Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Everything posted by Justin

  1. திரும்பும் வரலாறு -பாகம் 4 போர்மேகமும் இடிமுழக்கமும் நாசி ஜேர்மனி 1938 இலேயே அயல் நாடுகளை ஆக்கிரமிக்க ஆரம்பித்து விட்டதை முன்னைய பாகத்தில் பார்த்தோம். இந்த ஆக்கிரமிப்புக்கள் பாரியளவு எதிர்ப்புகளின்றி நிகழ்ந்தன. முதலில் ஆஸ்திரியா பின்னர் செக்கோஸ்லோவாக்கியாவின் எல்லைப் பகுதிகள் என்பன வீழ்ந்தன. இந்த நாடுகளின் இயற்கை வளங்களை நாசி ஜேர்மனி தன் இராணுவ மயப்படுத்தலுக்கும், பொருளாதாரப் பலத்திற்கும் பயன்படுத்திக் கொண்டது. அதே வேளையில், ஜேர்மனியின் யூதர்களுக்கெதிரான கொள்கைகளும் ஆக்கிரமிப்புப் பகுதிகளுக்குப் பரவின. ஐரோப்பாவில் யூத மக்களுட்பட்ட ஆரியல்லாத மக்களுக்கு எதிர்காலம் கேள்விக் குறியானது. இருண்ட எதிர்காலத்தை எதிர்கொள்ள முடியாத யூதர்கள் ஏராளமானோர் தற்கொலை செய்து கொண்டார்கள். இன்னும் பல்லாயிரம் பேர், அத்திலாந்திக்கைத் தாண்டி அமெரிக்கக் கண்டத்து நாடுகளில் அடைக்கலம் தேடினர் - எல்லோருமே இந்த விடயத்தில் அதிர்ஷ்டசாலிகளாக இருக்கவில்லை. உதாரணமாக, கியூபாவை நோக்கியும், கனடாவை நோக்கியும் யூத அகதிகளை ஏற்றிக் கொண்டு சென்ற கப்பல்கள் சில திருப்பி விடப் பட்டன. அந்தக் கப்பல்களில் இருந்து இறக்கப் பட்ட யூத அகதிகள் வதை முகாம்களுக்கு அனுப்பப் பட்டனர், அவர்களுள் பலர் உயிரோடு மீளவில்லை! யூத அகதிகளுக்கு நடந்த இந்த அவலம், மீள நிகழாமல் இருக்க பிற்காலத்தில் ஐ.நா எடுத்துக் கொண்ட முயற்சிகளில் ஒன்று தான் ஐக்கியநாடுகள் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகர் (UNHCR) என்ற பதவியின் உருவாக்கம். இந்த அமைப்பினால் பயனடைந்தவர்களுள் புலம் பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர்களும் அடங்குகின்றனர். அதே வேளை ஈழத்தமிழர்கள் போல அதிர்ஷ்டம் கிட்டாத றோஹிங்கியா அகதிகளும் கூட ஓரளவுக்கு இந்த அமைப்பினால் தான் பாதுகாக்கப் படுகின்றனர். (இன்னொருவரின் கல்லறையின் மீது கட்டியெழுப்பப் பட்ட சமூகக் கட்டமைப்புகள் தான் இன்று எங்களுக்கு நிழல் தருகின்றன என்பதை புலம்பெயர் ஈழவர்கள் உணர்ந்தாலே இந்தத் தொடரின் பாதி நோக்கம் நிறைவேறி விடும்!) ஹிற்லரைக் குளிர்வித்தல்! ஏற்கனவே சுட்டிக் காட்டப் பட்டது போல, ஹிற்லர் , நாசிகள் அவர்கள் கொள்கைகள் என்பன உடனடியாக உலகத்தின் மனச்சாட்சியைத் தட்டியெழுப்பவில்லை. உதாரணமாக, அமெரிக்கா நாசி ஜேர்மனிக்குத் தான் கொடுத்த கடன்களை எப்படிப் பவ்வியமாகத் திருப்பி வசூலிப்பதென மட்டும் யோசித்தது. இந்த நோக்கத்தை நிறைவேற்ற, ராஜதந்திர அனுபவமில்லாத ஆனால் ஜேர்மன் மக்கள் மீது அபிமானம் கொண்ட ஒரு வரலாற்றுத் துறைப் பேராசிரியரை தன் தூதுவராக பேர்லினில் நியமித்தது. நாசி ஜேர்மனியை எதிர்க்கும் வலுவுடன் எஞ்சியிருந்தவை மூன்று நாடுகள்: பிரிட்டன், பிரான்ஸ், சோவியத் ஒன்றியம். பிரான்ஸ், மஜினோ லைன் என்ற ஒரு எல்லைக் கோட்டை பாதுகாப்பு அரண்களுடன் அமைத்து விட்டு போர் வரும் போது பார்க்கலாம் என்று காத்திருந்தது. பிரிட்டனில் ஆட்சியில் இருந்த நெவில் சம்பர்லின் போரை விரும்பவில்லை. "ஹிற்லர் மரியாதையை எதிர்பார்க்கிறார், அதைக் கொடுத்து விட்டால் அடங்கி விடுவார்" என்று நினைத்த பிரிட்டன் அரசியலாளர்களுள் ஒருவராக இருந்த சம்பர்லின், 1938 இல் ஜேர்மனி சென்று ஹிற்லரை நேரடியாகச் சந்தித்து ஒரு ஒப்பந்தம் போட்டு விட்டு வந்தார். மியூனிக் (Munich) ஒப்பந்தம் எனப்பட்ட அந்த ஒப்பந்தம், ஜேர்மனியும் பிரிட்டனும் இனி ஒரு போதும் யுத்தத்தில் எதிரிகளாக இருக்க மாட்டா என்றிருந்தது. இத்தகைய "சர்வாதிகாரி எதிர்பார்ப்பதைக் கொடுத்தால் சமாதானம் நிலைக்கும்" என்ற கொள்கையை "குளிர்வித்தல் கொள்கை" (appeasement policy) என்று அழைப்பர். இன்றும் ரஷ்யாவின் புட்டின் கேட்பதைக் கொடுத்தால் உக்ரைனில் அழிவு நிற்கும் என்போர் இதே குளிர்வித்தல் கொள்கையையே வேறு சொற்களில் வெளிப்படுத்துகின்றனர். ஆனால், ஹிற்லர் மியூனிக் உடன்படிக்கை உருவாகி சில மாதங்களிலேயே முழு செக்கோஸ்லோவாக்கியாவையும் ஆக்கிரமித்து குளிர்வித்தல் சரிப்பட்டு வராத ஒரு கொள்கையென நிரூபித்தார். இவ்வளவு நிகழ்ந்த பின்னும் ஹிற்லரை நம்பிய உலக நாடுகளும் தலைவர்களும் இருந்தனர், அவர்களுள் ஒருவர் சோவியத் ஒன்றியத் தலைவர் ஸ்ராலின். ஏற்கனவே பிரான்சுடன் ஒரு எதிர்கால ஒத்துழைப்பை உறுதி செய்யும் ஒப்பந்தத்தை ஸ்ராலின் செய்து, நாசி ஜேர்மனியை எதிர்க்கக் கூடிய அணியில் சோவியத் ஒன்றியத்தை வைத்திருந்தார். ஆனால், 1939 ஆகஸ்ட் மாதம், மின்னாமல் முழங்காமல் நாசி ஜேர்மனியோடு ஒரு பகைமை தவிர்ப்பு ஒப்பந்தத்தை ஸ்ராலின் செய்து கொண்டார். மொலரோவ் - றிப்பன்ட்ரொப் உடன்படிக்கை என்ற பெயர் கொண்ட இந்த உடன்பாடு பகைமை தவிர்ப்பு ஒப்பந்தமாக இருந்தாலும், அது உண்மையில் ஐரோப்பாக் கண்டத்தைப் பங்கு பிரித்துக் கொள்ளும் ஒரு ஒப்பந்தமாக இருந்தது. இந்தப் பங்கு பிரிப்பு ஆரம்பித்தது போலந்தில். 1939, செப்ரெம்பர் 1 ஆம் நாள் ஜேர்மனி போலந்தின் மீது ஆக்கிரமிப்பை முடுக்கி விட்டது. அதிகாலை 4.45 மணிக்கு, நாசி ஜேர்மனியின் பீரங்கிக் கப்பலில் இருந்து போலந்தின் வட கரையோர நகரான டான்சிக் (Danzig, தற்போதைய பெயர் கடைன்ஸ்க் - Gdansk) மீது ஏவப்பட்ட முதல் குண்டு தான், இரண்டாம் உலகப் போரின் முதல் வெடியெனக் கருதப் படுகிறது. இரண்டு வாரங்கள் கழித்து, ஸ்ராலினின் சோவியத் ஒன்றியம் போலந்தின் கிழக்குப் பாதியைப் படையெடுத்து ஆக்கிரமித்தது. ஹிற்லர் ஸ்ராலின் கூட்டின் முதற்பலி போலந்து! போலந்தின் ஆக்கிரமிப்பைத் தொடர்ந்து, எஞ்சியிருந்த நாசி எதிர்ப்பு நாடுகளான பிரான்சும், பிரிட்டனும் நாசி ஜேர்மனி மீது போர்ப் பிரகடம் செய்தன. ஆனாலும், அடுத்த சில மாதங்களில் நாசி ஜேர்மனியின் இராணுவ வலிமையை இந்த இரு நாடுகளின் தரை, வான், கடற்படைகளால் மழுங்கடிக்க இயலவில்லை. 1940 ஏப்பிரலில், மீண்டும் ஒரு சுற்று ஆக்கிரமிப்பை ஆரம்பித்த நாசி ஜேர்மனி சடுதியாக நோர்வே, டென்மார்க், பெல்ஜியம், நெதர்லாந்து ஆகிய நாடுகளை ஆக்கிரமித்திருந்தது. 1940 மே மாதம் ஆரம்பித்த போது மேற்கில் பிரான்ஸ் மஜினோ எல்லையை நோக்கி நாசிகள் நகர்ந்து கொண்டிருந்தார்கள். முடிவிற்கு வந்த குளிர்வித்தல் கனவு ஹிற்லரின் சடுதியான இராணுவ வெற்றிக்கு சம்பர்லினின் குளிர்வித்தல் கொள்கை ஒரு காரணம் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், 1939 இல் சம்பர்லின் மியூனிக் உடன்படிக்கை மூலம் போரை தற்காலிகமாக ஒத்தி வைத்தாரென சில வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். உதாரணமாக, பிரிட்டனின் றோயல் விமானப் படை (RAF) 1939 இல் ஒரு போரை எதிர்கொள்ளக் கூடிய ஆள், தளபாட பலங்களோடு இருக்கவில்ல. ஆனால் 1940 இல் நாசிகள் பிரிட்டன் மீது தொடர் விமானத் தாக்குதல்களை நடத்திய போது, ஓரளவுக்கேனும் தாக்குப் பிடிக்கும் அளவுக்கு றோயல் விமானப் படை வளர்ந்திருந்தது. ஆனால், ஹிற்லரின் வளர்ச்சிக்கு வழி கோலி விட்டார், தொடர் தோல்விகளுக்கு தலைமையாக இருக்கிறார், ஆகிய காரணங்களால் சம்பர்லின் தொடர்ந்து பிரதமராக இருக்கத் தகுதியற்றவர் என்ற எண்ணம் ஓங்கியது. அவரும் உடல் நலக் குறைவால் பதவி விலக, வின்ஸ்ரன் சேர்ச்சில் பிரதமரானது 1940, மே 10 ஆம் திகதி. சேர்ச்சிலின் வரவோடு, சண்டைக்காரனைக் குளிர்விக்க வேண்டுமென்ற குரல்கள் பிரிட்டனில் அடங்க ஆரம்பித்தன. வின்ஸ்ரன் சேர்ச்சில் சேர்ச்சில் பற்றி மேலும் எழுதுவதற்கு முன்னர் அவர் அப்பழுக்கற்ற ஒரு பூரணமான அரசியல் தலைவர் அல்ல என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும் (அப்படி யாரும் இன்றும் இல்லை என்பதே உண்மை). பிரிட்டனின் காலனி நாடுகளுக்கு சுதந்திரம் வழங்குவதை எதிர்த்த பிரிட்டன் அதிகார மட்டத்தில் சேர்ச்சில் முக்கியமானவர். உள்ளூரில், அரசியல் கொள்கையை விட தனது அரசியல் முன்னேற்றத்தை ஒரு படி மேலே வைத்திருந்த சேர்ச்சில் ஓரிரு தடவைகள் கட்சியை மாற்றிக் கொண்டார். ஆனால், இந்தக் குறைபாடுகளைத் தாண்டி ஒரு இக்கட்டான காலகட்டத்தில் தலைமையேற்க அவசியமான பல பண்புகளுக்கு சேர்ச்சில் சொந்தக்காரராக இருந்தார். 1. சிறந்த பேச்சாளர், எழுத்தாளர் - இதனால் தன் கருத்துகளை இலகுவாக பகிரங்கப் படுத்த முடிந்தது, போர்க்கால இங்கிலாந்தில் இந்தத் தொடர்பாடல் மிகவும் பலன் தந்தது. 2. பிரிட்டன் கடற்படையில் பணியாற்றிய அனுபவமும், முதல் உலகப் போரில் நேரடியாகப் பங்கு பற்றிய அனுபவமும் சேர்ச்சிலிடம் இருந்தன. எனவே, பிரதமரான சேர்ச்சில் அது வரை இல்லாதிருந்த பாதுகாப்பு அமைச்சை புதிதாக உருவாக்கி, தன்னிடமே வைத்துக் கொண்டு நேரடியாக பிரிட்டனின் படை நடவடிக்கைகளைக் கண்காணித்தார். 3. சேர்ச்சில் இறுதி வரை ஒரு வரலாற்று மாணவனாகவே இருந்தார். கடந்த காலங்களின் போர் வரலாறுகளை வாசிப்பதிலும், சமகாலப் போர்களை வரலாறாகப் பதிவு செய்வதிலும் ஆர்வமாக இருந்த சேர்ச்சிலுக்கு, அவரது எழுத்துப் பணிக்காக பிற்காலத்தில் இலக்கியத்திற்கான நோபல் பரிசும் வழங்கப் பட்டது. நாசி விமானப் படை விமானங்களைத் தேடி தூரநோக்கிக் கண்ணாடியூடாக அவதானிக்கும் றோயல் விமானப் படைத் தொண்டர் - இப்படி ஆயிரக்கணக்கான தொண்டர்கள் ரேடாருக்கு மேலதிகமாக பணியில் இருந்தனர் (பட உதவி: நன்றியுடன் அமெரிக்க அரசு ஆவணக்காப்பகம்) நாசிகளை எதிர்க்கும் முயற்சியில், சேர்ச்சில் சில உடனடி நடவடிக்கைளை எடுத்தார். இது வரை நாசிகளின் தாக்குதல் பாணி, செறிவான விமானக் குண்டு வீச்சுகள் , பீரங்கித் தாக்குதல்கள் மூலம் இலக்கைச் சிதைத்து விட்டு, பின்னர் தரைப் படையை அனுப்பி ஆக்கிரமிப்பது என்பதாக இருந்தது (blitzkrieg - அதிரடி அல்லது செறிவடி எனத் தமிழில் கூறலாம்). எனவே, நாசிகளின் விமானத் தாக்குதலில் இருந்து நாட்டைக் காக்கும் நடவடிக்கைகள் முடுக்கி விடப் பட்டன. பிரிட்டனின் கரையோரங்களில் ரேடார் நிலையங்கள் அமைக்கப் பட்டன. றோயல் விமானப் படைக்கென புதிய விமானங்களை உற்பத்தி செய்வதற்கு தனியான ஒரு அமைச்சு உருவாக்கப் பட்டது - அதன் தலைவராக செயல்திறன் மிக்க ஒருவர் நியமிக்கப் பட்டு, ஆயிரக்கணக்கான புதிய தாக்குதல் விமானங்கள் சில மாதங்களிலேயே பாவனைக்கு வெளிவிடப் பட்டன. பிரிட்டனின் அந்தக் கால விமான இயந்திரவியல் தொழில்னுட்பத்திற்குச் சாட்சியாக ஹரிகேன் (Hurricane), ஸ்பிற்fயர் (Spitfire) ஆகிய சிறந்த சண்டை விமானங்கள் உருவாக்கப் பட்டன. கடற்படையைப் பொறுத்தவரை, பிரிட்டனை விடப் பலம் வாய்ந்த கடற்படை பிரான்சிடம் இருந்தது, ஆனால் பிரான்ஸ் நாசிகளிடம் தோற்றால் அந்தக் கடற்படையே பிரிட்டனுக்கு ஆப்பாகும் என்பதையும் சேர்ச்சில் உணர்ந்திருந்தார். இதனாலேயே, பிரான்ஸ் சுதந்திரமாக இருக்க வேண்டிய அவசியத்தை அடிக்கடி பிரெஞ்சுத் தலைவர்களிடம் நினைவுறுத்தி வந்தார் சேர்ச்சில். வீழ்ந்தது பிரான்ஸ் இந்த இராணுவ நிலவரத்தை மறுகரையில் இருந்த நாசிகளும் உணர்ந்திருந்தனர். எனவே, சேர்ச்சில் பிரிட்டன் பிரதமராகப் பதவியேற்ற அன்றே பிரான்சை ஆக்கிரமிக்கும் நடவடிக்கையையும் நாசிகள் ஆரம்பித்தனர். பிரெஞ்சுப் படைத்தலைமை தனது மஜினோ கோட்டின் வலிமையை சற்று அளவுக்கதிகமாகவே நம்பியிருந்தது. ஆனால், இந்த மஜினோ எல்லை என்பது ஒரு தொடரான காவலரண் சுவர் அல்ல. தெற்கே பிரான்ஸ் - இத்தாலி எல்லையில் ஆரம்பிக்கும் இந்தக் காவலரண்கள் நிறைந்த கற்பனைக் கோடு, சுவிஸ் எல்லையில் முடிவுற்று, பின்னர் ஜேர்மனியின் எல்லையோடு மீள ஆரம்பித்து, வடக்கில் பெல்ஜியத்தின் எல்லையோடு முடிவுறுகிறது. இந்த பெல்ஜியம்- பிரான்ஸ் எல்லையில் இருக்கும் ஆர்டென் காடுகள் (Ardennes forest) மிக அடர்த்தியான, நதிகளால் நிறைந்த ஒரு கன்னிக் காட்டுப் பிரதேசம். பிரெஞ்சுப் படைகளுக்கு, மஜினோ லைனைத் தாக்குவதாகப் பாசாங்கு காட்டிய நாசிகள், தங்கள் தாங்கிப் படையினரை இந்த ஆர்டென் காடுகளூடாக அனுப்பி பிரான்சின் வட கிழக்குப் பகுதியில் நுழைந்தார்கள். இது வரை எந்தப் படையாலும் ஊடுருவப் படாத ஆர்டென் காட்டினூடாக நாசிகள் வருவார்கள் என்ற எதிர்பார்ப்பின்றி இருந்த பிரான்ஸ், பாரிய இழப்புகளுடன் அடுத்த ஒரு மாதத்தினுள் நாசி ஜேர்மனியிடம் சரணடைந்தது. தற்போது பிரிட்டனின் நிலைஅபாயகரமானதாக மாறி விட்டது. நிச்சயம் பிரிட்டன் நாசிகளின் இலக்காக இருக்கும். "பிரெஞ்சுக் கடற்படையை தான் கைப்பற்றப் போவதில்லை" என ஹிற்லர் உத்தரவாதம் வழங்கியிருந்தாலும், அவ்வுறுதியின் நம்பகத் தன்மையை உலகம் அறிந்திருந்தது. எனவே, சேர்ச்சில், பிரான்சுக்கு வெளியே அதன் காலனிகளில் தரித்திருந்த பிரெஞ்சுக் கடற்படையினருக்கு மூன்று தெரிவுகளைக் கொடுத்தார். ஒன்று: பிரிட்டனுக்கு அல்லது பிரிட்டன் காலனிகளுள் ஒன்றுக்கு கப்பல்களோடு வந்து விடுங்கள், உங்களை இணைத்துக் கொள்கிறோம், இரண்டு: எங்களிடம் சரண்டையுங்கள், கப்பல்களை வைத்துக் கொண்டு உங்களை விட்டு விடுகிறோம், மூன்று: கரீபியன் தீவுகளுக்குச் சென்று அமெரிக்காவிடம் கப்பல்களை ஒப்படையுங்கள், அமெரிக்கா யுத்தம் முடியும் வரை கப்பல்களை வைத்திருக்கும். சில நாட்கள் அவகாசம் கொடுக்கப் பட்ட பிறகும் இந்த மூன்றில் ஒன்றுமே நடக்காமையால், பிரிட்டன் கடற்படை பிரெஞ்சுக் கடற்படையின் கப்பல்களைக் கைப்பற்றும் நடவடிக்கைளை எடுக்க ஆரம்பித்தது. இத்தகைய ஒரு நடவடிக்கையின் போது ஆயிரம் பிரெஞ்சுக் கடற்படையினர் அப்போது பிரெஞ்சுக் காலனியாக இருந்த மொரொக்கோவின் துறைமுகமொன்றில் பிரிட்டனின் தாக்குதலில் கொல்லப் பட்டனர். இந்தக் காலப்பகுதியில், ஹிற்லரும் அவரது உள்வட்டத்தினரும் அடுத்த கட்ட நகர்வுகளைத் திட்டமிட ஆரம்பித்து விட்டிருந்தனர். ஹிற்லர் இன்னும் பிரிட்டனை ஆக்கிரமிக்கும் உத்தரவை வழங்கவில்லை. இதற்கு ஒரு காரணம் இருந்தது. அந்தக் காரணத்தை அடுத்த பாகத்தில் நாம் பார்க்கும் போது, ஏன் சேர்ச்சிலும், 1940 களில் வாழ்ந்த பிரிட்டன் மக்களும் உலகத்தை பேரழிவிலிருந்து காத்த புண்ணியவான்கள் என்பது புலப்படலாம். -தொடரும்..
  2. அட, எதிர்பார்க்காத மாதிரியான முடிவு! நைற் ஷியாமளனின் The Sixth Sense படம் நினைவிற்கு வந்தது! பி.கு: "முருகர்சாமி" வன்முறையைத் தூண்டினார் என்று ஒரு சைட் கேசையும் பிலிப்ஸ் முன்னெடுக்க வைக்கலாமோ? 😂
  3. நிச்சயமாக, வாரம் இரு முறை போடுவதாகத் தான் திட்டம், இந்த வாரம் வேலை கூடி நேரம் சுருங்கி விட்டதால் நாளை போடுவேன்! நன்றி
  4. "புத்தியுள்ளவனுக்கே உலகம் சொந்தம்" என்று யூதர்கள் நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த எளிய விளக்கத்தை ஒதுக்கி விட்டு "யூதர்கள் உலகை ஆட்டிப் படைக்கிறார்கள்" என்ற சதிக் கோட்பாடு கலந்த ஒரு கருத்தை சிலர் பரப்பி வருவது உண்மை. "தகுதியே இல்லாமல் யூதர்கள் ஜேர்மனியில் மேலாண்மை செய்கிறார்கள், எனவே அழிக்க வேண்டும்!" என்று முழுமையான சதிக் கோட்பாட்டை வைத்துத் தான் நாசிகள் யூதப் படுகொலையை நியாயப் படுத்தினர்.
  5. திரும்பும் வரலாறு - பாகம் 3 – நாசிகள். fபிரிட்ஸ் ஹேபர் (Fritz Haber) ஒரு வித்தியாசமான பேர்வழி. பயிர்கள் வளர நைதரசன் அவசியம். ஆனால், காற்றில் நிறைந்திருக்கும் நைதரசன் வாயுவை எல்லாப் பயிர்களாலும் பயன்படுத்திக் கொள்ள இயலாது. ஹேபர், நைதரசனை அமோனியா உரமாக மாற்றும் வழியைக் கண்டு பிடித்தது உலக விவசாய உற்பத்திக்குப் பாரிய பங்களிப்புச் செய்தது. இந்தக் கண்டு பிடிப்பிற்காக அவருக்கு இரசாயனவியலில் நோபல் பரிசும் கிடைத்தது. ஹேபரின் அடுத்த கண்டு பிடிப்பு கொஞ்சம் விவகாரமானது. குளோரின் வாயுவை, வாயுவாகவே குடுவையில் வைத்திருக்கும் முறையை ஹேபர் கண்டு பிடித்த போது, முதலாம் உலகப் போர் முடிவிற்கு வந்து கொண்டிருந்தது. ஹேபர், பிரெஞ்சுப் போர் முனைக்கு தனது குளோரின் வாயுச் சிலிண்டர்களை ஜேர்மன் படையினரோடு சேர்ந்து எடுத்துச் சென்று பதுங்கு குழியில், காற்று பிரெஞ்சுப் படைகள் இருந்த பக்கம் வீசும் வரைக் காத்திருந்தார். காற்று வளமாக வந்த வேளையில் குளோரின் வாயுவைத் திறந்து விட்டார். காற்றோடு சேர்ந்து பிரெஞ்சுப் படைகளின் பக்கம் நகர்ந்த குளோரின் வாயு தான் முதலாவது இரசாயன ஆயுதம். தரையோடு சேர்ந்து பரவிய குளோரின் வாயு எதிரிகளின் பதுங்கு குழிகளுக்குள்ளும் இறங்கி அவர்களை மூச்சுத் திணற வைத்தது. குளோரின் வாயுவினால் உடனடியாக இறக்காதோர் கண் பார்வை, நுரையீரல் என்பன நிரந்தரமாகப் பாதிக்கப் பட்டு சில நாட்களில் இறப்பர். அந்த மரணம் வரை உடல் அனுபவிக்கும் உபாதை கொடூரமானது. இவ்வாறு ஒரு தடவையில் ஜேர்மனி பயன்படுத்திய குளோரின் வாயுவினால் மட்டும் ஆயிரத்திற்கு சற்று அதிகமான பிரெஞ்சு, கனேடியப் படைகள் இறந்தனர். ஹேபருக்கு ஜேர்மனியில் மதிப்பு உயர்ந்தது, ஆனால் அவர் தனது விஞ்ஞான அறிவை இவ்வாறு பயன்படுத்தியதை அறிந்து அதிர்ச்சியடைந்த ஹேபரின் மனைவி தன் உயிரை மாய்த்துக் கொண்டார். இதில் சுவாரசியமான தகவல் என்னவெனில், ஹேபர் ஒரு ஜேர்மனிய யூதர்! ஆனால், ஜேர்மன் தேசபக்தி காரணமாக கிறிஸ்தவ மதத்திற்கு மாறி, 1933 இல் ஹிற்லர் ஆட்சிக்கு வந்த வேளையிலும் மேலும் சில இரசாயனவியல் வாயுக்களைக் கண்டறிந்து ஜேர்மனியின் விஞ்ஞான வளர்ச்சிக்கு உதவிக் கொண்டிருந்தார். இவ்வாறு இவர் அடுத்துக் கண்டு பிடித்த வாயு, ஐதரசன் சயனைட் வாயு. சிக்லோன் (Zyklon) என்று அழைக்கப் பட்ட இந்த நச்சு வாயுவை இலகுவாக சில திண்மப் பொருட்களிலிருந்து தயாரிக்கும் வழியை ஹேபர் கண்டு பிடித்தார். இந்த நச்சு வாயுவை பூச்சி கொல்லியாகப் பாவிக்கும் நோக்கமே ஹேபரினுடையதாக இருந்தது. ஹேபரின் இந்தக் கண்டு பிடிப்புத் தான் அடுத்த 5 ஆண்டுகளில், சிக்லோன் - பி என்ற பெயரில் மில்லியன் கணக்கான யூதர்களை வாயு அறைகளில் அடைத்து வைத்துக் கரப்பான் பூச்சிகள் போல சில நிமிடங்களில் கொலை செய்யப் பயன் படுத்தப் பட்டது. ஆனால், இது நடப்பதற்கு முன்னரே ஹேபரின் யூத அடையாளம் காரணமாக அவரையும் ஜேர்மன் நாசிகள் ஒதுக்கி வைத்து விட்டமையும் நடந்தது. திட்டமிட்ட யூத ஒதுக்கல் முதலில், எடுத்தவுடனேயே நாசிகள் யூதர்களையும் ஏனையோரையும் கொலை செய்ய ஆரம்பிக்கவில்லை. உலக நாடுகள் பார்த்துக் கொண்டிருக்கின்றன, சர்வதேச வர்த்தகம், இராஜ தந்திர உறவுகள், 1936 பேர்லின் ஒலிம்பிக் என்பன இன்னும் ஜேர்மனியை படுகொலைகள் செய்ய விடாமல் தடுத்திருந்தது. ஆனால், சில திட்டமிட்ட நாசி நடவடிக்கைகள் யூதர்களைக் குறி வைத்தன (இது முழுமையான பட்டியல் அல்ல!): 1. யூதர்களின் வியாபாரங்களைப் புறக்கணிக்கும் படி கோரும் பிரச்சாரம் மூலம் யூதர்களின் பொருளாதாரம் முடக்கப் பட்டது. இது மட்டுமன்றி, புதிதாக ஆரம்பிக்கப் படும் வியாபரங்களில் யூதர்கள் முழு உரிமையாளர்களாக இருக்க முடியாத கட்டுப் பாடுகளும் உருவாக்கப் பட்டன. 2. வர்த்தக சங்கங்களில் யூதர்கள் அங்கத்துவராக இருக்க முடியாத சட்டங்கள் உருவாக்கப் பட்டன. நாசி ஆதரவாளர்களால் நிர்வகிக்கப் பட்ட தொழிற்சங்க அமைப்புகளே முன்னின்று இந்த ஒதுக்கல்களைச் செயல் படுத்தினர். 3. சட்டத்தரணிகளாக, மருத்துவர்களாக, மருந்தாளர்களாக யூதர்கள் பணி செய்யும் அனுமதியை ஜேர்மன் நகரங்களும் மானிலங்களும் மறுத்தன. 4. ஒரு கட்டத்தில், ஜேர்மன் யூதர்களின் பிரஜாவுரிமையைப் பறித்து விடும் சட்டமொன்று வரைபாக சில மாதங்கள் விவாதிக்கப் பட்டது. இறுதியில், சர்வதேச எதிர்ப்பு வரலாமென்பதால் அதை நிறைவேற்றாமல் விட்டார்கள். ஆனால், 1938 அளவில் ஜேர்மன் யூதர்களின் கடவுச் சீட்டுகளைத் தற்காலிகமாகப் பறிமுதல் செய்து, அதில் "ஜெ" என்ற எழுத்தைக் குறித்துத் திருப்பிக் கொடுத்தார்கள். இந்த "ஜெ" என்ற எழுத்துக் குறித்த கடவுச் சீட்டுகளை ஜேர்மன் அதிகாரிகள் புதுப்பிக்க மறுத்ததால், நடைமுறையில் ஜேர்மன் யூதர்கள் தங்கள் குடியுரிமையை இழந்தனர். 5. ஜேர்மன் பாடசாலைகளில் யூதக் குழந்தைகள் சேர முடியாமல் தடை வந்தது. ஒரு கட்டத்தில் எல்லா யூதர்களையும் ஒன்று கூட்டி, பஸ்களில் ஏற்றி நகரின் ஒரு மூலையில் யூதர்களுக்கு மட்டுமே உரியதான ஒரு குடியேற்றத்தில் ஒதுக்கி வாழ வைத்தனர். நினைத்த நேரத்தில், ஜேர்மன் பொலிஸ், காக்கிச் சட்டைக் கும்பல் என்பன இங்கே நுழைந்து யாரையும் கைது செய்ய, தாக்க இந்தக் குடியேற்றங்கள் வாய்ப்பாக இருந்தன. யூதர்கள் அல்லாதோருக்கும் சட்டரீதியான ஒதுக்கல் முன்னரே குறிப்பிட்டது போல, றோமா எனும் ஜிப்சி மக்களும் கூட யூதர்களுக்கு இணையாகப் பாதிக்கப் பட்டனர். இன்னொரு விதமான கொடுமையான ஒதுக்கலையும் நாசிகள் சட்ட ரீதியாக்கினர்: 1933 இல், நாசிகள் உடற்குறைபாடுகள் தொடர்பான ஒரு சட்டத்தை இயற்றினர்: Law for the Prevention of Progeny with Hereditary Diseases. இந்தச் சட்டத்தின் நோக்கம், அப்பழுக்கற்ற ஆரிய இனமாக ஜேர்மனியர்களை மாற்றும் போலி விஞ்ஞான நோக்கமாக இருந்தது (Eugenics - இதை மனிதர்களில் செய்யவே முடியாதென்பது வேறு கதை). அடுத்த 8 வருடங்களில், ஹிற்லரின் கட்டளைப் படி, “ஒபரேஷன் T4” எனும் பெயரில் இரகசியமாக முன்னெடுக்கப் பட்ட திட்டத்தின் கீழ், மூன்று லட்சம் வரையான உடல், மன ஊனங்கள் உடையவர்கள் வாயுக் கூடங்களிலும், விஷ ஊசிகளாலும் கருணைக் கொலை செய்யப் பட்டனர். உண்மையில், யூதர்களைக் கொல்லப் பயன்படுத்தப் பட்ட சிக்லோன் பி விஷவாயு, இந்த உடல் ஊனமுற்றோரில் தான் பரீட்சித்துப் பார்க்கப் பட்டது. பின்னர், 1938 இல் இருந்து இதே முறை மூலம் யூதர்களும் கொல்லப் பட்டனர். இறுதித் தீர்வு - “Final Solution” 1938 நவம்பர் 9 ஆம் திகதி "உடைந்த கண்ணாடி இரவுகள்" (Kristallnacht) என அழைக்கப் படுகிறது. அந்த இரவில் தான், கும்பலாக நாசி ஆயுததாரிகளும், காக்கிச் சட்டைகளும் ஜேர்மன் யூதர்கள் மீது வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டு சில நூறு யூதர்களைக் கொன்றனர். ஆயிரக் கணக்கான யூதர்கள் கைது செய்யப் பட்டு, புச்சன்வால்ட் வதை முகாமிற்கு அனுப்பப் பட்டனர் - இவர்களுள் பெரும்பாலானோர் நச்சு வாயு அறைகளில் பின்னர் கொல்லப் பட்டனர். இதே ஆண்டில், நாசிகள் ஆஸ்திரியாவையும், பின்னர் செக்கோஸ்லோவாக்கியாவையும் எதிர்ப்பின்றிக் கைப்பற்றி, அங்கே வாழ்ந்த யூதர்களையும் வெவ்வேறு வதை முகாம்களில் அடைத்தனர். ஜேர்மனிக்கு வெளியே, போலந்தில் இருந்த ஆஸ்விற்ஸ் வதை முகாம் தான் அதிக கிழக்கு ஐரோப்பிய யூதர்களைப் பலி கொண்ட கொலைக்களம். ஆனால், வதை முகாம்களில் மட்டுமன்றி சில இடங்களில் திறந்த வெளிகளிலேயே யூதர்கள் பெருந்தொகையாகக் கொல்லப் பட்டனர். இத்தகைய திறந்த வெளிக் கொலைக்களங்களில் முக்கியமானதாக உக்ரைன் தலைநகர் கியேவிற்கு அண்மையில் இருக்கும் பாபி யார் (Babi Yar) பள்ளத் தாக்கு விளங்குகிறது. இந்தப் பகுதியை இயற்கைப் புதைகுழியாகப் பயன்படுத்தி, சுமார் 34,000 யூதர்களை நாசிகள் சில நாட்களில் இயந்திரத் துப்பாக்கிகளால் சுட்டே கொன்றொழித்தனர். இந்த பாபி யார் படுகொலையில் அந்தக் காலப் பகுதியில் சோவியத் எதிர்ப்பாளர்களாக இருந்த உக்ரைனிய ஆயுதக் குழுக்களும் பங்கு கொண்டிருந்தன. 1938 முதல் 1945 வரையான காலப்பகுதியில் மூன்றுக்கு மேற்பட்ட வதை முகாம்கள், ஏனைய திறந்த வெளிக் கொலைகளங்களில் கொல்லப் பட்ட யூதர்களின் எண்ணிக்கை மட்டும் 6 மில்லியன்கள். இதை விட மேலதிகமாக நாசிகளால் கொல்லப் பட்ட ஏனையோர் 4 மில்லியன் வரை இருப்பர். இப்படி, செறிவான, வினைத்திறனான மனிதக் கொலையே முழுமூச்சாக இயங்கிய ஒரு அரச நிர்வாகத்தை அது வரை உலகம் கண்டிருக்கவில்லை. “மிகுந்த வீரரான” 😎ஹிற்லர், இத்தனை படுகொலைப் பழிக்குப் பின்னரும் பொறுப்பை முன்வந்து ஏற்றுக் கொள்ள முடியாமல், தன் காதலியோடு தற்கொலை செய்து கொண்டார். ஆனால், அவரது குற்றத்தில் பங்கு கொண்ட பலர் பிடிக்கப் பட்டு மரண தண்டனைக்குள்ளாகினர். இஸ்ரேல் சில நாசிகளை, தென்னமெரிக்கா வரைப் பின் தொடர்ந்து துரத்திச் சென்று பிடித்து வந்து இஸ்ரேலில் வைத்துத் தூக்கில் போட்டது சுவாரசியமான கதை. ஆனால், ஹிற்லர் இருக்கும் போதே அவருக்குத் தண்ணி காட்டிக் கலங்கடித்த ஒரு கதாநாயகனும் இருந்தார்: அவர் அக்கால பிரிட்டன் பிரதமர் வின்ஸ்ரன் சேர்ச்சில்! சேர்ச்சிலின், அவர் தலைமையில் நாசிகளுக்கு சவால் விட்ட பிரிட்டனின் கதை நாசிகளின் நரவேட்டையை விட உரத்துச் சொல்லப் பட வேண்டிய வெற்றிக் கதை! - வெற்றிக் கதை தொடரும்- -ஜஸ்ரின்
  6. நிச்சயமாக. இரண்டாம் உலகப் போரின் கதையை, பிரிட்டன், சேர்ச்சில், ப்ளெட்ச்லி பார்க், RAF இவையெல்லாம் குறிப்பிடாமல் எழுதவே முடியாது! - அலன் ரூரிங்கும் வருவார்!
  7. உலக நாடுகள் என்ன செய்தன? ஹிற்லரின் நாசிக் கட்சியின் ஆட்சியில் ஜேர்மனி வந்த காலப் பகுதி ஒரு அசாதாரணமான உலகக் சூழல் நிலவிய காலம். முதல் உலகப் போரினால் ஒரு லட்சம் இளைஞர்களையும், அதே காலப்பகுதியில் ஐந்து லட்சம் வரையான மக்களையும் இன்புழுவன்சாப் பெருந்தொற்றினால் இழந்த அமெரிக்கா, 1929 இல் உருவான பொருளாதார மந்த நிலையினால் கடுமையாகப் பாதிக்கப் பட்டது (இந்த மந்த நிலை- Great depression, ஏதோ ஒரு வகையில் 1939 வரை நீடித்தது). எனவே அமெரிக்கா ஒரு உலக சக்தியாக யாருக்கும் தோன்றவில்லை அப்போது. ஆனால், தங்கள் காலனிகள், சக்தி மிக்க கடற்படைகள் என்பவை காரணமாக பிரிட்டனும், பிரான்சும் இராணுவ ரீதியில் பலமாக இருந்த காலம் அது. நாடுகளின் சங்கம் (League of Nations) என்ற ஐ.நாவின் முன்னோடியான அமைப்பு அமெரிக்காவினால் முன்னின்று உருவாக்கப் பட்டாலும், அமெரிக்கா அந்த அமைப்பில் நிரந்தர உறுப்பினராகவில்லை. மாறாக, பிரிட்டன், பிரான்ஸ், இத்தாலி, ஜப்பான் ஆகிய நிரந்தர உறுப்பினர்களோடு, சில டசின் நாடுகளை உறுப்பினர்களாக வைத்துக் கொண்டு "கூட்டுப் பாதுகாப்பு (collective security)" என்ற அடிப்படையில் நாடுகளின் சங்கம் இயங்கியது. ஆனால், செயல் திறன், அமலாக்கல் சக்தி என்பன குறைந்த ஒர் அமைப்பாக இருந்ததால் உண்மையிலேயே உலகின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலான பிரச்சினைகளை நாடுகளின் சங்கத்தால் தீர்க்க இயலவில்லை. உதாரணமாக, நிரந்தர உறுப்பினரான ஜப்பான், சீனாவின் மஞ்சூரியாப் பகுதியை ஆக்கிரமித்த போது, நாடுகளின் சங்கத்தினால் கண்டனம் மட்டுமே தெரிவிக்க முடிந்தது - இந்தக் கண்டனமே ஜப்பான் தனது உறுப்பினர் பதவியிலிருந்து விலகிக் கொள்ளக் காரணமாக இருந்தது. ஜேர்மனி கூட ஒரு குறுகிய காலப்பகுதியில் நாடுகளின் சங்கத்தில் சேர்த்துக் கொள்ளப் பட்டது. ஹிற்லர் ஆட்சிக்கு வந்தவுடன் முதல் காரியங்களில் ஒன்றாக அந்த அமைப்பில் இருந்து ஜேர்மனியை விலக்கிக் கொண்டார். இதன் மூலம், உலகப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக வரப் போகும் இரு நாடுகள் நாடுகளின் சங்கத்தைப் புறக்கணிக்கும் வசதி வாய்ப்பு அமைந்தது. இப்படி உலக நாடுகள் - குறிப்பாகப் பலம் பொருந்திய நாடுகள்- தங்கள் உள்விவகாரங்களுக்கு முன்னுரிமை கொடுத்த காலப்பகுதி (isolationism என்பார்கள்)ஹிற்லருக்கும், கிழக்கில் ஜப்பானியர்களுக்கும் மிக வாய்ப்பான காலமாக இருந்தது. மொத்தத்தில், ஜேர்மனியின் புதிய நாசி அரசை உலக நாடுகள் வித்தியாசமாகப் பார்க்கவில்லை என்று தான் பின்னர் வெளி வந்த இராஜதந்திரப் பரிமாற்றங்கள் சுட்டிக் காட்டுகின்றன. மாறாக, அரவணைத்துச் செல்லும் (appeasing) முயற்சி கூட 1932 முதல் ஆரம்பித்து விட்டது. உதாரணமாக, அமெரிக்கா, வெர்சை உடன்படிக்கையின் படி ஜேர்மன் மீது விதித்த பொருளாதாரத் தண்டனைகளை ஈடு செய்ய, குறுகிய காலக் கடன்களை வழங்கியிருந்தது. 1932 இல், ஜேர்மனியின் பொருளாதரப் பிரச்சினைகளைக் கருத்திற் கொண்டு அந்தக் கடன்களை வசூலிப்பதை தற்காலிகமாக ஒத்தி வைத்தது (debt moratorium - வட்டி மட்டும் கட்ட வேண்டிய நிலை). இதன் பின்னர், 1934 இல் ஹிற்லர் ஒரு சட்டத்தை இயற்றி, சகல வெளிநாட்டுக் கடன்களையும் ஒரு தலைப் பட்சமாக நிறுத்தி வைத்தார். இதனால், ஜேர்மன் பணம் நாட்டை விட்டு வெளியே செல்வது வெகுவாகக் குறைக்கப் பட்டது. பொருளாதாரத்தில் ஒரு கண் வைத்திருந்த நாசிகள் கடன்களின் சுமையில்லாமல் மூச்சு விடக் கிடைத்த இடைவெளியில் நாசிகள் ஜேர்மன் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதில் தீவிரமாக ஈடுபட்டனர். ஜேர்மன் மக்களின் தொழில் நுட்பத் திறமை, உயர்ந்த கல்வி மட்டம், அதிகாரத்திற்குப் படிந்து எதையும்செய்யும் நடத்தைப் போக்கு (இதை முறைப்பாடு செய்யாமல் துன்பங்களைத் தாங்கிக் கொள்ளும் stoicism என்றும் சொல்வார்கள் - இது ஜேர்மன் தேசிய அடையாளங்களுள் ஒன்று என்று கூடச் சிலர் சொல்வர்!) என்பன நாசிகளுக்கு வரப்பிரசாதமாக அமைந்தன. வேலையற்ற ஜேர்மனியருக்கு வேலை வழங்க, கட்டுமானத் திட்டங்கள் உருவாக்கப் பட்டன - உலகின் முதல் நெடுஞ்சாலை வலையமைப்பு ஆட்டோ பான் (Autobahn) என்ற பெயரில் ஜேர்மனியில் உருவானது. இரும்புப் பொருட்கள் உற்பத்தி, எண்ணை சுத்திகரிப்பு, செயற்கை இறப்பர், இரசாயனங்கள் என ஏராளமான பொருட்களின் உற்பத்தி அளவு ஒரிரு ஆண்டுகளிலேயே பல மடங்குகளால் அதிகரித்தது நாசிகளின் ஆட்சியில். அதே வேளையில், வேலையில்லாதோருக்கு சீருடைகளை அணிவித்து, புதிது புதிதாக ஆயுதப் படைப்பிரிவுகளை உருவாக்கும் வேலையும் நடந்தது. காக்கிச் சட்டைகள் (brown shirts) என்று அழைக்கப் பட்ட ஹிற்லர் இளைஞரணியும் ஒரு தனிப் படையாக வளர்க்கப் பட்டது. நடுத்தர வர்க்கத்தினரின் வருமானம் அதிகரித்தது. நாசிகளை நம்பிக்கையுடன் ஆதரித்த மக்கள் "இது பொற்காலம்" என மகிழ்ந்து அவர்களது கூட்டங்களில் மந்திர சக்தியால் ஆட்கொள்ளப் பட்ட பொம்மைகள் போலக் கலந்து குதூகலித்தனர், ஆர்ப்பரித்தனர். ஆனால், இந்த 1930 களின் நாசி ஜேர்மன் பொருளாதாரம் ஒரு போர்க்காலப் பொருளாதாரம் என்பது முன்னுரிமை வழங்கப் பட்ட துறைகளைப் பார்க்கும் போதே தெளிவாக யாருக்கும் தெரிந்து விடும். அதாவது, வெர்சை உடன் படிக்கையின் படி ஆயுதப் படைகளை நவீன மயப்படுத்தும் உரிமையை இழந்த ஜேர்மனி, மறைமுகமாக தன் இராணுவப் பற்களைத் தீட்டிக் கொண்டிருந்தது. இதனை எத்தனை உலக நாடுகள் புரிந்து கொண்டிருந்தன என்பதில் வரலாற்றியலாளர்கள் முரண்படுகின்றனர் - ஆனால், ஹிற்லர் தன்னைச் சுற்றி வைத்திருந்த ருடோல்f ஹெஸ், ஜோசப் கோயபல்ஸ், ஹேர்மன் கோறிங் ஆகிய பெரிய தலைகள் ஜேர்மனியின் ஆயுத மயமாக்கலின் நீண்டகால நோக்கத்தை அறிந்திருந்தனர். உதாரணமாக, வெர்சை உடன் படிக்கையின் படி, ஜேர்மன் விமானப்படையொன்றைக் கட்டியெழுப்ப தடை இருந்தது. ஆனால், ஜேர்மனியில் பல சிவிலியன் விமான நிறுவனங்கள் முதல் உலகப் போர் காலத்திலேயே இருந்திருக்கின்றன. ஹெர்மன் கோறிங், இந்த சிவிலியன் விமான நிறுவனங்களின் திறமை வாய்ந்த விமானிகளை இரகசியமாக ஒன்று சேர்த்து, பயிற்சியளித்து ஜேர்மன் விமானப் படையை கண்காணிப்புக் குறைந்த ஜேர்மன் நாட்டுப் புறங்களில் கட்டியமைத்து வந்தார். இவ்வாறு உருவாக்கப் பட்ட ஜேர்மன் விமானப்படை (Luftwaffe), இரண்டாம் உலகப் போரில் பிரிட்டனுக்கு மிகுந்த சவாலாக விளங்கியது குறிப்பிடத் தக்கது. இருளிரவின் ஆரம்பம் இவ்வளவு தொழில்நுட்ப, பொருளாதார, கல்வி மேலாண்மை கொண்ட ஜேர்மன் சமுதாயம், "ஆரியர்கள்" அல்லாத யூதர்கள், றோமா மக்கள் ஆகியோரையும், ஓரினச் சேர்க்கையாளர்களையும், லூதரன் கிறிஸ்தவர்கள் அல்லாத ஏனைய கிறிஸ்தவர்களையும் எப்படி ஒதுக்கி வைத்தது? ஒதுக்கி வைத்தது மட்டுமல்லாமல், அவர்களை எப்படி வகை தொகையின்றிக் கொன்றொழித்தது? இத்தகைய இருண்ட மாற்றங்கள் 1933 இலிருந்து ஆரம்பிக்கின்றன - ஹிற்லரின் பேச்சுக்கள் செயல் வடிவம் பெற்றன. சாதாரண ஜேர்மன் மக்களும், ஜேர்மனியில் வசித்த வெளிநாட்டவர்களும் கூட "நாசிகள் ஒன்றும் மோசமில்லை"😎 என்று சான்றிதழ் கொடுக்கும் அளவுக்கு எப்படி பொருளதாரம், கலாச்சார மேன்மை ஆகிய பொன்முலாம் கொண்டு நாசிகள் தங்கள் மிருகத் தனத்தை மறைத்தனர்? இது தான் நண்பர்களே வரலாறு திரும்பும் ஒரு சிறந்த உதாரணக் கதையாக இருக்கிறது. -இன்னும் வரும் ஜஸ்ரின்
  8. சுவியர், 1,100 வரையான நீர்மூழ்கிகளை இரண்டாம் உலகப் போர் காலத்தில் நாசி ஜேர்மனி வைத்திருந்தது. இவற்றுள் 700 வரையானவை எதிரிப் படைகளால் அல்லது விபத்துக்களால் மூழ்கடிக்கப் பட்டன (ஆனால், எதிரி நாடுகளின் 3000 வரையான கடற்கலங்களை நாசி நீர்மூழ்கிகள் மூழ்கடித்தன!). எஞ்சிய நூற்றுக் கணக்கானவை ஜேர்மனி சரணடைவதற்கு முன்னராக நாசிகளால் அழிக்கப் பட்டன. சில சரணடைந்தன அல்லது கைப்பற்றப் பட்டன. அவ்வாறு அமெரிக்காவினால் கைப்பற்றப் பட்ட ஒரு ஜேர்மன் நீர்மூழ்கி இன்னும் சிக்காகோவில் பார்வைக்கு இருக்கிறது. https://www.msichicago.org/press/press-releases/u-505-submarine/ நாசிகளின் ஜேர்மன் நீர்முழ்கிகள் பற்றி அறிந்து கொள்ள "Das Boot" (The Boat) என்ற திரைப்படத்தைப் பார்க்கலாம்.
  9. மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதக் காதல் அல்ல..! அதையும் தாண்டிப் புனிதமானது!😎
  10. காகம் நரி றீமேக் நல்லாத் தான் இருக்குது! ஆனால், நரிக்கு வடை பிறீயாகக் கிடைத்தது கவலைக்குரியது! 😂
  11. இணைந்திருக்கிற எல்லோருக்கும் நன்றி - தனித்தனியாக வந்த கேள்விகளுக்கு பின்னர் பதில் எழுதுகிறேன். ஆனால், கோசானின் கருத்துக்கு இப்பவே எழுத வேண்டும்: உடைந்த றெக்கோர்ட் போல 5 வருடங்களாக போலிச் செய்திகள், சதிக் கதைகள், திரித்த வரலாறுகளின் பின் செல்லுதல் ஆகியவற்றால் வரக் கூடிய தீமைகளைச் சொல்லி வந்தும் அதனால் எவ்வளவு பயன் விளைந்தது எனத் தெரியவில்லை. சலிப்பு வந்தாலும், என் பிள்ளை வாழப் போகும் உலகை இப்படியே விட்டுப் போக முடியாது என்பதால் ஒரு சிறு முயற்சி, கடைசி முயற்சி என்று கூடச் சொல்லலாம். இதை நான் ஆரம்பிக்க 2 முன்மாதிரிகள் அல்லது ஊக்கிகள்: 1. மரியோ லிவியோ, ஒரு அமெரிக்க பௌதீகவியலாளர், விஞ்ஞான மறுப்பிற்கெதிராகச் செய்லபடும் ஒரு எழுத்தாளர். அவர் கருத்தின் படி இளம் வயதினர் (impressionable age? யாழை வாசிப்போரில் இவர்கள் எத்தனை வீதமென அறியேன்!) விஞ்ஞானத்தையும், வரலாற்றையும் அறியச் செய்தால் 10 வருடங்களில் உலகம் இப்போதிருப்பதை விட முன்னேற்றகரமாக இருக்கும் என்கிறார். 2. யாழ் கள ரஞ்சித்தும் நன்னியரும்: சளைக்காமல் எங்கள் இனம் பற்றிய பதிவுகளைத் தொடராகப் பதிவதில் அவர்கள் காட்டும் உழைப்பும் ஆர்வமும் மெச்சத்தக்கவை. இவர்களின் உழைப்பு எனக்கு வராதெனினும், தொலைவிலாவது பின் தொடர முனைகிறேன்.
  12. திரும்பும் வரலாறு: நாசிகள் அண்மைக் காலமாக "திரும்பும் வரலாறு" (repeat of history or historic recurrence) என்பது பிரபலமான ஒரு சொற்றொடராக மாறியிருக்கிறது. வரலாறு மீள மீள நிகழ்வதற்கு பிரதான காரணம் வரலாற்றிலிருந்து தலைவர்களும், தலைவர்களைத் தேர்வு செய்யும் மக்களும் பாடங்கள் கற்றுக் கொள்ளாமை தான் என்பது ஒரு தெளிவான அவதானம். எனவே, வரலாற்றின் மைல் கற்களாக விளங்கிய சம்பவங்கள், நபர்கள் பற்றிய தரவுகளைப் பதிவு செய்யலாம். முதலில் ஹிற்லர், நாசிகள் பற்றி ஆரம்பித்து, இரண்டாம் உலகப் போர், ஸ்ராலின், அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான் என்று ஒரு சுற்று வரலாம். ஆர்வமுடையோர் இணைந்திருங்கள். மூலங்கள் பற்றிய தகவல்களை ஒவ்வொரு பகுதியும் நிறைவுறும் போது தருகிறேன். ஆனால், விக்கிபீடியா மூலமாகப் பயன்படுத்தப் படவில்லை என்பதை உறுதி செய்கிறேன்! ஹிற்லர் எப்படிப் பதவிக்கு வந்தார்? முதலாம் உலகப் போர் 1918 இல் முடிவுக்கு வந்த போது ஐரோப்பாவின் எல்லைகள் பாரிய மாற்றங்களையடைந்தன. முதல் உலகப் போரின் போது கடல் வழியிலும், தரைவழியிலும் ஜேர்மனியின் படைகள் விளைவித்த மனிதப் பேரழிவு அளப்பரியது (முதலில் நீர்மூழ்கிக் கப்பல்களை பெருமளவில் பாவித்த நாடாக ஜேர்மனி இருந்தது, அனேக தாக்குதல் இலக்குகள் சிவிலியன் போக்கு வரத்துக் கப்பல்களாக இருந்தன!). ஜேர்மனி தோல்வியடைந்த போது வெர்சை உடன்படிக்கையின் வழியாக கடுமையான தண்டனைச் சுமைகள் ஜேர்மனி மீது சுமத்தப் பட்டன. 33 பில்லியன் டொலர்கள் வரையான போர் நட்ட ஈடு, காலனிகள் உட்பட்ட பல நிலப் பரப்பின் இழப்பு, இராணுவ ஆளணிக் குறைப்பு, ஆயுதங்கள் வாங்க, உற்பத்தி செய்வதற்கான கட்டுப் பாடுகள், என்பன ஜேர்மனியின் தண்டனைகளில் அடங்கின. இந்தப் போரில் காயமடைந்து மீண்ட படையினனான ஹிற்லர் ஆரம்பித்த கட்சி தான் "தேசிய சோசலிஸ்ட் கட்சி" எனப்பட்ட நாசிக் கட்சி. நாசிக் கட்சியின் நோக்கம் ஆட்சியைப் பிடிப்பது. இதற்கு உகந்த நுட்பமாக அவர்கள் தேர்ந்து கொண்டது, அண்மைய வரலாற்றில் ட்ரம்ப், பொல்சனாரோ, மோடி, ப்றெக்சிற்றின் தலைமைச் சிற்பியான நைஜல் பரார் போன்றோர் தேர்ந்து கொண்ட அதே ஜனத்திரள்வாத முறை. ஜனத்திரள் வாதம் நேர்மையான விடயங்களால் பலம் பெறுவதை விட மறைத்தன்மையான மனித உணர்வுகளால் பலம் பெறுவது தான் வரலாற்றில் அதிகம் நிகழ்ந்திருக்கிறது. நாசிக் கட்சி தங்கள் ஜனத்திரள் வாத வெற்றிக்காகத் தேர்ந்து கொண்ட அந்த மறைத்தன்மையான உணர்வு யூதர்கள் மீதான சந்தேகமும், எதிர்ப்புணர்வும். ஏன் யூதர்கள் மீது எதிர்ப்புணர்வு? ஏனெனில், ஜேர்மனியில் அந்தக் காலப்பகுதியில் வசித்த வேற்றினத்தவர்களுள், யூதர்கள் தான் பல வழிகளில் பிரபலமான இனக் குழுவாக இருந்தனர். பொருளாதார நடவடிக்கைகளில் மேலாண்மை மட்டுமன்றி, அரசியல் கலாச்சாரப் பரப்பிலும் யூதர்கள் முன்னணி வேற்றினத்தவராக இருந்தனர். கால் மார்க்ஸ் ஒரு யூதர், ஜேர்மனியுட்பட பல ஐரோப்பிய நாடுகளில் கம்யூனிசக் கட்சிகளின் தலைமையில் அதிகம் யூதர்கள் இருந்தனர். விஞ்ஞானத் துறையிலும் (ஐன்ஸ்ரைன் சிறந்த உதாரணம்) அவர்களுக்கு தனியிடம் இருந்தது. இவ்வாறு ஜேர்மன் மக்கள் ஏற்கனவே உணர்ந்திருந்த ஒரு "யூத மேலாண்மை பற்றிய அச்சம்" நாசிக் கட்சியின் மக்கள்திரள்வாத ஆயுதமாயிற்று! ஆனால், யூதர்களுக்கு மேலதிகமாக, ஏனைய மத, இனக்குழுக்கள், ரஷ்யாவின் சிலாவிக் இன மக்கள் ஆகியோரும் நாசிக்கட்சியின் வெறுப்பிலக்குகளாக விளங்கினர். இந்த சிலாவிக் இன மக்கள் மீதான வெறுப்பிற்கு வளங்களைக் கொள்ளையடிக்கும் ஜேர்மனியின் நீண்ட கால இலக்கும் ஒரு காரணமாக இருந்தது. ஆரிய இனமான நீலக் கண்ணும், வெள்ளைத் தோலும் கொண்ட ஜேர்மனியர்கள், லூதரன் கிறிஸ்தவ நெறிப்படி குடும்பங்களில் நிறையப் பிள்ளைகள் பெற்றுப் பெருகும் போது, அவர்கள் வாழ அவசியமான நிலம், சோவியத் ரஷ்யாவிடமிருந்து பறிக்கப் பட வேண்டுமென்பது நாசிக் கட்சியின் கொள்கை. எனவே, சிலாவிக் மக்கள், "மனித இனத்திற்குக் கீழானவர்கள்" என்ற வெறுப்புணர்வை நாசிக் கட்சியினர் பரப்பத் தயங்கவில்லை. இந்தக் “கீழ்மனிதர்களான” சிலாவிக் மக்களை விடக் கீழான நிலையில் தான் யூதர்கள் வைத்துப் பார்க்கப் பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 1921 அளவில், நாசிக் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக ஹிற்லர் வெளிப்படையாக இந்தக் கொள்கைகளைப் பேசி வந்திருக்கிறார். சாதாரண அரசியல் கட்சிகள் போலல்லாது, நாசி கட்சிக்கு ஒரு ஆயுதப் படையும் இருந்தது. Storm troopers என்று அழைக்கப் பட்ட இந்தப் படையில், ஹிற்லர் போலவே முதல் உலகப் போரிலிருந்து அவமானத்துடன் திரும்பி வந்த முன்னாள் படையினர் இருந்தனர். பல்லாயிரம் உறுப்பினர்கள் கொண்ட இந்த படை, பவாரியாவின் மாநில அரசைக் கவிழ்க்க முயன்று தோற்ற போது தான் ஹிற்லர் மற்றும் நாசிக் கட்சி பற்றிய முதல் எச்சரிக்கை ஜேர்மன் அரசுக்குக் கிடைத்தது. ஜேர்மன் அரசினால் ஒரு வருடம், இதற்காக சிறை வைக்கப் பட்ட போது தான் ஹிற்லர் தனது ஜனத்திரள்வாத, இனவெறிக் கொள்கைகளை நூலாக (Mein Kampf) எழுதினார். இந்த நூல், 1932 இல் ஜேர்மன் பாராளுமன்றத்தில் மிகப் பெரிய கட்சியாக நாசிக் கட்சி விளங்க ஒரு முக்கிய காரணியாக இருந்தது. இதனால், ஜேர்மன் ஜனாதிபதியினால், ஹிற்லர் வேந்தராக நியமிக்கப் படும் நிலையும் உருவானது. ஜேர்மன் மக்கள் என்ன நினைத்தனர்? தீவிர இனவெறிக் கொள்கை கொண்ட ஹிற்லரையும், நாசி கட்சியையும் 1932 பொதுத் தேர்தலில் ஜேர்மன் வாக்காளர்கள் ஆதரித்துப் பெரும்பான்மை வழங்க பல காரணங்கள் அப்போது இருந்தன. ஜேர்மனி முதல் உலகப் போரில் மிகவும் அவமானப் படுத்தப் பட்டதாக ஜேர்மனிய மக்களில் பெரும்பகுதியினர் உணர்ந்தனர். அதன் பின்னான தண்டனைகளால் ஜேர்மனியின் பணவீக்கம், வேலையில்லாதோரின் வீதம், என்பன கட்டுக்கடங்காமல் அதிகரித்தன. ஜேர்மன் ஜனாதிபதியாக இருந்த வொன் ஹிண்டன்பேர்க் வயசாளி, நோய்வாய்பட்ட நிலையில் தனது ஓய்வு வாசஸ்தலத்தில் இருந்தவாறே, கீழதிகாரிகளூடாக ஆட்சி செய்து கொண்டிருந்தார். இந்தப் பின்னணியில், மூன்று இளமையும், துடிப்பும் கொண்ட அரசியல் தலைவர்கள் மக்கள் முன் வலம் வந்தனர்: ஹிற்லர், ஹெஸ், கோயபல்ஸ் ஆகிய மூவரும் தான் அந்த "ஜனத்திரள்வாத" இளம் தலைவர்கள். எனவே, ஒரு நம்பிக்கையான எதிர்காலம் வேண்டி, ஜேர்மன் வாக்காளர்கள் நாசிக் கட்சிக்கு வாக்களித்தனர். இந்த மானசீகமான ஆதரவோடு, நாசிக் கட்சியின் ஆயுதப் படையினர் நாசிக் கட்சி எதிர்ப்பாளர்களுக்குக் கொடுத்த வன்முறை அச்சுறுத்தலும் சேர்ந்து தான் நாசிக் கட்சியும், ஹிற்லரும் ஜேர்மனியின் ஆட்சியைப் பிடித்தனர். பதவிக்கு வந்த பின்னர் ஹிற்லரின் நடவடிக்கைகள் ஹிற்லர் வேந்தராகப் பதவியேற்று சில மாதங்களில், ஜேர்மன் பாராளுமன்றம் தீயூட்டப் பட்டது. இந்த எரியூட்டலுக்கு ஜேர்மன் கம்யூனிஸ்டுகள் காரணமெனப் பிரச்சாரம் செய்த நாசிகள், ஒரு ஒல்லாந்து நாட்டு கம்யூனிஸ்டைக் கைது செய்தனர். ஹிற்லரின் விமானப் படையைப் பின்னாளில் கட்டியெழுப்பிய தீவிர நாசியான ஹேர்மன் கோறிங் நேரடியாக நீதிமன்றம் சென்று, கைது செய்யப் பட்ட ஒல்லாந்துக் கம்யூனிஸ்டின் மரண தண்டனையை உறுதி செய்தார். அதே நேரம் மிக முக்கியமான இன்னொரு விடயமும் நாசி ஜேர்மனியின் எதிர்காலப் போக்கை நிர்ணயித்தது: பாராளுமன்றம் எரிக்கப் பட்ட சம்பவத்தைக் காரணம் காட்டி, ஹிற்லர் ஜேர்மன் ஜனாதிபதியை அவசரகாலச் சட்டத்தை அமல் படுத்தத் தூண்டினார். இதனால், சகல அரசியலமைப்பு வழியான மக்கள் உரிமைகளும் ஒரே இரவில் ரத்துச் செய்யப் பட்டன. இந்த உரிமைகள் ரத்தினால், நாசிகளை ஆதரித்த ஜேர்மனியர்களுக்கு ஒரு பாதிப்பும் வரவில்லை- ஆனால், யூதர்கள், கம்யூனிஸ்ட்டுகள், நாசி எதிர்ப்பாளர்கள், ஊடக சுதந்திரம் என்பன நன்கு பாதிக்கப் பட்டன. ஹிற்லரின் கட்சிக் கொள்கைகள் செயல் வடிவம் பெற ஆரம்பித்தன! -இன்னும் வரும் ஜஸ்ரின்
  13. ஆம், அல்கஹோல் தினசரி எடுத்துக் கொள்வோருக்கு உடல் பருமன், கொழுப்பு தொடர்பான நோய்கள் வருவதற்கு நீங்கள் சொன்னது தான் காரணம். எனவே தான் பியர் குடிப்போரும் -சிறிதளவே அல்கஹோல் அதில் இருந்தாலும் - அளவுக்கு மிஞ்சிப் போகக் கூடாது.
  14. பியரையும் ஓட்டத்தையும் பற்றி ஏதோ அரிய தகவல்கள் எழுதப் போவதாக எதிர்ப்பார்ப்பைக் கிளப்பி விட்டேன் போல இருக்கு, எனவே எதிர்பார்ப்பு பலூன் பெரிதாகிப் புஸ்ஸென்று காற்றுப் போக முதல்🤣 இதை முடித்து விடுகிறேன்: இவை என் அனுபவமும், சில தரவுகளும் இணைந்தது: பொறுப்புத் துறப்பு: பியர் - அல்கஹோல் அளவு பொதுவாகக் குறைவாக இருந்தாலும் - ஒரு மதுபானமே. அல்கஹோல் உடல்நலத்திற்குக் கேடு, தவிர்ப்பது ஐடியல், குடிக்காதோர் இதைப் பார்த்துக் குடிக்க ஆரம்பிக்காதீர்கள்! நெடுந்தூர ஓட்டம் - பியர் தொடர்பு: அண்மையில் ஒரு கருத்துக் கணிப்பின் வழி எடுத்த ஆய்வொன்றில், அனேக நெடுந்தூர ஓட்டப் பிரியர்கள் பியர் பிரியர்களாகவும் இருப்பதாகக் கணித்திருந்தார்கள். என்ன காரணமாக இருக்கும்? நெடுந்தூர ஓட்டம் செய்வோர் அனேகமாக தங்கள் உடல் நலத்தில் அக்கறையுடையோராக இருப்பதால், அதிக அல்கஹோல் கொண்ட ஏனைய மதுபானங்களை விட பியரை நாடுகின்றனர் என்பது ஒரு விளக்கம். இன்னொரு விளக்கம் கொஞ்சம் நரம்பியல் தொடர்பானது: நெடுந்தூர ஓட்ட ஆர்வலர்களாக இருப்போர், அவ்வாறு நெடுந்தூரம் ஓடுவதற்கு அவர்களது உடலில் உற்சாகத்தைத் தூண்டும் எண்டோர்பின்கள் (endorphins) சுரப்பு ஒவ்வொரு ஓட்டத்தின் பின்னும் அதிகரிப்பது பிரதான காரணமாக இருக்கிறது (இது தான் ஓட்டத்திற்கு அடிமையாக addiction வருவதற்கும் காரணம்!). பல்வேறு மதுபானங்களைப் பரிசோதித்துப் பார்த்ததில், பியர் குடிக்கும் போது மட்டும் தான் மூளையில் எண்டோர்பின்கள் அதிகரிக்கின்றன என்கிறார்கள் (இதனால் தான் எப்போதுமே ஒருவர் ஒரு பியரோடு நிறுத்துவதில்லை - பியர் குடிப்போருக்கு 1 beer = 2 beers 😎; இதன் காரணம் எங்கள் மூளை வெளிப்படுத்தும் reward signal). இதற்கு பியரில் இருக்கும் திரட்சியான, சிக்கலான சுவை (complex taste) காரணமாக இருக்கலாம் என்கிறார்கள் - சுவை மட்டுமன்றி அரோமா எனப்படும் வாசனை, கிளாசில் இருந்தால் அதன் வர்ணம் என்பனவும் காரணமாக இருக்கலாம்! என் அனுபவம்: பியர் எனக்கு வெகுமதி போன்றது. ஒரு வாரத்தில் போதியளவு ஓடவில்லையானால் அந்த வெள்ளிக்கிழமை பியர் கட்! அதே போல ஒரு வெள்ளிக்கிழமை இரண்டு பியர் எடுத்தால் அடுத்த நாள் ஒரு மைல் கூடுதல் ஓட்டம்! இப்படி வெகுமதி - தண்டனை (reward-punishment) என்ற சக்கரம் தான் என் அனுபவம். ஏனையோருக்கும் இப்படி இருக்கலாம்! இனி சசியரின் ஒரிஜினல் பதிவு: உடற்பயிற்சி செய்ய பியரோடு வருகின்றனர்! இதில் ஆரோக்கியப் பிரச்சினை இருக்கிறதா? இதற்கு என் அபிப்பிரயம் பக்கச் சார்பாகத் தான் இருக்கும், ஆனாலும் தரவுகளோடு தருகிறேன்: ஒரு பியரில் அடிப்படையில் இருப்பவை: கார்ப்-carb (இது தான் கலோரி) , புரதம், அல்கஹோல், விற்றமின்கள், antioxidants எனப்படும் உடலுக்கு நன்மை தரும் பொருட்கள் (இந்த நன்மை தரும் பொருட்களும், விற்றமின்களும் ஏனைய மதுபானங்களில் இருப்பதில்லை என்பதைக் கவனிக்க! - சிவப்பு வைனில் மட்டும் இந்த antioxidants சிறிதளவு உண்டு). கலோரியின் அளவையும், அல்கஹோலின் அளவையும் குறைவாகக் கொண்ட பியர் ஒப்பீட்டளவில் ஆரோக்கியமானது எனலாம். லைற் பியர் வகைக்குள் அடங்கும் லாகர், வியன்னா லாகர், பில்ஸ்னர் ஆகியவை அனேகமாக 5% இலும் குறைந்த அல்கஹோல், கலோரி 100 முதல் 150 இருக்கும் (ஒரு 12 அவுன்ஸ் போத்தலில்) -ஒப்பீட்டிற்குப் பார்த்தால் ஒரு நடுத்தர சைஸ் வாழைப்பழத்தில் 110 கலோரிகள் இருக்கின்றன. இதுவும் உங்கள் உணவுக்கட்டுப் பாட்டுடன் ஒத்து வரவில்லையென்றால், விசேடமாக டயற்றில் இருப்போருக்கென இப்போது சில 90 கலோரி பியர்களும் இருக்கின்றன.சில கம்பனிகள் ஒரு படி மேலே போய் நெடுந்தூர ஓட்டப் பிரியர்களுக்கென கனியுப்புகள் (electrolytes) நிறைந்த பியர்களையும் உற்பத்தி செய்கின்றனர். எனவே, இவற்றை கடின உடல் உழைப்பின் பின்னர் எடுத்துக் கொள்வது பாரிய ஆரோக்கியக் குறைவைத் தராது! பியர் வகைகளில் அதிகம் பேர் விரும்புவது (நான் உட்பட) IPA (India Pale Ale) எனப்படும் கசப்பு அதிகமான பியர். ஆனால், இந்த பியரில் கலோரியின் அளவு 200 வரை இருக்கும், அல்கஹோல் அனேகமாக 6% முதல் 8 % வரை இருக்கும்! எனவே IPA டயற்றோடு அவ்வளவு ஒத்து வராது - ஆனால் IPA பியர் வகையின் சுவையை வேறெந்த பியரும் வெல்ல முடியாது! இன்னும் மேலே போனால், Double IPA, Triple IPA, Belgian Tripel எனப்படும் வகைகள் இன்னும் அதிக கலோரி, அல்கஹோல் கொண்டவை. இது சுவைக்காக அல்லாமல் வெறிக்காக குடிக்கும் வெறிக்குட்டிகள் குடிப்பது!😜 Stout வகையைச் சேர்ந்த கின்னஸ் போன்றவை, அதிக அல்கஹோல் இல்லா விட்டாலும், 300 கலோரிகள் வரை ஒரு 12 அவுன்ஸ் போத்தலில் கொண்டவை - எனவே இவ்வகையை எடுப்பதானால் உடல் எடை கூடுவதைப் பற்றிய கவலையை விட்டு விட வேண்டும்!
  15. 😂பெருமாள், பையன், நன்னியர் என்று ஒரு இளவட்டப் பட்டாளமே இருக்கிறதே? நாங்கள் முந்தின ஜெனரேசன்!
  16. இணையவன், ஓட்டம் என்பது உடற்பயிற்சிக்காக என்பது மாறி ஒரு addiction ஆகி விட்டது எனக்கு! கடந்த 20 ஆண்டுகளாக தூர ஓட்டம் செய்கிறேன். கடந்த 5 வருடங்களாக வாரம் 25 முதல் 30 மைல்கள் என்று ஓடிக் கொண்டிருந்தேன். சென்ற ஆண்டு 46 வயது முடிந்த கையோடு ஒரு முழங்கால் வலியோடு ஓய்வெடுத்து விட்டு மருத்துவரைப் பார்த்தேன். வலது முழங்காலில் அதிக ஓட்டம் காரணமாக மிதமான அழற்சி - இனி ஓடுவதைக் குறைக்க வேண்டுமென்று ஆலோசனை சொன்னார். ஒரு மாதம் ஓய்வெடுத்து வேறேதாவது செய்வோமா என்று முயன்றேன் - எதுவும் அந்த ஒரு மணி நேர ஓட்டம் தரும் எண்டோர்பின் கிக்கைத் தரவில்லை. இப்போது புதிதாக trail running ஆரம்பித்திருக்கிறேன். ஒரு தரமான trail running சப்பாத்தும், காட்டில் பூச்சி புழு அண்டாமல் காக்கும் ஸ்ப்றேயும் எடுத்துக் கொண்டு காட்டில் சனி -ஞாயிறு காணாமல் போய் விடுவேன். 2 நாட்கள் ட்ரெயில் ஓட்டத்திலும் 2 - 3 நாட்கள் சாதாரண தெரு ஓட்டத்திலும் வாரம் 25 மைல்களைக் கடந்து கொண்டிருக்கிறேன்! 😂எழுதுவேன் எழுதுவேன்..நேரம் தான் பிரச்சினையாக இருக்கு!
  17. சசியர், பரிஸில் மரதன், எப்படி லண்டன் Trafalgar square தெரியும்? இது பரிஸ் நகர மத்தியில் இருக்கும் ஒரு தங்கப் பெண் சிலை! (பியர் - ஓட்டம் இரண்டிற்கும் உள்ள தொடர்பு பற்றி பின்னர் எழுதுகிறேன்😉)
  18. பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் இணையவன்! 26 மைல்கள் 3 மணி 39 நிமிடமென்றால் உங்கள் சராசரி pace 8.4 நிமிடங்கள்! - இது சிறப்பான வேகம்! ஒரு வாரத்தில் 25 மைல்கள் ஓடுகிறேன் - ஆனால் மரதனுக்குப் பயிற்சி எடுக்க முனைந்த ஒவ்வொரு முறையும் ஏதாவது கால் பாதிப்பு வந்து விடுகிறது -இது வரை கனவாக இருக்கிறது என் மரதன்.
  19. உண்மையைச் சுட்டிக் காட்டினால் ஆத்திரம் வருவது சாதாரணமாகக் காண்பது தானே? அதிர்ச்சியில்லை. தொடர்ந்து எழுதுங்கள்!
  20. சரி, ஏக்கமில்லையெனில் ஒவ்வொரு பதிலிலும் 2009 ஜஸ்ரின் ஏன் வருகிறார் என யோசிக்கிறேன்! ஒருவர் தன் நிலைப்பாடுகளை -அரசியலோ, சமூகரீதியோ, தனிப்பட்ட வாழ்வோ - புதிய தரவுகளின் படி மீள் பரிசீலனை செய்து மாற்றிக் கொள்வதில் பிரச்சினையிருப்பதாக நான் நினைக்கவில்லை! நீங்கள் அவ்வாறு பிரச்சினையென நினைத்தால் அதை உங்கள் வாழ்க்கையில் கடைப்பிடியுங்கள், வாழ்த்துக்கள்! நீங்களே கேள்வி கேட்டிருக்கிறீர்களே உங்கள் பதிவில், புலிகள் தங்கள் பெயரைப் பழுதாக்கும் வேலைகளில் ஈடுபட்டிருப்பார்களா என்று? அது தான் புலிகள் வழமையாக அவ்வாறான பெயர் பழுதாக்கும் வேலைகளில் ஈடுபடவில்லையென்ற புரிதலில் நீங்கள் இருக்கிறீர்களாக்குமென நினைத்தேன்! மேல் குறிப்பிட்ட பதிவில் பல தரவுத் தவறுகளும் இருக்கின்றனவே ரஞ்சித்? வெளிநாட்டு ஊடகங்கள் புலிகளைக் குற்றம் சாட்டத் தயங்கின என்று கூறி, அமெரிக்க வெளியுறவுத் திணைக்கள அதிகாரிகள் கெபிரிகொலாவ, புத்தல தாக்குதல்களில் புலிகளின் கைவரிசையிருப்பதாகக் குறிப்பிட்டதையும் புதைத்து விட்டீர்களே ரஞ்சித்?
  21. நீங்களே முன்னர் குறிப்பிட்டிருப்பது போல, இந்தத் தொடர் "ஒரு நோக்கத்திற்காக எழுதப் படுகிறது" என்பதால் இவ்வாறு சதித்திட்டக் கதைகளூடு புலிகளுக்கு வெள்ளையடிப்பதை தீவிரமாக நீங்கள் செய்வதை சுட்டிக் காட்ட முனைகிறேன், அவ்வளவு தான்! இதன் அடிநாதம், புலிகள் தங்கள் பெயருக்குப் பாதகமான விடயங்களைச் செய்திருக்க மாட்டார்கள் என்ற விம்பத்தை ஏற்படுத்தும் நப்பாசை தானே? ஆனால், அப்படியல்ல, ஈழப்போராட்ட காலம் பூராகவும் புலிகள் அவ்வாறான தூர நோக்கற்ற பல காரியங்களைச் செய்தார்கள் என்பது சாதாரணமாக தமிழர்களுக்குத் தெரிந்த செய்தி! இதை இருட்டடிக்க வேண்டிய அவசியமில்லை என்பதே என் வாதம்! மற்றபடி, இது புலிகள் மீதான வெறுப்பல்ல ரஞ்சித். மாவீரர் தினத்திற்கு வருடாந்தம் போய்க்கொண்டே எனக்கு இந்த விமர்சனத்தையும் பகிரங்கமாகச் சொல்லும் நேர்மை இருக்கிறது! உங்களிடம் இருக்கிறதா என்பதை இந்த மழுப்பல்களை வாசிப்போர் தான் சொல்ல முடியும்!😎 (மேலும் எவ்வளவு காலம் தான் 2009 இற்கு முந்தைய ஜஸ்ரின் என்ற ஏக்கத்தில் காலத்தை ஓட்டுவீர்கள்?😂)
  22. ஆச்சரியமாகத் தான் இருக்கிறது ரஞ்சித்! தங்களதும், தமிழர்களதும் நீண்டகால நோக்கிற்கு பாதகமான பல விடயங்களை புலிகள் செய்தே இருக்கின்றனர் என்பது சாதாரண செய்திகள் வாசிப்போருக்குப் புரியும்! நீங்கள் சொல்லும் கதைகள் புதினமாகத் தான் இருக்கிறது! மன்னியுங்கள்! தொடருங்கள், இது ஒரு பிரச்சாரப் பதிவு தவிர வேறில்லை என்பதைச் சுட்டிக் காட்ட மட்டுமே சொன்னேன்!
  23. எத்தினை நாளைக்கு "பார்வையாளரா இரு" எண்டு விடப் போறியள்? உள்ள விட்டா ஏதாவது எழுதலாம்!😎

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.