Everything posted by பிழம்பு
-
சமஸ்டி குறித்து உங்கள் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டால் தேர்தலை பகிஸ்கரிப்பது என்ற முடிவு குறித்து பரிசீலனை செய்ய தயார் – சஜித்திற்கு தமிழ்தேசிய மக்கள் முன்னணி கடிதம்
ஒற்றையாட்சி முறையை ஒழித்து சமஸ்டி அரசியல் யாப்பினை கொண்டுவருவதன் மூலம் மாத்திரமே அனைத்து இனங்களையும் அரவணைத்து இந்த நாட்டை கட்டியெழுப்ப முடியும் என்ற உண்மையை ஐக்கியமக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தேர்தல் விஞ்ஞாபனத்தில் வெளியிட்டால் ஜனாதிபதி தேர்தலை புறக்கணிப்பது என்ற எமது நிலைப்பாட்டினை பரிசீலனை செய்வது தொடர்பில் நாம் ஆராய முடியும் என தமிழ்தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது. தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் ஆதரவை கோரி சஜித்பிரேமதாச அனுப்பிய கடிதத்திற்கான பதில் கடிதத்திலேயே தமிழ் தேசிய மக்கள் முன்னணி இதனை தெரிவித்துள்ளது. வேட்பாளராகிய நீங்கள் கடந்த 76 வருடங்களாக இலங்கையின் தோல்விக்கு காரணமான ஒற்றையாட்சி முறையை ஒழித்து சமஸ்டி அரசியல் யாப்பினை கொண்டுவருவதன் மூலம் மாத்திரமே அனைத்து இனங்களையும் அரவணைத்து இந்த நாட்டை கட்டியெழுப்ப முடியும் என்ற உண்மையை தங்களது தேர்தல் விஞ்ஞாபனத்தில் வெளியிடுவதன் மூலம் நாட்டின் இனப்பிரச்சினை தீர்ப்பதற்கு நீங்கள் மேற்கூறிய விடயங்களின் அடிப்படையில் தீர்வை காணவிளைகின்றீர்கள் என்பதை இந்த நாட்டு மக்களிற்கு நீங்கள் வெளிப்படுத்தவேண்டும் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம். அவ்வாறு தேர்தல் விஞ்ஞாபனத்தில் மேற்படி விடயங்களை தெளிவாகவும் முழுமையாகவும் உள்ளடக்கப்படும் நிலையில் ஜனாதிபதி தேர்தலை புறக்கணிப்பது என்ற எமது நிலைப்பாட்டினை பரிசீலனை செய்வது தொடர்பில் நாம் ஆராய முடியும் எனதமிழ் தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது சமஸ்டி குறித்து உங்கள் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டால் தேர்தலை பகிஸ்கரிப்பது என்ற முடிவு குறித்து பரிசீலனை செய்ய தயார் – சஜித்திற்கு தமிழ்தேசிய மக்கள் முன்னணி கடிதம் | Virakesari.lk
-
பொதுவேட்பாளருக்கு தமிழ்மக்கள் வாக்களிக்க வேண்டும் ; யாழ் வணிகர் கழகம்
(எம்.நியூட்டன்) தமிழர்களின் ஒற்றுமை, சுயாட்சி, மற்றும் சுயநிரணய கோரிக்கையை நிலைநிறுத்தி எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் தமிழ் பொதுவேட்பாளரான பாஅரியநேந்திரனை ஆதரித்து எமது வரலாற்றுக் கடமையை நிறைவேற்றி உலகமெல்லாம் ஒலிக்க சங்கு சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என யாழ்ப்பாண வணிகர் கழகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. நடைபெறவுள்ள ஐனாதிபதி தேர்தல் தொடர்பாக யாழ்ப்பாண வணிகர் கழகம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இலங்கை அரசு இந்த நாட்டை சிங்கள பௌத்த நாடாக சித்தரித்து அதற்கான முழு வேலைத்திட்டத்தையும் சுதந்திரத்திற்கு பின் 1948 ஆம் ஆண்டிலிருந்து செயற்படுத்திக் கொண்டு வருகிறது. தமிழ் மக்கள் தங்கள் தாயகமான வடக்கு, கிழக்கைப் பாதுகாத்து உரிமையோடு வாழ்வதற்காக கடந்த 75 வருட கால நீண்ட எமது போராட்டம் இன்னும் வெற்றிபெறவில்லை. தமிழ் தலைமைகள் எமது உரிமையை நிலைநாட்டவும், சமாதானத்தை நிலை நிறுத்துவதற்கும் எடுத்த முயற்சிகள் அத்தனையும் இன்றுவரை சிங்களத்தலைவர்களினால் நிராகரிக்கப்பட்டு உதாசீனப்பட்டுள்ளன. இந்திய, இலங்கை ஒப்பந்தத்தின் மூலம் கிடைக்கப்பெற்ற ஆகக்குறைந்த அதிகாரமான 13 ஆம் அரசியலமைப்பு திருத்தத்தைக் கூட முழுமையாக நடைமுறைப்படுத்தாமை. பேச்சுவார்த்தை என்ற ரீதியில் காலத்தை கடத்தி தட்டிக்கழிக்கப்பட்டு தந்தை செல்வா தொடக்கம் சம்பந்தர் வரை ஏமாற்றியுள்ளார்கள். நாம் இந்த நாட்டின் பூர்வீக குடிகள். வடக்கு. கிழக்கு தமிழர்களுடைய தாயகம் நாம் தனித்துவமானவர்கள் எமக்கு சுயநிர்ணய உரிமையுண்டு எமது நிலம், மொழி, கலை, கலாசாரம். பண்பாடு போன்றன பாதுகாக்கப்பட வேண்டும். அதற்கு பூரண சுயாட்சி அதிகாரம் எமது பகுதிக்கு தேவை என்பதை முன்னிறுத்தி தமிழ் மக்கள் தங்கள் கோரிக்கைக்கான சர்வஜன வாக்கெடுப்பாக இந்த தேர்தலை எதிர்கொண்டு அதற்கான அங்கீகாரத்தைப் பெறவேண்டும். இதன் மூலம் இலங்கை அரசுக்கும் சர்வதேசத்திற்கும் நாம் இன்னும் எமது உரிமைப்போராட்டத்தில் உறுதியாக இருக்கின்றோம் என்பதை அடையாளப்படுத்த முடியும். இந்த ஜனாதிபதித்தேர்தலை தமிழ்மக்களின் விடிவுக்காக ஜனநாயக முறையில் புதிய அணுகுமுறையாக இதை அணுகி எமது உரிமைகளை வென்றெடுக்க புத்திசாதுரியமாக நடந்து இதனை அணுகுவதே சிறந்த தீர்மானமாக அமையும். இந்த முயற்சிக்கு வடக்கு, கிழக்கில் செயற்படும் தமிழ்தேசியம் சார்ந்த அனைத்துக்கட்சிகளும், வடக்கு, கிழக்கில் செயற்படும் அத்தனை பொது அமைப்புக்களும், வடக்கு, கிழக்கைச் சேர்ந்த நாட்டின் ஏனைய பகுதிகளில் வாழும் அத்தனை தமிழ் பேசும் மக்களும் தமிழ் பொது வேட்பாளருக்கு தங்கள் பேராதரவை வழங்கி வாக்குகளை செலுத்த வேண்டும். அத்துடன் தென்னிலங்கை கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்துபவர்களும், தென்னிலங்கை வேட்பாளர்களுக்கும், தென்னிலங்கை கட்சிகளுக்கு ஆதரவு வழங்கும் வடக்கு, கிழக்கை சேர்ந்த கட்சிகளும், தென்னிலங்கை தலைவர்களுடன் தனிப்பட்ட நட்பு வைத்துள்ளோர், மாற்றுக்கருத்துள்ளோர் தங்கள் நிலைப்பாட்டை மாற்றி தமிழ் இனத்தின் விடிவிற்காக தமிழ் மக்களின் ஜனநாயக முறைப்படி நடைபெறும் உரிமைக்கான அங்கீகாரத்திற்கு தங்கள் பேராதரவை வழங்க வேண்டும் என்று தமிழ் மக்கள் சார்பில் வேண்டிநிற்கின்றோம் என்றுள்ளது. பொதுவேட்பாளருக்கு தமிழ்மக்கள் வாக்களிக்க வேண்டும் ; யாழ் வணிகர் கழகம் | Virakesari.lk
-
வாழை விமர்சனம்: மாரி செல்வராஜின் உன்னத படைப்பு தரும் தாக்கம் என்ன?
தூத்துக்குடி மாவட்டம் புளியங்குளத்தில் தன் அம்மா மற்றும் அக்காவுடன் வசித்து வருகிறான் சிறுவன் சிவனணைந்தான் (பொன்வேல்). அவன் வாழ்க்கையில் வெறுக்கும் ஒரே விஷயம் வாழைத்தார் சுமப்பது. வறுமையான குடும்பம், அப்பா இல்லை, வாங்கிய கடனை அடைத்தாக வேண்டும் என்பதற்காக தாயின் வற்புறுத்தலால் பள்ளி விடுமுறை நாட்களில் பெரும் துயரத்துடன் வாழைத்தார்களை சுமக்க செல்கிறான். அதனால் இரவில் வலியால் துடிக்கிறான். வாழைத்தார் சுமக்கும் அவனது ‘கனமான’ வாழ்க்கையை இலகுவாக்குவது பூங்கொடி மிஸ் (நிகிலா விமல்). இப்படியாக கறுப்பு பக்கங்களும், நடுவே சில ‘கலர்ஃபுல்’ பக்கங்களும் சிவனணைந்தான் வாழ்க்கையை ஆட்கொள்கின்றன. இதனிடையே, அதே ஊரில் வாழைத்தார் சுமக்கும் கனி (கலையரசன்) ஊதிய உயர்வு கேட்டு ஆட்களை திரட்டி போராடுகிறார். ஒருவகையில் அதற்கு ஒப்புக்கொள்ளும் முதலாளி, மற்றொருபுறம் ஆபத்தில் சிக்க வைக்கிறார். அது என்ன? சிவனணைந்தானுக்கு வாழை சுமப்பத்திலிருந்து விடுதலை கிடைத்ததா என்பது திரைக்கதை. தன் வாழ்வின் உச்சபட்ச அழுகையின் தருணங்களையும், மகிழ்ச்சியின் நினைவுகளையும் ஒரு சேர கோத்து ‘உணர்வுபூர்வமான’ படைப்பை கொடுத்திருக்கிறார் இயக்குநர் மாரி செல்வராஜ். சொற்ப கூலிக்காக, உயிர்கொடுத்து வாழைத்தாரை சுமந்து செல்லும் அம்மக்களின் வாழ்வியலையும், அது சிறுவனின் உளவியலில் ஏற்படுத்தும் தாக்கத்தையும் சமரசமின்றி அழுத்தமாக பதிவு செய்கிறது படம். அதேசமயம் கண்ணீர் மழையை பொழியும் காட்சிகளை உருக்கி உருக்கி வடிக்காமல், வெகுஜன ரசனையை ஈர்க்கும் படத்தின் திரைமொழி கவனம் பெறுகிறது. சிவனணைந்தான் மற்றும் அவனது நண்பனுக்கு இடையிலான நட்பு, ரஜினி, கமல் ரெஃபரன்ஸ், “நம்மூர்ல ரஜினி படம் தான் ஓடுது. கமல் படம் எங்க ஓடுது” என்ற வசனம், அதையொட்டிய காட்சிகள், ‘பூவே உனக்காக’, ‘பிரியமுடன்’ போஸ்டர்கள், கர்சீஃப் காட்சி என ஜாலியாக நகரும் படத்தின் தொடக்கம் ரசிக்க வைக்கிறது. தனக்கு பிடித்த ஆசிரியை மீது அந்தப் பருவத்தில் விளையும் ஈர்ப்பை எந்த வகையிலும், கொச்சையாகவோ, மிகைப்படுத்தியோ சொல்லாமல் மிக கவனமாக நேர்த்தியாக கையாண்டியிருப்பது பாராட்டுக்குரியது. நிகிலா விமலிடம், மாணவன், “நேத்து எங்க அம்மா மாதிரி அழகா இருந்தீங்க டீச்சர். இன்னைக்கு அக்கா மாதிரி” என சொல்லும் வசனம் அழகு! இதற்கு மறுபுறம், மற்றொரு காதலையும், மெல்லிய உணர்வுடன் 2 ரெட்ரோ பாடல்களின் வழியே கடத்தியிருந்தது அட்டகாசமான திரையனுபவம். கொத்தடிமை வாழ்க்கை, ஒரு ரூபாய் கூலி உயர்வு போராட்டம், அதனால் ஏற்படும் இழப்பு, இடைத்தரகர்களின் வஞ்சகம், கம்யூனிஸ்ட், அம்பேத்கர் குறியீடுகள் என உழைக்கும் மக்களின் வலியை அழுத்தமாக பதிய வைக்கிறது படம். எல்லாவற்றையும் தாண்டி கட்டிப்போட்டு உலுக்கும் இறுதிக் காட்சியின் தாக்கத்தை படம் முடிந்தும் உணர முடிகிறது. மாரி செல்வராஜின் ‘உருவக’ காட்சிகளின் டச் இப்படத்தில் நிறைந்திருக்கிறது. தேர்ந்த கலைஞர்கள் கூட தோற்றுப்போகும் அளவுக்கு, வலி, வேதனை, கண்ணீர், தாயிடம் கெஞ்சி மன்றாடுவது, களைப்பினால் சோர்ந்து வீழும் இடம் என உணர்வுகளை நடிப்பில் வரித்து மிரட்டியிருக்கிறார் சிறுவன் பொன்வேல். உற்ற தோழனாக, டைமிங்கிலும், யதார்த்தமான நடிப்பிலும் ஈர்க்கிறார் மற்றொருவர் சிறுவன் ராகுல். பால்ய கால ஆசிரியரை நினைவூட்டும் நிகிலா விமல், க்ளோசப் ஷாட்களில் முகத்தில் உணர்வுகளை கச்சிதமாக வெளிப்படுத்தி, இனம்புரியா உணர்வுகளைக் கொண்ட சிறுவனை ‘ஹேண்டில்’ செய்யும் முறையில் முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்துகிறார். ஆக்ரோஷமான இளைஞனாக கூலிக்காக போராடும் கலையரசன், வாழைத்தாரை தாங்குவது போல கதாபாத்திரத்தை நேர்த்தியாக தாங்கி கிராமத்து பெண்ணாக ஈர்க்கும் திவ்யா துரைசாமி கச்சிதமான தேர்வு. சிறுவனின் தாயாக நடித்துள்ள ஜானகி இறுதிக்காட்சியில் அட்டகாசமான நடிப்பால் பாரத்தை இறக்கிவிடுகிறார். அவருக்கு தனி பாராட்டுகள்! கமல் குறித்து பேசும் காட்சியில், ‘நாயகன்’ பட இசையை மெல்லிதாக ஓட விடுவது, உருக்கமான காட்சிகளுக்கு உயிரூட்டி உணர்வுகளாக்கியிருப்பது, தேவையான இடங்களில் அமைதியின் வழியே அழுத்தம் சேர்ப்பது என சந்தோஷ் நாராயணன் பின்னணி இசையில் மிரட்டுகிறார். ‘தென்கிழக்கு தேன் சிட்டு’, ‘பாதவத்தி’ பாடல்கள் சிறப்பு. கறுப்பு வெள்ளையிலும், ஷில்அவுட்டிலும் காட்சிகளை நனைத்து, மூச்சிறைக்க ஓடும் சிறுவனின் உணர்வுகளை கடத்தி, மாரி செல்வராஜின் நினைவுகளுக்கு உயிரூட்டுகிறது தேனி ஈஸ்வரின் கேமரா. ஒலிக்கலை நேர்த்தி. பொறுமையாக நகரும் கதை தான் என்றாலும் எங்கேயும் அயற்சி ஏற்படுத்தாமல் சுவாரஸ்யமாக கடப்பது பலம். மீண்டும் மீண்டும் ஒரே இடத்தில் காட்சிகள் சுற்றுவதாக சிலருக்கு தோன்றலாம். வெறும் வலியை மட்டும் திணித்து கடத்தாமல், வெகுஜன ரசனையிலும், திரை அனுபவத்திலும் கவனம் செலுத்தியிருக்கும் உன்னதமான இப்படம் இறுதியில் உங்களை ஆட்கொள்ளும். வாழை Review: மாரி செல்வராஜின் உன்னத படைப்பு தரும் தாக்கம் என்ன? | mari selvaraj directorial Vaazhai movie review - hindutamil.in
-
கொட்டுக்காளி விமர்சனம்: வினோத்ராஜின் மற்றொரு சமரசமற்ற கலைப் படைப்பு!
கொட்டுக்காளி விமர்சனம்: வினோத்ராஜின் மற்றொரு சமரசமற்ற கலைப் படைப்பு! பி.எஸ்.வினோத்ராஜ் இதற்கு முன்னால் இயக்கிய ‘கூழாங்கல்’ சர்வதேச அளவில் பல விருதுகளை வென்ற படம். மட்டுமின்றி ஆஸ்கர் வரை சென்று திரும்பிய படம் என்பதால், அவரது அடுத்தப் படமான ‘கொட்டுக்காளி’ முதல் அறிவிப்பிலிருந்தே சினிமா ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. அத்துடன் ஹீரோவாக தனக்கென ஒரு முத்திரையை பதித்துவரும் சூரி, சிவகார்த்திகேயன் தயாரிப்பு என்பதால் கமர்ஷியல் ரசிகர்கள் மத்தியில் இதன் ட்ரெய்லர் உள்ளிட்ட விஷயங்கள் கவனம் பெற்றிருந்தன. இந்த இரு தரப்பை இப்படம் திருப்திபடுத்தியதா என்பதை பார்க்கலாம். மதுரையில் உள்ள ஒரு குக்கிராமத்தில் இருக்கும் மீனாவுக்கு (அன்னா பென்) பேய் பிடித்திருப்பதாக அவரது குடும்பத்தினர் நம்புகின்றனர். எந்நேரமும் எதையோ வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்கும் அவரை, வருங்கால கணவரான பாண்டியும், (சூரி) அவரது குடும்பத்தினரும் ஒரு பேய் ஓட்டும் சாமியாரிடம் அழைத்துச் செல்கின்றனர். அவர்கள் செல்லும் வழியில் சில சம்பவங்கள் நடக்கின்றன. அவை என்ன? உண்மையில் நாயகி அன்னா பென்னுக்கு என்ன பிரச்சினை? - இதற்கான விடையே ‘கொட்டுக்காளி’. காலையில் ஒரு ஷேர் ஆட்டோவில் ஏறி மாலையில் இன்னொரு இடத்தில் போய் இறங்குவதுதான் கிட்டத்தட்ட கதை. மொத்தக் கதையையும் ஒரு சின்ன துண்டுச் சீட்டில் எழுதிவிடக் கூடிய மிக மிக சிம்பிளான ஒரு களம். எனினும் தன்னுடைய முந்தைய படமான ‘கூழாங்கல்’ போலவே ஆழமான, அடர்த்தியான ஒரு படத்தை கொடுத்துள்ளார் பி.எஸ்.வினோத் ராஜ். ஓரிடத்தில் தொடங்கி இன்னொரு இடத்தில் முடியும் ஒரு சிறிய ஆட்டோ பயணத்தில் கதாபாத்திரங்களுக்கு இடையே நடக்கும் உரையாடல்கள், அவர்களின் எண்ண ஓட்டங்கள் மற்றும் செயல்களை இயல்பை மீறாமலும் எந்தவித சமரசமும் இல்லாமலும் அப்படியே பதிவு செய்திருக்கிறார் இயக்குநர். கிராமங்களில் நிலவும் சாதி ஆதிக்கம், ஆணாதிக்கம், மூடநம்பிக்கைகள், பெண் வீட்டார் மீது மாப்பிள்ளை வீட்டார் இந்த காலத்திலும் செலுத்தும் அதிகாரம் என படம் போகிற போக்கில் பல விஷயங்களை வசனங்கள் வழியே தொட்டுச் செல்கிறது. தெருவில் உள்ள ஒரு ஸ்பீக்கரில் பாடும் ‘ஒத்தையடி பாதையிலே’ பாட்டை அன்னா பென் முணுமுணுப்பதும், அதைத் தொடர்ந்து சூரி, அன்னா பென் தொடங்கி மாமியார், மாமனார், அப்பா என அனைவரையும் அடித்து, தகாத வார்த்தைகளைக் கொண்டு திட்டும் காட்சி இந்த படத்தின் ‘பீக்’ தருணம். அந்த காட்சி முழுவதும் பார்க்கும் நமக்கு பதைபதைப்புடனே நகரும்படி காட்சிப்படுத்தப்பட்டிருப்பது சிறப்பு. படத்தின் பெரிய பலம் அதன் நடிகர்கள். சூரி, அன்னா பென் தவிர யாரும் தெரிந்த முகங்கள் கிடையாது. எனினும் படத்தில் நடித்த அனைவருமே மிக இயல்பான நடிப்பை வழங்கியுள்ளனர். நடிப்பில் ‘விடுதலை’, ‘கருடன்’ படங்களை காட்டிலும் சூரிக்கு இது மிக முக்கியமான படம். தொண்டையில் பிரச்சினை இருக்கும் நபராக படம் முழுக்க கரகரத்த குரலில் பேசுவதும், குடும்பத்தில் சம்பாதிக்கும் ஒரே நபராக அவர் காட்டும் அதிகாரமும் என ஒவ்வொரு காட்சியிலும் வியக்க வைக்கிறார். அன்னா பென்னுக்கு படத்தில் ஒரே ஒரு வசனம் மட்டும்தான். மற்றபடி வசனமே இல்லாமல் வெறித்து பார்த்தபடி மிரட்டலான நடிப்பை வழங்கி அவரும் ஸ்கோர் செய்கிறார். இவர்கள் தவிர சூரியின் சொந்தக் காரர்களாக பைக்கில் பின்னாலேயே வரும் இருவர், சூரியின் தங்கை மகனாக வரும் சிறுவன் என அனைவரும் சிறப்பான நடிப்பை தந்துள்ளனர். படத்தில் இசை கிடையாது. எனினும் கதாபாத்திரங்களை சுற்றி நடப்பவற்றிலிருந்து வரும் சத்தங்களே அந்த குறை தெரியாமல் காப்பாற்றுகின்றன. பின்னணி இசை இருந்திருந்தால் கூட படத்தோடு நம்மால் முழுமையாக ஒன்றியிருக்க முடியுமா என்று தெரியவில்லை. சமரசமே இன்றி பின்னணி இசையை கூட சேர்க்காமல் தன்னுடைய திறமை நம்பிக்கை வைத்த இயக்குநரை பாராட்டலாம். குறிப்பிட்டு பாராட்டப்பட வேண்டியது சக்தியின் ஒளிப்பதிவு. கிராமத்தில் கரடுமுரடான சாலைகளில் சென்று கொண்டிருக்கும் அந்த ஆட்டோவில் நாமும் பயணிப்பதைப் போன்ற ஓர் உணர்வு ஏற்படுகிறது. படத்தின் நீளம் வெறும் 1 மணி நேரம் 40 நிமிடங்கள் தான். ஆனால் அதில் முக்கால்வாசி நேரத்தை நீள நீளமாக வைக்கப்பட்ட ஷாட்களே நிரப்பியிருக்கும் என்று தெரிகிறது. தேவை இருக்கிறதோ இல்லையோ, கதாபாத்திரங்கள் நடந்து கொண்டே இருப்பதை காட்டுவது, திரையின் ஒரு ஓரத்தில் கிளம்பும் ஆட்டோ மற்றொரு ஓரத்தை அடையும் வரையும், திரையை விட்டு மறைந்த பிறகும் கூட ஷாட் அப்படியே இருப்பது, என அளவுக்கு அதிகமாக வைக்கப்பட்ட நீளமான ஷாட்கள் பல இடங்களில் சற்றே சலிப்பை ஏற்படுத்துவதை தவிர்க்க முடியவில்லை. எந்தவொரு தீர்வும் இல்லாமல் சூரியின் கோணத்திலிருந்து முடியும் க்ளைமாக்ஸ் ஆடியன்ஸின் பார்வைக்கே விடப்பட்டாலும், திரையரங்குக்கு வரும் பொதுவான பார்வையாளர்களால் அது ரசிக்கப்படுமா என்று தெரியவில்லை. மொத்தத்தில், நுணுக்கமான காட்சியமைப்புகள், கிராமத்தின் வாழ்வியலை மிக இயல்பாக காட்டிய விதம் என ஒரு முக்கியமான சர்வதேச கலைப் படைப்பை எந்தவித சமரசமும் செய்யாமல் கொடுத்துள்ள இயக்குநரையும், இதனை தயாரித்த சிவகார்த்திகேயனையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும். கொட்டுக்காளி Review: வினோத்ராஜின் மற்றொரு சமரசமற்ற கலைப் படைப்பு! | Kottukkaali Movie Review - hindutamil.in
-
உ.பி: மருத்துவமனையில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட செவிலியர்... மருத்துவர் உட்பட மூவர் கைது!
உத்தரப்பிரதேச மாநிலம், மொராதாபாத் மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில், 20 வயது செவிலியர் வேலை செய்துவந்தார். இந்த நிலையில், ஆகஸ்ட் 17-ம் தேதி இரவு 7 மணிக்கு பணிக்குச் சென்றிருக்கிறார் அந்தப் பெண் செவிலியர். அன்று இரவு, மருத்துவமனையின் மற்றொரு செவிலியர் மெஹ்னாஸ், டாக்டர் ஷாநவாஸ் என்பவரை அவரது அறையில் சந்திக்கும்படி, அந்தச் செவிலியரிடம் கூறியிருக்கிறார். அதற்கு அந்தச் செவியிலியர் மறுத்ததால், மெஹ்னாஸ், வார்டு பாய் ஜுனைத் ஆகியோர், மருத்துவமனையின் மேல் தளத்தில் உள்ள அறைக்கு வலுக்கட்டாயமாக அந்தச் செவிலியரை இழுத்துச் சென்று அடைத்து வெளியிலிருந்து பூட்டியுள்ளனர். அதைத் தொடர்ந்து, டாக்டர் ஷாநவாஸ் அந்த அறைக்குள் நுழைந்து, உள்பக்கமாகப் பூட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், இதை வெளியில் கூறினால் கொலை செய்வதாக மிரட்டியதாகவும், குற்றம்சாட்டப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக செவிலியரின் தந்தை மொரதாபாத் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். இந்த விவகாரம் தொடர்பாக பாரதிய நியாய் சன்ஹிதா (பிஎன்எஸ்) மற்றும் எஸ்சி/எஸ்டி சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் எப்.ஐ.ஆர் பதிவுசெய்த காவல்துறை, குற்றம்சாட்டப்பட்ட மூவரையும் கைதுசெய்தது. இந்த சம்பவம் குறித்து மொராதாபாத் காவல் கண்காணிப்பாளர் (எஸ்பி) சந்தீப் குமார் மீனா கூறுகையில், ``இந்த விவகாரம் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. குற்றம்சாட்டப்பட்ட மூன்று பேர்மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, கைதுசெய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக விசாரிக்க ஒரு விசாரணைக் குழுவும் அமைக்கப்பட்டிருக்கிறது. மேலும் அந்தப் பெண்ணுக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டிருக்கிறது. விசாரணையின் முடிவுகளின் அடிப்படையில், சம்பவம் நடந்த மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது." எனக் குறிப்பிட்டிருக்கிறார். செவிலியரின் தந்தை, உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்திடம், ``என் மகள் பட்டப்படிப்பு தொடர்ந்து வருகிறார். கடந்த பத்து மாதங்களாக உள்ளூர் மருத்துவமனையில் செவிலியராகப் பணிபுரிந்தார். ஆனால் மருத்துவரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருக்கிறார். குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும்" எனக் கோரிக்கை வைத்திருக்கிறார். உ.பி: மருத்துவமனையில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட செவிலியர்... மருத்துவர் உட்பட மூவர் கைது! | nurse raped by doctor in U.P. hospital, 3 held - Vikatan
-
அநியாயம் செய்கிற, கொடூரமாக செயல்படுகின்ற, ஜனாஸாக்களை எரித்த, எதிர்ப்பதற்கு உத்தரவிட்ட கூட்டம் இன்று ரணிலுடன் கை கோர்த்துள்ளது ; ரிஷாட் பதியுதீன் !
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கும் எமக்கும் எவ்வித பிரச்சனையும் இல்லை. அவரை பொறுத்தவரையில் எங்களிடத்தில் நல்லெண்ணமே இருக்கிறது.ஆனால் அவருடன் சேர்ந்து இருக்கிற கூட்டம் இந்த நாட்டிலே அநியாயத்தை செய்கிற,கொடூரமாக செயல்படுகின்ற ஜனாஸாக்களை எரித்த எதிர்ப்பதற்கு உத்தரவிட்ட அந்த ஜனாதிபதியுடன் கை கோர்த்து உள்ளவர்கள் இன்று யாருடன் இருக்கிறார்கள் என்று உங்களுக்குத் தெரியும். இதனாலேயே நாங்கள் ரணில் விக்கிரமசிங்க அவர்களை ஆதரிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். மன்னார் முசலியில் நேற்று திங்கட்கிழமை (19) மாலை இடம் பெற்ற விளையாட்டு நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச அவர்களுக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தனது ஆதரவு தெரிவித்த நிலையில் முதல் முதலாக இக்கிராமத்திற்கு வருகை தந்து பேசக்கூடிய ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. நடைபெற உள்ள தேர்தலில் நாங்கள் ஏமாந்து விடாது புத்தி சாதுரியமாக எமது வாக்குகளை பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது. இக் காலத்தில் நாங்கள் மிக நிதானமாக சிந்திக்க வேண்டியுள்ளது. ஜனாதிபதி தேர்தலில் நான்கு வேட்பாளர்கள் மத்தியில் போட்டி நிலவுகிறது. அவர்களின் நாங்கள் மூன்று வேட்பாளர்களை நிராகரித்து விட்டு,ஒருவரை மாத்திரம் ஏன் நாங்கள் ஆதரிக்கிறோம் என்று நீங்கள் சிந்திக்கலாம்.இந்த நாட்டிலே எதிர் காலத்தில் இனவாதம் இருக்க கூடாது என்று ஆசைப்படுகிறோம். ஜனாஸாக்களை எரிக்கின்ற கேடு கெட்ட ஜனாதிபதி இந்த நாட்டிலே மீண்டும் வந்து விடக் கூடாது என்று நாங்கள் ஆசைப்படுகிறோம். இவ்வாறு ஜனாஸாக்களை எரிகின்ற போது கைகட்டி பார்த்துக் கொண்டு இருந்தவர்கள் ,அமைச்சரவையில் இருந்தவர்கள்,அதற்கு பக்கபலமாக இருந்தவர்கள்,144 உறுப்பினர்களுடன் பாராளுமன்றத்தை வென்ற ஜனாதிபதி கோட்டபாய அவர்களுக்கு 20 ஆவது திருத்தச் சட்டத்தை வெள்ளச் செய்வதற்காக எமது சமூகத்தை சேர்ந்த 6 உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தனர். எமது சமூகத்தை அழிக்க கை உயர்த்திய அர்த கூட்டம் இன்று எங்கே இருக்கிறார்கள் என்று பாருங்கள். இந்த நாட்டிலே ஒரு காலத்தில் ஆயுத கலாச்சாரத்தை தூது விட்டவர்கள்,தற்போது ஜனநாயகத்தை பேசுகின்றவர்கள்,அவர்கள் இன்று எந்த மார்க்கத்தையும் ஏற்றுக்கொண்டவர்கள் இல்லை.அவர்கள் நாஸ்திக கொள்கையைக் கொண்டவர்கள். இவ்வாறானவர்கள் உடன் இணைந்து நாங்கள் இந்த நாட்டின் ஆட்சிப் பொறுப்பை கொடுக்க முடியுமா?,என்று சிந்திக்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கும் எமக்கும் எவ்வித பிரச்சனையும் இல்லை.அவரை பொறுத்தவரையில் எங்களிடத்தில் நல்லெண்ணமே இருக்கிறது. ஆனால் அவருடன் சேர்ந்து இருக்கிற கூட்டம் இந்த நாட்டிலே அநியாயத்தை செய்கிற,கொடூரமாக செயல்படுகின்ற ஜனாஸாக்களை எரித்த எதிர்ப்பதற்கு உத்தரவிட்ட அந்த ஜனாதிபதியுடன் கோர்த்துள்ளவர்கள் இன்று யாருடன் இருக்கிறார்கள் என்று உங்களுக்குத் தெரியும்.இதனாலேயே நாங்கள் ரணில் விக்கிரமசிங்க அவர்களை ஆதரிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அபிவிருத்தி இடம்பெற்று வருகின்றது என்று ஏமாந்து விடாதீர்கள்.அரசாங்கம் என்பது மக்களின் பணம்.அரசாங்கத்தில் யார் யார் எல்லாம் இருக்கின்றார்களோ அவர்களினால் அபிவிருத்தி பணிகளை முன்னெடுக்க முடியும்.எனவே இந்த நாட்டிலே மீண்டும் ஒரு முறை இனவாதம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக இந்த முடிவை நாங்கள் எடுத்துள்ளோம்.நான் மட்டுமல்ல சிறுபான்மை தலைவர்களும் சஜித் பிரேம தாசவுடன் கைகோர்த்துள்ளனர். பொருளாதாரத்தை கட்டியெழுப்ப கூடிய சட்ட வல்லுநர்கள் பலர் இருக்கின்றனர். இனவாதத்திற்கு எதிரான சமூக பற்றுள்ளவர்கள் இருக்கிறார்கள்.கரைபடியாத உள்ளங்கள் பலர் இருக்கின்ற அணியாகவே சஜித் பிரேமதாச அணி இருக்கின்றன. அந்த அணியை பலப்படுத்துகின்ற கடமை தமிழர்களுக்கும், முஸ்ஸீம்களுக்கும்,மலையக தமிழர்களுக்கும் இருக்கின்றது.இந்த மூன்று சமூகத்தின் வாக்கும் மிகவும் பெறுமதியான வாக்குகளாகவே இருக்கின்றது. எனவே சஜித் பிரேமதாச அவர்களுக்கு சிறுபான்மை மக்களின் வாக்குகளும் அமோக வெற்றிக்கு வழிவகுக்கும். எதிர்வரும் 22 ஆம் திகதி தேர்தல் முடிவு வருகின்ற போது சஜித் பிரேமதாச ஜனாதிபதியாக வருவார். மன்னார் மாவட்டத்தில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுப்போம்.எனவே அனைவரும் உங்கள் வாக்குகளை சீரழிக்காமல் சஜித் பிரேமதாசவிற்கு வழங்கி வெற்றி பெறச் செய்யுங்கள் என்றார். அநியாயம் செய்கிற, கொடூரமாக செயல்படுகின்ற, ஜனாஸாக்களை எரித்த, எதிர்ப்பதற்கு உத்தரவிட்ட கூட்டம் இன்று ரணிலுடன் கை கோர்த்துள்ளது ; ரிஷாட் பதியுதீன் ! | Virakesari.lk
-
யாழ்ப்பாணத்திற்கு வருகை தரவுள்ள திராவிடக்கழக தலைவர் கி.வீரமணி!
20 Aug, 2024 | 05:11 PM தமிழ்நாட்டை சேர்ந்த திராவிட கழக தலைவர் கி.வீரமணி யாழ்ப்பாணத்திற்கு வருகை தரவுள்ளார். நாடாளுமன்ற முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் மறைந்த அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் 97ஆவது பிறந்தநாள் நினைவு பேருரை எதிர்வரும் சனிக்கிழமை மாலை 3 மணிக்கு யாழ்ப்பாணத்தில் உள்ள றிம்பர் மண்டபத்தில் நடைபெறவுள்ளது. அந்நிகழ்வில் கலந்துகொள்வதற்காகவே கி. வீரமணி யாழ்ப்பாணத்திற்கு வருகை தரவுள்ளார். யாழ்ப்பாணத்திற்கு வருகை தரவுள்ள திராவிடக்கழக தலைவர் கி.வீரமணி! | Virakesari.lk
-
பாடசாலை மாணவிகள் முதலில் பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளாகுவது தங்களது காதலர்களால் !
பெரும்பாலான பாடசாலை மாணவிகள் முதலில் பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளாவது தங்களது காதலர்களால் என மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான மருத்துவ ஒன்றியத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார். நேற்று திங்கட்கிழமை (19) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், பாடசாலை மாணவிகளைப் போன்று மாணவர்களும் இவ்வாறு பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாகுகின்றனர். இந்நிலையில், பாடசாலை மாணவிகளை விட மாணவர்களே அதிகளவாக பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாகி வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். பாடசாலை மாணவிகள் முதலில் பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளாகுவது தங்களது காதலர்களால் ! | Virakesari.lk
-
ஜனாதிபதி ரணிலை ஆதரிக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர்களுக்கு புதிய அரசியல் கட்சி !
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான புதிய அரசியல் கட்சியொன்றை உருவாக்குவது தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று செவ்வாய்க்கிழமை (20) கொழும்பில் இடம்பெற்றது. எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின் பின்னர் நடைபெறும் எந்தவொரு தேர்தலுக்கும் இந்த புதிய அரசியல் கட்சியின் மூலம் வேட்பாளர்களை முன்வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் ஆளும் கட்சியின் பிரதம கொறடா பிரசன்ன ரணதுங்க ஆகியோரின் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவாக கருத்து தெரிவித்த ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நூற்றுக்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். புதிய அரசியல் கட்சிக்கு பல பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. எதிர்காலத்தில் உருவாக்கப்படவுள்ள புதிய அரசியல் கட்சிக்கான அரசியலமைப்பு ஏற்கனவே தயாரிக்கப்பட்டு விட்டதால், அந்த அரசியலமைப்பின் படி செயற்படுவதற்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர். ஜனாதிபதி ரணிலை ஆதரிக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர்களுக்கு புதிய அரசியல் கட்சி ! | Virakesari.lk
-
இலங்கை மக்கள் தெரிவு செய்யும் எவருடனும் இணைந்து பணியாற்ற தயார் - இந்திய தூதுவர்
இலங்கை மக்கள் தெரிவுசெய்யும் எந்த அரசாங்கத்துடனும் இணைந்து பணியாற்றுவதற்கு இந்தியா தயார் என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஸ் ஜா தெரிவித்துள்ளார். கண்டியில் பௌத்தமத தலைவர்களுடனான சந்திப்பின் பின்னர் அவர் இதனை தெரிவித்துள்ளார் இலங்கை மக்களின் தெரிவுகளை மதிப்பது குறித்த இந்தியாவின் உறுதிப்பாட்டையும்,இரண்டு நாடுகளில் எவர் ஆட்சி செய்தாலும் வலுவான இருதரப்பு உறவுகளை பேணுவது குறித்த உறுதிப்பாட்டையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார். இலங்கை மக்களே தெரிவு செய்யவேண்டி யவர்கள்,இலங்கை தீர்மானிக்கும்,இலங்கை மக்கள் தீர்மானிக்கும் எதனையும் நாங்கள் மதிப்போம் என அவர் தெரிவித்துள்ளார். இலங்கை மக்கள் தெரிவுசெய்யும் எந்த அரசாங்கத்துடனும் இணைந்து பணியாற்றுவோம்,எங்கள் நட்பு என்பது அனைத்து இலங்கைக்கும்,அனைத்து இலங்கையர்களிற்குமானது என அவர் தெரிவித்துள்ளார். இலங்கையையும் இந்தியாவையும் இணைக்கும் பாலம் குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர்,இதற்கு சில காலம் எடுக்கும்,இது நீண்ட திட்டம் ஓரிருவருட திட்டம் இல்லை,எவ்வளவு காலம் நீடிக்கும் என தெரிவிக்க முடியாது ஐந்து ஆறுவருடங்கள் நீடிக்கலாம்,இரு தரப்பும் இணைந்து பணியாற்றுவதிலேயே இது தங்கியுள்ளது,இதனை பரஸ்பர இணக்கப்பாடு புரிந்துணர்வுடனேயே முன்னெடுப்போம் என அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கை மக்கள் தெரிவு செய்யும் எவருடனும் இணைந்து பணியாற்ற தயார் - இந்திய தூதுவர் | Virakesari.lk
-
மட்டு நகரில் பிரபல உணவகத்தை 22ஆம் திகதி வரை மூடுமாறு நீதிமன்றம் உத்தரவு
KFC க்கு பூட்டு Janu / 2024 ஓகஸ்ட் 19 , மு.ப. 11:19 - 0 - 41 சுகாதார சீர்கேட்டை முன்னிட்டு மட்டக்களப்பு KFC விற்பனை நிலையம் ஞாயிற்றுக்கிழமை (18) அன்று மூடப்பட்டுள்ளது. மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிமனைக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமைய , சுகாதார பரிசோதகர்கள் மற்றும் சுகாதார மருத்துவ பணிமனையின் அதிகாரிகளால் மட்டக்களப்பு KFC நிலையத்தில் திடீர் சோதனை மேற்கொள்ளப்பட்டது . இதன் போது உணவு பொருட்கள் உரிய முறையில் விநியோகிக்கப்படாமை, களஞ்சியப்படுத்தப்படாமை, கழிவு நீர் முகாமைத்துவம் சரியாக பேணப்படாமை உணரப்பட்டதனைத் தொடர்ந்து குறித்த நிறுவனத்தின் மேல் நீதி மன்றத்தினால் வழக்கு தொடரப்பட்டு, எதிர்வரும் (22) திகதி வரை தற்காலிகமாக பூட்டப்பட்டுள்ளதாகவும், இனிவரும் காலங்களில் இவ்வாறு செயற்படும் உணவகங்கள் மீது உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி இராசரெட்ணம் முரளீஸ்வரன் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். எம். எஸ். எம். நூர்தீன் Tamilmirror Online || KFC க்கு பூட்டு
-
வெடிகுண்டு தாக்கப்பட்ட காருடன் வந்த பொன்சேகா
இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் சரத் பொன்சேகா லந்தர் சின்னத்தில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுகின்றதுடன் அவரின் முதலாவது தேர்தல் பேரணி கம்பஹா மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (18) இடம்பெற்றது. இதன்போது வெடிகுண்டு தாக்கப்பட்ட காரையும் அவர் தனது பேரணிக்கு கொண்டு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது . Tamilmirror Online || வெடிகுண்டு தாக்கப்பட்ட காருடன் வந்த பொன்சேகா
-
இணையத்தில் அனைவரது கவனத்தையும் ஈர்த்த ஈழத்து வெளியீடு!
இணையத்தில் அனைவரது கவனத்தையும் ஈர்த்த ஈழத்து வெளியீடு! தமிழ்க்கடவுள் முருகனின் வரலாறையும் தற்கால நிகழ்வுகளையும் இணைந்தவாறு குமரி கண்ட குமரன் எனும் பாடல் ஈழத்து இளைஞர்களால் வெளியீடு செய்யப்பட்டு அனைவரது கவனத்தையும் இணையத்தில் ஈர்த்துள்ளது. புத்தி கெட்ட மனிதரெல்லாம் மற்றும் டக் டிக் டோஸ் போன்ற வெற்றிப்படங்களை கொடுத்த குழுவிடம் இந்த படைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இதற்க்கான நிதியினை மக்களிடமிருந்தே சேகரித்துள்ளனர். "குமரி கண்ட குமரன்" என்ற பாடல், தமிழரின் தொன்மையான நிலமையான குமரி கண்டம் நிலவிய காலத்திற்குத் திரும்பி, அவ்வழியிலே பயணிக்கச் செய்கிறது. சமுத்திரத்தில் மறைந்ததாகக் கூறப்படும் குமரி கண்டத்தின் கதை, மற்றும் அதில் வாழ்ந்த தமிழர்களின் போராட்டம், தைரியம் மற்றும் முருகன் எனும் தெய்வத்தின் மீது அவர்கள் கொண்ட நம்பிக்கை ஆகியவை பாடலில் புலப்படுகின்றன . இந்த பாடலின் வரிகள், குமரனின் கதையை, தமிழர் மக்களின் போராட்டம், தைரியம், மற்றும் அவர்களின் புனித ஆற்றலின் அடையாளமாக விளங்கும் முருகனைச் சித்தரிக்கின்றன. அவற்றை கமல் அபரன் மற்றும் சாந்தகுமார் எழுதியுள்ளனர். பூவன் மதீசனின் கருவில் அவரே இசையமைத்துள்ள இந்த பாடல், கோகுலன் சாந்தன் சத்தியன் உள்ளிட்ட பல்வேறு குரல் கலைஞர்கள் இணைந்து பாடியதன் மூலம், ஈழத்தின் இசை வடிவத்தை பிரதிபலிக்கின்றது. இசையின் மேலதிக நுட்பங்களையும் ஒளிச்சமபடுத்தல்களையும் இசை மேம்படுத்தல்களையும் சாயீதர்ஷன் மேற்கொண்டுள்ளார். ராஜ் சிவராஜ் இயக்கிய இந்த வீடியோ, தமிழர் கலாச்சாரத்தின் அழகும் ஆழமும் கொண்ட காட்சிப் பொழிவாக உருவாக்கப்பட்டுள்ளது. ஏ கே கமல் அவர்களின் ஒளிப்பதிவு, அருணின் படத்தொகுப்பு மற்றும் குணரத்தினம் வாசிகரன், தாரு மற்றும் சத்யஜித் ஆகியோரின் ஒத்துழைப்புடன், குமரனின் கதையை உயிரோட்டமாக்குகின்றது. வி.எஸ். சிந்துவின் கலை இயக்கமும், முகமது நவீத் ஒழுங்கமைத்த நடனமும், தமிழர் மரபுகளையும், நம் மண்ணுக்கான காலமற்ற இணைப்பையும் பிரமிக்க வைக்கின்றன. முருகனாக வரும் தர்மலிங்கமும் தனது பங்கை செவ்வனே செய்திருக்கின்றார். "குமரி கண்ட குமரன்" தமிழர் கலாச்சாரம், வரலாறு மற்றும் அரசியல் ஆகியவற்றில் ஆர்வம் கொண்ட அனைவரும் கண்டுகளிக்க வேண்டிய காணொலி ஆகும். இது நம் எதிர்காலத்தையும் புத்துணர்வுடன் நினைவூட்டுகிறது, நம் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தை பாதுகாக்கவும், கொண்டாடவும், நம்பிக்கையையும், சமூக ஒற்றுமையையும், கலைகளையும் கொண்டாடும் பேராண்மையை மெய்ப்பிக்கிறது. மக்களுக்காக போராடிய தலைவர்கள் தெய்வமாக்கப்பட வேண்டியவர்கள் எனும் தொனிப்பொருளை இது விட்டுச்செல்வதாகவும் இருக்கிறது. (ப) #Eelam #srilanka #jaffna #uthayan #digital #newuthayan #sanjeevi #newupdet இணையத்தில் அனைவரது கவனத்தையும் ஈர்த்த ஈழத்து வெளியீடு! (newuthayan.com)
-
பொலிஸ் காணி அதிகாரம் தமிழ் மக்களை ஏமாற்றும் செயல் ; ரணிலின் நாடகத்தில் தமிழ் கட்சிகள் - சந்திரசேகரன்
16 Aug, 2024 | 05:36 PM பொலிஸ் காணி அதிகாரம் தமிழ் மக்களை ஏமாற்றும் செயல் - ரணிலின் நாடகத்தில் தமிழ் கட்சிகள் தமிழ் மக்களுக்கு பொலிஸ் மற்றும் காணி அதிகாரத்தை ஆட்சிக்கு வந்தபின் பெற்று தருவதாக கூறும் ரணில் விக்கிரமசிங்கவின் நாடகத்தை தமிழ் மக்கள் நம்ப மாட்டார்கள் என தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்தார். நேற்று (15) வியாழக்கிழமை யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் தேர்தல் பிரச்சார அலுவலகத்தை திறந்து வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போது ஜனாதிபதி தேர்தலில் 22 அரசியல் கட்சிகள் மற்றும் 17 சுயேச்சைக் குழு வேட்பாளர்கள் போட்டியிடுவதற்கு தகுதி பெற்றுள்ளனர். அனேகமாக சுயேச்சை குழு வேட்பாளராக களம் இறங்கியவர்கள் ரணில் விக்கிரமசிங்கவின் நிகழ்ச்சி நிரலில் களமிறங்கியவர்கள். தேசிய மக்கள் சக்தி தமிழ் சிங்கள முஸ்லிம் மலையக மக்களை பிரதிநிதித்துவப்படுத்தி நாட்டின் ஒளிமயமான எதிர்காலத்தை ஏற்படுத்துவதற்காக இம்முறை ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கியுள்ளது. தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரவுக்கு அனைவருடைய ஆதரவும் பெருகிவரும் நிலையில் அதனை சகித்துக் கொள்ள முடியாத ஏனைய கட்சிகள் பொய் பிரச்சாரங்களை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளன. இவ்வாறான ஒரு நிலையில் ரணில் விக்கிரமசிங்க தமிழ் கட்சிகளை சந்தித்து பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை மாகாணங்களுக்கு வழங்குவது தொடர்பில் தான் கரிசனையாக உள்ளதாக தெரிவித்திருக்கிறார். ரணில் விக்கிரமசிங்க 41 வருட காலமாக பாராளுமன்றத்தில் உள்ள நிலையில் ஆறு தடவைக்கு மேலாக எதிர்க்கட்சி தலைவராகவும் பிரதமர் மற்றும் தற்போது ஜனாதிபதியாக உள்ளார். தமிழ் மக்களுக்கு காணி போலீஸ அதிகாரத்தை வழங்க வேண்டுமானால் தனது விசேட அதிகாரத்தை பயன்படுத்தி வழங்கியிருக்க முடியும் ஏன் மீண்டும் ஜனாதிபதி ஆகிய பின்னர் வழங்கப் போவதாக கூறுகிறார். தமிழ் மக்கள் சார்ந்த தேசிய இன பிரச்சனையை தீர்ப்பதற்காக முழு பாராளுமன்றமும் செயற்குழுவாக கூடிய நிலையில் 84 தடவைகள் கூட்டம் இடம்பெற்றது. குறித்த கூட்டத்திற்கு ஐக்கிய தேசியக் கட்சி சார்ந்து எந்த ஒரு முன்மொழிவையும் சமர்ப்பிக்காத ரணில் விக்கிரமசிங்க தமிழ் மக்களின் பிரச்சினையை தீர்க்கப் போகிறேன் என கூறுவது வேடிக்கையாக உள்ளது. தமிழ் மக்கள் கடந்த காலங்களாக பச்சை மற்றும் நீல நிறங்களுக்கு தடுமாறியமைக்கு தமிழ் தலைவர்களே பொறுப்பேற்க வேண்டும். ஏனெனில் தமது மக்களை சரியான வழியில் வழிநடத்த முடியாதவர்களாக தமிழ் தலைவர்கள் காணப்பட்டதன் காரணமாக மக்களும் பல நிறங்களை ஆதரிக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. ஆகவே ரணில் விக்கிரமசிங்கவின் அப்பா, தாத்தா மற்றும் பாட்டன் ஆகியோரின் ஆட்சி காலத்தில் தமிழ் மக்கள் வஞ்சிக்கப்பட்ட வரலாறுகளே அதிகமாக உள்ள நிலையில் தமிழ் மக்கள் ரணில் விக்கிரமசிங்கவின் வாக்குறுதிகளை நம்பி ஏமாற வேண்டாம் என அவர் மேலும் தெரிவித்தார். பொலிஸ் காணி அதிகாரம் தமிழ் மக்களை ஏமாற்றும் செயல் ; ரணிலின் நாடகத்தில் தமிழ் கட்சிகள் - சந்திரசேகரன் | Virakesari.lk
-
எம் கையாலேயே எம் கண்களைக் குருடாக்கும் தென்னிலங்கை அரசியல் சக்திகள் : தமிழ் மக்கள் அவதானமாக செயற்படவேண்டும் என்கிறார் சுரேஷ்
16 Aug, 2024 | 09:02 PM எம்மவர்களைக் கொண்டே எம்மைப் பிரித்தாண்டு எமது ஒற்றுமையை சிதைத்து, எமது அபிலாசைகளைக் குழிதோண்டிப் புதைத்து எம்மீது மீண்டும் ஒடுக்குமுறைகளை மேற்கொள்வதற்கு எம்மிடமே ஆணை பெறுவதற்கு தென்னிலங்கை அரசியல்வாதிகள் முயற்சிக்கின்றனர். எனவே நாம் விழிப்புடன் இருந்து எம்மை பலியிடத் துடிக்கும் சக்திகளைப் புறந்தள்ளி அவர்களின் விருப்பம் நிறைவேறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் க. பிரேமச்சந்திரன் அறைகூவல் விடுத்துள்ளார். இதுகுறித்து சுரேஷ் பிரேமச்சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: 2024 ஆம் ஆண்டிற்கான ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்றுக்கொள்வதற்காக அதன் முக்கிய வேட்பாளர்களான ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாச, அனுரகுமார திஸாநாயக்க போன்றோர் அடிக்கடி வடக்கு - கிழக்குக்கு வருவதும் அங்குள்ள பல்வேறு கட்சிகளையும் தனிநபர்களையும் சந்தித்துப் பேசுவதும் இப்பொழுது கிரமமாக நடைபெற்று வருகின்றது. இதற்கு மேலதிகமாக தமிழர் தரப்புகளை கொழும்புக்கு வருமாறு அழைத்து அவர்களைச் சந்திக்க விரும்புவது ஒருபுறமும, சுமந்திரன் மற்றும் சாணக்கியன் போன்றோர் இவர்களைத் தேடித்திரிந்து சந்திப்பது இன்னொருபுறமுமாக அரசியல் நகர்த்தலில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக சுமந்திரன் அண்மைக்காலங்களில் மீண்டும் மீண்டும் ரணில் விக்கிரமசிங்கவைச் சந்திப்பதும் அவற்றைப் பெரிய செய்தியாகப் பத்திரிகைகளுக்குக் கொடுப்பதும் பத்திரிகைகளும் ரணில் விக்கிரமசிங்க தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கப்போகிறார் என்ற சாரப்பட கருத்துகளை எழுதுவதும் இப்பொழுது நடைபெற்று வருகின்றது. 2024 ஆம் ஆண்டின் ஆரம்பத்திலிருந்து தமிழர் தரப்பில் ஒரு பொதுவேட்பாளரை நிறுத்துவது தொடர்பாக ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்குள் பல சுற்றுப் பேச்சுகள் நடைபெற்றன. அதன் பிரகாரம் ஒரு தமிழ் பொதுவேட்பாளருக்கான தேவை இருக்கின்றது என்பதை எமது கூட்டணி ஏற்றுக்கொண்டது. அதேசமயம் தமிழ்த்தேசியப் பரப்பிலுள்ள சிவில் அமைப்புகளும் இவ்வாறான ஒரு தேவை இருப்பதை தமது கலந்துரையாடல்கள் மூலம் உறுதிப்படுத்தின. அதன் பின்னர் இருதரப்பினரும் இணைந்து தமிழ் பொதுவேட்பாளர் ஒருவரை நியமிப்பது தொடர்பாக ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதுடன் பொதுவேட்பாளரை நிறுத்துவது என்ற இலக்கை நோக்கி முன்னேறினர். இந்தக் காரணங்களினால் அச்சமடைந்துள்ள தென்னிலங்கை ஜனாதிபதி வேட்பாளர்கள் தமிழ் மக்களின் வாக்குகளை எப்படியாவது பெற்றுவிட வேண்டும் என்ற நோக்கில் பலமுனைகளிலும் காய்நகர்த்தல்களை மேற்கொள்கின்றனர். இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி சுமந்திரன் தனிநபராக தனது கட்சியினரின் ஒப்புதலோ அல்லது தமிழ் மக்களின் ஒப்புதலோ இல்லாமல் தான் ஜனாதிபதியுடன் பேசுகிறேன் என்று கூறுவதும் 13 ஐ அவர் முழுமையாகத் தந்துவிடப்போகிறார் என்று சாரப்பட கருத்துகளை வெளியிடுவதும் தேர்தலில் மக்களை பிழையான பாதைக்கு இட்டுச்செல்வதற்கான ஒரு முயற்சியாகும். தமிழ் மக்களது உரிமைகளைப் பெற்றுக்கொள்வதற்காக இந்த ஜனாதிபதித்தேர்தல் களத்தைப் பாவிக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்த வேண்டும் என்பதே தமிழர் தரப்பின் நோக்கமாகும். ஆனால் அதனை எதிர்த்து நிற்பது போன்ற தோற்றத்தைக் காட்டி நிற்கும் சுமந்திரன் தமிழ் பொதுவேட்பாளர் என்ற எண்ணக்கருவை முன்னிறுத்தியே இந்த பேச்சு வார்த்தைகளை நடாத்தி வருகின்றார். சுமந்திரனுக்கு பேச்சுவார்த்தைகள் தொடர்பாக குறைந்தபட்ச அனுபவங்களாவது இருக்கும் என்று நான் கருதுகின்றேன். மஹிந்த ராஜபக்ச தரப்புடன் 17 சுற்றுப்பேச்சுகள் நடாத்தப்பட்டு அவை எவ்வாறு தோல்வியில் முடிந்தது என்பது அவருக்குத் தெரியும். இதேபோன்று நல்லாட்சி காலத்தில் இதே ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் புதிய அரசியல் சாசனத்திற்காக நான்கு வருடங்கள் பேசி அது எவ்வாறு தோல்வியில் முடிந்தது என்பதும் அவருக்குத் தெரியும். அதன் பின்னர், ரணில் விக்கிரசிங்க ஜனாதிபதியாகப் பொறுப்பேற்றதன் பின்னர் 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கு நீங்கள் அனைவரும் தயாரா என்று கேட்டபொழுது மஹிந்த ராஜபக்ச உட்பட அனைவரும் அதற்கு ஆதரவு தெரிவித்தார்கள். ஆனால் அதன் பின்னர் அது தொடர்பாக ரணில் விக்கிரமசிங்க எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. அதே காலகட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் வடக்கு - கிழக்கில் மாகாணசபைத் தேர்தல் நடக்கும்வரை ஒரு இடைக்கால சபையை உருவாக்கும்படியும் அதற்கான முழு ஏற்பாடுகளையும் அவருக்கு சமர்ப்பித்தும்கூட அது தொடர்பாகவும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ரணில் விக்கிரமசிங்க இந்தியா சென்ற சமயத்திலும், இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி ஜெயசங்கர் இலங்கை வந்தபோதும் 13 ஐ முழுமையாக நிறைவேற்றும்படி வற்புறுத்தியும்கூட எதுவும் செய்யவில்லை. கடந்த இரண்டு வருடங்களாக நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியாக இருக்கின்ற ரணில் விக்கிரசிங்கவினால் அரசியல் சாசனத்தில் காணப்படும் 13 ஆவது திருத்தத்தில் உள்ள ஒருபகுதியைக்கூட நிறைவேற்றுவதற்கு எவ்வித நடவடிக்கையையும் மேற்கொள்ளாத நிலையில், சுமந்திரன் போன்றோர் தொடர்ச்சியாக ரணிலை சந்திப்பதும் மாகாணசபை அதிகாரங்கள் அனைத்தையும் அவர் கொடுப்பார் என்பது போன்ற அறிக்கையை வெளியிடுவதும் தமிழ் மக்களை தவறான பாதைக்கு வழிநடத்தும் ஒரு முயற்சியாகும். முன்னர் 13 ஐ முற்றுமுழுதாக எதிர்த்து நின்ற சுமந்திரன் இப்பொழுது 13 தான் ஏதோ பெற்றுக்கொடுப்பதுபோல் படம் காட்டுவதும் தமிழ் மக்கள் அரசியல் ஞானசூன்யங்கள் என்றும் அவர்களுக்கு எதுவும் புரியாது என்ற பாணியில்; நடந்துகொள்வதும் அவரது அறிவு முதிர்ச்சியின்மையின் வெளிப்பாடாகும். கொரோனா காலத்திற்குப் பின்னர் நாடு பொருளாதார ரீதியில் வங்குரோத்து அடைந்துவிட்டது என்ற சூழ்நிலையில் ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினருக்கும் வரவு-செலவு திட்டத்தில் ஒதுக்கப்படும் பன்முகப்படுத்தப்பட்ட நிதி நிறுத்தப்பட்டது. ஆனால் ஜனாதிபதி இப்பொழுது தான் விரும்பும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் தான் விரும்பியவாறு ஒதுக்கும் நிலையைக் காணமுடிகின்றது. இதன்மூலம் தமிழ் மக்களின் வாக்குகளை இலகுவாகப் பெற்றுவிடலாம் என்று ரணில் கனவு காண்பதாகவும் தோன்றுகின்றது. யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் ஜெனிவாவிலும், நியூயார்க்கிலும் சுமந்திரனின் நடவடிக்கைகள் என்பது தமிழ் மக்களது கோரிக்கைகளுக்கும் எதிர்பார்ப்புகளுக்கும் எதிராகவே இருந்திருக்கின்றது. இனப்படுகொலை நடக்கவில்லை என்று கூறுவதும் யுத்தக்குற்றங்கள் தொடர்பான விசாரணைகள் முடிவடைந்துவிட்டது என்று கூறுவதும் தொடர்ந்து அரசாங்கத்திற்கு கால அவகாசத்தைப் பெற்றுக்கொடுப்பதிலும் அவர் முன்னின்று செயற்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவை அனைத்தையும் புரிந்துகொள்வதினூடாக நாம் ஏன் தமிழ் பொது வேட்பாளரை களமிறக்குவது என்ற முடிவை எடுத்தோம் என்பதை உணர்ந்துகொள்ள முடியும். தமிழ் மக்கள் நீண்டகாலமாக இலங்கை அரசியலை கண்காணித்து வருபவர்கள். அவர்களை ஏமாளிகள் என்றோ இலகுவாக ஏமாற்றிவிடலாம் என்றோ நினைப்பது மடைமைத்தனமானது என்று அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. எம் கையாலேயே எம் கண்களைக் குருடாக்கும் தென்னிலங்கை அரசியல் சக்திகள் : தமிழ் மக்கள் அவதானமாக செயற்படவேண்டும் என்கிறார் சுரேஷ் | Virakesari.lk
-
தமிழினப்படுகொலை நினைவுத்தூபியை கனடாவில் நிர்மாணித்தால் நல்லிணக்க செயன்முறையைப் பாதிக்கும் - பிரம்டன் நகர மேயருக்கு இலங்கை கடிதம்!
கடந்தகால மீறல்கள் மறக்கடிக்கப்படமுடியாதவை என்பதற்கான நினைவுச்சின்னமாக தமிழினப்படுகொலை நினைவுத்தூபி திகழும் - ஹரி ஆனந்தசங்கரி 16 Aug, 2024 | 08:57 PM (நா.தனுஜா) இலங்கையின் கடந்தகால மீறல்கள் ஒருபோதும் மறக்கப்படமுடியாதவை என்பதற்கும், எமது மீண்டெழும் தன்மைக்குமான நிலையான சின்னமாக பிரம்டனில் நிர்மாணிக்கப்படவுள்ள தமிழினப்படுகொலை நினைவுத்தூபி திகழும் என கனடாவின் சுதேசிய உறவுகள் அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி நம்பிக்கை வெளியிட்டுள்ளார். கனடாவின் ஒன்டாரியோவில் உள்ள பிரம்டன் நகரில் தமிழினப்படுகொலை நினைவுத்தூபியை அமைப்பதற்கு வியாழக்கிழமை (15) அடிக்கல் நாட்டப்பட்டது. இதுகுறித்து இந்த நினைவுத்தூபியை நிர்மாணிப்பதற்கு அனுமதி வழங்கிய பிரம்டன் நகர மேயர் பற்ரிக் பிரவுன் அவரது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் பதிவொன்றைச் செய்திருக்கிறார். அப்பதிவில் தமிழினப்படுகொலையினால் பாதிக்கப்பட்ட 100,000 க்கும் மேற்பட்டோரை நினைவுகூரும் நோக்கில் இந்நினைவுத்தூபி நிர்மாண நடவடிக்கையை முன்னெடுத்திருப்பதற்காக கனேடியத் தமிழர்களின் தேசிய பேரவை, பிரம்டன் தமிழர் அமைப்பு மற்றும் பிரம்டன் தமிழ் சிரேஷ்ட பிரஜைகள் அமைப்பு ஆகியவற்றுக்கு நன்றி தெரிவிப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறார். 'இலங்கை அரசாங்கத்தினால் சிறுவர்கள் கொல்லப்பட்டனர். பெண்கள் வன்புணரப்பட்டனர். கிராமங்கள் பாரிய மனிதப்புதைகுழிகளாக மாற்றப்பட்டன. இனப்படுகொலை அரசாங்கத்தினால் காவு வாங்கப்பட்ட இந்த அப்பாவி உயிர்களை நாம் ஒருபோதும் மறக்கமாட்டோம்' எனவும் அவர் அப்பதிவில் தெரிவித்திருக்கிறார். 'தமிழர்களின் கனடாவுக்கான பயணம் என்பது எமது தேசிய கதையின் ஓரங்கமாகும். இலங்கை அரசாங்கத்தினால் கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறைகளின் விளைவாக நாட்டைவிட்டு வெளியேறிய தமிழர்களுக்கு ப்ரையன் மல்ரொனி தலைமையிலான அரசாங்கம் கனடாவின் கதவுகளைத் திறந்துவிட்டது. அதேபோன்று ஸ்டீபன் ஹார்பர் தலைமையிலான அரசாங்கம் இலங்கை தொடர்பில் கொள்கை ரீதியான தீர்மானமொன்றை மேற்கொண்டதுடன் இலங்கையில் நடைபெற்ற பொதுநலவாயக்கூட்டத்தொடரைப் புறக்கணித்தது. ஒன்டாரியோவின் ஃபோர்ட் அரசாங்கம் தமிழினப்படுகொலையை பாடசாலை மாணவர்களின் பாடவிதானத்தில் உள்ளடக்கியது. ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான அரசாங்கம் தமிழினப்படுகொலை நினைவேந்தல் நாளை அங்கீகரித்து ஏற்றதுடன், இலங்கையின் போர்க்குற்றவாளிகளுக்கு எதிராக பயண மற்றும் சொத்துத்தடைகளை விதித்தது' எனவும் மேயர் பற்ரிக் பிரவுன் சுட்டிக்காட்டியிருக்கிறார். மேலும் நீதியையும், நல்லிணக்கத்தையும் அடைந்துகொள்வதற்குப் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டியிருப்பினும், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதைப் புறந்தள்ளும் மிகமோசமான இலங்கை அரசாங்கத்துக்கு எதிரான தொடர் போராட்டத்தில் கனடா எப்போதும் முன்நிற்கும் எனவும் அவர் உறுதியளித்துள்ளார். அதேவேளை இதுகுறித்துக் கருத்து வெளியிட்டுள்ள கனடாவின் சுதேசிய உறவுகள் அமைச்சர் ஹரி ஆனந்த சங்கரி, 'எமது கூட்டிணைவு மற்றும் உறுதிப்பாடு என்பவற்றுக்கான வலுவான அடையாளமாகத் திகழக்கூடியவகையில் பிரம்டனில் தமிழினப்படுகொலை நினைவுத்தூபியை நிர்மாணிப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அத்தோடு மேமாதம் 18 ஆம் திகதியை தமிழினப்படுகொலை நினைவேந்தல் நாளாக அங்கீகரித்த முதலாவது தேசிய பாராளுமன்றம் என்ற வரலாற்று முக்கியத்துவத்தையும் கனடா உரித்தாக்கியிருக்கின்றது' எனத் தெரிவித்துள்ளார். கடந்தகால மீறல்கள் மறக்கடிக்கப்படமுடியாதவை என்பதற்கான நினைவுச்சின்னமாக தமிழினப்படுகொலை நினைவுத்தூபி திகழும் - ஹரி ஆனந்தசங்கரி | Virakesari.lk
-
பதவியை இராஜினாமா செய்தார் குஷ்பு!
`இனி தீவிர `அரசியல்’ தான்..!’ - குஷ்பு-வின் திடீர் ராஜினாமா பின்னணி?! தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவியினை குஷ்பு ராஜினாமா செய்திருக்கிறார். இது தொடர்பான டாப்பிக் தான் தற்போது அரசியல் டாக் ஆக உள்ளது. இதுகுறித்து நம்மிடம் பேசிய விவரப்புள்ளிகள், "திரைத்துறையில் பிரபல நடிகையாக இருப்பவர் குஷ்பு. இவர் கடந்த 2010-ம் ஆண்டு தி.மு.க-வில் இணைந்தார். பின்னர் தலைமையுடன் ஏற்பட்ட உரசலின் காரணமாக தி.மு.க -விலிருந்து விலகினார். பிறகு 2014-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். சுமார் 6 ஆண்டுகள் அந்த கட்சியில் பயணித்தார். அதன் பின்னர் பாஜக-வில் இணைந்தார். இதையடுத்து அவருக்கு 2021-ம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்பட்டது. கலைஞர் கருணாநிதி ஆனால் தேர்தல் முடிவில் தோல்வியைச் சந்தித்தார். பின்னாளில் அவருக்குத் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது. இந்த சூழலில்தான் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என குஷ்பு எதிர்பார்த்திருந்தார் என சொல்லப்பட்டது. ஆனால் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. பிறகு தமிழிசை உள்ளிட்ட வேட்பாளர்களுக்குப் பிரசாரம் செய்தார். முன்னதாக உடல்நலக்குறைவின் காரணமாகப் பாதியிலேயே பிரசார களத்திலிருந்து ஒதுக்கினார். இந்தச்சூழலில்தான் தற்போது தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். மேலும் தான் தீவிர அரசியலில் ஈடுபடப் போவதாக குஷ்பு அறிவித்துள்ளார்" என்றனர். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள குஷ்பு, "அரசியலில் 14 ஆண்டுக்கால சேவைக்குப் பிறகு, இன்று ஒரு இதயப்பூர்வமான மாற்றத்தை உணர்கிறேன். உயர்ந்த கட்சியாக விளங்கும் பா.ஜ.க-வில் முழுமையாகச் செயல்படுவதற்காகத் தேசிய மகளிர் ஆணையத்திலிருந்து என் பதவியை ராஜினாமா செய்துவிட்டேன். இந்த வாய்ப்பை வழங்கிய பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோருக்கு நன்றிகள். என்னுடைய விசுவாசமும், நம்பிக்கையும் எப்போதும் பா.ஜ.க உடன்தான் இருக்கும். தீவிர அரசியலில் ஈடுபட முடியாதபடி தேசிய மகளிர் ஆணையத்தில் அதற்கென சில கட்டுப்பாடுகள் இருந்தன. அதனால்தான் முன்னெப்போதும் இல்லாத உற்சாகத்துடன், நான் மீண்டும் தீவிர அரசியலுக்கு வந்துவிட்டேன். குஷ்பு இப்போது நான் சுதந்திரமாக, முழுமனதுடன் சேவையாற்ற முடியும். சென்னை கமலாலயத்தில் நடக்க உள்ள கொடியேற்றும் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளேன். தீவிர அரசியலிலிருந்து என்னுடைய இந்த இடைவெளி, பிரதமரின் தொலைநோக்கு திட்டங்களை முன்னெடுத்துச் செல்வதற்கான எனது தீர்மானத்தை வலுப்படுத்தியுள்ளது. வதந்தி பரப்புபவர்கள் அமைதியாக இருக்கலாம். என்னுடைய இந்த மறுவருகை நேர்மையானது. கட்சி மீதும் மக்கள் மீதும் நான் கொண்ட அசைக்க முடியாத அன்பின் காரணமாக எடுக்கப்பட்ட முடிவு" என்றார். அரசு தரப்பில் இதுகுறித்து வெளியிடப்பட்டு இருக்கும் தகவலில், 'கடந்த ஜூன் 28-ம் தேதியே குஷ்பு தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். அதனை ஜூலை 30ம் தேதி துறை அதிகாரிகள் ஏற்றுக்கொண்டனர்' எனச் சொல்லப்பட்டிருக்கிறது. தீவிர அரசியலில் ஈடுபடுவதற்குத்தான் தனது பதவியை ராஜினாமா செய்திருப்பதாக குஷ்பு சொன்னாலும், வேறு சில காரணங்களும் இருக்கின்றன என்கிறார்கள் கமலாலய சீனியர்கள். இதுகுறித்து நம்மிடம் பேசிய சீனியர் நிர்வாகிகள் சிலர், "தமிழக பா.ஜ.க தலைவராக அண்ணாமலை பதவியேற்ற பிறகு அதிக முக்கியத்துவம் கிடைக்காத நிர்வாகிகளில், குஷ்புவும் ஒருவர். குறிப்பாக நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தென் சென்னை தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்த்திருந்தார். அதற்கு டெல்லியிலும் முயற்சி செய்து வந்தார். ஆனால் கிடைக்கவில்லை. இந்த அதிருப்தியிலிருந்தவரை கட்சித் தலைமை தீவிர பிரசாரத்தில் ஈடுபடும்படி அறிவுறுத்தியது. குஷ்பூ அதன்படி ஒருசில பிரசாரங்களில் மட்டும் கலந்து கொண்டார். பிறகு உடல்நிலையைக் காரணம் காட்டி பிரச்சாரக் களத்திலிருந்து வெளியேறினார். அப்போது உடல்நலன் பாதிக்கப்பட்டு இருந்தது உண்மைதான். எனினும் சீட் கிடைக்காத அதிருப்திதான் அவரை மிகவும் சோர்வடையச் செய்திருந்தது. மேலும் முன்னதாக வழங்கப்பட்ட தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவியிலும் அவருக்குப் பெரிதாக விருப்பம் இல்லை. இதற்குத் தன்னை தீவிர அரசியலில் ஈடுபடாமல் தடுப்பதற்காக எதிர் தரப்பினர் செய்த வேலை என்பதில் அவர் உறுதியாக இருந்தார். மேலும் இதனால் தீவிர அரசியலிலும் ஈடுபட முடியவில்லை என குஷ்பு அப்செட்டில் இருந்தார். மறுபக்கம் கட்சி நிகழ்ச்சிகளுக்கும் அண்ணாமலை தரப்பு அழைப்பதில்லை என்ற வருத்தமும் அவருக்கு இருந்தது. இதையடுத்துதான் தனது பதவியை ராஜினாமா செய்யும் முடிவுக்கு வந்தார். இனி அவர் சொன்னது போலவே தீவிர அரசியலில் ஈடுபடுவார். இந்தச்சூழலில்தான் மேல் படிப்புக்காக அண்ணாமலை வெளிநாடு செல்ல இருக்கிறார். இந்த காலகட்டத்தில் செயல் தலைவரை நியமிக்க டெல்லி ஆலோசித்து வருவதாகப் பேச்சு அடிபடுகிறது. அதற்குப் பலரும் காய் நகர்த்தி வருகிறார்கள். தற்போது அந்த ரேஸில் குஷ்புவும் இணைந்திருக்கிறார் என்கிறார்கள். ஆனால் செயல் தலைவர் நியமிப்பது என்பது வெறும் ஆலோசனை மட்டத்தில் தான் இருக்கிறது. அண்ணாமலை இன்னும் உறுதியாகவில்லை. வெளிநாடு சென்றாலும் அண்ணாமலையே தான் தலைவராக நீடிப்பார் என்ற தகவலும் சொல்லப்ப்படுகிறது. இணையதளம் வாயிலாக அவர் கட்சி நடவடிக்கைகளை மேற்கொள்வார் என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள். அதேநேரத்தில் அண்ணாமலைக்கு எதிராக குஷ்பு அதிரடி அரசியல் செய்வதற்கு வாய்ப்பு அதிகம் இருக்கிறது. ஏற்கெனெவே அதிருப்தியில் இருக்கும் தலைவர்கள் அவருடன் கைகோர்க்கவும் வாய்ப்பு உள்ளது. தமிழிசை போன்று குஷ்புவும் நேரடி அரசியலை விரும்புவதும் மகளிர் ஆணைய பதவி ராஜினாமாவுக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது" என்கின்றனர். https://www.vikatan.com/government-and-politics/is-khushboo-aiming-for-an-important-post-in-bjp?pfrom=home-main-row
-
ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்குமாறு கோரி யாழில் துண்டுப் பிரசுரம் வழங்கல்!
Published By: Vishnu 15 Aug, 2024 | 07:13 PM ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்குமாறு கோரி 14ஆம் திகதி புதன்கிழமையும் யாழ்ப்பாணத்தில் துண்டுப்பிரசுரம் வழங்கப்பட்டது. புதன்கிழமை (14) பிற்பகல் யாழ்ப்பாணம் நகர் பகுதியில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினால் இந்த துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செ.கஜேந்திரன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் துண்டு பிரசுரங்களை வழங்கி மக்களுக்கு தமது நிலைப்பாடுகளை தெளிவுபடுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்குமாறு கோரி யாழில் துண்டுப் பிரசுரம் வழங்கல்! | Virakesari.lk
-
தங்கலான் Review: பா.ரஞ்சித் - விக்ரமின் ‘வரலாற்றுப் புனைவு’ தரும் தாக்கம் என்ன?
‘நட்சத்திரம் நகர்கிறது’ படத்துக்குப் பிறகு பா.ரஞ்சித்தும், ‘பொன்னியின் செல்வன்’ படத்துக்குப் பிறகு விக்ரமும் இணைந்துள்ள படம் ‘தங்கலான்’. இரண்டு பேருக்குமே ஒரு பேர் சொல்லும் வெற்றி அவசியமாக இருந்த நிலையில், விக்ரமின் கெட்டப், ஜி.வி.பிரகாஷின் பாடல்கள், விறுவிறுப்பான ட்ரெய்லர் என இப்படத்துக்கான எதிர்பார்ப்பு ஏகத்துக்கும் எகிறியிருந்தது. நீண்ட நாட்களாக இறுதிகட்ட பணிகளில் இருந்த ‘தங்கலான்’ ஒருவழியாக திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. கதை 17-ஆம் நூற்றாண்டில் தொடங்குகிறது. வட ஆற்காட்டில் பண்டைய அரசர்கள் பிடுங்கிக் கொண்ட நிலங்களில் இருந்து எஞ்சிய இடத்தில் விவசாயம் செய்து வரும் ஒரு சிறிய பூர்வக்குடி இனக்குழுவின் தலைவன் தங்கலான் (விக்ரன்). மனைவி கங்கம்மாள் (பார்வதி), குழந்தைகள் என வாழ்ந்து வரும் தங்கலான், பல நூற்றாண்டுகளுக்கு முன்பாக இப்போதைய கோலார் பகுதியில் தன்னுடைய மூதாதையர்கள் தங்கம் எடுத்துக் கொண்டிருந்ததையும், சிற்றரசன் ஒருவனின் பேராசையால் அவர்கள் தூண்டப்பட்டு, அப்பகுதியின் காவல் தேவதையாக விளங்கும் ஆரத்தி (மாளவிகா மோகனன்) என்ற பெண்ணால் தடுக்கப்பட்டதையும் கதையாக தன் குழந்தைகளுக்கு சொல்கிறார். இன்னொருபுறம் ஜமீன்தார் ஒருவரால் எஞ்சியிருக்கும் நிலமும் அபகரிக்கப்பட்ட நிலையில், தங்கலானின் குழுவினருக்கு உதவ முன்வருகிறார் க்ளெமென்ட் என்ற வெள்ளைக்காரர். பல நூற்றாண்டுகளுக்கு முன்பு தங்கலானின் மூதாதையர்கள் எடுத்த அதே பகுதியில் தனக்கு தங்கத்தை எடுத்துக் கொடுத்தால், அதில் பங்கு தருவதாக உறுதியளிக்கிறார். இதற்கு ஒப்புக் கொள்ளும் தன்னுடைய கூட்டத்தில் இருந்த சிலரை அழைத்துக் கொண்டு அந்த வெள்ளைக்காரர்களுடன் புறப்படுகிறார். செல்லும் வழியில் அவர்களுக்கு ஏற்படும் இடையூறுகள் என்னென்ன? அவர்களுக்கு தங்கம் கிடைத்ததா என்பதே படத்தின் திரைக்கதை. தலித் பூர்வக்குடி மக்களின் ரத்தத்திலும் வியர்வையிலும் உருவான கோலார் தங்க வயலின் மறைக்கப்பட்ட வரலாற்றை தொன்மக் கதைகள் வழியே கற்பனை கலந்த ஒரு ஃபேன்டசி படைப்பாக கொடுத்துள்ளார் பா.ரஞ்சித். சாதிய ஒடுக்குமுறையையும், நில அரசியலையும் ரஞ்சித்தின் முந்தைய படங்களை விட ‘தங்கலான்’ ஒருபடி மேலே சென்று மிக அழுத்தமாகவே பதிவு செய்திருக்கிறது. வரலாற்றின் பக்கங்களில் இருந்து பவுத்தம் மெல்ல அழிக்கப்பட்டது, அரசர்களுக்கு பின்னால் வந்த ஜமீன்தார்கள் நிலங்களை வஞ்சித்து பிடுங்கியது, தாய் வழிச் சமூகங்கள் பற்றிய குறியீடுகள் கதையின் ஓர் அங்கமாய் தங்கலானின் பயணத்தினூடே வழிநெடுக வந்துகொண்டிருக்கின்றன. முதல் பாதி முழுவதும் ரஞ்சித்தின் நேர்த்தியான திரை மொழி வெளிப்பட்டுக் கொண்டே இருக்கிறது, ஆனால், படத்தின் மிகப் பெரிய பிரச்சினை இரண்டாம் பாதியில் இருந்துதான் தொடங்குகிறது. வெள்ளைக்காரர்களுடன் சேர்ந்து தங்க வேட்டைக்கு புறப்படுவது வரை சுவாரஸ்யமாக செல்லும் படம், அதன் பிறகு தங்கலானின் பயணம் தொடங்கிய பிறகு ஒரு சுழலில் சிக்கிக் கொண்டதைப் போல திரும்ப திரும்ப திரும்ப, எத்தனை முறை என்றே கணிக்க முடியாத அளவுக்கு, காட்சிகள் ரிப்பீட் ஆகிக் கொண்டே இருக்கின்றன. நடிப்பில் விக்ரம் அசாத்திய உழைப்பைக் கொட்டியிருக்கிறார். அர்ப்பணிப்பு என்ற வார்த்தை கூட குறைவுதான். அந்த அளவுக்கு அபாரமான உடல்மொழியும், உழைப்பும் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரு பெரும் பாய்ச்சல். அவருக்கு ஈடுகொடுக்கும் வகையில் அதகளம் செய்திருக்கிறார் பார்வதி. முரட்டுத்தனம் கொண்ட தங்கலானையே மிரட்டும் கங்கம்மா தமிழின் மறக்கமுடியாத பெண் கதாபாத்திரமாக பேசப்படும். பசுபதி, மாளவிகா மோகனன் என அனைவரும் அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். படத்தின் இன்னொரு ஹீரோ என்றால் அது சந்தேகமே இன்றி ஜி.வி.பிரகாஷ்தான். படத்தின் தொடக்கம் முதல் இறுதி வரை மிரட்டியிருக்கிறார். பாடல்கள், பின்னணி இசை இரண்டுமே படத்தை தூக்கி நிறுத்தியிருக்கிறது. சலிப்படையச் செய்யும் பல காட்சிகளில் படத்தை காப்பாற்றுவது ஜி.வி.யின் பின்னணி இசைதான். படத்தின் மற்றொரு பலம், கிஷோர் குமாரின் ஒளிப்பதிவு, தங்க வயல், பூர்வக்குடிகளின் வறண்ட பூமி, என ‘ரா’வாக காட்சிப்படுத்தி ஸ்கோர் செய்துள்ளார். கலை இயக்கம், ஸ்டன்ட் உள்ளிட்ட அம்சங்களில் படக்குழுவின் அசாத்திய உழைப்பு தெரிகிறது. உதாரணமாக, படத்தின் ஆரம்பத்தில் விக்ரம் - மாளவிகா மோகனன் மோதும் காட்சி சிலிர்ப்பனுபவம். இரண்டாம் பாதியில் தங்கத்தை எடுக்க முயற்சிப்பது, அதனை மாளவிகா மோகனன் தடுக்க முயல்வது, இவை ஏன் திரும்ப திரும்ப வந்து கொண்டே இருக்கின்றன என்று தெரியவில்லை. காட்சிகள் ஒரு முடிவே இல்லாமல் இலக்கின்றி நகர்வது கடும் சலிப்பை தருகிறது. க்ளைமாக்ஸ் இப்போது வரும், இதோ வந்துவிட்டது, இதுதான் க்ளைமாக்ஸ் என ஒவ்வொரு காட்சியிலும் யோசிக்க வேண்டியிருக்கிறது. அந்த அளவுக்கு இழுத்துக் கொண்டே சென்றிருக்க தேவையில்லை. க்ளைமாக்ஸ் கடைசி 15 நிமிடங்கள் அபாரமாக படமாக்கப்பட்டுள்ளது. ஆனால், அதற்கு முந்தையக் காட்சிகள் ஏற்படுத்திய சலிப்பால் அது முற்றிலுமாக எடுபடாமல் போவதை தவிர்க்க முடியவில்லை. யாரும் இதுவரை பேசத் துணியாத ஒரு வரலாற்றை எடுத்துக் கொண்டு, அதில் தொன்மம், வாய்வழிக் கதைகள் அடிப்படையிலே ஃபேன்டசியாக கொடுக்க முயன்றிருக்கிறது படக்குழு. முதல் பாதியில் இருந்த சுவாரஸ்யம் இரண்டாம் பாதியிலும் இருந்திருந்தால் தமிழின் தவிர்க்க முடியாத ஒரு கிளாசிக் படைப்பாக ஆகியிருக்கும் இந்த ‘தங்கலான்’. தங்கலான் Review: பா.ரஞ்சித் - விக்ரமின் ‘வரலாற்றுப் புனைவு’ தரும் தாக்கம் என்ன? | Thangalaan Movie review - hindutamil.in
-
தமிழினப்படுகொலை நினைவுத்தூபியை கனடாவில் நிர்மாணித்தால் நல்லிணக்க செயன்முறையைப் பாதிக்கும் - பிரம்டன் நகர மேயருக்கு இலங்கை கடிதம்!
இலங்கையின் தலையீடுகளால் ஒருபோதும் பின்வாங்கமாட்டோம் - கனேடிய அரசு வலுவான நிலைப்பாட்டை எடுக்கவேண்டும் என பிரம்டன் நகர மேயர் வலியுறுத்தல்! 14 Aug, 2024 | 11:41 PM (நா.தனுஜா) இனப்படுகொலை புரிந்த இலங்கை அரசாங்கத்தினால் எமது உள்ளக விவகாரங்களில் மேற்கொள்ளப்படும் தலையீடுகளால் நாம் ஒருபோதும் பின்வாங்க மாட்டோம் எனத் தெரிவித்திருக்கும் கனடாவின் பிரம்டன் நகர மேயர் பற்ரிக் பிரவுன், இத்தலையீடுகள் தொடர்பில் கனேடிய அரசாங்கம் வலுவானதொரு நிலைப்பாட்டை எடுக்கவேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். புலம்பெயர் தமிழர்களால் கனடாவின் பிரம்டன் நகரில் தமிழினப்படுகொலை நினைவுத்தூபியை நிர்மாணிப்பதற்கு மேற்கொள்ளப்பட்டிருக்கும் முயற்சி இலங்கையிலும், கனேடியவாழ் இலங்கையர்கள் மத்தியிலும் முன்னெடுக்கப்பட்டுவரும் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகளில் பாரிய பின்டைவை ஏற்படுத்தும் எனவும், ஆகவே இம்முயற்சிக்கு உதவவேண்டாம் எனவும் வலியுறுத்தி பிரம்டன் நகர மேயர் பற்ரிக் பிரவுனுக்கு கனடாவின் டொரன்டோ நகரிலுள்ள இலங்கை கொன்சியூலர் நாயகம் துஷார ரொட்ரிகோ கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார். இக்கடிதத்தின் உள்ளடக்கத்துக்குப் பதிலளிக்கும் வகையில் தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் பதிவொன்றைச் செய்திருக்கும் மேயர் பற்ரிக் பிரவுன், 'எமது உள்ளக விவகாரங்களில் இனப்படுகொலை புரிந்த இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் தலையீடுகளால் நாம் ஒருபோதும் பின்வாங்க மாட்டோம்' எனத் தெரிவித்துள்ளார். 'தமிழினப்படுகொலை தொடர்பில் பொறுப்புக்கூறவேண்டிய குற்றவாளிகளை இலங்கை அரசாங்கம் ஹேக் நகரிலுள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் கையளிக்கும் வரை உண்மையான நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்பமுடியாது. இருப்பினும் இப்போர்க்குற்றவாளிகளை அவர்கள் இழைத்த மனிதகுலத்துக்கு எதிரான மீறல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறச்செய்வதற்குப் பதிலாக, இலங்கை அரசாங்கம் அவர்களைப் பாதுகாத்துவருகின்றது' எனவும் மேயர் பற்ரக் பிரவுன் விசனம் வெளியிட்டுள்ளார். அதேபோன்று இலங்கையில் தமிழ் மக்கள் அவர்களது அன்புக்குரியவர்களை நினைவுகூருவதைத் தடுப்பதற்கு அரசாங்கம் முயற்சித்தாலும், கனடாவில் அவர்களால் (இலங்கை அரசாங்கத்தினால்) அதனைச் செய்யமுடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அத்தோடு 'அவர்கள் கனடாவில் நினைவுகூரல் நிகழ்வைத் தடுப்பதற்கு முயன்றால் அது வெளிநாட்டுத் தலையீடாகவே அமையும்' எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் அண்மையகாலங்களில் இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டுவரும் வெளியக தலையீடு தொடர்பில் கனேடிய அரசாங்கம் வலுவான நிலைப்பாடொன்றை எடுக்கும் என தான் எதிர்பார்ப்பதாகவும் பிரம்டன் நகர மேயர் பற்ரிக் பிரவுன் தெரிவித்துள்ளார். இலங்கையின் தலையீடுகளால் ஒருபோதும் பின்வாங்கமாட்டோம் - கனேடிய அரசு வலுவான நிலைப்பாட்டை எடுக்கவேண்டும் என பிரம்டன் நகர மேயர் வலியுறுத்தல்! | Virakesari.lk
-
தமிழினப்படுகொலை நினைவுத்தூபியை கனடாவில் நிர்மாணித்தால் நல்லிணக்க செயன்முறையைப் பாதிக்கும் - பிரம்டன் நகர மேயருக்கு இலங்கை கடிதம்!
(நா.தனுஜா) புலம்பெயர் தமிழர்களால் கனடாவின் பிரம்டன் நகரில் தமிழினப்படுகொலை நினைவுத்தூபியை நிர்மாணிப்பதற்கு மேற்கொள்ளப்பட்டிருக்கும் முயற்சி இலங்கையிலும், கனேடியவாழ் இலங்கையர்கள் மத்தியிலும் முன்னெடுக்கப்பட்டுவரும் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகளில் பாரிய பின்னடைவை ஏற்படுத்தும் எனவும், ஆகவே இம்முயற்சிக்கு உதவவேண்டாம் எனவும் பிரம்டன் நகர கவுன்சில் மேயர் பற்ரிக் பிரவுனிடம் இலங்கை கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து பிரம்டன் நகர கவுன்சில் மேயர் பற்ரிக் பிரவுனுக்கு கனடாவின் டொரன்டோ நகரிலுள்ள இலங்கை கொன்சியூலர் அலுவலகத்தின் கொன்சியூலர் நாயகம் துஷார ரொட்ரிகோ கடந்த மேமாதம் அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: உங்களது பிரம்டன் நகர கவுன்சில் அலுவலகத்தில் உங்களை முதன்முறையாகச் சந்தித்ததையும், இலங்கையில் சுமார் 30 வருடகாலமாக நீடித்த யுத்தம் தொடர்பில் நாம் கலந்துரையாடியதையும் இப்போது நினைவுகூருகிறேன். அதன்படி கனேடியவாழ் இலங்கையர் குழுவொன்று உங்களது நிர்வாகத்தின்கீழ் உள்ள பிரம்டன் நகரில் தமிழினப்படுகொலை நினைவுத்தூபி எனக்கூறப்படும் சின்னத்தை நிர்மாணிப்பதற்கு உத்தேசித்திருப்பதாகவும், அதற்கு பிரம்டன் நகர கவுன்சில் அனுமதி அளித்திருப்பதாகவும் பல்வேறு கனேடிய இலங்கையர் அமைப்புக்கள் எமது அவதானத்துக்குக் கொண்டுவந்திருக்கின்றன. அதிலும் குறிப்பாக எவ்வித இன, மதபேதங்களுமின்றி அனைத்து இலங்கையர்களும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அவ்வாறிருக்கையில் இத்தகைய நினைவுத்தூபியை நிர்மாணிப்பது பாதிக்கப்பட்ட இலங்கையர்கள் மத்தியில் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கு முன்னெடுக்கப்படும் முயற்சிகளில் பின்னடைவை ஏற்படுத்தும் எனவும் அவ்வமைப்புக்கள் கரிசனை வெளியிட்டிருக்கின்றன. அதுமாத்திரமன்றி இந்நடவடிக்கையானது கனேடிய இலங்கையர் சமூகத்தினிடையேயான இனநல்லிணக்கம் மற்றும் ஒருமைப்பாட்டிலும், இலங்கையின் பல்லின சமூகங்களுக்கு இடையிலான ஒற்றுமையிலும் எதிர்மறைத்தாக்கத்தை ஏற்படுத்தும். அதேவேளை இலங்கையில் மூன்று தசாப்தகாலமாக இடம்பெற்ற யுத்தத்தின்போது இனப்படுகொலை இடம்பெற்றமைக்கான ஆதாரங்கள் எவையும் ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட எந்தவொரு அமைப்புக்களினாலும் வெளியிடப்படவில்லை. யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வாழ்ந்த மக்களுக்கு அவசியமான அத்தியாவசியப்பொருட்களும், அரச கட்டமைப்புக்கள் இடையூறின்றி இயங்குவதற்கு அவசியமான நிதியும் இலங்கை அரசாங்கத்தினால் வழங்கப்பட்டமை தெளிவாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோன்று இலங்கையில் இலவசக்கல்வி, இலவச சுகாதாரம், ஏனைய அரச மற்றும் தனியார் சேவைகள் உள்ளிட்ட அனைத்தும் தமிழர்கள் உள்ளடங்கலாக சகலராலும் சமத்துவமான முறையில் அனுபவிக்கப்படுகின்றன. சர்வதேச ரீதியில் தடைசெய்யப்பட்ட அமைப்பான தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்துடனான யுத்தம் 2009 ஆம் ஆண்டு முடிவுக்குக்கொண்டுவரப்பட்டது. அதன்பின்னர் கொவிட் - 19 வைரஸ் பெருந்தொற்று, இயற்கை அனர்த்தங்கள் உள்ளிட்ட பல்வேறு நெருக்கடிகளுக்கு இலங்கை முகங்கொடுத்த போதிலும், யுத்தத்துக்கு அடிப்படையாக அமைந்த காரணிகளைக் களைந்து, அதன் பின்னரான நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கே அரசாங்கம் தொடர்ந்து முன்னுரிமை அளித்து வந்திருக்கின்றது. எனவே தமிழர்கள் உள்ளடங்கலாக இலங்கையின் பல்லின சமூகங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களுக்கும், கனேடியவாழ் இலங்கையர்களுக்கும் நன்மையளிக்கக்கூடியவகையில் முன்னெடுக்கப்பட்டுவரும் நல்லிணக்க முயற்சிகள் தொடர்பில் அவதானம் செலுத்துமாறும் உங்களிடம் கேட்டுக்கொள்கின்றேன். அத்தோடு தமிழினப்படுகொலை நினைவுத்தூபி நிர்மாணம் போன்ற பிரிவினைகளை ஏற்படுத்தவல்ல நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்குப் பதிலாக, இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதை முன்னிறுத்தி இலங்கையினால் மேற்கொள்ளப்பட்டுவரும் ஆக்கபூர்வமான முயற்சிகளுக்கு உதவுமாறும் உங்களிடம் வலியுறுத்துகின்றேன் என்று அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழினப்படுகொலை நினைவுத்தூபியை கனடாவில் நிர்மாணித்தால் நல்லிணக்க செயன்முறையைப் பாதிக்கும் - பிரம்டன் நகர மேயருக்கு இலங்கை கடிதம்! | Virakesari.lk
-
வேதாரண்யம் மீனவர்கள் நால்வரை இரும்புக் கம்பியால் அடித்து விரட்டிய இலங்கை மீனவர்கள்!
நாகப்பட்டினம்: வேதாரண்யம் மீனவர்கள் நால்வரை இலங்கையை சேர்ந்த தமிழ் மீனவர்கள் கடுமையாகத் தாக்கி விரட்டி அடித்துள்ள சம்பவம் தமிழக மீனவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் அருகேயுள்ள ஆறுகாட்டுத்துறை மீனவ கிராமத்தைச் சேர்ந்த ராசப்பன் மகன் சந்திரகாசன் (70) என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் ஆறுகாட்டுத் துறையில் இருந்து புஷ்பவனத்தைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன் (70), ராஜேஷ் (26), பன்னீர்செல்வம் (50), வேல்முருகன் (36) ஆகிய நான்கு மீனவர்களும் நேற்று (ஆக.13) கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். கோடியக்கரைக்கு கிழக்கே 15 கடல்மைல் தொலைவில் அவர்கள் மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது இரவு 10.30 மணியளவில் இரண்டு படகுகளில் அங்குவந்த இலங்கையைச் சேர்ந்த தமிழ் பேசத் தெரிந்த 6 நபர்கள் வேதாரண்யம் மீனவர்களின் படகை சூழ்ந்து கொண்டு அவர்களின் படகில் ஏறி நான்கு பேரையும் வாள்களை கழுத்தில் வைத்து மிரட்டியும், இரும்புப் பைப்புகளை கொண்டு தாக்கியும் உள்ளனர். அத்துடன், படகில் இருந்த 700 கிலோ வலைகளை எடுத்துக் கொண்டு அங்கிருந்து சென்றுள்ளனர். இதையடுத்து, காயமடைந்த நான்கு மீனவர்களும் இன்று மதியம் ஆறுகாட்டுத்துறை கடற்கரைக்கு திரும்பினர். அவர்களின் முதுகின் பின்புறத்தில் இரும்பு பைப்பால் அடித்ததில் உள்காயம் ஏற்பட்டுள்ளதால் அவர்கள் உடனடியாக வேதாரண்யம் அரசு தலைமை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். வேதாரண்யம் மீனவர்கள் மீண்டும் மீண்டும் இலங்கை தமிழ் மீனவர்களால் தாக்கப்படுவது தமிழக மீனவர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வேதாரண்யம் கடலோர காவல் நிலைய போலீஸார் இது குறித்து விசாரணை செய்து வருகின்றனர். https://www.hindutamil.in/news/tamilnadu/1295336-sri-lankan-tamil-fishermen-chased-away-the-vedaranyam-fishermen-by-beating-them-with-iron-pipes.html
-
ரஷ்யாவுக்குள் புகுந்து முன்னேறும் யுக்ரேனிய ராணுவம் - போர்க்களத்தில் என்ன நடக்கிறது?
யுக்ரேன் தாக்குதலை சமாளிக்க முடியாமல் தடுமாறுகிறதா ரஷ்ய ராணுவம்? 5 கேள்விகளும் பதில்களும் ரஷ்யாவில் 1,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவை கைப்பற்றிவிட்டதாக யுக்ரேன் ராணுவம் தெரிவித்துள்ளது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இந்த தாக்குதலை ‘கடுமையான ஆத்திரமூட்டும் நடவடிக்கை’ என்று குற்றம்சாட்டியுள்ளார். யுக்ரேன் படைகளை ரஷ்ய எல்லையில் இருந்து துரிதமாக விரட்டியடிக்க வேண்டும் என்று ரஷ்ய ராணுவத்திற்கு அவர் உத்தரவிட்டுள்ளார். ரஷ்யாவின் கர்ஸ்க் பிராந்தியத்தில் யுக்ரேன் - ரஷ்யா இடையே கடந்த ஒரு வாரமாக மோதல் நிலவி வருகிறது. ரஷ்யாவின் கர்ஸ்க் பகுதியில் இந்தத் தாக்குதலை நடத்த யுக்ரேன் முடிவு செய்தது ஏன்? யுக்ரேனின் எல்லைக் கடந்த இந்த நடவடிக்கை தொடர்பாக இதுபோன்ற 5 கேள்விகள் எழுந்துள்ளன. அதற்கான பதில்களை இந்த கட்டுரையில் நாங்கள் உங்களுக்குச் சொல்லவிருக்கிறோம். கர்ஸ்க் பகுதியில் என்ன நடந்தது? ஆகஸ்ட் 6 ஆம் தேதி, யுக்ரேன் எல்லையோரம் உள்ள ரஷ்யாவின் கர்ஸ்க் பகுதியில் யுக்ரைன் இராணுவ வீரர்கள் திடீரென தாக்குதலை துவங்கினர். இந்த தாக்குதல் எவ்வளவு பெரிது என்பது குறித்த துல்லியமான தகவல்களை சேகரிப்பது கடினம். ஆரம்பத்தில், இந்த நடவடிக்கை விளாடிமிர் புதினின் அரசாங்கத்தை எதிர்க்கும் ரஷ்ய குழுக்களின் ஊடுருவலாக தோன்றியது. இந்த குழுக்கள் யுக்ரேன் வழியாக ரஷ்யாவிற்குள் நுழைந்திருக்கலாம் என்று கருதப்பட்டது. ரஷ்ய எல்லையில் இருந்து சுமார் 30 கிமீ தொலைவில் எதிரிகளுடன் கடும் சண்டை நடந்ததாக ரஷ்ய ராணுவ பிளாகர்ஸ் (MIlitary Bloggers) தெரிவித்தனர். ரஷ்யாவின் சில கிராமங்கள் யுக்ரேன் வசம் பிடிப்பட்டதை அடுத்து, இந்த தாக்குதலில் ஈடுபட்டிருப்பது யுக்ரேன் படைகள் தான் என்பது தெளிவாக உறுதிசெய்யப்பட்டது என அதிபர் புதினிடம் கர்ஸ்க் மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார். ரஷ்ய எல்லையில் பாதுகாப்பு குறைவாக இருந்த இடத்தின் வழியே ரஷ்யாவுக்குள் ஊடுருவ யுக்ரேன் முடிவெடுத்ததாக தெரிகிறது. பெயர் குறிப்பிட விரும்பாத யுக்ரேனிய உயர் அதிகாரி ஒருவர் ஏ.எஃப்.பி செய்தி முகமையிடம், ‘நாங்கள் ஆக்ரோஷமாக உள்ளோம். எதிரி வீரர்களை முடிந்தவரை காயப்படுத்த முயற்சிக்கிறோம். ரஷ்யாவால் தனது சொந்த எல்லையை பாதுகாக்க முடியாது என்பதை நிரூபிப்பதன் மூலம் ரஷ்யாவை ஸ்திரத்தன்மையற்ற நாடாக மாற்ற விரும்புகிறோம்.’ என்றார். ரஷ்யாவின் குர்ஸ்க் மீது தாக்குதல் யுக்ரைன் நடத்தியது ஏன்? ஆரம்பத்தில் யுக்ரேன் இந்த தாக்குதல் குறித்து அமைதி காத்து வந்தது. பின்னர், ஆகஸ்ட் 10 ஆம் தேதி, அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி மறைமுகமாக ஒப்புக்கொண்டார். 'யுக்ரேன் தொடர்ந்து போரை ஆக்கிரமிப்பாளர்களின் எல்லைக்குள் எடுத்து செல்லும்’ என்று அவர் தெரிவித்தார். ஆனால், ஆகஸ்ட் 12-ஆம் தேதி அன்று, சுமார் 1,000 சதுர கிலோமீட்டர் அளவிலான ரஷ்ய நிலப்பரப்பை கைப்பற்றியிருப்பதாக யுக்ரேன் அறிவித்தது. யுக்ரேனின் ஒரு பகுதியை ஆக்கிரமித்துள்ள ரஷ்யாவின் கவனத்தை திசை திருப்புவது இந்த ஊடுருவலின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாக இருக்கலாம் என்பதை பெரும்பாலானோர் ஒப்புக்கொள்கிறார்கள். கடந்த பல மாதங்களாக தனது கிழக்கு எல்லை வழியே ரஷ்ய இராணுவம் ஊடுருவுவதை தடுத்து நிறுத்த முடியாமல் தடுமாறுகிறது யுக்ரைன். ரஷ்ய இராணுவ படைகள் கடந்த மாதம் புவியியல் ரீதியாக முக்கியமான நகரமான சாசிவ் யார் (Chasiv Yar) பகுதியைக் கைப்பற்றி முன்னேறி வருகின்றன. யுக்ரேனின் நிலைமை வட-கிழக்கு மற்றும் தெற்கில் கடினமாகவே உள்ளது. தனது கிழக்கு பகுதிகளில் நிலைமையை இலகுவாக்குவதற்காக, ரஷ்யாவின் கர்ஸ்க் பகுதிக்குள் ஊடுருவ யுக்ரேன் முடிவு செய்துள்ளது. பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,யுக்ரேனின் துருப்புகளை திரும்பப் பெறுமாறு கோரும் ஆர்வலர்கள் ரஷ்ய இராணுவத்துடன் ஒப்பிடுகையில் யுக்ரேன் ராணுவம் எண்ணிக்கையிலும், ஆயுத ரீதியாகவும் சிறியது. ஆனாலும், யுக்ரேனிய ராணுவ அதிகாரிகள் இந்த ‘சூதாட்டம்’ போன்ற தாக்குதலை நடத்தி ரஷ்ய துருப்புக்களை சிதறடித்தனர். பிபிசியிடம் பாதுகாப்பு நிபுணரான பேராசிரியர் மார்க் கலியோட்டி இதுகுறித்து பேசுகையில், "யுக்ரேன் கடந்த சில மாதங்களாக போர்க்களத்தில் சிக்கியுள்ளது. போர்க்களத்தில் மிகச்சிறிய அளவிலேயே இயங்கி வந்தது. இப்போது, தாக்குதலை மேற்கொள்ள துணிந்து செயல்பட வேண்டி இருக்கிறது." என்றார். ஒரு யுக்ரேனிய தளபதி, தி எகனாமிஸ்ட் பத்திரிகையிடம் பேசுகையில், இது ஒரு சூதாட்டம் என்று கூறினார்: "எங்கள் முன்கள படைகளை, அவர்களின் மிகவும் அபாயகரமான எல்லை பகுதிக்குள் அனுப்பியுள்ளோம்." என்றார். ஆனாலும், யுக்ரேன் எதிர்பார்த்த அளவுக்கு இந்த தாக்குதல் வேகமான பலனளிக்கவில்லை என்றார். ‘ரஷ்ய தளபதி ஒன்றும் ஒரு முட்டாள் அல்ல. அவர்கள் தனது இராணுவத்தை முன்னோக்கி நகர்த்துகின்றனர். ஆனால் நாங்கள் விரும்பும் அளவுக்கு வேகமாக இல்லை. எங்களால் ஆயுத தளவாடங்களை 80 அல்லது 100 கிமீ வரை நீட்டிக்க முடியாது என்பது அவர்களுக்குத் தெரியும்.’ என்று அவர் கூறினார். ரஷ்யாவின் பதிலடி என்ன? யுக்ரேன் தாக்குதலால் கர்ஸ்க் பகுதியில் இருந்து 1,20,000 பேரையும், அண்டை மாகாணாமான பெல்கொரோட்டில் (Belgorod) இருந்து மேலும் 11,000 பேரையும் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுமாறு ரஷ்யா கேட்டுக் கொண்டுள்ளது. ரஷ்ய அதிகாரிகள் உள்ளூர்வாசிகளுக்கு ஒரு நபருக்கு $115 வீதம் இழப்பீடு வழங்கியுள்ளது. அப்பகுதிகளில் அவசர நிலையும் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. இந்த நெருக்கடிக்கு தீர்வு காண அதிபர் புதின் தலைமையில் ரஷ்யாவின் பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், இந்த சிறப்பு கூட்டத்தில் ஜெனரல் ஜெரசிமோவ் கலந்து கொள்ளவில்லை. புதினின் நெருங்கிய கூட்டாளிகளில் ஒருவரான பெடரல் பாதுகாப்பு சேவையின் (FSB) தலைவர் அலெக்சாண்டர் போர்ட்னிகோவ் அந்த கூட்டத்தில் கலந்து கொண்டார். சம்பவங்கள் குறித்த தனது சமீபத்திய அறிக்கையில், அமைதியான குடிமக்களை உக்ரைன் தாக்குவதாக ரஷ்ய அதிபர் புதின் குற்றம் சாட்டினார். இதற்கு "தகுந்த பதிலடி" அளிக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார். யுக்ரேன் ரஷ்யாவிடம் இருந்து உண்மையான அச்சுறுத்தலை கடுமையான பதிலடி மூலம் எதிர்கொள்ள நேரிடும் என பேராசிரியர் கலியாட்டி (Galeotti) கூறியுள்ளார். "தனது வேண்டுகோள் மூலம் புதின் அவரது ஆயுதப் படையில் லட்சக்கணக்கான வீரர்களை சேர்க்க முடியும். மோதலை அதிகரிக்க ரஷ்யா வேறு வழிகளைக் கண்டறியும்" என்று அவர் கூறினார். சமீபத்திய மாதங்களில் ரஷ்யாவின் குண்டுவீச்சால் யுக்ரேனின் எரிசக்தி கட்டமைப்பின் பெரும்பகுதி அழிந்தது (அல்லது) சேதமடைந்தது. ரஷ்யாவின் இந்த தாக்குதல் இன்னும் தீவிரமானதாக மாறக்கூடும். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,ரஷ்ய எல்லையில் யுக்ரேனிய துருப்புகள் யுக்ரேன் போரின் போக்கையே மாற்றிவிட்டதா? மார்க் கலியாட்டி, "ரஷ்யாவுக்கு யுக்ரேன் கைப்பற்றியுள்ள பகுதி சுமார் 50 மைல் நீளமும் 20 மைல் அகலமும் கொண்டதாகும். ரஷ்யாவின் ஒட்டுமொத்த பரப்புடன் ஒப்பிடுகையில் இது ஒன்றுமே இல்லை. ஆனாலும் இதன் அரசியல் தாக்கம் மிகவும் முக்கியமானது."என்று கூறினார். யுக்ரேன் தனது மேற்கத்திய நட்பு நாடுகளிடம், குறிப்பாக அமெரிக்காவிடம், அதன் இராணுவத்தால் தொடர்ந்து சண்டையிட முடியும் என்று காண்பித்துக் கொள்ள விரும்புகிறது என்று சில ஆய்வாளர்கள் வாதிடுகின்றனர். இது குறைந்தபட்சம் தற்காலிகமாக பேச்சுவார்த்தை நடத்தும் யுக்ரேனின் திறனை அதிகரித்துள்ளது. யுக்ரேனிய படைகள் ரஷ்ய எல்லைக்குள் 30 கிலோமீட்டர் தொலைவில் நிறுத்தப்பட்டுள்ளதால், போர் நிறுத்தம் குறித்த எந்தவொரு பரிந்துரையையும் ரஷ்யா ஏற்பதற்கு சாத்தியமில்லை. யுக்ரேனின் இந்த நடவடிக்கை, ரஷ்யர்களிடையே போர் குறித்த சொல்லாடலை மாற்றியதுள்ளது. யுக்ரேன் மீதான ரஷ்யப் படையெடுப்பு இனி "சிறப்பு இராணுவ நடவடிக்கை" என்று பெயரிடப்பட்ட முடியாத மோதலாக பார்க்கப்படும். ஏனெனில், யுக்ரேனின் நடவடிக்கை அவர்களை நேரடியாக பாதிக்கும் ஒன்றாக உருவெடுத்துள்ளது. "ரஷ்யாவில் ஊடகக் கட்டுப்பாடு அமலில் உள்ள சூழலிலும், மக்கள் சிலர் கேள்விகளைக் கேட்க துவங்கியுள்ளனர் என்பது கர்ஸ்க் பிராந்தியத்திலிருந்து வரும் தகவல்களில் இருந்து தெளிவாகிறது." என்று பிபிசியின் கிழக்கு ஐரோப்பிய செயதியாளர் சாரா ரெயின்ஸ்ஃபோர்ட் கூறுகிறார் பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,ரஷ்யா-யுக்ரேன் போரில் பல்பொருள் அங்காடி மீது ரஷ்ய தாக்குதல் (கோப்பு படம்) ஜெலன்ஸ்கி மற்றும் புதின் எதிர்காலத்தில் எத்தகைய தாக்கம் வரும்? ரஷ்யா மற்றும் யுக்ரேன் ஆகிய இரு நாடுகளின் அதிபர்களுக்கும் இதுவொரு ஒரு முக்கிய தருணம் ஆகும். விளாடிமிர் புதின், பெரும்பாலும் ஒரு சர்வாதிகார மற்றும் கடுமையான தலைவராகக் கருதப்படுகிறார். அவர் தனக்கு நெருக்கமான வட்டத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் குறிப்பாக பாதுகாப்பு சேவைகளை நம்பியிருக்கிறார். யுக்ரேனின் எதிர்பாராத தாக்குதல் அவர்களுக்கு பெரிய சவாலாக அமைந்துள்ளது. இதில் கொல்லப்பட்ட அல்லது காயமடைந்த ரஷ்ய வீரர்களின் எண்ணிக்கையை மறைப்பது கடினமாகியுள்ளது. ஆயிரக்கணக்கான ரஷ்யர்கள் இடம்பெயர்ந்துள்ளதால், நிலைமை எங்கள் கட்டுப்பாட்டில் உள்ளது, அல்லது இது முழுமையான போர் அல்ல என்ற பிம்பத்தை கட்டமைப்பதும் இனி கடினமாகும். பல காரணங்களுக்காக, ரஷ்யாவிற்குள்ளான யுக்ரேனின் இந்த தாக்குதல் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி-க்கும் சம அளவவில் பிரச்னையாக அமையலாம். யுக்ரேனில் போர் நடக்கும் மிக முக்கியமான இடங்களில் இருந்து ரஷ்யா தனது படைகளை பின்வாங்கினால் யுக்ரேனுக்கு அது சிறந்த பலனாக அமையும் என்று ஆய்வாளர் எமில் கஸ்தெல்மேயர் (Emil Kaszthelmeyer) கருதுகிறார். இது யுக்ரேனியர்களை சிறிது காலத்திற்கு உற்சாகமாக உணரவைக்கும் அதே வேளையில், அதன் கிழக்குப் பகுதியில் ரஷ்யா இன்னும் அதிகமான நிலங்களைக் கைப்பற்றுவதற்கு இது வழிவகுக்கக் கூடும். இங்கு இரு நாடுகளுக்கும் இடையே கடும் போர் நடந்து வருகிறது, இன்னும் உறுதி செய்யப்படாத போதிலும் சில ரஷ்ய ராணுவ பிளாகர்ஸ் வெற்றிகள் குறித்து பேசுகின்றனர். போரில் தற்போது நிலவும் தேக்கநிலைக்கு தீர்வு காண்பதற்கு விஷயங்களை முன்னோக்கி எடுத்துச் செல்ல வேண்டும் என்று பேராசிரியர் கலியோட்டி கூறுகிறார். இருப்பினும், கொந்தளிப்புகள் வேகமாக ஏற்பட்டு வருகின்றன. ஆனால் இதன் முடிவு என்னவாக இருக்கும் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. ரஷ்ய ராணுவம் யுக்ரேன் தாக்குதலை சமாளிக்க முடியாமல் தடுமாறுகிறதா? 5 கேள்விகளும் பதில்களும் - BBC News தமிழ்
-
ஜனாதிபதி வேட்பாளராக நாமல் – பொதுஜன பெரமுன அறிவிப்பு!
நாமலுக்கு கோட்டா ஆதரவு Simrith / 2024 ஓகஸ்ட் 14 , பி.ப. 02:48 - 0 - 54 எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷவுக்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது ஆதரவை வழங்கியுள்ளார். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவினால் வேட்பு மனுவில் கையொப்பமிடும் நிகழ்வில் கோட்டாபய ராஜபக்ச கலந்துகொண்டார். பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று காலை கொழும்பு விஜேராமவில் உள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்தில் வைத்து வேட்பு மனுவில் கையொப்பமிட்டார். Tamilmirror Online || நாமலுக்கு கோட்டா ஆதரவு
-
யானை, கை போன்று தமிழ்க்கட்சிகளின் சின்னங்களும் காணாமற்போகும் நிலைவரும் - ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு எச்சரிக்கை
யானை, கை போன்று தமிழ்க்கட்சிகளின் சின்னங்களும் காணாமற்போகும் நிலைவரும் ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு எச்சரிக்கை தென்னிலங்கையின் பழம்பெரும் அரசியல் கட்சிகள் இந்த ஜனாதிபதித் தேர்தலில் காணாமற்போனது போல, தமிழர் பரப்பிலும் கட்சிகளின் சின்னங்கள் காணாமற்போகும் நிலைவரும். ஆதலால், தூயதமிழ்த் தேசியவாதிகளும், இளையோரும் புதிய அரசியல் கூட்டமைப்பாக உருவெடுக்க வேண்டும் என்று ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் மேலும் உள்ளதாவது: தென்னிலங்கையின் பழம்பெரும் கட்சிகளின் சின்னங்களான யானையும், கையும் தற்போதைய ஜனாதிபதித் தேர்தலில் காணாமற்போயுள்ளன. அதுபோன்று தமிழர் பரப்பிலும் சின்னங்கள் காணாமற்போகும் நிலை விரைவில் வரலாம். தூயதமிழ் தேசியவாதிகளும், இளையோரும் புதிய அரசியல் கூட்டமைப்பாக உருவெடுக்க வேண்டும். அதனைக் கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்ட மூதவை வழிநடத்த வேண்டும். தமிழர்கள் புதிய செல்நெறியில் தமது அரசியல் பாதையை முன்கொண்டு செல்ல வேண்டும் என்பதைத் தற்போதைய நிகழ்வுகள் எடுத்துக் காட்டுகின்றன. தமிழ்ப் பொதுவேட்பாளர் களத்தை எம்மினம் சரியாகப் புரிந்து கொள்ள உச்சப்பட்சப் பரப்புரைகளை எல்லாத் தளங்களிலும் முன்னெடுப்போம். எதிர்கால வரலாறு நிச்சயம் சுயநலங்களை கடந்து குறும்கட்சி அடையாளங்களை துறந்து, தமிழ் தேசிய திரட்சிக்காக அர்ப்பணித்த மனிதர்களை நிலைநிறுத்தும் என்பதில் ஐயமில்லை - என்றுள்ளது. (ச) யானை, கை போன்று தமிழ்க்கட்சிகளின் சின்னங்களும் காணாமற்போகும் நிலைவரும் (newuthayan.com)