Everything posted by Justin
- Regan 1987.jpg
- ஓயாத நிழல் யுத்தங்கள் – 1
-
ஓயாத நிழல் யுத்தங்கள் – 1
ஓயாத நிழல் யுத்தங்கள் – 1 இது வரை இரு உலகப் போர்களை உலகம் கண்டிருக்கிறது. இவற்றுள் இரண்டாவது உலகப் போரின் பின்னர் இரு துருவங்களாக உருவான தேசங்கள் பனிப்போர் எனப்படும் நிழல் யுத்தங்களில் ஈடுபட்டதன் தாக்கம் இன்றும் உலகின் அரசியல், பூகோள நிலைமைகளில் எதிரொலிக்கிறது. அமெரிக்காவின், ஐரோப்பாவின் சில நகரங்களில் இன்றும் பனிப்போர் காலக் கட்டமைப்புகள் - அணுவாயுதத் தாக்குதலில் இருந்து காக்கும் காப்பரண் கட்டிடடங்கள்- நிலைத்திருக்கின்றன. 90 இற்குப் பிறந்த இளவல்களுக்கு இந்தக் கட்டிடங்கள் பற்றி எதுவும் தெரியாது. 90 களில் வயசுக்கு வந்த (சுவியர் சில சமயங்களில் குறிப்பிடும் 90’s kids) எங்கள் போன்றோருக்கு பனிப்போரின் முடிவு காலம் ஒரு “வாழ்ந்த அனுபவம்”. தனிப்பட்ட ரீதியில், என் வாசிப்பார்வத்தை வளர்த்ததில் பனிப்போருக்கு பெரிய பங்கிருக்கிறது. இதை ஒரு தட்டையான வரலாறாகச் சொல்லி விட முடியாது. ஆனால், அந்தக் காலங்களில் நிகழ்ந்த சம்பவங்கள் சார்ந்து முப்பரிமாணச் சித்திரமாக எங்கள் நினைவுகள் இருக்கின்றன. இவை சார்ந்து சில கட்டுரைகளை தனித்தனியாக எழுதும் முயற்சி இது. இதன் மூலம் உலக வரலாற்று வாசிப்பையும், பகிர்வையும் ஊக்குவிக்கும் ஒரு சிறு முயற்சி. இரு முன்னறிவித்தல்கள்: 1. இது மிகவும் மெதுவாக நகரப் போகும் ஒரு முயற்சி, எழுதுபவருக்கு வேறு வேலைகள் இல்லாமல் வெட்டியாக இருக்கக் கிடைக்கும் போது மட்டும் இது எழுதப் படும். 2. இந்தத் தொகுப்பில் இணைக்கும் படங்கள் அனேகமாக அமெரிக்க ஆவணக்காப்பகத்தில் (National Archives) இருந்து எடுக்கப் பட்டவையாக இருக்கும். இதன் அர்த்தம், அமெரிக்கா சொல்வதை மட்டும் விபரிக்கும் நோக்கமல்ல. இந்த ஆவணக்காப்பகத்தில் தான் பெரும்பாலான அரிய புகைப்படங்கள் பதிப்புரிமையில்லாமல் பயன்படுத்தக் கூடியவையாக இருக்கின்றன. கொரியா ஜூன் ஜூலை மாதங்கள் கொரிய தீபகற்பத்திற்கு முக்கியமான மாதங்கள். ஜூன் மாதம் 25, 1950 இல் கொரிய நேரப்படி அதிகாலையில் வடகொரியாவின் படைகள் சத்தமில்லாமல் எல்லையைத் தாண்டி தென் கொரிய தலை நகர் நோக்கி நகர்ந்தன. இது ஏன் முக்கியமெனில், இரண்டாம் உலகப் போரின் பின்னர், உலகில் முதன் முதலாக ஒரு நாட்டின் படைகள் எல்லை தாண்டி இன்னொரு அயல் நாட்டினுள் நுழைவது இது தான் முதல் தடவை. 3 ஆண்டுகள் கழித்து, பல இலட்சம் அமெரிக்க, கொரிய, மற்றும் சீனப் படைகள் உள்ளடங்கிய தரப்புகள் பலியான பின்னர் ஜூலை 27, 1953 இல் போர் நிறுத்த ஒப்பந்தம் மூலம் கொரிய யுத்தம் முடிவுக்கு வந்தது. எப்படி இரு கொரியாக்கள் உருவாகின? ஜப்பானின் கட்டுப்பாட்டில் இருந்த கொரியாவை, இரண்டாம் உலகப் போர் முடிந்த பின்னர் தற்காலிகமாக சோவியத்தும், அமெரிக்காவும் பாதியாகப் பிரித்து அங்கேயிருந்து சரணடைந்த ஜப்பானியப் படைகளை அகற்றுவது எனத் தீர்மானிக்கப் பட்டிருந்தது. இதை எப்படிச் செய்வதென யோசித்துக் கொண்டிருக்கும் போதே, சோவியத் நாடு தன் படைகளை வட கொரியாவில் நிலை நிறுத்த ஆரம்பித்தது. அவசர அவசரமாக அமெரிக்கா தன் படைகளை தெற்கில் குவிக்க ஆரம்பித்தது. கொரிய தீபகற்பம், 38thparallel சமாந்தரக் கோடு எனப்படும் latitude இன் படி வட, தென் கொரியாக்களாக உருவானது. இதன் பின்னர், 1946 இல் தற்போதிருக்கும் (கோசானின் தெய்வமச்சான்) கிம்மின் தாத்தா கிம் இல் சங் வட கொரியாவில் கம்யூனிச ஆட்சியை நிறுவியதுடன் அந்த 38 சமாந்தர எல்லைக் கோடும் அப்படியே நிரந்தர எல்லையாக நிலைத்து விட்டது. இந்த எல்லையைத் தாண்டித் தான் 1950 இல் வட கொரிய படைகள் தெற்கை ஆக்கிரமிக்க முனைந்தன. இந்த வடகொரிய ஆக்கிரமிப்பிற்கு ஒரு பின்கதை இருக்கிறது - இது ஒரே இரவில் நிகழ்ந்த ஒரு திடீர் நடவடிக்கையல்ல. உலகப் போர் முடிந்த பின்னர் 1948 இல், பசுபிக் பிராந்தியத்திலிருந்து அமெரிக்கா தன் பெருமளவிலான படைகளை அகற்றி விட்டிருந்தது. ஜப்பான், பிலிப்பைன்ஸ் தளங்களில் மட்டும் அமெரிக்க படைகள் இருந்தன, ஆனால் பாரிய யுத்த தயாரிப்புகள் இருக்கவில்லை. இதைக் கவனித்த வட கொரியாவின் கிம் இல் சங், ஸ்ராலின் தெற்கை ஆக்கிரமிக்க தங்களுக்கு உதவ வேண்டுமெனத் தொடர்ந்து நச்சரித்து வந்தார். முதலில் மறுத்த ஸ்ராலின், ஒரு கட்டத்தில் அனுமதியும் கொடுத்து தனது இராணுவ ஜெனரல்களைத் தாக்குதல் திட்டம் தயாரிக்கவும் வழங்கினார். பின்னர் படிப்படியாக, சோவியத் ஆயுதங்கள், விமானத் தாக்குதல் பாதுகாப்பு என்பனவும் சோவியத் மூலம் கிடைத்தன வட கொரியாவிற்கு. இதையெல்லாம் இன்னொரு கம்யூனிசத் தலைவர் பதற்றத்தோடு பார்த்துக் கொண்டிருந்தார்: சீனாவின் மாவோ சே துங் தான் அவர். மாவோ, ஸ்ராலினை உலக கம்யூனிசப் பிதாமகராக ஏற்றுக் கொள்வதைத் தந்திரமாகத் தவிர்த்து வந்த ஒருவர். 1950 இல் தான் மாவோ தன் கம்யூனிச ஆட்சியை சீனாவில் ஓரளவுக்கு நிலை நாட்டி விட்டு, தப்பிப் போய் போர்மோசா (Formosa) தீவில் (இன்று தாய்வான் என்று அழைக்கப் படும் தீவு) தனிதேசம் அமைத்திருந்த போட்டிக் குழுவை நோக்கிப் பாய திட்டம் தீட்டிக் கொண்டிருந்தார். இந்த நிலையில் தான் கிம் இல் சங் ஸ்ராலினை நெருங்கி தெற்கைத் தாக்க அனுமதியும் உதவியும் பெற்று, மாவோவின் கனவுக்கு மறைமுக ஆப்பு வைத்திருக்கிறார். அமெரிக்க வடிவில் வந்த ஆப்பு கிம் இல் சங், மாவோவிற்கு வைத்த இந்த மறைமுக ஆப்பு அமெரிக்கக் கடற்படையின் வடிவில் வந்திறங்கியிருந்தது. "தாய்வானிற்கு இராணுவ ரீதியில் உதவப் போவதில்லை" என்ற முடிவை எடுத்திருந்த அமெரிக்க அதிபர் ட்ரூமன், வட கொரியாவின் ஆக்கிரமிப்பை முறியடிக்க ஒரு மட்டுப்படுத்தப் பட்ட "பொலிஸ் நடவடிக்கையை" அனுமதித்தார் (இந்தப் பதத்தில் இருந்து தான் பின்னாளில் அமெரிக்கா "உலக பொலிஸ்காரன்" என்ற சொற்பதம் உருவாகியிருக்கக் கூடுமென நினைக்கிறேன்). அதே நேரம், இந்த நடவடிக்கையில் அமெரிக்கா கவனம் செலுத்தும் போது, மாவோ தாய்வானை நோக்கிப் படையெடுக்கக் கூடும் என்ற ஊகத்தில், அமெரிக்க கடற்படையின் 7வது கப்பற் படையை (7th Fleet) தாய்வான் சீனா எல்லையில் தொடர் ரோந்து செய்யவும் ட்ரூமன் கட்டளை பிறப்பித்திருந்தார். இது தான் மாவோ, 1950 இல் தாய்வானை நோக்கி சீன மக்கள் இராணுவத்தை ஏவாமல் தவிர்த்தமையின் பிரதான காரணம். வடகொரியாவின் மீது நடவடிக்கை எடுத்த ஐ.நா பாதுகாப்புச் சபை இன்று ஐ.நா பாதுகாப்புச் சபை உலக வல்லரசுகளின் போட்டிக் களமாக திகழ்கிறது. ஆனால், 1950 இல் உருவாக்கப் பட்ட புதிதில், உண்மையாகவே உலக சமாதானம், பாதுகாப்பு என்பவற்றைப் பேணும் அதன் பணியை சீரியசாகச் செய்ய முயன்றது என்று தான் சொல்ல வேண்டும். இந்த அடிப்படையில், இதன் முதல் பணியாக, வட கொரியா மீது நடவடிக்கை எடுத்து தென்கொரியாவை விட்டு படைவிலகலைக் கோரும் தீர்மானத்தை ஏகமனதாக ஐ.நா பாதுகாப்புச் சபை எடுத்தது. ஆனால்,கொஞ்சம் நிதானித்து இந்த தீர்மானத்தை ஆராய்ந்தால், இந்த தீர்மானம் ஏகமனதாக நிறைவேறவும் சோவியத் நாடு தான் மறைமுகக் காரணமாக இருந்தது என்பதைக் காணலாம். 50 களில் இருந்த ஐ.நா பாதுகாப்புச் சபையில் நிரந்தர உறுப்பு நாடுகளாக (எனவே வீட்டோ அதிகாரமுடைய நாடுகள்) அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், சீனக் குடியரசு, சோவியத் நாடு என்பன இருந்தன. இங்கே “சீனக் குடியரசு” என்பது தாய்வானில் இருந்த, மேற்கு ஏற்றுக் கொண்ட சீனா, தற்போதிருக்கும் “மக்கள் சீனக் குடியரசு” அல்ல என்பதைக் கவனிக்க வேண்டும். கம்யூனிச சீனாவான மக்கள் சீனக் குடியரசை, ஐ.நா அங்கீகரிக்காமல் இருந்ததை எதிர்த்து, சோவியத் நாடு ஐ.நா பாதுகாப்புச் சபையை பகிஷ்கரித்துக் கொண்டிருந்த காலப் பகுதியில் தான், வட கொரியா மீது படையெடுக்கும் தீர்மானத்தை ஐ.நா பாதுகாப்புச் சபை எடுத்தது. எனவே, ஸ்ராலின் ஒரு பக்கம் கிம் இல் சங்கிற்கு தெற்கை ஆக்கிரமிக்க உதவி செய்தபடியே, ஐ.நாவின் பாதுகாப்புச் சபையில் வட கொரியா மீதான எதிர் நடவடிக்கையை தடுக்காமலும் விட்டிருக்கிறார். இது முட்டாள் தனமென சில ஆய்வாளர்கள் சொல்கின்றனர். ஆனால், ஸ்ராலினின் நடவடிக்கைகளின் பின்னால் இன்னொரு உள் நோக்கம் இருந்திருக்கலாம். மேற்கு ஐரோப்பாவில் கண் வைத்திருந்த சோவியத் ஒன்றியம் இரண்டாம் உலகப் போர் முடிந்தவுடனேயே, சோவியத் ஒன்றியமும், மேற்கும் கொள்கையளவில் இரு துருவங்களாக உருவாகின. இந்த விரிசல்கள், ஐரோப்பாவின் எதிர்காலத்தை தீர்மானிப்பதற்காக நடத்தப் பட்ட பொற்ஸ்டாம் (Potsdam Conference) மாநாட்டிலேயே வெளிப்பட ஆரம்பித்து விட்டன. சோவியத் ஒன்றியம், கிழக்கு ஐரோப்பாவை மட்டுமன்றி, மேற்கு ஐரோப்பாவையும் கம்யூனிச குடையின் கீழ் கொண்டு வரும் ஆர்வத்தில் காய் நகர்த்தியது. இதற்கு மிகச் சிறந்த சாட்சியமான சம்பவம் கொரிய யுத்தம் ஆரம்பிப்பதற்கு சரியாக இரு ஆண்டுகள் முன்னர், ஜூன் 1948 இல் சோவியத் ஒன்றியம் மேற்கு பேர்லினிக்கான வினியோகப் பாதைகளை ஒரு தலைப்பட்சமாக மூடிய நிகழ்வு. நேட்டோ அமைப்பு உருவாக வித்திட்ட இந்த நிகழ்வை, ஒரு தனிக் கட்டுரையில் பின்னர் பேசலாம். சுருக்கமாகச் சொன்னால், மேற்கின், அமெரிக்காவின் படைகளை ஐரோப்பாவில் இருந்து, தொலைவிலிருக்கும் கொரியா நோக்கிப் போக வைத்தால், தனது மேற்கு ஐரோப்பா நோக்கிய விரிவாக்கம் இலகுவாகலாம் என்ற ஸ்ராலினின் கணிப்பும் வட கொரியாவை அவர் யுத்தமொன்றை நோக்கித் தள்ளக் காரணமாக இருந்தது. சுதாரித்து, வென்று பின் தோற்ற மேற்கு இஞ்சொன் தரையிறக்கத்தின் போது அமெரிக்கப் படையினர். எழுபதாயிரம் அமெரிக்க மரைன்கள், 200 இற்கு மேற்பட்ட கடற்கலங்களில் தரையிறங்கிய இந்த தாக்குதல். பட உதவி நன்றியுடன்: அமெரிக்க தேசிய ஆவணக்காப்பகம். ஐ.நா வட கொரியா மீது பொலிஸ் நடவடிக்கையை எடுத்த போதும், ஐ.நா படைகளின் பிரதான அணியாக அமெரிக்காவின் படைகளே விளங்கின. அமெரிக்காவோடு, தென்கொரியாவின் இராணுவமும் சம எண்ணிக்கையில் நடவடிக்கையில் இணைந்தது. தெற்கின் உள்ளே நன்கு ஊடுருவி விட்ட வட கொரிய இராணுவத்தை நேரடியாக அவர்களுக்குப் பரிச்சயமான நிலப்பரப்பில் எதிர் கொள்வது தற்கொலைக்குச் சமன் என அமெரிக்க இராணுவ வல்லுனர்கள் கருதினர். இந்த சந்தர்ப்பத்தில் தான், பசுபிக் பிராந்தியத் தளபதியாக இருந்த ஜெனரல் மக் ஆர்தரின் இராணுவ அனுபவம் மீண்டும் பயன்பட்டது. நோர்மண்டி தரையிறக்கம் போல, ஆனால் எண்ணிக்கையில் சிறிதாக, வட கொரிய படைகளின் பக்க வாட்டில் அமெரிக்க மரைன் டிவிஷன் ஒன்றை 1950 செப்டெம்பரில் இன்ஞொன் (Inchon) என்ற பகுதியில் மக் ஆர்தர் தரையிறக்கினார். இஞ்சொன் தரையிறக்கம் நோர்மண்டி போல பெரிதாகப் பேசப்படா விட்டாலும், பல வழிகளில் அது நோர்மண்டியை விட வெற்றிகரமானதாகக் கருதப் படுகிறது. ஒரு நாளில் இஞ்சொன் அமெரிக்க மரைன்களிடம் வீழ்ந்து, அடுத்த 11 நாட்களில் வட கொரிய படைகள் சியோலில் இருந்து பின்வாங்கி வடக்கு நோக்கிப் பின்வாங்க ஆரம்பித்தமைக்கு இஞ்சொன் தரையிறக்கம் தான் மூலக் காரணி. 1950 ஒக்ரோபர் 1 ஆம் நாள், ஐ.நா வின் கட்டுப்பாட்டில் தென் கொரியா வந்தது. 38 வது அகலாங்கு எல்லை மீண்டும் வட, தென்கொரியாக்களின் எல்லையாக உருவானது. அடுத்து நடந்த நிகழ்வுகள், அபரிமித வெற்றியுணர்வு எப்படி தோல்விகளுக்கு வழி வகுக்கும் என்பதைப் பற்றிய ஒரு பாடம்! ஜெனரல் மக் ஆர்தர், வட கொரியப் படைகளை, வடக்கு நோக்கி மேலும் துரத்திச் செல்ல வாஷிங்ரனிடம் அனுமதி கேட்கிறார். இதன் மூலம், வட கொரிய இராணுவ பலத்தை நிரந்தரமாக அழித்து, வட - தென் கொரியாக்களை ஒரே தேசமாக இணைப்பதே நோக்கம். இது நிகழ்ந்தால், சோவியத் ஒன்றியத்திற்கும், சீனாவுக்கும் மிக நெருக்கமாக ஒரு மேற்கின் இராணுவப் பிரசன்னம் உருவாகும். இதை, சோவியத் ஒன்றியமும், சீனாவும் எப்படி எதிர் கொள்ளும் என்ற கேள்வியைக் கேட்டு பதிலைத் தேட அமெரிக்காவின் பாதுகாப்புக் கட்டமைப்பில் யாருக்கும் தோன்றவில்லை அப்போது. இதன் பிரதான காரணம், வட கொரியாவை நிரந்தரமாக ஆக்கிரமிக்க அமெரிக்க அரசியல் தலைமைகள், மற்றும் பொதுமக்கள் அமைப்புகளின் ஆதரவு இருந்திருக்கிறது. அமெரிக்கா இந்த தொடர் இராணுவ நடவடிக்கைக்கு பச்சைக் கொடி காட்டியதோடு, ஐ.நாவும் வட தென் கொரியா என்ற பதங்களைத் தவிர்த்து "முழுக் கொரியாவிலும் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும்" என மறைமுகமாக கொரியாக்களை இணைப்பதற்கு ஆதரவு தெரிவித்தது. எனவே, குறுகிய காலத்தில், 38 வது அகலாங்கு எல்லையைக் கடந்து , வட கொரியாவின் பியொங் யாங்கை அமெரிக்கப் படைகள் கைப்பற்றின. தொடர்ந்து, வட கொரிய - சீன எல்லையில் இருக்கும் யாலு நதி நோக்கியும் அமெரிக்க இராணுவம் நகர ஆரம்பித்த போது சீனா தன் பங்களிப்பைத் தீவிரமாக்கியது. சீனாவின் "கம்யூனிசத் தொண்டர்கள்" “கம்யூனிசத் தொண்டர் படை” என்பது தான், சீனா வட கொரியாவினுள் அனுப்பிய தன் சீன மக்கள் இராணுவத்திற்கு இட்ட பெயர். சீனாவிடம் ஆட்பலம் - மூன்று இலட்சம் படையினர் வரை- இருந்த அளவுக்கு தொழில் நுட்பம் இருக்கவில்லை. ஆனால், வடக்கு நோக்கி நகர்ந்த ஐ.நா படைகளை (பெருமளவுக்கு அமெரிக்க படைகள்) தங்கள் அலை அலையான ஆட்பலம் மூலம் சீன இராணுவம் துவம்சம் செய்ய ஆரம்பித்தது. அமெரிக்கர்களுக்கு இருந்த பிரதான பலம் விமானப் படை. இந்த அமெரிக்க வான்படை மேலாண்மையை ஈடு கட்ட, சோவியத் ஒன்றியம் தன் “மிக்” ஜெற் விமானங்களைப் பயன்படுத்தி யாலு நதிப் பகுதியில் மட்டும் தனது சொந்த விமானிகளை வைத்து நடவடிக்கைகளில் ஈடு பட்டது. எனவே நடைமுறையில், இது அமெரிக்க, சோவியத், சீனப் படைகளிடையேயான போர் என்றாலும், மூன்றாம் உலகப் போர் உருவாகும் ஆபத்தைத் தவிர்க்க மூன்று நாடுகளும் இதனை வெளிப்படையாக அறிக்கையிடவில்லை. இறுதியில், 3 வருடங்கள் முன்னகர முடியாத பதுங்கு குழி யுத்தத்தை எதிர் கொண்ட ஐ.நா படைகள், பின்வாங்கி 38 வது அகலாங்குக் கோட்டு எல்லையில் மீண்டும் பிரிக்கப் பட்ட கொரியாவை ஏற்றுக் கொண்டதோடு, கொரியப் போர் ஜூலை 27, 1953 இல் போர் நிறுத்த ஒப்பந்தம் மூலம் முடிவுக்கு வந்தது. ஜூலை 27, 1953 இல், ஐ.நா படைகளின் தளபதியான அமெரிக்க ஜெனரலும், வட கொரிய இராணுவ ஜெனரலும் போர் நிறுத்த உடன்படிக்கையில் கையெழுத்திட்டதோடு கொரிய யுத்தம் ஓய்வுக்கு வந்தது. பட உதவி நன்றியுடன்: அமெரிக்க தேசிய ஆவணக்காப்பகம். போரில் இருந்து உதித்த நாயகர்களும் வில்லன்களும் கொரிய யுத்தம் அமெரிக்காவிற்கு பாதகமாகத் திரும்பிய போது, ஜப்பான் மீது அணுவாயுதத் தாக்குதலை எதிர்த்த மக் ஆர்தர், சீனாவின் மீது அணுவாயுதம் பயன்படுத்த வேண்டுமென்று வாதிட ஆரம்பித்தார். ஆனால், 1945 இல் ஜப்பான் நிலையும், 1950 களில் கொரிய நிலையும் ஒன்றல்ல என்ற தெளிவான பார்வையோடிருந்த அமெரிக்க அதிபர் ட்ரூமன், மக் ஆர்தரின் கோரிக்கையை நிராகரித்து, போரை விரைவாக முடித்து வைக்க விரும்பினார். இதற்காக ஒரு கட்டத்தில், ட்ருமன் ஜெனரல் மக் ஆர்தரை அவரது பசுபிக் கட்டளைத் தளபதி பதவியிலிருந்து நீக்கவும் வேண்டியிருந்தது. இதன் பின்னரே, கொரிய தீபகற்பத்தின் போர் வெப்பம் ஓரளவு தணிந்து, போர் ஓய்வுக்கு வந்தது. மறுபக்கம், ஸ்ராலின் மார்ச் 1953 இல் இறந்து போக, ஸ்ராலினை விட சிறிது வித்தியாசமான பார்வை கொண்ட குருசேவ் சோவியத் தலைவரானார் - இதுவும் கொரியாவில் சோவியத்தின் பங்களிப்பை மாற்றியது என்கிறார்கள். சீனாவின் மாவோவும், வட கொரியாவின் கிம் இல் சங்கும் தங்கள் கம்யூனிச ஆட்சியை உள்நாட்டில் பலப்படுத்திக் கொண்டனர். இரு கொரியாக்களுக்குமிடையேயான 38 வது அகலாங்கு எல்லை, பனிப்போரில் ஒரு முக்கிய எல்லைக் கோடாக நிலைத்து, இன்றும் தொடர்கிறது. - முற்றும்
- Inchon landing.jpg
- Korean armistice .jpg
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
இது தான் என் அவதானிப்பும். ஏனைய தளங்களில், ரஷ்ய உக்ரைன் யுத்தம் பற்றி எழுதப் பட்டிருக்கும் பெரும்பாலான கட்டுரைகள், ஆய்வுகள் எதையும் கூர்மையாக நேரம் செலவழித்து வாசித்தறிந்த பின் எழுதப்பட்டவையாக எனக்குத் தெரியவில்லை. இவற்றை மிக இலகுவாகக் கண்டு பிடிக்க ஒருவழி, சமூக வலை ஊடகங்களில் மிதந்து திரியும் cliche எல்லாம் ஏதோ வரலாற்றின் அரிய தரவுகள் போல மீள ஒப்புவிக்கப் பட்டிருக்கும். மேலே ஒரிஜினல் கட்டுரையாளரின் இந்த வசனம் ஒரு உதாரணம்: "...நவீன உலகில் அதிகமான நாடுகளில் போர்களை நடத்திய நாடு, தொடர்ந்தும் போர்களை நடத்திக் கொண்டிருக்கின்ற நாடு எதுவெனக் கேள்வி கேட்டால் அது அமெரிக்கா எனச் சிறுபிள்ளை கூடச் சொல்லி விடும்" இதை ஒப்புவித்த சிலரிடம் நான் கேட்டிருக்கிறேன்: சரி, இரண்டாம் உலகப் போரின் பின் உலகில் நிகழ்ந்த யுத்தங்கள் மொத்தமாக எத்தனை? அதில் அமெரிக்கா/நேட்டோவினால் ஆரம்பிக்கப் பட்டவை எத்தனை? இரண்டிற்கும் பதில் கிடைக்காது. "நீ மேற்கின் அடிவருடி!" என்ற மூலையில் போய் நிற்பார்கள்😂
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
பகிடிக்குத் தான் இரண்டு பேரும் சொல்லியிருக்கிறீர்களென்றாலும், இந்த சமூக வலைத் தளங்களில் வரும் போலித் தகவல்களை ஆதாரமாக வைத்துக் கட்டுரை எழுதும் ஆய்வாளர்களால் தான் புலம் பெயர் தமிழ் சமூகத்தின் ஒரு பிரிவினரிடையே ரஷ்ய ஆதரவு நிலைப்பாடு வேரூன்றியது. சில கட்டுரைகள் deadpan comedy போல இருக்கும்: உதாரணமாக பதிவுகள் இணையத்தில் ஒரு வருடம் முன்பு, ஜோதிகுமார் என்ற சிவப்புப் சட்டைக்காரர் எழுதியிருக்கும் தகவலைப் பாருங்கள்: "....போரின் மூன்றாவது சுற்று இப்படியாய் முடிவடைந்த நிலையில் அடுத்த நான்காவது சுற்று, ரஷ்யாவின் இலத்திரனியல்-மின்னியல் தாக்குதல்களை முறியடிக்கும் வகையில் அரங்கேற்றப்பட்டது. எலன்-மஸ்க் (Elon Musk) தனது Starlink செய்மதிகளை உக்ரைனுடன் தொடர்புபடுத்துவது மாத்திரமல்லாமல் தேவைப்படும் Terminalகளையும் உக்ரைனுக்கு தந்துதவி ரஷ்ய தாக்குதல்களால் செயலிழந்து போன உக்ரைன் அலைவரிசைகளை மீள உயிர்ப்பிக்க உதவப் போவதாக அறிவித்தார். இதனைத் தொடர்ந்து, ரஷ்யா, கீவ்வின் மிக உயர்ந்த தொலைதொடர்பு கோபுரத்தை துல்லிய குண்டுவீச்சுகளால் தாக்கியழித்து, அங்கே பணியாற்றிய ஐந்து ஊழியரையும் கொன்றொழித்து விட்டதாய் உக்ரைனே அறிவித்தது. அதாவது எலன் மஸ்க்கின், Starlink செய்மதிகளின் தொடர்பாடல், ரஷ்யா படைத்தரப்பால் ஏட்டிக்குப் போட்டியான நிலையில் பரிசீலிக்கப்பட்டு, அதற்கு பதிலடியான நடைமுறை மேற்கொண்டதன் மூலம், மேற்படி நான்காம் சுற்று முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், போரை, விண்வெளி நோக்கி விஸ்தரிக்க எடுக்கப்பட்ட நகர்வு, முதலடியிலேயே நிறுத்தப்பட்டது" அதாவது, உக்ரைனின் வானலை வழி தொலைத்தொடர்பை ரஷ்யா குறிவைத்துத் தாக்கி வந்த நிலையில், செய்மதி மூலம் உக்ரைனை வெளியுலகோடு இணைக்கும் நோக்கில் Starlink வழங்கப் படுகிறது. "உள்ளூர் வானலைக் கோபுரத்தை அழித்ததால், ரஷ்யா செய்மதித் தொடர்பை அழித்து விட்டதாக ஜோதிகுமார் எழுதுகிறார். இது தொழில்னுட்பம் புரியாமையா அல்லது, "வாசிப்பவர்கள் கேனையர்கள்" என்ற நம்பிக்கையா என்பது இவர் போன்ற கட்டுரையாளர்களுக்கே வெளிச்சம்! 😂
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
செய்திகளுக்குத் திரும்பினால், தென்னாபிரிக்காவில் நடக்கவிருக்கும் மாநாட்டிற்கு புரின் வரமாட்டாராம், அவருக்குப் பதிலாக ரஷ்ய வெளிநாட்டமைச்சர் லவ்ரோவ் வருவாராம். பிபிசி சொல்கிறது. https://www.bbc.com/news/world-africa-66247067 ரஷ்யாவைப் பகைக்கவும் முடியாமல், மேற்கின் ஆக்கினையை உதறவும் முடியாமல் தென்னாபிரிக்கா தவிக்கிறதெனத் தெரிகிறது.
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
ரஷ்யர்களே கழட்டி மடித்து வைத்த சிவப்புச் சட்டையோடு "நடுநிலை" நாடான சுவிசிலிருந்து எழுதியிருக்கிறார். ரஷ்யா "உக்ரைன் பாவித்தால், நானும் பாவிப்பேன்" என்று சொன்னதை, "ரஷ்யா இது வரை பாவிக்கவேயில்லை" என்று நம்பி எழுதுகிறார் - அங்க நிற்கிறார் ஆய்வாளர்!😂
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
நேட்டோ நேரடியாக வெளுக்கும் நிலையை ஏற்படுத்தினால் நல்லது தான்! ஒரு வாரத்தில் முடிவு வரலாம்!
-
சந்திரயான்-3: நாசா நிலவில் கால் பதித்துவிட்ட பிறகு ஆளில்லா ரோவர்களை அனுப்புவதால் என்ன பயன்?
நன்றி ஏராளன் (நீண்ட பதில், மன்னிக்கவும்!) முன்கதை சந்திராயன் போன்ற ஒரு விண்கலம் பூமியின் ஈர்ப்பு விசையை மீறி அதன் சுற்றுப் பாதைக்குச் செல்வதற்கு முதலில் இரண்டு ரொக்கற் இயந்திரங்களைப் பாவிக்க வேண்டும். சந்திராயன் 3 இன் தோற்றத்தில் அந்த இரண்டு பக்கமும் அமைந்திருக்கும் தாங்கிகள் தான் முதல் நிலை (Stage 1) இயந்திரம். இவற்றை ஊக்கிகள் (boosters) என்றும் அழைக்கலாம். இந்த ஊக்கிகள் முதல் சில நிமிடங்களில் எரிந்து முடித்து கழன்று பூமியில் வீழ்ந்து விடும். இதன் பிறகு, இரண்டாம் நிலை (Stage 2) ஊக்கி வேலை செய்து விண்கலத்தை பூமியில் இருந்து 22 000 மைல்கள் தொலைவு வரை தள்ளி விடும். இந்த உயரத்தில் தான் சந்திராயன் பூமியைச் சுற்றி வரும் சுற்றுப் (orbit) பாதையில் நுழையும். தன் வேலையை முடித்த பின்னர், இந்த இரண்டாம் நிலை எஞ்சின் பகுதியும் விண்கலத்திலிருந்து கழரும், ஆனால் பூமிக்கு முழுமையாக மீளுவதில்லை. இனித் தான் நீங்கள் கேட்ட கேள்விக்கான பதில்: சந்திராயனோ, அல்லது நிலவுக்கு முன்னர் சென்ற எந்த விண்கலமுமோ நேராக நிலவுக்குப் பறக்கவில்லை. பூமியைச் சுற்றி மிக உயரத்தில் Geo-synchronous orbit (GEO) என்ற வட்டப் பாதையில் அவை சுற்றி வந்து கொண்டிருக்கும். படிப்படியாக, 22,000 மைல்கள் உயரத்தில் இருந்து மேலதிக உயரத்திற்கு ஏறி, விண்கலம் சுற்றிக் கொண்டிருக்கும். ஒரு கட்டத்தில் இந்த பூமியின் சுற்றுப் பாதையில் இருந்து விலகி, நிலவினைச் சுற்றி வரும் ஒரு வட்டப் பாதையில் விண்கலம் இணையும். இப்படி, சுற்றுப் பாதையை மாற்றிக் கொள்ளவும் (orbit transfer), விண்கலத்தின் திசையை மாற்றிக் (maneuver) கொள்ளவும் தான் விண்கலத்திற்கு விசையுருவாக்கும் இயந்திரம் தேவை. அந்த இயந்திரத்தின் பெயர் மூன்றாம் நிலை (Stage 3) இயந்திரம். வெற்றிடத்தில், காற்றில்லாமல் வேலை செய்யக் கூடிய இந்த இயந்திரம் "உறைநிலை எரிபொருள்" (cryogenic) இயந்திரம் எனும் விசேட வகையைச் சார்ந்தது. இந்தியாவின் தயாரிப்பான உறைநிலை இயந்திரம் CE-20 சந்திராயன் 3 இல் விண்கலத்திற்குப் பின்னால் தாங்கி போல இருக்கும் பகுதி தான் CE-20 எனப்படும் உள்ளூர் தயாரிப்பான கிறையோஜெனிக் ரொக்கற் இயந்திரம். இந்த இயந்திரம் உள்ளூர் தயாரிப்பாக உருவாக வித்திட்டது, 1992 இல் அமெரிக்கா இந்தியாவின் விண்வெளி ஆய்வை முடக்க எடுத்த ஒரு நடவடிக்கை தான். 90 களில் இந்தியா இந்த கிறையோஜெனிக் இயந்திரங்களை வெளிநாட்டிலிருந்து வாங்க முயன்றது. அமெரிக்காவும், பிரான்சும் சொன்ன விலையை விட, ரஷ்யாவின் இயந்திரங்கள் மலிவாக இருந்ததால், இந்தியா ரஷ்யாவின் கிறையோஜெனிக் இயந்திரங்களை வாங்க ஒப்பந்தம் போட்டது. அமெரிக்காவோ, இது ஏவுகணைத் தொழில்நுட்பத்தை ஒத்தது, எனவே ஏவுகணைப் பெருக்கக் கட்டுப்பாட்டு விதிகளுக்கு முரண் எனக் கூறி, அடுத்த 2 வருடங்களுக்கு இந்தியாவின் விண்வெளி ஆய்வு நடவடிக்கைகளை முடக்கும் வகையில் ஏற்றுமதி இறக்குமதித் தடையை விதித்தது. அன்றே, இந்தியா உள்ளூரில் கிறையோஜெனிக் இயந்திரங்களை உருவாக்கும் முயற்சிகளைத் தொடங்கி, இன்று பெங்களூரில் இதற்கெனத் தனியான ஒரு பிரிவை உருவாக்கியிருக்கிறது. அங்கே உருவாக்கப் பட்டு, தமிழ்நாட்டில் போன வருடம் வெற்றிகரமாகப் பரீட்சிக்கப் பட்ட ஒரு இயந்திரம் தான் இந்த CE-20. எப்படி வேலை செய்கிறது கிறையோஜெனிக் இயந்திரம்? சில நாட்கள் முன்பு ஒரு திரியில், ஐதரசன் வாயு ஒட்சிசனுடன் சேர்ந்தால் பெரும் வெப்பம் உருவாகும் என்று குறிப்பிட்டுப் பேசிக் கொண்டிருந்தோம் அல்லவா? அதே exothermic இரசாயனத் தாக்கம் தான் கிறையோஜெனிக் இயந்திரத்தின் செயல்பாட்டுப் பொறிமுறை. மொத்தமாக 27,000 கிலோ நிறையுடைய திரவ நிலை ஓட்சிசனும், திரவ நிலை ஐதரசனும் இந்த இயந்திரத்தின் தாங்கிகளில் சேமிக்கப் பட்டிருக்கிறது. தேவையேற்படும் போது, பம்பிகள் மூலம் இந்த திரவ வாயுக்கள் கலக்கப் பட்டு, தீயை ஒரு தீயுருவாக்கி (ignition) ஏற்படுத்த, தாரை இயந்திரம் போன்ற அமைப்பு அந்தத் தீ-வாயுக்கலவையை பின் நோக்கித் தள்ளுவதால் உந்துகை (propulsion) நிகழ்கிறது. இதில் கவனிக்க வேண்டியது என்னவெனில், இந்த கிறையோஜெனிக் இயந்திரம் தொடர்ந்து இயங்க வேண்டியதில்லை: மொத்தமாக 40 நாட்கள் எடுக்கும் சந்திராயனின் நிலவுப் பயணத்தில், வெறும் 720 செக்கன்களுக்குத் தான் இந்த கிறையோஜெனிக் இயந்திரம் வேலை செய்ய வேண்டியிருக்கும். ஏனெனில், நியூட்டனின் முதல் விதியின் படி: இயக்கத்திலிருக்கும் பொருள் தடை ஏற்படும் வரை இயக்கத்திலிருக்கும். இதனால், உராய்வில்லாத விண்வெளி வெற்றிடத்தில் தொடர்ந்த உந்துகையின்றியே சந்திராயன் நகரும். சுற்றுப் பாதைகளை மாற்றும் போது மட்டும், கிறையோஜெனிக் இயந்திரம் வேலை செய்து விசையை வழங்கும். அப்படி அது வேலை செய்ய வேண்டிய கால அளவு மொத்தமாக வெறும் 720 செக்கன்கள் என்று கணித்திருக்கிறார்கள். மேலே, சந்திராயன் ஏவப் பட்ட பின்னர், இந்தியர்கள் பெருமைப் பட்ட சந்தர்ப்பங்களை நக்கல் நையாண்டி செய்திருப்போர் கவனிக்க வேண்டிய ஒன்று: உள்ளூரில் இப்படிப்பட்ட ஒரு சிக்கலான கிறையோஜெனிக் ரொக்கற் இயந்திரத்தை உருவாக்கியமை உண்மையில் சாதனை தான். 90 களில், அமெரிக்காவின் ஒரு சில்லறைத்தனமான சேட்டைக்குப் பதிலாக நரசிம்மராவ் உருவாக்கிய உள்ளூர் முயற்சி, அதில் முழுமையாக உள்ளூர் விஞ்ஞானிகளின் பங்களிப்பு (பலர் தென்மாநிலத்தவர், தமிழர்கள் என்பது கூடுதல் பெருமை!) என்பன தென்னாசிய நாடுகளைப் பொறுத்த வரை ஒரு சிறப்பான முன்மாதிரி. இந்தியர்கள் பெருமைப் பட சந்திராயன் 3 நியாயமான காரணம் தான்!
-
சந்திரயான்-3: நாசா நிலவில் கால் பதித்துவிட்ட பிறகு ஆளில்லா ரோவர்களை அனுப்புவதால் என்ன பயன்?
நியூட்டனின் மூன்றாம் விதி: ஒரு விசையை உருவாக்கினால் அதற்கு சமனும் எதிருமான விசை உருவாகும், இது வெற்றிடத்திலும் நடக்கும். விண்கலம் எரிபொருளை எரித்து வெளிவிடும் உந்துகைக்கு (thrust) எதிர் விசை விண்கலத்தை முன் தள்ளும். (பயனுள்ள திசையில் திரியை நகர்த்த முனைந்தமைக்கு ஒரு பச்சை!) உங்கள் கேள்வி "காற்றில்லை, அதனால் ஒட்சிசன் இல்லாமல் எப்படி உந்துகை கிடைக்கிறது" என்பதா?
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
நல்ல செய்தி! நாதத்தின் மொழியில் சொல்வதானால்: "அடிச்சான் பாரு அப்பாயின்ற்மென்ற் லெட்டரு!"😂
- DM Neuropathies
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
இது நிகழ்ந்தால், மிகவும் தவறான ஒரு நடவடிக்கை. கொத்துக் குண்டுகளால், உக்ரைன் படைகளுக்கு மேலதிக நன்மை எதுவும் கிடைக்குமென நினைக்கவில்லை. மறு பக்கம், வெடிக்காத bomblets நிறைந்த நிலப்பகுதியை ரஷ்யாவிடமிருந்து மீட்டு உக்ரைனியர்கள் குடியேறும் போது அது உக்ரைனிய மக்களுக்கு ஆப்பாக முடியும். யுத்தம் முடிந்த பின்னர், இந்தக் கொத்துக் குண்டுகளை கறுப்புச் சந்தையில் வேறு நாடுகளும், பயங்கரவாத அமைப்புகளும் உக்ரைனிடமிருந்து வாங்கவும் வாய்ப்புகள் உண்டு. பைடன், அனேகமாக நல்ல முடிவை எடுப்பாரென நம்புகிறேன்.
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
இந்தச் செய்தி ஆச்சரியமாகத் தான் இருக்குது. நவால்னிக்குப் பக்கத்தில் அறை ஒதுக்கியிருப்பார்களோ என்று யோசிக்கிறேன். அரச தொலைக்காட்சியில் பிரிகோஷினின் மாளிகை, கைப்பற்றப் பட்ட தங்கக் கட்டிகள் என்பன காட்டினார்களாம் என்கிறது பிபிசி.
-
டைட்டானிக் சுற்றுலாப்பயணிகளிற்கான நீர்மூழ்கி காணாமல்போயுள்ளது
ஓம், இப்படித் தான் நடந்திருக்கிறது. அது நான், எங்காவது உடையாமல் சிக்கிக் கொண்டிருக்கிறார்களோ என்ற சந்தேகங்கள் இருந்த போது எழுதியது.
- Liver & DM-1.jpg
- Liver & DM-2.jpg
-
டைட்டானிக் சுற்றுலாப்பயணிகளிற்கான நீர்மூழ்கி காணாமல்போயுள்ளது
ஒரு குறுகிய 20 அடிகள் நீள உருளைக்குள், ஆழ் சமுத்திரத்தில் கொஞ்சம் கொஞ்சமாக ஒக்சிசனும் வெப்பநிலையும் குறைந்து, இறப்பதென்பது கொடுமையான விடயம். இது போன்ற தண்டனையைப் பெறுவதற்கு இந்த ஐந்து பேரும் செய்த குற்றங்கள் செல்வந்தர்களாக இருப்பதும், தங்கள் செல்வத்தைப் பாவித்து ஒரு தனித்துவமான அனுபவத்தைப் பெற முயன்றமையும் மட்டும் தான் என நினைக்கிறேன்.
- Renal
-
இலங்கையில் ஆறு மாதங்கள்
இலங்கையில் சட்ட ஆட்சி எப்பவுமே ஒரு நொண்டிக் குதிரை என்பதற்கு சாட்சி இந்தக் காணிக் கபளீகரப் பிரச்சினை தான்! இதை உணர்ந்தே அப்பா இறுதி வரை வீடு கட்ட முடியாமல் வெறுமனே வைத்திருந்த யாழ்ப்பாணக் காணி பங்கு பிரிப்பு வரும் போது நான் ஒதுங்கி விட்டேன். அமெரிக்காவின் ஒரு மூலையில் ஒரு அரைப்பரப்புக் காணி உரிய சட்டப் பாதுகாப்புடன் போதும். பின்னர், ஒரு ஆறடி நிலம் - எரித்தால் அதை விடக் குறைவான அளவு நிலம்- அமெரிக்காவின் ஒரு மூலையில் போதும்! Less is more!
-
தமிழனின் சிற்பக் கலை.
இந்த "6000 ஆண்டுகள் முன்பு தமிழனுக்குத் தெரிந்த கருக்கட்டல் முறை" பற்றிப் பார்க்கலாம்: MyIndiaMyGlory என்ற ஒரு இணையத்தளம். மோடி ரீமின் "கோமிய விஞ்ஞானம்" உட்பட பல ஜோக்குகளை சீரியசாக சிரிக்காமலே பிரசுரித்து வரும் ஒரு தளம். "பிரிட்டிஷ் காரன் எங்களைப் பாம்பாட்டி நாடு என்றான், இந்தா பார் எவ்வளவு முன்னேற்றமாக இருந்திருக்கிறோம்?" என்பதே இந்த கோமிய இணையத் தளத்தின் மையக் குமுறல். அதன் ஒரு பகுதி தான் இந்த பாம்பு சந்திரனை விழுங்கும் சிற்பத்தை, " விந்து முட்டை இணையும்" கருக்கட்டல் சிற்பம் என்று 4 ஆண்டுகள் முன்பே எழுதியிருக்கிறார்கள். அது இப்போது தான் முகநூல் வழியாக யாழுக்கு வந்திருக்கிறது. இன்னொரு பகிடி: அந்த தளத்தில் "தமிழனின் கண்டு பிடிப்பு" என்று கூட அவர்கள் சிலாகிக்கவில்லை, சோழர்கள் காலத்தில் ஏற்கனவே இருந்த ஆலயம் என்பதோடு நிறுத்திக் கொண்டார்கள். ஆனால், தமிழுணர்வாளர்கள் மிகுதியைச் சேர்த்து, சோழர் காலத்திற்கு இன்னொரு 5000 ஆண்டுகளையும் கூட்டி விட்டார்கள். வாசித்துச், சிரித்துக் கடந்து போங்கள்! 😂
-
இலங்கையில் ஆறு மாதங்கள்
ஒருங்கிணைந்த பண்ணைகளின் சிறந்த மாதிரிகளைப் பார்க்க விரும்புவோர் போக வேண்டிய இடம் மத்திய மாகாணம். 20 ஆண்டுகளுக்கு முன்பே, குண்டசால, சரசவிகம, ஹிந்தகல, மஹகந்த போன்ற பேராதனையை அண்டிய சிறு கிராமங்களில் அருமையான ஒருங்கிணைந்த பண்ணைகள் இருந்தன. இவற்றுள் பலவற்றிற்கு கால்நடை மருத்துவ சேவைகளை வழங்கிய அதிர்ஷ்டம் கிடைத்தது. இவற்றுள் ஹிந்தகலவில் இருந்த பண்ணை சேதன பண்ணையாக இருந்தது. குண்டசாலையில் இருந்த ஒருங்கிணைந்த பண்ணையில், லொத்தர் அடிப்படையில் ஒரிரு குடும்பங்களைத் தேர்வு செய்து சில வருடங்களுக்கு பண்ணையில் வசித்து பயிற்சி பெறச் செய்யும் ஒரு திட்டத்தை நடைமுறைப்படுத்தினர். வளர்க்கும் பயிர்கள், ஆட்டினங்கள், மாட்டினங்கள் என்பன வடமாகாணத்தில் வேறாக இருக்கும், ஆனால், செயல்படுத்தும் நுட்பங்கள், முறைகள் பற்றி இந்த மத்திய மாகாண ஒருங்கிணைந்த பண்ணைகளில் கற்கலாம், ஆலோசனை பெறலாம்.
-
இலங்கையில் ஆறு மாதங்கள்
அருமையான பயணக் கட்டுரை சுமே. ஊர் போய்ப் பார்த்து வந்த மாதிரியே இருக்குது. நான் இலங்கை போனால் அங்க இங்க போவதற்கு பொதுப் போக்குவரத்துத் தான் பயன்படுத்துவது. வெளிநாட்டிலிருந்து வந்திருப்பவர் போல அல்லாமல் மக்கள் ஜோதியோடு இரண்டறக் கலந்து விடுவது இலங்கையில் நல்லது! ஆனால் குடும்பமாகப் போனால் அது சாத்தியமில்லை என்பது உண்மை.