Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஓஷோ கதைகள்

Featured Replies

மனிதனும் விலங்கும்

மாறுபட்ட கருத்துடையவர்களும் ஒருங்கிணைந்து வாழ முடியும் என்பதனை விளக்குவதற்காக ஒரு மிருகக் காட்சி சாலையில் ஒரே கூட்டில் ஒரு புலியும் முயலும் சேர்த்து வைக்கப் பட்டிருந்தன.இந்த அதிசயக் காட்சியைக் காண தினமும் மக்கள் கூட்டம் கூட்டமாக வந்தனர்.புலி படுத்திருக்கும்.அதன் வயிற்றில் சாய்ந்தவண்ணம் முயல் படுத்து தூங்கிக் கொண்டிருக்கும்.

ஒரு பெண்மணி இதை வியப்புடன் பார்த்து விட்டு நிர்வாகியிடம் சென்று, ''இது எப்படி சாத்தியம்? எப்படி இவ்வாறு பயிற்சி கொடுத்தீர்கள்?''என்று ஆர்வமுடன் கேட்டார்.அன்று அந்த நிர்வாகி பணியிலிருந்து ஓய்வு பெரும் நாள் எனவே அவர் அந்தப் பெண்ணிடம் மெதுவாக,''இதில் பெரிய ரகசியம் ஒன்றும் இல்லை.தினசரி நாங்கள் ஒரு ஆட்டை மாற்றிவிடுவோம்,இதை யாரிடமும் சொல்லி விடாதீர்கள்,''என்றார்.

புலி விலங்குகளை அடித்துக் கொல்லும் கொடிய மிருகம்தான்.ஆனால் அது பசித்தால் மட்டுமே தேவைக்கேற்ப விலங்குகளைக் கொல்லும்.பசி தீர்ந்தால் அது சாதுவாகிவிடும்.மனித இனம் மட்டும் தான் காரணம் ஏதுமின்றி பிற மனிதர்களைக் கொல்லும் குணமுடையது..ஒரு அணுகுண்டைப் போட்டு பல்லாயிரக்கணக்கான மக்களைக் கொல்லுவான்.ஹிட்லர் போன்ற மனிதர்கள் தான் இனத்தின் பேரால் பல லட்சம் மனிதரைத் தீர்த்துக் கட்ட இயலும்.

ஒரு உணவு விடுதிக்கு திடீரென ஒரு சிங்கமும் முயலும் சேர்ந்து வந்தன.அனைவரும் அரண்டு போய் நின்றபோது விடுதி மேலாளர் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு முயலிடம் சென்று,''நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள்?உங்கள் நண்பர் என்ன சாப்பிட விரும்புகிறார்?''என்று கேட்க முயல் சிரித்துக் கொண்டே சொன்னது,''இங்கு நான் மட்டும் தான் சாப்பிட வந்தேன்.என் நண்பர் பசியுடன் இருந்தால் நான் உடன் வந்திருக்க முடியுமா?நானே உணவாகியிருப்பேனே!''என்று சொன்னதாம்.


நன்றி ;ஜெயராஜன் ஓஷோ கதைகள்

நச்சரிப்பு

ஜெயராஜன்;  ஓஷோ கதைகள்

ஒரு தீவிர பக்தன் இருந்தான் நாள் முழுவதும் ஏதாவது பிரார்த்தனை செய்து கொண்டே இருப்பான்.அவனுடைய தம்பி இவனுக்கு நேர் மாறானவன்.பெரிய நாத்திகவாதி.சமீபத்தில் பக்தனின் மனைவி இறந்து விட்டாள் .அவனுடைய கூட்டாளி வியாபாரத்தில் அவனை ஏமாற்றி விட்டான்.அவனுடைய வீடு தீப்பிடித்து எரிந்து விட்டது. 

அவனுடைய குழந்தைகள் தறுதலையாய் திரிந்தார்கள். அதே சமயம் அவனுடைய தம்பி மிக மகிழ்ச்சியுடன் தனது மனைவி,குழந்தைகளுடன் வாழ்ந்து வந்தான்.பக்தன் ஒரு நாள் தாங்க முடியாமல் கடவுளிடம்,''நான் உன்னைக் குறை சொல்லவில்லை.என் வீடு எரிந்தபோதும் அதற்கு ஒரு காரணம் இருக்க வேண்டும் என்று தேற்றிக் கொண்டு உன்னையே வணங்கினேன்.என் மனைவி இறந்தபோது அதற்கு நல்ல காரணம் இருக்கும் என்று நம்பினேன்.

என் குழந்தைகள் எனக்கு எதிராக வந்தபோது கூட எல்லாம் உன் செயல் என்று தேற்றிக்கொண்டு உன்னைத் தான் கும்பிட்டேன்.எந்நேரமும் உன்னையே நினைத்துக் கொண்டிருக்கும் எனக்கு ஏன் இத்தனை சோதனைகள்?உன்னைத் தூற்றித் திரியும் என் தம்பி சகல வசதிகளுடனும் நன்றாக வாழ்கிறானே,அது ஏன்?''என்று கேட்டான். கடவுள் வெறுப்புடன் சொன்னார்,''நாள் முழுவதும் உன் நச்சரிப்பு தாங்காமல்தான் !''

கடவுளை எந்நேரமும் நச்சரித்துக் கொண்டிருந்தால் பாவம் அவர்தான் என்ன செய்வார்? .

மேடை பயம்

இங்கிலாந்தின் பிரதமராய் இருந்த வின்ஸ்டன் சர்ச்சில் ஒரு சிறந்த பேச்சாளர்.ஒரு முறை ஒருவர்,''மேடையில் இவ்வளவு சரளமாகப் பேசுகிறீர்களே, மேடை பயம் கொஞ்சம் கூட இல்லாமல் இருப்பது எப்படி?''என்று கேட்டார்.சர்ச்சில் சொன்னார்,

''நான் பேசும்போது என் முன்னால் அமர்ந்திருப்பவர்கள் எல்லோரும் முட்டாள்கள் என்று நினைத்துக் கொள்வேன்.அதனால் பயம் ஏற்படுவது இல்லை.''இதே கேள்வி ஒரு முறை ஜென் மாஸ்டர் ரின்சாயிடம் கேட்கப்பட்டது.ஏனெனில் அவரும் தங்கு தடையின்றிப் பேசக் கூடியவர்.அவர் சொன்னார்''என் முன்னால் அமர்ந்திருப்பவர்களைப் பார்க்கும் போதெல்லாம் நான்தான் அங்கு உட்கார்ந்திருப்பதாக எண்ணிக் கொள்வேன்.இந்த மக்களெல்லாம் நான்தான் என்று என்னும்போது எந்த வித பயமும் ஏற்படுவதில்லை.நான்தான் பேச்சாளர்,நான்தான் கேட்பவர்.

அதனால் பயமில்லை,''

இதுதான் மேற்கு நாடுகளுக்கும் கிழக்கு நாடுகளுக்கும் உள்ள கலாச்சார வித்தியாசம்.அடுத்தவரை முட்டாளாக நினைப்பதற்கும்,தானாகவே பாவிப்பதற்கும் எவ்வளவு மனதளவில் வித்தியாசம்!
 

மூன்று முறை

எப்போதும் தேவையானவை எல்லாம் உன் மனதிற்கு எதிரானவை.எனவே மனமானது எந்த ஒரு உண்மையையும் உன்னுள் நுழைய அனுமதிக்கப் பயப்படுகிறது.அது அந்த உண்மையைத் தட்டிக் கழிக்க ஆயிரத்தொரு காரணங்களைக் கண்டு பிடிக்கிறது.ஏனெனில் உண்மை உனது மனத்தைக் கலைத்துவிடும்.அதனால் மனதிற்கு ஆதரவானதை மட்டுமே அது அனுமதிக்கிறது.மேலும் மனமே ஒரு குப்பை.அதனால் அது குப்பையைத்தான் சேகரிக்கும்.அதையும் மகிழ்வோடு சேகரிக்கும்.

புத்தர் எதையும் மூன்று முறை கூறுவது வழக்கம் .காரணம் கேட்டபோது அவர் சொன்னார்''முதல் முறை நீங்கள் கேட்பதே கிடையாது.இரண்டாம் முறை ஏதாவது ஒரு பகுதியைத்தான் கேட்பீர்கள்.மூன்றாம் முறைதான் நான் கூறுவதை சரியாகக் கேட்கிறீர்கள் முதல் முறை சொல்லும்போது நீங்கள் உட்கருத்தை உணர முடியாது.இரண்டாம் முறை,உணர்ந்தாலும் சரியான முறையில் கருத்தை உணர மாட்டீர்கள்.மூன்றாம் முறை நான் என்ன எதிர் பார்க்கிறேனோ அதை சரியாகப் புரிந்து கொள்கிறீர்கள் என்று நம்புகிறேன்.''

ஏதாவது ஒன்று தேவையற்றது என்று நீ கண்டு கொண்ட கணமே அதன் மீது உன் கவனத்தை செலுத்தாதே.அதை விட்டு விலகிச் சென்றுவிடு.பொய்யைப் பொய் என்று கண்டு கொள்வதே மெய்யை மெய் என்று கண்டு கொள்வதற்கான ஆரம்பம்.

புல்லாங்குழல்

நன்றி ;ஜெயராஜன் -ஓஷோ கதைகள்

மோசசிடம் ஒரு புல்லாங்குழல் இருந்தது.சில சமயம் அதை வாசிக்க அவர் மலைக்கு செல்வதுண்டு.அவர் வாசிப்பை அவ்வழியில் செல்லும் இடையர்கள் மெய்மறந்து கேட்பர்.மான்கள் அசையாது நிற்கும்.பறவைகள் அவரை சூழ்ந்து கொள்ளும்.மோசஸ் இறந்த பிறகு அவ்விடையர்கள் அந்தப் புல்லாங்குழலை ஒரு மரத்தடியில் வைத்து வழிபட ஆரம்பித்தனர்.ஓரிரு தலைமுறைக்குப்பின் மக்கள்,''இந்த மூங்கில் புல்லாங்குழலில் என்ன இருக்கிறது?.வழிபடுவதற்கு இது மேலும் சிறப்புள்ளதாக இருக்க வேண்டும்.''என்று கூறி அதைத் தங்கத்தால் அலங்கரித்தனர்.

அடுத்து வந்த மக்கள் அதை வைரத்தால் அலங்கரித்தனர்.சில ஆண்டுகள் கழித்து ஒரு சங்கீதக் கலைஞர் அவ்வழியே வந்தார்.அவர் மோசசின் புல்லாங்குழல் பற்றிக் கேள்விப்பட்டு ஆவலுடன் அதைப் பார்க்க வந்தார்.தங்கத்தாலும் வைரத்தாலும் அலங்கரிக்கப்பட்டிருந்த அந்தப் புல்லாங்குழலை கையில் எடுத்துப் பார்த்தார்.பின் அதை ஊதிப் பார்த்தார்.அதன் துளைகள் முழுவதும் அடைபட்டிருந்தன.
மகாவீரரின் புல்லாங்குழலும்,புத்தரின் புல்லாங்குழலும்,இயேசுவின் புல்லாங்குழலும் இப்படித்தான் மாற்றப்பட்டு விட்டன.அவற்றை வைத்திருப்பவர்கள் அவற்றை அழகற்றவை ஆக்கி விட்டனர்.இதற்கு மகா வீரரோ,புத்தரோ ஏசுவோ பொறுப்பல்ல.நாமே காரணம்.

நன்றி ;ஜெயராஜன் -ஓஷோ கதைகள்

  • தொடங்கியவர்

கருணை உள்ளம்

ஒரு பிச்சைக்காரன் ஒரு மரத்தின் பக்கம் சென்று கொண்டிருந்தான்.அப்போது ஒரு மனிதன் வேகமாக வந்து அவனைக் குச்சியால் பலமாக அடித்தான்.நீண்ட நேரம் அடித்ததில் கை வலித்து குச்சி கீழே விழுந்ததும் அடித்தவன் அந்த இடத்தை விட்டு வேகமாக ஓடி விட்டான்.அந்தத் தடியைக் கையில் எடுத்துக் கொண்டு அருகில் இருந்த கடைக்கு பிச்சைக்காரன் சென்றான்.

அந்தக் கழியை பத்திரமாக வைத்திருந்து அடித்தவன் அந்தப் பக்கம் வந்தால் அவனிடம் சேர்ப்பிக்குமாறு வேண்டிக் கேட்டுக் கொண்டான்.கடைக்காரன்,''அவன் உங்களைக் கழியால் அடித்திருக்கிறான்.நீங்கள் மிகுந்த கருணையுடன் அவன் அடித்த கழியையே அவனிடம் திரும்பத் தரச் சொல்கிறீர்களே!''என்று கேட்டான்.பிச்சைக்காரன் சொன்னான்,

''முன்பொரு சமயம் இந்த மரத்தின் கீழே சென்று கொண்டிருந்தேன்.மரத்தின் கிளை ஒன்று என் மீது விழுந்தது.நான் அதை ஏற்றுக் கொண்டேன்.இந்த மனிதன் அந்த மரத்தை விடக் கொஞ்சமாவது மேலல்லவா?அதனால் தான் நான் அடியையும் ஏற்றுக் கொண்டேன்.''

நன்றி ஜெயராஜன் ; ஓஷோ கதைகள்

எது சொந்தம்?

நன்றி ;ஜெயராஜன் | In : ஓஷோ கதைகள்

துறவி ஒருவர் தன் சீடனை அழைத்து ஒரு நாள் முழுவதும் அரண்மனையில் தங்கி பாடம் கற்று வருமாறு கூறினார்.ஆசிரமத்தில் படிக்காத பாடமா அரண்மனையில் படிக்க என்று எண்ணினாலும் குருவின் கட்டளைப்படி அவன் அன்று அரண்மனை சென்றான்.

அரசன் அவனை நன்கு உபசரித்து அன்று அங்கு தங்கிச்செல்லுமாறு கூறி அனைத்து வசதிகளும் செய்து கொடுத்தான்.ஆனால் சீடன் பார்க்கையில் எங்கு பார்த்தாலும் ஆட்டமும்,பாடலும்,குடியுமாக இருந்தது அவனுக்கு அருவருப்பாக இருந்தது.இருந்தாலும் மனத்தைக் கட்டுப்படுத்தி படுத்து உறங்கினான்.அதிகாலையில் அரசன் சீடனை அழைத்து அரண்மனையின் பின்புறம் செல்லும் நதியில் குளித்து வர அழைத்தார்.சீடனும் அரசனும் குளித்துக் கொண்டிருந்தனர்.அப்போது திடீரென அரண்மனையில் தீப்பற்றியது.அதை அரசன் சீடனிடம் காண்பித்தான்.உடனே சீடன் அவசரமாக குளிப்பதை விட்டு, தன் கோவணம் எரிந்து விடாமல் காக்க வேண்டி ஓடினான். 

கோவணத்தைக் கையில் எடுத்தபின் திரும்பிப் பார்த்தால் அரசன் இன்னும் ஆற்றிலே குளித்துக் கொண்டிருந்தான்..அரண்மனை பற்றி எரியும்போது அரசன் அதைப் பற்றிக் கவலைப்படாமல் இருக்கும்போது தான் மட்டும் கோவணத்திற்காக ஓடி வந்ததை எண்ணி தலை கவிழ்ந்தான்.அரசனின் காலில் விழுந்து எப்படி அவரால் பதட்டப்படாமல் இருக்க முடிந்தது என்று கேட்டான்.

அரசன் சொன்னார்,''இந்த அரண்மனை என்னுடையது என்று நினைத்திருந்தால் நான் இங்கே நின்றிருக்க மாட்டேன்.இது ஒரு அரண்மனை.நான்,நான்தான்.அரண்மனை எப்படி என்னுடையதாகும்?நான் பிறக்காத போதும் இந்த அரண்மனை இங்கு இருந்தது.நான் இறந்த பின்னும் அது இங்கு இருக்கும்.இது எப்படி என்னுடையதாகும்?கோவணம் உங்களுடையது என்றும் அரண்மனை என்னுடையது என்றும் கருதியதால் நீங்கள் அதைப் பின்பற்றி ஓடினீர்கள்.நான் அவ்வாறு கருதாததால் ஓடவில்லை.''

தன் மனப்பாங்கினால்தான் மனிதன் அடிமை ஆகிறான்.அதை மாற்றினால்தான் அவன் விடுதலை பெறமுடியும்.
 

புத்தரா,ஏசுவா?

நன்றி ; ஜெயராஜன் | In : ஓஷோ கதைகள்

கிறிஸ்தவர் ஒருவர் இயேசுவின் பெருமையை விளக்க ஒரு ஜென் ஞானியை அணுகினார்.அவர் ஞானியிடம்,''நாங்கள் பின்பற்றும் நூலிலிருந்து உங்களுக்கு சிலவற்றை வாசித்துக் காட்டலாமா?''என்று கேட்க ஜென் ஞானியும்,''ஆஹா,அதற்கென்ன,வாசியுங்களேன்,''என்றார்.உடனே கிறிஸ்தவர்,இயேசுவின் மலைப் பிரசங்கத்தை துறவிக்குப் புரியுமாறு ஜப்பானிய மொழியில் சொன்னார்.

அதைக் கேட்டு முடித்ததும் துறவியின் கண்களிலிருந்து கண்ணீர் அருவியாய்க் கொட்டிற்று.அவர் வந்தவருக்கு நன்றி சொல்லிவிட்டு,''இவையெல்லாம் புத்தரின் வாக்கியங்களாயிற்றே,''என்றார்.வந்தவர் உடனே அதை மறுத்து,''இல்லை,இல்லை,இவை ஏசுபிரான் சொன்ன வாக்கியங்கள்.''என்றார்.துறவி சொன்னார்,''நீங்கள் என்ன பேர் வேண்டுமானாலும் சொல்லுங்கள்.

இவை ஒரு புத்தரின் வாக்கியங்களே! இனி நான் என் சீடர்களிடம் ஏசுவும் ஒரு புத்தரே என்று சொல்லுவேன்.''நீங்களும் இறைத் தன்மையை உணர்ந்தால் இயேசு,புத்தர் போன்ற பெயர்கள் ஒரு பெரிய விசயமில்லை..

குரைக்காதே!

நன்றி ; ஜெயராஜன் | In : ஓஷோ கதைகள்

நாய் ஒன்று தன இன நாய்களுக்கு போதனை செய்து வந்தது.கடவுள் தன வடிவில் நாயைப் படைத்தார் என்று அது சொல்வதுண்டு.எல்லா நாய்களுக்கும் அதன் மீது ஒரு குருவுக்குள்ள மரியாதை உண்டு.அந்த நாய் மற்ற நாய்களிடம் எப்போதும் குரைக்கக் கூடாது என்று போதனை செய்து வந்தது.எந்த நாய் குரைப்பதைக் கண்டாலும் அந்த இடத்திலேயே அது குரைப்பது ஒரு பயனற்ற செயல் என்று போதிக்க ஆரம்பித்துவிடும்.இந்த போதனை செய்பவர்களே இப்படித்தான்!எது ஒன்றை தவிர்க்க முடியாதோ அதைத்தான் செய்யக்கூடாது என்று வலியுறுத்துவார்கள்.

மற்ற நாய்களும் குரைப்பதைத் தவிர்க்க முயற்சித்தும் அவற்றால் முடியவில்லை.எனவே குற்ற உணர்வுடன் அவை ஒருநாள் ஒரு இடத்தில் கூடியபோது ஒரு நாய் ,''நமது குரு சொல்வது உண்மை. குரைப்பது ஒரு தேவையற்ற செயல் அது நம் மரியாதையைக் குறைக்கிறது.எனவே நாம் நாளை ஒரு நாள் எங்காவது ஒரு மூலையில் முடங்கிக் கிடந்தாவது நாளை முழுவதும் குரைக்காமல் இருப்போம்,''என்று கூற அனைத்து நாய்களும் அதை ஆமோதித்தன.மறுநாள் சொன்னதுபோல நாய்கள் தங்களை கட்டுப்படுத்திக் கொண்டு குரைக்காமல் இருந்தன.அப்போது அந்த குரு நாயானது வெளியே வந்தது.அதற்கு ஒரே அதிசயம்.எங்குமே குரைப்பு சப்தம் கேட்கவேயில்லை.

அதற்கு தெரிந்து விட்டது,தமது சொல்லுக்கு எல்லா நாய்களும் மதிப்புக் கொடுத்துள்ளனவென்று. அதே சமயம் அதற்கு ஒரு பயமும் வந்துவிட்டது.எல்லா நாய்களும் குரைக்கவில்லை என்றால் தனக்கு வேலை எதுவும் இருக்காதே,யாருக்கும் ஆலோசனை கூற முடியாதே என்ற அச்சம் ஏற்பட்டது.அப்போது தனக்கே குரைக்கவேண்டும்போலத் தோன்றியது.

அருகில் நாய் எதுவும் இல்லாததால் தைரியமாக அது குரைத்தது.அவ்வளவுதான்.அடக்கிக் கொண்டிருந்த நாய்கள் அவ்வளவும் தங்களுக்குள் யாரோ கட்டுப் பாட்டை மீறி விட்டார்கள் என்ற தைரியத்தில் எல்லாம் ஒன்று சேரக் குரைத்தன.இப்போது குருவான நாய்க்கும் மகிழ்ச்சி,இனிமேல் எல்லோருக்கும் புத்திமதி சொல்லலாம் என்று;மற்ற நாய்களுக்கும் மகிழ்ச்சி,குரைப்பதை யாராலும் கட்டுப் படுத்த இயலாது,எப்போதும்போலக் குரைக்கலாம்என்று.

மனத்தின் குணம்

நன்றி : ஜெயராஜன் | In : ஓஷோ கதைகள்

அவர் ஒரு புகழ்பெற்ற கவிஞர்.நிறைய கவிதைகள் புனைந்துள்ளார்.நிலாக் கவிதைகள் அவருடைய சிறந்த படைப்பு .நிலவைப் பல வகையில் வர்ணித்து எழுதிய கவிதைகள் அவருக்கு பெயர் வாங்கிக் கொடுத்தன.

அவர் ஒருநாள் தன நண்பர்களுடன் ஒரு காட்டிற்கு பொழுது போக்க சென்றார்.காட்டில் அவருக்கு வழி தவறிவிட்டது.தேடிப்பர்ர்த்தும் நண்பர்களைக் காண முடியவில்லை.காட்டில் மனம் போன போக்கில் அவர் நடந்தார்.அவருக்கு மிகுந்த களைப்பு ஆகி விட்டது.கடுமையாய் பசியும் எடுக்க ஆரம்பித்தது.சாப்பிட எதுவும் கிடைக்கவில்லை.

அதற்குள் இரவும் வந்துவிட்டது.அவர் ஒரு மரத்தில் ஏறி சாய்ந்து கொண்டார்.அப்போது ஆகாயத்தில் பூரண நிலவு பிரகாசித்துக் கொண்டிருந்தது.வழக்கமாக நிலவைப் பார்த்தவுடன் அவருக்கு ஏற்படும் பிரமிப்பு இன்று அவருக்கு ஏற்படவில்லை.வயிறறுப் பசி ஒன்றுதான் அவர் நினைவில் இருந்தது.வேறு வழியில்லாமல் மீண்டும் அவர் நிலவைப் பார்த்தபோது அந்த நிலவு அவருக்கு ஒரு ரொட்டித் துண்டுபோலக் காட்சி அளித்தது.

அதை நினைத்தவுடன் அவருக்கு சிரிப்பு வந்தது.நிலவு பற்றி அழகிய பல கருத்துக்களை எழுதிய தனக்கு இன்று நிலவு ஒரு ரொட்டித் துண்டு போலத் தோன்றுகிறதே என்று நினைத்தார்.ஆம்,பசி வந்தவனுக்குக் காணும் பொருள் யாவும் உணவுப் பொருளாய்க் காட்சி அளிப்பதில் வியப்பேதுமில்லையே!

உண்மையில் எந்தப் பொருளையும் நாம் அதன் உண்மைத் தன்மையில் பார்ப்பதில்லை.நம் மனம் அதை எப்படி உருவகிக்கிறதோ அப்படித்தான் பார்க்கிறோம்.மனதின் விந்தை இது.

இறந்தவன்

நன்றி ; ஜெயராஜன் | In : ஓஷோ கதைகள்

மன நோயுற்ற ஒருவன் மனோதத்துவ மருத்துவரிடம் அழைத்து வரப்பட்டான்.அவன் பிரச்சினை என்னவென்று கேட்க அவன் தந்தை சொன்னார்,''அவன் தான் இறந்து விட்டதாகக் கூறிக் கொண்டிருக்கிறான்.எங்காவது வெளியே போகச் சொன்னால் இறந்தவன் எப்படி வெளியே செல்ல முடியும் என்று கேட்கிறான்.என்ன சொல்லி சமாதானப் படுத்தினாலும் அதை ஏற்க மறுக்கிறான்.அதனால் தான் உங்களிடம் அழைத்து வந்தோம்.

''மருத்துவரும்,''இது ஒன்றும் பெரிய விசயமில்லை அவனை எளிதில் நான் சரி செய்து விடுவேன்,''என்றார்.பின் அவர் அவனிடம்திருபி கேட்டார்,''இறந்த மனிதனுக்கு உடலிலிருந்து இரத்தம் வருமா?''அவன் சொன்னான்,'வராது,'மருத்துவரும் ஒரு கத்தியை எடுத்து அவன் உடலில் இலேசாகக்கீற இரத்தம் பீறிட்டது.அவன் குடும்பத்தினர் மிக்க மகிழ்ச்சி அடைந்தனர்.மருத்துவர்,

''பார்த்தாயா,உன் உடலிலிருந்து இரத்தம் வருகிறது.எனவே நீ இறக்கவில்லை.புரிகிறதா?''என்று கேட்டார்.அவன் மிக அமைதியாக சொன்னான்,''இதுவரை நான் இறந்தவர்கள் உடலிலிருந்து இரத்தம் வராது என்று நம்பி வந்தேன்.இப்போதுதான் தெரிந்து கொண்டேன்,இறந்தவர் உடலிலிருந்தும் இரத்தம் வரும்.''மருத்துவர் மயங்கி விட்டார்.
 
  • தொடங்கியவர்

தூதன்

நன்றி : ஜெயராஜன் | In : ஓஷோ கதைகள்

''கடவுளின் தூதன் நான்''என்று கூறிக் கொண்டிருந்த ஒருவனை கலீப் ஓமர் முன் கொண்டு வந்து நிறுத்தினர்.அவன் ஓமரிடம் சொன்னான்,''நபிகள் நாயகம் தூதராக வந்து ஆயிரம் ஆண்டுகள் ஆகி விட்டன.அதற்குள் நிறைய மாற்றங்கள் வந்து விட்டன.எனவே புதிய செய்திகளுடன் என்னைத் தூதராக இறைவன் அனுப்பி இருக்கிறார்.''ஓமருக்கு கோபம் வந்துவிட்டது.அவர் தன ஆட்களிடம் அவனை உடைகளின்றி ஒரு தூணில் கட்டி வைத்து உதைக்கச் சொல்லிவிட்டு ஒரு வாரம் கழித்து அவனை வந்து பார்ப்பதாகக் கூறிச் சென்றார்.

அதேபோல் அவர் வந்தபோது அவன் உடலெங்கும் ரத்தக் காயங்களுடன் பலமின்றி காணப்பட்டான்.ஓமர் அவனிடம்,''இப்போது என்ன சொல்கிறாய்?''என்று கேட்டார்.அவன் சிரித்துக் கொண்டே,''நான் கடவுளிடமிருந்து வரும்போது அவர்,'என்னுடைய தூதர்கள் அனைவரும் இதுவரை துன்புறுத்தப் பட்டிருக்கிறார்கள் .அதுபோல நீயும் துன்புறுவாய் அதைக் கண்டு அஞ்சிவிடாதே,'என்று கூறினார்.நீங்கள் அதை உறுதி செய்துள்ளீர்கள்.

''என்று கூறினான்.அப்போது பக்கத்தில் கட்டிப் போடப்பட்டிருந்த கைதி ஒருவன் கோபத்துடன்,''அவன் சொல்வதை நம்பாதீர்கள்.நபிகளுக்குப் பிறகு நான் எந்த தூதுவரையும் அனுப்பவில்லை.'' என்று கத்தினான்.

இனி வேண்டாம்

நன்றி ;ஜெயராஜன் | In : ஓஷோ கதைகள்

ஒரு மனிதன் ஒவ்வொரு ஆண்டும் தன பிறந்த நாளன்று அந்த வருடம் பாடுபட்டுத் தேடிய பணம் அனைத்தையும் எடுத்துக் கொண்டு குதிரைப் பந்தயத்திற்கு செல்வான்.மீண்டும் மீண்டும் தோற்றபோதும் நம்பிக்கையுடன் ஒவ்வொரு ஆண்டும் இதைத் தொடர்ந்தான்.அவனுக்கு ஐம்பது வயது ஆயிற்று.அவன் நினைத்தான்,''ஒன்று பிச்சைக்காரனாக வேண்டும்,அல்லது பேரரசனாக வேண்டும்.நடுநிலை வேண்டாம்,''எனவே தன சொத்து முழுவதையும் விற்று குதிரைப் பந்தயம் சென்றான்.தோற்றான்.

இப்போது அவனிடம் ஒன்றுமில்லை.ஒரு மலை உச்சிக்கு சென்று அங்கிருந்து குதித்து தற்கொலை செய்துகொள்ள சென்றான்.அப்போது ஒரு குரல்,''நிறுத்து!அடுத்த முறை உனக்கு நான் வெற்றி தருகிறேன்.''என்றது.நம்பிக்கையுடன் இறங்கி வந்து உழைத்துப் பணம் சேர்த்து குதிரைப் பந்தயம் சென்றான்.குரல் ஒரு குதிரை பெயரைச் சொல்ல அதன் பேரில் பணம் கட்டினான்.அக்குதிரையும் வெற்றி பெற்று அவன் பெரும் பணம் பெற்றான்.

அடுத்த பந்தயம் துவங்க இருக்கும்போது மீண்டும் அக்குரல் ஒரு குதிரையின் பெயரைச் சொல்ல அவன் அதன் மீது பணம் கட்ட, மீண்டும் வெற்றி.மூன்றாவது பந்தயத்திற்குப் பணம் கட்டக் கிளம்பினான்.குரல் சொன்னது,''இனி வேண்டாம்,''ஆனால் அவன் சொன்னான்,''அமைதியாயிரு.நான் வெற்றி பெற்றுக் கொண்டிருக்கிறேன்.என் நட்சத்திரங்கள் உச்சத்தில் இருக்கின்றன.யாராலும் என்னைத் தோற்கடிக்க முடியாது.

''இப்போது அவனாகத் தேர்ந்தெடுத்த குதிரை கடைசியாக வந்தது.அனைத்தையும் இழந்து பிச்சைக்காரன் ஆனான்.அவன் தனக்குள்ளே முணுமுணுத்தான்,''இப்போது நான் என்ன செய்ய வேண்டும்?''குரல் சொன்னது,''இப்போது நீ மலை உச்சிக்கு சென்று குதித்து விடலாம்.''

வக்கீல் வாதம்

நன்றி ; ஜெயராஜன் | In : ஓஷோ கதைகள்

ஒரு விவசாயியின் தோட்டத்தில் ஒருவன் அனுமதியில்லாமல் நுழைந்து அவன் வளர்த்து வந்த காடைகளை சுட்டான் என்று வழக்கு போடப்பட்டது.எதிர் தரப்பு வக்கீல் விவசாயியைக் கேள்வி மேல் கேள்வி கேட்டு அவனைக் குழப்ப முயன்றார்.

வக்கீல்:இவர்தான் உன் காடைகளை சுட்டார் என்று சத்தியம் செய்ய முடியுமா?
விவசாயி:நான் அவர்தான் சுட்டார் என்று கூறவில்லை.அவர் சுட்டிருக்கக் கூடும் என்று சந்தேகப்படுகிறேன்.

வக்கீல்:சரி,ஏன் அப்படி அவர்மேல் சந்தேகப்பட்டாய்?
விவசாயி:நான் அவரை,கையில் துப்பாக்கியோடு இருப்பதைப் பார்த்தேன்.அடுத்து என் நிலத்தில் துப்பாக்கிசப்தம் கேட்டேன்.காடைகள் இறந்து விழுவதைப் பார்த்தேன்.என்னுடைய இறந்த காடைகள் அவர் கையில் இருப்பதைப் பார்த்தேன்.

அவ்வளவுதான்.ஆனால் வக்கீல் அவர்களே!என் காடைகள்,தானே தற்கொலை செய்து கொண்டன என்று நீங்கள் கூற மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.

அடையாளம்

நன்றி ;ஜெயராஜன் | In : ஓஷோ கதைகள்

ஒருவன் கலை அழகுடன் அரண்மனையைவிடச் சிறப்பாக மாளிகை ஒன்றைக் கட்டியிருந்தான்.அதை அந்த நாட்டு மன்னர் விலைக்குக் கேட்டும் அவன் கொடுக்கவில்லை.ஒருநாள் அவன் வெளிய போய்விட்டுத் திரும்பும்போது வீடு பற்றி எரிந்து கொண்டிருந்தது.மன்னன் செய்த சதியோ என நினைத்து அவன் அழுது புலம்பினான்.அப்போது அவன் மகன் அங்கே ஓடி வந்தான்.

அவன் சொன்னான்,''அப்பா,கவலைப் படாதீர்கள்.இந்த வீட்டை நான் நேற்று மன்னருக்கு மூன்று பங்கு விலைக்கு விற்றுவிட்டேன்.வரும் பணத்தைக் கொண்டு இதை விட அழகான வீடு ஒன்று கட்டிக்கொள்ளலாம்.''தந்தையின் கண்ணீர் சட்டெனக் காணாமல் போயிற்று.அவன் சிரிக்கத் தொடங்கினான்.அவன் எதிரே வீடு எரிந்து கொண்டிருந்தது.அவன் கண்களிலோ எதிர் காலக் கனவு!அப்போது அவன் இளைய மகன் ஓடி வந்தான்.அவன் சொன்னான்,''அப்பா,அண்ணன் சொன்னது உண்மைதான்.ஆனால் விற்றது பேச்சளவில்தான்.பத்திரம் எதுவும் பதிவு செய்யப்படவில்லை.பணமும் வாங்கவில்லை.''தந்தை மறுபடியும் அழ ஆரம்பித்து விட்டான்.

இதுதான் பற்று...அடையாளம்.ஒருவன் உயிருடன் இருக்கும்போது எல்லாவற்றையும் தன்னுடன் அடையாள படுத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது.எல்லாவற்றையும் பயன் படுத்திக் கொள்ளலாம்.ஆனால் பற்றில் விழுந்து விடக் கூடாது.உடைமை கொள்ள முயலக்கூடாது.
விலகி இருங்கள்!விழித்திருங்கள்!மௌனமாய்ப் பார்த்திருங்கள்!

உதாசீனம்

நன்றி  : ஜெயராஜன் | In : ஓஷோ கதைகள்

ஒரு அரசியல்வாதி மக்களால் போற்றப்பட்டான்.பின் அவனுக்கு அதிகாரம் கிடைத்த் உடன் எல்லோரும் அவனுக்கு எதிராகி விட்டார்கள்.அவன் பதவியிலிருந்து தூக்கி எறியப்பட்டான்.அவன் அந்த ஊரை விட்டே வெளியேற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.அவன் ஊர் ஊராய் தன மனைவியுடன் சென்று வீடு தேட ஆரம்பித்தான்.யாரும் அவனைக் கண்டு கொள்ளவில்லை.ஒரு ஊருக்குள் சென்றபோது அந்த ஊர் மக்கள் அவன் மீது கல்லெறிய ஆரம்பித்தார்கள்.

அவன் மனைவியிடம் சொன்னான்,''இந்த ஊர்தான் நம் வாழ்வைத் தொடங்க சரியான இடம்,''என்றான்.மனைவியோ,''உங்களுக்கு பைத்தியம் பிடித்து விட்டதா?''என்று கேட்டாள்.அவன் சொன்னான்,''மற்ற ஊர்க்காரர்களைப் போல இந்த ஊர் மக்கள் நம்மை உதாசீனப் படுத்த வில்லையே?அவர்கள் நம்மை கவனிப்பதால் தான் கல்லை விட்டெறிகிறார்கள்.''உதாசீனத்தை விட எதிர்ப்பு மேலானது.

  • தொடங்கியவர்
கையாலாகாதவன்

நன்றி : ஜெயராஜன் | In : ஓஷோ கதைகள்

கலிலியோ பூமி சூரியனை சுற்றுகிறது என்று கண்டு பிடித்து சொன்னதற்கு கிறிஸ்துவ மதத்திலிருந்து கடுமையான எதிர்ப்பு இருந்தது.ஏனெனில் பைபிளில் சொல்லப்பட்டிருந்ததற்கு அது எதிராக இருந்தது.கடைசியில் எழுபது வயதுக் கிழவராயிருந்த அவரை போப்புக்கு முன் மண்டியிட்டு மன்னிப்புக் கேட்கக் கட்டாயப் படுத்தினார்கள்.

அவரும் தள்ளாடியபடி நடந்துபோய் மண்டியிட்டு மன்னிப்பு கேட்டுக் கொண்டு,சூரியன் தான் உலகை சுற்றுகிறது என்று ஏற்றுக் கொள்கிறேன் என்றார்.அனைவருக்கும் மகிழ்ச்சி.பிறகு கலிலியோ வாய் விட்டு சிரித்தார்.''நான் சொல்வதனால் ஏதாவது மாறி விடப் போகிறதா என்ன?என் வார்த்தைகள் எதை சாதித்துவிட முடியும்?நான் சொல்வதனால் பூமியும் சூரியனும் தம் போக்கை மாற்றிக் கொள்ளப் போகின்றனவா?ஆனாலும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

நான் சொன்னது தவறு.ஆனால் ஒன்றை நினைவில் கொள்ளுங்கள்.பூமிதான் சூரியனை சுற்றுகிறது.என் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும் என்ற நிர்ப்பந்தம் பூமிக்குக் கிடையாது.நான் பைபிள் சொல்கிறபடி நடந்து கொள்கிறேன்.நான் கையாலாகாதவன்.''
 

இசை எனும் தவம்

நன்றி ;ஜெயராஜன் | In : ஓஷோ கதைகள்

ஒரு நவாபின் அரண்மனையில் பல இளம் பாடகர்கள் இருந்தனர்.அரசவைக்கு வந்த சிறந்த பாடகன் ஒருவன் தான் பட சில விதிகளைச் சொன்னான்.அவை கடுமையாயிருந்தன.அதாவது அவன் பாடும்போது யாரும் தலையை அசைக்கக் கூடாது.அசைந்தால் அவர்களின் தலைதுண்டிக்கப் பட வேண்டும்.நவாபும் விதிமுறைகளுக்கு ஒத்துக் கொண்டு,இசையைக் கேட்க விரும்புபவர்கள் இந்தக் கட்டுப்பாட்டை ஏற்றுக் கொண்டால் வரலாம் என அறிவித்தான்.

பல ஆயிரம் பேர் அந்த பாடகனின் இசையைக் கேட்கக் கூடினர்.விதிகளை நிறைவேற்றும் பொருட்டு நவாப் உருவிய வாளுடன் வீரர்களை ஆங்காங்கு நிறுத்தினார்.ஆனால் தலையை அசைப்பவர்களை நிகழ்ச்சியின் இடையில் வெட்டிக்கொண்டு இருந்தால் ,பாடகனுக்கு தொந்தரவாக இருக்கும் என்பதால்,தலை அசைப்பவர்களை அடையாளம் காணச் சொன்னான்.இவ்வளவு கடுமையான ஏற்பாடுகளுக்குப் பின்னும் பத்து பேர் தலை அசைத்துவிட்டனர்.

நிகழ்ச்சி முடிந்ததும் அவர்கள் தலையை வெட்ட அரசன் ஏற்பாடு செய்தான்.அப்போது அந்த பாடகன் சொன்னான்,''இந்த பத்து பேர் மட்டுமே என் பாடலைக் கேட்கத் தகுதி உள்ளவர்கள்.மற்றவர்கள் மரணத்திற்குப் பயந்து என் பாடலைக் கவனிக்கவில்லை.அவர்கள் கவனம் அவர்களின் உயிர் மீதுதான்.அவர்களுக்கு இசை தேவையில்லை.நான் பாடிய பாடல் இந்த பத்து பேருக்கு மட்டும் தான்.அவர்கள் என் பாடலின் இனிமையில் தம்மை மறந்து விட்டார்கள்.

எல்லாக் கட்டுப்பாடுகளையும் மீறி பாடலின் இனிமை அவர்களது இதயங்களைத் தொட்டிருக்கிறது..மீதி இரவும் நான் அவர்களுக்காக பாடுவேன்.எனக்குப் பரிசு எதுவும் தேவையில்லை.இசையைக் கேட்கும் உண்மையான மனிதர்களைக் கண்டுபிடித்ததே சரியான பரிசு.இவர்களுக்கு பரிசு கொடுக்கும்படி நான் உங்களை வேண்டுகிறேன்.ஏனெனில் இசை என்பது ஒரு தவம் என உணர்ந்தவர்கள் இவர்கள்''அந்த பத்துப் பேரைப் பொருத்தமட்டில் இசையைக் கேட்கும்போது அவர்களே மறைந்து போய்விட்டார்கள்..இசைமட்டுமே அங்கு இருந்தது .

அசரீரி

நன்றி : ஜெயராஜன் | In : ஓஷோ கதைகள்

ஒரு படகில் பல போணிகள் பயணம் செய்து கொண்டிருந்தனர்.அதில் ஒரு ஞானியும் இருந்தார்.அவரைப் பார்த்து மற்ற பயணிகள் கேலியும்,கிண்டலும் செய்து வந்தனர்.அவர் தியானத்தில் அமர்ந்தார்.இந்நேரம் அவர் எதுவும் செய்ய மாட்டார் என்பதைத் தெரிந்துகொண்ட மற்றவர்கள்,அவரை இஷ்டம் போல அடித்தனர்.அப்போதும் அவர் தியானத்தில் இருந்தார்.

அவர் கண்களிலிருந்து அன்பு, கண்ணீராய் வந்து கொண்டிருந்தது.அப்போது ஆகாயத்தில் ஒரு அசரீரி ஒலித்தது.''அன்புக்குரியவனே,நீ விரும்பினால் இந்தப் படகை நான் கவிழ்த்து விடுகிறேன்!''அப்போதும் சாதுவின் தியானம் கலையவில்லை.அடித்தவர்கள் இப்போது என்ன நடக்குமோ என்று பயந்தார்கள்.விளையாட்டு வினையாயிற்றே என்று நினைத்து அவர்கள்ஞானியின் கால்களில் விழுந்து மன்னிப்புக் கேட்டனர்.சாதுவின் தியானம் முடிந்தது.

சுற்றிலும் அச்ச உணர்வுடன் மற்றவர்கள் நிற்பதைப் பார்த்தார்.''கவலைப்படாதீர்கள்,''என்று அவர்களிடம் கூறிவிட்டு ஆகாயத்தை நோக்கி வணங்கி,''என் அன்பான கடவுளே,நீ ஏன் சாத்தானின் மொழியில் பேசுகிறாய்?நீ விளையாட வேண்டும் என்று விரும்பினால் இந்த மக்களின் புத்தியை மாற்று.அதை விட்டுவிட்டு படகைக் கவிழச்செய்வதால்என்ன பயன்?''என்று கேட்டார்.

ஆகாயத்திலிருந்து பதில் வந்தது,''நான் மகிழ்ச்சி அடைந்தேன்.நீ சரியான உண்மையை அறிந்து கொண்டாய்.முன்னால் ஒலித்தது என் குரல் அல்ல.எவன் ஒருவன் சாத்தானின் குரலை அறிந்து கொள்ள முடியுமோ.அவனால்தான் என் குரலையும் உணர முடியும்.''

சொர்க்கம்

நன்றி : ஜெயராஜன் | In : ஓஷோ கதைகள்

ஒரு அரசியல்வாதி சாகும் தருவாயில் நினைத்தார்,''நான் செய்த பாவங்களுக்குநரகத்திற்குத்தான் செல்ல வேண்டியிருக்கும்.''ஆனால் அவர் இறந்தவுடன் சொர்க்கத்திற்கு அனுப்பப்பட்டார்.அவருக்கு ஒரே வியப்பு.ஏதோ தவறு நடந்திருக்க வேண்டும் என்று நினைத்தார்.அங்கிருந்தவர்களிடம் கேட்டார்,''வாழ்நாள் முழுவதும் நான் நல்லசெயல்கள் எதுவும் செய்ததில்லை.

எனக்கு எப்படி சொர்க்கம்...?''அவர்கள் சொன்னார்கள்,''வாழ்நாள் முழுவதும் நீ நரகத்தில் இருந்துவிட்டாய்.அதனால் உனக்கு சொர்க்கம் அளிக்கப்பட்டிருக்கிறது.மேலும் நீ இருந்தது ஒரு நவீன நரகம்.இங்கு எங்கள் நரகம் எல்லாம் பழமையாகவே இருக்கிறது.

இன்னும் இங்கே பழைய தண்டனைகளையே அளித்துக் கொண்டு இருக்கிறோம்.பூமியில் நீங்கள் அதையெல்லாம் நவீனமாக மாற்றிவிட்டீர்கள்.உன்னை நரகத்தில் போட்டால் இது தான் நரகமா என்று எங்களைப் பார்த்து சிரிப்பாய்.அதனால் கடவுளுக்கே என்ன செய்வது என்று தெரியாமல் உன்னை சொர்க்கத்திற்கு அனுப்பச் சொல்லிவிட்டார்.''

மக்கள் இன்னும் நரகம் எங்கோ இருக்கிறது என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.நாம் வாழ்வதே நரக வாழ்க்கைதான்.இதை விடக் கொடிய நரகம் இன்னொன்று இருக்க முடியாது.ஆனால் நாம் வாழும் இடத்தை சொர்க்கமாக்குவதும் நம் கையில் தான் உள்ளது.
 
  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்களுக்கு நன்றி இனியவன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.