Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சமூக வலைதளங்களில் நிரம்பி வழிந்த தலைவனுக்கான பிறந்த நாள் வாழ்த்துகள்

Featured Replies

இறவாப் பிறந்தநாள்
**********************
பிரபாகரனின் பிறந்தநாள் அன்று தமிழ்த் தேசியத் தலைமைகள் தமது மக்களுக்கான அரசியலில் கடந்த வருடத்தில் நடந்தேறிய சாதக பாதக நிலைமைகளைப் பகுப்பாய்வு செய்தல் வேண்டும். சுய விமரிசன அடிப்படையில் கருத்துக்களைப் பரிமாறி எதிர்வரும் ஆண்டுக்கான வியூகங்களை தமிழ் மக்களின் தேச நலன் சார்ந்து வகுத்தல் வேண்டும்.இப்படிச் செயற்படுவதே தமிழ்த் தேசக் கட்டுமானம் எனும் கட்டுமரத்தின் துடுப்பாக துடிப்புடன் இயங்கிய பிரபாகரனுக்குச் செய்யும் கைம்மாறாகும். 

பிரபாகரனின் பெயரைத் தமது கட்சி மற்றும் தனி நபர் அரசியலுக்காகப் பயன்படுத்தும் கட்சிகள் மற்றும் தமிழ் அரசியல்வாதிகள் ஒரு தேர்தலில் வெற்றி பெற்ற அன்றிலிருந்து தமது அடுத்த தேர்தல் வெற்றிக்காக எப்படிப் பிரபாகரனதும், மாவீரர்களதும் பெயர்களைப் பாவிக்கலாம் என்ற உத்தியைக் கைவிடல் வேண்டும். இதனைக் கைவிட்டால்தான் தமிழ் மக்கள் தத்தித் தத்தியாவது விடுதலையை அடைவர்.

பிரபாகரன் தனது ஆதிக்கக் காலத்தில் உலக அரசியலில் ஏற்பட்ட மாற்றத்தை ஒரு தசாப்த காலமாகக் கணக்கில் எடுக்கத் தவறியதன் விளைவையே அவர் 2009 இல் சந்தித்தார். 

அவர் எப்போதும் தவணை முறை( Episode)அரசியலைச் செய்தவரல்ல. அப்படிச் செயல்பட்டிருந்தால் இன்றும் காட்டிக் கொடுத்த உச்ச நிலைத் தலைவராக உயிர் வாழ்ந்திருப்பார். அபிவிருத்தியை அள்ளித் தந்திருப்பார். 

ஏமாற்றிய உலக அரசியலுடன் உடன்பட்டு வாழ்வதை விடவும் தமிழரின் தனித்துவ விடுதலைக்கான அரசியலுக்காய் உயிர் துறப்பதே மேல் என எண்ணிய பிரபாகரனை சுயநலன் துறந்து தொடர்வது  சுமந்திரன் போன்றோரது கடமையல்ல அது அவர்களது "கடனாகும்".

இன்று பிரபாகரனின் பிறந்தநாள் மட்டுமல்ல; அவர் இறந்த பின்னர் தமிழரின் உறுதியான அரசியல் விடுதலைப் போராட்டம் பிறழ்ந்த நாளுமாகும்.

எந்தவொரு தமிழ்த் தலைவரும் தந்தை செல்வா உட்பட விடுதலைக்காக தமது குடும்பத்தையே பலி கொடுத்தார்களா? இந்தப் பலியை ஒரு யாகமாக நண்பன் பிரபாகரன் செய்தான். அவனுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள்! 

நண்பா! முஸ்லிம்கள் தொடர்பாக உனது இயக்கம் விட்ட தவறுகளைத் திருத்த முயலவில்லை என்பதைத் தவிர உன்னோடு வேறேதும் கோபங்களில்லை எனக்கு!

2002 இல் நான் தோழர் பாலகுமாரனை கிளிநொச்சி நடுவப் பணியகத்தில் சந்தித்த வேளை, அவர் சொன்ன கதையும்- அனுபவக் கருத்தியலின் அடிப்படையில் இன்னும் உலவும் பிரபாகரன் அவர்களே உம்மை நான் கண்ணீரோடு சந்திக்க விரும்புவதற்கு காரணமாகும். 

முதலாவது ஆனையிறவுப் போரில் நூற்றுக்கணக்கான போராளிகள் இறந்தார்கள்.அவர்களின் இரத்தம் சொட்டும் உடல்கள் ஓர் உளவு இயந்திரப் பெட்டியில் அடுக்கப்பட்டு கொண்டுவரப்பட்ட போது நீங்கள் அவ்விடத்துக்கு வந்து கண்ணீர் சொரிந்து நிமிர்ந்தபடி நின்று உங்களது நெஞ்சில் கைவைத்து தலை தாழ்த்தி அகவணக்கம் செய்த பின் சென்றீர்களாம்.அவ்வேளை பாலா அண்ணன் நினைத்தாராம் போராளிகளை இனிச் சண்டைக்கு அனுப்ப ஆகக்குறைந்தது ஆறு மாதங்களாவது ஆகும் என்று, ஆனால் நீங்கள் இரு வாரங்களில் அடுத்த போருக்காக போராளிகளை அனுப்பினீர்களாம். 

வரலாற்றில் காலக்கெடு எனும் உத்தியை பிரபாகரன் பயன்படுத்தவே இல்லை. அவர் வெல்லவில்லை ஆயினும் இன்னும் அவர் தோற்கவில்லை என்பதை நிரூபிக்க முடியும்.

தமிழ்த் தேசிய ஜனநாயக சக்திகளே பிரபாகரனைத் தோற்கடித்துவிடாதீர்கள்.

பசீர் சேகுதாவூத் - முக நூல் 

**†***********************************

 

இருக்கிறானா? இல்லையா?" எனும் ஐயத்தை எழுப்புவது இருவர் ஒன்று - பரம்பொருள் ஆன பராபரன்; இன்னொன்று
தமிழர்க்கு - அரும்பொருள் ஆன பிரபாகரன் ❤️ / கவிஞர்.வாலி/

தலைவனின் பதாகை கூட ஒரு ஆயுதமே.

 

பிரபாகரனின் பிறந்தநாளை அவருடைய ஆதரவாளர்கள் கொண்டாடி மகிழ்கிறார்கள். இதில் யாருக்காவது எதிலாவது பிரச்சனைகள் இருக்கிறதா? அவர் மீதோ, விடுதலைபுலிகள் இயக்கம் மீதோ முரண்கொண்ட தமிழகக்கட்சிகள்,இயக்கங்கள் கூட இன்றைய நாளை எவ்விதக் காழ்ப்புணர்ச்சியுமின்றி கடந்து போகிறார்கள். ஆனால், இணைய உபிகளில் ஒரு கும்பல் இருக்கிறது. திமுகவிற்கு ஒரு ஓட்டை கூட தேற்றித்தராத கூட்டம் அது. வருடந்தோறும் பிரபாகரன் பிறந்தநாளின் போது சம்பந்தமே இல்லாமல் வலிய வந்து வண்டியில் ஏறி, தானும் செருப்படி வாங்கி, தன்னுடைய தலைவன் கலைஞரையும் சாணியில் முக்கிய செருப்பால் அடிவாங்க வைத்துவிட்டு சமாளிக்க முடியாமல் ஓடி விடும். அரசியலில் கால் ஊன்றி வெகுகாலமாகியும் ஸ்டாலின் கடைசிவரை வயசுக்கு வரமுடியாமல் தவிக்க இணைய உபிகளே முழுமுதற்காரணம்.

 

அம்பேத்காரின் சாதிகள் இல்லாத சமுதாயத்தையும், பெரியாரின் பெண்கள் சுதந்திரத்தையும் ஒன்றுசேர கட்டியெழுப்பி தமிழ் தேசியம் படைத்த பிரபாகரனின் வரலாற்றை படித்தவர்களுக்கு அம்பேத்கார் பெரியார் எழுதியவைகளை தனித்தனியே படிக்க அவசியமில்லை.

பிரபாகரன் பிடல் காஸ்ட்ரோ ஒப்பீடுகள் எப்போதும் பொருந்தாத ஒன்று.இருவரும் சமகாலத்தில் வாழ்ந்த போராளிகள் என்றாலும்,போராடிய காலக் கட்டங்களும் நோக்கங்களும் வெவ்வேறானவைகள்.இலங்கையில் இருந்து பிரிந்து தனிநாடாக ஈழம் நிறுவ வேண்டும் என்கிற பிரபாகரனின் நிலைப்பாட்டிற்கும்,கியூபாவில் ஆட்சி மாற்றத்திற்கு போராடிய பிடலின் நிலைப்பாட்டிற்கும் வித்தியாசம் இருக்கிறது.

ஈழப்போராட்டம் தனிக் குடியுரிமைக்கான போர்.கியூபாவின் புரட்சி குடிமகன்களுக்கு எதிராக நடந்த சுரண்டலுக்கான போராட்டம்.இரண்டுமே அவரவர் வழிகளில் நடத்தப்பட்ட பேரினவாதம்,ஏகாதிபத்தியத்திற்கு எதிரானப் போர்.இதில் இருவரும் எங்கேயும் ஒன்றுப்படவும் இல்லை.எதிரெதிராக நிற்கவும் இல்லை.

பிரபாகரன் தன்னுடைய இனமக்கள் இரண்டாம் குடிமக்களாக நடத்தப்படுகிறார்கள் என்று தங்களுக்கான பிரிவினை அவசியம் என்றார்.பிடல் தன்னுடைய நாட்டில் முழு ஆட்சி மாற்றம் வேண்டும் என்று தேசியம் பேசினார்.இதில் உலகின் சிறந்த போராளிகள் யார் என்கிற போட்டி நடக்கவே இல்லை.

ஈழத்தை ஆதரிக்காமல் போனது கியூபாவின் வெளியுறவுக் கொள்கை அவ்வளவே.மற்றப்படி சீனா போல் நேரிடையான எந்தவித தொடர்பும் இலங்கையிடம் அவர்கள் வைத்துக் கொள்ளவில்லை.வரலாற்றில் இருவரும் சந்தித்துக் கொண்டதோ ஈழப்பிரிவினைப் பற்றி எதிர்மறையான விவாதம் பேசியதோ கிடையாது.ஆகவே உலகின் வெவ்வேறு மூலைகளில் நடந்த இனவெறிக்கும் ஏகாதிபத்திய சுரண்டலுக்கும் எதிராக நடந்த போர்களையும்,போராளிகளையும் ஒப்பீட்டு பேசுவது ஏற்கதக்கது அல்ல.

'மிசா'வின் போது போலீஸ் லத்தியைத் தூக்கும்போதே பேன்ட்டில் மூத்திரம் போன மு.க.ஸ்டாலினை யெல்லாம்  'திராவிட இளவரசன் 'என்று சொல்லும்போது, தெற்காசியாவின் அத்தனை நாட்டு ராணுவத்தையும் தனி இயக்கமாக எதிர்கொண்ட எம் தலைவன் பிரபாகரன் "தமிழனத்தலைவன்" தான்டா.!

பா வெங்கடேசன் முகனூல் (3-4updates)

************************************##

மக்களை நேசித்த தலைவர்.
தலைவரை நேசித்த மக்கள்.

நான் தமிழீழத்தில் நிற்கின்ற காலங்களில் உறங்குகின்ற நேரம் மிகக் குறைவு. ஓய்வெடுக்கின்ற நேரம் இல்லை என்றே சொல்லலாம். பயிற்சி வகுப்புகள் இல்லாத நேரங்களில் சந்திப்புகள், கலந்துரையாடல்கள், நிகழ்வுகள். பத்திரிகையாளர்களோடு சந்திப்பு என்று உறங்குகின்ற நேரத்தையும் ஓய்வெடுக்கின்ற நேரத்தையும் குறைத்து அதற்காக செலவிடுவதையே விரும்பி செய்தேன். அன்றும் அப்படித்தான். முதல் இரவு 11.00 மணிக்கு புலிகளின் குரல் வானொலியில் அதன் பொறுப்பாளர் தமிழன்பன் (ஜவான்), அண்ணன் பிரபாகரன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு என்னோடு நிகழ்த்திய உரையாடல் முடிவதற்கு நள்ளிரவைக் கடந்துவிட்டது. அதன் பிறகு புலிகளின் குரல் நண்பர்களுடன் கலந்துரையாடிவிட்டு தங்கும் விடுதிக்கு வந்து உறங்கச் செல்லும் போது அதிகாலை மூன்று மணியை நெருங்கியிருந்தது. 
சில மணிநேர உறக்கத்திற்குப் பிறகு எழுந்து, வழக்கமான நடைபயிற்சியை முடித்து, புதுக் குடியிருப்பிலும் முல்லைத் தீவிலும் ஏற்கனவே திட்டமிடப்பட்ட சந்திப்பிற்கும், நிகழ்விற்கும் டான்க் வியு விடுதியை விட்டு எனக்கான பசுரோ வாகனத்தில் புறப்பட்டேன். வாகனத்தில் ஏறியதும் கவனித்தேன் என்றும் இல்லாத வாறு ஓட்டுனர் போராளியிடம் துப்பாக்கி இருந்தது. கூடுதலாக ஒரு போராளியும் துப்பாக்கியுடன் வந்தார். வாகனம் டான்க் வியுவிலிருந்து மாலதி சிலையைக் கடந்து ஏ9 சாலையில் பயணித்து கொண்டிருக்கும் போதே சாலைகளில் மக்கள் ஆண்களும் பெண்களும் இளைஞகர்களும் குழந்தைகளும் திரளாக நின்று சாலையில் செல்வோரை வழிமறித்து சர்க்கரை பொங்கலை வழங்கிக் கொண்டிருந்தார்கள். என்னுடைய வாகனத்தையும் நிறுத்தக் கைக் காட்டினார்கள். ஆனால் வாகனத்தை ஒட்டிக் கொண்டிருந்த போராளி நிறுத்தவில்லை. நான் அந்தப் போராளியைத் பார்த்தேன், “தலைவருடைய பிறந்த நாளை மக்கள் கொண்டாடுகின்றார்கள் மாஸ்டர்” என்றார். எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. 
கிளிநொச்சியைக் கடந்த போது அங்கிருக்கும் முருகன் கோயிலடியில் மக்கள் திரள் இன்னும் அதிகமாக இருந்தது. அங்கேயும் மக்கள் என் வாகனத்தை நிறுத்த முயற்சித்தார்கள் ... வாகனம் நிற்கவில்லை. எனக்கு முன்னாள் சென்ற வாகனங்கள் அனைத்தும் நின்று மக்கள் தரும் சர்க்கரைப் பொங்கலைப் பெற்றுக் கொண்டிருந்தார்கள். அதில் சில இயக்க வாகனங்களும் உண்டு. 
பரந்தன் சந்தியை நெருங்கியபோது மக்கள் திரள் இன்னும் அதிகமாகவே இருந்தது. யாழ்ப்பாணம் பகுதியிலிருந்து வருகின்றவர்கள் புதுக்குடியிருப்பு பகுதியிலிருந்து வருகின்றவர்கள் அல்லது அந்த பகுதிகளுக்குச் செல்கின்றவர்கள் என்று அனைவருடைய வாகனங்களும் நின்று சென்றதால் என் வாகனம் யாரும் நிறுத்தாமலே நிற்கவேண்டிவந்தது. என் வாகனத்தை நோக்கி கையில் சர்க்கரைப் பொங்கலோடு ஓடி வந்தார்கள்..... அதற்குள் ஓட்டுனர் போராளி கிடைத்த இடைவெளியைப் பயன்படுத்தினார், முன் நின்ற வாகனத்தைக் கடந்து வலது புறம் திரும்பி புதுக்குடியிருப்பு சாலையில் வேகமெடுத்தது வாகனம். எனக்கு வருத்தமாக இருந்தது..... மக்கள் எவ்வளவு அன்போடும் மகிழ்வோடும் ஓடிவருகிறார்கள்... அதை நாம் மதிக்க வேண்டாமா..... என்ற உணர்வோடு ஓட்டுனர் பக்கம் திரும்பிப் பார்க்கிறேன்.... என் உணர்வை புரிந்துகொண்டவராக “மாஸ்டர் இன்றும் நாளையும் நாம் உங்களை கவனமாக பாதுகாக்க வேண்டியிருக்கிறது மாஸ்டர்” என்றார். கூடுதலாக போராளி வந்தபோதே நான் புரிந்து கொண்டேன் என்றேன். 
வழிநெடுகிலும் இதுபோன்றக் காட்சியை கண்டு மகிழ்ந்து கொண்டே சென்றேன். வழியில் விசுவமடு மாவீரர் துயிலும் இல்லத்திற்குள் சென்றேன். மாவீரர் நாளுக்கான ஏற்பாடுகள் துரிதமாக நடைபெற்றுக் கொண்டிருந்தன. சில நிமிடங்கள் இருந்து விட்டு புறப்பட்டேன். 
விசுவமடுவைக் கடந்து புதுக்குடியிருப்பின் நுழைவு பகுதியில் உள்ள ஒரு கோயிலில் மக்கள் நின்று வாகனங்களை நிறுத்தி பொங்கல் வழங்கிக் கொண்டிருந்தார்கள். இயக்க வாகனங்களும் சில நின்றுகொண்டிருந்தன. அதில் ஒன்றிரண்டு முக்கியப் பொறுப்பாளர்கள் தளபதிகளுக்குரியது என்று புரிந்தது. தளபதிகள் பொறுப்பாளர்கள் கூட நிறுத்தியிருக்கிறார்களே... என்றேன். “ஆம் மாஸ்டர் அது அவர்கள் பொறுப்பு. உங்களுக்கு ஏதாவது என்றால் நாங்கள் தான் பொறுப்பு” என்றார் கூடுதல் பாதுகாப்பிற்கு வந்த போராளி. உண்மைதான். 
வழியெங்கும், மக்கள் மிகவும் உணர்வோடும் உற்சாகத்தோடும் மகிழ்ச்சியோடும் எழுச்சியோடும் ஈடுபாட்டோடும் எல்லாவற்றுக்கும் மேலாக மிகவும் அமைதியோடும் கட்டுப்பாட்டோடும் தாங்கள் மிகவும் நேசிக்கும் தலைவரின் பிறந்த நாளை கொண்டாடிக்கொண்டிருந்தார்கள். 
மக்களின் விடுதலையை மட்டுமே நேசிகின்ற ஒரு தலைவனை மக்கள் எவ்வளவு ஆழமாக நேசிக்கிறார்கள் என்பதை நேரடியாகக் காண்பதற்கும் உணர்வதற்கும் எனக்குக் கிடைத்த மிகப் பெரிய வாய்ப்பு அது. அவர் பிறந்த நாளை அவர் ஒருபோதும் கொண்டாடியதில்லை. தமிழீழ மண்ணில் அவர் பிறந்தநாள் மக்களால் கொண்டாடப்பட்டது. 
இன்று.... உலகத் தமிழர்களால் கொண்டாடப்படுகிறது. என்றும் கொண்டாடப்படும்.

ஓவியர் புகழேந்தி.

********************************

எதற்காக புலிகளையும்,பிரபாகரனையும் கொண்டாட வேண்டும்? 

உலக வல்லரசுகள் எல்லாம் எப்படியாவது பிரபாகரனை கைது செய்துவிட வேண்டும் என கங்கனம் கட்டிக் கொண்டு முயற்சித்தன.அமெரிக்கா,ஐரோப்பா என பல நாடுகளில் புலிகள் இயக்கத்திற்கு தடை இருந்தது.

புலிகள் இயங்கிய ஈழத்தில் மின்சாரம் கிடையாது.முறையான தகவல் தொடர்பு வசதிகள் இருக்காது.நவீன உலகின் வேறு எந்த தொழில் நுட்ப சாதனங்களும் அங்கே இருக்காது.

இப்படி ஏகப்பட்ட தடைகள் இருந்தன....

இந்தத் தடைகளை எல்லாம்,புலிகளுக்கு தடைகளாகவே தெரியவில்லை.

இப்படி ஒரு சூழ்நிலை உலகில் வேறு எந்த நாட்டில் இருந்திருந்தாலும்,அங்கே ஒரு சைக்கிள் டயரை கூட பஞ்சர் ஒட்ட முடிந்திருக்காது.

ஆனால் ஈழத்தில்,விடுதலைப் புலிகள் இயக்கத்தில் அதிவேக கடற்படை இருந்தது.அப்படியான வேகத்தில் செல்லும் அதி நவீன போர் படகுகள் இலங்கை இராணுவத்திடம் கூட கிடையாது.

இத்தனை தடைகளை மீறி இந்த படகுகள் எப்படி இவர்களுக்கு கிடைத்தன? படகை ஓட்ட பயிற்சி தந்தது யார்?எந்த இடத்தில் பயிற்சிகள் நடந்தன?எரிபொருட்கள் எப்படி வருகின்றன?எங்கே சேமித்து வைக்கிறார்கள்?

--- போன்ற கேள்விகளுக்கான விடை எவருக்கும் தெரியாது.

சரி படகுகள் தானே என்று விட்டால்,புலிகளிடம் விமானப் படை இருந்தது.

ஒரு போர் விமானம் பறக்க குறைந்தது 250 மீட்டர் தூரத்திற்காவது நல்ல தரமான ஓடுதளம் எனும் ரன்வே தேவை.வளர்ந்த நாடுகளில் மட்டுமே காணப்படும் அத்தகைய ரன்வே,எந்த வசதிகளும் இல்லாத ஈழத்தில் அதுவும் இரணைமடு காட்டுக்குள் புலிகளால் அமைக்கப்பட்டது.

காட்டுக்குள் இருந்து கிளம்பிய விமானம் 500 கிமீ பறந்து இந்தியா இஸ்ரேல் தந்த ராடார்களின் கண்களில் மண்ணைத் தூவி கொழும்பு வரை சென்று திரும்பியது.

இது எப்படி சாத்தியமாயிற்று? என்ற உலக நாடுகளின் கேள்விக்கு இன்று வரையில் பதில் இல்லை.

இப்படி சாத்தியமேயற்றது என உலகமே நினைத்த விசயங்கள் தான் புலிகளால் ஈழத்தில் சாத்தியமானது.

சாதியில்லா சமுதாயம் ஈழத்தில் சாத்தியமானது.

மதுவில்லா நாடு ஈழத்தில் சாத்தியமானது.

நள்ளிரவில் கழுத்து நிறைய நகையைப் போட்டுக் கொண்டு தன்னந்தனியாக ஒரு பெண் நடந்து செல்லும் பாதுகாப்பு சாத்தியமானது.

லஞ்சம்,ஊழல் முறைகேடுகள் அற்ற நிர்வாகம் சாத்தியமானது.

புலிகளின் அந்த சாத்தியங்கள் தான் ஆனையிறவு போர்க்களத்தை அமெரிக்க இராணுவ தலைமையகமான பென்டகனில் போர் பாடமாக வைக்கத் தூண்டியது.

இவை அனைத்திற்கும் காரணம் புலிகள் தலைவர் பிரபாகரன்.

நடக்காது...முடியாது...சாத்தியமேயற்றது....வாய்ப்பேயில்லை..... என்பனவற்றை நடத்திக் காட்டுபவன் அதிசயம் என்றால்,

பிரபாகரன் ஒரு அதிசயம்.

தஞ்சை பெரிய கோவிலைப் போன்ற ஆயிரமாண்டு அதிசயம்....

D.துரை மொஹன்ராஜ்- முகனூல்

************************************

பல்லாயிரம் வீர விதைகளின் வித்து  
எம்மான்  என  வியக்கும் தமிழ்நிலத்தின் சொத்து
நல்லாயிரம் ஆண்டு
நீடு புகழ் நின் திரு நிழலில் .,

அஜயன் பாலா

*************************

டூப்ளிகேட் தமிழினத்தலைவர்களுக்கு நடுவில் தமிழினத்தின் ஒரே உண்மையான தலைவன்.. 

பிரபாகரன் என்பது வெறும் சொல் அல்ல.. 

பிறந்த நாள் வாழ்த்துகள்..

கார்ட்டூனிஷ் பாலா

**************##*********

 

30 ஆண்டுகால அகிம்சை போராட்டத்தின் முடிவில் இனி பேரனிவாத தேரவாத பௌத்த சிங்களர்களிடம் ஒன்றுபட்ட இலங்கையில் நியாயமே கிடைக்காது தனித்த ஈழமே தீர்வென நகர்த்திய ஈழ முன்னோடிகளின் இலக்கினை நேரெதிர் ஆயுதப்போராட்ட வழியில் அடுத்த 30 ஆண்டுகால தமிழர் நிலத்தில் சிங்கள குடியேற்றத்தை தடுத்து நிறுத்திய பேரரண்...

பண்டைய தமிழி காலம் முதல் தொன்று தொட்டு வந்த "ஈழ"த்தை மீண்டும் கட்டியெழுப்பி உலக வல்லாதிக்கத்தின் சதியால் 2009இல் இழந்தாலும், உன்னை குற்றம் சுமத்துவர் எவரும் 2018லும் நடைபெறும் நிலப்பரிப்பை கட்டுப்படுத்த முடியாத அவர்களின் வக்கற்ற நிலை சொல்லும், போன பாதை சரியே என...

ஈழத்தமிழர்களுக்கு படைபலமட்டுமல்லாமல் வங்கி முதல் அனைத்து கட்டமைப்புகளையும் உருவாக்கி ஒரு அரசாங்கத்தை சிறப்பாய் நடத்திக்காட்டி உலக அரசுகளிடம் இது தனித்த நாடாய் இயங்க முழித்தகுதியுடையது என உரைத்த பேராசான்...

ஆனால் நீங்கள் தொடாத துறையுண்டு...உங்கள் போராட்டத்துக்கே அஸ்திவாரமாய் அமைந்திருக்கும்...நீங்கள் தொட்டிருந்தால் நீங்கள் வீழ்ந்த 2009ம் ஆண்டுகால பத்மஸ்ரீகளால் நாங்கள் இங்கு காயடிக்கப்பட்டிருக்க மாட்டோம்...இராணுவ ஆட்சியில் எல்லாம் எதிர்பார்க்கும் மக்களாட்சி ஏமாளிகள் நாங்கள்...

உங்களால் முடிந்ததை முழூமூச்சாய் நீங்கள் கொடுத்தீர்...எங்களால் முடிந்ததை கொடுக்க முயல்கிறோம் தலைவா...

Sutharsan baskar 

கடந்த நூற்றாண்டின் மையப் பகுதியில் இருந்தே சிதைக்கப்பட்டு வந்த ஒரு இனத்தின் அழிவை, தொன்மையை, கலை, கலாச்சார வெளிப்பாடுகளை, மொழியின் நுண்ணிய வடிவங்களை ஒரு தனி மனிதனின் விடுதலைப் போராட்டம் மீட்டெடுத்து எங்கள் இளைஞர்களின் கைகளில் கொடுத்திருக்கிறது, அந்தத் தனி மனிதன் உலகின் எங்கோ ஒரு மூலையில் பிறந்தாலும், புவியெங்கும் பரந்து விரிந்த எம் தமிழ்ச் சகோதரர்களின் உளமெங்கும் நிறைந்து இருக்கிறான், திரைப்பட மாயைகளில், ஆன்மீக அழிவுகளில், திராவிடக் கட்சிகளின் நீர்த்துப் புரையோடிப் போன கொள்கைகளில் கரைந்து போய் அழிவின் விளிம்பில் நின்று ஊசலாடிக் கொண்டிருந்த எமது இனத்தின் இளைஞர்களை தமிழ் என்கிற ஒரே குடையின் கீழ் ஒருங்கிணைத்த ஒரு மாபெரும் அடையாளத்தை அழிப்பதற்கு இன்னும் பல நூற்றாண்டுகள் நீங்கள் முயன்றால் கூட முடியாது வீணர்களே……

உலகின் மூத்த குடிகளில் ஒன்றான எங்கள் இனம் தனது அடையாளங்களை உலகெங்கும் பொருளாதார ஓட்டங்களில் தொலைத்துக் கரைந்து கொண்டிருந்த போது இயற்கை எமக்கு வகுத்தக் கொடுத்த ஒரு கலங்கரை விளக்கம் தான் பிரபாகரன் என்கிற மனிதனின் விடுதலை வேட்கை, அந்த விடுதலை வேட்கையின் பின்னால் எண்ணற்ற தமிழ் இனத்தின் பண்பாட்டு வெளிப்பாடுகள் அணிவகுத்து நின்றன, தமிழ் இளைஞன் தமிழில் உரையாடுவதை பெருமையாக எண்ணத் துவங்கியதே இந்த மாவீரனின் வரவுக்குப் பின்னால் தானாய் நிகழ்ந்தது.

எங்கோ கிடக்கும் இன, மொழி அடையாள உறவுகளை எல்லாம் தனது உறவாய், தனது குருதியாய் தமிழன் சிந்தனை செய்யத் துவங்கியதே பிரபாகரன் என்கிற விடிவெள்ளி செய்த விடுதலை வேள்வி. காலம் எங்கள் இனத்திற்கு ஒரு பன்னாட்டு அடையாளம் தருவதற்கு விளைவித்த அருந்தவம் தான் பிரபாகரன் என்கிற ஒரு அடையாளம், களப் போராட்டமாய் இருந்தாலும் அது அறவழிப் போராட்டமாய், பண்பாட்டு வெளியாய் நிகழ்ந்த ஒரு அற்புதம் தான் மாவீரன் பிரபாகரன் என்கிற அடையாளம்.
Arivazakan 

  • தொடங்கியவர்

*****************#********

80 களின் நடுப்பகுதியில் தமிழ்நாட்டுக்கு ஈழப் போர் தொடர்பான பிரச்சாரத்துக்கு என்று படகில் சென்று திரும்பிய குழுவில் இருந்த அப்பா ஒரு பை வைத்திருந்தார், 

எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து வீட்டுத் தட்டில் இருக்கும் அந்த பையைக் கேட்டால் போய் வந்த கதை தான் சொல்லுவார் அதற்குள் என்ன எனக் கேட்டால் சொல்லமாட்டார்.
ஒரு நாள் அதைத் திறந்து ஏதோ எல்லாம் படிச்சுக் கொண்டிருந்தார், பக்கத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்தேன். அப்ப ஒரு பொலுத்தீன் பையை எதேச்சையா எடுத்தவர் திறந்து பார்த்து விட்டு ஒரு சின்ன சந்தோசத்துடன்.
"கடவுள் இந்தா" என நீட்டினார் வாங்கித் திறந்து பார்த்த எனக்கு பெரிய சந்தோசம்.
உள்ளே வட்டம் வட்டமான அவரின் ஸ்ரிக்கர்கள். சதுரம் சதுரமானதில் மாத்தையா பக்கத்தில் நின்றார்.
ஆனால் அந்த சிறுத்தைக் குட்டியுடன் நிற்கும் படம் தான் என்னை ஈர்த்தது.
ஆனால் அதை உரித்து ஒட்ட மனமில்லாமல் அதற்கு பின் பக்கமே சோற்றால் பூசி சுவர்களில் ஒட்டிக் கொண்டேன்.
அடுத்து நான் செய்த வேலை "ஏன்ரா இவனுக்கு இதைக் கொடுத்தோம்" என அவரை சிந்திக்க வைத்தது.
வீட்டில் அம்மாவுக்கு பூனை என்றால் கண்ணில் காட்டக் கூடாது, அப்படி ஒரு எதிரி, ஆனால் நானோ ரோட்டில் நின்ற பூனையை கலைத்துப் பிடித்து விட்டேன்.
அப்படியே நெஞ்சோடு அணைத்துக் கொண்டேன். அது திமிர முடியாமல் வீறிட்டுக் கத்திக் கொண்டது. விடவே இல்லை.
"தம்பி கடிக்கப் போகுதடா" சொன்னது அக்கா.
"அப்பா எனக்கு அப்பிடிப் படம் வேணும்"
பிறகு என்ன அப்பா பேப்பர் கமெரா செய்து அதற்குள் என்னைக் கீறி வைத்த படம் வைத்து சொன்னார், "இது தான் கடவுள், படம் இந்தியா போய் கழுவினால் அப்படி வரும்"

இது ஒரு நாயகக் கனவு, அன்றே இந்தளவு என்றால்.......
ஒரு தனிமனிதன் ஒரு வல்லரசையே மிரட்டினான் என்றால் எப்படி இருக்கும். ஒற்றுமை அற்று, காட்டிக் கொடுத்து, மற்றவனில் குளிர்காய்ந்த ஒரு இனத்தில் ஒரு பெரும் தொகுதியை தன் அரசின் கீழ் கொண்டுவருவதென்பது இலகுவான காரியமா.

உலகில் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட தலைவன் என்று எவனும் இருக்க முடியாது. ஆனால் விமர்சிப்பவன் அந்த இனத்துக்கு என்ன செய்திருக்கிறான் என்றால் ஒட்டி இருந்து குளிர்காய்தலே.

தான் தன் இனத்துக்காக தூக்கிய ஆயுதத்தை இறுதி வரை கீழே போடமல் தான் நேசித்த மண்ணிலேயே வீழ்ந்த என் நாயகன் தான் எம் இனத்தின் கடைசித் தலைவன்.

பிறந்த தினத்தில் மீண்டும் உங்களை நினைவில் நிறுத்துகின்றோம் அண்ணா ❤️

Mathi suthaa

  • கருத்துக்கள உறவுகள்

தன்னுடைய பிறந்ததினத்தை மாவீரர் நாளில் கொண்டாட வேண்டாம் என்று தானே அவரின்  கடுமையான அறிவுறுத்தல்கள் புலிகளுக்குள் வழங்கப்பட்டதாக அறிந்தேன். அது உத்தரவிற்கான கனதியுடையதா என்று தெரியவில்லை.

மாவீரர் நாளில், யார் பிறந்த தினமாக  இருந்தாலும், கொண்டாடக்  கூடாது என்பதே எனது நம்பிக்கை. 

  • தொடங்கியவர்

அன்புத் தம்பி….
_______________
நீ மீனைப் போல
கடலின் குழந்தை
ஒரு போதும்
உன்னைக் கடல் விழுங்காது

நீ பறவை போல்
வானின் குழந்தை
ஒரு போதும்
உன்னைக் காற்று கரைக்காது

நீ விதையைப் போல்
நிலத்தின் குழந்தை
மண் எப்போதும்
உன்னை விருட்சமாக்கி விடும்

நீ வெற்றியைப் போல்
வீரத்தின் குழந்தை
போராட்டம் எப்போதும்
உன்னைப் பதாகையில் தாங்கும்

ஆம்
நீ எங்களைப் போல்
வேடிக்கையின் குழந்தை இல்லை
வீழ்ந்து போவதற்கு

நீ எங்களைப்போல்
பேடிமையின் குழந்தையில்லை
பிறப்பை அடகு வைக்க

நீ எங்களைப் போல
அச்சத்தின் குழந்தையில்லை
அடிமைச் சிறுமதியை
உச்சத்தில் கொள்ள

நீ எங்களைப் போல்
ஊமைச் சனமும் இல்லை
கூவிப் பிதற்றும் குழந்தையுமில்லை

ஆவி பெரிதென்றெண்ணாதவர்களின்
அன்புத் தம்பி நீ
ஆயிரம் காலம் வாழ்வாய்
அவனியில் ’உன்’ தமிழ் போல்

(மீள் பதிவு)

# கலாப்பிரியா கவிஞர்

27 minutes ago, Kadancha said:

தன்னுடைய பிறந்ததினத்தை மாவீரர் நாளில் கொண்டாட வேண்டாம் என்று தானே அவரின்  கடுமையான அறிவுறுத்தல்கள் புலிகளுக்குள் வழங்கப்பட்டதாக அறிந்தேன். அது உத்தரவிற்கான கனதியுடையதா என்று தெரியவில்லை.

மாவீரர் நாளில், யார் பிறந்த தினமாக  இருந்தாலும், கொண்டாடக்  கூடாது என்பதே எனது நம்பிக்கை. 

26/ 27 வித்தியாசம் தெரியாதவரா நீங்கள்

தலைவனுக்காக ஒரு கவிதை

தலைவா, நீ ஒரு வரலாறு.
ஆயிரமாண்டு தவமிருந்து கிடைத்த ஓர் வரம்.
ஓர் உலகமே ஒன்றுசேர்ந்தால்தான் அணைக்கமுடியும்
எனச்சுடர்ந்த எல்லாளப் பெருநெருப்பு.

தென்துருவங்களும் வடதுருவங்களுமாயிருந்தவர்கள்
கைகோர்த்து அழிக்க வந்த தென்திசைக்குச் சொந்தமானவன்.
பத்து தலைகள் ஒன்றுசேர்ந்து தொடுத்தப் போரை 
எதிர்கொண்ட ஒற்றைத்தலை இராவணன்,
பசித்தாலும் புல் தின்னாது இது என்கிற பழமொழியை நிரூபித்தவன்.

இடையில் ஒரு தேசம் படைத்தாய்.
சில காலம் அதில் தமிழ்த்தாய் 
உன் பாதுகாப்பில் ஆட்சி புரிந்தாள்.
இறையாண்மையின் எதிர்க்காலக் கதிர்கள் 
சற்றே ஒளிபாய்ச்சிய
உன் வன்னிக்காட்டைக் கண்டு
அதிர்ந்தன
கொழும்பும் தில்லியும் 
வாஷிங்டனும் பெய்ஜிங்கும்
லண்டனும் ஓஸ்லோவும்.
இது விதி அல்லவே என்று அயர்ந்தன.

நீ ஒரு வித்தைபுரிந்தாய்.
விடுதலையை கண்முன்பு காட்டிச்சென்றாய்.
தமிழர் வரலாற்றில் ஓர் கணநேரக்காட்சியாக அது
இன்று முடிந்துபோயினும் முள்ளிவாய்க்காலில்,
நீ அதைக்காட்டிவிட்டாய்தானே!
அதை நாங்கள் ருசிகண்டோம்தானே!
இனி தாகம் அடங்காது.
வலியால் ஓய்ந்திருக்கிறோம் இப்போது.
புண்ணை ஆற்றிக்கொண்டிருக்கிறோம்.
துரோகங்களின் வலியால் துவண்டவர்கள் மீளெழ 
சில நாழிகைகள் கூடுதலாகலாம்.
மேகங்கள் கருக்கின்றனவா என்றும் நோட்டமிடுகிறோம்.

ஒருவேளை மீண்டும் நாங்கள் வன்னிக்காட்டுக்கு 
போவோமோ இல்லையோ -
ஆனால்
வேறொரு காட்டில் 
வேறொரு யுத்தத்தில் 
வேறொரு ஆயுதத்தால்
விடுதலையை வென்றெடுக்காமல் 
போவோமா என்ன?

ஈகங்கள் பலனின்றி போகுமா என்ன?

ஈழங்கள் உதித்தலின்றி 
வேறென்ன வரலாறு 
இவ்வுலகம் கண்டது இதுவரை?
பிரபாகரன்கள் வென்றதன்றி
வேறென்ன வரலாறு இவ்வுலகம் 
எழுதிற்று இதுவரை?

ஆழி செந்தில்நாதன், ஒருங்கிணைப்பாளர் தன்னாட்சித் தமிழகம்

நவம்பர் 26, 2018

 

பிரபாகரனின் பிறந்த நாளைக் கொண்டாடுவதில் அல்லது முள்ளிவாய்க்கால் நினைவுநாளைக் கடைப்பிடிப்பதில் உங்களுக்கு ஏதேனும் மனத்தடை இருக்குமானால், நீங்கள் 'காலனிய அடிமை மனோபாவம்' என்றொரு வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கிறீர்கள் என்றுதான் அர்த்தம். 

நல்ல டாக்டராக பார்க்கவும். இன்றே அட்மிட் ஆகவும்.

*†**********************†

தலைவர்…!

ஒருவரை தலைவராக ஏற்றுக்கொள்வதற்கும்- மனதார உணர்வதற்கும் இடையில் நிறைய வித்தியாசங்கள் உண்டு. தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டங்களின் போக்கில் தலைவர்கள் சிலர் வந்து போயிருக்கின்றார்கள். இனியும் வரலாம். ஆனால், இரண்டு தலைமுறைகளினால் மனதார தலைவராக உணரப்பட்டவர் ‘எமது தலைவர்’.

சுதந்திர வேட்கையும், அதற்கான மூர்க்கமான அர்ப்பணிப்பும் தான் எமது தலைவரை காலத்தின் நாயகனாக மாற்றியது. ஒருவருடைய ஆளுமை, அவர் முன்னெடுத்த போராட்ட வடிவம், அதன் அரசியல் மற்றும் போக்கு உள்ளிட்டவை தொடர்பில் பலவிதமான கருத்துக்களும் விமர்சனங்களும் இருப்பது வழமை. அது, எமது தலைவர் மீதும் (எனக்கு) உண்டு.

விமர்சனங்களுக்கு அப்பால் கொண்டாடப்படுவதை நான் என்றைக்கும் விரும்பியதில்லை. ஆனால், விமர்சனங்களோடும், வியாக்கியானங்களோடும் தலைவரையே ‘என்னுடைய’ தலைவனாக நான் மனதார உணர்கின்றேன். அந்த இடத்தினை இட்டு நிரப்புவதற்கு என்னுடைய வாழ்நாளில் இன்னொருவர் வருவார் என்று நான் நம்பவில்லை. ஏனெனில், பெரும் அர்ப்பணிப்புக்களோடும்- தீர்க்கமான திறனோடும் உருவாக்க வேண்டிய இடம் அது!

(மீள்பதிவு)

புருஜோத்தமன் தங்கமயில்

  • தொடங்கியவர்

ஒவ்வொரு வருடமும் இதையே திரும்பத் திரும்ப பதிவிடுகிறேன். வேறு சொற்களை வீசுவதை விட எனக்குள் ஆழமான மாற்றத்தை விதைத்த அந்தச் சொற்களையே விதைக்கிறேன்.

விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் எப்போதோ சொன்ன விஷயம் ஒன்றை இப்போதும் வணிகத்தில் பின்பற்றுகிறேன். மிகச் சிறந்த மேனேஜ்மெண்ட் தியரியும்கூட அது. எல்லா துறை சார்ந்தவர்களுக்குமான நிறையச் சொல்லாடல்களை இதுபோல விட்டுச் சென்றிருக்கிறார் அவர். " தலைவனின் பணி என்பது அன்றாட நடைமுறைகளை பரிபாலனம் செய்வதல்ல. நோக்கத்தை வடிவமைப்பதும் அது தடம்புரளாமல் பயணிக்கிறதா என்பதை உறுதி செய்வதும்தான்".

சரவணன் சந்திரன் 

 

########₹₹₹########

எந்தப் பெயரை எவர் சொல்லக் கேட்டாலும் நெஞ்சம் நெகிழுமோ, கண்கள் பனிக்குமோ, செவிகள் குளிருமோ, பொங்கிப் பொங்கி பெருமிதம் பெருக்கெடுத்து வழியுமோ… அந்தப் பெயர் பிரபாகரன். தமிழர்களாகிய நாங்கள் இப்பூவுலகில் வாழ்ந்தோம் என்பதற்கான சாட்சியமாய் அமைந்த நித்தியமான கல்வெட்டு உங்களது பெயர்.

உங்கள் தலைமையின் கீழ் நாங்கள் தோல்வியடையவில்லை. மாறாக, ஏகாதிபத்திய பேராசை கொண்ட வல்லூறுகளாலும், பிராந்திய அதிகாரத்தை விழைந்த வஞ்சகர்களின் கூட்டுச்சதியினாலும் பேரினவாத வெறியினாலும் வீழ்த்தப்பட்டோம்.

உங்கள் வரலாறுதான் எங்களுக்கு வழிகாட்டி. உங்கள் பெயர்தான் எம்மைச் செலுத்திச் செல்லும் பெருமித உந்துசக்தி. உங்கள் இன்மையே இம்மண்ணில் நித்திய இருளெனக் கவிந்துவிட்ட மாபெரும் துயரம். 

இன்று பிறந்தீர்கள். எங்கள் இனத்துள் நிறைந்தீர்கள். வணங்குகிறோம்.

தமிழ் நதி

ஒரு இனத்தின் அரசியல் விடுதலை எத்தனை முக்கியமானதென தமிழ் சமூகத்திற்கு விளங்க வைத்த ஒப்பற்ற தலைவனின் பிறந்த நாள். பல்லாயிரம் கோடிகள் ஊழல் செய்தாலும் திறமையான தலைவர் என தமிழ் சமூகத்திற்கு பழக்கப்பட்ட தமிழ்நாட்டு  அரசியல் தலைவர்கள் தமிழக மக்களிடமும் பெருவாரியாக நேர்மையற்றவராய் இருப்பதே அரசியலுக்கான முதல் படி என்ற சூழலை உருவாக்கி இருக்கும் நேரத்தில் பிரபாகரனின் பிறந்த நாளை தமிழர்களின் முக்கியமான தலைவனின் பிறந்த நாளாக தொடர்ந்து அடையாளப்படுத்த வேண்டியது முக்கியம். 

டைகர்கள் கபாலியைச் சுடுவதாக படம் எடுக்கும் அபத்தங்களாவது கேள்வி கேட்கப்பட வேண்டும் என்கிற அக்கறையும். இங்கே புலிகளின் மீது சுமத்தப்படுகிற ஓராயிரம் குற்றச்சாட்டுகளையும் உண்மையல்ல என்பதை அறிவுறுத்தவும் வேறு எப்போதையும் விட தீவிரமாக வேலை செய்ய வேண்டியுள்ளது.

இயக்கத்தையும் பிரபாகரனையும் மறுக்க உங்களுக்கு நூறு காரணங்கள் உண்டென்றால். எம் ஒப்பற்ற தலைவராக ஏற்றுக் கொள்ள எங்களுக்கு ஆயிரம் காரணங்களுண்டு.

 

லக்ஷ்மி சரவண குமார்

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, அபராஜிதன் said:

பிரபாகரனின் பிறந்த நாளைக் கொண்டாடுவதில் அல்லது முள்ளிவாய்க்கால் நினைவுநாளைக் கடைப்பிடிப்பதில் உங்களுக்கு ஏதேனும் மனத்தடை இருக்குமானால், நீங்கள் 'காலனிய அடிமை மனோபாவம்' என்றொரு வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கிறீர்கள் என்றுதான் அர்த்தம். 

நல்ல டாக்டராக பார்க்கவும். இன்றே அட்மிட் ஆகவும்.

தமிழீழ தேசம் என்பதும்,  பிரபாகரன் கட்டி எழுப்பிய அரசு என்பதும், மாவீரர் என்பதும் எந்த தலைவர் ஆகினும், பிரபாகரன் உட்பட, அப்பாற்றப்பட்டது என்பதை நீங்கள் மனதார ஏற்றுக்கொள்கிறீர்களா?

27 மாவீரர் நாளாகினும், 27 மாவீரர் தீபம் ஏற்றி அவர்களை துதித்து, மாவீரர்களின் உற்றார் உறவினர் ஆறுவது வரைக்கும் மாவீரர் வாரம்.   அந்த வாரத்தில், அதே மாவீரர்களுக்கு தலைமை வழங்கிய , தலை வணங்கிய தலைவன், ஒரு போதுமே தன் பிறந்த நாள் பற்றிய எண்ணமே இருந்திருக்காது என்பது எனது உறுதியான நம்பிக்கை.

இப்படி முன்பு கொண்டாடப்பட்ட போது, ஒரு போதுமே  அதில்  உடன்பாடில்லை.  

ஏன் இப்படி பிரபாகரன், அதுவும் அவரின் பிறந்த நாளை, இப்படி புலிகள் மாவீரர் வாரத்தில்  கொண்டாட பார்த்துக் கொண்டிருக்கிறார் என்று மனம் வேதனை அடைந்தது. கொண்டாடியர்வர்களுடன் வாக்குவாதப்பட்டதும் உண்டு.

ஆனாலும், பிராபகரன், சரியான தலைமைத்துவதையே வழங்கினார் என்பதையே, அவர் பிறப்பித்த அறிவுறுத்தலில் இருந்து அறியக் கூடியதாக இருந்தது.

தேசம், அரசு என்ற பொறுப்பை எடுக்கும் பொது, எனது என்பது இல்லை என்றாகி, எமது என்பதே மூச்சாகிறது.

காலனிய அடிமையாக இருக்கலாம், ஆயினும், எது எப்போது கொண்டாடப்படவேண்டும் என்பதில் காலனித்துவ அடிமைக்கும், தேசத்தின் தலைமை வாங்கியவருக்கும்  கருத்தொற்றுமை இருந்திருக்கிறது.

நீங்கள் சொல்லும் 26 மாவீரர் நாளல்ல என்பது, அதனால் கொண்டாடலாம் என்பது, உங்களுக்கு vulgar ஆக தெரியவில்லையா?

மாவீரர்களை, போராட்டத்தை நாங்களே கொச்சைப்படுத்துவதாக தெரியவில்லையா?

மாவீரர்களை, போராட்டத்தை, என் பிரபாகரனையே மற்றவர்கள் கொச்சைப்படுத்துவதத்திற்கான இடைவெளியை, வாய்ப்பை நாமே உருவாக்குகிறோம் என்று தெரியவில்லையா?

இதையே பிரபாகரன் உணர்ந்துள்ளார் என்றே தோன்றுகிறது.

மாவீரர் வரத்தை முடித்து கொண்டாடுங்கள். பிரபாகரன், தனது  பிறந்த நாளை மற்றவர் கொண்டாடுவதை விரும்பாவிட்டாலும், அதை மறுத்திருக்கமாட்டார் என்பதே இதுவரைக்குமான நம்பிக்கை.  

முள்ளிவாய்க்கால் பற்றி நான் ஒன்றுமே சொல்லவில்லை.

 

 

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர் வாரத்துள், ஓர் பிறந்தநாளை கொண்டாடுவதினால், வெளியார் எதைஎதையெல்லாம் செய்வதற்கு வாய்ப்பை, இடைவெளியை உருவாக்குகிறோம் என்பதற்கண உதாரணம்.

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=39260

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர் வாரத்தில்,
தமிழீழ தேசம்,
மாவீரர்கள், வீரம், நடுகல் வழிபாடு,   
புலிகளின் தலைமைத்துவம்,
பிரபாகரனின் தீர்க்க தரிசனத்துடன் கூடிய ஆளுமையும் தலைமைத்துவமும்

எனபது போன்றவையே, அதாவது, புலிகளும், தமிழீழ தேசமும், தமிழழீழ அரசும் எனப்து போன்ற  பிரிக்கப்படமுடியாத அடையாளங்களே பேச்சாக, மூச்சாக, உணர்வாக, உணவாக இருக்க வேண்டும் என்பதே வேண்டுகோள். 

இதில் ஓர் சிறிய விலக்கீடு இருந்தாலும், சுட்டிக் காட்டவும்.

Edited by Kadancha
add info.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.