Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கந்தசாமியும் கலக்ஸியும்! ( விஞ்ஞானத் தொடர் )

Featured Replies

முகவுரை!

 

310691_10150312965606415_753825724_n%252

 

இன்னும் சரியாக மூன்று மணித்தியாலங்களில் பூமி தூள் தூளாக வெடித்து அழியப்போகிறது என்று காலை ஐந்து மணிக்கு எழும்பி சுருட்டை பற்றவைக்கும் கந்தசாமிக்கு தெரிந்திருக்க ஞாயமில்லை. கந்தசாமிக்கென்ன? நல்லூர் கந்தசாமிக்கு கூட தெரியாது. அவன் கோயிலுக்கு மேலாக மெல்ல மெல்ல உதித்துக்கொண்டு இருக்கும் சூரியனுக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

 

மூன்று மணிநேரமே அவகாசம் இருந்தாலும் கந்தசாமி பற்றி தெரியாமல் கலக்ஸி பற்றி பேசுவதில் அர்த்தமில்லை. ஸோ இரத்தின சுருக்கம்! யாழ்ப்பாணம், வைமன் றோட்டு சந்தியில் இருக்கும் பாரதியார் சிலையிலிருந்து கந்தர்மடம் நோக்கி போகும் அரசடி வீதியில், ஒரு ஐந்து ஆறு வீடுகள் தள்ளிப்போனால் ஒரு இராணுவ முகாம் வரும். அந்த முகாமுக்கு பக்கத்து வீட்டில் தான் கந்தசாமி வசிக்கிறார். மூத்த மகன், 87ல் ஈபிஆர்எல்எப் அரசடி கிளை துணைப்பொறுப்பாளர் ஈசன் கன்னத்தை பொத்தி அடித்து, மறுநாளே கனடா சென்றுவிட்டான். இரண்டாண்டு இடைவெளியில் ஏனைய பெடியங்களையும் கந்தசாமி கனடாவுக்கும் சுவிஸுக்குமாய் அனுப்பிவிட்டார். மனிசி செல்வராணி மூன்றாவது மருமகளின் பிள்ளைப்பேறு பார்க்கப்போன நேரத்தில் கேஸ் போட்டு அங்கேயே செட்டில். கந்தசாமிக்கு வெளிநாடு போகும் எண்ணம் துளியும் இல்லை. என்ன ஆனாலும் இங்கேயே தான். அதுவும், தான் போனால் ஆர்மி தன்னுடைய காணியை எடுத்துவிடுமோ என்ற பயம். கந்தசாமி கச்சேரியில் காணிப்பதிவு பிரிவிலே கிளார்க்காக இருந்து ஓய்வுபெற்றவர். மாசி கழிந்தால் வயது ஐம்பத்தாறு; சமாதான நீதவான், இன்றைக்கு கோண்டாவில் RCTMS வருடாந்த விளையாட்டுபோட்டிக்கு பிரதமவிருந்தினர். பேசவேண்டிய உரையை மனசுக்குள் கொஞ்சம் மீட்டிக்கொண்டே, கப்பிக்கிணற்றில் தண்ணி அள்ளி முகம் அலம்பிவிட்டு, முகத்தை துடைத்துகொண்டே நேரே குசினிக்கு போகிறார்.

நிற்க! இந்த இடத்தில் பூமியில் வசிக்காத உயிரனங்களுக்காக சில பின்னணி தகவல்களை கொடுக்கவேண்டியிருக்கிறது.

 

நிற்க! இந்த இடத்தில் பூமியில் வசிக்காத உயிரனங்களுக்காக சில பின்னணி தகவல்களை கொடுக்கவேண்டியிருக்கிறது.

 

ring-galaxy%25255B2%25255D.jpg

 

எங்கோ ஒரு மூலையில், நவநாகரிகத்தின் சுவடே தெரியாத, பிரபஞ்சத்தின் மேற்கு பகுதியில், அதிகம் கவனிக்கபடாத கலக்ஸி ஒன்று இருக்கிறது. பால்வீதி என்று அதற்கு ஒரு பெயர் இருப்பது கூட உங்களுக்கு தெரிந்திருக்காது. அதிலே ஒரு குட்டி மஞ்சள் நிற நெருப்புக்கல், தன் பாட்டுக்கு அனிச்சையாக அசைந்து திரிந்தபடி; டெலஸ்கோப்பால் பார்க்கும்போது கூட அதிகம் சுவாரசியம் கொடுக்காத, அந்த நெருப்புக்கல்லில் இருந்து சிதறிய குறுணிக்கல் ஒன்று, சுமார் 98மில்லியன் மைல்கள் தூரத்தில் அந்த நெருப்புக்கல்லையே சுற்றி சுற்றி வந்துகொண்டிருக்கிறது. நீலமும் பச்சையுமாய் இருந்த கல்லுக்கு ஒரு பெயரை கூட பிரபஞ்சத்தின் வழிகாட்டி நூலான “பிரகராதி” குறிப்பிடவில்லை. அவ்வளவுக்கு எந்த பிரயோசனமுமற்ற புறக்கணிக்கப்பட்ட இந்த கிரகத்திலும் உயிரினங்கள் இருக்கிறது. அதிலும் குரங்கில் இருந்து கூர்ப்படைந்த, மனிதர்களை ஒத்த சாயல் கொண்ட வெறும் ஆறறிவு மட்டுமே கொண்ட உயிரனங்கள். தாமே முதன்மையான உயிரிகள் என்று அவற்றுக்கு ஒரு பெருமை. “சிந்திக்கும் விலங்கு” என்றெல்லாம் டாக் லைன் கொடுக்கும் ஆராய்ச்சியாளர்களை கொண்ட இனம். இன்றைய தேதிக்கு ஐபாடை(iPad) கூட தங்களின் கண்டுபிடிப்புக்களின் பெருமையாக சொல்லக்கூடிய பின்தங்கிய விலங்கினம்.  தமக்கு தாமே பெயர், பட்டம் வைத்துக்கொள்ளும் நடிகர்கள்; உலக நாயகன், சூப்பர் ஸ்டார் என்றெல்லாம் சொல்லுபவர்களுக்கு, இரண்டு வீடுகள் தள்ளி இருக்கும் இன்னொரு கிரகத்துக்கு போவதற்குள் தாவு தீர்ந்துவிடும். இந்த புத்திஜீவிகள் தம் கிரகத்துக்கு பூமி என்றும், தாம் சுற்றிவரும் நட்சத்திர நெருப்புக்கல்லுக்கு சூரியன் என்றும், தமக்கு தாமே மனிதர்கள் என்று அழைத்துகொள்வார்கள்.

 

இந்த பூமியில் இரண்டு வகையான புத்திசாலிகள் இருக்கிறார்கள். முதலாமவர் கவிஞர்கள், “வானத்து நிலவெடுத்து வாசலில் வைக்கட்டுமா?” என்று காதலிக்கு அதிகம் செலவில்லாத பரிசுகளே கொடுப்பார்கள். அவர்களில் ஒரு சிலர் விஞ்ஞானிகளும் கூட. வைரமுத்து என்ற ஒரு விஞ்ஞானி கவிஞர், “காலங்கள் எங்கு செல்லும், அதுவரை செல்வோமா? காலங்கள் தீரும் இடத்தில் புது ஜென்மம் கொள்வோமா?” என்ற சிந்தனையை ஒரு முறை கக்க, அதை எப்படியோ “ஓரியன்” சேர்ச் என்ஜினில் கண்டுபிடித்து, அதை அடிப்படையாக கொண்டே காலத்தத்துவத்தை,  பிரபஞ்சம் போற்றும் விஞ்ஞானியான துரைராஜா “சொர்க்கம் ஆராய்ச்சி கழகத்தில்” சில வருடங்களுக்கு முன்னர் கண்டுபிடித்தார்.

 

பூமியில் இருக்கும் இரண்டாவது வகை புத்திசாலிகள் கொஞ்சம் வித்தியாசமானவர்கள். இவர்கள் ஐடியாக்களை கொடுப்பது மட்டுமல்லாமல் பரப்புவதிலும் திறமைசாலிகள். ஒரு இனம் அடிமைப்பட்டு கிடந்தால், “உடனே புறப்படு, பொங்கியெழு, புரட்சி” என்று கோபாவேசத்தோடு Facebook என்னும், பூமியில் குப்பைகள் போடுவதற்காக அமைப்பட்ட தொட்டிலில் எழுதி போடுவார்கள். அந்த குப்பையை கிளற வரும் இன்னொடு புத்திசாலிக்கு பார்த்தவுடன் கோபம் இன்னமும் தலைக்கேறி அதே குப்பையை தன் தொட்டிலில் திருப்பி போடுவார். இப்படி குப்பை வீட்டுக்கு வீடு பரவி விடும். புரட்சி எல்லா குப்பை தொட்டிகளிலும் வெடிக்க, இன்னொரு புத்திசாலி அது குப்பையே இல்லை, அப்படி போட்டது தவறு என்பான். அவன் குப்பையும் பரவி, குப்பைகளை போட்டவர்கள் குழாயடி சண்டையில் இறங்குவார்கள். ஒரு கட்டத்தில் வேறொரு புத்திசாலி புதிதாக இன்னொரு குப்பையை போட, பழைய குப்பையை எல்லோரும் மறந்துவிடுவார்கள். இப்படி குப்பைகள் எல்லா இடமும் பறந்து, குப்பைகளுக்கு மத்தியிலேயே வாழும் இனமாக பூமியின் மனித இனம் மாறிவிட்டது. ஆக பிரபஞ்சங்களில் ஒரு சில ஆய்வுகளுக்கு ஐடியா கொடுக்கும் அதி புத்திசாலி கவிஞர்களும், புரட்ச்சிகளை நாளாந்தாம் உருவாக்கும் Facebook போராளிகளும் இருந்தாலும், இந்த இரண்டையும் பார்த்து “விரும்பும்” பூமி மனிதர்களே இங்கே அதிகம்.

இப்போது புரிகிறதா? பிரபஞ்சத்தின் கவனத்தை ஏன் இந்த பூமி கிரகம் அதிகம் ஈர்க்கவில்லை என்று?

 

பூமியில் எப்போதுமே ஒரு பிரச்சனை இருக்கிறது. யாருமே இங்கே சந்தோஷமாக இருந்ததில்லை. பிறந்ததிலிருந்து இறக்கும்வரை .. ஆ இறக்கும் வரை என்று சொல்லும்போது தான் ஞாபகம் வருகிறது. இந்த பூமியில் வாழும் உயிரினங்களுக்கு ஒரு வித "இறப்பு” என்ற வியாதி இருக்கிறது. மண்டையில் படாரென்று ஒன்று போட்டாலோ, அணுகுண்டு ஒன்றை தூக்கி போட்டாலோ தங்கள் சிந்தனை சக்தியை இழந்து நீர்த்துபோயவிடுவார்கள். பிரபஞ்சம் முழுதும் வசந்த காலங்களில் ஜலதொஷத்தொடு வரும், காதல் என்ற சின்ன வியாதிக்கு கூட இறந்துவிடுபவர்கள் இருக்கும் கிரகம் இது. அதில் தப்பினாலும் ஒரு எண்பது வயதில் மூப்பு என்ற வியாதி இறப்பை ஏற்படுத்திவிடும். இந்த சின்ன வியாதிக்கு வைத்தியம் கண்டுபிடிக்காமல் இன்னமும் திணறிக்கொண்டு இருப்பதால், எல்லோருக்கும் தாம் எப்படியும் இறந்துவிடுவோம் என்று தெரிந்தாலும் அது  எப்போது என்று பெரும் குழப்பம். எல்லாவற்றையும் அதற்குள் அனுபவிக்கவேண்டுமே என்ற ஏக்கம். விளைவு? அவசரம், தேடல் என சந்தோஷத்தை தேடி தேடி அலைவார்கள். இடைக்கால தீர்வாக வெறும் பச்சை தாள்களை இடம்மாற்றி கூட சந்தோசம் அடையும் விசித்திர ஐந்துகள் இவை. ஆனால் அதிலும் யாருக்கு அதிகம் தாள்கள் கிடைக்கின்றன என்ற போட்டியில் அந்த அற்ப சந்தோஷமும் பறிபோய்விடும். அதனால் இந்த “கவலை” என்ற விஷயம் கடைசி நிமிடம் வரை இருந்தது. பூமியின் மிகச்சிறந்த கண்டுபிடிப்பான ஐபாடை(iPad) வைத்திருப்பவர்களுக்கு கூட அந்த கவலை. சிலர் தாமேல்லாம் மரத்திலேயே தொங்கிக்கொண்டு இருந்திருந்தால் இவ்வளவு பிரச்சனை இல்லை என்பார்கள். இன்னும் சிலர், தரைக்கு வராமல் கடலிலேயே இருந்திருக்கலாம் என்பார்கள். ஆ.. இவர்கள் செய்த ஆராய்ச்சியில் தாம் எல்லோருமே ஆரம்பத்தில் கடல் உயிரிகளாக இருந்து தான் கூர்ப்படைந்து இப்படி மாறியிருக்கிறார்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். ஆனால் கண்டுபிடித்தவரை கல்லால் அடித்து கொன்றுபோட்டிருந்தார்கள்!  கிரேசி பீபிள்ஸ்!

 

இன்று வியாழக்கிழமை! “ஒரு மாறுதலுக்கு நீ சக மனிதனிடம் நல்லவனாக இருந்து பாரேன். எவ்வளவு சந்தோஷமாக இருக்கும்” என்று சொன்னவனை இவர்கள் சிலுவையில் அறைந்து தொங்கவிட்டு சரியாக ரெண்டாயிரம் வருஷம்!  யாழ்ப்பாண பல்கலைக்கழகத்துக்கு முன்னால் இருக்கும் “அபிராமி விலாசில்” கிழங்கு ரொட்டி சாப்பிட்டுக்கொண்டு இருக்கும் போது தான் மைதிலிக்கு இந்த விஷயம் உறைத்தது. பதில் கிடைத்துவிட்டது. ஏன் மனிதர்கள் சந்தோசம் இல்லாமல் அலைகிறார்கள் என்ற கேள்விக்கான பதில்; உலகை சந்தோஷமாக வைத்திருக்கக்கூடிய சூட்சுமம். ரொட்டியில் முழுசாக கிடந்த பச்சைமிளகாய் கடிபட்ட தருணத்தில் கிடைத்த ஞானோதயம். “ச்சா .. என்ன ஒரு ஐடியா, இன்றைக்கே Facebook இல் போடவேண்டும்” என்று மைதிலி நினைத்து கையில் இருந்த சாம்சங் கலக்ஸி போனில் Facebook அப்ளிகேஷனை ஒன் பண்ணினாள். “பயமில்லாமல் இதை போடலாமா? என்னையும் சிலுவையில் அறையமாட்டார்கள் தானே? கோத்தாவுக்கு பிடிக்குமா?, ம்கூம் .. இது தான் சரியான தருணம் .. சந்தோசம் எவ்வளவு ஈசியாக கிடைக்ககூடிய விஷயம் .. அதுக்கேன் இவ்வளவு குத்துப்பாடு?”. மைதிலி யோசித்துக்கொண்டே எழுதும்போது தான்,

எங்கிருந்தோ வந்த ஏதோ ஒரு அமானுஷ்ய சக்தி … பூமியை தாக்கி … பூமி வெடித்து சிதறி சுக்கல் நூறானது!

 

“இன்னமும் முற்றவில்லை!”

 

படங்கள் : சயந்தன் மற்றும் இணையம்

 

http://www.padalay.com/2012/06/blog-post_25.html

  • தொடங்கியவர்

“கந்தசாமி சொல்லுரத கேட்கிறது ஹரித? இந்த வீடு ஆர்மிக்கு தான் .. வீடு உண்ட பேர்ல இல்ல”

 

310691_10150312965606415_753825724_n_thu

 

கந்தசாமி தனியனாக ப்ளேன் டீ ஊத்திக்கொண்டிருக்கும்போது தான் செல்வராணியை நினைத்துப்பார்த்தார். இந்த நாச்சார் வீடு அவளின் சீதன உரித்தம் தான். இங்கே தான் 1982 இல் கந்தாசாமிக்கும் செல்வராணிக்கும் கலியாணம் நடந்தது. அப்போது எல்லாம் இரவில் தான் திருமணம்; முடிந்து மாப்பிள்ளை, பொம்பிளை முதலிரவு அறைக்குள் போனபின்பும் வெளியே நாற்சார் திண்ணையில் “தாள்” ஆட்டம் தண்ணியுடன் அனல் பறக்கும். பக்கத்தில் உட்கார்ந்திருந்தால் யாழ்ப்பாணத்து தூஷணங்கள் பற்றி பிஎச்டி செய்ய அமெரிக்கா போகலாம். கந்தசாமிக்கு இன்னமும் ஞாபகம் இருக்கிறது. அன்றைக்கும் அவர் தண்ணியை சாதுவாக போட்டுவிட்டு ஒரு “கை” விளையாடிவிட்டு தான் அறைக்குள்ளே போனார். விசுக்கோப்பன், கலாவறை சத்தங்கள் இன்னமும் காதில் கேட்டுக்கொண்டிருக்கையில், செல்வராணியை தொடுவது என்னவோ,  வெளியே யாரோ வெயிட் பண்ணும்போது கக்கூஸ் போவது போன்ற சங்கடம். கந்தசாமி அன்றிரவு முழுக்க செல்வராணியின் பயோடேட்டா கேட்டு, பின்னர் தன் பயோடேட்டா சொல்லி, அவளுக்கு ஏ.எம்.ராஜா பிடிக்கும் என்று தேனிலவு பாட்டெல்லாம் பாடி, எஸ்ஜேவி ஏன் மாவட்டசபை எடுத்தார்? பேசும் வரைக்கும் ஆடித்தன் துரும்பு நின்றபாடில்லை. வெட்கப்பட்டுக்கொண்டிருந்த கந்தசாமியை பார்க்க, செல்வராணிக்கு அப்புறம் இவன் அவனோ என்ற பயம் வேறு தொற்றிக்கொண்டது. வெட்கத்தை விட்டு தொட்டுவிட்டாள். மணி மூன்றரை.  ஆறுக்கு ரெண்டு புறத்தி. அடி கம்மாஸ்!

 

நாற்சார் குந்தில் பனங்கட்டியை கடிக்கும்போது நாக்கை கடித்தாரோ என்னவோ, கந்தசாமிக்கு கண்ணில் நீர் முட்டிவிட்டது. வீட்டில் யாருமில்லை. வேலைக்கு வரும் சிறுமி கூட, அவ்வப்போது தான், அதிலும் கள்ளம் அடித்துவிடுவாள். மாறிவிட்டாள். செல்வராணி கனடா போன பிறகு, எப்போதாவது கார்ட்டில் பணம் இருந்தால் மாத்திரமே கோல் எடுப்பாள். பெரும்பாலும் கந்தசாமி தான் கொமுனிகேஷனில் போய் அவள் “தங்கம்” பார்க்கும் சமயம் பார்த்து டெலிபோன் எடுத்து ஏச்சு வாங்குவார்.

 

Tamil_house_inside_view_thumb.jpg?imgmax

 

“அவளை அனுப்பியிருக்ககூடாது, மயிர், அவருக்கு பிள்ளைபேறு பாக்கிறதுக்கு நான் என்ர மனிசியை அனுப்பீட்டு இப்ப நாய் படுற பாடு படுறன்”

 

என்று மகனை ஏசிக்கொண்டிருக்கும் போது தான் வெளியே பல நாய்கள் குரைக்கும் சத்தம் கேட்டது.

 

நல்லூரடி ஆர்மி கொமாண்டர் சோமரத்ன. ஓஎல் பாஸ் பண்ணி, கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி இன்றைக்கு மேஜர் தரத்தில் இருப்பவர். ஆர்மி அதிலும் சிங்கள ஆர்மி, உலகிலேயே சிறந்த மனித உரிமைகளுக்காக போராடும் இராணுவம் என்று அவர்கள் தலைவர்களாலேயே கொண்டாடப்படும் பல பெருமைகள் இருந்தாலும், சோமரத்ன இஸ் ஸ்டில் சாதாரண மனிதன் தான். “பிரகராதி’ வார்த்தைகளில் சொல்லப்போனால், கார்பன் துணுக்குகளால் ஆன இருகால் கொண்டு ஊரும் பிராணி. அவர் ஆர்மிக்கு வந்ததற்கான இன்ஸ்பிரேஷன் மகாவம்சம் என்ற நூல் தான். வீட்டிலே கஷ்டத்தை போக்க வேண்டும். நாட்டை பயங்கரவாதிகளிடம் இருந்து காக்கவேண்டும். இந்த இரண்டையும் ஒரே நேரத்தில் செய்வதற்கு இராணுவத்தில் சேருவது தான் தக்க வழி என மகாவம்சம் சொல்லியிருப்பதாக ஒரு பௌத்த துறவி சின்னவயதில் சொமரத்னாவுக்கு உபதேசித்திருந்தார். சோமரத்ன இன்றைக்கு ஹம்பாந்தோட்டையில் அழகான வீடு ஒன்றை கட்டிவிட்டார். நாட்டையும் உள்நாட்டில் காப்பாற்றியாகிவிட்டது!

மகாவம்சம் சொல்லாத ஒருவிஷயமும் இருக்கிறது. சூரியதொகுதியை பற்றி அன்றோமீடோவில் இருக்கும் சூபி கிரகத்தை சேர்ந்த மொக்கன் என்ற சிறுவன் தன்னுடைய ஐந்தாம் வகுப்பு ரிசேர்ச் பேப்பரின் 437வது பக்கத்தில் எழுதியது.

 

“….மரத்னவும், எலியா நிரோஷாவும், பதினைந்து தலைமுறைகளுக்கு முன்னரான, இந்தியாவின் தூத்துக்குடியை சேர்ந்த கனகரத்தினம் என்கின்ற கவுண்டர் பரம்பரை வம்சாவளிகள் ஆவர். பூமியின் கிமு இரண்டாம் நூற்றாண்டு என்று அழைக்கப்படும் காலத்தில், சோழர் படையெடுப்பின் போது ஈழம் வந்து, வாழ்க்கை அமைத்து ...”

 

சோமரத்ன பற்றிய அறுபது வினாடிகள் விவரணம் முடிவதற்குள் பூமியில், இத்தாலிக்கு எதிராக டொரஸ் மூன்றாவது கோலும், கேட்டி கோல்ம்ஸ்-டோம் குரூஸ் ஜோடி பிள்ளைக்கு எந்த மத நம்பிக்கை ஊட்டுவது என்ற சர்ச்சையில் டிவோர்சும், நாக்பூரில் பாபுலால் ராதொட் என்ற விவசாயி தற்கொலையும் நடந்து முடிந்திருந்தன. இங்கே தன்னுடைய வீட்டை இராணுவம் அபகரிப்பதற்காக புல்டோசருடன் வந்திருப்பதை கண்டு கந்தசாமி, சோமரத்னவுடன் நீண்ட வாக்குவாதப்பட்டதும், புல்டோசருக்கு முன்னால் சாரத்தொடு படுத்ததும், அதே அறுபது வினாடிகளில் நடைபெற்றதால் தான், சூபி கிரகத்தில் எழுதப்படும் தொடர்கதைகளில் இந்த நீண்ட விவரணங்கள் தடைசெய்யப்பட்டுள்ளது.

 

“அது சீதன வீடு சேர், மனிசி செல்வராணி வெளிநாட்டுக்கு போயிட்டாள். அது ரெண்டுபேருக்கும் தான் .. சீவன உரித்து”

 

“சொன்னா கேட்கிறதில்ல? இது சீதனம் இல்ல .. செல்வராணி பேர்ல தான் இருக்கு .. செல்வராணி இப்ப ஒரு கனடா சிட்டிசன்..”

 

“என்ன விழல் கதைக்கிறாங்கள், ஒருவேளை, மாமனார், சீதனம் உண்மையிலேயே எழுதாமல் விட்டுவிட்டாரோ .. நப்பி நமசிவாயம், சுத்திவிட்டிட்டான் போல”

 

கந்தசாமிக்கு நிஜமாகவே சந்தேகம். காட்டிக்கொள்ளவில்லை.

 

“சேர், இப்பிடி திடுப் திடுப்பென்று வந்து இடிக்கிறது அநியாயம் .. ஒரு அறிவித்தல் கூட இல்ல, இந்த வீடு என்ர எண்டு கச்செரில பதிவு வேற இருக்கு, பாங்கில லோன் கூட எடுத்திருக்கிறன் தெரியுமே”

 

“கச்சேரில அறிவித்தல் குடுத்து ரெண்டு மாசம் முடிஞ்சு, நீ கவனிக்க இல்ல கந்தசாமி”

 

“கச்சேரில என்ன கவட்டுக்கையா அறிவித்தல் குடுத்த? நானும் அங்க தான் வேலை செய்தனான் .. முறையான அறிவித்தல் வரோணும் ... வர வர பாக்கிறன், உங்கட சேட்டைக்கு ஒரு அளவு கணக்கு இல்லாம போச்சு. ஆர்மிக்கு என்ன சீலம்பாவுக்கு கச்சேரில வேல? கனக்க கதைச்சா கூட்டமைப்பை கூட்டி ஆர்ப்பாட்டம் செய்வன் தெரியுமா?

 

திடீரென்று தனக்கு தெரியாத தமிழால் கந்தசாமி தன் பிடரியை சேதமாக்குவதை சோமரத்ன உணர்ந்துகொண்டார். “கவட்டு” என்றால் என்ன என்று புரியவில்லை. கவட்டு … கட்ட .. என்றால் வாயா? என்னை வாயை மூடு என்கிறானா கந்தசாமி? என்ன திமிர்? கோபம் வந்துவிட்டது. சுட்டு விடுவோமா? முடியாது. சிவசங்கர் மேனன் கொழும்பில் நிற்கும் சமயம். சுடக்கூடாது என்று உத்தரவு வந்து இருந்தது. ச்சே கழிவு எண்ணையை வேறு விட்டுவிட்டு வந்தாயிற்று.

 

“கந்தசாமி, திஸ் இஸ் த லாஸ்ட் வோர்னிங், மரியாதையா எழும்பி வழியை விடு, இல்லாட்டி இண்டைக்கு முழுக்க இங்க கிடப்பாய்.  மொனவாவத், ஷூ கரன்னத் யன்டோன நேத, பலமு பலமு”

 

கேட்டுக்கொண்டிருந்த கந்தசாமி மெதுவாக எழுந்து அந்த இடத்திலேயே பக்கத்தில் இருந்த குரோட்டனடியில் உட்கார்ந்து சாரத்தை தூக்கி, அடித்துவிட்டு திரும்பி பழையபடி புல்டோசர் முன்னாலே வந்து படுத்தார்.

 

Army-Search_thumb.jpg?imgmax=800

 

“யூ இடியட் …”

 

மேஜர் சோமரத்ன கோபத்துடன் நெருங்கி வரும்போது தான் “ட்ரிங், ட்ரிங்” என்று வாசலில் மணி அடித்தது. சுமந்திரன் அவசர அவசரமாக கேட்டடியில் சைக்கிளை ஸ்டாண்ட் கூட போடாமல் கிழே போட்டுவிட்டு நுழைந்தார். நுழைந்தவர் வாசலில் நின்ற ஆர்மியையும், சோமரத்னவையும் கவனித்தவர், கந்தசாமியை கவனிக்கவில்லை.

 

“கந்தசாமி … கந்தசாமி .. வீட்டிலேயே இருக்கிற? .. வெளிய வா .. வலு அவசரம்”

 

கந்தசாமி படுத்தபடியே நிமிர்ந்துபார்த்தார். சுமந்திரன் அந்த வெய்யிலிலும் வேர்த்துக்கொட்டிக்கொண்டு இருந்தார். ஆனாலும் கறுப்பு கோர்ட், கறுப்பு பாண்ட், தொப்பி என ஏதோ வெளிநாட்டு தூதுவரை சந்திக்கவந்தவர் போல,

 

“இங்க ஒருத்தன் கீழ கிடக்கிறது தெரியேல்லையோ .. குடியே மூழ்கபோகுது சுமந்திரன்"

 

“அதான் சொல்லவந்தன் .. குடியே மூழ்கப்போகுது .. நேற்று தான் எனக்கு தெரியும் ..

 

உனக்கு எப்பிடி தெரியும் கந்தசாமி?”

 

கந்தசாமி சுமந்திரனை விநோதமாக பார்த்தார்.

 

“உனக்கு அப்பவே தெரிஞ்சிருந்தா இவங்களோட பேசி தீர்த்திருக்கலாமே .. இப்ப திடீரென்று வந்து நிக்கிற?”

 

“அதான் சொல்ல வந்தன் கந்தசாமி .. உன்னோட கொஞ்சம் கதைக்கோணும் .. உனக்கேதும் அலுவல் கிலுவல் இருக்கே இப்ப?”

 

“என்ன அலுவலோ? நல்ல நக்கல் தான் போ, இவங்கள் வேசமக்கள் வீட்ட இடிக்க வந்து நிக்கிறாங்கள். நான் எழும்பினா போய் இடிச்சிடுவாங்கள். மற்றும்படி பெரிசா அலுவல் இல்லை”

 

கந்தசாமி நக்கலாக சொன்னதை சுமந்திரன் கவனித்ததாக தெரியவில்லை.

 

“ஓ .. அப்பிடி எண்டா வா ஒருக்கா தவறணைக்கு போயிட்டு வருவம். அஞ்சாறு போத்தில் அடிச்சுக்கொண்டு கதைச்சா தான் டைம் சேவ் பண்ணலாம்”

 

rishis-21_thumb.jpg?imgmax=800

 

கந்தசாமிக்கு சுமந்திரன் ஒரு மெண்டலா என்ற சந்தேகம் நீண்ட நாட்களாகவே இருந்தது. கந்தசாமிக்கு என்றில்லை, சுமந்திரனை தெரிந்த பலருக்கும் இதே சந்தேகம் தான். அவர்களை சொல்லிக்குற்றமில்லை. உருவாக்கி இருநூறாயிரம் ஆண்டுகளுக்கு பின்னரேயே வெறும் 1.2 ஒளிசெக்கன்கள் தூரத்தில் இருக்கும் சந்திரனில் காலடிவைத்த ஆறறிவு இனம் மனிதஇனம். 6500 ஒளியாண்டுகள் தூரத்தில் இருந்த கழுகு நெபுலா கலக்ஸியை கூட இப்போது தான் கண்டுபிடித்திருக்கிறார்கள். “இருந்த”  என்று எழுதும்போது கைநடுங்குகிறது. ஆம், நெபுலா கலக்ஸி வெடித்து சிதறி கண் காணாமல் போனது தெரியவே பாவம் இந்த பூமிமனிதர்களுக்கு இன்னமும் 3000 ஒளியாண்டுகள் எடுக்கும். அப்படி இருக்கையில், நெபுலாவில் சபரி என்று ஒரு குக்கிரகம் இருந்ததும், அங்கே இருபத்தேழு அறிவு கொண்ட சபரி மனிதர்கள் வாழ்ந்ததும் பூமி வாசிகளுக்கு தெரிந்திருக்க சந்தர்ப்பம் இல்லை.

 

சுமந்திரனும் ஒரு சபரியன் தான். சபரி கிரகம் அழியமுன்னமேயே, அகதியாக ஒரு விண்வெளி கப்பலில் தாவி ஓடி,  தேவலோகத்தில் தஞ்சம் கேட்டு, அங்கே அகதி விண்ணப்பம் மறுக்கப்பட்டு,  நரகத்துக்கு அனுப்பபட இருந்த போது தான், களவாக தப்பியோடி யாருக்கும் தெரியாமல் பூமியில் வந்து ஒளிந்திருக்கிறார். தற்சமயம் எண்பத்து நாலாவது பிறப்பாக, யாழ்ப்பாணத்தில், யோகராஜா-பூமகள் தம்பதியினருக்கு இரண்டாவது மகனாக! சுமந்திரன் பூமியில் பிறக்குமுன்னமேயே, அதர்வ வேதத்தை எழுதியவர்கள், ஒளியை விட வேகமாக செல்லும் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்து, சுமந்திரன் வரவை அறிந்து, அது பற்றிய சூத்திரங்கள் பலவற்றை எழுதியிருந்ததும், சுமந்திரன், அப்போதே எழுதிய அனைவரையும் கொன்று, எதிர்காலத்தில் அது பற்றி யார் எழுதினாலும் “அவன் விசரில் பிதற்றுகிறான்” என்று வாசிப்பவர்கள் நம்பும்படி, மனித இனத்தில் மூளையின் இலத்திரன்கள் அமைப்பை மாற்றி, பல தில்லு முல்லு செய்தும், இன்றைக்கு வரைக்கும் பிறந்து மறைந்து மாறி மாறி மறுபிறவி எடுத்து சமாளித்து வருகிறான். இன்றைக்கு அதற்கும் வேட்டு!

 

“எப்பவுமே லூசு தனமா கதைக்கிறதே உண்ட வேலையா போயிட்டுது … இங்க வீட்டை பிடிக்கபோறாங்கள் எண்டு நான் கத்திக்கொண்டு இருக்கிறன் .. நீ என்னண்டா தண்ணி அடிக்கலாம் வா எண்டு கேக்கிற, விட்டா அவனையும் சேர்த்து கூப்பிடுவ”

 

சுமந்திரன் கந்தசாமி பேசியதை கணக்கெடுத்ததாய் தெரியவில்லை. அடிக்கடி வானத்தை அண்ணாந்து பார்த்துக்கொண்டே இருந்தார். சொமரத்னவுக்கு சுமந்திரனின் வருகை குழப்பமாய் இருந்தது. அதைவிட அவர் பேசியது இன்னமும் குழப்பமாய் இருந்தது. சுமந்திரன் சோமரத்னவை ஒரு மாதிரியாக பார்த்துகொண்டே கந்தசாமியிடம் சொன்னார்.

 

“பிடிக்கிறவன் பிடிக்கட்டும். அதுக்கேன் நீ படுத்து கிடக்கிற? வா நாம போய் தண்ணியடிப்பம்”

 

“உனக்கு மெய்யாலுமே முத்தி போச்சு தான் சுமந்திரன். நான் இந்த இடத்தைவிட்டு எழும்பினா அவங்கள் புல்டோசரை எடுத்து வீட்டை இடிச்சிடுவாங்கள்.

 

சுமந்திரனின் மாஸ்டர் மைண்ட் வேலை செய்ய ஆரம்பித்தது. சுமந்திரன் எதையுமே உணர்ச்சிபூர்வமாக அணுகாமல் அறிவுபூர்வமாகவே அணுகுவார். அப்படி செய்தாலேயே எதிராளியை வெற்றி கொள்ளலாம் என்று திடமாக நம்புவார். ஆனால் பூமி மனிதர்களின் பல செயற்பாடுகள் இத்தனை பிறப்புகள் எடுத்தும் சுமந்திரனுக்கு பெரிதாக புரிவதில்லை. இவன் படுத்துக்கிடந்தால் என்ன? புல்டோசர் மேலும் நெருங்கினால் கந்தசாமி பயத்தில் எழுந்துவிடுவான். ஆனால் புல்டோசர் நகராது. காரணம் சிவசங்கர் மேனன். ஆனால் புல்டோசரை ஏத்தினால் சிவசங்கர் மேனன் வெறும் வருத்தம் மட்டுமே தெரிவிப்பார் என்பது சோமரத்னவுக்கு தெரியாது. கோத்தா பெயரை கொண்டு மிரட்டினால் சோமரத்ன பின்வாங்கிவிடுவான் என்பது கந்தசாமிக்கு தெரியாது. கந்தசாமி வீடு இடிந்தாலோ, அல்லது செத்தாலோ, தமிழகத்தின் உருவாக கூடிய ஆர்ப்பாட்டம் அடுத்த பில்லா அஜித் நடக்கும் வரையில் தான் என்பது சிவசங்கர் மேனனுக்கு தெரியாது.

 

Capture_thumb.png?imgmax=800

 

இந்த வட்டத்தில், ஒரு இயல்பான புரிதல் இருக்கிறது. அந்த புரிதல் வட்டத்தை எவன் முதலில் உடைக்கிறானோ, அவன் வெற்றி அடைகிறான். ஒருவேளை துணிந்து சோமரத்ன கந்தசாமி மீது புல்டோசரை ஏற்றினால், சமநிலை உடைந்து, கந்தசாமியின் பேரப்பிள்ளைகள் கனடாவில் உண்ணாவிரதப் போராட்டம் செய்து, அதில் கடைக்குட்டி சுரேஷ், ஸ்டான்போர்டில் படிக்கும்போது எதிர்கால அமெரிக்க ஜனாதிபதியாக போகும் சாள்ஸ் லெட்டர்மானின் ரூம் மேட்டாக இருந்து, ஒரு முறை சேர்ந்து தண்ணியடிக்கும்போது, கந்தசாமி மீது ஆர்மி புல்டோசர் ஏற்றிய கதையை லெட்டர்மானுக்கு சொல்ல, அவனும் வெறியில், இலங்கை மீது எதிர்காலத்தில் போர் தொடுப்பேன் என்று டக்கீலா மீது சத்தியம் செய்ய .. இப்படி இரு வினாடிகளில் சுமந்திரன் மனதில் தோன்றி மறைந்ததை இருபதாம் நூற்றாண்டில் ஷ்ரோடிங்கர் என்ற விஞ்ஞானி ஏற்கனவே சொல்லிவிட்டிருந்தார். அதையும் ஐன்ஸ்டீன் என்ற பெயரில் அப்போது பிறந்திருந்த சுமந்திரன் மறுத்து வாதாடி, பூமி இனம் இன்னமும் முட்டாளாகவே இருக்குமாறு பார்த்துகொண்டார்.

 

“ஸோ, நீ படுத்திருந்தா அவங்கள் புல்டோசரை ஏத்த மாட்டாங்கள். அவங்கள் திரும்பிப்போகும் வரைக்கும் நீயும் படுத்து கிடக்க போறாய்”

 

சுமந்திரன் தனக்கு தானே சொல்லிக்கொண்டு சோமரத்னவிடம் போனார். சரளமாக சிங்களத்தில் விளாசினார்.

 

“மேஜர் சோமரத்ன,  அப்பிட டிக்க பிரஸ்சனயக் தங் .. சின்ன பிரச்சனை ஒன்று”

 

“சொல்லுங்க, கந்தசாமிக்கு இந்த காணி சொந்தமில்ல. இது மிஸஸ் செல்வராணி பெயரில தான் இருக்கு. அவர் கனடா சிட்டிஸன். கனடா சிட்டிஸன் எங்கட நாட்டை சொந்தம் கொண்டாட முடியாது”

 

“ஐ நோ, ஐ நோ .. நான் இப்ப இந்த பிரச்சனையை தீர்க்க வரேல்ல. இவர் கந்தசாமி படுத்த இடத்தில இருந்து எழும்ப மாட்டாராம்”

 

“ஓ அப்பிடி என்றால் நாங்களும் அவர் எழும்பும் மட்டும் வெயிட் பண்ணுவோம்”

 

“தட்ஸ் தெ பாயிண்ட். நீங்களும் பின் வாங்க மாட்டீங்க. அவரும் எழும்ப மாட்டாராம். அப்பிடி எண்டா இரண்டு பேரும் இப்பிடியே ஸ்டக் ஆகி இங்க நிக்க போறீங்களா?”

 

சுமந்திரன் சொல்வதில் ஏதோ ஒரு லொஜிக் இருப்பது போல சோமரத்னவுக்கு பட்டது.

 

“என்ன சொல்ல வரீங்க மிஸ்டர்…”

 

“சுமந்திரன் .. ஐ ஆம் மிஸ்டர் சுமந்திரன்”

 

“ஓ .. ஹாய் மிஸ்டர் சுமந்திரன் .. ஐ ஆம் சோமரத்ன .. மேஜர் சோமரத்ன .. ஸோ இத எப்பிடி தீர்க்கலாம் என்று நினைக்கிறீங்க?”

 

“தீர்க்க முடியாது, ஆனால் ஒரு இடைக்கால தீர்வு செய்யலாம். எனக்கு அவசரமா கந்தசாமியை தவறணைக்கு கூட்டிக்கொண்டு போகோணும்”

 

“ஓகே .. அதுக்கு என்ன”

 

“ஆனா அவர் நீங்க வெளியேறாம அசைய மாட்டார், ஸோ இதில ஒரு சின்ன ப்ரேக் எடுப்பம். ஒரு அரை மணித்தியாலம் நான் கந்தசாமியை கூட்டிக்கொண்டு போறன்”

 

“ஆனா அவர் போனா நாங்க வீட்டை இடிச்சிடுவம் மிஸ்டர் சுமந்திரன்”

 

“அது .. அங்க தான் நான் வாறன். அவர் இருந்தா இடிக்கமாட்டீங்க. இல்லாட்டி இடிச்சிடுவீங்க. இது தெரிஞ்சு அவரும் அசையிறார் இல்ல. நீங்களும் அசையிறீங்கள் இல்ல”

 

“ஸோ?”

 

“ஸோ … அவர் இங்க படுத்தே கிடக்கிறது என்பது முக்கியமில்ல. அப்பிடி நினைத்தாலே போதும் இல்லையா? ஸோ நாங்க திரும்பி வரும்வரைக்கும் அவர் இங்கேயே கிடக்கிறதா யோசிச்சுக்கொண்டு பேசாம நில்லுங்க. நீங்க இதுக்கு ஓம் என்று சொல்லாட்டி, அவர் எப்பிடியோ இங்கே தானே கிடக்க போறார்? நோ யூஸ் இல்லையா?”

இவ்வளவு காலமும் நல்லூர் மக்களுக்கு மட்டுமே சுத்தியது, சோமரத்னவுக்கும் சுத்த தொடங்கியது. ஆனாலும் சுமந்திரன் பேசும்போது ஏதோ ஒரு சென்ஸ் இருப்பது போலவே தோன்றியது.

 

 

 

“ஓகே .. சுமந்திரன். எப்பிடியோ அவர் கிடக்கதானே போறார். ஒரு அரை மணித்தியாலம் போயிட்டு வாறதில பிரச்சனை இல்லை .. ஆனா .. ஆனா இதில எனக்கு என்ன பிரயோசனம்?”

 

“ஆ .. நாங்க திரும்பிவந்த பிறகு … நீங்களும் ஒரு ஷோர்ட் ப்ரேக் எடுக்கலாம். நீங்க இங்கேயே நிக்கிறதா நினைத்துக்கொண்டு நாங்கள் படுத்துக்கிடக்கிறோம்”

 

சோமரத்னவுக்கு இப்போது சுமந்திரன் பேசுவது சரியென்றே பட்டது. இப்படி ஒருவர் ஊருக்கு ஊர் இருந்தால், இந்த நாட்டில் பிரச்சனையே இருக்காதே என்று வெகுவாக அவரை மனசுக்குள் மெச்சினார். ஆனால் கந்தசாமி சுமந்திரனுக்கு மறை கழன்று விட்டது என்றே நினைத்தார்.

 

“என்ன கொட்டை கதை கதைக்கிற? பூனையை பாலுக்கு காவலா விட்டிட்டு போறதா? உன்னை போல ஆயிரம் இல்லை, ஒரு லூசு இருந்தாலே போதும் .. எல்லா காணியையும் அவன் பிடிச்சிடுவான்”

 

“ஆ பூனையை காவலுக்கு விடுதல் .. சூப்பர் ஐடியா” என்று சொல்லிக்கொண்டே சுமந்திரன் சொமரத்னவிடம் திரும்பினார்.

 

“மேஜர் சோமரத்ன, எங்கள் டீலிங்கில் ஒரு சின்ன சிக்கல்”

 

அரை மணித்தியாலத்துக்கு போட்ட டீலிங்கே நிரந்தர தீர்வு என்று நினைத்துகொண்டிருந்த சோமரத்ன மீண்டும் நெற்றியை சுருக்கினார்!

 

“மொகட?”

 

“இப்ப பார்த்தீங்கள் என்றால்,  கந்தசாமி படுத்த இடத்தில யாருமே இல்ல! ஸோ லொஜிகலா, எதிர்ப்பு இல்லை என்று நீங்கள் புல்டோசரை மூவ் பண்ணி இடிக்கலாம் தானே?”

 

“ஓகே .. அதுக்கு என்ன செய்யிறது?”

 

“அதுக்கு, ஒரு அரை மணித்தியாலம் .. ஜஸ்ட் அரை மணித்தியாலம் நீங்க புல்டோசருக்கு முன்னால படுக்கோணும். தண்ணி அடிச்சிட்டு நாங்க டக் எண்டு வந்திடுவம்”

 

இப்போது இருவரில் யாரோ ஒருவர் முட்டாளாக்கப்படுவதாக சோமரத்ன உணர்ந்தார். அதுவும் தன் பக்கம் தோற்கிறது என்று ஒரு எண்ணம் வர, பிஸ்டலை நோக்கி அவரின் கை நீண்டது. சுமந்திரன் சுதாரித்தார்.

 

“பொறுங்க, நாங்க திரும்பி வந்ததும், நீங்களும் தவறணைக்கு போகலாம், உங்கட இடத்தில நான் நிற்கிறன். நீங்க வரும்வரைக்கும் கந்தசாமி எழும்பி போகாத வண்ணம் பார்த்துக்கொள்ளுறன். நீங்க ஆறுதலா வரலாம்”

 

சோமரத்ன தலை பட பட வென்று சுழல தொடங்கிவிட்டது. சுமந்திரன் தன்னை சுற்றி ஒரு புரிதல் சங்கிலி போடுவதை அவர் உணரவில்லை. ஏன் கந்தசாமி எழும்பி போகாதவாறு இராணுவ தரப்பு கவனித்துக்கொள்ளவேண்டும்? கந்தசாமி எழுந்து போனால் நல்லது தானே? என்ற கேள்வி அவருக்கு எழவேயில்லை.

 

“இட் மேக்ஸ் லொட் ஓப் சென்ஸ் மிஸ்டர் சுமந்திரன். நீங்க போய் வரும் மட்டும் நான் புல்டோசருக்கு முன்னாலே படுக்கிறன். நீங்க திரும்பி வந்து, கந்தசாமி இந்த இடத்த விட்டு போகாம பார்த்துக்கொண்டால், நானும் வெளிய போயிட்டு வரலாம்.. தாங்க்ஸ் போர் த வோண்டர்புல் சொலுஷன்!”

 

“இட்ஸ் மை பிளஷர் மேஜர்”

 

.. என்று சொல்லியவாறே சுமந்திரன் கந்தசாமியை இழுத்துக்கொண்டு தவறணைக்கு விரைந்தார்.

 

“இவன் ஆர்மிக்காரனை நம்பி வீட்டை விட்டிட்டு போலாமே? அவனும் லூசன் போல தன்ர புல்டோசருக்கு முன்னாலே தானே படுக்கிறதுக்கு ஓம் எண்டுறான்!”

 

சுமந்திரன் சிரித்துக்கொண்டே “இப்ப பாரு” என்று கந்தசாமிக்கு மெதுவாக சொல்லிக்கொண்டு சொம்ரத்னவிடம் கத்தி சொன்னார்.

 

“மேஜர், நாங்க இல்லாத நேரம் ஆரும் ஆர்மிகாரன் இந்த வீட்டை இடிக்க வந்தா விடாதீங்க. சரியா?”

 

“நோ, வே … அதெப்படி அவையள் நினைச்ச பாட்டுக்கு காணியை பிடிக்க ஏலும்? நீங்க பயப்படாதீங்க..நான் அசைய மாட்டன்! யூ என்ஜோய் த டொடி!”

 

கந்தசாமிக்கு நடப்பது எல்லாமே கனவா நனவா என்றே ஊகிக்கமுடியவில்லை. அவனே வந்தான். இடிக்கபோகிறேன் என்றான். இப்போது அவனே இடிக்கக்கூடாது என்று புல்டோசர் முன்னால் படுக்கிறேன் என்கிறான். நாங்கள் போனா பிறகு இடிக்கமாட்டான் என்று என்ன நிச்சயம்?

 

“யோசிக்காத கந்தசாமி, சீவியம் பூரா .. ஏன் இந்த உலகம் இருக்கும் வரைக்கும் இந்த வீடு உனக்கு தான். யாரும் ஒண்டும் செய்ய ஏலாது!”

 

“எவ்வளவு உறுதியா சொல்லுற சுமந்திரன்?”

 

“ஏனென்டா .. இன்னும் ஒரு மணித்தியாலத்தில் இந்த உலகமே இருக்காது .. வெடிச்சிடும்!”

 

இவர்கள் பேசியது எதுவுமே கேட்காமல், சோமரத்ன நிம்மதி பெருமூச்சுடன் தன் பாண்ட் பின்பக்கத்தை தட்டியவாறே புல்டோசர் முன்னாலே சென்று படுத்தார்.

 

“இன்னமும் முற்றவில்லை!”

 

http://www.padalay.com/2012/07/blog-post.html

கோமகன்,

 

நேற்று நாம் இணைத்து படலையில் இருந்து இணைத்து இருந்த பதிவு ஒன்றினை ஜேகே தன் அனுமதியின்றி பிரசுரித்துள்ளோம் என்று கூறி அதனை அகற்றச் சொல்லியிருந்தார். ஜேகே யாழின் ஒரு உறுப்பினராகவும் உள்ளார். ஆயினும் இவ்வாறு முறையிட்டு இருந்தார். ஆகவே அவரது எழுத்து மூல அனுமதி இன்றி இனி படலையில் இருந்து நாம் யாழில் பதிவிடுவது சரியான விடயமாக இருக்காது.

 

இந்த தொடரை தொடர்ந்து யாழில் பதிவிடுவதற்கு அவரது எழுத்து மூல அனுமதியினை பெற்று அதனை எமக்கு சமர்பித்தபின் தொடருங்கள். அது போல படலையில் இருந்து இணைத்த அனைத்து பதிவுகளையும் விரைவில் மறைத்து விடுகின்றேன்.

 

நன்றி

 

 

  • தொடங்கியவர்

கோமகன்,

 

நேற்று நாம் இணைத்து படலையில் இருந்து இணைத்து இருந்த பதிவு ஒன்றினை ஜேகே தன் அனுமதியின்றி பிரசுரித்துள்ளோம் என்று கூறி அதனை அகற்றச் சொல்லியிருந்தார். ஜேகே யாழின் ஒரு உறுப்பினராகவும் உள்ளார். ஆயினும் இவ்வாறு முறையிட்டு இருந்தார். ஆகவே அவரது எழுத்து மூல அனுமதி இன்றி இனி படலையில் இருந்து நாம் யாழில் பதிவிடுவது சரியான விடயமாக இருக்காது.

 

இந்த தொடரை தொடர்ந்து யாழில் பதிவிடுவதற்கு அவரது எழுத்து மூல அனுமதியினை பெற்று அதனை எமக்கு சமர்பித்தபின் தொடருங்கள். அது போல படலையில் இருந்து இணைத்த அனைத்து பதிவுகளையும் விரைவில் மறைத்து விடுகின்றேன்.

 

நன்றி

 

தகவல் தந்ததிற்கு மிக்க நன்றி நிழலி . இந்த தொடரை நிறுத்துகின்றேன் நீங்களும் , அழித்துவிடுங்கள் .

 

  • 5 months later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அன்புள்ள நிழலி,

உங்கள் பதில்களை காலதாமதமாகவே பார்த்தேன். மன்னிக்கவும்.

என்பதிவுகளை இன்னொருவர் அனுமதியில்லாமல் பிரதியிட மறுப்பதற்கு சில காரணங்கள் இருக்கின்றன.

1) யாழ்ப்பாணத்து தினமுரசு பத்திரிக்கை பதிவுகளை அச்சொட்டமாக களவெடுத்து அனுமதியில்லாமல், என் பெயருமில்லாமல் பிரிண்ட் பண்ணினார்கள். கேட்டால் பதில் இல்லை.

2) பதிவுகளை நல்லெண்ணத்துடன் கொப்பி பண்ணுபவர்கள் முழுவதாக கொப்பிபாண்ணாமல் சிலவற்றை விட்டுவிடுகிறார்கள். அதனால் முழுமையான தாற்பரியம் தொலைந்துபோகிறது. எனக்குத்தெரியாமல் நடப்பதால் தொடர்ந்துவரும் கருத்துகளுக்கு பதிலும் கொடுக்க முடிவதில்லை.

3) படலையில் வந்து பதிவுகளை வாசித்தால்  எனக்கு ஊக்கமாக இருக்கும். ஆனால் யாழ் களத்தில் முழுமையாக வெளியிடவேண்டும் என்ற விதி இருக்கிறது.

4) என் பதிவுகள் பலதை அச்சுக்கு கொண்டுசெல்கிறேன்.

என் நிலைமையை புரிந்துகொள்வீர்கள் என்று நம்புகிறேன். உங்கள் ஆதரவுக்கு என்றும் நன்றிகள்.

அன்புடன்
ஜேகே

www.padalay.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.