Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமெரிக்கா, பிரித்தானியா திடீர் கரிசனை உள்நோக்கம் என்ன?

Featured Replies

அமெரிக்கா, பிரித்தானியா திடீர் கரிசனை உள்நோக்கம் என்ன?

]

வான் புலிகளை எப்படிச் சமாளிப்பதென்பது தெரியாது இலங்கை அரசு தடுமாறுகிறது. இதுவரை வான் புலிகளை எதுவுமே செய்ய முடியாத நிலையில் இனி என்ன செய்வதெனக் குழப்பமடைந்துள்ளது. சர்வதேச நாடுகளின் உதவிகளைப் பெறும் அதேநேரம், வான்புலிகளுக்கெதிராக சர்வதேசத்தின் கவனத்தையும் திருப்ப இலங்கை அரசு முயல்கிறது.

வான் புலிகளின் அச்சுறுத்தலால் கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையம் இரவு நேரங்களில் இழுத்து மூடப்படுகிறது. இலங்கை வான்பரப்பை பாதுகாக்கும் ஆற்றலை விமானப் படையினர் இழந்துவிட்டதால் வான்புலிகளின் அச்சுறுத்தலுக்கு அரசு அடிபணியும் நிலையேற்பட்டுள்ளது.

விமானப் படை விமானங்களால் தமிழர் பகுதிகளில் கண்மூடித்தனமாக குண்டுகளை வீச முடிகிறதே தவிர வான் புலிகளை கண்டுபிடித்து அவற்றை தாக்கியழிக்கும் வல்லமையை அவர்கள் கொண்டிருக்கவில்லை. இதனால், அவசர அவசரமாக மிக நவீன விமானங்களை கொள்வனவு செய்வதில் தீவிர அக்கறை காட்டும் அரசு, அதற்கிடையில் வான் புலிகள் குறித்து சர்வதேசமெங்கும் அச்ச உணர்வைத் தோற்றுவிக்கும் முயற்சியிலும் ஈடுபடுகிறது.

இந்தியாவின் பாதுகாப்புக்கு வான் புலிகள் பெரும் அச்சுறுத்தலாயிருப்பரென இலங்கை அரசு எச்சரித்ததையடுத்து, இந்திய அரசு முழு உஷாரடைந்துவிட்டதாக செய்திகள் வெளியாகின்றன. தமிழகத்திலுள்ள அணு உலைகளை வான்புலிகள் தாக்கும் சாத்தியமிருப்பதாக வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பாலித கோஹண எச்சரித்ததை இந்தியா வேதவாக்காக எடுத்துள்ளது.

புலிகளின் விமானங்கள் 200 முதல் 300 கிலோமீற்றர் வரை பறக்கக்கூடியவையென்பதால், வன்னிக்குச் சமீபமாகவுள்ள தமிழகத்தில் புலிகள் தாக்குதல்களை நடத்தும் வாய்ப்புகளுள்ளதாகவும் பாலித கோஹண தெரிவித்ததையடுத்து, இந்திய அரசு உஷாரடைந்தது.

கடந்த சில தினங்களுக்கு முன் இந்திய பாதுகாப்பு அமைச்சர், வெளிவிவகார அமைச்சர், வெளியுறவுச் செயலர், பிரதமரின் பாதுகாப்பு ஆலோசகர்கள், முப்படைத் தளபதிகள் மற்றும் பல சிரேஷ்ட அதிகாரிகள் கலந்துகொண்ட உயர்மட்ட மாநாடு புதுடில்லியில் நடைபெற்றது.

இதில் இலங்கை அரசு விடுத்த எச்சரிக்கை குறித்து தீவிர கவனம் செலுத்தப்பட்டதுடன், இவ்வாறானதொரு நிலைமை ஏற்பட்டால் என்ன செய்வதெனவும் விரிவாக ஆராயப்பட்டது. வான் புலிகளின் அச்சுறுத்தலை, சமாளிக்க தென் மாநிலங்களில், குறிப்பாக தமிழகத்தில் வான் வழிப் பாதுகாப்பை பல மடங்காக அதிகரிக்கத் தீர்மானிக்கப்பட்டதுடன் போர் விமானங்களை தமிழகத்திற்கு அனுப்பவும் அங்கு புதிய நவீன விமானப் படைத்தளத்தை அமைக்கவும் தீர்மானிக்கப்பட்டது.

இதுவரை விடுதலைப்புலிகளின் படையணிகளால் இந்தியாவுக்கு எதுவித அச்சுறுத்தலும் ஏற்படாத நிலையில் தற்போது இலங்கை கள நிலையிலும் இராணுவச் சமவலு நிலையிலும் திடீர் மாற்றங்கள் ஏற்பட்டு வருகையில் இந்தியா புதிய வியூகம் வகுப்பது பெரும் ஆச்சரியமாகவேயுள்ளது.

அதுவும் இலங்கை சிவில் அதிகாரியொருவர் (கோஹண) தெரிவித்த கருத்தின் அடிப்படையில் மற்றொரு நாட்டுடனான போருக்குத் தயாராகுவது போல் இந்தியாவில் ஆயத்தங்கள் செய்யப்படுவது பெரும் வியப்பைத் தருகிறது.

வான் புலிகளினால் இந்தியாவுக்கு ஆபத்தேற்படுமா, இல்லையா என்பது குறித்து இந்திய புலனாய்வாளர்கள் எவருமே எதுவித தகவல்களையும் தெரிவிக்காத நிலையில், பாலித கோஹணவின் கூற்றின் அடிப்படையில் பெரும் ஏற்பாடுகள் செய்யப்படுவது இந்தியாவின் பாதுகாப்பு குறித்த புலனாய்வுத் தகவல்களை இலங்கை சிவில் அதிகாரிகள்தான் வழங்குகின்றார்களா என்ற கேள்வியை எழுப்புகிறது.

விடுதலைப்புலிகளை எப்போதெல்லாம் இலங்கைப் படைகளால் சமாளிக்க முடியாது போகிறதோ அப்போதெல்லாம் இந்தியாவுக்கும் புலிகளுக்குமிடையில் சிண்டு முடிவதுதான் இலங்கையின் தந்திரமாகும். இதுவரை காலமும் இவ்வாறான செயல்களில் ஈடுபட்டுவந்த இலங்கை அரசு, தற்போதும் இதுபோன்ற நடவடிக்கைகளில் இறங்கியுள்ளதை இந்தியா உணர்ந்து கொள்ளாதது அவர்களது பாதுகாப்பு செயற்பாடுகள் குறித்து பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.

புலிகளை சமாளிக்க முடியாவிட்டால், இந்தியாவின் உதவியை அல்லது வேறு நாடுகளின் உதவியை இலங்கை அரசு பெற முயலுமென்பது அனைவரும் அறிந்ததொன்று. இதனால், வான் புலிகளால் இலங்கையை விட இந்தியாவுக்குத்தான் பெரும் அச்சுறுத்தலேற்படுமென்பது போல் அவர்கள் கதை விடுவார்கள். எனினும், யதார்த்த நிலையை உணர்ந்து செயற்பட வேண்டியது இந்தியாவின் பொறுப்பாகும்.

இந்த நிலையில் வான் புலிகளின் அச்சுறுத்தல் குறித்து இலங்கை கொண்டுள்ள கவலைபோன்று வேறு சில நாடுகளும் தீவிர கவனம் செலுத்துகின்றன. அந்த நாடுகளுக்கு வான் புலிகளால் எவ்வித நேரடி அச்சுறுத்தலும் இல்லாத போதும் தங்களுக்கெதிரான போராட்ட அமைப்புகள் வான் பலத்தை பெற்றுவிட்டால், அவற்றை எப்படி எதிர்கொள்வதென்பதே இவற்றின் கவலையாகும்.

இதுவரை நாளும், இல்லாத விதத்தில் அமெரிக்காவும் பிரிட்டனும் போட்டி போட்டு இலங்கையில் மனித உரிமைகள் விடயத்திலும், தொடரும் போர் குறித்தும், இனப்பிரச்சினைத் தீர்வு குறித்தும் தீவிர அக்கறை செலுத்துகின்றன. கடந்த வருடம் வடக்கு - கிழக்கில் பெரும் போர் வெடித்து மிக மோசமான மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றபோது, மௌனம் சாதித்த இந்த நாடுகள் இன்று அவசர அவசரமாக மோதல்களை முடிவுக்கு கொண்டு வர வேண்டுமென அழுத்தம் கொடுக்கின்றன.

வான் புலிகளின் வருகையுடன் இலங்கையில் இராணுவ வலுச் சமநிலையில் வேகமாக மாற்றங்கள் ஏற்பட்டு வரும் நிலையிலேயே வடக்கு - கிழக்கு பிரச்சினை குறித்து இந்த நாடுகள் தீவிர கவனம் செலுத்துகின்றன. மனித உரிமைகள் குறித்தும், அகதிகளின் பிரச்சினைகள் குறித்தும் அரசுக்கும் புலிகளுக்குமிடையில் மீண்டும் பேச்சுக்களை ஆரம்பிப்பது குறித்தும் பேசுகின்றன.

போர்நிறுத்த உடன்பாடு அமுலிலிருக்கையில் போர் வெடித்த போது இவர்கள் தடுக்க முன்வரவில்லை. யுத்த விமானங்கள் தினமும் தமிழர் பகுதிகளில் குண்டுகளைப் பொழிந்த போது ஏனென்று எவரும் கேட்கவில்லை. புலிகளுக்கெதிரான போரெனக் கூறி தமிழர் தாயகப் பிரதேசங்கள் படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டு, அவர்களது வீடுவாசல்கள் அழிக்கப்பட்டு, அவர்கள் இலட்சக்கணக்கில் அகதிகளாக ஓடியபோதும் எவரும் இவற்றைத் தடுத்து நிறுத்தவில்லை.

தினம் தினம் தமிழர்கள் சொந்த மண்ணில் சுட்டுக்கொல்லப்பட்டபோதும், நூற்றுக்கணக்கில் தமிழர்கள் கடத்தப்பட்டபோதும் பெருந்தொகையில் இந்த மக்கள் காணாமல் போனபோதும் இந்த நாடுகள் மௌனம் சாதித்ததுடன் கிழக்கிலிருந்து புலிகளை முற்றாக விரட்டிய பின், வடக்கில் பெரும் போருக்குச் செல்லப் போவதாக அரசு அறைகூவல் விடுத்த போது கூட முழு உலகமும் கைகட்டி வேடிக்கை பார்த்தது.

வடக்கு, கிழக்கை பிரித்து தமிழர் தாயகத்தை துண்டாடி கிழக்கில் தமிழர்களுக்கிடையில் மோதல்களை ஏற்படுத்தி தமிழர்களையும் தமிழர்களையும் மோதவிட்டு அவர்களைத் தினமும் அழித்த போதெல்லாம் மௌனம் சாதித்து தமிழரின் பலத்தை குறைத்து இராணுவ வலுச் சமநிலையில் பெரும் மாற்றம் ஏற்படும் நிலையை உருவாக்கியவர்கள், இன்று திடீரென இலங்கை பிரச்சினையில் தீவிர அக்கறை காட்டுவது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

உலகின் கவனத்தை ஒரு இரவுடன் மாற்றியது வான் புலிகளின் வருகைதான். அடுத்தடுத்து அவர்கள் மேற்கொண்ட விமானத் தாக்குதல்களும் அதனைச் சமாளிக்க முடியாது இலங்கை அரசு தடுமாறுவதும் இராணுவச் சமநிலையில் வேகமாக மாற்றங்களை ஏற்படுத்தி வரும் நிலையில்தான் அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகள் இலங்கை பிரச்சினையில் அக்கறை காட்டுகின்றன.

பிரிட்டன் பாராளுமன்றில் திடீரென இலங்கை பிரச்சினை குறித்து முழுநாள் விவாதம் நடைபெற்றது. புலிகள் மீதான தடையை நீக்கி அவர்களை அங்கீகரிக்குமாறு எம்.பி.க்கள் பலர் கோரிக்கை விடுத்தபோது பிரிட்டிஷ் அரசு அதற்கு மறுத்துவிட்டது. புலிகள் மீதான தடையை நீக்குவதென்பது அமெரிக்காவின் சீற்றத்திற்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் கோபத்திற்கும் ஆளாக வேண்டுமென்பதால் புலிகள் மீதான தடையை நீக்க பிரிட்டன் மறுத்தது.

அதேநேரம், பாராளுமன்றில் இந்தளவு அழுத்தத்திற்குப் பின்னரும் எதுவித நடவடிக்கையும் எடுக்காவிட்டால் தங்களை உலகம் தூற்றுமென்பதால், இலங்கை அரசுக்கான உதவித் திட்டங்களை இடைநிறுத்தியது. புலிகளின் மீதான தடையை நீக்குவதை விட பிரிட்டஷ் அரசுக்கு இது சுலபமானது.

புலிகளின் தடையை நீக்கிவிட்டு, மீண்டும் அதனை அமுலுக்கு கொண்டு வருவதென்பது பல்வேறு கட்டங்களை தாண்ட வேண்டும். ஆனால், இலங்கை அரசுக்கான உதவிகளை நிறுத்திவிட்டு, அதனை எவருக்கும் தெரியாமல் எந்த அறிவிப்பும் செய்யாமல் கூட மீண்டும் வழங்கலாம். இதன் மூலம் இலங்கை அரசை சமாளித்து விடலாம்.

இலங்கை அரசும் விடுதலைப்புலிகளும் உடனடியாகப் பேச வேண்டும், அதற்கு முன் ஜூலையில் லண்டனில் இரு தரப்பையும் சந்திக்க வைக்க வேண்டுமெனவும் பிரிட்டிஷ் அரசு தீவிரம் காட்டுகிறது. இதன் மூலம் இந்தக் காலப்பகுதியில் இலங்கையில் மோதல்களை நிறுத்த அழுத்தம் கொடுப்பதே பிரிட்டனின் திட்டமாகும்.

அவ்வாறாயின், வான் புலிகள் தங்கள் தாக்குதலை நிறுத்த வேண்டிய நிலையேற்படும். இதன் மூலம் இலங்கை அரசு வான் புலிகளால் எதிர்கொள்ளும் அச்சுறுத்தலை தவிர்ப்பதும் இந்தக் காலப்பகுதியில் இலங்கை அரசு, வான் புலிகளை எதிர்கொள்ளும் விதத்தில் தன்னை முழு அளவில் தயார்படுத்த கால அவகாசம் வழங்குவதாயுமிருக்கும்.

சமாதான முயற்சிகள் குறித்து பிரிட்டனும் அமெரிக்காவும் தீவிர அக்கறை காட்டுகையில், வான் புலிகள் ஏதாவது தாக்குதலை நடத்தினால், தாங்கள் ேமற்கொள்ளும் சமாதான முயற்சிகளை முறியடிக்க புலிகள் முயல்வதாக அவர்கள் மீது கடும் அழுத்தங்களை கொடுக்கவும் இவர்கள் முற்படக்கூடும்.

புலிகளின் விமானங்கள் இலங்கைக்குள்ளேயே இராணுவ நிலைகளைத் தாக்கும். ஏனைய வெளிநாட்டு அமைப்புக்கள் விமானப் படையை உருவாக்கி விட்டால் அந்த அமைப்புக்களின் விமானங்கள் அமெரிக்காவையே தாக்குமென்பதால், புலிகளின் விமானப் படை அமெரிக்காவுக்கு நேரடி அச்சுறுத்தலாக இல்லாவிட்டாலும், அதனை முன்மாதிரியாகக் கொண்டு ஏனைய அமைப்புக்களும் விமானப் படைகளை உருவாக்க முற்பட்டுவிடுமென்பதால் புலிகளின் விமானப் படை குறித்து அமெரிக்கா அச்சமடையலாம்.

இதனால், புலிகளின் வான் தாக்குதல் அதிகரித்து, அவர்களது கை ஓங்கி, இலங்கை விமானப் படையின் பலம் குன்றிவிடுவது பேராபத்தாகிவிடலாமெனக் கருதும் அமெரிக்கா போன்ற நாடுகள், இலங்கையில் மீண்டும் சமாதான முயற்சிகளெனக் கூறி வான் புலித் தாக்குதலை தடுத்து அதற்கிடையில் இலங்கை விமானப் படையினரின் பலத்தை அதிகரிக்கச் செய்துவிடும் முயற்சிகளில் ஈடுபடுவதாகவே பலரும் கருதுகின்றனர். எனினும், புலிகள் இதனை எவ்வாறு பார்க்கிறார்களென்பதைப் பொறுத்தே அடுத்த நடவடிக்கையிருக்கும்.

அதேநேரம், வான் புலிகளை எதிர்கொள்வதற்கான முயற்சிகளில் இலங்கை அரசு தீவிரம் காட்டுகிறது. தாக்குதலொன்றுக்காக வான் புலிகள் வரும்போது, தரையிலிருந்து படையினர் மேற்கொள்ளும் தாக்குதல்களிலிருந்து அவர்கள் தப்பிவிட்டால் இலக்கை நோக்கி அவர்கள் வருவதற்கிடையில் அவர்களை இடையில் - நடுவானில் வழிமறித்து தாக்கியழிக்கும் திறன் தற்போது விமானப் படையினரிடமில்லை.

வான் புலிகளைக் கண்டுபிடித்து, அவர்களை இடைமறித்து நடுவானில் தாக்கியழிக்கும் திறன் அவசியம் தேவைப்படுகிறது. இதனைப் பெற்றுக்கொள்ளும் முயற்சியில் அரசும் படையினரும் ஈடுபட்டுள்ளனர்.

இதற்காக, பிந்திய அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் தயாரிக்கப்பட்டுள்ள `மிக் - 29' ரக ரஷ்ய தயாரிப்பு போர் விமானங்களை உடனடியாகக் கொள்வனவு செய்யவும் அந்தக் கொள்வனவிற்கு முன் அவற்றில் ஒரு சிலவற்றை வாடகைக்கு பெற்றுக் கொள்வதிலும் அரசு தீவிர அக்கறை காட்டுகிறது.

விமானப் படையினரிடம் தற்போதிருக்கும் ரஷ்ய மற்றும் உக்ரேன் தயாரிப்பிலான `மிக் - 27' ரக விமானங்களும் இஸ்ரேல் தயாரிப்பிலான `கிபிர்' விமானங்களும் குண்டுவீச்சுக்களை நடத்துவதற்கு மிகவும் சிறந்தவை. ஆனால், இவற்றிடம் நடுவானில் எதிரி விமானங்களை இடைமறித்து தாக்கியழிக்கும் திறனில்லை.

இவையிரண்டும் அவசர நிலைமைகளில் இறங்கி ஏறுவதற்கு வசதியான விமான ஓடுபாதைகள் அவசியம். இவற்றால் உடனடியாகவும் மிக விரைவாகவும் மேலெழ முடியாது. இதனால், குறுந்தூர ஓடு பாதையில் ஓடிப் பறக்கவும் அல்லது அவற்றில் இறங்கவும் கூடிய விதத்தில், விஷேட பயிற்சி பெற்ற விமானிகளுடன் கூடிய சிறியரக விமானங்களே தற்போது விமானப் படையினருக்குத் தேவை.

`கிபிர்' மற்றும் `மிக் - 27' ரக விமானங்களில், வானிலிருந்து தாக்குதல் நடத்தக் கூடிய பீரங்கிகள் மற்றும் வானிலிருந்து வானுக்கு தாக்குதல் நடத்தக்கூடிய குறுந்தூர ஏவுகணைகள் பொருத்தப்பட்டிருந்தாலும் இவற்றால் வான் பரப்பில் எதிரி விமானங்களின் மீது எந்தளவிற்கு தாக்குதல்களை நடத்த முடியுமென்பது பெரும் கேள்வியே.

`மிக் - 27' விமானங்களைப் பொறுத்தவரை இரவு நேரங்களில் எதிரி விமானமொன்றைத் தேடிக் கண்டுபிடித்து, வான்பரப்பில் வைத்து அதன்மீது தாக்குதலை நடத்துவதற்கேற்ப எதிரி விமானத்தை கண்டுபிடிப்பதற்கான `ராடர்' இல்லை. எனினும் `கிபிர்' விமானங்களில், இரவு நேரங்களில் பறக்கும் எதிரி விமானங்களை கண்டுபிடிக்கக்கூடிய ராடர்களிருந்தாலும் மிகக் குறுகிய நேரத்தில் இந்த விமானத்தால் எதிரி விமானத்தை கண்டுபிடிக்க முடியாவிட்டால், பின்னர் அதனைக் கண்டுபிடிப்பதென்பது கடினமானதாகவேயிருக்கும்.

இதனால், `மிக் - 27' மற்றும் `கிபிர்' விமானங்களைப் பயன்படுத்தி புலிகளின் வானூர்திகளை இரவு நேரத்தில் கண்டுபிடித்து அழிப்பதென்பதை விட, தரையிலிருந்து வானுக்கு ஏவும் ஏவுகணைகளைப் பயன்படுத்துவது சுலபமானதென ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

இந்த நிலையில்தான், பிந்திய அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் தயாரிக்கப்பட்ட `மிக் - 29' ரக விமானங்களை பயன்படுத்த இலங்கை அரசும் படைத்தரப்பும் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றன. வானில் எதிரியின் விமானங்களை ராடரின் உதவியுடன் கண்டுபிடித்து, தாக்கி அழிப்பதற்கான சகல தொழில்நுட்ப வசதிகளையும் இந்த `மிக் - 29' விமானம் கொண்டிருப்பதுடன் தரையிலும் 3,000 கிலோ குண்டுகளை துல்லியமாக வீசித் தாக்கக்கூடியது.

எந்தக் காலநிலையிலும் எந்த உயரத்திலும் அல்லது தூரத்திலும் எதிரி விமானங்களை கண்டுபிடித்து தாக்கியழிக்கும் வல்லமை படைத்தது. வானில் தோன்றுமொரு இலக்கை 60 கிலோமீற்றர் முதல் 200 கிலோமீற்றர் தூரத்திற்குள் வைத்து எந்த உயரத்திலும் (தாழப்பறந்துகூட) `மிக் - 29' கண்ணிமைக்கும் நேரத்தில் தாக்கியழித்து விடும். இந்த விமானத்தின் ராடரில் எதிரி விமானம் சிக்கிவிட்டால், அந்த விமானம் அழிக்கப்படுவது நிச்சயம். அந்தளவிற்கு பிந்திய உயர் தொழில்நுட்பமும் தாக்குதல் திறனும் கொண்டது.

சுமார் 150 கோடி ரூபா பெறுமதியான இந்த விமானத்தை முப்பதுக்கும் மேற்பட்ட நாடுகள் தற்போது பயன்படுத்துகின்றன. இதனைப் பெற்றுவிட இலங்கை அரசு துடிப்பதால் இனிவரும் நாட்களில் மோதல்கள் மிகத் தீவிரமடைய ஏற்படலாம்.

Edited by வானவில்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தியக் கொள்கை எம்மை கட்டிப்பிடித்து முத்தம் இடும் நிலையில்தானே இருக்கிறது கோகன்னதான் சிண்டு முடியவேண்டுமாக்கும், "புலிகளிடம் வர்ணபகவானை ஏவிவிடும் ஆற்றல் இருக்குது'' என்று சிங்களம் சொன்னால் ஆமாம் என்று தலையாட்டும் நிலையில் தானே இந்தியத்தின் சொறிக் கொள்கைவகுப்பாளரின் போக்கு இருக்கிறது.

தமிழீழ விடுதலைப் புலிகளினால் மேற்கொள்ளப்பட்ட நான்கு வான் தாக்குதல்களானவை நான்கு ஈழப் போர்களை விட அதிகளவான அச்சத்தையும், அதிர்ச்சியையும் சிறிலங்காவின் பாதுகாப்பு, பாதுகாப்பு நடைமுறைகள் தொடர்பாக எழுப்பியுள்ளதாக கொழும்பில் இருந்து வெளிவரும் சண்டே ரைம்ஸ் வார இதழின் பாதுகாப்பு ஆய்வாளர் இக்பால் அத்தாஸ் தெரிவித்துள்ளார்.

அவர் எழுதிய கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ஏப்ரல் 29 ஆம் நாளுக்குப் பின்னர் வான்பரப்பு அமைதியாக உள்ளது. எனினும் சடுதியான வான் தாக்குதல் நிகழலாம் எனப் பல நாடுகளின் புலனாய்வு அமைப்புக்கள் தெரிவித்துள்ளன. சிறிலங்கா அரசு முழுமையான வான் பாதுகாப்பு பொறிமுறைகளை பெறுவதற்கு முன்னர் விடுதலைப் புலிகள் மேலதிக தாக்குதல்களை நிகழ்த்தலாம்.

சிறிலங்காவில் உள்ள இரு பரிமாண ராடார்களை உரிய முறையில் இயங்க வைப்பதற்கும், அவற்றை புனரமைக்கும் நோக்குடனும் இந்தியாவின் வான்படை அதிகாரிகள் இங்கு வந்துள்ளனர்.

விடுதலைப் புலிகளின் வான் தாக்குதல் உல்லாசப் பயணத்துறையை பெருமளவில் பாதித்துள்ளது. தவறான ஆலோசனைகள் மூலம் அனைத்துலக வானூர்தி நிலையம் இரவு 10.30 மணியில் இருந்து காலை 4.00 மணிவரை மூடப்படுவது அதனை மேலும் பாதித்துள்ளது.

சிறிலங்காவிற்கு பெரும் வெளிநாட்டு நிதியைப் பெற்றுத்தரும் தேயிலை வர்த்தகத்தில் இது பெரும் பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் தமது மாதிரி தேயிலை வகைகளை விரைவு வானூர்தி சேவைகள் மூலம் அனுப்புவதில் தடங்கல்களை எதிர்கொண்டு உள்ளனர். இதே நிலைமைகள் தான் பூக்கள், பழங்கள் ஏற்றுமதித்துறையினரும் சந்தித்துள்ளனர். இரவு வானூர்தி சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதனால் சரக்கு வானூர்திகளைப் பெறுவதில் பெரும் இடைஞ்சல்கள் தோன்றியுள்ளன.

வானூர்தி நிலையத்தை மூடியது தனது வான்பரப்பை பாதுகாக்க முடியாது என்ற நிலையை அரசு வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளதாகவே கொள்ள முடியும். அனைத்துலக வானூர்தி நிலையத்தின் வான்பரப்பைக்கூட பாதுகாக்க முடியாத நிலைமை அரசுக்கு தோன்றியுள்ளது.

ஐரோப்பா மற்றும் தூர கிழக்கு நாடுகளில் உள்ள மக்களும் தமது பயணங்களின் போதான இடைத்தங்கல் வானூர்தி நிலையமாக கொழும்பை தற்போது பயன்படுத்துவதில்லை. இதன் விளைவாக வானூர்தி நிலையத்தை சுற்றி உள்ள விடுதிகளுக்கும், வாடகைக் கார் உரிமையாளர்களுக்கும் கூட வியாபாரம் இல்லை.

எனினும் சில விருந்தினர்கள் சிறிலங்காவுக்கு வந்து செல்கின்றனர். அவர்கள் பல்வேறு வகையான ராடார்களை விற்பனை செய்பவர்கள். சிலர் பாதுகாப்பு அமைச்சு அதிகாரிகளுடன் தொடர்புகளை ஏற்படுத்தியிருந்தனர்.

எனினும் இதற்காக அரசு பாதுகாப்பு அமைச்சின் கீழ் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிறுவனத்திற்கு கோத்தபாயா தலைமை வகிக்கிறார். அவரே படையினருக்கான ஆயுதக் கொள்வனவுக்கான தனியான பொறுப்பாளராவார். இந்த நிறுவனத்தின் ஊடாகவே படையினருக்கான கொள்முதல்கள் மேற்கொள்ளப்படலாம் என அனைத்துலகத்தில் உள்ள சிறிலங்கா இராஜதந்திரிகளுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.

இதனிடையே வாடகைக்கு மிக்-29 ரக வானூர்திகளை கொள்வனவு செய்ய சிறிலங்கா அரசு முயன்று வருவதாக புலிகளுக்கு ஆதரவான புதினம் இணையத்தளம் முதலில் செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தது.

முதலில் வான்படை அதிகாரிகள் மிக்-29 வானூர்திகளை கொள்வனவு செய்வதற்கான பரிசோதனைகளை நடத்துவதற்காக மொசக்கோ சென்றிருந்தனர். எனினும் இது காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ளது. இதற்கான காரணம் தெரியவில்லை.

எனினும் இரு மிக்-29 ரக வானூர்திகளை வாடகைக்கு பெறும் பொருட்டு இந்த வாரம் சிறிலங்கா வான்படையின் வான் பொறியியல்துறை தலைவர் வைஸ் மார்சல் பிரிசந்தா சில்வா உக்ரேனுக்கு சென்றுள்ளார்.

சிறிலங்கா வான்படையினர் இந்த வானூர்திகளை செலுத்துவதற்கான பயிற்சிகளை கொண்டிருக்கவில்லை. எனவே இந்த வானூர்திகளுடன் வானோடிகளையும் குத்தகை அடிப்படையில் பெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

உக்ரேனுக்கு புனரமைப்புப் பணிகளுக்காக அனுப்பப்பட்டு பின்னர் சிறிலங்கா வான்படையிடம் கையளிக்கப்பட்ட 4 மிக்-27 ரக வானூர்திகளில் இரு வானூர்திகள் சேவையில் ஈடுபடுத்த முடியாது என கைவிடப்பட்டுள்ளது. இவற்றிற்கான உதிரிப்பாகங்கள் உக்ரேனில் இருந்து கொண்டுவரப்பட உள்ளன.

மிக்-29 வானூர்திகளின் மூலம் இலகுரக வானூர்திகளை தாக்குவது இலையானை பெரும் சுத்தியல் கொண்டு தாக்குவது போன்றது என சில வான்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மிக்-29 வானூர்திகள் அதனை ஒத்த வானூர்திகளை தாக்குவதற்கு என வடிவமைக்கப்பட்டது. உலகில் எந்த பகுதியிலும் சிறிய இலகு ரக வானூர்திகளை தாக்கியளிக்க மிக்-29 ரக வானூர்திகள் பயன்படுத்தப்பட்வில்லை.

புத்தம் புதிய மெசடீஸ் பென்ஸ் காரைக் கொண்டு மாட்டு வண்டிகளை மோதுவது போன்றது இது என வான்படை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மிக்-29 இன் அதிஉயர் வேகம் Zlin-143 யைவிட ஐந்து மடங்கு அதிகமானது.

மிக்-29 வானூர்திகளை தவிர ராடார் வழிகாட்டி, லேசர் வழிகாட்டி, வெப்ப உணர்திறனுள்ள ஏவுகணைகளையும் கொள்வனவு செய்ய வேண்டும். இந்த ஏவுகணைகளின் ஒன்றின் பெறுமதி 30,000 டொலர்களாகும். இது விடுதலைப் புலிகளின் மலிவான வானூர்திகளை தாக்குவதற்கான செலவான முறையாகும். எனவே நடந்துவரும் நாலாம் ஈழப்போர் செலவு மிக்கது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

வான் எதிர்ப்பு நடவடிக்கைகளை விட மேலும் சில செலவுகளும் குறிப்பிடத்தக்கது. 120 மி.மீ எறிகணை ஒன்றின் விலை 148 டொலர்கள், 81 மி.மீ எறிகணை ஒன்றின் விலை 74 டொலர்கள், 152 மி.மீ எறிகணை ஒன்றின் விலை 295 டொலர்கள். இவை தொடர்ச்சியான பயன்படுத்தும் வெடிபொருட்கள்.

கடற்படையால் பயன்படுத்தப்படும் 82 ரக துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தும் 14.5 மி.மீ ரவைகள் ஒவ்வொன்றும் 28,080 டொலர்கள் பெறுமதியானவை. அரசுக்கு தொடர்ந்து ஆயுதங்களை விநியோகம் செய்யும் தரகர் ஒருவருக்கு அரசு 200 மில்லியன் டொலர்கள் நிலுவையாக செலுத்த வேண்டி உள்ளது. எனவே அவர் இந்த முறை ஆயுதங்களை விநியோகம் செய்ய மறுத்து விட்டார். எனவே அரசு வேறு விநியோகிஸ்த்தரை நாடவேண்டியுள்ளது.

இதனிடையே விடுதலைப் புலிகள், மல்லாவியில் வான் பயிற்சிகளில் ஈடுபட்டு வருவதாக புலனாய்வுத்துறை தெரிவித்துள்ளது.

போரின் செலவானது பொதுமக்களை பாதித்துள்ளது. உணவு, எரிபொருள், போக்குவரத்து என்பவற்றின் விலைகள் அதிகரித்துள்ளன என்று அதில் கூறப்பட்டுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

வானவில், இது உங்கள் ஆய்வா? நல்லது தான். ஆனால் அப்படி இந்தியா ஏதும் தடல்புடலாகச் செய்ததாகச் செய்தி இல்லையே? மேலும் தென்னிந்தியாவில் ஏற்கனவே இந்திய வான்படையின் பிரசன்னம் போதுமான அளவு உண்டு. பெருநிலப்பரப்பில் மட்டுமன்றி அந்தமான் தீவுப்பகுதியிலும் வங்கக் கடலைக் கண்காணிக்கக் கூடிய பாரிய கட்டமைப்புகள் ஏற்கனவே உண்டு. இந்தியா இப்போது புலிஎதிர்ப்பு முகாம் தான் என்றாலும் புலிகளின் அடிப்படை நோக்கம் குறித்த அறிவு கூட இல்லாத முட்டாள்கள் என்பது நம்பக் கூடியதாயில்லை.

வானவில் நிச்சயமாக இது ஒரளவு தரமான ஆராய்ச்சிதான். இது உங்களது ஆக்கமாக இருந்தால் வாழ்த்துக்கள். மேலோட்டமாக கண்டிப்பார்கள் கீழே இணைப்பைப் பாருங்கள்.

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=22146

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வானவில், இது உங்கள் ஆய்வா? நல்லது தான். ஆனால் அப்படி இந்தியா ஏதும் தடல்புடலாகச் செய்ததாகச் செய்தி இல்லையே? மேலும் தென்னிந்தியாவில் ஏற்கனவே இந்திய வான்படையின் பிரசன்னம் போதுமான அளவு உண்டு. பெருநிலப்பரப்பில் மட்டுமன்றி அந்தமான் தீவுப்பகுதியிலும் வங்கக் கடலைக் கண்காணிக்கக் கூடிய பாரிய கட்டமைப்புகள் ஏற்கனவே உண்டு. இந்தியா இப்போது புலிஎதிர்ப்பு முகாம் தான் என்றாலும் புலிகளின் அடிப்படை நோக்கம் குறித்த அறிவு கூட இல்லாத முட்டாள்கள் என்பது நம்பக் கூடியதாயில்லை.

தினக்குரல் அரசியல் ஆய்வு என்று நினைக்கிறேன், பிரதிபண்ணும் போது முழுப்பகுதியும் அகப்படவில்லை போல் இருக்கிறது.

எல்லாம் இனவாத சிங்கள அரசிற்கு 1. தேவையான கால அவகாசம் பெற்றுக்கொடுத்தல்

2. ஆயுத உதவிமூலம் முட்டுக்கொடுத்தல்

3.இவற்றின் மூலம் இலங்கையின் வெற்றியை உறுதி செய்தல்

இவைதான் பலகாலமாக செய்து வருகின்றன. இனியும் செய்வார்கள்.

கண்துடைப்பிற்கு செல்லமாக கண்டித்தல், தற்காலிக நிதி உதவி நிறுத்தம்..... :)

எல்லாம் இனவாத சிங்கள அரசிற்கு 1. தேவையான கால அவகாசம் பெற்றுக்கொடுத்தல்

2. ஆயுத உதவிமூலம் முட்டுக்கொடுத்தல்

3.இவற்றின் மூலம் இலங்கையின் வெற்றியை உறுதி செய்தல்

இவைதான் பலகாலமாக செய்து வருகின்றன. இனியும் செய்வார்கள்.

கண்துடைப்பிற்கு செல்லமாக கண்டித்தல், தற்காலிக நிதி உதவி நிறுத்தம்..... :lol:

  • கருத்துக்கள உறவுகள்

உள்ள பழைய ஆயுதங்களை விற்று தள்ளுவதற்காக அமெரிக்காவும், பிரிட்டனும் நாடகம் போடுகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்ரீலங்கா அரசுக்கு சகல உதவிகளையும் செய்து பார்த்தாங்க, திட்டம் பிசகிவிட்டது, இப்போது குறுக்கு வழியிலை வாறாங்க, இதுவும் சரிவராதுங்கோ.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.