Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரஞ்சித்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ரஞ்சித்

  1. ஐ நா சாசனத்திற்கு உட்பட்ட வகையில் நடத்தப்பட்ட தற்காப்புத் தாக்குதலே இஸ்ரேல் மீது நாம் மேற்கொண்ட தாக்குதல் என்று ஈரான் தனது செயலை நியாயப்படுத்தியிருக்கிறது. சிரிய அரசாங்கத்தின் கோரிக்கைக்கு இணங்கவே தனது இராணுவ வல்லுனர்கள் டமஸ்க்கஸிற்குச் சென்றிருந்தார்கள் என்றும், அவர்களையே இஸ்ரேல் நீதிக்குப் புறம்பான முறையில் கொன்றதாகவும் ஈரான் குற்றஞ்சாட்டியிருக்கிறது.
  2. இங்கிலாந்து வானுக்கு ஏவியிருக்கும் டைபூன் ரக தாக்குதல் விமானம் இஸ்ரேலிய வான்பரப்பில் காணப்படும் ஈரானிய ட்ரோன்கள்
  3. ஈரானிலிருந்து இஸ்ரேலிற்கான மிகக் கிட்டிய தூரம் 1600 கிலோமீட்டர்கள். இதனைக் கடக்க ஈரானிய ட்ரோன்களுக்கு சில மணிநேரங்கள் தேவைப்படலாம் என்று கூறப்படுகிறது. சில மணித்தியாலங்களுக்கு முன்னர் ஏவப்பட்ட ட்ரோன்கள் இப்போதுதான் இஸ்ரேல் வான்பரப்பிற்குள் நுழைந்திருக்கின்றன. பெரும்பாலானவற்றை ஏவுகணை எதிர்ப்புப் பொறிமுறை சுட்டு வீழ்த்தியிருக்கிறது. இன்னும் சிலவற்றை அமெரிக்கா சுட்டு வீழ்த்தியிருக்கிறது. சில வீழ்ந்து வெடித்திருக்கின்றன. இத்தாக்குதலில் காயப்பட்ட இஸ்ரேலியச் சிறுவன் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். தாக்குதலா அல்லது இடைமறிப்பா? டைபூன் ரக மிகையொலித் தாக்குதல் விமானங்களை வானுக்கு ஏவியிருக்கிறது பிரித்தானிய வான்படை. மத்திய கிழக்கில் இஸ்ரேலுக்கெதிராக வரும் ஏவுகணைகள், ட்ரோன்கள் என்று அனைத்தையும் சுட்டு வீழ்த்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. சந்தில சிந்துபாடக் காத்திருந்த அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸுக்கு சந்தர்ப்பம் ஒன்று கிடைத்திருக்கிறது என்று நினைக்கிறேன். அடுத்தபக்கம் ரஸ்ஸியாவும், வடகொரியாவும் தமது ஆயுதக் கிடங்குகளைத் திறந்துவைத்திருப்பார்கள் ஈரானுக்காக. சீனாவும் ஆயத்தப்படும் போலத் தெரிகிறது.
  4. இஸ்ரேலிய ஈரான் யுத்தத்தின்மூலம், பலஸ்த்தீன மக்களின் பிரச்சினை பின்னுக்குத் தள்ளப்பட்டு விடும். அம்மக்களின் அவலங்கள் உலகின் கண்களில் இருந்து மறைக்கப்பட்டு விடும். இஸ்ரேலோ, ஈரானோ இந்த யுத்தத்தில் வெல்லப்போவதில்லை. வெறும் அழிவுகள் மட்டும்தான் மிஞ்சப்போகிறது. பலஸ்த்தீன அரசினை அங்கீகரித்து, அவர்கள் மீதான ஆக்கிரமிப்பினை நிறுத்துவதுதான் இப்பிரச்சினைகளை முடிவிற்குக் கொண்டுவர ஒரே வழி. ஆனால், இஸ்ரேலிய அரசு இதற்கு ஒத்துக்கொள்ளப்போவதில்லை. மத்திய கிழக்கு தொடர்ந்தும் எரிந்துகொண்டே இருக்கப்போகிறது. இதன்மூலம் ஈரானைப் பலவீனப்படுத்த இவர்களால் முடியாது. ஏவப்பட்டவை ஏவுகணைகள் மட்டும்தான். அவற்றைச் சுட்டு வீழ்த்துவதுடன் இவர்களின் பணி முடிந்துவிடும்.
  5. "முதல் முறையாக ஈரான் தனது நாட்டிலிருந்து இஸ்ரேல் மீது தாக்கியிருக்கிறது. இது சரித்திரத்தில் முன்னர் இடம்பெறவில்லை. மேலும், கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைகளும் பாவிக்கப்பட்டிருக்கின்றன. இஸ்ரேல் தாக்குதலை எதிர்பார்த்திருந்தது என்பது உண்மைதான், ஆனால் இதைச் சமாளிக்க முடியுமா என்பது கேள்விக்குறி. இஸ்ரேல் மீது ஏற்படுத்தப்போகும் அழிவுகளை அடிப்படையாகக் கொண்டே இஸ்ரேலின் பதிலடி அமையும். அவர்களிடம் சில தாக்குதல் திட்டங்கள் இருக்கின்றன. ஈரானின் முக்கிய இலக்குகள் மீது அவர்கள் தாக்குவார்கள். நிச்சயம் அமெரிக்கா இஸ்ரேலுக்கு உதவும்" என்று முன்னாள் இஸ்ரேலிய பாதுகாப்புப் பேச்சாளர் பி பி சி இற்குக் கூறியிருக்கிறார். தனது டமஸ்க்கஸ் தூதரகம் மீதான தாக்குதலுக்காகவே இஸ்ரேல் மீது தாக்கினோம். தற்போது அந்த நடவடிக்கை முடிவிற்குக் கொண்டுவரப்பட்டிருக்கிறது என்று ஐ நா விற்கான ஈரானின் நிரந்தரப் பிரதிநிதி கூறியிருக்கிறார். ஆனால், இஸ்ரேல் பதில்த் தாக்குதலில் ஈடுபடுமானால், அதன்மீது மிகக் கடுமையான தாக்குதலை ஈரான் நடத்தும் என்றும், நீதிக்குப் புறம்பான இஸ்ரேல் எனும் நாடு மீது தான் நடத்தும் தாக்குதல்களை அமெரிக்கா இடைமறிக்கக் கூடாது, விலகி நிற்க வேண்டும் என்றும் அமெரிக்காவை ஈரான் எச்சரித்திருக்கிறது.
  6. இஸ்ரேல் மீது தாக்குதலை ஆரம்பித்த ஈரான் தனது இராணுவத் தளபதிகள் மீது தாக்குதல் நடத்தியதற்குப் பழிவாங்க, இஸ்ரேல் மீது ஈரான் தற்போது பல ட்ரோன்களைக் கொண்டு தாக்குதலை ஆரம்பித்திருக்கிறது. நூற்றிற்கு மேற்பட்ட ட்ரோன்களும், பலிஸ்ட்டிக் ஏவுகனைகளும் இத்தாக்குதலில் பாவிக்கப்பட்டிருக்கின்றன. இஸ்ரேல் பதிலடித்தாக்குதலை ஆரம்பிக்கும்போது, அயல் நாடுகள் எவராவது இஸ்ரேலிய விமானங்கள் பறப்பதற்கு தமது வான்பரப்பை திறந்துவிட்டால் அந்த நாடுகளையும் தாக்குவோம் என்று ஈரான் எச்சரித்திருக்கிறது. ட்ரோன்கள் இன்னும் இஸ்ரேல் வந்து சேரவில்லை. இஸ்ரேல் அவற்றை அவதானிக்கின்றதாம். அமெரிக்காவும் இஸ்ரேலுக்கு உடவுவோம் என்று கூறியிருக்கிறது https://edition.cnn.com/middleeast/live-news/israel-hamas-war-gaza-news-04-13-24/index.html மத்திய கிழக்கில் நிலைகொண்டிருக்கும் அமெரிக்கத் துருப்புக்கள் இஸ்ரேலுக்கு உதவும் என்று அமெரிக்கா கூறியிருக்கிறது. ஈரானைத் தோற்கடிப்போம் என்றும் அமெரிக்கா கூறியிருக்கிறது. மேலும், ஏவப்பட்ட ட்ரோன்களில் சிலவற்றை அமெரிக்கா இடைமறித்திருக்கிறது. இஸ்ரேலிய ஏவுகணை எதிர்ப்பு நிலை மீது ஹிஸ்புள்ளா ஏவுகணைத் தாக்குதலை நடத்தி வருகிறது. இந்நிலையில், இஸ்ரேலிய மக்களை பாதுகாப்பான பகுதிகள் என்று அறியப்பட்ட இடங்கள் நோக்கி நகருமாறு அரசாங்கம் அறிவித்திருக்கிறது.
  7. உங்களுக்குத் தனிநாடும் இல்லை சமஷ்ட்டியும் இல்லை. தமிழ்நாட்டில் போராளிகள் இயங்க விடமாட்டேன் - ‍ ரஜீவ் காந்தி பண்டாரியின் விஜயம் இந்திய விமானப்படைக்குச் சொந்தமான விமானம் ஒன்றில் வைகாசி 28 ஆம் திகதி கொழும்பை வந்தடைந்தார் இந்தியாவின் வெளியுறவுச் செயலாளர் ரொமேஷ் பண்டாரி. இந்தியாவால் வரையப்பட்ட யுத்த நிறுத்தம் மற்றும் பேச்சுவார்த்தை தொடர்பான நகலையும் அவர் தன்னுடன் கொண்டுவந்திருந்தார். அந்த நகல், சக்சேனாவுடன் ஜெயாரும், லலித்தும் நடத்தியை பேச்சுக்களின் அடிப்படையில் இந்திய வெளிவிவகார அதிகாரிகளால் தயாரிக்கப்பட்டிருந்தது. பண்டாரி நான்கு முக்கிய விடயங்கள் குறித்து கலந்துரையாடினார். யுத்த நிறுத்தம், பேச்சுக்களில் ஈடுபடவிருக்கும் தமிழ் அமைப்புக்களின் பிரதிநிதிகள் குறித்த விபரம், அரசியல்த் தீர்விற்கான அடிப்படை மற்றும் பேச்சுக்கள் ஆரம்பிக்கப்படும் நாள் ஆகியவையே அந்த நான்கு விடயங்களுமாகும். முதல் மூன்று விடயங்கள் குறித்து ஜெயாரும், லலித் அதுலத் முதலியும் பிடிவாதமான நிலைப்பாட்டில் இருந்தார்கள். அதுலத் முதலி, நகலில் இருந்த சொற்பிரயோகங்கள் குறித்து சர்ச்சைகளை எழுப்பிக்கொண்டிருந்தார். யுத்தநிறுத்தம் எனும் சொல் பாவிக்கப்பட்டதை அவர் ஆட்சேபித்தார். தமிழ் ஆயுத அமைப்புக்கள் தமக்கான பிரதேசம் ஒன்றினை வைத்திருக்காதவிடத்து யுத்த நிறுத்தம் என்கிற சொல் பாவிக்கப்படலாகாது என்றும், வன்முறை தவிர்ப்பு என்று அதனை மற்றவேண்டும் என்று தர்க்கித்தார். ஆனால் பண்டாரியோ லலித்தின் கோரிக்கையினை நிராகரித்தார். வடக்குக் கிழக்கில் அதிகரித்துவரும் போராளின் தாக்குதல்களின் பின்னால் இந்தியாவே இருக்கிறது என்று ஜெயார் பகிரங்கமாகவே குற்றஞ்சாட்டினார். தமிழ் நாட்டிலிருந்து போராளிகளும் ஆயுதங்களும் இலங்கைக்குள் வருவதை இந்தியா தடுத்தாலே வன்முறைகள் குறைந்துவிடும் என்று அவர் கூறினார். ஆகவே, யுத்த நிறுத்த ஒப்பந்தத்தில் ஒரு நிபந்தனையாக பாக்கு நீரிணையூடாக போராளிகளும், ஆயுதங்களும் கடத்தப்படுவது முற்றாகத் தடைசெய்யப்படுவதாக அறிவிக்கப்பட வேண்டும் என்று அவர் கூறினார். இந்தவிடயத்தில் பண்டாரி விட்டுக்கொடுக்க முன்வந்தார். அடுத்ததாக நாட்டில் சட்டம் ஒழுங்கினை நிலைநாட்டுவது அரசாங்கத்தின் கடமையென்பதால், போராளிகளின் தாக்குதல்களால் மூடப்பட்ட பொலீஸ் நிலையங்கள் மீளத் திறக்கபட அரசாங்கத்திற்கு அனுமதி கொடுக்கப்பட வேண்டும் என்று கோரினார் ஜெயவர்த்தன. அதனையும் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தில் இணைத்துக்கொள்ள பண்டாரி சம்மதித்தார். ரஜீவ் காந்தி தமிழர் தரப்புப் பிரதிநிதிகளாக புலிகள், ஈ.பி.ஆர்.எல்.எப், டெலோ மற்றும் புளொட் ஆகிய போராளி அமைப்புக்களும் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரும் பங்குகொள்வார்கள் என்ற இந்தியாவின் பரிந்துரையினை ஜெயார் ஏற்க மறுத்தார். பயங்கரவாத குழுக்களுடன் பேசுவதில்லை என்கிற தீர்க்கமான முடிவினை தனது அரசாங்கம் எடுத்திருப்பதாக அவர் கூறினார். ஆயுத அமைப்புக்களுடன் பேசுவது அவர்களுக்கான அங்கீகாரத்தை வழங்குவதாக ஆகிவிடும் என்று அவர் தர்க்கித்தார். அதற்குப் பதிலளித்த பண்டாரி, அந்நியப்படுத்தப்பட்டுள்ள மக்கள் கூட்டம் ஒன்றின் அரசியல் அபிலாஷைகளை பேச்சுவார்த்தைகளூடாக தீர்க்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ள நிலையில், சட்டம், அங்கீகாரம் போன்ற‌ விடயங்கள் குறித்துப் பேசுவது பயனற்றது என்றும், தற்போதுள்ள நிலைமை அதனைக் கடந்து சென்றுவிட்டதாகவும் கூறினார். பஞ்சாப் மற்றும் அஸாமியப் பிரிவினைவாதப் போராளிகளுடன் ரஜீவ் காந்தி நடத்திவரும் பேச்சுக்களை இதற்கு உதாரணமாக முன்வைத்தார் பண்டாரி. அதன்பின்னர் போராளி அமைப்புக்களுடனும், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினருடனும் பேசுவதற்கு ஜெயார் ஒத்துக்கொண்டார். ஜெயாரின் இந்த இசைவை இந்தியாவின் இராஜதந்திரத்திற்குக் கிடைத்த மிகப்பெரும் வெற்றி என்று ரஜீவும், பண்டாரியும் கிலாகித்து நின்றனர். ரஜீவ் காந்தியின் அழைப்பினை ஏற்று ஆனி 1 ஆம் திகதி அவருடன் பேச்சுக்களில் ஈடுபடுவதற்காக ஜெயவர்த்தன தில்லி சென்றார். ஜெயவர்த்தனவுடன் பேசும்போது பஞ்சாப்பிய, அஸாமியப் பிரிவினைவாதப் போராளிகளுடனனான தனது பேச்சுவார்த்தை அனுபவங்களை ரஜீவ் பகிர்ந்துகொண்டார். தமிழ் ஆயுத அமைக்களுடன் பேசுவதற்குச் சம்மதித்த ஜெயாரின் இசைவினை "துணிவான முடிவு" என்று ரஜீவ் பாராட்டினார். பதிலளித்த ஜெயார், அநுராதபுரம் மீதான தாக்குதலையடுத்து சிங்கள மக்கள் தமிழ் ஆயுத அமைப்புக்கள் மீது கடுங்கோபத்தில் இருப்பதாக க் கூறினார். ஆகவே, தான் தமிழ் ஆயுத அமைப்புக்களுடன் பேசப்போவது தெரிந்தால், சிங்கள மக்கள் தன்மீது அதிருப்தியடைவார்கள் என்றும், அதனைச் சமாளிக்க ரஜீவ் தனக்கு உதவ வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். அதற்காக, இருவிடயங்கள் குறித்து இந்தியா, இலங்கைக்குச் சார்பாக நடந்துகொள்ள வேண்டும் என்று ஜெயார் கூறினார். இப்படிச் செய்வதன் மூலம், இந்தியா தமிழ் மக்களுக்குச் சார்பாக நடந்துகொள்கிறது என்கிற எண்ணத்தில் இருக்கும் சிங்களவர்கள் தமது நிலைப்பாட்டினை மாற்றிக்கொள்ளலாம் என்று அவர் கூறினார். ஜெயார் ரஜீவிடன் முன்வைத்த இரு கோரிக்கைகளாவன, 1. தமிழ்ப் போராளி அமைப்புக்களுக்கு உதவுவதை இந்தியா முற்றிலுமாக நிறுத்திக்கொள்ள வேண்டும். 2. தமிழர்களின் அபிலாஷையான தனிநாட்டினை இந்தியா ஒருபோதும் ஏற்றுக்கொள்ளக் கூடாது. இவை இரண்டையும் ரஜீவ் உடனடியாகவே ஏற்றுக்கொண்டார். தனது விஜயத்தின் நோக்கத்தை நிறைவேற்றினார் ஜெயவர்த்தன. தொடர்ந்து பேசிய ஜெயார், பாக்குநீரிணையை இந்திய இலங்கைக் கடற்படைகள் கூட்டாக கண்காணிப்பதன் மூலம் தமிழ்நாட்டிலிருந்து இலங்கைக்குக் கடத்தப்படும் ஆயுதங்கள் மற்றும் பயணிக்கும் போராளிகளைக் கட்டுப்படுத்த முடியும் என்று கூறினார். இதற்குப் பதிலளித்த ரஜீவ், இதுகுறித்து தான் நிச்சயம் நடவடிக்கை எடுப்பேன் என்று உறுதியளித்தார். ஜெயாரின் விஜயத்தின் இரண்டாம் நாளான ஆனி 2 ஆம் திகதி, சூறாவளியினால் பாதிக்கப்பட்டிருந்த அயல்நாடான பங்களாதேசத்திற்கு அவரை அழைத்துச் சென்றார் ரஜீவ். தில்லியிலிருந்து டாக்காவிற்குச் செல்லும் வழியிலும், திரும்பி வரும் வழியிலும் இரு தலைவர்களும் இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கான தீர்வுகள் குறித்து ஆராய்ந்தார்கள். இந்தப் பேச்சுக்களின்போது, அதிகாரப் பரவலாக்கத்திற்கான அலகாக இலங்கையரசு முன்வைத்துவந்த மாவட்ட சபையினைக் கைவிட்டு மாகாண சபையினை ஜெயார் ஏற்றுக்கொள்ள வைப்பதில் ரஜீவ் வெற்றி கண்டார். ஜெயார் தான் போராளிகளுடனும், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னண்னியினருடனும் பேசுவதற்கு ஆயத்தமாக இருப்பதாகக் கூறினார். ஆனி 3 ஆம் திகதி ஜெயார் நாடுதிரும்பினார். ஜெயவர்த்தன தில்லியிலிருந்து புறப்படுமுன்னர் ஆறு பந்திகளைக் கொண்ட அறிக்கையொன்று இந்தியாவினால் வெளியிடப்பட்டது. அவற்றில் இரு முக்கியமான பந்திகள் இவ்வாறு கூறியிருந்தன, "இலங்கையின் ஒருமைப்பாட்டிற்கும், இறைமைக்கும் பங்கம் ஏற்படாத வகையில், அனைத்து இன மக்களும் ஏற்றுக்கொள்ளக் கூடிய அரசியல்த் தீர்வு ஒன்றினை அடைவதற்கான சூழ்நிலையினை ஏற்படுத்துவது குறித்து இரு நாட்டுத் தலைவர்களும் இணங்கியிருக்கிறார்கள்". "மேலும், அனைத்துவிதமான வன்முறைகளும் முடிவிற்குக் கொண்டுவரப்பட வேண்டும் என்பதிலும் இணக்கப்பாடு ஏற்பட்டிருக்கிறது. வடக்குக் கிழக்கு மாகாணங்களில் வழமை நிலை உருவாக்கப்படுவதற்குத் தேவையான அனைத்துவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படும். இந்தியாவில் அகதிகளாகத் தஞ்சம் கோரியிருக்கும் தமிழர்கள் தாமதமின்றி மீள நாடு திரும்புவதும் இதன்மூலம் ஏதுவாக்கப்படும்". தில்லியிலிருந்து ஜெயாரை வழியனுப்பி வைத்தபின்னர் பத்திரிகையாளர்களுடன் பேசினார் ரஜீவ். வன்முறைகளைக் கட்டுப்படுத்துவதனூடாகவே அரசியல்த் தீர்விற்கான சூழ்நிலையினை ஏற்படுத்த முடியும் என்று தாம் இருவரும் ஏற்றுக்கொண்டதாக‌ அவர் கூறினார். ஆகவே, தமிழ்நாட்டை தளமாகக் கொண்டு இலங்கையில் ஆயுதக் கிளர்ச்சியில் ஈடுபட்டுவரும் போராளி அமைப்புக்களின் செயற்பாடுகளைத் தான் முடக்கிவிடுவதற்குத் தீர்மானித்திருப்பதாகவும், பாக்கு நீரிணையூடாக ஆட்களும் ஆயுதங்களும் இலங்கைக்குக் கொண்டுசெல்லப்படுவதைத் தடுக்கப் போவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். இதன்மூலம் வன்முறைகள் முடிவிற்குக் கொண்டுவரப்படும் என்றும், அதன்பிறகு இலங்கையரசாங்கமும் தமது இராணுவ நடவடிக்கைகளை குறைத்துக்கொள்ளும் என்றும் ரஜீவ் கூறினார். "இலங்கையில் தனிநாடொன்றினை உருவாக்க போராடிவரும் தமிழ் கெரில்லாக்கள் இந்தியாவை அதற்கு ஒரு தளமாகப் பாவிப்பதை நான் இனிமேல் அனுமதிக்கமாட்டேன். அடுத்ததாக, இலங்கையில் தமிழர்கள் தமக்கென்று தனிநாடு ஒன்றினை எதிர்பார்க்க முடியாது. சமஷ்ட்டி முறையிலான தீர்வும் அவர்களுக்கு வழங்கப்பட மாட்டாது. இந்தியாவிலிருக்கும் மாநிலங்களையொத்த தீர்வொன்றினை அவர்கள் எதிர்பார்க்க முடியும்" என்று தீர்க்கமாகக் கூறினார். விமான நிலையத்தில் செய்தியாளர்களளைச் சந்தித்துவிட்டு தனது அலுவலகம் திரும்பிய ரஜீவ், தமிழ்நாட்டு முதலமைச்சரான எம்.ஜி.ஆருடன் தொலைபேசியில் பேசினார். ஜெயவர்த்தனவுடனான பேச்சுக்கள் பயனுள்ளதாக அமைந்திருந்தன என்று கூறிய ரஜீவ், இலங்கைத் தீவின் அரசியற் பிரச்சினைக்கான தீர்வொன்று எட்டப்படும் சூழ்நிலை விரைந்து உருவாகி வருகிறது என்று தான் நம்புவதாகவும் தெரிவித்தார். தமிழ்நாட்டின் கல்வித்துறை அமைச்சராகவிருந்த இரா நெடுஞ்செழியன் தமிழக சட்டசபையில் எம்.ஜி.ஆருடன் ரஜீவ் காந்தி பேசிய விடயங்கள் குறித்து விபரித்ததுடன், தமிழரின் பிரச்சினைக்கு அரசியற் தீர்வொன்று எட்டப்படுவதற்கான சாத்தியம் உருவாகியிருப்பதாக ரஜீவ் காந்தி நம்புவதாகவும் தெரிவித்தார். மேலும், தனது வெளிநாட்டுப் பயணத்தை முடித்தபின்னர், இலங்கையில் நடைபெற்றுவரும் வன்முறைகளை முடிவிற்குக் கொண்டுவரும் செயற்பாடுகளில் ரஜீவ் காந்தி இறங்குவார் என்றும் நெடுஞ்செழியன் தெரிவித்தார். ஆனி மாதத்தின் முதல் அரைப்பகுதியில் அமெரிக்காவிற்கும், ரஸ்ஸியாவிற்கு ரஜீவ் காந்தி உத்தியோகபூர்வ விஜயங்களை மேற்கொண்டிருந்தார். ரொனால்ட் ரீகனுடனும், மிக்கெயில் கொர்பச்சேர்வுடனும் அவர் நடத்திய பேச்சுக்களில் இலங்கையில் நடந்துவரும் பிரச்சினை குறித்தும் பேசினார். ஆனி 18 ஆம் திகதி ரஜீவ் நாடு திரும்பினார். அதேநாள் இலங்கையில் யுத்தநிறுத்தம் அறிவிக்கப்பட்டது. ஆனி 3 ஆம் திகதி நாடுதிரும்பிய ஜெயார், கட்டுநாயக்க விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசும்போது, இறுதியாக இந்தியா களநிலவரங்களைச் சரியாகப் புரிந்துகொள்ளத் தொடங்கியிருப்பதாகக் கூறினார். மேலும், இந்தியாவின் மாநிலங்களுக்கு இருக்கும் அதிகாரங்களை ஒத்த அதிகாரங்களைத் தமிழர்களுக்கு தான் வழங்கவிருப்பதாகவும், ஆனால் அதிகாரப் பரவலாக்கலின் அலகு மாவட்டங்கள் தான் என்றும் கூறினார். சென்னையில் தங்கியிருந்த அமிர்தலிங்கம், தில்லியில் இரு நாட்டுத் தலைவர்களும் இணைந்து வழங்கிய அறிக்கை மற்றும் கட்டுநாயக்காவில் ஜெயார் வழங்கிய செவ்வி ஆகியவை குறித்து தனது கருத்தினைப் பதிவுசெய்தார். இருநாட்டுத் தலைவர்களும் இணைந்து வழங்கிய அறிக்கையினை வரவேற்ற அவர், "அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசியல்த் தீர்வொன்றினைக் காண்பதற்கான சூழ்நிலை ஏற்படுத்தவேண்டும் என்று இரு நாட்டுத் தலைவர்களும் கூறியதை நான் வரவேற்கிறேன். இந்தியா இப்பேச்சுவார்த்தைகளில் முக்கிய பங்கினை ஆற்றுவதன் மூலம் அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வைப் பெற்றுத்தரவேண்டும்" என்று கூறினார். ஆனால், கட்டுநாயக்காவில் ஜெயார் தெரிவித்த மாவட்ட சபைகளே அதிகாரப் பரவலாக்கத்திற்கான அலகுகள் என்பது தனக்கு ஏமாற்றமளிக்கிறது என்றும் கூறினார். தில்லியில் வெளியிடப்பட்ட இணைந்த அறிக்கையினைப் பாராட்டிய லலித், இந்தியாவின் நிலைப்பாட்டில் நல்ல மாற்றங்கள் தெரிகின்றது என்றும் புகழ்ந்தார்.
  8. இந்தியாவின் தலையீட்டினை எதிர்த்த போராளிகளும், இந்தியாவிடம் தமிழர் நலன்களைத் தாரைவார்த்த அமிர்தலிங்கமும் நற்பிட்டிமுனை படுகொலைகள் அம்பாறை மாவட்டத்தின் கல்முனைப் பிரதேசத்தில் அமைந்திருக்கும் ஒரு கிராமமே நற்பிட்டிமுனை. அநுராதபுரம் மீதான தாக்குதல் நடைபெற்று இரு நாட்களுக்குப் பின்னர், கடும்பச்சை நிற காக்கி சீருடை அணிந்த, இங்கிலாந்தின் விசேட படைகளால் பயிற்சியளிக்கப்பட்ட இலங்கை பொலீஸின் ஒரு பிரிவினரான விசேட அதிரடிப் படையினர், வைகாசி 17 ஆம் திகதி இரவு, நற்பிட்டிமுனை மற்றும் அதனைச் சூழவுள்ள இரு கிராமங்களுக்குள்ளும் நுழைந்தனர். அப்பகுகளை முற்றாக முடக்கிவிட்டு, அங்கிருந்த இளைஞர்கள் அனைவரையும் அவர்கள் கைதுசெய்தனர். அவ்வாறு கைதுசெய்யப்படும் போது சில இளைஞர்கள் அவர்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஏனையவர்கள் இழுத்துச் செல்லப்பட்டனர். சிங்கள பெளத்த மிருகங்கள் - விசேட அதிரடிப்படை அம்பாறை, தை முதலாம் திகதி, 2007 கிராமத்திற்குள் அதிரடிப்படையினர் நுழைந்தபோது இளைஞர் ஒருவர் குளித்துக்கொண்டிருந்தார். அவர்களின் காலில் வீழ்ந்த அவர், தன்னைக் கொல்லவேண்டாம் என்று மன்றாடியதுடன், போராளி அமைப்புக்களுக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லையென்று கூறினார். அவர்கள் கேட்கவில்லை, அவ்விடத்திலேயே அவரைச் சுட்டுக் கொன்றனர். அருகிலிருந்த வீட்டிற்குச் சென்ற அவர்கள், உள்ளிருந்து இளைஞர் ஒருவரை வெளியே இழுத்துவந்து, அவரது மனைவி பார்த்திருக்க தலையில் சுட்டுக் கொன்றனர். கொல்லப்பட்ட அவரது உடலை இழுத்துச் சென்ற அதிரடிப்படையினர், "பயங்கரவாதிகளுடன் தொடர்பு வைத்திருக்கும் எல்லாத் தமிழர்களுக்கும் இதுதான் கதி" என்று சத்தமிட்டவாறே சென்றனர். தம்மால் கைதுசெய்யப்பட்டிருந்த மேலும் 40 இளைஞர்களை நற்பிட்டிமுனை மயானத்திற்கு இழுத்துச் சென்ற அவர்கள், அப்பகுதியில் கிடங்குகளை வெட்டுமாறு கட்டளையிட்டனர். கிடங்குகள் வெட்டி முடிக்கப்பட்டதும், அவற்றின் அருகிலேயே அவர்களைச் சுட்டுக் கொன்றுவிட்டு அவர்கள் வெட்டிய கிடங்குகளை அவர்களைத் தள்ளி நிரவினர். கல்முனை பிரஜைகள் குழு சம்பவம் நடந்த இடத்திற்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்டதுடன், சர்வதேச மன்னிப்புச் சபைக்கு இப்படுகொலைகள் தொடர்பான விலாவாரியான அறிக்கை ஒன்றினையும் சமர்ப்பித்தது. சர்வதேச மன்னிப்புச்சபை இப் படுகொலைகுறித்து இலங்கை அரசாங்கத்துடன் தொடர்புகொண்டபோது, இளைஞர்களைக் கைதுசெய்ததையோ அல்லது படுகொலை செய்ததையோ முற்றாக மறுத்தது இலங்கையரசு. ஆனால், அங்கிருந்து காணாமற்போன இளைஞர்களுக்கு என்ன நடந்தது என்பதுபற்றி இலங்கையரசு எதுவுமே கூறவில்லை. ஆனால், கல்முனை பிரஜைகள் குழுவின் தலைவரான போல் நல்லநாயகம் இதனை இப்படியே விட்டுவிடவில்லை. அவர் ஊடகங்களிடம் இதுகுறித்துப் பேசத் தொடங்கினார். அரசாங்கம் குறித்தும், அதிரடிப்படையினர் குறித்தும் பொய்யான வதந்திகளைப் பரப்புகிறார் என்கிற பெயரில் நல்லநாயகத்தை பொலீஸார் மறுநாள் கைதுசெய்து நீதிமன்றத்தில் நிறுத்தினர். ஆடி 1986 இல் நீதிபதி அவர் குற்றம் அற்றவர் என்று கூறி அவரை விடுவித்தார். தீர்ப்பு வழங்கப்படும்போது, "1985 ஆம் ஆண்டு வைகாசி மாதம் 17 ஆம் திகதி நற்பிட்டிமுனையில் கைதுகள் எதுவும் நடைபெறவில்லை எனும் அதிரடிப்படையினரின் கூற்றினை எனக்குக் கிடைத்திருக்கும் ஆதாரங்கள் பொய்யென்று நிரூபிக்கின்றன" என்றும் நீதிபதி மேலும் கூறினார். நற்பிட்டிமுனை படுகொலைகள் நடைபெற்று மூன்று நாட்களின் பின்னர் புலிகள் மீண்டும் தாக்கினர். மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பகுதியில் விசேட அதிரடிப்படையினர் பயணம் செய்த ஜீப் வண்டியொன்றின்மீது புலிகள் நடத்திய கண்ணிவெடித் தாக்குதலில் ஐந்து அதிரடிப்படையினர் கொல்லப்பட்டனர். இதனையடுத்து அப்பகுதியைச் சுற்றிவளைத்த விசேட அதிரடிப்படையினரும் ஊர்காவற்படையினரும், அப்பகுதியிலிருந்த இரு கிராமங்களில் இருந்து 37 இளைஞர்களைக் கைதுசெய்து இழுத்துச் சென்று சுட்டுக்கொன்றனர். கொல்லப்பட்டவர்களின் சடலங்கள் அடையாளம் தெரியாதவாறு அதிரடிப்படையினரால் அழிக்கப்பட்டன. டிக் ஷிட் 2004 வன்முறைகள் தீவிரமாகிக்கொண்டிருக்கும் தருணத்திலேயே டிக் ஷிட் இந்தியாவுக்கான தூதராக கொழும்பில் பொறுப்பேற்றுக்கொண்டார். வைகாசி 27 ஆம் திகதி எனக்கு வழங்கிய நேர்காணலில், அதிகரிக்கப்பட்டு வரும் வன்முறைகள், வன்முறைகளின் தீவிரம் குறித்த தனது கவலையினைத் தெரிவித்திருந்தார். "திரு பண்டாரியின் விஜயம் நண்மை பயப்பதாக‌ அமையவேண்டும் என்று நான் பிரார்த்திக்கிறேன். மேலும் உயிரிழப்புக்கள் ஏற்படாதவாறு இந்த அழகான தீவு காக்கப்படுதல் வேண்டும்" என்று கூறினார். ஆனால், அவர் வேண்டிக்கொண்டதுபோல எதுவுமே அமையவில்லை. தமிழ்ப் போராளி அமைப்புக்களின் தலைவர்களைப் பொறுத்தவரையில் அப்போதைய சூழ்நிலை நம்பிக்கை தருவதாக இருக்கவில்லை. ஜெயவர்த்தனவை நம்புவதற்கு அவர்கள் தயாராக இருக்கவில்லை. ஆகவே, பண்டாரியின் கொழும்பு விஜயம் குறித்து கலந்தாலோசிப்பதற்காக ஈழத் தேசிய விடுதலை முன்னணியினர் மீண்டும் கூடினர். அங்கு பேசிய பிரபாகரன், ஜெயவர்த்தன பண்டாரியையும் தனது தாளத்திற்கு ஆடவைக்கப் போகிறார் என்று கூறினார். பண்டாரியுடன் மிகவும் கனிவாகப் பேசி, அவரையும் தன்பக்கம் இழுத்துவிடப் போகிறார் ஜெயார் என்று அவர் கூறினார். மேலும், இந்தியாவுக்கும் போராளிகளுக்குமிடையே ஒரு பிளவினை ஏற்படுத்தவும் ஜெயார் முயல்வார் என்றும் அவர் கூறினார். "நாம் கவனமாக இருப்பது அவசியம்" என்று அவர் கூறினார். இந்தியா தம்மை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்கு அனுமதிப்பதில்லை என்கிற முடிவிற்கு ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் வந்தார்கள். ஈழத்தமிழர்களின் நலன்களே தமது குறிக்கோளாக இருக்கவேண்டும் என்பதில் அவர்கள் உறுதியாக இருந்தார்கள். ஆகவே, தமிழர்கள் சார்பாக இந்தியா முடிவெடுப்பதை அவர்கள் நிராகரித்தார்கள். ஆனால், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியோ இதற்கு நேர் எதிரான நிலைப்பாட்டை எடுத்தது. அமிர்தலிங்கம் வெளியிட்ட அறிக்கையில் இலங்கைத் தமிழ் மக்களுக்கான தீர்வினை தீர்மானிக்கும் நடவடிக்கையில் இந்தியா நேரடியாக ஈடுபடவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மேலும் மூன்று நிபந்தனைகளையும் அமிர்தலிங்கம் முன்வைத்திருந்தார், 1. அனைத்துப் போராளி அமைப்புக்களும் சமரசப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவேண்டும். 2. பேச்சுவார்த்தைகள் இலங்கைக்கும், இந்தியாவிற்கும் இடையே நேரடியாக நடைபெற வேண்டும். 3. எடுக்கப்படும் தீர்விற்கு இந்தியா எழுத்துறுதி தரவேண்டும். அமிர்தலிங்கத்தின் முடிவினையடுத்து பிரபாகரன் மிகவும் கோபமுற்றார். தமிழர்களின் தலைவிதியினை இந்தியா தீர்மானிப்பதை அனுமதிக்கக் கூடாது என்று ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்களிடம் அவர் வலியுறுத்தினார். "எமது தலைவிதியினை நாமே தீர்மானிக்க வேண்டும்" என்று அவர் கூறினார். தமது தலைமையினைப் பாதுகாத்துக்கொள்ள தமிழரின் நலன்களை தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் இந்தியாவிடம் அடகுவைப்பதாக அவர் குற்றஞ்சாட்டினார். இதனையடுத்து இலங்கையரசாங்கத்துடன் பேச்சுக்களில் ஈடுபடவேண்டாம் என்று தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரை ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் கேட்டுக்கொண்டனர்.
  9. மறவன்புலவு சச்சிதானந்தம் பொதுபல சேனையின் ஞானசாரவுடன் ஒத்துப்போகலாம் என்று முன்பு ஒருமுறை கூறியவர். தமிழரிடையே மதரீதியில் பிளவுகளை ஏற்படுத்தவே இவர் முனைகிறார்.
  10. இது நடந்திருந்தால் நிச்சயமாக மேம்பட்ட நிலையில் இருந்திருப்போம். இப்போது, மீள முடியாத‌ ஆளத்தில்க் கிடக்கிறோம். ஆனால், புலிகளை மட்டுமே குறைகூறிக்கொண்டிருப்பதன் மூலம் மட்டுமே எவற்றையுமே மீளப் பெற்றுக்கொள்ள முடியாது அல்லவா? அக்காலத்தில் தமிழினத்திற்காக தம்மால் இயன்றதை அவர்கள் செய்தார்கள். எடுக்கப்பட்ட முடிவுகள் எல்லாமே சரியானவைதானா என்பது விவாதத்திற்குரியது. இறுதி வருடங்களில் நடந்த நிகழ்வுகள் எமது முடிவிற்குக் குறிப்பிடத் தக்க பங்கினையாற்றின என்பதையும் மறுக்கவில்லை. ஆனால், எமது சக்திக்கு அப்பாற்பட்ட ஒரு சக்தி இப்போரைக் கையாண்டது அப்பட்டமான உண்மை. அதற்கெதிராக எம்மால் செய்யக்கூடியவை மிகவும் மட்டுப்படுத்தப்பட்டவை என்பதே எனது எண்ணம். ஒன்றுமட்டும் உண்மை. தமிழர்கள் போராட்டத்தினை 80 களின் ஆரம்பத்தில் ஆரம்பித்தபோது அது ஆரம்பிக்கப்படத் தேவையாக இருந்த காரணங்களை விடவும் இப்போது அதிகளவான காரணங்கள் இருக்கின்றன. ஆகவே, எமது மக்களின் விடிவிற்கான போராட்டம் ஏதோ ஒருவகையில் முன்னெடுக்கப்பட்டுக்கொண்டே இருக்க வேண்டும். புலிகளை விமர்சிப்பதால் மட்டுமே தமிழ் மக்களுக்கான தீர்வைப் பெற்றுக்கொடுக்க முடியாது.
  11. டோக்கியோ மாநாட்டுப் புறக்கணிப்பு, சமஷ்ட்டிக் கோரிக்கை, புஷ் நிர்வாகத்தின் அதிகாரிகள் பற்றி இங்கே எழுதலாமே? போரும் சமாதானமும் தமிழிலும் இருக்கின்றதா? இக்காலத்தில் நடந்த பல விடயங்கள் நாம் அறியாதது. தெரிந்தவர்கள் இங்கே பகிர்வதன் மூலம் விவாதிக்கப்பட்டவை, முன்வைக்கப்பட்டவை, புறக்கணிக்கப்பட்டவை என்பவற்றை தெளிவாக அறிய முடியும். உங்களுக்கு நேரம் இருந்தால் செய்யுங்கள். நீங்கள் சொல்வதன்படி, கொல்லப்பட்ட மக்களினதும், போராளிகளினதும் ஒரு பகுதியினரையாவது கப்பாற்ற முடிந்திருந்தால் இன்றிருக்கும் நிலையினை விட மேம்பட்ட நிலையில் நிச்சயமாய் இருந்திருப்போம். இழப்புக்களையும் தவிர்த்திருக்கலாம்.
  12. இது ஓரளவிற்கு உண்மைதான். நாம் வங்கதேச விடுதலை பற்றித் தெரிந்து கொண்டளவிற்கு, காலிஸ்த்தான் விடுதலைப் போராட்டம் குறித்து தெரிந்து வைத்திருக்கவில்லை. இதற்கு இன்னுமொரு காரணமும் இருக்கிறது. பொற்கோயிலுக்குள் இந்திரா காந்தி இராணுவத்தை அனுப்பியது 1984 இல். அப்போது, புலிகள் உட்பட இயக்கங்கள் எல்லாமே இந்தியாவை தமது நேச சக்தியாகவே பார்த்து வந்தார்கள், குறிப்பாக இந்திராவை. ஆகவே, இந்திராவின் அரசுக்கெதிராகப் போராடிய பிந்தரன் வாலேயிடமிருந்தும், காலிஸ்த்தான் விடுதலை முன்னணியிடமிருந்தும் தம்மை விலத்தி வைத்திருந்ததாக எண்ணுகிறேன். அதாவது, காலிஸ்த்தானுக்கு ஆதரவு கொடுக்கப்போய், இந்திராவின் கோபத்திற்கு ஆளாகி, கிடைக்கும் உதவியையும் கெடுத்துவிடாமல் இருப்பதே சரியென்று எண்ணியிருக்கலாம். சுயநலம் தான். ஆனால், பலஸ்த்தீன விடுதலைப் போராட்டம் குறித்து இயக்கங்களுக்கிடையே அனுதாபம் இருந்தது. பணம் கொடுத்து பயிற்சிக்காக லெபனானுக்கும், பலஸ்த்தீனதிற்குச் சென்றாலும், அம்மக்களின் போராட்டம் குறித்த அனுதாபம் இருந்தது. ஈழத்தமிழர்கள் மற்றைய இனங்களுக்காகக் குரல் கொடுப்பதில்லை என்பது பரவலான குற்றச்சட்டுத்தான். அதில் உண்மையில்லாமலும் இல்லை. இந்தியா மீதும், தாம் வாழும் நாடுகள் மீதும் அவர்கள் வைத்திருக்கும் விசுவாசம் இதற்குக் காரணமாக இருக்கலாம். தனது நலன்களைப் பாதுகாத்துக்கொள்ள ஆட்சியதிகாரத்தில் இருப்போரையே அமெரிக்கா ஆதரிக்கிறது என்கிறேன். அதாவது, ஆட்சியில் இல்லாத, அதிகாரத்தில் இல்லாத ஈழத் தமிழர்களை அமெரிக்கா எப்படி ஆதரிக்கும்? தமிழர்களுக்கூடாக தனது நலன்களை எப்படி அமெரிக்கா உறுதிப்படுத்திக்கொள்ளும்? ஆகவேதான், எமக்கு அமெரிக்கா உடவப்போவதில்லை என்று கூறுகிறேன். சரி, எம்மிடம் என்னதான் இருக்கிறது அமெரிக்காவுக்கு விட்டுக் கொடுப்பதற்கு என்று கூறுங்கள்? நாம் என்ன செய்தால் அமெரிக்கா தனது மனதை மாற்றி எமக்கு உதவ முன்வரும் என்று சொல்லுங்கள்? எம்மால் அமெரிக்காவின் நலன்களை எப்படிப் பாதுகாத்துக் கொடுக்கலாம் என்று சொல்லுங்கள்? நாம் ஒரு இனமாக இனியாவது சிந்திக்கலாம்.
  13. குமுதினிப் படகுப் படுகொலைகள் அநுராதபுரத் தாக்குதலையடுத்துக் கொதிப்படைந்த ஜெயாரும், அதுலத் முதலியும் இதற்கான பதிலை இரு வகைகளில் வகுத்தனர். முதலாவது சிங்கள மக்களின் மனோநிலையினை மீளக் கட்டியெழுப்புதல். இரண்டாவது, பேச்சுவார்த்தைகளை இழுத்தடிப்பதன் மூலம் இந்தியாவின் முயற்சிகளைச் செயலிழக்கப்பண்ணுதல். சிங்கள மக்களின் மனோநிலையினை மீளக் கட்டியெழுப்ப அவர்கள் எடுத்துக்கொண்ட முதலாவது நடவடிக்கையினூடாக பல தமிழ் மக்கள் இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டனர். இந்தியாவை செயலிழக்கப்பண்ணும் தமது இரண்டாவது நடவடிக்கை போராளிகளுடனான பேச்சுவார்த்தைகளுக்கு அவர்களைப் போகப் பண்ணியிருந்தது. தமிழ் மக்கள் மீதான படுகொலைகளின் முதலாவது தொகுதிக் கொலைகள் வைகாசி 15 ஆம் திகதி, அநுராதபுரத் தாக்குதல் நடந்து ஒருநாளின் பின்னர் ஆரம்பிக்கப்பட்டது. அந்நாள் காலை 7:40 மணிக்கு, நெடுந்தீவிலிருந்து குறிக்கட்டுவான் இறங்குதுறை நோக்கிச் செல்லும் தனது நாளாந்தப் பயணத்தை குமுதினி எனும் பெயர் கொண்ட மக்கள் படகு ஆரம்பித்தது. குறிக்கட்டுவானிலிருந்தே யாழ்ப்பாணத்திற்கான பஸ்வண்டிச் சேவைகள் நடந்துவந்தன. மோட்டார் இயந்திரம் கொண்டு இயக்கப்பட்ட அப்படகில் பெண்கள், குழந்தைகள் உட்பட 80 பேர் அன்று காலை பயணம் செய்துகொண்டிருந்தனர். காங்கேசு சாந்தலிங்கம், அவரது மனைவி குசலகுமாரி, அவரது மைத்துனி அனுஷியா, அவர்களது சித்தி சரோஜா மற்றும் அவர்களது பிள்ளை லெகி ஆகியோரும் அன்று காலை குமுதினிப் படகில் பயணம் செய்துகொண்டிருந்தனர். கணபதிப்பிள்ளை கணேசபிள்ளை குடும்பமும் அன்று படகில் இருந்த குடும்பங்களில் ஒன்று. சாந்தலிங்கமும் கணேசபிள்ளையும் அன்றைய படுகொலைகளில் உயிர்தப்பி நடந்த அகோரத்திற்குச் சாட்சிகளாக இருக்கிறார்கள். நைனாதீவு இறங்குதுறை வைகாசி 25, 2000 இல் ஞாயிறு வீரகேசரிப் பத்திரிகைக்கு அவர்கள் வழங்கிய செவ்வியில் 16 வருடங்களுக்குப் பின் இலங்கையின் சரித்திரத்தில் நிகழ்த்தப்பட்ட மிகவும் அகோரமான கடற்படுகொலை குறித்த விபரங்கள் வெளிக்கொணரப்பட்டன. "நாம் நெடுந்தீவிலிருந்து புறப்பட்டு அரை மணிநேரம் ஓடியிருப்போம். நெடுந்தீவுக்கும், நைனாதீவிற்கும் இடையிலான கடற்பகுதியினூடாக நாம் பயணித்துக்கொண்டிருக்கும்போது, எமது படகு நோக்கி Fibre Glass இனால் செய்யப்பட்ட படகு ஒன்று வந்துகொண்டிருப்பதை அவதானித்தோம். அப்படகு எம்மை அண்மித்ததும், அதிலிருந்தவர்கள் எமது படகு செலுத்தியிடம் படகின் இயந்திரத்தை உடனே நிறுத்துமாறு கட்டளையிட்டார். அதன்பின்னர், எமது படகைச் சுற்றி இரண்டுமுறை வட்டமடித்த அவர்கள், இறுதியில் எமது படகுடன் தாம் வந்த படகினை சேர்த்துக் கட்டினர். அப்போது நாம் நைனாதீவை அண்மித்திருந்தோம்" என்று சாந்தலிங்கம் கூறினார். "கறுப்பு நிறத்தில் டீ‍சேர்ட்டும், கட்டைக் காற்சட்டையும் அணிந்த, திடகாத்திரமான ஏழு அல்லது எட்டு நபர்கள், கைகளில் தானியங்கித் துப்பாக்கிகளுடனும், இன்னும் சில ஆயுதங்களுடனும் எமது படகில் தாவி ஏறிக்கொண்டனர். அவர்கள் அனைவரும் கடற்படையைச் சேர்ந்தவர்கள். அவர்களை நான் முன்னர் கடற்படையினரின் சீருடையில் பார்த்திருக்கிறேன். அவர்களில் ஒருவர் இயந்திரத்தின் அறைக்குள்ச் சென்று அதனைத் தனது கட்டுப்பாட்டினுள் கொண்டுவந்தார்". "பின்னர், உள்ளிருந்த பயணிளையும், படகோட்டியையும் படகின் மேற்தட்டிற்குச் செல்லுமாறு கட்டளையிட்டனர். அவர்கள் கட்டளையிட்டவாறே நாம் எல்லோரும் படகின் மேற்பகுதிக்குச் சென்றோம். பின்னர், படகின் முன்புறத்தில் இருந்த அறை ஒன்றிற்குள் எம்மைப் போகச் சொன்னார்கள். அங்கிருந்த ஆண்களையெல்லாம் வரிசையில் நிற்கும்படி கட்டளையிட்டார்கள். உங்களிடம் அடையாள அட்டைகள் இருக்கின்றனவா என்று எங்களைப் பார்த்துக் கேட்டார்கள். நாமும், ஆம், கொண்டுவந்திருக்கிறோம் என்று பதிலளித்தோம். பின்னர் ஆண்களை படகின் இயந்திரம் அமைந்திருந்த பகுதியூடாக, படகின் பின்புறத்திற்குப் போகச் சொன்னார்கள். மற்றையவர்கள் தமது பெயர்களை உரக்கச் சொல்லியவாறே இயந்திரம் இருந்த அறைக்குள் செல்லுமாறு பணிக்கப்பட்டார்கள். ஒவ்வொரு பயணியும் இயந்திரத்தின் அறைக்குள் நுழையும்போது துப்பாக்கிகள் வெடிக்கும் சத்தம் எமக்குக் கேட்டது. கூடவே உடல்கள் கடலினுள் விழும் சத்தமும் எமக்குக் கேட்டது". கடற்படையினரால் வேட்டையாடப்பட்ட குமுதினிப் படகுப் பயணிகள் "வரிசையில் நான் நடுவில் நின்றிருந்தேன். எனது முறை வந்தது. நான் இயந்திரத்தின் அறையினுள் நுழைந்தபோது இரத்த வெள்ளத்தில் கிடந்த சில உடல்களைக் கண்டேன். அதிர்ச்சியில் நான் அலறத் தொடங்கினேன். யாரோ பின்னாலிருந்து எனது பின்னந்தலைப் பகுதியில் பலமாகத் தாக்கினார்கள். அங்கே கிடந்த உடல்களின் மீது நான் வீழ்ந்தேன். என்னை இழுத்தெடுத்த அவர்கள், தாம் வைத்திருந்த கோடரியினால் என்னை வெட்டத் தொடங்கினார்கள். நான் இறந்ததுபோல அசைவற்றுக் கிடந்தேன். பின்னர் என்னை அங்கே கிடந்த உடல்களின் மீது எறிந்துவிட்டு எனக்குப் பின்னால் நின்ற ஆணைக் கொல்லத் தொடங்கினார்கள். அவரது உடல் என்மீது வீழ்ந்தது. பின்னர், ஒன்றன் பின் ஒன்றாக‌ உடல்கள் என்மீது வந்து விழத் தொடங்கின. இக்கொலைகள் குறைந்தது 30 நிமிடங்கள் வரை தொடர்ந்து நடைபெற்றன. பின்னர், ஒரு கடற்படை வீரன் இன்னமும் உயிருடன் யாராவது இருக்கிறீர்களா? இருந்தால் வெளியே வாருங்கள் என்று கத்தினான். நான், என்மீது கிடந்த உடல்களை தள்ளை அகற்றிவிட்டு எழுந்து நின்றேன்". "சித்தி என்னிடம் பேசும்போது, எனது மனைவியையும், மைத்துனியையும் அவர்கள் கொன்றுவிட்டதாகக் கூறினார். எமது படகு மெதுமெதுவாக நெடுந்தீவு நோக்கி மிதந்து சென்றுகொண்டிருந்ததை நாம் அவதானித்தோம். படகிலிருந்த சிவப்பு நிறப் பயணப் பை ஒன்றினை மேலே உயர்த்திப் பிடித்து எம்மால் முடிந்தவரை கூச்சலிட்டோம். தூரத்தில் மீன்பிடித்துக்கொண்டிருந்த படகிலிருந்தோர் இதனை அவதானித்திருக்க வேண்டும். அவர்கள் தம்முடன் இன்னும் ஒரு பெரிய படகை எடுத்துவந்து எம்மைக் குறிக்கட்டுவானுக்கு அழைத்துச் சென்றார்கள். அங்கிருந்து யாழ்பாணம் வைத்தியசாலைக்கு நாம் கொண்டுசெல்லப்பட்டோம்" என்று சாந்தலிங்கம் கூறினார். கணேசபிள்ளை தனது அனுபவத்தைக் கூறும்போது, "எனது முறை வந்தது, நான் இயந்திரத்தின் அறையினுள் நுழைந்தேன். நான் உள்ளே நுழையும்போது பின்னாலிருந்து எனது தலையில் பலமாகத் தாக்கினார்கள். இன்னுமொருவன் கோடரியால் என்னை வெட்டினான். நான் அலறிக்கொண்டே கீழே வீழ்ந்தேன். மூன்றாமவன் எனது வாயினை தான் வைத்திருந்த வாளினால் வெட்டினான். நான் ஒருபுறமாகப் புரண்டு அறையின் கரைக்குச் சென்றேன்". "நான் மீண்டும் எழுந்திருந்தபோது, அவர்கள் சென்றுவிட்டார்கள் என்பதை உணர்ந்துகொண்டேன். என்னைச் சுற்றி எங்கும் உடல்கள் சிதறிக் கிடந்தன. சிலர் என்னைப்போன்றே குற்றுயிராகக் கிடந்ததை நான் கண்டேன். சிவப்புப் பையொன்றினைத் தூக்கிப் பிடித்து தொலைவில் மீன்பிடித்துக்கொண்டிருந்த படகொன்றின் கவனத்தை எம்மால் ஈர்க்க முடிந்தது. எம்மீது தாக்குதல் நடத்தியவர்கள் சிங்களவர்கள் பேசும் கொச்சைத் தமிழில் பேசினார்கள். தமக்கிடையே சிங்களத்தில் பேசிக்கொண்டார்கள். எம்மீது தாக்குதல் நடத்தியவர்களில் இருவரை நைனாதீவு கடற்படை முகாமில் நான் கண்டிருக்கிறேன். அவர்கள் இருவரையும் சீருடையிலும், சிவில் உடையிலும் பலமுறை கண்டிருக்கிறேன். கறுப்பு நிற டீ சேர்ட்டுக்களையே அவர்கள் பெரும்பாலும் அணிவார்கள். அவர்கள் பாக்கிஸ்த்தானில் பயிற்றுவிக்கப்பட்ட பயங்கரமானவர்கள் என்று ஊர்ச் சனங்கள் கூறக் கேட்டிருக்கிறேன். என்னால் அவர்களை அடையாளம் காண முடியும்" என்று அவர் கூறினார். இத்தாக்குதலில் ஆண்கள், பெண்கள் சிறுவர்கள் அடங்கலாக 48 தமிழர்கள் படுகொலைசெய்யப்பட்டனர். அநுராதபுரத் தாக்குதலுக்குப் பழிவாங்கவே இத்தாக்குதலை அரசாங்கம் நடத்தியது. நன்றாக திட்டமிடப்பட்டு நடத்தப்பட்ட படுகொலை இது. ஒவ்வொரு பயணியும் ஒருவர் பின் ஒருவராகக் கொல்லப்பட்டிருக்கிறார்கள். தம்மால் கொல்லப்படுபவர்களின் ஓலம் வெளியே கேட்காதிருக்க, உயிருடன் இருந்தவர்கள் தமது பெயர்களைச் உரத்துச் சத்தமிடவேண்டும் என்று கடற்படையினர் கட்டளையிட்டிருக்கிறார்கள். சர்வதேச மன்னிப்புச் சபை இப்படுகொலைகள் குறித்துக் கேள்வி எழுப்பியது. படுகொலையிலிருந்து உயிர்தப்பியவர்களின் கண்ணால்க் கண்ட சாட்சியங்களின் அடிப்படையில், படுகொலையில் ஈடுபட்டவர்கள் அனைவரும் நைனாதீவு கடற்படை முகாமைச் சேர்ந்த கடற்படை வீரர்கள் என்கிற விபரங்களுடன் அது அறிக்கை வெளியிட்டது. ஆனால், இப்படுகொலைகளை தமது படையினர் செய்யவில்லை என்று மறுதலித்த பாதுகாப்பு அமைச்சர் லலித் அதுலத் முதலி, "இதனைச் செய்தது யாரென்று கூறுவதற்கான சாட்சியங்கள் எதுவும் இல்லை" என்று கூறினார். சர்வதேசத்திலிருந்து எழுந்துவந்த விமர்சனங்களையடுத்து, இப்படுகொலைகள் குறித்து விசாரிக்க வேண்டிய தேவை அரசாங்கத்திற்கு ஏற்பட்டது. விசாரணைக் குழு ஒன்று உருவாக்கப்பட்டு, அவசர அவசரமாக விசாரணைகள் நடத்தப்பட்டு, அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டது. ஆனால், அந்த அறிக்கையினை பத்திரமாக தனது ஆவணக் காப்பகத்தில் மறைத்துவைத்த அரசாங்கம் இன்றுவரை அதுகுறித்த விபரங்களை வெளியே விடவில்லை. இப்படுகொலை நடைபெற்று இரு நாட்களுக்குப் பின்னர் நற்பிட்டிமுனைப் பகுதியில் இன்னொரு படுகொலையினை அரசாங்கம் நடத்தியது. இப்படுகொலை குமுதினிப் படுகொலையினை விடவும் குரூரமானதாக இருந்தது.
  14. அநுராதபுரத் தாக்குதல் பெளத்தர்களின் போயா தினமான, 1985 ஆம் ஆண்டு வைகாசி 14 ஆம் திகதி காலை, விக்டர் தலைமையில் புறப்பட்ட 14 சீருடை தரித்த புலிகள், புத்தளம் - அநுராதபுரம் வீதியில் பயணித்துக்கொண்டிருந்த பஸ்வண்டியொன்றைக் கடத்தினார்கள். பின்னர், கிறீஸ்த்துவிற்கு முன் 5 ஆம் நூற்றாண்டிலிருந்து, கிறிஸ்த்துவிற்குப் பின் 10 ஆம் நூற்றாண்டுவரை சிங்கள பெளத்தர்களின் புராதன தலைநகராக விளங்கிய அநுராதபுரம் நகரின் மத்தியில் அமைந்திருந்த பிரதான பேரூந்துத் தரிப்பிடத்திற்குச் அதனை ஓட்டிச் சென்றார்கள். பேரூந்துத் தரிப்பிடத்தில் காத்துநின்ற பயணிகள் மீது தாம் கொண்டுவந்த இயந்திரத் துப்பாக்கிகளால் அவர்கள் சரமாரியாகச் சுட்டபோது ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் அடங்கலாக சுமார் நூறு பொதுமக்கள் இறந்துவீழ்ந்தார்கள். பின்னர் உலக பெளத்தர்களால் கொண்டாடப்படும் புனித வெள்ளரசு மரம் அமைந்திருந்த பகுதிநோக்கி அவர்கள் சென்றார்கள். பெளத்த மதத்தை ஆரம்பித்த புத்தர் அமர்ந்திருந்து ஞானம் பெற்றதாகக் கூறப்படும் வெள்ளரசு மரத்தின் கிளையினை ஊன்றியே இந்த வெள்ளரசு மரமும் உருவாக்கப்பட்டதாக கூறப்படுவதால் இம்மரமும் பெளத்தர்களால் புனிதமானதாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. கிறீஸ்த்துவிற்கு முன் 3 ஆம் நூற்றாண்டில் இந்தியாவை ஆண்ட அசோக மன்னனின் மகளான சங்கமித்தையே இந்த வெள்ளரசுக் கிளையினை இலங்கைக்குக் கொண்டுவந்ததாக சிங்கள பெளத்தர்கள் கூறுகிறார்கள். அப்பகுதியில் இருந்த சிங்கள பெளத்த குருக்கள், பெண் குருக்கள், வெள்ளையுடையணிந்த சாதாரண பெளத்தர்கள் மீதும் புலிகள் தாக்குதல் நடத்தினார்கள். பின்னர் வில்பத்து வனப்பகுதி நோக்கிச் சென்ற தாக்குதல் அணி, போகும் வழியில் இருந்த பொலீஸ் நிலையம் மீதும் தாக்குதல் நடத்தியவாறே சென்றது. வில்பத்து வனப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த வன இலாகா முகாம் மீது புலிகளின் தாக்குதல் அணி நடத்திய தாக்குதலில் நான்கு ஆயுதம் தரித்த காவலாளிகள் கொல்லப்பட்டார்கள். அன்று மட்டும் புலிகளால் கொல்லப்பட்ட சிங்களவர்களின் எண்ணிக்கை 148 ஆகும். தாக்குதலையடுத்து உடனடியாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, புலிகளைத் தேடி வேட்டையாட விசேட பொலீஸ் கொமாண்டோக்களை அரசு வரவழைத்தது. ஆனால், அவர்கள் வருவதற்கிடையில் தாக்குதல் அணி அங்கிருந்து அகன்று சென்றிருந்தது. அநுராதபுரம் விமானப்படை முகாமிலிருந்து கிளம்பிச் சென்ற உலங்குவானூர்தியொன்று வில்பத்துக் காட்டுப் பகுதியூடாக புலிகளின் பஸ் வண்டி சென்றுகொண்டிருப்பதை அவதானித்துவிட்டு அதன்மீது தாக்குதல் நடத்தியது. உடனடியாக பஸ்ஸை விட்டிறங்கிய புலிகள் உலங்குவானூர்தி மீது திருப்பித் தாக்கத் தொடங்கினார்கள். புலிகளின் தாக்குதலில் யாழ்ப்பாணத்தில் பிறந்து துப்பாக்கி இயக்குனரான விமானப்படை சார்ஜன்ட் ஹத்த கபுராலகே ஜயரட்ண என்பவர் காலிலும் நெஞ்சிலும் துப்பாக்கிச் சூடுபட்டுக் காயமடைந்தார். அதனையடுத்து உலங்குவானூர்தி திரும்பிச் சென்றது. காயமடைந்த விமானப்படை வீரர் இன்றும் வாழ்கிறார் (2005). தாக்குதலில் ஒரு கையினையும், காலையும் இழந்த அவரை அன்றைய ஜனாதிபதியின் ஆலோசகர் ரவி ஜயவர்த்தன இஸ்ரேலுக்கு அனுப்பி செயற்கைப் பாகங்களை அவருக்குப் பெற்றுக்கொடுத்தார். அநுராதபுரம் மீதான தாக்குதல் குறித்த செய்திகள் கொழும்பை வந்தடைந்தபோது நான் லேக் ஹவுஸ் காரியாலயத்தில் இருந்தேன். சிங்கள பெளத்தர்கள் இச்செய்தியைக் கேட்டதும் கடும் கோபமடைந்தார்கள். தமிழர்கள், தம்மீது சிங்களவர்களால் பழிவாங்கும் தாக்குதல்கள் நடத்தப்படலாம் என்று அஞ்சிய‌போதும் அப்படி நடக்கவில்லை. அரசாங்கத்தில் உள்ளவர்களால் தூண்டப்பட்டால் ஒழிய சாதாரணச் சிங்களவர்கள் தம்மை கொல்லப்போவதில்லை என்பதை தமிழர்கள் அன்று புரிந்துகொண்டார்கள். நான் உடனடியாக டொரிங்டன் சதுக்கத்தில் இருந்த எனது தொடர்மாடி வீட்டிற்குச் சென்றேன். 1983 ஆம் ஆண்டில் எனது வீடு எரியூட்டப்பட்டதையடுத்து நாம் டொரிங்டனில்த்தான் வாழ்ந்துவருகிறோம். தாக்குதல் குறித்த செய்தி வந்தபோது, வீட்டில் மகன் மட்டும் தனியாக இருந்தமையினால், அவரது பாதுகாப்புக் குறித்த கவலையுடன் நான் வீட்டிற்குக் கிளம்பினேன். நான் எனது வீடிருக்கும் பகுதியை அடைந்தபோது, பொலீஸ் ரோந்து வண்டியொன்று அப்பகுதிக்கு வந்தது. நான் மகனிடம், "பயப்படாதே, இனிமேல் அவர்கள் வன்முறைகளில் இறங்கமாட்டார்கள். அரசாங்கம் இனிமேல் அவர்களைத் தூண்டாது" என்று கூறினேன். சிங்கள மக்கள் அமைதிகாத்து வருவதை தொடர்ச்சியாக சிங்களப் பத்திரிக்கைகள் பாராட்டி எழுதிவந்தன. சிங்கள மக்கள் முதிர்ச்சி அடைந்துவிட்டார்கள் என்றும் அவை எழுதின. ஆனால், அந்த கருத்துத் தவறானது என்பதை தமிழர்கள் அறிவார்கள். இம்முறை ஜெயவர்த்தன சிங்களவர்களைத் தூண்டிவிடவில்லை, அதனாலேயே தமிழர்கள் மீதான தாக்குதல்கள் நடைபெறவில்லை என்பதே உண்மை. சிங்களக் காடையர்களை தூண்டிவிட்டு தமிழர் மீது தாக்குதல் நடத்தினால், தமிழ்ப் போராளிகளும் பதில்த் தாக்குதல்களில் இறங்குவார்கள் என்கிற அச்சம் ஜெயாருக்கு ஏற்பட்டிருந்தது. அதனாலேயே சிங்களவர்களைத் தூண்டிவிடுவதை அவர் இம்முறை தவிர்த்திருந்தார். வழமைபோல சிங்கள ஊடகங்கள் நடப்பதை உணர்ந்துகொள்ள மறுத்துவிட்டன. சிங்களவர்களில் நல்லவர்கள் இருக்கிறார்கள் என்பதையும் அவை உணர மறுத்துவிட்டன. தொண்டைமான் இதனை ஒரு அறிக்கையில் தெளிவாகக் குறிப்பிட்டிருந்தார். 1983 இல் நடத்தப்பட்டது சிங்களவர்களால் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட பழிவாங்கற் தாக்குதல்கள் இல்லை என்று அவர் குறிப்பிட்டார். அது, ஜெயவர்த்தனவினால் நன்கு திட்டமிட்ட முறையில் நடத்தப்பட்ட பயங்கரவாதம் என்று அவர் கூறினார். அனிட்டா பிரதாப்புடனான செவ்வியில் பிரபாகரனும் இதனையே கூறியிருந்தார். அநுராதபுரத் தாக்குதலையடுத்து ஜெயார் நிலைகுலைந்துபோனார். லலித்தோ கடுமையான அதிர்ச்சியில் உறைந்துபோயிருந்தார். சிங்கள மக்கள் மத்தியில் தமக்கிருக்கும் நம்பிக்கையினை இத்தாக்குதல் சேதப்படுத்தப்போவதை அவர்கள் நன்கு உணர்ந்துகொண்டார்கள். அநுராதபுரம் மீதான தாக்குதல் உட்பட, வடக்குக் கிழக்கில் பரவலாக போராளிகளால் நடத்தப்பட்ட வந்த தாக்குதல்களின் பின்னால் இந்தியாவின் ரோ இருப்பதாக அவர்கள் சந்தேகிக்கத் தொடங்கினார்கள். சிங்கள ஊடகங்களில் தமது சந்தேகங்களை அவர்கள் வெளிப்படையாகவே முன்வைத்து வந்தார்கள்.
  15. 2007 இல் எழுதப்பட்ட கட்டுரை ஆக்கம் :சச்சி சிறீகாந்தா இணையம் : இலங்கை தமிழ்ச் சங்கம் 1985 ஆம் ஆண்டு வைகாசி 14 ஆம் திகதி, தமிழர் தாயகத்தின் எல்லைகளுக்கு வெளியே புலிகள் முதன்முதலாக நடத்திய தாக்குதலான அநுராதபுரத் தாக்குதலில் ஆண்கள் பெண்கள் சிறுவர்கள் அடங்கலாக 146 சிங்களவர்கள் கொல்லப்பட்டு இன்றுடன் 22 வருடங்கள் கடந்தோடிவிட்டன. புலிகளின் இந்த ஆக்ரோஷம் அண்மைய தமிழ் ஈழ வரலாற்றில் முன்னுதாரண மாற்றமாக அடையாளப்படுத்தப்பட்டிருக்கிறது. இத்தாக்குதலின் மூலம் இலங்கைப் பாராளுமன்றம் உதட்டளவில் பேசிவரும் இனப்பிரச்சினைக்கான தீர்வு அர்த்தமற்றுப் போயிருப்பதுடன், சிங்கள இனவாதிகளும் அவர்களின் அரசியல் பிரதிநிதிகளும் நடத்திவரும் அகம்பாவமான பேச்சுக்களும் அடிபட்டுப் போயிருக்கின்றன. துணிவான, சிங்களவர்களின் வாய்வானவேடிக்கைகளுக்குப் பணியாத இளைய‌ தமிழ்த் தலைமுறை ஒன்றிற்கு அவர்கள் தற்போது முகம்கொடுக்கிறார்கள். அநுராதபுரம் மீதான தாக்குதலை இன்றுவரை விமர்சித்து எழுதிவருவோர், இத்தாக்குதலுக்கு முன்னர் தமிழ் மக்கள் மீது மன்னாரில் இலங்கை இராணுவம் நடத்திய நரவேட்டைகள் குறித்துப் பார்க்க மறந்துவிடுகிறார்கள். அவசரமாகவும், முழுமையற்ற தகவல்களைக் கொண்டும் அநுராதபுரத் தாக்குதலை டைம்ஸ் பத்திரிக்கை செய்தியாக்கியிருக்கிறது. டைம்ஸ் பத்திரிக்கை வேண்டுமென்றே தவறவிட்ட சில விடயங்களைப் பார்க்கலாம். முதலாவதாக, "பிரிவினைவாதப் போராளிகள்" என்று பொதுவாக அழைத்ததன் மூலம் அமைப்பின் பெயரை சரியாகக் குறிப்பிட அது மறந்திருக்கிறது. 1985 ஆம் ஆண்டில், டைம்ஸ் பத்திரிக்கை உட்பட்ட சர்வதேச ஊடகங்கள் புலிகளுக்கும், அவர்களின் எதிரிகளான தமிழ் பிரிவினைவாதிகள் என்று தம்மை உரிமை கோரும் அமைப்புக்களுக்கும் இடையிலான வேறுபாட்டினை புரிந்துகொள்ளவில்லை என்றே தெரிகிறது. அடுத்ததாக, அநுராதபுரம் நோக்கிக் கடத்திச் செல்லப்பட்ட பஸ் வண்டியில் எத்தனை போராளிகள் இருந்தார்கள் என்பது குறித்தும் டைம்ஸ் பத்திரிக்கை தகவல் எதனையும் வெளியிடவில்லை. மூன்றாவதாக, தாக்குதல் அணியினை வழிநடத்தியது யாரெனும் தகவலும் அச்செய்தியில் குறிப்பிடப் படவில்லை. பின்னர் அவர் ஒரு இந்து என்று டைம்ஸ் அடையாளம் கண்டிருந்தது. இங்கே உண்மை என்னவென்றால், தாக்குதல் அணிக்குத் தலைமை தாங்கியது மன்னார் பன‌ங்கட்டிக்கொட்டுப் பகுதியில் பிறந்தவரும், புலிகளின் மன்னார்ப் பிராந்தியத் தளபதியுமான லெப்டினன்ட் கேணல் விக்டர் என்று அழைக்கப்பட்ட கத்தோலிக்கரான மேர்சிலின் பியூஸ்லஸ் என்பதே உண்மை. 18 மாதங்கள் கழித்து, 1986 ஆம் ஆண்டு ஐப்பசி 12 ஆம் திகதி மன்னார் அடம்பனில் இராணுவத்தினருடனான மோதல் ஒன்றில் விக்டர் வீரச்சாவடைந்தார். புலிகளின் உத்தியோகபூர்வ இதழான விடுதலைப் புலிகளின் தகவல்களின்படி விக்டர் வீரமரணம் எய்தியபோது அவருக்கு வயது வெறும் 23 தான். நான் இத்தகவல்களை இங்கே தருவதற்கான காரணம், சிக்காகோ பல்கலைக் கழகத்தின் பேராசிரியரான ரொபேர்ட் பேப் போன்றோரின், கத்தோலிக்க மதத்தைச் சேர்ந்த தளபதிகளோ அல்லது கரும்புலி வீரர்களோ புலிகள் அமைப்பில் இருக்கமுடியாது எனும் கருத்தினை உடைக்கத்தான். நான்காவதாக, டைம்ஸ் பத்திரிக்கையின் செய்தியின்படி, தமிழர்கள் மீதான சிங்களவர்களின் தாக்குதல்களை முடுக்கிவிடவே அநுராதபுரம் மீது புலிகள் தாக்கினார்கள் என்று பொருள்ப்பட எழுதியிருந்தது. ஆனால், 1985 ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களிலும் மன்னார் மாவட்டத்தில் நடத்தப்பட்ட இராணுவத்தின் அட்டூழியங்களைப் பார்க்கும் பலர் டைம்ஸ் பத்திரிக்கை முன்வைக்கும் கருதுகோளினை பொய்யென்று நிறுவுகிறார்கள். இன்றுவரை, அநுராதபுர தாக்குதல் குறித்து தொடர்ச்சியாக எழுதிவரும் புத்தகங்களாகட்டும், இணையத் தளங்களாகட்டும், டைம்ஸ் பத்திரிக்கையில் வெளியான சிங்களவரின் பார்வையினைப் பிரதிபலித்தே எழுதுகின்றன. ஆனால், புலிகளின் மன்னார் மாவட்டத் தளபதியான லெப்டினன்ட் கேணல் விக்டர் அவர்கள் அநுராதபுரம் மீது தாக்குதலை நடத்த அவரைத் தூண்டியது எதுவென்பதை இவர்கள் அனைவரும் பார்க்கத் தவறிவிடுகின்றனர். 1985 ஆம் ஆண்டு வைகாசி 14 ஆம் திகதிக்கு முன்னர் மன்னார்ப் பிராந்தியத்தில் இராணுவத்தால் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வந்த அட்டூழியங்கள் குறித்த செய்திகளைப் பார்க்கும் ஒருவரால், இராணுவத்தால் திட்டமிட்ட ரீதியில் மன்னார் மக்களின் அமைதியான வாழ்வும் அவர்களின் வாழ்வாதாரமும் அழிக்கப்பட்டு வருவதையும், 1984 ஆம் ஆண்டின் பின்னரைப் பகுதியிலிருந்து 1985 ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்கள்வரை கையறு நிலையில் வாழ்ந்துவரும் இந்து, கிறிஸ்த்தவ, இஸ்லாம் மதங்களைச் சேர்ந்த பெரும்பான்மையாக தமிழ் பேசும் மக்களின் அவலங்களையும் பார்க்காமல் இருக்க முடியாது. குறிப்பு : மன்னார்ப் படுகொலைகள் குறித்து சர்வதேச ஊடகங்களில் வெளிவந்த ஐந்து கட்டுரைகளை சிறீகாந்தா அவர்கள் தனது கட்டுரையில் விபரிக்கிறார். இக்கட்டுரைகளைப் படிக்கும் ஒருவருக்கு விக்டர் தலைமையிலான புலிகள் எதற்காக அநுராதபுரத் தாக்குதலை முன்னெடுத்தார்கள் என்பதைப் புரிந்துகொள்ள உதவியாக இருக்கும். இத்தொடருடன் நேரடியாகச் சம்பந்தப்பட்டபோதிலும், சபாரட்ணம் இக்கட்டுரைகள் குறித்து எதுவுமே குறிப்பிடாததனால், அதற்கான இணைப்பினை மட்டும் இங்கு பதிந்துவிட்டுத் தொடர்கிறேன். https://www.sangam.org/2007/05/Mannar_Massacres.php?uid=2395&print=true

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.