Everything posted by கிருபன்
-
மட்டக்களப்பில் இந்திய உயஸ்தானிகர் கிழக்கு மாகாண தமிழரசுக் கட்சியினருடனான முக்கிய சந்திப்பு !
மட்டக்களப்பில் இந்திய உயஸ்தானிகர் கிழக்கு மாகாண தமிழரசுக் கட்சியினருடனான முக்கிய சந்திப்பு ! kugenAugust 23, 2024 இன்று இலங்கை தமிழரசுக் கட்சியினுடைய பிரதிநிதிகளுக்கும், இந்திய உயர்ஸ்தானிகருக்குமான சந்திப்பொன்று இடம்பெற்றது. இதில் மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை ஆகிய மாவட்டங்களின் இலங்கைத் தமிழரசுக் கட்சியினுடைய பாராளுமன்ற உறுப்பினர்களும் அத்துடன் ஏனைய அரசியல் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். இதில் மட்டக்களப்பு மாவட்டம் சார்பாக மாநகர சபை முதல்வர், இளைஞர் அணித் தலைவர், மகளிர் அணியினுடைய உப தலைவி ஆகியோர் கலந்து கொண்டனர். திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் மற்றும் திருகோணமலை அங்கத்துவப் பிரதிநிதிகள் தவிர்க்கமுடியாத காரணத்தினால் வருகை தர முடியவில்லை. இச் சந்திப்பின் போது சமகால அரசியல், ஜனாதிபதி தேர்தல், தமிழ் மக்களுடைய அரசியல் பிரச்சனைகள், அரசியல் சம்மந்தமான பிரச்சனைகள் தொடர்பில் இந்திய உயர்ஸ்தானிகருடைய கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அம்பாறை மாவட்டம் சார்பாக கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் கலையரசன் அவர்களால் கல்முனையில் கலாசார மண்டபமொன்றினை தாபிப்பதற்கான கோரிக்கை முன்வைக்கப்பட்டது. மேலும் இவர் கிழக்கு மாகாணத்தில் Indian High Commission அலுவலகத்தினையும் அமைக்குமாறு கோரிக்கை விடுத்தார். https://www.battinews.com/2024/08/blog-post_703.html
-
தமிழ்ப் பொதுவேட்பாளர் 2024 கேள்விகளும் பதில்களும் - தமிழ் மக்கள் பொதுச்சபை
தமிழ்ப் பொதுவேட்பாளர் 2024 கேள்விகளும் பதில்களும் Vhg ஆகஸ்ட் 23, 2024 1. தமிழ்ப் பொது வேட்பாளர் ஏன்? தமிழ் மக்களை ஒன்று திரட்டுவதற்கு. தமிழ் மக்களுக்கே தங்கள் பலம் எது என்பதை உணர்த்துவதற்கு. தமிழ் மக்கள் ஒரு கொள்கைக்காக வாக்களிக்கும் மக்கள் என்பதை மீண்டும் மீண்டும் நிரூபிப்பதற்கு. தமிழ்மக்கள் தோற்கடிக்கப்பட முடியாதவர்கள் என்பதனை நிரூபிப்பதற்கு. தமிழ்மக்களிற்கு என்ன தேவை என்பதைத் தொடர்ச்சியாகச் சொல்வதற்கு. சிறீலங்கா அரசை அம்பலப்படுத்துவதற்கு. 2. தமிழ் மக்களை ஏன் ஒன்று திரட்ட வேண்டும்? தமிழ்மக்கள் கட்சிகளாய். கொள்கைகளாய். சாதியாய். சமயமாய், வடக்காய். கிழக்காய். தியாகியாய், துரோகியாய், கட்சிக்குள்ளேயே அணிகளாய். ஆலய அறக்கட்டளை களுக்குள் அணிகளாய், திருச்சபைகளுக்குள் பிரிவுகளாய். பாடசாலை பழைய மாணவர் சங்கங்களுக்குள் அணிகளாய், உடைந்து சிதறிப்போய்க் காணப்படுகிறார்கள். எனவே. அவர்களைச் சிதறடிக்கும் எல்லா வேறுபாடுகளுக்கும் அப்பால் அவர்களை ஒன்று திரட்ட வேண்டும். ஒருவர் மற்றவரை நம்பும் மக்களாய். ஒருவர் மற்றவருக்கு உதவும் மக்களாய், ஒன்றாகத் திரண்டு உலகத்துக்குத் தங்கள் ஐக்கியத்தைக் காட்டும் மக்களாய்த் தமிழ் மக்களை ஒன்றாக்க வேண்டும். 3. பொது வேட்பாளரின் தேர்தல் அறிக்கையில் என்ன தீர்வு முன்வைக்கப்படும்? சுயநிர்ணய உரிமையின் அடிப்படையிலான உச்சபட்சத் தன்னாட்சி: இன அழிப்புக்கு எதிரான பரிகார நீதி. 4.தமிழ் மக்கள் ஒரு பொது வேட்பாளருக்கு வாக்களிக்கத் தவறினால் என்ன நடக்கும்? தமிழ் வாக்குகள் பலவாகச் சிதறும். தென்னிலங்கை மைய வேட்பாளர்களிற்குத் தமிழ் வாக்குகள் மூன்றுக்கு மேற்பட்ட பிரிவுகளாகச் சிதறும். ஒரு பகுதி வாக்களிக்காமல் விலகி நிற்கும். ஆக மொத்தம் தமிழ் வாக்குகள் நான்கிற்கும் மேற் பட்ட வேட்பாளர்களால் சிதறு தேங்காயாகச் சிதறடிக்கப்படும். இன்னுமொரு வகையில் கூறுவதானால். ஒரு தேசமாகத் திரண்டு எமது அரசியல் அந்தஸ்து, அபிலாசைகள் என்ப வற்றை உரத்துச் சொல்வதற்கான இன்னுமொரு சந்தர்ப்பத் தையும் அதற்கூடாகப் பெற்றுக்கொள்ளக்கூடிய அரசியற் பேரம் பேசும் பலத்தையும், தற்காலிகமாக இழப்போம். 5.தமிழ்ப் பொது வேட்பாளர் பெருமளவு வாக்குகளைப் பெறவில்லை என்றால்? தேசியவாத அரசியல் என்பது மக்களை ஆகப்பெரிய திரட்சியாக மாற்றுவது. பொது வேட்பாளர் அதைத்தான் செய்யப்போகின்றார். எவ்வளவுக்கு எவ்வளவு தமிழ்மக்கள் ஐக்கியப்படுகின்றார்களோ அவ்வளவுக்கு அவ்வளவு தமிழ் வாக்குகள் திரளும். தமிழ்ப் பொது வேட்பாளர் ஆகக் கூடிய வாக்குகளைப் பெறுவார். ஆகவே இக்கேள்வியே எழாதவாறு அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுதல் காலத்தின் தேவை. 6. தமிழ்ப் பொது வேட்பாளர் தேர்தலில் வெல்வாரா? இல்லை. யாரோ ஒரு தென்னிலங்கை வேட்பாளர்தான் வெல்வார். 7. தோற்பதற்காக ஒருவரைத் தேர்தலில் நிறுத்த வேண்டுமா? அவர் ஜனாதிபதியாக வரமாட்டார் என்ற ஒரு விடயத்தில் தான் தோற்பார். மற்ற எல்லா விடயங்களிலும் வெல்வார். தமிழ் மக்களை ஒரு தேசமாகத் திரட்டுவதில், கட்சி கடந்து, பிரதேசத்தைக் கடந்து சாதி கடந்து,சமயம் கடந்து, பால்நிலை அசமத்துவங்களைக் கடந்து தமிழ் மக்களை ஒரு தேசமாகத் திரட்டுவதைத் தவிர வேறு வெற்றி மக்களுக்கு வேண்டுமா? 8.ஏன் தமிழ்ப் பொதுவேட்பாளர்? தென்னிலங்கையில் உள்ள வேட்பாளர்களில் யாரையும் நம்ப முடியாதா? முடியாது. ஏனென்றால். கடந்த பதினைந்து ஆண்டுகளாக மூன்று ஜனாதிபதி வேட்பாளர்களிற்கும் வாக்களித்ததால் தமிழ் மக்களிற்குத் தீர்வு கிடைத்ததா? வாழ்வின் சகல விடயங்களிலும் ஊடுருவியிருக்கும் இனப் பாரபட்சம் நீங்கியுள்ளதா? நிலப்பறிப்பும் சிங்களபௌத்தமயமாக்கலும் நிறுத்தப்பட்டதா? 9. தமிழ்ப் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்தும் பொழுது அது தென்னிலங்கையில் இனவாதத்தைத் தூண்டி விடாதா? நீங்கள் கேட்பதைப் பார்த்தால் இனவாதம் இப்பொழுது பதுங்கி விட்டது அல்லது நித்திரை கொள்கிறது என்று கருதுவது போலத் தெரிகிறதே? அப்படியென்றால். மயிலத்தமடுவில், மாதவனையில் மேய்ச்சல் தரையை ஆக்கிரமிப்பது யார்? குருந்தூர் மலையில், வெடுக்குநாறி மலையில் கோவில்களை ஆக்கிரமிப்பது யார்? நடைமுறையில், சிங்கள் இனம் தவிர்ந்த ஏனைய தேசிய இனங்களையும். மக்கள் குழுமங்களையும் மட்டுமே பாதிக்கும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தைப் புதுப்பிக்க முற்படுவது யார்? நடந்தது இனஅழிப்பு என்பதை ஏற்றுக்கொள்ள மறுப்பது யார்? பன்னாட்டு விசாரணையை ஏற்றுக்கொள்ள மறுப்பது யார்? தமிழ் மக்கள் பொதுச்சபை https://www.battinatham.com/2024/08/2024_23.html
-
தமிழ்ப் பொது வேட்பாளருக்கு தனது ஆதரவைத் தொிவித்த சிறீதரன்!
சங்கு சின்னத்தை சிபாரிசு செய்தவரே இவர் தான் - தமிழ் பொது வேட்பாளர் பெருமிதம் Vhg ஆகஸ்ட் 23, 2024 ஜனாதிபதி தேர்தலில் தாம் களமிறங்கும் சங்கு சின்னத்தை சிபாரிசு செய்தவரே நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தான் என தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரனுக்கு பூரண ஆதரவை வழங்குவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் உறுதியளித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனை யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது இல்லத்தில் தமிழ் பொது வேட்பாளர் அரியநேத்திரன் சந்தித்து கலந்துரையாடினார். கட்சியின் முடிவு அதன் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சிறீதரன், “இலங்கை தமிழ் அரசுக் கட்சி என்ன முடிவை எப்போது எடுத்தாலும் தனிப்பட்ட முறையில் எனது ஆதரவு அரியநேத்திரனுக்கு அளிக்கப்படும். கட்சி என்ன முடிவை எடுக்கிறதோ எடுக்கவில்லையோ அது எவ்வளவு தூரம் எம்மை தள்ளப்போகிறதோ என்பதை தமிழ் மக்கள் தீர்மானிப்பார்கள். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதியாக எனது ஆதரவு அரியநேத்திரனுக்கு அளிக்கப்படும். தமிழ் மக்கள் காத்திரமான ஒரு செய்தியை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வழங்க வேண்டும்” என அழைப்பு விடுத்தார். அதனை தொடர்ந்து கருத்து தெரிவித்த அரியநேத்திரன், “தான் களமிறங்கும் சங்கு சின்னத்தை சிபாரிசு செய்தவர் சிறீதரன் எம்பி என தெரிவித்தார். மேலும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழர்கள் தமக்காக குறியீடாக சங்கு சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும்” என வேண்டுகோள் விடுத்தார். https://www.battinatham.com/2024/08/blog-post_816.html
-
‘நாம் குறிப்பிடும் வேட்பாளருக்கே எம்மக்கள் வாக்களிப்பார்கள்’: எம்.ஏ.சுமந்திரன் கருத்து
‘நாம் குறிப்பிடும் வேட்பாளருக்கே எம்மக்கள் வாக்களிப்பார்கள்’: எம்.ஏ.சுமந்திரன் கருத்து August 23, 2024 நாம் குறிப்பிடும் வேட்பாளருக்கே எம்மக்கள் வாக்களிப்பார்கள்.தமிழ் பொது வேட்பாளரை நாங்கள் ஆதரிக்கவில்லை. அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கையை முன்னெடுத்துள்ளோம் என இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது, ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு யாருக்கு ஆதரவளிக்கும் என்பதை இதுவரை தீர்மானிக்கவில்லை. அவசரப்பட வேண்டிய தேவை கிடையாது. வாக்கெடுப்பு இடம் பெறுவதற்கு ஒருவாரத்துக்கு முன்னர் எமது தீர்மானத்தை அறிவிப்போம். ஜனாதிபதித் தேர்தலை புறக்கணிக்குமாறு ஒரு தரப்பினர் குறிப்பிடுவதை தமிழ் மக்கள் ஏற்க போவதில்லை. இவர்கள் ஒவ்வொரு தேர்தல்களின் போதும் தேர்தலை பகிஷ்கரிக்குமாறு குறிப்பிட்டுக் கொள்வார்கள். ஆனால் மக்கள் தேர்தலை புறக்கணிக்கவில்லை. இம்முறையும் தேர்தலை புறக்கணிக்க போவதில்லை. தமிழ் பொதுவேட்பாளருக்கு நாங்கள் ஒத்துழைப்பு வழங்கவில்லை. அவர் எங்களின் கட்சி உறுப்பினர் அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடடிக்கையை முன்னெடுத்துள்ளோம். இதனுடாக எமது நிலைப்பாட்டை விளங்கிக் கொள்ள வேண்டும். கடந்த கால தேர்தல்களில் எமது நிலைப்பாட்டை இறுதி தருணத்தில் அறிவித்திருந்தோம். அதற்கமைய 80 சதவீதமானோர் எமது தீர்மானத்துக்கு அமையவே வாக்களித்தார்கள். ஆகவே இம்முறையும் நாங்கள் குறிப்பிடும் வேட்பாளருக்கே எம்மக்கள் வாக்களிப்பார்கள் என்றார். https://www.ilakku.org/நாம்-குறிப்பிடும்-வேட்ப/
-
ஜனாதிபதித் தேர்தல் 2024 - செய்திகள்
ஜனாதிபதி வேட்பாளர் மரணம் Freelancer / 2024 ஓகஸ்ட் 23 , மு.ப. 12:39 - 0 இம்முறை ஜனாதிபதி தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்ட அய்ட்ரூஸ் முகமது இலியாஸ் (வயது 78) காலமானார். சுகவீனமுற்றிருந்த அவர் 2 நாட்களாக புத்தளம் ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (22) காலமானார். அவர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் யாழ்ப்பாண மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது. (a) https://www.tamilmirror.lk/செய்திகள்/ஜனாதிபதி-வேட்பாளர்-மரணம்/175-342660
-
பொது வேட்பாளர் நோக்கத்துக்காக களத்திலும் புலத்திலும் கைகோர்ப்போம்!
பொது வேட்பாளர் நோக்கத்துக்காக களத்திலும் புலத்திலும் கைகோர்ப்போம்! Hi ஆகஸ்ட் 22, 2024 “காக்காண்ணை”, என்று அறியப்பட்ட முத்துக்குமார் மனோகர் ஆகிய நான் மாவீரர் அறிவிழியின் தந்தை. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளர் போட்டியிட வேண்டிய அவசியம் பற்றிப் போதுமானளவு விடயங்கள் மக்களிடம் முன்வைக்கப்பட்டாயிற்று. எனவே, மேற்கொண்டு ஆற்றவேண்டிய விடயங்கள் தொடர்பாக சிலவற்றை மக்களின் கவனத்துக்குக் கொண்டு வருகிறேன். தமிழ்த் தேசிய நிலைப்பாட்டை இறுக்கமாகப் பற்றிக் கொண்டதால் மாவீரரான எமது செல்வங்களின் குடும்பத்தினரும், முன்னாள் போராளிகள் குடும்பத்தினரும், எப்போதும் தேசிய விடுதலைப் போராட்டத்துக்கு உறுதுணையாக எமது மக்களும் தமிழ்ப் பொது வேட்பாளர் பா. அரியநேத்திரனின் சின்னமான சங்குக்கு வாக்களிக்கத் தவறாதீர்கள். இதனை உங்கள் தேசியக் கடமையாக உளமார ஏற்றுக்கொள்ளுங்கள். உங்கள், உறவினர், நண்பர்களிடமும் இத்தேவையை உணர்த்துங்கள். இறுதியுத்தம் முடிந்து 15 வருடங்களாகிவிட்டது. பேச்சுவார்த்தை, பேசுதல் என்பவற்றை தொடர்ந்து கேட்டு காது புளித்துப்போய்விட்டது. தமிழரின் ஆறாம் அறிவைக் கேள்விக்குட்படுத்தும் விதத்தில் புதுப்புது விளக்கங்களைக் கேட்டாயிற்று. எனவே, நாம் இனி அடுத்த கட்டத்தை ஜனநாயக வழியில் மேற்கொள்வோம். புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள எமது உறவுகள் தமிழ்ப் பொது வேட்பாளருக்கு தவறாமல் வாக்களிக்கும்படி தமது குடும்பத்தினர், உறவினர், நண்பர்களுக்கு அறிவுறுத்துங்கள். பொது வேட்பாளர் குறித்த விடயத்துக்கு சாத்தியமான - எவ்வகையில் உதவ - பங்காற்ற முடியுமோ அந்த வகையில் பங்காற்றுங்கள். திரு. பா. அரியநேத்திரன் 1984ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில் அவரது சொந்தக் கிராமமான அம்பிளாந்துறையில் எனக்கு அறிமுகமானவர். போராட்டப் பங்களிப்பு என்பதற்கு மேலாக கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயம் தொடர்பான விடயங்களில் இவரது ஈடுபாட்டை நான் அறிவேன். அதனாலேயே, 2004 பொதுத் தேர்தலில் போட்டியிடத் தேர்வானவர்களில் ஒருவராக இவரது பெயர் கிளிநொச்சியிலிருந்து அறிவிக்கப்பட்டது. இறுதி யுத்தத்தின் பின்னர் நெருக்கடிகளின் மத்தியிலும் மாவீரர் நினைவேந்தல்களை எப்படியோ தொடர்ச்சியாகச் செய்து வந்தவர். *** தமிழ்த் தேசியம் என்பதை வெறும் எதிர்ப்பரசியல் என்று கொச்சைப்படுத்தியவர்களும் உண்டு. ஆனால், எம்மை யார் என உணரவைத்து உணர்வோட்டத்தில் ஒன்றிக்கலக்க வைத்த விடயம் இது. இராஜதுரை வடக்குக்கு வருகிறார் என்றால் அவரது அழகு தமிழ் உரையைக் கேட்பதற்கு எத்தனை மைல் தூரமானாலும் துவிச்சக்கரவண்டியில் பயணிக்கும் அன்றைய இளைஞர்களை நான் சிறுவயதில் கண்டிருக்கிறேன். அன்றைய தமிழ் இளைஞர் பேரவை காலத்தில் பாசி என்றழைக்கப்பட்ட பாலிப்போடி சின்னத்துரையும் (அடுத்த கட்டபோராட்டத்தில் அவரது பெயர் யோகன் பாதர் - முள்ளிவாய்க்கால் வரை பயணித்தவர்) இன்னொருவரும் காசி ஆனந்தனின் பிறந்தநாளைக் கொண்டாட ஏற்பாடு செய்திருந்தனர். தந்தை செல்வாவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அவர் தனியாக தனது பயணப் பொதியுடன் மட்டக்களப்பு புகையிரத நிலையத்தில் வந்திறங்கினார். அவரைக் கண்டதும் இவர்கள் இருவரும் விழா நிகழ்ச்சி நிரலைக் குறிப்பிடும் துண்டுப் பிரசுரம் ஒன்றை வழங்கினர். அதனை வாசித்த தந்தையிடமிருருந்து ஒற்றை வரியிலான கேள்வி எழுந்தது. “இதில் இராஜதுரையின் பெயர் இல்லையே?” - அவ்வளவுதான் தான் ஏற்கனவே தங்கத் தீர்மானித்த இடத்துக்கு அவர் போய்விட்டார். குறிப்பிட்ட நிகழ்வில் பங்கேற்கவில்லை. அன்று மாலை கொழும்பு புறப்படும் தபால் புகையிரதத்தில் அவர் திரும்பிவிட்டார். அவர் சொல்லாமலே உணர்த்திய விடயம் இதுதான் “தமிழ்த் தேசியத்துக்காக உழைத்த மூத்தவர்களை மதிக்காத செயலை நான் ஏற்கமாட்டேன்”, என்பது. இவ்வாறான தலைமைத்துவப் பண்புதான் தமிழ்த் தேசியத்தின் அடிநாதம். அதனால்தான் தந்தை செல்வாவின் நினைவுத்தூபியில் தமிழரின் சகல மாவட்டத்தின் மண்ணும் ஒன்றிக்கலக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இந்த வேண்டுகோளை ஏற்று கிழக்கு மாகாணம் அன்னமலையிலிருந்து உழவு இயந்திரப் பெட்டியில் மண் கொண்டுவந்தனர் அந்த ஊர் மக்கள். வெறுமனே ஓர் அரசியல் கட்சியின் தலைவர் என்று தந்தை செல்வாவைப் பார்க்கவில்லை வட- கிழக்கு மக்கள் என்பதற்கு இது ஓர் உதாரணம். தமிழ்த் தேசியத்தை ஓர் அஞ்சலோட்டமாக யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் கொண்டு செல்கின்றனர். எல்லா நெருக்கடியான காலங்களிலும் அடுத்தடுத்த தொகுதியினரிடம் இந்த உணர்வைக் கடத்துகின்றனர். கடந்த 15ஆம் திகதி (வியாழக்கிழமை) தொழில்நுட்ப உதவியாளராக சூறாவளி வீசிய காலத்தில் மட்டக்களப்பில் பணியாற்றிய ப. திருக்கேதீஸ்வரன் அவர்கள் வெளியிட்ட 'புழுதிக்கதைகள்' என்ற நூலின் வெளியீடு இடம்பெற்றது. அதில், சேதமடைந்த மன்னம்பிட்டி பாலத்தை யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் திருத்த உதவினர் என்ற விடயத்தைக் குறிப்பிட்டார். பின்னர், தேசியம் சார்ந்த எந்த நிகழ்விலும் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் பங்கேற்றே வந்துள்ளனர். “அங்கையிருந்து இஞ்சைவந்து...” என்று அவர்களின் பங்களிப்பை கொச்சைப்படுத்தினார் சாணக்கியன். இரா. பரமதேவாவின் காலத்தில் மட்டக்களப்பில் நடைபெற்ற மாணவர் போராட்டங்களில் தியாகி சிவகுமாரனும் சத்தியசீலனும் கலந்துகொண்டனர் என்ற வரலாறு இவருக்குத் தெரிந்திருக்காது. ஏனெனில், அப்போது இவர் பிறந்திருக்கவில்லை. இவரும் தமிழ்ப் பொது வேட்பாளருக்கு எதிராக விஷத்தைக் கக்குகிறார். 2004இலேயே அரியநேத்திரனின் பங்கு எத்தகையதாக இருந்தது என்பதை தமிழ் அரசின் தலைவரும் துணைத் தலைவரும் சொல்லிக்கொடுக்கத் தவறிவிட்டனர். சம்பந்தன் ஐயாவுக்கு வயதாகிவிட்டது. அவர் பதவி விலகி அடுத்தவர்களுக்கு வழிவிட வேண்டும் என அமைப்பின் அங்கீகாரமின்றி சுமந்திரன் சொன்னபோது அவர்மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கத் தவறியவர்கள் மூத்தவர்கள் தொடர்பாக (சிறீநேசன்) முறையற்ற விதத்தில் ஒருமையில் வார்த்தைப் பிரயோகங்கள் மேற்கொண்டபோது ஒழுங்கைப் பேணாதவர்கள் தந்தை செல்வாவின் அமைப்பின் பெயரால் எந்த நடவடிக்கையும் எடுக்கத் தகுதியற்றவர்கள் - அமைப்பின் பெயரால் சுமந்திரன் தன்னிச்சையாக மேற்கொண்ட நடவடிக்கைகள் தொடர்பாக இதுவரை ஏழுக்கும் மேற்பட்ட தடவைகள் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். 1989 தேர்தலில் அமிர்தலிங்கம், சிவசிதம்பரம், சம்பந்தன், ஆனந்தசங்கரி, யோகேஸ்வரன், போன்ற பிரபலங்களை தோற்கடித்தவர்கள் எமது மக்கள். ஒரு இலட்சத்துக்கு மேற்பட்ட வாக்குகள் பெற்ற ஒருவரை இன்றுவரை வாக்களிப்பு மூலம் தெரிவு செய்யாதவர்கள் எமது மக்கள் என்பதை சாணக்கியனும் உணர்ந்து கொள்ளவேண்டும். மேய்ச்சல் தரை விவகாரத்தில் “மாடுகளுக்கு புல்லு வெட்டிப் போட முடியாதா?” என ஜனாதிபதி தன்னிடம் கேட்டதாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சாணக்கியன் சொன்னார். இதன் அர்த்தம் “மேய்ச்சல் தரையை ஆக்கிரமித்தவர்களை அகற்ற நான் தயாரில்லை”, என்பதுதான். இப்போது ஜனாதிபதி பேச்சுக்கு அழைக்கிறார் என்றால் நாளாந்தம் எத்தனை தொன் புல்லுத் தர ஆயத்தமாக இருக்கிறார் என்றுதான் கேட்க முடியுமே தவிர, எப்போது இவர்களை அகற்றப்போகிறார் என்று பேச முடியாது. மேய்ச்சல்தரை விவகாரத்தில் 24 மணி நேரத்துக்குள் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து அகற்றப்பட்ட மாவட்டச் செயலர் திருமதி கலாமதி பத்மராஜா கண்ணீருடன் தன்னை அனுப்பி வைத்த மாவட்ட செயலக ஊழியர்களிடம் சொன்ன வார்த்தைகளை சாணக்கியனுக்கு நினைவூட்டுகிறோம். “சோர்ந்து போகாதீர்கள்! சோரம் போகாதீர்கள்...!” * * * எல்லாவிதத் தடைகளையும் துரோகங்களையும் தாண்டி தமிழ்ப் பொது வேட்பாளர் விடயத்தில் முன்னோக்கிச் செல்வோம். புலம்பெயர் உறவுகளும் தாயகத்திலுள்ளோரும் கைகோர்த்து இதனை சாத்தியமாக்குவோம். https://www.battinatham.com/2024/08/blog-post_303.html
-
ஏறாவூரில் 5ஆம் ஆண்டு மாணவிகளுக்கு தவறான படங்களை காண்பித்த அதிபர் கைது!
5ஆம் ஆண்டு மாணவிகளுக்கு தவறான படங்களை காண்பித்த அதிபர் கைது! Vhg ஆகஸ்ட் 22, 2024 மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள பாடசாலை ஒன்றில் தரம் 5இல் கல்வி கற்கும் மாணவிகளுக்கு கையடக்க தொலைபேசியில் தகாத படங்களை காட்டி வந்த குற்றச்சாட்டில் அதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 57 வயதுடைய பாடசாலை அதிபரையே நேற்று (21-08-2024) இரவு கைது செய்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த பொலிஸ் பிரிவிலுள்ள ஆரம்ப பாடசாலை ஒன்றில் தரம் 5 இல் 3 மாணவிகள், 3 மாணவன்கள் உட்பட 6 பேர் கல்விகற்று வருகின்றனர். இந்த நிலையில் அந்த மாணவர்கள் 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள நிலையில் அவர்களுக்கு பாடசாலை முடிவுற்ற பின்னர் மேலதிகமாக மாலையில் அதிபர் கற்பித்து வந்துள்ளார். இதன்போது, கைது செய்யப்பட்ட அதிபர் மாணவர்களுக்கு தனது கையடக்க தொலைபேசியில் இருந்து தகாத படங்களை காட்டி வந்தமை காரணமாக ஒரு மாணவி மாலை நேர வகுப்பிற்கு போக முடியாது என பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இந்நிலையில், அதற்கான காரணத்தை கேட்டபோது சிறுமி அதிபரின் இந்த செயல் தொடர்பாக கூறியுள்ளார். இதனை தொடர்ந்து, நேற்று இரவு மாணவியின் பெற்றோர், 119 என்ற பொலிஸ் அவசர இலக்கத்திற்கு அறிவித்துள்ளனர். இதன் பின்னர், பொலிஸார் பாதிக்கப்பட்ட 3 மாணவிகளிடம் இருந்து வாக்குமூலத்தை பதிவு செய்ததுடன் 57 வயதுடைய அதிபரை கைது செய்தனர். மேலும், கைது செய்யப்பட்ட அதிபரை விசாரணையின் பின்னர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதேவேளை, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பெண்கள், சிறுவர்கள் பாதுகாப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர். https://www.battinatham.com/2024/08/5_22.html
-
காசா போர் நிறுத்த முயற்சியில் முன்னேற்றம் இன்றி அமெரிக்கா திரும்புகிறார் பிளிங்கன்
காசா போர் நிறுத்த முயற்சியில் முன்னேற்றம் இன்றி அமெரிக்கா திரும்புகிறார் பிளிங்கன் -இஸ்ரேலின் தாக்குதல்களில் மேலும் பல பலஸ்தீனர்கள் பலி sachinthaAugust 22, 2024 காசாவில் போர் நிறுத்தம் ஒன்றை எட்டுவதற்கு தவறிய நிலையில் அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் அன்டனி பிளிங்கன் நேற்று (21) பிராந்திய விஜயத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பியுள்ளார். பரந்த அளவிலான போர் ஒன்றை தவிர்ப்பதற்கான கடைசி வாய்ப்பாக இது உள்ளது என்றும் அவர் எச்சரித்துள்ளார். எனினும் காசாவில் இஸ்ரேல் நேற்றும் உக்கிர தாக்குதல்களை நடத்தியதோடு கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேலின் முற்றுகையில் இருக்கும் அந்தப் பகுதியில் மேலும் 50 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் முன்வைக்கப்பட்டிருக்கும் போர் நிறுத்த முன்மொழிவை ஏற்கும்படி ஹமாஸை வலியுறுத்திய பிளிங்கன், காசாவின் எதிர்காலம் தொடர்பில் இஸ்ரேலுடன் வெளிப்படையாக முரண்பாட்டார். காசாவில் போர் வெடித்த பின்னர் கடந்த 10 மாதங்களில் ஒன்பதாவது முறையாக பிராந்தியத்திற்கு விஜயம் மேற்கொண்ட பிளிங்கன் கட்டார், எகிப்து மற்றும் இஸ்ரேலுக்கு பயணமானார். அந்தப் பயணங்களை முடித்துக் கொண்ட அவர் ‘நேரம் முக்கியமானது’ என்று வலியுறுத்தினார். ‘கடந்து செல்லும் ஒவ்வொரு நாளும், நல்லவர்களுக்கு மிக மோசமான விடயங்கள் நடக்கக் கூடும்’ என்று நேற்று (21) டோஹாவில் இருந்து விமானத்தில் புறப்படும் முன்னர் குறிப்பிட்டார். ‘இது (போர் நிறுத்தம்) ஏற்படுத்தப்பட வேண்டும், எதிர்வரும் நாட்களில் ஏற்படுத்தப்பட வேண்டும். அதனை அடைவதற்கு நாம் முடியுமான அனைத்தையும் செய்வோம்’ என்று அவர் போர் நிறுத்தம் தொடர்பில் குறிப்பிட்டார். போர் நிறுத்தம் ஒன்றை எட்டுவதற்கு இடையூறாக இருக்கும் இடைவெளிகளை நிரப்பும் யோசனைகளை அமெரிக்கா முன்வைத்து வருவதோடு, கெய்ரோவில் இந்த வாரம் நடைபெறும் பேச்சுவார்த்தையில் பங்கேற்க ஹமாஸ் அமைப்பை அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது. இந்தப் பேச்சுவார்த்தையில் இஸ்ரேல் பங்கேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. காசாவின் எகிப்துடனான எல்லையான பிலடல்பியா தாழ்வார பகுதியின் கட்டுப்பாட்டை தொடர்ந்து தக்கவைப்பதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வலியுறுத்தியுள்ளார். இந்த எல்லை பகுதியை இஸ்ரேல் ஹமாஸிடம் இருந்து கைப்பற்றியதோடு இங்குள்ள இரகசிய சுரங்கப்பாதை வழியாக ஆயுதங்கள் காசாவுக்கு கொண்டுவரப்படுவதாக இஸ்ரேல் கூறி வருகிறது. காசாவில் இருந்து துருப்புகள் வாபஸ் பெறும் அட்டவணை மற்றும் இடம் தொடர்பில் இஸ்ரேலுடன் ஏற்கனவே இணக்கத்தை எட்டி இருப்பதாக பிளிங்கன் குறிப்பிட்டுள்ளார். காசாவில் போர் வெடித்தது தொடக்கம் அங்கு இஸ்ரேல் தனது ஆக்கிரமிப்பை தொடர்வதை அமெரிக்கா நிராகரித்திருப்பதாக நெதன்யாகுவின் கருத்துகள் தொடர்பில் பிளிங்கனிடம் செய்தியாளர்கள் கேட்டபோது அவர் குறிப்பிட்டார். நெதன்யாகுவின் வலுவான அறிக்கை போர் நிறுத்தம் ஒன்றை எட்டுவதற்கு உதவாது என்று அமெரிக்க அதிகாரி ஒருவர் ஏ.எப்.பி. செய்தி நிறுவத்திற்கு குறிப்பிட்டுள்ளார். காசா எல்லை பகுதியை இஸ்ரேல் கைப்பற்றி இருப்பது தொடர்பில் இஸ்ரேலுடன் அமைதி உடன்படிக்கையை செய்து கொண்ட முதல் அரபு நாடான எகிப்து அதிருப்தி அடைந்துள்ளது. இரு முஸ்லிம் புனிதத் தலங்களின் காவலாராக உள்ள சவூதி அரேபியா உட்பட அரபு உலகம் மற்றும் இஸ்ரேல் இடையே இயல்புநிலையை ஏற்படுவதற்கான வாய்ப்பை வழங்குவதன் மூலம் நெதன்யாகுவை சமரசம் செய்ய பிளிங்கன் முயற்சித்தார். இந்நிலையில் பிளிங்கனை சந்தித்த எகிப்து ஜனாதிபதி அப்தல் பத்தா அல் சிசி, ‘போரை முடிவுக்குக் கொண்டுவர வேண்டிய நேரம் வந்துவிட்டது’ என்றார். போர் நிறுத்தம் ஒன்றை எட்டுவதில் ஹமாஸ் ஆர்வம் காட்டுகின்றபோதும் அமெரிக்காவின் புதிய போர் நிறுத்த முன்மொழிவில் இஸ்ரேல் முன்வைத்திருக்கும் புதிய நிபந்தனைகளுக்கு எதிர்ப்பை வெளியிட்டு வருகிறது. எகிப்துடனான எல்லையில் அமைந்துள்ள தெற்கு காசாவில் ரபா நகர் மீது இஸ்ரேலியப் படை நேற்றுக் காலை சரமாரியாக குண்டுகளை வீசியது. இதன்போது நான்கு சடலங்களை மீட்டதாக சுகாதார வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ரபா நகரின் மேற்கே அல் மவாசியில் இடம்பெயர்ந்த மக்கள் தங்கி இருக்கும் கூடாரங்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் பலர் காயமடைந்ததாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா குறிப்பிட்டுள்ளது. வடக்கு காசாவின் ஜபலியா அகதி முகாமில் உள்ள அல் காதிப் குடும்பத்திற்குச் சொந்தமான வீட்டுன் மீது நேற்று இடம்பெற்ற வான் தாக்குதல் ஒன்றில் ஒருவர் கொல்லப்பட்டிருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. இதேவேளை மத்திய காசாவின் டெயிர் அல் பலாஹ்வின் பல சுற்றுப்புறங்களில் இருந்து மக்களை வெளியேற இஸ்ரேல் இராணுவம் நேற்று புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்த நகரின் தெற்கு பகுதியில் பல இடங்களும் ‘அபாயகரமான போர் வலயம்’ என்பதை காட்டும் வரைபடம் ஒன்றை இஸ்ரேல் இராணுவம் எக்ஸ் சமூகதளத்தில் வெளியிட்டுள்ளது. அங்குள்ள போராளிகளுக்கு எதிராக விரைவில் நடவடிக்கை எடுக்கப்படவிருப்பதாகவும் மக்கள் மேற்கு பக்கமாக உடன் வெளியேற வேண்டும் என்றும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. ‘நாம் எங்கே போவது? எங்கே தான் போவது?’ என்று வடக்கு காசாவில் உள்ள காசா நகரில் இருந்து வந்த 55 வயது அபூரக்கன் என்பவர் ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார். அவர் காசாவில் போர் வெடித்தது தொடக்கம் ஐந்து முறை இடம்பெயர்ந்துள்ளார். ‘அவர்கள் எம்மை நெருங்கி வருகிறார்கள் என்று உணர்கிறேன். அச்சுறுத்தல் பகுதிக்கு சில நூறு மீற்றர் தூரத்தில் நான் இருக்கிறேன். காலை தொடக்கம் டெயிர் அல் பலாஹ், கான் யூனிஸ் அல்லது நுஸைரத்தில் எஞ்சியுள்ள இடத்தை நான் தேடி வருகிறேன்’ என்று சாட் செயலி வழியாக கருத்துக் கூறியபோதும் அவர் தெரிவித்தார். ‘துரதிருஷ்டவசமாக இந்தப் போரின் முடிவைக் காண்பதற்கு முன் நாம் இறக்கக்கூடம். போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைகள் எல்லாமே பெய்யானது’ என்றும் அவர் குறிப்பிட்டார். இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் காசாவில் கடந்த 24 மணி நேரத்தில் 50 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக காசா சுகாதார அமைச்சு நேற்று வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது. கடந்த 10 மாதங்களுக்கு மேற்பட்ட காலத்தல் காசாவில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 40,223 ஆக அதிகரித்திருப்பதோடு மேலும் 92,981 பேர் காயமடைந்துள்ளர். காசா போர் பிராந்தியத்தில் பதற்றத்தை அதிகரித்திருக்கும் சூழலில் தெற்கு லெபனானின் சிடோன் நகரில் இஸ்ரேல் நேற்று நடத்திய தாக்குதல் ஒன்றில் மேற்குக் கரையில் ஆட்சி புரியும் பத்தா அமைப்பின் அதிகாரியான கலீல் மகாதா கொல்லப்பட்டுள்ளார். மகாதா மற்றும் அவரது சகோதரரான மூத்த பத்தா உறுப்பினர் முனீர் ஆகியோர் லெபனானில் இருந்து ஈரான் புரட்சிக் காவல் படையுடன் இணைந்து செயற்படுவதாகவும் மேற்குக் கரைக்கு பணம் மற்றும் ஆயுதங்களை கடத்துவதாகவும் இஸ்ரேல் குற்றம்சாட்டியுள்ளது. https://www.thinakaran.lk/2024/08/22/world/80061/காசா-போர்-நிறுத்த-முயற்ச/
-
வவுனியா வைத்தியசாலையில் பிறந்த சிசுவின் மரணத்திற்கு நீதி கோரி ஆர்ப்பாட்டம்
வவுனியா வைத்தியசாலையில் பிறந்த சிசுவின் மரணத்திற்கு நீதி கோரி ஆர்ப்பாட்டம் PrashahiniAugust 22, 2024 வவுனியா வைத்தியசாலையில் பிறந்த சிசுவின் மரணத்திற்கு நீதி கோரி வைத்தியசாலை முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. மரணித்த சிசுவின் உறவினர்கள் மற்றும் பொது மக்களால் நேற்று (21) மாலை குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. வைத்தியசாலையின் முன்பாக வீதியில் அமர்ந்தவாறு போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள், வவுனியா வைத்தியசாலை வைத்தியர்களின் அசமந்தத்தால் மரணித்த சிசுவிற்கு நீதி வேண்டும் எனவும், வைத்தியசாலையின் உள்ளக விசாரணையில் நம்பிக்கையில்லை. சுகாதார அமைச்சர் ரமேஸ் பத்திரண இது தொடர்பில் கவனம் செலுத்தி ஒரு விசாரணை குழுவை அமைத்து பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நீதியைப் பெற்றுத் தர வேண்டும் எனவும், தொடரும் மருத்துவ மாபியங்களின் அசமந்த போக்கிற்கு தீர்வு காண அனைவரும் ஒன்றிணைய வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். அத்துடன், வவுனியா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்படும் சட்டவைத்திய அதிகாரியின் விசாரணையில் நம்பிக்கை இல்லை எனவும் சிசுவின் சடலத்தை பார்வையிட்ட வவுனியா நீதிபதி விசாரணைகளை முன்னெடுத்திருந்தார். அவரை நாம் நம்புகின்றோம். நீதிபதி எமக்கு ஒரு தீர்வைப் பெற்றுத்தர வேண்டும் எனவும் இதன்போது மரணித்த சிசுவின் உறவினர்கள் கோரினர். குறித்த ஆர்ப்பாட்டம் காரணமாக வைத்தியசாலை பிரதான வாயில் அருகில் பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.thinakaran.lk/2024/08/22/breaking-news/80045/வவுனியா-வைத்தியசாலையில்/
-
தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி அறிமுகம் : நிறம் என்ன தெரியுமா?
களைகட்டும் தவெக கொடி அறிமுக விழா : விஜய்க்கு சீமான் வாழ்த்து! Aug 22, 2024 07:51AM IST ஷேர் செய்ய : தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி கொடியை இன்று (ஆகஸ்ட் 22) அறிமுகப்படுத்த உள்ள நிலையில் அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் வாழ்த்து தெரிவித்துள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற புதிய கட்சியை தொடங்கி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் நடிகர் விஜய். எனினும் அக்கட்சியின் கொடி, சின்னம் அறிவிக்கப்படாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி கொடி சென்னை பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் இன்று காலை அறிமுகப்படுத்தப்படும் என விஜய் நேற்று அறிவித்தார். மேலும் கட்சியின் இசையமைப்பாளர் தமன் இசையில், பாடலாசிரியர் விவேக் வரிகளில் உருவாகியுள்ள கட்சியின் கொள்கைகள், எதிர்கால திட்டங்கள் அடங்கிய பாடலையும் வெளியிட உள்ளார். இதனையடுத்து பனையூரில் கட்சி கொடி விழா அறிமுகப்படுத்தவதற்கான நிகழ்ச்சி இன்று காலை முதலே களைகட்டியுள்ளது. கட்சி நிர்வாகிகள் பலரும் அங்கு குவிந்து வருகின்றனர். இந்த நிலையில், நாளை கட்சி கொடியை அறிமுகப்படுத்த உள்ள விஜய்க்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், ”தம்மை வளர்த்தெடுத்து, வாழ்வளித்த தாய்த்தமிழ்நாட்டு மக்களுக்குத் தன்னலமற்ற தொண்டாற்ற வேண்டும் என்ற புனித நோக்கத்தோடு, தமிழக வெற்றிக்கழகத்தின் கொடியை இன்று அறிமுகப்படுத்தி, நேரடி அரசியல் களத்தில் தடம் பதிக்கத் தொடங்கும், என் அன்புத்தம்பி தளபதி விஜய் லட்சிய உறுதிகொண்டு, தமிழக அரசியலில் வாகை சூட நெஞ்சம் நிறைந்த நல் வாழ்த்துகள்” என தெரிவித்துள்ளார். https://minnambalam.com/political-news/tvk-flag-launch-ceremony-seeman-congratulates-vijay/
-
ரணிலின் துணிவும் ஏனைய போட்டியாளரும்!
ரணிலின் துணிவும் ஏனைய போட்டியாளரும்! August 21, 2024 — கருணாகரன் — நெருக்கடி காலத்திலிருந்து நாட்டை – மக்களை மீட்டது தானே என்கிறார் ரணில் விக்கிரமசிங்க. அதாவது தானொரு மீட்பர், ஆபத்பாந்தகர் என்றெல்லாம் சொல்கிறார். “அன்றைய நெருக்கடிச் சூழலில் யாருமே பொறுப்பேற்க முன்வராதபோது தனியாளாக முன்வந்து அந்தப் பொறுப்பைத்துணிவுடன் ஏற்றேன். நெருக்கடியிலிருந்து நாட்டைமீட்பதற்கான தேசிய அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்காகச் சஜித்தையும் அநுரவையும் கூட அழைத்தேன். அதைப்போல தமிழ்த்தேசியக் கூட்டமைப்பையும் மலையக் கட்சிகளையும் முஸ்லிம்களையும் கேட்டிருந்தேன். யாரும் வரவில்லை. ஆனாலும், இணைந்து பணியாற்றக் கூடியவர்களைச் சேர்த்து ஆட்சியை அமைத்தேன். அதன் மூலம் பொருட்களுக்காகக் காத்திருக்கும் வரிசை யுகத்தை மாற்றினேன். விவசாயிகளுக்கு உரத்தைத் தந்தேன். பொருட்களின் தட்டுப்பாட்டை நீக்கினேன்…. நாம் இனி வாழமுடியுமா என்று நம்பிக்கையற்றிருந்த மக்களை நிம்மதியோ, அச்சமின்றி வாழ்க்கையைத் தொடரக் கூடியவாறான சூழலை உருவாக்கினேன். அப்படிச்செய்தேன். இப்படிச் செய்தேன்.. ” என்று ஏராளமாகச் சொல்லிச்செல்கிறார் ஜனாதிபதி. இதில் சில உண்மைகளுண்டு. மறுக்க முடியாது. ரணில் சொல்வதைப்போல (அவர் விரும்பியதைப்போல அல்ல) தேசிய அரசாங்கத்தை அமைத்திருக்க வேண்டும். அது பொருளாதாரப் பிரச்சினையையும் இனப்பிரச்சினையையும் தீர்க்கும் முகமாகச் செயற்பட்டிருக்க வேண்டும். கூடவே நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி ஆட்சிமுறையை நீக்குவது உட்படப் பலவற்றைச் சீர்செய்திருக்க முடியும். முக்கியமாக அரசியலமைப்பை மாற்றியிருக்கலாம். குறைந்தபட்சம் அதை நோக்கி நகர்ந்து சாத்தியமான பலவற்றையும் செய்திருக்கலாம். தேசிய அரசாங்கத்தில் இணைந்திருந்தால் ஒருவரை ஒருவர் சாட்டித் தப்பி விட முடியாது. ஏனென்றால் அனைத்துத் தரப்பினரும் பங்காளிகள். அதில்லாதபோது ஒருவரையொருவர் குற்றம்சாட்டியோ அல்லது எதிர்ப்புக் காட்டியோ தப்பி விடலாம். அப்படித்தான் ஒவ்வொருவரும் இழிவான முறையில் தங்கள் தங்கள் அரசியலைத் தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றனர். நாட்டைப் பற்றியோ மக்களைப் பற்றியோ இவர்கள் நேர்மையாக – விசுவாசமாகச் சிந்திக்கவில்லை. “அந்த நெருக்கடிச் சூழலில் நாட்டைப் பொறுப்பேற்குமாறு தன்னை 71 தடவை அழைத்தார்கள். நான் செல்லவில்லை. அப்படிப் பொறுப்பேற்றிருந்தால் அது கள்வர்களைப் பாதுகாப்பதாகவே முடிந்திருக்கும். அதை நான் விரும்பவில்லை” என்று இப்பொழுது சஜித் பிரேமதாச பெருமையாகச் சொல்கிறார். அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, நாட்டைப் பொறுப்பேற்று, ஆட்சியைப் பலப்படுத்திக் கொண்டு கள்வர்களைப் பிடித்துச் சிறையில் தள்ளி, ஊழலைக் கட்டுப்படுத்தியிருக்கலாம் அல்லவா! இதையே செய்திருக்க வேண்டும் சஜித். அப்படிச் செய்யாமல் விட்டதால்தான் அவர்கள் ரணில் அரசாங்கத்தில் பாதுகாக்கப்பட்டனர். ஊழல் தொடர்ந்தது. தவிர, ரணிலின் அழைப்பை ஏற்றுத் தேசிய அரசாங்கத்தில் இணைந்து கொண்டு செயற்படும்போது, ரணில் விக்கிரமசிங்க, தேசிய அரசாங்கத்திற்குரிய பொதுப் பண்புக்கு மாறாகச் செயற்பட முனைந்திருந்தால் அதை மக்களுக்குச் சொல்லி விட்டு (நிரூபித்துக் கொண்டு) அதிலிருந்து விலகியிருக்கலாம். அதுவே சரியானது. ஆனால் அப்படி எதுவும் நடக்கவேயில்லை. தேசிய அரசாங்கத்திற்கான வற்புறுத்தல்களை இலங்கையின் புத்திஜீவிகள், சமூகச் சிந்தனையாளர்கள், அரசியல்வாதிகளுக்கு ஆசீர்வாதம் வழங்குகின்ற மதத்தலைவர்கள் எவரும் செய்யவில்லை. இதனால் அரசியற் கட்சிகளைச் சேர்ந்த ஒவ்வொருவரும் தங்கள் நிலையிலிருந்தே, தங்களின் பாரம்பரியச் சிந்தனை முறையிலிருந்தே சிந்தித்தனர், செயற்பட்டனர். எவரும் நாட்டின் தேசிய நெருக்கடி, தேசியப் பிரச்சினைகள், அவற்றுக்கான தீர்வு என்று சிந்திக்கவில்லை. பதிலாக தனியொருவராக (ஒற்றை ஆளாக) நிற்கும் ரணில் விக்கிரமசிங்க தன்னைப் பலப்படுத்துவதற்காக, பிறரைப் பயன்படுத்துவதற்காக, தந்திரோபாயத்தின் அடிப்படையில்தான் பலரையும் அழைக்கிறார் எனச் சொல்லப்பட்டதுண்டு. தனியொருவராக நிற்கும் ரணில் எப்படி ஆளுமையும் நேர்மையும் உள்ள மற்றவர்களைப் பயன்படுத்திக் கொள்ள முடியும்? அவர்கள் தங்கள் ஆளுமையினாலும் நேர்மையினாலும் ரணில் விக்கிரமசிங்கவை அம்பலப்படுத்தியிருக்கலாம். கட்டுப்படுத்தியிருக்க முடியும். என்பதால் அன்றைய சூழலை இழந்தது தவறேயாகும். இலங்கையின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வை எட்டக் கூடியதாக அந்த நெருக்கடிச் சூழல் அனைவருக்குமான பொறுப்பை ஏற்குமாறு அழைத்தது. பொதுவாகவே நெருக்கடியொன்றின் போதுதான் அனைத்துத் தரப்பும் ஒருமுகப்பட்டுச் செயற்படக்கூடிய சூழலும் உளநிலையும் உருவாகும். உதாரணம், சுனாமி அனர்த்தச் சூழல். அந்தப் பேரிடரின்போது புலிகளும் அரசும் தமிழரும் சிங்களரும் முஸ்லிம்களும் என எதிரெதிர்த் தரப்புகள் எல்லாம் ஒன்றிணைந்து பேதங்களின்றிப் பணியாற்றினர். அதொரு முன்னுதாரணமாகப் பேசப்பட்டது. அதிலிருந்து நல்லெண்ணச் செயற்பாடுகள் உருவாக்கப்பட்டிருந்தால் பிந்திய இலங்கையின் பேரழிவுகளும் இன்றைய பொருளாதார நெருக்கடியும் ஏற்பட்டிருக்காது. இன்னொரு சந்தர்ப்பம், கொரோனா பெருந்தொற்றுக்காலப் பேரிடர்ச் சூழல். அதன் போதும் அனைத்துத்தரப்பினரிடத்திலும் ஒரு ஒற்றுமை உணர்வு மேலோங்கியிருந்தது. இனவாதம் தணிந்திருந்த சூழல்களிவை. ஆகவே இலங்கையின் பொருளாதார நெருக்கடியோடிணைந்த அந்த நெருக்கடிச் சூழலை அனைத்துத் தரப்பும் இலங்கையை மீட்பதற்கான வாய்ப்பாகப் பயன்படுத்தியிருக்கவேண்டும். அதற்கான கருநிலை “அறகலய“வின் மூலம் உருவாக்கப்பட்டிருந்தது. “அறகலய”வில் நேரடியான அரசியற் கட்சிகளுக்கு அப்பாலுள்ள அனைத்துத்தரப்பும் ஒன்றிணைந்து நின்றது. மட்டுமல்ல, இனப்பிரச்சினையைப் பற்றிய புரிதலும் அங்கே ஓரளவு காணப்பட்டது. அல்லது அதைப்பற்றிப் பேச வேண்டும் என்ற உணர்வு அங்கே இருந்தது. ஆகவே அதையொட்டி, அதற்குப் பின் வரவிருந்த தேசிய அரசாங்கம் என்பதை ஒரு வாய்ப்பாகக் கொண்டு அனைவரும் செயலாற்ற முன்வந்திருக்க வேண்டும். ஆனால் அதற்கு சஜித்தும் அநுரவும் ஏனைய தமிழ், முஸ்லிம், மலையகக்கட்சிகளும் சம்மதிக்கவில்லை. எல்லோருக்கும் இனவாதம் தேவைப்பட்டது. அதை விட்டு அரசியல் செய்து பழக்கமில்லை. இதனால் தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்குப் பின்னின்றனர். அவர்கள் சொன்ன காரணங்கள், ஏற்றுக் கொள்ள முடியாதவெறும் சாட்டுகளே. அதிலொன்று, ரணிலை நம்பமுடியாது. அவர் சூழ்ச்சிக்காரர். ராஜபக்ஸக்களை (திருடர்களை) காப்பாற்றுபவர். அவர் வெளிச்சக்திகளின் நிகழ்ச்சிகளுக்காகச் செயற்படுகின்றவர் போன்றனவாகும். இதிலும் உண்மையுண்டு. ஆனால், ஏற்புடையதல்ல. ஏனென்றால் – ஒன்று, வெளிச்சக்திகள் ரணிலை மட்டுமல்ல, அதிகாரத்திலிருப்போரையும் அதிகாரத்திற்கு வெளியே இருப்போரையும்தான் கையாள – கைப்பொம்மைகளாக வைத்திருப்பதற்கு முயற்சிக்கின்றன. சஜித் பிரேமதாசா, அநுரகுமார திசநாயக்க, சுமந்திரன், மனோ கணேசன், ஹக்கீம், செல்வம் அடைக்கலநாதன், சித்தார்த்தன், சந்திரகுமார் போன்றவர்களைப் பிற நாட்டுத் தூதர்கள் சந்திக்கிறார்கள். தங்களுக்குப் பொழுது போகவில்லை என்பதற்காகவா இந்தச் சந்திப்பையெல்லாம் ஒவ்வொரு நாட்டுத் துதுவர்களும் நடத்துகின்றனர்? அல்லது இவர்கள் இந்தத் தூதர்களைச் சந்திப்பது ஏதோ அன்புறவு காரணமாகவா? எல்லாவற்றுக்குப் பின்னும் நிகழ்ச்சி நிரல்களுண்டு. ஆகவே பிறருடைய நிகழ்ச்சி நிரல்கள் எப்போதுமிருக்கும். அது யார் அதிகாரத்துக்கு வந்தாலும் தொடரும். அதிகாரத்தில் இல்லாத சக்திகளையும் அவர்கள் நாடிபிடித்துப் பார்ப்பர். எனவே இதை ஒரு காரணமாகச் சொல்லித் தப்ப முடியாது. அப்படித்தான் ரணிலை நம்ப முடியாது என்பதும். அவர் ஒரு சூழ்ச்சிக்காரர். சேர்ந்திருப்போரையே அணைத்துக் கெடுத்து விடுவார். கட்சிகளை உடைப்பதில் வல்லவர் என்றும் குற்றம் சாட்டப்பட்டது. அரசியலில் போட்டியிருக்கும். இந்த மாதிரிச் சூழ்ச்சிகளும் இருக்கும். அரசியலென்பதே போட்டிகளின் களம்தான். முரண்பாடுகளின் இயக்கம்தான். சூழ்ச்சிகள் இடையறாது நிகழும் ஆட்டமே. ஆகவே அதற்கேற்ற காய்நகர்த்தல்களும் காய் வெட்டுகளும் நடக்கும். ஒரே கட்சிக்குள், ஒரே அமைப்புக்குள், ஒரே அணிக்குள் கூட இதெல்லாம் நடந்து கொண்டுதானிருக்கின்றன. அப்படியில்லாத ஒரு அணியை – ஒரு கட்சியை யாராவது காட்டுங்கள் பார்க்கலாம். தங்கள் அணிக்குள் வெட்டுக்குத்துகளும் குழிபறிப்புகளும் முரண்பாடுகளுமிருப்பதைப் போலவே வெளியிலும் இருக்கும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். ஏன், இப்படிச் சொல்வோர் தமது அணிக்குள்ளும் வெளியிலும் போட்டியாளர்களை முறியடிப்பதற்கும் வெட்டியெறிவதற்கும் முயற்சிப்பதில்லையா? எனவே ரணில் விக்கிரமசிங்கவைப் பற்றிய இந்தக் குற்றச் சாட்டுகளும் ஏற்புடையவையில்லை. ஆகவே இந்த மாதிரியான சிறுபிள்ளைத்தனமான சாட்டுப்போக்குகளைக் கடந்து தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்குச் சஜித்தும் அநுரவும் முன்வந்திருக்க வேண்டும். இருவரும் இளைய தலைமுறையினர். அப்படி இருவரும் வந்திருந்தால், உரிய பொறுப்புகளை ஏற்றுத் திறம்படச் செயற்பட்டிருந்தால், தங்களுடைய செயற்பாட்டுத்திறனால் இன்று மிகப் பெரிய ஆளுமைகளாக மிளிர்ந்திருப்பர். நாடும் கணிசமான அளவுக்கு மீண்டிருக்கும். வயோபதிரான, ஒற்றையாளான ரணில் விக்கிரமசிங்கவை களத்திலிருந்தே அப்புறப்படுத்தியிருக்க முடியும். அவருடைய பலத்தையும் ஒளிவட்டத்தையும் இல்லாதொழித்திருக்க முடியும். ஆனால் நடந்தது என்ன? ஒற்றையாளான – தனியனான – ரணில், முதிய வயதில் தனிக்காட்டு யானையாக மெல்ல மெல்லச் சூழலைத் தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார். பதவியே இல்லாமல் தன்னுடைய வீட்டுக்குள் முடங்கிக் கிடந்தவர், கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி நாடுமுழுக்கச் சென்று தன்னை நிலைப்படுத்தினார். இதற்கு வாய்ப்புக் கொடுத்தால் அவர் அதைச் செய்யத்தானே செய்வார்! அவர் மக்களால் தெரிவு செய்யப்பட்டவரில்லை. பின் கதவு வழியாக வந்தவர் என்ற பரிகாசமெல்லாம் அரசியலில் எடுபடாது. நீங்கள் களத்தில் நிற்கிறீர்களா இல்லையா என்பதே முக்கியமானது. ஜனாதிபதியாகப் பதவியேற்று ரணில் களத்தில் நின்றதே அவர் இன்று போட்டிக்குரிய வேட்பாளராக மாறிருப்பதற்கான காரணம். 2020 இல் ரணில் தோற்றுப்போன ஒருவர். அவரிடம் கட்சியும் இருக்கவில்லை. வெற்றியும் இருக்கவில்லை. ஏறக்குறைய அரசியலுக்கு முழுக்குப் போடும் நிலையில் இருந்தார். இன்று? சவாலுக்குரிய போட்டியாளராக – ஒரு இளைஞரைப்போல களத்தில் நிற்கிறார். செடியை முளையிலேயே கிள்ளாமல் விட்டால், அல்லது நமக்கு வாய்ப்புக் கிட்டும்போது அதைக் கை விட்டால் பிறகு அது நம்மையே பதம் பார்த்து விடும். https://arangamnews.com/?p=11123
-
தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி அறிமுகம் : நிறம் என்ன தெரியுமா?
வாகை மலருக்கு இத்தனை சிறப்புகளா! : எப்படி யோசித்தார் நடிகர் விஜய்? Kumaresan MAug 22, 2024 10:54AM தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி பனையூரில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் இன்று (ஆகஸ்ட் 22) நடைபெற்றது. இதில் பங்கேற்ற கட்சியின் தலைவர் விஜய் கொடியை அறிமுகம் செய்தார் அடர்சிவப்பு, மஞ்சள் ஆகிய இரு நிறங்களுடன் இரண்டு போர் யானைகள், நடுவில் வாகை மலருடன் இருக்கும் வகையில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி வடிவமைக்கப்பட்டுள்ளது. வாகை மலருக்கும் பல்வேறு சிறப்புகள் உள்ளன. தமிழ் நிலத்தில் சொல்லப்பட்டுள்ள ஐந்து நிலங்களில், ஒவ்வொரு நிலத்தின் பெயரும், அங்கு முக்கியமாக வளரும் மரம், அல்லது செடியின் பெயரைக் கொண்டே உருவாக்கப்பட்டுள்ளது. பாலை நிலத்தில் வளரும் முக்கிய மரம் வாகை மரமாகும். வாகைப் பூவைத் தொடுத்து, வெற்றிச் சின்னமாகக் கழுத்தில் அணிந்துக் கொள்வர். பெண்கள் காதணியாக அணிந்து கொள்வர் என்று சங்க நூல்கள் தெரிவிக்கின்றன. தொல்காப்பியம் நூலில் போர் காலங்களில் வீரர்கள் அணியும் பூக்கள் பற்றிச் சொல்லும் பாடலில், வாகைப் பூப் பற்றி கூறப்பட்டுள்ளது. சங்ககாலத்தில் போரில் வெற்றிபெறும் வீரர்களுக்கு வாகை மலர் சூட்டப்பட்டு வெற்றியை கொண்டாடியதாக தமிழ் இலக்கியங்களில் குறிப்புகள் உள்ளன. “வெற்றி வாகைச் சூடினான்” எனும் தொடர் இன்னமும் வழக்கில் உள்ளது. இந்த மரத்தின் இலை, பூ, பட்டை, பிசின், வேர், விதை ஆகியன மருத்துவப் பயன்கள் கொண்டவை. வாகை வேர் சித்தமருத்துவத்தில் கூறப்பட்டுள்ள பெரும்பஞ்ச மூலங்களுள் ஒன்று. இது, தமிழீழத்தின் தேசிய மரமாகும். வாகைப் பூக்களைப் போல் தூங்கு மூஞ்சி மரப் பூக்களும் தோன்றுவதால் வாகை மரமானது தூங்கு மூஞ்சி மரமென்றே பலரும் கருதி கொள்கின்றனர். ஆனால் வாகை மரமென்பது Flea Tree ரகத்தை சேர்ந்தது ஆகும். தூங்கு மூஞ்சி மரம் Rain Tree ரகத்தை சேர்ந்தது. ஆகும். இரண்டும் வெவ்வேறு மரங்களென்றாலும் ஒரே பேரினத்தைச் சேர்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது. https://minnambalam.com/political-news/why-actor-vijay-choose-vaagai-flower-in-tvk-party-flag/
-
ஜனாதிபதித் தேர்தல் 2024 - செய்திகள்
எந்த வேட்பாளருக்கும் ஆதரவு இல்லை என கத்தோலிக்க திருச்சபை அறிவிப்பு இலங்கையில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்ற எந்த வேட்பாளருக்கும் தாம் ஆதரவு வழங்கப்போவதில்லை என இலங்கை கத்தோலிக்க திருச்சபை அறிவித்துள்ளது. நாட்டின் புதிய ஜனாதிபதியை மக்களே தீர்மானிக்க வேண்டும் எனவும் தாம் நாட்டிலுள்ள கத்தோலிக்க மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாகவே ஜனாதிபதி வேட்பாளர்களுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கொழும்பு பேராயரின் ஊடகப் பேச்சாளர் சிறில்காமினி பெர்ணாண்டோ கருத்துத் தெரிவிக்கையில், “ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை நாம் சந்தித்துள்ள போதிலும் எந்த வேட்பாளருக்கும் ஆதரவை வெளியிடப்போவதில்லை எனத் தெரித்துள்ளார். இதேவேளை ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித்பிரேமதாச, ஜேவிபியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார, பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச உட்பட மேலும் பல ஜனாதிபதி வேட்பாளர்கள் பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித்தை சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. http://www.samakalam.com/எந்த-வேட்பாளருக்கும்-ஆதர/
-
தங்கலான் Review: பா.ரஞ்சித் - விக்ரமின் ‘வரலாற்றுப் புனைவு’ தரும் தாக்கம் என்ன?
தங்கலான் : விமர்சனம்! christopherAug 15, 2024 18:27PM இயக்குநர் பா.ரஞ்சித் என்றதும் சமூக நீதி அரசியல், ஒடுக்கப்பட்டோரின் குரல், தலித் அரசியல் என அவர் பேசிக்கொண்டிருக்கும் பல்வேறு விஷயங்கள் மனதில் தோன்றும். ஒரு தேர்ந்த அரசியல் தெளிவு கொண்ட இயக்குநர் பா. இரஞ்சித். இவர் குறித்து இயக்குநர் வெற்றி மாறன் கூறும்போது “பா. இரஞ்சித் ஒரு தெளிவான அரசியல்வாதி . அதனால் தான் அவரது படங்களில் சிறிதளவும் அரசியல் தவறுகள் தெரிவதில்லை” எனக் கூறியுள்ளார். ஆனால், இந்த சித்தாந்தங்கள் எல்லாம் கடந்து பா.இரஞ்சித் எனும் சிறந்த கலைஞனின் படைப்புகள் கலை ரீதியாகவும் மிக முக்கியமானவைகளாக உள்ளன. குறிப்பாக, பா. இரஞ்சித் இடம் உலகப் புகழ்பெற்ற கலை இலக்கிய கோட்பாடான ‘மாய எதார்த்தவாதம்’ குறித்த மிகுந்த ஆர்வம் இருந்ததை பல்வேறு இடங்களில் பார்த்திருக்க முடியும். ‘குதிரைவால்’ போன்ற படங்களை அவர் தயாரித்ததற்கு காரணமும் அதுவே. தற்போது வெளியாகியுள்ள ‘ தங்கலான் ‘ திரைப்படத்தில் அதன் வெளிப்பாடு மிக அதிகமாகவே தெரிந்ததைக் காண முடிந்தது. ஒன்லைன்: கர்நாடகா எல்லையில் உள்ள கோலார் பகுதியில் இருக்கும் தங்க சுரங்கத்தை தேடிக் கண்டுபிடிக்க விக்ரம் மற்றும் அவரது கிராமத்தினரை நாடுகிறார் ஆங்கிலேயரான டேனியல். சொந்த நிலத்தில், பண்ணை அடிமையாக இருப்பதற்கு வெள்ளைக் காரனிடம் தகுந்த கூலிக்கு வேலை செய்யலாம் என நினைத்து ஊர் மக்களுடன் உதவி செய்ய ஒப்புக் கொள்கிறார் விக்ரம். ஆனால், அந்தப் பகுதியை ‘ ஆரத்தி ‘ என்கிற வனதேவதை காத்து வருகிறாள் என்பது அந்த ஊர் மக்களின் நம்பிக்கை. ஆக, விக்ரம் தன் மக்களின் துணையோடு சுரங்கத்தை கண்டுபிடித்தாரா? யார் அந்த ‘ஆரத்தி’ ? எதற்காக அந்த தேவதை இந்தத் தங்க சுரங்கத்தைக் காக்க வேண்டும் போன்ற விஷயங்களைச் சொல்வதே ‘தங்கலான்’ திரைப்படத்தின் கதை. அனுபவ பகிர்தல்: இந்தப் படத்தைப் பார்த்து முடிக்கும் போது, தொழில் நுட்ப ரீதியாக தமிழ் சினிமாவின் ஓர் மிகச் சிறந்த படத்தைப் பார்த்த அனுபவம் நமக்கு கிடைத்தது. அதற்குக் காரணம் ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு, படத்தொகுப்பு மற்றும் சரியான நடிகர் தேர்வு. இவை அனைத்தும் அந்த வாழ்வியலை நாம் அப்படியே நேரில் காணும் ஒரு உணர்வை நமக்குள் ஏற்படுத்துகிறது. படத்தில் வரும் சில அரசியல் மற்றும் வரலாற்று சார்ந்த குறியீடுகள் நமக்கு சுவாரஸ்யம் தந்தது. அவை குறித்து மேலும் தெரிந்து கொள்ள வேண்டும் என்கிற ஆர்வத்தையும் உருவாக்கியது. தமிழ் சினிமாவிற்கு மிகவும் புதிதான மாய எதார்த்தவாத திரை மொழியில் ஒரு வரலாற்று கதையை பார்க்கும் அனுபவம், படத்தின் பல கூறுகளை ஆழ்ந்து சிந்தித்து, விவாதிக்க தூண்டுகிறது. ஜீவி பிரகாஷின் பின்னணி இசை மற்றும் படத்தின் ஒலிப்பதிவு சேர்ந்து இயக்குநர் நினைக்கும் உணர்வை நமக்குக் கடத்துகிறது. இந்தப் படத்தை நல்ல ஒலிவசதி உள்ள திரையரங்கில் பார்த்தல் நன்று. விரிவான விமர்சனம்: படத்தின் முதல் காட்சியிலேயே நம்மை அந்தக் கதை உலகிற்குள் அழைத்து செல்கிறார் பா.இரஞ்சித். இதற்கு முக்கியக் காரணம் நேர்த்தியான தொழில் நுட்பம், நடிகர்களின் இயல்பான நடிப்பு. நடிகர் விக்ரம், தான் ஏற்ற கதாபாத்திரத்தை மிக சிறப்பாக நடித்துள்ளார் எனக் கூறுவதோ, எழுதுவதோ புதிதான விஷயம் அல்ல. அந்த அளவிற்கு தனது நடிப்பாற்றலின் உச்சத்தை ஏற்கனவே நிரூபித்துள்ளார் விக்ரம். இந்தப் படத்தின் அவரது உடல்மொழி, பாவனை, வசன உச்சரிப்பு என அனைத்தும் கச்சிதம் என்பதைத் தாண்டி சர்வதேச தரம் என்று தான் சொல்ல வேண்டும். அவர் மட்டுமின்றி படத்தில் நடித்த பார்வதி, கணவனிடத்து அதிகாரம் காட்டுவது, பின் கொஞ்சிக் கொள்வது என அந்த வாழ்வியல் சார்ந்த பெண்ணாகவே தன்னை வெளிப்படுத்தியுள்ளார். அதிலும் குறிப்பாக, முதன் முதலாய் ரவிக்கை கட்டும் போது அவர் உடல் எவ்வாறு உணர்ந்தது என்பது வரை நமக்கு பாவனைகளில் கடத்துகிறார். படத்தில் நடித்த ஹரி கிருஷ்ணன், பிரீத்தி கரண், அர்ஜுன் போன்ற நடிகர்களின் திறமைக்கு இதையடுத்து நிச்சயம் தகுந்த பாத்திரங்கள் அவர்களை வந்து சேர வேண்டும். படத்தில் பல கதாபாத்திரங்கள் இருந்தாலும், நம்மை பெரிதும் கவர்ந்தது பசுபதியின் கதாபாத்திரம் தான். அந்தக் கதாபாத்திரம் எழுதப்பட்டிருந்த விதம், பசுபதியின் நடிப்பு என அனைத்தும் நம்மால் ரசிக்க முடிந்தது. இன்னும் சொல்லப் போனால் படத்தின் முதன்மை கதாபாத்திரம் ஒரு விஷயத்தை செய்து முடிக்கும் போது கூட நமக்கு வராத உணர்ச்சி, பசுபதி கதாபாத்திரம் இன்னோரு பாத்திரத்தை அடிக்கும் போது ஏற்படுகிறது. ஆரத்தியாக வரும் மாளவிகா மோகனன், சண்டைக் காட்சிகளில் மிகவும் கடினமாக உழைத்தது தெரிகிறது. நடிகர்களின் நடிப்பு இவ்வளவு நேர்த்தியாக வெளிப்பட்டதற்கு மற்றொரு காரணம் கிஷோரின் ஒளிப்பதிவு. குறிப்பாக விக்ரம் – பார்வதி காதல் காட்சி, விக்ரம் கம்பீரமாக வந்து நிற்கும் ஒரு சண்டைக் காட்சி என பல்வேறு காட்சியை மெருகூட்டுவது ஒளிப்பதிவு தான். தலை இல்லா புத்தர் சிலை, ஆடை அரசியல், நிலத்தின் அரசியல், சாதி அரசியல் என இரஞ்சித் பேசும் அனைத்து விஷயங்களையும் படத்தின் சின்னச் சின்னக் கூறுகளாக வைத்தது இரஞ்சித்திடம் எப்போதும் இருக்கும் தனிச் சிறப்பே. ஆனால், படத்தின் முதன்மை கதாபாத்திரம் முதல் பசுபதி பாத்திரம் தவிர்த்து எந்த கதாபாத்திரத்துடனும் நம்மால் ஒட்ட முடியவில்லை. படத்தின் முதல் பாதி வரை எந்த ஒரு ஒட்டுதலும் இல்லாமல் நகரும் திரைக்கதை இரண்டாம் பாதியில் இருந்து விறுவிறுப்பாகிறது. படத்தில் பேசப்படும் மாய எதார்த்தாவாதம் தமிழ் சினிமாவிற்கு மிகப் புதுமையானது என்பதால் படத்தின் மைய சித்தாந்தத்திற்கே எதிரான சில புரிதலை மக்களுக்குக் கடத்த நேரிடுமோ என்கிற எண்ணம் சற்றுத் தோன்றியது. எதார்த்தவாதத்தில் இருக்கும் சமூக நீதிக் கோட்பாடு, வரலாற்று கொடுமைகள் போன்ற விஷயத்தை மாய எதார்த்தவாத கதை சொல்லல் முறை கொண்டு சொல்ல வினைந்தது சரியாக ஒன்று சேரவில்லை. ஆக, படத்தின் பல காட்சிகள் பார்வையாளர்களோடு ஒட்டாமல் நகர்கிறது. அடுத்தடுத்த படத்தின் முக்கிய கதாபாத்திரங்களின் மரணங்களும் நம்மைப் பெரிதாக பாதிக்கவில்லை. படத்தின் பல்வேறு கூறுகள் கலை ரீதியாகவும், வரலாற்று ரீதியாகவும் ஆய்வு செய்து பார்க்கக் கூடிய அளவிற்கு படைத்திருந்தாலும் அதில் இருக்கும் சுவாரஸ்ய குறைவு நம்மை நெருடுகிறது. மொத்தத்தில் இந்த ‘ தங்கலான் ‘ நமக்குத் தரும் புது அனுபவத்தை கொஞ்சம் சுவாரஸ்யம் சேர்த்து நேர்த்தியான திரைக்கதையோடு தந்திருந்தால் மிகச் சிறந்த திரைப்படமாக இருந்திருக்கும். இருந்தாலும், இந்தத் திரைப்படம் தரும் அனுபவத்திற்காக நிச்சயம் அனைவரும் திரையரங்கில் பார்க்க வேண்டிய ஒரு திரைப்படம் தான். https://minnambalam.com/cinema/pa-ranjith-and-vikaram-thangalan-movie-review/
-
தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி அறிமுகம் : நிறம் என்ன தெரியுமா?
தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி அறிமுகம் : நிறம் என்ன தெரியுமா? Aug 20, 2024 10:54AM வரும் ஆகஸ்ட் 22ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை அக்கட்சியின் தலைவர் விஜய் அறிமுகம் செய்ய உள்ள நிலையில், தற்போது அக்கொடி எந்த நிறத்தில் இருக்கும் என்ற சூப்பர் தகவல் வெளியாகியுள்ளது. தளபதி என்று ரசிகர்களால் அழைக்கக்கூடிய பிரபல நடிகர் விஜய் தனது நற்பணி மன்றத்தை அரசியல் கட்சியாக மாற்றி அதிகாரப்பூர்வமாக ’தமிழக வெற்றிக் கழகம் கட்சி’ பெயரை கடந்த பிப்ரவரியில் அறிவித்தார். கட்சியின் முதல் மாநாடு செப்டம்பர் மாதத்தில் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் பிரமாண்டமாக நடத்துவதற்கான வேலைகள் நடந்து வருகிறது. மாநாட்டுக்கு கேரளா, கர்நாடகா, ஆந்திரா, புதுச்சேரி ஆகிய நான்கு மாநில முதல்வர்களை அழைக்கவும் திட்டமிட்டுள்ளார் விஜய். முறையாக அழைப்பு கொடுப்பதற்கு முன்பு நான்கு முதல்வரிடமும் பேசப்பட்டுள்ளதாகவும் சொல்கிறார்கள் விஜய்க்கு நெருக்கமானவர்கள். மாநாட்டுக்கு முன்பாக ஈசிஆர் சாலையில் உள்ள பனையூர் அலுவலகத்தில் வரும் ஆகஸ்ட் 22 ஆம் தேதி விஜய் கட்சி கொடியை அறிமுகம் செய்கிறார். இதற்காக கட்சி நிர்வாகிகள் மற்றும் சிறப்பு அழைப்பார்கள் என 300 பேருக்கு அழைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கொடியின் வர்ணங்கள் பற்றி தவெக நிர்வாகியிடம் விசாரித்தோம். அதற்கு, “மஞ்சள், வெள்ளை, சிவப்பு என மூவர்ண நிறத்தின் மத்தியில் வாகை பூ பதிக்கப்பட்டுள்ளது. வாகை பூ வெற்றியை உணர்த்தும். சங்ககாலத்தில் போரில் வெற்றிப் பெற்ற வீரர்களுக்கு வாகை பூக்களை சூடுவார்கள். அந்த வகையில் மூவர்ண கொடியில் வாகை பூ பதிக்கப்பட்டுள்ளது. இனி எங்கள் பயணம் வெற்றியை நோக்கிதான்” என்கிறார் தவெக நிர்வாகி ஒருவர். https://minnambalam.com/political-news/vijay-tvk-flag-introduction-do-you-know-what-the-color-is/
-
தமிழ் பொது வேட்பாளர் தேவையற்ற விடயமே என்கிறார் சாணக்கியன்!
தமிழ் பொது வேட்பாளர் தேவையற்ற விடயமே என்கிறார் சாணக்கியன்! தற்போதைய சூழ்நிலையில் இலங்கை தமிழரசுக்கட்சியின் பெரும்பாலான வேட்பாளர்கள் தமிழ் பொது வேட்பாளர் தேவையற்ற விடயம் என்பதில் ஒருமித்த கருத்துடன் உள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். இன்னொரு வேட்பாளரை வெல்ல வைப்பதற்காகவே இவ்வாறான தமிழ்ப் பொது வேட்பாளர் என்ற விடயம் அரங்கேற்றப்பட்டது என்பது முற்று முழுதான உண்மை எனவும் அவர் தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் இன்று கோடிக்கணக்கான சொத்தினை கொண்டுள்ளார். அவருக்கு அந்த சொத்து எவ்வாறு வந்தது என்பதை மக்களுக்கு சொல்ல வேண்டும் எனவும் தெரிவித்தார். மட்டு. ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். அந்த வகையில் அனுரகுமார திஸாநாயக்கா, ரணில் விக்கிரமசிங்க மற்றும் சஜித் பிரேமதாஸ குறிப்பிடக் கூடிய மூவராவர். அத்தோடு நாமல் ராஜபக்சவும் களத்தில் உள்ளனர். இந்நிலையில் தெற்கிலேயுள்ள வாக்குகள் சிதறிச் சின்னா பின்னமாகக் கூடிய நிலை உருவாகலாம். அந்த வகையில் தமிழ் மக்களுடைய வாக்குகளுக்குக் கூடிய பெறுமதி காணப்படும். அதில் கிழக்கு மாகாணத்திலுள்ள மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் மக்களுடைய அதிகூடிய வாக்குகள் இருக்கிறது. இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்ட மக்கள் சிந்தித்து தமது பெறுமதியான வாக்கினை அளிக்க வேண்டிய கடப்பாடுடையவர்கள். இவ்வாறான நிலையில் மட்டக்களப்பு மாவட்டத் தமிழரசுக் கட்சியினராகிய நாம் நேற்று முன்தினம் எமது மாவட்ட, தொகுதி மற்றும் பிரதேச மட்ட மகளீர், வாலிபர் அணி உறுப்பினர்களை அழைத்து அவர்களது கருத்துக்களை உள்வாங்கியிருந்தோம். அந்தவகையில் நாம் அனைவரது தேர்தல் விஞ்ஞாபனங்களை ஆராய்ந்தே முடிவை எடுக்க வேண்டுமென்ற கருத்தினை வெளிப்படுத்தியிருந்தனர். அத்தோடு மாவட்டக் குழுவின் தீர்மானத்தை மத்திய குழுவுக்குச் சமர்ப்பிப்போம். வவுனியாக் கூட்டத்தில் கலந்து கொண்ட 33 உறுப்பினர்களில் ஒருவரைத் தவிர மற்றைய உறுப்பினர்கள் அனைவரும் தமிழ்ப் பொது வேட்பாளர் என்ற விடயம் தேவையற்றதொன்று என்ற கருத்தை வெளிப்படுத்தியிருந்தனர். இவ்வாறான நிலையில் கட்சி உறுப்பினர்கள் எந்தவொரு வேட்பாளரையும் ஆதரிக்கும் வகையில் கூட்டங்களில் கலந்து கொள்வதைத் தவிர்த்தல் வேண்டும். ஏனெனில் தமிழரசுக் கட்சியின் செயற்குழு உறுப்பினர் ஒருவர் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதால் கட்சி உறுப்பினர்களிடையே குழப்பநிலை உருவாகலாம். நாம் கட்சி ரீதியாக பொது வேட்பாளருக்கு ஆதரிப்பதாக எதுவித கருத்தும் இதுவரை வெளியிடவில்லை. அவர் தனது விருப்பத்திற்கிணங்க சில கட்சிகளின் ஆதரவுடனே முன்னெடுக்கப்பட்ட விடயமாகும். அத்தோடு தமிழ்ப் பொது வேட்பாளர் என்ற விடயத்தை தானே முதலில் குருக்கள் மடத்தில் இடம்பெற்ற புத்தக வெளியீட்டில் வெளிப்படுத்தியதாகவும் ஊடகமொன்றில் கருத்து வெளியிட்டிருந்தார். இந்நிலையில் இன்னொரு வேட்பாளரை வெல்ல வைப்பதற்காகவே இவ்வாறான தமிழ்ப் பொது வேட்பாளர் என்ற விடயம் அரங்கேற்றப்பட்டது என்பது முற்று முழுதான உண்மை. இவ்வாறான நிலையில் ரணில் விக்கிரமசிங்க தனக்கெதிராக நாமல் ராஜபக்ச களம் இறங்குவார் என எதிர்பார்க்கவில்லை. அவரின் நினைப்பில் ஜனாதிபதி தேர்தல் வரும்போது மொட்டுக்கட்சி தமக்கு ஆதரவளிக்குமென்ற உணர்வே காணப்பட்டது. தமிழ்ப் பற்றாளர்கள் ராஜபக்ச தரப்பினருக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்பது தெரியும். அதனால்தான் வாக்கைப் பிரிக்கும் செயற்பாடாகத்தான் இருக்கும் என ஆரம்பத்திலிருந்தே கூறுகிறேன். இந்தப் பொது வேட்பாளர் என்ற விடயத்தில் ஈ.பி.ஆர்.எல்.எப் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் உறுதியாக இருக்கிறார். ஏனெனில் அவருக்கான அடையாளம் இல்லை. மக்களால் நிராகரிக்கப்பட்டவர். இது தமிழ் மக்களை அடகு வைக்கும் செயற்பாடாகும். இவ்வாறான காலகட்டத்தில் எமது இளைஞர்களின் எதிர்காலச் செயற்பாடுகளுக்கு பதில் கூற வேண்டிய தேவையுள்ளது. இது நாம் எடுத்த தீர்மானமல்ல.இஸ்லாமிய சகோதர்களில் சிலர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் சஜித் பிரேமதாஸ பக்கமும் இருக்கின்றனர். எனவே மாவட்ட தமிழ் மக்கள் எமது கட்சியின் முடிவின்படி செயற்பட வேண்டுமென்றார். http://www.samakalam.com/தமிழ்-பொது-வேட்பாளர்-தேவ-2/
-
முன்னைய தேர்தல்களில் இருந்து முற்றிலும் வேறுபட்ட அரசியல் கோலங்களுடன் 2024 ஜனாதிபதி தேர்தல்
முன்னைய தேர்தல்களில் இருந்து முற்றிலும் வேறுபட்ட அரசியல் கோலங்களுடன் 2024 ஜனாதிபதி தேர்தல் August 19, 2024 — வீரகத்தி தனபாலசிங்கம் — இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் வரலாற்றில் இந்த தடவையே மிகவும் அதிக எண்ணிக்கையில் 39 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். இதுகாலவரையில் ஜனாதிபதி தேர்தல் பிரதான இரு அரசியல் கட்சிகளின் அல்லது அவற்றின் தலைமையிலான கூட்டணிகளின் வேட்பாளர்களுக்கு இடையிலான நேரடிப் போட்டியாகவே இருந்து வந்தது. ஆனால் இந்த தடவை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரா குமார திசாநாயக்க ஆகியோருக்கு இடையிலான மும்முனைப் போட்டியாகவே தேர்தல் அமையப்போகிறது. இறுதி நேரத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மூத்த புதல்வனும் ராஜபக்ச குடும்பத்தின் அரசியல் வாரிசுவுமான நாமல் ராஜபக்ச களத்தில் இறக்கப்பட்டிருப்பதை அடுத்து மும்முனைப் போட்டி என்ற தோற்றப்பாட்டில் மாற்றம் ஏற்படக்கூடிய வாய்ப்பு இருக்குமா என்ற கேள்வியுடன் சில அரசியல் அவதானிகள் குழப்பகரமான கருத்துக்களை வெளியிடுகிறார்கள். அதேவேளை நாமல் ராஜபக்சவையும் மௌபிம ஜனதா கட்சியின் தலைவர் திலித் ஜயவீரவையும் சேர்த்து ஐந்து பிரதான வேட்பாளர்களுக்கு இடையிலான போட்டியாக ஜனாதிபதி தேர்தலை சில ஊடகங்கள் காண்பிக்க முயற்சிக்கின்றன. விக்கிரமசிங்கவும் பிரேமதாசவும் பெருவாரியான கட்சிகள், குழுக்களுடன் சேர்ந்து கூட்டணிகளை அமைக்கிறார்கள். ராஜபக்சாக்களை கைவிட்டு வருபவர்கள் இருவருடனும் இணைகிறார்கள். சில கட்சிகளின் தலைவர்கள் எடுக்கும் முடிவுகளுக்கு மாறாக அவற்றின் பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் சொந்தத்தில் முடிவுகளை எடுத்து வெவ்வேறு அணிகளில் தங்களை இணைத்துக்கொள்கிறார்கள். கட்சித் தாவல்கள் தீவிரமடைந்திருக்கின்றன. எவர் எந்தப் பக்கம் நிற்கிறார் என்று குழப்பமாக இருக்கிறது. இந்த இலட்சணத்தில் புதிய அரசியல் கலாசாரம், முறைமை மாற்றம் பற்றியும் வாய்கூசாமல் பேச்சு. இந்த தடவை ஜனாதிபதி தேர்தல் முற்றிலும் வேறுபட்ட ஒரு அரசியல் சூழ்நிலையில் இடம்பெறுகிறது. இரு வருடங்களுக்கு முன்னர் ராஜபக்சாக்களின் ஆட்சிக்காலத்தில் ஏற்பட்ட படுமோசமான பொருளாதார நெருக்கடி இலங்கையின் வரலாற்றில் முன்னென்றும் இல்லாத வகையிலான பிரமாண்டமான மக்கள் கிளர்ச்சியை மூளவைத்தது. ராஜபக்சாக்களை அதிகாரத்தில் இருந்து விரட்டிய அந்த கிளர்ச்சிக்கு பிறகு முதற் தடவையாக தங்களது வாக்குரிமையை பயன்படுத்துவதற்கான சந்தர்ப்பம் இலங்கை வாக்காளர்களுக்கு கிடைத்திருக்கிறது. கிளர்ச்சியின் விளைவாக நாட்டு மக்களின் அரசியல் சிந்தனையில் ஏதாவது மாற்றம் ஏற்பட்டிருக்குமானால் அதை இந்த தேர்தல் நிச்சயம் பிரதிபலிப்பதாக அமையவேண்டும். முன்னைய ஜனாதிபதி தேர்தல்களைப் போலன்றி இந்தத் தடவை பிரசாரங்கள் தேர்தலுக்கான அறிவிப்பை தேர்தல்கள் ஆணைக்குழு முறைப்படி அறிவிப்பதற்கு பல மாதங்களுக்கு முன்னதாகவே தொடங்கி விட்டன. சஜித் பிரேமதாசவும் அநுரா குமாரவும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப் போவதாக கடந்த வருடமே அறிவித்து தங்கள் பிரசாரங்களை முன்னெடுக்கத் தொடங்கினார்கள். ஆனால், ஜனாதிபதி விக்கிரமசிங்கவை பொறுத்தவரை தேர்தலில் போட்டியிடப் போவதாக கடந்தமாத பிற்பகுதியிலேயே அறிவித்தார். அவரது ஐக்கிய தேசிய கட்சி பலவீனமடைந்திருப்பதால் தன்னை தேர்தலில் ஆதரிக்கக்கூடிய கூட்டணி ஒன்றை உருவாக்குவதில் அவர் கவனம் செலுத்த வேண்டியிருந்தது. தனது கட்சியின் சார்பிலான வேட்பாளராக அன்றி பல்வேறு அரசியல் கட்சிகளில் இருந்து பிரிந்து வந்திருப்பவர்களை உள்ளடக்கிய ஒரு விசித்திரமான கதம்பக் கூட்டணி ஒன்றின் ஆதரவுடன் சுயேச்சை வேட்பாளராக அவர் போட்டியிடுகிறார். 32 அரசியல் கட்சிகள் குழுக்களை உள்ளடக்கிய கூட்டணி ஒன்று தொடர்பான உடன்படிக்கை கடந்த வெள்ளிக்கிழமை கைச்சாத்திடப்பட்டது. இலங்கையின் பிரதான அரசியல் கட்சி ஒன்றின் தலைவர் தேசியத் தேர்தல் ஒன்றில் சுயேச்சையாக போட்டியிடுவது இதுவே முதற்தடவையாகும். பொதுஜன பெரமுனவின் சார்பில் தனியான வேட்பாளரை களமிறக்குவதற்கு ராஜபக்சாக்கள் தீர்மானித்ததை அடுத்து அவர்களைக் கைவிட்டு அந்த கட்சியின் பெரும்பாலான பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியின் பக்கத்துக்கு வந்து விட்டார்கள். அதனால் ஜனாதிபதி மகிழ்ச்சி அடைந்தாலும், அவர்கள் ஒவ்வொருவரும் தனக்கு கொண்டுவரக்கூடிய வாக்குகளின் எண்ணிக்கையைப் பற்றி உண்மையில் அவர் சிந்தித்துப் பார்க்க வேண்டியது அவசியம். தங்கள் தொகுதிகளில் மக்கள் மத்தியில் ஜனாதிபதிக்கு ஆதரவு அதிகரித்துவருவதன் காரணமாகவே அந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் ராஜபக்சாக்களை கைவிட்டு அவரை ஆதரிக்க முண்டியடிக்கிறார்கள் என்று சில அவதானிகள் கூறுகிறார்கள். ராஜபக்சாக்களின் அதிவிசுவாசிகளாக இருந்த அரசியல்வாதிகள் கூட தங்களது ஆதரவாளர்களின் வேண்டுகோளின் பிரகாரமே விக்கிரமசிங்கவை ஆதரிப்பதற்கு தாஙகள் தீர்மானித்ததாக பகிரங்கமாகக் கூறுகிறார்கள். ஜனாதிபதி தனது பிரசாரத்தை முற்றிலும் வித்தியாசமான ஒரு தந்திரோபாயத்துடன முன்னெடுப்பதை காணக்கூடியதாக இருக்கிறது. தன்னை அல்ல தேசத்தையே முன்னிலைப்படுத்தி மக்கள் மத்தியில் பிரசாரம் செய்யப்போவதாக அவர் பிரகடனம் செய்திருக்கிறார். எவரையும் எதிர்த்து தேர்தலில் போட்டியிடவில்லை என்றும் மற்றைய வேட்பாளர்களைப் போலன்றி தனது எதிர்காலத்துக்காக அல்ல நாட்டின் எதிர்காலத்துக்காகவே போட்டியிடுவதாகவும் கூறும் அவர் தேர்தலில் வெற்றிபெற்றால் சகல கட்சிகளுடனும் சேர்ந்து பணியாற்றத் தயாராக இருப்பதாகவும் அறிவித்திருக்கிறார். “என்னுடன் இணைந்து பணியாற்ற முன்வருமாறு பிரேமதாசவுக்கும் அநுரா குமாரவுக்கும் முன்னரும் நான் அழைப்பு விடுத்தேன். ஆனால் அவர்கள் அதை நிராகரித்துவிட்டார்கள். அதற்காக அவர்கள் இப்போது கவலைப்படக்கூடும். அடுத்த தடவை அவர்களை எந்த ஆட்சேபனையும் இல்லாமல் அரசாங்கத்திற்குள் கொண்டுவருவேன். அவர்களுக்கு மாத்திரமல்ல, பொதுஜன பெரமுனவின் வேட்பாளரான நாமல் ராஜபக்சவுக்கும் அழைப்பு விடுக்கிறேன்” என்று கடந்த வாரம் பத்திரிகை ஆசிரியர்களையும் ஊடக நிறுவனங்களின் தலைவர்களையும் சந்தித்தபோது ஜனாதிபதி கூறினார். தேர்தல் பிரசார மேடைகளில் பெரும்பாலும் அவர் எந்த வேட்பாளரையும் தாக்கிப் பேசப்போவதில்லை என்பது நிச்சயம் என்று தெரிகிறது. இலங்கையை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்டெடுத்து அபிவிருத்தியை நோக்கி வழிநடத்துவதற்கு சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கையே ஒரேயொரு மார்க்கம் என்று கூறும் அவர் அந்த உடன்படிக்கையின் பிரகாரம் தனது தலைமையிலான அரசாங்கம் கடந்த இரு வருடங்களாக முன்னெடுத்துவரும் பொருளாதார மறுசீரமைப்பு நடவடிக்கைகளைத் தொடருவதற்கு தனக்கு அடுத்த ஐந்து வருடங்களுக்கு ஆணை தருமாறு மக்களை கேட்கிறார். மற்றைய பிரதான வேட்பாளர்களும் கூட சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கையை எதிர்க்கவில்லை என்பதையும் சில திருத்தங்களுடன் அதையே தொடரப் போவதாகக் கூறுவதையும் ஜனாதிபதி சுட்டிக் காட்டுகிறார். புதிய வாக்குறுதிகளை அவர் வழங்கவில்லை. தற்போது செல்லும் பாதையில் தொடர்ந்து பயணிப்பதற்கே அவர் மக்களின் ஆணையைக் கோருகிறார். அத்துடன் கடந்த காலத்தைப் போன்று கட்சி அரசியல் செய்வதில் நாட்டம் காட்டாமல் சகல கட்சிகளும் ஆதரிக்கக்கூடிய ஒரு சுயேச்சை வேட்பாளராகவே தன்னை முன்னிறுத்தியிருக்கும் விக்கிரமசிங்க கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்ட புதிய ஒரு ‘அவதாரமாக’ தன்னைக் காட்சிப்படுத்துகிறார். ஆழமான கட்சி அரசியல் போட்டாபோட்டிகள் நிறைந்த அரசியல் கலாசாரத்தைக் கொண்ட இலங்கைச் சமுதாயத்தில் ஜனாதிபதியின் தற்போதைய அணுகுமுறை எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதும் மக்கள் மத்தியில் அதற்கு எந்தளவுக்கு வரவேற்பு இருக்கும் என்பதும் முக்கியமான கேள்விகள். கடந்த வியாழக்கிழமை தேர்தல்கள் ஆணைக்குழு அலுவலகத்தில் தங்களது நியமனப்பத்திரங்களை கையளித்த பிறகு மூன்று பிரதான வேட்பாளர்களும் ஆதரவாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மத்தியில் கருத்துக்களை வெளியிட்டார்கள். “இலங்கை மக்களுக்கு பிரகாசமான ஒரு எதிர்காலத்தை உருவாக்குவதற்காகவே நான் மக்களின் ஆணையை நாடி நிற்கிறேன். நாம் நாட்டைப் பொறுப்பேற்று உறுதிப்பாட்டைக் கொண்டுவந்தோம். உங்களுக்கு இப்போது உணவு, எரிபொருள் மற்றும் ஏனைய அத்தியாவசியப் பொருட்கள் எல்லாம் கிடைக்கின்றன. இது ஒரு தொடக்கம் மாத்திரமே. உறுதிப்பாடுடைய ஒரு தேசமாக இலங்கையை மாற்றுவதற்கு பெருமளவு பணிகளை செய்ய வேண்டியிருக்கிறது. நாம் ஆட்சிப்பொறுப்பை ஏற்று சட்டம் ஒழுங்கை நிவைநாட்டியிருக்காவிட்டால் பங்களாதேஷின் கதி இலங்கைக்கு ஏற்பட்டிருக்கும். அதனால் இந்த பணிகளை நிறைவேற்றுவதற்கு எனக்கு ஒரு ஆணையைத் தருமாறு மக்களிடம் வேண்டுகிறேன். “நெருக்கடியான காலப்பகுதியில் நாட்டைப் பொறுப்பேற்குமாறு கேட்கப்பட்டபோது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பயந்து ஓடினார்கள். அத்தகைய ஆட்களிடம் நாட்டைக் கையளிக்கப் போகின்றீர்களா இல்லையா என்பதை தீர்மானியுங்கள்” என்று ஜனாதிபதி கூறினார். ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தனது தந்தையார் பாணியில் பொதுமக்கள் யுகம் ஒன்றைக் கொண்டு வரப்போவதாக சூளுரைத்தார். “பொதுமக்களின் யுகம் ஒன்றை உருவாக்குவதாக நான் உறுதியளிக்கிறேன். அபிவிருத்தியின் பயன்களை நாட்டில் வாழும் ஒவ்வொருவரும் அனுபவிக்கக்கூடிய சூழ்நிலையை நான் உருவாக்குவேன். எனக்கு ஆதரவாக அணிதிரளுமாறு பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கிறேன்” என்று அவர் கூறினார். மக்களுக்கு மாற்றம் ஒன்று அவசியமாகத் தேவைப்படுகிறது என்று கூறிய தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரா குமார தங்களது முகாம் மாத்திரமே அத்தகைய மாற்றத்தை கொண்டுவரக்கூடிய வல்லமையைக் கொண்டது என்று குறிப்பிட்டார். “கடந்த காலத்தில் பெருமளவு தேர்தல்கள் நடத்தப்பட்ட போதிலும் கூட வருடக்கணக்காக மககள் சொல்லொணா இடர்பாடுகளை அனுபவித்தார்கள். இந்த தேர்தலில் எங்களால் வெற்றிபெற முடியும். துன்பங்களை அனுபவிக்கும் நிலவரம் மாறவேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள். நாட்டையும் மக்களையும் இடர்பாடுகளில் இருந்து மீட்டெடுக்கக்கூடியதாக இந்த தேர்தலை எம்மால் மாற்றமுடியும். அதை எமது முகாமினால் மாத்திரமே சாதிக்கமுடியும் ” என்று அவர் கூறினார். நாமல் ராஜபக்சவை பொறுத்தவரை தனது அரசியல் எதிர்காலத்தை மனதிற்கொண்டு பொதுஜன பெரமுனவை மீளக்கட்டியெழுப்பும் ஒரு முயற்சியாகவே ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகிறார். மக்கள் கிளர்ச்சியின் விளைவாக ராஜபக்ச குடும்பம் ஆட்சியதிகாரத்தில் இருந்து அகற்றப்பட்டதற்கு பிறகு அந்த குடும்பத்தின் முக்கிய உறுப்பினர் ஒருவர் தேர்தல் களத்தில் இறங்கியிருக்கிறார் என்பதே நாமல் ராஜபக்சவின் பிரவேசத்தைப் பொறுத்தவரை குறிப்பிடத்தக்க முக்கிய அம்சமாகும். ராஜபக்ச குடும்பத்தின் எந்தவொரு உறுப்பினரும் இந்த தடவை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் நோக்கத்தைக் கொண்டிருக்கவில்லை. ஜனாதிபதி விக்கிரமசிங்கவை ஆதரிப்பதே அவர்களுக்கு இருக்கக்கூடிய சிறந்த தெரிவு என்று ஒரு கட்டத்தில் பரவலாக நம்பப்பட்டது. ஆனால் தங்களது எதிர்கால அரசியல் வாய்ப்புக்களை உறுதிசெய்யும் நோக்கில் அவர்கள் முன்வைத்த கோரிக்கைகளுக்கு அல்லது நிபந்தனைகளுக்கு இணங்குவதற்கு ஜனாதிபதி திட்டவட்டமாக மறுத்துவிட்டதை அடுத்து பொதுஜன பெரமுனவின் சார்பில் தனியான வேட்பாளரை நிறுத்தும் முடிவுக்கு அவர்கள் வந்தார்கள். விக்கிரமசிங்கவுடன் முரண்படுவதற்கு முன்னதாகவே தங்களது கட்சியின் சார்பில் நிறுத்தப்படக்கூடிய வேட்பாளராக தொழிலதிபர் தம்மிக்க பெரேராவை முன்னிறுத்தியதன் மூலம் ஜனாதிபதியை பயமுறுத்தும் பாணியில் ராஜபக்சாக்கள் நடந்துகொண்டார்கள். தங்களுக்கு மக்கள் மத்தியில் தற்போது இருக்கின்ற செல்வாக்கை பரீட்சித்துப் பார்ப்பதற்கான ஒரு உரைகல்லாக தம்மிக்கவையும் அவரது பணத்தையும் பயன்படுத்தும் ராஜபக்சாக்களின் பிரயத்தனம் இறுதியில் பயனளிக்கவில்லை. தனிப்பட்ட காரணங்களுக்காக தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை என்று அவர் கடைசி நிமிடத்தில் அறிவித்தார். அதனால் வேறு வழியின்றி நாமல் ராஜபக்சவை களமிறக்க வேண்டிய நிர்ப்பந்தம் ராஜபக்சாக்களுக்கு ஏற்பட்டது. தேர்தலில் போட்டியிடாவிட்டால் பொதுஜன பெரமுனவின் வாக்கு வங்கி சிதறடிக்கப்பட்டுவிடும் என்றும் அதனால் அடுத்த பாராளுமன்ற தேர்தலில் கட்சிக்கு பாதிப்பு ஏற்படும் என்றும் அஞ்சிய ராஜபக்சாக்கள் கட்சியைப் பாதுகாப்பதற்காக நாமல் ராஜபக்சவை போட்டியிட வைத்திருக்கிறார்கள். ஆனால் புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கு மக்கள் வாக்களிக்கப் போகிறார்களா அல்லது பொதுஜன பெரமுனவை பாதுகாக்க வாக்களிக்கப் போகிறார்களா? போரை முடிவுக்கு கொண்டு வந்தமைக்காக தங்களது தவறுகளைப் பொருட்படுத்தாமல் சிங்கள மக்கள் என்றென்றைக்கும் தங்களுக்கு விசுவாசமானவர்களாக இருக்கவேண்டும் என்ற விபரீதமான எண்ணம் ராஜபக்சாக்களிடம் நிலைகொண்டிருக்கிறது. அதேவேளை, சாத்தியமானளவுக்கு கூடுதல்பட்ச வாக்குகளைப் பெறுவதற்காக ராஜபக்சாக்கள் சிறுபான்மைச் சமூகங்களின் அரசியல் உரிமைகளுக்கும் அபிலாசைகளுக்கும் எதிராக பெரும்பான்மையினவாத அணிதிரட்டலை மீண்டும் செய்வதில் நாட்டம் காட்டுவார்கள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் மூன்று பிரதான வேட்பாளர்களும் தேர்தல் நோக்கங்களுக்காக என்றாலும், சிறுபான்மைச் சமூகங்களுக்கு நேசக்கரத்தை நீட்டுவதால் ராஜபக்சாக்களின் முயற்சிகள் சிங்கள மக்கள் மத்தியில் இந்த தடவை பெரிதாக எடுபடுவதற்கு வாய்ப்பில்லை என்று தோன்றுகிறது. எதிர்காலத்தில் நாட்டுக்கு தலைமை தாங்கும் குறிக்கோளைக் கொண்ட இளம் அரசியல் தலைவரான நாமல் ராஜபக்ச தனது குடும்பத்தின் மூத்தவர்களைப் போலன்றி இனவாதமற்ற அரசியல் பாதையை தெரிவுசெய்தால் ஆரோக்கியமானதாக இருக்கும். அவ்வாறு தன்னை மாற்றிக் கொள்வதற்கு முன்வருவாரா? குறைந்த பட்சம் அரசியலமைப்புக்கான 13 வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் ஆரோக்கியமான ஒரு நிலைப்பாட்டை தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் அறிவிப்பதன் மூலம் இனங்களுக்கு இடையிலான உறவுகள் தொடர்பான தனது சிந்தனையை அவர் வெளிக்காட்ட முடியும். ஜனாதிபதி தேர்தலில் 23 அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களும் 16 சுயேச்சை வேட்பாளர்களும் போட்டியிடுகிறார்கள். முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா, முன்னாள் நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ச போன்ற முன்னணி அரசியல்வாதிகளும் அவர்களில் அடங்குவர். ஜனாதிபதியாக தெரிவாவதற்கு அல்லாமல் வேறு நோக்கங்களுக்காகவே அவர்கள் போட்டியிடுகிறார்கள் என்பதில் சந்தேகமில்லை. பெருவாரியான சுயேச்சை வேட்பாளர்களைப் பொறுத்தவரையிலும் கூட நிலைமை அதுவே. ‘அறகலய’ மக்கள் கிளர்ச்சியில் முன்னரங்கத்தில் நின்ற செயற்பாட்டாளர்களால் ஒரு பிரிவினரால் அமைக்கப்பட்ட ‘மக்கள் போராட்டக் கூட்டணி ‘ என்ற இயக்கத்தின் சார்பில் நுவான் போபகே என்ற சட்டத்தரணி தேர்தலில் போட்டியிடுவதும் கவனிக்கத்தக்கது. வழமையாக ஜனாதிபதி தேர்தல்களில் முக்கியத்துவம் பெற்றுவந்த சில அடிப்படைப் பிரச்சினைகள் இந்த தடவை பிரதான வேட்பாளர்களின் கவனத்தைப் பெறுவது சாத்தியமில்லை என்றே தோன்றுகிறது. குறிப்பாக நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிக்கவேண்டும் என்ற நீண்டகாலக் கோரிக்கைக்கு அவர்களின் தேர்தல் விஞ்ஞாபனங்களில் இடம் கிடைக்குமா என்று தெரியவில்லை. தேசிய இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வைப் பொறுத்தவரை 13 வது திருத்தத்தின் நடைமுறைப்படுத்தல் தொடர்பில் பொலிஸ், காணி போன்ற முக்கிய அதிகாரங்கள் குறித்து தெளிவற்ற நிலைப்பாடுகளுடன் கூடிய அறிவிப்புக்களை தவிர வேறு எதையும் பிரதான வேட்பாளர்களின் விஞ்ஞாபனங்களில் எதிர்பார்க்க முடியாது. இலங்கை தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை ஏற்றுக்கொண்டு சமஷ்டி அடிப்படையில் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வைக் காண்பதற்கு தயாராக இருப்பதாக தென்னிலங்கையின் எந்த வேட்பாளராவது உறுதியளித்தால் அவரை ஆதரிப்பது குறித்து பரிசீலிக்க முடியும் என்று கூறும் அரசியல்வாதிகளும் வடக்கில் இருக்கிறார்கள். இன்றைய அரசியல் நிலைவரங்கள் குறித்த அவர்களது புரிதலின் இலட்சணம் அது. இது இவ்வாறிருக்க, தமிழ்ப் பொது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான பாக்கியசெல்வம் அரியநேத்திரன் தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்பு என்ற புதிய அமைப்பினால் வேட்பாளராக நிறுத்தப்பட்டிருக்கிறார். தமிழ் தேசிய பொதுக்கட்டமைப்பு ஆரம்பத்தில் இருந்தே தமிழ்ப்பொது வேட்பாளராக நியமிக்கப்படக்கூடியவருக்கு இருக்கவேண்டியவை என்று வரையறுத்த தகுதிகள் சகலவற்றுக்கும் முரணாக அரியநேத்திரனின் நியமனம் இடம்பெற்றது. அரியநேத்திரன் தமிழ்த் தேசிய அரசியல் அபிலாசைகளின் ஒரு குறியீடே தவிர வேறு ஒன்றுமில்லை என்று அவரை நியமித்தவர்கள் கூறுகிறார்கள். அவரும் தனது குறியீட்டுக் கடமை தேர்தல் தினத்துடன் முடிந்துவிடும் என்று கூறுகிறார். அதனால் அவரைப் பற்றி பேசுவதில் அர்த்தமில்லை. அவரை நிறுத்தியவர்கள் தேர்தல் பிரசாரங்களை எவ்வாறு முன்னெடுக்கப்போகிறார்கள்? தேரதலுக்கு பிறகு என்ன செய்யப் போகிறார்கள்? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். (ஈழநாடு ) https://arangamnews.com/?p=11118
-
அரியநேத்திரனுக்கு இரண்டு வார அவகாசம்; கட்சிக் கூட்டங்களில் பங்கேற்கவும் தடை
‘விளக்கம் எதுவும் கோரி கடிதம் எனக்கு அனுப்பப்படவில்லை’: பொது வேட்பாளர் பா. அரியநேத்திரன் கருத்து August 19, 2024 பொது வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள அரியநேத்திரன் அவர்களுக்கு விளக்கம் கோரி இரண்டு வார கால அவகாசம் கொடுத்து கடிதம் அனுப்பப்பட்டுள்ளதுடன், அதுவரை கட்சிக் கூட்டங்களிலும் பங்கேற்ற தடை விதிக்கப்பட்டுள்ளதாக தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும், பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ‘இலக்கு‘ ஊடகத்திற்கு கருத்து தெரிவித்த பொது வேட்பாளர் பா. அரியநேத்திரன், ”இதுவரையில் தமிழரசுக்கட்சியிடம் இருந்து விளக்கம் கோரிய கடிதம் எனக்கு எதுவும் அனுப்பப்படவில்லை. ஏற்கனவே ஒரு வாரத்துக்கு முதல் ஒரு கூட்டம் கூட்டப்பட்டு அதில் 7 நாட்களுக்குள் பதில் தரவேண்டும் என்றொரு செய்தி வந்திருந்தது. பின் நேற்று மீண்டும் இரண்டாம் முறையாக கூட்டப்பட்ட கூட்டத்தில் 2 வாரத்துக்குள் விளக்கம் தர வேண்டும் என செய்திகளைப் பார்த்தேன். ஆனால் எனக்கு எந்த விளக்கமும் கோரி கடிதங்கள் அனுப்பப்படவில்லை. அப்படி அனுப்பப்பட்டால் அதற்குப் பதில் அளிக்க நான் தயாராக இருக்கிறன். எவ்வளவோ பிரச்சனைகள் இருக்கும் போது, பொது வேட்பாளர் தெரிவு தொடர்பில் அடிக்கடி கூட்டம் கூட்டப்படுவது எந்தமாதிரியான மன நிலையில் அவர்கள் இவ்வாறு செயற்படுகின்றனர் எனத் தெரியவில்லை. நான் பொது வேட்பாளராக போட்டியிடுவதன் நோக்கம், தந்தை செல்வாவின் கொள்கையின் அடிப்படையில் தான் நான் போட்டியிட முடிவெடுத்துள்ளேன். ஆகவே நான் 22ம் திகதி என்ன முடிவு வருதோ அதை ஏற்றுக்கொள்ளத்தயாரக இருக்கிறேன். பொது வேட்பாளராக நான் போட்டியிடுவது தவறாக இருந்தால், ஜனாதிபதித்தேர்தலில் யாரை ஆதரிக்கப்போகின்றார்கள் என்ற எந்த ஒரு முடிவையும் கட்சி இது வரையில் எடுக்கவில்லை. ஆனால் இது தொடர்பில் முடிவெடுக்காமலே கட்சியில் இருக்கிறவர்கள் தனிதனியாகக் கருத்துக்களைக் கூறுகின்றார்கள். அவர்களுக்கு எதிராக கட்சி எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்ற வருத்தம் எனக்குள்ளது. ஏன் பொதுவேட்பாளராக நியமிக்கப்பட்ட இவ்வாறு துரிதமான கூட்டங்களை நடத்துகின்றனர் என்பதை மக்கள் மற்றும் தமிழ்தேசியத்தில் பற்றுள்ளவர்கள் உண்ர்ந்து கொள்ள வேண்டும் என்றுதான் என்னால் கூற முடியும்” என்றார். https://www.ilakku.org/i-have-not-been-sent-a-letter-seeking-any-explanation-general-candidate-b-aryanethrans-opinion/
-
ஜனாதிபதி தேர்தல்; வாக்களிப்பது எப்படி?; 50 வீதம் கிடைக்காவிட்டால் என்ன நடக்கும்?
ஜனாதிபதி தேர்தல்; வாக்களிப்பது எப்படி?; 50 வீதம் கிடைக்காவிட்டால் என்ன நடக்கும்? இம்முறை பிரதான வேட்பாளர்களாக கருதப்படும் பலர் போட்டியிடுகின்றமையினால் 2 ஆம் , 3 ஆம் விருப்பத் தெரிவு வாக்குகளை எண்ணும் நிலைமை உருவாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.ஆகவே தேர்தலில் வாக்களிக்கும் முறை மற்றும் 50 வீதத்திற்கும் அதிகமான வாக்குகள் யாருக்கும் கிடைக்காத பட்சத்தில் 2 , 3 ஆம் விருப்பத் தெரிவு வாக்குகளை எண்ணும் போது பின்பற்றப்படும் நடைமுறைகள் தொடர்பாக வாக்காளர்கள் தெளிவை பெற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. ந.ஜெயகாந்தன் இலங்கையின் 9 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தல் எதிர்வரும் செப்டம்பர் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், அதிகளவில் வாக்குகளை பெற்றுக்கொள்ளலாம் என்று எதிர்பார்க்கப்படும் மற்றும் பிரதான வேட்பாளர்களாக கருதப்படும் ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாச, அனுரகுமார திஸாநாயக்க மற்றும் நாமல் ராஜபக்ஷ ஆகியோருக்கு இடையில் நிலவும் கடும் போட்டியால் இம்முறை எந்தவொரு வேட்பாளருக்கும் 50 வீதத்திற்கும் அதிகமான வாக்குகள் கிடைக்காதுபோகும் நிலைமையே காணப்படுகின்றது. இம்முறை தேர்தலில் 39 வேட்பாளர்கள் போட்டியிடுவதுடன், அவர்களில் சுயேச்சை வேட்பாளராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும், ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளராக சஜித் பிரேமதாசவும், தேசிய மக்கள் சக்தி வேட்பாளரராக அனுரகுமார திஸாநாயக்கவும், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன வேட்பாளராக நாமல் ராஜபக்ஷவும் போட்டியிடுவதுடன், இவர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா, முன்னாள் அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ, வர்த்தகர் திலித் ஜயவீர ஆகியோர் போட்டியிடுகின்றனர். அதேபோன்று தமிழ்ப் பொது வேட்பாளராக அரியநேந்திரனும் களமிறக்கப்பட்டுள்ளார். இதனால் இம்முறை தேர்தலில் எந்தவொரு வேட்பாளருக்கும் 50 வீதத்திற்கும் அதிகமான வாக்குகள் கிடைக்காது போகலாம் என்பதுடன், இதனால் தேர்தலில் 2 ஆம் , 3ஆம் விருப்பத் தெரிவு வாக்குகள் செல்வாக்கு செலுத்தும் வாய்ப்புகள் அதிகமாகவே இருப்பதாக அரசியல் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். இதற்கு முன்னர் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல்களின் போது 2 ஆம் , 3 ஆம் விருப்பத் தெரிவு வாக்குகளை எண்ணும் நிலைமை இது வரையில் உருவாகியிருக்கவில்லை. ஆனபோதும் இம்முறை பிரதான வேட்பாளர்களாக கருதப்படும் பலர் போட்டியிடுகின்றமையினால் 2 ஆம் , 3 ஆம் விருப்பத் தெரிவு வாக்குகளை எண்ணும் நிலைமை உருவாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆகவே தேர்தலில் வாக்களிக்கும் முறை மற்றும் 50 வீதத்திற்கும் அதிகமான வாக்குகள் யாருக்கும் கிடைக்காத பட்சத்தில் 2 , 3 ஆம் விருப்பத் தெரிவு வாக்குகளை எண்ணும் போது பின்பற்றப்படும் நடைமுறைகள் தொடர்பாக வாக்காளர்கள் தெளிவை பெற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. முதலில் வாக்களிக்கும் முறை தொடர்பாக அவதானம் செலுத்துவோமாக இருந்தால், தேர்தலில் மூன்றுக்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிடுகின்றமையினால் வேட்பாளர் ஒருவருக்கோ அல்லது மூன்று வேட்பாளர்களுக்கு முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் விருப்பத் தெரிவுகளையோ வாக்குச்சீட்டில் அடையாளமிட முடியும். குறிப்பாக வாக்காளர் ஒருவர் ஒரு வேட்பாளருக்கு மாத்திரம் வாக்களிக்க விரும்புவாராயின் தான் விரும்பும் வேட்பாளரின் பெயர் மற்றும் சின்னத்துக்கு நேராக உள்ள பெட்டியில் மட்டும் 1 என்ற இலக்கத்தை அல்லது X எனும் புள்ளடியை இடுவது பொருத்தமாகும். அல்லது முதலாம் இரண்டாம் மற்றும் மூன்றாம் விருப்பத் தெரிவுகள் இருக்குமாயின் முதலாவது விருப்பத் தெரிவுக்குரிய வேட்பாளரின் பெயர் மற்றும் சின்னத்துக்கு நேராக உள்ள பெட்டியினுள் 1 எனவும் இரண்டாவது விருப்பத் தெரிவுக்குரிய வேட்பாளரின் பெயர் மற்றும் சின்னத்துக்கு நேரான பெட்டியில் 2 எனவும் மூன்றாவது விருப்பத் தெரிவுக்குரிய வேட்பாளரின் பெயர் மற்றும் சின்னத்துக்கு நேரான பெட்டியில் 3 எனவும் அடையாளமிடுவது பொருத்தமாகும். இதேவேளை எந்தவொரு வேட்பாளருக்கும் வாக்கொன்று அடையாளமிடப்படாத அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட வேட்பாளர்களுக்கு X என்ற அடையாளமிடப்பட்டுள்ள அல்லது ஒரு வேட்பாளருக்கு 1 எனவும் மற்றுமொரு வேட்பாளருக்கு X என்ற அடையாளமும் இடப்பட்டுள்ள அல்லது இரண்டாம் மற்றும் மூன்றாம் விருப்பத் தெரிவுகள் மாத்திரம் அடையாளமிடப்பட்டுள்ள வாக்குச்சீட்டுக்கள் செல்லுபடியற்றதானதாகும் என்பதுடன் வாக்கு எண்ணும் போது அவை நிராகரிக்கப்படும். ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பு முறைமை இவ்வாறாக இருக்கும் நிலையில், சிலருக்கு விருப்பத் தெரிவு வாக்களிப்பு முறை தொடர்பாக குழப்பங்கள் காணப்படுகின்றன. ஏன் இந்த முறைமை காணப்படுகின்றது. அதனால் என்ன பிரயோசனம்? மற்றைய தேர்தல்களின் போது இப்படி இலக்கமிட்டு வாக்களிப்பதில்லையே என்ற கேள்விகள் அவர்களிடையே எழுகின்றன. அதாவது ஜனாதிபதித் தேர்தல் என்பது முழு நாட்டிற்கும் ஒரு நபரை தெரிவு செய்வதற்கான தேர்தலாகவே காணப்படுகின்றது. இதனால் அவர் பெரும்பான்மையான ஆதரவை பெற்றவராக இருக்க வேண்டும். இதன்படி அந்த நபர் ஜனாதிபதியாக வேண்டுமென்றால் தேர்தலின் போது அளிக்கப்பட்டு செல்லுபடியான வாக்குகளில் 50 வீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற வேண்டும். அதாவது குறைந்தது 50 வீத வாக்குடன் மேலதிகமாக ஒரு வாக்கை பெற்றுக்கொள்ள வேண்டும். இவ்வாறான நிலைமையில் எந்தவொரு வேட்பாளருக்கும் 50 வீதத்தை விடவும் அதிகமான வாக்குகள் கிடைக்காது போகும் பட்சத்தில் மீண்டும் தேர்தலை நடத்தாது அந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையிலேயே இந்த விருப்பத் தெரிவு முறைமை பின்பற்றப்படுகின்றது. குறிப்பாக இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் 39 வேட்பாளர்கள் வரையில் போட்டியிடும் நிலையில் எந்தவொரு வேட்பாளருக்கும் 50 வீதத்திற்கும் அதிகமான வாக்குகள் கிடைக்காது அடுத்தக்கட்ட்டமாக விருப்பத் தெரிவு வாக்குகளை எண்ணும் நிலைமை ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. அவ்வாறானவொரு நிலைமை ஏற்படுமாக இருந்தால் விருப்பத் தெரிவு வாக்குகள் எவ்வாறு எண்ணப்படும் என்பது தொடர்பாக உதாரணங்களுடனான விளக்கத்தைப் பார்ப்போம். தேர்தலில் A, B, C, D மற்றும் E என்ற வேட்பாளர்கள் போட்டியிடுவதாக எடுத்துக்கொண்டால் அவர்களில் ஒருவரை தெரிவு செய்வதற்காக அளிக்கப்பட்டுள்ள வாக்குகளில் 100 வாக்குகள் செல்லுபடியான வாக்குகளாக கருதுவோம். இதன்படி A = 40 , B = 35 , C = 15 , D = 6 , E = 4 என்ற அடிப்படையில் வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளனர் என்று வைத்துக்கொள்வோம். இவ்வாறாக இவர்கள் பெற்றுக்கொண்ட வாக்குகளுக்கமைய எவரும் 50 வீத வாக்குகளை பெற்றுக்கொள்ளவில்லை. இதனால் விருப்பு வாக்குகளை எண்ண வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. இதன்போது முதல் இரண்டு இடங்களை வகிப்பவர்களை தவிர்த்து மற்றையவர்கள் போட்டியிலிருந்து விலக்கப்பட்டவர்களாக கருதப்படுவர். இதன்படி இந்த இடத்தில் A என்பவரும் B என்பவரும் முதல் இரண்டு இடங்களை வகிக்கின்றனர். C , D , E ஆகியோர் போட்டியிலிருந்து விலக்கப்படுகின்றனர். ஆனபோதும் C , D , E ஆகியோருக்குரிய 25 வாக்கு வாக்கு சீட்டுகளும் A மற்றும் B ஆகியோருக்கு கிடைத்துள்ள 2 ஆம் , 3 ஆம் விருப்பு வாக்குகளை எண்ணுவதற்காக எடுத்துக்கொள்ளப்படும். இவ்வேளையில் முதல் இரண்டு இடங்களை பெற்றுக்கொண்டுள்ள A என்பவருக்கும் B என்பவரினதும் முதலில் எண்ணப்பட்ட வாக்குச்சீட்டுகள் மீண்டும் எண்ணுவதற்கு எடுத்துக்கொள்ளப்படாது. அத்துடன் அந்த வாக்கு சீட்டுகளில் காணப்படும் விருப்பத் தெரிவு வாக்குகளும் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படமாட்டாது. இதனைத் தொடர்ந்து 15 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ள C என்பவரின் வாக்குச் சீட்டுகள் அனைத்தும் பரிசீலிக்கப்படும். இதன்போது Cயிற்காக மாத்திரம் புள்ளடியிடப்பட்ட மற்றும் அவருக்கு 1 என்று குறிப்பிட்டு வேறு யாருக்கும் விருப்பு வாக்குகள் குறிப்பிடப்படாத வாக்குச்சீட்டுகள் ஒதுக்கப்படும். இதன் பின்னர் Cயிற்கு 1 எனவும் A அல்லது Bயிற்கு 2 எனவும் விருப்பத் தெரிவு வாக்கு வழங்கப்பட்டிருக்குமாயின் Aயிற்குறிய வாக்கு சீட்டு அதற்குரிய பெட்டியிலும் Bயிற்குறிய வாக்கு சீட்டு அதற்குறிய பெட்டியிலும் போடப்படும். இதேவேளை Cயிற்கு 1 என குறிப்பிடப்பட்டுள்ள வாக்கு சீட்டியில் 2 ஆவது விருப்பு வாக்கு Dயிற்கோ அல்லது Eயிற்கோ குறிப்பிடப்பட்டிருந்தால் 3 ஆவது விருப்பு வாக்கு அதில் குறிப்பிடப்பட்டுள்ளதா என ஆராயப்படும். அவ்வாறாக 3 ஆவது விருப்பு வாக்கு Aயிற்கோ அல்லது Bயிற்கோ குறிப்பிடப்பட்டிருந்தால் அந்த வாக்கு சீட்டு A அல்லது B ற்காக ஒதுக்கப்பட்டுள்ள குறித்த பெட்டியினுள் போடப்படும். ஆனபோதும் அந்த வாக்கு சீட்டில் 2 ஆவது விருப்பு வாக்கு Dயிற்கும் 3 ஆவது விருப்பு வாக்கு Eயிற்கும் குறிப்பிடப்பட்டிருந்தால் அது கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படாது ஒதுக்கி வைக்கப்படும். இதேவேளை D மற்றும் E ஆகியோருக்குரிய வாக்குச்சீட்டுகளும் ஆராயப்பட்டு A அல்லது Bயிற்கு 2 மற்றும் 3 ஆம் விருப்பு வாக்குகள் குறிப்பிடப்பட்டிருந்தால் அதற்குரிய பெட்டிகளுக்குள் போடப்படும். இவ்வாறாகவே C , D , Eக்குரிய 25 வாக்குகளும் எண்ணப்பட்டு A , Bக்குரிய விருப்பு வாக்குகள் ஆராயப்படும். இவ்வாறாக 2ஆம் மற்றும் 3ஆம் விருப்பத் தெரிவு வாக்குகளை எண்ணும் போது Aயிற்கு 3 மேலதிக வாக்குகளும் Bயிற்கு மேலதிகமாக 10 வாக்குகளும் கிடைத்துள்ளதாக கருதுவோமாகவிருந்தால் Aயிற்கு முதலில் கிடைத்த வாக்குகள் அடங்கலாக மொத்தமாக 43 வாக்குகள் ( A= 40+3 = 43) கிடைத்துள்ளன. அதேபோன்று Bயிற்கு 45 வாக்குகள் (B = 35+10 = 45)கிடைத்துள்ளன. இதன்படி தற்போது 88 வாக்குகள் செல்லுபடியான வாக்குகளாக இருக்கின்ற நிலையில் அவற்றில் அதிக வாக்குகளைப் பெற்ற B என்பவர் வெற்றி பெற்றவராக கருதப்படுவார். இதேவேளை 2 ஆம் மற்றும் 3 ஆம் விருப்பத் தெரிவு வாக்கு எண்ணும் நடவடிக்கையின் பின்னர் A என்பவரும் B என்பவரும் சமமான வாக்குகளை பெற்றுக்கொள்வார்களாக இருந்தால் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் திருவுளச்சீட்டு மூலம் மேலதிக வாக்கொன்றை வேட்பாளர் ஒருவருடன் இணைத்து அவரை வெற்றி பெற்றவராக அறிவிக்க நடவடிக்கையெடுக்கப்படும். இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கும் 50 வீதத்திற்கும் அதிகமான வாக்குகள் கிடைக்காவிட்டால் மேற்கூறிய முறைமையே பின்பற்றப்படும். இதேவேளை இந்தத் தேர்தலில் 1 , 2 , 3 ஆம் விருப்பத் தெரிவு அடிப்படையில் வேட்பாளர்களுக்கு வாக்களிப்பதற்கு எண்ணியுள்ள வாக்காளர்கள் சில விடயங்களை அறிந்துகொள்ள வேண்டியுள்ளது. அதாவது தேர்தலில் 39 வரையான வேட்பாளர்கள் போட்டியிடுகின்ற போதும் அவர்களில் நால்வருக்கிடையில் கடும் போட்டி நிலவுகின்றது. இவ்வாறான நிலைமையில் பிரதான வேட்பாளர்களாக கருதப்படுபவர்களுக்கு 1 ஆம் விருப்பை வழங்கிவிட்டு மற்றைய சாதாரண வேட்பாளர்களுக்கு 2 , 3 ஆம் விருப்பு வாக்குகள் வழங்கப்படுமாக இருந்தால் இரண்டாவது வாக்கு எண்ணும் நடவடிக்கையில் போது அந்த வாக்குச்சீட்டு கவனத்தில் கொள்ளப்படாதவொன்றாகவே அமையும். குறிப்பாக யாருக்கும் 50 வீதத்திற்கும் அதிகமான வாக்குகள் கிடைக்காத பட்சத்தில் 2 ஆம் , 3 ஆம் விருப்ப தெரிவு வாக்குகளை எண்ணும் போது அதிகூடிய வாக்குகளை பெற்றுக்கொண்ட இரண்டு வேட்பாளர்களுக்கு கிடைத்துள்ள 2 , 3 ஆம் விருப்பு வாக்குகள் மாத்திரமே எண்ணப்படும். இவ்வேளையில் ஏற்கனவே பிரதான வேட்பாளர்கள் இருவருக்கும் கிடைத்துள்ள 1ஆம் விருப்பு வாக்கு எண்ணப்பட்டிருப்பதால் அந்த வாக்கு சீட்டுகள் மீண்டும் வாக்கு எண்ணப்படும் போது எடுத்துக்கொள்ளப்படாது. இதன்போது அவர்கள் இருவர் தவிர்த்த மற்றைய வேட்பாளர்களுக்காக முதலாம் விருப்ப தெரிவு வாக்கு வழங்கப்பட்டுள்ள வாக்குச்சீட்டுகளில் 2 , 3 ஆம் விருப்ப தெரிவு வாக்குகளே எண்ணப்படும். இதனால் விருப்ப தெரிவு வாக்குகளை வழங்க விரும்பின் சாதாரண வேட்பாளர் ஒருவருக்கு 1 ஆம் விருப்பை வழங்கிய பின்னர் பிரதான வேட்பாளருக்கு 2 ஆவது விருப்பு வழங்கப்பட்டிருக்குமாக இருந்தால் பிரயோசமானதாக அமையும் என்பதனை கருத்தில் கொள்ள வேண்டும். https://thinakkural.lk/article/307995
-
அரியநேத்திரனுக்கு இரண்டு வார அவகாசம்; கட்சிக் கூட்டங்களில் பங்கேற்கவும் தடை
அரியநேத்திரனுக்கு இரண்டு வார அவகாசம்; கட்சிக் கூட்டங்களில் பங்கேற்கவும் தடை பொது வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள அரியநேத்திரனுக்கு விளக்கம் கோரி இரண்டு வார கால அவகாசம் கொடுத்து கடிதம் அனுப்பப்பட்டுள்ளதுடன், அதுவரை கட்சிக் கூட்டங்களிலும் பங்கேற்ற தடை என தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் உள்ள விருந்தினர் விடுதி ஒன்றில் நேற்றையதினம் இடம்பெற்ற கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். பிரதான வேட்பாளர்களுடன் போச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. எமது அடிப்படை நிலைப்பாடு வடக்கு – கிழக்கு இணைந்த சமஸ்டி அடிப்படையிலான தீர்வு ஆகும். மூன்று பிரதான வேட்பாளர்களுடனும் இடம்பெற்ற பேச்சுவார்த்தை தொடர்பாகவும், பேசிய விடயங்களையும் கூட்டத்தில் தெரியப்படுத்தினோம். சில முன்னேற்றகரமான கருத்துக்களை அவர்கள் தெரிவித்துள்ளார்கள். அவர்களது தேர்தல் அறிக்கை வெளிவந்த பின்னரே எமது இறுதி முடிவு எடுக்கப்படும். நாமல் ராஜபக்ஸ அவர்கள் என்னுடைய வீட்டிற்கு வந்து சந்தித்து இருந்தார். அவர்களிடம் உள்ள விடயங்களை தெரியப்படுத்தினார். அது அதி தீவிர சிங்கள வாக்குளை பெற்றுக் கொள்வதை நோக்கமாக கொண்டிருந்தது. அதற்கான வாய்ப்புக்கள் குறித்தும் கலந்துரையாடியிருந்தோம். தற்போது தெற்கில் சிங்கள பௌத்த பேரினவாதம் தலைத் தூக்காமல் உள்ளது. அது தொடர்பில் கலந்துரையாடினோம். எமது மக்களை வழிகாட்டுவதற்காக நாங்கள் ஆவணம் ஒன்றை தயாரிக்கவுள்ளோம். அதற்கான சிறு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. தமிழ் பொது வேட்பாளராக வர்ணிக்கப்பட்டுள்ள அரியநேந்திரன் சம்மந்தமாக கலந்துரையாடப்பட்டது என குறிப்பிட்டார். https://thinakkural.lk/article/308047
-
விமல் தரப்பினர் நல்லூர் கந்தனை வழிபட்டனர்
விமல் தரப்பினர் நல்லூர் கந்தனை வழிபட்டனர் Freelancer / 2024 ஓகஸ்ட் 18 , பி.ப. 08:59 - 0 ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜயவீர, பாராளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில உள்ளிட்ட தரப்பினர் யாழ்பாணம் நல்லூர் கந்தன் ஆலயத்துக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளனர். நல்லூர் கந்தசுவாமி கோவிலில் தற்போது திருவிழா இடம்பெற்று வரும் நிலையில், அவர்கள் நேற்று அங்கு சென்றுள்ளனர். இதேவேளை, சர்வஜன அதிகார கூட்டணியின் முதலாவது அங்குரார்ப்பண தேர்தல் பிரசாரக் கூட்டம் யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்றது. (a) https://www.tamilmirror.lk/செய்திகள்/விமல்-தரப்பினர்-நல்லூர்-கந்தனை-வழிபட்டனர்/175-342396
-
ஜனாதிபதித் தேர்தல் 2024 - செய்திகள்
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை நீக்கப்படும் ; சஜித் உறுதி ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறைமை நீக்கப்பட்டு பாராளுமன்ற ஜனநாயக முறைமை ஏற்றுக்கொள்ளப்படும் என ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். ருவன்வெல்ல பிரதேசத்தில் இன்று (18) இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சக்தி பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் கருத்து தெரிவித்த சஜித் பிரேமதாச, ஜனாதிபதி முறைமையை மாற்றியமைப்பதாக எவ்வளவோ பேர் தம்பட்டம் அடித்தாலும் எவரும் செய்யவில்லை. எனக்கு பதவிகள் வேண்டாம். நான் ஒன்று உறுதியளிக்கிறேன். நிறைவேற்று ஜனாதிபதி முறைமை நிச்சயமாக ஒழிக்கப்படும். ராஜபக்ஸவிடம் முறையிட்டு நாட்டை திவாலாக்கிய குழுவின் பிரதான பாதுகாவலர் தான் ஜனாதிபதி. ராஜபக்ஸவை பாதுகாக்கும் பொலிஸ்மா அதிபர் ரணில் விக்ரமசிங்க என்றும் குறிப்பிட்டார். R https://www.tamilmirror.lk/செய்திகள்/நிறைவேற்று-அதிகார-ஜனாதிபதி-முறை-நீக்கப்படும்-சஜித்-உறுதி/175-342398
-
சங்கும் சிலிண்டரும் - நிலாந்தன்
சங்கும் சிலிண்டரும் - நிலாந்தன் இலங்கைத் தீவின் இரண்டு சுயேட்சை வேட்பாளர்கள் நாட்டின் தலைவிதியைத் தீர்மானிக்கக்கூடிய நிலைமைகள் வளர்ந்து வருகின்றனவா? முதலாவது சுயேட்சை வேட்பாளர் ஜனாதிபதி. அவர் காஸ் சிலிண்டர் சின்னத்தில் போட்டியிடுகிறார். இலங்கைத் தீவின் தேர்தல் வரலாற்றில் ஒரு ஜனாதிபதி சுயேட்சைச் சின்னத்தில் போட்டியிடுவது இதுதான் முதல் தடவை. உண்மையில் அவர் சுயேச்சை அல்ல. தாமரை மொட்டு கட்சியின் பெரும்பாலான பகுதி அவருக்கு பின் நிற்கின்றது. அப்படிப் பார்த்தால், அவர் தாமரை மொட்டுக்களின் மறைமுக வேட்பாளர்களில் ஒருவர். தாமரை மொட்டுக் கட்சி என்பது யுத்த வெற்றிக்கு பின் எழுச்சி பெற்றது. ராஜபக்சக்கள் யுத்த வெற்றியை குடும்பமயப்படுத்தி நிறுவனமயப்படுத்தி கட்டியெழுப்பியதே பொதுஜன பெரமுன எனப்படும் தாமரை மொட்டுக் கட்சியாகும். ஆனால் ரணில் இப்பொழுது அதில் பெரும் பகுதியைச் சாப்பிட்டு விட்டார். இலங்கைத் தீவின் கட்சி வரலாற்றில் இறுதியாகத் தோன்றிய பெரிய கட்சியும் சிதையும் ஒரு நிலை. அதன் விளைவாகத்தான் ரணில் சுயேட்சையாக நிற்கிறார். ரணில் சுயேட்சையாக நிற்கிறார் என்பதற்குள் ஓர் அரசியல் செய்தியுண்டு. அது என்னவென்றால் இலங்கைத்தீவின் பிரதான கட்சிகள் யாவும் சிதைந்து போகின்றன என்பதுதான். இலங்கைத் தீவின் மூத்த கட்சியாகிய ஐக்கிய தேசியக் கட்சியின் வாரிசு அவர். ஆனால் அந்தக் கட்சி சிதைந்து சஜித் பிரேமதாசாவின் தலைமையில் வேறொரு கட்சி ஆகிவிட்டது. அதுபோல இலங்கைத் தீவின் மற்றொரு பெரிய பாரம்பரிய கட்சியாகிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சிதைந்து அதிலிருந்துதான் தாமரை மொட்டுக் கட்சி தோன்றியது. இப்பொழுது தாமரை மொட்டுக் கட்சியும் சிதையத் தொடங்கிவிட்டது. இக்கட்சிகள் ஏன் சிதைக்கின்றன? ஏனென்றால் இலங்கைத் தீவின் ஜனநாயகம் சிதைந்து விட்டது. இலங்கைத் தீவின் ஜனநாயகம் எங்கே சிதையத் தொடங்கியது? இலங்கை தீவின் பல்லினத்தன்மையை சிங்கள பௌத்த பெருந்தேசிய வாதம் ஏற்றுக்கொள்ளத் தவறியபோதுதான். அதாவது இனப்பிரச்சினைதான் இலங்கைத் தீவின் பாரம்பரிய கட்சிகள் சிதைவதற்குக் காரணம். ஈழப் போரின் விளைவாக சிங்கள மக்கள் மத்தியில் காணப்படும் பாரம்பரிய கட்சிகள் இரண்டுமே சிதைந்து விட்டன. அந்த சிதைவிலிருந்து தோன்றிய மற்றொரு பெரிய கட்சியும் சிதையத் தொடங்கிவிட்டது. அந்தச் சிதைவின் வெளிப்பாடுதான் ரணில் சுயேட்சையாக நிற்பது. அதாவது இனப்பிரச்சனையைத் தீர்க்கத் தவறினால் இலங்கைத் தீவின் ஜனநாயகம் மேலும் சிதையும் என்பதன் குறியீடு அது. அவருடைய சின்னம் சிலிண்டர். அதுவும் ஒரு குறியீடு எந்த ஒரு சிலிண்டருக்காக நாட்கணக்கில் மக்கள் வரிசையில் காத்து நின்றார்களோ அதே சிலிண்டர்தான். அது நாட்டை பொருளாதார ரீதியாக அவர் மீட்டெடுத்ததன் அடையாளமாகக் காட்டப்படக்கூடும். எனினும் ஒரு நாட்டின் ஜனாதிபதி சுயேட்சையாகப் போட்டியிடும் அளவுக்கு நாட்டின் கட்சி நிலவரம் உள்ளது என்பதை அது காட்டுகிறது. அதாவது ரணில் ஒரு வெற்றியின் சின்னமாக இங்கு தேர்தலில் நிற்கவில்லை. சிதைவின் சின்னமாகத்தான் தேர்தலில் நிற்கின்றார். மற்றொரு சுயேச்சை, தமிழ்ப் பொது வேட்பாளர் அரியநேத்திரன். அவருடைய சின்னம் சங்கு. அது மகாவிஷ்ணுவின் கையில் இருப்பது. போர்க்களத்தில் வெற்றியை அறிவிப்பது. சுடச்சுட பண்பு கெடாது வெண்ணிறமாவது. தமிழ்ப் பண்பாட்டில் பிறப்பிலிருந்து இறப்புவரை வருவது. பிறந்த குழந்தைக்கு முதலில் சங்கில் பாலூட்டுவார்கள். திருமணத்தில் முதலில் பாலூட்டுவது சங்கில்தான். இறப்பிலும் சங்கு ஊதப்படும். அரியநேத்திரன் ஒரு குறியீடு. அவருடைய சின்னமும் ஒரு குறியீடு. தமிழ்ப் பொது வேட்பாளர் எனப்படுகின்றவர், தமிழ்ப் பொது நிலைப்பாட்டின் குறியீடு. தமிழ்ப்பொது நிலைப்பாடு என்பது பிரயோகத்தில் தமிழ் ஐக்கியம்தான். தமிழ் ஐக்கியத்தின் குறியீடாக நிக்கும் ஒருவர் சுயேட்சையாக நிற்பதன் பொருள் என்ன? அவர் கட்சி கடந்து நிற்கிறார் என்றும் வியாக்கியானம் செய்யலாம். அவர் ஒரு கட்சி பாரம்பரியத்தில் வந்தவர்தான். ஆனால் அந்தக் கட்சியின் வேட்பாளராக அவர் இங்கு நிற்கவில்லை. தமிழ்த் தேசிய பொதுக்கட்டமைப்புக்குள் உள்ள கட்சிகளின் பிரதிநிதியாகவும் அவர் தேர்தலில் நிற்கவில்லை. அவர் ஒரு பொது நிலைப்பாட்டின் பிரதிநிதியாக நிற்கிறார். அதை ஏனைய கட்சிகள் ஏற்றுக்கொள்கின்றன. இது ஒரு புதிய பண்பாடு.கட்சிக்காக வாக்குக் கேட்காமல்,ஒரு தனி நபருக்காக வாக்கு கேட்காமல்,ஒரு பொது நிலைப்பாட்டுக்காக வாக்கு கேட்பதற்கு ஒருவரை பொதுவாக நிறுத்தியிருப்பது என்பது. அரியநேத்திரன் தமிழரசுக் கட்சிப் பாரம்பரியத்தில் வந்தவர். ஆனால் அவருடைய கட்சி பொது வேட்பாளர் தொடர்பாக இன்றுவரை முடிவு எடுக்கவில்லை. கடைசியாக அந்த கட்சியின் மத்திய குழு கடந்த வார இறுதியில் கூடியபொழுதும் முடிவு எடுக்கப்படவில்லை. கட்சியின் பேச்சாளரான சுமந்திரன் அது தொடர்பாக கருத்து தெரிவிக்கும் பொழுது, தமிழ் அரசியலுக்கு தலைமை தாங்கும் கட்சி தங்களுடையது என்ற பொருள்பட பேசியிருக்கிறார். உள்ளதில் பெரிய கட்சி என்ற அடிப்படையில் அவர் அவ்வாறு கூறியிருக்கலாம். ஆனால் ஒரு மக்கள் கூட்டத்துக்குத் தலைமை தாங்குவதாகக் கருதும் ஒரு கட்சி, அதிலும் குறிப்பாக இனஅழிப்புக்கு நீதி கோரும் ஒரு மக்கள் கூட்டத்திற்கு தலைமை தாங்குவதாகக் கருதும் ஒரு கட்சியானது, எவ்வாறு தலைமை தாங்க வேண்டும்? அது எதிர்த் தரப்பின் அல்லது வெளித் தரப்பின் நிகழ்ச்சி நிரலுக்கு பதில் வினையாற்றும் அரசியலை முன்னெடுக்க வேண்டுமா? அல்லது செயல்முனைப்போடு நீதியைக் கோரும் போராட்டமாக அந்த அரசியலை வடிவமைக்க வேண்டுமா? கட்சியின் மூத்த தலைவர் சிவஞானம் கூறுகிறார், மக்கள் முடிவெடுப்பார்கள் என்று. தலைமை தாங்குவது என்பது மக்களை முடிவெடுக்க விட்டுவிட்டு மக்களின் முடிவைக்ககட்சி பின்பற்றுவது அல்ல. கட்சி முடிவெடுத்து மக்களுக்கு வழிநடத்த வேண்டும். பொருத்தமான நேரத்தில் பொருத்தமான முடிவுகளை எடுத்து மக்களுக்கு வழிநடத்துவதற்குப் பெயர்தான் தலைமைத்துவம். ஆனால் தென்னிலங்கை வேட்பாளர்கள் எதைத் தருவார்கள் என்று அவர்களுடைய தேர்தல் விஞ்ஞாபனம் வரும்வரையும் காத்திருப்பது என்பது ஒரு போராடும் இனத்துக்கு அழகில்லை; மிடுக்கில்லை; அதற்கு பெயர் தலைமைத்துவமும் இல்லை. பொது வேட்பாளர் விடையத்தில் தமிழரசுக்ககட்சி இரண்டாக நிற்கிறது என்பதே உண்மை நிலை. ஒருமித்த முடிவு எடுக்க முடியாமலிருப்பதற்கு அதுதான் காரணம். அதாவது தலைமைத்துவம் பலமாக இல்லை என்று பொருள். தென்னிலங்கை வேட்பாளர்களின் தேர்தல் அறிக்கைகளுக்காகக் காத்திருப்பது தலைமைத்துவப் பலவீனம்தான். கிடைக்கும் தகவல்களின்படி எந்த ஒரு தென்னிலங்கை வேட்பாளரும் 13ஆவது திருத்தத்திற்கு மேல் எந்த ஒரு தீர்வையும் தரப்போவதில்லை. தமிழரசுக் கட்சி முன்வைக்கும் சமஸ்டித் தீர்வுக்கு எந்த ஒரு தென்னிலங்கை வேட்பாளரும் தயாராக இல்லை. ஆயின், யாருடைய தேர்தல் அறிக்கைக்காக தமிழரசுக் கட்சி காத்திருக்கின்றது ? அவர்கள் சமஸ்ரியைத் தர மாட்டார்கள் என்று தெளிவாகத் தெரிந்த பின்னரும் அவர்களுக்காக காத்திருப்பது எதைக் காட்டுகின்றது? சமஷ்டி அல்லாத வேறு ஏதோ ஒன்றுக்கு இறங்கிப்போகப் போகிறோம் என்பதையா? அவர்கள் யாருமே சமஸ்ரித் தீர்வுக்கு உடன்படத் தயாரில்லை என்றால், அதன் பின் கட்சி என்ன முடிவு எடுக்கும்? தேர்தலைப் பரிஷ்கரிக்குமா? அல்லது பொது வேட்பாளரை ஆதரிக்குமா? பகிஸ்கரிப்பது தவறு என்று ஏற்கனவே சுமந்திரன் கூறியிருக்கிறார். அப்படியென்றால் பொது வேட்பாளரை ஆதரிப்பதைத்தவிர வேறு தெரிவு இல்லை. அல்லது அவர்கள் தரக்கூடியவற்றுள் பெறக்கூடியவற்றை எப்படிப் பெறலாம் என்று காத்திருக்கிறார்களா? அதற்குச் சிறீதரன் அணி தயாரா? கட்சியின் மத்திய குழு கூடுவதற்கு முதல் நாள் சனிக்கிழமை கிளிநொச்சியில் ஒரு பொதுக்கூட்டம் நடந்தது அங்குள்ள விவசாய அமைப்புகள் அப்பொதுக் கூட்டத்தை ஒழுங்குபடுத்தின. அதில் தமிழ்மக்கள் பொதுச்சபையின் உறுப்பினர்கள் கலந்துகொண்டு பேசினார்கள். நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் இறுதியில் பேசினார். அவருடைய உரை மிகத் தெளிவாக இருந்தது. அதில் அவர் தமிழ்ப் பொது வேட்பாளரை நியாயப்படுத்திப் பேசினார். கடந்த மாதம் 22 ஆம் திகதி ரணில் விக்கிரமசிங்க ஒரு தனியார் விருந்தினர் விடுதியில் மாவை சேனாதிராஜாவை சந்தித்தது பற்றியும், மாவையிடம் கையளித்த ஆவணம் ஒன்றைப்பற்றியும் அதிலவர் குறிப்பிட்டார். அந்த ஆவணத்தில் 13ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவதைப் பற்றிய அம்சங்கள் காணப்பட்டதாகவும் அவர் கூறினார். போலீஸ் அதிகாரத்தை இப்போதைகுத்த் தர முடியாது என்றும், அடுத்த நாடாளுமன்ற தேர்தலின் பின் நாடாளுமன்றத்தில் அதை தீர்மானிக்கலாம் என்றும் ரணில் கூறியுள்ளார். அதை பதிமூன்று மைனஸ் என்று சிறீதரன் வர்ணிதார். ஆயின், தமிழரசுக் கட்சி 13 மைனசை ஒரு பேசுபொருளாக ஏற்றுக்கொள்ளத் தயாரா? இல்லையென்றால், யாரிடமிருந்து சமஸ்ரி வரும் என்று சமஷ்ரிக் கட்சி காத்திருக்கின்றது? சமஸ்ரியை யாராவது ஒரு சிங்களத் தலைவர் தங்கத்தட்டில் வைத்துத்தருவார் என்று இப்பொழுதும் சமஷ்ரிக் கட்சி நம்புகின்றதா? போராடாமல் சமஸ்டி கிடைக்கும் என்று சமஸ்ரிக் கட்சி நம்புகின்றதா? தமிழ்ப் பொது வேட்பாளர் என்று தெரிவே அவ்வாறான ஒரு போராட்டந்தான் என்பதனை சமஸ்ரிக்கட்சி ஏற்றுக் கொள்கிறதா? அக்கட்சி முடிவெடுக்காமல் தடுமாறுவதும் ஒரு விதத்தில் பொது வேட்பாளர் அணிக்குச் சாதகமானது. உள்ளதில் பெரிய கட்சி முடிவெடுக்காமல் இரண்டாக நிற்பது பொது வேட்பாளருக்கு நல்லது. ஏனென்றால் தமிழரசுக் கட்சியின் வாக்காளர்களும் உட்பட தமிழ்மக்கள் தங்களுக்குத் தெளிவான இலக்குகளை முன்வைத்து தங்களை வழிநடத்த தயாரானவர்களின் பின் திரள்வார்கள். ஏற்கனவே ஈரோஸ் இயக்கத்தின் சுயேச்சைக் குழு பெற்ற வெற்றி ஒரு மகத்தான முன்னுதாரணமாகும். அது இலங்கைத்தீவின் தேர்தல் வரலாற்றில், தமிழரசியலில் ஒரு நூதனமான வெற்றி. அந்தத் தேர்தலில் அமிர்தலிங்கம், சம்பந்தர், யோகேஸ்வரன், ஆனந்தசங்கரி உட்பட பல மூத்த தலைவர்கள் தோல்வியடைந்தார்கள். அதைவிட முக்கியமாக திருகோணமலையில் இரண்டு ஆசனங்கள் கிடைத்தன. அன்றைக்கு அந்த சுயேட்சைக் குழுவுக்குக் கிடைத்த வெற்றி தமிழ்க் கூட்டுணர்வுக்குக் கிடைத்த வெற்றி. இன்றைக்கும் தமிழ்க் கூட்டுணர்வை பிரதிநிதித்துவப்படுத்தும் அரியநேத்திரனுக்கு தமிழ் மக்கள் வாக்குகளை அள்ளிக் கொடுப்பார்களாக இருந்தால், அது தமிழ்த் தேசிய அரசியலின் போக்கை மட்டுமல்ல, இலங்கை தீவின் ஒட்டுமொத்த அரசியல் போக்கைகையும் தீர்மானிக்கும் வாக்களிப்பாக அது அமையும். https://www.nillanthan.com/6860/
-
ஜனாதிபதித் தேர்தல் 2024 : ‘தமிழ்ப் பொதுவேட்பாளர்’ மாபெரும் பொதுக்கூட்டம்!
ஜனாதிபதித் தேர்தல் 2024 : ‘தமிழ்ப் பொதுவேட்பாளர்’ மாபெரும் பொதுக்கூட்டம்! August 17, 2024 இலங்கையில் 9-ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் நிறைவடைந்ததையடுத்து, இம்முறை தேர்தலில் 39 வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளதாக இலங்கை தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இந்த தேர்தலில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தமிழ் மக்களுக்கான பொது வேட்பாளராக போட்டியிடுகின்றார். இந்த நிலையில், ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தமிழ்ப் பொதுவேட்பாளர் மாபெரும் பொதுக் கூட்டம் நடைபெறவுள்ளது. மேலும் நாளை காலை 9 மணிக்கு தமிழ் பொதுவேட்பாளர் பா.அரியநேத்திரன் தந்தை செல்வா நினைவுத் தூபிக்கு வணக்கம் செலுத்துவார். அதன் பின் ஊடகச் சந்திப்பு இடம் பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.ilakku.org/ஜனாதிபதித்-தேர்தல்-2024-தமிழ/
-
தமிழரசுக் கட்சியும் பிளவுபடுகிறதா?
தமிழரசுக் கட்சியும் பிளவுபடுகிறதா? இலங்கைத் தமிழரசுக் கட்சியை விட்டு சிலர் வெளியேறி புதிய கட்சியையோ அல்லது புதிய தமிழரசுக் கட்சி என்ற பெயரில் கட்சியையோ ஆரம்பிக்க முயன்றால் பொது வேட்பாளரை விட மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என வட மாகாண சபை அவை தலைவரும் தமிழரசு கட்சியின் சிரேஷ்ட தலை வருமான சி. வி.கே.சிவஞானம் தெரிவித்தார். வெள்ளிக்கிழமை யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போது ஊடகவியலாளர் ஒருவரால், தமிழரசு கட்சியில் உள்ள சிலர் வெளியேறி புதிய கட்சியை ஆரம்பிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கே அவர் இவ்வாறு பதிலளித்தார். இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழரசுக் கட்சியை விட்டு சிலர் வெளியேறி புதிய கட்சி ஒன்றை ஆரம்பிக்கப் போவதாக நானும் கேள்விப்பட்டேன். கட்சியிலிருந்து யாரும் வெளியேறலாம் புதிய கட்சியை யாரும் ஆரம்பிக்கலாம் இவை ஜனநாயக நடைமுறை. இதைப் பற்றி நான் பேச வரவில்லை. ஆனால் தமிழரசு கட்சியை உடைத்து வெளியேறி புதிய கட்சி ஆரம்பிப்பது தற்போது பொது வேட்பாளர் விடையத்தில் நடந்ததைப் போல பல மடங்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்றார். இதன்போது கேள்வி அனுப்பிய ஊடகவியலாளர் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தனக்கு 60 கோடி ரூபா தந்தது மக்களின் அபிவிருத்தியை மேற்கொள்ள என கருத்து தெரிவித்திருக்கிறார். அவருடைய கருத்து அபிவிருத்தி அரசியலுக்கு தமிழ் மக்கள் வாக்களித்துள்ளார்களா என்பதை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா என கேள்வி எழுப்பினார். இதன் போது பதில் அளித்த சிவஞானம் இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனுக்கு மட்டும் ஜனாதிபதியால் நிதி ஒதுக்கீடு கிடைக்கப்பெறவில்லை. ஏனைய பல தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அவர்களின் முன்மொழிவு திட்டங்களின் அடிப்படையில் நிதி கூடி குறைந்திருக்கலாம். அத்தோடு இலங்கை தமிழரசுக் கட்சி அபிவிருத்தி சார்ந்த வேலைகளை முன்னெடுக்காது என்று எப்போதும் கூறியது கிடையோது, தமிழ் மக்களுடைய உரிமை எவ்வாறு முக்கியமோ மக்களுடைய அபிவிருத்தியும் எங்களுக்கு முக்கியம்தான் என தெரிவித்தார். https://akkinikkunchu.com/?p=288245