Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிருபன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by கிருபன்

  1. தமிழ் சினிமாக்களில் ஏன் இந்த கொலைவெறி? -தயாளன் என்னதான் ஆயிற்று தமிழ் சினிமாவிற்கு? ரத்தம் தெறிக்கும் கொலைகள், மனதை பதற வைக்கும் கொடூர வன்முறைகள் இல்லையென்றால் படமே பார்க்கமாட்டோம் என தமிழ் சினிமா ரசிகர்கள் சபதம் செய்துவிட்டார்களா? நல்ல சினிமாவை நோக்கிய நகர்வில் தமிழ் சினிமா எப்படி திசைமாறியது என ஒரு அலசல்; தமிழ் சினிமாவில் தற்போது வெளியாகி இருக்கும் ராயன் திரைப்படத்தில் ஒரு காட்சி. கொலைகளை செய்து விட்டு வரும் தனுஷை அவரது தங்கை நீர் ஊற்றி குளிப்பாட்டுவார். தண்ணீர் முழுவதும் இரத்தமாக ஓடும். இது போல பார்த்து விட்டு வீட்டுக்கு வந்த பிறகு நானும் நன்கு ஆற அமர குளித்தேன். நீர் சிவப்பாக மாறவில்லை எனினும், உடல் முழுக்க இரத்த வாடையும், வெட்டுப்பட்ட சதைகளின் குவியலுமாகவே மனம் முழுக்க நிரம்பி இருந்தது. மனம் முழுக்க இரத்த சகதி தெறித்தது போன்ற உணர்வு. இந்தப் படத்தின் இயக்குனரும் நடிகருமான தனுஷிடம் “ஒய் திஸ் கொலை வெறி?” என்று தான் கேட்கத் தோன்றுகிறது. சண்டைக் காட்சிகளைக் கூட ரசனையாக அணுகிக் கொண்டிருந்த தமிழ் சினிமா வன்முறை, ஆபாசம், இரத்த ஆறு ஓடும் கொலைகார சினிமாவாக மாறி நிற்பது ஏன்? சமீபத்தில் வெளிவந்த பெரும்பாலான சூப்பர் ஸ்டார் படங்கள் அனைத்துமே வன்முறை, குழந்தைகளிடம் பாலியல் அத்துமீறல், போதைப் பழக்கத்தை இயல்பாக்கும் காட்சிகள் என்பதாகவே உள்ளன. விக்ரம், மாஸ்டர், ஜெயிலர், லியோ, மஹாராஜா என்று தொடர்ந்து தற்போது ராயன் அதன் உச்சகட்டத்தை அடைந்திருக்கிறது. பெரும் வெற்றி இயக்குனர்களாக அறியப்படும் லோகேஷ் கனகராஜ், நெல்சன் திலீப்குமார், அட்லீ, வெற்றிமாறன், மாரி செல்வராஜ், நித்திலன் ஆகியோரது வரிசையில் மிகச் சிறப்பான நடிகரான தனுஷும் இந்த வெறியாட்ட ஜோதியில் கலந்திருக்கிறார். நல்ல சினிமாவை நோக்கிய பாய்ச்சலில் தமிழ் சினிமா இடறி அதல பாதாளத்தில் விழுந்தது எப்படி? சற்று தமிழ் சினிமாவின் வரலாற்று இயங்கியலை திரும்பிப் பார்த்தால் ஓரளவுக்கு நமக்கு பிடிபடக்கூடும். ஆரம்ப கால சினிமாவில், எம் ஜி ஆர் சிவாஜிக்கு இணையான வில்லன் பாத்திரங்களில் நடிக்க அற்புதமான நடிகர்கள் இருந்தனர். எம். என். நம்பியார், அசோகன், டி எஸ். பாலையா, எம். ஆர். ராதா, ஆர். எஸ். மனோகர், செந்தாமரை ஆகியோரின் வில்லன் பாத்திர வடிவமைப்புகள் ரத்தம் தெறிக்கும் வன்முறையை அடிப்படையாக கொண்டு அமையவில்லை. பெரும்பாலான படங்களில் வில்லன் மனம் திருந்திவிடக் கூடியவர்களாக இருந்தனர். அவர்களை மன்னித்து ஏற்கக் கூடிய நாயகர்களின் பாத்திரங்கள் இருந்தன. வில்லன்கள் “அபூர்வமாகவே” கொல்லப்பட்டனர். திரையில் இரத்தம் பீய்ச்சி அடிக்கும் காட்சிகள் இல்லை. எங்க வீட்டுப் பிள்ளை, ஆயிரத்தில் ஒருவன் போன்ற படங்களில் நம்பியார் மோசமான வில்லத் தனத்தை செய்தாலும் இறுதிக் காட்சியில் மனந்திருந்தி மன்னிப்பு கோருபவராகவே இருந்தார். தில்லானா மோகனாம்பாள் படத்தில் வில்லனாக வந்த பாலாஜி மற்றும் நம்பியார் ஆகியோர் தங்கள் தவறுகளுக்காக மனந்திருந்தி வருந்துபவர்களாகவே இருந்தனர். அப்படத்தில் சிவாஜியின் பாத்திரம் ஹீரோ எனினும், தன் காதலியை உடனுக்குடன் சந்தேகிக்கும் அவரது கறுப்பு பக்கத்தையும் இயக்குனர் காட்டத் தவறவில்லை. எம்.ஆர்.ராதா, டி. எஸ். பாலையா, பி.எஸ்.வீரப்பா, அசோகன், மனோகர் போன்றவர்களின் வில்லத்தனத்தில் குரூரத்தை விட, மெல்லிய குசும்புத்தனமும் இருந்தது. நாடகங்களிலிருந்து சினிமாக்களுக்கு வந்தவர்கள் என்பதால், இவர்களின் வில்லத்தனத்தில் நாடகத்தனம் அதிகம் இருந்தது. ஶ்ரீதர், பாலசந்தர் ஆகியோரின் வருகைக்கு பிறகு படங்களின் வில்லன்கள் புதிய பரிமாணம் எடுக்கத் தொடங்கினர். காதலிக்க நேரமில்லை படத்தில் டி எஸ் பாலையாவின் நகைச்சுவை வில்லன் பாத்திரம் இன்றளவும் ஒரு சாதனையே. திரைக்கதை, எதிர்பார்த்ததையும் கோரியதையும் கச்சிதமாக செய்தனர் அந்தக் கால வில்லன்கள். 1970களுக்கு பிறகான புதிய அலை இயக்குனர்களின் வரவால், ஹீரோ – வில்லன் என்ற இயங்கியல் புதிய திசையில் பயணிக்கத் தொடங்கியது. யதார்த்தவாத வில்லன்களின் அகவுலகை இயக்குனர்கள் மகேந்திரன், பாலுமகேந்திரா, தேவராஜ் மோகன், பாரதிராஜா, பாக்யராஜ் போன்றவர்களின் படங்களில் ஹீரோ வில்லன்களின் பரிமாணம் புதிய கட்டத்தை அடைந்தது. வில்லன் ரஜினிகாந்த் ஹீரோவானார், ஹீரோ ஜெய்சங்கர் வில்லன் ஆனார். ஹீரோவின் பண்புகளும் வில்லனின் பண்புகளும் புதிய வடிவத்தை மேற்கொள்ள ஆரம்பித்தன. உதிரிப் பூக்கள் படத்தில் விஜயன் ஏற்று நடித்த பாத்திரம் ஆழமான உளவியல் சிக்கல் கொண்ட வில்லனை நமக்கு அறிமுகம் செய்தது. அந்த வில்லன் பாத்திரத்தின் வன்மத்தை காட்சிப் படிமங்களால் நமக்கு கடத்தினார் இயக்குனர் மகேந்திரன். 1980களின் பிற்பகுதியில் உருவான நாயக பிம்ப கதைகள் வில்லனுக்கு வேறொரு பரிமாணத்தை தந்தன. நாயகன், தளபதி, தேவர்மகன், அமரன் போன்ற படங்களில் இடம் பெற்ற வன்முறை காட்சிகள் தமிழ் சினிமாவில் முதல் முதலாக இரத்தம் தெறிக்கும் கொடுர அனுபவத்தை தரத் தொடங்கின. நாயகனில் போலீஸ் அதிகாரியை நாயகன் அடித்தே கொலை செய்யும் காட்சி, தளபதி படத்தில் கையை வெட்டி கொலை செய்யும் காட்சி, தேவர் மகனின் இறுதிக்காட்சியில் நாசர் தலை துண்டித்து கொல்லப்படும் காட்சி தமிழ் சினிமா ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கின. 1990களில் தொடங்கிய இந்தப் போக்கு மெதுவாக வளர்ச்சியடைந்து, 2000 ஆண்டுகளின் பிற்பகுதியில் வெளிவந்த பருத்தி வீரன், சுப்பிரமணியபுரம் படங்களில் முக்கியமான திருப்பத்தை அடைந்தது. பருத்தி வீரன் மிகச் சிறந்த கல்ட் கிளாசிக் என்றாலும், அதன் கிளைமாக்ஸில் காட்சிப்படுத்தப்பட்ட பாலியல் வன்முறைக் காட்சியும், அதைத் தொடர்ந்து வரும் காட்சிகளும் பேரதிர்ச்சி மதிப்பீடுகளை கொண்டிருந்தன. வன்முறை எப்படி காட்சிப்படுத்தப்பட வேண்டும் என்பதின் தார்மீக அடிப்படையைக் கூட இப்படம் நிராகரித்திருந்தது. சுப்பிரமணியபுரம் படத்திலும் வில்லன் கழுத்தறுத்து கொல்லப்படும் காட்சியில் ரசிகர்கள் பதறுவதற்கு பதில் “கொல், கொல்,” என்று ஆவேசமாக கத்துவதை பார்க்க முடிந்தது. துரோகத்தை கதைக்களமாக கொண்ட இப்படத்தில் இடம் பெற்ற வன்முறைக் காட்சிகள் எல்லை மீறி இருந்தது. கலைக்கப்பட்ட தலைமுடி, லுங்கி, மதுரை வட்டார வழக்கு, நட்புக்காக கொலை கூட செய்வார்கள் என்ற கிளிஷே என இது போல பல படங்கள் வர ஆரம்பித்தன. 2010களுக்கு பிறகு, குறும்படங்கள் எடுத்து இயக்குனர்கள் ஆனவர்கள் சினிமாவிற்குள் நுழைந்தனர். இது தமிழ் சினிமாவில் புதிய அலையை உருவாக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. பீட்சா, பத்மினியும் பண்ணையாரும், சூது கவ்வும் போன்ற படங்கள் பெரும் நம்பிக்கையையும், எதிர்பார்ப்பையும் உருவாக்கினர். ஆனால், தமிழ் சினிமாவில் நிகழ்ந்ததோ தலை கீழான சம்பவங்கள். குறும்பட இயக்குனர்களும் புதிய இயக்குனர்களும் சூப்பர் ஸ்டார் படங்களை இயக்குவதிலும் பெரும் சம்பளம் பெறுவதிலும் மட்டுமே குறியாக இருந்தனர். லோகேஷ் கனகராஜ் இயக்கிய கைதி திரைப்படம் முழுக்க முழுக்க ஆக்‌ஷன் காட்சிகளால் நிரம்பி வழிந்தது. சூப்பர் ஸ்டார் நடிகர்களுக்கு கதை தயார் செய்யும் நோக்கத்தில் தங்களது படைப்புத் திறனை வன்முறைக் காட்சிகளை விதம்விதமாக படமாக்குவதில் இவர்களுக்கு வெறியே வந்து விட்டது. மாஸ்டர் படத்தில் அதுவரை ஹீரோவாக நடித்து வந்த விஜய் சேதுபதி கொடூர வில்லனாக நடித்தார். ஈவிரக்கம் இல்லாமல் இரத்த வெறி கொண்ட வில்லனாக விஜய் சேதுபதி நடித்திருந்தார். அதன் பின்பு மிகப் பெரும் நடிகரான கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த விக்ரம் படத்திலும் போதை, இரத்த வெறி கொண்ட வன்முறைக் காட்சிகள், தலை துண்டிக்கப்பட்டு சாகடிக்கப்படும் பெண் கதாபாத்திரங்கள், பெட்ரோல் ஊற்றி எரிக்கப்படும் மனிதர்கள் என்று பெரும்பாலான காட்சிகள் வன்முறை வெறியாட்டத்தையும் போதை கலாச்சாரத்தையும் முன்வைத்தன. அது போலவே லியோ படத்திலும் குழந்தைகளை பாலியல் வன்முறை செய்ய முயலும் தேவையற்ற பாத்திரங்கள், நூற்றுக்கணக்கானோரை வெட்டிச் சாய்க்கும் ஹீரோ, பெற்ற மகளை நரபலி கொடுக்க தயாராகும் வில்லன் என்ற எல்லா கேடுகெட்ட தனங்களையும் லியோ படம் தனக்குள் வைத்திருந்தது. அசுரன், வட சென்னை படங்களை இயக்கிய வெற்றி மாறனும் இந்த வன்முறை காட்சிப்படுத்தலில் சளைத்தவர் இல்லை. விடுதலை படத்தில் இடம்பெற்ற பெண்களை சித்திரவதை செய்யும் காட்சியிலும், ஒரு பெண் தலை முண்டமாக விழும் காட்சியிலும் வன்முறையை ஒரு ரசனையாக வளர்த்தெடுப்பதில் நிபுணத்துவம் கொண்டவர்களாக மாறி வருகிறார் வெற்றி மாறன். சூப்பர் ஸ்டார் நடிகரான ரஜினி நடித்த ஜெயிலர் படத்தில் இடம் பெற்ற வன்முறைக் காட்சிகள் நல்ல மன நிலையோடு இருப்பவர்களை நிலை தடுமாறச் செய்யக் கூடியவை. விஜய் சேதுபதி நடித்த மஹாராஜா படமும், குழந்தைகளை பாலியல் வன்முறை செய்யும் வில்லன் பாத்திரங்களை அடிப்படையாக கொண்டிருந்தது. வில்லன் என்பவன் கொல்லப்பட்டே ஆக வேண்டும். அந்த கொலையை ரசிகர்கள் விரும்பும் அளவு வில்லன்களின் குற்ற செயல் கொடூரமாக இருக்க வேண்டும் என்று தீர்மானித்தே திரைக்கதை எழுதப்படுகிறதா என்ற ஐயம் நமக்கு எழாமல் இல்லை. தற்போது வெளியாகி உள்ள ராயன் திரைப்படத்தின் கதையே வன்முறை மட்டும் தான். முதல் காட்சியில் துவங்கும் கொலை வெறி இறுதிக் காட்சி வரை வெட்டப்பட்ட தலைகளாகவும், அறுக்கப்பட்ட சதைத் துண்டுகளாகவும், ஆறுகளாக ஓடும் இரத்த ஓட்டங்களாகவும் படம் முழுக்க வன்முறை, வன்முறை. மிகச் சிறந்த நடிகரான தனுஷ் இயக்கத்தில் வெளிவரும் படம் என்பதால் ஆர்வத்துடன் படம் பார்க்க சென்றவர்களுக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி. பார்வையாளர்களை துணுக்குறச் செய்யும் ட்விஸ்ட்களை உருவாக்குவதற்காக அப்பட்டமான கொலைவெறி தாண்டவம் ஆடியிருக்கிறார் தனுஷ். ஏன்? எதற்கு என்று தெரியாமல் எதிர்ப்படும் அத்தனை பேரையும் வெட்டிச் சாய்க்கிறார். தங்கையை பாலியல் வன்முறை செய்த வில்லனை கொலை செய்வதன் மூலம் வன்முறைக் காட்சிக்கான நியாயத்தை பார்வையாளர்களிடம் உருவாக்குகிறார். நமக்கு படம் பார்க்கும் போதெல்லாம் ஒரு கேள்வி எழுகிறது. இவையெல்லாம் எந்த ஊரில் நடக்கிறது. அங்கு காவல்துறை என்ற ஒன்று இருக்காதா? நீதிமன்றங்கள் இருக்காதா? ஊடகங்கள் இருக்காதா? நாமெல்லாம் ஏதேனும் வேற்று கிரகத்தில் வாழ்கிறோமா என்ற ஐயம் எழுகிறது. குறிப்பாக, இந்த படங்களில் வரும் வில்லன் கதாபாத்திரங்களின் தன்மை தான் சிக்கலான அம்சமாக மாறுகிறது. கதையோட்டத்தில் நாயகன் அல்லது நாயகியுடன் ஏற்படும் முரண் காரணமாக வில்லன் பாத்திரம் வளர்த்தெடுக்கப்பட்டு வந்தது. ஆனால், இந்த வன்முறைப் படங்களில் வில்லன் எடுத்த எடுப்பிலேயே சமூக விரோத கும்பல் தலைவனாகவோ அல்லது போதைப் பொருள் அல்லது கடத்தல் கும்பல் தலைவனாகவோ இருக்கிறான். வில்லன் பாத்திரத்தின் மீது இன்னும் தீவிரமான வெறுப்பை உருவாக்குவதற்காக சிறுமிகளையோ, குழந்தைகளையோ பாலியல் வன்முறை செய்பவனாக உருவாக்கம் செய்யப்படுகின்றன. ஏனென்றால், இந்த வில்லன் திருந்துபவன் அல்ல; இவனையெல்லாம் திருத்த முடியாது, கொல்வதைத் தவிர, ஹீரோவுக்கு வேறு வழியே இல்லை என்ற தீர்மானத்தை பார்வையாளரின் மனதில் உருவாக்கவே இந்த வகையான வினோத வில்லன்கள் உருவாகிறார்கள். ஜெயிலரின் வில்லன் பாத்திரத்தில் நடித்த விநாயகன் என்கிற அற்புதமான நடிகரை கோமாளி வில்லனாக சித்தரித்திருந்தார் நெல்சன். விக்ரமில் விஜய் சேதுபதி போதை பயன்படுத்தியவுடன் அவருக்கு அசுர பலம் வருவது போல் காட்சிப்படுத்தி இருந்தார் லோகேஷ். இவர்கள் நாயகன் வாழ்வில் குறுக்கிடும் போது அவரால் கொல்லப்படுகிறார்கள். மற்றபடி இந்த வகை வில்லன்கள் சமுக விரோதிகள் இவர்கள் எதிர் நாயகர்கள் அல்ல. பார்வையாளர்களின் ஆர்கசத்தை தூண்டி வன்முறையால் கொல்லப்பட்டு, அதுவும் குரூரமான முறையில் நாயகனால் கொல்லப்படுவதற்காக உருவாக்கப்படும் பிம்பங்கள். வன்முறை கதைக்களம் எடுக்கவே கூடாது என்பதல்ல, அதை எப்படி காட்சியாக முன் வைக்கிறோம் என்பதில்தான் இயக்குனர்களின் கலை ஆளுமையும், பொறுப்பும், கடமையும் அடங்கி இருக்கிறது. இந்த ஆண்டு ஆஸ்கர் விருது வென்ற Zone of interest சினிமாவும் வன்முறை குறித்த சினிமா தான். ஆனால், அப்படம் கலை நேர்த்தியுடனும் பொறுப்புணர்வோடும் எடுக்கப்பட்டு உள்ளது என்பதை புரிந்து கொண்டால் தமிழ் சினிமா முன் வைக்கும் வன்முறைக் காட்சிகள் எவ்வளவு அறுவெறுப்பானவை என்பது புரியும். சினிமா, கலை என்ற பெயரில் இவர்கள் ஆபாசத்தையும், வன்முறையையும் விற்பனைச் சரக்குகளாக்குகிறார்கள். வன்முறையை ருசிகரமான பண்டமாக மாற்றுகிறார்கள். ஆழ் மனங்களில் புரையோடிப் போயிருக்கும் போலியான கலைஞர்கள் தான் இது போன்ற சினிமாக்களை எடுப்பார்கள். இன்னும் அடுத்தடுத்து இது போன்ற சினிமாக்கள் வரிசை கட்டி காத்திருக்கின்றன. சென்சார் போர்டு சில சமயங்களில் இது போன்ற சினிமாக்களுக்கு யு சான்றிதழ் அளிக்கிறது என்பது வேதனையான செய்தி. கன்னடத்திலும் மலையாளத்திலும் வரும் நல்ல சினிமாக்களை தமிழ் சினிமா ரசிகர்கள் கொண்டாட துவங்கியிருக்கிறார்கள். எனவே, ரசிகர்கள் வன்முறையை விரும்புகிறார்கள் என்ற சாக்கு போக்குகள் இனி செல்லாது. இந்த போக்கு தமிழ் சினிமாவை அழிவு பாதைக்கு இட்டுச் செல்லும் என்பது உறுதி. தமிழ் சினிமா இயக்குனர்களே “என்று தணியும் இந்த கொலை வெறி? சினிமாவை பார்க்கும் மென்மையான மனம் படைத்த குழந்தைகள், பெண்கள், மூத்தவர்கள்.. இவர்களை ஒரு நிமிடம் உங்கள் மனங்களில் நிறுத்திப் பாருங்கள். கலை என்பது மனித நேயத்தை வளர்ப்பதற்கு மாறாக மனித மனங்களில் வெறுப்பை,வன்மத்தை விதைத்து விடக் கூடாதல்லவா? கட்டுரையாளர்;- தயாளன் ஆவணப்பட இயக்குனர் https://chakkaram.com/2024/08/03/தென்னிந்திய-தமிழ்-சினிமா/
  2. தமிழ்ப்பொது வேட்பாளர் = பழைய வாய்ப்பன் அல்லது மூடப்பட்ட கதவு July 31, 2024 — கருணாகரன் — தோல்வி ஒரு போதுமே பெரிதல்ல. தோற்றுக் கொண்டேயிருப்பதுதான் பெரிது. அதுவே மிகப் பெரிய துயரமும் அவலமும். 00 ஈழத் தமிழரின் அரசியல், தோற்றுக் கொண்டேயிருக்கும் ஒன்றாகி விட்டது. அதனால்தான் தமிழர்கள் எப்போதும் தோற்றப்போன நிலையில் இருக்கிறார்கள். – ஆயுதப் போராட்டத்துக்கு முந்திய அரசியலும் தோற்றுப்போனது. – ஆயுதப்போராட்ட அரசியலும் தோற்றுப்போனது. – ஆயுதப்போராட்டத்துக்குப் பின்னான தற்போதய அரசியலும் தோற்றுப் போனதாகவே உள்ளது. இதிலும் இரண்டு வகை உண்டு. – ஒன்று நம்மைப் பிறர் – எதிராளர்கள் – தோற்கடிப்பது. – மற்றது, நம்மை நாமே தோற்கடிப்பது. அநேகமான சந்தர்ப்பங்களிலும் நம்மை நாமே தோற்கடிப்பதே நடந்து கொண்டிருக்கிறது. அப்படித்தானுள்ளது, “தமிழ்ப் பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும்” என்று ஜனாதிபதித் தேர்தலையொட்டிச் சிலர், “சாகிறோம் பந்தயம் பிடி” என்ற மாதிரி, விடாப்பிடியாக முன்னெடுத்துக் கொண்டிருக்கும் தேர்தற் திருவிழா ஏற்பாடுகளும். (இதற்காக யாழ்ப்பாணத்தில் ஒரு பத்திரிகை எழுதிக் கொண்டிருக்கும் நகைச்சுவைகள் ஏராளம்). அதற்குத் தோதாக தமிழ் மக்கள் பொதுச்சபை, தமிழ்த்தேசியப் பொதுக் கட்டமைப்பு என்று கிழமைக்குக் கிழமை ஒவ்வொரு அமைப்புகளின் உருவாக்கமும் நடக்கிறது. இப்படி இதற்கு முன்னர் உருவாக்கப்பட்ட அமைப்புகளுக்கு (தமிழ் மக்கள் பேரவை, P 2 P… போன்றவைக்கு) என்ன நடந்தது என்று யாருக்குமே தெரியாது. இந்த வார வெளியீடான தமிழ்த்தேசியக் கட்மைப்பின் அடுத்த கூட்டம் எப்படி நடக்கும்? அதில் யாரெல்லாம் கலந்து கொள்வார்கள் என்றே தெரியாது. அந்தளவுக்குக் குழப்பங்கள் ஒவ்வொருவருக்குள்ளும். இருந்தாலும் இழுத்துப் பிடித்து தலையைக் கொடுத்தே ஆக வேண்டும் என்று இதற்குப் பிள்ளையார் சுழி போட்டவர்கள் (களப்புலிகள்) இராப்பகலாக ஓடிக் கொண்டிருக்கிறார்கள். 2005 இல் ஜனாதிபதித் தேர்தலின்போது எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு நிகரானதே, இப்போது எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் பொது வேட்பாளர் விவகாரமும். அதற்குப் பரிசாக முள்ளிவாய்க்கால் முடிவுகள் கிடைத்தன. இதற்குப் பரிசாக…!? நிச்சயமாக இதற்கான எதிர்விளைவுகளையும் தமிழ்ச்சமூகம் சந்திக்கத்தான் போகிறது. “கெடுகுடி சொற் கேளாது” என்பார்களே! அப்படித்தான் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. எப்போதும் சாவுடன், அழிவுடன், பின்னடைவுடன், தோல்வியுடன் விளையாடிப் பார்ப்பது. தமிழ்ச் சமூகத்தின் உளக்குறைபாடு அல்லது சிந்தனைக் கோளாறுதான் இதற்குக் காரணமாகும். எதையும் தவறாகக் கணிப்பிடுவது. அல்லது எதையும் பிழையாகப் பார்க்க முற்படுவது. ஒரு நண்பர் அடிக்கடி சொல்வார், “பிழையாகக் கணக்கைச் செய்தால் விடையும் பிழையாகத்தான் வரும்” என்று. இதை உணர மறுத்து, தவறைப் பிறர் மேல் போட்டுத் தப்பித்துக் கொள்வதே தமிழர்களின் வேலையாக (அரசியலாக) உள்ளது. அநேகமான தமிழர்கள் எப்பொழுதும் சொல்லிக் கொள்ளும் தலையான வசனம் ஒன்றுள்ளது, “அரசு எங்களை ஏமாற்றி விட்டது” என. “காலா காலமாக ஏமாற்றப்பட்டோம். இனியும் அப்படி ஏமாற முடியாது” என்று தமிழரசுக் கட்சியின் தலைவரான மாவை சேனாதிராஜாவும் திருவாய் மலர்ந்துள்ளார். சேனாதிராஜா மட்டுமல்ல, பொதுவேட்பாளரை நிறுத்த வேணும் என்று அடம்பிடிக்கின்ற எல்லோரும்தான் அப்படிச் சொல்கிறார்கள். ரணில் ஏமாற்றி விட்டார். ராஜபக்ஸக்கள் ஏமாற்றி விட்டனர். மைத்திரி ஏமாற்றி விட்டார். அதற்கு முன்பு – சந்திரிகா, விஜயதுங்க, பிரேமதாச, ஜே.ஆர். ஜெயவர்த்தன, சிறிமா பண்டாரநாயக்க எல்லாம் ஏமாற்றி விட்டார்கள் என்று. போதாக்குறைக்கு இந்தியா ஏமாற்றி விட்டது. சர்வதேச சமூகம் ஏமாற்றி விட்டது என்றும் ஒப்பாரி வைத்துக் கொண்டிருக்கிறோம். இப்படி எல்லோரும் ஏமாற்றி விடக் கூடிய அளவுக்குத்தான் நம்முடைய தமிழ்த் தலைமைகளும் தமிழ் அரசியலும் உள்ளது. ஒரு புள்ளியிற் கூட அவர்களைத் தோற்கடிக்கக் கூடிய – வெல்லக் கூடிய – அரசியலே முன்னெடுக்கப்படவில்லை. ஒரு தலைமைகூட சிங்களப் பேரினவாதப் போக்கைக் கட்டுப்படுத்தக் கூடியவாறு தமிழ் அரசியலை – தமிழ் பேசும் மக்களின் அரசியலை மேற்கொள்ளவில்லை. காரணம், தோற்றுப் போகும் சிந்தனையை – தோற்கடிக்கக் கூடிய அரசியல் வழிமுறையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டதேயாகும். அதாவது ஒற்றைப்படைத்தன்மையான அணுகுமுறை. கறுப்பு – வெள்ளைச் சிந்தனை. முக்கியமாக உணர்வு சார்ந்த உணர்ச்சிகரமான அரசியல் முன்னெடுப்பே இதுவாகும். இது அறிவுக்கு எதிரானது. என்பதால்தான் அறிவுசார் அரசியலை மொழிவோரையும் முன்னெடுப்போரையும் உணர்வாளர்கள், துரோகிகள் என்று எடுத்த எடுப்பிலேயே குற்றம் சாட்டி நிராகரித்துத் தள்ளி விட முயற்சிக்கிறார்கள். அறிவுசார் அரசியலை நிராகரித்தால் அதற்குப் பிறகு எங்கே இராஜதந்திரம் (Diplomacy), தந்திரோபாயம் (strategy), புதிய அணுகுமுறைகள் (New Approaches), மீள் பரிசீலனைகள் (Reconsiderations), திருத்தங்கள் (corrections), மாற்றங்கள் (changes), வளர்ச்சி (Development), புத்தாக்கம் (Innovation) எல்லாம்? இவையெல்லாம் அரசியலின் அடிப்படைகள். அரசியல் ரீதியான விளைவுகளுக்கானவை. இவற்றை நிராகரித்து விட்டுத் தமிழ்ச்சமூகம் தனக்குள் சுருங்கிக் கொள்கிறது. குறைந்த பட்சம் அது இலங்கைத்தீவில் தமிழ்பேசும் சமூகங்களாகக் கூடத் திரள முடியாமல் திணறுகிறது. இந்த லட்சணத்தில்தான் அது பிராந்திய சக்தியாகிய இந்தியாவையும் சர்வதேச சமூகத்தையும் தன்வயப்படுத்தப்போகிறதாம்! இதெல்லாம் நடக்கிற காரியமா? கற்பனைக் குதிரைகள் ஓடுவதுமில்லை, களைப்பதுமில்லை. என்பதால்தான் நிரந்தரத் தோல்வியைத் தமிழ்ச்சமூகம் பெற்றுக் கொண்டிருக்கிறது. கடந்த 75 ஆண்டுகால அரசியல் வரலாற்றில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் வரவேயில்லை என்று சொல்ல முடியாது. அந்த வாய்ப்புகளைச் சரியாகக் கையாளக்கூடிய நம்பிக்கையும் திறனும் நம்மிடம் இல்லாமலிருந்ததே உண்மை. இன்னும் இந்தத் தடுமாற்றம் நீடிக்கிறது. இதை எத்தனை தடவை சொன்னாலும் புரிந்து கொள்ள மறுப்பதே நிகழ்கிறது. காரணம், நிலைமையைப் புரிந்து கொள்ளாத, உண்மையை விளங்க மறுக்கின்ற, யதார்த்தத்தை உணரத் தவறும் அதி தீவிரம், அதி புத்திசாலித்தனம், அதி தூய்மைவாதம், அவநம்பிகை என்ற பொருந்தாக் குணங்களே. இது தொடரும் தோல்விகளை உண்டாக்குகிறது. தொடரும் தோல்விகளைத் தாக்குப் பிடிக்க முடியாமல் பலரும் நாட்டை விட்டு வெளியேறுகிறார்கள். இந்த வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்தக் கூடிய ஆற்றலோ – வல்லமையோ – புத்திசாலித்தனமோ, அரசியல் நடவடிக்கையோ எவரிடத்திலும் இல்லை. குறைந்த பட்சம் கட்சிகளை – அரசியலாளர்களை – ஒரு குடையின் கீழ்க் கொண்டு வரக் கூடிய திறனும் உணர்வும் யாரிடத்திலும் இல்லை. அப்படி ஒரு குடையின் கீழ் கொண்டு வருவதற்கு இரண்டு வழிகள் – இரண்டு அடிப்படைகள் – உண்டு. 1. கொள்கை ரீதியாக ஒன்றிணைவது (Unity on principle) 2. பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கும் விதத்தில், அவற்றுக்குத் தீர்வு காணும் அடிப்படையில் ஒன்று திரள்வது (Based on the issues) இவை இரண்டின் அடிப்படையிலும் ஒன்றிணையவோ, அரசியலை முன்னெடுக்கவோ, மக்களுக்கான பணிகளைச் செய்யவோ யாரும் தயாரில்லை. பதிலாக அவ்வப்போது எதையாவது சொல்லித் தண்ணி காட்டுவதற்கே முயற்சிக்கின்றனர். இது மேலும் மேலும் தோல்விகளைத் தமிழ்ச்சமூகத்துக்குக் கொடுக்கப்போகிறது. இதனால் நிரந்தரத் தோல்விக்கு தமிழ்ச்சமூகம் தள்ளப்படப்போகிறது. என்றபடியால்தான் தமிழ்ச்சமூகத்தையும் விட பின்தங்கிய நிலையில் இருந்த ஏனைய இலங்கைச் சமூகத்தினர் இன்று தம்மை முன்னேற்றியுள்ளனர். தமிழர்கள் அவர்களைப் பார்த்து உள்ளுக்குள் புகைந்து கொண்டிருக்கும் அளவுக்கே நிலைமை உள்ளது. அப்படிப் புகைந்து கொண்டிருப்பதால் பயனில்லை. அறிவையும் ஆற்றலையும் பயன்படுத்தி தாம் முன்னேறிக் கொள்ள வேண்டியதே அவசியம். அதை விட்டுவிட்டு இப்படியே அடுத்தவரில் பழி சொல்லிக் கொண்டும் உள்ளே புகைந்து கொண்டுமிருந்தால் அதிமுட்டாள்தனமாக வரலாற்றில் முடிவடைய வேண்டியதுதான். தமிழ்ப் பொது வேட்பாளர் என்ற முடிவு மட்டுமல்ல, அந்த வழியிற் சிந்திக்கும் அனைத்து முடிவுகளும் அப்படித்தான் உள்ளது. எவர் ஒருவர் தொடர்ந்து வளர்ச்சியை நோக்கி மாறுகிறாரோ அவரிடம்தான் மாற்றத்தைப் பற்றிப் பேச முடியும். அவருடன் மட்டுமே மாற்றத்துக்காக இணைந்து செயற்பட முடியும். தலைமுறை தலைமுறையாக ஒரு மாற்றமும் பெறாதவர்கள், மாற்றத்தை உருவாக்குவதைப்பற்றிச் சிந்திக்காதவர்கள், தமக்குள் வளர்ச்சியடையாதவர்கள்தான் மாற்றங்கள் குறித்து அதிகமாகப் போதனைகளைச் செய்கிறார்கள். பொருளாதாரம், பதவி போன்றவற்றைத் தவிர, இவர்களுடைய வாழ்விலும் சிந்தனையிலும் பழக்கத்திலும் எந்த மாற்றமுமில்லை. ஆனால் இவர்கள்தான் வழிமறித்து, மாற்றம் பற்றி தீவிரமாகப் போதிக்கிறார்கள். உன்னை, உன் வாழ்வை உன்னால் மாற்ற முடியவில்லையெனில் எதனை நீ மாற்றுவாய்? என்று நாம் கேட்க வேண்டும். இப்போது இன்னொரு வாய்ப்பான காலம் வந்துள்ளது. 9 ஆவது ஜனாதிபதித் தேர்தல் அந்த வாய்ப்பைக் கொண்டு வந்திருக்கிறது. இதனைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதற்கான கூர்மையான அவதானிப்போடு, முறையான உரையாடல்களை நிகழ்த்தி, நிதானமான இறுதித் தீர்மானத்தை எடுக்க வேண்டும். அப்படி எடுக்க முடியும். சிங்களத் தரப்பிலும் தமிழ்த்தரப்பை நோக்கி இறங்கி வரக்கூடிய – வரவேண்டிய – சூழல் இது. அதற்கான சாத்தியக் கதவுகளைத் திறந்து வைத்திருப்பது அவசியம். ஆனால், இங்கே நடந்து கொண்டிருப்பது, கதவுகளை மூடும் காரியமல்லவா! தமிழ்ப்பொது வேட்பாளர் என்பதே கதவுகளை மூடும் செயலன்றி வேறென்ன? உலகத்தில் இந்த மாதிரி முட்டாள்தனமான வேலையை வேறு எந்தச் சமூகமாவது செய்யுமா? தமிழ் மக்களைத் தமிழ்த் தரப்பினரே தோற்கடிக்கும் முட்டாள்தனத்தை (அவர்கள் இதை அதி புத்திசாலித்தனம், அதி விவேகம் என்றுதான் கருதிக் கொண்டிருக்கிறார்கள்) இத்துடனாவது நிறுத்துவது நல்லது. தங்களைப் புத்திஜீகளாகக் கருதிக் கொண்டிருக்கும் இவர்கள் மெய்யாகவே புத்திஜீவிகள் தானென்றால் தமிழ்ச் சமூகம் அரசியல், பொருளாதாரம், பண்பாடு, சமூகம் என்ற அடிப்படையில் வளர்ச்சியை எட்டுவதற்குப் பாடுபட வேண்டும். அதற்குரிய திட்டங்களை வகுத்துக் காட்ட வேண்டும். அதை விடுத்து, இந்த மாதிரி பழைய வாய்ப்பனை திரும்பவும் எண்ணைச் சட்டிக்குள் போட்டு எடுக்கத் தேவையில்லை. தோல்வி ஒரு போதுமே பெரிதல்ல. தோற்றுக் கொண்டேயிருப்பதுதான் பெரிது. அதுவே மிகப் பெரிய துயரமும் அவலமும். https://arangamnews.com/?p=11050
  3. ஜனாதிபதித் தேர்தல் களம்: திரட்டுவதா சிதறடிப்பதா? - நிலாந்தன் “இம்முறை ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் எதிர்வுகூற முடியாதவை மட்டுமல்ல, ஊகிக்க முடியாதவைகளுந்தான்” என்று ஒரு மேற்கத்திய தூதராக அதிகாரி சொன்னார். இலங்கைதீவின் நவீன வரலாற்றில் குறிப்பாக ஜனாதிபதி முறைமை அமல்படுத்தப்பட்ட பின், ஒரு பிரதான வேட்பாளர் அதுவும் ஜனாதிபதியாக இருப்பவர், சுயேட்சையாக கட்டுப்பணம் செலுத்தியிருப்பது என்பது இதுதான் முதல்தடவை. முன்னெப்பொழுதும் தேர்தல் களத்தில் இந்த அளவுக்கு நிச்சயமின்மைகள் நிலவியதில்லை. இது எதை காட்டுகிறது ? போட்டி அதிகமாக இருப்பதை மட்டும் காட்டவில்லை. பெரும்பான்மையானவர்களால் அங்கீகரிக்கப்பட்ட தலைவர் யாரும் இல்லை என்பதையும் காட்டுகிறது. நாடாளுமன்றத்தில் தாமரை மொட்டு கட்சிதான் பலமாக உள்ளது. அதன் தயவில்தான் ஜனாதிபதி தங்கியிருக்கிறார். ஆனாலும் அவரை வரும் ஜனாதிபதி தேர்தலில் தனது வேட்பாளராக நிறுத்த தாமரை மொட்டுக் கட்சி தயாரில்லை என்று தெரிகிறது. கடந்த பல மாதங்களாக அது தொடர்பாக நடந்த பேச்சுவார்த்தைகள் வெற்றியளிக்கவில்லை என்றும் தெரிகிறது. வெற்றியளிக்கவில்லை மட்டுமல்ல அவை முரண்பாடுகளை தவிர்க்க உதவவில்லை என்றும் தெரிகிறது. அண்மையில் நாமல் ராஜபக்ச ஜனாதிபதி தொடர்பாக தெரிவித்த கருத்துக்கள் அதைத்தான் காட்டுகின்றன. ரணில், தமது கட்சியைப் பிளவுபடுத்த முயற்சிக்கிறார் என்ற பொருள்பட நாமல் கருத்து தெரிவித்திருந்தார். விடுதலைப் புலிகள் இயக்கத்தை பிளவுபடுத்தியதைப்போல அவர் தமது கட்சி பிரமுகர்களைக் கழட்டி எடுக்க முயற்சிக்கிறார் என்ற பொருள்பட நாமல் பேசியிருக்கிறார். கிடைக்கும் தகவல்களின்படி தாமரை மொட்டுக் கட்சியைச் சேர்ந்த பலர் ரணிலை நோக்கிப் போகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மனோகணேசன் தனது முகநூற்பதிவில் கூறியதுபோல, ராஜபக்சக்கள் ரணிலை தமது வேட்பாளராக்கினால் தம்மைப் பாதுகாக்கலாம் ஆனால் கட்சியைக் காப்பாற்ற முடியாது. ரணில் கட்சியைச் சாப்பிட்டு விடுவார் என்பதே சரி. ஒரு சுயேட்சை வேட்பாளராகக் களமிறங்கி வளர்ச்சிப் போக்கில் பல்வேறு தரப்புக்களின் பொது வேட்பாளராக அவர் மாறக்கூடிய நிலைமைகள் தெரிகின்றன. அதன் மூலம் ராஜபக்சக்களின் தவறுகளுக்குப் பொறுப்புக் கூறத் தேவையில்லாத ஒரு வெற்றியைப் பெற அவர் முயற்சிக்கிறாரா? இப்போதுள்ள நிலைமைகள் இதேபோக்கில் தொடர்ந்தும் வளர்ந்து சென்றால் தேர்தல் களத்தில் மூன்றுக்கும் மேற்பட்ட பிரதான வேட்பாளர்கள் நிற்க முடியும். சரத் பொன்சேகாவும் விஜயதாச ராஜபக்சவும் ஜனாதிபதியின் நோக்கங்களை நிறைவேற்றும் டம்மி வேட்பாளர்கள் என்ற ஒரு கருத்தும் தென்னிலங்கையில் உண்டு. சரத் பொன்சேகா அனுரவிற்குப் போகக்கூடிய படைத்தரப்பினரின் வாக்குகளை கவர்ந்து எடுப்பார். அவரும் விஜயதாச ராஜபக்ஸவும் ரணில் விக்கிரமசிங்கவின் போட்டியாளர்களுக்கு கிடைக்கக்கூடிய வாக்குகளை கவரும் நோக்கத்தோடு களமிறக்கப்பட்டார்களா என்ற சந்தேகங்களும் உண்டு. எதுவாயினும் தென்னிலங்கையில் தேர்தல் களம் முன்னெப்பொழுதையும்விட நிச்சயமற்றதாகக் காணப்படுகின்றது. இது சிங்கள வாக்காளர்களைக் குழப்பும்; சிதறடிக்கும். விளைவாக தெரிவு செய்யப்படப் போகும் ஜனாதிபதி பருமனில் கூடிய பெரும்பான்மையோடு ஆட்சிக்கு வருவாரா என்பதும் சந்தேகம்தான். அவருக்குக் கிடைக்கக்கூடிய சிங்களமக்களின் ஆணை ஒப்பீட்டளவில் பலவீனமாகவே இருக்கும். இந்தப்பின்னணியில் தமிழ்த் தரப்பில் ஒரு பொது வேட்பாளர் தமிழ் வாக்குகளை கவர்வாராக இருந்தால் தெரிவு செய்யப்படப்போகும் ஜனாதிபதி மிகப்பலவீனமான ஆணையோடு பதவிக்கு வருவார். அவருக்கு தமிழ் மக்களின் ஆணையும் கிடைக்காது; கிடைக்கக்கூடிய சிங்கள, முஸ்லீம் மக்களின் ஆணையும் பலவீனமாக இருக்கலாம். இது அடுத்த ஆண்டு தென்னிலங்கை அரசியலில் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும்? பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை வெற்றிகரமாக மீட்டெடுப்பது என்று சொன்னால் அதற்குப் பலமான ஒரு அரசுத் தலைவர் வேண்டும். ஆனால் ஒப்பீட்டளவில் பலவீனமான மக்கள் ஆணையோடு தெரிவு செய்யப்படக்கூடிய ஒரு ஜனாதிபதி பொருளாதார நெருக்கடி தொடர்பில் துணிகரமான முடிவுகளை எடுக்கக் கூடியவராக இருப்பாரா?அவ்வாறு பொருளாதாரத்தை சீர் செய்ய முடியாவிட்டால் நாடு இன்னும் கொதிநிலைக்கு போகும். இது முதலாவது விடயம். இரண்டாவது விடயம், அவ்வாறு ஒப்பிட்டுளவில் பருமன் குறைந்த ஒரு வெற்றியை பெறக்கூடிய புதிய ஜனாதிபதி நாடாளுமன்றத் தேர்தலும் உட்பட ஏனைய தேர்தல்களை உடனடியாக வைக்கக்கூடிய நிலைமைகள் இருக்குமா? ஏனென்றால் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறப்போகும் கூட்டு ஒரு பொதுத் தேர்தலை நடத்தி அந்த வெற்றியை மேலும் உறுதிப்படுத்தவும் பலப்படுத்தவும் முயற்சிக்கும். ஆனால் தெரிவு செய்யப்பட போகும் ஜனாதிபதிக்கு கிடைக்க கூடிய வெற்றி ஒப்பீட்டளவில் பலமாக இல்லையென்றால் அந்தக்கூட்டு பொதுத் தேர்தலை வைத்து ஒரு விசப்பரீட்சையைச் செய்யுமா? அல்லது பருமனில் சிறியது ஆனாலும் அந்த வெற்றி அடுத்தடுத்த தேர்தல்களில் பிரதிபலிப்புகளை ஏற்படுத்தும் என்று நம்பி தேர்தல்களை வைக்கக்கூடுமா? அல்லது அப்படிப்பட்டதோர் சூழலில் ஒரு தேர்தலை வைத்தால் பலமான பெரும்பான்மையைக் கொண்ட ஒரு நாடாளுமன்றம் தெரிவு செய்யப்படுமா? எனவே கூட்டிக்கழித்துப் பார்த்தால் தென்னிலங்கையில் இப்பொழுது காணப்படும் போட்டி நிலை எனப்படுவது அல்லது நிச்சயமற்ற நிலை எனப்படுவது அல்லது ஊகிக்கமுடியாத நிலை எனப்படுவது நாடு ஒரு நிச்சயமற்ற ஆண்டை நோக்கிச் செல்கிறது என்ற ஊகங்களைப் பலப்படுத்துமா? இதில் தமிழ்மக்கள் எடுக்கக்கூடிய முடிவுகள் நிர்ணயகரமானவைகளாக இருக்கும் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. தமிழ்மக்கள் எந்த ஜனாதிபதி வேட்பாளருக்கு அதிகமாக வாக்களிக்கிறார்களோ அவர் பெறக்கூடிய வெற்றியின் பருமன் அதிகரிக்கும். அது அதன் தர்க்கபூர்வ விளைவுகளை தென்னிலங்கையில் ஏற்படுத்தும். இப்படிப்பட்டதோர் நிர்ணயகரமான அரசியல் சூழலில் தமிழ்மக்கள் என்ன செய்ய வேண்டும்? தென்னிலங்கை வேட்பாளர்கள் என்ன செய்ய வேண்டும்? தமிழ்மக்கள் தென்னிலங்கை அரசியலுக்குப் பதில் வினையாற்றும் ஓர் அரசியலை தெரிந்தெடுப்பதா? அல்லது செயல் முனைப்புடன் இயங்கி தென்னிலங்கை வேட்பாளர்களை தங்களை நோக்கி வரச்செய்வதா? தென்னிலங்கை வேட்பாளர்களின் தேர்தல் அறிக்கைகளுக்காகக் காத்திருக்க வேண்டும் என்று கூறும் தமிழ் அரசியல்வாதிகள் அவர்களோடு பேரம் பேசலாம் என்று நம்புகிறார்கள். அப்படியென்றால் தென்னிலங்கை வேட்பாளர்களில் யாராவது ஒற்றை ஆட்சி முறைமையை மாற்றி சமஸ்ரியை ஏற்றுக் கொள்ளத் தயாரா? இல்லையென்றால் எது தொடர்பில் அவர்களோடு பேரம் பேசுவது? அடுத்தது, அவர்கள் தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிடும்வரை காத்திருப்பது என்பது தென்னிலங்கையின் நகர்வுகளுக்காகக் காத்திருக்கும் ஒரு அரசியல். இது சரியா? அடுத்தது அவர்கள் எப்பொழுது தேர்தல் அறிக்கையை வெளியிடுவார்கள்? பெரும்பாலும் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட பின்னர்தான். அப்பொழுது அவர்களுடைய தேர்தல் அறிக்கைகளில் பேரம் பேசக்கூடிய வாய்ப்புகள் இல்லையென்றால் என்ன முடிவை எடுப்பது? எந்த முடிவையும் எடுக்க முடியாது. யாரோ ஒருவருடன் ஏதோ ஒரு டீலுக்குப் போவதைத் தவிர. அதாவது தென்னிலங்கை வேட்பாளர்களின் தேர்தல் அறிக்கைகளுக்காகக் காத்திருப்பது என்பது அதன் தர்க்கபூர்வ விளைவைப் பொறுத்தவரை டீலுக்குக் காத்திருப்பதுதான். இனப்பிரச்சினைக்கான தீர்வைக் குறித்துப் பேரம் பேசுவதற்காக அல்ல. அவர்கள் தேர்தல் அறிக்கைகளுக்காக காத்திருக்கவில்லை. முடிவெடுக்காமல் காலத்தைக் கடத்துகிறார்கள் என்பதே சரி. தேசியவாத அரசியல் எனப்படுவது அதன் பிரயோக வடிவத்தில் பிறத்தியாரின் முடிவுகளுக்காக காத்திருப்பது அல்ல. தானே முடிவெடுத்து, அதற்காக உழைத்து பிறத்தியாரை தன்னை நோக்கி வரச்செய்வது. தமிழ்ப் பொது வேட்பாளர் என்ற தெரிவு அதுதான். ஆனால் பொது வேட்பாளரை ஆதரிப்பது என்ற முடிவை பொறுத்திருந்து எடுக்க முடியாது. ஏனென்றால் கடந்த 15 ஆண்டுகளாக சிதறிக் கொண்டு போகும் ஒரு மக்கள் கூட்டத்தை கூட்டிக்கட்டுவது என்ற முடிவை எப்பொழுதோ எடுத்திருந்திருக்க வேண்டும். அதை இனிமேல்தான் தென்னிலங்கை வேட்பாளர்களின் முடிவைக் கண்டு எடுப்பது என்பது தந்திரோபாயத் தவறு மட்டுமல்ல,தோல்விகரமானது. தங்களை ஒரு தேசமாகக் கருதும் தமிழ்மக்கள் வெளியாருக்காகக் காத்திருப்பதை விடவும் தங்களை செயல்முனைப்போடு கட்டியெழுப்பதுதான் தேசியவாத அரசியல். அதுதான் தமிழ்ப் பொது வேட்பாளர். எனவே தென்னிலங்கை வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனங்களுக்காக காத்திருப்பது என்பது திட்டவட்டமாக தமிழ்ப் பொது வேட்பாளரை நிராகரிப்பதுதான். தமிழ்ப் பொது வேட்பாளரை நிராகரிப்பது என்பது தமிழ் அரசியல் சக்தியை ஒரு மையத்தில் குவிக்கும் செயற்பாட்டுக்கு எதிரானதுதான். அதாவது தமிழ் மக்களை ஐக்கியப்படுத்திப் பலப்படுத்தும் செயற்பாட்டுக்கு எதிரானது. இதை இன்னும் அதன் தர்க்கபூர்வ விளைவின் அடிப்படையில் கூறின் தமிழ் மக்களைச் சிதறடிக்கும் சக்திகளுக்குச் சேவை செய்வது. எவ்வாறெனில், ஒரு பொது வேட்பாளரை ஆதரிக்காவிட்டால் சில அரசியல்வாதிகள் தமிழ் வாக்குகளை சஜித்தை நோக்கிச் சாய்த்துச் செல்வார்கள். இன்னொரு பகுதி குறிப்பாக ஆங்கிலம் தெரிந்த படித்த நடுத்தர வர்க்கும், ரணில் நாட்டின் பொருளாதாரத்தை ஒப்பீட்டளவில் நிமிர்த்தியிருப்பதாகக் கருதி அவருக்கு வாக்களிக்கும். இன்னொரு பகுதி மாற்றத்தை வேண்டி அனுரவுக்கு வாக்களிக்கும். ஒரு பகுதி தேர்தலைப் பகிஷ்கரிக்கும். இவ்வாறு பலவாறாக தமிழ் வாக்குகள் சிதறும்போது ஒரு பகுதி தமிழ் வாக்காளர்கள் சலிப்படைவார்கள்; வாக்களிப்பில் ஆர்வமிழப்பார்கள். அதாவது ஒரு வாக்களிப்பு அலை எழாது. அது வாக்களிப்பில் கலந்து கொள்வோரின் தொகையைக் குறைக்கும் மொத்தத்தில் தமிழ் வாக்குகள் பலவாகச் சிதறும். எனவே தமிழ்ப் பொது வேட்பாளர் அல்லாத எந்த ஒரு தெரிவும் தமிழ் வாக்குகளைப் பலவாகச் சிதறடிக்கும் இப்பொழுது மிக எளிமையான ஒரு கேள்வி தான் உண்டு. தமிழ் மக்களை சிதறு தேங்காயாகச் சிதறடிப்பதா? அல்லது ஒவ்வொரு நெல்மணியாகக் கூட்டிக் கட்டுவதா? https://www.nillanthan.com/6850/
  4. தேர்தலின் பின் நாட்டில் கலவரங்கள் வெடிக்கும் அபாயம் : சி.வி.விக்னேஸ்வரன் தெரிவிப்பு ஜனாதிபதி தேர்தலின் பின்னர் நாட்டில் கலவரங்கள் வெடிக்ககூடிய அபாயம் காணப்படுவதாக தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர்மேலும் தெரிவிக்கையில்; நாட்டை பொறுத்தவரையில் இப்பொழுதும் எனக்கு ஒரு கரிசனை இருக்கிறது. அதாவது தேர்தலின் பின்னர் கலவரங்கள் வெடிக்கக்கூடும் என்ற நிலை இருக்கிறது. சிங்கள வேட்பாளர்களிடையே ஐம்பது சதவிகித வாக்கை பெறக் கூடியவர்கள் என்று எவரும் இல்லை. உண்மையில் அவர்கள் ஐம்பது சதவிகித வாக்குகளுக்கும் குறைவாகத்தான் பெறுவார்கள். ஆனால் இத்தேர்தலில் பலபேர் போட்டியிடுவதாக கூறினாலும் ரணில், சஜித், அனுர என்ற மூன்று போர் தான் முக்கியமானவர்கள். இந்த மூவருக்கும் இடையில் என்ன மாதிரியான போட்டி நடக்க போகிறது. இந்த தேர்தலில் மொட்டு கட்சியின் பங்கு என்னவென்று கேட்டீர்களானால் அந்தக் கட்சியில் இருப்பவர்கள் திரும்பவும் ஒரு தேர்தல் வந்தால் முழுமையாக அழிக்கப்பட்டு விடுவார்கள் என்றே கருதுகிறேன். அதாவது தெற்கிலே இருக்கிற அவர்களுடைய ஆசனங்கள் எல்லாம் ஜே.வி.பி. கட்சிக்கு போய்விடும் என்பது என்னுடைய கருத்து. அந்தளவிற்கு இந்த நாட்டிற்கு இவர்கள் செய்த துரோகம் மக்கம் மனதிலே இருக்கின்றது. குறிப்பாக இந்த நாட்டை சூறையாடி இருக்கின்றார்கள், போர் போர் என்று போரின் காரணமாக தங்களை தங்கள் வளர்த்து கொண்டார்கள். இவை எல்லலாம் மக்ளுக்கு இப்போது நன்றாகத் தெரியும். ஆகவே எந்த விதத்திலும் தற்போது இருக்கிற நாட்டின் ஸ்திரத்தன்மையை இல்லாமல் பண்ணுவதற்கு அவர்கள் விரும்ப மாட்டார்கள். ஆனால தங்களுடைய கட்சியின் தனித்துவத்தை வெளிக்கொணர வேண்டும் என்ற முறையில் ஏதோ சில சில பேச்சுக்கள் எல்லாம் பேசி வருகின்றனர். அவர்கள் கட்டாயமாக ரணிலுக்கு ஆதரவைத் தெரிவிப்பார்கள் என்பது என்னுடைய கருத்தாக உள்ளது.இப்போது மொட்டு கட்சியில் உள்ள பலர் ரணிலுக்கு ஆதரவை தெரிவித்துள்ள அதேநேரத்தில் தங்களுடைய தனித்துவத்தை எடுத்து கட்டி வேறொரு வேட்பாளரை போடக்கூடும். ஆனால் அவர்களில் 92 பேர் ரணிலுக்கு ஆதரவு என்றால் மற்றையவர்களும் இதே மாதிரியான மனோ நிலையில் இருப்பார்கள் என்று தான் நான் நம்புகின்றேன். எனினும் முழுமையாக ரணிலிடம் தாங்கள் சரண்டைந்து விட்டோம் என்று காட்டுவது அவர்களுக்கு பிடிக்காமல் இருக்கலாம். இன்னும் மக்கள் ஆதரவுடனே இருக்கிறோம் என்று காட்டுவதற்க்கு பலதும் பேசுவார்கள். இப்போது அரசாங்கத்தோடு சேர்ந்திருப்பவர்கள் அதிகமாக ரணிலுக்கு ஆதரவை வழங்குவார்கள் என்றே நம்புகிறேன். ஏனெனில் ராஜபக்சாக்களோடு இருப்பவர்கள் நாடாளுமன்றத்தில் இருந்து வெளியே வந்துவிட்டால் இதன் பின்னர் நாடாளுமன்றம் போக கூடிய நிலைமை பலருக்கு இல்லை என்பது என்னுடைய கருத்தாகும் . - என்றார். https://newuthayan.com/article/தேர்தலின்_பின்_நாட்டில்_கலவரங்கள்_வெடிக்கும்_அபாயம்_:_சி.வி.விக்னேஸ்வரன்_தெரிவிப்பு
  5. பௌத்த வினாவல் - 3, ஹென்றி ஸ்டீல் ஆல்காட் பகுதி இரண்டு - தர்மம் அல்லது கோட்பாடு (தொடர்ச்சி) பிரதித்ய சமுத்பாதாம் 168. புத்தருடைய கோட்பாட்டின் முழு ஆன்மாவையும் ஒரே வார்த்தையில் பிரதிநிதித்துவம் செய்ய முயற்சித்தால், எந்த வார்த்தையை நாம் தேர்ந்தெடுக்க வேண்டும்? தர்மம். 169. ஏன்? ஏனென்றால் ஒருபோதும் பிழைக்காத கர்ம விதிகளின் செயல்முறைப்படி எல்லா மனிதருக்கும் தங்கள் செயல்களுக்கேற்ப நற்பலன் அல்லது தண்டனை சரியான அளவில் கிடைக்கும் என அது கற்பிக்கிறது. எந்த நற்செயலும் அல்லது தீச்செயலும் அது எத்தனை முக்கியத்துவமற்றது மற்றும் எத்தனை ரகசியமாக செய்யப்படினும் கர்மத்தின் தராசிலிருந்து தப்பமுடியாது. 170. கர்மம் என்றால் என்ன? அறம், பௌதிகம் மற்றும் பல பரப்புகளில் செயல்படும் காரணகாரிய இயக்கம். மானுட விவகாரங்களில் அற்புதம் என சொல்லத்தக்க எதுவும் இல்லை என பௌத்தர்கள் கூறுகின்றனர்: வினை விதைப்பவன் வினை அறுப்பான். 171. பௌத்தத்தின் சாராம்சத்தை வெளிப்படுத்த பயன்படுத்தும் வேறு நல்ல வார்த்தைகள் என்ன? மெத்தா, கருணா, முதித்தா, உபேக்சா (அன்பு, கருணை, பிறர் மகிழ்வில் மகிழ்தல், சமநிலை) 172. எந்த கோட்பாடு பௌத்தத்தை மற்ற உலக மதங்களின் மத்தியில் தனித்து உயர்த்திக் காட்டுகிறது? மெத்தா அல்லது மைத்ரேயா - அன்பு. இனி வரவிருக்கும் புத்தருக்கு ’மைத்ரி’ (கருணையானவர்) என்னும் பெயர் கொடுக்கப்படுவதன் மூலம் இக்கோட்பாட்டின் முக்கியத்துவம் மேலும் வலியுறுத்தப்படுகிறது. 173. நீங்கள் விளக்கிய இந்த கோட்பாடுகள் ஆனைத்தும் புத்தரால் போதி மரத்தின் அருகே தியானித்து அறியப்பட்டவையா? ஆம், இதுவும், மேலும் பெளத்த நூல்களில் நாம் படிக்கும் பலதும். பௌத்தத்தின் ஒட்டுமொத்த அமைப்பும் அவர் மகாஞானம் அடைந்தபோதே அவருடைய மனதில் உதித்தது. 174. எத்தனை காலம் புத்தர் போதி மரத்தின் அருகிருந்து நீங்காது இருந்தார்? நாற்பத்தி ஒன்பது நாட்கள். 175. புத்தர் போதித்த முதல் பிரசங்கத்தை நாம் எவ்வாறு அழைக்கிறோம், அதாவது தனது முன்னால் நண்பர்களுக்கு போதித்த முதல் பிரசங்கம்? தம்மசக்க-பவத்தனா சூத்திரம் - தம்மத்தின் விதிகளை வறையறுக்கும் சூத்திரம். சிங்கள பாலி அறிஞரான விஜேசிங்க முதலியார் இதை ”தம்மத்தின் ஆட்சியை ஸ்தாபித்தல்” என சொல்வது மேலும் சிறந்தது என்கிறார். ரைஸ்-டேவிட்ஸ் இதை “தர்மத்தின் ராஜ்ஜியத்திற்கான அடித்தளம்” எனக் குறிப்பிடுகிறார். 176. இந்தப் பிரசங்கத்தில் அவர் போதித்த பாடங்கள் என்னென்ன? “நான்கு உன்னத உண்மைகள்” மற்றும் “அஷ்டாங்க மார்க்கம்”. துறவிகள் உடலை மிகவும் வருத்துவதையும், மற்றொரு பக்கம் இல்லறத்தவர்கள் அதீத புலனின்ப நாட்டங்களில் ஈடுபடுவதையும் கண்டிக்கிறார். அஷ்டாங்க மார்க்கத்தை அந்த இரண்டு பாதைகளுக்கும் அல்லாத மத்திய பாதையாக பரிந்துரைத்தார். 177. புத்தர் உருவ வழிபாட்டை ஏற்றுகொண்டாரா? இல்லை, அவர் அதை எதிர்த்தார். கடவுள்கள், அசுரர்கள், மரங்கள் மற்றும் பல வழிபாடுகளையும் அவர் கண்டனம் செய்தார். புறவயமான வழிபாடுகள் நம்மை கட்டுக்குள் பிணைக்கும் தன்மையுடையவை. ஒருவர் முன்சென்று உயர விரும்பினால் அத்தகைய வழிபாடுகளைத் தகர்த்துவிட்டு செல்லவேண்டும். 178. ஆனால் பௌத்தர்கள் புத்தரின் சிலை மற்றும் அவரது குறியீட்டு வடிவங்களை வழிபடுகின்றனரே, மேலும் வழிபாட்டிடங்களும் கட்டுகின்றனர்? ஆம், ஆனால் இது உருவ வழிபாடு செய்பவர்களின் அதே தன்மையை போன்றதல்ல. 179. என்ன வேறுபாடு? நமது பௌத்த சகோதரர் தனது தெய்வ உருவங்களை கண்களுக்குப் புலனாகாத தெய்வத்தின் கண்களுக்கு புலனாகும் வடிவமாக மட்டும் எடுத்துக்கொள்வதில்லை. அவர் உயர்நிலை உருவவழிபாட்டாளர். ஆதாவது, அவர் தனது தெய்வ உருவத்தை வழிபடும் போது அந்த உருவமானது எங்கும் நிறைந்திருக்கும் இறை அம்சத்தின் ஒரு பகுதியை கொண்டுள்ள ஒன்றாகக் கருதி வழிபடுகிறார். 180. பௌத்தர்கள் என்ன நினைக்கிறார்கள்? பௌத்தர்கள் புத்தரின் சிலைகளையும், நீ சொல்லிய குறியீடுகளையும் இந்த உலக-காலத்தில் (கல்பம்) தோன்றிய உயரிய, அறிவார்ந்த, மிகவும் அன்பும் கருணையுமுடைய மனிதரின் நினைவுசின்னங்களாக மட்டுமே எண்ணுகின்றனர். எல்லா இனங்களும், எல்லா மக்களும் தங்களால் உயர்ந்தவர்கள் என்று எண்ணப்பட்ட ஆண் மற்றும் பெண்ணின் நினைவுசின்னங்களைப் பாதுக்காத்தும், பொக்கிஷீத்தும் வந்துள்ளனர். எங்களைப் பொறுத்தவரை புத்தர் துக்கத்தை அறிந்த ஒவ்வொரு மனிதராலும் வேறெவரையும் விட மிக அதிகமாக போற்றப்படுபவர், மதிக்கப்படுபவர். 181. இது குறித்து புத்தரிடமிருந்தே உறுதியாக ஏதேனும் சொல்லப்பட்டுள்ளதா? நிச்சயமாக சொல்லப்பட்டுள்ளது. மஹாபரிநிர்வாண சூத்திரத்தில் ”அஷ்டாங்க மார்க்கத்தின் படி தூய வாழ்வை வாழ்வதன் மூலமே ஒருவர் விடுதலையை அடையமுடியுமே தவிர வழிபாடுகளால் அல்ல. என்னையோ, மற்றவைகளையோ, எந்த உருவங்களையோ வழிபடுவதால் அல்ல” என்கிறார். 182. சடங்குகள் குறித்து புத்தரின் மதிப்பீடு என்ன? தொடக்கம் முதலே அவர் சடங்குகள் மற்றும் புறவயமான சமய பழக்கங்களைக் கண்டனம் செய்துள்ளார். அவை அனைத்தும் நமது ஆன்மீகக் குருட்டுத்தன்மையை அல்லது அறியாமையை மேலும் அதிகரிப்பதுடன் ஜட உருவங்களின் மேல் அதீத பற்றுகொள்ளவும் செய்யும். 183. இதற்கு மாற்று என்ன? அவருடைய பல பிரசங்கங்களில் இந்த பழக்கவழக்கங்கள் பெருங்கேடு விளைவிக்கும் என வெளிப்படையாக மறுப்புதெரிவித்துள்ளார். கோட்பாடுகள் மற்றும் மீபொருண்மை நுண்மைகள் மீது விவாதம் நிகழ்த்தி தங்கள் உயரிய உள்ளுணர்வை தளரச்செய்தும் மற்றும் நேரத்தை வீணாக்கும் பிக்குகளுக்கு அவர் தவத்தைப் பரிந்துரைத்தார். 184. மந்திர உச்சாடனம், நல்ல நேரம் பார்த்தல், ஆவி நடனம் இவையெல்லாம் பௌத்தத்தில் உள்ளனவா? இவை பௌத்தத்தின் அடிப்படை கொள்கைகளுக்கு எதிரானவை. இவை பேகன் மற்றும் அயல் மதங்களின் எஞ்சியிருப்பவை. பிரம்மஜத சூத்திரத்தில் புத்தர் இவைகளையும் பிற மூடநம்பிக்கைகளையும் பாகன், தாழ்ந்தவை, மற்றும் பொய்யானவை என வகைப்படுத்துகிறார். 185. பௌத்ததிற்கும் மதம் (religious) என்னும் பெயரில் உள்ளவைகளுக்குமான முதன்மையான முரண் என்ன? மற்றவற்றுடன் ஒப்பிடுகையில் பௌத்தம்: ஒரு கடவுளின் இருப்பின்றி உயரிய நன்மைகளைக் கற்பிக்கின்றது. வாழ்வின் சுழற்சியை மூடநம்பிக்கைகள், ’நித்யம்’ என்ற தன்னலக் கோட்பாடு, உடலை விட்டு நீங்குகின்ற ‘ஆத்மா’ ஆகியவை இன்றி கற்பிக்கின்றது. சொர்க்கம் என்ற குறிக்கோளின்றி மகிழ்ச்சியை கற்பிக்கின்றது. பிறரை காக்கும் ரட்சகர் இன்றி விடுதலையை கற்பிக்கிறது மீட்பர் இன்றி ஒருவன் தனக்கான முக்தியை அடைய கற்பிக்கிறது எந்தவிதமான சமய சடங்குகள், பிராத்தனைகள், கடும்தவங்கள், மதகுரு மற்றும் துறவிகளின் இடைபடலின்றி வீடுபேறு அடையும் முறைகளை கற்பிக்கின்றது. எல்லா உயிர்களிடத்தும் கருணைகொண்டு தூய தன்னலமற்ற வாழ்வை வாழும் அறிவைப் பெற்றால் இந்த வாழ்வில் இந்த உலகத்திலேயே நிர்வாணம் அடையலாம் என கற்பிக்கின்றது. 186. தியானத்தின் இரண்டு முக்கிய பிரிவுகளை சுட்டிகாட்டுங்கள், அதாவது ஆசையை அழித்து அறிவை எய்தும் முறை? சமதா மற்றும் விதர்சமா. சமதா: ஆசை தேய்வுறும்படி தூய வாழ்வை மேற்கொண்டு விடாமுயற்சியுடன் புலன்களை கட்டுக்குள் வைத்தல். விதர்சமா: தன்விழிப்படைவதன் மூலமாக உயர்நிலையிலான ஞானம் அடைதல். இவை ஒவ்வொன்றும் இருபது அம்சங்களை கொண்டுள்ளன. அவற்றை இங்கு குறிப்பிட தேவையில்லை. 187. ஒருவர் அடையவேண்டிய நான்கு வழிகள் அல்லது நிலைகள் என்னென்ன? சோதப்பன்னா- நான்கு உன்னத உண்மைகளை சரியாக புரிந்துகொண்ட பிறகு உள்ளே நுழைதல் அல்லது துவங்குதல். சகதகாமி - முழுமையாக காமம், வெறுப்பு மற்றும் மாயையை வென்றவரின் பாதை. இவர் மீண்டும் ஒருமுறை மட்டுமே உலகில் பிறப்பெடுப்பார். அநகாமி - சுயத்தை வென்றவரின் பாதை, இவர்கள் மீண்டும் இவ்வுலகில் பிறப்பெடுக்க வேண்டியதில்லை. அராகதம் - மதிப்புமிக்க தூய அராகதர்களின் பாதை. இவர்கள் மறுபிறப்பெடுக்க வேண்டிய தேவையிலிருந்து விடுபட்டவர்கள். மேலும் இவர்கள் சரியான ஞானத்தை அனுபவிக்கும் திறனை அடைந்தவர்கள், அறியாமையும் துயரமும் கொண்டர்களிடம் பிணைப்பில்லாமல் இரக்கம் கொள்பவர்கள், மற்றும் எல்லா உயிர்களிடமும் அளவில்லா அன்பு கொண்டவர்கள். 188. வெகுவாக அறியப்பட்ட பௌத்தத்தில் ’உண்மை’யைத் தவிர வேறு எதுவுமே கிடையாதா? நூற்றாண்டுகளாக இருந்துவரும் மற்ற எல்லா மதங்களையும் போல இதிலும் நிச்சயமாக உண்மையுடன் பொய்களும் கலந்துள்ளன, பொன்னிற்குள் கசடுகள் கலந்திருப்பது போல. வெவ்வேறு காலகட்டங்களில் நிலங்களில் பௌத்தர்கள் கொண்டிருந்த கவித்துவ கற்பனைகள், வீரியம் (ஆற்றல்) மற்றும் பெளத்த பக்தர்களின் நீண்டகால நம்பிக்கைகள் ஆகியவை புத்தரின் உன்னத தர்ம கோட்பாடுகளில் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ பொய்களை கலக்க காரணமாகின. அவை களையப்பட வேண்டியவை. அவற்றைக் களைவது நன்மைபயக்கும். 189. இத்தகைய திரிபுகளை கண்டடையும்போது அக்கறையுள்ள உண்மையான பௌத்தர் ஒருவரின் விருப்பம் என்னவாக இருக்கவேண்டும்? ஒரு உண்மையான பௌத்தர் உண்மையிலிருந்து பொய்களை கண்டறிந்து களையவோ அல்லது களைவதற்கு உதவவோ எந்நேரமும் தயாராக இருக்கவேண்டும், அவரால் இயலுமானால். சங்கத்தின் மூன்று பேரவைகள் புத்தரின் போதனைகளில் உள்ள தவறான திரிபுபட்ட இடைச்செருகல்களை களைவதற்காக நடத்தப்பட்டுள்ளன. 190. எப்போது? முதலாவது பேரவை சட்டப்பண்ணி குகையில் சரியாக புத்தரின் இறப்புக்கு பிறகு நடத்தப்பட்டது. இரண்டாவது வைசாலியிலுள்ள வலுகராமாவில். மூன்றாவது புத்தரின் மறைவுக்குப்பின் 235 ஆண்டுகள் கழிந்து பாடாலிபுத்திரத்திலுள்ள அசோகரம விகாரத்தில் நடந்தது. 191. எந்த பிரசங்கத்தில் இத்தகைய திரிபுகள் உண்மையான கோட்பாடுகளில் கலப்பதை நாம் எதிர்கொள்ள நேரிடும் என புத்தரே எச்சரிக்கிறார்? சம்யுத்த நிகாயத்தில் 192. பௌத்தத்தில் வரட்டு நம்பிக்கை ஏதேனும் உள்ளதா? இருப்பின் அதை நம்பி ஏற்கவேண்டுமா? இல்லை. நாங்கள் எந்த நம்பிக்கையும் அது நூல்களில் இருந்தாலோ அல்லது எங்கள் முன்னோர் சொல்லியிருந்தாலோ அல்லது ஞானிகள் சொல்லியிருந்தால் கூட ஏற்க வேண்டாம் என அக்கறையுடன் கட்டளையிடப்பட்டுள்ளோம். 193. அது புத்தரே கற்பித்த உன்னத விதியா? ஆம். ஒரு விஷயம் சொல்லப்பட்டிருப்பதாலேயே வெறுமனே அதை நம்பக்கூடாது; மரபை நம்பக்கூடாது, அது தொன்மையான காலத்தில் இருந்து தொடர்ந்து கையளிக்கப்பட்டு வருபவை; அது போன்று பரவிய பொய்களையும் நம்பக்கூடாது; ஒரு முனிவர் ஒன்றை எழுதிவிட்டார் என்பதாலேயே வெறுமனே அதை நம்பக்கூடாது; நமக்கு ஏற்படும் ஆன்மீக உளமயக்கம் ஒரு தேவனின் தூண்டுதலால் அளிக்கப்பட்டது என நாம் நினைத்து அதையும் நம்பக்கூடாது; நம்முடைய அரைகுறை ஊகங்களால் நாம் உருவாக்கும் அனுமானங்களை நம்பக்கூடாது; ஒப்பாய்வு செய்த முடிவுகளை நம்பக்கூடாது; நமது ஆசிரியர் என்பதால் அவர் சொல்லியவற்றை வெறுமனே நம்பக்கூடாது என்கிறார் புத்தர். 194. அப்படியானால் எப்போதுதான் நம்புவது? எழுதப்பட்ட அல்லது கேட்கப்பட்ட கோட்பாடுகள் நமது தர்க்க அறிவிற்கும் பிரக்ஞைக்கும் உடன்படும்போது நாம் நம்பலாம். இவ்வாறு சொல்லி அவர் நிறைவுசெய்தார்: “நீங்கள் கேட்டுவிட்டதாலேயே அதை வெறுமனே நம்புங்கள் என நான் உங்களுக்கு கற்பிக்கவில்லை. பிரக்ஞைபூர்வமாக உங்களுக்குள் நீங்களே உணரும் போது நம்புங்கள், பின்னர் அதற்கேற்ப செயல்படுங்கள்” (பார்க்க: அங்குத்தர நிக்கயத்திலுள்ள கலம சூத்திரம் மற்றும் மஹா பரிநிர்வாண சூத்திரம்) 195. புத்தர் தன்னை என்னவாக அறிவித்துகொள்கிறார்? தானும் மற்ற எல்லா புத்தர்களும் பாதையை சுட்டிக்காட்டும் உண்மையின் பரப்பாளர்கள் மட்டுமே என அறிவிக்கிறார். பயணிப்பதற்கான முயற்சியை நாம்தான் செய்ய வேண்டும் என்கிறார்.. 196. இது எங்கே சொல்லப்பட்டுள்ளது? தம்மபதம். அத்தியாயம் இருபது. 197. பௌத்தம் வெளிவேடத்தை எவ்வாறு எதிர்கொள்கிறது? தம்மபதம் “செய்கையில் காட்டாமல் ஒருவன் மதுரமாக மட்டும் பேசுவது, வாசனையற்ற அழகிய வண்ண மலர்போல பயனற்றவை” என்கிறது. (தம்மபதம் 4 - 51) 198. தீமைக்கு தீமை செய் என்று பௌத்தம் கற்பிக்கிறதா? தம்மபதத்தில் புத்தர் “ஒரு மனிதன் தனது மூடத்தனத்தால் எனக்கு தவறிழைக்கும் போதும் அவருக்கு என்னுடைய உட்பகையில்லாத அன்பான பாதுகாப்பையே திருப்பித்தருவேன். எத்தனை தீமை அவரிடமிருந்து வருகிறதோ அதற்குமேலான நன்மை என்னிடமிருந்து செல்லும்” இதுவே அராகதர்களின் பாதை. தீமைக்கு தீமை பௌத்தத்தில் நேர்மறையாக விலக்கபட்டுள்ளது. 199. பௌத்தம் இரக்கமின்மையை ஊக்குவிக்கிறதா? நிச்சயமாக இல்லை. ஐந்து கட்டளைகள் மற்றும் அவருடைய பல பிரசங்கங்களிலும் எல்லா உயிர்களிடத்தும் கருணையுடன் இருக்குமாறும், அவைகளை மகிழ்விக்கவும் அன்புடன் இருக்கவும் கற்பிக்கிறார். மேலும் உயிர் கொலை, அதற்கு துணைநிற்பது, அதை ஊக்குவிப்பது முதலானவற்றை தவிர்க்க வேண்டும் என்றும் புத்தர் கூறுகிறார். 200. எந்த பிரசங்கத்தில் இது குறிப்பிடப்பட்டுள்ளது? தம்மிக சூத்திரம் சொல்கிறது: “அவன் (இல்லறத்தான்) எந்த உயிரை அழிக்கவும் அல்லது அதன் அழிவிற்கு காரணமாகவும் வேண்டாம், அப்படி செய்பவரின் செயலை அனுமதிக்கவும் வேண்டாம். அவன் எந்த உயிருக்கும் ஊறுசெய்யவும் வேண்டாம்.” 201. மதுமயக்கத்தை அங்கீகரிக்கிறதா? அவருடைய தம்மிக சூத்திரத்தில் நாங்கள் மது அருந்துவதற்கும், மற்றவர்களை அருந்த தூண்டுவதற்கும், அருந்துபவரின் பழக்கத்தை அனுமதிப்பதற்கும் எதிராக எச்சரிக்கப்பட்டுள்ளோம். பஞ்சசீலத்தின் ஐந்தாவது சீலமும் இதை குறிப்பிடுகிறது. 202. மதுபழக்கம் நம்மை எங்கே இட்டுச்செல்லும் என சொல்லப்பட்டுள்ளது? தரக்குறைவு, குற்றம், பிறழ்வு மற்றும் அறியாமை - இதுவே மறுபிறப்பிற்கான முக்கிய காரணம். 203. திருமணம் குறித்து பௌத்தம் என்ன கற்பிக்கிறது? முழுமையான தூயஒழுக்கம் அல்லது பிரம்மச்சர்யம் நிறைவான ஆன்மீக வளர்ச்சிக்கு மிகவும் வலியுறுத்தப்படுகிறது. ஆனாலும் ஒரு பெண்ணுடனான திருமணமும் அவளுக்கு உண்மையாக இருப்பதும் ஒரு விதமான ஒழுக்கமாகவே கருதப்படும். பலதார மணங்கள் புரிவது அறியாமை மற்றும் காமத்தை உள்ளடக்கிருப்பதால் புத்தர் அதை பழிக்கிறார். 204. எந்த பிரசங்கத்தில்? அங்குத்தர நிக்காயம், அத்யாயம் 4, 55. 205. பிள்ளைகளிடத்து பெற்றோர்களின் கடமை என்னவென்று பௌத்தம் கற்பிக்கிறது? தீயஒழுக்கங்களிலிருந்து அவர்களை காக்கவேண்டும், நல்லொழுக்கங்களை பழக்க வேண்டும், கலை மற்றும் அறிவியல் கற்க செய்யவேண்டும், பொருத்தமான துணையை தேடித்தரவேண்டும், அவர்களின் வழியுரிமையை கொடுக்க வேண்டும். 206. பிள்ளைகளின் கடமையென்ன? பெற்றோரின் முதுமைப் பருவம் மற்றும் அவர்களுக்கு உதவிதேவைப்படும்போது உடனிருந்து உதவுதல், நியமிக்கபட்ட குடும்ப பொறுப்புகளை ஏற்றுநடத்துதல், குடும்ப சொத்துகளை பாதுகாத்தல், பெற்றோரின் வாரிசுகளாக தங்களை தகுதிப்படுத்திகொள்ளுதல், அவரின் மறைவுக்குப்பின் அவர்களை நன்மதிப்புடன் நினைவுறுதல். 207. ஆசிரியரிடத்து மாணவர்களின் கடமை என்ன? அவருக்கு மரியாதையளித்தல், அவரின் தேவைகளை கவனித்தல், கீழ்ப்படிதல், அவரின் அறிவுரைகளை கேட்டுநடத்தல். 208. மனைவியிடத்து கணவனின் கடமையென்ன? அவளை சந்தோசப்படுத்துதல்; அவளை மரியாதையுடனும் அன்புடனும் நடத்துதல்; அவளுக்கு உண்மையாய் இருத்தல்; அவளை பிறர் போற்றும்படி செய்தல்; அவளுக்கு தகுந்த நகைகள் மற்றும் துணிகள் வாங்கித்தருதல். 209. கணவனிடத்து மனைவியின் கடமையென்ன? அவனுடன் நேசமாக இருத்தல்; இல்லறத்தை சரியாக ஒழுங்குபடுத்துதல்; விருந்தினரை உபசரித்தல்; ஒழுக்கமாக இருத்தல்; சிக்கனமாக இருத்தல்; எல்லாவற்றிலும் திறமையும் சுறுசுறுப்பும் காண்பித்தல். 210. எந்த சூத்திரத்தில் இந்த விதிகள் கற்பிக்கபட்டன? சிகலோவாடா சூத்திரம் 211. மனிதனின் எதிர்கால மகிழ்ச்சிக்கு செல்வங்கள் உதவுமா? தம்மபதம் சொல்கிறது “ஒரு பாதை செல்வத்திற்கும் இன்னொரு பாதை நிர்வாணத்திற்கும் இட்டுசெல்கிறது”. (தம்மபதம் 5 - 75) 212. அப்படியென்றால் எந்த செல்வந்தனும் நிர்வாணம் அடையமுடியாதா? அவர் எதை அதிகம் விரும்புகிறார் என்பதை பொறுத்தது. அவருடைய செல்வத்தை துயருற்றவர்கள், ஒடுக்கப்பட்டவர்கள், அறியாமையிலிருப்பவர் என மானுட நன்மைக்காக உபயோகித்தால் அவரது செல்வம் அவருக்கு மதிப்பை பெற்றுத்தரும். 213. அவர் செல்வத்தை விரும்பினால்? அவர் செல்வத்தை விரும்பி அதை பேராசையுடன் பதுக்கி கையகப்படுத்தினால் அது அவரின் அறவுணர்வை நலியச்செய்து தீமையை தூண்டி இந்த வாழ்வில் பெரும்சாபத்தைக் கொண்டுவரும், அதன் விளைவுகள் அவரின் அடுத்த பிறப்பிலும் உணரப்படும். 214. அறியாமையைப் பற்றி தம்மபதம் என்ன சொல்கிறது? அந்த அழுக்கு ஒரு மனிதன் தன்மேல் போட்டுக்கொள்ளும் அனைத்து அழுக்குகளில் மிக மோசமான அழுக்கு. (தம்மபதம் 18 - 243) 215. மற்றவர்களிடம் காட்டும் கடுமையை பற்றி பௌத்தம் என்ன சொல்கிறது? மற்றவர்களின் தவறுகளை எளிதாக கண்டுகொள்ளலாம், ஆனால் ஒருவர் தன்னுடைய தவறுகளை தானே காண்பது சிரமம். மனிதன் தன் சுற்றத்தாரின் தவறுகளை உமியை புடைத்து களைவதுபோல கண்டுவிடுகிறான், ஆனால் தன்னுடைய தவறுகளை சூதாட்டத்தில் சூதாடியிடமிருந்து அதிர்ஷ்டமில்லாத சீட்டை மறைப்பதுபோல் தந்திரமாக மறைத்துவிடுகிறான் என்கிறது. 216. இல்லாதவர்களுக்கு மனிதன் செய்யக்கூடிய கடமைகள் பற்றி புத்தர் நமக்கு கூறும் அறிவுரை என்ன? அவர் மனிதனின் மொத்த வருமானமும் நான்காக பிரிக்கப்பட்டு அதில் ஒரு பங்கு முழுமையாக தர்ம காரியங்களுக்கு கொடுக்கப்படவேண்டும் என்கிறார். 217. எந்த ஐந்து தொழில்கள் மிகவும் தாழ்ந்த மற்றும் கீழானவை என்று சொல்லப்படுகிறது? மது விற்பனை, கொல்வதற்கு விலங்குகளை வளர்த்து விற்றல் மற்றும் விஷம், கொலைக்கருவிகள், அடிமைகள் ஆகியவற்றுடன் தொடர்புடைய தொழில்கள். 218. யாரெல்லாம் ஆன்மீக வளர்ச்சியடைய திறனற்றவர்கள்? பெற்றோர் மற்றும் புனித அராகதர்களை கொன்றவர்கள், சங்கத்திற்குள் வேற்றுமையை விதைக்கும் பிக்குகள், புத்தரை ஒத்த மனிதரை காயப்படுத்துதல், எதிர்கால இருத்தலின்மீது தீவிர மறுப்புவாத கொள்கையுடையோர் மற்றும் தீவிர புலனின்பநாட்டம் உடையவர்கள். 219. தீய மனிதர்களின் கர்மவினை அவர்கள் இவ்வுலக வாழ்வை நீங்கியபின் அவர்களை இட்டுச்செல்லும் இடம் பற்றி அல்லது அவர்களை வதைக்கும் நிலைகள் பற்றி பௌத்தம் குறிப்பிடுகிறதா? ஆம். அவை: சஞ்சிவா, கலசுத்ரா, சங்கதா, ரெளரவா, மஹா-ரௌரவ தபம், பிரதாபா, அவிச்சி. 220. அந்த வதை முடிவில்லாததா? நிச்சயமாக இல்லை. அதன் காலம் ஒருவரின் கர்மவினையின் அளவை பொருத்தது. 221. புத்தரின் மீது நம்பிக்கையற்றவர்கள் அவர்களது அவநம்பிக்கையின் பொருட்டு முடிவில்லா தண்டனைக்குரிய நரகத்தில் வருந்துவர் என பௌத்தம் அறிவிக்கிறதா? இல்லை. நற்செயல்களின் விழைவால் அவர்கள் சிறிதுகாலம் மகிழ்ச்சியாய் வாழக்கூடும். ஆனால் அவர்களின் தணியாத தன்ஹா (வேட்கை) மீண்டும் மறுபிறப்பை கொண்டுவரும். மறுபிறப்பிலிருந்து மீள ஒருவர் கண்டிப்பாக அஷ்டாங்க மார்க்கத்தை கடைபிடிக்க வேண்டும். 222. பௌத்தர்கள் மத்தியில் பெண்களின் ஆன்மீக நிலையென்ன? எங்கள் மதத்தை பொறுத்தவரை பெண்கள் ஆண்களுக்கு சமமாக நிற்கக்கூடியவர்கள். சுல்லவேதலா சூத்திரத்தில் புத்தர் சொல்கிறார் “ பெண் ஆணுக்கு சாத்தியமான உயர்ந்த புனிதத்தன்மையான அராகதர் தன்மையை அடையக்கூடும்”. 223. பெண்கள் மீது பௌத்தம் ஏற்படுத்திய தாக்கத்தை பற்றி ஒரு நவீன விமர்சகர் என்ன சொல்வார்? “வேறெந்த சமயத்தைவிடவும் பௌத்தம் பெண்களுக்கு மகிழ்ச்சியையும் உரிமையையும் அளித்துள்ளது” என்கிறார் சர் லெபெல் கிரீஃபின் (Sir Lepel Griffin) 224. சாதியை பற்றி புத்தர் என்ன கற்பித்தார்? செயலாலன்றி பிறப்பின் அடிப்படையில் ஒருவர் சாதியை அடைவதில்லை, அது தாழ்ந்தநிலையிலுள்ள பறையரானாலும் அல்லது மேலுள்ள பிராமணனானாலும். அவர் சொல்கிறார் “செயலின் மூலமாகவே ஒருவன் தாழ்ந்தநிலை அடைகிறான், செயலின் மூலமாகவே ஒருவன் பிராமணனாகிறான்” (பார்க்க வாஸ்ஸலா சூத்திரம்). 225. இதை விளக்கும் ஒரு கதையை சொல்லுங்கள்? புத்தரின் சீடர் ஆனந்தர் கிணற்றோரமாக நடந்து செல்கையில் தாகம் ஏற்பட்டு அங்கிருந்த மாதங்கா என்ற தாழ்ந்த சாதி பெண்ணிடம் தண்ணீர் தர கேட்டார். அந்த பெண் தான் தாழ்ந்த சாதியென்றும் தன்னிடம் நீர் பெறுவதால் அவர் அசுத்தம் அடையக்கூடும் என்று சொன்னாள். அதற்கு ஆனந்தர் “நான் உன் சாதியை கேட்கவில்லை தண்ணீர்தான் கேட்டேன்” என்றார். அப்பெண் மனமகிழ்ந்து அவருக்கு அருந்த நீர் கொடுத்தாள். புத்தர் அச்செயலுக்கு அவளை வாழ்த்தினார். 226. வாஸ்ஸலா சூத்திரத்தில் புத்தர் தாழ்ந்த குலத்தை சேர்ந்த சோபகாவை பற்றி என்ன சொல்கிறார்? சோபகா தனது நற்செயல்களால் உச்ச புகழ்பெற்றார், சத்திரியர்களும், பிராமணர்களும் அவருக்கு சேவை செய்தனர். அவருடைய இறப்புக்குப்பின் பிரம்மலோகத்தில் பிறந்தார். மற்றொருபுறம் பல பிராமணர்கள் தீசெயல்களால் நரகத்தில் பிறந்தனர். 227. ஆன்மாவின் அழிவின்மையை பௌத்தம் கற்பிக்கிறதா? “ஆன்மா” - பொய்யான ஒரு கருத்தை குறிப்பிட அறிவிலிகளால் பயன்படுத்தப்படும் சொல் அது என்கிறது பௌத்தம். அனைத்தும் மாறுதலுக்கு உட்பட்டது. அப்படியென்றால் அதில் மனிதனும் அடங்குவான், அவனுடைய எல்லா பௌதிக பகுதிகளும் மாற்றத்திற்கு உட்படவேண்டும். எது மாறுதலுக்கு உட்பட்டதோ அது நிரந்தரமானதல்ல, ஆதலால் மாறுகின்ற பொருளிலிருந்து எஞ்சுகின்ற அழியாத தன்மை கொண்ட எதுவும் இல்லை. (ஆன்மாவிற்கு இணையான கிரேக்க சொல்லான ‘சூக்கி’ (Psuche) என்பதும் இங்கு விமர்சிக்கப்படுகிறது.) 228. ”ஆன்மா” எனும் சொல்லில் அப்படியென்ன ஆட்சேபனை? மனிதன் பிற எல்லாவற்றிலிருந்தும் பிரபஞ்சத்தின் மொத்த இருப்பிலிருந்தும் தனித்தது என்னும் கருத்து அதில் அடங்கியுள்ளது. இந்த தனியிருப்பு கருத்து பகுத்தறிவிற்கானது அல்ல, தர்க்கத்தால் நிரூபிக்க கூடியது அல்ல, அறிவியலுக்கு ஏற்றதல்ல. 229. அப்படியானால் தனியான “நான்” அல்லது ”எனது” என்று எதுவும் இல்லையா? ஆம் மிகச்சரியாக. 230. தனிப்பட்ட மனித ”ஆன்மா” என்னும் கருத்து நிராகரிக்கப்பட வேண்டுமென்றால், எது மனிதனில் அவன் ஒரு நிரந்தரமான ஆளுமை என்ற எண்ணத்தை தோற்றுவிக்கிறது? தன்ஹா அல்லது இருத்தலின்மீது நிறைவுறாத ஆசை அல்லது வேட்கை. இதன் மூலம் அவ்வுயிர் எதிர்காலத்தில் வெகுமதிக்கோ தண்டனைக்கோ நிச்சயமாக உட்படுத்தப்படும். தன்ஹாவை கொண்டிருப்பதால் அவ்வுயிருக்கு கர்மவினைகளின் தாக்கத்தின் மூலம் மறுபிறப்பு கிடைக்கும். 231. எது பிறப்பெடுக்கிறது? இறக்கும் மனிதனில் கடைசியாக தோன்றும் எண்ணங்களால் ஏற்படும் புதிய ஆளுமை அல்லது ஸ்கந்தங்களின் சேர்க்கை. 232. எத்தனை ஸ்கந்தங்கள் உள்ளன? ஐந்து. 233. அவைகளின் பெயரென்ன? ரூபம், வேதனா, சன்னா, சம்கரா மற்றும் விஞ்ஞான. 234. சுருக்கமாக அவைகளை விளக்குங்கள்? ரூபம் - பௌதிக குணங்கள் வேதனா - உணர்வு சன்னா - அருவ கருத்துக்கள் சம்காரா - மனப்போக்கு விஞ்ஞானம் - மனோபலம் அல்லது பிரக்ஞை. இவைகள் மூலமே நாம் உருவாகிறோம். இதன் மூலமே இருத்தலை உணர்கிறோம், உலகுடன் நம்மைபற்றி தொடர்பேற்படுத்துகிறோம். 235. மற்ற தனிஉயிர்களிடம் இருந்து ஒவ்வொரு தனிஉயிரையும் வேறுபடுத்தி உருவாக்குவது ஐந்து ஸ்கந்த கலவைகளின் மாறுபாடு. இந்த ஸ்கந்த கலவை மாறுபாட்டிற்கு காரணமாவது எது? தனிஉயிர் ஒன்றுடைய முற்பிறப்புகளின் கர்மா. 236. கர்மத்தின் வழிக்காட்டலுடன் புது உயிர்களை பிறப்பிக்கும் விசையாற்றல் எது? தன்ஹா - இருத்தலுக்கான விழைவு. 237 எதனடிப்படையில் மறுபிறப்பு கோட்பாடு நிறுவப்பட்டது? தர்மம், சமவயம், இணக்கம் ஆகியவை இயற்கையின் பிரபஞ்ச அமைப்பிலேயே உள்ளடங்கியுள்ளது என்னும் பார்வையில் இருந்து நிறுவப்பட்டது. ஒரு மனிதனின் செயல்களுக்குண்டான வெகுமதி அல்லது தண்டனையை தீர்ப்பதற்கு ஒரு பிறவி போதும் என பௌத்தர்கள் நம்பவில்லை, அந்த பிறவி நூறு வருடங்கள் அல்லது ஐநூறு வருடங்கள் நீடித்தாலும்கூட போதாது. மாபெரும் மறுபிறப்புச்சுழற்சி ஒரு தனிஉயிருடைய வாழ்க்கைகளின் தூய அல்லது தூய்மையற்ற செயலுக்கேற்ப விரைவாகவோ அல்லது மெதுவாகவோ கடந்துசெல்லும். 238. ஸ்கந்தங்களின் புதிய சேர்க்கையுடன் அதாவது புதிய ஆளுமையுடன் பிறப்பெடுக்கும் உயிர் முற்பிறவியின் அதே உயிர்தானா? முற்பிறவியின் தன்ஹாவே அந்த உயிரை மீண்டும் இருப்புக்கு கொண்டுவருகிறது, ஆகவே பிறப்பெடுப்பது அதே உயிரா? ஒரு விதத்தில் ’புது உயிர்’, வேறொரு விதத்தில் ’புது உயிர் அல்ல’. பாலியில் இதை “நச்சா ஸோ நச்சா அந்நோ” என்பார்கள், இதற்கு அர்த்தம் “அதுவல்ல அதுவல்லாததும் அல்ல”. இந்த வாழ்கையில் ஸ்கந்தங்கள் மாறிக்கொண்டே இருக்கின்றன. உளவியல் சார்ந்து சொல்வதென்றால், மனிதனின் உடல் ஒவ்வொரு ஏழு வருடங்களுக்கு ஒருமுறை முழுவதுமாக மாறுகிறது. நாற்பவதாவது வயதில் ஒருவர் தன்னுடைய தனித்தன்மையில் தன் பதினெட்டு வயது இளம்பருவத்தை ஒத்திருந்தாலும், உடலின் தொடர்ச்சியான வளர்சிதை மாற்றங்களாலும் மனம் மற்றும் குணங்களின் மாற்றங்களாலும் அவர் ஒரு புதிய உயிர்தான். எப்படி ஒருவர் தன்னுடைய முதிய வயதில் தன்னுடைய முந்தைய கால செயல்கள் மற்றும் எண்ணங்களின் விளைவாக துயரத்தை பெறுகிறாரோ, அதுபோலவே மறுபிறப்பெடுக்கும் புதிய உயிர் முந்தைய உயிர்தான் என்றாலும் புது உருவில் அல்லது புது ஸ்கந்தங்களின் சேர்க்கையில் முற்பிறப்பின் செயல்கள் மற்றும் எண்ணங்களின் விளைவுகளை அனுபவிக்கும். 239. ஆனால் முதிய மனிதன் உடல் மற்றும் மன மாற்றங்களுக்கிடையில் அவருடைய இளமை பருவ நிகழ்வுகளை நினைவுகூற முடிகிறது. பின்னர் ஏன் நம்முடைய முந்தைய பிறப்புகளின் நினைவுத்தொகுப்பு இப்பிறப்பிற்கு கடத்தப்படவில்லை? ஏனென்றால் நினைவுகள் ஸ்கந்தங்களுக்குள் அடங்கியுள்ளன. புது பிறப்பில் ஸ்கந்தங்கள் மாற்றமடைந்துள்ளதால் புதிய நினைவுத்தொகுப்பும் அதனை சார்ந்த பதிவுகளும் மட்டுமே வளர்ச்சியுறும். எனினும் இப்புவி வாழ்கையின் முந்தய பதிவுகள் அனைத்து எஞ்சியிருக்கும். இளவரசன் சித்தார்த்தன் புத்தனானபோது அவருடைய முந்தைய பிறப்புகளின் தொடர்வரிசையை காணமுடிந்தது. முந்தைய நிகழ்வுகளின் தடம் இல்லையேல் அவரால் காண்பதற்கு எதுவுமே இருந்திருக்காது. தியானத்தின் நான்காம் நிலையை (மனதை உள்நோக்கி காணும் நிலை) அடையும் எவரும் தங்களின் முற்பிறவி தொடர்ச்சியை காணமுடியும். 240. இப்படி தொடர்ந்து மாற்றமடையும் உருவங்களின் அறுதி குறிக்கோள் என்ன? நிர்வாணம். 241. நிர்வாணம் அடையும் எண்ணத்துடன் நாம் நற்செயல்கள் செய்யவேண்டும் என பௌத்தம் கற்பிக்கிறதா? இல்லை. பணம், பதவி அல்லது புலனின்பத்திற்கான எதிர்பார்ப்பை போல இந்த எண்ணமும் முழுமையான சுயநலம்தான். நிர்வாணம் இவ்வகையில் அடைய முடியாதது, இவ்வாறு எதிர்பார்க்கும் அறிவிலி ஏமாற்றமே அடைவார். 242. இதை மேலும் தெளிவுபடுத்துங்களேன்? நிர்வாணம் தன்னலமற்ற சொல்லுக்கு நேர்பொருளாகும், அனைத்து சுயநல நாட்டமும் உண்மையிடம் சரணடைதல். அறியாமையால் மனிதன் அதன் இயல்பறியாமல் நிர்வாண இன்பமடைய ஆசைப்படுகிறான். சுயநலமின்மையே நிர்வாணம். புத்தர் கட்டளையிட்ட உன்னத வாழ்க்கை நல்லதை செய்து வெகுமதிகளை எதிர்பார்க்கவோ அல்லது புனித வாழ்வின் வழியாக சொர்க்கலோக மகிழ்ச்சியை அனுபவிக்க அல்ல. எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் உன்னத வாழ்வு வாழப்படவேண்டும் அதுவே உயர்ந்த வாழ்வு. உலகில் வாழும்போதே ஒருவர் நிர்வாண நிலையை அடையமுடியும். 243. முன்னேற்ற பாதையிலுள்ள பத்து மாபெரும் தடைகள் அல்லது சன்யோஜனம் என்னும் தடங்கல்கள் என்னென்ன? சுய அடையாளக் காட்சிகள் - சக்காயா தித்தி நிச்சயமற்ற தன்மை, சந்தேகம் - விசிகிச்சா கட்டளைகள், நடைமுறைகள், மூடநம்பிக்கைகளை பற்றிக் கொள்ளுதல் - சிலப்பத பரமாசம் புலன் மற்றும் உடல் இன்பங்கள் - காம ராகம் வெறுப்பு, நோய்மை உணர்வுகள், எதிர்ப்பு - வியாபாதா உலகவாழ்வுக்கான ஆசை - ரூப ராகம் சொர்கலோக வாழ்வுக்கான ஆசை - அரூப ராகம் அகந்தை - மானா தன்நேர்மையுணர்வு - உத்தக்கா அறியாமை - அவிஜ்ஜா (அவித்யை) 244. அராகதர் ஆவதற்கு இதில் எத்தனை தடைகளை கடக்க வேண்டும்? அனைத்தும். 245. ஐந்து நிர்வாரனங்கள் அல்லது இடையூறுகள் என்ன? பேராசை, காழ்ப்பு, மந்தம், செறுக்கு மற்றும் சந்தேகம். 246. ஏன் புத்தர் கற்பித்தவைகளில் உணர்வுகள், ஆன்மீக தூண்டுதல்கள், மனதின் செயல்பாடுகள், தடைகள் மற்றும் ஆன்மீக முன்னேற்றத்திற்கு உதவுபவை போன்றவைகளின் மிக நுட்பமான பிரிவுகள் அதிகம் வருகின்றன? இது புதியவரை மிகவும் குழம்பச்செய்கிறது. இது நமக்கு நம்மை பற்றிய அறிவை அடைய உதவும், எல்லா தளங்களிலும் ஆழ்ந்து சிந்திக்க நம் மனதை பழக்குவதன் வழியாக இதை அடையலாம். இந்த சுயபரிசோதனை முறையை பின்பற்றுவதன் மூலம் நாம் இறுதியாக அறிவை அடைகிறோம், உண்மையை உள்ளது உள்ளபடி காண்கிறோம். இதுவே ஒவ்வொரு சிறந்த ஆசிரியரும் தங்களுடைய சீடர்களின் மனம் வளர்ச்சியடைய முன்வைக்கும் பாடத்திட்டமாகும். 247. புத்தருடைய நேரடி சீடர்களில் எவ்வளவு பேர் தங்களின் மேம்பட்ட குணங்களுக்காக புகழ்பெற்றவர்கள்? எண்பது சீடர்கள் அவ்வாறு தனித்துவம் வாய்ந்தவர். அவர்கள் ’அஸிதி மஹா சாவகர்கள்’ எனப்படுகின்றனர். 248. புத்தரின் ஞானம் எத்தகையது? அவருக்கு அறியக்கூடியவை மற்றும் அறிய இயலாதவைகளின் இயல்பு தெரியும். சாத்தியமானவை மற்றும் சாத்தியமற்றவை தெரியும். தகுதி மற்றும் தகுதியின்மையின் காரணமும் தெரியும். உயிர்களின் எண்ணங்களை அவரால் படிக்க இயலும். இயற்கையின் விதிகளை, புலன்களின் மயக்கத்தை அறிந்தவர். ஆசைகளை கட்டுக்குள் வைக்கவும் தெரிந்தவர். தனிமனிதர்கள் மற்றும் எல்லா உயிர்களின் பிறப்பையும் மறுபிறப்பையும் வேறுபடுத்தி அறியக்கூடியவர். 249. ஒட்டுமொத்தமாக புத்தர் கற்பித்தவை எந்த அடிப்படை கொள்கையை அடித்தளமாக கொண்டு ஒட்டி கட்டி எழுப்பப்பட்டது? அது பிரதித்ய சமுத்பாதா. 250. அது எளிதாக உள்வாங்ககூடியதா? அது மிகவும் கடினமானது. உண்மையில், அதன் முழு அர்த்தமும் விரிவும் சரியாக பக்குவப்படாத மனதின் திறனுக்கு அப்பாற்பட்டது. 251. மகத்தான உரையாசிரியர் புத்தகோஷர் அதைப்பற்றி என்ன சொன்னார்? இந்த விரிந்த சிந்தனை கடலில் அவர் கடலின் நீரோட்டங்களில் அடித்து செல்லப்படுவதுபோல கைவிடப்பட்ட நிலையிலிருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். 252. பின்னர் ஏன் புத்தர் பரிநிபாண சூத்திரத்தில் “ஒரு ஆசிரியர் தன் கைக்குள் எதையும் ஒளித்துக்கொள்வதில்லை, தனக்கு பின்னால் எதையும் மறைத்து வைப்பதில்லை” என்று சொன்னார்? அவர் கற்பித்தவை அனைத்தும் எல்லோருக்குமானது மற்றும் யாராலும் உள்வாங்க கூடியது என்றால், ஏன் மகத்தானவரும் நன்கு கற்றவருமான புத்தகோஷ் அந்த சிந்தனை உள்வாங்க கடினமானது என அறிவிக்கவேண்டும்? இதில் புத்தர் தான் கற்பித்தவைகள் அனைத்தும் எல்லோருக்குமானது என வெளிப்படையாக சொல்கிறார். அதேசமயம் இதற்கு இணையாகவே, தர்மத்தின் மெய்யான உள்ளடுக்குகளை தன்னுடைய அறிதல் திறனை நிறைவாக வளர்த்தெடுதவராலேயே புரிந்துகொள்ளமுடியும் என்று சொன்னதும் நிஜமே. ஆகையால் சராசரிகளாலும் அகஒளியில்லாதவர்களாலும் அதை புரிந்துகொள்ள முடியாது. 253. புத்தர் கற்பித்தவைகள் இந்த கண்ணோட்டத்தை எப்படி ஆதரிக்கிறது? புத்தர் ஒவ்வொருவரின் உள்ளத்தையும் நன்கறிந்து, கேட்பவரின் தனிப்பட்ட குணத்திற்கும் ஆன்மீக வளர்ச்சிக்கும் ஏற்றவாறே போதித்தார். அடிக்குறிப்பு: கர்மம்: கர்மம் என்பது ஒரு மனிதனுடைய செயல்களின் ஒட்டுமொத்தம். காரண-காரிய விதி ‘பிரதித்ய சமுத்பாத தர்மம்’ என அழைக்கப்படுகிறது. அங்குதார நிகயத்தில் புத்தர் "என்னுடைய செயல்களே என்னுடைய உடமை; என்னுடைய செயல்களே என்னுடைய வழியுரிமை; என்னுடைய செயல்களே என்னை பெற்றெடுக்கும் கருவறை; என் செயலகளே என் உறவினர்; என் செயல்களே என் புகலிடம்" என்று கற்பிக்கிறார். அராகதர்கள்: அராகதர்கள் என்பவர்கள் பரிந்துரைக்கப்பட்ட பாடத்திட்டம் வழியாக ஆன்மீகத்திலும் அறிவிலும் உச்சநிலையை அடைந்தவர்கள். அராகதர்களை பொதுவாக இரண்டாக பிரிக்கலாம் - சமதயானிகர்கள் மற்றும் சுக்க விபாசகர்கள். சமதயானிகர்கள் உணர்ச்சிகளை முற்றாக அழித்து அறிவு அல்லது மறைஞான உள்ளுணர்வை முழுமையாக வளர்த்துக்கொண்டவர்கள். சுக்க விபாசகர்கள் முழுமையான உணர்ச்சியை அடைந்தவர்கள், மன ஆற்றலை அவ்வளவாக அடையாதவர்கள். தீக நிகாயத்தில் புத்தர் இவ்வாறு சொல்கிறார் “சுபத்ரா, கேள்! இந்த உலகம் அராகதர்கள் இல்லாமல் இருக்காது, எனது சங்கத்திலுள்ள பிக்‌ஷுகள் எனது போதனைகளை சரியாகவும் உண்மையாகவும் கடைபிடித்தார்கள் என்றால்”. பிரதித்ய சமுத்பாதா: இது பாலியில் நிதானா என அழைப்பக்கடுகிறது. இதற்கு காரணகாரிய தொடர் என்று பொருள். பன்னிரெண்டு நிதானங்கள் உள்ளன. அவை அவித்யா - அறியாமை சம்ஸ்காரா - காரணகாரிய செயல், கர்மம் விக்ஞானா - தன்னுணர்வு நாமரூபா - மன-உடல் தொகுப்பு சதாயதானா - ஆறு அறிவுகள் பாசா (ஸ்பர்ஷம்) - தொடர்பு, தொடுதல் வேதனா - உணர்ச்சி தன்ஹா - வேட்கை உபாதனா - பற்று பாவா - இருப்பு ஜாதி - பிறப்பு ஜராமரணா - வயதடைதல், இறத்தல் ஹென்றி ஸ்டீல் ஆல்காட் தமிழில் - விஷ்ணுகுமார், தாமரைக்கண்ணன் அவிநாசி ஹென்றி ஸ்டீல் ஆல்காட் விஷ்ணுகுமார் ஹென்றி ஸ்டீல் ஆல்காட் (ஆகஸ்டு 2, 1832 - பிப்ரவரி 17, 1909) எழுத்தாளர், தத்துவவாதி மற்றும் பிரம்மஞான சபையின் (Theosophical society) இணை நிறுவனர் ஆவார். பௌத்தை மீட்டுருவாக்கம் செய்தவர்களுள் முக்கிய பங்காற்றியிருக்கிறார். ஆல்காட் நியூயாரக் ட்ரைபியூன் (newyork tribune) செய்தித்தாளின் வேளாண்மை ஆசிரியராக 1858 முதல் 60 வரை பணிபுரிந்தார். பின்னர் கர்னல் பதவியுடன் அமெரிக்க போர் மற்றும் கடற்படை துறையில் சிறப்பு ஆணையராக 1863 - 66 வரை பணிபுரிந்தார். வழக்கறிஞராக 1966 முதல் பணிபுரிய தொடங்கினார். ஹெலனா பெட்ரோவ்னா பிளாவட்க்ஸ்கி (Helena petrovna blavatsky), வில்லியம் ஜட்ஜ் (William q Judge) மற்றும் சிலருடன் இணைந்து 1875-ல் பிரம்மஞான சபை நிறுவி அதன் தலைமை ஏற்றார். 1878-ல் அவரும் பிளாட்வஸ்கியும் இந்தியா வந்தனர். 1879 முதல் இந்தியாவிலேயே வசிக்க முடிவுசெய்தனர். 1882-ல் பிரம்மஞான சபையின் நிரந்தர தலைமையகமாக சென்னை அடையாறில் நிலைப்படுத்தினர். அன்னி பெசன்டுடன் (Annie Besant) இணைந்து வாரணாசியிலுள்ள பெனாரஸில் இந்து கல்லூரி நிறுவ உதவினார். பெசன்டுடன் இணைந்து பிரம்மஞான சபையின் கருதுகோள்களை இந்திய மற்றும் இலங்கையில் நேரில் சென்று விளக்கினார். இலங்கை பௌதர்கள் மத்தியில் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்த ஆல்காட் அவரது முயற்சியால் அங்கே மூன்று கல்லூரிகளும் முப்பதிமூன்று பள்ளிகளும் நிறுவ செய்தார். பௌதர்கள் மத்தியில் அவர் மிகுந்த செல்வாக்கும் வரவேற்பும் பெற்றார். கிழக்கத்திய தத்துவங்களுடன் நெருக்கமாக அறியப்பட்டாலும் இந்து தத்துவ புத்தூக்கத்திற்கும் தன் பங்களிப்பை அளித்துள்ளார். ஆல்காட் தனது 74-வது வயதில் சென்னையில் காலமானார். இக்கட்டுரை ஹென்றி ஸ்டீல் ஆல்காட் எழுதிய The Buddhist catechism (1891) என்ற உலக புகழ் பெற்ற நூலின் தமிழ் மொழிபெயர்ப்பு. வெளிவந்த நாள் முதல் பல மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது. https://www.britannica.com/biography/Henry-Steel-Olcott https://en.wikipedia.org/wiki/Henry_Steel_Olcott https://scroll.in/magazine/1047687/how-an-american-helped-revive-buddhism-in-sri-lanka-after-moving-to-india Catechism என்பது கிறிஸ்துவத்தில் கேள்வி-பதில் வடிவில் மத நம்பிக்கைகளையும் அதன் கொள்கைகளையும் கற்பிப்பதற்கு பயன்படுத்தப்படும் நூல் வடிவம். இச்சொல் தமிழில் வினாவல் என மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. https://www.kurugu.in/2024/07/blog-post_29.html
  6. சொன்னது நீதானா? சொல்,சொல் முதல்வரே..! -சுப. உதயகுமாரன் திராவிட மாடலைப் புரிந்து கொள்வோம் -3 ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் தற்போது வரை ஸ்டாலின் என்னென்ன பேசினார்..! அந்தப் பேச்சுக்களை தற்போது மீளவும் பார்க்கையில் உண்மையிலேயே சிலிர்க்கிறது..! ‘நம்மை ஆட்சி செய்வது ஒரு தேவ தூதனோ.! இவர் நம்மை பொற்காலத்திற்கு கொண்டு செல்ல உள்ளாரோ’ என்று கூட நினைக்கத் தோன்றுகிறது; சில உதாரணங்கள்; கடந்த 2021-ஆம் ஆண்டு யூலை 9 அன்று தமிழக பொருளாதார வளர்ச்சிக் குழுவின் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், தமிழ் நாட்டில் அனைத்துச் சமூகங்களையும், அனைத்து மாவட்டங்களையும், அனைத்துப் பிரிவினரையும் உள்ளடக்கிய ஒருங்கிணைந்த வளர்ச்சி தான் ‘திராவிட மாடல்’ என்று விவரித்தார். “அந்த நோக்கத்துடன் தமிழ்நாடு வளர வேண்டும் என்பது தான் என்னுடைய ஆசை” என்றும் அவர் தெரிவித்தார். மேற்படி கூட்டம் காணொலி வாயிலாக நடைபெற்றது. குழு உறுப்பினர்கள் எஸ்தர் டஃப்லோ, ரகுராம் ராஜன், அரவிந்த் சுப்பிரமணியன், ஜீன் டிரெஸ், எஸ். நாராயணன், அப்போதைய தமிழ்நாடு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், அப்போதைய தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு, அப்போதைய நிதித்துறைக் கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கிருஷ்ணன் ஆகியோர் அந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர். தமிழ்நாட்டின் பொருளாதார நிலையை மேம்படுத்துவது குறித்து அந்தக் குழு விவாதித்தது. “இந்தக் குழுவில் இடம் பெற்றுள்ள ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் தனித் தன்மை வாய்ந்தவர்கள்” என்று புகழ்ந்த முதல்வர், “சமூக நலன் சார்ந்த வளர்ச்சி தான் தமிழ்நாட்டை இந்த அளவுக்கு முன்னேற்றியிருக்கிறது என்பதை இந்தக் குழுவைச் சேர்ந்த நிபுணர்கள் நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் புத்தகங்களில் குறிப்பிட்டிருப்பது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது” என்றார். மேற்படிக் குழு உருவாக்கப்பட்டதற்கான முக்கிய நோக்கங்களாக சிலவற்றை முதல்வர் குறிப்பிட்டார்: * பொருளாதாரம் மற்றும் சமூகக் கொள்கைகளில் பொதுவான வழி காட்டுதல்களை வழங்க வேண்டும். * சமூகநீதி மற்றும் மனிதவள மேம்பாடுகள் குறித்த ஆலோசனைகள் தர வேண்டும். * பெண்கள் மற்றும் ஒடுக்கப்பட்டோருக்குச் சமமான வாய்ப்புரிமை வழங்க ஆலோசனைகள் வழங்க வேண்டும். * மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பு மற்றும் உற்பத்தி மேம்பாடு தொடர்பான ஆலோசனைகள் வழங்க வேண்டும். * மாநிலத்தின் மொத்தமான நிதிநிலையைப் பாதுகாப்பதற்கான ஆலோசனைகள் தர வேண்டும். * மக்களுக்குச் சேவை செய்வதற்கான மாநிலத் திறனை மேம்படுத்த ஆலோசனை வழங்க வேண்டும். * புதிய திட்டங்கள் மற்றும் நிறைவேற்றக்கூடிய தீர்வுகளுக்கான ஒரு வலுவான ஆலோசனை மையமாக நீங்கள் திகழ வேண்டும். * எவ்வித பிரச்னைக்கும் ஆராய்ந்து சாத்தியப்படக்கூடிய சிறந்த சமூக, பொருளாதாரத் தீர்வுகளை வழங்க வேண்டும். தொடர்ந்து தன்னுடைய தனிப்பட்டக் கனவுகளைப் பட்டியலிட்ட முதல்வர், “தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி அதிகமாக வேண்டும். வேலைவாய்ப்புகள் அதிகமாக வேண்டும். தனிநபர் வருமானம் அதிகமாக வேண்டும். மக்களின் சமூக மரியாதை உயர வேண்டும். அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியாக அது அமைய வேண்டும்” என்று குறிப்பிட்டார். மேலும் அந்தக் “கனவுகள் சாதாரணமாக நிறைவேறி விடாது என்று எனக்கும் தெரியும்” என்று நேர்மையுடன் ஒத்துக் கொள்ளவும் செய்தார். திரு. எஸ். நாராயணன் எழுதிய “Dravidian Years” நூலை மேற்கோள் காட்டிப் பேசிய முதல்வர், “அரசியல், வளர்ச்சி, நிர்வாகம் ஆகியவற்றின் இடையில் நெருக்கமான, உயிர்ப்புள்ள ஒரு உறவை உருவாக்குவதில் கருணாநிதி யுகம் வெற்றி கண்டது. பிற்காலத்தில் அது போன்ற பல திட்டங்களை உருவாக்குவதற்கு அது அடிப்படையாக அமைந்தது” என்று கோடிட்டுக் காட்டினார். தொடர்ந்து பேசிய முதல்வர், “தமிழ்நாடு அரசு 5 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான கடனில் இருக்கிறது. பொதுத்துறை நிறுவனங்கள் 2 லட்சம் கோடி ரூபாய்க் கடனில் இருக்கின்றன. நிதி ஆதாரம் என்பது விரல்விட்டு எண்ணத்தக்க ஒருசில துறைகளின் மூலமாக மட்டும் தான் வருகிறது. வரி வசூலிலிருந்த மாநில உரிமைகளை ஒன்றிய அரசு ஜி.எ.ஸ்டி மூலமாகப் பறித்து விட்டது. அதனால் வரி வசூலை நம்ப முடியாது. நமது வளங்களைக் கொண்டு நம்மை வளப்படுத்திக்கொள்ளும் நிலைமையில் இருக்கிறோம். அதற்கென உள்ள வழிமுறைகளைத் தமிழ்நாட்டு அரசுக்குக் காட்டுங்கள்’’ என்று கேட்டுக் கொண்டார். “சமூக நீதி – சமத்துவம் – சுயமரியாதை – மொழிப் பற்று – இன உரிமை – மாநில சுயாட்சி ஆகிய தத்துவங்களின் அடிதளத்தில் நிற்கும் இயக்கம் தான் திமுக” என்று பெருமைப்பட்டுக் கொண்ட முதல்வர், “நமது வளர்ச்சி என்பதும் அதன் அடிப்படையில் இருக்க வேண்டும். தொழில் வளர்ச்சி – சமூக மாற்றம் – கல்வி மேம்பாடு ஆகிய அனைத்தும் ஒரே நேரத்தில் நடக்க வேண்டும். வளர்ச்சி என்பது பொருளாதார வளர்ச்சியாக மட்டுமல்ல, சமூக வளர்ச்சியாக இருக்க வேண்டும். பொருளாதாரம் – கல்வி – சமூகம் – சிந்தனை – செயல்பாடு ஆகிய ஐந்தும் ஒரு சேர வளர வேண்டும். அது தான் தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும், கருணாநிதியும் காண விரும்பிய வளர்ச்சி. அதுதான் திராவிட மாடல் வளர்ச்சி!” என்று தெரிவித்தார். பின்னர் பிப்ருவரி 28, 2022 அன்று தன்னுடைய தன்வரலாற்று நூலை வெளியிட்டுப் பேசிய முதல்வர் “திராவிட மாடல் கோட்பாட்டை இந்தியா முழுவதும் விதைப்பதை தனது பணியாக மேற் கொள்ளவிருப்பதாகத்” தெரிவித்தார். தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வெற்றியை குறிக்கும் வகையில் பேசிய முதல்வர், “ஆளும் திமுக கூட்டணிக்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றி எங்களது ஒன்பது மாத கால ‘திராவிட மாடல்’ ஆட்சிக்குத் தமிழ்நாட்டு மக்கள் அளித்துள்ள நற்சான்றிதழ்” என்றும் பெருமிதத்துடன் குறிப்பிட்டார். “எனது தத்துவம் என்பதற்கு ‘திராவிட மாடல்’ என்று பெயர்” என்றறிவித்த முதல்வர், அது பற்றி மேலும் விவரித்தார்: “’மாடல்’ என்பது ஆங்கிலச் சொல் தான். அதைத் தமிழில் சொல்வதாக இருந்தால், ‘திராவிடவியல் ஆட்சிமுறை தான் எனது கோட்பாடு. அனைத்தையும் உள்ளடக்கிய வளர்ச்சி தான் என்னுடைய கோட்பாட்டு நெறிமுறை. கல்வியில் – வேலை வாய்ப்பில் — தொழில் வளர்ச்சியில் — சமூக மேம்பாட்டில் — இந்த நாடு ஒரு சேர வளர வேண்டும். பால் பேதமற்ற — ரத்தபேதமற்ற சமூகமாக நமது சமூக மனோபாவம் மாற வேண்டும். ‘எல்லார்க்கும் எல்லாம்’ என்பதே இந்த திராவிடவியல் கோட்பாடு” என்றார். மேலும், விவரித்த முதல்வர், “அனைத்து தேசிய இனங்களுக்கும் சரிநிகர் உரிமை தரப்பட வேண்டும் என்பது தான் திராவிடவியல் கோட்பாடு. இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியம். அனைத்து மாநிலங்களும் சுயாட்சித் தன்மை கொண்டதாக இருக்க வேண்டும். இந்த மாநிலங்களின் ஒன்றியமான இந்திய அரசானது கூட்டாட்சி முறைப்படி செயல்பட வேண்டும் என்பதுதான் திராவிடவியல் கோட்பாடு. இந்த திராவிடவியல் கோட்பாட்டை, தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியா முழுமைக்கும் எடுத்துச் செல்ல வேண்டும்” என்று கோரிக்கை வைத்தார். இப்படியாக முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய திராவிட மாடலை இந்தியப் பெருவெளிக்கு எடுத்துச் சென்றார்: “ராகுல் காந்தி இந்திய நாடாளுமன்றத்தில் எழுந்து நின்று “India is a union of states” என்றும்; “BJP can never ever rule over the people of Tamil Nadu” என்றும் பேசியது, அவர் திராவிடவியல் கோட்பாட்டை முழுமையாக உள் வாங்கியவர் என்பதை உணர்த்துகிறது. இத்தகைய மனமாற்றத்தை அகில இந்தியத் தலைவர்கள் அடைய வேண்டும் என்று தான் அண்ணாவும் கருணாநிதியும் விரும்பினார்கள். அவர்கள் காலத்தில் அடைய முடியாத மாற்றம் இப்போது தெரியத் தொடங்கி இருக்கிறது. மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் கொண்ட வகையில் இந்திய அரசியலமைப்புச் சட்டம் திருத்தப்பட வேண்டும். அதற்கு அகில இந்திய காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளும் – அனைத்து மாநிலக் கட்சிகளும் குரல் கொடுக்க வேண்டும்” என்று அவர் கேட்டுக் கொண்டார். “மாநிலத்தில் சுயாட்சி – மத்தியில் கூட்டாட்சி’ என்பது இந்தியா முழுமைக்குமான முழக்கமாக மாறிவிட்டது. அதைத் தான் ராகுல் காந்தி அவர்களும் நாடாளுமன்றத்தில் எதிரொலித்தார். அதே போல், இது சட்டத்தின் ஆட்சியாக மட்டுமில்லாமல் – சமூகநீதியின் ஆட்சியாக மாற்றப்பட வேண்டும். இதற்காக அகில இந்திய அளவிலான சமூகநீதிக் கூட்டமைப்பை திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் உருவாக்கி, அனைத்து அகில இந்தியக் கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்திருக்கிறேன். இத்தகைய திராவிடவியல் கோட்பாட்டை இந்தியா முழுமைக்கும் விதைப்பதை எனது பணியாக மேற்கொள்வேன். அந்த வகையில் எனது அரசியல் வாழ்க்கையின் திருப்புமுனையாக இந்த நிகழ்ச்சி அமைந்திருக்கிறது” என்று சொல்லி தன்னுடைய உரையை முடித்தார் முதல்வர். அண்மையில் (யூலை 2024) நடந்து முடிந்திருக்கும் விக்கிரவாண்டி இடைத் தேர்தல் வெற்றிக்குப் பிறகு தன்னுடைய தொண்டர்களுக்கு கடிதம் எழுதிய முதல்வர், “கலைஞர் ஆட்சிக் காலத்தில் தொடங்கி இன்று வரை தொடரும் சமூகநீதித் திட்டங்கள், திராவிட மாடல் அரசின் சமூகநலத் திட்டங்கள் –- இவற்றுக்கு நற்சான்றிதழ் அளித்து திமுகவிற்கு மகத்தான வெற்றியை [மக்கள்] வழங்கி” இருக்கிறார்கள் என்று குறிப்பிட்டார். விக்கிரவாண்டி வாக்காளர்களை “திமுக நிர்வாகிகள் வீடுவீடாகச் சென்று நேரில் சந்தித்து, மூன்றாண்டுகால திராவிட மாடல் அரசின் சாதனைகளை” எடுத்துச் சொன்னதாக பெருமிதம் கொண்டார் முதல்வர். ஆனால், இந்த வெற்றிக்காக திமுக கொடுத்த விலை அதிகம். ஆக, தன்னுடைய ஆட்சிக் காலத்தைத் தான் முதல்வர் திராவிட மாடல் அரசு என்று குறிக்கிறார். முதல்வரைத் தொடர்ந்து திமுக அமைச்சர்கள் மற்றும் இரண்டாம் கட்டத் தலைவர்கள் பலரும் ‘திராவிட மாடல்’ பற்றிப் பேசுகிறார்கள். ஏப்ரல் 10, 2022 அன்று ஒரு நிகழ்வில் பேசிய அமைச்சர் எ. வ. வேலு, “மக்களுக்கு என்ன தேவையோ அதனை பார்த்து, பார்த்து செய்து கொண்டிருக்கிறோம். மகளிருக்கு இலவச பஸ், மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ், இல்லம் தேடிக் கல்வி உள்ளிட்டத் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது. மேலும் கோவில்களில் கடகால் போடுவது முதல் கருவறை வரை வேலை பார்த்தவர்களை வெளியேப் போ என்பதை திராவிட மாடல் ஆட்சி எதிர்க்கிறது. இதனால் தான் கோவில்களில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர்கள் ஆகலாம் என்ற சட்டத்தை கொண்டு வந்தோம்” என்றார் அவர். முதல்வரின் பேச்சுக்களும், எழுத்துக்களும் பரந்து பட்ட திராவிட அரசியலின் கூறுகளை கோடிட்டுக் காட்ட முயன்றாலும், பிறர் பேசும் கருத்துக்கள் பெரும்பாலும் எம்.ஜி.ஆரின் அண்ணாயிசத்தையே நினைவூட்டுகின்றன. திராவிட மாடலின் தத்துவார்த்தப் பின்புலம், சமூக-பொருளாதார-அரசியல் வெளிப்பாடுகள், அன்றாடச் சேவை நடைமுறைகள் பற்றியெல்லாம் ஏராளமானக் கேள்விகளும், சந்தேகங்களும் எழுகின்றன. முதல்வர் ஸ்டாலின் பேசியவற்றுக்கும், தற்போதைய ஆட்சி நிர்வாகம் செல்லும் பாதைக்கும் ஏதாவது சம்பந்தம் உள்ளதா என்பதை அடுத்த கட்டுரையில் பார்ப்போம்; [கட்டுரையிலுள்ள மேற்கோள்கள் அனைத்தும் திமுகவினர் நடத்தும் தினகரன் நாளிதழிலிருந்து எடுக்கப்பட்டவை.] கட்டுரையாளர் ; சுப. உதயகுமாரன் அணுசக்திக்கு எதிரான மற்றும் பசுமை அரசியல் செயல்பாட்டாளர். https://aramonline.in/18566/dravidian-model-stalin/
  7. ஈரானியர்கள் பாரசீகர்கள். அரேபியர்கள் இல்லை. ஈரான் எதுவும் செய்யமுடியாது. ரஷ்யாவுடன் கூட்டுவைத்தாலும் இஸ்ரேலின் துல்லியமான தாக்குதல்கள் மூலம் முக்கியமானவர்களை தொடர்ந்தும் இழக்கத்தான் போகின்றது. போருக்கு வெளிக்கிட்டால் தெஹ்ரான் முல்லாக்கள் மூட்டைமுடிச்சோடு வெளியேறவேண்டிவரும். ஆனாலும் இஸ்ரேல் பலஸ்தீனிய பொதுமக்களை பாரிய அடக்குமுறைக்கு உள்ளாக்குவதும், பட்டினி போடுவதும், கேவலமாக நடத்துவதும் மிலேச்சத்தனமான செயல்கள். இவற்றை தடுக்கவோ, தட்டிக்கேட்கவோ ஒருவரும் இல்லை!
  8. யாழில். காணி மோசடி – நில அளவையாளர் உள்ளிட்ட மூவர் கைது! adminJuly 30, 2024 காணி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான நில அளவையாளர் உள்ளிட்ட மூவரையும் பிணையில் செல்ல நீதிமன்று அனுமதித்துள்ளது. வெளிநாடொன்றில் வசிக்கும் தம்பதியினர், மருதங்கேணி பகுதியில் உள்ள தமது காணி ஒன்றிக்கு ஆனைக்கோட்டை பகுதியை சேர்ந்த நபர் ஒருவருக்கு அற்றோணி தத்துவத்தை வழங்கியுள்ளார். குறித்த நபர் தனக்கு அற்றோணி தத்துவம் ஊடாக கிடைக்கப்பெற்ற காணியை சூழ உள்ள காணிகளையும் அடாத்தாக கையகப்படுத்தி நில அளவையாளர் ஊடாக காணி வரைபடத்தினை கீறி அற்றோணி தத்துவ காணியை பிறிதொரு நபருக்கு மோசடியாக விற்பனை செய்துள்ளார். இது தொடர்பில் பாதிக்கப்பட்ட தரப்பினரால் யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரிடம் முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து, காணி மோசடியில் ஈடுபட்டவர், நில அளவையாளர் மற்றும் காணியை கொள்வனவு செய்த நபர் ஆகிய மூவரையும் கைது செய்திருந்தனர். கைது செய்யப்பட்ட மூவரிடமும் விசாரணைகளை முன்னெடுத்த காவற்துறையினர், அவர்களை நீதிமன்றில் முற்படுத்திய போது , அவர்களை பிணையில் செல்ல மன்று அனுமதித்தது. https://globaltamilnews.net/2024/205444/
  9. திராவிட அரசியலும், திரைத்துறை ஆதிக்கமும்! -சுப. உதயகுமாரன் திராவிட மாடலைப் புரிந்து கொள்வோம் – 2 அறிஞர் அண்ணாவில் ஆரம்பித்த திராவிடத்தின் ‘திரையில் இருந்து தொடங்கிய அரசியல் பயணம்’ கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா..என வளர்ந்து, விஜயகாந்தை தொட்டுப் படர்ந்து துவண்டு, பிறகு சீமான், உதயநிதி, விஜய்..என மையம் கொண்டு களமாடுவதை அரசியல், சமூகப் பார்வையோடு விவரிக்கிறார் சுப.உதயகுமாரன்; தமிழகம் ஒரு மாபெரும் சமூக-பொருளாதார-அரசியல் திருப்பு முனையில் நின்று கொண்டிருக்கிறது. சாதி வெறி, மத வெறி, குடி நோய், பெண்ணடிமைத் தனம், மூட நம்பிக்கைகள் என ஏராளமான சமூகப் பிரச்சினைகள் நம்மை பிடித்தாட்டிக் கொண்டிருக்கின்றன. ‘முன்னேற்றம்,’ ‘வளர்ச்சி’ என்கிற பெயரில் ஏராளமான அழிவுத் திட்டங்கள் நம் மீது திணிக்கப்படுகின்றன. கால நிலைச் சிதைப்பு, வளக் கொள்ளை, மாசுபாடு, வாழ்வாதார அழிப்பு, நிலத்தடிநீர் இழப்பு என்று உழன்று கொண்டிருக்கிறோம். அரசியல் அரங்கில் சர்வ தேசியம், இந்தியத் தேசியம், திராவிடத் தேசியம் என நம் மண்சாரா, மக்கள்சாரா, மரபுசாரா விழுமியங்கள் சதிராட்டம் போடுகின்றன. பெருந் தலைவர்கள் யாருமற்ற அரசியல் வெற்றிடத்தை திரைத் துறையினர் சிலர் ஆக்கிரமிக்க கடிதில் முனைகின்றனர். தமிழக அரசியலில் திரைத் துறையின் ஆதிக்கம் உற்று நோக்கப்பட வேண்டியது. காங்கிரசுத் தலைவர் சத்தியமூர்த்தி சினிமாவை ஒரு பிரச்சார ஊடகமாகப் பயன்படுத்தலாம் என்றெண்ணினாலும், தி.மு.கழகம்தான் சினிமாவை முழுவீச்சில் கைக்கொண்டு களமிறங்கியது. புதினங்களும், நாடகங்களும் எழுதிய அறிஞர் அண்ணா வேலைக்காரி, நல்லதம்பி, ஓரிரவு, சொர்க்க வாசல் போன்ற திரைப்படங்களுக்கு திரைக்கதை-வசனம் எழுதினார். தாய் ஐந்தடி பாய்ந்தால் குட்டி பத்தடி பாயும் என்பது போல, கலைஞர் கருணாநிதி அறுபதுக்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு திரைக்கதை-வசனம் எழுதினார். நாளடைவில் தமிழ் மக்களின் கவனம் அறிவார்ந்த மூளையிலிருந்து அரிதாரம் பூசிய முகத்துக்குத் தாவியது. திமுக நட்சத்திரம் எம்.ஜி.ஆர். மொத்தம் 138 திரைப்படங்களில் நடித்தார். ஜெயலலிதா 140 படங்களில் நடித்தார். இருவரும் இணைந்து 1965–1973 கால கட்டத்தில் 28 வெற்றிப் படங்களை வழங்கினர். இளமையும், இனிமையும், ஆடலும், பாடலும், கிறுகிறுப்பும், விறுவிறுப்பும் ததும்பும் அந்த திரைப்படங்கள் இன்றளவும் பேசப்படுபவை. தன்னுடைய திரைப்படங்களில் அபலைப் பெண்களின் ஆபத்பாந்தவனாக, மது அருந்தாத, புகைப்பிடிக்காத ஒழுக்க சீலனாக, ஓர் உன்னத பிம்பத்தைக் கட்டமைத்து வளர்ந்தார் எம்.ஜி.ஆர். கட்சியில் களப்பணி ஆற்றியிருந்த அனுபவத்தையும் வைத்துக் கொண்டு, காற்றுள்ள போதேத் தூற்றிக் கொண்டார் அவர். கலைஞர்–எம்.ஜி.ஆர். உறவு கெடுவதற்கான காரணங்கள் பின்னவர் அரசில் பதவி கேட்டதும், கட்சியில் கணக்குக் கேட்டதும் மட்டுமல்ல, கலைஞர் தன்னுடைய மகன் மு.க. முத்துவை எம்.ஜி.ஆருக்குப் போட்டியாக திரையுலகில் களமிறக்கியதும் தான். இம் மோதலின் விளைவாக 1972–ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர். அதிமுகவைத் தொடங்கினார். பின்னர், அவரது கட்சியின் இல்லாத கொள்கையை அறியாத ஜெயலலிதா ஏகாந்தத்தில் பரப்புவதற்கு ஏதுவாக, அவருக்கு கொள்கை பரப்புச் செயலாளர் (கொ.ப.செ.) பதவியை வழங்கினார். புரட்சி நடிகராக இருந்தவர் ‘பட்ட உயர்வு’ பெற்று “புரட்சித் தலைவர்’ ஆனார். அவரை அடியொற்றி, ஜெயலலிதா ‘புரட்சித் தலைவி’ ஆனார். முன்னவர் காலமானதும், பின்னவர் கட்சியின் தலைமைப் பொறுப்புக்கு வந்தார். எம்.ஜி.ஆரின் துணைவியார் வி. என். ஜானகியும் சினிமா நடிகை தான் என்றாலும், தமிழ் மக்கள் “சின்னவளை, முகம் சிவந்தவளை”த் தான் தலைவியாக விரும்பி ஏற்றார்கள். தமிழ்நாட்டில் மட்டும் தான் சினிமா ‘புரட்சி’ களமாகவும். ‘புரட்சி’ சினிமாத் தனம் கொண்டதாகவும் இருக்கின்றன. அதிமுகவிலிருந்து புரட்சியையும், திமுகவிலிருந்து கலைஞரையும் தேர்ந்தெடுத்து, தேசியம், திராவிடம், முற்போக்கு என்றொரு வினோத அவியலைச் சமைத்து விளம்பினார் ‘புரட்சிக் கலைஞர்’ விஜயகாந்த். அரசியல் மாற்றம் விரும்பிய தமிழ் இளைஞர்கள் அவரையும் வரவேற்றனர். போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே அவர் மட்டும் வென்றார். இரண்டாவது தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவரானார். அரசின் கொள்கைகளை விவாதித்து, திட்டங்களை ஆய்வுசெய்து, மக்கள் பிரச்சினைகளைப் பேசி, திறம்பட இயங்கியிருந்தால் நிலைத்து நின்றிருக்கலாம். சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும்? அடுத்து தமிழ்த் திரையுலகின் சூப்பர் ஸ்டார், உலக நாயகன் இருவரும் தமிழ்நாட்டு அரசியலைக் கொஞ்சம் உருட்டினார்கள். முன்னவரிடம் கொள்கை என்று சொன்னால், அவருக்கு தலைச் சுற்றியது; பின்னவர் தன் கொள்கையைச் சொல்ல வந்தால் நமக்கு தலைச் சுற்றியது. முன்னவர் ஒதுங்கினார், பின்னவர் ஒதுக்கப்பட்டார். பெயரும், புகழும், பணமும், படையும், சக்தி வாய்ந்தோர் ஆதரவும், அனுசரணையும் மட்டுமே பொது வாழ்வுக்குப் போதாதென்று அண்மைய ரஜினி-கமல் காட்சிகள் தெளிவாக நிறுவுகின்றன. இது ஒரு நல்ல, மிக முக்கியமான, வரவேற்கப்படவேண்டிய விடயம். ‘புரட்சித் திலகம்’ சரத்குமார், டி.ராஜேந்தர், கார்த்திக், பாக்கியராஜ், குஷ்பு, விந்தியா, நமீதா, சீமான், உதயநிதி, விஜய் என ஏராளமான திரையுலகினர் பொது வாழ்க்கைக்கு வரிசை கட்டி வருகின்றனர். தங்களின் சினிமாப் புகழை பயன்படுத்தி அரசியல் அதிகாரம் பெற அவர்கள் முனைகிறார்கள். சனநாயகத்தன்மையைப் போற்றுவதாகப் பீற்றிக் கொள்ளும், தி.மு.க.வும், அதன் தலைமையும் தங்களின் அடுத்த தலைமுறைத் தலைவராக உதயநிதியை உருவாக்கிக் கொள்வதற்கு திரைத் துறையையே நாடினர். அவரைத் திட்டமிட்டு வலிந்து சினிமாவுக்குள் புகுத்தி, அவர் முகத்தை தமிழகமெங்கும் பிரபலமாக்கி, கடந்தத் தேர்தலில் பிரச்சார பீரங்கியாகக் களமிறக்கி, கழக உடன் பிறப்புக்களையும், தமிழர்களையும் மனதளவில் தயாரித்து, இப்போது கொல்லைப் புறம் வழியாக ‘மினி பட்டாபிஷேகம்’ ஒன்றையே அரங்கேற்றி வைத்திருக்கிறார்கள். உதயநிதியைவிட தகுதியும், திறமையும் வாய்ந்தவர்கள் வேறு யாருமே தி.மு.க.வில் இல்லையா? எல்லாப் பொறுப்புக்களுக்கும் தேர்தல் நடத்தும் தி.மு.க. ஏன் அவ்வப்போது ஆர்.எஸ்.எஸ். போல, ஆட்களை நியமனம் செய்கிறது? “நாங்கள் அடிப்படையில் சனநாயகவாதிகள், ஆனால், அவ்வப்போது சர்வாதிகாரிகள்” எனும் புதுவித அரசியலா இது? அறிஞர் அண்ணா தனது மூத்த மகன் டாக்டர் பரிமளத்தை கட்சியின் பொதுச் செயலாளராகவோ, தமிழகத்தின் முதல்வராகவோ நியமித்திருந்தால், திருக்குவளைக் குடும்பம் திசை தெரியாமல் போயிருக்குமே? சினிமா நடிகர்கள் தாராளமாக அரசியலுக்கு வரலாம், வரட்டும். ஆனால், மக்களைச் சந்திக்காமல், அவர்களின் பிரச்சினைகளை அறியாமல், அரசியல் அறிவு ஏதுமில்லாமல், சினிமாப் புகழை மட்டும் மூலதனமாக வைத்துக் கொண்டு முதல்வராக முயற்சிப்பது தான் பிரச்சினை. ஒரு நல்ல ஆசிரியராவதற்கு கல்வியியல் பாடம் படிக்கச் சொல்கிறோம். ஒரு நல்ல மருத்துவராவதற்கு ஐந்தரை ஆண்டுகள் மருத்துவப் பாடங்களை கற்கச் சொல்கிறோம். ஆனால், ஒரு நாட்டின் முதல்வராவதற்கு மூன்று சினிமாவில் நடித்தால் போதும் என்றால், அந்த நாடு எப்படி உருப்படும்? தந்தை பெரியார், அறிஞர் அண்ணாவில் தொடங்கிய திராவிட அரசியல், கலைஞர் கருணாநிதியில் தொடர்ந்து, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, உதயநிதி என்று சினிமாக்காரர்களிடம் சிக்கி தொடர்வது காலத்தின் கோலம். குடும்ப அரசியல், வாரிசு அரசியல், தனிநபர் துதி, அடிமை மனோபாவம் என்றியங்கும் தி.மு.க. என்கிற கட்சியை வழிநடத்த உதயநிதி சரியானவராக இருக்கலாம், ஆனால், எட்டுக் கோடி தமிழக மக்களை வழிநடத்த அவர் தகுதியானவர்தானா..? என்கிற கேள்வி எழுகிறது. அந்த தகுதிகளை பெறுவதற்காகத் தான் இப்போது கட்சியிலும், அரசிலும் பதவிகளைக் கொடுத்திருக்கிறார்கள் என்று வாதிட்டால், அந்த முடிவின் அநியாயத்தை, அந்த செயல்பாட்டின் சனநாயகமற்றத் தன்மையை கேள்விக்குள்ளாக்க வேண்டியிருக்கிறது. கோபாலபுரம் குடும்பத்துக்குள் தான் ஆட்சி அதிகாரம் தக்க வைக்கப்பட வேண்டுமென்றால்கூட, உதயநிதியை விட அறிவும், ஆற்றலும், அனுபவமும் மிக்க கனிமொழி, தயாநிதி மாறன் போன்றோரில் ஒருவரைத் தேர்வு செய்திருக்கலாமே? சினிமாவை கலையாக, தொழிலாக, வணிகமாக மட்டும் பார்க்காமல், தலைவர்களை உருவாக்கும் தளமாகவும் பார்த்தால், தமிழினம் எந்தக் காலத்திலும் உருப்பட முடியாது. கேரளத்தின் புகழ்பெற்ற நடிகர் பிரேம் நசீர் (1950–1980) 520 படங்களில் கதாநாயகனாக நடித்தார். நடிகை ஷீலாவோடு மட்டும் 130 படங்களில் நடித்தார். அனைத்தும் வெற்றிப் படங்கள். ஆனால் இருவரும் ஒரு வார்டு கவுன்சிலராகக்கூடத் தேர்வாக முடியவில்லை. நவீன உலகில் நடிப்பும், அரசியலும் இரண்டறக் கலந்தே இருக்கின்றன. திரையுலகில் நடைபெறும் ஆதிக்கம், அணிசேர்ப்பு, ஏகபோகம் உள்ளிட்ட அரசியல், அரசியல்வாதிகள் அன்றாடம் கைக்கொள்ளும் கதை சொல்லல், வசனம், நடிப்பு போன்றவற்றை நாம் எல்லோரும் நன்றாகவே அறிந்திருக்கிறோம். “துன்பத்திற்கு யாரே துணையாவார் தாமுடைய நெஞ்சந் துணையல் வழி” என்கிறது குறள். துன்பத்தில் ஒருவரின் நெஞ்சமே துணையாவது போல, தலைவர் எனப்படுபவர் மக்களுக்குத் துணையாக நிற்க வேண்டும். கோட்பாடுகள், நிலைப்பாடுகள், களப்பணி எதுவுமேயின்றி ‘கோடம்பாக்கத்திலிருந்து நேராக கோட்டைக்குச் செல்வேன்’ என்பதை ஏற்க இயலாது. ‘முற்போக்கு திராவிடம்’ பேசி விஜயகாந்த் நிரப்ப முயன்று தோற்ற அரசியல் வெளியில் கொஞ்சத்தை பிற்போக்கு தமிழ்த் தேசியம் பேசி சீமான் பிடித்தார். சமூக-பொருளாதார-அரசியல் ஏற்பாட்டின் மீது கோபமுற்ற இளையோர், கட்டமைப்புக்களை மாற்ற விழைவோர், ஈழ இனப் படுகொலை கண்டு துடித்தோர் என பலரும் சீமானின் சினிமாத் தனப் பேச்சுக்களைக் கேட்டு மகிழ்ந்தனர். அன்பு, அறிவு, கருணை, சிந்தனையை விட, வெறுப்பு, வன்மம், கோபம், மூடத்தனம் வேகமாகவே விலை போகும். தான் பிடித்து வைத்திருக்கும் இடத்தை ‘தம்பி’ ஆக்கிரமித்து விடும் அபாயத்தைக் கண்டஞ்சும் ‘அண்ணன்’ கூட்டணிக்காகத் தூதுவிட்டுக் கொண்டிருக்கிறார். திரைப் புகழின் உச்சத்தி்ல் இருக்கும் விஜய் ஏராளமான அப்பாவி இளைஞர்களின் அன்பைப் பெற்றிருக்கிறார். “வள்ளுவன் தன்னை உலகினுக்கேத் தந்து வான்புகழ் கொண்ட” தமிழ் நாடாயிற்றே! விஜயை தலைவராக்காமல் விட்டு விடுமா? எந்த சினிமாச் சட்டியிலும் சீர்திருத்தச் சரக்குக் கிடையாதென்றுணர இன்னும் கொஞ்சம் காலம் தேவைப்படும். உதயநிதி, விஜய், சீமான் என்று உருப் பெற்றுக் (உருப்பட்டு அல்ல!) கொண்டிருக்கிறது தமிழ் நாட்டின் அரசியல் களம். தமிழகம் திறமைமிகு, தகைமைசால் அப்பனுக்காக, ஓர் அம்மைக்காக, ஏங்கிக் கிடக்கிறது. ஆனால், பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால், கொட்டைப் பாக்குக்கு விலை சொல்வது போல, கேட்பது ஒன்றும், கிடைப்பது வேறொன்றுமாக இருக்கிறது. ஸ்டாலினும் திரைப்படங்களில் நடித்துப் பார்த்தார், நடக்கவில்லை. கலைஞரின் பேச்சுத் திறன், எழுத்துத் திறன், கவிதைத் திறன், சினிமாத் திறன் ஏதுமற்ற நிலையில் கட்சியை, ஆட்சியைப் பிடித்து நிலைநிறுத்த ஒரு கொழுகொம்பு அவருக்குத் தேவைப்படுகிறது. பல்வேறு முனைகளிலிருந்தும் போட்டிகளும், நெருக்கடிகளும் உருவாகிக் கொண்டிருக்கின்றன. அதிமுகவின் தொடர்ச்சி, இந்துத்துவாக் கூட்டத்தின் வளர்ச்சி, நடிகர்களின் அரசியல் முயற்சி, தமிழ்த் தேசிய உணர்வின் எழுச்சி என்று களம் கடினமானதாகிக் கொண்டிருக்கும் நிலையில், ஸ்டாலின் ‘திராவிட மாடல்’ கதையாடலைக் கையிலெடுக்கிறார். கட்டுரையாளர்; சுப. உதயகுமாரன் https://aramonline.in/18542/diravidam-cinema-politics/
  10. தமிழ்மக்கள் தாங்கள் யார் என்பதைக் காட்டுவார்கள் - நிலாந்தன் கடந்த வாரம் யாழ்ப்பாணத்தின் சுவர்களில் ஓர் அனாமதேயச் சுவரொட்டி ஒட்டப்பட்டிருந்தது. அதில் “தேசமே பயப்படாதே” என்று வெள்ளை பேப்பரில் சிவப்பு மையால் எழுதப்பட்டிருந்தது. யார் ? யாருக்குப் பயப்படக்கூடாது? என்று யார் கூறுகிறார்கள்? இந்த சுவரொட்டி ஒட்டப்படுவதற்கு முன்பு, ஜேவிபி ஒரு பெரிய பலவண்ணச் சுவரொட்டியை ஒட்டியது. அதில் “எங்கள் தோழர் அனுர” என்று எழுதப்பட்டிருந்தது. அனுரவின் பெரிய முகம் அதில் பதிக்கப்பட்டிருந்தது. அதற்கும் சில நாட்களுக்கு முன்பு ”நாங்கள் தயார்” என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்ட ஒரு சுவரொட்டி. அதுவும் பலவண்ணச் சுவரொட்டி. அதில் தென்னிலங்கையில் தன்னெழுச்சிப் போராட்டங்களில் ஈடுபட்ட தலைவர்கள் மூவருடைய படங்கள் காணப்பட்டன. அதற்குக் கிட்டத்தட்ட ஒரு வாரத்துக்கு முன்பு ஒரு சுவரொட்டியில் நற்செய்தி வருகிறது என்ற பொருள்பட எழுதப்பட்டிருந்தது. அது ஒட்டப்பட்ட அடுத்த அடுத்த நாள் ரணில் செய்வார் என்று இன்னொரு சுவரொட்டி வந்தது. பன்னாட்டு நாணய நிதியத்தின் அடுத்த கட்ட கடன் உதவிக்கான பேச்சுவார்த்தைகள் வெற்றி பெற்றிருந்த ஒரு பின்னணியில் ஜனாதிபதி நாட்டுக்கு உரை நிகழ்த்தவிருந்தார். அதை முன்னிட்டு அந்தச் சுவரொட்டிகள் வெளிவந்தன. இக்கட்டுரை எழுதப்படுகையில் ஒரு சுவரொட்டி சில நாட்களுக்கு முன் ஓட்டப்பட்டது. அதில் “ரணிலை விரட்டுவோம்” என்று கறுப்பு வெள்ளையில் எழுதப்பட்டுள்ளது. நிச்சயமாக மேற்கண்ட சுவரொட்டிகள் யாவும் ஜனாதிபதித் தேர்தலை நோக்கி ஒட்டப்பட்டவை. இவ்வாறு யாழ்ப்பாணத்தின் சுவர்களில் வண்ணவண்ணச் சுவரொட்டிகளை ஒட்டிக் கொண்டிருக்கும் தென்னிலங்கை மையக் கட்சிகள், யாழ்ப்பாணத்து மக்களின் மனங்களில் என்ன ஒட்டப்பட்டு இருக்கிறது என்பதனை அறிந்திருக்கிறார்களா? தென்னிலங்கைக் கட்சிகள் மட்டுமல்ல, அந்தக் கட்சிகளுக்கு தமிழ்மக்களின் வாக்குகளை மடைமாற்ற முயற்சிக்கும் தமிழ் முகவர்கள், தமது சொந்த மக்களின் மனங்களில் எந்தக் கனவு ஒட்டிக் கொண்டிருக்கிறது என்பதனை அறிந்திருக்கிறார்களா? தமிழ்மக்கள் கடந்த ஒரு நூற்றாண்டு காலமாக நிர்ணயகரமான தருணங்களில் கொள்கைகளுக்கு வாக்களித்திருக்கிறார்கள்.கொலனித்துவ ஆட்சிக்காலத்தில், இலங்கை பிரஜைகளுக்கு வாக்குரிமை வழங்கப்பட்ட பின் நடந்த முதலாவது பொதுத் தேர்தலில், 1931ஆம் ஆண்டு தமிழ்மக்கள் தேர்தலைப் புறக்கணித்தார்கள். அப்பொழுது இருந்த யாழ்ப்பாண வாலிபக் காங்கிரஸ் மகாத்மா காந்தியின் செல்வாக்குக்கு உட்பட்டு தேர்தலைப் புறக்கணிக்குமாறு விடுத்த கோரிக்கையை தமிழ்மக்கள் ஏற்றுக்கொண்டார்கள். அங்கிருந்து தொடங்கி தமிழ்மக்கள் நிர்ணயகரமான தேர்தல்களில் நிர்ணயகரமாக முடிவெடுத்து வாக்களித்திருக்கிறார்கள். மிகப்பலமான உயர்குழாத்தைச் சேர்ந்த சேர்.பொன் ராமநாதன்,பொன்னம்பலம் குடும்பத்தின் வாரிசு ஆகிய மகாதேவாவை ஜி.ஜி.பொன்னம்பலம் 1947ஆம் ஆண்டு “தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா” என்று கூறித்தோற்கடித்தார். அதே பொன்னம்பலத்தை பின்னர் கொள்கையின் பெயரால் செல்வநாயகம் தோற்கடித்தார். பின்னர் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் போதும் தமிழ்மக்கள் கொள்கைக்கு வாக்களித்தார்கள். அதன்பின் இந்திய அமைதி காக்கும் படை இலங்கைத் தீவில் நிலை கொண்டிருந்த காலகட்டத்தில், தமிழ்மக்கள் சுயேட்சைக் குழுவாகப் போட்டியிட்ட ஈரோசுக்கு வெற்றியைப் பெற்றுக்கொடுத்தார்கள். இலங்கைத் தீவின் தேர்தல் வரலாற்றில் ஒரு சுயேச்சை குழு 13 ஆசனங்களை வென்றது அதுதான் முதல்தடவை. அந்த வெற்றி தமிழ்மக்களின் போராட்டத்தின் விளைவு. தமிழ்மக்கள் கொள்கைக்கு வாக்களித்தார்கள். அதன் பின் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு என்ற கூட்டு உருவாக்கப்பட்ட பின் நடந்த முதலாவது தேர்தலில், தமிழ்மக்கள் திரண்டு வாக்களித்திருக்கிறார்கள். அதாவது போராட்டத்தின் விளைவாக தோன்றிய கூட்டமைப்புக்கு கொள்கை அடிப்படையில் வாக்களித்தார்கள். 22ஆசனங்களை அள்ளிக்கொடுத்தார்கள். ஏன் அதிகம் போவான்?கடந்த 15 ஆண்டுகளிலும் ஜனாதிபதித் தேர்தல்களில் தமிழ்மக்கள் எப்படி வாக்களித்தார்கள்? தங்களைத் தோற்கடித்த குடும்பத்துக்கு எதிராக பெருமளவுக்கு ஒன்றுபட்டு வாக்களித்தார்கள். எனவே தமிழ்மக்கள் கடந்த ஒரு நூற்றாண்டு முழுவதிலும் ஆகக்கூடியபட்சம் ஒரு பெருந்திரளாகத் திரண்டு ஒன்றுபட்டு வாக்களித்த பல தருணங்கள் உண்டு. ஒரு பொது நிலைப்பாட்டை எடுத்து வாக்களித்த தருணங்கள் பல உண்டு. ஆனால்,கடந்த 15 ஆண்டுகளிலும் அவர்கள் ஜனாதிபதி தேர்தல் அல்லாத ஏனைய தேர்தல்களில் வாக்காளர்களாக சிதறடிக்கக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது உண்மை. அதனால் அவர்களை மீண்டும் ஒரு பெரிய மக்கள் திரளாகக் கூட்டிக்கட்ட வேண்டும். ஜனாதிபதி தேர்தலில் தமிழ்மக்கள் திரண்டுவந்து வாக்களிக்க மாட்டார்கள் என்று புள்ளி விபரங்களைக் காட்டிப் புலம்புவர்களும் பயமுறுத்துவோர்களும் ஒன்றை விளங்கிக்கொள்ள வேண்டும். கட்சி அரசியல் என்பது ஆகக்கூடிய பட்சம் வாக்குகளைத் திரட்டுவதுதான். அதிலும் குறிப்பாக தேசியவாத கட்சி அரசியல் என்றால், மக்களை ஆகப்பெரிய திரளாகக் கூட்டிக்கட்டுவது. அதைச் செய்யாத அல்லது செய்ய முடியாத அரசியல்வாதிகள் பொது வேட்பாளருக்கு வாக்குகள் கிடைக்காது என்று பயமுறுத்தப் பார்க்கிறார்கள். அவர்கள் தமிழ்த் தேசிய அரசியலுக்கு மட்டுமல்ல கட்சி அரசியலுக்கே லாயக்கில்லாதவர்கள். தமிழ்மக்களை வாக்காளர்களாகச் சிதறடித்ததில் அவர்களுக்கும் பொறுப்புண்டு. எனவே தமிழ்ப்பொது வேட்பாளர் என்ற நிலைப்பாடு தமிழ்மக்ககளை ஒன்றாக்குவது. தமிழ்ப் பலத்தை ஒன்று திரட்டுவது. தமிழ் அரசியல் சக்தியை ஒரு மையத்தில் குவித்து ஆகக்கூடியபட்சம் ஆக்க சக்தியாக மாற்றுவது. இந்த அடிப்படையில்தான் கடந்த திங்கட்கிழமை 22ஆம் தேதி யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் ஒரு புரிந்துணர்வு உடன்படிக்கை உத்தியோகபூர்வமாக கைச்சாத்திடப்பட்டது. ஏழு தமிழ்த்தேசியக் கட்சிகளுக்கும், மக்கள் அமைப்பாகிய “தமிழ்மக்கள் பொதுச்சபை”க்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை அது. அந்த புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு இரண்டு முக்கியத்துவங்கள் உண்டு. முதலாவது முக்கியத்துவம், கட்சிகளும் மக்கள் அமைப்பொன்றும் அவ்வாறு ஓர் உடன்படிக்கையை எழுதிக்கொள்வது நவீன தமிழ் வரலாற்றில் அதுதான் முதல் தடவை. தமிழ்மக்கள் பொதுச் சபையெனப்படுவது தமிழர் தாயகத்தில் உள்ள குடி மக்கள் சமூகங்கள்; செயற்பாட்டு அமைப்புக்கள்; மக்கள் அமைப்புக்கள் என்பவற்றின் கூட்டிணைவாக உருவாக்கப்பட்ட, ஒப்பீட்டளவில் பெரிய ஒரு மக்கள் கட்டமைப்பாகும். அந்த மக்கள் அமைப்பு, ஏழு தமிழ்த்தேசியக் கட்சிகளோடு எழுதிக்கொண்டு ஒர் உடன்படிக்கை அது. அந்த நிகழ்வில் உரையாற்றிய விக்னேஸ்வரன் கூறினார், வாக்களித்த மக்களும் அந்த வாக்குகளால் தெரிவு செய்யப்பட்டவர்களும் எழுதிய உடன்படிக்கை அதுவென்று. உண்மையில் இரண்டும் இரு வேறு தரப்புகள் அல்ல. இரண்டுமே, ஒன்று மற்றதை இட்டு நிரப்பிகள்தான். ஆனால் அவ்வாறான இட்டு நிரப்பிகள் தங்களுக்கு இடையில் ஓர் உடன்படிக்கை எழுதவேண்டிய தேவை ஏன் ஏற்பட்டது? ஏனென்றால் கட்டமைப்பு ரீதியாக இயங்குவது என்று முடிவெடுத்து எழுதப்பட்ட ஒர் உடன்படிக்கை அது. ஒரு பொதுக் கட்டமைப்பை உருவாக்கும் நோக்கத்தோடு எழுதப்பட்ட உடன்படிக்கை அது. இரண்டாவது முக்கியத்துவம், தமிழ்ப்பொது வேட்பாளர் என்ற விடயம் கட்டமைப்பு ரீதியாக முன்நகரத் தொடங்கியுள்ளது என்று பொருள். கடந்த 15 ஆண்டுகளாக ஒரு கருத்துருவாக்கமாக, சில கட்சிகளின் நடவடிக்கையாக, கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது தமிழ்மக்கள் பேரவையின் சுயாதீனக் குழுவினால் முன்னெடுக்கப்பட்டு, இடையில் கைவிடப்பட்ட ஓர் அரசியல் நகர்வாகக் காணப்பட்ட ஒன்று, இப்பொழுது கட்டமைப்பு சார்ந்து அடுத்த கட்டத்திற்கு நகரத் தொடங்கியிருக்கின்றது. இது மிக முக்கியமானது. தமிழ்மக்கள் மத்தியில் குறிப்பாக தமிழ்ப் பொது வாழ்வில் கட்டமைப்பு சார்ந்து சிந்திக்கும் பாரம்பரியம் பலவீனமாக உள்ளது. கட்சிகளுக்குள் உரிய பொருத்தமான கட்டமைப்புகள் இல்லாத பின்னணிக்குள்தான் தனிநபர் ஓட்டங்களும் தனிநபர் சுழிப்புக்களும் இடம்பெறுகின்றன. இருக்கின்ற கட்டமைப்புகள் பலவீனமாக இருப்பதினால்தான் நீதிமன்றம் ஏற வேண்டியிருக்கிறது. கட்டமைப்புக்கு பொறுப்புக்கூறும் ஒரு நிலைமையை ஏற்படுத்தினால் முடிவுகள் கூட்டாக எடுக்கப்படும். அதில் ஒரு கூட்டுப் பொறுப்பும் இருக்கும். தமிழ் அரசியல் பரப்பில் விடயங்களை கட்டமைப்புக்கூடாக விளங்கிக் கொள்ளும் தன்மையும் குறைவு. அதனால்தான் யார் ஜனாதிபதி வேட்பாளர் ?அவருடைய தேர்தல் விஞ்ஞாபனம் எது? யாரையாவது மனதில் வைத்துக் கொண்டு ஒரு வேட்பாளரைத் தேடுகிறோம் என்று பொய் சொல்லப்படுகிறதா? போன்ற கேள்விகள் அடிக்கடி வருகின்றன. அதற்கு ஒரு கட்டமைப்பு உருவாக்கப்படும்; அந்தக் கட்டமைப்பு கூட்டாக முடிவு எடுக்கும்; அந்த முடிவுகளின் அடிப்படையில் ஒருவர் ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்படுவார் ;அவருக்குரிய தேர்தல் விஞ்ஞாபனத்தையும் ஒரு கட்டமைப்பு எழுதும்… என்றெல்லாம் கூறப்பட்ட போதிலும், இதுபோன்ற கேள்விகள் திரும்பத் திரும்ப கேட்கப்படுகின்றன. இப்பொழுது ஒரு பொதுக் கட்டமைப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது. அது கட்சிகளுக்கும் மக்கள் அமைப்புக்கும் இடையிலானது. இரண்டு தரப்பையும் சேர்ந்த ஏழு, ஏழு பேர் அதில் இணைக்கப்பட்டிருக்கிறார்கள். மொத்தம் 14 பேர். இந்த 14 பேர்களும் உபகுழுக்களை உருவாக்குவார்கள். ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதைத் தீர்மானிக்க ஒரு உபகுழு, தேர்தல் விஞ்ஞாபனத்தை எழுத ஒரு உபகுழு, நிதியை முகாமை செய்ய ஒரு உபகுழு… என்று உபகுழுக்கள் உருவாக்கப்படும் என்று அப்பொதுக் கட்டமைப்பு கூறுகின்றது. நவீன தமிழ் அரசியலில் இது ஒரு புதிய நகர்வு. ஒரு புரிந்துணர்வு உடன்படிக்கையின் அடிப்படையில் தமிழ்த்தேசிய அரசியல் போக்கை கூட்டாக தீர்மானிப்பது என்பது. இப்பொழுது உருவாக்கப்பட்டிருக்கும் புரிந்துணர்வு உடன்படிக்கைக்குள் ஏழு கட்சிகள் உண்டு. எதிர்காலத்தில் இணையக்கூடிய கட்சிகளுக்காக அந்த உடன்படிக்கை திறந்து வைக்கப்பட்டிருக்கும் என்று அந்த நிகழ்வில் கூறப்பட்டது. அரசியல் என்பது சாத்தியக்கூறுகளின் கலை. சாத்தியமானவற்றில் இருந்துதான் சாத்தியமற்றவற்றை அதாவது அதிசயங்களையும் அற்புதங்களையும் செய்யலாம். சாத்தியமானவற்றிலிருந்துதான் அதைத் தொடங்கலாம். வானத்தில் எவ்வளவு உயரக் கோபுரத்தைக் கட்டுவதாக இருந்தாலும் நிலத்தில் கிடைக்கும் நிலப்பரப்பில்தான் அத்திவாரத்தைப் போடவேண்டும். அப்படித்தான் இந்த உடன்படிக்கையும்.சாத்தியமான வற்றுக்கிடையிலான ஒரு உடன்படிக்கை. எதிர்காலத்தில் இது விரிந்தகன்ற தளத்தில்,பரந்தகன்ற பொருளில் ஒரு தேசத் திரட்சியாகக் கட்டி எழுப்பப்படும் என்று இரண்டு தரப்பும் எதிர்பார்க்கின்றன. கடந்த 15 ஆண்டுகால தமிழரசியல் எனப்படுவது எதிர்த் தரப்புக்கு அல்லது வெளித் தரப்புக்கு பதில்வினை ஆற்றும் “ரியாக்டிவ் பொலிடிக்ஸ்”ஆகத்தான் இருந்து வந்துள்ளது. ஆனால் ஜனாதிபதித் தேர்தலில் ஒரு பொது வேட்பாளரை நிறுத்துவது என்பது, அதை “ப்ரோஆக்டிவாக” மாற்றும். அதாவது செயல்முனைப்புள்ளதாக மாற்றும். தமிழ்த்தரப்பு இப்பொழுது ஒரு புதிய நகர்வை முன்னெடுக்கின்றது. இதற்கு இனி வெளித்தரப்புகளும் தென்னிலங்கைத் தரப்புக்களும் பதில்வினையாற்ற வேண்டிவரும். அதாவது வெளித் தரப்புகள் தமிழ்த்தரப்பை நோக்கி வரவேண்டியிருக்கும்.இவ்வாறு தமிழரசியலை “ப்ரோ ஆக்டிவாக”-செயல்முனைப்புள்ளதாக மாற்றும்பொழுது, தமிழ்மக்கள் தங்களுடைய சுவர்களில் வண்ணச் சுவரொட்டிகளை ஒட்டும் கட்சிகளுக்கு தாங்கள் யார் என்பதைக் காட்டுவார்கள். https://www.nillanthan.com/6841/
  11. சுற்றுலா செல்வதற்கான சிறந்த நாடுகளுள் இலங்கை : ஃபோர்ப்ஸ் நாளிதழ் அறிக்கை ! By kugen சுற்றுலா செல்வதற்கான சிறந்த முதல் மூன்று நாடுகளுள் இலங்கை சேர்க்கப்பட்டுள்ளது. ஃபோர்ப்ஸ் நாளிதழின்படி, 2024ஆம் ஆண்டில் கோடைக் காலத்தில் சுற்றுலா செல்வதற்காக கிரீஸ் , மொரிஸ் மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் உலகின் சிறந்த சுற்றுலா நாடுகளாக பெயரிடப்பட்டுள்ளன. இலங்கை மேடு பள்ளங்களுடன் மற்றும் கண்கவர் கடற்கரைகளுடன் காணப்படக்கூடிய தீவாக உள்ளதுடன் ஒப்பீட்டளவில் பாலி நாட்டைப் போன்ற ஈர்ப்பைக் கொண்டது. இதேவேளை, சுற்றுலாப் பயணிகளுக்காக அதிசொகுசு ரீதியிலான வசதிகள் இலங்கையினுள் காணப்படுகிறது. இயற்கை அழகை கண்டுகளிக்கும் விதத்தில் 22 தேசிய பூங்காக்கள் உள்ளதாகவும் ஃபோர்ப்ஸ் நாளிதழ் கூறுகிறது. அதனுடன், கடுமையான பொருளாதார நெருக்கடி மற்றும் அண்மைய நிலமைகளால் மீள எழுந்திருக்கும் இலங்கை இவ்வாண்டில் சுற்றலாவுக்கான சிறந்த நாடுகளுள் முன்னணியில் உள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. https://www.battinews.com/2024/07/blog-post_394.html
  12. மொட்டுவை பிளவுபடுத்திய ரணில்; குழம்பிப்போயுள்ள ராஜபக்ஷக்கள்!: அகிலன் July 28, 2024 ஜனாதிபதித் தோ்தலுக்கான அறிவித்தலை தோ்தல்கள் ஆணைக்குழு வெளியிட்ட உடனடியாகவே முதல் ஆளாக ரணில் விக்கிரமசிங்க தான் போட்டியிடுவதற்கான கட்டுப்பணத்தை செலுத்தியிருக்கின்றாா். கட்சி சாா்பின்றி சுயாதீன வேட்பாளராகவே அவா் போட்டியிடுகின்றாா். இதன் மூலமாக ரணில் வெளிப்படுத்திய செய்திகள் முக்கியமானவை! பொது ஜன பெரமுனவின் சாா்பில் களமிறங்கினால் மட்டுமே அவருக்கு ஆதரவளிக்க முடியும் என ராஜபக்ஷக்கள் அழுத்தம் கொடுத்துவந்த நிலையில், அதனையிட்டு தான் கவலைப்படப்போவதில்லை என்பதை இதன் மூலம் ரணில் தெளிவாக உணா்த்தியிருக்கின்றாா். ரணிலின் இந்த நகா்வு மொட்டு அணிக்குத்தான் அதிகளவுக்கு அதிா்ச்சியைக் கொடுத்திருக்கின்றது. ரணிலை ஆதரிப்பதா அல்லது தனியான வேட்பாளா் ஒருவரைக் களமிறக்குவதா என்பதையிட்டு ஆராய வேண்டிய நிா்ப்பந்தம் அவா்களுக்கு ஏற்பட்டுள்ளது. இதனைத் தீா்மானிக்க மொட்டுக் கட்சி திங்கட்கிழமை கூடவுள்ளது. ஜனாதிபதித் தோ்தல் விடயத்தில் அதிகளவுக்குக் குழம்பிப்போயுள்ள – அல்லது பிளவுபட்டுப்போயுள்ள அணியாக இன்று மொட்டுக் கட்சிதான் உள்ளது. நாடாளுமன்றத்தில் அதிக உறுப்பினா்களைக் கொண்டுள்ள கட்சியாக மொட்டுத்தான் உள்ளது. 225 உறுப்பினா்களில் 145 உறுப்பினா்கள் மொட்டு அணியைச் சோ்ந்தவா்கள். அவா்களை ஏதோ ஒருவகையில் அரவணைத்துச் செல்ல வேண்டிய நிா்ப்பந்தம் ரணிலுக்கு இருந்ததற்கு அதுதான் காரணம். ஐக்கிய தேசியக் கட்சி சிதைந்துபோய், நாடாளுமன்றத்தில் ஒரே ஒரு உறுப்பினரைக் கொண்டுள்ள நிலையில், தனது திட்டங்களை நிறைவேற்ற நாடாளுமன்ற பலத்தைக் கொண்டுள்ள மொட்டுவை நம்பியிருக்க வேண்டியராக ரணில் இருந்தாா். இதனைவிட, ரணிலின் கட்சியான ஐ.தே.க. சிதைவடைந்து அதன் கட்டமைப்புக்களும் செலிழந்துபோயிருப்பதால், தோ்தல் காலத்தில் களத்தில் செயற்படுவதற்கும் மொட்டுவின் தேவை ரணிலுக்கு இருந்தது. மறுபுறத்தில் ராஜபக்ஷக்கள் விரும்புவதுபோல மொட்டுவுடன் உத்தியோகபுா்வமாக ஒரு உடன்படிக்கைக்குச் செல்வதற்கோ அக்கட்சியின் சாா்பில் போட்டியிடவோ ரணில் விரும்பவில்லை. அதற்கு காரணம் இருந்தது. இரண்டு வருடங்களுக்கு முன்னா் இடம்பெற்ற அரகல என்ற மக்கள் கிளா்ச்சி ராஜபக்ஷக்களை அம்பலப்படுத்தியிருந்தது. ராஜபக்ஷக்கள்தான் பொருளாதார நெருக்கடிக்குக் காரணம் என்று பெரும்பாலான சிங்கள மக்களும் நம்புகின்றாா்கள். நீதிமன்றத் தீா்ப்பு ஒன்றும் அதனை வெளிப்படுத்தியது. இந்த நிலையில் ராஜபக்ஷக்களுடன் செல்வதில் ரணிலுக்கு இரண்டு பிரச்சினைகள் இருந்தன. ஒன்று ஊழல்வாதிகளுடன் ரணில் இணைந்துள்ளாா் என்ற பிரசாரத்தை சஜித்தும், அநுரகுமாரவும் முன்னெடுப்பாா்கள். இரண்டாவது, ராஜபக்ஷக்களுடன் கூட்டடை வைத்துக்கொண்டு தமிழ் வாக்குகளைக் கேட்க முடியாது. சிறுபான்மையினா் அவ்வாறான கூட்டுக்கு வாக்களிக்க மாட்டாா்கள். கடந்த மூன்று ஜனாதிபதித் தோ்தல்களிலும் ராஜபக்ஷக்களுக்கு எதிராகவே சிறுபான்மையின மக்கள் வக்களித்திருந்தாா்கள் என்பது கவனிக்கத்தக்கது. நாடாளுமன்றத்தில் தற்போது 145 உறுப்பினா்கள் இருந்தாலும், அடுத்து வரக்கூடிய ஒரு தோ்தலில் அந்த ஆதரவைத் தக்கவைத்துக்கொள்ள முடியாது என்பதும் ராஜபக்ஷக்களுக்கும் தெரியும். ஆனால், 145 ஐ வைத்துக்கொண்டு ரணிலுக்கு அழுத்தம் கொடுத்து தமது இருப்பைப் பாதுகாத்துக்கொள்வதுதான் அவா்களுடைய உபாயமாக இருந்தது. அதனைவிட, ரணிலின் சொந்தக் கட்சி பலவீனமானதாக இருப்பதால் களத்தில் பணியாற்ற தமது கட்சியின் தயவை ரணில் எப்படியும் நாடுவாா் என்றும் ராஜபக்ஷக்கள் எதிா்பாா்த்தாா்கள். ராஜபக்ஷக்களுக்கு இரண்டு பிரச்சினைகள் இருந்தன. முதலாவது, தம்மைப் பாதுகாத்துக்கொள்வது. இரண்டாவது, கட்சியைப் பாதுகாத்துக்கொள்வது. இந்த விடயத்தில் மகிந்த ராஜபக்ஷ கட்சியைப் பாதுகாப்பதைவிட குடும்பத்தின் எதிா்காலத்தைப் பாதுகாப்பதிலேயே கவனமாக இருந்தாா். இப்போதும் இருக்கின்றாா். அதனால், மீண்டும் ரணில் வருவதையும், ரணிலுக்கு நெருக்கடி கொடுக்கக்கூடாது என்பதும் அவரது நிலைப்பாடாக இருந்தது. சஜித் அல்லது அநுரா வந்தால் தமது குடும்பத்தினரின் பாதுகாப்பு எதிா்காலத்தில் கேள்விக்குறியாகலாம் என்பது மகிந்தவின் கருத்து. மீண்டும் கோட், கேஸ் என்று அவா்கள் தம்மை அலை வைக்கலாம் என்ற அச்சம் அவருக்குள்ளது. ஆனால், இந்த யதாா்த்தத்தைப் புரிந்துகொள்ளாமல் பசில், நாமல் போன்றவா்கள் ரணிலிடம் அதிகளவுக்கு எதிா்பாா்த்தாா்கள். கடினமான நிபந்தனைகளை முன்வைத்தாா்கள். பலசுற்றுப் பேச்சுவாாத்தைகள் இதற்காக இடம்பெற்றன. ரணில் எதற்கும் இணங்கவில்லை. இறுதியாக கடந்த வாரம் ரணிலைச் சந்தித்த மகிந்த, பசில், நாமல் ஆகிய மூவரும் தமது ஆதரவு தேவையானால் பிரதமா் பதவி தமக்குத் தரப்பட வேண்டும் என்ற புதிய நிபந்தனையை விதித்தாா்கள். நாமல் ராஜபக்ஷ அந்தப் பதவிக்குத் தயாராக இருந்தாா். அதாவது, மொட்டுவின் வேட்பாளராக ரணில் களமிறங்க வேண்டும், அவ்வாறில்லாமல் தனியாகக் களமிறங்குவதானால், பிரதமா் பதவியைத் தந்தால் மட்டுமே ஆதரவளிக்க தாம் ஆதரவளிக்கத் தயாா் என்பதுதான் அவா்களது நிலைப்பாடு. இதற்கு உறுதியான பதில் எதனையும் ரணில் கொடுக்கவில்லை. பதிலாக நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, பொதுத் தோ்தல் நடத்தப்படலாம் என்ற செய்திகள் கசியவிடப்பட்டன. ரணிலைப் பொறுத்தவரையில் ராஜபக்ஷக்கள் யாரையும் உத்தியோகபுா்வமாக தோ்தல் களத்தில் இறக்காமல் அமைதியாக இருக்க வேண்டும் என்பதையே எதிா்பாா்த்தாா். மொட்டு இணங்கிவராவிட்டால், நிலைமைகளை எவ்வாறு கையாள்வது என்பதற்கு மாற்றும் திட்டம் ஒன்றும் ரணிலிடம் இருந்தது… ரணில் இறங்கிவரப்போவதில்லை என்ற நிலையில்தான் சீற்றமடைந்த நாமல் ராஜபக்ஷ கடுமையான அறிக்கை ஒன்றை இரு தினங்களுக்கு முன்னா் வெளியிட்டாா். “விடுதலைப் புலிகளைப் பிளவுபடுத்தியதைப் போல பொதுஜன பெரமுனவையும் ரணில் பிளவுபடுத்திவிட்டாா்..” என்பதுதான் நாமலின் அறிக்கையின் சாரம். நாமல் ஆத்திரத்தில் அவசரப்பட்டுத் தெரிவித்த அந்தக் கருத்தில் பல உண்மைகள் பொதிந்துள்ளன. முதலாவது, ரணிலின் செயற்பாடுகளால் பொது ஜன பெரமுன பிளவுபட்டுப் பலவீனப்பட்டுப் போயுள்ளது என்ற ஆதங்கம், இயலாமை நாமலின் கருத்தில் தொனிக்கிறது. அதனை நாமல் பகிரங்கமாகவே ஒப்புக்கொண்டுள்ளாா் என்றும் கொள்ளலாம். இரண்டாவது, கட்சி பிளவுபட்டுள்ள நிலையில் உறுதியான தீா்மானம் ஒன்றை பொதுஜன பெரமுனவால் எடுக்க முடியுமா என்ற கேள்வியும் இங்கு எழுகின்றது. ஏனெனில் மொட்டு கட்சியில் ரணிலுக்கான ஆதரவே வலுவானதாக இருக்கின்றது. நாமல் சொன்னது போல பொதுஜன பெரமுன இப்போது பிளவுபட்ட நிலையில்தான் இருக்கின்றது. கட்சியை வழிநடத்துவதாக அல்லது கட்சிக்குத் தலைமையை வழங்குவதாகக் கூறிக்கொள்ளும் ராஜபக்ஷக்களையும் அவா்களது நெருங்கிய உறவினா்களையும் தவிர கட்சியின் மற்றையவா்கள் ரணிலை ஆதரிக்கத் தயாராகத்தான் இருக்கின்றாா்கள். கட்சியின் 145 நாடாளுமன்ற உறுப்பினா்களில் 75 போ் ரணிலை ஆதரிக்கப் போதாகத் தெரிவித்துள்ளாா்கள். கட்சியின் 12 மாவட்டத் தலைவா்களும் இதேபோன்ற நிலைப்பாட்டைத்தான் வெளிப்படுத்தியிருக்கின்றாா்கள். ராஜபக்ஷக்கள் என்னதான் நிலைப்பாட்டை எடுத்தாலும், மொட்டுக் கட்சியின் பெரும்பான்மையினா் ரணிலை ஆதரிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில்தான் இருக்கின்றாா்கள். இது ரணிலுக்கும் தெரியும். அதனால்தான் ராஜபக்ஷக்களுடனான பேச்சுவாா்த்தைகள் – பேரம் பேசல்களில் ரணில் இறுக்கமாக இருந்தாா். ரணில் தனியாகச் சென்றால் தமது வேட்பாளா் ஒருவரை களமிறக்குவது என்ற கருத்தை ராஜபக்ஷக்கள் முன்வைத்தாா்கள். திங்கட்கிழமை நடைபெறவிருக்கும் மொட்டுக் கட்சியின் உயா் மட்டக் கூட்டத்தில் இது தொடா்பில் இறுதி முடிவு எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகின்றது. பிரபல வா்த்தகா் தம்மிக்க பெரேரா மற்றும் நாமல் ராஜபக்ஷ ஆகியோா் ஏற்கனவே தமது விருப்பத்தை வெளிப்படுத்தியிருந்தாா்கள். ஆனால், “நாமல் ராஜபக்ஷக்கு காலம் இருக்கின்றது” என்று மகிந்த ராஜபக்ஷ கடந்த வாரம் தெரிவித்திருந்தாா். இதற்கு காலம் இருக்கின்றது என்பது மட்டும் காரணமல்ல. போட்டியிட்டால் நாமல் மண்ணைக் கவ்வுவாா் என்பது மகிந்தவுக்குத் தெரியும். ஆக, தனியாக ஒருவரை களமிறக்க மொட்டு கட்சி தீா்மானித்தால் அது தம்மிக்க பெரோவாகத்தான் இருக்கும். ஆனால், அது ரணிலின் வாக்குகளைப் பிளவுபடுத்தி சஜித்துக்கான வெற்றிவாய்ப்பை அதிகரிக்கும்.! ராஜபக்ஷக்களைப் பொறுத்தவரை அது ஒரு தற்கொலை முயற்சியாகவும் முடியலாம்! https://www.ilakku.org/மொட்டுவை-பிளவுபடுத்திய-ர/
  13. ஒற்றுமையின்மையால் எமது மக்களையும் மண்ணையும் நாம் இழந்துவிடக்கூடாது தமிழர்கள் பூர்வீகமாக வடக்கு, கிழக்கில் வாழ்ந்தார்கள் என்கிற வரலாற்றை சிதைக்கும் வகையில் இன்றைக்கு தென்னிலங்கை திட்டமிட்டு பல விடயங்களை அரங்கேற்றி வருகிறது. எமது ஒற்றுமை இன்மை காரணமாக எமது மக்களையும் மண்ணையும் நாங்கள் இழந்துவிடக்கூடாது என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். வெலிக்கடை சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்ட ரெலோ கட்சியின் தலைவர் தங்கதுரை, தளபதி குட்டிமணி, முன்னாள் போராளி ஜெகன் உட்பட 53 தமிழ் அரசியல் கைதிகளின் 41வது நினைவேந்தல் நிகழ்வு நேற்று சனிக்கிழமை (27) மாலை 6 மணியளவில் மன்னாரில் உள்ள தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ கட்சியின் அலுவலகத்தில் இடம்பெற்றது. இதன்போது இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்வில் போராளிகளுக்கு அஞ்சலி செலுத்திய பின் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், ஓர் இன அழிப்பின் ஆரம்ப இடம் வெலிக்கடை சிறைச்சாலை. ஓர் இனத்தின் மீது வன்முறைகள் ஆரம்பிக்கப்படுவது தான் இலங்கை வரலாற்றில் கூறப்படுகின்ற மிக மோசமான வன்முறையாக உள்ளது. இந்த நாட்டில் பல படுகொலைகள் இடம்பெற்றுள்ளது. தன்னைக் கொலை செய்வதன் மூலம் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் போராட்டத்தில் இணைவார்கள் என தலைவர் கூறிய தீர்க்கதரிசனம் 1983ஆம் ஆண்டு இளைஞர் யுவதிகள் தமது உயிரை எமது தேசத்திற்காக தியாகம் செய்துள்ளனர். ஆயுதப் போராட்டமாக மாறி தற்போது ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்டு, மீண்டும் அகிம்சை ரீதியான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு எமது இனத்தின் பிரச்சினைகளை வெளிக்கொண்டு வரும் கால கட்டத்தில் இருக்கிறோம். எமது மக்களின் நிலங்கள், கடல் வளம், மண் அபகரிக்கப்படுகின்றன. நாங்கள் ஒரு காலத்திலே தமிழர்கள் பூர்வீகமாக வடக்கு, கிழக்கில் வாழ்ந்தார்கள் என்கிற வரலாற்றை சிதைக்கும் வகையில் இன்றைக்கு தென்னிலங்கை திட்டமிட்டு பல விடயங்களை அரங்கேற்றி வருகிறது. தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) தலைவர்களையும் போராளிகளையும் இழந்த இயக்கமாக தொடர்ச்சியாக செயல்பட்டு வந்தாலும் கூட தலைவர்களின் சிந்தனையின் அடிப்படையில் எல்லா போராளிகளையும் அரவணைத்து செல்ல வேண்டும் என்பதன் அடிப்படையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து தமிழரசுக் கட்சி வெளியேறியுள்ள போதும் ஏனைய ஐந்து கட்சிகளுடன் போராட்ட கட்சியான ஜனநாயக போராளிகள் கட்சியையும் இணைத்து செயல்பட்டு வருகிறோம். இன்று நாங்கள் ஒற்றுமையுடன் செயல்பட்டு வருகிறோம். நாங்கள் ஒற்றுமையாக இல்லை என்றால் எமது மக்களை காப்பாற்ற முடியாது. தென்னிலங்கையில் உள்ளவர்கள் வடக்கு, கிழக்கில் ஆட்சி நடத்தக்கூடிய அல்லது அவர்களின் செயல்பாட்டை இங்கே திறம்பட செய்யக்கூடிய வாய்ப்பை எமது ஒற்று இன்மையால் காவு கொடுக்கிற நிலைப்பாட்டில் நாங்கள் இருந்துவிடுவோம். எல்லா கட்சிகளும் ஒன்றிணைந்து மக்களின் விடுதலைக்காக செயல்பட்டு மக்கள் விரும்புகின்ற ஒற்றுமையை பேணி எமது மக்களுக்காக குரல் கொடுக்கும் எமது மண்ணை மீட்டெடுக்கும் தார்மிக செயற்பாட்டை முன்னெடுக்க இன்றைய நாளில் வேண்டுகோள் விடுக்கின்றேன். எமது ஒற்றுமையின்மை காரணமாக எமது மக்களையும் மண்ணையும் நாங்கள் இழந்துவிடக்கூடாது என்பதையும் கூறிக்கொள்ள விரும்புகிறேன் என்றார். https://akkinikkunchu.com/?p=285715
  14. மீண்டும் வந்தடைந்த மருத்துவர் அர்ச்சுனா! சாவகச்சேரி மருத்துவமனையின் முன்னாள் மருத்துவ அத்தியட்சகர் இராமநாதன் அர்ச்சுனா பேராதனை மருத்துவமனைக்கு இடமாற்றப்பட்டதைத் தொடர்ந்து இன்று சாவகச்சேரி மருத்துவமனைக்கு மீண்டும் வந்தடைந்துள்ளார். இவ்வாறாக மருத்துவமனைக்கு முன் நின்று கொண்டு "மீண்டும் எனது வீட்டுக்கு" என்ற ஒரு செய்தியை தனது உத்தியோகபூர்வ முகப்புத்தக தளத்தில் பதிவிட்டிருக்கிறார். அத்துடன் இன்று மாலை யாழ் இந்து கல்லூரி மைதானத்தில் நடைபெறவுள்ள 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான கூடைப்பந்து ஆட்டத்தில் ஸ்புட்னிக் அணிக்காக தான் விளையாடவுள்ளதாக தெரிவித்துள்ளார். (ப) https://newuthayan.com/article/மீண்டும்_வந்தடைந்த_மருத்துவர்_அர்ச்சுனா!
  15. சிங்களவர்களை நெகிழ வைத்த தமிழ் பெண் Vhg ஜூலை 27, 2024 திருகோணமலை தமிழ் பெண் ஒருவரால் நெகிழ்ச்சியடைந்த சிங்களவர்கள் சமூகவலைத்தளங்களில் பதிவொன்றை பதிவிட்டுள்ளனர். பணமில்லாத ஏழைகளுக்கு தினமும் இலவச உணவு வழங்கும் ஷீலாம்மா என்ற தமிழ் பெண் தொடர்பிலேயே பதிவிடப்பட்டுள்ளது. தினமும் அன்னதானம் வழங்கும் ஷீலாம்மா என்ற பெயரில் இந்த பதிவை சிங்கள இளைஞன் ஒருவர் பதிவிட்டுள்ளார். மனிதாபிமான செயல் “பதவியில் இருந்து திருகோணமலை செல்லும் போது இக்பால் நகர் என்ற இடத்திலேயே இந்த மனிதாபிமானமிக்க பெண்ணை சந்தித்தேன். வீதிக்கு அருகிலுள்ள சிறிய குடிசை ஒன்றில், மிகவும் சுத்தமான முறையில் உணவு தயாரிக்கப்பட்டிருந்தது. தமிழர்களின் சுவையில் வழங்கப்பட்ட உணவை விடவும் அங்கிருந்த பலகை ஒன்றில் எழுதப்பட்டிருந்த விடயமே மனதை நிறைவாக்கியது. பணம் இல்லாத அனைவருக்காகவும் ஷீலாம்மாவிடம் தினமும் உணவு உள்ளது. பணத்தில் ஏழையாக இருந்தாலும் இதயத்தில் பணக்காரராக எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பவர்களின் வாழ்க்கை இது” என சிங்கள இளைஞன் குறிப்பிட்டுள்ளார். https://www.battinatham.com/2024/07/blog-post_108.html
  16. மறைந்த கலாநிதி விக்ரமபாகு கருணாரத்னவின் இறுதிச்சடங்கு இன்று மறைந்த நவ சம சமாஜ கட்சியின் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரத்னவின் இறுதிச் சடங்கு இன்று இடம்பெறவுள்ளது. இறுதி கிரியை பொரளை பொது மயானத்தில் இன்று மாலை ஐந்து மணிக்கு இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவரது பூதவுடல் பொரளையில் உள்ள தனியார் மலர்சாலை ஒன்றில் இன்றும், காலை முதல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. உடல் நலக்குறைவு காரணமாக நவ சம சமாஜ கட்சியின் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரத்ன கடந்த 24ஆம் திகதி காலமானார். https://thinakkural.lk/article/306865
  17. கோடிக்கணக்கில் நிவாரணி மாத்திரைகள் பறிமுதல்! இராமநாதபுரம் அடுத்த மானாங்குடி கடற்கரையில் இருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக கடற்கரையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1 கோடி 80 இலட்சம் ரூபாய் மதிப்பிலான 5 இலட்சத்து 70 ஆயிரம் வலி நிவாரணி மாத்திரைகள் திருச்சி சுங்கத்துறை நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் நேற்று (26) வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்து தலைமறைவான சந்தேக நபர் ஒருவரை தீவிரமாக தேடி வருகின்றனர். இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம், மண்டபம் வேதாளை மரைக்காயர் பட்டினம், மானாங்குடி உள்ளிட்ட கடற்கரையில் இருந்து தனுஷ்கோடி கடல் வழியாக கடல் அட்டை, சமையல் மஞ்சள், இஞ்சி, வலி நிவாரணி மாத்திரைகள், கஞ்சா உள்ளிட்ட பொருட்கள் இலங்கைக்கு கடத்தப்பட்டு வருகிறது. கடல் வழியாக நடக்கும் கடத்தல் சம்பவங்களை தடுக்க மத்திய சுங்கத்துறை, கடலோர காவல் படை, கடற்படை மற்றும் மத்திய, மாநில உளவுத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தாலும் அதையும் மீறி சமீப காலமாக அதிக அளவில் கடத்தல் சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திருச்சி சுங்கத்துறை நுண்ணறிவு பிரிவு கண்காணிப்பாளர் கண்ணதாசனுக்கு ராமநாதபுரம் மாவட்டம் புதுமடம் அடுத்த மானாங்குடி கடற்கரையில் இருந்து போதைப்பொருள் இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் சுங்கத்துறை நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் குழு புது படத்திலிருந்து மானாங்குடி வரை உள்ள கடற்கரை பகுதியில் தீவிர சோதனை நடத்தினர். அப்போது இலங்கைக்கு கடத்துவதற்காக மானாங்குடி கடற்கரை பதுக்கி வைக்கப்பட்டிருந்த 10 பெட்டிகள் கைப்பற்றப்பட்டது. அதை திறந்து சோதனை செய்த போது அதில் வலி நிவாரணி மாத்திரைகள் இருந்தது தெரியவந்தது. இதனை எடுத்து அந்த பெட்டிகளை மண்டபம் சுங்கத் துறை அலுவலகத்திற்கு எடுத்து வந்து ஆய்வு செய்தபோது ஒரு பெட்டியில் 57 ஆயிரம் மாத்திரைகள் வீதம் 10 பெட்டியில் 5 இலட்சத்து 70 ஆயிரம் மாத்திரைகள் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து வலி மாத்திரைகள் அடங்கிய பெட்டிகளை சரக்கு வாகனம் மூலமாக இராமநாதபுரம் சுங்கத்துறை தலைமை அலுவலகத்தில் எடுத்து வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சுங்கத்துறை அதிகாரிகள் நடத்திய முதல் கட்ட விசாரணையில் வலி நிவாரணி மாத்திரைகள் இலங்கைக்கு நேற்று இரவு படகு மூலம் கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்துள்ளதாகவும், இந்த கடத்தல் சம்பவத்தில் தொடர்புடையதாக கருதப்படும் சந்தேக நபர் ஒருவர் தலைமறைவாகி உள்ளதால் அவரை தீவிரமாக தேடி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் கைப்பற்றப்பட்ட வலி நிவாரணி மாத்திரைகளின் மதிப்பு சுமார் 1 கோடி 80 இலட்சம் என்றும் சர்வதேச மதிப்பு 3 கோடி ரூபாய் இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. https://newuthayan.com/article/கோடிக்கணக்கில்_நிவாரணி_மாத்திரைகள்_பறிமுதல்!
  18. யாழ்.கொள்ளைக்காரி கைது எம்.றொசாந்த் யாழ்ப்பாணம் அனலைதீவு பகுதியில் கனேடிய தமிழ் குடும்பம் மீது தாக்குதலை மேற்கொண்டு கொள்ளையடித்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரான பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அனலைதீவை சேர்ந்த தமிழ் குடும்பம் ஒன்று, கனடாவில் குடியுரிமை பெற்று வந்து அங்கு வசித்து வந்த நிலையில், விடுமுறையை கழிக்க அனலைதீவுக்கு கடந்த வருடம் வந்து தங்கியிருந்துள்ளது. அந்நிலையில் கடந்த வருடம் பெப்ரவரி மாதம் 23ஆம் திகதி அவர்கள் தங்கியிருந்த வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த வன்முறை கும்பல் வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டு , அவர்களிடம் இருந்த வெளிநாட்டு பணம் , நகைகள் , பொருட்கள் , கடவுசீட்டு உள்ளிட்டவற்றை கொள்ளையடித்து சென்றிருந்தது. சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த ஊர்காவற்றுறை பொலிஸார் , யாழ்ப்பாணத்தில் இருந்து, பிரத்தியேக படகில் அனலைதீவுக்குச் சென்று தாக்குலை மேற்கொண்டு , கொள்ளையடித்துக்கொண்டு மீள படகில் ஏறி தப்பி சென்றமையை கண்டறிந்தனர். அதனை தொடர்ந்து மேற்கொண்ட தீவிர விசாரணைகளின் அடிப்படையில் 03 நபர்களை சந்தேகத்தில் கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்த வேளை , தமக்கு பெண்மணி ஒருவர் பணம் கொடுத்து தம்மை கூலிக்கு அமர்த்தி தாக்குதலை மேற்கொள்ள கோரியதன் அடிப்படையிலையே தாம் தாக்குதல் மேற்கொண்டு கொள்ளையடித்ததாக தெரிவித்துள்ளனர். அதனடிப்படையில் குறித்த பெண் மணியை சுமார் ஒன்றரை வருடங்களாக தேடி வந்த பொலிஸார் புதன்கிழமை (24) பெண்மணியை கைது செய்துள்ளனர். குறித்த பெண்மணியிடம் விசாரணைகளை முன்னெடுத்த வேளை , கனடாவில் உள்ள ஐயப்பன் கோவில் தலைவரே தனக்கு பணம் அனுப்பி தாக்குதல் மேற்கொள்ள கூறியதன் அடிப்படையிலையே தான் வன்முறை கும்பல் ஒன்றுக்கு பணம் கொடுத்து தாக்குதலை மேற்கொண்டதாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். அதனை தொடர்ந்து குறித்த பெண்ணை வியாழக்கிழமை (25) ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய பொலிஸார் , பெண்ணை பொலிஸ் காவலில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுக்க அனுமதி கோரி விண்ணப்பம் செய்தனர் பொலிசாரின் விண்ணப்பத்தை ஏற்ற மன்று , பெண்ணனை 48 மணி நேரம் பொலிஸ் காவலில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுக்க அனுமதித்துள்ளது. அதேவேளை குறித்த பெண் கிளிநொச்சியை சேர்ந்தவர் எனவும் , அவருக்கு எதிராக ஏற்கனவே கொலை வழக்கொன்றும் , சில மோசடி வழக்குகளும் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். https://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/யாழ்-கொள்ளைக்காரி-கைது/71-341068 தொடர்பான திரி:
  19. விடுதலைப் புலிகளை ரணிலே பிளவுப்படுத்தினார்: நாமல் ராஜபக்ச குற்றச்சாட்டு தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் பிரதான தேசிய அரசியல் கட்சிகளை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடந்த காலங்களில் பிளவுப்படுத்தியதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபகச் தெரிவித்துள்ளார். இந்நிலையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியையும் பிளவுப்படுத்தும் முயற்சியில் ஜனாதிபதி ஈடுபட்டுள்ளதாகவும், எனினும் அதற்கு இடம்கொடுக்க முடியாது எனவும் அவர் கூறியுள்ளார். இது குறித்து மேலும் கருத்து வெளியிட்ட அவர், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எவ்வித இடையூறும் இன்றி அரசாங்கப் பணிகளை முன்னெடுப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது பொதுஜன பெரமுனவை பிளவுபடுத்துவதற்கு ஜனாதிபதி செயற்பட்டுள்ளார். இது ரணில் விக்ரமசிங்க வழமையாக செய்து வரும் விடயம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சி, நல்லாட்சி அரசாங்கம், மக்கள் விடுதலை முன்னணி, விடுதலைப் புலிகள் மற்றும் சுதந்திரக் கட்சியை ரணில் விக்கிரமசிங்க பிளவுப்படுத்தினார். இந்நிலையில், அந்த பழக்கத்தை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். ரணில் விக்கிரமசிங்கவிற்கு நாங்கள் உண்மையாக உதவி செய்தோம். எனினும் எங்கள் கட்சியை பிளவுபடுத்தும் முயற்சி இருந்தால், அதை அவர் சிந்திக்க வேண்டும்.” என நாமல் ராஜபக்ச கூறியுள்ளார். https://akkinikkunchu.com/?p=285408
  20. டொராண்டோ நகரசபையில் உறுப்பினர் போட்டியிடும் தமிழர்: வேட்பு மனு தாக்கல் வெற்றிடமாக உள்ள டொராண்டோ நகரசபை உறுப்பினர் பதவிக்கு தமிழர் ஒருவரும் போட்டியிடுகிறார். இதன்படி, Don Valley மேற்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் நியமனங்கள் கடந்த திங்கட்கிழமை (22) ஆரம்பித்தது. இதன்படி, Evan சாம்பசிவம் என்ற தமிழரும் தேர்தலில் போட்டியிடுவதற்கு வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதாக கூறப்படுகின்றது. இவர் முன்னதாக நகரசபை வேட்பாளராகவும் போட்டியிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், குறித்த தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் செப்டம்பர் 19ஆம் திகதி வரை தமது வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதிக்கான இடைத்தேர்தல் நவம்பர் மாதம் 04ஆம் திகதி நடைபெறுகிறது. முன்கூட்டிய வாக்குப்பதிவு ஒக்டோபர் 26, 27ஆம் திகதிகளில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த தொகுதியின் நீண்ட கால நகர சபை உறுப்பினர் Jaye Robinson புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மரணமடைந்ததை அடுத்து இந்த வெற்றிடம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://akkinikkunchu.com/?p=285397
  21. இலங்கை ஜனாதிபதி தேர்தல் - களமிறங்கும் வேட்பாளர்கள் Vhg ஜூலை 26, 2024 நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது. இதனடிப்படையில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, தேசிய மக்கள் சக்தி தலைவர் அனுரகுமார திஸாநாயக்க, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர் விஜயதாச ராஜபக்ச, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, தொழிலதிபர் திலித் ஜயவீர, தொழிலதிபர் தம்மிக்க பெரேரா, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜானக ரத்நாயக்க, முன்னாள் அமைச்சர் ரொஷான் ரணசிங்க மற்றும் வலஹங்குனவேவே மிஹிந்தலை ரஜமஹா விகாரை தம்மரதன தேரர் ஆகியோர் போட்டியிடவுள்ளனர். இது தவிர வடக்கில் உள்ள தமிழ் கட்சிகளின் பொது வேட்பாளரையும், முன்னணி சோசலிஸ கட்சியின் மக்கள் போராட்ட இயக்கத்தின் வேட்பாளரையும் முன்னிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி தேர்தல் முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தனவின் பேரனும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவார் என முதலில் அறிவிக்கப்பட்ட நிலையில் ஜனாதிபதி தேர்தல் திகதி அறிவிக்கப்பட்ட பின்னர் வேட்பாளர் பட்டியல் மேலும் அதிகரிக்கலாம் என தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், தற்போதைய அரசியல் சூழ்நிலைக்கு ஏற்ப இம்முறை ஜனாதிபதித் தேர்தலுக்கான மிகப்பெரிய வேட்பாளர் பட்டியல் முன்வைக்கப்படும் என அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.battinatham.com/2024/07/blog-post_406.html
  22. திராவிடப் பேரரசும், திளைத்து வாழும் சிற்றரசர்களும்! -சுப. உதயகுமாரன் திராவிட மாடலைப் புரிந்து கொள்வோம் -1 அன்றைய வரலாற்றின் தேவையாக உருவான இந்த இயக்கம் காலப் போக்கில் பெயர் மாறி, உருமாறி, திசைமாறி..பயணித்துக் கொண்டிருக்கிறது..! இதன் ஆரம்ப காலம் தொடங்கி இன்று வரை சமூக, அரசியல் தளங்களில் இது ஏற்படுத்திய தாக்கங்களையும், இன்றைய சரிவுகளையும் சமரசமின்றி அலசுகிறார் சுப.உதயகுமாரன்; சமூக-பொருளாதார-அரசியல் தளங்களில் பார்ப்பனரல்லாத தென்னக மக்கள் அதிகமான வாய்ப்புக்களைப் பெறவும், பார்ப்பனர்களின் ஆதிக்கத்தை எதிர்க்கவுமாக சர். பிட்டி. தியாகராயர், டாக்டர். நடேசன், டாக்டர் டி.எம். நாயர் போன்றோரால் 1916-ஆம் ஆண்டு தென் இந்திய நல உரிமைச்சங்கம் எனும் அமைப்புத் தொடங்கப்பட்டது. இவர்கள் நடத்திய “ஜஸ்டிஸ்” (நீதி) எனும் ஆங்கில இதழின் பெயர்க் காரணத்தால், இந்த அமைப்பு நீதிக் கட்சி (Justice Party) என்றழைக்கப்பட்டது. மேற்கண்ட பெயர்களில் உள்ள “நலம்,” “உரிமை,” “நீதி” போன்றவை ஆழமான அரசியல் அர்த்தம் கொண்ட வார்த்தைகள். நடேசன், சர்.பிட்டி.தியாராஜர், டி.எம். நாயர் பார்ப்பனர்களின், வட இந்தியர்களின் ஆதிக்கத்திலிருந்து தென்னிந்திய மக்களைக் காப்பாற்றும் பொருட்டு, ஜஸ்டிஸ் கட்சியை 1944-ஆம் ஆண்டு ‘திராவிடர் கழகம்’ என பெயர் மாற்றி நடத்திய பெரியார், இந்தியாவின் விடுதலை நாளை கருப்பு நாளாக அறிவித்தார். அதனை எதிர்த்த அண்ணாவோ, இந்திய விடுதலை வெறும் ஆரிய வட இந்தியர்களால் மட்டும் பெறப்பட்டதல்ல, அனைத்து இந்தியர்களின் உழைப்பும் அதிலே அடங்கியிருக்கிறது’’ என்று வாதாடினார். அரசியலுக்கு அப்பாற்பட்டு இருந்தாலொழிய, தான் நினைக்கும் சமூகச் சீர்திருத்தங்களை, விழிப்புணர்வுப் பிரச்சாரங்களைத் தொடர்ந்து நடத்த முடியாது என்று உறுதியாக நம்பினார் பெரியார். ஆனால், தேர்தலில் பங்கு பெறாமல் திராவிடர் கழகம் விலகி நிற்பது அண்ணாவுக்கும் அவர் தோழர்களுக்கும் ஏற்புடையதாக இருக்கவில்லை. பெரியாருக்கும் அண்ணாவுக்கும் இடையே ஏற்பட்ட விரிசல், முன்னவர் தன்னைவிட ஏறத்தாழ 40 வயது இளையவரான மணியம்மையாரை மணம்புரிய முடிவு செய்தபோது, உடைப்பாக உருவெடுத்தது. அண்ணாவும் அவர் தோழர்களும் திராவிடர் கழகத்திலிருந்து வெளியேறினர். குடந்தை கே. கே. நீலமேகம், இரா. நெடுஞ்செழியன், கே. ஏ. மதியழகன், என். வி. நடராஜன், பெரியாரின் அரசியல் வாரிசு என்று கருதப்பட்ட அவரது அண்ணன் மகன் ஈ.வி.கே. சம்பத் எனும் “ஐம்பெரும் தலைவர்கள்” புடைசூழ, அண்ணா திராவிடர் கழகத்திலிருந்து விலகி 1949 செப்டம்பர் 17 அன்று திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தொடங்கினார். சென்னை ராயபுரம் ராபின்சன் பூங்காவில் கனமழைக்கிடையே புதிய கட்சி தொடங்கப்பட்ட போது, குடந்தை கே. கே. நீலமேகம் அவர்கள் தான் கட்சியின் பெயரை அறிவித்ததாகக் கேள்விப்படுகிறோம். பகுத்தறிவு, சுயமரியாதை, சாதி (தீண்டாமை) ஒழிப்பு, மூட நம்பிக்கை ஒழிப்பு போன்ற கொள்கைகளோடு பெரியாரின் திராவிடர் கழகம் இயங்கிக் கொண்டிருக்க, “முன்னேற்றம்” எனும் கருத்தை ஏற்றெடுத்து “திராவிட முன்னேற்றக் கழகம்” என்று தம் கட்சிக்கு பெயர் வைத்தார் அண்ணா. திராவிட இனமக்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும், ஆதிக்கமற்ற சமுதாயம் அமைக்கவும், தமிழ் மொழியையும், தமிழ்ப் பண்பாட்டையும் பாதுகாத்து மேம்படுத்தவுமாக, ஏறக்குறைய திராவிடர் கழகத்தின் கொள்கைகளை ஒத்தே தி.மு.க. சிந்தித்தது. தேர்தலில் போட்டியிட்டு ஆட்சிக்கு வந்தால் தான் மாநிலத்தை சீரமைக்க முடியும் என்று உறுதியாக தி.மு.க. நம்பியது. அண்ணாவும், ஐம்பெரும் தலைவர்களும்! கட்சியின் பெயர் ஆங்கிலத்தில் ‘Dravidian Progressive Federation’ என்று கொள்ளப் பட்டதாகவும், “முன்னேற்றம்” என்பது முற்போக்கு என்ற அர்த்தத்திலேயே அமைக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால், அண்ணா சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பொருளியல் மற்றும் அரசியல் பாடங்களில் இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டங்களைப் பெற்றவர் என்கிற முறையில் “முன்னேற்றம்,” “வளர்ச்சி” பற்றியெல்லாம் உறுதியாக சிந்தித்திருப்பார். தி.மு.க. படிப்படியாக முன்னேறி ஆட்சியைப் பிடித்தபோது, அண்ணா முதல்வர் பொறுப்பை ஏற்றார். அவர் குறுகிய காலமே ஆட்சியில் இருந்த போதும், சென்னை மாநிலம் என்றழைக்கப்பட்ட தமிழகத்தின் பெயரை தமிழ்நாடு என மாற்றினார். சீர்திருத்தத் திருமணங்களுக்கு சட்டப்பாதுகாப்பு அளித்தார். தமிழகப் பள்ளிகளிலிருந்து இந்தி மொழியை அறவே நீக்கினார். சென்னை, கோவை ஆகிய பெருநகரங்களில் ரூபாய்க்கு ஒரு படி அரிசி எனும் திட்டத்தை சோதனை முறையில் அமுல்படுத்தினார். ஏழைகளுக்கு எரியாத வீடுகள் அளித்தார். பேருந்துகளை நாட்டுடமை ஆக்கினார். ஆனால், ஆட்சி அதிகாரத்தின் உதவியுடன் தன் குடும்பத்தையோ, உறவினர்களையோ “முன்னேற்றிக்” கொள்ளவில்லை அவர். அறிஞர் அண்ணா பிப்ரவரி 3, 1969 அன்று இயற்கை எய்தியது தமிழ்நாட்டுக்கு பேரிழப்பாக அமைந்தது. ஒரு பெரும் அதிகாரப் போட்டி நிகழ்ந்து, கலைஞர் மு. கருணாநிதி அடுத்த முதல்வராகப் பதவியேற்றார். “ஆதிக்கமற்றச் சமுதாயம் அமைத்தேத் தீருவோம்,” “ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்” என்றெல்லாம் மேம்போக்கான முழக்கங்களை முன்வைத்த தி.மு.க., “முன்னேற்றம்” குறித்த ஆழமான தத்துவார்த்தப் பார்வையோ, அரசியல் பொருளாதாரப் புரிதலோ, சுற்றுச்சூழல் விழிப்புணர்வோ கொண்டிருக்கவில்லை. கலைஞரின் அரசு நலிவுற்ற, பிற்படுத்தப்பட்ட மக்களின் நலனுக்காக பல திட்டங்களை நிறைவேற்றியது. குடிசை மாற்று வாரியம், பிச்சைக்காரர் மற்றும் தொழுநோயாளர் மறுவாழ்வு இல்லங்கள், கருணை இல்லங்கள், கண்ணொளி வழங்கும் திட்டம், பண்டிகை நாட்களில் ஏழைகளுக்கு இலவச அரிசி மற்றும் ஆடைகள், விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், கை ரிக்சாக்களை ஒழித்து, இலவச சைக்கிள் ரிக்சாக்கள் வழங்கியது, ஊனமுற்றோர் மறுவாழ்வுத் திட்டம், பெண்களுக்குச் சொத்துரிமை, மகளிர் இலவச பட்டப்படிப்பு திட்டம், ஏழைப் பெண்கள் திருமண உதவித்திட்டம், ஆதிதிராவிடர்களுக்கு இலவச வீடுகள், மாநில திட்டக்குழு அமைப்பு என பல நடவடிக்கைகளைக் குறிப்பிடலாம். சமூகநீதி, இட ஒதுக்கீடு போன்ற விடயங்களிலும் பெரும் பங்களிப்பினைச் செய்தார் கலைஞர். தமிழினத்தின் பழைய சிறப்புக்களை நினைவுகூறும் வகையிலும், தமிழ் மொழிக்காக பாடுபட்ட பெரியோர்களின் சேவைகளை நிலைநிறுத்தும் விதத்திலும் பூம்புகார் கலைக்கூடம், வள்ளுவர் கோட்டம், கட்டபொம்மன் கோட்டை, நினைவில்லங்கள் போன்றவற்றை உருவாக்கினார். இராஜாஜியின் குலக்கல்வித் திட்டத்தை எதிர்த்தது, தமிழர்களை `முட்டாள்கள்’ என்று நிந்தித்த நேருவைக் கண்டித்தது, டால்மியாபுரம் தொடர் வண்டி நிலையத்தின் பெயரை ‘கல்லக்குடி’ என்று மாற்றியது போன்ற உணர்ச்சி அரசியலும் மேலோங்கி நின்றது. மக்களின் உணர்வுகளைத் தூண்டி வழிநடத்தும் குறியீட்டு அரசியலும், கல்வி, வேலை வாய்ப்புக்களில் சலுகைகளைப் பெற்றுத் தருவதும் மட்டுமே பொருளாதார வளர்ச்சிக்கு வழிகோல முடியாது. அனைத்துத் தரப்பு மக்களும் தங்களின் சமூக நிலையை உயர்த்திக் கொள்வதற்கும், பொருளாதார மேம்பாட்டினை அடைவதற்கும், அரசியல் அதிகாரம் பெறுவதற்கும் தத்துவார்த்த அடிப்படையும், நீண்டகால அரசியல் செயல் திட்டங்களும், தெளிவானப் பொருளாதார நடவடிக்கைகளும் வேண்டும். கட்சிக்காரர்கள் தம்மையும், தம்மைச் சார்ந்தோரையும் “முன்னேற்றிக் கொள்ள” அனுமதிப்பதன் மூலம் தான், அவர்களின் தொடர்ந்த ஆதரவைப் பெற முடியும் என்ற அடிப்படையில் லஞ்சமும், ஊழலும், ஊதாரித்தனமும் முன்னேற்றத்தின் அங்கங்களாக ஏற்றுக் கொள்ளப்பட்டன. பின்னர் ஆட்சியைக் கைப்பற்றிய எம்.ஜி.ஆர். “முன்னேற்றம்” குறித்த மேம்போக்கானப் பார்வை கொண்டவராகவே இருந்தார். ‘அண்ணாயிசம்’ எனும் யாருமறியா தத்துவத்தின் வழியாகவும், சினிமாப் பாடல்கள் மற்றும் வசனங்கள் மூலமாகவுமே முன்னேற்றம் மட்டுமல்ல, நல்வாழ்க்கையும்கூட அறியப்பட்டது. வறுமையிலிருந்தும், ஏழ்மையிலிருந்தும் குழந்தைகளை மீட்டு, பள்ளிக்குச் செல்ல வைக்க பெருந் தலைவர் காமராசர் இலவச மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டு வந்தார். முதல்வர் எம்.ஜி.ஆர். அதனை சத்துணவுத் திட்டம் என்று பெயர் மாற்றி, முட்டையும் சேர்த்துக் கொடுத்தார். கூடவே மக்களுக்கு இலவசக் காலணியும், பல்பொடியும் கொடுத்தார். மீண்டும் ஆட்சிக்கு வந்த கலைஞர் இலவச கலர் டி.வி. கொடுத்தார். அடுத்து வந்த முதல்வர் ஜெயலலிதா பொங்கல் கொண்டாடுவதற்கு இலவச அரிசியும், பருப்பும், சர்க்கரையும் கொடுத்தார். ஆடு, மிக்சி, கிரைண்டர், மின்விசிறி, மிதிவண்டி, மடிக்கணினி என தமிழகத்தில் “முன்னேற்றம்’ தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. தற்போதைய முதல்வர் ஸ்டாலின் பள்ளிக் குழந்தைகளுக்கு காலையுணவையும் சேர்த்து வழங்குகிறார். ஐம்பதாண்டு காலம் கடந்த “திராவிட முன்னேற்றக்” கட்சிகளின் ஆட்சிக்குப் பிறகு, அந்தத் திட்டம் கைவிடப்பட வேண்டிய நிலைமையை அவர்களால் உருவாக்க முடியவில்லை. விவசாய மேம்பாடோ, தொழில் வளர்ச்சியோ, உற்பத்திப் பெருக்கமோ, வேலை வாய்ப்புக்களோ, வருமான உயர்வோ, மக்களின் வாங்கும் திறன் அதிகரிப்போ எதுவும் பெருமளவில் நடக்கவில்லை. மாறாக, இலவசங்கள் வழங்குவது, கமிஷன் பெறுவது, இயற்கை வளங்களைச் சுரண்டிக் கொழுப்பது, மக்களின் வாக்குக்களை விலைக்கு வாங்குவது என “திராவிட முன்னேற்றத்தின்” நிலைமை தொடர்ந்து மோசமாகிக் கொண்டிருக்கிறது. சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு, கூடங்குளம் மற்றும் கல்பாக்கம் அணுமின் நிலையங்கள், அனல்மின் நிலையங்கள், மீத்தேன் எரிவாயுத் திட்டம் போன்ற திட்டங்களில் எல்லாம் ஒன்றிய அரசின் நிலைப்பாட்டை பெரிய “திராவிட முன்னேற்றக்” கட்சிகள் அப்படியே ஏற்றுக் கொண்டன. வைகோ அவர்கள் வழிநடத்தும் ம.தி.மு.க. மட்டுமே இவற்றை எதிர்த்தது. காவிரி டெல்டா பகுதியில் கடந்த 30 ஆண்டுகளாகத் தொடர்ந்து நடைபெற்ற ஹைட்ரோகார்பன் கண்டுபிடிப்புச் சோதனைகள் தான் அண்மை அவலத்துக்கு அடித்தளமாக அமைந்தன. இந்த கால கட்டத்தில் இரண்டு “முன்னேற்றக்” கழகங்களும் தான் மாறி, மாறி ஆட்சியில் இருந்தன என்பது கவனிக்கப்பட வேண்டிய விடயம். கடந்த ஐம்பதாண்டுகளாக இரண்டு பெரிய திராவிட முன்னேற்றக் கழகங்களின் முன்னேற்றம், வளர்ச்சி, நல்வாழ்வு பற்றிய புரிதலை அவதானித்தால் இந்த சொலவடை தான் நினைவுக்கு வருகிறது. “குங்குமம் என்பதை நானறிவேன், அது மஞ்சள் போல வெண்மையாய் இருக்கும்!”. அதாவது, புரியாத ஒன்றை புரிந்தது போல பாவனை செய்வது! எதிர்க் கட்சியாக இருக்கும் போது ஒரு நிலைப்பாடும், ஆளும் கட்சியாக இயங்கும் போது அதற்கு நேரெதிர் நிலைப்பாடும் என்பதே திராவிட முன்னேற்ற கழகத்தின் வழிமுறையாக தொன்று தொட்டு இருந்து வருகிறது. சேலம்-சென்னை எட்டு வழிச்சாலைத் திட்டம் ஓர் அண்மைய எடுத்துக்காட்டு. கடந்த 2021-ஆம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பேற்ற முதல்வர் மு. க. ஸ்டாலின் கைக்கொள்ளும் ‘முன்னேற்றம்’ குறித்த நிலைப்பாடு ஊன்றி கவனிக்கத்தக்கது. உள்ளூர் எதிர்ப்புகளால் ஹைட்ரோகார்பன், நியூட்ரினோ, கெயில் குழாய் பதிப்பு, ஸ்டெர்லைட் போன்ற பல்வேறுத் திட்டங்களை அவர் எதிர்த்தாலும், பரந்தூர் விமான நிலையம், மேல்மா சிப்காட் விரிவாக்கம் போன்ற பல திட்டங்களை மக்களின் எதிர்ப்புகளை நசுக்கி, கடுமையாக நின்று அமல்படுத்த முயற்சிக்கிறார். வெளிநாட்டு மூலதனத்தைக் கவரும் முயற்சிகளும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்குக் கட்டியம் கூறி வரவேற்கும் செயல்பாடுகளும், ‘ஸ்டாலினின் முன்னேற்றம் புதிய கோணத்தில் அணுகப்படவில்லை’ என்பதைத் தெளிவாக்குகின்றன. நாடெங்கும் கனிம வளக் கொள்ளை பரவலாக நடந்து கொண்டிருக்கிறது. ஐம்பது-அறுபது ஆண்டு கால திராவிடக் கட்சிகளின் ஆட்சிக்குப் பிறகு, இன்றைய தமிழ்நாட்டின் பரந்துபட்ட நிலைமையை ஒரு தேர்ந்த தலைப்போடு விவரிக்க வேண்டுமென்றால், இப்படிச் சொல்வது தான் சரியாக இருக்கும்: “திராவிடப் பேரரசும், திளைத்து வாழும் சிற்றரசர்களும்!” (கட்டுரையாளர்; சுப. உதயகுமாரன் அணுசக்திக்கு எதிரான மற்றும் பசுமை அரசியல் செயல்பாட்டாளர்.) https://aramonline.in/18518/analysis-of-dravidian-parties/
  23. தேர்தல் நடக்கவேண்டும் ஆனால் புறக்கணிப்போம்; முன்னணியின் ஆசை! தேர்தல் நடந்தே ஆகவேண்டும். அதை நாம் புறக்கணிக்கவும் வேண்டும். எங்களுடைய வாக்குகள் உங்களுக்குத் தேவையெனில் எங்களுடைய கோரிக்கைகளை ஏற்கவேண்டும் என்பது எமது அணுகுமுறையாக இருக்கின்றது- இவ்வாறு தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது: சிங்களச் சமூகத்துடன் சேர்ந்து இந்நாட்டை கட்டியெழுப்பத் தயாராக இருக்கின்றோம். அது நடைபெற வேண்டுமெனில் ஒற்றையாட்சி முறைமை ஒழிக்கப்பட்டு எங்களுடைய தேசம், இறைமை, சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட்ட அடிப்படையில் ஒரு சமஷ்டி அரசமைப்பு கொண்டுவரப்படவேண்டும். தமிழ் மக்களுள் பெரும்பாலானவர்கள் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் வெறுப்படைந்துள்ளனர். வடக்கு, கிழக்கில் உள்ள அரசியல் கட்சிகளையும், சிவில் அமைப்புகளையும் வைத்துக்கொண்டு பொதுவேட்பாளர் என்ற ஒரு சதி அரங்கேற்றப்படுகின்றது. தமிழர்கள் பகிஷ்கரிப்பு என்ற ஓர் ஆயுதத்தை கையில் எடுக்கக்கூடாது என்ற தேவைப்பாடு ரணில், சஜித், அநுரகுமார ஆகியோருக்கு உள்ளது. அதை தோற்கடிக்கவே பொதுவேட்பாளர் நாடகம் அரங்கேற்றப்படுகிறது - என்றார். (ச) https://newuthayan.com/article/தேர்தல்_நடக்கவேண்டும்_ஆனால்_புறக்கணிப்போம்;_முன்னணியின்_ஆசை!
  24. தம்பாப்பிள்ளை மகேஸ்வரன் July 23, 2024 — கருணாகரன் — ஈழவிடுதலைப் போராட்ட இயக்கங்களில் ஒன்றான தமிழீழ இராணுவத்தின் (Tamil Eeelam Army) தலைவர் திரு. தம்பாப்பிள்ளை மகேஸ்வரன் (பனாகொடை மகேஸ்வரன் அல்லது தம்பா என்றுஅழைக்கப்பட்ட தம்பாப்பிள்ளை மகேஸ்வரன்) யாழ்ப்பாணத்தில் மாரடைப்பினால் காலமாகி விட்டார். ஈழவிடுதலைப் போராட்டத்தின் ஒரு காலகட்ட வரலாற்று நாயகன் மகேஸ்வரன். யாழ்ப்பாணம் – புங்குடுதீவைச் சேர்ந்த தம்பாப்பிள்ளை – செங்கமலம் இணையரின் மகனே மகேஸ்வரன். தந்தையார் தம்பாப்பிள்ளை கொழும்பு – மருதானையில் அப்போது பிரபலமாக இருந்த “தவளகிரி” ஹோட்டலின் உரிமையாளராவார். யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் படித்த மகேஸ்வரன், மிகத் திறமையான மாணவராகப் பாடசாலையில் விளங்கினார். திறமைச் சித்தியைப் பெற்ற மகேஸ்வரன், மேற்படிப்புக்காக 1970 களின் நடுப்பகுதியில் லண்டனுக்குச் சென்றார். 1979 இல் லண்டனில் உயர் கல்வியை (Engineering) இடைநிறுத்தி தேச விடுதலைக்காக தாயகம் நோக்கி திரும்பிய மிகச்சிலரில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. தாயத்துக்குத் திரும்பிய மகேஸ்வரன், தமிழர்களுக்காக ஒருவிடுதலைத் தேசம் அமையவேண்டும் என்று விரும்பி, தமிழீழ இராணுவம் என்ற அமைப்பை (Tamil Eelam Army) உருவாக்கிச் செயற்பட்டார். அது அப்பொழுது பிரபலமாக இருந்த இயக்கங்களில் ஒன்றாகும். திருகோணமலை மாவட்டத்தின் வங்கிக் கொள்ளை முயற்சி ஒன்றில் குற்றம்சாட்டப்பட்டார் மகேஸ்வரன். இதனால் தேடப்பட்ட மகேஸ்வரன் கைது செய்யப்பட்டு, மிகக் கூடிய பாதுகாப்பு ஏற்பாடுகளோடிருந்த பனாகொட இராணுவத் தடுப்பு முகாமில் சிறை வைக்கப்பட்டிருந்தார். அப்படிச் சிறைவைக்கப்பட்ட மகேஸ்வரன், அங்கிருந்து தப்பினார். சிறைக் கம்பியை மெதுவாக அறுத்து, அதை வெளியே தெரியாதவாறு சுவிங்கத்தினால் ஒட்டி வைத்த மகேஸ்வரன், சந்தர்ப்பம் பார்த்துத் தப்பிச் சென்றார். இது அரசுத் தரப்புக்கு பேரதிர்ச்சியைக் கொடுத்திருந்தது. அதேவேளை இது விடுதலைப் போராளி ஒருவரின் வீரம் நிறைந்த சாகஸச் செயலாக அப்போது தமிழ்ப்பரப்பில் பேசப்பட்டது. போராளிகளுக்கு பாரிய மிரட்டலாக, கொடூரமான சிறைக்கூடமாகத் திகழ்ந்த பனாகொடை சிறைச்சாலையிலிருந்து சாதுரியமாகத் தப்பித்த சாதனையால், அவர் “பனாகொடை மகேஸ்வரன்” என்று பின்னாளில் போராளிகளாலும் மக்களாலும் பெருமையுடன் அழைக்கப்பட்டு, மக்கள் மத்தியில் பிரபலம் பெற்றார். ஆனாலும் தலைமறைவாகக் கொழும்பில் இருந்த வேளையில் கைது செய்யப்பட்ட மகேஸ்வரன் வெலிக்கடைச் சிறையில் மீண்டும் அடைக்கப்பட்டார். 1983 இல் வெலிக்கடைச் சிறையில் இலங்கை அரசின் அனுசரணையுடன் சிங்களச் சிறைக் கைதிகளான வன்முறையாளர்கள் மேற்கொண்ட காட்டு மிராண்டித்தனமான தாக்குதலை எதிர்த்து நின்று போராடி உயிர் தப்பினார். (அந்தக் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை நேரிற் கண்ட உளத் தாக்கத்திலிருந்து – உளப் பாதிப்பிலிருந்து இறுதி வரையில் மீள முடியாமலிருந்தார் மகேஸ்வரன். அந்தச் சம்பவத்தைப் பற்றிப் பேசினால் அவர் பதட்டமடைந்து சமனிலை குலையும் நிலையிலிருந்தார்). வெலிக்கடைச் சிறைச்சாலையிலிருந்து மட்டக்களப்புச் சிறைச் சாலைக்கு ஏனைய தமிழ் அரசியற் கைதிகளோடு மாற்றப்பட்ட மகேஸ்வரன், 1983 செப்ரெம்பரில் மேற்கொள்ளப்பட்ட வரலாற்றுப் புகழ் மிக்க மட்டக்களப்புச் சிறையுடைப்பின் மூலம் மறுபடியும் தப்பினார். இந்தச் சிறையுடைப்பில் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் (முன்னர் ஈ.பி.ஆர்.எல்.எவ்வின் இராணுவத்தளபதி) டக்ளஸ் தேவானந்தா, முன்னாள் வடக்கு கிழக்கு மாகாணசபையின் முதலமைச்சர் வரதராஜப்பெருமாள், சின்னவன், புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த பரமதேவா, ஆதரவாளர்களான நிர்மலா, நித்தியானந்தன், மருத்துவர் ஜெயகுலராஜா, ஈரோஸ் இயக்கத்தைச் சேர்ந்த அழகிரி மற்றும் காந்தியத்தைச் சேர்ந்த டேவிட் ஐயா உட்படப் பலர் தப்பித்திருந்தனர். தம்பாப்பிள்ளை மகேஸ்வரன் தப்பியதை அடுத்து தமிழீழ இராணுவத்தின் செயற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டன. இந்தக் காலப்பகுதியில் தமிழீழ இராணுவத்தை மக்கள் மகேஸ்வரனின் தந்தையின் பெயரைச் சுருக்கி “தம்பா இயக்கம்” எனவும் அழைக்கத் தொடங்கினர். இதற்கான நிதித் தேவைக்காக காத்தான்குடி வங்கிக் கொள்ளை, தமிழீழ இராணுவத்தினால் நடத்தப்பட்டது. இதில் ஏறக்குறைய அன்றைய பெறுமதியில் ஆறு கோடி பணமும் நகையும் மகேஸ்வரன் தலைமையிலான தமிழீழ இராணுவத்தினால் கைப்பற்றப்பட்டது. ஏறக்குறைய இதே காலப்பகுதியில் இயக்கத்தின் வளர்ச்சிக்காக அதிர்ஸ்டலாபச் சீட்டை விற்பனை செய்து நிதிச் சேகரிப்பில் தமிழீழ இராணுவத்தினர் ஈடுபட்டனர். இதற்குரிய முதற்பரிசாக கார் ஒன்று வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. மிகக் கூர்மையான மதிநுட்பம் வாய்ந்த மகேஸ்வரனைப் பலரும் தனி மனித இராணுவமாகவே (One Man Army) கருதினர். பல விதமான அதிரடிச் செயற்பாடுகளால் சாகஸ நாயகனாக விளங்கினார் மகேஸ்வரன். குறிப்பாக ஆளணி குறைவாக இருந்த போராட்ட அமைப்பில் இருந்துகொண்டு அவ்வப்போது அவர் நிகழ்த்திய போராட்டகால நடவடிக்கைகள், ஒரு காலத்திற் பெரும் சாகசங்களாகப் பார்க்கப்பட்டன. அரசியற் சித்தாந்தத்தின் அடிப்படையில் போராட்ட அமைப்பைக் கட்டியெழுப்புவதற்குப் பதிலாக இராணுவ சாகஸங்களால் அதைக் கட்டியெழுப்ப முற்படுகிறார் தம்பாப்பிள்ளை மகேஸ்வரன் என்ற விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. தமிழீழ இராணுவத்தைப் பற்றிய வரலாற்றின் மதிப்பீடும் ஏறக்குறைய இதுவாகவே இருக்கிறது. ஆனாலும் ஈழப்போராட்டத்தில் ஈடுபட்ட இயக்கங்களில் பலவும் விரும்பியோ விரும்பாமலோ பலவும் இராணுவ சாகஸத்திலும் இராணுவ வாதத்திலும் திளைத்தவைதான். விடுதலைப் போராட்டம் என்பது சாகசங்களாலும் ஆயுதப் பிரயோகங்களாலும் இராணுவவாதங்களாலும் மட்டும் வெற்றிகரமாக வளர்ச்சியடைந்து விடுவதில்லை. இதனால்தான் இன்று ஈழப்போராட்டம் எந்த வெற்றியையும் பெற்றுத் தர முடியாமல் போனது மட்டுமல்ல, அடுத்த கட்ட அரசியலைக் கூடத் தீர்மானிக்க முடியாத கையறு நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. மேலும் தமிழீழ இராணும் என்ற இந்த இயக்கமானது, 1984 இல் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தாக்குதல் ஒன்றை நடத்தத் திட்டமிட்டிருந்தது. இதற்காக சென்னை மீனம்பாக்க விமான நிலையத்தில் வெடிகுண்டைப் பொருத்தி, கட்டுநாயக்காவில் வெடிக்க வைப்பதற்குத் திட்டமிட்டது. ஆனாலும் அதற்கு முன்பே அந்தக் குண்டு மீனம்பாக்கம் விமான நிலையத்திலேயே வெடித்து விட்டது. இதன்போது 24 பேர் வரையில் கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவம் இலங்கை – இந்தியப் பரப்பில் பெரும் அதிர்ச்சியைக் கொடுத்திருந்தது. முக்கியமாகப் பொது மக்களின் இழப்பும் சிவில் விமான நிலையமொன்றில் மேற்கொள்ளப்பட்ட குண்டு வெடிப்பும் தமிழீழ இராணுவத்தின் மீது பெரும் குற்றமாக விழுந்தது. இதனால் மகேஸ்வரன் மீண்டும் தேடப்பட்டு, கைது செய்யப்பட்டார். இவ்வாறு கைது செய்யப்பட்ட மகேஸ்வரன் தமிழ் நாட்டில் புழல், செங்கல்பட்டு சிறைகளில் ஏறக்குறைய பத்து ஆண்டுகளுக்கு மேல் சிறைவைக்கப்பட்டிருந்தார். இதன்போது மகேஸ்வரனுக்குப் பல்வேறு தரப்பினரோடும் அறிமுகமும் உறவும் ஏற்பட்டது. இந்தக் காலகட்டத்தில் அவர் பல விதமான நூல்களையும் படிக்கத் தொடங்கினார். பின்னர் அங்கிருந்து விடுதலையாகி ஆபிரிக்காவுக்குச் சென்ற மகேஸ்வரன், வேறு சம்பவங்களின் பின்னணியினால் தான்சானியாவில் மீண்டும் சிறைவாசம் புரிய வேண்டியிருந்தது. ஆனாலும் அந்தச் சூழலையும் தன்னுடைய அறிவு மேம்பாட்டுக்கான படித்தலிலேயே கழித்தார். இவ்வாறு தன்னுடைய வாழ்க்கையில் மிக நீண்ட காலத்தைச் சிறைகளில் கழித்த மகேஸ்வரன், 2010 இல் இலங்கைக்குத் திரும்பியிருந்தார். பல்மொழிகளில் பேசக் கூடிய ஆற்றலைப் பெற்றிருந்த மகேஸ்வரன், உலக அரசியல், பொருளாதார, பண்பாட்டு விடயங்களில் ஆழமான அறிவைக் கொண்டிருந்தார். மிகப் பெரிய தகவற் களஞ்சியம் என்று சொல்லக் கூடிய அளவுக்கு அவருடைய அறிவாற்றல் பின்னாளில் விளங்கியது. ஆனாலும் அதனை ஈழத்தமிழ்ச் சமூகம் பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கவில்லை. அவரும் அரசியலில் இருந்து ஒதுங்கியே இருக்க விரும்பினார். ஒளிப்பதிவாளர் அமரதாஸ் குறிப்பிடுவதைப்போல “போராட்டச் செயற்பாடுகளில் இருந்து ஒதுங்கி எளிமையாக வாழ்ந்த மகேஸ்வரன், மாற்றுக்கருத்துகளைக் கொண்டிருப்பவர்களோடும் உரையாடக்கூடிய பக்குவத்தோடிருந்தார். தனது போராட்டகால அனுபவங்களையும் பல்வேறு சிறைகளில் இருந்த அனுபவங்களையும் அவர் விரிவாகப் பதிவுசெய்திருக்க வேண்டும். அது நடக்கவில்லை என்பது வருத்தத்திற்குரியது. மிகச்சில சந்தர்ப்பங்களில் உரையாட முடிந்திருந்தாலும் அவரைப் பற்றி முழுமையாகத் தெரிந்துகொள்ள முடியவில்லை” என்பது வருத்தத்திற்குரியதே. ஈழவிடுதலை போராட்ட வரலாற்றில் மகேஸ்வரனின் பெயரும் தீவிரமும் முக்கியமானவை. ஆம், ஈழத் தமிழர்களின் One Man Army யை இழந்து விட்டோம். ஒரு மூத்த போராளியாக, ஈழவிடுதலைப் போராட்ட இயக்கத் தலைவர்களில் மிஞ்சியிருந்த ஒருவராக இருந்த மகேஸ்வரனும் விடைபெற்று விட்டார். ஈழ விடுதலைப் போராட்ட வரலாறு தன்னுடைய இறுதித் தலைவரையும் இழந்து விட்டது. இறுதி நாட்களில் மிக எளிமையாக யாழ்ப்பாணத்தில் வாழ்ந்து வந்த மகேஸ்வரன், வாழைகளுக்கு நீர் பாய்ச்சிக்கொண்டிருக்கும் வேளையில் மாரடைப்பினால் இயற்கை எய்தியிருக்கிறார். வரலாறுதான் எத்தனை வேடிக்கையானது. மகேஸ்வரனுக்கு அஞ்சலி. https://arangamnews.com/?p=11023
  25. ஈழத் தமிழர்களுக்காக ஓங்கி ஒலித்த குரல் ஓய்ந்தது! உண்மையை உரக்கக் கூறிய விக்கிரமபாகு கருணாரத்ன!! …. ஐங்கரன் விக்கினேஸ்வரா. (உண்மையை எப்போதும் உரக்கக் கூறிய நவ சமசமாஜ கட்சியின் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ன தனது 81ம் வயதில் காலமானார். கடந்த 2010ம் ஆண்டில் கருணாரட்ன ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டுருந்தார். விக்ரமபாகு கருணாரட்ன தமிழ் மக்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டைக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது) வந்தேறிகளான தமிழர்கள் வடக்குக்கு எப்படி உரிமை கோருவது என எல்லாவல மேத்தானந்த தேரோ 2012ஆம் ஆண்டு கடும் இனவாதத்தோடு கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதிலளித்த நவ சமசமாஜ கட்சியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரத்ன தேரருக்கு சவால் விடுத்தார். அதாவது ”இலங்கைத் தீவு தமிழர்களுக்குரிய தேசம் என்பதை உரிய ஆதாரங்களுடன் நிரூபித்துக் காட்டுவேன். முதுகெலும்பிருந்தால் தேரர் விவாதத்துக்கு வரத் தயாரா?” என வெளிப்படையாகவே அவர் சவால் விடுத்திருந்தார். ஈழ தமிழர்களுக்கு ஆதரவாக ஒலித்த குரல் இன்று மறைந்தது. சிங்கள பேரினவாத தலைமைகளுக்கு மத்தியில், ஒட்டுமொத்த தமிழினத்துக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்ட இன பிரச்சினைக்களுக்கும் அரசியல் ரீதியான பிரச்சினைகளுக்கும் தனித்து நின்று குரல் கொடுத்தவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன. சிங்கள இனத்தவராக இருந்தாலும் அவருடைய மறைவு தமிழ் மக்களுக்கு ஓர் பேரிழப்பாகவே அமையும். ஈழத் தமிழரின் விடுதலையையும், உரிமைகளையும் சிங்கள மக்கள் அறியும்படி செய்த பெரும் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன அவர்களாவார். தொல்பொருள் தொடர்பான ஜனாதிபதி செயலணியின் நோக்கம் தொல்பொருட்களை பாதுகாப்பதே தவிர முரண்பாடுகளை தோற்றுவிப்பது அல்ல எனவும், இது தொடர்பில் செயலணியின் உறுப்பினர்களின் செயற்பாடுகள் குறித்து ஜனாதிபதியிடம் தனிப்பட்ட முறையில் அவர் முறையிட்டிருந்தார். ஒரு பிரதேசத்தில் எந்த இனத்தவர்கள் அதிகளவில் வாழ்கின்றார்களோ அங்கு அந்த இனமே பெரும்பான்மையினமாக கருதப்படும். தெற்கில் சிங்களவர்கள் அதிகமாக வாழ்கின்றமையினால் அம்மாகாணம் பெரும்பான்மை இனத்தவர்கள் உரிமைக் கொண்டாடுகிறார்கள் அதேபோல தான் வடக்கு மற்றும் கிழக்கிலும். வடக்கில் தமிழ் மக்கள் வரலாற்று காலம் தொடக்கம் வாழ்ந்துள்ளமைக்கான ஆதாரங்கள் மத தலங்களின் ஊடாகவும், மத வழிப்பாடுகளுடனும் உறுதிப் படுத்தப்பட்டுள்ளன.இவ்வாறான தன்மையே கிழக்கிலும் காணப்படுகிறது. இலங்கை பல்லின சமூகம் வாழும் நாடு அனைத்து இன மக்களின் உரிமை மற்றும் கலாசாரங்கள் பாதுகாக்கப்பட வேண்டும். தமிழ் மக்களின் பூர்வீகம் வடக்கு மற்றும் கிழக்கு என்பது அனைவரும் அறிந்த விடயமே என கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன தெரிவித்திருந்தார். நீண்டகாலமக சிங்கள பேரினவாத அரசாங்கத்தின் பல தவறான செயற்பாடுகளை பகிரங்கமாக சுட்டிக்காட்டியதுடன் அவற்றிற்கு எதிராகவும் போராடினார். அத்துடன் சிங்கள அரசு தமிழ் மக்களுக்கு இழைத்த அநீதிகளை உலகறிய செய்ததில் இவருக்கும் ஒரு பாரிய பங்குண்டு. ஈழப்போர் மௌனிக்கப்பட்ட 2009 இன் பின்னர் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணம் தமிழர்களின் பூர்வீக பிரதேசம் அல்ல என தொல்பொருள் தொடர்பான ஜனாதிபதி செயலணியின் உறுப்பினர் எல்லாவல மேதானந்த தேரர் குறிப்பிட்டுள்ள கருத்தை சிங்கள அரசும் பறைசாற்றி வந்தது. இது முற்றிலும் தவறானது என கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன தெரிவித்திருந்தார். அவரின் மறைவின் பின்னரும் இலங்கையின் யதார்த்த அரசியலையும் ஆளுமையையும் அவர் வரலாற்றில் பதிவு செய்துள்ளார். https://akkinikkunchu.com/?p=285324

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.