Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிருபன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by கிருபன்

  1. தமிழரசுக்கட்சி தன்னிச்சையாக எடுத்த முடிவு தவறாகும்; ராணுவ பிரசன்னத்திற்கு எதிரான போராட்டத்திற்கு ரெலோ ஆதரவு - செல்வம் அடைக்கலநாதன் Published By: Vishnu 18 Aug, 2025 | 01:57 AM இலங்கை தமிழரசு கட்சி அனைத்து தமிழ் தேசிய அரசியல் கட்சிகளுடனும் கலந்துரையாடி ராணுவ பிரசன்னத்திற்கு எதிரான போராட்டத் திற்கான முடிவை எடுத்திருக்க வேண்டும். மாறாக தன்னிச்சையாக எடுத்த முடிவு தவறாகும்.எனினும் முப்படை களுக்கும் எதிராக ஆயுதம் ஏந்தியவர்கள் என்ற வகையில் ராணுவ பிரசன்னத்திற்கு எதிரான போராட்டத்திற்கு தமிழீழ விடுதலை இயக்கம் 'ரெலோ' ஆகிய நாம் ஆதரவளிக்கின்றோம்.என ரெலோ தலைவரும்,வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை (17) மாலை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,, தமிழினத்தின் மீது தொடர்ச்சியாக சிங்கள பேரினவாத அரசுகளின் முப்படைகளாலும் அரங்கேற்றப் பட்டு வரும் அடக்குமுறை, ஒடுக்குமுறை, இன அழிப்பு படுகொலைகளை வெறுமனே நாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது. முப்படையினரின் இனவாத செயற்பாடுகள் நடைபெற வடக்கு கிழக்கிலே காணப்படும் அதிகூடிய தேவை யற்ற இராணுவ முகாம்களும் முப்படையின் பிரசன்னமுமே காரணமாகும். 2009 போர் மெளனிப்பிற்கு பிறகும் கூட தமிழினத்தை நிம்மதியாக வாழ விடக்கூடாது என்கிற நிகழ்ச்சி நிரலில் படையினர் செயற்படுவதாக நாம் கருதுகின்றோம். அன்றைய காலத்தில் எம்மினத்தின் மீது பேரினவாதிகளால் நிகழ்த்தப்பட்ட அடக்குமுறைகளுக்கு முகம் கொடுத்து வந்த எமது மக்களை பாதுகாப்பதற்காக வடக்கு கிழக்கில் இருந்து ராணுவம் உள்ளிட்ட முப்படைகளின் பிரசன்னத்தையும் முற்றாக அகற்ற பொது மக்களின் சுதந்திர வாழ்வியல் இராணுவ பிரசன்னத்தை அகற்றுவதன் ஊடாக உறுதிப்படுத்தப்படும் என்ற நம்பிக்கையிலும் மக்களையும்,மண்ணையும் காத்திட தமிழீழ விடுதலை இயக்கத்தினராகிய நாம் ஆயுதம் ஏந்தினோம். இன்றைய சூழ் நிலையில் மக்களை அச்சுறுத்தும் அதிக இராணுவ பிரசன்னம் அதன் அடக்குமுறை இன அழிப்பு வடிவங்காரும் எமது இனத்தின் எதிர்கால இருப்பை கேள்விக்குரியக்குகின்றது. அந்தவகையிலேயே 18/08/2025 ம் ‘திகதி நாளைய தினம் இலங்கை தமிழரசுக் கட்சியால் முன்னெடுக்கப்பட்டுள்ள வடக்கு கிழக்கு தலுவிய இராணுவ பிரகன்ணத்திற்கு எதிரான போராட்டத்திற்கு தமிழீழ விடுதலை இயக்கம் "ரெலோ" ஆதரவாளிக்கின்றது. இதேவேளை இலங்கை தமிழரசுக்கட்சி அனைத்து தமிழ் தேசிய அரசியல் கட்சிகளுடனும் கலந்துரையாடி இந்த முடிவை எடுத்திருக்க வேண்டும்.மாறாக தன்னிச்சையாக எடுத்த முடிவு தவறாகும். இருந்த போதிலும் இனத்தின் அடிமை விலங்கொடிக்க ராணுவம் உள்ளிட்ட முப்படைகளின் பிரசன்னத்தை எமது தாயக பூமியான வடக்கு கிழக்கில் இருந்து முற்றாக அகற்ற வேண்டும். அதன் ஊடாக தமிழினத்தை சுதந்திரமாக வாழ விட வேண்டும் என்ற உயரிய நோக்கில் முப்படை களுக்கும் எதிராக ஆயுதம் ஏந்தியவர்கள் என்ற வகையில் ராணுவ பிரசன்னத்திற்கு எதிரான போராட்டத்திற்கு தமிழீழ விடுதலை இயக்கம் "ரெலோ" ஆகிய நாம் ஆதரவளிக்கின்றோம்.என அவர் மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/222767
  2. யாழில் அமைக்கப்படும் பௌத்த மத்திய நிலையம் - உடனடியாக நிறுத்துமாறு கோரிக்கை! யாழ் கந்தரோடையில் சட்டவிரோதமாக அமைக்கப்படும் கட்டிடத்தின் கட்டுமானத்தை உடனடியாக நிறுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா பிரகாஸ் தெரிவித்துள்ளார். பிரதேச சபையின் அனுமதி இல்லாமல் யாழ்.கந்தரோடையில் அமைக்கப்படும் பௌத்த மத்திய நிலையத்தை நேற்றையதினம் (16) சென்று பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில், ”கந்தரோடையில் பௌத்த மத்திய நிலையம் என்ற பெயரில் இராணுவ முகாமுக்கு அருகில் சட்டவிரோதமாக கட்டப்படும் கட்டிடம் தொடர்பில் எங்களுக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் இன்றைய தினம் அதைப் பார்வையிட்டிருக்கின்றோம். இந்தக் கட்டுமானத்தை நிறுத்துமாறு ஒட்டப்பட்ட பிரசுரம் அகற்றப்பட்டிருக்கின்றது. இந்தக் கட்டுமானத்தை பௌத்த பிக்கு ஒருவர் கட்டுவதாக அறிந்திருக்கின்றோம். எதிர்காலத்தில் பௌத்த சின்னங்களை அல்லது விகாரைகளை அமைப்பதற்கான ஏற்பாடுகளும் இருப்பதாக அறிகின்றேன். அதனால் இதனை உடனடியாக நிறுத்துமாறு கோரியிருக்கின்றோம். அதற்கு அடுத்த கட்ட நடவடிக்கைகள் சம்மந்தமாக சபை உறுப்பினர்களுடன் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கவுள்ளோம்.” என தெரிவித்தார். இந்த விஜயத்தின் போது தவிசாளருடன் இலங்கை தமிழரசுக் கட்சியின் பிரதேச சபை உறுப்பினர்களும் குறித்த பகுதிக்கு சென்றிருந்தனர். https://newuthayan.com/article/யாழில்_அமைக்கப்படும்_பௌத்த_மத்திய_நிலையம்_-_உடனடியாக_நிறுத்துமாறு_கோரிக்கை!#google_vignette
  3. ஹர்த்தாலுக்கு ஆதரவில்லை – வழமைப் போன்று இயங்கும் யாழ். நகர்! வடக்கு – கிழக்கில் முழு கதவடைப்பு போராட்டத்திற்கு இலங்கை தமிழரசு கட்சி அழைப்பு விடுத்திருந்த நிலையில், யாழ்ப்பாணம் வழமைப் போல் இயங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் முல்லைத்தீவில் தமிழ் இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தை மையப்படுத்தி இந்த முழு கதவடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. முல்லைத்தீவில் உள்ள இராணுவ முகாமுக்குள் நுழைந்த இளைஞர் ஒருவர் அப்பகுதியில் உள்ள ஏரியில் இருந்து சடலமாக மீட்கப்பட்டிருந்தார். இந்தச் சம்பவம் தமிழ் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இராணுவத்தினர் மேற்கொண்ட தாக்குதல் காரணமாகவே குறித்த இளைஞர் உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில், சம்பவம் குறித்து இரண்டு சிறப்பு பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளது. அத்துடன், சம்பவம் தொடர்பில் மூன்று இராணுவ வீரர்கள் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், குறித்த இளைஞரின் மரணத்திற்கு நீதிகோரி வடக்கு – கிழக்கில் முழு கதவடைப்பு போராட்டத்திற்கு இலங்கை தமிழரசு கட்சி அழைப்பு விடுத்திருந்தது. முன்னதாக கடந்த 15ஆம் திகதி இந்த கதவடைப்பு போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்த நிலையில், பல்வேறு காரணங்களுக்காக இன்று திங்கட்கிழமை (18ஆம் திகதி) பிற்போடப்பட்டிருந்தது. இந்த கதவடைப்பு போராட்டத்திற்கு பல்வேறு தரப்பினர்கள் ஆதரவு வழங்கியிருந்த நிலையில், அதற்கு சமமாக எதிர்ப்புகளும் வெளியிடப்பட்டிருந்தது. எவ்வாறாயினும், வடக்கு மற்றும் கிழக்கில் இன்று முன்னெடுக்கவுள்ள கதவடைப்பு போராட்டம் தொடர்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, அரசாங்கத்தையும் பாதுகாப்புப் படையினரையும் குறிவைத்து பொய்யான பிரச்சாரங்களால் மக்கள் ஏமாறுவதைத் தவிர்க்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார். மேலும், இந்த சம்பவத்தின் உண்மைகளைத் திரித்து, தவறான தகவல்களைப் பரப்புவதன் மூலம், சில அரசியல் குழுக்கள் வடக்கு, கிழக்கு மக்களிடையே அமைதியின்மையை ஏற்படுத்த முயற்சிப்பதாகவும் அவர் குற்றம் சுமத்தியிருந்தார். எனவே, இதுபோன்ற பிரச்சாரங்களுக்கு பொது மக்கள் ஏமாறக்கூடாது என்றும், உண்மைகளைப் புரிந்துகொண்டு அமைதியாக நடந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். https://www.samakalam.com/ஹர்த்தாலுக்கு-ஆதரவில்லை/
  4. அடுத்த வருடத்தில் மாகாண சபைகளுக்கான தேர்தல்? மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்ட பின்னர் அரசியலமைப்புத் திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். தற்போதுள்ள சட்டச் சிக்கல்கள் தீர்க்கப்பட்ட பின்னர், அடுத்த ஆண்டு முதல் 6 மாதங்களுக்குள் மாகாண சபைத் தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார். கிளிநொச்சி பகுதியில் நேற்று (17) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் பிமல் ரத்நாயக்க இவ்வாறு தெரிவித்தார். “நாங்கள் 2025 இல் தேர்தலை நடத்தினோம். 2024 நவம்பரிலும் தேர்தலையும் நடத்தினோம். அடுத்த ஆண்டு முதல் 6 மாதங்களில் மாகாண சபைத் தேர்தலை நடத்துவோம் என்று நம்புகிறோம். சட்டத் தடைகள் உள்ளன. அவற்றை அகற்ற முயற்சிக்கிறோம். அரசியலமைப்பைக் கொண்டுவருவது குறித்து எங்களிடம் கொள்கை முடிவு உள்ளது. அரசியலமைப்பைக் கொண்டுவருவது ஒரு விரிவான செயல்முறை. அதற்கு முன்னர் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதே எங்கள் இலக்கு. மாகாண சபைத் தேர்தலை நடத்திய பிறகு அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் குறித்த விரிவான அரசியல் திட்டத்தைத் தொடங்குவோம்.” என்றார். https://www.samakalam.com/அடுத்த-வருடத்தில்-மாகாண/
  5. தடைகளைத் தாண்டிய புத்தகங்கள் – 12 | தனிமையின் ஒரு நூறு ஆண்டுகள் (One Hundred Years of Solitude) தவறுகளைத் திருத்திக்கொள்ளாத தலைமுறைகளின் கதை – அ. குமரேசன் பெருந்தொழில் நிறுவனத்தின் சந்தை ஆதிக்கம், உழைப்புச் சுரண்டல், போர், அரசியல் கொந்தளிப்புகள் ஆகிய காரணங்களால் ஆட்டுவிக்கப்படும் ஒரு நகரத்து மக்களின் நூறாண்டு வாழ்க்கையைச் சித்தரிக்கிறது, ஸ்பானிஷ் மொழியில் எழுதப்பட்ட ஒரு நாவல். கல்வித்துறையினர் “இலக்கியக் குப்பை” என்று தள்ளிவைத்தனர், பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் மாணவர்களுக்குப் பரிந்துரைக்கப்படும் “கட்டாயம் படித்தாக வேண்டிய புத்தகங்கள்” பட்டியலிலிருந்து அந்தப் புத்தகம் நீக்கப்பட்டது. மோசமான சொல்லாடல்கள், பாலியல் சித்தரிப்புகள் என்றெல்லாம் கூறி அந்த நாவலைத் தனிமைப்படுத்தும் முயற்சிகள் நடந்தன. ஆனால் தனிமைப்படுத்தும் முயற்சிகளை மீறி தனித்து நிற்கிறது “தனிமையின் ஒரு நூறு ஆண்டுகள்” (One Hundred Years of Solitude). கொலம்பியா நாட்டின் கேப்ரியல் கார்சியா மார்க்வேஸ் (Gabriel García Márquez 1927–2014) எழுதிய இந்தப் புத்தகம் 1967ஆம் ஆண்டில் வெளியானது. ஒரு கற்பனை நகரத்தில், ஒரு குடும்பத்தின் பல தலைமுறைகளை சந்திக்க வைக்கிற இந்நாவல் “மாய மெய்யியல்” உத்தியில் சிறந்த படைப்புகளில் ஒன்றாக இன்று மதிக்கப்படுகிறது. மனிதர்களின் தனிமை, வரலாற்றின் சுழற்சி ஆகிய கருப்பொருள்களை ஆராய்ந்து, மெய்யியலின் அழகிய கூறுகளை இணைக்கிற நாவல், விதியை மாற்ற முடியாது என்ற நம்பிக்கையை உயர்த்திப் பிடிக்கிறது என்ற விமர்சனம் கூட எழுந்தது. நாவல் என்னதான் சொல்கிறது? கற்பனை நகரம் ஜோஸ் ஆர்காடியோ புயேண்டியா, அவரது இணையர் உர்சுலா இகுவாரன் இருவரும் தங்களின் சொந்த ஊரைவிட்டு வெளியேறி மகோண்டோ என்ற புதிய நகரத்தைக் கட்டமைக்கின்றனர். தனிமையான சொர்க்கம் என்று சொல்லத் தக்கதாக இருந்த அந்த நகரத்தை ஒரு தனியார் நிறுவனத்தின் சுரண்டல்கள், உள்நாட்டுப் போர்கள், அரசியல் ஏற்ற இறக்கங்கள் ஆகியவை ஆழமாகப் பாதிக்கின்றன. புயேண்டியா குடும்பம் இயல்பான காதல், உறவு, இன்பம், சோகம் என எதிர்கொள்வதோடு இயற்கைக்கு அப்பாற்பட்ட நிகழ்வுகளையும் அனுபவிக்கிறது. குறியீடுகளால் நிறைந்துள்ள நாவலில் கதாபாத்திரங்கள் பெரும்பாலும் முன்னரே தீர்மானிக்கப்பட்ட விதிகளுக்கு எதிராகப் போராடுகிறார்கள். புயேண்டியா குடும்ப உறுப்பினர்கள், பலர் ஒரே விதமான பெயர்களைப் பகிர்ந்து கொள்கிறார்கள், தங்கள் முன்னோர்களின் தவறுகளை மீண்டும் மீண்டும் செய்கிறார்கள், அந்தத் தவறுகளின் விளைவுகளும் மீண்டும் மீண்டும் நிகழ்கின்றன. இது வரலாற்றின் சுழற்சி முறையை வலுப்படுத்துகிறது. சுதந்திரமாக உலகெங்கும் சுற்றுகிற ஜிப்ஸி (நாடோடி) இனப் பிரிவைச் சேர்ந்தவர்கள் அறிவியல் ஞானம் கொண்டவரான மெல்குயாடஸ் என்ற கலகலப்பான மனிதரின் தலைமையில் அடிக்கடி அந்த நகரத்திற்கு வருகிறார்கள். அவர்கள் வேதியியல் புதுமைகள் உள்ளிட்ட கண்டுபிடிப்புகளை அறிமுகப்படுத்துகிறார்கள், இது ஜோஸ் ஆர்காடியோ புயேண்டியாவை கவர்ந்திழுக்கிறது. மெல்குடயாஸ் ஒரு மர்ம மனிதராகவும், ரகசியக் குறிப்புகளாக ஏதோ எழுதிவைக்கிறார். புயேண்டியா இணையரின் மகன் ஜோஸ் ஆர்காடியோ வலிமையானவன் ஆனால் அடிக்கடி உணர்ச்சிவசப்படுகிறவன். மற்றொரு மகன் ஆரேலியானோ நிதானமானவன், ஆனால் புதிரானவன். இவன் பின்னர் அரசியல் கிளர்ச்சியில் பங்கேற்று தலைமைப் பொறுப்புக்கு வருகிறான். மகோண்டா நகரம் அரசியல் மோதல்களின் களமாகிறது. வியக்கத்தக்க மாற்றங்களுக்கும் உள்ளாகிறது. நகரத்திற்கு ஒரு பெரிய வாழைப்பழ நிறுவனம் வருகிறது. விவசாயிகளிடமிருந்து வாழைத்தார்களைக் கொள்முதல் செய்து எந்திரங்களின் மூலம் பதப்படுத்தி, பல்வேறு பொருள்களையும தயாரிக்கிற அந்த நிறுவனம் நவீனமயமாக்கலோடு, அப்பட்டமான உழைப்புச் சுரண்டலிலும் இறங்குகிறது. ஆட்சி நிர்வாகம் அதற்கு ஒத்துழைக்கிறது. கொந்தளிக்கும் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகிறார்கள். அந்தப் போராட்டத்தின்போது ஒரு படுகொலை நடக்கிறது. நிறுவன உரிமையாளரின் செல்வாக்கால் அந்தக் கொலை பதிவிலிருந்தே நீக்கப்படுகிறது. இந்த நிகழ்வுப் போக்குகள் நகரத்தின் குழப்பத்தையும் வீழ்ச்சியையும் குறிக்கின்றன. நகரத்தையே உருவாக்கிய புயேண்டியா குடும்பத்தின் தலைமுறைகள், புதிய அணுகுமுறைகள் இல்லாதவர்களாகப் பழைய தவறுகளைத் தொடர்கிறார்கள், அழிவைச் சந்திக்கிறார்கள். எஞ்சியிருக்கும் புயேண்டியா அந்த ஜிப்ஸி தலைவர் மெல்குயாடஸ் ரகசியமாக எழுதிவைத்திருந்த கையெழுத்துப் பிரதியை எடுத்து, புதிரான குறியீடுகளுக்குப் பொருள் கண்டுபிடிக்கிறான். அதில் தன் குடும்பத்தின் அழிவு குறித்து முன்னரே அறிவிக்கப்பட்டிருப்பதைக் கண்டு வியக்கிறான். தலைவிதி போல எழுதப்பட்டிருப்பது பற்றிய யோசனையோடு படித்துக்கொண்டிருக்கும்போதே புயல் தாக்குகிறது. ஊரை முற்றிலுமாகக் குலைத்துப் போடுகிறது. ஒவ்வொரு தலைமுறையும் மகோண்டோவை எவ்வாறு பாதிக்கிறது என்று நாவல் சித்தரிக்கிறது. நகரம் உருவாக்கப்பட்ட லட்சியத்திலிருந்து அது முடிந்து போகும் சோகம் வரையிலான காலத்தின் ஓட்டமே கதையாகிறது. கதாபாத்திரங்கள் முன்னரே தீர்மானிக்கப்பட்ட வாழ்க்கையைத்தான் வாழ்கிறார்களா, தலைவிதித் தத்துவத்தை நாவல் போதிக்கிறதா என்று யோசிக்க வைக்கிறது. ஆனால், மாற்றமே இல்லாமல் திரும்பத் திரும்ப ஒரே மாதிரியாகச் செயல்படுகிறபோது அடுத்தடுத்த தலைமுறைகள் ஒரே மாதிரியான முடிவுகளை எதிர்கொள்ளத்தானே வேண்டியிருக்கும், அதை ஒருவர் கணித்து எழுதியிருப்பது வழக்கமான தலைவிதி நம்பிக்கையாகாது என்று இலக்கியத் திறனாய்வாளர்கள் கூறுகிறார்கள். பொருளாதாரம், அரசியல் உள்ளிட்ட புறச்சூழல்கள் தனி மனிதர்களின் காதல் உறவுகளைக் கூடச் சீர்குலைக்கின்றன; பல கதாபாத்திரங்களைத் தனிமைக்குக் கொண்டு செல்கின்றன; விதிப்படி நடப்பது போலக் காட்சியளித்து, நுட்பமான முறையில் மனிதச் செயல்களே எதையும் தீர்மானிக்கின்றன என்றும், மாற்றங்களுக்கு எப்போதும் தயாராக இருக்க வேண்டும் என்றும் உணர்த்துகின்றன என்றும் விளக்கமளிக்கிறார்கள். நாவலுக்கு எழுந்த எதிர்ப்புக்குக் காரணம், உழைப்புச் சுரண்டலையும், பாரம்பரியத்தின் பெயரால் தொடரும் பழமைப் போக்குகளையும் கேள்விக்கு உட்படுத்துவதுதான் என்ற கருத்தும் பகிரப்பட்டிருக்கிறது. முன்னோடி நாவலின் படைப்பாளி கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ் 20ஆம் நூற்றாண்டின் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். வாழ்க்கையின் உண்மை நடப்புகளையும், கற்பனை வளர்ச்சிகளையும் இணைக்கிற மாய மெய்யியல் படைப்பாக்க உத்தியின் முன்னோடிகளில் ஒருவராகப் புகழப்படுகிறார். அவருடைய இந்த நாவல் பன்னாட்டு அளவில் பாராட்டுகளைப் பெற்றது. லத்தீன் அமெரிக்க இலக்கியத்தின் பெருமிதத்திற்குரிய படைப்பாகக் கொண்டாடப்படுகிறது. “காலரா காலத்தில் காதல்” (Love in the Time of Cholera –1985) “ஒரு மரண முன்னறிவிப்பின் காலவரிசை” (Chronicle of a Death Foretold – 1985) உள்ளிட்ட நாவல்களும் குறிப்பிடத்தக்கவை. பல சிறுகதைகளையும் எழுதியிருக்கிறார். லத்தீன் அமெரிக்காவின் வாழ்க்கையையும் சிக்கல்களையும் பிரதிபலிக்கும் நாவல்கள், சிறுகதைகளுக்காக இலக்கியத்திற்கான நோபல் பரிசு 1982 ஆம் ஆண்டில் அவருக்கு வழங்கப்பட்டது. அமெரிக்காவில் இந்தக் குறிப்பிட்ட நாவலுக்குக் கல்வி நிறுவனங்கள் தடைவிதித்ததை எதிர்த்து ஆங்கில ஆசிரியர் ஒருவர் நீதிமன்றத்திற்குச் சென்றார். பின்னர் நாவல் நூலகங்களுக்குள் வந்தது. கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ் எதிர்ப்புக்கு உள்ளானதன் பின்னணியில் அவரது சோசலிசக் கருத்துகளும், கியூபா தலைவர் ஃபிடல் காஸ்ட்ரோவுடனான தொடர்பும் இருந்தன. அமெரிக்காவிற்குச் செல்ல முயன்றபோது அவருக்கு விசா மறுக்கப்பட்டது. ஓடிடி திரையில் இந்த புத்தகத்திற்கு பெரிய இலக்கிய விருது எதுவும் கிடைக்கவில்லை என்றாலும். 2007இல் நடந்த ஸ்பானிஷ் மாநாட்டில் இது அந்த மொழியின் மிக முக்கியமான படைப்புகளில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டது. 20 ஆம் நூற்றாண்டின் மிகச் சிறந்த இலக்கிய சாதனைகளில் ஒன்றாகக் கருதப்படும் இந்த நாவல் 46 மொழிகளில் கொண்டுசெல்லப்பட்டுள்ளது. உலகளவில் 5 கோடிக்கும் அதிகமான படிகள் விற்பனையாகியுள்ளன. “தனிமையின் நூறாண்டுகள்” ஸ்பானிஷ் மொழியில் வலைத் தொடராகத் தயாரிக்கப்பட்டு, ஆங்கிலத் துணைத் தலைப்புகளுடன், சென்ற ஆண்டிலிருந்து நெட்ஃபிக்ஸ் தளத்தில் ஒளிபரப்பாகி வருகிறது. கவிதையழகோடு உருவாகியுள்ளதாகப் பாராட்டப்படும் இந்தத் தொடர் மார்க்வெஸ் குடும்பத்தினரின் ஆதரவுடன் படமாக்கப்பட்டுள்ளது. https://bookday.in/books-beyond-obstacles-gabriel-garcia-marquez-one-hundred-years-of-solitude-book-based-article-written-by-a-kumaresan/
  6. பழிவாங்கும் தீ – அம்பை அஷ்ட வசுக்கள் அஷ்ட வசுக்கள் அவரவர் மனைவியுடன் மலைப்பிரதேசத்தில் மகிழ்வாக நேரம் கழித்துக் கொண்டிருந்தனர். அப்பொழுது மகரிஷி வசிஷ்டரின் ஆசிரமத்தை கண்டனர். அந்த சமயத்தில் ரிஷி அங்கில்லை. ஆசிரமத்தின் அருகே தெய்வ பசு நந்தினி மேய்ந்து கொண்டிருந்ததைக் கண்டனர். அஷ்ட வசுக்களில் ஒருவர் அந்த பசுவின் தெய்வீக வடிவை கண்டு மயங்கி அதை புகழ்ந்து பேச துவங்கினார். அவரது மனைவியும் கருணை வடிவாய் இருந்த அந்த சாதுவான பசுவை பார்த்து மயங்கி அந்த பசுவை தங்களுடன் எடுத்த செல்ல விரும்பினார். ஆனால் மற்ற வசுக்கள் இதை எதிர்த்தனர். மனைவி விரும்பி கேட்டதால் அந்த ஒரு வசு மற்றவர்களை இதற்கு சம்மதிக்க வைத்து, நந்தினியை அங்கிருந்து கவர்ந்து சென்றனர். வசிஷ்டர், ஆசிரமத்துக்கு திரும்பிய பிறகு நந்தினியை இவர்கள் கடத்தி சென்றது அறிந்து கோபம் கொண்டார். வசுக்களை வரவழைத்து அவர்களை சபித்தார். “ நீங்கள் உங்கள் நிலைக்கு தகுதி இல்லாத செயலை செய்தீர்கள் ! எனவே நீங்கள் மனிதனாக பிறக்கவேண்டும் “ அவரது சாபம் கேட்டவுடன் அனைத்து வசுக்களும் பயந்து, நந்தினியை திரும்ப ஒப்படைத்து சாபத்தில் இருந்து விடுவிக்க கோரினர். ஒருமுறை சபித்தால் அதை மீண்டும் பெற இயலாது. இருந்தும், நந்தினி மீண்டும் வந்ததால் கோபம் தணிந்த வசிஷ்டர் ” அந்த ஒரு வசு மட்டுமே நந்தினியை திருட எண்ணியதால் , அவன் மட்டுமே மனிதனாக பிறந்து முழு வாழ்வும் வாழ்ந்து பின் இறப்பை சந்திக்க நேரிடும். மற்ற அனைவரும் பிறந்ததுமே சாபத்தில் இருந்து விடுபட்டு மீண்டும் வசுக்கள் ஆவீர்கள் ” என சாபத்தை மாற்றினார். இதன் பின், வசுக்கள் கங்கையை சென்று சந்தித்து, தங்களின் சாபத்தை பற்றிய விவரத்தைக் கூறி பூலோகத்தில், தங்களது தாயாக இருக்க வேண்டினார்கள். அவர்கள் மேல் கருணை கொண்ட கங்கையும் அதற்கு சம்மதித்தாள் . பூலோகத்திற்கு வந்து, சந்தனு ராஜாவை சந்தித்து அவரை மணந்துக் கொண்டாள். ஆனால் அதற்கு முன் , தான் செய்யும் எந்த செயலைப் பற்றியும் எந்த கேள்வியும் கேட்கக்கூடாது என்ற நிபந்தனை விதித்து அதற்கு அரசன் சம்மதத்தைப் பெற்றாள். முதல் ஏழு வசுக்கள் பிறந்த பொழுதும், பிறந்தவுடனேயே அவர்களை கங்கை நதியில் வீசி அவர்களுக்கு சாப விமோசனம் அளித்தாள் . ஏழு குழந்தைகளை அவள் கங்கையில் வீசிய பொழுதும் எதுவும் கேட்காத சந்தனு, அவள் எட்டாவது குழந்தையை வீச முயன்றபொழுது, அவளை தடுத்து அவளது செய்கைகளுக்குக் காரணம் கேட்டார். சந்தனுவிடம் தன் உண்மை தோற்றத்தை காட்டிய கங்கை, தனது செய்கைகளுக்கு உண்டான காரணத்தையும் விளக்கி கூறினாள். பின், ” நீ எனக்கு அளித்த சத்தியத்தை மீறியதால், இனி என்னால் உன்னுடன் வாழ இயலாது. இப்பொழுது இக்குழந்தையை என்னுடன் அழைத்து செல்கிறேன். உரிய காலம் வரும் நேரத்தில் அவன் உன்னிடம் வந்து சேர்வான் ” எனக் கூறி அக்குழந்தையுடன் அங்கிருந்து சென்றாள். அதன் பின், பதினாறு வருடங்கள் கழித்து அனைத்தும் கற்ற இளம் வாலிபனாய் அரசனிடம் திரும்பி வந்தது அக்குழந்தை. தேவவிரதன் என அழைக்கப்பட்ட அந்த இளைஞன், அனைவராலும் மதிக்கப்பட்டு, பயத்துடன் பார்க்கப்பட்டான் . அவன் அனைவருக்கும் கவலைப்பட்டு அனைவரையும் பார்த்துக் கொண்டாலும், மகிழ்ச்சி என்பதே வாழ்வு முழுவதும் அறியாமல் இருந்தான். பழிவாங்கும் தீ – அம்பை சத்யவதியின் மகன் விசித்திரவீர்யனுக்கு திருமண வயது வந்ததும் அவனுக்கு உரிய மணமகளை தேடும் வேலையை துவங்கினார் பீஷ்மர். அந்த சமயத்தில் , காசி ராஜனின் மகள்களான அம்பை, அம்பிகா மற்றும் அம்பாலிகாவிற்கு சுயம்வரம் நடைபெற்றது. குணவதிகளும் அழகிகளுமான அவர்களை விசித்திரவீர்யனுக்கு திருமணம் செய்ய முடிவுசெய்தார் பீஷ்மர். சுயம்வரத்திற்கு சென்ற இவரை, இவரது நோக்கம் தெரியாமல் அங்கு வந்திருந்த மற்ற இளவரசர்கள் கிண்டல் செய்தனர். ஏற்கனவே பிரம்மச்சரிய விரதம் பூண்டவர் சுயம்வரத்திற்கு வந்ததால் இந்த கேலி நிகழ்ந்தது. இதனால் கோபம் அடைந்த பீஷ்மர் அவர்கள் அனைவரையும் சண்டைக்கு அழைத்தார். மிக எளிதாக எந்தவித கஷ்டமும் இன்றி அந்த இளவரசர்கள் அனைவரையும் தோற்கடித்து, மூன்று இளவரசிகளையும் அங்கிருந்து அழைத்து சென்றார். அம்பை, ஸுபால ராஜன் சால்வனை விரும்பியதையும், சுயம்வரத்தில் அவனுக்கு மாலையிட விரும்பியதையும் பீஷ்மர் அறியவில்லை. அஸ்தினாபுரம் திரும்பும் வழியில் , சால்வன் இவரை வழிமறித்து போருக்கு அழைத்து தோல்வியடைந்தான். அஸ்தினாபுரம் வந்தபின்பே, அம்பை , தனது மனதில் இருப்பதை பீஷ்மரிடம் கூறினார். தான் தவறு செய்ததை உணர்ந்த பீஷ்மர், தக்க பாதுகாப்புடன் அவளை சால்வன் இருக்குமிடத்திற்கு அனுப்பி வைத்தார். ஆனால் சால்வனோ, பலர் பார்க்க பீஷ்மர் என்னை தோற்கடித்தார். எனவே என்னால் உன்னை திருமணம் செய்ய இயலாது என கூறினான். இதனால் மனம் உடைந்த அம்பை, கோபத்துடன் மீண்டும் பீஷ்மரிடம் திரும்பி வந்து, நடந்ததை கூற, அவர் விசித்திரவீரியனிடம் அம்பையை திருமணம் செய்யக் கூறினார். அவனோ, மனதில் வேறொரு ஆணை நேசிக்கும் பெண்ணை தான் திருமணம் செய்ய இயலாது எனக் கூறி மறுத்துவிட்டான். மீண்டும் சிலகாலம் கழித்து சால்வன் மனம் மாறியிருப்பான் என எண்ணி , அம்பையை அங்கே அனுப்ப, அவன் மீண்டும் மறுத்துவிட்டான். இதனால் கடுங்கோபம் கொண்ட அம்பை, நீங்கள்தான் இந்த நிலைக்கு காரணம் எனவே நீங்களே என்னை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என பீஷ்மரிடம் சண்டையிட்டாள். ஆனால், ஏற்கனவே பிரம்மச்சரிய விரதம் பூண்டதால் பீஷ்மர் அவளைத் திருமணம் செய்ய மறுத்துவிட்டார். தனது வலிக்கும் வாழ்வின் பிரச்சனைக்கும் பீஷ்மர் மட்டுமே காரணம் என எண்ணிய அம்பை அவரை அழிக்க சபதம் பூண்டாள். சுப்ரமணியரை நோக்கி தவம் இருந்து, என்றும் வாடாத தாமரை மாலையை வரமாகப் பெற்றாள். அந்த மாலையை அணிந்தவர் பீஷ்மரை அழிக்க இயலும் என்பதே வரமாகும். அந்த மாலையுடன் வலிமை மிகுந்த பல அரசர்களிடம் சென்று பீஷ்மரை தோற்கடிக்க உதவிக் கோரினாள். ஆனால் பீஷ்மரை பகைத்துக் கொள்ள எவரும் விரும்பாததால் அனைவரும் மறுத்துவிட, அம்பை துருபதனிடம் சென்றாள். துருபதனும் மறுத்துவிட, அவனின் அரண்மனை வாசலில் தாமரை மாலையை தொங்கவிட்டு காட்டுக்கு சென்றாள் அம்பை. அங்கே இருந்த சில முனிவர்கள் அவளை பரசுராமரை அணுகுமாறு கூற, பரசுராமரிடம் சென்றாள். முதலில் சால்வனிடம் பேசி அவளை திருமணம் செய்துகொள்வதாய் அவர் கூற, இனி தன் வாழ்வில் இல்லறத்திற்கு இடம் இல்லையென்றும், பழி வாங்குவது மட்டுமே தன் லட்சியம் என அவள் மறுத்துவிட , பீஷ்மரை போருக்கு அழைத்தார் பரசுராமர். நீண்ட நாட்கள் இருவருக்கும் வெற்றி தோல்வி இன்றி சண்டை நீடிக்க, இறுதியில் தன் தோல்வியை ஒத்துக்கொண்டு அங்கிருந்து விலகினார் பரசுராமர். இதனால், மனம் உடைந்த அம்பை மீண்டும் சிவனை நோக்கி கடுமையான தவமிருக்க துவங்கினாள். இறுதியில் அவள் தவத்தை மெச்சி காட்சியளித்த சிவன், அடுத்த பிறவியில் அவள் பீஷ்மரை கொல்ல முடியும் என வரமளித்தார். இதனை கேட்டவுடன், தீ மூட்டி, அதில் இறங்கினாள் அம்பை. அடுத்த பிறவியில் துருபதனின் மகளாக பிறந்தாள் . சிறு வயதிலேயே அம்பை முன்பு வாயிலில் தொங்க விட்டு சென்ற தாமரை மாலையை எடுத்து அணிந்து கொண்டாள் . இதை அறிந்த துருபதன், பீஷ்மரின் கோபத்திற்கு ஆளாகாமல் இருக்க, அவளை காட்டிற்கு அனுப்பி வைத்தார். காட்டில் போர்கலைகளை கற்றவள், அங்கிருந்த யட்சனின் உதவியுடன் ஆணாக சிகண்டியாக மாறினாள். மகாபாரத யுத்தத்தில் சிகண்டி பெண்ணாக பிறந்தவள் என அறிந்திருந்த பீஷ்மர் அவளை தாக்கவில்லை. பத்தாம் நாள், யுத்தத்தில், அர்ஜுனனுக்கு சாரதியாக கிருஷ்ணரின் இடத்தில் சிகண்டி இருக்க, அர்ஜுனன், சிகண்டி இருவருமே அவர் மேல் கணைகளை தொடுத்தனர். பிதாமகர், அர்ஜுனனின் அம்புகள் வலிமையாகவும் துன்புறுத்துவதாகவும் இருந்ததாகக் கூறினார். அவருடைய நீண்ட துன்பகரமான வாழ்வு அங்கு முடிவுக்கு வந்தது. பதிலுக்கு பதில்… துரோணரும், துருபதனும் அவர்களின் இளம் வயதில் ரிஷி பாரத்வாஜரின் குருகுலத்தில் பயின்றுவந்தனர். அப்பொழுது இருவரும் மிக நெருங்கிய தோழர்களாய் இருந்தனர். அந்த நேரத்தில், துருபதன் துரோணருக்கு ஒரு வாக்கு அளித்தார். அவர் நாட்டின் அரசராக ஆகும் பொழுது, அவரது சாம்ராஜ்யத்தின் பாதியை துரோணருக்கு அளிப்பதாக கூறினார். குருகுலம் முடிந்து இருவரும் பிரிந்தனர். துருபதன் நாளடைவில் பாஞ்சால நாட்டின் அரசன் ஆனான். துரோணர், கிருபரின் சகோதரி கிருபையை மணந்து அஸ்வத்தாமன் என்ற மகனை பெற்றார். உலகிலேயே சிறந்த வில்லாளி ஆக வேண்டும் என்ற ஆசையில் பரசுராமரிடம் மேலும் பயின்றார். வித்தையில் சிறந்தவராக இருந்தாலும், போதுமான வருமானம் இல்லாததால் மிக வறுமையில் சிக்கி தவித்தார் துரோணர். ஒருமுறை, அஸ்வத்தாமன் அவனது அம்மாவிடம், ” அம்மா என் நண்பன் பால் பருகியதாகக் கூறினான். பால் என்றால் என்ன ? ” என கேக்கும் அளவிற்கு அவர்கள் வறுமையில் இருந்தனர். இதனால் வேதனையுற்ற கிருபை துருபதனின் வாக்கை துரோணருக்கு நினைவூட்டி அவரிடம் சென்று உதவி கேக்க சொன்னாள். இளம்பிராயத்து நினைவுகளும் துருபதனுடன் கழித்த இன்பமான நினைவுகளும் மனதில் தோன்ற பாஞ்சாலத்திற்கு சென்றார் துரோணர். அங்கே அரசவையில் துருபதனை நண்பனாய் நினைத்து பேச, அதிகாரத்தில் இருப்பதால் அகந்தையில் துருபதன் துரோணரை பிச்சைகாரன் என்றும் அரசரை நேரடியாக சந்தித்து பேச அருகதை இல்லை என்றும் அவமதித்தான். இதனால் கோபம் கொண்ட துரோணர், இதற்கு பழி வாங்க உறுதி பூண்டார். சில காலம் கழித்து , துரோணர் குரு வம்சத்து ஆச்சாரியாராக ஆனார். குரு வம்ச இளவரசர்களின் குருகுல காலம் முடிந்ததும், அவர்களிடம் குரு தட்சணையாக துருபதனை பிடித்து வர சொன்னார். இளவரசர்கள் அவர்களின் முதல் போரை எண்ணி சந்தோசத்துடன் சென்றனர். முதலில் போருக்கு சென்ற கௌரவர்களை எளிதாக தோற்கடித்தான் துருபதன். அதன்பின், யுதிஷ்டிரன் இல்லாமல் சென்ற பாண்டவர்கள், துருபதனை எளிதில் வீழ்த்தினர். அர்ஜுனன் அப்பொழுதே தீர செயல்கள் செய்து தான் சிறந்த போர் வீரன் என நிரூபித்தான். எதற்காக இந்த யுத்தம் என புரியாமலே அவர்களிடம் கைதியானான் துருபதன். தன் மாணவர்களின் சாமர்த்தியத்தை கண்டும், தன் சபதம் நிறைவேறியதை கண்டும் துரோணர் மகிழ்ந்தார். பின் துருபதனை நோக்கி ” நீ என்னை பிச்சைக்காரன் என்று அழைத்தாயே நினைவிருக்கிறதா ? இன்று உனது ராஜ்ஜியம் என்னிடம். இப்பொழுது, உன் உயிரை காப்பாற்றக் கூடியது என்று எதுவும் உன்னிடம் இல்லை. இப்பொழுது மற்ற பிச்சைக்காரர்கள் போன்றுதான் நீயும். உன்னை இப்பொழுதே கொன்றுவிட்டு உன் ராஜ்யத்தை நான் எடுத்துக்கொள்ள முடியும். ஆனால், எனக்கு உன் நட்பே மீண்டும் வேண்டும். அதனால், பாதி ராஜ்யத்தை திருப்பி அளிக்கிறேன் ” என்றார். தன் சபதம் நிறைவேறியதும் துரோணரின் கோபமும் தணிந்தது. ஆனால் அந்த சம்பவம் அப்படி நல்லபடியாக முடியவில்லை. துருபதனின் உள்ளிருந்த கோபம் வெளிப்படாமல் உள்ளுக்குள்ளே நீறு பூத்த நெருப்பாய் இருந்தது. அது பழி வாங்கத் துடிக்கும் , சண்டையிடவும் கொல்லவும் பிறந்த ஷத்ரிய வம்சத்தின் கோபம் அது. பிராமணரை கொல்லும் ஒரு மகனும், அர்ஜுனன் போன்ற ஒரு வீரனை மணக்கக் கூடிய மகளும் வேண்டும் என்று அப்பொழுதே மனதில் உறுதி கொண்டார். தன்னை கைது செய்து கொண்டுவந்தாலும் அர்ஜுனனின் வீரத்தை பாராட்டாமல் இருக்க இயலவில்லை அவரால். திருஷ்த்துட்யும்னன் , ஆச்சாரியார் துரோணரை கொன்றான், திரௌபதி அர்ஜுனனை மணந்து அதன் மூலம், பஞ்சபாண்டவர்களுக்கும் மனைவியானாள். https://solvanam.com/2025/01/26/பல்லாயிரம்-ஆண்டுகளுக்க-3/
  7. அங்கீகரித்தலின் அரசியல் sudumanal பலஸ்தீனத்தை ஓர் அரசாக அங்கீகரித்தல் என்பதே ஓர் வரலாற்றுக் கேலிதான் என்றபோதும், அதை பேசவேண்டியிருக்கிறதுதான் வரலாற்று அவலம். இஸ்ரேல் என்ற நாடு போலன்றி பலஸ்தீனம் என்ற நாடு 1948 வரை வரைபடத்தில் இருந்த ஓர் நாடு. அதை அங்கீகரிக்கிறோம் என சொல்ல வருமளவுக்கு அரசியலை தலைகீழாகப் புரட்டிப் போட்டவர்கள் யார். பலஸ்தீனத்தை காலனியாக்கி வைத்திருந்த பிரித்தானியர்கள்தான். 1947 இல் பிரித்தானிய சாம்ராஜ்யத்தின் அதிகார நிழலில், சியோனிஸ்டுகளின் தொடர் முயற்சியில், இஸ்ரேல் என்ற நாடு முளைத்தெழும்பியது. உலகத்திலேயே இன்றுவரை தனக்கான நிரந்தர எல்லையை வகுத்துக் கொள்ளாத ஒரேயொரு நாடு இஸ்ரேல்தான். அதை ஓர் அரசாக அங்கீகரித்த உலகம், ஏற்கனவே அரசாக இருந்த பலஸ்தீனத்தை அரசற்றவர்களாக ஏற்றுக்கொள்வதில் எந்தத் தயக்கமும் காட்டவில்லை. அந்தளவுக்கு இஸ்ரேலிய சியோனிச ஆட்சியும் அமெரிக்காவிலுள்ள சியோனிச லொபியும் அமெரிக்காவின் செல்லப் பிள்ளையாக, அதேநேரம் அமெரிக்க வெளிநாட்டுக் கொள்ளையை தமக்கேற்ப தகவமைக்குமளவுக்கு செயற்பட்டு வந்தன. இந்த சியோனிச அரசு பலஸ்தீன இனவொதுக்கலையும் மண் ஆக்கிரமிப்பையும் குடியேற்றத்தையும் இனவழிப்பையும் திட்டமிட்ட வகையில் தொடர்ச்சியாகப் பேணி இன்று இனப்படுகொலை என்ற அளவுக்கு உயர்த்தி வெறியாட்டம் ஆடுகிறது. வரலாறு இவ்வாறாக நகர்ந்துவர ஐரோப்பியர்களும் அமெரிக்காவும் அவர்தம் பச்சை எடுபிடிகளும் ஒக்ரோபர் 7 கமாஸின் தாக்குதலை பூதாகாரமாக்கி படம் காட்டினர். இஸ்ரேல் என்ற நாடு தோன்றி 1948 இல் இஸ்ரேல் நடத்திய பயங்கரவாதம் இவர்களுக்கு ஒரு பொருட்டல்ல. அதற்கெதிராக அவர்கள் ஒருபோதுமே பேசியது கிடையாது. அந்த சியோனிசப் பயங்கரவாத செயற்பாட்டின்போது ஏழு இலட்சம் பலஸ்தீன மக்கள் வலுக்கட்டாயமாக இடம்பெயர வைக்கப்பட்டார்கள். 15’000 க்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். அவர்களை 530 கிராமங்களிலிருந்து விரட்டியடித்து, அரக்கிப் பெற்ற நிலத்தில் இஸ்ரேல் அகலக் கால்வைத்தது. 78 வீதமான பலஸ்தீன நிலப்பரப்பை கைப்பற்றி அமைந்ததுதான் இன்றைய இஸ்ரேல் என்ற நாடு. மேற்குலகுக்கு இது பயங்கரவாதமாகத் தெரியவில்லை. அவர்களது காலனிய வரலாற்றுக்கு இது புதியதுமல்ல. விரட்டப்பட்ட பலஸ்தீனர்களுக்கு தம் பிரதேசத்தின் மீதான உரிமை குறித்து பேசாத மேற்குலகினர் ஹமாஸின் ஒக்ரோபர் தாக்குதலின்போது “இஸ்ரேலுக்கு தன்னைப் பாதுகாக்கும் உரிமை இருக்கிறது” என ஒருதலைப்பட்சமாக தத்துவம் பேசினர். இவர்கள் யார். இவர்கள்தான் இதுவரை பலஸ்தீனத்தை ஓர் அரசாக அங்கீகரிக்காமல் இருப்பவர்கள். இப்போ ஐரோப்பியத் தெருக்களில் காஸா படுகொலைக்கு எதிராகவும் பலஸ்தீனத்துக்கு ஆதரவாகவும் தொடர்ச்சியாக நடக்கும் பிரமாண்டமானதும் உயிர்ப்பானதுமான ஆர்ப்பாட்டங்கள் தமது அரசியல் இருப்பை ஆட்டிவிடும் என்ற அச்சத்தில் “பலஸ்தீனத்தை அஙகீகரிக்கப் போகிறோம்” என பிரான்சும் ஜேர்மனியும் பிரித்தானியாவும் கடைசியாக அவுஸ்திரேலியாவும் கனடாவும் சொல்லவந்திருப்பது முக்கிய செய்தியாக இடம்பிடித்திருக்கிறது. 15 நவம்பர் 1988 அன்றைய பலஸ்தீன விடுதலை இயக்கத் தலைவர் யசீர் அரபாத் அவர்கள் பலஸ்தீனத்தை இறைமையுள்ள ஓர் அரசாக பிரகடனப்படுத்தினார். அதன் தலைநகரம் கிழக்கு ஜெரூசலம் எனவும் அறிவித்தார். அதை அல்ஜீரிய நாடு முதலில் அங்கீகரித்தது. அதைத் தொடர்ந்து மேலும் 82 நாடுகள் அங்கீகரித்தன. அதாவது 1988 நவம்பரிலிருந்து டிசம்பருக்குள் 83 நாடுகள் பலஸ்தீனத்தை அங்கீகரித்தன. இதற்குள் இந்தியா, சீனா, ரசியா, துருக்கி, பாகிஸ்தான், உக்ரைன் போன்ற நாடுகளும் அடக்கம். தொடர்ந்து 2000 வது ஆண்டிற்குள் மேலும் 20 நாடுகள் பலஸ்தீனத்தை அங்கீகரித்தன. இதற்குள் தென்னாபிரிக்கா, பிலிப்பைன், றுவண்டா, கென்யா, எத்தியோப்பியா என்பனவும் அடக்கம். 21ம் நூற்றாண்டின் தொடக்கத்தில், அதாவது 2000 இன் பின் 2012 வரையில் மேலும் 30 நாடுகள் பலஸ்தீனத்தை அங்கீகரித்தன. அவை பெரும்பாலும் தென்னமெரிக்க, மத்திய அமெரிக்க நாடுகள் ஆகும். பிரேசில் ,வெனிசுவேலா, பெரு, ஆர்ஜன்ரீனா, சிலி போன்ற நாடுகளும் தாய்லாந்து, லெபனான், சிரியா, ஐஸ்லாந்து போன்ற நாடுகளும் இதற்குள் அடங்குகின்றன. இத்தாலி இதுவரை கள்ள மௌனம் காக்கிற போதும்கூட, 2013 இல் ஐநாவில் அங்கம் வகிக்காத வத்திக்கான் பலஸ்தீனத்தை அங்கீகரித்தது. 2013 இலிருந்து இன்றுவரை மேலும் 10 நாடுகள் அங்கீகரித்திருக்கின்றன. இவ்வாறாக உலகின் 193 நாடுகளில் 143 நாடுகளும் வத்திக்கனும் பலஸ்தீன அரசை அங்கீகரித்திருந்த நீண்ட வரலாற்றுத் தொடர்ச்சி உள்ளது. 2014 இல் சர்வதேச குற்றவியல் நீதிமன்றமும் பலஸ்தீன அரசை அங்கீகரித்திருந்தது. 2012 இல் ஐநா இல் 138 நாடுகள் பலஸ்தீனம் ஓர் உறுப்பு நாடாக வர வாக்களித்திருந்தபோதும், இன்றுவரை தொடர்ச்சியாக ‘வீட்டோ’ அதிகாரத்தை வைத்து அதை அமெரிக்கா இல்லாமலாக்கியபடிதான் வந்திருக்கிறது. 2012 இலிருந்து இன்றுவரை பலஸ்தீனம் ‘பார்வையாளர்’ நாடாகவே ஐநா இல் குந்தியிருக்கிறது. இதுவரை அங்கீகரிக்காத மிகுதி 50 நாடுகளில் அமெரிக்கா, கனடா, அவுஸ்திரேலியா மட்டுமல்ல, பிரித்தானியா பிரான்ஸ் ஜேர்மன் உட்பட்ட பல ஐரோப்பிய நாடுகளும் உள்ளடங்குகின்றன. அப்படியிருக்க, பலஸ்தீன அரசை பிரான்ஸ், பிரித்தானியா, கனடா, ஜேர்மனி நாடுகள் எதிர்வரும் செப்ரம்பர் மாதம் ஐநா வில் அங்கீகரிக்கப் போவதாக முன்னோட்டமிட்டதை முக்கியத்துவப்படுத்தி ஊடகங்கள் செய்தி வெளியிடுகின்றன. ஐநா பொதுச் சபையில் வாக்கெடுப்புக்கு விட்டால் பலஸ்தீனம் ஓர் அரசாக மிகப் பெரும்பான்மை நாடுகளால் அங்கீகரிக்கப்படும் என்பது உறுதி. அது பாதுகாப்புச் சபைக்குப் போகும்போது அது அமெரிக்காவினால் வீட்டோ கொண்டு அடித்து வீழ்த்தப்படும் என்பதும் தெரிந்த ஒன்றுதான். இது மக்ரோனுக்கும் தெரியும், இப்போ இந்தா அங்கீகரிக்கிறோம் என குரல்விடும் மேற்குலக நாடுகளுக்கும் தெரியும். இங்குதான் அரசியல் இருப்பை காப்பாற்ற வெகுண்டெழும் மக்களை சமாதானப்படுத்த செய்யும் நாடகமா இது என சந்தேகப்பட வேண்டியிருக்கிறது. எது எப்படியோ இராஜதந்திர ரீதியில் இவர்களின் அறிவிப்பை சாதகப்படுத்திக் கொள்ளலாம், சந்தேகத்தோடு!. இந்தச் சந்தேகத்தை தீர்க்கவேண்டியது அவர்கள்தான். அவர்களது செயற்திறன்தான். அமெரிக்கா வீட்டோ அதிகாரத்தை இதுவிடயத்தில் பயன்படுத்தாமலிருக்க செய்துகாட்டும் முயற்சிகள்தான் அந்த செயற்திறன் ஆகும். 1988 இல் தொடங்கிய பலஸ்தீன அரசுப் பிரகடனத்தை இன்றுவரை 143 நாடுகள் ஏற்றுக் கொள்ளும் வரையான அவர்களின் மௌனத்துக்கு காரணம்தான் என்ன. அதற்கான சுயவிளக்கம்தான் என்ன. சுயவிமர்சனம்தான் என்ன என்பதை அவர்கள் பேசட்டும். கேட்போம். இஸ்ரேல் என்ற அரசை ஏற்கனவே அங்கிகரித்ததால், “இஸ்ரேலுக்கு தன்னை பாதுகாக்கிற உரிமை இருக்கிறது” என சொன்ன இவர்கள், இப்போதாவது பலஸ்தீனத்தை ஓர் அரசாக அங்கீகரிக்கிறோம் என வரும்போது “பலஸ்தீனத்துக்கு தன்னை பாதுகாக்கிற உரிமை இருக்கிறது” என இதுவரை அறிவிக்க முடியாமல் இருப்பது ஏன்?. இங்குதான் அவர்கள் ஹமாஸிடம் வருகிறார்கள். “ஹமாஸ் ஆயுதத்தை கீழே வைத்துவிட வேண்டும். அவர்கள் அரசியலுக்குள் வரக்கூடாது” என்பன போன்ற நிபந்தனைகளை உருவாக்குகிறார்கள். இதற்குள் தெரிவது அவர்களின் சூழ்ச்சிதான். ஹமாஸ் அரசியல் அதிகாரம் பெறுவது பெறாதது என்பதெல்லாம் பலஸ்தீன மக்களின் தெரிவுக்கானவை. இவர்களது தெரிவுக்கானதல்ல. அதை உச்சரிக்க இவர்கள் யார். அது இஸ்ரேலின் குரல். அதை இவர்களும் ஒலிக்கிறார்கள். காஸாவிலும் மேற்குக் கரையிலும் முதலில் ஆயுதத்தை கீழே வைக்க வேண்டியது -தாக்கும் நிலையிலுள்ள- இஸ்ரேலிய பாதுகாப்புப் படையும் சியோனிச குடியேற்றவாதிகளும்தான். பாதுகாப்பு நிலைக்குள் தள்ளப்பட்ட ஹமாஸ் அல்ல. ஹமாஸ் அமெரிக்காவும் பிரித்தானியாவும் உருவாக்கிய அல்கைடா, ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு போன்றதல்ல. சர்வதேச ரீதியில் பயங்கரவாதச் செயல் புரிந்த அமைப்புமல்ல. ஹமாசுடன் உடன்படுவதா இல்லையா என்ற விடயம் ஒருபுறம் இருக்கட்டும். அதற்கு முன்னால் எழும் கேள்வி அவர்களின் இருப்பை சாத்தியப்படுத்துவது எது என்பதே. அவர்கள்தான் இன்று நடைமுறையில் பலஸ்தீன அரசின் காஸா பகுதியை பிரதிநிதிப்படுத்தக் கூடிய, பாதுகாக்கும் உரிமையை செயற்படுத்தக்கூடிய சிறிய சக்தியாக இருக்கின்றனர். அவர்களிடம் வான்படை இல்லை. கடற்படை இல்லை. ஏன் இராணுவமும் இல்லை. வெறும் கெரில்லாக் குழு வடிவில் சுருங்கிப் போயிருப்பவர்கள் அவர்கள். அவர்களை வளர்ப்பது இஸ்ரேலிய அரச பயங்கரவாதம்தான். அப்படியிருக்க ஹமாஸை ஆயுத நீக்கம் செய்ய அல்லது அரசியல் நீக்கம் செய்யக் கோருவதானது, மக்கள் பக்கம் முகம் காட்டும்போது பலஸ்தீன அரசை அங்கீகரிப்பது போலவும், இஸ்ரேல் பக்கம் முகம் காட்டும்போது ஹமாஸை அங்கீகரிக்கவில்லை என்பதுபோலவும் நடத்தும் இரட்டை வேடம் ஆகும். ஹமாஸை அஙகீகரிக்கவில்லை என்பதன் மூலம் பலஸ்தீன அரசு உருவாவதை இல்லாமல் செய்து, அதற்கான பழியை ஹமாஸிடம் போடுவது சுலபமானது. இன்னொரு பக்கம் தமது மக்களை அவர்களது வீதிநிரம்பும் போராட்டங்களை காயடிக்கும் வேலையை இதன் மூலம் செய்யலாம் என அவர்கள் நம்புகிறார்கள். மேற்குலகம் ஹமாஸை ‘பயங்கரவாதிகள்’ என நெத்தன்யாகுவின் வார்த்தைகளில் உச்சரிக்கிறார்கள். காஸா மக்கள் அல்லது முழு பலஸ்தீன மக்கள் இதை ஏற்றுக் கொள்வார்களா என நமக்குத் தெரியாது. அது அவரவர் தெரிவாக, தவிர்க்க முடியாதவையாக அல்லது நியமங்களை வைத்து அளப்பவையாக அல்லது பிரச்சார உத்தி கொண்டவையாக இருக்கும். அரச பயங்கரவாதம் சட்டங்களால், ஆட்சியதிகார நிறுவனங்களால் இயல்பாக்கம் செய்யப்பட்டிருக்கிறது. அரச பயங்கரவாதத்தையோ எதிர்ப் பயங்கரவாதத்தையோ இயல்பாக்கம் செய்வது ஆபத்தானது. அதேநேரம் அவை நிகழ்த்தப்படுதலின் மீதான ஆதரவு, எதிர்ப்பு அல்லது இரண்டுக்கும் இடையிலான மூன்றாவது நிலைப்பாடு என்பது அவரவர் சார்ந்த கண்ணோட்டத்தில் வேறுபடவே செய்கிறது. யூத இன புத்திஜீவியான நோர்மன் பின்கல்ஸ்ரைன் அவர்கள் ஹமாஸை ‘பயங்கரவாதிகள்’ என அழைப்பதை ஏற்கவில்லை. அது குறித்து அவர் கூறுவது இதுதான். “2006 இல் காஸாவிலும் மேற்குக் கரையிலும் நடந்த பாராளுமன்றத் தேர்தலில் ஹமாஸ் அமைப்பினர் பெரும்பான்மை வெற்றியை ஈட்டி அதிகாரத்துக்கு வந்தனர். இவ்வாறு ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஹமாஸ் இனை நிராகரித்து இஸ்ரேல் ‘முற்றுகையை’ செயற்படுத்தியது. அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் பொருளாதாரத் தடைகளை விதித்தன. காஸாவுக்குள் வரும் உணவுப் பொருட்களின் அளவையும் நீரின் அளவையும் மருந்தின் அளவையும் மற்றும் எல்லா அத்தியாவசிய பொருட்களையும் இஸ்ரேல்தான் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. (இன்றும் அதேதான் நீடிக்கிறது) காஸாவுக்குள் எவருமே உள்நுழைய முடியாது. அதேபோல் காஸாவிலிருந்து எவருமே வெளியே செல்ல முடியாது. இந்த 19 (2006-2025) வருடத்திலும் இளையோர்கள் இந்த 5×25 சதுர மைல் பரப்பளவுக்கு வெளியே தம் வாழ்வில் எதையும் கண்டதில்லை. முன்னாள் பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூன் அவர்கள் காஸாவை ஒரு “திறந்தவெளிச் சிறைச்சாலை” என வர்ணித்தார். இஸ்ரேலின் முன்னணி சமூகவியலாளர் Baruch Kimmerling ஹிப்ரூ மொழியில் (2003) எழுதிய “ஆரியல் ஷரோனின் பலஸ்தீனத்துக்கு எதிரான போர்” என்ற தனது நூலில் காஸாவை இதுவரை தோன்றியிராத மிகப் பெரும் “கொன்சன்றேசன் முகாம்” (கொ.மு) என வர்ணித்தார். அரைவாசிப் பேர் இந்த கொ.மு க்குள் பிறந்து குழந்தைகளாகி சிறுவர்களாகி இளையோர்களாகி வளர்ந்தவர்களாகினர். அவர்களது அனுபவங்கள் இந்த கொ.மு எல்லைக்குள்தான் இருந்தது. இந்த கொ.மு இல் பிறந்த அதே மனிதன் ஒக்ரோபர்-7 இல் அந்த அடிமை நிலையிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள முயன்றதை, அதற்காக அவர்கள் என்னவிதமான தந்திரோபாயத்தை வழிமுறையை உபயோகித்தார்கள் என்பதை யார்தான் விமர்சிக்க முடியும்?. அப்படியொரு கொ.மு இனுள் நானும் பிறந்து 20 வருட வாழ்வை அங்கு வாழ்ந்திருந்தால் என்ன செய்திருப்பேன் என எனக்குத் தெரியாது” என்றார். இந்த யதார்த்தத்தை மறுத்து மேற்குலகின் ஜனநாயக மதிப்பீடுகளும் அரசியல் சார்புகளும் நலன்களும் ஹமாஸை ‘பயங்கரவாதிகள்’ என வரையறை செய்கின்றன. சரி கனவான்களே. அப்படியேதான் இருக்கட்டும். ஓர் அரசாக அங்கீகரிக்கப் போவதாக நீங்கள் சொல்லும் பலஸ்தீனத்துக்கு ஆதரவாகவும் காஸா படுகொலைக்கு எதிராகவும்தானே உங்களது நாட்டு மக்கள் உணர்வுபூர்வமாக போராடுகிறார்கள். உங்கள் குரலுக்கு எதிராக அல்லவே. அவர்களை ஏன் கைதுசெய்ய வேண்டும். அடித்து நொருக்க வேண்டும். சட்டங்களை இயற்றி சிறை வாழ்வுக்குத் தள்ள வேண்டும். அவர்கள் அமைதியாகத்தானே போராடுகிறார்கள். நேட்டோ என்ற மிகப் பெரும் வன்முறை இயந்திரத்தை இயக்கி எத்தனை போர்களை செய்தீர்கள். மில்லியன் மக்களை கொன்றீர்கள். அரசுகளை வீழ்த்தினீர்கள். தலைவர்களை கொலை செய்தீர்கள். மில்லியன் குழந்தைகளை கொலை செய்தீர்கள். எல்லாமும் நெத்தன்யாகுவுக்கும் தெரியும். 2022 ஒக்ரோபரிலிருந்து இன்றுவரை கள்ள மௌனம் சாதித்துவிட்டு, இப்போ காஸா குழந்தைகளை கொல்வதை முன்னிறுத்திப் பேசும் உங்கள் அறத்தின் போலிமையை நெத்தன்யாகுவும் அறிவார். அதனால்தான் உங்கள் குரல் மீது அவர் உமிழ்ந்துவிட்டு நகர்ந்து போகிறார். பலஸ்தீனம், இஸ்ரேல் என்ற “இரு அரசு” (two state) தீர்வு என்பது ஒரு வகைப்பட்ட அரசியல் தீர்வு. அது சரியா, தவறா, சாத்தியமா என விவாதங்கள் தொடர்ந்தபடிதான் இருக்கிறது. சரியென்றே எடுத்துக் கொள்வோமே. அதை உறுதியாக்க அந்த மண்ணில் மக்கள் உயிரோடு இருக்க வேண்டும். தேக ஆரோக்கியத்தோடு இருக்க வேண்டும். சந்ததிகள் தப்பிப் பிழைக்க வேண்டும். அவர்கள் கடந்த 22 மாதங்களாக பசிக்கு எதிராக போராடுகிறார்கள். எலும்புக் கூடுகளாக மாறிக் கொண்டிருக்கிறார்கள். முதலில் அதற்கான உங்களது தீர்வு என்ன என்பது இதுவரை தெரியவில்லை. அதை செயற்படுத்த இஸ்ரேலின் மீது நீங்கள் செயற்படுத்தும் அழுத்தம் என்ன என்பதும் தெரியவில்லை. இஸ்ரேல் மீது பொருளாதாரத் தடை ஏதும் இல்லை. ஆயுத ஏற்றுமதித் தடை ஏதுமில்லை. ஒப்பந்த இடைநிறுத்தங்கள் ஏதுமில்லை. உக்ரைன் பிரச்சினையில் இரசியா மீது 27’000 பொருளாதாரத் தடைகளை விதித்த அந்த அளவுகோல் இங்கு ஏன் வளைந்து நெளிந்து கொண்டது? ஐநாவின் அங்கீகாரத்தோடுதானா நீங்கள் நாடுகளின் இறைமையை மதிக்காமல் உட்புகுந்து போர் நடத்தி மக்களை கொன்றீர்கள். இஸ்ரேல் சர்வதேச மக்களின் குரலையும் கேளாமல், ஐநா வினது தீர்மானங்களையும் குரலையும் கேளாமல், ஓர் இனப்படுகொலையை கண்முன்னே நடத்திக் கொண்டிருக்கிறது. இன்று அதே அதிகாரத்தை எடுத்து இஸ்ரேலை புறந்தள்ளி, காஸாவுக்குள் புகுந்து உணவு தண்ணீர் மருத்துவம் என உடனடித் தேவைகளை நிறைவேற்றவும், அந்த மக்களுக்கு இஸ்ரேலிய கொலைப்படையிடமிருந்து பாதுகாப்புக் கொடுக்கவும் முடியாமலிருப்பதற்கான விளக்கம்தான் என்ன. சும்மா விமானத்திலிருந்து உணவுப் பொதியை ஓரிரு முறை வீசி படம் காட்டியதற்கு அப்பால் எதுவரை சென்றிருக்கிறீர்கள். உலக மக்களின் கண் முன்னால் இஸ்ரேல் நடத்தும் ஓர் பட்டினிப் படுகொலையை விடவும், இனப்படுகொலையை விடவும், 20’000 குழந்தைகளின் மரணத்தை விடவும் இஸ்ரேலின் ‘இறைமை’ உங்களுக்கு முக்கியமானதாகப் போய்விட்டது. உங்கடை ஜனநாயகம் மனித உரிமை அறம் எல்லாமும் புல்லரிக்க வைக்கிறது. போங்கள்! - Ravindran Pa https://sudumanal.com/2025/08/15/அங்கீகரித்தலின்-அரசியல்/#more-7337
  8. சுமந்திரனின் கர்த்தால்? - நிலாந்தன் சுமந்திரன் ஒரு கிறிஸ்தவர். அவரைச் சுற்றியிருக்கும் யாருமே அவருக்கு கடந்த 15ஆம் திகதி மடுப் பெருநாள் என்பதைச் சொல்லவில்லையா? இது நல்லூர் திருவிழாக் காலம் என்பதைச் சொல்லவில்லையா? இந்த இரண்டு திருவிழாக்களுக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் வருவார்கள் அவர்களை ஏற்றி இறக்க பேருந்துகள் ஓடும். குறிப்பாக மடுத் திருவிழாவுக்கு இந்துக்களும் போவார்கள். அது மத பேதமின்றி இன பேதமின்றி யாத்திரிகர்கள் வந்துகூடும் ஓராலயம். பெருநாளை முன்னிட்டு சில நாட்களுக்கு முன்னரே யாத்திரிகர்கள் வரத்தொடங்கி விடுவார்கள். எனவே தொடர்ச்சியாக சில நாட்களுக்கு வடக்கிலிருந்து பேருந்துகள் ஓடும். இந்த விடயங்களை ஏன் சுமந்திரன் கவனத்தில் எடுக்கவில்லை? அவரைச் சுற்றியிருக்கும் யாருமே இதை அவருக்குச் செல்லவில்லையா? அல்லது தனது மக்களின் பண்பாட்டு பெருவிழாக்களைக் குறித்துச் சிந்திக்க முடியாத அளவுக்கு அவர் தன்னுடைய மக்களின் பண்பாட்டு இதயத்திலிருந்து புறத்தியாக நிற்கின்றாரா ? இது போன்ற பண்பாட்டு விடயங்களைச் சுட்டிக்காட்டுவதற்கு அவருக்கு அருகில் யாரும் இல்லையா? அல்லது அவர் யாரிடம் கேட்டு இதுபோன்ற முடிவுகளை எடுக்கிறார்? அல்லது அவர் முடிவெடுக்கும்பொழுது யாரிடமும் எதையும் கேட்பதில்லையா? அவர் மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒரு பிரதிநிதி அல்ல. அவருடைய வார்த்தைகளில் சொன்னால் மக்களின் ஆணை அவருக்கு இல்லை. கட்சிக்குள்ளும் அவர் பதில் செயலாளர்தான். பதில்தான். ஆனால் அவர்தான் கட்சியின் முகமாக,கட்சியின் எல்லாமமாகத் தோன்றுகிறார். அண்மையில் அவர் வெளி நாடுகளுக்குப் போயிருந்தார். அங்கே அவர் ராஜதந்திரிகளைச் சந்தித்துப் பேசியதாக அவருடைய அரசியல் எதிரிகள் கூறுகிறார்கள். வரும் செப்டம்பர் மாதம் நடக்கவிருக்கும் ஜெனிவா கூட்டத் தொடரை முன்னிட்டு அவர் அவ்வாறு மேற்கத்திய ராஜதந்திரிகளைச் சந்தித்துப் பேசியதாகக் கூறப்படுகிறது. அது தனிப்பட்ட பயணம் என்று சுமந்திரன் கூறியிருக்கிறார். ஆனால் அவர் ராஜதந்திரிகளைச் சந்தித்ததாகப் புலம்பெயர்ந்த தமிழர் தரப்புகள் கூறுகின்றன. அவை கூறுவது உண்மையாக இருந்தால்,அவர் கட்சியின் அனுமதியோடுதான் அச்சந்திப்புகளில் ஈடுபட்டாரா? அங்கே என்ன கதைக்கவேண்டும் என்பதனை கட்சி ஏற்கனவே கூடி முடிவெடுத்திருந்ததா? அவ்வாறான சந்திப்புகளில் என்ன கதைக்கப்பட்டது என்பதனை அவர் கட்சிக்குத் தெரிவித்தவரா? அதை அவர் மக்களுக்குக் கூறத் தேவையில்லையா? நடப்பு நிலைமைகளைப் பார்த்தால், அவர் யாரோடும் எதையும் கலந்தாலோசித்து முடிவெடுப்பதில்லை என்றுதான் தோன்றுகிறது. கடந்த 20 மாதங்களாக, அதாவது கடந்த ஆண்டின் தொடக்கத்தில் தனது கட்சி ஆட்களாலேயே நிராகரிக்கப்பட்ட பின், அவருடைய நடவடிக்கைகளைத் தொகுத்துப் பார்த்தால், ஏறக்குறைய மந்திரித்துவிட்ட சேவலைப் போல அவர் எதையோ நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறார். அடிக்கடி காணொளிகளில் வருகிறார். கட்சிக்குள் தன்னைப் பலப்படுத்துவது;கட்சியின் முகமாகத் தொடர்ந்தும் தோன்றுவது; கட்சியின் தீர்மானங்களைத் தானே எடுப்பது; மத்திய குழுவை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது; எட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கத்தக்கதாக கட்சி தொடர்பான ராஜதந்திர நகர்வுகளை தானே முன்னெடுப்பது….இதைத்தான் கடந்த 20 மாதங்களாக அவர் செய்து வருகிறார். கட்சிக்குள் யாரும் அதை எதிர்ப்பதாகத் தெரியவில்லை. அவர் கடையடைப்புக்கு அழைப்பு விடுத்த விடயம் சரியானது. அதை மனோ கணேசனும் முஸ்லீம் தலைவர்களும் ஆதரித்துள்ளார்கள். . படையின் முகாம்கள் மக்கள் குடியிருப்புகள் மத்தியில் இருப்பதினால்தான் கடந்த வாரம் முல்லைதீவில் இடம்பெற்றது போன்ற சம்பவங்கள் நிகழ்வதாக சுமந்திரன் கூறுகிறார். தமிழர் தாயகத்தில் படையினரை நீக்கக் கோரி தமிழ் மக்கள் போராட வேண்டும். அதில் சந்தேகம் இல்லை. அந்த இடத்தில் சுமந்திரன் சரி. ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்த பின்னரும் கடந்த 16ஆண்டுகளாக படைமய நீக்கம் முழுமையாக நிகழவில்லை. இலங்கையின் மொத்தப் படைக் கட்டமைப்பில் ஏறக்குறைய மூன்றில் இரண்டு பகுதி தமிழ் பகுதிகளில்தான் நிலை கொண்டிருக்கிறது என்று உத்தியோகப்பற்றற்ற புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. எனவே படைமய நீக்கம் அவசியம். அதை வலியுறுத்தி தமிழ் மக்கள் போராட வேண்டியதும் அவசியம். அதில் யாருக்கும் சந்தேகம் இல்லை. ஆனால் பிரச்சினை எங்கே வருகிறது என்றால், அதற்காக கடையடைப்பு ஒரு பொருத்தமான போராட்டமா என்பதுதான். சுமந்திரனை எதிர்க்கும் பலரும் கடையடைப்பையும் எதிர்க்கிறார்கள். அது தவறு. அரசியலில் சில சமயம் பிழையான ஆட்கள் சரியான செயல்களைச் செய்வதுண்டு. கடையடைப்பு என்ற போராட்ட வடிவம் குறித்து கேள்விகளை எழுப்பலாம். வேறு போராட்ட வடிவங்களைக் குறித்துச் சிந்திக்கலாம். அரசாங்கத்துக்கு நோகக்கூடிய விதத்திலும் அரசாங்கத்தை ஆதரிக்கும் நாடுகளின் கவனத்தை ஈர்க்கும் விதத்திலும் குறிப்பாக, ஐநாவின் கவனத்தை ஈர்க்கும்விதத்திலும் அதைவிடக் குறிப்பாக ஐநாவில் தமிழ் மக்கள் தொடர்பான தீர்மானத்தைக் கொண்டுவர இருக்கும் “கோ குரூப்” நாடுகளின் கவனத்தை ஈர்க்கும் விதத்திலும் அழுத்தங்களைப் பிரயோகிக்கத்தக்க போராட்ட வடிவங்களைச் சிந்திக்கலாம். அரசாங்கத்துக்கு நோகத்தக்க விதத்தில் போராடுவது என்று சொன்னால் சம்பவம் நடந்த மாவட்டத்தில் ஒரு மக்கள் பேரெழுச்சியை ஒழுங்குபடுத்தலாம். அதை ஏனைய மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தலாம். இது முதலாவது. இரண்டாவதாக,அரசு அலுவலகங்களை முடக்கக்கூடிய விதத்தில் அரசு அலுவலகங்களைச் சுற்றி வளைக்கலாம். மூன்றாவதாக,ஐநாவில் முடிவெடுக்கும் நாடுகளின் தூதரகங்களின் முன்னாள் கவன ஈர்ப்புப் போராட்டங்களை ஒழுங்கு செய்யலாம். அந்தக் கவன ஈர்ப்புப் போராட்டங்கள் படைப்புத்திறன் மிக்கவைகளாக இருக்கவேண்டும். மனித உரிமைகள் ஆணையாளர் செம்மணிக்கு வந்த பொழுது நிகழ்த்தப்பட்ட அணையா விளக்கு போராட்டத்தைப் போல. எனவே இதுபோன்ற பல வழிகளிலும் அரசாங்கத்துக்கு நோகக்கூடிய விதத்தில் போராடலாம். கடையடைப்பு அழைப்பவருக்கு இலகுவான ஒரு போராட்டம். மாறாக,கடைகளை மூடும் வியாபாரிகளுக்கும் பொதுப் போக்குவரத்தை நிறுத்தும் தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கும் அன்றாடம் காய்சிகளுக்கும் அன்றாடம் வேலை செய்பவர்களுக்கும் அதனால் இழப்பு ஏற்படும். அந்த இழப்பைக்கூட நாட்டுக்காக ஒருநாள் செய்யும் தியாகம் என்று நியாயப்படுத்த முடியும். ஆனால் கடையடைப்போ அல்லது பொது முடக்கமோ எதுவாக இருந்தாலும் அது அரசாங்கத்துக்கு நோக வேண்டும். அரசாங்கத்துக்கு நோகக் கூடிய விதத்தில் அழுத்தமாகப் போராட வேண்டும். அப்படிப்பார்த்தால் கடையடைப்பு அரசு அலுவலகங்களுக்கு நோகாது. ஏனென்றால் கடையை அடைத்தாலும் பொதுப் போக்குவரத்தை முடக்கினாலும் அரச அலுவலகங்கள் தொடர்ந்து இயங்கும். ஏன் பாடசாலைகளே இயங்கும். ஆசிரியர்கள் வருவார்கள்; அதிபர்கள் வருவார்கள்; மாணவர்கள் மட்டும் வர மாட்டார்கள். நாளை, இரண்டாம் தவணை விடுமுறை முடிந்து பாடசாலைகள் மீண்டும் தொடங்குகின்றன. எனவே கடையடைப்பைவிட அழுத்தமான, கூர்மையான படைப்புத்திறன்மிக்க அறவழிப் போராட்டங்களை சிந்தித்து முடிவெடுக்க வேண்டும். அதற்குக் கூடிக்கதைக்க வேண்டும். அதைவிட முக்கியமாக தமது சொந்த மக்களை நேசிக்க வேண்டும். தனது மக்களை விசுவாசிக்கும் எந்த ஒரு செயற்பாட்டாளருக்கும் போராட்டத்தின் வழி தானாகத் திறக்கும். அதிலும் குறிப்பாக உலகில் வெற்றி பெற்ற பெரும்பாலான எல்லா அறவழிப் போராட்டங்களும் சட்ட மறுப்புப் போராட்டங்கள்தான். சட்டத்தரணிகள் தங்களுடைய சட்டரீதியிலான சௌகரிய வலையத்துக்கள் நின்றுகொண்டு போராட முடியாது.சட்ட மறுப்பாகப் போராட சுமந்திரன் தயாரா? ஆனால் சுமந்திரனின் போராட்டத்தை விமர்சிப்பவர்கள் அவ்வாறு பார்க்கவில்லை. “அவர் மக்களுக்காகப் போராடவில்லை. அல்லது பாதிக்கப்பட்ட குடும்பத்துக்காகப் போராடவில்லை. அல்லது படைமய நீக்கத்துக்காகப் போராடவில்லை. மாறாக கட்சிக்குள் தன் முதன்மையைப் பலப்படுத்தவும் தமிழ்த்தேசிய அரசியலில் தன்னுடைய இன்றியமையாமையை நிருபிப்பதற்கும் அவர் இந்தப் போராட்டத்தைப் பயன்படுத்துகிறார்” என்றுதான் அவர்கள் விமர்சிக்கின்றார்கள். அவ்வாறு விமர்சிக்கத்தக்க விதத்தில்தான் அவருடைய நடவடிக்கைகளும் காணப்படுகின்றன.கடந்த வாரம் ஐநாவுக்கு ஒரு கடிதம் அனுப்பப்பட்டது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சிவில் சமூகங்களோடு இணைந்து அந்தக் கடிதத்தைத் தயாரித்தது.அந்தக் கடிதத்தில் தமிழரசுக் கட்சி கையெழுத்துப் போடவில்லை. அந்த முடிவைப் பெரும்பாலும் சுமந்திரனே எடுத்திருப்பதாகக் கருதப்படுகிறது. அவர் சொன்னதைச் சிவஞானம் திரும்பிச் சொல்கிறார் என்றுதான் எல்லாரும் நம்புகிறார்கள். எனவே இந்த விடயத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியோடு இணைந்து ஒரு கூட்டுக் கடிதத்தை அனுப்புவதற்கு சுமந்திரன் தயாராக இருக்கவில்லை. அந்த விடயத்தில் தமிழ்த் தேசியக் கட்சிகளோடு இணைந்து முடிவெடுத்திருந்திருந்தால் இன்றைக்கு கடையடைப்பை அல்லது அதுபோன்ற ஏதோ ஒரு போராட்டத்தை எல்லாருமாகச் சேர்ந்து தரமாகச் செய்திருக்கலாம். அதற்குத் தமிழரசுக் கட்சியின் ஈகோ இடம் கொடுக்கவில்லை. ஆனால் அதற்கு சுமந்திரன் ஒவ்வொரு நாளும் காணொளியில் வந்து விளக்கம் கொடுக்கிறார்.அவர் தரும் விளக்கங்களில் முக்கியமானது, நாங்களே பெரிய கட்சி நாங்களே முதன்மைக் கட்சி எனவே நீங்கள் கடிதத்தை எழுதிவிட்டு எங்களை அதில் கையெழுத்துப் போடுமாறு கேட்க முடியாது என்ற பொருள்பட அமைந்துள்ள விளக்கந்தான். அதில் ஒரு பகுதி உண்மை. அவர்கள்தான் பெரிய கட்சி; அவர்கள்தான் முதன்மைக் கட்சி. அதில் யாருக்கும் சந்தேகமில்லை. ஆனால் இங்கே கேள்வி என்னவென்றால், கடந்த 16 ஆண்டுகளாக அவர்களே முதன்மைக் கட்சியாகவும் முடிவெடுக்கும் கட்சியாகவும் இருந்து தமிழ் மக்களுக்கு செய்த நன்மைகள் என்ன? கடந்த 16 ஆண்டுகாலத் தமிழரசியலில் ஏற்பட்ட தேக்கங்கள்,தோல்விகள், பின்னடைவுகள் போன்ற எல்லாவற்றிற்கும் அவர்கள்தான் பொறுப்பேற்க வேண்டும். அதுமட்டுமல்ல அனைத்துலக அளவில் குறிப்பாக ஐநாவில் தமிழ் மக்களின் விவகாரம் மேலும் நீர்த்துப்போகக்கூடிய ஆபத்து தெரிகிறது. அதற்கும் தமிழரசுக் கட்சிதான் பொறுப்பேற்க வேண்டும். 2015இலிருந்து ஐநாவின் நிலைமாறுகால நீதிக்கான தீர்மானத்தை நோக்கி தமிழரசியலைச் செலுத்தியது முக்கியமாக சுமந்திரனும் சம்மந்திருந்தான்.அது ஒரு தோல்வியுற்ற பரிசோதனை என்று பின்னர் சுமந்திரன் சொன்னார். அது அவர்களுடைய தனிப்பட்ட தோல்வி அல்ல. இனத்தின் தோல்வி.இப்பொழுதும் ஐநாவை கையாளும் விடயத்தில் தமிழரசுக் கட்சியின் அணுகுமுறை வெளிப்படையாயானதாக, ஐக்கியமானதாக இல்லை.இதில் வரக்கூடிய தோல்விக்கு யார் பொறுப்புக் கூறுவது? கட்சி வேறுபாடுகளைத் தூக்கி ஓரத்தில் வைத்து விட்டு இனமாகத் திரள வேண்டிய விடயங்களில் அதாவது ஐநாவைக் கையாள்வது,படை நீக்கத்துக்காகப் போராடுவது போன்ற விடயங்களில் இனமாகத் திரள முடியாததற்கு யார் பொறுப்பு ?சுமந்திரன் பொறுப்பில்லையா? https://www.nillanthan.com/7654/#google_vignette
  9. வாடகை வீடு தேடும் மகிந்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ விஜேராமாவில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டு வெளியேறத் தயாராகி வருவதாகக் கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஓய்வுபெற்ற ஜனாதிபதிகளின் சலுகைகளை நீக்குவதற்கான சட்டமூலத்தை நிறைவேற்ற அரசாங்கம் தயாராகி வரும் பின்னணியில் அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது. குறித்த புதிய சட்டமூலம் நிறைவேற்றப்படுவதன் மூலம், முன்னாள் ஜனாதிபதிகள் தங்கள் ஓய்வு காலத்தைஉத்தியோகபூர்வ இல்லத்திற்கு கழிக்க உரிமை இல்லை. இந்நிலையில், அவர் தற்போது பொருத்தமான வாடகை வீட்டைத் தேடி வருவதாக அறியப்படுகிறது. மெதமுலானையில் உள்ள தனது வீட்டிற்கு அவர் செல்ல விரும்பினாலும், கொழும்புக்கு கணிசமான தூரம் பயணிப்பதில் உள்ள சிரமத்தையும், அவரது மருத்துவ நிலைமைகளுக்கு சிகிச்சை பெறுவதில் உள்ள சிரமத்தையும் கருத்தில் கொண்டு அவர் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக கூறப்படுகின்றது. அவர் தங்குவதற்கு பொருத்தமான வீடுகள் குறித்து பல திட்டங்கள் முன்வைக்கப்பட்டிருந்தாலும், பாதுகாப்பு காரணங்களுக்காக அவை இன்னும் பரிசீலிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. https://akkinikkunchu.com/?p=337253
  10. கட்டுநாயக்க விமான நிலையத்தில் குழப்பம் – பயணிகள் பெரும் அவதி பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நேற்றிரவு கடுமையான நெரிசல் ஏற்பட்டதாகவும், செக்-இன் கவுண்டர்கள் மற்றும் குடியேற்ற மையங்களில் நீண்ட வரிசைகள் காணப்பட்டதாகவும் பயணிகள் முறைப்பாடு தெரிவித்துள்ளனர். இவ்வாறு ஏற்பட்ட தாமதங்கள் காரணமாக தங்கள் விமானங்களை தவறவிட்டதாக பல பயணிகள் தெரிவித்துள்ளனர். விமான நிலையம் அதிக கொள்ளளவுக்கு அதிகமாக இயங்கியதாகவும், ஒரே நேரத்தில் பல விமானங்கள் திட்டமிடப்பட்டிருந்ததாகவும், இதனால் புறப்படும் பகுதிகளில் கூட்டம் அதிகமாக இருந்ததாகவும் பயணிகள் தெரிவித்தனர். குழப்பமான சூழ்நிலை குறித்து பலர் விரக்தியை வெளிப்படுத்தினர். எதிர்காலத்தில் இதுபோன்ற இடையூறுகளைத் தவிர்க்க பணியாளர்கள் மற்றும் திட்டமிடல் பிரச்சினைகளை நிவர்த்தி செய்யுமாறு அதிகாரிகளை வலியுறுத்தி பலர் சமூக ஊடகங்களில் வலியுறுத்தினர். https://akkinikkunchu.com/?p=337247
  11. இனப்படுகொலையாளர்களை பாதுகாப்பது தமிழ், முஸ்லிம் இன விரிசல்களை ஏற்படுத்தும் - அருட்தந்தை மா.சத்திவேல் இனப்படுகொலையாளர்களுக்கு மேடை அமைத்துக் கொடுப்பதும், இனப் படுகொலையாளர்களை பாதுகாப்பதும் தமிழ்- முஸ்லிம் இன விரிசல்களையே ஏற்படுத்தும் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார். அவரால் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கொடூர இனப்படுகொலைக்கு முகம் கொடுத்துக் கொண்டிருக்கும் பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாகவும், இஸ்ரேலுக்கும் அதன் இனப்படுகொலையை ஆதரிக்கும் நேச நாடுகளுக்கு எதிராகவும் நேற்றுமுன்தினம் பாரிய ஆர்ப்பாட்டம் கொழும்பு பொரல்லை மலையன சுற்றுவட்டாரத்தில் ஆரம்பித்து கெம்பல் மைதானத்தில் நடந்த எதிர்ப்பு போராட்டம் எதிர்ப்பு கோசத்தோடு முடிவுக்கு வந்தது. இப்போராட்டம் இனப்படுகொலைக்கு முகம் கொடுத்து தொடர் இன அழிப்பிற்கு முகம் கொடுத்துக் கொண்டிருக்கும் தமிழர்களை முகம் சுழிக்க வைத்ததோடு ஆர்ப்பாட்டத்தில் இருந்து வெளியேறும் மனநிலையை உருவாக்கியமை வேதனைகுரியதே. இலங்கையின் இனப்படுகொலைக்கு முழு மூச்சாக ஆதரவு தெரிவித்த மக்கள் விடுதலை முன்னணி ஆதரவாளர்கள், அதன் நாடாளுமன்ற உறுப்பினர்கள், தமிழர்களின் விடுதலை அமைப்பை பாசிச வாத அமைப்பு என்றும், தேசிய தலைவரை பாசிச வாதி எனவும் மேடை கட்டி பேசியவர்கள் கூட்ட முன் வரிசையை அலங்கரித்தோடு மேடை ஏறி வீர வசனம் பேசியமை மட்டுமல்ல நிகழ்வு ஆரம்பம் இலங்கை தேசியக்கொடி திரையில் அசைந்தாட தேசிய கீதத்தோடு ஆரம்பமானது. இலங்கையில் இன அழிப்பு,இன சுத்திகரிப்பு, இனப்படுகொலை என்பன தேசிய கொடியோடும் தேசிய கீதத்தோடும் நடத்தப்பட்டதோடு அதன் வெற்றியின் அடையாளமாகவே சிங்கள பௌத்த பெரும் தேசிய வாதம் அதனை தம் அடையாளமாக கொண்டுள்ளது. பேரினவாதம் நிகழ்த்திய இனப்படுகொலைக்கு முழுமூச்சாக ஆதரவு தெரிவித்து படைக்கு தேவையானவர்களை கிராம புறத்தில் இருந்து திரட்டி கொடுத்து முள்ளிவாய்க்கால் இனபடுகொலையை பாதையில் பால் சோறு சமைத்து தேசிய வெற்றியாக கொண்டாட வைத்து மகிழ்ந்தவர்கள் பாலஸ்தீன மக்கள் முகம் கொடுக்கும் இனப்படுகொலைக்கு எதிரானவர்களாக இருப்பதாக காண்பிப்பது முஸ்லிம்களை தமது அரசியலுக்குள் இழுப்பதற்காகவே அன்றி வேறில்லை. போராட்ட ஒழுங்கமைப்பினர் போராட்ட பேரணியில் இலங்கையில் நடந்த இனப்படுகொலையினை தமது பதாதைகளிலோ கோசங்களிலோ வெளிவராத வகையில் திட்டமிட்டிருந்தனர். இது இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடந்த இனப்படுகொலை என்பதை ஏற்றுக் கொள்ளாத மனநிலை மட்டுமல்ல சிங்கள பௌத்தத்தையும் அதன் காவலர்களையும் இனப்படுகொலையாளர்களையும் பகைத்துக் கொள்ள விரும்பாத அரசியல் என்பதே உண்மை. அது மட்டும் அல்ல தமிழர்களின் இனப்படுகொலைக்கு எதிரான போராட்டத்தையும் அரசியல் அபிலாசைகளையும் மறுக்கும் செயலாகவுமே நாம் கருதுகின்றோம். சிங்கள பௌத்த பேரினவாதிகளுக்கு 1948 ல் கிடைத்த சுதந்திரம் இனப்படுகொலைக்கும், இன சுத்திகரிப்பிற்கும், இன அழிப்பிற்குமான சுதந்திரம் என்பது எமது அனுபவம். இன்று பாலஸ்தீனர்கள் சந்திக்கும் இனப்படுகொலைக்கு முன்னர் இந்த நூற்றாண்டு கண்ட மிகப்பெரும் இனப்படுகொலை முள்ளிவாய்க்காலில் நிகழ்ந்தது என்பதை முஸ்லிம் உறவுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும். இன்று பாலஸ்தீனர்களுக்கு எதிராக இஸ்ரேலை வழி நடத்தி இனப்படுகொலை புரியும் வல்லரசுகளை அன்று தமது அரசியலுக்காக இலங்கை சிங்கள பௌத்த பேரினவாதிகளை வழி நடத்தி பெரும் இனப்படுகொலையோடு ஆயுத யுத்தத்தை மௌனிக்கச் செய்து தமிழர்களை அரசியல் ரீதியில் அங்கவீனமாக்கினர். தொடர்ந்து தமிழர்களின் அரசியலை அழிக்க பெரு முயற்சியை எடுத்துக் கொண்டிருக்கின்றனர். தமிழர்களை பொறுத்தவரையில் பாலஸ்தீனர்களின் சுதந்திர தேசம் தமிழர்களின் போராட்டத்திற்கான அங்கீகாரமாகும். அதேபோன்று தமிழர்களின் சுதந்திர தாயகம் பாலஸ்தீன மக்களின் சுதந்திர தாகத்திற்கான வெற்றியாகும். இத்தகைய அரசியலை மக்கள் மயப்படுத்தி போராட்டங்களை முன்னெடுத்தல் தமிழ்- முஸ்லிம் உறவை பலப்படுத்தும். மக்கள் விடுதலை போராட்டத்தில் மக்கள் அரசியலாகி மக்களைபெரும் சக்திகளாக கொண்டுவர வேண்டும். அதனை விடுத்து இனப்படுகொலையாளர்களுக்கு மேடை அமைத்துக் கொடுப்பதும், இனப்படுகொலையாளர்களை பாதுகாப்பதும் தமிழ்- முஸ்லிம் இன விரிசல்களையே ஏற்படுத்தும் என்பதையும் மிக கவலையோடு கூறுகின்றோம். தற்போதைய ஆட்சியாளர்கள் இதற்கு தமிழ் முஸ்லீம் மக்கள் தமக்கு முழுமையான ஆதரவளித்துள்ளனர் என கூறுவது தமிழ் முஸ்லிம் இன உறவுகளை பிரிக்கும் இன அழிப்பை தொடரும் கூற்றாகவே கொள்ளல் வேண்டும். புதிய அரசியல் உறவை பலப்படுத்தி இனப்படுகொலைக்கு எதிராக ஒருமித்த குரல் எழுப்புவது காலத்தின் அரசியல் தேவையுமாகும் என வலியுறுத்துகின்றோம். https://akkinikkunchu.com/?p=337232
  12. ட்ரம்பை சந்திக்கவுள்ள ஷெலன்ஸ்கி உக்ரைன் ஜனாதிபதி வொளொடிமிர் ஷெலன்ஸ்கி (Volodymyr Zelenskyy) அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை எதிர்வரும் திங்கட்கிழமை சந்திக்கவுள்ளார். இந்த சந்திப்பானது வொஷிங்டன் டிசியில் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை உக்ரைன் ஜனாதிபதியும் தமது டெலிகிராம் கணக்கில் உறுதிப்படுத்தியுள்ளார். உக்ரைன் மற்றும் ரஷ்யாவுக்கு இடையில் இடம்போரை நிறுத்துவதற்கான அமைதிப் பேச்சுவார்த்தை டொனால் ட்ரம்பின் தலைமையில் இடம்பெற்று வருகின்றது. இது தொடர்பான பேச்சுவார்த்தை இலங்கை நேரப்படி இன்று இடம்பெற்றிருந்த நிலையில், அது எவ்வித இணக்கப்பாடும் இன்றி நிறைவடைந்தது. இன்றைய பேச்சுவார்த்தையில் எவ்வித உடன்பாடும் எட்டப்பட்டிருக்கவில்லை என அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்திருந்தார். அத்துடன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான சிறந்த வழி ஒரு சமாதான ஒப்பந்தம்தான் என்றும் அவர் கூறியுள்ளார். எல்லாம் சரியாக நடந்தால், ஜனாதிபதி புட்டினுடன் ஒரு சந்திப்பை நாங்கள் திட்டமிடுவோம். அதன்மூலம் மில்லியன் கணக்கான மக்களின் உயிர்கள் காப்பாற்றப்படும் என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். https://akkinikkunchu.com/?p=337156
  13. ஹர்த்தாலுக்கான அழைப்பின் மூலம் கேலிக்கூத்தாடும் இலங்கை தமிழரசு கட்சி! ஹர்த்தாலுக்கு ஆதரவை திரட்டுமாறு தமிழரசுக் கட்சியின் உயர்மட்டமானது பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும், உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்களுக்கும் குடைச்சலை கொடுத்து வருவதாக அறியமுடிகிறது. அதாவது ஹர்த்தாலுக்கு ஆதரவாக ஊடக சந்திப்புகளை நடாத்தியும், வர்த்தக சங்கங்களை சந்தித்தும் இவ்வாறு ஆதரவை திரட்டுமாறு உயர்மட்டமானது கடிதம் மூலம் அறிவித்துள்ளது. அந்த கடிதத்தில் பதில் தலைவரானத சி.வி.கே.சிவஞானம், பதில் செயலாளரான எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் கையொப்பமிட்டுள்ளனர். அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சகல கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் சகல கௌரவ உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கும் அன்புடையீர். எதிர்வரும் திங்கட்கிழமை 18 ஆம் திகதிய கடையடைப்பு (ஹர்த்தால்) தொடர்பானது எமது கட்சியினால் மேற்சொன்ன நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது நீங்கள் அறிந்ததே. இதை வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்கு உங்கள் அனைவரினதும் முழுமையான ஒத்துழைப்பு அத்தியாவசியமானது. கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களும் உள்ளுராட்சி தவிசாளர்களும் ஊடக சந்திப்புக்களை நடாத்தி சகலரது ஆதரவை கோருவது அவசியமாகும். அத்தோடு அனைத்து வணிகர் சங்கங்களையும் சந்தித்து ஆதரவை கோருவதோடு உறுப்பினர்கள் நேரடியாக சந்தைக்கும் கடைக்கும் சென்று இதை செய்வது நல்லது. கட்சியின் நிர்மானத்தை வலுவாக நிறைவேற்ற உங்கள் முழுமையான பங்களிப்பை எதிர்பார்க்கிறோம் என குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் கடையடைப்புகளை மேற்கொள்ளும்போது வர்த்தக சங்கங்கள் உள்ளிட்ட அனைத்து அமைப்புகளையும் அழைத்து கலந்துரையாடியே ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் தற்போது தமிழரசுக் கட்சியானது தன்னிச்சையாக ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்துவிட்டு, தங்களது அழைப்பானது நிராகரிக்கப்படுமோ என்ற அச்சத்தில் இவ்வாறு ஊடக சந்திப்புகளையும், நேரடி சந்திப்புகளையும் நடாத்துமாறு உறுப்பினர்களை கட்டாயப்படுத்துவது கேலிக்கூத்தாக மாறியுள்ளது. https://akkinikkunchu.com/?p=337186
  14. போர் நிறுத்தம் வேண்டுமா?; எனக்கு டொனெட்ஸ்க் வேண்டும்!; டிரம்பிடம் புடின் வைத்த நிபந்தனை போர் நிறுத்தத்திற்கு உக்ரைன் சில நிலப்பரப்புகளை விட்டுத் தர வேண்டும் என்று டிரம்பிடம் புடின் தெரிவித்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நிலையான அமைதி ஒப்பந்தம் உக்ரைன் போரை நிறுத்துவது தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி புடின் இடையே நடைபெற்ற 3 மணி நேர பேச்சுவார்த்தை நிலையான முடிவு எதுவும் எட்டப்படாமல் நிறைவடைந்துள்ளது. இதையடுத்து கருத்து தெரிவித்த டிரம்ப், ரஷ்யா மிகப்பெரிய சக்தி, உக்ரைன் ஆனால் அப்படி இல்லை என தெரிவித்தார். மேலும் இந்த பேச்சுவார்த்தை தொடர்பாக தனது “ட்ரூத் சோஷியல்” சமூக வலைதள பக்கத்தில், பெரும்பாலான போர் நிறுத்த ஒப்பந்தங்கள் நிலைப்பது இல்லை, உக்ரைன்-ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டு வர போர் நிறுத்த ஒப்பந்தத்தை விட, நிலையான அமைதி ஒப்பந்தமே சிறந்தது என அனைத்து தரப்பினராலும் முடிவு செய்யப்பட்டுள்ளது என டிரம்ப் பதிவிட்டுள்ளார். டொனெட்ஸ்க் பிராந்தியத்தை விட்டுத் தர வேண்டும் பேச்சுவார்த்தைக்கு பிறகு அமெரிக்க ஜனாதிபதியுடன் உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி உரையாடிய நிலையில், போர் நிறுத்தத்திற்கு மாற்றாக உக்ரைன் தங்களின் நிலப்பரப்பு சிலவற்றை ரஷ்யாவிற்கு விட்டுக் கொடுக்க வேண்டும் என டிரம்ப் வலியுறுத்தி இருப்பதாக கூறப்படுகிறது. இந்த உரையாடல் குறித்து நம்பகமான ஆதாரங்கள் வழங்கிய தகவலில், ரஷ்ய ஜனாதிபதி புடின் உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர உக்ரைன் டொனெட்ஸ்க்(Donetsk) பிராந்தியத்தை விட்டுத்தர வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டிரம்பிடம் முன்மொழிந்து இருப்பதாக தெரிகிறது. ஆனால் இந்த முன்மொழிவை உக்ரைனிய ஜனாதிபதி முழுவதுமாக நிராகரித்துவிட்டார் என தெரிவித்துள்ளார். இதையடுத்து, பேச்சுவார்த்தை தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பை ஜெலென்ஸ்கி திங்கட்கிழமை வாஷிங்டனில் சந்தித்து பேசவுள்ளார். ரஷ்யா ஏற்கனவே உக்ரைனின் ஐந்தில் ஒரு பங்கை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் நிலையில், முக்கிய மூலோபாய நகரான டொனெட்ஸ்க் பிராந்தியத்தை கோருவது உக்ரைனை வேதனையில் தள்ளியுள்ளது. 2024ம் ஆண்டு இந்த பிராந்தியத்திற்கு நுழைந்த ரஷ்ய படைகள் ஏற்கனவே டொனெட்ஸ்க் பிராந்தியத்தின் முக்கால் பங்கை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து இருப்பது குறிப்பிடத்தக்கது. https://akkinikkunchu.com/?p=337240
  15. இணையனுசரணை நாடுகளின் புதிய பிரேரணை: புதிய அரசியலமைப்பு, பயங்கரவாதத்தடைச்சட்ட நீக்கம், மாகாணசபைத்தேர்தல் நடைமுறை என்பன உள்வாங்கப்படும் 17 Aug, 2025 | 09:53 AM (நா.தனுஜா) ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் செப்டெம்பர் மாதக்கூட்டத்தொடரில் பிரிட்டன் தலைமையிலான இணையனுசரணை நாடுகளால் இலங்கை தொடர்பில் கொண்டுவரப்படவுள்ள புதிய பிரேரணையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பணிகளை ஆரம்பித்தல், பயங்கரவாத்தடைச்சட்டத்தை நீக்குதல், மாகாணசபைத்தேர்தல்களை விரைந்து நடாத்துதல் ஆகிய விடயங்கள் உள்வாங்கப்படவுள்ளன. ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் வாக்குறுதி அளித்தவாறு புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பணிகளை விரைவில் ஆரம்பிக்கவேண்டும், பயங்கரவாதத்தடைச்சட்டத்தை முற்றாக நீக்குதல் மற்றும் அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தத்தின் பிரகாரம் மாகாணசபைத்தேர்தல்களைத் தொடர்ந்து காலந்தாழ்த்தாமல் விரைவாக நடாத்துதல் ஆகிய விடயங்கள் உள்வாங்கப்படவுள்ளன. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடர் ஜெனீவாவில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 8 ஆம் திகதி ஆரம்பமாகி, ஒக்டோபர் மாதம் 8 ஆம் திகதி வரை நடைபெறவிருக்கிறது. தற்போது நடைமுறையில் இருக்கும் 'இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல்' என்ற தீர்மானத்தின் ஊடாக வழங்கப்பட்டுள்ள ஆணைக்கு அமைவாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் 'இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறல் செயற்திட்டம்' முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. அதற்கமைய உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் தயாரிக்கப்பட்டுள்ள இலங்கை தொடர்பான விரிவான எழுத்துமூல அறிக்கை, கூட்டத்தொடரின் ஆரம்ப நாளான 8 ஆம் திகதி உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்கினால் பேரவையில் சமர்ப்பிக்கப்படும். இது இவ்வாறிருக்க பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடரில் பிரிட்டன் தலைமையிலான இணையனுசரணை நாடுகள் இலங்கை தொடர்பில் புதிய பிரேரணையொன்றை சமர்ப்பிக்கவுள்ளன. அப்பிரேரணையில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் வாக்குறுதி அளித்தவாறு புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பணிகளை விரைவில் ஆரம்பிக்கவேண்டும், பயங்கரவாதத்தடைச்சட்டத்தை முற்றாக நீக்குதல் மற்றும் அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தத்தின் பிரகாரம் மாகாணசபைத்தேர்தல்களைத் தொடர்ந்து காலந்தாழ்த்தாமல் விரைவாக நடாத்துதல் ஆகிய விடயங்கள் உள்வாங்கப்படவுள்ளன. அதேவேளை செம்மணி சித்துபாத்தி மனிதப்புதைகுழி விவகாரம் சர்வதேச கவனம் பெற்றிருக்கும் நிலையில், மனிதப்புதைகுழிகளுடன் தொடர்புடைய விடயங்களும் இணையனுசரணை நாடுகளின் புதிய பிரேரணையில் உள்ளடக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. https://www.virakesari.lk/article/222708
  16. இலங்கையில் மாறாத கட்டமைப்பு மீறல்கள்: பொறுப்புக்கூறல் பொறிமுறையின் அவசியத்தை உணர்த்துகிறது - மீனாட்சி கங்குலி 17 Aug, 2025 | 10:03 AM (லியோ நிரோஷ தர்ஷன்) இலங்கையில் கடந்தகால மனித உரிமை மீறல்களுக்கு வழிவகுத்த கட்டமைப்பு ரீதியான காரணிகள் இன்றும் தொடர்வதை ஐக்கிய நாடுகள் சபையின் சமீபத்திய மனித உரிமைகள் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசியப் பிராந்தியத்துக்கான பிரதிப் பணிப்பாளர் மீனாட்சி கங்குலி தெரிவித்துள்ளார். இந்த அறிக்கை, ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கண்காணிப்பு மற்றும் பொறுப்புக்கூறல் செயற்றிட்டத்தின் அவசியத்தை மீண்டும் உறுதிப்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் செப்டெம்பர் மாதம் ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரை முன்னிறுத்தி வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கை, இலங்கையின் மனித உரிமைகள் நிலை குறித்த ஒரு கவலைக்குரிய சித்திரத்தை முன்வைப்பதுடன், சர்வதேச சமூகம் ஏன் இலங்கை விடயத்தில் தனது கண்காணிப்பைத் தளர்த்தக்கூடாது என்பதற்கான ஒரு எச்சரிக்கை மணியாகவும் உள்ளது. ஐ.நா. அறிக்கை குறிப்பிடும் கட்டமைப்பு ரீதியான காரணிகள் என்பது தற்காலிகப் பிரச்சினைகள் அல்ல மாறாக, அவை நாட்டின் நிர்வாக, சட்ட மற்றும் பாதுகாப்பு இயந்திரங்களில் ஆழமாக வேரூன்றியுள்ள நீண்டகாலப் பிரச்சினைகளாகும். சர்வதேச கண்டனங்கள் இருந்தபோதிலும், தன்னிச்சையான கைதுகளுக்கும், சித்திரவதைகளுக்கும் வழிவகுக்கும் பயங்கரவாதத் தடைச் சட்டம் இன்னும் முழுமையாக நீக்கப்படவில்லை. போர்க்குற்றங்கள் மற்றும் பாரிய மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட இராணுவ மற்றும் பொலிஸ் அதிகாரிகள் மீது நம்பகரமான விசாரணைகள் இன்றி, அவர்கள் தொடர்ந்தும் பதவிகளில் நீடிக்கப்பட்டுள்ளனர். மேலும் கடந்தகால மீறல்களுக்குப் பொறுப்பானவர்களை நீதியின் முன் நிறுத்துவதற்கான முயற்சிகள் இல்லாமை மற்றும் உள்நாட்டு நீதிப் பொறிமுறைகள் தோல்வியடைந்தமை என்பன சர்வதேசத்தின் தலையீட்டை வலியுறுத்துகிறது. மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசியப் பிராந்தியத்துக்கான பிரதிப் பணிப்பாளர் குறிப்பிடும் ஐ.நா. உயர்ஸ்தானிகரின் பொறுப்புக்கூறல் செயற்றிட்டம் என்பது, இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பாரிய மீறல்கள் தொடர்பான ஆதாரங்களைச் சேகரித்து, பாதுகாத்து, பகுப்பாய்வு செய்யும் ஒரு சர்வதேசப் பொறிமுறையாகும். இலங்கை இத்தகைய சர்வதேசப் பொறிமுறைகளைத் தொடர்ச்சியாக நிராகரித்து, நாட்டின் இறைமையில் தலையிடுவதாகக் குற்றம் சுமத்துகிறது. ஆகவே, எதிர்வரும் ஜெனீவா கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிரான ஒரு புதிய தீர்மானத்தின் மூலம் பொறுப்புக்கூறல் செயற்றிட்டத்தை மேலும் வலுப்படுத்தவும், அதன் ஆயுட்காலத்தை நீட்டிக்கவும் சர்வதேச சமூகம் முன்வர வேண்டும் என்ற கோரிக்கையை வலுப்படுத்துகிறது. இலங்கையின் கட்டமைப்பு மாறாத வரை, சர்வதேசத்தின் கண்காணிப்பும் தளரக்கூடாது என மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசியப் பிராந்தியத்துக்கான பிரதிப் பணிப்பாளர் மீனாட்சி கங்குலி வலியுறுத்தியுள்ளார். https://www.virakesari.lk/article/222709
  17. இராணுவப் பிரசன்னமற்ற சுதந்திர தமிழர் தாயகம் வேண்டுமென்ற அடிப்படையில் அனைவரும் ஹர்த்தாலுக்கு ஆதரவை வழங்குங்கள் - ரவிகரன் எம்.பி 17 Aug, 2025 | 10:09 AM வடக்கு, கிழக்கு தமிழர் தாயகத்தில் அதிகரித்துள்ள்இராணுவப் பிரசன்னத்திற்கு எதிராக திங்கட்கிழமை (18) இடம்பெறவுள்ள பூரண ஹர்த்தாலுக்கு அனைவரும் ஒத்துழைப்பு நல்குமாறு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அழைப்பு விடுத்துள்ளார். அதேவேளை இராணுவப் பிரசன்னமற்ற சுதந்திரமான வடக்கு, கிழக்கு தமிழர் தாயகம் வேண்டுமென்ற எமது அடிப்படை மனித உரிமைக் கோரிக்கையினை சர்வதேச மட்டத்தில் ஓங்கி ஒலிக்கச்செய்வதற்காக அனைவரும் இக் ஹர்த்தாலுக்கு பூரண ஆதரவினை வழங்கவேண்டுமெனவும் நாடாளுமன்ற உறுப்பினர் வலியுறுத்தியுள்ளார். வடக்கு, கிழக்கு தமிழர்தாயகப்பரப்பில் அதிகரித்துள்ள இராணுவப் பிரசன்னத்திற்கெதிராக எதிர்வரும் 18ஆம் திகதி இடம்பெறவுள்ள வடக்கு, கிழக்கு தழுவிய ஹர்த்தாலுக்கு அனைத்துத் தரப்பினரும் ஆதரவு வழங்கக்கோரி வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களால் வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் பிரதேசசெயலாளர் பிரிவிலுள்ள முத்துஐயன்கட்டு இடதுகரை ஜீவநகர் பகுதியைச்சேர்ந்த ஐந்து இளைஞர்கள் கடந்த 07.08.2025அன்று, முத்துஐயன்கட்டு பகுதியிலுள்ள 63ஆவது இராணுவமுகாமைச்சேர்ந்த இராணுவத்தினரால் அழைக்கப்பட்டு மிகக் கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளனர். இராணுவத்தின் குறித்த தாக்குதல் சம்பவத்தையடுத்து, இராணுவமுகாமிற்குச் சென்ற ஐவரில் ஒருவரான 32வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தை எதிர்மன்னசிங்கம் கபில்ராஜ் காணாமல்போயிருந்தார். இந்நிலையில் இவ்வாறு காணாமல்போயிருந்தவர் கடந்த 09.08.2025அன்று முத்துஐயன்கட்டுக்குளத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இதனைத்தொடர்ந்து இடம்பெற்ற விசாரணைகளையடுத்து, கடந்த 09.08.2025அன்று மேஜர் தரத்திலான இராணுவ அதிகாரி ஒருவர் உட்பட ஐந்து இராணுவத்தினர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து இரு இராணுவத்தினர் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் மூன்று இராணுவத்தினர் எதிர்வரும் 19ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த இராணுவத்தின் தாக்குதல் சம்பவமும், அதன்பின்னர் குடும்பஸ்தர் ஒருவர் காணாமல்போய் குளத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் இராணுவத்தின் முறையற்ற செயற்பாடுகளும், முல்லைத்தீவு மாவட்டத்தில் மிதமிஞ்சிய இராணுவமயமாக்கமுமே காரணமாக அமைந்துள்ளது. குறிப்பாக இராணுவத்தினர் தேவையற்றவிதத்தில் அப்பகுதி இளைஞர்களுடன் நெருக்கமான தொடர்புகளைப்பேணிவந்துள்ளனர். அத்தோடு அப்பகுதி மக்களின் வறுமைநிலையைப் பயன்படுத்தி இளைஞர்களை முறைகேடான, சட்டவிரோத செயற்பாடுகளுக்கு இராணுவத்தினர் தூண்டிவிட்டுள்ளதுடன், சட்டவிரோத செயற்பாடுகளுக்கும் பயன்படுத்திவந்துள்ளனர். அந்தவகையில் இராணுவத்தினரால் அப்பகுதி இளைஞர்களுக்கு இராணுவமுகாமிலுள்ள பொருட்கள், தளபாடங்கள், எரிபொருள் என்பவற்றுடன் இராணுவத்தினரால் காட்டுமிருகங்கள் வேட்டையாடப்பட்டு இப்பகுதி இளைஞர்களிடம் விற்பனைக்காக வழங்கப்பட்டுவந்ததாகவும் அப்பகுதி மக்களாலேயே எமக்கு முறையிடப்பட்டது. இவ்வாறு இளைஞர்களுக்கு வழங்கப்படும் பொருட்களுக்கு மாற்றீடாக போதைப்பொருட்களைப் பெற்றுத்தருமாறு 63ஆவது இராணுவமுகாம் இராணுவத்தினர் அப்பகுதி இளைஞர்களைத் தூண்டிவிட்டுள்ளனர். இவ்வாறாக இராணுவத்தினரின் முறையற்ற செயற்பாடுகள், தொடர்பாடல்களின் பின்னணியிலேயே இந்த தாக்குதல் சம்பவமும் அதன்பின்னர் குடும்பஸ்தர் ஒருவர் படுகொலைசெய்யப்பட்ட சம்பவமும் பதிவாகியிருக்கின்றது. இவ்வாறாக அப்பகுதி இளைஞர்களுடன் முறையற்றவிதத்தில் தொடர்பினைப் பேணிவந்தார்கள் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே இராணுவத்தினர் மூவரை எதிர்வரும் 19ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளது. ஆகவே இந்தச் சம்பவத்திற்கு இராணுவத்தினரே முற்றுமுழுதான பொறுப்பாளிகளாகக் காணப்படுகின்றனர். மேலும் அதிகரித்த இராணுவப் பிரசன்னமென்பது முல்லைத்தீவு மாவட்டத்தில் மாத்திரமின்றி வடக்கு, கிழக்கு தமிழர் தாயகப் பரப்பெங்கும் அதிகரித்துள்ள நிலையே காணப்படுகின்றது. யுத்தம் மௌனிக்கப்பட்டு 16ஆண்டுகளாகியுள்ளநிலையில் வடக்கு, கிழக்கில் இவ்வாறான அதிகரித்த இராணுவப்பிரசன்னம் தேவையற்ற ஒன்றாகும். இவ்வாறாக யுத்தம் மௌனித்து ஒன்றரைத் தசாப்தகாலம் கடந்துவிட்ட சூழலில் வடக்கு, கிழக்கு தமிழர்தாயகத்தில் தொடர்ந்து இராணுவப் பிரசன்னம் அதிகரித்திருப்பதை ஒருபோதும் எம்மால் ஏற்றுக்கொள்ளமுடியாது. அதேவேளை இவ்வாறு வடக்கு,கிழக்கு தமிழர் தாயகப்பரப்பில் இராணுவப் பிரசன்னம் அதிகரித்திருப்பதன் பின்னணியில் இடம்பெறக்கூடிய கொடூரமான சம்பவங்களையும் தொடர்ந்தும் எம்மால் அனுமதிக்கமுடியாது. எனவேதான் வடக்கு, கிழக்கில் இவ்வாறு அதிகரித்துள்ள இராணுவப் பிரசன்னத்திற்கு எதிராக திங்கட்கிழமை(18) வடக்கு, கிழக்கு தமிழர்தாயகம் தழுவியரீதியில் பூரணகர்த்தாலுக்கு இலங்கைத் தமிழ் அரசுக்கட்சி அழைப்புவிடுத்துள்ளது. இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியால் எனக்கு பொறுப்பளிக்கப்பட்டவகையில் முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள வர்த்தக சங்கங்கள், தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம், முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் சங்கம் உள்ளிட்ட தரப்பினர்களுக்கு நேரடியாகவும், தொலைபேசியூடாகவும் கர்த்தாலுக்கான ஆதரவைநல்குமாறு கோரியுள்ளேன். அதேவேளை வன்னி மக்களின் பாராளுமன்ற பிரதிநிதிஎன்ற வகையில் வன்னியிலுள்ள அனைத்துத் தரப்பினரும் இந்த ஹர்த்தாலுக்கு பூரண ஆதரவினை வழங்குமாறு கேட்டுக்கொள்வதுடன், வடக்கு, கிழக்கு தமிழர்தாயகப் பரப்பிலுள்ள அனைவரும் இந்த பூரண ஹர்த்தாலுக்கு ஆதரவுநல்கி வடக்கு, கிழக்கில் அதிகரித்துள்ள இராணுவப் பிரசன்னத்திற்கு எதிராக எமது முழுமூச்சான எதிர்ப்பினை காண்பிக்குமாறு அனைத்துத் தரப்பினருக்கும் அழைப்புவிடுக்கின்றேன். மேலும் யுத்தம் மௌனிக்கப்பட்டு 16ஆண்டுகள் ஆகியுள்ளசூழலில் வடக்கு,கிழக்கில் தொடர்ந்தும் இராணுவக் கெடுபிடிக்குள் எமது மக்களை வைத்திருப்பது அடிப்படை மனித உரிமை மீறலாகும். வடக்கு, கிழக்கு தமிழர்தாயகத்திலுள்ள எமது மக்கள் வீட்டுக்காவலில் உள்ள குற்றவாளிகளைப்போல தொடர்ந்தும் இராணுவக் கண்காணிப்பில், அதிகரித்த இராணுவ பிரசன்னத்திற்கு மத்தியில் ஓர் அவல வாழ்வினையே வாழ்கின்றார்கள். எனவே வடக்கு, கிழக்குத் தமிழர் தாயகப்பரப்பிலுள்ள எமது மக்கள் நாட்டின் ஏனைய பாகங்களில் உள்ள மக்களைப்போல இராணுவப் பிரசன்னமில்லாது சுதந்திரமாக வாழவேண்டுமென்ற அடிப்படை மனித உரிமையினையே நாங்கள் கோருகின்றோம். அதற்காகவே இந்த வடக்கு, கிழக்குரீதியிலான பூரண கர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கின்றோம். இந்நிலையில் ஐக்கியநாடுகள் மனிதஉரிமைகள் பேரவையின் 60ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் செப்டெம்பர்மாதம் 08ஆம் திகதி இடம்பெறவுள்ளது. எனவே எதிர்வரும் 18.08.2025அன்று இடம்பெறவுள்ள வடக்கு, கிழக்குத்தழுவிய பூரண ஹர்த்தாலுக்கு அனைவரும் முழுஆதரவினை நல்குவதன் ஊடாக, வடக்கு கிழக்கில் அதிகரித்துள்ள இராணுவப் பிரசன்னம் உடனடியாக அகற்றப்படவேண்டும் என்ற எமது அடிப்படை மனிதஉரிமைக் கோரிக்கையினை முழுசர்வதேசத்திற்கும் வலுவாக முன்வைப்போம் என குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/222715
  18. வட, கிழக்கில் எதிர்வரும் 30 ஆம் திகதி மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டங்கள் 17 Aug, 2025 | 11:08 AM (நா.தனுஜா) வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச தினமான எதிர்வரும் 30 ஆம் திகதி வட, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இருவேறு கவனயீர்ப்புப்போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. வருடாந்தம் ஓகஸ்ட் மாதம் 30 ஆம் திகதி வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச தினமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அதனை முன்னிட்டு வட, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தினால் வருடாந்தம் ஓகஸ்ட் மாதம் 30 ஆம் திகதி வட, கிழக்கு மாகாணங்களில் பாரிய கவனயீர்ப்புப்போராட்டம் முன்னெடுக்கப்படும். அதன் நீட்சியாக இவ்வருடமும் எதிர்வரும் 30 ஆம் திகதி வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளால் வடக்கிலும், கிழக்கிலும் தனித்தனியாக இருவேறு கவனயீர்ப்புப்போராட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இவ்விரு போராட்டங்களும் நடைபெறவிருக்கும் இடங்கள் தொடர்பான விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும். அதேவேளை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 22 ஆம் திகதி ஜெனீவாவில் ஆரம்பமாகவுள்ள வலிந்து காணாமலாக்கப்படல்கள் தொடர்பான குழுவின் 29 ஆவது கூட்டத்திலும் வட, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் சார்பில் பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளனர். https://www.virakesari.lk/article/222724
  19. பிள்ளையானின் கீழ் செயற்பட்ட மேலும் 6 துப்பாக்கிதாரிகளுக்கு சிஐடி வலைவீச்சு 17 August 2025 பல குற்ற சம்பவங்களில், பிள்ளையான் எனப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் கீழ் பணியாற்றியதாக கூறப்படும் மேலும் ஆறு துப்பாக்கிதாரிகளை கைது செய்வதற்கு குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக அரச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. அந்த திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டு விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ள,பிள்ளையான் மற்றும் இனியபாரதி எனப்படும் கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் கே.புஷ்பகுமார் ஆகியோரிடம் நடத்தப்பட்ட நீண்ட விசாரணைகளின் போது இந்தக் குழு பற்றிய தகவல்கள் தெரியவந்துள்ளன. இந்த இருவரும் வெளிப்படுத்திய தகவல்களின் அடிப்படையில், துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட இரண்டு நபர்கள் கடந்த வாரம் மட்டக்களப்பு மற்றும் கொழும்பின் வாழைத்தோட்டம் ஆகிய பகுதிகளில் வைத்து கைது செய்யப்பட்டனர். 2007-2008 ஆம் ஆண்டு காலகட்டத்தில் பிள்ளையானின் தலைமையிலான ஆயுதக் குழு, மட்டக்களப்பு மாவட்டம் மற்றும் கிழக்கு மாகாணத்தில் அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள் மற்றும் பொதுமக்களை கொலைசெய்தமை, கடத்தியமை மற்றும் காணாமல் போகச் செய்தமை தொடர்பான குற்றங்களில் ஈடுபட்டமை தொடர்பான தகவல் தற்போது வெளியாகியுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்கள தகவல்களை மேற்கோள் காட்டி குறித்த அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. https://hirunews.lk/tm/415017/cid-nets-6-more-gunmen-who-operated-under-pillayan
  20. முத்தையன்கட்டு சம்பவம்: அரசாங்க தரப்பு விரிவான விளக்கம் 17 August 2025 முல்லைத்தீவு - முத்தையன்கட்டு பகுதியில் இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான தகவல்களை திரிபுபடுத்தி சில தரப்புகள் அரசியல் லாபம் பெற முயற்சிப்பதாகவும், இதனை அரசு வன்மையாக கண்டிக்கிறது எனவும் அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் விளக்கமளிக்கும் வகையில் அரசாங்கம் தகவல் திணைக்களத்தில் இன்று (17) இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார். ஒட்டுச்சுட்டான் - முத்தையன்கட்டு பகுதியிலுள்ள இராணுவ முகாமுக்குள் கடந்த 7 ஆம் திகதி 5 பேர் அத்துமீறி நுழைய முயன்றுள்ளனர். அதன்போது, அங்கிருந்த சில சிப்பாய்கள் அவர்களை தாக்கி, அங்கிருந்து விரட்டியுள்ளனர். குறித்த நபர்களை அங்கிருந்த தப்பியோடியபோது, ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயிருந்த நிலையில் பின்னர் உடலமாக மீட்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில் 3 இராணுவ சிப்பாய்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்தநிலையில், இந்த சம்பவத்தை திரிபுபடுத்தி தவறான தகவல்களை வழங்கி, சில அரசியல் குழுக்கள் வடக்கு மற்றும் தென்னிலங்கை மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிப்பதை அவதானிக்க முடிகிறது. இந்த சம்பவத்தை அவர்கள், இராணுவத்தினரால் தாக்கப்பட்டு பொதுமகன் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார் என காண்பிப்பதற்கு முயற்சிக்கின்றனர். சிலர் தங்களது அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்வதற்கு தவறான தகவல்களை மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்து அமைதியை சீர்குலைக்க முயல்கின்றனர். இந்த சம்பவம் தொடர்பில் முறையாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன இதனிடையே, இராணுவ முகாமில் திருட்டில் ஈடுபட்டதாகக் கூறப்படும் சந்தேகநபர்கள் தொடர்பான பீ அறிக்கையையும் ஒட்டுச்சுட்டான் காவல்துறையினர் தயாரித்துள்ளனர். சந்தேகநபர்களுக்கு தற்போது, அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதுடன் அவர்கள் விரைவில் மன்றில் முன்னிலைப்படுத்தப்படுவர். இந்தநிலையில், கடந்த கால சம்பவங்களை மனதில் வைத்துக் கொண்டு இந்த சம்பவத்தை அதனுடன் தொடர்புபடுத்தி மக்கள் மனதில் ஆத்திரத்தை ஏற்படுத்துவதற்கு, சில குழுக்கள் முன்னெடுக்கும் முயற்சிகளை அரசாங்கம் கண்டிக்கிறது எனவும் அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இதனிடையே, உயிரிழந்த இளைஞரின் மரணத்துக்கு எந்தவித பாரிய காயங்களுக்கு நேரடியாக பங்களிக்கவிலலை என அவரது பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது எனவும் எச்சங்கள் உடற்கூறாய்வுக்கும் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இராணுவ பேச்சாளரின் விளக்கம் இந்த ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் வருண கமகே, இராணுவம் சார்பில் இந்த சம்பவம் தொடர்பில் விளக்கமளித்தார். முத்தையன்கட்டு முகாமிற்குள், நுழைந்ததாக சந்தேகிக்கப்படும் சந்தேகநபர்களில் ஒருவர் இராணுவத்தினரின் பொறுப்பில் எடுக்கப்பட்டு, காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டார். முன்னதாகவும்,இராணுவ முகாமுக்குள் நுழைந்து திருட முயன்றமை தொடர்பில், அவருக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டுள்ளமையும் தெரியவந்துள்ளது. எனினும், மற்றொரு இளைஞர் உயிரிழந்த சம்பவத்துக்கு இராணுவத்தினருக்கு எவ்வித தொடர்பும் இல்லை என விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இராணுவத்தினரின் பொறுப்பில் எடுக்கப்பட்ட நபரே இராணுவ சிப்பாய் ஒருவரால் தாக்கப்பட்டார் என விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும், உயிரிழந்ததாக கூறப்படும் நபரை அவர் தாக்கியிருக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார். எனவே, காவல்துறை முன்னெடுக்கும் விசாரணைக்கு பக்கசார்பின்றி இராணுவம் ஆதரவளிக்கும் எனவும் இராணுவ பேச்சாளர் தெரிவித்துள்ளார். காவல்துறை பேச்சாளரின் விளக்கம் இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் தொடர்பில் காவல்துறை பேச்சாளர், சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் எவ்.யூ.வுட்லர் விளக்கமளித்தார். இந்த சம்பவம் தொடர்பான ஒட்டுச்சுட்டான் காவல்நிலையத்தினால் இரண்டு விசாரணைக்குழுகள் நியமிக்கப்பட்டுள்ளன. 13 இராணுவம் சிப்பாய்கள் உட்பட மேலும் பலரிடம் இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன், அடுத்தகட்ட சட்டநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். சம்பவம் தொடர்பில், முகாமுக்குள் திருட வந்தவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கிய குற்றச்சாட்டில் 2 இராணுவ சிப்பாய்களும், மற்றையவர் தாக்குதல் தொடர்பில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். முகாமுக்குள் சந்தேகநபர்களை அனுமதித்ததாக சந்தேகிக்கப்படும் குற்றச்சாட்டிலேயே இரு இராணுவ சிப்பாய்கள் கைதுசெய்யப்பட்டனர். சிவிலியன்கள் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையிலேய மற்றைய சிப்பாய் தாக்குதல் தொடர்பில் செய்யப்பட்டதாகவும், அவர் அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்தப்படுவார் எனவும் காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். https://hirunews.lk/tm/415018/muthaiyankattu-incident-detailed-explanation-from-the-government#google_vignette
  21. இந்தியாவில் இருந்து கப்பலில் வரும் பயணிகளுக்கு விசேட சலுகை இந்தியாவில் இருந்து கப்பலில் இலங்கை வரும் பயணிகளுக்கு விசேட அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்திய பாடசாலை மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு இலங்கையில் தங்குவதற்கு சிறப்புச் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. கப்பல் பயணச்சீட்டு கட்டணம் மற்றும் பயணச் செலவு என அனைத்தையும் சிறப்புச் சலுகையாக 9,999 இந்திய ரூபாயாகக் கப்பல் நிறுவனம் அறிவித்துள்ளது. மாணவர்களை ஒருங்கிணைத்து அழைத்து வரும் 2 ஆசிரியர்களுக்கு இலவச பயணச்சீட்டு வழங்கப்படும் என கப்பல் நிறுவன உரிமையாளர் சுந்தர்ராஜன் தெரிவித்துள்ளார். https://www.samakalam.com/இந்தியாவில்-இருந்து-கப்ப/
  22. ரஷ்ய ஜனாதிபதி புட்டின் - அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் சந்திப்பு : பேசப்பட்ட முக்கிய விடயங்கள் என்ன ? 16 Aug, 2025 | 10:29 AM ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையில் கடந்த 3 ஆண்டுகளை கடந்து நீடிக்கும் யுத்தத்தை நிறைவுக்கு கொண்டு வர அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கடுமையான முயற்சி மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், ரஷ்ய ஜனாதிபதி புட்டினை அமெரிக்காவின் அலஸ்காவிற்கு அழைத்து டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்தினார். சிறப்பு விமானத்தில் அலஸ்கா சென்ற ரஷ்ய ஜனாதிபதி புட்டினுக்கு, அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் செங்கம்பள வரவேற்பளித்தார். ரஷ்ய ஜனாதிபதி புட்டினை, டிரம்ப் கைகுலுக்கி வரவேற்றார். அதன்பின், இரு நாட்டு தலைவர்களும் ஒன்றாக நின்று புகைப்படம் எடுத்து கொண்டனர். சந்திப்பு நடைபெற இருந்த இடத்திற்கு இருவரும் ஒரே காரில் பயணித்தனர். இருவரும் தனியே சந்திப்பார்கள் என முதலில் அறிவிக்கப்பட்ட நிலையில், இறுதிக்கட்டத்தில் இரண்டு தரப்பிலும் தலா 3 அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றனர். குறித்த கூட்டம் சுமார் 3 மணிநேரம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து, அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மற்றும் புட்டின் ஆகியோர் கூட்டாக ஊடகவியலாளர்களை சந்தித்தனர். அவர்கள் நின்று கருத்துதத் தெரிவித்த இடத்தின் பின்னணியில் சமாதானத்தை தொடர்தல் என்று எழுதப்பட்டு இருந்தது. முதலில் புட்டினை பேசுமாறு டிரம்ப் சைகை காட்டினார். அதன் படி, தனது பேச்சை ஆரம்பித்த புட்டின், டிரம்ப் உடனான சந்திப்பு தாமதமாக நடந்த ஒன்று என்று குறிப்பிட்டார். போர் மூண்டதற்கான முதன்மை பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்று புட்டின் தெரிவித்தார். அதாவது நேட்டோவில் உக்ரைன் இணைவது தொடர்பான பிரச்னைக்கு தீர்வு தேவை என்று புட்டின் வலியுறுத்தினார். எங்களுக்கு இடையே நடந்த போர்நிறுத்தம் பற்றிய பேச்சுவார்த்தையின் மூலம் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது. நானும், டிரம்பும் வெளிப்படையாக பேசினோம். டிரம்ப் ஜனாதிபதியாக இருந்திருந்தால் போர் தொடங்கியிருக்காது. டிரம்பிற்கு நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். எங்களுக்கு இடையே இடம்பெற்ற பேச்சுவார்த்தை உக்ரைனில் அமைதியை கொண்டு வரும் என நம்புகிறேன். உக்ரைனில் காணப்படும் சூழ்நிலை எங்களுடைய பாதுகாப்புக்கு ஓர் அச்சுறுத்தலாக உள்ளது. உக்ரைனின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என டிரம்ப் கூறியதில் நான் உடன்படுகிறேன். அமெரிக்கா மற்றும் ரஷ்யா இடையே நல்ல பொருளாதார உறவு உருவாகி உள்ளது என தெரிவித்தார். அடுத்த சுற்று பேச்சுவார்த்தை மொஸ்கோவில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. https://www.virakesari.lk/article/222661
  23. அரசுக்குள் குழப்பம் என்று கூறி ஆட்சியைப் பிடிக்க முடியாது - பிரதமர் தெரிவிப்பு! தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசுக்குள் குழப்பம் என்று வதந்திகளைப் பரப்பி ஆட்சியைப் பிடிக்கலாம் என்று எதிர்க்கட்சிகள் கனவு காணக்கூடாது. நாட்டு மக்களின் அமோக ஆணையைப் பெற்ற இந்த அரசை எந்தச் சக்தியாலும் அசைக்கவே முடியாது என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், பிரதமரை மாற்ற வேண்டுமா, இல்லையா என்பதை ஜனாதிபதிதான் முடிவு செய்ய வேண்டும். இந்த விடயத்தில் எதிர்க்கட்சிகளுக்கு என்ன அவசரம்? பிரதமர் பதவியை நான் எந்தச் சந்தர்ப்பத்திலும் துஷ்பிரயோகம் செய்யவில்லை. ஜனாதிபதி என் மீது வைத்துள்ள நம்பிக்கையை நான் கேள்விக்குட்படுத்தவில்லை. ஜனாதிபதியும், தேசிய மக்கள் சக்தி அரசும் என் மீது அழுத்தங்கள் எதனையும் இதுவரை பிரயோகிக்கவில்லை. ஆனால், எதிர்க்கட்சிகள் வதந்திகளை வெளியிட்டு வருகின்றன. சில ஊடகங்கள் இதற்கு முக்கியத்துவம் கொடுக்கின்றன. அனைத்து ஊடகங்களும் நடுநிலையுடன் செயற்பட வேண்டும். உண்மை நிலைமைகளை ஊடகங்கள்தான் மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும். இது தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசு. இந்த அரசுக்குள் குழப்பம் என்று வதந்திகளைப் பரப்பி ஆட்சியைப் பிடிக்கலாம் என்று எதிர்க்கட்சிகள் கனவு காணக்கூடாது. நாட்டு மக்களின் அமோக ஆணையைப் பெற்ற இந்த அரசை எந்தச் சக்தியாலும் அசைக்கவே முடியாது என்றார். https://newuthayan.com/article/அரசுக்குள்_குழப்பம்_என்று_கூறி_ஆட்சியைப்_பிடிக்க__முடியாது_-_பிரதமர்_தெரிவிப்பு!#google_vignette
  24. மீண்டுவரும் பொருளாதார நகர்வுகளை மீட்டெடுக்கும் இன்றைய காலகட்டத்தில் ஹர்த்தால் உள்ளிட்ட போராட்டங்கள் அவசியமற்றது - சச்சிதானந்தம் வலியுறுத்து! தோல்வியில் முடிந்த தமிழ் மக்களது போராட்டத்திலிருந்து மீண்டுவரும் பொருளாதார நகர்வுகளை மீட்டெடுக்கும் இன்றைய காலகட்டத்தில் ஹர்த்தால் உள்ளிட்ட போராட்டங்கள் அவசியமற்றது என சிவசேனை அமைப்பின் தலைவர் சச்சிதானந்தம் தெரிவித்துள்ளார். எதிர்வரும் 18ஆம் திகதியன்று வலிந்து அழைக்கப்பட்டுள்ள ஹர்த்தாலை சைவர்களும் தமிழ்மக்களும் புறக்கணிக்க வேண்டும் எனவும் அழைப்பு விடுத்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் இன்று (15) நடைபெற்ற ஊடக சந்திப்பில் இவ்வாறு கூறிய சச்சிதானந்தம் மேலும் கூறுகையில்:- தற்போது அழைப்பு விடுக்கப்பட்ட கடையடைப்பு போராட்டம் என்பது கடைந்தெடுத்த கயவர்கள் விடுத்துள்ள அழைப்பு. இதை சைவர்கள் குதிப்பாக தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும். கடையடைப்புக்கான தேவை இன்றைய சூழலுக்கு தேவையற்ற ஒன்று. அத்துடன் கடையடைப்புக்கு என்பது காலத்துக்கும் ஒவ்வாத போராட்டம். முல்லைத்தீவில் இளைஞன் இதந்த சம்பவத்துக்கு அது தொடர்பில் குற்றம் சாட்டபட்டவர்கள உடனடியாகக் கைது செய்யப்பட்டுள்ளனர். அங்கு நடந்த சம்பவத்துக்கு காரணம் கஞ்சா குடித்து போதையில் நீரில் வீழ்ந்து இறந்ததே என மதுத்துவ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்நேரம் இராணுவ பிரசன்னம் என்பது தோல்வி அடைந்த இனம் சந்திக்கும் ஒரு இயல்பனது தாக்கம் அல்லது அடக்கு முறைதான். மடு மாதாவின் நலன் கருதி போராட்டத்தை பின்நகர்த்திய குறித்த தரப்னர் நல்லூர் திருவிழாவை குறிவைத்து கடையடைப்பு என கூறி சுயநல அரசியல் இலாபம் தேட முயற்சிப்பதால் நாளாந்தம் உழைத்து வாழும் மக்களின் வழ்வே பாதிக்கும். அந்தவகையில் ஏழை மக்களை பகடைக்காயாக்க முயற்சிக்கும் நரித்தன அரசியலுக்கு இடம்கொடுக்கக்கூடாது. இந்த கடை அடைப்பு போராட்டத்துக்கு வர்த்தகர்களோ, போக்குவரத்து சார் சங்கங்களோ, பொது அமைப்புகளோ எதுவானாலும் ஒத்துழைப்பு வழங்ககூடாது. தோல்வியில் முடிந்த போராட்டத்திலிருந்தி மீண்டுவரும் பொருளாதார நகர்வுகளை மீட்டெடுக்கும் காலத்தில் இந்த போராட்டங்கள் அவசியமற்றது எனவும் அவர் தெரிவித்தார். https://newuthayan.com/article/மீண்டுவரும்_பொருளாதார_நகர்வுகளை_மீட்டெடுக்கும்_இன்றைய_காலகட்டத்தில்_ஹர்த்தால்_உள்ளிட்ட_போராட்டங்கள்_அவசியமற்றது#google_vignette
  25. ரஷ்ய-உக்ரைன் போர் முடிவுக்காக அலாஸ்காவில் டிரம்ப் – புடின் சந்திப்பு Published By: Vishnu 16 Aug, 2025 | 03:24 AM ரஷ்ய-உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில், அமெரிக்க ஜனாதிபதிக்கும் ரஷ்ய ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பு அமெரிக்காவின் அலாஸ்காவில் உள்ள எல்ம்ஹர்ஸ்ட்-ரிச்சர்ட்சன் இராணுவத் தளத்தில் நடைபெற்றது. பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் அலாஸ்கா வந்தடைந்த ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அன்புடன் வரவேற்றார். மேலும், 6 ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும், பேச்சுவார்த்தை நடைபெறும் எல்ம்ஹர்ஸ்ட்-ரிச்சர்ட்சன் அமெரிக்க ராணுவ தளத்திற்கு ஒரே வாகனத்தில் புறப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ராணுவ தளம் அமெரிக்காவிற்கு சொந்தமானது, மேலும் அமெரிக்க ரகசிய சேவை மற்றும் ரஷ்ய பாதுகாப்புப் படைகள் கூட்டாக டிரம்ப் மற்றும் புதின் சந்திப்புக்கு சிறப்பு பாதுகாப்பை வழங்கியுள்ளன. வான்வெளி தடைசெய்யப்பட்ட மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது, மேலும் நகரம் முழுவதும் பொலிஸ் சோதனைச் சாவடிகள் மற்றும் சிறப்புத் தேடல் நடவடிக்கைகளும் செயல்பாட்டில் உள்ளன. அமெரிக்க மற்றும் ரஷ்ய அதிபர்களுக்கு இடையே ஒரு சுற்று நேரடிப் பேச்சுவார்த்தை 16ஆம் திகதி சனிக்கிழமை உள்ளூர் நேரப்படி அதிகாலை 1:15 மணியளவில் நடைபெற்றது. மேலும் இரு நாடுகளின் பிரதிநிதிகளுடன் மற்றொரு சுற்று பேச்சுவார்த்தை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. Virakesari.lkரஷ்ய-உக்ரைன் போர் முடிவுக்காக அலாஸ்காவில் டிரம்ப் – புடின...US President Joe Biden and Russian President Vladimir Putin held a meeting at the Elmhurst-Richardson military base in Alaska to discuss ways to end the Russia-Ukraine war.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.