Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அஞ்சலி: நண்பரும் தோழருமான மணிவண்ணன் - யமுனா ராஜேந்திரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நண்பரும் தோழருமான மணிவண்ணன்

- யமுனா ராஜேந்திரன்

எழுபதுகளின் மத்திய ஆண்டுகள். கோயமுத்தூர் மாவட்டத்தின் சிங்காநல்லார் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த சிற்றூரான உப்பிலிபாளையத்தில் இருந்த ஸ்டீல் பர்னிச்சர் உற்பத்திப் தொழிற்சாலை ஒன்றில் வேலை செய்வதற்காகச் சூலூரிலிருந்து மணிவண்ணன் சைக்கிளில் வருவார். தொழிற்சாலைக்கு எதிரில் இந்தியக் கம்யூனிஸ்ட்டுக் கட்சியின் கிளை அலுவலகமான பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் மன்றம் இருந்தது. மதிய உணவருந்திவிட்டு கம்யூனிஸ்ட் தோழர் ஒருவர் வைத்திருந்த பெட்டிக் கடையில் பீடியோ, சிகரெட்டோ பற்றவைத்துக் கொண்ட மணிவண்ணன், பட்டுக் கோட்டை கல்யாணசுந்தரம் மன்றத்தின் சிமென்டுத் திண்ணையில் உட்கார்ந்தபடி தினமணியும், ஜனசக்தியும் தாமரையும் படிக்க அங்கே வருவார். அப்படித்தான் மணிவண்ணனோடு எனக்குப் பரிச்சயம் ஏற்பட்டது.

 

manivannan_2.jpg

அவரோடு எனது முதல்காதல் உள்பட நான் பேசியிருக்கிறேன். அப்போது நான் வேலையில்லாமல் கொஞ்சம் விரக்தியிலும் இருந்தேன். கனிவான இயல்பு கொண்ட அவர் வாசிப்பு சார்ந்த ஞானத்துடன் அரசியல் விவாதங்களில் ஈடுபடுவார். என்னைவிடவும் அவருக்கு நெருக்கமானவர்களாக பஞ்சாலைத் தொழிலாளியான சுப்பிரமணியமும் நண்பர் ரவியும் இருந்தார்கள். சுப்பிரமணியத்துடன்தான் மணிவண்ணனுக்கு ஒட்டுதல் கூடுதலாக இருந்தது. அதற்கான காரணம் இருவரையும் இணைக்கும் புள்ளியாக அவர்களது உடலுழைப்பும் அதுசார்ந்த தொழிலாளிவர்க்க உணர்வும் இருந்தது என்றுதான் நான் இப்போது நினைக்கிறேன்.

கம்யூனிஸ்ட் கட்சிகளின் நிகழ்வுகள், புத்தக விற்பனை இடங்கள் என சூலூரிலும் கோவையிலும் உப்பிலிபாளையத்திலும் என பல்வேறு சந்தர்ப்பங்களில் அவரோடு கனிவுடனும் கோபத்துடனும் விவாதித்;த பல சம்பவங்கள் இன்று ஞாபகம் வருகிறது. கம்யூனிஸ்ட் கட்சியுடனான அவரது உறவுக்கான ஒரு சாட்சிபோலவே அவரது தோழர்.பாண்டியன் படம் வெளியானது. பிற்பாடு அவர் சென்னை போகிறார். நான் எண்பதுகளின் மத்தியில் மேற்குலகிற்கு நகர்ந்து விடுகிறேன். அவரது படங்களைப் பார்க்கிறபோது பழைய ஞாபகங்கள் வந்ததுண்டு. அநேகமாக எங்களுக்கு இடையிலான நேரடி உரையாடல்கள் அற்றுப்போயின. கோவை நண்பர்கனோடு பேசும்போது மணிவண்ணன் அவ்வப்போது என்னை விசாரித்ததைச் சொல்வார்கள்.

முள்ளிவாய்க்கால் பேரழிவு முடிந்து நாட்களில் ஈழநிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக மணிவண்ணன் இலண்டன் வந்து சென்றதையும் அறிந்திருக்கிறேன். தொடர்ந்து வந்த ஒரு நாளில் நள்ளிரவு தாண்டி எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. நள்ளிரவுத் தொலைபேசி அழைப்புகள் எப்பொதுமே எனக்கும் துணைவியாருக்கும் கலக்கத்தைத் தருபவை. நள்ளிரவு கடந்த நிலையில் எமக்குவரும் தொலைபேசி அழைப்புகள் பெரும்பாலும் எமக்கு எமது இரத்த சொந்தங்கள், தோழர்கள், நண்பர்கள் என இவர்களின் மரணச் செய்தியோடுதான் வந்திருக்கின்றன. மிகுந்த பதட்டத்துடன் தொலைபேசியை எடுக்க ‘இது ராஜேந்திரன் வீடுதானா?’ என மறுமுனைக் குரல் கேட்டது. ‘எப்படி இருக்கிறீர்கள்?’ என இயல்பான தொனியில் அடுத்த கேள்வியும் வந்தது. அரைத்தூக்க நிலை, பதட்டத்தில் நானிருக்க மறுமுனைக்குரல் சாவதானமாகக் கேள்விகள் கேட்டுக் கொண்டிருந்தது. எனக்கு மிகுந்த கோபம் வந்தது. கொஞ்சம் கோபத்துடன் ‘யார் நீங்கள்? இந்த நேரத்தில் இப்படிக்; கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள்?’என்றேன். ‘மன்னிக்கவும், நான் மணிவண்ணன்’ என்றது எதிர்முனைக் குரல். கோபம் தணிந்துவிட்டது. எனது பதட்டத்தை நான் மணிவண்ணனிடம் விளக்கிச் சொன்னேன். ‘நாளைக்கு எடுக்கவா?’ என்றார். ‘பேசுவோம்’ என்றேன்.

 

manivannan_3.jpg

 

தான் இலண்டன் வந்திருந்தபோது என்னைச் சந்திக்கவிரும்பியதாகவும் தொலைபேசி எண் தருகிறேன் என்ற எழுத்தாளரொருவர் தரவில்லை எனவும் சொன்னார். தான் ஈழப் பிரச்சினை தொடர்பாகத் தமிழிலும் ஆங்கிலத்திலும் கொண்டுவரவிருக்கிற தொகுப்புகளுக்கு நான் கட்டுரை அனுப்ப வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். நான் கட்டுரைகளை அவருக்கு அனுப்பிவைத்தேன். அன்று துவங்கி அமைதிப்படை வெளிவருவதற்கு மூன்று மாதம் முன்பு வரை சில நாட்களில் நாளைக்குப் பலதடவைகளும், பலசமயங்களில் வாரம் இருமுறையும் நாங்கள் தொடர்ந்து உரையாடியபடி இருந்திருக்கிறோம். உரையாடல் பெரும்பாலும் ஈழ அரசியல், இடதுசாரி இயக்கங்கள் மற்றும் இலக்கியம் என்பது குறித்ததாகவே இருக்கும். அவருடன் நான் அதிகம் திரைப்படம் குறித்துப் பேசியில்லை.

அவருடைய பொருட்படுத்தத்தக்க படங்கள் என நான் கருதுவது அவருடைய நூறாவது நாள், அமைதிப்படை, இன்னொரு சுதந்திரம் அதனோடு அவர் முதன்முதலாகத் திரைக்கதை எழுதிய நிழல்கள் போன்றவைதான். நிழல்கள் தமிழ் சினிமாவில் ஒரு டிரென்ட செட்டர் என்பது எனது அனுமானம். பாரதிராஜா பள்ளியிருந்து வந்த பாக்யராஜிம் மணிவண்ணனும் திரைக்கதைகளை நேர்த்தியாக அமைப்பவர்கள். மணிவண்ணனது நூறாவது நாள் மற்றும் அமைதிப்படை சத்தியராஜ் என்கிற உத்தமவில்லனை அல்லது ஆன்டி ஹீரோவை தமிழுக்குக் கொடுத்தது. மணிவண்ணன் பாரதிராஜா பள்ளியின் உணர்ச்சவச சினிமாவை விழைந்தவர். அவரிடமிருந்து சோதனைபூர்வமான சினிமா எதுவும் வரமுடியும் என நான் நம்பவில்லை. மணிவண்ணன் இயக்குனராக வென்றதை விட நடிகராகவே வென்றார். கலைவாணரதும் நடிகவேள் எம்.ஆர்.ராதாவினதும் கலவை அவர். அவரது மாடுலேசனும் வசனஉச்சரிப்பிலான நேர உணர்வும் ராதாவிடமிருந்து அவர் ஸ்வீகரித்துக்; கொண்டவை. வெற்றி என்பதை இங்கு பொருளாதார ஸ்திரநிலை என்றே இங்கு அர்த்தம் கொள்கிறேன்.

கடந்த ஆண்டு மத்தியில் நான் பணியாற்றி வந்த இலண்டன் குளோபல் தமிழ் நியூஸ் வானொலி நிறுவனத்திற்காக மணிவண்ணனது மிக நீண்ட உரையாடல் ஒன்றினை நான் இணைப்பாளராக இருந்து நெறிப்படுத்தியிருந்தேன். இயக்குனர், திரைக் கலைஞன், வாசகன், அரசியல் செயல்பாட்டாளன் என மணிவண்ணன் எனும் ஆளுமையின் பல்வேறு முகங்களையும் வெளிக்கொணரும் மிக நீண்ட உரையாடலாக அது இருந்தது. தனது உடல் நிலையையும் பொருட்படுத்தாது, மின்வெட்டு வீட்டுத் தொலைபேசியை இடையூறு செய்த நிலையிலும் அவர் கைத்தொலைபேசியைக் காதருகில் வைத்தபடி, நள்ளிரவு தாண்டிய நேரத்திலும் அவர் நிகழ்ச்சியின் நேயர்களது கேள்விகளுக்குப் பொறுமையாகவும் ஆர்வத்துடனும் பதில்சொல்லிக் கொண்டிருந்தார்.

மணிவண்ணனை மார்க்சிய அரசியல் தேர்வும் விடுதலைத்தேட்டமும் கொணடிருக்கச் செய்தது அவரது அடித்தட்டுநிலை வாழ்வுதான். ஆவரது விடுதலை அரசியல் அவரை எப்போதும் தொடர்ந்து கொண்டே இருந்தது. வெகுஜன தமிழ்சினிமாவில் மிகவெளிப்படையான கச்சாவான அரசியல் விமர்சனப் படங்கள் என்றால் அது அவரது அமைதிப்படை திரைப்படம்தான். ஈழத்தமிழர்களால் நேசிக்கப்பட்ட, ஈழவிடுதலையில் அக்கறை கொண்ட மனிதராக அவர் இருந்தார். அதனாலேயே தமிழக அரசியல்வாதிகள் குறித்த மிகக் கசப்பான விமர்சனங்களை அவர் கொண்டிருந்தார்.

எனது கோவை நண்பர்கள் போலவே மணிவண்ணனின் மரணம் என்பது எனக்கும் அதிர்ச்சி தருவதாகவும் துயரார்ந்ததாகவும் இருக்கிறது. ஐம்பத்து எட்டு வயது என்பது மரணம் வரும் வயது இல்லை. மரணம் எம்மையும் அண்மித்துக் கொண்டிருப்பதான பீதி எம்மைச் சூழ்கிறது. மரணத்தின் முன்பு செய்ய வேண்டிய காரியங்கள் குறித்து நிறைய யோசிக்கச் செய்திருக்கிறது. மணிவண்ணனின் அகால மரணம் பெரும் துக்கத்தையும் நெருங்கிவரும் பயங்கரம் குறித்த பயத்தையும் எமக்குள் எழுப்புகிறது.

இதயநோய் கொண்டவரான மணிவண்ணன் குறித்த பாரதிராஜாவின் மனிதநாகரிகமற்ற, காட்டுமிராண்டித்தனமான வசைச் சொற்கள் மணிவண்ணனுக்கு மிகுந்த மன உளைச்சலைத் தந்திருக்கும் என்பதில் சந்கேமில்லை. இதயநோய் கொண்டவர்களை உடனடியாகப் பாதிப்புக்கு உள்ளாக்குபவர்கள் அவர்களுக்கு மிக நெருஙகிய மனிதர்கள்தான் என்பது ஒரு நிரூபிக்கப்பட்ட மருத்துவ உண்மையாக இருக்கிறது. மணிவண்ணனின் மரணம் ஞாபகம் வருகிறதுபோது எவருக்கும் இனி பாரதிராஜாசின் அரக்ககுணமும் ஞாபகத்தில் வந்தபடிதான் இருக்கும். மணிவண்ணனின் மரணம் இயற்கை பாரதிராஜாவுக்கு அளித்திருக்கும் ஆயுள்தண்டனை என்றுகூட நாம் சொல்ல முடியும்.

நண்பரும் தோழரும் கலைஞனுமான மணிவண்ணனுக்கு எனதும் எனது கோவை நண்பர்களதும் நெஞ்சார்ந்த அஞ்சலி.

 

 http://pesaamoli.com/mag_7_manivannan.php

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
பாரதிராஜா பல வெற்றிப்படங்களை கொடுத்தாலும் பின்னணியில் நின்று உழைத்தவர்கள் அதிகம்பேர் என்பது பல சர்ச்சைகளிலிருந்து புரிகின்றது.
தன்னைவிட யாரும் மிஞ்சக்கூடாது என்றமனநிலை பாரதிராஜாவிடம் இன்றும் இருக்கின்றது போல் தெரிகின்றது.
இணைப்பிற்கு நன்றி கிருபன்.
  • கருத்துக்கள உறவுகள்

மணிவண்ணன் அண்ணா, இன்னும்... ஒரு கிழமை உயிரோடு இருந்திருந்தால்...
லண்டன் போராட்டத்தைப் பார்த்த, மகிழ்ச்சியில்... நீடூழி வாழ்ந்திருப்பார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மனிதம் போற்றிய மணிவண்ணன்

எஸ்.கோபாலகிருஷ்ணன்

அல்வா என்பது தமிழர்கள் மத்தியில் பிரபலமான ஓர் இனிப்புப்பண்டம். 1994இல் வெளியான அமைதிப்படை என்ற படம் அல்வா என்ற வார்த்தைக்கு தமிழ்ச் சொல் அகராதியில் புதுப்பொருளைப் பெற்றுத் தந்தது. அதன் பிறகு யாராவது பொய் சொல்வதை உணர்ந்தால் 'ஏய்! யார் கிட்ட அல்வா கொடுக்கற?' என்று கேட்கத் தொடங்கினார்கள் தமிழர்கள். இதைப் போல் தமிழ் மக்களின் பேச்சுமொழியில் ஊடுருவும் திறமை தமிழ்த் திரைப்படத்துறையைச் சேர்ந்த வெகு சிலருக்கே வாய்த்திருக்கிறது. அவர்களில் ஒருவர் அமைதிப்படை படத்தின் இயக்குநர் மணிவண்ணன்.

50 படங்களை இயக்கியவரும் 400 படங்களுக்கு மேல் நடித்தவருமான மணிவண்ணன் 2013ஆம் ஆண்டின் சூன் திங்கள் 15 ஆம் திகதி இன்னுயிர் நீத்தார். அவரது இழப்பு தமிழ் சினிமாவுக்கு மட்டுமல்லாமல் உலகத் தமிழர்களுக்கே பேரிழப்பாக அமைந்திருக்கிறது.

1954இல் தமிழகத்தின் கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த சூலூர் கிராமத்தில் பி;றந்தவர் மணிவண்ணன். இவரது தந்தை ஆர்.எஸ். மணியம் திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர். தந்தையின் மூலம் திராவிட முன்னேற்றக் கழகம், திராவிடர் கழகம், திராவிடச் சிந்தனை மரபு ஆகியவற்றில் ஈடுபாடு கொண்டார். பின்னர் இடதுசாரி சிந்தனை மரபில் ஈடுபாடு கொண்டு மார்க்ஸிய லெனினியக் கட்சியில் பணியாற்றினார். தன் தந்தையுடன் அரசியல் ரீதியாக முரண்படத் தொடங்கினார். ஈழப் பிரச்சினையில் ஈடுபாடு கொண்டு பின்னாட்களில் ம.தி.மு.க, சீமானின் நாம் தமிழர் கட்சி ஆகிய கட்சிகளிலும் பணியாற்றினார். (பார்க்க: பெட்டிச் செய்தி- மணிவண்ணனின் தமிழீழத் தாகம்)

நடிகர் சத்யராஜின் கல்லூரி நண்பரான மணிவண்ணன் கல்லூரிக் காலங்களில் தன் கதை வசனத்தில் முற்போக்குச் சிந்தனைகளைப் பறைசாற்றும் மேடை நாடகங்களை அரங்கேற்றியிருக்கிறார். 80களின் தொடக்கத்தில் தமிழ் சினிமா அலையைத் தன் வசம் திருப்பிய இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் திரைப்படங்களைப் பார்த்து திரைப்படத் துறையில் ஆர்வம் கொண்டார். பாரதிராஜாவின் கிழக்கே போகும் ரயில் படத்தைப் பார்த்து அதைப் பற்றிய 100 பக்கக் கடிதம் ஒன்றை எழுதி பாரதிராஜாவுக்கு அனுப்பினார். அது அவரை பாரதிராஜாவின் பட்டறையில் இணைத்தது. பாரதிராஜா இயக்கி நடித்துக் கொண்டிருந்த கல்லுக்குள் ஈரம் படத்தின் துணை இயக்குநரானார் மணிவண்ணன்.

பாரதிராஜாவின் துணை இயக்குநர்களுக்கு ஒரு நன்மை உண்டு. அவர்களிடம் எழுத்துத் திறமை இருந்தால் கதை வசனம் எழுதும் பொறுப்பை பாரதிராஜா வழங்கிவிடுவார். இதனால் பயன்பெற்றவர்கள் பாக்யராஜும் மணிவண்ணனும்தான். ஆழ்ந்த வாசிப்புப் பழக்கத்தைக் கொண்டிருந்த மணிவண்ணன், பாரதிராஜா இயக்கி 1980இல் வெளியான நிழல்கள் என்ற திரைப்படத்துக்குக் கதை வசனம் எழுதும் வாய்ப்பைப் பெற்றார். அந்தப் படம் வசூல் ரீதியாகத் தோல்வி அடைந்தாலும் கதை வசனத்துக்காகப் பாராட்டப்பட்டது. ஆனால் அடுத்த ஆண்டு வெளியான 'அலைகள் ஓய்வதில்லை' படத்துக்கு மணிவண்ணனே கதை வசனம் எழுதினார். அந்தப் படம் வசூல் சாதனை புரிந்ததோடு தமிழ்த் திரைப்படக் காதல் காவியங்களில் மறக்க முடியாத ஒன்றாக தமிழர்கள் மனதில் தங்கியது. இந்துப் பையனுக்கும் கிறிஸ்தவப் பெண்ணுக்கும் இடையிலான காதலைப் பேசிய அந்தப் படத்தில் மதபேதங்களைச் சாடியிருப்பார் மணிவண்ணன்.

பாரதிராஜாவின் மேலும் சில படங்களில் துணை இயக்குநராகவும் கதை-வசனகர்த்தாவாகவும் பணியாற்றிய மணிவண்ணன் இயக்கிய முதல் படம் 1982இல் வெளியான "கோபுரங்கள் சாய்வதில்லை". அழகில்லாத மனைவியை வெறுத்து வேறொரு பெண்ணை விரும்பும் கணவனை திருத்தும் பெண்ணின் பரிதாபத்துக்குரிய நிலைமையைப் பேசிய அந்தப் படத்தின் ஒரு காட்சியில் தன் தமிழின உணர்வை வெளிப்படுத்தியிருப்பார் மணிவண்ணன்.

படத்தின் நாயகன் மோகனின் தந்தையாக நடித்த வினு சகரவர்த்தி கர்நாடக மாநிலத்தின் தலைநகர் பெங்களூருக்குப் பயணமாவதுபோல் ஒரு காட்சி படத்தில் இடம்பெறும். பெங்களூரில் கையில் ஒரு புட்டித் தண்ணீரை வைத்துக் கொண்டு அலைவார் வினு சக்ரவர்த்தி. உடனிருக்கும் நபர் இத்தனை பெரிய ஊரில் தண்ணீர் கிடைக்காதா என்று கேட்பார்.

அதற்கு 'பேப்பய மவனே... பேப்பரே படிக்கிறதில்லையாடா நீ.. தண்ணி குடுக்க மாட்டேன்னு தகராறு பண்ற ஊர்றா இது.. தன்மானமுள்ள தமிழன்டா நான்!' என்பார் வினு சக்ரவர்த்தி. இந்தக் காலகட்டத்தில் தமிழகத்துக்கும் கர்நாடகத்துக்கும் இடையிலான காவிரி நதிநீர்ப் பங்கீட்டுப் பிரச்சினை உச்சத்தில் இருந்தது. இந்தப் படம் வெளியான ஆண்டு 1982 என்பதும் அதுவரை தமிழ்த் திரைப்படங்களில் மிக மிக அரிதாகவே தமிழுணர்வு வசனங்கள் ஒலித்திருக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கவை.

80களில் திரையிலகின் உச்சத்தில் மின்னிய இயக்குநர் நட்சத்திரங்களில் மணிவண்ணனும் ஒருவர். இதுவரை 50 படங்களை இயக்கியுள்ள மணிவண்ணன் அனைத்து காதல், வீரம் (ஆக்ஷன்), குடும்ப உறவுச் சிக்கல்கள், பாசப் பிணைப்பு (செண்டிமெண்ட்), விறுவிறுப்பு (திரில்லர்), சமுதாயத்தின் மீதான அக்கறை என அனைத்து விதமான கதையமசங்களையும் கையாள்வதில் வல்லவராக விளங்கிய வெகு சில இயக்குநர்களில் ஒருவர். இவர் இயக்கிய நூறாவது நாள், 24 மணி நேரம் ஆகிய படங்கள் விறுவிறுப்பான திரைக்கதைக்காக இன்றுவரை பாராட்டப்படும் படங்களாக விளங்குகின்றன. புதுமைகளைச் செய்யத் தயங்காத மணிவண்ணன் நூறாவது நாள் படத்தில் அப்போது முன்னணிக் கதாநாயகனாக வலம்வந்துகொண்டிருந்த மோகனை வில்லனாக்கியிருப்பார். படமும் வெற்றிபெற்றது.

தன் கல்லூரிக்கால நண்பர் சத்யராஜை வைத்து 25 படங்களை இயக்கியிருக்கிறார் மணிவண்ணன். அவற்றில் ஜல்லிக்கட்டு, சின்னதம்பி பெரியதம்பி, வாழ்க்கைச் சக்கரம், பாலைவன ரோஜாக்கள், அமைதிப்படை ஆகிய படங்கள் முக்கியமானவை.

குறிப்பாக 1994இல் வெளியான அமைதிப்படையைப் பற்றித் தனிக் கட்டுரையே எழுதலாம். ஒரு சாதாரண பிச்சைக்காரர் ஓர் அரசியல்வாதியின் உதவியாளராகச் சேர்ந்து அவரையே பின்னுக்குத் தள்ளி அமைச்சர் பதவிக்கு வந்து, பின் வீழும் கதையைப் பேசிய இந்தப் படம் தமிழ்த் திரைப்படங்களில் அரசியல் நையாண்டி என்ற புது வகைமையின் அரிச்சுவடி என்று பிரபல ஆங்கில நாளிதழான தி இந்துவின் பாராட்டைப்பெற்றது.

விக்ரமன், ஆர்.கே. செல்வமணி, சுந்தர்.சி, சீமான், ராசு மதுரவன் என பல இயக்குநர்கள் மணிவண்ணனிடம் திரைப்படப் பாடம் பயின்றவர்கள். இவர்கள் அனைவரும் தனி முத்திரை பதித்த இயக்குநர்கள் என்பதும் மணிவண்ணனுக்குப் பெருமை சேர்ப்பதாக அமைந்திருக்கிறது.

அதற்கு முன் பல படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்திருந்தாலும் அமைதிப்படையில்தான் ஒரு சிறந்த நடிகராக கவனிக்கப்பட்டார் மணிவண்ணன். இந்தப் படத்தில் ஓர் அரசியல் கட்சித் தலைவராகத் தோன்றும் மணிவண்ணன், அப்போதைய பிரதமர் நரசிம்மராவ், பேச்சுத் திறமையால் அப்பாவி மக்களை மயக்கிய திராவிடக் கட்சித் தலைவர்கள், கள்ள ஓட்டுக் கலாச்சாரம், வாரிசு அரசியல் ஆகியவற்றைச் சகட்டுமேனிக்கு வாரித் தள்ளியிருப்பார். இதனால் நடிப்பு வாய்ப்புகள் அவரை வந்தடைந்தன.

ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த, சத்யராஜ், அர்ஜுன், அஜீத், விஜய் என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்தார். முற்போக்கு சிந்தனை கொண்ட நடிகரான சத்யராஜும் இவரும் இணைந்து நடித்த படங்களில் மூட நம்பிக்கைகளையும் பிற்போக்குத்தனங்களையும் பகடி செய்யும் வசனங்கள் அதிகமாக இடம்பெற்று ரசிகர்களின் ஆதரவைப் பெற்றன. 90களில் இந்த இணை, நகைச்சுவையில் கவுண்டமணி-செந்தில் இணைக்கு இணையான வரவேற்பைப் பெற்றுக்கொண்டிருந்தது என்றால் அது மிகையல்ல.

சுந்தர்.சி இயக்கிய "உள்ளத்தை அள்ளித்தா" என்ற நகைச்சுவைப் படத்தில் இரட்டைவேடமேற்று நடித்த மணிவண்ணன் இரண்டு பாத்திரங்களையும் சிறப்பாகக் கையாண்டிருப்பார். இது தவிர முதல்வன், அவ்வை சண்முகி, சங்கமம், படையப்பா, வில்லாதிவில்லன், மாமன் மகள், எட்டுப்பட்டி ராசா, துள்ளாத மனமும் துள்ளும். பட்ஜெட் பத்மநாபன், மாயாண்டி குடும்பத்தார் போன்ற எண்ணற்ற படங்கள் இவரது நடிப்புக்காகவும் கவனம்பெற்றிருக்கின்றன.

எம்.ஆர். ராதா பாணியில் நகைச்சுவை கலந்த வில்லன் வேடங்களை திறம்படக் கையாள்பவராக அறியப்பட்டவர் மணிவண்ணன். நடிப்புக்கான தன் ஆதர்சமாக எம்.ஆர் ராதாவையே குறிப்பிடுவார் மணிவண்ணன்.

அதேவேளையில் குணச்சித்திரப் பாத்திரங்களில் நடித்ததோடு பார்ப்பவரைக் கண்ணீர் சிந்தவகைக்கும் நடிப்பையும் வழங்கியிருக்கிறார். சங்கமம், காதலுக்கு மரியாதை, சமுத்திரம், மாயாண்டி குடும்பத்தார் ஆகிய படங்கள் அவற்றில் குறிப்பிடத்தகுந்தவை. குறிப்பாக சங்கமம் படத்தில் இவரது பாத்திரமே மையப் பாத்திரமாக அமைந்தது.

திரைப்படங்களில் மட்டுமல்லாம நிஜ வாழ்க்கைச் செயல்பாடுகளிலும் துணிச்சலையும் சமுதாய அக்கறையையும் வெளிப்படுத்தியவர் மணிவண்ணன். திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு,கருணாநிதியின் அரசியல் செயல்பாடுகளை மிகக் கடுமையாக விமர்சிக்க அஞ்சியதில்லை. அதே நேரத்தில் அவரிடம் தனிப்பட்ட முறையில் நட்புப் பாராட்டவும் தவறியதில்லை

திரையுலகப் பிரபலங்கள் செய்த தவறுகளையும் மணிவண்ணன் கண்டிக்கத் தவறியதில்லை. விஸ்வரூபம் திரைப்படத்தை எதிர்த்து இஸ்லாமியர்கள் போர்க்கொடி உயர்த்தியபோது அந்தப் படம் இஸ்லாமியர்களை இழிவுபடுத்துவதாக கமல்ஹாசனைக் கண்டித்த வெகு சிலரில் ஒருவர் மணிவண்ணன். அப்போதுகூட கமல்ஹாசனின் திறமையையும் உழைப்பையும் கௌரவப்படுத்திவிட்டுத்தான் பேசினார். கமல்ஹாசன் ஹாலிவுட் தரத்தை தமிழ்த் திரைப்படங்களுக்குக் கொண்டுவருவது நல்லதுதான். ஆனால் ஹாலிவுட்டின் மோசமான அரசியலை தமிழ் சினிமாவுக்குக் கொண்டுவருவது கண்டிக்கத்தக்கது என்பதைச் சுட்டிக்காட்டிய வெகு சிலரில் மணிவண்ணனும் ஒருவர். எல்லாவற்றுக்கும் மேலாக விஸ்வரூபம் படம் வெளியாவதற்கும் முன் எந்தக் கருத்தையும் கூற மறுத்துவிட்டு படத்தைப் பார்த்த பின்பே அது குறித்த தன் கருத்துக்களை வெளிப்படுத்தினார் என்பது அவரது நேர்மைக்குச் சான்று.

திரையுலகில் திரையில் மட்டுமல்லாமல் திரைமறைவிலும் மிக நல்ல மனிதராக அறியப்பட்ட சிலரில் ஒருவர் மணிவண்ணன். அவரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவரும் இன்றைய முன்னணி ஊடகவியலாளருமான கல்யாணகுமாரின் வார்த்தைகள் அதற்குச் சாட்சியமாக அமைகின்றன. தன் திருமணத்தைக் கைக்காசு போட்டு நடத்திக் கொடுத்தவர் மணிவண்ணன் என்பதை நினைவுகூரும் கல்யாண் குமார், மணிவண்ணன் மிக கலகலப்பானவர் என்றும் திரையுலகப் பிரபலங்களிடம் இருக்கும் பகட்டை அறவே தவிர்ப்பவர் என்றும் தன் முகநூல் பதிவில் தெரிவித்திருக்கிறார்.

மூத்த பத்திரிகையாளர் ஞாநி, மணிவண்ணன் மறைவுக்குத் தெரிவித்துள்ள இரங்கலில், இடதுசாரி முற்போக்கு சிந்த்னைகொண்டவர்கள் தமிழ் சினிமாவில் நுழைவது அரிதாக இருப்பதையும் அதுபோன்ற மிகச்சிலரில் மணிவண்ணனும் ஒருவர் என்பதையும் சுட்டிக்காட்டியிருக்கிறார். எல்லாவற்றுக்கும் மேலாக அரணமனைக்குள் (தமிழ் சினிமாவுக்குள்) நுழைந்த பின்னும் பிச்சைக்காரர்களுக்காகவே (துன்பத்தில்வாடும் எளிய மனிதர்களுக்காகவே) ஏங்கிய மனம் கொண்டவர் என்று மணிவண்ணனை அடையாளப்படுத்தி அவரது மனித நேயத்துக்குக் கட்டியம் கூறுகிறார் ஞாநி (முகநூல் பதிவு).

பல்வேறு ஆளுமைகளையும் சாதி-மதம் சார்ந்த பழக்க வழக்கங்களையும் திரைப்படங்களிலும் நிஜ வாழ்க்கையிலும் விமர்சித்தாலும் யாருடைய தனிப்பட்ட காழ்ப்பையும் மணிவண்ணன் சம்பாதித்ததில்லை. 30 ஆண்டுகளுக்கு மேலாக பொதுவாழ்க்கையில் ஈடுபட்ட மணிவண்ணன் மீது தனிப்பட்ட முறையில் யாரும் எந்தக் குறையும் கூறியதில்லை. இயக்குநர் பாரதிராஜாவைத் தவிர.

அண்மையில் மணிவண்ணனுக்கும் பாரதிராஜாவுக்கும் இருந்த உரசல்கள் பொது அரங்குக்கு வந்தன. தான் இயக்கிய கடைசிப் படமான நாகராஜ சோழன் (அமைதிப்படை-2) படத்தின் இசை வெளியீட்டு விழாவில், பாரதிராஜா தன்னைத் தவிர யாரையும் ஓர் இயக்குநராக மதிக்காதவர் என்றும் தனக்கு இயக்குநர் வாய்ப்பு கிடைக்க அவர் எந்த வகையிலும் உதவியதில்லை என்றும் கூறினார் மணிவண்ணன். அதே வேளையில் தனக்கு திரைப்படம் இயக்கும் கலையைப் பயிற்றுவித்த குரு பாரதிராஜாதான் என்பதையும் அவர் பதிவு செய்யத் தவறிவில்லை.

இதற்கு எதிர்வினையாக பாரதிராஜா கூறிய பதில் ஒன்று ஆனந்த விகடன் வார இதழில் வெளியானது. அதில் மணிவண்ணனுக்கு வாழ்வளித்ததே தான்தான் என்றும் அந்த நன்றியை மறந்துவிட்டு மணிவண்ணன் பேசுவதாகவும் கூறியிருந்தார் பாரதிராஜா. மணிவண்ணனை ஒரு பொய்யர் என்றும் கூறியிருந்தார்.

அந்த பதில் வெளியாகி இரண்டு நாட்களில் இறந்துவிட்டார் மணிவண்ணன். மாரடைப்பால் இறந்திருப்பதால் மணிவண்ணனின் மறைவுக்கு பாரதிராஜாவின் இழிவான விமர்சனமும் காரணம் என்று சமூக வலைதளங்களில் கருத்துக்கள் பரப்பபடுகின்றன. அதை ஏற்க முடியாது என்றாலும் தன் கருத்துக்களை சற்று கண்ணியத்துடன் பாரதிராஜா வெளிப்படுத்தியிருக்கலாம் என்பதை மறுப்பதற்கில்லை.

ஆழ்ந்த வாசிப்பின் மூலம் தமிழ்த் திரைப்படத்துறையில் ஓர் அறிவுஜீவியாக விளங்கிய மணிவண்ணன் நல்ல நடிகராகவும் உயர்ந்து தன் பன்முகத் திறமையை நிரூபித்தவர். இவற்றுக்கெல்லாம் மேலாக அவருக்கு இருந்த சமூக அக்கறையும் மனிதநேயமும் தனி நபர் காழ்ப்பில்லாமல் விம்ரசனங்களை முன்வைத்த பாங்குமே அவரை வரலாற்றின் மிக முக்கியமான ஆளுமையாக மாற்றியிருக்கிறது.

**

பெட்டிச் செய்தி

மணிவண்ணனின் தமிழீழத் தாகம்

திரைப்படங்களில் மட்டுமல்லாமல் அரசியல் சமூக செயல்பாடுகளுக்காகவும் அறியப்பட்டவர் மணிவண்ணன். ஈழப் பிரச்சினையில் அதிக ஈடுபாடு கொண்டு தனித் தமிழீழத்துக்காகக் குரலெழுப்பினார். ம.தி.மு.க கட்சியில் சேர்ந்து சிறிது காலம் பணியாற்றினார். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மரணதண்டனை வழங்கப்பட்ட சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோரின் மரண தண்டனையை ரத்து செய்யக்கோரி தமிழகத்தில் நடந்து பல்வேறு போராட்டங்களுக்குப் பொருளுதவி செய்தார். சென்னையில் உண்ணாவிரதப் பந்தல் அமைத்துக் கொடுத்ததோடு நேரில் வந்து ஆதரவும் தெரிவித்தார். வெளிப்படையாக விடுதலைப் புலிகள் கட்சியையும் அதன் தலைவர் பிரபாகரனையும் ஆதரித்தார். சீமான் தொடங்கிய நாம் தமிழர் கட்சி உறுப்பினரானார்.

'நான் ஈழத்தில் பிறந்திருந்தால் விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்து தனித் தமீழத்துக்கான போராட்டத்தில் ஈடுபட்டிருப்பேன். தமிழகத்தில் பிறந்ததால் அதற்கான ஆதரவை மட்டுமே என்னால் வழங்க முடிகிறது. இது என் துரதிருஷ்டம்' என்று அவர் கூறியிருப்பதை வைத்து அவரது தமிழீழ தாகத்தைப் புரிந்துகொள்ளலாம்.

இதை கௌரவிக்கும் வகையிலும் பகிரங்கமாக அவரே தெரிவித்த விருப்பத்துக்கிணங்கவும் அவர் மறைந்தபின் அவரது சடலத்துக்கு விடுதலைப் புலிகள் கொடி போர்த்தப்பட்டது. பல்வேறு தமிழீழ ஆதரவு அமைப்புகள் அவருக்கு வீரவணக்கம் செலுத்தியிருக்கின்றன.

குறிப்பு- கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் விக்கிபீடிய இணையதளத்திலிருந்து பெறப்பட்டவை.

http://www.ponguthamil.com/shownewscontent.aspx?sectionid=11&contentid=77d2f691-7caa-4e6c-81c5-2472bc3ccaad

  • கருத்துக்கள உறவுகள்

 

பாரதிராஜா பல வெற்றிப்படங்களை கொடுத்தாலும் பின்னணியில் நின்று உழைத்தவர்கள் அதிகம்பேர் என்பது பல சர்ச்சைகளிலிருந்து புரிகின்றது.
தன்னைவிட யாரும் மிஞ்சக்கூடாது என்றமனநிலை பாரதிராஜாவிடம் இன்றும் இருக்கின்றது போல் தெரிகின்றது.
இணைப்பிற்கு நன்றி கிருபன்.

 

 

இது எமது நாட்டிலும் இருந்தது......
 
குறிப்பிட்டவர் தன்னை சார்ந்தே எல்லாவற்றையும் வைத்திருக்க ஆசைபட்டார். (இவரால் ஒரு சிறிய பாதிப்பு எனக்கும் தனிப்பட நிகழ்ந்தது)
இவர் இறுதி காலங்களில் உச்சிக்கே போயிருந்தார்.
அப்போது இவரை "நீங்கள் ஆலமரம் நாங்கள் விழுதுகள்" என்று இவருடைய சிஷ்யன் ஒருவன் எழுதியிருந்தான். இதை இவர் தலைவரிடம் போய்  சொன்னாராம்.
 
தலைவர் இவருக்கு சொன்னாராம்: ஆலமரத்திடம் ஒரு கெட்ட குணமும் இருக்கிறது தனக்கு கீழே அது வேறு மரங்களை வளர விடுவதில்லை என்று சிரித்தாராம். 
(இதை கேட்ட பின்புதான் அவதானிக்கிறேன் ஆலமரத்தின் கீழ் வேறு மரங்கள் இருப்பதில்லைதான்) 
 
"பாரதிராஜா" ஒரு ஆலமரம்.  

மணிவண்ணன் அண்ணா, இன்னும்... ஒரு கிழமை உயிரோடு இருந்திருந்தால்...

லண்டன் போராட்டத்தைப் பார்த்த, மகிழ்ச்சியில்... நீடூழி வாழ்ந்திருப்பார்.

 

உண்மை அண்ணா.

பல தமிழ்நாட்டு உறவுகளும் லண்டன் போராட்டம்பற்றிய தகவல்களுடன் மணிவண்ணன் ஐயாவை நினைவு கூர்ந்தார்கள். இருந்திருந்தால் அதை பார்த்து மகிழ்ந்திருப்பாரே என்று...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.