவிப்பது என்ற தீர்மானத்திற்கு வந்தார்கள். முதல் பரிசு, இரண்டாம் பரிசு, ஆறுதல் பரிசு என்றெல்லாம் கொடுத்தால் ஆறுதலுக்காக எழுதுபவர்களும் கதைகளை எழுதி எல்லோரது நேரத்தையும் வீணடிப்பார்கள் என்பதால் ஒரேயொரு கதைக்குத்தான் பரிசு. மரத்தில் ஒரேயொரு கனி என்றால்தான் பறவைகளின் கவனம் சிதறாது என்பது லிபி வட்டத்தினரின் எண்ணம். தேர்வு செய்யப்படும் கதைக்கு இலங்கை நாணயப் பெறுமதியில் ஒரு இலட்சம் ரூபாயுடன் விருதுக் கேடயமும் கொடுப்பது எனவும் பரிசு பெறும் எழுத்தாளருக்கு பிரான்ஸ் விசா கிடைத்தால், அவரைப் பரிசளிப்பு விழாவுக்கு அழைத்துக் கவுரவித்து அனுப்புவது எனவும் முடிவு செய்தார்கள். லிபி வட்டத்தினரிடம் பரிசுப் போட்டி வைப்பதைத் தவிர இலக்கியத்திற்குப் பொருந்தாத இன்னொரு குணமும் உண்டு. அவர்கள் நேரம் தவறாமையை மிகக் கறாராகக் கடைப்பிடிப்பார்கள். குறித்த நேரத்திற்கு ஒரு பார்வையாளர்கூட வரவில்லை என்றாலும், வெற்று நாற்காலிகளை வைத்துக்கொண்டே கூட்டத்தை ஆரம்பிக்க அவர்கள் தயங்கியதில்லை. அவர்களுடைய கூட்டத்திற்கு வருவதென்னவோ பத்திருபது பேர் என்றாலும், ஒரு மாநாட்டையே நடத்துவது போன்ற கண்டிப்பான திட்டமிடலுடன்தான் ஒழுங்குகளை மேற்கொள்வார்கள். சிறுகதைப் போட்டிக்கு நடுவர்களாக வெளியாட்களை அவர்கள் நியமிக்கவில்லை. எங்களுடைய பரிசு, எங்களுடைய பணம், எங்களுடைய முயற்சி என்பதால் நாங்களே சிறந்த கதையைத் தீர்மானிப்போம் என்பது அவர்களது நிலைப்பாடு. அதற்கான தகுதி அவர்களுக்கு இல்லையென்று ஒரேயடியாகச் சொல்லிவிடவும் முடியாது. அவர்களைப் பேச விட்டால் புதுமைப்பித்தனை விட எஸ்.பொன்னுத்துரை ஏன் முக்கியமானவர் என ஒருநாள் முழுவதும் விரிவாகப் பேசுவார்கள். இந்த வருடத்தின் ஜூன் மாதத்தில்தான் சிறுகதைப் போட்டியின் முடிவு அறிவிக்கப்பட்டது. கதிரன் சிவபாலன் என்ற அறிமுக எழுத்தாளர் எழுதியிருந்த ‘மாறிலி’ என்ற சிறுகதைதான் பரிசு பெற்றிருந்தது. யாழ்ப்பாணத்தில் சாதிய ஒடுக்குமுறைகளில் ஈடுபடுவோரின் கனவான் தந்திரங்களைச் சித்திரித்து யதார்த்தமாகவும் எள்ளலாகவும் அந்தச் சிறுகதை எழுதப்பட்டிருந்தது. எழுதியவரின் முதற்பெயர் ‘கதிரன்’ என இருப்பதால் அவர் ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த ஒருவராகவே இருப்பார் என லிபி வட்டத்திலுள்ள ஒவ்வொருவருமே தமக்குள் எண்ணினார்களே தவிர, அந்த எண்ணத்தை எவருமே அடுத்தவருக்கு வெளிப்படுத்தவில்லை. சிவபாலனுக்கு பிரான்ஸ் விசாவைப் பெற்றுக் கொடுப்பதற்கான ஏற்பாடுகளைத் தொடக்கியபோதுதான், சிவபாலன் யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரு பாடசாலையில் ஆசிரியராக இருக்கிறார் என்பது லிபி வட்டத்தினருக்குத் தெரிய வந்தது. அரசாங்க உத்தியோகத்தர் என்பது பிரான்ஸ் விசா கிடைப்பதற்குப் பெரும் சாதகமான விஷயம். தவிரவும், லிபி வட்டம் கலாசார அமைப்பாக பிரான்ஸில் பதிவு செய்யப்பட்டிருப்பதும் சாதகமான விஷயமே. லிபி வட்டத்தினரால் ‘ஸ்பொன்சர்’ கடிதம் கச்சிதமாகத் தயாரிக்கப்பட்டு சிவபாலனுக்கும் கொழும்பிலுள்ள பிரெஞ்சுத் தூதரகத்திற்கும் அனுப்பிவைக்கப்பட்டது. எனினும், விசா கிடைக்குமா கிடைக்காதா என்ற சந்தேகத்திலேயே லிபி வட்டத்தினர் இருந்ததால், பரிசளிப்பு விழாத் தேதியை பொதுவெளியில் அறிவிக்காமலேயே இருந்தார்கள். பிரெஞ்சுத் தூதரகத்தில் நூறு கேள்விகள் கேட்டுக் குடைந்த பின்பாக சிவபாலனுக்கு இரண்டு வாரங்களுக்கான விசா வழங்கினார்கள். அந்தச் செய்தியை அறிந்ததும் லிபி வட்டத்தினர் உற்சாகத்தில் குதித்தனர். பரிசளிப்பு விழாவுக்கான தேதி உடனடியாகவே பொதுவெளியில் அறிவிக்கப்பட்டது. சிவபாலனை இரண்டு வாரங்கள் கவுரமாகவும் சிறப்பாகவும் பாரிஸில் உபசரித்து, எந்தக் குறையுமில்லாமல் விழாவை நடத்தி முடித்து, விருதுக் கேடயத்துடன் அவரை இலங்கைக்கு வழியனுப்புவது வரையான திட்டங்களை லிபி வட்டத்தினர் பார்த்துப் பார்த்துச் செதுக்கத் தொடங்கினார்கள். சிவபாலன் பாரிஸிலுள்ள தனது உறவினர்களின் வீட்டில் தங்கவே விரும்புவார் என்றே லிபி வட்டத்தினர் நினைத்தார்கள். ஆனால், அப்படியெல்லாம் தனக்கு உறவினர்கள் அய்ரோப்பாவிலேயே கிடையாது என்று சிவபாலன் தொலைபேசியில் லிபி வட்டத்தினரிடம் தெரிவித்தபோது, அவர்களுக்கு இது புதினமாகக் கிடந்தது. அய்ரோப்பாவில் சொந்தக்காரர்களே இல்லாத ஒரு யாழ்ப்பாணத்தானா என்று அவர்கள் வாயைப் பிளந்தார்கள். “சிவபாலன் மலையகத்தைச் சேர்ந்த ஆளாயிருக்கலாம்… இப்ப யாழ்ப்பாணத்தில படிப்பிக்கலாம்” என்று ஒருவர் தனது ஊகத்தை வெளியிட்டார். லிபி வட்டச் செயற்பாட்டாளர் கருணானந்தன் வீட்டில் முதல் வாரமும், இன்னொரு செயற்பாட்டாளரான அலெக்ஸ் வீட்டில் அடுத்த வாரமும் சிவபாலனைத் தங்க வைப்பதாக முடிவானது. பாரிஸைச் சுற்றிக்காட்டும் பொறுப்பை ‘பசுமை’ மதியரசு ஏற்றுக்கொண்டார். இதற்காகவே வேலையிலிருந்து இரண்டு வாரங்கள் விடுப்பு எடுக்க அவர் முடிவு செய்திருந்தார். லிபி வட்டத்தினர் எல்லோருடைய வீட்டிலும் முறைவைத்து சிவபாலனை விருந்துக்கு அழைப்பது என்பது அவர்களது பெரு விருப்பம். இந்தத் திட்டங்கள் எல்லாவற்றையும் பிசகில்லாமல் வகுத்த பின்பும் அவர்களிடம் ஒரு கேள்வி எஞ்சியிருந்தது. எழுத்தாளர் சிவபாலன் எப்படியான மனிதராக இருப்பார்? தொலைபேசியில் பேசும்போது கொஞ்சம் அப்பாவித்தனமாகவும் அதேவேளையில் தன்னடக்கத்துடனும் பேசுகிறார். “எனக்கும் இலக்கியத்துக்கும் ஒரு சம்மந்தமும் இல்லைப் பாருங்கோ… நான் படிச்சது கணிதம், படிப்பிக்கிறதும் கணிதம். பின்ன, கொரோனா காலத்தில வீட்டுக்கேயே அடைஞ்சு கிடைக்கேக்க என்ர மனிசி வாசிக்கிற கதைப் புத்தகங்களில சிலதை எடுத்து வாசிச்சுப் பார்த்திருக்கிறன். உண்மையா நடந்த ஒரு சம்பவத்தை வைச்சுக் கதை எழுதியிருக்கிறன். எனக்கு நீங்கள் தந்த பரிசு இலக்கியத்துக்காக கிடைச்சது இல்ல… உண்மைக்கு கிடைச்சதுதான்” என்றார். தொலைபேசியில் பேசியதைப் போலவேதான் நேரிலும் சிவபாலன் இருந்தார். மிக மென்மையான குரலிலும் தொனியிலும் பேசினார். அடிக்கடி அலைபேசியை உருட்டி அதில் ஆழ்ந்து வாசித்துக்கொண்டிருந்தார். அவரிடம் ஏதாவது கேள்வி கேட்டால் மிக நீளமாகவும் தெளிவாகவும் பதிலளித்தார். இருபது வருட ஆசிரியப் பணியால் இந்தப் பண்பு அவரிடம் வந்திருக்கலாம். சிவபாலன் பிரான்ஸுக்கு வந்த அன்றிரவு, லிபி வட்டத்தின் பொருளாளர் காண்டீபன் வீட்டில் இரவு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மேசையில் மதுவும் இருந்தது. தனக்கு மது அருந்தும் பழக்கமில்லை என்று சிவபாலன் புன்னகையுடன் சொன்னார். அன்று நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தார்கள். சிவபாலனுக்குத் தூக்கம் கண்களை அழுத்தினாலும் புன்னகையுடன் சமாளித்துக்கொண்டிருந்தார். பேச்சு சிவபாலனின் ‘மாறிலி’ சிறுகதையில் வந்து நின்றது. கருணானந்தனே முதலில் ஆரம்பித்தார். “உண்மையில மாஸ்டர்… அற்புதமான ஒரு கதை எழுதியிருக்கிறியள். படிச்சால் கண்ணீரும் வருகுது ஆனால், அதை மீறிக்கொண்டு கோவமும் வருகுது. உதுதான் கதையின்ர வெற்றி. டொமினிக் ஜீவாட கதையளிலும் இந்தப் பண்பு இருக்கு. ஒரு தலித்துக்குக் கிடைக்கிற கொடுமையான வாழ்க்கை அனுபவம் எங்கிட லிபி வட்டத்தில இயங்கிற ஒருத்தருக்கும் இல்லை எண்டதுதான் உண்மை. ஆனால், உங்கிட கதை அந்த அனுபவத்தை எங்களில தொற்ற வைச்சிற்றுது. ஒரு உலுக்கு உலுக்கிப் போட்டுது. அதுதான் எழுத்தின்ர வீரியம்! கலையின்ர தரிசனம்! பெரிய விஷயம் மாஸ்டர்!” மூர்த்திக்கு உரத்த குரல். “மாஸ்டர் உங்கிட கதையில ‘காடல்முனை’ எண்டொரு ஊர் வருது. நான் கேள்விப்பட்டதேயில்ல…” “கேள்விப்பட்டிருக்க மாட்டியள். அதொரு சின்னக் கிராமம். வடமராட்சியில இருக்கு. அதுதான் என்ர ஊர்” என்றார் சிவபாலன். சிவபாலனை நாளுக்கு ஒவ்வொரு இடமாக ஈஃபிள் கோபுரம், அருங்காட்சியகங்கள், வெர்சாய் அரண்மனை என்றெல்லாம் அழைத்துச் சென்று சுற்றிக்காட்ட வேண்டும் என்று மதியரசு திட்டமிட்டிருந்தார். அதன்படியே ஈஃபிள் கோபுரத்திற்குப் போய்விட்டு வரும் வழியில், தமிழர்களின் கடைத்தெருவான லாசப்பலுக்கு சிவபாலனை தேநீர் அருந்த அழைத்துச் சென்றார். சிவபாலன் ஈஃபிள் கோபுரத்தைப் பார்த்தபோது “இதைப் பார்த்துப்போட்டு மகாத்மா காந்தி ‘இரும்புக் குப்பை’ எண்டு சொன்னவராம்… சரியாத்தான் சொல்லியிருக்கிறார்” என்றார். அந்தக் கோபுரத்தையே பார்த்து ஆச்சரியப்படாத சிவபாலன் தமிழர்களின் கடைத்தெருவைப் பார்த்து ஆச்சரியத்தின் உச்சிக்கே போய்விட்டார். பாரிஸில் இப்படி ஓர் இடம் இருக்குமென அவர் கற்பனை கூடச் செய்து பார்த்ததில்லை. தமிழர்களின் கடைத்தெரு என்பதை விடக் கடைத் தெருக்கள் என்றுதான் சொல்ல வேண்டும். ஏழெட்டுத் தெருக்களில் கடைகள் பரவியிருந்தன. நடுவிலே சிங்களத்தில் பெயர்ப் பலகை போட்டு இரண்டு சிங்களக் கடைகளும் இருந்தன. நூற்றுக்கணக்கான தமிழ் மக்கள் அந்த வீதிகளிலே தேநீர் அருந்தியவாறும், வெற்றிலை சப்பியவாறும், வீதியில் நின்று அரட்டையடித்தவாறும் இருந்தார்கள். சிவபாலனின் கணித மூளை கடகடவெனக் கணக்குப் போட்டு லாசப்பல் டவுன், பருத்தித்துறை டவுனைவிடப் பெரிது எனக் கண்டுபிடித்தது. அடுத்தநாளிலிருந்து மதியரசு எங்கேயாவது அருங்காட்சியம் அல்லது அரண்மனைக்குப் போகலாமென்றால், சிவபாலன் “நாங்கள் லாசப்பலுக்குப் போவம்” என்றார். “மாஸ்டர் அங்க என்ன கிடக்கெண்டு அதைப் பார்க்கோணும் எண்டுறியள்?” என்று மதியரசு சற்றுக் குழப்பத்துடனேயே கேட்டார். “தமிழ் சனங்களைப் பார்க்க ஆசையாக்கிடக்கு.” “ஹோம் சிக்! மாஸ்டருக்கு ஊருக்குப் போற எண்ணம் வந்திற்றுது போல… இன்னும் நாலு நாள்தானே… கூட்டத்தை முடிச்சுக்கொண்டு போயிடலாம் மாஸ்டர். கவலைப்படாதேயுங்கோ” என்றார் மதியரசு. 4 பரிசளிப்புக் கூட்டத்தில் சிவபாலன் தனது உரையை இவ்வாறு தொடங்கினார்: “முதலில் லிபி இலக்கிய வட்டத்து நண்பர்களுக்கு என்னுடைய நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவர்கள் எடுத்த முயற்சியால்தான் நான் இப்போது உங்கள் முன்னே நின்று இந்தக் கவுரவத்தைப் பெறுகிறேன்…” சிவபாலன் பேசி முடித்தபோது, மதியரசுவுக்குக் கண்ணீரே வந்துவிட்டது. யாரும் பார்க்காதவாறு இரகசியமாகக் கண்ணீரைத் துடைத்துக்கொண்டார். ‘சிவபாலனிடம் பார்வையாளர்கள் கேள்விகள் கேட்கலாம்’ என்று அறிவிக்கப்பட்டபோது, சபை சர்வ அமைதியாக இருந்தது. வழமையாகவே இப்படித்தான் நடக்கும் என்பது லிபி வட்டத்தாருக்கும் தெரியும். அந்த அமைதியை உடைத்தெறியும் தந்திரமும் அவர்களுக்கு அத்துப்படி. அவர்களில் ஒருவரே முதல் கேள்வியைக் கேட்டுவிட்டால், பின்பு சபையோர் நான், நீ எனப் போட்டி போட்டுக்கொண்டு கேள்விகளைக் கேட்பார்கள். கேட்காவிட்டால் தமது மாண்பு குறைந்துவிடும் என்பது போல் கேள்விகளுடன் முண்டியடிப்பார்கள். எனவே, முதல் கேள்வியை கருணானந்தனே கேட்டார்: “நாற்பது வயதுக்குமேலே இலக்கியம் எழுத வந்து வெற்றிபெற்ற ஒரேயொரு எழுத்தாளர் என கி.ராஜநாராயணனைச் சொல்வார்கள். நீங்கள் நாற்பத்தைந்து வயதிலே உங்களது முதல் சிறுகதையை எழுதியிருக்கிறீர்கள். இது தொடருமா?” சிவபாலன் தனது வழக்கப்படி நீளமாகவே பதிலளித்தார். “நான் எழுதியது எனது சொந்தக் கதை. விரக்தியின் உச்சத்தில் இருந்து நான் எழுதிய கதை. இருபது வருடங்களுக்கு மேலாக நான் ஆசிரியராக இருக்கிறேன். என்னுடைய கல்வித் தகமைக்கும் பணிமூப்புக்கும் உரிய பதவி எனக்குக் கிடைக்காமலேயே இருக்கிறது. இப்போது நான் தலைமையாசிரியராக ஆகியிருக்க வேண்டும். ஆனால், ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த ஒருவன் தலைமையாசிரியராக வரக்கூடாது என்பதற்காக ஆதிக்கசாதியினர் பல தந்திரமான நடவடிக்கைகளைக் கையாள்கிறார்கள். இது யாழ்ப்பாணத்தில் பல பாடசாலைகளில் இப்போதும் நடந்துகொண்டிருக்கிறது. மாவட்டக் கல்வித்துறையில் அதிகாரம் உயர்ந்த சாதி எனச் சொல்லப்படுபவர்களிடமே குவிந்திருக்கிறது. இதற்கு எதிராக நான் பல வழிகளில் போராடிப் பார்த்துவிட்டேன். எல்லாத் திசைகளிலும் நிராகரிப்பே எனக்குக் கிடைத்தது. என்னுடைய கதையில் வரும் ஆசிரியர் கோபமுற்றுத் தனது வேலையையே ராஜினாமா செய்துவிடுகிறார். நான் விரக்தியோடு ஒரு கதை எழுதினேன். அவ்வளவுதான்.” “அய்யா… யாழ்ப்பாணத்தில் இப்போது சாதி ஒடுக்குமுறை இல்லை என்கிறார்களே. கதைக்காக நீங்கள் மிகைப்படுத்திச் சொல்கிறீர்களா?” என்றொரு கேள்வி சபையிலிருந்து வந்தது. “இப்போது சாதி ஒடுக்குமுறை இல்லை என உங்களிடம் யார் சொன்னார்கள் என்பது எனக்குத் தெரியாது. ஆனால், சொன்னவர் ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த ஒருவராக நிச்சயமாக இருக்கமாட்டார். வட்டுக்கோட்டையில் ஒடுக்கப்பட்ட சாதியினரின் குடியிருப்புத் தாக்கப்பட்டது, ஒடுக்கப்பட்டவர்கள் தேரில் வடம் பிடிப்பதைத் தவிர்ப்பதற்காக இராணுவத்திரை, இயந்திரத்தை வைத்துத் தேர் இழுத்த சம்பவங்கள், ஒடுக்கப்பட்ட சாதியினரின் குடியிருப்புக்கு நடுவே ஆதிக்க சாதியினரின் சுடுகாடு, சாமிக்குப் பூ வைத்த ஒடுக்கப்பட்ட சாதி இளைஞன் தாக்கப்பட்டது போன்ற மிகச் சில சம்பவங்கள் மட்டும்தான் வெளியே வந்திருக்கின்றன. ஆனால், ஒடுக்கப்பட்ட சாதியினர் ஒவ்வொரு நாளும் ஏதோவொரு வகையில் நேரடியாகவோ மறைமுகமாகவோ சாதிய ஒடுக்குமுறைகளைச் சந்தித்துக்கொண்டே இருக்கிறோம். உயர்சாதி எனச் சொல்லப்படுபவர்கள் எங்களைச் சக மனிதர்களாகவே மதிப்பதில்லை என்பதே உண்மை.” கேள்விகளுக்குச் சிவபாலனின் பதில்கள் எப்போதும் போலவே மிக விரிவாகவும் தெளிவாகவுமிருந்தன. ஒவ்வொரு பதிலுக்கும் லிபி வட்டத்தினர் கைதட்டினார்கள். விழா முடிவில் ஒட்டுமொத்தச் சபையுமே எழுந்து நின்று கைதட்டி, சிவபாலனுக்கு மரியாதை செலுத்தியது. 5 வியாழக்கிழமை சிவபாலனின் விசா முடிகிறது. அன்றுதான் அவர் இலங்கைக்குத் திரும்ப வேண்டும். திங்கட்கிழமை காலையில், சிற்பக்கலையில் சிறந்த ‘நோத்துறு டாம்’ தேவாலயத்தைப் பார்வையிட சிவபாலனை, மதியரசு அழைத்துச் சென்றிருந்தார். “கெதியாக் கோயிலைப் பார்த்து முடிச்சிட்டு லாசப்பலுக்குப் போய் தமிழ் ஆக்களைப் பார்ப்பம்” என்றார் சிவபாலன். அவர்கள் காரில் லாசப்பலுக்குப் போய்க்கொண்டிருந்தபோது, சிவபாலன் அலைபேசியில் ஏதோ ஆராய்ந்தவாறே வந்தார். பின்பு அவர் மதியரசுவிடம் “நான் இப்பிடியே பிரான்ஸிலேயே நிக்கலாம் எண்டு பார்க்கிறன்…நீங்கள் ஃப்ளைட் டிக்கெட்ட கான்ஸல் பண்ணுங்கோ” என்றார். லாசப்பலில், அம்மாளாச்சி உணவகத்தில் தேநீர் அருந்திக்கொண்டிருக்கும்போது “மாஸ்டர் ஒரு நிமிசம் இருங்கோ… இந்தா வாறன்” எனச் சொல்லிவிட்டு மதியரசு உணவகத்திற்கு வெளியே வந்து, மூர்த்தியை அலைபேசியில் அழைத்து “மாஸ்டர் இங்கேயே நிற்கப் போறாராம்” என்றார். “நிற்கப் போறாரோ? இதென்னடாப்பா கரைச்சல்” என்று பதறினார் மூர்த்தி. மூர்த்தியின் மூலமாக லிபி வட்டத்தினருக்கு உடனடியாகச் செய்தி பரவியதும், அவர்கள் எல்லோருமே கலவரமானார்கள். சிவபாலன் பிரான்ஸ் விசா வாங்குவதற்காக ‘ஸ்பொன்சர்’ கடிதம் கொடுத்த தங்களுக்கு எதுவும் சட்டச் சிக்கல் ஏற்படுமா எனக் கலந்தாலோசித்தார்கள். சட்டச் சிக்கல் வராது என்பது தெளிவானதும் கொஞ்சம் நிம்மதியானார்கள். எனினும், பரிசளிப்பு விழாவுக்கு என அழைத்துவிட்டு, விசா முடிந்த பின்பும் அவரை இங்கேயே தங்கவைப்பது நியாயமற்றது என்ற முடிவுக்கே அவர்கள் வந்தார்கள். அன்றிரவு மகிந்தன் வீட்டில் சிவபாலனுக்கு விருந்து ஏற்பாடாகியிருந்தது. இதைப் பற்றி அங்கே பேசலாம் என்று லிபி வட்டத்தினர் முடிவெடுத்தார்கள். வழமைபோல அன்று விருந்து உற்சாகமாக இல்லைத்தான். ஆனால், சிவபாலன் வழமையைவிட உற்சாகமாக இருந்தார். மூத்தவர் கருணானந்தனே பேச்சைத் தொடக்கினார். “மாஸ்டர்… இஞ்சயே நிற்கப்போறதாச் சொன்னீங்களாம்… மெய்யே?” “ஓம். அப்பிடித்தான் யோசிச்சிருக்கிறன்!” “உங்களுக்கு விசா முடியுதெல்லே மாஸ்டர்… பிறகு எப்பிடி?” “நான் இஞ்ச அரசியல் தஞ்சம் கேட்கலாம் எண்டு முடிவெடுத்திருக்கிறன்.” சற்று நேரம் அங்கே அமைதி நிலவியது. அலெக்ஸ் அந்த அமைதியை உடைத்தார். அவருடைய வீட்டில்தான் சிவபாலன் இப்போது தங்கியிருக்கிறார். “இலங்கையில சண்டை முடிஞ்சு பதினாறு வருசமாகுது மாஸ்டர். நீங்கள் நினைக்கிற மாதிரி லேசா அகதி விசா எடுக்க ஏலாது. கிடைக்காது எண்டதுதான் உண்மை.” “நான் சண்டையைக் காரணம் காட்டி விசா கேட்கப் போறதில்ல. சமூகப் பாகுபாடு, சமூக ஒடுக்குமுறை. அதைக் காரணம் காட்டியும் விசா கேட்கலாம் எண்டு ஜெனிவா அகதிச் சட்டத்தில இருக்குத்தானே…” “அப்பிடி இல்லையே மாஸ்டர்…” “இருக்குதுங்கோ… உங்களுக்குத் தெரியாதே? நான் ‘நெட்’டில எல்லாம் தேடி வாசிச்சுத்தான் இந்த முடிவெடுத்தனான்.” “ஆனால், நீங்கள் இலக்கிய விழாவுக்கு எண்டு விசா எடுத்து வந்தனிங்கள். பிறகு என்னெண்டு அகதி விசா கேட்கலாம்?” “முந்தியும் இலங்கையிலயிருந்து வேற வேற இலக்கிய விழாக்களுக்கு விசா எடுத்து வந்த சில ஆக்கள் அகதி விசா போட்டிட்டு இங்கேயே இருக்கினம்தானே?” “அதுவும் ‘நெட்’டில வந்திற்றுதோ?” என்று கொஞ்சம் சலிப்புடன்தான் கேட்டார் மூர்த்தி. “அது பிழைதானே மாஸ்டர்… சட்டவிரோதம்” என்றார் கருணானந்தன். “அகதியா வாற ஆக்கள் எல்லாருமே சட்டவிரோதமா இப்பிடி ஏதாவதொரு வழியிலதானே இங்க வாறது. நீங்களும் அப்பிடித்தானே வந்திருப்பீங்கள்?” “உண்மைதான் மாஸ்டர்… ஆனால், அகதியா வாற அளவுக்கா இலங்கையில சாதிப் பிரச்சினை இருக்குது?” என்று வெடுக்கெனக் கேட்டார் மகிந்தன். “இருக்குது எண்டுதானே ஞாயிற்றுக்கிழமை கூட்டத்தில சொன்னனான்!” “மாஸ்டர்… நீங்கள் அங்க படிப்பிக்கிறீங்கள். அந்த நல்ல வேலையை விட்டிட்டு இஞ்ச நிண்டு எங்களோட சேர்ந்து கூட்டித் துடைச்சு வேலை செய்யப் போறீங்களே?” “மரியாதையோட கூட்டித் துடைக்கலாம் எண்டு நினைக்கிறன். இந்த ரெண்டு கிழமையா ஊரைச் சுத்திப் பார்த்திட்டன். எல்லாருக்கும் எல்லாரும் மரியாதை. உங்கிட எல்லாற்ற வீட்டையும் வந்து நான் சாப்பிடுறன், தங்குறன். என்ன சாதியெண்டு நீங்களும் பார்க்கயில்ல. நானும் பார்க்கயில்ல. லாசப்பலைப் பார்க்க எவ்வளவு சந்தோசமாக் கிடக்கு! என்னென்னவோ சாதி ஆக்கள் வெளிநாட்டுக்கு வந்து ஒரு வலுவான சமூகமாக உருவாகியிருக்கிறியள். அதுதான், லாசப்பல் போக வேணும் எண்டு நெடுகவும் மதியரசிட்டக் கேக்கிறனான். எனக்கு அகதி விசா கிடைச்சா என்ர குடும்பத்தையும் இஞ்ச கூப்பிடலாம். நான் படுற அவமானத்தை என்ர பிள்ளையளும் அங்க கிடந்து படவேண்டாம். சாதி பார்க்காம வாய்ப்புத் தாற நாடு இது!” “மாஸ்டர்… இந்த நாட்டில நான் முப்பது வருசம் அகதியாக இருந்த அனுபவத்தில சொல்லுறன்…” என்று மூர்த்தி என்னவோ சொல்ல ஆரம்பிக்க “நான் மூவாயிரம் வருசமா அகதி” என்றவாறே மூர்த்தியின் கண்களைப் பார்த்தார் சிவபாலன். கருணானந்தன் முடிவாகச் சொன்னார்: “மாஸ்டர்! நீங்கள் குறை நினைக்க வேணாம். நாங்கள் ஸ்பொன்சர் கடிதம் தந்துதான் நீங்கள் இஞ்ச வந்திருக்கிறியள். தயவு செய்து நீங்கள் திரும்பிப் போகத்தான் வேணும். பின்னடிக்குப் பிரச்சினை வேணாம்!” சிவபாலன் அமைதியாக இருந்தார். லிபி வட்டத்தினர் தாங்கள் ஒழுங்கமைத்த திட்டப்படியே செயலாற்றினார்கள். செவ்வாய்கிழமையன்று ‘கொன்கோர்ட்’ சதுக்கத்தைப் பார்க்க சிவபாலனை மதியரசு அழைத்துச் சென்றார். எக்காரணம் கொண்டும் லாசப்பலுக்கு அழைத்துச் செல்லக்கூடாது என மதியரசுவுக்கு லிபி வட்டத்தினர் அறிவுறுத்தியிருந்தனர். புதன்கிழமையன்று காலையில் ‘வைட் சேர்ச்’ பார்க்க சிவபாலனை அழைத்துச் சென்ற மதியரசு மாலை நான்கு மணியளவில், பந்தியோன் மணிமண்டபத்தைப் பார்க்கச் சிவபாலனை அழைத்துச் சென்றார். அதுதான் சிவபாலன் பாரிஸில் பார்க்கப் போகும் கடைசி இடம். நாளை அதிகாலையில் இலங்கைக்குப் புறப்படும் விமானத்தில் அவரை வழியனுப்பிவைக்க லிபி வட்டத்தினர் எல்லோருமே விமான நிலையத்திற்குச் செல்வதாகத் திட்டம். பந்தியோன் மணிமண்டபத்துள் நுழைவதற்குப் பார்வையாளர்கள் பெருங் கூட்டமாகக் காத்திருந்தார்கள். நீண்ட வரிசையில் நின்று நுழைவுச் சீட்டுகளைப் பெற்றுக்கொண்டு மதியரசுவும் சிவபாலனும் உள்ளே நுழைந்தார்கள். இன்னும் ஒரு மணிநேரத்தில் மணிமண்டபத்தை மூடிவிடுவார்கள். சன நெரிசலோடு நெரிசலாக அவர்கள் சிலுவை வடிவப் பாதாள மண்டபத்தில் சமாதிகளைப் பார்த்துக்கொண்டு மெதுமெதுவாக நகரும்போதே, ‘மணிமண்டபத்தை மூடும் நேரமாகிவிட்டது, பார்வையாளர்கள் வெளியேறவும்’ என்ற அறிவிப்பு ஒலிபெருக்கியில் கேட்டது. பார்வையாளர்கள் குறுகிய படிகளில் மேலேறிச் சென்று கும்பலாக வெளிவாசலை நோக்கி நகர்ந்தார்கள். சிவபாலன் மதியரசுவைப் பார்த்தார். மதியரசு வெளிவாசலில் பார்வையை வைத்தவாறே முன்னே நகர்ந்துகொண்டிருந்தார். அவருக்குப் பின்னால் போய்க்கொண்டிருந்த சிவபாலன் அப்படியே திரும்பி, சனக் கும்பலுக்குள் நுழைந்து பாதாள மண்டபத்தை நோக்கி நடந்தார். பாதாள மண்டபத்திற்குள் எங்கெல்லாம் கமெராக்கள் இருக்கின்றன என அவர் முன்பே கணக்குப் போட்டு வைத்திருந்தார். அந்தக் கமெராக்களின் பார்வையில் சிக்காமல் நடந்து சென்று ரூஸோவின் சமாதிக்குப் பின்னால் இருளில் மறைந்துகொண்டார். 6 பந்தியோன் மணிமண்டபத்தின் அலுலக அறைக்குள் சிவபாலனை விசாரணை செய்து முடித்த காவல்துறை அதிகாரி பெருமூச்சொன்றை வெளியேற்றியவாறே சிவபாலனின் கைகளிலிருந்த விலங்கை அகற்றிவிட்டு, ஆங்கில மொழியில் சொன்னார்: “திரு. கதிரன் சிவபாலன்! விமானத்தில், ரயிலில், கப்பலில், காய்கறி மூட்டைக்குள் மறைந்திருந்துவிட்டு அகதித் தஞ்சம் கோரியவர்களை நான் நிறையவே பார்த்திருக்கிறேன். சமாதிக்குப் பின்னால் மறைந்திருந்து தஞ்சம் கோரும் ஒருவரை நான் இப்போதுதான் சந்திக்கிறேன். நல்வரவாகுக! இந்தத் துண்டுச் சீட்டில் எழுதப்பட்டிருக்கும் தொண்டு நிறுவனம் இங்கிருந்து இரண்டு தெருக்கள் தள்ளித்தான் இருக்கிறது. நீங்கள் அங்கே சென்றால், முறையாக அகதித் தஞ்சம் கோருவதற்கு அவர்கள் உங்களுக்கு வழிகாட்டுவார்கள்.” சிவபாலன் அந்தத் துண்டுச் சீட்டை வாங்கிக்கொண்டு உற்சாகத்துடன் மணிமண்டபத்தின் வெளிவாசலை நோக்கி நடந்தார். அந்த வாசலின் கதவுகள் கண்ணாடிகளாலானவை. கண்ணாடியைத் துடைத்து அபினா சுத்தம் செய்துகொண்டிருந்தார். கண்ணாடியில் மங்கலாக சிவபாலனின் உருவம் தோன்றியபோது, அந்த உருவத்தைப் பார்த்து “பொன்ஜூர் ரூஸோ” என்றார் அபினா. (தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் 16-ஆவது மாநில மாநாடு சிறப்பு மலரில் வெளியாகியது. டிசம்பர் -2025) https://www.shobasakthi.com/shobasakthi/2026/01/24/பொன்ஜூர்-ரூஸோ/?fbclid=IwdGRleAPhQjZleHRuA2FlbQIxMQBzcnRjBmFwcF9pZAo2NjI4NTY4Mzc5AAEelNjOvGfSYhzJwAYJxWdJm9TyKgcRk8KiKMQxqneSDw-oVgxu_mlHIvnSlhg_aem_TPU71sFRoGyA0LOMc86Lyg
-
துடுப்பாடும் ஆனந்தி -இளங்கோ
துடுப்பாடும் ஆனந்தி -இளங்கோ 'டாடி, நீங்கள்தானா எங்கள் அம்மாவைக் கொன்றது' என்று மகள் கேட்டபோது தேவனுக்கு அதிர்ச்சியாக இருந்தது. இந்தக் கேள்வி எப்படியோ பிள்ளைகளிடமிருந்து ஒருநாள் கேட்கப்படும் என்று தேவனுக்குத் தெரிந்திருந்தது, ஆனால் இவ்வளவு விரைவில் கேட்கப்படும் என்பதைத்தான் தேவன் எதிர்பார்த்திருக்கவில்லை. அவர் உடல் ஒரு கணம் விதிர்விதிர்த்து, வியர்வையில் தெப்பலாக நனையத் தொடங்கியது. தேவனுடைய மனைவி ஆனந்தி கலகலப்பானவர், செல்வம் கொழித்த குடும்பப் பின்னணியில் வளர்ந்தவர். அந்தக் குடும்பத்தின் பெயரில் நாட்டின் பல பாகங்களில் பாடசாலைகளும், கோயில்களும் இருந்தன. ஆனந்தியின் தாத்தாவிற்கு பிரிட்ஷ்காரர்கள் 'சேர்' என்று பட்டங்கொடுத்து கெளரவிக்குமளவுக்கு அவர்கள் நாடு முழுதும் மிகுந்த செல்வாக்குள்ளவர்களாக இருந்தார்கள். தேவன் அப்போது ஒரு பிரபல்யமான கிரிக்கெட் விளையாட்டுக்காரர். வலது கரத்தில் மின்னல் பாய்வதுபோல அவரது துடுப்பு மைதானத்தில் நடனமாடும். அவரின் ஆட்டத்தைப் பார்ப்பதற்கென்றே அவருக்கு ஓர் இரசிகர் பட்டாளம் இலங்கையில் இருந்தது. எந்தளவுக்கு சிறந்த கிரிக்கெட்காரராக தேவன் இருந்தாரோ அந்தளவுக்கு பெண்கள் விடயத்தில் 'தீராத விளையாட்டுக்கார'ராகவும் இருந்தார். இரவிரவாக மதுவில் நீராடுவதிலும், விடிய விடிய நடனவிடுதிகளில் பெண்களோடு சேர்ந்து நடனமாடுவதிலும் அலுக்காத ஒருவராக தேவன் இருந்தார். தேவனின் இந்த வித்தைகளைப் பார்க்கும் நண்பர்கள் எல்லாம், 'மச்சான், இவன் மட்டுந்தான் கால்களின் பெறுமதியை கிரிக்கெட்டிலும், நடனத்திலும் சரியாகப் பயன்படுத்துகின்றவன்' என்று பொறாமையில் சொல்லித் திரிவார்கள். இரண்டு மூன்று நாட்களாக தொடர்ந்து கிரிக்கெட் ஆட்டங்கள் நடக்கும்போது , விடிய விடிய விழித்திருந்து தேவன் மது அருந்துவதைப் பார்ப்பவர்கள், நாளை இவனால் தள்ளாடாமல் கிரிக்கெட் ஆடமுடியுமா என்று ஐயமுறுவார்கள். ஆனால் மைதானத்திற்குள் வந்துவிட்டால் தேவன் வேறொருவராக விசுவரூபம் எடுத்துவிடுவார். இந்த மனிதனா நேற்று மதுவின் குளியல்தொட்டிக்குள் நீச்சலடித்தான் என்று சந்தேகிக்குமளவுக்கு தேவனின் துடுப்பு பந்துகளை எல்லைக் கோட்டுக்கு அப்பால் விளாசித் தள்ளும். அப்போது இலங்கை அணிக்கு சர்வதேசத்தில் கிரிக்கெட் விளையாட அனுமதி கிடைத்திருக்கவில்லை. ஒருபொழுது ஆஸ்திரேலியா அணி அவர்களின் நட்சத்திர வீரரான டொன் பிராட்மனோடு இலங்கைக்கு கிரிக்கெட் விளையாட வந்தபோது தேவனே இலங்கை அணிக்கு தலைமை தாங்கியிருந்தார். இலங்கை கிரிக்கெட் அணியில் ஓன்றிரண்டு தமிழர்களே விளையாட இத்தனைகால வரலாற்றில் இடம்பெற அனுமதிக்கப்பட்டபோது, ஒரு தமிழர் அதற்கு ஒருபொழுது தலைமை தாங்கியிருக்கின்றார் என்பதை இப்போது நினைத்துப் பார்த்தால் கூட ஆச்சரியமாகத்தான் இருக்கும். தேவன் சென்னை சேப்பாக்கத்தில் சாகசம் நிகழ்த்திப் பெற்ற 215 ஓட்டங்கள்தான் அவரை ஓர் நட்சத்திர வீரராக உலங்கெங்கும் மாற்றியது. தேவன் சென்னைக்குப் போனபோது அவரது கையில் ஆடுவதற்கு ஒரு துடுப்பு கூடக் கிடையாது. அவசரமாக அருகிலிருந்த கடையில் துடுப்பை வாங்கிக் கொண்டு மைதானத்துக்குள் நுழைந்திருக்கின்றார். அன்றைய காலங்களில் இந்தியா அணியிடம் இலங்கை அணி மிக மோசமாகத் தோற்றுக் கொண்டிருந்தது. தேவனின் துடுப்பு காற்றில் எழுதிய கவிதையில் அவர் இரட்டைச் சதத்தை சேப்பாக்கத்தில் பெற்றிருக்கின்றார். தேவனின் ஆட்டத்தில் மெய்சிலிர்த்துப்போன ஒரு சென்னை இரசிகர், அவர் முதல் சதத்தை அடித்தபோது தேவனுக்குப் பிடித்த ரம் போத்தலை அன்பளிப்பாகக் கொடுத்திருக்கின்றார். அதைக் கொடுத்தது மட்டுமில்லை, 'நாளை நீ இரட்டைச் சதத்தை அடிப்பாயானால், நீ பம்பாய் நகரைப் போய்ப் பார்ப்பதற்கான பயணச்செலவும் எனக்குரியது' என்றிருக்கின்றார் அந்தத் தீவிர இரசிகர். தேவன் ரம் போத்தலை தனது காதலியைப் போல உச்சிமோர்ந்து முத்தமிட்டுவிட்டு, 'நாளை மும்பாயிற்கான விமான டிக்கெட்டோடு தயாராக வாருங்கள்' என்று கண்ணைச் சிமிட்டிச் சொல்லியிருக்கின்றார். முதல் நாள் இரவு அருந்திய ரம்மாலோ, இல்லை உண்மையாகவே திறமையாலோ, தேவன் அடுத்தநாள் இரட்டைச் சதத்தை எட்டியிருக்கின்றார். தேவனின் இந்த இரட்டைச் சதத்தை இன்னொரு இலங்கை வீரர் வந்து அதே சேப்பாக்க மைதானத்தில் முறியடிக்க கிட்டத்தட்ட அதற்குப் பிறகு முப்பது வருடங்களாகி இருக்கின்றது. * தேவன் இவ்வாறு ஒரு உச்ச கிரிக்கெட் ஆட்டக்காரராக உயரங்களில் ஏறிப் போனபோது இன்னொருபக்கத்தில் குடும்ப வாழ்வில் அதளபாதாளத்தில் விழுந்து கொண்டிருந்தார். அவருக்கும் ஆனந்திக்கும் நான்கு பிள்ளைகள் அப்போது பிறந்திருந்தன. தேவனுக்கும் முப்பது வயதைத் தாண்டியிருந்தது. தேவன் மற்ற கிரிக்கெட்காரர்கள் போல ஒரு வேலைக்கு போகவோ, நல்லதொரு குடும்பஸ்தவனாக இருக்கவோ பிரியப்படவில்லை. மனைவியினது பூர்வீகச் சொத்துக்களின் நிமித்தம் அவர் வாழ்க்கை நதி போல மதுவிலும், கிரிக்கெட்டிலும் பொங்கிப் பிராவகரித்துக் கொண்டிருந்தது. ஆனந்தியால் தேவன் வேலைக்குப் போகவில்லை என்பதை ஏதோ ஒருவகையில் ஏற்றுக்கொள்ள முடிந்ததென்றாலும், தேவனின் முடிவுறாத பெண்களின் மீதான பித்தை மட்டும் ஒருபோதும் தாங்க முடியாதிருந்தது. தேவனுக்கு அப்போது ஆங்கிலேயப் பின்னணியில் வந்த ஒரு காதலி இருந்தார். அந்தக் காதலியோ விரைவில் ஆனந்தியை விவாகரத்துச் செய்துவிட்டு தன்னைத் திருமணம் செய்யும்படி தேவனுக்கு நெருக்குவாரம் கொடுத்தபடி இருந்தார். தேவனுக்கு ஆனந்தியின் பணக்காரப் பின்னணியால் கிடைக்கும் செளகரியங்களை விட்டு இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்ய அவ்வளவு ஈடுபாடு இருக்கவில்லை. எந்த ஆண்தான் குடும்பம் என்ற அமைப்பால் வரும் வசதி வாய்ப்புக்களை விட்டு விலகிச் செல்ல விரும்புவார். தேவனும், மனைவியை ஒரு புறம் வைத்துக்கொண்டு, கிருஷ்ணனைப் போல கோபிகையர்களின் பின்னால் அலைந்தபடி திரிந்தார். திருமணமான புதிதில் தேவனின் இந்த காதல் லீலைகளை கண்டு வெறுத்து, விவாகரத்து வேண்டுமென்று ஆனந்தி தேவனிடம் கோரியிருந்தார். நிலைமை இந்தளவுக்கு விபரீதமாகப் போய்விட்டதே என்று சுதாகரித்த இரண்டு பேரினதும் செல்வாக்குள்ள குடும்பங்கள் தலையிட்டுத்தான் அந்த வழக்கை மீளப்பெற வைத்திருந்தனர். ஆனால் காலம் செல்லச் செல்ல, நான்கு பிள்ளைகள் பிறந்தபின்னும் பெண் பித்தில் திளைத்துக் கிடந்த தேவனை என்ன செய்வதென்றும் ஆனந்திக்கும் விளங்கவில்லை. வெள்ளைக்காரப் பெண்ணோடான புதிய காதல் உறவை விட்டுவிட்டு தன்னிடமும் தன் குழந்தைகளிடமும் மீண்டு வரும்படி ஆனந்தி தேவனிடம் மன்றாடியிருக்கின்றார். அது இனி ஒருபோதும் சாத்தியமில்லை என்ற முடிவுவந்தபோதே ஆனந்தி விவாகரத்தை தன் வக்கீல்கள் மூலம் கோரியிருக்கின்றார். இது தேவனின் ஆண் என்கிற மிருகத்தை உலுப்பி எழுப்பியிருக்க வேண்டும். அவர் ஆனந்தியிற்கு மனதாலும் உடலாலும் நிறைய உளைச்சலைக் கொடுக்கத் தொடங்கியிருக்கின்றார். அப்போது ஆனந்தி பொலிஸ் அதிகாரிக்கு ஒரு கடிதத்தை எழுதத் தொடங்கினார்: மதிப்புக்குரிய பொலிஸ் அதிகாரிக்கு, நான் தொலைபேசியில் உங்களிடம் கேட்டதிற்கிணங்க இந்தக் கடிதத்தை எழுதுகின்றேன். நான் இப்போது எனது கணவர் தேவனிடம் இருந்து விவாகரத்தைப் பெறுவதற்கு நீதிமன்றத்தை நாடியிருக்கின்றேன். அவர் தற்சமயம் இங்கிலாந்தில் இருப்பதால் அவரால் இந்த வழக்கிற்கு வரமுடியாதிருக்கின்றது. அவரின் வழக்கறிஞர், தேவன் விரைவில் இங்கிலாந்திருந்து இலங்கைக்கு கப்பல் மூலம் வர இருப்பதாகத் தெரிவித்திருக்கின்றார். அத்துடன் தேவன் அவரின் தாயாரையும் கூட்டிக்கொண்டு வந்து எங்களோடு மீண்டும் வாழப்போவதாகவும் தெரிவித்திருக்கின்றார். இந்த வீடு எனது சொந்தப்பணத்தில் வாங்கிய வீடாகும். ஒரு விவாகரத்து வழக்கு நிலுவையில் நீதிமன்றத்தில் இருந்தால், எதிர்த்தரப்பை வீட்டில் அனுமதிக்கத் கூடாது என்பது என்பது சட்டமாகும். அத்துடன் எனக்கும் தேவனை எனது வீட்டில் வந்து தங்க அனுமதிக்க வேண்டாம் என்று எனது வழக்கறிஞரால் அறிவுறுத்தப்பட்டிருக்கின்றது. எனது கணவரை நீண்டகாலமாக நன்கு அறிந்தவள் என்பதால், அவர் எல்லாவித வன்முறையைகளையும் பயன்படுத்தி எங்கள் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து எங்கள் குடும்பத்தின் அமைதியைக் குலைக்கக்கூடும் என்று நான் அச்சமுறுகிறேன். இவ்வாறான சூழ்நிலையில், எனக்கு ஒரு பாதுகாப்பு பொலிஸிடம் இருந்து வேண்டுமென உங்களிடம் கோருகின்றேன். ஏதேனும் ஒரு பிரச்சினை எனது கணவர் மூலம் வருமென்றால் நான் உங்கள் பொலிஸ் நிலையத்துக்கு அழைப்பேன். அப்போது எனக்குப் பாதுகாப்புத் தர நீங்கள் எங்கள் வீட்டுக்கு வர வேண்டும். எங்கள் வீட்டில் தொலைபேசி இருக்கின்றது, ஆகவே ஏதேனும் விபரீதமாக நடந்தால் நான் உங்களுக்கு உடனே தொலைபேசியில் அழைக்க முடியும். மேலும் எனக்கு நான்கு பிள்ளைகள் இருக்கின்றார்கள் என்பதையும், அவர்களின் பாதுகாப்புக் குறித்தும் நான் அக்கறை கொள்ளவேண்டும் என்பதையும் உங்களுக்குத் தெரிவிக்க விரும்புகின்றேன். இப்படிக்கு, ஆனந்தி தேவன் * இங்கிலாந்திலிருந்து கப்பலில் வந்த தேவன் ஐப்பசி மாதம் ஆறாந்திகதி ஆனந்தியின் வீட்டுக்கு நள்ளிரவில் சென்றிருக்கின்றார். அன்றைய இரவை விடுதியில் கழித்த தேவன் ஆனந்தியின் வீட்டுக்குப் போகும்போது விடிகாலை ஒரு மணியாக இருந்திருக்கின்றது தம்பதியினர் இருவரும் அன்றைய இரவை சேர்ந்தே ஒரே வீட்டில் கழித்திருக்கின்றனர். அடுத்த நாள் காலை அவர்களின் இரண்டு பிள்ளைகள் அருகிலிருந்து பாடசாலைக்குச் செல்ல, ஐந்து வயதுக்குள் இருந்த மற்ற இரண்டு பிள்ளைகள் மட்டும் வீட்டில் இருந்திருக்கின்றனர். அன்றைய காலை பத்தரை மணியளவில் தேவன் வீட்டிலிருந்து டாக்ஸியில் புறப்பட்டுச் சென்றிருக்கின்றார். 'அம்மா தலைவலியால் அவதிப்பட்டபடி சமையலறையில் நீண்ட நேரமாக விழுந்து கிடக்கின்றார்' என்று ஆனந்தியின் நான்கு வயது மகள் பக்கத்து வீட்டுக்காரருக்குச் சொன்னபோது, அந்த வீட்டுப் பெண்மணி வந்து பார்த்தபோது, சமையலறையில் பக்கத்தில் இருந்த அறையில் ஆனந்தி விழுந்து கிடந்திருக்கின்றார். அவரின் கழுத்தடியில் உலக்கை குறுக்காகக் போடப்பட்டிருந்தது. ஆனந்தியின் உடலில் அசைவுகள் எதுவுமில்லாததைக் கண்டு பயந்து அஞ்சிய அந்தப்பெண்மணி பொலிஸை அழைத்திருக்கின்றார். ஆனந்தியின் மரணம் இயற்கையாக நடக்கவில்லை என்பதை பொலிஸ் உடனே கண்டுபிடித்திருக்கின்றது. ஒரு குடும்பத்துக்குள் கொலை நடக்கும்போது, முதலாவது சந்தேக நபராக கணவராகவோ மனைவியாகவோ இருப்பது சாதாரணம் என்பதால் தேவனை அவரின் நண்பரின் வீட்டில் வைத்து பொலிஸ் சந்தேகத்தின்பேரில் கைது செய்திருக்கின்றது. ஆனந்திக்கு வீட்டில் உதவுவதற்கென ஒரு மாதத்துக்கு முன்னரே சிங்களப் பையனான வில்லியம் மாத்தறையில் இருந்து வந்திருக்கின்றான் அப்போதுதான் சமையலுக்கு உதவிக்கென இருந்த வில்லியம் காணாமல் போயிருப்பதைப் பொலிஸ் கண்டுபிடித்திருக்கின்றது. அத்தோடு ஆனந்தி அணிந்திருந்த தாலிக்கொடியும், வளையல்களும் காணாமல் போயிருப்பதும் தெரிந்திருக்கின்றது. ஏன் வில்லியம் தப்பியோடினான், அவனுக்கு இந்த கொலைக்கும் என்ன சம்பவம் என்று அறிய வில்லியமை பொலிஸ் வலைவிரித்துத் தேடியதில் வில்லியமும் அவன் பிறந்த ஊரில் வைத்து பிடிபட்டிருக்கின்றான். மாத்தறையில் வில்லியமைப் கைதுசெய்த பொலிஸ் அவனே நகைகளின் பொருட்டு கொலை செய்தான் என்கின்ற வாக்குமூலத்தை அவனிடமிருந்து பெற்றிருக்கின்றது. இந்த வழக்கு நீதிமன்றத்துக்குப் போனபோது யார் உண்மையில் ஆனந்தியைக் கொலை செய்தார் என்பதில் குழப்பம் வந்திருக்கின்றது. ஒரு கொலை வழக்கு இரண்டு வருடம் சந்தேக நபர்களான இருவரும் சிறைக்குள் இருக்க நடந்திருக்குமா என்று தெரியவில்லை. தேவனும் வில்லியமும் சிறைக்குள் இருக்க, ஆனந்தியின் கொலை வழக்கு இரண்டாண்டுகளுக்கு மேலாக இலங்கையில் நடந்திருக்கின்றது. * தேவனின் சார்பில் பிரபல்யமான வழக்கறிஞர்கள் வந்து தேவன் குற்றமற்றவர் என நிரூபிக்க முயன்றனர். தேவன், ஆனந்தியின் வீட்டை விட்டு வெளியேறிய காலை பத்தரைக்குப் பின்னரே ஆனந்தி கொலை செய்யப்பட்டார் என்று சாட்சியங்களின் மூலம் அவர்கள் எடுத்துக் காட்டினார்கள். முக்கியமாக தேவனை கூட்டிக்கொண்டு போக காலையில் டாக்ஸிக்காரர் வந்தபோது, ஆனந்தி வாசலடியில் நின்று கையசைத்தார் என்று சொல்லப்பட்டது. தேவன் வீட்டை விட்டுக் கிளம்பியபோது ஆனந்தி உயிரோடு இருந்தார், ஆகவே தேவன் ஆனந்தியைக் கொலை செய்யவில்லை என்று டாக்ஸிக்காரரின் சாட்சியத்தை முன்வைத்து தேவனின் வழக்கறிஞர்கள் திறமையான வழக்கைக் கொண்டு சென்றனர். ஆனால் சட்டென்று வழக்கில் ஒரு திருப்பம் வந்தது. தொடக்கத்தில் ஆனந்தியின் நகைகளுக்காக ஆசைப்பட்டே கொலை செய்தேன் என்று ஆரம்பத்தில் வாக்குமூலத்தைக் கொடுத்த பதினெட்டு வயதான வில்லியம் நீதிமன்றத்தில் 'நான் ஆனந்தியைக் கொலை செய்யவில்லை' என்று வேறொரு கதையைச் சொல்லத் தொடங்கினான். 'நான் காலை ஒன்பது மணியளவில் சமையலறைக்குள் தேங்காய் துருவிக் கொண்டிருந்தேன். அப்போது தேவன் என்னை மாடியில் இருந்த அவரின் படுக்கையறைக்கு வரக் கூப்பிட்டார். நான் மேலே போனபோது அங்கே ஆனந்தி கட்டிலில் அழுதபடி அமர்ந்திருந்தார். நான் வருவதைக் கண்டதும் தேவன் சட்டென்று ஆனந்தியின் கூந்தலைப் பிடித்து தனது இடது கரத்தால் ஆனந்தியின் கழுத்தை வளைத்து நெரிக்கத் தொடங்கினார். துடிக்கத் தொடங்கிய ஆனந்தியின் முழங்கால்களை என்னை இறுக்கப்பற்றிப் பிடிக்கும்படி கத்தினார். சில நிமிடங்களில் கொஞ்சம் கொஞ்சமாக ஆனந்தியின் மூச்சடங்கியதும், ஆனந்தியின் உடலை கீழே இழுத்து வந்து சமையலறைக்குப் பக்கத்தில் இருந்த உரலும் உலக்கையும் இருந்த அறையில் நானும் தேவனும் கிடத்தினோம்' என்றான் வில்லியம். 'அப்படியாயின் நீ ஏன் ஆனந்தியின் தாலிக்கொடியையும், வளையல்களையும் எடுத்துக்கொண்டு தப்பியோடினாய்' என்று வில்லியத்திடம் வழக்கை விசாரித்த நீதிபதி கேட்டார். 'தேவன்தான் தாலிக்கொடியையும், காப்பையும் கழற்றித் தந்ததோடு, ஆனந்தியின் கைப்பையிலிருந்து நிறையப் பணத்தையும் கையில் தந்து, இங்கிருந்து எங்கேயாவது தப்பியோடிப் போய்விடு' என்று அதட்டி அனுப்பிவைத்தார் என்றான் வில்லியம். இப்போது நீதிபதிக்கு எல்லாமே குழப்பமாகிவிட்டது. அந்தக் காலத்தில் இப்போதுபோல கைரேகைகள் எடுத்து குற்றங்களைக் கண்டுபிடிக்கும் நுட்பங்கள் வந்துவிடவில்லை. யாரின் கைவிரல்ரேகை ஆனந்தியின் உடலில் இருக்கின்றது என்றும் அறியமுடியாது. ஆனந்தி குப்புறக்கிடந்ததைப் பார்த்த பக்கத்துவீட்டுப் பெண்மணி அவர் மேல் போடப்பட்டிருந்த உலக்கையும் எடுத்து, கொலை நடந்த சாட்சியங்களையும் அவர் அறியாமலே கலைத்தும் விட்டிருந்தார். ஆனந்தியின் கொலையில் வில்லியத்துக்கு மட்டுமில்லை தேவனுக்கும் தொடர்பு இருக்கின்றது என்கின்ற குழப்பம் நீதிமன்றத்துக்கு வந்துவிட்டது. ஆனாலும் தேவனின் வழக்கறிஞர்கள் தேவன் நிரபாரதி என நிரூபிக்க கடுமையாக இன்னும் முயற்சித்தார்கள். இந்த வழக்கிற்காகவே இங்கிலாந்தில் மிகவும் பிரபல்யமான இருந்த வழக்கறிஞரை நேரடியாகவே இலங்கைக்கு தேவனின் சார்பில் வழக்காட வரவழைத்தனர். அவர் இந்தக் கொலை ஆனந்தி நின்றுகொண்டிருந்தபோது யாரோ ஒருவர் பின்புறமாக கைகளை வளைத்து கழுத்தை நெரித்தே கொலை செய்திருப்பார் என்பதைத் தனது திறமையான வாதத்தால் நிரூபித்தார். அத்தோடு இந்தக் கொலை மேல் மாடியின் படுக்கையறையில் அல்ல, கீழே இருந்த சமையலறையில்தான் நிகழ்ந்திருக்கின்றது என்றிருக்கின்றார். சமையல்காரனான வில்லியம்தான் ஆனந்தியோடு முறைகேடாக நடக்க முயன்றிருக்கின்றான். அப்போது அதற்கு எதிராக ஆனந்தி போராடியபோது, சமையலறையில் இருந்த ஆணி ஆனந்தியின் தலையில் குத்திய காயமும் சாட்சியமாக இருக்கின்றது என்று அந்த வழக்கறிஞர் வாதாடியிருக்கின்றார். இங்கிலாந்து வழக்கறிஞரின் வாதத்துக்கு மேலும் ஆதாரம் சேர்க்க, வில்லியமின் முழங்கையில் ஆனந்தி இறுதி நேரத்தில் மூச்சடங்குவதற்கு முன்னர் அவரது கைகளால் கீறிய காயங்கள் காணப்பட்டன. ஆனந்தியின் உடல்மேல் உலக்கை போடப்பட்டு கொலை செய்யப்பட்டதை பக்கத்து வீட்டுப் பெண்மணி கண்டபோது ஆனந்தியின் உடலில் தேங்காய்த் துருவல்களும் இருந்தன. ஆக தேங்காயைத் துருவிக் கொண்டிருந்த வில்லியந்தான் ஆனந்தியைக் கொலை செய்தார் என்றும், Benefit of a Doubt என்பதன் அடிப்படையில் தேவன் நிரபராதி எனவும் நீதிபதியால் தீர்ப்பு வாசிக்கப்பட்டது. * அன்று உச்சத்தில் இருந்த மேற்கிந்தியத் தீவு கிரிக்கெட் அணியின் தலைவர், தான் உலகில் சிறந்த பதினொரு வீர்ர்களைத் தேர்ந்தெடுக்கின்றேன் என்றால் அதில் முதன்மையானவர் தேவன் என்று ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் சொல்லியிருக்கின்றார். தேவன் சிறைக்குள் இருந்தபோது மேற்கிந்தியத் தீவு வீரர்கள் அவரை நேரில் சென்று சந்திக்கும் அளவுக்கு தேவன் ஒரு சிறந்த துடுப்பாட்டக்காரராக இருந்தார். அவரின் சுழலும் கையின் சாகசத்திற்காகவும், பந்துகளை அடித்தாடும் அழகிற்காகவும் அவருக்கு உலகெங்கும் இரசிகர்கள் இருந்தார்கள். இந்த கொலை வழக்கு முடிந்து விடுதலையான கொஞ்சக் காலத்திலே தேவன் தனது காதலி நான்ஸியை இலண்டனில் திருமணம் செய்து கொண்டு சிங்கப்பூரில் சென்று வசிக்கத் தொடங்கினார். இந்தத் தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் பிறந்தனர். தேவன் சிங்கப்பூர் நாட்டு கிரிக்கெட் அணிக்கு தலைவராகவும் உயர்ந்தார். சிங்கப்பூர் மலேசியாவில் இருந்து பிரிந்தபோது மலேசியா கிரிக்கெட் அணிக்கும் தேவன் தலைவரானார். இலங்கை, சிங்கப்பூர், மலேசியா என்று மூன்று நாடுகளுக்கும் கிரிக்கெட்டில் தலைமை தாங்கிய ஒரேயொருவர் என்ற புகழும் தேவனுக்குக் கிடைத்தது. தேவனின் விடுதலை பெற்ற கொஞ்ச ஆண்டுகளில் வில்லியமும் நிரபராதி என விடுவிக்கப்பட்டார். ஒரு கொலை வழக்கில் முதலாம், இரண்டாம் கொலையாளிகளாக இருந்திருக்கக்கூடிய இரண்டு பேருமே விடுதலை செய்யப்பட்டு ஆனந்தியின் பரிதாபமான உயிருக்கு மட்டும் முறையான நீதி வழங்கப்படாது அநாதரவாக அவர் கைவிடப்பட்டிருந்தார். ஆனந்தி கொலை செய்யப்பட முன்னர், இங்கிலாந்தில் இருந்த தேவனுக்கு ஆனந்தி எழுதிய கடிதத்தில், 'தயவு செய்து உங்கள் தீராத காதல் விளையாட்டுக்களையும், குடிக்கு அடிமையான நிலையையும் கண்டபின், உங்களோடு நான் சேர்ந்து வாழ விரும்பவில்லை. எனக்கு தயவுசெய்து விவாகரத்து தந்துவிடுங்கள்' என்று உருக்கமாக ஒரு கடிதம் எழுதியிருப்பது பின்னர் கண்டுபிடிக்கப்பட்டிருந்தது. தேவனின் வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்றபோது அவரது நண்பரொருவர் தேவனைச் சிறைக்குள் சந்தித்தபோது, தேவன், அந்த நண்பனின் மனைவி இந்த வழக்கு குறித்து என்ன நினைக்கின்றார் என்று அபிப்பிராயத்தைக் கேட்டிருக்கின்றார். அதற்கு அந்த நண்பர் 'எனது மனைவி நீங்கள்தான் இந்தக் கொலையைச் செய்திருப்பீர்கள் என்று உறுதியாக நம்புகின்றார்' என்று சொல்லியிருக்கின்றார். அதற்குச் சிரித்தபடி தேவன், 'எனது கொலைப்பட்டியலில் அடுத்து உனது மனைவிதான் இருக்கின்றார் என்பதைச் சொல்லிவிடு' எனக் கூறியிருக்கின்றார். ஆனந்தியின் கொலை நடந்தபோது அதே வீட்டில் ஆனந்தி-தேவனின் இரண்டு பிள்ளைகள் இருந்திருக்கின்றனர். அதில் நான்கு வயதான மகளிடம் நீதிமன்றம் 'என்ன நடந்தது?' எனக் கேட்டபோது அந்தக் குழந்தை, 'மம்மியை, டாடியும், வில்லியமும் மேலே இருந்து கீழே தூக்கிக் கொண்டு வந்து சமையலறைக்கு பக்கத்தில் படுக்க வைத்திருந்தனர்' என்று சொல்லியிருந்தது. ஆனால் நீதிமன்றம் இரண்டாம் நாள் 'என்ன நடந்தது' என மீண்டுமொரு முறை கேட்டபோது அந்தக் குழந்தை நடந்தவற்றைச் சொல்ல முடியாது தவித்ததால் அந்த முக்கிய சாட்சியம் வழக்கில் கவனத்தில் எடுக்கப்படாது கைவிடப்பட்டிருந்தது. அந்த மகள்தான் தனது சகோதரிகளோடு தேவனோடு சிங்கப்பூரில் வாழ்ந்து கொண்டிருந்தபோது பன்னிரண்டு வருடங்களுக்குப் பிறகு தேவனைப் பார்த்துக் கேட்டாள், 'டாடி நீங்கள்தானா எங்கள் அம்மாவைக் கொன்றது?'. **** (நன்றி: 'அம்ருதா' - ஜனவரி, 2026) ஓவியம்: கோபிகிருஷ்ணன் https://www.elankodse.com/post/1769190555244_16818_4146?fbclid=IwdGRleAPgnGBleHRuA2FlbQIxMQBzcnRjBmFwcF9pZAo2NjI4NTY4Mzc5AAEeQDC1Q9dJTvCvQmTZ9HgZ2Xr-fPjQtfv59VR5tuuBnWDBuX3LSlfEGA5JNOs_aem_mdpMiOZoVi9QJjMeOQHZeQ
-
அநீதிக்குப் பிரபலமான நாடு - குமாரபுரம் படுகொலை
அநீதிக்குப் பிரபலமான நாடு படுகொலை செய்யப்பட்ட தனது கணவனின் படத்தோடு நடராசா தவமணி (69) கட்டுரை மற்றும் படங்கள் | North East Narrative இலங்கையின் கிழக்கு மாகாணத்தில், திருக்கோணமலை மாவட்டத்தில், மூதூர் பிரதேச செயலாளர் பிரிவில் மட்டக்களப்பு வீதியில் அமைந்திருக்கிறது குமாரபுரம் கிராமம். பல தலைமுறைகளாகத் தமிழர்கள் வாழும் இக்கிராமத்தைச் சூழ பரந்த வயல்வெளிகளும், நீர்நிலைகளும் உள்ளன. அந்த வயலை நம்பியே அக்கிராமத்தவர்களின் பொருளாதாரம் தங்கியுள்ளது. இத்தகைய கிராமமானது 1996ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 11ஆம் திகதி மிகப்பெரிய படுகொலையைச் சந்தித்தது. இலங்கை அரச படைகளும், துணை இராணுவக் குழுவினரும் இணைந்து நடத்திய துப்பாக்கிச் சூட்டின்போது சிறுவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் உட்பட 26 பேர் படுகொலைசெய்யப்பட்டனர். 24 பேர் படுகாயமடைந்தனர். தற்போது குமாரபுரத்தில் வசிக்கும் நடராசா தவமணி (69) படுகொலையின் நேரடி சாட்சியாவார். அவரின் கணவர் நடராசா இப்படுகொலை சம்வத்தின்போது கொல்லப்பட்டதிலிருந்து தவமணி தன் மகனோடு தனியே வசித்துவருகிறார். ”நாங்க தொண்ணூத்தைஞ்சில கலியாணம் முடிச்சம். எட்டு மாச வாழ்க்கதான். வயித்திள இருந்த புள்ள பொற்ற முதலே வாழ்க்கையே பேயிற்று” தவமணி தன்னை இப்படித்தான் அறிமுகம் செய்கிறார். 1996 ஆம் ஆண்டு ரெண்டாம் மாசம் 11 ஆம் திகதி. நாங்க வீட்டுக்குள்ளதான் இருந்தனாங்க. றோட்டில நிறைய வெடி சத்தங்கள் கேட்டது. நாங்க பயத்தில வீட்டுக்க வந்து இருந்தனாங்க. நிறைய ராணுவம் ஊருக்க வந்திற்று. அங்கால ஏதோ சம்பவம் நடந்ததாம் எண்டு, தெகிவத்த, அம்பத்தெட்டு, கிளிவெட்டி இடங்களில இருந்த எல்லா இராணுவமும் எங்கட ஊருக்குள்ள புகுந்து சுட்டது. நாங்க எங்கட வீட்டில இருக்கல்ல. பயந்து பக்கத்து வீட்டில தான் இருந்தனாங்க. அங்க வந்த ஆமிக்காரர் ஜன்னல், கதவுகள உடைச்சு சுட்டதில எங்கட அவருக்கு (கணவர்) வெடிபட்டிற்று. அந்த வீட்டுக்கார அக்காவுக்கும் வெடி பட்டிற்று. அங்க பதுங்கியிருந்த இன்னொரு பிள்ளைக்கும் வெடி பட்டிற்று. அங்க இருந்த ரெண்டு பேருக்கு வெடி படல்ல. கதவ உடைச்சி சுட்டதில எங்கட அவருக்கு வயித்தில வெடிபட்டிற்று. மற்ற அக்காவுக்கு ஜன்னலுக்கால சுட்டதில நெத்தியில வெடி பட்டிற்று. அங்கா ஒரு வீட்டுக்குள்ள ஏழு பேர சுட்டிருக்கானுவ. அதில ரெண்டு புள்ளத்தாச்சிகள் (கர்ப்பிணித்தாய்மார்) செத்தது. அதில ஒரு புள்ளைக்கு 16 ஆம் திகதி புள்ள பொறக்கிற நாள். 11ஆம் திகதி சுட்டிற்றானுவ. ஒருத்தரையும் வெளியில வைச்சு சுடல்ல. எல்லாரையும் வீட்டுக்க வைச்சித்தான் சுட்டானுவ. ஐஞ்சு மணி இருக்கும் தொடங்கி இரவு எட்டு மணி வரைக்கும் வெடி மயமாத்தான் கிடந்த அதுக்குள்ள. ஒருத்தரும் வெளிய வந்துக்க ஏலாது. பொறவு விடிஞ்சுதான் தெரியும், எங்க வீட்ட மட்டுமில்ல எல்லார்ட வீட்டயும் இப்படியொரு சம்பவம் நடந்திருக்கெண்டு. அங்க ஒரு புள்ளையையும் (சிறுமி) கற்பழிச்சிக் கொன்றிருந்தானுவ. முதல் பொடிய கொண்டு போக வேணாம் எண்டு வெள்ளக்காரங்க சொன்னவங்க. பிறகு மூதூருக்கு பொடிய கொண்டுபோய் அங்க வைச்சி தந்தவங்க. புதன் கிழமதான் பொடி தாட்டம் (சடலம் புதைப்பது). அதில 26 பேருக்கு வெடிபட்டு செத்தவங்க. 24 பேருக்கு காயம். இங்கத்தய ஆக்கள் மட்டுமில்லா கிளிவெட்டி, 58, மேங்காமம் ஆக்களுக்கும் எங்கட ஊருக்குள்ள வந்த இடத்தில செத்தாங்க. சின்னப்புள்ளயள், புள்ளத்தாச்சிப் பொம்பிளகள் என்று எல்லாரையும் சுட்டுக்கொன்றானுவ. முதல்ல மூதூர்ல வழக்கு நடந்தது. பொறவு ரிங்கோவுக்கு (திருக்கோணமலை) போட்டவங்க. ரிங்கோவுலயும் பத்தொன்பது தரம் வழக்கு நடந்தது. ஒரு முடிவும் இல்ல. பொறவு அன்ராதபுரத்துக்கு போட்டு, அங்க போன்னாங்க. அங்கயும் எங்களுக்கு எதுவுமான முடிவும் வரல. இதுவரைக்கும் எந்த முடிவுமில்ல. நாங்களும் ஒவ்வொரு வருசமும் அந்த நினைவுநாளத்தான் செய்துவாறம். செய்யக்குல்ல எல்லாரும் வருவாங்க. வாறவங்களிட்ட இதுக்கு ஒரு தீர்வெடுத்துத் தரச்சொல்லித்தான் கேட்கம். அதுக்காகத்தான் எவ்வளவு கஸ்ரத்திலயும் நினைவு நாள செய்துவாறம். படுகொலை சம்பவத்தின்போது படுகாயமடைந்து தப்பித்தவர்களின் ஒருவரான அரசரட்ணம் நாகராசா (74) தவமணி வசிக்கும் அதே கிராமத்தின் முனையில் வசிக்கிறார். பார்வையற்றிருக்கும் அவரிடமும் வலி மிகுந்த அனுபவங்கள் உண்டு. ஆயிரத்தி தொளாயிரத்தி தொன்னூற்றி ஆறாம் ஆண்டு, ரெண்டாம் மாசம் பதினொராம் திகதி. அன்றைக்கு நாங்க ஒரு பதினாலு பேர் வெள்ளாம வெட்ட கூலிக்குப் போயிந்தம். முன்று மணியப் போல எங்கட வேலை முடியப்போகுது. குளிப்பமெண்டு கரப்புறப்படக்குள்ள வெடிச்சத்தம் கேட்குது. நேரத்தோட போறவாற ஆடிக்காரர் கொக்குக்குங் குருவிக்கும் சுடுறது. அப்பிடித்தான் நான் நினைச்சிருந்தன். ஆனா அன்றைக்கு வெடிச்சம்கூடக் கேட்குது. நான் எங்கட வீட்டுக்கு ஓடியந்திற்றன். மற்றாக்களும் தங்கட வீடுகளுக்கு ஓடித்தாங்க. வீட்ட வந்தாலும், ஊரைச் சுத்தி வெடிச்சத்தம் கேட்குது. அந்த நேரம் எங்கட வீட்டயும் ஆக்கள் ஓடிவாறாங்க. படாரென்று எனக்கு கன்னத்துக்கு மேல மழைத்துளி பட்டமாதிரி இருந்தது. அதோட என்ர கண் வெட்டைக்குவந்திற்று (வெளியே வந்துவிட்டது). என்ர மகன் பிடிச்சிற்றான். ஆனால் எனக்கு அறிவுகெடல்ல. என்னைக் கடந்து போயிற்றானுவ. எல்லா வீட்டலயும் வெடி. சவமும், காயப்பட்டாக்களும் கிடக்கு. வந்து பார்க்கிறதுக்கு ஒரு மனுசங்கிடையாது. வரையுமேலாது. விடயுமில்ல அவங்க. காயப்பட்டவுடன என்னையத் தூக்கிக்கொண்டு ஓடக்குள்ள என்ர பெஞ்சாதிக்கும் வயித்தில வெடிபட்டிற்று. மகனுக்கும் காலில வெடி. இருவத்தாறு தையல். அந்த நேரம் எட்டுவயது அவனுக்கு. பொறவு அடுத்தநாள் ஒரு ஏழு மணியிருக்கும். பஸ்ஸில ஆசுபத்திரிக்கு ஏத்திப்போனானுவ. திருக்கோணமலையில இந்தக் கண்ணுக்கு பக்கத்தில் விறைப்பூசி அடிவங்க. அந்த விறைப்பு இன்னும் மாறல்ல. பொறவு கண்டி ஆசுபத்திரியில பதிமூனு நாள் கிடந்தன். பொறவு திருகோணமலை ஆசுபத்திரியில ஏழு நாள் கிடந்தன். என்ர கண் பிழையாபேயிற்று என்றது எனக்கே விளங்கீற்று. மற்ற கண்ணும் சரியா தெரியல்ல. இப்பிடியே ஒரு மூணு வருசம் பேயிற்று. இதுக்கிடையில இங்க காயப்பட்ட ஆக்களையெல்லாம் கோட்சுக்கு (நீதிமன்றம்) கொண்டுபோய் ஆமிக்காரங்கள காட்டச்சொன்னாங்வங்க. அதில எட்டுப்பேரை என்னமோ காட்டினாங்களாக்கும். அவங்களுக்கு வழங்கு நடந்துகொண்டிருக்கு. எனக்கு வழக்கென்றால் எப்பிடி என்று கூட தெரியல்ல. எனக்கு சம்மன் வரயில்ல. கண்டியில் வாய்முறைப்பாடு எடுத்த பொலிஸ்காரன் சரியா எடுக்கல்ல. சேரிட்ட கேட்டிற்று வந்து எடுக்கிறன் என்று சொன்னவன், போனவன் போனவன்தான். பொறவு வரவேயில்ல. மலையிலயும் (திருக்கோணமலை) எடுக்கல்ல. வழக்கு மூதூர்ல இருந்து திருக்கோணமலைக்குப் போய், பொறவு அனுராதபுரம் போயும் எங்களுக்கு சார்பா தீர்ப்பு கிடைக்கல்ல. தள்ளுபடி செய்திற்றாங்க. சனங்களுக்கு இதுக்கு அலைஞ்சு சீ (சலித்துப்போயிற்று) என்று பேயிற்கு. இதுக்கு ஒரு ஞாயத்தை (நீதி) யார் தாறது? பார்வையை இழந்து அல்லற்படும் நாகராசாவின் கேள்விக்கு இலங்கை அரசிடம்கூட பதில் இல்லை. குறிப்பு – இப்படுகொலை தொடர்பான ஆரம்பகட்ட விசாரணைகள் மூதூர் நீதவான் நீதிமன்றத்திலும், திருகோணமலை நீதிமன்றத்திலும் இடம்பெற்றன. போர்ச்சூழல் காரணமாக சந்தேக நபர்களுக்கு பாதுகாப்பில்லை எனத் தெரிவித்து, வழக்கானது 2013ஆம் ஆண்டில் அனுராதபுரம் மேல்நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. 2016ஆம் ஆண்டு ஜீலை மாதம் 27ஆம் திகதி பிரதிவாதிகளைக் குற்றவாளிகளாக நிரூபிப்பதற்குப் போதுமானளவு ஆதாரங்களை முன்வைக்கத் தவறியுள்ளதாகத் தெரிவித்து, குற்றஞ்சாட்டப்பட்டு, சாட்சிகளால் அடையாளம் காட்டப்பட்டிருந்த இராணுவததினர் 6 பேரும் விடுவிக்கப்பட்டனர். https://nenarrative.com/அநீத்கு-பிரபலமான-நாடு/
-
வவுனியா மாவட்டத்தில் அரசு முன்னெடுக்கவுள்ள கிவுல் ஓயா திட்டம் தமிழருக்கு ஆபத்து; பல்லாயிரம் ஏக்கர் காணிகளைப் பறித்து சிங்களக் குடியேற்றத்துக்கு முயற்சி
இனவாதிகளான ராஜபக்ஷர்கள் கொண்டு வந்த கிவுல்ஓயா திட்டத்தை இந்த அரசாங்கம் தொடர தீர்மானித்துள்ளது. சனி, 24 ஜனவரி 2026 02:46 AM இனவாதிகளான ராஜபக்ஷர்கள் கொண்டு வந்த கிவுல்ஓயா திட்டத்தை அரசாங்கம் தொடர தீர்மானித்துள்ளது. இத்திட்டம் சிங்கள குடியேற்றத்தை இலக்காக கொண்டது என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் கிவுல்ஓயா திட்டத்திற்கு வடக்கு மற்றும் கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினரும் இணங்கமாட்டார்கள். அரச தரப்பினர் உள்ளிட்டவர்களும் இதற்கு இணங்க மாட்டார்கள். கிவுல்ஓயா திட்டத்தை ராஜபக்ஷக்களே ஆரம்பித்தனர். அவர்கள் தமிழர்களுக்கு எதிரான இனவாதத்தை முன்னெடுத்தவர்கள். யுத்தம் முடிந்த பின்னர் 2013ஆம் ஆண்டு காலத்தில் 6000 சிங்கள குடும்பங்களை குடியேற்றுவதற்காக இந்த திட்டம் கொண்டுவரப்பட்டது. 1984ஆம் ஆண்டு காலத்தில் முல்லைத்தீவு, கிழக்கு மற்றும் வவுனியா வடக்கு பகுதியில் இருந்து இராணுவ நடவடிக்கையில் தமிழ் மக்கள் அங்கிருந்து வெளியேறியிருந்தனர். இவ்வாறான நிலைமையில் அங்கு சிங்கள மக்களை குடியேற்றும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன. யுத்தம் முடிவடைந்த பின்னர் தமிழ் மக்கள் அங்கு சென்ற போது வனபாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் இடங்களை கையகப்படுத்தியிருந்தனர். இது சிங்கள மக்களை குடியேற்றுவதற்காக பயன்படுத்தப்படுகின்றது. கிவுல்ஓயா திட்டம் மிகவும் பிரச்சினைக்குரிய விடயம். இதற்கு நாங்கள் கடும் எதிர்ப்பை வெளியிடுகின்றோம். ஏனைய வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள தமிழ் கட்சிகளும் இதனை எதிர்க்கின்றன. இங்கு முழுமையாக சிங்கள மக்களே குடியேற்றப்படுவர். இவ்வாறான வேலைத்திட்டங்கள் ராஜபக்ஷக்களால் கொண்டுவரப்பட்டன. ராஜபக்ஷர்கள் ஆட்சியை நாங்கள் இனவாதம் என்றோம். ஆனால் உங்களின் ஆட்சியிலும் அவ்வாறான திட்டங்கள் கொண்டுவரப்படுகின்றது. அப்படியென்றால் நீங்கள் செய்வதும் அவ்வாறான இனவாத வேலைகளே. ராஜபக்ஷ அரசாங்கம் இந்த திட்டத்துக்கு 7 பில்லியன் ரூபாவே ஒதுக்கியிருந்தது. தற்போதைய அரசாங்கம் இந்த நிதியை அதிகரித்துள்ளீர்கள். இதன்மூலம் அரசாங்கம் எங்களுக்கு சொல்லும் செய்தி என்ன? யாழ் .தையிட்டி விகாரைக்கென காணி இருக்கும் போது அதனை விடுத்து தனியார் காணியில் விகாரை நிர்மாணிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் நாங்கள் போராட்டத்தை நடத்தும் போது எங்களை இனவாதி என்று ஜனாதிபதி கூறுகின்றார். இதன்மூலம் கூறும் செய்தி என்ன? மீண்டும் எங்களை ஜனாதிபதி இனவாதி என்று கூறினால் இதனை என்னவென்று கூறுவது? சபையில் உள்ள பிரதமரிடம் கேட்கின்றேன். உங்கள் அரசாங்கம் மற்றைய அரசாங்கங்களை விடவும் வித்தியாசமானது என்றால் முறைமையில் மாற்றம் இருக்க வேண்டும். உங்களிடம் இனவாதம் இல்லையென்றால் மாற்றத்தில் அதனை வெளிப்படுத்த வேண்டும். இந்த விடயத்தில் அமைச்சரவை வழங்கியுள்ள அனுமதி தொடர்பில் ஆராயுமாறு நாங்கள் கேட்டுக்கொள்கின்றோம். இதுவே தமிழ் மக்கள் உங்கள் அரசாங்கத்தின் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கான இறுதி சந்தர்ப்பமாகும் என்றார். https://jaffnazone.com/news/54523
-
இறுதி யுத்தத்தில் மீட்க்கப்பட்ட தமிழர்களின் நகைகளை ஒப்படையுங்கள்
இறுதி யுத்தத்தில் மீட்க்கப்பட்ட தமிழர்களின் நகைகளை ஒப்படையுங்கள் சனி, 24 ஜனவரி 2026 02:50 AM இறுதி யுத்த காலத்தில் மீட்கப்பட்ட தமிழர்களின் தங்க நகைகளை அவர்களிடம் ஒப்படைப்பதாக தற்போதைய ஆளுங்கட்சி மக்களுக்கு வாக்குறுதியளித்தது. ஆகவே வழங்கிய வாக்குறுதியை விரைவாக நிறைவேற்றுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், ஜனாதிபதியிடம் வலியுறுத்தினார். நாடாளுமன்றில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை உரையாற்றும் போதே அவ்வாறு உரையாற்றினார். மேலும் தெரிவிக்கையில், தமிழர்களின் மீட்கப்பட்ட தங்க நகைகளை அவர்களிடம் ஒப்படைப்பதாக 2024 ஆண்டு ஜனாதிபதி தேர்தல், பாராளுமன்றத் தேர்தல் காலங்களில் தற்போயை ஆளும் கட்சி பகிரங்கமாக குறிப்பிட்டிருந்தது. தேர்தல்கள் முடிந்து ஓராண்டுக்கு மேலாகியும் எதிர்பார்ப்போடும் ஏக்கத்தோடும் இருக்கும் தமிழ் மக்களுக்கு எந்த மகிழ்ச்சியான செய்தியும் இதுவரை கிடைக்கவில்லை. தங்களின் பொருளாதாரத்தை இழந்து தவிக்கும் மக்களின் மனநிலையை இந்த அரசு மனிதாபிமானத்தோடு கரிசனை கொள்ளுமா? வடக்குக் கிழக்கில் இவ்வாறு தமிழ் மக்களிடம் எடுக்கப்பட்ட தங்கநகைகள் எத்தனை கிலோ பவுண்?,நீண்ட எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் இம்மக்களின் தங்க நகைகள் எப்போ அவர்களிடம் மீள வழங்கப்படும்? இந்த தங்க நகைகளை மீள அம்மக்களிடம் ஒப்படைப்பதற்கான ஏதாவது ஒரு வேலைத்திட்டம் அரசால் அறிவிக்கப்பட்டுள்ளதா? மொத்தமாக வடக்கு, கிழக்கில் இவ்வாறு தமிழீழ வைப்பகத்தில் தங்கநகைகளை அடகு வைத்தோரின் விபரங்களையாவது உங்கள் அரசுமேற்கொண்டு வெளியிடுமா? தங்களுடைய தேர்தல் கால வாக்குறுதிகளில் இத்தங்க நகை விடயம் முக்கியத்துவம் பெறுவதால் தமிழ் மக்கள் ஏமாற்றப்படாமல் இருக்க தாங்கள் எடுத்துள்ள துரித நடவடிக்கைகள் என்ன? என கேள்வி எழுப்பினார். இந்த கேள்விகளுக்கு பதிலளிக்க ஒரு வாரகால அவகாசம் தேவையென அரச தரப்பு பிரதம கொறடாவான அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ கோரினார். https://jaffnazone.com/news/54524
-
அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியிலும் உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல்
அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியிலும் உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 20 பேர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உக்ரைனின் தலைநகர் கீவ் மற்றும் வடகிழக்கு நகரமான கார்கிவ் ஆகியவற்றை இலக்கு வைத்து இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சுமார் நான்கு ஆண்டுகால போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்வைத்த திட்டம் குறித்த பேச்சுவார்த்தைகளின் இரண்டாவது நாளுக்காக ரஷ்யா, உக்ரைன் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த பேச்சுவார்த்தையாளர்கள் சனிக்கிழமை அபுதாபியில் சந்திக்கவுள்ள நிலையில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த முன்மொழிவு தொடர்பாக உக்ரைன் மற்றும் ரஷ்ய அதிகாரிகளுக்கு இடையேயான முதல் நேரடி தொடர்பு நேற்று ஆரம்பமானமை குறிப்பிடத்கத்கது. https://akkinikkunchu.com/?p=357261
-
இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான யுத்தகால பாலியல் வன்முறைகள் : சர்வதேச பொறுப்புக்கூறல் அவசியம்!
இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான யுத்தகால பாலியல் வன்முறைகள் : சர்வதேச பொறுப்புக்கூறல் அவசியம்! January 24, 2026 இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக இடம்பெற்ற யுத்த காலத்தில் இடம்பெற்ற பாலியல் வன்முறைகள் குறித்து சர்வதேச ரீதியான பொறுப்புக்கூறலை அவசியம் என்பதை கனேடிய தமிழர் தேசிய பேரவை (National Council of Canadian Tamils – NCCT) மீண்டும் வலியுறுத்தியுள்ளது. ஜனவரி 13, 2026 அன்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர் ஆணையர் அலுவலகம் (OHCHR) வெளியிட்ட “We Lost Everything – Even Hope for Justice: Accountability for Conflict-Related Sexual Violence in Sri Lanka” என்ற அறிக்கையை மேற்கோள் காட்டி, இலங்கையில் யுத்தக காலத்தில் பாதுகாப்புப் படைகளால் தமிழர்கள் பாலியல் வன்முறைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என கனேடிய தமிழர் தேசிய பேரவை ( NCCT ) தெரிவித்துள்ளது. 1985 முதல் 2024 வரையிலான காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஐ.நா. விசாரணைகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுடன் நடத்தப்பட்ட நேரடி கலந்துரையாடல்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளதாக ஆய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி, பாலியல் வன்முறை என்பது அச்சுறுத்தல், தண்டனை மற்றும் கட்டுப்பாடு ஆகியவற்றுக்கான ஆயுதமாக திட்டமிட்ட முறையில் பயன்படுத்தப்பட்டுள்ளதாக அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. காவல் நிலையங்கள், தடுப்பு முகாம்கள், சோதனைச் சாவடிகள் மற்றும் வீடுகளிலேயே கூட தமிழ்ப் பெண்கள் மற்றும் ஆண்கள் கடுமையான பாலியல் வன்முறைகளுக்கு உள்ளாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. பாலியல் வன்முறைகள் காரணமாக உடல் மற்றும் மனநல பாதிப்புகள், குடும்ப அமைப்புகள் சிதைவு, சமூக ஒதுக்கல், வறுமை, நீண்டகால நோய்கள், இனப்பெருக்க பாதிப்புகள் போன்ற பல விளைவுகள் ஏற்பட்டுள்ளதாக அறிக்கை கூறுகிறது. மேலும், இந்த பாதிப்புகள் தலைமுறை தலைமுறையாக தொடரும் மனஅழுத்தங்களாக (Intergenerational Trauma) மாறியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பாலியல் வன்முறைகளுக்கு காரணமான எவரும் இதுவரை சட்டத்தின் முன் கொண்டுவரப்படவில்லை என்றும், இலங்கையின் அரசின் உள்ளக விசாரணை முறைகள் நம்பகமான நீதியை வழங்கத் தவறியுள்ளதாகவும் கனேடிய தமிழர் தேசிய பேரவை குற்றம்சாட்டியுள்ளது. இதனால், முழுமையாக சர்வதேசத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும், சுயாதீனமான, நம்பகமான விசாரணை மற்றும் வழக்குத் தொடரும் அமைப்பு ஒன்றே உண்மையை வெளிக்கொண்டு வர முடியும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஐக்கிய நாடுகள், கனடா அரசு மற்றும் சர்வதேச சமூகத்தினர் இணைந்து உடனடி, வலுவான மற்றும் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு, மோதல் தொடர்பான பாலியல் வன்முறைகள் மற்றும் தமிழர் இன அழிப்பு குற்றச்சாட்டுகள் தொடர்பில் சர்வதேச பொறுப்புக்கூறலை உறுதி செய்ய வேண்டும் என கனேடிய தமிழர் தேசிய பேரவை அறிக்கையொன்றை வெளியிட்டு வேண்டுகோள் விடுத்துள்ளது. இதேவேளை, இலங்கையில் யுத்த காலத்தின்போது இடம்பெற்ற பாலியல் வன்முறைகளால் பாதிக்கப்பட்டவர்களிடம் இலங்கை அரசு பகிரங்கமாக மன்னிப்பு கோர வேண்டுமெனவும் யுத்த காலத்தின்போது இடம்பெற்ற பாலியல் வன்முறைகளுக்கு இன்னும் நீதி வழங்கப்படவில்லை எனவும் குறிப்பிட்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அலுவலகம் அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.ilakku.org/wartime-sexual-violence-against-tamils-in-sri-lanka/
-
மட்டக்களப்பை உலுக்கும் சம்பவங்கள்- 23 நாட்களில் 16 பேர் உயிர்மாய்ப்பு!
மட்டக்களப்பை உலுக்கும் சம்பவங்கள்- 23 நாட்களில் 16 பேர் உயிர்மாய்ப்பு! Vhg ஜனவரி 24, 2026 மட்டக்களப்பு, கல்லடி பழைய பாலத்திலிருந்து வாவியில் பாய்ந்து 20 வயதுடைய யுவதி ஒருவர் தற்கொலை செய்துகொண்ட நிலையில் , கடந்த 23 நாட்களில் மாவட்டத்தில் பதிவான தற்கொலைகளின் எண்ணிக்கை 16 ஆக அதிகரித்துள்ளது. நேற்றயைதினம் (23.01.2026)தாழங்குடா பிரதேசத்தைச் சேர்ந்த 20 வயதுடைய யுவதியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். உடனடியாகச் செயற்பட்ட மீனவர்கள், அப்பகுதி இளைஞர்கள் மற்றும் பொலிஸாருடன் இணைந்து, படகு மூலம் சடலத்தை மீட்டு கரைக்குக் கொண்டு வந்ததுடன், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். உயிரிழந்த யுவதி கடந்த வருடம் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றியவர் எனவும், காதல் விவகாரம் காரணமாகவே இவர் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் எனவும் பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். அதேவேளை இந்த வருடத்தின் ஜனவரி 1ஆம் திகதி முதல் நேற்று (23) வரையிலான குறுகிய காலப்பகுதிக்குள், மட்டக்களப்பு மாவட்டத்தில் 16 தற்கொலைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. உயிரிழந்தவர்களில் 3 இளம் யுவதிகளும், 75 வயதுக்கு மேற்பட்ட 3 முதியவர்களும் உள்ளடங்குவதாகப் பொலிஸ் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. மாவட்டத்தில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் இத்தகைய தற்கொலைச் சம்பவங்கள் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. https://www.battinatham.com/2026/01/23-16.html
-
ஈரானை நோக்கி அமெரிக்கக் கடற்படை சென்று கொண்டிருப்பதாக ட்ரம்ப் தெரிவிப்பு!
அமெரிக்க கடற்படைகள் ஈரானை நோக்கி நகர்த்தப்படுவதால் மத்திய கிழக்கில் பதற்றம்: ஈரான் அமெரிக்காவுக்கு கடும் எச்சரிக்கை 24 Jan, 2026 | 01:54 PM ஈரானில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடி மற்றும் விலைவாசி உயர்வை எதிர்த்து அரசு மற்றும் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனிக்கு எதிராக நாடு முழுவதும் தொடர்ச்சியான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த போராட்டங்களை கட்டுப்படுத்த ஈரான் அரசு எடுத்த கடும் நடவடிக்கைகளின் காரணமாக வன்முறை வெடித்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்தப் போராட்டங்கள் மற்றும் வன்முறைகளில் இதுவரை 5,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக அமெரிக்கா கருத்து வெளியிட்டுள்ள நிலையில், இது ஈரான்–அமெரிக்கா இடையிலான பதற்றத்தை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. போராட்டக்காரர்கள்மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டால் இராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஈரான் அரசை எச்சரித்துள்ளார். மேலும், ஈரானில் போராட்டக்காரர்களுக்கு அமெரிக்கா உதவும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதனிடையே, ஈரானை நோக்கி மிகப்பெரிய அமெரிக்க கடற்படை படையணி (Armada) நகர்த்தப்பட்டு வருவதாக டிரம்ப் அறிவித்துள்ளார். இதனால், ஈரான் மீது அமெரிக்கா எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்தலாம் என்ற அச்சம் நிலவி, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பெரும் பதற்ற சூழல் உருவாகியுள்ளது. இந்த நிலையில், அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக ஈரானின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “ஈரான் மீது மேற்கொள்ளப்படும் எந்தவொரு தாக்குதலையும், அது எவ்வளவு வரையறுக்கப்பட்டதாக இருந்தாலும், முழு அளவிலான போராகவே நாங்கள் கருதுவோம். அமெரிக்கா எங்களை தாக்கினால், அதற்குப் பதிலாக அதிகபட்ச பலத்துடன் கடுமையான பதிலடி வழங்கப்படும்” என தெரிவித்துள்ளார். மேலும், அமெரிக்காவின் அச்சுறுத்தல்களுக்கு எதிராக அயதுல்லா அலி கமேனி தலைமையிலான ஆட்சி தனது வசம் உள்ள அனைத்து வளங்களையும் பயன்படுத்தும் என்றும், இந்த மோதலை முடிவுக்கு கொண்டு வர மிகக் கடுமையான வழிகளில் பதிலடி கொடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். அமெரிக்காவின் இராணுவக் குவிப்பு உண்மையான மோதலுக்கானதல்ல என்று ஈரான் நம்புவதாகக் கூறிய அந்த அதிகாரி, இருப்பினும் மோசமான சூழ்நிலைக்கும் ஈரான் இராணுவம் முழுமையாக தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார். இதன் காரணமாக, நாடு முழுவதும் உயர் எச்சரிக்கை நிலை அமுல்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். இதேவேளை, ஈரான் ஆயுதப் படைகளின் செய்தித் தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனிக்கு எதிராக எடுக்கப்படும் எந்தவொரு நடவடிக்கையும் பேரழிவு தரும் விளைவுகளை ஏற்படுத்தும்” என எச்சரித்துள்ளார். அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் அச்சுறுத்தல்களுக்கு பதிலடியாக, ஈரான் தாக்குதல் நடத்த தயாராக இருப்பதாகவும், “தாக்குதலுக்கான பொத்தானில் ஈரான் விரல் வைத்துள்ளது” எனவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த நிலைமை, ஈரான்–அமெரிக்கா இடையிலான மோதல் முழுமையான போராக மாறக்கூடும் என்ற அச்சத்தை உலகளாவிய ரீதியில் அதிகரித்துள்ளது. https://www.virakesari.lk/article/236898
-
நிந்தவூரில் சிறுமி மீது கூட்டு பாலியல் துஷ்பிரயோகம் - தலைமறைவாகியிருந்த சந்தேக நபர் கைது
நிந்தவூரில் சிறுமி மீது கூட்டு பாலியல் துஷ்பிரயோகம் - தலைமறைவாகியிருந்த சந்தேக நபர் கைது 24 Jan, 2026 | 01:23 PM அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புற நகர் பகுதியில் சிறுமியை கூட்டு பாலியல் துஷ்பிரயோகம் செய்து தலைமறைவாகி இருந்த எஞ்சிய 3 சந்தேக நபர்களில் சாய்ந்தமருது பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வொலிவேரியன் கிராமத்தில் வைத்து 43 நாட்களின் பின்னர் 36 வயதுடைய சந்தேக நபர் ஒருவர் கைதாகியுள்ளார்.இந்த கைது நடவடிக்கையானது கடந்த புதன்கிழமை (21) இரவு 10 மணியளவில் இடம்பெற்றதாக பொலிஸார் குறிப்பிட்டனர். 2025.12.11 அன்று 12 வயது மதிக்கத்தக்க தனது சொந்த மகளை கூட்டு பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தை உட்பட ஏனைய 5 சந்தேக நபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தது யாவரும் அறிந்ததே. குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய தலைமைறைவாகிய 3 சந்தேக நபர்களையும் பொலிஸார் கைது செய்ய மேலதிக விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர். இதன்போது குறித்த சம்பவத்துடனான வழக்கு சம்மாந்துறை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் கடந்த தவணை நடைபெற்ற போது விளக்கமறியலில் வைக்கப்பட்ட தந்தை தவிர ஏனைய 4 சந்தேக நபர்கள் ஒரு சந்தர்ப்பத்தில் அடையாள அணி வகுப்பிற்கு உள்ளாக்கப்பட்டிருந்தனர். பாதிக்கப்பட்ட சிறுமி 4 சந்தேக நபர்களையும் அடையாள அணிவகுப்பில் சரியாக இனங்காட்டினார். பாதிக்கப்பட்ட 12 வயதான சிறுமி பாதுகாப்பு கருதி வெளி மாவட்டம் ஒன்றில் உள்ள சிறுவர் காப்பகம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளார். மேலும் கூட்டு பாலியல் துஸ்பிரயோகம் செய்து தலைமறைவாகி இருந்த எஞ்சிய 3 சந்தேக நபர்களில் இறுதியாக வொலிவேரியன் கிராமத்தில் வைத்து கைதான சந்தேக நபர் கல்முனை குடி பகுதியை பிறப்பிடமாகவும் அக்கரைப்பற்று பகுதியை வசிப்பிடமாகவும் கொண்ட குடும்பஸ்தர் என பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் இருந்து தெரிய வந்துள்ளது. சந்தேக நபர் தொடர்பில் ஆரம்ப கட்ட விசாரணைகள் முடிவடைந்த பின்னர் இன்று உரு மறைக்கப்பட்ட நிலையில் சம்மாந்துறை நீதிமன்ற நீதிவான் நூர்டீன் முஹம்மட் சர்ஜுன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். இதன்போது சந்தேக நபரை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 2 ஆந் திகதி அடையாள அணி வகுப்பிற்கு உட்படுத்த பணிப்புரை விடுத்த நீதிவான் வழக்கினை மறு தவனைக்கு ஒத்திவைத்தார். அத்துடன் முறைப்பாட்டுக்காரரான 12 வயது மதிக்கத்தக்க சிறுமியினால் கூறப்பட்ட பெயர்கள் யாவும் சந்தேக நபர்களின் பட்டப் பெயர்கள் ஊர்களில் அழைக்கப்படுகின்ற பெயர்கள் ஆகையினால் தான் எஞ்சிய சந்தேக நபர்களை கைது செய்வதற்கு காலதாமதம் ஏற்பட்டுள்ளது.இருந்தும் பல சிரமங்களுக்கு மத்தியில் எஞ்சிய சந்தேக நபர்களை பல்வேறு தரவுகளை பெற்று கைது செய்வதில் பொலிஸார் ஈடுபட்டுள்ளதாக எமது செய்தியாளர் பாறுக் ஷிஹான் தெரிவித்தார். இக்கைது நடவடிக்கையின் போது அக்கரைப்பற்று பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் டி.என்.பி டந்தநாராயண ஆலோசனைக்கமைய நிந்தவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ஏ.டபிள்யு.எஸ். நிஷாந்த வெடகே நெறிப்படுத்தலில் பெருங்குற்றப் பிரிவு பொறுப்பதிகாரியும் உப பொலிஸ் பரிசோதகருமையான கே.எல்.எம் முஸ்தபா தலைமையிலான பொலிஸ் குழு பல்வேறு தரவுகளை சேகரித்து வைத்து எஞ்சிய 2 சந்தேக நபர்களையும் கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. நடந்தது என்ன? அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புற நகர் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் சுமார் 5 மாத காலமாக விபச்சார நடவடிக்கை ஒன்று இடம்பெற்று வந்துள்ளது. இவ்விடயம் தொடர்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் 1929 தொலைபேசி ஊடாக அப்பகுதியில் இருந்த சிறுவர் பெண்கள் தொடர்பான அமைப்பு ஒன்று வழங்கிய தகவலின் படி துரிதமாக செயற்பட்ட தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை நிந்தவூர் பொலிஸார் மற்றும் அம்பாறை மாவட்ட சிறுவர் பெண்கள் பொலிஸ் பிரிவு அதிகாரிகளிடம் சம்பவம் குறித்து அறிவித்துள்ளது. இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட சிறுமியை நிந்தவூர் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்த அம்பாறை மாவட்ட சிறுவர் மற்றும் மகளிர் பணியக அதிகாரிகளிடம் நடந்த அனைத்தையும் குறித்த சிறுமி கூறியுள்ளார். இதன் போது பொருளாதார சிரமம் காரணமாக 12 வயது மதிக்கத்தக்க தனது மகளை முதலில் பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தை பின்னர் சம காலத்தில் ஏழு பேருக்கு விபச்சார செயலுக்காக மகளை ஈடுபடுத்தியுள்ளமை மற்றும் இந்த செயலுக்கு சிறுமியின் தாயார் உடந்தையாக இருந்து வந்தமையும் பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது. இந்நிலையில் 2025.12.11 அன்று தந்தை உட்பட 5 பேரை கைது செய்த பொலிஸார் தலைமறைவாகிய ஏனைய 3 சந்தேக நபர்களை தேடி வருகின்றனர். இச்சம்பவத்தில் அச்சிறுமியிடம் இருந்து பெறப்பட்ட தகவலின்படி முதலில் தந்தை கைது செய்யப்பட்டார். பின்னர் சாய்ந்தமருது மாளிகைக்காடு சம்மாந்துறைப் பகுதியில் அச்சிறுமியை பணத்திற்கு வாங்கி வன்புணர்ந்த 04 பேர் கைது செய்யப்பட்டனர்.இவர்கள் 52 , 41, 24, 40 , வயதிற்குட்பட்ட சந்தேக நபர்கள் உள்ளடங்குகின்றனர். மேலும் தந்தை தனது மகளை சுமார் 05 மாத காலமாக பல்வேறு நபர்களுக்கு விற்று வந்ததாக பொலிஸ் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக எமது செய்தியாளர் பாறுக் ஷிஹான் குறிப்பிட்டார். இது தவிர இச்சம்பவத்தில் தலைமறைவான ஏனைய மூன்று சந்தேக நபர்களையும் கைது செய்ய மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டிருந்தனர். கிழக்குப் பிரிவுக்குப் பொறுப்பான சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி வருண ஜெயசுந்தரவின் பணிப்பரைக்கமைய அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வேதமுல்லவின் உத்தரவிற்கமைய அம்பாறை மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த பண்டார கஸ்தூரி ஆராய்ச்சியின் வழிநடத்தலில் அக்கரைப்பற்று பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் டி.என்.பி தந்த நாணயக்காரவின் மேற்பார்வையின் கீழ் நிந்தவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ஏ.டபிள்யு.எஸ். நிஷாந்த வெடகே நெறிப்படுத்தலில் பெருங்குற்றப் பிரிவு பொறுப்பதிகாரியும் உப பொலிஸ் பரிசோதகருமையான கே.எல்.எம் முஸ்தபா தலைமையிலான பொலிஸ் குழு மற்றும் அம்பாறை மாவட்ட சிறுவர் மற்றும் மகளிர் பணியக பிரதம பொறுப்பதிகாரி தயானி கமகே உள்ளிட்ட அதிகாரிகள் இணைந்து குறித்த கைது நடவடிக்கை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடதக்கது. அம்பாறை மாவட்டத்தின் மாளிகைக்காடு பகுதியில் வசித்து வந்த ஐவர் கொண்ட இக்குடும்பம் பொருளாதார நிலைமை காரணமாக அவ்விடத்தில் இருந்து குடிபெயர்ந்து அருகில் உள்ள மற்றுமொரு ஊரான நிந்தவூர் பகுதியில் உள்ள புறநகரில் வாடகை அடிபபடையில் வீடொன்றை பெற்று வாழ்ந்து வந்தனர்.இக்குடும்பத்தில் 18 வயது ஆண் 12 வயது பெண் பிள்ளை உட்பட 5 வயது ஆண் பிள்ளையும் உள்ளடங்குகின்றனர். இதில் 18 வயது ஆண் பிள்ளை உறவினர் ஒருவரின் வீட்டில் தங்கியிருந்து தனியார் கல்வி நிலையம் ஒன்றின் ஊடாக கல்வி கற்று வருகின்றார். இச்சம்பவத்தில் 12 வயதான பெண் பிள்ளையே பாதிக்கப்பட்டவராவார்.சிறுமியின் தந்தை கடற்தொழில் செய்பவர் ஆவார்.தந்தைக்கு 40 வயது என்பதுடன் தாய்க்கு 36 வயதாகும்.ஆரம்ப காலத்தில் தந்தையுடன் தொழில் உறவில் இருந்தவர்கள் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயுடன் முறைகேடான தொடர்புகளை தந்தையின் சம்மதத்துடன் ஏற்படுத்தி கொண்டுள்ளனர். இத்தொடர்புகள் தங்களது வசதியின்மையை காரணம் காட்டி பொருளாதார நன்மைக்காகவே மேற்கொள்ளப்பட்டதாக அவர்கள் தெரிவித்த போதிலும் மாளிகைக்காட்டில் இருந்து ஆரம்பமாகி பின்னர் வாடகை வீடு அமைந்துள்ள நிந்தவூர் வீட்டிலும் குறித்த விபச்சாரம் தொடர்ந்தமை விசாரணையில் அம்பலமானது குறிப்பிடத்தக்கது. பின்னர் தான் குறித்த குடும்பத்தில் இருந்த 12 வயது மதிக்கத்தக்க சிறுமியும் ஆபாசப்படம் காண்பிக்கப்பட்டு தனது தந்தை மூலம் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளார்.பின்னர் ஏனைய சந்தேக நபர்களுக்கும் சிறுமி பணத்திற்காக விற்கப்பட்டிருந்தார். இச்செயற்பாடுகள் தாயின் ஆசிர்வாதத்துடன் நடைபெற்றமை விசாரணையில் இருந்து வெளியாகியுள்ளது.இதன் போது வாடிக்கையாளர் ஒவ்வொருவரிடம் இருந்தும் 20 ஆயிரம், 10 ஆயிரம், 2 ஆயிரம் என பணம் பெறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. பின்னர் ஆபாச படம் காண்பித்து தனது சொந்த மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தை உட்பட ஏனைய 5 சந்தேக நபர்களையும் கைது செய்யப்பட்ட நிலையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்ட சம்மாந்துறை நீதிவான் நீதிமன்று குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய 3 சந்தேக நபர்களையும் பொலிஸார் உடனடியாக கைது செய்ய மேலதிக விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர். பின்னர் குறித்த சம்பவத்துடனான வழக்கு கடந்த தவணையின் போது சம்மாந்துறை நீதிமன்ற நீதிவான் ஜே.பீ ஏ.ரஞ்சித்குமார் முன்னிலையில் இரு தடவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.இதில் தந்தை உட்பட 5 சந்தேக நபர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். பின்னர் மற்றுமொரு சந்தர்ப்பத்தில் சந்தேக நபர்களான தந்தை தாய் தவிர ஏனைய 4 சந்தேக நபர்களையும் அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. இதேவேளை குறித்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 12 வயதான சிறுமி அந்த 4 சந்தேக நபர்களையும் அடையாளம் காட்டி இருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். https://www.virakesari.lk/article/236893
-
வல்வெட்டித்துறை பட்டத் திருவிழா: சுகாதார விதிமுறைகளை மீறிய உணவு நிலையங்களுக்கு எதிராக வழக்கு
வல்வெட்டித்துறை பட்டத் திருவிழா: சுகாதார விதிமுறைகளை மீறிய உணவு நிலையங்களுக்கு எதிராக வழக்கு யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற பட்டத் திருவிழாவின் போது சுகாதார விதிமுறைகளைப் பேணத் தவறிய 24 உணவு கையாளும் நிலையங்களுக்கு எதிராகப் பொது சுகாதார பரிசோதகரால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த தைப்பொங்கல் தினத்தன்று வல்வெட்டித்துறை உதயசூரியன் கடற்கரையில் நடைபெற்ற பட்டத் திருவிழாவின் போது, மருத்துவச் சான்றிதழ் இன்றி உணவைக் கையாண்டமை, திண்மக்கழிவுகளைத் திறந்த வெளியில் வீசியமை, அனுமதிக்கப்பட்ட உணவுத்தரக் கொள்கலன்களைப் பயன்படுத்தாது பிளாஸ்டிக் கொள்கலன்களைப் பயன்படுத்தியமை, முகச்சவரம் மற்றும் தனிநபர் சுகாதாரம் பேணாமல் உணவைக் கையாண்டமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இதனடிப்படையில் ஐஸ்கிரீம் வாகனங்கள், பஞ்சு மிட்டாய் உற்பத்தியாளர்கள், காரச் சுண்டல் வண்டிகள் மற்றும் பானி பூரி விற்பனை நிலையங்கள் உள்ளிட்ட 24 உணவு நிலையங்களுக்கு எதிராக, வல்வெட்டித்துறை நகர சபையின் பொதுச்சுகாதார பரிசோதகர் பா. தினேஷ், பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் இன்று வழக்குத் தாக்கல் செய்தார். குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, 24 உரிமையாளர்களில் 19 பேர் மன்றில் முன்னிலையாகி, தம் மீதான குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொண்டனர். இதனையடுத்து, குறித்த 19 உரிமையாளர்களையும் கடுமையாக எச்சரித்த மன்று, அவர்களுக்கு மொத்தமாக 4 இலட்சத்து 40 ஆயிரம் ரூபா தண்டம் விதித்தது. அதேவேளை, மன்றில் இன்று முன்னிலையாகாத ஏனைய 05 உரிமையாளர்களையும் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 30ஆம் திகதி மன்றில் ஆஜராகுமாறு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது. https://adaderanatamil.lk/news/cmkr6x3ny04byo29nxw86k2co
-
யாழ். சுழிபுரத்தில் வெளியேறிய இராணுவம்
யாழ். சுழிபுரத்தில் வெளியேறிய இராணுவம் யாழ். - சுழிபுரம் பகுதியில் கடந்த 30 ஆண்டு காலமாக முகாமிட்டு இருந்த இராணுவத்தினர் நேற்றிரவு அந்த முகாமை விட்டு முழுமையாக வெளியேறியுள்ள இராணுவத்தினர் சங்கானை படை முகாமுக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இராணுவத்தினர் அந்த இடத்தை விட்டு வெளியேறுவது குறித்து, கடிதமொன்றை 513வது காலாட்படை பிரிவின் கட்டளை தளபதி சில தினங்களுக்கு முன்னர் சங்கானை பிரதேச செயலாளர் கவிதா உதயகுமாரிடம் கையளித்தார். அதேநேரம், பண்டத்தரிப்பு பகுதியில் உள்ள இராணுவ முகாமும் அகற்றப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அந்த பகுதியில் நீண்டகாலமாக முகாமிட்டு குடியிருந்த இராணுவத்தினர் அராலி பகுதியில் உள்ள இராணுவ முகாமிற்கு மாற்றப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பண்டத்தரிப்பு படை முகாமானது 100 அடி நீளத்தை கொண்டதால் அதனை அகற்றுவதற்கு, காலம் தேவை என்பதால் அவர்கள் அங்கிருந்து வெளியேற சற்று தாமதமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. (M) https://www.tamilmirror.lk/செய்திகள்/யாழ்-சுழிபுரத்தில்-வெளியேறிய-இராணுவம்/175-371486
-
பரபரப்பு: குருநாகல் விகாரையில் முன்னாள் ஜனாதிபதியின் ‘இரகசிய’ சொகுசு அறை அம்பலம்!
பரபரப்பு: குருநாகல் விகாரையில் முன்னாள் ஜனாதிபதியின் ‘இரகசிய’ சொகுசு அறை அம்பலம்! adminJanuary 23, 2026 குருநாகலில் உள்ள பிரபல விகாரை ஒன்றில், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பயன்படுத்தி வந்ததாகக் கூறப்படும் அதி சொகுசு அறை குறித்த அதிர்ச்சியூட்டும் தகவல்களை அங்கிருந்த பௌத்த தேரர் ஒருவர் வெளியிட்டுள்ளார். குளிரூட்டப்பட்ட வசதி, விலை உயர்ந்த மெத்தைகள் மற்றும் சொகுசுத் தளபாடங்களுடன் இந்த அறை வடிவமைக்கப்பட்டுள்ளது. அறைக்குள் இருந்து யாரும் அறியாத வண்ணம் வெளியேறுவதற்கு எனத் தனியாக ஒரு சிறிய கதவு அமைக்கப்பட்டுள்ளது. நுழைவாயிலில் உள்ள இரும்பு கேட்டை மூடிவிட்டால், உள்ளே வாகனம் இருப்பதோ அல்லது ஆட்கள் இருப்பதோ வெளியில் இருப்பவர்களுக்குத் தெரியாது. மகிந்த ராஜபக்ச இரவு நேரங்களில் தங்குவதில்லை. ஆனால், அவசரமாக வந்து பல மணிநேரம் தங்கியிருந்து தனது இரகசிய விடயங்களில் ஈடுபடுவார். ‘ஹசினி’ என்ற பெண்ணும் அங்கு வந்து தங்குவதாகக் குறிப்பிட்ட தேரர், அந்த கிராமத்து மக்களுக்கே இப்படியொரு அறை இருப்பது தெரியாது எனத் தெரிவித்துள்ளார். குறிப்பாக, அந்த விகாரையில் உள்ள அனைத்துக் கட்டடங்களையும் மகிந்த ராஜபக்சவே திறந்து வைத்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. https://globaltamilnews.net/2026/227331/
-
உக்ரைன்-ரஷ்யா-அமெரிக்கா இடையே முதல் முத்தரப்பு பேச்சுவார்த்தை: ஐக்கிய அரபு அமீரகத்தில் சந்திப்பு
உக்ரைன்-ரஷ்யா-அமெரிக்கா இடையே முதல் முத்தரப்பு பேச்சுவார்த்தை: ஐக்கிய அரபு அமீரகத்தில் சந்திப்பு உக்ரைன் ரஷ்யா போர் தொடர்பான முத்தரப்பு பேச்சுவார்த்தை ஐக்கிய அரபு அமீரகத்தில் முதல் முறையாக நடைபெற உள்ளது. உக்ரைன் - ரஷ்யா போர் நிறுத்தம் உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கையை முடிவுக்கு கொண்டு வருவதற்காக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தலைமையிலான அரசு தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் அலாஸ்காவில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை நேரடியாக சந்தித்து போர் நிறுத்தம் தொடர்பாக டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்தி இருந்தார். இருப்பினும் தீர்வுகள் எதுவும் எட்டப்படாத நிலையில், நேற்று சுவிட்சர்லாந்தின் தவோஸ் நகரில் நடைபெற்ற உலக பொருளாதார உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மற்றும் உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி சிறப்பு நேரடி சந்திப்பு ஒன்றை நடத்தினர். முதல் முத்தரப்பு பேச்சுவார்த்தை இந்நிலையில், போர் நிறுத்தம் தொடர்பாக உக்ரைன் - ரஷ்யா - அமெரிக்கா இடையே முதல் முறையாக முத்தரப்பு பேச்சுவார்த்தை ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று தொடங்க இருப்பதாக உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி அறிவித்துள்ளார். இந்த சந்திப்பின் மூலம் அமெரிக்கா, உக்ரைன், ரஷ்யா ஆகிய மூன்று நாடுகளை சேர்ந்த அதிகாரிகள் முதன்முறையாக நேரடியாக அமர்ந்து அமைதி பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். இதற்கிடையில் அமெரிக்க அதிகாரிகள் இருவர் மாஸ்கோவில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். முன்னதாக பொருளாதார மாநாட்டில் பேசிய ஜெலென்ஸ்கி, உக்ரைன் ஒரு சுழற்சியில் சிக்கி இருப்பதாகவும், ஐரோப்பிய நாடுகள் பேச்சுவார்த்தையில் ஆர்வம் காட்டுகிறதே தவிர வேறு எந்தவொரு ஆக்கப்பூர்வமான நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டியுள்ளார். https://news.lankasri.com/article/trilateral-talks-for-ukraine-war-in-saudi-1769139699
-
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஒருமுறை - மஹாபாரத கதைகளின் தொகுப்பு
அஸ்வத்தாமனின் கோபம் மூலம் : யமுனா ஹர்ஷவர்தனா தமிழாக்கம் : கார்த்திக் பாண்டவர்கள் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்த மத்ஸ்ய தேசத்தை கௌரவர்கள் தாக்கிய சமயத்தில் அவர்களை எதிர்கொள்ள மத்ஸய தேசத்துப் படைகளோ தளபதிகளோ அங்கே இல்லை. தேசத்தின் மற்றொரு எல்லையில் பகைவனை எதிர்த்து சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். எனவே அனுபவமற்ற இளவசரன் உத்திரகுமாரனே போர்க்களத்திற்கு செல்ல வேண்டி இருந்தது. ஒரு அலியாக உருமாறி அரசவை பெண்டிருக்கு நாட்டியம் கற்பித்துக் கொண்டிருந்த அர்ஜுனன் அவனுக்கு ரதமோட்டினான். உத்திரகுமாரனுக்கு தைரியம் ஊட்ட தான் யார் என்பதை அவனுக்கு கூறினான் அர்ஜுனன். அதன்பின், தான் மறைத்து வைத்திருந்த தேவதத்தம் என்ற தன் சங்கை எடுத்து சங்கநாதம் முழங்கி, தன் வில்லான காண்டீபத்தை நாணை சுண்டினான். இரு சப்தங்களையும் கேட்ட துரோணர் உடனடியாக அவற்றை கண்டுகொண்டார். துரியனை நோக்கி “துரியோதனா! நாம் கைப்பற்றிய கால்நடைகளை பாதுகாப்பாக ஒட்டிக்கொண்டு நாடு திரும்புவது நல்லது. இல்லையனில் அர்ஜுனன் நம்மை தோற்கடித்து இவற்றை மீண்டும் கைப்பற்றி சென்றுவிடுவான்” என்றார். “ஆச்சார்யரே! படையினரை மனம் தளர வைக்குமாறு ஏன் இப்படி பேசுகிறீர்கள்? கால்நடைகளைக் கைப்பற்றுவது நம் நோக்கமில்லை என்பது உங்களுக்கு தெரியும். முடிவதற்குள் நாம் அம்பலப்படுத்தினாலும் அவர்களை மீண்டும் பன்னிரெண்டு வருடம் வனவாசம் அனுப்பிவிடுவேன் . எனவே எதிர்காலத்தை உத்தேசித்து இப்பொழுது அர்ஜுனனை அவர்களை தாக்குவோம்” என துரியோதனன் வேண்டினான். அவர்களை இடைமறித்த கர்ணன் “வேண்டுமானாலும் ஆச்சார்யரின் வார்த்தைகளை கேட்டு மனம் தளரலாம். ஆனால், நான் பயப்படவில்லை. எதிரே இருப்பது இந்திரனாக இருந்தாலும் நான் தயாராக இருக்கிறேன். இந்த தருணத்திற்காக கடந்த பதிமூன்று வருடங்களாகக் காத்திருக்கிறேன். என் வில்லில் இருந்து அலையென கிளம்பும் அம்புகள் அவர்களை துளைக்கப் போவதை பார்க்கக் காத்திருங்கள்” என கர்வத்துடன் கூறினான். “போர் இன்றி நல்லது நடக்க வாய்ப்பிருக்கும் பொழுது, சண்டையிட நீ ஏன் இவ்வளவு ஆர்வமாக இருக்கிறாய்? தனி ஒருவனாக அர்ஜுனன் எதிரிகளை பலரை தோற்கடிக்க இயலும் என்பதும் உன்னால் அது இயலாது என்பதும் அனைவரும் அறிந்த ஒன்றே. கந்தர்வர்கள் துரியோதனனை பிடித்து சென்றபொழுது யார் விட்டுவிட்டு ஓடினார்கள் என்பதும் யார் அவனை காப்பாற்றினார்கள் என்பதும் உள்ளதா? நாம் அனைவரும் சேர்ந்து அவனை எதிர்ப்பதே வெற்றியை தரும்” என க்ருபாச்சாரியார் கூறினார். இது கர்ணனை கோபத்திற்குள்ளாகியது. “துரியோதனா! அர்ஜுனனை கண்டு க்ருபாச்சார்யார் பயந்து விட்டார் போல. சடங்குகளை செய்யும் பொழுதும், தானங்கள் கொடுக்கும் பொழுதும் மட்டுமே ப்ராமணர்களிடம் ஆலோசனை கேக்க வேண்டும். போரின் பொழுது ஆலோசனை கேக்கக் கூடாது !” என துரியனிடம் கர்ணன் கூறினான். இதை கொண்டிருந்த அஸ்வத்தாமன் மிகுந்த கோபத்திற்கு உள்ளானான். “துரியோதனா! பசுக்களை காக்க நீ எதுவும் செய்யவில்லை. கர்ணா! வெட்டி பேச்சு பேசாதே! ப்ரமாணர்கள் நல்லறிவும், அடக்கமும் கொண்டவர்கள். எனவே அவர்கள் தம்பட்டம் அடித்துக் கொள்வதில்லை. நீ இதுவரை என்ன செய்துவிட்டாய் என இப்படி பேசுகிறாய்?” “துரியோதனன் ராஜ்யத்தை என்ன போரிலா வென்றான்? தர்மரை பகடையில் சூழ்ச்சி செய்து வென்றான். அதுவும் அவன் ஆடவில்லை . அவனுக்கு பதில் சகுனி ஆடினார். அது சத்ரியனுக்கு அழகா? இப்பொழுது “அவன் ராஜ்ஜியம்” என பேசுகிறான்.” “எதிரிகளின் வலிமையை அங்கீகரிக்கக் கற்றுக் கொள். பாண்டவர்கள் உண்மையில் வலிமையானவர்கள்தான். மற்ற எவரின் துணையும் இன்றி, இந்திரனின் சேனையைக் கூட எதிர்கொள்ளக் கூடியவர்கள். அர்ஜுனனைப் பற்றி சொல்ல புதிதாய் ஒன்றுமில்லை. உனக்கே தெரியும் அவனை உன்னால் தோற்கடிக்க இயலாதென. வெறும் வாய்ச்சவடால் விடுவதை நிறுத்து!” “என் தந்தையும், மாமாவும் சொன்னது பயத்தினால் அல்ல. அவர்களின் வலிமையை அறிந்ததால். ஒருவரை புகழ வேண்டிய சமயத்தில் புகழ்வது தவறல்ல. கர்ணா! அவன் மேல் உனக்கு இருக்கும் பொறாமை அவனை சிறியவனாக்காது” என கோபத்துடன் கூறிய அஸ்வத்தாமன் வில்லைக் கீழே எறிந்து விட்டு ரதத்தில் அமர்ந்து கொண்டான். இவற்றையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த பீஷ்மர் தலையிட்டு “துரியோதனா! துரோணரும், க்ருபாச்சார்யரும் கூறியதெல்லாம் உண்மைதான்.அர்ஜுனனை தோற்கடிப்பது என்பது மிகக் கடினமான ஒன்றாகும். அஸ்வத்தாமனின் கோபமும் சரியான ஒன்றாகும். ஆனால், அஸ்வத்தாமா! படையினரை உற்சாகமூட்டவே கர்ணனும், துரியனும் அவ்வாறு பேசினார்கள். அதனால் கோபம் கொள்ளாதே! நாம் அனைவரும் இணைந்து போரிடுவோம்” என அனைவரையும் சமாதானப்படுத்தினார். இதனால் ஓரளவு சமாதானம் அடைந்த அஸ்வத்தாமன் “துரியோதனுனும், கர்ணனும் தன் தந்தையிடமும், மாமாவிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும்” என வலியுறித்தினான். சூழ்நிலையின் அவசியத்தை உணர்ந்த துரியோதனனும், கர்ணனும் ஆச்சார்யர்கள் இருவரின் மன்னிப்பை வேண்டினார்கள். “பீஷ்மர் பேசியபொழுதே என் கோபம் போய்விட்டது. நாம் இப்பொழுது செய்யவேண்டியது அனைவரும் இணைந்து அர்ஜுனன் துரியோதனனை தாக்காமல் பார்த்துக் கொள்ளவேண்டியது அவசியம். ஏனென்றால், தற்பொழுது அவன் மேல் அர்ஜுனனின் கோபம் கட்டுக்கடங்காமல் இருக்கக் கூடும். அதேபோல் , அவர்கள் தலைமறைவாய் இருக்கவேண்டிய காலம் முடிந்துவிட்டது. எனவே , அவர்களை வெளிப்படுத்தினாலும் நாம் ஒன்றும் செய்ய இயலாது” என துரோணர் கூறினார். இதைக் கேட்டு குழப்பம் அடைந்த துரியன் பீஷ்மரை பார்த்தான். அவரும் துரோணர் கூறியதை ஆமோதித்தார். அத்துடன் துரியனின் படையெடுப்பின் நோக்கம் ஒன்றுமில்லாமல் ஆனது. கண் திறந்த தருணம் . .. பிறப்பிலேயே குருடனாக பிறந்த திருதராஷ்டிரனுக்கு மனைவியாக காந்தாரா நாட்டு இளவரசி காந்தரியை கேட்டு தூது அனுப்பினார் பீஷ்மர். காந்தார அரசனுக்கு தன் மகள் ஒரு குருடனுக்கு இல்லை. ஆனால், காந்தாரியோ குரு வம்ச இளவரசனான திருதராஷ்டிரனனை மனப்பூர்வமாக சம்மதித்தாள். திருமணம் முடிந்தவுடன் தன் கணவனின் கஷ்டத்தில் தானும் பங்கு கொள்ளவேண்டி தன் கண்களையும் துணியால் கட்டிக்கொண்டாள். அதன் பின், ஒரே ஒரு முறை மட்டுமே தன் கண் கட்டை அவிழ்த்தாள் . அவளுடைய இந்த தவத்தினால் அவளுடைய கண்களுக்கு விசேஷ சக்தி கூடியது. குருஷேத்திர போரின் பொழுது, துரியன் பீமனால் கொல்லப்பட்டுவிவிடுவானோ என்ற பயத்தில் அவனைக் காப்பாற்ற தன் சக்தியை உபயோகிக்க முடிவு செய்தாள். அவனை சந்திக்க முடிவு செய்து, கங்கையில் குளித்து ஈர உடலுடன் பிறந்தமேனியாக தன்னை சந்திக்க அனுப்பினாள். அந்த கோலத்தில் துரியனை காந்தாரி சந்தித்தால், துரியன் வீழ்த்தப்பட முடியாத அளவிற்கு பலம் பெற்றுவிடுவான் என ஊகித்த கிருஷ்ணன், கங்கையில் குளித்து அன்னையை சந்திக்க சென்றுக் கொண்டிருந்த துரியனை வழிமறித்தான். “துரியோதனா! உன் ஆடை எங்கே? ஆடைகளுடன் உன் வெட்கத்தையும் கழற்றி எறிந்து விட்டாயா? பிறந்தமேனியாக எங்கே சென்றுக் கொண்டிருக்கிறாய்?” “கிருஷ்ணா! என் அன்னையை காண அவர் இட்ட கட்டளைப்படி நிர்வாணமாக செல்கிறேன். அன்னை முன் நான் நாண வேண்டும்?” “துரியோதனா! நீ இப்பொழுது வளர்ந்த மனிதன். அன்னையே என்றாலும், அவள் முன் நிர்வாணமாக இருக்க முடியும்?” இதைக் கேட்ட துரியோதனனுக்கு வெட்கம் தோன்றியது. அருகே இருந்த வாழை மரத்தில் இருந்து வாழை இலையை வெட்டி, தன் இடுப்பை சுற்றிக் கட்டிக்கொண்டான். அவன் தொடைகளையும் அது மறைத்தது. தன் முன் துரியோதனன் வந்து நின்றவுடன் தன் கண் கட்டை அவிழ்த்து அவனைப் பார்த்த காந்தாரி, இடையில் அவன் வாழை இலை அணிந்து வந்ததால் அதிர்ச்சி அடைந்தாள். மேலும் , பீமன் துரியனின் தொடை பிளந்து கொல்வேன் என சபதம் எடுத்ததையும் அவள் அறிவாள். துரியனின் இந்த செய்கை, அவளது சக்தியை முறியடித்தது. இனி, தன் சக்தியால் அவனை காப்பாற்ற என்பதை புரிந்து கொண்டாள். https://solvanam.com/2025/09/15/அஸ்வத்தாமனின்-கோபம்/
-
கல் வியாபாரத்திற்காக அழிக்கப்படும் காதலியார் சமளங்குளம்
கல் வியாபாரத்திற்காக அழிக்கப்படும் காதலியார் சமளங்குளம் கட்டுரை | North East Narrative படம் | T.Ravikaran முல்லைத்தீவு மாவட்டத்தில், ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் இருக்கிறது காதலியார் சமளங்குளம் எனும் கிராமம். வன்னிப் பெருநிலப் பரப்பிலிலிருந்து ஆங்கிலேயர்களோடு போரிட்டு வீரமரணமடைந்த குலசேகரம் வைரமுத்து பண்டாரவன்னியனின் வரலாற்றோடு தொடர்புபடும் இந்தக் கிராமானது விவசாயத்திற்கும், கால்நடை வளர்ப்பிற்கும் பெயர்பெற்றதாகும். இலங்கையின் வடமாகாணத்தில் இருக்கின்ற வன்னிப் பெருநிலப் பரப்பு இயற்கை வளங்களால் நிரம்பப்பெற்றது. வனமும் நிலமும், கடலும் குளமும், மணலும் மலையும், பெருநிலத்தின் அடையாளங்களாக இருக்கின்ற இயற்கை வளங்கள். வன்னிப் பெருநிலப் பரப்பை இலங்கை அரச படைகள் கைப்பற்றுவதற்கு முன்னர், தமிழீழ விடுதலைப் புலிகளே நிர்வாகம் செய்தனர். அக்காலப் பகுதியில் வன்னி பெருநிலப்பரப்பிலிருந்து அனைத்துவிதமான இயற்கை வளங்களும் எதிர்கால சந்ததிக்காகப் பாதுகாக்கப்பட்டன. வன்னிப் பெருநிலத்தின் பெரும்பகுதியை நிரப்பியிருக்கும் காட்டிலிருந்து ஒரு சிறு மரத்தைத் வெட்டுவதாயினும் புலிகளின் வனவளப் பிரிவினரிடம் அனுமதி பெறவேண்டியிருந்தது. அனுமதி பெறாது மரங்களை வெட்டியோர் சிறைத்தண்டனை வரை அனுபவிக்கவேண்டியுமிருந்தது. 2009 ஆம் ஆண்டில் போர் முடிவுக்கு வந்த காலத்திலிருந்து இற்றைவரைக்கும் வன்னி பெருநிலத்திலிருந்து அனைத்து இயற்கை வளங்களும் சூறையாடப்பட்டு வருகின்றன. அந்நிலத்தின் சுற்றுச்சூழல் அடையாளமே மாறிப்போகும் அளவிற்கு இயற்கை வள அழிப்பு இடம்பெற்று வருகின்றது. இப்பின்னணியில்தான் வன்னி பெருநிலத்தின் பல பாகங்களிலும் காணப்படுகின்ற சிறு மலைக் குன்றுகளும், பாறை மேடுகளும் கிரனைற் வியாபாரிகளால் அகழப்பட்டு வருகின்றன. உதாரணத்திற்கு ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயச்சூழலில், பண்டைய கால இராசதானியொன்றின் கட்டட எச்சங்கள் காணப்பட்ட வாவெட்டி மலை சட்டவிரோமான முறையில் கிரனேற் வியாபாரிகளால் அழிக்கப்பட்டது. தொல்லியல் திணைக்களத்தினால் பாதுகாக்கப்பட்டிருக்க வேண்டிய வாவெட்டி மலை அழிக்கப்பட்டதோடு, அங்கிருந்த தமிழர்களது வரலாற்றைக்கூறும் தொல்லியல் எச்சங்களும் அழிக்கப்பட்டன. வாவெட்டி மலைக்கு அடுத்தபடியாகத்தான், அம்மலைப் பகுதிக்கு அண்மித்த கிராமமான காதலியார் சமளங்குளத்தில் காணப்பட்ட கருங்கல் பாறை மேடும் 2018 ஆம் ஆண்டிலிருந்து கிரனேற் வியாபாரிகளால் அகழப்பட்டது. ஊர் மக்களின் எதிர்ப்பையடுத்து 2022ஆம் ஆண்டில் அகழ்வுப் பணிகள் நிறுத்தப்பட்டன. ஆனாலும் அகழ்வின்போது ஏற்பட்ட பாரிய குழி மண்ணிட்டு நிரப்பப்படாமல் இன்றும் அப்படியே இருப்பதை அவதானிக்கமுடியும். தற்போது மீண்டும் அவ்விடத்தில் கிரனேற் அகழ்விற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கு காதலியார் சமளங்குள மக்கள் தம் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். இதுகுறித்து கருத்துத் தெரிவித்த காதலியார் சமளங்குளப் பெண்ணொருவர், ”2018ஆம் ஆண்டின்ர ஆரம்பத்தில ஏஜிஏ (பிரதேச செயலாளர்) மட்டத்தில முடிவெடுத்த பிறகு நிற்பாட்டினது. நிம்மதியா இருந்தம். சரியான டஸ்ட் (தூசி). எங்கட வீடு இதிலயிருந்து நூறு மீற்றர் தூரத்திலதான் இருக்குது. நாங்கள் எங்கட வீட்டு யன்னலுகளுக்கு கண்ணாடி போட்டிற்றம். எங்கட வீட்டிலயும் கல் உடைக்கிற அதிர்வினால ரெண்டு யன்னல் கண்ணாடியளும் வெடிச்சி, சுவருகளும் வெடிச்சது. எங்களுக்குப் பக்கத்து வீட்டில இன்றை வரைக்கும் கண்ணாடியும் போடேல்ல. சுவருகளும் வெடிச்ச படியேதான் கிடக்கு”. என கல் உடைக்கும் நிறுவனத்தினால் தங்கள் கிராமம் எவ்வளவுதூரம் பாதிக்கப்பட்டிருக்கிறது என்பதை விபரித்தார். “..போனகிழமை ரெண்டு வாகனங்களில ஆக்கள் வந்து இறங்கினவ. நாங்கள் றோட்டில வந்து நின்றிட்டம். யாரையும் கல்லுடைக்கிற இடத்துக்கு போக விடேல்ல. வந்த முழுப்பேரும் சிங்கள ஆக்கள். பிரதேச சபை ஆள் ஒருத்தரும் வந்தவர். ஜீ.எஸ்ம் (கிராம சேவையாளர்) வந்தவர். இன்னொரு தமிழ் பெடியனும் வந்தவர். தாங்கள் இடத்தைப் பார்க்க வந்ததாக சொல்லிச்சினம். நாங்கள் இடத்தைப் பார்க்க போக வேண்டாம் என்று சொல்லீற்றம். நாங்கள் எங்கட ஊருக்க கல்லெடுக்க விடமாட்டம். எங்களுக்கு இதால நிறையப் பாதிப்பு. எங்கட மாடுகளுக்கு மேய்ச்சல் நிலம் இல்ல. அந்த மாடுகளக் கொண்டுவந்து இந்தக் காடுகரம்பையாத்தான் மேய்க்கிறனாங்கள். இங்க மாடுகள் மேய்க்க வேற இடமே இல்ல. இந்தக் குழிகளுக்குள்ள மாடுகள் விழுந்து செத்தால் யார் பொறுப்பு? இதுக்க கொண்டுவந்து கல்லுக் கிரேசரைப் போட்டால் மாடுகளை நாங்கள் கட்டித்தூக்கிறதோ? மாடுகள விடுங்கோ. எங்கட வாழ்க்கையப் பாருங்கோ. இதுக்க கிரேசர் போட்டால் அதில இருந்து வாற டஸ்ட் எங்க போகும். 100 மீற்றருக்குள்ள தான் எங்கட வீடுகள் இருக்கு. ஏற்கனவே இருந்த கிரேசரால வீடுகள் உடைஞ்சு போய்தானே கிடக்கு. அதைத் திருத்தவே வழியக் காணேல்ல. இதில இருக்கிற மிச்சசொச்சத்தையும் இடிச்சழிக்க திருப்பி வருகினம்..” என்றார் மிகுந்த கோபத்தோடு. அக்கிராமத்தில் வசித்துவரும் இன்னொரு கிராமவாசி குறிப்பிடுகையில், ”உண்மையிலயே இங்க நிறைய வருத்தக்காரர் இருக்கினம். இதய வருத்தக்காரர், கிட்னி பெய்லியர் ஆகின ஆக்கள் இங்க அதிகம். இங்க கல்லுகள உடைக்கும்போது கேட்கிற சத்தம் அவையளப் பாதிக்கும். அதவிடவும் எங்கட வீடுகளுக்கு சரியான சேதம். சுவருகள், யன்னலுகள் எல்லாம் வெடிச்சிற்று. அதைத் திருப்பி எப்பிடி ஒட்டவைக்கிறது? கல்லுகள் உடைக்கும்போது வாற சத்தத்துக்கு சின்னப் பிள்ளையள் சரியா பயப்பிடுதுகள். எங்கட வீடுகள் கிரேசருக்குப் பக்கத்தில இருக்கிறதால சத்தம் காதைக் கிழிக்கும். எங்களுக்கு இந்தக் கிரேசர் வேண்டாம். ஏற்கனவே இதனால பட்டபாடுகள் போதும். திருப்பியும் யாரும் வந்தால் நாங்கள் போராட்டம்தான் செய்யவேண்டிவரும்” – என்றார். அக்கிராமத்தில் விவாசயத்தோடு கால்நடையும் வளர்த்து வருகின்ற ஒருவர் குறிப்பிடுகையில், ”கிணறுகளில தண்ணீர் இல்ல. குழாய்க்கிணறு கிண்டியும் பார்த்தம், அதிலயும் தண்ணியில்ல. ஆனால் அவையள் கிண்டின கல் குவாரியில பெரிய குளம் போல தண்ணி நிற்குது. எங்கட கிணறுகளில் தண்ணீர் இல்லாமல் போனதுக்கு அதுவும் காரணமோ தெரியேல்ல – என்கிற சந்தேகத்தையும் அவர் வெளியிட்டார். இந்தக் குரல்கள் சொல்லுவதெல்லாம் ஒன்றைத்தான். ”இயற்கையை நீ அழித்தால் இயற்கையால் நீ அழிவாய்” https://nenarrative.com/கல்-வியாபாரத்திற்காக-அழி/
-
கீரிமலை - தமிழர் மரபுரிமை சுற்றுலா
தமிழர் மரபுரிமை சுற்றுலா கட்டுரை மற்றும் படம்| North East Narrative நமது கடந்த காலத் தலைமுறைகள் நமக்காக விட்டுச்சென்றவைகள் மரபுரிமைகள் ஆகும். அவை நிகழ்காலத்திலும், எதிர்காலத்திலும் மதிப்புமிக்கவையாக இருக்கும். இதனைத் தொட்டுணரக்கூடிய மரபுரிமைகள் (Tangible Heritage) எனவும், தொட்டுணர முடியாத மரபுரிமைகள் (Intangible Heritage) எனவும் இரண்டாக வகுப்பர். நினைவுச்சின்னங்கள், பண்டைக்கால கட்டடங்கள், கலைப்பொருட்கள் போன்றன தொட்டுணரக்கூடிய மரபுரிமைகளாகவும், பண்டைக்கால தொழில்நுட்ப நுணுக்கங்கள், கலைநிகழ்ச்சிகள், சடங்குகள், பழக்கவழக்கங்கள், நாட்டார் கதைகள், மரபுவழிப் பாடல்கள் போன்றன தொட்டுணரமுடியாத மரபுரிமைகளாகவும் கொள்ளத்தக்கன. மரபுரிமைகள் என்ன செய்யும்? இத்தகைய மரபுரிமைகள், எதிர்கால சந்ததியினருக்கு வரலாற்றைக் கடத்தும் பணியை செவ்வனே செய்கின்றன. குறித்தவொரு பிராந்தியத்தின் வாழும் மக்களின் தனித்துவமான அடையாளக்கூறுகளைக் கட்டிக்காக்கின்றன. இனம்சார் உணர்வு மேலிடவும், தக்கவைக்கவும் உதவுகின்றன. எல்லாவற்றுக்கும் மேலாக குறித்தவொரு மரபுரிமைச் சின்னம் காணப்படுகின்ற பிராந்தியத்தின் சுற்றுலாத்துறை விருத்தியடையவும், அதன்விளைவாக அப்பிராந்தியத்தின் வரலாறு உள்ளிட்ட பண்பாட்டுக்கூறுகள் உலகத்தவர்களுக்கு எடுத்துச்செல்லப்படவும், பொருளாதாரம் மேம்படவும் உதவுகின்றன. ஈழத்தமிழர் மரபுரிமைகள் எத்தகையன? இலங்கையின் வடக்கு கிழக்கு பாகங்களில் வாழுகின்ற ஈழத்தமிழர்களிடம் இருக்கின்ற மரபுரிமைகளை எந்த வகைக்குள் உள்ளடக்குவது என்கிற கேள்வி எழுவது இயல்பானது. இப்பிராந்தியத்தில் போரில் அழிக்கப்பட்டவைபோக, தற்போது எஞ்சியிருக்கின்ற மரபுரிமைகளுக்குள் அனேகமானவை பண்பாட்டு மரபுரிமைகள் (Cultural Heritage) என்கிற வகையறாவுக்குள்ளேயே உள்ளடக்கத்தக்கவை. அவற்றுள் தொட்டுணரக்கூடியவையும், தொட்டுணரமுடியாதவையும் அடங்கும். அண்மையில், சர்வதேச சுற்றுலாப் பயணங்களுக்கான விபரிப்பு சஞ்சிகையான Lonely Planet இவ்வருடத்தில் (2026) சுற்றுலாப் பயணிகள் உலகளவில் பயணம் செய்வதற்கெனத் தெரிவுசெய்யக்கூடிய சிறந்த 25 நகரங்களில் ஒன்றாக யாழ்ப்பாண நகரத்தைத் தெரிவுசெய்திருந்தது. அச்சஞ்சிகையில், யாழ்.நகரானது தமிழ் கலாசார விழுமியங்களைக் கற்க விரும்புபவர்களுக்குப் பொருத்தமான நகரம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. சர்வதேச சுற்றுலா தொடர்பான பார்வையில் இப்படியோர் அடையாளத்தைப் பிடித்திருக்கும் யாழ்ப்பாணத்தைத் தமிழர் பண்பாட்டு மரபுரிமைசார் இடமாகக் காட்டுவது எப்படி என்பதற்கான எழுத்துவடிவிலான சுற்றுலா வழிகாட்டியாக இந்தக் கட்டுரைத்தொடர் அமையும். கீரிமலை யாழ்.குடாநாட்டில் இருக்கின்ற மிக முக்கியமான பண்பாட்டு மரபுரிமை மையங்களில் கீரிமலையும் ஒன்றாகும். யாழ்ப்பாண நகரிலிருந்து வடக்கே 19 கிலோமீற்றர்கள் தொலைவில் இக்கிராமம் அமைந்துள்ளது. ஆழமற்ற, சுண்ணக்கற்பாறைகளால் சூழ்ந்த அழகிய கடற்கரையும், யாழ்ப்பாண பாரம்பரிய கட்டடக் கலைமரபில் அமைந்த கட்டடங்களும் இந்தக் கிராமத்திற்கு எல்லையிட்டு நிற்கின்றன. கீரிமலையை அடைவதற்கான இலகு பயணம் யாழ்ப்பாண நகர மத்திய பேரூந்து நிலையத்திலிருந்து இக்கிராமத்திற்கு அரச மற்றும் தனியார் பேரூந்துகள் மூலமாகப் பயணம் செய்யலாம். அதேபோல தனியார் முச்சக்கர வண்டிகள் மூலமாகவும் பயணிக்கலாம். அரச, தனியார் பேரூந்துகளின் கட்டணம் 200 ரூபாவுக்குட்பட்டதாகவும், முச்சக்கரவண்டிகளின் கட்டணம் 2500 ரூபாவுக்குட்பட்டதாகவும் காணப்படும். யாழ்.நகரிலிருந்து புறப்பட்டால் 45 நிமிட நேரத்திற்குள் இவ்விடத்தினை அடையலாம். கீரிமலையில் பார்க்கவேண்டிய இடங்கள் கீரிமலையின் என்கிற இந்தக் கடற்கரை கிராமத்தில் பார்க்கவேண்டிய இடங்களில் முதன்மையானது நகுலேச்சரம் சிவன் கோயில் ஆகும். இலங்கையில் உள்ள மிகத் தொன்மையான ஐந்து சிவன் கோயில்களில் ஒன்றாக நகுலேச்சரம் காணப்படுகின்றது. இக்கோயிலின் வரலாறானது இராமயணக் காலத்திலிருந்தே ஆரம்பிப்பதாகக் குறிப்புகள் உண்டு. இறந்தோருக்கான பிதிர்க்கடன் ஆற்றுவதற்குப் பிரசித்தி பெற்ற நகுலேச்சர கோயிலின் உருவாக்கம் தொடர்பில் ஐதீகக் கதையொன்று உண்டு. 15ஆம் நூற்றாண்டில் இலங்கையைத் தம் காலனியாத்திக்கத்தின் கீழ் வைத்திருந்த போத்துக்கேயர்கள் மிகத் தொன்மையான இக்கோயிலை முதலில் அழித்தனர். பின்னர் ஆறுமுகநாவலர் எடுத்த முயற்சியின் பலனாக 1894 ஆம் ஆண்டில் மீண்டும் புனருத்தானம் செய்து திறக்கப்பட்டது. 1956 ஆம் ஆண்டு தொடக்கம் 2011ஆம் ஆண்டு வரை இலங்கை அரச படைகளின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த நகுலேச்சரம் முற்றாக சேதமடைந்தது. தற்போது மீளவும் புதுப்பொலிவுடன் கட்டியமைக்கப்பட்டு, வர்ணமிகு புதிய கோயிலாக நகுலேச்சரம் காட்சிதருகின்றது. நகுலேச்சரத்தின் வரலாறு முன்பொரு காலத்தில் சுதாமா எனும் முனிவர் மேரு மலையில் தவம் செய்துகொண்டிருந்தபோது, அவரின் தவத்தை குழப்பிய குற்றத்திற்காக யமத்கினி எனும் வேடன் முனிவரின் சாபத்திற்குள்ளானார். அச்சாபத்தினால் அவர் கீரி முகம் அமையப்பெற்றார். கீரிமுகம் பெற்ற வேடன் தற்போதைய நகுலேச்சரத்தை அண்மித்த கடலில் நீராடி தன் கீரிமுகத்தை நீங்கப் பெற்றமையால் அவர் நகுல முனிவர் என அழைக்கப்பட்டார். அதனால் அந்தக் கடற்கரை கிராமத்திற்கு கீரிமலை என்றும், நகுலகிரி என்றும் பெயர்பெற்றது. பின்னாளில் நகுல முனிவர் வழிபட்ட இடம் ஆனபடியால், அங்கு அமைந்த சிவ ஆலயமும் நகுலேச்சரம் எனப் பெயர்பெற்றது. கீரிமலை நகுலேச்சரம் கோயில் கீரிமலை தீர்த்தக் கேணி கீரிமலைக்கு வருகின்ற பக்தர்களையும், சுற்றுலாப் பயணிகளையும் அதிகம் கவருகின்ற இடமாக நீள்வட்ட வடிவான அழகிய தீர்த்தக்கேணி காணப்படுகின்றது. எக்காலத்திலும் நீர் வற்றாத, உப்புத் தன்மையற்ற இத்தீர்த்தக்கேணியில் பகல் வேளைகளில் நீராடுவது, உடலில் உள்ள நோய்களைத் தீர்க்கும் என நம்பப்படுகின்றது. கீரிமலை தீர்த்தக்கேணி சிறாப்பர் மடம் கீரிமலையில் அமைந்துள்ள சிறாப்பர்மடமானது யாழ்ப்பாணத்து பாரம்பரிய சமயம்சார் கட்டடக் கலை மரபின் எச்சமாக காணப்படுகின்றது. 1870ஆம் ஆண்டில் சுப்பிரமணியம் கதிரவேல் என்பவர் ”நகுலேசுவர சுவாமிகள் தண்ணீர் பந்தல்” எனும் பெயரில் இம்மடத்தினை அமைத்தார். அவர் அக்காலத்தில் பிரபலமான ”சிறாப்பர்” பதவியைப் பெற்றிருந்தமையால், பின்நாட்களில் சிறாப்பர் மடம் என அழைக்கப்பட்டது. கீரிமலைக்கு வருகின்ற யாத்திரிகர்கள் தங்கிநின்று ஓய்வு எடுக்கவும், தியானம் செய்யவும், சமயத் தேவைகளுக்காகவும் இந்த மடம் பயன்படுத்தப்பட்டு வந்தது. இதுபோல கீரிமலையை அண்மித்த பகுதிகளில் 13 மடங்கள் இருந்ததாகக் குறிப்பிடப்படுகின்றது. அவை அனைத்தும் இன்று அழிவடைந்துவிட்டன. சிறாப்பர் மடமும் போர்க்காலத்தில் மோசமாக சிதைவடைந்த போதிலும், அதன் கட்டட அமைப்பை இப்போதும் பார்வையிடலாம். மன அமைதி தரும் தியான மண்டபம் கீரிமலையின் கடற்கரையோரமாக அமைக்கப்பட்டுள்ள பிரமாண்டமான மண்டபம் தியானம் செய்வதற்கு மிகப் பொருத்தமான இடமாகும். வெளிநாட்டுப் பயணிகளும், உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளும் அதிகாலை வேளையில் இந்த மண்டபத்திற்கு வருகைதந்து, மெல்லிய கடல் அலையின் ஓசையைக் கேட்படி மனதுக்கு அமைதி தரும் தியானத்தை மேற்கொள்ளக்கூடிய வகையில் தியான மண்டபமும், தியானம் மேற்கொள்வதற்கான கோயிலும் கீரிமலையில் அமைக்கப்பட்டுள்ளது. கீரிமலை கடற்கரையில் அமைந்துள்ள யாத்திரிகர்களுக்கான மண்டபம் கீரிமலையில் பார்க்கக்கூடிய சடங்கு கீரிமலை ஆலயச்சூழலில் இறந்தோர்க்கு பிதிர்க்கடன் செய்யும் வகையிலான சடங்குகளும் இடம்பெறும். அதிகாலை 3 மணி தொடக்கம் சூரிய உதயம் நிகழும் வரைக்கும் இந்தச் சடங்கினைப் பார்க்க முடியும். சைவ சமயத்தைப் பின்பற்றுகின்ற தமிழ் மக்கள் தம் குடும்பத்தில் இறந்த ஒருவரின் 16ஆம் நாள் கீரிமலைக்கு அதிகாலை வேளை வருகைதந்து, சமய முறைப்படி, இறந்தவர் குறித்த சடங்குகளைச் செய்வதோடு, இறந்தவரை எரித்த பின் எஞ்சிய சாம்பலையும் அக்கடலில் கரைத்துச் செல்வர். இதனைவிட இறந்தவர்களின் ஆத்ம ஈடேற்றத்திற்காக ஒவ்வொரு வருடமும் ஆடி மாதம் இடம்பெறும் ஆடி ஆமாவாசை வழிபாட்டு நிகழ்வுகளும் இங்கு சிறப்பாக இடம்பெறும். நாடு முழுவதுமிருந்து பெருமளவிலான பக்தர்கள் இவ்விடத்திற்கு வருகைதந்து சடங்குகளைச் செய்வர். உணவு மற்றும் தங்குமிடம் கீரிமலைக்கு அண்மித்த தெல்லிப்பளை, காங்கேசன்துறை போன்ற இடங்களில் அதிகளவான தங்ககங்கள் உள்ளன. அதேபோல யாழ்ப்பாணத்தின் உணவுகளைப் பரிமாறும் உணவகங்களும் கீரிமலைக்குப் பயணிக்கும் சாலை ஓரங்களில் உள்ளன. கீரிமலையில் ”அம்மாச்சி உணவகம்” என அழைக்கப்படுகின்ற மலிவு விலை பாரம்பரிய உணவகமும் இயங்கிக்கொண்டிருக்கின்றது. அந்த உணவகத்தில் யாழ்ப்பாணத்தின் உணவுகளை சமைத்து, சுடச்சுட பெண்கள் வழங்குவர். அவ்வுணவுகளின் விலை மலிவானதாகவும் சுகாதாரமானதாகவும் காணப்படுகிறது. இது தவிர ஞாயிற்றுக் கிழமைகளிலும், விசேட தினங்களிலும் கீரிமலையில் அமைந்துள்ள சிவபூமி அறக்கட்டளை என்கிற அமைப்புக்குரிய அன்னதான மடத்தில் மதிய உணவு இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றது. கீரிமலைக்கு சுற்றுலா வரும் பயணிகள்கூட குறித்த இந்த அன்னதான மடத்தில் உணவருந்தமுடியும். அன்னதானத்தைத் தாம் வழங்க விரும்பினாலும் அதனைச் செய்ய இயலும். முடிவாக, யாழ்ப்பாண பண்பாட்டின் மரபுரிமைகளைத் தரிசிக்க விரும்பும் சுற்றுலாப் பயணி ஒருவர் – மனதுக்கு அமைதியைத் தரக்கூடிய இடமொன்றைப் பார்வையிட விரும்பும் சுற்றுலாப் பயணி ஒருவர் தெரிவுசெய்யவேண்டிய முதன்மையிடம் கீரிமலை ஆகும். https://nenarrative.com/தமிழர்-பண்பாட்டு-மரபுரிம/
-
அனைத்து நாடுகளும் அமைதி வாரியத்தில் இடம்பெற விரும்புவதாக டிரம்ப் கருத்து
டொனால்ட் ட்ரம்ப் தொடங்கிய அமைப்பில் இணைய சீனா மறுப்பு Nishanthan SubramaniyamJanuary 22, 2026 6:54 pm 0 அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தொடங்கிய ‘போடர் ஒப் பீஸ்’ Board of Peace என்ற அமைப்பில் இணைவதற்கான அமெரிக்காவின் அழைப்பை சீனா நிராகரித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையை உறுதியாக ஆதரிப்பதாகவும் சீனா தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சீன வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட தகவலை இந்தியாவுக்கான சீன தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர் யூ ஜிங் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், ‘அமைதி வாரியத்தில் இணைவதற்கான அமெரிக்காவின் அழைப்பு கிடைக்கப்பெற்றுள்ளது. சீனா எப்போதுமே உண்மையான பலதரப்பு வாதத்தைப் பின்பற்றுகிறது. சர்வதேச சூழல் எவ்வாறு மாறினாலும், ஐ.நாவை மையமாகக் கொண்ட சர்வதேச அமைப்பு, சர்வதேச சட்டத்தை அடிப்படையாகக் கொண்ட சர்வதேச ஒழுங்கு, ஐ.நா சாசனத்தின் நோக்கங்கள் மற்றும் கொள்கைகள் ஆகியவற்றின் அடிப்படையில் சர்வதேச உறவுகளை நிர்வகிக்கும் அடிப்படை விதிமுறைகளைப் பாதுகாப்பதில் சீனா உறுதியாக இருக்கும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெறும் உலகப் பொருளாதார மன்றக் கூட்டத்தில் பங்கேற்ற அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் , உலக நாடுகளின் ஆதரவை திரட்டுவதில் தீவிரம் காட்டி வருகிறார். இந்நிலையில், அந்த வாரியத்தில் இணையப் போவதில்லை என்ற முடிவை உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமாகத் திகழும் சீனா அறிவித்திருக்கிறது. சீனாவின் இந்த முடிவு, ட்ரம்ப்பின் முயற்சிகளுக்கு மிகப் பெரிய பின்னடைவாகக் கருதப்படுகிறது. https://oruvan.com/china-refuses-to-join-the-organization-launched-by-donald-trump/
-
வவுனியா மாவட்டத்தில் அரசு முன்னெடுக்கவுள்ள கிவுல் ஓயா திட்டம் தமிழருக்கு ஆபத்து; பல்லாயிரம் ஏக்கர் காணிகளைப் பறித்து சிங்களக் குடியேற்றத்துக்கு முயற்சி
கிவுல் ஓயா திட்டத்திற்கு எதிராக பாரிய போராட்டம்; சுமந்திரன் தெரிவிப்பு கிவுல் ஓயா திட்டத்தை இலங்கை தமிழ் அரசுக் கட்சி வன்மையாக எதிர்த்து பாரிய போராட்டத்தை நடத்தும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இலங்கை தமிழ் அரசுக் கட்சி வெளியிட்ட அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த திங்கட்கிழமை 20ஆம் திகதி அமைச்சரவை மாகாவலி கிபுல் ஓயா திட்டத்துக்கு அனுமதி வழங்கியுள்ளது. இத் திட்டம் எப்படியாக இனப்பரம்பலை மாற்றி அமைக்கும் என்றும் தமிழ் மக்களின் உரிமைகளை எந்த அளவுக்குப் பாதிக்கும் என்பதையும் எமது பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் சத்தியலிங்கம் பாராளுமன்றத்தில் தெளிவாக விளக்கியுள்ளார். இந்த திட்ட அமுலாக்கலை தடுக்கும் வகையில் பாரிய எதிர்ப்புப் போராட்டங்களை நாம் நடத்த உள்ளோம். இந்தப் போராட்டங்களில் எம்மோடு இணைந்து கொள்ளுமாறு மற்றைய கட்சிகளையும் அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம். அடுத்தடுத்த நாட்களில் இது சம்பந்தமான கலந்துரையாடல்கள் வவுனியாவிலும் நாம் நடாத்த உள்ளோம். இவற்றிலும் கலந்து கொண்டு உங்களது கருத்துக்களையும் பகிர்ந்து இப் போராட்டங்களுக்கு வலுச் சேர்க்குமாறு சகலரையும் அன்பாக கேட்டுக்கொள்கிறோம் – என்றுள்ளது. https://akkinikkunchu.com/?p=357104
-
அனுமதியின்றி வைக்கப்பட்ட தொல்பொருள் அடையாளப் பலகைகளை அகற்ற தீர்மானம்
அனுமதியின்றி வைக்கப்பட்ட தொல்பொருள் அடையாளப் பலகைகளை அகற்ற தீர்மானம் January 23, 2026 மட்டக்களப்பு ஏறாவூர் பற்று செங்கலடி சபை பிரிவிற்குட்பட்ட பகுதிகளில், பிரதேச சபையின் எந்தவித அனுமதியுமின்றி தொல்பொருள் திணைக்களம் தன்னிச்சையாக அடையாளப் பலகைகளை நாட்டி வருவதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளதுடன் அனுமதிபெறப்படாமல் நடப்பட்ட பதாகைகளை சட்டத்தின் கீழ் அகற்றுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இலங்கை தமிழரசுக் கட்சியின் ஆட்சியின் கீழுள்ள செங்கலடி பிரதேச சபையின் மாதாந்த அமர்வு வியாழக்கிழமை (22) தவிசாளர் மு.முரளிதரன் தலைமையில் இடம்பெற்றது. இதன்போது வீதிப்பிரச்சினை, வடிகான் பிரச்சினை, தொல்பொருள் பொயர்ப்பலகை உனவிவகாரம் மற்றும் பன்குடாவெளி வட்டாரப்பகுதியில் சூரிய மின்சக்தி திட்டம் அமைத்தலுக்கான அனுமதியை மீள் பரிசீலனை செய்தல் உள்ளிட்ட பிரச்னைகள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன் தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டது. இதன்போது முக்கிய பிரச்சனைகள் மற்றும் குற்றச்சாட்டுகள் சபை அமர்வின் போது உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்டன. அனுமதியற்ற செயற்பாடு 1987 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்கச் சட்டத்தின்படி, உள்ளூர் அதிகார சபைகளுக்கு உட்பட்ட பகுதிகளில் இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ள பிரதேச சபையின் அனுமதி அவசியம். ஆனால், தொல்பொருள் திணைக்களம் எவ்வித ஆலோசனையுமின்றி இப்பணிகளை மேற்கொண்டுள்ளது. தொல்பொருள் இடங்களாகக் கூறி மக்களின் விவசாய நிலங்கள் மற்றும் பொதுச் சந்திகளிலும் பலகைகள் நாட்டப்பட்டுள்ளன. இதனால் 56 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இது மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளதாகவும் சபையில் சுட்டிக்காட்டப்பட்டது. தொல்பொருள் திணைக்களத்தினால் நாட்டப்பட்டுள்ள அடையாளப் பலகைகளில் தமிழ் மொழி மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. வடக்கு-கிழக்கில் நிர்வாக மொழியாக தமிழ் முதன்மையாக இருக்க வேண்டும் என்ற விதியை மீறி, மொழி உரிமை மீறப்பட்டுள்ளதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் பிரதேச சபை உறுப்பினர் செ.நிலாந்தன் கடும் கண்டனம் தெரிவித்தார். இது தொடர்பாக தொடர்பாக மேலும் தெரிவித்த நிலாந்தன் நில ஆக்கிரமிப்பு, மொழி உரிமை மீறலுக்கு தொல்லியல் திணைக்களம் துணைபோகிறது. வடகிழக்கில் உள்ள சிறுபான்மை இன மக்களின் நில ஆக்கிரமிப்பு மற்றும் மொழி உரிமை மீறலுக்கு சட்டரீதியாக துணைபோகும் திணைக்களமாக தொல்லியல் திணைக்களம் செயற்பட்டு வருகிறது . மட்டக்களப்பு மாவட்டத்தில் தொல்லியல் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் மக்கள் மத்தியில் குழப்பத்தையும், முரண்பாடுகளையும் ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. வடகிழக்கில் உள்ள சிறுபான்மை இன மக்களின் நில ஆக்கிரமிப்பு மற்றும் மொழி உரிமை மீறலுக்கு சட்டரீதியாக துணைபோகும் திணைக்களமாக தொல்லியல் திணைக்களம் செயற்பட்டு வருகிறது. 1987, 15ம் இலக்க சட்டத்தின் பிரகாரம் பிரதேச சபைகளுக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தை மீறி பிரதேச சபையின் அனுமதி இன்றி தொல்லியல் திணைக்களம் பெயர்ப் பலகைகளை இட்டுள்ளனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் மாத்திரம் தொல்பொருள் திணைக்களத்தினால் நடப்பட்ட பெயர் பலகைகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தவர்கள், பெயர் பலகைகளை அகற்றிய வர்கள் என்று கூறி 56 பேரை கைது செய்துள்ளனர். முன்னர் இருந்த எந்த அரசாங்கங்களும் செய்யாத செயற்பாட்டை தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கம் செய்துள்ளது. இதைவிட தொல்லியல் திணைக்களத்தின் ஊடாக நடப்பட்ட அனைத்து பெயர் பலகைகளிலும் மொழி உரிமை மீறப்பட்டுள்ளது. இந்த நாட்டின் அரச கரும மொழிகளாக தமிழ், சிங்கள மொழிகள் காணப்படுகிறது, அதேபோல் வடகிழக்கின் நிர்வாக மொழியாக தமிழ் மொழியே காணப்படுகிறது. இவ்வாறு இருக்கும் நிலையில் வடகிழக்கின் நிர்வாக மொழியான தமிழ் மொழியை முதலாவதாகவும், சிங்கள மொழியை இரண்டாவதாகவும் எழுதி இருக்க வேண்டும். ஆனால் தொல்லியல் திணைக்களத்தின் பெயர் பலகைகளில் மூன்றாவதாகவே தமிழ் மொழி அடையாளப்படுத்தும் பட்டுள்ளது. தமிழரசுக் கட்சியின் ஆட்சியின் கீழ் இருக்கும் பிரதேச சபைகளின் அதிகாரங்களை மீறி அரசியல் நோக்கங்களுக்காக, பிரதேச சபை சட்டங்களை மீறி தொல்லியல் திணைக்களம் செயற்படுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. இதனை வன்மையாக கண்டிக்கிறேன். மேலும் இதன்போது இலங்கை தமிழரசுக் கட்சியின் செங்கலடி பிரதேச சபை உறுப்பினர் வ.வவாநந்தன் தமது கடும் கண்டனமான முறையில் தனது வாதத்தை அரசின் செயற்பாட்டிற்கு எதிராக முன்வைத்தார். மேலும் சபையில் தொல்பொருட்களைப் பாதுகாப்பதாகக் கூறிக்கொண்டு, நுணுக்கமான முறையில் நில ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும், இது இனங்களுக்கிடையிலான ஒற்றுமையைச் சீர்குலைக்கும் செயல் என்றும் இதன்போது விமர்சிக்கப்பட்டது. முறையான வர்த்தமானி அறிவித்தல் மற்றும் ஆவணங்களின்றி நாட்டப்பட்ட பலகைகள் குறித்து விளக்கம் அளிக்க தொல்பொருள் திணைக்களத்திற்கு ஒரு வார கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக் செங்கலடி பிரதேச சபையின் தவிசாளர் மு.முரளிதரன் தெரிவித்தார். வழங்கப்பட்ட காலக்கெடுவிற்குள் உரிய ஆவணங்களைச் சமர்ப்பிக்கத் தவறினால், பிரதேச சபைக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி அந்த அடையாளப் பலகைகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சபையில் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக மத்திய அரசிற்கும் சம்பந்தப்பட்ட திணைக்களங்களுக்கும் உத்தியோகபூர்வமாக அறிவிப்பதோடு, தேவைப்படின் சட்ட ரீதியான நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் சபை தீர்மானித்துள்ளது. தொல்பொருட்களைப் பாதுகாப்பதில் தங்களுக்கு மாற்றுக் கருத்து இல்லை என்றும், ஆனால் அவை சட்ட ரீதியாகவும், மக்களின் உரிமைகளை பாதிக்காத வகையிலும் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதே சபையின் நிலைப்பாடாக உள்ளது என்றார். இதன் போது சட்ட ரீதியாக பெயர்ப்பலகைகளை அகற்றுவது தொடர்பாக உறுப்பினர்களது ஆதரவுடன் பிரேரணையும் நிறைவேற்றப்பட்டது. இதற்கு மூன்று உறுப்பினர்கள் நடுநிலை வகித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. https://www.ilakku.org/resolution-to-remove-archaeological-signs-placed-without-permission/
-
அனைத்து நாடுகளும் அமைதி வாரியத்தில் இடம்பெற விரும்புவதாக டிரம்ப் கருத்து
அனைத்து நாடுகளும் அமைதி வாரியத்தில் இடம்பெற விரும்புவதாக டிரம்ப் கருத்து January 23, 2026 அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்மொழிந்துள்ள ‘அமைதி வாரியம்’ (Board of Peace) அமைப்பிற்கான ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் நிகழ்வு, (ஜனவரி 22) ஸ்விட்சர்லாந்தின் டாவோஸில் நடைபெற்றது. அப்போது பேசிய டிரம்ப், “இது மிகவும் உற்சாகமான நாள், இதற்காக நீண்ட காலமாக திட்டமிடப்பட்டது” என்று கூறினார். “எல்லோரும் எனது அமைதி வாரியத்தில் ஒரு பகுதியாக இருக்க விரும்புகிறார்கள். ஐக்கிய நாடுகள் சபை உட்பட பலருடன் தொடர்ந்து பணியாற்றுவேன்” என்றும் அவர் தெரிவித்தார். ‘அமைதி வாரியம்’ உருவாக்கப்பட்டவுடன், “நாம் செய்ய விரும்புவதை ஓரளவிற்குச் செய்ய முடியும். அமைதி வாரியம் மற்றும் ஐ.நா-வின் முயற்சிகளை இணைப்பது உலகிற்கு மிகவும் தனித்துவமானதாக அமையும். இது மத்திய கிழக்குப் பிராந்தியத்தின் ஒரு பிரகாசமான எதிர்காலத்திற்கான முதல் படி” என்றும் டிரம்ப் கூறுகிறார். தனது உரையை நிறைவு செய்யும் விதமாக, அமைதி வாரியத்திற்கான ஆவணத்தில் கையெழுத்திடுமாறு பஹ்ரைன் மற்றும் மொராக்கோ பிரதிநிதிகளுக்கு டொனால்ட் டிரம்ப் அழைப்பு விடுத்தார். வாரியத்தின் மற்ற உறுப்பினர்கள் கையெழுத்திட அழைக்கப்படுவதற்கு முன்பு, அவர்கள் மூவரும் சிரித்துக் கொண்டே ஆவணங்களை உயர்த்திப் பிடித்தனர். டிரம்ப் தனது உரையின் போது, காஸாவைப் பற்றியும் பேசினார். அங்கிருந்துதான் அமைதி வாரியத்திற்கான திட்டம் தொடங்கியதாக அவர் கூறுகிறார். “ஹமாஸ் அமைப்பு அவர்கள் செய்வதாக உறுதியளித்ததை ‘அநேகமாகச் செய்வார்கள்’. அவர்கள் தங்கள் ஆயுதங்களை கைவிட வேண்டும், அதைச் செய்யவில்லை என்றால், அது அவர்களின் முடிவாக அமையும்” என்றார் டிரம்ப். ஹமாஸால் நடத்தப்படும் சுகாதார அமைச்சகத்தின் தகவல்படி, அக்டோபர் 10 அன்று இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே போர்நிறுத்தம் தொடங்கியதில் இருந்து காஸாவில் குறைந்தது 466 பாலத்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். https://www.ilakku.org/trump-says-all-countries-want-to-be-on-the-peace-council/
-
மட்டக்களப்பில் போலி வைத்தியர் கைது!
மட்டக்களப்பில் போலி வைத்தியர் கைது! Vhg ஜனவரி 23, 2026 வைத்தியர் என தன்னை அடையாளப்படுத்தி வீடு ஒன்றில் மருத்துவ கிளினிக் நிலையம் ஒன்றை கடந்த 3 வருடங்களாக நடத்தி வந்த போலி வைத்தியர் ஒருவர் நேற்று(23.01.2026) வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள செம்மண் ஓடை பிரதேசத்தில் வைத்து மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர். மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவினருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து குறித்த கிளினிக் முற்றுகையிடப்பட்டது. இதன்போது குறித்த வைத்தியசாலை அனுமதி பத்திரம் மற்றும் வைத்தியர் அடையாள அட்டைகளை கேட்டு சோதனையில் ஈடுபட்ட போது அவரிடம் எந்தவிதமான பத்திரங்களும் வைத்தியராக அடையாளப்படுத்தும் காணப்படவில்லை என தெரிய வந்துள்ளது. குறித்த நபர் க.பொ.தர உயர் தரத்தில் மருத்துவ துறையில் கல்வி கற்று வந்துள்ளதாகவும் போதிய புள்ளிகள் இல்லாமல் மருத்துவ துறைக்கு தெரிவு செய்யப்படாமல் உள்ள நிலையில் கண்டிக்கு சென்று அங்கு மருத்துவ துறைக்கு கல்வி கற்று வந்த நிலையில் தனது சொந்த ஊரான செம்மண் ஓடையில் உள்ள தனது வீட்டுக்கு திரும்பி வந்து வைத்தியசாலையில் சத்திரசிகிச்சையில் ஈடுபடும் போது வைத்தியர்கள் அணியும் ஆடை போல உடையை அணிந்து கொண்டு தன்னை தானே புகைப்படம் எடுத்துக் கொண்டதாகவும் தெரியவந்துள்ளது. பின்னர் அதனை தொடர்ந்து போலியாக முகநூல் கணக்கு ஒன்றை ஆரம்பித்து அதில் கண்டி பல்லேகல பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் போல போலியான தரவுகள் மற்றும் வைத்தியர் போல உடையணிந்த படங்களை தரவேற்றம் செய்து வீட்டில் ஒரு தனியார் வைத்திய கிளினிக் ஒன்றை ஆரம்பித்து கடந்த 3 வருடங்களாக நோயாளிகளுக்கு மருந்துகளை வழங்கி இயங்கி வந்துள்ளதாக பொலிசாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து குறித்த போலி வைத்தியரைக செயற்பட்டு வந்த 33 வயதுடையவரை கைது செய்ததுடன் அங்கிருந்த சான்று பொருட்களை மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவினர் மீட்டு ஒப்படைத்துள்ளதாகவும் இவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை உடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு மற்றும் வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். https://www.battinatham.com/2026/01/blog-post_23.html
-
நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய வனப்பகுதியாக 'நீல்கல' உத்தியோகபூர்வமாக பிரகடனம் -அதிவிசேட வர்த்தமானி வெளியீடு
நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய வனப்பகுதியாக 'நீல்கல' உத்தியோகபூர்வமாக பிரகடனம் -அதிவிசேட வர்த்தமானி வெளியீடு 23 Jan, 2026 | 12:08 PM இலங்கையின் இரண்டாவது பெரிய வனப்பகுதியான 'நீல்கல' (Nilgala Forest) காப்பகம் உத்தியோகபூர்வமாக பாதுகாக்கப்பட்ட வன ஒதுக்கீடாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் தற்போது வெளியிடப்பட்டுள்ளதாக சுற்றாடல் அமைச்சு அறிவித்துள்ளது. சுமார் 40,684.99 ஹெக்டேயர் பரப்பளவைக் கொண்ட இந்த வனப்பகுதியை பாதுகாக்கப்பட்ட வலயமாக்கும் நடவடிக்கை, 2025ஆம் ஆண்டு உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு தேசிய வனப்பரிபாலன திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்டதாக சுற்றாடல் அமைச்சர் தம்மிக பட்டபெந்தி தெரிவித்துள்ளார். இந்த பிரகடனத்தின் முக்கியத்துவம் குறித்து அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்: நாட்டின் பல்லுயிர் பெருக்கத்தைப் பாதுகாப்பதற்கும் சுற்றாடல் சீர்கேட்டைக் குறைப்பதற்கும் எடுக்கப்பட்ட ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல்லாக இது அமையும். இலங்கை போன்ற வெப்பமண்டல நாடுகளுக்கு இவ்வாறான வனப்பகுதிகளைப் பாதுகாப்பது சுற்றாடல் சமநிலைக்கு மாத்திரமன்றி, வனவிலங்குகளுக்கான நிலையான வாழ்விடங்களை உருவாக்குவதற்கும் அவசியமானதாகும். மனிதர்களும் இயற்கையும் இணைந்து வாழக்கூடிய பசுமையான தேசத்தை நோக்கிய பயணத்தை இது மேலும் வலுப்படுத்துகிறது. எதிர்கால சந்ததியினருக்காக பசுமையான சூழலை உருவாக்குவதற்கும், நிலையான உயிர்ச்சூழலை கட்டியெழுப்புவதற்கும் இலங்கை கொண்டுள்ள அர்ப்பணிப்பை இந்த தீர்மானம் மீள உறுதிப்படுத்துவதாக அமைச்சர் தம்மிக பட்டபெந்தி மேலும் சுட்டிக்காட்டினார். https://www.virakesari.lk/article/236780
-
சுவிட்சர்லாந்து மற்றும் டாவோஸ் இலங்கை வர்த்தகச் சமூகத்தினருடன் பிரதமர் சந்திப்பு
சுவிட்சர்லாந்து மற்றும் டாவோஸ் இலங்கை வர்த்தகச் சமூகத்தினருடன் பிரதமர் சந்திப்பு 23 Jan, 2026 | 12:24 PM டாவோஸில் நடைபெற்று வரும் உலகப் பொருளாதார மன்றத்தின் World Economic Forum வருடாந்தக் கூட்டத்திற்குச் சமாந்தரமாக, பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய அவர்கள் சுவிட்சர்லாந்து வர்த்தகச் சமூகத்தின் உறுப்பினர்களையும், அந்நாட்டில் வசிக்கும் இலங்கை வர்த்தகத் தலைவர்கள் மற்றும் தொழில்சார் நிபுணர்களையும் சந்தித்துக் கலந்துரையாடினார். இலங்கையின் பொருளாதார மீட்சி மற்றும் நீண்டகால அபிவிருத்திக்கு ஆதரவளிக்கும் நோக்கில், கூட்டுறவைப் பலப்படுத்துதல், நம்பிக்கையைக் கட்டியெழுப்புதல் மற்றும் ஒத்துழைப்புக்கான நடைமுறைச் சாத்தியமான வழிகளை ஆராய்தல் ஆகிய விடயங்கள் குறித்து இச்சந்திப்புகளின் போது கவனம் செலுத்தப்பட்டது. சுவிட்சர்லாந்தில் வசிக்கும் இலங்கை வர்த்தக மற்றும் தொழில்சார் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடலின் போது, வர்த்தகத் தொடர்புகளை வளர்ப்பதிலும், முதலீட்டு வாய்ப்புகளை இலகுபடுத்துவதிலும், சந்தை வாய்ப்புகளை உறுதிப்படுத்துவதிலும் அவர்கள் ஆற்றக்கூடிய முக்கிய பங்கினைப் பிரதமர் சுட்டிக்காட்டினார். அத்துடன், தொழில்முயற்சியாளர்களுக்கு வழிகாட்டுதல் மற்றும் சர்வதேச வர்த்தக வலையமைப்புடன் இலங்கையின் ஈடுபாட்டைப் பலப்படுத்துதல் ஆகியவற்றிலும் அவர்களின் ஒத்துழைப்பைப் பெற்றுத் தருமாறு கேட்டுக்கொண்டார். அத்தோடு, சுவிட்சர்லாந்து வர்த்தகச் சமூகத்தினருடனான சந்திப்பில், இலங்கையின் தற்போதைய பொருளாதாரப் போக்கு, மறுசீரமைப்பு முன்னுரிமைகள் மற்றும் முதலீட்டிற்கான முக்கிய துறைகள் குறித்துப் பிரதமர் விளக்கமளித்தார். பொருளாதார ஸ்திரத்தன்மை, முன்கூட்டியே கணிக்கக்கூடிய கொள்கைக் கட்டமைப்புகள் மற்றும் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்புவதை நோக்கமாகக் கொண்ட நிர்வாகச் சீர்திருத்தங்கள் ஆகியவற்றில் அரசாங்கம் கொண்டுள்ள அர்ப்பணிப்பைப் பற்றியும் இதன்போது அவர் எடுத்துரைத்தார். சேவைத் துறை வளர்ச்சி, மூலதனச் சந்தைகள், நிதித் தொழில்நுட்பம் மற்றும் ஏனைய முன்னுரிமைத் துறைகளில் ஒத்துழைப்பதற்கான வாய்ப்புகள் குறித்தும் இக்கலந்துரையாடல்களில் ஆராயப்பட்டது. அத்துடன், இந்த ஈடுபாடுகளை முதலீட்டு ஆர்வம், துறை சார்ந்த கூட்டுறவு மற்றும் நீண்டகால ஒத்துழைப்பு போன்ற உறுதியான பெறுபேறுகளாக மாற்றுவதன் முக்கியத்துவமும் வலியுறுத்தப்பட்டது. மறுசீரமைப்பு, ஸ்திரத்தன்மை மற்றும் சர்வதேசக் கூட்டுறவு ஆகியவற்றின் ஊடாகத் தொடர்ச்சியான பொருளாதார மீட்சியை உறுதிப்படுத்துவதற்கான இலங்கையின் அர்ப்பணிப்பை மீண்டும் வலியுறுத்திய பிரதமர், சுவிட்சர்லாந்து மற்றும் இலங்கை வர்த்தகத் தரப்பினரின் தொடர்ச்சியான ஈடுபாட்டை வரவேற்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/236782
-
காணாமல் போன தொடர்பான 11 ஆயிரம் புகார்கள்: 2 ஆண்டுகளுக்குள் முடிக்கப்படும்
காணாமல் போன தொடர்பான 11 ஆயிரம் புகார்கள்: 2 ஆண்டுகளுக்குள் முடிக்கப்படும் காணாமல் போனோர் தொடர்பாக பெறப்பட்ட 11 ஆயிரம் புகார்கள் மீதான விசாரணைகள் இரண்டு ஆண்டுகளுக்குள் முடிக்கப்படும். தற்போதைய சட்டமா அதிபரை நீக்குவது குறித்து அமைச்சரவையில் எந்த விவாதமும் இல்லை. பாரிய புதைகுழிகள் தொடர்பான விசாரணைகளுக்குத் தேவையான அளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது காணாமல் போனோர் அலுவலகத்தின் ஆரம்ப விசாரணைக் குழுக்களின் தலைவர்கள் மற்றும் விசாரணைக் குழுக்களின் முதல் குழு உறுப்பினர்களை உணர வைப்பதற்கான முதல் பயிற்சித் திட்டம் மற்றும் அவர்கள் எதிர்கொண்ட பிரச்சினைகள் குறித்த கலந்துரையாடல் நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர் வழக்கறிஞர் ஹர்ஷன நாணயக்காரவின் பங்கேற்புடன் வவுனியா மாவட்ட செயலகத்தில் வியாழக்கிழமை(22) அன்று நடைபெற்றது. காணாமல் போனோர் அலுவலகத்தின் கட்டமைப்பிற்குள் விசாரணைகளின் நோக்கங்களைப் புரிந்துகொள்வது, விசாரணைக் குழுக்களின் பங்கு, காணாமல் போனோர் அலுவலகத்தின் நிறுவன ஆதரவு, விசாரணைச் செயல்பாட்டின் படிகள், விசாரணை நடவடிக்கைகள் மற்றும் ஆரம்ப விசாரணை வினாத்தாள் போன்ற பிரச்சினைகள் குறித்து விசாரணைக் குழுக்களின் தலைவர்கள் மற்றும் விசாரணைக் குழுக்களின் உறுப்பினர்களை உணர வைப்பதற்காக இந்தப் பயிற்சிப் பட்டறை நடைபெற்றது. பயிற்சி நிகழ்ச்சிக்குப் பிறகு ஊடகவியலாளர்களிடம் பேசிய அமைச்சர், பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்: காணாமல் போனோர் அலுவலகம் பெறும் புகார்களை முறையாக விசாரிக்கவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு முக்கிய காரணம், இந்த அலுவலகத்தில் உள்ள பிரச்சனை அல்ல, அப்போதைய அரசியல் சூழ்நிலை. காணாமல் போனோர் அலுவலகத்தில் போதுமான ஊழியர்கள் இல்லாததால், 65 அதிகாரிகளை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த அலுவலகத்தின் விசாரணைக் குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி அளிக்க ரூ. 375 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. காணாமல் போனோர் தொடர்பான பதினொரு ஆயிரம் புகார்கள் இதுவரை இந்த அலுவலகத்திற்கு வந்துள்ளன. இந்த ஐயாயிரம் புகார்களின் விசாரணைகள் இந்த ஆண்டு நிறைவடையும் என்றும், அனைத்து புகார்களின் விசாரணைகளும் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் நிறைவடையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. புகார்களை விசாரிப்பதன் முதன்மை நோக்கம் காணாமல் போனவர்களுக்கு இழப்பீடு வழங்குவது மட்டுமல்ல. அவர்கள் தங்கள் உயிருக்கு நீதியை விரும்புகிறார்கள். போர் முடிந்து பல ஆண்டுகள் கடந்துவிட்ட பிறகும், காணாமல் போனவர்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை. அவர்கள் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணைகளுக்குப் பிறகு, தேவைப்பட்டால் மேலும் விசாரணைகள் மேற்கொள்ளப்படும். கடந்த காலங்களில் ஏற்பட்ட வலிகளைத் தவிர்த்து, இந்த மக்களிடையே நம்பிக்கையை வளர்ப்பதே அரசாங்கத்தின் நோக்கமாகும். கேள்வி - தற்போது புதைகுழிகள் அகழ்வாராய்ச்சி தொடர்பாக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் என்ன? அகழ்வாராய்ச்சிகள் தொடர்பாக டி.என்.ஏ சோதனைகள் குறித்தும் விவாதங்கள் உள்ளன. இதுகுறித்த கருத்து என்ன? பதில் - இந்தப் புதைகுழிகள் அகழ்வாராய்ச்சி தொடர்பாக நாங்கள் சிறப்பு ஆர்வத்துடன் செயல்பட்டு வருகிறோம். தேவையான ஏற்பாடுகளை முறையாக வழங்கவும், இந்த அகழ்வாராய்ச்சிகளை வெளிப்படையாக நடத்தவும் நாங்கள் நடவடிக்கை எடுத்துள்ளோம். வெளிநாடுகளிலிருந்து அறிவியல் உதவிகளைப் பெற்று தேவையான விசாரணைகளை நடத்த நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம். அவர்கள் தங்கள் அன்புக்குரியவர்களுக்கு என்ன நடந்தது என்பதையும் அறிந்து கொள்ள வேண்டும். விசாரணைகளின் போது தவறு செய்தவர்கள் தெரியவந்தால், அவர்களை தண்டிக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளின் உதவியுடன் டி.என்.ஏ மற்றும் பிற தொழில்நுட்ப ஆய்வகங்களைப் பெறவும் நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம். கேள்வி - காணாமல் போனோர் அலுவலகத்திற்கு பெறப்பட்ட புகார்கள் தொடர்பாக இந்த பயிற்சி பட்டறையில் ஒரு தரவுத்தள அமைப்பு விவாதிக்கப்பட்டது. ஒரே காணாமல் போனவர் தொடர்பாக இரண்டு அல்லது மூன்று புகார்கள் வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. பதில் - இந்த அலுவலகத்திற்கு ஒரு தரவுத்தள அமைப்பு அவசியம். இந்த அலுவலகம் 2018 இல் நிறுவப்பட்டது. காணாமல் போனவர்கள் தொடர்பாக பல ஆணைக்குழுக்கள் நிறுவப்பட்டுள்ளன. எனவே, ஒரு தரவுத்தள அமைப்பு தேவை. கேள்வி - இந்த விசாரணைகள் வடக்கு மற்றும் கிழக்கில் காணாமல் போனவர்கள் தொடர்பாக மட்டுமே நடத்தப்படுகின்றனவா, மேலும் தெற்கில் காணாமல் போனவர்கள் குறித்தும் விசாரணைகள் நடத்தப்படுகின்றனவா? பதில் - வடக்கு மற்றும் கிழக்கில் காணாமல் போனவர்கள் குறித்து மட்டுமல்ல. தெற்கிலும் காணாமல் போனவர்கள் குறித்து விசாரணைகள் நடத்தப்படுகின்றன. இந்த பயிற்சிகளுடன், தெற்கிலும் விசாரணைக் குழுக்கள் நிறுவப்படுகின்றன. 1988-89 இல் நடந்த காணாமல் போனவர்கள் குறித்தும் விசாரணைகள் நடத்தப்படுகின்றன. வடக்குக்கும் தெற்கிற்கும் இடையில் ஒரு பிரிவு இருக்கக்கூடாது. விசாரணைகள்நடத்தப்பட வேண்டும். விசாரணைகள் நடத்தப்படுகின்றன. கேள்வி - தற்போதைய சட்டமா அதிபரை பதவி நீக்கம் செய்வது குறித்து சமூக ஊடகங்களில் பல்வேறு கதைகள் பரவி வருகின்றன. நீதி அமைச்சர் என்ற முறையில் உங்கள் கருத்து என்ன? பதில் - . தற்போதைய சட்டமா அதிபரை இன்று பதவியில் இருந்து நீக்குவது குறித்து பல ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சமூக ஊடகங்களில் எந்த வகையான அறிக்கைகள் வெளியிடப்பட்டாலும், சட்டமா அதிபரை பதவி நீக்கம் செய்வது குறித்து அமைச்சரவையில் எந்த விவாதமும் நடத்தப்படவில்லை. சட்டமா அதிபர் பாதுகாக்கப்பட வேண்டும் என்று சமூக ஊடகக் கருத்துக்கள் வெளிப்படுத்தப்படுகின்றன. அவர் நீக்கப்பட வேண்டும் என்று சமூக ஊடகக் செய்திகள் வெளியிடப்படுகின்றன. சட்டமா அதிபரை மட்டுமல்ல, நீதி அமைச்சரையும் வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என்று சில சமூக ஊடகக் செய்திகள் வெளியிடப்பட்டன. இதைத்தான் நான் சொல்ல வேண்டும். நீதி அமைச்சர் அல்லது வேறு யாரையாவது பற்றி புகார்கள் இருந்தால், இந்த நாட்டில் உள்ள சட்டம் அனைவருக்கும் சமமாகப் பொருந்தும். நீங்கள்புகார் செய்யலாம். சமூக ஊடகங்களில் வெளியிடப்படும் விஷயங்களுடன் அரசாங்கத்திற்கு எந்த தொடர்பும் இல்லை. சட்டமா அதிபரை நீக்குவது அல்லது பதவி நீக்கம் செய்வது குறித்து அமைச்சரவையில் எந்த விவாதமும் இல்லை என்றும் அமைச்சர் கூறினார். https://www.tamilmirror.lk/செய்திகள்/காணாமல்-போன-தொடர்பான-11-ஆயிரம்-புகார்கள்-2-ஆண்டுகளுக்குள்-முடிக்கப்படும்/175-371404