Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நீர் | நிலம் | வனம்!

Featured Replies

  • தொடங்கியவர்

கடல்புறத்தில் ஒரு பெண்...

 

kadal_samoogam1_2046462h.jpg

 

ஒரு இளம்பெண். கல்யாணமாகி மூன்று ஆண்டுகள். இரண்டு குழந்தைகள். இரண்டு வயதில் ஒன்று, ஒரு வயதில் ஒன்று. ஒரு நாள் கடலுக்குப் போன கணவன் திரும்பவில்லை. ஊர் தேடிப் போனது. ஆள் கிடைக்கவில்லை. ஒரு வாரம் கழித்துக் கடலோரப் பாதுகாப்புப் படையும் காவல் துறையும் பக்கத்து ஊரில் கரை ஒதுங்கிய ஒரு உடலைக் காட்டுகிறார்கள். உடல் என்று அதைச் சொல்ல முடியுமா? மீன் தின்ற மிச்சம். நீரில் ஊறி வெடித்த பிண்டத்தின் எச்சம். உயிர் உடைந்து, கதறித் துடிப்பவள் அப்படியே உறைந்து சரிகிறாள் சுவரோரம். சோறு இல்லை, தூக்கம் இல்லை. பித்துப் பிடித்தவளாய் உறைந்திருக்கிறாள்.

கடல்புறத்தில் ஒரு பெண் தனித்துப் பிழைப்பது அத்தனை எளிதல்ல. ஒரு ஆண் தினமும் கடலோடும்போதே, பெண் வீட்டு வேலையோடு ஆயிரம் கரை வேலைகளையும் சேர்த்துப் பார்த்தால்தான் ஜீவனம் சாத்தியம். இந்த நடைப்பிணம் இனி என்ன செய்யும் என்று ஊரும் குடும்பமும் கூடிப் பேசுகிறது. அவளை நோக்கி, கடல் கொன்றவனின் தம்பியைக் கை காட்டுகிறது. உடனிருக்கும் இரண்டு உயிர்களைக் காட்டி வற்புறுத்துகிறது. உலுக்குகின்றன பிள்ளைகளின் பார்வைகள். அவள் கரம் பிடிக்கிறாள். ஓராண்டு ஓடுகிறது. இப்போது இன்னொரு பிள்ளை அந்தக் குடும்பத்தில்.

மேலும் ஓராண்டு ஆகிறது. கடலுக்குச் சென்றவனை எதிர்பார்த்துக் காத்திருக்கிறாள். வீடு திரும்புகிறான் அவன். அதிர்ந்துபோகிறாள். வீடு திரும்பியவன் பிந்தையவன் அல்ல; முந்தையவன். எவன் செத்தவன் என்று ஊர் நினைத்து எரித்ததோ அவன். கொஞ்ச நேரத்தில் பிந்தையவன் வருகிறான். மூவரும் வாய் பொத்தி நிற்கிறார்கள். மூவரின் முன்னே மூன்று குழந்தைகள். முடிவெடுக்க வேண்டியவள் அவள். இப்போது அவள் என்ன செய்வாள்?

கடல்புறத்தில் ஆயிரம் கதைகள் கிடக்கின்றன இப்படி. இந்த ஒரு கதை போதும் என்று நினைக்கிறேன் ஒரு கடல் சமூகப் பெண்ணின் வாழ்க்கைப் பாட்டைச் சொல்ல!

 

மனதுக்குள் கடலைச் சுமப்பவள்

ஒரு கடல் சமூக ஆணுக்கு, கடலில் போராடுவது வாழ்க்கைப்பாடு என்றால், கரையில் ஆயிரமாயிரம் வேலைகளோடு, மனதில் கடலையும் அதில் தன் வீட்டு ஆணையும், அவனுடைய போராட்டத்தையும் சுமந்து போராடும் பாடு கடல் சமூகப் பெண்ணுடையது. ஒவ்வொரு கடல் சமூகப் பெண்ணும் கடக்க வேண்டிய பாதையை ரோஸம்மாவும் மேரியம்மாவும் சொன்னார்கள்.

 

வலி பழகல்

“கடக்கரையில பொறக்குற ஒரு பொட்டப்புள்ளைக்கு வெவரம் தெரியிற வயசுலயே வலி பழக்கணும்னு சொல்லுவாங்க. வலி பழக்கணும்னா என்ன அர்த்தமுண்டா, உங்களை அடிச்சாலும் வலி தெரியக் கூடாது. நீங்க தடுக்கி வுழுந்து புண்ணு பட்டாலும் வலி தெரியக் கூடாது. அடி பாட்டுக்கு அடி, புண்ணு பாட்டுக்கு புண்ணு, நட பாட்டுக்கு நட. அப்படிப் பழகணும். இப்போ நகரத்துல இருக்குற பொண்டுவோபோல, கடக்கரையில பொண்டுவோ தான் சோலி பார்த்து வாழ முடியாது. கஷ்டமோ நஷ்டமோ, குடும்பத்தோடு சேர்த்துதான் எல்லாம்.

வீட்டுல ஆம்பிளைங்க நடுராத்திரி ரெண்டு மணி இல்ல, மூணு மணி இல்ல, கடலுக்கு ஓடுவாங்க. அந்த நேரத்துல, வலைய எடுத்துக் குடுக்கிறது, வள்ளத்துல போறதுக்குத் தளவாட சாமானுகளை எடுத்துக்குடுக்குறது, ஒரு வா கொடுத்தனுப்ப கஞ்சித் தண்ணியோ, கட்டுச்சோறோ எடுத்துக் குடுக்குறதுனு அப்பமே ஒரு வீடு முழிச்சிக்கிடும். கடலுக்கு ஆம்பளையை அனுப்பிப்புட்டு, பொம்பளை நிம்மதியா தூங்க முடியுமா? விடியிற வரைக்கும் கூரையை வெறிச்சிக்கிட்டு, சாமியை வேண்டிக்கிட்டு கிடப்போம்.

கொஞ்சம் வானம் கரைஞ்சதும் எந்திரிச்சு பிள்ளைங்களுக்குக் கொடுத்து அனுப்ப எதையோ செஞ்சுவெச்சுட்டு, பிள்ளைங்களை எழுப்பிவுட்டு, படிக்கச் சொல்லி டீத்தண்ணி வெச்சுக்கொடுத்து, சோத்தைக் கட்டிக் கொடுத்தோம்னா, வானம் தெளிஞ்சிரும். அவசர அவசரமா, கடக்கரைக்கு மீன் வாங்க ஓடுவோம். ஏலத்துல மீன் எடுத்து, கூடையில கட்டிக்கிட்டோம்னா ஆளுக்கொரு திசையா வாடிக்கை ஊருக்குப் போவோம். சூரியன் உச்சில போற முட்டும் தெருத்தெருவா கூவி நடப்போம். ஒண்ணு ரெண்டு நா எல்லாமும் வித்திரும். பல நா பாதிக்குச் சொச்சம் மிச்சப்படும். தூக்கிக்கிட்டு வீடு வந்தோம்னா, பசி பொரட்டி எடுக்கும். கஞ்சியைக் குடிச்சிட்டு மிச்ச மீனைக் கருவாடாக்க எந்திரிப்போம். அந்த நா மீனை ஊறல்ல போட்டுட்டு, முன்ன நா ஊறலைக் கலைச்சி, மீனைக் காயப்போட எடுத்தோம்னா, முடிக்கையில பள்ளிக்கூடம் போன புள்ளைங்க வீடு திரும்பிடும். ராத்திரி சோத்தை வடிச்சி, பசியாற வெச்சதுக்கு அப்புறம் உட்கார்றோம் பாருங்க... அப்பம்தான் ஒலகம் தெரியும். ஆனா, அப்பவும் மனசு முழுக்க கடல்லேயே அலை அடிச்சிக்கிட்டு கெடக்கும். போன மனுஷம் இப்ப எங்க நிக்குதோ, காத்தும் நீவாடும் எப்படி அடிக்குதோ, மீனு கெடைச்சுதோ, கெடக்கிலியோ, எப்பம் மனுஷம் கர திரும்புமோன்னு அடிக்கிட்டே கெடக்கும். மனுஷம் வர்ற வரையில இதே பாடுதான். கரைக்கு வந்து திரும்ப கடலுக்குப் போற வரைக்குள்ள எடைப்பட்ட நேரம்தான் மனசு கொஞ்சம் நெலையா இருக்கும்.

 

இதுவே நல்லூழ்

இந்த வாழ்க்கையே நல்ல வாழ்க்கம்போம் கடக்கரையில. ஏன்னா, என்ன கஷ்டம்னாலும் கூட சுமந்துக்க ஒரு நாதி இருக்கு. இன்னும் கட்டினவனைக் கடலுக்குக் கொடுத்துட்டு, அவன் கொடுத்ததைக் கையில சுமந்துக்கிட்டு, அஞ்சுக்கும் பத்துக்கும் மீன் வித்து, கருவாடு சுமந்து, கால் வயிறு, அரை வயிறைக் கழுவுற கொடுமையெல்லாம் இருக்கே... அதெல்லாம் காணச் சகிக்காதய்யா... ஆனா, தெருவுக்கு நாலு பேரு இப்படிச் சிறுவயசிலேயே அறுத்துட்டு, அம்போன்னு சுமந்து நிக்கிற கொடுமை எந்தக் காலத்துலேயும் குறையலீயே...”

அப்படியே ஆத்துப்போகிறார்கள், கண்கள் கலங்கி நிற்கின்றன.

“முடியலைய்யா... எந்த நேரமும் வாய்க்கரிசி வெச்சிக்கிட்டுதான் உட்கார்ந்திருக்கணும்... ஒரு வா சோத்துக்காக. அதாம் பொழப்பு, அதாம் விதி கடக்கர பொண்ணுக்கு!”

 

(அலைகள் தழுவும்...)

-சமஸ் 

 

http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D/article6294206.ece?homepage=true&theme=true

 

  • Replies 52
  • Views 19.6k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

ரத்தக் கருப்பு

 

res1_2050988h.jpg

 

கடலுக்கும் கடற்கரைக்கும் அழகான ஒரு நிறம் உண்டு. அது இயற்கையைச் சிதைத்துவிடாத, பாரம்பரியக் கடலோடிகளின் எளிமையான வாழ்க்கைக் கலாச்சாரத்தால் விளைந்த நிறம். இப்போது அந்த நிறம் வெளிரி புதிதாக வெளியிலிருந்து ஊடுருவும் நிறம் கடலையும் கடற்கரையையும் ஆக்கிரமிக்கிறது. பண வேட்கையும் சுரண்டும் வெறியும் நுகர்வுக் கலாச்சாரமும் சூழ்ந்த நிறம். பாரம்பரியக் கடலோடிகளை அவர்களுடைய பூர்வீகச் சொத்தான கடலிலிருந்தும் கடற்கரையிலிருந்தும் அடித்து விரட்டத் துடிக்கும் நிறம்.

நான் கன்னியாகுமரியைவிட்டுப் புறப்படும் நாளன்று என்னை நோக்கித் தலைதெறிக்க ஓடிவந்தார் பெரியவர் அந்தோணிசாமி.

“ஏய்யா, பத்திரிகையில எங்க கடப்புற மக்களப் பத்தி எழுத வந்தவரு நீங்கதான?”

மூச்சிரைப்பு நிற்காத அவரிடம் நான் ஒரு வார்த்தை பேசுவதற்குள் அவரே தொடர்கிறார்.

“ஏய்யா, எங்க மக்களுக்காவ நீங்க தயைபண்ணி ஒண்ணு எழுதணுமய்யா... இங்க கன்னியாகுமரியில ஒரு புத்துநோய் ஆசுபத்திரி கட்டிக்கொடுக்கணும்னு எழுதணுமய்யா...

ஐயா, உங்ககிட்ட எங்காளுங்க யாரும் இதப் பத்திச் சொன்னாங்களா இல்லையான்னு தெரியலீங்கய்யா. இங்க கடக்கர முழுக்கப் புத்துநோய் பரவிக் கெடக்கு. பாவி மக்களைக் கொன்னுப்போடுது. நாங்க பொழைக் கிற நூறு எரநூறு பொழப்புல இந்த நோயிலாம் வந்தா எப்டிங்கய்யா பாக்குறது? சாவத் தடுக்க வழியில்ல. சாவுற வரைக்கும் வலி தாங்குறதுக்குத் தூக்க மாத்தர வாங்கணும்னாலே, திருவனந்தபுரம் ஓட வேண்டிக் கெடக்கு. அங்கே நம்மாளுவோள மதிக்க மாட்டாங்கான். அவன சொல்லிக் குத்தமில்ல. அன்னிக்கு கேரள சர்க்காரு வேணாமின்னு போராட்டம் செஞ்சி, நாம தமிழ்நாட்டு சர்க்காரோட சேர்ந்துகிட்டம். இப்பம் போயி அவன்கிட்ட நின்னா, நியாயம் இல்ல பாருங்க... நீங்க எழுதணுமய்யா...”

தூத்துக்குடி கடற்கரையில் ஜானைச் சந்தித்தேன். “தூத்துக்குடின்னா, முத்துக் குளிக்குற நகரம்னு நெனைச்சுக்கிட்டிருக்கு ஒலகம். தூத்துக்குடில முத்துக் குளிக்குற தொழில் செத்து அம்பது அறுவது வருசம் ஆயிப்போச்சு, தெரியுங்களா? அப்புறம் வேற வழியில்லாம சங்கு குளிச்சுக்கிட்டு கிடந்தோம். இப்ப உயிர்ச் சங்குக்கும் வழியில்லாம, செத்த சங்கப் பொறுக்கி பொழைச்சிக்கிட்டுருக்கோம். இதுவும் எவ்வளோ காலத்துக்குன்னு தெரியல. எழுதுங்க...”

வேம்பார். “நகரத்துல காசு கொடுத்துத் தண்ணி வாங்கிக் குடிக்கிறது உங்களுக்குத் தெரியும். இப்படிக் கடக்கரைப் பக்கம் உள்ள கிராமங்கள்ல தண்ணி வாங்கிக் குடிக்கிறது ஒலகத்துல எங்கேயாவது நடக்குமாய்யா? நீங்க அவசியம் இதை எழுதணும்!”

பாம்பன் சென்றுவிட்டு ராமேஸ்வரம் பஸ்ஸில் ஏறும்போது கால் வழுக்கியது. சட்டெனக் கை கொடுத்து இழுத்தார் பெரியவர் ஆறுமுகம். “யப்பா... பஸ்ஸா இல்ல ராமேஸ்வரத்துக்கு, பாத்து ஏறக்கூடாதாப்பா?” என்று உட்கார இடம் கொடுத்தார். வெறும் கால் மணி நேரப் பயணத்துக்குள் இருவரும் யார், எவர் என்று சகல கதைகளையும் பரிமாறிக்கொண்டிருந்தோம்.

“யப்பா, ரொம்ப நல்ல காரியம் செய்யுறீங்க. யாரும் கண்டுக்காத பாவி மனுசனாப் போய்ட்டோம். எழுதுங்க, நல்லா எழுதுங்க. கடக்கரையில நடக்குற எதுவும் வெளியே யாருக்கும் தெரியுறதில்ல.

அந்தக் காலத்துல ‘உள்ளதையெல்லாம் வித்தாவது உள்ளான் வாங்கித் தின்னு’னு சொல்லுவாங்க ராமேஸ்வரத்துல. அந்த ருசி உள்ளான் ருசி. ராமேஸ்வரம் கடல்ல இப்படிப் பல மீனுங்க உண்டு. இங்க மட்டும் வரும். வெளிக்கடல்ல கெடைக்குற மீனுங்களும்கூட இந்தக் கடத்தண்ணில கெடக்கும்போது ஒரு தனி ருசி ஏறிடும், பாத்துக்கங்க, அப்படி ஒரு தண்ணி இந்தத் தண்ணி. எல்லாம் பவளப்பாறையில தங்குற கூட்டம் வேறல்ல? அதனால, வெளியூர்க்காரனெல்லாம் இங்கெ வந்து தங்கி விதவிதமா மீன் தின்னுப் போவான். ஆனா, இப்பம் கத என்ன தெரியுமா? ராமேஸ்வரக்காரன் மீன் திங்க ஆசையெடுத்தாலே, வெளியூர் மீனை வாங்கித்தான் திங்கணும்.

ராமேஸ்வரத்துல மூணு படகை வெச்சி, தொழில் செஞ்சிக்கிட்டுருந்தவன் நான். ரெண்டு படகை வித்திட்டு, ஒத்த படகைப் பாம்பன்ல போட்டு, அங்க போயி தொழில் பாத்துக்கிட்டு வந்துக்கிட்டிருக்கேன். மீனே கெடையாது. பவளப்பாறையெல்லாம் அழிஞ்சுக் கெடக்கு. என் நெலமையாவது தேவலாம். கட்டுமரம் வெச்சிருந்தவனெல்லாம் வழியத்துப்போய்ட்டான். எல்லாம் பொழப்பத்துப்போய்க் கெடக்கோம். இதெல்லாம் எழுதுங்க...”

தமிழ்நாட்டுக் கடற்கரை ஊர்களின் சாபங்களில் முக்கியமானது புற்றுநோய். பழவேற்காடு தொடங்கி நீரோடி வரை புற்றுநோயின் குரூர ஆட்டத்துக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் நடுங்கிக் கொண்டிருக்கிறார்கள் தமிழகக் கடலோடிகள். காரணம் என்ன?

தூத்துக்குடி கடலில் முத்து வளம் அழிந்து, இப்போது சங்கு வளமும் சாகக் காரணம் என்ன? ஆற்றுத் தண்ணீரின் ருசியைக் கடற்கரை ஊற்றுத் தண்ணீர் தாண்டும் என்பார்கள். ஊற்றுநீர் தூர்ந்து நிலத்தடிநீர் உப்பள நீராகக் காரணம் என்ன?

ராமேஸ்வரத்தில் மட்டும் அல்ல; அங்கே நீரோடியில் தொடங்கி இங்கே பழவேற்காடு வரை என்றைக்கு மீன் வளம் அற்று பிழைப்பு அற்றுப்போகுமோ என்று கடலைப் பயத்தோடு பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் தமிழகக் கடலோடிகள். காரணம் என்ன?

 

http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/article6302951.ece?ref=relatedNews

 

 

 

  • தொடங்கியவர்
கடலில் பாவிய பூதக் கால்கள்!

 

fishing_2053104h.jpg

 

பழவேற்காட்டில் கால் வைத்தபோது நல்ல பசி. ஒரு டீயைக் குடித்துவிட்டு நடக்க ஆரம்பித்தேன். சாமிப்பிள்ளை எனக்கு முன்னே போய்க்கொண்டிருந்தார்.

“ஐயா, கொஞ்சம் மெல்லமாப் போலாங்களா?”

“இதுக்கே அசந்துட்டா எப்பிடி? நெறையக் கேட்குறீங்க. ஆயிரம் வருசத்தைத் தாண்டிப் போவணும்ல? இந்த வேகம் எப்பிடிக் காணும்?” - சொல்லிக்கொண்டே காற்றில் தாவிக்கொண்டிருந்தார். வேறு வழியில்லாமல், நான் என் நடையை ஓட்டமாக்க ஆரம்பித்தேன்.

தமிழகக் கடலோடிகள், இன்றைக்கு எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகளுக்கான ஆணிவேரை எனக்குப் பிடித்துக்காட்டியவர் சாமிப்பிள்ளை. எந்த ஒரு பிரச்சினைக்கும் வெறும் புறச்சூழல் காரணிகள் மட்டும் மூலகாரணங்களாக இருப்பதில்லை. சமூக உளவியலுக் கும் அதில் முக்கியமான ஒரு பங்கு இருக்கும். கடலோடிகள் விஷயத் தில் அதைச் சரியாக அடையாளம் காட்டியவர் சாமிப்பிள்ளை.

 

மீனவன் எனச் சொல்லாதே; கடலோடி எனப் பழகு!

“நீங்க மொதல்ல சரித்திரத்தைக் கொஞ்சம் தெரிஞ்சிக்கணும். அப்போதான் இங்கெ இருக்குற பிரச்சினைங்களுக்கான காரணத்தைப் புரிஞ்சுக்க முடியும். இப்பம் நீங்களாம் பத்திரிகைகள்ல கடக்கரை யில இருக்குற எங்களை என்னன்னு சொல்லி எழுதுறீங்க? பொத்தாம் பொதுவா மீனவன், மீனவச் சமூகம்னு எழுதுறீங்க இல்லையா? மொதல்ல அதுவே தப்பு. கடலோடிங்கிற வார்த்தைதாம் சரி.

பல்லாயிரம் வருஷத்துக்கு முன்னாடியே கப்பப் படை வெச்சிருந் தவன் தமிழன்னு சொல்லுறம். ராசேந்திர சோழன மாரி கடலை செயிச்சவன் யாரு உண்டுன்னு பேசுறம். சரி, அவன் யாரை வெச்சு செயிச்சான்? அந்தக் கப்பப் படையில் இருந்தவம்லாம் யாரு? திரைகடல் ஓடியும் திரவியம் தேடினவம்னு பேசுறம்; அப்படிக் கப்பல்ல ஓடி வாணிபம் செஞ்சவன் யாரு? முத்துக்குளிச்ச பரம்பரைங்கிறோம்; கடல்ல மூழ்குனவம் யாரு? எல்லாமும் இந்தக் கடக்கரையைச் சேந்தவன்தானே? மீனு புடிக்ககுறதுங்குறது ஒரு கடலோடிக்குத் தெரிஞ்ச பல கலைகள்ல ஒண்ணு. ஒரு விவசாயியானவன் எத்தன வித்தைங்களயும் தொழில்நுட்பங்களையும் கத்துவெச்சிருக்கான்? அவன வெறும் நெல்லுக்காரன்னு சொல்றது கொச்ச இல்லயா? அப்பிடித்தான் ஒரு கடலோடிய மீனவன்னு சொல்லுறதும். இது மொத தப்பு. அடுத்த தப்பு, வெளுத்ததெல்லாம் பாலுன்னு நம்புற மாரி, கடலுக்குப் போறவனெல்லாம் கடலோடின்னு நம்புறது.

ஐயா, நம்ம கடக்கரையில உள்ள ஆதி பழங்குடி இனக்குழுக்கள் பரவர், முக்குவர், பட்டினவர், வலையர், கரையர், கடையர் இப்பிடி 13 இனங்களுக்குள்ள அடங்கிடும். மொத்தமா, பரதவர் சமுதாயம்னு சொல்றோம்னு வெச்சுக்குங்களேன். பின்னாடி, அரபு வியாபாரிய நம்ம கடக்கரைக்கு வந்தப்போ, இஸ்லாம் வந்துச்சு. போர்ச்சுகீசிய பாதிரிமாருங்க வந்தப்போ கிறித்தவம் வந்துச்சு. தொழிலை வெச்சு இந்தச் சமுதாயங்கள் எல்லாம் பெருத்தப்போ, கடக்கரை மக்களோட இனக் குழுக்கள் எண்ணிக்கை இன்னும் பெருத்துச்சு. ஆனா, இந்த இனக்குழுக்கள் பழக்கங்கள்ல என்ன வேறுபாடுங்க இருந்தாலும், கடலைப் பொறுத்தவரைக்கும் அது எங்க அம்மா, சாமீ எல்லாம்.

 

சுய கட்டுப்பாடுகள்

இப்போ பாரம்பரியக் கடலோடிகளுக்குன்னு ஒரு சட்டதிட்டம் இருக்கு. கடலுக்குள்ள போறதுக்கும் கட்டுப்பாடு உண்டு, கடல்ல தொழில் பண்ணுறதுக்கும் கட்டுப்பாடு உண்டு. இந்தக் கட்டுப்பாடு எல்லாமே காலங்காலமா எங்க பெரியவங்க சொல்லிக்கொடுத்தது, நாங்களே வகுத்துக்கிட்டது.

இப்போ ஒரு பாரம்பரியக் கடலோடியோட வலைல சின்ன மீன் பட்டா கடல்ல தூக்கி விட்டுருவான். சினை நண்டு பட்டா கடல்ல தூக்கி விட்டுருவான். சங்குப் பூக்கள் உள்ள சங்கு சிக்கினா கடல்ல தூக்கி விட்டுருவான். இதெல்லாம் நாளைக்கி வர்ற நம்ம தலை முறைக்கு. நாம அழிச்சிடக் கூடாதுங்கிறது அடிப்படை.

 

சொந்த செலவில் சூனியம்

சுதந்திரத்துக்கு அப்புறம் என்னாச்சுன்னா, மீன் வளத்தை அதிகரிக்கிறேன்டா தம்பின்னு சொல்லி, அரசாங்கம் உள்ள நுழைஞ்சுச்சு. அதுவரைக்கும் பருத்தி நூலு, சணலு, தென்னை நாருன்னு வலை பின்னிக்கிட்டிருந்த மக்ககிட்ட நைலான் வலையைக் கொடுத்துச்சு. பிடிக்கிற மீனு தன் ஊரைச் சுத்தி; மிச்சம்பட்டது கருவாடுக்குன்னு ஓடிக்கிட்டிருந்தவன்கிட்ட ஐஸ் கட்டியைக் கொடுத்துச்சு. வெளியூருங்களுக்கும் வெளிமாநிலங்களுக்கும் மீனை எடுத்துக்கிட்டுப் போவ லாரிங்களை அனுப்புச்சு. நல்லா வசதியாப் போய் பெருவாரியா மீன் பிடிக்க விசைப்படகுகளை அறிமுகப் படுத்துச்சு. கூடவே, கடல்ல அடிமண் வரைக்கும் வாரி அள்ளுற மாரி இழுவை மடிகளையும் கொடுத்துச்சு.

இந்த இழுவை மடியோட கதை என்னான்னா, ரெண்டாம் ஒலகப் போர்ல கடலுக்கு அடியில எதிரிங்க போட்டுவைக்கிற குண்டுங்களை வாரி வெளியே எடுக்குறதுக்காகக் கொண்டுவந்த மடி இது. எப்பிடி ஒலகப் போருக்குப் பின்னாடி, வெடிமருந்து தயாரிச்சவனெல்லாம் தன் கம்பெனியை வெச்சு உரம் தயாரிக்கிறவனா ஆனானோ, அப்பிடி வெடிகுண்டை எடுக்குற மடியை வெச்சு, மீன் பிடிக்கச் சொல்லிக்கொடுத்தான். நம்மூரைக் கெடுத்ததுல நார்வேக்காரனுக்குப் பங்கு உண்டு.

இதெல்லாம் கடக்கரைக்கு வந்தவுடனே, வியாபாரத்துக்காக வெளி ஆளுங்களும் அதிகாரிமாருங்களும் கடக்கரைக்கு வந்தாங்க. இந்தப் பாரம்பரியக் கடலோடிகிட்ட இல்லாத முதலீடும் தொழில்நுட்பமும் அவங்ககிட்ட இருந்துச்சு. அவங்க கண்ணுக்கு, கடலு அம்மா மடியா தெரியல. தங்கச் சுரங்கமா தெரிஞ்சுது. அள்ள ஆரம்பிச்சாங்க. கடலோடி சமூகத்தையும் அள்ளப் பழக்கினாங்க.

 

பறிகொடுத்த பாரம்பரிய அறிவும் அறமும்

இப்பம் கடைசியில எங்கே வந்து நிக்குதுன்னு கேட்டா, இன்னைக்குக் கடலுக்குப் போவ ஒரு கடலோடிதான் தேவைன்னு இல்ல. உங்ககிட்ட விசைப்படகு இருந்து, நவீனத் தொழில்நுட்பம் தெரிஞ்சா நீங்களும் போவலாம். காத்து தெரிய வேணாம், நீவாடு தெரிய வேணாம், மீன் குறி தெரிய வேணாம். எல்லாத்துக்கும் கருவி வந்தாச்சு. அதனால, கடலுக்குப் போற ஆளுங்க இன்னைக்கு ரெண்டா பிரிஞ்சு நிக்குறாங்க. ஒண்ணு, பாரம்பரியக் கடலோடிங்க. இன்னொண்ணு, தொழில்முறை கடலோடிங்க. இந்த ரெண்டாவது ஆளுங்களோட எண்ணிக்கை ரொம்பக் கொறைச்ச. ஆனா, அவங்க கையிலதான் இன்னைக்குத் தொழில் இருக்கு, கடக்கரை இருக்கு, கடல் இருக்கு.

இப்பிடி வெளியிலேர்ந்து வந்து கடலைப் பார்த்து சுரங்கமா நெனைச்சவங்க கொண்டாந்ததுதான் அனல் மின்நிலையங்கள்ல ஆரம்பிச்சி, கனிம மணல் ஆலை, அணு உலை வரைக்கும்.

நீங்க எங்க வேணா போங்க, எந்தப் பிரச்சினையை வேணா எழுதுங்க. கடல்ல நடக்குற மாற்றங்களுக்கான அடிப்படை இதுதான் பார்த்துங்க!”

அநாயாசமாக ஒரு பெரும் கதையைச் சொல்லிவிட்டு, வெற்றிலையை எடுத்து, அதன் முதுகில் சுண்ணாம்பைத் தடவ ஆரம்பித்தார் சாமிப்பிள்ளை.

(அலைகள் தழுவும்...)

 

http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article6306788.ece?homepage=true&theme=true

 

  • தொடங்கியவர்
கரும் பிசாசு

 

neer1_2055649g.jpg

 

neer2_2055650g.jpg

 

கன்னியாகுமரி மாவட்டம். மணவாளக்குறிச்சி. உயரமான சுற்றுச்சுவர்களால் வளைக்கப்பட்டிருக்கும் அந்த வளாகத்தில், ‘இந்திய அரிய மணல் ஆலை' எனும் பெயர் பலகையைத் தாண்டி, உள்ளே ஒரு ஆலை இயங்குவதற்கான எந்த அடையாளமும் வெளியே இல்லை. உள்ளே மலை மாதிரி குவிக்கப்பட்டிருக்கும் மணலைப் பார்க்கும் வெளியூர்க்காரர்கள் எவருக்கும் அவர்களுடைய சிறு பிராயத்து மணல் ஆட்டம் ஞாபகத்துக்கு வரும். கடற்கரை யோர மக்களோ அதைக் கரும் பிசாசு என்கிறார்கள்.

 

கனிம மணல் என்றால் என்ன?

தமிழகத்தின் தென்பகுதி கடற்கரையின் மணலைக் கருமணல் என்று சொல்கிறார்கள். ஏராளமான கனிமங்களை உள்ளடக்கிய இந்த மணலிலிருந்து இலுமனைட், ரூட்டைல், சிர்கான், மோனசைட், சிலிமினேட், கார்னைட் உள்ளிட்ட கனிமங்கள் பிரித்தெடுக்கப்படு கின்றன. சர்வதேச அளவிலான சந்தையைக் கொண்ட தொழில் இது.

இந்தக் கருமணல் இயல்பிலேயே கதிரியக்கத் தன்மை கொண்டது. அதைத் தோண்டிக் கையாளும்போது, அதிலுள்ள கதிரியக்கம் மேலும் பல மடங்கு அதிகரிக்கும். புற்றுநோய்க்கான முக்கியமான காரணிகளில் கதிரியக்கமும் ஒன்று என்பதுதான் கருமணலைக் கரும் பிசாசு என்று கடற்கரை மக்கள் அழைக்கக் காரணம்.

 

தமிழகக் கடற்கரைக்கு வந்த முதல் அபாயம்

தமிழகக் கடற்கரையில் இன்று நிறுவப்பட்டிருக்கும் எல்லா நவீனத் தொழிலகக் கட்டமைப்புகளுக்கும் தொடக்கப் புள்ளி மணவாளக்குறிச்சி ஆலை. “1908-ல் ஜெர்மனியிலிருந்து இங்கு வந்த ஹெர்ஸ் ஸ்கோன்பெர்க் என்பவர்தான் தமிழகக் கடற்கரைக்கு இந்த ஆலை வந்த கதையின் சூத்திரதாரி. வெகு விரைவில், ஆங்கிலேய அரசு இதைப் பெரிய அளவில் விஸ்தரித்தது. சுதந்திரத்துக்குப் பின், 1963-ல் தன்னுடைய நேரடிக் கட்டுப்பாட்டில் இந்திய அணுசக்தித் துறை கொண்டுவந்தது” என்று ஆலையின் வரலாற்றைச் சொல்கிறார் ஆய்வாளரும் ‘தாது மணல் கொள்ளை' நூலாசிரியருமான முகிலன். இன்றைக்குத் தென்தமிழகக் கடற்

கரையைச் சூறையாடிக்கொண்டிருக்கும் கனிம மணல் அள்ளுநர் களெல்லாம் இந்த ஆலையைப் பார்த்துதான் தொழில் கற்றிருக் கின்றனர்.

ஆண்டுக்கு 90,000 ஆயிரம் டன் இலுமனைட், 10,000 டன் சிர்கான், 10,000 டன் கார்னெட், 3,500 டன் ரூட்டைல், 3,000 டன் மோனசைட்டைக் கருமணலிலிருந்து பிரித்து இந்த ஆலை உற்பத்தி செய்கிறது. கோடிகளில் புரளும் இந்நிறுவனம், தொழிலை மேலும் விஸ்தரிக்க சுற்றுப்புறக் கிராமங்களைத் தேடுகிறது.

 

முதல் களபலி

ஒரு நாட்டுக்கு வளர்ச்சித் திட்டங்கள் அவசியம். எந்த ஒரு நவீனக் கட்டமைப்பும் இயற்கையின் சூழல் கட்டமைப்பில் சில சேதங்களை உருவாக்கவே செய்யும். ஆனால், அந்தக் கட்டமைப்புகள் முற்றிலுமாக இயற்கையைச் சிதைக்கும் அளவுக்கு மோசமானவையாக மாறி விடக் கூடாது. மக்களின் வாழ்வைச் சீரழிப்பதாக மாறிவிடக் கூடாது. ஒரு வரையறைக்குள் செயல்படுத்தப்படுவது அவசியம். இந்தியாவின் சாபக்கேடு என்னவென்றால், வளர்ச்சியின் பெயரால் முன்னெடுக்கப்படும் திட்டங்கள் பலவும் மக்களின் வாழ்வையும் வாழ்வாதாரத்தையும் முதல் களபலி கேட்பதும் வரையறைக்கு அப்பாற்பட்டு சூறையாடுவதாக மாறுவதும்.

இந்திய அரிய மணல் ஆலை, தனக்காகத் தம் ஊரையும் நிலத்தையும் உழைப்பையும் அர்ப்பணித்த மக்களுக்குச் செய்தது என்ன? ஆலையையொட்டி உள்ள சின்னவிளை கிராமம் உதாரணம்.

 

சுரண்டல் கதைகள்

அடிப்படையில் கடலோடிகளின் கிராமமான சின்னவிளையில் ஆகப் பெரும்பான்மையினர் கத்தோலிக்க மக்கள். விரல் விட்டு எண்ணிவிடும் இந்து, முஸ்லிம் குடும்பங்கள் ஊரில் வசிக்கின்றன. ஊர் மக்கள் கதைகதையாகச் சொல்கிறார்கள். என்றாலும், நல்லது கெட்டது எல்லாவற்றையும் தீர்மானிக்கும் ஊரின் மதகுரு அருட்தந்தை பெஞ்சமினை நோக்கி விரலைக் காட்டுகிறார்கள்.

“இந்த ஆலை இயங்குறதுக்கான இடம் கொடுத்ததுல ஆரம்பிச்சு, இங்கே கூலி வேலைக்குப் போய் இந்த ஆலை இயங்குறதுக்கான எல்லா அடித்தளமும் நம்ம ஊர் மக்கள்தான். ஆனா, பதிலுக்கு ஆலை என்ன பண்ணுச்சுன்னு மட்டும் நான் சொல்றேன்” என்று ஆரம்பித்தார் பெஞ்சமின்.

“ஆலை தொடங்குனப்போ ஊரோட எல்லா இடத்தையும் ஆலை எடுத்துக்கிட்டு, மக்களுக்கு குடும்பத்துக்கு ரெண்டரை சென்ட் மட்டும் கொடுத்துச்சு. இன்னைக்குத் தலைமுறை ஓடிப்போச்சு. அன்னைக்கு இப்படி ரெண்டரை சென்ட் எடத்துல வாழ ஆரம்பிச்சவங்களுக்கு இன்னைக்குப் பேரப்பிள்ளை ஆகிப்போச்சு. இன்னும் அந்த எடத்தைத்தான் உடைச்சி உடைச்சி வாழ்ந்துகிட்டிருக்காங்க. ஊருல வேற எடம் இல்லை. வயசுப் பிள்ளைங்களை வெச்சுக்கிட்டு எப்படி இத்தனை சின்ன எடத்துல வாழ முடியும். ஒரு ரெண்டு ஏக்கர் நெலத்தை மக்களுக்குக் கொடுங்க; நாங்க பகிர்ந்துக்குறோம்னு ஆண்டுக் கணக்கா கேட்குறோம். ஆலை என்ன செய்யுது தெரியுமா? பதிலுக்கு எங்ககிட்ட இருக்குற கொஞ்ச நஞ்ச எடத்தையும் கேட்குது.

மழை கொட்டுற நாள்லகூட இங்கே நெலத்துல கால் சுடும். அவ்வளவு கதிரியக்கம். இதோ, இப்பகூட செல்சியானு ஒரு குழந்தை புற்றுநோயால பாதிக்கப்பட்டிருக்கு. ஏழாவது படிச்சுக்கிட்டுருந்தது. நல்லாப் படிக்கக் கூடிய பிள்ளை. ரத்தப் புற்றுநோய்னு தாய் - தகப்பன் தூக்கிக்கிட்டு சென்னைக்கும் திருவனந்தபுரத்துக்கும் மாத்திமாத்தி அலையுறாங்க. அன்னாடம் நூறு இருநூறுக்குப் பிழைக்குற மக்கள், தொழிலை விட்டுட்டு ஊர் விட்டு ஊர் போய் அறை எடுத்துத் தங்கி, பல்லாயிரக் கணக்குல மருத்துவச் செலவு பாக்குறதுன்னா சாமானியமா? இந்த ஊர் மக்கள் எவ்வளவோ இழந்திருக்காங்க இந்த ஆலைக்காக.

ஆனா, இப்பவும் இந்த ஆலைக்கு எதிரா நானோ, ஊரோ பேசலை. ஆலை வேணாமின்னு சொல்லலை. காரணம், இந்த ஊரைச் சேர்ந்த பெரும்பாலானவங்க அங்கதான் கூலி வேலைக்குப் போறாங்க. பிழைப்புக்கு அதைத்தான் நம்பியிருக்காங்க. அதனால, எல்லாத்தையும் தாங்கிக்கிறோம். ஆனா, குறைஞ்சபட்ச நியாயமின்னு ஒண்ணு இருக்கணுமா வேணாமா?

ஊர்லேர்ந்து கூலி வேலைக்குப் போறவங்க, சொற்பத் தொகைக்கு ஒப்பந்தக் கூலியாத்தான் போறாங்க. உள்ள நிரந்தரமா வெச்சிருக்குற தன்னோட அதிகாரிங்களுக்கு மூணு மாசத்துக்கு ஒரு மொறை கதிரியக்கப் பாதிப்புப் பரிசோதனை நடத்துது ஆலை. அவங்களுக்குக் கதிரியக்கப் பாதிப்பு அதிகமானா, தேவையான சிகிச்சைகளைத் தருது. புற்றுநோய் பாதிப்பு வந்தாக்கூடப் பணிப் பாதுகாப்பு அவங்களுக்கு உண்டு. கூலித் தொழிலுக்குப் போற எங்க ஊர் மக்கள்ல இப்படி ஒருத்தர் பாதிக்கப்பட்டா, அத்தோட அவர் கதை முடிஞ்சுது. வருஷத்துக்கு ரெண்டு லட்ச ரூபாய் ஊர் வளர்ச்சி நிதின்னு சொல்லி பேர் பண்ணுறதோட ஆலையோட கடமை முடிஞ்சுது. வெளிய பாருங்க. இந்தச் சாலையைத்தான் ஒரு நாளைக்கு ஆயிரம் மொறை பயன்படுத்துது ஆலை. என்ன லட்சணத்துல கெடக்குது பாருங்க” என்று சாலையைக் காட்டும் பெஞ்சமின் சொல்கிறார். “வளர்ச்சித் திட்டங்களை ஆதரிக்கிற மக்களோட கதியே இப்படின்னா, எதிர்க்குற மக்களோட நெலைமை நம்ம நாட்டுல எப்படி இருக்குனு யோசிச்சுப்பாருங்க!”

சின்னவிளையிலிருந்து கடியப்பட்டினம் போனபோது கதிரியக் கத்தின் தாண்டவம் கலங்க வைத்தது.

 

(அலைகள் தழுவும்…)

 

http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81/article6311159.ece?homepage=true&theme=true

  • தொடங்கியவர்

அரசே... அபலைகளின் அழுகுரல் உனக்குக் கேட்கிறதா?

 

436xNxnilam1_2058200g.jpg.pagespeed.ic.I

 

கடியப்பட்டினத்தில் நுழைந்தபோதே சாவு வரவேற்றது. ‘அது' சாவு. மக்களின் முகத்தில் துக்கத்தைத் தாண்டி ஆக்கிரமித்திருக்கிறது பயம். துக்கத்துக்காகக் கூடியிருப் பவர்கள் குனிந்து கிசுகிசுக்கிறார்கள். ‘அது' பற்றியது இந்தப் பேச்சு. வாயைத் திறந்து ‘அது' பெயரைச் சொன்னாலே 'அது' வீட்டுக்கு வந்துவிடுமோ என்று அஞ்சுகிறார்கள். ‘அது'வோ ஈவிரக்கம் இல்லாமல் மக்களை வேட்டையாடுகிறது.

தமிழகத்திலேயே கதிரியக்கத்தை அதிக அளவில் எதிர்கொள்ளும் ஊர்களின் வரிசையில் முதல் வரிசையில் இருக்கிறது கடியப்பட்டினம். ஒவ்வொரு வாரமும் யாரோ ஒருவர் புதிதாக வெளியூர் ஆஸ்பத்திரிக்குப் போக வேண்டிய சூழல் உருவாகிறது. ஒவ்வொரு மாதமும் யாரோ ஒருவருக்குப் புதிதாக ‘அது' கண்டறியப்படுகிறது. வெகு சீக்கிரம் ஒரு நாள் ‘அது' கொன்றுபோடுகிறது.

அபலைகளின் கதறல்

“ஐயா, பொறுப்புள்ள பிள்ளையா. பதிமூணு வயசுல இப்பிடி ஒரு பிள்ளையை நீங்க பார்க்க முடியாது. தாய் - தந்தை மேல அப்பிடி ஒரு பிரியம், மதிப்பு. கடலுக்குப் போயி நூறு, எரநூறுக்கு உயிரைக் கொடுத்து, அப்பன் பொழைக்கிறாம்னு சொல்லி, நல்லாப் படிச்சுக் குடும்பப் பொறுப்பை ஏத்துக்கிடுவேன்னு சொல்லிக்கிட்டிருந்த பிள்ளை. ஒரு நா கைய வலிக்குண்ணாம். கடுக்குண்ணாம். ஆஸ்பத்திரி போனோம். மருந்து மாத்திரை கொடுத்தாங்க. வலி கட்டுபடல்ல. பரிசோதனை பண்ணணும்னாங்க. கடைசில அதுன்னாட்டாங்க. எலும்புல வந்துடுச்சு.

ஐயா, ஒரு பாவம் அறியாத பிள்ளைய்யா. பச்ச பிள்ளைக்கு என்ன தெரியும்? ஐயோ, ஒரு கெட்ட பழக்கம், அது இதுன்னு இருந்து செத்தாக்கூட, தப்புன்னு சொல்லி ஆத்திக்கலாமே... ஏ, ஐயா, புருனோ... உன்னையே பொறுப்பே இல்லாம பறி கொடுத்துட்டேனேய்யா...”

- மாரிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு வெளிப்படும் அந்த அழுகுரல் இதயத்தைச் சுக்கு நூறாக்குகிறது.

ஒன்று, இரண்டல்ல; அங்கொன்றும் இங்கொன்றும் அல்ல; இதோ எதிர்த்த வீட்டில் ரத்தப் புற்று, அதோ பக்கத்து வீட்டில் எலும்புப் புற்று, இங்கே பின் வீட்டில் கருப்பைப் புற்று என்று கூப்பிட்டுச் சொல்கிறார்கள்.

யாருக்கும் தெரியவில்லை!

கடியப்பட்டினம் பங்குத்தந்தை செல்வராஜ், வரிசை யாகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட, உயிரிழந்தவர் கள் தொடர்பான கோப்புகளை விரித்துக் காட்டுகிறார்.

“ஒவ்வொரு வருஷமும் 20 பேர் புத்துநோயால மரிச்சுப்போறாங்க. இந்தச் சின்ன ஊர்ல இதோ, ரெண்டு மாசத்துல நாலு பேர் அடுத்தடுத்து, புத்துநோயால பாதிக்கப்பட்டிருக்காங்க. கொடுமை என்னன்னா, காட்டுறதுக்கு ஆஸ்பத்திரிகூட இங்கே ஏதும் கிடையாது. ஒண்ணு திருவனந்தபுரம் ஓடணும், இல்ல, சென்னைக்கு ஓடணும். சரியான மருத்துவ வசதி, பரிசோதனை வசதி இல்லாததால, முத்துன நெலையிலதான் நோய் பாதிப்பே தெரியவருது. ஒவ்வொரு நாளும் மக்கள் வந்து கதறுறாங்க. என்ன செய்யுறதுன்னே தெரியலை” என்கிறார்.

கடற்கரை முழுவதும் பாதிப்பு

இங்கே குமரி மாவட்டத்தில் தொடங்கி அங்கே திருவள்ளூர் மாவட்டம் வரை புற்றுநோய் கோரத் தாண்டவம் ஆடிக்கொண்டிருக்கிறது. கடற்கரை ஊர்களில் நுழையும்போதெல்லாம், மக்களைச் சந்திக்கச் செல்லும்போதெல்லாம் அவர்கள் சொல்லும் செய்திகள் குலைநடுங்க வைக்கின்றன. அரசுக்கோ ஊடகங்களுக்கோ இதன் தீவிரம் தெரியவில்லை. நம் கடற்கரை மக்கள் வாழ்க்கையை எந்த அளவுக்குப் புற்றுநோய் குலைத்துப்போட்டிருக்கிறது என்பதற்குச் சரியான உதாரணம் காயல்பட்டினம்.

ஒரு உயிர் ஒரு உலகம்

காயல்பட்டினம் பேருந்து நிலையத்தில் இறங்கியதுமே எதிர்ப்படுகிறார்கள் புற்றுநோயாளிகள். சுப்பிரமணியன் பேருந்து நிலைய வளாகத்தில் வல்கனைசிங் தொழில் செய்கிறார். மனைவியும் புற்றுநோயாளி, மகனும் புற்றுநோயாளி. “டயருக்கு பஞ்சர் ஒட்டிப் பொழப்பு நடத்துறவங்க. பொஞ்சாதிக்கு நுரையீரல்ல புத்து. புள்ளைக்கு ரத்தத்துல புத்து. ஒரே நேரத்துல ஒருத்தரை சென்னையிலேயும் இன்னொருத்தரை மதுரையிலேயும் வெச்சுக்கிட்டுப் போராடுனேன் பாருங்க. எவ்வளவோ செலவு செஞ்சி பாத்தாச்சு. பொஞ்சாதி போய்ட்டாங்க. பிள்ளையைக் காப்பாத்தணும், அதுக்காகத்தான் ஓடிக்கிட்டு இருக்கேன்” என்று சொல்லும் தந்தையையே பார்த்துக்கொண்டிருக்கிறான் ஐயன்ராஜ். மருத்துவச் செலவை எதிர்கொள்ள படிப்பை நிறுத்திவிட்டு, அப்பாவோடு கடையில் உதவிக்கு உட்கார்ந்திருக்கிறான். “அப்பா ஒண்டியா எவ்ளோண்ணே கஷ்டப்படுவாங்க, பாவம் இல்லேண்ணே, என்னால பெருசா ஒண்ணும் முடியாது. ஆனா, பக்கத்துலேயே உட்கார்ந்துருக்கும்போது அப்பாவுக்கு ஒரு ஆறுதலா இருக்கு” என்கிறான், கண்ணில் ததும்பும் நீரை அடக்கிக்கொண்டு.

புற்றுக்கு எதிராகத் திரளும் ஊர்

இஸ்லாமியர்கள் பெரும்பான்மையினராக வாழும் பாரம்பரியமான ஊர் காயல்பட்டினம். சமீப காலத்தில் மட்டும் 60 பேர் இறந்திருக்கிறார்கள்; அவர்களில் 20 பேர் புற்றுநோயாளிகள் என்கிறார்கள் ஊர்க்காரர்கள். அரசு கண்டுகொள்ளாத நிலையில், புற்றுக்கு எதிராக இப்போது ஊரே திரள ஆரம்பித்திருக்கிறது. ‘காயல்பட்டினம் புற்றுநோய் காரணி கண்டறியும் குழு’ என்று ஒரு குழுவை அமைத்து அறிவியல்ரீதியிலான ஆய்வுகளில் களம் இறங்கியிருக்கிறார்கள்.

“ஒண்ணுபட்ட சமூக அமைப்பு உள்ள ஊர் காயல் பட்டினம். பொண்ணு கொடுக்க, எடுக்க எல்லாமே பெரும்பாலும் இங்கைக்குள்ளேதான் நடக்கும். அதனால, இந்த நோயால பாதிக்கப்பட்டாகூட மக்கள் வெளியே சொல்லத் தயங்குனாங்க. பலர் இதை வெளியே சொல்ல விரும்புறதில்லை. ஆனா, இப்படியே போனா இந்தத் தலைமுறையையே பறி கொடுக்க வேண்டியதாம்னு சொல்லிக் களத்துல எறங்கிட்டோம்.

ஒவ்வொரு வீட்டுலேயும் எத்தனை பேர் புத்துநோயால் பாதிக்கப்பட்டிருக்காங்கன்னு 40 தன்னார்வலர்களை வெச்சுக் கணக்கெடுத்தோம். விஞ்ஞான ரீதியா என்ன காரணமா இருக்கும்னு நிலத்தடித் தண்ணீர்ல ஆரம்பிச்சு மளிகைக் கடை சாமான்கள் வரைக்கும் ஆய்வு நிறுவனங்களுக்கு மாதிரியை அனுப்பிச்சு ஆய்வுசெஞ்சோம். புத்துநோய் மருத்துவர் சாந்தாவைக் கூட்டிட்டு வந்து இந்த அறிக்கைங்க, பாதிப்பு எல்லாத்தையும் கொடுத்து ஆலோசனை கேட்டோம். தொடர்ந்து அரசாங்கத்துக் கதவைத் தட்டிக்கிட்டேதாம் இருக்கோம். ஆனா, செவிசாய்க்க ஆள் இல்லை” என்கிறார் உள்ளூரில் மருத்துவ உதவிக்காக இயங்கும் ஷிஃபா கூட்ட மைப்பின் செயலாளரான தர்வேஷ் முஹம்மத்.

கடந்த மூன்றாண்டுகளில் மட்டும் 125 பேருக்கும் மேற்பட்டவர்களுக்குப் புற்றுநோய் கண்டறியப் பட்டுள்ளதாகக் கூறுகிறார் மருத்துவ அறிக்கைகளோடு.

ஊருக்குள் நோயாளிகளுடன் உரையாடும்போது, நோய் வேதனையைக் காட்டிலும் அரசின் புறக்கணிப்பு தரும் விரக்தி அவர்களைத் துளைத்தெடுப்பதை உணர முடிகிறது. நான்கு குழந்தைகளின் தாயான ஜீனத் தன் பிள்ளைகளின் எதிர்காலம் குறித்துப் பேசும்போது துக்கம் வெடிக்கிறது. தந்தை முஹம்மது ஹசன் சிறுநீர்ப்பை புற்றுநோய்த் தாக்குதலுக்கு ஆளான பிறகு, தாய் ஆப்பம் விற்கப்போவதாகச் சொல்லும் 12 வயது சஹர் பானு குடும்பத்தைப் பற்றிப் பேசும்போது மலங்க மலங்க விழிக்கிறாள். “அப்பாவுக்கு நல்லாயிடுமாண்ணே?” என்று அவள் கேட்கும் கேள்வி துரத்திக்கொண்டே வருகிறது.

தொடர்ந்து கடற்கரையோர ஊர்களில் நோயாளி களைச் சந்திக்கும்போதெல்லாம் எழும் கேள்வி ஒன்று தான்: இவ்வளவு நடக்கிறது, அரசாங்கம் என்ன செய்கிறது?

(அலைகள் தழுவும்...)

 

http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%87-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AE%BE/article6315574.ece?homepage=true&theme=true

  • தொடங்கியவர்

இந்த அழிவு ஒரு ஊருக்கானது மட்டுமா?

 

1w_2064682h.jpg

 

பொதுவாக, இயற்கைச் சூழலைச் சீரழிப்பதில் தொழில் துறையினரின் அநீதியான செயல்பாடுகளைப் பேச ஆரம்பித்தாலே, ‘வளர்ச்சிக்கு எதிரான முத்திரையை' குத்துவது இந்திய இயல்பு. வளர்ச்சியே காலத்தை முன்னகர்த்துகிறது என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால், வளர்ச்சி என்பதற்கான வரையறை எது; அதில் தொழில் துறையினருக்கான எல்லை எது? இந்தப் பயணம் எனக்கு இந்த எல்லையைக் கறாராக வரையறுத்துக் காட்டியது. அவலமான மொழியில், கொடூரமான தோற்றத்தில், உக்கிரமாகக் காட்டியது என்றுகூடச் சொல்லலாம்.

ஆலையும் அழிவும்

தமிழகத்தில் ஆயிரக் கணக்கான ஆலைகள் இருக்கின்றன. சூழலை நாசப்படுத்துவதோடு, உயிர்களைக் காவு வாங்கிவிடக் கூடிய அபாயம் மிக்க ஆலைகளின் எண்ணிக்கை நூறைத் தாண்டும். அதிகபட்சமாக, பயணங்களின்போது நம் மூக்கில் விருட்டெனப் புகும் நெடி, ஆலையின் புகைபோக்கியிலிருந்து வெளியேறும் கரும்புகை, எங்கோ கசிந்து கழிவுநீர் தேங்கி நிற்கும் சாக்கடைகளைத் தாண்டி, இந்த ஆலைகள் சூழல் சார்ந்து பொதுத்தளத்தில் கவனத்தை ஈர்ப்பதில்லை.

ஒரு ஆலைக்காகச் சில நாட்களை ஒதுக்க முடியுமானால், ஒரு ஆலையால் சூழலை எவ்வளவு மாசுபடுத்த முடியும் என்பதை சாஹுபுரம் பயணம் எனக்கு உணர்த்தியது.

சாஹுபுரத்தின் வாசல்

சாஹுபுரத்தின் முன்வாசலுக்குச் செல்வது எளிதான பயணம். தூத்துக்குடி - திருச்செந்தூர் பஸ்ஸில் ஏறி உட்கார்ந்தால், பாட்டு கேட்டுக்கொண்டே சுமார் ஒரு மணி நேரத்தில் போய் சேர்ந்துவிடலாம். சாஹுபுரம் பேருந்து நிறுத்தத்தில் இறங்கினால், டி.சி.டபிள்யூ. (தாரங்கதாரா கெமிக்கல் ஒர்க்ஸ்) ஆலையின் முகப்பு உங்களை வரவேற்கும். அங்கே நீங்கள், சாஹு சிரியன்ஸ் பிரசாந்த் ஜெயின் என்கிற மனிதர், எப்படி இந்த நாட்டின் முதல் சோடா ஆஷ் ஆலையை குஜராத்தின் தாரங்கதாராவில் நிறுவினார் என்பதில் தொடங்கி, அந்த ஆலை எப்படியெல்லாம் விரிவாக்கப்பட்டு, தமிழகம் வந்து இன்று பல நூறு கோடிகளைக் குவிக்கும் வெற்றிகரமான நிறுவனம் ஆனது என்கிற சாதனைச் சரித்திரம் வரை உங்களுக்குக் கிடைக்கும்.

சாஹுபுரத்தின் கொல்லைப்புறம்

சாஹுபுரத்தின் கொல்லைப்புறத்துக்குச் செல்லும் பயணம் கொஞ்சம் சிரமமானது. காயல்பட்டினம் கடற்கரையோரமாக நடந்து சென்று, கொம்புத்துறைப் பகுதியை அடைந்த பின் வரும் புதர்ப் பகுதியில் உள்ளே நுழைந்து சில கி.மீ. தூரத்தை முட்கள் சூழ்ந்த மணல் பாதையில் கடந்து சென்றால், சாஹுபுரத்தின் கொல்லைப்புறத்தை அடையலாம். இப்படிச் செல்லும்போது மக்களிடம் பேசினால், எப்படியெல்லாம் வளர்ச்சியை உருவாக்குகிறேன் என்று சொல்லி,

டி.சி.டபிள்யூ. ஆலை, நிலத்தை சலுகையில் வாங்கி, ஒரு ஊராக்கி, ஆலை நிறுவனர் சாஹு சிரியன்ஸ் பிரசாந்த் ஜெயின் பெயரால், அதற்கு சாஹுபுரம் என்று பெயரிட்டுக்கொண்ட கதையில் தொடங்கி, கடலையே தன் ஆலையின் கழிவுத் தொட்டியாக்கிக்கொண்டது வரை கூறுவார்கள்.

நீராதாரக் கொலை

சாஹுபுரம் ஆலையின் பின்புறம் அழைத்துச் சென்று காட்டிய பெரியவர் சேக்கணா, “எங்க ஊரோட ஒரு பகுதி தம்பி இது. ஏதோ ஒரு ஆலை வரும், மக்களுக்கு வேலை வாய்ப்பு கெடைக்கும், வளர்ச்சி வரும்முன்டு சந்தோஷமா வரவேத்தோம். இன்னைக்கு, தொட்டா பஸ்பமாக்கிடக்கூடிய பலவித ரசாயனங் களையும் இங்க கொண்டாந்துட்டாங்க. இப்பம் பாருங்க, ஆலையை ஒட்டி இருக்குற ஒரு நீரோடையையே எப்படிக் கொன்னுட்டாங்கன்டு. வெறும் கழிவுநீரு இல்ல தம்பி இது, ரசாயனக் கழிவு. இது கடல்ல கலந்து கடல் எப்பிடி செவப்பா இருக்கு பாருங்க. கடலோட நெறமே மாறுதுன்டா எத்தன லட்சம் லிட்டர் இப்பிடிக் கடல்ல கலந்துருக்கும்? அது பட்ட எடத்துல பாறாங்கல்லையே எவ்வளவு அரிச்சிருக்குன்டு பாருங்க. இது மனுசனை அரிக்காதா தம்பி?” என்கிறார்.

அவர் பேசிக்கொண்டேயிருக்கிறார். என் கண்கள் அப்படியே அந்த நீரோடையில் குத்தி நிற்கின்றன. இப்படி ஓடையிலிருந்து வெளியேறும் நீர், தடையில்லாமல் கடலுக்குச் செல்ல ஏதுவாகக் கடலை நோக்கி வடிகால் வெட்டிவிட்டிருக்கிறார்கள்.

“யாரும் வர முடியாத எடம் இது. ஆள் அரவம் கிடையாது. ஆனா, ஆலைக்காரங்க ஆளுங்க இங்கே கூடாரம் போட்டு உட்கார்ந் திருப்பாங்க. நடுராத்திரில கால்வாயை வெட்டிக் கடல்ல கலக்க விடுற வேலை நடக்கும். நாங்க வர ஆரம்பிச்சதும் வேட்டை நாய்ங்களை வெச்சுத் துரத்த விரடறது, மெரட்டுறதுன்டு நிறையப் பண்ணிப் பார்த்தாங்க.

நாங்க தனியாளா இருந்தா வேலைக்காவாதுன்டு ஊருல ஒரு சுற்றுச்சூழல் போராட்ட அமைப்பைத் தொடங்குனோம். இங்கே தினம் வர்றது, போட்டோ எடுக்குறது, அரசாங்கத்துக்கு ஆதாரபூர்வமா புகார் அனுப்புறதுன்டு களத்துல எறங்குனோம். ஆஷீஷ் குமார் ஆட்சியரா இருந்தப்போ, இங்கே எங்க புகாரைக் கேட்டு நேர்ல வந்தார். எவ்வளவு பெரிய கொடுமை இதுன்னு கொந்தளிச்சுட்டார். நடவடிக்க எடுக்குறதுக்குள்ள அவரு வேற எடம் போய்ட்டார். இப்பம் உள்ள ஆட்சியருகிட்ட மறுபடியும் பூரா சரித்திரத்தையும் கொடுத்து, நம்பிக்கையோட காத்திருக்கம்.”

அவர் பேசிக்கொண்டிருக்கும்போதே, ஆலையிலிருந்து புகை வெளியேறுகிறது. திணறவைக்கும் வாடை காற்றை நிறைக்கிறது. “ஆரம்பமாயிட்டு… கடவுளே” என்று சொல்லியவாறே தலையில் அடித்துக்கொள்கிறார்.

ஒரு ஊர் பிரச்சினையா இது?

காயல்பட்டினம் மக்கள், தங்கள் ஊர்க்காரர்கள் புற்றுநோயால் மாண்டுபோக முக்கியமான காரணம் சூழல் சீர்கேடுதான் என்று வலுவாக நம்புகிறார்கள். “இந்தப் படங்களையெல்லாம் பாருங்க” என்று காயல்பட்டினம் சுற்றுசூழல் பாதுகாப்பு இயக்கத்தைச் சேர்ந்த எஸ்.கே. சாலிஹ் காட்டும் படங்கள், ஆலை உருவாக்கும் அவலச் சூழலுக்கு வலுவான ஆதாரங்கள்.

“இது எங்க ஊர் பிரச்சினை மட்டும் இல்ல சார். ஆலையைச் சுத்தியும் பாருங்க, இந்தப் படங்களையெல்லாமும் பாருங்க... இப்பிடி ரசாயனக் கழிவு பட்ட, இங்கெ வெளையுற நெல்லை நாங்க மட்டுமா சாப்பிடுறோம்? இங்கெ உற்பத்தியாவுற உப்பை நாங்க மட்டுமா சாப்பிடுறோம்? இங்கெ புடிக்குற மீனையும் இறாலையும் நாங்க மட்டுமா சாப்பிடுறோம்?

வளர்ச்சி வளர்ச்சினு பேசுறாங்களே... அந்த வளர்ச்சியை அனுபவிக்கிறது யாரு? அதனால வர்ற துயரங்களை அனுபவிக்குறது யாரு? இன்டர்நெட்டுல போய்த் தேடிப் பாருங்க. இந்த ஆலை கோடிக் கோடியா சம்பாதிக்குதுங்குறது தெரியும். வளர்ச்சியோட பலனை குஜராத்துல இருக்குற முதலாளிமாருங்க அனுபவிக்கிறாங்க. அந்த வளர்ச்சி தர்ற பாவத்துக்கு நம்ம சொந்தங்களைச் சவங்களாக் கிட்டு, நாம அனுபவிக்கிறோம். வருஷக் கணக்காப் போராடிட்டு இருக்கோம். அதிகாரிமாருங்க இங்கே வர வேணாம், இந்தக் கொடுமையை யெல்லாம் நேர்ல பார்க்க வேணாம். எல்லா ஆதாரங்களையும் வெச்சுக் கிட்டுக் கதறுறோமே, அதுக்காவது காது கொடுக்கக் கூடாதா?”

காலில் மோதும் அலைகளின் சிவப்பு நிறம் துடிக்கும் கடலின் ரத்தமாகச் சூழ்கிறது.

என்ன சொல்கிறார்கள் சம்பந்தப்பட்டவர்கள்?

இவையெல்லாம் பற்றி டி.சி.டபிள்யூ. ஆலை நிர்வாகத்தின் கருத்து என்ன? தொலைபேசியில் தொடர்புகொண்டபோது, விவரம் கேட்டவர்கள் அதற்குப் பின் தங்கள் பெயரைக்கூடச் சொல்லாமல் இணைப்பைத் துண்டிக்கிறார்கள். ஆலையின் இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் office@shpm.dcwltd.com எனும் மின்னஞ்சல் முகவரியோ மின்னஞ்சலைத் திருப்பியடிக்கிறது. ஆலை நிர்வாகத்தினர் பதில் அனுப்பினால் பிரசுரிக்கத் தயாராக இருக்கிறோம்.

(அலைகள் தழுவும்...)

 

http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE/article6327995.ece?ref=relatedNews

 

  • தொடங்கியவர்

மர்மப் பிரதேசத்தில் பயணம்

 

kanima_manal_2066157d.jpg

 

 

‘நீர், நிலம், வனம்!’ தொடரைத் தொடங்கும்போதே அபாயகரமான சில பயணங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதை உணர்ந்திருந்தேன்.

கடல் மக்கள் வாழ்வை அருகிலிருந்து எழுத வேண்டும் என்ற உந்துதலில் அவர்களை நெருங்கியபோது, கடல் பயணங்களுக்குத் தயாரானேன். அலைகள் அற்ற கடலில், சௌகர்யமான சுற்றுலாப் படகில் உல்லாசப் பயணம் போவது வேறு; அடித்துத் தூக்கும் மாசாவில் ஏறி, பறந்து, விழுந்து செல்லும் கட்டுமரத்தில் போகும் தொழில் பயணம் வேறு. நீச்சல் தெரியாதவனுக்கு, கடல் பயணங்கள்தான் அபாயகரமானதாக இருக்கும் என்று நினைத்திருந்தேன்.

தமிழகத்தில் கடல் பயணத்தைவிடவும் கரைப் பயணங்கள் எவ்வளவு அபாயகரமானவை என்பதைக் கனிம மணல் கரைப் பயணங்கள் உணர்த்தின. சூழல் கெடுக்கும் கழிவு ஆலை பற்றி நேற்று சொன்னேன். இன்று வேறொரு நிறுவனத்தின், மனம் பதைபதைக்க வைக்கும் மணல் கொள்ளை மீது பார்வையைத் திருப்பியுள்ளேன்.

தனி உலகத்துக்கு நல்வரவு

இந்தியாவின் நீளமான கடற்கரையைப் பெற்றிருக்கும் மாநிலங்களில் ஒன்றான தமிழகக் கடற்கரையின் நீளம் 1,076 கி.மீ. நாட்டின் கடற்கரையில் 13% இது. கடற்கரை என்றால், உடனே நம் ஞாபகத்துக்கு வரும் மெரினா, வேளாங்கண்ணி, கன்னியாகுமரி ஆகிய கடற்கரைகளின் முகங்களையும் அங்கு காணப்படும் ஜன நெருக்கத்தையும் இதில் மிகச் சொற்ப இடங்களில், மிகச் சொற்பமான தூரத்திலே காண முடியும்.

நீரோடியில் புறப்பட்டு, பழவேற்காடு வரை கடற்கரை வழியாக வந்தால் இடையில் அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தென்படும் நகரங்கள், 591 கடலோடிகளின் கிராமங்களைத் தவிர, ஏனைய இடங்கள் யாவும் மர்மப் பிரதேசங்கள். மனித நடமாட்டம் அற்ற இந்தப் பிரதேசங்கள் ஒருபுறம் இணையற்ற அழகு கொண்டவை; மறுபுறம் குற்றங்களுக்கேற்ற களங்கள். ஆலா கத்தும் காடுகளும் சவுக்குத் தோப்புகளும் நாட்டுக் கருவை மரங்களும் நிறைந்த அந்தப் பகுதிகளில் என்ன நடந்தாலும் யாருக்கும் தெரியாது.

ஞாபகம் இருக்கிறதா?

ஓராண்டுக்கு முன் இதே நாட்களில் தமிழகம் எதைப் பற்றிக் காரசாரமாக விவாதித்துக்கொண்டிருந்தது ஞாபகம் இருக்கிறதா? தமிழகக் கடற்கரை சூறையாடப்பட்டு, ஏறத்தாழ ரூ. 1,00,000,00,00,000 வரை முறைகேடு நடந்திருக்கலாம் என்று பேசப்பட்டதே... கனிம மணல் கொள்ளை... அதன் மையச் சரடைத் தெரிந்துகொள்ள இந்தப் பிரதேசங்களில் பயணம் மேற்கொள்ள வேண்டியிருந்தது. ஏனென்றால், சென்ற இடமெல்லாம் கடலோடிச் சமூகமும் கடற்கரையையொட்டி வாழும் மக்களும் கனிம மணல் பிரச்சினையை வலியுறுத்தினர். கனிம மணல் பிரச்சினையை நாம் வெளியிலிருந்து பார்ப்பதற்கும் உள்ளிருந்து பார்ப்பதற்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. முக்கியமாக, நாம் புரிந்துகொள்ள வேண்டிய இரண்டு விஷயங்கள்: 1. இது வெறும் பணம் சம்பந்தப்பட்ட விவகாரம் மட்டும் அல்ல. 2. இந்த விவகாரம் ஏதோ ஓராண்டுக்கு முன், சில மாதங்களுக்கு முன் தோன்றியதும் அல்ல.

சூழல் கேடும் உயிர்க் கேடும்

பாரம்பரியக் கடலோடி சமூக மக்களைப் பொறுத்த அளவில் எப்போதுமே பணம் அவர்களுக்குப் பெரிய விஷயம் அல்ல. யார் எவ்வளவு சம்பாதிக்கிறார்கள், எவ்வளவு அரசாங்கத்துக்குக் கொடுக்கிறார்கள் என்பதெல்லாம் அவர்களுக்கு இரண்டாம் பட்சம்தான். அவர்களுடைய முதல் அக்கறை கடலுக்கும் சூழலுக்கும் ஏற்படும் சேதாரம். கனிம மணல் ஆலைகளைப் பொறுத்த அளவில், அவை கடலையும் கடற்கரையையும் சூறையாடப்படுவதை அவர்களால் சகித்துக்கொள்ள முடியவில்லை. கூடவே, முறைகேடாகக் கடலிலும் நடத்தப்படும் மண் அகழ்வு, அவர்களின் கரைகளை அரித்து, கடலை ஊருக்குள் கொண்டுவரும்போது செய்வதறியாது நிற்கிறார்கள். எல்லாவற்றுக்கும் மேல் ஆலைகளிலிருந்து வெளிப்படும் கதிரியக்கமும் கழிவுகளும் நோய்களை நோக்கித் தள்ளும்போது துடித்துப்போகிறார்கள்.

கால் நூற்றாண்டுப் போராட்டம்

“அறிவியல் எங்களுக்குத் தெரியாம இல்ல. மண்ணுக்குச் சேதத்தைத் தராமலா கால்வாயையும் குளங்குட்டைகளையும் வெட்டுனாங்க அந்தக் காலத்துல? அது அறிவியல் இல்லையா, தொழில்நுட்பம் இல்லையா? ஆனா, சூழலை நாசம் பண்ணாமச் சாதிக்க முடிஞ்சுதுல்ல? இன்னைக்கு அது இல்லையே?

கனிம மணலுங்கிறது இயற்கையிலேயே கதிரியக்கம் கொண்டது. அதைப் பிரிச்சு வேலை செய்யும்போது கதிரியக்கம் இன்னும் அதிகமாவுது. போதாக்குறைக்கு விதிகளை மீறி ராட்சச எந்திரங்களை வெச்சிக்கிட்டு, வெறித்தனமா மண்ணை எடுத்து சுத்திகரிச்சு, கழிவுத் தண்ணிய கடல்ல விட்டா என்னாகும்?

நிலத்தடி தண்ணி கெட்டுப்போச்சு. கடல் வளம் கெட்டுப்போச்சு. தொழில் அழிஞ்சுக்கிட்டிருக்கு. கதிரியக்கத்தால ஏராளமான நோய்ங்க. எங்க பார்த்தாலும் புத்துநோய், சிறுநீரக நோய். கடல்ல மண்ணை எடுக்க எடுக்க… கரையை அரிச்சுக்கிட்டுக் கடல் ஊருக்குள்ள வருது. எவ்வளவு சகிச்சுக்க முடியும்?

இருபத்தஞ்சு வருசமா போராடிக்கிட்டிருக்கம். யாரு எதிர்த்துப் பேசுறாங்களோ அவங்களை ஒண்ணு, பணத்தை வெச்சு அடிக்கிறது. இல்ல, பேசாம செஞ்சிடுறது. ஊர் எதிர்த்தா, சாதி மதத்தை வெச்சு ஊரை ரெண்டாக்குறது. அரசாங்க அதிகாரிங்களைக் கைக்குள்ள போட்டுக்கிட்டு எதிர்க்குறவங்களையே அமுக்கிப்போடுறது. 1996 டிசம்பர் 16-ம் தேதியை நாங்க இன்னும் மறக்கல. போராடுன மக்கள் மேல போலீஸை வெச்சு நடத்துன தடியடியில கூட்டப்புளி சேசு செத்துப்போன நாள். இன்னைக்கும் நாங்க போராட்டத்தை விடல. எப்பிடி விட முடியும்? கடல் வெறும் கடலா?” என்று கேட்கும் ம. புஷ்பராயன், கடலோர மக்கள் கூட்டமைப்பின் அமைப்பாளர். அப்போதைய உவரி தேவாலய உதவிப் பங்குத்தந்தை. அன்றைக்கு நடந்த காவல் துறை தடியடியில், கைகள் முறிபட்டு, மூட்டு தெறித்தவர்.

அப்படி என்ன நடக்கிறது அங்கே?

உண்மைதான். வெறும் உரிமங்களையும் இயந்திரங்களையும் ஆட்களையும் கொண்டு நடக்கும் தொழில் அல்ல இது. சாதி, மத, அதிகார, அரசியல், புஜபல வழிகள் யாவும் இரண்டறக் கலந்து கிடக்கும் தொழில்.

கனிம மணல் ஆலைகள் நடக்கும் பகுதிகளில், கடற்கரை மட்டும் அல்ல; கடலும் ஊரும்கூட அவர்கள் கைகளுக்குள் இருக்கின்றன. “அரசாங்கம் கனிம மணல் முறைகேடு சம்பந்தமா விசாரிக்க அமைச்ச ஆய்வுக் குழுவோட தலைவரான ககன்தீப் சிங் பேடி ஆய்வுக்குப் போனப்போ, அவர்கூட போன பத்திரிகையாளருங்களையே மறிச்சிட்டாங்க. படம் எடுக்கப்போனவங்களை அடிக்கப்போயிட்டாங்க. எல்லா ஊரையும் பிரிச்சு, கையாளு வெச்சிருக்காங்க. நீங்க தனியா போறது நல்லதில்லீங்க.

தயவுசெஞ்சு நாங்க சொல்லுறது கேளுங்க...”

எந்த மக்கள் அழைத்தார்களோ, அவர்களே எச்சரிக்கிறார்கள்...

 

http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/article6329551.ece?homepage=true&theme=true

 
  • தொடங்கியவர்

வணக்கம் வைகுண்டராஜன்!

 

sand_mining1_2067644g.jpg

 

vaigunda_2067902g.jpg

 

 

கார் புறப்படுகிறது, உலகின் கனிமச் செழிப்பான கடற்கரைப் பகுதியை நோக்கி. கன்னியாகுமரி மாவட்டத்தின் மிடாலத்தில் தொடங்கி தூத்துக்குடி மாவட்டம் வேம்பார் வரையிலான சுமார் 150 கி.மீ. நீளக் கடற்கரையும் அதை ஒட்டியுள்ள கிராமங்களையும் தொடும் பயணம் இது.

பொதுவாக, இப்படிச் செல்லும்போது பகலில், வரிசையாக ஒவ்வொரு ஊராகச் சென்றுவிட்டு இரவில் திரும்பிவிடுவது வழக்கம். முதல் நாள் விட்ட இடத்திலிருந்து மறுநாள் பயணம் தொடங்கும். இந்தப் பயணத்தைப் பொறுத்த அளவில் வேறு மாதிரி திட்டமிட வேண்டியிருந்தது. முதல் நாள் அனுபவங்கள் அப்படி.

ஏ... யாருப்பா நீயீ?

ஊரில் உள்ளவர்கள்தான் கூப்பிட்டிருக்கிறார்கள். ஆனால், அவர்கள் வந்து உள்ளே அழைத்துச் செல்ல அஞ்சுகிறார்கள். "நீங்க எப்படியாச்சும் வீட்டுக்கு வந்துடுங்க... அங்கென எல்லாரையும் கூட்டி வெச்சிருக்கோம்."

பகலில் ஊருக்குள் நுழைவது அத்தனை எளிதாக இல்லை.

"அண்ணாச்சி, கார் கண்ணாடியை ஏத்திவிட்டு, தலையைக் கொஞ்சம் குனிஞ்சுக்குங்க. அங்கம் மரத்தடியில வண்டியை வெச்சிக்கிட்டு உட்கார்ந்திருக்குப் பாருங்க... அந்த ஆள் கண்ணுல பட்டோம்... தகவல் போயிடும்... அஞ்சு கிலோ மீட்டருக்கு ஒரு ஆள்னு இப்பிடி நிக்கும். ஊருக்குள்ளேயும் சலூன் கடையில, டீக்கடையிலேன்னு பேசிக்கிட்டு இருக்கற மாதிரி உட்கார்ந்திருக்கும். குனிஞ்சிக்கிடுங்க, குனிஞ்சுக்கிடுங்க..."

இப்படியெல்லாம் குனிந்து, மறைந்து சென்றும் பகல் பயணம் வேலைக்கு ஆகவில்லை. "ஐயா, எங்க ஊருல எந்தப் பிரச்சினையும் இல்ல; நீ ஒம் சோலியைப் பாத்துக்கிட்டுப் போய்யா... வெத்து மண்ணை எடுத்து வித்து, பொழப்பு கொடுக்குற மவராசனைப் போட்டுக்கொடுக்க வந்துட்டியளா?"

கூப்பிட்டுச் சென்றவர்கள் கும்பிட்டு, மீனவர்கள் வாழ்க்கைபற்றி எழுத வந்திருப்பதாகவும் மணல் விவகாரத் துக்கும் என் எழுத்துக்கும் சம்பந்தம் இல்லை என்றும் சொல்லி, அங்கிருந்து திரும்ப அழைத்து வருகிறார்கள்.

"அண்ணாச்சி, இங்கெ எல்லாம் ஒண்ணோட மண்ணா கெடக்கு பாத்துக்கிங்க. அரசு அதிகாரிங்கள்ல ஆரம்பிச்சி ஊருல கொஞ்சம் வாயுள்ளவன் வரைக்கும் எல்லாத்துக்கும் காசு, காசு, காசு... அட, கரண்டு லைனுல எதாச்சும் பிரச்சனைன்னா கூட்டியார்ற லைன்மேனுக்கு கார் சவாரி, பிரியாணி, ஆயிரம் ரூவா ரொக்கம்னா பார்த்துக்குங்க. வாங்குற காசுக்குக் கொஞ்சமாச்சும் கூவணுமில்லா? அதாம் நடக்கி. இப்பிடி வரிச்சிக்கிட்டு வர்றவங்களைப் பார்த்துதான் ஊரே பயந்து கெடக்கு. போலீஸு கீலீஸு எல்லாம் ஒண்ணும் செல்லாது பார்த்துக்குங்க. மக்க பாவம் என்ன செய்யிம்? நமக்கு எதுக்குடா பொல்லாப்புனு நடுங்கிக் கெடக்கு."

ஆக, இப்போது பயணத் திட்டங்கள் வகுப்பது ஊர் மக்களின் பொறுப்பானது. "அண்ணாச்சி, இருட்டத் தொடங்கையில இங்கெருந்து கார்ல புறப்படுவோம். அங்கன போற வழியில ஒரு எடம் கெடக்கு. அங்கன எறங்கி, காரைத் திருப்பிவுட்டுட்டு, பாலத்தை ஒட்டி ரெண்டு மைல் நடந்தோம்னா, கிராமத்தைப் பின்னால போய்ச் சேர்ந்துடலாம். ‘......’ வீட்டுக்குப் போய்ச் சேர்ந்துட்டோம்னா, அங்கன ஊர்ல உள்ள பாதிக்கப்பட்ட மக்கள் இருக்கும். கொஞ்ச நேரம் பேசிக்கிட்டு இருங்க. பொறவு பொறப்பட்டோம்னா கடக்கரையோட நடக்கலாம்."

இது இந்தியாதானா?

கடற்கரையில், புதர்க்காடுகள் நடுவே புகுந்து இருட்டில் பயணம் தொடங்குகிறது. நிலா வெளிச்சம் மட்டுமே வழிகாட்டி. மண்ணில் கால் வைத்தால் பொதக் பொதக் என்று உள்வாங்குகிறது. தூரத்தில், ராட்சத இயந்திரங்கள் மணலை வாரி வாரி எடுத்து, டிரக்குகளை நிரப்புவதும் டிரக்குகள் வரிசையாகச் செல்வதும் தெரிகிறது. அலை சத்தத்தைத் தாண்டி மடேர் மடேர் என இயந்திரங்களின் சத்தம் காதை அறைகிறது. பெரியவர் ஒருவர் சொன்ன வார்த்தைகள் நினைவுக்கு வருகின்றன. "ஒரே பாதையில போவாதீய. குறுக்க மறுக்க நடந்து கடந்து கொழப்பிவிட்டுப் போங்க. கால் தடம் காட்டிக்கொடுத்துடும்..."

கொஞ்ச தூரம் நடந்து கடக்க, எனக்கு சத்தீஸ்கர் பயண ஞாபகம் வந்தது. ‘இந்தியாவின் வண்ணங்கள்' தொடருக்காகச் சென்றிருந்தபோது அங்கே இதே போன்ற சூழலை எதிர்கொண்டிருக்கிறேன். ஒருபுறம் சுரங்கங்கள் என்ற பெயரில் பெருநிறுவனங்கள் சூறையாடிக் கொண்டிருக்கும் பகுதியில், நாம் கால் வைக்கவே முடியாது.

இன்னொருபுறம் மாவோயிஸ்ட்டுகள் பகுதியிலும் வெளியாட்கள் சாமானியமாக நுழைய முடியாது. இங்கெல் லாம் காவல் துறை, நிர்வாகம் எல்லாம் ஒரு பெயருக்குத்தான். வல்லான் வகுத்ததே வாய்க்கால்.

தனி சாம்ராஜ்ஜியம்

நம் சமூகம் எந்த அளவுக்குக் கனிம மணல் விவகாரத் தையும் இந்தப் பகுதிகளில் நிலவும் சூழலையும் தீவிரமாக எடுத்துக்கொண்டிருக்கிறது என்று தெரியவில்லை. உள்ளபடி இது ஒரு தனி சாம்ராஜ்ஜியம். ஒரு தனிமனிதன் உருவாக்கியிருக்கும் சாம்ராஜ்ஜியம். இன்றைக்குத் தென் தமிழகக் கடற்கரை முழுக்க அந்த மனிதரின் பெயரைத்தான் உச்சரிக்கிறது: வைகுண்டராஜன்.

ஒரு பெயரின் சக்தி

தமிழகக் கடற்கரையில் வைகுண்ட ராஜன் என்கிற பெயருக்கும் அவர் பிடியின் கீழ் இருக்கும் பகுதிக்கும் சர்வதேச அளவில் இன்றைக்கு இருக்கும் முக்கியத்துவம் என்ன? அவருடைய ‘விவி மினரல்ஸ்' நிறுவனத்தின் இணைய தளம் சொல் லும் தகவல்கள் இவை:

"உலகில் அதிகமான கனிமப் பொருட்களும் மணலும் இந்தியாவில் கிடைக்கின்றன. உலகமெங்கும் கிடைக்கும் 46 கோடி டன் வள ஆதாரங் களில், இந்தியாவின் பங்கு 27.8 கோடி டன்கள். இவற்றில் உலகத் தரம் கொண்ட கனரக கனிமங்கள் 20 முதல் 30% இருப்பதாகவும் கணக்கிடப் பட்டுள்ளது.

மன்னார் வளைகுடா கொடை

இந்தியாவிலேயே, 15 கி.மீ. நீள கடற்கரைப் பகுதியைக் கொண்டு அமைந்த ஒரே நிறுவனமான வி.வி.மினரல்ஸ், 40 ஆண்டுகள் சுரங்கக் குத்தகையின் கீழ் செயல்படுகிறது. மன்னார் வளைகுடாவின் நிலவியல் பண்புகள், தொடர்ந்து வீசும் அலை கள் மற்றும் கடற்கரை அமைப்பு ஆகியவற்றின் காரணமாக கார்னெட், இல்மனைட், ருடைல் மற்றும் ஜிர்கான் போன்ற கனிமப் பொருட்கள் அதிக அளவில் கிடைக்கும் பகுதியாக இது உள்ளது.

குறி: உலகின் முதலிடம்

இந்தியாவின் மிகப் பெரிய சுரங்க நிறுவனமான வி.வி. மினரல்ஸ் நிறுவனம், கார்னைட் மற்றும் இல்மனைட் கனிமங்களின் உற்பத்தி, ஏற்றுமதியிலும் முன்னணி நிறுவனம். உலக அளவில், இரண்டாம் இடத்தில் உள்ள எங்கள் நிறுவனம் மேலும் உயர்ந்த இடத்துக்குச் செல்வதில் முனைப்புடன் உள்ளது. இந்தியாவில் இல்மனைட் ஏற்றுமதி செய்யும் முதல் தனியார் நிறுவனம் வி.வி.எம். மேலும், நாட்டிலேயே, இல்மனைட் சுரங்கப் பணிகள் மற்றும் ஏற்றுமதிக்கான அங்கீகரிக்கப்பட்ட உரிமம் பெற்ற முதல் தனியார் நிறுவனமும் இதுதான்.

ராட்சத பலம்

வி.வி.எம். நிறுவனத்தில், வெட்டியெடுக்கப்பட்ட தாதுக் களைத் தரப்படுத்த, சுரங்கப் பகுதிகளுக்கு அருகிலேயே ஐந்து ஈர ஆலைகளும் ஆறு உலர் ஆலைகளும் அமைக் கப்பட்டுள்ளன. அமெரிக்காவின் எரீஸ், ரோடெக்ஸ் ஸ்க்ரீன்ஸ், ஆஸ்திரேலியாவின் லினெடெக்ஸ், கோரோனா ஸ்டாட், ஜெர்மனியின் மினாக்ஸ் நிறுவனங்களிலிருந்து தருவிக்கப்பட்ட இயந்திரங்கள் இங்கு பொருத்தப்பட்டுள்ளன. இந்த இயந்திரச் சாதனங்கள், மாதம் ஒன்றுக்கு 14,000 மெட்ரிக் டன் கார்னெட், 20,000 மெட்ரிக் டன் இல்மனைட், 1000 மெட்ரிக் டன் ஜிக்ரான், 500 மெட்ரிக் டன் ருடைல் ஆகியவற்றை உற்பத்தி செய்யும் திறன் கொண்டவை. ஒவ்வொரு வேலைக்கும் ஏற்ப வெவ்வேறு வகையான வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. ட்ரக்குகள், டிப்பர்கள், புல்டோசர்கள் மற்றும் ட்ரெய்லர் வண்டிகள் யாவும் சொந்தமாக உள்ளன. இவை, கச்சாப் பொருட்களையும், உற்பத்திப் பொருட்களையும் குறித்த நேரத்தில் கொண்டுசெல்கின்றன.

தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து 5 கி.மீ. தொலைவுக் குள், கனிமப் பொருட்களை மிகப் பெரிய அளவில் சேமித்துவைக்கும் மூன்று பெரிய சேமிப்புக் கிடங்குகளையும் வி.வி.எம். நிறுவனம் கொண்டுள்ளது. சுமார் 3,00,000 முதல் 4,50,000 மெட்ரிக் டன் வரை கனரக கனிமப் பொருட்களை இந்தக் கிடங்குகளில் வைத்திருக்க முடியும்.

இலக்குகள்

ஆண்டுக்கு 1,50,000 மெட்ரிக் டன் கார்னெட் கற்கள் மற்றும் 2,25,000 மெட்ரிக் டன் இல்மினைட் ஆகியவற்றை, வி.வி.எம். நிறுவனம் உற்பத்திசெய்கிறது.

தூத்துக்குடி துறைமுகத்தில் முதன்முதலாக ஒரேநாளில் 4,700 மெட்ரிக் டன் இல்மினைட் கனிமத்தை ஏற்றுமதி செய்த நிறுவனம் வி.வி.எம். முந்தைய சாதனையை விட 60% அதிகம் இது. எதிர்காலத்தில், இதுபோன்ற சாதனைகளை இன்னும் அதிவேகத்தில் வி.வி.எம். நிறுவனம் இரட்டிப்பாக்கும்!"

இணையதளத்திலுள்ள இந்த ஒவ்வொரு வார்த்தைகளைப் படிக்கும்போதும் இருளில் கடலும், ராட்சச இயந்திரங்களின் ‘மடார் மடார்' சத்தமும் தோன்றித் தோன்றி மறைகின்றன.

(அலைகள் தழுவும்…)

 

http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%8D/article6334084.ece?homepage=true&theme=true

 

 

  • தொடங்கியவர்

எதை எ(கொ)டுத்துச் செல்கிறோம்?

 

pic2_2070812g.jpg

 

carnet_2070811g.jpg

 

ஒவ்வொரு கிராமமாகக் கடக்கிறேன். இரவுகள் கொடூர இரவுகளாக நகர்கின்றன. எங்கும் குதறிக் கிடக்கின்றன கடலும் கரையும். மக்களோ சிதறிக்கிடக்கிறார்கள்.

பிரிவினை வெடிகுண்டு

‘‘என்னிக்கு இந்தத் தொழிலு வந்துச்சோ, அன்னிக்கே ஊரு நாலாயிடுச்சு. கம்பு, கத்தி காலமெல்லாம் போயி வெடிகுண்டு காலம் வந்துடுச்சு. சாதியை வெச்சு வாயடைக்கணுமா, சாதியை வெச்சு அட. மதத்தை வெச்சு வாயடைக்கணுமா, மதத்தை வெச்சு அட. ரெண்டுக்கும் மூடாத வாயைக் காசை வெச்சு அட. அதுக்கும் அடங்காதவனை மூட்டிவிட்டு அட. இதாம் கணக்கு. எத்தினி பேரை ஊரைவிட்டு ஒதுக்கிவெச்சிருக்காங்க தெரியுமா?’’

பேசிக்கொண்டே வரும் ‘.......' அந்த இருட்டிலும் இடையே குறுக்கிடும் குழாய்களைத் துல்லியமாகச் சுட்டிக்காட்டுகிறார். ‘‘பார்த்து நடங்க. நெடுவ, நீங்க கடக்கரையைத் தோண்டிப் பாத்தீங்கன்னா கட வாயில பல எடங்கள்ல இப்பிடிக் குழாய்க தென்படும். மண்ணை அள்ளுறதோட இல்ல, கழிவையும் இப்பிடி நேரே கடலுக்குள்ள அனுப்பியூடுறங்க. எல்லாம் ரசாயனக் கழிவையும் கதிரியக்கத்தையும் சொமந்துக்கிட்டு வர்ற தண்ணீ. நாம பார்த்துப்புட்டு ஊரைக் கூட்டியாந்து ‘ஏ... யய்யா இது நியாயமா?'னு கேட்க போனா, என்னாவும் தெரியுமா? இந்த எடத்துல இந்தக் குழாய் தென்படாது. அது மேல ஒரு வண்டி மண்ணைக் கொட்டி மறைச்சுட்டு, இன்னொரு எடத்துல குழாயைப் பதிச்சுடுறது. பெறவு, கேள்வி கேட்க போறவனை பைத்தியக்காரனாக்கி கேள்வி கேக்குறது. நம்ம வாயை மூடலாம். கடலுக்குள்ள போற தண்ணீ வாய மூட முடுயுமா? அது திரும்ப நம்ம வாய்க்கே வந்து ஒலை வைக்குது.

கர எதுக்கு இருக்கு? ஒவ்வொண்ணுக்கும் காரண காரியம் இருக்கு. கரைதான் ஊருக்கும் கடலுக்கும் எடையில இருக்குற தடுப்பணை. அமாவாசையோ, பௌர்ணமையோ, அஷ்டமி, நவமியோ கட அலை மேல ஏறி எறங்கி வரும். ஒரு எடத்துல ஏறுனா, இன்னொரு எடத்துல எறங்கும். அத அனுசரிக்கத்தாம் கர.

இப்பம் கரைய நோண்டிப்புட்டோம். கடல்லேயும் கைய வெச்சாச்சு. கடலு சும்மா வுடுமா? இங்கன நீங்க கைய வெச்சா, கொஞ்சம் தள்ளி அது கைய வைக்கும். வெச்சிடுச்சு. பல ஊர்கள்ல கர உடைஞ்சி கடல் ஊருக்குள்ள வந்தாச்சி. கட அரிக்க அரிக்க ஓடுறம். எவ்வளவுக்கு ஓட?’’

பெரியவர் அயர்ந்து நிற்கிறார்.

கொள்ளும் கடல்

கனிம மணல் அகழ்வால் விளையும் பெரும் துயரங்களில் கடல் அரிப்பு முக்கியமானது. தமிழகத்தின் கடலோரக் கிராமங்கள் பல கடலின் வாய் நுனியில், அபாயத்தின் நுனியில் நிற்கின்றன. கரையில் வள்ளங்களை நிறுத்த முடியாது என்பதோடு, பல இடங்களில் குடியிருப்புகள் அடியோடு அரித்த நிலையில் நிற்கின்றன. கடல் அரிப்புக்குக் காரணமான கடல் கொள்ளையைத் தடுக்க முடியாதவர்கள் அலைகளின் சீற்றத்தை எதிர்கொள்ள ஊருக்கு ஊர் தூண்டில் வளைவு கேட்டு அரசுக்கு மனு அனுப்பிக்கொண்டிருக்கின்றனர்.

இந்தப் பிரச்சினை எவ்வளவு தீவிரமாகிக்கொண்டிருக்கிறது என்பதற்குக் கடியப்பட்டி ஓர் உதாரணம். கடியப்பட்டியில், எந்த வீட்டில் எந்த விசேஷம் என்றாலும், ஊர்க்காரர்கள் தூண்டில் வளைவுக்கு நன்கொடை அளிக்க வேண்டும். ‘‘தூண்டி வளைவு செலவுல அரசாங்கத்தோட செலவை நாங்களும்கூடப் பகிர்ந்துக்க தயாரா இருக்கோம்’’ என்று நிதி சேர்த்துக்கொண்டிருக்கின்றனர். வீடு, பிழைப்பு, உயிர் என அனைத்து உயிராதாரங்களையும் நோக்கிப் பாயும் கடலைப் பார்த்து நடுங்கிக்கொண்டிருக்கிறார்கள்.

உணரப்படாத விபரீதம்

‘‘பெரிய நாசத்தை உண்டாக்கக் கூடிய விபரீதம் கடலோட விளையாடுறது. ஆனா, கடக்கரைக்கு வெளியிலேர்ந்து பார்க்குறவங்களுக்கு இந்தப் பிரச்சினையோட வீரியம் புரியலை. கடலைச் சூறையாடுறதும் கடல்ல கதிரியக்கக் கழிவுகளைக் கொண்டுசேர்க்குறதும் பெரிய சூழலியல் ஆபத்து.

உலகத்துல ஏதோ ஒரு மூலையில கடல்ல தவறிடுற வெள்ளைக்காரங்க பிணம் இங்கே சின்னவிளையில வந்து ஒதுங்கும். நீவாடு அப்பிடி. ராமேஸ்வரத்துல பெய்யுற மழைக்கும் அந்தமான் தீவுல இருக்குற காட்டுக்கும் சம்பந்தம் உண்டு. காத்துவாக்கு அப்பிடி. இங்கே ஆபத்து கண்ணுக்கு நேரே தெரியுது. தெரியாத ஆபத்தை நகரத்து மக்கள் அனுபவிக்கிறாங்க. அவ்வளவுதான்.

ஏதோ, இந்த மாதிரி திட்டங்களால அரசாங்கத்துக்குப் பெரிய வருமானம்னு வேற மக்கள்கிட்ட ஒரு மாயையை உருவாக்கிடறாங்க. உண்மை என்ன தெரியுமா? சர்வதேச அளவுல, ஒரு டன் கனிம மணலோட மதிப்பு ஒரு லட்ச ரூபா. இவங்க ஒரு ஏக்கருக்கு அரசாங்கத்துக்குக் கொடுக்குற ஒரு வருஷ குத்தகைத்தொகை அதிகபட்சமே முந்நூத்தி எண்பத்தி ரெண்டு ரூவாதான். வளர்ச்சித் திட்டம்னு சொல்லப்படுற பல திட்டங்களோட கதை இதுதான். இதுக்கு எத்தனை பேர் உயிரைப் பணயம் வெப்பீங்க?’’ என்கிறார் முகிலன். தமிழகத்தில் கனிம மணல் கொள்ளையின் கோர முகத்தை விரிவாகச் சொல்லும் ‘தாது மணல் கொள்ளை' நூலின் ஆசிரியர்.

கொள்கையர்களை என்ன செய்வது?

கனிம மணல் கொள்ளையைப் பெரிய அளவில் அம்பலப்படுத்தியவர்களில் மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் அமைப்பாளரும் உயர் நீதிமன்ற வழக்குரைஞருமான சே. வாஞ்சிநாதனும் முக்கியமானவர். இவர் தலைமையில் சென்ற வழக்கறிஞர்கள் குழு சுமார் 10 நாட்கள் நேரடி ஆய்வில் வெளியிட்ட ‘தாது மணல் கொள்ளை - உண்மை அறியும் குழு அறிக்கை' சிறு நூலும் பல உண்மைகளை வெளியே கொண்டுவந்தது.

‘‘இந்தப் படத்துல இருக்குறது யார் தெரியுதா?’’

கணினியில், வாஞ்சிநாதன் சுட்டிக்காட்டும் படத்தில், வி.வி. மினரல்ஸ் அதிபர் வைகுண்டராஜனுக்கு விருது அளிக்கிறார் அன்றைய மத்திய அமைச்சர் ப.சிதம்பரம். அடுத்தடுத்த படங்களில் பிரணாப் முகர்ஜி, கமல்நாத் ஆகியோர். எல்லாம் வி.வி.மினரல் நிறுவனத்துக்கு விருதுகளை அளிக்கும் படங்கள்.

‘‘ஆஷீஷ் குமாரோட அறிக்கையை வெச்சிக்கிட்டு, எல்லாரும் அரசாங்கத்துக்கு ஏற்படுத்தின இழப்பை மட்டும் வெச்சு, இதை ஒரு முறைகேடுன்னும் வைகுண்டராஜன் மேல மட்டும்தான் தப்பு இருக்குன்னும் பேசுறாங்க. அவங்க கணக்கை சரியா காட்டிட்டதாவே வெச்சுக்குவோம். இது சரியாயிடுமா?

அடிப்படையில, இது ஒரு ஆள் பிரச்சினை மட்டும் இல்ல. நம்ம அரசாங்கம் வகுக்குற கொள்கைகளுக்கும் ஆளுற வர்க்கத்துக்கும் இதுல பங்கு இருக்கு. வைகுண்டராஜன் வளர்ந்த காலகட்டம் ஒரு வகையில, இந்திய அரசியல் பொருளாதார வரலாற்றுலேயும் முக்கியமானது. இந்தியா புதிய பொருளாதாரக் கொள்கைக்கு மாறின காலகட்டம் அது. 1990 வரைக்கும் இந்திய அரசோட தொழில் கொள்கையில, கனிம வளங்களைக் கையாள்றதுல தனியாருக்கு நிறையக் கட்டுப்பாடு இருந்துச்சு. புதிய பொருளாதாரக் கொள்கைக்கு மாறினப்போ, அதையெல்லாம் அடிச்சி நொறுக்கி, தனியாரையும் முழுசா கனிமத் தொழில்ல உள்ளே விட்டாங்க. சரியான வார்த்தைகள்ல சொல்லணும்னா 1990-க்கு முன்னாடி சட்ட விரோதமா இருந்த நெறைய விஷயங்கள் 1991-ல் சட்டபூர்வமா ஆயிடுச்சு. விளைவுகளை இப்போ அனுபவிக்கிறோம்.

நெனைக்கவே கஷ்டமாயிருக்கு. பல்லாயிரம் வருஷமா அவங்க பாதுகாத்துப் புழங்குன கடக்கரையில கால் வைக்க அனுமதி வாங்கணும்கிற சூழலை. பாரம்பரிய உரிமைகள்னெல்லாம் வாய் கிழியப் பேசுறோமே, அதுக்கெல்லாம் என்ன அர்த்தம் இந்த நாட்டுல இருக்கு? எந்தக் கடக்கரைக் கிராமத்துல நொழைஞ்சாலும், புத்துநோய், சிறுநீரகக் கோளாறு, தைராய்டுன்னு தெருக்குத் தெரு சீக்கு. நேத்துக்கூட ஒரு சின்ன புள்ள, எலும்புப் புத்துநோய், வலி தாங்க முடியாம துடிக்குது. என்ன மாரி நாட்டை நாம அடுத்தத் தலைமுறைக்கு விட்டுட்டுப் போவப்போறோம்? பணம் பணம்னு ஓடுறோமே, அப்படி எதைக் கொண்டுக்கிட்டு போவப்போறோம்?

ஒட்டுமொத்தமா இந்தத் தொழில்ல தனியார் ஈடுபடுறதையே தடை விதிக்கணும். மக்களையும் இயற்கையையும் பாதிக்காம எல்லாத் தொழில்களையும் அரசாங்கம் கையில எடுக்கணும். அதுக்கான முதல் படியா இந்த விவகாரம் மாறணும்…’’

வாஞ்சிநாதன் பேசிக்கொண்டிருக்கிறார். நான் விருது படத்தில் சிரிக்கும் சிதம்பரத்தைப் பார்த்துக்கொண்டிருக்கிறேன். செல்பேசி அழைக்கிறது. ‘‘யண்ணா… கடலூருக்கு எப்போண்ணா வருவீங்க?’’

‘‘நாளைக்கு வர்றேன்ப்பா!’’

(அலைகள் தழுவும்...)

- சமஸ்,

 

http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%8E%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D/article6337248.ece?homepage=true&theme=true

  • தொடங்கியவர்

நஞ்சூர் ஆகிடுமோ கடலூர்?

 

3_2078418g.jpg

ரசாயனக்கழிவு.

 

2_2078416g.jpg

ஆறும், ஆலைகளும்...

 

கடல் ஊர். இந்தப் பெயரே பல தருணங்களில் எனக்குக் கிளர்ச்சியைத் தந்திருக்கிறது. எத்தனையோ ஊர்களில் கடல் இருக்கிறது என்றாலும், பெயருக்கேற்றாற்போல, அற்புதமான கடல் ஊர் கடலூர். நீலக் கடல். கண்ணாடிபோல காலடியைத் தழுவும் தெள்ளத்தெளிந்த அலைகள். நீளமான கடற்கரை. கடற்கரையிலிருந்து கொஞ்சம் வெளியே வந்தால், நீளவாக்கில் குறுக்கே செல்லும், படகுகள் ஓடும் பரவனாறு. இன்னும் கொஞ்ச தூரம் கடந்தால், கெடிலம் ஆறு. கேரளத்தை நினைவூட்டக் கூடியவை கடலூரின் கடற்கரைக்கும் பரவனாறுக்கும் இடைப்பட்ட பகுதிகள். சில நிமிஷங்கள் உட்கார்ந்து லயித்தால், அப்படியே காலத்தோடு உறைந்துபோகலாம். அத்தனை ரம்மியம்!

ஒரு ஓடாவியின் கனவு

பரவனாறு தோணித் துறையில் வரிசையாகக் கட்டிக் கிடக்கின்றன சின்னதும் பெரியதுமான தோணிகள். கருப்பமுத்து அம்மன், ஆவணி அம்மன், ஒண்டிவீரன், சண்டக் கோழி... பெரும்பாலும் குலசாமி பெயர்கள் அல்லது சினிமா பெயர்கள். கால்கள் சங்கிலியில் பிணைக்கப்பட்ட கோயில் யானை அசைவதுபோல, தண்ணீரில் கயிற்றுக்குக் கட்டுப்பட்டு அசைந்துகொண்டிருக்கின்றன. சின்னப் பிள்ளைகளின் குறும்பைச் செல்லமாகப் பார்ப்பதுபோல, அவற்றைப் பார்த்தபடியே கரையில் கட்டப்படும் ஒரு பெரும் தோணியைப் பக்கத்தில் உட்கார்ந்து கவனித்துக்கொண்டிருக்கிறார் ஓடாவி ஐயாதுரை. தமிழகத்தின் மூத்த ஓடாவிகளில் ஒருவர். 86 வயது. அனுபவத்துக்குத்தான் வயது; உடலுக்கு இல்லை என்கிறது அவருடைய வேலை.

“ஒரு தோணி கட்டுறதுங்குறது வூடு கட்டுற மாரிதான். என்னா, வூடு கட்டயில நீங்க தப்பு எதனா செஞ்சா, பின்னால ஒரு நா காட்டிக்கொடுக்கும். தோணி கட்டயில தப்பு எதனா செஞ்சா தண்ணீல எறங்குன அன்னிக்கே காட்டிக்கொடுத்துரும். தண்ணீல போவயில எப்படி ஒரு தோணி போவும், காத்தை எப்படி வரிச்சுக்கும், புயலுக்கும் அலைக்கும் எப்படித் தாங்கும்... இப்படியெல்லாம் நெனப்புலேயே ஓட்டிப் பாத்து, ஓட்டிப் பாத்து தோணியக் கட்டணும். அதாம் ஒரு ஓடாவிக்குச் சவாலு” என்கிறார்.

கப்பல் செல்லமுடியாத அளவுக்கு ஆழம் குறைந்த தீவுகளில் சகலப் போக்குவரத்துக்கும் பயன்படுத்தும் தோணியை ஐயாதுரை கட்டிக்கொண்டிருக்கிறார். “மொத்தம் நூத்தியிருவதடி நீளம், இருவத்திநாலரையடி அகலம், பதினேழரையடி அடி ஒயரத் தோணி இது. நடுமரம் ஏறா மட்டும் கருமருது. மிச்சமெல்லாம் இலுப்பையும் மலேசிய வேங்கையும். ரெண்டு வருஷமா வேல நடக்குது. இன்னும் ஒரு மாசத்துல எறங்கிடும். ரெண்டரை கோடி ரூவா ஆகியிருக்கு.” ஒரு கனவைப் பார்ப்பதுபோல, பூரிப்போடு பார்க்கும் ஐயாதுரை 17.5 அடி உயரத் தோணியின் உச்சிக்கு, ஏணியில் ஒரு நிமிடத்தில் அநாயாசமாக ஏறி இறங்குகிறார்.

ஊரைப் பற்றிப் பேசும்போது பெருமிதமும் துக்கமும் ஒருசேர அவரைத் தாக்குகின்றன. “எம்மாம் மாரி ஊர் தெரியூமா இது, இன்னா அழகு என் ஊரு? எல்லா அழகையும் தொழிச்சாலைங்களைக் கொண்டாந்து நாசமாக்கிட்டாங்க...” - கண்கள் இடுங்கிப் போகின்றன. பேச முடியாமல் தலை குனிந்துகொள்கிறார்.

போர்களைவிடவும் கொடியவை

தொன்மையான ஊர் கடலூர். கெடிலமாறும் பரவனாறும் கடலும் கூடும் இடத்தில் இருந்ததால், கூடலூர் என்று அழைக்கப்பட்டிருக்கலாம் என்று சொல்கிறார்கள் உள்ளூர்க்காரர்கள். பல்லவர்கள், சோழர்கள், பாண்டியர்கள், நாயக்கர்கள், மராட்டியர்கள், பிரெஞ்சுக்காரர்கள், பிரிட்டிஷ்காரர்கள் என்று பலருடைய ஆட்சியின் கீழும் இருந்த ஊர். எல்லோருக்குமே கடலூரின் மீது ஒரு கண் இருந்ததன் காரணத்தை ஊரின் வனப்பையும் புவியியல் அமைவிடத்தையும் பார்க்கும்போது ஊகிக்க முடிகிறது. எவ்வளவோ தாக்குதல்களை எதிர்கொண்டிருக்கிறது கடலூர். இயற்கைச் சீற்றங்களையும் அடிக்கடி எதிர்கொள்ளும் ஊர். ஆனால், இயற்கைச் சீற்றங்களும் போர்களும் உருவாக்காத பாதிப்பை கடலூரில் நவீன ஆலைகள் உருவாக்கிவிட்டதாகச் சொல்கிறார்கள் ஊர் மக்கள்.

“காலங்காலமா எங்களுக்குப் பெருமழையும் புயலும் சகஜம். முன்னோருங்க நெறைய போர், சண்டைங்களைப் பார்த்திருக்காங்க. ஆனா, அதெல்லாம் உண்டாக்க முடியாத அழிவை வெறும் 30 வருஷத்துல கொண்டாந்துடுச்சுங்க இந்தத் தொழிற்சாலைங்க. எங்க ஊர் ‘சிப்காட்’ தொழிப்பேட்ட ஒலக அளவுல பேசப்படுற நச்சு மையங்கள்ல ஒண்ணு. நிலத்தடித் தண்ணீ சுத்தமா நாசமாப்போய்டுச்சு. காத்து மூக்குல நெடி ஏறும். ஊருல இல்லாத சீக்கு இல்ல. எம்மா நாளு சும்மாவே பார்த்துக்கிட்டு இருக்கிறது? பத்து வருஷத்துக்கு முன்னாடி, சுத்துச்சூழல்ல அக்கறை உள்ளவங்க களத்துல எறங்கினாங்க. தொடர் போராட்டங்களோட விளைவா, இங்கெ நெறைய ஆய்வுங்களை நடத்தினாங்க. அப்புறம்தான் நம்ப எவ்வளோ பெரிய நச்சு மையத்துல வாழ்ந்துகினுருக்கோம்கிறது ஊர்க்காரங்களுக்குப் புரியவந்துச்சு” என்கிறார்கள்.

தமிழகத்தின் நச்சு மையம்

“இங்கருக்குற 18 பெரிய ஆலைங்களுமே சிவப்புப் பட்டியல்ல வர்ற ஆபத்தான ரசாயனங்களைக் கையாள்ற ஆலைங்க. இவங்க கையாள்ற பல ரசாயனங்க அபாயகரமானதுங்க. கண்ண, தோல, சுவாச உறுப்புங்கள, நரம்பு மண்டலத்த, சிறுநீரகத்த பாதிக்கக் கூடியதுங்க. நாங்க எம்மாம் போராடியும்கூட இங்க உள்ள அதிகாரிங்க அசர்ல. ஆறு வர்சத்துக்கு முன்னாடி நீரி அமைப்பு (NEERI-தேசியச் சுற்றுச்சூழல் பொறியியல் ஆய்வுக் கழகம்) கடலூர்ல ஆய்வு நடத்துச்சு. ‘கடலூர் ரசாயன ஆலைகள்லேர்ந்து வெளியாவுற நச்சுப் பொகயால இந்தச் சுத்துவட்டாரத்துல இருக்குறவங்களுக்குப் புத்துநோய் வர்றதுக்கான வாய்ப்பு மத்த எடத்தைக் காட்டிலும் ரெண்டாயிரம் மடங்கு ஜாஸ்தியா இருக்கு’ன்னு அந்த ஆய்வறிக்கை சொல்லிச்சு. தேசிய அளவுல இது விவகாரமானதும்தான் கொஞ்சமாச்சும் நடவடிக்கைன்னு ஏதோ எடுக்க ஆரம்பிச்சாங்க” என்கிறார் சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர் அருள்செல்வம்.

ஆக்கிரமிப்புகளும் அத்துமீறல்களும்

ஊரின் நிலைமை உருவாக்கும் கவலை பலரையும் போராட்டக் களத்தில் இறக்கியிருக்கிறது. அவர்களில் மருதவாணனும் ஒருவர். பொதுத்துறை வங்கி ஒன்றில் பணியாற்றி ஓய்வுபெற்றவர். “கடலூர்ல எங்க போனீங்கன்னாலும் அரசியல்வாதிங்களோட ஆக்கிரமிப்புங்களையும் ஆலைகளோட அத்துமீறல்களையும் நீங்க பாக்கலாம். ஆலைங்க ஊரை நாசமாக்கிட்டுங்கிறதுக்குப் பின்னாடி ஒரு வரலாறு இருக்கு. தமிழ்நாட்டுல மாசுக் கட்டுப்பாட்டு வாரியம்கிற அமைப்பை ஆரம்பிச்சதே 1982-லதான். கடலூர் சிப்காட் 1984-ல அமைக்கப்பட்டது. அந்தக் காலகட்டதுல இன்னிக்கு இருக்குற சுற்றுச்சூழல் விழிப்புணர்வெல்லாம் கிடையாது; அதனால, இந்த ஆலைங்களையெல்லாம் அனுமதிச்சுட்டாங்கங்கிறதை ஒப்புக்கலாம். ஆனா, தண்ணீ நஞ்சாயி, காத்து நஞ்சாயி எப்போ வேணும்னாலும் எது வேணும்னாலும் நடக்கலாம்கிற சூழல் உருவாயிருக்குற இந்த நாள்லேயும் நாம இதை அனுமதிக்கலாமா?

கொடுமை என்னான்னா, உள்ள ஆலைங்களை எதிர்த்து நாங்க போராடிக்கிட்டுருக்குற சூழல்ல, திருப்பூரை அழிச்ச சாயப்பட்டறைத் தொழிலுக்கும் இங்கே அனுமதிச்சு, புது ஆலைங்களுக்கு அனுமதி கொடுக்குது அரசாங்கம். மத்திய அரசாங்கம் தொடர்ந்து தனியார் துறைமுகங்களுக்கும் நிலக்கரி ஆலைங்களுக்கும் அனுமதி கொடுக்குது. நாங்கல்லாம் வாழல; வாழறதுக்காகச் செத்துக்கினுருக்கோம்” என்கிறார்.

ரசாயனக் கடல்

கடலூர் தொழிற்சாலைகளையொட்டி நடந்தால் மனம் பதறுகிறது. பல ஆலைகளின் ரசாயனக் கழிவுகள் குழாய்கள் வழியே கடலுக்குள் கொண்டு விடப்பட்டிருக்கின்றன. கடல் நடுவே அவ்வப்போது கொப்பளித்து நிறம் மாறி அடங்குகிறது தண்ணீர். காலையிலிருந்து மெல்ல நெடியேறிக்கொண்டிருக்கும் காற்று சாயங்காலம் ஆனதும் கடுமையான நாற்றம் கொண்டதாக மாறுகிறது. கண்கள் எரிகின்றன. கண்ணெதிரே புகை ஒரு படலமாக உருவெடுப்பதைப் பார்க்க முடிகிறது. கடற்கரையிலிருந்து தூரத்தில் உருப்பெறும் புதிய துறைமுகங்களும் ஆலைகளும் தெரிகின்றன. கடலோடிகள் கடலை வயிற்றெரிச்சலோடு பார்த்துக்கொண்டிருக்கின்றனர். “தொயில் வுட்டுபோச்சு. காலங்காலமாக் கடலை நம்பியிருந்த குடும்பங்க இன்னைக்கு வேற எதாச்சும் கூலி வேலைக்குப் போயிடலாமான்னு யோசிச்சுக்கினு இருக்குங்க. போராடுறோம். ஒண்ணும் வேலைக்காவல” என்கிறார் சுப்புராயன்.

தலைமுறை தலைமுறையாகக் கடல் தொழிலில் இருந்த புகழேந்தி, தொழில் அற்றுப்போனதால், பிழைப்புக்குக் கறிக்கோழிக் கடைக்குச் செல்கிறார். “சின்ன வயசுல ஒரு வாட்டி கடலுக்குப் போனா, எர்நூரூபாக்கி அள்ளிகினு வருவம். நான் சொல்லுறது அம்பது வர்சத்துக்கு முன்னால. பத்துப் பதினைஞ்சு வர்சத்துக்கு முன்னாடிகூட கரையில ஓடியார்ற வண்ணாத்தி நண்டைப் புடிச்சாலே அன்னிக்குப் பொயப்ப ஓட்டிடலாம். இன்னிக்கு இந்த வயசில நாளெல்லாம் ஒயச்சு சலிச்சாலும் அம்பது ரூவா கிடைக்கலை. என்னா பண்றது? தலையெயித்து. கறிக்கோயி வெட்டுறன். தொறமுகம், நெலக்கரி ஆலையின்னு புச்சு புச்சா கடக்கரையை ஆக்கிரமிக்க ஆக்கிரமிக்க கடலு அரிக்குது. போயிப் பாருங்க, எத்தன கட்டடம் அரிச்சு இடிஞ்சு வுயிந்து கெடக்குன்னு. மீனு வளம் சுத்தமா காலி. எங்க கஸ்டம் மட்டும் இல்லப்பா இது. எல்லாரு கஸ்டமும்தான். அன்னிக்குப் பத்து ரூவாக்கி ஒரு குடும்பம் மீனு துன்னலாம். இன்னிக்கு நூறு ரூவாக்கி வாங்கி ஒருத்தம் முய்சா மீனு துன்ன முடியாது. திடீர்னு ஒரு நா மீனுங்க கூட்டம் கூட்டமா கடலுல செத்து மொதக்கும். திடீர்னு ஒரு நா சீக்குபுடிச்சி வாய்க்குள்ள கட்டியோட, வவுறு தொங்கிப்போயி வலையில கெடக்கும். கடலால மீனுக்கு மட்டும்தான் பாதிப்பா? மன்சனுக்கு இல்லீயா? யோசிக்கணும். கடலூரு நச்சுக்காத்தும் ரசாயனம் கலந்த கடத்தண்ணீயும் இங்கேக்குள்ளேயேதான் நின்னுக்குமா? உங்கக்கிட்ட வராதா? யோசிக்கணும். எங்க காலம் பூட்ச்சு; நீங்கலாம்தான் இன்னா பண்ணப்போறீங்கன்னு தெர்லபா”

புகழேந்தியின் கேள்விகள் துரத்துகின்றன.

 

http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%A8%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%87%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D/article6352133.ece?homepage=true&theme=true


உப்பிட்டவரை எள்ளளவேனும் நினைக்கிறோமா?

 

tutucorin_2080024h.jpg

 

தூத்துக்குடியில் கேட்ட முதல் குரலே அசரடித்தது. “என்னது... ஒண்ணுக்கிருக்க அஞ்சு ரூவாயா?”

இடம்: தூத்துக்குடி பழைய பஸ் நிலையக் கட்டணக் கழிப்பறை. காசு வாங்கிக்கொண்டிருந்தவர் பதில் ஏதும் சொல்லவில்லை. மேஜையில் கிடந்த ஐந்து ரூபாய் நாணயம் ஒன்றை எடுத்து ‘டொக்’ ‘டொக்’என்று தட்டினார். பின், தலையை நிமிர்த்தி, கேள்வி கேட்ட இளைஞருக்குப் பின் நின்றுகொண்டிருந்த என்னை ஒரு பார்வை பார்த்தார். ‘இஷ்டம்னா இரு; இல்லாட்டி போய்க்கிட்டே இரு’ என்பது போல இருந்தது அந்தச் சைகை. இளைஞர் காசைக் கொடுக்க, அடுத்து நான், பின்னால் வந்த பெரியவர் என மூவரும் காசு கொடுத்து உள்ளே நுழைகிறோம்.

“தம்பி, ஊருக்குப் புதுசோ... இங்கெ இதெல்லாம் ரொம்ப சாதாரணம். இல்லாட்டி எங்கெங்கேயோ தொரத்தி அடிவாங்கினவம்லாம் இங்கெ வந்து ஆலை வெச்சு ஊர நாசமாக்க முடியுமா? காசுதாம்பி பேசுது...”

பெரியவர் முனகிக்கொண்டே கடக்கிறார்.

நகர் இங்கே... முத்து எங்கே?

தூத்துக்குடிக்கும் முத்துக்கும் உள்ள தொடர்பைப் பற்றிப் பேச ஆரம்பித்தால், குறைந்தது 1,500 வருஷங்கள் பின்னோக்கிப் போகலாம். பாண்டியர்கள், சோழர்கள், சுல்தான்கள், நாயக்கர்கள், போர்ச்சுகீசியர்கள், டச்சுக் காரர்கள், பிரிட்டிஷ்காரர்கள்... எல்லாக் காலங்களிலும் தூத்துக்குடியின் அடையாளம் முத்துக் குளித்தலும் கடல் வாணிபமும். இன்றைக்குக் கடல் வாணிபம் நடக்கிறது. முத்துக் குளிக்கும் தொழில்?

“அது செத்துப் பல காலம் ஆகுதுங்க. பத்துப் பன்னெண்டு வயசுல கால்ல பத்து கிலோ குளிகல்லைக் கட்டிவிட்டு, கடல்ல தள்ளிப் பழக்குவாங்க. கடலுக்குள்ள எறங்குன வேகத்துல குளிகல்லைக் கழட்டி வுடணும். அதாம் மொதப் பயிற்சி. பொறவு சுத்தி கடலுக்குள்ள சுறா, திருக்கை, பாம்புக திரியுதான்னு கவனிக்கணும். பொறவு முடிஞ்ச மட்டும் மூச்சடக்கிப் பழகணும். பொறவு தரயில துழாவி, கவனமா அரிக்கணும். பொறவு மூச்சு தட்டுற நேரத்துக்கு முன்னால, தண்ணிக்கு மேல வரணும். மூச்சுத் தட்டுற நேரத்துல வைடூரியமே கிட்ட கெடந்தாலும், யோசிக்காம ஏறிரணும். இப்படியெல்லாம் தயாரானாதான் குளியனாவலாம்.

ஒருத்தம் குளியனாயி கொட்டான் (சேகரிக்கும் பெட்டி) கட்டிட்டாம்னா, வேற தொழில்ல நாட்டம் போவாது பாத்துக் கிடுங்க. எங்க ஐயா காலத்துலேயே தூத்துக்குடில முத்துக் குளிக்கிற தொழில் செத்துப்போச்சு. பொறவு சங்கு குளிக்க ஆரமிச்சோம். எழுத்தாணிச் சங்கு, ராவணன் விழிச்சங்கு, ஐவரளிச் சங்கு, குதிரைமுள்ளிச் சங்கு, யானைமுள்ளிச் சங்கு, வலம்புரிச் சங்குனு விதவிதமா உயிர்ச் சங்கு கெடைச்சுது ஒரு காலம். இப்பம் அதுக்கு வழி இல்ல. செத்த சங்க அரிச்சுப் பொழைக்கிறோம். இதும் எத்தன காலமினு மேல இருக்கவனுக்குதான் தெரியும். கட அத்து, தொழில் செத்து கெடக்கம்.”

தலைமுறை தலைமுறையாகக் குளியல் தொழிலில் இருக்கும் சுப்பிரமணியன் தன் காலத்தோடு இந்தத் தொழில் முடிந்துவிடும் என்று அஞ்சுகிறார். தூத்துக்குடியின் அடையாளம் என்று எதைக் குறிப்பிடுகிறோமோ, அந்த முத்துக்கும் குளியர்களுக்கும் இன்றைக்கு இதுதான் நிலை.

கடல் வாணிபம் செழித்தது எதனால்?

தமிழகத்தின் கடல் பகுதியை மூன்று பிரிவாகப் பிரிக்கிறார்கள். 1. பழவேற்காட்டிலிருந்து வேதாரண்யம் வரை - சோழமண்டலக் கடற்கரை. 2. வேதாரண்யத் திலிருந்து தனுஷ்கோடி வரை - பாக் நீரிணைப் பகுதி. 3. தனுஷ்கோடியிலிருந்து நீரோடி வரை - மன்னார் வளைகுடா பகுதி. இந்த மூன்று பகுதிகளிலும் கடல் சூழலியலும் நிலவியலும் வெவ்வேறானவை என்கிறார்கள்.

பொதுவாகவே, இந்தப் பகுதிகள் மூன்றும் பல்லுயிர்ச் செழிப்பு மிக்கவை என்றாலும், ராமேசுவரத்தைச் சுற்றியுள்ள பகுதி அபரிமிதமானது. ராமேசுவரம் தொடங்கி தூத்துக்குடி வரையிலான 21 தீவுகளையும் அதைச் சுற்றியுள்ள பகுதி களையும் ‘இந்தியக் கடல்சார் உயிர்க்கோளக் காப்பகப் பகுதி' என்று சொல்கிறது அரசு. ‘மன்னார் வளைகுடா கடல் தேசியப் பூங்கா' என்றும் அழைக்கப்படும் இந்தப் பகுதி, உலக அளவில் முக்கியமான உயிர்ச்சூழல் பகுதிகளில் ஒன்று.

சுரபுன்னைக் காடுகள், காயல்கள், கடல்கோரைப் படுகைகள், பவளப்பாறைகள் ஆகியவற்றின் உறைவிட மாக இருந்ததாலேயே எங்குமில்லாக் கடல் தாவரங்களும் உயிரினங்களும் இங்கே பல்கிப் பெருகின. முத்துச் சிப்பிகளும் பவளப்பாறையில் வளரும் மீன்களும் கடல் வெள்ளரிகளும் சங்குப்பூக்களும் சூழ்ந்து வளர்ந்தன. தூத்துக்குடி கடல் வாணிபத்தின் ஆதாரச் சுருதியாக இருந்தது கடலின் உயிரோட்டமான சூழல். பின்னாளில், கடல் சூழலைப் பின்னுக்குத் தள்ளின வாணிப நோக்கங்கள். விளைவு, தூத்துக்குடி இன்று சிதைந்துகொண்டிருக்கும் நகரம்.

விரட்டும் ஆலைகள்

தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக மனிதவள ஆற்றல் வளர்ச்சி அட்டவணையில் தூத்துக்குடி இரண்டாவது இடத்தில் இருப்பதாகச் சொல்கிறது இந்தியத் தொழிலகங்களின் சம்மேளனம். பாரம்பரியத் தொழில்களான மீன்பிடி, விவசாயம், பிற்கால அடை யாளமான உப்பளத் தொழில் எல்லாவற்றையும் பின்னுக்குத் தள்ளி மின்சார உற்பத்தி, ரசாயன உற்பத்தித் தொழிற்சாலைகள் முன்வரிசையில் நிற்கின்றன.

“ஒருகாலத்துல முத்து அடையாளமா இருந்த ஊருக்கு பின்னாடி உப்பு அடையாளமா மாறுச்சு. இன்னைக்கும் தமிழ்நாட்டோட பெரும் பகுதி உப்பு இங்கேயிருந்துதான் உற்பத்தியாவுது. தமிழ்நாட்டோட மொத்த உப்பு உற்பத்தி 30 லட்சம் டன். இதுல தூத்துக்குடியோட பங்கு மட்டும் 25 லட்சம் டன். கிட்டத்தட்ட 40 ஆயிரம் குடும்பங்கள் இத நம்பிப் பொழைச்சிக்கிட்டிருக்கு. தவிர, தமிழ்நாடு, கேரளத்தோட தொண்ணூறு சதவீத உப்புத் தேவை, கர்நாடகத்தோட அம்பது சதவீத உப்புத் தேவை, ஆந்திரத்தோட இருபத்தியஞ்சி சதவீத உப்புத் தேவையைத் தூத்துக்குடிதான் நெரப்புது. இந்த உப்பைப் பாருங்க. என்ன நெறத்துல இருக்குன்னுட்டு. எல்லாம் காத்து நச்சுப் பொகையாயி, நச்சுப் பொகையில மெதக்குற சாம்ப படியுறதால நடக்குற அழிவு. தூத்துக்குடி உப்பைத்தான் தமிழ்நாடு முழுக்கத் திங்குது. ஆனா, தூத்துக்குடிக்கு ஒண்ணுன்னா அது தூத்துக்குடிக்காரனுக்கு மட்டும்தான்னு நெனைக்கிது. தொழில் நசிஞ்சுக்கிட்டிருக்கு. 50 வருசமா இந்தத் தொழில்ல உக்கார்ந்திருக்கவங்களையெல்லாம் அஞ்சே வருசத்துல விரட்டுது ஆலைங்க” என்கிறார் தனபாலன். தூத்துக்குடி சிறு அளவிலான உப்பு உற்பத்தியாளர்கள் சங்கத்தின் செயலாளர்.

வளர்ச்சியின் குறியீடு

“ஏற்கெனவே ஏகப்பட்ட ஆலைங்க இங்க இருக்கு. அபாயகரமான சிவப்புப் பட்டியல்ல வர்ற ஆலைங்க மட்டும் 14 இருக்கு. தவிர, அனல் மின்நிலையங்கள் வேற. இப்பம் மேல மேல புதுப்புது ஆலைங்களுக்கும் அனல் மின்நிலையங்களுக்கும் வரிசையா அனுமதி கொடுக்குறாங்க. அனல் மின்நிலையங்களுக்குத் தண்ணீ தடங்க இல்லாமக் கெடைக்குமின்னு கடக்கரை ஓரமா அனுமதி கொடுத்திர்றாங்க. ஒவ்வொரு நாளும் லட்சக் கணக்கான லிட்டர் தண்ணீ எடுத்து வுட்டா என்னாவும்? கடல் இருக்கு. தொழில் முன்ன மாரி இல்ல. சுத்துவட்டாரத்துல நெலத்தடி நீர்மட்டம் சுத்தமா வுழுந்து 600 அடிக்குக் கீழ போச்சு.

இது ஒரு பக்கமின்னா, ஆலைங்க வெளியேத்துற நச்சுப்பொகை ஒருபக்கம். மகாராஷ்டிரத்துல வேணாமின்னு தொரத்திவிட்ட ஆலை ஸ்டெர்லைட். இங்கே கொண் டாந்து வைக்க விட்டாங்க. அது வெளியேத்துன கந்தக வாயுவோட கொடுமை தாங்கல. ஒருகட்டத்துல மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் நடத்துன ஆய்வுலேயே நாட்டுலேயே மாசு கலக்குறதுல நாலாவது எடம் இங்கெ இருக்குன்னு சொல்லிக் கண்டுபிடிச்சாங்க. நீதிமன்றம் ஆலை இயங்கத் தடை விதிச்சுச்சு. இப்போம் திரும்பி அனுமதிச்சுட்டாங்க. கந்தகம் கலந்த காத்தைச் சுவாசிச்சா நுரையீரலும் இருதயமும் போய்ச் சேர்ந்துடும்னுகூடவா தெரியாம இருக்கு? ஸ்டெர்லைட்டு மட்டும் இல்ல; நச்சுப் பொகைய வெளியே வுடுற ஏராளமான ஆலைங்க இங்கெ இருக்கு. திடீர்னு ஒரு நா பயங்கரப் பொகையா இருக்கும், கடுமையா நெடி ஏறும். மொதல்ல, சின்ன விபத்தும்பாங்க. மறுநா விசாரிச்சா நச்சு வாயு வெளியேறிடுச்சு, கந்தக அமிலக் குழாய் வெடிச்சுருச்சு, உலை தெறிச்சுருச்சுன்னு எதாவது வெவரம் வரும். ஆலைக்குள்ளேயே எத்தன உசுரு போயிருக்கு? அவங்களப் பொறுத்தவரைக்கும் விபத்து. அவ்ளோதான். போபால் மாரி ஒண்ணு நடந்தா, தூத்துக்குடி என்னாவும்? நெனைக்கவே சகிக்க முடியாதத, நாலு பேருக்குப் பொழப்பு ஓடுதுன்னு பார்த்து ஒடுங்கிக்கிட்டிருக்கம்…”

துக்கம் கவியப் பேசுகிறார்கள் கடலோடிகள். கடல் அலையில் ததும்பிக்கொண்டிருக்கின்றன தோணிகள்.

வண்டி தூத்துக்குடியிலிருந்து புறப்படுகிறது. வழி நெடுக உப்பளங்கள். ஆங்காங்கே உப்பளங்களுக்கு மிக நெருக்கமாக ஆலைகள். நம் காலத்து வளர்ச்சியின் குறியீடாக, ஒரு சின்னமாக மனதில் அவை நிலை பெறுகின்றன. எதிர்காலத்தில் நாம் எப்படி இருப்போம்? பணம் வரும் என்றால், வீட்டின் சமையலறையில்கூட ஒரு ஆலையை அனுமதிப்போமோ?

-சமஸ் 

http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%89%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%BE/article6355561.ece?homepage=true&theme=true

 

  • தொடங்கியவர்

கபாலிகளை விரட்டும் வரலாறு

 

neer1_2082022g.jpg

 

சென்னை, தமிழகக் கடற்கரையின் மாணிக்கம். இந்தியாவின் பழமையான மாநகராட்சி என்பதோடு, உலகின் இரண்டாவது மூத்த மாநகராட்சி. தென்னிந்தியாவின் நுழைவாயில்; மாபெரும் கல்வி, தொழில், கலாச்சார மையம். 1688-ல் மாநகராட்சியான சென்னை, இன்றைக்கு 200 வட்டங்கள், 426 சதுர கி.மீ. பரப்புக்கு விரிந்திருக்கிறது. 86 லட்சம் மக்களுக்கு அது உறைவிடம். புதிய புறநகர்ப் பகுதிவாசிகளையும் சேர்த்தால், இந்த எண்ணிக்கை 89 லட்சம் ஆகும். மிக விரைவில் ஒரு கோடியை எட்டிவிடும்.

அஸ்ஸாம் சென்றிருந்தபோது, அங்கிருந்து வந்து இங்கு வேலை செய்யும் இளைஞர்களுடன் ரயிலில் பேசிக்கொண்டுவந்தேன். டெல்லி, மும்பை, கொல்கத்தாவை விடவும் பாதுகாப்பான நகரம், இன துவேஷம் காட்டாத நகரம், வருபவர்களுக்கெல்லாம் வாழ்வளிக்கும் நகரம் என்று சென்னையைக் கொண்டாடினார்கள் அந்த இளைஞர்கள். உண்மை. நாட்டின் கடைக்கோடி கிராமத்து இளைஞர்களின் நம்பிக்கைக்கும் கை கொடுக்கும் நகரம் இது. தவிர, நாட்டிலேயே மும்பை, டெல்லிக்குப் பிறகு வெளிநாட்டவர்கள் அதிகம் வேலை செய்யும் நகரமும் இதுதான். கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேர் வேலை செய்கிறார்கள். இன்னும் சென்னையின் பெருமைகளை அடுக்கிக்கொண்டே போகலாம். ஆனால், இந்த மண்ணின் பூர்வகுடிகள் இன்றைக்கு எப்படி இருக்கிறார்கள்? அவர்களை இந்த ஊர் எங்கே வைத்திருக்கிறது?

எந்த சென்னையின் தினம்?

ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 22-ம் தேதி சென்னை தினம் கொண்டாடுகிறோம். சென்னைக்கு இப்போது வயது 375 என்று நம்புகிறோம். எங்கிருந்து தொடங்குகிறது இந்த வரலாறு? 1639-ல் சந்திரகிரி, வந்தவாசி ஆகிய பகுதிகளை ஆண்ட தாமர்லா சென்னப்ப நாயகடு என்ற மன்னரிடமிருந்து கடற்கரையோர நிலத்தை கிழக்கிந்திய கம்பெனி சார்பில் பிரான்சிஸ் டே வாங்கினார். சென்னை என்ற வார்த்தை அந்த விற்பனைக் கிரயப்பத்திரத்தில் இடம்பெற்றுள்ளது. அங்கிருந்து தொடங்குகிறது இந்த வரலாறு.

அதற்கு முன் இங்கே கடல் இல்லையா, கடற்கரை இல்லையா, ஊர் இல்லையா, மக்கள் இல்லையா? எல்லாம் இருந்தது, இருந்தார்கள். பிரான்ஸிஸ் டே இடம் வாங்கிய பகுதியே ஒரு கடலோடிகள் குப்பம்தான். அந்த வரலாறு இன்றைக்கு இருட்டு சூழ்ந்த வரலாறு.

இன்றைக்குக் கிட்டத்தட்ட தொள்ளாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய - 12-ம் நூற்றாண்டின் - ‘கலிங்கத்துப் பரணி’யிலேயே மயிலையைக் குறிப்பிடும்போது, ‘பண்டை மயிலை’ என்று குறிப்பிடப்படுவதாகச் சொல்கிறார் ஆய்வாளரும் கடலோடியு மான நரசய்யா. இதை உறுதிப்படுத்துகிறார் ஆய்வாளரான முத்தையா. “இதுவரை கிடைத்திருக்கும் தரவுகளின்படி இன்றைய சென்னையின் பழமையான கடற்கரையூர் என்று மயிலாப்பூரையே குறிப்பிட வேண்டும்” என்கிறார் முத்தையா. அத்தனை தொன்மையானது மயிலை எனும் மயிலாப்பூர்.

கபாலியும் கபாலீஸ்வரரும்

இன்றைய சென்னையின் தொன்மையான அடையாளங் களில் ஒன்று கபாலீஸ்வரர் திருக்கோயில். ஆனால், கபாலீஸ்வரரைக் காலங்காலமாகத் தங்கள் குலதெய்வமாகக் கும்பிட்ட கபாலிகள் சென்னைக்கு வேண்டாதவர்கள் ஆகிப் போனார்கள்.

“கபாலீஸ்வரர்னா கடவுள். ஆனா, கபாலின்னா திருடன், கொலைகாரன், கொள்ளைக்காரன். ஒரு காலகட்டம் வரைக்கும் எல்லாப் பத்திரிகைகள்லேயும் தமாசுன்னு வந்தா குத்தவாளிக்குப் பேர் கபாலின்னுதான் இருக்கும். கடலோடிகளோட கடவுள் கபாலீஸ்வரர். அதனாலதான் அப்போ குப்பத்துல பத்து பேருக்காவது, கபாலிங்கிற பேர் இருக்கும். சென்னைக்குக் கபாலீஸ்வரர் தேவைப்பட்டார். கபாலிங்க தேவையில்லாதவங்களா ஆயிட்டாங்க.

நமக்கு நல்லாத் தெரிஞ்ச நவீன சென்னையோட வரலாற்று லேந்தே எடுத்துக்குவோம். போர்ச்சுகீசியர் காலத்துல கடலோடிங்க தொரத்தப்பட்டாங்க. பிரிட்டிஷ்காரங்க காலத்துல தொரத்தப்பட்டாங்க. சுதந்திர இந்தியாவுலேயும் தொரத்தப்பட்டாங்க, தொரத்தப்படறாங்க. எம்ஜிஆர் ஆட்சியில மெரினாவை அழகாக்குறோம்னு சொல்லி துப்பாக்கிச் சூடே நடந்துச்சு. உயிர்கள் போச்சு. ஒரு சமூகம் வளரும்போது எப்படித் தன்னோட பூர்வகுடிகளை ஒடுக்கி, மிதிச்சு, ஒதுக்கும்கிறதுக்கு உதாரணம் கபாலி” என்கிறார் கடலோடியும் எழுத்தாளருமான ஜோ டி குரூஸ்.

அடிமை வியாபாரம்

ஒருகாலத்தில், அடிமை வியாபாரச் சந்தையில் சென்னைக்கு முக்கிய இடம் இருந்திருக்கிறது. “பூம்புகார் காலியான பிற்பாடு பொயப்பு தேடி வந்தவங்களுக்கு எடம் கொடுத்த ஊரு இதுன்னு சொல்லுவாங்க. வெளியாள் ஆதிக்கத்துக்கு அப்புறம் பஞ்ச காலத்துல அடிமைங்க யாவாரம் இங்கே டாப்புல இருந்திருக்கு. 1646-ல ஒரு பெரிய பஞ்சம் வந்துச்சாம். சோறு இல்லாம சாவுறதைவிட, அடிமையா போயி பொயச்சுக்கலாம்னு எத்தினியோ பேரு போயிக்கிறாங்க. அப்போலாம் எவ்ளோ பேருக்கு ஒத்தாசை பண்ணிக்கிறாங்க இங்கக்குற கடக்கர ஜனங்கோ” என்கிறார் பெரியவர் வீரமுத்து.

தன்னுடைய ‘மதராசபட்டினம்’ நூலில் ஓர் இடத்தில் இதுகுறித்துப் பதிவுசெய்திருக்கிறார் நரசய்யா. சென்னை அடிமைகளின் சந்தையாக இருந்ததுடன், கொஞ்சம் பிற்காலத்தில், இங்கிருந்து வெளியே கொண்டுசெல்ல வசதியான இடமாகவும் இருந்திருக்கிறது. அடிமைகளுக்கான சுங்க வரி ஏனைய துறைமுகங்களைவிட இங்கு குறைவான தாக இருந்திருக்கிறது. 1711-ல் ஒரு அடிமையைப் பதிவதற்கு 6 ஷில்லிங், 9 பென்ஸ் வசூலிக்கப்பட்டிருக்கிறது.

இப்படியெல்லாம் வந்தவர்களுக்கு உதவியவர்கள் இன்றைக்கு நகரின் விளிம்பில் தொங்கிக்கொண்டு நிற்கிறார்கள்.

புறக்கணிப்பின் அரசியல்

ஒரு சமூகம் புறக்கணிக்கப்படும்போது, அதன் சகல கட்டுமானங்களும் புறக்கணிக்கப்படுகின்றன. “மீனுங்க பெருக்கத்துக்கு அலையாத்திக் காடு, நல்ல ஆத்து தண்ணீலாம் அவசியம். காட்ட அயிச்சாச்சு. கயிவெ வேற கடல்ல கொண்டாந்து வுட்டா இன்னாவும்? போதாத்துக்கு வர்சையா ஆலைங்க, அன மின் நிலையம், அணு மின் நிலையம்... கடலையே உறிஞ்சிக்குறா மாரி தண்ணீயை எடுக்குறதுல சின்ன மீனுங்க, மீனு முட்டைங்க எல்லாம் பூட்து. பதிலுக்குக் கொதிக்க கொதிக்க தண்ணிய வெளியே வுட்றாங்க. வெளியேருக்குற மீனுங்களும் செத்து ஒழியுது. கரக்கடலுல தொயிலே கெடயாது. பூட்ச்சு. எல்லாம் பூட்ச்சு. ஆனா, நம்ம கொரலு எடுபடல.”

சென்னையின் இரு துறைமுகங்களில் ஒன்றான எண்ணூர் துறைமுகம் நாட்டின் இரண்டாவது பெரிய துறைமுகம். ஆனால், செயற்கையாக உருவாக்கப்பட்ட இந்தத் துறைமுகத்தின் உருவாக்கத்தில், கடலோடிகள் சமூகத்தின் வாழிடங்களின் பாதுகாப்புக்குக் கவனம் அளிக்கப்படவில்லை. கடலில் ஓரிடத்தில் வண்டி வண்டியாய்க் கற்களையும் மண்ணையும் கொட்டி நீரோட்டத்தின் மீது கை வைத்ததன் விளைவு, வேறோர் இடத்தில் கடல் அரிப்பு பூர்வக்குடிகளைத் துரத்தி அடிக்கிறது.

தமிழகத்தின் மாபெரும் சந்தையான சென்னையின் மக்கள் திரளுக்குக் கடல் உணவு தேவைப்படுகிறது. ஆனால், கடலோடிகளுக்கான தொழில் மையமோ திண்டாடுகிறது. சென்னையின் மற்றொரு துறைமுகமான காசிமேடு துறைமுகம் இட நெருக்கடியால் திணறுகிறது. “சென்னையில அங்கியும் இங்கியும் நூறுக்கும் மேல மீனு விக்கிற எடம் வந்துட்சு. ஆனா, காசிமேடு மட்டும் அப்டியேதாங்கீது. ஐந்நூறு படகு நிறுத்துற எட்துல ஆயிரத்து நாநூறு நிக்கிது. இன்னா செய்ய?”

நெரிசல் மிக்க ஜன சந்தடியில் உடன் பேசிக்கொண்டே வருகிறார்கள். சென்னையின் கதை சென்னையின் கதையாக மட்டும் இல்லை. வளர்ச்சியின் பெயரால் நகரமாக உருப்பெறும் ஒவ்வொரு கடற்கரையூரின் தொடர்கதையுமாக நீள்கிறது!

(அலைகள் தழுவும்…)

 

http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%95%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81/article6359019.ece?homepage=true&theme=true

  • தொடங்கியவர்

கடலில் ஓர் அபாய வளையம்!

 

nnv_2083706h.jpg

 

நாளைக்கு நீங்க கொண்டார்ற எந்தத் திட்டத்தால எந்தத் தீங்குன்னாலும் மொத பறிபோகுற உசுரு, எங்க உசுரு, எங்க புள்ளைங்க உசுருதானய்யா? அப்போம் எங்க கொரலுக்கு என்ன மதிப்பு கொடுக்குதீங்க?

தமிழகக் கடலையும் கடற்கரையையும் சூழும், சுற்றுச்சூழலுக்குச் சவாலான தொழிலகங்களைப் பற்றி எழுத ஆரம்பித்த இந்த ஒரு வாரத்தில், வாசகர்களிடமிருந்து ஒவ்வொரு நாளும் ஏராளமான கடிதங்கள், மின்னஞ்சல்கள். ஒவ்வொரு கடிதமும், மின்னஞ்சலும் அவர்கள் படும் பாட்டை விவரிக்கிறது. அவர்கள் ஊரை நோக்கி அழைக்கிறது. அத்தனை சீக்கிரம் விடுபட முடியாத, துக்கம் மேலிடும் அந்தக் குரல்கள் அத்தனையையும் இந்தத் தொடரில் பதிவுசெய்துவிட முடியுமா?

ஒரு சின்ன முயற்சி. தமிழகக் கடற்கரையின் வரைபடத்தை எடுத்துக்கொண்டு புள்ளிவைக்கும் முயற்சி. தமிழகக் கடல் எல்லை தொடங்கும் திருவள்ளூர் மாவட்டம் முதல் முடியும் குமரி மாவட்டம் வரை. கடலோடிகளும் வாசகர்களும் தங்களை அதிகம் பாதிக்கும் என்று குறிப்பிட்ட தொழிலகங்களின் பட்டியல் வரிசையாக நீள்கிறது. சுற்றுச்சூழலைக் கடுமையாகப் பாதிக்கும், மாசை உருவாக்கும், அபாயகரமான பின்விளைவுகளையும் ஆபத்துகளையும் உண்டாக்கும் வாய்ப்புள்ள அணு மின்உலைகள், கனிம மணல் ஆலைகள், அனல் மின்நிலையங்கள், பெரிய அளவிலான ரசாயன ஆலைகள். எங்கெல்லாம் செயல்படுகின்றனவோ / செயல்படவிருக்கின்றனவோ அங்கெல்லாம் ஒரு புள்ளி. வேலை முடிந்தபோது பெரும் அதிர்ச்சி. தமிழகக் கடற்கரையைச் சுற்றிலும் புள்ளிகள்.

கதிர்வீச்சர்கள்

இந்தப் பக்கம் கல்பாக்கம். அந்தப் பக்கம் கூடங்குளம். தமிழகத்தில் இந்த இரு இடங்கள்தான் அணுசக்தி மையங்கள் என்றாலும், வீரியத்தில் தேசிய அளவில் முக்கியமானவை இவை இரண்டும். கூடங்குளத்தை எடுத்துக்கொண்டால், இந்தியாவின் முதல் 1,000 மெகா வாட் அணு உலை என்பதைத் தவிர தொழில்நுட்பரீதியாக முதல் பிடபிள்யூஆர் அணு உலை, வி412 அணு உலை. மேலும், 5 அணு உலைகள் கூடங்குளத்திலேயே திட்டமிடப்பட்டிருக்கின்றன. கல்பாக்கத்தை எடுத்துக்கொண்டால், இரு அணு உலைகள், அணுக்கழிவு மேலாண்மை மையம், அணுக் கழிவு மறுசுழற்சி ஆலை ஏற்கெனவே செயல்படுகின்றன. தவிர, மூன்று ஈனுலைகள், அணுக் கழிவு மேலாண்மை மையம், அணுக் கழிவு மறுசுழற்சி ஆலைக்குத் திட்டமிடப்பட்டிருக்கிறது. இந்த அணுசக்தி மையங்களைத் தவிர, குமரி, நெல்லை, தூத்துக்குடி மூன்று மாவட்டங்களிலும் இருக்கும் கனிம மணல் ஆலைகள் ஒவ்வொன்றும் குட்டி கதிரியக்க வெளியீட்டு ஆலைகள்.

அனல்கக்கர்கள்

இந்தப் பக்கம் எண்ணூர். அந்தப் பக்கம் தூத்துக்குடி. வரிசை யாக அமைந்திருக்கும் அனல் மின்நிலையங்களைக் காட்டிலும் கட்டுமானத்தில் இருக்கும் அனல் மின்நிலையங்களின் எண்ணிக்கை அதிகம். அவற்றைக் காட்டிலும் அதிகம் திட்டமிடப்பட்டிருக்கும் அனல் மின்நிலையங்களின் எண்ணிக்கை. செய்யூர், பரங்கிப் பேட்டை, பெரியபட்டு, புதுப்பட்டினம், திருக்குவளை, கீழப்பெரும் பள்ளம், வாணகிரி, மருதம்பள்ளம், தலைச்சங்காடு, ஒக்கூர், வெங்கிடங்கால், வேலங்குடி, பெரிய கண்ணமங்கலம், மாணிக்கப் பங்கு, காளியப்பநல்லூர், எடுக்காட்டாஞ்சேரி, சாத்தங்குடி, உப்பூர், வேம்பார், உடன்குடி... நீண்டுகொண்டே போகிறது பட்டியல்.

நச்சுப்புகையர்கள்

அனல் மின்நிலையக் கட்டுமானங்கள் எங்கெல்லாம் விடுபட்டிருக்கின்றனவோ அங்கெல்லாம் இடைவெளியை அடைக்கின்றன ரசாயன ஆலைகள். கடலூர், தூத்துக்குடி ரசாயன ஆலைகளுக்கெல்லாம் சவால் விடக்கூடும், எதிர்காலத்தில் சீர்காழியையொட்டி 256 ச.கி.மீ-ல் அமைக்கப்படவிருக்கும் பெட்ரோலிய மண்டலத்தில் அமையவுள்ள பெட்ரோலிய, ரசாயன ஆலைகள்.

பாதிப்புகள் - எச்சரிக்கைகள்

“தொழில் வளர்ச்சியை நாங்க எதிர்க்கலை. ஆனா, எந்தத் தொழிலும், ஆலையும் அறத்துக்குக் கட்டுப்பட்டு இயங்குணுமா, இல்லையா? அதைத்தான் கேக்குறோம். கல்பாக்கத்துக்கு நான் வந்து 24 வருஷம் ஆகுது. இந்த 24 வருஷங்கள்ல இந்தப் பக்கக் கடலோரக் கிராமங்களோட சிதைவை என் கண் முன்னே அணுஅணுவா பார்த்துக்கிட்டிருக்கேன். முதல்ல மீன் வளம் கொறைஞ்சுச்சு. தொழிலைவிட்டு, வேலை தேடி வெளியே போக வேண்டிய நெலைமை கடலோடிகளுக்கு ஏற்பட்டுச்சு. அடுத்து, புற்றுநோய்ல ஆரம்பிச்சு பிறவிக்குறைபாடு, மூளை வளர்ச்சிக் குறைபாடு வரைக்கும் எப்படி வாழ்க்கையைச் சீரழிக்குதுன்னு ஒரு மருத்துவனா என்கிட்ட வர்ற மக்களைப் பார்த்துத் துடிச்சுக்கிட்டிருக்கேன். அணு சக்தித் துறை சார்புல நியமிக்கப்பட்ட மஞ்சுளா தத்தாவோட ஆய்வறிக்கையே கல்பாக்கம் அணு உலை பக்கத்துல இருக்குற கிராமங்கள்ல இருக்குற மக்களுக்குப் புற்றுநோய் வாய்ப்பு 700% அதிகம்னு சொல்லுது. ஆனா, அந்த மக்களோட பாதுகாப்புக்கு நாம செஞ்சிருக்கிறது என்ன? அமெரிக்கா, ஜப்பான் மாதிரி நாடுகள்ல, இப்படிப் பாதிக்கப்படுற மக்களுக்குக் குறைந்தபட்சம் இழப்பீடாவது கிடைக்கும். சட்டம் இருக்கு. இங்கே அதுக்கும் வழி இல்ல.

அணு உலை கதிரியக்கத்தால ஏற்படுற பாதிப்புகள் ஒருபக்கம் இருக்கட்டும், இப்படி ஒரு ஆலையைச் சுத்தி இருக்குறவங்களுக்கு அபாய காலத்துலேர்ந்து எப்படிச் செயல்படணும்கிற முன்னேற்பாடு கள், எச்சரிக்கை நடவடிக்கைகளெல்லாம் சொல்லிக் கொடுக்கப்படணும் இல்லையா? நம்ம ஊர்ல அதெல்லாம் எந்த அளவுல இருக்கு? மனசாட்சி உள்ள ஒரு மனுஷன், இதோட முழு அபாயங்கள் அத்தனையையும் புரிஞ்ச மருத்துவன் எப்படிங்க வாய் மூடிப் பார்த்துக்கிட்டு இருக்க முடியும்?” என்று கேட்கும் மருத்துவர் புகழேந்தி, கல்பாக்கத்தைச் சேர்ந்தவர். இந்தப் பகுதி கடலோர மக்கள் மத்தியில் எளிமையான மருத்துவ சேவைக்கான நன்மதிப்பைப் பெற்றவர்.

“தமிழகக் கடற்கரையோரத்துல, கடல்ல நதிகள் கலக்குற இடங்களுக்குப் பக்கத்துலன்னு வரிசையா நாம ஆலைகளை நிறுவிக்கிட்டுருக்கோம். தமிழகக் கடற்கரை ஒரு அபாய வளைவு மாதிரி ஆயிக்கிட்டுருக்கு. நம்மளோட கடல் சூழலை மட்டும் இல்லை; நிலத்தடி நீர்மட்டத்தை, விவசாயத்தை, நம்மளோட உடல் நலம்னு எல்லாத்தையும் பாதிக்கக் கூடியது இந்த அபாய விளைவு. இன்னைக்குப் பாதிக்கப்படுற மக்கள் எழுப்புற குரல் நாளைக்கு நமக்கான எச்சரிக்கைக் குரல்” என்கிறார் நித்யானந்த் ஜெயராமன். தமிழகக் கடலோரப் பகுதிகள் நெடுக ஆய்வுகள் நடத்தி, தொடர்ந்து சுற்றுச்சூழல் விழிப்புணர்வுக்காகப் பேசிவரும் செயல்பாட்டாளர்.

“கூடிப் பேசும்போது எல்லாரும் சமம்; நம்ம எல்லாரோடய வளர்ச்சிக்காகவும்தான் இதெல்லாம் நடக்குதுன்னு கேக்கும்போது சந்தோஷமாதான் இருக்கு. ஆனா, இதோட ஆதாயம் காஷ்மீர் வரைக்கும் போவும். பாதிப்பு, தமிழ்நாட்டுக்கு மட்டும்தானே? பெரிய அளவுல யோசிச்சா இப்பிடி. சின்ன அளவுல யோசிங்க. லாபம் யாருக்கோ, நஷ்டம் கடக்கரை மக்களுக்கு. சுனாமி வந்தப்போ யாரு உசுரு மொதல்ல போச்சு? நாளைக்கு நீங்க கொண்டார்ற எந்தத் திட்டத்தால எந்தத் தீங்குன்னாலும் மொத பறிபோகுற உசுரு, எங்க உசுரு, எங்க புள்ளைங்க உசுருதானய்யா? அப்போம் எங்க கொரலுக்கு என்ன மதிப்பு கொடுக்குதீங்க?” என்கிறார் பரமசிவம். கடலோடி.

குரல்கள் அபயக் குரல்கள் மட்டும் அல்ல; எச்சரிக்கைகள்!

(அலைகள் தழுவும்...)

தொடர்புக்கு: samas@thehindutamil.co.in

 

http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/article6362741.ece

 

  • தொடங்கியவர்

பாக் நீரிணைக்கும் மன்னார் வளைகுடாவுக்கும் நடுவே...

 

pamban_bridge1_2086644h.jpg

 

pamban-bridge-rameshwaram.jpg

 

ராமேசுவரம் தீவைப் பொறுத்தமட்டுல, அன்னிக்குத் தொடங்கி ரெண்டே பொழப்புதான். ஒண்ணு, கோயிலை வெச்சுப் பொழப்பு. இன்னொண்ணு, கடலை வெச்சுப் பொழப்பு. கோயிலை வெச்சு நடக்குற பொழப்பு நல்லாவே போவுது. கடலை வெச்சு நடக்குற பொழப்புதான் நாளுக்கு நாள் நாறுது.

இந்தக் கடலோரப் பயணத்தில், பெரும்பாலும் எல்லா இடங்களுக்கும் உடன் வந்த கூட்டாளி. நான் கூட்டிக்கொண்டு போகவில்லை. போகும் இடமெல்லாம் அவர் இருந்தார். ரயில்களில் செல்பேசியில், படகுகளில் டேப் ரெக்கார்டரில், கார்களில் ரேடியோவில்!

மக்களின் ராஜா

நம்மிடத்தில் வீடுகளில் ஒலிக்கும் இளையராஜா வேறு. உழைக்கும் மக்களிடத்தில், அவர்கள் புழங்குமிடத்தில் ஒலிக்கும் இளையராஜா வேறு. கடலில் பல மைல் தொலைவு வந்துவிட்டு, வலையை இறக்கிவிட்டுக் காத்திருக்கும் நேரத்தில், ஒரு பாட்டை ஒலிக்கவிட்டு, அப்படியே வள்ளத்தின் ஓரத்தில் கை மீது தலை சாய்ந்து உட்கார்ந்துகொள்கிறார் சேசண்ணா. அதிகாலையில் எழுந்து மீன் கூடை சுமந்து, கிராமம் கிராமமாக, தெருத் தெருவாக அலைந்து மீன் விற்றுவிட்டு, வீடு திரும்பும்போது, இரு பக்கமும் பனை மரங்கள் மட்டுமே துணையாக இருக்கும் பாதையில், கூடையில் பாலிதீன் பையில் பத்திரமாகச் சுற்றிவைத்திருக்கும் ரேடியோவில் ஒரு பாட்டை ஒலிக்கவிட்டு நடக்கிறார் ரோஸக்கா. படகுத் துறையிலிருந்து நடு ராத்திரியில் குட்டி லாரியில் கூட்டம் கூட்டமாக ஆட்களை ஏற்றிக்கொண்டு போகும்போது தனக்கு மட்டுமல்லாமல், பின்புறம் உட்கார்ந்திருப்பவர் களுக்கும் சேர்த்து ஒரு பாட்டை ஒலிக்கவிட்டு, வண்டியை விரட்டுகிறார் ராமலிங்கம். அந்தத் தருணங்களில், அந்தச் சூழல்களில், இளையராஜாவின் பாடல்கள் கொண்டுசெல்லும் உலகமே வேறு.

அமைதியான தனி அறையில், நுண்ணிய அதிநவீன சாதனங்களின் துணையோடு கண்களை மூடிக்கொண்டு கேட்கும்போதுகூட இளையராஜா இத்தனை நெருக்கமாகவில்லை. இந்தப் பயணங்களின்போது, மக்களோடு மக்களாகச் செல்லும்போது அப்படி ஒன்றிவிட்டார். அதுவும் கடலோரக் கிராமங்களுக்குச் செல்லும் பஸ்ஸில், ஜன்னலோர இருக்கையில், வெயில் தணிந்த சாயங்கால வேளையில்... வாய்ப்பே இல்லை. அன்றைக்கு இறைவனின் பரிபூரண ஆசி வாய்த்திருந்தது என்று சொல்ல வேண்டும். சரியாக, பாம்பன் சாலைப் பாலத்தில் பஸ் ஏற ஆரம்பிக்கிறது. காற்றில் கரைந்து வருகிறார் மனிதர். ‘அந்த நிலாவத்தான்... நான் கையில புடிச்சேன்... என் ராசாவுக்காக...’

ஜன்னலோரத்தில் கீழே வானமும், மேலே கடலும்போல நீலம். மேலே சர்ரெனப் போகிறது ஒரு விமானம். கீழே வரிசையாகச் சென்றுகொண் டிருக்கின்றன படகுகள். பாம்பன் ரயில்வே பாலத்தில் ஊர்ந்துகொண்டிருக்கிறது ரயில். பாம்பன் சாலைப் பாலத்தில், பஸ்ஸில் காதுக்குள் நிலா பிடித்துக் கொண்டிருக்கிறார் இளையராஜா. அடடா, அடடா... சாலைகள், பாலங்கள், தண்டவாளங்களுக்கெல்லாம் உயிர் இல்லை என்று யார் சொன்னது? பாம்பனில் வந்து பாருங்கள். எல்லாவற்றுக்கும் உயிர் இருக்கிறது. பாம்பன் அழகு, பேரழகு. அந்த அழகு அங்குள்ள எல்லோரையும் எல்லாவற்றையும் அழகாக்கிவிடுகிறது. இந்தியாவின் மிக ரம்மியமான இடங்களில் ஒன்றான பாம்பனைக் கடந்து பஸ் ராமேசுவரம் நோக்கிச் செல்கிறது. மனமோ ராமேசுவரம் பஸ் நிலையத்தில் இறங்கும் வரை அங்கேயே கிடக்கிறது.

ராமேசுவரம் தீவு - ஒரு குறிப்பு

இந்தத் தொடரில் அதிகமான அத்தியாயங்களை ராமேசுவரம் கடல் பகுதி பிடித்துக்கொள்ள நிறைய நியாயம் இருக்கிறது. முக்கியமாக மூன்று காரணங்கள். ஒன்று, தமிழகத்திலேயே நீளமான 236.8 கி.மீ. கடற்கரையைக் கொண்ட, அதிகமான கடல் உணவு அறுவடையைத் தரும் ராமநாதபுரம் மாவட்டத்தின் கடலோடிகளின் மையம் மட்டும் அல்லாமல், தமிழகத்தின் முக்கியமான கடல் கேந்திரமும் ராமேசுவரம். இரண்டு, உலகிலேயே மிகச் செழிப்பான கடல் பகுதி, பாதுகாக்கப்பட வேண்டிய பல்லுயிர் உயிர்க்கோளம் ராமேசுவரத்திலிருந்துதான் தொடங்குகிறது. மூன்று, உலகிலேயே பிழைப்புக்காகக் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்பவர்கள் அந்நிய நாட்டுப் படையினரால் கோரமாகத் தாக்கப்படும் அவலத்துக்கும் சுட்டுக் கொல்லப்படும் அக்கிரமத்துக்கும் முதல் பலி கொடுத்ததில் தொடங்கி அதிகமான பலிகளைக் கொடுத்தது ராமேசுவரம்.

இன்றைக்கு இந்திய நிலப்பரப்புக்கு வெளியே இருக்கும் கடல்சூழ் தீவு ராமேசுவரம். அதாவது, நாம் சென்னையிலிருந்து புறப்பட்டால், திருச்சி, புதுக்கோட்டை, ராமநாதபுரம் என்று மண்டபத்தோடு முடிந்துபோகிறது நம் நாட்டின் நிலப்பரப்பு. நடுவே, ஒரு ஆறுபோலக் குறுக்கிடுகிறது கடல். அதைப் பாலம் வழியே கடந்தால், பாம்பனில் தொடங்கி ராமேசுவரம் - தனுஷ்கோடி - அரிச்சல்முனை வரை ராமேசுவரம் தீவு. ஒருகாலத்தில் ராமேசுவரம் இப்படித் தீவாக இல்லை என்றும் ஒரே நிலப்பரப்பாக இருந்தது என்றும் சொல்கிறார்கள். தொடர் பெரும் புயல்கள் - குறிப்பாக, கி.பி.1480-ல் ஏற்பட்ட புயல் - நிலத்தை உடைத்துக்கொண்டு கடல் உள்ளே வர வழிவகுத்தது என்கிறார்கள்.

பாக் நீரிணை, மன்னார் வளைகுடா - ஓர் அறிமுகம்

எளிமையாக எப்படிச் சொல்வது? இப்படிப் புரிந்துகொள்ளலாம். கோடியக்கரை முதல் பாம்பன் வரை நீண்டிருக்கும் கடல் பகுதி பாக் நீரிணை. பாம்பன் முதல் கன்னியாகுமரி வரை நீண்டிருக்கும் கடல் பகுதி மன்னார் வளைகுடா. ராமேசுவரம் தீவின் முன்வாசல் பாம்பன். அதாவது, ராமேசுவரம் தீவை ஒரு மாலைபோலச் சூழ்ந்திருக்கிறது கடல். இந்தப் பக்கக் கடல் பாக் நீரிணை. அந்தப் பக்கக் கடல் மன்னார் வளைகுடா.

பொதுவாக, பாக் நீரிணை, மன்னார் வளைகுடா பகுதி முழுவதுமே உயிர்வளம் மிக்கது என்றாலும், ராமேசுவரம் தொடங்கி தூத்துக்குடி வரையிலான பகுதி இதில் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது. இவை இரண்டுக்கும் உட்பட்ட வான் தீவு, கசுவார் தீவு, கரைச்சல்லி தீவு, விலாங்குச் சல்லித் தீவு, உப்புத்தண்ணித் தீவு, புலுவினிசல்லித் தீவு, நல்லதண்ணித் தீவு, ஆனைப்பார் தீவு, வாலிமுனைத் தீவு, அப்பா தீவு, பூவரசன்பட்டித் தீவு, தலை யாரித் தீவு, வாலைத் தீவு, முள்ளித் தீவு, முயல் தீவு, மணோலி தீவு, மணோலி புட்டித் தீவு, பூமறிச்சான் தீவு, புள்ளிவாசல் தீவு, குருசடைத் தீவு, சிங்களத் தீவு ஆகிய 21 தீவுகளும் அவற்றை ஒட்டிய பகுதிகளும் உலகிலேயே மிகச் செழிப்பான பகுதியாக இனம் காணப்பட்டு, இந்திய அரசால் கடல்சார் தேசியப் பூங்காவாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், ராமேசுவரத்தையொட்டியுள்ள பகுதி உயிர்கோளக் காப்பகமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சின்னப் பகுதியில் மட்டும் 96 வகை பவளப்பாறை இனங்கள், 79 வகை நத்தை இனங்கள், 108 வகை கடல் பஞ்சு இனங்கள், 260 வகை கிளிஞ்சல் இனங்கள், 125 வகை பாசி இனங்கள் உள்ளிட்ட 3,600 வகை இனங்கள் கண்டறிப்பட்டுள்ளன. இந்தியக் கடல்பரப்பில் காணப்படும் 2,200 மீன் இனங்களில் 450 இனங்கள் இங்கு கண்டறியப்பட்டுள்ளன.

ராமேசுவரத்து விசேஷங்கள்

ராமேசுவரம் தீவுக்கென்று சில விசேஷங்கள் இருக்கின்றன. தீவுக்குள் கலப்பை கொண்டு உழக் கூடாது, லிங்கம் முளைக்கும் என்கிற நம்பிக்கை பல தலைமுறைகளாக நிலவுவதால், நெல் சாகுபடி கிடையாது. பூச்செடிகளைப் பயிரிடுவதே அதிகபட்ச விவசாயம். தீவு முழுக்கத் தென்னை, பனை, முருங்கை, மா, புளிய மரங்கள்தான். பொந்தம்புளி மரம் என்று விசேஷமாக ஒரு மரம் இருக்கிறது. தீவுக்குள் விளையும் புளிக்கும் முருங்கைக்கும் தனி ருசி என்கிறார்கள். பல சாதியினர், இனத்தினர் இருந்தாலும் - சாதிய அதிகார அடுக்குகள் அப்படியே நீடித்தாலும் - தீவுக்குள் அரிதான ஒற்றுமையைப் பார்க்க முடிகிறது. முக்கியமாக, இந்துக்கள், முஸ்லிம்களிடையே அபாரமான ஒற்றுமையைப் பார்க்க முடிகிறது. ஓர் உதாரணம், வேறெங்கும்போல அல்லாமல், முஸ்லிம்களின் உடை அடையாளமே இங்கு மாறுபட்டிருப்பது. முஸ்லிம்களின் பொது அடையாளமான குல்லா, கைலிக்கட்டு இங்கு இல்லை. இந்துக்களைப் போலவே வேட்டி-சட்டையில் காணக் கிடைக்கிறார்கள். பெரும்பாலான இந்துக்கள் - முஸ்லிம்கள் அப்பா, மாமா, மச்சான் என்றே அழைத்துக்கொள்கின்றனர். ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் வளாகத்தில் பல தலைமுறைகளாகக் கடை வைத்திருக்கும் முஸ்லிம்களைச் சந்திக்க முடிந்தது. “ஒரே சாமியை வேற வேற பேருல கும்பிடுறோம், வேற என்ன இருக்கு நமக்குள்ள வேறுபட்டுக் கெடக்க?” என்கிறார்கள்.

படகுத் துறைக்குப் போனபோது, எல்லாப் படகுகளும் கட்டிக்கிடந்தன. ஆங்காங்கே மூன்று நான்கு பேர் உட்கார்ந்து பேர் சீட்டு விளையாடிக்கொண்டிருக்கின்றனர். சிலர் வெறுமனே உட்கார்ந்திருக்கின்றனர் கடலைப் பார்த்துக்கொண்டு.

“ராமேசுவரம் தீவைப் பொறுத்தமட்டுல, அன்னிக்குத் தொடங்கி இன்னிக்கு வரைக்கும் ரெண்டே பொழப்புதான். ஒண்ணு, கோயிலை வெச்சுப் பொழப்பு. இன்னொண்ணு, கடலை வெச்சுப் பொழப்பு. கோயிலை வெச்சு நடக்குற பொழப்பு நல்லாவே போவுது. கடலை வெச்சு நடக்குற பொழப்புதான் நாளுக்கு நாள் நாறுது” - கடலைப் பார்த்தபடியே பேச ஆரம்பிக்கிறார் அருளானந்தம்.

(அலைகள் தழுவும்...)

 

http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87/article6368605.ece?homepage=true&theme=true

 

Edited by Athavan CH

  • தொடங்கியவர்

தேரகம், குட்டுலுகள் எங்கே போயின?

 

fish2_2088167h.jpg

 

உழைப்புக்கு அஞ்சாத உடல். துடுப்புப் போட்டு விரிந்த கைகள் குத்திட்டிருக்கும் கால்கள் மீது கோத்திருக்கின்றன. முகத்தைப் பார்க்காமல், கடலைப் பார்த்தவாறே பேசுகிறார் சம்மாட்டி அருளானந்தம்.

“நீங்க கடக்கர ஊருக்கு வந்திருக்கீங்கள்ல, எங்கேயாச்சும் நல்ல மீன் சாப்பாடு கெடைக்குதான்னு விசாரிச்சுட்டு வாங்களேன். ராமேசுவரம் தீவு முழுக்கச் சுத்தினாலும் கெடைக்காது. மீனு கெடைக்கிற எடத்துல மீனு வெலயான வெல குதர வெலயா இருக்கும். உள்ளூர்க்காரங்களே வெளிக் கடக்கர மீனத்தான் வாங்க வேண்டியிருக்கு. கடல்ல மீனு அத்துப்போய்க்கிட்டிருக்கு.

ஒருகாலத்துல ராமேசுவரம் மீனு ருசி ராசபோக ருசிம்பாங்க. இங்கெ கிடைக்கிற மீனுங்க வேற எங்கெயும் கெடைக்காது. அப்படிக் கெடைச்சாலும் இங்கெ கெடைக்கிற மீனுக்குள்ள ருசி தங்காது. தேரகம்னு ஒரு மீனு. அவியக் கொழம்பு வைப்பாங்க. அள்ளும் பாருங்க ருசி. கொழம்பு மீனு, வருவ மீனு கேள்விப்பட்டிருப்பீங்க. சுட்டுத் திங்கிறதுக்குன்னே சில மீனுங்க உண்டு. குட்டுலு மீனு அந்த ரகம் பாத்துக்குங்க. செங்கனி, உலுவ, வேலா இப்பிடி அடுக்கிக்கிட்டே போவலாம். இப்போம் இந்த மீனயெல்லாம் கண்ணால பாத்தவங்களத் தேடணும். நாஞ் சொல்றது சாதாரண விசயமில்ல. நீங்க எழுத வந்திருக்குற எல்லா சேதிக்கும் அடிப்பட விசயம் இதான். தீவு முழுக்கப் போங்க… நீங்களே புரிஞ்சுக்குவீங்க” - அருளானந்தம் பிரச்சினையைச் சொன்னார். அதற்கு மேல் பேசவில்லை.

தீவையும் தீவைச் சுற்றியும் சுற்ற ஆரம்பித்த அடுத்த சில நாட்களில் எல்லாக் கதைகளும் புரிபட ஆரம்பித்தன.

பெரியவர் வேலாயுதம் புட்டுப்புட்டுவைத்தார்.

“தம்பி, காலங்காலமா கடலுக்குப் போவணும்னா, கடலோடி மட்டும்தான் போவ முடியும்னு இருந்துச்சு. சுதந்திரத்துக்கு அப்புறம் மீன்பிடியை அதிகரிக்கணும்னுட்டு அரசாங்கம் நினச்சிது பாருங்க, விசைப்படகு, இழுவ மடின்னு அடுத்தடுத்து கொண்டாந்துட்டுச்சு பாருங்க, யாரு வேணா கடலுக்குப் போவலாம்னுட்டு ஆயிட்டு.

இது என்னாயிட்டுன்னா, கடலுக்குள்ள முதலீட்டைக் கொண்டாந்துட்டு. ரெண்டு வர்க்கம் உருவாவுது. ஒண்ணு, பாரம்பரியக் கடலோடிங்க வர்க்கம்; இன்னொண்ணு, தொழில்மொற கடலோடிங்க வர்க்கம். மொத வர்க்கம், காலங்காலமா கடலை நம்பிப் பொழச்சது. ரெண்டாவது வர்க்கம், பண மூட்டையோட கடக்கரைக்கு வந்தது. இந்த ரெண்டாவது வர்க்கம் என்னா பண்ணுச்சுன்னா, காச வெச்சி அடிச்சு மொத வர்க்கத்துல தொழில் தெரிஞ்ச ஆளுங்களத் தன் கைக்குள்ள போட்டுக்கிட்டு. மொத வர்க்கம், தன்னோட அன்னாட பொழப்புக்குக் கடலுக்குப் போவுது. ரெண்டாவது வர்க்கம், தன்னோட மொதலீட்ட ரெண்ட நாலாக்கி, நால எட்டாக்கப் போவுது. பணம் மனுசனை வுடுமா? தொரத்துது. எட்ட பதினாறாக்கவும், பதினாற நூறாக்கவும் தொரத்துது. மனுசன் கடல அரிக்க ஆரம்பிச்சுட்டான்” என்கிற பெரியவர், கரையோரமாகப் போடப்பட்டிருக்கும் ஒரு வலையைக் கையில் எடுக்கிறார்.

“நார்வேக்காரன் கொண்டாந்து வுட்ட தொழில்நுட்பம் இது. இழுவ மடின்னு பேரு. இந்தக் கண்ணிய பாத்தீங்களா? சனியன். எல்லாத்தையும் சல்லீசா அரிச்சு அழிச்சுரும். இதாம்பி நம்ம கடலுக்கு மொத எமன். இத இப்பம் ரெட்ட மடியாக்கி வேற போடுதாம். கூடவே, டிராலரை வேற கொண்டாந்து ஓட்டுதாம். எல்லாம் எமனுவோ. கடலு எப்பிடித் தம்பிக் கடலா இருக்கும்?” என்றவரை மறித்தேன்.

“ஐயா, எனக்குப் புரியல...”

“வெளக்கமாச் சொல்லுறன். சுதந்திரத்துக்கு முன்னாடி வரைக்கும் கடக்கரையில ஐஸ் கட்டியே கெடையாது தம்பி. அப்போம்லாம் புடிக்கிற மீன சுத்துப்பட்ட ஊருகள்ல கொண்டுபோய் விப்பம். மிச்சப்பட்ட மீனுக கருவாடாகும். மீனு கொண்டுபோவ முடியாத ஊருக்கெல்லாம் கருவாடு போவும். இப்பிடித்தான் போச்சு. இந்த ஐஸு வந்துச்சு பாத்துக்கங்க, கடலோடிங்க வாழ்க்கையில பெரிய மாத்தம் வந்துடுச்சு. கடக்கரைக்கு லாரிக வந்துச்சு. யாவாரிங்க வந்தாங்க. மீனு வெளிய போவ ஆரம்பிச்சிச்சு. வசதி பெருகினப்போ, தேவையும் பெருகுமில்ல? அரசாங்கம் விசைப்படகைக் கொண்டாந்து வுட்டுச்சு. கூடவே, இந்த இழுவ மடியையும் கொண்டாந்துட்டுச்சு.

இந்த விசைப்படகுல ரெண்டு ‘வசதி’. படகையும் எந்திரம் இழுக்கும், வலையையும் எந்திரம் இழுக்கும். இந்த இழுவ மடி ரெண்டாம் ஒலகப் போருல, கடலுக்கு அடியில எதிரிங்க பொதச்ச கண்ணிவெடிங்கள அரிச்சு அள்ள கண்டுபுடிச்ச மடி. அதாவது, சின்னச் சின்ன மீனுக் குஞ்சுவோ வரைக்கும் இதுல சிக்கிப்புடுங்க.

பாரம்பரியக் கடலோடிங்க தினுசு தினுசா மீனுங்களுக்கு ஏத்த மாரி வல வெச்சிருப்பம். இப்பம் சீலா மாரி பெருவட்டான மீனு புடிக்கப் போறவன் அதுக்கேத்த மாரி வலய வெச்சிருப்பாம். வலயோட வாயி பெருசா இருக்கும். சின்ன மீனுங்க சிக்குனா தானா வெளியே ஓடியாந்துருங்க. இந்த விசைப்படகுகள்ள கணக்கே வேற.

அதுவும் எறாலுக்குன்னு வெளிநாட்டு பவுசு கெடைச்சு ஏத்துமதி ஆவ ஆரம்பிச்சுப் பாருங்க, அவனவன் எறாலுக்காவ எதையும் அழிக்கலாமுன்னு துணிஞ்சுட்டாம். விசைப்படகெல்லாம் தாண்டி இன்னிக்கு டிராலர் வந்துடுச்சு. பெருஞ்சனியன். சின்ன கப்பல் அது. அதே மாரி இழுவ மடியைத் தாண்டி ரெட்ட மடி வந்துட்டு. ரெண்டு படகுங்க நடுவுல மடியைக் கட்டி, அப்பிடியே கடலை அடியோட அரிக்கிறது. பவளப்பாறை, செடி கொடிங்க, இண்டு இடுக்கு எல்லாம் அழிஞ்சுபோவுது. மீனுங்க கூடிப் பெருக்கம் பண்ண எடம் கெடையாது இன்னிக்கு. மீனுக் குஞ்சு, முட்டை சகலத்தையும் மடிங்க அரிச்சு அழிச்சுடுது. அப்புறம் எப்பிடிக் கடல்ல மீன் கெடைக்கும்? கடலையே அழிச்சுக்கிட்டிருக்காங்க தம்பி...”

“ஐயா, அப்போ விசைப்படகு, டிராலர் எல்லாமே வீண்ணு சொல்றீங்களா? இன்னிக்கு மீனவக் குப்பங்கள்ல கொஞ்ச நஞ்சம் இருக்குற மச்சு வீடுங்களுக்கெல்லாம் நவீன மாற்றம்தானே காரணம்? தப்பா நெனைக்காதீங்க. நீங்க எல்லாத்தையும் சேர்த்து ஒதுக்கிறீங்களோன்னு தோணுது...”

“தம்பி. நீங்க சொல்லுறதுல நியாயம் இருக்கு. ஒத்துக்கிடுதேன். நவீன வசதிங்க எங்காளுங்கள மேம்படுத்தி இருக்கு. நெசம்தான். இன்னிக்கும் சொந்தக் கட்டுமரம் வெச்சிருக்கவனுக்கு ஒரு நாளைக்கு நூறு ரூவா உத்தரவாதமில்ல. விசைப்படகுல பங்குக்குப் போறவன் எப்பிடியும் ஆயிரம் ஐந்நூறு பாத்துடுதாம். நெசந்தாம். விசைப்படகு, டிராலரு எல்லாமே எங்க வசதிக்குத்தான். ஏத்துக்கிடுதேன். ஆனா, இந்த விசைப்படகை எங்க ஓட்டணும்? டிராலரை எங்க ஓட்டணும்? இதெல்லாம் ஆழ்கடல்ல ஓட்ட வேண்டிய படகுங்க தம்பி. கடல்ல நூறு பாவம் ஆழம் இருக்குற எடத்துல ஓட்ட வேண்டிய படகை அஞ்சு பாவம் ஆழத்துல ஓட்டுனா என்னாவும்? எல்லாரும் தப்பு பண்ணலை. ஆனா, சிலரு இல்ல; பலரு தப்புப் பண்ணுதாம். குறிப்பா, இந்தப் பக்கக் கடல்ல. இதுல ஒளிச்சுப் பேச ஒண்ணுமில்ல. ஊர் அறிஞ்ச உண்ம. தம்பி, நாளக்கி பகப் பொழுதுல வாங்க. நேருல ஒரு விசயத்தக் காட்டுறேன். உங்களுக்கே எல்லாம் புரியும்...”

மறுநாள் காலை அவர் காட்டிய காட்சி மனதை உடைத்து, சிதைத்துப் போட்டது.

(அலைகள் தழுவும்...)

- சமஸ், 

 

http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9/article6372009.ece?homepage=true&theme=true

 

  • தொடங்கியவர்

கடல் மடியில் கூரிய அரிவாள்

 

sangayam1_2089812h.jpg

கடல் வளம் சங்காயமாக

அடுத்த நாள் அதிகாலையிலேயே ராமேஸ்வரத்திலிருந்து வண்டியைக் கிளப்பியாயிற்று. சுற்றுப்புற ஊர்களுக்குப் பயணமானோம். கடலுக்குச் சென்று விசைப் படகுகள் திரும்பும் நேரத்தில் படகுத் துறையில் இருந்தோம். படகுகளில் இறால்கள் தனியே, மீன்கள் தனியே எனத் தரம் பிரித்து, கூடை கூடையாக இறக்கப்படுகின்றன. அளவில் பெரிய இறால்களைக் கரையிலேயே தராசு வைத்து நிறுத்து, சில ஆட்கள் எடுத்துக்கொண்டிருக்க, மீன்களைத் தனியே கொண்டுபோய் வைக்கிறார்கள்.

“கரையிலயே நின்னு எல்லாத்தையும் பாத்துட முடியுமா, படகுல ஏறுங்க” என்று என்னைப் பார்த்துச் சொல்லிய வாறே, “ஏ... யப்பா, அந்தக் கயித்த கொஞ்சம் இப்பிடிப் போடுப்பா... தம்பி வெளியூர்லேந்து வந்திருக்காரு...” என்று படகில் உள்ளவர்களிடம் கயிற்றை இழுத்துவிடச் சொல்கிறார் வேலாயுதம்.

படகின் கூரையிலிருந்து தொங்கிய கயிற்றைப் பிடித்துக்கொண்டு, படகைச் சுற்றிலும் தொங்க விட்டி ருக்கும் டயர்களில் ஒன்றில் கால்வைத்து ஏறினேன்.

“ஏ... யப்பா... சங்காயம் இவ்ளோதானா?” என்கிறார் அவர்களிடம்.

“அங்கெ வேற ஒதுக்கிக் கெடக்கு, பாருங்க... தேர்றது ஒரு பங்குன்னா, தேறாதது மூணு பங்கு. இதுக்கு மேலயும் வேற நட்டப்படணுமா?” என்கிறார்கள்.

படகின் ஒரு பகுதியை ஆக்கிரமித்துக் குவிக்கப்பட்டி ருக்கின்றன, இன்னவென்று பிரித்துச் சொல்ல முடியாத பல வகை மீன்கள். எல்லாம் சிறுசிறு பொடிகள். “இதாம் சங்காயம், பாத்துக்குங்க” என்று காதோரம் மெல்லக் கிசுகிசுக்கிறார்.

“ஏ... யப்பா... பாடு ரொம்பக் கம்மியாட்டு இருக்கே?” என்கிறார் அவர்களை நோக்கி.

“ஏம்டா கடலுக்குப் போறோம்னு இருக்கு… கஷ்டம்” என்றவாறே வேலையைக் கவனிக்கிறார்கள்.

“சரி, வாங்க, நாம அந்தப் படகுக்குப் போவலாம்...” என்று அந்தப் படகையொட்டி நிற்கும் அடுத்த படகுக்குத் தாவுகிறார். அங்கும் அதே கதை… அதே பேச்சு… அதே சங்காயம். படகுத் துறையிலிருந்து வெளியே வருகிறோம்.

மெல்லக் கரையையொட்டி நடக்கிறோம். தூரத்தில் மீன்கள் காயவைக்கப்பட்டிருக்கும் தளத்தை நோக்கி அழைத்துச் செல்கிறார்.

“அந்தோ காயுதே என்னான்னு தெரியிதா?”

“கருவாடு...”

“ஆங்... கருவாடு இல்ல. சங்காயம். ஒங்களுக்குப் புரியிற மாரிச் சொல்லணும்னா, நீங்க கடல் வளம், மீனு வளம்னெல்லாம் சொல்லுறீங்களே அதாம் இந்தச் சங்காயம்” என்றவாறே அந்தப் பகுதியை நெருங்குபவர், காயவைக்கப்பட்டிருக்கும் சங்காயத்தில் ஒரு பிடி அள்ளு கிறார். என் கையில் கொடுக்கிறார். அப்படியே இடி இறங்கியதுபோல இருக்கிறது.

“பாருங்க... கடலு வளம் படுற பாட்டை... யய்யா, பாருங்க... என் குலமே எங்க ஆத்தாளைச் சீரழிக்கிறதை. சூறையாடுறானுவோய்யா கடலை, சூறையாடுறானுவோ. நாளைக்கு என் புள்ளைக்கும், பேரப்புள்ளைக்கும், அவம் புள்ளைக்கும் தொழில் கொடுக்க வேண்டிய உசுருய்யா இதெல்லாம். உங்க புள்ளைக்கும், பேரப்புள்ளைக்கும், அவம் புள்ளைக்கும் வயித்தை நெரப்ப வேண்டிய உசுருய்யா இதெல்லாம். ஆளா பெருக்க வேண்டிய உசுரையெல்லாம் இப்பிடிக் குஞ்சா இருக்கையிலேயே புடிச்சு அழிச்சா கடலு எப்படிச் செழிக்கும்?

இதுல என்னெல்லாம் இருக்கு தெரியுமா? காரப்பொடி, மீனு, நண்டு, எறா, கணவா, கடக்குச்சி, முச்சங்கு எல்லாம்… எல்லாம். நீங்க பேப்பர்ல அரிய உயிரினம்னு எதை யெல்லாம் எழுதுவீங்களோ அதையெல்லாம் இதுல தேடிக் கண்டெடுக்கலாம். ஆனா, படகுக்காரங்களுக்கு இது என்னா தெரியுமா? குப்ப. எதுக்கும் தேவப்படாத குப்ப.

எறா புடிக்கப் போகையில மடி அரிச்சிக்கிட்டு வர்றது இதெல்லாம். பெரும்புடி எறா, மீனுங்களைப் பொறுக்கிட்டு இதக் குப்பையாக் கொண்டாந்து கொட்டுதாம். கோழித் தீவனக் கம்பெனிங்களுக்கு இது போவும். என்னா வெல தெரியுமா? கிலோ ஏழு ரூவா தேறாது. வயிறு எரியுதய்யா… வயிறு எரியுது. கடக்கரையில ஆலைங்களைக் கொண்டாந்து வைக்கிறவங்க கடப் பொழக்கம் இல்லாதவங்க. இந்தக் கடலுக்கு உசுரு இருக்கு, இதுதான் நம்ம உசுர வளக்குதுங்கிறது அவங்களுக்குத் தெரியாது. ஆனா, இது அப்பிடியா? காலங்காலமா உசுரு வளக்குற ஆத்தாள இப்பிடிப் புண்ணாக்கலாமா? பவளப்பாற, கடக்கோர எல்லாம் உடச்சிக்கிட்டுப் போவுதய்யா.”

“தெரிஞ்சேதான் இதையெல்லாம் செய்யுறாங் களாய்யா?”

“தெரியாமலா பண்ணுதாம்? இதெல்லாம் எறாலுக்கான வேட்டையில சிக்குறதுங்க. கடத்தல் எவ்ளோ தெரியுமா? கீழக்கரைக்குப் போங்க. கப்ப கப்பலா கதை வரும். உண்டியக் கதையிலேந்து வஸ்துங்க கத வரைக்கும். தீவுல திரியுற குதுரக் குட்டியைக்கூடக் கடத்துதாம் தம்பி. ஆமைங்க, கடக் குதுர, ஆவுளியாவெல்லாம் எந்த மூல? எல்லாம் குறிவெச்சு வேட்டையாடுதாம். எல்லாத்துக்கும் வெளியில விக்க ஒரு கத வெச்சிக்கிதாம். கடக் குதுரயோட உடம்பு மருந்து, ஆவுளியாவோட பல்லு மருந்துன்னு கத. கம்பெனிக்காரங்ககிட்ட இவங்க தள்ளிவுடுறது. அவனுவோ டப்பியில வெச்சு வெளிநாட்டுக்கு அனுப்பிவிடுறது.”

அவர் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும் சம்மட்டி அடிபோல் விழுகிறது.

“அரசாங்கம் இதுக்கெல்லாம் தடை விதிச்சிருக்கு, இல்லையா?”

“ஆமா, அரசாங்கம்... அட, ஏன் தம்பி? எவ்வளவோ உசுருங்களைக் கடல்ல புடிக்கக் கூடாதுன்னு தட இருக்கு. அதெல்லாம் சட்டப் புத்தகத்துலதான தம்பி இருக்குது? எல்லாம் தூங்குது. அதிகாரிங்கதான் நெதம் கப்பத்துக்குக் கைநீட்டுறாங்களே? இங்கெ எல்லாம் நடக்கும். பல கதைங்க அரசாங்கத்துக்கே தெரியாது.”

“சரி, உங்க ஆளுங்களுக்கு இதனால ஏற்படுற பாதிப்புங்க தெரியும்ல, எல்லாம் தெரிஞ்சும் எப்பிடி இதையெல்லாம் செய்றாங்க?”

“அதாம் நேத்து சொன்னேனே தம்பி, ரெண்டு வர்க்கம். மொத வர்க்கம், அன்னாடப் பொழப்புக்கு ஓடுது. ரெண்டாவது வர்க்கம், பணத்தப் பெருக்க அலையிது. கடக்கரைக்கு மொதலீட்டோட வந்த இந்த ரெண்டாவது வர்க்கம், கடலுக்குள்ள போவாமலே சம்பாதிக்குது தம்பி. அதுக்குக் கைக்கூலிங்க இந்த மொத வர்க்கத்துலேந்து, எங்க வர்க்கத்துலேர்ந்து வெல போனவங்ங. பாரம்பரியக் கடலோடி அன்னியில எவனும் கடலுக்குள்ள நொழய முடியாது தம்பி. வெல போயிட்டாம். ஆனா, அப்படிப் போனவம் எண்ணிக்கை கம்மி.

இன்னிக்கும் மொத்தக் கடலோடிங்கள்ல விசைப்படகு, டிராலர எண்ணிக்க எவ்வளவு, கட்டுமரம் - நாட்டுப்படகுங்க எண்ணிக்கை எவ்வளவுன்னு நெனைக்கிறீங்க? பத்துல ஒரு பங்கு. அவ்ளோதாம். அதுல தர்மத்துக்குக் கட்டுப்பட்டு ஆழ்கடலுக்குப் போயித் தொழில் செய்யிறவன் தானும் உசந்து, தான் தலமொறயயும் உசத்துதாம். காசுக்கும் குடிக்கும் ஆசப்பட்டு, ரெட்ட மடி இழுவ மடி போட்டுதவம் கடலையும் நாசம் பண்ணி, தான் தலமொறையயும் நாசம் பண்ணுதாம். இதுல நீங்க இன்னொரு கணக்கையும் பாக்கணும். ஓடுற படகுல பத்துல ஒண்ணுதாம் விசைப்படகுன்னேல்ல, ஆனா, புடி படுற மீனுல பெரும் பகுதி விசைப்படகு, டிராலருதாம். இந்த அக்கிரமத்த எதுத்து எவ்வளோ போராட்டம்கிறீங்க? ஒருகட்டத்துல விசைப்படகுங்களை அங்கைக்கு அங்க வச்சி எரிச்சதெல்லாம் கடக்கரையில நடந்தது. இப்பம் நீ மூணு நாளைக்குத் தொழிலுக்குப் போ, நான் மூணு நாளைக்குத் தொழிலுக்குப் போன்னு ஒப்பந்தம் போட்டுக்கிட்டு, வாரத்துக்கு ஒரு நா படகைக் கரையில கட்டிப்போட்டு கடல பாத்துக்கிட்டிருக்கம்.

இழுவ மடி, ரெட்ட மடிக்கு அரசாங்கம் தட விதிச்சுப் பல வருசம் ஆவுது தம்பி. ஆனா, யாரும் தடுக்க இல்ல. ஏன்னா, கடலைச் சூறயாடுற கையி கடக்கரையில இல்ல. அது வெளியில இருக்கு. வெவ்வேற கம்பனி பேருல. கம்பனிக்குப் பின்னாடி இருக்குற வெள்ளைச் சட்ட சோக்கு மனுசங்க பேருல. நம்ம நாட்டுக் கடலேந்து எவ்வளவு ஏத்துமதி ஆவுது, எறா ஏத்துமதியில மட்டும் வருசத்துக்கு எவ்வளவு பொழங்குதுன்னு நீங்க விசாரிங்க. யாரு யாரு பினாமி பேருல கப்பலுங்க ஓடுது, கம்பனிங்க நடக்குதுன்னு, அந்தக் கப்பலுங்க, கம்பனிங்க பின்னாடி இருக்குற கைங்க எத்தன நீளம்னு உங்களுக்குப் புரியும்” என்றவாறு என் கையிலிருந்த சங்காயத்தை வாங்கிக் கீழே வைக்கிறார்.

“கடலம்மா, மன்னிச்சுக்க. தடுக்க முடியாத இந்தப் பாவிய... சூறையாடுதானுவோளேம்மா, அந்தப் பாவிய” - முணுமுணுத்தவாறே சங்காயத்தைப் பார்த்து நிற்கிறார் வேலாயுதம்.

(அலைகள் தழுவும்...)

- சமஸ், 

 

http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D/article6375401.ece?homepage=true&theme=true

 

  • தொடங்கியவர்

இறால் வேட்டையும் அந்நியக் கைகளும்

 

prawn1_2091283g.jpg

 

prawn2_2091282g.jpg

 

பெரியவர் சொன்னது சத்தியம்! இந்திய ஏற்றுமதி உலகத்தில் விசாரித்தால், கொட்டுகின்றன உண்மைகள். 2013 -14 நிதியாண்டில், இந்தியாவின் கடல் உணவு ஏற்றுமதி எவ்வளவு தெரியுமா? 5.1 பில்லியன் டாலர். அதாவது, முந்தைய ஆண்டைக் காட்டிலும் 60% அதிகம். கடந்த ஆண்டு 9.83 லட்சம் டன் கடல் உணவை ஏற்றுமதிசெய்திருக்கிறது இந்தியா. இந்த நிதியாண்டின் இலக்கு 6 பில்லியன் டாலர். "இந்த இலக்கை அடைவது பெரிய கஷ்டம் இல்லை" என்கிறார் கடல் பொருட்கள் ஏற்றுமதி வளர்ச்சி ஆணையத்தின் (எம்பெடா) தலைவர் லீனா நாயர். இலக்கை அடைவதற்கு அவர் முக்கியமான வழியாகக் குறிப்பிடுவதும் நம்புவதும் இறால் ஏற்றுமதியை.

அமெரிக்காவும் இறாலும்

இந்தியக் கடல் உணவு ஏற்றுமதியில் தெற்காசியச் சந்தைக்கே முதலிடம் (26.38%). அமெரிக்கா கொஞ்சம் கொஞ்சமாக அந்த இடத்தை நோக்கி நகர்கிறது (25.68%). அடுத்தடுத்த நிலையில் ஐரோப்பிய ஒன்றியம் (20.24%), ஜப்பான் (8.21%), சீனா (5.85%), மேற்கு ஆசியா (5.45%) சந்தைகள் வருகின்றன.

இந்தியக் கடல்சார் ஏற்றுமதி நிறுவனங்களின் கண் அமெரிக்காவை நோக்கியே இருக்கிறது. கடந்த ஆண்டில் மட்டும் அமெரிக்காவுக்கான இந்தியாவின் கடல் உணவு ஏற்றுமதி 19% அதிகரித்திருக்கிறது. அமெரிக்காவுக்கான இந்த ஏற்று மதியில் முக்கிய இடம் இறாலுக்கானது. அமெரிக்காவுக்கு நாம் ஏற்றுமதி செய்யும் கடல் உணவில் 64.12% இறால். கடந்த ஆண்டு மட்டும் இந்தியா 95,927 டன் இறாலை அனுப்பியிருக்கிறது. அமெரிக்காவின் மிகப் பெரிய இறால் ஏற்றுமதியாளர் இன்றைக்கு இந்தியாதான். இந்தியா தனது இறாலில் அமெரிக்காவுக்கு 51%; தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு 16%; ஐரோப்பிய நாடுகளுக்கு 16%; ஜப்பானுக்கு 5% அனுப்புகிறது.

தாய்லாந்தைத் தாண்டும் இலக்கு

"தாய்லாந்து பிடித்துவைத்திருந்த இடம் இது. அவர்கள்தான் இறால் ஏற்றுமதியில் முன்னே நின்றார்கள். இப்போது தாய்லாந்து கடலில் வளம் குறைந்து விட்டதால், இந்தியா அந்த இடத்தைப் பிடித்திருக்கிறது. நாம் பிடித்த இடத்தைத் தக்கவைத்துக்கொள்ள இதுதான் தருணம். அதனால், இறால் அறுவடையை அதிகரிக்க முடிந்த முயற்சிகளையெல்லாம் எடுத்துக்கொண்டிருக்கிறோம்" என்கிறார்கள் ஏற்றுமதியாளர்கள்.

ஒருகாலத்தில் தாய்லாந்திலிருந்து மட்டும் ஆண்டுக்கு 5 லட்சம் டன் இறால் ஏற்றுமதி ஆகும். அதேபோல, வியட்நாம், மலேசியா, தாய்வானிலிருந்தும் பெரிய அளவில் இறால் ஏற்றுமதியாகும். இப்போது அங்கு கடல் வளம் காலி. வெறித்தனமான மீன்பிடி முறைகள், நோய்த் தாக்குதல் காரணமாக அங்குள்ள கடல் உணவுப் பதனீட்டு ஆலைகள் வெறிச்சோடிக் கிடக்கின்றன.

இதனிடையே, ஐரோப்பாவுக்கும் அமெரிக்காவுக்கும் ஒப்பந்தப்படி இறாலை ஏற்றுமதிசெய்ய கிழக்காசிய நாடுகளின் கடல் உணவுப் பதப்படுத்தும் நிறுவனங் களும் இந்தியாவிடம் இறாலை எதிர்பார்க்கின்றன. சீனா, வியட்நாம், தாய்வானைச் சேர்ந்த பல நிறுவனங்கள் கடந்த ஆண்டு இந்தியாவிடமிருந்து இறாலை வாங்கி, அமெரிக்காவுக்கு மறு ஏற்றுமதி செய்திருக்கின்றன. இறால்பாடின் வீழ்ச்சி அதன் விலையையும் உயர்த்தியிருக்கிறது. இந்தச் சூழலை இந்தத் தொழிலில் உள்ள இந்தியப் பெருநிறுவனங்கள் பயன்படுத்திக்கொள்ளத் துடிக்கின்றன. ஆக, ஏற்றுமதி உலகம் ஒவ்வோர் ஆண்டும் கடல் உணவின், இறாலின் ஏற்றுமதி இலக்கை அதிகரிக்கிறது.

தமிழ்நாட்டின் பங்களிப்பு

இந்த அழுத்தம் தமிழகக் கடலோடிகள் மீதும் விழுகிறது. நாட்டின் 13% கடற்கரையையும் 9.4% பிரத்யேகப் பொருளாதார மண்டல கடல் பகுதியையும் பெற்றிருக்கும் தமிழகம், நாட்டின் மொத்தக் கடல் உணவுக்கு 12.62% பங்களிக்கிறது. ஓர் ஆண்டுக்கு இப்போது தமிழகக் கடலிலிருந்து நடக்கும் கடல் உணவு அறுவடை 4.32 லட்சம் டன். இதில் பாதி 50 மீட்டர் ஆழத்துக்கு உள்பட்ட கடல் பகுதி யிலும் மீதி 50 மீட்டர் ஆழத்துக்கு மேற்பட்ட பகுதியிலும் பிடிக்கப்படுகின்றன. தமிழகக் கடல் பகுதியில் 7 லட்சம் டன் அளவுக்கு ஆண்டுக்கு அறுவடை செய்யலாம் என்று மதிப்பிடுபவர்கள் அதற்கேற்பக் கணக்குப் போடுகிறார்கள்.

பொதுவாக, கடலில் இப்படி அறுவடையை அதிகரிக்கத் திட்டமிடும்போது எல்லோரும் பரிந்துரைக்கும் இடம் ஆழ்கடல். அரசும் ஆழ்கடல் மீன்பிடியை ஊக்குவிக்கும் நோக்கத்திலேயே நவீன மீன்பிடிக் கொள்கைகளை வகுத்தது; டிராலர்களுக்கு அனுமதி அளித்தது. ஆனால், உலகின் பல்வேறு பகுதிகளையும் போல, இங்கும் பெரும்பாலான டிராலர்கள் ஆழம் குறைந்த பகுதியிலேயே ஓடி, முறையற்ற மீன்பிடியில் ஈடுபடுகின்றன. இன்னொரு முக்கியமான பிரச்சினை, இந்த ஏற்றுமதி இலக்கு கடலில் கிடைக்கும் ஒட்டுமொத்த வளத்துக்கானது அல்ல; இறாலைக் குறிவைத்தது. இந்த இறால் வேட்டையில் கடலடியை நொறுக்கிப் பிடிக்கப்படும் இறாலின் மொத்த எடையைக் காட்டிலும், குறைந்தது இரண்டு மடங்கு தங்களுக்குத் தேவைப்படாத இனங்களையும் பிடித்து அழிக்கிறார்கள்.

ஏற்றுமதியின் இன்னொரு முகம்

"ஆரம்பத்துல தன்னோட சொந்த மக்கள் வலுவா இருக்கணும்னு அரசாங்கம் நெனைச்சுச்சு. புரதச் சத்துக்குக் கடல் உணவு முக்கியம்னு நெனைச்சுதான் மீன்பிடித் தொழில்ல, நவீன முறைகளை அரசாங்கம் கொண்டாந்துச்சு. ஆனா, ஏத்துமதி கொடுத்த அந்நியச் செலாவணி நம்ம ஆட்சியாளருங்களோட நோக்கத்தை மாத்த ஆரம்பிச்சுடுச்சு.

ஒலகம் முழுக்க இந்த மாரி டிராலருங்கள வெச்சி, கடல அரிக்கிற வேல நடக்குது. பல நாடுகள்ல கடல் வளத்தையே இன்னிக்கு இழந்துட்டு உட்கார்ந் திருக்குங்க. நாளைக்கு இங்கேயும் அப்பிடி நடக்கும். ஒவ்வொரு வருசமும் ஏத்துமதியை ஏத்துறோம், அந்நியச் செலாவணியை ஏத்துறோம்னு பேசி, சாதனை போலச் சித்திரிக்கிறாங்க. நடப்புல, இங்கெ உள்ளூர்க்காரனுக்குக் கெடைக்க வேண்டிய நல்ல மீனு எறாலைப் பறிச்சுதாம் வெளிய அனுப்புறாங்க. கேட்டா, கடல் தொழிலுக்குப் போறவங்களுக்கும்தானே வருமானம்னு பேசுவாங்க. கடலோடிங்களுக்குத் தேவை சரியான வருமானம். அதை வெளிநாட்டுக்காரன் கிட்டதான் வாங்கிக் கொடுக்கணும்னு யாரு கேக்குறா? உள்நாட்டுலயே நல்ல வெல கெடைக்க வழி பண்ணலாமே?

உண்மையான பின்னணி என்னான்னா, உள்நாட்டுல இதை வித்தா கெடைக்குற காசுல பெரும் பகுதி எங்களுக்கு நேரடியா வந்துரும். அதே ஏத்துமதின்னா, கடலோடிங்களுக்குச் சொற்பம். இத வாங்கி ஏத்துமதி செய்யிற ஆளுங்க கோடிக் கோடியா அள்ளுறாங்க. அந்த வெறிதான் மேல மேல வாரிக்குவிக்கணும்னு கடலைச் சூறையாடச் சொல்லுது. தடை செஞ்ச உயிரைக்கூட வெட்டி டப்பியில அடைச்சி அனுப்பச் சொல்லுது. கரைக் கடலுல ஓடும்போது, டிராலரோட அடிக் கதவு பவளப் பாறைங்கள அடிச்சு நொறுக்கும், தரையையே உழுதுறும்னு ஊருக்கே தெரியும். இந்திய அரசாங்கத்துக்குத் தெரியாதா? ஆனா, ஒண்ணும் நடக்காது. கட்சி வேறுபாடுங்களைக் கடந்து, பல அரசியல்வாதிகளோட மொதலீடு இந்த டிராலருங்கள்ல இருக்குது. நம்மூரு அரசியல்வாதிங்க எத்தன பேருக்கு, இந்தியா முழுக்க டிராலரு, கப்பலு ஓடுதுன்னு தெரியுமா? எல்லாம் பினாமி ராஜ்ஜியம்."

- கடலோடிகளுக்கு எதுவும் தெரியாமல் இல்லை.

ஆழ்கடலில் அந்நியக் கைகள்

இந்தத் தொடர் உரையாடலின் தொடர்ச்சியாக டிராலர் முதலாளிகளிடம் பேசினேன். அவர்கள் தரப்பு நியாயங்களை அடுக்கினார்கள். போகிற போக்கில் அவர்கள் சொன்ன ஒரு விஷயம் பெரும் அதிர்ச்சியைத் தரக் கூடியது. "நம்மளோட கடல் எல்லையில தாய்வான்காரனும் வியட்நாம்காரனும் கப்பல்ல வந்து வேட்டையாடுறான். எல்லாம் பெரிய அளவுள்ள, எல்லா வசதியும் கொண்ட நவீனக் கப்பலுங்க. சுறாவைப் புடிக்கிறான். கப்பலுக்குள்ளேயே வெட்டுறான், தூவிய எடுத்துக்கிட்டு, ஒடம்பத் தூக்கி வீசுறான். எறாலைப் புடிக்கிறான். கண வாயைப் புடிக்கிறான். எல்லாத்தையும் கப்பலுக்குள்ளேயே சுத்தம் பண்ணி, பதப்படுத்தி, டப்பாவாக்கிட்டு, கழிவெல்லாம் கடல்லயே வுட்டுட்டுப் போய்க்கிட்டே இருக்கான். யாரும் அவனை ஒண்ணும் பண்ண முடியலை."

"அதெப்படி அந்நியக் கப்பல்கள் நம்முடைய எல்லைக்குள் அத்துமீறி வந்து மீன்பிடிக்க முடியும்?"

"ம்... கப்பல் அவன் பேருல இருந்தாத்தானே? கப்பலோட உரிமம் நம்மாளுங்க பேருலல இருக்கும்? டெல்லி ராஜ்ஜியத்துல செல்வாக்குள்ள ஆளுங்க கையும் அதுல இருக்குதே? இத யார் கேக்க?"

இங்கே என்ன நடந்தாலும் கடைசியில் அது அரசியலைப் போய் அடைகிறது. அரசியல்வாதிகளோ தங்கள் தொழில் போட்டிக்கான எல்லையை விரித்துக் கொண்டே போகிறார்கள். ஆழ்கடலுக்குள்ளேயும்.

அறைக்குத் திரும்புகிறேன். டிவியில் செய்தி ஓடிக்கொண்டிருக்கிறது. தமிழகக் கடலோடிகள் மீதான இலங்கை ராணுவத்தின் வெறியாட்டம்...

(அலைகள் தழுவும்...)

 

http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%87%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/article6378739.ece?ref=relatedNews

இவ் அரிய தொடரினை எத்தனை பேர் யாழில் வாசிக்கின்றனர் என்று தெரியவில்லை.  எவராவது வாசித்தால் தமிழக மீனவர்கள் ஏன் வடக்கு இலங்கையின் கரைக்குள் பிரவேசிக்கின்றனர் என்பதும், அது எவ்வளவு பெரிய அழிவை எம் கடல் வளத்துக்கு தரப்போகின்றது என்பதையும் புரிந்து கொள்ளலாம்.

 

இந்த விடயத்தில் சுப்பிரமணிய சுவாமி சொன்னது சரியாகப்படுகின்றது எனக்கு. மீனவர்களை விடுவித்து விட்டு படகுகளை கைப்பற்றி வைத்திருப்பது தான் பண முதலைகளின் பேராசைக்கு சரியான மருந்து.

 

நேற்று, வடக்கு மாகாண முதலமைச்சர் சொல்லியிருப்பதும் இத் தொடரில் சொல்லப்படும் பிரதான அம்சமும் ஒத்து வருகின்றனர்.  விக்கி சொல்லியிருப்பது:

 

இந்திய- இலங்கை மீனவர்களிடையே இருக்கும் இருக்கும் பிரச்சினை முடிவுகள் இன்றி தொடர்ந்தும் இழுபறியில் உள்ளது. ஒரு காலத்தில் இந்தியாவை சுற்றியுள்ள கடல் வளம் மிக மேம்பட்டதாக இருந்தது. இந்த இழுவைப்படகின் பாவனையால் அனைத்தும் இடித்து அழிக்கப்பட்டு வெறும் தரை மட்டும் இருக்கும் நிலை தற்போது காணப்படுகின்றது.  அவ்வாறு அங்கு இருப்பதால் தான் இங்கு வந்து எங்களுடைய கடல்வளத்தையும் அவர்கள் சூறையாட துணிந்துள்ளனர். இதற்கு ஒரு தீர்வைக்காண வேண்டும். -
http://onlineuthayan.com/News_More.php?id=276023396705718966#sthash.tRTAm8Yz.dpuf

 

 


தொடர்ந்து பதிவுகளை இங்கு இணைத்து வரும் ஆதவனுக்கு பெரும் நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான் நிழலி , படிக்கவே பக் பக் என்டுது...!அடுத்த மூன்றாவது தலைமுறைக்கு இந்தப் பூமிப் பந்து பாலைவனமாகவாவது மிஞ்சுமா என்பது சந்தேகமே...!

  • தொடங்கியவர்

துரத்தும் மரண நிழல்கள்

 

pic1_2093346g.jpg

 

pic2v_2093345g.jpg

 

நாம் அறிந்திருக்கும் இலங்கையைவிட, தமிழகக் கடலோடிகள் அறிந்திருக்கும் இலங்கை நெருக்கமானது. பல்லாண்டு காலமாக அவர்கள் இலங்கையோடு நெருக்கமாக இருந்திருக்கிறார்கள். பன்னெடுங்காலமாக, இரு பக்கக் கடலோடிகளுக்குமே பக்கத்து நாடு ஒரு நாடாக இல்லை; பக்கத்து ஊராக இருந்திருக்கிறது, தொலைவில் மட்டும் அல்ல; கலாச்சார உறவிலும்.

“எங்க முன்னோருங்க சொல்லுறது இது. பல ஆயிர வருஷங் களுக்கு முன்ன இந்த நெலப்பரப்பு முழுக்க ஒண்ணாதாம் இருந்திருக்கு. அப்புறம் கடக்கோளுல ஒடைஞ்சு இலங்கை தனியாவும் இந்தியா தனியாவும் ஆயிருக்கு. எடயில உள்ள சனம் முழுக்க கடல்ல போயிருக்கு. என்னைக்கா இருந்தாலும், தாயா புள்ளையா இருந்தவங்க நம்மல்லாம்பாங்க.”

- இது நாகப்பட்டினத்தில் கேட்டது.

“இங்கெ உள்ள தெதல், ஓட்டுமா, வட்டளாப்பம், பனை ஒடியக்கூழ் இப்பிடிப் பல சாப்பாட்டு அயிட்டங்கள் இலங்கையிலேர்ந்து இங்கெ வந்து ஒட்டிக்கிட்டதுதாம். அந்தக் காலத்துல ரெண்டு பேருல யார் பெரிய ஆளுன்னு நிரூபிக்க வுட்ற சவால்ல ஒண்ணு, மன்னார் ஓட்டம். தனுஷ்கோடிலேந்து தலைமன்னார் வரைக்கும் நீந்திப் போய்ட்டு வரணும். அந்தத் தலமுறையில கடைசி மனுஷன் நீச்சல் காளி. சில வருஷங்களுக்கு முன்னாடிதான் காலமானாரு. இங்கெ உள்ளவங்களுக்கு அங்கெ ஒரு வூடு இருக்கும், அங்கெ உள்ளவங்களுக்கு இங்கெ ஒரு வூடு இருக்கும். சும்மா வந்து ஒரு வாரம் தங்கி சினிமா பாத்துட்டுப் போற வழக்கமெல்லாம் இருந்துச்சு.”

- இது ராமேசுவரத்தில் கேட்டது.

“கடல் வியாபாரத்துல எப்பவுமே நமக்குத் தனி மரியாத அங்கெ இருக்கும். நம்மூர்லேந்து போற எதுவும் தரமா இருக்கும்ண்டு நம்புவாங்க. அவங்க ஊரு சாமானையேகூடக் கேலி பேசுவாங்க. கொழும்பு மக்களோட உபசரிப்ப வேற எந்த ஊரோடயும் ஒப்பிட முடியாது.”

- இது காயல்பட்டினத்தில் கேட்டது.

“அந்தக் காலத்துல கொழும்புன்னாலே நம்ம கடக்கரயில தனி மவுசு. அது எப்படின்னா, கொஞ்சம் வசதி ஏறிப்போச்சுன்னா, ‘என் பரம்பரயெல்லாம் குடிக்கிற தண்ணியக்கூட வள்ளத்துல கொழும்புலேந்து எடுத்தாந்து குடிச்ச பரம்பரயிடா’ன்னு பேசுவாங்க பாத்தீயளா, அப்பிடி.”

- இது குமரியில் கேட்டது.

இவையெல்லாம் அந்தக் காலத்தைப் பற்றிய குரல்கள். இன்றைய நிலவரம் என்ன?

“படகுல ஏறும்போது ஆழிய நெனச்சுக் கடலம்மாவ வணங்குற நாளெல்லாம் போச்சுங்க. ‘அம்மா... தாயீ... சிலோன் நேவிக்காரன் கண்ணுல படாமக் காப்பாத்து தாயி’ன்னு வேண்டிக்கிட்டுதாம் ஏறுறோம்.”

- இது வேதாரண்யத்தில் கேட்டது.

“கண்ணுல பட்ட வாக்குல தொரத்திச் சுத்தி வளைப்பாங்க. கையத் தூக்கச் சொல்லுவாங்க. அந்தப் படகுலேந்து ஒருத்தம் இந்தப் படகுக்கு வருவாம். தேவைப்பட்ட மீனுங்களை எடுத்துப்பாம். மிச்ச சொச்ச மீனுங்கள அப்பிடியே கடல்ல வாரி வீசி எறிவான். வலய அறுத்துடுவாம். கண்ணுல பட்டது எல்லாத்துக்கும் இதுதாம் கதி. எல்லாத்தயும் தூக்கி எறிஞ்சதுக்கு அப்புறம் எங்கள அப்படியே முட்டிப்போடச் சொல்லுவாம். பொரடியிலயே கையில கெடக்கிறத வெச்சு இருக்குவாம். தலையில, பொரடியில, முதுவுல. நாங்க தலய தொங்கப்போட்டுக்கிட்டே இருக்கணும். தல நிமிந்தா மூஞ்சிலயே அடிப்பாம். கீழ தடுமாறி வுழுந்தா, மூஞ்சிலயே பூட்சு காலால மிதிப்பாம். மூஞ்சிலயே துப்புவாம். இஸ்டத்துக்கு அடிச்சுட்டு, படகையும் நாசம் பண்ணிட்டு, அவம் பாட்டுக்குப் போய்க்கிட்டே இருப்பாம்.”

- இது கோட்டைப்பட்டினத்தில் கேட்டது.

“கண்ட வாக்குல சுடுவாங்க. படகைச் சுத்திச் சுடுவாங்க. ஈரக்கொலையெல்லாம் நடுங்கும். ஒரேயொருத்தம் உள்ள வருவான். ‘ஏய், நீ அந்தக் கம்பியக் கையில எடு... நீ, இந்தக் கட்டயக் கையில எடு... ஒருத்தனுக்கொருத்தன் மாத்தி மாத்தி அடிச்சுக்குங்கடா’ம்பாம். ‘மூஞ்சில மாறி மாறித் துப்பிக்கிங்க’ம்பாம். ஏய்க்க முடியாது. ‘உனக்கு அடிக்கத் தெரியாதாடா? அடின்னா இப்பிடி அடிக்கணும்’னு ஓங்கி ஓங்கி அறைவான். இதுக்குப் பயந்துக்கிட்டே இப்பம்லாம் அவங்க வர்றது கண்ணுல பட்டாலே படகுல இருக்குற எல்லாத்தையும் நாங்களே கடல்ல வீசியெறிஞ்சுர்றது. அப்பம்லாம் எங்க வேண்டுதல ஒண்ணே ஒண்ணுதாம். ‘ஆத்தா... எங்களை அடிச்சித் துவைக்கட்டும், அப்பிடியே புடிச்சிக்கிட்டுப் போயி ஜெயிலுக்குள்ள அடைக்கட்டும், என்னா சித்திரவதை வேணும்னா செய்யட்டும், சுட்டுடணும்கிற எண்ணம் மட்டும் அவனுக்கு வந்துராமப் பாத்துக்கம்மா’ன்னு வேண்டிக்குவோம்.”

- இது ராமேசுவரத்தில் கேட்ட குரல்.

“இப்பிடித்தாம் சுடுவான்லாம் இல்லீங்க. பதினெட்டு வருசத்துக்கு முன்னாடி இங்கேருந்து போன சூசைராஜோட படகை எப்படி அடிச்சாங்க தெரியுமா? ஹெலிகாப்டர்ல பறந்து சுட்டான். ஆறு உசுரு. போச்சு. நாலு வாரம் தேடித் திரிஞ்சோம் பொணம்கூடக் கிடைக்காம. பொஞ்சாதி புள்ளைங்க பரிதவிச்சு நிக்குது. பார்க்கச் சகிக்க முடியாமத் திரும்பத் திரும்ப ஓடுறோம். கொடும. கேவலம் பொழப்புக்கு மீன் புடிக்கப்போயி, அந்நிய நாட்டுப் படைக்காரனால சாவுறதைவிட இந்த நாட்டுல கொடும, அந்தப் பொணத்தைக் கொண்டாந்து அடையாளம் காட்டுனாத்தான் அரசாங்க இழப்பீடு கெடைக்கும். இல்லாட்டி ஏழு வருசம் வரைக்கும் இழப்பீடு வாங்கக் காத்துக் கெடக்கணும். பொணத்தை மீட்டோம். அழிஞ்சு செதைஞ்ச அந்தப் பிண்டங்களப் பாத்து வூட்டுல உள்ளவங்க கதறுனது இருக்கே... நாங்க கட்டையில போறவரைக்கும் மறக்காதுங்க...”

- இது பாம்பனில் கேட்டது.

இரு நாட்டு மக்களிடையே இருந்த அழகான ஓர் உறவு எப்படி நாசமானது? 1984-ல் முனியசாமியில் தொடங்கி இலங்கை ராணுவத்தால், இதுவரை சுடப்பட்டிருக்கும் கடலோடிகள் எத்தனை பேர்? அவர்களுடைய விதவைகள் எப்படி உயிர் பிழைக்கிறார்கள்? அவர்களுடைய குழந்தைகளெல்லாம் எப்படி இருக்கின்றனர்? உலகின் மிகப் பெரிய நாடுகளில் ஒன்றின் கடலோடிகளை, ஆசியாவின் மிகப் பெரிய சக்திகளில் ஒன்றின் குடிமக்களை இத்தனை அலட்சியமாகக் கையாளும் தைரியத்தை ஒரு சின்னத் தீவுக்குத் தருவது எது? இதன் பின்னணியில் இருக்கும் ராஜாங்க சங்கதிகள் என்னென்ன?

(அலைகள் தழுவும்...)

- சமஸ்,

 

http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article6381043.ece?homepage=true&theme=true

  • தொடங்கியவர்

அரசியல் விழுங்கிய உரிமைக் கடல்

 

indira_gandhi_2097353h.jpg
இந்திரா காந்தியுடன் சிறீமாவோ பண்டார நாயக

 

காலங்காலமாகக் கடலோடிகள் கடலில் எதிர்கொள்ளும் பெரும் பிரச்சினை எல்லை தவறிவிடுவது. ஒருகாலம் வரைக்கும் கப்பல்களின் பயணங்களே கரையைப் பார்த்தவாறுதான் அமைந்திருந்தன, திசை தவறி எங்கோ சென்றுவிடக் கூடாது என்று. அப்படிப்பட்ட திசை தவறிய பயணம் ஒன்றுதான் இந்தியாவைச் சென்றடைய வேண்டும் என்று கிளம்பிய கொலம்பஸை அமெரிக்காவில் கொண்டு இறக்கியது. அமெரிக்கா ஒரு காலனி நாடாகி, பின் உலகின் மிகப் பெரிய நவீன காலனியாதிக்க நாடாக உருவெடுக்க வழிவகுத்தது. ஒரு கடல் கலத்தில் ஆயிரம் வசதிகள் இருந்தாலும், அடிப்படையில் நீரோட்டமும் காற்றுமே அதை இயக்குகின்றன. இந்த இயற்கையின் இயக்கத்தைத் தனதாக வரித்துக்கொள்ள மனிதன் நடத்தும் போராட்டமே அவன் கண்டறியும் தொழில்நுட்பங்கள். ஆனால், இயற்கையின் பெரும் பிள்ளையான கடல் என்னும் பிரம்மாண்டத்தின் முன் இந்தத் தொழில்நுட்பங்களெல்லாம் எம்மாத்திரம்?

இதனாலேயே, பாரம்பரியக் கடலோர ஊர்களில், கடலோடிகள் மத்தியில் ஒரு மரபு உண்டு. திசை தவறி வருபவர்களுக்கு இளைப்பாற இடம் கொடுத்து, உதவிசெய்து ஊருக்கு வழியனுப்பிவைப்பது. தமிழகக் கடலோடிகள் இன்னும் ஒரு படி மேலே. ஒரு மனிதன் எந்த நாட்டிலிருந்து வந்து இங்கு கரையேறினாலும் சரி, அவனை உபசரித்து, உடல் தேற்றி, அவனுக்குப் புத்தாடை எடுத்துக்கொடுத்து, செலவுக்குப் பணம் கொடுத்து ஊருக்கு அனுப்பிவைப்பது தமிழகக் கடற்கரை மரபு.

கடலோடிகளுக்கு எது எல்லை?

இங்கே கவனிக்க வேண்டிய ஒரு விஷயம் உண்டு. இங்கே நாம் விவாதிக்கும் எல்லைகளெல்லாம் நவீன காலத்தில் நாடுகள் வகுத்திருக்கும் எல்லைகளே தவிர, கடலோடிகள் கடலைப் பிரிக்க வகுக்கும் எல்லைகளே வேறு. அது உனக்குத் தேவையானதை நீ எடுத்துக்கொள்; எனக்குத் தேவையானதை நான் எடுத்துக்கொள்கிறேன் என்கிற எல்லை. நாடுகள் வரையறுக்கும் எல்லைகளைவிடவும் சக்தி வாய்ந்தவை இந்த எல்லைகள்.

இந்தியர்கள் என்பதாலேயே ஆந்திரக் கடலோடிகளின் படகுகள் கேரளக் கடலில் வந்து மீன்பிடித்துவிட முடி யாது; தமிழக எல்லை என்பதாலேயே குமரிப் படகுகள் நாகப்பட்டினக் கடலில் வந்து மீன்பிடித்துவிட முடியாது. அவரவர் அவரவருக்கான எல்லைகளை வகுத்துக்கொண்டே தொழிலில் ஈடுபடுகிறார்கள். இதைத் தாண்டிக் கடலோடிகள் தங்கள் எல்லைகளைத் தாண்டிவிட இரு காரணங்கள் இருக்கின்றன. ஒன்று, திசை தெரியாமல் அடித்துச் செல்லப்படுவது. இரண்டு, தமக்கான மீன்களைத் தேடி, தங்கள் எல்லையின் விளிம்பு வரை செல்லும்போது இன்னோர் எல்லைக்குள் சென்றுவிடுவது.

உலகெங்கும் கடலோடிகள் இந்த இரு காரணங்களாலும் இன்னொரு நாட்டு எல்லையில் இருக்கும்போது கைதுசெய்யப் படுகிறார்கள். இந்தியாவைச் சுற்றி எடுத்துக்கொண்டால், ஜப்பான் - சீனா இரு நாட்டுக் கடலோடிகள் இடையே இப்படியான கைதுகள் நடக்கின்றன. இந்தியா - பாகிஸ்தான் இடையே கைதுகள் நடக்கின்றன. வங்கதேசம் - மியான்மர் இடையே நடக்கின்றன. ஏன், தலைமன்னார் பக்கம் போய் நம் கடலோடிகள் எப்படி மாட்டிக்கொள்கிறார்களோ, அப்படியே இலங்கைக் கடலோடிகள் கேரளப் பக்கம் வந்து மாட்டிக்கொள்கிறார்கள். ஆனால், பிடிபடும் கடலோடிகள் வேறு எங்கும் இப்படித் தாக்கப்படுவது கிடையாது, காட்டு மிராண்டித்தனமாகச் சித்திரவதை செய்யப்படுவது கிடையாது, சுட்டுக்கொல்லப்படுவது கிடையாது. இலங்கை ராணுவம் மட்டும் இப்படி மோசமாக நடந்துகொள்ள என்ன காரணம்? இலங்கையின் சமூக உளவியலை வரலாற்றுபூர்வமாக விளக்கினார்கள் கடல் வணிகத்தில் இருக்கும் நம்மவர்கள். இவர்கள் பல தலைமுறைகளாக வாணிபத்துக்காக இலங்கை சென்று வருபவர்கள்.

ஆதிக் கதை

“ஆதி காலத்துல நாமெல்லாம் ஒண்ணா இருந்திருக் கோம்கிற உணர்வு நமக்கு எப்படி உண்டோ, அதேபோல அவங்களுக்கும் உண்டு. அது கலாச்சாரரீதியா நம்மை இணைக்குது. ஒரு பிணைப்பை உண்டாக்குது. அதேபோல, வரலாற்றுக் காலந்தொட்டே நம்ம மேல அவங்களுக்கு ஒரு அச்சம் உண்டு. அதுக்குக் காரணம் உண்டு. புராண காலத்துல ராவணன், வரலாற்றுக் காலத்துல ராஜராஜன், ராஜேந்திரன், ரகுநாதநாயக்கன்னு, இந்தியா ஒரு அமைப்பா உருவெடுத்தப்போ அந்த அச்சம் அதிகமாச்சு. இந்தியாவுக்குச் சுதந்திரம் கெடைச்சப்போ அவங்க இன்னும் பதற்றமானாங்க. அதுல நியாயம் உண்டு. ஏன்னா, இந்தியாங்கிற அமைப்பே பல நாடுகளோட தொகுப்பு. இலங்கை, தமிழ்நாட்டுப் பரப்பளவுல பாதியை மட்டுமே கொண்ட நாடு. வெறும் ரெண்டு கோடி சொச்சம் மக்கள்தொகை. இப்பிடி ஒரு குட்டி நாட்டை இவ்ளோ பக்கத்துல உள்ள எந்தப் பெரிய நாடும் விட்டுவைக்காது. போதாக்குறைக்கு ரெண்டு நாட்டுக்கும் பிணைப்பு மாரி தமிழ் பேசுற மக்கள். இதுதாம் அடிப்படைல நம்ம மேல அவங்களுக்குள்ள இருக்குற அச்சத்துக்கான அடிவேரு.

சுதந்திரத்துக்கு அப்புறம் ரெண்டு விஷயத்துல அவங்க கவனமா இருந்தாங்க. மொத விஷயம், இலங்கையோட பூர்வகுடிகளான ஈழத் தமிழர்களைக் கொஞ்சம் கொஞ்சமா ஒடுக்குறது. ரெண்டாவது விஷயம், பிற்காலத்துல இங்கே தமிழ்நாட்டுலேர்ந்து போய் தோட்டத் தொழிலுக்காக அங்கே குடியேறின மலையகத் தமிழர்களைத் தொரத்திர்றது. நேரு காலத்துலயே அவங்களை இந்தியா ஏத்துக்கணும்னு நெருக்கடி கொடுக்க ஆரம்பிச்சுட்டாங்க. அவரு ஒப்புக்கலை. இலங்கையோட வளர்ச்சியில அவங்களோட பங்கு இருக்கு, அவங்களா இந்தியா வர விரும்பாதபட்சத்துல இது சம்பந்தமா பேச முடியாதுன்னு சொல்லிட்டார். ஆனா, நேருவோட மரணத்துக்கு அப்புறம் சாஸ்திரி காலத்தை இவங்க நல்லாப் பயன்படுத்திக்கிட்டாங்க. பாகிஸ்தான்லேர்ந்து வர்ற ஒரு கோடிப் பேரை ஏத்துக்கிறீங்க. அதுல பத்துல ஒரு பங்கு ஆளுங்ககூட இங்கெ இல்ல, இவங்களையும் ஏத்துக்குங்கன்னு சொல்லி நெருக்குதல் கொடுத்தாங்க. சீனப் போர் தோல்வி பாதிப்புல இந்தியா இருந்த சமயம் அது. அப்பிடி இப்பிடின்னு சாஸ்திரிகிட்ட பேசி, கடைசியில அஞ்சே கால் லட்சம் பேரை இந்தியாவை ஏத்துக்க வெச்சிட்டாங்க. அப்புறம் இந்திரா காந்தி காலத்துல ஒரு முக்கா லட்சம் பேரை இந்தியாவை ஏத்துக்க வெச்சாங்க. சிறீமாவோ பண்டார நாயக செஞ்ச வேலை இது. அடுத்து, ஈழத் தமிழர்களைக் குறிவெச்சு நகர்த்த ஆரம்பிச்சாங்கங்கிற கதை உலகத்துக்கே தெரியும்” என்கிறார் புகாரி.

கச்சத்தீவு பறிபோன கதை

“உலகத்துலயே ரொம்ப நெருக்கமான கடல் எல்லை நமக்கு இடையில இருக்குறது. அதனால, கடல்ல தன்னோட ஆதிக்கத்தை நிலைநிறுத்திக்கிறதுலேயும் ஆரம்பத்துலேர்ந்து அவங்க குறியா இருந்தாங்க. 1956-57-ல இந்தியா தன்னோட கடல் எல்லையைப் புதுசா வரையறுத்துச்சு. அதாவது, கடற்கரையிலேந்து 6 கடல் மைல் வரைக்கும் இந்தியா வோட கடல் எல்லையின்னும், 100 கடல் மைல் பரப்பு வரைக்கும் தனக்கு உரிமை உண்டுன்னும் அறிவிச்சுச்சு. இது நடந்த கொஞ்ச காலத்துலயே இலங்கையும் தன்னோட கடற்கரையிலேந்து 6 கடல் மைல் வரைக்கும் இலங்கையோட கடல் எல்லையின்னும், 100 கடல் மைல் பரப்பு வரைக்கும் தனக்கு உரிமை உண்டுன்னும் அறிவிச்சுச்சு. அதே மாதிரி, 1967-ல எங்க கடல் எல்லை 12 கடல் மைல்னு இந்தியா அறிவிச்சதும், 1970-ல எங்க கடல் எல்லை 12 மைல்னு இலங்கையும் அறிவிச்சுச்சு. கடலை அவங்க எவ்வளவோ முக்கியமா பார்க்குறாங்கங்கிறதுக்கு இது ஒரு உதாரணம்தான்.

ராமநாதபுரம் மன்னரோட ஜமீன்ல உள்ளடக்கம் கச்சத்தீவு. கடல் வளம் அந்தப் பகுதில ஜாஸ்தி. காலா காலமா, மீன்பிடிக்கிறது மட்டும் இல்லாம, முத்துக்குளி, சங்குக்குளின்னு எல்லாம் நடந்துக்கிட்டிருந்த பகுதி. அப்படிப் போகும்போது, கலத்தைக் கரையில ஒதுக்கிட்டு, தீவுல வலையை உலர்த்திட்டு, இளைப்பாறிட்டு வருவாங்க. அங்க உள்ள அந்தோனியார் கோயில் நூறு வருஷத்துக்கு முன்னாடி நம்மாளுங்க கட்டினது. ஆரம்பத்துலேர்ந்தே இலங்கை கண்ண இது உறுத்திக்கிட்டுருந்துச்சு. அந்தத் தீவால ஒண்ணும் பெரிய பிரயோஜனம் கிடையாது. ஆனா, இந்தியாவோடதுன்னு ஒப்புக்கிட்டா, அதைக் கடந்தும் நமக்குக் கடல்ல உரிமை இருக்குன்னு ஆயிடுமே. அதனாலயே பிரச்சினை பண்ணிக்கிட்டு இருந்தாங்க.

நம்ம அரசாங்கம் நேரு காலத்திலேர்ந்தே கச்சத்தீவு விவகாரத்தை ஒரு பொருட்டா எடுத்துக்கலை. அப்புறம் பேசிக்கலாம், பேசிக்கலாம்னு தள்ளிப்போட்டுக்கிட்டே போச்சு. வங்கப் போருக்குப் பின்னாடி, அவங்க சமயம் பார்த்து அடிச்சிட்டாங்க. 1973-ல இந்திரா காந்தி கொழும்புக்கு வந்தாங்க. ராஜ வரவேற்பு. சிறீமாவோ பண்டார நாயக ரொம்ப நெருக்கமான உறவை இந்திராவோட உருவாக்கிக்கிட்டாங்க. 1974-ல சிறீமாவோ பண்டார நாயக டெல்லிக்குப் போனப்போ, கச்சத்தீவோட கதை முடிஞ்சுது. அது இலங்கையோடது ஆயிட்டு. தன்னோட அரசியல் நெருக்கடியைக் காரணமாச் சொல்லி, ஒரு அரசியல் உதவியாவே கேட்டு கச்சத்தீவை வாங்கிட்டாங்க. 1974 ஒப்பந்தத்துல, தமிழகத்தைச் சேர்ந்த பாரம்பரியக் கடலோடிகளுக்கு ஒரு பாதுகாப்பு இருந்துச்சு. தீவு மேலான அவங்களோட பாரம்பரிய உரிமைக்கு ஒரு பாதுகாப்பு இருந்துச்சு. 1976-ல போட்ட ஒப்பந்தத்துல அதுவும் போச்சு” என்கிறார் தரண்.

அந்தக் கேள்விக்கு என்ன பதில்?

“இதையெல்லாம் தாண்டி, நம்ம ஆளுங்க பக்கமும் சில தப்புங்க இருக்கு” என்று ஆரம்பித்த ஆறுமுகத்திடம் நேரடியாக அந்தக் கேள்வியைக் கேட்டேன். நாகப்பட்டினத்தில் தொடங்கி ராமேசுவரம் வரைக்கும் நான் பார்த்தவர்களிடமெல்லாம் கேட்ட கேள்வி.

“நீங்க மத்த எல்லாத்தையும் பேசறதுக்கு முன்னாடி, ஒரு கேள்விக்குப் பதில் சொல்லணும். நம்ம ஆளுங்க, நம்ம எல்லைக்குள்ள மட்டும்தான் மீன் பிடிக்கிறாங்களா இல்ல, எல்லை தாண்டியும் போறாங்களா?”

(அலைகள் தழுவும்...)

- சமஸ், 

 

http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D/article6390124.ece?homepage=true&theme=true

 

  • தொடங்கியவர்

எல்லையை ஏன் தாண்டுகிறார்கள்?

 

india_2099121h.jpg

 

நாகப்பட்டினம் தொடங்கி ராமேசுவரம் வரைக்கும் நான் பார்த்தவர்களெல்லாம் என்ன பதிலைச் சொன்னார்களோ, அதே பதிலை எந்தத் தயக்கமும் இல்லாமல் சொன்னார் ஆறுமுகம்.

“ஆமா, எல்லயத் தாண்டியும் போறாங்க. என் மவனே போயிருக்காம். தெரியாம இல்ல, தெரிஞ்சே தான் போனாம். அவம் மட்டும் இல்ல, எல்லயத் தாண்டுற பலரும் தெரிஞ்சேதான் போறாங்க.”

“இது தப்பில்லீங்களாய்யா? நம்முடைய எல்லைக் குள்ளதானே நாம தொழில் செய்யணும்?”

“தம்பி, நான் சத்தியத்துக்குக் கட்டுப்பட்டவன். என் மவனும் அப்பிடித்தான். பொல்லாப்பு வேணாம், நமக்கு ஒட்டுறது போறும்னு நான் நெனைக்கிறேன். எல்லைக்குள்ளேயேதான் நம்ம தொழில். இது என்னோட மனோபாவம். இதுக்கு என் வயசும் ஒரு காரணம். என் மவன், பொல்லாப்பு வந்தாலும் பரவாயில்ல, இப்ப சம்பாரிச்சாதானே புள்ளகுட்டிங்களைத் தேத்திவுட முடியும்னு நெனைக்கிறான். இது அவனோட மனோபாவம். அதுக்கு அவனோட வயசும் ஒரு காரணம்.

இங்க நீங்க குறிச்சிக்கிட வேண்டியது என்னான்னா, அவன் எல்லயத் தாண்டிப் போறதும் நான் போவாததும் எங்களோட வயசு, உடம்பு நெலம, குடும்பச் சூழ்நில இதெல்லாம்தான் காரணமே தவிர, எல்லயத் தாண்டுறது சரியா, தப்பாங்கிறதுல்ல இல்ல. ஏன்னா, இந்த எல்லயெல்லாம் அரசியல்வாதிங்களும் அதிகாரிங்களும் தங்களோட வசதிக்கேத்த வாக்குல அறிவிக்கிறது. என் பாட்டன் பூட்டன் காலத்துலேந்து மீன் பிடிச்சுக்கிட்டிருந்த எடத்துல நான் மீன் புடிக்கப் போறேன். அது தப்புன்னா, எப்பிடி ஏத்துக்க முடியும்?

நீங்க எல்ல… எல்லன்னு எதச் சொல்லவர்றீங்க? கச்சத்தீவு வரைக்கும் போறதத்தானே? என் நாட்டோட சண்ட போட்டு, கச்சத்தீவப் புடிச்சுக்கிட்டு, ‘இது இனிமே என்னோடது; நீ வரக் கூடாது’ன்னு இலங்கைக்காரன் சொன்னா நான் கேட்டுக்குவேன். சத்தியமாக் கேட்டுக்குவேன். ரெண்டு நாட்டுத் தலைவருங்களும் பேசி, அவங்களோட நட்புக்காக இந்தத் தீவ வுட்டுக்கொடுத்துட்டு, நாளயிலேந்து நீ இங்க வரக் கூடாதுன்னு சொன்னா, அது எந்த ஊரு நியாயம்யா? ஒங்களுக்குத் தெரியுமா? 1974-ல கச்சத்தீவ இலங்கைக்குக் கொடுத்தப்ப, ‘தீவுதான் அவங்களுக்குச் சொந்தம்; நீங்க வழக்கம்போல அங்கெ போவலாம், மீன் பிடிக்கலாம், தீவுல போயி எளப்பாறலாம்’னெல்லாம் அரசாங்கம் சொன்னுச்சு. 1976-ல இன்னொரு ஒப்பந்தத்தப் போட்டுக்கிட்டு, அந்த உரிமயும் உங்களுக்குக் கெடயாதுன்னுட்டு. இன்னும் அம்பது வருசம் கழிச்சு, ‘மண்டபத்தோட நம்ம எல்ல முடிஞ்சிபோச்சு; ராமேசுவரத்தை இலங்கைக்குக் கொடுத்துட்டோம்; நீ எல்ல தாண்டக் கூடாது’ன்னு அரசாங்கம் சொன்னாலும் சொல்லும். அரசாங்கம் சொல்லுறதாலயே எல்லாம் நியாமாயிடுமா?”

ஆறுமுகம் கேட்கும் கேள்விக்குப் பதில் சொல்ல முடியவில்லை.

சட்டங்கள் எல்லாமே நியாயமானவையா?

ஆறுமுகத்தின் வார்த்தைகள் ஒரு தனிப்பட்ட மனிதனின் வெளிப்பாடு அல்ல; தாங்கள் காலங்காலமாகப் புழங்கிய ஒரு இடம், தங்களிடமிருந்து பறிக்கப்படும்போது, அதைப் பாரம்பரிய பூர்வகுடிகளின் ஆன்மா எப்படிப் பார்க்கிறது என்பதன் வெளிப்பாடு. அரசாங்கத்தின் ஏடுகளில் ஏற்றினால், நமக்கு எல்லாம் சட்டபூர்வமாகிவிடுகிறது; சட்டபூர்வமானால், எல்லாமே சரியானதாகிவிடுகிறது. ஆனால், சட்டங்களுக்கும் நியாயங்களுக்கும் இடையில் உள்ள இடைவெளியை யார் நிரப்புவது? நாம் சட்டங்களை நம்புகிறோம், அதற்குக் கட்டுப்படுகிறோம். பூர்வகுடிகளோ நியாயங்களை மட்டுமே நம்புகிறார்கள், நியாயங்களுக்கு மட்டுமே கட்டுப்படுகிறார்கள்.

ஆறுமுகம் தொடர்ந்தார்.

“என்னாடா, இவம் இப்பிடிப் பேசுறானேன்னு பாக்காதீங்க. இலங்கைக்கு இந்தத் தீவு எதுக்காவ தேவப்படுது? அவங்களோட ராஜாங்கப் பெருமைக்கு, அதிகாரத்துக்கு. நாங்க எதுக்கு அங்கெ போறம்? பொழப்புக்கு, சோத்துக்கு. இங்கெ பொழப்பு இருந்தா ஏன் அங்கெ போறோம்? இங்கெ பொழப்பு போச்சு. சுத்தமாப் போச்சு.”

“இங்கெ கடல் வளம் அத்துப்போக யார் காரணம்? இங்கெ கடல் வளத்தை அழிச்ச அதே மீன்பிடி முறையோட அங்கெ போனா, அங்கேயும் கடல் வளம் அத்துப்போகாதா?”

“இப்போ சொல்லுறீங்களே, இத ஏத்துக்கிறேன். கடல இங்கெ அரிக்கிறது குத்தம், அங்கெ அரிக்கிறது நியாயம்னெல்லாம் இல்ல. கடல அரிக்கிறது பாவம், பெரிய பாவம். கடல அரிக்கிறவனுங்கள வுடக் கூடாது. புடி. அவம் என்ன புடிக்கிறது? நீயே புடி. நம்ம கடப்படைய வெச்சே புடி. அது மட்டு மில்ல. கடலுக்குள்ள கடத்தல் செய்யிறவம், கடல வெச்சுத் தப்புசெய்யிறவம் எல்லாத்தயும் புடி. அது நியாயம். ஆனாக்க, எல்லாம் தப்புசெய்யிறவம் இல்ல. எல்லைக்குள்ள புடிக்கிறவனெல்லாம் மேவாட்டுல புடிக்கிறவனும் இல்ல; எல்லய தாண்டிப் போறவனெல்லாம் அடிய அரிக்கிறவனும் இல்ல.

தம்பி, தமிழ்நாட்டுல மொத்தம் முப்பதாயிரத்திச் சொச்ச படகு இருக்கு. இதுல எத்தன படகு எல்லய தாண்டிப் போயி தொழில் செய்யுமின்னு நெனைக்

கிறீங்க. அதுல எத்தன படகு அடிமடிய அரிக்குமுன்னு நெனைக்கிறீங்க? நூத்துல ஒரு பங்குகூட இருக்காது. அதக்கூட நியாயமுன்னு நான் சொல்லல. ஆனா, விசயம் அது இல்லங்கிறதுக்குச் சொல்லுறன். இங்கெ நம்மாளு எப்பிடி எறாலைத் தேடிப் போறானோ, அதே மாரி அவிங்க ஆளு சூரை மீனத் தேடி நம்ம எல்லைக்குள்ள வருவான். ஆரம்ப காலத்துல இது பிரச்சினையா இல்ல. பின்னாடிதான் பிரச்சினையாச்சி.”

பின்னாளில், பிரச்சினையான கதையை ராமசாமி விவரித்தார்.

தம்பி சரக்கு

“இலங்கையில விடுதலப் புலிங்க தலையெடுக்க ஆரமிச்ச உடனேயே இங்கெ கடல்ல மீன்பிடிக்கப் போற ஒவ்வொருத்தனயும் புலின்னு நெனச்சிக் குறிவெக்க ஆரம்பிச்சுட்டான். அது அவம் மனசில அப்படியே வொறைஞ்சிக் கிடக்கு. எம்ஜிஆரு காலத்துல, விடுதலப் புலிங்களுக்குப் போவ வர்ற பாதையாவே கடல் பாதைதாம் இருந்திச்சுங்கிறது நெசம். எப்போம் ராஜீவ் காந்தியைக் கொன்னாங்களோ அப்பவே போக்குவரத்து கொறைஞ்சாச்சி. பெறகும் கொஞ்சம் பேரு டீசலு, மண்ணெண்ணெய்னு கெடச்சதைக் கடத்திக்கிட்டுதாம் இருந்தாம். கடக்கரயில ‘தம்பி சரக்கு’ன்னே ஒரு குறிச்சொல்லு உண்டு. ஆனா, இதயெல்லாம் செஞ்சவம் ரொம்பக் கொஞ்சம்.

இலங்கைக்காரன் புத்திசாலித்தனமா என்னாப் பண்ணான்னா, இங்கெருந்து கடல்ல மீன் புடிக்கப் போறவன் ஒவ்வொருத்தனும் படகுல தங்கமும் துப்பாக்கியும் பீரங்கியுமா கொண்டுபோயி விடுதலப் புலிங்களுக்குக் கொடுத்துக்கிட்டு இருக்கான்கிற கணக்கா கெளப்பிவுட்டான். அத நம்ம அரசாங்கத்தயே நம்பவெச்சான். அப்படியெல்லாம் கடத்தியிருந்தா ஏன், கடக்கரக் குப்பமெல்லாம் குடிசைக்குக் கூரை வேயக் காசில்லாமக் கெடக்கு? குண்டடி பட்டாலும் பரவாயில்லைன்னு நூறு எரநூறுக்காவ உசுர வுடத் துணியிறாம்? இத யோசிக்க நாதியில்ல.

ரொம்பப் பேருக்கு வெளிய தெரியாத ஒரு உண்மயச் சொல்லுறன், கேட்டுக்குங்க. புலிங்க கையில எப்போ முல்லத்தீவு போச்சோ, அப்பவே இந்தக் கடக்கர முழுக்க அவங்க கட்டுப்பாட்டுல வந்துடுச்சு. யாழ்ப்பாணத்துலேந்து திரிகோணமலை வரைக்கிம் அவங்க கையிலதாம் இருந்துச்சு. இங்கெருந்து மீன் பிடிக்கப் போன படகுங்களப் புலிங்க சுத்தி வளச்சிப் பிடிச்சிருக்காங்க. பல மொற. தண்டம் கட்டியெல்லாம் படிக மீட்டுக்கிட்டு வந்திருக்கோம். ஏன், கச்சத்தீவு நம்மளோடதுங்கிறதயே அவங்க ஏத்துக்கலயே? இதெல்லாம் இந்திய அரசாங்கத்துக்கும் தெரியிம், இலங்கை அரசாங்கத்துக்கும் தெரியிம். தெரிஞ்சேதாம் நம்மளக் கடத்தக்காரன்னு கத கட்டிவுட்டாம். சரி, போருக்குப் பின்னாடி விடுதலப் புலி இயக்கத்ததாம் அழிச்சிட்டியே... அப்புறமும் ஏன் எங்கள வெரட்டுற? ஏன் சுட்டுத்தள்ளுற?

தம்பி, கச்சத்தீவயும் நெடுந்தீவயும் சுத்தியுள்ள கடப் பகுதிலதாம் எறாலுங்க நெறையக் கெடைக்கும். நம்மாளுங்க அதைத் தேடித்தாம் அங்கெ போறது. ஆனா, இலங்கைக்காரனுக்கு இந்தப் பக்கம் தொழிலே கெடயாது. அங்கெ உள்ள தமிழ் ஆளுங்க கரக்கடல்ல தொழில் செஞ்சா அதிகம். பாதுகாப்பு, பந்தோபஸ்துன்னு சொல்லி அனுமதிக்க மாட்டாம். விசயம் என்னான்னா, அவம் கடக்கரயைச் சுத்திக் காசு வாங்கிக்கிட்டு சீனாக்காரனைக் கொண்டாந்து வுட்றான். இப்பம் இலங்கை தொறைமுகத்துல எங்கெ பாத்தாலும், சீனாக்காரன்தான். சீனாக்காரனைப் பூச்சாண்டி காட்டிதாம் காலாகாலமா நம்மாளுங்க தலையில அம்மி அரைக்கிறாம். இப்பவும் அதே கததான் ஓடுது.”

ராமசாமி சொன்னதில் நிறைய உண்மை இருந்தது. விசாரிக்க ஆரம்பித்தபோது, உண்மை அதைத் தாண்டியும் நீண்டது.

பெருவியாபாரப் பிசாசு நோக்கங்கள்

இங்கே கடலை சூறையாட எந்த ஏற்றுமதியும் வியாபார நோக்கங்களும் அடித்தளங்களோ, அதே ஏற்றுமதியும் வியாபார நோக்கங்களும் இலங்கை யையும் நகர்த்துகின்றன. ஐந்தாண்டுகளுக்கு முன் இலங்கையின் கடல் உணவு உற்பத்தி 2.93 லட்சம் டன். கடந்த ஆண்டு இது 4.45 லட்சம் டன். இந்த ஆண்டின் இலக்காக இலங்கை அரசு நிர்ணயித் திருப்பது 6.25 லட்சம் டன். இலங்கையின் ஏற்றுமதி இலக்குகளும் இதேபோல நேர்க்குத்தில் நிற்கின்றன. கடலோடிகளைப் பெருவியாபாரப் பிசாசு நோக்கங்கள் தள்ளுகின்றன. அரசியல்வாதிகளுக்குக் கப்பம் தேவைப்படுகிறது. அரசாங்கங்களுக்கு அந்நியச் செலாவணி தேவைப்படுகிறது. எல்லோரும் பின்னிருந்து நடத்தும் இந்த மாய விளையாட்டில், ஏழ்மையும் வறுமையும் கூடவே பேராசையும் சேர்ந்து கடலோடிகளைப் பகடைகளாக உருட்டுகின்றன.

“ ஊர் பேர் பலகயப் பாத்திருப்பீங்க, நாடு பேர்ப் பலகயப் பாத்திருக்கீங்களா? இந்தப் பேர்ப் பலகயப் பாருங்க...”

குரல் வந்த திசையில் திரும்பினால், தெரிகிறது அந்தப் பெயர்ப் பலகை. ‘இந்தியா’எனும் பெயர்ப் பலகை. “எங்களுக்கு எல்ல தெரியலியாம். எங்களோட உரிமயெல்லாம் இதோட முடிஞ்சிருச்சாம். அரசாங்கம் எங்கள ஏமாத்தல; தன்னையே ஏமாத்திக்குது.”

தனுஷ்கோடிக்கும் தலைமன்னாருக்கும் இடைப்பட்ட 13 மணல் தீடைகளில் 5-வது மணல் தீடையில் இந்திய அரசு வைத்திருக்கும் அந்தப் பெயர்ப் பலகை நம்முடைய சகல வரலாற்றுத் தவறு களுக்கும் பலவீனங்களுக்கும் ஒரு மௌன சாட்சியாக நிற்கிறது, பரிதாபமாக!

(அலைகள் தழுவும்...)

- சமஸ், 

 

http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article6393093.ece?homepage=true&theme=true

 

  • தொடங்கியவர்
குடி சுனாமி

 

tasmac1_2100414h.jpg

 

பூம்புகார். பண்டைக்காலச் சோழப் பேரரசின் பொலிவான காவிரிப்பூம்பட்டினம். கடல் கொண்ட புகார் நகரம். நிச்சலனமாக இருக்கிறது. கடல், அலைகள், இரைச்சல் எல்லாமே அந்த இரவில் கண் முன்னே நிலைத்து நிற்கும் ஒரு ஓவியம்போல இருக்கின்றன. மனம் பல நூற்றாண்டுகளுக்குப் பின்னோடி எங்கோ ஒரு இடுக்கில் சிக்கிக்கொண்டிருக்கிறது. கடல் மிகப் பெரிய வரலாற்றுக் கிடங்கு. ஏதோ ஒரு தருணத்தில் அது வரலாற்றினூடே நம்மை இழுத்துக்கொள்கிறது. அந்தக் கணங்களில் பேச முடிவதில்லை. யோசிக்க முடிவ தில்லை. மனம் நிச்சலனமாக இருக்கிறது. திடீரெனக் கடலில் கண்ணகியும் கோவலனும் கடந்து போகிறார்கள். திடீரெனக் கடலில் சுனாமி கொண்டுசென்ற உயிர்கள் படபடவென்று மீன் கூட்டம்போலத் தவ்வி எழுகின்றன. திடீரென எதுவும் அசைவற்று சூனியமாய் மாறுகிறது.

பூம்புகார் வருவதற்குச் சில நாட்கள் முன்பு நாகப்பட்டினம் சென்றிருந்தேன். அங்கு மனம் நிலைகொள்ளாமல் அடித்துக் கொண்டிருந்தது. திடீரென சுனாமி நினைவுகள் பேரலை எடுத்து அடித்துத் துவைக்க ஆரம்பித்தன. நாகப்பட்டினம் கடற்கரை ஒருபோதும் மறக்க முடியாத 2004 டிசம்பர் 26 காட்சிகள் கண் முன்னே ஓடுகின்றன. 6,065 உயிர்கள். யார் அழுவதென்றும் தெரியவில்லை. யார் தேற்றுவதென்றும் புரியவில்லை. கடற்கரை முழுவதும் சிதறிக் கிடந்தன பிணங்கள். பெருங்குழிகள் தோண்டி கொத்துக்கொத்தாகப் போட்டுப் புதைத்தார்கள். குழந்தை, பெண், ஆண், ஏழை, பணக்காரர், சாதி, மதம், மொழி, இனம் என்று நாம் பிரித்துவைத்திருக்கும் எல்லாப் பாகுபாடுகளையும் அருகருகே கோத்து, மண்ணோடு மண்ணாக்கி மூடியது மண். அப்போதும் சரி, அதற்குப் பின் ஒவ்வொரு டிசம்பர் 26 அஞ்சலி நிகழ்ச்சியிலும் கடற்கரையில் நின்று கண்ணீர் பொங்க கடலில் பால் குடத்தைக் கவிழ்க்கும் பெண்களைப் பார்க்கும்போதும் சரி, கடல் மரணத்தின் மாபெரும்

குறியீடாக மாறி மறையும். எவ்வளவு அற்பமானது இந்த வாழ்க்கை?

 

இருட்டைக் கிழித்த நான்குருக்கள்

எங்கெங்கோ ஓடும் எண்ணங்களை ஒரு குரல் அறுத்து வீசுகிறது. பெண் குரல். திரும்பிப் பார்க்கும் முன் இரு உருவங்கள் கடக்கின்றன. ஓட்டமும் நடையுமாக. பின்னாடியே இரண்டு சின்ன உருவங்கள். அழுகையும் விசும்பலுமாகத் தடதடவென்று ஓடுகின்றன. என்னவென்று ஊகிக்கும் முன்னே இருட்டில் அந்த முதல் உருவம் கீழே விழுகிறது. அனேகமாக ஆண். தட்டுத் தடுமாறி எழுகிறது. பின்னால், துரத்திச் சென்று தூக்கும் பெண் உருவத்தைத் தள்ளிவிடுகிறது. மிதிக்கிறது. மறுபடியும் கீழே விழுந்து எழுந்து மீண்டும் ஓங்கி ஓங்கி உதைக்கிறது. அலறல். இனம் காண முடியாத அலறல். இதற்குள் பின்தொடர்ந்து ஓடிய இரு சின்ன உருவங்கள் உதைக்கும் கால்களைக் கட்டிக்கொள்கின்றன. அவையும் சேர்ந்து ஓலமிட்டு அழுகின்றன. ஆண் உருவம் அவற்றைப் பிய்த்தெறிய முற்படுகிறது. ஒரு சின்ன உருவத்தைப் பிடித்துத் தூக்கி மணலில் வீசி எறிகிறது. திடுக்கிடும் ஏனைய இரண்டு உருவங்களும், வீசியெறியப்பட்ட சின்ன உருவத்தை நோக்கி ஓட, ஆண் உருவம் தான் ஏற்கெனவே ஓடிய திசையில் மறுபடியும் ஓட ஆரம்பிக்கிறது. ஓடி... ஓடி இருட்டில் கரைகிறது.

ஓடிப்போய் அருகில் நெருங்கினால், அடிபட்ட குழந்தையை மடியில் போட்டுக்கொண்டு, மண்ணை உதறிவிட்டு அழுதுகொண்டிருக்கிறார் ஒரு பெண். மூவரும் அழுதுகொண்டிருக்கிறார்கள். அடித்து உதைத்துவிட்டு ஓடியது சாந்தியின் கணவர். சாந்தியின் பிரச்சினை தமிழகக் கடற்கரைப் பெண்கள் பெரும்பாலானோரைக் கதறவைக்கும் அதே பிரச்சினை. குடி!

 

அழுகும் குடும்பங்கள்

“ஒரே ஊருதாண்ணே. ரெண்டு பேரும் விருப்பப்பட்டுதாம் கல்யாணம் கட்டிக்கிட்டோம். நல்ல மனுசன். தானுண்டு தன் வேலை உண்டுன்னு இருப்பாரு. இப்பதாம்ணே ரெண்டு வருசமா... இந்த பாழாப்போன குடிப் பழக்கம். ஆரம்பத்துல கடலுக்குப் போயி, கரைக்குத் திரும்பயில மட்டும் குடிச்சிட்டு வந்தாரு. அப்பொறம், கடலுக்குப் போவயிலயே குடிக்க ஆரமிச்சுட்டாருண்ணே. அப்பொறம், கடலுக்குப் போவாத நாள்லயும் கடக்கரயில உக்காந்து குடிக்க ஆரமிச்சாரு. அப்பொறம், வீட்டுலயே உக்காந்து குடிக்க ஆரமிச்சாரு. இப்பம் எந்நேரமும் குடி... குடி... குடிதான்!

ரெண்டு மாசத்துக்கு முன்னாடிதான் கொடலு, ஈரலு எல்லாம் வெந்துபோயி ஆஸ்பத்திரியில சேத்தோம். உயிரு போயி உயிரு வந்துச்சு. பத்து நா கட்டுப்பாடா இருந்த மனுசன் திரும்பவும் குடிக்க ஆரமிச்சுட்டாரு. தாலிய மொதக்கொண்டு வித்து குடிய மறக்குற வைத்தியத்துக்கு அழச்சுக்கிட்டுப் போயிருந்தேண்ணே. ‘திரும்பக் குடிச்சிட்டு வந்தீன்னா செத்துருவ’ன்னு சொல்லித்தான் வைத்தியம் செஞ்சி அனுப்புனாங்க. இப்பம் திரும்பவும் ஆரம்பிச்சிட்டாருண்ணே” என்று அழும் சாந்தியைப் பார்த்துப் பிள்ளைகள் மேலும் அழுகின்றன.

“அவரு நல்ல மனுசன்ணே. நடுராத்திரில விசுக்குனு எந்திரிச்சு உட்காந்துக்குறாரு. தலயில அடிச்சுக்கிட்டு அழுவுறாரு. ‘என்னால, குடிக்காம இருக்க முடியல சாந்தி, என்னக் கொன்னுடு’ன்னு சொல்லி தலயிலயும் மாருலயும் அடிச்சிக்கிட்டு அழுவுறாருண்ணே. புள்ளைங்கன்னா, அவருக்கு உசுரு. என்னயும் அடிச்சதில்ல. புள்ளைங்களயும் அடிச்சதில்ல. இப்பம் ஒரு வாரமா என்கிட்டயும் புள்ளைங்க கிட்டயும் யாரோ ஆம்பளைங்ககிட்ட பேசுற மாரி பேசுறாருண்ணே. ‘என்னய கடல்ல வெச்சிக் கொல்லதானடா திரிஞ்சீங்க. நேத்திக்கு நீதானடா அடிச்ச?’ன்னு என்னென்னமோ பேசுறாரு. அடிக்கிறாரு. குடிக்கக் காசு கொடுக்காட்டி வீட்டக் கொளுத்திடுவேன்னு கேஸத் தொறந்துவுடுறாருண்ணே. வெளியிலயே அவர அனுப்பாதீங்கன்னு ஆஸ்பத்திரியில படிச்சுப் படிச்சுச் சொல்லிருந்தாங்க. இப்பம் கடலுக்குப் போனாலே போவேன்னு ஓடுறாருண்ணே. ஐயோ... செல்லம்... அப்பா நம்மள வுட்டு ஓடுறாருடா... நான் என்ன பண்ணுவேன்னே தெரியலியே...” - பிள்ளைகளை அணைத்துக்கொண்டு அழும் சாந்தியின் குரல் கடல் காற்றில் கலக்கிறது.

 

கடற்கரை முழுக்கக் குரல்கள்

இந்தப் பயணத்தில், ஒவ்வொரு கடற்கரையிலும் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைப் பற்றிக் கேட்கும்போது ஆண்கள் பட்டியலிடும் பிரச்சினைகள் ஊருக்கு ஊர் மாறுபடும். பெண்களைப் பொறுத்த அளவில் அவர்களுடைய பிரதான பிரச்சினை குடி ஒன்றுதான்.

“கடக்கரயில இன்னைக்குக் குடிக்காத ஆம்பிளயத் தேடணும் பாத்துக்கிடுங்க. குடிச்சிட்டு தொழிலுக்குப் போறதில்ல. வூட்டுல உள்ள பொம்பள எதனாச்சும் காசத் தேத்தி வெச்சிருந்தா, அதையும் அடிச்சிட்டுப் போயி குடிக்கிறது. வூட்டுல உள்ளவங்களைப் போட்டு அடிக்கிறது, கடசியா வயிறு வீங்கிச் சாவுறது... இதாம் கடக்கர சேதின்னு ஆயிடுச்சு. சாவு சேதின்னு வந்தா ஒண்ணு, புத்து இல்லன்னா, காமால சாவு. கடக்கரயில உசுர மட்டும் இல்லீங்க, குடும்பத்தயும் சேத்துக் குடி கொன்னுக்கிட்டிருக்கு. போற உசுரு வெறும் உசுரா மட்டும் போறதில்ல. வூட்டுல உள்ள சொத்து பத்து, நக நட்டு எல்லாத்தயும் அழிச்சுட்டு, ஊரு முழுக்க அஞ்சு காசு, பத்து காசு வட்டிக்குக் கடன் வாங்கி வெச்சிட்டு, குடும்பத்த சந்தில நிக்கவெச்சிட்டுப் போவுது. ஆம்பள இல்லாம இவ்வளவு கடனோட ஒரு பொம்பள எப்படிய்யா தனிச்சு நின்னு கர சேக்க முடியும்? சின்ன பொண்ணுங்க சிக்கித் தவிக்குதுங்க. மருங்கி மருங்கிச் சாவுதோம்யா...” - கொஞ்சம் வயது முதிர்ந்த அம்மாக்கள் யாரிடம் பேசினாலும் குடியைப் பற்றித்தான் கொட்டித் தீர்க்கிறார்கள்.

 

கோடித்துணி கேட்கும் கோடி

தமிழக அரசு டாஸ்மாக் மூலம் மதுத் தொழிலைக் கையில் எடுத்த 2002-03-ல் மாநிலத்தின் மது விற்பனை ரூ. 2,828 கோடி. இப்போது 2013-14-ல் ரூ. 21,680 கோடி. குடி நம் மக்களிடமிருந்து கோடிகளை மட்டும் பறிக்கவில்லை; அவர்கள் உயிரையும் குடும்பத்தையும் சேர்த்தே பறித்துக் கொண்டிருக்கிறது. யாருக்கும் தெரியாத சுனாமியாய் மஞ்சள் காமாலை என்ற பெயரில் எல்லோர் கண்களையும் மூடி தமிழ்நாட்டின் ஈரலையே அழுகடித்துக்கொண்டிருக்கின்றன ‘லிவர் சிரோசிஸ்’ மரணங்கள். தவிர, அதீத ஆல்கஹால் பயன்பாடு ஏற்படுத்தும் மனச்சிதைவும் சேர்ந்து பாதிக்கப் பட்டவர்களைச் சீரழிக்கிறது.

குடி ஒரு போதைப் பழக்கம் என்பதைத் தாண்டி குடிநோயாகிச் சீரழிப்பதைக் குடிப்பவர்களும் உணர்கிறார்கள். ஆனால், வெளியே வர வழி தெரியவில்லை என்கிறார்கள் பெரும்பாலானவர்கள்.

“எப்படியாச்சிம் வெளிய வந்துரணும்னுதாம் பாக்குறோம்ணே. முடியல. வூட்டை நெனச்சாலே வெறுப்பா இருக்கு. நம்ம தொழிலுக்கு ஒடம்புதாம் மொதலீடு. அது கெட்டுப்போச்சு. புள்ளைங்க கிட்ட போனா மூஞ்சத் திருப்புது. வேலையும் ஒழுங்கா பாக்க முடியல. வேல பார்க்குற எடத்துல மருவாத இல்ல. பொஞ்சாதிக்கும் சொமயாக்கிட்டிருக்கோம். கடன் மேல கடனா சேருது. குடி குடியைக் கெடுத்து நாசம் பண்ணுதுன்னு புரியிதுண்ணே. ஆனா, வெளிய வர வழி தெரியலே...” - கையில் முகம் புதைத்துத் தேம்பித் தேம்பி அழும் மனிதனைத் தேற்ற வார்த்தைகள் இல்லை. கடல் எல்லாப் பாவங்களையும் பார்த்துக்கொண்டிருக்கிறது.

(அலைகள் தழுவும்...)

- சமஸ், 

 

http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF/article6395501.ece?ref=relatedNews

 

  • தொடங்கியவர்

கடல்புறத்தில் ஒரு ஷூட்டிங்!

 

9_2102288g.jpg

 

8_2102287g.jpg

முட்டம் விடுதிகள்

 

10_2102283g.jpg

சின்ன முட்டம் தனியார் டீசல் நிலையமும் அரசுசார் டீசல் நிலையமும்.

 

11_2102284g.jpg

 

12_2102285g.jpg

துறைமுகத்தில் சூடு பறக்கும் வியாபாரம்

 

13_2102286g.jpg

 

7_2102282g.jpg

மணப்பாடு கடற்கரை

 

பிலோமினாக்கா கேரளப் புகழ் பழரோஸை ஒரு கையிலும் (பழரோஸ் அறியாதவர்கள் கேரளத்து வாழைப்பழ பஜ்ஜி என்று அறிக!) இஞ்சி டீயை ஒரு கையிலும் திணித்தபோது, செல்பேசியில் மணி இரவு மணி 12-ஐ நெருங்கிக்கொண்டிருந்தது. கூடவே சுடச்சுட இஞ்சி டீ. இடம்: கன்னியாகுமரி, சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகம்.

“யக்கா, எத்தனை மணிக்குக்கா இங்கெ வருவீங்க?”

“சாயங்காலம் நாலஞ்சு மணி வாக்குல வருவன் தம்பி. ராத்திரி ரெண்டு மணி வரைக்கும் வியாவாரம். ஆனா, பலகாரம் போட்டு எடுத்தாற நேரத்தையும் சேர்த்துக்கணுமில்ல? பக சாப்பாடு முஞ்சதுமே வேலையைத் தொடங்கணும். எப்படியும் பன்னெண்டு மணி நேர வேலையின்னு வெச்சிக்கயேன்...”

“எவ்ளோவுக்குக்கா ஓடும்?”

“அது ஓடும், நாளைப் பார்த்தாப்புல... அஞ்சாயிரம் வரைக்கும் ஓடும் தம்பி. ஆயரூபா மிஞ்சும்னு வெச்சிக்கோயேன்...”

பிலோமினாக்காவை அடுத்து வரிசையாக உட்கார்ந்திருப்பவர்களில் பாப்பாக்கா வெற்றிலை, பாக்கு விற்கிறார். செஸ்மியக்கா பீடி, சுருட்டு விற்கிறார். ஒரு நாளைக்கு ஆயிரத்திலிருந்து இரண்டாயிரம் ரூபாய் வரைக்கும் விற்பனையாகும் என்கிறார்கள். கிட்டத்தட்ட நூறு பேர் இப்படிச் சில்லறை வியாபாரிகள் மட்டும் இருக்கிறார்கள்.

சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகம் அப்படியொன்றும் பெரிதல்ல. படகுகள் நிறுத்த போதிய இடம் இல்லாததால், கொஞ்சம் தூரத்தில் உள்ள தூத்தூர்காரர்களே கொச்சியில்தான் படகுகளை நிறுத்துகிறார்கள். சின்னத் துறைமுகம். 200 படகுகள் இங்கிருந்து மீன்பிடிக்கச் செல்கின்றன. ஆனால், இந்தப் படகுகளை வைத்து வெளியே பிழைப்பவர்களின் எண்ணிக்கையே சில ஆயிரங்களைத் தாண்டுகிறது. ஒரு நாளைக்கு துறைமுகத்துக்கு ஏற்ற இறக்க மட்டும் நூற்றுக் கணக்கான லாரிகள் வந்து செல்கின்றன.

துறைமுகத்துக்கு வெளியே வரிசையாக இருக்கும் டீசல் பெட்ரோல் நிலையங்கள் பெயருக்குதான் பெட்ரோல் நிலையங்கள். எல்லாம் டீசல் நிலையங்கள். ஒரு படகுக்குச் சராசரியாக 2,000 லிட்டர் டீசல் வாங்குகிறார்கள். ஆழ்கடல் தொழிலுக்கு நீண்ட நாட்களுக்குச் செல்லும் படகுகள் என்றால், ஒரு படகுக்கு 15,000 லிட்டர் வரை டீசல் வாங்குகிறார்கள். சென்னை, அண்ணா சாலையில் பரபரப்பான இடத்தில் இருக்கும் பெட்ரோல் நிலையத்தில் நாள் முழுவதும் விற்கப்படும் டீசலுக்குச் சமம் இது. எவ்வளவு பெரிய வியாபாரம்? வெளியே உள்ள டீசல் நிலையங்களிலிருந்து கேன்களில் டீசல் வாங்கி, ஆட்டோக்களின் பின்புறம் ஏற்றி வந்து படகுகளில் நிரப்புகிறார்கள் படகுக்காரர்கள். துறைமுக வளாகத்தில் இருக்கும் அரசுத் துறை நிறுவனம் நேரடியாக நிறுவிய டீசல் நிலையமோ சீரழிந்து, மூடப்பட்டு நாய்களின் புகலிடமாகக் கிடக்கிறது.

தமிழ்நாட்டில் குறைந்தது 100 இடங்களில் இப்படியான படகுத் துறைகளை அமைக்கலாம்.

முட்டம் ஞாபகத்தில் இருக்கிறதா? ‘கடலோரக் கவிதைகள்’ முதல் ‘கடல்’ படம் வரைக்கும் படப்பிடிப்பு நடந்த தளம். அற்புதமான கடற்கரை. சுற்றுலாப் பயணிகள் பார்த்தால் விட மாட்டார்கள். இந்திய அரசாங்கத்துக்கு எப்போதோ, திடீர் ஞானோதயம் வந்து விடுதிகளைக் கட்டிவிட்டிருக்கிறது. அந்தோ, பாவம்... கன்னியாகுமரியிலிருந்து செல்ல நேரடி பஸ்கூட இல்லாத ஊருக்கு எப்படிப் போவார்கள்? ஒரு சாப்பாட்டுக் கடைகூட இல்லாத கடற்கரையில் யார் தங்குவார்கள்? விளைவு, கட்டுமானங்கள் சிதைந்து கிடக்கின்றன. மணப்பாடுக்குச் செல்பவர்கள் கோவா நினைவுகளில் ஆழ்வார்கள். அப்படியொரு அழகு. அங்கும் அதே கதைதான். கடற்கரையில் குளிக்கவும் குடிக்கவும் கிணற்றில்தான் தண்ணீர் இறைக்க வேண்டும். எழில் அள்ளும் தனுஷ்கோடிக்குச் செல்ல சாலைகளே கிடையாது... அடுக்கிக்கொண்டே போகலாம்.

உலகெங்கும் சுற்றுலாத் துறையில் ஓராண்டில் புழங்கும் தொகை ஒரு டிரில்லியன் டாலர்கள். நாட்டின் பணக்கார மாநிலங்களில் ஒன்றான கோவாவின் பொருளாதாரம் அதன் கடற்கரைகளில்தான் மையம் கொண்டிருக்கிறது. வருஷத்துக்கு 20 லட்சம் பேர் கோவா வந்து போகிறார்கள். கடலூரில் சுற்றுலாத் துறையை வளர்த்தெடுத்தால், அங்குள்ள அபாய ஆலைகள் அத்தனையையும் மூடிவிடலாம். அதைக் காட்டிலும் பெரிய வருவாயைத் தரக் கூடும்.

நம் கண்ணுக்கு எது மட்டும் பொருளாதாரமாகத் தெரிகிறது? சூழலை நாசமாக்காத சுற்றுலா மூலம் உள்ளூர் மக்களின் வாழ்க்கையை எப்படியெல்லாம் உயர்த்தலாம்? ஆண்டுக்கு ஒரு டிரில்லியன் டாலர்கள் புழங்கும் சுற்றுலாத் துறையை நாம் எப்படி அணுகுகிறோம் என்பதற்கான உதாரணங்கள் மட்டும் அல்ல இவை. தமிழகத்துக்குக் கிடைத்த கொடைகள் இவையெல்லாம். ஆனால், எத்தனை பேருக்குப் பார்க்கக் கிடைத்திருக்கும்? கடல் சூழல் நாசமாகிறது; யாருக்கும் கவலையில்லை என்றால், எப்படிக் கவலைப்படுவார்கள்? அறியாத ஒரு விஷயத்துக்காக யார் கவலைப்படுவார்கள்?

தமிழகக் கடலோரத்தில் எடுக்கப்பட்ட எந்தவொரு திரைப்படமும் அங்குள்ள மக்கள் வாழ்வை துல்லியமாகப் படம் பிடித்ததில்லை என்ற குற்றச்சாட்டு கடலோடிகள் சமூகத்தில் உண்டு. தனுஷ்கோடி சென்றிருந்தபோது, அங்கே ஒரு படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்தது. படத்தின் பெயர் ‘ஒரு ஊர்ல ரெண்டு ராஜா’ என்றார்கள். “வாட் எ ரொமான்டிக் பிளேஸ்யா?” என்று நம்முடைய சினிமாக்காரர்கள் பேசிக்கொண்டிருந்த இடம் ஐம்பது ஆண்டுகளுக்கு முன் புயலில் சின்னாபின்னாமான தேவாலயம். பல நூறு பேர் புயலுக்கு அடைக்கலம் புகுந்து கடலில் ஜலசமாதியான இடத்தில் குத்தாட்ட உடையில் ப்ரியா ஆனந்த் உட்கார்ந்திருக்கிறார்.

புரியவில்லையா? இந்த அத்தியாயத்தின் ஒவ்வொரு வார்த்தைகளும் ஒன்றுக்குள் ஒன்று பிணைந்தவை!

(அலைகள் தழுவும்...)

-சமஸ், தொடர்புக்கு

http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B7%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D/article6400430.ece?homepage=true&theme=true

 

 

 

  • தொடங்கியவர்

கடலோடிகள்கிட்ட கடலை ஒப்படைச்சுடுங்க!- வறீதையா கான்ஸ்தந்தின் பேட்டி

 

varidhyaia_2104537f.jpg

 

முனைவர் வறீதையா கான்ஸ்தந்தின், கடலோடிகள் சமூகத்தைச் சேர்ந்தவர். கடல் வளம் கற்பிக்கும் பேராசிரியர். சமூக ஆய்வாளர். தமிழகக் கடலோடிகளின் வாழ்க்கைப்பாட்டையும் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளையும் உரக்கப் பேசும் ‘அணியம்’, ‘கரைக்கு வராத மீனவத் துயரம்’ உள்ளிட்ட பல நூல்களின் ஆசிரியர்.

வறீதையா தான் எழுதுவதைத் தாண்டி இன்னொரு முக்கியமான காரியத்தைச் செய்கிறார். கடற்கரைச் சமூகத்தின் குரல்களைப் பேசும் 30-க்கும் மேற்பட்ட நூல்களைத் தன்னுடைய ‘நெய்தல் வெளி’ பதிப்பகம் மூலம் கொண்டுவந்திருக்கிறார். கடல், கடலோடிகளின் பிரச்சினைகளை வரலாற்றுப் பின்புலத்திலும் விஞ்ஞான அடிப்படையிலும் நேர்மையாக அணுகுகிறார் வறீதையா.

 

ஒரு சாதாரணப் பேராசிரியர் என்ற நிலையிலிருந்து உங்கள் சமூகத்துக்காகச் செயல்படுபவராக உங்களை மாற்றிய தருணம் எது?

ஊருல நல்ல சேலாளின்னு பேர் வாங்கினவரு எங்கப்பா. கடல் வாங்கலா, கொந்தளிப்பா இருக்குறப்போகூட பள்ளத்துலேர்ந்து ரெண்டு மரம் கடலுக்குப் போகுதுன்னா ஒண்ணு கான்ஸ்தந்தினோடதா இருக்கும்பாங்க. அப்பிடிப்பட்ட மனுஷனா இருந்தாலும், என்னோட சின்ன வயசுல பல நாள் பசியைப் பார்த்திருக்கேன். பஞ்ச காலம் கடல்புறத்தோட கூடப் பொறந்ததா இருந்துச்சு. பஞ்ச காலத்துல ஒரு நாளைக்கு ஒரு வேளை சமைக்கிறதே வீட்டுல பெரிய விஷயமா இருக்கும். எத்தனையோ அப்பாமார்கள் ஆழ்கடலுக்குத் தங்கலுக்குப் போய் மீன் கெடைக்காம, அவங்க சாப்பிடக் கொண்டுபோன கட்டுச்சோத்தைச் சாப்பிடாமத் திரும்பக் கொண்டுவந்து பிள்ளைங்களுக்குச் சாப்பிடக் கொடுக்குறதைப் பார்த்திருக்கேன்.

இந்த வறுமையெல்லாம் சின்ன வயசுல, ஏதோ நம்ம குடும்பச் சூழல்னு நெனைச்சுக்கிட்டிருந்தேன். பின்னாடி கொஞ்சம் கொஞ்சமாத்தான் புரிஞ்சுது நம்மளோட சகல கஷ்ட நஷ்டங்களும் நாம சார்ந்திருக்குற சமூகத்தோட, அரசியலோட, அரசாங்கத்தோட பின்னிப் பிணைஞ்சதுன்னு. கல்லூரி நாட்கள்ல என்னோட பேராசிரியர் சோபணராஜ் சொல்வார், ‘மனுஷன்னா சமூகத்துக்காக எதாவது செய்யுணும்டா’னு. சுனாமி என்னைத் தள்ளுற அந்தத் தருணமா அமைஞ்சுது.

 

எந்த வகையில் சுனாமி உங்களைப் பாதித்தது?

சுனாமி வந்தப்போதான் நம்மூர்ல பலருக்குக் கடக்கரையில கடல் மட்டும் இல்ல; மனுஷனும் இருக்கான்கிறதே தெரியவந்துச்சு. என்னைப் பொறுத்த அளவுல எங்க மக்கள் இந்தச் சமூகத்தோட எந்த விளிம்புல இருக்காங்கங்கிறதை சுனாமியைத் தொடர்ந்து நடந்த கூத்தெல்லாம் உணர்த்துச்சு. பசி தீர்க்கிறோம்னு சாம்பார் சாதமும் தயிர் சாதமும் கட்டிக்கிட்டு வந்தவங்க கடக்கரை மக்கள் அதைச் சாப்பிடலைன்னதும் கொந்தளிச்சுப்போனாங்க. ‘என்ன திமிர் பாருங்க, இவனுங்களுக்கு... இப்போகூட சாப்பிட மீன் கேட்குது’ன்னு வெளிப்படையா பேசினாங்க. அவங்க பக்கத்துலேர்ந்து பார்த்தா இது நியாயம். ஆனா, நியாயம் இந்தப் பக்கத்துலேயும் இருக்கு.

வீட்டுல அரிசி வாங்கக்கூட காசு இருக்காது. வெறும் கருவாட்டைச் சுட்டுத் தருவாங்க. அதாம் பஞ்ச காலத்துல சாப்பாடு. மீனுங்கிறது வெளியிலதான் விசேஷமான உணவு. கடக்கரையில அதைவிட மலிவானது எதுவுமில்ல. சொல்லப்போனா, எங்களுக்கு அரிசிச் சோறு ஆடம்பரமான உணவு. ஒரு கடலோடிக் குடும்பத்துல பொறந்தவனுக்கு, மரச்சீனிக்கிழங்கு போதும். ஆனா, தொட்டுக்கக் கருவாடாவது வேணும். இன்னைக்கு நேத்து இல்ல; பல ஆயிரம் வருஷங்களா இதுதான் சாப்பாட்டு முறை. எங்களோட உணவுப் பழக்கம் மட்டும் இல்ல இது; ஒரு சமூகத்தோட பண்பாட்டுக் கூறு.

பசியில வாடுற ஒரு ஐயர் குடும்பத்துக்கு அசைவத்தைக் கொடுத்துச் சாப்பிடச் சொல்ல மாட்டீங்க. அது தப்புன்னு உங்களுக்குத் தெரியும். ஆனா, கடலோடிகளுக்கு முழுச் சைவத்தைக் கொடுத்துச் சாப்பிடச் சொன்னப்போ, அவங்க சங்கடப்பட்டது உங்களுக்குத் திமிரா தெரியுது. காரணம் என்ன? எங்களைப் பத்தி உங்களுக்கு எதுவும் தெரியாது. சாப்பாட்டுல மட்டும் இல்ல, இந்த அணுகுமுறை. எல்லாத்துலேயும் இருக்குது. கடலை மேலாண்மை பண்ணுறதைப் பரிந்துரைக்கிறதுக்கு எம்.எஸ். சுவாமிநாதனை நியமிச்சீங்களே... கடலுக்கும் அவருக்கும் என்ன சம்பந்தம்?

அப்போ ஒரு சமூகவியலாளனா எனக்கு என்ன தோணுச்சுன்னா, தப்பு சமூகத்து மேல மட்டும் இல்ல; நம்ம பக்கமும் இருக்கு. மொதல்ல நாம நம்ம பக்கத்தைப் பத்தி வெளியே பேச ஆரம்பிக்கணும்னு முடிவுசெஞ்சேன். எறங்குனேன்.

 

அதற்கு நீங்கள் தேடிக்கொண்ட வழிதான் எழுத்தா?

ஆமாம். கருத்துதான் சமூகத்தைப் பொரட்டிப்போடும்னு உறுதியா நான் நம்புறேன். இன்னைக்கு உலகத்துல சமூக விடுதலையை நோக்கி நகர்ற எந்தச் சமூகமும் அது உருவாக்குற கருத்தாக்கங்களால்தான் முன் நகருது.

 

இன்றைக்குத் தமிழகக் கடலும் கடற்கரை மக்களும் எதிர்கொள்ளும் பிரச்சினைகளின் அடிப்படைக் காரணங்களாக எவற்றைப் பார்க்கிறீர்கள்?

ரெண்டு காரணங்களைச் சொல்லலாம். ஒண்ணு, கடலோடிகள் கடலுக்கு முகத்தையும் சமூகத்துக்கு முதுகையும் காட்டிக்கிட்டு இருக்குறது. தன்னைச் சுத்தி என்ன நடக்குதுன்னே சொரணையில்லாம கெடக்குது எங்க சமூகம். ரெண்டாவது, கடக்கரைக்கு வெளியிலேர்ந்து வர்ற கூட்டம் பெரிய மொதலீட்டோட ஆவேசமான பசியோட வருது. உலகம் முழுக்க இயற்கையோட வளங்களை வெறியோட பார்க்குற சந்தைப் பொருளாதாரத்தோட தாக்கம் அதுகிட்ட இருக்கு. இது ரெண்டுமா சேர்ந்து பொதுச் சமூகத்துக்கு வெளியிலேயே எங்களை வெச்சிருக்கு. முக்கியமா அரசியலுக்கு வெளியே நாங்க நிறுத்தப்பட்டிருக்கோம். அதுதான் இவ்வளவு பிரச்சினைங்களுக்கும் ஆணிவேரு.

 

அரசியல்தான் அடிப்படைக் காரணம் என்று எப்படிச் சொல்கிறீர்கள்?

ரொம்ப தூரம் போக வேணாம். கேரளத்தை எடுத்துக்கு வோமே. கேரளத்தோட கடக்கரை நீளம் 595 கி.மீ. கிட்டத்தட்ட நம்ம கடக்கரை நீளத்துல பாதி. ஆனா, நாட்டுலேயே மீன் உற்பத்தில மொத எடத்துல அவங்கதாம் இருக்காங்க. பத்து வருஷத்துக்கு முன்னாடியே நம்மளைவிடப் பத்து மடங்கு முன்னாடி இருந்தாங்க, துறைமுகம், தூண்டில் வளைவு, அணுகுசாலைன்னு கடல் தொழில் கட்டமைப்புகளை உருவாக்குறதுல. இன்னைக்குத் தமிழ்நாட்டுலேயே அதிகமான மீன்பிடி நடக்குறது கன்னியாகுமரி மாவட்டத்துல. ஆழ்கடல் மீன்பிடி இங்கேதான் அதிகம். ஆனா, அவங்க பிடிக்கிற மீன் கணக்கு எதுவும் தமிழ்நாட்டுக் கணக்குல வராது. கேரளத்துக் கணக்குலதாம் போவும். அவங்களுக்கான வசதி எதுவும் இங்கே இல்ல. அங்கெ இருக்கு. காரணம் என்ன?

2007 மார்ச்ல ராமேசுவரம் பகுதியில மீன்பிடிச்சுக்கிட்டிருந்த கிருஷ்ணாங்கிற படகு காணாம போகுது. அதுல பன்னெண்டு பேர் கடலோடிங்க இருக்காங்க. அதுல ஒரேயொருத்தர் மலையாளி. தன்னோட மாநிலத்தைச் சேர்ந்த அந்த ஒத்த ஆளுக்காக ஹெலிகாப்டரை அனுப்பித் தேடுது கேரள அரசாங்கம். டெல்லிக்கு நிர்ப்பந்தம் மேல நிர்ப்பந்தம் கொடுத்து இலங்கை அரசாங்கத்தோட பேசச் சொல்லுது. டெல்லியையே உலுக்குது. ஏன், இத்தாலிக்காரங்களால ஒரு கேரள மீனவர் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம் சர்வதேச விவகாரம் ஆகிடுச்சே, காரணம் என்ன?

 

இலங்கைக் கடற்படை தமிழனைச் சுடுற மாரி ஒரு நாளும் ஒரு கேரளத்தவனைச் சுட முடியாது; நடக்குற கதையே வேற. காரணம் என்ன?

கேரளத்துல கடலோடிகள் சமூகத்தோட குரல் அரசியல்ல ஒலிக்குது. அங்கெ அவங்களோட பங்கேற்பு அரசியல்ல இருக்கு. இங்கெ இல்லை. அதாம் காரணம்.

ஆனால், கடல் சூறையாடப்படுவதெல்லாம் உங்கள் சமூகத்தின் பங்கேற்பு இல்லாமலா நடக்கிறது?

கடல் சூறையாடப்படுறதை எந்தவொரு பாரம்பரியக் கடலோடியும் நியாயப்படுத்த மாட்டான். அதே சமயம், ஒருத்தன் தப்பு செய்யிறான்னா எது அவனைத் தப்பு செய்ய வைக்குதுங்கிறதையும் நாம யோசிக்கணும்.

 

வெளிப்படையாகப் பேசுவோம். கரைக்கடலை நம்முடைய விசைப்படகுகளும் டிராலர்களும் சூறையாடுகின்றன. இதற்கு என்ன தீர்வை முன்வைக்கிறீர்கள்?

ஒரே தீர்வுதான். கரைக்கடல்ல கட்டுமரங்கள், வள்ளங்கள்னு பாரம்பரியக் கலங்களை மட்டும் அனுமதிக்கணும். விசைப் படகுகள், டிராலர்களை ஆழ்கடலை நோக்கித் தொரத்தணும்.

 

கச்சத்தீவு விவகாரத்தில் உங்கள் நிலைப்பாடு என்ன?

கச்சத்தீவு இந்திய நெலத்துலேர்ந்து 12 கல் தொலைவுல இருக்கு; இலங்கை நெலத்துலேர்ந்து 16 கல் தொலைவுல இருக்கு. அது யாரோடதுங்கிறதுக்கு இதைவிடப் பெரிய வியாக்கியானம் வேணாம்.

 

ஆனால், கச்சத்தீவை மீட்டுவிட்டால் எல்லாப் பிரச்சினைகளும் தீர்ந்துவிடும் என்கிற நினைப்பு அபத்தமானது அல்லவா? ஒருபக்கம் இங்கே நம்முடைய பாரம்பரியக் கடலோடிகளைச் சுரண்டல் மீன்பிடி பாதிப்பதுபோலவே, அங்கே இலங்கை யின் பாரம்பரியக் கடலோடிகளும் பாதிக்கப்படுகிறார்கள். இதையும் கணக்கிலெடுத்துக்கொள்ள வேண்டும் அல்லவா?

ஆமா. கச்சத்தீவை மீட்டா எல்லாம் மாறிடும்னு நெனைக்கிறது ஒரு மாயை. அரசியல் பிழைப்புக்கான வழிகள்ல ஒண்ணு. கச்சத்தீவு நமக்கு வேணும். ஆனா, கச்சத்தீவைத் தாண்டி நாம யோசிக்கணும். அங்கெ உள்ளவங்களும் மனுஷங்கதானே? கடலைச் சுரண்டறதைத் தடுக்க தீவிரமான நடவடிக்கை எடுக்கணும். ஆழ்கடல் மீன்பிடி முறையை நவீனமாக்கி ஊக்குவிக்கணும்.

ஆனால், ராமேசுவரம் போன்ற பகுதிகளில் கடல் ஆழம் குறைந்த இடங்களில் ஆழ்கடல் மீன்பிடி முறை எடுபடுமா?

நிச்சயமா. அங்க உள்ளவங்க ‘பீட்டர் பேங்க்’னு சொல்லுவாங்க. அந்தப் பகுதி வழிய தாண்டினா, நாம ஆழ்கடல் மீன்பிடிக்குப் போகலாம். ஆனா, ராமேசுவரம் கடலோடிகள் பகல் பொழுதுல, பக்கத்துலேயே போய் தொழில் பண்ணிப் பழகிருக்காங்க. அந்தத் தொழில் கலாச்சாரத்தை மாத்த நாம நடவடிக்கை எடுக்கணும்.

இன்னும், கடலையும் கடக்கரையை ஆக்கிரமிக்குற ஏனைய தொழில்கள், கடலுக்குள்ள நடக்குற அக்கிரமங்கள் எல்லாத்தைப் பத்தியும் நாம பேசலாம், அடிப்படையில் ஒரே தீர்வுதான். கடலோடிகள்கிட்ட கடலை ஒப்படைச்சுடுங்க. கடல்ல என்ன செய்யணும்னு கடலோடிகளைக் கேட்டுச் செய்யச் சொல்லுங்க. எல்லாம் சரியாயிடும்!

(அலைகள் தழுவும்...)

- சமஸ், 

 

http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%80%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF/article6404189.ece?ref=relatedNews

  • தொடங்கியவர்

மொதல்ல இங்க ஒத்தும வேணும்யா!- ஜோ டி குரூஸ் பேட்டி

 

joe_d_cruz1_2108268f.jpg

 

சென்னை, ராயபுரத்தில் நெரிசலான வீடுகளில் ஒன்றின் சின்ன அறை. சரக்கு மற்றும் கப்பல் போக்குவரத்தில் முன்னணியில் இருக்கும் நிறுவனம் ஒன்றின் தலைவரின் அறை அது என்றால், யாரும் நம்ப மாட்டார்கள். “இதுதாம் நம்ம எழுத்துலகம், வர்றீயளா கடக்கரைக்குப் போய்ப் பேசலாம்?” - சிரிக்கிறார் ஜோ டி குரூஸ். ‘ஆழி சூழ் உலகு’, ‘கொற்கை’ நாவல்களின் மூலம் தமிழ்க் கடலோடிகளின் பல்லாயிரமாண்டு வரலாற்றையும் வாழ்க்கையையும் ரத்தமும் சதையுமாகத் தந்தவர். கடலோடி, படைப்பாளி என்பதைத் தாண்டி, உலகெங்கும் தான் சார்ந்த தொழில் நிமித்தம் சுற்றியவர். கடலோடிகளின் நேற்று, இன்று, நாளைபற்றிப் பேசச் சரியான ஆள்.

எண்ணூர் கடற்கரை. “வசதி வரும் போவும்... மனுசம் பழச மறக்கக் கூடாது. அதாம் ராயபுரத்துல இருக்கம். இங்க வீட்டப் பூட்டற பழக்கமில்லய்யா. சுத்தி நம்ம சனம். எதுக்குப் பயம்? உவரியில எங்காத்தா கடல் பக்கம் புள்ளயள வுட மாட்டா. ஆனா, எத அவ செய்யக் கூடாதுன்னு சொன்னாளோ, அதத்தாம் செஞ்சம். விடியப் பொறுக்காம ஓடிப் போயி கடக்கரயில நிப்பம். வலயோட கட்டிக்கிட்டுக் கட்டுமரத்தக் கர வுடுவாறு தாத்தா தொம்மந்திரை. கோவண ஈரம் சொட்டச் சொட்ட நிக்கிற அவுரு காலக் கட்டிக்கிட்டு நிப்பம். காத்துக் காலமா இருந்தா, ஆழிமேல உருண்டு அடிபட்டு வருவாங்க. பருமல் முறிஞ்சி, பாய் கிழிஞ்சி, நெஞ்சில அடிபட்டு, பேச்சிமூச்சி இல்லாம, கை கால் ஒடிஞ்சி, பாக்க பரிதாவமா இருக்கும். காலம் எவ்வளவோ ஓடிட்டு. எஞ் சனத்தோட நெலம மாறலீயே?” - கடற்கரையில் கிடக்கும் கட்டுமரம் ஒன்றில் உட்காருகிறார்.

 

திடீரென்று எழுத்துலகில் நுழைந்தீர்கள். எடுத்த எடுப்பில் எழுதிய நாவலே தமிழின் முக்கியமான நாவல்களில் ஒன்றானது. அடுத்த நாவல் சாகித்ய அகாதெமி விருது பெற்றுத்தந்தது. பெரிய வாசிப்புப் பின்னணியும் உங்களுக்கு இருப்பதாகத் தெரியவில்லை. எது இதைச் சாத்தியமாக்கியது?

மொதல்ல, ஒரு கவிதைத் தொகுப்பக் கொண்டுவர்றதுக்காகத்தாம் ‘தமிழினி பதிப்பகம்’ போறம். அங்க ஒரு மேல்தட்டுக் கும்பல் கேலி பண்ணிச் சிரிக்கிது. அவமானம் தாங்க முடியல. அடிக்கணும்போல இருக்கு. தமிழினி வசந்தகுமார் அண்ணன் சொல்றார், ‘கன்னத்துல கையால அடிக்காத, அடிக்கிறத உன்னட எழுத்தால நெஞ்சுல அடி’ன்னு. பா. சிங்காரத்தோட ‘புயலிலே ஒரு தோணி’ நாவலைக் கொடுக்குறார். ரெண்டே நாள்ல படிச்சி முடிச்சிட்டு எழுதறம், எங்காத்தா குமரியே எனக்குள்ள வந்து புகுந்திற்றமாரி இருந்திச்சி. நிக்க, நடக்க, சாப்புட, தூங்க நேரமில்ல. எங்கெல்லாம் உக்கார்ந்து எழுதினம் தெரியுமா? வீடு, ரயிலடி, தொறைமுகம், கடக்கர... ஒலகம் முழுக்க எங்கெல்லாம் சுத்துறேனோ, அங்கெல்லாம். கங்காரு குட்டியத் தூக்கிக்கிட்டே திரியுமாமே அப்பிடி, எழுதுனத எந்நேரமும் சட்டைக்குள்ளயே வெச்சிக்கிட்டு அலைஞ்சம். என்னமோ ஒரு நெனப்பு, இது உன்னிது இல்லடா, பல்லாயிரம் வருஷமா பேசாத ஒரு சமூகத்தோடதுன்னு. இப்பவும் அதே நெனப்பாத்தாம் ஓடுறம்.

 

உங்கள் சமூகத்தில், உங்கள் எழுத்து எதிர்மறையான அதிர்வுகளைத்தான் உண்டாக்கியது, இல்லையா?

ஆமா, ரொம்ப அப்பாவிச் சனங்க… லேசுல உணர்ச்சிவசப்படறவங்க. அவங்ககிட்ட ஊருல அரைகுறையா படிச்சவம்லாம் சேந்து, நம்மளப் பத்தி அசிங்கமா எழுதிட்டாம்னு ஒண்ணுக்கு ரெண்டாப் பரப்பிவிட்டாம். போதாக்குறைக்குச் சில பாதிரிமாருங்க இந்தப்

புஸ்தகத்தை எரிச்சா மோட்ச ராச்சியம் உடனே சமீபிக்கும்ங்கவும் அவனவம் வீட்டுக்கு போன் அடிச்சி மெரட்டுறாம். ஊருக்குள்ள நொழஞ்சா ரெண்டு துண்டா வெட்டிக் கடல்ல வீசுவோம்னு மெரட்டுறாம். ஆனா, இப்ப எங்க சனத்துக்கு உண்ம புரியிது… எல்லாத்தயும் எல்லா நாளும் ஏமாத்த முடியாதுல்ல?

 

இந்த ஒதுக்கலைத் தாண்டி தமிழ் இலக்கிய உலகம் உங்களை ஆரத் தழுவியது; ஆனால், நீங்கள் அவர்களிடமிருந்து ஒதுங்கியே இருப்பதாகச் சொல்கிறார்கள்...

நெசத்தச் சொல்லட்டுமா? ஒரு இலக்கியவாதியா என்னய நானே இன்னும் ஏத்துக்கல. இங்க பல தகுதியான ஆளுங்களுக்கு இன்னும் சாகித்ய அகாதெமி விருதே கொடுக்கப்படல. எனக்குக் கெடைச்சது கூச்சமடைய வெக்கிது. ஒரு விழாவுல, பக்கத்துல உக்காந்திருந்தவர் பின்நவீனத்துவம்னு என்னென்னவோ பேசிட்டு, எங்கிட்ட கருத்து கேட்டார். நான் பின்நவீனத்துவம்னா என்னான்னே தெரியாதுன்னேன். எங்கிட்ட இருக்கிறதெல்லாம் அனுபவ ஞானமும், கத கேட்டு வளத்துக்கிட்ட கேள்வி ஞானமும்தாம். எஞ் சனத்துக்கு நாஞ் செய்ய வேண்டியது நெறய இருக்குய்யா. நமக்கு மேடயெல்லாம் வேணாம், எஞ் சனத்துக்கு உணர்வு வந்தாப் போதும்.

 

உங்களுடைய எழுத்துகளில் கிறிஸ்தவம் மீது கடுமையான விமர்சனம் வெளிப்படுகிறது...

இன்னிக்கும் திடீர்னு ஒரு தும்ம வந்தாக்கூட, ‘யேசுவே ரட்சியும்’ங்கிற வார்த்தயும் கூடவே வந்து விழற உண்மயான கிறிஸ்தவந்தாம் நா. ஆனா, எங்க இனத்தோட வரலாற்றயும் பண்பாட்டயும் தலமயையும் கிறிஸ்தவம்தாம் தீத்துக்கெட்டிட்டுன்னு புரிஞ்சுவெச்சிருக்கம். இதுவரைக்கிம் பாக் நீரிணையில மட்டும் பல நூறு கடலோடிங்க இலங்கைக் கடற்படையால சுட்டுக்கொல்லப்பட்டிருக்காங்க. வாட்டிகன்லேந்து ஒரு காக்கா, குருவி சத்தம்கூட வருல்லிய, ஏன்னு கேட்டா குத்தமா?

ஆனால், உங்கள் விமர்சனங்கள் மதம் என்கிற ஒட்டுமொத்த அமைப்பையும் கேள்விக்குள்ளாக்குவதாக இல்லை. மாறாக, இந்து மதத்தின் பெருமைகளைத் தூக்கிப் பிடிக்கின்றன. பூர்வகுடிகளின் வரலாற்றையும் கலாச்சாரத்தையும் பேசும் நீங்கள், மத ஆதிக்கம்பற்றிப் பேசும்போது, ஒரு மதத்தைத் தகர்த்துவிட்டு, அந்த இடத்தில் இன்னொரு மதத்தை உட்காரவைக்க முனையக் காரணம் என்ன?

முப்பத்து முக்கோடி தேவர்கள்னு சொல்லிட்டு, எடயிலயே யாராச்சும் யேசுவயும் மாதாவயும் காட்டுனா அதயும் சேத்துக் கும்புட்டுகிட்டுப் போய்க்கிட்டே இருக்கிறது ஒரு மதத்தோட பாரம்பரியம் இல்ல. இந்த மண்ணோட பாரம்பரியம். தென்மொனயில இருக்குற குமரியாத்தா எங்க குலதெய்வம் மட்டுமில்ல, எங்க இனத்தோட அடயாளம். நான் யேசுவக் கும்பிடறதாலயே குமரியாத்தாள மறக்கணும்னு நீங்க நிர்ப்பந்திச்சிங்கன்னா, எங்க குலதெய்வத்த மட்டும் நீங்க ஒதுக்கல; கூடவே, எங்க இனத்தோட அடயாளத்தயும் பண்பாட்டயும் சேத்தே ஒதுக்குகிறீங்க. அதத்தாம், விமர்சிக்குறம். வேற எந்த மதத்தயும் நான் தூக்கிப்பிடிக்கல.

உங்களுடைய வழிபாட்டு முறை நாட்டார் வழிபாட்டு முறை அல்லவா? மதம் சார்ந்து கிறிஸ்தவம் உங்களைச் சுரண்டியது என்றால், மறுபக்கம் இந்து மதமும் உங்களுக்கு ஒன்றும் உயர் பீடத்தைக் கொடுத்துவிடவில்லையே? இந்து மதத்தின் சாதிய அதிகார அடுக்குகளின் விளிம்பில்தானே கடலோடிகள் சமூகம் இருக்கிறது?

இந்துன்னு ஒரு மதம் இருக்குறதாவே நான் நெனைக்கல. இது ஒரு வாழ்க்க மொற, கலாச்சாரம். இந்துன்னா, எல்லாத்தயும் ஏத்துக்குற அதி பக்குவம். இதுதாம் நான் பாக்குற இந்து. அதைத் தாண்டி மதம், அதுல உள்ள சாதிய அடுக்கு இது எதயும் நான் ஏத்துக்கல.

 

நீங்கள் இடதுசாரி இல்லை என்று அறிவித்தீர்கள்; அப்படியென்றால், வலதுசாரி என்று கொள்ளலாமா?

அய்யா சாமி, நான் வலதுசாரியுமில்ல, இடதுசாரியுமில்ல, மக்கள்சாரி.

 

தேசிய அளவில் பிரதமர் பதவிக்கு மோடியை ஆதரித்தவர்களில்நீங்களும் ஒருவர். இந்துத்துவ அமைப்புகளுடனான உறவின் தொடர்ச்சி என்று உங்கள் நிலைப்பாட்டைக் கொள்ளலாமா?

நா எல்லார்கிட்டயும் பேசுறவம். அதனாலயே, இவம் இப்பிடின்னு முத்திரைக் குத்திற முடியாது. மோடி மேல இருக்குற நம்பிக்கையும் மதிப்பும் அவரோட செயல்பாட்டால உருவானது. பெரிய குடும்பப் பின்னணி இல்லாத ஒரு தனிமனுஷன் தன்னோட அசாதாரண உழைப்புனால, ஒரு நாட்டோட பிரதமரா உயர்ந்துருக்காருன்னா, அது இந்திய ஜனநாயகத்தோட வெற்றி. என்னோட நம்பிக்கை வீணாகப் போறதில்ல. நீங்க பாப்பீங்க.

 

மோடி பிரதமரான பின் அரசப் பிரதிநிதிகளோடு தொடர்ந்து பேசுகிறீர்கள்; சில திட்டங்களை முன்மொழிந்தீர்கள் என்றெல்லாம் செய்திகள் வந்தன. என்ன திட்டம் அது?

இந்தியக் கடக்கரையோட நீளம் 8,118 கி.மீ. நமக்குக் கிடைச்சிருக்குற அரிய வளம் இவ்வளவு நீளக் கடக்கரையும் கடலும். ஆனா, கடல்ல என்ன நடக்குதுங்கிறது, கடத் தொழில்ல உள்ள பணக்கார முதலைங்களைத் தவிர வேற யாருக்குமே தெரியாது. ஒண்ணுமில்ல, பேக்வாட்டர்ம்பீங்களே… அந்தப் பின்நீரிணையை மட்டும் பயன்படுத்தி, எத்தன எடங்கள்ல உள்நாட்டுப் படகுப் போக்குவரத்தயும் பொழுதுபோக்கு அம்சங்களயும், மீன் உற்பத்தியையும் பெருக்கலாம் தெரியுமா? உழைச்சு உசுரக் கொடுக்குற கடலோடிச் சமூகமும் ஒண்ணுமில்லாம நிக்கிது. வருமானம் போய்ச்சேர வேண்டிய அரசாங்கமும் ஒண்ணுமில்லாம நிக்கிது. இந்த ரெண்டுக்கும் தீர்வு காணுறதுக்கான வழிங்களைச் சொல்லியிருக்கம். முக்கியமா, கடலோடிகளோட பங்கேற்பு இல்லாம கடலோரப் பாதுகாப்போ, கடல் மேலாண்மயோ சாத்தியமே இல்லன்னு சொல்லியிருக்கம்.

 

இந்திய அளவில் பேசுகிறீர்கள். தமிழகக் கடலோடிகளின் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை யோசித்திருக்கிறீர்களா?

மொதல்ல இங்க ஒத்தும வேணும்யா. சங்க இலக்கியத்துல, கடல் தொழில் செய்யிற அத்தன பேரயும் பரதவர்ங்கிற ஒத்த வார்த்ததாம் குறிக்கிது. அந்த ஒரு குழு இன்னக்கி, பரவர்,பர்வதராஜர், செம்படவர், ஓடக்காரர், முக்குவர், நுழையர், பட்டங்கட்டி, வலயர், வலைஞர், கடையர், அம்பலக்காரர், கரையர், முத்தரயர், செட்டி, நாட்டார், பட்டினவர், பள்ளி, மரைக்காயர், வருணகுல முதலின்னு எத்தன குழுவா செதைஞ்சி கெடக்கு? இதுக்குள்ள ஊருக்கு ஊரு, தெருவுக்குத் தெருன்னு எத்தனயெத்தன குழுக்கள்? மொதல்ல இந்தப் பிரிவின, ஏத்தத்தாழ்வு, வெட்டுக்குத்தெல்லாம் நீங்கணும்.

கடலோரக் கிராமங்களின் ஒற்றுமையின்மைக்கும் வன்முறைக் கலாச்சாரத்துக்கும் என்ன காரணம்?

அடிப்படையில வேட்டையாடிச் சமூகம்தானே? இங்கெ ஒவ்வொருத்தனும் அவம் மனசுல கடலுக்கே ராசா. முதலாளி - தொழிலாளி மொறயே கடக்கரயில கெடயாது கவனிச்சீங்களா? எல்லாம் பங்குமொறதாம். ஒரு ராசாவுக்கு இன்னொரு ராசாவப் புடிக்குமா? யாராவது ஒருத்தம் ஆதிக்கம் செய்யிறமாரி தெரிஞ்சா அடுத்தவம் சீறுவாம். இது கலாச்சாரம். ஆனா, காலம் மாறுறதுக்கேற்ப, நாமளும் மாறணுங்குறம். துரதிர்ஷ்டவசமா, நம்ம கல்வி மொற அதுக்கு உதவல. சமூக அக்கறையயும் அரசியல் விழிப்புணர்வயும் கொடுக்குறதுக்குப் பதிலா, சுயநலத்தயும் சுரண்டலுக்குத் தொணபோறதயும்தாம் சொல்லிக்கொடுக்குது.

 

கடல் சூழலைச் சீரழிக்கும் சுரண்டல்களில் கடலோடிகளின் கைகளும் இருக்கின்றன. சுரண்டல்களைத் தடுப்பது எப்படி?

கடலயும் கரயையும் பேணிக்காக்குறதுல எல்லாத்தயும்விட கடலோடிச் சமூகத்துக்குக் கூடுதலான அக்கற வேணும். சூறயாடல் நடக்குன்னா, எங்காளுங்களும் காரணம். இதுல ஒளிச்சு மறைக்க ஒண்ணுமில்ல. இத நிறுத்தணும். ஆபத்தான ரெட்டமடி, சுருக்குமடி,கொல்லிமடிங்கள கடக்கரயிலிருந்து மொத்தமா பறிமுதல் செஞ்சி வீசணும். கரைக்கடல்லயும், அண்மைக்கடல்லயும் நாட்டுப் படகுகளுக்கு மட்டும் அனுமதி கொடுக்கணும். விசைப்படகு, டிராலரையெல்லாம் ஆழ்கடலுக்குத் தொரத்தணும். ஆழ்கடல் தூண்டில் தொழில் ஊக்குவிக்கப்படணும். அதேமாரி கடக்கரயையும் சூழல் பாதிப்பு ஏற்படாம நாம பேணிக் காக்கணும். அரசியல் விழிப்புணர்வு வேணும். எங்க எதிர்காலத்த நாங்களே தீர்மானிக்க ஒரு அரசியல் தலைமய உருவாக்கணும்.

உங்களுக்கு அரசியல் கனவு உண்டா?

குளச்சல் சைமன், கொட்டில்பாடு துரைசாமி, தூத்துக்குடி குருஸ் பர்னாந்து, ஜே. எல். பி. ரோச், தியாகி.பெஞ்சமின், பொன்னுசாமி வில்லவராயர், ஜி. ஆர். எட்மண்ட், என். ஜீவரத்தினம், கே. சுப்ரமணியம், எடப்பாடி சின்னாண்டி பக்தர், மூக்கையூர் குழந்தைசாமி… இவங்கெல்லாம் யாருன்னு இன்னக்கி பொதுச் சமூகத்துல யாருக்காச்சும் தெரியுமா? கடலோடிகளுக்காக உசுரக் கொடுத்து ஒழைச்ச மகராசன்வ. பேருக்காக இல்ல; உணர்வால ஒழைச்சவங்க. நானும் அப்பிடித்தாம் ஒழைக்கணுமின்னு நெனைக்கிறம். அது அரசியல் வழியாத்தாம் ஆவும்னா நா ஒதுங்கி ஓட மாட்டம்!

(அலைகள் தழுவும்…)

- சமஸ்

 

http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%92%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%9C%E0%AF%8B-%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%82%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF/article6411627.ece?ref=relatedNews

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.