Everything posted by கிருபன்
-
யாழ்ப்பாண சர்வதேச புத்தகத் திருவிழா - 2024 !
யாழ்ப்பாண சர்வதேச புத்தகத் திருவிழா - 2024 ! யாழ்ப்பாண வர்த்தக தொழில்த்துறை மன்றத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாண கலாச்சார மண்டபத்தில் எதிர்வரும் 09ஆம் திகதி முதல் 11 ஆம் திகதி வரையில் மூன்று நாட்கள் தொடர்ந்து நடைபெறவுள்ளது என நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். இலங்கையிலிருந்து மட்டுமல்லாமல் பல்வேறு நாடுகளில் இருந்தும் பல்வேறுபட்ட புத்தக விற்பனை நிறுவனங்கள் மற்றும் வெளியீட்டகங்களின் புத்தகங்கள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்படவுள்ளது. நாம் நமது உடலுக்கு உடற்பயிற்சி செய்வது போல, வாசிப்பு என்பது நம் மனதுக்கும் புத்திக்கும் ஒரு புத்துணர்ச்சி அளிக்கக்கூடியது. அதிவேகமாக வளர்ந்து வரும் தொழில்நுட்ப இந்த உலகில் நமது சமூகத்தில் வாசிப்பு கலாச்சாரத்தை மீட்டெடுக்க வேண்டிய தேவை நமக்கு உள்ளது. அந்த வகையில் மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்களிடம் வாசிப்பைமேம்படுத்தும் பொருட்டு அவர்களுக்கு தேவையான புத்தகங்களை அவர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டிய கடமைப்பாடு எமக்கு உண்டு. உள்நாட்டிலும், தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் ஆர்வமும் பங்குகொள்ள விருப்பமும் உள்ள புத்தக வெளியீட்டாளர்கள் மற்றும் விற்பனையாளர்களை ஒன்றிணைத்து இந்தப் புத்தகத் திருவிழாவை நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. ஒவ்வொரு வருடமும் பல புத்தகக் கண்காட்சிகள் நடக்கின்றன ஆனால் யாழ்ப்பாணத்தில், உள்ளூர் மற்றும் சர்வதேச எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையில் யாழ்ப்பாண வர்த்தகத் தொழிற்துறை மன்றமானது இந்த புத்தக கண்காட்சியை ஏற்பாடு செய்துள்ளது. இக் கண்காட்சியின் மூலம் வடமாகாணத்தை சேர்ந்த நூலகங்கள் , சனசமூக நிலையங்களுக்கும் இந்த புத்தகத் திருவிழா நல்லதொரு வாய்ப்பாக அமையும் என நாம் கருதுகிறோம். பாடசாலைகள் கூட தமது நூலகங்களுக்கு தேவையான புத்தகங்களை இந்த புத்தக திருவிழாவில் பெற்றுக்கொள்ள முடியும். புத்தக திருவிழா இடம்பெறும் தினங்களில் புத்தக வெளியீடுகள், அறிமுக நிகழ்வுகள் மற்றும் கலை கலாசார நிகழ்வுகள் என்பவற்றுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வடமாகாணத்தை சேர்ந்த அனைத்து மக்களும் இந்த நிகழ்வில் பங்குபற்ற கூடியவாறு அமையப்பெற்றுள்ளது. இக் கண்காட்சி முற்றிலும் இலவசமாக பார்வையிட முடியும். 40 காட்சி கூடங்கள் அமைக்கப்படும். அவற்றில் உள்ளூர் வெளியூர் எழுத்தாளர்களின் புத்தகங்களை காட்சிப்படுத்தவுள்ளோம் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்னர். குறித்த ஊடக சந்திப்பில் யாழ்ப்பாண வர்த்தக தொழில்த்துறை மன்றத்தின் நிறைவேற்று இயக்குனர் கு. விக்னேஷ் , வர்த்தக தொழில்த்துறை மன்ற தலைவர் கலாநிதி வாசுதேவன் ராசையா மற்றும் உப தலைவர் கலாநிதி செல்லத்துரை திருமாறன் ஆகியோர் கலந்து கொண்டனர். ( https://newuthayan.com/article/யாழ்ப்பாண_சர்வதேச_புத்தகத்_திருவிழா_-_2024_!
-
ஜனாதிபதித் தேர்தல் 2024 - செய்திகள்
ஜனாதிபதித் தேர்தல் எப்போது? – இறுதி முடிவு இன்று! ஜனாதிபதி தேர்தல் திகதி மற்றும் வேட்புமனுக்களை கோரும் திகதி தொடர்பில் இறுதி தீர்மானம் எடுப்பதற்காக தேர்தல்கள் ஆணைக்குழு இன்று (25) கூடவுள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தலைமையில் இன்று காலை தேர்தல்கள் ஆணைக்குழு கூட்டம் நடைபெறவுள்ளது. அடுத்த ஜனாதிபதி தேர்தல் திகதி தொடர்பில் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு இடையில் இறுதி இணக்கப்பாடு எட்டப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதி தேர்தல் திகதி இந்த வார இறுதிக்குள் அறிவிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நேற்று (24) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார். ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கான பூர்வாங்க பணிகள் ஏற்கனவே நிறைவடைந்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளது. http://www.samakalam.com/ஜனாதிபதித்-தேர்தல்-எப்போ/
-
தமிழ் மக்களுக்காக குரல் கொடுத்த கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன காலமானார்
தமிழ் மக்களுக்காக குரல் கொடுத்த கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன காலமானார் நவ சமசமாஜ கட்சியின் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ன தனது 81ம் வயதில் காலமானார். கடந்த 2010ம் ஆண்டில் கருணாரட்ன ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டுருந்தார். விக்ரமபாகு கருணாரட்ன தமிழ் மக்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டைக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் மக்களின் உரிமை கடந்த காலங்களில் தமிழ் மக்களின் உரிமைகளுக்காக கொழும்பில் போராட்டங்களை முன்னெடுத்திருந்தார். 1977ம் ஆண்டில் விக்ரமபாகு கருணாரட்ன நவ சமசமாஜ கட்சியில் இணைந்து கொண்டிருந்தார். நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார உள்ளிட்ட பல்வேறு இடதுசாரி கட்சித் தலைவர்களுடன் கடந்த காலங்களில் நெருக்கமான தொடர்புகளை பேணியிருந்தார். இலங்கை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பட்டதாரியான கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ன, கேம்றிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் கலாநிதி பட்டம் பெற்றுக் கொண்டார். அவர், 18 ஆண்டுகளாக பேராதனை பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக கடமையாற்றியுள்ளார். நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமைக்கு எதிராக குரல் கொடுத்த காரணத்தினால் அவர் தனது தொழிலை இழக்க நேரிட்டது. இனங்களுக்கு சுய நிர்ணய உரிமை வழங்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ன தமிழ் மக்களின் உரிமைகளுக்காக தொடர்ச்சியாக குரல் கொடுத்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. https://tamilwin.com/article/vikrmabahu-paassed-away-1721874586
-
சம்பந்தர் காலமானார்
“தோல்வியுற்ற தலைவர்” எனஇரா.சம்பந்தனை நிந்திப்பது நியாயமா? July 21, 2024 -– நியூசிலாந்து சிற்சபேசன் — திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் தலைவருமான இரா சம்பந்தன் அவர்களுடைய மறைவு சொல்லிக்கொள்ளக்கூடிய அதிர்வுகளைத் தமிழ் பொதுவெளியில் ஏற்படுத்தவில்லை. அன்னாருடைய பூதவுடல் அக்கினியில் சங்கமாக முன்னரே, அவருடைய மறைவு குறித்த பிரக்ஞை காணாமல்போய்விட்டது. ஏன் இந்த நிலை? என்ற கேள்வியை எளிதில் கடந்துபோகமுடியவில்லை. தன்னந்தனியனாகவும் தன்னிச்சைப்படியுமே இரா சம்பந்தன் இயங்கிவராகும். அதனால், ஒடுக்கப்பட்ட இனத்தின் அரசியலை முட்டுச்சந்தில் கொண்டுவந்து நிறுத்தியவர். சமூகத்தின் கூட்டுவலிகளில் கரிசனை கொண்டவரல்ல. மரபுகளிலே நம்பிக்கை கொண்டிருந்தவருமல்ல. வரம்புமீறல்களிலே உச்சம்தொட்டவர். சிங்கக்கொடியைத் தூக்குவது, சுதந்திரதினக்கொண்டாட்டம் உள்ளிட்ட அனைத்து விடயங்களிலும், வலிசுமந்த மரபுகளை அனாயாசமாக உதறித்தள்ளியவர். திருமலை நடராஜா உள்ளிட்ட எண்ணிலடங்காதோரின் உயிர்த்தியாகத்தை அர்த்தமற்றதாக்கியவர். இத்தகையதொரு 91 வயதுப் பெரியவரின் அரசியலை, நாலுவரிகளில், நறுக்கென்று சொல்லிவிடலாம். சிங்கள ஆளும் வர்க்கத்திடம் தோற்றார். தமிழ் மக்களிடம் தோற்றார். சொந்தக் கட்சியிடம் தோற்றார். ஈற்றில், தானும் தோற்றார். இவ்வாறு சொல்வதனாலே, பெரியவர் சம்பந்தனைக் குற்றவாளி ஆக்குவதாகப் பொருள் கொள்ள வேண்டியதில்லை. மக்களாட்சி முறையில், மக்களுடைய பிரதிநிதிகளை மக்களே தெரிவு செய்கின்றனர். மக்களுடைய நாடித்துடிப்பை அறிந்த ஒருவரே, அந்த மக்களுடைய தலைவராகப் பரிணமிக்கின்றார். 1960களில் திருகோணமலையில் பெயர் சொல்லக்கூடிய சட்டத்தரணியாக வலம்வந்தவர். குடும்பப்பின்னணி, செழிப்பான வருமானம் என்பவை அன்னாரை மேட்டுக்குடிமகனாக்கிச் சீராட்டின. மேட்டுக்குடிச்சமூகத்திலே, பெரும்பான்மைச் சமூக அரச, பொலிஸ், இராணுவ அதிகாரிகளுடன் தோழமையில் திளைத்து,ரம்மியமான மாலைப்பொழுதுகளில் இயற்கையை ரசிக்கும் வாழ்க்கை முறையில் வாழ்ந்து கொண்டிருந்தவர். அவ்வாறாக, வாழ்வின் உன்னதங்களைக் கொண்டாடிக் கொண்டிருந்தவரை, வலிந்து அரசியலுக்கு அழைத்து வந்தவர்களிலே பெரியவர் எஸ்.ஜே.வி செல்வநாயகம் முக்கியமானவராகச் சொல்லப்படுகின்றது. தொடர்ச்சியாகக் கொடுக்கப்பட்ட அழுத்தங்களினாலேயே, பெரியவர் சம்பந்தன் அரசியலில் கால்பதித்தவராகும். சுயவிருப்பில் அரசியலுக்கு வந்தவரல்லர். 1977 பாராளுமன்றத் தேர்தலில் திருகோணமலையில் வெற்றி பெற்றார். வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை முன்வைத்தே, தமிழர் விடுதலைக் கூட்டணி வெற்றிபெற்றது. தனிநாட்டுக் கோரிக்கையில் பெரியவர் சம்பந்தன் நம்பிக்கை கொண்டவரல்ல. இருந்தாலும்கூட, கூட்டத்தோடு சேர்ந்துகொண்டு அடக்கி வாசித்தார். தன்னுடைய நம்பிக்கைகளைப் பவுத்திரப்படுத்திக்கொண்டார். “ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும்” காத்திருந்தார். வாய்ப்புக்கிடைத்தபோது, “பிளவுபடாத இலங்கைக்குள், பிரிக்கப்பட முடியாத இலங்கைக்குள்” என்பதை மந்திரமாகவே உச்சரித்தார். பெரியவர் சம்பந்தனுடைய உலகம் மிகவும் சிறியது. அவருடைய உச்சந்தலையிலிருந்து தொடங்குகின்ற உலகம், உள்ளங்காலுடன் முடிந்துவிடுகின்றது. அதனைச் சுயநலம் என்று வெளிப்படையாகவும் சொல்லலாம். ஒரு மனிதர், தன்னுடைய நலனில் மட்டுமே கவனம்கொண்டிருப்பது தவறில்லையே. ஆனால், அத்தகையதொரு சுயநல இயல்பைத் தூக்கலாகக் கொண்ட ஒருவர், அர்ப்பணிப்பு மிக்க மக்கள் சேவைக்கு உரியவரா என்பதே இங்கு எழவேண்டிய கேள்வியாகும். அவரை வலிந்து அரசியலுக்கு கொண்டுவந்த “உயர்ந்த” தலைவர்கள் என்போர், அவரது இயல்பைக் கவனத்தில் கொள்ளவில்லை என்பதே வரலாற்றுத் தவறின் ஆரம்பமாகிவிட்டது. 1989 மற்றும் 1994 பாராளுமன்றத் தேர்தலிலே திருகோணமலையில் தோல்வியடைந்தார். 1997ல் அ. தங்கதுரை கொல்லப்பட்டபோது பாராளுமன்ற அங்கத்துவம் வசப்பட்டது. 2000ம் ஆண்டு தேர்தலிலே மீண்டும் தோல்வியடைந்தார். அதன் பின்னர், 2001லிருந்து பாராளுமன்றத் தேர்தல்களிலே வெற்றி பெற்றார். ஆக, 1977 வட்டுக்கோட்டை தீர்மானம் ஏற்படுத்திய அலையிலும், அதன் பின்னர் தமிழ் தேசிய அலையிலும் பாராளுமன்றம் சென்றவராகும். அந்தவகையிலே, தனித்துவமான மக்கள் ஆதரவினால் பெரியவர் சம்பந்தன் தேர்தல்களிலே வெற்றிபெற்றவருமல்ல. மக்களின் நாடித்துடிப்பை அறிந்த தலைவருமல்ல. மக்களிடமிருந்து எவ்வளவுதூரம் விலகி இருந்தார் என்பதற்கான சான்றுகளை தேடி அலைய வேண்டியதில்லை. அரசியல்கைதிகள் விடயத்திலே திறப்பு தன்னிடமில்லை என்று சொன்ன தொனியும், இராணுவ நடவடிக்கைகளினால் வலிந்து இடம்பெயர்ந்த தையிட்டி மக்களிடம் “என்ன காரணத்துக்காக உங்கள் வீடுகளைவிட்டு வந்தீர்கள்” என்ற கேள்வியும் “ஒருபானை சோற்றுக்கு, ஒரு சோறு பதம்” போன்றவையாகும். யாழ்ப்பாணத்திலே அன்னாருக்கு அஞ்சலிசெலுத்த வந்திருந்த பெண்கள் குழுவொன்று, பூதவுடலுக்கு அருகே நின்று “குரூப்போட்டோ” எடுத்துக்கொண்டதாக, ஓய்வுநிலை மூத்த அரச அதிகாரியொருவர் வேதனையோடு அங்கலாய்த்துக்கொண்டார். மேற்படி சம்பவத்தைக் கேள்வியுற்றபோது, வாழும்போது நெருங்க முடியாதவரை, இறந்த பின்னரேனும் மக்கள் நெருங்க எத்தனித்தனரோ என்னும் குரூரமான எண்ணம் தோன்றியதைத் தவிர்க்க முடியவில்லை. அரசியலுக்கு வந்தபின்னர் சமயோசிதமாகக் காய்களை நகர்த்தினார். தன்னுடைய இருப்பை மட்டுமே பேணிக்கொண்டார். அதிலே, மக்கள் நலன் இருக்கவில்லை என்பது ஆச்சரியப்படுவதற்கில்லை. ஏனெனில், மக்களுடைய நாடித்துடிப்பில் அக்கறை கொண்டவராக தன்னை என்றுமே அடையாளப்படுத்தியவரல்ல. ஆக, தலைவர் என தமிழ் சமூகம் கொண்டாடியதற்கு, பெரியவர் சம்பந்தன் எவ்வாறு பொறுப்பாளியாகலாம்? தமிழ் தேசிய அரசியலின் தலைமைக்கு பெரியவர் சம்பந்தனைக் கொண்டுவந்து சேர்த்ததில், விடுதலைவேண்டிய அமைப்புக்களின் பங்கு முக்கியமாகச் சொல்லப்படுகின்றது. ஆக, தானுண்டு – தன்னுடைய குடும்பம், தொழில் என தேமேயென இருந்தவரை, முதலில் பாராளுமன்ற அரசியலுக்கு வலிந்து கொண்டுவந்து சேர்த்தார்கள். “பெருந்தலைவர்” ரேஞ்சுக்கு “படம்” காட்ட “அத்திவாரக்கிடங்கு” வெட்டிவிட்டார்கள். 2001க்குப் பின்னர் கண்ணை மூடிக்கொண்டு வாக்களித்து வெற்றிபெறச்செய்தார்கள். இவற்றையெல்லாம் செய்தவர்களை விட்டுவிட்டு, “தோல்வியுற்ற தலைவர்” என பெரியவர் சம்பந்தனை நிந்திப்பது எந்தவகையிலே நியாயமாகும். https://arangamnews.com/?p=11017
-
கறுப்பு ஜூலை நினைவுகள்!… முருகபூபதி.
கறுப்பு ஜூலை நினைவுகள்!… முருகபூபதி. July 22, 2024 1 ஒவ்வொரு வருடத்திலும் வரும் ஜூலை மாதம் எனக்கு மிக மிக முக்கியமானது. அத்துடன் மறக்க முடியாத மாதம். இந்த மாதத்தில்தான் 1951 ஆம் ஆண்டு 13 ஆம் திகதி நான் பிறந்தேன். 13 ஆம் இலக்கம் அதிர்ஷ்டம் அற்றது என்பது பொதுவான கருத்து. சில நாடுகளில் அமைந்துள்ள உல்லாசப்பயண விடுதிகளில் 13 ஆம் இலக்கத்தில் விருந்தினர்கள் தங்கும் அறையும் இருக்காது என்பார்கள். 1942 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 13 ஆம் திகதிதான் கொலிவூட் நடிகர் ஹாரிசன் போர்ட் பிறந்தார். 1953 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 13 ஆம் திகதிதான் கவிப்பேரரசு வைரமுத்துவும் பிறந்தார். இவர்கள் எல்லாம் அதிர்ஷ்டம் அற்றவர்களா..? நான் 1951 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 13 ஆம் திகதி ஒரு வெள்ளிக்கிழமை பிறந்தேன். சில நாடுகளில் ஆங்கிலேயர்கள் 13 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வந்தால், அதனை கறுப்பு வெள்ளி துரதிர்ஷ்டமான நாள் எனச்சொல்லிக்கொண்டு வேலைக்கும் செல்ல மாட்டார்களாம் ! இது எப்படி இருக்கிறது..? கவியரசு கண்ணதாசன் “ நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்கத் தெரியாதா..?“என்று தொடங்கும் பாடலை இயற்றியிருக்கிறார். அவர் இந்த வரிகளை தனது சொந்த அனுபவத்தில்தான் எழுதியிருப்பார். எனக்கும் இந்த ஜூலை மாதத்தை பல காரணங்களினால் மறக்க முடியவில்லை. எனது முதல் சிறுகதையும் ( கனவுகள் ஆயிரம் ) 1972 ஆம் ஆண்டு ஜூலை மாதம்தான் மல்லிகையில் வெளியானது. கடந்த 1989 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 13 ஆம் திகதிதான் எனக்கு நன்கு தெரிந்தவர்களான தமிழ்த் தலைவர்கள் அ. அமிர்தலிங்கமும், வெ. யோகேஸ்வரனும் கொழும்பில் சுட்டுக்கொல்லப்பட்டனர். அன்றைய தினம் நான் கேக் வெட்டி பிறந்த தினத்தை கொண்டாடவில்லை. அந்தத் துயரச்சம்பவம் தொடர்பான செய்தியை அறிவதில் முனைப்போடு இருந்தேன். கடந்த ஆண்டு ( 2023 ) ஓகஸ்ட் மாதம் லண்டனில் நடந்த ஒரு திருமண நிகழ்வில் அமிர்தலிங்கம் – மங்கையர்க்கரசி தம்பதியரின் இரண்டாவது புதல்வர் மருத்துவர் பகீரதனை சந்தித்தபோதும், அவரது அப்பாவினது மறைவுத் திகதியை என்னால் என்றைக்குமே மறக்கமுடியாது என்றேன். இலங்கை வரலாற்றில் மறக்கமுடியாத கறை படிந்த கறுப்பு ஜூலை பற்றிய எனது நனவிடை தோய்தல் குறிப்புகளை மீண்டும் இங்கே நினைவுபடுத்துகின்றேன். “ தெரிதலும், தேர்ந்து செயலும், ஒரு தலையாச் சொல்லலும் வல்லது அமைச்சு “ இது திருவள்ளுவர் வாக்கு. இலங்கையில் திருக்குறள் சிங்கள மொழியிலும் பெயர்க்கப்பட்டிருக்கிறது. ஆனால், எமது சிங்கள அரசியல் தலைவர்கள் அதனை பொருள் விளங்கிப் படித்தார்களா..? என்பது தெரியவில்லை ! 1977 ஆம் ஆண்டு ஜே.ஆர். ஜெயவர்தனாவின் அரசு பதவியேற்ற காலப்பகுதியில்தான், அவர் 1906 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 17 ஆம் திகதி அவர் பிறந்த இல்லத்தில் பின்னாளில் அமைந்த வீரகேசரியில் நிரந்தர ஊழியனாகச் சேர்ந்தேன். 1977 ஆம் ஆண்டு நடுப்பகுதியில் அவரது பதவிக்காலத்தில்தான் 1958 இன்பின்னர் மற்றும் ஒரு கலவரம் வந்தது, அதற்குச் சில மாதங்களுக்கு முன்னர்தான் எனக்கும் வீரகத்தி தனபாலசிங்கத்திற்கும் வேறு சிலருக்கும் அங்கே நேர்முகத்தேர்வு நடந்தது. கலவரம் வந்தமையால் அந்த நேர்முகத் தேர்வின் முடிவும் தாமதமாகியது. அக்கலவர காலத்தில்தான் ஜே.ஆர், “ போர் என்றால் போர்- சமாதானம் என்றால் சமாதானம் “ என்று வானொலியில் திருவாய் மலர்ந்தருளிமுரசறைந்தார். ஜே.ஆரின் பதவிக்காலத்தில் அடுத்தடுத்து மூன்று கலவரங்கள் நிகழ்ந்தன. அந்த ஆண்டுகள் 1977 – 1981 – 1983. இரண்டாவது கலவரம் வந்தபோது வீரகேசரியில் அவர் திருவாய் மலர்ந்தருளும் கருத்துக்களை செய்தியாக ஒப்புநோக்க நேர்ந்தது. திருவள்ளுவர் என்ன சொல்கிறார்..? ஒரு செயலைப்பற்றி பலவழிகளிலும் ஆராய்ந்து அறியவேண்டும். சந்தர்ப்பம் வரும்போது ஆராய்ந்தவாறு செய்யவேண்டும். அதிலும் நன்மை தருவனவற்றையே உறுதியாகச் சொல்லவேண்டும். இதில் தனது ஆற்றலை வெளிப்படுத்துபவனே சிறந்த அமைச்சனாக இருப்பான். ஜே.ஆர். அரசியலில் பழுத்த அனுபவசாலி. சட்டம் படித்த பரீஸ்டர். அமைச்சராக – ராஜாங்க அமைச்சராக – பிரதமராகவிருந்து ஜனாதிபதியானவர். அரசியலில் இராஜதந்திரி. அவர் எதிர்க்கட்சியிலிருந்த காலத்தில் யாழ்ப்பாணம் சென்று ஒரு கூட்டத்தில்பேசும்போது, அவமானப்படுத்தப்பட்டு தாமதிக்காமலேயே, தனது காரில் கொழும்பு திரும்பியவர். நான் நீர்கொழும்பு பிரதேச வீரகேசரி நிருபராக பணியாற்றிய காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தில் நடந்த அச்சம்பவம் பற்றி, எங்கள் ஊர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும் ஜே.ஆரின். கட்சியைச்சேர்ந்தவருமான டென்ஸில் பெர்னாண்டோவிடம் கேட்டுத் தெரிந்துகொண்டேன். யாழ்ப்பாணக் கலாசாரம் கந்தபுராணக்கலாசாரம் என்று பண்டிதமணி கணபதிப்பிள்ளை சொல்லியிருக்கிறார். அத்தகைய கலாசாரப்பிடிப்புள்ள வடபுலத்தில் ஒரு தென்னிலங்கை அரசியல் தலைவரை அவ்வாறு அவமதித்தமை கண்டனத்துக்குரியதுதான். அதன் விலையை பின்னாளில் அறுவடை செய்யநேர்ந்தது. அந்த அறுவடைக் காலத்தில் எனது பத்திரிகை உலகப்பிரவேசம் வீரகேசரிக்குள் நிகழ்ந்தது. ஜே.ஆரின் மனதில் வஞ்சம் குடியிருந்திருக்கவேண்டும். வடபகுதி தமிழ் மக்களுக்கு பாடம் கற்பிக்கவேண்டும் என்ற எண்ணமும் இருந்திருக்கலாம். இலங்கையில் தமிழ் மக்கள் 1977 இல் அனுபவித்த இன்னல்களை சொல்வதற்கு எமது தமிழ் தலைவர்கள் இந்தியாவில் அப்போது எதிரணியிலிருந்த இந்திரகாந்தியிடம் ஓடினர். அதற்கு அவர், “ இரண்டு கிழட்டு நரிகளும் என்ன நினைக்கின்றன என்பது தெரியவில்லை. நீங்கள் பிரதமர் மொரார்ஜி தேசாயிடம் முறையிடுங்கள் “ என்று திருப்பியனுப்பினார். எமது தமிழ்த்தலைவர்கள் தேசாயிடம் முறையிட்டனர், அவரோ, “ அது இலங்கையின் உள்நாட்டுப்பிரச்சினை. பேசி தீர்த்துக்கொள்ளுங்கள் “ என்று கைவிரித்தார். போர் என்றால் போர் – சமாதானம் என்றால் சமாதானம் என்றவரிடம் எதனைத்தான் பேசித்தீர்ப்பது..? 1978 இல் பாரதப்பிரதமர் தேசாய் இலங்கை வந்தார். எதிர்க்கட்சித்தலைவராக இருந்த அமிர்தலிங்கம் அவரை சந்தித்தார். மீண்டும் 1979 இல் தனது மனைவி மங்கையற்கரசியுடன் அரச விருந்தினராக டில்லிக்குச் சென்றார். அங்கு அமிர் தெரிவித்த கருத்துக்கள் ஊடகங்களில் வெளிவந்தன. இந்தச்செய்திகளையெல்லாம் வீரகேசரியில் ஒப்புநோக்கியிருக்கின்றேன். ஏற்கனவே இலங்கை – இந்திய ஒப்பந்தங்கள் பலவற்றை எனது பாடசாலைக்காலத்திலிருந்தே பார்த்து வளர்ந்தமையாலும், சரித்திர பாடம் எனக்கு மிகவும் பிடித்தமானதாலும், அந்த ஒப்பந்தங்கள் பற்றி அறிந்திருந்தேன். மலையக இந்திய வம்சாவளி மக்கள் தொடர்பான ஶ்ரீமா – சாஸ்திரி ஒப்பந்தம், கச்சதீவை இலங்கைக்கு ஒப்படைக்க இந்திராகாந்தியுடன் ஶ்ரீமா செய்துகொண்ட ஒப்பந்தம் என்பனவற்றையும் அறிந்திருந்தமையால், பின்னாளில் வீரகேசரியில் செய்திகளை ஒப்புநோக்கும்போது, எதிர்காலத்தில் எமது தாயகத்தினுள் இந்தியாவின் தலையீடு தவிர்க்கப்படமுடியாததே என்ற தீர்க்கதரிசனமும் வந்தது. ஆங்கிலத்தில் ஒரு சொற்றொடர் இருக்கிறது. “Experience without education better than education without Experience “ அனுபவமற்ற கல்வியை விட, கல்வியற்ற அனுபவமே மேலானது. கர்மவீரர் காமராஜர் அதற்குச் சிறந்த உதாரணம். பாடசாலைக்கு செல்லும் வாய்ப்பினை சிறுவயதிலேயே இழந்தவர் அவர். எனினும் தமிழ்நாட்டில் ஏழை மாணவர்களின் கல்விக்கண்ணை திறந்தவர். அவர் முதலமைச்சராகவிருந்தபோது, பல்கலைக்கழகங்களில் மாணவர்களை அனுமதிக்கும் திட்டத்தில் அவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலனைக்காக அவரிடம் வருகிறது. அவர் மிகவும் குறுகிய நேரத்தில் தெரிவுசெய்து அதிகாரிகளிடம் கொடுத்துவிடுகிறார். “எப்படி அய்யா இவ்வளவு சீக்கிரம் தேர்வுசெய்தீர்கள்…? “ என்று அதிகாரிகள் அவரிடம் கேட்டபோது, “ இந்த மாணவர்களின் தந்தைமாரின் கையொப்பங்களை பார்த்தேன். அவர்கள் அனைவரும் கைநாட்டுத்தான் இட்டுள்ளார்கள். இவர்களின் பிள்ளைகளாவது படித்து நல்ல நிலைக்கு வரட்டும். , நான் இந்த விண்ணப்பங்களில் அதனைத்தான் முதலில் பார்த்தேன் “ என்றார் அந்த தீர்க்கதரிசி. விருதுநகரில் செக்கிழுத்து எண்ணெய் வடித்து வயிற்றைக்கழுவிய ஏழைக் குடும்பத்திலிருந்து வந்த காமராஜரையும், செல்வந்த குடும்பத்திலிருந்து வந்து லண்டன் சென்று பாரீஸ்டர் பட்டம் பெற்றுத்திரும்பிவந்து அரசியல்வாதியாகி, நாட்டின் அதிபராகிய ஜே.ஆர். ஜெயவர்தனாவையும் அக்காலப்பகுதியில் ஒப்பிட்டுப்பார்த்தேன். எழுத்துப்பிழைகளை திருத்தும் ஒப்புநோக்காளராகியபோதே, உலகத்தலைவர்களையும் ஒப்புநோக்குவதற்கும் கற்றுக்கொண்டேன். தான் பதவியேற்ற காலப்பகுதியிலேயே ஒரு இனக்கலவரம் நாட்டில் வந்துவிட்டிருந்தால், அந்த நாட்டின் தலைவர் என்ன செய்திருக்கவேண்டுமோ, அதனைச்செய்யத்தவறியதால், கடந்த ஐந்து தசாப்தங்களுக்கும் மேலாக இலங்கையின் இனப்பிரச்சினை தீர்ந்தபாடாயில்லை. தேசிய இனப்பிரச்சினையை தீர்க்கவென ஜே.ஆர் காலத்தில்தான் முதலில் மாவட்ட சபை திட்டமும் பின்னர் மாகாணசபை முறைமையும் வந்தன. இறுதியில் ஒரு பிரயோசனமும் இல்லை. 1981 இல் மாவட்ட சபைத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டபோது, அந்த யோசனையை வரைந்த தந்தை செல்வநாயகத்தின் மருமகனும் பிரபல சட்ட மேதையுமான ஏ. ஜே. வில்சனும் அமைச்சர் தொண்டமானும், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் ஐக்கிய தேசியக்கட்சியை போட்டியிட அனுமதிக்கவேண்டாம் என்றுதான் ஜே.ஆருக்கு ஆலோசனை கூறினார்கள். இங்குதான் இந்தப்பத்தியின் தொடக்கத்தில் குறிப்பிட்ட எமது திருவள்ளுவரின் வாக்கை நினைவுபடுத்தவேண்டியிருக்கிறது. இந்தியாவில் ஜாகிர் உசேன், அப்துல் கலாம் முதலான இஸ்லாமியர்கள் ஜனாதிபதியாக வருவதற்கு வாய்ப்பிருக்கிறது. ஆனால், இலங்கையில் சபாநாயகராக ஒரு சிறுபான்மை இனத்தவர் வருவதற்கும் சங்கடம் இருக்கிறது. பாக்கீர்மார்க்காரும் எம். எச். முகம்மதுவும் சொற்ப காலமே சபாநாயகர்களாக இருந்தார்கள். இந்நிலையில் ஒரு தமிழர் எவ்வாறு எதிர்க்கட்சித்தலைவராக தொடர்ந்து இருக்கமுடியும் என்ற சிந்தனைதான் பேரினவாதிகளிடத்தில் குடியிருந்தது. அதன் எதிரொலிகளை அக்காலப்பகுதியில் செவிமடுக்கமுடிந்தது. யாழ்ப்பாணம் மாவட்ட சபைகளுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டதும், தமது கட்சியின் பிரசாரப்பணிகளுக்காக ஜே.ஆர். அனுப்பிய அமைச்சர்கள் காமினி திஸாநாயக்காவும் சிறில் மத்தியூவும். சுமார் 180 சிங்கள அரசுப்பணியாளர்கள் தேர்தல் ஆணையாளரால் தேர்ந்தெடுக்கப்பட்டு அனுப்பப்பட்டனர். அத்துடன், யாழ். மாவட்டத்தில் போதியளவு பொலிஸார் இருக்கத்தக்கதாக தென்னிலங்கையிலிருந்து மேலதிகமாக 250 பொலிஸார் சென்றனர். இவர்களுடன் பாதுகாப்பு இணை அமைச்சர் வெரபிட்டிய, செயலாளர், மற்றும் பொலிஸ் மா அதிபரும் சென்றனர். ஒரு மாவட்டத்தில் நடக்கவிருந்த தேர்தலுக்கு இத்தனைபேர் எதற்காக அனுப்பிவைக்கப்பட்டனர் என்பது மிஸ்டர் தர்மிஸ்டர் ஜே.ஆருக்கே வெளிச்சம். இவ்வளவு பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கும் மத்தியில்தான் ஜே.ஆரின். அன்றைய அரசை ஆதரித்த வட்டுக்கோட்டை முன்னாள் எம். பி.யான ஆ. தியாகராஜா இளைஞர்களினால் சுட்டுக்கொல்லப்பட்டார். நாச்சிமார் கோவிலடியில் நடந்த தமிழர் விடுதலைக்கூட்டணியின் பிரசாரக்கூட்டத்தில் நான்கு பொலிஸ்காரர்கள் இளைஞர்களின் வேட்டுக்கு பலியாகினர். அதன்பிறகு நடந்த அனர்த்தங்கள் பற்றி இலங்கை தமிழர் அரசியல் வரலாற்று ஏடுகள் பதிவுசெய்துள்ளன. 1981 மே 31 ஆம் திகதி, யாழ்ப்பாணம் பொது நூலகம் பற்றி எரிந்தது. யாழ்.பொதுநூலகம் எரிக்கப்பட்டதை அறிந்த வண.பிதா தாவீதுஅடிகள் மாரடைப்பால் காலமானார். யாழ்ப்பாணத்தில் நாலாதிசையிலும் நடமாடிக்கொண்டிருந்த மிலிட்டரி பொலிஸ்காரர்கள் மக்களை மிரட்டிக் கொண்டிருந்தனர். அவர்களின் நடமாட்டமே மிரட்சியை ஏற்படுத்தியிருந்தது. நூல் நிலையத்தை எரித்தவர்கள், யாழ். எம். பி. வெற்றிவேல் யோகேஸ்வரனின் வீட்டையும் ஈழநாடு அலுவலகத்தையும் எரித்திருந்தார்கள். யோகேஸ்வரனும் அவரது மனைவி சரோஜினியும் பின்புறத்தால் தப்பி ஓடினர். 1981 ஆம் ஆண்டு ஜூன் 01 ஆம் திகதி முற்பகல் எரிந்துகொண்டிருந்த யாழ். பொது நூலகத்தைப்பார்க்கச்சென்றபோது அங்கு மிலிட்டரி பொலிஸார்தான் காவலுக்கு நின்றார்கள். “ இனிமேல் அங்கே எரிப்பதற்கு என்ன இருக்கிறது…? ஏன் இவர்கள் இங்கு காவலுக்கு நிற்கிறார்கள்..? “ என்று உடன் வந்த மல்லிகை ஜீவாவிடம் கேட்டேன். காவலுக்கு நின்ற ஒரு மிலிட்டரி பொலிஸ்காரரிடம் சிங்களத்தில், “புவத்பத், புஸ்தகால கறபு வெறத்த குமக்த?” (பத்திரிகைகளும் நூல்நிலையமும் செய்த குற்றம் என்ன? ) என்று சிங்களத்தில் கேட்டேன். அந்த மிலிட்டரி பொலிஸ்காரர் என்னை விநோதமாகப் பார்த்தார். யாழ்ப்பாணத்தில் தன்னோடு சிங்களத்தில் பேசும் இவன் யாராகவிருக்கும் என்ற பார்வை அதில் தெரிந்தது. அன்று மாலை உரிய நேரத்திற்கு வரவேண்டிய இரவு தபால் ரயிலும் காங்கேசன்துறையிலிருந்து தாமதமாகவே புறப்பட்டது. ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுவிட்டதால் எனக்கு விடை கொடுத்துவிட்டு ஜீவா அருகிலிருந்த தமது வீட்டுக்குச் சென்றுவிட்டார். இரவு பத்துமணிக்குத்தான் அந்தமெயில்வண்டி வந்தது. விரல் விட்டு எண்ணத் தக்க பயணிகளுடன் பதட்டத்துடனும் எனக்கு சிங்களமும் பேசத் தெரியும் என்ற தைரியத்துடனும் அந்தப் பயணத்தை தொடர்ந்தேன். யாழ்.பொதுநூலக எரிப்புக்கு கண்டனம் தெரிவித்து ஜி. செனவிரத்தின உட்படசில மனிதஉரிமை ஆர்வலர்களுடன் இணைந்து கொழும்பில் புதிய நகரமண்டபத்தில் ஒரு பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. இக்கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த அமிர்தலிங்கமும் பேசுவதாக இருந்தது. ஏதும் குழப்பம் நேரலாம் என்று இறுதி நேரத்தில் பொலிசார் இக்கூட்டத்திற்கு அனுமதி வழங்கவில்லை. அமிர்தலிங்கம் அந்தச்சம்பவத்தை கண்டித்து நாடாளுமன்றில் நிகழ்த்திய உரை மிகவும் முக்கியமானது. அவர் அன்று இவ்வாறு சொன்னார்: “ இரண்டாம் உலக மகா யுத்தத்தின்போது, ஹிட்லர் தனது படைகளிடத்தில்,“ மருத்துவமனைகள் நூல் நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தவேண்டாம் “ என்று கட்டளை இட்டார். கொடுங்கோலன் சர்வாதிகாரி எனப் பெயரெடுத்த ஹிட்லருக்கும் கூட நூல் நிலையத்தின் பெறுமதி தெரிந்திருக்கிறது. ஆனால், இலங்கையில் எமது நாட்டைப்பாதுகாக்கவேண்டிய பொலிஸாருக்கு இந்த அடிப்படை அறிவும் தெரியவில்லை “ பொலிஸாரின் அடாவடித்தனத்தால், அன்று யாழ். ஈழநாடு பத்திரிகை அலுவலகம் மற்றும் பஸ் நிலையத்திலிருந்த பூபாலசிங்கம் புத்தகசாலை உட்பட பல கட்டிடங்கள் எரிந்தன. அதனைப்பார்க்க யோகர்சுவாமிகள்தான் இல்லை. இருந்திருப்பின், ஈழநாடு முதல் பிரதி தன்வசம் தரப்பட்டபோது, எதற்காக, “ ஏசுவார்கள், எரிப்பார்கள் “ என்று சொன்னேன். எனது நாக்கு கரிநாக்கா..? “ என்றும் யோசித்திருக்கக்கூடும். வில்சனும், தொண்டமானும் சொன்ன சொல்லை கேளாமல் எதுவித தீர்க்கதரிசனமுமற்று யாழ். மாவட்ட தேர்தலில் ஐக்கியதேசியக்கட்சியை போட்டியிடவைத்து, இத்தனை அநர்த்தங்களுக்கும் வித்திட்ட ஜே.ஆர். சர்வதேச அழுத்தங்களினாலும் கூட்டணித்தலைவர்களின் நெருக்குதலினாலும், இறுதியில் யாழ். நூலக எரிப்புக்கு ஒரு கோடி ரூபா இழப்பீடு தருவதற்கு சம்மதித்தார். யாழ். எம்.பி. வெற்றிவேல் யோகேஸ்வரனின் வீடு தீக்கிரையாக்கப்பட்டதற்கும் இழப்பீடு வழங்கப்பட்டது. நிகழ்ந்த அநர்த்தங்களை விசாரிக்க சர்வதேச ஜூரிமார் சபை நியமிக்கப்பட்டது. அந்தச்சபை Ethnic Conflict and Violence in Srilanka என்ற தலைப்பில் நீண்ட அறிக்கை தயாரித்து ஜே.ஆரிடம் கொடுத்தது. அவர் கண்துடைப்பில் பெரிய வித்தகர். அதற்கு முன்னர் 1977 இல் நடந்த கலவரம் பற்றியும் சன்சோனி என்ற நீதியரசர் தலைமையில் ஆணைக்குழு வைத்து விசாரித்து அறிக்கை பெற்றவர். இழப்பீடுகள், ஜே.ஆரின் குடும்பச்சொத்திலிருந்து வழங்கப்படுவதில்லை. மக்களின் வரிப்பணத்திலிருந்தும் வெளிநாட்டு கடனுதவியிலிருந்தும்தான் வழங்கப்படுகிறது. யாழ்ப்பாணம் பொது நூலக எரிப்புடன், அந்த 1981 ஆம் ஆண்டு கடந்துவிடவில்லை. அந்த ஆண்டு நடுப்பகுதியில் வடக்கில் பற்றி எரிந்த தீ, படிப்படியாக மேற்கிலங்கையிலும் மலையகத்திலும் பரவியது. அதற்கு காலிமுகத்திடலுக்கு முன்பாக பிரிட்டிஷாரின் காலத்தில் அமைந நாடாளுமன்றத்தில் அரசு தரப்பு அமைச்சர்களும் எம். பி. க்களும் பேசிய பேச்சுக்கள்தான் பின்னணிக் காரணம். முக்கியமாக பாணந்துறை எம். பி. நெவில் பெர்னாண்டோ, அமைச்சர் சிறில் மத்தியூ ஆகியோர் கொண்டு வந்த எதிர்க்கட்சித்தலைவர் அமிர்தலிங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பான வாதம்தான். அமிரை காலிமுகத்திடலில் கழுவேற்றிக்கொல்லவேண்டும் என்றெல்லாம் பேசினார்கள். விவாதங்கள் இரவு வரையில் தொடர்ந்தன. அந்தச்செய்திகளை வீரகேசரியில் இரவு நேரப்பணியில் ஒப்புநோக்கினேன். என்னுடன் பணியாற்றிய கனகசிங்கத்தின் குடும்பத்தினர் 1977 இல் கொழும்பு முகத்துவாரத்தில் குடியிருந்தபோது, சிங்கள இனவாதிகளினால் தாக்கப்பட்டனர். கனகசிங்கத்தின் மனைவி கத்தி வெட்டுக்காயங்களுடன் ஆஸ்பத்திரிக்கு எடுத்துச்செல்லப்பட்டவர். இந்தக்குடும்பம், அந்தக்கலவரம் தொடர்பாக விசாரித்த சன்சோனி ஆணைக்குழுவின் முன்பாகத் தோன்றி சாட்சியம் வழங்கியிருக்கிறது. 1981 ஜூலை மாதம் 23 ஆம் திகதி நாடாளுமன்றில் அமிருக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத்தீர்மான விவாதம் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை தெரிந்தோ தெரியாமலோ அதிபர் ஜே.ஆரும், பிரதமர் பிரேமதாசாவும் தமது கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சுதந்திரமாக பேசுவதற்கு அனுமதித்திருந்தனர். பிரேமதாசா அன்றைய விவாதத்தின்போது, வெளியூர் நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்துகொண்டு, அகன்றுவிட்டார். அதிபர் ஜே.ஆர். நாடாளுமன்றத்திற்கு சிம்மாசனப்பிரசங்கத்திற்கு மாத்திரமே வருவார். அந்த விவாதம் 23 ஆம் 24 ஆம் திகதிகளில் தொடர்ந்து நடந்தது. வாய்க்கு வந்தபடி ஆளும்தரப்பு எம்.பி.க்கள் சிலர் பேசினார்கள். எதிரணியிலிருந்த ஏழு சுதந்திரக்கட்சி எம்.பி.க்கள், அதனைக் கண்டித்து அந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் நாடாளுமன்ற அதிகார வரம்பிற்கு உட்பட்டதல்ல எனக்கூறி வெளிநடப்புச்செய்தார்கள். அரசு எம்.பி.க்கள் 121 பேர் ஆதரித்து வெற்றிகொண்டனர். அமைச்சர் தொண்டமானும் துணை நீதியமைச்சர் ஷெல்டன் ரணராஜாவும் வாக்களிக்க மறுத்தனர். இரண்டுபேரும் கண்டி, செங்கடகல மற்றும் மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தியவர்கள். விஞ்ஞான கைத்தொழில் அமைச்சர் சிறில் மத்தியூவை சுதந்திரமாக பேசவிட்ட ஜே.ஆர், அவரது வரம்புமீறிய பேச்சைக்கேட்டபின்னர், அவரை பதவியிலிருந்து தூக்கினார். ஐக்கியதேசியக்கட்சியின் தொழிற்சங்கங்க சம்மேளனத்தின் பெருந் தலைவராகவிளங்கிய பலம்பொருந்தி சக்தியான சிறில் மத்தியூவை முன்னால் விட்டு வீழ்த்திய சாணக்கியர் பிரேமதாசா, தனது எதிர்காலத் தலைமைத்துவத்திற்கான பாதையை செப்பனிடத் தொடங்கிய காலமும் அதுதான். இந்த சம்பவங்களின் எதிரொலியாக நிகழ்ந்த தொடர் அநர்த்தம்தான் 1981 ஆம் ஆண்டு கலவரம். அந்த ஆண்டு ஜூன் மாதம் யாழ்ப்பாணம் எரிந்தது. ஜூலை மாதம் இரத்தினபுரி மாவட்டமும் கம்பகா மாவட்டத்தில் எங்கள் ஊரும் எரிந்தது. இவ்வளவும் நடந்தபின்னர்தான் பொலிஸார் வெளியே வந்தனர். பொலிஸை நம்பிப்பிரயோசனம் இல்லை. யாழ்ப்பாணத்தில் தீவைத்தது பொலிஸ்தானே! ஆனால், எங்கள் ஊரில் அந்தவேலையை பேரினவாதிகளின் ஏவல் சக்திகள் பொறுப்பெடுத்திருந்தன. எமது ஊரில் 1966 இல் இடைத்தேர்தல் நடந்தபொழுது பாடசாலை மாணவனாக இருந்த நான், அந்த இடைத்தேர்தல் பிரசாரக் கூட்டங்களில்தான் பிரதமர் டட்லியையும், அதே மேடையில் கல்குடா எம்.பி தேவநாயகத்தையும் வவுனியா எம்.பி. தா.சிவசிதம்பரத்தையும் ஜே.ஆரையும் பார்த்திருக்கின்றேன். இவ்வாறு ஐக்கிய தேசியக்கட்சியுடன் தேன்நிலவு கொண்டாடிய ( தேவநாயகம் தவிர்ந்த ) தமிழரசுக்கட்சி எம்.பி.க்கள், அமிர், மற்றும் இரண்டு சிவசிதம்பரங்களும் 1983 அதே ஐக்கிய தேசியக்கட்சியின் பதவிக்காலத்தில் தமிழ்நாட்டில் பாதுகாப்பிற்காக தஞ்சமடைந்தனர். அந்தக்காட்சியையும் 1984 ஆம் ஆண்டு சென்னைசென்றபோது நேரடியாகப் பார்த்தேன். அதிபர் ஜே.ஆர், பிரதமர் பிரேமதாசாவுடன் ஒருநாள் எங்கள் ஊருக்கு வந்து எரிக்கப்பட்ட கடைத் தொகுதிகளை பார்த்தார். அத்துடன் தொண்டமான், செல்லச்சாமியுடன் இரத்தினபுரி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட இடங்களையும் சென்று பார்வையிட்டு நிலைமையின் தீவிரத்தை அறிந்தார். அன்றும் ஐக்கிய நாடுகள் சபையும் மனித உரிமை அமைப்புகளும் தமிழகத்தில் முதல்வர் எம்.ஜி. ஆரின் அரசும் இந்திய மத்திய அரசும் அழுத்தங்களை பிரயோகித்ததையடுத்து ஜே.ஆர். எதிர்காலத்தில் தனக்கு வரப்போகும் நெருக்கடிகளை உணர்ந்தார். அவர் எங்கள் ஊருக்கும் இரத்தினபுரி உள்ளிட்ட மலையகப்பகுதிகளுக்கும் சென்று நேரடியாக அநர்த்தங்களை பார்த்துவிட்டு திரும்பிய பின்னர், தமிழ் மக்கள் செறிந்து வாழும் வெள்ளவத்தை இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் ஆளும் கட்சியின் நிருவாகக்குழுவின் கூட்டத்தை நடத்திப்பேசிய பேச்சுக்களையும் வீரகேசரியில் ஒப்பு நோக்க நேர்ந்தது. அதிலிருந்து சில வசனங்கள்: “ நான் ஆத்திரத்தில் அல்ல. மனம் நொந்து பேசுகிறேன். நாடெங்கும் அண்மையில் நடந்திருக்கும் வெறிச்செயல்கள் நாம் மதித்துப்போற்றிப் பின்பற்றுகின்ற உயர் சமய நெறிகள், நம்மில் சிலரை பண்புள்ள மனிதர்களாக மாற்றவேயில்லை. சில மிருகங்கள் – இதைச்சொல்லவே வெட்கப்படுகின்றேன். அதிலும் நம் கட்சியினர் சிலர் கூட இந்த வன்முறைகளுக்கு காரணமாக இருந்திருக்கின்றனர். எமது எம்.பி.க்கள் நாடாளுமன்றின் உள்ளும் புறமும் பேசிய பொறுப்பற்ற பேச்சுக்கள் நாடெங்கும் கொலை , கொள்ளை, கொள்ளி வைப்பு பாலியல் வன்முறை முதலான கொடுஞ்செயல்களுக்கு காரணமாகியுள்ளன. ஒரு கட்சிக்கு தலைமை ஏற்றிருக்கும் நான் அது குறித்து பெருமையாக நினைக்கவேண்டும். அந்நிலை இல்லையாயின் நான் எதற்காக அதற்கு தலைவராக இருத்தல் வேண்டும். வன்முறைகளை ஏவிவிட்டு, அதன்மூலம்தான் பல இன மக்கள் வாழும் இந்நாட்டில் எழுந்துள்ள சிக்கல்களுக்கு தீர்வு காணமுடியும் என்று எவரேனும் கருதினால், அவர்களே வந்து இந்த தலைமைப் பதவியை ஏற்கட்டும். நான் ஒதுங்கிக்கொள்கின்றேன். “ அவரது ஆதங்கம் நிரம்பிய உரையை எமது வீரகேசரி அலுவலக நிருபர் எழுதிக்கொண்டு வந்தார். கெமராமேன் படம் எடுத்துக்கொண்டு வந்தார். செய்தி ஆசிரியர் டேவிட் ராஜூ செம்மைப்படுத்தினார். அதனை அச்சுக்கோப்பாளர்கள் அச்சுக்கோர்த்தனர். நாம் ஒப்புநோக்கினோம். பத்திரிகை அச்சாகி தமிழ் மக்களிடம் சென்றது. அந்த மக்கள், “ ஆகா…. ஜனாதிபதி நல்லவர்தான். அவருக்கு கீழே இருப்பவர்கள்தான் கெட்டவர்கள் “ என்ற முடிவுக்கு வந்தார்கள். ஜே.ஆர். அன்று பேசிய பேச்சு அச்சில் வெளியானாலும், வெள்ளவத்தை கடற்கரைக்கு அருகில் இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்திலிருந்து நிகழ்த்தப்பட்டமையால், கடல் காற்றோடு இரண்டறக்கலந்து காணாமல் போய்விட்டதோ என்றும் யோசித்தேன். இலங்கையில் அடுத்தடுத்து நடந்த கலவரங்களின் அதிஉச்சம்பெற்றதுதான் ஆவணி அமளி என்றும் கறுப்புஜூலை எனவும் சொல்லப்பட்ட கலவரம். 1958 முதல் நடந்த கலவரங்கள் குறித்து பல நூல்கள், ஆவணங்கள், சிறுகதைகள், நாவல்கள், தொடர்கதைகள் வெளிவந்துவிட்டன. 1958 ஆம் ஆண்டு கலவரம் வந்தபோது நான்கு வயது பாலகனாக இருந்த பிரபாகரன், பாணந்துறையில் ஒரு இந்து மத கோயில் ஐயர் கொதிக்கும் தாரில் எறியப்பட்டு துடிதுடிக்க கொல்லப்பட்ட செய்தியைக்கேட்டு, தனது தந்தையிடம், ஏன் தமிழரை அடிக்கிறார்கள். நாம் திருப்பி அடிக்கமுடியாதா..? எனக்கேட்டதாகவும் ஒரு செய்தியை பின்னணியாகக்கொண்டு மேதகு திரைப்படம் வருகிறது. அந்த மேதகுவின் தீர்க்கதரிசனம் அடிக்கு அடி என்றிருந்தமையாலும், அன்றைய இலங்கை அதிபரின் தீர்க்கதரிசனம் அடித்துத்தான் அடக்கவேண்டும் என்று இருந்ததாலும் 1983 கலவரத்தின் ரிஷிமூலம் திருநெல்வேலியில் பரமேஸ்வராச் சந்தியில் அந்த ஆண்டு இதே ஜூலை மாதம் 23 ஆம் திகதி இரவு 13 இராணுவத்தினர் புலிகளின் கண்ணிவெடித்தாக்குதலில் கொல்லப்பட்டதுதான் என்று சில அரசியல் ஆய்வாளர்கள் சொன்னாலும், ஜே.ஆரின் இராஜதந்திரம் அதனை எவ்வாறு கையாண்டது என்பது கவனத்திற்குரியது. அதற்கு முன்னர் அதே ஆண்டு மே மாதம் 01 ஆம் திகதி, கொழும்பில் நடந்த மக்கள் விடுதலை முன்னணியின் மாபெரும் மேதின எழுச்சிப் பேரணியையும், ஏனைய கட்சிகளுக்கில்லாத பேராதரவில் அந்த இயக்கத்தின் மேதினக்கூட்டத்திற்கு கொழும்பு நகரசபை மண்டபத்திடலில் திரண்ட மக்களையும் மதிப்பீடு செய்த ஜே.ஆரின். புலனாய்வாளர்கள் அவருக்குச்சொன்ன செய்திகளையடுத்து, அந்த இயக்கத்தை மீண்டும் தடைசெய்வதற்கான கணக்கினை மனதில் வரைந்தார். அந்த சித்திரத்தை பொறுத்திருந்து ஜூலை மாதம் இறுதியில் தருணம் பார்த்து வெளியிட்டார். முதல்நாள் ஜூலை 22 இல் கொழும்பில் ஆடிவேல்விழா. மறுநாள் 23 ஆம் திகதி சனிக்கிழமை திருநெல்வேலியில் தாக்குதல். அடுத்த நாள் ஞாயிறு போயா தினம் பௌத்தர்கள் சில் அனுட்டிக்கும் நாள். அதிபர் ஜே.ஆரும் சில் அனுட்டித்தார். திங்கட்கிழமை தமிழர்களை கில் ( Kill ) செய்யும் படலம் தொடங்கியது. கொல்லப்பட்ட 13 இராணுவ சிப்பாய்களின் சடலங்களையும் பொறுப்பேற்க இராணுவத் தளபதி யாழ்ப்பாணம் விரைந்தார். அதற்கிடையில் இராணுவத்தினர் பலாலி வீதியில் பல அப்பாவித் தமிழர்களை வீடு புகுந்து சுட்டுக் கொன்றனர். அவ்வாறு கொல்லப்பட்டவர்களில் எழுத்தாளர் கலா. பரமேஸ்வரனும் அவரது மாமனாரும் அடங்குவர். அவர்கள் அன்று ஆடி அமாவாசை விரதம் அனுட்டித்துக் கொண்டிருந்தவேளையில் குடும்பத்தினர் முன்னிலையில் சுட்டுக்கொல்லப்பட்டனர். நிலைமை கட்டுப்பாட்டை மீறுவதை அவதானித்த ஜே.ஆர். தனது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் சேபால ஆட்டிகலவிடம், யாழ்ப்பாணத்தில் நிற்கும் இராணுவத்தளபதி திஸ்ஸ வீரதுங்கவிடம், “ இராணுவ வீரர்கள் சண்டையில் சாவது பெரிய விடயம் அல்ல. அந்த 13 சடலங்களையும் அங்கேயே புதைத்துவிடச்சொல்லுங்கள் “ என்றுதான் முதலில் சொல்லியிருக்கிறார். “ சிங்கள வீரர்களை யாழ்ப்பாணத்தில் புதைப்பது சிங்கள இனப்பெருமைக்கு இழுக்கு. எனவே கொல்லப்பட்டவர்களின் சடலங்களை அவர்களது உறவினர்களிடமே ஒப்படைப்போம் “ என்கிறார் திஸ்ஸ வீரதுங்க. இந்தச் செய்தி ஜே.ஆரிடம் வருகிறது. அவர் முக்கிய பாதுகாப்புத்துறை அதிகாரிகளிடம் கலந்துரையாடுகிறார். 13 ஊர்களுக்கு சடலங்கள் சென்றால் , 13 ஊர்களில் கலவரம் வெடிக்கலாம், அதனால், பொரளை கனத்தை மயானத்திலேயே புதைக்கத் தீர்மானிக்கின்றனர். அன்று ஞாயிற்றுக்கிழமை 24 ஆம் திகதி கனத்தைக்கு சடலங்கள் வந்தன. கொல்லப்பட்டவர்களின் நெருங்கிய உறவினர்கள் இறுதிச்சடங்கிற்காக அழைக்கப்பட்டனர். அவர்களுடன் கோபக்கனல் கொப்பளிக்க வந்து குவிந்த கும்பல் தனது கைவரிசையை காண்பிக்கத்தொடங்கியது. கனத்தையில் வந்து நின்று பொலிஸாருக்கு உத்தரவுகளை பிறப்பித்தவர் அன்றைய பொலிஸ்மா அதிபர் ருத்ரா ராஜசிங்கம். கொல்லப்பட்ட இராணுவத்தினருக்கான இறுதி மரியாதை செலுத்த வந்த பாண்ட் வாத்தியக்குழுவின் தலைவர் மற்றும் ஒரு தமிழ் இராணுவ அதிகாரி ஜோர்ஜ் தேவசகாயம். ஜே.ஆரும் வரவிருந்தார். பாதுகாப்புத்தரப்பு அவரை வரவேண்டாம் எனச்சொல்லியிருக்கிறது. கனத்தையில் தொடங்கிய கலவரம் தலைநகர் எங்கும் தலைவிரித்தாடியது. அந்த ஞாயிற்றுக்கிழமை மாலை வேலை முடிந்து நான் வீடு திரும்பிவிட்டேன். மறுநாள் திங்கள் எனக்கு விடுமுறை நாள். அன்று மாலை தினபதி – சிந்தாமணியில் துணை ஆசிரியராகவும் நாடாளுமன்ற நிருபராகவும் பணியாற்றிய எனது நண்பர் செல்வரத்தினம் கொழும்பிலிருந்து விரைந்து வருகிறார். நேரே தனது வீடு செல்லாமல் என்னிடம் வந்து கொழும்பில் அன்று கண்ட காட்சிகளை பதற்றத்துடன் விபரிக்கிறார். “ நாளை முதல் வேலைக்குச்செல்லவேண்டாம் “ என்றார். அன்று முதல் பல நாட்கள் வீரகேசரியும் வெளிவரவில்லை. ஜே.ஆரின் இராஜதந்திர மூலை , அந்தக்கலவரத்தை தூண்டியவர்கள் மக்கள் விடுதலை முன்னணியினரும் மற்றும் இடதுசாரிக்கட்சியினரும்தான் என்று பெரிய அபாண்டத்தை சுமத்தி அவற்றை தடைசெய்யும் உத்தரவை பிறப்பித்தது. அதன்பின்னர் நடந்த சம்பவங்கள் வரலாற்று ஏடுகளில் தெளிவாக பதிவுசெய்யப்பட்டுள்ளன. எங்கள் வீரகேசரி பிரதம ஆசிரியர் க. சிவப்பிரகாசம், தினகரன் பிரதம ஆசிரியர் ஆர். சிவகுருநாதன் ஆகியோரின் வெள்ளவத்தை வீடுகளும் தாக்கப்பட்டன. அவர்களின் சேகரிப்பிலிருந்த பெருந்தொகையான நூல்கள் எரிக்கப்பட்டன. சிவகுருநாதன் தனது முதுமானிப்பட்டத்திற்காக பல இரவுகள் கண்விழித்திருந்து எழுதிய ஆய்வேடு உட்பட பல ஆவணங்களை தீ அரக்கன் அழித்தான். பின்னாளில்,அந்த அமளியின்பொழுது தான் அனுபவித்த கொடுந்துயர் பற்றி அவர் விரிவாக எழுதுகிறார். “ அமைதியாகவிருந்து எழுத வீடுவாசலில்லை. உடுக்க உடையில்லை. நான் படித்த நூல்களில்லை. சிறுபராயத்திலிருந்தே சேர்த்துவந்த சுமார் ஐயாயிரம் நூற் பிரதிகளுக்கு மேல் இன்றில்லை. நான் எழுதிய பேனாவே இல்லையென்றால் என் நிலை என்ன? நடுத்தெரு நாராயணனாக ஒரு சில மணிநேரத்துக்குள் என்னை ஆக்கிவிட்டார்கள் அந்தக்குண்டர்கள். தியாகப்பிரம்மத்தின் சமாதியில் நல்லை ஆதினகர்த்தா ஸ்ரீலஸ்ரீ சுவாமிநாதத் தம்பிரான் பூஜை செய்து எமது மகளுக்குத்தந்த ருத்ர வீணையை காடையர்கள் முறித்து குப்பையில் போட்டிருந்தார்கள். “ என்று எழுதுகிறார். கொழும்பில் ஏற்பட்ட அழிவுகள் உயிர்ச்சேதம் பற்றி புதிதாக ஒன்றும் இங்கே பதிவுசெய்யவேண்டியதில்லை. வீரகேசரியின் ஊழியர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டனர். பலர் அகதி முகாம்களிலும் சிலர் பாதுகாப்பான வீடுகளிலும் இடங்களிலும் முடங்கினர். சிவப்பிரகாசம் அவர்களது வீடும் காரும் சேதமானது. அந்த இனசங்காரம் பற்றியும் அவர் ஆங்கிலத்தில் ஒரு நூல் எழுதியிருக்கிறார். தனதும் குடும்பத்தினரதும் எதிர்காலம் பற்றி அவர் தீவிரமாக சிந்தித்திருக்கவேண்டும். 1983 பலருக்கும் எதிர்காலம் பற்றிய கேள்விக்குறியை முன்வைத்தது. அவரும் தமது குடும்பத்தினருடன் வெளிநாட்டுக்கு புலம்பெயரநேரிட்டது. எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப் தனது அனுபவங்களை நாங்கள் பாவிகளாக இருக்கிறோம் அல்லது 1983 என்ற நாவலாக படைத்துள்ளார். எழுத்தாளர் அருளர் 1958 கலவரம் பற்றி லங்கா ராணி என்ற நாவலை எழுதியுள்ளார். வ. ந. கிரிதரன் 1983 கலவரத்தின் பின்னணியில் குடிவரவாளன் என்ற நாவலை வரவாக்கியுள்ளார். அவுஸ்திரேலியாவில் வதியும் எழுத்தாளர் நடேசன் உனையே மயல்கொண்டு என்ற நாவலை எழுதிள்ளார். நேற்றை செய்திகள் வரலாறுகளாகவும் படைப்பிலக்கியங்களாகவும் பதிவாகிக்கொண்டிருக்கின்றன. 41 ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்த இக் கலவர காலத்தின்போது பிறந்த குழந்தைகளுக்கும், அதன்பின்னர் பிறந்தவர்களுக்கும் இவைதான் எமது தேசத்தின் வரலாறாக விளங்கப்போகிறது. சிங்கள இனவாத தீயசக்திகள் தமிழருக்கு எதிராக தாக்குதல் நடத்தின. தமிழ் விடுதலை இயக்கங்கள் சிங்கள இராணுவத்திற்கு எதிராக தாக்குதல் நடத்தின. இந்தப்போராட்டமும் கடந்த 2009 மே மாதம் முள்ளிவாய்க்காலில் முடிவுற்றது. “ அகிம்சைப்போராட்டம், ஆயுதப்போராட்டமாகி தற்போது ராஜ தந்திரப் போராட்டமாக மாறியிருக்கிறது “ என்று சில வருடங்களுக்கு முன்னர் மெல்பனுக்கு வருகை தந்து உரையாற்றிய தற்போதைய தமிழ்த்தலைவர் நாடாளுமன்ற யாழ். மாவட்ட உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் தெரிவித்தார். 1964 இல் பிறந்த அவருக்கு 1983 இல் 19 வயது. இலங்கையில் நீடித்த இனப்பிரச்சினையும் ஈழப்போராட்டமும் அவரை அரசியல்வாதியாக்கியதுடன் அரசியல் தலைவருமாக்கியது. அத்துடன் நாடாளுமன்ற உறுப்பினருமாக்கியது. 1951 – ஜூலையில் இல் பிறந்த நான், 1958 – 1977 – 1981 – 1983 கலவரங்களை பார்த்துவிட்டு, 1987 முதல் அவுஸ்திரேலியாவில் புகலிடம் பெற்று இந்தக் கலவரங்களை நனவிடை தோய்ந்தவாறு, நீடித்தபோரில் பாதிக்கப்பட்ட ஏழைத்தமிழ் மாணவர்களுக்கு உதவும் தன்னார்வத்தொண்டுப் பணிகளில் ஈடுபட்டவாறு தொடர்ந்தும் எழுதிக்கொண்டிருக்கின்றேன். இனிச்சொல்லுங்கள்: என்னால். இந்த ஜூலை மாதத்தை மறக்க முடியது அல்லவா..? முருகபூபதி. எனது கறுப்பு ஜூலை நினைவுகள் ஆக்கத்தில் நேர்ந்துள்ள தகவல் தவறை பிரான்ஸில் வதியும் தோழர் ராயப்பு அழகிரி சுட்டிக்காண்பித்துள்ளார். அவர் சொல்லும் தகவல் இதோ: தோழர் அருளர் எழுதிய ‘லங்காராணி’ நாவல் முதல் பதிப்பு 1978 இல் வெளிவந்தது. 1977 கலவரத்தின் போது கொழும்பில் அகதிகளை ஏற்றி யாழ்ப்பாணத்தில் இறக்கிய கப்பலின் பெயர் தான் ‘லங்காராணி’. அதில் தோழர் அருளரும் ஒரு அகதியாகப் பயணித்த அனுபவங்கள் நாவலில் பிரதிபலிக்கின்றன. அதனை அச்சிட்டுப் புத்தகமாக வெளியிட்ட பொறுப்பு சென்னையில் என்னுடையது. நீங்கள் கட்டுரையில்1958 கலவரம் என்று குறிப்பிட்டுள்ளது பிழையாகும். தோழர் அழகிரி அவர்களுக்கு மனமார்ந்த நன்றி. முருகபூபதி. https://akkinikkunchu.com/?p=284951
-
சாவகச்சேரி வைத்தியசாலையின் புதிய பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்சுனாவின் குற்றச்சாட்டுகள்
சாவகச்சேரியில் இருந்து சமூக விடுதலையை ஆரம்பிக்க வேண்டும் – அசாந்த் வடிவேல் July 23, 2024 இன்றைய காலத்தில் அவரைத் தெரியாத ஒருவர் இலங்கையில் இல்லை… ஒரு வைத்தியர் ஒரு சமூக பொறுப்புடன்களை எடுக்க புறப்பட்டதன் விளைவு. நாட்டின் ஜனாதிபதி சுகாதார அமைச்சரை அனுப்பி பிரச்சினையை பார்க்க வைத்துள்ளார். தமிழன், ஒரு வைத்தியன் துணிந்து அநீதி களுக்கும் ஊழல்களுக்கும் எதிராக குரல் கொடுத்தபோதும் இன்று அவரின் குரல்வளை நசுக்கப்படுகின்றது. பகிரங்கமாக கேட்டும் தமிழ் தேசியம் பேசி திரியும் சட்டவாளர்கள் எவரும் அவருக்கு உதவ முன்வரவில்லை. இப்படித்தான் ஒரு பெரும் தலைவன் வா என்று கூப்பிட்டபோது ஓடி ஒழிந்து, வெளிநாடுகளுக்கு அடைக்கலம் தேடி தப்பி ஓடிய அதே கூட்டம் இன்று போலி தேசியம் பேசித் திரிகின்றது. இன்றும் அதே பல்லவி. யாராவது வந்துதான் குரல் கொடுக்க வேண்டும். நமக்கு கன்டென்ட் தான் முக்கியம். அப்படிதான் பலரின் வாழ்கை. இங்கே சாதாரண அர்ஜுனக்கு எப்படி ஆதர்வு கிடைக்கும்?. சுகாதார அமைச்சர் கூட இங்கு வந்து ஒரு தள வைத்தியசாலையின் பதில் வைத்திய அதிகாரி இவர்தான் என்று கூறுமளவு அர்ஜுனாவின் தாக்கம் அனைத்து சுகாதார துறைக்குள்ளே ஒரு தாக்கம் செலுத்தியுள்ளது.. ஏன் இவ்வளவு பிரமிப்பு! தென்னிலங்கை ஊடகங்களில்கூட அர்ச்சுனாவின் தாக்கம் உள்ளது. ஆக எல்லாவற்றையும் மாற்றிய மைக்க உங்கள் அனைவருக்கும் அர்ச்சுனாக்கள் தேவைப்படுகிறார்கள். அர்ச்சுனாக்களின் கதை முடிந்த பின் உங்களுடைய கடமைகள் முடிந்து விடுகிறது. ஏன் ஒவ்வொருவருக்கும் இந்த சமுதாய அக்கறை வருவதில்லை. அநீதி நடக்கும் இடங்களில் கேள்வி கேட்பதில்லை? காரணம் சுயநலம். நீங்கள் மேற்கூறிய அத்தனையையும் அனுபவிக்கவும் வேண்டும். அதேசமயம் சமூக அக்கறை என்று காட்டிக் கொள்ளவும் வேண்டும். ஏன் இந்த மனோநிலை. எதற்காக இந்த சுயநலம்? மறுபக்கம் அர்ஜுனா அவரது தவறு களை மறுக்கவில்லை. வைத்தியர்களின் மோசடிகள் அனைத்தையும் உள்ளிருந்தே சேகரித்து ஆவணப்படுத்தி பிரதி எடுத்து ஏனைய ஆதாரங்களையும் துல்லியமாகவும் உள்ளேயிருந்து ஆரம்பித்து அவர்களின் காலரில் பிடித்து இருக்க லாம். இப்போது எல்லாரும் ஒன்று சேர்ந்து மறைத்து உசார் ஆகி விட்டார்கள். இரகசியமாக சட்ட ஆலோசனைகளையும் பெற்று சமூக ஊட கத்தை மட்டுமே நம்பி இருக்காமல் முறைப்படி செய்து தப்பிக்க வழிதேடிவிட்டார்கள். இதனை நான் கூறுவது கூட அவர் மீதிருக் கும் சுயநலமற்ற அக்கறை காரணமாக. தற்போது பிரச்சினைக்குரிய வைத்தியர்கள் அவர் மீதான வழக்கு தனிப்பட்ட வழக்கு ஆக்கிவிட்டார்கள். வேறு விடயங்கள் பற்றி அவர் யோசிக்கமுடியாமல் ஆக்கியுள்ளார்கள். கேபிட்டல் ஊடகம் போன்ற சிலர் டிரெண்டிங் விளம்பரத்திற்கு அர்ச்சுனாவின் வாயைக் கிளறி பலதையும் பேச வைக்கிறார்கள். இது புரியாமல் அவரும் புலம்புகிறார். இதனால் அவரின் பெறுமதி அவருக்கே புரிவதில்லை. பின்னாளில் இலங்கையின் சுகாதார துறைக்கே செயலாளர் ஆக வர தகுதியுடைய தமிழர். அரைகுறை இல்லை call me as sir புகழ் யாழ் மாவட்ட வைத்திய அதிகாரி பிரணவனுக்கே பாடம் எடுத்தவர். ஆங்கிலத்தில் கூறுவார்கள் wooden spoon என்று அதைபோல இங்கு ஒரு பிராந்திய சுகாதார அதிகாரி இருக்கிறார், அவரின் ஆளுமை ஆமை போல. அதுவே அனைத்துப் பிரதேச வைத்தியசாலைகளுக்கும் வசதியாக நிர்வாகம் செய்ய முடிகிறது. சுற்றுநிருபம் படி அனைவரும் வேலை செய்தால் புதிதாக வருபவர் ஏன் நிர்வாகம் பற்றி பேச போகிறார். ஆனால் அர்ஜுனா சிங்களம், ஆங்கிலம் என மனுஷன் கணணித் தொழில்நுட்பத்தில் கூட அதிக திறன் உள்ளவர். அதைவிட MBBS, மேலதிகமாக மருத்துவ நிர்வாகத்துறை படித்து உள்ளார். அடுத்து அவர் வெளிநாட்டில் படிக்க செல்லுவார் அது இனி நடக்குமோ தெரியாது. Consultant of surgery இருந்தால் வெளிநாடு போய் செட்டில் ஆகி இருக்கலாம். இலங்கை மருத்துவ நிர்வாகம் படித்து அங்கு போய் வேலை கேட்டால் சந்தி சிரிக்கும். ஆனால் அவருக்கு பிற மொழி கல்வியை ஒரு வருடம் முடித்தால் அது முடிந்த பின் அவர் எதிர்காலமே வேறு. சபிக்கப்பட்ட தேசத்தில் எதுவுமே செய்யமுடியாது. இப்போது அவர் சேவையில் இல்லை. ஜனாதிபதியை சந்தித்து பேசினால் தீர்வு உண்டு. கருச்சிதைவு செய்ததாக குற்றம் சாட்டப் பட்ட வைத்தியர் சஃபியை கூட நீதிமன்றம் விடுவித்துள்ளது. இவர் மீது வழக்குகள் பல. அர்ஜுனா இனி அவர் சேவையில் இருந்தால் அவர் மீது பல கண்கள் குறிவைக்கப்படும். அவரின் குடும்பம் நண்பர்கள் பள்ளித் தோழர்கள் அவருக்கு ஆறுதலாக இருக்க வேண்டும். ஆனாலும் மனிதன் அனைத்து சுயநல வைத்தியர்களையும் அதிகாரிகளையும் ஓரளவு திருத்தி வேலை பயத்துடன் செய்ய வைத்துள்ளார். பலர் திருந்தி விடுவார்கள். உடனே வடக்கில் மருத்துவ மாஃபியா கொஞ்சம் அடங்கியுள்ளது. மக்களுக்கும் பயந்து உள்ளது. உடனடியாக சுகாதார அமைச்சு வைதியர்களுக்கும் பயோமெட்ரிக் வரவுப்பதிவு பொறிமுறையை நடைமுறைபடுத்த வேண்டும். வைதியர்களின் ஒழுங்கான வரவு கண்காணிக்க படவேண்டும். தனியார் வைத்தியசாலைக்கு குறித்த நேரத்திற்கு சரியாக செல்லும் அதே வைத்தியர்கள் அரச வைத்தியசாலைக்கு பிந்தி போனால் கேள்வி கேட்க கூடாது. சேர்க்கு கோவம் வரும்… என்ற வழக்கம் மாறவேண்டும் தாதியர்கள், நோயாளர் விடுதிக்கு பொறுப் பானவர்கள், மருத்துவத்துறை மாணவர்கள் ஆகி யோர் கோப்புக்களை தூக்கிகொண்டு ஆட்டு மந்தைகள்போல பின்னுக்கு ஓடகூடாது. அவர்கள் தமது கடமைகள் மற்றும் பொறுப்புக்களை உணரவேண்டும். முதலில் வடக்கில் இதனை உடனே ஆரம்பிக்க வேண்டும். அதை கண்காணிக்க வேண்டும். மேலும் பல அக்கறையான வைத்தியர்கள் வெளிநாட்டுக்குச் செல்லக்கூடிய நிர்ப்பந்தத்தில் இருக்கின்றார்கள். வைத்தியசாலையில் நடை பெறும் அசட்டையீனங்கள், ஊழல்கள் மற்றும் மோசடி களும் அதற்கு காரணமாகின்றன. சாவகச்சேரியில் இருந்து ஆரம்பிக்க வேண்டும். https://www.ilakku.org/சாவகச்சேரியில்-இருந்து-ச/
-
கறுப்பு ஜூலை – நாற்பத்தொரு வருடங்கள் கடந்தும் ஆறாத வடு
கறுப்பு ஜூலை – நாற்பத்தொரு வருடங்கள் கடந்தும் ஆறாத வடு ஜூலை 23, 2024 ஈழத் தமிழ் மக்களின் வாழ்வில் என்றுமே மறக்க முடியாத ஒரு வடுவாக கறுப்பு ஜூலைப் படுகொலை இருக்கிறது. இத் தீவின் மக்கள் குருதியாலும் நிர்வாணத்தாலும் இனப்படுகொலை செய்யப்பட்டார்கள். அதனை சிறிலங்கா அரசு கலவரம் என்று அழைத்து தன்னைக் காக்க முயன்றது. சிறிலங்கா அரசு ஈழத் தமிழ் மக்களின் கல்வி, தொழில் வளம், பொருளாதாரம், இனப்பரம்பல், கலாசாரம் என்று ஒரு இனத்தின் வாழ்வியல்மீது தொடுத்த மிட்டமிட்ட படுகொலையாக போராக ஜூலைப்படுகொலை நிகழத்தப்பட்டது. இதுவே ஈழத் தமிழ் மக்களின் தனிநாடு கோரிய விடுதலைப் போராட்டத்தை வலுப்படுத்திய பின்னணியுமானது. மூத்த தளபதி செல்லக்கிளி அம்மான் வீரமரணம் ஈழ விடுதலைப் போராட்டம் முகிழ்ந்த எண்பதுகளின் ஆரம்பத்தில் விடுதலைப் புலிகள் உள்ளிட்ட இயக்கங்கள் சிறிய அளவிலான தாக்குதல்களை நடாத்தி வந்தார்கள். 1983ஆம் ஆண்டு ஜூலை 23ஆம் திகதியன்று, யாழ்ப்பாணம் திருநெல்வேலிப் பகுதியில் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தலைமையில் இலங்கை இராணுவத்திற்கு எதிரான சமர் ஒன்று இடம்பெற்றது. விடுதலைப் புலிகளை தாக்கும் நோக்கில் வந்த இராணுவ அணியொன்றை இடைமறித்து புலிகள் இயக்கம் தாக்குதலைத் தொடுத்தது. இதனால் இராணுவத்திற்கும் புலிகளுக்கும் இடையில் சமர் மூண்டது. இதில் 13 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். புலிகளின் மூத்த தளபதி செல்லக்கிளி அம்மான் இதில் வீர மரணமடைந்தார். புலிகளின் தாக்குதலில் கொல்லப்பட்ட இராணுவத்தினரின் சடலங்கள் கொழும்புவுக்கு கொண்டு செல்லப்பட்டன. தமிழர்களால் சிங்களவர்கள் கொல்லப்பட்டு விட்டார்கள் என்று திட்டமிட்டு கதை பரப்பட்டது. இதனால் கொழும்புவில் இருந்த தமிழர்களை கொன்று அழிப்போம் என்றும் இனவெறி பரப்பட்டது. இதனால் சிங்கள வன்முறையாளர்கள், தமிழர்களை தாக்கத் தொடங்கினர். வீதிகளில் சென்ற தமிழ் மக்கள் வீதிகளிலேயே அடித்து விரட்டப்பட்டார்கள். பலர் அடித்துக் கொல்லப்ட்டார்கள். எரியும் நெருப்பில் உயிரோடு தமிழர்கள் போட்டப்பட்டார்கள். தமிழ் மக்களின் வீடுகளுக்குள் நுழைந்த வன்முறையாளர்கள் அவர்களை அடித்துக் கொலை செய்தார்கள். நிர்வாணத்தாலும் நனைந்த இலங்கைத் தீவு ஜூலை 23இல் தொடங்கிய வன்முறை ஐந்து நாட்களுக்கு மேல் நீடித்தது. கொழும்புவில் மாத்திரம் சுமார் மூவாயிரம் பேர் கொல்லப்பட்டார்கள். கொழும்புவில் சிங்கள வன்முறையாளர்கள் படுகொலைகளை நிகழ்த்திய தருணத்தில், வடக்கு கிழக்கில் இலங்கை இராணுவமும் தமிழ் மக்களை கொன்று குவித்தது. யாழ்ப்பாணம் திருநெல்வேலிப் பகுதியில் 51 தமிழ் மக்கள் புலிகள் என்ற பெயரில் படுகொலை செய்யப்ட்டார்கள். அதேபோல வெலிக்கடைச் சிறைச்சாலையில் 53 தமிழ் அரசியல் கைதிகள் அடித்து துன்புறுத்தப்பட்டார்கள். குட்டிமணி, தங்கத்துரை, ஜெகன் முதலிய ஈழ விடுதலைப் போராளிகளும் படுகொலை செய்யப்பட்டார்கள். இலங்கை தீவு ஈழத் தமிழர்களின் குருதியாலும் நிர்வாணத்தாலும் நனைந்தது. கொழும்பு வீதிகளில் இருந்து தமிழர்களின் உடல்களில் மூட்டப்பட்ட தீ உயர எழுந்தது. தமிழர்களைப் பிடித்து நிர்வாணமாக்கி அவர்களை அவமதிப்பு செய்து வன்முறையாளர்கள் மகிழ்ந்தார்கள். மிக மிக கோரமான முறையில் மனித குலத்திற்கு விரோதமான முறையில் வன்முறைகள் நிகழ்த்தப்பட்டு மக்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். ஒரு குறிப்பிட்ட குழுவாலோ, அல்லது ஒரு தரப்பாலே இப்படி பரவலாகவும் நீண்ட நாட்களுக்கும் வன்முறைகளை மேற்கொள்ள முடியாது. கறுப்பு ஜூலைப் படுகொலை அன்றைய அரசால்தான் மிக திட்டமிட்டு நிகழ்த்தப்பட்டது. 1958இல் நடந்த இனப்படுகொலை கறுப்பு ஜூலை இலங்கையின் முதல் படுகொலையல்ல. அதற்கு முன்னர் 1958களிலும் இத்தகைய இனப்படுகொலைகள் நிகழ்த்தப்பட்டன. எழுதுபகளிலும் நிகழ்த்தப்பட்டன. அப்போது விடுதலைப் புலிகள் இலங்கை இராணுவம்மீது தாக்குதல்கள் எவற்றையும் நடாத்தவும் இல்லை. 1956இல் தனிச்சிங்கள சட்டத்தை அன்றைய பிரதமர் பண்டார நாயக்கா கொண்டு வந்த வேளையில் அன்று நாடாளுமன்றத்தில் இருந்த சிங்கள முற்போக்கு அரசியல்வாதிகள், இலங்கையில் தமிழ்நாடு ஒன்றை உருவாக்கப் போகிறீர்கள் என்றும் தமிழர்கள் பிரிந்து செல்லப் போகிறார்கள் என்றும் எச்சரித்தார்கள். இலங்கை அரசின் தமிழ் இன ஒடுக்குமுறை செயற்பாடுகளாலும் உரிமை மறுப்புக்களாலும் தனித் தமிழீழமே தீர்வு என்ற நிலைக்கு தமிழ் அரசியல்வாதிகள் சென்றனர். அதுவே அன்றைய இளைஞர்கள் தமிழீழத்தை அமைக்க ஆயுதம் ஏந்தவும் காரணமானது. தனிச்சிங்கள சட்டத்தை எதிர்த்து அறவழிப் போராட்டத்தை தமிழ் அரசியல்வாதிகள் முன்னெடுத்த வேளையில்தான் 1958களில் மூந்நூறு ஈழத் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்ட்டார்கள். அதேபோல 1981இல் யாழ் நூலகம் எரிக்கப்பட்டு அறிவுமீதும் புத்தகங்களின் மீதும் மிகப் பெரிய வன்முறை நிகழ்த்தப்ட்டது. ஆக விடுதலைப் புலிகள் உள்ளிட்ட இயக்கங்களின் எழுச்சியை மக்களை படுகொலை செய்து அழிக்கவும் திசை திருப்பவும் அன்றைய இலங்கை அரசு தீர்மானித்தது. இதனால் விடுதலைப் புலிகள் தாக்குதல் நடாத்திய மறுகணமே ஈழ மக்கள்மீது பெரும் வன்முறைப் போர் நடாத்தப்பட்டது. ஜே.ஆர். ஜெயவர்த்தனவின் முற்கூட்டிய பேச்சு ஜூலைப் படுகொலை நடப்பதற்கு பத்து நாட்களுக்கு லண்டன் பத்திரிகை ஒன்றுக்கு பேட்டியளித்த அன்றைய அதிபர் ஜே.ஆர். ஜெயவர்த்தனா, “யாழ்ப்பாண (தமிழ்) மக்களின் கருத்தைப் பற்றி நான் இப்போது கவலைப்படவில்லை. இப்போது நாம் அவர்களை நினைக்க முடியாது. அவர்களின் வாழ்க்கையைப் பற்றியோ அல்லது எங்களைப் பற்றிய அவர்களின் கருத்தைப் பற்றியோ அல்ல. வடக்கில் எந்தளவுக்கு அழுத்தம் கொடுக்கப்படுகிறதோ அந்தளவுக்கு சிங்கள மக்கள் இங்கு மகிழ்ச்சியடைவார்கள்... உண்மையில் நான் தமிழர்களை பட்டினி போட்டால் சிங்கள மக்கள் மகிழ்ச்சியடைவார்கள்” என்று கூறினார். இப்பிடி பேசி சில நாட்களிலேயே வடக்கு கிழக்கு தமிழ் மக்களை அழித்து மாபெரும் மகிழ்ச்சி தென்னிலங்கைக்கு வழங்கப்பட்டது. இன்று இலங்கை அதிபராக இருக்கும் ரணில் விக்ரமசிங்காவின் மாமனார்தான் அன்றைய அதிபர் ஜே.ஆர். ஜெயவர்த்தனா. விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உருவாக்கத்தை கண்டும் வடக்கு கிழக்குமீது வெறுப்பைக் கொண்டும் எதிர்ப்பை வெளியிட்ட அவர், தமிழர் தரப்புமீது வன்முறையை மேற்கொள்ள நேரிடும் என்ற தொனியில் எச்சரித்தும் இருந்தார். கறுப்பு ஜூலைப் படுகொலையை அன்று ஜெயவர்த்தனா அரசில் அமைச்சராக இருந்த சிறில் மத்யூ உள்ளிட்ட அரச தரப்பினரால்தான் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டது என்பதை இலங்கை அரசியல் கட்சிகள் கூறின. தனிநாடு கோரக் கூடாது என்ற நோக்கம் குறுகியதொரு காலப் பகுதியில் இவ்வாறு பெரும் வன்முறை நடக்கிறது என்றால் அதற்குப் பின்னால் அரசின் திட்டம் இருந்திருக்கிறது என்பதையும் உணராலாம். ஏற்கனவே இனவழிப்புக்கள் நடந்த நிலையில் விடுதலைப் புலிகளின் தாக்குதலை ஒரு சாக்காக வைத்துக் கொண்டு 83 ஜூலை இனப்படுகொலையை நடாத்தியுள்ளார்கள். சிறில் மத்யூ போன்றவர்கள் குறுகிய குழுவில் வன்முறையாக இல்லாமல் சிங்கள பொதுமக்களின் பற்கேற்புடன் நடாத்த நினைத்தார்கள். அதன் ஊடாக ஈழ மக்கள் ஆயுதம் ஏந்தக் கூடாது, தனிநாடு கோரக் கூடாது, தமது உரிமைகளை கேட்கக்கூடாது என்ற எச்சரிக்கைகளை விடுக்க நினைத்தார்கள். கொழும்புவில் இருந்து ஈழ மக்கள் வடக்கு கிழக்கு நோக்கி விரட்டப்பட்டார்கள். மலையகப் பகுதிகளில் தேயிலைத் தோட்டத்தில் பணி புரிந்த தமிழ் மக்கள் கூட அங்கிருந்து விரட்டப்பட்டார்கள். வடக்கு கிழக்குதான் உங்கள் நாடு அங்கே சென்றுவிடுங்கள் என்றால் போல் தென்னிலங்கையில் இருந்து தமிழ் மக்கள் விரட்டப்பட்டதும், தென்னிலங்கையில் ஈழ மக்கள் சிந்திய குருதியும் அனுபவித்த நிர்வாணங்களும் எரியூட்டப்பட்ட நெருப்பும் ஈழத் தமிழ் மக்களுக்கு ஒற்றைத் தீர்வு தனித் தமிழீழம் என்பதை நிர்பந்தித்தது. கறுப்பு ஜூலை இலங்கையில் இரண்டு நாடுகள்தான் தீர்வு என்ற நிலைக்கு ஆளாக்கியது. நாற்பத்தொரு ஆண்டுகள் கடந்தும் கறுப்பு ஜூலை தந்த நினைவுகள் அழியவில்லை. மிகப் பெரிய வன்முறை ஒன்று விட்டுச் செல்லும் வடுவின் தடம் அகல்வது அவ்வளவு எளிதல்ல. இப்போது சிங்கள மக்களின் மத்தியில் சில மனமாற்றங்களும் உருவாகியுள்ளன. தமிழ் மக்களுக்கு தீர்வை வழங்க வேண்டும், தமிழ் மக்களையும் புலிகளையும் புரிந்து கொள்ள வேண்டும் என்ற கருத்துநிலைகளும் உருவாகி வருகின்றன. ஆனால் சிங்கள மக்களை இன்றும் பிழையான வழிக்கு தூண்டும் அரசியல்வாதிகளும் உள்ளனர். சரத் வீரசேகர, விமல் வீரவன்ச, உதய கம்மன்பில போன்றவர்கள் பேரினவாத்தை பேசுகின்றபோதும்கூட எமக்கு ஜூலைப்படுகொலைகளே நினைவுக்கு வருகின்றன. https://www.battinatham.com/2024/07/blog-post_959.html
-
அர்ஜுனாவும் இரும்பு மோதிரமும்- நிலாந்தன்
அர்ஜுனாவும் இரும்பு மோதிரமும்- நிலாந்தன் ஒரு கனேடிய நண்பர், அவர் ஒரு பொறியியலாளர், இரும்பு மோதிரம் ஒன்றை அணிந்திருந்தார். அதற்குப் பின்னால் உள்ள கதையைச் சொன்னார். கனடாவில், கியூபெக் பாலம் 1907ஆம் ஆண்டு மனிதத் தவறுகளால் நொறுங்கி விழுந்தது. அதில் 75 தொழிலாளர்கள் கொல்லப்பட்டார்கள். அப்படி ஒரு தவறு இனிமேலும் நடக்க கூடாது என்ற சங்கல்பத்தோடு பொறியியலாளர்களுக்கான சத்தியப்பிரமாணம் ஒன்றைக் குறித்துச் சிந்திக்கப்பட்டது. டொரன்டோ பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான பொறியியலாளர் Haultain ஹோல்டேய்ன் 1922ஆம் ஆண்டு பொறியியலாளர்களுக்கான தொழில்சார் சத்தியபிரமாணத்தை அறிமுகப்படுத்தினார். 1925ஆம் ஆண்டு அவருடைய மேற்பார்வையின் கீழ் பொறியல் பட்டதாரிகள் இரும்பு மோதிரம் அணிந்து சத்தியபிரமாணம் செய்து கொண்டார்கள். முதலாவது தொகுதி இரும்பு மோதிரங்கள் உடைந்து விழுந்த கியூபெக் பாலத்தின் இரும்புத் தூண்களில் இருந்து தயாரிக்கப்பட்டன. இது கனேடியப் பொறியியலாளர்களுக்கான பொறுப்புக்கூறல் சம்பந்தப்பட்ட ஒரு விடயம். மருத்துவர்களுக்கும் அவ்வாறு உலகளாவிய “ஹிப்போகிரடிஸ் ஓத்” என்று அழைக்கப்படும் சத்தியப்பிரமாணம் உண்டு. பொறுப்புக்கூறல் எனப்படுவது மருத்துவத் துறைக்கும் பொறியியல் துறைக்கும் மட்டுமல்ல எல்லாத் துறைகளுக்கும் பொருந்தும். ஒரு சமூகப் பிராணியாக இருக்கும் மனிதர்கள் அனைவருக்கும் அது பொருந்தும். மருத்துவர் தவறுவிட்டால் உயிர் போகும் உறுப்புகள் போகும்.பொறியியலாளர் தவறுவிட்டால் பாலம் இடிந்து விழும்; அல்லது கட்டடம் இடிந்து விழும்; உயிர் போகும்; உறுப்புகள் போகும்; சொத்துக்கள் போகும். ஆசிரியர் தவறுவிட்டால் ஒரு தலைமுறையின் எதிர்காலம் நாசமாகும். தலைவர்கள் தவறு விட்டால் ஒரு நாடு அழிந்து போகும். எனவே மனிதத் தவறுகளுக்கு மனிதர்கள் பொறுப்புக் கூற வேண்டும். சமூகத்தின் மிகச்சிறிய அலகாகிய குடும்பத்துக்குள் குடும்ப அங்கத்தவர்களுக்கு பொறுப்புக்கூற வேண்டும். நிறுவனங்களுக்குள் கட்டமைப்பு சார்ந்து,தொழில் தர்மம் சார்ந்து,பதவிவழி சார்ந்து,பொறுப்புக்கூற வேண்டும். தலைவர்கள் மக்களுக்குப் பொறுப்புக்கூற வேண்டும்.ஆகக் குறைந்தது எல்லா மனிதர்களும் தங்களுடைய மனச் சாட்சிக்காவது பொறுப்புக் கூற வேண்டும். மருத்துவர் அர்ஜுனா மருத்துவத்துறை சார்ந்த பொறுப்புக்கூறல் தொடர்பில் விழிப்பை அதிகப்படுத்தியுள்ளார். மருத்துவத்துறை சார்ந்தவர்கள் சமூகத்துக்கு பொறுப்புக்கூற வேண்டிய நிர்ப்பந்தங்களை அவர் அதிகப்படுத்தியுள்ளார். அவர் எப்பொழுதும் நேரலையில் தோன்றினார். அப்பாவித்தனமாகவும் வெகுளித்தனமாகவும் தனக்குச் சரியெனப்பட்டதை நேரலையில் கூறினார். அவரிடம் உள்ள அப்பாவித்தனமும் தன்னைத் தற்காத்துக் கொள்ளாத துணிச்சலும் கலகக் குணமும் அவரை மக்களுக்கு நெருக்கமானவர் ஆக்கின. அதேசமயம் அந்த அப்பாவித்தனமும் அவசரமும் நிதானமின்மையும் பக்குவமின்மையும் ஊடகங்கள் முன் அவரை சிலசமயம் பலவீனமானவராகவும் காட்டின. சுகாதாரத்துறை தொடர்பாக அவர் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளை வெவ்வேறு ஊடகவியலாளர்கள் ஏற்கனவே முன்வைத்திருக்கிறார்கள். கிளிநொச்சியைச் சேர்ந்த மு.தமிழ்ச்செல்வன் அதுதொடர்பாக கட்டுரைகள் எழுதியிருந்தார். ஆனால் அர்ஜுனா இதில் எங்கே வேறுபடுகிறார் என்றால், அவர் அந்த சிஸ்டத்துக்குள் இருந்துகொண்டே அந்த சிஸ்டத்தைக் கேள்வி கேட்கின்றார் என்பதுதான். அதுதான் அவருக்கு கிடைத்த கவர்ச்சி. அந்தக் கவர்ச்சியை அவர் தொடர்ந்தும் தக்கவைத்துக் கொள்வாரா இல்லையா; அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை எத்தகையது; அவருடைய தனிப்பட்ட சுபாவம் எத்தகையது… போன்ற எல்லா விடயங்களுக்கும் அப்பால்,அவர் எழுப்பியிருக்கும் கேள்விகளுக்கு துறைசார் உயர் அதிகாரிகள் பதில் கூறுவதே பொருத்தமானது. ஏனெனில் அர்ஜுனா மருத்துவத்துறை சார்ந்த பொறுப்புக்கூறல் தொடர்பில் விழிப்பை ஏற்படுத்தியிருக்கிறார். மருத்துவத்துறைக்கு அது தொடர்பில் நிர்ப்பந்தங்களை ஏற்படுத்தியிருக்கிறார். தமிழ்ச் சமூகத்தில் கிராமவாசிகள் அரச மருத்துவமனைகளை தர்மாஸ்பத்திரிகள் என்று அழைப்பார்கள். அங்கு மருந்தும் சிகிச்சையும் இலவசமாக தரப்படுகிறது என்று பொருள். ஆனால் அவை மெய்யான பொருளில் தர்மாஸ்பத்திரிகள் அல்ல. அங்கே வேலை செய்யும் மருத்துவர்கள் உட்பட அனைவரும் சம்பளம் வாங்குகிறார்கள். அந்தச் சம்பளம் மக்கள் செலுத்தும் வரிப்பணத்தில் இருந்து திரட்டப்படுவது. அங்கு வழங்கப்படும் இலவச மருந்தும் சிகிச்சையும்கூட மக்களுடைய வரிப் பணம்தான். எனவே அங்கே யாரும் யாருக்கும் தானம் செய்யவில்லை. யாரும் யாரிடமும் தானம் பெறவும் இல்லை. ஆனால் வாங்கும் சம்பளத்துக்கு மேலதிகமாக தமது தொழிலைத் தொண்டாகச் செய்யும் மருத்துவர்கள் அநேகர் உண்டு. தாம் பொறுப்பேற்ற நோயாளியை காப்பாற்றுவதற்காக ஊண் உறக்கமின்றி சேவை புரியும் மருத்துவர்கள் உண்டு. தனியார் மருத்துவமனைக்குப் போகக்கூடாது என்பதனை ஒரு தவம் போல கடைப்பிடிக்கும் மருத்துவர்கள் உண்டு. தனியார் மருத்துவத் துறைக்கு போனாலும் அங்கே நோயாளியின் நிதிநிலையைக் கருத்தில் எடுத்து காசு வாங்காத மருத்துவர்கள் உண்டு. வாங்கிய காசை உண்டியலில் சேகரித்து தானம் செய்யும் மருத்துவர்கள் உண்டு. எனவே அர்ஜுனா முன்வைக்கும் குற்றச்சாட்டுக்கள் எல்லாம் மருத்துவர்களுக்கும் பொருந்தாது. போர்க்காலத்தில் உயிரைக் கொடுத்து உழைத்த மருத்துவர்களுக்கு அது பொருந்தாது. பெருந்தொற்றுநோய் காலத்தில் உயிரைக் கொடுத்து உழைத்த மருத்துவர்களுக்கு அது பொருந்தாது. இப்பொழுதும் தொழிலைத் தொண்டாகச் செய்யும் மருத்துவர்களுக்கு அது பொருந்தாது. அரச மருத்துவமனையை தர்மாஸ்திரியாக பார்க்கும் மக்கள் அங்கு மருத்துவர்கள் தாதியர்களும் தாங்கள் எதிர்பார்க்கும் அளவுக்கு தர்மமாக இல்லை எனும் பொழுது அதிருப்தி அடைகிறார்கள், கோபமடைகிறார்கள். குறிப்பாக தனியார் மருத்துவத்துறை மீதான விமர்சனங்கள் அந்தக் கோபத்தை அதிகப்படுத்துகின்றன. அந்தக் கோபங்களை கேள்விகளை அதிருப்தியை அர்ஜுனா குவிமயப்படுத்தினார். அதனால்தான் சாவகச்சேரியில் அத்தனை மக்கள் திரண்டார்கள். சில நாட்களுக்கு முன் சம்பந்தரின் அஞ்சலி நிகழ்வில் திரண்டதைவிட அதிக தொகையினர் ஒரே நேரத்தில் திரண்டார்கள். அர்ஜுனா எப்பொழுதும் நேரலையில் தோன்றினார் அதுதான் அவருடைய பலம். பின்னர் அதுவே அவருக்கு பலவீனமாகவும் மாறியது. அரச மருத்துவமனைகளை தர்மாஸ்பத்திரிகளாக கருதும் ஒரு சமூகத்தின் மத்தியில் மருத்துவர்களுக்கு உயர்வான பவித்திரமான ஒரு இடம் உண்டு. பொதுவாக மருத்துவர்கள் அந்த பவித்திரமான ஸ்தானத்தை விட்டு வெளியே வர விரும்புவதில்லை. ஆனால் அர்ஜுனா வெளியே வந்தார். பல மாதங்களுக்கு முன் கண்டாவளையைச் சேர்ந்த ஒரு பெண் மருத்துவர் வெளியே வந்தார். இப்பொழுது முகநூலில் சில மருத்துவர்கள் அவ்வாறு வெளியே வருகிறார்கள். ஆனால் இவர்கள் அனைவரும் விதிவிலக்கு. பொதுவான மருத்துவர் குணம் என்பது தனக்குரிய பவித்திரமான ஸ்தானத்தைப் பேணுவதுதான். ஆனால் அர்ஜுனா அப்படியல்ல. அவர் மருத்துவர்கள் தொடர்பாக தமிழ்ச் சமூகத்தில் கட்டியெழுப்பப்பட்ட பொதுவான பிம்பத்துக்கு வெளியே நிற்கிறார். நேரலைமூலம் அவர் சமூக வலைத்தளங்களில் கட்டியெழுப்பியிருக்கும் பிம்பமும் திடீர் வீக்கமாக இருக்கலாம். அவர் தன்னுடைய தனிப்பட்ட தவறுகளை, பலவீனங்களை சிஸ்டத்தின் மீதான விமர்சனங்களாக மாற்றுவதில் வெற்றி கண்டு விட்டார் என்ற ஒரு விமர்சனமும் உண்டு. எனினும்,அவர் சார்ந்த சிஸ்டத்தின் மீது அவர் எழுப்பியிருக்கும் கேள்விகள் விசாரணைக்குரியவை. திணைக்களம் சார்ந்த உள்ளக விசாரணைகள் உண்மைகளை வெளியே கொண்டு வரலாம். அல்லது ஊடகத் துறையைச் சேர்ந்தவர்கள் அதை மணந்து கண்டுபிடிக்கலாம். அர்ஜுனா எழுப்பிய கேள்விகள் தொடர்பாக உண்மைகளை புலனாய்ந்து வெளியே கொண்டுவர வேண்டிய துறைசார் பொறுப்பு ஊடகங்களுக்கு உண்டு. அது ஊடகத்துறை சார்ந்த பொறுப்புக் கூறல். அதேசமயம் துறைசார் அரச உயர் அதிகாரிகள் அவர் எழுப்பிய கேள்விகள் தொடர்பாக மக்களுக்கு பதில்கூற வேண்டும். அதைவிட முக்கியமாக அர்ஜுனா ஒரு பொறியைத் தட்டிப்போட்டதும் அது எப்படி சாவகச்சேரியில் தீயாகப் பரவியது என்பதற்குரிய சமூக உளவியலையும் தொகுத்து ஆய்வுசெய்ய வேண்டும். அர்ஜுனாவின் கலகம் வெற்றிடத்தில் இருந்து தோன்றவில்லை. அது ஏற்கனவே சமூக மட்டத்தில் பரவலாகக் காணப்பட்ட அதிருப்தி,கோபம்,பயம், சந்தேகம் போன்றவற்றின் தொகுக்கப்பட்ட விளைவுதான். ஏற்கனவே பொதுப் புத்திக்குள் இருந்த பயங்களையும் கோபத்தையும் அதிருப்தியையும் அர்ஜுனா ஒருங்குவித்தார் என்பதுதான் சரி. அர்ஜுனாவின் விமர்சனங்கள் விவகாரம் ஆகிய பின் சில நாட்கள் கழித்து யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் சத்தியமூர்த்தி ஒரு குறிப்பை முகநூலில் போட்டார். அது போதனா வைத்தியசாலை மீதான விமர்சனங்களுக்குப் பதில் கூறும் நோக்கிலானது. ஆனால் அதற்கு கீழே வந்த கருத்துக்களைத் தொகுத்துப் பார்த்தால், 500க்கும் அதிகமான கருத்துக்களில் 90 விகிதத்துக்கும் அதிகமானவை மருத்துவத் துறைக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை முன்வைப்பவை. அதில் ஒரு செய்தியுண்டு. பொதுசன மனோநிலை ஏன் அவ்வாறு அதிருப்தியோடும் கோபத்தோடும் காணப்படுகின்றது? ஒரு சமூகத்தின் குறிப்பிட்ட ஒரு துறைசார்ந்த பொறுப்புக்கூறல் தொடர்பில் விழிப்பு அதிகரிப்பது நல்லது. ஒவ்வொருவரும் தொழில் சார்ந்தும் அறம் சார்ந்தும் குறைந்தது மனச்சாட்சிக்காவது பொறுப்புக்கூற வேண்டும். ஒரு மருத்துவர் கூறியதுபோல, பொது வைத்தியசாலைகளில் கழிப்பறைகளை பயன்படுத்துவதிலும் பொதுச்சொத்தை நுகர்வதிலும் பொதுமக்கள் எவ்வளவு தூரம் பொறுப்போடு காணப்படுகிறார்கள்?எல்லாப் பொது மருத்துவமனைகளிலும் கழிப்பறைகள் மோசமாகக் காணப்படுகின்றன. ஏன் அதிகம் போவான்? முருகண்டியில் கழிப்பறைக்குக் காசு வாங்கப்படுகின்றது. ஆனால் அந்தக் கழிப்பறையின் சுகாதாரச்சூழல் எப்படியிருக்கிறது? மேற்கத்திய சமூகத்தின் சமூகப் பொறுப்பை கண்டுபிடிக்கக் கூடிய இடங்களில் ஒன்று கழிப்பறைகள் ஆகும். அங்கே பொதுக் கழிப்பறைகள் சுத்தமாக இருக்கும். அது நலன்புரி அரசுக் கட்டமைப்பு. தவிர அங்கே கழிப்பறைகள் உலர்ந்தவை. ஆனால் நமது கழிப்பறைகளோ ஈரமானவை. எனவே எமது சூழலுக்கு ஏற்ப வித்தியாசமாகச் சிந்தித்து கழிப்பறைகளில் சுத்தத்தைப் பேண வேண்டும். ஆனால் பொதுக் கழிப்பறைகளை வைத்து ஒரு சமூகத்தின் பொறுப்புணர்ச்சியை மதிப்பிடலாம். எனவே பொறுப்புக்கூறல் எல்லாத் தளங்களிலும் உறுதி செய்யப்பட வேண்டும். பொது மக்களில் தொடங்கி அரசாங்கம் வரை அனைவரும் பொறுப்புக்கூற வேண்டும். ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரை பொறுப்புக்கூறல் என்ற வார்த்தைக்கு அதிகம் பிரயோக அழுத்தம் உண்டு. அரசியல் அடர்த்தி உண்டு. 2015 ஆம் ஆண்டு ஐநாவில் நிறைவேற்றப்பட்ட30/1 தீர்மானம் பொறுப்புக் கூறலுக்கானது. அதாவது நிலைமாறு கால நீதிக்கு உரியது. ஆனால் அது தோற்கடிக்கப்பட்டது. இனப்படுகொலைக்கு யாருமே இதுவரை பொறுப்புக் கூறவில்லை. இவ்வாறு அரசியல் அர்த்தத்தில் பொறுப்புக் கூறப்படாத ஒரு நாட்டுக்குள், அல்லது பொறுப்புக்கூற யாருமற்ற ஒரு நாட்டுக்குள், பொறுப்புக் கூறலை பன்னாட்டு நீதிமன்றத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்று கேட்கும் ஒரு சிறிய மக்கள் கூட்டம்,தனக்குள்ளும் அந்தந்தத் துறை சார்ந்து அல்லது ஆகக்குறைந்தது அவரவர் தமது மனச்சாட்சிக்காவது பொறுப்புக் கூறத்தானே வேண்டும்? https://www.nillanthan.com/6828/
-
பாரிய தகவல்தொழில்நுட்ப கோளாறு - சர்வதேச அளவில் விமானசேவைகள் வங்கி சேவைகள் செயல் இழந்தன
இந்த உலகப் பிரச்சினைக்கு மூலகாரணம் ஒரு NULL pointer. ஒழுங்காக memory ஐ allocate பண்ணாமல் விட்டால் அல்லது பிழையான memory addresses ஐ point பண்ணினால் வரும் பிரச்சினை! C/C++ programming languages படிக்கும்போது பெரிய தலையிடியைக் கொடுக்கும் விடயம்! இதனால் பின்னர் வந்த programming languages பல resource management ஐ coding எழுதுவர்களிடம் இருந்து மறைத்து கையாள்கின்றது. ஆனால் Hardware க்கு அண்மித்து உருவாக்கப்படும் embedded software C/C++ இல்தான் எழுதப்படுகின்றன. எமது வேலையிலும் NULL pointers எப்போதும் பிரச்சினையாகத்தான் உள்ளன. ஆனால் இவற்றை இலகுவாகக் கண்டுபிடிக்க பல tools, rigorous engineering processes உள்ளன. எப்படி இவற்றையெல்லாம் தாண்டி Microsoft நிறுவனம் CrowdStrike இன் update ஐ அனுமதித்தது என்று புரியவில்லை.
-
ஹிந்தியன் 2 விமர்சனம்.
இந்தியன் 1 இல் தந்த கிறக்கத்தால் இரண்டு தரம் அகன்ற திரையில் படத்தைப் பார்த்தேன்😻 இந்தியன் 2 இல் நித்திரைதான் வந்தது! இப்போது மனிஷா இப்படி இருக்கா!
-
கொக்குதொடுவாயில் மனித எச்சங்கள் மீட்பு
கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி இறப்புக்கான காரணங்களுடன் அறிக்கை சமர்ப்பிக்கப்படவேண்டும் நீதிமன்று பணிப்பு என்கிறார் சட்டத்தரணி!!! கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியில் மீட்கப்பட்ட எலும்புக்கூடுகளை அடிப்படையாக வைத்து அவர்களின் இறப்புக்கான காரணம், பால், வயது உள்ளிட்ட பல்வேறு விடயங்களையும் உள்ளடக்கி இறுதி அறிக்கையைத் தாக்கல் செய்யுமாறு நீதிமன்றம் பணித்துள்ளதாக சட்டத்தரணி வி.கே.நிறஞ்சன் தெரிவித்தார். புதைகுழி அகழ்வின் இறுதியில் ஊடகங்களுக்கு அவர் மேலும் தெரிவித்ததாவது:- கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி வழக்கு கடந்த செவ்வாய்க்கிழமை எடுத்துக்கொள்ளப்பட்டது. மாவட்ட நீதிவான் த.பிரதீபன் முன்னிலையில் அவரின் பிரசன்னத்துடன் அகழ்ந்தெடுக்கப்பட்ட மனித ஓட்டுத்தொகுதிகள் அதனூடான பிறசான்றுப்பொருள்கள் பாரப்படுத்தப்பட்டன. இடைக்கால அறிக்கை பேராசிரியர் றாஜ்சோமதேவவால் தாக்கல் செய்யப்பட்டது. அதில் 1994- 1996 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலப்பகுதிக்குரிய எச்சங்களாக இவை இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பங்குபற்றுனர்களின் இறுதி அறிக்கைகளும் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்படவேண்டும். இறப்புக்கான காரணம், பால், வயது, உயரம் உட்பட பல விடயங்கள் உள்ளடக்கப்படவேண்டும். அத்துடன் காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலக அதிகாரிகளின் அறிக்கையும் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட வேண்டும். இதுபோன்ற அறிக்கைகள் எல்லாம் கிடைக்கப்பெற்ற பின்னர் ஒட்டு மொத்த அறிக்கைகளை வைத்து தீர்மானத்துக்கு வரமுடியும் என்று நீதிமன்றின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த வழக்கு எதிர்வரும் 8ஆம் திகதி மீண்டும் அழைக்கப்பட இருக்கின்றது. காணாமற் போனோர் அலுவலகத்தின் பிரதிநிதிகளின் பிரசன்னத்தில் புதைகுழி முற்றுமுழுதாக மூடப்பட்டுள்ளது. சர்வதேச நியமங்களுக்கு அமைவாக புதை குழியை மூடுமாறு நீதிமன்றின் கவனத்துக்கு நாங்கள் கொண்டு சென்றோம். மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள். தமிழீழவிடு தலைப்புலிகளின் உறுப்பினர்களின் உடலங்களாக இருக்கலாம் என்று நம்பப்படுகின்றது. கூடுதலாக பெண்போராளிகளின் உடலங்கள்தான் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. அதிகமானவர்களின் உடலங்களில் துப்பாக்கிச் சன்னங்கள் பாய்ந்துள்ளதை காணக்கூடியதாக உள்ளது. குழிகளுக்குள்ளும் துப்பாக்கிச் சன்னங்கள் பாய்ந்துள்ளன. அதனைவிட பிற பொருள்கள் அகழ்ந்தெடுக்கப்பட்டு நீதிமன்றக் கட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளன. ஆடைகள் கிழிக்கப்பட்டு அகற்றப்பட்டுள்ளதை காணக்கூடியதாக இருந்தது. இங்கு ஒரு வன்முறை, துஷ்பிரயோகம், மனித உரிமை மீறல் நடந்தது என்று அப்பட்டமாக தெரிகின்றது. ஒட்டுமொத்த அறிக்கைகள் வந்ததன் பின்னர்தான் உண்மை துலங்கும் என்று எதிர்பார்க்கின்றோம். தொழில்நுட்பவசதிகள், சர்வதேச முறைகள் இலங்கையில் இல்லை என்பதை நாங்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். என்றார். (ச) https://newuthayan.com/article/கொக்குத்தொடுவாய்_மனிதப்_புதைகுழி_இறப்புக்கான_காரணங்களுடன்_அறிக்கை_சமர்ப்பிக்கப்படவேண்டும்
-
பெருந்தொகை பண மோசடி கிழக்கு பல்கலை ஊழியர் கைது!
பெருந்தொகை பண மோசடி கிழக்கு பல்கலை ஊழியர் கைது! adminJuly 18, 2024 வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதாக பல்வேறு நபர்களிடம் இருந்து சுமார் 06 கோடி ரூபாய்க்கும் அதிகமான பணத்தினை பெற்று மோசடி செய்த குற்றச்சாட்டில் கிழக்கு பல்கலைக்கழக அலுவலர் ஒருவர் யாழ்ப்பாண காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தை சேர்ந்த சிலரை வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதாக கூறி பெரும் மோசடி ஒன்று நடைபெற்ற நிலையில், பாதிக்கப்பட்டவர்கள் யாழ்ப்பாண காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர். முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த காவற்துறையினர் பெண்ணொருவரை கைது செய்திருந்தனர். குறித்த பெண்ணிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் , அந்த பெண்ணினை வழிநடத்தி, மோசடிகளில் ஈடுபட்டவர் எனும் குற்றச்சாட்டில் கிழக்கு பல்கலைக்கழகத்தின் அலுவலர் கைது செய்யப்பட்டுள்ளார். அதேவேளை முன்னதாக கைது செய்யப்பட்ட இளம் பெண், பல்வேறு நபர்களிடம் இருந்து பெற்ற சுமார் 6 கோடி ரூபாய்க்கும் அதிகமான நிதியினை பல்கலைக்கழக அலுவலரின் வங்கி கணக்கில் வைப்பிலிட்டுள்ளமையும் விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண காவற்துறையினர் ர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். https://globaltamilnews.net/2024/205170/
-
சாவகச்சேரி வைத்தியசாலையின் புதிய பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்சுனாவின் குற்றச்சாட்டுகள்
ஒருவரின் அனுமதி இல்லாமல் உரையாடலைப் பதிவு செய்வது, சமூகவலை ஊடகங்களில் பொறுப்பற்ற வகையில் பதிவுகளை வைப்பது எல்லாம் ஆரம்பத்திலேயே இவர் மீது நன்மதிப்பைத் தரவில்லை. வைத்தியத் துறையில் உள்ள பிரச்சினைகளை உணர்ச்சிப் போராட்டம் ஆக்கி இப்போது அது புஸ்வாணமாகிவிட்டது. அதிகாரத்தை துஸ்பிரயோகம் செய்பவர்கள், ஊழல்களில் ஈடுபடுபவர்கள், நோயாளிகளை மனிதநேயத்துடன் நடத்தாமல் அலையவிடுபவர்கள், தமது கடமைகளை மறந்து பணம் சேர்ப்பதை குறியாகக் கொண்டவர்கள் இனி பழையபடி சகஜ நிலைக்குக் திரும்பி எல்லாவற்றையும் தொடர்வார்கள். — பேராதனைக்கு செல்லும் வைத்தியர் அருச்சுனா! adminJuly 19, 2024 பேராதனை வைத்தியசாலைக்குச் சென்று கடமைகளைப் பொறுப்பேற்கவுள்ளேன் என சாவகச்சேரி வைத்தியசாலையின் முன்னாள் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் அருச்சுனா இராமநாதன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை (18.07.24) ஊடகவியலாளர்களை சந்தித்து கருத்து வெளியிட்ட அவர், “ஒரு வைத்தியருக்காக பொதுமக்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டது இதுவே முதல்முறை. எனக்காக போராடிய மக்களுக்கு நான் எப்போதும் விசுவாசமாக இருப்பேன் யாழ்ப்பாண மக்களுக்காக உண்மையாக செயற்பட்டேன். அது வைத்தியத்துறை மாபியாக்களுக்கு பிடிக்கவில்லை. அதனால் என்னை இங்கிருந்து விரட்டுகின்றனர். ஆனால், இந்த மக்களின் அன்பு என்பது எனது இதயத்துடிப்பு. இந்த மண்ணில் இருந்து விடைபெறுகின்றேன். சுகாதார அமைச்சிற்கு வருமாறு நேற்றைய திகதியிட்டு இன்றைய தினம் எனக்கு கடிதம் கிடைத்துவிட்டது. கொழும்பு சென்று நாளை (19.07.24) அங்கு புதிய நியமனத்தைப் பெற்றுக் கொண்டு நான் முன்னர் கடமையாற்றிய பேராதனை வைத்தியசாலைக்குச் சென்று கடமைகளைப் பொறுப்பேற்கவுள்ளேன்” என தெரிவித்தார். https://globaltamilnews.net/2024/205158/
-
‘தமிழன்’ என மார்தட்டும் சமூகம், பாரம்பரிய அடையாளத்தை இழக்கிறதா? அழிவின் விளிம்பில் பனையேறிகள்!
அது பியர் வண்டி!
-
குறுங்கதை 1 -- செல்லப்பிராணி
ஒன்று போனால் இன்னொன்று! பழையதை மறந்து புதியதுடன் சந்தோஷமாக இருப்பார்கள்! இதையே மனிதர்களுக்கும் கடைப்பிடித்தால் நன்றாக இருக்கும்!
-
ஹிந்தியன் 2 விமர்சனம்.
கொட்டக் கொட்ட முழித்துப் பார்த்தேன்! படத்தில் மனிஷா கொய்ராலா அளவுக்கு கிறக்கம் தர ஒருவரும் இல்லை!🤪
-
சாவகச்சேரி வைத்தியசாலையின் புதிய பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்சுனாவின் குற்றச்சாட்டுகள்
வட மாகாணத்திற்கு ‘Good bye’ கூறினார் வைத்தியர் அர்ச்சுனா! பொது மக்கள் மற்றும் ஊடகங்களுக்கு நன்றி தெரிவித்த யாழ்ப்பாணம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகராக பணியாற்றிய வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா, வட மாகாணத்திற்கு “Good bye” என்றும் தெரிவித்துள்ளார். தனது பேஸ்புக் பக்கத்தில் விடுத்துள்ள பதிவொன்றில் அவர் இவ்வாறு கூறியுள்ளார். இனி அரசியல்வாதிகள் எவரையும் நம்பக்கூடாது என்பதை தெரிந்துகொண்டதாகவும் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திற்கு நேற்று புதன்கிழமை பயணம் செய்திருந்த சுகாதார அமைச்சர், சாவகச்சேரி வைத்தியசாலையில் பதில் அத்தியட்சகர் தற்போது நியமனம் பெற்றுள்ளவரே என குறிப்பிட்டிருந்தார். இதனையடுத்து, “இன்றிலிருந்து இந்த கறை படிந்த சிஸ்டத்தில் மெடிக்கல் அட்மினிஸ்ட்ரேட்டர் ஆக வேலை செய்ய மாட்டேன்” எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார். http://www.samakalam.com/வட-மாகாணத்திற்கு-good-bye-கூறின/
-
ஹிந்தியன் 2 விமர்சனம்.
அவர் பொதுவாக இலக்கிய விமர்சனம் செய்பவர்! யாரோ இந்தியன்-2 படம்பார்க்க அனுப்பிவிட்டார்கள்! நானும் திரையில் பார்த்தேன்! இடையில் நல்ல நித்திரை வந்தது.. ஆனாலும் கண்களை இறுக்கித் திறந்தே வைத்திருந்தேன்.. அடுத்த பாகம் அடுத்த வருஷம் வரும்!
-
ஹிந்தியன் 2 விமர்சனம்.
“இந்தியன்… 2” …. சமூகத்தை திருத்த முயன்ற சாகச இந்தியன், திரைக்கதையில் சறுக்கிய பரிதாபம்!! … முருகபூபதி. திரைப்படம் விமர்சனம்! …… வட இந்தியாவில் உத்தர பிரதேசத்தில் ஹாத்ரஸில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒரு சாமியாரின் கால் பதிந்த மண்ணை எடுக்க முனைந்து, அந்த ஜன நெரிசலில் 122 பேரளவில் பரிதாபமாக இறந்திருக்கும் காலப்பகுதியில், தமிழ்நாடு கள்ளக்குறிச்சியில் சாராயம் அருந்தி ஐம்பதிற்கும் மேற்பட்டவர்கள் அநியாயமாக சாகடிக்கப்பட்டிருக்கும் துயரம் கப்பிய காலப் பகுதியில், தமிழ் நாட்டில் நிலமோசடி வழக்கில் முன்னாள் அமைச்சர் ஒருவர் கைதாகியிருக்கும் வேளையில், சில அரசியல் தலைவர்கள் கூலிப்படைகளினால் கொடூரமாக கொல்லப்பட்டுள்ள சந்தர்ப்பத்தில், ஆனந்த் அம்பானி திருமணத்துக்கு ஐநூறு கோடி ரூபாவுக்கு மேல் செலவுசெய்து அதில் கலந்துகொண்ட விருந்தினர்களுக்கு இரண்டு கோடி ரூபா மதிப்புள்ள கைக் கடிகாரங்கள் பரிசாக வழங்கப்பட்டிருக்கும் வேளையில், இந்திய தேசத்தில் நீடித்திருக்கும் ஊழலை, சொத்து சேகரிப்பை , கருப்புப் பணத்தை ஒழிக்கவேண்டும் என்ற குரலோடு லைக்கா சுபாஸ்கரனின் தயாரிப்பில் சங்கரின் இயக்கத்தில் உலக நாயகன் கமல் நடித்த இந்தியன் – 2 திரைப்படம் வெளியாகியிருக்கிறது. இந்தியன் 1996 ஆம் ஆண்டில் இதே சங்கரின் இயக்கத்தில் சுஜாதாவின் திரைக்கதை வசனத்தில் ஏ. ஆர். ரகுமான் இசையில் வெளிவந்து, கமலுக்கு அவ்வாண்டில் சிறந்த நடிகருக்கான தேசிய விருதும் கிடைத்தது. 28 வருடங்களுக்குப் பின்னர் அதாவது கால் நூற்றாண்டுக்குப் பின்பு, இந்த 21 ஆம் நூற்றாண்டில் இந்தியன் 2 வெளிவந்துள்ளது. இம்மாதம் 12 ஆம் திகதி உலகெங்கும் ஆயிரக்கணக்கான திரையரங்குகளில் காட்சிக்கு வந்திருக்கும் இந்தியன் 2 முதல் நான்கு நாட்களிலேயே நூறு கோடி ரூபாவை வசூல் செய்திருக்கிறது என்ற செய்தியும் வெளியானது. இந்த விமர்சனத்தை நான் எழுதும்போது, அது இன்னும் எத்தனை கோடியை தாண்டியிருக்கும் என்பது இங்கு அவசியமில்லை. ஐநூறு கோடி ரூபா செலவில் தயாரிக்கப்பட்டுள்ள இத்திரைப்படத்தில் நடித்திருக்கும் உலகநாயகன் கமலின் சம்பளம் நூற்றி ஐம்பது கோடி ரூபா எனவும் சொல்லப்படுகிறது. இயக்குனர் சங்கர் முன்னர் இயக்கிய ஜென்டில்மென் , முதல்வன் ( அக்ஷன் கிங் அர்ஜுன் நாயகனாக நடித்தவை ) இந்தியன் ( கமல் நடித்து 1996 இல் வெளியானது ) அந்நியன் ( விக்ரம் நடித்தது ) ஆகிய நான்கும் சமூகத்தில் அன்றாடம் நடக்கும் மோசடிகள், ஊழல்களுக்கு எதிராக பேசிய திரைப்படங்கள். அந்த வரிசையில் 1996 இல் வெளியான இந்தியனின் இரண்டாம் பாகம் எனச்சொல்லிக்கொண்டு 28 வருடங்களின் பின்னர் இந்தியன் 2 வெளிவந்துள்ளது. நான் வதியும் மெல்பனில் புறநகரமான மோர்வல் நகரத்தில் கடந்த 15 ஆம் திகதி இரவுக் காட்சிக்கு எனது மனைவியுடன் சென்றிருந்தேன். எனக்கு கடந்த 13 ஆம் திகதி பிறந்த தினம். அதனை முன்னிட்டு எனது இரண்டாவது மகள் பிரியாதேவி ஏற்பாடு செய்து தந்த பரிசுதான் இந்தியன் 2 இற்கான அனுமதிச்சீட்டு. அன்று மோர்வல் திரையரங்கில் அந்தக்காட்சியை பார்த்தவர்கள் எங்களுடன் சேர்த்து மொத்தம் ஏழு பேர்தான்! 28 வருடங்களுக்கு முன்னர் பார்த்த இந்தியன் திரைப்படம் தந்த திருப்தியை, இரண்டாவது இந்தியன் தரவில்லை, பலத்த ஏமாற்றத்தையே தந்தது என்பதை முதலிலேயே சொல்லிவிடுகின்றேன். சங்கரின் திரைப்படம் என்றாலே பிரமாண்டம் என்பதுதான் அடையாளம். ஆனால், அதனை அவர் கதையில் காண்பிக்காமல் காட்சிகளில் சித்திரிக்க முயன்றிருக்கிறார். இந்தியன் முதல் திரைப்படம் ஒரே குடும்பத்திற்குள் தந்தைக்கும் மகனுக்கும் இடையிலிருந்த முரண்பாட்டை சித்திரித்தது . கமல் இரண்டு வேடங்களிலும் சிறப்பாக நடித்திருந்தார். தந்தை சேனாதிபதியாக இந்தியன் தாத்தா வேடம் ஏற்று நடித்த அவருக்கு அப்போது தேசிய விருதும் கிடைத்தது. இந்தியன் 2 , நான்கு குடும்பங்களுக்குள் நடக்கும் கதையை சொல்லியிருக்கிறது. புதிய இந்தியன் 2 இல் தோன்றும் இந்தியன் தாத்தா ( கமல் ) – முதல் காட்சியிலேயே தான் 40 வயதிற்குட்பட்டவர்களுக்காகத்தான் மீண்டும் வந்திருப்பதாக சொல்கிறார். அடுத்துவரும் 2025 ஆம் ஆண்டில் இந்தியன் 3 வெளியாகவிருப்பதாகவும் செய்தி வெளிவந்துள்ளது. இதில் வரப்போகும் இந்தியன் தாத்தா, இருபது வயதிற்குட்பட்டவர்களுக்காகத்தான் மீண்டும் வந்திருக்கின்றேன் எனச்சொல்லப் போகின்றாரோ தெரியவில்லை ? ! தேசத்தை சுத்தப்படுத்துவதற்கு முன்னர் வீட்டை சுத்தப்படுத்தவேண்டும் என்ற தொனியில் பேசத்தொடங்கும் திரைக் கதைதான் இந்தியன் 2. அதற்காக இந்தத்திரைப்படத்தில் நான்கு குடும்பங்களும் அங்கிருந்து போராடத் தொடங்கும் நான்கு இளம் தலைமுறையினரும் வருகிறார்கள். இந்நால்வரில் ஒரு இளம் யுவதியும், மூன்று இளைஞர்களும் இடம்பெறுகிறார்கள். இவர்களின் கதை தனியாகவும் தாய்வானில் தைப்பேயிலிருந்து வரும் இந்தியன் தாத்தா சேனாபதியின் கதை தனியாகவும் வந்து இணைகின்றது. இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பயணித்த விமானம் தாய்வானில்தான் விபத்துக்குள்ளாகி அவரது உடல் காணாமல் போனது. 1996 இல் வெளியான இந்தியன் திரைப்படம், நாயகன் சேனாபதி ( தந்தை கமல் ) தனது மகன் சந்துருவை ( மகன் கமல் ) விமான நிலைய ஓடுபாதையில் தனது வர்மக்கலையினால் கொலைசெய்துவிட்டு தப்பிச் செல்வதாக முடிகிறது. இந்தியன் 2 இல் தோன்றும் இந்தியன் தாத்தா சேனாபதி எங்கே இருக்கிறார்? என்பது தெரியாமல், இந்தியாவில் நிலவும் ஊழல் மோசடிகளை ஒழிப்பதற்காக அந்த நான்கு இளம் தலைமுறையினரும் தங்கள் சமூக வலைத்தள ஊடகம் ஊடாக (You tube Chenal ) தேடுகிறார்கள். இந்தியன் தாத்தா முற்றிலும் வித்தியாசமான தோற்றத்துடன் தாய்வான் தைப்பேயிலிருந்து இந்தியாவுக்கு வருகிறார். இதன் மூலம் அவரை நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் மறு அவதாரம் என காட்ட முனைகிறார்களா..? என்பது தெரியவில்லை!? அவரை மீண்டும் கைதுசெய்வதற்காக 96 இல் அவரை கைதுசெய்ய முயன்று அவரின் வர்மக்கலை தாக்குதலினால் பாதிக்கப்பட்ட ஒரு பொலிஸ் அதிகாரியின் மகனாக ( பாபி சிம்கா ) பாதுகாப்புத்துறை அதிகாரியாக காத்திருக்கிறார். விமான நிலையத்தில் காத்திருக்கும் இவரது பார்வையில் மண்ணைத் தூவி விட்டு தப்பிவிடும் இந்தியன் தாத்தா, தனது வர்மக்கலை தாக்குதலின் மூலம் மேலும் சில ஊழல்வாதிகளையும் நிதிமோசடிகள் மூலம் முறைகேடாக சொத்து சேர்த்தவர்களையும் அதே வர்மக்கலை தாக்குதல் மூலம் சித்தப்பிரமை பிடிக்க வைத்து வாயில் நுரை கக்க பாட வைக்கிறார். தெருவிலே ஓட வைக்கிறார். அதில் ஒருவர் தங்க மாளிகையில் வாழ்ந்து தங்கத்தால் அமைக்கப்பட்ட மலகூடத்தை தனது பாவனைக்கு வைத்திருப்பவர். இந்திய மாநிலங்கள் அனைத்திலும் நடக்கும் ஊழல் மோசடிகளை, சொத்து சேகரிப்பை அம்பலப்படுத்தி சம்பந்தப்பட்டவர்களை ஒழித்துக்கட்ட துப்பாக்கியோ, ஏ. கே. 47 இயந்திரத் துப்பாக்கியோ இந்தியன் தாத்தாவுக்கு தேவைப்படவில்லை. கைவிரல்களே அவருக்குப்போதும். அவரிடம் இருக்கும் ஆயுதம் அது மாத்திரம்தான். அதற்காக இத்தனை பொருட் செலவில் பிரமாண்டமான ஒரு திரைப்படமா..? நாட்டில் ஊழல் மோசடிகளை கண்டுபிடித்து ஒழிக்க முன்வரும், நான்கு இளம் தலைமுறையினரும் தங்கள் குடும்பத்தில் இருக்கும் தாய், தந்தை, மற்றும் உறவினர்கள் அந்த விடயங்களில் சம்பந்தப்பட்டிருப்பது கண்டு, அரசுக்கு காட்டிக்கொடுத்து தண்டனை பெற்றுக்கொடுக்கும்போது அதில் ஒரு தாய் அவமானம் தாங்கமுடியாமல் தற்கொலை செய்துகொள்கிறாள். அத்தோடு திரைக்கதையும், சென்ற திசையிலிருந்து முற்றாக மாறிவிடுகிறது. அந்த ஒரு மரணமே அந்த இளம் தலைமுறையினரையும் அவர்களின் பின்னால் திரண்டு வந்த மக்களையும் நேர்மையை விரும்பிய இந்தியன் தாத்தாவுக்கு எதிராக மாறித் திருப்பிவிடுகிறது. தற்கொலை செய்துகொண்ட தாயின் பூதவுடலுக்கும் கொள்ளி வைக்கும் உரிமை அந்த நேர்மையான மகனுக்கு இல்லாமல் செய்யப்படுகிறது. அதற்கெல்லாம் இந்தியன் தாத்தாதான் காரணம் என்று ஆயிரக்கணக்கில் மக்கள் திரண்டு அவரை தாக்குகின்றனர். “ சமூகம் இப்படித்தான் எதிர்மறையாகச் சிந்திக்கும். ஆனால், அது எவ்வாறு நேர்மறையாகச் சிந்திக்கவேண்டும் “ என்று சொல்ல வேண்டியவர்தான் திரைக்கதை எழுத்தாளர். இந்தியன் தாத்தா இறுதியில் கைதாகிறார். கைதுசெய்த அதிகாரியையும் அவர் தனது வர்மக்கலை தாக்குதலினால் உடல் ஊனமடையச் செய்துவிடுகிறார். அவரை குணப்படுத்தவேண்டுமானால், இந்தியன் தாத்தாவின் கைகளில் மாட்டப்பட்ட விலங்குகள் கழற்றப்பட வேண்டுமாம். அவரால் மட்டும்தான் அந்த இளம் அதிகாரியை குணப்படுத்த முடியுமாம். இந்தியன் தாத்தா, அந்த இளம் அதிகாரியை ஒரு அம்பூலன்ஸில் எடுத்துக்கொண்டு தப்பிச்செல்கிறார். இந்தியன் முதல் படத்தில் வந்த மூத்த அதிகாரி இந்தப்படத்திலும் வந்து ( நெடுமுடி வேணு ) சொல்கிறார்: “ மீண்டும் திமிங்கிலம் கடலுக்குச் சென்றுவிட்டது “ திமிங்கிலம் கரைக்கு வந்தால், என்னவாகும் ? என்பதை குழந்தையும் சொல்லிவிடும். இந்த இலட்சணத்தில், இந்தியன் என்ற திமிங்கிலம் 28 ஆண்டுகளுக்குப்பின்னர் மீண்டும் கரைக்கு வந்துவிட்டு, திரும்பவும் கடலுக்குள் தப்பிச்சென்றுவிட்டிருக்கிறது. மீண்டும் 2025 இல் திரும்பி வரும்போது பார்த்துக்கொள்வோம். அதற்கிடையில் இந்த பதிவின் தொடக்கத்தில் சொல்லப்பட்ட செய்திகள் மீண்டும் இந்தியாவில் நடந்துகொண்டுதானிருக்கும். ஒரு தேசத்தில் கல்வி, உணவு, உறைவிடம் ( நிலம் – வீடு ) மருத்துவம் பிரதானமானவை. இவற்றில் நடக்கும் ஊழல் மோசடிகளை இரண்டு விரல்களின் உதவிகொண்டு வர்மக்கலை தாக்குதல் மூலம் முடிவுக்கு கொண்டுவந்துவிடலாம் என்று இதுபோன்ற திரைக்கதை எழுதுபவர்களும் இயக்குநரும் நினைக்கிறார்கள். இதன் மூலம் கோடி கோடியாக சம்பாதிக்க முடியும் என்று தயாரிப்பாளர்கள் நம்புகிறார்கள். இந்தியன் 2 திரைப்படம் தயாரிக்கப்பட்டுக்கொண்டிருந்த வேளையில், சென்னையில் அதன் படப்பிடிப்பு தளத்தில் இராட்சத கிரேன் விழுந்து மூன்று தொழில் நுட்ப உதவியாளர்கள் கொல்லப்பட்டதையும் சிலர் படுகாயமடைந்ததையும் நாம் மறந்துவிட முடியாது. அவர்களை மறக்காமல் இந்தியன் 2 தொடக்கத்தில் நினைவுபடுத்தியுள்ளனர். அத்துடன் இத்திரைப்படத்தில் நடித்த நடிகர்கள் விவேக், மற்றும் மனோபாலாவும் கேரள நடிகர் நெடுமுடி வேணுவும் தற்போது உயிரோடு இல்லை. ஊழலும் மோசடியும் நிறைந்த தேசத்தை – சமூகத்தை வர்மக்கலை தாக்குதல் மூலம் திருத்த முயன்ற சாகச இந்தியன், திரைக்கதையில் சறுக்கிய பரிதாபத்தைத்தான் காணமுடிந்திருக்கிறது. இதுபோன்ற திரைப்படங்களில் தோன்றும் உலகநாயகன் நாட்டைத் திருத்துவதற்காக தானும் ஒரு அரசியல் கட்சி நடத்துகிறார். அதன் கொள்கைப் பிரகடனத்தில் வர்மக்கலை தாக்குதல் பற்றிய விளக்கமும் இருக்கிறதா..? https://akkinikkunchu.com/?p=284167
-
இலங்கையில் நிகழ வேண்டியது
இலங்கையில் நிகழ வேண்டியது July 15, 2024 — கருணாகரன் — அரசியலில் பிரதானமாக இரண்டு வகை உண்டு. ஒன்று, சமூக மீட்புக்கான அரசியல். இதனை மக்கள் நலன் அரசியல் என்பர். மக்களுடைய நலனுக்காகத் தம்மையும் தமது கட்சி அல்லது இயக்கத்தையும் அர்ப்பணித்துச் செயற்படுவது. இதில் மக்களும் அவர்களுடைய நலன்களும் தேவைகளுமே முதன்மைப்பட்டிருக்கும். இதனுடைய உச்சமாக மக்களுக்கெனத் தம்மையும் தம்முடைய உயிரையும் அர்ப்பணித்துச் செயற்படுவதாகவே விடுதலைப்போராட்ட அரசியல் இருந்தது. இந்த அரசியல் தோற்றுப் பின்னடைந்தாலும் மக்கள் இந்த அரசியலை முன்னெடுத்தோரை மறப்பதில்லை. தங்களுடைய மனதில் அதற்கான – அவர்களுக்கான இடத்தைக் கொண்டிருப்பர். இரண்டாவது, தங்களுடைய நலன்களுக்காக மக்களை முன்னிறுத்திச் செய்யப்படும் அரசியல். இதையே இப்பொழுது பெரும்பாலான கட்சிகளும் தலைமைகளும் செய்து கொண்டிருக்கின்றன. மக்களுக்காகத் தியாகம் செய்வதற்கும் மக்களுக்காகச் செயற்படுவதற்கும் பதிலாக மக்கள் தமக்காகத் தியாகம் செய்ய வேண்டும், தங்களுடைய நிலைப்பாடுகளை ஏற்றுக் கொள்ள வேண்டும் எனக் கருதிச் செயற்படுவது. இதனால் கட்சிகளும் தலைமைகளும் வளர்ந்து கொண்டும் வாழ்ந்து கொண்டும் இருக்கும் நிலை தொடருமே தவிர, மக்களும் – சமூகமும் வளர்ச்சியடைவதில்லை. பதிலாக மக்களின் (சமூகத்தின்) நிலை மேலும் மேலும் மோசமடையும். முதலாவதில் மக்களின் மீதான அதிகாரம் செலுத்தும் போக்குக் குறைவாக உள்ளது. இரண்டாவதில் மக்களின் மீது அதிகாரம் செலுத்தும் போக்கு தூக்கலாகக் காணப்படுகிறது. அதாவது, தாம் தீர்மானிப்பதை, தாம் விரும்புவதை மக்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற நிலைப்பாடிருக்கும். இத்தகைய அதிகாரப் போக்கும் மக்கள் நலனை விட்டுக் கட்சி நலன், தமது நலன் எனச் செயற்படும் தன்மையும் ஒரு கட்டத்தில் மக்களின் மனதில் வெறுப்பை ஏற்படுத்துவதுண்டு. இதுவே இப்போதைய நிலையாகும். தற்போதுள்ள தமிழ் அரசியற் சக்திகளிலும் தலைமைகளிலும் நம்பிக்கையிழந்து அவற்றை ஒதுக்குவதற்கு மக்கள் வந்திருப்பது மேற்படி காரணங்களினாலேயே. தமிழர்களிடத்தில் மட்டுமல்ல, இலங்கைத் தீவிலுள்ள அனைத்துச் சமூகங்களிடத்திலும் இந்த நிலையே ஏற்பட்டுள்ளது. இதனால்தான் அரகலய எழுச்சி அந்தளவுக்கு வெற்றியைக் கொடுத்தது. ஆட்சியாளர்களின் மீது மக்கள் வெறுப்படைந்ததன் அடையாளமே அது. காரணம், மக்களுக்கு அப்பாலான, மக்கள் விரோத அரசியலை இந்தத் தரப்புகள் செய்ய முற்பட்டதேயாகும். இதனால் இலங்கைச் சமூகங்கள் அத்தனையும் இன்று நெருக்கடிகளைச் சந்தித்துள்ளன. இந்த நெருக்கடிகள் இரண்டு வகையானவை. ஒன்று தனித்தனியான நெருக்கடி. மற்றது கூட்டு நெருக்கடி. இன நெருக்கடி, இன ஒடுக்குமுறை போன்றவற்றைத் தனித்தனியாகவும் பொருளாதார நெருக்கடி, அந்திய ஆக்கிரமிப்புப் போன்றவற்றை கூட்டாகவும் சந்தித்து நிற்கின்றன. இதைச் சுருக்கிச் சொல்வதானால், கடந்த 75 ஆண்டுகளிலும் தலைமைகளும் அவற்றின் தரப்புகளும் (கட்சிகளும்) வெற்றியடைந்திருக்கின்றனவே தவிர, மக்கள் வெற்றியடையவில்லை. ஒரு உதாரணத்துக்குத் தமிழரின் அரசியலை நோக்கலாம். தமிழ் மக்கள் எப்போதும் – எத்தகைய இடரின்போதும் தமிழ்த்தேசிய நிலைப்பாட்டுக்கு ஆதரவாகவே நின்றுள்ளனர். அது யுத்த காலமாயினும் சரி, யுத்தத்துக்கு முந்திய காலத்திலும்சரி, யுத்தத்திற்குப் பிந்திய சூழலிலும் சரி தமிழ்த்தேசிய அரசியலை முன்னெடுத்த தலைமைகளையும் தரப்புகளையுமே (கட்சிகளையும் இயக்கங்களையும்) ஆதரித்துள்ளனர். அவற்றையே வெற்றியடைய வைத்துள்ளனர். இப்படியெல்லாம் ஓர்மமாக நின்ற மக்களுக்கு இந்தத் தலைமைகளால் விளைந்த நன்மைகள் என்ன? மக்களுடைய எந்தப் பிரச்சினைகள் தீர்த்து வைக்கப்பட்டன? பதிலாக மேலும் மேலும் பலநூறு பிரச்சினைகள் பெருகியே உள்ளன. இப்பொழுது மாடு மேய்ப்பதற்கான மேய்ச்சற்தரைகளுக்குக் கூடப் பிரச்சினை என்ற அளவுக்கு நிலைமை வந்துள்ளது. இதைத் திசை திருப்பும் விதமாக அவை ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு விதமாக அரச எதிர்ப்பையும் இனவெறுப்பையும் முன்னிறுத்துகின்றன. அரச எதிர்ப்பை அர்த்தபூர்வமாகச் செய்தால், அரசினால் வாலாட்ட முடியுமா? அதற்குத் தம்மை அர்ப்பணித்துக் களத்தில் இறங்கிச் செயற்பட வேண்டும். போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும். இதற்கு எந்தத் தரப்பும் எந்தத் தலைமையும் தயாரில்லை. இதனால் அரச எதிர்ப்பை முன்னிறுத்தித் தம்முடைய அரசியல் வரட்சியையும் பலவீனத்தையும் மறைத்துக் கொள்ள முற்படுகின்றன. இதிற் கூட கள்ளத்தனமும் மோசடிகளும் உண்டு. பிறரைக் குற்றம்சாட்டி தாம் தப்பித்துக் கொள்வதற்காக உள் முரண்பாடுகளைக் காரணம் காட்டி, அவற்றைப் பெருப்பித்து ஒவ்வொரு அணியும் தம்மைச் சுத்தப்படுத்திக் கொள்ள முன்னிற்கின்றன. இதன் விளைவே தமிழ்த்தேசியத் தரப்புகள் இன்று பல துண்டுகளாக – அணிகளாக உடைந்து தனித்தனியாக நிற்பதாகும். அப்படியென்றால், எந்த அணி உண்மையில் தூய்மையானது – சரியானது – வீரியமானது – மக்களுக்கான விடுதலையைப் பெற்றுக் கொடுக்கக் கூடியது? என்ற கேள்வி எழுகிறது அல்லவா! இதேநிலைதான் சிங்களத் தரப்பிலும் முஸ்லிம்களிடத்திலும் உண்டு. ஐ.தே.க – சிறிலங்கா சுதந்திரக் கட்சி என இரண்டு பெருந்தரப்புகளாக இருந்த சிங்களக் கட்சிகள் இன்று உடைந்து பல அணிகளாகப் பெருகியுள்ளன. ஐ.தே.க உடைந்து, ஐக்கிய மக்கள் சக்தி (சஜித் பிரேமதாச தரப்பு), ஐ.தே.க என இரண்டு பிரிவுகளாக உள்ளது. இதை விட சிறு சிறு குழுக்களும் அணிகளும் தனித்தனியாக உள்ளன. மறுவளத்தில் சிறிலங்கா சுதந்திரக் கட்சி உடைந்து பொது ஜனபெரமுன (ராஜபக்ஸவினரின் தரப்பு) – சிறிலங்கா சுதந்திரக் கட்சி என மாறியிருக்கிறது. இந்த இரண்டு தரப்புகளிலிருந்து வெளியேறி வேறு சில அணிகளும் குழுக்களுமாக தனித்தனியாக உள்ளன. இப்படிச் சிதறுண்டிருக்கும் அனைத்துத் தரப்பும் ஒரே விதமாகவே உள்ளன. இவற்றுக்கிடையில் எந்தப் பெரிய வித்தியாசங்களையும் காண முடியாது. ஆனால், ஒன்றையொன்று குற்றம்சாட்டிக் கொள்கிறது. மற்றவர்களை விடத் தாம் சுத்தவாளிகள் என்றே ஒவ்வொரு தரப்பும் சொல்லிக் கொள்கின்றன. மலையகக் கட்சிகளிடத்திலும் முஸ்லிம் கட்சிகளிலும் இதுதான் நிலைமை. இன்னும் ஆயிரத்தி எழுநூறு ரூபாய் சம்பளத்தை உறுதிப்படுத்திக் கொள்ள முடியாத நிலையில்தான் மலையகக் கட்சிகள் இருக்கின்றன. அங்கே பல தலைமுறைகளாக வாழ்கின்ற மக்களுக்கு ஒரு துண்டு நிலத்தைப் பெற முடியாமல்தான் அத்தனை கட்சிகளும் பிரகடனங்களைச் செய்கின்றன. அவ்வறே, முஸ்லிம்களின் பதட்டத்தைத் தணிக்குக் கூடிய அளவுக்கு ஒரு முஸ்லிம் கட்சியும் இன்றில்லை. ஆக மொத்தத்தில் தமிழ், சிங்கள, மலையக, முஸ்லிம் கட்சிகளும் தலைமைகளும் மக்களைத் தோற்கடித்தே தம்மை வளர்த்திருக்கின்றன – நிலை நிறுத்தியுள்ளன. மக்களை எந்த நிலையிலும் இவை மீட்கவோ மேலுயர்த்தவோ இல்லை. இதனால் மக்கள் தொடர்ந்தும் தோற்கடிக்கப்பட்டிருக்கிறார்கள். அதுவும் அந்தந்தச் சமூகத்தின் தலைமைகளால். மக்கள் வெற்றியடைந்திருந்தால் நாடு வளர்ச்சியடைந்திருக்கும். மக்களின் வெற்றியே நாட்டின் வெற்றியாக அமைவதாகும். உலகம் முழுவதும் வரலாறு முழுவதும் நிகழும் உண்மை இது. இலங்கையில் மக்களைத் தோற்கடிக்கும் அரசியற் கலாச்சாரம் வளர்ச்சியடைந்ததால் நாடு தோற்றுப்போய் பின்னடைந்திருக்கிறது. இன்று நாட்டை மீட்பதற்காக உலகின் கால்களில் கடன் கேட்டு மண்டியிடுகிறார்கள். இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு சீனா, இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசுகள் நாட்டின் வளங்களையும் நிலத்தையும் ஆக்கிரமித்து, அபகரிக்க முற்படுகின்றன. இது பேரபாய நிலையாகும். இந்தச் சந்தர்ப்பத்திற்தான் நாட்டின் மீதும் மக்களின் மீதும் பற்றுள்ளோர் தீவிரமாகச் சிந்தித்துச் செயற்பட வேண்டியது அவசியமாகிறது. இதில் நாட்டிலுள்ளோரும் நாட்டை விட்டுப் புலம்பெயர்ந்தோரும் பங்களிக்க வேண்டும். படித்தோரும் வசதியுள்ளோரும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும். முதலில் மக்கள் விரோதச் சிந்தனையுடைய அரசியலாளர்களிடம் கேள்வி எழுப்ப வேண்டும். அவர்கள் மாற்றத்துக்குள்ளாகக் கூடிய அளவுக்கு நெருக்கடிகளையும் நிர்ப்பந்தங்களையும் கொடுக்கலாம். அப்படிச் செய்யும்போது அவர்கள் மாற்றத்துக்குள்ளாக நல்ல வழிக்கு வருவர். அல்லது மக்கள் நலனை முன்னிறுத்திச் செயற்பட்டுக் கொண்டிருக்கும் தரப்புகளை அடையாளம் கண்டு அவற்றை முன்னுக்குக் கொண்டு வர வேண்டும். அவை சிறிய தரப்புகளாக இருக்கலாம். மக்களின் ஆதரவு அவற்றுக்குக் கிடைக்குமானால் அவை பெருச் சக்திகளாக உருவெடுக்கும். அப்படி நிகழும்போது ஒரு மாற்று அரசியற் கலாசாரமும் மாற்றுச் சூழலும் உருவாகும். உதாரணமாக, அடுத்து வரவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியடைவதற்காக சஜித், ரணில், அநுர என ஒவ்வொரு தரப்பும் இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு ஒத்துழைப்பதாகச் சொல்கின்றன. இதற்குக் காரணம், இந்தத் தடவை வழமைக்கு மாறாக மும்முனைப்போட்டியை எதிர்கொள்ள வேண்டியிருப்பதாகும். அப்படியான ஒரு நிர்ப்பந்தம் வரும்போது தவிர்க்க முடியாமல் தீர்வைப் பற்றிப் பேசுவதற்காகக் படியிறங்கி வருகிறார்கள். இதை வாய்ப்பாக எடுத்து, உடனடியாகவே – தேர்தலுக்கு முன்பே அதிகாரப்பகிர்வுக்கு முயற்சிக்க வேண்டும். அதற்கான நிர்ப்பந்தத்தை அளிக்க வேண்டும். அப்படிச் செய்தால் தவிர்க்க முடியாமல் ஏதோ ஒரு முடிவை எடுக்க வேண்டிய நிலை இந்தத் தரப்புகளுக்கு ஏற்படும். இதைப்போல நாட்டின் பொருளாதார மேம்பாட்டை எட்டுவதற்கான செயற்றிட்டங்களை முன்வையுங்கள் என போட்டியாளர்களிடத்திலும் ஆட்சியாளர்களிடத்திலும் மக்கள் கேட்க வேண்டும். மக்கள் சார்பாக ஊடகங்களும் மக்கள் அமைப்புகளும் மதத் தலைவர்களும் புத்திஜீவிகளும் கேள்வி எழுப்ப வேண்டும். ஏறக்குறைய அரவலயவைப்போல எழுச்சிகரமான ஒரு நிர்ப்பந்தக் கட்டமைப்பே இலங்கையில் மாற்றங்களை நிகழ்த்த வல்லது. அத்தகைய எழுச்சியை அது கொண்டிராது விட்டாலும் அத்தகைய அறிவும் உணர்திறனும் கொண்ட மக்கள் கட்டமைப்பு கிராமங்கள், பிரதேசங்கள் தோறும் உருவாகினால் – உருவாக்கப்பட்டால் நிச்சயமாக மாற்றத்துக்கான அரசியல் நிகழும். அல்லது அரசியல் மாற்றம் நிச்சயமாக நிகழும். இப்படித்தான் மாற்றங்களை நிகழ்த்துவதற்கு உழைக்க வேண்டியுள்ளது. விடுதலையைக் காண வேண்டுமானால் அதற்காக நாம் கடுமையாகப் போராட வேண்டும். மாற்றங்களை நிகழ்த்த வேண்டுமானால் அதற்காகக் கடுமையாக உழைக்க வேண்டும். இதையே எதிர்பார்த்து நிற்கிறது இலங்கை. https://arangamnews.com/?p=10979
-
சாவகச்சேரி வைத்தியசாலையின் புதிய பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்சுனாவின் குற்றச்சாட்டுகள்
வைத்தியர் அர்ச்சுனாவுக்கு கடும் நெருக்கடி! சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் பணிப்பகிஷ்கரிப்பை சில மணிநேரங்களுக்கு பிற்போட்டுள்ள நிலையில் வைத்தியர் அர்ச்சுனாவை வைத்தியசாலை விடுதியில் இருந்து வெளியேற்றகோரி மீண்டும் இன்று நீதிமன்றத்தை நாடவுள்ளனர். சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றத்தில் நகர்த்தல் பத்திரம் மூலம் அர்ச்சுனாவின் வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இராமநாதன் அர்ச்சனாவை சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை நடவடிக்கைகளில் ஈடுபட சாவகச்சேரி நீதவான் நீதிமன்றம் நேற்று தடை விதித்ததோடு, அவரை 75 ஆயிரம் ரூபா பெறுமதியான தலா 5 சரீரப் பிணைகளில் விடுவித்தது. சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் சுமூகமான செயற்பாட்டிற்காக, முன்னாள் பதில் வைத்திய அத்தியட்சகர் அர்ச்சனாவை வைத்தியசாலையின் நிர்வாக செயல்பாடுகளில் தலையிடவும், வைத்தியசாலைக்குள் நுழையவும் தடை உத்தரவு பிறப்பித்தார். இருந்தபோதிலும் வைத்தியசாலையின் விடுதிக்குள் தாங்குவதற்கு மட்டும் நீதிபதி அனுமதி வழங்கினர். இந்நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் முன்னாள் பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்ச்சுனா இன்று காலை 8 மணிக்கு முன்னதாக வைத்தியசாலை விடுதியில் இருந்து வெளியேற்றவேண்டும் என தெரிவித்த சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை அரச வைத்திய அதிகாரிகள் சங்க கிளையினர், இல்லையேல் இன்று காலை 8 மணி முதல் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் குதிப்போம் என எச்சரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில் குறித்த விடயத்தில் சாவகச்சேரி வைத்தியசாலை விடுதி வைத்தியசாலை வளாகத்திற்கு உள்ளே அமைந்துள்ளது என்ற காரணத்தை குறிப்பிட்டு வைத்தியர் அர்ச்சுனாவுக்கு எதிராக நீதிமன்றத்தை நாடவும் முடிவு எட்டப்பட்டுள்ளது. இதன்காரணமாக காலை 8 மணிக்கு ஆரம்பிக்கப்படவிருந்த வைத்தியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் நான்கு மணி நேரத்துக்கு பிற்போடப்ட்டுள்ளது. நீதிமன்றத்தின் ஊடாக சாதகமான முடிவுகள் கிடைக்கபெறாதவிடத்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை கிளையினர் மீண்டும் இன்று மதியம் பகிஸ்கரிப்பை மேற்கொள்வர் என தெரிவிக்கப்படுகிறது. http://www.samakalam.com/வைத்தியர்-அர்ச்சுனாவுக்/ “அர்ஜூனா செல்ல வேண்டும்” மீண்டும் போராட்டம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் முன்னாள் பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்ச்சுனா இன்று (17) காலை 8 மணிக்கு முன்னதாக வைத்தியசாலை விடுதியில் இருந்து வெளியேற்றப்படவேண்டும். இல்லை என்றால் இன்று காலை 8 மணி முதல் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் குதிப்போம் என சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை அரச வைத்திய அதிகாரிகள் சங்க கிளையினர், எச்சரிக்கை விடுத்துள்ளனர். சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் வெளியிட்ட ஊடக அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில், சாவச்சேரி ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகராக இராமநாதன் அர்ச்சுனா நியமிக்கப்பட்டதன் பின்பு ஏற்பட்ட பிரச்சனைகள் யாவரும் அறிந்த ஒன்று. இவ்விடயம் தொடர்பான தவறான புரிதல்கள் பொதுமக்கள் மத்தியில் காணப்படுவதனால் அது பற்றிய தெளிவுபடுத்தல்களை மேற்கொள்ள வேண்டிய நிலைக்கு நாம் ஆளாகியுள்ளோம். தனிப்பட்ட ஒரு மருத்துவரின் நிர்வாகம் சார்ந்த பிரச்சனை ஒட்டுமொத்த வைத்திய சமுகத்தையும் பாதித்துள்ளது. எனவே உண்மை நிலையை எடுத்துரைப்பதோடு அறிவுக் கண்கொண்டு இவ்விடயத்தை பொதுமக்கள் அணுக வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும். வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா பதவியேற்ற பின்னர் அங்கு கடமையாற்றிய அனைத்து வைத்தியர்களும் ஒருமித்த குரலில் வைத்தியசாலையை விட்டு வெளியேறி தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட வேண்டிய நிர்ப்பந்தம் ஏன் ஏற்பட்டது என்றும் காலக்கெடு இன்றி விடுதியில் இருந்து கடமையாற்றிய வைத்தியர்களை உடனடியாக வெளியேற்றும் சர்வாதிகார முறையினை பிரயோகித்தது சரியா எனவும் நீங்கள் ஏன் சிந்திக்க மறந்தீர்கள் ? ஒரு வைத்தியராக நோயாளிகளுக்குத் தேவையான பாதுகாப்பான சிகிச்சையை வழங்க முடியாமல் போகும் பட்சத்தில் தொடர்ந்து அங்கு பணியாற்றுவது என்பது முடியாத ஒன்று. நோயாளர்களது உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலையில் அங்கு பணியாற்ற முடியாத நிலைக்கு வைத்தியர்கள் தள்ளப்பட்டுள்ளனர். அதே நேரம் உடனடியாக பணிப்புறக்கணிப்பையும் அவர்கள் மேற்கொள்ளவில்லை. தான் கடமையேற்ற இரண்டு மணித்தியாலங்களில் வைத்தியர்கள் தங்கி இருந்த விடுதியை விட்டு வெளியேறுமாறு அவர் பணித்துள்ளார். மகப்பேற்று விடுமுறையில் இருந்தவர்கள் என்று கூடக் கருதாமல் மனிதாபிமானம் அற்ற முறையில் கட்டாய இடமாற்றத்திற்கு வைத்தியர்களை உள்ளாக்கியுள்ளார். வைத்தியர்களது மூடப்பட்டிருந்த விடுதிகளை உடைத்து தன்னகப்படுத்தியுள்ளார் இவரது அதிகார தோரணைகளையும் அட்டூழியங்களையும் தட்டிக் கேட்ட வைத்தியர்களை உளரீதியாகப் பாதிப்புக்கு ஆளாகும் படியான தகாத வார்த்தைப் பிரயோகங்களால் பேசியதுடன் தனது அதிகாரத்தை பயன்படுத்தி கட்டாய இடமாற்றங்களையும் வழங்கியுள்ளார். இதனால் வைத்தியர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். வைத்தியர்கள் மீது இவர் கொண்டிருந்த தனிப்பட்ட காழ்ப்புணர்வுகளே இவரது சர்வாதிகாரத்தனமான செயற்பாடுகளுக்குக் காரணமாகியுள்ளது. இவற்றை மேலதிகாரிகளுக்குத் தெரியப்படுத்தி பொறுமை காத்து வந்தனர் சாவச்சேரி வைத்தியர்கள். அவசர சிகிச்சை பிரிவு மற்றும் மகப்பேற்றுப் பிரிவுகளை மின் பிறப்பாக்கி வசதியற்ற கட்டடத்திற்கு மாற்ற முற்பட்ட வேளையில் ஏற்கனவே கொள்வனவு செய்யப்பட்ட மின்பிறப்பாக்கி சுகாதார அமைச்சுக்கு கிடைக்கப்பெற்றுள்ளது எனவே பாதுகாப்பாக இக்கட்டடத்தை மீள ஆரம்பிப்போம் இல்லையெனில் அதற்கான மாற்று ஏற் பாடுகளை மேற்கொள்வோம் என வைத்திய நிபுணர்கள் அறிவுரை கூறியபோதும் அவசர அவசரமாக தன்னிச்சையான முடிவுகளை எடுத்து இடமாற்றியுள்ளார். இரண்டாம் மாடிக்கு மாற்றப்பட்ட மகப்பேற்று விடுதிக்குப் பிரசவத்திற்கு வந்த கர்ப்பிணியை மின்தடை காரணமாக மேலெடுத்துச் செல்ல முடியாத நிலையில் சாதாரணமாக மேற்கொள்ள வேண்டிய பிரசவத்தையும் செய்ய முடியாத நிலையில் யாழ். போதனா வைத்திய சாலைக்கு அனுப்பி வழமையாக மேற்கொள்ளப்பட்டு வந்த பிரசவத்தையும் அங்கு நடத்த முடியாதவாறே இவர் பணியாற்றியுள்ளார். இவற்றையெல்லாம் ஏற்கனவே எதிர்வுகூறித் தான் வைத்திய நிபுணர்கள் அவருக்கு தகுந்த அறிவுரைகளை வழங்கியிருந்தனர். இவரது பொறுப்பற்ற செயல்களினால் பாதிக்கப்பட்டது பொதுமக்களே. இதன் பின்பே வைத்தியர்கள் தங்களது பிராந்திய சுகாதார பணிப்பாளர் மற்றும் மாகாண சுகாதார பணிப்பாளரை அணுகினர். அவர்களும் அங்கு விஜயத்தை மேற்கொண்டு வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவை மாகாணப் பணிமனைக்கு மாற்றலாகுமாறு பணித்து இருபத்தினான்கு மணி நேரம் நிறைவுற்றும் அதனை செயற்படுத்த முடியாமல் போனதால் தொழிற்சங்கமாகிய அரசமருத்துவ அதிகாரிகள் சங்கம் தமது உறுப்பினர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் கடப்பாட்டிற்குள்ளாக்கப்பட்டோம். நாம் நமது தொழிற்சங்க கூட்டத்தை நடாத்துகின்ற இடத்தில் இவர் காணொளி எடுத்து எமது கூட்டத்தை குழப்பும் நோக்கத்தோடு செயற்பட்டதாலேயே இவரது கைபேசி தட்டி விடப்பட்டு அருகிலிருந்த காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது. மாறாக இவர் கூறுவது போன்று எவரும் அங்கு வன்முறையில் ஈடுபடவில்லை என்பதை தெரியப்படுத்துகின்றோம். வைத்தியர்கள் அவரை வெளியேற்ற நடவடிக்கை எடுப்பதை அறிந்து ஆதாரங்களற்ற பொய்யான குற்றச்சாட்டுகளை மேலதிகாரிகள் மீதும் வைத்தியர்கள் சமுகத்தின் மீதும் சுமத்தி மக்களை தன் வசப்படுத்தி தன்னை பாதுகாக்கும் நடவடிக்கைகளை இவர் நன்கு திட்டமிட்டு மேற்கொண்டு வருகின்றார். வைத்தியர்கள் மீது சுமத்தப்படுகின்ற ஆதாரமற்ற ஊழல் குற்றச்சாட்டுகள் அனைத்துமே இவரது கபட நாடகமே. இவர் வன்முறைகள் நடந்ததாக கூறி பொதுசன ஊடகங்களை தவறான முறையில் பாவித்து தனக்கான ஆதரவைப் பெற்றுக்கொள்ள இவரால் கூறப்பட்டவை இவரது கட்டுக் கதைகளும் கற்பனைகளுமே தவிர எந்தவித வன்முறைச் சம்பவங்களும் அன்று வைத்திய சாலையில் நிகழவில்லை . வைத்தியர்கள் அவருக்கு எதிரான முறைப்பாடுகளை முன்னெடுப்பதை அறிந்த வைத்தியர் ஆதாரங்கள் அற்ற பிழையான சாத்தியமற்ற குற்றச்சாட்டுகளை தனது மேலதிகாரிகள்மீதும் வைத்தியர்கள் மீதும் சுமத்தி மக்களை திசை திருப்பி தன்னைப் பாதுகாத்துக் கொள்ள புத்திசாதுரியமாக முனைக்கின்றார். அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கமாகிய நாங்கள் நியாயமான திணைக்கள ரீதியான குற்றச்சாட்டுகளை விசாரணைக்குட்படுத்தி உண்மைகளை ஆராய்ந்து தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதை எப்போதும் மேற்கொண்டு வருவதோடு ஊக்கப்படுத்தியும் வருகின்றோம். வைத்தியர்களுக்குள் நடக்கும் உட்பூசல்களை தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தும் தீய சக்திகள் மக்களை வைத்தியர்களுக்கு எதிராக திசை திருப்பி வசை பாடவைத்து தமது அரசியல் கபட நாடகங்களை அரங்கேற்றி வருகின்றனர். இன்று வரை எத்தனை நோயாளிகள் அதி தீவிரத்தன்மையுடன் வருகை தந்து தமக்கான மருத்து சிகிச்சைகளைப் பெற்றுச் சென்றுள்ளனர. ஆளணிப் பற்றாக்குறை, கட்டமைப்பு ரீதியிலான சிக்கல் வாய்ந்த தன்மை, பௌதீக வளப்பற்றாக்குறைகளுக்கு மத்தியில் அங்கு பணியாற்றி வருகின்ற வைத்தியர்கள் அர்ப்பணிப்புடனும் தம்மை நாடிவரும் நோயாளர்களுக்குத் தேவையான சேவைகளை திறம்பட ஆற்றி வருகின்றனர். வைத்திய நிர்வாகியான இராமநாதன் அர்ச்சுனா ஏனைய வைத்தியர்களுக்கும் ஊழியர்களுக்கும் முன்னுதாரணமாக செயற்படுவதை விடுத்து நோயாளர்களது உணவைத் தான் உண்பது, வேலை நேரங்களில் சமூக வலைத்தளங்களினைப் பயன்படுத்தல், தனது உயர் அதிகாரிகளின் கட்டளைகளை மீறுதல், வைத்தியசாலை விடுதிகளை தன்னகப்படுத்தல், தனக்கு நியமிக்கப்பட்ட நியமனத்திற்கு செல்லாமல் சாவகச்சேரி வைத்தியசாலையின் சாதாரண செயற்பாடுகளுக்கு ஊறு விளைவித்து வருகிறார். தான் இதுவரை பெற்றுக் கொள்ளாத பட்டத்தினை தனது அலுவலக முத்திரையாகவும், அலுவலக ஆவணங்களிலும் பயன்படுத்துவதென்பது சட்டப்படி பாரிய குற்றமாகும். இவ்வாறு அரச சேவையில் உள்ள அனைத்து உத்தியோகத்தர்களும் செய்வாராயின் நாட்டின் நிலைமை என்னவாகும்? வைத்தியர் அர்ச்சுனா இராமநாதன் மாற்றப்பட்டு புதிய வைத்திய அத்தியட்சகர் நியமிக்கப்பட்டதன் பின்பு வைத்தியசாலை நடவடிக்கைகள் யாவும் சுமுகமான நிலைக்குத் திரும்பியுள்ளமை நீங்கள் யாவரும் அறிந்த வொன்று. வைத்தியர் அர்ச்சுனா இராமநாதன் வைத்தியசாலை விடுதியை மீள ஒப்படைக்காமல் அங்கு தங்கியிருந்து வைத்தியசாலைக்குள் வெளியாட்களை அழைப்பது ,சமூக வலைத்தளப் பதிவுகளூடாக மக்களை வைத்தியர்களுக்கு எதிராக திசை திருப்ப முனைவது, போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது வைத்தியசாலையில் கடமையில் இருக்கும் வைத்தியர்களும் விடுதியில் உள்ள வைத்தியர்களும் சாதாரண செயற்பாடுகளை நிறைவேற்ற முடியாது சிரமங்களை ஏற்படுத்துவதோடு பாதுகாப்பு அச்சுறுத்தல்களையும் ஏற்படுத்தி வருகின்றது. இவ்விடயம் தொடர்பாக மத்திய மற்றும் மாகாண சுகாதார அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்தியும் இதுவரை எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாத காரணத்தினால் நாம் வைத்தியசாலை நடவடிக்கைகளை சுமுகமாக்குவதற்கும் வைத்தியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் தொழிற்சங்க நடவடிக்கைகள் மீண்டும் மேற்கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். இவ்விடயம் தொடர்பாக பொது மக்களாகிய தாங்கள் அறிவுக் கண்கொண்டு சிந்தித்து செயற்படுமாறு மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினராகிய நாம் கேட்டுக் கொள்கின்றோம். மத்திய மற்றும் மாகாண சுகாதார அதிகாரிகள் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவிடமிருந்து இன்று 17/7/2024 காலை 8 மணிக்கு முன்பு வைத்தியசாலை விடுதியை பெற்று, வைத்தியசாலை சேவையை சுமூகமாக இயங்குவதற்கும் வைத்தியர்களிற்குரிய பாதுகாப்பை உறுதிப்படுத்தவதற்குரிய நடவடிக்கைகளை எடுக்க தவறின் நாம் எமது உறுப்பினர்களாகிய வைத்தியர்கள் அனைவரையும் காலை 8 மணி முதல் வைத்தியர் இராமணாதன் அர்ச்சுனா விடுதியை ஒப்படைத்து வெளியேறும் வரை தொழிற்சங்க போராட்டமாக யாழ் .பிராந்திய சுகாதார பணிமனையில் இணைக்கவுள்ளோம் என்பதை மிக மனவருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கின்றோம். - என்றுள்ளது. R https://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/அர்ஜூனா-செல்ல-வேண்டும்-மீண்டும்-போராட்டம்/71-340526
-
விசா இன்றி தாய்லாந்து செல்ல, இலங்கையர்களுக்கு அனுமதி!
விசா இன்றி தாய்லாந்து செல்ல, இலங்கையர்களுக்கு அனுமதி! adminJuly 15, 2024 இலங்கை உட்பட 93 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் விசா இன்றி தாய்லாந்துக்குள் செல்ல இன்று (15.07.24) முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன் ஊடாக முதல் தடவையாக இலங்கையர்களுக்கு விசா இன்றி தாய்லாந்து செல்லும் வாய்ப்பு கிடைத்துள்ளது. தாய்லாந்தின் உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ள புதிய கொள்கையின்படி, ஒரு சுற்றுலாப் பயணி 60 நாட்களுக்கு விசா இல்லாமல் நாட்டில் தங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, விசா இல்லாமல் தாய்லாந்திற்குள் நுழையும் சுற்றுலாப் பயணிகள் தங்குமிட நிதி மற்றும் திரும்புவதற்கான சான்றுகளை வைத்திருக்க வேண்டும் என்பதுடன், அந்நாட்டின் குடிவரவு அதிகாரிகளின் ஒப்புதலைப் பெறுவதும் கட்டாயமாகும். தாய்லாந்தில் சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. https://globaltamilnews.net/2024/205081/
-
சாவகச்சேரி வைத்தியசாலையின் புதிய பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்சுனாவின் குற்றச்சாட்டுகள்
அருச்சுனா இராமநாதன், மீண்டும் சாவகச்சேரி வைத்தியசாலையில்! adminJuly 15, 2024 யாழ்ப்பாணம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் முன்னாள் பதில் அத்தியட்சகரான அருச்சுனா இராமநாதன் மீண்டும், சாவகச்சேரி வைத்தியசாலைக்கு சென்றுள்ளமையால் அங்கு குழப்பமான நிலைமை காணப்படுகிறது. சாவகச்சேரி வைத்தியசாலையில் பதில் மருத்துவ அத்தியட்சகராகத் கடமையாற்றிய இராமநாதன் அர்ச்சுனாவை சாவகச்சேரி வைத்தியசாலையில் இருந்து இடமாற்றம் செய்ய உத்தரவிடும் சுகாதார அமைச்சகத்தின் கடிதம் கடந்த 07ஆம் திகதி இரவு வடக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளர் சமன் பத்திரண வைத்தியர் அர்ச்சுனாவிடம் வழங்க முற்பட்டபோது அதனை ஏற்க மறுத்த பதில் வைத்திய அத்தியட்சகர், இது அலுவலக நேரம் அல்ல என தெரிவித்தார். அந்நிலையில் வைத்தியரை இடமாற்றும் முயற்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்து வைத்தியசாலை முன்பாக 07ஆம் திகதி இரவு ஆரம்பித்த கண்டன ஆர்ப்பாட்டம் மறுநாள் 08ஆம் திகதி அதிகளவிலான மக்களின் பங்கேற்புடன் நண்பகல் வரையில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவாக சாவகச்சேரி நகர்ப்பகுதிகளில் கடைகள், பொதுச்சந்தை மூடப்பட்டது. அந்நிலையில் 08ஆம் திகதி, நீண்ட இழுபறியின் பின்னர் நண்பகலுடன் வைத்தியசாலையில் இருந்து வெளியேறி சென்ற வைத்தியர் அருச்சுனா, தான் விடுமுறையில் தான் செல்வதாகவும் மீண்டும் வருவேன் என கூறி சென்றார். வைத்தியர் வெளியேறி சென்றதுடன் மக்கள் போராட்டமும் நிறைவுக்கு வந்தது. அதனை அடுத்து மறுநாள் 09ஆம் திகதி வடமாகாண சுகாதார திணைக்களத்தால் வைத்தியர் கே. ரஜீவ் புதிய பதில் அத்தியட்சகராக நியமிக்கப்பட்டு,பொறுப்பேற்றுள்ளார். அந்நிலையில் விடுமுறையில் சென்ற தான் விடுமுறை முடிய மீண்டும் வந்துள்ளேன் என முன்னாள் பதில் அத்தியட்சகர், பதில் அத்தியட்சகருக்கு உரிய அறையில் அமர்ந்துள்ளார். இதனால் வைத்தியசாலையில் பரபரப்பான சூழல் காணப்படுவதால், பாதுகாப்புக்காக காவற்துறையினர் வைத்தியசாலை வளாகத்தில் குவிக்கப்பட்டுள்ளனர். அதேவேளை முன்னாள் பதில் வைத்திய அத்தியட்சகரை வரவேற்க சாவகச்சேரி வைத்தியசாலை முன்பாக மக்கள் கூடிய வேளை காவற்துறையினர் மக்களை வைத்தியசாலை சுற்று வட்டாரத்தில் இருந்து அப்புறப்படுத்தியுள்ளனர். அதன் போது, நபர் ஒருவரையும் காவற்துறையினர் கைது செய்து பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துள்ளனர் https://globaltamilnews.net/2024/205074/
-
சம்பந்தருக்குப் பிறகு? - நிலாந்தன்
சம்பந்தருக்குப் பிறகு? - நிலாந்தன் சம்பந்தர் எதை விட்டுச் சென்றிருக்கிறாரோ அங்கிருந்துதான் அடுத்த கட்டம் தொடங்கும். சம்பந்தர் எதை விட்டுச் சென்றிருக்கிறார்? சம்பந்தர் சிதறிப்போன தன் பலத்தைத் தானே உணராத ஒரு தமிழ்ச் சமூகத்தை விட்டுச் சென்றிருக்கிறார். சம்பந்தரின் வழி தமிழ் மக்களுக்கு எதைப் பெற்றுத் தந்திருக்கிறது என்பதனை இரண்டு தளங்களில் ஆராயலாம். முதலில் அனைத்துலக அளவில். இரண்டாவதாக உள்நாட்டுக்குள். அனைத்துலக அளவில் சம்பந்தர் தமிழ்மக்களின் மெய்யான பலம் எது என்பதைக் கண்டுபிடித்திருக்கவில்லை. தமிழ் மக்களின் துயரங்களுக்கெல்லாம் எது காரணமோ அதுதான் தமிழ் மக்களின் மெய்யான பலமும். அதுதான் தமிழ் மக்களின் புவிசார் அமைவிடம். அந்த அமைவிடம் காரணமாகத்தான் இனப்பிரச்சினை பிராந்தியமயயப்பட்டது. பின்னர் பூகோளமயப்பட்டது. அந்த அமைவிடம் காரணமாகத்தான் திம்புவிலிருந்து ஒஸ்லோ வரையிலும் பேச்சு வார்த்தைகள் நடந்தன. அந்த அமைவிடம் காரணமாகத்தான் ஈழத்தமிழர்கள் பேரரசுகளின் இழுவிசைகளுக்குள் சிக்கிக் கிழிபடும் மக்களாக மாறியிருக்கிறார்கள். எனவே எது ஈழத் தமிழர்களின் துயரங்களுக்கெல்லாம் ஊற்றுமூலமாக இருக்கின்றதோ அதையே வெற்றிக்குரிய அடிப்படையாக மாற்றுவதில் சம்பந்தர் வெற்றி பெறவில்லை. அவர் ஈழத் தமிழ் அரசியலை பெருமளவுக்கு சர்வதேச மயநீக்கம் செய்வதிலும் பிராந்திய மயநீக்கம் செய்வதிலும் ஆர்வமாகக் காணப்பட்டார். இந்தியாவிடம் போனால் சிங்களமக்கள் கோபிப்பார்கள் என்று கருதி இந்தியாவின் அழைப்பை நிராகரித்தார். அதுபோலவே ஐநாவில் பரிகார நீதியை கேட்க அவர் விரும்பவில்லை. அதாவது இனப்படுகொலைக்கு எதிரான பரிகார நீதியை அவர் கேட்கவில்லை. மாறாக நிலை மாறு கால நீதியைத்தான் சம்பந்தர் ஆதரித்தார். அதற்குரிய ஐநாவின் தீர்மானத்தில் அவர் பங்காளியாகவும் இருந்தார். ஆனால் ” 6 ஆண்டுகளாக ஒரு பரிசோதனையை செய்தோம் அதில் தோல்வி அடைந்து விட்டோம்” என்று சுமந்திரன் 2021ஆம் ஆண்டு வவுனியாவில் வைத்து கூறினார். எனவே பரிகார நீதியும் இல்லை; நிலைமாறுகால நீதியும் இல்லை. இப்பொழுது ஐநாவில் ஒரு பலவீனமான சான்றுகளைச் சேகரிக்கும் அலுவலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது. இதுதவிர புலம்பெயர்ந்த தமிழர்கள் தங்களால் இயன்றதைச் செய்து இனப்படுகொலைக்கு எதிரான நீதியைக் கோரும் போராட்டத்தில் குறிப்பிடத்தக்க அளவுக்கு முன்னேறியிருக்கிறார்கள். குறிப்பாக கனடாவில் குறிப்பிட்ட செல்லக்கூடிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஆனால் அவற்றை எல்லாம் அடுத்தடுத்த கட்டத்துக்கு வளர்த்துச்செல்லத் தேவையான ஒரு அரசியல் தலைமைத்துவத்தை தாயகத்தில் இருந்து சம்மந்தர் வழங்கத் தவறினார். அதனால் அவர் இனப்பிரச்சினையை உள்நாட்டுக்குள் சுருக்க விரும்பிய சிங்களபௌத்த அரசுக் கட்டமைப்புக்குத் துணைபோனார் என்பதுதான் சரி. அதாவது சர்வதேச அளவில் சம்பந்தர் தமிழ் மக்களின் அரசியலை குறிப்பிடத்தக்க அளவுக்கு தோற்கடித்து விட்டார். இனப்பிரச்சனை எனப்படுவது சாராம்சத்தில் ஒரு அனைத்துலகப் பிரச்சினைதான். அதற்கு அனைத்துலகத் தீர்வுதான் உண்டு. உள்நாட்டுத் தீர்வு கிடையாது. எனவே இனப்பிரச்சினையை அதன் சர்வதேச, பிராந்தியப் பரிமாணங்களில் இருந்து வெட்டி எடுப்பது என்பது தமிழ் மக்களைத் தோற்கடிப்பதற்குச் சமம். சம்பந்தர் அதைத்தான் செய்தார். உள்நாட்டில் அவர் என்ன செய்தார்? யாழ்ப்பாணத்தில் அவருடைய இறுதி நிகழ்வு அதற்குச் சான்று. நூற்றுக்கணக்கானவர்கள்தான் அதில் பங்குபற்றினார்கள். அவருடைய கட்சி அவரை ஒரு முதுபெரும் தலைவர் என்று அழைக்கின்றது. ஆனால் ஒரு முதுபெரும் தலைவரின் பூதவுடல் எடுத்துவரப்பட்ட வழிநெடுக மக்கள் காத்திருந்து மலர் தூவவில்லை. அதுமட்டுமில்லை, அவருடைய கட்சித் தொண்டர்கள்கூட ஆயிரக்கணக்கில் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தவில்லை. அதைவிட முக்கியமாக, சம்பந்தரின் பூத உடல் அடுத்த நாள் விமானத்தில் எடுத்துச் செல்லப்படுவதற்கு இடைப்பட்ட இரவில் தந்தை செல்வா கலையரங்கில் ஓர் அறையில் விடாது சுற்றும் விசிறிகளின் கீழே அனாதையாக வைக்கப்பட்டிருந்தது என்ற செய்தி. அது மிகத் தோல்விகரமானது. சில கட்சி உறுப்பினர்கள் அந்த அறைக்கு வெளியே நின்று இருக்கலாம். ஆனால் ஒரு முதுபெரும் தலைவரின் உடல் ஒர் இரவு முழுவதும் அனாதையாக விடப்பட்டிருந்தமை என்பது சம்பந்தரின் அரசியல் தோல்வியை காட்டுகின்றது. பொதுவாக ஊரில் ஒரு கிராமவாசி இறந்தால், இரவில் அந்த உடலைத் தனியே விட மாட்டார்கள். அந்த உடலுக்கு அருகே யாராவது உறங்குவார்கள். ஒரு குத்துவிளக்கு அல்லது மெழுகுதிரி கால்மாட்டில் தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கும். யாராவது தேவாரம் பாடுவார்கள் அல்லது ஜெபம் பண்ணுவார்கள். இடைக்கிடை பெண்கள் ஒப்பாரி வைப்பார்கள். ஆனால் சம்பந்தருக்கு தந்தை செல்வா கலையரங்கில் இவை எவையும் இருக்கவில்லை. சம்பந்தரின் தோல்வியை மதிப்பிட அது ஒன்றே போதும். நவீன தமிழ் அரசியலில் ஆகக்கூடிய ஆசனங்களைப் பெற்ற ஒரு கூட்டணி அவருடைய கையில் கொடுக்கப்பட்டிருந்தது. 22 ஆசனங்கள். ஆனால் கடந்த 15 ஆண்டுகளிலும் அந்த ஆசனங்களின் தொகை குறைந்து இப்பொழுது மொத்தம் 13 ஆசனங்கள். அவைகூட சம்பந்தரின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கவில்லை. முதலில் ஆயுத மோதல்கள் முடிந்த கையோடு சம்பந்தர் கூட்டமைப்பைப் புலி நீக்கம் செய்தார். அதன்பின் படிப்படியாக சர்வதேச நீக்கம், பிராந்திய நீக்கம் செய்தார். கஜேந்திரகுமார் அணி வெளியேறத்தக்க சூழ்நிலைகளை ஏற்படுத்தினார். அடுத்த கட்டமாக ஆயுதப் போராட்ட மரபில் வந்த பங்காளிக் கட்சிகள் விலகிப் போகக்கூடிய நிலைமைகளை அவருடைய பட்டத்து இளவரசர் ஏற்படுத்தினார். முடிவில் தமிழரசுக் கட்சி மட்டும் மிஞ்சியது. இப்பொழுது அதுவும் இரண்டாக உடைந்து நீதிமன்றத்தில் நிற்கின்றது. அதுமட்டுமல்ல, அவருடைய காலத்தில் கிழக்கில் வடக்கை எதிர்த்துக்கொண்டு தெற்குடன் கைகோர்க்கும் ஒரு கட்சி மேலெழுந்து விட்டது. மேலும் கடந்த ஜனவரி மாதம் நடந்த கட்சித் தலைவருக்கான தேர்தலின்போது யாருக்கு செயலாளர் பதவி கொடுப்பது என்ற விவாதங்களில் திருகோண மலையா? மட்டக்களப்பா? எது உண்மையாகக் கிழக்கைப் பிரதிநிதித்துவப்படுத்துவது? என்ற ஒரு விவாதமும் எழுந்தது. அதாவது சம்பந்தரின் காலத்தில் கிழக்கில் உப பிரதேசவாதம் ஒன்றும் உற்பத்தி செய்யப்பட்டது. ஆயின், சம்பந்தர் தமிழரசியலை எங்கே கொண்டு வந்து விட்டிருக்கிறார்? இந்த தோல்வி எங்கிருந்து வந்தது? சம்பந்தரின் அரசியல் வழியின் விளைவு அது. சிங்கள மக்களைப் பயமுறுத்தககூடாது என்று அவர் உறுதியாக நம்பினார். ஆனால் தமிழ் மக்களின் பயங்களை ; கூட்டுக் காயங்களை; கூட்டுத் துக்கத்தை கூட்டு மனவடுக்களை அவர் பொருட்படுத்தவில்லை. ஆயுத மோதலுக்கு பின்னரான ஒரு சமூகத்தில் கூட்டுக் காயங்களுக்கும் கூட்டுத் துக்கத்துக்கும் கூட்டச் சிகிச்சையாக அமையவில்லை ஒரு அரசியலை; பண்புரு மாற்ற அரசியலை முன்னெடுத்திருக்க வேண்டிய ஒரு தலைவர் அவர். ஆனால் அவர் அதைச் செய்யவில்லை. செய்யத் தேவையான அரசியல் உள்ளடக்கம் அவரிடம் இருக்கவில்லை. 2009 மே மாதம் தோற்கடிக்கப்பட்ட ஆயுதப் போராட்டம் ஒரு விளைவுதான். அது மூல காரணம் அல்ல. மூல காரணம் இன ஒடுக்கு முறைதான். அதாவது இலங்கைத்தீவின் இனப்பல்வகைமையை ஏற்றுக்கொள்ளாமை. யுத்த வெற்றிகளின் மூலம் மூலகாரணம் மேலும் வீங்கித் தடித்தது. அது யுத்த வெற்றியை அரசியல் வெற்றியாக மாற்ற விரும்பவில்லை. மாற்றவும் முடியாது. ஏனென்றால் அது ஓர் இனப்படுகொலை. போரில் வெற்றி பெற்ற ராஜபக்சக்கள் யுத்த வெற்றியை அடிப்படையாக வைத்து ஒரு கட்சியைக் கட்டி எழுப்பினார்கள். அதன்மூலம் யுத்த வெற்றிவாதத்துக்கு தலைமை தாங்கினார்கள். யுத்த வெற்றி வாதம் எனப்படுவது நாட்டைத் தொடர்ந்தும் பிளவுண்ட நிலையிலே பேணுவதுதான். வென்றவர்களும் தோற்றவர்களுமாக நாடு தொடர்ந்து பிளவுண்டிருக்கும். இவ்வாறு யுத்த வெற்றிவாதிகள் நாட்டைப் பிளவுண்ட நிலையில் பேணும்பொழுது தோற்கடிக்கப்பட்ட தரப்பின் தலைவராகிய சம்மந்தரோ “பிளவுபடாத இலங்கைக்குள்; பிரிக்கப்பட முடியாத இலங்கைக்குள்” என்று மந்திரம்போல சொல்லிக் கொண்டு, சிங்கள மக்களின் பயங்களைப் போக்குகிறோம் என்று புறப்பட்டு, இறுதியிலும் இறுதியாக யுத்த வெற்றிவாதிகளால் தோற்கடிக்கப்பட்டார். யுத்தவெற்றி வாதம் எனப்படுவது, சிங்கள பௌத்த இனவாதத்தின் 2009க்கு பின்னரான “அப்டேட்டட் வேர்சன்” தான். யுத்தவெற்றி வாதமானது தொடர்ந்து ஒடுக்கு முறைகளையும் ஆக்கிரமிப்பையும் முன்னெடுத்துக் கொண்டிருக்க, அதாவது நாட்டைப் பிளவுண்ட நிலையிலே தொடர்ந்தும் பேண, சம்பந்தாரோ நேசக்கரம் நீட்டிக் கொண்டிருந்தார். முடிவில் யுத்த வெற்றி வாதம் சம்பந்தரின் வழியைத் தோற்கடித்தது. அவருடைய விசுவாசத்துக்கு பரிசாக எதிர்க்கட்சித் தலைவரின் மாளிகையை இறக்கும்வரை அவருக்கு வழங்கியது. இப்படித்தான் சம்பந்தர் தோற்கடிக்கப்பட்டார். தென்னிலங்கையோடு தன்னை சுதாகரித்துக் கொள்வதற்காக அவர் வகுத்த வழியின் விளைவாக கூட்டமைப்பு உடைந்தது. முடிவில் அவருடைய தாய்க்கட்சியும் உடைந்து விட்டது.சம்பந்தர் தோற்றுப் போனார். தோல்வியுற்ற ஒரு தலைவராகத்தான் அவர் இறந்து போயிருக்கிறார். அவருடைய உடல் யாழ்ப்பாணத்தில் தனித்து விடப்பட்டிருந்த அந்த இரவிலிருந்து எதிர்காலத் தலைவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும். எனவே இப்பொழுது தொகுத்துப் பார்க்கலாம். சம்பந்தர் தமிழ் மக்களைச் சிதறடித்து விட்டார். தமிழ் மக்களின் அடிப்படைப் பலங்களைப் பொருத்தமான விதங்களில் கையாளத் தவறி, தமிழ் மக்களைத் தனிமைப்படுத்தியிருக்கிறார். முடிவில் தானும் தனிமைப்பட்டுப் போனார். எனவே சம்மந்தருக்கு பின்னரான தமிழ் அரசியல் என்பது, சம்பந்தர் சிதறடித்தவற்றை சேர்த்துக் கட்டுவதுதான். சம்பந்தர் தமிழ் மக்களின் எந்தெந்த பலங்களைச் சிதறடித்தாரோ, அவற்றை எல்லாம் மீண்டும் ஒன்றிணைப்பதுதான். எந்தெந்த கட்சிகளை சிதறடித்தாரோ, அவற்றை எல்லாம் ஒன்றாக்குவதுதான். சம்பந்தருக்கு பின்னரான தமிழ் அரசியல் என்பது ஒன்று திரட்டும் அரசியலாக இருந்தால்தான் அது அதன் கடந்த 15 ஆண்டு கால தோல்வியின் தடத்திலிருந்து வெளியே வரலாம். இங்கேதான் ஜனாதிபதித் தேர்தலில் ஒரு தமிழ்ப் பொது வேட்பாளர் என்ற தெரிவு கால முக்கியத்துவம் பெறுகின்றது. இந்த ஆண்டு ஜனாதிபதி தேர்தல் நடந்தால், அதில் தமிழ் மக்களுக்கு ஒரே ஒரு தீர்க்கதரிசனமான தெரிவுதான் உண்டு. ஒரு பொது வேட்பாளரை நிறுத்துவது. ஒரு பொது நிலைப்பாட்டின் கீழ் தமிழ் மக்களை ஒன்றாக்குவது. சம்பந்தரின் வழியிலிருந்து விலகி வருவதென்றால் அதைவிட வேறு வழி இல்லை. சிதறடிக்கப்பட்டவற்றை ஒன்று சேர்ப்பது. https://www.nillanthan.com/6820/
-
சீமான் கைது எப்போது?
சீமான் கைது எப்போது? SelvamJul 13, 2024 09:20AM நாம் தமிழர் கட்சி தலைவர் சீமானை உடனடியாக கைது செய்ய வேண்டும் என திமுகவின் முக்கிய நிர்வாகிகள் தலைமையிடம் வற்புறுத்தி வருகின்றனர். நடந்து முடிந்த விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது… நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் அபிநயாவை ஆதரித்து மேடையில் முதல் வரிசையில் சீமான் அமர்ந்திருக்க, கட்சியின் நிர்வாகி சாட்டை துரைமுருகன் ஒரு கூட்டத்தில் பேசினார். அப்போது, திமுக முன்னாள் தலைவரும் முன்னாள் முதலமைச்சர் ஆன மறைந்த கலைஞர் பற்றி ஹனீஃபா பாடிய பிரபலமான பாடலை தழுவி கலைஞரை மிகக் கடுமையாக விமர்சித்து வார்த்தைகளை மாற்றி பாடினார். அது மட்டுமல்ல அமைச்சர் உதயநிதியை புகழ்ந்து தற்போது திமுக மேடைகளில் பாடப்படும் பாடலையும் கேலி செய்து வரிகளை மாற்றி பாடினார். இவற்றை ரசித்து கைதட்டினார் சீமான். இந்த நிலையில், சாட்டை துரைமுருகனின் பேச்சு பதிவுகள் உளவுத்துறை மூலம் மேல் இடத்திற்கு சென்றன. ஜூலை 10ஆம் தேதி விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல் முடியும் வரை காத்திருந்த போலீஸ், தேர்தல் முடிந்ததும் குற்றாலத்தில் தங்கி இருந்த துரைமுருகனை சண்டாளன் என்ற வார்த்தையை பயன்படுத்தியதற்காக எஸ்சி எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்தது. ஜூலை 11ஆம் தேதி திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட சாட்டை துரைமுருகனை இந்த வழக்கில் நீதிமன்ற காவலில் வைக்க முடியாது என்று கீழமை நீதிபதி விடுவித்துவிட்டார். சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்ட அதே நேரம் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், “கருணாநிதி என்றைக்கும் தமிழின துரோகி தான். உங்க ஆட்சிங்கறதுனால உங்க அப்பாவை புனிதப்படுத்தி விடுவீர்களா? அதே பாட்டை நானும் இப்போது பாடுகிறேன். என் மீது கை வைத்து பார் பார்ப்போம்” என்று சவால் விட்டு பிரச்சார மேடையில் சாட்டை துரைமுருகன் பாடிய அதே பாடலை செய்தியாளர்கள் முன் பாடினார் சீமான். இந்நிலையில், ” திமுக அரசை கடுமையாக விமர்சித்து வந்த சீமான், தலைவர் கலைஞரையே மிகவும் கொச்சைப்படுத்தி விட்டார். இனியும் நாம் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியாது. சீமானை உடனடியாக கைது செய்ய வேண்டும்” என்று திமுகவின் பல மாவட்டச் செயலாளர்கள், அமைச்சர்கள், சீனியர் நிர்வாகிகள் முதலமைச்சர் ஸ்டாலினை வற்புறுத்தி இருக்கிறார்கள். இந்த சூழலில் தான் ஜூலை 12ஆம் தேதி அமைச்சர் கீதாஜீவன் பத்திரிகையாளர்களை சந்தித்து சீமானை கடுமையாக விமர்சித்தார். சீமான் சட்டம் ஒழுங்குக்கு கேடு விளைவிக்கும் வகையில் நடந்து கொள்வதாகவும்… ஒரு அரசியல் கட்சியின் தலைவருக்கு உரிய பொறுப்புணர்வு அவருக்கு இல்லை என்றும் அவரது மனநிலையை பரிசோதிக்க வேண்டும் என்றும் கூறினார் அமைச்சர் கீதா ஜீவன். சட்டம் ஒழுங்குக்கு சவால் விடும் வகையில் சீமான் செயல்படுகிறார் என்று ஒரு அமைச்சரே சொல்லும்போது அவர் ஏன் கைது செய்யப்படவில்லை என்று திமுகவினரே கேள்வி எழுப்புகிறார்கள். இதுகுறித்து அதிகாரிகள் வட்டாரத்தில் நாம் பேசிய போது, “2009, 2010 காலகட்டத்தில் தமிழகத்தில் கலைஞர் முதலமைச்சராக இருந்தார். அப்போது இலங்கையின் இறுதிப்போர் நடந்த நிலையில்… திமுகவையும் திமுக அரசையும் எதிர்த்து கடுமையான போராட்டங்கள் நடைபெற்றன. அப்போது நாம் தமிழர் இயக்கம் தொடங்கப்பட்ட நிலையில் இருந்தது. தமிழ் உணர்வாளராக மட்டுமே அறியப்பட்டிருந்தார் சீமான். ஒரு கட்டத்தில் முதலமைச்சர் கலைஞர் சீமானை கைது செய்து சிறையில் அடைக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அப்போது அதிகாரிகள், ‘அவரை கைது செய்து சிறையில் அடைத்தால் அவருக்கு அது அரசியல் ஆதாயமாகிவிடும்’ என்று முதலமைச்சர் கலைஞரிடம் தெரிவித்தார்கள். ஆனால் கலைஞரோ அப்போது வீரியமாக போராடிக் கொண்டிருந்த வைகோவின் பலத்தை குறைப்பதற்கு சீமான் பயன்படுவார் என்று கணக்கு போட்டு… ‘சின்ன பையனா இருந்தா என்ன கைது பண்ணுங்க’ என்று சீமானை பற்றி அதிகாரிகளிடம் தெரிவித்தார். அதன்படியே சீமான் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். சுமார் ஆறு மாத காலம் வேலூர் மத்திய சிறையில் இருந்த சீமான் விடுதலையாகி வெளியே வந்த பிறகு தமிழ் தேசிய அரசியலில் வைகோவின் இடத்தை கொஞ்சம் கொஞ்சமாக பிடித்தார். அது அன்று கலைஞர் போட்ட அரசியல் கணக்கு. இதேபோல கடந்த 2023 வருட இறுதியில் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி தொடர்ந்து புகார்களை சென்னைக்கு வந்து எழுப்பினார். இதன் அடிப்படையில் வளசரவாக்கம் காவல் நிலையம் சீமானுக்கு சம்மன் அனுப்பி அவரை விசாரித்தது. அப்போதும் சீமானை கைது செய்யக்கூடிய ஒரு சூழல் உருவானது. ஆனால், முதலமைச்சர் ஸ்டாலின், ‘என் அப்பா செய்த தப்பை நான் செய்ய மாட்டேன். அவரை அப்போது கைது செய்திருக்காவிட்டால் அரசியலில் இப்படி வந்திருக்க மாட்டார். இப்போது அவரை கைது செய்தால் மீண்டும் அது அவருக்கு அரசியல் ஆதாயம் ஆகிவிடும்’ என கைது நடவடிக்கையை தவிர்த்தார் ஸ்டாலின். ஆனால் இன்று… மறைந்து ஆறு ஆண்டுகள் ஆகியும் கலைஞருக்கு எதிராக மிக கடுமையான வார்த்தைகளால் சீமான் அவரை இழிவு படுத்துகிறார். சீமானை கைது செய்து ஆக வேண்டும் என்று முதலமைச்சருக்கு அழுத்தங்கள் கட்சிக்குள்ளேயே எழுந்துள்ளன. தற்போது சீமானை கைது செய்தால் அது எதிர்க்கட்சிகளை ஒருமுகப்படுத்தும் அரசியல் செயல்பாடுகளுக்கு ஊக்கம் கொடுத்ததாக ஆகிவிடுமோ என்ற கருத்தும் ஒரு பக்கம் இருக்கிறது. என்றாலும் இறுதி முடிவு முதலமைச்சர் கையில் தான் உள்ளது” என்கிறார்கள் அதிகாரிகள் வட்டாரத்தில். நேற்று அமைச்சர் கீதா ஜீவனின் பேட்டிக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த சீமான், “சண்டாளன் என்ற வார்த்தையை கருணாநிதியே பல இடங்களில் பயன்படுத்தி இருக்கிறார். என்னை அச்சுறுத்துவதற்காக இப்படி செய்கிறார்கள். முழுமையான பதிலை நாளை சொல்கிறேன்” என்று தெரிவித்தார். இன்று ஜூலை 13ஆம் தேதி பகல் சென்னை பிரஸ் கிளப்பில் பத்திரிக்கையாளர்களை சந்திக்கிறார் சீமான். இதில் இந்த விவகாரம் தொடர்பாக விளக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரம் சீமானை கைது செய்வதற்கு பல முகாந்திரங்கள் இருக்கிற நிலையில்… அவரை இன்னமும் பேச விட்டு பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது என்பதே திமுக நிர்வாகிகளின் கருத்தாக இருக்கிறது. https://minnambalam.com/political-news/when-will-ntk-seeman-arrest/