Everything posted by யாயினி
-
யாழ் மருத்துமனையில் நடப்பது என்ன?
இப்படியானவர்களுக்கு நிரந்தர நியமனம் குடுத்தால் மக்களின் நிலை சொல்லி வேலை இல்லை என்று நினைக்கிறேன்..இது எவ்வளவு தூரம் உண்மை என்று தெரியாது.அனேகமான தாதியர்கள் ஒழுங்காக படித்து முடிக்காத நிலையில் ஊதியமற்ற பணி செய்வதாககே உள் நுளைந்தார்களாம்.இப்போ அவர்களுக்கும் குடும்பம் மற்றும் இதர பொறுப்புக்கள் கூடியதாக நிரந்தர நியமனம் போன்றவற்றுக்காக போராடுகிறார்களாம்.
-
நானும் சைக்கிளும் (சிறுகதை)
நானும் சைக்கிளும் (சிறுகதை) நான் எட்டாவது படிக்கிறவரை சைக்கிள் ஓட்டக்கத்துக்கல. இது எனக்கு ரொம்ப அசிங்கமா இருந்துச்சு. காரணம் பழக ஒருத்தரும் சைக்கிள் குடுக்கல. எங்க அப்பா சைக்கிள தொடைச்சி வைக்கிற உரிமை மட்டும்தான் எனக்குத்தந்திருந்தாரு. ஓட்டக்கேட்டா ஒதைதான் விழும்... வாடகைசைக்கிள் கடைக்கிப்போனா சின்னபசங்களுக் கெல்லாம் சைக்கிள் கெடையாதுன்னு வெரட்டுவாரு எங்க தெருவில வாடகைசைக்கிள் வைச்சிருந்த ஒரு அண்ணன் ரவி. அவர்கடையில புத்தம் புது சைக்கிள் வரிசையா நம்பர் போட்டு நிறுத்தியிருப்பாரு. பளபளன்னு தொடச்சி ஆயில் கிரீஸ் எல்லாம் போட்டு நிப்பாட்டி இருப்பாரு. மணிகணக்கில் வாடகை நாள் வாடகை உண்டு... சின்னபசங்க போனா தரமாட்டாரு. கீழபோட்டு வண்டி பாழாயிடும் போங்கடா ந்னு வெரட்டுவாரு . இதுக்கு நடுவில அம்மாயி வீட்டுக்குப்போனப்ப அங்க ஒரு வாடகைச்சைக்கிள் கடை இருந்துச்சு. அம்மாயிகிட்ட அழுது அடம் பிடிச்சி காசு வாங்கிட்டு அங்க போனேன். சின்ன சின்ன சைக்கிள் எல்லாம் இருந்துச்சு. அங்கபோய் சைக்கிள் கேட்டா யாரு நீ புதுபையனா இருக்க தெரியாத பயலுகளுக்கெல்லாம் தரமுடியாதுன்னு சொன்னாரு. நான் அம்மாயி பேர் சொல்லி அவங்க பேரன்ன்னு சொன்னவன்ன யாரு மூத்த மக பேரனான்னு கேட்டுட்டு சரி இந்தத்தெருவுக்குள்ளயே ஓட்டுன்னு குடுத்தாரு. ஆனா சின்ன சைக்கிள்னா ஓட்டிடலாம்ற கனவு ஓட்டிப்பாத்தப்ப தகர்ந்துருச்சு..... சிறுசானாலும் பெருசானாலும் பழகுனாத்தான் ஓட்டமுடியும் ந்னு தெரிஞ்சிக்கிட்டேன் சைக்கிள் கடைக்காரு நான் படுற பாட்டைப்பாத்துட்டு மூணுசக்கர சைக்கிள் குடுத்தாரு. இது ஈசியா இருக்கும் ஓட்டலாமுன்னு சொன்னாரு. ஆனா அது எனக்குப்பிடிக்கல. என் லட்சியம் என்னா ஆகுறது.... இதுமாதிரி நான் இருந்தப்ப எனக்குக் கெடைச்ச வந்தான் மோகன். அவன் சகல கலா வல்லவன் அப்பயே சைக்கிள் ஓட்டுவான். அவங்க மாமா வைச்சிருந்த ஸ்கூட்டர் ஓட்டுவான். அவன் சொன்னான் நான் ஒனக்குக்கத்துத் தாறேன்ன்னு காசுகொண்டா நான் கேட்டால் ரவி அண்ணன் சைக்கிள் குடுப்பாரு. நான் கத்துத்தாறேன்னான். ரொம்ப சந்தோசமாப்போச்சு. அம்மாகிட்ட காசு கேட்டு கிடைக்காத்துனால அய்யா கிட்ட வேலை செஞ்சு காசு சம்பாதிச்சி 2 ரூ எடுத்துக்கிட்டு மோகன் கிட்டப்போனேன் அவனும் சைக்கிள் வாடகைக்கு எடுத்துக்கிட்டு வந்தான். அவன் சொன்னான் மொதல்ல கொரங்கு பெடல் போட்டுப் பழகு. நான் பிடிச்சிக் கிறேன்னு சொல்லி சைக்கிள்ல ஏத்தி விட்டான் அது மேல ஏறாம பார்குள்ள காலை விட்டு ஓட்டுறது. அவன் பிடிச்சிக்கிட்டு பின்னாடி ஓடி வருவான். இது ஒரு வாரம் ஓடிச்சி. இடையில் கைய விட்டு என்னத் தனியா ஓட்டவிட்டான். ஓரளவு பேலன்ஸ் பண்ணுறது கைவசம் வந்துச்சு. இதுக்கு சாயங்காலம் அவனுக்கு டி, ஆர் டீ க்கடையில பஜ்ஜி வாங்கித்தரணும்.... அடுத்தவாரம் பார்மேல ஏறி ஓட்டச் சொல்லிக் குடுத்தான். அந்தசைக்கிள்ல கால் சீட்டுல ஒக்காந்தா எட்டாது அதுனால உயரமான எடத்துல கொண்டு போய் சைக்கிள நிறுத்தி அதுல ஏறிக்கிட்டு பார்மேல ஒக்காந்து ஓட்டனும். அன்னிக்கி ரெண்டு மணிநேரம் வாடகைக்கு எடுத்துக்கிட்டுப்போனோம். ஆரப்பாளையம் தண்ணீர் தொட்டிக்கிட்ட பயிற்சி. அப்ப எல்லாம் பஸ்டாண்டு அங்க வரல. ரொம்ப பஸ் வராது. ஃப்ரீயா இருக்கும். அங்க சைக்கிள் மேல என்னை ஏத்திவிட்டு ஓட்டச்சொல்லி பின்னாடி பிடிச்சிகிட்டு அவன் ஓடிவந்தான். கொரங்கு பெடல்ல இருந்து பார்ல ஏறி ஓட்ட ஆரம்பிச்ச வன்ன சைக்கிள் ரொம்ப வேகமா ஓட்ட முடிஞ்சது. ஆனா அவனால ஓடி வரமுடியல விட்டுட்டான். இது தெரியாத நான் படுவேகமா ஓட்டினேன்... அப்புறம்தான் தெரிஞ்சது பின்னாடி மோகன் இல்லைன்றது... கைகால் நடுங்க ஆரம்பிச்சிருச்சு. அது ஒரு இறக்கம் அதுனால சைக்கிள் வேகமா ஓடிச்சி பிரேக் புடிக்கனும் ன்னு தோணல.... கைகால் நடுக்கம் வேற நேர போய் ஒக்காந்துருந்த ஒரு பாட்டிமேல போய் மோதி சைக்கிள் கீழ விழுந்து டைனமோ நொறுங்கிப்போச்சி நெறையா தேய்ப்பு வேற. பாட்டி பாவம் குய்யோ மொறையோன்னு கத்துச்சு. அதுக்குள்ள மோகன் ஓடியாந்து என்னை தூக்கி விட்டு சைக்கிள் எடுத்தான் அதுஹேண்ட் பார் முறுக்கிக்கிடுச்சு அதை நேராக்கி என்னையும் ஏத்திக்கிட்டு தப்பிச்சி வந்துட்டோம்... இன்னும் நேரம் இருந்துச்சு. எனக்கு மொழங்காலு கைமூட்டு எல்லாம் தேய்ஞ்சு ரத்தம் ஒழுகுச்சு.. அதுல குல வழக்கப்படி மண்ணை அள்ளி தேய்ச்சிட்டு சைக்கிள் கடைக்கிப்போனோம் . அங்க ரவி அண்ணகிட்ட எதுவும் நடக்காதமாதிரி சைக்கிள நிப்பாட்டுனோம் அண்ணே போதும் சைக்கிள் விட்டுட்டோம் நோட் பண்ண்ணிக்கோங்கன்னு சொல்லிட்டு நழுவினோம்... அவர் எப்புடியோ கண்டுபிடிச்சிட்டாரு. கொஞ்சம் இருங்கன்னு சொல்லிட்டு எந்திரிச்சி வந்து வண்டியபாத்தாரு. இதுக்குத்தான் சின்னபசங்களுக்கு நான் சைக்கிள் குடுக்குறதில்ல. சைக்கிள் டேமேஜ் ஆயிடுச்சு 50 ரூ ஆகும் டைனமோ நொறுங்கிப்போச்சு. பார் வளைஞ்சிடுச்சு போக்கஸ் கம்பி ரெண்டு கட்டாயிடுச்சு சைக்கிள்ள பெயிண்டு போயிடுச்சு. ஒழுங்கா 50 ரூ குடுங்கன்னாரு எனக்கு ஆடிபோச்சு உசிறுஅஞ்சு ரூ கேட்டாலே ஆயிரம் கேள்விகேக்கும் அப்பாவை எப்புடிச்சமாளிக்கிறதுன்னு தெரியல அதுக்குள்ள ரவி அண்ணன் சட்டையக் கழட்டிக்குடுத்துட்டு போ. காசைகொண்டாந்து குடுத்துட்டு சட்டைய வாங்கிட்டுப்போன்னாரு. நான் சட்டையக் கழட்டிக் குடுத்துட்டு ( இருக்குறதே ரெண்டு சட்டைதான்) ஒண்ணும் தெரியாத மாதிரி வீட்டுக்குப் போய்ட்டேன் அம்மா கிட்ட 50 ரூ கேட்டேன் எதுக்குன்னு கேட்டாங்க. விவரம் சொன்னேன்.. அம்புட்டுகாசுக்கு நான் எங்க போறது.. அப்பாகிட்டகேள் ந்னு சொன்னாங்க. அவர்கிட்டப்போனா முதுகுதோல உரிச்சிடுவாரேன்னு நடுங்கிட்டு இருந்தேன்..... அதுக்குள்ள அப்பா வந்தாரு. அவர் கையில என் சட்டை இருந்துச்சு.. அதைப்பாத்ததுமே குலை நடுங்க ஆரம்பிச்சது... அவர் மூஞ்சி கடும் கோவத்துல இருந்துச்சு.... பட படத்துச்சு நெஞ்சு இன்னிக்கி முதுகுத்தோல் உரியப்போகுதுன்னு தெரிஞ்சி போச்சு ஏன்னா அவர் மூஞ்சில அம்புட்டு கோவம்... என்னக்கூப்புட்டாரு. எங்க போட்ட இந்த சட்டையன்னாரு. நான் முளிச்சேன்.... அடி கிடி பட்டதான்னு கேட்டாரு. நான் கைகால காமிச்சேன் அம்மாவை கூப்புட்டு அதுல தேங்கா எண்ணை தடவச்சொன்னாரு.... இனிமே அவன் கிட்ட சைக்கிள் எடுக்காத என் சைக்கிள் தாறேன் ஒழுங்காப்பழகிக்கோ அவன் திருட்டுப்பய ஓவராக்காசு கேட்டான் மிரட்டிடு 20 ரூ குடுத்திட்டு வந்தேன்.இனிமே என்சைக்கிள் எடுத்து ஓட்டிப்பழகுன்னாரு. யார் இது நம்ம அப்பாவா முதுகுத் தோல் உரியும் நு இருந்தப்ப அவர் யாருன்னு காட்டிட்டாரேன்னு கண்ணு கலங்கிடுச்சு. அவர்தான் "அப்பா என்ற குலசாமி" அ.முத்துவிஜயன் https://www.facebook.com/groups/1617989741545239/posts/9529459303731537/ All reacti
-
விமான நிலையம் அருகே டிரோன்கள் பறக்க தடை விதித்த அமெரிக்கா - காரணம் என்ன?
கடந்த சனிக்கிழமை நியூயோர்க் பகுதியில் அனாமதேயமான முறையில் ட்ரோண் பறந்தது என்று தொலைக்காட்சியில் காட்டிக் கொண்டு இருந்தார்கள்.இங்கு இதைப் பற்றி யாரும் பேசியதாக இல்லை அதனால் பேசாமல் போய்ட்டேன்.கனடாவில் சில பணி இடங்களில் அவசர தேவைகளுக்கு முடிந்தவரை கையில் பணம் வைத்திருக்குமாறும் சொல்லி இருக்கிறார்கள்.
-
ஜேர்மனியில் நத்தார் கடைகளுள் வாகனம் புகுந்ததால் பலர் படுகாயம்.
கனடா நாட்டு ஊடகம் ஒன்றில் வந்திருக்கும் செய்தி... https://www.cp24.com/news/world/2024/12/20/at-least-2-dead-and-68-hurt-after-car-drives-into-german-christmas-market-in-suspected-attack/
-
அம்மாவின் காதலன் - மனோ சின்னத்துரை -
அம்மாவின் காதலன் - மனோ சின்னத்துரை - சிறுகதை 19 டிசம்பர் 2023 கொஞ்ச நாட்களாக அம்மாவில் சில மாறுதல்களை அவதானிக்கத் தொடங்கினேன். அந்த அவதானிப்பு என்னையும் மீறி வளர்ந்துகொண்டே போனது. அம்மா இப்போ இடையிடையே தன்பாட்டில் சிரிக்கிறார். தனது அலங்காரங்களில் அதிக அக்கறை செலுத்துகிறார். முன்பெல்லாம் நான் நினைவூட்டி நெருக்கும்போதுதான் தலைக்கு சாயம் தீட்டுவார். இப்போது மாதம் இரண்டு தடவை, சிலவேளைகளில் மூன்றுதடவையும் கூட நடக்கிறது. தொலைபேசி சத்தம் கேட்டால் அம்மா பரபரப்பாக ஓடுகிறார். கையில் என்ன வேலையாக இருந்தாலும் அதை அப்படியே போட்டுவிட்டு ஓடிவிடுகிறார். இரண்டு தடவைகள், சமைத்துக் கொண்டிருக்கும்போதும் இப்படி நடந்தது. சட்டி அடிப்பிடித்தது மட்டுமல்ல வீடெல்லாம் பெரும் புகை. பெரும் ஆபத்தில்கூட முடிந்திருக்கலாம். 'அய்யய்யோ..ஏன் பிள்ளை நீ கொஞ்சம் பாத்திருக்கலாமல்லே...' நான் என்னத்தைப் பாக்கிறது. நான் அம்மாவையே பார்த்துக்கொண்டு நின்றேன். அம்மா தன் உதட்டுக்குள் ஒரு புன்னகையோடு கறிச்சட்டடியை சரியை செய்யும் வேலையில் மூழ்கியிருந்தார். இந்த அமளியிலும் கூட அம்மாவின் மூளை எங்கெங்கோ அலைந்து திரிந்ததை என்னால் அவதானிக்கமுடிந்தது. பேரப்பிள்ளைகளுடன்கூட செலவழிக்கும் அம்மாவின் நேரம் குறைந்து விட்டது. சிலவேளைகளில் சினந்து விழுகிறார். அல்லது தூக்கிவைத்து அளவுக்கதிகமாக செல்லம் பொழிகிறார் அம்மாவின் இந்த மாற்றத்தை என்னுடைய கணவருடன் பகிர்ந்துகொண்டபோது அவர் என்னை முறைத்தார். எதுவும் பேசவில்லை. எனக்குப் பயமாக இருந்தது. அக்காவுடன் தொலைபேசியில் பேசினேன். அக்கா ஏற்கனவே தன் குடும்பத்தகராறில் மூழ்கிக்கிடப்பவள். 'போடி விசரி' என்று என்னைத் திட்டினாள். அண்ணாவுடன் நான் எதையும் பேசமுடியாது. அவன் என் வயசையும் பார்க்காது சிலவேளை எனக்கு கைநீட்டியும் விடுவான். அம்மாவுடன் பேசலாம் என்றால், எப்படிப் பேசுவது? அது சிலவேளை அம்மாவை காயப்படுத்தியும் விடலாம். எனக்கு மூன்று வயதாக இருக்கும்போது அப்பா இறந்துவிட்டார். அப்போது அம்மாவுக்கு வயது முப்பத்தியெட்டு. தனியாளாக நின்று எங்களை ஆளாக்க எவ்வளவு கஸ்ரப்பட்டிருப்பார். சந்தோசம் என்றாலே என்ன என்று தெரியாத அளவுக்கு அம்மாவின் காலம் கடந்திருக்கும். நாங்கள் திருமணமாகி ஒரு நிலைக்கு வந்தபின்னர்தான் அம்மாவின் முகத்தில் புன்னகை பூத்திருக்கும். பேரப்பிள்ளைகள் அம்மாவுக்குப் பெரும் வரம். கடந்த ஆண்டு, அம்மாவின் பாடசாலை பழையமாணவர் ஒன்றுகூடலுக்கு அம்மாவையும் அழைத்தார்கள். அம்மா தொடுகிலும் மாட்டேன் என்றே அடம்பிடித்தார். அங்க போனால் தேவையில்லாத கதைகள் வரும். தேவையில்லாத கதைகள் கிளறுப்படும். எல்லாரும் குடும்பமாக வர நான் தனியப்போறது அவ்வளவு நல்லா இருக்காது என்று காரணங்களை அடுக்கிக்கொண்டே போனார். நான் விடாப்பிடியாக நின்றேன். 'பாடசாலைக் காலங்கள் எவ்வளவு இனிமையானவை. ஏன் அதை மீட்டிப் பார்க்கக்கூடாது. அறுபது வயது என்ன வயதா? இனிதான் வாழவேண்டிய வயது. வாழப்போகும் ஒவ்வொரு மணித்துளிகளையும் மகிழ்ச்சியாக கழிக்கவேணும். நீங்கள் சந்தோசமாக போயிற்று வாங்கோ' என்று நாங்கள் காரில் கொண்டுபோய் இறக்கிவிட்டு வந்தோம். திரும்பி வரும்போது அம்மா தன் நண்பரின் காரில் வந்திறங்கினார். அதன் பிற்பாடு அம்மா தொலைபேசியில் மூழ்கிக்கிடந்தார். தன்னுடைய நண்பர்கள் பற்றி அம்மா சிலாகிக்கும்போது சிவகலா என்பவர்பற்றிய சிலாகிப்பு சற்று மிகையாகவே இருந்தது. மெது மெதுவாக தன் பளளிக் கதைகளை தன்னையறியாமலே அம்மா என்னிடம் கசியவிட்டார். அதிலிருந்து ஒரு முக்கிய புள்ளியை ஊகிப்பது எனக்கு அவ்வளவு சிரமமாக இருக்கவில்லை. பள்ளிக்காதல் படலை வரை மட்டுமென்று ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் என்னுடைய அப்பம்மா சொன்னது நினைவில் வந்து போனது. எனக்குப் புதினம் அறியும் ஆவல் அதிகரித்தது. நான் 'பிறகு...பிறகு...பேந்து..'என்று சிரித்துச் சிரித்துக் கேட்டேன். அம்மா வெட்கப்பட்டார். 'சும்மா போடி' என்று என்னைச் செல்லமாக இடித்தார். வெட்கத்தைப்பார். ஓ! இந்த வயதிலும் வெட்கம் வருமா? எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அம்மா கவிதைகள் எழுதத் தொடங்கினார். அவை கன்னா பின்னா என்றிருந்தன. ஆனாலும் மகிழ்வூட்டும் பல சொற்கள் கவிதைகளில் தெறித்தன. அம்மா சந்தோசமாக இருப்பது எனக்கு மகிழ்வாய் இருந்தாலும், எங்கேயோ ஏதோ என் மனதுக்குள் இடறிக்கொண்டேயிருந்தது. ஒருநாள் அம்மா தன் நண்பரை வீட்டுக்கு அழைத்திருந்தார். வந்தவரை சிவகலா மாமா என்று எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். அவர் தலையில் முடியேதும் இருக்கவில்லை. ஆனாலும் வாட்டசாட்டமாக இருந்தார். அவர் எல்லோருடனும் அதிகம்பேசும் பேர்வழியாக இருக்கவில்லை. என்னிடம் பழகுவதற்குகூட சற்று கூச்சப்பட்டதை அவதானிக்கமுடிந்தது. விலை உயர்ந்த கார் வைத்திருந்தார். வரும்போது பெரிய பூங்கொத்துடனும், ஒரு பெரிய சொக்லேற் பெட்டியுடனும் வந்தார். பின்னர் அடிக்கடி வீட்டுக்கு வந்துபோனார். என்னுடைய கணவருக்கு இது அவ்வளாகப் பிடிக்கவில்லை. நான் ஒரு ஐரோப்பிப் பெண்ணாக இருந்திருந்தால் இலகுவாகக் கடந்திருப்பேன். அம்மாவின் மகிழ்சியை எண்ணிப் பூரிப்டைந்திருப்பேன். இன்னும் அடுத்தவர்கள் என்ன நினைப்பார்கள்! என்ன சொல்வார்கள்! என்று குழம்பியிருக்மாட்டேன். இப்போது அடுத்தவர் பற்றிய வீணான எண்ணங்கள் என் மூளையை நிரப்புகின்றன. சரி, நான் என்னைச் சரி செய்து கொள்ள முயற்சிக்கலாம். முயற்சித்தாலும் என் கணவரை நினைக்க பயம் என்னை இறுகப்பற்றிக் கொண்டே வந்தது. அவரும் ஐரோப்பிய நாடொன்றில் வாழ்ந்தாலும் என் அளவிற்குகூட அவரால் மாறமுடியவில்லை. அவர் இன்னும் அதிகமாக எங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிப் பயந்தார். என்னுடைய பிறந்த நாளுக்கு சிவகலா மாமா மடிக்கணினி ஒன்றைப் பரிசளித்தார். அது எனக்கு தேவையில்லாத ஒன்றாகவே பட்டது. என் கணவர் அதை ஒரு அருவெருப்பான தீண்டத்தகாத பொருளாகவே பார்த்தார். அது வீட்டின் ஒரு மூலையில் அனாதரவாகக் கிடந்தது. அம்மாவின் கணினி வைரஸ் பிரச்சினையால் இடறுப்பட்டது. அது பாவிக்கச் சிரமமானதும் பழையதுமான ஒன்று. இனி, அதைத் திருத்திக் கொடுக்குமாறு என் கணவரிடம் கேட்கவும் தயக்கமாக இருந்தது. சிவகலா மாமா தந்த கணினியை அம்மாவிடம் கொடுத்தேன். அம்மா மிக ஆவலோடு வாங்கி பாவிக்கத் தொடங்கினார். அந்தக்கணினி அம்மாவுக்கு பல புதியபுதிய விசயங்களை கற்பித்தது. அம்மாவும் ஆர்வமாய்க் கற்றுக் கொண்டிருந்தார். எதிர்பாராத ஒரு மாலைப்பொழுது. சிவகலா மாமா வீட்டுக்கு வந்தார். அம்மா சிரித்த முகத்தோடு 'வாங்கோ' என்றார். என் கணவர் என்னை 'வாரும் வெளியே போவம்' என்றார். எனக்கு ஒரு மாதிரியாக இருந்தது. இருந்தாலும், நான் சற்றுத் தாமதமாக்கிக் கிளம்பினேன் . அம்மா என்னை ஒரு மாதிரிப் பார்த்தார். நான் சிரித்துச் சமாளித்தேன். போகும் போது என் கணவர் கதவை அடித்துச் சாத்தினார். நான் திடுக்கிட்டேன். நிலைமையச் சமாளிக்க நான் கதவைத் திரும்பத் திறந்து சாத்தினேன். சாத்தும்போது, 'வெளியில சரியான காத்து' என்று இல்லாத காற்றை வரவழைத்தேன். அம்மா சிரித்தார். அப்பாடா! என்றிருந்தது. நடக்கும்போது 'என்னப்பா கொஞ்சமும் 'மனேஸ்' இல்லாமல் நடந்து கொள்றியள்' என்றேன். அப்போதும் அவர் முறைத்தார். நிலைமையை உணர்ந்து நான் மௌனமானேன். 'வேற வீடு பாக்கிறன்' என்றார். நான் எதுவும் பேசவில்லை. 'கிட்டவாத்தான் பாக்கிறன். இந்த ஏரியா சரியான விலையா இருக்கு'என்றார். 'அப்ப அம்மா?' 'இது அவான்ர வீடு. அவ என்னவும் செய்யட்டும்' 'வயசான நேரத்தில என்னண்டு...தனிய விட்டிட்டு....' நான் இழுத்தேன். 'அவ வயசு போன மாதிரியே நடந்து கொள்றா?' கடுமையானார். நாங்கள் அருகிலுள்ள பார்க்கில் போய் அமர்ந்தோம். பூமரத்து இலைகள் வாடிக்கிடந்தன. வாடிக் கருகிக்கிடக்கும் இலைகளுக்குள்ளும் ஒரு துளிர் மட்டும் எப்படி? 'கொஞ்சம் தள்ளிப்போகலாம். பிறகு வேலைதூரம். பிள்ளைகளுக்கு பள்ளிகுடமும் சிக்கலாப்போகிடும்' என்று மௌனத்தை அவரே உடைத்தார். 'கொஞ்சம் அமைதியாகுங்கோப்பா. இப்ப என்ன அவசரம்?' அவர் அமைதியாகினார். 'அம்மாவின்ர முடிவு, அது அவவின்ர சுதந்திரம்.' இப்போ குரலை அமைதியாக்கி ஆனால் அழுத்தினார். 'இப்ப அவ என்ன முடிவு எடுத்துப்போட்டா? ஒரு ஆணும் பெண்ணும் நட்பாய் இருக்கிறது தப்பா? 'ஒரு தப்பும் இல்லை. எல்லை தாண்டாமல் இருக்கிறது முக்கியம்' 'எது எல்லை?' 'வயதுகள் தாண்டின பிறகும்கூட சபலம் ஏற்படுறது இயல்புதான். ஆனால், அடுத்தவைக்கு பாதிப்பில்லாமல் நடந்துகொள்ளவேணும்.' 'இப்ப ஆருக்கு பாதிப்பு? ஊருலகம் என்னவும் கதைக்கட்டும். அதைப்பற்றி நான் கவலைப்படேல்லை' 'உமக்குத் தெரியுமா? சிவகலாவின்ர குடும்பத்துக்க என்ன நடக்குது என்று' உண்மையிலேயே எனக்கு எதுவும் தெரியவில்லை. 'என்னப்பா அங்க என்ன நடக்குது?' பதகளிப்பட்டேன். 'சிவகலாவின்ர மனிசி ஒரு ஒரு அப்பாவி. அழுது வடிக்குது. ரெலிபோனில எடுத்து எனக்கு முறைப்பாடு வைக்குது' 'என்ன? உங்களோட கதைச்சவவோ?' 'ஓ! என்னோடதான். எனக்குச் சீ எண்டு போச்சு. பிள்ளையள் சிவகலாவோட கதைக்கிறேல்ல' இதற்கு மேல் எனக்கு எதுவும் கதைக்கத் தோன்றவில்லை. கதைக்க முடியவுமில்லை. o நாங்கள் வீடுதிரும்பியபோது சிவகலாவும் வீட்டிலிருக்கவில்லை. அம்மா உற்சாகமாக கணினியில் ஏதோ செய்து கொண்டிருந்தார். இரவு என்னால் சரியாக சாப்பிடவும் முடியவில்லை. நித்திரையும் வரவில்லை. புரண்டு புரண்டு படுத்துக்கொண்டிருந்தேன். அம்மாவிடம் இதை எப்படி நான் வெளிப்படையாகப் பேசுவது? வீடு பார்க்கிறோம் என்று தெரிந்தாலே அம்மா உடைந்து போய்விடுவார். எப்படியோ சொல்லித்தானே ஆகவேண்டும். சிவகலா மாமாவின் தொடர்பை துண்டித்துவிடும்படி கேட்கலாம்! ஏன் கேட்கக்கூடாது? ஏன் கேட்க வேண்டும்? இன்னொரு குடும்பம் பாதிக்கப்படுகிறது என்ற காரணத்தை முன்வைத்துக் கேட்கலாம்! அது கூட இன்னொருவர் வாழ்க்கைக்குள் அத்துமீறி தலையிடுவது போல் ஆகிவிடாதா? சனிக்கிழமைக்காகக் காத்திருந்தேன். வீடு பார்க்கப் போகிறோம் என்று அம்மாவின் முகத்தைப் பார்த்துச் சொல்லும் தைரியம் எனக்கில்லாதிருந்தது. 'அம்மா, வெளியில போறம் பிள்ளயள ஒருக்கா வெளிக்கிடுத்தி விடுங்கோ' என்றேன். இப்படி ஒரு வழமை எங்களிடம் இருந்தபடியால் அம்மா ஆர்வமாக வெளிக்கிடுத்த தயாரானார். பிள்ளைகள் மகிழ்ச்சியில் 'அம்மா எங்க போறம்?' என்றார்கள். 'புது வீடு பாக்க..' என்றேன். ' யாருக்கு, எங்களுக்கா? என்றார்கள் ஆச்சரியத்தோடு. 'ஓம்' என்று தலையசைத்தேன். 'அ..ய்...எங்களுக்கு புதுவீடு' என்று அவர்கள் துள்ளிக் குதித்தார்கள்;. 'அப்ப இந்த வீடு..? என்றார் அம்மா ஏக்கத்தோடு. 'இது உங்கட வீடு. நீங்கள் இதில இருங்கோ. நாங்கள் கிட்டத்தான். ஆபத்து அவசரம் என்றால் ஓடிவருவம்' என்றேன். அம்மாவின் உதடுகள் துடித்தன. வார்த்தைகள் வரத்தயங்கின. கண்களிலிருந்து மட்டும் ஒரு துளி சொட்டியது. * ஓவியம் - நன்றி: கல்கி https://www.geotamil.com/index.php/2021-02-11-18-01-46/8316-2023-12-19-07-35-44?fbclid=IwY2xjawHRczNleHRuA2FlbQIxMAABHW5CUvBJsA1srZo3WUKUR9Cag5DkARKTgrZahM4Ze1nxm-ibSjWaliTFsA_aem_mBTjdXq8QKLekpZlDrtHdQ
-
பயங்கரவாத அமைப்புக்கு பணம் சேகரித்தவர் கைது
இந்த நபர் சட்டத்தரணி தவராஜா அவர்களின் முயற்சியால் விடுதலை செய்யபட்டுள்ளார் என்று யூருப் செய்தி ஒன்றி பார்த்தேன்.
-
கிளிநொச்சியில் இரவு இனந்தெரியாத நபர்களால் கடத்தப்பட்ட யாழ்ப்பாண இளம் பெண்!
கிளிநொச்சியில் வைத்து கடத்தப்பட்ட யாழ். யுவதி! கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, இரணைமடுச் சந்தி கனகாம்பிகைக்குளம் வீதியில் வைத்து 26 வயதுடைய இளம் பெண்ணொவர் நேற்று திங்கட்கிழமை(16) மாலை 6 மணியளவில் கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் புன்னாலைக்கட்டுவானைச் சேர்ந்த குறித்த யுவதி, கிளிநொச்சியில் உள்ள அழகுக்கலை நிலையம் ஒன்றில் பயிற்சிபெற்று வரும் நிலையில், கனகாம்பிகைக்குளதில் உள்ள வாடகை வீடு ஒன்றில் தங்கியிருந்தார். இந்த நிலையில் வழமை போன்று குறித்த யுவதி கற்கைநெறியை முடித்துவிட்டு, தான் தங்கியிருக்கும் இடத்துக்கு திரும்புகையில் வான் ஒன்றில் சென்ற குழுவினர் அப்பெண்ணை கடத்திச் சென்றுள்ளதாக ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது. குறித்த யுவதியின் கைப்பை மற்றும் தொலைபேசி ஆகியன கண்டெடுக்கப்பட்ட நிலையில் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு சென்ற தலைமைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சரத் சமரவிக்ரம தலைமையிலான பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். குறித்த யுவதியை கடத்திச் சென்றவர் யாழ்ப்பாணம் புன்னாலைக்கட்டுவன் பகுதியைச் சேர்ந்தவர் என்றும், அவர் யுவதியின் முன்னாள் காதலன் என்றும் தெரியவருகிறது. அவர் யுவதியை, யாழ்ப்பாணம் - புன்னாலைக்கட்டுவன் பகுதிக்கு கடத்திச் சென்றுள்ளார். கடத்திச் செல்லப்பட்ட யுவதி திருமணத்துக்கு மறுப்பு தெரிவித்தவேளை, யுவதியின் நண்பியை அழைத்த குறித்த குழு அந்த யுவதியை நண்பியின் கையில் பாரப்படுத்திவிட்டு தப்பிச் சென்றது. இந்நிலையில் அந்த நண்பி குறித்த யுவதியை கிளிநொச்சி பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். மருத்து பரிசோதனைக்காக அந்த யுவதி மருத்துவமன்னையில் சேர்ப்பிக்கப்பட்டுள்ளார். சம்பவம் குறித்து கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். (ச) https://newuthayan.com/article/கிளிநொச்சியில்_வைத்து_கடத்தப்பட்ட_யாழ்._யுவதி!
-
இலங்கை தமிழரசுக்கட்சி ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் 75 ஆண்டுகள் பூர்த்தி!
இலங்கை தமிழரசு கட்சியின் 75ஆவது ஆண்டு பூர்த்தி! இலங்கை தமிழரசுக்கட்சி ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் 75 ஆண்டுகள பூர்த்தியாவதை முன்னிட்டு இலங்கை தமிழரசு கட்சியின் ஸ்தாபக தலைவர் தந்தை செல்வாவிற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தந்தை செல்வா நினைவு சதுக்கத்தில் அமைந்த்துள்ள தந்தை செல்வா சிலைக்கு இலங்கை தமிழரசு கட்சியின் முக்கியஸ்தர்களால் மலர் மாலை அணிவித்தும் மலர் தூவியும் அஞ்சலி செலுத்தப்பட்டது. குறித்த நிகழ்வில் இலங்கை தமிழரசுக்கட்சியின் முக்கியஸ்தர்களான மாவை சேனாதிராஜா, சி.வி.கே. சிவஞானம், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு தந்தை செல்வாவின் உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். இலங்கை தமிழரசுக் கட்சி 1949ஆம் ஆண்டு டிசம்பர் 18 ஆம் திகதி கொழும்பு மருதானை எழுதுவினைஞர் சங்க மண்டபத்தில் வைத்து தந்தை செல்வாவின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. (ச) https://newuthayan.com/article/இலங்கை_தமிழரசு_கட்சியின்_75வது_ஆண்டு_பூர்த்தி!
-
யாழ்ப்பாணம் ஏ-9 வீதியில் விபத்து - ஐவர் படுகாயம்!
யாழ்ப்பாணம் 5 மணி நேரம் முன் யாழ்ப்பாணம் ஏ-9 வீதியில் விபத்து - ஐவர் படுகாயம்! கொழும்பிலிருந்து பயணிகளை ஏற்றி வந்த அதிசொகுசு பேருந்து ஒன்று, சிறிய ரக உழவு இயந்திரத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் ஐவர் காயமடைந்துள்ளனர். இன்று அதிகாலை 4மணியளவில் ஏ-9 வீதி, மிருசுவில் பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. காயமடைந்தவர்கள் சாவகச்சேரி ஆதார மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் அவர்களில் மூவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்; கொழும்பிலிருந்து பயணித்த அதிநவீன சொகுசு பேருந்தும், அதே திசையில் பயணித்த மரப் பலகைகளை ஏற்றிய சென்ற சிறிய ரக உழவு இயந்திரமும் மோதியதாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் உழவு இயந்திரத்தின் சாரதியும், பேருந்தின் நடத்துனருமே படுகாயம் அடைந்துள்ளதுடன், குறித்த பேருந்தின் முன் பகுதி முற்றாக சேதமடைந்ததால் சாரதி மற்றும் பேருந்தில் இருந்தவர்களை, பொதுமக்கள் சேர்ந்து ஒரு மணித்தியாலப் போராட்டத்தின் பின்னரே மீட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் கொடிகாமம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. (ச) #jaffna_news https://newuthayan.com/article/யாழ்ப்பாணம்_ஏ-9_வீதியில்_விபத்து_-_ஐவர்_படுகாயம்!
-
தூக்கில் தொங்கியவாறு இளைஞனின் சடலம் மீட்பு - மரணத்தில் சந்தேகம் என உறவினர்கள் தெரிவிப்பு!
யாழ்ப்பாணம் 2 மணி நேரம் முன் தூக்கில் தொங்கியவாறு இளைஞனின் சடலம் மீட்பு - மரணத்தில் சந்தேகம் என உறவினர்கள் தெரிவிப்பு! சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இணுவில் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞனின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. செட்டி வீதி, இணுவில் மேற்கு இணுவிலைச் சேர்ந்த 31வயதுடைய அமுதலிங்கம் நிவேதன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது; குறித்த இளைஞன் வீட்டின் முன்புறம் உள்ள காணியில் நேற்றிரவு செவ்வாய்க்கிழமை(17) இருந்துள்ளார். இதன்போது இரவு உணவுக்காக அவரது தாயார் குறித்த இளைஞனை அழைத்துள்ளார். இதன்போது அவர் வருவதாக கூறியும் வீட்டுக்கு செல்லவில்லை. பின்னர் உறவினர்கள் தொலைபேசி மூலம் அழைப்பு மேற்கொண்ட வேளை அவரது கைப்பேசி உறக்க நிலையில் காணப்பட்ட்டுள்ளதாகவும், இந்நிலையில் அவர் இன்றையதினம் குறித்த காணியில் உள்ள மரம் ஒன்றில் தூக்கில் தொங்கியவாறு சடலமாக காணப்பட்டுள்ளதாகவும், அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் பொலிஸாரிடம் தெரிவித்தனர். இது தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் நீதிமன்றத்தின் கண்காணிப்பின் கீழ் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.(ச) https://newuthayan.com/article/தூக்கிய_தொங்கியவாறு_இளைஞனின்_சடலம்_மீட்பு_-_மரணத்தில்_சந்தேகம்_என_உறவினர்கள்_தெரிவிப்பு!
-
சவதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தத்தை திருத்த சந்தர்ப்பம் கிடைத்தும் அரசாங்கம் ஒரு வசனத்தையேனும் திருத்தவில்லை - ஹர்ஷடி சில்வா
சவதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தத்தை திருத்த சந்தர்ப்பம் கிடைத்தும் அரசாங்கம் ஒரு வசனத்தையேனும் திருத்தவில்லை - ஹர்ஷடி சில்வா Published By: Vishnu 18 Dec, 2024 | (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) சவதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தத்தில் திருத்தம் மேற்கொள்ள சந்தர்ப்பம் கிடைத்தும் அரசாங்கம் ஒரு வசனத்தையேனும் திருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை என எதிர்க்கட்சி உறுப்பினர் ஹர்ஷடி சில்வா தெரிவித்தார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (17) சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையை வழிமொழிந்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி, நாட்டின் பொருளாதாரத்தை மேன்படுத்துவதற்காகவேண்டி இந்திய அரசாங்க்ததுடன் பல்வேறு இணக்கப்பாடுகளுக்கு அரசாங்கம் வந்திருப்பதாக தெரியவருகிறது. இதனையிட்டு நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். எமது அண்மை நாடான இந்தியாவுடன் நாங்கள் சிறந்த உறவை வைத்திருக்க வேண்டும். எப்போதும் எங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கக்கூடிய நாடாகும். என்றாலும் பெற்றோலியம் குழாய் தொடர்பில் இந்தியாவுடன் எந்த தொடர்பையும் ஏற்படுத்திக்கொள்ளப்போவதில்லை என தேசிய மக்கள் சக்தி தேர்தலின் போதும் அதிகாரத்துக்கு வந்த பின்னரும் தெரிவித்து வந்தது. அதேபோன்று வலுசக்தியை இணைப்பதில்லை என தெரிவித்து வந்தது. ஆனால் தற்போது இந்த இரண்டு விடயங்களுக்கும் அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாகவே எமக்கு தெரியவருகிறது. இது இடம்பெறவேண்டும் என்பதே எமது நிலைப்பாடும். நாணய நிதியத்தின் இணக்கப்பாடும் அவ்வாறே முன்னெடுத்துச்செல்லுங்கள் என நாங்கள் தெரிவிப்பதில்லை. மாறாக அதில் திருத்தங்களை மேற்கொண்டு முன்னுக்கு செல்ல வேண்டும் என்றே தெரிவிக்கிறேன். சர்வதேச இறையாண்மை பிணைப் பத்திர மறுசீரமைப்பு தொடர்பாக அரசாங்கத்தினால் பாராளுமன்றத்தில் உண்மையை கூற முடியாது போயுள்ளது.. இணங்கிய ஒப்பந்தமானது பிணைமுறியாளர்களுக்கு சார்பானது. சவதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தத்தில் திருத்தம் மேற்கொள்ள சந்தர்ப்பம் கிடைத்தும் அரசாங்கம் ஒரு வசனத்தையேனும் திருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில் எமது மூன்றாம் காலாண்டில் மொத்த தேசிய உற்பத்தி 5.5ஆக அதிகரித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. இதற்கான பெருமையை இந்த அரசாங்கத்திற்கு பெற்றுக்கொள்ள முடியாது. 2024ஆம் ஆண்டில் எதிர்பார்க்கும் மொத்த தேசிய உற்பத்தி எவ்வளவு என்று அரச தரப்பில் எவராவது கூறுங்கள் பார்ப்போம். எதிர்காலத்தில் என்ன செய்ய முடியும் என்பதே முக்கியமாகும் என்றார்.
-
பயங்கரவாதத்தடைச்சட்டத்தின்கீழ் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருப்போர் எத்தனை பேர்? - தகவல் கோரிக்கைக்கு அமைய தரவுகளை வெளியிட்டது சட்டமா அதிபர் திணைக்களம்
பயங்கரவாதத்தடைச்சட்டத்தின்கீழ் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருப்போர் எத்தனை பேர்? - தகவல் கோரிக்கைக்கு அமைய தரவுகளை வெளியிட்டது சட்டமா அதிபர் திணைக்களம் Published By: Vishnu 18 Dec, 2024 | (நா.தனுஜா) சட்டமா அதிபர் திணைக்களத்தின் தரவுகளின்படி கடந்த ஏப்ரல் மாதம் வரையான காலப்பகுதியில் விடுதலைப்புலிகள் இயக்கத்துடன் தொடர்புடைய குற்றங்களுக்காக 6 பேரும், உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல்களுடன் தொடர்புடைய குற்றங்களுக்காக 24 பேரும் பயங்கரவாதத்தடைச்சட்டத்தின்கீழ் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். சர்வதேச மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான சட்டங்களுக்குப் புறம்பான பயங்கரவாதத்தடைச்சட்டம் முற்றாக நீக்கப்படவேண்டும் எனத் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருவதுடன், அதனை முன்னிறுத்திய நடவடிக்கைகளை முன்னெடுத்துவரும் செயற்பாட்டாளர்களில் ஒருவரான அம்பிகா சற்குணநாதன், கடந்த ஏப்ரல் மாதம் வரையான காலப்பகுதியில் பயங்கரவாதத்தடைச்சட்டத்தின்கீழ் தடுத்துவைக்கப்பட்டிருப்போரின் எண்ணிக்கை தொடர்பான விபரங்களை தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் ஊடாக சட்டமா அதிபர் திணைக்களத்திடம் கோரிப்பெற்றிருக்கிறார். சட்டமா அதிபர் திணைக்களத்தினால் வழங்கப்பட்டிருக்கும் தரவுகளின் பிரகாரம், பயங்கரவாதத்தடைச்சட்டத்தின்கீழ் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்துடன் தொடர்புடைய குற்றச்செயல்களுக்காக 6 பேர் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருப்பதுடன், 34 பேர் வழக்குத்தொடரப்படாமல் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். அதேவேளை வழக்கு தொடரப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்டிருப்போரின் எண்ணிக்கை 49 ஆகவும், 2020 - 2023 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் முழுமையாக விடுவிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 81 ஆகவும் காணப்படுகின்றது. அதேபோன்று உயிர்த்த ஞாயிறுதினப் பயங்கரவாதத்தாக்குதல்களுடன் தொடர்புடைய குற்றங்களுக்காக இச்சட்டத்தின்கீழ் 24 பேர் தடுத்துவைக்கப்பட்டிருப்பதுடன், 34 பேர் வழக்குத்தொடரப்படாமல் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். அத்தோடு 54 பேர் வழக்கு தொடரப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டிருப்பதுடன், 2019 - 2023 வரையான காலப்பகுதியில் 365 பேர் முழுமையாக விடுவிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து தனது உத்தியோகபூர்வ 'எக்ஸ்' தளத்தில் பதிவொன்றைச் செய்திருக்கும் அம்பிகா சற்குணநாதன், இங்கு விடுவிக்கப்பட்டோரின் எண்ணிக்கை உயர்வாகக் காணப்படுவதானது, பயங்கரவாதத்தடைச்சட்டத்தின்கீழ் தன்னிச்சையான முறையில் கைதுசெய்தல் மற்றும் தடுப்புக்காவலில் வைத்தல் என்பன சாதாரணமாகிவிட்டதைக் காண்பிப்பதாகச் சுட்டிக்காட்டியுள்ளார். அதுமாத்திரமன்றி முதலில் கைதுசெய்து, பின்னர் கேள்வி கேட்டல் என்பது இயல்பாகிவிட்டது என்றும் அவர் விசனம் வெளியிட்டுள்ளார்.
-
இமாலயப் பிரகடனத்தினை முன்னெடுக்கும் பணிக்காக மக்கள் இயக்கமொன்றை உருவாக்குங்கள்; பலதரப்பட்ட பங்கேற்பாளர்களும் வலியுறுத்தல்
இமாலயப் பிரகடனத்தினை முன்னெடுக்கும் பணிக்காக மக்கள் இயக்கமொன்றை உருவாக்குங்கள்; பலதரப்பட்ட பங்கேற்பாளர்களும் வலியுறுத்தல் Published By: Vishnu 18 Dec, 2024 | இமாலயப் பிரகடனத்தினை தொடர்ந்தும் தேசிய உரையாடலாக முன்னெடுத்துச் செல்வதற்கான பணியை மக்கள் இயக்கமொன்றை உடனடியாக உருவாக்கி ஒப்படையுங்கள் என்று யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சியில் நடைபெற்ற மாவட்ட மட்டத்திலான உரையாடல்களில் ஆணித்தனமாக வலியுறுத்தப்பட்டுள்ளது. நாட்டில் சமாதானம் மற்றும் நல்லிணகத்தை நோக்கிய இமாலயப்பிரகடனம் பற்றிய உரையால் கடந்த 16ஆம் மற்றும் 17ஆம் திகதிகளில் கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றிருந்தது. இதன்போது பௌத்த, இந்து, காத்தோலிக்க, இஸ்லாமிய சமயத்தலைவர்கள் மற்றும் பல்லின சிவில் அமைப்பின் பிரதிநிதிகள், இளையோர் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றிருந்தனர். இந்த நிகழ்வின் போது, இமாலயப்பிரகடனம் தேசிய மட்டத்தில் உரையாடப்பட வேண்டிய தக்க தருணம் ஏற்பட்டுள்ளது. ஆகவே தேசிய கலந்துரையாடலொன்றை உடனடியாக முன்னெடுக்க வேண்டும் என்பதை பங்கேற்பாளர்கள் அனைவரும் ஏற்றுக்கொண்டார்கள். அத்துடன், இமாலயப்பிரகடனத்தினை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல வேண்டிய அளப்பரிய பணியை பௌத்த அமைப்புக்கள், உலகத் தமிழர் பேரவை உட்பட வரையறுக்கப்பட்ட சிவில் அமைப்புக்கள் ஆகியவற்றுக்குள் மட்டுப்படுத்தக்கூடாது என்றும் பங்கேற்பாளர்கள் கேட்டுக்கொண்டனர். மேலும், இமாலயப்பிரகடனத்தினை தேசிய மட்டத்தில் முன்னெடுத்துச் செல்வதற்கான மக்கள் இயக்கமொன்றை உடன் உருவாக்குவதோடு தேசிய உரையடலை முன்னெடுத்துச் செல்லும் பணியை அந்த மக்கள் இயக்கத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் பங்கேற்பாளர்கள் ஆணித்தனமாக வலியுறுத்தி கோரியுள்ளனமை குறிப்பிடத்தக்கது.
-
இசை கலைஞர் ஜாகிர் உசேன் காலமானார்
இசை கலைஞர் ஜாகிர் உசேன் காலமானார் ADDED : டிச 16, 2024 12:19 AM புதுடில்லி: அமெரிக்காவில் வசித்து வந்த பிரபல தபேலா இசைக் கலைஞர் ஜாகிர் உசேன், 73, உடல் நலக்குறைவால் நேற்று காலமானார். மஹாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த பிரபல தபேலா இசைக் கலைஞர் ஜாகிர் உசேன், சிறு வயது முதலே பல இசை நிகழ்ச்சிகளை நடத்தி வந்தார். இந்திய இசை உலகில் மட்டுமல்லாமல், சர்வதேச அளவிலும் புகழ்பெற்றவர். வெளிநாடுகளிலும் பல நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். கடந்த, 40 ஆண்டுகளாக அமெரிக்காவில் வசித்து வந்த அவருக்கு, ரத்தக் கொதிப்பு பிரச்னை இருந்து வந்தது. இதற்காக கடந்த சில வாரங்களாக சிகிச்சை பெற்று வந்தார். தபேலா இசை மேதை ஜாகிர் உசேன் காலமானார் இந்தியா 3 hour(s) ago 1 இந்நிலையில், இதய பிரச்னைக்காக, சான்பிரான்சிஸ்கோவில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் நேற்று அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். பிரபல தபேலா இசை மேதை உஸ்தாத் அல்லா ரக்கா கானின் மகனான ஜாகிர் உசேன், 7 வயதில் இருந்து இசை நிகழ்ச்சிகளை நடத்தி வந்தார். இந்திய இசைக்கு அவர் ஆற்றிய சேவைகளுக்காக, பத்ம ஸ்ரீ, பத்ம பூஷண், பத்ம விபூஷண் விருதுகள் வழங்கப்பட்டன. சங்கீத நாடக அகாடமி விருதும் அவருக்கு கிடைத்தது. இதைத் தவிர, சர்வதேச அளவில் இசைக்காக வழங்கப்படும் கிராமி விருதை நான்கு முறை பெற்றுள்ளார். https://www.dinamalar.com/news/india-tamil-news/tabla-musician-zakir-hussain-passes-away-/3805910
-
மனித உரிமை செயற்பாட்டாளரான அருட்தந்தை லூக் அவர்கள் தாக்கப்பட்டார்
மனித உரிமை செயற்பாட்டாளரான அருட்தந்தை லூக் அவர்கள் தாக்கப்பட்டார் Published By: Vishnu 16 Dec, 2024 | 02:21 AM கிளிநொச்சியில் நத்தார் இன்னிசை வழிபாட்டுக்கு பயணித்துக் கொண்டிருந்த மனித உரிமை செயற்பாட்டாளர் அருட்தந்தை.ம.லூக். சனிக்கிழமை (14) மாலை வழி மறிக்கப்பட்டு தாக்கப்பட்டுள்ளார். கிளிநொச்சி முறிகண்டியை சேர்ந்த தன்னை சுயாதீன ஊடகவியலாளர் என அழைத்துக் கொள்ளும் நபர் ஒருவரே இத்தாக்குதலை நடத்தி அருட்தந்தையின் கழுத்தை நெரித்து கொலை செய்ய முயன்றதாகவும். இத் தாக்குதல் தொடர்பாக கிளிநொச்சி பொலிசில் அருட்தந்தையினால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
-
மீனவர்கள் நேரில் சந்திப்பது இதுவரை நடைபெறவில்லை; அவ்வாறு இடம்பெறுமாயின் பல பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் - இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் துணைத்தூதுவர் சாய் முரளி
மீனவர்கள் நேரில் சந்திப்பது இதுவரை நடைபெறவில்லை; அவ்வாறு இடம்பெறுமாயின் பல பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் - இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் துணைத்தூதுவர் சாய் முரளி Published By: Vishnu 16 Dec, 2024 | 02:25 AM மீனவர்கள் நேரில் சந்திப்பது இதுவரை நடைபெறவில்லை. அது இடம்பெறுமாயின் பல பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் யாழ்ப்பாணம் துணைத்தூதுவர் சாய் முரளி இவ்வாறு தெரிவித்தார். இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் பெரும் பங்களிப்புடன் மிஸ்பா ஜெப மிஷனரி ஆலயத்தின் ஏற்பாட்டில் சனிக்கிழமை (14.12.2024 முல்லைத்தீவு முள்ளியவளையில் மாபெரும் நத்தார் பெருவிழா இடம்பெற்றிருந்தது. நிகழ்வின் பின்னர் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்தார், அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், இந்திய மக்கள் சார்பாக மிஸ்பா ஜெப மிஷனரி ஆலய மாணவர்களுக்கு இந்திய மக்கள் சார்பாக கலந்து கொண்டு உதவித்திட்டங்களை வழங்குவதில் பெருமையடைகிறேன். இந்திய அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட பல திட்டங்களில் குறிப்பாக வடக்கு, கிழக்கு மாகாணத்திலுள்ள மக்களுக்கு ஆதரவாக மேலும் யாழ்ப்பாண பல்கலைக்கழகம், கிழக்கு பல்கலைக்கழகம் சம்பந்தமான திட்டங்களும் அண்மையில் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது இன்றையதினம் இலங்கை ஜனாதிபதி இந்தியா பயணிக்கின்றார். அங்கு தங்கியிருந்து இலங்கை சம்பந்தமான பல திட்டங்கள் தொடர்பான அறிவிப்பை எதிர்பார்க்கலாம். அதில் குறிப்பாக வடக்கு கிழக்கு மாகாணங்கள் சேர்ந்த பல திட்டங்கள் எதிர்பார்க்கப்படுகிறது. நிகழ்வில் கலந்து கொள்ள வந்திருக்கின்ற அனைவரோடும் மாணவர்கள், இளைஞர்கள், இங்கே இருக்கின்ற மக்கள் அனைவரையும் சந்திப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். ஏற்கனவே குறிப்பிட்டது போல இது ஒரு ஆரம்பம்தான் எதிர்காலத்தில் பல விடயங்களோடு சேர்ந்து பயணிப்போம். ஒக்டோபர் மாதம் இறுதியில் பெரியளவிலான கூட்டம் ஒன்று இடம்பெற்றிருந்தது. அதில் இலங்கை தொடர்பான அதிகாரிகள் சந்தித்திருக்கிறார்கள் ஆனால் மீனவர்கள் நேரில் சந்திப்பது இதுவரை நடைபெறவில்லை. அது இடம்பெறுமாயின் பல பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என மேலும் தெரிவித்தார்.
-
வருமான வரி செலுத்தாதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் - உள்ளாட்டு இறைவரி திணைக்கள ஆணையாளர்
வருமான வரி செலுத்தாதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் - உள்ளாட்டு இறைவரி திணைக்கள ஆணையாளர் Published By: Vishnu 16 Dec, 2024 (எம்.ஆர்.எம்.வசீம்) 2023, 2024 மதிப்பீட்டு வருடத்தின் எஞ்சிய வரி பணத்தை எதிர்வரும் 26ஆம் திகதிக்கு முன்னர் செலுத்துமாறு உள்ளாட்டு இறைவரித் திணைக்களம் அறிவித்துள்ளது. குறித்த திகதிக்கு முன்னர் வரி பணம் செலுத்த தவறும் நபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு எந்த நிவாரணமும் வழங்கப்படாது என திணைக்களத்தின் ஆணையாளர் சேபாலிகா சந்திரசேகர தெரிவித்துள்ளார். இதுவரை செலுத்தாத சுய மதிப்பீட்டு வரி மற்றும் எஞ்சிய வரி பணத்தை அறவிடுவதற்காக கள ஆய்வு மற்றும் உள்நாட்டு இறைவரி கட்டளை சட்டங்களின் பிரகாரம் சட்ட ரீதியில் நடவடிக்கை எடுப்பதற்கு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.அவர்களுக்கு எதிராக 2025 ஜனவரி மாதத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஆணையாளர் தெரிவித்துள்ளார். அத்துடன் எஞ்சிய வருமான வரி பணம் செலுத்தாத நபர்களுக்கு முன் அறிவிப்பின்றி அவர்களின் வங்கி கணக்குகளில் இருந்து பணத்தை அறவிட நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கு மேலதிகமாக அவர்கள் செலுத்த வேண்டிய மீதமுள்ள வரி பணத்தின் அளவுக்கமைய குற்றவியல் வழக்கு தொடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் நிழலியண்ண.✍️
-
கனடா நோக்கிப் பயணமாகியுள்ள சிறீதரன்
அப்படியே மொன்றியல் பக்கம் வீடுகளில் போய் நின்றார் என்றால் வசதியற்ற பிள்ளைகளை படிப்பிக்க காசைக் கேட்டால் பொக்கற்றை நிரப்பி அனுப்புவார்கள்..முன்பு ஒரு முறை வந்த போது அப்படித் தான் நடந்து என்று அறிந்து கொண்டேன்.
-
சிறப்பாக இடம்பெற்ற நல்லூர் ஆலய கார்த்திகை குமாராலயதீப நிகழ்வு!
யாழ்ப்பாணம் 18 மணி நேரம் முன் சிறப்பாக இடம்பெற்ற நல்லூர் ஆலய கார்த்திகை குமாராலயதீப நிகழ்வு! இந்துக்களின் விசேட பண்டிகையான கார்த்திகை விளக்கீடு தினமாகிய இன்றையதினம் வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தசாமி ஆலயத்தில் முருக பெருமானுக்கு விசேட பூஜை வழிபாடுகள் இடம் பெற்றது. பின்னர் சொக்கப்பானை என அழைக்கப்படும் கார்த்திகை தீப நிகழ்வு நல்லூர் ஆலய முன்வளாகத்தில் இடம்பெற்றது. மாலை 4:30 மணியளவில் முருகப் பெருமானுக்கு வசந்தங மண்டப பூஜை இடம் பெற்று முருகப்பெருமான் உள் வீதி வலம் வந்து கோயில் முன்வாயிலில் சொக்கப்பானை எனப்படும் கார்த்திகை தீபம் பனை ஓலைகளால் விசேடமாக வடிவமைக்கப்பட்ட இடத்தினை எரியூட்டும் நிகழ்வு இடம்பெற்றது. சொக்கப்பானை நிகழ்வு இடம்பெற்ற பின்னர் நல்லூர் முருக பெருமான் கைலாய வாகனத்தில் வெளிவீதி வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார் இன்றைய சொக்கபானை நிகழ்வில் பெருமளவு முருகன் அடியவர்கள் கலந்து கொண்டனர். https://newuthayan.com/article/சிறப்பாக_இடம்பெற்ற_நல்லூர்_ஆலய_கார்த்திகை குமாராலயதீப_நிகழ்வு!
-
வயோதிப தம்பதியினர் உட்பட 6 பேர் போதைப்பொருளுடன் கைது!
தென்னிலங்கை செய்திகள் 36 நிமிடம் நேரம் முன் வயோதிப தம்பதியினர் உட்பட 6 பேர் போதைப்பொருளுடன் கைது! நான்கு கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் வயோதிப தம்பதியினர் உட்பட 6 பேரை கஹதுடுவ பொலிஸார் கைது செய்துள்ளனர். சந்தேக நபர்களுடன், 1 கிலோ 50 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 835 கிராம் ஹெரோயினுடன் முச்சக்கர வண்டி ஒன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. மூன்று பேர் பயணித்த சந்தேகத்திற்குரிய முச்சக்கரவண்டியில் ஒருவர் வைத்திருந்த 5,140 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளை கஹதுடுவ பொலிஸ் அதிகாரிகள் குழு கைப்பற்றியது. சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு சந்தேகநபர் ஒருவரின் கைப்பேசியில் பதிவான இணைய வரைபடத்தின் ஊடாக கிரிவத்துடுவ முனமலேவத்தை 16ஆம் லேனில் அமைந்திருந்த சந்தேகத்திற்கிடமான வீடொன்றில் சோதனையிட்ட போது அங்கிருந்த வயோதிப தம்பதியினர் வீட்டினுள் இருந்த நாள் ஒன்றை அவிழ்த்து விட்டு பொலிஸ் அதிகாரிகளை விரட்ட நடவடிக்கை எடுத்திருந்தனர். இதற்கிடையில், மற்றுமொரு நபர் வீட்டின் பின் கதவின் வழியாக பொதி ஒன்றை எடுத்துக்கொண்டு தப்பிச் செல்ல முயற்சித்த போது அவரை கைது செய்து குறித்த பொதியை சோதனையிட்ட போது அதில் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் காணப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். சந்தேகநபரை விசாரித்த போது முச்சக்கரவண்டி சாரதியான தனது மாமாவிற்கு இந்த வாடகை வீடு சொந்தம் எனவும், அவர் கொழும்பு பிரதேசத்தில் வேலை செய்வதாகவும் தான் கிருலப்பனை பிரதேசத்தில் வசிப்பவர் எனவும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்த வீட்டிற்கு வந்ததாகவும் தெரிவித்தார். கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் இரண்டு நாள் தடுப்புப் காவல் உத்தரவின் பேரில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. https://newuthayan.com/article/வயோதிப_தம்பதியினர்_உட்பட_6_பேர்_போதைப்பொருளுடன்_கைது!
-
மர்ம காய்ச்சல் காரணமாக 44 பேர் வைத்தியசாலைகளில் அனுமதி
மர்ம காய்ச்சல் காரணமாக 44 பேர் வைத்தியசாலைகளில் அனுமதி Digital News Team யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்போது பரவிவரும் ஒருவிதமான காய்ச்சல் காரணமாக இதுவரை 44 பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது இக்காய்ச்சல் காரணமாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையிலும் யாழ். போதனா வைத்தியசாலயிலும் 32 பேர் சிகிச்சைபெற்று வருகின்றனர் என யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மற்றும் வைத்தியகலாநிதி. ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், மேலும் இக்காய்ச்சல் காரணமாக இதுவரை 7 இறப்புக்கள் ஏற்பட்டுள்ளன. நோயாளர்களிடமிருந்து கொழும்பு மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அனுப்பப்பட்ட மாதிரிகளில் இருவருக்கு எலிக்காய்ச்சல் (Leptospirosis) இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எனவே தற்போது மேற்படி காய்ச்சலை எலிக்காய்ச்சலாக கருதி சிகிச்சைகளும் தடுப்பு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இக்காய்ச்சல் தற்போது பரவிவரும் பருத்தித்துறை, கரவெட்டி, சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் ஒருநாள் காய்ச்சலாக இருந்தாலும் உடனடியாக அருகிலுள்ள அரச வைத்தியசாலையை நாடும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. இப்பிரதேசத்திலுள்ள வைத்தியசாலைகளில் இந்நோய்க்கு சிகிச்சை வழங்குவதற்கான மருந்துகள் வழங்கப்பட்டுள்ளன. இவ்விடயம் சம்பந்தமாக சுகாதார வைத்திய அதிகாரிகளால் ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு அறிவிக்கப்படுகின்றது. மேலும் பிரதேச செயலாளர்களின் உதவியுடன் கிராமமட்ட உத்தியோகத்தர்கள் மூலமாக பொதுமக்களுக்கு இவ்விடயம் சம்பந்தமாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகின்றது. எலிக்காய்ச்சல் நோய் ஏற்படக்கூடிய ஆபத்து இலக்கினர்களான விவசாயிகள், மீன்பிடித் தொழிலாளர்கள், துப்பரவுப் பணியாளர்கள் போன்றவர்களுக்கு இந்நோய்க்கான தடுப்பு மருந்து வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விவசாயத் திணைக்களத்தின் பிரதேசமட்ட உத்தியோகத்தர்களின் உதவியுடன் கிராமமட்டத்தில் விவசாயிகளுக்கு தடுப்பு மருந்துகளை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நோய்ப்பரம்பலை ஆய்வுசெய்து ஆலோசனை வழங்குவதற்காக மத்திய சுகாதார அமைச்சின் தொற்றுநோய்த் தடுப்பு பிரிவிலிருந்து வைத்திய நிபுணர்கள் குழுவொன்று யாழ்ப்பாண மாவட்டத்திற்கு வருகைதந்துள்ளது. அவர்கள் வைத்தியசாலைகளிலும் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைகளிலும் களத்திலும் ஆய்வுகளை மேற்கொண்டு உரிய ஆலோசனைகளை வழங்கவுள்ளனர். மேலும் இந்நோய்க்கு சிகிச்சை அளிப்பதற்கான ஒருதொகுதி மருந்துகள் சுகாதார அமைச்சின் மருத்துவ வழங்கல் பிரிவினால் யாழ்ப்பாணம் மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார். https://thinakkural.lk/article/313646
-
அரசியலமைப்பு தீர்வு விடயத்தில் தமிழ் கட்சிகள் ஒருதரப்பாக பயணிப்பது அவசியம் என்கிறார் சத்தியலிங்கம்
அரசியலமைப்பு தீர்வு விடயத்தில் தமிழ் கட்சிகள் ஒருதரப்பாக பயணிப்பது அவசியம் என்கிறார் சத்தியலிங்கம் அரசியலமைப்பு தீர்வு விடயத்தில் தமிழ் கட்சிகள் அனைத்தும் ஒருதரப்பாக பயணிக்க வேண்டும் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் தெரிவித்தார். வவுனியாவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டு இனப்பிரச்சனைக்கான தீர்வு காணப்படவேண்டும் என்பதில் தமிழரசுக் கட்சி உறுதியாக இருக்கிறது. அவ்வாறான சந்தர்ப்பம் ஏற்ப்படும் போது ஒட்டுமொத்த தமிழ்மக்களின் குரலாக பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற மற்றும் பிரதிநிதித்துவப்படுத்தாத கட்சிகள் ஒன்றாக இணைந்து தமிழ்மக்களின் நிலைப்பாடு இதுதான் என்பதை அரசுடனான பேச்சுவார்த்தையின் போது முன்வைக்கவேண்டும்.இதுதான் கட்சியின் நிலைப்பாடகவும் இருக்கும் இது தொடர்பாக எமது கட்சியின் மத்தியகுழுவில் ஆராய்ந்து உரிய முடிவை எடுப்போம். தமிழரசுக் கட்சியின் செயலாளர் என்றவகையில் பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக ஈ.பி.ஆர்.எல்.எப்.,தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் , தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) ஆகிய கட்சிகளுடன் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலை ஒன்றாக எதிர்கொள்வது தொடர்பான பேச்சுவார்த்தையினை நடத்தியிருந்தோம். அப்போது தாங்கள் அனைவரும் ஒருகூட்டாக இருக்கிறோம். எனவே தமிழரசுக் கட்சிதான் தனித்துள்ளது. எனவே நீங்கள் வந்து எமது சின்னத்தில் கேட்கலாம் என்ற நிலைப்பாட்டில் அவர்கள் இருந்தனர்.அந்தவகையில் திருகோணமலையில் ஒன்றாக போட்டியிட்டமையினாலேயே ஒரு பிரதிநிதித்துவத்தை தக்கவைக்கக்கூடியதாக இருந்தது. எனவே நாங்கள் முயற்சிகளை எடுத்திருக்கின்றோம். கடந்த முறை உள்ளூராட்சி தேர்தல் முறைமையினால் அதில் தனித்தனியாக போட்டியிட்டு பின்னர் ஒன்றாகலாம் என்ற ஆலோசனையினை முன்வைத்திருந்தோம். ஏனெனில் அந்த தேர்தலில் வட்டார அடிப்படையில் நாம் பெரும்பான்மையாக வெற்றி பெற்றாலும் உள்ளூராட்சி அமைப்புக்களில் ஆட்சியை பிடிக்க முடியாத நிலை ஏற்பட்டிருந்தது. அதனை தவறுதலாக புரிந்துணர்ந்த ஏனைய கட்சிகள் தேர்தல்களில் தனித்து போட்டியிட்டிருந்தமை உங்களுக்கு தெரியும். இருப்பினும் அரசியல் அமைப்பு தீர்வு விடயத்தில் நாங்கள் அனைவரும் ஒருதரப்பாக பயணிக்க வேண்டும் என்பது எனது கருத்து. தமிழ்த் தேசிய கட்சிகள் இடையே வடகிழக்கில் அதிகமான பிரதிநிதித்துவத்தை எமது கட்சி பெற்றுள்ளது. அத்துடன் எமது கட்சி 75வருட வரலாற்றுபாரம்பரியம் கொண்ட தாய்கட்சி. எனவே தமிழ் கட்சிகளை பொதுவான நோக்கத்திற்காக ஒன்றுபட்டு செயற்படுவதற்கான நடவடிக்கையினை நாம் எடுப்போம் என்றார். https://thinakkural.lk/article/313624✂️
-
தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் தீப்பந்தம் ஏந்தி போராட்டம்
தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் தீப்பந்தம் ஏந்தி போராட்டம்தமது அடிப்படை வசதிகளை விரைவாக ஏற்படுத்தி தருமாறு கோரியும் இட நெருக்கடிக்கு தீர்வு காணுமாறும் வலியுறுத்தி அம்பாறை மாவட்டம் ஒலுவில் தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் தீப்பந்தம் ஏந்தியவாறு தென்கிழக்குப் பல்கலைக்கழக முன்றலில் இன்று (12) இரவு 7.30 மணியளவில் மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 300 மாணவர்கள் கலந்து கொண்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு கோசங்களை எழுப்பியவாறு மாணவர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதன் போது தமது அடிப்படை வசதிகளை விரைவாக ஏற்படுத்தி தருமாறு கோரி தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் பல்கலைக்கழக ஒலுவில் வளாக பிரதான வீதிக்கு அருகில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு பின்னர் வளாகத்தினுள் ஊர்வலமாக தீப்பந்தம் ஏந்தி இப்போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் போலித் தீர்வுகள் வேண்டாம், விடுதி வசதிகளை விரிவுபடுத்து , தென் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் அனைவரையும் பல்கலைக்கழகத்தினுள் உடனடியாக அழைக்கவும், மாணவர்களை துன்புறுத்தாதே, மாணவர்கள் மீதான அடக்கமுறையை நிறுத்து, போன்ற சுலோகங்களை ஏந்திய வண்ணம் மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். https://thinakkural.lk/article/313633
-
சிறுகதை; இழப்பு - குரு அரவிந்தன் -
சிறுகதை; இழப்பு - குரு அரவிந்தன் - - குரு அரவிந்தன் - சிறுகதை 27 நவம்பர் 2024 - ஓவியம் - AI - சிகப்பு மஞ்சள் விளக்குகள் மின்னிக் கொண்டிருக்க, இராணுவ நோயாளர் காவுவண்டி ஒன்று அலறி அடித்துக் கொண்டு மருத்துவமனை வாசலில் வந்து நின்றது. என்னவோ ஏதோவென்று மருத்துவமனை ஊழியர்கள் எட்டிப் பார்த்தனர். நோயாளர் காவுவண்டிக்குப் பாதுகாப்பாய் வந்த இன்னுமொரு வண்டியில் இருந்து குதித்து இறங்கிய இராணுவத்தினர் ஆயுதங்களோடு தடதட என்று உள்ளே நுழைந்தனர். வெளிநோயாளர் பயந்துபோய் ஒதுங்கி நிற்க, வரவேற்பு மேசையில் இருந்த பெண் பதட்டத்தில் தன்னை அறியாமலே சட்டென்று எழுந்து நின்றாள். ‘டாக்டர் எங்கே..?’ அதிகாரக்குரலில் மிரட்டினான் துப்பாக்கியோடு உள்ளே நுழைந்த இராணுவ சிப்பாய். பயத்தில் வார்த்தைகள் வெளிவர மறுக்கவே, அவள் மருத்துவரின் அறையை நோக்கிக் கையை நீட்டிக் காட்டினாள். எந்தவித தயக்கமும் இல்லாமல் அவன் கதவைத் தள்ளித் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தான். ‘டாக்டர் ரொம்ப அவசரம், உடனே வாங்க, எங்க காப்டனுக்கு உடனே சத்திர சிகிச்;சை செய்யணும்.’ என்றான். ‘என்னாச்சு..?’ வைத்திய கலாநிதி சிவகுமாரன் பதட்டப்பட்டார். ‘கிளைமோர் குண்டு வெடிச்சதாலே எங்க காப்டன் ஆபத்தான நிலையில இருக்கிறார். உடனே வாங்க..!’ என்றான் சிப்பாய். கடமை அழைத்த வேகத்தைவிட, துப்பாக்கி முனையின் அழைப்பு அவரை உடனே எழுந்திருக்க வைத்தது. இப்படியான நேரங்களில் பாதிக்கப் பட்டவர்களின் மனநிலை எப்படி இருக்கும் என்பதை அவர் நன்கு புரிந்து வைத்திருந்தார். எனவே அதிகம் அலட்டிக் கொள்ளாது, சத்திர சிகிச்சை அறைக்குள் சென்றபோது அவரது உதவியாளர்கள் இராணுவ அதிகாரிக்கு செலைன் கொடுத்து, அவசரமாக செய்யவேண்டிய உதவியை செய்து கொண்டிருந்தார்கள். மரணத்தின் வாசலில் நின்று தவிப்பவன்போல, வேதனையில் முனகிக் கொண்டிருந்தான் அந்தநோயாளி. மரணபயம் குறித்த அவனது வேதனை காரணமாக அவனது முகம்; அப்படியே வெளிறிப்போய்;க் கிடந்தது. நிறைய இடங்களில் இரத்தம் வழிந்து இராணுவ சீருடையில் ஆங்காங்கே கறை படிந்திருந்ததிலிருந்து அந்த முனகலின் தேவை கருதிய வெளிப்பாடு என்னவாய் இருக்கும் என்பது அவருக்குப் புரிந்தது. அவரவர் அனுபவிக்கும் போதுதான் அந்த வலியின் வேதனை என்ன என்பது அவர்களுக்குப் புரியும் என்பதைத் தனது தொழில் அனுபவத்தில் தெரிந்து வைத்திருந்தார் டாக்டர். உதவியாளர்களிடம் அவனுடைய சீருடையை அகற்றி சத்திர சிகிச்சைக்குரிய உடையை அணிவிக்கச் சென்னார். போர்ச் சூழ்நிலையைச் சாதகமாக்கிக் கொண்டு சீருடையின் துணிவில் நடமாடும் வெறிபிடித்த இந்தவக்கிரங்கள், அந்த சீருடை இல்லாவிட்டால் வெறும் பூஜ்யம்தான் என்பதில் அவருக்குச் சந்தேகமே இல்லை! ஒன்றா இரண்டா, துப்பாக்கி ரவைகள் துளைத்தது போல, உடம்பில் பட்ட இடமெல்லாம் சின்னச் சின்னக் காயங்கள். அவசரமாக எக்ஸ்றே எடுத்து, நோயாளிக்கு மயக்க மருந்து கொடுத்தார்கள். கையுறையை மாட்டும்போதுதான் கவனித்தார், துப்பாக்கியோடு உள்ளே நின்ற சிப்பாயை! அவனை வெளியே போகும்படி சைகையிலே காட்டினார். அவனும் வேறு வழியில்லாமல் விரோதிபோல அவரை முறைத்துப் பார்த்து விட்டு வெளியேறினான். சின்னஞ்சிறிய ஆணிகள், பிளேட்டுத் துண்டுகள், சைக்கிள் பால்சுகள் என்று அத்தனையும் காப்டனின் உடம்பைப் பதம் பார்த்திருந்தன. சத்திர சிகிச்சை மூலம் ஒவ்வொன்றாக அவற்றை வெளியே எடுக்க முயற்ச்சி செய்து கொண்டிருந்தவரின் மனதை அதிர்ச்சியும், ஆச்சரியமும் முழுமையாக ஆக்கிரமித்திருந்தன. இதை வெடிக்க வைத்தவனின் மனதிலே எவ்வளவு கோபமும், வெறியும் இந்த ஆக்கிரமிப்பு ராணுவத்தின் மேல் இருந்திருக்க வேண்டும், இந்தத் தருணத்திற்காக எத்தனை நாள் ஊனுறக்கம் இல்லாமல் அவன் தவம் கிடந்திருப்பான் என்று உடலைக் கீறி வெளியே எடுத்த ஒவ்வொரு பொருளையும் பார்த்தபோது, தனக்குளே கணக்குப் போட்டுக் கொண்டார். எங்கேயாவது சைக்கிள் பால்சுகளைக் கண்டால் ஆக்கிரமிப்பு இராணுவம் ஏன் வெருண்டடித்துப் பயப்படுகிறது என்ற உண்மையும் அவருக்கு இப்போ புலனாகியது. உயிரோடு போராடிக் கொண்டிருக்கும் அந்த அதிகாரி உயிர் தப்புவானா இல்லையா என்ற முடிவைக் காலன், இவரது கையிலே ஒப்படைத்திருந்ததை நினைத்துப் பார்க்க அவருக்கே வியப்பாக இருந்தது. ஒரு இனத்தையே கூண்டோடு அழிக்கப் போவதாக சவால் விட்டு விட்டு வந்து, ஆயுதபலத்தால் அந்த இனத்தின் பாரம்பரிய மண்ணை ஆக்கிரமித்திருக்கும் ராணுவ அதிகாரிதான் இவன் என்பது எல்லோருக்கும் தெரியும். இப்படியான ஒரு சூழ்நிலையில், வெறிபிடித்தலையும் அவனைக் காப்பாற்றுவதிலேயோ, அல்லது அவனை உயிர் தப்பவைப்பதிலேயோ அவருக்கு எந்தவித ஈடுபாடும் மனதார இருக்கவில்லை. எங்கள் மண்ணை ஆக்கிரமித்து, எங்கள் இனத்தையே அழித்தொழிக்கும் பரமஎதிரி இவன். இவனைப் போன்ற இனவாதிகள் எல்லாம் விபத்து நடந்த இடத்திலேயே இறந்து போயிருந்தால் எங்களுக்கு சற்று நிம்மதி யாவது இருந்திருக்கும் என்று மனசுக்குள் நினைத்துக் கொண்டார். இப்போ நோயாளியாக அவன் தன்னிடம் வந்தபின், தனது கடமையில் இருந்து நழுவ அவருக்குக் கொஞ்சமும் விருப்பமில்லை. தன்னை நம்பி வந்த ஒரு நோயாளி என்ற கடமை உணர்வோடு, இனமத பேதம் எல்லாவற்றையும் மறந்து, ஒரு டாக்டராய் விரைவாகச் செயற்பட்டார். கடினமான உழைப்பில், சத்திர சிகிட்சை நேரம் நீண்டு கொண்டு போனதே தெரியவில்லை. மகனின் நினைவு வரவே, கடிகாரத்தைப் பார்த்தார். மருத்துவபீடத்தில் இறுதியாண்டு படித்துக் கொண்டிருக்கும் தனது மகனை, வகுப்பு முடிந்ததும் அங்கு சென்று வீட்டிற்கு அழைத்துக் கொண்டு செல்வதாக உறுதியளித்திருந்தார். இப்போதைக்கு இந்த இடத்தை விட்டு நகரவேமுடியாது, எப்படியாவது அவன் சமாளித்துக் கொள்வான் என்ற நம்பிக்கையோடு மீண்டும் நோயாளி மேல் கவனம் செலுத்தினார். நேரகாலம் இல்லாமல் இப்போதெல்லாம் சத்திர சிகிட்சை ஒரு சாதாரண நிகழ்வாய்ப் போய்விட்டது. இராணுவம் வலிந்து ஆக்கிரமித்த மண்ணில் தினமும் இப்படி ஏதாவது அசம்பாவிதங்கள் நடந்து கொண்டேதான் இருந்தன. முன்பெல்லாம் வாழ்ந்து, அனுபவித்த முதியோர்தான் தேவை கருதி அடிக்கடி வைத்திய சாலைக்கு வருவார்கள். இப்போ நிலைமை ரொம்பவும் மாறிவிட்டது. வயது வித்தியாசம் இல்லாமல் எல்லோரும் பலதரப்பட்ட வைத்தியத்திற்காகவும் வருகிறார்கள். இந்த வைத்திய சாலையில் சத்திர சிகிச்சைக்குப் பொறுப்பாக இருந்த மற்றவைத்தியர் சமீபத்தில் மாற்றலாகிப் போய்விட்டபடியால் இவர் மட்டும்தன் அங்கே மிஞ்சியிருந்தார். எனவே இங்குவரும் எல்லா அவசரசத்திர சிகிச்சையையும் அவரே தனியே கவனிக்க வேண்டியிருந்தது. யுத்தப் பிரதேசத்தில் இந்த மருத்துவமனை இருந்ததால், தொழில் செய்ய யாருமே விருப்பப்படவில்லை. இப்படியான நேரங்களில் ராணுவத்தையும் போராளிகளையும் சமாளிக் வேண்டிய பெரும் பொறுப்பு அவரிடம் இருந்தது. ‘ஏன் சிகிச்சை செய்தாய்’ என்று இரண்டு பக்கத்தில் இருந்தும் மிரட்டல்கள் வரும்போதெல்லாம் ‘கடமையைத்தான் செய்தேன்’ என்று துணிந்து சொல்ல வேண்டும். இல்லாவிட்டால் இடமாற்றம் எடுத்துக் கொண்டு எங்கேயாவது கண்காணாத இடத்திற்குப் போகவேண்டும், அல்லது வேலையை இராஜினாமா செய்துவிட்டு வீட்டிலே சிவனே என்று உட்கார்ந்து இருக்க வேண்டும். இத்தனை பிரச்சனைகளுக்கு மத்தியிலும், மருத்துவக்கல்லூரி இறுதி ஆண்டில் படிக்கும் மகனின் படிப்பு முடியட்டும் என்ற எண்ணத்தோடுதான் பல்லைக் கடித்துக் கொண்டு நாட்களை எண்ணிக் கொண்டிருந்தார். தன்னைப் போலவே அவனும் இந்த மண்ணில் படித்து ஒரு புகழ்பெற்ற மருத்துவராக வந்து, மக்களுக்குச் சேவை செய்யவேண்டும் என்ற படித்த சாதாரண பெற்றோருக்கு இருக்கும் ஆசைதான் அவருக்கும் இருந்தது. பாசமா கடமையா என்று எடைபோட்டபோது, கடமைதான் அவருக்குப் பெரிதாகத் தெரிந்தது. சத்திர சிகிட்சை அறையைவிட்டு வெளியே வந்தபோது, தாதி அவரைநோக்கிப் பரபரப்பாக ஓடி வந்தாள். முகத்திலே கவலை தோய்ந்து இறுகிப்போயிருந்தது. ‘என்ன..?’ என்றார். ‘சத்திர சிகிச்சை முடிஞ்சுதா டாக்டர்..?’ ‘ஆமா, நோயாளி தப்பிப்பிழைச்சிட்டான்.’ ‘பிழைச்சிட்டானா..? காப்பாற்றிவிட்டீங்களா..?’ இனம்புரியாத வெறுப்பு, அவளின் பெருமூச்சில் கலந்திருந்ததை அவர் அவதானித்தார். அந்த வெறுப்பு நியாயமானதுதான், இது அவளின் தனிப்பட்ட வெறுப்பல்ல, ஒட்டு மொத்தமாக அங்கே உள்ள ஊழியர்களின் வெறுப்பையும் உள்வாங்கித்தான் அவள் பிரதிபலிக்கிறாள் என்பதையும் அவர் அறிவார். நாட்டு நடப்பு அப்படி இருந்தது. ‘ஓரு வைத்தியருக்குரிய என்னுடைய கடமையைத்தானே நான் செய்தேன். என்னுடைய கையில் எதுவுமில்லை, நான் ஒரு காரணி அவ்வளவுதான், எல்லாம் அவன் செயலே!’ என்றவரின் குரல் கம்மியது. ‘எது கடமை..?’ அவள் எதையோ சொல்லத் தயங்குவது தெரிந்தது. ‘என்ன ஒரே பதட்டமாய் இருக்கிறாய்?’ அசதியோடு கேட்டார். ‘வந்து.., அவசர சிகிச்சைக்காக நோயாளர் காவுவண்டியிலே இரண்டு, மூன்று நோயாளியைக் கொண்டு வந்தாங்க, வாசலிலே காவலுக்கு நின்ற இராணுவசிப்பாய்கள் உள்ளே அனுமதிக்க மறுத்திட்டாங்க!’ ‘அப்படியா..? இப்போ எங்கே அவங்க..?’ கடமை உணர்வோடு கேட்டார். ‘ரொம்ப நேரம் காவுவண்டி வெளியே காத்திருந்திட்டு, வேற வழியில்லாமல் எங்கேயாவது வேறு வைத்தியசாலைக்கு கொண்டு போகமுடியமா என்று முயற்சி செய்யப்போவதாக சொல்லித் திரும்பிப் போயிட்டாங்க!’ ‘ரொம்ப ஆபத்தான நிலையில் இருந்தாங்களா?’ ‘ஆமா, டாக்டர் துப்பாக்கிச்சூட்டுக்காயம், இரத்தசேதமாம்! அவசர சத்திர சிகிச்சை செய்தால் எப்படியும் அவங்க தாப்பிவிடுவாங்க என்று சொன்னாங்க.’ ‘எங்கே இருந்து கொண்டுவந்தாங்க? சத்திரசிகிச்சை செய்யக்கூடிய வேறு வைத்தியசாலை ஒன்றும் அருகே இல்லையே!’ ‘மருத்துவக்கல்லூரிக்கு முன்பாகத்தான் கிளைமோர் குண்டு வெடிச்சதாம். அதிலேதான் நீங்க சத்திர சிகிச்சை செய்து பிழைக்க வைத்த இராணுவகாப்டன் அகப்பட்டிருந்தான்.’ ‘மருத்துவக் கல்லூரிக்கு முன்பாகவா? அங்கேயா நடந்தது?’ டாக்டரின் குரல் சட்டென்ற அடைத்துக் கொண்டது. ‘ஆமா, காயமடைந்த ஆத்திரத்தில் கூடவந்த இராணுவத்தினர் மருத்துவக் கல்லூரிக்குள்ளே புகுந்து கல்லூரி மண்டபத்திற்கு தீவைச்சது மட்டுமல்ல, அங்கே நின்ற மாணவர்களையும் நோக்கிச் சாரமாரியாகச் சுட்டிருக்கிறாங்க. அதிலேதான் இங்கே கொண்டுவந்த அந்த மாணவங்க காயப்பட்டாங்களாம்!’ ‘மருத்துவக் கல்லூரி மாணவங்களா..?’ வார்த்தைகள் அடைத்துக் கொண்டன. ‘ஆமா டாக்டர்..!’ ‘எத்தனை பேரைக் கெண்டு வந்தாங்க? அவங்க முகத்தையாவது நீ பார்த்தியா?’ பதட்டத்தோடு கேட்டார் சிவகுமாரன். ‘இல்லையே டாக்டர், உயிருக்குத் துடிச்சிட்டு இருப்பதாக கொண்டு வந்தவங்க சொல்லி மன்றாடினாங்க, ஆனால் அவங்களை உள்ளே கொண்டுவரக் காவலுக்கு நின்ற சிப்பாய்ங்க விடவேயில்லை!’ ‘ஏன்..? ஏன் தடுத்தாங்க..?’ கடமையைச் செய்ய முடியாமல்போன ஏமாற்றமும் அது சார்ந்த இயலாமையும் அவரை வாட்டத் தொடங்கின. ‘காப்டனின் சத்திரசிகிச்சை முடியாமல் யாரையும் உள்ளே விடமாட்டோம் என்று சொல்லித் தடுத்திட்டாங்க. அதுமட்டுமல்ல காப்டனுக்கு ஏதாவது ஆச்சுதென்றால் எங்களையும் சுட்டுப் பொசுக்கி விடுவோம் என்று துப்பாக்கியைக் காட்டி மிரட்டினாங்க டாக்டர்.’ ‘உண்மையாவா..? எனக்கு இதெல்லாம் தெரியாமல் போச்சே..!’ களைப்பும், குழப்பமும் ஒன்றாய் நிறைந்த நிலையில், மனம் உடைந்துபோன சிவகுமாரன், தலையில் கை வைத்தபடி அருகே இருந்த நாற்காலியில் உட்கார்ந்தார். இந்த நேரம் பார்த்து மேசையில் இருந்த தொலைபேசி அலறியது. இராணுவ மேலிடத்தின் அழைப்பாகத்தான் இருக்கும், எடுக்காவிட்டால் அது குறித்த பிரச்சனைகள் இன்னும் பூதாகரமாய் வெடித்துவிடும் என்ற நினைப்பில் வேண்டா வெறுப்பாய் எடுத்துக் காதில் வைத்தார்! என்றுமில்லாதவாறு ஏதோ தவறு நடந்துவிட்டது போல, 'என்ர ராசா...' என்று கத்திக் குழறியழும் மனைவியின் அவலக்குரல் மறுபக்கத்தில் கேட்க, ஒன்றும் புரியாமல் அப்படியே உறைந்து போய் நின்றார் டாக்டர்! :kuruaravinthan@hotmail.com https://yarl.com/forum3/forum/215-கதைக்-களம்/?do=add