Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியாவில் இளம் வயதினர் கொரோனாவால் இறப்பது அதிகரித்துள்ளது ஏன்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சுதா சேஷய்யன் பதில்

பிரமிளா கிருஷ்ணன் பிபிசி தமிழ்

தினமும் ஆயிரக்கணக்கானோருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்படும் நிலையில், தமிழகத்தில் கொரோனா வைரஸ் அக்டோபர் 2020 வரை அதிக அளவில் பரவும் என தமிழ்நாடு எம்.ஜி.ஆர் பல்கலைக்கழக துணை வேந்தர் சுதா சேஷய்யன் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸுக்கு தடுப்பு மருந்து கண்டறியும் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள சுதா சேஷய்யன், கொரோனா வைரஸ் மரபணு திடீர் மாற்றமடைவது குறித்தும், இளம் வயது மரணங்கள் ஏன் அதிகரிக்கின்றன, 'சைலன்ட் ஹைபாக்சியா' எனப்படும் அறிகுறிகள் தென்படாமல் நிகழும் சில மரணங்கள் தமிழ்நாட்டில் நிகழ்ந்துள்ளது எப்படி என்பவை குறித்து விளக்கமாகப் பேசினார்.

அவர் அளித்த பேட்டியிலிருந்து:

கொரோனா வைரஸின் கிளையினமான ஏ3ஐ வைரஸ் பரவல் தொடங்கியுள்ளது என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து விளக்க முடியுமா?

பதில்: ஏ3ஐ குறித்த அறிவியல் விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. இந்த ஏ3ஐ என்பதை 'க்ளேட்' என்று சொல்வார்கள். கொரோனா வைரஸில் மாற்றங்கள் ஏற்படும். இந்த மாற்றங்களைதான் க்ளேட் என்பார்கள். வைரஸின் தன்மையில் பெரிய அளவிலான மாற்றங்கள் ஏற்பட்டால் அதனை புதிய ஸ்ட்ரெயின் என்பார்கள்.

புதிய ஸ்ட்ரெயின் என்று கூறத்தக்க மாற்றம் ஏற்பட்டால்தான் நாம் அச்சப்படவேண்டும். ஆனால் க்ளேட் உருவாவதை கண்டு நாம் அஞ்சவேண்டியதில்லை. ஒருசில நேரங்களில் இந்த க்ளேட் உருவாவதால், கொரோனா வைரஸின் வீரியம் குறையவும் வாய்ப்புள்ளது.

கொரோனா வைரஸ் பரவலின் ஆரம்பகட்டத்தில், வெளிநாட்டில் இருந்து திரும்பியவர்கள், முதியவர்கள் மட்டும்தான் பலியானார்கள். தற்போது இந்தியாவில் இளம் வயதினரின் மரணங்களும் அதிகரித்துள்ளன. ஏன்?

பதில்: முதலில் வைரஸ் தொற்று இருப்பவர்களுக்கு நோய்க்கான வரலாறு வெளிப்படையாக தெரிந்தது. ஊரடங்கு அமலில் இருந்தது. நோய் தொற்று இருப்பவர்களின் பயண வரலாறு, அவர்கள் தொடர்பில் இருந்தவர்களை சரியாக அடையாளம் காண முடிந்தது. அதன் மூலம், வெளிநாட்டில் இருந்து திரும்பியவர்கள், முதியவர்களுக்கு தாக்கம் இருப்பதை கண்டறிந்து சிகிச்சை அளிக்கமுடிந்தது. தற்போது பொது மக்கள் பலரும் கொரோனா வைரஸ் பரவலை பொது வெளிகளில் எதிர்கொள்கிறார்கள்.

வெளியிடங்களில் பயணம் செய்யும் போது, காய்கறி மார்க்கெட் அல்லது பிற பொது இடங்களில் தொடர்ந்து வைரஸ் தொற்று பெறுபவர்கள், தங்களது எதிர்ப்புசக்தி கொண்டு சமாளிக்கிறார்கள். இளைஞர்களில் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள், பிற வியாதிகளுக்கு ஏற்கனவே சிகிச்சை எடுப்பவர்களாக இருப்பதால், நோய் தொற்றுக்கு ஆளாகிறார்கள்.

அதனால் தற்போது இளவயது மரணங்கள் ஏற்படுகின்றன. இதுகுறித்த ஆய்வுகள் நடைபெற்றுவருகின்றன. ஒரு சில பொது இடங்களில் தொற்று ஏற்பட்டவர்கள் ஏசிம்ப்டமேடிக் நபர்களாக இருந்தால், அங்கு நோய் பரவல் திரள் (கிளஸ்டர்) ஆகிறது.

தமிழகத்தில் கோயம்பேடு சந்தை திரள் மூலமாக பல மாவட்டங்களிலும் கொரோனா தொற்று ஏற்பட்டது என கண்டறியப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களோடு தொடர்பில் இருந்தவர்களுக்கு நோய் தொற்று ஏற்பட்டது. இது சமூகப் பரவல் தானே?

பதில்: கிளஸ்ட்டர் என்பது வேறு. சமூகப் பரவல் என்பது வேறு. பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களோடு தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து பரவலை தடுக்கிறோம் என்பது கிளஸ்ட்டர். நோய் பரவலை தடுக்க முடியாத நிலைதான் சமூகப் பரவல். அந்த நிலை இந்தியாவில் தற்போதுவரை இல்லை.

கோயம்பேடு சந்தைபடத்தின் காப்புரிமை Getty Images

தமிழகத்தில் கடந்த வாரத்தில் இறந்தவர்களில் சிலரிடம் இறக்கப் போவதற்கான அறிகுறிகள் தென்படவில்லை. அவர்கள் இறந்ததற்கு 'சைலன்ட் ஹைபாக்சியா' காரணம் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தார்கள். 'சைலன்ட் ஹைபாக்சியா' மரணம் எப்படி நிகழ்கிறது?

பதில்: நுரையீரலில் ரத்தக் கட்டு ஏற்படும்போது, உடலில் ஆக்ஸிஜன் குறைகிறது. ஆக்ஸிஜன் உடலின் எல்லா திசுக்ககளுக்கும் தேவை. உடலில் ஆக்ஸிஜன் குறையும்போது, 70 சதவீதத்திற்கும் கீழாக சரியும்போது, மரணத்தை தொட்டுவிடுவார்கள்.

சிலருக்கு அவர்கள் அன்றாட வேலைகளை செய்துகொண்டிருக்கும் நேரத்தில் சில சமயம் மூச்சு திணறல் இருக்கும். ஆனால் உடனடி கவனம் கொடுக்காமல் இருந்தால், சில நேரம் மரணம் நேரலாம். மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டால், உடனடியாக மருத்துவரை நாடுவது அவசியம்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறந்தவர்களில் ஆண்கள் அதிகமாக இருக்கிறார்கள். பெண்கள் குறைவாக இருக்கிறார்கள். இதற்கு என்ன காரணம்?

பதில்: கொரோனா வைரஸின் வரலாறு வெறும் ஆறு மாதங்கள்தான். தற்போது நம்மிடம் உள்ள புள்ளிவிவரங்களை கொண்டு, ஆண்கள்தான் அதிகம் இறக்கிறார்கள். பெண்களின் இறப்பு குறைவு என சொல்லமுடியாது.

ஊரடங்கு காலத்தில் பெரும்பாலான பெண்கள் வீட்டில் இருக்கிறார்கள். ஆண்கள் வெளியில் நடமாடுவதால், அவர்களுக்கு தாக்கம் அதிகம், பாதிக்கப்பட்டவர்கள் அதிகம் என்பதால் இறப்பு விகிதம் அதிகமாக இருப்பதுபோல தோன்றும். தற்போது இந்த முடிவை நாம் எட்டமுடியாது.

கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து மீண்டவர்கள் மீண்டும் பாதிக்கப்படமாட்டார்கள் என்பது சரியா? ரீஇன்பெக்சன்(தொற்று மீண்டும் ஏற்படுவது) ஏற்படுமா?

பதில்: இதுவரை இந்தியாவில் ரீஇன்பெக்சன் ஏற்பட்டதற்கான சான்றுகள் இல்லை. வெளிநாடுகளில் வெகு சில நபர்களுக்கு ஏற்பட்டுள்ளது என தெரியவந்துள்ளது. அதனால், இன்னும் ரீஇன்பெக்சன் குறித்த தெளிவான தகவல் நமக்கு கிடைக்கவில்லை.

இந்தியாவில் பாதிப்பில் இருந்து மீண்டவர்களுக்கு எதிர்ப்புசக்தி அதிகரித்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இருந்தபோதும், உடனடியாக இதையே சாட்சியாக எடுத்துக்கொள்ளமுடியாது. உலகம் முழுவதும் ஏற்படும் மாற்றங்களை நாம் சிறிது காலத்திற்கு கவனிக்கவேண்டும்.

இந்தியாவில் ரீஇன்பெக்சன்படத்தின் காப்புரிமை Getty Images

தமிழகத்தில் ஏற்படும் கொரோனா இறப்பு விகிதம் குறித்து தமிழக அரசுக்கு உங்கள் பல்கலைக்கழகம் அளித்துள்ள புள்ளிவிவரங்கள் பெருமளவு சரியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. என்ன ஆய்வு அது?

பதில்: தமிழக அரசு எடுக்கவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எவ்வாறு இருக்கவேண்டும் என்பதற்கு நாங்கள் செய்த ஆய்வு உதவும். பேரிடர் காலங்களில், சிக்கலான சூழலுக்கு எவ்வாறு தயாராக வேண்டும் என்பதற்கு இந்த ஆய்வு உதவும்.

நோய் பரவல் ஏற்பட்ட காலம் தொடங்கி இதுவரை ஏற்பட்ட பாதிப்புகளை ஒவ்வொரு நாளும் கவனித்துகொண்டே வருகிறோம். அதைவைத்து நோய் பரவல் எவ்வாறு இருக்கும் என கணிதம் மற்றும் தொழில்நுட்ப உதவியுடன் புள்ளிவிவரங்களை தயாரித்துள்ளோம். அதன்படி, தமிழகத்தில் அக்டோபர் 2020 வரை புதிதாக தொற்று ஏற்படுவது அதிகமாகத்தான் இருக்கும்.

அதாவது நமது மொத்த மக்கள் தொகையில், 60 முதல் 70 சதவீதம் பேர் இந்த கொரோனா வைரஸை எதிர்கொள்ளும் சமயத்தில்தான் உண்மையான தாக்கம் எவ்வாறு இருக்கும் என்பதை நாம் தெரிந்துகொள்ளமுடியும். இந்தியாவில் செப்டம்பர் மாதம் தாக்கத்தின் அதிகபட்ச காலமாக இருக்கும் என தெரிகிறது.

கொரோனா வைரஸ்

பொது மக்கள் எந்தவிதத்தில் இந்த சவாலான காலத்தை எதிர்கொள்ளவேண்டும்? 2020 கொரோனா ஆண்டாக முடிந்துவிடுமா?

பதில்: நோய்த் தொற்று அதிகரிக்கும் என்பதால், பொது இடங்களில் முகக்கவசம் அணியவேண்டும். உங்கள் வீடுகளுக்கு யாராவது வந்தால், நீங்களும், அவர்களும் முகக்கவசம் அணியவேண்டும். சில அடி தூரத்தில் நின்று ஒரு நபரிடம் பேசும்போது, கட்டாயம் முகக்கவசம் தேவை. 2020 கொரோனா ஆண்டு என சொல்லமுடியாது.

ஒருவேளை நாம் பாதுகாப்பாக இருந்து, வைரஸை வெற்றிகொண்டால், அதன் பரவல் தொடர்வதற்கு வாய்ப்பு தரவில்லை என்றால், அது குறையும். அதே நேரம், பாதுகாப்பு குறைவாக இருந்தால், 2021ஆம் ஆண்டும் தாக்கம் தொடரும்.

ஹெர்ட் இம்யூனிட்டி எனப்படும் சமூக நோய் எதிர்ப்பு கூட்டுத் திறன் மூலமாக வைரஸ் தொற்றினை வெல்ல முடியும் என்ற தகவல் சரியானதா?

பதில்: பெரும்பாலான மக்களுக்கு வைரஸ் தொற்று ஏற்படும்போது, அவர்களின் எதிர்ப்பு சக்தி காரணமாக வைரஸ் அழிந்துவிட்டால், மேலும் பரவுவது குறைந்து, வைரஸ் கட்டுப்பாட்டுக்குள் வரும் என்பதுதான் ஹெர்ட் இம்யூனிட்டி.

ஆனால் பெரும்பாலான மக்கள், சுமார் 70 சதவீதம் மக்கள், தாக்கத்திற்கு ஆளானால், எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் அதிக பாதிப்புக்கு ஆளாவார்கள். அதனால் இறப்பு விகிதம் அதிகரிக்கும். இந்தியா போன்ற நாடுகளில் இறப்பு ஒரு சதவீதம் என்றால் கூட, அதிகப்படியான மக்களை நாம் இழப்போம். அதனால், ஹெர்ட் இம்யூனிட்டி என்பது தீர்வல்ல.

https://www.bbc.com/tamil/science-53043890

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.