Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இதற்கு முடிவு கிடையாது.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Demonstration-Demo-Tamilen-Genf-Uno.jpg

"திங்கட்கிழமை லீவு எடுத்திட்டியே" என்று அருகிலிருந்து ஒரு குரல். வேறு யார். எல்லாம் திருமாறனின் நண்பன்  தான். அண்ணன் கவுண்டமணி சொன்னது போல் "இனி நீ வயசுக்கு வந்தா என்ன வராட்டி என்ன" என்ற வசனம் தான் அவனுக்கு நினைவிற்கு வந்தது. இவ்வளவு நடந்த பிறகு இனி எங்களால் என்ன செய்ய முடியும். பேசாமல் வேலைக்கு போகலாம் என்றான். "டேய் லூசுத்தனமா கதைக்காம லீவு எடுத்துக்கொண்டு வா" அவனும் விடுவதாய் இல்லை. சரி எதையும் செய்யாமல் இருப்பதைவிட இதையாவது செய்வோம் என்று சம்மதம் தெரிவித்தான். 

10மணிக்கு பேரூந்து புறப்படும் என்று அறிவிப்பார்கள். இருவரும் சரியாக அங்கு சென்று காத்திருப்பார்கள். அதன் பின்னரே ஏற்பாட்டாளர்கள் வந்து சேர்வார்கள். நானும் வருகின்றேன் என்று சொன்னவர்களில் பலரை அங்கு காணக்கிடைக்காது. ஏற்பாட்டாளர்களும் இவர்களை நம்பி பேரூந்து ஒழுங்கு செய்து இறுதியில் பேரூந்திற்கான செலவை தங்கள் சொந்தப்பணத்தில் கொடுப்பார்கள் அல்லது வேறு வழிகளில் பெற்றுக்கொள்வார்கள்.

 

ஒரு காலத்தில் பேரூந்துகள் போதாமல் கார்களில் பேரணிக்கு வந்த காலங்களும் உண்டு. இது முள்ளிவாய்க்காலுக்கு முன். ஆனால் இப்பொழுது நிலமையோ தலைகீழ். ஒரு பேரூந்திற்கு போதுமான ஆட்கள் கிடைப்பதே பெரும்பாடாக இருக்கும். நிலமை இப்படியிருக்கையில் வருவதாக உறுதியிளித்தவர்களும் வராது விட்டால் இன்னும் திண்டாட்டம் தான். எனவே வருவதாக வாக்குறிதயளித்தவர்களிற்கு தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு என்னாயிற்று என்று விசாரித்து நிலமைகளை அறியவே அரை மணி நேரம் தாமதமாகி விடும். ஒரு சிலரை போகும் வழியில் அவர்களின் இடங்களில் சென்று ஏற்றிசென்ற சம்பவங்களும் உண்டு. 

பேரூந்து வெளிக்கிடும் நேரம் பல குழுக்களாக உள்ளே பிரிந்துவிடுவார்கள். ஒரு குழு மதுபாணங்களுடன் பின் இருக்ககைளிற்கு சென்றுவிடுவார்கள். அவர்களின் பேச்சுக்கள் சினிமா கிசுகிசு அல்லது பெண்கள் பற்றிய இரட்டை அர்த்த வசனங்களாக இருக்கும். இடையிடையே அரசியலும் வந்து போகும்.

 

இன்னொரு குழு "படித்த நகரீகம்" தெரிந்தவர்கள் என்று மதுபாணப்பிரியர்களால் அழைக்கப்படுபவர்கள். உண்மையில் இவர்கள் தங்களை தாங்களே படித்தவர்கள் என்று நினைத்துக்கொள்வதால் அவர்கள் வைத்த பெயர் தான் இது. இந்த நாகரீக வாதிகள் முன் வரிசையில் அமர்ந்து கொள்வார்கள். இவர்களிற்கும் மதுப்பிரியர்களிற்கும் ஆகவே ஆகாது. மதுப்பிரியர்கள் சுயநினைவில்லாமல் இருப்பதால் இவர்கள் பல நேரங்களில் பயத்தில் அடக்கிவாசிப்பார்கள். இந்த "படித்த" குழுக்களின் பேச்சுக்கள் எப்பொழுதும் உலக அரசியல் பற்றியே இருக்கும். ஒவ்வொருவரும் ஒரு வெளியுறவுத்துறை அமைச்சர் என்ற நினைப்பில் வாதாடுவார்கள். தெரிந்தோ தெரியாமலோ இவர்கள் பேசுவது பின் வரிசையில் இருக்கும் மதுப்பிரியர்ளின் காதுகளில் விழுந்துவிட்டால் போதும். உடனே அங்கிருந்து நையாண்டித்தனமான பதில்கள் வரும். 

இந்த இரு குழுக்களையும் தவிர இன்னொரு குழு நடுவில் அமர்ந்துகொண்டு இருவரின் பேச்சுக்களையும் கேட்டுக்கொண்டிருப்பார்கள். அதுவும் ஒரு சுவாரசியம் தான். 

முள்ளிவாய்க்காலுக்கு முன்னர் இயக்கப்பாடல்களே பேரூந்துகளில் ஒலித்தன. ஆனால் இப்பொழுது எப்படியான பாடல்களும் ஒலிக்கும். 

பேரணி நடைபெறும் இடம் வந்ததும் மீண்டும் அதே இடத்திற்கு பேரணி முடிந்தபின் புறப்படும் நேரத்தையும் அறிவித்து, வந்து நிற்குமாறு பணிக்கப்படும். ஆனால் இது நடைமுறைசாத்தியமாக எப்பொழுதும் இருந்ததில்லை. எமது மதுப்பிரியர்கள் சுயநினைவிற்கு மீண்டு அந்த இடத்திற்கு புறப்படும் நேரம் வந்து சேர தாமதமாகிவிடும். பேரணி நடைபெறும் இடத்திற்கு அருகில் ஒரு பல்பொருள் அங்காடி உள்ளது. அன்று அந்த கடையில் எந்த விதமான மதுபாணங்களும் இருக்காது. அனைத்தையும் எம்மவர்கள் வாங்கி குடித்துவிடுவார்கள். குடித்தது போக மிகுதியை பேரூந்திற்கு கொண்டுவருவார்கள். வெளிநாட்டிலிருந்து வருபவர்கள் அந்த கடையில் சாக்லேட் முதல் மதுபாணம் வரை வாங்கிக்கொண்டு தான் திரும்புவார்கள். "பேசாம பேரணியை இங்கயே வச்சிடலாம்" என்று திருமாறனும் நண்பனும் பேசிக்கொள்வார்கள். அவ்வளவு கூட்டம் அங்கு அலைமோதும். 

பின்னர் பேரணி ஐக்கிய நாடுகள் சபை வளாகத்தில் வந்து நிற்கும். அதன் பின்னர் பல கலைநிகழ்ச்சிகள் நடைபெறும். பலர் சிறப்புரை என்ற பெயரில் மைக்கை கடித்து சப்பி துப்பிக்கொண்டிருப்பார்கள். ஆனால் அதை கேட்பதற்கு பலர் தயாராக இருக்கமாட்டார்கள். கூடுதலாக இந்தியாவில் இருந்து யாராவது ஒரு பிரபலம் வந்து சிறப்புரையாற்றுவார். அவரின் உரைக்கு முன்னால் உள்நாட்டு "பிரபலங்கள்" பலர் வந்து பேசுவார்கள். இவர்கள் பேசும் போது பலரும் தமது சொந்தங்களையும் உறவுகளையும் தேடி வளாகத்தில் உலா வருவார்கள். பல நாட்கள் காணாத நண்பர்களை கண்டு நலம் விசாரிப்பார்கள்.

 

திருமாறனும் ஒரு இடத்தில் நிற்பதில்லை. சிறப்புரை என்ற பெயரில் இவர்கள் யதார்த்தமில்லாத பேச்சுக்களை கேட்க ஓங்கி அறைய வேண்டும் போல் இருக்கும். "தலைவர் வருவார்" என்பார் ஒருவர். தலைவர் வருவாரா இல்லையா என்பது அவனுக்கு தெரியாது. ஆனால் ஆரம்பத்தில் தலைவர் 6மாதங்களில் வருவார் என்பதற்கான அடையாளங்கள் தமக்கு தெரிகின்றது என்று ஒருவர் பேசினார். அவர் இன்றும் அதையே தான் பேசிக்கொண்டு இருக்கின்றார். பேசுகின்ற பலரில் அரைத்த மாவையே அரைத்துக்கொண்டிருப்பது அடுத்த காரணம். 

"நான் 14 வயசில இருந்து இங்க வாறன். இன்னும் கொஞ்ச காலத்தில என்ர பிள்ளை இங்க வந்து நிக்க போகுது. ஆனா இவங்கள் இன்னும் திருப்பி திருப்பி ஒரே விசயத்தை தான் பேசிக்கொண்டிருக்கிறாங்கள்" என்று நண்பனிடம் கடிந்துகொள்வான். 

இவை அனைத்தும் 2009ஆம் ஆண்டிற்கு பின்னர் நடந்தவையே. 2009ஆம் ஆண்டு பல வித்தியாசமான அனுபவங்கள்.

---

2009ஆம் ஆண்டு தொடக்கத்தில் பல மாநிலங்களில் பலவிதமான போராட்டங்கள் நடைபெற்றன. அனைத்து போராட்டங்களிற்கும் தொடக்கப்புள்ளி ஐ.நா. முருகதாசன் திடலில் வைக்கப்பட்டது. 

முதல் முறை ஐ.நா. முன் ஒன்றுகூடிய போது மக்கள் அமைதியாகவே கலைந்து சென்றனர். எப்படியும் வெளிநாடுகள் தடுத்துநிறுத்திவிடும் என்ற நம்பிக்கை. இரண்டாவது முறை கூடும் போது அந்த நம்பிக்கையைவிட கோபமே அதிகமாக காணப்பட்டது. ஐ.நா. விற்கு கல் எறிவது தொடங்கி சாலைமறியல் வரை தொடர்ந்தது. பின்னர் அங்கு கூடி இருந்த காவல்துறையினர் அமைதியான முறையில் உரையாடி அனைவரையும் கலைந்துபோக செய்தனர். 

மூன்றாவது முறை அங்கு கூடிய போது என்றுமில்லாதவாறு காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர். ஒவ்வொருவரும் ஒரு மாமிச மலை போல் உருவம் கொண்டவர்கள். 

இம்முறை திருமாறனுடன் இதுவரை போராட்டங்களிற்கு வராத நண்பர்களையும் அழைத்துச்சென்றான். வழமை போல் இம்முறை செய்யகூடாது என்று அவன் முடிவுசெய்து சற்று வித்தியாசமாக ஏதாவது செய்யலாம் என ஒரு திட்டம் தீட்டினான்.

 

இணையத்தளத்தில் 10 சிறீலங்கா கொடிகளை ஆடர் செய்தான். இரண்டு நாட்களின் பின்னர் கைளிற்கு வந்துவிட்டது. 10 கொடிகளையும் ஒரு பைக்குள் போட்டு போகும் வழியில் ஒரு பிளாஸ்டிக் போத்தலிற்குள் பெற்றோலும் நிரப்பி கொண்டு புறப்பட்டான். ஜெனிவா வந்ததும் கொடிகளை வெளியில் எடுத்து தரையில் வைத்து பெற்றோலில் குளிப்பாட்டிவிட்டு மீண்டும் பையை எடுத்து தோளில் போட்டுக்கொண்டு, போகும் வழியில் கற்களையும் சேர்த்துக்கொண்டான். இம்முறை கடுங்குளிர். முன்கூட்டியே ஒன்றிற்கு மூன்று ஆடைகளை அணிந்துகொண்டான். கால்கள் விறைத்துப்போகாமல் இருக்க பிளாஸ்டிக் பைகளால் கால்களை சுற்றி கட்டிவிட்டு, அதற்கு மேல் இரண்டு சாக்ஸ் போட்டு குளிரை தடுத்து வைத்தான். ஆனால் இதையும் மீறி கால்கள் முடிவில் விறைத்துப்போயின. 

இவர்களிற்கு முன்னரே அங்கு சாலை மறியல் தொடங்கிவிட்டது. அவன் கொண்டுவந்த சிறீலங்கா கொடிகளில் ஒன்றை ஐ.நா.வின் நுழைவாயிலில் வைத்து கொழுத்தினான். அதனை சுற்றி பலர் ஆடி, சிலர் நெருப்பு என்றும் பாராமல் அந்த கொடியின் மீது ஏறி மிதித்தார்கள்.

 

பின்னர் சற்று தூரத்தில் இன்னொரு கொடி கொளுத்தப்பட்டது. அவனது பையை பக்கத்திலிருந்த நண்பனிடம் கொடுத்துவிட்டு, அவன் கொளுத்தினான். இவை அனைத்தையும் தூரத்திலிருந்தே கண்காணித்துக்கொண்டிருந்தது காவல்துறை. இதனை அவதானித்த பையை வைத்திருந்த நண்பன் எனையவர்களை எச்சரிக்கவும் காவல்துறையினர் அவர்களை நோக்கி ஓடி வரவும் சரியாக இருந்தது.

 

அனைவரும் ஆளுக்கொரு திசையில் ஓடினார்கள். திருமாறனின் பையை வைத்திருந்த நண்பரன் சரியாக எதிர்ப்புறத்திலிருந்த காவல்துறையினரை கவனிக்காமல் அவர்களை நோக்கி ஓடியதால், அவனை மட்டும் கோழி அமுக்குவது போல் சுற்றிவழைத்து தரையில் போட்டு, அந்த பிஞ்சு கை பிஞ்சு போகும் அளவிற்கு விலங்கிட்டு வாகனத்தில் ஏற்றினார்கள்.

 

ஏனையவர்கள் பலர் தப்பித்தற்கு காரணம் மக்கள் கூட்டத்திற்குள் ஓடியதால், அங்கு காவல்துறையினர் வரமாட்டார்கள் என்பதை பின்னர் அறிந்துகொண்டார்கள். நல்ல வேளையாக ஒரு அடிக்கு தாக்கு பிடிக்காத இவர்களின் உடலமைப்பு அந்த மாமிச மலைகளிடம் சிக்கவில்லை.

 

கைதான அந்த நண்பர் மீது வழக்கு பதியப்பட்டது. பொதுச்சொத்துக்களை சேதப்படுத்தியதற்காக அவரிற்கு அபராதம் விதிக்கப்பட்டது. அத்துடன் மண்ணெண்னை குண்டு (பெற்றோல் நிரப்பிய திருமாறனின் பிளாஸ்டிக் போத்தல்) வைத்திருந்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டது. அதன் பின்னர் ஒவ்வொரு வருடமும் அந்த நண்பரை தவறாமல் போராட்டங்களிற்கு வரும்படி அழைப்பான். அவனும் ஒரு சிரிப்பு சிரித்துவிட்டு "என்னை கொல்லாம விடமாட்டீங்களாடா" என்று ஒரு பார்வை பார்ப்பான். திருமாறனும் விடுவதாக இல்லை. கேட்டுக்கொண்டு தான் இருக்கின்றான். 

இந்த முறை திருமாறனும் இன்னொரு நண்பரும் சேர்ந்து ஒரு மாநிலத்தில் ஆர்ப்பாட்டம் செய்தே ஆக வேண்டும் என முடிவெடுத்தார்கள். இது ஒரு நாளில் உருவானது. இரவோடு இரவாக துண்டுப்பிரசுரங்கள் அடித்தார்கள். அவனது வேலையிடத்தில் களவாக அதனை பல நூறு காப்பிகள் எடுத்தான். பின்னர் தமிழ் கடைகளின் முன்னால் விநியோகம் செய்தார்கள்.

 

இந்த செய்தி அறிந்து அங்கே உளவு பார்க்க வந்த ஒரு தமிழ் இளையோர் அமைப்பு நணபர் இவர்களை பற்றி விசாரித்தார். அன்று இரவே இது விடுதலைப்புலிகளின் கிளை காரியாலயத்திற்கு சென்றடைந்தது. எதிர்ப்போ ஆதரவோ அவர்களிடமிருந்து வரவில்லை.

 

இவர்களும் அனைவரிற்கும் குறுஞ்செய்தி மூலம் தகவல் அனுப்பிவிட்டார்கள். முதல் நாள் நடைபெற்ற போராட்டத்திலிருந்து சில பதாகைகளை அவர்கள் களவாடி வைத்திருந்தார்கள். எப்படி கூட்டிப்பார்த்தாலும் இவர்கள் இருவருடனும் சேர்த்து ஒரு 10 பேரிற்கு மேல் வர மாட்டார்கள் போல் தெரிந்தது.

 

எடுத்த காலை பின்னுக்கும் வைப்பதில்லை சைட்டிற்கும் வைப்பதில்லை. நேரவே வைப்போம் என்று விடாப்பிடியாக இருந்தார்கள். அவர்கள் எதிர்பார்த்தது படியே ஒரு 10 பேர் தான் கூடியிருந்தார்கள். 30 நிமிடங்களில் அங்கு வந்த ஒரு காவல் அதிகாரி அனுமதி வாங்கிவிட்டீர்களா என்றார். அப்படி ஒரு விடயம் இருப்பதே இருவருக்கும் அப்பொழுது தான் தெரியும்.

 

இவர்களின் எண்ணிக்கையை நினைத்து மனிதர் பரிதாபப்பட்டாரோ தெரியவில்லை. அவர்களிற்கு அந்த இடத்தில் அனுமதியை அவரே வழங்கினார் (அனுமதிக்கான பணம் கட்டியபின்னர்). சில மணி நேரத்தின் பின்னர் அங்கிருந்த 10 பேரும் கலைந்துசென்றார்கள். ஆனாலும் ஏதாவது செய்துவிட்டோம் என்ற திருப்தி அவர்களிற்கு. 

அடுத்த போராட்டம் பாராளுமன்றம் முன்பாக. ஐ.நா. முன் ஒன்றுகூடிய போது எழுப்பிய அதே கோசத்தை இங்கேயும் எழுப்பிவிட்டு அனைவரும் கலைந்து போகும் தருவாயில் ஒருவர் இந்தியன் எம்பசி அருகில் தான் உள்ளது வாருங்கள் அங்கே போகலாம் என்று பொறியை தட்டிவிட, அங்கிருந்த இளையவர்கள் எல்லோரும் இந்தியன் எம்பசி நோக்கி நடந்தார்கள்.

 

போகும் வழியில் கற்களை கைகளிலும், பாக்கெற்களிலும் எடுத்துக்கொண்டு சென்றார்கள். இவர்களின் நோக்கத்தை முன்கூட்டியே கணித்திருந்த காவல்துறையினர் இவர்களிற்கு முன்னரே அங்கு சென்றுவிட்டனர். வந்த வேகத்தில் அனைவரும் கற்களை எந்தியன் எம்பசி நோக்கி எறிய கண்ணாடிகள் உடைந்து நெருங்கும் சத்தம் கேட்டக்தொடங்கியதும், காவல்துறையினரும் சுடத் தொடங்கினார்கள்.

 

ரப்பர் துண்டுகளால் ஆனா தோட்டாக்கள். ஒரு ரப்பர் துண்டு திருமாறனின் சிம்ரன் போல் சிலிம்மான மெல்லிடையில் பட்டு தெறித்தது. அவனது கறுத்த இடையில் ஒரு சிவப்பு புள்ளி (இந்த ரண களத்திலயும் ஒரு கவிதையா). முதுகில் பட்டால் இந்த ரப்பர் துண்டுகள் பெரிதாக வலிப்பதில்லை என்பதால் சுடும் போதெல்லாம் திரும்பி நின்றார்கள். ஆனாலும் எவ்வளவு நேரம் தான் வலிக்காத மாதிரியே நடிப்பது. எறிவதற்கு கொண்டுவந்த கற்களும் முடிந்துவிட்டன. இந்தியாவை அடித்த திருப்தியில் வீடு திரும்பினார்கள். அடுத்த நாள் இணையத்தளங்கள் முழுவதும் இதுதான் செய்தி. தமிழர்களிற்கு இந்திய விசா தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது என்று கதைகள் அடிப்பட்டன. 
 

1798181_m3w560h330q75v11792_xio-fcmsimag

இந்த கதையின் முடிவை நீங்கள் எதிர்பார்த்திருந்தால் மன்னிக்கவும். இதற்கு முடிவு கிடையாது (அல்லது முடிக்கத் தெரியவில்லை). 

 

 

Edited by செங்கொடி

  • கருத்துக்கள உறவுகள்

முடிவுகள் வரும்வரையான போராட்டம் தொடரும் செங்கொடி. உங்கள் எழுத்துக்களைத் தொடருங்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி சாந்தி அக்கா!

 

---

 

நேற்று பேரணி மேடையில் பேசிய ஒருவர் (பெயரை கவனிக்கவில்லை):

 

"இங்க எவ்வளவு சனம் நிக்குதோ அதே அளவு சனம் உந்த Coop கடையடியிலையும் நிக்குது" 

 

---

 

 

 

10003082_471999022927258_1053491744_n.jp

  • கருத்துக்கள உறவுகள்

இன்று  தான் பார்த்தேன்

இந்தமுறை  புகையிரத்தில் வந்ததால் இது போன்றவற்றை  நேரடியாக  தரிசிக்க  முடிந்தது

நான் பார்த்தவற்றை  அப்படியே  அன்றே  எழுதியுள்ளீர்கள்....

உங்கள் கைகளில் தான் தாயகவிடிவு  உள்ளது என்பதை  நம்புபவன் நான்

அது  நிரூபிக்கப்பட்ட வருகிறது

 

தொடருங்கள்

நேரம் கிடைக்கும்போது நானும்  எனது அனுபவத்தை எழுதுகின்றேன்.

Edited by விசுகு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.