Jump to content

மெட்ராஸ் அந்த மெட்றாஸ்


Recommended Posts

மெட்ராஸ் அந்த மெட்றாஸ் 1: தொழிலதிபரின் இன்னொரு பக்கம்!

 

1954-ல் மெட்றாஸ் மவுண்ட் ரோடு - இப்போது அண்ணா சிலை உள்ள இடம். வாலாஜா சாலை முனை. கோப்புப் படம்
1954-ல் மெட்றாஸ் மவுண்ட் ரோடு - இப்போது அண்ணா சிலை உள்ள இடம். வாலாஜா சாலை முனை. கோப்புப் படம்

தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னை, முன்னர் மெட்றாஸ் என்று அழைக்கப்பட்டது. அந்த மெட்றாஸ் பல வரலாற்று நிகழ்ச்சிகளுக்கும் திருப்புமுனைகளுக்கும் சாட்சியாகத் தொடர்கிறது. டச்சுக்காரர்கள், போர்ச்சுக்கீசியர்கள், பிரெஞ்சுக்காரர்கள், ஆங்கிலேயர்கள் என்று பல்வேறு வெளிநாட்டவர்கள் தென்னிந்தியாவில் முதன்முதல் காலூன்றிய இடம் மெட்றாஸ். மாகாணத்தின் தலைநகரமாக இருந்த மதறாஸ் தமிழர், தெலுங்கர், கன்னடர், மலையாளிகள், முஸ்லிம்கள், ஆங்கிலேயர், குஜராத்தியர், மராட்டியர் என்று பல்வேறு பிரிவினருக்கும் உற்ற உறைவிடமாக இருந்தது. அரசியல், சமூகம், ஆன்மிகம், தொழில், வர்த்தகம், கல்வி என்று எல்லா துறைகளுக்கும் மூல விசையாக இருந்த நகரம்.

சென்னை மாநகருக்கு என்று தொகுக்கப்பட்ட, முழுமையான வரலாறு இல்லை. ஆவணங்களும் கிடையாது. இந்தக் குறையை நீக்கும் வகையில் அறிஞர் எஸ்.முத்தையா ‘தி இந்து’ ஆங்கில நாளிதழின் ‘மெட்ரோ பிளஸ்’ இணைப்பில் 1999 நவம்பர் 15 முதல் சிறு சிறு துணுக்குகளை எழுதிவந்தார். அவர் மூலம் சென்னை நகரின் பிரமுகர்கள், இடங்கள், சம்பவங்கள் பற்றிய தகவல்கள் மீட்கப்பட்டன. ஏராளமான வாசகர்கள் அவரைத் தொலைபேசி மூலமும் கடிதம் வாயிலாகவும் தொடர்புகொண்டு தகவல்களுக்கு மேலும் பல விவரங்களைத் தெரிவித்து சுவை கூட்டினர்.

அதை ‘தி இந்து’ தமிழ் வாசகர்களுக்கும் தர வேண்டும் என்ற முயற்சியில் இத்தொடர் தொடங்கப்படுகிறது. மெட்றாஸில் இருந்தவர்கள் மட்டும் அல்ல; மெட்றாஸுக்கு வந்தவர்களும் தமிழ் நாட்டிலும் பிற மாநிலங்களிலும் இப்போதும் வாழ்கிறார்கள். வாழ வைத்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய நெஞ்சில் நிழலாடும் நினைவுகளுக்கு இத்தொடர் புத்துயிர் ஊட்டும் என்று நம்புகிறோம். வரலாற்றைப் பாலாடையில் சிறுகச் சிறுகப் புகட்டும் முயற்சி இது.

நாடு சுதந்திரமடைந்த உடன் கடைப் பிடிக்கப்பட்ட பல பொரு ளாதாரக் கொள்கைகளை உருவாக்கியவர் செயலூக்கம் மிகுந்த டி.டி.கிருஷ்ணமாசாரி (டி.டி.கே.), ‘திருவள்ளூர் தட்டை கிருஷ்ணமாசாரி’ என்பதுதான் சுருங்கி டி.டி.கிருஷ்ண மாசாரியாகவும் பிறகு டி.டி.கே ஆகவும் மாறியது. பிறந்த நாள் நூற்றாண்டைக் கொண்டாடும் தரு ணத்தில் அவர் அமைச்சராக இருந்ததை மட்டும் நினைவுகூர்ந்த நாம் வாழும் காலம் எப்படிப்பட்டது என்பதைச் சுட்டுகிறது. நவம்பர் 26-ல் அவரை நினைவுகூர்ந்தவர்கள் அவ ருடைய பன்முகத் தன்மையையோ ரசனையுள்ள அவருடைய பிற குணங்களையோ அறிந்திருக்கவில்லை.

‘புத்தகங்களை அப்படியே விழுங்கி விடுவார்’ என்று அவரைப் பற்றி வேடிக்கையாகச் சொல்வார்கள். கிரைம் நாவல்களாக இருந்தாலும், அரசியல் சட்டம் பற்றிய மண்டைக் குடைச்சல் புத்தகமானாலும் அவைதான் அவருக்கு சாப்பாடு, காபியெல்லாம். வீட்டில், தான் படித்த புத்தகங்களைக் கொண்டு பெரிய நூலகமே வைத்திருந்தார். காலை நேரத்தில், மவுண்ட்ரோடு ஆக்ஸ்போர்டு யுனிவர்சிடி பிரஸ் புத்தகக் காட்சி நிலையத்தில் புத்தகங்களைப் புரட்டிக் கொண்டிருப்பார். அவர் எதைப் படித்து சீரணித்தாரோ அது அச்சிலும் அவர் கட்டுரைகளில் வெளிப்படும்.

1878 செப்டம்பர் 20-ல் உணர்ச்சிமிக்க 6 இளைஞர்கள் ஒரு ரூபாய் 12 அணா கடன் வாங்கி ‘தி இந்து’ என்ற ஆங்கிலப் பத்திரிகையைக் கொண்டு வந்தார்கள். அந்த திருவல்லிக்கேணி அறுவரில் ஒருவர்தான் டி.டி.ரங்காசாரியார். பத்திரிகைப் பணியை விட்ட அவர், சட்டப்படிப்பு முடித்து வழக்குரைஞராகி பின்னாளில் மாவட்ட நீதிபதியுமானார். அவருடைய மகன்தான் டி.டி.கே.

ttk_2960098a.jpg

இந்து பத்திரிகையுடன் குடும்பத் தொடர்பு விட்டுவிடாமல் ‘அரிஸ்டைட்ஸ்’ என்ற பெயரில் கடிதங்கள் எழுதிவந்தார் டி.டி.கே. 1970-ல் ஜி.ஏ. நடேசன் நடத்தி வந்த ‘இன்டியன் ரெவ்யூ’ பத்திரிகைக்கு உயிர் கொடுத்தார். 1974-ல் நோய்வாய்ப்படும் வரையில் அதில் தலையங்கம் எழுதிக் கொண்டிருந்தார்.

மதராஸின் கடந்த காலத் தலை வர்கள் பற்றி ‘அரிஸ்டைட்ஸ்’ அதில் சுவைபட எழுதிவந்தார். அவருடைய கட்டுரைகளை அவரே தட்டச்சு செய் வார். “டைப்ரைட்டரைத் தொட்டு 30 ஆண்டுகள் ஆகிவிட்டன, எனவே பழக்கம் விட்டுப்போயிற்று; அத்துடன் முன்னாள் அமைச்சர்கள் நல்ல தட்டச்சர்கள் இல்லையே” என்று நண்பரிடம் வேடிக்கையாக சுய விமர்சனம் செய்துகொள்வார்.

படிப்பது, எழுதுவது தவிர அவ ருக்கு மிகவும் பிடித்த இன்னொரு பொழுதுபோக்கு அரட்டை அடிப்பது. பேச்சுத்திறமை உள்ளவர் அல்ல என்றாலும் பொதுமேடைகளில் விரிவா கப் பேசுவார். நண்பர்களுடன் பேசும் போது - அதுவும் சீட்டு விளையாட் டுக்கு இடையில் - பழைய விஷயங் களையெல்லாம் கொட்டி அளந்து அனைவரையும் மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்துவார். நண்பர்களுடன் வீட்டில் சீட்டு விளையாடுவதையும், கிண்டியில் குதிரைப் பந்தயத்தில் குதிரைகள் ஓடுவதைப் பார்ப்பதையும் மிகவும் விரும்புவார். இரண்டு சந்தர்ப்பங்களிலும் பந்தயம் கட்டுவார். எனவே அவருடைய பேச்சும் பந்தயமும் பின்னிப் பிணைந்து சுவை கூட்டும். அவருக்கு நெருக்கமான நண்பர்கள் அவரை இந்நாளைய இளைஞர்கள் அழைத்துக் கொள்வதைப் போல செல்லமாக ‘மாமா’ என்று அழைப்பார்கள். அவருக்கு இசை என்றால் கொள்ளைப் பிரியம். அவருடன் சீட்டு விளையாடும் இளம் நண்பர்களில் ஒருவர் செம்மங்குடி சீனிவாச ஐயர். எங்கேயாக இருந்தாலும் டி.டி.கே. கேட்டுக்கொண்டால் செம்மங்குடி பாடத் தயங்க மாட்டார்.

- சரித்திரம் தொடரும்…

http://tamil.thehindu.com/opinion/blogs/மெட்ராஸ்-அந்த-மெட்றாஸ்-1-தொழிலதிபரின்-இன்னொரு-பக்கம்/article8946968.ece?ref=relatedNews

 

Link to comment
Share on other sites

மெட்றாஸ் அந்த மெட்ராஸ் 2: அர்பத்நாட் குடும்பத்தின் இரு கிளைகள்!

மெரினா காமராஜர் சாலை - 1961
மெரினா காமராஜர் சாலை - 1961

kamarajar_silai1_2969375g.jpg

மெட்ராஸ் நகரில் தொழிற் சாலைகளை நிறுவிய அர்பத் நாட் குடும்பத்தில் இரண்டு கிளைகள் இருந்தன. அர்பத்நாட் (வங்கி), பின்னி, பாரி என்ற மூன்றும் முன்னோடித் தொழில்நிறுவனங்கள். பின்னி நிறுவனங்களுக்குப் பிறகு, பாரி தொடங்கப்பட்டாலும் அர்பத்நாட் வங்கி என்ற தனியார் நிதி நிறுவனம் தென்னிந்தியா முழுக்க கிளை பரப்பி வேகமாக வளர்ந்தது. தவறான நிர்வாகம், தொழிலதிபர்களின் ஊதாரித் தனமான செலவுகள், சில இயக்குநர்கள் லட்சக்கணக்கில் செய்த கையாடல்கள், பொதுப் பணத்தில் சொந்தப் பெயர் களில் திருட்டுத்தனமாக சொத்துகள் வாங்கியது என்று பல்வேறு காரணங் களால் அர்பத்நாட் நிறுவனம் நொடித்தது அல்லது நொடித்ததாக 1906-ல் அறிவிக்கப்பட்டது.

இயக்குநர்களில் ஒருவர் நீதிமன்ற விசாரணைக்குப் பிறகு சிறைவாசம் அனுபவித்தார். இன்னொருவர் தற்கொலை செய்து கொண்டார்.தென்னிந்தியாவைச் சேர்ந்த ஆயிரக் கணக்கான சிறு முதலீட்டாளர்கள் தங்களுடைய வாழ்நாள் சேமிப்பை யெல்லாம் அந் நிறுவனம் மீது வைத்த நல்ல நம்பிக்கையால் முதலீடு செய்திருந்தார்கள். அந்த நிறுவனத்தின் வீழ்ச்சி தவறான நிர்வாகத்தால் அல்ல; திட்டமிட்ட சதி, மோசடி, நம்பிக்கைத் துரோகம் ஆகியவற்றின் கூட்டுக் கலவை என்று ‘தி இந்து’ ஆங்கில நாளிதழ் தொடர் செய்திகள், கட்டுரைகள் மூலம் தோலுரித்துக் காட்டியது.

அந்தத் தொழில் குடும்பத்தின் இன்னொரு கிளை மக்களுடைய நினைவில் இருந்தே நீங்கிவிட்டது. அது தென்னிந்திய வளர்ச்சிக்கு ராணுவத் துறையிலும் சிவில் துறை யிலும் நிரந்தரமான வளத்தைச் சேர்த்தது. அக்கிளையைச் சேர்ந்த அலெக்சாந்தர் அர்பத்நாட் அந்நாளைய மதராஸ் மாகாண அரசின் தலை மைச் செயலாளராகவும் தற்காலிக கவர்னராகவும் (ஆளுநர்) பணியாற்றி னார். 1857-ல் சென்னைப் பல்கலைக் கழகம் ஏற்பட முக்கிய காரணகர்த்தராக விளங்கினார். இப்பல்கலைக்கழகத்தின் தந்தையாகவும் பிறகு துணை வேந்தராகவும் பணியாற்றிய அவருடைய பெயர், பழைய நிர்வாகி கள் பட்டியலில் ஒரு வரியில் நினைவு கூரப்பட்டதைத் தவிர, பெரிதாக அவர் போற்றவோ, பாராட்டப்படவோ இல்லை. 1858-ல் பல்கலைக்கழகத்தின் முதல் பட்டமளிப்பு உரையை அவர் நிகழ்த்தினார்.

பத்தாண்டுகளுக்குப் பிறகு மீண்டும் 1868-ல் பட்டமளிப்பு விழா உரையாற்ற அழைத்திருந்தனர். 19-வது நூற்றாண்டில் வாழ்ந்த மனிதர்களி லேயே மிகச் சிறந்தவர் டாக்டர் அர்நால்ட் என்று ஒருவரைப் புகழ்ந்துரைத்தார் அர்பத்நாட். நேர்மையும் பக்தியும் நிரம் பியவர், எளிமையானவர், செய்யும் செயலில் விசுவாசம் மிக்கவர், தாராள சிந்தை உள்ளவர், புலமையில் ஆழங்கால்பட்டவர், மேன்மையான வற்றிலும் நல்லனவற்றிலும் மதிப்புள் ளவர், அற்பத்தனங்களை வெறுத்தவர், பேராண்மைக்கு எடுத்துக்காட்டான உதாரண புருஷர் என்று டாக்டர் அர்னால்டை அந்த உரையில் அவர் வாயாரப் புகழ்ந்திருக்கிறார். இத்தகைய பண்புகள் இப்போது தென்னிந்தியாவில் பல்கலைக்கழகங்களில் பணியாற்று கிறவர்களில் எத்தனை பேரிடம் காணப்படுகின்றன என்ற வியப்பு எனக்கு ஏற்படுகிறது.

‘அர்பத்நாட் அண்ட் கோ’ நிறுவன அலுவலகம் இருந்த இடத்தில் இந்தி யன் வங்கியின் தலைமை அலு வலகம் இப்போது இருக்கிறது. அர்பத் நாட் பெயரில் தெரு ஒன்றும் அங்கே இருக்கிறது.

சென்னை பல்கலைக் கழகத்தை நிறுவியவரும் தென்னிந்தி யாவுக்கு கிரிக்கெட், ரக்பி விளை யாட்டுகளை அறிமுகப்படுத்திய முன் னோடியுமான அலெக்சாந்தர் அர்பத் நாட் பெயர் எங்குமே, எதற்குமே சூட்டப்படவில்லை.

அவர்தான் நினை வில் வைத்திருக்கப்பட வேண்டி யவர். பெல்ஸ் சாலை அருகிலோ, பல்கலைக்கழகத்துக்கு அருகிலோ அலெக்சாந்தர் அர்பத்நாட் பெயர் ஏதாவதொரு சாலைக்கு சூட்டப்படுமா?

- சரித்திரம் தொடரும்…

http://tamil.thehindu.com/opinion/blogs/மெட்றாஸ்-அந்த-மெட்ராஸ்-2-அர்பத்நாட்-குடும்பத்தின்-இரு-கிளைகள்/article8978541.ece?ref=relatedNews

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

மெட்றாஸ் அந்த மெட்ராஸ் 3: விளையாட்டு ரசிகரான அமைச்சர்!

 

மெட்ராஸ் மூர் மார்க்கெட் - 1971 (கோப்புப் படம்)
மெட்ராஸ் மூர் மார்க்கெட் - 1971 (கோப்புப் படம்)

திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆரம்ப கால உறுப்பினரான எஸ்.ராகவானந்தம், விளையாட்டில் மிகுந்த ஆர்வம் உள்ளவர். கட்சி தொடங் கிய காலத்தில் அதன் தொழிற்சங்க அமைப்புகளில் பணியாற்றினார். அத னால் அ.இ.அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த போது முதல்வர் எம்.ஜி. ராமசந்திரன் அவருக்குத் தொழிலாளர் நலத்துறையை யும் அளித்திருந்தார். நகர்ப்புற வளர்ச்சி, வீட்டு வசதி, தொழிலாளர் நலம் ஆகிய 3 துறைகளையும் அவர் சேர்த்து கவனித்து வந்தார். செயலூக்கம் மிகுந்தவர், நல்ல நகைச்சுவை உணர்வு உள்ளவர், எல் லோரிடமும் எளிமையாகப் பழகுவார். எனவே அரசியலிலும் அதிகார வர்க்கத்திலும் அனைவரிடையேயும் பிரபலமானவராக இருந்தார்.

வேறொரு சூழலில் அவரைப் பார்த் தது எனக்கு நினைவுக்கு வருகிறது. சென்னை மாநகரின் அடையாளங்களில் ஒன்று மூர் மார்க்கெட். அங்கு எந்தப் பழைய பொருளையும் முடிந்த விலை யில் வாங்கிக்கொண்டு வீடு திரும்பலாம். அந்த மூர் மார்க்கெட் இருப்பது ரயில்வே இடத்தில். அந்த இடத்தை மீட்க ரயில்வே விரும்பியது.

இதைத் தெரிந்துகொண்ட ‘அசைட்’ என்ற சென்னை மாநகர வாரப் பத்திரிகை, மூர் மார்க்கெட்டைக் காப் பாற்ற வேண்டும் என்ற இயக்கத்தைத் தொடங்கியது. பத்திரிகையின் வாசகர் களும், மூர் மார்க்கெட் காப்பாற்றப்பட வேண்டும் என்று விரும்பியவர்களும் அதன் கையெழுத்து இயக்கத்தில் சேர்ந் தனர். மூர் மார்க்கெட் காப்பாற்றப்பட வேண்டும் என்று விரும்பியவர்களின் பிரதிநிதிகளை கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது (அரசு) இல்லத்தில் ஒரு விடுமுறை நாளன்று காலை சந்தித்துப் பேச ராகவானந்தம் சம்மதித்தார். எத் தனை பேர் வேண்டுமானாலும் வாருங் கள் என்று அமைச்சர் தாராள மனதுடன் அழைத்திருந்தார்; நாங்கள் சுமார் 20 பேர் சென்றிருந்தோம்.

more1_2978345a.jpg

வழக்கம்போல, மூர் மார்க்கெட் இடத்தை ரயில்வே எடுத்துக்கொள்ள விரும்புவதற்கான அரசுபூர்வ காரணங் களை நியாயமென முதலில் அவர் எடுத் துக் கூறினார். ‘மூர் மார்க்கெட் இடிக்கப் படக் கூடாது என்று கேட்கும் உங்களைப் போன்ற நூறு பேர் முக்கியமா? ரயில் நிலையத்தை விரிவாக்கிக் கட்டினால் பயன்படுத்தப் போகும் ஆயிரம் பேர் முக்கியமா?’ என்று கேட்டார்.

‘மூர் மார்க்கெட்டைக் காப்பாற்றுவதால் உண்ண உணவு, உடுத்த உடை, இருக்க இடம் இல்லாதவர்களுக்கு எல்லாம் கிடைத்துவிடுமா’ என்றும் கேட்டார். இதையெல்லாம் அவர் எங்களுடைய மனம் நோகாத வண்ணம் நகைச்சுவையாகத்தான் கேட்டுக் கொண்டிருந்தார். இப்படி அவர் பேச, நாங்கள் பேச, காலை 10 மணிக்குத் தொடங்கிய இந்த சந்திப்பு நடுப்பகல் 1 மணி வரை நீண்டுவிட்டது. இப்படி இந்த சந்திப்பு நீண்டதற்கே அவர்தான் காரணம். எங்களில் ஒருவர் பேசி முடித்தவுடன், ‘‘இருங்கள் இதோ வருகிறேன்’’ என்று சொல்லிவிட்டு உள்ளே ஒர் அறைக்குள் சென்று அப்போது நடந்து கொண்டிருந்த கிரிக்கெட் மேட்சைச் சிறிது நேரம் பார்த்துவிட்டு வந்து ஸ்கோர் என்ன என்று சொல்வார்.

அப்போதுதான் டெலிவிஷனில் கிரிக்கெட் போட்டிகளை நேரலையாக ஒளிபரப்ப ஆரம்பித்திருந்தார்கள். ஆட்டத்தின் முக்கியமான கட்டங்களை நேரில் பார்க்காமல் தவிர்க்க அவரால் முடியவில்லை. ‘‘சின்ன வயதில் நான் நன்றாக கால்பந்து விளையாடுவேன், இப்போதும் விளையாட்டு என்றால் எனக்குக் கொள்ளை ஆசை’’ என்று சொல்லிவிட்டு மீண்டும் உள்ளே போவார்.

மனுவில் கையெழுத்து போட்டவர்களில் ஓர் அமெரிக்கரும் ஒரு ஸ்வீடன் நாட்டவரும் இருந்தனர். ஒரு பொதுப் பிரச்சினையைவிட மாநில அமைச்சர் கிரிக்கெட்டுக்குக் கொடுக்கும் முக்கியத்துவம் கண்டு அவர்கள் வியப்பில் ஆழ்ந்தனர். “மைதானத்தில் ஆடுகிறவர்களைவிட அமைச்சர் மிகுந்த ஆர்வத்தோடு இந்த ஆட்டத்தில் பங்கேற்கிறார்” என்று ஒருவர் வேடிக்கையாகக் குறிப்பிட்டார்.

- சரித்திரம் தொடரும்…

http://tamil.thehindu.com/opinion/blogs/மெட்றாஸ்-அந்த-மெட்ராஸ்-3-விளையாட்டு-ரசிகரான-அமைச்சர்/article9007081.ece?ref=relatedNews

 

மெட்றாஸ் அந்த மெட்ராஸ் 4: மறக்கப்பட்ட 200 ஆண்டு நிறுவனங்கள்!

 

‘பின்னி' மில்
‘பின்னி' மில்

மெட்றாஸ் பட்டணத்தின் வளர்ச்சிக்குப் பெரிதும் உறுதுணையாக இருந்த 3 நிறுவனங்களைச் சுருக்கமாக ஏ.பி.பி. (A.B.P.) என்று அவற்றின் ஆங்கில முதல் எழுத்தின் சுருக்கமாக அழைப்பார்கள். அவை முறையே அர்பத்நாட், பின்னி, பாரி ஆகிய நிறுவனங்களாகும். அவற்றில் மிகவும் மூத்ததான பாரி நிறுவனம் இப்போதும் வலுவுடன் திகழ்கிறது. பின்னி அடுத்த மூத்த நிறுவனம். பின்னி நிறுவனம் மட்டுமல்ல அதற்குள் ஒரு குட்டி சாம்ராஜ்யம். 1980-களின்போது ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் ஏற்பட்ட சேதத்தில் இருந்து அது மீள வேண்டும் என்பதே என் விருப்பம். அர்பத்நாட் நிறுவனம் அது தொடங்கிய இன்னொரு கிளை நிறுவனமான கிலாண்டர்ஸ் அர்பத்நாட் என்பதன் மூலம் இன்னமும் வாழ்கிறது.

பின்னி நிறுவனம் இப்போதுள்ள துரதிருஷ்டவசமான நிலைமை காரணமாக தனது 200-வது ஆண்டு விழாவைக் கூட கொண்டாட முடியாமல் இருக்கிறது. வட சென்னையின் வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகித்த பின்னி நிறுவனத்தை மட்டும் புதுப்பிக்க முடிந்தால் அது பெரிய கொண்டாட்டத்தை நிச்சயம் ஏற்படுத்தும். ஒரு வர்த்தக நிறுவனம் நிர்வாக முகமையாக மாறி, பிறகு மெட்றாஸ் மாநகரிலேயே முக்கியமான தொழில் கேந்திர சின்னமாக மாறிய ‘பக்கிங்ஹாம் அண்ட் கர்நாடிக் மில்ஸ்’ நிறுவனமானது.

கர்நாடக நவாபின் ஆட்சிப் பகுதியில் டாக்டராக சேவை செய்ய ஸ்காட்லாந்து பகுதியைச் சேர்ந்த 18 வயதே நிரம்பிய ஜான் பின்னி என்பவர் 1797-ல் மெட்றாஸ் பட்டணத்தில் காலடி எடுத்து வைத்தார். அவர்தான் பின்னி வர்த்தக நிறுவனத்தைத் தொடங்கினார். “அவரிடம் யார் சிகிச்சை பெற்றார்கள்? அவர்களை அவர் பிழைக்க வைத்தாரா? பரலோகம் போக வைத்தாரா? ஏதாவது சிறிய அறுவைச் சிகிச்சையாவது செய்தாரா என்றெல்லாம் ஒரு தகவலும் நமக்குத் தெரியாது” என்று எஃப். டிசௌசா வியப்போடு பதிவிட்டிருக்கிறார். அப்போதைய காலகட்டத்தைப் பார்க்கும்போது அவர் தனியாக வங்கித் தொழிலில் ஈடுபட்டிருப்பார் என்று அனுமானிக்க முடிகிறது.

1800-ல் அவரும் டென்னிசன் என்பவரும் சேர்ந்து வர்த்தகத்தில் ஈடுபட்டனர். அப்போது இருந்துதான் பின்னி அண்ட் கோ-வின் வரலாறு பிறக்கிறது. (ஜான் பின்னியை ஜான் ‘டெஃப்’ (செவிடு) பின்னி என்று அழைத்திருக்கிறார்கள்) பிற்காலத்தில் ஹோட்டல் கன்னிமாரா முளைத்த இடத்தில்தான் பின்னிக்கு பங்களா இருந்திருக்கிறது. பின்னிக்காக யார் 200-வது பிறந்த நாள் வாழ்த்து பாடுவார்கள் என்று என்னை நானே கேட்டுக்கொண்டேன். பாடாவிட்டாலும் பரவாயில்லை அதற்குப் புத்துயிர் ஊட்ட முடியுமா?

- சரித்திரம் தொடரும்…

 

http://tamil.thehindu.com/opinion/blogs/மெட்றாஸ்-அந்த-மெட்ராஸ்-4-மறக்கப்பட்ட-200-ஆண்டு-நிறுவனங்கள்/article9035580.ece?ref=relatedNews

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

மெட்றாஸ் அந்த மெட்ராஸ் 5: எட்வர்ட் மில்ஸ் மர்மம்!

நேப்பியர் பாலம் - அன்று
நேப்பியர் பாலம் - அன்று

 

நேப்பியர் பாலம் - இன்று
நேப்பியர் பாலம் - இன்று

 

அந்தக் கால மெட்றாசில் மிகவும் பேசப்பட்ட எட்வர்ட் மில் என்ற ஜவுளி ஆலை எது என்ற மர்மம் தீர, தகவல் வேண்டி நின்றேன். அந்த ஆலையில் உதவி ஸ்பின்னிங் மாஸ்டராக 16 ஆண்டுகள் பணியாற்றியவரின் மகன் ஆர்.ஜே. ஆஷர் கடிதம் மூலம் என் வாட்டத்தைப் போக்கினார். அந்த ஆலையை ‘சூளை மில்’ என்றுதான் மக்கள் அழைப்பார்கள்.

19-வது நூற்றாண்டின் பிற்பகுதி யிலும் 20-வது நூற்றாண்டின் முற்பகுதி யிலும் மெட்றாசில் 2 ஜவுளி ஆலைகள் பிரபலமாக இருந்தன. பெரம்பூரில் ‘பக்கிங்காம் அண்ட் கர்நாடிக் மில்’ என்கிற ஆலையும், சூளையில் ‘மெட்றாஸ் யுனைடெட் ஸ்பின்னிங் அண்ட் வீவிங் மில்ஸ்’ என்ற நிறுவனமும் செயல்பட்டன. பெரம்பூர் ஆலையை ‘பின்னி மில்’ என்றோ ‘பி அண்ட் சி’ என்றோ கூறியவர்கள், இன்னொன்றின் பெயரைச் சொல்ல மெனக்கெடாமல் ‘சூளை மில்’ என்றே அதன் இருப்பிடத்தைக் கொண்டு அடையாளப்படுத்தினார்கள்.

பி அண்ட் சி மில் பிரிட்டிஷாருடையது. சூளை மில் மும்பையைச் சேர்ந்த ‘மூல்ஜி ஜெய்தா அண்ட் கோ’ என்ற நிறுவனத்துக்கு உரியது. இந்தியர்கள் பணத்தில் இந்தியர் கள் நிர்வாகத்தில் இந்திய ஊழியர் களால் ஆலை நடத்தப்பட்டது. இதனா லேயே சூளை மில்லில் மோட்டா ரகத் துணிகளை மட்டுமே நெய்ய வேண்டும் என்று பிரிட்டிஷ் அரசு உத்தரவிட்டிருந்தது.

அதனாலேயே அந்த ஆலை நஷ்டம் அடைந்தது. 1939-ல் ஆலையில் பெரிய வேலைநிறுத்தம் நடந்தது. அதே ஆண்டில் பெய்த பெருமழையில் அந்த ஆலையின் பிரம்மாண்டமான புகைப்போக்கி (சிம்னி) உடைந்து நொறுங்கியது. இறுதியாக அந்த ஆலை இழுத்து மூடப்பட்டது.

சூளை ஆலையைப் பிறகு ‘சர்தார் இந்தர்ஜித் சிங் அண்ட் சன்ஸ்’ என்ற டெல்லி நிறுவனத்துக்கு விற்றார்கள். இந்தர்ஜித் சிங்கின் புதல்வர்களில் ஒருவர்தான் சர்தார் பல்தேவ் சிங். இவர் சுதந்திர இந்தியாவின் முதல் அமைச்சரவையில் முதல் ராணுவ அமைச்சராகப் பதவி வகித்தார்.

இந்தர்ஜித் சிங்குக்கு வயதாகிவிட்ட தாலும் அவருடைய புதல்வர்களுக்கு ஆலை நிர்வாகத்தில் ஆர்வம் இல்லாததாலும் சூளை மில் மீண்டும் விற்பனைக்கு வந்தது. இப்போது அதை விலைக்கு வாங்க முன் வந்தது ‘எட்வர்ட் டெக்ஸ்டைல்ஸ்’ என்ற பெயருள்ள மார்வாடி நிறுவனமாகும். அதற்கு அந்நாளைய மும்பை மாநகரில் ஏற்கெனவே 2 ஜவுளி ஆலைகள் இருந்தன. சூளை ஆலையை மீண்டும் தொடங்க எட்வர்ட் டெக்ஸ்டைல்ஸ் நிறுவனம் எவ்வளவோ முயற்சிகளை எடுத்தது. முந்தைய நிர்வாகம் வைத்துவிட்டுச் சென்று வரி பாக்கியைச் செலுத்தினால்தான் ஆயிற்று என்று பிரிட்டிஷ் அரசு பிடிவாதம் பிடித்தது.

பிறகு அந்த ஆலையை அரசே கைப் பற்றியது. இயந்திரங்களைப் பிரித்து காயலாங்கடைகளுக்கு விற்றது. பின்னாளில் இந்திய உணவு கார்ப்ப ரேஷனுக்கு அந்த இடம் கட்டிடங்களுடன் விற்கப்பட்டது. அங்கே தானியக் கிடங்குகள் அமைக்கப்பட்டன. இப் போது தானியக் கிடங்குகள்தான் அங்கே இருக்கின்றன.

மெட்றாசில் எட்வர்ட் மில்ஸ் என்ற நிறுவனம் எங்கே, எப்படி வந்தது என்ற புதிர் இதன் மூலம் தீர்ந்தது. நகரின் 400 ஆண்டுகால வரலாற்றை எழுத முற்படுகிறவர்கள் இதைப்போல பல மறக்கப்பட்ட தகவல்களை ஆங்காங்கே உள்ளவர்கள் மூலம் திரட்ட முடியும்.

 

- சரித்திரம் தொடரும்…

 

http://tamil.thehindu.com/opinion/blogs/மெட்றாஸ்-அந்த-மெட்ராஸ்-5-எட்வர்ட்-மில்ஸ்-மர்மம்/article9064292.ece?ref=relatedNews

மெட்றாஸ் அந்த மெட்ராஸ் 6: புலம் பெயர்ந்தோர் இடையே இன்னொரு காந்தி!

mad_3003942f.jpg
 

இந்திய குடியரசுத் தலைவரின் செயலாளராக இருந்த கோபால கிருஷ்ண காந்தி, தென்ஆப்பிரிக் காவில் உள்ள நேடால் பல்கலைக்கழகத் தால் சட்டத்தில் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி கவுரவிக்கப்பட்டார். காந்திஜி, ராஜாஜி ஆகியோரின் பேரனான கோபால கிருஷ்ண காந்தி அந்த அங்கீகாரத்தை மகாத்மா காந்தி, அவரை தென்ஆப் பிரிக்காவில் வழக்கு நடத்த அழைத்து வந்த தாதா அப்துல்லா சேத் மற்றும் 1860 நவம்பர் 16-ல் அந் நாட்டில் பிரிட்டிஷ் அரசால் கட்டாயப்படுத்தி குடியேற்றப் பட்ட இந்தியத் தொழிலாளர்கள் ஆகி யோர் சார்பில் பெற்றுக்கொண்டார்.

இந்தியத் தொழிலாளர்கள் கோபால கிருஷ்ண காந்திக்கு வெறும் வரலாற்று நினைவு மட்டுமல்ல; டாக்டர் பட்டம் பெற்ற போது அவரைப் பற்றி அளித்த வாழ்க் கைக் குறிப்பில் தென்ஆப்பிரிக்காவில் அவர் சில ஆண்டுகள் இந்திய ஹை-கமிஷனராக (தூதர்) பதவி வகித்ததைக் குறிப்பிட்டிருந்தனர். அதைத் தவிர புலம்பெயர்ந்த இந்தியத் தொழிலாளர்களுடன் அவருக்குத் தொடர்பு இருந்ததாக வேறு குறிப்பு ஏதும் அதில் இல்லை. தமிழ்நாடு அரசுப் பணியில் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக அவர் பணியாற்றியபோது அந்தத் தொடர்பு அவருக்கு ஏற்பட்டிருந்தது. அந்த அந்தஸ் தில் இலங்கையின் கண்டி நகரில் இருக்கும் இந்தியத் துணைத் தூதரக அலுவலகத்தில் பணியாற்ற அவர் நியமிக்கப்பட்டிருந்தார். அங்கிருந்த இந்திய வம்சாவளி தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் விரும்பியோ அல்லது உள்ளூர் நிலைமையின் நிர்பந்தத்தாலோ தாயகமான தமிழ்நாடு திரும்ப வேண்டியிருந்தது. அதற்கு அவர் அரசு நிர்வாகம் மூலம் அனைத்து உதவிகளையும் செய்தார். அந்தத் தலைமுறைத் தொழிலாளர்களுக்குத் தாயகமாக தமிழகம் இருந்தாலும் அது குறித்து ஏதும் தெரியாமல் இருந்தனர்.

கண்டியில் இருந்த மூன்று ஆண்டு பணி அனுபவத்தையொட்டி ‘சரணம்’ என்ற தலைப்பில், உணர்ச்சிவயப்பட வைக்கும் ஒரு புத்தகத்தை எழுதினார் கோபால கிருஷ்ண காந்தி. சென்னை யைச் சேர்ந்த ‘அஃபிலியேடட் ஈஸ்ட் வெஸ்ட் (ஏ.இ.டபிள்யு.) பிரஸ்’ பதிப்பு நிறுவனம் அதை வெளியிட்டது. இலங்கையில் வாழ்ந்த இந்தியத் தமிழ் தோட்டத் தொழிலாளர் வாழ்க்கையின் அவலங்களையும் அவர்களுடைய புலம்பெயர்வையும் உள்ளத்தை உருக் கும் வகையில் அந்த நாவல் விவரிக்கிறது. பதிப்புத்துறை கண்டிராத ஒரு வரலாறும் இந்தப் புத்தக வெளியீடு தொடர்பாக அரங்கேறியது.

புத்தகங்கள் முதலில் கெட்டி அட்டையுடன் சற்றே விலை அதிகமாக புகைப்படங்களுடன் நல்ல தாளில் அச்சிடப்பட்டு வெளியிடப்படும். சில காலம் கழித்து சாதாரண தாளில் அதிக படங்கள் இல்லாமல் மலிவுப் பதிப்பாக பிரசுரிக்கப்படும். ‘சரணம்’ புத்தகத்திலோ இது நேர்மாறாக நடந்தது. ஏ.இ.டபிள்யு. நிறுவனம் இதை முதலில் மலிவுப் பதிப்பாகக் கொண்டுவந்தது. சில ஆண்டுகளுக்குப் பிறகு டெல்லியைச் சேர்ந்த ரவி தயாள் இதை கெட்டி அட்டை யில் விலை அதிகமுள்ள பதிப்பாகக் கொண்டுவந்தார். ஆக்ஸ்போர்டு யுனிவர்சிடி பிரஸ் நிறுவனத்தின் இந்தியத் தலைவராகப் பதவி வகித்த ரவி தயாள், கல்லூரி பாடப் புத்தக வெளியீட்டையும் தாண்டி எதையாவது சாதிக்க வேண்டும் என்று விரும்பினார். ஆக்ஸ்போர்டு யுனிவர்சிடி பிரஸ் நிறுவனத்தில் தான் பார்த்த வேலையில் இருந்து விலகினார். ‘சரணம்’ என்று புத்தகத்துக்கு இருந்த தலைப்பை ஆங்கில நாவல் வாசிக்கும் வாசகர்களுக்கு எளிதில் பிடிக்கும் வகையில் ‘ரெஃப்யூஜ்’ (Refuge) என்று மாற்றினார். தன்னுடைய புதிய நிறுவனம் மூலம் வெளியிட்டார்.

இலங்கை தோட்டத் தொழி லாளர்களின் வாழ்க்கையை அப் படியே எதிரொலிக்கும் இவ்விரு வகை நூல்களுமே வாசகர்களால் ஆதரிக்கப்பட வேண்டியவை. இலங்கைக்குச் சென்ற இந்தியத் தோட்டத் தொழிலாளர்களின் நிலை குறித்து இந்திய அரசு - அதிலும் குறிப்பாக தமிழகம் - 150 ஆண்டுகளுக்கும் மேல் கவலைப்படாமல் கண்ணை மூடிக் கொண்டிருந்தது என்பதே உண்மை. இந்தப் புத்ததகத்தை அடிப்படையாகக் கொண்டு ஒரு திரைப்படத்தை எடுக்க வேண்டும் என்பது என்னுடைய எண்ணம். அப்படி எடுத்தால் அது மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெறுவதுடன் தோட்டத் தொழிலாளர்களுடைய துயர வாழ்க்கையை லட்சக்கணக்கானோர் முழுதாக அறிந்து கொள்ள நல்ல வாய்ப்பும் ஏற்படும்.

ஐ.ஏ.எஸ்.அதிகாரியான கோபால கிருஷ்ண காந்தி லண்டனில் அமைக்கப்பட்ட ‘நேரு நினைவு மைய’த்தின் முதல் இயக்குநராகப் பொறுப்பேற்றார். நகரின் முக்கியமான கலாச்சார மையமாக அதை மாற்றினார். அவருக்குப் பிறகு அந்த மையத்தின் புதிய இயக்குநராகப் பொறுப்பேற்றவர் மெட்றாஸுடன் வலுவான தொடர்புகள் உள்ள கிரீஷ் கர்நாட்.

கன்னடத் திரையுலகின் முன்னணித் தயாரிப்பாளராகவும் நாடகாசிரிய ராகவும் தான் பல பேருக்குத் தெரியும். ஞானபீட விருது வாங்கிய முதல் நாடகாசிரியர் அவர். ஆனால், மெட்றாஸ் இப்போதும் அவரை 1960-களின் பிற்பகுதியிலும் 1970-களின் முற்பகுதியிலும் ‘மெட்றாஸ் பிளேயர்ஸ்’ என்ற ‘அமெச்சூர்’ நாடகக் குழுவுக்காக எழுதிக் கொடுத்த நாடகங்களுக்காக நினைவில் வைத்துள்ளது. (50 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட காலத்தில் ‘மெட்றாஸ் பிளேயர்ஸ்’ நாடக மன்றம் 240-க்கும் மேற்பட்ட நாடகங்களை அளித்துள்ளது.) அப்போது அவர் ஆக்ஸ்போர்டு யுனிவர்சிடி பிரஸ் நிறுவனத்தில் வேலை செய்துவந்தார். பி.பி.சி. வானொலி நிறுவனத்துக்காக எழுதிக் கொடுத்த ‘தி ட்ரீம்ஸ் ஆஃப் திப்புசுல்தான்’ என்ற நாடகத்தை மேடையில் நடிப்பதற்கேற்ப மாற்றிக் கொடுத்தார். மெட்றாஸ் பிளேயர்ஸ் நாடக மன்றம் அதை முதன்முறையாக ஆங்கிலத்தில் அரங்கேற்றியது. நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. கல்லூரி அரங்கில் திறந்தவெளியில் அரங்கேற்றியது அவர்களுக்குப் புது அனுபவம்.

‘மேஜிக் லேன்டர்ன்’ என்ற நாடகக் குழு பொன்னியின் செல்வனை வெற்றிகரமாக அரங்கேற்றியதும் வாசகர்களுக்கு நினைவுக்கு வரும்.

- சரித்திரம் பேசும்...

 

http://tamil.thehindu.com/opinion/blogs/மெட்றாஸ்-அந்த-மெட்ராஸ்-6-புலம்-பெயர்ந்தோர்-இடையே-இன்னொரு-காந்தி/article9089761.ece?ref=relatedNews

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சென்னையின் கடந்த கால வரலாறு பற்றி அறியாத பல தகவல்களை அள்ளித் தருகிறது..

தொடருங்கள், ஆதவன் CH.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.