Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாழ்ப்பாணம் சில நினைவுகள்.......

Featured Replies

என் கொல்லைப்புறத்து காதலிகள்: யாழ்ப்பாணத்து கிரிக்கட்

 

Centrl0309_03_51764_200_thumb%25255B3%25

 

இன்னும் ஐந்து ரன் அடித்தால் வெற்றி. நன்றாக இருட்டிவிட்டது.  தீயிடப்பட்டு நிர்மூலம் ஆக்கினாலும் கம்பீரமாக நிற்கும் யாழ் நூலகத்துக்கு பின்னாலே சூரியன் மறைந்துகொண்டிருக்க, எங்கே வெளிச்சம் இல்லை என்று சொல்லி ஆட்டத்தை நிறுத்தி விடுவார்களோ என்ற பயம் எங்களுக்கு. மணிக்கூண்டு கோபுர முனையில் இருந்து பிரபா அண்ணா பந்துவீச தயாராக, பூங்கா முனையில் எதிர்கொள்வது காண்டீபன் அண்ணா. மொத்த மைதானமே ஆர்ப்பரிக்கிறது. பந்து மட்டிங் பிட்ச்சில் லெந்தில் விழ, காண்டீபன் அண்ணா லோங் ஓனில் இழுத்து அடிக்க… பந்து பறக்கிறது. அத்தனை பேரும் ஆவென்று வாய் பிளந்து நிற்க, அது மைதானத்தை தாண்டி, வீதியை தாண்டி மணிக்கூண்டு கோபுரத்தின் உச்சியில் இருந்த சேவல் கொண்டையில் பட்டு…. சேவல் கூவும் சத்தம். எழும்பிப்பார்த்தால் இன்னமும் விடியவில்லை. காலை நாலு மணி. இன்னும் நான்கு மணித்தியாலங்களில் ஆரம்பித்துவிடும். வடக்கின் பெரும்போர் என்று அழைக்கப்படும் சென்றல் சென்ஜோன்ஸ் பிக் மேட்ச். நித்திரை அதற்கு பிறகு வரவில்லை.
 
“கடவுளே காண்டீபன் அண்ணா எப்பிடியும் செஞ்சரி அடித்து அஞ்சு விக்கட்டும் விழுத்தோணும்.”
 
1992ம் ஆண்டு. மாசி மாதத்து இறுதி வெள்ளிக்கிழமை. அம்மா நேற்றே சுட்டு வைத்திருந்த ரோல்ஸ் ஐந்தாறை வாழை இலைக்குள் சுற்றி, அதற்கு மேல் உதயன் பேப்பரை சுற்றி ஒரு பாக்கினுள் போட்டுத்தர தயக்கத்தோடு வாங்கினேன். “பெடியள் பார்த்தால் நக்கலடிப்பாங்கள்” என்று தெரியும். அக்காவின் பேர்த்டேக்கு செய்த ரோல்ஸ். அருமையாய் கிடைப்பது, பின்னேரம் வீடு திரும்பும் போது  ஒன்று கூட மிச்சம் இருக்காது என்று தெரியும். வெட்கத்தை பார்த்தால் வேலைக்காகாது என்று வாங்கி அதை ஸ்டைலாக ஒரு PP பாக்கிற்குள் வைத்துக்கொண்டு, அப்பா என்றைக்கோ சவுதியில் இருந்து கொண்டுவந்த கீறல் விழுந்த கூலிங் கிளாஸை எடுத்து மாட்டிப்பார்த்தால், எல்லாமே மங்கலாக தெரிந்தது. இருக்கட்டும் லஞ்ச் பிரேக்கின் போதாவது போட்டுக்கொண்டு திரியலாம் என்று அதுவும் PPக்குள். ட்ரிங்க்ஸ் போத்தலுக்குள் தேசிக்காய் தண்ணி, சென்ஜோன்ஸ் இலச்சினை பொறித்த தொப்பி, சிவப்பு டீசேர்ட் எல்லாமே அணிந்து, அம்மாவிடம் திரும்பிவந்தேன்.
 
“… ஒரு இருபது ரூவா தாறீங்களா? கச்சானும் ஐஸ் கிரீமும் வாங்கிறதுக்கு”
 
கேட்டதும் தான் தாமதம் அம்மா தொணதொணக்க ஆரம்பித்தார்.
 
“அதான் தேசிக்காய்த்தண்ணி .. ரோல்ஸ் எல்லாம் தந்திருக்கிறனல்லோ .. உண்ட அப்பர் இங்க உழைச்சு கொட்டிக்கொண்டு தானே இருக்கிறார் .. ஐஸ் கிரீமுக்கும் கச்சானுக்கும் காசு தர…. இந்த தரித்திரம் பிடித்த “ஊனா” கார்ட்டால வேற ஐஞ்சியத்துக்கும் பிரயோசனமில்ல. நாலு பெடியள வெளிநாட்டுக்கு அனுப்பீட்டு அவனவன் சங்கக்கடையில அவ்வளவு நிவாரணத்தையும் அள்ளிக்கொண்டு போறான் .. எங்களுக்கு அதுவும் கிடைக்காது .. அரைக்கிலோ சீனி .. ஆருக்கு காணும்? ”
 
அம்மா ஏன் விடியக்காலமை எனக்கு இதை சொல்லிக்கொண்டு இருக்கிறார் என்று புரியவில்லை. அப்பா அனுராதபுரத்தில் உள்ள நொச்சியாகம காட்டுக்குள் மகாவலி அபிவிருத்தி திட்டத்தில் நில அளவையாளராக பணி புரிந்துகொண்டிருந்த காலம்.  அரசாங்க உத்தியோகம் என்று பெயர், ஆனால் சம்பளம் என்னவோ ஐயாயிரம் ரூபாய் தான். போதாக்குறைக்கு உத்தியோகத்தர் என்று சங்கக்கடையில் எங்களுக்கு உலர் உணவு நிவாரணமும் குறையத்தான் கிடைக்கும். பாதை எப்போதாவது திறந்தால் மட்டுமே யாரிடமாவது சம்பளத்தையும், வேறு ஏதாவது குட்டி சாமான்களையும் அனுப்பிவைப்பார். கொஞ்ச காலமாகவே தாண்டிக்குளம் பக்கம் அடிபாடு. பாதை மூடிக்கிடந்த கடுப்பு அம்மாவுக்கு. எனக்கும் காசு அனுப்பாத அப்பா மீது அர்த்தமில்லாமல் கோபமும் வந்தது.
 
“என்னட்ட ரெண்டு ரூவா இருக்கு .. ஒரு எட்டு ரூவா தந்தீங்கள் எண்டா கோன் வாங்கி குடிக்கலாம் .. ஐஸ் சொக் கூட பத்து ரூவா .. ப்ளீஸ் .. சிநேகிதங்கள் எல்லாம் இண்டைக்கு காசு கொண்டு வருவாங்கள்”
 
“சின்னப்பெடியனுக்கு காசைக்குடுத்து பழுதாக்காதீங்க நீங்க” என்ற அக்காவின் முறைப்பாட்டையும் மீறி அம்மாவுக்கு என்னை பார்க்க இரக்கம் வந்திருக்கவேண்டும். பத்து ரூபாய் தாளை எடுத்து நீட்ட மேசையில் இருந்து படிக்கும் அக்காவின் முகத்தை திரும்பிப்பார்க்காமலேயே சைக்கிளுக்கு போனேன். “பத்துரூபாய் சுளையாக வாங்கிவிட்டேன்; எப்படியும் தாங்கமாட்டாள். சென்ஜோன்ஸ் தோற்கவேண்டும் என்று நேர்த்தி வைத்தாலும் வைத்திருப்பாள். சொல்ல முடியாது”
 
வீட்டுக்குள் நிறுத்திவைத்திருந்த சைக்கிளை சன்ஹூடுக்குள் இறக்கும்போது தான் வாசலில் கீர்த்திராஜ். ஆளையும் தோரணையையும் பார்க்க சிரிப்பாக இருந்தது. பிரேமதாசா தந்த அந்தக்காலத்து ஒருவித காக்கி நீலத்து துணியில் தைத்த காற்சட்டை, அது பாட்டுக்கு பொங்கிப்போய் பாவாடையாட்டம், சம்பந்தமேயில்லாமல் மேலுக்கு ஒரு சிவப்பு டீஷர்ட், அவன் மூன்றாவது பிறந்தநாளுக்கு வாங்கியதாக இருக்கவேண்டும், உடம்பை இறுக்கிப்பிடித்துக்கொண்டு, கட்டை டீஷர்ட் மேலெழும்பி வயிறு வேறு தெரிந்தது. முகத்தில் கூலிங்கிளாஸ், சென்ஜோன்ஸ் தொப்பி, லுமாலா சைக்கிளில் சிவப்பு கறுப்பு கொடி என்று ஆள் இன்றைக்கு ஒரு முடிவோடு தான் வந்திருந்தான். பிக்மட்ச் என்றால் சும்மாவா? அதுவும் நாங்கள் சென்ஜோன்சில் இணைந்தபின் நடக்கும் முதல் பிக் மட்ச். ஏதோ இந்தியா பாகிஸ்தான் மட்ச் ஆட்டம் போன்ற பீலிங்கை கொடுத்தது!
 
“டேய் … நல்லதா காஞ்ச ரெண்டு தடியும் ஒரு எண்ணை பரல் கேனும் தேடோணும் .. இண்டைக்கு கிரவுண்டடில அதுகள காணக்கிடைக்காது”
 
கீர்த்தி கேற்றடியில் இருந்து கத்த, நான் கள்ளமாக பத்தியடிக்கு போய், சத்தம் போடாமல் அம்மா எண்ணை வைத்திருக்க பாவிக்கும், இந்தியன் ஆர்மி விட்டுச்சென்ற தகர கேனை எடுத்தேன். கால்வாசிக்கு பொரித்த எண்ணை கிடந்தது. அதை எடுத்து ஒரு சட்டிக்குள் ஊற்றிவிட்டு தேங்காய் பொச்சை சன்லைட்டில் தேய்த்து எண்ணை கேனை கிணற்றடியில் வைத்து கழுவினேன்.
 
“என்னடா வெள்ளனயே பெரிய கவர்மென்ட் உத்தியோகம் பார்க்கபோறவன் மாதிரி நேரம் போயிட்டு எண்டு துள்ளிக்கொண்டிருந்த .. இப்ப கிணத்தடில என்ன செய்து கொண்டிருக்கிற?”
 
“ஒண்டுமில்லை சிலிப்பர் முழுக்க சேறு .. கழுவிக்கொண்டிருக்கிறன்”
 
சத்தம்போடாமால் குசினி யன்னலுக்கு கீழாக பதுங்கி கேட்டடிக்கு போக, கீர்த்தி, ஏற்கனவே பழைய தும்புத்தடியை ரெண்டாக உடைத்து தயாராக வைத்திருக்க, டபிள்ஸ் ஆரம்பமாகியது. நான் சைக்கிள் உழக்க, அவன் பார்த்தடியில் இருந்துகொண்டு, தகர டின்னை வைத்து தாளம் போட தொடங்கினான். சைக்கிள் சவாரி பிரஷாந், குகன், மக்கர் சுட்டா என்று ஒவ்வொருவர் வீடுகளுக்கும் போய், நல்லூரடியில் “சென்ஜோன்ஸ் வெல்லவேண்டும், காண்டீபன் அண்ணே சென்சரி போடோணும்” என்று தேங்காய் உடைச்சு, சொட்டை எல்லோரும் சாப்பிட்டுக்கொண்டே ஆரிய குளத்தடிக்கு போகும்போது பிரியா, குணாலதாஸ் குரூப்பும் இணைந்துகொள்ள, இப்போது பதினைந்து பேர், பத்து சைக்கிள், பத்து சிவப்பு கறுப்பு கொடிகள், நாலைந்து தகர டின்கள் என தாளம் அந்த ஏரியாவையே அதகள படுத்தியது.
 
central_thumb%25255B2%25255D.jpg?imgmax=
 
“கொலிஜ் கொலிஜ் .. சென்ஜோன்ஸ் கொலிஜ்” 
“எங்கட கொலிஜ் .. சென்ஜோன்ஸ் கொலிஜ்”
central“அப்பே கொலிஜ்.. சென்ஜோன்ஸ் கொலிஜ்”
“வாட்ஸ் த கலர்? ரெட் அண்ட் ப்ளக்”
“ஹூ இஸ் த கப்டின்?” காண்டீபன்”
“தீபன் தீபன் .. காண்டீபன்”
“எங்கட தீபன் … காண்டீபன்”
“செஞ்சரி தீபன் … காண்டீபன்”
“அடியுங்கோ அண்ணா பவுண்டரி சிக்ஸர்” 
“போடுங்கோ அண்ணா .. பொல்லுப்பறக்க”
“சென்றலால ஏலாது”
“ஏலுமெண்டா பண்ணிப்பார்”
“ஏலாட்டி விட்டிட்டு போ”
 
தகர சத்தமும் கூச்சலும் சிவப்பு கறுப்பு கொடியுமாக போகும்சமயத்தில் தூரத்தில் “தமிழீழ காவல் துறை” வேதாளர் கொமிக்ஸில் வரும் படையினரின் யூனிபோர்மில் நிற்பதை கண்டவுடன் கப்சிப். பலாலி ரோட்டையே மறித்தபடி சைக்கிளில்  பரலளாக வந்துகொண்டிருந்தவர்கள், திடீரென்று ஒன்றன் பின் ஒன்றாக வரிசையில் வீதியோரமாக போக ஆரம்பித்தோம். வேம்படி சந்தியில் ஒரு காவல்துறை அண்ணா தெரியாத்தனமாக எம்மைப்பார்த்து சிரித்துவைக்க, தாளம் மீண்டும் ஆரம்பித்தது.
 
“எங்கட துறை காவல் துறை”
“மக்களின் துறை காவல் துறை”
“எங்கட துறை காதல் துறை”
 
பதிலுக்கு அவர் ஏதோ சொல்லி எங்களை அழைக்க போகும்முன்னரேயே நெக் காட்டிவிட்டு திரும்பிப்பார்க்காமல் வேகம் பிடிக்க, மைதானத்தருகில் தாளச்சத்தமும் விசிலும், கூச்சலும் விண்ணை கிழித்துக்கொண்டிருந்தது.
 
கொல்லைப்புறத்து காதலிகளில் கிரிக்கட்டை பற்றி எழுதுவது என்று தீர்மானித்தபோது, எந்த எல்லைக்குள் எழுதுவது என்று குழப்பம். மீட்டும்போது சும்மா ஜிவ்வென்று எனக்கு சுருதி ஏறும் கிரிக்கட் எது என்றால், அது தொண்ணூறுகளில் யாழ்ப்பாணத்தில் ஆடப்பட்ட கிரிக்கட் தான். வெறும் ஆறு மணித்தியாலம் டிவி முன் இருந்து பார்த்துவிட்டு நண்பர்களுடன் டிஸ்கஸ் பண்ணும் ஆட்டங்கள் அல்ல அவை. அது ஒரு வாழ்க்கை. அந்த ஆட்டங்கள், இடம்பெற்ற மைதானங்கள், அந்த காலப்பகுதி, அரசியல் நிலை எல்லாமே கூடிக்கலந்த வாழ்க்கை. அதை எழுதலாம் என்று ஒரு ஐடியா. ஒரு சிறுவனாக அந்த கிரிக்கட் ஏற்படுத்திய ஆர்வம். அதை எப்படி பார்த்தோம் என்று பகிரலாம். அதுவும் தொண்ணூறுகளின் முதற் பாதி. இந்திய இராணுவம் திருப்பி அனுப்பப்பட்டு, புலிகளின் கட்டுப்பாட்டில் யாழ்ப்பாணம் வந்து, மக்கள் புதிய ஒரு சூழ்நிலைக்கு தயாராகிக்கொண்டிருந்த சமயம்.  ஊருக்கு வந்துகொண்டிருந்த லக்ஸபான மின்சாரம் பிரேமதாசா-புலிகள் தேனிலவு முடிந்து கொஞ்சநாளில் கட் ஆகி, கூடவே பொருளாதார தடைகளும் வந்து சேர டிவியில் பார்க்கும் கிரிக்கட்டையும், நரேந்திர கிர்வாணியையும், சச்சின், விவியன் ரிச்சர்ட்ஸ், இம்ரான், மியன்டாட் போன்ற பெயர்களையும் மறந்து யாழ்ப்பாணம் தன்னுடைய சொந்த ஹீரோக்களை கொண்டாட தயாராகிக்கொண்டிருந்தது. 
 
யாழ் மத்திய கல்லூரி மைதானத்தின் மூலை முடுக்கெங்கும் சிவப்பு கறுப்பு நீலம் பிரவுண் என கொடிகள். செவிப்பறை வெடிக்கும் அளவுக்கு மண்ணெண்ணெய் பரல்களில் போடும் தாளச்சத்தம். ஆங்காங்கே டோலக்குகள். கூலிங் கிளாசஸ். அந்த வெயிலிலும் சப்பாத்து போட்டு, ஸ்டைலாக திரியும் மாணவர்கள். மைதானத்தின் வடக்கு பக்கம் மணிக்கூண்டு கோபுரம், இயங்காத கடிகாரம், அதன் உச்சியில் ஒரு சேவல் சிலை இருந்ததாகவும் சுரேன்குமார் அண்ணா அடித்த சிக்ஸரால் தான் அது உடைந்தது என்றும் அவசர அவசரமாக மைதானத்திலே ஒரு ஐதீகம் பரவியது! இதையே சென்றல் மாணவர்களிடம் கேட்டால் வேறு ஒருவரின் சிக்ஸ் என்பார்கள்!
 
கிழக்குப்பக்கம் யாழ் மத்திய கல்லூரி. மைதானத்தை பார்த்துக்கொண்டே இரண்டு வகுப்பறை கட்டடங்கள்.  ஒன்றில் வேம்படி மகளிர் கல்லூரி மாணவிகள் நின்றுகொண்டு, மத்திய கல்லூரி அணிக்கு சப்போர்ட் பண்ண மற்றயதில் சுண்டுக்குளி மகளிர் கல்லூரி பெண்கள், எங்களுக்கு..  சென்ஜோன்சுக்கு சப்போர்ட் பண்ண வந்திருப்பார்கள்! ஆட்டத்தின் சியர் கேர்ள்ஸ்! அதிகமாக கூலிங் கிளாஸ் போடுவதாலோ அல்லது இயற்கையாகவே தானோ தெரியாது. சுண்டுக்குளி பெண்கள் இருக்கும் பக்கம் கொஞ்சம் குளிர்ச்சி அதிகமாகவே இருக்கும். யாழ்ப்பாணத்தில், சைக்கிளில்  எதிர்பட்டால் அட்லீஸ்ட் ஒரு சிரிப்பாவது சிரித்துவிட்டு போகும் பெண்கள் இந்த பெண்கள் தான். அழகும் திமிரும் அதிகம் இருக்கும், எங்கள் ரேஞ்சோடு ஒப்பிடுகையில் அவர்களுக்கு ஷேக்ஸ்பியர் லெவலுக்கு இங்கிலீஷ் தெரியும். சும்மா வெட்டி ஆடுவார்கள், நாங்கள் எங்களுக்கு தெரிந்த இங்கிலீஷ் புத்தகத்தில் இருந்த “Me and my TV” ஐ வைத்து சமாளிப்போம். ஆனால் வேம்படி அப்படியல்ல. பார்த்தால் தலை குனிவார்கள். குவிஸ் போட்டி என்றால் சிக்ஸர் பவுண்டரி அடிப்பார்கள். படிப்பில் சுட்டிகள். அதில் கவனம் அதிகரித்ததால் கண்ணாடியை பல நாட்களில் பார்த்து டச்சப் பண்ண மறந்து விடுவதால் சின்ன வயதில் பெரிதாக அவர்கள் என்னை டச் பண்ணவில்லை. ஆனால் பதினெட்டு வயதில் டச்சப் பட்ச்அப் பாக்கப் எல்லாமே பண்ணியது வேம்படி நண்பிகள் தான் என்று இந்த இடத்தில் சொல்லியே ஆகவேண்டும். இல்லாவிட்டால் Facebook இல் இருக்கும் என் வேம்படி மகளிர் கல்லூரி நண்பிகள் அடிக்கவருவார்கள்!
 
Jaffna%252520Library_thumb%25255B2%25255
 
கிரிக்கட்டை பற்றி எழுத வந்து சியர் கேர்ல்ஸ் பக்கம் போயிட்டன் போல. தெற்காலே போனால் பாழடைந்த சுப்பிரமணிய பூங்கா. நின்ற ஓரிரு மரங்களிலும் மாணவர்கள் ஏறி இருந்து வசதியாக ஆட்டத்தை பார்க்க ரெடியாக இருக்க ஆங்காங்கே ஐஸ் கிரீம் வான், சுண்டல் கச்சான் கடை என்று பரப்பப்பட்டு .. மேற்கே திரும்பினால் யாழ் நூலகம். அப்போது எரிந்த நிலையில் இருந்த கம்பீரம், சந்திரிகா பின்னாளில் மீண்டும் திருத்தி தந்தபின்  தொலைந்துபோய் இருந்தது. அவனே எரித்து அவனே கட்டி தருகிறான். மீண்டும் அவனே எரிப்பான் .. உன்னால் என்ன செய்யமுடியும்? என்று அது என்னை பார்த்து பல தடவை கேட்டிருக்கிறது. “நீங்கின் அரிதால் புணர்வு” என்று வள்ளுவன் காமத்துக்கு சொன்னது சம்பந்தமில்லாமல் எனக்கு இந்த இடத்தில் மனதில் வந்துபோகும். வேண்டாம்.
 
92ம் ஆண்டு முதல் 95ம் ஆண்டு இடம்பெயர்வு வரை யாழ்ப்பாணத்து கிரிக்கட்டுக்கு ஒரு சிறப்பு இருக்கிறது.  ஏககாலத்தில் எல்லா பாடசாலைகளிலும் திறமையான வீரர்கள் அப்போது இருந்தார்கள்.  முதலில் ஞாபகத்துக்கு வருபவர் காண்டீபன் அண்ணா. சென்ஜோன்ஸ் கப்டின். ஆறரை அடி உயரம், நடக்கும் போது ஒரு பக்கம் சரிந்து அவருக்கென்றே ஒரு ஸ்டைல். ஓபன் பவுலிங், லோங் ரன் அப் எடுத்துக்கொண்டு வந்தாரே என்றால் விக்கட் கீப்பர் பீஷ்மன் அண்ணா வழமையான தூரத்துக்கு இரண்டு மீட்டர் பின்னாடி போய் நிற்பார். பந்தை வீசிவிட்டு அரை பிட்ச் தாண்டியும் பலோ அப் இருக்கும். நெருக்கமாக போய் பட்ஸ்மனை சாய்ந்து ஒரு பார்வை பார்த்துவிட்டு மீண்டும் நடப்பார். அதே காண்டீபன் அண்ணா தான் சென்ஜோன்சின் டூ டவுண் பட்ஸ்மன். சச்சின் போல. ஒரே சீசனில் மூன்று செஞ்சரிகள் அடித்ததாக ஞாபகம். அதிலும் ஒன்று 151 ரன்ஸ்.  அத்தோடு பீஷ்மன், கேர்ஷன், யோகதாஸ் என்று சென்ஜோன்சின் தூண்கள். இங்கே கதை இப்படி என்றால் சென்றல் பக்கம் மணிவண்ணன், பிரபாகரன், ரகுதாஸ், ஆகாஷ், சுரேஷ்(கோழி சுரேஷ்), லட்டு என்றும் யாழ் இந்துவில் சின்ன வரதன், நரேஷ், கொக்குவில் இந்துவில் பண்டா, யாழ்ப்பாணக்கல்லூரி சிவசுதன் என்று யாழ்ப்பாணத்தில் பாடசாலை கிரிக்கட் உச்சத்தில் இருந்த சமயம். வில்ஸ் கிரிக்கட் ரேட்டிங் போல உதயனிலும் அப்போது ரேட்டிங் போகும். சிறந்த துடுப்பாட்டவீரர், பந்துவீச்சாளர், சகலதுறை ஆட்டக்காரர் என்று, அதற்கு ஒரு போட்டியும் நடக்கும், எழுதிப்போடலாம். காண்டீபன், சிவசுதன், ரகுதாஸ் நரேஷ் பெயர்கள் எல்லாம் அப்போது முன்னிலையில் இருந்தது இப்போதும் ஞாபகம் இருக்கிறது.
 
யாழ் இந்துக்கல்லூரி மைதானம், யாழ் நகரின் சென்டர் பீஸ். அந்த நேரங்களில் கோட்டை அடிபாடு முடிந்திருந்தாலும் ஆர்மி பண்ணைப்பாலத்துக்கு அப்பால் நிலை கொண்டிருந்ததால் முத்தவெளி, துரையப்பா அரங்கு, மத்தியகல்லூரி திடல்கள் பெரும்பாலும் பிரபலமாக இருக்கவில்லை. அதே நேரம்,  சின்ன கிரவுண்டாக இருந்தாலும் யாழ் இந்துக்கல்லூரி மைதானம் தான் எங்களுக்கு ரோமானிய கொலோசியம். மணி ரியூஷனில் வில்வரின் கொமேர்ஸ் வகுப்புக்கு பீஸ் கட்டுவதே கட் பண்ணுவதுக்கு தான்.  காலையிலேயே உதயனில் “இன்றைய ஆட்டங்கள்” பார்த்துவிடுவேன். வகுப்பை கட்பண்ணி யாழ் இந்து மைதானத்துக்கு போய், அப்பிடியே கஸ்தூரியார் ரோட்டில் சைக்கிளை மதிலோரமாக சரித்துவிட்டு சீட்டில் இருந்தவாறே மேட்ச் பார்க்கலாம். சிலநேரங்களில் மதிலில் ஒட்டியிருக்கும் முள்ளு முள்ளு கல்லுகள் குத்தும். சுவரில் தேய்த்திருக்கும் சுண்ணாம்பு கையில் படும். வெயில் கொளுத்தும், ஆட்டத்தில் கண் இருக்கும் போது வீதியிலும் கண் இருக்கவேண்டும். அந்தநேரம் யாராவது பெண்கள் கூட்டம் சைக்கிளில் வந்தால், எவனாவது சிக்ஸ் அடித்து மண்டையில் வந்து பந்து பட்டாலும் எங்களுக்கு தெரியாது. அப்போது பதினாலு வயசு தான். எங்கட மக்ஸிமம் லொள்ளு என்றால், இவ்வளவு தான்.
sri_lanka_2005_1111678200_main_transport
 
அக்கா .. பின் சில்லுக்கு காத்து போயிட்டுது”
“மஞ்சள் சட்டை .. .. பாக் காரியரில சரியுது”
“கண்ணாடி நல்லா இருக்கு? எங்க வாங்கினீங்க?”
“கொண்டையில் தாழம்பூ கூடையில் வாழைப்பூ நெஞ்சிலே என்ன பூ?”
“டேய் .. நடுவில போற ஏசியா சைக்கிள் .. எண்ட ஆள்டா”
“என்ன நடை, சின்ன இடை, கையில் என்ன குடை? சிங்கார குடை, சிங்க மார்க் குடை!”
 
அனேகமாக கணக்கெடுக்கமாட்டார்கள். எப்போதாவது அதிஷ்டம் அடித்தால் பார்த்து முறைப்பார்கள். அவ்வளவு தான். இதுவே தனியாக நின்று மேட்ச் பார்த்தால், வாலைச்சுருட்டிக்கொண்டு நல்ல பெடியன் போல, அவர்கள் கவனித்தாலும் கவனிக்காதது போல, மட்ச்சை கவனமாக பார்ப்போம். சில நேரங்களில் சொந்தக்காரர் யாராவது அந்த பாதையால் போனால், வீட்டில் போய் போட்டுக்கொடுத்துவிடுவினம். அப்புறம் என்ன, வீடு போனதும் போகாததுமாக காவல்துறை விசாரணை ஆரம்பமாகும்.
 
பாடசாலை கிரிக்கட் எல்லாம் வெள்ளி மதியம் ஆரம்பித்து சனியும் நடைபெறும். சென்றல்- சென்ஜோன்ஸ் அணிகளின் வடக்கின் பெரும்போரும், சென்பற்றிக்ஸ்-யாழ்ப்பாண கல்லூரிகளுக்கு இடையில் நடைபெறும் பொன் அணிகள் போரும் வெள்ளி சனி என இரண்டு நாட்களும் திருவிழா போல நடைபெறும். பொதுவாகவே சென்றல் அணி தரமான அணியாக மிளிர்வதுண்டு. வெல்லவேண்டும் என்ற வெறி உள்ள ஆஸ்திரேலியா போன்ற அணி தான் சென்றல். சென்ஜோன்ஸ் பல நட்சத்திர வீரர்களை கொண்டிருந்தாலும் பிக் மட்ச் என்று வரும்போது தடுமாறிவிடும். இந்திய அணி போல. யாழ் இந்து, கொக்குவில் இந்து இரண்டும் ஏனைய இரு முக்கிய பாடசாலை அணிகள். இதைவிட ஸ்கந்தா, ஸ்டான்லி என்றும் அணிகள் இருந்தாலும் அவைகள் எல்லாம் பிரபல அணிகள் வெளுத்துவாங்குவதற்கு களம் அமைத்து கொடுக்கும் சிம்பாப்வே, பங்களாதேஷ் ரக அணிகள். இந்த அணிகளுள் டார்க் ஹோர்ஸ் என்றால் அது பற்றிக்ஸ் தான். சத்தம்போடாமல் சில நேரங்களில் பெரும் ஜாம்பவான்களை சாத்தி அனுப்பும். அதில் பலதடவை அடிவாங்கி செத்தது நம்மட சென்ஜோன்ஸ் அணி தான்!
 
அப்போதெல்லாம் பல கிண்ணங்களுக்கு போட்டி நடக்கும். KCCC கிண்ணம்,  உதயன்-ஷப்ரா கிண்ணம், ஜோலிஸ்டார்ஸ் கிண்ணம் என பல. போட்டிகள் மத்திய கல்லூரி, இந்து கல்லூரி, கொக்குவில் இந்து, யாழ் பல்கலைக்கழக மைதானங்களில் நடைபெறும். சென்றலைட்ஸ், ஜோனியன்ஸ், பற்றீசியன்ஸ், ஜோலிஸ்டார்ஸ், KCCC, ஷப்ரா, அரியாலை சனசமூக நிலையம், வட்டுக்கோட்டை, ஸ்டான்லி என பல கிளப் அணிகள். சென்றலைட்ஸ் என்றால் சண்முகலிங்கம்(இரும்பன்), ஜோனியன்ஸ் என்றால் சூரியகுமார்(சூரி), ஜொலிஸ்டார்ஸ் என்றால் தயாளன் என ஐம்பது வயதுக்காரர்கள்( தயாளன் கொஞ்சம் இளமை) தான் அணியில் முக்கிய ஆட்டக்காரர்கள். இரும்பன் ரன்அப் எடுத்து பவுலிங் போட்டால் பந்து எகிறிக்கொண்டு போகும். அதுவே யாழ் இந்து மைதானம் என்றால், கீப்பர் விடுவதெல்லாம் பின் மதிலில் பட்டு மதிலுக்கு மேலால் எம்பி விழும். அத்தனை வேகம் அந்த வயதிலும்.
 
கொக்குவில் இந்து இன்னொரு முக்கிய மைதானம். அதை மைதானம் என்று சொல்லுவதை விட வளவு என்று சொல்வதே பொருத்தம். இரண்டு பக்கங்களும் முப்பது மீட்டர் கூட வராது என்று நினைக்கிறேன். மதில் சுவர் தான் பவுண்டரி லைன்.  சுவரில் புல்லாக போய் பட்டாலும் பவுண்டரி தான். சிக்ஸுக்கு மதில் தாண்டவேண்டும். அப்படி ஒரு ரூல் அங்கே. ஒரு முறை மட்ச் பார்த்துக்கொண்டிருக்கிறேன். யாழ் பல்கலைகழகத்துக்கும் ஜொலிஸ்டார்ஸ் அணிக்கும் மட்ச். ஓபன் பட்டிங் திலக் என்று நினைக்கிறேன். நான் நேரே கீப்பருக்கு பின்னால் பவுண்டரி லைனில், சுடுமணலில் செருப்பை போட்டு அதற்கு மேல் இருந்து பார்த்துக்கொண்டிருக்கிறேன். நரேன் பந்து வீசுகிறார். சீறிக்கொண்டு வந்து பந்து விக்கட்டில் பட்டு தெறிக்க, பெயில்ஸ் அப்பிடியே ஆகாயத்தில் சரக்கென்று பறந்து வந்து என் காலடியில் விழுந்தது. அவ்வளவு சைஸ் அந்த மைதானம்!
 
ஒருமுறை ஆறுபேர் அணிகொண்ட ஐந்து ஓவர் சுற்றுப்போட்டி இந்துக்கல்லூரி மைதானத்தில் நடந்தது.  யாழ் செயலக-கச்சேரி அணி என்று ஒரு கனவு அணி உருவாகியது. அந்த அணியில் ரகுதாஸ், காண்டீபன், பிரஷாந்தன் என எல்லோருமே அதிரடி ஆட்டக்காரர்கள். சென்றல், சென்ஜோன்சில் எதிரும் புதிருமாக மோதியவர்கள் ஒரே அணியில். ஒரு ஆட்டத்தில் ரகுதாஸ் அண்ணா ருத்திரதாண்டவம் ஆடிக்கொண்டிருந்தார். போட்டதெல்லாம் கஸ்தூரியார் ரோட்டில் இருந்த பஸ் ஸ்டொப்புக்கு மேலால் பறந்து ஒவ்வொரு வீடுகளிலும் விழுந்துகொண்டிருந்தது. கூடவே காண்டீபனும் சேர்ந்து பந்தை அக்கம் பக்கத்து வளவுகளுக்குள் அனுப்பிக்கொண்டிருக்க… அப்போது ஒரு நிறைவேறாத ஆசை. எமக்கென்று ஒரு அணி, அதிலே காண்டி, ரகுதாஸ், பீஷ்மன், சுரேஷ், லட்டு, நரேஷ், பிரபா, கிருபா, சின்ன வரதன், பெரிய வரதன் எல்லோரும் சேர்ந்து ஒரு அணி. உலக கிண்ணத்தில், பாகிஸ்தான் இங்கிலாந்து ஆஸ்திரேலியா, இலங்கை என  எல்லோரையும் துவம்சம் செய்து இறுதிப்போட்டி இந்தியாவுடன். அந்த பக்கம் சச்சின், காம்பிளி, இந்தப்பக்கம் பௌலிங் போடுவது காண்டீபன். எப்படி இருந்திருக்கும்? ப்ச் ..எல்லாமே ..  பெருமூச்சு தான்.
 
எங்கள் வீடு பல்கலைக்கழகத்துக்கு முன்னால் இருந்ததால் அதிகமான கம்பஸ் ஆட்டங்கள் பார்க்கும் சந்தர்ப்பங்கள் கிடைத்தது. அப்போது கம்பஸ் அணியில், சின்ன/பெரிய வரதன், திலக், சுதேசன் தொட்டு பின்னாளில் பீஷ்மன் என முக்கிய பலர் விளையாடினார்கள். அருமையான அணி. இப்போது பூங்காவாக மாற்றப்பட்டிருக்கும் பரமேஸ்வரா கோயிலின் முன் மைதானத்தில் பல ஆட்டங்கள் நடக்கும். அந்த மரங்களுக்கு கீழே இருக்கும் பெஞ்சுகளில் இருந்து மட்ச் பார்க்கலாம். சிலநேரங்களில் முதல் வருட அக்காமாரை சீனியர்கள் கூட்டிக்கொண்டுவந்து செய்யும் ராக்கிங் கூட ப்ரீ ஷோவாக பார்க்கலாம். அந்த “என்ன கலர்? என்ன கலர்? என்ன கலர்?” என்று வெறும் ஈர்க்கை வைத்து ஒரு அக்காவை ஒரு சீனியர் நாதாறி மிரட்டி கேட்ட ராக்கிங் இன்னமும் நினைவு இருக்கிறது. விளங்கப்படுத்தினால் இன்னொரு மெக்சிகன் சலவைக்காரி ஜோக்காக போய்விடும். வேண்டாம்!
 
மீண்டும் வடக்கின் பெரும்போருக்கு வருவோம். 1992 ஆட்டம் நான் பார்த்த மிகச்சிறந்த பிக் மட்ச் என்று நினைக்கிறேன். முதலில் துடுப்பெடுத்தாடிய சென்றல் அணி முன்னூறுக்கு மேல் அடித்துவிட்டு மாலையில் டிக்ளேர் பண்ணியது. சென்ஜோன்ஸ் அணியில் யோகதாஸ் அண்ணா ஐந்து விக்கட்டும் காண்டீபன் அண்ணா நான்கு விக்கட்டும் நூற்றுச்சொச்ச ரன் கொடுத்து கைப்பற்றினார்கள். ஆகாஷ் அண்ணே கூட எழுபது ரன் அடித்திருக்கவேண்டும். அந்த ஆட்டத்தில் தான் லட்டு என்கின்ற லட்சுமிகரன் எட்டு விக்கட் எடுத்து சென்ஜோன்சை சரித்ததாக ஞாபகம். காண்டீபன் அண்ணா சமாளித்து ஆடி 74 ரன் அடித்து ஸ்லிப் கட்சில் அவுட் ஆனார். கேர்ஷன் அண்ணா வந்த வேகத்தில் கவர், பாயிண்ட் என்று எல்லா இடமும் சராமாரியாக அடித்து முப்பத்து சொச்ச ரன்னில் ஆட்டமிழக்க, பின்னுக்கு வந்த பிரதீபன் அண்ணா, எப்படிப்போட்டாலும் வழிச்சு துடைக்கும் பட்ஸ்மன். இரண்டு சிக்ஸர் இறக்கிவிட்டு அவரும் ஆட்டமிழக்க சென்ஜோன்ஸ் 230 சொச்ச ரன்களில் ஆட்டமிழக்க, இரண்டாவது இன்னிங்க்ஸ் சோபை இழந்து போரிங்காக டிரோவில் முடிந்தது வருத்தமே.
 
1992ம் ஆண்டு. மத்திய கல்லூரியில் under 15 ஆட்டம் ஒன்று. பாடசாலை முடிந்து வீடு போகும் வழியில் பார்த்துவிட்டு போகலாம் என்று நானும், கீர்த்தி, ரங்கன் என்ற எங்கள் வழமையான திருநெல்வேலி/கொக்குவில் குரூப் மைதானப்பக்கம் சைக்கிளில் போகிறோம். சென்ஜோன்ஸ்-சென்றல் ஆட்டம் தான். சென்ஜோன்ஸ் துடுப்பெடுத்தாடுகிறது. அறைக்காற்சட்டை போட்டு thigh pad கூட காற்சட்டைக்குள்ளால் வெளியே தெரியும். அவன் சூரியனை பார்த்து வணங்கியவாறே மைதானத்துக்குள் நுழைகிறான். பன்னிரண்டு வயது சிறுவன். எங்கள் வகுப்பு தான். நடையில் ஒரு கர்வம் எப்போதும் இருக்கும். சிங்கம் போல. பிட்ச்சுக்குள் வந்து, சோக்கட்டி எடுத்து லெக் ஸ்டம்ப் பார்த்து, நிலை எடுத்து அத்தனை பீல்டர்ஸ் பொசிஷனும் பார்தது பந்தை எதிர்கொள்ள தயாராகிறான். வேகப்பந்து. இவன் எப்படி பெரியவங்கள் போடுற பந்தை சமாளிக்கபோகிறான் என்றதில் பார்க்கும் எங்களுக்கு ஒரு அசிரத்தை. முதல் பந்து, ஷோர்ட் ஒப் த லெந்தில் விழும் பந்துக்கு, இயல்பாக ஆரம்பத்தில் பாக்புட்டுக்கு போய் பின் வேகமாக புஃரொண்ட் புட்டுக்கு சென்று எக்ஸ்ட்ரா கவரில் …. சடக்கென்று ஒரு டிரைவ்!
 
தொண்ணூறுகளில் யாழ்ப்பாணத்தை ஒரு கலக்கு கலக்கிய, இன்றைய திகதிக்கு தமிழர்களில் இருந்து பிறந்த மிகச்சிறந்த கிரிக்கட் வீரனனான, the best ever cricketer never to have represented a national team, ஏ.டி.கௌரிபாகன் சிம்பிளாக அந்த டிரைவை அடித்துவிட்டு அடுத்த பந்துக்கு தயாராகிறான். தன் வரவை சத்தம்போடாமல் அறிவித்தபடி!.
 
 

நல்லதொரு பதிவு ஆதவன். இதை எங்கோ 2 அல்லது  3 வருடங்களுக்கு முன் வாசித்த ஞாபகம்.

மழை

இரவெல்லாம் ஒரே மழை. சாக்குக் கட்டிலில் போர்த்துக்கொண்டு படுத்திருக்க நன்றாக இருந்தது. ஒன்றிரண்டு மழைத்துளிகள் கூரையில் இருந்து எப்படியோ தப்பி வந்து முகத்தில் விழுந்தன. இரவு முழுவதும் தூரத்தில் ஷெல் வெடிப்பதுவும் துப்பாக்கிகள் சடசடப்பதுவும் இடிமுழக்கத்துடன் கலந்து கேட்டது. சிலவேளைகளில் ஷெல் விழுந்து யாரும் சாகாமல் இருந்திருக்கவும் கூடும். அப்படியே இருக்கக் கடவது. போன கிழமை இப்படி இரவு முழுக்க மழைபெய்த ஒரு இரவில்தான் ஷெல் விழுந்து பன்னிரண்டு பேர் ஏதோ ஒரு ஊரில் செத்தார்கள். ஈழநாடு,ஈழமுரசு, உதயனில் எல்லாம் தலைப்புச் செய்தி. நான்கு ஆண்கள், ஆறு பெண்கள், இரண்டு குழந்தைகள். ரூபவாஹினி ரிவி "நேற்றிரவு பலாலி இராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலை இராணுவம் முறியடித்துப் பதில் தாக்குதல் நடத்தியதில் பதினைந்து பயங்கரவாதிகள் கொல்லப்பட்டார்கள்" என்றது. இன்றைக்கு அப்படி இராது. இருக்கக்கூடாது. சந்நிதி முருகன் பார்த்துக் கொள்வார். "அவருக்கு அவற்றை தேர் ஐக் காப்பாற்ற முடியவில்லை, ஆக்களைக் காப்பாற்றப் போறாறோ?" என்று சேந்தன் அண்ணா கேட்பார். அவர் நிறையச் சிவப்பு மட்டைப் புத்தகங்கள் வாசிப்பார். புத்தகங்கள் எல்லாம் பூர்ஷ்ஷவா, நிலவுடமை, சுரண்டல், உழைக்கும் வர்க்கம், ஆளும் வர்க்கம் என்று இருக்கும். ஒன்றும் புரியாது. ஒரு புத்தகத்திலும் ஒரு படமும் போட்டிருக்காது. நான் படம் போட்ட புத்தங்கள்தான் வாசிப்பேன். "ரொபின்சன் குறூசோ" கூட மழை பெய்த ஒரு நாளில்தான் சேந்தன் அண்ணாவின் புத்தக அலுமாரியில் கண்டு பிடித்து வாசித்தேன். "ரொபின்சன் குறூசோ" இற்குப் பக்கத்தில் ஒரு கறுப்பு/வெள்ளை புகைப்படங்கள் நிறையப் போட்ட ஒரு புத்தகமும் இருந்தது.

காலையில் மழை ஓய்ந்திருந்தது. ஆனால் ஒரே மழை இருட்டு. வெள்ளம் வடிந்திருந்தது. நிலம் சுத்தமாக இருந்தது. நிலத்தில் அட்டைகளும் நத்தைகளும் ஊர்ந்து திரிந்தன. மரங்களும் மழையில் கழுவுப்பட்டுச் சுத்தமாக இருந்தன. கிளிகள், குருவிகள் என்று கலவையாகச் சத்தம் கேட்டது. "கோபால் பற்பொடி நேரம் காலை ஏழு மணி" என்று றேடியோ சொன்னது. பொங்கும் பூம்புனல் அடுத்ததாக இருக்கலாம். றேடியோவை முடுக்கினேன், ஆமி றேடியோவில் "சிட்டூக்குச் செல்லச் சிட்டூக்குச்-சிறகு முளைத்தது.." என்று யேசுதாஸ் சோகமாகப் பாடிக்கொண்டிருந்தார். இடையில் எந்நேரமும் பாட்டு நிறுத்தப்பட்டு, "அச்சுவேலி, இடைக்காடு ,அவரங்கால் மக்கலுக்கு.....பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடக்க இருப்பதால் உடனடியாக பதுகாப்பான இடங்களுக்கு இடம் பெயரவும்... " என்று அறிவித்தல் வரலாம். வரவில்லை. "ஒரே இடத்தில் ஆட்களைக் குவித்தால் போடுகிற குண்டுகளுக்குக்கான செலவு குறையும்; குறைந்த குண்டுகள், நிறைந்த சாவுகள்"; இஸ்ரேல்காரன் 'அத்துலத் முதலி'க்குக் கொடுத்த அட்வைஸ் இப்படித்தான் இருந்திருக்க்கும்.

"இண்டைக்கு அடுப்பு மூட்டுவது கஷ்டம், விறகு எல்லாம் ஈரம், போய்ப் பாண் வாங்கி வா" என்றா அம்மா. மழைநாட்களிற் பாண் சூடாக சாப்பிட்டால் நன்றாக இருக்கும். பாண்காரனும் மழை என்பதாற் பிந்தித்தான் கடைகளில் 'சப்ளை' பண்ணியிருப்பான். பாண் சூடாகத்தான் இருக்கும்.

அப்பா வாங்கித் தந்த ஹீரோ சைக்கிள். அதை உழக்க ஒருதரம் தனியாகச் சாப்பிட வேண்டும். என்றாலும் அதில் ஒரு பிரியம். ஓ/எல் பரீட்சைக்கு அதில்தான் போனேன். மகன் வளர்ந்திட்டான் என்று அப்பாவிற்குப் புரிந்த ஒருநாள் வாங்கியிருப்பார்.

மண் ரோட்டில் சைக்கிள் ரயர் தடம் பதிந்த அடையாளங்கள் தெரிந்தன. குட்டை குட்டையாகத் தேங்கி நின்ற தண்ணீரை விலக்கச் சைக்கிளை வெட்டி வெட்டி ஓட வேண்டியிருந்தது. "சரக்க்" என்று சத்தம் கேட்டது. அட்டையோ நத்தையோ ஒன்று ரயரில் நெரிந்து போயிருக்கவேண்டும். ஒருகணம் அரியண்டம், பிறகு பிறகு பரிதாப உணர்ச்சி. புத்த மதக் கொள்கைப்படி ஈ , எறும்பைக் கூடக் கொல்லக் கூடாதாமே? தூரத்தில் இடைக்கிடை துவக்குச் சூட்டுச் சத்தங்கள் கேட்டுக் கொண்டுதானிருந்தன. ஒன்றிரண்டு சூட்டுச் சத்தங்கள் கேட்டாலே தலை தெறிக்க எதிர்த் திசையில் ஓடும் காலம் கழிந்து, 'தூரத்தில் தானே'என்று அசண்டையாக இருக்கும் காலமிது. ஈரக்காற்று முகத்தில் அடித்தது... நெஞ்சுக்குக் குறுக்கே கைகளைக் கட்டிக்கோண்டு மெலிதாக நடுங்கிக்கொண்டு இரண்டொரு பெரிசுகள் நடந்து போய்க்கொண்டிருந்தர்கள். ('இந்தக் காலத்துப் பெடியளுக்குக் குளிர்ச்சட்டை தேவைப்படுது, நாங்களும் இருக்கிறமே, இந்த அறுவைத்தஞ்சு-எழுவது வயதிலும் சட்டையே இல்லாமல் நடந்து திரியுறம், இது ஒரு குளிரே?)

திடீரென்று வெயில் அடிக்க ஆரம்பித்தது. இப்பதான் முதல் முதலில் வெயில் அடிப்பதுமாதிரி ஒரு சுத்தமான புது வெயில். கண்கூசியது. தும்பிகளும், வண்ணத்திப் பூச்சிகளும் பறக்கத் தொடங்கின. முன்பு எங்கு ஒளித்திருந்தன? தூரத்தில் ஹெலிகொப்ரர் பறப்பது கேட்டது. ஹெலிகொப்ரர்காரன் என்றால் கண்ணில் பட்ட யாரையும் துரத்திச் துரத்திச் சுடுவான். "பிளேன்"காறன் என்றால் முன்பே திட்டமிட்டிருந்தால் தான் குண்டு போடுவான். போற வாற வழியில் "எந்நேரமும் எவருக்கும்" வஞ்சகமில்லாமல் சுடுவது ஹெலிகாரன்தான். நினைத்தது மாதிரி 'ஹெலிச்சூட்டுச்' சத்தம் கேட்டது, தூரத்தான். கிட்ட வந்தால் கண்ணில் அகப்பட்ட வீட்டுக்கு புகுந்து தலைக்கறுப்பையும் சைக்கிளையும் மறைக்கவேண்டும். '50 கலிபரா?, 60 கலிபரா' ? எதுவாக இருந்தாலும் ஒரு மனிதனைப் பிய்த்தெறியப் போதும். சிலவேளை ஜாம்பழப் போத்தலில் கைக்குண்டைப் நுளைத்து, அதைச் சும்மா மேலேயிருந்து போட்டுவிடுவாங்கள். அப்படி ஒன்று விழுந்துதான் எங்கள் கணக்கு வாத்தியார் ஒருவர் இறந்து போனார்.

மீண்டும் இருட்டு. இருட்டு என்றால் இரவு மாதிரி இருட்டு. எதிரில் சுகந்தி வந்திருந்தாலே மட்டுக்கட்டியிருக்க மாட்டேன். அவ்வளவு இருட்டு. மழை எந்நேரமும் பெய்யலாம். அல்லது ரூபவாஹினியில் சொல்வதுமாதிரி 'மழை பெய்யக்கூடும்' . அதுக்குமுன் பாணோடு வீடு போகவேண்டும். இரண்டரை இறாத்தல் பாண் வாங்கவேண்டும். அதில் ஒரு இறாத்தல் "அச்சுப்" பாண், மிகுதி "ரோஸ்" பாண். 'ரோஸ்" பாணின் கரை சைக்கிளை ஓடி ஓடித் தின்ன நன்றாக இருக்கும். பாணுக்கு கோழிக்கறி நல்ல பொருத்தம்-அதுவும் மழை நாட்களில். இல்லாவிட்டால் போனாப் போகுது என்று தேங்காய்ச் சம்பலோடு சாப்பிடலாம், அதுவும் நல்லாத்தான் இருக்கும். மழைக்கு இடித்த அரிசிமாப் புட்டும் நல்லாகத்தான் இருக்கும். வெளியில் மழை பெய்ய , வீட்டு விறாந்தையில் குந்தியிருந்து, புட்டை தேங்காய்ச் சம்பலோடு... காமுகன் என்பவன் எந்த நேரமும் பொம்பிளையைப் பற்றி யோசிப்பானாம், நான் மழை வந்தால் சாப்பாட்டைப் பற்றி யோசிக்கத் தொடங்கிவிடுகிறேன்.

**************************

பின்னேரம் ஆகியும் இருட்டு விலகவில்லை. இனி வெளிச்சம் நாளை காலை வந்தால்தான் உண்டு. வயல் வெளியில் நடுங்கிக் கொண்டு நடந்தேன். சுருக்கிய குடை கையில். குளிர் காற்றுக் காதில் வீசியது. வயல் கட்டில் 'பலன்ஸ்' பண்ணி நடக்க நாரியை நெளித்து இடைக்கிடை ஒரு சின்ன ஓட்டம் ஓட வேண்டியிருந்தது. எதிரில் சின்ராசு அண்ணை "தண்ணீஈஈ கருக்கையிலே அங்கே தவளை சத்தம் கேட்டீஈஈருச்சு..." என்று பாடிக்கொண்டு வந்தார். என்னைக் கண்டதும் பாட்டை நிறுத்தி , "தம்பி வளலாய்க் குளத்துக்க முதலை வந்துட்டுதாம், பாத்துப் போ" என்றார். இந்த முதலைகள் எப்படி வருகின்றனவோ தெரியாது. மழைக்காலத்தில் மட்டும்தான் யாராவது காண்பார்கள். முதலை என்றவுடனே ஆளை விழுங்கிவிடுமென்றுதான் யோசனை ஓடும். ஆருக்காவது ஒரு முதலைக்கடி தன்னும் விழுந்தது மாதிரி ஊரில் அறியவில்லை. ஆனால் 'வழிதவறி' ஒரு தோட்டக் கிணற்றிற்குள் விழுந்துவிட்ட ஒரு குட்டி முதலையை அடி அடி என்று அடித்துப் பின்னும் அது சாகாததால் அதன் வாய்க்குள் இறைப்பு மிசின் பைப்'பைச் செருகி தண்ணீர் பம்ப் பண்ணிக் கொன்றார்கள்.அது பழங்கதை.செத்த முதலையை நானும் போய்ப் பார்த்திருந்தேன். முதலைப் பயம் இருந்தாலும் தலை முழுக்க அடிகாயங்களுடன் செத்திருந்த குட்டி முதலையைப் பார்க்கப் பாவமாகத்தான் இருந்தது.

புத்த மதக் கொள்கைப்படி ஈ , எறும்பைக் கூடக் கொல்லக் கூடாதாமே?

http://www.ssakthivel.com/2012/06/blog-post.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.