Everything posted by கிருபன்
-
சிறிதரன் எம்.பியின் கருத்து:முஸ்லிம்கள் ஒரு தேசிய இனம் இல்லையா?
சிறிதரன் எம்.பியின் கருத்து:முஸ்லிம்கள் ஒரு தேசிய இனம் இல்லையா? மொஹமட் பாதுஷா இலங்கையில் உண்மையிலேயே எத்தனை தேசிய இனங்கள் வாழ்கின்றன? முஸ்லிம்களும்; மலையக மக்களும் தனித்தனியான தேசிய இனங்கள் இல்லையா என்ற கேள்வி இப்போது எழுந்துள்ளது. தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் அண்மையில் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையைத் தொடர்ந்தே இந்த கேள்விக்கான விடையைத் தேட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. சபையில் உரையாற்றிய சிறிதரன் எம்.பி. ‘சபாநாயகர் அவர்களே, இந்த நாட்டில் இரு தேசிய இனங்கள் உள்ளன. ஒன்று தமிழ் பேசும் மக்கள் தமிழ்த் தேசிய இனம் மற்றையது சிங்கள தேசிய தினம் ஆகியவையாகும்’ என்று கூறி, தொடர்ச்சியாக உரையாற்றினார். பெருந்தேசிய அரசியலில் தற்போதைய ஜனாதிபதியான அனுரகுமார திசாநாயக்க ஒரு எம்.பியாக எவ்வாறு கனகச்சிதமாக உரையாற்றினாரோ, அவ்வாறு உரையாற்றுகின்ற ஒரு தமிழ் அரசியல்வாதியாகவே சிறிதரன் எம்.பியைச் சொல்ல முடியும். இவர் உரையாற்றுகின்ற பாணிக்கு முஸ்லிம் சமூகத்திடையேயும் ஒரு வரவேற்பிருந்தது எனலாம். இலங்கையில் சிங்கள மக்கள், தமிழ் மக்கள் மட்டுமன்றி, முஸ்லிம் மக்களும் மலையக மக்களும் கூட தனியான தேசிய இனங்களாக வாழ்கின்றனர். ஏன்? கத்தோலிக்க மக்களும், பூர்வீகக் குடியைச் சேர்ந்த (வேடுவ) மக்களும் தங்களைத் தேசிய இனங்களாக முன்னிறுத்த முடியும் என்பதுதான் யதார்த்தமாகும். இதுவெல்லாம் தெரியாத ஒரு அரசியல்வாதி என சிறிதரனை குறிப்பிட முடியாது. அத்துடன், அவர் தவறுதலாக உரையாற்றியதாகக் குறிப்பிடவும் முடியாது. அப்படிச் செய்திருந்தால் அந்த 20 நிமிட உரையில் எங்காவது ஒரு இடத்தில் அவர் அதனைத் திருத்தியிருப்பார் அல்லது வெளியில் வந்து ஒரு அறிக்கையை வெளியிட்டிருப்பார். எனவே, அவர் இதனைத் தெளிவாக, திட்டமிட்டே உரையாற்றியிருக்கின்றார் என்றே எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது. சிறிதரனுக்குப் பிறகு பாராளுமன்றத்தில் உரையாற்றிய தமிழ் எம்.பிக்களும் இவ்விடயத்தைச் சரிப்படுத்தவோ சமாளிக்கவோ முற்படவில்லை என்பது இங்கு கவனிப்பிற்குரியது. இந்த நாட்டில் இரண்டு தேசிய இனங்கள் மட்டும்தான் வாழ்கின்றன என்ற தொனியில் உரையாற்றியதன் மூலம், அபத்தமானதும் பிற்போக்குத்தனமானதுமான கருத்தொன்றை மேற்படி தமிழ் எம்.பி. முன்வைத்திருக்கின்றார். இப்படியொரு கருத்தை சிறிதரன் போன்றவர்களிடமிருந்து முஸ்லிம் சமூகம் எதிர்பார்க்கவில்லை. வரைவிலக்கண அடிப்படையில் நோக்கினால், இனம் என்பது வேறு, தேசிய இனம் என்பது வேறு. ஒரு மக்கள் கூட்டம் வாழுகின்ற நிலப்பகுதி, கலாசாரம், பண்பாட்டு நடைமுறைகள், இன மரபு வரலாறு, மதம், மொழி என்பவற்றின் அடிப்படையிலேயே தேசிய இனங்கள் வரையறை செய்யப்படுகின்றன. இதன் அடிப்படையில் முஸ்லிம்கள் நூற்றாண்டு காலமாக இலங்கையில் ஒரு தேசிய இனமாக ஆகிவிட்டனர். இது, தமிழ்த் தேசியமோ சிங்கள தேசியமோ நிராகரிக்க முடியாத நிதர்சனமாகும்.அதனையும் மீறி யாராவது, இரண்டு தேசிய இனங்கள்தான் இந்த நாட்டில் உள்ளன என்று கூறுவார்களாயின் அதன் பின்னால் ஒரு கருத்தியல் ரீதியான நிகழ்ச்சிநிரல் இருக்கின்றது என்றுதான் கருத வேண்டியுள்ளது. ஆரம்பக் காலங்களில் மொழியைப் பிரதான காரணியாக வைத்து தேசிய இனங்கள் தீர்மானிக்கப்பட்டாலும் அப்படி மொழியை மட்டும் கொண்டு தேசிய இனங்களைத் தீர்மானிக்கும் காலம் இப்போது மலையேறிப் போய்விட்டது. இப்போது மொழி என்பது, ஒரு தேசிய இனத்தை அடையாளப்படுத்துவதற்கான ஏகப்பட்ட காரணிகளுள் ஒரேயொரு காரணி மட்டுமே என்பதைக் கவனிக்க வேண்டும். முஸ்லிம்கள் மொழியால் ஒன்றுபட்டாலும் ஏனைய காரணிகளால் வேறுபடுகின்றார்கள். கலாசாரம், மதம், பண்பாடு, மரபினம், ஆட்புல எல்லை, பொருளாதார அம்சங்கள் என ஏனைய எல்லா விதத்திலும் பிரத்தியேகமான அடையாளங்களை முஸ்லிம் சமூகம் கொண்டிருக்கின்றது. அத்துடன், தெற்கில் பல பகுதிகளில் முஸ்லிம்கள் தங்களது தாய் மொழியாக சிங்களத்தையே பேசுகின்றனர் என்பதையும் சிறிதரன் போன்றோர் மறந்து விடக் கூடாது. அவர் சொல்வது போல, வடக்கு, கிழக்கில் மொழியை அடிப்படையாக வைத்து முஸ்லிம்களைத் தமிழ் பேசும் தேசிய இனமாகக் கருதுவதாயின், தெற்கில் முஸ்லிம்கள் சிங்களத்தைப் பிரதானமாகப் பேசுகின்றார்கள் என்பதற்காக சிங்கள தேசிய இனத்திற்குள் உள்ளடக்க முடியுமா? அது மட்டுமன்றி, தமிழை விட அதிகமாக சிங்களத்தைப் பேசுகின்ற தமிழர்களையும் சிங்கள தேசிய இனமாகக் கொள்ள முடியுமா? முஸ்லிம்களும் தமிழர்களும் தமிழ் பேசும் சமூகங்களே அன்றி தமிழ் பேசும் ஒரு தனி தேசிய இனம் அல்ல. வடக்கு, கிழக்கில் அவர்கள் தமிழர்களோடும் அதற்கு வெளியே பெரும்பான்மைச் சமூகத்தோடும் பின்னிப் பிணைந்து வாழ்கின்றார்கள் என்பதற்காக தங்களது தேசிய இனத்திற்குள் முஸ்லிம்களை உள்ளடக்கி விட முடியாது. குறிப்பாக, முஸ்லிம்களும் தமிழ் பேசும் இனம் என்று கருதியிருந்தால் வடக்கில் இருந்து தனியே முஸ்லிம்களைப் புலிகள் வெளியேற்றியிருக்க மாட்டார்கள். வடக்கு, கிழக்கில் பல இடங்களில் முஸ்லிம்கள் ‘தனியாகப் பிரித்தெடுக்கப்பட்டு’ தமிழ் ஆயுதக் குழுக்களால் படுகொலை செய்யப்பட்டிருக்க மாட்டார்கள். இதனையெல்லாம் மறந்து விட்டு, கருத்துக் கூற முற்படும் பழமைவாத சிந்தனையைத் தமிழ் அரசியல்வாதிகள் களைய வேண்டும். முஸ்லிம்களைத் தனியொரு தேசிய இனமாகக் கூட கருத முடியாத மனநிலையில் இருக்கின்ற தமிழ் அரசியல்வாதிகள்தான், சிங்கள தேசியத்திடம் தமிழ் மக்களுக்கான உரிமையை வேண்டி நிற்கின்றனர் . என்பது முரண்நகை இல்லையா?20 இலட்சத்திற்கும் அதிகமான மக்களைக் கொண்ட ஒரு சமூகத்தை, மதம், கலாசாரம், பண்பாடு என பல அடிப்படைகளில் தனித்துவமான அடையாளங்களின் அடிப்படையில் ஒரு தேசிய இனமாகக் கூறுவதற்குக் கூட விரும்பாத சூழலில் நாம், நல்லிணக்கம் பற்றிப் பேசுவது நகைப்புக்கிடமானது இல்லையா?உலக அரங்கில் தேசிய இனங்களைப் பிரகடனப்படுத்தும் ஒழுங்குகள் எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்னரே மாறிவிட்டன. முன்னைய காலங்களில் மொழி ஒரு பிரதான தீர்மானிக்கும் சக்தியாக இருந்த போதும், இப்போது மொழியை விட வேறு பல காரணிகள்தான் தேசிய இனங்களைத் தீர்மானிக்கின்றன என்பதைத் தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளட்டும். மதப் பின்னணியை அடிப்படையாகக் கொண்டே நெதர்லாந்தில் வாழ்ந்த மக்களில் ஒரு பகுதியினர் தம்மைத் தேசிய இனமாக பிரகடனப்படுத்தி, பெல்ஜியம் என்ற நாடாகப் பிரிந்து சென்றனர். தவிர, மொழியை அடிப்படையாகக் கொண்டல்ல. இஸ்ரேல் உருவானதும் மொழியை அன்றி யூதர்கள் என்ற அடையாளத்தை மையமாகக் கொண்டே ஆகும். மதத்தை அடிப்படையாக வைத்து ஒரு தேசிய இனம் பாகிஸ்தான் என்ற நாட்டை உருவாக்கியது. உலகில் வாழும் ஆங்கிலம் பேசுகின்ற எல்லோருமே ஒரு தேசிய இனத்திற்குள் உள்ளடங்குவது கனவிலும் சாத்தியமில்லை. ஐரோப்பாவில், ஆங்கிலம் என்ற ஒரே மொழியைப் பேசுகின்ற சமூகங்கள் வேறு காரணங்களை முன்வைத்து தம்மை, தனியான தேசிய இனங்களாக முன்னிறுத்தி, பிரிந்து செல்ல முற்படுவதை நாம் கண்டிருக்கின்றோம். அரபு மொழியைப் பேசும் நாடுகளிலும் இவ்வாறு தனித்தனியான பல தேசிய இனங்கள்; உருவாகியுள்ளன.இதனையெல்லாம் இருட்டடிப்புச் செய்து விட்டு, இலங்கையில் இரு தேசிய இனங்கள் உள்ளன என்று நாட்டின் உயரிய சபையில் உரையாற்றிச் செல்வது. குறுகிய அரசியல் சிந்தனையையே வெளிப்படுத்துகின்றது. பாராளுமன்றத்தில் இக்கருத்தை சிறிதரன் எம்.பி. கூறியபோது, இரு முஸ்லிம் எம்.பிக்கள் மாத்திரம் எழுந்து பதிலளித்தனர். ஹக்கீம். றிசாட் போன்ற கட்சித் தலைவர்களும் அரச தரப்பு முஸ்லிம்களும் மௌனமாக இருந்தாலும் கூட, இக்கருத்தை ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகமும் கண்டிக்கின்றது. இப்படியான வேலையைச் சுதந்திரத்திற்குப் பின்னரான காலத்தில் இருந்தே பெயர் குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய சில தமிழ் தலைவர்கள் செய்து வந்தார்கள். ‘முஸ்லிம்களும் தமிழர்கள்’ அல்லது ‘தமிழ் பேசும் இனத்தவர்’ என்று சொன்னார்கள். ஆனால், அதனை முஸ்லிம் சமூகம் மறுதலித்து. தாங்கள் ஒரு தனி தேசிய இனம் என்பதைப் பல வழிகளில் நிரூபித்தது. பின்வந்த தமிழ்த் தேசிய தலைவர்கள் இந்த யதார்த்தங்களைப் புரிந்து கொண்டு செயற்பட்டதாகச் சொல்லலாம். ஆனால், சிறிதரன் எம்.பியின் அண்மைய உரையானது, தமிழ்த் தேசிய அரசியல்வாதிகள் குறுகிய அரசியல் சிந்தனை என்ற முருங்கை மரத்தில் மீண்டும் ஏறுகின்றார்களா? என்ற சந்தேகத்தைக் குறிப்பாக முஸ்லிம்களுக்கு ஏற்படுத்தியுள்ளது, இக்கருத்து உண்மையில், சிறிதரன் எம்.பியின் தனிப்பட்ட கருத்தா அல்லது ஒட்டுமொத்த தமிழ்த் தேசியத்தின் கருத்தும் இதுதானா என்பதைத் தெளிவுபடுத்துவது ஏனைய தமிழ் எம்.பிக்களின் பொறுப்பாகும். https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/சிறிதரன்-எம்-பியின்-கருத்து-முஸ்லிம்கள்-ஒரு-தேசிய-இனம்-இல்லையா/91-363965
-
எதிர்வரும் செப்டெம்பர் 24ஆம் திகதி சர்வதேச சபையில் அநுர வழங்கவுள்ள செய்தி -விஜித ஹேரத் தெரிவிப்பு!
எதிர்வரும் செப்டெம்பர் 24ஆம் திகதி சர்வதேச சபையில் அநுர வழங்கவுள்ள செய்தி -விஜித ஹேரத் தெரிவிப்பு! எதிர்வரும் செப்டெம்பர் 24ஆம் திகதி ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க ஐ.நா பொதுச் சபையில் உரையாற்றுவார் என்று வெளியுறவுத்துறை அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். மேலும், நல்லிணக்க பொறிமுறை மற்றும் யுத்தகால உரிமை மீறல்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை குறிப்பிட்டுள்ள தவறுகளை நிவர்த்தி செய்ய அரசாங்கத்திற்கு 'அதிக காலமும் விட்டுக்கொடுப்பும்' தேவை எனவும் அமைச்சர் விஜித ஹேரத் குறிப்பிட்டுள்ளார். ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 60ஆவது அமர்வு செப்டெம்பர் 8ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. பிரித்தானியா உட்பட பல நாடுகளின் குழுமம் இம்முறை இலங்கை பிரச்சினை தொடர்பில் மேலும் ஒரு தீர்மானத்தை முன்வைக்கவுள்ளன. அது குறித்து ஆரம்ப கலந்துரையாடல்கள் நடைபெற்றுள்ளன, ஆனால் தீர்மானம் இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில், மனித உரிமைகள் தொடர்பான உயர்ஸ்தானிகர் அலுவலகம் குறிப்பிட்டுள்ள தவறுகளை நிவர்த்தி செய்ய இலங்கைக்கு 'அதிக காலம் மற்றும் விட்டுக்கொடுப்பும்' தேவை என்று அமைச்சர் தெரிவித்துள்ளார். அதனால் இலங்கைக்கு தனது கருத்துக்களை முன்வைக்க இராஜதந்திர சமூகத்தின் ஆதரவு தேவையெனவும் அவர் குறிப்பிட்டார். இலங்கைக்கு விஜயம் செய்த ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க், நடைபெறவுள்ள அமர்வில் தனது அறிக்கையை முன்வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கை தொடர்பான ஐ.நா மனித உரிமைகள் பேரவைத் தீர்மானங்களை கடந்த அரசாங்கம் இராஜதந்திர ரீதியாக தாக்கல் செய்தது. கடந்த ஆண்டு இந்தத் தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டபோது தற்போதைய அரசாங்கமும் அந்தத் தீர்மானத்தை நிராகரித்தது. கடந்த 11 மாதங்களில் அரசாங்கம் மேற்கொண்ட முன்னேற்றங்கள் குறித்தும் அமைச்சர் இராஜதந்திர சமூகத்திற்கு விளக்கினார். கூட்டத்தில் கலந்து கொண்ட வெளியுறவுச் செயலாளர் அருணி ரணராஜா, செப்டெம்பர் 24 ஆம் திகதி ஜனாதிபதி ஐ.நா பொதுச் சபையில் உரையாற்றுவார் என்றும் கூறினார். https://newuthayan.com/article/எதிர்வரும்_செப்டெம்பர்_24ஆம்_திகதி_சர்வதேச_சபையில்_அநுர_வழங்கவுள்ள_செய்தி_-விஜித_ஹேரத்_தெரிவிப்பு!
-
ரணில் எதிர்க்கட்சிகளை ஐக்கியப்படுத்தக்கூடிய வல்லமையைப் பெற்றுவிட்டாரா?
ரணில் எதிர்க்கட்சிகளை ஐக்கியப்படுத்தக்கூடிய வல்லமையைப் பெற்றுவிட்டாரா? Veeragathy Thanabalasingham on September 1, 2025 Photo, Social Media முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இலங்கையின் அரசியல் வரலாற்றில் பல முதலாவது ‘சாதனைகளுக்கு’ சொந்தக்காரர். இந்த நாட்டின் மிகவும் பழைமை வாய்ந்த அரசியல் கட்சியான ஐக்கிய தேசிய கட்சியின் தலைவராக விக்கிரமசிங்கவை போன்று வேறு எந்த அரசியல் தலைவரும் நீண்டகாலம் பதவி வகித்ததில்லை. மூன்று தசாப்தங்களுக்கும் அதிகமான காலமாக தனது கட்சியின் தலைவராக இருந்து வரும் அவரே மிகவும் நீண்டகாலம் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக பதவி வகித்த அரசியல் தலைவர். இலங்கையின் அரசியல் வரலாற்றில் முதல் தடவையாக நாடாளுமன்றத்தில் தேர்தல் மூலமாக நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக தெரிவான முதல் அரசியல் தலைவர் விக்கிரமசிங்கவே. இறுதியில் அவரே அதிகார துஷ்பிரயோக குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட முதலாவது முன்னாள் ஜனாதிபதி என்ற அவப்பெயரையும் தனது சுமார் அரை நூற்றாண்டுகால அரசியல் வாழ்வின் அந்திமக் காலத்தில் சம்பாதிக்க வேண்டியதாகப் போய்விட்டது. ஜனாதிபதியாக இருந்த வேளையில் 2023ஆம் ஆண்டு செப்டெம்பரில் ஜி 77 நாடுகளின் உச்சி மகாநாட்டில் பங்குபற்றுவதற்காக கியூபாவுக்கும் அடுத்து ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 78ஆவது வருடாந்த கூட்டத்தொடரில் பங்குபற்றுவதற்காக அமெரிக்காவுக்கும் உத்தியோகபூர்வ விஜயங்களை மேற்கொண்ட விக்கிரமசிங்க நாடு திரும்பும் வழியில் லண்டனில் தனிப்பட்ட தேவைக்காக தங்கிநின்ற இரு நாட்கள் தனக்கும் தனது குழுவினருக்குமான செலவுகளுக்கு அரச பணத்தைப் பயன்படுத்தியதன் மூலம் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து விட்டார் என்பதே அவர் மீதான குற்றச்சாட்டாகும். முன்னாள் ஜனாதிபதியின் மனைவியான பேராசிரியை மைத்ரி. விக்கிரமசிங்கவுக்கு ஐக்கிய இராச்சியத்தின் பல்கலைக்கழகம் ஒன்று கௌரவப் பேராசிரியை பட்டம் வழங்கிக் கௌரவித்த வைபவத்தில் பங்கு பற்றுவதற்காகவே அவர் லண்டனுக்குச் சென்றார். பேராசிரியை மைத்ரி தனக்குரிய கௌரவத்தைப் பெறுவதற்காக தனது சொந்தப் பணத்திலேயே ஐக்கிய இராச்சியத்துக்கு சென்றிருந்தார். அமெரிக்க விஜயத்தை முடித்துக் கொண்டு லண்டனுக்குச் சென்று தங்கியிருந்த போது விக்கரமசிங்க தனது அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புப் பிரிவினருக்கான செலவினங்களுக்கு 16.6 மில்லியன் ரூபா அரச பணத்தை செலவிட்டதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருக்கிறது. இலங்கை பொலிஸின் குற்றவியல் புலனாய்வு திணைக்களத்தின் அழைப்பின் பேரில் ஆகஸ்ட் 22ஆம் திகதி தனது வாக்குமூலத்தை வழங்குவதற்கு அதன் தலைமையகத்துக்குச் சென்ற விக்கிரமசிங்கவை நீண்டநேரம் விசாரணை செய்த பிறகு பொலிஸார் கைதுசெய்து கொழும்பு கோட்டை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர். ‘நாடக பாணியிலான’ நிகழ்வுகளுக்குப் பிறகு அன்றையதினம் இரவு 10 மணிக்குப் பிறகு அவரை ஆகஸ்ட் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். கைவிலங்கிடப்பட்ட நிலையில் சிறைச்சாலை வாகனத்தில் கூட்டிச் செல்லப்பட்ட விக்கிரமசிங்கவின் உடல்நிலை கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்ததை அடுத்து அவர் முதலில் வெலிக்கடைச் சிறைச்சாலை வைத்தியசாலையிலும் பிறகு கொழும்பு தேசிய வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த அவரால் ஆகஸ்ட் 26ஆம் திகதி நீதிமன்றத்திற்கு செல்லமுடியவில்லை. இணையவழியின் மூலமாக நீதிமன்றத்தில் தனது பிரசன்னத்தை உறுதிசெய்த முன்னாள் ஜனாதிபதியின் உடல் நிலையைக் கருத்தில்கொண்டு கோட்டை மாஜிஸ்திரேட் அவரை தலா ஐந்து மில்லியன் ரூபா மூன்று ஆளுறுதிப் பிணையில் விடுதலை செய்தார். ஒருவாரகாலம் தேசிய வைத்தியசாலையில் தீவிரசிகிச்சைப் பிரிவில் இருதய நோய் மற்றும் நீரிழிவு உட்பட பல பாரதூரமான நோய்களுக்காக விசேட வைத்திய நிபுணர்களின் கண்காணிப்பில் சிகிச்சை பெற்ற பிறகு ஆகஸ்ட் 29 வெள்ளிக்கிழமை முன்னாள் ஜனாதிபதி வீடு திரும்பினார். வெளிநாட்டில் சிகிச்சை பெறுவதற்கு விக்கிரமசிங்க விரும்பினால் அரசாங்கம் அதற்கு அனுமதிக்குமா என்று தெரியவில்லை. முன்னாள் ஜனாதிபதி வெளிநாட்டுக்குச் செல்லாமல் இருப்பதை உறுதிசெய்வதற்கு அவரது கடவுச்சீட்டை பறிமுதல் செய்யுமாறு சட்டமா அதிபரின் சார்பில் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்படவில்லை என்பது கவனிக்கத்தக்கது. மீண்டும் விக்கிரமசிங்கவின் வழக்கு அக்டோபர் 29ஆம் திகதி விசாரணைக்கு எடுக்கப்படும். அவரின் கதியை இனிமேல் நீதிமன்றமே தீர்மானிக்கும் என்பதால் இதற்கு மேல் நாம் அதைப்பற்றி எதையும் கூறுவது நீதித்துறையை அவமதிப்பதாக அமைந்து விடும். அரச பணத்தை தனிப்பட்ட தேவைக்காக பயன்படுத்தியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு அவர் கைதுசெய்யப்பட்டதற்குப் பிறகு அந்த விவகாரம் முற்றிலும் சட்டப் பிரச்சினையாக மாறிவிட்டாலும் கூட, அது அரசியல் அரங்கில் பெரும் பதற்றத்தை தோற்றுவித்திருக்கிறது. விக்கிரமசிங்கவை கடந்த காலத்தில் மிகவும் கடுமையாக விமர்சித்த அரசியல்வாதிகளும் கூட அணிதிரண்டு அவருக்கு தங்களது ஆதரவையும் ஒருமைப்பாட்டையும் வெளிக்காட்டினர். பெரும்பாலும் சகல எதிர்க்கட்சிகளின் தலைவர்களுமே செய்தியாளர்கள் மகாநாடுகளைக் கூட்டி விக்கிரமசிங்கவை நியாயப்படுத்தியதுடன் ஜனாதிபதிகளின் உத்தியோகபூர்வ வாழ்வையும் தனிப்பட்ட வாழ்வையும் வேறுபடுத்திப்பார்க்கக் கூடாது என்றும் கூறினர். மேலும், விக்கிரமசிங்க மீதான சட்ட நடவடிக்கையை அவர்கள் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அரசியல் பழிவாங்கல் என்றே வர்ணிக்கிறார்கள். விக்கிரமசிங்கவுக்கு எதிரான நடவடிக்கையை முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க நாட்டின் ஜனநாயக விழுமியங்கள் மீதான பெரும் தாக்குதல் என்று கண்டனம் செய்த அதேவேளை, முன்னாள் ஜனாதிபதியான மஹிந்த ராஜபக்ஷ விக்கிரமசிங்கவின் கைதை அரசியல் பழிவாங்கல் என்று வர்ணித்தார். முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கட்டமைத்து வருகின்ற அரசியலமைப்பு ரீதியான சர்வாதிகாரத்தை தோற்கடிப்பதற்கு கட்சி வேறுபாடுகளை மறந்து எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என்று அழைப்பு விடுத்திருக்கிறார். கோட்டபாய ராஜபக்ஷ மாத்திரமே இந்த விவகாரத்தில் பகிரங்கமாக கருத்து எதையும் வெளியிடாமல் இருந்துவரும் முன்னாள் ஜனாதிபதியாவார். விக்கிரமசிங்க விவகாரம் ஒரு ஜனாதிபதியின் தனிப்பட்ட விஜயங்களையும் உத்தியோகபூர்வ விஜயங்களையும் வேறுபடுத்திப் பார்க்க முடியுமா என்ற விவாதம் ஒன்றையும் மூளவைத்திருக்கிறது. அவ்வாறு வேறுபடுத்திப்பார்க்க முடியாது என்று விக்கிரமசிங்க கூறியதாக பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீபா பீரிஸ் கொழும்பு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் கூறியிருந்தார். தேசிய மக்கள் சக்தி/ ஜே.வி.பியின் நிகழ்ச்சிகளுக்கும் அநுராதபுரத்தில் தனது குடும்ப உறுப்பினர்களை சந்திப்பதற்கும் செல்லும் போது ஜனாதிபதி அநுர குமார திசநாயக்க பாதுகாப்புப் பிரிவினர் இல்லாமல் தனது சொந்த வாகனத்தையா பயன்படுத்துகிறார் என்று எதிர்க்கட்சிகள் கேள்வியெழுப்பின. இதற்குப் பதிலளித்த வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் ஜனாதிபதி தனிப்பட்ட தேவைகளுக்காக, குறிப்பாக சுகவீனமுற்றிருக்கும் தனது தாயாரைப் பார்வையிடுவதற்காக நாட்டுக்குள் பயணங்களைச் செய்வதையும் முன்னாள் ஜனாதிபதி வெளிநாடுகளுக்கு விமானங்களில் செல்வதையும் ஒருபோதும் ஒப்பிட முடியாது என்று குறிப்பிட்டார். எதிர்க்கட்சிகள் முடியுமானால் திசாநாயக்கவின் உள்நாட்டுப் பயணங்கள் தொடர்பில் நீதிமன்றத்தை நாடட்டும் பார்க்கலாம் என்று ஜே.வி.பியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா சவால் விட்டதையும் காணக்கூடியதாக இருந்தது. தற்போதைய இலங்கை அரசியல் தலைவர்களில் விக்கிரமசிங்கவே சர்வதேச மட்டத்தில் செல்வாக்கும் மதிப்பும் கொண்டவராகக் கருதப்படுவதால் அவருக்கு எதிரான நடவடிக்கைகளை குறிப்பாக, அமெரிக்கா மற்றும் மேற்குலக நாடுகள் கண்டனம் செய்யும் என்றும் அவரை உடனடியாகவே விடுவிக்க வேண்டும் என்று அரசாங்கத்துக்கு நெருக்குதல்களைக் கொடுக்கும் என்றும் பரவலான எதிர்பார்ப்பு இருந்தது. அவ்வாறு எதுவுமே நடைபெற்றதாகத் தெரியவில்லை. இலங்கையின் நிகழ்வுப் போக்குகளை அந்த நாடுகள் அவதானித்துக் கொண்டிருந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், வெளிநாடுகளில் இருந்து அவருக்கு சார்பாக பகிரங்கமாக கருத்து வெளியிட்டவர்கள் என்றால் இந்திய காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஷி தரூரும் இலங்கைக்கான முன்னாள் சமாதானத் தூதுவர் நோர்வேயின் எரிக் சொல்ஹெய்முமேயாவர். விக்கிரமசிங்க பாரதூரமான குற்றச் செயல் எதையும் செய்யவில்லை என்று கூறிய அவர்கள் இருவரும் அவரை உனடியாக விடுதலை செய்யவேண்டும் என்று அரசாங்கத்தை வலியுறுத்தினார்கள். முன்னாள் ஜனாதிபதியின் கைது தொடர்பில் வெளிநாட்டு தூதரகங்கள் உட்பட சர்வதேச சமூகத்திடமிருந்து நெருக்குதல்கள் வந்ததா என்று அமைச்சரவை செய்தியாளர்கள் மகாநாட்டில் வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத்திடம் கேட்கப்பட்டபோது அதற்குப் பதிலளித்த அவர், எந்தவொரு வெளிநாட்டு இராஜதந்திரியோ அல்லது இராஜதந்திர அமைப்போ எந்தக் கருத்தையும் கூறவில்லை என்றும் சில தனிப்பட்டவர்கள் வெளிநாடுகளில் இருந்து வெளியிட்ட கருத்துக்கள் முக்கியத்துவமற்றவை என்றும் குறிப்பிட்டார். கடந்த காலத்தில் தற்போது இலங்கையில் சட்டத்தின் ஆட்சி சமத்துவமான முறையிலும் நேர்மையாகவும் பிரயோகிக்கப்படுகிறது என்பதை சர்வதேச சமூகம் அங்கீகரிக்கிறது என்றும் அவர் கூறினார். முன்னாள் ஜனாதிபதியின் கைதுக்கு வழிவகுத்த சூழ்நிலைகள் குறித்து கொழும்பில் உள்ள பல்வேறு வெளிநாட்டு தூதரகங்களுக்கு ஐக்கிய தேசிய கட்சியின் மூத்த தலைவர்கள் விளக்கிக் கூறியதாகவும் கைது தொடர்பில் மேலதிக விபரங்களை குறிப்பிட்ட சில சர்வதேச அமைப்புக்கள் அவர்களிடம் கோரியதாகவும் கட்சி வட்டாரங்கள் அறிவித்தன. விக்கிரமசிங்க விவகாரம் தற்போது சிதறிப்போயிருக்கும் எதிர்க்கட்சிகளை ஐக்கியப்படுத்தி அரசாங்கத்துக்கு பெரிய சவாலைத் தோற்றுவிக்கக்கூடிய சாத்தியத்தை எதிர்பார்ப்பதற்கில்லை. முன்னாள் ஜனாதிபதியின் கைதுக்கு உடனடியாக எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் மத்தியில் காணப்பட்ட ஆரவாரம் தற்போது தணிந்து போயிருப்பதாகவே தோன்றுகிறது. எதிர்க்கட்சிகளின் பரந்தளவிலான கூட்டணியொன்றை அமைப்பதற்கு அவற்றை வழிநடத்தக்கூடிய அரசியல் செல்வாக்கும் வல்லமையும் கொண்ட ஏற்புடைய தலைவர் ஒருவர் அவர்கள் மத்தியில் இல்லை. அதேவேளை, கடந்த வாரத்தைய சம்பவங்களுக்குப் பிறகு எதிரணி அரசியல் கட்சிகளை ஐக்கியப்படுத்தக்கூடிய ஒரு வலிமையான அரசியல் காரணியாக விக்கிரமசிங்க மாறியிருக்கிறாரா என்பதும் முக்கியமான ஒரு கேள்வி. இன்றைய எதிர்க்கட்சி அரசியல்வாதிகளில் பெரும்பாலானவர்கள் அவர்களது கடந்தகால முறைகேடான செயற்பாடுகளுக்காக அரசாங்கத்தினால் எளிதாக இலக்கு வைக்கப்படக்கூடிவர்களாக இருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதனால் தங்கள் மீது சட்ட நடவடிக்கைகளை எடுப்பதில் அரசாங்கம் நாட்டம் காட்டாமல் இருப்பதை உறுதிசெய்யக்கூடிய சூழ்நிலையை உருவாக்குவதற்காகவே ஐக்கியப்படுவது குறித்தும் மக்களை அணிதிரட்டுவது குறித்தும் அவர்கள் பேசுகிறார்கள். அத்தகைய அணுகுமுறை மக்களின் ஆதரவைப் பெறுவதற்கான சாத்தியம் குறித்து வலுவான சந்தேகம் எழுகிறது. அதேவேளை, கடந்த வருடத்தைய தேசிய தேர்தல்களின்போது நாட்டு மக்களுக்கு அளித்த பெருவாரியான வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியிருக்கும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முக்கியமான பிரச்சினைகளில் இருந்து கவனத்தை திருப்புவதற்காக முன்னைய ஆட்சியாளர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளில் அக்கறை காட்டுகிறது என்ற விமர்சனமும் இருக்கிறது. விக்கிரமசிங்கவை விடவும் கூடுதலான அளவுக்கு செல்வாக்குடைய பலம்பொருந்திய அரசியல் தலைவர்களுக்கு எதிராக நடவடிக்கைகளில் இறங்குவதற்கு முன்னதாக மக்களின் உணர்வுகளை நாடிபிடித்துப் பார்க்கும் ஒரு நடவடிக்கையே அவரின் கைது என்றும் ஊகிக்கப்படுகிறது. அரசியல் பழிவாங்கலில் இறங்கியிருப்பதாக அரசாங்கத்தைக் குற்றஞ்சாட்டும் எதிர்க்கட்சி அரசியல்வாதிகளின் எச்சரிக்கைளை தாங்கள் ஒரு பொருட்டாக மதிக்கவில்லை என்று காட்டும் வகையில் நடந்துகொள்ளும் அரசாங்கத் தலைவர்கள் ஊழல்தனமான அரசியல்வாதிகளுக்கு எதிராக மேற்கொண்டு எடுக்கப்போகும் நடவடிக்கைகளைப் பற்றி அறிவிப்புகளைச் செய்கிறார்கள். விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக நீதிமன்ற வளாகத்துக்கு ஆர்ப்பாட்டக்காரர்களை அணிதிரட்டிக்கொண்டு வந்தவர்களை அடையாளம் காணும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக பொலிஸ்மா அதிபர் கூறியிருக்கிறார். சகல குடிமக்களுக்கும் சமத்துவமான முறையில் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்திய ஜனாதிபதி திசாநாயக்க ஏற்கனவே எடுக்கப்பட்ட எந்தவொரு நடவடிக்கையும் மீள்பரிசீலனை செய்யப்படமாட்டாது என்று கூறியிருக்கிறார். அரச பணத்தை தவறாகப் பயன்படுத்தியவர்களிடம் இருந்து அது திரும்பப் பெறப்படும் என்றும் ஊழலுக்கும் துஷ்பிரயோகங்களுக்கும் பொறுப்பானவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்படுவார்கள் என்றும் அவர் கொழும்பில் கடந்தவாரம் நிகழ்வொன்றில் கூறினார். செப்டெம்பரில் புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டதும் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட அரசுக்குச் சொந்தமான வீடுகள் திரும்பப் பெறப்படும் என்றும் ஜனாதிபதி அறிவித்திருக்கிறார். அதேவேளை, விக்கிரமசிங்கவைப் போன்று மற்றைய முன்னாள் ஜனாதிபதிகளும் முறைகேடுகளில் ஈடுபட்டதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றால் அவை குறித்து விசாரணை செய்யப்படும் என்று அரசாங்கம் அறிவித்திருக்கிறது. சட்டம் சகலருக்கும் சமமான முறையில் பிரயோகிக்கப்படும் என்று கூறிய பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால எவரிடமிருந்தாவது முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றால் மற்றைய முன்னாள் ஜனாதிபதிகளுக்கு எதிராகவும் விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என்று ஊடகங்களுக்கு கடந்த வாரம் கூறினார். விக்கிரமசிங்க விவகாரத்தில் முக்கியமான ஒரு அம்சத்தை அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது. அவர் இலங்கையின் பாரம்பரியமான அரசியல் அதிகார வர்க்கக் குடும்பங்களைச் சேர்ந்த ஒரு அரசியல் தலைவர். அவரது கைதும் நீதிமன்றத்தில் அவர் பல மணி நேரமாக அனுபவிக்க வேண்டியிருந்த அசௌகரியங்களும் கொழும்பு உயர் வர்க்கத்தவர்களுக்கு கடுமையான ஆத்திரத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஜனாதிபதி திசாநாயக்க உட்பட தேசிய மக்கள் சக்தியின் குறிப்பாக, ஜே.வி.பியின் தலைவர்களின் எளிமையான குடும்பப் பின்னணிகளை அடிப்படையாகக் கொண்டு நோக்கும்போது விக்கிரமசிங்கவுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஒரு வர்க்க வன்மம் வெளிக்காட்டப்பட்டதாகவும் விமர்சனங்கள் உண்டு. விக்கிரமசிங்கவின் அரசியலையும் எதையுமே மெத்தனமாக நோக்கும் அவரது சுபாவத்தையும் விரும்பாதவர்கள் பலர் கூட அவர் கைவிலங்கிடப்பட்டு சிறைச்சாலை வாகனத்தில் கூட்டிச் செல்லப்பட்டதனால் கடுமையான அதிருப்தியடைந்திருக்கிறார்கள் என்பது தெளிவானது. அத்துடன், மனைவியின் பட்டமளிப்பு வைபவத்தில் பங்கேற்பதற்காக (இலங்கையில் இடம்பெற்ற நிதி தொடர்பான பாரிய ஊழல் நடவடிக்கைளுடன் ஒப்பிடும்போது) ஒரு சிறிய தொகையான 16.6 மில்லியன் ரூபாவை பயன்படுத்தியதை பாரதூரமான பிரச்சினையாக ஊதிப்பெருப்பித்து அவரை கைதுசெய்திருக்க வேண்டியதில்லை என்ற ஒரு அபிப்பிராயமும் பல மட்டங்களில் இருக்கிறது. வழமையாக விக்கிரமசிங்கவை மிகவும் கடுமையாக விமர்சித்து வருபவரான முன்னாள் இராஜதந்திரியும் அரசியல் ஆய்வாளருமான கலாநிதி தயான் ஜெயதிலக கடந்த வாரம் எழுதிய கட்டுரை ஒன்றில் ஜனாதிபதி திசாநாயக்கவின் நிருவாகத்தின் உண்மையான முகம் அம்பலப்படுத்தப்பட்டிருக்கிறது என்று குறிப்பிட்டிருக்கிறார். மத்திய வங்கி பிணைமுறி ஊழல் விவகாரத்தை பொறுத்தவரை, சந்தேகத்துக்கு அப்பாற்பட்ட ஒருவராக முன்னாள் ஜனாதிபதியைக் கருதவில்லை என்று கூறியிருக்கும் தயான், விக்கிரமசிங்க தனது குடும்பத்தவர்களிடம் அல்லது நண்பர்களிடம் கேட்டிருந்தால் ஒரு நிமிடத்தில் பெற்றிருக்கக்கூடிய 16.6 மில்லியன் ரூபாவை அரச நிதியில் இருந்து அவர் கையாடியிருப்பார் என்று நம்பினால் தனது விவேகத்தையே நிந்தனை செய்வதாக அமையும் என்று குறிப்பிட்டிருக்கிறார். சட்டபூர்வத் தன்மைக்கும் நியாயப்பாடான தன்மைக்கும் இடையில் உள்ள வேறுபாட்டை ஜே.வி.பி./ தேசிய மக்கள் சக்தியின் தலைவர்கள் விளங்கிக்கொள்வது சாத்தியமில்லை என்றும் ஒப்பீட்டளவில் வலுவில்லாத ஒரு பிரச்சினைக்காக விக்கிரமசிங்கவை கைதுசெய்து அசௌகரியத்தை கொடுத்ததன் மூலம் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் சமூக நீதியில் அதற்கு இருக்கும் பற்றுறுதியை அல்ல, அதன் தலைமைத்துவத்தின் கீழ்த்தரமான சிந்தனையையும் மட்டுமீறிய தவறான உணர்ச்சியார்வத்தையும் வெளிக்காட்டியிருக்கிறது என்றும் தயான் மேலும் கூறியிருக்கிறார். இலங்கை அதன் வரலாற்றில் முன்னென்றுமில்லாத பொருளாதார வீழ்ச்சியை சந்தித்தபோது ஆட்சிப் பொறுப்பை அரசியல் தைரியத்துடன் ஏற்றுக்கொண்டு மீட்சிக்கு வழிகாட்டிய ஒரு தலைவரை கைதுசெய்து அவமதித்திருக்கக் கூடாது என்றும் ஒரு பிரிவினர் கவலைப்படுகிறார்கள். 2022 ஜூலையில் வெறுமனே 50 மில்லியன் டொலர்களாக இருந்த வெளிநாட்டுச் செலாவணி கையிருப்பு 2025 செப்டெம்பரில் 6 பில்லியன் டொலர்களாக உயரக்கூடியதாக நாட்டின் பொருளாதாரத்தை மீடடெடுத்த தலைவர் 53,000 டொலர்களுக்கு (16.6 மில்லியன் ரூபா)வுக்கு பெறுமதி இல்லாதவரா என்று சில தினங்களுக்கு முன்னர் ஒரு அரசியல் பத்தியாளர் தர்மாவேசத்துடன் கேள்வியெழுப்பியிருந்தார். கடந்த வெள்ளிக்கிழமை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இருந்து வெளியேறியபோது விக்கிரமசிங்க தனது கையில் முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர் போறிஸ் ஜோன்சனின் “கட்டவிழ்த்துவிடப்பட்டது ” (Unleashed) என்ற தலைப்பிலான சுயசரிதை நூலை கையில் வைத்திருந்தார். தீவிர சிகிச்சைப்பிரிவில் இருந்தபோது அதை அவர் வாசித்திருக்கிறார் போன்று தெரிகிறது. அதன் மூலமாக ஏதாவது அரசியல் செய்தியை நாட்டுக்கு அல்லது அரசாங்கத்துக்கு சொல்வதற்கு அவர் நோக்கம் கொண்டிருந்தாரோ தெரியவில்லை. போறிஸ் ஜோன்சனின் நூல் பற்றிய தகவல்களை அறியும் ஆவலில் கூகிளில் தேடுதல் நடத்தியபோது அது பற்றி லண்டன் கார்டியன் பத்திரிகையின் இணையாசிரியர் மார்டின் கெற்றில் கடந்த வருட பிற்பகுதியில் எழுதிய விமர்சனத்தை காண நேர்ந்தது. “போறிஸ் ஜோன்சனின் நூல் – ஒரு கோமாளியின் வரலாற்றுக் குறிப்புகள் ” (Unleashed by Boris Johnson review – memoirs of a clown) என்று அதற்கு தலைப்பிடப்பட்டிருந்தது. வீரகத்தி தனபாலசிங்கம் https://maatram.org/articles/12270
-
வடக்கு மக்களின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான தனது பொறுப்பை நிறைவேற்றுவேன் – ஜனாதிபதி
வடக்கு மக்களின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான தனது பொறுப்பை நிறைவேற்றுவேன் – ஜனாதிபதி September 3, 2025 11:29 am வடக்கிற்கு மீளவும் உயிர்கொடுத்து மக்களுக்கு வலுவான பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான தனது பொறுப்பை நிறைவேற்றுவேன் என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். இதன்படி, வடக்கிற்கு புதிய பொருளாதார வாய்ப்புகளை உருவாக்க எதிர்காலத்தில் தொழில்துறை வலயங்கள் உட்பட பல அபிவிருத்தித் திட்டங்களை எதிர்காலத்தில் செயல்படுத்தப் போவதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். உலக தெங்கு தினத்தை முன்னிட்டு, முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு நகரில் நடைபெற்ற வடக்கு தெங்கு முக்கோண ஆரம்ப விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இவ்வாறு தெரிவித்தார். இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட ஜனாதிபதி, புதுக்குடியிருப்பு பகுதி கடந்த காலங்களில் பாரிய யுத்தத்தை சந்தித்த ஒரு பகுதி என்பதை நாங்கள் அறிவோம். அந்த மோதல்கள் காரணமாக, இந்தப் பகுதி மக்கள் அனைத்தையும் இழந்துள்ளனர். கடந்த தேர்தலின் போது இந்தப் பகுதி மக்களை நான் சந்தித்தேன். இந்த அழிவுற்ற பகுதிக்கும் மக்களுக்கும் நாம் மீண்டும் உயிர் கொடுக்க வேண்டும். குறிப்பாக கடந்த தேர்தல்களின் போது, இந்தப் பகுதிகளில் வாழும் மக்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்து வலுவான அடியை எடுத்து வைத்தனர். எங்கள் மீது நம்பிக்கை வைத்து ஒரு அடி எடுத்து வைத்த மக்களை வெற்றியின் பக்கம் இட்டுச் செல்வதே எங்கள் எதிர்பார்ப்பாகும். அதற்காக, நாங்கள் பல துறைகளில் பணிகளைத் ஆரம்பித்துள்ளோம். முதலில், இந்த மக்களின் உரிமைகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும். காணி உரிமைகள், மொழி உரிமைகள் மற்றும் கலாசார உரிமைகள், அத்துடன் காணாமல் போனவர்களுக்கு என்ன நடந்தது என்பதை அறியும் உரிமை ஆகியவற்றை அவர்களின் அடிப்படை உரிமைகளாக நாங்கள் பார்க்கிறோம். அந்த உரிமைகளைப் பாதுகாக்க நாங்கள் பல நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளோம். அவர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டும். ஒரு அரசாங்கமாக, அவர்கள் இழந்த பொருளாதார வாய்ப்புகளை வழங்குவதன் மூலம் வலுவான பொருளாதாரத்தை உருவாக்கும் பொறுப்பை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். அதற்காக நாங்கள் ஏற்கனவே பல நடவடிக்கைகளை எடுத்துள்ளோம் என ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார். இதேவேளை, வடக்கிலும் தெற்கிலும் அதிகாரத்தைப் பெறுவதற்கான பிரதான கருவியாக இனவாதம் மாறியது. அந்த நிலைமையை கடந்த ஜனாதிபதித் தேர்தலில் இந்நாட்டு மக்கள் தோற்கடித்தனர். மீண்டும் இந்த நாட்டில் இனவாத அரசியலுக்கு இடமளிக்க மாட்டோம். இந்த இனவாத அரசியலை நிராகரிக்க வேண்டும். ஒற்றுமையை உருவாக்குவதே எமது அரசாங்கத்தின் குறிக்கோள் என ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார். https://oruvan.com/i-will-fulfill-my-responsibility-to-build-the-economy-of-the-people-of-the-north-president/
-
பாலஸ்தீனம் ஒரு நாடாக அங்கீகரிக்கப்படும் : பெல்ஜியம் அறிவிப்பு
பாலஸ்தீனம் ஒரு நாடாக அங்கீகரிக்கப்படும் : பெல்ஜியம் அறிவிப்பு ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் பாலஸ்தீனத்தை ஒரு நாடாக அங்கீகரிக்கவிருப்பதாக பெல்ஜியம் அறிவித்துள்ளது. “ஐக்கிய நாட்டுக் கூட்டத்தில் பாலஸ்தீனத்தை பெல்ஜியம் ஒரு நாடாக அடையாளப்படுத்தப்படும். அத்துடன் இஸ்ரேலிய அரசாங்கத்துக்கு எதிராகக் கடுமையான தடைகள் விதிக்கப்படும்,” என்று பெல்ஜிய வெளியுறவு அமைச்சர் மெக்ஸிம் பிரிவோட் அறிவித்துள்ளார். ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்தில் பாஸ்தீனத்தை ஒரு நாடாக அங்கீகரிக்கப்போவதாகப் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோன் கடந்த ஜுலை மாதம் அறிவித்திருந்தார். இந்த நிலையில் பெல்ஜியம் உட்பட பல நாடுகள் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக குரல்கொடுக்க தொடங்கியுள்ளன. நியூயார்க்கில் எதிர்வரும் 9ஆம் திகதி ஆரம்பமாகும் ஐ.நா. கூட்டத் தொடர் 23ஆம் திகதி வரை நடைபெறவிருக்கிறது. பாலஸ்தீனத்தை நாடாகக் கருதும்படி பிற மேற்கத்திய நாடுகளும் அழைப்பு விடுத்துள்ளன. காஸாவில் அதிகரிக்கும் மனிதநேய நெருக்கடியை அடிப்படையாகக் கொண்டு அந்தத் தீர்மானம் எடுக்கப்படுவதாகத் பிரிவோட் கூறியுள்ளார். இஸ்ரேலிய இராணுவம் பாலஸ்தீனர்களில் அதிகமானோரை ஒரு முறைக்கு மேல் வீடுகளை விட்டு வெளியேறும் சூழலுக்குத் தள்ளியிருப்பதாலும் ஐ.நா. அங்குப் பஞ்சத்தை அறிவித்திருப்பதாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக பிரிவோட் குறிப்பிட்டுள்ளார். அனைத்துலக சட்டத்தை மீறும் விதத்தில் இஸ்ரேல் வன்முறையாக நடந்துகொண்டதால் இஸ்ரேலிய அரசாங்கம், ஹமாஸ் பயங்கரவாதிகள் ஆகியோர்மீதான நெருக்கடியை அதிகரிக்க பெல்ஜியம் உறுதியான தீர்மானத்தை எடுக்கவேண்டிய நிலைக்கு ஆளாகியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இஸ்ரேலிய மக்களைத் தண்டிப்பதற்காக அல்ல, மாறாக அதன் அரசாங்கம் அனைத்துலக, மனிதநேய சட்டங்களை மதித்து நடப்பதை உறுதிசெய்து காஸாவின் நிலையை மாற்றும் நோக்கில் பெல்ஜியம் அத்தகைய தீர்மானங்களை எடுத்துள்ளதாகக் கூறியுள்ளது. https://akkinikkunchu.com/?p=339390
-
சீனாவில் பிரமாண்ட இராணுவ அணிவகுப்பு
சீனாவில் பிரமாண்ட இராணுவ அணிவகுப்பு 03 Sep, 2025 | 11:24 AM சீனாவில் இரண்டாம் உலகப்போர் வெற்றி மற்றும் ஜப்பான் சரணடைந்ததன் 80-ஆண்டு நிறைவையொட்டி பிரம்மாண்ட இராணுவ அணிவகுப்பு நடைபெற்றது. பீஜிங் நகரில் உள்ள தியானன்மென் சதுக்கத்தில் நடைபெற்ற இராணுவ அணிவகுப்பை சீன ஜனாதிபதி ஜின்பிங்குடன், ரஷ்ய ஜனாதிபதி புட்டின், வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் உட்பட பலநாட்டு தலைவர்கள் பார்வையிட்டனர். இந்த அணிவகுப்பில் அதிநவீன போர் விமானங்கள், கண்டம் விட்டு கண்டம் பாயும் அணுஆயுத ஏவுகணைகள், புதிய நீர்மூழ்கி ட்ரோன்கள் உட்பட சீனாவின் இராணுவ வலிமையை உலகிற்கு பறைசாற்றும் ஆயுதங்களும் இராணுவ தளவாடங்களும் இடம்பெற்றிருந்தன. https://www.virakesari.lk/article/224075
-
நெடுந்தீவு – கச்சத்தீவு ஒன்றிணைக்கும் வகையிலான சுற்றுலா மேம்பாட்டு திட்டம் ஆராயப்படுகின்றது ; அமைச்சர் சந்திரசேகர்
நெடுந்தீவு – கச்சத்தீவு ஒன்றிணைக்கும் வகையிலான சுற்றுலா மேம்பாட்டு திட்டம் ஆராயப்படுகின்றது ; அமைச்சர் சந்திரசேகர் 03 Sep, 2025 | 11:00 AM நெடுந்தீவு மற்றும் கச்சத்தீவை ஒன்றிணைக்கும் வகையிலான சுற்றுலா மேம்பாட்டுத் திட்டத்தின் சாத்தியப்பாடுகள் தொடர்பில் ஆராயப்படுகின்றது என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். ஜனாதிபதியுடன் இணைந்து கச்சத்தீவுக்கு கண்காணிப்பு பயணம் மேற்கொண்டமை தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, கச்சத்தீவு பகுதியில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடும் எமது மீனவ சொந்தங்களின் பாதுகாப்பு, அவர்கள் எதிர்நோக்கும் சவால்கள் மற்றும் அப்பகுதியில் மேற்கொள்ள வேண்டிய மேம்பாட்டு திட்டங்கள் பற்றி கடற்படையினரிடம் கேட்டறிந்தோம். அதேபோல சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்குரிய பல்வேறு திட்டங்கள் வகுக்கப்பட்டுவருகின்றன. அந்தவகையில் நெடுந்தீவு மற்றும் கச்சத்தீவை ஒன்றிணைத்த வகையில் சுற்றுலா திட்டமொன்றை மேற்கொள்வதற்குரிய சாத்தியப்பாடு பற்றியும் கேட்டறியப்பட்டது. நெடுந்தீவுக்கு தற்போது சுற்றுலாப் பயணிகள் வரும் நிலையில் அதனை கச்சத்தீவுவரை மேம்படுத்துவதற்குரிய திட்டம் உள்ளது என்றார். https://www.virakesari.lk/article/224070
-
ரோம் உடன்படிக்கையில் இலங்கை கையெழுத்திட வேண்டுமென வலியுறுத்தல்
ரோம் உடன்படிக்கையில் இலங்கை கையெழுத்திட வேண்டுமென வலியுறுத்தல் 03 September 2025 எதிர்வரும் 08 ஆம் திகதி ஜெனீவாவில் ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அமர்வில் சமர்ப்பிக்கப்படவுள்ள இலங்கையின் மனித உரிமைகளின் நிலைமை தொடர்பான அறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக இராணுவம் மற்றும் ஏனைய பாதுகாப்புப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட கடுமையான மனித உரிமை மீறல்களை ஒப்புக்கொள்ள, இலங்கை அரசாங்கம் தவறிவிட்டதாக குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதற்கமைய, உண்மை மற்றும் நீதியை எடுத்துக்காட்டுவதற்கு புதிய அரசாங்கத்திற்கு சிறந்த வாய்ப்பொன்று கிட்டியுள்ளதாகவும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிடைத்துள்ள மக்கள் ஆணையின் பிரகாரம், புதிய அரசாங்கத்திற்கு இது வரலாற்றுச் சந்தர்ப்பமாக அமையும் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. யுத்தக் காலப்பகுதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறல் அவசியம் எனவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில், மனித உரிமை மீறல்களைத் தடுப்பதற்குத் தேவையான இறுக்கமான பொறிமுறைகள் அவசியம் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், மனித உரிமைகளைப் பாதுகாக்கும் பொறிமுறைகளை உறுதிப்படுத்துவதோடு, நீதிமன்றக் கட்டமைப்பினூடாக பாதுகாப்புத் துறைக்கான மறுசீரமைப்புகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகம் நாட்டில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளமையை குறித்த அறிக்கையூடாக வரவேற்கப்பட்டுள்ளதுடன், அந்த நிறுவனத்தின் செயற்பாடுகளை சர்வதேச கண்காணிப்பின் கீழ் மேற்பார்வை செய்ய வேண்டும் எனவும் ஐ.நா அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன், பொறுப்புக்கூறல் விடயத்தில் இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் தனது ஒத்துழைப்புகளை வழங்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, ரோம் உடன்படிக்கையில் இலங்கை அரசாங்கம் கைச்சாத்திட வேண்டும் எனவும் குறித்த அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. https://hirunews.lk/tm/418056/insisting-that-sri-lanka-sign-the-rome-statute
-
செம்மணி வழக்கை சிறப்பாகக் கையாண்ட நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜாவுக்கு பதவி உயர்வுடன் இடமாற்றம்!
செம்மணி வழக்கை சிறப்பாகக் கையாண்ட நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜாவுக்கு பதவி உயர்வுடன் இடமாற்றம்! அரியாலை - செம்மணிப் புதைகுழி வழக்கை, மிகச் சிறப்பான முறையில் கையாண்டு வந்த யாழ்ப்பாணம் மாவட்ட நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜாவுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. மேல்நீதிமன்ற நீதிபதிகளாக சில நீதிபதிகள் பதவி உயர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவராகவே, நீதிபதி ஆனந்தராஜாவுக்கும் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. பதவி உயர்வுக்கான அனுபவத்தையும், தகுதியையும் நீதிபதி ஏ.ஏ.ஆனந்தராஜா நீண்ட காலத்துக்கு முன்னரே பெற்றிருந்த போதிலும், தற்போது திடீரென இந்தப் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இதனால், நீதிபதி ஏ.ஏ.ஆனந்தராஜா செம்மணிப் புதைகுழி தொடர்பான வழக்குகளை இனிவரும் நாள்களில் கையாள முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. செம்மணிப் புதைகுழி தொடர்பான வழக்கில், கிட்டத்தட்ட 50 வீதத்துக்கும் மேற்பட்ட பணிகள் நிறைவடைந்துள்ளன. பணிகள் இவ்வாறு வேகமாக நிறைவடைவதற்கு நீதிபதி ஆனந்தராஜா காட் டிய அக்கறையும், அவருடைய அர்ப்பணிப்பான செயற்பாடுகளுமே காரணம் என்று துறைசார் செயற்பாட்டாளர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர். இவ்வாறான நிலையிலேயே, அவருக்குப் பதவி உயர்வு வழங்கப்பட்டு, செம்மணிப் புதைகுழி தொடர்பான வழக்கை அவர் கையாள முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. அகழ்வுப் பணிகளை சம்பிரதாயபூர்வமாக மேற்பார்வை செய்யாமல், சான்றுப் பொருள்களை அடையாளம் காணும் நடவடிக்கைகளையும் நீதிபதி ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னெடுத்திருந்தார். அகழ்வுப் பணிகளின் கால அளவை நீடிப்பது தொடர்பில் காத்திரமான உத்தரவுகளை வழங்கியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. https://newuthayan.com/article/செம்மணி_வழக்கை_சிறப்பாகக்_கையாண்ட_நீதிவான்_ஏ.ஏ.ஆனந்தராஜாவுக்கு_பதவி_உயர்வுடன்_இடமாற்றம்!
-
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை 400 ஆண்டுகள் சிறையில் அடைக்க வேண்டும் - சரத் பொன்சேகா
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை 400 ஆண்டுகள் சிறையில் அடைக்க வேண்டும் - சரத் பொன்சேகா 02 Sep, 2025 | 10:12 AM முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை 400 ஆண்டுகள் சிறையில் அடைக்க வேண்டும் என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா குற்றம் சாட்டியுள்ளார். 2010ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற ஊழல்களை எடுத்துக்காட்டி, அவர் குற்றம் சாட்டியதாக தெரிவிக்கப்படுகிறது. நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், அடுத்தடுத்து வந்த இலங்கைத் தலைவர்களை விமர்சித்தார். இதன்போது, தேசிய வளர்ச்சிக்கான தொலைநோக்கு பார்வை, இலங்கை தலைவர்களுக்கு இல்லை என இதன்போது அவர் குறிப்பிட்டுள்ளார். சிங்கப்பூரின் லீ குவான் யூ, மலேசியாவின் மகாதீர் முகமட் மற்றும் ருவாண்டாவின் ஜெனரல் ஜுவெனல் ஹப்யரிமனா போன்ற சர்வதேச பிரமுகர்களுடன் இலங்கை முன்னாள் தலைவர்களை ஒப்பிட்டு வேறுபடுத்தி இதன்போது அவர் உரையாற்றியுள்ளார். தனிநபர்களின் பெயர்களைக் குறிப்பிடாமல் கடந்த கால சம்பவத்தைக் குறிப்பிட்டு தமது கருத்துக்களை சரத் பொன்சேகா கூறியுள்ளார். 2010 ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிகால பகுதியில் சீனாவிற்கு மேற்கொண்ட அரச பயணத்தையும் இதன்போது அவர் நினைவுப்படுத்தினார். அந்த பயணத்தின் போது 65 பேர் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் உத்தியோகபூர்வமாக அழைத்துச் செல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் நடவடிக்கைகளை அவர் மன்னிக்கவில்லை என்றாலும், அதிகாரிகளை பொறுப்புக்கூற வைப்பதில் தற்போதைய நிர்வாகம் வகுத்த முன்னுதாரணத்தை ஆதரிப்பதாகவும் சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார். அதன்படி, ரணில் விக்கிரமசிங்க செய்தது சரி என நான் கூறவில்லை. அவரது நிலையை பார்ப்பது எனக்கு கவலையாக இருக்கிறது. அவர்தான் என்னை அரசியலுக்குக் கொண்டு வந்தவர். ஆனால் இந்த வழக்கில், அரசாங்கம் அமைத்த முன்னுதாரணத்தை நான் ஏற்றுக்கொள்கிறேன் என இதன்போது சரத் பொன்சேகா கூறியுள்ளார். அதேநேரம், மஹிந்த ராஜபக்ஷ போன்ற ஒருவருக்கு சுமார் 400 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, நாமல் ராஜபக்ஷவின் கடந்த கால சிறைத்தண்டனை குறித்து சமீபத்தில் தெரிவித்த கருத்துகளுக்கும் சரத் பொன்சேகா பதிலளித்தார். இராணுவத் தலைமையகத்தில் பணியாற்றிய 35 சிரேஸ்ட இராணுவ அதிகாரிகளை ஓய்வூதியம் இல்லாமல் இராணுவ சேவையிலிருந்து வெளியேற்றியதாக மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் மீது சரத் பொன்சேகா நிகழ்வில் உரையாற்றும்போது குற்றம் சுமத்தியுள்ளார் https://www.virakesari.lk/article/223992
-
சூடானில் கிராமத்தை அழித்த நிலச்சரிவு - 1000க்கும் மேற்பட்டோர் பலி
சூடானில் கிராமத்தை அழித்த நிலச்சரிவு - 1000க்கும் மேற்பட்டோர் பலி 02 September 2025 மேற்கு சூடானின் மர்ரா மலை பகுதியில் ஒரு கிராமத்தையே அழித்த நிலச்சரிவில், குறைந்தது 1000 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலச்சரிவில் ஒருவர் மட்டுமே உயிர் பிழைத்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. கனமழையைத் தொடர்ந்து,கடந்த ஆகஸ்ட் 31 அன்று, இந்த நிலச்சரிவு ஏற்பட்டதாக சூடான் விடுதலை இராணுவம் தெரிவித்துள்ளது. மேற்கு ஆப்பிரிக்க நாடான சூடானில் வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டு, இலட்சக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ள நிலையிலேயே இந்த நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர்கள் என்ற பலியானவர்களின் உடலங்களை மீட்க உதவுமாறு ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சர்வதேச உதவி நிறுவனங்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளன. நிலச்சரிவு ஏற்பட்ட கிராமம் தற்போது முழுமையாகத் தரைமட்டமாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://hirunews.lk/tm/417818/landslide-destroys-village-in-sudan-over-1000-dead
-
மன்னார் வீரர்கள் இருவர், தேசிய உதைபந்தாட்ட அணிக்கு தெரிவு
மன்னார் வீரர்கள் இருவர், தேசிய உதைபந்தாட்ட அணிக்கு தெரிவு எஸ்.ஆர்.லெம்பேட் இலங்கை 16 வயது கீழ் உதைபந்தாட்ட தேசிய அணியில் மாணவர்களை உள்வாங்குவதற்கு நடைபெற்ற தேர்வில் மன்/புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையைச் சேர்ந்த இரு மாணவர்கள் தெரிவாகி மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர். மன்/புனித சவேரியார் ஆண்கள் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்களான N.கெஸ்ரோன் , K.ஜெனிஸ்ரன் ஆகியோர் குறித்த தெரிவில் கலந்து கொண்டு சிறப்பாக விளையாடி திறமையை வெளிப்படுத்தியதன் அடிப்படையில் தேசிய அணிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர் குறித்த இரு மாணவர்களும் கலந்து கொள்ளும் முதலாவது சர்வதேச உதைபந்தாட்ட போட்டியானது சீனாவில் இம் மாதம் 20ம் திகதி தொடக்கம் 28ம் திகதி வரை நடைபெறவுள்ளது. இப் போட்டி “ U16 Tainyu Liufang Cup – 2025” ற்கான போட்டியாகும். இதற்கான மேலதிக பயிற்சிகள் இம் மாதம் 4 ஆம் திகதி முதல் கொழும்பில் நடைபெறவுள்ளது. இம்மாணவர்கள் மிகவும் வறுமைக்கோட்டின் கீழ் இருந்து தமது கல்வியை மேற்கொள்கின்றார்கள் என்பதன் அடிப்படையில் குறித்த மாணவர்களுக்கு உதவி செய்ய விரும்புவோர் அதிபர் ஊடாக உங்கள் உதவிகளை வழங்கி அந்த மாணவர்களின் திறமைக்கான அங்கீகாரம் பெறுவதற்கு உதவுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள் இம் மாணவர்களின் மேலதிக பயிற்சிக்கான செலவையும், அவர்கள் சீனாவில் இருக்கும் போது ஏற்பட உள்ள மேலதிக செலவையும் தாங்கிக் கொள்வதற்கு பண வசதி இல்லாத சூழ்நிலையில் தற்போது இருக்கிறார்கள். எனவே இம் மாணவர்களை ஊக்கப்படுத்தி தேசிய மட்ட அணியில் ஒருவராக விளையாடுவதற்கு தங்களால் இயன்ற நிதி உதவியை வழங்கி உதவுமாறு பாடசாலை சமூகம் சார்பாக கோரிக்கை விடுத்துள்ளனர். https://www.tamilmirror.lk/பிரதான-விளையாட்டு/மன்னார்-வீரர்கள்-இருவர்-தேசிய-உதைபந்தாட்ட-அணிக்கு-தெரிவு/44-363894
-
விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்படவில்லை - நாமல் தெரிவிப்பு!
விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்படவில்லை - நாமல் தெரிவிப்பு! தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு இன்னும் கருத்தியல் ரீதியில் தோற்கடிக்கப்படவில்லை என பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளுக்காக சர்வதேசத்தில் நினைவகம் அமைக்கப்படுகின்றது என்றும் நாமல் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில் , இந்நாட்டில் பயங்கரவாதத்தை இல்லாதொழித்து நாட்டு மக்களுக்கு உயிர் பயமின்றி வாழ்வதற்குரிய சூழ்நிலையை ஏற்படுத்திய படையினர் மீண்டும் வேட்டையாடப்படுகின்றனர். புலிகள் அமைப்பு கட்டமைப்பு ரீதியாக தோற்கடிக்கப்பட்டாலும் அதன் பிரிவினைவாத கருத்தியல் இன்னும் முடியவில்லை. விடுதலைப் புலிகளுக்காக சர்வதேசத்தில் நினைவகம் அமைக்கப்படுகின்றது. ஆனால், படையினருக்கு அமைத்தால் அதை இனவாதமாக காட்ட முற்படுகின்றனர். முன்னாள் கடற்படை தளபதி ஒருவர் சிறை வைக்கப்பட்டுள்ளார். அடையாள அணிவகுப்பில் புலி உறுப்பினர் ஒருவரே சாட்சியமளித்துள்ளார். இப்படியான நிலை வருமென அந்த கடற்படை தளபதி நினைத்தும் பார்த்திருக்கமாட்டார். இப்படியான நிலைமையே இங்கு நிலவுகிறது. எமது நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த படையினரை நாம் காக்க வேண்டும் என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். https://newuthayan.com/article/விடுதலைப்_புலிகள்_தோற்கடிக்கப்படவில்லை_-_நாமல்_தெரிவிப்பு!
-
முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொடவின் புத்தகத்துக்கு தடை!
முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொடவின் புத்தகத்துக்கு தடை! முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட எழுதிய சுயசரிதை புத்தகம், பிரித்தானியாவில் Amazon விற்பனை பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை, சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் எனும் அமைப்பின் கோரிக்கைக்கு அமைய எடுக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது. கரன்னாகொடவின் புத்தக விற்பனை பிரித்தானிய தடை சட்டங்களை மீறும் எனவும், தடைக்குட்பட்ட ஒருவருக்கு காப்புரிமை உள்ளிட்ட வளங்களை வழங்குவது குற்றமாக கருதப்படும் எனவும் சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் Amazonக்கு அறிவித்திருந்தது. பிரித்தானிய சட்டத்தின்படி, இத்தகைய மீறலுக்காக ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம். Amazon பிரிட்டன் கிளை, சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டத்தின் கோரிக்கைக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ளதாக அந்த அமைப்பு அறிவித்துள்ளது. 2005 முதல் 2009வரை உள்நாட்டுப் போரின் இறுதி கட்டத்தில் கடற்படைத் தளபதியாக பணியாற்றிய கரன்னாகொட மீது, நீதிக்குப் புறம்பான கொலைகள் மற்றும் மனித உரிமை மீறல்கள் செய்ததாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அதற்கமைய, கடந்த மார்ச் மாதம், பிரித்தானிய அரசு வசந்த கரன்னாகொட உட்பட ஐவருக்கு எதிரான தடை விதித்திருந்தது. https://newuthayan.com/article/முன்னாள்_கடற்படைத்_தளபதி_வசந்த_கரன்னாகொடவின்_புத்தகத்துக்கு_தடை!
-
புலனாய்வு அதிகாரிகளுக்கு 'தண்ணிகாட்டிய' ஜனாதிபதி!
புலனாய்வு அதிகாரிகளுக்கு 'தண்ணிகாட்டிய' ஜனாதிபதி! ஜனாதிபதி அநுரகுமார யாழ்ப்பாணத்துக்கு நேற்று வந்திருந்த நிலையில், அவர் எப்போது யாழ்ப்பாணம் வருகின்றார்? யாழ்ப்பாணத்தில் எங்கு தங்கியிருக்கின்றார்? என்ற விடயம் புலனாய்வு அதிகாரிகள் உட்பட அரச பெருந்தலைகள் எவருக்கும் தெரியாமல் இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதி அநுர யாழ்ப்பாணத்துக்கு நேற்றுப் பயணம் மேற்கொண்டார். இந்தப்பயணத்தின்போது, முதலாவது நிகழ்வாக காலை 10 மணிக்கு மயிலிட்டித் துறைமுக அபிவிருத்திப் பணிகளை ஆரம்பித்து வைப்பதாக இருந்தது. ஜன திபதியின் பயணத்தை முன்னிட்டு புலனாய்வாளர்கள் உச்சக்கட்டக் கண்காணிப்பைச் செலுத்தியிருந்தனர். இதனால், 31ஆம் திகதி நள்ளிரவே ஜனாதிபதி இராணுவக் காவலரண்களை தாண்டிவிட்டார் என்ற தகவல் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்துள்ளது. எனினும், யாழ்ப்பாணத்துக்குள் ஜனாதிபதி நுழைந்துவிட்டாரா? அவர் எங்கு சென்றார்? என்று அவர்களால் தொடர்ச்சியாக அறியமுடியவில்லை. இந்த விடயங்கள் தொடர்பில் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் தெரியாத நிலையில் நேற்று அதிகாலை பாதுகாப்பு வட்டாரங்களிலும் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களிடத்திலும் பெரும் பரப்ரப்பு ஏற்பட்டுள்ளது. பின்னர் மயிலிட்டித் துறைமுக அபிவிருத்திப் பணிகளுக்காக எந்த வாகனத் தொடரணியும் இல்லாமல் தனி வாகனத்தில் ஜனாதிபதி சென்று இறங்கியபோதே, ஜனாதிபதி யாழ்ப்பாணத்தில் தான் தங்கியிருந்தார் என்ற விடயம் புலனாய்வு அதிகாரிகளுக்கும் அரச வட்டாரங்களுக்கும் தெரியவந்துள்ளது. https://newuthayan.com/article/புலனாய்வு_அதிகாரிகளுக்கு_'தண்ணிகாட்டிய'_ஜனாதிபதி!
-
7 மாதங்களில் இலஞ்சம் பெற்ற 49 பேர் கைது!
7 மாதங்களில் இலஞ்சம் பெற்ற 49 பேர் கைது! adminSeptember 2, 2025 இந்த ஆண்டின் முதல் 7 மாதங்களில் இலஞ்ச பெறப்பட்ட சம்பவங்களுடன் தொடர்புடைய 49 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. குறித்த காலகட்டத்தில் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு 3,937 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. அதன் அடிப்படையில் 72 சுற்றிவளைப்புகள் நடத்தப்பட்ட நிலையில் அவற்றில் 39 சுற்றிவளைப்புகள் வெற்றியடைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதிகளவில் இலஞ்சம் பெற்ற சம்பவங்கள் காவற்துறை திணைக்களத்தில் பதிவானதுடன், இதுவரை 17 காவற்துறை அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. நீதி அமைச்சு, சுகாதார அமைச்சு, குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம், இலங்கை போக்குவரத்து ஆணைக்குழு மற்றும் பிரதேச செயலகங்கள் போன்ற அரச நிறுவனங்களில் கடமையாற்றியவர்களும் அவர்களில் அடங்குவதாக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. அத்துடன் கடந்த காலங்களில் இலஞ்ச வழக்குகள் தொடர்பாக 27 நபர்களை நீதிமன்றங்கள் குற்றவாளிகளாக அடையாளம் கண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://globaltamilnews.net/2025/219975/
-
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரர் வி.தர்மலிங்கத்தின் 40ஆம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு!
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரர் வி.தர்மலிங்கத்தின் 40ஆம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு! adminSeptember 2, 2025 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரர் வி.தர்மலிங்கத்தின் 40ஆம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. யாழ். தாவடியில் அமைந்துள்ள அமரர் தர்மலிங்கத்தின் நினைவுத் தூபியில் குறித்த அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது. நிகழ்வில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் அமரர் தர்மலிங்கத்தின் புதல்வருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம், வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் பாலச்சந்திரன் கஜதீபன், யாழ்ப்பாண தேசிய கல்வியற் கல்லூரியின் சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி பா.தனபாலன்,வவுனியா மாநகர சபை முதல்வர் சுந்தரலிங்கம் காண்டீபன், வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தன், வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் தி.நிரோஸ், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டிருந்தனர். https://globaltamilnews.net/2025/219965/
-
காலநிலை மாற்றம்: இலங்கையின் தமிழ்த்தாயகத்திக்கு கொண்டுவரும் புதிய நெருக்கடி நிலை
காலநிலை மாற்றம்: இலங்கையின் தமிழ்த்தாயகத்திக்கு கொண்டுவரும் புதிய நெருக்கடி நிலை Photo: ஐசாக் நிக்கோ | இலங்கையின் வட மாகாணத்திலும், போரினால் ஏற்பட்ட பேரழிவுகள், கட்டமைக்கப்பட்ட இனப்பாகுபாட்டு நடவடிக்கைகள் போன்றவற்றால் அவதிக்குள்ளாகியுள்ள தமிழ் மக்கள் மிகையளவில் பரம்பியுள்ள ஏனைய பிரதேசங்களிலும் சாதகமற்ற காலநிலை மாற்றங்களால் ஏற்பட்டிருக்கின்ற நெருக்கடி நிலை தமிழ்த் தேசியத்துக்கு பல புதிய சவால்களை ஏற்படுத்தியுள்ளது. “இந்த மண்ணில்தான் உங்களது இனத்தின் அடையாளம் ஆழ வேரூன்றியிருக்கிறது” என 1998ஆம் ஆண்டு, புலம்பெயர் தமிழ் மக்களிடையே உரையாற்றும்போது, தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தெரிவித்தார். இலங்கையின் வட கீழ் நிலப்பரப்பான தீவின் மேற்குக் கரையோரத்தில் கற்பிட்டி தொடங்கி கிழக்குக் கரையோரமான திருகோணமலை வரை உள்ள 14ஆம் 17ஆம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் யாழ்ப்பாணம் இராசதானியின் பிரதேச எல்லைகளாக இருந்த பகுதியையே அவர் அவ்வாறு மேற்கோளிட்டார். இந்த மண்ணுக்காகவும், அதனை ஆளும் வல்லமைக்காகவும்தான், இலங்கை அரசுக்கும் பிரிவினைவாத தமிழ் சக்திகளுக்கும் இடையில் இடம்பெற்ற இருபத்தாறு வருடகால ஆயுதப் போராட்டத்தில் எண்ணிலடங்காத ஆண்களும் பெண்களும் போராடி உயிர்துறந்தனர். ஒரு முக்கியம் வாய்ந்த தமிழ் தேசிய கட்சியான இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் சிவஞானம் ஸ்ரீதரன் “போருக்குப் பிறகும், எங்களது இறைமையையும் விடுதலையையும் மீளப்பெற நாங்கள் இன்னும் போராடிக்கொண்டுதான் இருக்கிறோம்” என என்னிடம் கூறினார். இந்நெருக்கடிநிலைக்கான தீர்வு இதுவரை எட்டப்படாத நிலையில் மேலதிகமாக இன்னுமொரு பிரச்சினை பிறந்திருக்கிறது: எந்த நிலத்தைப் பாதுகாக்க தமிழ் மக்கள் தங்கள் உயிர்களைத் தியாகம் செய்தார்களோ, எந்த நிலத்தில் அவர்களது அடையாளம் ஆழமாக வேரூன்றியிருக்கிறதோ அதே நிலம் ஒரு புதிய, மாறுபட்ட அச்சுறுத்தலை எதிர்நோக்கியிருக்கிறது. சுவிஸ் நாட்டின் விவசாய விஞ்ஞான பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்களில் ஒருவரான நடராஜா ஸ்ரீஸ்கந்தராஜா என்னிடம் தெரிவித்ததாவது, “இது இனிமேலும் வெறும் காலநிலை மாற்றம் அல்ல. இது ஒரு காலநிலை நெருக்கடி.” பல வளர்ந்து வரும் சிறுதீவு நாடுகள் போல இலங்கையும் காலநிலை மாற்றத்தில் மேற்கொள்ளப்படும் அநீதிக்கான ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக இருக்கிறது. குறிப்பிடத்தக்க அளவு உயர் காபன் உமிழ்வை மேற்கொள்ளாத போதும், உலகளாவிய காபன் இடர் குறியீட்டுப் பட்டியலில் இலங்கை தொடர்ந்தும் முதல் பத்து இடங்களுக்குள் வரிசைப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், உலக வங்கியின் 2018ஆம் ஆண்டின் ஆய்வொன்றின்படி இலங்கையின் அதிகூடிய காலநிலை வெப்பநிலைத் தளங்களாக வடக்கு மற்றும் வடமேல் மாகாணங்கள் இனங்காணப்பட்டுள்ளன. தமிழ்த் தாயகத்தின் பகுதிகளாகக் கருதப்படும் யாழ்ப்பாணம், புத்தளம், மன்னார் மற்றும் கிளிநொச்சி ஆகிய இடங்களே காலநிலை இடர்பாட்டினால் அதிகூடிய பாதிப்புக்குள்ளாகும் வாய்ப்பைக் கொண்டிருக்கும் மாவட்டங்களாக கருதப்படுகின்றன. யுத்தத்தால் பாதிக்கப்பட்ட இப்பிராந்தியங்கள் – நீண்டகால இனப் பாகுபாடு மற்றும் அரச வன்முறைகளுக்குள்ளான மாவட்டங்கள் – இக்காலநிலை இடரை எதிர்கொள்வதற்கான வளங்கள் மற்றும் வழிமுறைகளை அதிகுறைந்த அளவில் கொண்டிருக்கின்றன. பாதிக்கப்பட்ட சமூகங்களுடன் நடாத்தப்படும் காலநிலை மற்றும் அறிவியல் ஆய்வு மதிப்பீடுகளுடன் கூடிய கலந்துரையாடல்கள், தமிழ் தாயகத்தின் காலநிலை அவசர நிலையின் அதிர்ச்சியூட்டும் நிகழ்நிலைத் தரவுகளை வெளிப்படுத்துகின்றன. கடல்நீர்மட்ட உயர்வு, நிலம் உப்பாதல், வெள்ளம், வரட்சி, கரையோர மண்ணரிப்பு, பவள வெழுக்கம், வானிலையின் நிலையற்ற தன்மை மற்றும் தீவிர வெப்பம் போன்றவை ஏற்கனவே விவசாய மற்றும் மீன்பிடி சமூகத்தின் வாழ்வாதாரத்தை சீர்குலைத்த வண்ணம் உள்ளதோடு அந்நிலத்தின் தன்மை மற்றும் உற்பத்தித் திறனிலும் மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. அதிகம் துஷ்பிரயோகிக்கப்பட்ட தமிழர்களும் அவர்களது தலைமைத்துவங்களாக தங்களைப் பிரகடனப்படுத்திக்கொள்ளும் தமிழ்த் தேசிய அமைப்புக்களும் இவ்வச்சுறுத்தல் தொடர்பான விழிப்புணர்வு இல்லாமல் வெறுமனே அவற்றை கடந்துசெல்லவே தயாராக உள்ளனர். நீர்வளமும் அதன் ஊடுருவலும் “ஜூன் அல்லது ஜூலை மாதங்களில் மழை இல்லாதபோது வயல் நிலங்களில் உப்புப் படிமங்கள் உருவாக்கியிருப்பதை காணலாம்” என மன்னார் மாவட்டம் விடத்தல் தீவைச் சேர்ந்த சூழலியலாளரான எடிசன் மேரிநாதன் என்னிடம் குறிப்பிட்டார். நிலம் மற்றும் நிலக்கீழ் நீரின் உப்புத்தன்மையை அதிகரிக்கின்ற, உப்புப் படிவாக்கம், இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக ஏற்கனவே யாழ். குடாநாட்டின் 43 சதவீதமான விவசாய நிலங்களின் நிரந்தரமான கைவிடப்படலுக்கு காரணமாக இருந்ததோடு, அது அப்பகுதி முழுவதுமான பயிர்ப்பாசனம் மற்றும் குடிநீர் விநியோகம் ஆகியவற்றுக்கும் அச்சுறுத்தலாக இருக்கின்றது. 2020 இல் நிலக்கீழ் நீர்வளத்தின் உடனடி பரிபாலானத்தை வலியுறுத்தும்வகையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்று, குறித்த ஆண்டில் யாழ். குடாநாட்டில் இருந்த கிட்டத்தட்ட 59 சதவீதமான கிணறுகளின் நீர், பயிர்ப் பாசனத்துக்கு பொருத்தமற்ற விதத்தில் உப்புத்தன்மை வாய்ந்ததாக மாறியிருந்தமை குறித்து கண்டறிந்தது. தொடர் நீர்ப்பற்றாக்குறைக்காக அறியப்பட்ட வட மாகாணத்தில் இதுவொரு எளிய பிரச்சினை அல்ல என்பது குறிப்பிடத்தக்கது. காலநிலை சமநிலையின்மையின் அறிகுறிகளுக்கு எடுத்துக்காட்டாக இருக்கின்ற ஏராளமான கரையோரக் கிராமங்களில் ஒன்றான மன்னார் மாவட்டத்தின் இலுப்பக்கடவையில் நீரினுள் நிற்கும் நாய். காலநிலை சமநிலையின்மையின் அச்சுறுத்தல்கள் பற்றிய விடயங்கள் இன்னும் பொதுவான கலந்துரையாடல் வடிவம் பெறவோ அல்லது தமிழ் பெரும்பான்மை கொண்ட வடக்கின் அரசியல் சிந்தனைகளாக கருத்தில் கொள்ளப்படவோ இல்லை. Photo: ஐசாக் நிக்கோ உப்புப் படிவாக்கம் அதிகளவான நீர் பாவனையின் விளைவு என காலநிலை விஞ்ஞானி தரணி கோபாலகிருஷ்ணன் விளக்குகின்றார். சனத்தொகை அதிகரிக்க அதிகரிக்க மக்கள் புதிது புதிதாக கிணறுகளை தோண்டிய வண்ணம் இருக்கிறார்கள். நீர்ப்பாசனம் மற்றும் வீட்டுத் தேவைகளுக்கான அதிகளவான நீர் பாவனைய, யாழின் நீர்கொள் படுகைகளாகச் செயற்படும் சுண்ணாம்புப் படுகைப் பாறைகளுக்கிடைப்பட்ட கடல் மற்றும் நன்னீர் சமநிலையை பாதிக்கின்றமை கிணறுகளிலுள்ள நீரை உவர்தன்மைமிக்கதாக மாற்றுகிறது. ஆனால், காலநிலை சமநிலையின்மையால் விளைந்த கடல்நீர்மட்ட உயர்வு மற்றும் நிலமட்டத்தைத் தாண்டிய கடல் நீரின் மிகை ஊடுருவல் போன்றவற்றாலும்கூட உப்புப் படிவாக்கம் நிகழ்கின்றது. உவர்நீர் ஊடுருவலின் விளைவாக யாழில் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்பும், நூற்றுக்கணக்கான கிணறுகளும் பாவனையிலிருந்து கைவிடப்பட்டுள்ளன. கோபாலகிருஷ்ணனின் கூற்றுப்படி பல்வேறு இடங்களில் மண்ணின் உப்புப் படிவாக்கம் 20 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட மூன்று அல்லது நான்கு மடங்கு அதிகரித்துள்ளது என்பது தெரிகிறது. மேலும், பூநகரி அல்லது அரியாலையிலுள்ள கைவிடப்பட்ட வயல் நிலங்களுக்குச் சென்று பார்த்தோமானால், அங்குள்ள மண் கடல் மண்ணின் தன்மையில் காட்சியளிப்பதோடு சிலவேளைகளில் அவற்றில் சிப்பிகளையும் கண்டெடுக்க முடியும் என்று அப்பெண் தெரிவித்தார். பெரும்பாலான மக்கள் வாழும் கரையோரத்தின் சமதரையான யாழ். குடாநாட்டில் கடல்நீர்மட்ட உயர்வானது மண்ணரிப்பு மற்றும் வெள்ளப்பெருக்கு போன்றவற்றுக்கும் காரணமாக அமையும். மொத்த நிலப்பரப்பில் 35 சதவீதமும் பிராந்தியத்தின் விவசாய நிலங்களில் 52 சதவீதமும் 2100ஆம் ஆண்டளவில் அற்றுப்போகும் வாய்ப்புள்ளதாக காலநிலை விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். யாழ்ப்பாணத்தின் மூன்றில் ஒரு பங்கு குடும்பங்கள் விவசாயத்தில் ஈடுபட்டிருக்கின்ற நிலைமையில், யாழ்ப்பாணத்தின் உழைக்கும் மக்கள் தொகையில் நாலில் ஒரு பங்கினரை 2050 அளவில் நெல்லுற்பத்தியில் ஏற்படப்போவதாக கணிக்கப்படும் சுமார் ஒரு மில்லியன் டாலர்கள் வீழ்ச்சி நேரடியாக பாதிக்கும் அபாயம் உள்ளது. சனத்தொகை பெருக்கத்தோடு கூடிய நெல்லுற்பத்தியின் வீழ்ச்சி குடாநாட்டில் உணவுப் பற்றாக்குறையை ஏற்படுத்துவதோடு வறுமைக்கும் வழிவகுக்கும் என காலநிலை விஞ்ஞானிகள் எதிர்வு கூறுகின்றனர். இலங்கையின் வடமேற்குக் கரையோரமாக கிழக்கு அரிப்பு பகுதியில் நீரை அண்மித்த இரண்டடுக்கு செங்கல் மாளிகையொன்று தீவிர வெப்பம் மற்றும் கடலரிப்பின் விளைவாக அழிவடைந்த வண்ணம் காணப்படுகிறது. 19ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட இக்கட்டடம் ஒரு காலத்தில் இலங்கையின் முதல் பிரிட்டிஷ் ஆளுநரான பிரடெரிக் நோர்த் அவர்களின் வசிப்பிடமாக இருந்தது. இன்று இது அழிவடையும் நிலையில் உள்ளது. இன்னும் சில மீட்டர்கள் தூரத்தில் கடலலைகளின் தொடர் மோதலால் அங்குள்ள உருளைவடிவக் கிணறொன்றின் செங்கல் அடுக்குகள் படிப்படியாக வெளித்தெரியத் தொடங்கிவிட்டன. 71 வயதான கிராமவாசியான டீ.எம்.க்ரூஸின் கூற்றுப்படி கரையோர மண்ணரிப்பானது கடந்த மூன்று அல்லது நான்கே வருடங்களில் இக்கிணற்றைச் சுற்றியுள்ள மண்ணை உட்கொண்டுள்ளதாக தெரிகிறது. கடலிலிருந்து கரைக்கு மீன் கொண்டுவரும் கரையோர மீனவரான எஸ்.ஏ.பெர்னாண்டோ இக்கிணற்றிலிருந்து நன்னீரை குடிநீராகப் பயன்படுத்தி வந்தவர். தற்போது இக்கிணற்றில் குடிப்பதற்கு முடியாத நிலையில், நீரில் உப்பு கலந்திருப்பதாக அவர் கூறுகிறார். என்ன காரணத்தினால் கடலரிப்பு மற்றும் உப்பேற்றம் போன்றவை நிகழ்கின்றன என்ற எந்தவித அனுமானமும் அவருக்கு இல்லை. காலநிலை மாற்றத்தால் ஏற்படும் கடல் நீர்மட்ட உயர்வு கடலரிப்பு வீதத்தை அதிகரிக்கின்ற அதேவேளை, கரையோர கட்டுமானங்கள் போன்ற மனித நடவடிக்கைகள் மற்றும் இயற்கையில் ஏற்படும் இயல்பான மாற்றங்கள் போன்றவற்றின் விளைவுகள் கூட இவ்வாறான கடலரிப்புக்கு காரணமாக அமையலாம். கடலரிப்பின் விளைவால் பெரும்பாலான வடமேல் கரையோரங்களில் உள்ள நிலப்பரப்புக்கள் படிப்படியாக கடலினால் உள்வாங்கப்பட்டு வந்துள்ளன. உதாரணமாக முத்தரிப்புத்துறை மற்றும் சிலாவத்துறைக்கு இடைப்பட்ட பகுதிகளை குறிப்பிடலாம். “மக்கள் நடந்துசெல்கின்ற இடங்கள் கடலுக்குள் காணாமல் போய்விட்டன” என்கிறார் க்ரூஸ். “எதிர்காலததில் எது என்ன விதத்தில் நடக்கும் என்பது இறைவனுக்கே தெரியும்.” என்றும் க்ரூஸ் கூறுகிறார். எஸ்.ஏ.பெர்னாண்டோ இக்கிணற்றிலிருந்து நன்னீரை குடிநீராகப் பயன்படுத்தி வந்தவர். ஆனால், தற்போது இக்கிணற்று நீரில் குடிப்பதற்கு முடியாத நிலையில் உப்பு கலந்திருக்கிறது. தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்கில் காலநிலையின் உக்கிரம் உப்புப் படிவாக்கம் மற்றும் கடலரிப்பை அதிகரிக்கச் செய்கிறது. இருந்தும் பெர்னாண்டோ போன்றவர்களிடம் இவ்வுலகளாவிய காலநிலை நெருக்கடி பற்றிய விழிப்புணர்வு போதிய அளவு இல்லை. Photo: ஐசாக் நிக்கோ தமிழ் தாயகத்தை கடல் உள்வாங்கிக்கொள்ளும் எதிர்வுகூறல் தமிழின் புராண வரலாற்றை எதிரொலிக்கிறது. சங்கத் தமிழ் இலக்கியங்கள் குறிப்பிடும் குமரிக் கண்டம் – தமிழர்கள் இன்று வாழ்கின்ற நிலங்களுக்கு எந்த நிலத்தில் இருந்து இடம்பெயர்ந்து வந்தார்களோ அந்தப் புராதன நிலத் துண்டம் – முற்றாகக் கடல் உள்வாங்கிக்கொள்ள முன்பு அந்நிலம் ஒரு பெரும் பிரளயம் அல்லது பிரளயங்களின் தொடர் போன்ற இயற்கைப் பேரழிவுகளை எதிர்கொண்டது. இத்தொன்ம வரலாறு எமக்கு வருத்தமளிக்கிறது. புத்தளம் மாவட்டத்தின் மேற்குப் பகுதியில் உள்ள கல்பிட்டியின் தீவுகள் மற்றும் ஏனைய நிலப்பகுதிகள் இன்று கடலில் மூழ்கிக்கொண்டிருக்கின்றன. யாழ். குடாநாடு மற்றும் கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பகுதியைச் சுற்றியுள்ள பெரும்பாலான தீவுகளை 2100ஆம் ஆண்டளவில் முற்றாக கடல் உள்வாங்கிக்கொள்ளும் என காலநிலை விஞ்ஞானிகள் எதிர்வு கூறுகின்றனர். அண்மைய வெள்ளப்பெருக்குகளை கருத்தில் கொள்ளும்போது கடந்தகால புராணங்களில் கூறப்பட்டுள்ள பிரளயங்கள் வினோதமான தீர்க்கதரிசனமாக தோன்றுகிறது. வருடா வருடம் இயற்கை அனர்த்தங்களால் இலங்கைக்கு ஏற்படும் பொருளிழப்பில் பெரும்பகுதியை வெள்ள அனர்த்தங்களே ஏற்படுத்துகிறன. வருடாந்தம் சுமார் 140 மில்லியன் அமெரிக்க டாலர்களாக இருக்கின்ற இத்தொகை 2030ஆம் ஆண்டளவில் 338 மில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் வெள்ளப்பெருக்கானது மண்சரிவு, தொற்றுநோய்கள் போன்ற இன்னோரன்ன அபாயங்களை அதிகரிக்கச்செய்து உயிர், வாழ்வாதாரம் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளுக்கும் அச்சுறுத்தலாக அமையும் அபாயம் உள்ளது. 1964ஆம் ஆண்டு வடக்கில் சுமார் ஆயிரம் பேர் வரை உயிரிழக்க நேரிட்ட இராமேஸ்வரம் சூறாவளிக்குப் பின்னர் குறிப்பிடத்தக்களவு வெள்ள அனர்த்தங்கள் நிகழ்ந்ததாக தனது கவனத்தில் இல்லை என கரையோர நகரமான விடத்தல்தீவின் விவசாயக் குடும்பமொன்றின் ஐந்தாவது தலைமுறையைச் சேர்ந்த செபஸ்டியன்பிள்ளை சத்தியசேகரன் தெரிவித்தார். ஆனால், 2020 இல் புரெவி புயல் தாக்கியபோது பல இடங்கள் வெள்ளக்காடானதோடு சுமார் 70,000 இற்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்புக்குள்ளாயினர். சத்தியசேகரத்தின் வயல் நிலம் முற்றாக நீரில் மூழ்கியதோடு அவரது மூத்த சகோதரர் அவ்வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து அவ்வருடத்துக்கான விவசாயத்தை முற்றுமுழுதாக கைவிட்டதாகச் சொன்னார். நிலக்கீழ்நீர் உப்பாகியிருக்கலாம் என ஊகித்து அடுத்த வருடமும் அவர் பயிர்ச்செய்கையை மேற்கொள்ளவில்லை. வெள்ள அனர்த்தங்களால் இலங்கையில் கடந்த முப்பது ஆண்டுகளில் 10 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டிருந்தாலும் அதிகரித்துவரும் வெள்ள அனர்த்தங்களின் நிகழ்தகவுகள் மக்கள் மத்தியில் முழுவதும் பதிவுசெய்யப்படவில்லை. நிலத்தின் மதிப்பானது அதன் நிலையமைப்பு, அங்குள்ள இயற்கை பேரழிவுகளுக்கான சாத்தியக்கூறுகள் மற்றும் தள விபரம் போன்ற அளவுகோல்களில் தங்கியுள்ளது என மன்னார் தீவைச் சேர்ந்த சொத்து மதிப்பீட்டாளர் செபஸ்டியன்பிள்ளை சத்யதீபன் அறிந்திருந்தார். இருப்பினும், கட்டுமானத்தை ஆரம்பித்து இரண்டாவது வருடத்திலேயே வெள்ளத்தில் மூழ்கிய ஒரு நிலத் துண்டில் குறித்த கட்டுமானத்தை அவர் இன்னும் தொடர்கிறார். “வெள்ளம் வடிந்ததும் நிலம் காய்ந்துவிடும்” என்றும் “அது ஒரு பெரும் பிரச்சினையல்ல” என்றும் அவர் சொல்கிறார். எனினும், குன்சன் மற்றும் எடிசன் மேரிநாதன் போன்ற சூழலியல் செயற்பாட்டாளர்கள் மன்னாரில் வாழும் மக்கள் தீவிர காலநிலையின் நெருக்கடி நிலை குறித்து போதிய விழிப்புணர்வின்றி அசிரத்தையாக இருப்பது குறித்து கவலை தெரிவித்தனர். கனமழையின்போது மன்னார் தீவை பிரதான நிலப்பரப்புடன் இணைக்கும் வீதியின் நீர் மட்டத்தை குன்சன் கண்காணித்து வருகிறார். இந்த வீதி விரைவில் நீரில் மூழ்கும் எனவும், அது மன்னாரை அத்தியாவசியப் பொருள் வழங்கலில் இருந்தும் துண்டித்துவிடுவதோடு, மக்களை அங்கிருந்து இடம்பெயரும் கட்டாயத்துக்கும் ஆளாக்கும் எனவும் எச்சரிக்கை செய்தார். வெம்மையும் அறுவடையும் காலநிலை மாற்றம் இலங்கையில் வரட்சி, வெள்ளப்பெருக்கு போன்ற அசௌகரியங்கள் ஏற்படுவதற்கான நிகழ்தகவு மற்றும் தீவிரம் போன்றவற்றை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2008 – 2018 இற்கு இடைப்பட்ட காலத்தில் வரட்சியால் நாட்டில் சுமார் எட்டு மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டனர். 2014, 2016 -17 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் ஏற்பட்ட வரட்சியில் வெப்ப வலயமான வட மாகாணம் அசாதாரணமான பாதிப்பை எதிர்கொண்டது. 2023 ஆகஸ்ட் மாதத்தில் வரட்சி போன்ற காலநிலை காரணமாக இலங்கையில் பத்து மாவட்டங்களில் உள்ள மக்கள் பாதுகாப்பான குடிநீரின்றி அவதிக்குள்ளாயினர். குறிப்பாக யாழ்ப்பாணம், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்கள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டன. கிட்டத்தட்ட பாதிக்கப்பட்ட 150,000 பேரில் 85 சதவீதமானோர் இம்மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்வீடன் நாட்டின் விவசாய விஞ்ஞான பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஸ்ரீஸ்கந்தராஜா, இலங்கையானது வெப்ப வலயங்கள் உட்பட அனைத்துப் பிரதேசங்களிலும் சீரான மழைவீழ்ச்சியை பெறும் ஒரு நாடு எனத் தெரிவிக்கிறார். அழுத்தம் மிக்க காலநிலை கொண்ட சூழலில் மோசமான நிலையில் உள்ள நீர் “மேலாண்மை” மற்றும் வளங்களின் வினைத்திறனான பரிபாலனத்தின் தேவை ஆகியன இன்னும் அழுத்தமான பிரச்சினையாக இருக்கின்றன எனவும் அவர் கூறினார். மேலும், “அதிக நீரை நுகரும்” சோள உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் வரையப்பட்டுள்ள தேசிய செயற்றிட்டத்தை விமர்சித்தவண்ணம், உள்ளூர் சாகுபடிகள் பற்றிய வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு விதைத்தலுக்கான பயிர்கள் மறுபரிசீலனை செய்யப்படல் வேண்டும் என்றும், நிலத்தின் தரைத்தோற்றம், தட்பவெப்பநிலை மற்றும் வளங்களின் கிடைப்பனவுகளுக்கு ஏற்புடைய விதத்தில் விவசாயப் பயிர்களை தேர்வுசெய்வது அவசியம் எனவும் அவர் வாதிடுகிறார். பசுமைப் புரட்சி காலத்தில், அதிக விளைச்சலைத் தரும் நெல் மற்றும் பிற பயிர்களால் பதிலீடு செய்யப்பட முன்னர் தமிழர்களின் உணவுக் கலாசாரத்தில் முக்கிய இடம் வகித்துவந்த, மிகக் குறைந்தளவு நீரின் கிடைப்பனவிலும் செழிப்பாக வளரக்கூடிய, தீவிர காலநிலையின் தாங்குதிறன் மிக்க பயிரான ‘தினை’யை தனது பாட்டன் காலத்து மக்கள் உண்டு பிழைத்த கதைகளை அவர் நினைவுகூர்ந்தார். புராணங்களில் முருகப் பெருமானின் மனைவி வள்ளி, தினை வயல்களுக்கு காவலரணாக இருந்ததை குறிப்பிட்டு, “கதிர்காமம் முருகன் கோவிலில் பிரசாதமாக தினை வழங்கப்படுவது எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கிறது” என்றும் ஸ்ரீஸ்கந்தராஜா கூறினார். காலநிலை சமநிலையின்மையால் ஏற்படும் வெப்பநிலை அதிகரிப்பானது அதிகரித்த வரட்சி மற்றும் அதனோடு தொடர்புடைய பல்வேறு பாதகமான விளைவுகளை ஏற்படுத்தவல்லது. தெற்காசியாவில் வெப்ப அலைகளின் தாக்கம் அதிகரித்து வருகின்றது. குறிப்பாக இலங்கையின் வட பகுதி இதனால் அதிக தாக்கத்துக்கு உள்ளாகும் – சில எதிர்வுகூறல்களுக்கமைய இந்நூற்றாண்டின் முடிவில் 35 பாகை செல்சியஸை அண்மித்த சராசரி வெப்பநிலையை இப்பிராந்தியம் எதிர்கொள்ள நேரிடும். இந்த ஆண்டில் மட்டும் வெப்ப அலைகள் வட மாகாணத்தில் குறைந்தபட்சம் ஏழு பேரையேனும் கொன்றிருக்கும். தீவிர வெப்பநிலை அதிகரிப்பானது முறையான குளிரூட்டல் வசதிகள் இல்லாமல் திறந்த வெளியில் வேலை செய்யும்இ வடக்கிலுள்ள பல்லாயிரக்கணான விவசாயிகள் மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள தொழிலாளர்களது சுகாதாரம் மற்றும் வாழ்க்கைத் தரத்தை பாதிக்கும். உயர் வெப்பநிலையால் விவசாய விளைச்சல்களும் பாதிப்புக்கு உள்ளாகும். குறிப்பாக இலங்கையின் முக்கிய சாகுபடியான நெற்பயிர் வெப்பநிலைக்கு உணர்திறன் கூடியது. வெப்பநிலை அதிகரிப்பால் விளைச்சலில் ஏற்படுகின்ற வீழ்ச்சி, குடும்ப மற்றும் தேசிய உணவு கிடைப்பனவை அச்சுறுத்துவதோடு, குறிப்பிடத்தக்களவு வறுமை வீதத்தையும் அதிகரிக்கும் என எதிர்வுகூறப்படுகிறது. மதிப்பீடொன்றின்படி தீவிர காலநிலை மாற்றம் இல்லாத நிலைமையில் ஏற்படக்கூடிய வறுமை வீத அதிகரிப்பை விட இது 12 இலிருந்து 26 சதவீதம் அதிகமாகும். சில இடங்களில் வெப்பநிலை அதிகரிப்போடு கூடிய விளைச்சல் வீழ்ச்சி ஏற்கனவே நலிவு நிலையை எட்டியுள்ளது. குறிப்பாக கிளிநொச்சி, வளைபாடு பிரதேசத்தில் யுத்தத்தில் கணவர்களை இழந்த பெண்கள் மேற்கொள்ளும் கடற்பாசி விவசாயத்தில் 2024ஆம் ஆண்டின் வெப்ப அலைகளின் தாக்கத்தால் 80 சதவீதம் பயிர்கள் சேதமடைந்துள்ளன. 2024 இல் வெப்ப அலைகளாலும் 2022 இல் குளிராலும் கால்நடைகளை இழந்த இலங்கையின் வடக்கைச் சேர்ந்த கால்நடை விவசாயி. காலநிலை நெருக்கடிக்கு மத்தியில், விவசாய வாழ்வாதாரங்கள் அதிக வெப்பநிலை மற்றும் கணிக்க முடியாத வெப்பநிலை ஏற்ற இறக்கங்கள் ஆகியவற்றால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகின்றன. Photo: ஐசாக் நிக்கோ அதிக வெப்பநிலையானது உணவூட்டல் மற்றும் வளர்சிதை மாற்ற (உயிரினங்கள் உயிர்வாழ்வதற்கும், வளர்வதற்கும், இனப்பெருக்கம் செய்வதற்கும், உடலில் உள்ள அனைத்து வேதிவினைகளின் தொகுப்பாகும்) விகிதங்களை துரிதப்படுத்தும். ஆகையால், இதன்மூலம் ஒரு சில குறிப்பிட்ட பீடைகளின் குடித்தொகை பரம்பலின் பெருக்கம் அதிகரிப்பதினூடு பயிர்ச்சேத வீதமும் அதிகரிக்கும். அதிகரித்த வெப்பத்துடன் கூடிய மழைப்பொழிவு ஆசியாவின் மிகவும் அழிவுகரமான நெல் பூச்சிகளில் ஒன்றான பழுப்பு நிற தத்தியின் திடீர் பரவலுக்கு வழிவகுக்கும். வெப்பநிலை உயர்வு மந்தைகளையும் பாதிக்கும் – கடுமையான வெயில் காலங்களில் வட பகுதி விவசாயிகள் தங்கள் கால்நடைகளை இழந்துள்ளனர் மற்றும் அனுமானிக்க முடியாத அழிவுகரமான வெப்பநிலை ஏற்ற இறக்கங்களும்கூட இவ்விழப்புக்கள் ஏற்படக் காரணமாக அமையலாம். டிசம்பர் 2022 இல் மாண்டூஸ் சூறாவளியின் போது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மிகையான குளிரின் காரணமாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட கால்நடைகள் இறந்தன. சிலவேளைகளில் மிதமான காலநிலை இருந்தாலும்கூட அதன் கணிக்கமுடியாத தன்மை மீனவர்களுக்கும் விவசாயிகளுக்கும் ஒரு அச்சுறுத்தலாகவே இருக்கும். “நாங்கள் காற்றை எதிர்பார்க்கும்போது, அது வீசாது. நாங்கள் மழையை எதிர்பார்க்கும்போது, அது பெய்யாது. நாங்கள் முன்பு பெற்ற விளைச்சலை இனிப் பெற இயலாது” என மன்னார் மாவட்டம், இலுப்பைக் கடவையைச் சேர்ந்த விவசாயியொருவரின் மனைவி மகாதேவி குறைகூறினார். இவ்வாறான எதிர்வுகூறமுடியாத தன்மை கூட மீனவர்களைப் பாதிக்கும். “முன்பெல்லாம் எமது மூதாதையர்கள் ஒரு குறித்த நாளில் மழை பெய்யும் என்று சொன்னால், அது நடக்கும். இன்று நிலைமை அப்படியல்ல” என அந்தோனியார்புரம் கரையோர கிராமத்தைச் சேர்ந்த மீனவர் கனகசபை குகசிரி கூறினார். இளைஞர்களின் கைகளிலுள்ள திறன்பேசிகள் வாயிலாக குகசிரிக்கு வானிலை தொடர்பான தகவல்களை இலகுவாகப் பெற்றுக்கொள்ள முடிந்தபோதும், வானிலை எதிர்வுகூறல்கள் எல்லா வேளைகளிலும் துல்லியமாக இருக்காது என அவர் அறிந்திருக்கிறார். “அவர்கள் இன்று காற்றின் வேகம் அதிகமாக இருக்குமென்று சொன்னார்கள், ஆனால் அப்படி இல்லை” என்று சலித்துக்கொண்டார். இலங்கை, மன்னார் மாவட்டத்தின் ஓய்வுபெற்ற மீன்பிடி உத்தியோகத்தர் எம்.எஸ் மிரன்டா, ஓர் சேற்று நண்டோடு. இலங்கையின் நீர்நிலைகளில் ஏற்றுமதித் தரம் வாய்ந்த சேற்று நண்டுகளின் எண்ணிக்கை குறைந்தவண்ணம் உள்ளது. ஆனால், அதற்கான காரணங்களை நிர்ணயிக்கும் வகையில் எவ்வித ஆய்வுகளும் முன்னெடுக்கப்படவில்லை. Photo: ஐசாக் நிக்கோ நிச்சயமற்ற வானிலையைத் தவிர, காலநிலை சமனிலையின்மை குறித்து மீனவர்கள் வேறெந்த சந்தர்ப்பத்திலும் விசனம் தெரிவிக்கவில்லை. அது கடல்சார் சுற்றுச் சூழலின் அமைப்பில் ஏற்படுத்தவல்ல தாக்கங்களை அவதானித்தல், அளவிடல் அல்லது விளங்கிக்கொள்ளல் எளிதல்ல. மிதமிஞ்சிய மீன்பிடி, அழிவுகரமான செயன்முறைகளான டைனமைட் மீன்பிடி, இழுவை வலை மீன்பிடிப்பு, அடிவலை மீன்பிடி போன்ற செயற்பாடுகளால் உள்நாட்டு நீரினங்களின் பல்வகைமை வீழ்ச்சி போன்ற காலநிலைச் சமநிலையின்மையால் ஏற்படுகின்ற பாதிப்புகளுக்கு நிகரான விளைவுகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது. யாழ். நகரின் குருநகரில் உள்ள மீனவர்கள் தங்களது நீர்நிலைகளில் முன்பைவிட மீன்களின் அளவும், அதன் பல்வகைமை குறைந்துள்ளதாகவும், ஒரு காலத்தில் மிகவும் பிரசித்தமான ஏற்றுமதி பொருளாக இருந்த சிங்க இறால்கள் போன்ற சில மீனினங்கள் அங்கு முற்றாக அற்றுப்போயுள்ளதாகவும் குறிப்பிட்டனர். காலநிலை சமநிலையின்மையால் அதிகரிக்கும் நிகழ்தகவுடைய நீரின் வெப்பநிலை அல்லது அதன் உப்புத்தன்மையால் நீர்வாழ் விலங்குகளின் இனப்பெருக்க இயல்புகள் பாதிக்கப்படலாம் என்பது தெரிந்திருந்தும், என்னோடு பேசிய சிலர் இம்மாற்றங்களுக்கு மிகை மீன்பிடி மற்றும் அடிவலை மீன்பிடியையே காரணம் காட்டினர். மற்றுமொரு அதிக இலாபம் தரும் ஏற்றுமதி உயிரினமான சேற்று நண்டுகள் எண்ணிக்கையில் குறைந்து வருவதாக மன்னார் மாவட்டத்திற்கான மீன்பிடி மற்றும் நீரியல் வளத்துறையின் ஓய்வுபெற்ற உதவிப் பணிப்பாளர் எம்.எஸ்.மிராண்டா சுட்டிக்காட்டினார். ஆனால், “அதற்கான காரணங்கள் பற்றி அறிந்துகொள்ள போதிய ஆய்வுகள் எம்மிடம் இல்லை” என்று அவர் தெரிவித்தார். காலநிலை சமநிலையின்மையின் பாதிப்புக்கள் பற்றி உய்த்தறிய மீனவர்கள் சிரமப்படுகின்றனர். “ஆனால் அப்பாதிப்புகள் கடுமையானவை” என பவளப்பாறை சூழலியலாளர், இலாப நோக்கற்ற உள்நாட்டு கடல் ஆராய்ச்சி மற்றும் பாதுகாப்பு இணை நிறுவனர் நிஷான் பெரேரா வலியுறுத்தினார். குறிப்பாக ‘எல் நினோ’ மற்றும் ‘லா நினா’ காலங்களில் கடலின் மேற்பரப்பு வெப்பநிலை அதிகரிப்பது, பவள வெளுப்பு மற்றும் பவள இறப்புக்கு வழிவகுக்கும் என அவர் கூறினார். 1998 மற்றும் 2016ஆம் ஆண்டுகளில் இலங்கையின் கரையோரங்களில் முக்கிய பவள வெளுப்பு நிகழ்வுகள் நடந்தேறின. அதேசமயம், கிழக்குக் கரையோரமானது 2019 இல் ஒரு சிறிய வெளுப்பு நிகழ்வை எதிர்கொண்டது. பவள வெளுப்பு நிகழ்வுகள் முருகைக் கற்பாறைகளில் வாழும் உயிரினங்களை அழிப்பதோடு, சில மீனினங்கள் மற்றும் உணவுச் சங்கிலியில் கீழ்நிலைகளில் அவற்றை உண்ணும் உயிரினங்களையும் இல்லாதொழிக்கும். 2023 இல் ஏற்பட்ட வெப்ப அலைகளுக்குப் பிறகு திருகோணமலையை அண்மித்த பகுதிகளில் ஆய்வாளர்கள் பவள வெழுப்பை அவதானித்தனர். அத்தோடு, மன்னாரிலும் வெளுப்பு நிகழ்வுகள் ஏற்படலாம் என அதிகாரசபைகள் அஞ்சின. 25 ஆண்டுகளாக அலங்கார மீன்களைப் பிடித்து வரும் முஹம்மது சதாத், பவளப்பாறை வெளுப்பு ஏற்படுவதற்கான அறிகுறிகளை அவதானித்ததாக கூறினார். திருகோணமலையிலிருக்கும் தனது இல்லத்திலிருந்து ஏற்றுமதிக்காக கடல்வாழ் உயிரினங்களை பெற்றுக்கொள்ள வடக்கு மற்றும் கிழக்கு கரையோரமாக மட்டக்களப்பு, கல்பிட்டி மற்றும் மன்னார் போன்ற இடங்களுக்கு அவர் பயணிப்பவர். பவளவெழுப்பின்போது ஏற்படும் வெளிறலைப்போல முருகைக்கற் பாறைகள் இறந்து வெண்மையாக மாறும்போது தமது நடத்தைகள் மூலம் பவளப்பாறைகளின் ஆரோக்கியத்தை அளவிட்டுக் காட்டும் கருவியாகவும் மீன் இனங்கள் ஆபத்தில் உள்ளமை குறித்து முன்கூட்டியே எச்சரிக்கையை வெளிப்படுத்தும் தன்மையுமுள்ளதாகவும் கருதப்படும் வண்ணமயமான பட்டாம்பூச்சி மீன்களில் சிலவற்றை அவதானித்ததாக சாதாத் விளக்கிக் கூறினார். தான் அவதானித்த பவள இறப்புக்கு 2004ஆம் ஆண்டில் இந்தியப் பெருங்கடலில் ஏற்பட்ட சுனாமி அனர்த்தம், தொழில்முறை மீன்பிடித்தல் மற்றும் காலநிலை மாற்றத்தால் விளைந்த வெப்பநிலை அதிகரிப்பு போன்றவையே காரணம் என சாதாத் கருதுகிறார். நான் சந்தித்தவர்களில் அலங்கார மீன்பிடி வியாபாரத்தில் ஈடுபடும் சதாத் போன்ற வெகு சிலரே மீன்களின் குடித்தொகையில் ஏற்படும் வீழ்ச்சிக்கு வெப்பநிலை மாற்றத்தை காரணமாகக் கூறினர். “ஏனைய மீனவர்கள் பிரச்சினைக்கான புள்ளிகளை உரிய முறையில் இணைப்பதாகத் தோன்றவில்லை” என பெரேரா அவர்கள் தெரிவித்தார். அலங்கார மீன்களை பிடித்து வாழ்வாதாரம் செய்யும் முகமது சதாத் ஓர் தாமரைக்காத்தான் மீனுடன். இலங்கையில் உள்ள அலங்கார மீன்களைப் பிடிக்கும் மீனவர்கள் கடல் வெப்பநிலை அதிகரிப்பால் பவளப்பாறை வெளுப்பதை முதலில் கவனித்துள்ளனர். Photo: ஐசாக் நிக்கோ மோசமான தாக்கம்: தயாரற்ற நிலை 2022 இல் உச்சம் தொட்ட, இலங்கை எதிர்கொண்டுவரும் பொருளாதார நெருக்கடியினால் ஏற்பட்ட வீழ்ச்சி, நாட்டின் காலநிலை நெருக்கடி நிலையை எதிர்கொள்ளும் திறனை குறைத்துள்ளது. ஒப்பீட்டளவில் வடமேல் மாகாணம் வளமானதாகக் காணப்பட்டாலும் காலநிலை அசாதாரண நிலைமையினால் அதிகளவு பாதிப்படையும் பத்து பிராந்தியங்களில் ஐந்து பிராந்தியங்கள் வளம் குன்றிய வட மாகாணத்தில் உள்ளன. பாதிப்படையும் அபாயம் உள்ள முதல் பத்து மாவட்டங்களில் இடம்பெறும் முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்கள் நாட்டின் வறிய மாவட்டங்களுமாகும் என்பது குறிப்பிடத்தக்கது. கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை உட்பட தமிழ் பேசுபவர்கள் அதிகம் வாழும் பல்வேறு பகுதிகள், 2009 இல் பாரிய அட்டூழியங்கள் மற்றும் சிலரது வாதத்தின்படி இனப்படுகொலையுடன் முடிவடைந்த 26 ஆண்டுகால உள்நாட்டுப் போரின் போதான கடுமையான சண்டை ஏற்படுத்திய தாக்கத்திலிருந்து படிப்படியாக மீண்டு வருகின்றன. இருந்தும், போரினால் சோர்வடைந்த தமிழ் மக்கள் இன்றும் தொடர்ச்சியான வன்முறைகளையும் தொடர்ச்சியான மனித உரிமை மீறல்களையும் எதிர்கொண்டவண்ணமுள்ளனர். உள்ளூர் வளங்களின் பற்றாக்குறை மற்றும் போரினால் ஏற்பட்ட சேதம் போன்றவற்றோடு சுரண்டல், சந்தர்ப்பவாதம், மற்றும் போருக்குப் பின்னான சுற்றுச் சூழலை அழிவுக்குள்ளாக்கும் மோசமான பொருளாதார நடவடிக்கைகள் போன்றவற்றில் இருந்து நாட்டின் பொருளாதாரம் இன்னும் மீளவில்லை. இவை அனைத்தும் பொருளாதார நெருக்கடியின் விளைவால் இன்னும் மோசமான நிலையையே எட்டியுள்ளது. போருக்குப் பின் பவளப் பாறைகள், அதன் சுற்றுச்சூழல் அமைப்புகள் மற்றும் எளிய படகுகளுக்கு மட்டுப்படுத்தப்பட்ட பாரம்பரிய தமிழ் மீனவர்களின் வாழ்வாதாரம் போன்றவற்றை சேதப்படுத்தும் வகையில் இந்தியாவின் இயந்திரமயமாக்கப்பட்ட கீழ்-விசைப்படகுகள் வட கரையோரத்தின் கடற்படுக்கையின் அடிவரை தங்கள் வலைகளை இழுத்துவந்தன. 2017ஆம் ஆண்டுக்குப் பிறகு இலங்கை கடற்பரப்பில் கீழ்-விசைப்படகுகள் தடைசெய்யப்பட்டபோதும், இந்த வழக்கங்களும் டைனமைட் மீன்பிடித்தல் போன்ற பிற தீங்கு விளைவிக்கும் பழக்கங்களும் தொடர்ந்தவண்ணமே இருக்கின்றன. அதேபோல உள்ளூர் நிலப்பரப்பை மீளமுடியாத அளவில் மாற்றியமைக்கும் அச்சுறுத்தல்மிக்க அபிவிருத்திச் செயற்பாடுகளை தனியார் மண்ணகழ்வு நிறுவனங்கள் முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்களில் மேற்கொண்டுவருகின்றன. பல்லுயிர் மற்றும் கடலோர வாழ்வாதாரத்தின் நிலைபற்றி சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்ற நிலையில், இந்திய கூட்டு வர்த்தக நிறுவனமான அதானி குழுமம் கடந்த ஆண்டு பூநகரி மற்றும் மன்னாரில் பல மில்லியன் டாலர் செலவில் காற்றாலை மின் உற்பத்தி நிலையங்களை நிறுவ அரசிடம் ஒப்புதல் பெற்றிருக்கிறது. அத்திட்டத்தின் விலை நிர்ணயங்கள் மற்றும் பொருளாதார நன்மைகள் பற்றி பகுப்பாய்ந்த அரச செயற்றிட்ட ஆய்வாளர் ரோஹித் பெதியகொட அதனை “நாட்டை வறுமைக்குத் தள்ளும் வீண் மோசடி” என அழைக்கிறார். “இது அனைத்தும் பணம் சம்பந்தப்பட்டது” என விடத்தல்தீவு சூழலியலாளர் எடிசன் மேரிநாதன் கூறுகிறார். இயற்கை பற்றி அறிந்துகொள்வதற்காக மேரிநாதன் தனது இளைய மகன்களை அடிக்கடி கண்டல் நிலங்களுக்கு அழைத்துச் செல்வது வழக்கம். விடத்தல்தீவு இயற்கை காப்பகம் தொடர்பான சில உறுப்புரைகளை மாற்றியமைத்து அக்காப்பாகத்தின் வளமான சதுப்புநிலங்கள் தனியார் மீன்வளர்ப்பு வணிகங்களால் சுரண்டப்படக்கூடிய வகையில் மீள் வர்த்தமானியொன்றை அரசாங்கம் வெளியிட்டுள்ளது. இக்காப்பகமானது ஒரு முக்கிய கரிமத் தேக்கம் மட்டுமல்லாது, பல்வேறு நீர்வாழ் இனங்களின் வாழ்வாதாரத்துக்கு ஏதுவான கரையோர பாதுகாப்பு அரணாகவும் விளங்குகிறது. இலங்கை அரசின் இந்த நகர்வானது இலங்கையின் மூன்றாவது முக்கிய கடலோரப் பாதுகாப்பு வலயத்தை அழிவுக்குள்ளாக்கக் கூடியது என்றும் இதுபோன்ற ஏனைய வலயங்களுக்கு அதுவொரு தவறான முன்னுதாரணமாக அமையும் எனவும் சூழலியல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். ஈரநிலங்களையும் கரிமத் தேக்கங்களையும் பாதுகாப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விடுத்திருக்கின்ற வாக்குறுதியை “காலநிலை பாசாங்கு நடவடிக்கை” என இளைஞர்களால் முன்னெடுக்கப்படும் ‘பேர்ல் ப்ரொடெக்டர்ஸ்’ (Pearl Protectors) எனும் கடலோர பாதுகாப்பு அமைப்பு விளிக்கின்றது. “ஒட்டுமொத்த சூழலியல் மற்றும் பாதுகாப்புச் சமூகமும் இந்த முரண்பாட்டையே சுட்டிக் காட்டிய வண்ணம் உள்ளது. பெருமளவான அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பான கெடுபிடிகளுக்குள் இப்பிரச்சினை இலகுவாக நழுவிப்போய்விடுகிறது” என லங்கா சுற்றாடல் நிதியத்தின் வினோத் மல்வத்தை அவர்கள் கூறினார். தமிழர் தாயகத்தில் அரசியல் மற்றும் அபிவிருத்தி செயற்பாடுகளில் நிலவும் சவால்களின் உடனடித் தன்மை மற்றும் காலநிலை மாற்றத்தின் விளைவுகளுக்கு முகம் கொடுக்கப்போகும் உழைக்கும் வர்க்கத்தின் பொருளாதார நெருக்கடி போன்றவற்றைக் கருத்தில் கொள்கையில், மக்கள் மத்தியில் காலநிலை நெருக்கடி நிலை பற்றிய புரிதலை ஏற்படுத்தும் வாய்ப்பு மிகக் குறைவென்றே கணிக்கலாம். மீன்பிடிக் குடில்களும், நடைபாதைகளும் ஏற்கனவே கடலால் விழுங்கப்பட்ட நிலையிலும் அந்தோனியார்புர மீனவர்களுக்கு அது பற்றிக் கருத்தில்கொள்வதற்கான அவகாசமோ உணர்வு ரீதியான புரிதலோ இல்லை. “ஓரிரண்டு அடி நிலம் கடலால் அரித்துச் செல்லப்படுவதற்கு குறைந்தபட்சம் ஆறு மாதங்களாவது எடுக்கும். இதுபற்றி எதிர்கால சந்ததியினரே சிந்திக்க வேண்டும்.” என நாளூதியமே ஒரு பெரும் பிரச்சினையாக இருக்கும் குகசிரி கூறினார். மன்னாரில் உள்ள பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் உதயன், இலங்கையின் காலநிலை நெருக்கடிக்கு முகம்கொடுக்க தேவையான வளங்கள், அவற்றின் ஒருங்கிணைப்பு மற்றும் உபகரணங்களின் பற்றாக்குறை குறித்து முறையிட்டார். Photo: ஐசாக் நிக்கோ ஊடகவியலாளர்கள்கூட அடிப்படை அறிக்கைகளை வெளியிடுவதைத் தவிர வினைத்திறன்மிக்க வேறெந்த செயற்பாடுகளையும் செய்யத் தலைப்படுவதில்லை. மூன்று தமிழ் செய்தி நாளிதழ்களில் இடம்பெற்ற நீர் பாதுகாப்பு குறித்த ஆய்வொன்றில் 80 சதவீதமான நாளிதழ்கள் வெறுமனே செய்திகளை வழங்குகின்றனவே தவிர நிகழ்ச்சி நிரல் அமைத்தல், கலந்துரையாடல்களை உருவாக்குதல் அல்லது சுற்றுச்சூழல் செயற்பாடுகளுக்கு ஊக்கமளித்தல் போன்ற விடயங்களை தங்கள் ஊடக செயற்பாட்டில் உள்ளடக்குவதில்லை. போதியளவு ஆய்வுகளின்மை இப்பிரச்சினையை மேலும் அதிகரிக்கின்றது. “பல்கலைக்கழக ஆய்வுத் தேவைக்காக மட்டுமே கிட்டத்தட்ட சுமார் 25 ஆண்டுகள் வரையான கால நீட்சியில் மேற்கொள்ளப்படவேண்டிய ஆய்வுகள் வெறும் ஆறு மாதகால குறுகிய காலத்தில் மேற்கொள்ளப்படுகின்றன” என மன்னார் பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் உதயன் குறிப்பிட்டார். “நிலைபேறான ஏற்பாடுகளுக்கு நீண்டகாலமாக சேகரிக்கப்பட்ட தரவுகளின் உள்ளீடு அவசியம்” என்ற கருத்தை பவளப்பாறை சூழலியல் வல்லுனர் நிஷான் பெரேரா முன்வைத்தார். மீன்களின் இடம்பெயர்வு மாற்றங்கள், முட்டையிடும் இயல்பின் தளம்பல்கள் போன்ற காலநிலை மாற்றத்தின் படிப்படியான தாக்கங்களை கண்காணிப்பதற்கு வெறும் அடிப்படை ஆய்வுகள் மற்றும் குறுகிய கால திட்ட அடிப்படையிலான ஆராய்ச்சிகளுக்குப் பதிலாக நீண்டகால தொடர்-நேர தரவுகள் நமக்குத் தேவை. ஆனால் அவசியமான தரவு சேகரிப்பு வளங்கள் மற்றும் அதற்குத் தேவையான உபகரணங்களின் பற்றாக்குறையால் அவ்வாறான ஆய்வு முயற்சிகள் தடைப்பட்டுள்ளன. “மழை அளவீட்டுக் கருவிகள் போன்ற உபகரணங்கள் ஓரிரண்டு நகரங்களிலேயே கிடைக்கக்கூடியதாக இருக்கும். ஆனாலும் அவை எல்லா பகுதிகளிலும் இல்லை” எனவும் உதயன் குறிப்பிட்டார். வனவிலங்குப் பாதுகாப்புத் திணைக்களம் “போதுமான வளங்கள் இல்லாத நிலையில் பெரிய பகுதிகளை நிர்வகிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. மேலும், சில சிற்றலுவலகங்களில் அடிப்படை தளபாட வசதிகள் கூட கிடையாது. மீன்வளத் துறையைச் சேர்ந்த மீன்வள ஆய்வாளர்களிடம் உள்ள மோட்டார் சைக்கிள்கள் பழுதடைந்த நிலையில் இருக்கலாம் அல்லது அவர்களிடம் எரிபொருளுக்கான போதிய நிதிவசதிகூட இல்லாமலிருக்கலாம். ஆதலால், அவர்களுடைய கடமையை ஏற்புடைய விதத்தில் நிறைவேற்றுவதில் அவர்களுக்குள்ள சிரமம் உண்மையிலேயே ஒரு சவாலான விடயம்தான் என்கிறார் பெரேரா. இத்தரவுப் பற்றாக்குறை, நிறுவனங்களின் திறன்குறைபாடு, ஒருங்கிணைப்பின்மை மற்றும் பலவீனமான பின்னூட்ட வழிமுறைகள் ஆகிய பல்வேறு காரணிகளால் ஒன்றுசேர்ந்தது. உதயனின் குறிப்புப்படி இலங்கை முழுவதுமுள்ள வானிலை ஆய்வு மற்றும் விவசாய திணைக்களங்களுக்கிடையில் ஓர் சிறிய ஒருங்கிணைவு உள்ளது. பெரும்பாலும் நிர்வாக மொழியாக சிங்களத்தைப் பயன்படுத்தும் மத்திய அரசுக்கும் தமிழ் பேசும் மக்களைக் கொண்ட பிராந்தியங்களுக்கும் இடையிலிருக்கின்ற தொடர்பாடல் தடைகள் மற்றும் மோதல் வரலாறுகள் போன்றவை தரவுகளின் பரிமாற்றத்துக்கு இடையூறாக இருக்கின்றது. காலநிலை சமநிலையின்மையைத் தணிக்கும் முயற்சிகளுக்காக மாகாணங்களுக்கு வழங்கப்படும் நிதியுதவி மத்திய அரசின் நடவடிக்கைகளால் குழப்பப்பட்டிருக்கலாம். ஆனால், காலநிலை மாற்றங்கள் குறித்து சிரத்தைக்கொள்ளவேண்டிய மாவட்ட நிலை அதிகாரிகள், மாகாணங்களின் தேவைகள் மற்றும் அவற்றுக்கான நிதியுதவியைப் பெற்றுக்கொள்ளல் தொடர்பான தொடர்பாடல்களில் நலிவான கீழிருந்து மேலான பின்னூட்ட வழிமுறைகளில் தங்கியுள்ளனர். அதேவேளை, “உயர் மட்டங்களில் காலந்துரையாடப்படுகின்ற விடயங்கள், உயர் மட்டங்களில் அவ்வாறான கலந்துரையாடல்கள் நிகழுமிடத்து, அவற்றில் சீர்தூக்கப்படும் அம்சங்கள் நிச்சயமாக அடிமட்டத்திலுள்ள ஊழியர்களுக்கு அதே முறையில் தொடர்பாடப்படுவதில்லை” என்று ஸ்ரீஸ்கந்தராஜா குறிப்பிடுகிறார். இலங்கையில் சர்வதேச சுற்றாடல் அமைப்புக்களின் வெற்றிடங்களும் வளங்களின் கிடைப்பனவை மட்டுப்படுத்துகின்றன. நாங்கள் உலகின் முக்கியமான 36 பல்லுயிர் மையங்களில் ஒன்றாக இருக்கிறோம். ஆனால், இங்கே உலக வனவிலங்கு நிதியம் (WWF) இல்லை. கன்சர்வேஷன் இன்டர்நேஷனல் (Conservation International) இல்லை. நேச்சர் கணசர்வென்ஸி (Nature Conservancy) இல்லை என்கிறார் மல்வத்தை. “இங்கே ஓர் கருந்துளை இருப்பதுபோல இருக்கிறது.” போர், இலங்கையில் சர்வதேச நிறுவனங்களை நிறுவுவதில் உள்ள சிரமங்கள், சர்வதேசத்தின் இலங்கை மீதான கவனத்தில் அரசுக்குள்ள நீண்டநாள் வெறுப்புணர்வு போன்றவற்றையே கருந்துளை என மல்வத்தை அவர்கள் விபரிக்கிறார். இயற்கையும் தேசமும் “என்னைப் பொறுத்த வரையில் தமிழ் தேசியம் என்பது தமிழர்கள் தம்முடைய நிலத்துடன் கொண்டிருக்கும் உறவு” என யாழ் பல்கலைக் கழகத்தின் ஆங்கில விரிவுரையாளரான மகேந்திரன் திருவரங்கம் கூறுகிறார். தமிழ் கவி புதுவை ரத்னதுரை அவர்களின் புகழ்பெற்ற தேசியவாத கவிதையான ‘மண்’ஐ அவர் மேற்கோளிடுகிறார். மண் நிலமிழந்து போனால், பலமிழந்து போகும். பலமிழந்து போனால், இனம் அழிந்து போகும். ஆதலால் மானுடனே! தாய்நிலத்தைக் காதலிக்கக் கற்றுக் கொள்! கடந்த காலங்களில் தமிழர்களுக்கும் இந்த மண்ணுக்கும் இடையிலான பிணைப்பு “தமிழீழ தாயகமே புலிகளின் வேட்கை” போன்ற விடுதலைப் புலிகளின் பிரபல கோஷங்களினூடாகவும் “இந்த நிலம் எங்கள் நிலம்’ மற்றும் வடகிழக்கின் மரங்கள், பூக்கள், மேய்ச்சல் நிலங்கள், ஏரிகள் மற்றும் பனை மரங்கள் அணிவகுத்த கடல்களுக்கு அஞ்சலி செலுத்தும் ‘பசுமை வெளிகள்’ போன்ற தேசியவாத பாடல்கள் போன்றவற்றால் பகிரங்கமாக கொண்டாடப்பட்டது. “எங்கள் தாயகமானது எங்கள் உயிர், எங்கள் உதிரம், எங்கள் உடலுடன் ஒன்றியது” என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் ஸ்ரீதரன் என்னிடம் கூறினார். ஆனால், தமிழர்களுக்கும் அவர்களின் தாயகத்திற்கும் இடையில் இவ்வாறான பிணைப்பு இருந்தபோதிலும், காலநிலை நெருக்கடி தொடர்பான விழிப்புணர்வு தமிழ் அரசியல் பரப்பில் முக்கிய இடத்தைப் பெறவில்லை. “நாங்கள் சுற்றாடலைப் பாதுகாக்க வேண்டும். நாங்கள் நிறைய மரங்கள் நட வேண்டும். சூழல் மாசை குறைக்க நாங்கள் வழிமுறைகளை கண்டடைய வேண்டும் போன்ற சொற்றொடர்களை மக்கள் பயன்படுத்துகின்றனர். ஆனால், காலநிலை மாற்றம் பற்றிய கலந்துரையாடல்களில் மக்கள் ஈடுபடுகிறார்களா என்பது எனக்குத் தெரியவில்லை” என்கிறார் திருவரங்கன். வாழ்வாதாரம் மற்றும் தொழில்வாய்ப்பு போன்றவை குறித்து அவரது கட்சி தொடர்ந்து விவாதித்து வந்திருந்தாலும், காலநிலை மாற்றம் பற்றிய விவாதங்களை மேற்கொண்ட சந்தர்ப்பங்கள் குறித்து அவரால் நினைவுகூர முடியவில்லை என இலங்கை பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கை தமிழரசு கட்சியின் பேச்சாளருமான எம். ஏ சுமந்திரன் குறிப்பிட்டார். தமிழர் அரசியல் முன்னெடுப்புக்கள் நிலத்தை மையப்படுத்தியதாகவும் விவசாயமும் மீன்பிடியும் அத்தேர்தல் தொகுதியின் மிக முக்கியமான தொழில்துறைகளாகவும் இருக்கின்ற வேளையில், சமீபமான எதிர்காலத்தில் காலநிலை மாற்றம் குறித்த விடயங்கள் தமிழ் தேசியத்தின் மேலாதிக்க சிந்தனைகளில் எந்தவித செல்வாக்கும் செலுத்தப்போவதாக தான் காணவில்லை எனவும் சுமந்திரன் அவர்கள் குறிப்பிட்டார். தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் நிறுவனர் பி.ஐங்கரநேசன் பேசுகையில், இலங்கையில் சுற்றுச்சூழல் தமிழ் தேசியவாதத்தின் முக்கியமான பகுதி எனவும் அது தமிழ் மொழி மற்றும் அதன் கலாச்சாரத்தில் பொதிந்துள்ளது எனவும் குறிப்பிட்டார். Photo: ஐசாக் நிக்கோ இலங்கையின் முதல் பசுமைக் கட்சியான தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் ஸ்தாபகரின் பார்வை வேறாக இருந்தது. தமிழ் தேசியவாதத்தில் சுற்றுச்சூழல் பற்றிய சிந்தனைகள் எப்போதும் பொதிந்துள்ளன என்று தான் நம்புவதாக பீ. ஐங்கரநேசன் கூறினார். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் ஓர் சுற்றுச் சூழல் அலகு இருந்ததாகவும், அதன் தலைவர் பிரபாகரன் இயற்கையை தன் நண்பன் என மேற்கோளிட்டதாகவும் அவர் குறிப்பிடுகிறார். “மொழி, கலாசாரம், சுற்றுச் சூழல் – தமிழ் தேசியம் இம்மூன்றாலும் ஒருசேரக் கட்டமைக்கப்பட்டது. வெளிநாடுகளில் உள்ள மக்கள் கோதுமையை தங்கள் பிரதான உணவாக உட்கொள்ளும்வேளை தமிழர்கள் அரிசியையே தங்கள் பிரதான உணவாகப் பயன்படுத்துகின்றனர். ஏனெனில் அது எமது காலநிலையில் இயல்பாகவே வளரக்கூடியது” என்கிறார் ஐங்கரநேசன். உணவைப்போலவே மொழியும் சூழலின் ஆதிக்கத்திற்குட்பட்டது. சங்க கால தமிழ் இலக்கியம் ஐந்து வெவ்வேறு திணைகளை தனித்துவமாக வேறுபடுத்திக் காட்டுகிறது – குறிஞ்சி (மலையும் மலை சார்ந்த இடமும்), முல்லை (காடும் காடு சார்ந்த இடமும்), நெய்தல் (கடலும் கடல் சார்ந்த இடமும்)இ பாலை (மணலும் மணல் சார்ந்த இடமும்)இ மற்றும் மருதம் (வயலும் வயல் சார்ந்த இடமும்). ஒவ்வொரு திணையும் தனித்துவமான தரைத்தோற்றத்தையும் புணர்தல், காத்திருத்தல், ஊடல், இரங்கல், பிரிதல் ஆகிய வெவ்வேறு உணர்ச்சி நிலைகளையும் குறித்து நிற்கின்றது. ஐங்கரநேசனைப் பொறுத்தவரை, தமிழ் மொழி மற்றும் அதன் பண்பாட்டில் சுற்றுச்சூழல் எத்துணை முக்கியம் வாய்ந்ததாக உள்ளது என்பதற்கு இவ்வாறான குறியீடுகள் ஒரு பெரும் எடுத்துக்காட்டாக திகழ்கிறது. ஆனால், யாழ் பல்கலைக்கழகத்தில் தாவரவியல் மற்றும் உடற்கூற்றியல் முதுகலை பட்டம் பெற்ற ஐங்கரநேசன் போன்ற அரசியல்வாதிகள் தமிழ் அரசியலில் மிக அரிதானவர்கள். தற்காலத்தில் உலகின் பல்வேறு நாடுகளிலும் இயங்கி வருகின்ற பசுமைக் கட்சிகளை தான் இனங்கண்டுகொண்டாலும், தனது வாக்காளர்கள் மத்தியில் பசுமை அரசியல் பிரசித்தம் பெறவில்லை என இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் ஸ்ரீதரன் ஒப்புக்கொள்கிறார். ஏனையவர்கள் மிக வெளிப்படையாக இருக்கிறார்கள். உதாரணமாக ஸ்ரீஸ்கந்தராஜாவின் கூற்றின் பிரகாரம், அரசியல் மட்டத்தில் காலநிலை நெருக்கடி என்று வரும்போது, “அவர்கள் அது தொடர்பாக ஆனந்தமான அறியாமையில் இருக்கிறார்கள்.” “எந்தவொரு அரசியல்வாதியும் இதுவரைகாலமும் இப்பிரச்சினை பற்றி இங்கு வந்து பேசிய வரலாறு இல்லை” என இலுப்பைக்கடவை விவசாயி ஒருவரின் மனைவியான மகாதேவி கூறினார். உயரடுக்கு மக்களின் குடியகல்வின் பின்னர் ஏற்பட்ட மக்கள் தொகை மாற்றத்தின் பிறகும், தமிழ் அரசியல் மற்றும் தமிழ் உயர்மட்ட தொழில்சார் வர்க்கங்கள் ஆகியவை ஆதிக்க-சாதி சமூகத்தினரால் நிறைந்துள்ளதாகவும், ஒடுக்கப்பட்ட சமூகத்துக்கான பிரதிநிதித்துவம் அங்கு மிகக் குறைந்த அளவிலேயே காணப்படுவதாகவும் வட மாகாணத்தில் கூட்டுறவு நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றும் ஆய்வாளர் அகிலன் கதிர்காமர் வாதிடுகிறார். அழிவுகரமான மீன்பிடி நடைமுறைகள் மற்றும் கிராமப்புற மக்களின் கடன்சுமை ஆகியவற்றை தமிழ் அரசியலால் புறக்கணிக்கப்பட்ட கிராமிய பொருளாதாரத்தின் முக்கிய பிரச்சினைகளுக்கு எடுத்துக்காட்டுகள் என அவர் மேற்கோளிடுகிறார். “புத்திஜீவிகளும் கல்வியியலாளர்களும் கூட மீனவர்களினதும் விவசாயிகளினதும் இடர்களை நிவர்த்தி செய்ய மிகக் குறைந்தளவு பங்களிப்புக்களையே வழங்கியுள்ளனர்” என்கிறார் அவர். இலங்கையின் வடக்கு கரையோரத்தில் உள்ள இலுப்பைகடவையைச் சேர்ந்த விவசாயி ஒருவரின் மனைவி மகாதேவி, வெப்ப அலைகள் மற்றும் கொந்தளிப்பான வானிலை குறித்து புகார் கூறினார். பருவநிலை மாற்றம் குறித்த அரசியல் உரையாடல்களை தான் கேட்டதில்லை என்றும் கூறினார். Photo: ஐசாக் நிக்கோ கட்டமைக்கப்பட்ட இனவாதம், வன்முறை மற்றும் நீதிவழங்கலில் உள்ள பாரபட்சங்கள் போன்றவை உள்நாட்டுப் போர் முடிவடைந்து 16 ஆண்டுகள் கடந்தும் தமிழர் நிலையை பறைசாற்றும் முக்கிய அம்சங்களாக இருக்கின்றன. மாகாண ஆளுகைகளுக்கு கூடுதல் அதிகாரத்தை வழங்கும் இலங்கையின் அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தம் போன்ற நீண்டகால தமிழ் அரசியல் கோரிக்கைகள் இன்னும் கவனத்தில் கொள்ளப்படாமலே இருக்கின்றன. “மன்னாரில், கிளிநொச்சியில், யாழ்ப்பாணத்தில், திருக்கோணமலையில், மட்டக்களப்பில், அம்பாறையில எமது நிலங்கள் தினமும் பறிக்கப்பட்டுவருகின்றன” என அரசியலின் தற்போதைய உடனடி சவால்களைப் பற்றி விவரிக்கும்போது ஸ்ரீதரன் கூறினார். இந்தப் பின்னணியில் வளம் குறைந்த மற்றும் நிறுவன ரீதியில் வலுவிழந்த தமிழ்த் தலைமைகளுக்கு பருவநிலை மாற்றத்தில் ஒரு புதிய, சரியாகப் புரிந்துகொள்ளப்படாத மற்றும் அருவமான ஓர் ‘எதிரியை’ எதிர்த்துப் போராடுவதற்காக, தமது அரசியல் மூலதனத்தைச் செலவிடுவது கடினமாக இருக்கலாம். ஒரு காலத்தில் தமிழ் சமூகத்தின் மனித உரிமைகளுக்கான போராட்டத்தில் அவர்களின் கூட்டாளிகளாக கருதப்பட்ட மேற்கத்தேய, முன்னேறிய, தொழில்மயமான நாடுகளின் நடவடிக்கைகளாலேயே எப்படி காலநிலை நெருக்கடியின் பின்னணியில் உள்ள இடப்பெயர்வு, வன்முறை மற்றும் பொருளாதார இழப்பு போன்றவை தூண்டப்பட்டது என்பது மற்றொரு சிக்கல். பாதை சார்ந்திருத்தலும் பாரம்பரிய அரசியல் கூட்டாளிகளை எதிரிகளாக மறுகற்பனை செய்வதில் உள்ள சிரமமும்கூட தமிழ் பொது உரையாடல்களில் காலநிலை நெருக்கடி தொடர்பான விடயங்கள் வெளித்தெரியாமை பற்றிய விளக்கத்தை வழங்கலாம். பாரம்பரிய அரசியலில் ஒரு சிறு அளவு புத்தாக்கத்தை உட்புகுத்துவதன் வாயிலாக புதிய நெருக்கடிகள் தொடர்பான விடயங்களை அவற்றில் உள்ளடக்கத்தகுந்த அவகாசங்களை உருவாக்கலாம். தொடர்பாடலில் உள்ள தடைகள், அரசிறை வரும்படியின் மையப்படுத்தல் ஆகியவை தமிழ் பேசும் மக்கள் காலநிலை நெருக்கடிக்கு முகம்கொடுக்கும் செயன்முறைக்கு தடையாக இருக்கும். அத்தோடு, தமிழ் பேசும் பிராந்தியங்களுக்கான மேம்பட்ட சுயநிர்ணயம் மற்றும் சுயாட்சி ஆகிய வழிகளில் இப்பிரச்சினைகளுக்கு தீர்வுகாண்பது தமிழர்களின் வரலாற்றுக் கோரிக்கைகளோடு இணங்கிப்போகும். விவசாயம் மற்றும் மீன்பிடி தொடர்பான நிலைபேறான கொள்கை வகுத்தல்களுக்கான முன்மொழிவு மற்றும் செயல்படுத்தல்களை மேற்கொள்ள, உள்ளூர் நிலப்பரப்பு, காலநிலை, வளங்கள் கிடைக்கும் தன்மை, உணவுக் கலாச்சாரங்கள், முன்னுரிமைகள் மற்றும் தேவைகள் போன்ற அப்பிராந்தியம் பற்றிய பரிச்சியமும் அது தொடர்பான நெருக்கமான புரிதலும் இருப்பது அவசியம் என பருவநிலை விஞ்ஞானிகள் வாதிடுகின்றனர். மேலும், தாம் வாழும் பிராந்தியம் பற்றிய பரிச்சியமே வடக்கை அபிவிருத்தி செய்வதற்கும் அதனை ஆள்வதற்கும் தமிழர்களை பொருத்தமானவர்களாக ஆக்கும் என ஐங்கரநேசன் வலியுறுத்துகிறார். “நீங்கள் தென்பகுதியில் வசிப்பவராக இருந்தால் நீங்கள் தலகொயா (Asian water monitor) பற்றி அறிந்திருப்பீர்கள். ஆனால், அந்த விலங்கு இங்கு எங்களிடம் இல்லை. தென் பகுதியில் கித்துள் மரங்கள் உள்ளன. ஆனால், எங்களுக்கு பனை மரங்கள்தான் பரிச்சியமானவை. அவர்களிடம் சிங்கராஜ வனம் உள்ளது. ஆனால் எங்களிடம் வரண்ட காடுகளே உள்ளன.” இலங்கையில் பிரபலமான தமிழ் அரசியலில் பசுமை அரசியல் ஒரு பகுதி அல்ல என்பதை தமிழ் தேசியவாதக் கட்சியான இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் எஸ்.ஸ்ரீதரன் ஒப்புக்கொண்டார். ஆனால் “எதுவும் தொடக்கத்தில் சிறியது” என்று அவர் கூறினார். இறுதியாக அது நிலத்துடனான தமிழின் தொடர்பாகும் – தமிழ்க் கவிதை, பாடல், அரசியல் சொல்லாட்சி, எழுத்து மற்றும் கலை ஆகியவை அத்தொடர்புக்கு ஆதாரமாக விளங்குகிறது – தமிழர்கள் தங்கள் பருவநிலைமாற்றம் குறித்த இசைவாக்க முயற்சிகள் மற்றும் சுற்றுச்சூழல் செயற்பாடுகளில் வெற்றிபெறுவதற்கான ஒரு பெரும் ஊக்கத்தை அது வழங்கும். உண்மையில் தமிழர் அடையாளம் அவர்களது மண்ணில் வேரூன்றியிருந்தால், அதுபோலவே முக்கியமாக தமிழரின் நிலத்துடனான உறவாக தமிழ் தேசியம் இருந்தால், அந்நிலத்தில் ஏற்படும் மாற்றங்கள் தமிழ் அரசியல்வாதிகளை காலநிலை அவசரநிலை குறித்து அதிகம் குரல்கொடுப்பதற்குத் தூண்டவேண்டும். தமிழ் தேசியவாதிகளோ அல்லது பருவநிலை மாற்றத்தினால் ஏற்படும் நெருக்கடிநிலையின் முக்கிய பங்குதாரர்களான தமிழால் அறியப்படும் சமூகத்தினர் மட்டுமல்ல – தமிழர் தாயகமாக அறியப்பட்ட பிரதேசங்களில் காலாகாலமாக வாழ்ந்துவருகின்ற இஸ்லாமிய மற்றும் சிங்கள மக்களும்கூட அதில் அடக்கம் என திருவரங்கன் சுட்டிக் காட்டினார். தமிழ் தேசியவாதத்தின் சில புறக்கணிப்புப் போக்குகளை விவரிக்கும்போது, பருவநிலை மாற்றத்தின் நெருக்கடிநிலை ஏனைய சமூகங்களைப் புறந்தள்ளி குறித்த ஒரு சமூகத்தின் ஆதிக்கத்தை முன்நிறுத்திய கதையாடலின் பகுதியாக ஆக்கப்படுவதை தவிர்ப்பது மிக அவசியம் எனவும் வகுப்பு, சாதி, இனம் மற்றும் யுத்தம் போன்றவற்றின் வழியில் ஏற்படுத்தப்பட்ட முரண்பாடுகள் குறித்து நாம் கவனமாக இருக்க வேண்டும்” எனவும் அவர் எச்சரித்தார். காலப்போக்கில், காலநிலை நெருக்கடிநிலையைப் புறக்கணிப்பது அல்லது நிராகரிப்பது மிகவும் கடினமாகிவிடும். இலங்கையில் தமிழர்கள் செறிந்து வாழும் பிராந்தியங்களில் காலநிலை மாற்றம் பற்றிய பேச்சுக்களின் வீச்சு இன்னும் பிரதான அரசியல் உரையாடல்களில் உள்வாங்கிக்கொள்ளப்படாவிடினும், கொஞ்சம் நம்பிக்கை எஞ்சியிருக்கிறது. தமிழ் தாயகத்தில் பசுமை அரசியலின் வளர்ச்சி பற்றி மேற்கோளிட்டு பேசும்போது, “தொடக்கத்தில் எதுவுமே சிறியதாகத்தான் இருக்கும். ஆனால், அந்த சிந்தனை தோன்றும். காலப்போக்கில் அது நடக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது” என்று ஸ்ரீதரன் நம்பிக்கையூட்டினார். அமித்தா அருட்பிரகாசம் இலங்கையைச் சேர்ந்த ஓர் எழுத்தாளர், ஆய்வாளர், மற்றும் சுயாதீன திட்ட வரைவு பகுப்பாய்வாளர். இக்கட்டுரைக்கான அனுசரணை புலிட்சர் மைய மானியத்தால் வழங்கப்பட்டதோடு இக்கட்டுரையின் ஆங்கில வடிவம் முதலில் ஹிமால் சவுத் ஏசியன் (Himal Southasian) இதழில் வெளியிடப்பட்டது. தமிழாக்கம்: ருக்ஷானா ஷரிபுதீன். https://maatram.org/articles/12249
-
ஆப்கன், பாகிஸ்தானில் நிலநடுக்கம்: நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்திருக்க வாய்ப்பு - தாலிபன் என்ன செய்கிறது?
ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம் – உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 250 ஆக உயர்வு September 1, 2025 11:15 am ஆப்கானிஸ்தானில் இன்று திங்கட்கிழமை ஏற்பட்ட வலுவான நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 250 ஆக அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும் காயமடைந்தவர்களின் எண்ணிக்கையும் 500ஐ கடந்தள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகாலை 12.57 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தது. 6.0 ரிக்டர் அளவில் பதிவான இந்த நிலநடுக்கம் எட்டு கிலோமீட்டர் ஆழத்தில் நிலைகொண்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக நிலநடுக்கத்தில் 20 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும், இடிபாடுகளில் பலர் சிக்கியுள்ளதாகவும், இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அந்நாட்டு அதிகாரிகள் அச்சம் வெளியிட்டுள்ளன. காபூலில் இருந்து பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் வரை பல கட்டிடங்களை நிலநடுக்கம் உலுக்கியுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வட இந்தியாவிலும் நிலநடுக்கத்தின் அதிர்வுகள் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் நிலநடுக்கத்திற்குப் பின்னர் முறையே நான்கு தசம் ஐந்து முதல் ஐந்து தசம் இரண்டு வரை ரிக்டர் அளவில் மூன்று பின்அதிர்வுகள் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பாகிஸ்தானின் எல்லைக்கு அருகில் உள்ள குனார் மாகாணத்தின் நோர்கல் மாவட்டத்தில் நிலநடுக்கம் கடுமையான சேதத்தை ஏற்படுத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆப்கானிஸ்தான் மற்றும் இமயமலையின் அருகிலுள்ள பகுதிகளில் அண்மைய நாட்களில் ஏற்பட்ட நிலநடுக்கங்கள் அதிகரித்து வருவது புவியியலாளர்கள் மத்தியில் கவலைகளை ஏற்படுத்தியுள்ளன. இந்திய-யூரேசிய டெக்டோனிக் தட்டுகளின் இயக்கம்தான் நிலநடுக்கத்திற்குக் காரணம் என்று புவியியலாளர்கள் தெரிவித்துள்ளனர். https://oruvan.com/afghanistan-earthquake-death-toll-rises-to-250/
-
முல்லைத்தீவில் வட்டுவாகல்,கேப்பாப்புலவில் இராணுவ முகாம்களில் உள்ள விகாரைகளின் கீழ் புதைகுழிகள்; ஆய்வுகள் செய்ய வலியுறுத்துகிறார் ரவிகரன்
முல்லைத்தீவில் வட்டுவாகல்,கேப்பாப்புலவில் இராணுவ முகாம்களில் உள்ள விகாரைகளின் கீழ் புதைகுழிகள்; ஆய்வுகள் செய்ய வலியுறுத்துகிறார் ரவிகரன் இறுதிக்கட்டப் போரின்போது இராணுவத்திடம் சரணடைந்த பொதுமக்கள் மற்றும் போராளிகள் படுகொலைசெய்யப்பட்டு கேப்பாப்புலவு மற்றும் வட்டுவாகல் பகுதிகளில் அமைந்துள்ள இராணுவமுகாம்களின் விகாரைகளின் கீழ் புதைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், குறித்த இராணுவ முகாம்களில் அமைக்கப்பட்டுள்ள விகாரைகள் ஆய்விற்குட்படுத்தப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார். அத்தோடு தமிழ் இனவழிப்பு மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் விடயம், தமிழர்தாயகப் பகுதிகளில் இனங்காணப்பட்ட மனிதபுதைகுழிகள் உள்ளிட்ட விவகாரங்களுக்கு பன்னாட்டு நீதி விசாரணைகளை முன்னெடுப்பதற்கு தற்போதைய தேசியமக்கள்சக்தி அரசாங்கம் பூரண ஒத்துழைப்புக்களை வழங்கவேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார். சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில், வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளால் யாழ்ப்பாணம் கிட்டு பூங்காவிலிருந்து செம்மணிவரை மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டப் பேரணியில் கலந்துகொண்டு ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே ரவிகரன் எம்.பி.இவ்வாறு தெரிவித்துள்ளார். இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்தகாலத்தில் தமிழர்கள் மீது இனவழிப்புச் செயற்பாடுகள் இடம்பெற்றன என்பதற்கு வடக்கு, கிழக்கு தமிழர்தாயகத்தில் இனங்காணப்பட்டுள்ள மனிதப் புதைகுழிகளும், மனிதப் புதைகுழிகளிலிருந்து அகழ்ந்தெடுக்கப்படுகின்ற எலும்புக்கூடுகளும்,சாட்சியாக இருக்கின்றன. இதனை யாருமே மறுக்கமுடியாது. தற்போது செம்மணி மனிதப் புதைகுழி பெரும் பேசுபொருளாக மாறியுள்ளன. செம்மணியில் அகழ, அகழ எம்மவர்கள் எலும்புக்கூடுகளாக மீட்கப்படுகின்ற அவலங்களைக் காண்கின்றோம். கொலைசெய்தவனிடமே நீதியைக் கோருகின்ற உள்ளக நீதிவிசாரணைப்பொறிமுறையில் எமக்கு கடுகளவும் நம்பிக்கை கிடையாது. ஆகவேதான் தமிழ் இனவழிப்பு, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விடயம், மனிதப்புதைகுழிகள் உள்ளிட்ட விவகாரங்களுக்கு தொடர்சியாக பன்னாட்டு நீதி விசாரணையைக் கோருகின்றோம். முல்லைத்தீவில் வட்டுவாகல் மற்றும் கேப்பாப்புலவு பகுதிகளில் இராணுவமுகாம்களில் அமைக்கப்பட்டுள்ள விகாரைகள் அகற்றப்பட்டு விகாரைகளின் கீழ்ப்பகுதிகள் அகழ்ந்து ஆய்வுகள் செய்யப்படவேண்டும். அல்லது நவீன கருவிகளின் துணையுடன் ஸ்கேன் செய்யப்பட்டு விகாரையின் கீழ்ப்பகுதியில் உள்ள விடயங்கள் தொடர்பில் வெளிப்படுத்தப்படவேண்டும் எனக் கோருகின்றேன். 2009ஆண்டு இறுதிக்கட்ட போரின்போது சரணடைந்த போராளிகள் மற்றும் மக்களை இராணுவம் கைதுசெய்துள்ளது. அதன்பின்னர் அவ்வாறு இராணுவத்தால் கைதுசெய்யப்பட்டவர்கள் வட்டுவாகல் சப்தகன்னியர் ஆலயத்திற்கு அருகே கடற்கரைநோக்கி போகும் பாதையினூடாக பேருந்துகளில் அழைத்துச்செல்லப்பட்டுள்ளனர். அதேபோல் சரணடைந்த பலர் கேப்பாப்புலவு நோக்கியும் இராணுவத்தினரால் பேருந்துகளில் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். அவ்வாறு இராணுவத்தால் பேருந்துகள் மூலம் அழைத்துச்செல்லப்பட்டவர்கள் திருப்பி அழைத்து வரப்படவில்லை. என்ன ஆனார்கள் என்பதும் தெரியாமலுள்ளது. அப்படியெனில் அவ்வாறு அழைத்துச்செல்லப்பட்டவர்கள் எங்கேபோனார்கள். தனிச் சைவத் தமிழ் கிராமமான வட்டுவாகலில் எதற்கு பாரிய விகாரை அமைக்கப்பட்டது. அந்த விகாரையை அகற்றி அகழ்வாய்வுகளை மேற்கொள்ளவேண்டும். அல்லது விசேட ஸ்கேன் கருவிகளைப் பயன்படுத்தி பரிசோதனை மேற்கொண்டு உண்மைத்தன்மைகள் வெளிப்படுத்தப்படவேண்டும். அதேபோல் கேப்பாப்புலவு இராணுவ முகாமில் அமைக்கப்பட்டுள்ள பாரிய விகாரையும் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவேண்டும். ஆய்வுகள் மேற்கொள்ளப்படவேண்டும். இதுதொடர்பில் ஏற்கனவே பலதடவைகள் எம்மால் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. பாராளுமன்றிலும் இந்த கேப்பாப்புலவு மற்றும் வட்டுவாகல் இராணுவமுகாம்களில் அமைந்துள்ள விகாரைகள் ஆய்வுக்குட்படுத்தப்படவேண்டுமென கோரியுள்ளேன். இதுவரை அந்த விகாரைகளை ஆய்வுக்குட்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என்றார். https://akkinikkunchu.com/?p=339154
-
மட்டக்களப்பில் 3 சிறுமிகள் மீது பாலியல் துஸ்பிரயோகம் , 2 சிறுமிகள் கர்ப்பம் - இரு சிறுவர்கள் கைது
மட்டக்களப்பில் 3 சிறுமிகள் மீது பாலியல் துஸ்பிரயோகம் , 2 சிறுமிகள் கர்ப்பம் - இரு சிறுவர்கள் கைது By kugen மட்டக்களப்பு மாவட்டத்தில் இரு பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசங்களில் ஒருவாரத்தில் 3 சிறுமிகள் மீது பாலியல் துஸ்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், 13 மற்றும் 17 வயதுகளுடைய இரு சிறுமிகள் கர்ப்பம் தரித்துள்ளதாகவும் இரு ஆண் சிறுவர்களை கைது செய்துள்ளதாக அந்தந்த பொலிஸ் நிலைய பொலிஸார் தெரிவித்தனர். மாவட்டத்திலுள்ள ஒரு பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசம் ஒன்றில் சில தினங்களுக்கு முன்னர் வாந்தியெடுத்த 17 வயது சிறுமி ஒருவரை வைத்தியசாலையில் அனுமதித்தபோது அவர் 3 மாத கர்ப்பிணியாக இருப்பதை வைத்தியர்கள் கண்டறிந்தனர். இது தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டபோது குறித்த சிறுமியின் தாயார் தந்தையர்கள் மீன்பிடி தொழிலுக்காக கடற்கரை பகுதியில் மீன் வாடியில் இருந்து வருவதாகவும் வீட்டில் குறித்த சிறுமியும் அவரது சகோதரரும் தங்கியிருந்து வந்துள்ளனர். இதன்போது, கடந்த 3 மாத்திற்கு முன்னர் சம்பவதினம் குறித்த சிறுமி வீட்டிற்கு இரவு வீதியால் நடந்து வரும்போது இருட்டில் வந்த ஒருவன் தன்னை இழுத்துச் சென்று துஸ்பிரயோகம் செய்ததாகவும், அவனை அடையாளம் தெரியாது என பொலிஸாரின் விசாரணையின் போது தெரியவந்துள்ளதையடுத்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர். இதேவேளை, குறித்த அதே பொலிஸ் பிரிவில் 13 வயது சிறுமி ஒருவரை 3 மாத கர்ப்பிணியாக்கிய 17 வயது சிறுவன் ஒருவரை கைது செய்ததனர். இதன்போது கைது செய்யப்பட்ட சிறுவன் நான் இதற்கு காரணம் இல்லை. எனது நண்பன் தான் இந்த சம்பவத்துக்கு காரணம் எனவும் தெரிவித்துள்ள நிலையில், குறித்த சிறுமி இல்லை இவன்தான் காரணம் என முறைப்பாட்டில் தெரிவித்ததையடுத்து கைது செய்யப்பட்ட சிறுவனை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியதையடுத்து அவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார். இந்நிலையில் மாவட்டதிலுள்ள இன்னொரு பொலிஸ் நிலைய பிரிவின் கீழ் உள்ள பிரதேசம் ஒன்றில் 15 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஸ்பிரயோகம் செய்த 17 வயது சிறுவன் ஒருவரை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து அவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார் இவ்வாறு ஒரு வாரத்தில் 3 சிறுமிகள் மாவட்டத்தில் பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.battinews.com/2025/08/3-2.html
-
அவுஸ்திரேலியாவில் வெளிநாட்டவர்களின் குடியேற்றத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் !
அவுஸ்திரேலியாவில் வெளிநாட்டவர்களின் குடியேற்றத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் ! 01 Sep, 2025 | 10:20 AM அவுஸ்திரேலியாவில் வெளிநாட்டினர் குடியேற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து "மார்ச் ஃபார் அவுஸ்திரேலியா" (March for Australia) என்ற அமைப்பு நாடு முழுவதும் ஆர்ப்பாட்ட பேரணிகளை முன்னெடுத்துள்ள நிலையில், இந்தியர்கள் குடியேறுவதை எதிர்த்து இந்த அமைப்பினர் குரல் கொடுத்து வருகின்றனர். அவுஸ்திரேலியாவில் பிரதமர் அந்தோணி அல்பனீஸ் தலைமையில் தொழிலாளர் கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது.இந்நிலையில், வெளிநாட்டினர் குடியேற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து "மார்ச் ஃபார் ஆஸ்திரேலியா" (March for Australia) என்ற அமைப்பு நாடு முழுவதும் ஆர்ப்பாட்ட பேரணிகளை நடத்தியுள்ளது. அவுஸ்திரேலியாவின் தலைநகர் கான்பெரா, சிட்னி, மெல்போர்ண் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டப் பேரணிகளில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். கான்பெராவில் பாராளுமன்றத்தை முற்றுகையிட முயன்றவர்களை பொலிஸார் தடுத்து நிறுத்தினர். சிட்னி உள்ளிட்ட பிற நகரங்களிலும் வெளிநாட்டவர்களின் குடியேற்றத்துக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன. அசம்பாவிதங்கள் ஏற்படுவதைத் தவிர்க்க பல இடங்களில் பொலிஸார் குவிக்கப்பட்டிருந்தனர். மெல்போர்ணில் போராட்டக்காரர்களுக்கும், பொலிஸாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாகவும், சிலர் கைது செய்யப்பட்டதாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தப் பேரணிகளுக்கு அவுஸ்திரேலிய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுபோன்ற போராட்டங்கள் வெறுப்புணர்வைப் பரப்புவதாகவும், அவுஸ்திரேலிய சமூகத்தின் ஒற்றுமையை சீர்குலைப்பதாகவும் அந்நாட்டு குற்றம்சாட்டியுள்ளது. மேலும், இந்த நாட்டில் பிரிவினையை ஏற்படுத்தும் மக்களுக்கு இடமில்லை என்றும், பல்லின கலாச்சாரம் என்பது அவுஸ்திரேலியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்றும் அரசு வலியுறுத்தியுள்ளது. https://www.virakesari.lk/article/223894
-
இஸ்ரேல் தாக்குதலில் ஹமாஸின் ஆயுதப் பிரிவின் பேச்சாளர் பலி
இஸ்ரேல் தாக்குதலில் ஹமாஸின் ஆயுதப் பிரிவின் பேச்சாளர் பலி 01 September 2025 காசா நகரில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் ஹமாஸின் ஆயுதப் பிரிவின் பேச்சாளரான அபு ஒபைடா கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ், இதனைத் தெரிவித்துள்ளார். எனினும் ஹமாஸ் அவரது மரணத்தை உறுதிப்படுத்தவில்லை. இந்தநிலையில் காசாவில் ஒரு குடியிருப்பு கட்டடத்தின் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் பல பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும் காயமடைந்ததாகவும் ஹமாஸ் தெரிவித்துள்ளது. காசா நகரத்தின் அடர்த்தியான மக்கள் தொகை கொண்ட அல்-ரிமல் சுற்றுப்புறத்தில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. காசா நகரத்தை முழுமையாகக் கைப்பற்ற இஸ்ரேலிய திட்டத்தின் ஒரு பகுதியாகவே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. https://hirunews.lk/tm/417617/hamass-armed-wing-spokesman-killed-in-israeli-strike
-
பதவி சண்டை: மதுரை ஆதீனத்திற்கு எதிராக இளைய ஆதீனம் உண்ணாவிரத போராட்டம்
பதவி சண்டை: மதுரை ஆதீனத்திற்கு எதிராக இளைய ஆதீனம் உண்ணாவிரத போராட்டம் 31 Aug 2025, 2:27 PM மதுரை ஆதீனத்திற்கு எதிராக இளைய ஆதீனம் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தென்னிந்தியாவில் உள்ள பழமையான சைவ மடங்களில் ஒன்று மதுரை ஆதீனம்.மதுரை ஆதீனத்தின் 293வது பீடாதிபதியாக 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 23 ஆம் தேதி ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஞானசம்பந்த தேசிக சுவாமிகள், பொறுப்பேற்றார். இவர் அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துகளை முன் வைத்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இந்நிலையில் மதுரை ஆதீனத்திற்கு எதிராக மறைந்த அருணகிரிநாதரின் நினைவிடத்தில் இளைய ஆதீனம் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அடுத்த ஆதீனத்தை தேர்ந்தெடுப்பதில் தற்போதைய ஆதீனம் தன்னிச்சையாகச் செயல்படுவதாக அவர் குற்றம் சாட்டி உள்ளது தற்போது பேசுபொருளாகி உள்ளது. ஏற்கனவே மதுரை ஆதீனம் தன் மீது கொலை முயற்சி நடத்தப்பட்டதாகக் கூறிய நிலையில் மத மோதலை தூண்டும் நோக்கத்தில் கருத்து தெரிவித்ததாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. https://minnambalam.com/hunger-strike-against-madurai-atheenam/
-
ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு , மயிலிட்டியில் அடித்து நொறுக்கப்படும் தமிழக மீனவர்களின் படகுகள்
ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு , மயிலிட்டியில் அடித்து நொறுக்கப்படும் தமிழக மீனவர்களின் படகுகள் August 31, 2025 3:38 pm மயிலிட்டி துறைமுக புனரமைப்பு பணிகளை நாளைய தினம் திங்கட்கிழமை ஜனாதிபதி ஆரம்பித்து வைக்கவுள்ள நிலையில், மயிலிட்டி துறைமுக பகுதிகளில் உள்ள தமிழக கடற்தொழிலாளர்களின் படகுகள் ஜே.சி.பி வாகனம் மூலம் அடித்து உடைக்கப்பட்டு , அங்கிருந்து அப்புறப்படுத்தப்படும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. கடந்த காலங்களில் இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் தமிழக கடற்தொழிலாளர்கள் கைது செய்யப்பட்ட வேளைகளில் அவர்களின் படகுகளையும் கடற்படையினர் கைப்பற்றி , மயிலிட்டி மீன்பிடி துறைமுக பகுதிகளில் தடுத்து வைத்திருந்தனர். அவ்வாறு 124 படகுகள் தற்போது மயிலிட்டி மீன்பிடி துறைமுக பகுதிகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளன. வெவ்வேறு சந்தர்ப்பங்களில் அத்துமீறி இலங்கை கடற்பரப்பினுள் நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்டமை தொடர்பிலான வழக்கு விசாரணைகள் நீதிமன்றங்களில் தனித்தனி வழக்குகளாக நடைபெற்று வரும் நிலைகளில் சில வழக்குகள் முடிவடைந்துள்ளன. அவற்றின் அடிப்படையில் இதுவரையில் முடிவற்ற வழக்குகளில் 33 படகுகள் அரச உடமையாக்கப்பட்டுள்ளன. மேலும் 07 படகுகளை அதன் உரிமையாளர்களிடம் கையளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. ஏனைய படகுகள் மீதான வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன. இந்நிலையிலையே நாளைய தினம் திங்கட்கிழமை ஜனாதிபதி மயிலிட்டி துறை முக பகுதிக்கு விஜயம் செய்யவுள்ள நிலையில், அரசுடைமையாக்கப்பட்ட 33 படகுகளையும் ஜே.சி.பி வாகனம் மூலம் அடித்து உடைத்து அவற்றை அச்சுவேலி தொழில் பேட்டைக்கு எடுத்து செல்லும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதேவேளை உரிமையாளர்களிடம் கையளிக்க நீதிமன்றம் உத்தரவிட்ட 07 படகுகளையும் அதன் உரிமையாளர்கள் கடந்த 25ஆம் திகதி தமிழகத்தில் இருந்து கடற்படையினரின் பாதுகாப்புடன் மயிலிட்டி பகுதிக்கு வந்த தமது படகுகளை பார்த்து சென்றமை குறிப்பிடத்தக்கது. https://oruvan.com/tamil-nadu-fishermens-boats-being-smashed-in-myiliti-ahead-of-presidents-visit/