Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முன்னால் போராளிகளின் வேண்டுதல்கள் , வேதனைகள் : புலம்பெயர்ந்து வாழும் எம் உறவுகளுக்கு ஈழத்தில் இருந்து முன்னாள் பெண் போராளியின் வேண்டுகோள்

Featured Replies

Mv%201_CI.jpg

அன்பான உறவுகளே எம் மக்களின் விடுதலைக்காக எம்முடன்  புறப்பட்டு தமது இன்னுயிரை ஈந்த மாவீரர் குடும்பங்களும், மாவீரர் ஆகாது உயிரைக் கையில் பிடித்து வாழும் எங்களுக்காகவும்  சற்று சிந்தியுங்கள்...

எங்கள் மாவீரருக்காக நீங்கள் ஏற்றும் தீபங்கள் அவர்களை மகிழ்விக்க வேண்டுமானால் அவர்களின் குடும்பங்களின் வாழ்வில் முதலில் ஒளியேற்ற வேண்டும்...

சமூக வலைத்தலங்களில் எங்கள் உருவப்படங்கள் மிளிர்கின்றன...  ஐரோப்பிய மண்டபங்களில் கண்ணை மின்னும் ஒளி தீபங்கள் மிளிர்கின்றன... ஆனால் எமது வீட்டின் அடுப்புகளில் விறகில்லை... எங்கள் குழந்தைகள் கற்பதற்கு விளக்கில்லை....

எம் அன்புக்குரியவர்களே புலம்பெயர் நாடுகளில் மாவீரர் வாரங்களில் மண்டபங்களிலும் – மிகையான கொண்டாட்டங்களிலும் கொட்டப்படும் பணம் இங்கு வாழும் ஆயிரம் ஆயிரம் மாவீரர் குடும்பங்களின் வாழ்வில்  ஒளியேற்றட்டும்.. ஆலயங்களிலும், தேவாலயங்களிலும் உங்கள் வீடுகளிலும் மாவீரர்களை நினைவுறுத்தி லட்சக்கணக்காண உங்கள் நாட்டுப் பணத்தை இங்குள்ள நம்மவர் குடும்பங்களுக்கு அனுப்பினால் எங்கள் மாவீரர்களின் கனவுகள் நிட்சயம் நனவாகும்.

அவர்களின் கனவுகள் நனவாக இவற்றை நிறைவேற்றுவீர்களா??????

புலிகள் எமது மண்ணில் உயிர்ப்புடன் இருந்த காலத்தில் முன்னெடுக்கப்பட்ட மாவீரர் குடும்பங்களின் நலன்காப்பிற்கான பொறிமுறையை  ஏற்படுத்தி அவர்களிற்கான வாழ்வாதார உதவியினை செய்தல்.

அவயவங்களை இழந்து எந்த ஆதாரமுமின்றி வாழ வழியின்றி தேற்றுவாரின்றி  நிற்கதியாய் நிற்கும் எமது போராளிகளை பராமரிப்பதற்கான ஏற்பாடுகளை செய்தல்.

புனர்வாழ்வு என்ற போர்வையில் தடுத்து வைக்கப்பட்டு விடுவிக்கப்பட்டும் இன்னமும் இராணுவப் புலனாய்வாளரின் தொடர்ச்சியான தொல்லைகளாலும் சமூகத்தின் புறந்தள்ளலாலும் மனம் முறிந்து செய்வதறியாத நிலையில் நடுத்தெருவில் விடப்பட்ட போராளிகளிற்கு உதவித்தொகை வழங்கி அவர்களின் வாழ்வாதாரத்திற்காக சுயதொழில் உதவிகளையும் வேலை வாய்ப்பையும் ஏற்படுத்திக் கொடுத்தல் .

சிறைகளில் வாடும் அரசியற்கைதிகளும் அவர்களின் குடும்பங்களும் எந்தவித உதவிகளும் இன்றித் தனித்து விடப்பட்டு துவண்டு கொண்டிருக்கிறார்கள். அவர்களின் குடும்பங்களிற்கு பண உதவிகள் வழங்கி, அவர்களின் வழக்கிற்குகளிற்கான செலவுகளையும்பொறுப்பெடுத்தல்.

எமது மக்கள் எமது மண்ணில் நாள்தோறும் முகம் கொடுக்கும் பிரச்சனைகளை சட்டரீதியில் அணுக கூடியவாறான சட்டவல்லுனர்கள் குழாமை நிறுவி அதன் தொடர்ச்சியான விரைவான செயற்பாட்டிற்கான நிதியை ஏற்படுத்திக் கொடுத்தல்.

கிராமியக் கட்டமைப்புக்களிற்கு புத்துயிர் அளித்து அதன் மூலமாக சமூக செயற்பாடுகளை முன்னெடுத்தல்.

போரில் ஏற்பட்ட இழப்பிற்களாலும், தோல்வியாலும் வயது வேறுபாடின்றி உளவியல் தாக்கங்களிற்கு உள்ளாகித் துன்பப்பட்டுக் கொண்டிருக்கும் எமது மக்களிற்காக இலவச உளவள ஆற்றுப்படுத்தல் சேவைகளை வழங்குவதற்கான பொறிமுறையை ஏற்படுத்தல்.

எமது மக்கள் எமது மண்ணில் வாழ வழி செய்யக்கூடிய அத்தனை சாத்தியமான கட்டமைப்புக்களையும் ஏற்படுத்தல். இவற்றை செய்வீர்களா?????

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/113882/language/ta-IN/article.aspx

Edited by Athavan CH

இதுதான் மாவீரர்களுக்கு நாம் செயும் உண்மையான வணக்கமாக இருக்கும்

  • தொடங்கியவர்

2015ஆம் ஆண்டு மாவீரர் நாளிலும் நாடுகடந்த அரசின் மாவீரர் நினைவாலையத்திலும் எனது படத்தை தொங்கவிடுங்கள்

 

கடற்புலி - நிரூபன் (PK, Canon-23 heavy weapon) ஆகிய சீழ்வடியும் சாந்த குமார்

 

Niruban_CI.jpg

படுக்கையில் - நிரூபன்

 

விடுதலைக்காக புறப்பட்டு மரணித்த, வீர காவியமாக மாறிய அனைத்து போராளிகளுக்கும், போராட்டத்தில் கொல்லப்பட்ட எம் மக்கள் அனைவருக்கும், சிரம் தாழ்த்தி நெஞ்சார்ந்த வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.... உங்கள் தியாகங்கள் என்றோ ஒரு நாள் போலிகளை  கூட்டெரிக்கும்..... 


இந்தப் பதிவு புனைவு அல்ல – போலி அல்ல – பாட  போதனை அல்ல -– தமிழருக்கு ஒன்றுமே இல்லாத தெற்கின் அரசியல் மாற்றமும் அல்ல -  வியாபாரமும் அல்ல - உண்மையின் தரிசனம்..... ஓரு சிலர் கேட்ட எம்மவர் வரத்தின் தரிசனம்....


ஆம்... எம் நேர்மையின் மீது, நாம் கடந்து வந்த பாதையின் மீது – நாம் நேசிக்கும் எம் ஊடக செயற்பாட்டின் மீது எம் தார்மீக உணர்வின் மீது – எமது இணையத்தின் மீது – ஆசிரியர் பீடத்தின் மீது எம் வானொலி மீது -  தம் நிலை உணராத அற்பர்கள்விடுத்த சாவாலுக்கான முதலாவது பதிவு... இதற்கான சகல ஆதாரங்களும் எம்மிடம் உண்டு.. தவிர்க்கப்பட வேண்டிய பல பெயர்கள் தவிர்க்கப்பட்டு உள்ளன. எதிர்வினையாற்ற விரும்புகிறவர்கள் மறைந்து நிறு கல்லெறியாது சொந்த பெயரில் முகவரியில் பதிலுறுக்க முடியும்...


இது ஒரு ஆரம்பம்! முடிவல்ல..... 

 

www.globaltamilnews.net

 
www.gtbc.fm
 
radiokuru@yahoo.com
 

நான் கடற்புலிகளின் கனரக ஆயுதங்கள் பாவிக்கும் குழுவில் இருந்த ஒரு குழுத்தலைவன். எனது இயக்கப் பெயர் நிரூபன் சாந்தகுமார் என்ற இயற் பெயருடைய எனது வயது இப்போ 30. என்னை உங்களுக்கு தெரியுமா?


என்னோடு போராடிய பலர் இப்போ ஒஸ்ரேலியாவிலும் கனடாவிலும் இருக்கிறீர்களே... பலதடவை உங்களுடன் பேச முற்பட்டேனே...  முன்பு களத்தில் இருந்தபோது PK, Canon-23 heavy weapon என்றால் உடனே என்னை ஞாபகப்படுத்தி இருப்பீர்கள்... இப்போ என்னை உங்களுக்கு தெரியாது... காரணம் இடுப்புக்கு கீழ் இயங்க முடியாத விழுப்புண்ணுடன் எப்போதும் மரணிக்கலாம் என மரணத்தைக் காத்திருக்கும் ஒரு ஏழைத் தாயின் மகன் தானே....


ஒரு காலத்தில் தரையில் சண்டை இருக்கும் போது எனது கனரக ஆயுத அணியைத் தானே  தரைப்புலிகள் தளபதிகள்  அழைப்பார்கள்.. அதுவும் என்னோடு போராடிய என்னை தெரிந்த இப்போது வெளிநாட்டில் இருக்கும் உங்களுக்கு இப்போ தெரிய நியாயம் இல்லை... காரணம் இடுப்புக்கு கீழ் இயங்க முடியாத விழுப்புண்ணுடன் எப்போதும் மரணிக்கலாம் என மரணத்தைக் காத்திருக்கும் ஒரு ஏழைத் தாயின் மகன் தானே....


இறுதி யுத்தத்தில் விழுப்புண் அடையாது, நானும் முன்னைய யுத்தம் ஒன்றில்  மரணித்திருந்தால் இன்று உலகம் முழுவதுமாக கொண்டாடப்படும் மாவீரர் தினங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் ஒரு சுட்டி விளக்குடன் உருவப்படமாக இருந்திருக்கலாம்... எனக்கு கவிதை எழுதியிருப்பீர்கள்.... இந்தியாவில் பாட்டு இயற்றி சமூக வலைத் தளங்களில் ஏற்றி இருப்பீர்கள்... கட்டுரை எழுதியிருப்பீர்கள்... கூடவே மரணித்த பின் நான் நேசித்த என் தலைவரால் லெப்.கேணல்  பட்டம் வழங்கப்பட்டு இருக்கும்... அத்தைகைய தரத்தில்தான் இருந்தேன்... இவை எல்லாம் குறைந்த பட்சம் என் ஏழைத் தாயிற்கு ஒரு கௌரவமாகவும் இருந்திருக்கலாம்....

ஆனால் படுக்கையை விட்டு இறங்க முடியாது இருக்கும் என்னை பார்ப்பதற்கு என் ஏழைத் தாய் கூலி வேலைக்கு போகிறார்... இயக்கத்தில் இருந்த என் உற்ற நண்பர்கள் சிலர் பெயின்ட் அடித்து பணம் அனுப்புகிறார்கள்...

மாற்றுவதற்கான சாரத்திற்கு ஆகவும், ஓடிக்கலோனுக்காவும்.... அவர்களும் புலம்பெயர் நாடுகளில் இருந்து பணத்தை அனுப்பவில்லை.... தமது ரூபாய்  உழைப்பில் மிச்சமாக்கி தருகிறார்கள்...


என் இயலாமையால் எனது முகநூலை துண்டித்து விட்டேன்.... எத்தனை பேரிடம் உதவி கேட்டு இருப்பேன், பிச்சை போடுங்கள் என மண்டியிட்டு இருப்பேன்... எவரும் உதவவில்லையே...


இப்படி ஒரு அறிவித்தலையும் நண்பர்கள் வெளியிட்டு இருந்தார்களே..


உதவும் கரங்களை எதிர்பார்த்து படுத்த படுக்கையில் இருக்கும் விடுதலைப் புலிகளின் முன்னால் போராளி:-


ஈழத்தமிழ் இளைஞனின் உயிரைக்காப்பாற்ற உதவும் கரங்களுக்கு உதவும் கரங்களை எதிர்பார்த்து படுத்த படுக்கையில் இருக்கும் விடுதலைப்புலிகளின் முன்னால் போராளியான நிரூபன் த/பெ சாந்தகுமார் , வயது 30, என்பவர் தற்போது வவுனியா செட்டிக்குளம் அரச மருத்துவமனையில் சிகிச்சைக்காக காத்துக் கொண்டிருக்கிறார். இவர் 2009.03.18 ஆம் திகதியன்று ஈழத்தில் நடந்த யுத்தத்தில் விழுப்புண் அடைந்தார்.


அதன் காரணமாக இடுப்புக்கு கீழ் முற்றாக செயலிழந்து விட்டது. அன்றிலிருந்து இன்றுவரை படுத்தபடுக்கையிலே உள்ளார். இவருக்கு படுக்கை புண் மிக மோசமான நிலையில் இருந்த போது, ஒரு மாதத்திற்கு முன்னர் முகப்புத்தகம் வாயிலாக (பேஸ்புக்) இவரது சிகிச்சைக்காக உதவி கேட்டும் , யாரும் உதவ முன்வரவில்லை.


தற்போது காச நோயாலும் பாதிக்கப்பட்டு உயிராபத்தான நிலையில் உள்ளார். எமது சகோதரன் நிருபனின் உடல்நிலை மிகவும் மோசமடைந்து செல்கிறது. எனவே இவரது மருத்துவ சிகிச்சைக்காக மனிதநேயமுள்ள உறவுகளே உதவுமாறு மிகவும் தாழ்மையுடன் வேண்டுகிறோம். என அறிவித்தும் இருந்தார்கள்???


எவருமே உதவவில்லையே ... காரணம் இடுப்புக்கு கீழ் இயங்க முடியாத விழுப்புண்ணுடன் எப்போதும் மரணிக்கலாம் என மரணத்தைக் காத்திருக்கும் ஒரு ஏழைத் தாயின் மகன் தானே....


நான் துன்பத்தின் உச்சியில் இருந்த போது யுத்தத்தில் தப்பி வந்து உங்கள் புலம்பெயர் தேசத்தில் லண்டனில் இருக்கும் எங்கள் இயக்கத்தின் முக்கிய தளபதியிடம் கூட உதவி கேட்டேனே... அவர் வசதி அற்றவர் அல்ல... எங்கள் கடற்புலியில் முக்கிய இடத்தில் இருந்தவர்... இப்போ பல இலட்சங்களுக்கு அதிபதி... அவருக்குக் கூட என்னை ஏமாற்ற எப்படி மனம் வந்தது....


பலருடைய வற்புறுத்தல்களால் இந்தியாவுக்கு வரவழைத்த அவர் அங்கு நிர்க்கதியாக விட்டு லொச்சில் தவித்தேன்...

இந்த நேரத்தில் தமிழகத் தோழர் .....ன் (தனது பெயரை் வரக் கூடாது எனவிரும்பும் உதவியாளர்) உதவியாளர்களின் சிறிய பண உதவியில் அல்லாடி எனது ஆசிய நண்பர்கள் சிலரின் கூலிவேலையால் கிடைத்த உதவியாலும் காத்திருந்தேன் உங்களது உதவிக்காக.. 

இந்திய ரூபாயில் 6000.00 ரூபாயை வங்கிக்கு அனுப்பி இதை விட உதவ முடியாது எனச் சொல்லி பிறிதொரு நாட்டில் அனாதரவாய் விட்டுவிட எப்படி உங்களுக்கு முடிந்தது...


காரணம் இப்போ புலம் பெயர் தேசத்தில் நீங்கள் நாட்டை மீட்கும் 5ஆம் கட்டப் போருக்கு தயாராகும் புலியாக மாறி இருக்கிறீர்கள்...  நானும் என்போன்றவர்களும் இடுப்புக்கு கீழ் இயங்காத படுக்கைப் புண்ணுக்கு உள்ளான சாதாரண ஏழைத் தாய்மாரின் பிள்ளைகள் தானே....


நான் இந்தியாவில் இருந்த போது இந்திய கனவானாகிய உணர்வாளர் சத்திரசிகிச்சை நிபுணர் வைத்தியகலாநிதி ம.....ம்... (இவரும் தன் பெயரை பிரபல்யப் படுத்துவதை விரும்பாதவர்) இந்திய மதிப்புக்கு 8 லட்சம் ரூபாய் (பிரித்தானிய பண மதிப்பில் இப்போதைய பெறுமதி 8ஆயிரம் பவுண்ட்) செலவுடைய சத்திர சிகிச்சையை 2 லட்சம் ரூபாய்க்கு பிரித்தானிய பணப் பெறுமதி 2000.00 பவுண்ட் வைத்தியசாலைக் கட்டணத்துடன் செய்வதாக கூறினாரே... (2013ஆண்டின் பிரித்தானிய மாவீரர் தின மண்டபச் செலவு அண்ணளவாக 87ஆயிரம் பவுண்ட்...) ஆனால் எவரும் எனக்கு உதவவில்லையே....


என்னுடன் இருந்த எனக்கு தெரிந்த என் நண்பர்களுக்கு தெரிந்த, புலம்பெயர்ந்து வாழும் எத்தனை முன்னாள் போராளிகளிடம் இந்த உதவியைக் கேட்டு இருப்பேன் யாரும் திரும்பியும் பார்க்கவில்லையே... என் மக்களுக்காக ஆயுதம் தூக்கியதை தவிர நான் என்ன தவறு செய்தேன்...


இறுதியாக எதுவுமே முடியாது மீண்டும் இலங்கை சென்று படுக்கையில் விழுந்தேன்.... குறைந்தது என் மன ஆறுதலுக்கு என்னுடன் பேசுமாறு எத்தனைபேரிடம் கெஞ்சியிருப்பேன்.... நீங்கள் பேசக்கூட இல்லையே... காரணம் நான் தீண்டத்தகாத விழுப்புண் அடைந்து மரணத்திற்காக காத்திருக்கும் படுக்கைப் புண்... நோயாளி ஆச்சே....


இனி நீங்கள் பேசினால் கூட என்ன பயன் கிடைக்கப் போகிறது... இப்போ நான் உடலாலும் உளத்தாலும் மனதாலும் சீழ் வடியும் சாந்த குமார்... போராளி - தளபதி – கடற்புலி நிரூபன் அல்ல... காரணம் அடுத்த கட்ட போருக்கு தயாராகும் உங்களுக்கு கடற்புலி நிருபன் தளபதி நிரூபன்  என்றால் சீழ் புண்ணுடன்  இருப்பதனால் இழுக்காக இருக்கலாம்...


ஆனாலும் எனக்கு புலம்பெயர்ந்த மக்கள் மீதும் எமது அமைப்பின் பெயரால் இயங்குபவர்கள் மீதும் அசைக்க முடியாத நம்பிக்கை உண்டு எனது மரணத்தின் பின்பு  2015ஆம் ஆண்டு மாவீரர் நாளிலும் நாடுகடந்த அரசாங்கத்தின் பிரதமர் ருத்திரகுமாரன் தலைமையில் அமைக்கப் போகும் பிரமாணட்டமான மாவீரர் நினைவாலையத்திலும் எனது படத்தை தொங்கவிட்டு மாலைபோட்டு, முண்டி அடித்து வந்து  சுட்டி விளக்கு எரிப்பீர்கள்... உங்களது அந்த கௌவரவத்  திருவிழாவில், ஒரு படம் பிடித்து, என் ஏழைத் தாய் உயிருடன் இருந்தால் அவரது விலாசத்திற்கு  உன் மகன் மாவீரர் என்று பெயரிட்டு அனுப்பி விடுங்கள்... ஏனென்றால் நீங்கள் வரையும் வீர காவியங்களை முகநூலில் பார்வையிட முடியாத ஏழை அவர்...... படத்தை பார்த்து மகிழக் கூடும்...
 

 

 

  • தொடங்கியவர்

விதைக்கப் பட்டவர்கள் ஒருநாள் முளைத் தெழுவார்கள்... போலிகளின் முகத் திரைகளை கிழித்தெறிவார்கள்

 

புலிகளின் முன்னாள் புலனாய்வுத் துறை பெண் போராளி - 

 

நான் கிழக்கைச் சேர்ந்த விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளி... (பாதுகாப்பு கருதி மாவட்டம் தெரிவிக்கப்படவில்லை) புலிகளின் புலனாய்வுத் துறையின் முக்கிய பணியில் இருந்தவள்...


யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த என்கணவரும் போராளி... புலனாய்வுத் துறையின் சினைப்பர் தாக்குதல் அணியின் முக்கியமானவரான இயங்கியவர்.. யுத்தத்தில் மாவீரர் ஆனவர்...

இறுதியுத்தத்தின் பின் முகாமில் இருந்து வெளியேறி, எனது வாழ்வில் ஒரு மாற்றம் ஏற்படுமா என்ற ஏக்கத்துடன் குழந்தைகளுடன் கணவரின் யாழ்ப்பாண வீட்டிற்கு சென்றேன்... அங்கே அதிர்ச்சி காத்திருந்தது.


வசதியான என் கணவரின் குடும்பம் “என்னைத் தெரியாது நீயார்” என்று கேள்விகளை தொடுத்து எனை வீட்டின் உள் செல்லவே அனுமதிக்காது மிகவும் கேவலப்படுத்தி துரத்திவிட்டார்கள்.... ஏனென்றால் ... (அதனை இங்கு தவிர்க்கிறேன்.... அது நம்மை வீழ்த்த காத்திருக்கும் பேரினவாதிகளுக்கும் அவரோடு கைகோர்த்திருக்கும் நம்மவருக்கும் ஒரு பிடியாகிவிடும்)


எனக்கு பெற்றோர் இல்லை.. 2க்கும் மேற்பட்ட குழந்தைகளுடன் (சரியான எண்ணிக்கை குறிப்பிடப்படவில்லை) யாழ்ப்பாணத்திலும் இருக்க முடியாது கிழக்கிற்கும் செல்ல முடியாது அலைந்தேன்... பழைய உடைகளை வீடு வீடாக திரிந்து சேர்த்து அணியும் நிலைக்கு நானும் பிள்ளைகளும் தள்ளப்பட்டோம்...


மதங்களின் மீது பிடிப்பில்லாத போராளியாக வாழ்ந்த நான் ஈற்றில் பெந்தோ கொஸ்த சபையிடம் சரணா கதி அடைந்தேன்.... அங்கிருந்து அவர்களின் உதவியால் பிள்ளைகளை ஒரு இடத்தில் விட்டு மத்திய கிழக்கிற்கு புறப்பட்டேன்... மிகச் சிறிய குழந்தைகளை பராமரிக்க வேண்டிய நிலையில் மற்றயவர்களிடம் தவிக்கவிட்டு பரிதவிக்கும் நிலையில் எமக்கு தெரிந்த முன்னாள் போராளிகளின் உதவியுடன் புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் சிலரோடு தொடர்பு கொண்டேன்...


அவர்களின் தொடர்பின் மூலம் இம்முறை அதிர்ச்சி காத்திருக்கவில்லை பதிலாக எம்மவரின்  அசிங்கம் என் முகத்தில் பட்டுத் தெறித்தது. நான் பேரழகி இல்லாவிடினும் அழகானவள்.. உதவி கேட்கப் போய் என் அழகை பங்கு போடுகின்ற அசிங்கமான கதைகளைத் தான் அவர்களிடம் என்னால் கேட்க முடிந்தது... போராட்டத்தின் பின் இப்படியும் ஒரு கேவலமான மனிதர்களை சந்திக்க வேண்டிய துர்ப்பாக்கியத்தை நினைத்து அழுதேன் இனி அழுவதற்கு கண்ணீர் இல்லை... என் துயரங்களால் அவை தீர்ந்து போயின...


இருந்த போதும் என் பிள்ளைகளுக்காக நான் வாழ வேண்டும்.... அவர்களை வளர்க்க வேண்டும்.... அதற்காகவாவது என் உயிரை பிடித்திருக்க வேண்டும்...


மனதால்  மரணித்து உடலால் இயங்கும் நான் இயக்கம் உயிர்ப்பில் இருந்த போது கொல்லப்பட்டு இருந்தால் லெப்டினன் கேணல் தரத்தில் இருந்த நான் தரமுயர்த்தப்பட்டு வீர காவியமாகி, இப்போ என் கணவனைப் போல் மாவீரர் பட்டியலில் இணைக்கப்ட்டு எனக்கும் விளக்கேற்றி இருப்பீர்கள்....


ஆனாலும் உயிருடன் இருக்கும் என் குழந்தைகளை பாதுகாக்க நானும், எனது உடலை அதன் அழகை ரசிப்பதற்கு பலரும், இன்னும் இருக்கிறார்கள் என்பதனை நினைக்கும் பொழுதும், மாவீரரனா என் கணவனுடையதும், அவர் போன்ற 50 ஆயிரத்திற்கு மேற்பட்ட மாவீரர்களுடைய உடல்களும் புதைக்கப்படவில்லை விதைக்கப்பட்டு இருக்கிறது என வருடா வருடம் வீர முழக்கம் செய்வதனைப் பார்க்கும் போதும்... மனது பூரிப்படைகிறது.


அது மட்டுமா? முள்ளிவாய்க்காலுக்கு பின் 5 வருடங்களாக புலம்பெயர் தேசங்களிலும் எம் போற்றுதற்குரிய மாவீரர் தினத்தை, எழுச்சியுடன் கொண்டாடுவதை நினைக்கும் போதும், என் மனமும் என்னைப் போன்று கைவிடப்பட்ட ஏராளம் மாவீரர்களின் மனைவிமாரின் மனங்களும், அவர்களின் பிள்ளைகளின், குடும்பங்களின் மனங்களும் பேரானந்தம் அடைகின்றன. புள்காகிதம் அடைகின்றன... காரணம் விதைக்கப்பட்டவர்கள் ஒருநாள் முளைத்தெழுவார்கள்... அப்போது அவர்கள் - போலிகளின் முகத்திரைகளை கிழிப்பார்கள்.... அதுவரை தொடரட்டும் மாவீரர் பணி.... 
 

 
 
  • கருத்துக்கள உறவுகள்

இதெல்லாம் குளோபல் தமிழின் சீப்பான ஊடக விபச்சாரம்.

 

1990 களில் மிகுந்த பொருண்மிய தடைகள் மத்தியிலும்.. தாயகத்தில்.. பணச் செலவோடு மாவீரர் தின நிகழ்வுகள் செய்யப்பட்டன தானே..????! அதனை எல்லாம் தடுத்து நிறுத்த ஏன் இவர்கள் கோரிக்கை வைக்கவில்லை..??!

 

தனி மனிதர்கள் சிலர் தங்கள் சொந்த வாழ்க்கை தொடர்பில் எடுக்கும் தீர்மானங்கள்.. அவர்கள் போராளியாக வாழ்ந்த காலத்தில் ஒரு அமைப்பின் ஒழுங்கு விதிக்கமைய வாழ்ந்ததற்கு உதாரணமாக முடியாது.

 

முன்னாள் போராளிகள் என்ற போர்வைக்குள் இருந்து கொண்டு இப்படியான நச்சுக்களை விதைப்பதை விட்டுவிட்டு.. மாவீரர்களை போற்றும் நினைவு கூறும் விடயத்தில் எளிமையும்.. உறுதியும் அவசியம் என்பதை சொல்லலாம்.

 

போர் தந்த சமூகத்தை கட்டி எழுப்ப வேண்டிய பொறுப்பை புலம்பெயர் சமூகம்.. உலகத் தமிழினம் உணராமல் இருக்கிறது என்ற குளோபல் தமிழின் அதிமேதாவித்தன.. ஊடக விபச்சாரம்.. இங்கு அவசியம் தானா..???! :icon_idea:

  • தொடங்கியவர்

"மாவீரர் குடும்பங்கள் மற்றும் போராளிகளின் நலன்பேணும் பொறுப்பினை எடுத்து அவர்களின் எதிர்காலத்திற்காக செயற்படுவேன்"

 

வலிவடக்கு பிரதேசசபை துணைத் தவிசாளர் சஜீவன் உடனான நேர்காணல் இது.. இந்த நேர்காணலுடன் கீழ் இணைக்கப்பட்டுள்ள அறிக்கை மாவீரர் நாள் தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை... இந்த செவ்வியில் வடக்கில் மாவீரர் குடும்பங்கள் - முன்னாள் போராளிகளின் குடும்பங்கள் - முன்னாள் போராளிகள் படும் துயரங்களை வெளிப்படுத்துகிறார்...

எதிர் வரும் நாட்களில் கிழக்கில் முன்னாள் போராளிகள் - அவர்களின் குடும்பங்கள் எதிர்நோக்கும் இன்னல்கள் வெளிவரவுள்ளது....

ஆ.ர்

 உலகமெங்கும் தமிழ்பேசும் மக்கள் வாழும் இடங்களில் மாவீரர் நாள் உணர்வெழுச்சியுடன் கொண்டாடப்படும் இவ்வேளையில், புலம்பெயர் வாழ் தமிழ்மக்களுக்கு ஒரு முக்கியமான செய்தியை தெரிவிக்க வேண்டியதும் கடமையாகின்றது.

புலத்தில் மாவீரரை நினைவுகூரும் இச்சந்தர்ப்பத்தில் தாயகத்தில் இன்னமும் நெருக்கடிகள், அழுத்தங்கள் மற்றும் பல்வேறு இன்னல்களை எதிர்கொண்டு அங்கவீனர்களாகவும், ஆதரவற்றவர்களாகவும் எதிர்கால நம்பிக்கைகள் ஏதுமற்ற நிலையில் வாழும் போராளிகளையும் மாவீரர்தம் குடும்பங்களையும் நினைவில் கொண்டு அவர்களின் வாழ்வியல் மேம்பாட்டுக்கான உதவிகளையும், செயற்பாடுகளையும் புலம்பெயர்ந்து வாழ்ந்துவரும் தமிழ் உறவுகள் மேற்கொள்ள முன்வர வேண்டிய தமிழ்த் தேசியப் பொறுப்பினை உணர்ந்து செயற்படவேண்டும் என்பதை உணர்வு பூர்வமாக சிந்திக்க வேண்டும்.

எமது அரசியல் வாதிகள் வெறுமனே தத்தம் அரசியல் அபிலாஷைகளை இலக்குவைத்து புலம்பெயர் மக்களின் நிதிகளை பெற்று செய்யும் பிரசார நோக்கிலான உதவிகள் அளப்பரிய தியாகங்களை செய்துவிட்டு ஆதரவின்றி தவிக்கும் மக்களுக்கு எதுவிதத்திலும் உதவப்போவது கிடையாது என்பதை தொலைநோக்குடன் புரிந்து கொள்ளல்வேண்டும்.

 

இச்சமயத்தில் "வெளிநாட்டு பத்திரிகையாளர் ஒருவர், முன் ஒருமுறை, தலைவர் வே.பிரபாகரன் அவர்களிடம்,தமிழீழம் அமையும்போது அந்த நாட்டில் நீங்கள் எத்தகைய பதவிப் பொறுப்பினை ஏற்பீர்கள் எனக் கேட்டார். அதற்கு பதில் அளித்த அவர், மாவீரர் குடும்பங்கள் மற்றும் போராளிகளின் நலன் பேணும் பொறுப்பினை எடுத்து அவர்களின் எதிர்காலத்திற்காக செயற்படுவேன்" என்று கூறிய வார்த்தைகளை இங்கு நினைவு படுத்துதல் அவசியமாகின்றது.

அவரது இலட்சியத்தை - கனவை புரிந்துகொண்டு புலம்பெயர் தமிழ்மக்கள், வெறும் பதவி கனவுகளுக்காக உழைக்கும் அரசியல்வாதிகளை நம்பி நிற்காமல் சரியான முறையில் சிந்தித்து அல்லலுறும் போராளிகள் மற்றும் மாவீரர்களின் குடும்ப நலன்களுக்காக - வாழ்வு மேம்பாட்டுக்காக சிந்தித்து செயற்பட முன்வருவதற்கான பிரதிக்கிணையை இம்மாவீரர் நாளில் எடுத்துக்கொள்வது மிக அவசியம்.

ச. சஜீவன்

துணைத் தவிசாளர், வலிவடக்கு பிரதேசசபை

காங்கேசன்துறை.

 

http://www.dailymotion.com/video/x2bb300_interview-about-maveerar-day-by-sajeevan_news

 

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/113984/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.