Everything posted by கிருபன்
-
முற்றவெளி மந்திரம்
முற்றவெளி மந்திரம் sudumanalFebruary 18, 2023 யாழ் முற்றவெளியில் 09.02.24 அன்று நடந்த இந்திய சினிமா நட்சத்திரங்களின் கலை நிகழ்ச்சி கட்டற்ற மக்கள் அலையில் தத்தளித்தது. அதில் சில மீறல்களை இளைஞர்கள் நிகழ்த்தியதால் பரபரப்பாகி நிகழ்ச்சி தடைப்பட்டு பின் தொடர்ந்து நடந்து முடிந்தது. சமூகவலைத்தளங்கள் எப்போதுமே தூண்டிலோடு அலைவதால் முற்றவெளியில் பேத்தைவால் குஞ்சு அகப்படவும் அதைப் பிடித்து இராட்சத மீனாக படம் காட்டி அமர்க்களப்படுத்திவிட்டன. இதற்குள் புகுந்து “யாழ்ப்பாணிகளின் கலாச்சாரச் சீரழிவு” என இளைஞர்கள் மீதான ஒழுக்காற்று குற்றப்பத்திரிகை வாசிக்கப்பட்டன. அலம்பல்கள், வன்மங்கள், வகுப்பெடுப்புகள் என அடித்த அலைகளுக்கு நடுவே பொறுப்பான விதத்தில் இப் பிரச்சினையை அணுகி எழுதியவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அது முக்கியமானது என நம்புகிறேன். எப்போதுமே சந்ததி இடைவெளி என்பது வரலாறு பூராவும் இருந்துகொண்டேதான் வருகிறது. அப்பர் நடந்துவந்த தடத்தில் நான் நடக்க சாத்தியமில்லை. நான் நடந்த தடத்தில் என் பிள்ளைகள் நடக்க சாத்தியம் இல்லை. காலம் இயக்கமுறாமல் நிலைகுத்தி நின்றால் மட்டுமே இது சாத்தியம். காலம் இயங்கியபடியே இருக்கிறது என்ற நினைப்பு இந்த விடயத்தில் பல பேருக்கு வருவதில்லை. அதுவும் 40 வருடங்களுக்கு முன் இருந்த சந்ததி இடைவெளி போலன்றி பின்னர் ஏற்பட்ட இணையம், சமூக வலைத்தளம் என்பன போன்ற தொடர்பாடல் தொழில்நுட்பக் கடல் ஒரு சுனாமி போல் எழத் தொடங்கி அந்த இடைவெளியை அதிகரிக்கிறது. இது அதை கையாளத் தொடங்கிய வளர் இளம் பருவ அல்லது இளைஞர் பட்டாளத்தின் தகவல் அறிதல் திறனையும் கொள்ளளவையும் அறிவுப் பரம்பலையும் மாற்றி உலகை விரல் நுனியில் நிறுத்தியுள்ளது. இளஞ் சமுதாயத்தின் உலகை முதிய சமுதாயம் புரிந்து கொள்வதில் தமது இளம்பராய ஒப்பீடுகளை தவிடுபொடியாக்கியது. புதிய வளர்ச்சிக்கு ஈடுகொடுத்து தம்மை ‘இற்றைப்படுத்த’ (update) முடியாதவர்கள் இளஞ் சமுதாயத்தின் மேல் குற்றப் பத்திரிகை வாசிக்கும் இயலாமைக்குள் சென்றார்கள். இந்த மனப்பாங்குடனே யாழ் முற்றவெளி சம்பவத்தை அவர்கள் அணுகுகிறபோது கலாச்சாரச் சீரழிவு, ஒழுக்கமின்மை என்ற எளிய சூத்திரத்திரத்தை பாவித்தார்கள். எம்மையும்விட அடுத்தடுத்த சந்ததிகள் அறிவிலும், உலகை அறிதலிலும் வளர்ச்சிகண்டு கொண்டே போவதற்கான வெளிகள் திறந்து வைக்கப்பட்டிருக்கின்றன என்பதை நாம் ஏற்றுத்தான் ஆக வேண்டும். அதை நாம் அனுபவத்தில் எமது பிள்ளைகள் ஊடாக கண்டுகொண்டே இருக்கிறோம். ஒட்டுமொத்தமாக அவர்களை “அறிவுலக வெளிக்குள் தம்மை ஆட்படுத்திக் கொண்டவர்கள்” என எவரும் சான்றிதழ் கொடுத்துவிட முடியாது என்றபோதும், அதை ஒரு வளர்ச்சிப் போக்காக வரையறுக்க முடியும். யாழ் முற்றவெளியில் நிகழ்ச்சிக்கு வந்த இளைஞர்கள் நிகழ்த்திய மீறல் ஒன்றும் குற்றமாக எனக்குத் தெரியவில்லை. அங்கு ஏற்பட்ட இடைஞ்சல்களுக்கான பொறுப்பை நிகழ்ச்சி ஒழுங்கமைப்பாளாகள்தான் ஏற்க வேண்டும். அந்த விடயங்கள் பலராலும் பேசப்பட்டாயிற்று. அந்த மீறலை ஒரு வன்முறைபோல சித்தரித்தல் அபத்தமானது. ஆனால் ஒரு கும்பல் தனமான வன்முறை அல்லது panic நிலைக்கு மாறக்கூடிய சந்தர்ப்பம் இருந்தது என்பதையும் மறுக்க முடியாது. அந்தளவில் இளைஞர்களுக்கும், அதேபோல் பொலிசாருக்கும் பொறுப்புணர்வு இருந்திருக்கிறது. அதன்படியான செயல் இயல்பாகவே குளவிக்கூட்டுக்கு கல்லெறியாத, ஒரு கண்ணீர்ப்புகையிடம் உதவிகோராத, அதன்மூலம் ஒருவித panic நிலையை உருவாக்காத பொலிஸாரின் பொறுப்புணர்வில் தெரிகிறது. அதேபோல் வன்முறையை அன்றி ஆர்வக்கோளாறை மட்டுமே அடிப்படையாகக் கொண்ட மீறலின் எல்லைக்குள் செயற்பட்ட இளசுகளின் பொறுப்புணர்விலும் தெரிகிறது. எந்நேரமும் உடைந்து நொருங்கக்கூடிய அந்தப் பொறுப்புணர்வின் எல்லை ஓர் அனர்த்தத்தின் வாயிலை எட்டாதது ஒரு பெரும் நிம்மதிதான். இளைஞர்களின் போக்கை கிண்டலடிப்பவர்களுக்கு இது விளங்காமலே போய்விட்டது. இவ்வாறான நேரம்சங்களைக் கவனத்தில் எடுக்காமல், எப்போதும் எதிரம்சங்களை மோப்பம் பிடிக்கும் வேட்டைமனிதர்களே ஆபத்தானவர்கள். மாறாக இந்த இளைஞர்கள் அல்ல. இந்த வேட்டை மனிதர்கள் தமக்கான ஆதாரங்களை கும்பலாக ஓடிக்கொண்டிருப்பவர்களின் கால்களுக்குள் அகப்பட்டு முறிந்த சில கதிரைக் கால்களிலும், சரிந்து விழுந்த தண்ணீர்த் தாங்கியிலும், கதிரையைக் களவெடுத்துக் கொண்டு ஓடிய ஒருசில கள்ளப் பயல்களிடமும் கண்டடைந்து சொன்னார்கள். விலையுயர்ந்த கமராக்கள் ஒலிபெருக்கிகள் தொழில்நுட்ப சாதனங்கள் எதுவுமே அடித்து நொருக்கப்படாமல் பாதுகாப்பாக இருந்ததும், மேடைமீது பாய்ந்து ரகளை பண்ணாமல் இருந்ததும் என எல்லாமே இளைஞர்களின் மீறல் ஒரு வன்முறையல்ல, அது அவர்களின் நோக்கமுமல்ல என்பதற்கான ஆதாரங்கள். பல உலக நாடுகளில் கால்பந்து விளையாட்டு மைதானங்களில் இப்படியான ரசிகர்களின் மீறல்கள் இருப்பது நாம் பார்க்காததல்ல. யாழ் முற்றவெளி மீறல் மட்டும் ‘யாழ்ப்பாணியின் கலாச்சார சீரழிவாக’ ஒரு பகுதியினருக்கு தெரிவது அறிவின் ஓர் அவலம். கலாச்சார காவிகளாக பெண்களை அமர்த்திவிட்டு, கலாச்சார காவலர்களாக ஆண்கள் இருப்பதே ஆணாதிக்க முறைமை கொண்ட சமூகத்தில் நிலவும் வழிமுறை. ஆண்களின் கலாச்சார மீறல்களை இயல்பானதாக எடுக்கும் அதேவேளை, பெண்களின் கலாச்சார மீறல்களை ‘குய்யோ முறையோ’ என கூச்சலிட்டு எதிர்ப்பதுதான் ஆணாதிக்கக் கலாச்சாரக் கடமையாக இருந்தது. இதில் ஆண்கள் மீது நியாயமான விமர்சனங்களை முன்வைப்பவர்கள்கூட, முற்றவெளி விடயத்தில் இந்த இளைஞர்களை (ஆண்களை) முன்வைத்து கலாச்சாரச் சீரழிவு பற்றி பேசும் முரண்நகையை என்னவென்பது. அதுவும் முற்றவெளிக்கு வராத ஒரு மிகப் பெரும் பகுதி இளைஞர்கள் இவர்கள் கவனத்திற்குள் வரவேயில்லை. ஒரு சிறு பகுதி இளைஞர்களை வைத்து பொதுவாக ‘யாழ்ப்பாணிகளின் கலாச்சார சீரழிவு’ என பிரதேசவாத வாடையுடனும், ஒரு கொசிப்பு மனநிலையுடனும் வந்து களமாடியவர்கள் உண்டு. அடுத்தது ஒரு சமூகத்தின் கலாச்சார பங்காளிகளில் ஒரு பகுதியினர் மட்டுமே இளைஞர்கள். அதுவும் ஆணாதிக்க பங்காளிகள். ஒரு கலாச்சார முழுமையில் பெண்கள், சிறுவர்கள், முதியவர்கள் பங்கை வசதியாக மறைத்துவிட்டு முற்றவெளிக்கு வந்த இளைஞர்களை மட்டும் முன்னிறுத்தி ‘தமிழ்க் கலாச்சார சீரழிவு’ என விரிவுபடுத்தி பேசுபவர்களும் இருந்தார்கள். இது இன்னொரு அபத்தம் அல்லது மோசடி. இளம் பெண்கள் முற்றவெளியில் நடந்த மீறலில் இளைஞர்களுடன் சமனான அல்லது முன்னணிப் பாத்திரம் கொண்டிருந்திருந்தால் கலாச்சார சீரழிவு மதிப்பீட்டாளர்கள் இன்னும் பத்து மடங்கு எகிறியிருப்பார்கள். புலத்தில் மட்டுமல்ல புலம்பெயர் நாட்டிலும் இந்த கலாச்சார மதிப்பீட்டாளர்கள் கலாய்த்தபடிதான் இருந்தார்கள், இருக்கிறார்கள். இந்துத்துவ இந்தியாவின் மத மற்றும் சாதியப் பண்பாட்டு பரவலாக்கம் அல்லது தீவிரப்படுத்தல் மட்டுமல்ல, சினிமாவை முதன்மையில் வைக்கும் ஜனரஞ்சக பண்பாட்டு ஆதிக்கமும் இலங்கைத் தமிழ் மக்களை நோக்கி திட்டமிடப்பட்ட வகையில் இந்துத்துவ நிகழ்ச்சி நிரலின்படி படிப்படியாக நகர்த்தப்படுகிறது. தெரிந்தோ தெரியாமலோ இம் முற்றவெளி கலைநிகழ்ச்சி ஏற்பாடும் அதற்குத் துணைபோனதாக ஒருவர் மதிப்பிடுவதை இலகுவில் நிராகரிக்க முடியாது. ஒரு சிலமணி நேர நிகழ்ச்சிக்கு இவளவு பெருந்தொகையான சினிமாத்தள ‘கலைஞர்களை’ கொண்டுவந்து இறக்கிய செயல் அதனடிப்படையிலானதாகவும் இருக்கலாம். அதுவும் முந்தநாள் மழையில் நேற்று முளைத்தவர்களும் இந்த படைபெடுப்பினுள் அடக்கம். இந்தியப் பெருநகரங்களில் இல்லாத பெருமெடுப்பில் யாழ்ப்பாணத்தில் கலாச்சார மண்டபம் கட்டித் தந்திருக்கிறோம் எனவும் எதிர்காலத்தில் இந்தியாவுக்கும் தமிழ் நிலத்துக்குமான தொடர்பானது தரை, கடல், ஆகாயம் வழி இறுகப் பற்றிக் கொள்ளும் எனவும் இரண்டு கைகளின் விரல்களையும் ஒன்றாகக் கோர்த்து யாழ்ப்பாணத்தில் மேடையில் நின்று உறவுப்பாலம் அமைத்துக் காட்டினார் அண்ணாமலை. அயோத்தியில் தொன்மைமிகு மசூதியை உடைத்து இராமர் கோயில் கட்டிமுடிய, இப்போ இராமர் பாலம் இலங்கையை கொழுவி இழுத்து கட்ட ஆயத்தமாகிறார்கள். இந்த பண்பாட்டு ஆதிக்கம் அல்லது பரவலாக்கலுக்கு இளைஞர்கள் படிப்படியாக இரையாகுவது குறித்து விழிப்படைய வேண்டும். ஒவ்வொரு பண்பாட்டிலுமிருந்து நல்லனவற்றையும் பொருத்தமானவற்றையும் உள்வாங்கி சொந்தப் பண்பாட்டை வளமாக்குதல் முக்கியம். அதேநேரம் மற்றைய கசடுகளை கழித்துக் கட்ட வேண்டியதும் அவசியம். முற்றவெளி நிகழ்ச்சி இந்தக் கசடுகளின் பிரமாண்டம். சினிமா ஓர் அற்புதமான கலை. எல்லாக் குறைபாடுகளையும் காட்டி அந்தக் கலையை நாம் ஒருபோதுமே நிராகரிக்க முடியாது. பெண்ணுடலை பாலியல் பண்டமாக்கும் கருத்துநிலைக்கு ஏற்ப அதன் காட்சிப் படிமங்கள், பாடல்கள் என சினிமாவானது ஒரு காலத் தொடர்ச்சி கொண்டது. அதற்கு இரசிகர்களாகி பலியாகியபடிதான் வந்துகொண்டிருக்கிறோம். அத் தொடர்ச்சி தமன்னா வடிவில் இப்போ இந்த இளைஞர்களை மேடைக்கு அருகில் இழுத்துவந்து விட்டதிலும், பனை மரத்தில் கம்பங்களில் என ஏற்றியதிலும் பெரும் பங்கை ஆற்றியது எனலாம். இரசனை வேறு மோகம் வேறு. இதுகுறித்து இளைஞர்கள் விழிப்புற வேண்டும். தமன்னாவுடன் புகைப்படம் எடுப்பதற்கு சிலரிடமிருந்து 30’000 ரூபாவை பறித்து விசுக்கியது இந்த மோகம்தானே ஒழிய சினிமா இரசனை அல்ல என்பதை அவர்கள் அடையாளம் காண வேண்டும். ஈழத்தில் 70 களில் வீச்சம் பெற்று எழுந்த பொப் இசை வடிவம் என்பது சினிமாவிலிருந்து கிளைத்ததல்ல. அது தனித்துவம் கொண்டது. அதன் தொடர்ச்சியை போர் முறித்தெறிந்துவிட்டது. இந்தியாவிலோ ‘பாடலிசை’ சினிமாவுக்குள் அடக்கமாகிப் போனது. பாடலிசையை இரசிப்பது என்பதை சினிமாவுக்கு வெளியில் பிம்பமுறாதபடி இரசிகரின் மனதை கட்டிப் போட்டுள்ளது. பல நாடுகளில் பாடலிசை என்பது சினிமாவுக்கு வெளியே வளர்ச்சியுறும் கலை வடிவம். இசையை இரசிப்பது, ஆடுவது என்பதெல்லாம் இளம் உடலின் துடிப்புத்தனத்துக்கும் அகத் தூண்டலுக்கும் அதிகம் இதமளிப்பது. மகிழ்ச்சியை சுற்றி வாழ்வை அமைத்துக் கொள்ள உதவுவது. திரையில் உலவிய கதாநாயகன் அரசியலில் அறிவுக்கூச்சமின்றி முதலமைச்சராக நினைக்கிறான். தொலைக்காட்சி முழுவதும் கேளிக்கை நிகழ்ச்சியிலிருந்து அறிவை முன்னிறுத்துவதாக படம் காட்டும் போட்டி அல்லது உரையாடல் நிகழ்ச்சி எல்லாமே திரையுலகம் சுற்றியே சுழல்கிறது. நடிகர்களின் கட் அவுட்டுக்கு பால் வார்க்கவும், கோயில் கட்டவும்கூட மனித அறிவை இழிநிலைக்கு கொணர்ந்து விட்டிருக்கிறது இந்தியத் திரையுலகம். இவையெல்லாம் இனி ஈழத்திலும் நடக்காது என்பதற்கான உத்தரவாதத்தை இந்தியாவிலிருந்து வரும் இந்தக் கிழிசல் பண்பாட்டு அம்சங்கள் உடைத்து நொருக்க நாளாகாது என்றே தோன்றுகிறது. இதுகுறித்து இளைஞர்கள் எச்சரிக்கையடையவும் வேண்டும். யுத்தங்கள் நடந்து முடிந்த பிரதேசங்களிலெல்லாம் திட்டமிட்டே போதைப்பொருளை பரவலாக்குவதன்மூலம் இளைஞர்களை அதற்கு அடிமையாக்கி, சமூகம்சார் அரசியலிலிலிருந்து தூரப்படுத்தி தமது அதிகாரங்களுக்கு எதிராக எழுந்துவிடாதபடி பார்த்துக் கொள்வது அதிகாரவெறியர்களின் உத்திகளில் ஒன்று. இலங்கைக்குள் அதுவும் குறிப்பாக தமிழ்ப் பகுதியினுள் போதைப் பொருள் இந்தியாவிலிருந்து பெருமளவு வருகிறது என சொல்லப்படுகிறது. இலங்கை அரசு அதிகார வெறியர்களின் உத்திக்கு இசைவாக, இந்திய வியாபாரிகளின் காசு பார்க்கும் குறியும் அமைவதால் அந்தக் காட்டில் ஒரே மழைதான். இலாபமீட்டும் தொழிலாக போதைப் பொருள் வியாபாரம் உலகின் மூலைமுடக்குகளெல்லாம் ஒரு சமூகவிரோத கிருமியாகப் பரவத் தொடங்கி நாளாகிவிட்டது. அதற்கு எதிராக இருப்பதும், அதை பொலிஸாரின் சட்டபூர்வ நடவடிக்கைகள் மூலமும், சிவில் சமூக நிறுவனங்களின் அறிவூட்டல் செயற்பாடுகள் மூலமும் எதிர்கொள்வது அவசியமானது. ஆனாலும் போதைப் பொருளை ‘கடந்து போதல்’ என்பது இளம் சந்ததியால் முடியாததல்ல. புலம்பெயர் நாட்டில் மது, சிகரெட், போதைப் பொருள், பாலியல் தொழில் விடுதிகள் என சட்பூர்வமாகவும் சட்டபூர்வமற்றும் கண்முன்னே விரிகிற சந்தர்ப்பங்கள் இருக்கிறபோதும், இவைகளுக்கு அடிமையாகுபவர்கள் ஒப்பீட்டளவில் மிக மிகக் குறைவானவர்கள். அது தனக்கானது அல்ல என்கின்ற அறிவு மற்றும் மனவளத்தால் பெரும்பான்மை மனிதர்கள் கடந்து போய்க் கொண்டிருக்கிறார்கள். எனவே இலங்கையிலும் பெரும்பான்மை மனிதர்கள் அல்லது இளைய சமுதாயம் இதற்கு (கடந்துபோதலுக்கு) விதிவிலக்காக இருக்க நியாயமில்லை. முற்றவெளி நிகழ்ச்சி ஒழுங்கமைப்பாளர்களுக்கு ஒரு பாடம். இளைஞர்களுக்கு ஒரு சுயவிசாரணை! https://sudumanal.com/2024/02/18/முற்றவெளி-மந்திரம்/#more-5984
-
யாழில் விபத்து; பல்கலை மாணவன் சாவு!
உயிரிழந்த பல்கலைக்கழக மாணவன் குறித்து அதிர்ச்சி செய்தி யாழ்ப்பாணம் - நீர்வேலியில் நேற்று (21) விபத்தில் உயிரிழந்த பல்கலைக்கழக மாணவன் குறித்து அதிர்ச்சி செய்தி வெளியாகி உள்ளது. குறித்த மாணவன், வீடொன்றில் புகுந்து வன்முறையில் ஈடுபட்டு வாகனத்துக்கு தீவைத்து விட்டு திரும்பிய போதே விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அச்சுவேலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சிறுப்பிட்டி பகுதியில் நேற்று அதிகாலை நாய் குறுக்காக ஓடியதால் மோட்டார் சைக்கிளை கட்டுப்படுத்த முடியாமல் விபத்துக்குள்ளாகி பல்கலைக்கழக மாணவன் உயிரிழந்தார். யாழ். பல்கலைக்கழகத்தில் புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள மானிப்பாய், வேம்படி பகுதியைச் சேர்ந்த ரமேஸ் சகீந்தன் (22) என்ற மாணவனே இதில் உயிரிழந்துள்ளார். மாணவன் உயிரிழந்த விவகாரம் மர்மமாக இருந்த நிலையில், மானிப்பாயை சேர்ந்த மற்றொரு இளைஞன் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், உயிரிழந்த பல்கலைக்கழக மாணவனுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்து, விபத்தில் சிக்கியவர் என்பது தெரியவந்தது. இந்த நிலையில், வல்வெட்டித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உடுப்பிட்டியில் உள்ள வீடொன்றில் தாக்குதல் முயற்சி நடந்தது. இது குறித்து பொலிஸார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தியபோது, குறித்த வீட்டிற்குள் நுழைந்து துடுப்பு மட்டையை பயன்படுத்தி தாக்குதல் நடத்தி, வானுக்கு தீ வைத்து விட்டு திரும்பி வரும் போதே பல்கலைக்கழக மாணவன் விபத்தில் சிக்கியது தெரிய வந்தது. உயிரிழந்த பல்கலைக்கழக மாணவனும் காயமடைந்தவரும் இணைந்து வன்முறை தாக்குதலில் ஈடுபட்டு விட்டு திரும்பி வரும் போது நீர்வேலியில் விபத்தில் சிக்கினர். விபத்தை தொடர்ந்து, நண்பரொருவருக்கு அறிவித்து அவர் மூலம் சம்பவத்தை மறைக்க அந்த இடத்தை சுத்தம் செய்து, தடயங்களை அழிக்க முற்பட்டதுடன், காயமடைந்தவரை நோயாளர் காவு வண்டியில் ஏற்றி அனுப்பியுள்ளனர். அத்துடன், விபத்தில் சிக்கிய மோட்டார் சைக்கிளில் பயணித்த மற்றையவர், மோட்டார் சைக்கிளை மறைத்து வைத்து விட்டு, சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு சென்றுள்ளார். ஒரு தலைக்காதல் விவகாரத்தினால் இந்த வன்முறை தாக்குதல் நடத்ததாக பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். நோயாளர் காவு வண்டிக்கு அறிவித்து தடயத்தை அழிக்க முற்பட்டவரையும் வைத்தியசாலையில் காயமடைந்து சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளவரிடமும் அச்சுவேலி பொலிஸார் மற்றும் வல்வெட்டித்துறை பொலிஸார் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். R https://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/உயிரிழந்த-பல்கலைக்கழக-மாணவன்-குறித்து-அதிர்ச்சி-செய்தி/71-333708
-
பௌர்ணமி பொங்கலை தடுத்து நிறுத்திய பொலிஸார்
பௌர்ணமி பொங்கலை தடுத்து நிறுத்திய பொலிஸார் அப்துல்சலாம் யாசீம் திருகோணமலை - தென்னைமரவாடி மக்களால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த கந்தசாமி மலை முருகன் ஆலயத்தின் மாதாந்த பௌர்ணமி தின பொங்கல் நிகழ்வினை இன்று (23) தடுத்து நிறுத்தியதாக தெரிய வந்துள்ளது. மாதாந்தம் பௌர்ணமி தினத்தன்று தென்னமரவாடி கிராம மக்களால் நடத்தப்படும் பொங்கல் விழா வழமை போன்று இன்றைய தினமும் ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தது. இப்பொங்கல் விழாவிற்கு கிராம மக்கள் மற்றும் திருகோணமலை மாவட்டத்தின் பல பிரதேசங்களிலிருந்து பக்தர்கள் உட்பட சிவில் அமைப்புக்களைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். இச்சந்தர்ப்பத்தில் இக்கிராம மக்களால் பொங்கலுக்கான ஏற்பாடுகள் இடம்பெற்றுக்கொண்டிருந்த வேளையில் ஆலய வளாகத்திற்குள் திடீரென நுழைந்த 100க்கு மேற்பட்ட பொலிஸார் மற்றும் விசேட அதிரடி படையினர் ஆயுதங்களுடன் வருகை தந்து அப்பிரதேசத்திலிருந்த கிராம மக்களையும் வெளி பிரதேசத்திலிருந்து வருகை தந்த மக்களையும் விரட்டினர். இதன் போது இப்பொங்கல் நிகழ்வில் கலந்து கொண்ட சிவில் செயற்பாட்டாளரான திரு. லவகுசராசா அவர்களுக்கும் அவருடன் வருகை தந்திருந்த செயற்பாட்டாளர்களுக்கும் நீதிமன்ற தடையுத்தரவினை வழங்கி அவ்விடத்திலிருந்து வெளியேற்றியிருந்ததுடன் பொங்கலை தடுத்து நிறுத்தி அக்கிராம மக்களையும் வெளியேற்றி கிராம சூழ்நிலையை பதற்றத்திற்குள்ளாக்கினர்.. இச்சம்பவம் இலங்கையில் வாழும் ஒட்டுமொத்த தமிழ் சமுகத்தினுடைய கலாசார மற்றும் மத வழிபாட்டு உரிமையினை மீறும் செயலாகும். ஆகவே இச்சம்பவத்தை கிராம மக்களும் சிவில் சமுகங்களும் கண்டிப்பதுடன் இதற்கான நீதியை பெற்றுக் கொடுக்க வேண்டும் எனவும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். R https://www.tamilmirror.lk/திருகோணமலை/பரணம-பஙகல-தடதத-நறததய-பலஸர/75-333709
-
34 வருடங்களின் பின்னர், வலி. வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்தில் ஆலய வழிபாடு!
34 வருடங்களின் பின்னர், வலி. வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்தில் ஆலய வழிபாடு! adminFebruary 23, 2024 வலி. வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்தில் 34 வருடங்களின் பின்னர் ஆலயங்களுக்கு சென்று பொதுமக்கள் இன்று வழிபாடுகளில் ஈடுபடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைவாக, 290 பக்தர்கள் ஆலய வழிபாடுகளை மேற்கொள்வதற்காக, தமது பெயர் விபரங்களை தெல்லிப்பழை பிரதேச செயலகத்தில் பதிவு செய்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று காலை முதல் பலாலி இராணுவ தலைமையகத்தில் இருந்து பக்தர்கள் இராணுவத்தின் பேருந்து மூலம் ஆலயங்களுக்கு கொண்டு செல்லப்படுவர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இலத்திரனியல் உபகரணங்கள், தொலைபேசிகள் கொண்டு செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளதோடு, பூசைப் பொருட்கள் கொண்டு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கடந்த 14ஆம் திகதி வலி.வடக்கு காணி விடுவிப்பு தொடர்பில் யாழ் மாவட்ட செயலர், ஜனாதிபதியின் மேலதிக செயலாளர், மாவட்ட செயலக அதிகாரிகள், தெல்லிப்பழை பிரதேச செயலர், யாழ் மாவட்ட இராணுவ தளபதி ஆகியோருக்கிடையில் பலாலி இராணுவ தலைமையகத்தில் கூட்டம் இடம்பெற்றது. இன்றைய தினம் ஆலய வழிபாட்டிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள போதிலும் வழிபாட்டு தலங்களை புனர்நிர்மாணம் அல்லது புனரமைப்பு பணிகள் செய்வதற்கு அனுமதிகள் வழங்கப்படவில்லை என இராணுவம் குறிப்பிட்டுள்ள போதிலும் ஆலயத்தினர் விரும்பினால் முறையான கோரிக்கையினை மாவட்ட செயலகத்திடம் முன் வைப்பதன் ஊடாக இராணுவத்தினர் மூலம் ஆலயங்களை புனர்நிர்மாணம் செய்யமுடியும் என யாழ் மாவட்ட செயலர் அம்பலவானர் சிவபாலசுந்தரம் அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. https://globaltamilnews.net/2024/200747/
-
நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
அதனால்தான் மதியுரைஞர் அன்ரன் பாலசிங்கம் முதல் வரைபை சிலாகித்திருந்தார்😃
-
நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
நல்லது நன்னி. மிகவும் ஆழமாகவே ஆராய்ந்துள்ளீர்கள். நீலன் மிளிர்வான வரைபை உருவாக்குவதற்கு உதவினார். எனினும் நீர்த்துப்போகச் செய்தது சிங்கள அரசியல் கட்சிகளினது செயற்பாடு. பொதி தீர்வாக வந்திருக்கும் என அந்தக் காலத்திலேயே நம்பவில்லை. ஆனால் எழுத்து மூலம் ஒரு தீர்வுத் திட்டத்தை தயாரிக்க உதவியது கொலை செய்யவேண்டிய அளவுக்கு துரோகமான செயல் இல்லை. புலிகள் இராணுவ ரீதியில் பலமான நிலையில் இருந்த காலகட்டத்தில் தமிழ் ஈழத்திற்குக் குறைவான தீர்வு ஒன்றை அவர்களின் அனுமதி இல்லாமல் வரைய உதவியதுதான் நீலன் கொல்லப்பட்டதற்கான காரணம். இன்றைய காலகட்டத்தில் “மிளிர்வான” பொதியையோ அல்லது நீர்த்துப்போன அதன் மறுவரைபுகளையோ கூட ஒரு அரசியல் பேச்சுவார்த்தைக்கு எடுத்துச் செல்லமுடியாத அரசியல் வலிமையற்ற இடத்தில்தான் தமிழர்கள் நிற்கின்றார்கள்.
-
வரலாற்றுக்குள் வாழும் அனுபவம் தரும் ‘பிரமயுகம்’
வரலாற்றுக்குள் வாழும் அனுபவம் தரும் ‘பிரமயுகம்’ -தயாளன், மம்மூட்டியின் அபார நடிப்பில் வந்துள்ளது ‘பிரமயுகம்’. 17-ஆம் நூற்றாண்டு கால கேரள மலபார் சமூக வாழ்வு, பண்பாடு, சாதி ஒடுக்கு முறை, அரசியல் என்று எல்லா அடுக்குகளிலும் கதை நகர்கிறது. கேரளாவின் தொன்மங்களையும், மாந்திரீகங்களையும், ஒடுக்குமுறை அரசியலையும் நுட்பமாக காட்சிப்படுத்தி இருக்கிறார்கள்; கேரளாவின் எல்லா திரையரங்குகளிலும் வசூலை வாரிக் குவித்துக் கொண்டிருப்பதோடு மட்டுமில்லாமல், விமர்சகர்களின் கொண்டாட்டமும் சேர்ந்து கொண்டிருக்கிறது. மலையாள சினிமாவில் கிளாசிக் இடத்தை பெறக்கூடிய வாய்ப்பை பிரமயுகம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. 17- ஆம் நூற்றாண்டில் தெற்கு மலபாரில் நடக்கும் கதை. பாணன் ஒருவர் ஆற்றைக் கடப்பதற்காக முயலும் போது வழி தவறி உயர்சாதியைச் சார்ந்த கொடுமோன் போட்டி என்பவரின் தரவாட்டுக்கு (உயர் சாதியினர் வீடு) வந்து விடுகிறார். கொடுமோன் போட்டி பாணனை பாடச் சொல்கிறார். அவனது இசையில் மயங்கியவர், பாணனை தன்னுடைய வீட்டிலேயே தங்கச் சொல்கிறார். தயங்கினாலும் பிறகு பாணன் சம்மதிக்கிறார். அந்த வீட்டில் போட்டியைத் தவிர ஒரு சமையல்காரர் மட்டுமே இருக்கிறார். ஒடுக்கப்பட்ட சாதியைச் சார்ந்த பாணன் அந்த வீட்டில் தங்கும் போது பல அமானுஷ்யமான நிகழ்வுகளைப் பார்க்கிறார். சமையல்காரன், பாணனிடம் போட்டியை நம்பாதே என்கிறான். அதனால் மனம் குழம்பிப் போகிறான் பாணன். பகடை விளையாட அழைக்கிறான் போட்டி. அதில், தோற்றதால் தனக்கு அடிமையாக இங்கேயே இருக்க வேண்டும் என்று உத்தரவிடுகிறான். ஒரு சிலந்தியைப் போல வலையில் சிக்கிக் கொள்ளும் பாணன் அந்த வீட்டிலிருந்து வெளியேற முயல்கிறான். என்ன நடந்தது? என்பது கிளைமாக்ஸ். இந்த எளிய கதையை வைத்துக் கொண்டு, மூன்றே மூன்று கதாபாத்திரங்களின் மூலம் ஒரு முழு நீள சினிமாவில் நம்மைக் கட்டிப் போடுகிறார் இயக்குனர் ராகுல் சதாசிவன். மொத்தக் கதையும் பெரும்பாலும் ஒரு வீட்டிற்குள்ளே மட்டுமே நடக்கிறது. ஆனால், நேர்த்தியான திரைக்கதையால் பார்வையாளர்களுக்கு சினிமா அனுபவத்தை தருகிறார். படம் முழுக்க கருப்பு வெள்ளையில் படமாக்கப்பட்டிருக்கிறது. இந்த படத்திற்கு மற்ற வண்ணங்கள் தேவையில்லை என்ற முடிவு எடுத்ததிலேயே வெற்றி பெறுகிறார் ராகுல். கதையின் ஊடாக நமக்கு காட்டப்படும் 17ம் நூற்றாண்டு கால கேரள மலபார் சமூக வாழ்வு, பண்பாடு, சாதி ஒடுக்குமுறை, அரசியல் என்று எல்லா அடுக்குகளிலும் கதை நகர்கிறது. கேரளாவுக்கே உரித்தான தொன்மங்களையும் மாந்திரீக நடைமுறைகளையும் ஒடுக்குமுறை அரசியலையும் காட்சிப்படுத்தி இருக்கிறார். படத்தின் வசனங்கள் நறுக்கென்று வெளிப்படுகின்றன. ஒரு ‘ஹாரர்’ படத்தில் நுட்பமான கலை அம்சத்தை வெளிப்படுத்தி இருக்கிறார், இயக்குனர். படத்தின் முக்கிய கதாபாத்திரமான கொடுமோன் போட்டி பாத்திரத்தில் அனாயசமாக நடித்திருக்கிறார் மம்மூட்டி. அவரின் நடையும், கூர்ந்த பார்வையும், அச்சத்தை தரும் அவரது எகத்தாள சிரிப்பும் நம்மை பயத்தில் உறைய வைக்கின்றன. எப்பேர்பட்ட நடிகன் மம்மூட்டி என்பதை முதல் ஷாட்டிலேயே காட்டி விடுகிறார். அந்த வீடு முழுக்க எதிரொலிக்கும் அவரது அமானுஷ்யமான அந்தச் சிரிப்பு திரையரங்கு முழுவதும் நிசப்தத்தை தருகிறது. போட்டி என்ற அவரது தோற்றத்திற்கு கச்சிதமாக பொருந்துகிறார். இவரை விட்டால், வேறு யாரையும் அந்த கேரக்டருக்கு நினைத்துப் பார்க்க முடியாது என்ற எண்ணத்தை உருவாக்குகிறார். பாணனாக வரும் அர்ஜூன் அசோகன் நடிப்பில் மம்மூட்டிக்கு சவால் விடுகிறார். ஒடுக்கப்பட்ட சாதியை சார்ந்தவர் என்பதால் அவர் காட்டும் ஒடுக்கமான உடல் மொழி, தயங்கி தயங்கி பேசுவது, அமானுஷ்யங்களை காணும் போது, திடுக்கிட்டு குழம்புவது என்று அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். படம் முழுக்க ஒரு வேட்டி மட்டுமே உடை. அவரின் கண்களில் காணும் மிரட்சியும், பயமும் நமக்கும் தொற்றிக் கொள்கின்றன. இன்னொரு பாத்திரமான சமையல்காரனாக சித்தார்த். மம்மூட்டியுடன் முரண்படும் போதும், அலட்சியமாக பாணனை நடத்தும் போதும் மிக நிதானமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். படத்தின் தூண் எனில், அது ஒளிப்பதிவு தான். படம் முழுக்க முழுக்க கருப்பு வெள்ளை வண்ணங்களில் மட்டுமே எடுக்கப்பட்டிருக்கிறது. இந்த கதைக்கு தேவையான ஒரு உணர்வு நிலையை இதுவே உருவாக்கி விடுகிறது. கருப்பு வெள்ளை என்பதால் பார்வையாளருக்கு சிதறல்கள் ஏற்பட வாய்ப்பில்லை. கதாபாத்திரங்களின் உணர்வுகளின் மீது நமது கவனம் முழுமையாக குவிகிறது. குறிப்பாக அவர்களின் கண்களின் மீது கவனம் ஈர்க்கப்படுகிறது. படம் முழுக்க ஒரே வீட்டிற்குள் நடந்தாலும், ஒவ்வொரு காட்சியிலும் வைக்கப்படும் கோணங்களும், ஒளியமைப்பும் புத்துணர்வைத் தருகின்றன. மிக மெதுவாக நகரும் காட்சிகளின் மூலம் அந்தந்த காட்சிகளின் அழுத்தத்தை அதிகரிக்கிறார். படத்தின் இசையும், ஒலிக் கோர்ப்பும் அற்புதமாக அமைந்திருக்கின்றன. சிறு சிறு ஓசைகளை கூட துல்லியமாக பதிவு செய்திருப்பதன் மூலம் அமானுஷ்யத்தை உணர்த்துகிறார்கள். பாணன் பாடல்கள் மனதிற்கு இதமாக இருக்கின்றன. ஹாரர் படம் என்பதற்காக திடுக்கிட வைக்கும் ஒலிகளோ, இசையோ இல்லாமல், இயல்பாக காட்சியோடு இணைந்திருக்கின்றன. படத்தின் கொண்டாடப்படப் வேண்டிய இன்னொரு அம்சம் கலை இயக்கமும், ஒப்பனையும். பழைய கால தரவாட்டு வீட்டை அதன் புழங்கு பொருள்களோடு, உருவாக்கி இருக்கிறார்கள். சின்னச் சின்ன பொருட்களில் கூட அவ்வளவு மெனக்கெடலை நிகழ்த்தி இருக்கிறார்கள். ‘பாதாள அறைகளும், மாடங்களும், நெல் குதிர்களும், மதுப் பானைகளும் கலை இயக்கம் என்ற ஒன்று நிகழ்ந்தது போலவே இல்லை’ என்ற நேர்த்தியை கொண்டு வந்திருக்கிறார்கள். படத்தொகுப்பு காட்சியோடும், ஒலியோடும், இசையோடும் இணைந்து ஒரு ரிதத்தை உருவாக்கி இருக்கிறது. ‘திடுக் திடுக்’ என்று ‘ஜம்ப் கட்’களை செய்து செயற்கையான திகிலை உருவாக்காமல், மொத்த திரைக் கதையின் நீட்சியாக அமானுஷ்யத்தை ஒரு அனுபவமாக நமக்குள் செலுத்துகிறது எடிட்டிங். படத்தில் பத்து பேர் நடித்திருந்தாலும், மூன்றே மூன்று கதாபாத்திரங்களை வைத்து ஒரு தொன்மம் சார்ந்த கதையை வரலாற்று பின்புலத்தில் திகில் படமாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் ராகுல். நடிகர் மம்மூட்டிக்கு இது ஒரு வாழ்நாள் சாதனைப் படம். மாபெரும் அனுபவத்தை தரும் பிரமயுகம், திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. https://aramonline.in/16772/brahumayugam-cinema-review/
-
ஐ.பி.எல் 2024 - செய்திகள்
இன்று வெளியாகிறது ஐபிஎல் அட்டவணை ManjulaFeb 22, 2024 12:11PM ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த ஐபிஎல் தொடரின் அட்டவணை இன்று (பிப்ரவரி 22) மாலை 5 மணிக்கு வெளியாகவிருக்கிறது. இந்த நிலையில் ஐபிஎல் தொடரின் முதல் போட்டி வருகின்ற மார்ச் 22-ம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளதாக உறுதியான தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அதன்படி முதல் 15 நாட்களுக்கான ஐபிஎல் போட்டியின் அட்டவணை வெளியாகவிருக்கிறது. அடுத்த அட்டவணை நாடாளுமன்ற தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டவுடன் வெளியாகும். ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி மே மாதம் 26-ம் தேதி அகமதாபாத்தின் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவுள்ளது. முதல் போட்டியில் வழக்கம்போல சென்னை அணி களமிறங்குகிறது. எதிர்த்து ஆடுவது யாரென்பது தெரியவில்லை. அநேகமாக குஜராத் அல்லது பெங்களூர் அணி எதிர்த்து ஆடும் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையில் நடைபெறும் தொடக்க விழாவில் சென்னை அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி ஐபிஎல் கோப்பையை எடுத்து வந்து ஒப்படைப்பார். இதையடுத்து தொடக்கவிழா நிகழ்ச்சிகள் நடைபெறும். தொடர்ந்து தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தன்னுடைய முதல் ஐபிஎல் போட்டியில் விளையாடும். நாடாளுமன்ற தேர்தல் வந்தாலும் கூட டி2௦ உலகக்கோப்பை தொடரால், ஐபிஎல் தொடரை தள்ளிப்போடும் சூழ்நிலை தற்போது இல்லை. இதனால் தான் ஐபிஎல் போட்டிகளை முன்னதாகவே நடத்திட பிசிசிஐ திட்டமிட்டு வருகிறது. எது எப்படி இருந்தாலும் வெளிநாடுகளில் போட்டியை நடத்திட பிசிசிஐ துளியும் விரும்பவில்லை. வீரர்களும் ரசிகர்களின் கரகோஷங்களுக்கு மத்தியில் தான் ஆடிட விரும்புகின்றனர். எனவே இந்தாண்டு ஐபிஎல் தொடர் முழுவதுமே இந்தியாவில் தான் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. https://minnambalam.com/sports/bcci-to-release-ipl-2024-schedule-on-february-22-at-5-pm/
-
உக்ரைனுக்கு எதிராக போலந்து விவசாயிகள் போராட்டம்.. தீர்வு காண அரசியல் தலைவர்களுக்கு ஜெலன்ஸ்கி அழைப்பு
உக்ரைனுக்கு எதிராக போலந்து விவசாயிகள் போராட்டம்.. தீர்வு காண அரசியல் தலைவர்களுக்கு ஜெலன்ஸ்கி அழைப்பு உக்ரைன் மீது ரஷியா தனது முழு அளவிலான ராணுவ நடவடிக்கையை தொடங்கி இரண்டு ஆண்டுகள் நிறைவடைய உள்ளது. போர் தொடங்கியதில் இருந்தே அண்டை நாடான போலந்து, உக்ரைனுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறது. நேட்டோ மற்றும் ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடான போலந்து, உக்ரைனில் இருந்து வந்த அகதிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததுடன், உக்ரைனுக்கு ஆயுதங்களையும் வழங்கியது. இந்நிலையில், உக்ரைனில் இருந்து தானியங்கள் மற்றும் பிற உணவுப் பொருட்கள் இறக்குமதி செய்வதால் தங்களின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்காமல் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக போலந்து விவசாயிகள் குற்றம்சாட்டி போராடத் தொடங்கியதில் இருந்து பிரச்சினை உருவானது. இந்த விவகாரம் நாளுக்குநாள் வலுத்து, பெரிய அளவில் வெடித்துள்ளது. நேற்று முன்தினம் போலந்து விவசாயிகள் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தினர். உக்ரைனுக்கு செல்லக்கூடிய அனைத்து சாலைகளையும் மறித்து போக்குவரத்தை தடை செய்தனர். அத்துடன் சிலர் ரஷிய அதிபர் புதினுக்கு ஆதரவாக முழக்கமிட்டனர். இந்த செயல் உக்ரைனின் கோபத்தை தூண்டும் வகையில் அமைந்தது. இதையடுத்து போலந்து விவசாயிகளின் பிரச்சினை குறித்து பேசுவதற்காக போலந்து தலைவர்களுக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பாக ஜெலன்ஸ்கி கூறியிருப்பதாவது:- இரு நாடுகளின் விவசாயிகளும் ஒருவரையொருவர் அவமதிக்கக்கூடாது. நாம் ஒற்றுயாக இருக்க வேண்டும். நம்மிடையே உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படவேண்டும். உக்ரைன் மற்றும் போலந்து இடையே மட்டுமல்லாமல் முழு ஐரோப்பா அளவிலும் தீர்வு தேவை. விவசாயிகளின் பிரச்சினை தொடர்பாக விவாதித்து தீர்வு காண்பதற்காக எல்லையில் ஆலோசனைக் கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. ரஷியா போர் தொடங்கி இரண்டு ஆண்டு நிறைவடைய (பிப்ரவரி 24) உள்ள நிலையில், அதற்கு முன்னதாக போலந்து பிரதமர் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதி ஆகியோருடனான சந்திப்பு நடைபெறும் என நம்புகிறேன். இது தேசிய பாதுகாப்பு தொடர்பான விஷயம். இவ்வாறு அவர் கூறினார். https://akkinikkunchu.com/?p=269216
-
ஜீவனின் வளர்ச்சி மனோவிற்கு எரிச்சல், அதனாலேயே புலம்பல்
ஜீவனின் வளர்ச்சி மனோவிற்கு எரிச்சல், அதனாலேயே புலம்பல் - இது காழ்ப்புணர்ச்சி - வங்குரோத்து அரசியலின் வெளிப்பாடாகும் PrashahiniFebruary 22, 2024 ஒரு இளம் அரசியல் தலைவராக மக்களுக்கான அரசியலை வெற்றிகரமாக முன்னெடுத்து, மக்களின் கோரிக்கைகளை அமைச்சர் ஜீவன் தொண்டமான் நிறைவேற்றிவருவதால், அரசியலில் தாம் காணாமல் போய்விடுவோம் என்ற பீதியிலேயே அவர் மீது சில எதிரணி மலையக அரசியல்வாதிகள் விமர்சனக் கணைகளைத் தொடுக்க ஆரம்பித்துள்ளனர். இது காழ்ப்புணர்ச்சி – வங்குரோத்து அரசியலின் வெளிப்பாடாகும் – என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவரும், பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிறுவனத்தின் தலைவருமான பாரத் அருள்சாமி தெரிவித்தார். வீட்டுரிமையையும், காணி உரிமையையும் வைத்து இதுவரை அரசியல் நடத்திவந்தவர்கள், இவ்விரண்டு உரிமைகளையும் அமைச்சர் ஜீவன் தொண்டமான் பெற்றுக்கொடுத்துவிட்டால், தாம் அரசியலில் அநாதையாகிவிடுவோம் என்ற அச்சம் அவர்களை ஆட்கொள்ள தொடங்கியுள்ளது. அதனால்தான் புலம்ப ஆரம்பித்துள்ளனர் எனவும் அவர் தெரிவித்தார். மலையக பெருந்தோட்ட மக்களுக்கு 10 பேர்ச்சஸ் காணி வழங்குவதற்கு சட்டப்பூர்வமாக அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது, ஆக 7 பேர்ச்சஸா அல்லது 10 பேர்ச்சஸா என கோமாளி அரசியல்வாதிகள் குழப்பமடைய தேவையில்லை, அதேபோல அவர்களின் ஆட்சிகாலத்தில் வழங்கப்பட்டது போல் காட்போல் உரித்து அல்ல, சட்டப்பூர்வமான காணி உரித்து பத்திரமே வழங்கப்படவுள்ளது எனவும் பாரத் அருள்சாமி சுட்டிக்காட்டியுள்ளார். “ விசேட அமைச்சரவை அனுமதியுடன் 10 பேர்ச்சஸ் வழங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனவே, 10 பேர்ச்சஸ் காணியுடன்தான் எமது மக்களுக்கு வீடுகள் வழங்கப்படும். பயனாளிகள் தேர்வும் முறையாகவே இடம்பெறும். இதனை இந்தியாவும், சம்பந்தப்பட்ட நிறுவனமும் மேற்பார்வை செய்யும். இதற்கு நாம் முழு ஆதரவு வழங்குவோம். தோட்டத்தில் வேலை செய்பவர்களுக்கு மட்டும் அல்ல, தோட்டத்தில் பிறந்திருந்தாலேயே வீடுதான். தோட்டத்தில் 5 வருடங்கள் வாழ்ந்திருந்தால் வீட்டை பெறுவதற்கு அவர் தகுதியுடையவராவார். கடந்த ஆட்சியின்போதே கட்சி பார்த்து வீடுகள் வழங்கப்பட்டன. இதன்போது புறக்கணிக்கப்பட்ட – பாதிக்கப்பட்ட மக்களுக்கும் நாம் முன்னுரிமை வழங்கியுள்ளோம். கட்டி முடிக்கப்படும் வீடுகள் காணி உரிமையுடன்தான் கையளிக்கப்படும். கடந்த காலங்களில் போன்று கண்டி உட்பட சில மாவட்டங்களில் வழங்கப்பட்டதுபோல் காட்போட் காணி வழங்கப்படமாட்டாது. கண்டி, ஹந்தானை பகுதியில் எவ்வித அடிப்படை வசதியும் இன்றியே வீடுகள் அமைக்கப்பட்டிருந்தன. எதிரணி மலையக அரசியல்வாதிகள் சொன்னாலும், சொல்லாவிட்டாலும்கூட ஹந்தானை பகுதியில் உள்ள அரச காணியை நாம் மக்களுக்கு பிரித்துகொடுக்கதான் போகின்றோம். காணி உரிமையையும், வீட்டுரிமையையும் வைத்து அரசியல் நாடகம் நடத்தி வந்தவர்கள், இவற்றுக்கு அமைச்சர் ஜீவன் தொண்டமான் செயல் வடிவம் கொடுத்துவருவதால் நடுங்கியுள்ளனர். கடந்த அரசின் இரு அமைச்சுகளையும், இராஜாங்க அமைச்சு பதவிகளையும் வைத்து செய்ய முடியாவற்றை தனி ஒருவனாக ஜீவன் செய்து காட்டியுள்ளதால் வன்மத்தை அவர்மீது வெளிப்படுத்த முற்படுகின்றனர். காலையில் எதிரணியிலும் இரவில் அரச தரப்புடனும் டீல் அரசியல் நடத்தும் இவர்களை விமர்சிப்பதுகூட எமக்கு இழுக்குதான். இருந்தாலும் சமூகத்தின் போலி கருத்துகளை விதைத்து மக்களை குழப்பக்கூடாது. அதனால்தான் இந்த தெளிவுபடுத்தல்.” என்றார். https://www.thinakaran.lk/2024/02/22/breaking-news/44310/ஜீவனின்-வளர்ச்சி-மனோவிற்/
-
கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி வழக்கு இன்று!
கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி வழக்கு இன்று! ஆதவன்) முல்லைத்தீவு, கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வு தொடர்பான வழக்கு இன்று முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றில் நடைபெறவுள்ளது. மனிதப்புதைகுழியின் அகழ்வு நட வடிக்கைகள் எதிர்வரும் முதலாம் திகதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான சாதக நிலைமைகள் தொடர்பாகவும், முன்னெடுக்கப்படுகின்ற விடயங்கள் தொடர்பாகவும் இன்றைய வழக்கில் ஆராயப்படவுள்ளது. அகழ்வு நடவடிக்கைகளுக்காக 5.7 மில் லியன் ரூபா நிதியமைச்சால் ஒதுக்கப்பட் டுள்ள நிலையில், அதன் ஒருபகுதி முன்னைய அகழ்வு நடவடிக்கைகளுக் குப் பயன்படுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில் அகழ்வுக்காக 13.7 மில்லியன் ரூபா மாவட்டச் செயலகத்திடம் கோரப்பட்டுள்ளது. முதலாம் திகதி அகழ்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. (ஏ) https://newuthayan.com/article/கொக்குத்தொடுவாய்_மனிதப்_புதைகுழி_வழக்கு_இன்று!
- ஒரு பல்கலைக் கழகமும் ஒரு இசைநிகழ்ச்சியும்- நிலாந்தன்
-
நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
நீலன் திருச்செல்வம் ஒரு சிறந்த சட்டவாளர், புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் கல்வி கற்ற புலமை மிகுந்தவர். தேர்தலில் மக்களால் தெரிவுசெய்யப்படாமல் பாராளுமன்ற உறுப்பினராக 83 இலும் பின்னர் 94 இலும் இருந்தவர். அடிப்படையில் அவர் ஒரு கறுவாத் தோட்டத்து உயர்குழாத்தினர். அவர் செய்த நன்மை என்னவென்றால், இலங்கையில் இனப்பிரச்சினைக்குத் தீர்வாக ஜீ.எல். பீரீஸுடன் சேர்ந்து ஒரு தீர்வுப்பொதியைத் தயாரித்தவர். இப்பொதி இணைந்த வடக்கு- கிழக்கு மாகாணங்களுடன் அதிகாரங்களை மாகாணங்களுக்கு பரவலாக்கும் திட்டங்களைக் கொண்டிருந்தது. 13 ஆவது திருத்தச் சட்டத்திற்கு மேலே சென்று ஒரு தீர்வை முன்வைத்தது. ஆக, சமஸ்டி என்று எழுத்தில் சொல்லாமல் ஒரு சமஸ்டித் தீர்வை முன்வைத்தது. இந்தப் பொதியை சிங்கள கடும்போக்கினரும், விடுதலைப் புலிகளும் ஏற்றுக்கொள்ளவில்லை. இந்தப் பொதியை தயாரித்தமையால்தான் அவர் “துரோகி” என அடைமொழி கொடுக்கப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்டார். மற்றும்படி அவர் எவரையும் காட்டிக்கொடுத்ததாக வரலாறு இல்லை. அதாவது, அவர் படுகொலை செய்யப்படுமளவிற்கு ஒரு தீமைகளும் செய்யவில்லை. இந்தப் பொதி தயாரிக்கப்ப்பட்டு 30 வருடங்களின் பின்னர் தமிழர்களுக்கான அரசியல் தீர்வு என்பது இந்திய- இலங்கை ஒப்பந்தமூடாக வந்த (13ஆவது திருத்தச்சட்டம்) நீர்த்துப்போன, அதிகாரம் இல்லாத, வடக்கும் கிழக்கும் பிரிக்கப்பட்ட மாகாண சபைகளுக்கு மேலாக இருக்காது. சந்திரிக்கா காலத்து பொதியைப் பற்றி அறிய https://noolaham.net/project/36/3532/3532.pdf
-
ரஸ்யாவிலிருந்து உக்ரைனிற்கு தப்பிச்சென்ற விமானி ஸ்பெயினில் சடலமாக மீட்பு – உக்ரைன் புலனாய்வு பிரிவினர் தகவல்
ரஸ்யாவிலிருந்து உக்ரைனிற்கு தப்பிச்சென்ற விமானி ஸ்பெயினில் சடலமாக மீட்பு – உக்ரைன் புலனாய்வு பிரிவினர் தகவல் கடந்தவருடம் இடம்பெற்ற இரகசிய நடவடிக்கையின் போது உக்ரைனிற்கு தப்பிவந்த ரஸ்ய விமானி ஸ்பெயினில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார். உக்ரைனின் புலனாய்வு பிரிவினர் இதனை தெரிவித்துள்ளனர். தெரிவித்துள்ளனர். மாக்சிம் குஸ்மினோவ் என்ற விமானியே உயிரிழந்தநிலையில் மீட்கப்பட்டுள்ளார். தொடர்மாடியொன்றின் வாகனத்தரிப்பிடத்தில் இவரது உடல் மீட்கப்பட்டுள்ளதாக உக்ரைனின் புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.அலிகண்டோவில் உள்ள வில்லாஜோயோசா நகரில் இவரது உடல் மீட்கப்பட்டுள்ளதாகவும் அருகில் உள்ள பகுதியில்கார் ஒன்று எரியுண்ட நிலையில்மீட்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. முதலில் இது குற்றவாளிகும்பலின் நடவடிக்கை என ஸ்பெய்ன் பொலிஸார் கருதியுள்ளனர் எனினும் பின்னரே இது ரஸ்ய உக்ரைன் மோதல் தொடர்பான விவகாரம் என்பது தெரியவந்துள்ளது. கடந்த வருடம் ஆகஸ்ட்மாதம் குஸ்மினோவ் இரண்டு தளங்களிற்கு இடையிலான விமானபறத்தலின் போது ரஸ்ய தரப்பிலிருந்து உக்ரைனிற்கு தப்பிவந்தார். ஹெலிக்கொப்டரில் எஸ்யு 27- எஸ்யு 30 போர்விமானங்களி;ற்கான உதிரிப்பாகங்களை கொண்டு செல்லும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த இவர் தனது ஹெலிக்கொப்டர் மூலம் உக்ரைனின் கட்டுப்பாட்டு பகுதியில் தரையிறங்கினார். ஆறுமாத இரகசிய நடவடிக்கையின் பயனாக இவரை உக்ரைனின் பக்கம் வரச்செய்ததாக உக்ரைனின் புலனாய்வுபிரிவினர் தெரிவித்திருந்தனர். அதற்கு முன்னதாக அவரது குடும்பத்தினர் ரஸ்யாவிலிருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். குஜ்மினோவ் மரணம் உறுதி செய்யப்பட்டால் அதற்கு ரஸ்ய அரசாங்கமே காரணம் என்ற குற்றச்சாட்டுகள் வெளியாகலாம். கடந்தகாலங்களில்அதன் கொலையாளிகள் ஐரோப்பாவில் பல கொலைகளில் ஈடுபட்டுள்ளனர். https://akkinikkunchu.com/?p=269046
-
யாழ்., தொல்புரத்தில் சிறுமி கடத்தல் சிறுவன் கைது
யாழ்., தொல்புரத்தில் சிறுமி கடத்தல் சிறுவன் கைது ஆதவன் 15 வயதுச் சிறுமியை 4 நாள்களாகக் கடத்தி வைத்திருந்த குற்றச்சாட்டில் 17 வயதுச் சிறுவனை நேற்று முன்தினம் கைது செய்துள்ளதாக வட்டுக்கோட்டைக் காவல் துறையினர் தெரிவித்தனர். வட்டுக்கோட்டைக் காவல் துறையினர் பிரிவுக்கு உட்பட்ட தொல்புரம் பகுதியில் 15 வயதுச் சிறுமியைக் காணவில்லை என்று அவரது மூத்த சகோதரியால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அதற்கு அமைவாக விசாரணைகளை முன்னெடுத்த காவல் துறையினர் அதேயிடத்தைச் சேர்ந்த 17 வயதுச் சிறுவனின் வீட்டிலிருந்து சிறுமியை மீட் டனர். யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனைக்காகச் சிறுமியைச் சேர்த்த காவல் துறையினர் சிறுவனைக் கைது செய்து நீதிமன்றில் முற்படுத்தியுள்ளனர். நேற்று முன்தினமும் 15 வயதான சிறுமியொருவரைக் கடத்தினார் என்ற குற்றச் சாட்டில் 22 வயதான இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. (எ https://newuthayan.com/article/யாழ்.,_தொல்புரத்தில்_சிறுமி_கடத்தல்_சிறுவன்_கைது
-
நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
உச்சநிலவரம்பு சட்டத்தைக் காட்டி சட்டத்தரணி தென்னந்தோப்புக் காணியில் ஒரு பகுதியை சுருட்டிவிட்டார்! இப்படியான சுத்துமாத்து தமிழ் சட்டவாளர்களிடம் உச்சநில வரம்புக்கு மேலாகவே காணிகள் இருந்திருக்கும்.! மேலும் இந்த சட்டத்தைக் கொண்டுவந்த சிறீமாவோ பண்டாரநாயக்கா தமது காணிகளையும் இழந்தார் என்று அறிந்திருக்கின்றேன். காணிச் சீர்திருத்தச் சட்டம் விவசாயத்தை நவீனப்படுத்த தடையாகத்தான் இருக்கின்றது. 25 ஏக்கர் வயல்காணி அல்லது 50 ஏக்கர் தோட்டக்காணி என்பது பெரும் இயந்திரங்களை வைத்து விவசாயம் செய்ய உதவாது.
-
தமிழ் அரசின் மத்திய குழு கிளிநொச்சியில் கூடுகின்றது – சட்ட சிக்கல் குறித்து ஆராயத் திட்டம்
தமிழ் அரசின் மத்திய குழு கிளிநொச்சியில் கூடுகின்றது – சட்ட சிக்கல் குறித்து ஆராயத் திட்டம் February 19, 2024 இலங்கை தமிழ் அரசு கட்சியின் தேசிய மாநாட்டு விவகாரம் சட்டச் சிக்கலை எதிர்கொண்டுள்ள நிலையில், அடுத்த கட்ட நடவடிக்கைள் குறித்து ஆராய்வதற்காக கட்சியின் மத்திய குழு உறுப்பினர்கள் கிளிநொச்சியில் கூடவுள்ளனர். எதிர்வரும் வெள்ளிக்கிழமை இந்தசந்திப்பு நடைபெறவுள்ளது. கட்சியின் தேசிய மாநாட்டை நடத்துவதற்கு திருகோணமலை, யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றங்கள் தற்காலிக தடையை கடந்த வியாழக்கிழமை விதித்தன. இந்த நிலையில், வரும் வெள்ளிக்கிழமை கிளிநொச்சியில் மத்திய குழு உறுப்பினர்கள் சந்திக்கின்றனர். இந்த சந்திப்பு மத்திய குழு கூட்டமாக அல்லாது உறுப்பினர்களின் சந்திப்பாகவே அமைகிறது. சட்ட ரீதியான பிரச்னைகள் எழலாம் என்பதற்காகவே மத்திய குழுவை உத்தியோகபூர்வ கூட்டமாக அறிவிக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. https://www.ilakku.org/தமிழ்-அரசின்-மத்திய-குழு/
-
”பொறுப்பான அரசியல் கட்சியாக யாப்பின்படி செயற்படுவதுதான் சரியான முறை”- சுமந்திரன்
வாட்ஸப்பில் கண்டது… இரண்டு அணிகள் என்பதே வழக்கிற்கான மூல காரணம்.! இலங்கைத்தமிழ் அரசுக்கட்சிக்குள் இரண்டு அணிகள் உண்டு என்ற கதையை கடந்த ஜனவரி 27, ம் திகதி நடந்த மத்தியகுழு மற்றும் பொதுச்சபை கூட்டத்தில் கௌரவ சுமந்திரன் அவர்களே மீளவும் ஒலிபெருக்கியில் பேசி உறுதிப்படுத்தினார்! அவருடைய அணியை சேர்ந்தவர்களே தற்போது யாழ்ப்பாணம், திருகோணமலை நீதிமன்றங்களில் கொழும்பில் இருந்து சட்டத்தரணிகளை பல இலட்சம் ரூபாய் செலவு செய்து வழக்கு தாக்கல் செய்துள்ளனர். கட்சியாப்பு (உபவிதி) என்பது 74, வருடங்களாக உள்ளது ஆனால் அது தேர்தல் திணைக்களத்திற்கு கட்டாயம் வழங்கப்படவேண்டும். இந்த யாப்பின் படி கடந்த 16, மாநாடுகளும் இடம்பெறவில்லை யாப்புக்கு அப்பால் சில விட்டுக்கொடுப்பு இணக்கப்பாடு , பேசுதல், சமரசம் காணுதல் என்ற அடிப்படையில்தான் சகல மாநாட்டு தெரிவுகளும் தந்தை்செல்வா காலம் தொடக்கம் மாவை அண்ணர் காலம் வரை எட்டுத்தலைவர்களும் வழிப்படுத்தினர். கட்சியை இலங்கை நீதிமன்றில் காட்டிக்கொடுக்கவில்லை. அப்போது இரண்டு அணிகள் இருக்கவில்லை ஒற்றுமையாக கட்சியை இயங்கவைத்தனர். இலங்கை நீதிமன்றில் அடவு வைக்காமல் பேசி கட்சியை சரி பிழைகளை கதைத்து கட்சியை முன்நோக்கி நகர்தினர். ஆனால் 17, வது இந்த மகாநாடுதான் தலைவருக்கு வேட்புமனுகோரி, மாவட்டங்களில் சென்று பிரசாரங்கள் மேற்கொண்டு ஜனநாயக கட்சி ஜனநாயக தேர்தல் என மக்களுக்கு கூறி தலைவர் தெரிவு இடம்பெற்றால் இருவரும் இணைந்து செயல்படுவோம் என பிரசாரங்களிலும் கூறிவிட்டு தலைவராக சிறிதரன் தெரிவான பின்னர் கடந்த ஜனவரி 27, ம் திகதி திருகோணமலையில் நடைபெற்ற மத்தியகுழு, பொதுச்சபை கூட்டத்தில் கௌரவ சுமந்திரன் மகிரங்கமாகவே இரண்டு அணிகள் உண்டு தமது அணிக்கு பொதுச்செயலாளர் பதவி தரப்படவேண்டும் அல்லது தமக்கு தரப்படவேண்டும் என கூறியதன் மூலம் தமிழரசுகட்சிக்குள் இரண்டு பிரிவு(அணி) உண்டு என்பதை உறுதிப்படுத்தினார். ஒரு உதாரணம் கடந்த 2019, ல் யாழ்ப்பாணத்தில் இறுதியாக நடந்த மாநாட்டில் எல்லாத்தெரிவுகளும் கௌரவ சுமந்திரன் எழுதிவாசித்து்நிறைவேறியது. கட்சியாப்பில் இல்லாத பிரதி பொதுச்செயலாளர் இருவர், மூத்த துணைத்தலைவர் இருவர் என சிலரை திருப்திப்படுத்தி பதவி வழங்கப்பட்ட வரலாறும் உண்டு . இரண்டு அணிகள் கதையால் குழப்பம் ஆரம்பமானது! இந்த அணிகள் என்ற்இரண்டு பிரிவானது தற்போது ஒரு அணி வழக்கு தாக்கல் செய்து தமிழரசுக்கட்சிக்குள் ஒற்றுமை இல்லை என்பதை உலகத்திற்கு நிருபித்துள்ளனர். எனவே கட்சியாப்பு எப்படி என்ன எழுதி இருந்தாலும் யாப்புக்கு அப்பால் பேசி பல விடயங்கள் கடந்த காலங்களில் ஒற்றுமையாக இணக்கப்பாடுடன் கட்சி முன்நோக்கி செய்த வரலாற்றை இந்த வழக்குமூலம் கட்சிக்குள் ஒற்றுமை இல்லை என்பது நிருபணமாகியுள்ளது! -பா.அரியநேத்திரன்- 18/02/2024
-
”பொறுப்பான அரசியல் கட்சியாக யாப்பின்படி செயற்படுவதுதான் சரியான முறை”- சுமந்திரன்
”பொறுப்பான அரசியல் கட்சியாக யாப்பின்படி செயற்படுவதுதான் சரியான முறை” இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாப்பில் இருக்கின்ற விடயங்கள் சரியாக பின்பற்றப்படவில்லை என நீதிமன்றில் சுட்டிக்காட்டப்படுமாக இருந்தால் பொறுப்பான அரசியல் கட்சியாக அதனைத் திருத்தி யாப்பின்படி செயற்படுவதுதான் சரியான முறை என்று நான் கருதுகின்றேன்.” – இவ்வாறு தெரிவித்தார் ஜனாதிபதி சட்டத்தரணியும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன். இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா, தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் புத்திஜீவிகள் உள்ளிட்ட சிலரை நேற்றுமுன்தினம் (16) இரவு யாழ்ப்பாணத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார். இந்தச் சந்திப்புக்குப் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே சுமந்திரன் மேற்கண்டவாறு கூறினார். ‘இலங்கைத் தமிழரசுக் கட்சியினுடைய தேசிய மாநாட்டுக்கு யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஆகிய நீதிமன்றங்கள் தடை விதித்திருக்கின்றன. இது தொடர்பில் கட்சியின் ஊடகப் பேச்சாளர் என்ற வகையில் உங்கள் கருத்து என்ன?’ – என்று ஊடவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த சுமந்திரன், “யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றத்தால் எங்களுடைய நிர்வாகச் செயலாளருக்குக் கொடுக்கப்பட்ட ஆவணத்தைப் பார்வையிட்டிருந்தேன். திருகோணமலை நீதிமன்ற ஆவணம் இன்னும் யாரிடமும் சேர்க்கப்படவில்லை. கட்சி யாப்பிலே இருக்கின்ற சில சரத்துக்கள் மீறப்பட்டுள்ளன எனக் குற்றம் சுமத்தியே இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அப்படியான யாப்பு மீறல்கள் இருக்குமாக இருந்தால் அதனை நிவர்த்தி செய்து நாங்கள் அடுத்த கட்ட நடவடிக்கைக்குச் செல்லலாம் என்பதே என்னுடைய கருத்து. ஏனென்றால் ஒரு கட்சியினுடைய நடவடிக்கையைக் கட்டுப்படுத்துவது அல்லது முறைப்படுத்துவது அந்தக் கட்சியினுடைய யாப்பு மட்டுமே. பல தடவைகளிலே நாங்கள் சில விடயங்களைக் கவனிப்பதில்லை. அப்படிக் கவனிக்காமல் இருக்கின்றபோது அது பழக்கமாக வந்துவிடும். ஆனால், யாராவது அதைச் சவாலுக்கு உட்படுத்தினால்தான் அந்தப் பிரச்சினை வெளிப்படும். ஆகவே, யாப்பில் இருக்கின்ற விடயங்கள் சரியாகப் பின்பற்றப்படவில்லை எனச் சுட்டிக்காட்டப்படுமாக இருந்தால் பொறுப்பான அரசியல் கட்சியாக அதனைத் திருத்தி யாப்பின்படி செயற்படுவதுதான் சரியான முறை என்று நான் கருதுகின்றேன்.” – என்றார். ‘வழக்குத் தொடர்பிலே தமிழரசுக் கட்சியினுடைய முன்னாள் தலைவர்கள், இந்நாள் தலைவர்கள் யாரேனும் உங்களுடன் கலந்துரையாடி இருக்கின்றார்களா?’ என்று ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, யாரும் என்னுடன் இந்த வழக்குச் சம்பந்தமாக கலந்துரையாடவில்லை என்றும் அவர் தெரிவித்தார். http://www.samakalam.com/பொறுப்பான-அரசியல்-கட்சி/
-
ஒரு பல்கலைக் கழகமும் ஒரு இசைநிகழ்ச்சியும்- நிலாந்தன்
ஒரு பல்கலைக் கழகமும் ஒரு இசைநிகழ்ச்சியும்- நிலாந்தன் பாடசாலைகளை, பல்கலைக்கழகங்களைக் கட்டுவது உன்னதமானது. புலம்பெயர்ந்துபோன எல்லாத் தமிழர்களும் தாயகத்துக்கு திரும்பி வருவதில்லை. தாயகத்துக்கு திரும்பிவரும் எல்லாருமே தாயகத்தில் முதலீடு செய்வதில்லை. தாயகத்தில் முதலீடு செய்பவர்களிலும் மிகச்சிலர்தான் கல்வித்துறையில் முதலீடு செய்கிறார்கள். ஆளில்லா ஊரில் ஆலயங்களைக் கட்டுவதை விடவும் கல்விச்சாலைகளை கட்டுவது மகத்தானது. அப்படி ஒரு முதலீடுதான் கந்தர்மடம் சந்தியில் அமைக்கப்பட்டிருக்கும் நோர்தேன் யுனி என்று அழைக்கப்படும் தனியார் பல்கலைக்கழகம். போட்டிக் கல்வி வியாபாரமாக மாறிய ஒரு கல்விச்சூழலில், ஒரு முதலாளி கல்வியில் முதலீட்டைச் செய்யும்பொழுது அங்கேயும் வியாபார இலக்குகள் இருக்கும். ஆனால் தனது முதலீட்டை விளம்பரப்படுத்துவதற்காக சினிமாத் துறைப் பிரபல்யங்களை கொண்டு வரும்போதுதான் சர்ச்சை எழுகிறது. கடந்த இரு நூற்றாண்டுகளிலும் கிறிஸ்தவ மிஷனரிகளும் இந்து மத மறுமலர்ச்சியாளர்களும் போட்டிக்குப் பள்ளிக்கூடம் கட்டிய ஒரு பிரதேசம்தான் யாழ்ப்பாணம். நவீன யாழ்ப்பாணம் எனப்படுவது அவ்வாறு போட்டிக்குப் பள்ளிக்கூடம் கட்டிய ஒரு போக்கின் தேறிய விளைவு. அமெரிக்காவில் தமது சுகபோகங்களைத் துறந்து யாழ்ப்பாணத்திற்கு வந்து பள்ளிக்கூடங்களைக் கட்டிய மிஷன் தொண்டர்கள்; ஊரூராக பிடியரிசி சேர்த்து இந்துக் கல்லூரிகளைக் கட்டிய இந்து மறுமலர்ச்சியாளர்கள் என்ற மகத்தான முன்னுதாரணங்கள் ஈழத் தமிழர்களுக்கு உண்டு. இம்மாதம் ஆறாந் திகதி உடுவில் மகளிர் கல்லூரியில், அக்கல்லூரி ஸ்தாபிக்கப்பட்டு 200ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் கொண்டாட்டங்கள் தொடக்கின. சரியாக 200 ஆண்டுகளுக்கு முன் திருமதி.ஹரியற் வின்சிலோ என்று அழைக்கப்படும் அமெரிக்கப் பெண், தனது 28ஆவது வயதில் உடுவில் மகளிர் கல்லூரியைத் தொடங்கினார். தென்னாசியாவில் விடுதி வசதியோடு கூடிய முதலாவது பெண்கள் பள்ளி அது. யாழ்ப்பாணத்தில் ஹரியற் அம்மையார் தங்கியிருந்த காலத்தில் அவருடைய ஐந்து பிள்ளைகள் தொற்று நோய்க்கு இரையானார்கள். அமெரிக்காவுக்கு படிப்புக்காக அனுப்பப்பட்ட அவருடைய ஆண்பிள்ளை கடல் பயணத்தில் இறந்து போனார். தொடர்ச்சியான தனிப்பட்ட இழப்புகளால் நொறுங்கிப்போன போன ஹரியற் தன்னுடைய 37ஆவது வயதில், இளவயதில் இறந்து போனார். அவரோடு சேர்ந்து பணிபுரிய வந்த அவருடைய இரண்டு சகோதரிகள் அவருக்குப் பின் இறந்து போனார்கள். தன் மூன்று சகோதரிகளோடு சேர்ந்து பணிபுரிவதற்கென்று அமெரிக்காவிலிருந்து வந்த மற்றொரு சகோதரி யாழ்ப்பாணத்தில் வந்து இறங்கிய பின்னர்தான் தன்னுடைய ஏனைய மூன்று சகோதரிகளும் உயிரோடு இல்லை என்பதை அறிந்து கொண்டார். யாழ்ப்பாணத்தின் கல்வியை கட்டியெழுப்புவதற்காக எங்கேயோ பிறந்து எங்கேயோ வளர்ந்த வெள்ளைக்காரர்கள் இங்கு வந்து சந்நியாசிகள்போல வாழ்ந்து, தொண்டு புரிந்திருக்கிறார்கள். அவர்கள் மதம் மாற்றினார்கள் என்ற குற்றச்சாட்டை முன்வைத்து அவர்களுடைய செயற்பாடுகளுக்கு எதிராக இந்து மறுமலர்ச்சியாளர்களும் இந்து அறக்கட்டளைகளும் பள்ளிக்கூடங்களைக் கட்டியெழுப்பினார்கள். மிஷன் பள்ளிக்கூடங்களை எதிர்கொண்டு ஆறுமுக நாவலர் யாழ்ப்பாணத்தில் சுதேசிகளின் பள்ளிக்கூடங்களைக் கட்டினார். அவ்வாறு பள்ளிக்கூடங்களைக் கட்டுவதற்கு அவர் பிடியரிசித் திட்டம் என்ற ஒரு சமூகப் பங்களிப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். கிராமங்கள் தோறும் பிடியரசி சேகரிக்கப்பட்டு, அந்த நிதியில் யாழ்.இந்துக் கல்லூரியும் உட்பட பல்வேறு சுதேச பள்ளிக்கூடங்களை இந்து மறுமலர்ச்சியாளர்களும் இந்து அறக்கட்டளைகளும் கட்டினர். உடுவில் மகளிர் கல்லூரியில் இருந்து சில கிலோமீட்டர் தூரத்தில் மருதனார் மடத்தில் ராமநாதனின் கல்லூரி கட்டப்பட்டது. அப்பள்ளிக்கூடத்தின் ஸ்தாபகர்களில் ஒருவராகிய திருமதி லீலா ராமநாதன் ஒரு ஒஸ்ரேலியப் பெண். அவருடைய சேவையை வியந்து போற்றுபவர்கள் அவருடைய வெண்ணிறப் பாதங்களில் அந்த ஊரின் செம்பாட்டுச் சாயம் நிரந்தரமாக ஒட்டிக் கொண்டிருக்கும் என்று கூறுவார்கள். உடுவில் மகளிர் கல்லூரியின் முதலாவது பட்டதாரி இவ்வாறு எங்கேயோ பிறந்து எங்கேயோ வளர்ந்த வெள்ளைக்காரப் பெண்களும் ஆண்களும், உள்ளூரில் சைவசமய மறுமலர்ச்சியாளர்களும் கல்விச்சாலைகளைக் கட்டியெழுப்பிய போது அவர்கள் அதை அதிகபட்சம் தொண்டாகவே செய்தார்கள். கல்விப் பணி என்பது உன்னதமான ஒரு தொண்டாகக் கருதப்பட்டு, போற்றப்பட்ட காலகட்டம் அது. இப்படிப்பட்ட கல்விச்சாலைகளைக் கட்டும் ஒரு பாரம்பரியத்தின் பின்னணியில் வைத்து நோர்தென் யூனியையைப் பார்க்க வேண்டும். அந்த பல்கலைக்கழகம் கட்டப்பட்டிருக்கும் கந்தர் மடம் சந்தியில் இருந்து அரசடிச் சந்தியை நோக்கி வரும் கந்தர் மடம் வீதியில், முன்பு ஒரு சைவப் பிரகாசா வித்தியாசாலை இருந்தது. அங்கே மாணவர்களின் வரவு குறைந்தபடியால் அப்பள்ளிக்கூடம் மூடப்பட்டு; பின்னர் இடிக்கப்பட்டு அந்த இடத்தில் இப்பொழுது ஏதோ ஒரு அரச கட்டடம் கட்டப்பட்டிருக்கிறது. அச்சிறிய பள்ளிக்கூடத்துக்கு ஈழப்போரில் ஒரு முக்கியத்துவம் உண்டு. 1983ஆம் ஆண்டு தொடக்கத்தில், உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடந்தபொழுது சைவப்பிரகாச வித்தியாசாலை ஒரு வாக்களிப்புச் சாவடியாக இருந்தது. அத்தேர்தலைப் பகிஷ்கரித்த விடுதலைப் புலிகள் இயக்கம் அந்தச் சாவடியில் காவலுக்கு நின்ற படையினர் மீது தாக்குதல் நடத்தியதில் ஒருவர் கொல்லப்பட்டார். இப்பொழுது மாணவர்கள் இல்லை என்பதால் அப்பள்ளிக்கூடம் மூடப்பட்டு விட்டது. அது அமைந்திருக்கும் வீதி பலாலி வீதியில் வந்து ஏறும் சந்தியில் நோர்தேன் யூனி கட்டப்பட்டிருக்கிறது. கனடாவில் வசிக்கும் தமிழ் முதலீட்டாளர் அதைக் கட்டியிருக்கிறார். தனது தாயகத்தில் அவர் முதலீடு செய்ய விரும்புகிறார். குறிப்பாக அதனைக் கல்வித் துறையில் முதலீடு செய்ய விரும்புகிறார். தமிழ் மக்களுக்கு தனியார் பல்கலைக்கழகங்கள் வேண்டும். தமிழ்மக்கள் தங்களுக்கு வேண்டிய துறைகளை விருத்தி செய்வதற்கு அரசாங்கத்தில் தங்கியிராத அதுபோன்ற பல்கலைக்கழகங்கள் வேண்டும். அந்த அடிப்படையில் அந்த முதலீட்டை வரவேற்க வேண்டும். இராமநாதன் இணையர் அந்த முதலீட்டாளரின் மனைவி இந்தியாவின் சினிமாப் பிரபல்யங்களில் ஒருவரான ரம்பா. அதனால் அப்பல்கலைக்கழகத்தை விளம்பரப்படுத்த முயன்ற முதலீட்டாளர் தன்னுடைய மனைவியின் துறைசார்ந்து சிந்தித்து விட்டார். தன் மனைவியின் துறை சார்ந்த பிரபல்யங்களை கொண்டு வந்து பெருமெடுப்பில் ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சியை ஒழுங்குபடுத்துவதன்மூலம் தனது பல்கலைக்கழகத்திற்குப் பொருத்தமான விளம்பரம் கிடைக்கும் என்று அவர் கருதியிருக்கலாம். தமிழ் வெகுசனைப் பண்பாட்டில் சினிமாவின் தாக்கம் வலியது. பெருந்தமிழ் பரப்பில், குறிப்பாக தமிழகத்தில், அரசியல் எனப்படுவது ஏதோ ஒரு விகிதமளவுக்கு சினிமாவின் நீட்சியும் அகட்சியும்தான். ஊடகமாகட்டும் பொழுதுபோக்கு ஆகட்டும், எல்லாவற்றிலும் சினிமாவின் தாக்கம் உண்டு. கேபிள் தொலைக்காட்சி எனப்படுவது சுந்தர ராமசாமி கூறுவதுபோல வீட்டுக்கு வந்த திரைப்படம்தான். அது வீட்டில் வரவேற்பறையில் எப்பொழுதும் இருப்பது. எனவே தமிழ்ப் பொது உளவியலின் மீது தமிழ்ச் சினிமாவின் செல்வாக்குப் பெரியது. தென்னிந்திய வணிக சினிமாவானது மேலோட்டமானது; தமிழ்ப் பொதுப் புத்தியைச் சுரண்டுவது அல்லது அவமதிப்பது; பெண்ணுடலைப் போகப்பொருளாகப் பார்ப்பது. தமிழில் ஜனரஞ்சகமானவற்றுள் பெரும்பாலானவை மேலோட்டமானவை; ஆழமற்றவை; அறிவுக்கு விரோதமானவை. இந்த அடிப்படையில் பார்த்தால் அறிவைக் கட்டியெழுப்பும் ஓர் உயர்கல்வி நிறுவனத்துக்கு ஜனரஞ்சகமான விளம்பரஉத்தி ஒன்றைத் தெரிந்தெடுத்த விடயத்தில் அந்த முதலீட்டாளர் தவறிழைத்து விட்டார். நிகழ்வில் கூடிய கூட்டத்தைக் கட்டுப்படுத்த அவர் மேடையில் பேசுகிறார். தமிழ் மக்களுக்கு நன்மை செய்வதற்காகத்தான் புலம்பெயர்ந்து போன நாட்டில் இருந்து வந்திருப்பதாக கூறுகிறார். ஆனால் கூட்டம் அவருக்கு அடங்கவில்லை. அவருடைய மனைவி ரம்பா பேசுகிறார். கூட்டம் அடங்கவில்லை. போலீஸ் அதிகாரி பேசுகிறார் கூட்டம் அடங்கவில்லை. அப்படி ஒரு கூட்டத்தை எதிர்பார்த்து அதற்கு வேண்டிய முன்னேற்பாடுகள் செய்யப்படாததன் விளைவு அது. புலம்பெயர்ந்த தமிழர்களின் நிதி அதிகாரத்துக்குள்ள வரையறைகளை உணர்த்திய ஒரு நிகழ்வும் அது. ஆனால் அந்தக் குழப்பம் புலம்பெயர்ந்த தமிழர்களின் முதலீடுகளுக்கு விரோதமானது அல்ல. முதலீட்டை விளம்பரப்படுத்த எடுத்துக்கொண்ட வியாபார உத்தியின் விளைவு அது. மேலும்,ஹரிஹரனின் இசையை பார்வையாளர்கள் அவமதித்ததாகவும் எடுத்துக்கொள்ளத் தேவையில்லை. ஒரு தமிழ் முதலீட்டாளர் தமிழ் பொதுப்புத்தியை கையாள்வதில் கற்றுக்கொள்ள வேண்டிய விடயங்கள் உண்டு என்பதனை உணர்த்திய ஒரு குழப்பம் அது. தாயகத்தில் புலம்பெயர்ந்த தமிழர்களின் முதலீடுகள் தொடர்பாக முதலீட்டாளர்களும் தாயகத்தில் உள்ள அரசியல் சமூகமும் இணைந்து ஒன்றிணைந்த ஒரு வேலைத் திட்டத்துக்குப் போகவேண்டியிருப்பதை உணர்த்திய ஒரு நிகழ்வு அது. தாயகத்துக்கு முதலீடுகள் அவசியம். தாயகத்தில் தொழில் வாய்ப்புகள் இல்லை; அல்லது மகிழ்ச்சியான ஒரு வாழ்க்கை இல்லை; அல்லது முன்னேறுவது கடினம் என்று கருதும் ஒரு தொகுதி மக்கள் தாயகத்தைவிட்டு வெளியேறிக் கொண்டிருக்கும் ஒரு காலகட்டம் இது. “இந்த மண் எங்களின் சொந்த மண்”என்று பாடிய ஒரு மக்கள் கூட்டம், அந்த மண்ணை விட்டு வெளியேறிக் கொண்டிருக்கிறது. எனவே தாயகத்தைத் தொழிற் கவர்ச்சி மிக்கதாக மாற்ற வேண்டும். அதற்கு முதலீடுகள் அவசியம். ஆனால் அந்த முதலீடுகளை எந்த நோக்கு நிலையில் இருந்து முன்னெடுப்பது என்பதுதான் இங்குள்ள சவால். “நாங்கள் தானம் செய்கின்றோம் அல்லது தொண்டு செய்கிறோம்”என்ற நிதி அதிகார மனோநிலையில் இருந்து அல்ல, மாறாக, தமிழ்த் தேசத்தைக் கட்டியெழுப்புவது; அதற்கு வேண்டிய துறைசார் நிறுவனங்களைக் கட்டியெழுப்புவது என்ற நோக்குநிலையில் இருந்து புலம்பெயர்ந்த தமிழ் முதலீட்டாளர்கள் தாயகத்தில் முதலீடுகளைச் செய்ய வேண்டும். அதாவது தேச நிர்மானத்தின் பங்காளிகள் என்ற அடிப்படையில் முதலீட்டாளர்கள் தாயகத்தை நோக்கி வரவேண்டும். புலம்பெயர்ந்த தமிழ் முதலாளிகளை எப்படி தேச நிர்மானத்தின் பங்காளிகளாக மாற்றுவது என்று தாயகத்தில் உள்ள அரசியல் சமூகம் சிந்திக்க வேண்டும். முதலாளிகள், அவர்கள் தமிழர்களோ, சிங்களவர்களோ,வெள்ளைக்காரர்களோ யாராக இருந்தாலும், முதலாளிகள்தான். அவர்களிடம் லாப நோக்கம் இருக்கும். முதலாளிகள் அப்படித்தான் சிந்திப்பார்கள். ரணில் விக்கிரமசிங்க புலம்பெயர்ந்த தமிழர்களின் முதலீடுகளை கொழும்புமைய நோக்கு நிலையில் இருந்துதான் அணுகுவார். அவர் அப்படித்தான் சிந்திப்பார். ஆனால்,முதலீடுகளை தேச நிர்மாணத்தின் ஒரு பகுதியாகத் திட்டமிட வேண்டியது தாயகத்தில் உள்ள அரசியல் சமூகத்தின் பொறுப்பு, கொழும்பின் நோக்கு நிலையில் இருந்தல்ல; அல்லது தனிய லாப நோக்கு நிலையில் இருந்தல்ல;தேசத்தைக் கடியெப்புவது என்ற நோக்கு நிலையிலிருந்து முதலீடு செய்யுமாறு,தமிழ் முதலீட்டாளர்களை ஊக்குவிக்கவேண்டும். அவர்களைத் தேச நிர்மாணத்தின் பங்காளிகளாக்க வேண்டும். பாரதி பாடியது போல “ஆலைகள் செய்வோம்;கல்விச் சாலைகள் செய்வோம்” https://www.nillanthan.com/6549/
-
வலி.வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்தில் உள்ள 7 ஆலயங்களில் வழிபட அனுமதி!
வலி.வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்தில் உள்ள 7 ஆலயங்களில் வழிபட அனுமதி! adminFebruary 18, 2024 யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு பிரதேச செயலக பிரிவில் உயர் பாதுகாப்பு வலயத்தினுள் சில ஆலயங்களில் இராணுவத்தினரின் கட்டுப்பாடுகளுடன் பொது மக்கள் வழிபாடுகளில் ஈடுப்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.இதற்கமைய வலி.வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள 21 ஆலயங்களில் ஏழு ஆலயங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆலய வழிபாடுகளுக்கு செல்ல விரும்புவோர், தமது பெயர், முகவரி ,அடையாள அட்டை இலக்கம், தொலைபேசி இலக்கம் என்பவற்றை ஆலய நிர்வாகத்தினரிடம் ஒப்படைக்கவேண்டும். குறித்த விபரங்களை நிர்வாகத்தினர் மாவட்ட செயலகம் மற்றும் பிரதேச செயலகம் என்பவற்றில் கையளிக்கவேண்டும். மேலும், குறித்த உயர் பாதுகாப்பு வலயத்தினுள் செல்வதற்கான போக்குவரத்து ஏற்பாடுகளை இராணுவமே மேற்கொள்ளும் என்றும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. https://globaltamilnews.net/2024/200636/
-
’அந்த நான்கு பேரைப் பற்றி பேசாதே’ : கட்சியினருக்கு சீமான் கட்டளை!
’அந்த நான்கு பேரைப் பற்றி பேசாதே’ : கட்சியினருக்கு சீமான் கட்டளை! Feb 18, 2024 13:30PM மக்களவைத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிற நிலையில் நாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மாவட்ட நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் நேற்று பிப்ரவரி 17ஆம் தேதி சென்னையில் நடந்தது. ஆங்காங்கே தொகுதிகளின் வேட்பாளர்களை அறிவித்து வருகிறார் சீமான். இதையடுத்து ’அந்த வேட்பாளர் சரியில்லை’, ’இந்த தொகுதியில் ஏற்கனவே தேர்தல் பணியில் ஈடுபட்டு வருபவரை புறக்கணித்துவிட்டு புதிதாக வந்தவருக்கு வாய்ப்பு கொடுக்கிறீர்கள், இது சரியல்ல’ என்றெல்லாம் சீமானுக்கு புகார்கள் போயிருக்கின்றன. இந்த நிலையில் நேற்று ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய சீமான், “ஒவ்வொரு தொகுதிக்கும் வேட்பாளரை நான் தான் முடிவு செய்கிறேன். அந்த வேட்பாளர் சரியில்லை என்று நீ என்னிடம் சொன்னால் நான் சரியில்லை என்று தானே சொல்கிறாய்? நமது கட்சியை பொறுத்த வரைக்கும் வேட்பாளர் என்பது ஒரு கருவி மட்டும் தான். தேர்தல் ஆணையம் ஒருவரை நிறுத்த வேண்டும் என்று கூறியிருப்பதால் நாம் பல்வேறு தகுதி படைத்த நம் நபர்களில் இருந்து ஒருவரை மட்டும் நிறுத்துகிறோம். மற்றபடி எல்லா தொகுதிகளும் நமது கட்சி தான் வேட்பாளர் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். நமக்குள் சச்சரவு கொண்டிருக்காமல் ஒற்றுமையாக இருந்து தேர்தல் வேலைகளை பாருங்கள். வருகிற மக்களவைத் தேர்தலில் அதிக வாக்குகள் வாங்கக்கூடிய தொகுதியின் பொறுப்பாளர், அதிக வாக்குகள் வாங்கி தரக்கூடிய சட்டமன்றத் தொகுதியின் பொறுப்பாளர், வாக்குச்சாவடி பொறுப்பாளர் என ஒவ்வொருவருக்கும் பிரபாகரன் படம் போட்ட தங்க நாணயத்தை நானே பரிசாக கொடுப்பேன்”என்று தெரிவித்த சீமான் கட்சியினருக்கு முக்கியமான ஒரு கட்டளையை பிறப்பித்துள்ளார். “நமது தம்பிகள் மேடைகளிலும் சமூக தளங்களிலும் நமது அன்புக்குரிய சில தலைவர்களை தொடர்ந்து விமர்சித்து வருகிறீர்கள். அவர்கள் நம்மைப் பற்றி பேசினாலும் நாம் அது பற்றி கவலைப்படாமல் கடந்து விட வேண்டும். அண்ணன் திருமாவளவன், அய்யா வைகோ, அய்யா ராமதாஸ், சகோதரர் அன்புமணி ஆகியோரை பற்றி நாம் தமிழர் தம்பிகள் இனி விமர்சிக்க வேண்டாம்” என்று அன்பு கட்டளை இட்டுள்ளார் சீமான். https://minnambalam.com/political-news/dont-talk-about-those-four-people-seaman-orders-the-party-members/
-
இலங்கை ஜனாதிபதி தேர்தல்-2024.
@ஈழப்பிரியன் ஐயா ஆய்வாளர் ஆகிவிட்டார்😃 சிங்கள மக்கள் என்ன செய்வார்கள் என்பது எவருக்கும் தெரியாது!
-
(தீ) சுவடு
மிகவும் நெருடலான கதை. கைவிடப்பட்டவர்கள் தங்களைத் தாங்களே பார்த்துக்கொள்ளும் நிலைதான் அதிகம்.
-
சித்திரப்பேழை...... ஷோபாசக்தி.
கொப்பி-பேஸ்ற்றில் ஆங்கிலத்தில் இருந்த சொற்களைக் காணவில்லை @யாயினி! //திடீரென ஓர் உந்துதல் ஏற்படக் கைத்தொலைபேசியை எடுத்து, கூகுளில் ‘communist countries today’ என்று தட்டிப் பார்த்தார். // முதலாளித்துவம், தாராளவாதம், ஜனநாயகம் என்பவற்றுக்கு மாற்றான புட்டினின் ரஷ்யாவை கொம்யூனிஸ்ற் நாடுகளில் ஒன்றாக கூகிள் சொல்லாமல் விட்டது கவலைக்குரியது! தோழர் ஷோபாசக்தி வழமைபோன்று சொற்களால் செதுக்கியிருக்கின்றார். ஆனாலும் யசோதா சாம்பலைக் கரைத்தது கொம்யூனிஸ கியூபாவின் கடலிலா அல்லது தனியாருக்குச் சொந்தமான வரடேரோவிலா என்பதில் குழப்பம்தான்!