Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிருபன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by கிருபன்

  1. முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொடவின் புத்தகத்துக்கு தடை! முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட எழுதிய சுயசரிதை புத்தகம், பிரித்தானியாவில் Amazon விற்பனை பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை, சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் எனும் அமைப்பின் கோரிக்கைக்கு அமைய எடுக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது. கரன்னாகொடவின் புத்தக விற்பனை பிரித்தானிய தடை சட்டங்களை மீறும் எனவும், தடைக்குட்பட்ட ஒருவருக்கு காப்புரிமை உள்ளிட்ட வளங்களை வழங்குவது குற்றமாக கருதப்படும் எனவும் சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் Amazonக்கு அறிவித்திருந்தது. பிரித்தானிய சட்டத்தின்படி, இத்தகைய மீறலுக்காக ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம். Amazon பிரிட்டன் கிளை, சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டத்தின் கோரிக்கைக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ளதாக அந்த அமைப்பு அறிவித்துள்ளது. 2005 முதல் 2009வரை உள்நாட்டுப் போரின் இறுதி கட்டத்தில் கடற்படைத் தளபதியாக பணியாற்றிய கரன்னாகொட மீது, நீதிக்குப் புறம்பான கொலைகள் மற்றும் மனித உரிமை மீறல்கள் செய்ததாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அதற்கமைய, கடந்த மார்ச் மாதம், பிரித்தானிய அரசு வசந்த கரன்னாகொட உட்பட ஐவருக்கு எதிரான தடை விதித்திருந்தது. https://newuthayan.com/article/முன்னாள்_கடற்படைத்_தளபதி_வசந்த_கரன்னாகொடவின்_புத்தகத்துக்கு_தடை!
  2. புலனாய்வு அதிகாரிகளுக்கு 'தண்ணிகாட்டிய' ஜனாதிபதி! ஜனாதிபதி அநுரகுமார யாழ்ப்பாணத்துக்கு நேற்று வந்திருந்த நிலையில், அவர் எப்போது யாழ்ப்பாணம் வருகின்றார்? யாழ்ப்பாணத்தில் எங்கு தங்கியிருக்கின்றார்? என்ற விடயம் புலனாய்வு அதிகாரிகள் உட்பட அரச பெருந்தலைகள் எவருக்கும் தெரியாமல் இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதி அநுர யாழ்ப்பாணத்துக்கு நேற்றுப் பயணம் மேற்கொண்டார். இந்தப்பயணத்தின்போது, முதலாவது நிகழ்வாக காலை 10 மணிக்கு மயிலிட்டித் துறைமுக அபிவிருத்திப் பணிகளை ஆரம்பித்து வைப்பதாக இருந்தது. ஜன திபதியின் பயணத்தை முன்னிட்டு புலனாய்வாளர்கள் உச்சக்கட்டக் கண்காணிப்பைச் செலுத்தியிருந்தனர். இதனால், 31ஆம் திகதி நள்ளிரவே ஜனாதிபதி இராணுவக் காவலரண்களை தாண்டிவிட்டார் என்ற தகவல் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்துள்ளது. எனினும், யாழ்ப்பாணத்துக்குள் ஜனாதிபதி நுழைந்துவிட்டாரா? அவர் எங்கு சென்றார்? என்று அவர்களால் தொடர்ச்சியாக அறியமுடியவில்லை. இந்த விடயங்கள் தொடர்பில் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் தெரியாத நிலையில் நேற்று அதிகாலை பாதுகாப்பு வட்டாரங்களிலும் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களிடத்திலும் பெரும் பரப்ரப்பு ஏற்பட்டுள்ளது. பின்னர் மயிலிட்டித் துறைமுக அபிவிருத்திப் பணிகளுக்காக எந்த வாகனத் தொடரணியும் இல்லாமல் தனி வாகனத்தில் ஜனாதிபதி சென்று இறங்கியபோதே, ஜனாதிபதி யாழ்ப்பாணத்தில் தான் தங்கியிருந்தார் என்ற விடயம் புலனாய்வு அதிகாரிகளுக்கும் அரச வட்டாரங்களுக்கும் தெரியவந்துள்ளது. https://newuthayan.com/article/புலனாய்வு_அதிகாரிகளுக்கு_'தண்ணிகாட்டிய'_ஜனாதிபதி!
  3. 7 மாதங்களில் இலஞ்சம் பெற்ற 49 பேர் கைது! adminSeptember 2, 2025 இந்த ஆண்டின் முதல் 7 மாதங்களில் இலஞ்ச பெறப்பட்ட சம்பவங்களுடன் தொடர்புடைய 49 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. குறித்த காலகட்டத்தில் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு 3,937 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. அதன் அடிப்படையில் 72 சுற்றிவளைப்புகள் நடத்தப்பட்ட நிலையில் அவற்றில் 39 சுற்றிவளைப்புகள் வெற்றியடைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதிகளவில் இலஞ்சம் பெற்ற சம்பவங்கள் காவற்துறை திணைக்களத்தில் பதிவானதுடன், இதுவரை 17 காவற்துறை அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. நீதி அமைச்சு, சுகாதார அமைச்சு, குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம், இலங்கை போக்குவரத்து ஆணைக்குழு மற்றும் பிரதேச செயலகங்கள் போன்ற அரச நிறுவனங்களில் கடமையாற்றியவர்களும் அவர்களில் அடங்குவதாக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. அத்துடன் கடந்த காலங்களில் இலஞ்ச வழக்குகள் தொடர்பாக 27 நபர்களை நீதிமன்றங்கள் குற்றவாளிகளாக அடையாளம் கண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://globaltamilnews.net/2025/219975/
  4. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரர் வி.தர்மலிங்கத்தின் 40ஆம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு! adminSeptember 2, 2025 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரர் வி.தர்மலிங்கத்தின் 40ஆம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. யாழ். தாவடியில் அமைந்துள்ள அமரர் தர்மலிங்கத்தின் நினைவுத் தூபியில் குறித்த அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது. நிகழ்வில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் அமரர் தர்மலிங்கத்தின் புதல்வருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம், வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் பாலச்சந்திரன் கஜதீபன், யாழ்ப்பாண தேசிய கல்வியற் கல்லூரியின் சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி பா.தனபாலன்,வவுனியா மாநகர சபை முதல்வர் சுந்தரலிங்கம் காண்டீபன், வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தன், வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் தி.நிரோஸ், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டிருந்தனர். https://globaltamilnews.net/2025/219965/
  5. காலநிலை மாற்றம்: இலங்கையின் தமிழ்த்தாயகத்திக்கு கொண்டுவரும் புதிய நெருக்கடி நிலை Photo: ஐசாக் நிக்கோ | இலங்கையின் வட மாகாணத்திலும், போரினால் ஏற்பட்ட பேரழிவுகள், கட்டமைக்கப்பட்ட இனப்பாகுபாட்டு நடவடிக்கைகள் போன்றவற்றால் அவதிக்குள்ளாகியுள்ள தமிழ் மக்கள் மிகையளவில் பரம்பியுள்ள ஏனைய பிரதேசங்களிலும் சாதகமற்ற காலநிலை மாற்றங்களால் ஏற்பட்டிருக்கின்ற நெருக்கடி நிலை தமிழ்த் தேசியத்துக்கு பல புதிய சவால்களை ஏற்படுத்தியுள்ளது. “இந்த மண்ணில்தான் உங்களது இனத்தின் அடையாளம் ஆழ வேரூன்றியிருக்கிறது” என 1998ஆம் ஆண்டு, புலம்பெயர் தமிழ் மக்களிடையே உரையாற்றும்போது, தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தெரிவித்தார். இலங்கையின் வட கீழ் நிலப்பரப்பான தீவின் மேற்குக் கரையோரத்தில் கற்பிட்டி தொடங்கி கிழக்குக் கரையோரமான திருகோணமலை வரை உள்ள 14ஆம் 17ஆம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் யாழ்ப்பாணம் இராசதானியின் பிரதேச எல்லைகளாக இருந்த பகுதியையே அவர் அவ்வாறு மேற்கோளிட்டார். இந்த மண்ணுக்காகவும், அதனை ஆளும் வல்லமைக்காகவும்தான், இலங்கை அரசுக்கும் பிரிவினைவாத தமிழ் சக்திகளுக்கும் இடையில் இடம்பெற்ற இருபத்தாறு வருடகால ஆயுதப் போராட்டத்தில் எண்ணிலடங்காத ஆண்களும் பெண்களும் போராடி உயிர்துறந்தனர். ஒரு முக்கியம் வாய்ந்த தமிழ் தேசிய கட்சியான இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் சிவஞானம் ஸ்ரீதரன் “போருக்குப் பிறகும், எங்களது இறைமையையும் விடுதலையையும் மீளப்பெற நாங்கள் இன்னும் போராடிக்கொண்டுதான் இருக்கிறோம்” என என்னிடம் கூறினார். இந்நெருக்கடிநிலைக்கான தீர்வு இதுவரை எட்டப்படாத நிலையில் மேலதிகமாக இன்னுமொரு பிரச்சினை பிறந்திருக்கிறது: எந்த நிலத்தைப் பாதுகாக்க தமிழ் மக்கள் தங்கள் உயிர்களைத் தியாகம் செய்தார்களோ, எந்த நிலத்தில் அவர்களது அடையாளம் ஆழமாக வேரூன்றியிருக்கிறதோ அதே நிலம் ஒரு புதிய, மாறுபட்ட அச்சுறுத்தலை எதிர்நோக்கியிருக்கிறது. சுவிஸ் நாட்டின் விவசாய விஞ்ஞான பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்களில் ஒருவரான நடராஜா ஸ்ரீஸ்கந்தராஜா என்னிடம் தெரிவித்ததாவது, “இது இனிமேலும் வெறும் காலநிலை மாற்றம் அல்ல. இது ஒரு காலநிலை நெருக்கடி.” பல வளர்ந்து வரும் சிறுதீவு நாடுகள் போல இலங்கையும் காலநிலை மாற்றத்தில் மேற்கொள்ளப்படும் அநீதிக்கான ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக இருக்கிறது. குறிப்பிடத்தக்க அளவு உயர் காபன் உமிழ்வை மேற்கொள்ளாத போதும், உலகளாவிய காபன் இடர் குறியீட்டுப் பட்டியலில் இலங்கை தொடர்ந்தும் முதல் பத்து இடங்களுக்குள் வரிசைப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், உலக வங்கியின் 2018ஆம் ஆண்டின் ஆய்வொன்றின்படி இலங்கையின் அதிகூடிய காலநிலை வெப்பநிலைத் தளங்களாக வடக்கு மற்றும் வடமேல் மாகாணங்கள் இனங்காணப்பட்டுள்ளன. தமிழ்த் தாயகத்தின் பகுதிகளாகக் கருதப்படும் யாழ்ப்பாணம், புத்தளம், மன்னார் மற்றும் கிளிநொச்சி ஆகிய இடங்களே காலநிலை இடர்பாட்டினால் அதிகூடிய பாதிப்புக்குள்ளாகும் வாய்ப்பைக் கொண்டிருக்கும் மாவட்டங்களாக கருதப்படுகின்றன. யுத்தத்தால் பாதிக்கப்பட்ட இப்பிராந்தியங்கள் – நீண்டகால இனப் பாகுபாடு மற்றும் அரச வன்முறைகளுக்குள்ளான மாவட்டங்கள் – இக்காலநிலை இடரை எதிர்கொள்வதற்கான வளங்கள் மற்றும் வழிமுறைகளை அதிகுறைந்த அளவில் கொண்டிருக்கின்றன. பாதிக்கப்பட்ட சமூகங்களுடன் நடாத்தப்படும் காலநிலை மற்றும் அறிவியல் ஆய்வு மதிப்பீடுகளுடன் கூடிய கலந்துரையாடல்கள், தமிழ் தாயகத்தின் காலநிலை அவசர நிலையின் அதிர்ச்சியூட்டும் நிகழ்நிலைத் தரவுகளை வெளிப்படுத்துகின்றன. கடல்நீர்மட்ட உயர்வு, நிலம் உப்பாதல், வெள்ளம், வரட்சி, கரையோர மண்ணரிப்பு, பவள வெழுக்கம், வானிலையின் நிலையற்ற தன்மை மற்றும் தீவிர வெப்பம் போன்றவை ஏற்கனவே விவசாய மற்றும் மீன்பிடி சமூகத்தின் வாழ்வாதாரத்தை சீர்குலைத்த வண்ணம் உள்ளதோடு அந்நிலத்தின் தன்மை மற்றும் உற்பத்தித் திறனிலும் மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. அதிகம் துஷ்பிரயோகிக்கப்பட்ட தமிழர்களும் அவர்களது தலைமைத்துவங்களாக தங்களைப் பிரகடனப்படுத்திக்கொள்ளும் தமிழ்த் தேசிய அமைப்புக்களும் இவ்வச்சுறுத்தல் தொடர்பான விழிப்புணர்வு இல்லாமல் வெறுமனே அவற்றை கடந்துசெல்லவே தயாராக உள்ளனர். நீர்வளமும் அதன் ஊடுருவலும் “ஜூன் அல்லது ஜூலை மாதங்களில் மழை இல்லாதபோது வயல் நிலங்களில் உப்புப் படிமங்கள் உருவாக்கியிருப்பதை காணலாம்” என மன்னார் மாவட்டம் விடத்தல் தீவைச் சேர்ந்த சூழலியலாளரான எடிசன் மேரிநாதன் என்னிடம் குறிப்பிட்டார். நிலம் மற்றும் நிலக்கீழ் நீரின் உப்புத்தன்மையை அதிகரிக்கின்ற, உப்புப் படிவாக்கம், இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக ஏற்கனவே யாழ். குடாநாட்டின் 43 சதவீதமான விவசாய நிலங்களின் நிரந்தரமான கைவிடப்படலுக்கு காரணமாக இருந்ததோடு, அது அப்பகுதி முழுவதுமான பயிர்ப்பாசனம் மற்றும் குடிநீர் விநியோகம் ஆகியவற்றுக்கும் அச்சுறுத்தலாக இருக்கின்றது. 2020 இல் நிலக்கீழ் நீர்வளத்தின் உடனடி பரிபாலானத்தை வலியுறுத்தும்வகையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்று, குறித்த ஆண்டில் யாழ். குடாநாட்டில் இருந்த கிட்டத்தட்ட 59 சதவீதமான கிணறுகளின் நீர், பயிர்ப் பாசனத்துக்கு பொருத்தமற்ற விதத்தில் உப்புத்தன்மை வாய்ந்ததாக மாறியிருந்தமை குறித்து கண்டறிந்தது. தொடர் நீர்ப்பற்றாக்குறைக்காக அறியப்பட்ட வட மாகாணத்தில் இதுவொரு எளிய பிரச்சினை அல்ல என்பது குறிப்பிடத்தக்கது. காலநிலை சமநிலையின்மையின் அறிகுறிகளுக்கு எடுத்துக்காட்டாக இருக்கின்ற ஏராளமான கரையோரக் கிராமங்களில் ஒன்றான மன்னார் மாவட்டத்தின் இலுப்பக்கடவையில் நீரினுள் நிற்கும் நாய். காலநிலை சமநிலையின்மையின் அச்சுறுத்தல்கள் பற்றிய விடயங்கள் இன்னும் பொதுவான கலந்துரையாடல் வடிவம் பெறவோ அல்லது தமிழ் பெரும்பான்மை கொண்ட வடக்கின் அரசியல் சிந்தனைகளாக கருத்தில் கொள்ளப்படவோ இல்லை. Photo: ஐசாக் நிக்கோ உப்புப் படிவாக்கம் அதிகளவான நீர் பாவனையின் விளைவு என காலநிலை விஞ்ஞானி தரணி கோபாலகிருஷ்ணன் விளக்குகின்றார். சனத்தொகை அதிகரிக்க அதிகரிக்க மக்கள் புதிது புதிதாக கிணறுகளை தோண்டிய வண்ணம் இருக்கிறார்கள். நீர்ப்பாசனம் மற்றும் வீட்டுத் தேவைகளுக்கான அதிகளவான நீர் பாவனைய, யாழின் நீர்கொள் படுகைகளாகச் செயற்படும் சுண்ணாம்புப் படுகைப் பாறைகளுக்கிடைப்பட்ட கடல் மற்றும் நன்னீர் சமநிலையை பாதிக்கின்றமை கிணறுகளிலுள்ள நீரை உவர்தன்மைமிக்கதாக மாற்றுகிறது. ஆனால், காலநிலை சமநிலையின்மையால் விளைந்த கடல்நீர்மட்ட உயர்வு மற்றும் நிலமட்டத்தைத் தாண்டிய கடல் நீரின் மிகை ஊடுருவல் போன்றவற்றாலும்கூட உப்புப் படிவாக்கம் நிகழ்கின்றது. உவர்நீர் ஊடுருவலின் விளைவாக யாழில் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்பும், நூற்றுக்கணக்கான கிணறுகளும் பாவனையிலிருந்து கைவிடப்பட்டுள்ளன. கோபாலகிருஷ்ணனின் கூற்றுப்படி பல்வேறு இடங்களில் மண்ணின் உப்புப் படிவாக்கம் 20 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட மூன்று அல்லது நான்கு மடங்கு அதிகரித்துள்ளது என்பது தெரிகிறது. மேலும், பூநகரி அல்லது அரியாலையிலுள்ள கைவிடப்பட்ட வயல் நிலங்களுக்குச் சென்று பார்த்தோமானால், அங்குள்ள மண் கடல் மண்ணின் தன்மையில் காட்சியளிப்பதோடு சிலவேளைகளில் அவற்றில் சிப்பிகளையும் கண்டெடுக்க முடியும் என்று அப்பெண் தெரிவித்தார். பெரும்பாலான மக்கள் வாழும் கரையோரத்தின் சமதரையான யாழ். குடாநாட்டில் கடல்நீர்மட்ட உயர்வானது மண்ணரிப்பு மற்றும் வெள்ளப்பெருக்கு போன்றவற்றுக்கும் காரணமாக அமையும். மொத்த நிலப்பரப்பில் 35 சதவீதமும் பிராந்தியத்தின் விவசாய நிலங்களில் 52 சதவீதமும் 2100ஆம் ஆண்டளவில் அற்றுப்போகும் வாய்ப்புள்ளதாக காலநிலை விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். யாழ்ப்பாணத்தின் மூன்றில் ஒரு பங்கு குடும்பங்கள் விவசாயத்தில் ஈடுபட்டிருக்கின்ற நிலைமையில், யாழ்ப்பாணத்தின் உழைக்கும் மக்கள் தொகையில் நாலில் ஒரு பங்கினரை 2050 அளவில் நெல்லுற்பத்தியில் ஏற்படப்போவதாக கணிக்கப்படும் சுமார் ஒரு மில்லியன் டாலர்கள் வீழ்ச்சி நேரடியாக பாதிக்கும் அபாயம் உள்ளது. சனத்தொகை பெருக்கத்தோடு கூடிய நெல்லுற்பத்தியின் வீழ்ச்சி குடாநாட்டில் உணவுப் பற்றாக்குறையை ஏற்படுத்துவதோடு வறுமைக்கும் வழிவகுக்கும் என காலநிலை விஞ்ஞானிகள் எதிர்வு கூறுகின்றனர். இலங்கையின் வடமேற்குக் கரையோரமாக கிழக்கு அரிப்பு பகுதியில் நீரை அண்மித்த இரண்டடுக்கு செங்கல் மாளிகையொன்று தீவிர வெப்பம் மற்றும் கடலரிப்பின் விளைவாக அழிவடைந்த வண்ணம் காணப்படுகிறது. 19ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட இக்கட்டடம் ஒரு காலத்தில் இலங்கையின் முதல் பிரிட்டிஷ் ஆளுநரான பிரடெரிக் நோர்த் அவர்களின் வசிப்பிடமாக இருந்தது. இன்று இது அழிவடையும் நிலையில் உள்ளது. இன்னும் சில மீட்டர்கள் தூரத்தில் கடலலைகளின் தொடர் மோதலால் அங்குள்ள உருளைவடிவக் கிணறொன்றின் செங்கல் அடுக்குகள் படிப்படியாக வெளித்தெரியத் தொடங்கிவிட்டன. 71 வயதான கிராமவாசியான டீ.எம்.க்ரூஸின் கூற்றுப்படி கரையோர மண்ணரிப்பானது கடந்த மூன்று அல்லது நான்கே வருடங்களில் இக்கிணற்றைச் சுற்றியுள்ள மண்ணை உட்கொண்டுள்ளதாக தெரிகிறது. கடலிலிருந்து கரைக்கு மீன் கொண்டுவரும் கரையோர மீனவரான எஸ்.ஏ.பெர்னாண்டோ இக்கிணற்றிலிருந்து நன்னீரை குடிநீராகப் பயன்படுத்தி வந்தவர். தற்போது இக்கிணற்றில் குடிப்பதற்கு முடியாத நிலையில், நீரில் உப்பு கலந்திருப்பதாக அவர் கூறுகிறார். என்ன காரணத்தினால் கடலரிப்பு மற்றும் உப்பேற்றம் போன்றவை நிகழ்கின்றன என்ற எந்தவித அனுமானமும் அவருக்கு இல்லை. காலநிலை மாற்றத்தால் ஏற்படும் கடல் நீர்மட்ட உயர்வு கடலரிப்பு வீதத்தை அதிகரிக்கின்ற அதேவேளை, கரையோர கட்டுமானங்கள் போன்ற மனித நடவடிக்கைகள் மற்றும் இயற்கையில் ஏற்படும் இயல்பான மாற்றங்கள் போன்றவற்றின் விளைவுகள் கூட இவ்வாறான கடலரிப்புக்கு காரணமாக அமையலாம். கடலரிப்பின் விளைவால் பெரும்பாலான வடமேல் கரையோரங்களில் உள்ள நிலப்பரப்புக்கள் படிப்படியாக கடலினால் உள்வாங்கப்பட்டு வந்துள்ளன. உதாரணமாக முத்தரிப்புத்துறை மற்றும் சிலாவத்துறைக்கு இடைப்பட்ட பகுதிகளை குறிப்பிடலாம். “மக்கள் நடந்துசெல்கின்ற இடங்கள் கடலுக்குள் காணாமல் போய்விட்டன” என்கிறார் க்ரூஸ். “எதிர்காலததில் எது என்ன விதத்தில் நடக்கும் என்பது இறைவனுக்கே தெரியும்.” என்றும் க்ரூஸ் கூறுகிறார். எஸ்.ஏ.பெர்னாண்டோ இக்கிணற்றிலிருந்து நன்னீரை குடிநீராகப் பயன்படுத்தி வந்தவர். ஆனால், தற்போது இக்கிணற்று நீரில் குடிப்பதற்கு முடியாத நிலையில் உப்பு கலந்திருக்கிறது. தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்கில் காலநிலையின் உக்கிரம் உப்புப் படிவாக்கம் மற்றும் கடலரிப்பை அதிகரிக்கச் செய்கிறது. இருந்தும் பெர்னாண்டோ போன்றவர்களிடம் இவ்வுலகளாவிய காலநிலை நெருக்கடி பற்றிய விழிப்புணர்வு போதிய அளவு இல்லை. Photo: ஐசாக் நிக்கோ தமிழ் தாயகத்தை கடல் உள்வாங்கிக்கொள்ளும் எதிர்வுகூறல் தமிழின் புராண வரலாற்றை எதிரொலிக்கிறது. சங்கத் தமிழ் இலக்கியங்கள் குறிப்பிடும் குமரிக் கண்டம் – தமிழர்கள் இன்று வாழ்கின்ற நிலங்களுக்கு எந்த நிலத்தில் இருந்து இடம்பெயர்ந்து வந்தார்களோ அந்தப் புராதன நிலத் துண்டம் – முற்றாகக் கடல் உள்வாங்கிக்கொள்ள முன்பு அந்நிலம் ஒரு பெரும் பிரளயம் அல்லது பிரளயங்களின் தொடர் போன்ற இயற்கைப் பேரழிவுகளை எதிர்கொண்டது. இத்தொன்ம வரலாறு எமக்கு வருத்தமளிக்கிறது. புத்தளம் மாவட்டத்தின் மேற்குப் பகுதியில் உள்ள கல்பிட்டியின் தீவுகள் மற்றும் ஏனைய நிலப்பகுதிகள் இன்று கடலில் மூழ்கிக்கொண்டிருக்கின்றன. யாழ். குடாநாடு மற்றும் கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பகுதியைச் சுற்றியுள்ள பெரும்பாலான தீவுகளை 2100ஆம் ஆண்டளவில் முற்றாக கடல் உள்வாங்கிக்கொள்ளும் என காலநிலை விஞ்ஞானிகள் எதிர்வு கூறுகின்றனர். அண்மைய வெள்ளப்பெருக்குகளை கருத்தில் கொள்ளும்போது கடந்தகால புராணங்களில் கூறப்பட்டுள்ள பிரளயங்கள் வினோதமான தீர்க்கதரிசனமாக தோன்றுகிறது. வருடா வருடம் இயற்கை அனர்த்தங்களால் இலங்கைக்கு ஏற்படும் பொருளிழப்பில் பெரும்பகுதியை வெள்ள அனர்த்தங்களே ஏற்படுத்துகிறன. வருடாந்தம் சுமார் 140 மில்லியன் அமெரிக்க டாலர்களாக இருக்கின்ற இத்தொகை 2030ஆம் ஆண்டளவில் 338 மில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் வெள்ளப்பெருக்கானது மண்சரிவு, தொற்றுநோய்கள் போன்ற இன்னோரன்ன அபாயங்களை அதிகரிக்கச்செய்து உயிர், வாழ்வாதாரம் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளுக்கும் அச்சுறுத்தலாக அமையும் அபாயம் உள்ளது. 1964ஆம் ஆண்டு வடக்கில் சுமார் ஆயிரம் பேர் வரை உயிரிழக்க நேரிட்ட இராமேஸ்வரம் சூறாவளிக்குப் பின்னர் குறிப்பிடத்தக்களவு வெள்ள அனர்த்தங்கள் நிகழ்ந்ததாக தனது கவனத்தில் இல்லை என கரையோர நகரமான விடத்தல்தீவின் விவசாயக் குடும்பமொன்றின் ஐந்தாவது தலைமுறையைச் சேர்ந்த செபஸ்டியன்பிள்ளை சத்தியசேகரன் தெரிவித்தார். ஆனால், 2020 இல் புரெவி புயல் தாக்கியபோது பல இடங்கள் வெள்ளக்காடானதோடு சுமார் 70,000 இற்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்புக்குள்ளாயினர். சத்தியசேகரத்தின் வயல் நிலம் முற்றாக நீரில் மூழ்கியதோடு அவரது மூத்த சகோதரர் அவ்வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து அவ்வருடத்துக்கான விவசாயத்தை முற்றுமுழுதாக கைவிட்டதாகச் சொன்னார். நிலக்கீழ்நீர் உப்பாகியிருக்கலாம் என ஊகித்து அடுத்த வருடமும் அவர் பயிர்ச்செய்கையை மேற்கொள்ளவில்லை. வெள்ள அனர்த்தங்களால் இலங்கையில் கடந்த முப்பது ஆண்டுகளில் 10 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டிருந்தாலும் அதிகரித்துவரும் வெள்ள அனர்த்தங்களின் நிகழ்தகவுகள் மக்கள் மத்தியில் முழுவதும் பதிவுசெய்யப்படவில்லை. நிலத்தின் மதிப்பானது அதன் நிலையமைப்பு, அங்குள்ள இயற்கை பேரழிவுகளுக்கான சாத்தியக்கூறுகள் மற்றும் தள விபரம் போன்ற அளவுகோல்களில் தங்கியுள்ளது என மன்னார் தீவைச் சேர்ந்த சொத்து மதிப்பீட்டாளர் செபஸ்டியன்பிள்ளை சத்யதீபன் அறிந்திருந்தார். இருப்பினும், கட்டுமானத்தை ஆரம்பித்து இரண்டாவது வருடத்திலேயே வெள்ளத்தில் மூழ்கிய ஒரு நிலத் துண்டில் குறித்த கட்டுமானத்தை அவர் இன்னும் தொடர்கிறார். “வெள்ளம் வடிந்ததும் நிலம் காய்ந்துவிடும்” என்றும் “அது ஒரு பெரும் பிரச்சினையல்ல” என்றும் அவர் சொல்கிறார். எனினும், குன்சன் மற்றும் எடிசன் மேரிநாதன் போன்ற சூழலியல் செயற்பாட்டாளர்கள் மன்னாரில் வாழும் மக்கள் தீவிர காலநிலையின் நெருக்கடி நிலை குறித்து போதிய விழிப்புணர்வின்றி அசிரத்தையாக இருப்பது குறித்து கவலை தெரிவித்தனர். கனமழையின்போது மன்னார் தீவை பிரதான நிலப்பரப்புடன் இணைக்கும் வீதியின் நீர் மட்டத்தை குன்சன் கண்காணித்து வருகிறார். இந்த வீதி விரைவில் நீரில் மூழ்கும் எனவும், அது மன்னாரை அத்தியாவசியப் பொருள் வழங்கலில் இருந்தும் துண்டித்துவிடுவதோடு, மக்களை அங்கிருந்து இடம்பெயரும் கட்டாயத்துக்கும் ஆளாக்கும் எனவும் எச்சரிக்கை செய்தார். வெம்மையும் அறுவடையும் காலநிலை மாற்றம் இலங்கையில் வரட்சி, வெள்ளப்பெருக்கு போன்ற அசௌகரியங்கள் ஏற்படுவதற்கான நிகழ்தகவு மற்றும் தீவிரம் போன்றவற்றை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2008 – 2018 இற்கு இடைப்பட்ட காலத்தில் வரட்சியால் நாட்டில் சுமார் எட்டு மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டனர். 2014, 2016 -17 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் ஏற்பட்ட வரட்சியில் வெப்ப வலயமான வட மாகாணம் அசாதாரணமான பாதிப்பை எதிர்கொண்டது. 2023 ஆகஸ்ட் மாதத்தில் வரட்சி போன்ற காலநிலை காரணமாக இலங்கையில் பத்து மாவட்டங்களில் உள்ள மக்கள் பாதுகாப்பான குடிநீரின்றி அவதிக்குள்ளாயினர். குறிப்பாக யாழ்ப்பாணம், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்கள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டன. கிட்டத்தட்ட பாதிக்கப்பட்ட 150,000 பேரில் 85 சதவீதமானோர் இம்மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்வீடன் நாட்டின் விவசாய விஞ்ஞான பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஸ்ரீஸ்கந்தராஜா, இலங்கையானது வெப்ப வலயங்கள் உட்பட அனைத்துப் பிரதேசங்களிலும் சீரான மழைவீழ்ச்சியை பெறும் ஒரு நாடு எனத் தெரிவிக்கிறார். அழுத்தம் மிக்க காலநிலை கொண்ட சூழலில் மோசமான நிலையில் உள்ள நீர் “மேலாண்மை” மற்றும் வளங்களின் வினைத்திறனான பரிபாலனத்தின் தேவை ஆகியன இன்னும் அழுத்தமான பிரச்சினையாக இருக்கின்றன எனவும் அவர் கூறினார். மேலும், “அதிக நீரை நுகரும்” சோள உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் வரையப்பட்டுள்ள தேசிய செயற்றிட்டத்தை விமர்சித்தவண்ணம், உள்ளூர் சாகுபடிகள் பற்றிய வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு விதைத்தலுக்கான பயிர்கள் மறுபரிசீலனை செய்யப்படல் வேண்டும் என்றும், நிலத்தின் தரைத்தோற்றம், தட்பவெப்பநிலை மற்றும் வளங்களின் கிடைப்பனவுகளுக்கு ஏற்புடைய விதத்தில் விவசாயப் பயிர்களை தேர்வுசெய்வது அவசியம் எனவும் அவர் வாதிடுகிறார். பசுமைப் புரட்சி காலத்தில், அதிக விளைச்சலைத் தரும் நெல் மற்றும் பிற பயிர்களால் பதிலீடு செய்யப்பட முன்னர் தமிழர்களின் உணவுக் கலாசாரத்தில் முக்கிய இடம் வகித்துவந்த, மிகக் குறைந்தளவு நீரின் கிடைப்பனவிலும் செழிப்பாக வளரக்கூடிய, தீவிர காலநிலையின் தாங்குதிறன் மிக்க பயிரான ‘தினை’யை தனது பாட்டன் காலத்து மக்கள் உண்டு பிழைத்த கதைகளை அவர் நினைவுகூர்ந்தார். புராணங்களில் முருகப் பெருமானின் மனைவி வள்ளி, தினை வயல்களுக்கு காவலரணாக இருந்ததை குறிப்பிட்டு, “கதிர்காமம் முருகன் கோவிலில் பிரசாதமாக தினை வழங்கப்படுவது எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கிறது” என்றும் ஸ்ரீஸ்கந்தராஜா கூறினார். காலநிலை சமநிலையின்மையால் ஏற்படும் வெப்பநிலை அதிகரிப்பானது அதிகரித்த வரட்சி மற்றும் அதனோடு தொடர்புடைய பல்வேறு பாதகமான விளைவுகளை ஏற்படுத்தவல்லது. தெற்காசியாவில் வெப்ப அலைகளின் தாக்கம் அதிகரித்து வருகின்றது. குறிப்பாக இலங்கையின் வட பகுதி இதனால் அதிக தாக்கத்துக்கு உள்ளாகும் – சில எதிர்வுகூறல்களுக்கமைய இந்நூற்றாண்டின் முடிவில் 35 பாகை செல்சியஸை அண்மித்த சராசரி வெப்பநிலையை இப்பிராந்தியம் எதிர்கொள்ள நேரிடும். இந்த ஆண்டில் மட்டும் வெப்ப அலைகள் வட மாகாணத்தில் குறைந்தபட்சம் ஏழு பேரையேனும் கொன்றிருக்கும். தீவிர வெப்பநிலை அதிகரிப்பானது முறையான குளிரூட்டல் வசதிகள் இல்லாமல் திறந்த வெளியில் வேலை செய்யும்இ வடக்கிலுள்ள பல்லாயிரக்கணான விவசாயிகள் மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள தொழிலாளர்களது சுகாதாரம் மற்றும் வாழ்க்கைத் தரத்தை பாதிக்கும். உயர் வெப்பநிலையால் விவசாய விளைச்சல்களும் பாதிப்புக்கு உள்ளாகும். குறிப்பாக இலங்கையின் முக்கிய சாகுபடியான நெற்பயிர் வெப்பநிலைக்கு உணர்திறன் கூடியது. வெப்பநிலை அதிகரிப்பால் விளைச்சலில் ஏற்படுகின்ற வீழ்ச்சி, குடும்ப மற்றும் தேசிய உணவு கிடைப்பனவை அச்சுறுத்துவதோடு, குறிப்பிடத்தக்களவு வறுமை வீதத்தையும் அதிகரிக்கும் என எதிர்வுகூறப்படுகிறது. மதிப்பீடொன்றின்படி தீவிர காலநிலை மாற்றம் இல்லாத நிலைமையில் ஏற்படக்கூடிய வறுமை வீத அதிகரிப்பை விட இது 12 இலிருந்து 26 சதவீதம் அதிகமாகும். சில இடங்களில் வெப்பநிலை அதிகரிப்போடு கூடிய விளைச்சல் வீழ்ச்சி ஏற்கனவே நலிவு நிலையை எட்டியுள்ளது. குறிப்பாக கிளிநொச்சி, வளைபாடு பிரதேசத்தில் யுத்தத்தில் கணவர்களை இழந்த பெண்கள் மேற்கொள்ளும் கடற்பாசி விவசாயத்தில் 2024ஆம் ஆண்டின் வெப்ப அலைகளின் தாக்கத்தால் 80 சதவீதம் பயிர்கள் சேதமடைந்துள்ளன. 2024 இல் வெப்ப அலைகளாலும் 2022 இல் குளிராலும் கால்நடைகளை இழந்த இலங்கையின் வடக்கைச் சேர்ந்த கால்நடை விவசாயி. காலநிலை நெருக்கடிக்கு மத்தியில், விவசாய வாழ்வாதாரங்கள் அதிக வெப்பநிலை மற்றும் கணிக்க முடியாத வெப்பநிலை ஏற்ற இறக்கங்கள் ஆகியவற்றால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகின்றன. Photo: ஐசாக் நிக்கோ அதிக வெப்பநிலையானது உணவூட்டல் மற்றும் வளர்சிதை மாற்ற (உயிரினங்கள் உயிர்வாழ்வதற்கும், வளர்வதற்கும், இனப்பெருக்கம் செய்வதற்கும், உடலில் உள்ள அனைத்து வேதிவினைகளின் தொகுப்பாகும்) விகிதங்களை துரிதப்படுத்தும். ஆகையால், இதன்மூலம் ஒரு சில குறிப்பிட்ட பீடைகளின் குடித்தொகை பரம்பலின் பெருக்கம் அதிகரிப்பதினூடு பயிர்ச்சேத வீதமும் அதிகரிக்கும். அதிகரித்த வெப்பத்துடன் கூடிய மழைப்பொழிவு ஆசியாவின் மிகவும் அழிவுகரமான நெல் பூச்சிகளில் ஒன்றான பழுப்பு நிற தத்தியின் திடீர் பரவலுக்கு வழிவகுக்கும். வெப்பநிலை உயர்வு மந்தைகளையும் பாதிக்கும் – கடுமையான வெயில் காலங்களில் வட பகுதி விவசாயிகள் தங்கள் கால்நடைகளை இழந்துள்ளனர் மற்றும் அனுமானிக்க முடியாத அழிவுகரமான வெப்பநிலை ஏற்ற இறக்கங்களும்கூட இவ்விழப்புக்கள் ஏற்படக் காரணமாக அமையலாம். டிசம்பர் 2022 இல் மாண்டூஸ் சூறாவளியின் போது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மிகையான குளிரின் காரணமாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட கால்நடைகள் இறந்தன. சிலவேளைகளில் மிதமான காலநிலை இருந்தாலும்கூட அதன் கணிக்கமுடியாத தன்மை மீனவர்களுக்கும் விவசாயிகளுக்கும் ஒரு அச்சுறுத்தலாகவே இருக்கும். “நாங்கள் காற்றை எதிர்பார்க்கும்போது, அது வீசாது. நாங்கள் மழையை எதிர்பார்க்கும்போது, அது பெய்யாது. நாங்கள் முன்பு பெற்ற விளைச்சலை இனிப் பெற இயலாது” என மன்னார் மாவட்டம், இலுப்பைக் கடவையைச் சேர்ந்த விவசாயியொருவரின் மனைவி மகாதேவி குறைகூறினார். இவ்வாறான எதிர்வுகூறமுடியாத தன்மை கூட மீனவர்களைப் பாதிக்கும். “முன்பெல்லாம் எமது மூதாதையர்கள் ஒரு குறித்த நாளில் மழை பெய்யும் என்று சொன்னால், அது நடக்கும். இன்று நிலைமை அப்படியல்ல” என அந்தோனியார்புரம் கரையோர கிராமத்தைச் சேர்ந்த மீனவர் கனகசபை குகசிரி கூறினார். இளைஞர்களின் கைகளிலுள்ள திறன்பேசிகள் வாயிலாக குகசிரிக்கு வானிலை தொடர்பான தகவல்களை இலகுவாகப் பெற்றுக்கொள்ள முடிந்தபோதும், வானிலை எதிர்வுகூறல்கள் எல்லா வேளைகளிலும் துல்லியமாக இருக்காது என அவர் அறிந்திருக்கிறார். “அவர்கள் இன்று காற்றின் வேகம் அதிகமாக இருக்குமென்று சொன்னார்கள், ஆனால் அப்படி இல்லை” என்று சலித்துக்கொண்டார். இலங்கை, மன்னார் மாவட்டத்தின் ஓய்வுபெற்ற மீன்பிடி உத்தியோகத்தர் எம்.எஸ் மிரன்டா, ஓர் சேற்று நண்டோடு. இலங்கையின் நீர்நிலைகளில் ஏற்றுமதித் தரம் வாய்ந்த சேற்று நண்டுகளின் எண்ணிக்கை குறைந்தவண்ணம் உள்ளது. ஆனால், அதற்கான காரணங்களை நிர்ணயிக்கும் வகையில் எவ்வித ஆய்வுகளும் முன்னெடுக்கப்படவில்லை. Photo: ஐசாக் நிக்கோ நிச்சயமற்ற வானிலையைத் தவிர, காலநிலை சமனிலையின்மை குறித்து மீனவர்கள் வேறெந்த சந்தர்ப்பத்திலும் விசனம் தெரிவிக்கவில்லை. அது கடல்சார் சுற்றுச் சூழலின் அமைப்பில் ஏற்படுத்தவல்ல தாக்கங்களை அவதானித்தல், அளவிடல் அல்லது விளங்கிக்கொள்ளல் எளிதல்ல. மிதமிஞ்சிய மீன்பிடி, அழிவுகரமான செயன்முறைகளான டைனமைட் மீன்பிடி, இழுவை வலை மீன்பிடிப்பு, அடிவலை மீன்பிடி போன்ற செயற்பாடுகளால் உள்நாட்டு நீரினங்களின் பல்வகைமை வீழ்ச்சி போன்ற காலநிலைச் சமநிலையின்மையால் ஏற்படுகின்ற பாதிப்புகளுக்கு நிகரான விளைவுகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது. யாழ். நகரின் குருநகரில் உள்ள மீனவர்கள் தங்களது நீர்நிலைகளில் முன்பைவிட மீன்களின் அளவும், அதன் பல்வகைமை குறைந்துள்ளதாகவும், ஒரு காலத்தில் மிகவும் பிரசித்தமான ஏற்றுமதி பொருளாக இருந்த சிங்க இறால்கள் போன்ற சில மீனினங்கள் அங்கு முற்றாக அற்றுப்போயுள்ளதாகவும் குறிப்பிட்டனர். காலநிலை சமநிலையின்மையால் அதிகரிக்கும் நிகழ்தகவுடைய நீரின் வெப்பநிலை அல்லது அதன் உப்புத்தன்மையால் நீர்வாழ் விலங்குகளின் இனப்பெருக்க இயல்புகள் பாதிக்கப்படலாம் என்பது தெரிந்திருந்தும், என்னோடு பேசிய சிலர் இம்மாற்றங்களுக்கு மிகை மீன்பிடி மற்றும் அடிவலை மீன்பிடியையே காரணம் காட்டினர். மற்றுமொரு அதிக இலாபம் தரும் ஏற்றுமதி உயிரினமான சேற்று நண்டுகள் எண்ணிக்கையில் குறைந்து வருவதாக மன்னார் மாவட்டத்திற்கான மீன்பிடி மற்றும் நீரியல் வளத்துறையின் ஓய்வுபெற்ற உதவிப் பணிப்பாளர் எம்.எஸ்.மிராண்டா சுட்டிக்காட்டினார். ஆனால், “அதற்கான காரணங்கள் பற்றி அறிந்துகொள்ள போதிய ஆய்வுகள் எம்மிடம் இல்லை” என்று அவர் தெரிவித்தார். காலநிலை சமநிலையின்மையின் பாதிப்புக்கள் பற்றி உய்த்தறிய மீனவர்கள் சிரமப்படுகின்றனர். “ஆனால் அப்பாதிப்புகள் கடுமையானவை” என பவளப்பாறை சூழலியலாளர், இலாப நோக்கற்ற உள்நாட்டு கடல் ஆராய்ச்சி மற்றும் பாதுகாப்பு இணை நிறுவனர் நிஷான் பெரேரா வலியுறுத்தினார். குறிப்பாக ‘எல் நினோ’ மற்றும் ‘லா நினா’ காலங்களில் கடலின் மேற்பரப்பு வெப்பநிலை அதிகரிப்பது, பவள வெளுப்பு மற்றும் பவள இறப்புக்கு வழிவகுக்கும் என அவர் கூறினார். 1998 மற்றும் 2016ஆம் ஆண்டுகளில் இலங்கையின் கரையோரங்களில் முக்கிய பவள வெளுப்பு நிகழ்வுகள் நடந்தேறின. அதேசமயம், கிழக்குக் கரையோரமானது 2019 இல் ஒரு சிறிய வெளுப்பு நிகழ்வை எதிர்கொண்டது. பவள வெளுப்பு நிகழ்வுகள் முருகைக் கற்பாறைகளில் வாழும் உயிரினங்களை அழிப்பதோடு, சில மீனினங்கள் மற்றும் உணவுச் சங்கிலியில் கீழ்நிலைகளில் அவற்றை உண்ணும் உயிரினங்களையும் இல்லாதொழிக்கும். 2023 இல் ஏற்பட்ட வெப்ப அலைகளுக்குப் பிறகு திருகோணமலையை அண்மித்த பகுதிகளில் ஆய்வாளர்கள் பவள வெழுப்பை அவதானித்தனர். அத்தோடு, மன்னாரிலும் வெளுப்பு நிகழ்வுகள் ஏற்படலாம் என அதிகாரசபைகள் அஞ்சின. 25 ஆண்டுகளாக அலங்கார மீன்களைப் பிடித்து வரும் முஹம்மது சதாத், பவளப்பாறை வெளுப்பு ஏற்படுவதற்கான அறிகுறிகளை அவதானித்ததாக கூறினார். திருகோணமலையிலிருக்கும் தனது இல்லத்திலிருந்து ஏற்றுமதிக்காக கடல்வாழ் உயிரினங்களை பெற்றுக்கொள்ள வடக்கு மற்றும் கிழக்கு கரையோரமாக மட்டக்களப்பு, கல்பிட்டி மற்றும் மன்னார் போன்ற இடங்களுக்கு அவர் பயணிப்பவர். பவளவெழுப்பின்போது ஏற்படும் வெளிறலைப்போல முருகைக்கற் பாறைகள் இறந்து வெண்மையாக மாறும்போது தமது நடத்தைகள் மூலம் பவளப்பாறைகளின் ஆரோக்கியத்தை அளவிட்டுக் காட்டும் கருவியாகவும் மீன் இனங்கள் ஆபத்தில் உள்ளமை குறித்து முன்கூட்டியே எச்சரிக்கையை வெளிப்படுத்தும் தன்மையுமுள்ளதாகவும் கருதப்படும் வண்ணமயமான பட்டாம்பூச்சி மீன்களில் சிலவற்றை அவதானித்ததாக சாதாத் விளக்கிக் கூறினார். தான் அவதானித்த பவள இறப்புக்கு 2004ஆம் ஆண்டில் இந்தியப் பெருங்கடலில் ஏற்பட்ட சுனாமி அனர்த்தம், தொழில்முறை மீன்பிடித்தல் மற்றும் காலநிலை மாற்றத்தால் விளைந்த வெப்பநிலை அதிகரிப்பு போன்றவையே காரணம் என சாதாத் கருதுகிறார். நான் சந்தித்தவர்களில் அலங்கார மீன்பிடி வியாபாரத்தில் ஈடுபடும் சதாத் போன்ற வெகு சிலரே மீன்களின் குடித்தொகையில் ஏற்படும் வீழ்ச்சிக்கு வெப்பநிலை மாற்றத்தை காரணமாகக் கூறினர். “ஏனைய மீனவர்கள் பிரச்சினைக்கான புள்ளிகளை உரிய முறையில் இணைப்பதாகத் தோன்றவில்லை” என பெரேரா அவர்கள் தெரிவித்தார். அலங்கார மீன்களை பிடித்து வாழ்வாதாரம் செய்யும் முகமது சதாத் ஓர் தாமரைக்காத்தான் மீனுடன். இலங்கையில் உள்ள அலங்கார மீன்களைப் பிடிக்கும் மீனவர்கள் கடல் வெப்பநிலை அதிகரிப்பால் பவளப்பாறை வெளுப்பதை முதலில் கவனித்துள்ளனர். Photo: ஐசாக் நிக்கோ மோசமான தாக்கம்: தயாரற்ற நிலை 2022 இல் உச்சம் தொட்ட, இலங்கை எதிர்கொண்டுவரும் பொருளாதார நெருக்கடியினால் ஏற்பட்ட வீழ்ச்சி, நாட்டின் காலநிலை நெருக்கடி நிலையை எதிர்கொள்ளும் திறனை குறைத்துள்ளது. ஒப்பீட்டளவில் வடமேல் மாகாணம் வளமானதாகக் காணப்பட்டாலும் காலநிலை அசாதாரண நிலைமையினால் அதிகளவு பாதிப்படையும் பத்து பிராந்தியங்களில் ஐந்து பிராந்தியங்கள் வளம் குன்றிய வட மாகாணத்தில் உள்ளன. பாதிப்படையும் அபாயம் உள்ள முதல் பத்து மாவட்டங்களில் இடம்பெறும் முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்கள் நாட்டின் வறிய மாவட்டங்களுமாகும் என்பது குறிப்பிடத்தக்கது. கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை உட்பட தமிழ் பேசுபவர்கள் அதிகம் வாழும் பல்வேறு பகுதிகள், 2009 இல் பாரிய அட்டூழியங்கள் மற்றும் சிலரது வாதத்தின்படி இனப்படுகொலையுடன் முடிவடைந்த 26 ஆண்டுகால உள்நாட்டுப் போரின் போதான கடுமையான சண்டை ஏற்படுத்திய தாக்கத்திலிருந்து படிப்படியாக மீண்டு வருகின்றன. இருந்தும், போரினால் சோர்வடைந்த தமிழ் மக்கள் இன்றும் தொடர்ச்சியான வன்முறைகளையும் தொடர்ச்சியான மனித உரிமை மீறல்களையும் எதிர்கொண்டவண்ணமுள்ளனர். உள்ளூர் வளங்களின் பற்றாக்குறை மற்றும் போரினால் ஏற்பட்ட சேதம் போன்றவற்றோடு சுரண்டல், சந்தர்ப்பவாதம், மற்றும் போருக்குப் பின்னான சுற்றுச் சூழலை அழிவுக்குள்ளாக்கும் மோசமான பொருளாதார நடவடிக்கைகள் போன்றவற்றில் இருந்து நாட்டின் பொருளாதாரம் இன்னும் மீளவில்லை. இவை அனைத்தும் பொருளாதார நெருக்கடியின் விளைவால் இன்னும் மோசமான நிலையையே எட்டியுள்ளது. போருக்குப் பின் பவளப் பாறைகள், அதன் சுற்றுச்சூழல் அமைப்புகள் மற்றும் எளிய படகுகளுக்கு மட்டுப்படுத்தப்பட்ட பாரம்பரிய தமிழ் மீனவர்களின் வாழ்வாதாரம் போன்றவற்றை சேதப்படுத்தும் வகையில் இந்தியாவின் இயந்திரமயமாக்கப்பட்ட கீழ்-விசைப்படகுகள் வட கரையோரத்தின் கடற்படுக்கையின் அடிவரை தங்கள் வலைகளை இழுத்துவந்தன. 2017ஆம் ஆண்டுக்குப் பிறகு இலங்கை கடற்பரப்பில் கீழ்-விசைப்படகுகள் தடைசெய்யப்பட்டபோதும், இந்த வழக்கங்களும் டைனமைட் மீன்பிடித்தல் போன்ற பிற தீங்கு விளைவிக்கும் பழக்கங்களும் தொடர்ந்தவண்ணமே இருக்கின்றன. அதேபோல உள்ளூர் நிலப்பரப்பை மீளமுடியாத அளவில் மாற்றியமைக்கும் அச்சுறுத்தல்மிக்க அபிவிருத்திச் செயற்பாடுகளை தனியார் மண்ணகழ்வு நிறுவனங்கள் முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்களில் மேற்கொண்டுவருகின்றன. பல்லுயிர் மற்றும் கடலோர வாழ்வாதாரத்தின் நிலைபற்றி சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்ற நிலையில், இந்திய கூட்டு வர்த்தக நிறுவனமான அதானி குழுமம் கடந்த ஆண்டு பூநகரி மற்றும் மன்னாரில் பல மில்லியன் டாலர் செலவில் காற்றாலை மின் உற்பத்தி நிலையங்களை நிறுவ அரசிடம் ஒப்புதல் பெற்றிருக்கிறது. அத்திட்டத்தின் விலை நிர்ணயங்கள் மற்றும் பொருளாதார நன்மைகள் பற்றி பகுப்பாய்ந்த அரச செயற்றிட்ட ஆய்வாளர் ரோஹித் பெதியகொட அதனை “நாட்டை வறுமைக்குத் தள்ளும் வீண் மோசடி” என அழைக்கிறார். “இது அனைத்தும் பணம் சம்பந்தப்பட்டது” என விடத்தல்தீவு சூழலியலாளர் எடிசன் மேரிநாதன் கூறுகிறார். இயற்கை பற்றி அறிந்துகொள்வதற்காக மேரிநாதன் தனது இளைய மகன்களை அடிக்கடி கண்டல் நிலங்களுக்கு அழைத்துச் செல்வது வழக்கம். விடத்தல்தீவு இயற்கை காப்பகம் தொடர்பான சில உறுப்புரைகளை மாற்றியமைத்து அக்காப்பாகத்தின் வளமான சதுப்புநிலங்கள் தனியார் மீன்வளர்ப்பு வணிகங்களால் சுரண்டப்படக்கூடிய வகையில் மீள் வர்த்தமானியொன்றை அரசாங்கம் வெளியிட்டுள்ளது. இக்காப்பகமானது ஒரு முக்கிய கரிமத் தேக்கம் மட்டுமல்லாது, பல்வேறு நீர்வாழ் இனங்களின் வாழ்வாதாரத்துக்கு ஏதுவான கரையோர பாதுகாப்பு அரணாகவும் விளங்குகிறது. இலங்கை அரசின் இந்த நகர்வானது இலங்கையின் மூன்றாவது முக்கிய கடலோரப் பாதுகாப்பு வலயத்தை அழிவுக்குள்ளாக்கக் கூடியது என்றும் இதுபோன்ற ஏனைய வலயங்களுக்கு அதுவொரு தவறான முன்னுதாரணமாக அமையும் எனவும் சூழலியல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். ஈரநிலங்களையும் கரிமத் தேக்கங்களையும் பாதுகாப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விடுத்திருக்கின்ற வாக்குறுதியை “காலநிலை பாசாங்கு நடவடிக்கை” என இளைஞர்களால் முன்னெடுக்கப்படும் ‘பேர்ல் ப்ரொடெக்டர்ஸ்’ (Pearl Protectors) எனும் கடலோர பாதுகாப்பு அமைப்பு விளிக்கின்றது. “ஒட்டுமொத்த சூழலியல் மற்றும் பாதுகாப்புச் சமூகமும் இந்த முரண்பாட்டையே சுட்டிக் காட்டிய வண்ணம் உள்ளது. பெருமளவான அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பான கெடுபிடிகளுக்குள் இப்பிரச்சினை இலகுவாக நழுவிப்போய்விடுகிறது” என லங்கா சுற்றாடல் நிதியத்தின் வினோத் மல்வத்தை அவர்கள் கூறினார். தமிழர் தாயகத்தில் அரசியல் மற்றும் அபிவிருத்தி செயற்பாடுகளில் நிலவும் சவால்களின் உடனடித் தன்மை மற்றும் காலநிலை மாற்றத்தின் விளைவுகளுக்கு முகம் கொடுக்கப்போகும் உழைக்கும் வர்க்கத்தின் பொருளாதார நெருக்கடி போன்றவற்றைக் கருத்தில் கொள்கையில், மக்கள் மத்தியில் காலநிலை நெருக்கடி நிலை பற்றிய புரிதலை ஏற்படுத்தும் வாய்ப்பு மிகக் குறைவென்றே கணிக்கலாம். மீன்பிடிக் குடில்களும், நடைபாதைகளும் ஏற்கனவே கடலால் விழுங்கப்பட்ட நிலையிலும் அந்தோனியார்புர மீனவர்களுக்கு அது பற்றிக் கருத்தில்கொள்வதற்கான அவகாசமோ உணர்வு ரீதியான புரிதலோ இல்லை. “ஓரிரண்டு அடி நிலம் கடலால் அரித்துச் செல்லப்படுவதற்கு குறைந்தபட்சம் ஆறு மாதங்களாவது எடுக்கும். இதுபற்றி எதிர்கால சந்ததியினரே சிந்திக்க வேண்டும்.” என நாளூதியமே ஒரு பெரும் பிரச்சினையாக இருக்கும் குகசிரி கூறினார். மன்னாரில் உள்ள பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் உதயன், இலங்கையின் காலநிலை நெருக்கடிக்கு முகம்கொடுக்க தேவையான வளங்கள், அவற்றின் ஒருங்கிணைப்பு மற்றும் உபகரணங்களின் பற்றாக்குறை குறித்து முறையிட்டார். Photo: ஐசாக் நிக்கோ ஊடகவியலாளர்கள்கூட அடிப்படை அறிக்கைகளை வெளியிடுவதைத் தவிர வினைத்திறன்மிக்க வேறெந்த செயற்பாடுகளையும் செய்யத் தலைப்படுவதில்லை. மூன்று தமிழ் செய்தி நாளிதழ்களில் இடம்பெற்ற நீர் பாதுகாப்பு குறித்த ஆய்வொன்றில் 80 சதவீதமான நாளிதழ்கள் வெறுமனே செய்திகளை வழங்குகின்றனவே தவிர நிகழ்ச்சி நிரல் அமைத்தல், கலந்துரையாடல்களை உருவாக்குதல் அல்லது சுற்றுச்சூழல் செயற்பாடுகளுக்கு ஊக்கமளித்தல் போன்ற விடயங்களை தங்கள் ஊடக செயற்பாட்டில் உள்ளடக்குவதில்லை. போதியளவு ஆய்வுகளின்மை இப்பிரச்சினையை மேலும் அதிகரிக்கின்றது. “பல்கலைக்கழக ஆய்வுத் தேவைக்காக மட்டுமே கிட்டத்தட்ட சுமார் 25 ஆண்டுகள் வரையான கால நீட்சியில் மேற்கொள்ளப்படவேண்டிய ஆய்வுகள் வெறும் ஆறு மாதகால குறுகிய காலத்தில் மேற்கொள்ளப்படுகின்றன” என மன்னார் பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் உதயன் குறிப்பிட்டார். “நிலைபேறான ஏற்பாடுகளுக்கு நீண்டகாலமாக சேகரிக்கப்பட்ட தரவுகளின் உள்ளீடு அவசியம்” என்ற கருத்தை பவளப்பாறை சூழலியல் வல்லுனர் நிஷான் பெரேரா முன்வைத்தார். மீன்களின் இடம்பெயர்வு மாற்றங்கள், முட்டையிடும் இயல்பின் தளம்பல்கள் போன்ற காலநிலை மாற்றத்தின் படிப்படியான தாக்கங்களை கண்காணிப்பதற்கு வெறும் அடிப்படை ஆய்வுகள் மற்றும் குறுகிய கால திட்ட அடிப்படையிலான ஆராய்ச்சிகளுக்குப் பதிலாக நீண்டகால தொடர்-நேர தரவுகள் நமக்குத் தேவை. ஆனால் அவசியமான தரவு சேகரிப்பு வளங்கள் மற்றும் அதற்குத் தேவையான உபகரணங்களின் பற்றாக்குறையால் அவ்வாறான ஆய்வு முயற்சிகள் தடைப்பட்டுள்ளன. “மழை அளவீட்டுக் கருவிகள் போன்ற உபகரணங்கள் ஓரிரண்டு நகரங்களிலேயே கிடைக்கக்கூடியதாக இருக்கும். ஆனாலும் அவை எல்லா பகுதிகளிலும் இல்லை” எனவும் உதயன் குறிப்பிட்டார். வனவிலங்குப் பாதுகாப்புத் திணைக்களம் “போதுமான வளங்கள் இல்லாத நிலையில் பெரிய பகுதிகளை நிர்வகிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. மேலும், சில சிற்றலுவலகங்களில் அடிப்படை தளபாட வசதிகள் கூட கிடையாது. மீன்வளத் துறையைச் சேர்ந்த மீன்வள ஆய்வாளர்களிடம் உள்ள மோட்டார் சைக்கிள்கள் பழுதடைந்த நிலையில் இருக்கலாம் அல்லது அவர்களிடம் எரிபொருளுக்கான போதிய நிதிவசதிகூட இல்லாமலிருக்கலாம். ஆதலால், அவர்களுடைய கடமையை ஏற்புடைய விதத்தில் நிறைவேற்றுவதில் அவர்களுக்குள்ள சிரமம் உண்மையிலேயே ஒரு சவாலான விடயம்தான் என்கிறார் பெரேரா. இத்தரவுப் பற்றாக்குறை, நிறுவனங்களின் திறன்குறைபாடு, ஒருங்கிணைப்பின்மை மற்றும் பலவீனமான பின்னூட்ட வழிமுறைகள் ஆகிய பல்வேறு காரணிகளால் ஒன்றுசேர்ந்தது. உதயனின் குறிப்புப்படி இலங்கை முழுவதுமுள்ள வானிலை ஆய்வு மற்றும் விவசாய திணைக்களங்களுக்கிடையில் ஓர் சிறிய ஒருங்கிணைவு உள்ளது. பெரும்பாலும் நிர்வாக மொழியாக சிங்களத்தைப் பயன்படுத்தும் மத்திய அரசுக்கும் தமிழ் பேசும் மக்களைக் கொண்ட பிராந்தியங்களுக்கும் இடையிலிருக்கின்ற தொடர்பாடல் தடைகள் மற்றும் மோதல் வரலாறுகள் போன்றவை தரவுகளின் பரிமாற்றத்துக்கு இடையூறாக இருக்கின்றது. காலநிலை சமநிலையின்மையைத் தணிக்கும் முயற்சிகளுக்காக மாகாணங்களுக்கு வழங்கப்படும் நிதியுதவி மத்திய அரசின் நடவடிக்கைகளால் குழப்பப்பட்டிருக்கலாம். ஆனால், காலநிலை மாற்றங்கள் குறித்து சிரத்தைக்கொள்ளவேண்டிய மாவட்ட நிலை அதிகாரிகள், மாகாணங்களின் தேவைகள் மற்றும் அவற்றுக்கான நிதியுதவியைப் பெற்றுக்கொள்ளல் தொடர்பான தொடர்பாடல்களில் நலிவான கீழிருந்து மேலான பின்னூட்ட வழிமுறைகளில் தங்கியுள்ளனர். அதேவேளை, “உயர் மட்டங்களில் காலந்துரையாடப்படுகின்ற விடயங்கள், உயர் மட்டங்களில் அவ்வாறான கலந்துரையாடல்கள் நிகழுமிடத்து, அவற்றில் சீர்தூக்கப்படும் அம்சங்கள் நிச்சயமாக அடிமட்டத்திலுள்ள ஊழியர்களுக்கு அதே முறையில் தொடர்பாடப்படுவதில்லை” என்று ஸ்ரீஸ்கந்தராஜா குறிப்பிடுகிறார். இலங்கையில் சர்வதேச சுற்றாடல் அமைப்புக்களின் வெற்றிடங்களும் வளங்களின் கிடைப்பனவை மட்டுப்படுத்துகின்றன. நாங்கள் உலகின் முக்கியமான 36 பல்லுயிர் மையங்களில் ஒன்றாக இருக்கிறோம். ஆனால், இங்கே உலக வனவிலங்கு நிதியம் (WWF) இல்லை. கன்சர்வேஷன் இன்டர்நேஷனல் (Conservation International) இல்லை. நேச்சர் கணசர்வென்ஸி (Nature Conservancy) இல்லை என்கிறார் மல்வத்தை. “இங்கே ஓர் கருந்துளை இருப்பதுபோல இருக்கிறது.” போர், இலங்கையில் சர்வதேச நிறுவனங்களை நிறுவுவதில் உள்ள சிரமங்கள், சர்வதேசத்தின் இலங்கை மீதான கவனத்தில் அரசுக்குள்ள நீண்டநாள் வெறுப்புணர்வு போன்றவற்றையே கருந்துளை என மல்வத்தை அவர்கள் விபரிக்கிறார். இயற்கையும் தேசமும் “என்னைப் பொறுத்த வரையில் தமிழ் தேசியம் என்பது தமிழர்கள் தம்முடைய நிலத்துடன் கொண்டிருக்கும் உறவு” என யாழ் பல்கலைக் கழகத்தின் ஆங்கில விரிவுரையாளரான மகேந்திரன் திருவரங்கம் கூறுகிறார். தமிழ் கவி புதுவை ரத்னதுரை அவர்களின் புகழ்பெற்ற தேசியவாத கவிதையான ‘மண்’ஐ அவர் மேற்கோளிடுகிறார். மண் நிலமிழந்து போனால், பலமிழந்து போகும். பலமிழந்து போனால், இனம் அழிந்து போகும். ஆதலால் மானுடனே! தாய்நிலத்தைக் காதலிக்கக் கற்றுக் கொள்! கடந்த காலங்களில் தமிழர்களுக்கும் இந்த மண்ணுக்கும் இடையிலான பிணைப்பு “தமிழீழ தாயகமே புலிகளின் வேட்கை” போன்ற விடுதலைப் புலிகளின் பிரபல கோஷங்களினூடாகவும் “இந்த நிலம் எங்கள் நிலம்’ மற்றும் வடகிழக்கின் மரங்கள், பூக்கள், மேய்ச்சல் நிலங்கள், ஏரிகள் மற்றும் பனை மரங்கள் அணிவகுத்த கடல்களுக்கு அஞ்சலி செலுத்தும் ‘பசுமை வெளிகள்’ போன்ற தேசியவாத பாடல்கள் போன்றவற்றால் பகிரங்கமாக கொண்டாடப்பட்டது. “எங்கள் தாயகமானது எங்கள் உயிர், எங்கள் உதிரம், எங்கள் உடலுடன் ஒன்றியது” என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் ஸ்ரீதரன் என்னிடம் கூறினார். ஆனால், தமிழர்களுக்கும் அவர்களின் தாயகத்திற்கும் இடையில் இவ்வாறான பிணைப்பு இருந்தபோதிலும், காலநிலை நெருக்கடி தொடர்பான விழிப்புணர்வு தமிழ் அரசியல் பரப்பில் முக்கிய இடத்தைப் பெறவில்லை. “நாங்கள் சுற்றாடலைப் பாதுகாக்க வேண்டும். நாங்கள் நிறைய மரங்கள் நட வேண்டும். சூழல் மாசை குறைக்க நாங்கள் வழிமுறைகளை கண்டடைய வேண்டும் போன்ற சொற்றொடர்களை மக்கள் பயன்படுத்துகின்றனர். ஆனால், காலநிலை மாற்றம் பற்றிய கலந்துரையாடல்களில் மக்கள் ஈடுபடுகிறார்களா என்பது எனக்குத் தெரியவில்லை” என்கிறார் திருவரங்கன். வாழ்வாதாரம் மற்றும் தொழில்வாய்ப்பு போன்றவை குறித்து அவரது கட்சி தொடர்ந்து விவாதித்து வந்திருந்தாலும், காலநிலை மாற்றம் பற்றிய விவாதங்களை மேற்கொண்ட சந்தர்ப்பங்கள் குறித்து அவரால் நினைவுகூர முடியவில்லை என இலங்கை பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கை தமிழரசு கட்சியின் பேச்சாளருமான எம். ஏ சுமந்திரன் குறிப்பிட்டார். தமிழர் அரசியல் முன்னெடுப்புக்கள் நிலத்தை மையப்படுத்தியதாகவும் விவசாயமும் மீன்பிடியும் அத்தேர்தல் தொகுதியின் மிக முக்கியமான தொழில்துறைகளாகவும் இருக்கின்ற வேளையில், சமீபமான எதிர்காலத்தில் காலநிலை மாற்றம் குறித்த விடயங்கள் தமிழ் தேசியத்தின் மேலாதிக்க சிந்தனைகளில் எந்தவித செல்வாக்கும் செலுத்தப்போவதாக தான் காணவில்லை எனவும் சுமந்திரன் அவர்கள் குறிப்பிட்டார். தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் நிறுவனர் பி.ஐங்கரநேசன் பேசுகையில், இலங்கையில் சுற்றுச்சூழல் தமிழ் தேசியவாதத்தின் முக்கியமான பகுதி எனவும் அது தமிழ் மொழி மற்றும் அதன் கலாச்சாரத்தில் பொதிந்துள்ளது எனவும் குறிப்பிட்டார். Photo: ஐசாக் நிக்கோ இலங்கையின் முதல் பசுமைக் கட்சியான தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் ஸ்தாபகரின் பார்வை வேறாக இருந்தது. தமிழ் தேசியவாதத்தில் சுற்றுச்சூழல் பற்றிய சிந்தனைகள் எப்போதும் பொதிந்துள்ளன என்று தான் நம்புவதாக பீ. ஐங்கரநேசன் கூறினார். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் ஓர் சுற்றுச் சூழல் அலகு இருந்ததாகவும், அதன் தலைவர் பிரபாகரன் இயற்கையை தன் நண்பன் என மேற்கோளிட்டதாகவும் அவர் குறிப்பிடுகிறார். “மொழி, கலாசாரம், சுற்றுச் சூழல் – தமிழ் தேசியம் இம்மூன்றாலும் ஒருசேரக் கட்டமைக்கப்பட்டது. வெளிநாடுகளில் உள்ள மக்கள் கோதுமையை தங்கள் பிரதான உணவாக உட்கொள்ளும்வேளை தமிழர்கள் அரிசியையே தங்கள் பிரதான உணவாகப் பயன்படுத்துகின்றனர். ஏனெனில் அது எமது காலநிலையில் இயல்பாகவே வளரக்கூடியது” என்கிறார் ஐங்கரநேசன். உணவைப்போலவே மொழியும் சூழலின் ஆதிக்கத்திற்குட்பட்டது. சங்க கால தமிழ் இலக்கியம் ஐந்து வெவ்வேறு திணைகளை தனித்துவமாக வேறுபடுத்திக் காட்டுகிறது – குறிஞ்சி (மலையும் மலை சார்ந்த இடமும்), முல்லை (காடும் காடு சார்ந்த இடமும்), நெய்தல் (கடலும் கடல் சார்ந்த இடமும்)இ பாலை (மணலும் மணல் சார்ந்த இடமும்)இ மற்றும் மருதம் (வயலும் வயல் சார்ந்த இடமும்). ஒவ்வொரு திணையும் தனித்துவமான தரைத்தோற்றத்தையும் புணர்தல், காத்திருத்தல், ஊடல், இரங்கல், பிரிதல் ஆகிய வெவ்வேறு உணர்ச்சி நிலைகளையும் குறித்து நிற்கின்றது. ஐங்கரநேசனைப் பொறுத்தவரை, தமிழ் மொழி மற்றும் அதன் பண்பாட்டில் சுற்றுச்சூழல் எத்துணை முக்கியம் வாய்ந்ததாக உள்ளது என்பதற்கு இவ்வாறான குறியீடுகள் ஒரு பெரும் எடுத்துக்காட்டாக திகழ்கிறது. ஆனால், யாழ் பல்கலைக்கழகத்தில் தாவரவியல் மற்றும் உடற்கூற்றியல் முதுகலை பட்டம் பெற்ற ஐங்கரநேசன் போன்ற அரசியல்வாதிகள் தமிழ் அரசியலில் மிக அரிதானவர்கள். தற்காலத்தில் உலகின் பல்வேறு நாடுகளிலும் இயங்கி வருகின்ற பசுமைக் கட்சிகளை தான் இனங்கண்டுகொண்டாலும், தனது வாக்காளர்கள் மத்தியில் பசுமை அரசியல் பிரசித்தம் பெறவில்லை என இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் ஸ்ரீதரன் ஒப்புக்கொள்கிறார். ஏனையவர்கள் மிக வெளிப்படையாக இருக்கிறார்கள். உதாரணமாக ஸ்ரீஸ்கந்தராஜாவின் கூற்றின் பிரகாரம், அரசியல் மட்டத்தில் காலநிலை நெருக்கடி என்று வரும்போது, “அவர்கள் அது தொடர்பாக ஆனந்தமான அறியாமையில் இருக்கிறார்கள்.” “எந்தவொரு அரசியல்வாதியும் இதுவரைகாலமும் இப்பிரச்சினை பற்றி இங்கு வந்து பேசிய வரலாறு இல்லை” என இலுப்பைக்கடவை விவசாயி ஒருவரின் மனைவியான மகாதேவி கூறினார். உயரடுக்கு மக்களின் குடியகல்வின் பின்னர் ஏற்பட்ட மக்கள் தொகை மாற்றத்தின் பிறகும், தமிழ் அரசியல் மற்றும் தமிழ் உயர்மட்ட தொழில்சார் வர்க்கங்கள் ஆகியவை ஆதிக்க-சாதி சமூகத்தினரால் நிறைந்துள்ளதாகவும், ஒடுக்கப்பட்ட சமூகத்துக்கான பிரதிநிதித்துவம் அங்கு மிகக் குறைந்த அளவிலேயே காணப்படுவதாகவும் வட மாகாணத்தில் கூட்டுறவு நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றும் ஆய்வாளர் அகிலன் கதிர்காமர் வாதிடுகிறார். அழிவுகரமான மீன்பிடி நடைமுறைகள் மற்றும் கிராமப்புற மக்களின் கடன்சுமை ஆகியவற்றை தமிழ் அரசியலால் புறக்கணிக்கப்பட்ட கிராமிய பொருளாதாரத்தின் முக்கிய பிரச்சினைகளுக்கு எடுத்துக்காட்டுகள் என அவர் மேற்கோளிடுகிறார். “புத்திஜீவிகளும் கல்வியியலாளர்களும் கூட மீனவர்களினதும் விவசாயிகளினதும் இடர்களை நிவர்த்தி செய்ய மிகக் குறைந்தளவு பங்களிப்புக்களையே வழங்கியுள்ளனர்” என்கிறார் அவர். இலங்கையின் வடக்கு கரையோரத்தில் உள்ள இலுப்பைகடவையைச் சேர்ந்த விவசாயி ஒருவரின் மனைவி மகாதேவி, வெப்ப அலைகள் மற்றும் கொந்தளிப்பான வானிலை குறித்து புகார் கூறினார். பருவநிலை மாற்றம் குறித்த அரசியல் உரையாடல்களை தான் கேட்டதில்லை என்றும் கூறினார். Photo: ஐசாக் நிக்கோ கட்டமைக்கப்பட்ட இனவாதம், வன்முறை மற்றும் நீதிவழங்கலில் உள்ள பாரபட்சங்கள் போன்றவை உள்நாட்டுப் போர் முடிவடைந்து 16 ஆண்டுகள் கடந்தும் தமிழர் நிலையை பறைசாற்றும் முக்கிய அம்சங்களாக இருக்கின்றன. மாகாண ஆளுகைகளுக்கு கூடுதல் அதிகாரத்தை வழங்கும் இலங்கையின் அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தம் போன்ற நீண்டகால தமிழ் அரசியல் கோரிக்கைகள் இன்னும் கவனத்தில் கொள்ளப்படாமலே இருக்கின்றன. “மன்னாரில், கிளிநொச்சியில், யாழ்ப்பாணத்தில், திருக்கோணமலையில், மட்டக்களப்பில், அம்பாறையில எமது நிலங்கள் தினமும் பறிக்கப்பட்டுவருகின்றன” என அரசியலின் தற்போதைய உடனடி சவால்களைப் பற்றி விவரிக்கும்போது ஸ்ரீதரன் கூறினார். இந்தப் பின்னணியில் வளம் குறைந்த மற்றும் நிறுவன ரீதியில் வலுவிழந்த தமிழ்த் தலைமைகளுக்கு பருவநிலை மாற்றத்தில் ஒரு புதிய, சரியாகப் புரிந்துகொள்ளப்படாத மற்றும் அருவமான ஓர் ‘எதிரியை’ எதிர்த்துப் போராடுவதற்காக, தமது அரசியல் மூலதனத்தைச் செலவிடுவது கடினமாக இருக்கலாம். ஒரு காலத்தில் தமிழ் சமூகத்தின் மனித உரிமைகளுக்கான போராட்டத்தில் அவர்களின் கூட்டாளிகளாக கருதப்பட்ட மேற்கத்தேய, முன்னேறிய, தொழில்மயமான நாடுகளின் நடவடிக்கைகளாலேயே எப்படி காலநிலை நெருக்கடியின் பின்னணியில் உள்ள இடப்பெயர்வு, வன்முறை மற்றும் பொருளாதார இழப்பு போன்றவை தூண்டப்பட்டது என்பது மற்றொரு சிக்கல். பாதை சார்ந்திருத்தலும் பாரம்பரிய அரசியல் கூட்டாளிகளை எதிரிகளாக மறுகற்பனை செய்வதில் உள்ள சிரமமும்கூட தமிழ் பொது உரையாடல்களில் காலநிலை நெருக்கடி தொடர்பான விடயங்கள் வெளித்தெரியாமை பற்றிய விளக்கத்தை வழங்கலாம். பாரம்பரிய அரசியலில் ஒரு சிறு அளவு புத்தாக்கத்தை உட்புகுத்துவதன் வாயிலாக புதிய நெருக்கடிகள் தொடர்பான விடயங்களை அவற்றில் உள்ளடக்கத்தகுந்த அவகாசங்களை உருவாக்கலாம். தொடர்பாடலில் உள்ள தடைகள், அரசிறை வரும்படியின் மையப்படுத்தல் ஆகியவை தமிழ் பேசும் மக்கள் காலநிலை நெருக்கடிக்கு முகம்கொடுக்கும் செயன்முறைக்கு தடையாக இருக்கும். அத்தோடு, தமிழ் பேசும் பிராந்தியங்களுக்கான மேம்பட்ட சுயநிர்ணயம் மற்றும் சுயாட்சி ஆகிய வழிகளில் இப்பிரச்சினைகளுக்கு தீர்வுகாண்பது தமிழர்களின் வரலாற்றுக் கோரிக்கைகளோடு இணங்கிப்போகும். விவசாயம் மற்றும் மீன்பிடி தொடர்பான நிலைபேறான கொள்கை வகுத்தல்களுக்கான முன்மொழிவு மற்றும் செயல்படுத்தல்களை மேற்கொள்ள, உள்ளூர் நிலப்பரப்பு, காலநிலை, வளங்கள் கிடைக்கும் தன்மை, உணவுக் கலாச்சாரங்கள், முன்னுரிமைகள் மற்றும் தேவைகள் போன்ற அப்பிராந்தியம் பற்றிய பரிச்சியமும் அது தொடர்பான நெருக்கமான புரிதலும் இருப்பது அவசியம் என பருவநிலை விஞ்ஞானிகள் வாதிடுகின்றனர். மேலும், தாம் வாழும் பிராந்தியம் பற்றிய பரிச்சியமே வடக்கை அபிவிருத்தி செய்வதற்கும் அதனை ஆள்வதற்கும் தமிழர்களை பொருத்தமானவர்களாக ஆக்கும் என ஐங்கரநேசன் வலியுறுத்துகிறார். “நீங்கள் தென்பகுதியில் வசிப்பவராக இருந்தால் நீங்கள் தலகொயா (Asian water monitor) பற்றி அறிந்திருப்பீர்கள். ஆனால், அந்த விலங்கு இங்கு எங்களிடம் இல்லை. தென் பகுதியில் கித்துள் மரங்கள் உள்ளன. ஆனால், எங்களுக்கு பனை மரங்கள்தான் பரிச்சியமானவை. அவர்களிடம் சிங்கராஜ வனம் உள்ளது. ஆனால் எங்களிடம் வரண்ட காடுகளே உள்ளன.” இலங்கையில் பிரபலமான தமிழ் அரசியலில் பசுமை அரசியல் ஒரு பகுதி அல்ல என்பதை தமிழ் தேசியவாதக் கட்சியான இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் எஸ்.ஸ்ரீதரன் ஒப்புக்கொண்டார். ஆனால் “எதுவும் தொடக்கத்தில் சிறியது” என்று அவர் கூறினார். இறுதியாக அது நிலத்துடனான தமிழின் தொடர்பாகும் – தமிழ்க் கவிதை, பாடல், அரசியல் சொல்லாட்சி, எழுத்து மற்றும் கலை ஆகியவை அத்தொடர்புக்கு ஆதாரமாக விளங்குகிறது – தமிழர்கள் தங்கள் பருவநிலைமாற்றம் குறித்த இசைவாக்க முயற்சிகள் மற்றும் சுற்றுச்சூழல் செயற்பாடுகளில் வெற்றிபெறுவதற்கான ஒரு பெரும் ஊக்கத்தை அது வழங்கும். உண்மையில் தமிழர் அடையாளம் அவர்களது மண்ணில் வேரூன்றியிருந்தால், அதுபோலவே முக்கியமாக தமிழரின் நிலத்துடனான உறவாக தமிழ் தேசியம் இருந்தால், அந்நிலத்தில் ஏற்படும் மாற்றங்கள் தமிழ் அரசியல்வாதிகளை காலநிலை அவசரநிலை குறித்து அதிகம் குரல்கொடுப்பதற்குத் தூண்டவேண்டும். தமிழ் தேசியவாதிகளோ அல்லது பருவநிலை மாற்றத்தினால் ஏற்படும் நெருக்கடிநிலையின் முக்கிய பங்குதாரர்களான தமிழால் அறியப்படும் சமூகத்தினர் மட்டுமல்ல – தமிழர் தாயகமாக அறியப்பட்ட பிரதேசங்களில் காலாகாலமாக வாழ்ந்துவருகின்ற இஸ்லாமிய மற்றும் சிங்கள மக்களும்கூட அதில் அடக்கம் என திருவரங்கன் சுட்டிக் காட்டினார். தமிழ் தேசியவாதத்தின் சில புறக்கணிப்புப் போக்குகளை விவரிக்கும்போது, பருவநிலை மாற்றத்தின் நெருக்கடிநிலை ஏனைய சமூகங்களைப் புறந்தள்ளி குறித்த ஒரு சமூகத்தின் ஆதிக்கத்தை முன்நிறுத்திய கதையாடலின் பகுதியாக ஆக்கப்படுவதை தவிர்ப்பது மிக அவசியம் எனவும் வகுப்பு, சாதி, இனம் மற்றும் யுத்தம் போன்றவற்றின் வழியில் ஏற்படுத்தப்பட்ட முரண்பாடுகள் குறித்து நாம் கவனமாக இருக்க வேண்டும்” எனவும் அவர் எச்சரித்தார். காலப்போக்கில், காலநிலை நெருக்கடிநிலையைப் புறக்கணிப்பது அல்லது நிராகரிப்பது மிகவும் கடினமாகிவிடும். இலங்கையில் தமிழர்கள் செறிந்து வாழும் பிராந்தியங்களில் காலநிலை மாற்றம் பற்றிய பேச்சுக்களின் வீச்சு இன்னும் பிரதான அரசியல் உரையாடல்களில் உள்வாங்கிக்கொள்ளப்படாவிடினும், கொஞ்சம் நம்பிக்கை எஞ்சியிருக்கிறது. தமிழ் தாயகத்தில் பசுமை அரசியலின் வளர்ச்சி பற்றி மேற்கோளிட்டு பேசும்போது, “தொடக்கத்தில் எதுவுமே சிறியதாகத்தான் இருக்கும். ஆனால், அந்த சிந்தனை தோன்றும். காலப்போக்கில் அது நடக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது” என்று ஸ்ரீதரன் நம்பிக்கையூட்டினார். அமித்தா அருட்பிரகாசம் இலங்கையைச் சேர்ந்த ஓர் எழுத்தாளர், ஆய்வாளர், மற்றும் சுயாதீன திட்ட வரைவு பகுப்பாய்வாளர். இக்கட்டுரைக்கான அனுசரணை புலிட்சர் மைய மானியத்தால் வழங்கப்பட்டதோடு இக்கட்டுரையின் ஆங்கில வடிவம் முதலில் ஹிமால் சவுத் ஏசியன் (Himal Southasian) இதழில் வெளியிடப்பட்டது. தமிழாக்கம்: ருக்‌ஷானா ஷரிபுதீன். https://maatram.org/articles/12249
  6. ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம் – உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 250 ஆக உயர்வு September 1, 2025 11:15 am ஆப்கானிஸ்தானில் இன்று திங்கட்கிழமை ஏற்பட்ட வலுவான நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 250 ஆக அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும் காயமடைந்தவர்களின் எண்ணிக்கையும் 500ஐ கடந்தள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகாலை 12.57 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தது. 6.0 ரிக்டர் அளவில் பதிவான இந்த நிலநடுக்கம் எட்டு கிலோமீட்டர் ஆழத்தில் நிலைகொண்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக நிலநடுக்கத்தில் 20 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும், இடிபாடுகளில் பலர் சிக்கியுள்ளதாகவும், இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அந்நாட்டு அதிகாரிகள் அச்சம் வெளியிட்டுள்ளன. காபூலில் இருந்து பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் வரை பல கட்டிடங்களை நிலநடுக்கம் உலுக்கியுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வட இந்தியாவிலும் நிலநடுக்கத்தின் அதிர்வுகள் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் நிலநடுக்கத்திற்குப் பின்னர் முறையே நான்கு தசம் ஐந்து முதல் ஐந்து தசம் இரண்டு வரை ரிக்டர் அளவில் மூன்று பின்அதிர்வுகள் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பாகிஸ்தானின் எல்லைக்கு அருகில் உள்ள குனார் மாகாணத்தின் நோர்கல் மாவட்டத்தில் நிலநடுக்கம் கடுமையான சேதத்தை ஏற்படுத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆப்கானிஸ்தான் மற்றும் இமயமலையின் அருகிலுள்ள பகுதிகளில் அண்மைய நாட்களில் ஏற்பட்ட நிலநடுக்கங்கள் அதிகரித்து வருவது புவியியலாளர்கள் மத்தியில் கவலைகளை ஏற்படுத்தியுள்ளன. இந்திய-யூரேசிய டெக்டோனிக் தட்டுகளின் இயக்கம்தான் நிலநடுக்கத்திற்குக் காரணம் என்று புவியியலாளர்கள் தெரிவித்துள்ளனர். https://oruvan.com/afghanistan-earthquake-death-toll-rises-to-250/
  7. முல்லைத்தீவில் வட்டுவாகல்,கேப்பாப்புலவில் இராணுவ முகாம்களில் உள்ள விகாரைகளின் கீழ் புதைகுழிகள்; ஆய்வுகள் செய்ய வலியுறுத்துகிறார் ரவிகரன் இறுதிக்கட்டப் போரின்போது இராணுவத்திடம் சரணடைந்த பொதுமக்கள் மற்றும் போராளிகள் படுகொலைசெய்யப்பட்டு கேப்பாப்புலவு மற்றும் வட்டுவாகல் பகுதிகளில் அமைந்துள்ள இராணுவமுகாம்களின் விகாரைகளின் கீழ் புதைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், குறித்த இராணுவ முகாம்களில் அமைக்கப்பட்டுள்ள விகாரைகள் ஆய்விற்குட்படுத்தப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார். அத்தோடு தமிழ் இனவழிப்பு மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் விடயம், தமிழர்தாயகப் பகுதிகளில் இனங்காணப்பட்ட மனிதபுதைகுழிகள் உள்ளிட்ட விவகாரங்களுக்கு பன்னாட்டு நீதி விசாரணைகளை முன்னெடுப்பதற்கு தற்போதைய தேசியமக்கள்சக்தி அரசாங்கம் பூரண ஒத்துழைப்புக்களை வழங்கவேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார். சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில், வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளால் யாழ்ப்பாணம் கிட்டு பூங்காவிலிருந்து செம்மணிவரை மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டப் பேரணியில் கலந்துகொண்டு ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே ரவிகரன் எம்.பி.இவ்வாறு தெரிவித்துள்ளார். இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்தகாலத்தில் தமிழர்கள் மீது இனவழிப்புச் செயற்பாடுகள் இடம்பெற்றன என்பதற்கு வடக்கு, கிழக்கு தமிழர்தாயகத்தில் இனங்காணப்பட்டுள்ள மனிதப் புதைகுழிகளும், மனிதப் புதைகுழிகளிலிருந்து அகழ்ந்தெடுக்கப்படுகின்ற எலும்புக்கூடுகளும்,சாட்சியாக இருக்கின்றன. இதனை யாருமே மறுக்கமுடியாது. தற்போது செம்மணி மனிதப் புதைகுழி பெரும் பேசுபொருளாக மாறியுள்ளன. செம்மணியில் அகழ, அகழ எம்மவர்கள் எலும்புக்கூடுகளாக மீட்கப்படுகின்ற அவலங்களைக் காண்கின்றோம். கொலைசெய்தவனிடமே நீதியைக் கோருகின்ற உள்ளக நீதிவிசாரணைப்பொறிமுறையில் எமக்கு கடுகளவும் நம்பிக்கை கிடையாது. ஆகவேதான் தமிழ் இனவழிப்பு, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விடயம், மனிதப்புதைகுழிகள் உள்ளிட்ட விவகாரங்களுக்கு தொடர்சியாக பன்னாட்டு நீதி விசாரணையைக் கோருகின்றோம். முல்லைத்தீவில் வட்டுவாகல் மற்றும் கேப்பாப்புலவு பகுதிகளில் இராணுவமுகாம்களில் அமைக்கப்பட்டுள்ள விகாரைகள் அகற்றப்பட்டு விகாரைகளின் கீழ்ப்பகுதிகள் அகழ்ந்து ஆய்வுகள் செய்யப்படவேண்டும். அல்லது நவீன கருவிகளின் துணையுடன் ஸ்கேன் செய்யப்பட்டு விகாரையின் கீழ்ப்பகுதியில் உள்ள விடயங்கள் தொடர்பில் வெளிப்படுத்தப்படவேண்டும் எனக் கோருகின்றேன். 2009ஆண்டு இறுதிக்கட்ட போரின்போது சரணடைந்த போராளிகள் மற்றும் மக்களை இராணுவம் கைதுசெய்துள்ளது. அதன்பின்னர் அவ்வாறு இராணுவத்தால் கைதுசெய்யப்பட்டவர்கள் வட்டுவாகல் சப்தகன்னியர் ஆலயத்திற்கு அருகே கடற்கரைநோக்கி போகும் பாதையினூடாக பேருந்துகளில் அழைத்துச்செல்லப்பட்டுள்ளனர். அதேபோல் சரணடைந்த பலர் கேப்பாப்புலவு நோக்கியும் இராணுவத்தினரால் பேருந்துகளில் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். அவ்வாறு இராணுவத்தால் பேருந்துகள் மூலம் அழைத்துச்செல்லப்பட்டவர்கள் திருப்பி அழைத்து வரப்படவில்லை. என்ன ஆனார்கள் என்பதும் தெரியாமலுள்ளது. அப்படியெனில் அவ்வாறு அழைத்துச்செல்லப்பட்டவர்கள் எங்கேபோனார்கள். தனிச் சைவத் தமிழ் கிராமமான வட்டுவாகலில் எதற்கு பாரிய விகாரை அமைக்கப்பட்டது. அந்த விகாரையை அகற்றி அகழ்வாய்வுகளை மேற்கொள்ளவேண்டும். அல்லது விசேட ஸ்கேன் கருவிகளைப் பயன்படுத்தி பரிசோதனை மேற்கொண்டு உண்மைத்தன்மைகள் வெளிப்படுத்தப்படவேண்டும். அதேபோல் கேப்பாப்புலவு இராணுவ முகாமில் அமைக்கப்பட்டுள்ள பாரிய விகாரையும் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவேண்டும். ஆய்வுகள் மேற்கொள்ளப்படவேண்டும். இதுதொடர்பில் ஏற்கனவே பலதடவைகள் எம்மால் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. பாராளுமன்றிலும் இந்த கேப்பாப்புலவு மற்றும் வட்டுவாகல் இராணுவமுகாம்களில் அமைந்துள்ள விகாரைகள் ஆய்வுக்குட்படுத்தப்படவேண்டுமென கோரியுள்ளேன். இதுவரை அந்த விகாரைகளை ஆய்வுக்குட்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என்றார். https://akkinikkunchu.com/?p=339154
  8. மட்டக்களப்பில் 3 சிறுமிகள் மீது பாலியல் துஸ்பிரயோகம் , 2 சிறுமிகள் கர்ப்பம் - இரு சிறுவர்கள் கைது By kugen மட்டக்களப்பு மாவட்டத்தில் இரு பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசங்களில் ஒருவாரத்தில் 3 சிறுமிகள் மீது பாலியல் துஸ்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், 13 மற்றும் 17 வயதுகளுடைய இரு சிறுமிகள் கர்ப்பம் தரித்துள்ளதாகவும் இரு ஆண் சிறுவர்களை கைது செய்துள்ளதாக அந்தந்த பொலிஸ் நிலைய பொலிஸார் தெரிவித்தனர். மாவட்டத்திலுள்ள ஒரு பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசம் ஒன்றில் சில தினங்களுக்கு முன்னர் வாந்தியெடுத்த 17 வயது சிறுமி ஒருவரை வைத்தியசாலையில் அனுமதித்தபோது அவர் 3 மாத கர்ப்பிணியாக இருப்பதை வைத்தியர்கள் கண்டறிந்தனர். இது தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டபோது குறித்த சிறுமியின் தாயார் தந்தையர்கள் மீன்பிடி தொழிலுக்காக கடற்கரை பகுதியில் மீன் வாடியில் இருந்து வருவதாகவும் வீட்டில் குறித்த சிறுமியும் அவரது சகோதரரும் தங்கியிருந்து வந்துள்ளனர். இதன்போது, கடந்த 3 மாத்திற்கு முன்னர் சம்பவதினம் குறித்த சிறுமி வீட்டிற்கு இரவு வீதியால் நடந்து வரும்போது இருட்டில் வந்த ஒருவன் தன்னை இழுத்துச் சென்று துஸ்பிரயோகம் செய்ததாகவும், அவனை அடையாளம் தெரியாது என பொலிஸாரின் விசாரணையின் போது தெரியவந்துள்ளதையடுத்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர். இதேவேளை, குறித்த அதே பொலிஸ் பிரிவில் 13 வயது சிறுமி ஒருவரை 3 மாத கர்ப்பிணியாக்கிய 17 வயது சிறுவன் ஒருவரை கைது செய்ததனர். இதன்போது கைது செய்யப்பட்ட சிறுவன் நான் இதற்கு காரணம் இல்லை. எனது நண்பன் தான் இந்த சம்பவத்துக்கு காரணம் எனவும் தெரிவித்துள்ள நிலையில், குறித்த சிறுமி இல்லை இவன்தான் காரணம் என முறைப்பாட்டில் தெரிவித்ததையடுத்து கைது செய்யப்பட்ட சிறுவனை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியதையடுத்து அவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார். இந்நிலையில் மாவட்டதிலுள்ள இன்னொரு பொலிஸ் நிலைய பிரிவின் கீழ் உள்ள பிரதேசம் ஒன்றில் 15 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஸ்பிரயோகம் செய்த 17 வயது சிறுவன் ஒருவரை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து அவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார் இவ்வாறு ஒரு வாரத்தில் 3 சிறுமிகள் மாவட்டத்தில் பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.battinews.com/2025/08/3-2.html
  9. அவுஸ்திரேலியாவில் வெளிநாட்டவர்களின் குடியேற்றத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் ! 01 Sep, 2025 | 10:20 AM அவுஸ்திரேலியாவில் வெளிநாட்டினர் குடியேற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து "மார்ச் ஃபார் அவுஸ்திரேலியா" (March for Australia) என்ற அமைப்பு நாடு முழுவதும் ஆர்ப்பாட்ட பேரணிகளை முன்னெடுத்துள்ள நிலையில், இந்தியர்கள் குடியேறுவதை எதிர்த்து இந்த அமைப்பினர் குரல் கொடுத்து வருகின்றனர். அவுஸ்திரேலியாவில் பிரதமர் அந்தோணி அல்பனீஸ் தலைமையில் தொழிலாளர் கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது.இந்நிலையில், வெளிநாட்டினர் குடியேற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து "மார்ச் ஃபார் ஆஸ்திரேலியா" (March for Australia) என்ற அமைப்பு நாடு முழுவதும் ஆர்ப்பாட்ட பேரணிகளை நடத்தியுள்ளது. அவுஸ்திரேலியாவின் தலைநகர் கான்பெரா, சிட்னி, மெல்போர்ண் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டப் பேரணிகளில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். கான்பெராவில் பாராளுமன்றத்தை முற்றுகையிட முயன்றவர்களை பொலிஸார் தடுத்து நிறுத்தினர். சிட்னி உள்ளிட்ட பிற நகரங்களிலும் வெளிநாட்டவர்களின் குடியேற்றத்துக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன. அசம்பாவிதங்கள் ஏற்படுவதைத் தவிர்க்க பல இடங்களில் பொலிஸார் குவிக்கப்பட்டிருந்தனர். மெல்போர்ணில் போராட்டக்காரர்களுக்கும், பொலிஸாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாகவும், சிலர் கைது செய்யப்பட்டதாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தப் பேரணிகளுக்கு அவுஸ்திரேலிய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுபோன்ற போராட்டங்கள் வெறுப்புணர்வைப் பரப்புவதாகவும், அவுஸ்திரேலிய சமூகத்தின் ஒற்றுமையை சீர்குலைப்பதாகவும் அந்நாட்டு குற்றம்சாட்டியுள்ளது. மேலும், இந்த நாட்டில் பிரிவினையை ஏற்படுத்தும் மக்களுக்கு இடமில்லை என்றும், பல்லின கலாச்சாரம் என்பது அவுஸ்திரேலியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்றும் அரசு வலியுறுத்தியுள்ளது. https://www.virakesari.lk/article/223894
  10. இஸ்ரேல் தாக்குதலில் ஹமாஸின் ஆயுதப் பிரிவின் பேச்சாளர் பலி 01 September 2025 காசா நகரில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் ஹமாஸின் ஆயுதப் பிரிவின் பேச்சாளரான அபு ஒபைடா கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ், இதனைத் தெரிவித்துள்ளார். எனினும் ஹமாஸ் அவரது மரணத்தை உறுதிப்படுத்தவில்லை. இந்தநிலையில் காசாவில் ஒரு குடியிருப்பு கட்டடத்தின் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் பல பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும் காயமடைந்ததாகவும் ஹமாஸ் தெரிவித்துள்ளது. காசா நகரத்தின் அடர்த்தியான மக்கள் தொகை கொண்ட அல்-ரிமல் சுற்றுப்புறத்தில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. காசா நகரத்தை முழுமையாகக் கைப்பற்ற இஸ்ரேலிய திட்டத்தின் ஒரு பகுதியாகவே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. https://hirunews.lk/tm/417617/hamass-armed-wing-spokesman-killed-in-israeli-strike
  11. பதவி சண்டை: மதுரை ஆதீனத்திற்கு எதிராக இளைய ஆதீனம் உண்ணாவிரத போராட்டம் 31 Aug 2025, 2:27 PM மதுரை ஆதீனத்திற்கு எதிராக இளைய ஆதீனம் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தென்னிந்தியாவில் உள்ள பழமையான சைவ மடங்களில் ஒன்று மதுரை ஆதீனம்.மதுரை ஆதீனத்தின் 293வது பீடாதிபதியாக 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 23 ஆம் தேதி ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஞானசம்பந்த தேசிக சுவாமிகள், பொறுப்பேற்றார். இவர் அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துகளை முன் வைத்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இந்நிலையில் மதுரை ஆதீனத்திற்கு எதிராக மறைந்த அருணகிரிநாதரின் நினைவிடத்தில் இளைய ஆதீனம் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அடுத்த ஆதீனத்தை தேர்ந்தெடுப்பதில் தற்போதைய ஆதீனம் தன்னிச்சையாகச் செயல்படுவதாக அவர் குற்றம் சாட்டி உள்ளது தற்போது பேசுபொருளாகி உள்ளது. ஏற்கனவே மதுரை ஆதீனம் தன் மீது கொலை முயற்சி நடத்தப்பட்டதாகக் கூறிய நிலையில் மத மோதலை தூண்டும் நோக்கத்தில் கருத்து தெரிவித்ததாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. https://minnambalam.com/hunger-strike-against-madurai-atheenam/
  12. ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு , மயிலிட்டியில் அடித்து நொறுக்கப்படும் தமிழக மீனவர்களின் படகுகள் August 31, 2025 3:38 pm மயிலிட்டி துறைமுக புனரமைப்பு பணிகளை நாளைய தினம் திங்கட்கிழமை ஜனாதிபதி ஆரம்பித்து வைக்கவுள்ள நிலையில், மயிலிட்டி துறைமுக பகுதிகளில் உள்ள தமிழக கடற்தொழிலாளர்களின் படகுகள் ஜே.சி.பி வாகனம் மூலம் அடித்து உடைக்கப்பட்டு , அங்கிருந்து அப்புறப்படுத்தப்படும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. கடந்த காலங்களில் இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் தமிழக கடற்தொழிலாளர்கள் கைது செய்யப்பட்ட வேளைகளில் அவர்களின் படகுகளையும் கடற்படையினர் கைப்பற்றி , மயிலிட்டி மீன்பிடி துறைமுக பகுதிகளில் தடுத்து வைத்திருந்தனர். அவ்வாறு 124 படகுகள் தற்போது மயிலிட்டி மீன்பிடி துறைமுக பகுதிகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளன. வெவ்வேறு சந்தர்ப்பங்களில் அத்துமீறி இலங்கை கடற்பரப்பினுள் நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்டமை தொடர்பிலான வழக்கு விசாரணைகள் நீதிமன்றங்களில் தனித்தனி வழக்குகளாக நடைபெற்று வரும் நிலைகளில் சில வழக்குகள் முடிவடைந்துள்ளன. அவற்றின் அடிப்படையில் இதுவரையில் முடிவற்ற வழக்குகளில் 33 படகுகள் அரச உடமையாக்கப்பட்டுள்ளன. மேலும் 07 படகுகளை அதன் உரிமையாளர்களிடம் கையளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. ஏனைய படகுகள் மீதான வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன. இந்நிலையிலையே நாளைய தினம் திங்கட்கிழமை ஜனாதிபதி மயிலிட்டி துறை முக பகுதிக்கு விஜயம் செய்யவுள்ள நிலையில், அரசுடைமையாக்கப்பட்ட 33 படகுகளையும் ஜே.சி.பி வாகனம் மூலம் அடித்து உடைத்து அவற்றை அச்சுவேலி தொழில் பேட்டைக்கு எடுத்து செல்லும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதேவேளை உரிமையாளர்களிடம் கையளிக்க நீதிமன்றம் உத்தரவிட்ட 07 படகுகளையும் அதன் உரிமையாளர்கள் கடந்த 25ஆம் திகதி தமிழகத்தில் இருந்து கடற்படையினரின் பாதுகாப்புடன் மயிலிட்டி பகுதிக்கு வந்த தமது படகுகளை பார்த்து சென்றமை குறிப்பிடத்தக்கது. https://oruvan.com/tamil-nadu-fishermens-boats-being-smashed-in-myiliti-ahead-of-presidents-visit/
  13. யாழில் கடவுசீட்டு அலுவலகத்தை நாளை ஜனாதிபதி திறந்து வைக்கிறார் யாழ் மாவட்ட செயலக வளாகத்தில் குடிவரவு மற்றும் குடியகழ்வு திணைக்கள அலுவலகத்தினை நாளைய தினம் திங்கட்கிழமை காலை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க திறந்து வைக்கவுள்ளார். இந்நிலையில் , அலுவலகத்தின் உள்கட்டமைப்பு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. ஜனாதிபதியாக பதவியேற்று, ஒரு வருட காலம் பூர்த்தியாவதை முன்னிட்டு, முன்னெடுக்கப்படவுள்ள செயற்திட்டங்களின் ஆரம்ப நிகழ்வுகளை ஆரம்பித்து வைக்க, யாழ்ப்பாணத்திற்கு நாளைய தினம் திங்கட்கிழமை ஜனாதிபதி அநுர குமார திஸநாயக்க விஜயம் செய்யவுள்ளார். யாழ்ப்பாணம் வருகை தரும் ஜனாதிபதி காலை 08.30 மணியளவில் மையிலிட்டி மீன் பிடி துறைமுக அபிவிருத்தி பணிகளை ஆரம்பித்து வைக்கவுள்ளார். தொடர்ந்து , யாழ் மாவட்ட செயலக வளாகத்தில் புதிதாக ஆரம்பிக்கப்படவுள்ள குடிவரவு மற்றும் குடியகழ்வு திணைக்களத்தின் யாழ். பிரதேச அலுவலகத்தினை காலை 09.30 மணியளவில் திறந்து வைக்கவுள்ளார். அதனை தொடர்ந்து , யாழ்.பொது நூலகத்தில் நடைபெறும் நிகழ்விலும் கலந்து கொள்ளவுள்ளார். அதன் பின்னர் மதியம் 1.30 மணியளவில், மண்டதீவு பகுதியில் நிர்மாணிப்பதற்கு முன்மொழியப்பட்டுள்ள சர்வதேச துடுப்பாட்ட மைதானத்தின் பணிகளை ஆரம்பித்து வைக்கவுள்ளார். நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை முல்லைத்தீவு வட்டுவாகல் பாலத்தின் புணரமைப்பு பணிகளை ஆரம்பித்து வைக்கவுள்ளதுடன், தென்னை முக்கோண வலய பணிகளையும் ஆரம்பித்து வைக்கவுள்ளார். https://akkinikkunchu.com/?p=339064
  14. இந்திய பிரதமர் மோடி - உக்ரேன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி பேச்சுவார்த்தை 31 Aug, 2025 | 11:14 AM இந்திய பிரதமர் நரேந்திர மோடி மோடியிடன் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இந்திய பிரதமர் மோடி ஜப்பான், சீனாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். கடந்த 29ம் திகதி ஜப்பான் சென்ற பிரதமர் மோடி அங்கு அந்நாட்டு பிரதமர் உள்பட முக்கிய தலைவர்களை சந்தித்தார். இதையடுத்து, இந்தியா , ஜப்பான் இடையே பல்வேறு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. 2 நாட்கள் ஜப்பான் பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி நேற்று இரவு சீனா சென்றார். அவர் சீனாவின் தியான்ஜின் நகரில் இன்றும், நாளையும் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்துகொள்கிறார். இந்த மாநாட்டின்போது சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷ்ய ஜனாதிகதி புட்டின் உள்பட பல்வேறு நாடுகளின் தலைவர்களை இந்திய பிரதமர் மோடி சந்திக்கிறார். இந்த சந்திப்பின்போது பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடைபெற உள்ளது. இந்நிலையில், இந்தி பிரதமர் மோடியிடன் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். சீனா சென்றுள்ள இந்திய பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஜெலன்ஸ்கி பேச்சுவார்த்தை நடத்தினார். உக்ரேன் - ரஷ்யா போர் தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த பேச்சுவார்த்தையின்போது போர் நிறுத்தம் தொடர்பான முயற்சிகளுக்கு இந்தியா முழு ஆதரவு அளிக்கும் என்று இந்திய பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ரஷ்ய அதிபர் புட்டினை இந்திய பிரதமர் மோடி சந்திக்க உள்ள நிலையில் உக்ரேன் ஜனாதிகதி ஜெலன்ஸ்கியின் பேச்சுவார்த்தை முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. https://www.virakesari.lk/article/223817
  15. சீன ஜனாதிபதியை சந்தித்தார் இந்திய பிரதமர் மோடி 31 Aug, 2025 | 11:29 AM ஜப்பானில் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்ட இந்திய பிரதமர் மோடி, அங்கிருந்து சீனா புறப்பட்டார். சீனாவில் உள்ள தியான்ஜின் விமான நிலையத்துக்கு சென்ற இந்திய பிரதமர் மோடிக்கு, சிவப்பு கம்பள வரவேற்பு கொடுக்கப்பட்டது. தியான்ஜின் நகரில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் இந்திய பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். இதில் சீன ஜனாதிபதி ஜின்பிங், ரஷ்ய ஜனாதிபதி புட்டின் மற்றும் கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், பாகிஸ்தான், ஈரான், பெலாரஸ் ஆகிய நாடுகளின் தலைவர்களும் பங்கேற்கிறார்கள். இந்த மாநாட்டுக்கு இடையே ஜின்பிங்கையும், ரஷ்ய ஜனாதிபதி புட்டினையும் இந்திய பிரதமர் மோடி சந்தித்து பேசுவார். அப்போது இந்திய-சீனா-ரஷ்யா இடையேயான ஒத்துழைப்பு குறித்தும், உறவு குறித்தும் விரிவாக விவாதிக்கப்படும். முன்னதாக கடந்த 2018-ம் ஆண்டு சீனாவில் நடந்த மாநாட்டில் இந்தியபிரதமர் மோடி கலந்து கொண்டார். இதையடுத்து 2019-ம் ஆண்டு சீன ஜனாதிபதி ஜின்பிங் இந்தியா வந்தார். அதன் பின்னர் இந்திய பிரதமர் மோடி சீனா செல்லவில்லை. இதனிடையே 2020-ம் ஆண்டு கல்வான் பகுதியில் சீனா-இந்தியா இடையே நடந்த தாக்குதலுக்கு பிறகு இருநாடுகளுக்கு இடையேயான உறவில் சற்று விரிசல் ஏற்பட்டது. இந்த சூழ்நிலையில் 7 ஆண்டுகளுக்கு பின்னர் இந்திய பிரதமர் மோடி, சீனாவுக்கு சென்றுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு எதிராக பரஸ்பர வரி விதித்துள்ள நிலையில் ரஷ்ய, சீன, இந்திய தலைவர்கள் ஒரே இடத்தில் கூடி பேசுவதன் மூலம் அமெரிக்காவுக்கு எதிரான புதிய வியூகம் ஒன்றை வகுக்க வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது. https://www.virakesari.lk/article/223819
  16. அதிக நேரம் நிகழும் சந்திர கிரகணம் ; காணத்தவறாதீர்கள் 31 Aug, 2025 | 03:51 PM செப்டம்பர் 7 ஆம் திகதி இரவு வானத்தில் முழு சந்திர கிரகணம் தோன்றுவதால், இலங்கையர்கள் மற்றும் வானியல் ஆர்வலர்களுக்கு பார்வையிடும் வாய்ப்பாக அமைந்துள்ளது. இந்த அற்புதமான நிகழ்வு நாட்டின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் முழுமையாகத் தெரியும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் இயற்பியல் துறையின் தலைவரும், வானியல் மற்றும் விண்வெளி அறிவியல் பிரிவின் பணிப்பாளரும் ஆர்தர் சி கிளார்க் நவீன தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைவருமான பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார். பூமி சூரியனை சுற்றி வரும் பாதையிலும், சந்திரன் பூமியை சுற்றி வரும் பாதையிலும் சில நேரங்களில் சூரியன், பூமி மற்றும் சந்திரன் ஆகியவை ஒரே நேர்கோட்டில் வரும். அப்போது, சூரிய ஒளி பூமியில் விழுந்தாலும் சந்திரன் மீது விழாது. இதனால் சந்திர கிரகணம் ஏற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. சந்திர கிரகணம் நிகழும் நேரம் பின்வருமாறு, கிரகணம் ஆரம்பம் - இரவு 8:58 (செப்டம்பர் 7) பகுதி கிரகணம் ஆரம்பம் - இரவு 9:57 முழுமையான கிரகணம் - இரவு 11:01 அதிகபட்ச கிரகணம் - நள்ளிரவு 11:42 கங்கண கிரகணம் முடிவு - அதிகாலை 12:22 (செப்டம்பர் 8) பகுதி கிரகணம் முடிவு - அதிகாலை 1:26 கிரகணம் முடிவு - அதிகாலை 2:25 https://www.virakesari.lk/article/223852
  17. அனுர பின்வாங்க முடியாத இடத்துக்கு வந்துவிட்டாரா ? - நிலாந்தன் ரணில் வெளியில் வந்துவிட்டார். வைத்தியசாலையில் இருந்து வெளி வரும் போது கையில் அவர் வைத்திருந்த புத்தகம் தற்செயலானதா? அல்லது அவருடைய வழமையான பாணியா? அது முன்னாள் பிரித்தானியப் பிரதமர் போரிஸ் ஜெல்சின் எழுதிய Unleashed-கட்டவிழ்த்து விடுதல் என்ற புத்தகம். அதன் மூலம் ரணில் அரசாங்கத்துக்கு ஏதாவது சொல்ல நினைக்கிறாரா? அன்ரன் பாலசிங்கம் அவரை நரி என்று அழைத்தார். பாலசிங்கம் சொன்ன பல விடயங்களை தமிழர்கள் மறந்து விட்டார்கள். ஆனால் ரணிலைப்பற்றி அவர் சொன்னதை மறக்காமல் நினைவில் வைத்திருக்கிறார்கள். ரணிலைக் கைது செய்த விடயத்தில் தேசிய மக்கள் சக்தியானது பின்வாங்க முடியாத ஒரு இடத்துக்கு வந்திருக்கிறது என்று சட்டத்தரணி சாலிய பீரிஸ் கூறுகிறார். அவர் ஆங்கிலத்தில் “Crossing the Rubicon” என்ற சொற்றொடரைப் பாவித்துள்ளார். அது ஜூலியஸ் சீசரின் துணிகரமான, ஆனால் பின்வாங்க முடியாத ஒரு யுத்த நகர்வைக் குறிக்கும் சொற்றொடர். பின்வாங்க முடியாத ஒர் இடத்துக்கு என்பிபி முன்நகர்ந்திருக்கிறது என்று பொருள். தொடர்ச்சியாக நிகழும் கைது நடவடிக்கைகளைத் தொகுத்துப் பார்த்தல் என்பிபி அதை நன்கு விளங்கி வைத்திருக்கிறது என்றே தெரிகிறது. தமிழ்த் தேசிய அரசியல் நோக்குநிலையில் இருந்து தேசிய மக்கள் சக்தி மீது விமர்சனங்கள் ஆயிரம் உண்டு. ஆனால் சிங்கள மக்களைப் பொறுத்தவரையிலும் அது சில மாற்றங்களைக் காட்டுகிறது என்பதைத் தமிழர்கள் ஏற்றுக்கொண்டுதானாக வேண்டும். குறிப்பாக ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளைப் பொறுத்தவரை இதுவரை 70 க்கும் குறையாதவர்கள் கைது செய்யப்பட்டு விட்டார்கள். இவர்களில் அரசியல்வாதிகள், உயர் நிர்வாகிகள், போலீஸ் அதிகாரிகள் படைப்பிரதானிகள், அரசியல் வாதிகளின் கைக்கூலிகளாக பாதாள உலகக் குற்றவாளிகள் போன்றவர்கள் அடங்குவர். ரணில் விக்கிரமசிங்கவை கைது செய்த பின் அதிலிருந்து பின் வாங்கினால், இப்பொழுது சீண்டப்பட்டிருக்கும், தற்காப்பு நிலைக்குத்-defensive-தள்ளப்பட்டிருக்கும் சிங்கள மேட்டுக்குடியும் எதிர்க் கட்சிகளும் பழிவாங்கும் உணர்ச்சியோடு அனுரமீது பாயும். அதாவது தாக்கும் நிலைக்கு-offensive- வளரக்கூடும். எனவே என்பிபி திரும்பிப்போக முடியாது. அப்படிப் போனால் அது எல்லாவிதத்திலும் தோல்வி. அதனால் ரணிலைத் தொடர்ந்து அடுத்தடுத்து பெரிய தலைகளைக் கைது செய்வதன்மூலம் சிங்கள பௌத்த மேட்டுக்குடியை ஒருவித அச்சச் சூழலில், தற்காப்பு நிலையில் வைத்திருக்கலாம். ஏற்கனவே ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டதோடு சிங்கள பௌத்த உயர் குழாம் ஒன்று திரண்டு விட்டது. ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் பின்வருமாறு கூறினார்…”கட்சி பேதமின்றி நாம் ஒன்றிணைய வேண்டும். இவை அனைத்தும் இணைந்து இறுதியில் எமது வீட்டுக் கதவைத் தட்டும். நாம் தற்பொழுது ஒன்றிணைந்து எதிர்கொள்ளவில்லை என்றால் எதிர்காலத்தில் ஆபத்தான சூழ்நிலையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்” இது சிங்கள பௌத்த உயர் குழாத்தின் அச்சத்தை பிரதிபலிக்கும் கருத்தாகும். ரணிலைக் கைது செய்வதன்மூலம் சிங்கள பௌத்த உயர் குழாமும் எதிர்க்கட்சிகளும் உஷார் ஆகிவிட்டன. இந்த அரசாங்கம் இப்படியே தொடர்ந்து முன் சென்றால் தங்கள் எல்லாரிலும் கைவைக்கக்கூடும் என்ற அச்சம் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. இதனால் எதிர்க்கட்சிகள் மீண்டும் ஒன்று திரளும் வாய்ப்புகள் அதிகரிக்கும். இது ஒரு ஒத்திகைதான். இப்போதுள்ள சிங்கள பௌத்த உயர் குழாத்தில் ஒப்பீட்டளவில் மென் இலக்காக ரணில்தான் காணப்படுகிறார். அவருடைய தாய்க் கட்சி உடைந்துவிட்டது. அவர் ஒரு பலமான அணியாக இல்லை. உள்நாட்டில் அவர் அனேகமாக பலவீனமான ஒரு தலைவர்தான். அவர் தண்டு சமத்தாக, மிடுக்காக நிமிர்ந்து காட்சி தருபவர் அல்ல. தன்னை ஜனவசியம் மிக்க ஒரு தலைவராகக் கட்டி எழுப்ப வேண்டும் என்பதற்காக சிங்கள பௌத்த இனவாதத்தின் தீவிர நிலைகளுக்கு தலைமை தாங்குபவர் அல்ல. அல்லது சிங்கள பௌத்த கூட்டு உளவியலைக் கவரும் விதத்தில் ஆடை அணிகலன்கள் போன்றவற்றில் கவனம் செலுத்துபவர் அல்ல. மாறாக அவர் தன் அரசியல் வாழ்க்கை முழுவதிலும் மேற்கத்திய உடுப்புகளோடுதான் காணப்பட்டார். மேற்கத்திய அறிவுவாதத்தின் வாரிசாகவும் தன்னை காட்டிக்கொள்ள முற்பட்டார். ராஜபக்சக்களை போலன்றி ஏன் அனுரவை போலன்றி எல்லா பேரரசுகளையும் சமதூரத்தில் வைத்திருக்கக்கூடிய தந்திரசாலியாகவும் கெட்டிக்காரராகவும் அவர் காணப்பட்டார். ஆனால் அவருடைய கெட்டித்தனங்கள் சிங்கள மக்களைக் கவரவில்லை. சிங்கள மக்களைக் கவர்வதற்கு ராஜபக்சக்களிடம் நிறைய இருந்தது. ரணிலிடம் குறைவாகவே இருந்தது. அதனால்தான் அவர் அநேகமாக தேர்தல்களில் தோற்கடிக்கப்படும் ஒரு தலைவராக காணப்பட்டார். எனினும் உள்நாட்டில் அவர் பலவீனமாக தலைவராக இருந்த பொழுதும், அனைத்துலக அளவில் அவர் ஒரு பலமான ஒரு பிம்பத்தை கட்டியெழுப்பி வைத்திருந்தார். மேற்கத்திய தலைநகரங்களிலும் சரி ஐநா, ஐஎம்எஃப் போன்ற உலகப்பொது நிறுவனங்களிலும் சரி அவருக்கு கவர்ச்சி அதிகம். இவ்வாறு உள்நாட்டில் கவர்ச்சி குறைந்த ஒருவரை ஒரு மென் இலக்கை முதலில் கைது செய்ததன்மூலம் அனுர ஒத்திகை ஒன்றைச் செய்தார் என்றும் எடுத்துக் கொள்ளலாம். இது எதிர்காலத்தில் நிகழப்போகும் கைது நடவடிக்கைகளுக்கான ஒத்திகை. அதேசமயம்,ஏற்கனவே இளைய ராஜபக்சவாகிய சசீந்திர ராஜபக்ச கைது செய்யப்பட்டிருக்கிறார். நேற்று அவருடைய விளக்கமறியல் நீடிக்கப்பட்டிருக்கிறது. மூத்த ராஜபக்சங்களில் கையை வைத்தால் எதிர்ப்பு பலமாக இருக்கலாம் என்று தேசிய மக்கள் சக்தி சிந்திக்கின்றது. மூத்த ராஜபக்ஷக்களில் கைவைத்தால் அது இனவாதத்தை மேலும் முன்னிலைக்கு கொண்டு வரும். யுத்த வெற்றி வாதம் மீண்டும் பலமடையக்கூடும். அதனால்தான் பரீட்ச்சார்த்தமாக சஷீந்திரவில், ரணிலில் கை வைத்திருக்கிறார்கள். அது இன்னொரு வகையில் பழைய பகையை, கணக்கைத் தீர்ப்பது. அண்மையில் யாழ்ப்பாணத்துக்கு வந்த அமைச்சர் பிமல் ரட்டநாயக்க கூறினார் ரணிலை 40 ஆண்டுகளுக்கு முன்னரே கைது செய்து இருந்திருக்க வேண்டும் என்று. அது 40ஆண்டுகளுக்கு முந்திய ஜேவிபியின் கணக்கு. ஜேவிபியின் இரண்டாவது போராட்டத்தை கொடூரமாக நசுக்கியது யுஎன்பி. அப்பொழுது ரணில் அரசாங்கத்தில் ஒரு பிரதானி. எனவே அந்தக் கணக்கைத் தீர்க்க வேண்டிய தேவை ஜேவிபிக்கு இருந்தது. ஆனால் இந்த இடத்தில் மேலும் ஒன்றைச் சுட்டிக்காட்ட வேண்டும். ஜேவிபிக்கு எதிராக இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல் குற்றங்களுக்காக அவர் கைது செய்யப்படவில்லை. அது ஒரு குற்றச்சாட்டாகவே இல்லை. பிமல் ரட்டநாயக்க யாழ்ப்பாணத்தில் வைத்துச் சுட்டிக்காட்டிய, தமிழ் மக்களுக்கு எதிரான நூலக எரிப்பு போன்ற குற்றங்களுக்காகவும் அவர் கைது செய்யப்படவில்லை. அரச வளங்களை தனிப்பட்ட தேவைகளுக்கு பயன்படுத்தியதற்காகத்தான் அவர் மீது வழக்கு. போர்க்குற்ற வழக்கு அல்ல. அவரைக் கைது செய்வதன் மூலம் எதிர்காலத்தில் அவரைப் போன்ற முன்னாள் ஜனாதிபதிகளும் உட்பட ஏனையவர்களைக் கைது செய்வதற்கான ஒரு பரிசோதனையை என்பிபி செய்து பார்த்தது என்றும் எடுத்துக்கொள்ளலாம். ஆனால் அந்த பரிசோதனைக்குள் இதுவரை போர்க் குற்றங்கள் அடங்கவில்லை. உள்நாட்டில் ரணில் தேர்தல் கவர்ச்சி குறைந்த தலைவராக இருந்த காரணத்தால் அவரை ஒரு மென் இலக்கு என்று தீர்மானித்து கைது செய்திருக்கலாம். ஆனால் இப்பொழுது எதிர்க்கட்சிகள் ஒன்றுபட்டுவிட்டன. சிங்கள பௌத்த உயர் குழாம் மீண்டும் ஒன்று திரளுகிறது. ”தேசிய மக்கள் சக்தியை வீட்டுக்கு அனுப்புவதற்கான பலமான கூட்டணியை உருவாக்குவதற்கு அரசாங்கமே அடிக்கல் நாட்டியிருக்கிறது”என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார கூறியுள்ளார். சாலிய பீரிஸ் கூறியதுபோல திரும்பிவர முடியாத ஒரு இடத்துக்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் வந்திருக்கின்றது. எனவே அவர்கள் தொடர்ந்தும் துணிச்சலாக ரிஸ்க் எடுத்து ஊழலுக்கு எதிராக முன்போனால் மட்டும்தான் தமையும் காத்துக் கொள்ளலாம் எதிர்த்தரப்பையும் பலவீனப்படுத்தலாம். அதேசமயம் இந்தக் கைது நடவடிக்கையால் தமிழ் தரப்புக்கு ஏற்பட்டிருக்கும் சாதக பாதக விளைவுகள் என்ன? ரணில் கைது செய்யப்பட்ட காலம் எதுவென்று பார்க்க வேண்டும். அடுத்த ஜெனீவா கூட்டத்துடருக்கு சில கிழமைகளுக்கு முன் அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். ஒரு முன்னாள் ஜனாதிபதியைக் கைது செய்யும் அளவுக்கு இலங்கைத்தீவின் உள்நாட்டு நீதி பலமாக உள்ளது என்று அனைத்துலக அரங்கில் எடுத்துக் கூறுவதற்கு அது அனுரவுக்கு உதவும். ரணில் மேற்கு நாடுகளுக்கும் ஐநாவுக்கும் அதிகம் இசைவானவர். இலங்கைத் தீவில் மேற்கு நாடுகளின் அனுசரணையோடு முன்னெடுக்கப்பட்ட இரண்டு சமாதான முயற்சிகளில் அவர்தான் அரச பங்காளி. முதலாவது சமாதான முயற்சி நோர்வையின் அனுசரணையோடு கூடிய சமாதான முயற்சிகள். இரண்டாவது சமாதான முயற்சி, 2015ஆம் ஆண்டு ஐநா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட பொறுப்புக் கூறலுக்கான தீர்மானம். இந்த இரண்டிலும் ரணில்தான் சிங்கள மக்களை பிரதிநிதித்துவப்படுத்தினார். அவருடைய காலத்தில்தான் மேற்கின் நிகழ்ச்சி நிரலுக்கு இசைவாக சமாதான முயற்சிகள் அல்லது நல்லிணக்க முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன. எனவே மேற்கு நாடுகளுக்கும் ஐநாவுக்கும் ஐ.எம் எப்பிற்கும் வாலாயமான ஒரு தலைவரை சில நாட்கள் தடுத்து வைத்ததன் மூலம் அனுர அரசு உள்நாட்டு நீதி தொடர்பில் ஒரு புதிய தோற்றப்பாட்டைக் கட்டியெழுப்ப முற்படுகின்றது. ஏற்கனவே ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் தனது இலங்கை விஜயத்தின் போது உள்நாட்டு நிதியை வெளிநாட்டு உதவிகளோடு பலப்படுத்துவது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்திருந்தார். அதன்பின் அவர் வெளியிட்ட திருத்தப்படாத அறிக்கையிலும் அதே கருத்தை பிரதிபலித்திருந்தார். ஐநா புதிய அரசாங்கத்துக்கு வாய்ப்புகளை வழங்கலாம் என்று தெரிகிறது. இப்படிப்பட்ட ஒரு பின்னணியில்,உள்நாட்டு நீதியின் நம்பகத்தன்மையை பலப்படுத்துவதற்கு ரணில் கைது அரசாங்கத்துக்கு உதவும். இது தமிழ் தரப்பின் நிலைமையை ஐநாவில் மேலும் பலவீனப்படுத்தும். ஐநாவின் பொறுப்புக்கூறல் செய்முறையின் பங்காளியாக இருந்த ஒருவரே கைது செய்யப்படும் அளவுக்கு இலங்கைத்தீவின் உள்நாட்டு நீதி பலமாக உள்ளது என்று அரசாங்கம் ஜெனிவாவில் கூறப்போகிறது. இந்த விடயத்தில் அண்மையில், இன அழிப்புக்கு அனைத்துலக விசாரணையைக் கேட்டு தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒன்று திரண்டிருப்பது சமயோசிதமானது; பொருத்தமானது. எனவே கூட்டிக் கழித்துப் பார்த்தால் ரணிலைக் கைது செய்தமை என்பது சிங்கள மக்கள் மத்தியில் அரசாங்கத்தின் நம்பகத்தன்மையை பலப்படுத்துகிறது. அதேசமயம் எதிர்க் கட்சிகளை ஒன்று திரட்டியுள்ளது. உலக அளவிலும் உள்நாட்டு நீதியின் நம்பகத்தன்மையை பலப்படுத்துவதற்கு அது உதவக் கூடும். இந்த விடயத்தில் அரசாங்கத்துக்கு எதிராக ஒன்றுதிரளும் சிங்கள பௌத்த உயர் குழாமும் எதிர்க் கட்சிகளும் எப்படிப்பட்ட சவால்களை அரசாங்கத்திற்கு ஏற்படுத்தப் போகின்றன என்பதுதான் நாட்டின் எதிர்காலத்தையும் தேசிய மக்கள் சக்தியின் எதிர்காலத்தையும் ஐநாவில் தமிழர் விவகாரம் நீர்த்துப் போவதற்கான வாய்ப்புக்களையும் தீர்மானிக்கும். https://www.nillanthan.com/7697
  18. கோட்டாபய குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு அழைப்பு adminAugust 31, 2025 முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வாக்குமூலம் பெறுவதற்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காலி முகத்திடலில் போராட்டம் நடத்தியவர்கள் மீதான தாக்குதலைக் கட்டுப்படுத்தத் தவறியமை தொடர்பாக முன்னாள் காவல்துறை மாஅதிபர் தேசபந்து தென்னகோன் அளித்த வாக்குமூலம் தொடர்பிலேயே அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது போதிலும் அவர் அழைக்கப்பட்ட திகதி குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது https://globaltamilnews.net/2025/219865/
  19. ஹெரோயினுடன் கைதான இளைஞனை விடுவிக்க லஞ்சம் பெற முயன்ற மதுவரி திணைக்கள உத்தியோகஸ்தர்கள் கைது adminAugust 31, 2025 யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப்பொருளை உடைமையில் வைத்திருந்த நபரை கைது செய்யாது தவிர்க்க 20 இலட்ச ரூபாய் இலஞ்சம் வாங்க முற்பட்ட மதுவரி திணைக்கள உத்தியோகஸ்தர்கள் மூவர் காவல்துறையினரினால் நேற்றைய தினம் சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர் மாதகல் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளை உடைமையில் வைத்திருந்த இளைஞன் ஒருவர் மதுவரி திணைக்கள உத்தியோகஸ்தரினால் கைது செய்யப்பட்டார். கைதில் இருந்து குறித்த நபரை விடுவிக்க , 30 இலட்ச ரூபாய் பணம் இளைஞனிடம் லஞ்சமாக கோரியுள்ளனர். அதற்கு இளைஞன் சம்மதிக்காது , 20 இலட்ச ரூபாய் கொடுப்பதற்கு சம்மதித்ததை அடுத்து , இளைஞனை விடுவித்து , சங்கானையில் உள்ள மதுவரி திணைக்கள அலுவலகத்திற்கு வந்து பணத்தினை தருமாறு கூறி சென்றுள்ளனர். அதனை அடுத்து , தன்னிடம் லஞ்சம் கோரிய விடயம் தொடர்பாக இளைஞன் காங்கேசன்துறை பிரிவு குற்றத்தடுப்பு காவல்துறையினரிடம் முறையிட்டுள்ளார். காவல்துறையினர் குறித்த இளைஞனுடன் சிவில் உடையில் மதுவரி திணைக்களத்திற்கு சென்று , இளைஞனை ஒரு தொகை பணத்தினை கொடுக்க வைத்து , பணத்தினை பெற முயன்ற மூன்று அதிகாரிகளையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மூவரையும் மல்லாகம் நீதவான் முன்னிலையில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ள காவல்துறையின ர் இலஞ்சமாக கொடுக்க முற்பட்ட ஒரு தொகை பணத்தினை சான்று பொருளாக மன்றில் பாரப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர் https://globaltamilnews.net/2025/219869/
  20. ஹவுதி அரசின் பிரதமர் வான்வழித் தாக்குதலில் பலி செய்திகள் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள ஏமன் பகுதியின் பிரதமர் அஹமட் அல்-ரஹாவி கொல்லப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சனாவில் நடந்த தாக்குதலில் அவரும் சில அமைச்சர்களும் கொல்லப்பட்டதாக ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இன்று (30) அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்னர். 2024 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் முதல் ஹவுதி தலைமையிலான அரசாங்கத்தின் பிரதமராக அஹமட் அல்-ரஹாவி பணியாற்றி வந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்தன. https://adaderanatamil.lk/news/cmeyg4k0r004co29neegq34bb
  21. அமெரிக்காவின் வர்த்தகப் போருக்கு மத்தியில் சீனா செல்லும் மோடி : ரஷ்யா மற்றும் சீன ஜனாதிபதிகளை சந்திக்கிறார் ! 30 Aug, 2025 | 10:48 AM அமெரிக்காவுடனான வர்த்தக மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ரஷ்யா மற்றும் சீன ஜனாதிபதிகளை சந்திக்கவுள்ளார். ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜப்பானில் இருந்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை (30) சீனாவுக்கு விஜயம் செய்கின்றார். அமெரிக்க அரசாங்கம் அண்மையில் இந்தியப் பொருட்களுக்கு 50 வீத வரி விதிப்பை நடைமுறைக்குக் கொண்டு வந்தது. இது இந்தியாவுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, ரஷ்யாவிடம் இருந்து மசகு எண்ணெய் வாங்குவதே இந்த உயர் வரி விதிப்பிற்கான காரணம் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். இந்தச் சூழ்நிலையில், ஜப்பான் பயணத்தை நிறைவு செய்துகொண்டு இந்தியப் பிரதமர் மோடி இன்று சனிக்கிழமை (ஆகஸ்ட் 30) சீனா செல்கிறார். அங்கு, ஷங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் அவர் பங்கேற்கவுள்ளார். நாளை ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 31) நடைபெறும் இந்த மாநாட்டின் ஒரு பகுதியாக, அவர் சீன ஜனாதிபதி சீ ஜின்பிங் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் ஆகியோரை சந்தித்துப் பேசவுள்ளார். இந்த சந்திப்பு குறித்து பிரதமர் மோடி தனது 'எக்ஸ்' பக்கத்தில் பயணத்திற்கு முன்பே பதிவிட்டிருந்தார். அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இந்தியா உட்பட பல நாடுகளுக்கு எதிராக வர்த்தகப் போரைத் தொடங்கியுள்ள நிலையில், சீனாவில் நடைபெறும் ஷாங்காய் உச்சி மாநாடு முக்கியத்துவம் பெறுகிறது. இந்தியா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் இந்த மாநாட்டில் கலந்துகொள்வதால், இது டிரம்ப்புக்கு எதிரான ஒரு வலுவான கூட்டமைப்பாகப் பார்க்கப்படுகிறது. குறிப்பாக, பிரதமர் மோடியும் சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்கும் கலந்துகொள்வது டிரம்ப்புக்கு ஒரு வலுவான செய்தியை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா-சீனா உறவில் ஒரு புதிய அத்தியாயம் கடந்த 2020 ஆம் ஆண்டு இந்தியா-சீனா எல்லைப் பகுதியான கால்வனில் இருநாட்டு வீரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் பெரிய விரிசல் ஏற்பட்டது. கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, இரு நாடுகளும் மீண்டும் ஒன்றிணையத் தொடங்கியுள்ளன. கடந்த மார்ச் மாதம் சீன ஜனாதிபதி இந்திய அரசாங்கத்திற்கு அமெரிக்காவின் வரிவிதிப்பு குறித்து ரகசிய கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். இதைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு மீண்டும் வலுவடையத் தொடங்கியுள்ளது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சுமார் ஏழு ஆண்டுகளுக்குப் பின்னர் முதன்முறையாக சீனாவுக்கு பயணம் மேற்கொள்கின்றார். கடந்த ஜூலை மாதம் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சீனா சென்று சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்கை சந்தித்தார். கடந்த வாரம் சீன வெளியுறவுத்துறை அமைச்சர் இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். இந்த தொடர் பயணங்கள் மூலம் இரு நாடுகளும் உறவை புதுப்பித்து, அமைதிக்கு வழி வகுக்கின்றன. இந்தியாவின் மீது டிரம்ப் விதித்த வரி விதிப்பை சீனா வெளிப்படையாகவே விமர்சனம் செய்து வருகிறது. இந்த சூழலில், பிரதமர் மோடியின் சீன விஜயம் மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. ஷாங்காய் மாநாட்டில் பிராந்தியப் பிரச்சனைகளைத் தாண்டி, அமெரிக்காவின் வரிவிதிப்பு விவகாரம் குறித்து முக்கியமாகப் பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவுக்கு எதிராக ரஷ்யா, சீனா மற்றும் தற்போது இந்தியா என மூன்று நாடுகளின் தலைவர்களும் சந்திப்பதால், இது உலக அரசியலின் போக்கையே தீர்மானிக்கக்கூடிய ஒரு மாநாடாக அமையும் என்று அரசியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். https://www.virakesari.lk/article/223754
  22. பாலஸ்தீன ஜனாதிபதி, 80 பாலஸ்தீன அதிகாரிகளின் விசாக்களை ரத்து செய்தது அமெரிக்கா 30 August 2025 பாலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் மற்றும் 80 பாலஸ்தீன அதிகாரிகளின் விசாக்களை அமெரிக்கா ரத்துச் செய்துள்ளது. இந்த நிலையில், அடுத்த மாதம் நியூயோர்க்கில் நடைபெறும் ஐக்கிய நாடுகளின் பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொள்ள பாலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் தடை செய்யப்பட்டுள்ளார் என்பதை அமெரிக்க ராஜாங்க திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது. இருப்பினும், விசாக்களை மறுப்பது அல்லது ரத்து செய்வது என்ற அமெரிக்காவின் நடவடிக்கை அந்தந்த அரசாங்கங்களுக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான "உறவுகளைப் பொருட்படுத்தாமல்", நியூயோர்க்கில் வெளிநாட்டு அதிகாரிகள் வருகை அமெரிக்காவால் தடைபடாது என்று கோடிட்டுக் காட்டும் ஐக்கிய நாடுகளின் ஆவணத்துடன், இந்த விசா ரத்து நடவடிக்கை இணங்குகிறதா என்பது தெளிவாகத் தெரியவில்லை என்று பிபிசி கூறுகிறது. அமைதி முயற்சிகளை குறைமதிப்புக்கு உட்படுத்தியதற்காகவும், "பாலஸ்தீனத்தை ஒரு நாடாக ஒருதலைப்பட்சமாக அங்கீகரிக்கப்பட வேண்டும்" என்று கோரியதற்காகவும், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ராஜாங்க செயலாளர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார். எனினும் டொனால்ட் ட்ரம்ப்பின் நிர்வாகத்தின் முடிவுக்கு எதிராக, இந்த அமர்வின் போது, பாலஸ்தீனத்தை ஒரு நாடாக அங்கீகரிப்பதற்கான சர்வதேச முயற்சிகளுக்கு பிரான்ஸ் தலைமை தாங்குவதால் இந்தத் தடை வந்துள்ளதாக கருதப்படுகிறது முன்னதாக, ஐக்கிய நாடுகளுக்கான பாலஸ்தீன தூதர் ரியாத் மன்சூர், நாட்டின் தூதுக்குழுவின் தலைவராக, நியூயார்க்கில் நடைபெறும் நாட்டுத் தலைவர்கள் மற்றும் அரசாங்கத் தலைவர்கள் கூட்டத்தில் அப்பாஸ் கலந்து கொள்வார் என்று கூறியிருந்தார். https://hirunews.lk/tm/417351/us-cancels-visas-of-palestinian-president-80-palestinian-officials
  23. கேப்பாப்புலவு மக்களின் காணியை கோரிய விமானப்படை செய்திகள் முல்லைத்தீவு, கேப்பாப்புலவில் உள்ள 0.5 ஹெக்டயர் மக்களின் பூர்வீக விவசாயக் காணிகளை தமது தேவைக்காக விமானப்படையினர் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் அனுமதி கோரியிருந்தனர். இதற்கு, வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், ஏற்கனவே படையினரால் அபகரிக்கப்பட்ட மக்களின் காணிகளைச் சுட்டிக்காட்டி, இக்கோரிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அவரது எதிர்ப்பை அடுத்து, நேற்று (29) நடைபெற்ற மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் விமானப்படையினருக்கு காணி வழங்குவதில்லை என முடிவு செய்யப்பட்டது. ரவிகரன் தனது கருத்தில், “ஏற்கனவே ஆக்கிரமிக்கப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்ட காணிகளில் மக்கள் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். இந்நிலையில், விமானப்படை மீண்டும் இக்காணிகளைக் கோருவது பொருத்தமற்றது. கேப்பாப்புலவில் இன்னும் 190 ஏக்கர் மக்களின் காணிகள் விடுவிக்கப்பட வேண்டியுள்ளன. மக்கள் தொடர்ந்து போராட்டங்களையும் கோரிக்கைகளையும் முன்வைத்து வருகின்றனர். யுத்தம் முடிந்து ஒன்றரை தசாப்தங்களுக்கு மேலாகியும், விமானப்படையினர் மக்களின் காணிகளை அபகரித்து யாருடன் போர் செய்யப்போகின்றனர்? எனவே, இக்காணிகளை விமானப்படைக்கு வழங்குவதற்கு ஒருபோதும் அனுமதிக்க முடியாது,” எனக் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார். இதனையடுத்து, முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் விமானப்படையினருக்கு காணி வழங்குவதில்லை என தீர்மானிக்கப்பட்டது. https://adaderanatamil.lk/news/cmexjjmlv003sqplp8xkhyrpm
  24. முன்னாள் ஜனாதிபதி இருவரை கைது செய்ய நடவடிக்கை! முன்னாள் ஜனாதிபதிகள் மைத்திரிபால சிறிசேன மற்றும் கோட்டபாய ராஜபக்ஷ ஆகியோரால் பொதுச் சொத்துக்களை தவறாகப் பயன்படுத்திய பல சம்பவங்கள் தொடர்பாக இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணையத்தில் முறைப்பாடு செய்யப்படவுள்ளது. ஊழல் மற்றும் மோசடிக்கு எதிராக போராடும் பல சிவில் சமூக அமைப்புகளால் இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இந்த அமைப்புகள் சமீபத்தில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தொடர்புடைய அனைத்து தகவல்களையும் பெற்றுள்ளன. அந்தத் தகவல்களை பயன்படுத்தி தொடர்புடைய முறைப்பாடுகளை ஆணைக்குழுவில் சமர்ப்பிக்க திட்டமிட்டுள்ளனர். தற்போது வழக்கறிஞர்கள் அதற்கான தகவல்களை பகுப்பாய்வு செய்து வருகின்றனர். அவற்றில், மைத்திரிபால சிறிசேனவின் தனிப்பட்ட தலையீட்டில் மேற்கொள்ளப்பட்ட பல கட்டுமாணங்களும், கோட்டபாய ராஜபக்ஷவால் மேற்கொள்ளப்பட்ட பல மோசடிகளும் அடங்கும். இது குறித்து கருத்து தெரிவித்த பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, “இது போன்ற முறைப்பாடுகள் தகவலுடன் சமர்ப்பிக்கப்பட்டால், முறையான விசாரணைகளை நடத்தி தேவையான சட்ட நடவடிக்கை எடுக்கத் தயங்கமாட்டேன். சந்தேகநபர் முன்னர் வகித்த பதவிகள் அத்தகைய சட்டச் செயல்பாட்டில் பொருத்தமானவை அல்ல” என அவர் குறிப்பிட்டுள்ளார். ஊழல் மோசடி குற்றச்சாட்டில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்மசிங்க கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இலங்கையின் வரலாற்றில் முன்னாள் ஜனாதிபதி ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் இதுவாகும். இவ்வாறான நிலையில் எந்தவொரு ஜனாதிபதியும் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் முன்னாள் ஜனாதிபதிகள் அச்சத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது. https://newuthayan.com/article/முன்னாள்_ஜனாதிபதி_இருவரை_கைது_செய்ய_நடவடிக்கை!#google_vignette
  25. காணாமல் ஆக்கப்பட்டோருக்கு - மரண அத்தாட்சிப் பத்திரம் வழங்க நடவடிக்கை! இலங்கையில் கடந்த 25 வருடங்களுக்கு மேலாக காணாமல் போனவர்களுக்கு மரண அத்தாட்சிப் பத்திரம் வழங்குவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது இலங்கையின் வடக்கு கிழக்கில் மட்டுமன்றி தென்னிலங்கையிலும் கடந்த காலங்களில் ஆயிரக்கணக்கான நபர்கள் காணாமல் போயுள்ளனர். அவ்வாறான நபர்களுக்கு என்ன நடந்தது என்பது குறித்து தகவல்களை அறிந்து கொள்ள முடியாமல் அவர்களின் உறவினர்கள் நீண்ட காலமாக துயரத்துடன் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 25 வருடகாலத்துக்கும் மேலாக காணாமல் போயுள்ள நபர்கள் தொடர்பில் அவர்கள் இறந்து விட்டதாக கருதப்பட்டு மரண அத்தாட்சிப் பத்திரம் வழங்க அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதன் மூலம் அவர்களின் உறவினர்களின் துயரங்களை குறைத்து, அவர்களுக்கு நிவாரணம் வழங்க முடியும் என்று அரசாங்கம் கருதியுள்ளதாக தெரிய வந்துள்ளது. இதேவேளை, 10,000 க்கும் மேற்பட்ட காணாமல் போனவர்கள் தொடர்பான முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்படும் என நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார். மேலும் வலுக்கட்டாயமாகக் காணாமல் போதல்கள் தற்செயலான சம்பவங்கள் அல்ல. அவை குற்றங்கள் என அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார். https://newuthayan.com/article/காணாமல்_ஆக்கப்பட்டோருக்கு_-_மரண_அத்தாட்சிப்_பத்திரம்_வழங்க_நடவடிக்கை!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.