Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வடக்கு தேர்தல் : தமிழ் மக்களின் போராட்ட குணமும், உலகிற்கான செய்தியும் !

Featured Replies

 

afp-vote+-photo.jpg

தமிழ் மக்களிடம் இருக்கும் போராட்ட குணத்தை யாராலும் முறியடித்துவிட முடியாது என்கிற செய்தியை மீண்டும் ஆணித்தரமாக உணர்த்தியிருக்கிறது வடக்கு மாகாண சபைத் தேர்தலின் முடிவுகள்.

அதற்காக, போராட்ட குணம் என்பது ஆயுத போராட்டத்துக்கான மீள் திருப்பம் என்றும் யாரும் கற்பனைக் குதிரைகளை தட்டிவிட வேண்டாம். அப்படியான செய்தியை வடக்கு மக்கள் இம்முறை சொல்லவும் இல்லை. விருப்பவும் இல்லை. போராட்ட குணம் என்று இங்கு சொல்லப்படுவது அரசியல் உரிமைகளைப் பெற்றுக்கொள்வதற்கான அவசியமான போராட்டம் பற்றியது.

 
இலங்கை சுதந்திரம் பெறுவதற்கு முன்னர் இருந்து இன்று வரை தமது அரசியல் போராட்டத்தை தமிழ் மக்களும், தலைமைகளும் முன்னெடுத்திருக்கின்றன. ஒவ்வொரு போராட்ட வடிவமும் எதிர்வினைகளின் படியும், சர்வதேச சூழலுக்கு ஏற்பவும் மாறியும் வந்திருக்கிறது. அப்படித்தான், அஹிம்சை வழி போராட்டங்கள் 1970களின் இறுதியில் இளைஞர்களின் கைகளில் ஆயுத போராட்டமாக சென்று சேர்ந்தது. அதன் நீட்சி சாதக பாதகங்களுடன் 30 ஆண்டுகளையும் தாண்டிய வரலாற்றினை தன்னகத்தே கொண்டிருந்தது. அது, 2009 மே 17, 18, 19களில் முடிந்தும் போனது. போராட்ட வடிவமொன்று தோற்கடிக்கப்பட்டுவிட்டது என்பதற்காக அந்தப் போராட்டத்துக்கான காரணங்கள் இல்லாமற் போவதில்லை. அப்படித்தான் தமிழர் பிரச்சினைகளுக்கான காரணங்களும் - போராட வேண்டிய தேவையும் இன்னமும் மிச்சமிருக்கிறது. அப்படியான சூழ்நிலையில் சர்வதேச மாற்றங்களை உள்வாங்கிக் கொண்டு தமிழ் மக்கள் மீண்டும் அரசியல் ரீதியிலான போராட்டத்தை கைகளுக்குள் எடுத்துக்கொண்டுள்ள செய்தியை சொல்லியிருக்கிறார்கள். அதற்காக, வடக்கு தேர்தலை பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

சிலருக்கு மேற்சொன்ன விடயத்தில் பெரியளவு உடன்பாடு இல்லாமல் இருக்கலாம். ஏனெனில், முள்ளிவாய்க்காலுக்குள் வைத்து ஆயுத போராட்டத்தை தோற்கடித்த அரசாங்கத்தை தோற்கடிப்பதற்கான சரியான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து காத்திருந்த மக்களுக்கு, வடக்கு தேர்தல் சரியான சந்தர்ப்பமாக அமைந்தது என்பது மாதிரியான கருத்து. இதிலும் குறிப்பிட்டளவு உண்மையிருக்கிறது. ஆனால், பழிவாங்கும் மனநிலைக்கு அப்பால் இளைஞர்களிடமும்- பெரும்பாலான மக்களிடமும் அடுத்த கட்ட நகர்வு குறித்து தெளிவும் இருந்ததாகவே நான் உணர்கிறேன். ஏனெனில், தேர்தல் காலமும் - வாக்களிப்பின் தேவை பற்றிய ஆர்வமும் இளைஞர்களிடம் அதிகரித்திருந்தது. அது, போராட்ட வடிவமொன்றின் மாற்று தளத்தை தேடிக் கொண்டிருப்பவர்களின் ஆர்வமாகவே தெரிந்தது. அதுதான், வடக்கு தேர்தலில் இவ்வளவு அதிகமான வாக்களிப்பு வீதத்தை சாத்தியமாக்கி காட்டியது. பழிவாங்கும் உணர்ச்சிகளுக்கு அப்பாலான அழுத்தமான செய்தியாக அது பதிவாகியிருக்கிறது.

ஐக்கிய இலங்கைக்குள்; சுயாட்சி

தமிழ் மக்கள் இதற்கு முன்னரும் தமது ஆணையை போராட்ட குணத்தின் பிரதிபலிக்காக தேர்தல்களில் வழங்கிய வரலாற்றை நாம் திருப்பிப் பார்க்கலாம். ஒவ்வொரு தருணத்திலும் அதீத நம்பிக்கைகளுடனேயே இருந்தார்கள். இறுதியாக 2004ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலிலும் அதனையே நிகழ்த்திக் காட்டினார்கள். (வாக்களிப்பின் போது குறிப்பிட்டளவு குழறுபடிகள் நிகழ்த்தப்பட்டது என்பது உண்மை. அதை மறுக்க முடியாது) ஆனால், அந்தத் தேர்தல் குறித்த ஆர்வம் சமாதானத்துக்கான மற்றும் சுயாட்சிக்கான ஆணையையும் சேர்த்தே முன்வைத்தது.

இன்று களம் வேறு, யதார்த்தம் வேறு. எங்களுடைய போராட்டத்தின் இலக்கு எவ்வாறாக அமைய முடியும் என்றும் தெரியும். ஆக, மக்களின் தெளிவு குறித்து யாரும் அச்சம் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. தேர்தல் களங்கள் உலகின் பல பாகங்களிலும் இன (சாதிய, தேசிய) உணர்ச்சிகளினாலேயே முன்னிறுத்தப்படுகிறது. அதை மறுக்க முடியாது. அப்படியிருக்க இன விடுதலை கோசத்தோடு போராடியவர்களின் தேர்தல் களம் இன உணர்ச்சிகளை முன்னிறுத்தாது என்று எதிர்பார்க்க முடியாது. ஆனால், அதைத் தாண்டிய குறிப்பிட்டளவு யதார்த்த செய்தியொன்றை மக்களும் தங்களோடு எடுத்து வந்திருக்கிறார்கள் இம்முறை. அது, ‘ஐக்கிய இலங்கைக்குள்; சுயாட்சி’ என்பது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இம்முறை தேர்தலில் முன்வைத்த கோசமும் அதுதான். வடக்கு மக்களில் அநேகர் அதை தங்களோடு எடுத்தும் கொண்டிருக்கிறார்கள். அதாவது, தனி நாட்டுக் கோரிக்கையை தற்போதைய களம் அனுமதிக்கவில்லை என்று உணர்ந்ததன் பின்னரான தெரிவு. ஆனால், அதை உணர்வதற்காக கொடுக்கப்பட்ட விலை ரொம்பவே அதிகம் தான். அதையும் மறந்துவிட முடியாது. ஆக, பிரிவினை பற்றிய எண்ணப்பாடு தமிழ் மக்களிடத்தில் இப்போது (பெரிதாக) இல்லை. இணைந்திருத்தலுக்குள் தமக்கான சுயாட்சி பற்றிய விருப்பமும்- தேவையுமே தமிழ் மக்களிடத்தில் இப்போது இருக்கிறது.

அபிவிருத்திக் கோசம்

வடக்கு தேர்தல் களம் சந்தித்த கோசங்களில் ஒன்று அபிவிருத்தி என்பது. மோதல்களினால் முற்றாக அழிந்து போயிருக்கிற வடக்கு மாகாணம் உள்ளக அபிவிருத்தியில் முன்னோக்கி செல்ல வேண்டிய அவசியம் இருக்கிறது. அது தவிர்க்கவும் முடியாதது. ஆனால், அபிவிருத்தி பற்றிய கோசத்தை மக்கள் கண்டு கொள்ளவில்லை. ஆம், அதுதானே உண்மை. தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளுக்கான கோசங்களுக்கு முன்னால், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கம் முன்வைத்த அபிவிருத்தி என்கிற கோசமொன்றும் எடுபடவில்லை.

தேர்தல் கால அபிவிருத்தி இலங்கையின் பல பகுதிகளிலும் இடம்பெற்று வந்திருக்கிறது. இலங்கையை ஆளும் அரசாங்கங்கள் எப்போதுமே அதைச் செய்தும் வந்திருக்கின்றன. ஆனால், அவ்வாறான முயற்சியை வடக்கிலும் முன்னெடுத்தது பெரும் முட்டாள் தனம். அதாவது, வடக்கில் அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்படுவது தப்பில்லை. ஆனால், அவற்றை தேர்தல் வெற்றிகளை இலக்காக்கி கொண்டு முன்னெடுத்ததுதான் தப்பு என்கிறேன். கடந்த 30 வருடங்களில் மின்சாரம் இன்றியும், வீதிகளின் குண்டு குழிகளோடும், சுவரற்ற வீடுகளோடும் வாழுவதற்கு தமிழ் மக்களின் அநேகர் பழகிவிட்டனர். அவை அனைத்தும் தமது அரசியல் உரிமைகளை முன்னிறுத்திய போராட்டங்களுக்காக கொடுக்கப்பட்டவை. அது தொடர்பில் பெரும்பான்மையான தமிழ் மக்களுக்கு பெரிய கவலைகளும் இல்லை. அது, சலுகைகளைத் தாண்டிய அரசியல் உரிமைகள் மீதான அக்கறையின் வெளிப்பாடு.

வடக்கில் அபிவிருத்தி கோசங்களினால் பெரிய வெற்றிகளைப் பெற முடியாது என்று அரசாங்கததுக்கு தெரியும் தான். ஆனால், இவ்வளவுக்கு மக்கள் கண்டு கொள்ள மாட்டார்கள் என்று எதிர்பார்க்கவில்லை. தேர்தல் கால யாழ்தேவி ரயிலாலும், லக்ஷபானா மின்சாரத்தினாலும், தமிழ் எப்எம் வானொலியாலும், கார்பெட் வீதிகளினாலும் மக்களின் மனங்களை வெல்ல முடியவில்லை. இந்த இடத்தில் இதையும் கோடிட வேண்டிய தேவையுள்ளது, வடக்கு (கிழக்கு) தமிழ் மக்கள் எடுக்கின்ற முடிவுகள் சில தவறாக இருக்கின்ற போதும், அதற்காக நிறைய அர்ப்பணிப்பாக இருந்த வரலாறு இருக்கின்றது. அப்படிப்பட்ட மக்களிடம் தேர்தல் கால அபிவிருத்தி கோசம் வெற்றிபெறும் என்று எதிர்பார்ப்பது அபத்தமானது. அதன் பலனையே அரசாங்கமும்- அதன் சார்ப்பு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியும் அறுவடை(?) செய்திருக்கின்றன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

வடக்கு (கிழக்கு) தமிழ் மக்களின்  பிரதிநிதிகளாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியத்தை மக்கள் மீண்டும் முன்வைத்திருக்கிறார்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீதான மக்களின் அபிமானம் என்பது தேசியம், புலிகள் சார்பு நிலைப்பாட்டின் வெளிப்பாடு. இதில், மாற்றுக்கருத்துக்களுக்கு இடமில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் பல கட்சிகள் அங்கம் வகித்தாலும், சில கட்சிகள் உள்வந்தும் - வெளியே சென்றாலும் அது, புலிகளினால் ஒருங்கிணைக்கப்பட்ட அரசியல் குழு என்பதே உண்மை. அதுவே, தமிழ் மக்களின் வாக்குகளை கூட்டமைப்பிற்கு அபரிமிதமாக வழங்கச் செய்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை அரசியல் தலைமைகளாக மக்கள் முன்னிறுத்துவது என்பது கூட்டமைப்பின் வெற்றியல்ல. மக்களிடத்தில் இருக்கின்ற இறுதித் தெரிவு மட்டுமே. அது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் தெரியும்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கமா, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பா? என்கிற இரண்டு தெரிவுகள் தான் மக்கள் முன்னால் இருக்கின்றது என்கிற போது இலகுவாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னிறுத்தப்பட்டு விடும். அது தான் வடக்கின் யதார்த்தம். ஆனால், அதைத் தாண்டியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடமும் மக்கள் அழுத்தமான செய்தியொன்றை சேர்ப்பித்திருக்கிறார்கள். காலம் கடத்தலும் - அலட்டல்களும் தொடர்ந்தும் வேலைக்கு ஆகாது. எனவே, வழங்கப்பட்ட ஆணையைக்கு குறிப்பிட்டளவு நேர்மையாக இருந்து செயற்பட முயற்சியுங்கள் என்பதே அது.

ஏனெனில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இப்படியான பெருவெற்றியை பெறும் என்று அவ்வளவுக்கு எதிர்பார்க்கவில்லை. குறிப்பாக மொத்தமுள்ள 38 வடக்கு மாகாண ஆசனங்களில் 30ஐ கைப்பற்றும் ஆணைய மக்கள் வழங்குவார்கள் என்று. இந்த அதிகப்படியான வெற்றி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களையே உலுக்கி விட்டிருக்கிறது. வடக்கில் மாற்று சக்தியென்ற ஒன்றே இல்லை என்கிற அளவுக்கான ஆணை இது. இதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எப்படிக் கையாளப்போகின்றது என்பதிலிருந்துதான் எதிர்கால வரலாறு எழுதப்படும். அது, சிலவேளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக திருப்பினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. ஏனெனில், மக்களின் எதிர்பார்ப்புக்களில் குறிப்பிட்டளவானவற்றை சரியாக நிறைவேற்ற வேண்டிய தேவை. அல்லது அதற்கான முயற்சியின் அவசியம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வேண்டும்.

முன்னாள் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் வடக்கு மாகாணத்தின் முதலாவது முதலமைச்சராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபை உறுப்பினர்களினால் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்ட நாளின் பின்னிரவிலேயே இந்தக் கட்டுரை எழுதப்படுகிறது. சி.வி.விக்னேஸ்வரனுக்கோ, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கோ தட்டிக்கழித்துவிட முடியாத வரலாற்று கடமையுண்டு. அதை உணர மறுக்கின்ற புள்ளி படுபயங்கரமான துரோகமாக மாறும். ஆக, அவர்களின் செயற்திட்டங்கள், எதிர்காலம் குறித்த சரியான திட்டமிடல்களே இன்னமும் தமிழ் மக்களிடம் இருக்கின்ற போராட்ட குணத்தை சரியாக பாதையில் சேர்ப்பிக்க உதவும். அதை, கருத்தில் கொள்ள வேண்டிய தேவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு உண்டு.

வெற்றியும்; சில அதிர்வும்

வடக்கு மாகாண சபைத் தேர்தல் முடிவுகள் எல்லா தரப்பினரிடமும் பிரதிபலித்திருக்கிறது. அது, வடக்கிலுள்ள தமிழர்கள், வடக்கிற்கு வெளியே உள்ள தமிழர்கள், புலம்பெயர் தமிழர்கள், இந்தியத் தமிழர்கள், சிங்கள மக்கள், முஸ்லிம் மக்கள் என்று பல தரப்பு மக்களும் ஆர்வத்துடனும் - சின்னதான அதிர்ச்சியுடனும் பேசிக் கொண்டிருக்கின்றனர். இன்னும் சில நாட்களுக்கு அது தொடரவும் செய்யும்.

வடக்கின் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட அன்றே அங்கு ஆட்சி(?) அமைக்கப் போகின்றவர்கள் யார்? என்கிற கேள்விக்கான பதிலும் எழுதப்பட்டுவிட்டது. ஆனால், அது பிரச்சினையில்லை. இங்கு பலருக்கும் அதிர்ச்சியைக் கொடுத்தது வடக்கிலுள்ள மக்களின் அர்ப்பணிப்புடனான வாக்களிப்பு வீதமும் - அதனூடு நிகழ்த்திக் காட்டப்பட்ட இலங்கை அரசாங்கத்தின் மீதான எதிர்ப்புமே.

வடக்கு மக்கள் இவ்வளவு கோரங்களை எதிர்கொண்ட பின்னரும் அச்சமின்றி அரசாங்கத்தின் மீதான எதிர்ப்பு மனநிலையை இவ்வளவுக்கு வெளிக்காட்டுகிறார்களே? என்பது. இலங்கையில் ஆட்சி அமைத்திருக்கிற எந்த அரசாங்கம் ஆனாலும், வடக்கிலுள்ள பெரும்பான்மை மக்களின் அபிமானத்தைப் பெற்றுக்கொள்வது அவ்வளவு இலகுவானது அல்ல. ஏனெனில், வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் இலங்கையின் இரண்டு பெரும் கட்சிகளுக்கு எதிராகவும்- அவை அமைத்த ஆட்சிகளுக்கு எதிராகவும் உரிமைகளைக் கோரி போராடி வந்தவர்கள். அதை, இறுதி கோரங்கள் இடம்பெற்று 4 ஆண்டுகளுக்குள்ளேயே மறந்துவிட மாட்டார்கள். அதுபோக, போராட்டத்தின் வடிவமொன்றுதான் தோற்கடிக்கப்பட்டதே அன்றி, போராட்ட குணம் இன்னமும் அவர்களோடு தானே இருக்கின்றது. அதன் பிரதிபலிப்பே அதிகமாக வடக்கு தேர்தல் முடிவுகளில் தெரிந்தது.

இலங்கையின் எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி செயலிழந்து, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்தின் ஆதரவுக் கட்சி என்கிற நிலைக்கு சென்று கொண்டிருக்கிறது. மஹிந்த அரசாங்கத்தின் மீது ஏராளமான குற்றங்களை முன்வைக்கும் ஐக்கிய தேசியக் கட்சியினால் அவற்றுக்கு எதிராக மக்களை அணிதிரட்ட முடியவில்லை. ஏனெனில், கட்சிக்குள்ளேயே ஒன்றுமையாக இருக்க முடியவில்லை. கட்சியின் முக்கியஸ்தர்கள் எல்லாம் பொறுமை இழந்து அரசாங்கத்தோடு சேர்ந்து கொண்டிருக்கிறார்கள். தெற்கிலுள்ள மக்களும் தற்போதைய செயற்திறனற்ற எதிர்க்கட்சியை நம்புவதற்கு தயாராகவும் இல்லை. ஆக, தெற்கு இலங்கையின் ஆணை என்பது தவிர்க்க முடியாமல் பெருமளவில் மஹிந்தவின் பக்கமே இருக்கின்றது. அப்படித்தான்  வடக்கு கிழக்கு மாகாணங்களைத் தாண்டிய தேர்தல் செய்திகள் அடிக்கடி சொல்லிக் கொண்டிருக்கின்றன.

இப்படியானதொரு நிலையில் வடக்கிலுள்ள குறிப்பிட்டளவான மக்களின் மனங்களையும் மஹிந்த அரசாங்கம் வென்றுவிடும் என்று சிங்கள மக்களில் ஒரு தொகையினர் நம்பினர்கள். ஆனால், அது அபத்தமானது என்று தமிழ் மக்கள் தீர்பெழுதி விட்டனர். அதை சிங்கள மக்களினால் ஜீரணிக்க முடியவில்லை. மீண்டும் தமிழ் மக்களின் மீதொரு அச்சப்பார்வையை தோற்றுவித்துவிட வாய்ப்புக்களை வழங்கி விட்டது. எனினும், குறிப்பிட்டளவான சிங்கள மக்களிடம் தமிழ் மக்களின் அரசியல் அடிப்படைத் தேவை என்ன என்கிற தெளிவு இருக்கின்றது என்பதுவும் உண்மை.

புலம்பெயர் தமிழர்களில் அநேகர் ஈழத்திலுள்ள தமிழர்களை புரிந்து கொள்ள எப்போதுமே தயாராக இல்லை என்கிற செய்தியையும் வடக்கு தேர்தல் முடிவு சொல்லியிருக்கின்றன. மீண்டுமொரு தனித்த ஈழத்துக்கான ஆணையை தமிழ் மக்கள் வழங்கியிருக்கிறார்கள் என்கிற அச்சமூட்டுகிற அறிக்கையிடல்களையும் - கருத்துக்களையும், சில தென்னிந்திய அரசியல்வாதிகள் போல வெளியிட்டு வைக்கின்றனர். இது, தற்போதைக்கு அவசியம் அற்றது. புலம்பெயர்ந்துள்ள தமிழ் மக்களில் அநேகர் தமது எதிர்பார்ப்பை இங்குள்ள மக்களின் மீது திணிக்கவே முயற்சிக்கிறார்கள். மாறாக, மோதல்களினால் பாதிக்கப்பட்டு மீள் அபிவிருத்திக்காகவும் - சமூக கட்டுமானத்துக்காகவும் காத்திருக்கின்ற மக்களின் தேவை என்ன என்பதை உணர்வது மாதிரியாக இல்லை. இது, மீண்டும் மீண்டும் அச்சுறுத்தலானதாகவே இருக்கின்றது. சமூகமொன்றின் வெற்றியில் தாக்கம் செலுத்தக்கூடிய ஒரு தொகையினர் யதார்த்த களத்தினை புரிந்து கொள்ள மறுக்கின்ற புள்ளி அபாயகரமானது. அதையே, புலம்பெயர் தமிழர்களின் குறிப்பிட்டளவானவர்கள் பிரதிபலிக்கின்றனர். புலம்பெயர் தமிழர்களை நோக்கி ‘உதவி செய்யாவிட்டாலும் பரவாயில்லை, உபத்திரம் செய்யாமல் இருந்தாலே போதுமானது’ என்கிற செய்தியை ஈழத்திலுள்ள தமிழர்களை சொல்ல வைக்க வைத்துவிடுவார்களோ என்கிற பயம் இன்னமும் ஓடிக்கொண்டிருக்கிறது.

இணக்கப்பாடும், நல்லிணக்கமும்

மோதல்களினால் இயல்பு வாழ்க்கையை இழந்துள்ள இலங்கையின் சமூகங்களிடையே இணக்கப்படும் நல்லிணக்கமும் அவசியம். அதுவே, அடுத்த கட்டம் நோக்கி நகர்த்தும் என்கிற செய்தி அனைத்துத் தரப்பிடமிருந்தும் வந்து கொண்டிருக்கின்றன. அதுதான் என்னுடைய வாதமும். அதற்கு அர்ப்பணிப்பாகவும் இருக்க எல்லோரையும் கோருகிறேன். அழிவுகளிலிருந்து நல்லிணக்கமும்- சமாதானமும் உருவாகிய வரலாறுகள் இல்லை. சமூகங்களிடையேயான புரிந்துணர்வும் இணக்கப்பாடுமே நல்லிணக்கத்தை தோற்றுவிக்க அவசியமானவை. அது, இலங்கையிலுள்ள சமூகங்களுக்கிடையிலும் அவசியமானது. அந்த இணக்கப்பாட்டையும், நல்லிணக்கத்தையும் தேர்தல்கள் பிரதிபலிக்கும் என்று சிலர் எதிர்பார்க்கின்றனர். அல்லது அப்படித்தான் இருக்க வேண்டும் என்று இறுதி வரை நம்புகின்றனர்.

இன்னும் சிலர், இணக்கப்பாடும் - நல்லிணக்கமும் தோற்கடிக்கப்பட்டவர்களின்(?) பக்கத்திலிருந்து அர்ப்பணிப்புடன் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர். இவ்வாறான சிந்தனை  அபத்தமானது. அது, அடிமைத்தனத்தின் சில கூறுகளைத் திணிப்பதாக அமைகின்றது. இணக்கப்பாடு என்பது இரண்டு தரப்பினரும் விட்டுக்கொடுப்புக்களைச் செய்து கொண்டு வர வேண்டியது. அதனூடே நல்லிணக்கம் சாத்தியமாகும். அதைவிடுத்து ஒரு தரப்பினரே எல்லாவிதமான விட்டுக் கொடுப்பையும் செய்ய வேண்டும் என்றால் எப்படி அது சரியாக இருக்க முடியும்..?

இப்படியான ஒருபக்க விட்டுக்கொடுப்புக்களுடன் கூடிய இணக்கப்பாட்டையே வடக்கு  மக்களிடம் இருந்து சிலர் எதிர்பார்த்தார்கள். ஆனால், அது சாத்தியமாகவில்லை என்றவுடன் மீண்டும் பிரிவினைக்கான கோசம், ஆயுத போராட்டத்துக்கான முனைப்பு, அழிவுகளுக்கான அவசரம் என்கிற தொனியில் கருத்துக்களை வெளியிடுகின்றனர். உண்மையில் அது அவற்றுக்கான ஆணையை வழங்கவில்லை. மாறாக, இன ரீதியிலான ஒற்றுமையையும்- ஆணையையும் வழங்கியிருக்கிறது அவ்வளவுதான்.

பேரம் பேசுதலுக்கான (?) சக்தியை இன்னமும் இழந்துவிட வில்லை என்பதையும் - போராட்டத்தின் தேவைகள் இன்னமும் அடையப்படவில்லை என்பதையும் உணர்த்துவதற்கான முடிவினையே வடக்கு தேர்தல் முடிவுகள் பிரதிபலித்திருக்கின்றன. இதையே, இணைந்த வடக்கு- கிழக்கில் தேர்தல் நடத்தப்பட்டிருந்தாலும் அங்குள்ள தமிழர்கள் சொல்லியிருப்பார்கள். இதுவொன்றும் அச்சுறுத்தலான செய்தி அல்ல. ஆக, தேவையற்ற பதற்றங்கள் அவசியமற்றவை. இணக்கப்பாட்டையும் - நல்லிணக்கத்தையும் தமிழ் மக்களும் விரும்புகிறார்கள். அது, எதிர்த் தரப்பிடமும் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர் அவ்வளவு தான்.

காணி அதிகாரமும் - உள்ளக அபிவிருத்தியும்

வடக்கு மாகாணத்தில் இன்னும் சில நாட்களில் உத்தியோகபூர்வமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சி அமைத்துவிடும். அவர்களின் முன்னால் அரசியல் உரிமைகளைப் பெற்றுக்கொள்வதற்கு முன்னெடுக்கப்பட வேண்டிய செயற்திட்டங்களும் - அவசியமும் எவ்வளவுக்கு இருக்கின்றதோ, அதேயளவுக்கு வடக்கின் உள்ளக அபிவிருத்தி என்கிற விடயமும் இருக்கின்றது. மோதல்களினால் முற்றாக அழிந்து போயுள்ள வடக்கில் உள்ளக அபிவிருத்தி என்பது கல்வி, பொருளாதார, கலாசார, பண்பாட்டியல் பக்கங்களிலிருந்து முன்னெடுப்பட வேண்டிய அவசியம் இருக்கின்றது. இல்லாத பட்சத்தில் தமிழ் அடையாளங்களையும் - பாரம்பரியத்தையும் இழக்க வேண்டியிருக்கும். கல்வி மற்றும் பெருளாதாரம் என்கிற சூத்திரமே வடக்கு தமிழர்களை எப்போதும் முன்னிறுத்தி வந்திருக்கின்றது. அது, அவர்களின் அடையாளமாகவும் இருந்தது. இன்னும் அது ஓரளவுக்கு தொடர்கிறது. அவற்றை மீளவும் முன்னோக்கி எடுத்துச் செல்வதற்கான முயற்சிகள் அவசியம். அது, அவசரமானதும் கூட.

வடக்கில் தமிழ் மக்களின் ஆணை இலங்கையின் ஆட்சியாளர்களை ஏதோவொரு புள்ளியில் உலுக்கி பார்த்துவிட்டது என்பது உண்மை. வடக்கிலுள்ள தமிழ் மக்களின் பரம்பல் என்பது எப்போதுமே இலங்கையின் ஆட்சியாளர்களை அச்சுறுத்துவது. கிழக்கு மாகாணத்தில் தமிழ்- முஸ்லிம் பரம்பலை குழப்புவற்கான திட்டங்கள் 60 ஆண்டுகளுக்கு மேலாக முன்னெடுக்கப்பட்டு குழப்பியாகிவிட்டது. அப்படியானதொரு செயற்திட்டத்தை வடக்கிலும் முன்னெடுக்க முனைகிறார்கள். அதை, தேர்தல் முடிவுகள் அதிகமாக முன்னெடுக்க வைக்கும். இந்த நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் இருக்கின்ற முக்கிய வரலாற்றுக் கடமை வடக்கில் அத்துமீறிய குடியேற்றங்களை செய்வதிலிருந்து தடுப்பது. அதுவே, வடக்கின் பாரம்பரிய இன சமநிலையைப் பேண உதவும். இல்லாது போனால், தமிழ் மக்களின் இனச் செறிவு குழப்பப்படும் சாத்தியம் நிறையவே உண்டு.

மாகாண சபைகளின் அதிகாரங்களின் முக்கியமானதாக கொள்ளப்படுகின்ற காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களில், காணி அதிகாரத்தை ஜனாதிபதியிடமிருந்து / மத்திய அரசாங்கத்திடமிருந்து பெற்றுக்கொள்வதினூடு அத்துமீறிய குடியேற்றங்களை நிறுத்த முடியும். அதற்கான முயற்சியை மேற்கொள்ள வேண்டிய அவசியமே இப்போது முதன்மையாக இருக்கின்றது. இல்லாது போனால், கிழக்கு மாகாணத்தின் பகுதிகள் பறிக்கப்பட்டது போல வடக்கின் பகுதிகளும் இழக்கப்பட்டு விடும். ஏற்கனவே வவுனியாவின் தெற்கு சிங்கள குடியேற்றங்களினால் நிறைந்துவிட்டது. மன்னாரின் சில பகுதிகளும் அவ்வாறான முயற்சிகளுக்கு பலிகொடுக்கப்பட்டு விட்டது. இப்போது, அவ்வாறான குடியேற்றங்களைச் செய்ய நினைக்கிறர்களின் பார்வை முல்லைத்தீவை நோக்கி திரும்பியிருக்கிறது. அதற்கான ஆரம்ப அடிகளும் ஏற்கனவே போடப்பட்டுவிட்டன. 150க்கும் அதிகமான சிங்கள மீனவ குடும்பங்களை இராணுவத்தின் ஒத்துழைப்போடு குடியேற்றிவிட்டனர். இது, வடக்கு நோக்கிய அத்துமீறிய குடியேற்றங்கள் அச்சுறுத்தலின் படிகள். இவற்றை தடுத்து நிறுத்த வேண்டிய அவசரம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு தேவை.

(ஐக்கிய இலங்கைக்குள் எங்கும் வசிக்கின்ற உரிமை எல்லோருக்கும் உண்டு. ஆனால், அது, தனித்த மனித உரிமையாக இருக்கின்ற பட்சத்தில். அதுவே, அத்துமீறிய குடியேற்றங்களாக திட்டமிட்டு மேற்கொள்ளப்படுகின்ற போது அச்சுறுத்தலாக மாறுகின்றது. இரண்டுக்கும் நிறைய வித்தியாசம் உண்டு.)

இறுதியாக,

வடக்கு மாகாண சபைத் தேர்தல் வெற்றிகள் தமிழ் மக்களிடம் குறிப்பிட்டளவு கொண்டாட்ட மனநிலையை தோற்றுவித்துள்ளது. அது, போராட்ட குணத்தின் பிரதிபலிப்பினால் ஆனது. அத்தோடு, யதார்த்த கள நிலையை புரிந்து கொள்ள மறுக்கின்ற கொண்டாட்டமாகவும் அது இருந்துவிடாது என்று நம்பலாம். ஒவ்வொரு முறையும் சர்வதேசத்தை நோக்கிய ஒருமித்த கருத்தை தமிழ் மக்கள் வழங்கி வந்திருக்கிறார்கள். அதையே, இம்முறையும் அதிக அர்ப்பணிப்புடன் செய்திருக்கிறார்கள். அது, சர்வதேசத்தினால் கருத்தில் கொள்ளப்பட வேண்டும் என்றும் விரும்புகின்றனர். ஆனால், அது முரட்டுத்தனமான நம்பிக்கையாக இல்லை. ஆக, தமிழ் மக்கள் எந்தவொரு பகற்கனவின் பக்கத்திலும் தற்போது இல்லை. அது தொடர்பில் அச்சப்பட வேண்டிய அவசியமும் இல்லை. குறிப்பிட்டளவான யதார்த்த களத்தின் பக்கத்தில் நின்றுகொண்டு போராட்டத்தை முன்னெடுக்க முனைகிறார்கள். அது சரியான முடிவாகவும் இருக்கின்றது…!

4தமிழ்மீடியாவிற்காக : - புருஜோத்தமன் தங்கமயில்

இப்பிடி ஈழத்துக்கான விடிவுக்காக என்று கடைசில முடிச்சால் உந்தப்பந்தி அதிகம் விற்குமா?

 

இந்த தேர்தல் வெற்றியை வைச்சு எல்லாரும் வியாக்கியானம் செய்தாச்சு இனி என்ன அடுத்தது ஏதாவது நடக்கும் வரை காத்திருக்க வேண்டியது தானே.

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.