Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிருபன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by கிருபன்

  1. மொட்டுவை பிளவுபடுத்திய ரணில்; குழம்பிப்போயுள்ள ராஜபக்ஷக்கள்!: அகிலன் July 28, 2024 ஜனாதிபதித் தோ்தலுக்கான அறிவித்தலை தோ்தல்கள் ஆணைக்குழு வெளியிட்ட உடனடியாகவே முதல் ஆளாக ரணில் விக்கிரமசிங்க தான் போட்டியிடுவதற்கான கட்டுப்பணத்தை செலுத்தியிருக்கின்றாா். கட்சி சாா்பின்றி சுயாதீன வேட்பாளராகவே அவா் போட்டியிடுகின்றாா். இதன் மூலமாக ரணில் வெளிப்படுத்திய செய்திகள் முக்கியமானவை! பொது ஜன பெரமுனவின் சாா்பில் களமிறங்கினால் மட்டுமே அவருக்கு ஆதரவளிக்க முடியும் என ராஜபக்ஷக்கள் அழுத்தம் கொடுத்துவந்த நிலையில், அதனையிட்டு தான் கவலைப்படப்போவதில்லை என்பதை இதன் மூலம் ரணில் தெளிவாக உணா்த்தியிருக்கின்றாா். ரணிலின் இந்த நகா்வு மொட்டு அணிக்குத்தான் அதிகளவுக்கு அதிா்ச்சியைக் கொடுத்திருக்கின்றது. ரணிலை ஆதரிப்பதா அல்லது தனியான வேட்பாளா் ஒருவரைக் களமிறக்குவதா என்பதையிட்டு ஆராய வேண்டிய நிா்ப்பந்தம் அவா்களுக்கு ஏற்பட்டுள்ளது. இதனைத் தீா்மானிக்க மொட்டுக் கட்சி திங்கட்கிழமை கூடவுள்ளது. ஜனாதிபதித் தோ்தல் விடயத்தில் அதிகளவுக்குக் குழம்பிப்போயுள்ள – அல்லது பிளவுபட்டுப்போயுள்ள அணியாக இன்று மொட்டுக் கட்சிதான் உள்ளது. நாடாளுமன்றத்தில் அதிக உறுப்பினா்களைக் கொண்டுள்ள கட்சியாக மொட்டுத்தான் உள்ளது. 225 உறுப்பினா்களில் 145 உறுப்பினா்கள் மொட்டு அணியைச் சோ்ந்தவா்கள். அவா்களை ஏதோ ஒருவகையில் அரவணைத்துச் செல்ல வேண்டிய நிா்ப்பந்தம் ரணிலுக்கு இருந்ததற்கு அதுதான் காரணம். ஐக்கிய தேசியக் கட்சி சிதைந்துபோய், நாடாளுமன்றத்தில் ஒரே ஒரு உறுப்பினரைக் கொண்டுள்ள நிலையில், தனது திட்டங்களை நிறைவேற்ற நாடாளுமன்ற பலத்தைக் கொண்டுள்ள மொட்டுவை நம்பியிருக்க வேண்டியராக ரணில் இருந்தாா். இதனைவிட, ரணிலின் கட்சியான ஐ.தே.க. சிதைவடைந்து அதன் கட்டமைப்புக்களும் செலிழந்துபோயிருப்பதால், தோ்தல் காலத்தில் களத்தில் செயற்படுவதற்கும் மொட்டுவின் தேவை ரணிலுக்கு இருந்தது. மறுபுறத்தில் ராஜபக்ஷக்கள் விரும்புவதுபோல மொட்டுவுடன் உத்தியோகபுா்வமாக ஒரு உடன்படிக்கைக்குச் செல்வதற்கோ அக்கட்சியின் சாா்பில் போட்டியிடவோ ரணில் விரும்பவில்லை. அதற்கு காரணம் இருந்தது. இரண்டு வருடங்களுக்கு முன்னா் இடம்பெற்ற அரகல என்ற மக்கள் கிளா்ச்சி ராஜபக்ஷக்களை அம்பலப்படுத்தியிருந்தது. ராஜபக்ஷக்கள்தான் பொருளாதார நெருக்கடிக்குக் காரணம் என்று பெரும்பாலான சிங்கள மக்களும் நம்புகின்றாா்கள். நீதிமன்றத் தீா்ப்பு ஒன்றும் அதனை வெளிப்படுத்தியது. இந்த நிலையில் ராஜபக்ஷக்களுடன் செல்வதில் ரணிலுக்கு இரண்டு பிரச்சினைகள் இருந்தன. ஒன்று ஊழல்வாதிகளுடன் ரணில் இணைந்துள்ளாா் என்ற பிரசாரத்தை சஜித்தும், அநுரகுமாரவும் முன்னெடுப்பாா்கள். இரண்டாவது, ராஜபக்ஷக்களுடன் கூட்டடை வைத்துக்கொண்டு தமிழ் வாக்குகளைக் கேட்க முடியாது. சிறுபான்மையினா் அவ்வாறான கூட்டுக்கு வாக்களிக்க மாட்டாா்கள். கடந்த மூன்று ஜனாதிபதித் தோ்தல்களிலும் ராஜபக்ஷக்களுக்கு எதிராகவே சிறுபான்மையின மக்கள் வக்களித்திருந்தாா்கள் என்பது கவனிக்கத்தக்கது. நாடாளுமன்றத்தில் தற்போது 145 உறுப்பினா்கள் இருந்தாலும், அடுத்து வரக்கூடிய ஒரு தோ்தலில் அந்த ஆதரவைத் தக்கவைத்துக்கொள்ள முடியாது என்பதும் ராஜபக்ஷக்களுக்கும் தெரியும். ஆனால், 145 ஐ வைத்துக்கொண்டு ரணிலுக்கு அழுத்தம் கொடுத்து தமது இருப்பைப் பாதுகாத்துக்கொள்வதுதான் அவா்களுடைய உபாயமாக இருந்தது. அதனைவிட, ரணிலின் சொந்தக் கட்சி பலவீனமானதாக இருப்பதால் களத்தில் பணியாற்ற தமது கட்சியின் தயவை ரணில் எப்படியும் நாடுவாா் என்றும் ராஜபக்ஷக்கள் எதிா்பாா்த்தாா்கள். ராஜபக்ஷக்களுக்கு இரண்டு பிரச்சினைகள் இருந்தன. முதலாவது, தம்மைப் பாதுகாத்துக்கொள்வது. இரண்டாவது, கட்சியைப் பாதுகாத்துக்கொள்வது. இந்த விடயத்தில் மகிந்த ராஜபக்ஷ கட்சியைப் பாதுகாப்பதைவிட குடும்பத்தின் எதிா்காலத்தைப் பாதுகாப்பதிலேயே கவனமாக இருந்தாா். இப்போதும் இருக்கின்றாா். அதனால், மீண்டும் ரணில் வருவதையும், ரணிலுக்கு நெருக்கடி கொடுக்கக்கூடாது என்பதும் அவரது நிலைப்பாடாக இருந்தது. சஜித் அல்லது அநுரா வந்தால் தமது குடும்பத்தினரின் பாதுகாப்பு எதிா்காலத்தில் கேள்விக்குறியாகலாம் என்பது மகிந்தவின் கருத்து. மீண்டும் கோட், கேஸ் என்று அவா்கள் தம்மை அலை வைக்கலாம் என்ற அச்சம் அவருக்குள்ளது. ஆனால், இந்த யதாா்த்தத்தைப் புரிந்துகொள்ளாமல் பசில், நாமல் போன்றவா்கள் ரணிலிடம் அதிகளவுக்கு எதிா்பாா்த்தாா்கள். கடினமான நிபந்தனைகளை முன்வைத்தாா்கள். பலசுற்றுப் பேச்சுவாாத்தைகள் இதற்காக இடம்பெற்றன. ரணில் எதற்கும் இணங்கவில்லை. இறுதியாக கடந்த வாரம் ரணிலைச் சந்தித்த மகிந்த, பசில், நாமல் ஆகிய மூவரும் தமது ஆதரவு தேவையானால் பிரதமா் பதவி தமக்குத் தரப்பட வேண்டும் என்ற புதிய நிபந்தனையை விதித்தாா்கள். நாமல் ராஜபக்ஷ அந்தப் பதவிக்குத் தயாராக இருந்தாா். அதாவது, மொட்டுவின் வேட்பாளராக ரணில் களமிறங்க வேண்டும், அவ்வாறில்லாமல் தனியாகக் களமிறங்குவதானால், பிரதமா் பதவியைத் தந்தால் மட்டுமே ஆதரவளிக்க தாம் ஆதரவளிக்கத் தயாா் என்பதுதான் அவா்களது நிலைப்பாடு. இதற்கு உறுதியான பதில் எதனையும் ரணில் கொடுக்கவில்லை. பதிலாக நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, பொதுத் தோ்தல் நடத்தப்படலாம் என்ற செய்திகள் கசியவிடப்பட்டன. ரணிலைப் பொறுத்தவரையில் ராஜபக்ஷக்கள் யாரையும் உத்தியோகபுா்வமாக தோ்தல் களத்தில் இறக்காமல் அமைதியாக இருக்க வேண்டும் என்பதையே எதிா்பாா்த்தாா். மொட்டு இணங்கிவராவிட்டால், நிலைமைகளை எவ்வாறு கையாள்வது என்பதற்கு மாற்றும் திட்டம் ஒன்றும் ரணிலிடம் இருந்தது… ரணில் இறங்கிவரப்போவதில்லை என்ற நிலையில்தான் சீற்றமடைந்த நாமல் ராஜபக்ஷ கடுமையான அறிக்கை ஒன்றை இரு தினங்களுக்கு முன்னா் வெளியிட்டாா். “விடுதலைப் புலிகளைப் பிளவுபடுத்தியதைப் போல பொதுஜன பெரமுனவையும் ரணில் பிளவுபடுத்திவிட்டாா்..” என்பதுதான் நாமலின் அறிக்கையின் சாரம். நாமல் ஆத்திரத்தில் அவசரப்பட்டுத் தெரிவித்த அந்தக் கருத்தில் பல உண்மைகள் பொதிந்துள்ளன. முதலாவது, ரணிலின் செயற்பாடுகளால் பொது ஜன பெரமுன பிளவுபட்டுப் பலவீனப்பட்டுப் போயுள்ளது என்ற ஆதங்கம், இயலாமை நாமலின் கருத்தில் தொனிக்கிறது. அதனை நாமல் பகிரங்கமாகவே ஒப்புக்கொண்டுள்ளாா் என்றும் கொள்ளலாம். இரண்டாவது, கட்சி பிளவுபட்டுள்ள நிலையில் உறுதியான தீா்மானம் ஒன்றை பொதுஜன பெரமுனவால் எடுக்க முடியுமா என்ற கேள்வியும் இங்கு எழுகின்றது. ஏனெனில் மொட்டு கட்சியில் ரணிலுக்கான ஆதரவே வலுவானதாக இருக்கின்றது. நாமல் சொன்னது போல பொதுஜன பெரமுன இப்போது பிளவுபட்ட நிலையில்தான் இருக்கின்றது. கட்சியை வழிநடத்துவதாக அல்லது கட்சிக்குத் தலைமையை வழங்குவதாகக் கூறிக்கொள்ளும் ராஜபக்ஷக்களையும் அவா்களது நெருங்கிய உறவினா்களையும் தவிர கட்சியின் மற்றையவா்கள் ரணிலை ஆதரிக்கத் தயாராகத்தான் இருக்கின்றாா்கள். கட்சியின் 145 நாடாளுமன்ற உறுப்பினா்களில் 75 போ் ரணிலை ஆதரிக்கப் போதாகத் தெரிவித்துள்ளாா்கள். கட்சியின் 12 மாவட்டத் தலைவா்களும் இதேபோன்ற நிலைப்பாட்டைத்தான் வெளிப்படுத்தியிருக்கின்றாா்கள். ராஜபக்ஷக்கள் என்னதான் நிலைப்பாட்டை எடுத்தாலும், மொட்டுக் கட்சியின் பெரும்பான்மையினா் ரணிலை ஆதரிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில்தான் இருக்கின்றாா்கள். இது ரணிலுக்கும் தெரியும். அதனால்தான் ராஜபக்ஷக்களுடனான பேச்சுவாா்த்தைகள் – பேரம் பேசல்களில் ரணில் இறுக்கமாக இருந்தாா். ரணில் தனியாகச் சென்றால் தமது வேட்பாளா் ஒருவரை களமிறக்குவது என்ற கருத்தை ராஜபக்ஷக்கள் முன்வைத்தாா்கள். திங்கட்கிழமை நடைபெறவிருக்கும் மொட்டுக் கட்சியின் உயா் மட்டக் கூட்டத்தில் இது தொடா்பில் இறுதி முடிவு எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகின்றது. பிரபல வா்த்தகா் தம்மிக்க பெரேரா மற்றும் நாமல் ராஜபக்ஷ ஆகியோா் ஏற்கனவே தமது விருப்பத்தை வெளிப்படுத்தியிருந்தாா்கள். ஆனால், “நாமல் ராஜபக்ஷக்கு காலம் இருக்கின்றது” என்று மகிந்த ராஜபக்ஷ கடந்த வாரம் தெரிவித்திருந்தாா். இதற்கு காலம் இருக்கின்றது என்பது மட்டும் காரணமல்ல. போட்டியிட்டால் நாமல் மண்ணைக் கவ்வுவாா் என்பது மகிந்தவுக்குத் தெரியும். ஆக, தனியாக ஒருவரை களமிறக்க மொட்டு கட்சி தீா்மானித்தால் அது தம்மிக்க பெரோவாகத்தான் இருக்கும். ஆனால், அது ரணிலின் வாக்குகளைப் பிளவுபடுத்தி சஜித்துக்கான வெற்றிவாய்ப்பை அதிகரிக்கும்.! ராஜபக்ஷக்களைப் பொறுத்தவரை அது ஒரு தற்கொலை முயற்சியாகவும் முடியலாம்! https://www.ilakku.org/மொட்டுவை-பிளவுபடுத்திய-ர/
  2. ஒற்றுமையின்மையால் எமது மக்களையும் மண்ணையும் நாம் இழந்துவிடக்கூடாது தமிழர்கள் பூர்வீகமாக வடக்கு, கிழக்கில் வாழ்ந்தார்கள் என்கிற வரலாற்றை சிதைக்கும் வகையில் இன்றைக்கு தென்னிலங்கை திட்டமிட்டு பல விடயங்களை அரங்கேற்றி வருகிறது. எமது ஒற்றுமை இன்மை காரணமாக எமது மக்களையும் மண்ணையும் நாங்கள் இழந்துவிடக்கூடாது என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். வெலிக்கடை சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்ட ரெலோ கட்சியின் தலைவர் தங்கதுரை, தளபதி குட்டிமணி, முன்னாள் போராளி ஜெகன் உட்பட 53 தமிழ் அரசியல் கைதிகளின் 41வது நினைவேந்தல் நிகழ்வு நேற்று சனிக்கிழமை (27) மாலை 6 மணியளவில் மன்னாரில் உள்ள தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ கட்சியின் அலுவலகத்தில் இடம்பெற்றது. இதன்போது இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்வில் போராளிகளுக்கு அஞ்சலி செலுத்திய பின் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், ஓர் இன அழிப்பின் ஆரம்ப இடம் வெலிக்கடை சிறைச்சாலை. ஓர் இனத்தின் மீது வன்முறைகள் ஆரம்பிக்கப்படுவது தான் இலங்கை வரலாற்றில் கூறப்படுகின்ற மிக மோசமான வன்முறையாக உள்ளது. இந்த நாட்டில் பல படுகொலைகள் இடம்பெற்றுள்ளது. தன்னைக் கொலை செய்வதன் மூலம் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் போராட்டத்தில் இணைவார்கள் என தலைவர் கூறிய தீர்க்கதரிசனம் 1983ஆம் ஆண்டு இளைஞர் யுவதிகள் தமது உயிரை எமது தேசத்திற்காக தியாகம் செய்துள்ளனர். ஆயுதப் போராட்டமாக மாறி தற்போது ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்டு, மீண்டும் அகிம்சை ரீதியான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு எமது இனத்தின் பிரச்சினைகளை வெளிக்கொண்டு வரும் கால கட்டத்தில் இருக்கிறோம். எமது மக்களின் நிலங்கள், கடல் வளம், மண் அபகரிக்கப்படுகின்றன. நாங்கள் ஒரு காலத்திலே தமிழர்கள் பூர்வீகமாக வடக்கு, கிழக்கில் வாழ்ந்தார்கள் என்கிற வரலாற்றை சிதைக்கும் வகையில் இன்றைக்கு தென்னிலங்கை திட்டமிட்டு பல விடயங்களை அரங்கேற்றி வருகிறது. தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) தலைவர்களையும் போராளிகளையும் இழந்த இயக்கமாக தொடர்ச்சியாக செயல்பட்டு வந்தாலும் கூட தலைவர்களின் சிந்தனையின் அடிப்படையில் எல்லா போராளிகளையும் அரவணைத்து செல்ல வேண்டும் என்பதன் அடிப்படையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து தமிழரசுக் கட்சி வெளியேறியுள்ள போதும் ஏனைய ஐந்து கட்சிகளுடன் போராட்ட கட்சியான ஜனநாயக போராளிகள் கட்சியையும் இணைத்து செயல்பட்டு வருகிறோம். இன்று நாங்கள் ஒற்றுமையுடன் செயல்பட்டு வருகிறோம். நாங்கள் ஒற்றுமையாக இல்லை என்றால் எமது மக்களை காப்பாற்ற முடியாது. தென்னிலங்கையில் உள்ளவர்கள் வடக்கு, கிழக்கில் ஆட்சி நடத்தக்கூடிய அல்லது அவர்களின் செயல்பாட்டை இங்கே திறம்பட செய்யக்கூடிய வாய்ப்பை எமது ஒற்று இன்மையால் காவு கொடுக்கிற நிலைப்பாட்டில் நாங்கள் இருந்துவிடுவோம். எல்லா கட்சிகளும் ஒன்றிணைந்து மக்களின் விடுதலைக்காக செயல்பட்டு மக்கள் விரும்புகின்ற ஒற்றுமையை பேணி எமது மக்களுக்காக குரல் கொடுக்கும் எமது மண்ணை மீட்டெடுக்கும் தார்மிக செயற்பாட்டை முன்னெடுக்க இன்றைய நாளில் வேண்டுகோள் விடுக்கின்றேன். எமது ஒற்றுமையின்மை காரணமாக எமது மக்களையும் மண்ணையும் நாங்கள் இழந்துவிடக்கூடாது என்பதையும் கூறிக்கொள்ள விரும்புகிறேன் என்றார். https://akkinikkunchu.com/?p=285715
  3. மீண்டும் வந்தடைந்த மருத்துவர் அர்ச்சுனா! சாவகச்சேரி மருத்துவமனையின் முன்னாள் மருத்துவ அத்தியட்சகர் இராமநாதன் அர்ச்சுனா பேராதனை மருத்துவமனைக்கு இடமாற்றப்பட்டதைத் தொடர்ந்து இன்று சாவகச்சேரி மருத்துவமனைக்கு மீண்டும் வந்தடைந்துள்ளார். இவ்வாறாக மருத்துவமனைக்கு முன் நின்று கொண்டு "மீண்டும் எனது வீட்டுக்கு" என்ற ஒரு செய்தியை தனது உத்தியோகபூர்வ முகப்புத்தக தளத்தில் பதிவிட்டிருக்கிறார். அத்துடன் இன்று மாலை யாழ் இந்து கல்லூரி மைதானத்தில் நடைபெறவுள்ள 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான கூடைப்பந்து ஆட்டத்தில் ஸ்புட்னிக் அணிக்காக தான் விளையாடவுள்ளதாக தெரிவித்துள்ளார். (ப) https://newuthayan.com/article/மீண்டும்_வந்தடைந்த_மருத்துவர்_அர்ச்சுனா!
  4. சிங்களவர்களை நெகிழ வைத்த தமிழ் பெண் Vhg ஜூலை 27, 2024 திருகோணமலை தமிழ் பெண் ஒருவரால் நெகிழ்ச்சியடைந்த சிங்களவர்கள் சமூகவலைத்தளங்களில் பதிவொன்றை பதிவிட்டுள்ளனர். பணமில்லாத ஏழைகளுக்கு தினமும் இலவச உணவு வழங்கும் ஷீலாம்மா என்ற தமிழ் பெண் தொடர்பிலேயே பதிவிடப்பட்டுள்ளது. தினமும் அன்னதானம் வழங்கும் ஷீலாம்மா என்ற பெயரில் இந்த பதிவை சிங்கள இளைஞன் ஒருவர் பதிவிட்டுள்ளார். மனிதாபிமான செயல் “பதவியில் இருந்து திருகோணமலை செல்லும் போது இக்பால் நகர் என்ற இடத்திலேயே இந்த மனிதாபிமானமிக்க பெண்ணை சந்தித்தேன். வீதிக்கு அருகிலுள்ள சிறிய குடிசை ஒன்றில், மிகவும் சுத்தமான முறையில் உணவு தயாரிக்கப்பட்டிருந்தது. தமிழர்களின் சுவையில் வழங்கப்பட்ட உணவை விடவும் அங்கிருந்த பலகை ஒன்றில் எழுதப்பட்டிருந்த விடயமே மனதை நிறைவாக்கியது. பணம் இல்லாத அனைவருக்காகவும் ஷீலாம்மாவிடம் தினமும் உணவு உள்ளது. பணத்தில் ஏழையாக இருந்தாலும் இதயத்தில் பணக்காரராக எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பவர்களின் வாழ்க்கை இது” என சிங்கள இளைஞன் குறிப்பிட்டுள்ளார். https://www.battinatham.com/2024/07/blog-post_108.html
  5. மறைந்த கலாநிதி விக்ரமபாகு கருணாரத்னவின் இறுதிச்சடங்கு இன்று மறைந்த நவ சம சமாஜ கட்சியின் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரத்னவின் இறுதிச் சடங்கு இன்று இடம்பெறவுள்ளது. இறுதி கிரியை பொரளை பொது மயானத்தில் இன்று மாலை ஐந்து மணிக்கு இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவரது பூதவுடல் பொரளையில் உள்ள தனியார் மலர்சாலை ஒன்றில் இன்றும், காலை முதல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. உடல் நலக்குறைவு காரணமாக நவ சம சமாஜ கட்சியின் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரத்ன கடந்த 24ஆம் திகதி காலமானார். https://thinakkural.lk/article/306865
  6. கோடிக்கணக்கில் நிவாரணி மாத்திரைகள் பறிமுதல்! இராமநாதபுரம் அடுத்த மானாங்குடி கடற்கரையில் இருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக கடற்கரையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1 கோடி 80 இலட்சம் ரூபாய் மதிப்பிலான 5 இலட்சத்து 70 ஆயிரம் வலி நிவாரணி மாத்திரைகள் திருச்சி சுங்கத்துறை நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் நேற்று (26) வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்து தலைமறைவான சந்தேக நபர் ஒருவரை தீவிரமாக தேடி வருகின்றனர். இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம், மண்டபம் வேதாளை மரைக்காயர் பட்டினம், மானாங்குடி உள்ளிட்ட கடற்கரையில் இருந்து தனுஷ்கோடி கடல் வழியாக கடல் அட்டை, சமையல் மஞ்சள், இஞ்சி, வலி நிவாரணி மாத்திரைகள், கஞ்சா உள்ளிட்ட பொருட்கள் இலங்கைக்கு கடத்தப்பட்டு வருகிறது. கடல் வழியாக நடக்கும் கடத்தல் சம்பவங்களை தடுக்க மத்திய சுங்கத்துறை, கடலோர காவல் படை, கடற்படை மற்றும் மத்திய, மாநில உளவுத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தாலும் அதையும் மீறி சமீப காலமாக அதிக அளவில் கடத்தல் சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திருச்சி சுங்கத்துறை நுண்ணறிவு பிரிவு கண்காணிப்பாளர் கண்ணதாசனுக்கு ராமநாதபுரம் மாவட்டம் புதுமடம் அடுத்த மானாங்குடி கடற்கரையில் இருந்து போதைப்பொருள் இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் சுங்கத்துறை நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் குழு புது படத்திலிருந்து மானாங்குடி வரை உள்ள கடற்கரை பகுதியில் தீவிர சோதனை நடத்தினர். அப்போது இலங்கைக்கு கடத்துவதற்காக மானாங்குடி கடற்கரை பதுக்கி வைக்கப்பட்டிருந்த 10 பெட்டிகள் கைப்பற்றப்பட்டது. அதை திறந்து சோதனை செய்த போது அதில் வலி நிவாரணி மாத்திரைகள் இருந்தது தெரியவந்தது. இதனை எடுத்து அந்த பெட்டிகளை மண்டபம் சுங்கத் துறை அலுவலகத்திற்கு எடுத்து வந்து ஆய்வு செய்தபோது ஒரு பெட்டியில் 57 ஆயிரம் மாத்திரைகள் வீதம் 10 பெட்டியில் 5 இலட்சத்து 70 ஆயிரம் மாத்திரைகள் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து வலி மாத்திரைகள் அடங்கிய பெட்டிகளை சரக்கு வாகனம் மூலமாக இராமநாதபுரம் சுங்கத்துறை தலைமை அலுவலகத்தில் எடுத்து வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சுங்கத்துறை அதிகாரிகள் நடத்திய முதல் கட்ட விசாரணையில் வலி நிவாரணி மாத்திரைகள் இலங்கைக்கு நேற்று இரவு படகு மூலம் கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்துள்ளதாகவும், இந்த கடத்தல் சம்பவத்தில் தொடர்புடையதாக கருதப்படும் சந்தேக நபர் ஒருவர் தலைமறைவாகி உள்ளதால் அவரை தீவிரமாக தேடி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் கைப்பற்றப்பட்ட வலி நிவாரணி மாத்திரைகளின் மதிப்பு சுமார் 1 கோடி 80 இலட்சம் என்றும் சர்வதேச மதிப்பு 3 கோடி ரூபாய் இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. https://newuthayan.com/article/கோடிக்கணக்கில்_நிவாரணி_மாத்திரைகள்_பறிமுதல்!
  7. யாழ்.கொள்ளைக்காரி கைது எம்.றொசாந்த் யாழ்ப்பாணம் அனலைதீவு பகுதியில் கனேடிய தமிழ் குடும்பம் மீது தாக்குதலை மேற்கொண்டு கொள்ளையடித்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரான பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அனலைதீவை சேர்ந்த தமிழ் குடும்பம் ஒன்று, கனடாவில் குடியுரிமை பெற்று வந்து அங்கு வசித்து வந்த நிலையில், விடுமுறையை கழிக்க அனலைதீவுக்கு கடந்த வருடம் வந்து தங்கியிருந்துள்ளது. அந்நிலையில் கடந்த வருடம் பெப்ரவரி மாதம் 23ஆம் திகதி அவர்கள் தங்கியிருந்த வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த வன்முறை கும்பல் வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டு , அவர்களிடம் இருந்த வெளிநாட்டு பணம் , நகைகள் , பொருட்கள் , கடவுசீட்டு உள்ளிட்டவற்றை கொள்ளையடித்து சென்றிருந்தது. சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த ஊர்காவற்றுறை பொலிஸார் , யாழ்ப்பாணத்தில் இருந்து, பிரத்தியேக படகில் அனலைதீவுக்குச் சென்று தாக்குலை மேற்கொண்டு , கொள்ளையடித்துக்கொண்டு மீள படகில் ஏறி தப்பி சென்றமையை கண்டறிந்தனர். அதனை தொடர்ந்து மேற்கொண்ட தீவிர விசாரணைகளின் அடிப்படையில் 03 நபர்களை சந்தேகத்தில் கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்த வேளை , தமக்கு பெண்மணி ஒருவர் பணம் கொடுத்து தம்மை கூலிக்கு அமர்த்தி தாக்குதலை மேற்கொள்ள கோரியதன் அடிப்படையிலையே தாம் தாக்குதல் மேற்கொண்டு கொள்ளையடித்ததாக தெரிவித்துள்ளனர். அதனடிப்படையில் குறித்த பெண் மணியை சுமார் ஒன்றரை வருடங்களாக தேடி வந்த பொலிஸார் புதன்கிழமை (24) பெண்மணியை கைது செய்துள்ளனர். குறித்த பெண்மணியிடம் விசாரணைகளை முன்னெடுத்த வேளை , கனடாவில் உள்ள ஐயப்பன் கோவில் தலைவரே தனக்கு பணம் அனுப்பி தாக்குதல் மேற்கொள்ள கூறியதன் அடிப்படையிலையே தான் வன்முறை கும்பல் ஒன்றுக்கு பணம் கொடுத்து தாக்குதலை மேற்கொண்டதாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். அதனை தொடர்ந்து குறித்த பெண்ணை வியாழக்கிழமை (25) ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய பொலிஸார் , பெண்ணை பொலிஸ் காவலில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுக்க அனுமதி கோரி விண்ணப்பம் செய்தனர் பொலிசாரின் விண்ணப்பத்தை ஏற்ற மன்று , பெண்ணனை 48 மணி நேரம் பொலிஸ் காவலில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுக்க அனுமதித்துள்ளது. அதேவேளை குறித்த பெண் கிளிநொச்சியை சேர்ந்தவர் எனவும் , அவருக்கு எதிராக ஏற்கனவே கொலை வழக்கொன்றும் , சில மோசடி வழக்குகளும் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். https://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/யாழ்-கொள்ளைக்காரி-கைது/71-341068 தொடர்பான திரி:
  8. விடுதலைப் புலிகளை ரணிலே பிளவுப்படுத்தினார்: நாமல் ராஜபக்ச குற்றச்சாட்டு தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் பிரதான தேசிய அரசியல் கட்சிகளை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடந்த காலங்களில் பிளவுப்படுத்தியதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபகச் தெரிவித்துள்ளார். இந்நிலையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியையும் பிளவுப்படுத்தும் முயற்சியில் ஜனாதிபதி ஈடுபட்டுள்ளதாகவும், எனினும் அதற்கு இடம்கொடுக்க முடியாது எனவும் அவர் கூறியுள்ளார். இது குறித்து மேலும் கருத்து வெளியிட்ட அவர், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எவ்வித இடையூறும் இன்றி அரசாங்கப் பணிகளை முன்னெடுப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது பொதுஜன பெரமுனவை பிளவுபடுத்துவதற்கு ஜனாதிபதி செயற்பட்டுள்ளார். இது ரணில் விக்ரமசிங்க வழமையாக செய்து வரும் விடயம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சி, நல்லாட்சி அரசாங்கம், மக்கள் விடுதலை முன்னணி, விடுதலைப் புலிகள் மற்றும் சுதந்திரக் கட்சியை ரணில் விக்கிரமசிங்க பிளவுப்படுத்தினார். இந்நிலையில், அந்த பழக்கத்தை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். ரணில் விக்கிரமசிங்கவிற்கு நாங்கள் உண்மையாக உதவி செய்தோம். எனினும் எங்கள் கட்சியை பிளவுபடுத்தும் முயற்சி இருந்தால், அதை அவர் சிந்திக்க வேண்டும்.” என நாமல் ராஜபக்ச கூறியுள்ளார். https://akkinikkunchu.com/?p=285408
  9. டொராண்டோ நகரசபையில் உறுப்பினர் போட்டியிடும் தமிழர்: வேட்பு மனு தாக்கல் வெற்றிடமாக உள்ள டொராண்டோ நகரசபை உறுப்பினர் பதவிக்கு தமிழர் ஒருவரும் போட்டியிடுகிறார். இதன்படி, Don Valley மேற்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் நியமனங்கள் கடந்த திங்கட்கிழமை (22) ஆரம்பித்தது. இதன்படி, Evan சாம்பசிவம் என்ற தமிழரும் தேர்தலில் போட்டியிடுவதற்கு வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதாக கூறப்படுகின்றது. இவர் முன்னதாக நகரசபை வேட்பாளராகவும் போட்டியிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், குறித்த தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் செப்டம்பர் 19ஆம் திகதி வரை தமது வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதிக்கான இடைத்தேர்தல் நவம்பர் மாதம் 04ஆம் திகதி நடைபெறுகிறது. முன்கூட்டிய வாக்குப்பதிவு ஒக்டோபர் 26, 27ஆம் திகதிகளில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த தொகுதியின் நீண்ட கால நகர சபை உறுப்பினர் Jaye Robinson புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மரணமடைந்ததை அடுத்து இந்த வெற்றிடம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://akkinikkunchu.com/?p=285397
  10. இலங்கை ஜனாதிபதி தேர்தல் - களமிறங்கும் வேட்பாளர்கள் Vhg ஜூலை 26, 2024 நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது. இதனடிப்படையில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, தேசிய மக்கள் சக்தி தலைவர் அனுரகுமார திஸாநாயக்க, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர் விஜயதாச ராஜபக்ச, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, தொழிலதிபர் திலித் ஜயவீர, தொழிலதிபர் தம்மிக்க பெரேரா, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜானக ரத்நாயக்க, முன்னாள் அமைச்சர் ரொஷான் ரணசிங்க மற்றும் வலஹங்குனவேவே மிஹிந்தலை ரஜமஹா விகாரை தம்மரதன தேரர் ஆகியோர் போட்டியிடவுள்ளனர். இது தவிர வடக்கில் உள்ள தமிழ் கட்சிகளின் பொது வேட்பாளரையும், முன்னணி சோசலிஸ கட்சியின் மக்கள் போராட்ட இயக்கத்தின் வேட்பாளரையும் முன்னிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி தேர்தல் முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தனவின் பேரனும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவார் என முதலில் அறிவிக்கப்பட்ட நிலையில் ஜனாதிபதி தேர்தல் திகதி அறிவிக்கப்பட்ட பின்னர் வேட்பாளர் பட்டியல் மேலும் அதிகரிக்கலாம் என தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், தற்போதைய அரசியல் சூழ்நிலைக்கு ஏற்ப இம்முறை ஜனாதிபதித் தேர்தலுக்கான மிகப்பெரிய வேட்பாளர் பட்டியல் முன்வைக்கப்படும் என அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.battinatham.com/2024/07/blog-post_406.html
  11. திராவிடப் பேரரசும், திளைத்து வாழும் சிற்றரசர்களும்! -சுப. உதயகுமாரன் திராவிட மாடலைப் புரிந்து கொள்வோம் -1 அன்றைய வரலாற்றின் தேவையாக உருவான இந்த இயக்கம் காலப் போக்கில் பெயர் மாறி, உருமாறி, திசைமாறி..பயணித்துக் கொண்டிருக்கிறது..! இதன் ஆரம்ப காலம் தொடங்கி இன்று வரை சமூக, அரசியல் தளங்களில் இது ஏற்படுத்திய தாக்கங்களையும், இன்றைய சரிவுகளையும் சமரசமின்றி அலசுகிறார் சுப.உதயகுமாரன்; சமூக-பொருளாதார-அரசியல் தளங்களில் பார்ப்பனரல்லாத தென்னக மக்கள் அதிகமான வாய்ப்புக்களைப் பெறவும், பார்ப்பனர்களின் ஆதிக்கத்தை எதிர்க்கவுமாக சர். பிட்டி. தியாகராயர், டாக்டர். நடேசன், டாக்டர் டி.எம். நாயர் போன்றோரால் 1916-ஆம் ஆண்டு தென் இந்திய நல உரிமைச்சங்கம் எனும் அமைப்புத் தொடங்கப்பட்டது. இவர்கள் நடத்திய “ஜஸ்டிஸ்” (நீதி) எனும் ஆங்கில இதழின் பெயர்க் காரணத்தால், இந்த அமைப்பு நீதிக் கட்சி (Justice Party) என்றழைக்கப்பட்டது. மேற்கண்ட பெயர்களில் உள்ள “நலம்,” “உரிமை,” “நீதி” போன்றவை ஆழமான அரசியல் அர்த்தம் கொண்ட வார்த்தைகள். நடேசன், சர்.பிட்டி.தியாராஜர், டி.எம். நாயர் பார்ப்பனர்களின், வட இந்தியர்களின் ஆதிக்கத்திலிருந்து தென்னிந்திய மக்களைக் காப்பாற்றும் பொருட்டு, ஜஸ்டிஸ் கட்சியை 1944-ஆம் ஆண்டு ‘திராவிடர் கழகம்’ என பெயர் மாற்றி நடத்திய பெரியார், இந்தியாவின் விடுதலை நாளை கருப்பு நாளாக அறிவித்தார். அதனை எதிர்த்த அண்ணாவோ, இந்திய விடுதலை வெறும் ஆரிய வட இந்தியர்களால் மட்டும் பெறப்பட்டதல்ல, அனைத்து இந்தியர்களின் உழைப்பும் அதிலே அடங்கியிருக்கிறது’’ என்று வாதாடினார். அரசியலுக்கு அப்பாற்பட்டு இருந்தாலொழிய, தான் நினைக்கும் சமூகச் சீர்திருத்தங்களை, விழிப்புணர்வுப் பிரச்சாரங்களைத் தொடர்ந்து நடத்த முடியாது என்று உறுதியாக நம்பினார் பெரியார். ஆனால், தேர்தலில் பங்கு பெறாமல் திராவிடர் கழகம் விலகி நிற்பது அண்ணாவுக்கும் அவர் தோழர்களுக்கும் ஏற்புடையதாக இருக்கவில்லை. பெரியாருக்கும் அண்ணாவுக்கும் இடையே ஏற்பட்ட விரிசல், முன்னவர் தன்னைவிட ஏறத்தாழ 40 வயது இளையவரான மணியம்மையாரை மணம்புரிய முடிவு செய்தபோது, உடைப்பாக உருவெடுத்தது. அண்ணாவும் அவர் தோழர்களும் திராவிடர் கழகத்திலிருந்து வெளியேறினர். குடந்தை கே. கே. நீலமேகம், இரா. நெடுஞ்செழியன், கே. ஏ. மதியழகன், என். வி. நடராஜன், பெரியாரின் அரசியல் வாரிசு என்று கருதப்பட்ட அவரது அண்ணன் மகன் ஈ.வி.கே. சம்பத் எனும் “ஐம்பெரும் தலைவர்கள்” புடைசூழ, அண்ணா திராவிடர் கழகத்திலிருந்து விலகி 1949 செப்டம்பர் 17 அன்று திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தொடங்கினார். சென்னை ராயபுரம் ராபின்சன் பூங்காவில் கனமழைக்கிடையே புதிய கட்சி தொடங்கப்பட்ட போது, குடந்தை கே. கே. நீலமேகம் அவர்கள் தான் கட்சியின் பெயரை அறிவித்ததாகக் கேள்விப்படுகிறோம். பகுத்தறிவு, சுயமரியாதை, சாதி (தீண்டாமை) ஒழிப்பு, மூட நம்பிக்கை ஒழிப்பு போன்ற கொள்கைகளோடு பெரியாரின் திராவிடர் கழகம் இயங்கிக் கொண்டிருக்க, “முன்னேற்றம்” எனும் கருத்தை ஏற்றெடுத்து “திராவிட முன்னேற்றக் கழகம்” என்று தம் கட்சிக்கு பெயர் வைத்தார் அண்ணா. திராவிட இனமக்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும், ஆதிக்கமற்ற சமுதாயம் அமைக்கவும், தமிழ் மொழியையும், தமிழ்ப் பண்பாட்டையும் பாதுகாத்து மேம்படுத்தவுமாக, ஏறக்குறைய திராவிடர் கழகத்தின் கொள்கைகளை ஒத்தே தி.மு.க. சிந்தித்தது. தேர்தலில் போட்டியிட்டு ஆட்சிக்கு வந்தால் தான் மாநிலத்தை சீரமைக்க முடியும் என்று உறுதியாக தி.மு.க. நம்பியது. அண்ணாவும், ஐம்பெரும் தலைவர்களும்! கட்சியின் பெயர் ஆங்கிலத்தில் ‘Dravidian Progressive Federation’ என்று கொள்ளப் பட்டதாகவும், “முன்னேற்றம்” என்பது முற்போக்கு என்ற அர்த்தத்திலேயே அமைக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால், அண்ணா சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பொருளியல் மற்றும் அரசியல் பாடங்களில் இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டங்களைப் பெற்றவர் என்கிற முறையில் “முன்னேற்றம்,” “வளர்ச்சி” பற்றியெல்லாம் உறுதியாக சிந்தித்திருப்பார். தி.மு.க. படிப்படியாக முன்னேறி ஆட்சியைப் பிடித்தபோது, அண்ணா முதல்வர் பொறுப்பை ஏற்றார். அவர் குறுகிய காலமே ஆட்சியில் இருந்த போதும், சென்னை மாநிலம் என்றழைக்கப்பட்ட தமிழகத்தின் பெயரை தமிழ்நாடு என மாற்றினார். சீர்திருத்தத் திருமணங்களுக்கு சட்டப்பாதுகாப்பு அளித்தார். தமிழகப் பள்ளிகளிலிருந்து இந்தி மொழியை அறவே நீக்கினார். சென்னை, கோவை ஆகிய பெருநகரங்களில் ரூபாய்க்கு ஒரு படி அரிசி எனும் திட்டத்தை சோதனை முறையில் அமுல்படுத்தினார். ஏழைகளுக்கு எரியாத வீடுகள் அளித்தார். பேருந்துகளை நாட்டுடமை ஆக்கினார். ஆனால், ஆட்சி அதிகாரத்தின் உதவியுடன் தன் குடும்பத்தையோ, உறவினர்களையோ “முன்னேற்றிக்” கொள்ளவில்லை அவர். அறிஞர் அண்ணா பிப்ரவரி 3, 1969 அன்று இயற்கை எய்தியது தமிழ்நாட்டுக்கு பேரிழப்பாக அமைந்தது. ஒரு பெரும் அதிகாரப் போட்டி நிகழ்ந்து, கலைஞர் மு. கருணாநிதி அடுத்த முதல்வராகப் பதவியேற்றார். “ஆதிக்கமற்றச் சமுதாயம் அமைத்தேத் தீருவோம்,” “ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்” என்றெல்லாம் மேம்போக்கான முழக்கங்களை முன்வைத்த தி.மு.க., “முன்னேற்றம்” குறித்த ஆழமான தத்துவார்த்தப் பார்வையோ, அரசியல் பொருளாதாரப் புரிதலோ, சுற்றுச்சூழல் விழிப்புணர்வோ கொண்டிருக்கவில்லை. கலைஞரின் அரசு நலிவுற்ற, பிற்படுத்தப்பட்ட மக்களின் நலனுக்காக பல திட்டங்களை நிறைவேற்றியது. குடிசை மாற்று வாரியம், பிச்சைக்காரர் மற்றும் தொழுநோயாளர் மறுவாழ்வு இல்லங்கள், கருணை இல்லங்கள், கண்ணொளி வழங்கும் திட்டம், பண்டிகை நாட்களில் ஏழைகளுக்கு இலவச அரிசி மற்றும் ஆடைகள், விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், கை ரிக்சாக்களை ஒழித்து, இலவச சைக்கிள் ரிக்சாக்கள் வழங்கியது, ஊனமுற்றோர் மறுவாழ்வுத் திட்டம், பெண்களுக்குச் சொத்துரிமை, மகளிர் இலவச பட்டப்படிப்பு திட்டம், ஏழைப் பெண்கள் திருமண உதவித்திட்டம், ஆதிதிராவிடர்களுக்கு இலவச வீடுகள், மாநில திட்டக்குழு அமைப்பு என பல நடவடிக்கைகளைக் குறிப்பிடலாம். சமூகநீதி, இட ஒதுக்கீடு போன்ற விடயங்களிலும் பெரும் பங்களிப்பினைச் செய்தார் கலைஞர். தமிழினத்தின் பழைய சிறப்புக்களை நினைவுகூறும் வகையிலும், தமிழ் மொழிக்காக பாடுபட்ட பெரியோர்களின் சேவைகளை நிலைநிறுத்தும் விதத்திலும் பூம்புகார் கலைக்கூடம், வள்ளுவர் கோட்டம், கட்டபொம்மன் கோட்டை, நினைவில்லங்கள் போன்றவற்றை உருவாக்கினார். இராஜாஜியின் குலக்கல்வித் திட்டத்தை எதிர்த்தது, தமிழர்களை `முட்டாள்கள்’ என்று நிந்தித்த நேருவைக் கண்டித்தது, டால்மியாபுரம் தொடர் வண்டி நிலையத்தின் பெயரை ‘கல்லக்குடி’ என்று மாற்றியது போன்ற உணர்ச்சி அரசியலும் மேலோங்கி நின்றது. மக்களின் உணர்வுகளைத் தூண்டி வழிநடத்தும் குறியீட்டு அரசியலும், கல்வி, வேலை வாய்ப்புக்களில் சலுகைகளைப் பெற்றுத் தருவதும் மட்டுமே பொருளாதார வளர்ச்சிக்கு வழிகோல முடியாது. அனைத்துத் தரப்பு மக்களும் தங்களின் சமூக நிலையை உயர்த்திக் கொள்வதற்கும், பொருளாதார மேம்பாட்டினை அடைவதற்கும், அரசியல் அதிகாரம் பெறுவதற்கும் தத்துவார்த்த அடிப்படையும், நீண்டகால அரசியல் செயல் திட்டங்களும், தெளிவானப் பொருளாதார நடவடிக்கைகளும் வேண்டும். கட்சிக்காரர்கள் தம்மையும், தம்மைச் சார்ந்தோரையும் “முன்னேற்றிக் கொள்ள” அனுமதிப்பதன் மூலம் தான், அவர்களின் தொடர்ந்த ஆதரவைப் பெற முடியும் என்ற அடிப்படையில் லஞ்சமும், ஊழலும், ஊதாரித்தனமும் முன்னேற்றத்தின் அங்கங்களாக ஏற்றுக் கொள்ளப்பட்டன. பின்னர் ஆட்சியைக் கைப்பற்றிய எம்.ஜி.ஆர். “முன்னேற்றம்” குறித்த மேம்போக்கானப் பார்வை கொண்டவராகவே இருந்தார். ‘அண்ணாயிசம்’ எனும் யாருமறியா தத்துவத்தின் வழியாகவும், சினிமாப் பாடல்கள் மற்றும் வசனங்கள் மூலமாகவுமே முன்னேற்றம் மட்டுமல்ல, நல்வாழ்க்கையும்கூட அறியப்பட்டது. வறுமையிலிருந்தும், ஏழ்மையிலிருந்தும் குழந்தைகளை மீட்டு, பள்ளிக்குச் செல்ல வைக்க பெருந் தலைவர் காமராசர் இலவச மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டு வந்தார். முதல்வர் எம்.ஜி.ஆர். அதனை சத்துணவுத் திட்டம் என்று பெயர் மாற்றி, முட்டையும் சேர்த்துக் கொடுத்தார். கூடவே மக்களுக்கு இலவசக் காலணியும், பல்பொடியும் கொடுத்தார். மீண்டும் ஆட்சிக்கு வந்த கலைஞர் இலவச கலர் டி.வி. கொடுத்தார். அடுத்து வந்த முதல்வர் ஜெயலலிதா பொங்கல் கொண்டாடுவதற்கு இலவச அரிசியும், பருப்பும், சர்க்கரையும் கொடுத்தார். ஆடு, மிக்சி, கிரைண்டர், மின்விசிறி, மிதிவண்டி, மடிக்கணினி என தமிழகத்தில் “முன்னேற்றம்’ தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. தற்போதைய முதல்வர் ஸ்டாலின் பள்ளிக் குழந்தைகளுக்கு காலையுணவையும் சேர்த்து வழங்குகிறார். ஐம்பதாண்டு காலம் கடந்த “திராவிட முன்னேற்றக்” கட்சிகளின் ஆட்சிக்குப் பிறகு, அந்தத் திட்டம் கைவிடப்பட வேண்டிய நிலைமையை அவர்களால் உருவாக்க முடியவில்லை. விவசாய மேம்பாடோ, தொழில் வளர்ச்சியோ, உற்பத்திப் பெருக்கமோ, வேலை வாய்ப்புக்களோ, வருமான உயர்வோ, மக்களின் வாங்கும் திறன் அதிகரிப்போ எதுவும் பெருமளவில் நடக்கவில்லை. மாறாக, இலவசங்கள் வழங்குவது, கமிஷன் பெறுவது, இயற்கை வளங்களைச் சுரண்டிக் கொழுப்பது, மக்களின் வாக்குக்களை விலைக்கு வாங்குவது என “திராவிட முன்னேற்றத்தின்” நிலைமை தொடர்ந்து மோசமாகிக் கொண்டிருக்கிறது. சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு, கூடங்குளம் மற்றும் கல்பாக்கம் அணுமின் நிலையங்கள், அனல்மின் நிலையங்கள், மீத்தேன் எரிவாயுத் திட்டம் போன்ற திட்டங்களில் எல்லாம் ஒன்றிய அரசின் நிலைப்பாட்டை பெரிய “திராவிட முன்னேற்றக்” கட்சிகள் அப்படியே ஏற்றுக் கொண்டன. வைகோ அவர்கள் வழிநடத்தும் ம.தி.மு.க. மட்டுமே இவற்றை எதிர்த்தது. காவிரி டெல்டா பகுதியில் கடந்த 30 ஆண்டுகளாகத் தொடர்ந்து நடைபெற்ற ஹைட்ரோகார்பன் கண்டுபிடிப்புச் சோதனைகள் தான் அண்மை அவலத்துக்கு அடித்தளமாக அமைந்தன. இந்த கால கட்டத்தில் இரண்டு “முன்னேற்றக்” கழகங்களும் தான் மாறி, மாறி ஆட்சியில் இருந்தன என்பது கவனிக்கப்பட வேண்டிய விடயம். கடந்த ஐம்பதாண்டுகளாக இரண்டு பெரிய திராவிட முன்னேற்றக் கழகங்களின் முன்னேற்றம், வளர்ச்சி, நல்வாழ்வு பற்றிய புரிதலை அவதானித்தால் இந்த சொலவடை தான் நினைவுக்கு வருகிறது. “குங்குமம் என்பதை நானறிவேன், அது மஞ்சள் போல வெண்மையாய் இருக்கும்!”. அதாவது, புரியாத ஒன்றை புரிந்தது போல பாவனை செய்வது! எதிர்க் கட்சியாக இருக்கும் போது ஒரு நிலைப்பாடும், ஆளும் கட்சியாக இயங்கும் போது அதற்கு நேரெதிர் நிலைப்பாடும் என்பதே திராவிட முன்னேற்ற கழகத்தின் வழிமுறையாக தொன்று தொட்டு இருந்து வருகிறது. சேலம்-சென்னை எட்டு வழிச்சாலைத் திட்டம் ஓர் அண்மைய எடுத்துக்காட்டு. கடந்த 2021-ஆம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பேற்ற முதல்வர் மு. க. ஸ்டாலின் கைக்கொள்ளும் ‘முன்னேற்றம்’ குறித்த நிலைப்பாடு ஊன்றி கவனிக்கத்தக்கது. உள்ளூர் எதிர்ப்புகளால் ஹைட்ரோகார்பன், நியூட்ரினோ, கெயில் குழாய் பதிப்பு, ஸ்டெர்லைட் போன்ற பல்வேறுத் திட்டங்களை அவர் எதிர்த்தாலும், பரந்தூர் விமான நிலையம், மேல்மா சிப்காட் விரிவாக்கம் போன்ற பல திட்டங்களை மக்களின் எதிர்ப்புகளை நசுக்கி, கடுமையாக நின்று அமல்படுத்த முயற்சிக்கிறார். வெளிநாட்டு மூலதனத்தைக் கவரும் முயற்சிகளும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்குக் கட்டியம் கூறி வரவேற்கும் செயல்பாடுகளும், ‘ஸ்டாலினின் முன்னேற்றம் புதிய கோணத்தில் அணுகப்படவில்லை’ என்பதைத் தெளிவாக்குகின்றன. நாடெங்கும் கனிம வளக் கொள்ளை பரவலாக நடந்து கொண்டிருக்கிறது. ஐம்பது-அறுபது ஆண்டு கால திராவிடக் கட்சிகளின் ஆட்சிக்குப் பிறகு, இன்றைய தமிழ்நாட்டின் பரந்துபட்ட நிலைமையை ஒரு தேர்ந்த தலைப்போடு விவரிக்க வேண்டுமென்றால், இப்படிச் சொல்வது தான் சரியாக இருக்கும்: “திராவிடப் பேரரசும், திளைத்து வாழும் சிற்றரசர்களும்!” (கட்டுரையாளர்; சுப. உதயகுமாரன் அணுசக்திக்கு எதிரான மற்றும் பசுமை அரசியல் செயல்பாட்டாளர்.) https://aramonline.in/18518/analysis-of-dravidian-parties/
  12. தேர்தல் நடக்கவேண்டும் ஆனால் புறக்கணிப்போம்; முன்னணியின் ஆசை! தேர்தல் நடந்தே ஆகவேண்டும். அதை நாம் புறக்கணிக்கவும் வேண்டும். எங்களுடைய வாக்குகள் உங்களுக்குத் தேவையெனில் எங்களுடைய கோரிக்கைகளை ஏற்கவேண்டும் என்பது எமது அணுகுமுறையாக இருக்கின்றது- இவ்வாறு தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது: சிங்களச் சமூகத்துடன் சேர்ந்து இந்நாட்டை கட்டியெழுப்பத் தயாராக இருக்கின்றோம். அது நடைபெற வேண்டுமெனில் ஒற்றையாட்சி முறைமை ஒழிக்கப்பட்டு எங்களுடைய தேசம், இறைமை, சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட்ட அடிப்படையில் ஒரு சமஷ்டி அரசமைப்பு கொண்டுவரப்படவேண்டும். தமிழ் மக்களுள் பெரும்பாலானவர்கள் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் வெறுப்படைந்துள்ளனர். வடக்கு, கிழக்கில் உள்ள அரசியல் கட்சிகளையும், சிவில் அமைப்புகளையும் வைத்துக்கொண்டு பொதுவேட்பாளர் என்ற ஒரு சதி அரங்கேற்றப்படுகின்றது. தமிழர்கள் பகிஷ்கரிப்பு என்ற ஓர் ஆயுதத்தை கையில் எடுக்கக்கூடாது என்ற தேவைப்பாடு ரணில், சஜித், அநுரகுமார ஆகியோருக்கு உள்ளது. அதை தோற்கடிக்கவே பொதுவேட்பாளர் நாடகம் அரங்கேற்றப்படுகிறது - என்றார். (ச) https://newuthayan.com/article/தேர்தல்_நடக்கவேண்டும்_ஆனால்_புறக்கணிப்போம்;_முன்னணியின்_ஆசை!
  13. தம்பாப்பிள்ளை மகேஸ்வரன் July 23, 2024 — கருணாகரன் — ஈழவிடுதலைப் போராட்ட இயக்கங்களில் ஒன்றான தமிழீழ இராணுவத்தின் (Tamil Eeelam Army) தலைவர் திரு. தம்பாப்பிள்ளை மகேஸ்வரன் (பனாகொடை மகேஸ்வரன் அல்லது தம்பா என்றுஅழைக்கப்பட்ட தம்பாப்பிள்ளை மகேஸ்வரன்) யாழ்ப்பாணத்தில் மாரடைப்பினால் காலமாகி விட்டார். ஈழவிடுதலைப் போராட்டத்தின் ஒரு காலகட்ட வரலாற்று நாயகன் மகேஸ்வரன். யாழ்ப்பாணம் – புங்குடுதீவைச் சேர்ந்த தம்பாப்பிள்ளை – செங்கமலம் இணையரின் மகனே மகேஸ்வரன். தந்தையார் தம்பாப்பிள்ளை கொழும்பு – மருதானையில் அப்போது பிரபலமாக இருந்த “தவளகிரி” ஹோட்டலின் உரிமையாளராவார். யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் படித்த மகேஸ்வரன், மிகத் திறமையான மாணவராகப் பாடசாலையில் விளங்கினார். திறமைச் சித்தியைப் பெற்ற மகேஸ்வரன், மேற்படிப்புக்காக 1970 களின் நடுப்பகுதியில் லண்டனுக்குச் சென்றார். 1979 இல் லண்டனில் உயர் கல்வியை (Engineering) இடைநிறுத்தி தேச விடுதலைக்காக தாயகம் நோக்கி திரும்பிய மிகச்சிலரில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. தாயத்துக்குத் திரும்பிய மகேஸ்வரன், தமிழர்களுக்காக ஒருவிடுதலைத் தேசம் அமையவேண்டும் என்று விரும்பி, தமிழீழ இராணுவம் என்ற அமைப்பை (Tamil Eelam Army) உருவாக்கிச் செயற்பட்டார். அது அப்பொழுது பிரபலமாக இருந்த இயக்கங்களில் ஒன்றாகும். திருகோணமலை மாவட்டத்தின் வங்கிக் கொள்ளை முயற்சி ஒன்றில் குற்றம்சாட்டப்பட்டார் மகேஸ்வரன். இதனால் தேடப்பட்ட மகேஸ்வரன் கைது செய்யப்பட்டு, மிகக் கூடிய பாதுகாப்பு ஏற்பாடுகளோடிருந்த பனாகொட இராணுவத் தடுப்பு முகாமில் சிறை வைக்கப்பட்டிருந்தார். அப்படிச் சிறைவைக்கப்பட்ட மகேஸ்வரன், அங்கிருந்து தப்பினார். சிறைக் கம்பியை மெதுவாக அறுத்து, அதை வெளியே தெரியாதவாறு சுவிங்கத்தினால் ஒட்டி வைத்த மகேஸ்வரன், சந்தர்ப்பம் பார்த்துத் தப்பிச் சென்றார். இது அரசுத் தரப்புக்கு பேரதிர்ச்சியைக் கொடுத்திருந்தது. அதேவேளை இது விடுதலைப் போராளி ஒருவரின் வீரம் நிறைந்த சாகஸச் செயலாக அப்போது தமிழ்ப்பரப்பில் பேசப்பட்டது. போராளிகளுக்கு பாரிய மிரட்டலாக, கொடூரமான சிறைக்கூடமாகத் திகழ்ந்த பனாகொடை சிறைச்சாலையிலிருந்து சாதுரியமாகத் தப்பித்த சாதனையால், அவர் “பனாகொடை மகேஸ்வரன்” என்று பின்னாளில் போராளிகளாலும் மக்களாலும் பெருமையுடன் அழைக்கப்பட்டு, மக்கள் மத்தியில் பிரபலம் பெற்றார். ஆனாலும் தலைமறைவாகக் கொழும்பில் இருந்த வேளையில் கைது செய்யப்பட்ட மகேஸ்வரன் வெலிக்கடைச் சிறையில் மீண்டும் அடைக்கப்பட்டார். 1983 இல் வெலிக்கடைச் சிறையில் இலங்கை அரசின் அனுசரணையுடன் சிங்களச் சிறைக் கைதிகளான வன்முறையாளர்கள் மேற்கொண்ட காட்டு மிராண்டித்தனமான தாக்குதலை எதிர்த்து நின்று போராடி உயிர் தப்பினார். (அந்தக் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை நேரிற் கண்ட உளத் தாக்கத்திலிருந்து – உளப் பாதிப்பிலிருந்து இறுதி வரையில் மீள முடியாமலிருந்தார் மகேஸ்வரன். அந்தச் சம்பவத்தைப் பற்றிப் பேசினால் அவர் பதட்டமடைந்து சமனிலை குலையும் நிலையிலிருந்தார்). வெலிக்கடைச் சிறைச்சாலையிலிருந்து மட்டக்களப்புச் சிறைச் சாலைக்கு ஏனைய தமிழ் அரசியற் கைதிகளோடு மாற்றப்பட்ட மகேஸ்வரன், 1983 செப்ரெம்பரில் மேற்கொள்ளப்பட்ட வரலாற்றுப் புகழ் மிக்க மட்டக்களப்புச் சிறையுடைப்பின் மூலம் மறுபடியும் தப்பினார். இந்தச் சிறையுடைப்பில் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் (முன்னர் ஈ.பி.ஆர்.எல்.எவ்வின் இராணுவத்தளபதி) டக்ளஸ் தேவானந்தா, முன்னாள் வடக்கு கிழக்கு மாகாணசபையின் முதலமைச்சர் வரதராஜப்பெருமாள், சின்னவன், புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த பரமதேவா, ஆதரவாளர்களான நிர்மலா, நித்தியானந்தன், மருத்துவர் ஜெயகுலராஜா, ஈரோஸ் இயக்கத்தைச் சேர்ந்த அழகிரி மற்றும் காந்தியத்தைச் சேர்ந்த டேவிட் ஐயா உட்படப் பலர் தப்பித்திருந்தனர். தம்பாப்பிள்ளை மகேஸ்வரன் தப்பியதை அடுத்து தமிழீழ இராணுவத்தின் செயற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டன. இந்தக் காலப்பகுதியில் தமிழீழ இராணுவத்தை மக்கள் மகேஸ்வரனின் தந்தையின் பெயரைச் சுருக்கி “தம்பா இயக்கம்” எனவும் அழைக்கத் தொடங்கினர். இதற்கான நிதித் தேவைக்காக காத்தான்குடி வங்கிக் கொள்ளை, தமிழீழ இராணுவத்தினால் நடத்தப்பட்டது. இதில் ஏறக்குறைய அன்றைய பெறுமதியில் ஆறு கோடி பணமும் நகையும் மகேஸ்வரன் தலைமையிலான தமிழீழ இராணுவத்தினால் கைப்பற்றப்பட்டது. ஏறக்குறைய இதே காலப்பகுதியில் இயக்கத்தின் வளர்ச்சிக்காக அதிர்ஸ்டலாபச் சீட்டை விற்பனை செய்து நிதிச் சேகரிப்பில் தமிழீழ இராணுவத்தினர் ஈடுபட்டனர். இதற்குரிய முதற்பரிசாக கார் ஒன்று வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. மிகக் கூர்மையான மதிநுட்பம் வாய்ந்த மகேஸ்வரனைப் பலரும் தனி மனித இராணுவமாகவே (One Man Army) கருதினர். பல விதமான அதிரடிச் செயற்பாடுகளால் சாகஸ நாயகனாக விளங்கினார் மகேஸ்வரன். குறிப்பாக ஆளணி குறைவாக இருந்த போராட்ட அமைப்பில் இருந்துகொண்டு அவ்வப்போது அவர் நிகழ்த்திய போராட்டகால நடவடிக்கைகள், ஒரு காலத்திற் பெரும் சாகசங்களாகப் பார்க்கப்பட்டன. அரசியற் சித்தாந்தத்தின் அடிப்படையில் போராட்ட அமைப்பைக் கட்டியெழுப்புவதற்குப் பதிலாக இராணுவ சாகஸங்களால் அதைக் கட்டியெழுப்ப முற்படுகிறார் தம்பாப்பிள்ளை மகேஸ்வரன் என்ற விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. தமிழீழ இராணுவத்தைப் பற்றிய வரலாற்றின் மதிப்பீடும் ஏறக்குறைய இதுவாகவே இருக்கிறது. ஆனாலும் ஈழப்போராட்டத்தில் ஈடுபட்ட இயக்கங்களில் பலவும் விரும்பியோ விரும்பாமலோ பலவும் இராணுவ சாகஸத்திலும் இராணுவ வாதத்திலும் திளைத்தவைதான். விடுதலைப் போராட்டம் என்பது சாகசங்களாலும் ஆயுதப் பிரயோகங்களாலும் இராணுவவாதங்களாலும் மட்டும் வெற்றிகரமாக வளர்ச்சியடைந்து விடுவதில்லை. இதனால்தான் இன்று ஈழப்போராட்டம் எந்த வெற்றியையும் பெற்றுத் தர முடியாமல் போனது மட்டுமல்ல, அடுத்த கட்ட அரசியலைக் கூடத் தீர்மானிக்க முடியாத கையறு நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. மேலும் தமிழீழ இராணும் என்ற இந்த இயக்கமானது, 1984 இல் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தாக்குதல் ஒன்றை நடத்தத் திட்டமிட்டிருந்தது. இதற்காக சென்னை மீனம்பாக்க விமான நிலையத்தில் வெடிகுண்டைப் பொருத்தி, கட்டுநாயக்காவில் வெடிக்க வைப்பதற்குத் திட்டமிட்டது. ஆனாலும் அதற்கு முன்பே அந்தக் குண்டு மீனம்பாக்கம் விமான நிலையத்திலேயே வெடித்து விட்டது. இதன்போது 24 பேர் வரையில் கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவம் இலங்கை – இந்தியப் பரப்பில் பெரும் அதிர்ச்சியைக் கொடுத்திருந்தது. முக்கியமாகப் பொது மக்களின் இழப்பும் சிவில் விமான நிலையமொன்றில் மேற்கொள்ளப்பட்ட குண்டு வெடிப்பும் தமிழீழ இராணுவத்தின் மீது பெரும் குற்றமாக விழுந்தது. இதனால் மகேஸ்வரன் மீண்டும் தேடப்பட்டு, கைது செய்யப்பட்டார். இவ்வாறு கைது செய்யப்பட்ட மகேஸ்வரன் தமிழ் நாட்டில் புழல், செங்கல்பட்டு சிறைகளில் ஏறக்குறைய பத்து ஆண்டுகளுக்கு மேல் சிறைவைக்கப்பட்டிருந்தார். இதன்போது மகேஸ்வரனுக்குப் பல்வேறு தரப்பினரோடும் அறிமுகமும் உறவும் ஏற்பட்டது. இந்தக் காலகட்டத்தில் அவர் பல விதமான நூல்களையும் படிக்கத் தொடங்கினார். பின்னர் அங்கிருந்து விடுதலையாகி ஆபிரிக்காவுக்குச் சென்ற மகேஸ்வரன், வேறு சம்பவங்களின் பின்னணியினால் தான்சானியாவில் மீண்டும் சிறைவாசம் புரிய வேண்டியிருந்தது. ஆனாலும் அந்தச் சூழலையும் தன்னுடைய அறிவு மேம்பாட்டுக்கான படித்தலிலேயே கழித்தார். இவ்வாறு தன்னுடைய வாழ்க்கையில் மிக நீண்ட காலத்தைச் சிறைகளில் கழித்த மகேஸ்வரன், 2010 இல் இலங்கைக்குத் திரும்பியிருந்தார். பல்மொழிகளில் பேசக் கூடிய ஆற்றலைப் பெற்றிருந்த மகேஸ்வரன், உலக அரசியல், பொருளாதார, பண்பாட்டு விடயங்களில் ஆழமான அறிவைக் கொண்டிருந்தார். மிகப் பெரிய தகவற் களஞ்சியம் என்று சொல்லக் கூடிய அளவுக்கு அவருடைய அறிவாற்றல் பின்னாளில் விளங்கியது. ஆனாலும் அதனை ஈழத்தமிழ்ச் சமூகம் பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கவில்லை. அவரும் அரசியலில் இருந்து ஒதுங்கியே இருக்க விரும்பினார். ஒளிப்பதிவாளர் அமரதாஸ் குறிப்பிடுவதைப்போல “போராட்டச் செயற்பாடுகளில் இருந்து ஒதுங்கி எளிமையாக வாழ்ந்த மகேஸ்வரன், மாற்றுக்கருத்துகளைக் கொண்டிருப்பவர்களோடும் உரையாடக்கூடிய பக்குவத்தோடிருந்தார். தனது போராட்டகால அனுபவங்களையும் பல்வேறு சிறைகளில் இருந்த அனுபவங்களையும் அவர் விரிவாகப் பதிவுசெய்திருக்க வேண்டும். அது நடக்கவில்லை என்பது வருத்தத்திற்குரியது. மிகச்சில சந்தர்ப்பங்களில் உரையாட முடிந்திருந்தாலும் அவரைப் பற்றி முழுமையாகத் தெரிந்துகொள்ள முடியவில்லை” என்பது வருத்தத்திற்குரியதே. ஈழவிடுதலை போராட்ட வரலாற்றில் மகேஸ்வரனின் பெயரும் தீவிரமும் முக்கியமானவை. ஆம், ஈழத் தமிழர்களின் One Man Army யை இழந்து விட்டோம். ஒரு மூத்த போராளியாக, ஈழவிடுதலைப் போராட்ட இயக்கத் தலைவர்களில் மிஞ்சியிருந்த ஒருவராக இருந்த மகேஸ்வரனும் விடைபெற்று விட்டார். ஈழ விடுதலைப் போராட்ட வரலாறு தன்னுடைய இறுதித் தலைவரையும் இழந்து விட்டது. இறுதி நாட்களில் மிக எளிமையாக யாழ்ப்பாணத்தில் வாழ்ந்து வந்த மகேஸ்வரன், வாழைகளுக்கு நீர் பாய்ச்சிக்கொண்டிருக்கும் வேளையில் மாரடைப்பினால் இயற்கை எய்தியிருக்கிறார். வரலாறுதான் எத்தனை வேடிக்கையானது. மகேஸ்வரனுக்கு அஞ்சலி. https://arangamnews.com/?p=11023
  14. ஈழத் தமிழர்களுக்காக ஓங்கி ஒலித்த குரல் ஓய்ந்தது! உண்மையை உரக்கக் கூறிய விக்கிரமபாகு கருணாரத்ன!! …. ஐங்கரன் விக்கினேஸ்வரா. (உண்மையை எப்போதும் உரக்கக் கூறிய நவ சமசமாஜ கட்சியின் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ன தனது 81ம் வயதில் காலமானார். கடந்த 2010ம் ஆண்டில் கருணாரட்ன ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டுருந்தார். விக்ரமபாகு கருணாரட்ன தமிழ் மக்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டைக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது) வந்தேறிகளான தமிழர்கள் வடக்குக்கு எப்படி உரிமை கோருவது என எல்லாவல மேத்தானந்த தேரோ 2012ஆம் ஆண்டு கடும் இனவாதத்தோடு கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதிலளித்த நவ சமசமாஜ கட்சியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரத்ன தேரருக்கு சவால் விடுத்தார். அதாவது ”இலங்கைத் தீவு தமிழர்களுக்குரிய தேசம் என்பதை உரிய ஆதாரங்களுடன் நிரூபித்துக் காட்டுவேன். முதுகெலும்பிருந்தால் தேரர் விவாதத்துக்கு வரத் தயாரா?” என வெளிப்படையாகவே அவர் சவால் விடுத்திருந்தார். ஈழ தமிழர்களுக்கு ஆதரவாக ஒலித்த குரல் இன்று மறைந்தது. சிங்கள பேரினவாத தலைமைகளுக்கு மத்தியில், ஒட்டுமொத்த தமிழினத்துக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்ட இன பிரச்சினைக்களுக்கும் அரசியல் ரீதியான பிரச்சினைகளுக்கும் தனித்து நின்று குரல் கொடுத்தவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன. சிங்கள இனத்தவராக இருந்தாலும் அவருடைய மறைவு தமிழ் மக்களுக்கு ஓர் பேரிழப்பாகவே அமையும். ஈழத் தமிழரின் விடுதலையையும், உரிமைகளையும் சிங்கள மக்கள் அறியும்படி செய்த பெரும் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன அவர்களாவார். தொல்பொருள் தொடர்பான ஜனாதிபதி செயலணியின் நோக்கம் தொல்பொருட்களை பாதுகாப்பதே தவிர முரண்பாடுகளை தோற்றுவிப்பது அல்ல எனவும், இது தொடர்பில் செயலணியின் உறுப்பினர்களின் செயற்பாடுகள் குறித்து ஜனாதிபதியிடம் தனிப்பட்ட முறையில் அவர் முறையிட்டிருந்தார். ஒரு பிரதேசத்தில் எந்த இனத்தவர்கள் அதிகளவில் வாழ்கின்றார்களோ அங்கு அந்த இனமே பெரும்பான்மையினமாக கருதப்படும். தெற்கில் சிங்களவர்கள் அதிகமாக வாழ்கின்றமையினால் அம்மாகாணம் பெரும்பான்மை இனத்தவர்கள் உரிமைக் கொண்டாடுகிறார்கள் அதேபோல தான் வடக்கு மற்றும் கிழக்கிலும். வடக்கில் தமிழ் மக்கள் வரலாற்று காலம் தொடக்கம் வாழ்ந்துள்ளமைக்கான ஆதாரங்கள் மத தலங்களின் ஊடாகவும், மத வழிப்பாடுகளுடனும் உறுதிப் படுத்தப்பட்டுள்ளன.இவ்வாறான தன்மையே கிழக்கிலும் காணப்படுகிறது. இலங்கை பல்லின சமூகம் வாழும் நாடு அனைத்து இன மக்களின் உரிமை மற்றும் கலாசாரங்கள் பாதுகாக்கப்பட வேண்டும். தமிழ் மக்களின் பூர்வீகம் வடக்கு மற்றும் கிழக்கு என்பது அனைவரும் அறிந்த விடயமே என கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன தெரிவித்திருந்தார். நீண்டகாலமக சிங்கள பேரினவாத அரசாங்கத்தின் பல தவறான செயற்பாடுகளை பகிரங்கமாக சுட்டிக்காட்டியதுடன் அவற்றிற்கு எதிராகவும் போராடினார். அத்துடன் சிங்கள அரசு தமிழ் மக்களுக்கு இழைத்த அநீதிகளை உலகறிய செய்ததில் இவருக்கும் ஒரு பாரிய பங்குண்டு. ஈழப்போர் மௌனிக்கப்பட்ட 2009 இன் பின்னர் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணம் தமிழர்களின் பூர்வீக பிரதேசம் அல்ல என தொல்பொருள் தொடர்பான ஜனாதிபதி செயலணியின் உறுப்பினர் எல்லாவல மேதானந்த தேரர் குறிப்பிட்டுள்ள கருத்தை சிங்கள அரசும் பறைசாற்றி வந்தது. இது முற்றிலும் தவறானது என கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன தெரிவித்திருந்தார். அவரின் மறைவின் பின்னரும் இலங்கையின் யதார்த்த அரசியலையும் ஆளுமையையும் அவர் வரலாற்றில் பதிவு செய்துள்ளார். https://akkinikkunchu.com/?p=285324
  15. யாழ்ப்பாண சர்வதேச புத்தகத் திருவிழா - 2024 ! யாழ்ப்பாண வர்த்தக தொழில்த்துறை மன்றத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாண கலாச்சார மண்டபத்தில் எதிர்வரும் 09ஆம் திகதி முதல் 11 ஆம் திகதி வரையில் மூன்று நாட்கள் தொடர்ந்து நடைபெறவுள்ளது என நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். இலங்கையிலிருந்து மட்டுமல்லாமல் பல்வேறு நாடுகளில் இருந்தும் பல்வேறுபட்ட புத்தக விற்பனை நிறுவனங்கள் மற்றும் வெளியீட்டகங்களின் புத்தகங்கள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்படவுள்ளது. நாம் நமது உடலுக்கு உடற்பயிற்சி செய்வது போல, வாசிப்பு என்பது நம் மனதுக்கும் புத்திக்கும் ஒரு புத்துணர்ச்சி அளிக்கக்கூடியது. அதிவேகமாக வளர்ந்து வரும் தொழில்நுட்ப இந்த உலகில் நமது சமூகத்தில் வாசிப்பு கலாச்சாரத்தை மீட்டெடுக்க வேண்டிய தேவை நமக்கு உள்ளது. அந்த வகையில் மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்களிடம் வாசிப்பைமேம்படுத்தும் பொருட்டு அவர்களுக்கு தேவையான புத்தகங்களை அவர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டிய கடமைப்பாடு எமக்கு உண்டு. உள்நாட்டிலும், தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் ஆர்வமும் பங்குகொள்ள விருப்பமும் உள்ள புத்தக வெளியீட்டாளர்கள் மற்றும் விற்பனையாளர்களை ஒன்றிணைத்து இந்தப் புத்தகத் திருவிழாவை நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. ஒவ்வொரு வருடமும் பல புத்தகக் கண்காட்சிகள் நடக்கின்றன ஆனால் யாழ்ப்பாணத்தில், உள்ளூர் மற்றும் சர்வதேச எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையில் யாழ்ப்பாண வர்த்தகத் தொழிற்துறை மன்றமானது இந்த புத்தக கண்காட்சியை ஏற்பாடு செய்துள்ளது. இக் கண்காட்சியின் மூலம் வடமாகாணத்தை சேர்ந்த நூலகங்கள் , சனசமூக நிலையங்களுக்கும் இந்த புத்தகத் திருவிழா நல்லதொரு வாய்ப்பாக அமையும் என நாம் கருதுகிறோம். பாடசாலைகள் கூட தமது நூலகங்களுக்கு தேவையான புத்தகங்களை இந்த புத்தக திருவிழாவில் பெற்றுக்கொள்ள முடியும். புத்தக திருவிழா இடம்பெறும் தினங்களில் புத்தக வெளியீடுகள், அறிமுக நிகழ்வுகள் மற்றும் கலை கலாசார நிகழ்வுகள் என்பவற்றுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வடமாகாணத்தை சேர்ந்த அனைத்து மக்களும் இந்த நிகழ்வில் பங்குபற்ற கூடியவாறு அமையப்பெற்றுள்ளது. இக் கண்காட்சி முற்றிலும் இலவசமாக பார்வையிட முடியும். 40 காட்சி கூடங்கள் அமைக்கப்படும். அவற்றில் உள்ளூர் வெளியூர் எழுத்தாளர்களின் புத்தகங்களை காட்சிப்படுத்தவுள்ளோம் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்னர். குறித்த ஊடக சந்திப்பில் யாழ்ப்பாண வர்த்தக தொழில்த்துறை மன்றத்தின் நிறைவேற்று இயக்குனர் கு. விக்னேஷ் , வர்த்தக தொழில்த்துறை மன்ற தலைவர் கலாநிதி வாசுதேவன் ராசையா மற்றும் உப தலைவர் கலாநிதி செல்லத்துரை திருமாறன் ஆகியோர் கலந்து கொண்டனர். ( https://newuthayan.com/article/யாழ்ப்பாண_சர்வதேச_புத்தகத்_திருவிழா_-_2024_!
  16. ஜனாதிபதித் தேர்தல் எப்போது? – இறுதி முடிவு இன்று! ஜனாதிபதி தேர்தல் திகதி மற்றும் வேட்புமனுக்களை கோரும் திகதி தொடர்பில் இறுதி தீர்மானம் எடுப்பதற்காக தேர்தல்கள் ஆணைக்குழு இன்று (25) கூடவுள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தலைமையில் இன்று காலை தேர்தல்கள் ஆணைக்குழு கூட்டம் நடைபெறவுள்ளது. அடுத்த ஜனாதிபதி தேர்தல் திகதி தொடர்பில் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு இடையில் இறுதி இணக்கப்பாடு எட்டப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதி தேர்தல் திகதி இந்த வார இறுதிக்குள் அறிவிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நேற்று (24) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார். ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கான பூர்வாங்க பணிகள் ஏற்கனவே நிறைவடைந்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளது. http://www.samakalam.com/ஜனாதிபதித்-தேர்தல்-எப்போ/
  17. தமிழ் மக்களுக்காக குரல் கொடுத்த கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன காலமானார் நவ சமசமாஜ கட்சியின் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ன தனது 81ம் வயதில் காலமானார். கடந்த 2010ம் ஆண்டில் கருணாரட்ன ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டுருந்தார். விக்ரமபாகு கருணாரட்ன தமிழ் மக்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டைக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் மக்களின் உரிமை கடந்த காலங்களில் தமிழ் மக்களின் உரிமைகளுக்காக கொழும்பில் போராட்டங்களை முன்னெடுத்திருந்தார். 1977ம் ஆண்டில் விக்ரமபாகு கருணாரட்ன நவ சமசமாஜ கட்சியில் இணைந்து கொண்டிருந்தார். நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார உள்ளிட்ட பல்வேறு இடதுசாரி கட்சித் தலைவர்களுடன் கடந்த காலங்களில் நெருக்கமான தொடர்புகளை பேணியிருந்தார். இலங்கை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பட்டதாரியான கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ன, கேம்றிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் கலாநிதி பட்டம் பெற்றுக் கொண்டார். அவர், 18 ஆண்டுகளாக பேராதனை பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக கடமையாற்றியுள்ளார். நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமைக்கு எதிராக குரல் கொடுத்த காரணத்தினால் அவர் தனது தொழிலை இழக்க நேரிட்டது. இனங்களுக்கு சுய நிர்ணய உரிமை வழங்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ன தமிழ் மக்களின் உரிமைகளுக்காக தொடர்ச்சியாக குரல் கொடுத்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. https://tamilwin.com/article/vikrmabahu-paassed-away-1721874586
  18. “தோல்வியுற்ற தலைவர்” எனஇரா.சம்பந்தனை நிந்திப்பது நியாயமா? July 21, 2024 -– நியூசிலாந்து சிற்சபேசன் — திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் தலைவருமான இரா சம்பந்தன் அவர்களுடைய மறைவு சொல்லிக்கொள்ளக்கூடிய அதிர்வுகளைத் தமிழ் பொதுவெளியில் ஏற்படுத்தவில்லை. அன்னாருடைய பூதவுடல் அக்கினியில் சங்கமாக முன்னரே, அவருடைய மறைவு குறித்த பிரக்ஞை காணாமல்போய்விட்டது. ஏன் இந்த நிலை? என்ற கேள்வியை எளிதில் கடந்துபோகமுடியவில்லை. தன்னந்தனியனாகவும் தன்னிச்சைப்படியுமே இரா சம்பந்தன் இயங்கிவராகும். அதனால், ஒடுக்கப்பட்ட இனத்தின் அரசியலை முட்டுச்சந்தில் கொண்டுவந்து நிறுத்தியவர். சமூகத்தின் கூட்டுவலிகளில் கரிசனை கொண்டவரல்ல. மரபுகளிலே நம்பிக்கை கொண்டிருந்தவருமல்ல. வரம்புமீறல்களிலே உச்சம்தொட்டவர். சிங்கக்கொடியைத் தூக்குவது, சுதந்திரதினக்கொண்டாட்டம் உள்ளிட்ட அனைத்து விடயங்களிலும், வலிசுமந்த மரபுகளை அனாயாசமாக உதறித்தள்ளியவர். திருமலை நடராஜா உள்ளிட்ட எண்ணிலடங்காதோரின் உயிர்த்தியாகத்தை அர்த்தமற்றதாக்கியவர். இத்தகையதொரு 91 வயதுப் பெரியவரின் அரசியலை, நாலுவரிகளில், நறுக்கென்று சொல்லிவிடலாம். சிங்கள ஆளும் வர்க்கத்திடம் தோற்றார். தமிழ் மக்களிடம் தோற்றார். சொந்தக் கட்சியிடம் தோற்றார். ஈற்றில், தானும் தோற்றார். இவ்வாறு சொல்வதனாலே, பெரியவர் சம்பந்தனைக் குற்றவாளி ஆக்குவதாகப் பொருள் கொள்ள வேண்டியதில்லை. மக்களாட்சி முறையில், மக்களுடைய பிரதிநிதிகளை மக்களே தெரிவு செய்கின்றனர். மக்களுடைய நாடித்துடிப்பை அறிந்த ஒருவரே, அந்த மக்களுடைய தலைவராகப் பரிணமிக்கின்றார். 1960களில் திருகோணமலையில் பெயர் சொல்லக்கூடிய சட்டத்தரணியாக வலம்வந்தவர். குடும்பப்பின்னணி, செழிப்பான வருமானம் என்பவை அன்னாரை மேட்டுக்குடிமகனாக்கிச் சீராட்டின. மேட்டுக்குடிச்சமூகத்திலே, பெரும்பான்மைச் சமூக அரச, பொலிஸ், இராணுவ அதிகாரிகளுடன் தோழமையில் திளைத்து,ரம்மியமான மாலைப்பொழுதுகளில் இயற்கையை ரசிக்கும் வாழ்க்கை முறையில் வாழ்ந்து கொண்டிருந்தவர். அவ்வாறாக, வாழ்வின் உன்னதங்களைக் கொண்டாடிக் கொண்டிருந்தவரை, வலிந்து அரசியலுக்கு அழைத்து வந்தவர்களிலே பெரியவர் எஸ்.ஜே.வி செல்வநாயகம் முக்கியமானவராகச் சொல்லப்படுகின்றது. தொடர்ச்சியாகக் கொடுக்கப்பட்ட அழுத்தங்களினாலேயே, பெரியவர் சம்பந்தன் அரசியலில் கால்பதித்தவராகும். சுயவிருப்பில் அரசியலுக்கு வந்தவரல்லர். 1977 பாராளுமன்றத் தேர்தலில் திருகோணமலையில் வெற்றி பெற்றார். வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை முன்வைத்தே, தமிழர் விடுதலைக் கூட்டணி வெற்றிபெற்றது. தனிநாட்டுக் கோரிக்கையில் பெரியவர் சம்பந்தன் நம்பிக்கை கொண்டவரல்ல. இருந்தாலும்கூட, கூட்டத்தோடு சேர்ந்துகொண்டு அடக்கி வாசித்தார். தன்னுடைய நம்பிக்கைகளைப் பவுத்திரப்படுத்திக்கொண்டார். “ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும்” காத்திருந்தார். வாய்ப்புக்கிடைத்தபோது, “பிளவுபடாத இலங்கைக்குள், பிரிக்கப்பட முடியாத இலங்கைக்குள்” என்பதை மந்திரமாகவே உச்சரித்தார். பெரியவர் சம்பந்தனுடைய உலகம் மிகவும் சிறியது. அவருடைய உச்சந்தலையிலிருந்து தொடங்குகின்ற உலகம், உள்ளங்காலுடன் முடிந்துவிடுகின்றது. அதனைச் சுயநலம் என்று வெளிப்படையாகவும் சொல்லலாம். ஒரு மனிதர், தன்னுடைய நலனில் மட்டுமே கவனம்கொண்டிருப்பது தவறில்லையே. ஆனால், அத்தகையதொரு சுயநல இயல்பைத் தூக்கலாகக் கொண்ட ஒருவர், அர்ப்பணிப்பு மிக்க மக்கள் சேவைக்கு உரியவரா என்பதே இங்கு எழவேண்டிய கேள்வியாகும். அவரை வலிந்து அரசியலுக்கு கொண்டுவந்த “உயர்ந்த” தலைவர்கள் என்போர், அவரது இயல்பைக் கவனத்தில் கொள்ளவில்லை என்பதே வரலாற்றுத் தவறின் ஆரம்பமாகிவிட்டது. 1989 மற்றும் 1994 பாராளுமன்றத் தேர்தலிலே திருகோணமலையில் தோல்வியடைந்தார். 1997ல் அ. தங்கதுரை கொல்லப்பட்டபோது பாராளுமன்ற அங்கத்துவம் வசப்பட்டது. 2000ம் ஆண்டு தேர்தலிலே மீண்டும் தோல்வியடைந்தார். அதன் பின்னர், 2001லிருந்து பாராளுமன்றத் தேர்தல்களிலே வெற்றி பெற்றார். ஆக, 1977 வட்டுக்கோட்டை தீர்மானம் ஏற்படுத்திய அலையிலும், அதன் பின்னர் தமிழ் தேசிய அலையிலும் பாராளுமன்றம் சென்றவராகும். அந்தவகையிலே, தனித்துவமான மக்கள் ஆதரவினால் பெரியவர் சம்பந்தன் தேர்தல்களிலே வெற்றிபெற்றவருமல்ல. மக்களின் நாடித்துடிப்பை அறிந்த தலைவருமல்ல. மக்களிடமிருந்து எவ்வளவுதூரம் விலகி இருந்தார் என்பதற்கான சான்றுகளை தேடி அலைய வேண்டியதில்லை. அரசியல்கைதிகள் விடயத்திலே திறப்பு தன்னிடமில்லை என்று சொன்ன தொனியும், இராணுவ நடவடிக்கைகளினால் வலிந்து இடம்பெயர்ந்த தையிட்டி மக்களிடம் “என்ன காரணத்துக்காக உங்கள் வீடுகளைவிட்டு வந்தீர்கள்” என்ற கேள்வியும் “ஒருபானை சோற்றுக்கு, ஒரு சோறு பதம்” போன்றவையாகும். யாழ்ப்பாணத்திலே அன்னாருக்கு அஞ்சலிசெலுத்த வந்திருந்த பெண்கள் குழுவொன்று, பூதவுடலுக்கு அருகே நின்று “குரூப்போட்டோ” எடுத்துக்கொண்டதாக, ஓய்வுநிலை மூத்த அரச அதிகாரியொருவர் வேதனையோடு அங்கலாய்த்துக்கொண்டார். மேற்படி சம்பவத்தைக் கேள்வியுற்றபோது, வாழும்போது நெருங்க முடியாதவரை, இறந்த பின்னரேனும் மக்கள் நெருங்க எத்தனித்தனரோ என்னும் குரூரமான எண்ணம் தோன்றியதைத் தவிர்க்க முடியவில்லை. அரசியலுக்கு வந்தபின்னர் சமயோசிதமாகக் காய்களை நகர்த்தினார். தன்னுடைய இருப்பை மட்டுமே பேணிக்கொண்டார். அதிலே, மக்கள் நலன் இருக்கவில்லை என்பது ஆச்சரியப்படுவதற்கில்லை. ஏனெனில், மக்களுடைய நாடித்துடிப்பில் அக்கறை கொண்டவராக தன்னை என்றுமே அடையாளப்படுத்தியவரல்ல. ஆக, தலைவர் என தமிழ் சமூகம் கொண்டாடியதற்கு, பெரியவர் சம்பந்தன் எவ்வாறு பொறுப்பாளியாகலாம்? தமிழ் தேசிய அரசியலின் தலைமைக்கு பெரியவர் சம்பந்தனைக் கொண்டுவந்து சேர்த்ததில், விடுதலைவேண்டிய அமைப்புக்களின் பங்கு முக்கியமாகச் சொல்லப்படுகின்றது. ஆக, தானுண்டு – தன்னுடைய குடும்பம், தொழில் என தேமேயென இருந்தவரை, முதலில் பாராளுமன்ற அரசியலுக்கு வலிந்து கொண்டுவந்து சேர்த்தார்கள். “பெருந்தலைவர்” ரேஞ்சுக்கு “படம்” காட்ட “அத்திவாரக்கிடங்கு” வெட்டிவிட்டார்கள். 2001க்குப் பின்னர் கண்ணை மூடிக்கொண்டு வாக்களித்து வெற்றிபெறச்செய்தார்கள். இவற்றையெல்லாம் செய்தவர்களை விட்டுவிட்டு, “தோல்வியுற்ற தலைவர்” என பெரியவர் சம்பந்தனை நிந்திப்பது எந்தவகையிலே நியாயமாகும். https://arangamnews.com/?p=11017
  19. கறுப்பு ஜூலை நினைவுகள்!… முருகபூபதி. July 22, 2024 1 ஒவ்வொரு வருடத்திலும் வரும் ஜூலை மாதம் எனக்கு மிக மிக முக்கியமானது. அத்துடன் மறக்க முடியாத மாதம். இந்த மாதத்தில்தான் 1951 ஆம் ஆண்டு 13 ஆம் திகதி நான் பிறந்தேன். 13 ஆம் இலக்கம் அதிர்ஷ்டம் அற்றது என்பது பொதுவான கருத்து. சில நாடுகளில் அமைந்துள்ள உல்லாசப்பயண விடுதிகளில் 13 ஆம் இலக்கத்தில் விருந்தினர்கள் தங்கும் அறையும் இருக்காது என்பார்கள். 1942 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 13 ஆம் திகதிதான் கொலிவூட் நடிகர் ஹாரிசன் போர்ட் பிறந்தார். 1953 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 13 ஆம் திகதிதான் கவிப்பேரரசு வைரமுத்துவும் பிறந்தார். இவர்கள் எல்லாம் அதிர்ஷ்டம் அற்றவர்களா..? நான் 1951 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 13 ஆம் திகதி ஒரு வெள்ளிக்கிழமை பிறந்தேன். சில நாடுகளில் ஆங்கிலேயர்கள் 13 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வந்தால், அதனை கறுப்பு வெள்ளி துரதிர்ஷ்டமான நாள் எனச்சொல்லிக்கொண்டு வேலைக்கும் செல்ல மாட்டார்களாம் ! இது எப்படி இருக்கிறது..? கவியரசு கண்ணதாசன் “ நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்கத் தெரியாதா..?“என்று தொடங்கும் பாடலை இயற்றியிருக்கிறார். அவர் இந்த வரிகளை தனது சொந்த அனுபவத்தில்தான் எழுதியிருப்பார். எனக்கும் இந்த ஜூலை மாதத்தை பல காரணங்களினால் மறக்க முடியவில்லை. எனது முதல் சிறுகதையும் ( கனவுகள் ஆயிரம் ) 1972 ஆம் ஆண்டு ஜூலை மாதம்தான் மல்லிகையில் வெளியானது. கடந்த 1989 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 13 ஆம் திகதிதான் எனக்கு நன்கு தெரிந்தவர்களான தமிழ்த் தலைவர்கள் அ. அமிர்தலிங்கமும், வெ. யோகேஸ்வரனும் கொழும்பில் சுட்டுக்கொல்லப்பட்டனர். அன்றைய தினம் நான் கேக் வெட்டி பிறந்த தினத்தை கொண்டாடவில்லை. அந்தத் துயரச்சம்பவம் தொடர்பான செய்தியை அறிவதில் முனைப்போடு இருந்தேன். கடந்த ஆண்டு ( 2023 ) ஓகஸ்ட் மாதம் லண்டனில் நடந்த ஒரு திருமண நிகழ்வில் அமிர்தலிங்கம் – மங்கையர்க்கரசி தம்பதியரின் இரண்டாவது புதல்வர் மருத்துவர் பகீரதனை சந்தித்தபோதும், அவரது அப்பாவினது மறைவுத் திகதியை என்னால் என்றைக்குமே மறக்கமுடியாது என்றேன். இலங்கை வரலாற்றில் மறக்கமுடியாத கறை படிந்த கறுப்பு ஜூலை பற்றிய எனது நனவிடை தோய்தல் குறிப்புகளை மீண்டும் இங்கே நினைவுபடுத்துகின்றேன். “ தெரிதலும், தேர்ந்து செயலும், ஒரு தலையாச் சொல்லலும் வல்லது அமைச்சு “ இது திருவள்ளுவர் வாக்கு. இலங்கையில் திருக்குறள் சிங்கள மொழியிலும் பெயர்க்கப்பட்டிருக்கிறது. ஆனால், எமது சிங்கள அரசியல் தலைவர்கள் அதனை பொருள் விளங்கிப் படித்தார்களா..? என்பது தெரியவில்லை ! 1977 ஆம் ஆண்டு ஜே.ஆர். ஜெயவர்தனாவின் அரசு பதவியேற்ற காலப்பகுதியில்தான், அவர் 1906 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 17 ஆம் திகதி அவர் பிறந்த இல்லத்தில் பின்னாளில் அமைந்த வீரகேசரியில் நிரந்தர ஊழியனாகச் சேர்ந்தேன். 1977 ஆம் ஆண்டு நடுப்பகுதியில் அவரது பதவிக்காலத்தில்தான் 1958 இன்பின்னர் மற்றும் ஒரு கலவரம் வந்தது, அதற்குச் சில மாதங்களுக்கு முன்னர்தான் எனக்கும் வீரகத்தி தனபாலசிங்கத்திற்கும் வேறு சிலருக்கும் அங்கே நேர்முகத்தேர்வு நடந்தது. கலவரம் வந்தமையால் அந்த நேர்முகத் தேர்வின் முடிவும் தாமதமாகியது. அக்கலவர காலத்தில்தான் ஜே.ஆர், “ போர் என்றால் போர்- சமாதானம் என்றால் சமாதானம் “ என்று வானொலியில் திருவாய் மலர்ந்தருளிமுரசறைந்தார். ஜே.ஆரின் பதவிக்காலத்தில் அடுத்தடுத்து மூன்று கலவரங்கள் நிகழ்ந்தன. அந்த ஆண்டுகள் 1977 – 1981 – 1983. இரண்டாவது கலவரம் வந்தபோது வீரகேசரியில் அவர் திருவாய் மலர்ந்தருளும் கருத்துக்களை செய்தியாக ஒப்புநோக்க நேர்ந்தது. திருவள்ளுவர் என்ன சொல்கிறார்..? ஒரு செயலைப்பற்றி பலவழிகளிலும் ஆராய்ந்து அறியவேண்டும். சந்தர்ப்பம் வரும்போது ஆராய்ந்தவாறு செய்யவேண்டும். அதிலும் நன்மை தருவனவற்றையே உறுதியாகச் சொல்லவேண்டும். இதில் தனது ஆற்றலை வெளிப்படுத்துபவனே சிறந்த அமைச்சனாக இருப்பான். ஜே.ஆர். அரசியலில் பழுத்த அனுபவசாலி. சட்டம் படித்த பரீஸ்டர். அமைச்சராக – ராஜாங்க அமைச்சராக – பிரதமராகவிருந்து ஜனாதிபதியானவர். அரசியலில் இராஜதந்திரி. அவர் எதிர்க்கட்சியிலிருந்த காலத்தில் யாழ்ப்பாணம் சென்று ஒரு கூட்டத்தில்பேசும்போது, அவமானப்படுத்தப்பட்டு தாமதிக்காமலேயே, தனது காரில் கொழும்பு திரும்பியவர். நான் நீர்கொழும்பு பிரதேச வீரகேசரி நிருபராக பணியாற்றிய காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தில் நடந்த அச்சம்பவம் பற்றி, எங்கள் ஊர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும் ஜே.ஆரின். கட்சியைச்சேர்ந்தவருமான டென்ஸில் பெர்னாண்டோவிடம் கேட்டுத் தெரிந்துகொண்டேன். யாழ்ப்பாணக் கலாசாரம் கந்தபுராணக்கலாசாரம் என்று பண்டிதமணி கணபதிப்பிள்ளை சொல்லியிருக்கிறார். அத்தகைய கலாசாரப்பிடிப்புள்ள வடபுலத்தில் ஒரு தென்னிலங்கை அரசியல் தலைவரை அவ்வாறு அவமதித்தமை கண்டனத்துக்குரியதுதான். அதன் விலையை பின்னாளில் அறுவடை செய்யநேர்ந்தது. அந்த அறுவடைக் காலத்தில் எனது பத்திரிகை உலகப்பிரவேசம் வீரகேசரிக்குள் நிகழ்ந்தது. ஜே.ஆரின் மனதில் வஞ்சம் குடியிருந்திருக்கவேண்டும். வடபகுதி தமிழ் மக்களுக்கு பாடம் கற்பிக்கவேண்டும் என்ற எண்ணமும் இருந்திருக்கலாம். இலங்கையில் தமிழ் மக்கள் 1977 இல் அனுபவித்த இன்னல்களை சொல்வதற்கு எமது தமிழ் தலைவர்கள் இந்தியாவில் அப்போது எதிரணியிலிருந்த இந்திரகாந்தியிடம் ஓடினர். அதற்கு அவர், “ இரண்டு கிழட்டு நரிகளும் என்ன நினைக்கின்றன என்பது தெரியவில்லை. நீங்கள் பிரதமர் மொரார்ஜி தேசாயிடம் முறையிடுங்கள் “ என்று திருப்பியனுப்பினார். எமது தமிழ்த்தலைவர்கள் தேசாயிடம் முறையிட்டனர், அவரோ, “ அது இலங்கையின் உள்நாட்டுப்பிரச்சினை. பேசி தீர்த்துக்கொள்ளுங்கள் “ என்று கைவிரித்தார். போர் என்றால் போர் – சமாதானம் என்றால் சமாதானம் என்றவரிடம் எதனைத்தான் பேசித்தீர்ப்பது..? 1978 இல் பாரதப்பிரதமர் தேசாய் இலங்கை வந்தார். எதிர்க்கட்சித்தலைவராக இருந்த அமிர்தலிங்கம் அவரை சந்தித்தார். மீண்டும் 1979 இல் தனது மனைவி மங்கையற்கரசியுடன் அரச விருந்தினராக டில்லிக்குச் சென்றார். அங்கு அமிர் தெரிவித்த கருத்துக்கள் ஊடகங்களில் வெளிவந்தன. இந்தச்செய்திகளையெல்லாம் வீரகேசரியில் ஒப்புநோக்கியிருக்கின்றேன். ஏற்கனவே இலங்கை – இந்திய ஒப்பந்தங்கள் பலவற்றை எனது பாடசாலைக்காலத்திலிருந்தே பார்த்து வளர்ந்தமையாலும், சரித்திர பாடம் எனக்கு மிகவும் பிடித்தமானதாலும், அந்த ஒப்பந்தங்கள் பற்றி அறிந்திருந்தேன். மலையக இந்திய வம்சாவளி மக்கள் தொடர்பான ஶ்ரீமா – சாஸ்திரி ஒப்பந்தம், கச்சதீவை இலங்கைக்கு ஒப்படைக்க இந்திராகாந்தியுடன் ஶ்ரீமா செய்துகொண்ட ஒப்பந்தம் என்பனவற்றையும் அறிந்திருந்தமையால், பின்னாளில் வீரகேசரியில் செய்திகளை ஒப்புநோக்கும்போது, எதிர்காலத்தில் எமது தாயகத்தினுள் இந்தியாவின் தலையீடு தவிர்க்கப்படமுடியாததே என்ற தீர்க்கதரிசனமும் வந்தது. ஆங்கிலத்தில் ஒரு சொற்றொடர் இருக்கிறது. “Experience without education better than education without Experience “ அனுபவமற்ற கல்வியை விட, கல்வியற்ற அனுபவமே மேலானது. கர்மவீரர் காமராஜர் அதற்குச் சிறந்த உதாரணம். பாடசாலைக்கு செல்லும் வாய்ப்பினை சிறுவயதிலேயே இழந்தவர் அவர். எனினும் தமிழ்நாட்டில் ஏழை மாணவர்களின் கல்விக்கண்ணை திறந்தவர். அவர் முதலமைச்சராகவிருந்தபோது, பல்கலைக்கழகங்களில் மாணவர்களை அனுமதிக்கும் திட்டத்தில் அவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலனைக்காக அவரிடம் வருகிறது. அவர் மிகவும் குறுகிய நேரத்தில் தெரிவுசெய்து அதிகாரிகளிடம் கொடுத்துவிடுகிறார். “எப்படி அய்யா இவ்வளவு சீக்கிரம் தேர்வுசெய்தீர்கள்…? “ என்று அதிகாரிகள் அவரிடம் கேட்டபோது, “ இந்த மாணவர்களின் தந்தைமாரின் கையொப்பங்களை பார்த்தேன். அவர்கள் அனைவரும் கைநாட்டுத்தான் இட்டுள்ளார்கள். இவர்களின் பிள்ளைகளாவது படித்து நல்ல நிலைக்கு வரட்டும். , நான் இந்த விண்ணப்பங்களில் அதனைத்தான் முதலில் பார்த்தேன் “ என்றார் அந்த தீர்க்கதரிசி. விருதுநகரில் செக்கிழுத்து எண்ணெய் வடித்து வயிற்றைக்கழுவிய ஏழைக் குடும்பத்திலிருந்து வந்த காமராஜரையும், செல்வந்த குடும்பத்திலிருந்து வந்து லண்டன் சென்று பாரீஸ்டர் பட்டம் பெற்றுத்திரும்பிவந்து அரசியல்வாதியாகி, நாட்டின் அதிபராகிய ஜே.ஆர். ஜெயவர்தனாவையும் அக்காலப்பகுதியில் ஒப்பிட்டுப்பார்த்தேன். எழுத்துப்பிழைகளை திருத்தும் ஒப்புநோக்காளராகியபோதே, உலகத்தலைவர்களையும் ஒப்புநோக்குவதற்கும் கற்றுக்கொண்டேன். தான் பதவியேற்ற காலப்பகுதியிலேயே ஒரு இனக்கலவரம் நாட்டில் வந்துவிட்டிருந்தால், அந்த நாட்டின் தலைவர் என்ன செய்திருக்கவேண்டுமோ, அதனைச்செய்யத்தவறியதால், கடந்த ஐந்து தசாப்தங்களுக்கும் மேலாக இலங்கையின் இனப்பிரச்சினை தீர்ந்தபாடாயில்லை. தேசிய இனப்பிரச்சினையை தீர்க்கவென ஜே.ஆர் காலத்தில்தான் முதலில் மாவட்ட சபை திட்டமும் பின்னர் மாகாணசபை முறைமையும் வந்தன. இறுதியில் ஒரு பிரயோசனமும் இல்லை. 1981 இல் மாவட்ட சபைத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டபோது, அந்த யோசனையை வரைந்த தந்தை செல்வநாயகத்தின் மருமகனும் பிரபல சட்ட மேதையுமான ஏ. ஜே. வில்சனும் அமைச்சர் தொண்டமானும், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் ஐக்கிய தேசியக்கட்சியை போட்டியிட அனுமதிக்கவேண்டாம் என்றுதான் ஜே.ஆருக்கு ஆலோசனை கூறினார்கள். இங்குதான் இந்தப்பத்தியின் தொடக்கத்தில் குறிப்பிட்ட எமது திருவள்ளுவரின் வாக்கை நினைவுபடுத்தவேண்டியிருக்கிறது. இந்தியாவில் ஜாகிர் உசேன், அப்துல் கலாம் முதலான இஸ்லாமியர்கள் ஜனாதிபதியாக வருவதற்கு வாய்ப்பிருக்கிறது. ஆனால், இலங்கையில் சபாநாயகராக ஒரு சிறுபான்மை இனத்தவர் வருவதற்கும் சங்கடம் இருக்கிறது. பாக்கீர்மார்க்காரும் எம். எச். முகம்மதுவும் சொற்ப காலமே சபாநாயகர்களாக இருந்தார்கள். இந்நிலையில் ஒரு தமிழர் எவ்வாறு எதிர்க்கட்சித்தலைவராக தொடர்ந்து இருக்கமுடியும் என்ற சிந்தனைதான் பேரினவாதிகளிடத்தில் குடியிருந்தது. அதன் எதிரொலிகளை அக்காலப்பகுதியில் செவிமடுக்கமுடிந்தது. யாழ்ப்பாணம் மாவட்ட சபைகளுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டதும், தமது கட்சியின் பிரசாரப்பணிகளுக்காக ஜே.ஆர். அனுப்பிய அமைச்சர்கள் காமினி திஸாநாயக்காவும் சிறில் மத்தியூவும். சுமார் 180 சிங்கள அரசுப்பணியாளர்கள் தேர்தல் ஆணையாளரால் தேர்ந்தெடுக்கப்பட்டு அனுப்பப்பட்டனர். அத்துடன், யாழ். மாவட்டத்தில் போதியளவு பொலிஸார் இருக்கத்தக்கதாக தென்னிலங்கையிலிருந்து மேலதிகமாக 250 பொலிஸார் சென்றனர். இவர்களுடன் பாதுகாப்பு இணை அமைச்சர் வெரபிட்டிய, செயலாளர், மற்றும் பொலிஸ் மா அதிபரும் சென்றனர். ஒரு மாவட்டத்தில் நடக்கவிருந்த தேர்தலுக்கு இத்தனைபேர் எதற்காக அனுப்பிவைக்கப்பட்டனர் என்பது மிஸ்டர் தர்மிஸ்டர் ஜே.ஆருக்கே வெளிச்சம். இவ்வளவு பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கும் மத்தியில்தான் ஜே.ஆரின். அன்றைய அரசை ஆதரித்த வட்டுக்கோட்டை முன்னாள் எம். பி.யான ஆ. தியாகராஜா இளைஞர்களினால் சுட்டுக்கொல்லப்பட்டார். நாச்சிமார் கோவிலடியில் நடந்த தமிழர் விடுதலைக்கூட்டணியின் பிரசாரக்கூட்டத்தில் நான்கு பொலிஸ்காரர்கள் இளைஞர்களின் வேட்டுக்கு பலியாகினர். அதன்பிறகு நடந்த அனர்த்தங்கள் பற்றி இலங்கை தமிழர் அரசியல் வரலாற்று ஏடுகள் பதிவுசெய்துள்ளன. 1981 மே 31 ஆம் திகதி, யாழ்ப்பாணம் பொது நூலகம் பற்றி எரிந்தது. யாழ்.பொதுநூலகம் எரிக்கப்பட்டதை அறிந்த வண.பிதா தாவீதுஅடிகள் மாரடைப்பால் காலமானார். யாழ்ப்பாணத்தில் நாலாதிசையிலும் நடமாடிக்கொண்டிருந்த மிலிட்டரி பொலிஸ்காரர்கள் மக்களை மிரட்டிக் கொண்டிருந்தனர். அவர்களின் நடமாட்டமே மிரட்சியை ஏற்படுத்தியிருந்தது. நூல் நிலையத்தை எரித்தவர்கள், யாழ். எம். பி. வெற்றிவேல் யோகேஸ்வரனின் வீட்டையும் ஈழநாடு அலுவலகத்தையும் எரித்திருந்தார்கள். யோகேஸ்வரனும் அவரது மனைவி சரோஜினியும் பின்புறத்தால் தப்பி ஓடினர். 1981 ஆம் ஆண்டு ஜூன் 01 ஆம் திகதி முற்பகல் எரிந்துகொண்டிருந்த யாழ். பொது நூலகத்தைப்பார்க்கச்சென்றபோது அங்கு மிலிட்டரி பொலிஸார்தான் காவலுக்கு நின்றார்கள். “ இனிமேல் அங்கே எரிப்பதற்கு என்ன இருக்கிறது…? ஏன் இவர்கள் இங்கு காவலுக்கு நிற்கிறார்கள்..? “ என்று உடன் வந்த மல்லிகை ஜீவாவிடம் கேட்டேன். காவலுக்கு நின்ற ஒரு மிலிட்டரி பொலிஸ்காரரிடம் சிங்களத்தில், “புவத்பத், புஸ்தகால கறபு வெறத்த குமக்த?” (பத்திரிகைகளும் நூல்நிலையமும் செய்த குற்றம் என்ன? ) என்று சிங்களத்தில் கேட்டேன். அந்த மிலிட்டரி பொலிஸ்காரர் என்னை விநோதமாகப் பார்த்தார். யாழ்ப்பாணத்தில் தன்னோடு சிங்களத்தில் பேசும் இவன் யாராகவிருக்கும் என்ற பார்வை அதில் தெரிந்தது. அன்று மாலை உரிய நேரத்திற்கு வரவேண்டிய இரவு தபால் ரயிலும் காங்கேசன்துறையிலிருந்து தாமதமாகவே புறப்பட்டது. ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுவிட்டதால் எனக்கு விடை கொடுத்துவிட்டு ஜீவா அருகிலிருந்த தமது வீட்டுக்குச் சென்றுவிட்டார். இரவு பத்துமணிக்குத்தான் அந்தமெயில்வண்டி வந்தது. விரல் விட்டு எண்ணத் தக்க பயணிகளுடன் பதட்டத்துடனும் எனக்கு சிங்களமும் பேசத் தெரியும் என்ற தைரியத்துடனும் அந்தப் பயணத்தை தொடர்ந்தேன். யாழ்.பொதுநூலக எரிப்புக்கு கண்டனம் தெரிவித்து ஜி. செனவிரத்தின உட்படசில மனிதஉரிமை ஆர்வலர்களுடன் இணைந்து கொழும்பில் புதிய நகரமண்டபத்தில் ஒரு பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. இக்கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த அமிர்தலிங்கமும் பேசுவதாக இருந்தது. ஏதும் குழப்பம் நேரலாம் என்று இறுதி நேரத்தில் பொலிசார் இக்கூட்டத்திற்கு அனுமதி வழங்கவில்லை. அமிர்தலிங்கம் அந்தச்சம்பவத்தை கண்டித்து நாடாளுமன்றில் நிகழ்த்திய உரை மிகவும் முக்கியமானது. அவர் அன்று இவ்வாறு சொன்னார்: “ இரண்டாம் உலக மகா யுத்தத்தின்போது, ஹிட்லர் தனது படைகளிடத்தில்,“ மருத்துவமனைகள் நூல் நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தவேண்டாம் “ என்று கட்டளை இட்டார். கொடுங்கோலன் சர்வாதிகாரி எனப் பெயரெடுத்த ஹிட்லருக்கும் கூட நூல் நிலையத்தின் பெறுமதி தெரிந்திருக்கிறது. ஆனால், இலங்கையில் எமது நாட்டைப்பாதுகாக்கவேண்டிய பொலிஸாருக்கு இந்த அடிப்படை அறிவும் தெரியவில்லை “ பொலிஸாரின் அடாவடித்தனத்தால், அன்று யாழ். ஈழநாடு பத்திரிகை அலுவலகம் மற்றும் பஸ் நிலையத்திலிருந்த பூபாலசிங்கம் புத்தகசாலை உட்பட பல கட்டிடங்கள் எரிந்தன. அதனைப்பார்க்க யோகர்சுவாமிகள்தான் இல்லை. இருந்திருப்பின், ஈழநாடு முதல் பிரதி தன்வசம் தரப்பட்டபோது, எதற்காக, “ ஏசுவார்கள், எரிப்பார்கள் “ என்று சொன்னேன். எனது நாக்கு கரிநாக்கா..? “ என்றும் யோசித்திருக்கக்கூடும். வில்சனும், தொண்டமானும் சொன்ன சொல்லை கேளாமல் எதுவித தீர்க்கதரிசனமுமற்று யாழ். மாவட்ட தேர்தலில் ஐக்கியதேசியக்கட்சியை போட்டியிடவைத்து, இத்தனை அநர்த்தங்களுக்கும் வித்திட்ட ஜே.ஆர். சர்வதேச அழுத்தங்களினாலும் கூட்டணித்தலைவர்களின் நெருக்குதலினாலும், இறுதியில் யாழ். நூலக எரிப்புக்கு ஒரு கோடி ரூபா இழப்பீடு தருவதற்கு சம்மதித்தார். யாழ். எம்.பி. வெற்றிவேல் யோகேஸ்வரனின் வீடு தீக்கிரையாக்கப்பட்டதற்கும் இழப்பீடு வழங்கப்பட்டது. நிகழ்ந்த அநர்த்தங்களை விசாரிக்க சர்வதேச ஜூரிமார் சபை நியமிக்கப்பட்டது. அந்தச்சபை Ethnic Conflict and Violence in Srilanka என்ற தலைப்பில் நீண்ட அறிக்கை தயாரித்து ஜே.ஆரிடம் கொடுத்தது. அவர் கண்துடைப்பில் பெரிய வித்தகர். அதற்கு முன்னர் 1977 இல் நடந்த கலவரம் பற்றியும் சன்சோனி என்ற நீதியரசர் தலைமையில் ஆணைக்குழு வைத்து விசாரித்து அறிக்கை பெற்றவர். இழப்பீடுகள், ஜே.ஆரின் குடும்பச்சொத்திலிருந்து வழங்கப்படுவதில்லை. மக்களின் வரிப்பணத்திலிருந்தும் வெளிநாட்டு கடனுதவியிலிருந்தும்தான் வழங்கப்படுகிறது. யாழ்ப்பாணம் பொது நூலக எரிப்புடன், அந்த 1981 ஆம் ஆண்டு கடந்துவிடவில்லை. அந்த ஆண்டு நடுப்பகுதியில் வடக்கில் பற்றி எரிந்த தீ, படிப்படியாக மேற்கிலங்கையிலும் மலையகத்திலும் பரவியது. அதற்கு காலிமுகத்திடலுக்கு முன்பாக பிரிட்டிஷாரின் காலத்தில் அமைந நாடாளுமன்றத்தில் அரசு தரப்பு அமைச்சர்களும் எம். பி. க்களும் பேசிய பேச்சுக்கள்தான் பின்னணிக் காரணம். முக்கியமாக பாணந்துறை எம். பி. நெவில் பெர்னாண்டோ, அமைச்சர் சிறில் மத்தியூ ஆகியோர் கொண்டு வந்த எதிர்க்கட்சித்தலைவர் அமிர்தலிங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பான வாதம்தான். அமிரை காலிமுகத்திடலில் கழுவேற்றிக்கொல்லவேண்டும் என்றெல்லாம் பேசினார்கள். விவாதங்கள் இரவு வரையில் தொடர்ந்தன. அந்தச்செய்திகளை வீரகேசரியில் இரவு நேரப்பணியில் ஒப்புநோக்கினேன். என்னுடன் பணியாற்றிய கனகசிங்கத்தின் குடும்பத்தினர் 1977 இல் கொழும்பு முகத்துவாரத்தில் குடியிருந்தபோது, சிங்கள இனவாதிகளினால் தாக்கப்பட்டனர். கனகசிங்கத்தின் மனைவி கத்தி வெட்டுக்காயங்களுடன் ஆஸ்பத்திரிக்கு எடுத்துச்செல்லப்பட்டவர். இந்தக்குடும்பம், அந்தக்கலவரம் தொடர்பாக விசாரித்த சன்சோனி ஆணைக்குழுவின் முன்பாகத் தோன்றி சாட்சியம் வழங்கியிருக்கிறது. 1981 ஜூலை மாதம் 23 ஆம் திகதி நாடாளுமன்றில் அமிருக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத்தீர்மான விவாதம் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை தெரிந்தோ தெரியாமலோ அதிபர் ஜே.ஆரும், பிரதமர் பிரேமதாசாவும் தமது கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சுதந்திரமாக பேசுவதற்கு அனுமதித்திருந்தனர். பிரேமதாசா அன்றைய விவாதத்தின்போது, வெளியூர் நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்துகொண்டு, அகன்றுவிட்டார். அதிபர் ஜே.ஆர். நாடாளுமன்றத்திற்கு சிம்மாசனப்பிரசங்கத்திற்கு மாத்திரமே வருவார். அந்த விவாதம் 23 ஆம் 24 ஆம் திகதிகளில் தொடர்ந்து நடந்தது. வாய்க்கு வந்தபடி ஆளும்தரப்பு எம்.பி.க்கள் சிலர் பேசினார்கள். எதிரணியிலிருந்த ஏழு சுதந்திரக்கட்சி எம்.பி.க்கள், அதனைக் கண்டித்து அந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் நாடாளுமன்ற அதிகார வரம்பிற்கு உட்பட்டதல்ல எனக்கூறி வெளிநடப்புச்செய்தார்கள். அரசு எம்.பி.க்கள் 121 பேர் ஆதரித்து வெற்றிகொண்டனர். அமைச்சர் தொண்டமானும் துணை நீதியமைச்சர் ஷெல்டன் ரணராஜாவும் வாக்களிக்க மறுத்தனர். இரண்டுபேரும் கண்டி, செங்கடகல மற்றும் மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தியவர்கள். விஞ்ஞான கைத்தொழில் அமைச்சர் சிறில் மத்தியூவை சுதந்திரமாக பேசவிட்ட ஜே.ஆர், அவரது வரம்புமீறிய பேச்சைக்கேட்டபின்னர், அவரை பதவியிலிருந்து தூக்கினார். ஐக்கியதேசியக்கட்சியின் தொழிற்சங்கங்க சம்மேளனத்தின் பெருந் தலைவராகவிளங்கிய பலம்பொருந்தி சக்தியான சிறில் மத்தியூவை முன்னால் விட்டு வீழ்த்திய சாணக்கியர் பிரேமதாசா, தனது எதிர்காலத் தலைமைத்துவத்திற்கான பாதையை செப்பனிடத் தொடங்கிய காலமும் அதுதான். இந்த சம்பவங்களின் எதிரொலியாக நிகழ்ந்த தொடர் அநர்த்தம்தான் 1981 ஆம் ஆண்டு கலவரம். அந்த ஆண்டு ஜூன் மாதம் யாழ்ப்பாணம் எரிந்தது. ஜூலை மாதம் இரத்தினபுரி மாவட்டமும் கம்பகா மாவட்டத்தில் எங்கள் ஊரும் எரிந்தது. இவ்வளவும் நடந்தபின்னர்தான் பொலிஸார் வெளியே வந்தனர். பொலிஸை நம்பிப்பிரயோசனம் இல்லை. யாழ்ப்பாணத்தில் தீவைத்தது பொலிஸ்தானே! ஆனால், எங்கள் ஊரில் அந்தவேலையை பேரினவாதிகளின் ஏவல் சக்திகள் பொறுப்பெடுத்திருந்தன. எமது ஊரில் 1966 இல் இடைத்தேர்தல் நடந்தபொழுது பாடசாலை மாணவனாக இருந்த நான், அந்த இடைத்தேர்தல் பிரசாரக் கூட்டங்களில்தான் பிரதமர் டட்லியையும், அதே மேடையில் கல்குடா எம்.பி தேவநாயகத்தையும் வவுனியா எம்.பி. தா.சிவசிதம்பரத்தையும் ஜே.ஆரையும் பார்த்திருக்கின்றேன். இவ்வாறு ஐக்கிய தேசியக்கட்சியுடன் தேன்நிலவு கொண்டாடிய ( தேவநாயகம் தவிர்ந்த ) தமிழரசுக்கட்சி எம்.பி.க்கள், அமிர், மற்றும் இரண்டு சிவசிதம்பரங்களும் 1983 அதே ஐக்கிய தேசியக்கட்சியின் பதவிக்காலத்தில் தமிழ்நாட்டில் பாதுகாப்பிற்காக தஞ்சமடைந்தனர். அந்தக்காட்சியையும் 1984 ஆம் ஆண்டு சென்னைசென்றபோது நேரடியாகப் பார்த்தேன். அதிபர் ஜே.ஆர், பிரதமர் பிரேமதாசாவுடன் ஒருநாள் எங்கள் ஊருக்கு வந்து எரிக்கப்பட்ட கடைத் தொகுதிகளை பார்த்தார். அத்துடன் தொண்டமான், செல்லச்சாமியுடன் இரத்தினபுரி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட இடங்களையும் சென்று பார்வையிட்டு நிலைமையின் தீவிரத்தை அறிந்தார். அன்றும் ஐக்கிய நாடுகள் சபையும் மனித உரிமை அமைப்புகளும் தமிழகத்தில் முதல்வர் எம்.ஜி. ஆரின் அரசும் இந்திய மத்திய அரசும் அழுத்தங்களை பிரயோகித்ததையடுத்து ஜே.ஆர். எதிர்காலத்தில் தனக்கு வரப்போகும் நெருக்கடிகளை உணர்ந்தார். அவர் எங்கள் ஊருக்கும் இரத்தினபுரி உள்ளிட்ட மலையகப்பகுதிகளுக்கும் சென்று நேரடியாக அநர்த்தங்களை பார்த்துவிட்டு திரும்பிய பின்னர், தமிழ் மக்கள் செறிந்து வாழும் வெள்ளவத்தை இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் ஆளும் கட்சியின் நிருவாகக்குழுவின் கூட்டத்தை நடத்திப்பேசிய பேச்சுக்களையும் வீரகேசரியில் ஒப்பு நோக்க நேர்ந்தது. அதிலிருந்து சில வசனங்கள்: “ நான் ஆத்திரத்தில் அல்ல. மனம் நொந்து பேசுகிறேன். நாடெங்கும் அண்மையில் நடந்திருக்கும் வெறிச்செயல்கள் நாம் மதித்துப்போற்றிப் பின்பற்றுகின்ற உயர் சமய நெறிகள், நம்மில் சிலரை பண்புள்ள மனிதர்களாக மாற்றவேயில்லை. சில மிருகங்கள் – இதைச்சொல்லவே வெட்கப்படுகின்றேன். அதிலும் நம் கட்சியினர் சிலர் கூட இந்த வன்முறைகளுக்கு காரணமாக இருந்திருக்கின்றனர். எமது எம்.பி.க்கள் நாடாளுமன்றின் உள்ளும் புறமும் பேசிய பொறுப்பற்ற பேச்சுக்கள் நாடெங்கும் கொலை , கொள்ளை, கொள்ளி வைப்பு பாலியல் வன்முறை முதலான கொடுஞ்செயல்களுக்கு காரணமாகியுள்ளன. ஒரு கட்சிக்கு தலைமை ஏற்றிருக்கும் நான் அது குறித்து பெருமையாக நினைக்கவேண்டும். அந்நிலை இல்லையாயின் நான் எதற்காக அதற்கு தலைவராக இருத்தல் வேண்டும். வன்முறைகளை ஏவிவிட்டு, அதன்மூலம்தான் பல இன மக்கள் வாழும் இந்நாட்டில் எழுந்துள்ள சிக்கல்களுக்கு தீர்வு காணமுடியும் என்று எவரேனும் கருதினால், அவர்களே வந்து இந்த தலைமைப் பதவியை ஏற்கட்டும். நான் ஒதுங்கிக்கொள்கின்றேன். “ அவரது ஆதங்கம் நிரம்பிய உரையை எமது வீரகேசரி அலுவலக நிருபர் எழுதிக்கொண்டு வந்தார். கெமராமேன் படம் எடுத்துக்கொண்டு வந்தார். செய்தி ஆசிரியர் டேவிட் ராஜூ செம்மைப்படுத்தினார். அதனை அச்சுக்கோப்பாளர்கள் அச்சுக்கோர்த்தனர். நாம் ஒப்புநோக்கினோம். பத்திரிகை அச்சாகி தமிழ் மக்களிடம் சென்றது. அந்த மக்கள், “ ஆகா…. ஜனாதிபதி நல்லவர்தான். அவருக்கு கீழே இருப்பவர்கள்தான் கெட்டவர்கள் “ என்ற முடிவுக்கு வந்தார்கள். ஜே.ஆர். அன்று பேசிய பேச்சு அச்சில் வெளியானாலும், வெள்ளவத்தை கடற்கரைக்கு அருகில் இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்திலிருந்து நிகழ்த்தப்பட்டமையால், கடல் காற்றோடு இரண்டறக்கலந்து காணாமல் போய்விட்டதோ என்றும் யோசித்தேன். இலங்கையில் அடுத்தடுத்து நடந்த கலவரங்களின் அதிஉச்சம்பெற்றதுதான் ஆவணி அமளி என்றும் கறுப்புஜூலை எனவும் சொல்லப்பட்ட கலவரம். 1958 முதல் நடந்த கலவரங்கள் குறித்து பல நூல்கள், ஆவணங்கள், சிறுகதைகள், நாவல்கள், தொடர்கதைகள் வெளிவந்துவிட்டன. 1958 ஆம் ஆண்டு கலவரம் வந்தபோது நான்கு வயது பாலகனாக இருந்த பிரபாகரன், பாணந்துறையில் ஒரு இந்து மத கோயில் ஐயர் கொதிக்கும் தாரில் எறியப்பட்டு துடிதுடிக்க கொல்லப்பட்ட செய்தியைக்கேட்டு, தனது தந்தையிடம், ஏன் தமிழரை அடிக்கிறார்கள். நாம் திருப்பி அடிக்கமுடியாதா..? எனக்கேட்டதாகவும் ஒரு செய்தியை பின்னணியாகக்கொண்டு மேதகு திரைப்படம் வருகிறது. அந்த மேதகுவின் தீர்க்கதரிசனம் அடிக்கு அடி என்றிருந்தமையாலும், அன்றைய இலங்கை அதிபரின் தீர்க்கதரிசனம் அடித்துத்தான் அடக்கவேண்டும் என்று இருந்ததாலும் 1983 கலவரத்தின் ரிஷிமூலம் திருநெல்வேலியில் பரமேஸ்வராச் சந்தியில் அந்த ஆண்டு இதே ஜூலை மாதம் 23 ஆம் திகதி இரவு 13 இராணுவத்தினர் புலிகளின் கண்ணிவெடித்தாக்குதலில் கொல்லப்பட்டதுதான் என்று சில அரசியல் ஆய்வாளர்கள் சொன்னாலும், ஜே.ஆரின் இராஜதந்திரம் அதனை எவ்வாறு கையாண்டது என்பது கவனத்திற்குரியது. அதற்கு முன்னர் அதே ஆண்டு மே மாதம் 01 ஆம் திகதி, கொழும்பில் நடந்த மக்கள் விடுதலை முன்னணியின் மாபெரும் மேதின எழுச்சிப் பேரணியையும், ஏனைய கட்சிகளுக்கில்லாத பேராதரவில் அந்த இயக்கத்தின் மேதினக்கூட்டத்திற்கு கொழும்பு நகரசபை மண்டபத்திடலில் திரண்ட மக்களையும் மதிப்பீடு செய்த ஜே.ஆரின். புலனாய்வாளர்கள் அவருக்குச்சொன்ன செய்திகளையடுத்து, அந்த இயக்கத்தை மீண்டும் தடைசெய்வதற்கான கணக்கினை மனதில் வரைந்தார். அந்த சித்திரத்தை பொறுத்திருந்து ஜூலை மாதம் இறுதியில் தருணம் பார்த்து வெளியிட்டார். முதல்நாள் ஜூலை 22 இல் கொழும்பில் ஆடிவேல்விழா. மறுநாள் 23 ஆம் திகதி சனிக்கிழமை திருநெல்வேலியில் தாக்குதல். அடுத்த நாள் ஞாயிறு போயா தினம் பௌத்தர்கள் சில் அனுட்டிக்கும் நாள். அதிபர் ஜே.ஆரும் சில் அனுட்டித்தார். திங்கட்கிழமை தமிழர்களை கில் ( Kill ) செய்யும் படலம் தொடங்கியது. கொல்லப்பட்ட 13 இராணுவ சிப்பாய்களின் சடலங்களையும் பொறுப்பேற்க இராணுவத் தளபதி யாழ்ப்பாணம் விரைந்தார். அதற்கிடையில் இராணுவத்தினர் பலாலி வீதியில் பல அப்பாவித் தமிழர்களை வீடு புகுந்து சுட்டுக் கொன்றனர். அவ்வாறு கொல்லப்பட்டவர்களில் எழுத்தாளர் கலா. பரமேஸ்வரனும் அவரது மாமனாரும் அடங்குவர். அவர்கள் அன்று ஆடி அமாவாசை விரதம் அனுட்டித்துக் கொண்டிருந்தவேளையில் குடும்பத்தினர் முன்னிலையில் சுட்டுக்கொல்லப்பட்டனர். நிலைமை கட்டுப்பாட்டை மீறுவதை அவதானித்த ஜே.ஆர். தனது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் சேபால ஆட்டிகலவிடம், யாழ்ப்பாணத்தில் நிற்கும் இராணுவத்தளபதி திஸ்ஸ வீரதுங்கவிடம், “ இராணுவ வீரர்கள் சண்டையில் சாவது பெரிய விடயம் அல்ல. அந்த 13 சடலங்களையும் அங்கேயே புதைத்துவிடச்சொல்லுங்கள் “ என்றுதான் முதலில் சொல்லியிருக்கிறார். “ சிங்கள வீரர்களை யாழ்ப்பாணத்தில் புதைப்பது சிங்கள இனப்பெருமைக்கு இழுக்கு. எனவே கொல்லப்பட்டவர்களின் சடலங்களை அவர்களது உறவினர்களிடமே ஒப்படைப்போம் “ என்கிறார் திஸ்ஸ வீரதுங்க. இந்தச் செய்தி ஜே.ஆரிடம் வருகிறது. அவர் முக்கிய பாதுகாப்புத்துறை அதிகாரிகளிடம் கலந்துரையாடுகிறார். 13 ஊர்களுக்கு சடலங்கள் சென்றால் , 13 ஊர்களில் கலவரம் வெடிக்கலாம், அதனால், பொரளை கனத்தை மயானத்திலேயே புதைக்கத் தீர்மானிக்கின்றனர். அன்று ஞாயிற்றுக்கிழமை 24 ஆம் திகதி கனத்தைக்கு சடலங்கள் வந்தன. கொல்லப்பட்டவர்களின் நெருங்கிய உறவினர்கள் இறுதிச்சடங்கிற்காக அழைக்கப்பட்டனர். அவர்களுடன் கோபக்கனல் கொப்பளிக்க வந்து குவிந்த கும்பல் தனது கைவரிசையை காண்பிக்கத்தொடங்கியது. கனத்தையில் வந்து நின்று பொலிஸாருக்கு உத்தரவுகளை பிறப்பித்தவர் அன்றைய பொலிஸ்மா அதிபர் ருத்ரா ராஜசிங்கம். கொல்லப்பட்ட இராணுவத்தினருக்கான இறுதி மரியாதை செலுத்த வந்த பாண்ட் வாத்தியக்குழுவின் தலைவர் மற்றும் ஒரு தமிழ் இராணுவ அதிகாரி ஜோர்ஜ் தேவசகாயம். ஜே.ஆரும் வரவிருந்தார். பாதுகாப்புத்தரப்பு அவரை வரவேண்டாம் எனச்சொல்லியிருக்கிறது. கனத்தையில் தொடங்கிய கலவரம் தலைநகர் எங்கும் தலைவிரித்தாடியது. அந்த ஞாயிற்றுக்கிழமை மாலை வேலை முடிந்து நான் வீடு திரும்பிவிட்டேன். மறுநாள் திங்கள் எனக்கு விடுமுறை நாள். அன்று மாலை தினபதி – சிந்தாமணியில் துணை ஆசிரியராகவும் நாடாளுமன்ற நிருபராகவும் பணியாற்றிய எனது நண்பர் செல்வரத்தினம் கொழும்பிலிருந்து விரைந்து வருகிறார். நேரே தனது வீடு செல்லாமல் என்னிடம் வந்து கொழும்பில் அன்று கண்ட காட்சிகளை பதற்றத்துடன் விபரிக்கிறார். “ நாளை முதல் வேலைக்குச்செல்லவேண்டாம் “ என்றார். அன்று முதல் பல நாட்கள் வீரகேசரியும் வெளிவரவில்லை. ஜே.ஆரின் இராஜதந்திர மூலை , அந்தக்கலவரத்தை தூண்டியவர்கள் மக்கள் விடுதலை முன்னணியினரும் மற்றும் இடதுசாரிக்கட்சியினரும்தான் என்று பெரிய அபாண்டத்தை சுமத்தி அவற்றை தடைசெய்யும் உத்தரவை பிறப்பித்தது. அதன்பின்னர் நடந்த சம்பவங்கள் வரலாற்று ஏடுகளில் தெளிவாக பதிவுசெய்யப்பட்டுள்ளன. எங்கள் வீரகேசரி பிரதம ஆசிரியர் க. சிவப்பிரகாசம், தினகரன் பிரதம ஆசிரியர் ஆர். சிவகுருநாதன் ஆகியோரின் வெள்ளவத்தை வீடுகளும் தாக்கப்பட்டன. அவர்களின் சேகரிப்பிலிருந்த பெருந்தொகையான நூல்கள் எரிக்கப்பட்டன. சிவகுருநாதன் தனது முதுமானிப்பட்டத்திற்காக பல இரவுகள் கண்விழித்திருந்து எழுதிய ஆய்வேடு உட்பட பல ஆவணங்களை தீ அரக்கன் அழித்தான். பின்னாளில்,அந்த அமளியின்பொழுது தான் அனுபவித்த கொடுந்துயர் பற்றி அவர் விரிவாக எழுதுகிறார். “ அமைதியாகவிருந்து எழுத வீடுவாசலில்லை. உடுக்க உடையில்லை. நான் படித்த நூல்களில்லை. சிறுபராயத்திலிருந்தே சேர்த்துவந்த சுமார் ஐயாயிரம் நூற் பிரதிகளுக்கு மேல் இன்றில்லை. நான் எழுதிய பேனாவே இல்லையென்றால் என் நிலை என்ன? நடுத்தெரு நாராயணனாக ஒரு சில மணிநேரத்துக்குள் என்னை ஆக்கிவிட்டார்கள் அந்தக்குண்டர்கள். தியாகப்பிரம்மத்தின் சமாதியில் நல்லை ஆதினகர்த்தா ஸ்ரீலஸ்ரீ சுவாமிநாதத் தம்பிரான் பூஜை செய்து எமது மகளுக்குத்தந்த ருத்ர வீணையை காடையர்கள் முறித்து குப்பையில் போட்டிருந்தார்கள். “ என்று எழுதுகிறார். கொழும்பில் ஏற்பட்ட அழிவுகள் உயிர்ச்சேதம் பற்றி புதிதாக ஒன்றும் இங்கே பதிவுசெய்யவேண்டியதில்லை. வீரகேசரியின் ஊழியர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டனர். பலர் அகதி முகாம்களிலும் சிலர் பாதுகாப்பான வீடுகளிலும் இடங்களிலும் முடங்கினர். சிவப்பிரகாசம் அவர்களது வீடும் காரும் சேதமானது. அந்த இனசங்காரம் பற்றியும் அவர் ஆங்கிலத்தில் ஒரு நூல் எழுதியிருக்கிறார். தனதும் குடும்பத்தினரதும் எதிர்காலம் பற்றி அவர் தீவிரமாக சிந்தித்திருக்கவேண்டும். 1983 பலருக்கும் எதிர்காலம் பற்றிய கேள்விக்குறியை முன்வைத்தது. அவரும் தமது குடும்பத்தினருடன் வெளிநாட்டுக்கு புலம்பெயரநேரிட்டது. எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப் தனது அனுபவங்களை நாங்கள் பாவிகளாக இருக்கிறோம் அல்லது 1983 என்ற நாவலாக படைத்துள்ளார். எழுத்தாளர் அருளர் 1958 கலவரம் பற்றி லங்கா ராணி என்ற நாவலை எழுதியுள்ளார். வ. ந. கிரிதரன் 1983 கலவரத்தின் பின்னணியில் குடிவரவாளன் என்ற நாவலை வரவாக்கியுள்ளார். அவுஸ்திரேலியாவில் வதியும் எழுத்தாளர் நடேசன் உனையே மயல்கொண்டு என்ற நாவலை எழுதிள்ளார். நேற்றை செய்திகள் வரலாறுகளாகவும் படைப்பிலக்கியங்களாகவும் பதிவாகிக்கொண்டிருக்கின்றன. 41 ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்த இக் கலவர காலத்தின்போது பிறந்த குழந்தைகளுக்கும், அதன்பின்னர் பிறந்தவர்களுக்கும் இவைதான் எமது தேசத்தின் வரலாறாக விளங்கப்போகிறது. சிங்கள இனவாத தீயசக்திகள் தமிழருக்கு எதிராக தாக்குதல் நடத்தின. தமிழ் விடுதலை இயக்கங்கள் சிங்கள இராணுவத்திற்கு எதிராக தாக்குதல் நடத்தின. இந்தப்போராட்டமும் கடந்த 2009 மே மாதம் முள்ளிவாய்க்காலில் முடிவுற்றது. “ அகிம்சைப்போராட்டம், ஆயுதப்போராட்டமாகி தற்போது ராஜ தந்திரப் போராட்டமாக மாறியிருக்கிறது “ என்று சில வருடங்களுக்கு முன்னர் மெல்பனுக்கு வருகை தந்து உரையாற்றிய தற்போதைய தமிழ்த்தலைவர் நாடாளுமன்ற யாழ். மாவட்ட உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் தெரிவித்தார். 1964 இல் பிறந்த அவருக்கு 1983 இல் 19 வயது. இலங்கையில் நீடித்த இனப்பிரச்சினையும் ஈழப்போராட்டமும் அவரை அரசியல்வாதியாக்கியதுடன் அரசியல் தலைவருமாக்கியது. அத்துடன் நாடாளுமன்ற உறுப்பினருமாக்கியது. 1951 – ஜூலையில் இல் பிறந்த நான், 1958 – 1977 – 1981 – 1983 கலவரங்களை பார்த்துவிட்டு, 1987 முதல் அவுஸ்திரேலியாவில் புகலிடம் பெற்று இந்தக் கலவரங்களை நனவிடை தோய்ந்தவாறு, நீடித்தபோரில் பாதிக்கப்பட்ட ஏழைத்தமிழ் மாணவர்களுக்கு உதவும் தன்னார்வத்தொண்டுப் பணிகளில் ஈடுபட்டவாறு தொடர்ந்தும் எழுதிக்கொண்டிருக்கின்றேன். இனிச்சொல்லுங்கள்: என்னால். இந்த ஜூலை மாதத்தை மறக்க முடியது அல்லவா..? முருகபூபதி. எனது கறுப்பு ஜூலை நினைவுகள் ஆக்கத்தில் நேர்ந்துள்ள தகவல் தவறை பிரான்ஸில் வதியும் தோழர் ராயப்பு அழகிரி சுட்டிக்காண்பித்துள்ளார். அவர் சொல்லும் தகவல் இதோ: தோழர் அருளர் எழுதிய ‘லங்காராணி’ நாவல் முதல் பதிப்பு 1978 இல் வெளிவந்தது. 1977 கலவரத்தின் போது கொழும்பில் அகதிகளை ஏற்றி யாழ்ப்பாணத்தில் இறக்கிய கப்பலின் பெயர் தான் ‘லங்காராணி’. அதில் தோழர் அருளரும் ஒரு அகதியாகப் பயணித்த அனுபவங்கள் நாவலில் பிரதிபலிக்கின்றன. அதனை அச்சிட்டுப் புத்தகமாக வெளியிட்ட பொறுப்பு சென்னையில் என்னுடையது. நீங்கள் கட்டுரையில்1958 கலவரம் என்று குறிப்பிட்டுள்ளது பிழையாகும். தோழர் அழகிரி அவர்களுக்கு மனமார்ந்த நன்றி. முருகபூபதி. https://akkinikkunchu.com/?p=284951
  20. சாவகச்சேரியில் இருந்து சமூக விடுதலையை ஆரம்பிக்க வேண்டும் – அசாந்த் வடிவேல் July 23, 2024 இன்றைய காலத்தில் அவரைத் தெரியாத ஒருவர் இலங்கையில் இல்லை… ஒரு வைத்தியர் ஒரு சமூக பொறுப்புடன்களை எடுக்க புறப்பட்டதன் விளைவு. நாட்டின் ஜனாதிபதி சுகாதார அமைச்சரை அனுப்பி பிரச்சினையை பார்க்க வைத்துள்ளார். தமிழன், ஒரு வைத்தியன் துணிந்து அநீதி களுக்கும் ஊழல்களுக்கும் எதிராக குரல் கொடுத்தபோதும் இன்று அவரின் குரல்வளை நசுக்கப்படுகின்றது. பகிரங்கமாக கேட்டும் தமிழ் தேசியம் பேசி திரியும் சட்டவாளர்கள் எவரும் அவருக்கு உதவ முன்வரவில்லை. இப்படித்தான் ஒரு பெரும் தலைவன் வா என்று கூப்பிட்டபோது ஓடி ஒழிந்து, வெளிநாடுகளுக்கு அடைக்கலம் தேடி தப்பி ஓடிய அதே கூட்டம் இன்று போலி தேசியம் பேசித் திரிகின்றது. இன்றும் அதே பல்லவி. யாராவது வந்துதான் குரல் கொடுக்க வேண்டும். நமக்கு கன்டென்ட் தான் முக்கியம். அப்படிதான் பலரின் வாழ்கை. இங்கே சாதாரண அர்ஜுனக்கு எப்படி ஆதர்வு கிடைக்கும்?. சுகாதார அமைச்சர் கூட இங்கு வந்து ஒரு தள வைத்தியசாலையின் பதில் வைத்திய அதிகாரி இவர்தான் என்று கூறுமளவு அர்ஜுனாவின் தாக்கம் அனைத்து சுகாதார துறைக்குள்ளே ஒரு தாக்கம் செலுத்தியுள்ளது.. ஏன் இவ்வளவு பிரமிப்பு! தென்னிலங்கை ஊடகங்களில்கூட அர்ச்சுனாவின் தாக்கம் உள்ளது. ஆக எல்லாவற்றையும் மாற்றிய மைக்க உங்கள் அனைவருக்கும் அர்ச்சுனாக்கள் தேவைப்படுகிறார்கள். அர்ச்சுனாக்களின் கதை முடிந்த பின் உங்களுடைய கடமைகள் முடிந்து விடுகிறது. ஏன் ஒவ்வொருவருக்கும் இந்த சமுதாய அக்கறை வருவதில்லை. அநீதி நடக்கும் இடங்களில் கேள்வி கேட்பதில்லை? காரணம் சுயநலம். நீங்கள் மேற்கூறிய அத்தனையையும் அனுபவிக்கவும் வேண்டும். அதேசமயம் சமூக அக்கறை என்று காட்டிக் கொள்ளவும் வேண்டும். ஏன் இந்த மனோநிலை. எதற்காக இந்த சுயநலம்? மறுபக்கம் அர்ஜுனா அவரது தவறு களை மறுக்கவில்லை. வைத்தியர்களின் மோசடிகள் அனைத்தையும் உள்ளிருந்தே சேகரித்து ஆவணப்படுத்தி பிரதி எடுத்து ஏனைய ஆதாரங்களையும் துல்லியமாகவும் உள்ளேயிருந்து ஆரம்பித்து அவர்களின் காலரில் பிடித்து இருக்க லாம். இப்போது எல்லாரும் ஒன்று சேர்ந்து மறைத்து உசார் ஆகி விட்டார்கள். இரகசியமாக சட்ட ஆலோசனைகளையும் பெற்று சமூக ஊட கத்தை மட்டுமே நம்பி இருக்காமல் முறைப்படி செய்து தப்பிக்க வழிதேடிவிட்டார்கள். இதனை நான் கூறுவது கூட அவர் மீதிருக் கும் சுயநலமற்ற அக்கறை காரணமாக. தற்போது பிரச்சினைக்குரிய வைத்தியர்கள் அவர் மீதான வழக்கு தனிப்பட்ட வழக்கு ஆக்கிவிட்டார்கள். வேறு விடயங்கள் பற்றி அவர் யோசிக்கமுடியாமல் ஆக்கியுள்ளார்கள். கேபிட்டல் ஊடகம் போன்ற சிலர் டிரெண்டிங் விளம்பரத்திற்கு அர்ச்சுனாவின் வாயைக் கிளறி பலதையும் பேச வைக்கிறார்கள். இது புரியாமல் அவரும் புலம்புகிறார். இதனால் அவரின் பெறுமதி அவருக்கே புரிவதில்லை. பின்னாளில் இலங்கையின் சுகாதார துறைக்கே செயலாளர் ஆக வர தகுதியுடைய தமிழர். அரைகுறை இல்லை call me as sir புகழ் யாழ் மாவட்ட வைத்திய அதிகாரி பிரணவனுக்கே பாடம் எடுத்தவர். ஆங்கிலத்தில் கூறுவார்கள் wooden spoon என்று அதைபோல இங்கு ஒரு பிராந்திய சுகாதார அதிகாரி இருக்கிறார், அவரின் ஆளுமை ஆமை போல. அதுவே அனைத்துப் பிரதேச வைத்தியசாலைகளுக்கும் வசதியாக நிர்வாகம் செய்ய முடிகிறது. சுற்றுநிருபம் படி அனைவரும் வேலை செய்தால் புதிதாக வருபவர் ஏன் நிர்வாகம் பற்றி பேச போகிறார். ஆனால் அர்ஜுனா சிங்களம், ஆங்கிலம் என மனுஷன் கணணித் தொழில்நுட்பத்தில் கூட அதிக திறன் உள்ளவர். அதைவிட MBBS, மேலதிகமாக மருத்துவ நிர்வாகத்துறை படித்து உள்ளார். அடுத்து அவர் வெளிநாட்டில் படிக்க செல்லுவார் அது இனி நடக்குமோ தெரியாது. Consultant of surgery இருந்தால் வெளிநாடு போய் செட்டில் ஆகி இருக்கலாம். இலங்கை மருத்துவ நிர்வாகம் படித்து அங்கு போய் வேலை கேட்டால் சந்தி சிரிக்கும். ஆனால் அவருக்கு பிற மொழி கல்வியை ஒரு வருடம் முடித்தால் அது முடிந்த பின் அவர் எதிர்காலமே வேறு. சபிக்கப்பட்ட தேசத்தில் எதுவுமே செய்யமுடியாது. இப்போது அவர் சேவையில் இல்லை. ஜனாதிபதியை சந்தித்து பேசினால் தீர்வு உண்டு. கருச்சிதைவு செய்ததாக குற்றம் சாட்டப் பட்ட வைத்தியர் சஃபியை கூட நீதிமன்றம் விடுவித்துள்ளது. இவர் மீது வழக்குகள் பல. அர்ஜுனா இனி அவர் சேவையில் இருந்தால் அவர் மீது பல கண்கள் குறிவைக்கப்படும். அவரின் குடும்பம் நண்பர்கள் பள்ளித் தோழர்கள் அவருக்கு ஆறுதலாக இருக்க வேண்டும். ஆனாலும் மனிதன் அனைத்து சுயநல வைத்தியர்களையும் அதிகாரிகளையும் ஓரளவு திருத்தி வேலை பயத்துடன் செய்ய வைத்துள்ளார். பலர் திருந்தி விடுவார்கள். உடனே வடக்கில் மருத்துவ மாஃபியா கொஞ்சம் அடங்கியுள்ளது. மக்களுக்கும் பயந்து உள்ளது. உடனடியாக சுகாதார அமைச்சு வைதியர்களுக்கும் பயோமெட்ரிக் வரவுப்பதிவு பொறிமுறையை நடைமுறைபடுத்த வேண்டும். வைதியர்களின் ஒழுங்கான வரவு கண்காணிக்க படவேண்டும். தனியார் வைத்தியசாலைக்கு குறித்த நேரத்திற்கு சரியாக செல்லும் அதே வைத்தியர்கள் அரச வைத்தியசாலைக்கு பிந்தி போனால் கேள்வி கேட்க கூடாது. சேர்க்கு கோவம் வரும்… என்ற வழக்கம் மாறவேண்டும் தாதியர்கள், நோயாளர் விடுதிக்கு பொறுப் பானவர்கள், மருத்துவத்துறை மாணவர்கள் ஆகி யோர் கோப்புக்களை தூக்கிகொண்டு ஆட்டு மந்தைகள்போல பின்னுக்கு ஓடகூடாது. அவர்கள் தமது கடமைகள் மற்றும் பொறுப்புக்களை உணரவேண்டும். முதலில் வடக்கில் இதனை உடனே ஆரம்பிக்க வேண்டும். அதை கண்காணிக்க வேண்டும். மேலும் பல அக்கறையான வைத்தியர்கள் வெளிநாட்டுக்குச் செல்லக்கூடிய நிர்ப்பந்தத்தில் இருக்கின்றார்கள். வைத்தியசாலையில் நடை பெறும் அசட்டையீனங்கள், ஊழல்கள் மற்றும் மோசடி களும் அதற்கு காரணமாகின்றன. சாவகச்சேரியில் இருந்து ஆரம்பிக்க வேண்டும். https://www.ilakku.org/சாவகச்சேரியில்-இருந்து-ச/
  21. கறுப்பு ஜூலை – நாற்பத்தொரு வருடங்கள் கடந்தும் ஆறாத வடு ஜூலை 23, 2024 ஈழத் தமிழ் மக்களின் வாழ்வில் என்றுமே மறக்க முடியாத ஒரு வடுவாக கறுப்பு ஜூலைப் படுகொலை இருக்கிறது. இத் தீவின் மக்கள் குருதியாலும் நிர்வாணத்தாலும் இனப்படுகொலை செய்யப்பட்டார்கள். அதனை சிறிலங்கா அரசு கலவரம் என்று அழைத்து தன்னைக் காக்க முயன்றது. சிறிலங்கா அரசு ஈழத் தமிழ் மக்களின் கல்வி, தொழில் வளம், பொருளாதாரம், இனப்பரம்பல், கலாசாரம் என்று ஒரு இனத்தின் வாழ்வியல்மீது தொடுத்த மிட்டமிட்ட படுகொலையாக போராக ஜூலைப்படுகொலை நிகழத்தப்பட்டது. இதுவே ஈழத் தமிழ் மக்களின் தனிநாடு கோரிய விடுதலைப் போராட்டத்தை வலுப்படுத்திய பின்னணியுமானது. மூத்த தளபதி செல்லக்கிளி அம்மான் வீரமரணம் ஈழ விடுதலைப் போராட்டம் முகிழ்ந்த எண்பதுகளின் ஆரம்பத்தில் விடுதலைப் புலிகள் உள்ளிட்ட இயக்கங்கள் சிறிய அளவிலான தாக்குதல்களை நடாத்தி வந்தார்கள். 1983ஆம் ஆண்டு ஜூலை 23ஆம் திகதியன்று, யாழ்ப்பாணம் திருநெல்வேலிப் பகுதியில் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தலைமையில் இலங்கை இராணுவத்திற்கு எதிரான சமர் ஒன்று இடம்பெற்றது. விடுதலைப் புலிகளை தாக்கும் நோக்கில் வந்த இராணுவ அணியொன்றை இடைமறித்து புலிகள் இயக்கம் தாக்குதலைத் தொடுத்தது. இதனால் இராணுவத்திற்கும் புலிகளுக்கும் இடையில் சமர் மூண்டது. இதில் 13 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். புலிகளின் மூத்த தளபதி செல்லக்கிளி அம்மான் இதில் வீர மரணமடைந்தார். புலிகளின் தாக்குதலில் கொல்லப்பட்ட இராணுவத்தினரின் சடலங்கள் கொழும்புவுக்கு கொண்டு செல்லப்பட்டன. தமிழர்களால் சிங்களவர்கள் கொல்லப்பட்டு விட்டார்கள் என்று திட்டமிட்டு கதை பரப்பட்டது. இதனால் கொழும்புவில் இருந்த தமிழர்களை கொன்று அழிப்போம் என்றும் இனவெறி பரப்பட்டது. இதனால் சிங்கள வன்முறையாளர்கள், தமிழர்களை தாக்கத் தொடங்கினர். வீதிகளில் சென்ற தமிழ் மக்கள் வீதிகளிலேயே அடித்து விரட்டப்பட்டார்கள். பலர் அடித்துக் கொல்லப்ட்டார்கள். எரியும் நெருப்பில் உயிரோடு தமிழர்கள் போட்டப்பட்டார்கள். தமிழ் மக்களின் வீடுகளுக்குள் நுழைந்த வன்முறையாளர்கள் அவர்களை அடித்துக் கொலை செய்தார்கள். நிர்வாணத்தாலும் நனைந்த இலங்கைத் தீவு ஜூலை 23இல் தொடங்கிய வன்முறை ஐந்து நாட்களுக்கு மேல் நீடித்தது. கொழும்புவில் மாத்திரம் சுமார் மூவாயிரம் பேர் கொல்லப்பட்டார்கள். கொழும்புவில் சிங்கள வன்முறையாளர்கள் படுகொலைகளை நிகழ்த்திய தருணத்தில், வடக்கு கிழக்கில் இலங்கை இராணுவமும் தமிழ் மக்களை கொன்று குவித்தது. யாழ்ப்பாணம் திருநெல்வேலிப் பகுதியில் 51 தமிழ் மக்கள் புலிகள் என்ற பெயரில் படுகொலை செய்யப்ட்டார்கள். அதேபோல வெலிக்கடைச் சிறைச்சாலையில் 53 தமிழ் அரசியல் கைதிகள் அடித்து துன்புறுத்தப்பட்டார்கள். குட்டிமணி, தங்கத்துரை, ஜெகன் முதலிய ஈழ விடுதலைப் போராளிகளும் படுகொலை செய்யப்பட்டார்கள். இலங்கை தீவு ஈழத் தமிழர்களின் குருதியாலும் நிர்வாணத்தாலும் நனைந்தது. கொழும்பு வீதிகளில் இருந்து தமிழர்களின் உடல்களில் மூட்டப்பட்ட தீ உயர எழுந்தது. தமிழர்களைப் பிடித்து நிர்வாணமாக்கி அவர்களை அவமதிப்பு செய்து வன்முறையாளர்கள் மகிழ்ந்தார்கள். மிக மிக கோரமான முறையில் மனித குலத்திற்கு விரோதமான முறையில் வன்முறைகள் நிகழ்த்தப்பட்டு மக்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். ஒரு குறிப்பிட்ட குழுவாலோ, அல்லது ஒரு தரப்பாலே இப்படி பரவலாகவும் நீண்ட நாட்களுக்கும் வன்முறைகளை மேற்கொள்ள முடியாது. கறுப்பு ஜூலைப் படுகொலை அன்றைய அரசால்தான் மிக திட்டமிட்டு நிகழ்த்தப்பட்டது. 1958இல் நடந்த இனப்படுகொலை கறுப்பு ஜூலை இலங்கையின் முதல் படுகொலையல்ல. அதற்கு முன்னர் 1958களிலும் இத்தகைய இனப்படுகொலைகள் நிகழ்த்தப்பட்டன. எழுதுபகளிலும் நிகழ்த்தப்பட்டன. அப்போது விடுதலைப் புலிகள் இலங்கை இராணுவம்மீது தாக்குதல்கள் எவற்றையும் நடாத்தவும் இல்லை. 1956இல் தனிச்சிங்கள சட்டத்தை அன்றைய பிரதமர் பண்டார நாயக்கா கொண்டு வந்த வேளையில் அன்று நாடாளுமன்றத்தில் இருந்த சிங்கள முற்போக்கு அரசியல்வாதிகள், இலங்கையில் தமிழ்நாடு ஒன்றை உருவாக்கப் போகிறீர்கள் என்றும் தமிழர்கள் பிரிந்து செல்லப் போகிறார்கள் என்றும் எச்சரித்தார்கள். இலங்கை அரசின் தமிழ் இன ஒடுக்குமுறை செயற்பாடுகளாலும் உரிமை மறுப்புக்களாலும் தனித் தமிழீழமே தீர்வு என்ற நிலைக்கு தமிழ் அரசியல்வாதிகள் சென்றனர். அதுவே அன்றைய இளைஞர்கள் தமிழீழத்தை அமைக்க ஆயுதம் ஏந்தவும் காரணமானது. தனிச்சிங்கள சட்டத்தை எதிர்த்து அறவழிப் போராட்டத்தை தமிழ் அரசியல்வாதிகள் முன்னெடுத்த வேளையில்தான் 1958களில் மூந்நூறு ஈழத் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்ட்டார்கள். அதேபோல 1981இல் யாழ் நூலகம் எரிக்கப்பட்டு அறிவுமீதும் புத்தகங்களின் மீதும் மிகப் பெரிய வன்முறை நிகழ்த்தப்ட்டது. ஆக விடுதலைப் புலிகள் உள்ளிட்ட இயக்கங்களின் எழுச்சியை மக்களை படுகொலை செய்து அழிக்கவும் திசை திருப்பவும் அன்றைய இலங்கை அரசு தீர்மானித்தது. இதனால் விடுதலைப் புலிகள் தாக்குதல் நடாத்திய மறுகணமே ஈழ மக்கள்மீது பெரும் வன்முறைப் போர் நடாத்தப்பட்டது. ஜே.ஆர். ஜெயவர்த்தனவின் முற்கூட்டிய பேச்சு ஜூலைப் படுகொலை நடப்பதற்கு பத்து நாட்களுக்கு லண்டன் பத்திரிகை ஒன்றுக்கு பேட்டியளித்த அன்றைய அதிபர் ஜே.ஆர். ஜெயவர்த்தனா, “யாழ்ப்பாண (தமிழ்) மக்களின் கருத்தைப் பற்றி நான் இப்போது கவலைப்படவில்லை. இப்போது நாம் அவர்களை நினைக்க முடியாது. அவர்களின் வாழ்க்கையைப் பற்றியோ அல்லது எங்களைப் பற்றிய அவர்களின் கருத்தைப் பற்றியோ அல்ல. வடக்கில் எந்தளவுக்கு அழுத்தம் கொடுக்கப்படுகிறதோ அந்தளவுக்கு சிங்கள மக்கள் இங்கு மகிழ்ச்சியடைவார்கள்... உண்மையில் நான் தமிழர்களை பட்டினி போட்டால் சிங்கள மக்கள் மகிழ்ச்சியடைவார்கள்” என்று கூறினார். இப்பிடி பேசி சில நாட்களிலேயே வடக்கு கிழக்கு தமிழ் மக்களை அழித்து மாபெரும் மகிழ்ச்சி தென்னிலங்கைக்கு வழங்கப்பட்டது. இன்று இலங்கை அதிபராக இருக்கும் ரணில் விக்ரமசிங்காவின் மாமனார்தான் அன்றைய அதிபர் ஜே.ஆர். ஜெயவர்த்தனா. விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உருவாக்கத்தை கண்டும் வடக்கு கிழக்குமீது வெறுப்பைக் கொண்டும் எதிர்ப்பை வெளியிட்ட அவர், தமிழர் தரப்புமீது வன்முறையை மேற்கொள்ள நேரிடும் என்ற தொனியில் எச்சரித்தும் இருந்தார். கறுப்பு ஜூலைப் படுகொலையை அன்று ஜெயவர்த்தனா அரசில் அமைச்சராக இருந்த சிறில் மத்யூ உள்ளிட்ட அரச தரப்பினரால்தான் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டது என்பதை இலங்கை அரசியல் கட்சிகள் கூறின. தனிநாடு கோரக் கூடாது என்ற நோக்கம் குறுகியதொரு காலப் பகுதியில் இவ்வாறு பெரும் வன்முறை நடக்கிறது என்றால் அதற்குப் பின்னால் அரசின் திட்டம் இருந்திருக்கிறது என்பதையும் உணராலாம். ஏற்கனவே இனவழிப்புக்கள் நடந்த நிலையில் விடுதலைப் புலிகளின் தாக்குதலை ஒரு சாக்காக வைத்துக் கொண்டு 83 ஜூலை இனப்படுகொலையை நடாத்தியுள்ளார்கள். சிறில் மத்யூ போன்றவர்கள் குறுகிய குழுவில் வன்முறையாக இல்லாமல் சிங்கள பொதுமக்களின் பற்கேற்புடன் நடாத்த நினைத்தார்கள். அதன் ஊடாக ஈழ மக்கள் ஆயுதம் ஏந்தக் கூடாது, தனிநாடு கோரக் கூடாது, தமது உரிமைகளை கேட்கக்கூடாது என்ற எச்சரிக்கைகளை விடுக்க நினைத்தார்கள். கொழும்புவில் இருந்து ஈழ மக்கள் வடக்கு கிழக்கு நோக்கி விரட்டப்பட்டார்கள். மலையகப் பகுதிகளில் தேயிலைத் தோட்டத்தில் பணி புரிந்த தமிழ் மக்கள் கூட அங்கிருந்து விரட்டப்பட்டார்கள். வடக்கு கிழக்குதான் உங்கள் நாடு அங்கே சென்றுவிடுங்கள் என்றால் போல் தென்னிலங்கையில் இருந்து தமிழ் மக்கள் விரட்டப்பட்டதும், தென்னிலங்கையில் ஈழ மக்கள் சிந்திய குருதியும் அனுபவித்த நிர்வாணங்களும் எரியூட்டப்பட்ட நெருப்பும் ஈழத் தமிழ் மக்களுக்கு ஒற்றைத் தீர்வு தனித் தமிழீழம் என்பதை நிர்பந்தித்தது. கறுப்பு ஜூலை இலங்கையில் இரண்டு நாடுகள்தான் தீர்வு என்ற நிலைக்கு ஆளாக்கியது. நாற்பத்தொரு ஆண்டுகள் கடந்தும் கறுப்பு ஜூலை தந்த நினைவுகள் அழியவில்லை. மிகப் பெரிய வன்முறை ஒன்று விட்டுச் செல்லும் வடுவின் தடம் அகல்வது அவ்வளவு எளிதல்ல. இப்போது சிங்கள மக்களின் மத்தியில் சில மனமாற்றங்களும் உருவாகியுள்ளன. தமிழ் மக்களுக்கு தீர்வை வழங்க வேண்டும், தமிழ் மக்களையும் புலிகளையும் புரிந்து கொள்ள வேண்டும் என்ற கருத்துநிலைகளும் உருவாகி வருகின்றன. ஆனால் சிங்கள மக்களை இன்றும் பிழையான வழிக்கு தூண்டும் அரசியல்வாதிகளும் உள்ளனர். சரத் வீரசேகர, விமல் வீரவன்ச, உதய கம்மன்பில போன்றவர்கள் பேரினவாத்தை பேசுகின்றபோதும்கூட எமக்கு ஜூலைப்படுகொலைகளே நினைவுக்கு வருகின்றன. https://www.battinatham.com/2024/07/blog-post_959.html
  22. அர்ஜுனாவும் இரும்பு மோதிரமும்- நிலாந்தன் ஒரு கனேடிய நண்பர், அவர் ஒரு பொறியியலாளர், இரும்பு மோதிரம் ஒன்றை அணிந்திருந்தார். அதற்குப் பின்னால் உள்ள கதையைச் சொன்னார். கனடாவில், கியூபெக் பாலம் 1907ஆம் ஆண்டு மனிதத் தவறுகளால் நொறுங்கி விழுந்தது. அதில் 75 தொழிலாளர்கள் கொல்லப்பட்டார்கள். அப்படி ஒரு தவறு இனிமேலும் நடக்க கூடாது என்ற சங்கல்பத்தோடு பொறியியலாளர்களுக்கான சத்தியப்பிரமாணம் ஒன்றைக் குறித்துச் சிந்திக்கப்பட்டது. டொரன்டோ பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான பொறியியலாளர் Haultain ஹோல்டேய்ன் 1922ஆம் ஆண்டு பொறியியலாளர்களுக்கான தொழில்சார் சத்தியபிரமாணத்தை அறிமுகப்படுத்தினார். 1925ஆம் ஆண்டு அவருடைய மேற்பார்வையின் கீழ் பொறியல் பட்டதாரிகள் இரும்பு மோதிரம் அணிந்து சத்தியபிரமாணம் செய்து கொண்டார்கள். முதலாவது தொகுதி இரும்பு மோதிரங்கள் உடைந்து விழுந்த கியூபெக் பாலத்தின் இரும்புத் தூண்களில் இருந்து தயாரிக்கப்பட்டன. இது கனேடியப் பொறியியலாளர்களுக்கான பொறுப்புக்கூறல் சம்பந்தப்பட்ட ஒரு விடயம். மருத்துவர்களுக்கும் அவ்வாறு உலகளாவிய “ஹிப்போகிரடிஸ் ஓத்” என்று அழைக்கப்படும் சத்தியப்பிரமாணம் உண்டு. பொறுப்புக்கூறல் எனப்படுவது மருத்துவத் துறைக்கும் பொறியியல் துறைக்கும் மட்டுமல்ல எல்லாத் துறைகளுக்கும் பொருந்தும். ஒரு சமூகப் பிராணியாக இருக்கும் மனிதர்கள் அனைவருக்கும் அது பொருந்தும். மருத்துவர் தவறுவிட்டால் உயிர் போகும் உறுப்புகள் போகும்.பொறியியலாளர் தவறுவிட்டால் பாலம் இடிந்து விழும்; அல்லது கட்டடம் இடிந்து விழும்; உயிர் போகும்; உறுப்புகள் போகும்; சொத்துக்கள் போகும். ஆசிரியர் தவறுவிட்டால் ஒரு தலைமுறையின் எதிர்காலம் நாசமாகும். தலைவர்கள் தவறு விட்டால் ஒரு நாடு அழிந்து போகும். எனவே மனிதத் தவறுகளுக்கு மனிதர்கள் பொறுப்புக் கூற வேண்டும். சமூகத்தின் மிகச்சிறிய அலகாகிய குடும்பத்துக்குள் குடும்ப அங்கத்தவர்களுக்கு பொறுப்புக்கூற வேண்டும். நிறுவனங்களுக்குள் கட்டமைப்பு சார்ந்து,தொழில் தர்மம் சார்ந்து,பதவிவழி சார்ந்து,பொறுப்புக்கூற வேண்டும். தலைவர்கள் மக்களுக்குப் பொறுப்புக்கூற வேண்டும்.ஆகக் குறைந்தது எல்லா மனிதர்களும் தங்களுடைய மனச் சாட்சிக்காவது பொறுப்புக் கூற வேண்டும். மருத்துவர் அர்ஜுனா மருத்துவத்துறை சார்ந்த பொறுப்புக்கூறல் தொடர்பில் விழிப்பை அதிகப்படுத்தியுள்ளார். மருத்துவத்துறை சார்ந்தவர்கள் சமூகத்துக்கு பொறுப்புக்கூற வேண்டிய நிர்ப்பந்தங்களை அவர் அதிகப்படுத்தியுள்ளார். அவர் எப்பொழுதும் நேரலையில் தோன்றினார். அப்பாவித்தனமாகவும் வெகுளித்தனமாகவும் தனக்குச் சரியெனப்பட்டதை நேரலையில் கூறினார். அவரிடம் உள்ள அப்பாவித்தனமும் தன்னைத் தற்காத்துக் கொள்ளாத துணிச்சலும் கலகக் குணமும் அவரை மக்களுக்கு நெருக்கமானவர் ஆக்கின. அதேசமயம் அந்த அப்பாவித்தனமும் அவசரமும் நிதானமின்மையும் பக்குவமின்மையும் ஊடகங்கள் முன் அவரை சிலசமயம் பலவீனமானவராகவும் காட்டின. சுகாதாரத்துறை தொடர்பாக அவர் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளை வெவ்வேறு ஊடகவியலாளர்கள் ஏற்கனவே முன்வைத்திருக்கிறார்கள். கிளிநொச்சியைச் சேர்ந்த மு.தமிழ்ச்செல்வன் அதுதொடர்பாக கட்டுரைகள் எழுதியிருந்தார். ஆனால் அர்ஜுனா இதில் எங்கே வேறுபடுகிறார் என்றால், அவர் அந்த சிஸ்டத்துக்குள் இருந்துகொண்டே அந்த சிஸ்டத்தைக் கேள்வி கேட்கின்றார் என்பதுதான். அதுதான் அவருக்கு கிடைத்த கவர்ச்சி. அந்தக் கவர்ச்சியை அவர் தொடர்ந்தும் தக்கவைத்துக் கொள்வாரா இல்லையா; அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை எத்தகையது; அவருடைய தனிப்பட்ட சுபாவம் எத்தகையது… போன்ற எல்லா விடயங்களுக்கும் அப்பால்,அவர் எழுப்பியிருக்கும் கேள்விகளுக்கு துறைசார் உயர் அதிகாரிகள் பதில் கூறுவதே பொருத்தமானது. ஏனெனில் அர்ஜுனா மருத்துவத்துறை சார்ந்த பொறுப்புக்கூறல் தொடர்பில் விழிப்பை ஏற்படுத்தியிருக்கிறார். மருத்துவத்துறைக்கு அது தொடர்பில் நிர்ப்பந்தங்களை ஏற்படுத்தியிருக்கிறார். தமிழ்ச் சமூகத்தில் கிராமவாசிகள் அரச மருத்துவமனைகளை தர்மாஸ்பத்திரிகள் என்று அழைப்பார்கள். அங்கு மருந்தும் சிகிச்சையும் இலவசமாக தரப்படுகிறது என்று பொருள். ஆனால் அவை மெய்யான பொருளில் தர்மாஸ்பத்திரிகள் அல்ல. அங்கே வேலை செய்யும் மருத்துவர்கள் உட்பட அனைவரும் சம்பளம் வாங்குகிறார்கள். அந்தச் சம்பளம் மக்கள் செலுத்தும் வரிப்பணத்தில் இருந்து திரட்டப்படுவது. அங்கு வழங்கப்படும் இலவச மருந்தும் சிகிச்சையும்கூட மக்களுடைய வரிப் பணம்தான். எனவே அங்கே யாரும் யாருக்கும் தானம் செய்யவில்லை. யாரும் யாரிடமும் தானம் பெறவும் இல்லை. ஆனால் வாங்கும் சம்பளத்துக்கு மேலதிகமாக தமது தொழிலைத் தொண்டாகச் செய்யும் மருத்துவர்கள் அநேகர் உண்டு. தாம் பொறுப்பேற்ற நோயாளியை காப்பாற்றுவதற்காக ஊண் உறக்கமின்றி சேவை புரியும் மருத்துவர்கள் உண்டு. தனியார் மருத்துவமனைக்குப் போகக்கூடாது என்பதனை ஒரு தவம் போல கடைப்பிடிக்கும் மருத்துவர்கள் உண்டு. தனியார் மருத்துவத் துறைக்கு போனாலும் அங்கே நோயாளியின் நிதிநிலையைக் கருத்தில் எடுத்து காசு வாங்காத மருத்துவர்கள் உண்டு. வாங்கிய காசை உண்டியலில் சேகரித்து தானம் செய்யும் மருத்துவர்கள் உண்டு. எனவே அர்ஜுனா முன்வைக்கும் குற்றச்சாட்டுக்கள் எல்லாம் மருத்துவர்களுக்கும் பொருந்தாது. போர்க்காலத்தில் உயிரைக் கொடுத்து உழைத்த மருத்துவர்களுக்கு அது பொருந்தாது. பெருந்தொற்றுநோய் காலத்தில் உயிரைக் கொடுத்து உழைத்த மருத்துவர்களுக்கு அது பொருந்தாது. இப்பொழுதும் தொழிலைத் தொண்டாகச் செய்யும் மருத்துவர்களுக்கு அது பொருந்தாது. அரச மருத்துவமனையை தர்மாஸ்திரியாக பார்க்கும் மக்கள் அங்கு மருத்துவர்கள் தாதியர்களும் தாங்கள் எதிர்பார்க்கும் அளவுக்கு தர்மமாக இல்லை எனும் பொழுது அதிருப்தி அடைகிறார்கள், கோபமடைகிறார்கள். குறிப்பாக தனியார் மருத்துவத்துறை மீதான விமர்சனங்கள் அந்தக் கோபத்தை அதிகப்படுத்துகின்றன. அந்தக் கோபங்களை கேள்விகளை அதிருப்தியை அர்ஜுனா குவிமயப்படுத்தினார். அதனால்தான் சாவகச்சேரியில் அத்தனை மக்கள் திரண்டார்கள். சில நாட்களுக்கு முன் சம்பந்தரின் அஞ்சலி நிகழ்வில் திரண்டதைவிட அதிக தொகையினர் ஒரே நேரத்தில் திரண்டார்கள். அர்ஜுனா எப்பொழுதும் நேரலையில் தோன்றினார் அதுதான் அவருடைய பலம். பின்னர் அதுவே அவருக்கு பலவீனமாகவும் மாறியது. அரச மருத்துவமனைகளை தர்மாஸ்பத்திரிகளாக கருதும் ஒரு சமூகத்தின் மத்தியில் மருத்துவர்களுக்கு உயர்வான பவித்திரமான ஒரு இடம் உண்டு. பொதுவாக மருத்துவர்கள் அந்த பவித்திரமான ஸ்தானத்தை விட்டு வெளியே வர விரும்புவதில்லை. ஆனால் அர்ஜுனா வெளியே வந்தார். பல மாதங்களுக்கு முன் கண்டாவளையைச் சேர்ந்த ஒரு பெண் மருத்துவர் வெளியே வந்தார். இப்பொழுது முகநூலில் சில மருத்துவர்கள் அவ்வாறு வெளியே வருகிறார்கள். ஆனால் இவர்கள் அனைவரும் விதிவிலக்கு. பொதுவான மருத்துவர் குணம் என்பது தனக்குரிய பவித்திரமான ஸ்தானத்தைப் பேணுவதுதான். ஆனால் அர்ஜுனா அப்படியல்ல. அவர் மருத்துவர்கள் தொடர்பாக தமிழ்ச் சமூகத்தில் கட்டியெழுப்பப்பட்ட பொதுவான பிம்பத்துக்கு வெளியே நிற்கிறார். நேரலைமூலம் அவர் சமூக வலைத்தளங்களில் கட்டியெழுப்பியிருக்கும் பிம்பமும் திடீர் வீக்கமாக இருக்கலாம். அவர் தன்னுடைய தனிப்பட்ட தவறுகளை, பலவீனங்களை சிஸ்டத்தின் மீதான விமர்சனங்களாக மாற்றுவதில் வெற்றி கண்டு விட்டார் என்ற ஒரு விமர்சனமும் உண்டு. எனினும்,அவர் சார்ந்த சிஸ்டத்தின் மீது அவர் எழுப்பியிருக்கும் கேள்விகள் விசாரணைக்குரியவை. திணைக்களம் சார்ந்த உள்ளக விசாரணைகள் உண்மைகளை வெளியே கொண்டு வரலாம். அல்லது ஊடகத் துறையைச் சேர்ந்தவர்கள் அதை மணந்து கண்டுபிடிக்கலாம். அர்ஜுனா எழுப்பிய கேள்விகள் தொடர்பாக உண்மைகளை புலனாய்ந்து வெளியே கொண்டுவர வேண்டிய துறைசார் பொறுப்பு ஊடகங்களுக்கு உண்டு. அது ஊடகத்துறை சார்ந்த பொறுப்புக் கூறல். அதேசமயம் துறைசார் அரச உயர் அதிகாரிகள் அவர் எழுப்பிய கேள்விகள் தொடர்பாக மக்களுக்கு பதில்கூற வேண்டும். அதைவிட முக்கியமாக அர்ஜுனா ஒரு பொறியைத் தட்டிப்போட்டதும் அது எப்படி சாவகச்சேரியில் தீயாகப் பரவியது என்பதற்குரிய சமூக உளவியலையும் தொகுத்து ஆய்வுசெய்ய வேண்டும். அர்ஜுனாவின் கலகம் வெற்றிடத்தில் இருந்து தோன்றவில்லை. அது ஏற்கனவே சமூக மட்டத்தில் பரவலாகக் காணப்பட்ட அதிருப்தி,கோபம்,பயம், சந்தேகம் போன்றவற்றின் தொகுக்கப்பட்ட விளைவுதான். ஏற்கனவே பொதுப் புத்திக்குள் இருந்த பயங்களையும் கோபத்தையும் அதிருப்தியையும் அர்ஜுனா ஒருங்குவித்தார் என்பதுதான் சரி. அர்ஜுனாவின் விமர்சனங்கள் விவகாரம் ஆகிய பின் சில நாட்கள் கழித்து யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் சத்தியமூர்த்தி ஒரு குறிப்பை முகநூலில் போட்டார். அது போதனா வைத்தியசாலை மீதான விமர்சனங்களுக்குப் பதில் கூறும் நோக்கிலானது. ஆனால் அதற்கு கீழே வந்த கருத்துக்களைத் தொகுத்துப் பார்த்தால், 500க்கும் அதிகமான கருத்துக்களில் 90 விகிதத்துக்கும் அதிகமானவை மருத்துவத் துறைக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை முன்வைப்பவை. அதில் ஒரு செய்தியுண்டு. பொதுசன மனோநிலை ஏன் அவ்வாறு அதிருப்தியோடும் கோபத்தோடும் காணப்படுகின்றது? ஒரு சமூகத்தின் குறிப்பிட்ட ஒரு துறைசார்ந்த பொறுப்புக்கூறல் தொடர்பில் விழிப்பு அதிகரிப்பது நல்லது. ஒவ்வொருவரும் தொழில் சார்ந்தும் அறம் சார்ந்தும் குறைந்தது மனச்சாட்சிக்காவது பொறுப்புக்கூற வேண்டும். ஒரு மருத்துவர் கூறியதுபோல, பொது வைத்தியசாலைகளில் கழிப்பறைகளை பயன்படுத்துவதிலும் பொதுச்சொத்தை நுகர்வதிலும் பொதுமக்கள் எவ்வளவு தூரம் பொறுப்போடு காணப்படுகிறார்கள்?எல்லாப் பொது மருத்துவமனைகளிலும் கழிப்பறைகள் மோசமாகக் காணப்படுகின்றன. ஏன் அதிகம் போவான்? முருகண்டியில் கழிப்பறைக்குக் காசு வாங்கப்படுகின்றது. ஆனால் அந்தக் கழிப்பறையின் சுகாதாரச்சூழல் எப்படியிருக்கிறது? மேற்கத்திய சமூகத்தின் சமூகப் பொறுப்பை கண்டுபிடிக்கக் கூடிய இடங்களில் ஒன்று கழிப்பறைகள் ஆகும். அங்கே பொதுக் கழிப்பறைகள் சுத்தமாக இருக்கும். அது நலன்புரி அரசுக் கட்டமைப்பு. தவிர அங்கே கழிப்பறைகள் உலர்ந்தவை. ஆனால் நமது கழிப்பறைகளோ ஈரமானவை. எனவே எமது சூழலுக்கு ஏற்ப வித்தியாசமாகச் சிந்தித்து கழிப்பறைகளில் சுத்தத்தைப் பேண வேண்டும். ஆனால் பொதுக் கழிப்பறைகளை வைத்து ஒரு சமூகத்தின் பொறுப்புணர்ச்சியை மதிப்பிடலாம். எனவே பொறுப்புக்கூறல் எல்லாத் தளங்களிலும் உறுதி செய்யப்பட வேண்டும். பொது மக்களில் தொடங்கி அரசாங்கம் வரை அனைவரும் பொறுப்புக்கூற வேண்டும். ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரை பொறுப்புக்கூறல் என்ற வார்த்தைக்கு அதிகம் பிரயோக அழுத்தம் உண்டு. அரசியல் அடர்த்தி உண்டு. 2015 ஆம் ஆண்டு ஐநாவில் நிறைவேற்றப்பட்ட30/1 தீர்மானம் பொறுப்புக் கூறலுக்கானது. அதாவது நிலைமாறு கால நீதிக்கு உரியது. ஆனால் அது தோற்கடிக்கப்பட்டது. இனப்படுகொலைக்கு யாருமே இதுவரை பொறுப்புக் கூறவில்லை. இவ்வாறு அரசியல் அர்த்தத்தில் பொறுப்புக் கூறப்படாத ஒரு நாட்டுக்குள், அல்லது பொறுப்புக்கூற யாருமற்ற ஒரு நாட்டுக்குள், பொறுப்புக் கூறலை பன்னாட்டு நீதிமன்றத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்று கேட்கும் ஒரு சிறிய மக்கள் கூட்டம்,தனக்குள்ளும் அந்தந்தத் துறை சார்ந்து அல்லது ஆகக்குறைந்தது அவரவர் தமது மனச்சாட்சிக்காவது பொறுப்புக் கூறத்தானே வேண்டும்? https://www.nillanthan.com/6828/
  23. இந்த உலகப் பிரச்சினைக்கு மூலகாரணம் ஒரு NULL pointer. ஒழுங்காக memory ஐ allocate பண்ணாமல் விட்டால் அல்லது பிழையான memory addresses ஐ point பண்ணினால் வரும் பிரச்சினை! C/C++ programming languages படிக்கும்போது பெரிய தலையிடியைக் கொடுக்கும் விடயம்! இதனால் பின்னர் வந்த programming languages பல resource management ஐ coding எழுதுவர்களிடம் இருந்து மறைத்து கையாள்கின்றது. ஆனால் Hardware க்கு அண்மித்து உருவாக்கப்படும் embedded software C/C++ இல்தான் எழுதப்படுகின்றன. எமது வேலையிலும் NULL pointers எப்போதும் பிரச்சினையாகத்தான் உள்ளன. ஆனால் இவற்றை இலகுவாகக் கண்டுபிடிக்க பல tools, rigorous engineering processes உள்ளன. எப்படி இவற்றையெல்லாம் தாண்டி Microsoft நிறுவனம் CrowdStrike இன் update ஐ அனுமதித்தது என்று புரியவில்லை.
  24. இந்தியன் 1 இல் தந்த கிறக்கத்தால் இரண்டு தரம் அகன்ற திரையில் படத்தைப் பார்த்தேன்😻 இந்தியன் 2 இல் நித்திரைதான் வந்தது! இப்போது மனிஷா இப்படி இருக்கா!
  25. கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி இறப்புக்கான காரணங்களுடன் அறிக்கை சமர்ப்பிக்கப்படவேண்டும் நீதிமன்று பணிப்பு என்கிறார் சட்டத்தரணி!!! கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியில் மீட்கப்பட்ட எலும்புக்கூடுகளை அடிப்படையாக வைத்து அவர்களின் இறப்புக்கான காரணம், பால், வயது உள்ளிட்ட பல்வேறு விடயங்களையும் உள்ளடக்கி இறுதி அறிக்கையைத் தாக்கல் செய்யுமாறு நீதிமன்றம் பணித்துள்ளதாக சட்டத்தரணி வி.கே.நிறஞ்சன் தெரிவித்தார். புதைகுழி அகழ்வின் இறுதியில் ஊடகங்களுக்கு அவர் மேலும் தெரிவித்ததாவது:- கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி வழக்கு கடந்த செவ்வாய்க்கிழமை எடுத்துக்கொள்ளப்பட்டது. மாவட்ட நீதிவான் த.பிரதீபன் முன்னிலையில் அவரின் பிரசன்னத்துடன் அகழ்ந்தெடுக்கப்பட்ட மனித ஓட்டுத்தொகுதிகள் அதனூடான பிறசான்றுப்பொருள்கள் பாரப்படுத்தப்பட்டன. இடைக்கால அறிக்கை பேராசிரியர் றாஜ்சோமதேவவால் தாக்கல் செய்யப்பட்டது. அதில் 1994- 1996 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலப்பகுதிக்குரிய எச்சங்களாக இவை இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பங்குபற்றுனர்களின் இறுதி அறிக்கைகளும் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்படவேண்டும். இறப்புக்கான காரணம், பால், வயது, உயரம் உட்பட பல விடயங்கள் உள்ளடக்கப்படவேண்டும். அத்துடன் காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலக அதிகாரிகளின் அறிக்கையும் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட வேண்டும். இதுபோன்ற அறிக்கைகள் எல்லாம் கிடைக்கப்பெற்ற பின்னர் ஒட்டு மொத்த அறிக்கைகளை வைத்து தீர்மானத்துக்கு வரமுடியும் என்று நீதிமன்றின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த வழக்கு எதிர்வரும் 8ஆம் திகதி மீண்டும் அழைக்கப்பட இருக்கின்றது. காணாமற் போனோர் அலுவலகத்தின் பிரதிநிதிகளின் பிரசன்னத்தில் புதைகுழி முற்றுமுழுதாக மூடப்பட்டுள்ளது. சர்வதேச நியமங்களுக்கு அமைவாக புதை குழியை மூடுமாறு நீதிமன்றின் கவனத்துக்கு நாங்கள் கொண்டு சென்றோம். மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள். தமிழீழவிடு தலைப்புலிகளின் உறுப்பினர்களின் உடலங்களாக இருக்கலாம் என்று நம்பப்படுகின்றது. கூடுதலாக பெண்போராளிகளின் உடலங்கள்தான் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. அதிகமானவர்களின் உடலங்களில் துப்பாக்கிச் சன்னங்கள் பாய்ந்துள்ளதை காணக்கூடியதாக உள்ளது. குழிகளுக்குள்ளும் துப்பாக்கிச் சன்னங்கள் பாய்ந்துள்ளன. அதனைவிட பிற பொருள்கள் அகழ்ந்தெடுக்கப்பட்டு நீதிமன்றக் கட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளன. ஆடைகள் கிழிக்கப்பட்டு அகற்றப்பட்டுள்ளதை காணக்கூடியதாக இருந்தது. இங்கு ஒரு வன்முறை, துஷ்பிரயோகம், மனித உரிமை மீறல் நடந்தது என்று அப்பட்டமாக தெரிகின்றது. ஒட்டுமொத்த அறிக்கைகள் வந்ததன் பின்னர்தான் உண்மை துலங்கும் என்று எதிர்பார்க்கின்றோம். தொழில்நுட்பவசதிகள், சர்வதேச முறைகள் இலங்கையில் இல்லை என்பதை நாங்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். என்றார். (ச) https://newuthayan.com/article/கொக்குத்தொடுவாய்_மனிதப்_புதைகுழி_இறப்புக்கான_காரணங்களுடன்_அறிக்கை_சமர்ப்பிக்கப்படவேண்டும்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.