Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிச்சை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பிச்சை
ஏ.எம். சாலன்

அது ஒரு ஞாயிற்றுக் கிழமை.

பாலச்சந்திரன் தன் வேலையை முடித்துவிட்டு அலுவலகத்திலிருந்து வெளியேற சாயந்திரம் 5.30 மணிக்கு மேலாயிற்று. வழக்கமாக அவன், ஞாயிற்றுக் கி-ழமைகளில் 4 அல்லது 4.30 மணிக்கெல்லாம் அலுவலகத்தை விட்டு வெளியேறிவிடுவான். ஆனால், இன்று அவன் கைக்கடிகாரத்தைப் பார்க்க மறந்ததால் வசமாக மாட்டிக் கொண்டான்.

எல்லா ஞாயிற்றுக் கிழமைகளிலும் அந்த ஆர்.எம்.எஸ். அலுவலகத்தில் வேலை நடைபெறுவதுண்டு. நான்கு அஞ்சல் பிரிப்பாளர்களும், ஒரு தலைமைப் பிரிப்பாளரும் இருப்பார்கள். இம்மாதிரி ஞாயிற்றுக் கிழமைகளில் வேலை பார்ப்பவர்களுக்கு வார ஓய்வு நாளாக வேறொரு நாள் கொடுக்கப்படும். பாலச்சந்திரன் வேலை பார்க்கும் முதல் பிரிவில் ஞாயிற்றுக் கிழமைகளில் ஓய்வு வேண்டும் என்ற பேச்சுக்கே இடம் கிடையாது.

பாலச்சந்திரனுக்கு செவ்வாய்க் கிழமை ஓய்வு நாளாக வழங்கப்பட்டிருந்தது. அந்த அலுவலகத்தின் பஸ் ஸ்டாப்பிலிருந்து சரியாக 5.45&க்கு ஒரு பஸ் புறப்படும். அதைத் தவறவிட்டால், அவன் ஊர் போய்ச் சேர அந்த பஸ் ஸ்டாப்பில் கிட்டத்தட்ட ஒரு மணிக்கூர் நேரம் வரையில் காத்து நிற்க வேண்டும். அதிலும் இன்று ஞாயிற்றுக் கிழமை; பொதுவாக ஞாயிற்றுக் கிழமை அன்று, அந்த ரூட்டில் ஓடும் பஸ்ஸுகள் ஒழுங்காக ஓடுவதும் கிடையாது. அவன் தங்கியிருக்கும் ஊர், பட்டணத்திலிருந்து வெகு தொலைவிலுள்ள உட்பிரதேசத்தில் இருந்தது.

பாலச்சந்திரன், பஸ் ஸ்டாப்பை நோக்கி விறுவிறுவென நடந்தான்.

சேய், என்ன முட்டாள்தனம் பண்ணிட்டோம்; கடைசி நேரத்தில போய் மணி பார்க்காம உட்கார்ந்து வேலை செஞ்சிட்டோம் பாரு. பாலச்சந்திரன், தலையைத் தலையைப் போட்டு உருட்டிக் கொண்டான்.

ஞாயிற்றுக்கிழமை அநேகமாக அலுவலகத்தின் தலைமைப் பொறுப்பு அவனுக்குத்தான் வந்து சேரும்.

அவன் பஸ் ஸ்டாப்பில் வந்து நின்றதும் அகஸ்மாத்தாக தன் பர்ஸைத் திறந்து பார்த்தான். அதிர்ச்சியாயிற்று, அவனுக்கு! தன் சக ஊழியரான முரளிக்குப் பர்சுக்குள்ளிருந்து நூறு ரூபாயைக் காலையில் எடுத்துக் கொடுத்தது அப்போதுதான் அவன் நினைவுக்கு வந்தது. இப்போது பர்சுக்குள் 5 ரூபாய் ஒற்றைத் துட்டு மாத்திரம்தான் கிடந்தது. பஸ்ஸில் பயணம் செய்ய ஆறு ரூபாய் வேண்டும்.

இப்பொ, என்ன செய்வது? இன்னும் ஒரு ரூபாய்க்கு, எங்கே போவது? யாருட்டப் போய்க் கேட்க?

பஸ் ஸ்டாப்பில் நின்றவாறு அவன், சுற்றும் முற்றும் பார்த்தான்; தெரிந்த முகம் ஒன்றுகூட இல்லை. எர்ணாகுளம் பட்டணத்திலேயே பஸ் ஏறுவதற்கு அதிகமாகப் பயணிகள் வந்து கூடி நிற்கும் பஸ் ஸ்டாப் இதுதான்! ஒன்று, இரண்டு பேர்தான் பஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டிருந்தார்கள்.

இனி என்ன செய்ய?

பால் போன்று வெள்ளை நிறச் சட்டை அணிந்து, இன் பண்ணி, பெல்ட் கட்டி வி.ஐ.பி. மாதிரி நின்று கொண்டிருக்கும் ஒருவர், எப்படிப் போய் வெட்கமில்லாமல் கண்ணில் கண்டவர்களிடம் ஒரு ரூபாய்க்காகக் கையேந்துவது?

பாலச்சந்திரனுக்கு முகத்திலும், கழுத்திலும் வேர்த்துக் கொண்டிருந்தது. கைக்குட்டையை எடுத்து, அழுத்தித் துடைத்துக் கொண்டான்.

அவங்க கூடச் சேர்ந்து போய் சாயா குடிச்சிட்டு வரும்போதே பர்ஸைத் திறந்து பார்த்திருக்க வேண்டும்! கவனக் குறைவா இருந்திட்டோம்! தன்னையறியாமல் அவன், புலம்ப ஆரம்பித்துவிட்டான்.

நான்கு, ஐந்து பேர்களும் இன்னும் சேர்ந்து சாயா குடிக்க, இவன் தன் பர்சிலிருந்த 25 ரூபாயிலிருந்து 20 ரூபாயை எடுத்துக் கொடுத்தது, பாலச்சந்திரனுக்கு மறந்து போனது. ரயில்வே கான்டீனில் வைத்துப் பார்த்திருந்தாலாவது பத்து ரூபாய் யாரிடமாவது கைமாத்தாக வாங்கியிருக்கலாம்!

பைத்தியம் பிடித்தவன் போல் ரோட்டில், வடக்கும் தெற்கும் நடந்து கொண்டிருந்தான்.

மேகமூட்டமாக இருப்பதினால், இன்னும் கொஞ்ச நேரத்தில் இருட்ட ஆரம்பித்து விடுவேன் என மாலைப் பொழுது வேறு அவனைப் பயமுறுத்திக் கொண்டிருந்தது. அந்த வேளையில் திடீரென்று ஒரு பஸ் வரவே, நின்றிருந்தவர்களில் பாதிப் பேர் அதில் ஏறிப் போய்விட்டார்கள்.

பாலச்சந்திரன் என்ன நினைத்தானோ தெரியவில்லை; திடீரென்று பக்கத்திலிருந்த குறுக்குச் சாலைக்குள் புகுந்து, கிராண்ட் ஹோட்டலின் எதிர்ப்புறத்தில் ஒரு லொடக்குச் சைக்கிளுடன் நின்று, தினமும் லாட்டரி விற்கும் ஏஜெண்ட் நிற்கிறானா என்று பார்ப்பதற்காக வேண்டி ஓடினான்.

ஓ, இன்னிக்கு ஞாயிற்றுக் கிழமையல்லவா!

அவன், நெற்றியில் அடித்துக் கொண்டான் என்றாலும், கிராண்ட் ஹோட்டலைக் கடந்து, ரோட்டின் மூலை வரையில் சென்று பார்த்தான். நீந்தத் தெரியாதவன், தண்ணீருக்குள் விழுந்து தத்தளித்துக் கொண்டிருக்கும் வேளையில், ஒரு சிறு துரும்பாவது தன் கையில் தட்டுப்படாதா என்ற ஏக்கம், அவனுக்குள்!

சார்… இண்ணெத்தெ லாட்டரி, இண்ணத்தெ லாட்டரி…

நெற்றியின் மேற்புறத்தில் குங்குமப் பொட்டும், கீழ்ப்புறத்தில் சந்தனப் பூச்சுமாகப் போவோரையும், வருவோரையும் சாலையோர மரங்களுக்கு அடியில் நின்றுவாறு உஸ்… உஸ்… என்று கூவிக்கூவி அழைத்துக் கொண்டிருக்கும் கருப்புநிற ஜோஸ்யக்காரனை இன்று காலையில் திட்டியது அவன் நினைவுக்கு வந்தது. இப்படி தடிமாடன் மாதிரி இருந்துகிட்டு, வழியோரமா நின்னு இந்தத் தொழில் செய்யிறியே… ஒனக்கெல்லாம் வெட்கமா இல்லெ? பொழைக்க வேறு வழியா இல்லை?

என்றாலும்கூட, அவன் இவனைப் பார்த்து முகத்தில் அசடு வழியச் சிரிக்கத்தான் செய்தான்.

ஒரு வேளை அவன் நின்றாலாவது…

அங்கே, அவனையும் காணவில்லை.

பாலச்சந்திரன் அடுத்த குறுக்குச்சாலைக்குள் நடந்தான். அந்தச் சாலையோரத்தில் உட்கார்ந்து தினமும் பிச்சையெடுக்கும் தொழுநோயாளிப் பெண், தன் பிச்சைக் காசுகளை எண்ணி முடித்து, மடி சீலைக்குள் போட்டுச் சுருக்கி, தன் இடுப்புச் சேலைக்குள் சொருகிக் கொண்டாள். பின் பக்கத்தில் கிடந்த மரத்தாலான பொய்க்காலை எடுத்துப் பொருத்த ஆரம்பித்தாள்.

பாலச்சந்திரனைக் கண்டதும், இவன் நமக்குப் பிச்சைதான் போட வருகிறான் என்றெண்ணிய அப்பெண், சாமீ… தருமம் போடுங்க சாமீ…. என அழைத்தவாறு தன் பிச்சைப் பாத்திரத்தை எடுத்து அவனுக்கு நேராக ஏந்திப் பிடித்தாள். தினமும் அவன், அப்பெண்ணின் முகத்தில் விழிக்காமல் அலுவலகத்திற்குச் செல்ல முடியாது. அவன் காலையில் பஸ்ஸிலிருந்து இறங்கி, இப்பெண் உட்கார்ந்திருக்கும் அந்தக் குறுக்குச்சாலை வழியாகத்தான் அலுவலகத்திற்குச் செல்வது வழக்கம். அதோடு கொஞ்சம் பக்கமும்கூட!

என்ன சூழ்நிலை காரணமாக அப்பெண், இந்த நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கலாம் என்ற இரக்க உணர்வுகூட இல்லாமல் அவன், எத்தனையோ நாட்கள், அப்பெண்ணை உள்ளூரத் திட்டியிருக்கிறான். தனக்குக் காசு தராமல் போகக் கூடியவர்களை, அவர்கள் காதில் விழும்படியாக சில வேளை அப்பெண் கோபத்தில் திட்டுவாள். இவனும்கூட ஒரு நாள் அப்பெண்ணிடமிருந்து திட்டு வாங்கியிருக்கிறான்.

பிச்சைக்கார நாய், நீ… உனக்கு இவ்வளவு திமரா? & இது பாலச்சந்திரனின் கணிப்பு.

இந்த நிகழ்வுக்குப் பிறகு அப்பெண் உட்கார்ந்திருக்கும் பாதையோரமாக அவன் செல்வது கிடையாது; சற்று விலகியேதான் நடப்பான்.

அப்பெண்ணிடம் போய் ஒரு ரூபாய் கேட்டால் என்ன? சீச்சீ… அதைவிடக் கேவலம் இந்த உலகில் வேறு என்ன இருக்கு?

பாலச்சந்திரன் மீண்டும் பஸ் ஸ்டாப்புக்கே திரும்பி வந்தான்.

நேரம் போய்க் கொண்டிருந்தது. அவனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. உள்ளூர ஒரே கடுப்பு.

திடீரென்று பாலச்சந்திரனுக்கு முன்னால் ஒரு பெண் தென்பட்டாள். கிட்டத்தட்ட 40 அல்லது 50 வயது மதிக்கலாம். நல்ல சிகப்பு நிறம். வானவில்லைப் போல் பல வண்ண நிறத்திலுள்ள சுடிதார் அணிந்து, தோளில் ஒரு வானிட்டிப் பையுடன் மெல்ல நடந்து வருகிறாள். ஜிகினா தாளில் பொதித்தெடுத்த ஒரு பொருளும் அப்பெண்ணின் கையில் இருந்தது.

மானத்தையும், வெட்கத்தையும் பார்த்தால் இனி கதை நடக்காது.

முணுமுணுத்தவாறு பாலச்சந்திரன் தன் தோளில் கிடந்த பையைச் சரி செய்தவாறு மெல்ல அவளை நெருங்கினான்.

மேடம், ஒரு ஒரு ரூபாய் கிடைக்குமா?

அக்கம் பக்கம் திரும்பிப் பார்த்தவாறு பாலச்சந்திரன், அப்பெண்ணின் முன்னால் போய் நின்று கையை ஏந்துகிறான்.

என்ன நினைத்தாளோ தெரியவில்லை; அவள், இவனைக் கேசாதி பாதம் கண்களால் அளந்துவிட்டு, இவன் அந்தத் தொழுநோயாளிப் பெண்ணைக் கண்டு விலகிச் செல்வது போன்று தப்பித்தேன், பிழைத்தேன் என்று திரும்பித் திரும்பி இவனைப் பார்த்தவாறு சாலையின் மறுபுறத்திற்கு ஓடினாள்.

கடவுளே, மாசம் 20 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்கும் நமக்கா இந்தக் கதி? அதுவும் ஒரு ரூபாய்க்கு…!

பாலச்சந்திரன் பெருமூச்சுவிட்டான். அவனுக்கு நாக்கு உலர்ந்து, தொண்டை வறண்டு கொண்டிருந்தது.

நாம் லாட்டரி விற்கும் ஏழைத் தொழிலாளியையும், வழியோரமாக நிற்கும் ஜோஸ்யக்காரனையும், தொழுநோயாளிப் பெண்ணையும் ஏசியதன் பலனோ, என்னவோ! சேய், அது கெடக்கட்டும்; இப்ப, நாம் ஒரு ரூபாய்க்கு என்ன செய்வது? எப்படி வீடு போய்ச் சேருவது?

அப்போது பாலச்சந்திரனுக்குத் தீடீரென்று ஒரு யோசனை பிறந்தது. சற்றுத் தள்ளி ஆரியபவன் ஹோட்டல் உண்டே… அங்கு சென்று, நமக்குத் தெரிந்த தொழிலாளிச் சகோதரர்கள் யாராவது இருக்கிறார்களா என்று பார்த்தால் என்ன?

பாலச்சந்திரன் வடக்கு நோக்கி எட்டி நடந்தான்.

ஐயோ, இன்னிக்கு ஞாயிற்றுக் கிழமை… ஹோட்டல் திறந்திருக்குமோ, என்னவோ?

நினைப்பு, அவன் கால்களைப் பிடித்துப் பின்னால் இழுத்தது.

ப்ச்சு… சொல்ல முடியாது; எதுக்கும் போய்ப் பார்ப்போம்!

அப்பாடா, ஆரியபவன் ஹோட்டல் திறந்திருந்தது. சினிமாக் கொட்டகைக்கு, தங்கள் விரும்பும் கதாநாயகன் நடித்து முடித்த படங்கள் வெளிவரும் வேளையில் ரசிகர்கள் முண்டியடித்துக் கொண்டு உள்ளே நுழைவார்களே, அந்த மாதிரி ஹோட்டலுக்குள் புகுந்தான் பாலச்சந்திரன். உள்ளே பரிச்சயமுள்ள சகோதரர்கள் யாராவது நிற்கிறார்களா என்று அவன் சுற்றுமுற்றும் பார்த்தான். கருப்பு நிறத்திலுள்ள அந்தக் குட்டையான திருநெல்வேலிச் சகோதரன், ஓரமாக வைக்கப்பட்டிருந்த கம்ப்யூட்டரில் பில் அடித்துக் கொண்டிருந்தான்.

அவன் இவனைக் கண்டதும், வாங்க சார், நீங்க மட்டும்தான் வந்தீங்களா? குடும்பத்தைக் கூட்டிட்டு வர்லியா? என இவன் பக்கமாகத் திரும்பினான்.

தம்பி, நீ எனக்கு ஓர் உதவி பண்ணனும்.

பாலச்சந்திரன், அவன் காதில் மட்டும் வி-ழும்படியாகப் பையப் பேசினான்.

என்ன சார்… சொல்லுங்க; என்ன செய்யணும்?

ஒரு, ஒரு ரூபாய் வேணும்; நாளை தந்திருவேன்.

உடனே, அந்த உடன்பிறவாத் தொழிலாளிச் சகோதரன், மறுபேச்சுப் பேசாமல் தன் மேல்சட்டைப் பைக்குள்ளிருந்து ஒரு 5 ரூபாய் ஒற்றை நாணயத்தை எடுத்து, பாலச்சந்திரன் கையில் கொடுத்தான்.

அஞ்சு ரூபா போதுமா சார்?

நிஷ்களங்கமான அவன் முகத்தைப் பார்த்தவாறு பாலச்சந்திரன் சொன்னான் : போதும் தம்பி, வர்றேன்.

சாலையிலிருந்து மூன்று, மூன்றரை அடி உயரத்திலிருந்த அந்த ஹோட்டலின் படிக்கட்டு வழியே தடதடவென்று கனத்த செருப்பின் சத்தம் கேட்கக் கீழே இறங்கிய பாலச்சந்திரன் பஸ் ஸ்டாப்பை நோக்கி ஓடினான்.

http://omsakthionline.com/?post_type=sirukathai&publish=1376

 

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கதை. எனக்கும் இப்படி ஒரு அனுபவம் இருக்கு. பின்னர் எழுதுகிறேன். நன்றி பகிர்வுக்கு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.