Everything posted by யாயினி
-
கிளிநொச்சியில் ஊடகவியலாளரை தாக்கி கடத்த முயற்சி !
ஊடகவியலாளரை தாக்கி கடத்த முயற்சி செய்த சந்தேக நபர் இருவரும் பொலிசாரால் கைது Published By: Vishnu 28 Dec, 2024 | 12:15 AM கிளிநொச்சியில் வியாழக்கிழமை (26) மாலை ஊடகவியலாளர் ஒருவரை ஏ9 வீதியில் வைத்து தாக்கி கருப்பு நிற வாகனம் ஒன்றில் கடத்த முயற்சி செய்த சந்தேக நபர்கள் இருவரையும் பொலிசார் கைது செய்துள்ளனர். கிளி நொச்சி பொலிசாரால் கைது செய்யப்பட்ட இருவரும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் இவர்கள் மேலதிக விசாரணைக்காக நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்
-
இராணுவம் காடுகளில் முகாம் அமைக்கலாம்; மேச்சல் தரைக்கு அனுமதி இல்லை - மக்கள் விசனம்!
இராணுவம் காடுகளில் முகாம் அமைக்கலாம்; மேச்சல் தரைக்கு அனுமதி இல்லை - மக்கள் விசனம்! 28 Dec, 2024 வவுனியாவில் பெரும்காடுகளில் ஏக்கர் கணக்கான காணிகளில் இராணுவம் முகாம் அமைத்துள்ளது. ஆனால் கால்நடைகளிற்கான மேச்சல்தரை அமைப்பதில் மாத்திரம் திணைக்களங்கள் அக்கறையில்லாமல் செயற்படுவதாக வவுனியா ஒருங்கிணைப்பு குழுவில் சுட்டிக்காட்டப்பட்டது. வவுனியா பிரதேச ஒருங்கினைப்பு குழு கூட்டம் ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர் உபாலி சமரசிங்க தலைமையில் வெள்ளிக்கிழமை (27) இடம்பெற்றது. இதன்போது வவுனியாவில் மேச்சல் தரை இல்லாமல் கால்நடை வளர்ப்பில் ஈடுபடுவோர் பல்வேறு இடர்பாடுகளை எதிர்கொள்வதாக கவலை தெரிவித்தனர். மழைகாலங்களில் அதன் நிலமை மேலும் மோசமடைவதுடன் பால் உற்பத்தியும் வீழ்ச்சியடையும் நிலை காணப்படுகின்றது இராணுவம் பெரும் காடுகளில் பல ஏக்கர்கணக்கான காணிகளை பிடித்து முகாம் அமைத்துள்ளது. ஆனால் நாட்டின் பொருளாதாரத்திற்கு பங்களிக்கும் கால்நடைகளுக்கு மேச்சல் வரைவழங்குவதில் அதிகாரிகள் பின்னடிப்பதாக பொதுமக்கள் குற்றம் சுமத்தினர். குளத்தின் அலைகரைப்பகுதிகளில் மேச்சல் தரை அமைப்பது தொடர்பாக ஆராயுமாறும் அரச காணிகளை அடாத்தாக பிடித்து வைத்திருக்கும் நபர்களிடம் இருந்து அந்த காணிகளை பறித்து மேச்சல் தரை அமைப்பது தொடர்பாக பரிசீலிக்க முடியும் என பாராளுமன்ற உறுப்பினர் செ.திலகநாதன் இதன்போது தெரிவித்திருந்தார்.
-
திருகோணமலை கடலில் ஆளில்லா விமானம் மீட்பு !
திருகோணமலை கடலில் ஆளில்லா விமானம் மீட்பு ! திருகோணமலை கடலில் சிறிய ரக ஆளில்லா விமானம் ஒன்று மிதப்பதை நேற்று வியாழக்கிழமை (26) அதிகாலை அவதானித்த மீனவர்கள் வழங்கிய தகவலையடுத்து கடற்படையினர் குறித்த விமானத்தை மீட்டு அதனை கரைக்கு கொண்டுவந்ததாக விமானப்படை ஊடகப் பேச்சாளர் குரூப் கப்டன் எரந்த கிகனகே தெரிவித்தார். திருகோணமலை கரையில் இருந்து சுமார் 35 கடல் மைல் தொலைவில் நேற்று அதிகாலை 4.30 மணியளவில் மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். இதன்போது கடலில் சிறிய ரக விமானம் மிதப்பதை கண்ட மீனவர்கள் அதனை கைப்பற்றி தமது படகில் இணைத்து கொண்ட பின்னர் கடற்படையினருக்கு தகவல் வழங்கினர் இதனையடுத்து குறித்த பகுதிக்கு சென்ற கடற்படையினர் விமானத்தை மீட்டு கரைக்கு கொண்டுவந்தனர். இந்த விமானம் ஆளில்லா விமானம் என்பதுடன் இந்த வகை விமானம் 2020 ஆம் ஆண்டிலேயே கண்டுபிடிக்கப்பட்டதாகவும் சுமார் 40 கிலோ எடையுடையது என்றும் விமானத்தில் வெடிபொருட்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இருந்தபோதும் கண்டுபிடிக்கப்பட்ட இந்த விமானம் எப்படி வந்தது, ஏன் வந்தது தொடர்பில் விசாரணை நடத்த விசேட குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளது என விமானப்படை ஊடகப் பேச்சாளர் குரூப் கப்டன் எரந்த கிகனகே தெரிவித்தார்.
-
வினைத்திறனற்ற அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் – பூர்த்தி செய்யப்படாத இருதயசிகிச்சைப் பிரிவும் – வவுனியாவில் 54 இருதய நோயாளர் மரணங்கள் !
வினைத்திறனற்ற அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் – பூர்த்தி செய்யப்படாத இருதயசிகிச்சைப் பிரிவும் – வவுனியாவில் 54 இருதய நோயாளர் மரணங்கள் ! அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் – பூர்த்தி செய்யப்படாத இருதயசிகிச்சைப் பிரிவும் – வவுனியாவில் 54 இருதய நோயாளர் மரணங்கள் !0 நடப்பு வருடத்தில் மட்டும் வவுனியா பொது வைத்தியசாலையில் இருதய சத்திரசிகிச்சை செய்ய முடியாத காரணத்தினால் இவ்வருடம் 54 இருதய நோயாளர்கள் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. உயிரிழந்தவர்களில் 46 நோயாளிகள் 45 வயதுக்கு உட்பட்டவர்களாகும். நெதர்லாந்து அரசாங்கத்தின் நிதி உதவியுடன் 3,329 மில்லியன் ரூபா செலவில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் புதிதாக இருதய சத்திர சிகிச்சைப் பிரிவு நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இந்த வருடத்தின் நடுப்பகுதியிலிருந்து அப்பிரிவு இயங்கி வருகின்றது. இவ் இருதய சிகிச்சை பிரிவானது ஆய்வு கூடம் (Cath Lab), கார்டியோ டோராசிக் ஆய்வுகூடம் (Cardio-thoracic theatre), இருதய அவசர சிகிச்சைப் பிரிவு (Cardiac ICU), எக்கோ கார்டியோகிராபி (Echo Cardiography), உடற்பயிற்சி ECG, நடமாடும் இரத்த அழுத்த கண்காணிப்பு பிரிவு (Ambulatory BP Monitoring), நடமாடும் ECG கண்காணிப்பு பிரிவு (Ambulatory ECG monitoring) போன்ற நவீன வசதிகளுடன் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. எவ்வாறெனினும் இப்பிரிவு பல குறைபாடுகளுடன் ஒழுங்காக இயங்கவில்லை எனக் குற்றஞ்சாட்டப்படுகிறது. ஒரேயொரு இருதய நோயியல் நிபுணருடன் இயங்கும் இப்பிரிவில் போதிய பயிற்சி பெற்ற வைத்தியர்கள், தாதியர்கள், பணியாளர்கள் மற்றும் உபகரணங்களுக்கும் தட்டுப்பாடு நிலவுகிறது. பல கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்ட இருதய நோய் சிகிச்சைப் பிரிவில் அதனைக் கண்டறியும் ஆஞ்சியோகிராம் பரிசோதனைக்கு தேவையான உபகரணங்கள் இல்லை. இதேமாதிரியானவொரு நிலமையே சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையிலும் காணப்படுகிறது. இதனால் இருதய நோய் சிகிச்சை தேவைப்படும் நோயாளிகள் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டு வருகிறார்கள். வடமாகாண சபையின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் விபத்து மற்றும் அதிதீவிர சிகிச்சைப்பிரிவு அமைப்பதற்கு என 430 மில்லியன்கள் ஒதுக்கப்பட்டிருந்தது. இதில் பாதி நிதிக்கு கட்டிடமும், பாதி நிதிக்கு உபகரணங்களும் என தீர்மானிக்கப்பட்டு கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டது. உபகரணக் கொள்வனவுக்கு ஒதுக்கப்பட்ட நிதி அன்றைய மாகாண சபை சுகாதார அமைச்சர் ப. சத்தியலிங்கத்தினாலும் அன்றைய மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆர் கேதீஸ்வரனாலும் வவுனியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டது. பல கோடி ரூபா செலவில் விபத்து அறுவை சிகிச்சைக் கூடம் அமைக்கப்பட்டும், இறுதியில் ஜெனரேற்ரர் வசதியில்லாததால், சிகிச்சைகள் நடைபெறாது வருடக்கணக்காக பூட்டிக் கிடக்கிறது. சாவகச்சேரியிலும் விபத்திற்குள்ளாகி வரும் நோயாளிகள் யாழ்ப்பாண வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு வருகின்றனர். தென்னாசியர்கள் இருதய நோயினால் பாதிக்கப்படுவதும் உயிரிழப்பதும் ஒப்பீட்டளவில் அதிகம். இந்தச் சூழலில் வவுனியா பொது வைத்தியசாலையில் பல கோடி ரூபா செலவில் இருதய நோய் பிரிவு ஒன்று ஆரம்பிக்கப்பட்டாலும் இருதய நோயைக் கண்டறியும் ஆஞ்சியோகிராம் பரிசோதனைக்கு தேவையான உபகரணங்கள் வவுனியா பொது வைத்தியசாலைக்கு வழங்கப்படவில்லை. வன்னி தேர்தல் மாவட்டத்தில் பாராளுமன்றதத்துக்கு தெரிவாகியுள்ள கால்நடை வைத்தியர் திலகநாதன், தமிழரசுக் கட்சியின் தேசியப்பட்டியலில் தெரிவாகியுள்ள சத்தியலிங்கம் ஆகிய இருவரும் வைத்தியத்துறையை சேர்ந்தவர்களாக உள்ளனர். இவர்களோடு யாழில் இருந்து என்பிபி சார்பில் பாராளுமன்றம் சென்றுள்ள வைத்தியர் சிறிபவானந்தராஜா, சுயேட்சையாக பாராளுமன்றம் சென்றுள்ள வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா ஆகியோரும் இணைந்து, வவுனியா பொது வைத்தியசாலையின் இருதயநோய் பிரிவை முறைப்படி இயங்க வைப்பதற்கான அழுத்தத்தை சுகாதார அமைச்சுக்கு வழங்க முன்வர வேண்டும். இல்லையேல் பரோபகாரிகளை தொடர்பு கொண்டு சுகாதார அமைச்சின் அனுவரணையோடு அதனை வாங்குவதற்கு வழியேற்படுத்த வேண்டும். அரச அதிகாரிகளின் மற்றும் அரசியல்வாதிகளின் தூரநோக்கற்ற செயற்திட்டங்களாலும் மற்றும் வினைத்திறனற்ற செயல்களாலும் பாதிக்கப்படுவது பொதுமக்களே. அவ்வாறான பொறுப்பற்று செயற்படும் அதிகாரிகள் மற்றும் அரசியல் வாதிகளை சட்டத்தின் முன்நிறுத்தி விசாரணைக்கு உட்படுத்தப்படுத்தி தண்டனைகள் வாங்கிக் கொடுக்கப்பட வேண்டும். அது தான் அநியாமாக பலியாகிக்கிக் கொண்டிருக்கின்ற உயிர்களுக்கு நிவாரணமாகவும் ஏனையவர்களுக்கு எச்சரிக்கையாகவும் இருக்கும் என்கிறார்கள் சமூகச் செயற்பாட்டாளர்கள். https://www.thesamnet.co.uk/?p=109952
-
புதிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக வாகனங்களை இறக்குமதி செய்யப்போவதில்லை - ஆனந்த விஜே
புதிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக வாகனங்களை இறக்குமதி செய்யப்போவதில்லை - ஆனந்த விஜேபால புதிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனங்கள் கொள்வனவு செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளபோதும் அதற்காக இறக்குமதியை மேற்கொள்ளப்போகவில்லை என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். இந்த விடயம் சம்பந்தமாக அவர் தெரிவித்துள்ளதாவது, கடந்த அரசாங்கங்களின் ஆட்சிக்காலத்தில் பயன்படுத்தப்பட்ட ஆடம்பர வாகனங்களை தற்போது ஏலம் விடும் பணியில் ஆளும் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. இவ்வாறான நிலையில் தேசிய மக்கள் சக்தியின் பெரும்பாலான பாராளுமன்ற உறுப்பினர்கள் தற்போது தங்கள் சொந்த வாகனங்களைப் பயன்படுத்துகின்றனர். பத்தாவது பாராளுமன்றத்தில் பணியாற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனங்களை வழங்குவதற்கு நாங்கள் முடிவு செய்துள்ளோம். இருப்பினும், அவர்களுக்கு எப்போது வாகனங்களை வழங்குவது என்பது குறித்து நாங்கள் இன்னமும் முடிவு செய்யவில்லை. எவ்வாறாயினும் அவர்களுக்கு ஒதுக்கப்படும் வாகனங்களை இறக்குமதி செய்யப்போவதில்லை. அவர்களுக்கு வாகனங்கள் வழங்குவது தொடர்பில் அரசாங்கம் பரிசீலனைகளை மேற்கொள்ளவுள்ளது. அதன் அடிப்படையில் புதிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனங்கள் ஒதுக்கீடு செய்யப்படும் என்றார்.
-
கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில் அமைதியின்மை!
அநாகரீக வாக்குவாதத்தில் ஈடுபட்ட அர்ச்சுனா எம்.பி.யும் தம்பிராசாவும்; கிளிநொச்சி அபிவிருத்திக்குழு கூட்டத்தில் நடந்த அசிங்கம் கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் இலங்கை பனை அபிவிருத்தி சபையின் தலைவர் சகாதேவனுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் இ.அர்ச்சுனாவுக்குமிடையே கருத்து மோதல் ஏற்பட்டது. இதன்போது சகாதேவன் அர்ச்சுனாவை பார்த்து, பாராளுமன்ற உறுப்பினர் போல இல்லாமல் நீங்கள் ஏன் பைத்தியக்காரத்தனமாக பேசுகின்றீர்கள் என்று கூறினார். அதற்கு shut up (வாயை மூடுங்கள்) என்று அர்ச்சுனா கூறினார். இதன்போது குறிக்கிட்ட தம்பிராசா, ஒரு பாராளுமன்ற உறுப்பினர் மக்களால் தெரிவு செய்யப்பட்டவர். Shut up என்று எல்லாம் கூற முடியாது. இங்கே அதிகாரிகள் தான் உள்ளார்கள் என்றார். இதன்போது குறுக்கிட்ட அர்ச்சுனா, ஒரு பாராளுமன்ற உறுப்பினர் கதைக்கும் போது, கதைப்பதற்கு உங்களுக்கு உரிமை இருக்கின்றது என்று நினைத்துக்கொண்டு இருக்கின்றீர்களா என்றுவிட்டு தம்பிராசாவை பார்த்து “can you shut up” (உங்களது வாயை மூட முடியுமா?) என்றார்அத்துடன் சகாதேவனை பார்த்து “உங்களுடன் திருப்பி கதைத்ததற்காக ஒரு நாளில் 8 அல்லது 10 பேரை இடமாற்றம் செய்துள்ளீர்கள். இதனை உங்களது கட்சியோடு வைத்துக் கொள்ளுங்கள் என்றார்.இதன்போது குறுக்கிட்ட தம்பிராசா, ஒரு அரச அதிகாரியை பொது வெளியில் வைத்து அவமானப்படுத்த கூடாது. இடமாற்றம் பெற்றவர்கள் வேண்டும் என்றால் அமைச்சுக்கு முறையிடலாம் என்றார். இதன்போது குறுக்கிட்ட அர்ச்சுனா “நீங்கள் எந்த கட்சி? உங்களுக்கு கிடைக்கவில்லை தானே nomination ஆகையால் அடுத்த முறை முயற்சியுங்கள். தயவு செய்து தம்பிராசாவை வெளியே அகற்றுங்கள். ஒரு பொம்பிளை பிள்ளையை பற்றி முகநூலில் எவ்வளவு எழுதுகின்றீர்கள். வெளியே போம் என்றார்.அதற்கு பதிலளித்த தம்பிராசா “நீங்கள் இரவு பகலாக ஒரு பொம்பிளையை கொண்டு திரிகிறாய் என்றார்.அதற்கு பதிலளித்த அர்ச்சுனா “நான் ஒன்றைத்தான் கொண்டு திரிகிறேன். நீங்கள் எத்தனையை கொண்டுபோய் வெளிநாடுகளில் கொடுத்தீர்கள் என்று எங்களுக்கு தெரியும். எதற்காக இவரை அழைக்கின்றீர்கள். இவர் ஒரு அழையா நபர் ஆகையால் வெளியே செல்லுங்கள். அமைச்சர் அவர்களே ஒரு அழையா நபரை உள்ளே விட்டு ஏன் பிரச்சினையை உருவாக்குகின்றீர்கள். இவர் யார்? என்ன அடிப்படையில் உள்ளே வந்தார் என்றார்.அதற்கு அமைச்சர் பதிலளிக்கையில் இனிமேல் பொதுமக்களுக்கோ ஊடகங்களுக்கோ அனுமதி இல்லை. பொதுமக்கள் முறையிட வேண்டுமாக இருந்தால் நாங்கள் அபிவிருத்தி ஒருங்கிணைப்பு அலுவலகத்தில் உள்ளோம், பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளார்கள், அவர்களிடம் முறையிடுங்கள் என்றார். https://thinakkural.lk/article/314151
-
கடந்த 24 மணிநேரத்தில் 7,950 வாகன சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை - பொலிஸ் ஊடகப் பேச்சாளர்
கடந்த 24 மணிநேரத்தில் 7,950 வாகன சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை - பொலிஸ் ஊடகப் பேச்சாளர் (செ.சுபதர்ஷனி) நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட போக்குவரத்து நடவடிக்கைக்கு அமைய வியாழக்கிழமை (26) காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேர காலப்பகுதியில் மாத்திரம் மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டின் பேரில் 395 சாரதிகள் உள்ளடங்கலாக 7,950 சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் அத்தியட்சகர் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி புத்திக மனதுங்க தெரிவித்தார். பண்டிகைக் காலங்களில் வாகன விபத்துகளை குறைக்கும் நோக்கில் பதில் பொலிஸ் மா அதிபரின் பணிப்புரைக்கமைய கடந்த 20ஆம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் விசேட போக்குவரத்து நடவடிக்கை அமுல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேர காலப்பகுதியில் மாத்திரம் மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டின் பேரில் 395 சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்தோடு கவனக்குறைவாகவும் அபாயகரமாகவும் வாகனம் செலுத்திய 50 சாரதிகள், அதிக வேகத்தில் வாகனம் செலுத்திய 120 சாரதிகள், விதிமீறல்களில் ஈடுபட்ட 1,262 சாரதிகள், அனுமதிப்பத்திர உரிமைமீறல் தொடர்பில் 682 சாரதிகள் மற்றும் ஏனைய போக்குவரத்து விதிமீறல்களுடன் தொடர்புடைய 5,441 சாரதிகள் உள்ளடங்கலாக 7,950 சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. போதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளுக்கு எதிராக 25 ஆயிரம் தொடக்கம் 30 ஆயிரத்துக்கு இடைப்பட்ட தொகையில் தண்டப்பணம் விதிக்கப்படுவதுடன் அவர்களின் சாரதி அனுமதிப்பத்திரம் 12 மாதங்களுக்கு இடைநிறுத்தப்படும். மேலும், பொதுப் போக்குவரத்து வாகன சாரதிகள் மேற்படி குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்படும் பட்சத்தில் அவர்களின் சாரதி அனுமதிப்பத்திரம் இரத்து செய்யப்படும் என்பதையும் கவனத்தில் கொள்வது அவசியம். இனிவரும் நாட்களில் மது போதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளின் சாரதி அனுமதிப்பத்திரத்தை 12 மாதங்களுக்கு இடைநிறுத்தல் அல்லது சாரதி அனுமதிப்பத்திரத்தை இரத்து செய்யுமாறு நீதிமன்றத்தில் பொலிஸார் கோரிக்கை விடுக்க உள்ளார். எனவே மது போதையில் வாகனத்தை செலுத்துவதை தவிர்க்குமாறு அனைத்து வாகன சாரதிகளிடமும் கோரிக்கை விடுக்கிறேன். மேலும், தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் மேற்படி விசேட போக்குவரத்து சோதனை நடவடிக்கை தொடர்ந்து செயற்படுத்தப்படும் என்றார்.
-
கிளிநொச்சியில் ஊடகவியலாளரை தாக்கி கடத்த முயற்சி !
கிளிநொச்சியில் ஊடகவியலாளரை தாக்கி கடத்த முயற்சி ! கிளிநொச்சி ஏ- 9 வீதியில் வைத்து ஊடகவியலாளர் தமிழ்ச்செல்வன் மீது தாக்குதலை மேற்கொண்ட இனந்தெரியாத நபர்கள் அவரை கடத்த முயற்சி செய்துள்ளனர். அலுவலகத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் வீடு நோக்கி புறப்பட்டுக்கொண்டிருக்கையில், கறுப்பு வேனில் வந்த இனந்தெரியாதவர்கள் தன்னை தாக்கி வேனுக்குள் ஏற்றி கடத்த முயன்றதாகவும் தான் அங்கிருந்து தப்பியுள்ளதாகவும் தாக்குதலுக்குள்ளான ஊடகவியலாளர் தமிழ்ச்செல்வன் தெரிவித்தார். கடும் தாக்குதலுக்குள்ளான ஊடகவியலாளர் தற்போது கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றார். சம்பவம் தொடர்பில் ஊடகவியலாளர் தமிழ்ச் செல்வன், பொலிஸில்முறைப்பாடளிந்துள்ள நிலையில், பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
-
பானை கழுவச்சென்ற பெண் முதலையின் தாக்குதலுக்கு பலி !
பானை கழுவச்சென்ற பெண் முதலையின் தாக்குதலுக்கு பலி ! (செ.சுபதர்ஷனி) களுத்துறை தொடங்கொட பகுதியில் முதலையால் தாக்கப்பட்டு களு கங்கையில் இழுத்துச் செல்லப்பட்ட 50 வயதுடைய பெண் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். தொடங்கொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொஹொலன பிரதேசத்தில் களு கங்கையில் வியாழக்கிழமை (26) பானை கழுவச் சென்ற பெண்ணொருவர் எதிர்பாராத விதமாக அங்கிருந்த முதலையால் தாக்கப்பட்டு இழுத்துச் செல்லப்பட்டுள்ளார். இந்நிலையில் காணாமல்போன பெண்ணை மீட்பதற்காக படகுகள் மூலம் பிரதேச மக்கள் தேடுதல் நடவடிக்கையினை முன்னெடுத்திருந்தனர். இதன்போது சம்பவம் இடம்பெற்ற பகுதியிலிருந்து சற்று தொலைவில் முதலை இழுத்துச் சென்ற பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். தொடங்கொட கொஹொலான வடக்கு பிரதேசத்தை சேர்ந்த 50 வயதுடைய பெண்ணொருவரே உயிரிழந்துள்ளதாக விசாரணையின்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், இந்த சம்பவம் தொடர்பில் தொடங்கொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். https://www.virakesari.lk/article/202233
-
நோர்வேயில் பேருந்து ஏரிக்குள் விழுந்து விபத்து – பலர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்
நோர்வேயில் பேருந்து ஏரிக்குள் விழுந்து விபத்து – பலர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம் நோர்வேயின் வடபகுதியில் 70 க்கும் அதிகமானவர்களுடன் பயணித்துக்கொண்டிருந்த பேருந்து ஏரியொன்றில் விழுந்து விபத்துக்குள்ளானதில் பலர் உயிரிழந்துள்ளனர். நோர்வேயின் ஹட்செலில் உள்ள ஈ10 வீதியை நோக்கி பயணித்த பேருந்து அசவட்நெட் என்ற ஏரியில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது,பேருந்தின் சில பகுதிகள் ஏரிக்குள் மூழ்கியுள்ளன. https://www.virakesari.lk/article/202244
-
புள்ளி விபரங்களுடன் கேள்விகளால் தாக்கிய அர்ச்சுனா : திணறிய சிறீதரன்
உண்மை..உண்மை..வேப்பிலை தேவைப்படாத அளவுக்கு அவரது செயல்பாடுகள் இருந்தால் நல்லம் தான்.😀
-
கிளிநொச்சியில் கோர விபத்து - குழந்தை பலி
மது போதையில் விபத்தை ஏற்படுத்தி அவ்விடத்தில் இருந்து கிட்டத்தட்ட 200 m அப்பால் பாதையை விட்டு வெளியே நிற்கும் டிப்பர் வாகனம். அம்மா,அப்பா 02 குழந்தைகள் என்று அறியப்படுகிறது தந்தை ஆசிரியர் ஒருவர் என அறியப்படுகிறது டிப்பர் மக்களால் அடித்து உடைப்பு பரிதாப மரணத்தின் எதிரொலி இடம் மின்சார சபை- வலயக்கல்வி பணிமனை கிளிநொச்சி. All reactions மலையக தாய்
-
இருட்டுப் பூச்சிகள் : நெற்கொழுதாசன்
இருட்டுப் பூச்சிகள் : நெற்கொழுதாசன் by நெற்கொழுதாசன் “என்ர மனுசி ஐயர் ஆக்கள். நான் வெள்ளாளன். நாங்கள் உதெல்லாம் சாப்பிடுறதில்லை.”இயல்பாக சொல்லியபடி, நான் வெட்டிக்கொடுத்திருந்த மாட்டிறைச்சியை கிறிலில் சூடாகிக்கொண்டிருந்தான். அவன் கூறியதைக் கேட்டதும் ஏறக்குறைய பத்து ஆண்டுகளுக்குப் பிறகு எனக்குள் ஒரு சிறிய அதிர்வு எழுந்து அடங்கியது. என்ன இழவடா இது!, எங்கபோனாலும் முன்னால சனி போகுதென எனக்குள் சொல்லிக்கொண்டேன். செய்துகொண்டிருந்த வேலையை நிறுத்திவிட்டு நிமிர்ந்து அவனைப் பார்த்தேன். நான், தன்னைப் பார்ப்பதை உணர்ந்ததும் அவனில் ஒருவிதமான அசாதாரண உடல்மொழி வெளிப்பட்டு அடங்கியது. உலகைமுடக்கிய கொரோனாவின் பின் நிரந்தரமானதொரு வேலை கிடைத்திருக்கவில்லை. அரச உதவிப்பணத்தோடு காலத்தைக் கடத்தவேண்டியிருந்தது. அவ்வப்போது கிடைத்த வேலைகளும் நேரம் அதிகமாகவும் சம்பளம் குறைவாகவும் இருந்தன. முதலில் வேலைசெய்த உணவகங்களின் முதலாளிகளுக்கு அழைப்பெடுத்து வேலைக்காக விண்ணப்பித்தும் பலனேதும் கிடைக்கவில்லை. சிலர் தங்களது உணவகங்களை வாடகைக்கு கொடுத்துவிட்டதாக கூறினார். சிலர் மகன்களிடம் கொடுத்துவிட்டதாகவோ அல்லது விற்றுவிட்டதாகவோ கூறினார்கள். இன்னும் சிலர் அழைப்பதாக கூறினாலும் அழைக்கவில்லை. சீராக சென்றுகொண்டிருந்த நாள்களைக் கடந்து, சிறிய சேமிப்பை செய்து ஊரில் எதாவதொரு முதலீடுசெய்து தொழிலை ஆரம்பித்து விடவேண்டுமென்று எண்ணிய நாள்களில்தான் கொரோனா வந்து எல்லாவற்றையும் சிதைத்துத் தள்ளியது. சேமிப்பு எல்லாம் கரைந்து கடனில் நாள்களைக் கடத்தவேண்டியதாயிற்று. ஒருவாறு கொரானாவின் தாக்கம் குறைய ஆரம்பித்ததும், வேலைநிறுத்த போராட்டங்களும் மானியக்குறைப்புக்கு எதிரான விவசாயிகளின் போராட்டமும் ஆரம்பித்தது. மஞ்சள் ஆடையணிந்த பெருந்தொகை மக்கள் அரசுக்கும் நிறுவனங்களுக்கும் எதிராக வீதிகளில் இறங்கியிருந்தனர். பல தடவைகள் ஆட்சி கவிழ்ப்பு முயற்சிகளும் நடந்தன. வல்லரசு எனப் பெயர்கொண்ட, இன்னமும் காலனித்துவ அதிகாரத்தைப் பயன்படுத்தி சில நாடுகளை சுரண்டிக் கொண்டிருக்கிற இந்தத் தேசத்தில் ஐந்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் கடன் மற்றும் பொருளாதார இழப்பினால் தற்கொலை செய்துகொண்டிருந்தார்கள். இந்தத் தேசத்தின் குடியானவர்களாலேயே பொருளாதார சரிவை தாங்கமுடியாதபோது முப்பது வயதுகளின் தொடக்கத்தில், கையில் எதுவுமே இல்லாமல் அகதியாக, வந்தேறியாக ஆரம்பத்திலிருந்து வாழ்வைத் தொடங்கிய நானெல்லாம் எப்படி சமாளிப்பது. போதாக்குறைக்கு ரசியா – உக்ரைன் யுத்தம், பாலஸ்தீனிய இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு என விலைவாசியெல்லாம் உச்சத்தை தொட்ட இந்தநாள்களில் இவன் ஒருவனின் கதைக்காக, அலைந்துதேடிக் கிடைத்த வேலையை விட்டுவிட்டு செல்லவா முடியும். திரும்ப திரும்ப அவன் சொன்னதொனி மூளைக்கு உருவெற்றிக் கொண்டிருந்தது. கையில் மிகக் கூரியகத்தி. கொஞ்சம் கவனக்குறைவாக வேலையை செய்தாலும் கையைப் பதம் பார்த்துவிடக்கூடும். இரண்டு நாள்களுக்கு முன்னர்தான், சிறியவயதிலேயே இங்கு வந்துவிட்டதாகவும், ஊரில் யாருமில்லை. இன்றுவரை அங்கு போயிருக்கவுமில்லை. அந்த மண்ணின் நிறம்கூட மறந்துபோய்விட்டது என்று கூறியிருந்தான். ஒரு நிதானமான நடத்தை அவனில் தெரிந்திருந்தது. பரவாயில்லை. இவனுடன் சச்சரவில்லாமல் வேலைசெய்யலாமென எண்ணிக்கொண்டிருந்தேன். வார்த்தைகளை அளந்து பக்குவமாக பேசும் அவனைப்பற்றி நல்ல அபிப்பிராயம் வந்திருந்தது. அது வளர்ந்து விருட்சமாகுவதற்கிடையில் தனக்குள்ளும் ஒரு விசச்செடி இருக்கிறது என்பதனை மிக சாதாரணமாக எந்தவொரு தயக்கமுமில்லாமல் தான் யார் என்பதை வெளிப்படுத்தி தன்னை உணர்த்த முற்படுகிறான். இனி எப்படி இவனோடு நெருங்கி வேலை செய்வது. அதைவிட முகம் கொடுத்து ஒரு உரையாடலை செய்வது. எப்படியாவது இந்தப் பொழுதைக் கடத்தி விடவேண்டுமென்ற மனவூக்கத்துடன் வேலைத் தொடர்ந்து செய்யத்தொடங்கினேன். மனதுக்குள் எழுந்த பேரிரைச்சல், கிணற்றுக்குள் இறங்க இறங்க விளையும் அசாதாரண அமைதியைப்போல குறைந்துகொண்டிருந்தது. அதேவேளை அதற்குள் எழும் எதிரொலியைப்போல அவனது சொற்கள் என்னைச் சூழ்ந்து மோதிக்கொண்டிருந்தன. வெளிச்சத்தைக் கண்டதும் ஒளிந்துகொள்ளும் கரப்பான் பூச்சியைப்போல என்னை எங்காவது ஒளித்துவிட இயலாதா எனத் தவித்துக்கொண்டிருந்தேன். கைகளுக்கும் மனதிற்கும் இடையே ஒரு இடைவெளி எழுந்தது. கத்தியைப் பிடித்திருந்த கையின் இறுக்கம் தளர்வதுபோல இருந்தது. காலிலிருந்து ஒருவித சோர்வு மேலெழுவது போலத் தோன்றியது. அவன் சொன்னது எந்த விதத்திலாவது என்னைப் பாதித்துவிடக்கூடாது எனச் சொல்லிக்கொண்டேன். தாடைகளால் பற்களை இறுக்கிக்கொண்டேன். இது நிகழ்வது முதல் தடவையல்லத்தான். முன்னர் நிகழ்ந்த போதெல்லாம் தூசுபோலத் தட்டிவிடும் வல்லமை வாய்த்திருந்தது. அந்தச் சூழலும் காலமும் அதை வழங்கியிருந்தது. இப்போதைய சூழல், வாழ்வுத் தேவைகள் அவமானத்தை கண்டும் காணாமல் கடந்துபோகச்செய்கிறது. கத்தியை மெதுவாக வெட்டுப்பலகையில் வைத்தேன். திடீரென உருவாகியிருந்த அமைதி அவனுக்கு எதையோ உணர்த்தியிருக்க வேண்டும். திரும்பிப் பார்த்தான். பின் இங்கு எதுவுமே நிகழவில்லை என்பதுபோலச் சாதாரணமாகவே கேட்டான். “என்ன கத்தியை கீழ வைச்சிட்டியள். வெட்டி முடியுங்க. “கை வழுக்குது. கழுவிட்டு வெட்டுறன்” . நான் சொல்லிமுடிக்கவில்லை. அவனிடமிருந்து பதில் வந்தது. “உங்களுக்கே கத்தி வழுக்குது எண்டால் என்ன கதை. இண்டைக்கு நேற்றே கத்தி பிடிச்சனிங்கள்.” “இப்ப என்ன சொல்லுறியள்?” எல்லாக்காலங்களிலும் நடந்த நிகழ்வுகளை ஒரே கணத்தில் முடிச்சுப்போட்ட மனது சட்டென குரலுக்குள் இறங்கியது. மனது குரலால் வெளிப்படுத்திய அயர்சியைப் பார்த்ததும் அவன், “இல்லை இங்கு வந்தகாலம் முதல் ரெஸ்ரோரண்டில தானே வேலை செய்கிறீர்கள் அதைச் சொன்னேன்” என்றான். எதுவும் சொல்லப் பிடிக்காமல் விலகிச்சென்று கையைக் கழுவினேன். பின் அந்தக் குளிர்ந்த நீரை கைகளில் ஏந்தி முகத்தில் ஏத்தினேன். முகத்தசைகளில் இருந்த இறுக்கம் குறைந்ததுபோல இருந்தது. மீண்டும் மீண்டும் குளிர்ந்த நீரை முகத்தில் ஏத்தினேன். எத்தனை தடவைகள், எத்தனை விதமாக குத்திப் பேசுகிறார்கள். தங்கள் எங்கெல்லாம் வசதிகளும் வாய்ப்புகளும் கிடைக்கின்றனவோ அங்கெல்லாம் தேவைப்படாத இடத்திலும் கூழைக்கும்பிடு போட்டு அவற்றை தக்கவைத்தும் கொள்கிறார்கள். அதையே மற்றவர்களிடமும் எதிர்பார்க்கிறார்கள். நிலம் மாறியும், மொழி மாறியும், நிறம் மாறியும், பழக்கவழக்கங்கள் கூட மாறியும், இந்தக்குணத்தில் மாத்திரம் எந்த மாற்றமுமில்லை. எங்காவது இது குறித்து கதைத்தால், இப்ப முந்தின மாதிரியெல்லாம் இல்லை. யாரும் யாரையும் ஒதுக்கி வைப்பதில்லை. வீடுகளுக்குள்ளும் கோயில்களுக்குள்ளும் போய்வர யாருமே மறிப்பதில்லை. எல்லாம் மாறிவிட்டது என்பார்கள். என்ன, கல்யாணத்தில் மட்டும்தான் கொஞ்சம் இருக்கு அதை விட்டுவிட ஏலாது தானேயென்று இன்னொரு விசித்திரத்தையும் கூடவே வெட்கமில்லாமல் சொல்லுவார்கள். இவர்களுக்கு எப்படி விளங்கப்படுத்துவது. அன்றைக்கு இருத்திக்கதைக்க முற்றத்து மணல்கும்பி. இன்றைக்கு விறாந்தையின் மெத்தைக்கதிரை. இந்த மாற்றத்தைவிட வேறு என்னதான் சொல்லமுடியும். அந்த இடத்திலிருந்து கொஞ்ச நேரமென்றாலும் விலகியிருக்க வேண்டும்போலத் தோன்றியது. வேலை செய்த இடத்தை துடைத்துவிட்டு அவனிடம் எதுவும் சொல்லாமல் வெளியேறினேன். ஓய்வு அறைக்கு சென்று அங்கிருந்த நாற்காலியில் அமைதியாக இருந்தேன். ஒளிர்ந்துகொண்டிருந்த மின்குமிழை சுற்றியோடும் பூச்சி கண்ணில் பட்டது. இன்றைய பொருளாதார நிலைதான் மின்குமிழ். நான் தான் அந்தப் பூச்சி. யார் என்ன செய்தாலும் வெளிச்சத்தைவிட்டு விலகமுடியாத நிலை. கைகளால் மெதுவாக அந்தப் பூச்சியை தள்ளிக்கொண்டு மேசையின் விளிம்பில் விட்டேன். ஒருகணம் ஸ்தம்பித்து நின்றது. பின் சுதாரித்து வெளிச்சத்தை நோக்கி ஒடத்தொடங்கியது. தொலைபேசியை எடுத்து பூச்சியை வீடியோவாக பதிவு செய்தேன். தன்னிச்சையாக கைகள் தொலைபேசியிலிருந்த வங்கிக்கணக்கை திறந்தது. அந்த மாதத்தின் பில்கள் ஒவ்வொன்றாக கழிந்திருந்தன. முதலாம் திகதி வரவாக இரண்டாயிரம் யூரோக்களையும் பதினைந்தாம் திகதி மிகுதியாக இருநூறு யூரோக்களையும் பச்சை நிறமாக காட்டியது. பச்சை நிறத்தை பார்த்ததும் ஒரு திருப்தி உண்டானது. மீண்டும் ஒருதடவை கணக்கை மாதத் தொடக்கத்திலிருந்து ஆராய்ந்தேன். வீட்டுவாடகை, தொலைபேசி, இன்சூரன்ஸ் என முக்கியமானவை எல்லாம் கழிந்திருந்தன. இந்தமுறை இளையவளுக்கு சப்பாத்து எடுத்துவிடவேண்டும். சப்பாத்து கிழிந்திருப்பதை போனமாதமே காட்டியிருந்தாள். இளையவளுக்கு எடுத்தால் மூத்தவளுக்கும் எடுக்கவேண்டும். சரி இந்தமாதமும் ஓடியிலதான் போகப்போகுது. தொலைபேசியை வைத்துவிட்டு பூச்சியைத் தேடினேன். மின்குமிழின் அடியில் இருளும் வெளிச்சமும் கலக்குமிடத்தில் அசைவில்லாமல் இருந்தது. அதை கண்டதும் வேலையை செய்துமுடிக்க வேண்டுமேயென்ற நினைவு வந்தது. தொலைபேசியில் நேரத்தைப் பார்த்தேன். இதற்கு மேலும் இருந்தால் இன்று செய்யவேண்டிய வேலையை செய்து முடிக்கவியலாது போய்விடும் எனத் தோன்றியது. எழுந்து வேலைசெய்யுமிடத்திற்குள் சென்றேன். அந்த இடமெல்லாம் இருளின் குரலால் நிறைந்திருப்பதைப்போல தோன்றியது. முதன் முதலாக அப்படியானதொரு அனுபவம் பாடசாலையில் ஏற்பட்டிருந்தது. அந்த ஆசிரியையை எனக்கு நிறையப் பிடிக்கும். அவர்தான் எங்களுக்கு வகுப்பு ஆசிரியருமாக இருந்தார். என்னை வகுப்புத்தலைவனாக நியமித்துமிருந்தார். அதனாலோ என்னவோ மற்றைய எல்லா ஆசிரியர்களையும் விட ஒருபடி நெருக்கமாக நினைத்துக்கொண்டிருந்தேன். எழுதுகின்ற சோக்கட்டி முடிந்தாலோ, டஸ்ரர் தேவைப்பட்டாலோ, வருகைப்பதிவேடு எடுத்து வருவதென்றாலோ அல்லது என்ன தேவையென்றாலும் என்னைப் பெயரை சொல்லி அழைப்பார். தேவையை கூறுவார். நானும் சிட்டாக பறந்துபோய் அந்தத் தேவை நிறைவேற்றுவேன். அதில் ஒரு பெரிய மகிழ்வு எனக்கு. சிலநாள்களில் தண்ணீர் போத்தலையோ, உணவினையோ அல்லது தனது உடல் தேவைக்களுக்கான மருந்துவகைகள் எதனையாவதோ ஆசிரியர்கள் அறையில் மறந்து வைத்துவிட்டு வந்திருந்தால் அதனை எடுத்தவர என்னை அழைப்பதில்லை. அதற்கு மட்டும் வேறு ஒரு மாணவனை அனுப்பி எடுப்பிப்பார். முதலில் அது எனக்கு பெரிதாக தோன்றவில்லை. வகுப்பறை தலைவன் நான் என்பதால் வகுப்பறை சார்ந்த குறிப்பிட்ட வேலைகளை எனக்கு தருகிறார் என நினைத்துக்கொண்டேன். நாளாக நாளாக சின்ன உறுத்தல் உருவாகியிருந்தது. அது அவருக்கு நான் மட்டும் நெருக்கமான மாணவனாக இருக்கவேண்டுமென்ற சிறுவயது அலாதி. அதனைக் கேட்டுவிட வேண்டும் என்று தீர்மானித்தேன். சந்தர்ப்பம் வாய்த்தபொழுதில் கேட்டும்விட்டேன். தீர்க்கமான பார்வையொன்றின் பின் அவரது சொற்கள் வெளிப்பட்டன. அவ்வப்போது பாடசாலையில் கல்வி சார்ந்து சில சந்தர்ப்பங்களில் கேள்விப்பட்டு உளைச்சலுக்குள்ளான பலசொற்கள் அதில் விரவிக்கிடந்தன. எப்போதுமில்லாமல் “அவரவரை அந்தந்த இடத்திலதான் வைக்கிறது. பதினெட்டுப்புத்தியோட கேள்வி கேளாதே” என்று அவர் இறுதியாக சொன்னதுமட்டும் தெளிவாக கேட்டது. மறுநாள் எனது ஊரவரான உடற்கல்வி ஆசிரியரையும் அழைத்துக்கொண்டு அதிபரிடம் சென்று வகுப்பறையை மாற்றிக்கேட்டேன். உடற்கல்வி ஆசிரியர் நிகழந்தவற்றை அதிபரிடம் எடுத்துக்கூறி வகுப்பினை மாற்றிக்கொள்ள உதவினார். சிலநாள்களில் பாடசாலை முழுவதற்கும் இந்தக்கதை பரவியிருந்தது. மரநிழல்கள் கதிரைகள் கரும்பலகைகள் தும்புத்தடிகள் எல்லாவற்றுக்கும் வாய் முளைத்தன. பிடிவாதமாக பாடசாலை சென்றேன். சிலர் நண்பர்களானார்கள். சில நண்பர்கள் ஒதுங்கிக்கொண்டனர். அந்தக் காலத்திலேயே என்னை விழுங்கிவிடும் கருமையென ஒரு இருள் எனக்குள் உருவாகியிருந்து. அது என்னோடேயே வளரவும் தொடங்கியது. இருளின் குரல் சில இடங்களில் வழிகாட்டியது. சில இடங்களில் என்னை மூழ்கடித்தும் கொண்டது. சில இடங்களில் எதிரொலிகளை தின்று செமித்தது. சில இடங்களில் காறி உமிழ்ந்தது. நீண்ட காலத்தின் பின் மீண்டும் அந்த இருளின் குரல் என்னை மீறி ஒலிக்கத்தொடங்கியிருந்தது. இந்த வேலையை விட்டு விலகிவிடவேண்டும். எதற்காக விலகவேண்டும். இந்த மனஅழுத்தத்துடன் எப்படி வேலைசெய்வது. செய்துதான் ஆகவேண்டும். நாளைக்கும் இப்படியொரு கதையை சொன்னால். சொன்னால் என்ன சொல்லிவிட்டுப்போகட்டும். காசுக்காக எல்லாவற்றையும் பொறுக்க வேண்டுமா. நாளைக்கு வீட்டு வாடகைக்கு, இதர செலவுகளுக்கு என்ன செய்வது. மனம் இரண்டு பட்டுகொண்டது. அரசியல்காரணங்களால் அகதியாக வந்திருந்தாலும், காலநீட்சி பொருளாதார அகதியாக்கிவிட்டது. வேலையில்லை என்றால் ஒன்றும் செய்யவியலாது. நான் தனியன் இல்லை. பிள்ளைகளுக்காக, அவர்கள் படித்து நல்ல வேலையொன்றில் அமர்வதற்காக, ஏன் நானின்று அடைகின்ற அவமானத்தையும் இழிவையும் அவர்கள் அடைந்துவிடாமல் இருப்பதற்காக வேலைத்தளத்தில் நிகழ்பவற்றை மறந்து வேலை செய்யத்தான் வேண்டும். மனது தனக்கு இனக்கமான ஒரு இடத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருந்தது. அது தற்காலிகமாக இருந்தாலும் பரவாயில்லை. இல்லை இந்த இணக்கம் தான் அவர்களை இன்னும் இப்படியெல்லாம் பேசவைக்கிறது தூக்கி முகத்துக்கு நேரேயே எறிந்துவிட்டு போனால் மற்றவர்களுடன் இப்படி பேசவோ நடக்கவோ முனையமாட்டார்கள். எரிச்சலுடனும் கையேலாத் தனத்துடனும் உள்ளே நுழைந்தபோது அவன் இல்லை. புகைப்பிடிக்கப் போயிருப்பான் என நினைத்துக்கொண்டு எனது வேலையை ஆரம்பித்தேன். மனது தனியாக வெளிப்பட்டு எனக்குள் முரண்டு பிடித்தது. “யாரும் எங்களுக்கு படியளக்கப் போவதில்லை. எங்களின் கைதான் படியளக்கும்.” அப்பர் நெடுக சொல்லும் வசனம் நினைவுக்கு வந்தது. அப்பாவின் நினைவு தோன்றியது அந்தநேரத்தில் பெரும் நெகிழ்வாக இருந்தது. உழைப்பின் வண்ணம் என்ன என்று கேட்டால், எந்தப்பொழுதிலும் அப்பாவின் வியர்வை படிந்த உடலின் நிறம்தான் தோன்றும். முதன்முதலாக அப்பாவில் சிறிய வருத்தம் உண்டான நாளொன்றும் இருந்தது. அது சிறுவயதின் அறியாமை. அது எனது பத்தாவது வயதில் நிகழந்தது. அப்பாவின் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருக்கும்போது நாகைய்யா கடையைக் கண்டதும் இனிப்பு வாங்கித்தரும்படி அடம்பிடித்துக் கேட்டேன். சைக்கிளை நிறுத்திவிட்டு இனிப்பு வாங்குவதற்காக சென்றார். அப்போது ஒருவன், தனது வீட்டு வாசலுக்கு நேரே நிறுத்திவிட்டதாக சொல்லி சைக்கிளை தள்ளி விழுத்திவிட்டு உனக்கெல்லாம் எவ்வளவு திமிர். இதில் சைக்கிளை நிறுத்துகிறாய் என சண்டைக்கு வந்தான். அப்பா அவனது வயதையும் பொருட்படுத்தாமல் மன்னிப்பு கேட்டுவிட்டு விலகிவந்தார். எனக்கு மனதுக்குள் ஒரு நெருடல். அப்பா ஏன் அவனுக்கு அடிக்கவில்லை. அன்று, அவனிடம் அப்பா எதற்காக அவ்வளவு கண்ணியத்துடன் நடந்துகொண்டார். ஏன் சைக்கிளை தள்ளிவிழுத்தினாய் என்று கேட்கவில்லை என்று கேட்டதற்கு, எங்களிலும் பிழை இருக்குதானே அப்பன். அதைவிட கேட்டு சண்டை பிடிக்கிறதால என்ன பலன். அவங்களுக்கு வசதி வாய்ப்பு பணம் எல்லாம் இருக்கு. நாங்கள் அப்படியில்லைத்தானே. அப்பா நாளைக்கு வேலைக்கு போனால்தான் உங்களை நன்றாக படிக்கவைக்க முடியும். நீங்கள் படித்து பெரியாளாக வந்தால் காணும். இப்படியெல்லாம் நடக்காமல் இருக்கும் என்றார். அத்தோடு மறந்துபோன அந்த நிகழ்வின் உண்மையான பக்கம் ஓரளவு அறிவு வந்த போதுதான் புரிந்தது. அபபாவின் மீது இருந்த வருத்தம் மறைந்து பெரும் ஆசுவாசம் உண்டாகியது. பின் எங்களுக்காக, எங்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்காக எபபடியெல்லாம் தன் கோபத்தை அடக்கிக்கொண்டாரென்று உணர்ந்த நாள்களிலெல்லாம் அவர் குறித்து உருவாகிய பெருமிதம் எள்ளளவேனிலும் குறைந்ததில்லை. நான் இதையெல்லாம் அனுபவித்த பொழுதுகளில் அப்பா எவ்வளவு வலிய சீவன் என்று எண்ணிக்கொள்வேன். எனக்கு கிடைத்த வலிமை அப்பாவிடமிருந்து கிடைத்தது போல, அப்பாவுக்கு அவரின் அப்பாவிடமிருந்து கிடைத்திருக்கும். தலைமுறைகளாக வலி மட்டுமல்ல வலிமையும்தான் தொடர்கிறது. வலி மட்டும் என்னோடு நின்றுவிடவேண்டும் என்று தீர்மானித்ததும், அப்பாவும் அவ்வாறுதான் நினைத்திருப்பார் என்று எண்ணியதும் நினைவுக்கு வந்தது. கூடவே தமிழ் பள்ளிக்கூடத்தில் “உங்களிடம் ஒன்றும் வாங்கிச் சாப்பிடக் கூடாது என அம்மா சொன்னவ” என்று மகளிடம் யாரோ ஒரு சகமாணவி சொன்னதாக இளையமகள் கூறியதும். காலடிச் சத்தம் கேட்க திரும்பிப் பார்த்தேன். கையில் இரண்டு கஃபேகளுடன் வந்துகொண்டிருந்தான். என்னருகில் வந்து கஃபே ஒன்றையும், சீனி பைக்கற்றுக்கள் இரண்டையும் வைத்துவிட்டு சென்றான்.நெருக்கமாக வந்து கஃபேயை வைத்துச்சென்றதும், முழு உடலும் பதற்றமடையத் தொடங்கியது. ஏதாவது செய்யென மன இருளுக்குள்ளிருந்து ஒருகுரல் ஒலிக்கத் தொடங்கியது. என்னிடம் அப்பாவின் கண்ணியமோ பொறுமையோ இல்லை என்பதை உணர்ந்தேன். ஒன்றும் சொல்லாமல் கஃபேயை எடுத்து மேல் தட்டில் கண்ணில் படும்படியான இடத்தில் வைத்தேன். அந்தக் கஃபே கண்ணில் படவேண்டும். அது என்னை இன்னும் குற்றவுணர்க்குள் தள்ளி வருத்தப்பட வைக்கவேண்டுமென எண்ணிக்கொண்டேன். இருளின் ஓரங்களில் வேலை ஏறி அமர்ந்துகொண்டது. இரண்டுபட்ட மனநிலையில் வேலையை தொடர்ந்து செய்துகொண்டே இருந்தேன். எந்தவொரு தேவையில்லாத உரையாடல்களிலும் ஈடுபாடு காட்ட விரும்பவில்லை என்பதை அவனுக்கு உணர்த்திவிடும் வகையில் முரட்டுத்தனமாக வேலையை செய்துகொண்டிருந்தேன். அந்தநேரத்தில் அவ்வாறு வேலை செய்வது மனதிற்கு அமைதியை தருவதுபோல் இருந்ததால் அவனை புறக்கணித்துவிட்டு முழு உடல் உழைப்பால் இயங்கத் தொடங்கினேன். என்னவேலை, எவ்வளவு வேலையென்றெல்லாம் கவனிக்கவில்லை. என்றுமில்லாத சோர்வும் அசதியும் ஏற்பட நேரத்தைப்பார்த்தேன். எனது வேலை நேரம் முடிவுக்கு வந்திருந்தது. கஃபே வைத்த இடத்தைப்பார்த்தேன். அது ஆறிப்போய் அதன்மேல் மெல்லிய வெள்ளைப் படலம் படிந்திருந்தது. மனதின் இருளுக்குள் மெல்லியதாக ஒரு வெள்ளையொளி. வேலையறையில் இருந்து வெளியேறினேன். ஓய்வறைக்கு சென்று ஆடைகளை மாற்றிவிட்டு முதலில் வெளியால் போகவேண்டும் என மனது உந்திக்கொண்டிருந்து. வழமையை விட துரிதமாக ஓய்வறையை நோக்கி சென்றேன். ஓய்வறைக்கதவைத் திறந்ததும் மேசையில், வெளிச்சமும் இருளும் கலந்திருந்த இடத்தில் இன்னமும் அந்தப்பூச்சி அமைதியாக இருந்தது. அருகில் இருந்த கனமான மட்டையை எடுத்து ஓங்கி அந்தபூச்சி மீது அடித்தேன். மட்டையை அப்படியே போட்டுவிட்டு எவ்வளவு முடியுமோ அவ்வளவு விரைவாக ஆடையை மாற்றிக்கொண்டு அங்கிருந்து வெளியேறினேன். https://akazhonline.com/?p=9181&fbclid=IwY2xjawHZbHdleHRuA2FlbQIxMQABHURj1eGHSq0-m7TxL3OoQ_isjI4tNXoL3kKCiaQssdhfB1Woo2uZHkS_LA_aem_Q15VuymTeLFQpTmmS4Qbl
-
2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்துங்கள்
இருபது ஆண்டுகளாயிற்று.2004 - 2024.🙏
-
கடலில் நீராட சென்ற மூவர் மாயம் - அம்பாறையில் சம்பவம்
கடலில் நீராட சென்ற மூவர் மாயம் - அம்பாறையில் சம்பவம் கடலில் நீராட சென்ற மூவர் காணாமல் சென்ற சம்பவம் ஒன்று அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள சங்கமன்கண்டி உமிரி கடற்கரையில் இன்று மாலை இடம்பெற்றுள்ளது. இதன் போது குறித்த சம்பவத்தில் தாண்டியடி உமிரி கடற்கரையில் நீராடச்சென்ற தந்தை மகன் மற்றும் அவர்களின் உறவினரின் மகன் என மூவர் காணாமல் சென்றுள்ளனர்.இவ்வாறு காணாமல் சென்றவர்களை தேடும் பணி தீவிரம் கடற்படையினர் மற்றும் மீனவர் சமுகத்தினர் பொதுமக்கள் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர் மேலும் திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சங்கமன்கண்டி தாண்டியடி உமிரி பகுதியில் கிறிஸ்மஸ் தினமான இன்று கடற்கரையில் பொழுதை கழிக்க சென்ற தாண்டியடி உமிரி கிராமத்தை சேர்ந்த 38, 15, 18, வயதை சேர்ந்தவர்களே கடலில் நீராட சென்றபோது கடல் அலையில் சிக்கி காணாமல் சென்றுள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை திருக்கோவில் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
-
யாழ். போதனா வைத்தியசாலையில் இருந்து நீக்கப்பட்ட தொண்டர் ஊழியர்கள்: சுகாதார அமைச்சிற்கு அழைத்துச் சென்ற அர்ச்சுனா எம்.பி
இவர்கள் அனைவரும் 35.000 தொடக்கம் 40.000 வரையான ஊதியத்துடன் வேலையில் இணையலாம் என்ற செய்தி வைத்தியர் அர்ச்சனாவின் முகப் புத்தக பக்கத்தில் பகிரப்பட்டு இருக்கிறது.
-
யாழ்.கள உறவுகளுக்கு இனிய நத்தார் தின வாழ்த்துக்கள்.
நத்தார் கொண்டாடும் அனைவருக்கும் இனிய நத்தார் தின வாழ்த்துக்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஏராளன் தம்பி.நீண்ட காலம் உடல், உள ஆரோக்கியத்தோடு வாழ வேண்டும்.🎂
-
யாழ். போதனா வைத்தியசாலையில் இருந்து நீக்கப்பட்ட தொண்டர் ஊழியர்கள்: சுகாதார அமைச்சிற்கு அழைத்துச் சென்ற அர்ச்சுனா எம்.பி
Ramanathan Archchuna 10h · புலம்பெயர் தமிழர்களின் உதவியுடன் பாதிக்கப்பட்ட சுகாதார தொழிலாளர்களுக்கு இன்னும் மூன்று மாதத்தில் 30,000 மாதாந்த சம்பளத்துடன் நான் வேலை தருகிறேன்! இது அரசியலுக்கான பதிவு அல்ல.. ஏழைகளுக்கான எனது முதலாவது திட்டம்! பல பேருடன் கதைத்து இருக்கிறேன்.. இந்த மாதம் முடிவில் அதற்குரிய முதற்கட்ட வேலைகளை ஆரம்பிக்கிறேன்.. இந்தத் திட்டத்தால் வருகின்ற ஒரு ரூபாய் வருமானம் கூட என் தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலுக்கோ அல்லது எனது அரசியல் பயணத்துக்கோ பாவிக்கப்பட மாட்டாது! சற்று பொறுமையாக காத்திருக்கவும்! All r வைத்தியர் அர்ச்சுணா இன்று காலையில் பதிந்த பதிவு இது..இன்னும் 3 மாத்தில் சுகாதாரப் பணியாளர்களுக்கு புலம் பெயர் உறவுகளின் உதவியோடு சம்பளம் குடுப்பதாக சொல்கிறார்..இது எவ்வளவு காவத்திற்கு நடக்கும் சொல்ல முடியுமா...?எல்லாவ்ற்றுக்கும் புலம் பெயர்ந்தவர்களை இழுத்தால் அங்குள்ள அரசாங்கம் என்ன செய்ய இருக்கிறது...இவரது இந்த விழையாட்டால் எதிர்காலத்தில் அரசாங்கம் செய்ய வேண்டிய வேலை திட்டங்களை கூட புலம் பெயர் சமுகம் செய்யட்டும் என்று சொல்லும் நிலையும் ஏற்படலாம்.இவர் பத்து இடத்தாலும் ஓடித் திரிகிறார் தான் இல்லை என்று இல்லை..ஆனாலும் சில கட்டுரை எழுதுபவர்களைப் போல் 'புலம் பெயர் மக்கள் மேல் மிகுந்த பாரத்தை போடுகிறார்.பிழையாக இருந்தால் மன்னித்துக் கொள்ளவும்.
-
மேல்நீதிமன்ற வழக்கு விசாரணை, ஊழல் ஒழிப்பு, சட்டமா அதிபர் திணைக்களம்: சட்டத்தின் ஆட்சியை வலுப்படுத்துவதற்கு இம்மூன்றையும் மறுசீரமையுங்கள் - ஜனாதிபதியிடம் ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தல்
மேல்நீதிமன்ற வழக்கு விசாரணை, ஊழல் ஒழிப்பு, சட்டமா அதிபர் திணைக்களம்: சட்டத்தின் ஆட்சியை வலுப்படுத்துவதற்கு இம்மூன்றையும் மறுசீரமையுங்கள் - ஜனாதிபதியிடம் ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தல் (நா.தனுஜா) நாட்டில் சீர்குலைவடைந்திருக்கும் சட்டத்தின் ஆட்சியை வலுப்படுத்துவதை இலக்காகக்கொண்டு மேல்நீதிமன்ற வழக்கு விசாரணை செயன்முறையை சீரமைத்தல், ஊழல் மோசடிகளைக் கட்டுப்படுத்தல் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்தை மறுசீரமைத்தல் ஆகிய மூன்று பிரதான விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்படவேண்டும் என ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கொள்கை மற்றும் செயற்திட்டப் பணிப்பாளர் பாஸில் பெர்னாண்டோவினால் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு அனுப்பிவைக்கப்பட்டிருக்கும் கடிதத்தில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: இலங்கையில் சட்டத்தின் ஆட்சியையும், மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்கப்படுவதையும் உறுதிப்படுத்துவதை இலக்காகக்கொண்டு மேற்கொள்ளப்படவேண்டிய மறுசீரமைப்புக்களில் பிரதானமாகக் கருத்திலெடுக்கப்படவேண்டிய மூன்று மறுசீரமைப்புக்களை உங்களது கவனத்துக்குக் கொண்டுவரவிரும்புகிறேன். நாம் கடந்த பல வருடகாலமாக இலங்கையில் சீர்குலைவடைந்திருக்கும் சட்டத்தின் ஆட்சி குறித்து தொடர்ச்சியாக சுட்டிக்காட்டி வந்திருக்கிறோம். நீண்டகாலமாக நீங்கள் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரைகளிலும், கடந்த தேர்தலின்போது தேசிய மக்கள் சக்தியினால் மேற்கொள்ளப்பட்ட நிலைப்பாட்டிலும் இவ்விடயம் உள்வாங்கப்பட்டதுடன், சிறந்த ஆட்சியியல் நிர்வாகக்கட்டமைப்பை நிறுவுதல் எனும் பொது நோக்கத்தின் அடிப்படையில் பலர் ஒன்றிணைந்தனர். எனவே கடந்த 50 வருடங்களில் முதன்முறையாக வரலாற்று ரீதியில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்துவதை முன்னிறுத்திய அரசியல் தன்முனைப்பு வெளிப்படுத்தப்பட்டிருப்பதையிட்டு மகிழ்ச்சியடைகின்றோம். இவ்வாறானதொரு பின்னணியில் முதலாவதாக மிகமோசமான குற்றங்கள் தொடர்பில் தினந்தோறும் மேல்நீதிமன்றங்களில் நடைபெறும் வழக்கு விசாரணைகள் முறையான விதத்தில் மறுசீரமைக்கப்படவேண்டும். குறிப்பாக குற்றங்களுக்கு விதிக்கப்படவேண்டிய தண்டனைகள் தொடர்பில் நிச்சயமற்ற தன்மையொன்று நிலவும் பட்சத்தில், நாட்டின் ஒட்டுமொத்த குற்றவியல் சட்ட நடைமுறைகளும் சீர்குலைவடையும். இலங்கையில் தற்போது அவ்வாறானதொரு நிலையே காணப்படுகின்றது. மிகப்பாரதூரமான வழக்குகள் மேல்நீதிமன்றத்தில் தினந்தோறும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுவது அவசியமாகும். குற்றவியல் வழக்குகள் தொடர்பான நீதிமன்ற விசாரணைகள் இடமாற்றம் செய்யப்படுவதானது, அவ்வழக்கு விசாரணைகள் தாமதமடைவதற்கு வழிகோலியுள்ளன. நிர்வாக ரீதியான சிக்கல்கள் காரணமாக வழக்கு விசாரணைக்கான திகதிகள் அடிக்கடி மாற்றியமைக்கப்படுவதனால் வழக்குகள் பல வருடகாலமாக இழுத்தடிக்கப்படுகின்றன. எனவே அரசியல் தன்முனைப்பு மற்றும் தூரநோக்கு சிந்தனை என்பவற்றின் ஊடாக இச்செயன்முறையை ஆக்கபூர்வமான விதத்தில் மறுசீரமைப்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவேண்டும். இரண்டாவதாக ஊழல் மோசடிகள் இடம்பெறுவதைக் கட்டுப்படுத்தக்கூடியவாறான மறுசீரமைப்புக்கள் மேற்கொள்ளப்படவேண்டும். அதன்படி இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கான குற்றவியல் விசாரணை அதிகாரிகளை பொலிஸ் சேவையிலிருந்து தெரிவு செய்யும் தற்போதைய நடைமுறையைக் கைவிடவேண்டும். மாறாக குறித்த ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகள் பொலிஸ் திணைக்களத்துக்கு வெளியிலிருந்து தெரிவு செய்யப்படுவதுடன், அவர்கள் பொலிஸ்மா அதிபர் மற்றும் ஏனைய திணைக்களங்களுடன் தொடர்பற்ற முற்றிலும் சுயாதீனமானவர்களாக இருக்கவேண்டும். மூன்றாவதாக சட்டமா அதிபர் திணைக்களம் மறுசீரமைக்கப்படவேண்டும். 1978 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மாற்றத்தின் ஊடாக நிறைவேற்றதிகார ஜனாதிபதிக்கு ஏற்புடையதும், தன்னிச்சையான செயற்பாடுகளுக்குப் பெரிதும் இடமளிக்கக்கூடியவகையிலும் ஸ்தாபிக்கப்பட்ட கட்டமைப்பான சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஊடாக சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்தமுடியாது. எனவே இக்கட்டமைப்பு அவசியமான மறுசீரமைப்புக்களுக்கு உட்படுத்தப்படவேண்டும் என அக்கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
-
யாழ்ப்பாணத்தில் நான்கு நாட்கள் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட குடும்பஸ்தர் உயிரிழப்பு!
யாழ்ப்பாணத்தில் நான்கு நாட்கள் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட குடும்பஸ்தர் உயிரிழப்பு! யாழ்ப்பாணத்தில் நான்கு நாட்கள் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட குடும்பஸ்தர் ஒருவர் இன்றையதினம் உயிரிழந்துள்ளார். கோண்டாவில் பகுதியைச் சேர்ந்த கந்தசாமி குணரத்தினம் (வயது 67) என்ற 5 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், இவர் நான்கு தினங்களாக காய்ச்சலினால் பீடிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவரை ஞாயிற்றுக்கிழமை (22) யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. https://jaffnazone.com/news/47018#:~:text=யாழ்ப்பாணத்தில் நான்கு நாட்கள் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட,5 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.&text=இவர் நான்கு தினங்களாக காய்ச்சலினால் பீடிக்கப்பட்டிருந்தார்.
-
தனங்கிளப்பு பகுதியில் சட்டவிரோதமாக பனை மரங்கள் தறிப்பு!
தனங்கிளப்பு பகுதியில் சட்டவிரோதமாக பனை மரங்கள் தறிப்பு! தனக்கிளப்பு பகுதியில் 25க்கும் மேற்பட்ட அனுமதியற்ற சட்டவிரோத பனை மரங்கள் தொடர்ச்சியாக தறிக்கப்பட்டு வந்த நிலையில் பொதுமக்கள் வழங்கிய முறைப்பாட்டை அடுத்து பனை அபிவிருத்தி சபையால் சாவகச்சேரி பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது . குறித்த சம்பவம் தொடர்பில் பனை அபிவிருத்தி சபையின் தலைவர் சகாதேவன் தெரிவிக்கையில், தனங்கிளப்புப் பகுதியில் தொடர்ச்சியாக சட்டவிரோத பனை மரங்கள் வெட்டப்படுவதாக பனை அபிவிருத்திச் சபைக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றது. முறைப்பாட்டின் அடிப்படையில் எமது உத்தியோத்தர்கள் குறித்த இடத்திற்கு விஜமம் மேற்கொண்ட நிலையில் அங்கு 25க்கும் மேற்பட்ட பனை மரங்கள் தறிக்கப்பட்டமை அவதானிக்கப்பட்டதுடன் கனகர இயந்திரங்கள் குறித்த பகுதியில் கொண்டுவரப்பட்டமையும் நேரடியாக அவதானிக்கப்பட்டது. குறிப்பாக சொல்ல வேண்டுமானால் இள வயது பனைகள் பல தறிக்கப்பட்டும் அடிப்பாகங்கள் எயியூட்டப்பட்ட நிலையிலும் காணப்பட்டது. சம்பவம் தொடர்பில் நெல்லியடியைச் சேர்ந்த காணி உரிமையாளர் சாவகச்சேரி பொலிஸ் நிலையம் வரவழைக்கப்பட்டுள்ள நிலையில் பொலிசார் வழக்கு தாக்கல் செய்வதாக உறுதியளித்தனர். பனை மரங்களை வெட்டுவதற்காக எடுத்துவரப்பட்ட கனகர இயந்திரங்களை முறைப்பாட்டில் பதிவு செய்யுமாறு எமது உத்தியோகத்தர்கள் வலியுறுத்திய நிலையில் சாவகச்சேரி பொலிசார் ஏற்க மறுத்துள்ளனர். இந்த சட்ட விரோத செயற்பாடுகளுடன் சாவகச்சேரி பொலிசாருக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகம் எழுந்த நிலையில் அவர்களுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாகன இலக்கங்களை முறைப்பாட்டில் பதியாவிட்டால் மேலிடத்தில் முறைப்பாடு செய்ய வேண்டி வரும் எனக் கூறிய நிலையில் முறைப்பாட்டை ஏற்பதாக தெரிவித்ததாக அவர் மேலும் தெரிவித்தார். சட்ட விரோத பனை மரங்கள் தறிக்கப்பட்டால் 0779273042 பண்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு தகவல்களை தர முடியும் என பனை அபிவிருத்திச் சபை தலைவர் மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/201922
-
வவுனியாவில் முதலை தாக்கி முதியவர் பலி
வவுனியாவில் முதலை தாக்கி முதியவர் பலி Published By: Vishnu 23 Dec, 2024 | 03:28 AM வவுனியாவில் முதலை தாக்கியதில் சூடுவெந்தபுலவை சேர்ந்த பெண் ஒருவர் பலியாகியுள்ளதாக உலுக்குளம் பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் பற்றி தெரியவருவதாவது, நேற்றையதினம் மாடுகளை மேய்ப்பதற்காக பாவற்குளம் - சூடுவெந்தபுலவு பகுதிக்கு சென்ற வேளை அப்பகுதியில் காணப்பட்ட ஆற்றுப்பகுதியில் இறங்கிய போதே முதலையின் தாக்குதலுக்கு இலக்காகி பலியாகியுள்ளார். இச்சம்பவத்தில் சூடுவெந்தபுலவினை சேர்ந்தமூன்று பிள்ளைகளின் தாயான 67 வயதுடைய ஆதம்பாவா முசிறியா என்பவரே பலியாகியுள்ளார். இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை உலுக்குளம் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
-
24 மணித்தியாலயத்தில் 10 வீதி விபத்துக்களில் 13 பேர் உயிரிழப்பு
24 மணித்தியாலயத்தில் 10 வீதி விபத்துக்களில் 13 பேர் உயிரிழப்பு Published By: Vishnu 23 Dec, 2024 | 04:05 AM நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற 10 வீதி விபத்துகளில் 13 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்தார். மட்க்களப்பு, ஹட்டன், சீதுவ, பின்னதுவ, மாரவில, ஹம்பலாந்தோட்டை, மிரிஹான, கம்பளை, ஹெட்டிபொல, கெப்பத்திகொல்லாவ ஆகிய பகுதிகளில் கடந்த 24 மணித்தியாலயத்தில் இந்த வீதி விபத்துக்கள் இடம்பெற்றுள்ளது இதில் 4 பாதசாரிகள் உட்பட 13 பேர் உயிரிழந்துள்ளனர். எனவே பண்டிகைக் காலங்களில் வீதிகளில் பயணிக்கும் போது அதிக கவனம் செலுத்த வேண்டும் என அவர் தெரிவித்தார்.
-
கல்வித்துறையின் சவால்களை வெற்றிக்கொள்ள தொடர்ச்சியான ஒத்துழைப்பு - ஆசிய அபிவிருத்தி வங்கி
கல்வித்துறையின் சவால்களை வெற்றிக்கொள்ள தொடர்ச்சியான ஒத்துழைப்பு - ஆசிய அபிவிருத்தி வங்கி Published By: Vishnu 23 Dec, 2024 | 02:57 AM தொடர்ச்சியான ஒத்துழைப்புக்கள் ஊடாக கல்வித்துறையில் தோற்றம் பெற்றுள்ள சவால்களை வெற்றிக் கொள்வதற்கு ஒத்துழைப்பு வழங்குவதாக ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதிநிதிகள் பிரதமரிடம் உறுதியளித்துள்ளனர். ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கைக்கான வதிவிட தூதுக்குழுவின் பணிப்பாளர் டகாபுமி கடோனோவுக்கும், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கும் இடையிலான சந்திப்பு ஞாயிற்றுக்கிழமை (22) கல்வி அமைச்சில் நடைபெற்றது. இலங்கையின் அபிவிருத்தியில் பிரதான செயற்பாட்டு பங்குதாரராக ஆசிய அபிவிருத்தி வங்கி செயற்படுவது இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது. இலங்கையின் தேசிய அபிவிருத்தியின் முதற் கட்டமாக புதிய கல்வி முறைமை மறுசீரமைப்பு குறித்து இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டது. அதேபோல் புதிய கல்வி கொள்கையை வெற்றிகரமான முறையில் செயற்படுத்துவதற்காக பாடசாலைகளின் உட்கட்டமைப்பு மேம்பாடு,ஆசிரியர் - அதிபர் பயிற்சி மற்றும் தொழில்நுட்ப பயன்பாட்டின் முக்கியத்துவம் குறித்து பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இந்த கலந்துரையாடலின் போது எடுத்துரைத்துள்ளார். தொடர்ச்சியான ஒத்துழைப்புக்கள் ஊடாக கல்வித்துறையில் தோற்றம் பெற்றுள்ள சவால்களை வெற்றிக் கொள்வதற்கு ஒத்துழைப்பு வழங்குவதாக ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதிநிதிகள் பிரதமரிடம் உறுதியளித்துள்ளனர்.