Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இதயத்தின் மொழிகள் புரிந்து விடில்...!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்


இதயத்தின் மொழிகள் புரிந்து விடில்...! - பகுதி - 1 

பொறுப்புத் தவிர்த்தல் (அதான்பா disclaimer!): எனது முதல் தகுதி மாட்டு வைத்தியராகவும் மேலதிக தகுதி கல/மூலக்கூற்று உயிரியலாளராகவும் இருப்பதால் இந்தக் கட்டுரைத் தொடரை மருத்துவ ஆலோசனையாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று வாசகர்களிடம் கேட்டுக் கொள்கிறேன். உயிரியல் சார்ந்த துறைகளில் நான் இன்னும் தேடுதல் செய்யும் மாணவனாக மட்டுமே இந்தத் தகவல்களை சக வாசகர்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.

மாரடைப்பு: உலகின் முன்னேறிய நாடுகளில் பெரும்பாலும் மரணங்களை ஏற்படுத்தும் முதற் காரணமாக இருக்கும் ஒரு நோய் நிலைமை! நோயியல் பாசையில் மாரடைப்பு என்பது இதயத்திற்கான இரத்த ஓட்டம் சில நிமிட நேரங்களுக்குத் தடைப்படுவதால் (ischemia) இதயத்தின் சில குறிப்பிட்ட கலங்கள் இறப்பதால் ஏற்படும் ஒரு நோய். எமக்கு இறப்பு என்பது ஒரு முற்றுப் புள்ளியாக (அல்லது மத ரீதியில் இன்னுமொரு வாழ்க்கையின் தொடர்ச்சியாகவும் !) இருந்தாலும் எங்கள் உடலின் ட்ரில்லியன் கணக்கான கலங்கள் தினமும் இறப்பதன் மூலம் எங்கள் உடலுக்கு புத்துணர்ச்சியையும் புது வாழ்வையும் வழங்குகின்றன என்பது அதிசயமான தகவல்!

பல படைகளைக் கொண்ட எங்கள் தோலின் மேற்படை இறந்து அகற்றப் படா விட்டால் நாம் ஒவ்வொருவரும் இறந்த பிணங்களாகவே காட்சி தருவோம்! இறக்கும் தோலின் மேற்படையை உடனுக்குடன் அகற்றினால் எமது தோலும் புத்துணர்ச்சி பெறுகிறது. இவ்வாறு இறக்கும் தோலின் மேற்படையை இயற்கை அனுமதித்த அளவை விடவும் விரைவாக அகற்றி எங்கள் தோலை ஜொலிக்கச் செய்ய நாம் சலிசிலிக் அமிலம் போன்ற பிளீச் வகையிலான திரவியங்களைப் பயன்படுத்துகிறோம்!.

இறப்பில் புத்துணர்வு உருவாவதின் அடுத்த உதாரணம் எமது உணவுக் கால்வாயின் உள்படையை உருவாக்கும் மேலணி.  நாம் உள்ளெடுக்கும் உணவின் தன்மையாலும், அந்த உணவுகளை சமிபாடடையச் செய்யும் சுரப்புகளின் வீரியத்தாலும் எமது உணவுக்கால்வாயின் மேலணியை உருவாக்கும் கலங்கள் நாளாந்தம் இறக்கின்றன! ஆனால், அதே வேகத்துடன் மீள உருவாகி எங்கள் உணவுக் கால்வாயைப் பாதுகாக்கும் பணியைத் தொடர்கின்றன!. அவ்வாறு மேலணிக் கலங்கள் உணவுக் கால்வாயின் மீள உருவாக இயலாத நிலைமைகள் உருவானால், வயிற்றுப் புண் எனும் அல்சர் (gastric ulcer) வியாதியால் நாம் அவதிப் பட நேருடுகிறது!

இவ்வாறு உடலின் பல்வேறு உறுப்புகளில், பல்வேறு இழையங்களில் கலங்கள் இறந்தவுடன் மீள உருவாவதைப் போல, இதயத்தின் சில கலங்கள் மீள உருவாகாமல் மடிந்து போவதே மாரடைப்பு ஒரு மரண காரணியாக இருக்கக் காரணம்! ஏன் உடலின் சில கலங்களுக்கு மட்டும் இந்த நிலை? விஞ்ஞான உலகில் இன்று அதிகம் பேசப்படும் ஸ்ரெம் செல்ஸ் (stem cells- மூலவுயிர்க்கலங்கள் என்பது என் தமிழ் மொழி பெயர்ப்பு!) என்பதை அதிகம் பிரபலமாக்கிய இந்த உயிரியல் விஞ்ஞான விந்தை பற்றித் தொடர்ந்து உரையாடுவோம் உறவுகளே!

 

ஆர்வமுள்ளோர் இணைந்திருங்கள்!

 

பி.கு: நிழலி- உள்ளேன் ஐயா!, கிருபன் - நன்றி ஐயா!

தொடரும்.

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இதயத்தின் மொழிகள் புரிந்து விடில்..!-பகுதி - 2 

மனித உடலின் ஒவ்வொரு உறுப்பும் ஒரு தனித்துவமான வகையில் சிறப்பானது. மூளையின் சிறப்பை நரம்புகளின் நடனம் பகுதியில் பார்த்தோம். சிறு நீரகங்கள் கழிவை அகற்றுவதில் அபாரமான சாதனைகளைப் படைக்கின்றன. எமது சுவாசப்பைகள் இரத்தத்தை ஒக்சிசனாக்கி முழு உடலுக்கும் புத்துணர்ச்சியூட்டும் அரிய பணியில் சாதனை படைக்கின்றன.  இதயத்தின் சிறப்புகள் எவை?

உடல் முழுவதும் கிட்டத்தட்ட ஆறு லீட்டர் குருதியைத் தொடர்ந்து செலுத்தும் மனித இதயம் எங்கள் உடலோடு இணைந்திருந்தாலும், எங்கள் உடலில் இருந்து பிரிக்கப் பட்ட நிலையிலும் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு இயங்கக் கூடிய வல்லமை கொண்டது. ஊரிலும் சரி புலம் பெயர்ந்த நாடுகளிலும் சரி வீட்டில் "கோழி உரிக்கும்" பணியில் எங்களில் சிலர் ஈடுபட்ட அனுபவங்கள் இருக்கும். அடுத்த முறை உயிர்க்கோழியை அதன் தலையை வெட்டிக் கொன்ற பின்னர், கோழியை உரிக்கும் போது, அதன் இதயத்தை அடுத்த ஐந்து நிமிடங்களுக்குள் நெஞ்சுக் கூட்டைத் திறந்து அவதானித்துப் பாருங்கள். இறந்த கோழியின் இதயம் மெதுவாகத் துடிப்பதை உங்களால் அவதானிக்க முடியும்! 

கோழியின் இதயம் மட்டுமன்றி மனிதர்களின் இதயமும் உடலின் ஏனைய உறுப்புகளின் கட்டுப் பாட்டில் இருந்து சுதந்திரமாக இயங்கக் கூடிய வகையில் அமைக்கப் பட்டிருக்கின்றது. உடற்றொழிலியல் ரீதியில் மனித இதயத்தை இயக்கும் கட்டுப் பாட்டு நிலையம் இதயத்திலேயே அமைந்திருப்பது இந்த "இதய சுயாட்சிக்குக்" காரணம். கோமா நிலையில் , மூளை இறந்து விட்ட நிலையில் இருக்கும் நோயாளிகளில் இதயம் சாதாரணமாக இயங்குவதற்கும் இந்த இதய சுயாட்சியே காரணம். இதயத்தின் நான்கு அறைகளில் ஒன்றில், இப்படி இதயத்தை உடலின் கட்டுப் பாடின்றி இயங்க வைக்கும் "இதய இயக்கி (பேஸ் மேக்கர்-pace maker)" அமைந்திருக்கிறது. 

இதயம் உடலில் இருந்து சுதந்திரமாக இயங்கும் சுயாட்சி கொண்டிருக்கிறது. இதன் பிரயோக ரீதியான பயன்கள் எவை? மருத்துவ ரீதியில், இரண்டு பயன்களைக் குறிப்பிட முடியும்: ஒன்று: மாரடைப்புக் காரணமாக இயங்காமல் விட்ட ஒரு மனிதனின் இதயத்தை மின்சார அதிர்ச்சியின் மூலம் இயங்க வைக்க முடியும் (இதன் மூலம் இறப்பைத் தடுக்க முடியும்!) இரண்டு: இன்னொரு உடலில் இருந்து எடுக்கப் பட்ட இதயத்தை, இதயம் திருத்த இயலாத அளவில் பழுதடைந்த ஒருவரின் உடலில் பொருத்திச் செயல்பட வைக்க இயலும்!.

 

தொடரும்... 

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் ஜஸ்டின்...!

எமது உடல் எவ்வாறு வடிவமைக்கப் பட்டுள்ளது என்பதை வாசிக்க.. வாசிக்க.. எமது பிரபஞ்சத்தை நோக்கிய சிந்தனை தவிர்க்கப் பட முடியாதது ஆகின்றது!

எவ்வளவு விடயங்கள் இயற்கையால் கவனத்தில் எடுக்கப்பட்டிருக்கின்றன என்பதும் மிகவும் ஆச்சரியமானது!

இதயத்துக்குத் தனித்துவமான 'கட்டுப்பாட்டு நிலையம்' உள்ளது சத்தியமாக.. உங்கள் கட்டுரையை வாசித்த பிறகு தான் தெரியும்!

உங்களிடம் ஒரு கேள்வி...!

உடலின் உள்ளே இருக்கும் உறுப்புக்களுக்கு... வலியை உணரும் தன்மை இல்லை என்று வாசித்தேன்!

உதாரணமாக  இதயத்தில் வலி  ஏற்படும்போது.. அதனால் அதை வெளிப்படுத்த இயலாது என்றும்.. மற்றைய பக்க விளைவுகலிலிருந்து தான் இதய வலியை அறிந்து கொள்ளலாம் என்றும் கேள்விப்பட்டேன்!

தொடருட்டும் உங்கள் பகிர்வு...!

கொடுக்கக் கொடுக்கக் குறையாதது கல்வியறிவு மட்டுமே!

எனவே வஞ்சகம் பாராது அறிவைப் பகிர்ந்து கொள்ளுங்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு கட்டுரை... பதிவிட்டுக் கொண்டு வாருங்கள்  பார்க்க ஆவலுடன் இருக்கின்றோம்...!  :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.